லோகமாதேவியின் பதிவுகள்

Author: logamadevi (Page 2 of 24)

ஒரு நாள்

(தொடர்)

25 வருடங்கள் ஆகிவிட்டதா? மலைப்பாக இருக்கிறது . நான் இன்னும் அந்த சிவப்பு செங்கல் அடுக்கி கட்டப்பட்டிருந்த பிரிட்டிஷ் காலத்து கட்டிடத்தில் வெளிப்புற சுவரோரம் காயங்களுடன் நெற்றியில் வழிந்த ரத்தத்துடன் என்னருகில் மதில்மீதேறிக்கொண்டிருந்த ஒரு கொடியின் இதயவடிவ இலைகளை பொருளின்றி பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவளாகவே இருக்கிறேன்.

புது தில்லியின் அந்த நெடுஞ்சாலையின் நடுவில் கிடந்த என்னை அங்கு கூடிய கூட்டத்தில் இருந்தவர்களும் மதுவும் தூக்கி வந்து அமரசெய்திருந்தனர். அன்று நடந்ததெல்லாமே அப்படியே சட்டம் சட்டமாக மனதில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது.

தனித்து நீண்ட பல இரவுகளில் அடிக்கடி எடுத்து அவற்றை என் முன்னே பரப்பி ஒவ்வொன்றாக பார்ப்பது வழக்கமாகி இருந்தது..ஒவ்வொரு காட்சியும் தனித்தனியே துலங்கித் தெரியும் எப்போது நினைத்துக்கொண்டாலும். அப்படியொரு உச்சதருணங்களால் நிறைந்த நாளது.

அந்த நாள் அந்த விபத்திற்கு சற்றும் தொடர்பில்லாமல் வெகு ரம்மியமாக துவங்கி இருந்தது. வெள்ளையில் அடர்நீல மலர்கள் செறிந்திருந்த பிறந்த நாளுக்கென எடுத்திருந்த ஷிஃபான் புடவை உடலை தழுவிக்கொண்டிருந்தது. அன்றைய தினம் என்னவோ நிகழும் என்னும் எதிர்பார்ப்பில் மனமும் மலர்ந்திருந்தது.

உடனிருந்த தோழிகளுக்கும் விஷயம் தெரிந்திருந்ததால் மொத்தத்தில் எங்கள் அறையே மலர்ந்திருந்தது. மல்லிதான் பிறருக்கு சொல்லி இருப்பாள்

பல்கலைக்கழகத்தில்ஆய்வுமாணவிகளுக்கான கடிதங்கள் போடப்படும் பெட்டி இருக்கும் இடத்தில் நான் தவமிருப்பதும் அடிக்கடி எனக்கு கடிதம் வருவதும், துறையின் எதிரிலிருக்கும் பெருங்கொன்றையின் அடியில் இருக்கும், மதியம் அங்கு விற்கப்பட்ட ஆரஞ்சு, கொய்யாக்களின் கார நெடி வீசும் மரபெஞ்சில் அமர்ந்து நான் கடிதங்களை படிப்பதும் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதுவதும், கனவு மிதந்த கண்களுமாக என்னுடன் இருந்த அனைவருக்கும் சேதியை சொல்லி இருந்தது,

போதாதற்கு சென்ற முறை தில்லி சென்று திரும்புகையில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் வசிக்கும் வீணா அக்காவுக்கு கொடுக்கும்படி அவர் கொடுத்திருந்த ஒரு பார்சலை கொடுக்க போகையில் உடன் மல்லிகாவும் வந்திருந்தாள். அங்கிருந்து கிளம்புகையில் வீணாக்காவின் மாமியார் எனக்கு தலைவாரி பின்னலிட்டு பிச்சிப்பூ சரம் வைத்துவிட்டார்கள். வீணாக்கா என்னை நெட்டி முறித்து ’’நாங்களே பார்த்தாலும் உன்னைப்போல ஒருத்தி எங்க நாணாவுக்கு கிடைக்கமாட்டா உங்க வீட்டில் ஒத்துப்பாங்களா‘’என்று நேரடியாக கேட்டே விட்டார். நான் திகைத்து ’’அவர் வந்து பேசறேனிருக்கார்’’என்றேன். ’’அவன் பேசறது இருக்கட்டும் உனக்கு இஷ்டமா?’’ என்றார். திணறி மூச்சடைத்து திக்கித் தடுமாறி ’ஆம்’ என்றேன்

மல்லி மேற்கொண்டு அங்கு ஏதும் கேட்கவில்லை எனினும் வெளியில் வந்ததும் ’’என்னடிது? அப்பா ஒத்துக்கவே மாட்டாரே ?’’ என்றாள். நான் அஞ்சிகொண்டிருந்த ஒன்றை அவள் எடுத்து என் முன்னே வைக்கிறாளே என்று ஆத்திரமாக இருந்தது அவள் மீது. ’’பார்க்கலாண்டி’’ என்று மட்டும் சொல்லி இருந்தேன்.

எதிர்பாராமல் மது அதிகாலையில் அந்த தங்குமிடத்துக்கு பியூஷுடன் வந்து அவராகவே செய்து என் பெயரை க்ரீமில் எழுதியிருந்த சிறிய வட்ட கேக்கை கொண்டு வந்தது தாங்கமுடியாத சந்தோஷத்தை அளித்தது. எத்தனை முயன்றும் அதை என் முகத்தில் மறைக்கவே முடியவில்லை நான் ததும்பிக்கொண்டிருந்தேன்.

அவர் மாலை என்னை கோவிலுக்கு அழைத்துச்செல்வதாக விஜி மிஸ்ஸிடம் அனுமதி கேட்டதும் அப்படித்தான், நம்ப முடியவில்லை. விஜிக்கோ அவரை அத்தனை பிரியம் தில்லி வரும் போதெல்லாம் மது மது என அவர் புகழ்பாடிக்கொண்டே இருக்கும் என்ன நினைத்ததோ அவர் கேட்டதும் உடனே சரிஎன்றது.

நான் அன்றைய கருத்தரங்கில் என்னவோ பேசினேன் என்னவோ சாப்பிட்டேன் என்னவோ பதிலளித்தேன். எனது கடைசி ஆய்வறிக்கைஅது உதவித்தொகையாக அமைச்சகம் எனக்கு கொடுத்திருந்த 6 லட்சரூபாய்களுக்கான கணக்குகளையும் சமர்ப்பித்தேன். எதிலும் கவனமாக இல்லாத என் இளமனம் மாலை செல்லப்போகும் கோவிலில் முன்பே போய் காத்திருந்தது. அங்கே நடக்குமென மனம் விழைந்த ஆயிரமாயிரம் விஷயங்களை மனதுக்குள் நடத்தி நடத்தி ஒத்திகை பார்த்த்து.

மற்றொமோர் எதிர்பாராமையாக கருந்தரங்கு நடந்த இடத்துக்கே என்னை அழைத்த்துச்செல்ல மது வந்தார். நான் மாலை விடுதிக்கு போய் குளித்து புறப்படலாமென்றிருந்தேன். ஆனால் அவருக்கும் காத்திருக்க முடியவில்லையோ என்னவோ அங்கேயே வந்தார். விஜியிடன் அனுமதி பெற்று கண்களால் புன்னகைக்கும் தோழிகளிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன். அந்த பைக்கில் நான் அன்றுதான் முதலும் கடைசியுமாக ஏறி அமர்ந்தேன். என் கைகளில் இங்கிலாந்தில் இருந்து பாப் கொண்டு வந்து பரிசளித்த அழகிய பச்சைப்பூக்கள் இருக்கும் இரண்டு மடிப்பாக மடித்துக்கொள்ளும் சாம்பல் நிற பர்ஸ் இருந்தது.அதற்குள் என்னை எபோதைக்குமாக கைவிட்ட குட்டி விநாயகர் சிலையுமிருந்தது.

மாலையாயிருந்ததால் சந்தடி மிகுந்திருந்தது தில்லி தெருக்களில். ’’என்னை வேணும்னா பிடிச்சுக்கோ’’ என்றபோது வெட்கி மறுத்துவிட்டு சீட்டின் பின்னிருந்த ஒரு கம்பியை பற்றிக்கொண்டேன். முதன்முதலில் தில்லி வந்தபோது மதுவுடன் வன அமைச்சக இயக்குநரை சந்திக்க சென்றபோது அவ்வளாகமெங்கும் மலர்ந்திருந்த ஏழிலைப்பாலையின் மணம் எங்கிருந்தோ வீசுவதுபோல் இருந்தது.

கொஞ்ச நேரத்தில் ஒரு கோவில் முன்பாக பைக்கை நிறுத்தி இறங்கினோம். தான் முதன் முறையாக கோவிலுக்கு வருவதாக சொன்னார். புன்னகைத்தேன் அவருக்கு நடவுள் நம்பிக்கை இல்லையென்றறிந்திருந்தேன்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளே செல்ல தனித் தனி வழிகள் இருந்தன. நான் எனக்கான வழியில் நுழைந்து உள்ளே கருவறையில் ஆளுயரத்துக்கு வண்ண வண்ண மாலைகளுடன் குழலூதிக்கொண்டிருக்கும் நீலக்கண்ணனை கண்டபோது அவரது வழியில் மதுவும் உள்ளே வந்து என்னுடன் இணைந்துகொண்டார். அவ்வளவாக கூட்டம் இல்லை. ஒன்றிரண்டு பேர் உடனிருந்தனர். பூஜை ஆரத்தியெல்லாம் ஒன்றுமில்லை தட்டில் இருந்த குங்குமப் பிரசாதம் மட்டும் கொடுக்கப்பட்டது. நான் நெற்றிக்கு இட்டுக்கொள்ளாமல் உள்ளங்கையிலேயே குங்குமத்தை வைத்துக்கொண்டிருந்தேன்.

சந்நிதியின் பக்கவாட்டு வாயில் வழியே வெளியேறி அங்கிருந்து மேலேறிய படிகளில் ஏறி மேலே சென்றோம். கோவிலில் அபப்டி படிகள் இருக்குமென்பதை அப்போதுதான் பார்த்தேன். மேலிருந்த விசாலமான அறையில் பலர் அமர்ந்திருந்தனர். அழகிய வண்ணங்களில் சாளரங்கள் இருந்தன. ஒரு சாளரத்தினருகில் ஒருவர் அமர்ந்து ஆர்மோனியப்பெட்டியை இசைத்துக்கொண்டே ஒரு பஜனை மனமுருகிப்பாடிக்கொண்டிருந்தார்.

என் மனமும் உருகி வழிந்துகொண்டிருந்தது. மற்றுமோர் சாளரமருகே இருவரும் நின்றோம். தில்லியின் தெருக்களில் மெல்ல மெல்ல ஒளிஎழுந்து நகரமே அந்த சாளரம் வழியே ஒளிரத்துவங்கியிருந்தது.

தனது கையிலிருந்த குங்குமத்தை என் கைகளில் கொட்டினார். நான் அதை எடுத்து நெற்றிக்கிட்டுக்கொண்டேன். மது என்னையே பார்ப்பது தெரிந்தது. மனம் அதுவரை இருந்த பதட்டமில்லாமல் நிச்சலனமாய் துடைத்துவிட்டது போலிருந்தது. பஜன் உருகிக்கொண்டே இருந்தது . அந்த பாஷை முழுவதும் புரியவில்லை எனினும்

மீள் மீள

’’போலோ ராம் ராம் ராம், போலோ ஷியாம் ஷியாம் ஷியாம்’’

என மன்றாடிய அக்குரல் என்னுள் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

அங்கிருந்து புறப்படுகையில் இருட்டிவிட்டிருந்தது. பைக்கில் ஏறியதும் சட்டெனெ நினைத்துக்கொண்டவர் போல ’’போன இண்டிபெண்டன்ஸ் டேக்கு நா இந்தியா கேட்டில் பரேட் வந்தேனில்லியா அங்கே போலாமா?’’ என்றார். அப்போது நரகத்துக்கு போலாமா என்று கேட்டிருந்தாலும் சரியென்று தலையாட்டி இருப்பேன்.

அங்கே சென்றோம், பைக்கை தொலைவில் நிறுத்திவிட்டு நடந்து இந்தியா கேட்டின் முன்பிருந்த பரந்த புல்வெளியில் அருகருகே அமர்ந்தோம். உள்ளிருந்து என் இதயம் அவர் சொல்லப்போவதை கேட்க கணம் கணமாக காத்திருந்தது அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் எனினும் இருவருமே குடும்பம் ஆராய்ச்சி , உன்னதியுடனான ப்யூஷின் காதல் ப்யூஷ் என்றால் அமிழ்தம் என பொருள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். அவர் முழங்கால்களை கைகளால் கட்டிக்கொண்டிருந்தார், நான் கால்களை ஒருக்களித்து அமர்ந்திருந்தேன். இளங்குளிர் ரம்மியமாக இருந்தது. பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர், குழந்தைகளின் கீச்சிடல் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது.

மெதுவாக மது “என்னவோ எண்ட்டே சொல்லனும்னியே என்னது” என்றார் கண்கள் பளிச்சிட. அப்படி அவருக்கு எழுதியிருந்தேன் என்பதே அப்போதுதான் நினைவுக்கு வந்தது

இதயம் பறை போல் துடித்தது காதில் எனக்கே கேட்டது. எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு அடுத்த மாதம் ஆய்வு முடிவதால் வீட்டில் கல்யாண பேச்சு துவங்கிவிடும் இனிமேல் தாமதிக்க காரணமில்லை என்பதையும் அக்கா கணவரின் இடையூறையும் சொன்னேன். அவை குறித்து சமாதானமாக மேலோட்டமாக ஏதோ சொன்னவர் ’’என்ட்டே சொல்லனும்னு இருந்தியேஅது இதுதானா’’ என்றார், கண்களில் பளிச்சிடல் இப்போது இல்லை, குழம்பி இருந்தது, கசப்புடன் ’ஆம்’ என்றேன்.

பின்னரான அமைதி அத்தனை துயரளித்தது இருவருக்கும். சட்டென்ன பேச்சை வீணாக்கா உத்ரா ரேகா அத்திம்பேர் இந்தியா கேட்டின் உள்ளே படிகளில் ஏறிச்செல்லும் வழியென மாற்றியவர் ’’நேரமாயிருச்சே போலமா’’ என்றார்.

மனதை திரட்டிக்கொண்டு ஏமற்றத்துடன் சரி என்று எழுந்தேன். பைக் நிறுத்தப்பட்ட இடம்வரை மெளனமாகவே வந்தோம். பைக்புறப்பட்டு இந்தியா கேட்டின் எதிரிலிருந்த நேர்ச்சாலையில் 300மீ தூரம் கூட வந்திருக்காத போது எதிரே தவறான திசையில் வந்த ஒரு ஜீப் பைக்கில் மோதியதில் நான் தூக்கி வீசப்பட்டேன்.

பலர் கூடி என்னை தூக்கினார்கள், முழங்காலுக்கு கீழ் பலத்த அடிபட்டிருந்த அவரும் ஓடிவந்து என்னை தூக்கி ”ஆர் யூ ஆல்ரைட்” என்று பலமுறை உரக்கக் கேட்டார். எனக்கு வலிதெரியவைல்லை அதிர்ச்சியும் திகைப்புமாக பிரமித்திருந்தேன். ஜீப்பில் இருந்தவர்களிடன் இந்தியில் என்னமோ ஆத்திரமாக பேசிக்கொண்டும் என்னை காட்டி அவளுக்கு எதாவது என்றால் அவள் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என்று கேட்டுக்கொண்டு ஜீப்பில் பர்தா அணிந்த பெண்கள் இருப்பதை பார்த்ததும் காலை நொண்டிக்கொண்டே அவ்வபோது என்னை திரும்பி திரும்பி பார்த்தபப்டி, அவர்களை போய்விட்டு மறுநாள் தனது ராணுவ முகாமில் வந்து பார்க்கும் படி சொல்லி ஜீப் எண்ணை குறித்துக்கொண்டு, பைக் சேதமடைந்ததுக்கு அவர்களளித்த 2000 ரூபாய்களை வாங்கிக்கொண்டிருந்தவரை பார்த்துக்கொண்டிருந்த நான் மனதிற்குள் ”லவ்யூ மது” என்று கோடானு கோடி முறை உரக்க கூவிக்கொண்டிருந்தேன்.

விலக்கப்பட்ட கனி !

விஷ்ணுபுரம்  குழும நண்பர்கள் உலகெங்கிலும் இருப்பதால் அந்தந்த நாடுகளின் சிறப்பான  மலர்கள் செடி,கொடிகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்புவார்கள். நானும் செர்ரி மலர் கொண்டாட்டங்களை டோக்கியோ செந்திலிடமும், மேப்பிள் இலைகளை பழனி ஜோதியிடமும் வானவில் யூகலிப்டஸ்  புகைப்படங்களை சுபாவிடமும், இலைகளே பொன்னாக பூத்து நிற்கும் ஜின்கோவை ஜெனிவா கணேஷிடமும் புகைப்படங்களாக  கேட்டு வாங்கி கொள்ளுவேன். அவர்களின் கண்களின் வழியே உலகத் தாவரங்களை வேண்டுமட்டும் இப்போது பார்க்கும், ரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அப்படி சமீபத்தில நண்பர் பெல்ஜியம் மாதவன்-ப்ரியா அவர்களது வீட்டில் ஆப்பிள் மலர்ந்திருக்கும், கனிகள் செறிந்திருக்கும் புகைப்படங்களை  அனுப்பியிருந்தார்கள்.

வெள்ளையும் இளஞ்சிவப்பும் கலந்த அழகிய ஐந்து இதழ் கொண்ட சிறு மலர்களும் அடர்சிவப்பு அரும்புகளும் கொத்துகொத்தாக நிறைந்து  மயங்க வைத்தன. இளம்பச்சை ஆப்பிள் கனிகள்  மரங்களில் செறிந்திருந்தன.  அந்த புகைப்படங்கள் என்னை ஆப்பிளின் தாவரவியல் உள்ளிட்ட பிற தகவல்களின் பின்னே செல்ல வைத்தது.  

சமீபத்தில்  கிறிஸ்தவ இறையியல் குறிப்பிடும் விலக்கபட்ட கனியான ஆப்பிள் மீண்டும் பேசுபொருளாயிருந்தது.

ஹார்வேர்ட் மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான ஒரு மரபணு ஆய்வகத்தில் Joe Davis என்னும் ஒரு உயிரிக்கலைஞர் , (bio-artist) விவிலியம் சொல்லிய அதே அறிவு மரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பொருட்டு , உலகின் மிகபழைய ஆப்பிள் என கருதப்படும்  4000 வருடத்துக்கு முன்பான ஆப்பிளின் காட்டு மூதாதையான M. sieversiiயின்  மரபணுவை தேர்ந்தெடுத்திருக்கிறார்.மிகுந்த ஆர்வமூட்டும் செய்தி இது.

மத்திய ஆசியாவில் தோன்றி பின்னர் உலகெங்கும் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் உலகில் அதிகம் பயிராக்கப்படும் கனிமரங்களில் ஒன்று. பல நாடுகளில், பல நாகரீகங்களில் ஆப்பிள் மலர் நீளாயுளின், அழகு இளமை காதல் வளமை ஆகியவற்றின் குறியீடாக கருதப்படுகின்றன

 ஆப்பிள் மலரும்போது  பல ஐரோப்பிய அமெரிக்க வீடுகளில் பூச்சாடிகளில் அவற்றை அமைத்து அழகுபடுத்துவதும், திருமண அலங்காரங்களில் பயன்படுத்துவதும் உண்டு . ஆப்பிள் மரங்களில் இலையுதிர்காலம் முடியும் போது இலைகளுக்கு முன்பாக மலர்கள் உருவாகிவிடும் என்பதால் முழுமரமும் மலர் நிறைந்து கொள்ளை அழகுடன் இருக்கும்.  

இத்தனை அழகுடன் இருப்பினும் ஆப்பிள் மரத்தின் இலை தண்டு மற்றும் விதைகளில்  Amygdalin என்னும் நச்சுப்பொருள் இருக்கும். இந்த நச்சுப்பொருள் அதை உண்பவர்களின் உடலில் சயனைடு நஞ்சாக மாறிவிடும். இவை மிக குறைந்த அளவே இருக்கிறது என்றாலும் ஆப்பிள் நஞ்சு கொண்டிருக்கும் மரம் எனும் கவனம் தேவைப்படுகிறது. 

