உலகின் மிகப்பழமையான மரமான மெத்தூசலா  பைன்  மரம் (Pinus longaeva), உலகின் மிக பெரியதான அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கில் செக்கோயா தேசிய பூங்காவில் உள்ள சுமார் 2,500 க்யூபிக் மீ அளவு கொண்ட செக்கோயா மரம் (General Sherman), 115.92 மீ  உயரத்துடன் உலகின் மிக உயரமான மரம் என்னும் பெருமைக்குரிய ஹைப்பீரியான்  இவற்றுடன் உலகின் மாபெரும் ஒற்றைத்தாவரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலர்களை உருவாக்கும் கடல் தாவரங்கள் ’கடற்புற்கள்’ – seagrass எனப்படுகின்றன. நான்கு தாவரக்குடும்பங்களை சேர்ந்த சுமார் 60 கடற்புல் சிற்றினங்கள் உலகில் உள்ளன.ஏறக்குறைய 70 லிருந்து 100 மில்லியன் வருடங்களாக இவை கடலில் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது.

ரிப்பன் போன்ற நீண்ட தட்டையான இலைகளுடன் கடற்பரப்பில் அடர்ந்து வளரும் இவை புல்வெளிகளைப்போலவே காணப்படும். கடற்கரையை ஒட்டிய ஆழம் குறைவான பகுதிகளில் இவை வளரும்.

அவற்றில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதிகளில் வாழும் Posidonia australis என்னும் கடற்புல் உலகின் மாபெரும் பரப்பில் வளரும் ஒற்றைத்தாவரமாக 2022ல் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

உலக பாரம்பரிய சின்னம் என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய கடற்கரையின் ஷார்க் பே பகுதியில் (Shark Bay) அறிவியலாளர்களால் அடையாளம் காணப்பட்ட இந்த கடற்புல் மாபெரும் தாவரம் மட்டுமல்ல உலகின் மாபெரும் உயிரினமும் கூடத்தான்.

1–15மீ ஆழத்தில் மணலில் புதைந்திருக்கும் வேர்கிழங்குகளிலிருந்து வளரும் இவற்றில் ஆண்பெண் மலர்கள்  தனித்தனியே அமைந்திருக்கும்.

இவை மழைக்காடுகளை காட்டிலும் 35% அதிக கார்பனை சேமித்துக்கொள்கின்றன.

2022  ஜூனில் வெளியான ஒரு அறிவியல் கட்டுரை சுமார் 180 கிமீ தொலைவிற்கு பரந்து வளர்ந்த ஒற்றைத்தாவரம் இது என்பதை மரபணு சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை தெரிவிக்கிறது, கடலின் அடிப்பரப்பில் சுமார் 49,000 ஏக்கரில் இவை வளர்ந்திருக்கின்றன.

இந்த கடற்புல்லின் வயது சுமார் 4,500 ஆண்டுகள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உலகின்  மிகப்பழமையான ஒற்றைத்தாவரமும் இதுதான்.

கிரேக்க தொன்மத்தில் கடலின் கடவுளான் Poseidon -ன் பெயரே இதன்பேரினப்பெயராக வைக்கப்பட்டிருப்பதும் பொருத்தமாக அமைந்துவிட்டது. இதன் சிற்றினப்பெயரான ஆஸ்திரேலிஸ் என்பது இது ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது என்பதைக் குறிக்கிறது.

IUCN இந்த கடற்புல் அழிவின் அருகில் இருப்பதாக தெரிவிக்கிறது.