 Malus domestica என்னும் ஆப்பிள் மரம்  பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே Malus sieversii,  என்னும் அதன் காட்டுமூதாதையிடமிருந்து கலப்பினமாக உருவாக்கப்பட்டு இன்றைய கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில்  சாகுபடி செய்யப்பட்டது. காட்டு மூதாதையான M. sieversii மிகச்சிறிய புளிப்பான கனிகளை கொண்டிருந்தது. எனவே அவற்றின் கலப்பினங்கள் உருவாக்கப்பட்டு மெல்ல மெல்ல புதிய வகைகள் உருவாகின.அவற்றின் சுவை, அழகிய நிறம், அதிக காலம் சேமித்துவைக்காலம் என்னும் வசதி ஆகியவற்றினால் ஆப்பிள்கள் உலகின் மிக விரும்பப்பட்ட கனிகளில் ஒன்றாக  இருக்கின்றன.

ஆப்பிள்கள் ரோசேசியே குடும்பத்தை சேர்ந்தவை இதே குடும்பத்தில்தான் பேரிக்காய்களும் ரோஜாக்களும் செர்ரிகளும் ஸ்ட்ராபெர்ரிகளும், ப்ளம்களும் இருக்கின்றன. 

விதையிலிருந்து உருவாகும் ஆப்பிள் அதன் இரண்டு பெற்றோரை போலவும் இருக்காது. இதனால் ஆப்பிள்களின் பரிணாம வளர்ச்சியில் பல்லாயிரக் கணக்கான வகைகள்  உருவாகி இருக்கின்றன. உடல் இனப்பெருக்க முறையில் தண்டுகளிலிருந்தும் ஆப்பிள்கள் பயிராகின்றன.

ஆப்பிள்கள் பல பண்டைய நாகரிகங்களில் ஆதிக்கம் செலுத்தியதை வரலாற்றில் காணலாம்.பல நாகரீகங்களின் நூல்களில் தேவதைக்கதைகளில், காப்பியங்களில், நாட்டுப்புற பாடல்களில்,  தொன்மங்களில் ஆப்பிள்கள் இடம்பெற்றிருக்கின்றன.

 மேற்கத்திய இலக்கியங்களில் மிக அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும் கனி ஆப்பிள்தான். பண்டைய கிரேக்க வரலாற்றின் ட்ரோஜன் போரை துவங்கி வைத்ததும் ஒரு ஆப்பிள் தான். பல வருடங்களாக வீட்டை பிரிந்திருந்த ஒடிசெஸ், ஆப்பிள் மரங்கள் சூழ்ந்த  தோட்டத்தில் கழிந்த தனது பால்யத்தை நினைத்து நினைத்து ஏங்குகிறான்.

நார்ஸ் தொன்மங்களில் கவிதையின் கடவுளான இடுனா கடவுளர்க்கு இறவாமையை  அளிக்கும் மந்திர தங்க ஆப்பிள் கனியை அவளது பொறுப்பில் வைத்திருந்தாள்.

கெல்டிக் தொன்மம் ஆப்பிளை என்றும் இளமையுடன் இறவாமல் இருக்க முடியும்  மறு உலகிற்கான கனி என்கிறது. இப்படி ஆப்பிள்களின் மந்திர பண்புகளை கொண்டு ஆண்களை இளம்பெண்கள் வசியம் செய்யும் கதைகள் பல நாட்டுப்புறக்கதைகளில்  உள்ளது.

ஐரிஷ் தொன்மங்களின் மாபெரும் நாயகனான  கோன்லா, ஒரு அழகிய பெண் இறவாமையை அளிக்கும் என சொல்லி கொடுத்த  ஒரு ஆப்பிளால் வசியம் செய்யப்படுகிறான்

ஆர்தரியன் புராணங்களில், ஆர்தர் மன்னருக்கு மிகப்பிரியமான அவலோன் என்னும் ஒரு தீவில் செறிந்து வளர்ந்திருந்த ஆப்பிள் மரங்களின் கனிகள் பல மந்திர பண்புகளை பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது

 பல தொன்மங்களில் ஆப்பிள்கள் ஆசையை தூண்டுதல், இறவாமை, காதல்,  மெய்ஞானம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படும் கனியாகவே இருக்கிறது . அரேபிய இரவுக் கதைகளிலும் வருகிறது மனிதனின் அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரு மந்திர ஆப்பிள்.

 பிரபல தேவதைக் கதையான ’’Snow White and the Poisoned Apple’’லில் ஸ்னோ ஒயிட் சூனியக்காரி கொடுத்த நச்சு ஆப்பிளால் மீளா உறக்கத்துக்கு போனபின்பு ஒரு காதல் முத்தமே அவள் எழுப்பும். இந்த பிரபல தேவதை கதை உலகின் பல மொழிகளில் பல கலாச்சாரங்களில் பல வடிவங்களில் இருக்கிறது

ஸ்வீடன் நாடோடிக்கதைகளின் வில்வித்தை நாயகனான வில்லியம் டெல் தன் மகனின் தலையிலிருந்த ஆப்பிளை ஒற்றை அம்பில் வீழ்த்தும் போட்டியில் வெற்றிபெறுகிறான்.வில்லியம்டெல்லும் ஆப்பிளும் என்னும் நாடன் பாடல் வீரத்துக்கான் பாடலாக பலகாலமாக அங்கு பிரசித்தி பெற்றிருக்கிறது.

ஐரோப்பிய நாட்டுப்புற கலாச்சாரத்திலும் ஆப்பிள் காதலின் அடையாளமாக கருதப்படுகிறது அங்கு நடைபெறும் ஆப்பிள் அறுவடை கொண்டாட்டங்களின் போது இளம்பெண்கள் நீளமாக சீவப்பட்ட ஆப்பிள் தோலை, தோள்களுக்கு பின்புறம் வீசி எறிவார்கள். அது எந்த ஆங்கில எழுத்தைப்போல விழுந்து வடிவம் கொண்டிருக்கிறதோ,அந்த எழுத்தை முதலாவதாக கொண்டிருக்கும் காதலன் அல்லது கணவன் கிடைப்பான் என்று அங்கு நம்பிக்கை உண்டு.

சேக்‌ஷ்பியரின் ரோமியோ ஜுலியட்டில், ரோமியோவை தனது விலக்கப்பட்ட கனி என்கிறாள் ஜூலியட்.

 ஆங்கில பழமொழியொன்று //ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிளை உண்டால் மருத்துவரே தேவையில்லை என்கிறது. இந்தப் பழமொழி// an apple a day will keep the doctor away//  முதன் முதலாக 1866 ல் அச்சில் வெளியானது.  

பிரபல கவிஞர்களான  Robert Frost, Emily Dickinson, Christina Rossetti,  Dylan Thomas  ஆகியோரும் ஆப்பிள்கள் பற்றி கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். பல பிரபல ஓவியர்கள் ஆப்பிளை வரைந்திருக்கிறார்கள். இயற்பியலாளர் ஐஸக் நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிள் புவியீர்ப்பு விசை குறித்த அறிதலை உலகிற்களித்தது.

 நியூயார்க்  நகரின் இணைப்பெயராகவே  பெரிய ஆப்பிள் என்னும் பெயர் இருக்கிறது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூயார்க்கில் பிரபலமாக இருந்த குதிரை பந்தயத்தின் மிகப்பெரிய  தொகையை குறிப்பிட பயன்படுத்தப்பட்ட “The Big Apple” என்னும் குறியீட்டுச் சொல் பின்னர் விரிவடைந்து நியூயார்க்கின் பெயராகவே நிலைத்துவிட்டது.

கிறிஸ்தவ இறையியலில், விவிலியத்தின் ஆதியாகமம், ஏதேன் தோட்டத்தின் விலக்கப்பட்ட கனியை உண்டதால் தண்டனைக்கு உள்ளான ஆதாமையும் ஏவாளையும் குறிப்பிடுகிறது.  நூற்றாண்டுகளாக  பல இறையியல் நூல்களில் விலக்கப்பட்ட கனியாக  பெயரற்ற கனியே இருந்து வந்தது

 ஆரம்பகால கிறிஸ்தவ படைப்புகள் இதை கடவுளுக்கு கீழ்படியாததால் கிடைத்த தண்டனை என்பதை  சற்று  விரிவாக சொல்லமுற்பட்டபோது கனி என்று பொதுவாக குறிப்பிடாமல் ஒரு குறிப்பிட்ட கனியின் பெயரை சேர்த்தன. அப்படி பல கனிகள் கிழங்குகள் தானியங்கள் குறிப்பிடப்பட்டு இறுதியில்  அது ஆப்பிளாகி இருக்கிறது.

விலக்கப்பட்ட கனி என்பது கனியே அல்ல அது மனம் மயக்கும் ஒரு மது, திராட்சை ரசம் போல என்னுமோர் கருத்தும் அப்போது இருந்தது, வைன் அருந்துவது பாவம் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் அக்கருத்து முன்வைக்கப்பட்டிருக்கலாம்.

 யூதர்களின் விவிலியமொன்று,  கடவுளின் கட்டளையை கீழ்ப்படியாமையை விளக்கும் அந்த நிகழ்வை இப்படி விவரிக்கிறது

“When the woman saw that the tree was good for eating and a delight to the eyes, and that the tree was desirable as a source of wisdom, she took off its fruit and ate. She also gave some to her husband, and he ate” (Genesis 3:6)

ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட பழைய விவிலியத்திலும் விலக்கப்பட்ட கனி ஆப்பிள் என்று குறிப்பிட்டிருக்கவில்லை. பிற்கால ஹீப்ரூ விவிலியத்தில் கனியை குறிக்க  உபயோகப்படுத்தபட்டிருந்த சொல் பெரி “peri”.

விவிலிய ஹீப்ரு மற்றும் நவீன ஹீப்ரூ இரண்டிலுமே பெரி என்பது கனி என்னும் பொதுவான பொருளைத்தான் கொண்டிருக்கிறது குறிப்பிட்ட கனியை அது சுட்டுவதில்லை. ஆப்பிளுக்கான ஹீப்ரூ சொல்லான “tapuach,”  என்பது ஹீப்ரூ மொழியில் உருவான  முதல் ஐந்து விவிலியங்களில் எங்குமே குறிப்பிடபடவில்லை. 

 ரபிஸ்  என்றழைக்கப்படும் விவிலிய மொழியியல்  ஆய்வாளர் மற்றும் மதகுருக்களில் ஒருவர் அது அத்திக்கனியாக இருக்கலாம் என்னும் கருத்தை முன்வைக்கிறார்.ஏனெனில் ஆதாமும் ஏவாளும் கனியை புசித்ததும் தங்களின் நிர்வாணத்தை உணர்ந்து வெட்கி அத்தி இலைகளில் ஆடையணிந்து கொண்டார்கள், எனவே அது அம்மரத்தின் கனியாக இருக்கலாம் என்கிறார் 

ரபிஸ் ஒருவேளை அந்தக் கனி கோதுமை மணியாக கூட இருக்கலாம் என்னும் ஒரு கருத்தையும் சொல்கிறார். ஏனெனில் ஹீப்ரூ மொழியில் கோதுமை மணிகளுக்கான் சொல்  “chitah,”  ஹீப்ரூ மொழியில் பாவம்- sin, என்பதற்கான சொல்”cheit,”  எனவே கோதுமை மணியும் விலக்கப்பட்ட கனி என்னும் சாத்தியங்களின் பட்டியலில் இருக்கிறது என்கிறார்,

 ரபிஸ் அவரது ஆய்வுக்கட்டுரையில் கொஞ்சம் கசப்பு சுவை கொண்ட, சுருக்கங்கள் இருக்கும் மிக தடிமனான தோல் கொண்டிருக்கும் முட்டை வடிவ எலுமிச்சை கனியான  citron என்பதை குறிக்கும் ஹீப்ரூ சொல்லான “etrog” என்பதை சுட்டிக்காட்டி அக்கனி எலுமிச்சை ஆகவும் இருக்கலாம் என்கிறார். யூதர்களின் பண்டிகைகளில் பண்டைய காலத்திலிருந்தே இந்த  எலுமிச்சை கனி முக்கியமான இடம் கொண்டிருக்கிறது

அதைப்போலவே ஏதேன் தோட்டத்தின் இருப்பிடமும் விவாதப்பொருளாகவே  இருக்கிறது. அது துருக்கியிலிருந்து ஓஹியோ வரை என்றும் இல்லை அது வடதுருவம் என்றும் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன

விலக்கப்பட்ட கனி அத்தி, ஆலிவ், திராட்சை,கோதுமை, எலுமிச்சை, ஆப்ரிகாட், வாழை மாதுளை என்றெல்லாம்  மாறி மாறி வந்து கடைசியில்தான்  ஆப்பிளில் வந்து நின்றிருக்கிறது.  விலக்கப்பட்ட கனிகளுக்கான் இத்தனை சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கையில் எப்படி அது இறுதியாக ஆப்பிளாயிற்று?  

துவக்க கால இறையியல் படைப்புகளில் விலக்கப்பட்ட கனியானது  வளமையை பெருக்குமென நம்பப்பட்ட மாண்ட்ரேக்  கனியாக கருதப்பட்டது,இதுவே வாழ்க்கை மரம்’’ tree of life’’ எனப்பட்டது. இனப்பெருக்கத்தின் ரகசியங்கள் கடவுளுக்கு மட்டுமே உரித்தானது என்பதால் இதன் கனிகள் மனிதர்களுக்கு விலக்கப்பட்டிருந்தது .பிறகு சாத்தானின் தூண்டுதலால் ஆதிமனிதன் அக்கனியை புசித்து இனப்பெருக்க ரகசியங்களை, காதலை காமத்தை அறிந்து கொண்டான்.

எனவே  கோபம் கொண்ட கடவுளால், அந்த  ஆதி தம்பதியினரும்,  விஷப்பாம்பாக மாற்றப்பட்ட சாத்தானும், சிறு செடியாக மாற்றப்பட்ட  அந்த மாண்ட்ரேக் மரமும் கடவுளால்  சொர்க்கத்திலிருந்து  வெளியேற்றப்பட்டனர்.அதன் பின்னர் அக்காலப் படைப்புகளில் விலக்கப்பட்ட கனி மாண்ட்ரேக் என்னும் சிறு செடியின் கனியாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது.

 பொ யு 250–200  ஆண்டுகளுக்கு முன்பான ஆதாமின் ஏழாம் தலைமுறை என கருதப்படும் ஏனோக்குவின் நூலில் கொத்துகொத்தாக திராட்சைகளை போன்ற கனிகள் விலக்கப்பட்ட கனிகளாக சித்தரிக்கப்பட்டன (Enoch 32:4). இது பின்னர் முதல் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. 

 ஒரு நூற்றாண்டு கழித்தே திராட்சைகளின் இடத்தை அத்தி எடுத்துக்கொண்டது. 

கிறிஸ்துவுக்கு பிறகான முதல் ஆயிரமாண்டு காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தகுந்த படைப்பான   Life of Adam and Eve என்னும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரான ஆதாம் ஏவாளின் வாழ்க்கையை சொல்லும் படைப்பிலும் அது அத்திக்கனியென்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்ட  கிரேக்க, லத்தீன அர்மீனிய, ஜார்ஜிய, ஸ்லேவினிக் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பல மொழிகளிலும் அப்படியே குறிப்பிடப்பட்டது. முக்கிய கிறிஸ்தவ  இறையியல் எழுத்தாளர்களும் விவிலிய அறிஞர்களுமான அகஸ்டின், தியடோர்  ஆகியோரும் அது அத்தியே என குறிப்பிட்டார்கள்  

அந்நூல்களின் சித்தரிப்பை அடிப்படையாக கொண்டு பல ஓவியங்களும் அதே கனிகளை வரைந்தன.அவற்றில் மிக அதிகம் இடம்பெற்றது அத்தியும் திராட்சையும்தான். சில சித்திரங்களில் அத்திமரத்தில் திராட்சை காய்த்திருந்தது.இன்னும் சில சித்திரங்கள்  மரத்தையோ கனியையோ அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் வரையப்பட்டிருந்தன.

பிரான்ஸின் வடக்குப்பகுதி நகரமான  லையான்  (Lyon) தேவாலயமொன்றில் சிறியதாக கருப்பு நிறத்தில் ஆலிவ் கனிகளை நினைவூட்டும் கனி வரையப்பட்டிருந்தது

வடக்கு பிரான்ஸில் ஒரு தேவாலயத்தில் 1180–90க்கு  இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்ட ஒரு சித்திரத்தில் ஏற்கனவே கடிக்கப்பட்டிருந்த ஒரு உருண்டையான கனியை ஆதாம்  உண்ணும் சித்திரம் இருந்தது.அக்கனியில் ஆப்பிளை அடையாளம் காணும் மேற்புற பிளவு தெளிவாக தெரிந்தது.

3ம் நூற்றாண்டின் அலெக்ஸாண்டிரியா திராட்சையே ஆதமும் ஏவாளுமுண்ட விலக்கப்பட்ட கனி என்றார்.  பாரீஸின் வடக்கு புறநகர்ப்பகுதி தேவாலயங்களில் அக்காலத்து ஓவியங்களில் சாத்தானாகிய பாம்பு ஒரு கொத்து திராட்சைகளை வாயில் கவ்விக் கொண்டிருக்கும் சித்திரங்கள் இருந்தன.

 4ம் நூற்றாண்டில் (அனேகமாக  A.D. 382ல்) ரோம் நகரில்தான் இந்த ஆப்பிளின் வடிவம் துவங்கி இருக்கக்கூடும். போப் முதலாம் டமஸ்கஸ் , மொழியியலாளரான ஜெரோம் என்பவரிடம் விவிலியத்தை ஹீப்ரூவில் இருந்து லத்தீன மொழியில் மொழியாக்கம் செய்ய பணித்தபோது ஜெரோம் ஹீப்ரூவின் பெரி என்னும் சொல்லுக்கான லத்தீன இணைச்சொல்லாக மாலம் (“malum”) என்பதை உபயோகப்படுத்தினார். லத்தீன மொழியில் மாலம் என்பது சதைப்பற்றான உட்புறமும் ஏராளமான விதைகளையும் கொண்டிருக்கும் கனிகளின் பொதுப்பெயர். ஜெரோம் உபயோகப்படுத்திய மாலம் என்னும் சொல்லின் மற்றொரு இணைப்பொருள் ’’தீமை’’. 

ஜெரோம் அப்பணியை 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு செய்தார்.  அவர் கையாண்ட canonical Vulgate எனப்பட்ட பேச்சுவழக்கு லத்தீன மொழியிலான அப்படைப்புத்தான் மாலம் என்னும் தீமைக்கும் கனிக்குமான் ஒரே பொதுச்சொல்லினால் கனியை குறிப்பிட்டு விலக்கப்பட்ட கனி ஆப்பிள் தான் என்னும் விதையை ஊன்றியது

ஜெரோம் மொழியியலாளர் மட்டுமல்ல  ஒரு இறையியலாளர் மிக புத்திசாலியும் கூட . ஜெரோம் வேண்டுமென்றே அதை செய்திருக்க கூடும் என்று மொழியியலாளர்கள் பின்னர் யூகித்தனர். மொழிமாற்றத்தின்போது ஆப்பிளுக்கும் தீமைக்குமான ஒரு பொதுச்சொல்லை, தீமையை கொண்டு வரும் என்பதால்  கடவுளால் விலக்கபட்ட ஒரு கனிக்கு உபயோகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம் என்கிறது அவர்கள் தரப்பு.எப்படியாகினும் மாலஸ் ஒரு நாகம் போல மெல்ல ஊர்ந்து வந்து வரலாற்றில் இடம் பிடித்தது ஜெரோமினால்தான்.

ஆனால் மாலஸ் என்பது சதைப்பற்றான எந்த கனியையும் குறிப்பதுதான் எனவே அக்கனி பேரிக்காய் அல்லது அத்தி அல்லது பீச் ஆக இருக்கலாம் என்ற கருத்தும் வலுவாக  பின்னர் எழுந்தது.அதை சொன்னவர்கள் தங்கள் தரப்பு ஆதாரமாக  1508 லிருந்து 1512 க்கு இடைப்பட்ட காலத்தில் சிஸ்டைன் தேவாலய உட்கூரையில் மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த சித்திரத்தில் அத்தி மரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பை காட்டினார்கள் 

எனினும்  அதன் பின்னர் ஐரோப்பாவின் பல கலைவடிவங்களில் விலக்கப்பட்ட கனி ஆப்பிளாக சித்தரிக்கப்பட்டது. ஜெர்மானிய கலைஞரான  Albrecht Dürer என்பவரின் 1504 ஆண்டின் புகழ்பெற்ற  செதுக்கு சித்திரங்களில் ஆதாமும் ஏவாளும் ஆப்பிள் மரத்தடியில் நின்றுகொண்டிருக்கும் சித்திரத்தை  உதாரணமாக சொல்லலாம்.

அந்த சித்திரம் பிற்பாடு உருவாக்கப்பட பல ஓவியங்களுக்கு அடித்தளமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்தது. உதாரணமாக ஜெர்மானிய ஓவியர்  Lucas Cranach the Elder ன் ஆதாமும் ஏவாளும் சித்திரத்தில் மரத்திலிருந்து  பளபளக்கும் ஆபரணங்களை போல ஏராளமான ஆப்பிள்கள் தொங்கிக்கொண்டு இருந்தன.  

எனவே இது ஒரு மொழியில் ஏற்பட்ட நுண்மையான விளையாட்டு அல்லது தவறு  என்பதை மக்கள் உணரும் முன்னேயே ஆதாமும் ஏவாளும் ஆப்பிளுடன் இருக்கும் சித்திரங்கள் ஏராளமாக உருவாகிவிட்டிருந்தன.

அதே சமயத்தில் எலுமிச்சையும் ஆப்ரிகாட்டும்,மாதுளைகளும்  பல ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டன என்றாலும் ஆப்பிள் மிக அதிக இடமும் முக்கியத்துவமும் ஏற்றிருந்தது’

 12ம் நூற்றாண்டின் வழிபாட்டு நாடகமான Jeu d’Adam ல் பல இடங்களில் விலக்கப்பட்ட கனி என்பதை  மாதுளையை குறிக்கும் “forbidden pom” என்னும் சொற்களே குறிப்பிட்டன. ஜெர்மனியிலும் 10,12 நூற்றாண்டுகளில் விலக்கப்பட்ட கனியாக அத்தி மாதுளை ஆகியவை இடம் பெற்றிருந்தன ஆனால் 13ம் நூற்றாண்டில் அனைத்து கனிகளையும் விலக்கிவிட்டு ஆப்பிள் அந்த  இடத்தில் அமைந்தது 

 அதன் பின்னர் ஆப்பிள் வலுவாக  பிரான்சின் விலக்கப்பட்ட கனியின் இடத்தில் அமர்ந்தது. இங்கிலாந்திலும்  ஜெர்மனியிலும் அத்தனை விரைவில் மாற்றம் வந்திருக்காவிடினும்  பிரான்சின் கலாச்சார தாக்கத்தில்  13ம் நூற்றாண்டின் பின்பகுதியில் அங்கும் ஆப்பிள் அறிமுகமானது.பிரான்சையும் விரைவில் கடந்து  13ம் நூற்றாண்டின் இறுதியில் பல நாடுகளில் அத்தியை நகர்த்திவிட்டு ஆப்பிள்கள் இடம்பெற்றன,

14ம் நூற்றாண்டில்  ஆங்கிலம் பேசுமொழியாக இருந்த அனைத்து பிரதேசங்களிலும் பெரும்பாலான  அத்திகள் ஆப்பிள்களாகியிருந்தன.  . அதன் பின்னர் ஐரோப்பாவின் அனைத்து கலைகளிலும் அத்தி மறைந்து ஆப்பிள் நுழைந்தது

 ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாவதற்கு அச்சு இயந்திரங்களும் ஒரு காரணமாயிருந்தன. 16ம் நூற்றாண்டின் துவக்ககாலங்களில் முக்கிய அச்சு தொழிற்சாலைகள் எல்லாம் வடக்கு ஐரோப்பாவில் அமைந்திருந்தன. அவை உருவாக்கிய அனைத்து படைப்புக்களிலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாக சித்தரிக்கப்பட்டது.

வடக்கு ஜெர்மனியின் புகழ்பெற்ற கலைஞர்களான Hugo van der Goes, Hieronymus Bosch, Lucas Cranach the Elder, Albrecht Dürer ஆகியோரின் சித்திரங்களில் விலக்கப்பட்ட கனி ஆப்பிளாகவே இருந்தது. 

ஜான் மில்டன் தனது இழந்த சொர்க்கத்தை பதிப்பத்தாரிடம் 5 பவுண்டுகளுக்கு  1667ல் உரிமம் பெற்று இப்போது 356 வருடங்கள் ஆகின்றன.

அவரது அப்பெரும் படைப்பில் விவிலியத்தின் ஆதிக்கதைதான் பேசுபொருள் . கதாபாத்திரங்களும் நமக்கு தெரிந்தவர்கள் தான் கடவுள், ஆதாம், ஏவாள், பாம்பின் வடிவத்தில் சாத்தான் மற்றும் ஒரு ஆப்பிள்.

கடவுளுக்கெதிரான மனிதனின் முதல் மீறலும்,  உலகிற்கு மரணத்தின் சுவையையும் அழிவையும் கொண்டு வந்த அந்த  விலக்கப்பட்ட மரத்தின் கனியை குறித்தான அறிமுகத்தில் ஜான் மில்டன் இப்படி குறிப்பிடுகிறார்

//Of Mans First Disobedience, and the Fruit

Of that Forbidden Tree, whose mortal taste

Brought Death into the World, and all our woe//

துவக்கத்தில் வெறும் கனி என்று சொல்லும் மில்டன் அந்த 1000 வரி கவிதையில் இரண்டு இடங்களில் ஆப்பிள் என்று குறிப்பிடுகிறார்.

மில்டன் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல அவருக்கு பன்மொழிப்புலமை இருந்தது. லத்தீன, கிரேக்க மற்றும் ஹீப்ரூ மொழிகளில் நல்ல புலமை இருந்த அவர் வெளிநாட்டு மொழிகளுக்கான செயலராகவும் பணிபுரிந்தார். அவருக்கு நிச்சயம்  ஜெரோமின் நுண்மையான விளையாட்டு தெரிந்திருக்கும் இருந்தும் அவர் ஏன் ஆப்பிள் என்னும் சொல்லை தேர்வு செய்திருக்க கூடும்?

இதற்கு வரலாற்றாய்வாளர்கள் இருகருத்துகளை சொல்கிறார்கள்’ ஒன்று மில்டன் அக்கனி ஆப்பிள் என்றே நினைத்திருக்கலாம் . இரண்டு மில்டனும் ஆப்பிள்/மாலஸ் என்னும் சொல்லின் பொருளான சதைப்பற்றான விதைகள் நிரம்பிய ஏதோ ஒரு கனி என்னும் பொதுப்பெயரில் கூட அச்சொல்லை உபயோகப்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்’

மில்டனுக்கு பின் வந்த எழுத்தாளர்கள் அச்சொல்லை பிரத்யேகமாக ஆப்பிளை குறிக்கும் சொல்லாகவே உருவகப்படுத்தி பிரபலமாக்கினர்.அதன்பிறகே உலகெங்கிலும் விலக்கப்பட்ட கனியாக ஆப்பிள் நிலைத்துவிட்டது.

கடவுளுக்கு கீழ்படிந்திருந்தால் மற்றுமொரு  நன்மை மரமான வாழ்க்கை மரத்தின் பலன்கள் மனிதனுக்கு கிடைத்திருக்கும் என்பதையே இறையியல் நூல்கள்  விலக்கப்பட்ட கனி என்பதன் மூலம் குறிப்பிட்டன. அது ஒரு குறியீடு என்பதையும் தாண்டி பல நூற்றாண்டுகளாக அக்கனி எது என்பதற்கு  இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டது வியப்புத்தான்.

 ஏவாளும் ஆதாமும் கீழ்படியாமை, மீறல் ஆகிய பாவங்களின் பொருட்டே பூமிக்கு அனுப்பப்பட்டனர். அக்குற்றத்தை காட்டிலும் நூற்றாண்டுகளாக அது எந்தக்கனி என்பதில் இத்தனை ஆராய்சிகள் செய்யப்பட்டிருக்கிறது.

 மொழியியலோ அழகியலோ தவறான புரிதலோ  ஆலிவிலிருந்து, மாதுளை, அத்தி, கோதுமை, திராட்சை என்று பல வசீகரிக்கும் வடிவங்கள் கொண்டு இறுதியில் ஆப்பிளாயிருக்கிறது விலக்கப்பட்ட கனி. இப்படித்தான் தீமையும் பல அழகிய, வசீகரிக்கும், சபலப்படுத்தும் வடிவங்களில் நம்முன் வந்து நிற்கிறது.

அதிலும் செக்கசிவந்த நிறமும் சதைப்பற்றும் சுவையும் கொண்ட ஆப்பிள் வசீகரமென்றால், முன்பே கடிக்கப்பட்ட ஆப்பிள்  கூடுதல் வசீகரம்தான்.

 சிவப்பு நிறம்கொண்ட ஆப்பிள் ஆசையும் காதலும் நிரம்பி இருக்கும் மனிதனின் இதயத்துக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. உலகெங்குமே  ஆப்பிள் வடிவம்  தொழில்நுட்பம், மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களின் அடையாளமாக கருதப்படுகிறது. 

ஜூன் 7 1954 ல் தனது 42வது வயதில் ஆலன் டூரிங் அவருக்கு மிக பிடித்தமான அடர்சிவப்பு ஆப்பிளில் சயனைடை ஊசியில் செலுத்தி அதை கடித்துண்டார் மறு நாள் காலையில் ஒரு துண்டு கடிக்கப்பட்ட ஆப்பிளின் அருகில் அவரது சடலம் கிடந்தது. அதே கடிக்கப்பட்ட ஆப்பிள் தான் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோவாக அமைந்திருக்கிறது.

விலக்கப்பட்ட கனி என்பது மாதுளையோ அத்தியோ ஆப்பிளோ திராட்சையோ அல்ல எவையெல்லாம் அறமற்றதோ அவையனைத்துமே விலக்கப்பட்ட கனிகள்தான். 

ஏவாள் அக்கனியை தாணுண்டு ஆதாமுக்கும் அளித்து அவர்கள் சொர்க்கத்தை  இழந்தாலும் உலகை தோற்றுவித்தார்கள், வெண்முரசு நாவல் நிரையின் இமைக்கணத்தில் இந்த  வாழ்வின் சுழற்சியை, தொடர்ச்சியை சிகண்டியும் இளைய யாதவரும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு அத்தியாயத்தின் இருவரிகள் சொல்லி விடுகிறது. //ஆணை பெண் உண்கிறாள். அவன் உடலின் பகுதியென்றாகிறாள். அவள் வயிற்றில் அவன் கருவாகிறான்” //

டிகாப்ரியோ மரம்!

மத்திய ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டின் ‘எபோ’ காடுகள் இயற்கை வளம் மிகுந்தவை. மலை யானை, உலகின் மிகப்பெரிய கோலியாத் தவளை மிக அரிய  உலகின் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் Red colobuses குரங்குகள் பல அரிய தாவர வகைகள் என பலவற்றின் வாழிடம் இதுதான். உலகின் மழைப்பொழிவில் எபோ காடுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது .

இந்த எபோ காடுகளில் 1500 சதுர கிமீ அளவுக்கு மழைக்காடுகள் எபோ ஆற்றின் அருகில் இருக்கிறது.இங்கு 65 மிக முக்கிய உயிரினங்கள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன

உலகின் பிற இயற்கை வளங்களைப்போலவே எபோ காடுகளும் கனிம சுரங்கங்களுக்ககவும், சட்ட விரோத விலங்கு வேட்டை மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றால் அழியும் அபாயத்தில் இருந்தது. பல சூழலியல் ஆர்வலர்கள் இந்த பிரச்சனையை  சர்வதேச அளவில் முன்வைத்தபோது எபோ காடுகள் பாதுகாக்கப்பட்ட பூங்காவாக அறிவிக்கப்படும் என்று அரசுத்தரப்பில் 2010ல் சொல்லப்பட்டும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதன் பின்னரும் எபொ காடுகளின் 1,300  சதுர கிமீ அளவுள்ள பரப்பின் மரங்கள் வெட்டப்படுவதற்கான உரிமம்  அரசால் வழங்கப்பட்டது. எபோ காடுகளின் உயிரினங்களும் அங்கிருக்கும் தொல்குடிகளுக்குமான மாபெரும் அச்சுறுத்தலாக அது இருந்ததால் எதிர்ப்புகள் வலுத்தன. 

 எனவே அழிவின் விளிம்பில் இருந்த எபொ காடுகளை பாதுகாக்க கேமரூனின் ஆரய்ச்சியாளர்கள் சூழியலாளர்கள் ஆகியோர் இணைந்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு டிகாப்ரியோ உள்ளிட்ட பல பிரபலங்களின் கையெழுத்தை சேகரித்து  அரசுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினார்கள் கூடவே எபோ காடுகளின் இயற்கை வளத்தை பட்டியலிட்டு உலகிற்கு அதன் முக்கியத்துவத்தை காட்ட நினைத்தார்கள் அப்படி பட்டியலிடுகையில்தான் அதுவரை அறியப்பட்டிருக்காத ஒரு மரம் கண்டுபிடிக்கப்பட்டது

 சீதாப்பழத்தின் தாவரக்குடும்பமான அனோனேசியை சேர்ந்த, 2022ல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  இம்மரத்திற்கு புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரும் இயற்கை ஆர்வலரும், சூழியல் செயற்பாட்டாளருமான லியோனார்டோ டிகாப்ரியோ வின் பெயரிடப்பட்டிருக்கிறது. 

கேமரூன் நாட்டின் எபோ காடுகளின் பாதுகாப்பில் டிகாப்ரியோ காட்டிவரும் அக்கறையையும் அதை பாதுகாக்கும் அவரது முன்னெடுப்புக்களையும் சிறப்பிக்கும் பொருட்டு அக்காடுகளில் மட்டும் காணப்படும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மரத்திற்கு Uvariopsis dicaprio என்று அவரது பெயர் இடப்பட்டிருக்கிறது, 

குறிப்பாக அக்காடுகளில் மரம் வெட்டப்படுவதற்கான எதிரான அவரது செயல்பாட்டின் முக்கியத்துவத்தின் பொருட்டே இந்த கெளரவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

எபோ காடுகளில் 50க்கும் குறைவான டிகப்ரியோ மரங்கள் மட்டுமே இருக்கின்றன அதுவும் வெறும் 4 சதுர கி மீ பரப்பளவில் மட்டும் இருக்கிறது. பலமுறை எபோ காடுகளில் தேடியும் இவை வேறெங்கும் காணப்படவில்லை.

கடல் மட்டத்திற்கு 850 மீ உயரத்தில்,4 அடி உயரமும் கவிழ்ந்து தொங்கும் மஞ்சள் இதழ்களை கொண்ட ஆண்மலர்களையும் கொண்டிருக்கும் இம்மரம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அவசியம் பாதுகாக்கப்படவேண்டிய தாவரங்களில் ஒன்றாகி விட்டிருக்கிறது. இக்காடுகளின் மரம் வெட்டும் உரிமம் ரத்தானதில் டிகாப்ரியோவின் பங்கு மிக முக்கிய மானதென்பதால் இம்மரம் அவர் பெயரில் அழைக்கப்படுவது அவருக்கான பொருத்தமான அங்கீகாரம்.

இந்தப் பெயரிடல் கியூ தாவரவியல் பூங்காவின் தாவரவியலாளர் களான  Martin Cheek  மற்றும் George Gosline, ஆகிய இருவரின் பரிந்துரையின் பேரில் நடந்திருக்கிறது.

உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் எட்டு முறை இடம்பெற்ற செல்வந்தர் எனினும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயற்கை பாதுகாப்பில் அக்கறை கொண்டவராகவே இவர் பொதுவெளியில் அறியப்படுகிறார்

திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர் 2014ல் தயாரித்த மலை கொரில்லாகளைக் காப்பாற்ற போராடும் நான்கு நபர்கள் குறித்த பிரிட்டிஷ் ஆவணப்படம் ’விருங்கா’ மிக குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விவசாயம், விலங்குகள் பாதுகாப்பு போன்ற பேசு பொருட்களை கொண்ட படங்கள் தயாரிப்பதில் டிகாப்ரியோ ஆர்வம் கொண்டிருந்தார். 

2019ல் புவி வெப்பமாதல் குறித்த  ஆவணப்படமாகிய  Ice on Fire, அவரால் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து டிகாப்ரியோ சூழலியம் (Environmentalism)  தொடர்பான பல முன்னெடுப்புக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

புவிவெப்பமாதல் உலகின் மிகப்பெரிய சவால் என்று சொல்லும் இவர் மழைக்காடுகள் அழிந்து வருவதையும் வாழிடங்ளை இழந்து பல உயிரினங்களின் இருப்பு கேள்விக்குறியாகவும் கவலைக்குரியதாகவும் ஆகிவிட்டிருப்பது குறித்தும்  தொடர்ந்து ஆவணப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்

இயற்கை சார்ந்த விழிப்புணர்வு மற்றும் செயல்பாட்டின் பொருட்டு லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை ஒன்றையும் (Leonardo DiCaprio Foundation,) 1998ல் நிறுவினார். இந்த அறக்கட்டளை மூலம் வளரும் நாடுகளின் இயற்கை பேணுதலுக்காக நிதியுதவிகள் அளிக்கப்படுகின்றது. 

இத்துடன் சூழலுக்கு இணக்கமான மின் வாகனங்களைத்தான் அவர் பயன்படுத்துகிறார்.

2000த்தில் சூழல் பாதுகாப்பு குறித்த பில் கிளிண்டனுடனான டிகாப்ரியோவின் நேர்காணல் க முக்கியமானது

2007ல் Live earth எனப்படும் மாபெரும் சூழல் விழிப்புணர்வு நிகழ்வையும் நடத்தினார் அதே ஆண்டில் ரஷ்யாவின் வன உயிர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய புலிகளுக்கான் உச்சிமாநாட்டுக்கு 1மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினார். அந்த மாநாட்டிற்கு பல தடங்கல்களுக்கு இடையில், இரண்டு முறை அவர் செல்லவேண்டிய விமானம் ரத்தாகியும் அவர் முயற்சி எடுத்து கலந்துகொண்ட போது புதின் டிகாப்ரியோவை ’’இவரே உண்மையான் ஆண்’’ என்று புகழ்ந்தார்.

இந்தோனேசியாவின் எண்ணெய்ப்பனை வளர்ப்பினால் காடழிதல் குறித்து கண்டனம் தெரிவித்தது, 2016ல்; அமெரிக்க தொல்குடிகள், அவர்களின் வாழ்விடங்களின், வன உயிர்களின் பாதுகாப்புக்கென  15.6 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தது, 2017ல்  காலநிலை மாற்றம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பாராமுகக்தை கண்டித்து ஊர்வலம் சென்றது என டிகாப்ரியோவின் சூழல் செயல்பாடுகளை வரிசையாக சொல்லிக்கொண்டெ போகலாம்

சமீபத்தில் கிழக்கு பசிபிக் தீவுக் கூட்டங்களின் பாதுகாப்பிற்கென டிகாப்ரியோ 43 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்திருக்கிறார். அவரும் அவரது அன்னையுமாக பல நன்கொடைகளை சூழியல் சார்ந்த செயல்பாடுகளுக்கென அளிக்கிறார்கள். அவரின் விக்கி பக்கத்துக்குள் சென்றால் இவரது சூழியல் செயல்பாடுகள் குறித்து மேலும் அறியலாம்

டிகாப்ரியாவின் இத்தையக சூழல் சார்ந்த செயல்பாடுகளால் அவரை சிறப்பிக்கும் பொருட்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  மலேசியாவில் மட்டும் காணப்படும் ஒரு வண்டினத்துக்கு  Grouvellinus leonardodicaprioi,  என்றும் டொமினிக் குடியரசின் சிலந்தி ஒன்றுக்கு Spintharus leonardodicaprioi  என்றும் அவரது பெயர் முன்பே வைக்கப்பட்டிருக்கிறது.

டிகாப்ரியோ விற்கு  வாழ்த்துக்கள்!

https://en.wikipedia.org/wiki/Uvariopsis_dicaprio

 மரியா சிபில்லா!

கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னதான அரிய நீல நிற வைரக்கல்லான  ஹோப் வைரம் உள்ளிட்ட பதினான்கு கோடி பல்துறை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்மித்சோனியன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் (Smithsonian National Museum of Natural History) ஒரு மதிய வேளை அது. அறிவியலாளரான சினிச்சி நகஹரா (Shinichi Nakahara) தனது மேசையின் இழுப்பறையை திறந்து அந்த கண்ணாடிப் பெட்டியை கவனமாக எடுத்தார்.1981 லிருந்து  அதனுள் இருந்த பதப்படுத்தப்பட்டிருந்த  பட்டாம் பூச்சியை மீண்டும் கவனமாக ஆராய்ந்தார். 

பட்டாம்பூச்சி மற்றும் அந்துப்பூச்சிகள் துறையில் வல்லுநரான நகஹராவால் அந்த பட்டாம் பூச்சியை வெகு காலமாக, 2018  டிசம்பர் மாதமான அப்போது வரை இனம் காண முடியாமல் இருந்தது. அந்த அரிய கருப்பு வண்ண ஆண் பட்டாம்பூச்சியின் உடல் பனாமாவில் கிடைத்தது. ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் மாணவன் பாப்லோ (Pablo Sebastián Padrón) அதை கண்டு பிடித்து அதன் உடலை புகைப்படம் எடுத்து நகஹராவுக்கு அனுப்பி அதை இனம் கண்டு சொல்லும்படி கேட்டிருந்தான்.  பின்னர் அது பாடம் செய்து அங்கே சேமித்துவைக்கப்பட்டது. அந்த பட்டாம்பூச்சியை இனம் காண்பது பெரிய சவாலாக அமைந்துவிட்டது நகஹராவுக்கு. மேலும் ஒரு பட்டாம்பூச்சி கிடைத்தால் ஒப்பிட்டு பார்க்க உதவியாக இருக்கும் என அவர் நினைத்துக் கொண்டு காத்திருந்தார்.

பளபளக்கும் கரிய இறக்கைகளும், இறக்கைகளின் விளிம்புகளில் பாலாடை நிறப் புள்ளிகளின் வரிசையும் கொண்ட அந்த பட்டாம்பூச்சி மிக வசீகரமாயிருந்தது. இறகுகள் இணையும் இடத்தில் இருந்த செந்தீற்றல் அதை மேலும் அழகாக்கி இருந்தது.

அதன் உடல் அமைப்பு பட்டாம்பூச்சிகளின் மிகப்பெரிய குடும்பமான பியரிடேவை (Pieridae) சேர்ந்தது என தெரிவித்தாலும் அதன் கருப்பு நிறம் சந்தேகத்துக்கு இடமளித்தது. எனவே நகஹராவும் பாப்லோவும் காத்திருந்தனர். 

Shinichi Nakahara

அதிர்ஷ்டவசமாக, இரண்டு மாதங்கள் கழித்து மிஸிஸிபி பல்கலைக்கழகத்தின் பூச்சியியலாளரான ஜான் (John MacDonald) பனாமாவிலிருந்து தன்னால் இனம் காணமுடியவில்லை என்னும் குறிப்புடன் ஒரு கருப்பு நிற பட்டாம்பூச்சியின் புகைப்படத்தை நகஹராவுக்கு அனுப்பியிருந்தார்.

புகைப்படத்தில் இருந்த பட்டாம்பூச்சி தன்னிடம் இருந்த அதே கருப்பு பட்டாம்பூச்சியை போலிருந்ததால், நகஹரா, ஜானிடம் அந்த பூச்சி உடலின் ஒரு காலை மட்டும் உடனே  அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். இரண்டின் DNA சோதனைகளையும் செய்து அவை Catasticta  பேரினத்தை சேர்ந்த  மிக அரிய வகை பட்டாம்பூச்சிகள் என்பதை கண்டறிந்தார். 

அதுவரை விவரிக்கவும், கண்டுபிடிக்கப்பட்டும் அடையாளம் காணப்பட்டுமிராத அவற்றின் வேறு மாதிரிகள் எங்கேனும் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறதா என அடுத்த 30 மாதங்களும்  14  பட்டாம்பூச்சி அருங்காட்சியங்களில் தேடிப்பார்த்த போது எங்குமே அவை இல்லை. எனவே  புதிய கண்டுபிடிப்பான அதற்கு பொருத்தமான பெயரை தேடினார் நகஹரா

அத்தனை அரிய பட்டாம்பூச்சிகளான அவற்றிற்கு 17ம் நூற்றாண்டின் பிரபல ஓவியக்கலைஞரும் பூச்சியியலில் பெரும் கண்டுபிடிப்புக்கள் செய்தவரும் பட்டாம்பூச்சிகளில் பேரார்வம் கொண்டிருந்தவருமான  மரியா சிபில்லா மெரியனின் (Maria Sibylla Merian) பெயரை வைக்க முடிவு செய்து அந்தப் பட்டாம்பூச்சிக்கு  Catasticta sibyllae என்று பெயரிட்டார்.

மரியா சிபில்லா அவர் வாழ்ந்த நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் மற்றும் ஓவியக்கலைஞராக அறியப்பட்டவர். 17ம் நூற்றாண்டில் பெண்கள் இருந்த நிலைக்கு மாறாக பல அரிய சாதனைகளை தாவரவியலிலும், பூச்சியியலிலும் செய்தவர்.

17ம் நூற்றாண்டின் பிரபல  தாவரவியல் ஓவியக் கலைஞரான  ஜெர்மெனியை சேர்ந்த மரியா சிபில்லா (1647-1717) மிக இளைய வயதிலேயே கம்பளிப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள் மற்றும் பூச்சிகளிலும் அவை வாழும், உண்ணும் தாவரங்களிலும்  வெகுவாக  ஆர்வம் கொண்டிருந்தார். மரியாவின் மாமா ஒரு பட்டுப்புழு உற்பத்தியாளர், எனவே அவருக்கு அப்புழுக்களை கவனிப்பதில் இயற்கையாகவே ஆர்வம் உண்டானது

மரியா தனது 11ம் வயதிலிருந்தே ஓவியங்கள் வரையத் துவங்கினார். அவரது பொழுதுபோக்கு இறந்த பூச்சிகளை பாடம் பண்ணுவதில்  அவரது தாய் மாமாவுக்கு உதவுவதும், அவற்றை அலமாரிகளில் அடுக்கி வைப்பதும்தான். எனவே மரியாவிற்கு பூச்சிகளின் உலகில் நல்ல பரிச்சயமுண்டானது, 

ஜான்ஸ்டன் (Jonston) உருவாக்கிய முதல் விலங்கியல் அகராதியை அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான அச்சகம் மரியா சிறுமியாக இருக்கையிலேயே வெளியிட்டது. அந்த அகராதியின் அழகிய வண்ணப்படங்களால் மரியா வெகுவாக  ஈர்க்கப்பட்டிருந்தாள். 

மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டில் ஏப்ரல் 2,  1647 ல்  சிற்பியும் பதிப்பக உரிமையாளரும் ஓவியருமான மேத்யூஸுக்கும் (Matthaeus Merian) ஜோஹன்னாவுக்கும் (Johanna Sibylla Heim) பிறந்தார்.  ஜொஹன்னா மெரியனின் இரண்டாவது மனைவி. மரியாவுக்கு 3 வயதாக இருக்கையில் தந்தை மேத்யூஸ் இறந்த பின்னர் ஜோஹன்னா உருவப்பட ஓவியரான  ஜேகப்பை  (Jacob Marrel-1613/14 – 1681)   மணந்துகொண்டார். 

மரியா ஒவியம் வரைவதை அவரது தாய் மறுமணம் புரிந்துகொண்ட பிரபல ஓவியரும் அவளது வளர்ப்புத்தந்தையுமான ஜேகப்பிடமிருந்து  கற்றுகொண்டார் .   

ஜேகப் ஒரு மலர் ஓவியர், உருவ வரைபட நிபுணர் மற்றும் தேர்ந்த சிற்பி.

ஃப்ராங்க்ஃபர்ட்டின் பிரபல உருவ வரைபட நிபுணரான  ஜார்ஜின் (Georg Flegel -1566-1638),   மாணவராக இருந்து ஓவியக்கலையை கற்ற இவர்   Utrecht க்கு 1632 ல் குடிபெயர்ந்தார். அங்கு உயிர் ஓவியக்கலை வல்லுநரான  ஜேனின் (Jan Davidsz. de Heem -1606-1683/4) அறிமுகம் உண்டானது. அக்கலையையும் ஜேகப் கற்றுத்தேர்ந்தார்

ஜேகப்பின் படைப்புக்களில் மிகவும் பிரபலமானவை மேசையின் மீதிருக்கும் கூடைகளில் வைக்கப்பட்டிருக்கும் கனிவகைகளும், பூச்சாடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மலர்களும் தான். குறிப்பாக கனிகளின் மேற்புறத்தின் நுட்பமான அமைப்புக்களை ஜேகப் துல்லியமாக வரைந்திருப்பார்.

அழகிய உலோகக் கிண்ணங்களில் வைக்கப்பட்டிருக்கும் பீச், ரத்தினக்கற்களை போன்ற விதைமுத்துக்களை காட்டிக் கொண்டிருக்கும் மாதுளை, தோல் மீதிருக்கும் மெல்லிய வெண்படலத்துடன் காணப்படும் கொத்து கொத்தான திராட்சைகள்  ஆகியவை மிக தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும்.

ஜேகப்பின் ஓவியங்களில் பூச்சி அரித்த இலைகளும், பழுத்து அழுகிய கனிகளும் காணப்படும். எத்தனை அழகியதாயினும் அழிவு என்பது இயற்கையில் தவிர்க்க முடியாது என்பதை அவரது ஓவியங்கள் உணர்த்தின.

ஜேகப்,  ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் பிறந்தார். எண்ணெய் ஓவியங்கள் அவரது தனித்த பிரியத்துக்குரியவையாக இருந்தன. 1641ல் ஜேகப் கேதெரினா எலியட்டை மணந்தார். 1649ல் எலியட் மரணமடைந்த பின்னர் ஃப்ராங்க்ஃபர்ட்டில் வாழ்ந்துவந்த   பிரபல சிற்பியான மேத்யூஸ் மெரியனின் (Matthäus Merian) விதவையான  ஜொஹன்னா சிபில்லாவை (Johanna Sibylla Heimius)  1651ல் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அப்போதுதான் மனைவியின் மகளான மரியாவை தனது மாணவராக்கிக்கொண்டு ஓவியக்கலையை கற்பித்தார்.

அப்போதிலிருந்து  அவர் இறந்த 1681 வரை அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டிலேயே பெரும்பாலும் வாழ்ந்தார்.

ஜேகப்பின் ஓவியங்களில் குறியீடுகள் மிக சிறப்பானவை. மலர்களில் பல்லியோ  பட்டாம்பூச்சிகளோ இருந்தால் அவை உயிர்த்தெழுதலையும், நத்தைகள் சோம்பேறித்தனத்தையும் குறித்தன 

கூரிய இதழ்களுடன் இருக்கும் நீண்ட ஊதா மலர்மஞ்சரிகள் தூய ஆவியை, வாடிய மலர்கள் மரணத்தை,  லில்லிகள் பணிவையும் குறித்தன. ட்யூலிப் மலர்களே அவரின் சிறப்பு ஓவியங்கள் என கருதப்படுகின்றன. ட்யூலிப் மலர்களின் ஓவியங்களும் அவற்றின் விலைகளும் குறிப்பிடப்பட்டிருந்த ஜேகப்பின் நான்கு ஓவியத்தொகுதிகள் மிக புகழ்பெற்றவை. மரியாவும் அவரை போலவே ட்யூலிப்களின் ஓவியங்களை வரைந்தார்.

ஜேகப்பின்  மறைவுக்கு பின்னர் அவரது மகனும் மரியாவின் சகோதருமான கேஸ்பர் மெரியன் மரியாவுக்கு செம்புப் பட்டயங்களில் செதுக்கோவியங்களை வரைய கற்றுக்கொடுத்தார். அக்காலத்தில் ஜெர்மனியில் பெண்கள் ஓவியம் வரைவதும் விற்பதும்  சில நகரங்களில் தடை செய்யப்பட்டிருந்தது.  ஆனால் மரியா வாழ்நாள் முழுவதும் ஓவியங்களை வரைந்தார்

மரியா  சிறுமியாயிருந்த போதிலிருந்து கர்ப்பமுற்றிருந்த போதும் , குழந்தை வளர்ப்பு காலங்களிலும், இல்பேணிக்கொண்டிருக்கையிலும் எப்போதும் வரைந்துகொண்டே இருந்தார்.

மரியாவுடன் ஓவியம் வரைய கற்றுக்கொண்ட ஜேகப்பின் மாணவரான ஜோகன்ஸைத்தான் (Johann Andreas Graff)  மரியா  1665ல்  காதல் திருமணம் செய்துகொண்டார். மரியாவின் கணவரும் கட்டிடக்கலை ஓவியங்களில் வல்லுநர். அவரது 9 பெரிய தாள்களில் வரையப்பட்ட st. பீட்டர்ஸ்  தேவாலயத்தின்  ஓவியம் மிக பிரபலமானது. ஆனால் மரியாவுடையது தோல்வியுற்ற தாம்பத்யம் .  

 1668ல் மரியா அந்நகரின் இளம்பெண்களுக்கு மலரோவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார்,  Jungferncompaney (“Company of Young Misses,”) எனப்படும் திருமணத்திற்கு காத்திருக்கும் மேல்மட்ட குடும்பப்பெண்களின்  அத்தகைய குழுமங்களில் மலர்களின்  ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பது, லினென் துணிகளில் இயற்கை சித்திரங்களை எம்பிராய்டரி செய்வது, ஆகிய வகுப்புக்களின் மூலம் மரியாவுக்கு பல செல்வந்தர்களின் சொந்த தோட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடைத்தது. மேலும் பல பூச்சிகளை தாவரங்களை மரியா வரைய இவை உதவியாக இருந்தன

 பெரும்பாலான் ஐரோப்பிய பூச்சி இனங்களை ஆராய்ந்திருந்த மரியா எப்படி அவை பிறக்கின்றன, வளர்கின்றன,உணவுண்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன இறக்கின்றன என்பதை முழுமையாக ஆய்வு செய்து  ஓவியங்களாக ஆவணப்படுத்தினார். 

மரியாவுக்கு புழுக்கள் அழகிய பூச்சிகளாக உருமாறுவதை காண்பதில் பெருவிருப்பம் இருந்தது.  மரியா பூச்சிகளின் இனப்பெருக்க உறுப்புக்களை கவனித்து அவற்றின் ஆண் பெண்  வேறுபாட்டுடன் ஓவியங்கள் வரைந்தார்

பூச்சிகளை குறித்த பயமமேதுமில்லாமல் அவற்றை கைகளில் பிடித்து கவனமாக உற்று நோக்கி பல ஓவியங்களை அவர் வரைந்தார். பல வகையான பூச்சிகளை வீட்டில் பெட்டிகளில் வளர்த்தார்

மரியாவின் வீடு சீசாக்களிலும் பெட்டிகளிலும் அடைக்கப்பட்டு வளர்ந்த பூச்சிகளாலும் தொட்டிகளில் வளர்ந்த பல வகையான செடிகளாலும் நிறைந்திருந்தது

1679 ல் தனது இரண்டாவது மகள் பிறந்த ஒரு வருடத்தில், இரு வருடங்கள் கூர்ந்து கவனித்து வரைந்த ஓவியங்கள், தகவல்கள் அடங்கிய  ’’கூட்டுப்புழுக்களின் அதிசய உருமாற்றம்’’ என்னும் தனது    Der Raupen wunderbarer Verwandlung (the wondrous transformation of caterpillars  and their curios diet of flowers )  நூலை வெளியிட்டார். அவர் கைகளால் வரையப்பட்ட, பல வண்ணங்களில் இருந்த, வெகு அழகிய, மிக துல்லியமான பூச்சிகள், அவை அமரும் தாவரங்களின் ஓவியங்கள் அறிவியல் இலக்கியத்தின் புது வரவாக கவனம் பெற்றன,

அந்நூலில் பிற பூச்சியியல் நூல்களில் இருப்பதைப்போல செடிகொடிகளின் பின்னணியில் பூச்சிகளை வரையாமல் ஒவ்வொரு பூச்சிக்கும் அவற்றின் வாழிடத்துக்கும், உணவுக்கான தாவரத்துக்குமான தொடர்பையும் காட்சிப்படுத்தினார்.

உண்மையில் உலகின் முதல் சூழலியாளர் மரியாதான்  1683ல் இதன் இரண்டாம் படைப்பையும் மரியா வெளியிட்டார். தாவரங்களுக்கும்  விலங்குகளுக்குமான தொடர்புகளை மரியா அவரது ஓவியங்களில் ஆவணப்படுத்தியிருந்தார்.

லத்தீன் மற்றும் டச்சு மொழிகளில் சூழியல் அடிப்படைகளை தெளிவாக கொண்டிருந்த அந்நூல்கள் ஐரோப்பாவில் பெரும அதிர்வலைகளை எழுப்பியது

1681ல் தந்து வளர்ப்புத்தந்தை ஜேகப் இறந்தபின்னர் மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு திரும்பி தன் அன்னையுடன் வசித்தார் அப்போதும் பல படைப்புக்களை வெளியிட்டார்

1686ல் தவளைகள் அவற்றின் முட்டைகள், தலைப்பிரட்டைகளின் ஓவியங்களுடன் மரியா வெளியிட்ட ஓவியங்களும் குறிப்புக்களும் அவருக்கு பின்னர் வந்த டச்சு நுண்ணோக்கியலாளரான ஆண்டனி வான் லூவன் காக்கின் (1632-1723)  அதேபோன்ற கண்டுபிடிப்புக்கு   வெகுவாக முன்னால் இருந்தது. மரியாவே முதன் முதலில் இருவாழ்விகளின் இனபெருக்கவியலை ஆவணப்படுத்தியவர் 

1698ல் மரியா  தனது ஓவியங்களை ஏலம் விட்டு பெருந்தொகை பெற்று பூச்சிகளை அவற்றின் வாழ்விடத்துடன் இணைத்து வரையத் துவங்கினார். அதன் பின்னர் மரியா உலகெங்கும் ஒரு தாவரவியலாளராக, பூச்சியியலாளராக ஓவியக் கலைஞராக, இயற்கையியலாலராக அறியப்பட்டார்.

 அக்காலகட்டத்தில் பிரபலமாக  இருந்த  அலங்கார ஓவியங்களைப் போலல்லாமல் தேவையற்ற  வரியோ, வண்ணமோ இல்லாமல் தன் கண்களால் கண்டவற்றை அப்படியே  கைகளால்  வரைந்தார் மரியா 

17ம் நூற்றாண்டின் பழமையான கலாச்சாரத்தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியல் குறித்த  பல ஆய்வுகள் செய்தார், ஆனால் .அக்காலத்தில் இனப்பெருக்கம் குறித்த ஆய்வு பெண்களுக்கானதல்ல  என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்

அப்போதிலிருந்து இன்று வரைக்கும் மரியா கலாச்சார தடைகளை உடைத்து வென்று முன்னேறிய பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் கருதப்படுகிறார். மரியாவின் ஓவியங்கள் மிக துல்லியமான அறிவியல் அடிப்படைகளையும் மிகச்சரியான வண்ணங்களையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு பூச்சிகளையும் அவற்றின் முட்டைப் பருவத்திலிருந்து படிப்படியாக கவனித்து அவற்றின் இறப்பு வரை வரைந்து ஆவணப்படுத்தினார்

ஓவியங்களில்  இருந்த பூச்சிகள், தாவரங்கள் குறித்த இனப்பெருக்கவியல் உள்ளிட்ட பல   மிக விவரமான தகவல்களையும் மரியா எழுதினார் . மரியாவே பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் குறித்து ஓவியங்களில் காட்சிப்படுத்தி ஆவணப்படுத்திய முதல் பெண்மணி.   

 17 வருட மணவாழ்வு 1685ல் விவாகரத்தில் முடிந்த பின் மரியா நெதர்லாந்தின்  (Friesland) மதம்  சார்ந்த  Labadists என்னும் அமைப்பில் தன் சகோதர கேஸ்பருடன்  இணைந்துகொண்டார். அவ்வமைப்பு கிருத்துவம் சார்ந்த பல சேவைகளை செய்து வந்தது. அக்குழுவின் நோக்கமும் நம்பிக்கையும் இயற்கையின் படைப்புகளை நெருங்கி அறிவதன் மூலம் அவற்றை படைத்த கடவுளை அறியலாம் என்பது.  அங்கு மரியா மேலும் ஓவியங்கள் வரையலானார் இரண்டு வருடங்களில் மரியாவின் பல ஓவியங்களின் தொகுதிகள் அவ்வமைப்பின் அச்சுக்கூடத்தில் பிரசுரமாகியது.

அந்த மத அமைப்பில்  அவரது  கணவர்  Graff தானும் இணைந்துகொண்டு மீண்டும் மரியா தன்னுடன் வாழவேண்டுமென பல தகராறுகள் செய்தார். 1692 ல் தாயும் இறந்த பின்னர்  மரியா ஆம்ஸ்டர்டாமுக்கு சென்று  மகள்களுடன் வசித்தார். அங்குதான் பெண்களும் வணிகம் செய்யலாம் என்பதை கண்டுகொண்டார்   அங்குதனது  ஓவியங்களை விற்று கிடைத்த வருமானத்தில் சுயமாக வாழ்ந்தார்.

1698ல் மரியாவும் மகள்களும் ஆடம்பரமான ஒரு வீட்டில் வாழ்ந்தனர்.

ஆம்ஸ்டர்டாமில் மரியாவின் படைப்புகள் நல்ல விலைக்கு போனது. அங்கு அவர் உலகின் பல பாகங்களிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த பாடமாக்கப்பட்ட  பல பெரிய பட்டாம்பூச்சிகள் அருங்காட்சியகங்களின் கண்ணாடிச்சட்டகங்களில் ஊசியால் பிணைக்கப்பட்டிருந்ததை பார்த்தார்.எனினும் அவர் அவற்றை ஒரு போதும் வரையவில்லை. பூச்சிகளை அவற்றின் இயற்கையான வாழிடங்களில் வரையவே விருப்பம் கொண்டிருந்தார்.

1699ல் ஆம்ஸ்டர்டாம் அரசு  மரியாவிற்கும் மகள் டோரதியாவுக்கும் சுரிநாம் செல்ல அனுமதி அளித்தது. அங்கு ஐந்தாண்டுகள் இருப்பதாக பயணத்திட்டம் இருந்த்து எனினும் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மலேரியா தொற்று உண்டானதால் அவர் ஆம்ஸ்டர்டாமிற்கு திரும்பினார். அந்த  பயணத்திற்கான நிதி திரட்டும் பொருட்டு மரியா தனது 255 ஓவியங்களை விற்றிருந்தார். அப்போது அறிவியல் நூல்களுக்கான மொழியாக லத்தீன் இருந்தது. எனவே மரியா லத்தீன மொழியை கற்றுக்கொண்டார்

அப்போது அதிகம் அறியப்பட்டிருக்காத அறிவியல் ரீதியான தேடலுக்கென மரியா அந்தப் பயணத்தை மேற்கொண்டார். ஜூன் 1699ல்  தனது 52வது வயதில்  மகள் டோரதியாவுடன்     தென்னமெரிக்காவின் சுரிநாமிற்கு மரியா பயணப்பட்டார். அது ஒரு மிக துணிச்சலான பயணம் அதற்கு முன்பு வரை ஆண்களால் அரசியல், பொருளாதார ராணுவ காரணத்துக்காகவே அப்படியான தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்காலத்தில்  அரிய பொருட்களை தேடும் பொருட்டு கடற்பயணம் மேற்கொண்ட ஆண்களில் யாரும் மரியாவை உடனழைத்துச் செல்லவில்லை.

அப்போதைய ஆணாதிக்க உலகில் ஒரு 52 வயது பெண்ணாக அவர் அறிவியல் தேடலுக்கு ஒரு பயணத்தை முன்னெடுத்தது மிகப்பெரிய ஆச்சரியம். தனது ஓவியங்களை விற்றுக்கிடைத்த நிதியை கொண்டே மரியா பயணத்தை செய்துமுடித்தார்.

சுரிநாமில் 2 வருடங்கள் மரியா தன் கைகளில் கிடைத்தவற்றை எல்லாம் சேகரித்தார். தலைநகர் Paramariboவின் பூங்காக்களில், சுரிநாம் ஆற்றின் கரைகளில், கரும்புத் தோட்டங்களில் மட்டுமல்ல அந்த ஆற்றை சிறு படகில் கடந்து மழைக்காடுகளிலும் தனியே பயணித்து அங்கு வாழ்ந்த தொல்குடிகளை சந்தித்து அவர்களிடமிருந்தும் பல பூச்சிகளை பெற்றார். பூச்சி, புழுக்கள் மூலிகைகள் குறித்த தகவல்களை சேகரித்தார்.  தொல்குடியினரும் மரியாவின் மீதான அன்பினால் காடுகளுக்குள் துணையாக வந்து அவரது ஆய்வில் உதவினார்கள்.

சுரிநாமில் இரு அடிமைப் பணிப்பெண்கள் மரியாவிற்கு உதவினர். மரியாவின் அத்தனை புகழுக்கும் இந்த அடிமைபெண்களே காரணம் என சொல்லப்படுகிறது. சில படைப்புக்களில் அவர்களிருவரின் பெயர்களை குறிப்பிடாமல் இரு இந்திய அடிமைப் பணிப்பெண்களுக்கும் தனது நன்றியை மரியா தெரிவித்திருக்கிறார்.

பல மரங்களில் மரியா ஏணியில் ஏறி உயரங்களில் வாழ்ந்த பூச்சிகளை சேகரித்தார்.  மலேரியா காய்ச்சல் வந்ததால் 1701ல் தான் மரியா மீண்டும் ஆம்ஸ்டர்டாமுக்கு திரும்பினார். இந்தப் பயணத்தின் ஆய்வு முடிவுகள் தான் மரியாவின் பெரும்படைப்பான Metamorphosis insectorum Surinamensium

 1705.ல் அவரது மிக பிரபலமான படைப்பான  ’’Metamorphosis Insectorum Surinamensium’’ வெளியானது அந்நூலில் சுரிநாமின் புழுக்கள், தேரைகள், எறும்பு, பல்லி, நாகம், சிலந்திகள் மற்றும் பலவித  பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் தெளிவாக ஆவணப்படுத்த பட்டிருந்தன

லத்தீன் மொழியில் எழுதப்பட்ட  பல செதுக்கு ஓவியங்களுடன் கூடிய அந்த ஆடம்பரமான வண்ணமயமான  இந்த  நூலிலிருந்த மழைக்காடுகளின், தாவரங்களும், பல்லி பாம்புகள் உள்ளிட்ட பூச்சி இனங்களும் பல நாடுகளின் இயற்கை ஆர்வலர்களின் வீடுகளுக்குள் நுழைந்தன.

மலர்மஞ்சரிகளில் அமர்ந்திருக்கும் நீல பட்டாம்பூச்சிகளும், உணர்கொம்புகளை நீட்டிக்கொண்டிருக்கும் அந்துப்பூச்சிகளும், முட்டைகளும் தலைப்பிரட்டைகளும் சூழ இருக்கும் கொழுத்த தவளைகளும், பல இலைகளை தின்று கொண்டிருக்கும் வரிகளுடன் கூடிய கூட்டுப்புழுக்களும், மரங்களின் மீது ஏறிக்கொண்டிருக்கும் எறும்புகளும் இருக்கும் அவரது ஓவியங்கள் தத்ரூபமாகவும் அழகாகவும் மட்டுமல்லாது, அறிவியல் ரீதியாக மிகச் சரியாகவும் இருந்தன. பல ஓவியங்களில் மலரிதழ்களில் பூச்சிகள் உண்டாகிய துளைகளும் பாதி கடிக்கப்பட்ட இலைகளும், இதழ்களே இல்லாத மலர்களும் இருந்தன.

மரியாவின் நூல் ஏதேன் தோட்டம்போல அழகாக உருவாக்கப்பட்டதல்ல, இயற்கையின் விதிக்குட்பட்ட உயிரினங்கள் உள்ளபடிக்கே அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன

 மரியா இந்த நூலை வெளியிட்ட போது அவரது சமகால அறிஞர்கள் உயிர்களின் உயிர்களின் தன்னிச்சையான தோற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அரிஸ்டாட்டிலின் காலத்திலிருந்து நம்பப்பட்ட ’’உயிர்கள் உயிரற்றவைகளிலிருந்து தன்னிச்ச்சையாக தோன்றின என்னும் கருதுகோளான spontaneous generation விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மரியாவின் படைப்புக்கள் பூச்சிகளின் சிறுவிலங்குகளின் இனப்பெருக்கத்தை துல்லியமாக காட்டின. ஆண்பெண் வேறுபாட்டை இனப்பெருக்க உறுப்புக்களை துல்லியமாக விவரித்த மரியாவின் நூல் அப்போது பெரிய பேசு பொருளாக இருந்தது.

மாமிசம் உண்ணும் பூச்சிகள் அழுகும் இறைச்சியிலிருந்தும், மேலும் பல பூச்சிகள் புத்தகங்களுக்குள்ளிருந்தும், பனித்துளிகளிலிருந்து அந்துப்புச்சிகளும்,  எலிகளும் தேள்களும் பழைய நைந்து போன கம்பளியிலிருந்தும் தோன்றுவதாக  பலர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கையில் மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியலை ஓவியங்களில் ஆவணப்படுத்தினார். 

 மரியா உலகின் பல அறிவியல் அறிஞர்களுடன் தொடர்பில் இருந்தார். அவரது படைப்புக்கள் பலநாடுகளின் நூலகங்களில் பெருமைக்குரிய சேகரிப்பாக காட்சிப்படுத்தப்பட்டன. ஜெர்மனியின் மிகப்புகழ் பெற்ற கவிஞரும், பூச்சிகளின் வளர்சிதை மாற்றம் குறித்த ஆர்வம் கொண்டிருந்தவருமான  கோத்தி (Goethe) மரியாவை கலைக்கும் அறிவியலுக்குமிடையில் வண்ணமயமாக பயணித்தார் என்று புகழ்கிறார்.

 17ம் நூற்றாண்டில் பெண்கள் எளிதில் செய்துவிடமுடியாத துணிச்சலான பலவற்றை செய்தவரும் அசாதாரணமான அறிவியல் படைப்புக்களை உருவாக்கியவருமான மரியாவின் படைப்புகளின் முக்கியத்துவத்தை அந்த நூற்றாண்டில் பலரறிந்திருகக்வில்லை  

மரியா  ஓவியங்களை வரைய துவங்கி இருக்கையில் அவரது ஓவியங்களில் இருந்த பல பட்டாம்பூச்சிகள் இனம் காணப்பட்டிருக்கவில்லை. மரியாவிற்கு பூச்சிகளை இனங்கண்டு வகைப்படுத்தலில் ஆர்வமில்லை அவரே ஒருமுறை சொன்னது போல அவை எப்படி உருவாகி உருமாறி வாழ்வை முழுமை செய்கின்றன என்பதில்தான் ஆர்வமிருந்தது.  வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் பிற்பாடு மரியாவின் பல படைப்புக்களை பூச்சிகளின் வகைப்பாட்டின்போது உதவியாக வைத்துக்கொண்டார்.  

ஜெர்மானிய விலங்கியலாளர்  Ernst Haeckel  சூழலியல் என்று பொருள்படும்  Oecologie என்னும் சொல்லிலிருந்து ecology என்னும் சொல்லை உருவாக்கியதற்கு இரு  நூற்றாண்டுகள் முன்னரே மரியா சூழலியல் தொடர்புடைய பல நூறு ஓவியங்களை வரைந்திருந்தார்

 பல ஓவியங்களில் மரியா உணவுச்சங்கிலியையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். 

Metamorphosis நூலின் 18 வது ஓவியத்தில் ஒரு கொய்யா மரத்தின் இலைகளை எறும்புகளும், இலை வெட்டும் பூச்சிகளும் கடித்து தின்றுகொண்டு, தண்டில் ஏறிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில எறும்புகள், சிறு சிலந்தியொன்று, ஒரு கரப்பான்பூச்சியின் அருகில் ஒரு டாரன்டுலா சிலந்தி ஒரு தேன்சிட்டுவை தின்று கொண்டிருக்கிறது,  சினைப்பையுடன் ஒரு டாரண்டுலாவும் காணப்படுகிறது. 

உயிரினங்களின் வாழ்விற்கான போராட்டத்தை,  சார்லஸ் டார்வின் தனது   Origin of Species, வெளியிடுவதற்கு 150 வருடங்களுக்கு முன்னரே மரியா  தனது படைப்புகளில் விவரித்திருந்தார்.

1670 ல் அவர் வெளியிட்ட கேட்டர்பில்லர் நூலில் ஆண் பெண் பட்டாம்பூச்சிகள் கூடி முட்டை இட்டு புழுக்கள் உருவாகின்றன என்பதை முதன்முதலில் எழுதி ஆவணப்படுத்தி இருந்தார்.

மரியாவின் படைப்புகள் பிற அறிவியல் படைப்புகளில் இருந்து மிகவும் வேறுபட்டிருந்தன. உதாரணமாக வாழைமரத்தின் ஓவியத்தில் அவர் அதன் தாவரவியல் பண்புகளுடன் வாழைப்பழத்தின் சுவையையும் விவரித்திருந்தார். ஐரோப்பா அதுவரை அத்தகைய படைப்புகளை கண்டிருக்கதில்லை.

 பனையின் வேரை வெட்டி வேகவைத்து உண்ணலாம் என்னும் குறிப்புடன், அவை ஆர்டிசோக்குகளின் மையப்பகுதியை காட்டிலும் சுவையானவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பல ஓவியங்களில்  தாவரங்களின் மருத்துவ இயல்புகளையும் மரியா குறிப்பிட்டிருக்கிறார்.  

1715ல் பக்கவாதம் தாக்கி உடலின் ஒரு பாகம் செயலிழந்தது, அந்நிலையிலும் மரியா ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார்.

மரியாவிற்கு இரு மகள்கள் ஜொஹானா மற்றும் டோரதியா (Johanna Helena Herolt Graff&    Dorotea Maria Hendriks Graff).மரியாவின் மகளான  ஜொஹானாவும் மிகப்புகழ்பெற்ற ஓவியர். ஜொஹானாவின் பல படைப்புகளில் அவளது தாயின் கையெழுத்தையும் காணலாம்’

மரியா ஜனவரி 13, 1717 ல் அவரது 70 வது பிறந்த நாளுக்கு முன்னர் இறந்த போது அவரது இறப்புச்சடங்கிற்கு வந்திருந்த  ரஷ்யப் பேரரசர் முதலாம்  பீட்டர் அலெக்சியேவிச் ரொமானோவின் தூதுவர் மரியாவின் வீட்டில் மீதமிருந்த வண்ணக்கலவைகளை பெரும் விலைக்கு பெற்றுக்கொண்டார்.

மரியாவின் இறப்புக்கு முன்னரே அவரது படைப்புகளில்  ரஷ்ய பேரரசர் பீட்டர் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது மறைவுக்குபின்னர் அவரது மீதமிருந்த பெரும்பாலான படைப்புக்களை அவரே பெருவிலை கொடுத்து வாங்கிக்கொண்டார்.  

மரியா இறந்தபின்னர் St. Petersburgல் அவரால் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தில்  ஓவியரான டோரதியாவின் கணவர் ஜார்ஜுக்கு (Georg Gsell) நல்ல பதவியளித்து அரசவை ஓவியராகவும் வைத்துக்கொண்டார். டோரதியாவும் அங்கேயே பின்னர் வாழ்ந்தார்.

மிக சிறப்பான படைப்பாளியாக இருந்தும் உலகால் அங்கீகரிக்கப்படாத ஜேகப் மரணப்படுக்கையில் இருக்கையில் ’’இல்லை நான் முற்றிலும் உலகால் மறக்கப் படமாட்டேன், நான்தான் மரியாவின் தந்தை என உலகம் என்னை நிச்சயம் ஒரு நாள் கொண்டாடும்’’ என்றார், மரியா ஜேகப்பை காட்டிலும் பிரபலமானார்.

மரியாவின் caterpillars நூலின் மூன்றாவது  தொகுப்பை மரியாவின் மறைவுக்கு பின்னர் டோரதியா வெளியிட்டார். அவரது metamorphosis நூல் 18 ம் நூற்றாண்டில் பல  மறுபதிப்புக்கள் வெளியாகி அவர் பெயரை  உலகெங்கும் பரப்பின

சிறப்புக்கள்

மரியாவின்றப்புக்கு வெகுகாலம் கழித்தே அவரது படைப்புக்களின்  முக்கியத்துவம் உலகால் அறியப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில்தான் மரியாவின் படைப்புகள் மீண்டும்  உலகின் கவனத்துக்கு வந்தன. அவரது பல படைப்புகள் அப்போது சிறப்பு செய்யப்பட்டன

  • 1905ல்  Opsiphanes cassina meriana என்னும் பட்டாம்பூச்சியும் 1967ல்  பட்டாம்பூச்சியின் துணை சிற்றினமொன்றிற்கும் postman butterfly Heliconius melpomene meriana; என்றும் மரியாவின் பெயரிடப்பட்டது.
  • க்யூபாவின் ஒரு அந்துபூச்சிக்கு  Erinnyis merianae என்றும் ஒரு  வண்ணமயமான வண்டினத்துக்கு  Plisthenes merianae என்றும் பெயரிடஒபட்டது. 
  • கும்பிடு  பூச்சியின் பேரினமொன்று  Sibylla என்றும், ஆர்கிட் வண்டினமொன்று Eulaema meriana என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.
  • Argentine black and white tegu (Salvator merianae), என்னும் வளர்ப்பு பிராணியாக வளர்க்கப்படும் பெரிய பல்லி வகைக்கும் அவரது பெயரடிப்பட்டிருக்கிறது.
  • மரியாவின் சிலந்திகள் குறித்த படைப்புகளை சிறப்பிக்கும் பொருட்டு  பறவைகளை பிடித்து உண்ணும் சிலந்தியொன்றிற்கு  Avicularia merianae  என்று பெயரிடப்பட்டது.
  • 2017ல் மற்றுமொரு சிலந்தி Metellina merianae என்று அவர் பெயரிடப்பட்டது 
  • ஒரு தேரை  Rhinella merianae என்றும் ஒரு நத்தை Coquandiella meriana  என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றன
  • ஆப்பிரிக சிறு பறவையினம் இன்றிற்கு Saxicola torquatus sibilla.   எனப்பெயரிடப்பட்டிருக்கிறது.
  • ஒரு தாவர பேரினத்துக்கு  Meriania எனவும், ஒரு தாவர சிற்றினம் Watsonia meriana   எனவும் பெயரிடப்பட்டது.
  • 2009  வெளியான The Year of th Flood   என்னும் நாவலில் மரியா ஒரு துறவியாக காட்டப்பட்டிருந்தார்.
  • மரியாவின் உருவப்படம் ஜெர்மனியின் 500 DM நோட்டில் சித்தரிக்கப்பட்டது
  • அதுபோலவே  0.40 DM தபால் தலையில் அவரது உருவப்படம் சித்தரிக்கப்பட்டு செப்டம்பர் 17 1987ல் வெளியிடப்பட்டது. மரியாவின் பெயரில்  ஐரோப்பாவில் பல பள்ளிகள் இருக்கின்றன,
  • மொசார்ட்டின் கச்சேரிகளில் இசைக்கருவிகளில் மரியாவின் மலரோவியங்கள் சித்தரிக்கப்பட்டன.
  • 2008ல்  பனாமாவின் அரிய கருப்பு பட்டாம்பூச்சியொன்றிற்கு Catasticta sibyllae  பெயரிடப்பட்டது.
  • 2013, ஏப்ரல் 2 ம் தேதி மரியாவின் 366 வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் அவரது  பூச்சிகள், பல்லிகள் தாவரங்களின் ஓவியங்களிலேயே கூகுள் என வடிவமைத்து சிறப்பித்திருந்தது .
  • ஜெர்மெனியின் இரண்டாவது  பெரிய நவீனமயமாக்கபப்ட்ட ஆய்வுக்கப்பலுக்கு   மரியாவை கெளரவப்படுத்தும் விதமாக  RV Maria S. Merian  என்று பெயரிடப்பட்டது
  • 2016ல் மரியாவின், Merian’s Metamorphosis insectorum Surinamensium  மறு பிரசுரம் செய்யபட்டது.
  • 2017ல்  மரியாவின் ஓவியங்கள் குறித்த ஒரு கருத்தரங்கு ஆம்ஸ்டர்டாமில் நிகழ்ந்தது 
  • மார்ச் 2017ல்,  ஓஹியோவின் Lloyd நூலகம் மற்றும்   அருங்காட்சியகத்தில்  மரியாவின் பல ஓவியங்களின் முப்பரிணாம  கண்காட்சியையும், பாடம் செய்யப்பட்ட பல பூச்சிகளின் கண்காட்சியையும்  ஏற்பாடு செய்திருந்தது
  • நியூயார்க் டைம்ஸின் 2017 ஜனவரி இதழில் மரியா உலகின் முதன் முதலாக பூச்சிகளை அவற்றின் வாழிடம் உணவு ஆகியவற்றுடன் வரைந்து ஒரு கூட்டு சூழலியல் தொகுப்பாக ஓவியங்களை வரைந்த முதல் ஆளுமை என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது

மரியா அசாதாரணமான , மிக ஆர்வமுள்ள, அதிபுத்திசாலியான சுயசார்புள்ள பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார்.

மரியா உயிரனங்களுக்கான தொடர்புகளை ஆவணப்படுத்திய முதல் அறிஞரும் கலைஞருமாவார் 

அப்போது உருவாகி இருக்காத சூழலியல் துறையை நிறுவியவரகவும் மரியாவே கருதப்படுகிறார் ஏனெனில் மரியாவின் ஓவியங்கள் உணவுச்சங்கிலி, உயிரினங்களின் ஒன்றுடன் ஒன்றான தொடர்பு, எவ்வாறு அவற்றின் வாழிடம் அவற்றின் வாழ்க்கையில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது, எப்படி வாழ்விற்கான போராட்டத்தில் வலியவை வெல்கின்றன ஆகியவற்றை  காட்டுகின்றன. இவற்றின் தொகுப்பைத்தான்  இப்போது சூழலியல் என்கிறோம்

 உயிரற்றவைகளிலிருந்து தானாகவே உயிரினங்கள் தோன்றுகின்றன என்னும் கருதுகோளை முதலில் பொய்ப்பித்தவரும் மரியாதான்.

அறிவியலை தங்களது பாதையாக தீர்மானம் செய்யும் பெண்கள் மரியாவை முன்னோடியாக கொள்ளலாம், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பாதையேதும் இல்லாத பிரதேசங்களில் மரியா புதிய பாதைகளையும், அறிவியலுக்கும் கலைக்குமிடையேயான பாலங்களையும் உருவாக்கினார் பூச்சியியலுக்கும் தாவரவியலுக்குமான  தொடர்புகளை கண்டறிந்து ஆவணப்படுத்தினார்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆர்டிஸ் லைப்ரரி அருங்காட்சியங்களில்  லின்னேயஸ், அரிஸ்டாட்டில், சார்லஸ் டார்வின் உள்ளிட்ட 35 ஆண் அறிஞர்களின் படைப்புக்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்களில்  M.S.Merian என்னும் பெயரைப்பார்த்தால் கூர்ந்து கவனியுங்கள்,  அறிவியல் வரலாற்றில் மரியா விட்டுச்சென்றிருக்கும் வண்ணச்சுவடுகள் அதில் இருக்கும்.

குரு-(Kuru)

  

பப்பா நியூ கினியின் ஒரு தனித்த கிராமமான வெய்சாவை சேர்ந்த 11 வயதான சிறுமி கிகியாவிற்கு திடீரென கால்கள்  ஊன்றி நிற்க முடியாமலாகியது. கைகால் மூட்டுகளில் தாங்க முடியாத வலி உண்டான போது, அவள் சத்தமாக கதறி அழுதுகொண்டும் இடையிடையே பயங்கரமாக சிரித்துக்கொண்டுமிருந்தாள். கிகியா அப்பகுதியின் ஃபோரே (Fore) தொல் குடியை சேர்ந்தவள்.

1930 வரை பப்பா நியூ கினியில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதே உலகிற்கு தெரியாமல் இருந்தது. ஆஸ்திரேலியாவின் தங்க வேட்டைக்காரர்கள் அங்கு சென்றபோதுதான் அங்கு லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து வந்தது தெரிந்தது

1950களில் ஆராய்ச்சியாளர்களும்   மானுடவியலாளர்களும் காவலதிகாரிகளும் அரும்பாடுபட்டு அவர்களுடன் தொடர்புகொண்டு, அங்கு சென்றபோது   அங்கு கிராமங்களில்  ஆயிரக்கணக்கில் தொல்குடியினர்  இருந்ததும் அவர்களில் பலருக்கு குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு விசித்திரமான நோய் இருந்ததும் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து இறந்து கொண்டிருந்ததையும் கண்டார்கள்

அந்த நோய் அவர்கள் மொழியில் குரு என்றழைக்கப்பட்டது. அவ்வினத்தின் பெண்களும் குழந்தைகளும் மிக அதிக எண்ணிக்கையில்  கிகியாவைப்போலவே  நோய்வாய்பட்டு இருந்ததை அவர்கள்  கண்டறிந்தார்கள்

அவர்களில் பலருக்கு உடம்பு உதறி உதறிப் போடும் தீவிரமான வலிப்பு, பசியின்மை இருந்தது, உடல் அங்கங்கள் ஒத்திசைவு இன்றி நேராக நிற்கவோ நடக்கவோ முடியாமல் எலும்பும் தோலுமாக இருந்தனர். உடல் உதறிப்போடும் அறிகுறி வந்தவர்கள் அடுத்த  ஒரு வருடத்திற்குள் இறந்துபோனார்கள்.

ஃபோரே பழங்குடியினரின் மொழியில் குரியா என்னும் சொல் உடல் உதறுதல் என்னும் பொருள் கொண்டது. எனவே இந்நோய்க்கு குரு என்னும் பெயர் வந்தது.

இதற்கு  ’’நெகி நெகி’’ என்று அவர்கள் மொழியில் சிரிக்கும் நோய் என்னும் பெயரும் இருந்தது நரம்புகள் தனது கட்டுப்பாட்டை இழந்து விடுவதால் வெடித்து சிரிப்பதும் அந்நோயின் அறிகுறி .

அப்பழங்குடியினர் இந்த நோயும், வலியும், இறப்பும் சூனியம் அல்லது இயற்கையை தாண்டிய ஒன்றின் தண்டனை அல்லது தீவினை என்று நம்பினர்.

வரலாறு

ஃபோரே மக்கள் துவக்கக்தில் குரு ஒரு சூனியநோய் என்றும் அதன் மந்திரசக்தி பிறருக்கும் பரவுகிறது என்றும் நம்பினர். பின்னர் தீய ஆவிகள் பிடித்துள்ளதாக நினைத்தனர். உடல் நடுக்கத்தை குணமாக்க சில காலம் சவுக்கு மரப்பட்டை சாற்றை அருந்த கொடுத்து வந்தனர்

குரு குறித்த முதல் தகவல்கள் பப்பா நியூ கினியில்  (PNG) ரோந்து வந்த ஆஸ்திரேலிய காவலர்களால் 1950ல் பதிவு செய்யபட்டது. செவிவழிச்செய்திகள் 1910 லேயே குரு மரணங்கள் இருந்ததை தெரிவித்தாலும் அதிகாரபூர்வ ஆவணங்கள் 1950லிருந்துதான் கிடைத்திருக்கின்றன. 1953ல் ரோந்துக்காவலரான ஜான்,   (John McArthur),  தனது அறிக்கையில் குரு நோயின் அறிகுறிகளை பதிவு செய்திருந்தார். ஃபோரே இனத்தவர்களின் விசித்திரமான சடங்குகளால் உருவான குரு நோய் ஒருவகை மன நலக்கோளாறு என்று  அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

குரு கட்டுக்கடங்காமல் பெரிதாக பரவிய போதுதான் தொல்குடி இனமக்களே   பப்பா நியூ கினியில்  பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவ அதிகாரியான சார்லஸ் (Charles Pfarr) என்பவர் மூலம் ஆஸ்திரேலிய மருத்துவ அமைச்சகத்துக்கு    தகவலனுப்பினர்,

 1957ல்  அமெரிக்க மருத்துவர் கார்ல்டன் (Dr. Carlton Gajdusek) பப்பா நியூ கினியின் மருத்துவ ஆலோசகர் திரு வின்சென்ட் ஜிகாசினால் (Vincent Zigas) அழைத்து வரப்பட்ட போதுதான் அது என்ன நோயென்பது உலகிற்கு தெரியவந்தது

அந்நோய் குறித்த தனது முதல் மருத்துவ அறிக்கையை அவர் வெளியிட்டபோது, உலகிற்கு அதன் தீவிரம் புரியவில்லை.1957ல்  குரு குறித்த இவரது விரிவான ஆய்வுக்கட்டுரை,  Medical Journal of Australia வில் வெளியானது. அக்கட்டுரையில் அவர் குரு ஒரு மரபுவழி நோயாக இருக்கலாமென்றும் ஒரு வகை வைரஸினால் அது உருவாகிறது என்றும் தெரிவித்திருந்தார்

 1960 ல்  அடிலெய்ட் மருத்துவரான  மைக்கேல் அல்பெர் (Michael Alpers) இந்த மர்மமான நோயை குறித்து அறிய அந்த கிராமத்துக்கு வந்தார்,   Dr. கார்ல்டன் உடன் இணைந்து அந்நோயை ஆராய்ந்த அவர் தன் வாழ்நாள் முழுவதையும் குரு நோயை குறித்த ஆய்வுக்காக அர்ப்பணித்தார்

வலிப்பு நோய் என்னும் பொருளில் அவர்களின் மொழியில் குரு என்றழைக்கப்பட்ட அந்நோயை இருவரும் மிக கவனமாக ஆராய்ந்தார்கள். ஏன் அந்நோய் அந்த குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் தொடர்ந்து வருகிறது என்பதை துவக்க காலங்களில் இருவராலும் யூகிக்கவும் கண்டுபிடிக்கவும் முடியாமலிருந்தது

நோய் அறிகுறிகளை விரிவாக ஆராய்ந்தபோது இருவருக்கும்  200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  ஆடுகளுக்கு இருந்து வந்த மூளை அழிவு நோயை குறித்த நினைவு வந்தது. அந்நோய் ஃப்ரான்ஸ் மக்களால்  trembling disease என்றும் ஆங்கிலத்தில் scrapie என்றும் அழைக்கப்பட்டது

குரு மற்றும் ஸ்க்ரேபிக்கு இடையே இருந்த ஒற்றுமைகளின் மூலம் குரு மூளையில் உண்டாகும் ஒரு நோய்  என்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட இறந்தவர்களின் மூளையை நுண்ணோக்கியில் பார்க்கையில் மூளை பஞ்சு போல மாறிவிட்டிருப்பதையும், மூளையில் ஏராளமான நுண் துளைகள் இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் ஸ்க்ரேபியைபோலவே குருவும் ஒரு தொற்றுநோய் என்பதுவும் உறுதியானது

எனவே குருவின் தொற்றும் தன்மையை  இருவரும் உறுதி செய்ய நினைத்த சமயத்தில் தான் கிகியா குருவின் ஆரம்பகட்ட அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டிருந்தாள்

இந்த சோதனையை குரங்குகளில்  செய்ய  இருவரும் முடிவெடுக்கையில் படிப்படியாக நோய் முற்றி கிகியா  இறந்துபோனாள். கிகியாவின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவளது மூளையின் ஒரு சிறு பகுதி அமெரிக்காவின் ஆய்வமொன்றிற்கு அனுப்பப்பட்டது   

அங்கு டெய்ஸி மற்றும் சார்லெட்டி என்னும் இரு சிம்பன்ஸிகளின் மூளையில் கிகியாவின் மூளைக்கரைசல் ஊசியாக  செலுத்தபட்டபோது. இரு சிம்பன்ஸிகளுக்கும் விரைவில் குரு தொற்று உண்டானது. எனவே மூளையில் உண்டாகும் இந்நோய் அடுத்தவர்களுக்கும் பரவும் என்பது நிரூபணமானது.

 ஃபோரே தொல்குடியில்.பெரும்பாலும் பெண்களுக்கு அந்நோய் தொற்று உருவாகி பலர் இறந்திருந்ததால் சில கிராமங்களில் முற்றிலும் பெண்கள் இல்லாமல் இருந்ததை ஆய்வாளர்கள் கண்ட போதுதான் ஃபோரே இனமே அழியும் அபாயத்திலிருந்ததை உலகம் அறிந்துகொண்டது.

அதே சமயத்தில்   குரு நோயின்   தொற்று மற்றும் பரவலில் ஆய்வு செய்து கொண்டிருந்த  நியூயார்க்கின் மருத்துவ மானுடவியலாளர் ஷர்லி லிண்டென்பாம் (Shirley Lindenbaum), தனது ஆய்வின் முடிவில் புதிதாக ஒன்றை கண்டடைந்திருந்தார். 1960க்கு பிறகு பிறந்த யாருக்கும் குரு தொற்று இல்லை என்னும் அந்த முடிவு அக்காலத்துக்கு முன்பு வரை அத்தொல்குடியினரின் எதோ ஒரு வழக்கத்தின் மூலமே குரு உருவாகி தொற்று பரவி இருக்கும் என்பதை அறிவித்தது

ஃபோரே தொல்குடியினருடன் தங்கி இருந்து பல வருடங்கள் ஆய்வு செய்தவரான அவர் அவ்வினத்தவர்கள் அழிவின் விளிம்பில் இருந்ததால் எப்படியேனும் தங்கள் இனத்தை பாதுகாக்கத்தான் நினைத்தார்கள் என்று குறிப்பிடுகிறார்

ஷர்லி 1961ல் ஒவ்வொரு கிராமமாக சென்று தரவுகளை சேகரித்தார். அவற்றின் அடிப்படையில் 1960க்கு பிறகு பிறந்தவர்களுக்கு குரு தொற்று உண்டாகவில்லை என்பதை கண்டறிந்தார்,

எனவே அவர்களோடு பல காலம் இருந்து ஆய்வு செய்த ஷர்லிக்கு அவர்களின் விசித்திரமான இறப்புச் சடங்கு தான் அதற்கு காரணமாயிருக்கலாம் என்னும் சந்தேகம் இருந்தது

ஃபோரே இனத்தில் ஒருவர் மரணமடைகையில் அவரது சடலத்தை குடியினர் அனைவரும் சமைத்து பகிர்ந்துண்ணும் வழக்கம் இருந்தது. அது அவர்களின் தொல்நம்பிக்கையின் அடிப்படையில் பல ஆண்டு காலமாக நடந்து வந்தது 

நரமாமிசம் உண்பது குரு தொற்றிற்கு காரணமாக இருக்கலாம் என்னும் சந்தேகம் குருவை ஆராய்ந்த அனைத்து வல்லுநர்களுக்கும் இருந்ததெனிலும் அதற்கான அடிப்படை அறிவியல்  ஆதாரமில்லாததாலும் முன்பெப்போதும் அத்தகைய நோயை கேள்விப்பட்டிருக்காததாலும் அதிகாரபூர்வமாக குருவிற்கு நரமாமிசம் உண்பதுதான் காரனம் என 1967 வரை யாருமே பதிவு செய்திருக்கவில்லை

1967ல்  கிளாஸெ, மோரெ, ( Glasse,   more)  மற்றும் 1968 ல் மேத்யூஸ் மற்றும் லிண்டன்பாம்  (Mathews & Lindenbaum) ஆகியோரே நரமாமிசம் உண்பதால் குரு உருவாவதை ஆதாரத்துடன் தெளிவாக நிறுவினார்கள்.

இவர்களைப்போலவே  E. J. Field என்னும்  பிரிட்டிஷ் நரம்பியல் மருத்துவர்   1960s- 1970 களில் பப்பா நியூ கினியில் தங்கி இருந்து இந்த நோயை ஆராய்ந்தார்

குருவை  scrapie மற்றும்  multiple sclerosis. நோய்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து எழுதப்பட்ட  இவரது குரு ஆய்வுக்கட்டுரைகளை வாசித்த பிரிட்டிஷ் மருத்துவ கழகம் இவரை  புதிய மூளை நோய்களை ஆராயும் குழுவின் இயக்குநராக நியமித்தது.

இவரின் ஆய்வு முடிவுகளை ஆதாரமாகக் கொண்டுதான்  1970 BBC Horizon  நர மாமிசம் உண்பது தொடர்பான மிக முக்கியமான ஆவணப்படமாகிய New Guinea வை உருவாக்கி வெளியிட்டது

மானுடவியலாலர்களும் மருத்துவர்களும் ஆய்வாளர்களும் பப்பா நியூ கினிக்கு வரும் முன்னரே நரமாமிசம் உண்பது அங்கு சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தது, எனினும் இவர்களின் முயற்சியினால் உலகம்  , குரு என்னும் நரமாமிசம் உண்பதால் வரும் நோயை  முதன் முதலாக அறிந்து கொண்டது

  பிறகும் பல ஆராய்ச்சிகள் அதில் நடந்து ஒரு வைரஸ் இந்த குரு நோய்க்கு காரணமாக இருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது

 ஆனால் அது வைரஸோ பாக்டீரியாவோ பூஞ்சையோ அல்ல வெறும் புரதம், நோய் உருவாக்கும் வீரியமுள்ள புரதம் என பிற்பாடு கண்டறியப்பட்டது,

வைரஸ்கள் என்பவை மிக எளிய உடலமைப்பை கொண்டவை.ஒரு புரத அடுக்கு அதனுள்ளிருக்கும் நியூக்ளிக் அமிலம் அவ்வளவுதான் ஒரு வைரஸ், சில வைரஸ்கள் வெறும் நியூக்ளிக் அமிலம் மட்டுமே உடலாக கொண்டவை மேலும் சில வெறும் புரத அடுக்கு மட்டுமே வைரஸாக இருக்கும் அவையும் நோய்க்கிருமிகள்தான். அப்படியான ஒரு வெறும் புரத வைரஸ்தான் பிரையான் என்பது. 

குருவை உண்டாக்கும் அந்த புரதமும் தவறாக திருகிய அமைப்பை கொண்டிருந்த பிரையான்கள் தான்  (prions).  அவை மூளையின் செல்களை தாக்கி அழிக்க வல்லவை. அப்படி அழிந்துவரும் மூளையில் பல துளைகள் உருவாகிக்கொண்டிருக்கும்

இந்த தொற்று  ஃபோரே இனத்தின் Creutzfeldt-Jakob Disease, எனப்படும் நரம்பு அழிதல் நோயினால் இறந்த ஒருவரின் சடலத்தை பிறர் உண்டதால் உருவாகி இருக்கலாம் என்று யூகிக்கப் பட்டது 

ஃபோரே இனத்தவர்களில் இறப்பு நிகழுகையில் இறந்தவர்களின் உடலை சமைத்து உறவினர்கள் அனைவரும் உண்ணுவது வழக்கமாக இருந்தது. இவ்வழக்கம் வெளி உலகிற்கு தெரியவரவே வெகு காலமாகியது பின்னர் 1959ல் அரசு தலையிட்டு இறந்த உடலை உண்ணுவதை சட்டப்படி தடை செய்து அவர்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வந்தது.

Endo cannibalism அல்லது ritual cannibalism என்னும் இவ்வகை நரமாமிசம் உண்ணுதலின் பின்னணியில்  ஃபோரே இனத்தவர்களின் நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்கள் இருந்தன.

 ஃபோரே இனத்தின் பிரபஞ்சவியல்

ஃபோரே இனத்தவர்கள் தொல்மொழியில்   அவர்கள் வாழும் பூமியை உயிருள்ளது என்று பொருள்படும் பகினா (bagina) என்று அழைத்தனர்.

 நிலப்பரப்பை  முழுமையாக உருவாக்கி முடித்த பகினா, மக்களை உருவாக்கி, மக்கள் தொகை பெருகிய பின்னர்  இனத்தின் பாதுகாவலர்களான இ அமனி (e amani) யை உருவாக்குகிறது.

இ அமனி என்பவை மலைகள் ஏரிகள் பைன் மரங்கள் மற்றும் பனைக்காடுகள். இவற்றை கடந்த பின்னர் நீத்தோருக்கான் உலகம் என அழைக்கப்பட்ட குகைகள் நிரம்பிய   வெலனந்தமுண்டி என்னும் பிரதேசம் (kwelanandamundi) இறந்தவர்களின் ஆன்மா சென்று சேரும் இடமாக தனியே வகுக்கப்பட்டிருந்தது

ஃபோரேக்களின் ஐந்து ஆன்மாக்கள்

ஃபோரேக்களின் நம்பிக்கைப்படி ஒவ்வொரு மனிதருக்கும் ஐந்து ஆன்மாக்கள் முறையே அவுமா, அமா, க்வெலா,அவோனா மற்றும் யெசெகி  ( auma, ama, kwela, aona&  yesegi ) என இருக்கின்றன. 

மரணத்தருவாயில் கடைசி மூச்சின் போது உடனடியாக உடலை விட்டு வெளியேறுவது அவுமா. அது உடனே உயிர்  நீத்தோருக்கென தனியே வகுக்கப்பட்டிருக்கும்  வெலனந்தமுண்டி  பிரதேசத்துக்கு சென்று விடுகிறது .இந்த ஆன்மா ஒரு மனிதனின்  புண்ணியங்களுக்கானது.அது தான் வாழ்ந்த பகினாவுக்கு விடை சொல்லிவிட்டு உடனடியாக உடலை நீங்கிச் சென்று விடும்.

அவுமா பாதுகாவலர்களான இ அமானியிடம் சென்று தான் இறந்த காரணத்தை தெரிவிக்கிறது. அதை கேட்ட பாதுகாவலர்கள் நீத்தோருக்கான் இடமாகிய வெலனந்தமுண்டிக்கு செல்ல ஆன்மாவிற்கு வழி காட்டுகிறார்கள்.

நீத்தோருக்கு உறவினர்கள் படையலிடும் உணவும் நீரும் செல்லும் வழியில் அவுமாவால் எடுத்துக்கொள்கிறது.

நீத்தோருலகில் வாசலில் இருக்கும் சிவப்பு ஆற்றை அடையும் அவுமா அக்கரையில் காத்திருக்கும் முன்னோர்களின் ஆன்மாவினால் வரவேற்கப்படுகிறது, அங்கு காத்திருக்கும் அவுமா, அமா என்னும் எலும்புகளின் ஆன்மாவும், க்வெலா என்னும் தசைகளின் ஆன்மாவும் வந்துசேர காத்திருக்கிறது. அவை வந்து சேர்ந்த பின்னரே தன் மூத்தோர்களிலொருவராக அது மறுபிறப்பெடுக்கும். ( ama (bones) & kwela (flesh))  

அமா (Ama) என்னும் ஆன்மா ஏறக்குறைய அவுமாவை போலத்தான் ஆனால் அதை காட்டிலும் சக்தி வாய்ந்தது. அது சடலத்துக்கு சடங்குகள் முறைப்படி செய்யப்படுகின்றனவா என கண்காணித்தபடி பூமியிலேயே காத்திருக்கும். உறவினர்கள்  மரணச்சடங்குகளை முறையாக செய்ய வழிகாட்டி, ஒருவேளை இறப்பு எதிரிகளால் நிகழ்ந்திருந்தால் அவர்களை தண்டிப்பதாக  அமா வஞ்சினம் உரைக்க செய்யும்.

இறந்தவர்களின் உடலை உறவினர்கள் உண்ணும் போது அமா அவர்களை ஆசிர்வதிக்கிறது. சடலத்தை உண்பவர்களின் ஆன்மாவாகிய அவோனா அப்போது அதிகரிக்கிறது. உடல் முழுக்க மிச்சமின்றி உண்டு முடிக்கப்பட்டதும் அமா விடைபெற்றுக்கொண்டு நீத்தோருலகிற்கு செல்லும். அங்கிருந்து பூமியிலிருக்கும் குடும்பத்தாருக்கு தேவைப்படும் உதவிகளை அமா செய்யும்

இறந்தவரின் அவோனா தனக்கு குடும்பத்தில் இருக்கும் பிரியமான குழந்தையின் உடலுக்குள் சென்று விடுகிறது. இப்படி அவோனா நுழைந்த குழந்தை நல்ல வேட்டைக்காரராகவும், அள்ள அள்ள குறையாமல் உணவை அளிப்பவராகவும் பின்னாட்களில் இருப்பார் என்றும் நம்பிக்கை உண்டு

  க்வெலா  ஆன்மா காற்றில் பயணித்து  மறைந்து நின்று கவனித்து மரணச்சடங்குகளை சரியாக செய்யாதவர்களை தண்டிக்கிறது

உடல் அழுகி கொண்டிருக்கையில் உடலிலிருக்கும் க்வெலா மிக சக்தி வாய்ந்தது என்பதால் கிராமத்தில் வாழிடங்கள் இருக்கும்  இடங்களுக்கு மிகத் தள்ளி இருக்கும் இடங்களில் தான் உடல் கிடத்தப்படும்

உடல் புதைக்கப்படுகையில் க்வெலா சக்தி குறைந்து காணப்படும். உடல் உண்ணப்படுகையில் க்வெலா, உடலை உண்ட பெண்களின் கர்ப்பப் பையில் தங்கி விடுகிறது. அங்கு அதன் பெயர் அனக்ரா ( anagra)  

உடல் சமைக்கப்படுகையில் வெப்பம் அதிகமாகும் போதுதான் க்வெலா விலகி நீத்தோருலகிற்கு செல்லும்

யெசெகி  ஆன்மா இறந்தவரின் சருமத்தில் தங்கி இருந்து க்வெலா கருப்பைக்குள் செல்லும் வரை உடன் இருந்துவிட்டு பின்னரே விடைபெற்றுக்கொள்ளு.ம் யெசெகி ஆன்மாவானது   இறந்த மனிதர், பெரும் வேட்டைக்காரராகவும், சக்திவாய்ந்தவராகவும் வாழ காரணமாக இருப்பது.

இவ்வாறான நம்பிக்கைகளின் அடிப்படையில்  முறையாக  செய்யப்படும் மரண சடங்குகள் மூலமாக  இறந்த மூத்தோர் மீண்டும் அவர்களுக்கே பிறந்து வாழ்க்கை சுழற்சி தொடர்ந்து நடக்கும் என ஃபோரே குடியினர் நம்புகிறார்கள்.

இறந்த உடலை கையாளும் முறை

(இந்த பகுதி சிலருக்கு வாசிக்க ஒவ்வாமையை உண்டாக்கலாம்) 

மரணத்தருவாயில் இருப்பவர் சில சமயம் தனது உடல் எவ்வாறு கையாளப்படவேண்டும் என்பதை சொல்லிச்செல்வது உண்டு. இல்லாவிட்டால் உடலை என்ன செய்வது என்பதை குடும்பத்தினர் முடிவு செய்வார்கள்

இறப்பு நிகழ்ந்த உடனே உடல் முழுக்க, பித்தப்பையை தவிர  பங்குபோட்டு சமைத்து உண்ணப்படும்  அல்லது சில நாட்கள் புதைத்து வைத்து மீண்டும் வெளியே எடுத்து உடலில் இருக்கும் புழுக்கள் தனியாகவும், உடல் தனியாகவும் சமைத்தும் உண்ணப்படும். 

சில சமயம் உடல் ஒரு மேடையில் கிடத்தப்பட்டு மாமிசத்தை   சிறு பூச்சிகள் (maggots) உண்ணும்படியும் வைக்கப்படும்.

ஃபோரே தொல்குடியினர்  அவர்களுடன் வாழ்ந்து மறைந்த  பிரியமானவர்களின் உடலை இப்படி புழுக்களும்,பூச்சிகளும் உண்பதை காட்டிலும் அவர்களுக்கு விருப்பமான குடும்ப உறவினர்கள் உண்ணுவதே சிறந்தது என்று நம்பினார்கள்.

இப்படி உண்ணப்படுகையில் மிகுந்த சக்திவாய்ந்த க்வெலாவின் ஆபத்துக்களிலிருந்து தப்பி அதை கர்ப்பத்தில் அடுத்த சந்ததியாக தக்கவைத்துக்கொள்வது பெண்களுக்கு மிக முக்கியமான சடங்காக கருதப்பட்டது.

இறந்தவர்களின் மீதான அன்பை, அவர்கள் இழப்பை குறித்த துக்கத்தை உடலை உண்பதன் மூலம் காண்பிக்க முடியும் என அவர்கள் நம்பினார்கள். எனவே பெரும்பான்மையான ஃபோரே உட்பிரிவினங்கள் உடலை சமைத்து உண்டார்கள்.

இறந்த உடல் ஒரு கூடையில் வைக்கப்பட்டு மூங்கில், கரும்பு அல்லது சவுக்கு காடுகளுக்குள் உறவினர்களால் எடுத்துச்செல்லப்படும்

காடுகளில், துக்கம் அனுஷ்டிப்பவர்களுக்கு நிழல் இருக்கும், இறந்த உடலின் ஆன்மாக்கள் காடுகளில்தான் மகிழ்ந்திருக்கும் என்பதால் உடல் காட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

உடலை வெட்டித் திறந்ததுமே, பூமி உள்ளிருக்கும் ஆன்மாக்களை வாழ்த்தி வரவேற்கிறது. ஒரு உயரமான மேடையில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் கீரைகள் காய்கறிகள் கிழங்குகளின் மீது விரிக்கப்பட்டிருக்கும் வாழை இலையின் மீது உடல் கிடத்தப்படும் . 

இடைவெளியில்லாமல் நிரப்பப்பட்டிருக்கும் காய்கறிகளின் மீது உடல் வெட்டப்படும்போது சிந்தும் திரவங்கள் வீணாகாது என்பதால் இப்படி செய்யப்படுகிறது. உடல் பாகங்களும் திரவங்களும் சிந்தி வீணானால் க்வெலாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் கசப்பு நிறைந்த பித்தப்பையை தவிர ஒரு துளி உடல் பாகமும் வீணாகாமல் அச்சடங்கு நடத்தப்படும் 

முதலில் உடலை பெண் மற்றும் ஆண் உறவினர்களுக்கிடையே சரிசமமாக பங்கு போட்டுக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

குழந்தைகளை அங்கிருந்து விலக்கி வைப்பார்கள் எனினும் சில குழந்தைகள் மரங்களின் மீதிருந்து சடங்கை வேடிக்கை பார்ப்பதுண்டு

 கைக்குழந்தைகள் க்வெலாவின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்பதால் அவர்கள் 4 கிமீ தள்ளி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பார்கள். 

உடல் மூங்கில் கத்தியால் வெட்டப்பட்டு, மீண்டும் சதை சிறுசிறு துணுக்குகளாக வெட்டப்பட்டு சிறு குவியல்களாக கறிப்பலா இலைகளில் குவித்து வைக்கப்படும்

உடலின் கீழ்ப்பகுதி வெட்டப்படுகையில்   பெண்களும் இளையவர்களும் இனப்பெருக்க உறுப்புக்களை பார்க்கக்கூடாது என்பதற்காக வயதான பெண்கள்  வட்டமாக நின்று மனிதத்திரை உண்டாக்குவார்கள்

உடலை வெட்டி முடித்ததும் கைகளை வாழை நார், மூங்கில் குருத்துக்கள் கொண்டு துடைத்து சுத்தம் செய்துகொண்டு  மாமிசம் வேகவிருக்கும் அடுப்பு நெருப்பில் துடைத்த நாரையும் குருத்துக்களையும் போடுவார்கள். கடைசியாக பெண்கள் கைகளை அவர்களது புல்லாடையில் துடைத்துக் கொள்வார்கள்

மூங்கில் குழாய்களில் அடைத்து நெருப்பில் வேக வைக்கப்பட்ட மாமிசம் வாழையிலைகளில் கொட்டப்படும்.

முதல் உணவு துக்கம் விசாரிக்க வந்திருக்கும் ’எனாமே’ எனப்படும் வெளியூர் உறவினர்களுக்கு குச்சிகளில் குத்தப்பட்டு வாயில் நேரடியாக அளிக்கப்படும்.

அவர்கள் உணவை கைகளால் தொடக் கூடாது என்பது நெறி. அவர்கள் ஊர் திரும்பி செல்கையில் வெஸா (wesa) என்னும் செடியின் இலைகளை மென்று நர மாமிசம் உண்ட வாயை சுத்தம் செய்து கொள்வார்கள் 

ஃபோரே குடியினரின் உட்பிரிவான அடிக்மா என்னும் அடிகமனா மொழிபேசும் உட்பிரிவில் இறந்த ஆணின் இனப்பெருக்க உறுப்புக்கள் விதவையான அவரின் மனைவிக்கு அளிக்கப்படும்.   (Atigina – atikamana),   ஆனால் தெற்குப் பகுதியின் பிரிவான பமுசாகினா (Pamusagina) குடியினரிடம் இவ்வாறான பழக்கம் இல்லை.

பிரையான்களால் அழுகி இருக்கும்   மூளை ஒரு கூரான மூங்கில் குச்சியால் நெம்பி எடுத்து வேகவைக்கப்பட்டு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அளிக்கப்படும். ஒருபோதும் 6 வயதுக்கு மேலான ஆண் குழந்தைகளுக்கு இது அளிக்கப்படமாட்டாது, ஆனால் எல்லா வயதிலும் பெண்கள் இதை உண்ணலாம்

குடிசையை விட்டு வந்திருக்காத, துக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு நரமாமிச உணவு கொண்டு போய் கொடுக்கப்படும்.

எலும்புகளில் பெரியவையும் மண்டை ஓடும் சில பிரிவு மக்களால் இறந்தவரின் குடிசையின் முன்பாக சாக்குப் பைகளில்  கட்டி தொங்கவிடப் படுவதும் உண்டு.  

மறுநாள் காலையில் உடல் சமைக்கப்பட்ட இடத்துக்குச் செல்லும் சில பெண்கள் மீதமிருக்கும் எலும்புகளைக் இகாகி எனும் காட்டுப்புல்லில் சுற்றி நெருப்பில் வாட்டி அவற்றை மேலும் கீழுமாக கறிப்பலா இலைகளால் மூடி கற்களால் பொடித்து மிச்சமின்றி உண்பார்கள். உடலின் எந்த பாகமும் வீணாகி விடக்கூடாது என்பதால் கவனமுடன் இருப்பார்கள்.

மாமிசம் வேகவைக்கப்பட்ட கருகிய மூங்கில் குழாய்களின் சாம்பலும் பொடித்து காய்கறிகளில் கலந்து உண்ணப்படும்

பின்னர் சமைப்பதற்கும் உடலை வெட்டுவதற்கும் உபயோகப்பட்ட அனைத்துப் பொருட்களையும் நெருப்பிலிட்டு அழிப்பார்கள். விதிவிலக்காக தாடை மற்றும் கழுத்தெலும்புகள் மட்டும் சிறுமிகளின் கழுத்தில் தாயத்தாக அணிவிக்கப்படும்.  

உடல் முழுமையாக உண்ணப்பட்டதும் இறந்தவரின் குடிசையின் வெளியே இருந்து புகை இடப்பட்டு குடிசை தூய்மையாக்கப்படும் பின்னர் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்படும்

பெண்கள் எலிகளையும் சிறு விலங்குகளையும் வேட்டையாடி பிடித்து வருவார்கள் அவற்றைக் கொன்று, ரோமத்தை விதவையின் வீட்டு நெருப்பில் பொசுக்கி விதவையின் உடலில் இருக்கும் க்வெலாவை அந்த நாற்றதினால் வெளியேற்றிவிட்டு பின்னர் இறந்த விலங்குகளின் மாமிசத்தை   சமைத்து பெண்கள் மட்டும் உண்ணும் சடங்கு நடைபெறும்

பின்னர் துக்கம் விசாரிக்க வரும் உறவினர்கள் கீரை, புல் போன்ற இலை உணவு மட்டுமே உண்ணும் கவுண்டா (kavunda), என்னும்  மரணச்சடங்கின் நீட்சியான உணவுச் சடங்கு  நடைபெறும். இந்த சைவ உணவுச்சடங்கு பொதுவாக  மனிதர்கள் உண்ணக்கூடாத நரமாமிசத்தை உண்டதன் பிழையீடாக நடக்கும்.  

பின்னர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூட்டாக வேட்டைக்குச் என்று விலங்குகளை கொண்டுவந்து சமைத்து விருந்துண்ணுவார்கள்,  

இறந்தவரின் மனைவி மறுமணம் செய்து கொள்ளாவிட்டால் இறந்தவரின் க்வெலா அவளை பாதுகாத்துக்கொண்டு அருகில் இருக்கும். ஒருவேளை மறுமணம் செய்துகொண்டால் க்வெலாவிடம் அவள் விடைபெறும் சடங்கும் நடக்கும்.

இச்சடங்குளினால் தான் நடுக்கநோய் எனப்படும் குரு அவர்களுக்கு உண்டாகிறது என்று தெரிய வந்தபின்னர் அவர்கள் நரமாமிசம் உண்பதை நிறுத்திக்கொண்டனர். கிருஸ்துவ மிஷனரிகளும் நரமாமிசம் உண்ணக்கூடாது என்னும் விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தினர். 

நோய் அறிகுறிகள்

துவக்க அறிகுறிகளாக உடல் நடுக்கம் வலிப்பு, நிலையில்லாமை, உடல் பாகங்களின் ஒத்திசைவின்மை ஆகியவை தோன்றும். கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் அறிகுறியும் இருந்தது.

நோய் முற்றும் போது வலிப்பு அடிக்கடி தீவிரமாக வருவதும்,  தாங்க முடியாத உடல் வலி, நடக்க முடியாமல் சிரமப்படுதல், பேச்சு குளறல்,தலைவலி ஆகியவை உண்டாகும். கடைசி நேரங்களில் விழுங்க , பேச முடியாமல் கோமா, தொடர்ந்து மரணம் ஆகியவை நேரும் 

குரு நோய்க்கு சிகிச்சை என ஏதும் இல்லாததால், தொற்று உண்டாகி 6 லிருந்து 12 மாதங்களில் இறப்பு நிகழும்

குரு மிக அரிதான நோய், பிரையான்கள் எனப்படும் நோய் உண்டாக்கும் புரதங்களால் இவை உருவாகி மூளையை பாதித்து இறப்பை உண்டாக்கும். 3 லிருந்து 50 வருடங்கள் வரை இந்த கிருமியின் நோயரும்பும் (incubation) காலம் இருக்கும்

 குரு மருத்துவ அறிவியல்

ஃபோரே இனத்திலும் அவர்களுக்கு அருகாமையில் வசித்த சில தொல்குடி இனங்களிலும் 1900 த்தில் குரு பரவலாக இருந்தது, 1940-50 வரையில் ஆயிரத்தில் 35 பேர் என்னும் அளவில் இறப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.

அதிலும் குறிப்பாக மூளையை உண்ணும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  தசைகளை உண்ணும் ஆண்களை விட அதிக தொற்று உருவாகி இருந்தது

குரு ஒரு Transmissible spongiform encephalopathies (TSEs),  வகையை சேர்ந்த நோய் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.பிரதானமாக இது சிறுமூளையை பாதிக்கிறது.

குரு தொற்றிற்கு சிகிச்சை மருந்து என எதுவும் இல்லை. மூளையில் இருக்கும் பிரையான்களை ஃபார்மால்டிஹைடில்  வருடக்கணக்காக சேமித்து வைத்திருக்கையிலும் நோய் உண்டாகும் வீரியத்தை அவை  இழக்காமலிருக்கிறது 

PrP என குறிப்பிடப்படும் பிரையான்களில் இரு வகைகள் உள்ளன  PrPc என்பது சரியான மடிப்புக்கள் கொண்ட புரதம்,  PrPsc, என்பது தவறாக திருகிய மடிப்புகள் கொண்ட குரு உருவாக்கும் வீரியமான புரதம் 

PrPsc காலப்போக்கில் PrPc புரதத்தின் மடிபுக்களை தவறாகக் திருகச்செய்து அவற்றையும் நோய்க்கிருமி ஆக்கி இருக்கலாம் என்னும்  சாத்தியத்தையும் ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறர்கள்

ஜுலை 1996 லிருந்து ஜூன் 2004 வரை நடைபெற்ற தீவிரமான ஆய்வில் 11 குரு தொற்றுக்கள் மட்டுமே  கண்டறியப்பட்டன

2005க்கு பிறகு புதிய தொற்றுக்கள் ஏதும் இல்லை, 1957ல் 200 குரு மரணங்கள் நிகழ்ந்தன, ஆனால் 2010க்குபிறகு குரு மரணங்கள் முற்றிலும் இல்லை. எனினும் பிரையான்களின் வீரியமும் நோயரும்பும் காலமும் மிக அதிகம் என்பதால் மருத்துவத்துறை குரு குறித்த எச்சரிக்கை உணர்வுடன் தான் இருக்கிறது. 

funerary cannibalism. அல்லது rithual cannibalism எனப்படும் இறப்பு சடங்கில் சடலத்தை உண்ணும் ஃபோரே மக்களின்  Endocannibalism  என்னும் வழக்கத்தினால் குரு உருவானது இவ்வாறுதான் பலரின் அர்ப்பணிப்புள்ள ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டது

நரமாமிசம் உண்பது எல்லா சமூகத்திலும் பயங்கரமானதும் விலக்கப்பட்ட ஒன்றுமாகவே இருந்திருக்கிறது. பண்டைய ரோமில் கிருஸ்துவர்கள் பலருக்காக தியாகம் செய்த ஒருவரின் உடல் ரகசியமாக சமைத்துண்ணப்படுவதாக வதந்திகள் உலவின. 

நற்கருணை எனப்படும் கிருஸ்துவின் கடைசி இரவு உணவின்  குறியீடாக திராட்சை மதுவும் அப்பமும் கிருஸ்துவின் ரத்தமும் சதையுமாக கருதப்பட்டு உண்ணப்படுவதன் மிகைப்படுத்தப்பட்ட வதந்திதான் அது​

போராளி இனங்களான  Iroquois  மற்றும் Fijians எதிரிகளின் சக்தியும் தங்களுக்கு கிடைக்குமென எண்ணி    தாங்கள் வென்ற எதிரிகளை சமைத்து உண்டனர்.  தென்னமெரிக்க பழங்குடியினரான  வாரிகளும்(wari) இவ்வாறு எதிரிகளை உண்பது வழக்கத்திலிருந்து .இது Exo cannibalism எனப்படுகிறது.  

​1979ல் வெளியான ’’நரமாமிசம் உண்பது என்னும் கட்டுக்கதை’’ என்னும் நூலில்   (Man-Eating Myth)   W. Arens அப்படியான ஒன்று எந்த காலத்திலும், எந்தச் சமூகத்திலும் நிகழ்ந்திருக்காது என்கிறார். ஒருவேளை கடும் பஞ்சத்தில் அப்படி நிகழ்ந்திருக்கலாமே தவிர மனிதர்களை மனிதர்களை எப்போதும் உண்டதில்லை என்று சொல்லும் அவர் 6 விரிவான அத்தியாயங்களில் நர மாமிசம் தொடர்பான கதைகள் நாட்டுப்பாடல்கள்  தொன்மங்கள் ஆகியவற்றை விவரித்திருக்கிறார்

  1986 ல் Peggy Reeves Sanday  என்பவர்  ’’Divine Hunger: Cannibalism as a Cultural System’’ என்னும் தனது நூலை வெளியிட்டார் அதில் நரமாமிசம் உண்பதற்காக நடைபெற்ற கொலைகளையும், மனித மாமிசம் ஊட்டச்சத்துக்களுக்காக உண்ணப் பட்டதையும்,  சில பழங்குடியினர் இயல்பாக நரமாமிசம் உண்பதையும் குறிபிட்டு எழுதி இருந்தார். cannibalism  தொடர்பான நூல்களில் இது முக்கியமான தரவுகளை கொண்டதாக இன்றளவும் கருதப்படுகிறது

 Michael Alpers, என்னும் ஆஸ்திரேலியாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர் குரு நோயைக் குறித்து பல ஆண்டுகள்  2012 வரையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து குருவினால் நிகழ்ந்த  கடைசி  இறப்பை தெரிவித்தார். மேலும்  குரு முற்றிலும் இல்லை என உலகிற்கு அறிவித்தார்.

குருவிற்கான நோபல் பரிசுகள்

  • 1976-அமெரிக்க மருத்துவர்  Daniel Carleton Gajdusek- குரு தொற்றை கண்டறிந்ததற்காக
  • 1977-அமெரிக்க நரம்பியல் மருத்துவரும்,  வேதியியலளருமான Stanley Ben Prusiner  – பிரையான்களின் ஆய்விற்காக
  • ஸ்விஸ் வேதியியலாளரும் உயிரி இயற்பியலாளருமான Kurt -பிரையான்களின் புரத அமைபை கண்டுபிடித்தற்காக.

 குரு நோயுற்றவர்களின் மூளையை உண்ட பிறருக்கு நோய் வருவதும், பைத்தியக்கார பசு நோய் (Mad Cow disease) நோயுற்ற பசுவை உண்பவர்களுக்கும் வருவதும் அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.

 மேலும் பிரையான் நோய்கள் இனி உண்டாகுமா? மான் வேட்டையாடி அதன் இறைச்சியை உண்ணும் வேட்டைக்காரர்களுக்கும், பிற நோயுற்ற காட்டுவிலங்குகளை உண்பவர்களுக்கும் இனிமேல் பிரையான் நோய் வரும் சாத்தியம் இருக்கிறதா?

இதுகுறித்துத்தான் வட அமெரிக்காவில் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்

சமீபத்தில் வட அமெரிக்காவில் மர்மமான முறையில் உணவுண்ன முடியாமல் பட்டினி கிடந்து இறக்கும் மான்களின், எல்க்குகளின் உடலில் மூளையில் பிரையான்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள் அந்த பிரையான்கள் மூளையில் மட்டுமல்ல இறந்த விலங்குகளில் உடல் முழுக்க இருந்தது

 எனவே மான்களின் இறப்பு விகிதம் இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நோய் தடுப்பு மையமான CDC இப்போது வேட்டைக்காரர்களுக்கு பிரையான் நோய் இருக்கிறதா என்று தீவிரமாக கண்காணிக்க தொடங்கி இருக்கிறது 

உலகெங்கும் நர மாமிசம் உண்ணுதல் (Cannibalism) என்பது மானுடவியல் மற்றும் இறையியல் ரீதியாக அணுகப்படும் ஒன்றாகவே இருக்கிறது. கடவுளின் ரத்தம் சதை என உருவகப்படுத்தி அப்பமும் மதுவும் உண்ணப்படுவதும் சடங்கு ரீதியான நரமாமிசம் உண்பதின்  (Ritual cannibalism) ஒரு வடிவம் தான்

Anthropophagy  என்பது மனிதன் மனிதனை உண்ணுவது, Theophagy என்பது கடவுளின் உடல் என்று நம்பி உருவகப்படுத்திக்கொண்ட  உணவை உண்பதன் மூலம் கடவுளின் சக்தியை அருளை ஆசியை பெறலாம் என்று நம்புவதும் உண்பதும்.

ஐரோப்பாவின் மருத்துவ நரமாமிச உண்ணுதல் medical cannibalism எனப்படுகிறது. பட்டினிக் காலங்களில் உயிர்பிழைக்கும் கடைசி வாய்ப்பாக இறந்தவர்களை  உண்ணுவது Starvation cannibalism, விமான ப்பயணம் அல்லது கடல்வழி பயணங்களில் விபத்துக்களில் சிக்கி உணவுப்பொருள் தீர்ந்த போது உயிர்பிழைக்க சடலங்களை உண்பது survival Cannibalism. இப்படி பலவகையான நரமாமிசம் உண்ணும் வழக்கங்கள் உலகெங்கிலும் இருந்தன, இருக்கின்றன.

ஐரோப்பாவில்  மனித உடல்பாகங்களை மருத்துவக் காரணங்களுக்காக  உண்டவர்களை பற்றிய  ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஸ்விஸ் மருத்துவர்  பாராசெல்சஸ் (Paracelsus-1493/4-1541)  மருத்துவ காரணங்களுக்காக மட்டுமல்லாது  அரசர்களும் புனித தந்தைகளும் கூட பல காரணங்களுக்காக நரமாமிசம் உண்டதை எழுதினார்.

எனினும் இன்னுமே பிடிவாதமாக உலகின் எந்த பகுதியிலும் நரமாமிசம் உண்ணுதல் என்பது நடக்கவே இல்லை என்று வாதிடும் மானுடவியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள்  இருக்கிறார்கள்.

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நாவல்களில் திரைப்படங்களில், நாடகங்களில், வீடியோ விளையாட்டுக்களில்  நரமாமிசம் உண்பது, குரு நோய் ஆகியவை சித்தரிக்கப்பட்டிருக்கிறது, உதாரணமாக: 

குரு இப்போது முற்றிலும் இல்லை. ஆனால் நரமாமிசம் உண்பது   முற்றிலும் கட்டுக்கதை அல்ல. இறந்த உடல்களின் குவியல்களின் மீது அமர்ந்து தியானம் செய்தால் அசாதாரண சக்தி கிடைக்கும் என்று நம்பிய திபெத் புத்தபிட்சுக்களை, காசியில் எரியும் பிணங்களின் உடலை தின்னும் அகோரிகளை நாம் அறிந்திருக்கிறோம்.  கடந்த 2022ல் கேரளாவில் நரபலி கொடுத்து நரமாமிசம் உண்டால் புதையல் கிடைக்கும் என்பதற்காக கொல்லப்பட்டு உண்ணப்பட்ட இரு பெண்களை குறித்த செய்திகளையும் அறிந்திருக்கிறோம்.

இந்த விக்கிபீடியா இணைப்பில் (https://en.wikipedia.org/wiki/List_of_incidents_of_cannibalism#:~:text=Accounts%20of%20human%20cannibalism%20date,the%20practice%20to%20this%20day3.) நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நரமாமிசம் உண்ட நமது நியாண்டர்தால் மூதாதைகளிலிருந்து, கணவனை, மனைவியை குழந்தைகளை, அந்நியர்களை, காதலியை கொன்று சமைத்து உண்டவர்களை பற்றிய தகவல்கள் 2022ன் கேரளா சம்பவம்  வரை இருக்கிறது. 

சந்திராயன் நிலவுக்கு சென்று சேர்ந்திருக்கும் இந்தக்காலத்தில் இவை நடக்கிறது என்னும் போது 1900களில் வெளி உலகத் தொடர்பில்லாத ஃபோரே தொல்குடியினர் இறப்புச் சடங்கில் நரமாமிசம் உண்டதில் வியப்பொன்றும் இல்லை.  

 மேலதிக தகவல்களுக்கு:

Alpers, Michael P. The epidemiology of kuru: monitoring the epidemic from its peak to its end. Philos Trans R Soc Lond B Biol Sci. 2008; 363(1510): 3707–3713.

Lindenbaum, Shirley “Kuru, Prions, and Human Affairs: Thinking About Epidemics”. Annual Review of Anthropology. 2001; 30 (1): 363–385

Shirley Lindenbaum (14 Apr 2015). “An annotated history of kuru”. Medicine Anthropology Theory.

Whitfield, Jerome T.; Pako, Wandagi H.; Collinge, John; Alpers, Michael P. “Mortuary rites of the South Fore and kuru”. Philos Trans Royal Society B Biol Sci. 2008: 363 (1510): 3721–3724.

“When People Ate People, A Strange Disease Emerged”. NPR.org. Retrieved 2018-04-08. 

தன் வாழ்வை முற்றிலுமாக குரு நோய் குறித்த ஆய்விற்கு அர்ப்பணித்த  Michael Alpers குறித்து வாசிக்க: https://cosmosmagazine.com/science/biology/the-man-who-linked-kuru-to-cannibalism/

சென்னையில் விஜி!

(விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி தொண்டைமான் பூபதி காளிங்கராய சுப்ரமண்ய சுந்தரவடிவேல் தனது சென்னை விஜயம் குறித்தும் அகரனுடனான நட்பைகுறித்தும் எழுதிய (முதல் எழுத்துப்) பதிவு)

எழுதுவதில் உள்ள சிக்கல் எழுதுவது அல்ல, துறை சார்ந்த வேலைகளும், நேரமின்மையும், நமக்கு எழுத்து முதிர்ச்சி இருக்குமா என்ற  ஐயப்பாடு இவையெல்லாம் தான். பிரதிபலன் பாரா பேரியற்கை எப்படி நமக்கு வேண்டுவனவற்றை வாரிவழங்கிக்கொண்டுள்ளதோ அப்படியே நம் சமூகமும். நாம் கவனிக்கவில்லையே, கிரகிக்கவில்லையே தவிர, வழங்குதல் என்றுமே வற்றுவதில்லை வரண்டுவிடுவதில்லை. எல்லோருக்கும் வாழ்வை வரையறுக்கும், வெற்றிடமாக்கும், திசைமாற்றும் புள்ளி என்று ஒன்று உண்டு,

ஓரு பேரிழப்பு, பெருந்துயரம், அவமானம், வெறுமை, பெருஞ்சுழல், பயணம், ஓர் சந்திப்பு அந்தப்புள்ளியை அணுப்பிளவாகவும் மாற்றும் அல்லது மிக எளிமையாக தடயங்களே இல்லாமல் அழித்துவிடும்.

ஒரு தனிமனிதனின் சிறப்பாளுமை, ஒரு சந்திப்பு மீளாஅற்புதங்களை நிகழ்த்தும் என்று கண்டுகொண்டேன்.

சென்னைக்கு ஒரு இலக்கிய அமர்வுக்கு சென்ற போது அகரமுதல்வன் என்ற அகரன் எப்படி ரயில் நிலையம் வந்து தன்னை அழைத்தது முதல் அரசியல் கட்சி கூட்டத்திற்கு ஆள் பிடித்துச்சென்று கட்சிக்கூட்டம் முடிந்தபின் ஆதரவற்றவர்களை கைவிட்டு வருவது போல இல்லாமல், திரும்ப பாதுகாப்பாக வழியனுப்பி வைத்த அகரனுடனான முழு பயன அனுபவத்தை என் மூத்தசகோதரி லோகமாதேவி என்னிடம் கூறினார்.

பேராசிரியையாக உள்ளதால் பொதுவாகவே நிகழ்வுகளை நேர்த்தியான விவரிப்புடன் கூறுவார் என் சகோதரி. எல்லா சந்திப்புகளும், உரையாடல்களும் பெரும்பாலும் உள்நோக்கத்துடன் தான் இருக்கும், அமையும் என்று திடமாக நம்புபவன் நான். சில சுயநலத்துடனும் சில இயற்கை விதிப்படியும் சில காரணகாரியங்களுக்காகவும் அமையும்.  ஆனால் விதிவிலக்குகள் உண்டு என அகரனை குறித்து கேள்விப்பட்டபோது உணர்ந்தேன்

தன்னை தேடி வரும் அனைவரையும் இவ்வாறே அகரன் அழைத்து, அனுசரித்து திரும்ப அனுப்பிவைப்பதாகவும் கூறினார். கூடவே அகரனின் ஈழப்பிறப்பிடம் பற்றியும் “ கடவுள் பிசாசு நிலம்” பற்றியும் கூறினார். வெகு சில நாட்கள்  நான் ஈழத்தில் வேலை செய்திருக்கின்றேன். வெகு இயல்பான என்கொடியுறவு என்பதாலும் என் இனக்கீற்று அவன் என்பதாலும் ஒரு பிணைப்பு ஏற்ப்பட்டதில் வியப்பில்லை. ஈழம் எப்போதுமே ஈர்ப்புதான் எனக்கு.

அடுத்தமுறை சென்னைக்கு சென்றால் நிச்சயம் அகரனை நான் சந்திக்க வேண்டும் என்றும்,அல்லது இதற்க்காகவே செல்ல வேண்டும் என்று கூறினேன்.ஆச்சரியத்தோடு பார்த்தாள் அக்கா. நீ அவனை பார்த்ததே இல்லையே பின் எதற்க்கு இத்தனை ஆர்வம்? என்றாள் தெரியவில்லை என்றேன்,

இரண்டொரு மாதம் கழித்து அகரன், லக்ஷ்மணன், மூர்த்தி, மணி நால்வரும் பொள்ளாச்சியை அடுத்த வேடசெந்தூரில் உள்ள எங்களது வீட்டிற்க்கு வந்தார்கள். இரண்டொருமணி நேரம் கதைத்ததில் சற்றே அறிமுகம் கிடைத்தது நால்வருக்கும். நால்வரும் ஒவ்வொரு ஆளுமை. பார்ப்பதற்க்கு வெகு இயல்பாகவும் இனிமையாகவும் இருந்தனர்.உணவு இடைவேளையின் போது இலக்கியம் மற்றும் திரைப்படம் சார்ந்தும், பகடிகளோடு அன்று பகல் போனது. மிக சிறிய சந்திப்பு அது.

கடந்த வாரம் நடைபெற்ற திரு. எம் கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஒரு நாள் கருத்தரங்கிற்கு அகரனிடமிருந்து அழைப்பு வந்தது. நானும் எனது சகோதரியும் சென்னைக்கு சென்றோம். முன்னிரவு விலாசம் தொடங்கி நிலப்படம் வரை மிகச்சரியான வழிகாட்டுதலோடு தகவல் வந்து சேர்ந்தது.

இலக்கியமும் திரையுலகம் இரு வேரு ஆளுமைகளைக் கொண்ட துறைகள்.

இலக்கியத்திற்கும் திரையுலகிற்கும் மொழி ஆளுமை, கற்பனை, பயணம், வாசிப்பு, புனைவு பற்றிய அடிப்படைகள், துறை சார்ந்த அறிவு, அனுபவம் எனப் பல விதிகள் பொதுவில் உண்டு, ஆனால் அதில் பயணிப்பவர் வேறு வேறு அடையாளங்களைக் கொண்டிருக்க வேண்டும்.   திரையுலகில் உள்ளவர் பெரும்பாலும் இலக்கியம் சாராமலே இருப்பர். முதல் நாள் முழுவதும் திரைத்துறை நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார் அகரன். அணைவரிடமும் ஒரே மாதிரியான பாவனையில் இணைந்திருந்தார். அவர் பேசிய உலகத்திரைப்படம் அனைத்தும் போர்ச்சூழல், புலம்பெயர்தல், மனித உணர்வுகள் மற்றும் மனஎழுச்சி என்றே கட்டமைக்கப்பட்டிருந்தது.

ஆங்கில அமெரிக்க ஐரோப்பிய பொழுதுபோக்குப் படங்களையே பார்த்து வளர்ந்த எனக்கு அகரனினுடைய விவாதம், திரைப்படங்களைப் பற்றிய பார்வை, படத்தேர்வு, காட்சி நுகர்வு, திரை அரசியல் எனப் பல நுண்மைகளை கவனிக்க கற்றுத்தந்தது. என்னுடைய விவாதம் நிச்சயம் சிறுபிள்ளைத்தனமாகவே இருந்திருக்கும். என் வயது மற்றும் என் துறை சார்ந்த அனுபவத்திற்காக மட்டுமே அகரன் அமைதிகாத்தார் என்றே நம்பிக்கொண்டேன்.

ஒரு முறை என் சகோதரியின் மற்றுமொரு அறிமுகமான் சதீக்ஷ் என்பவரிடம் இதே போல  உரையாடிக்க்கொண்டிருந்த போது அதுவும் பிதாமகன் காந்தியைப்பற்றி கதைத்தபோது அவர் பாவம் பொறுமை இழந்து, பற்றிக்கொண்டு எரிந்தார், அவரின் உடல் மொழிசிதைந்து, அகமெய் அலறியஹை முகத்தில் காணமுடிந்தது. நரம்பு புடைக்க ஆற்றாமையை அடக்க முடியாமல் வயதின் வரம்பு மீறி …..…ஒன்றும் செய்ய இயலாததால் கூடுதலாக இரண்டு சுருட்டு புகைத்து விட்டு கூடுமானவரை வேகமாக அங்கிருந்து தன் காதலியுடன் தூர விலகி விட்டார். பாவம்

அகரன் அமைதியானவர், விருந்தின் வினயம் கருதி விவாதத்தை தொடர்ந்தார். அந்த மனசுதான் “ கடவுள்”. அனுபவமில்லாத துறைசார்ந்த பேச்சும், நகைப்பும், பகடியும் ஆளுமைகளால் பெரும்பாலும் சகித்துக்கொள்ளமுடியாது, அகரன் அப்படியல்ல என்பதை தெரிந்துகொண்டேன்.

சென்னையிலிருகும் அகரனின் இல்லதிற்கு சென்றோம் காலை உணவிற்கு. என்னதான் ஈழ எழுச்சி என்றாலும் சாய்விருக்கையில் புலித்தோல் விரிப்பு அமைக்கப்பட்டு இருந்தது. ஆச்சரியமாக கேட்டதற்கு நகைச்சுவையாக இல்லை, ஆமாம் என்று பதில் வந்தது. யோசனையூடே அவரின் தாய் என்னை எடை போட்டுக்கொண்டே இருந்தார். அவர் கடந்து வந்த பாதையை என் அக்கா முன்பே கூறி இருந்தார். மரியாதையூடே ஒரு பயத்துடன் அமர்ந்திருந்தேன். அகரனின் மனைவி ப்ரபா மிக மிக எளிமையானவர், அவர் ஈழத்தமிழில் பேசுவதை கேட்பதற்கு கொடுப்பினை வேண்டும். நாம் மறந்த ஒரு அழகு தமிழ் நடை. தமிழகம் முழுவதும் வாசிப்பில், நட்பில், இயல்பில், மரபில் இப்படி பேசினால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அவர்கள் சமைத்த புட்டு, பருப்பு மற்றும் முட்டையை சுவைத்தோம். அகரனின் அன்பு மைந்தன் ஆதீரன் , இருவரின் கலவை. தமிழில் மைனா பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்தான். மைனாவை அவன் மைய்யா என்றது இனிமை.

அகரனை சிறிது வேலை செய்ய விடுவோம் என்று நானும் எனது அக்காவும் நீரதிகாரம் வெண்ணிலாவின் வீட்டிற்க்குச் சென்றோம். அவரது தாயும் இரட்டை மகள்களில்களில் ஒருவரான அன்பு மட்டும் இருந்தனர் வீட்டில்.  என்னுடன் அதிகமாக என் அக்கா பேசியது திரு ஜெயமோகன் மற்றும் திருமதி. வெண்ணிலா அவர்கள் பற்றி மட்டுமே. அவரின் மகள் அசல் என் மகள் சாம்பவியின் ஜாடையை ஒத்து இருந்தார்.  சிறிது நேரத்தில் வெண்ணிலாவும் கதிரும்(அவர் பெயர் தீபக் ஆனால்  எனக்கு கதிர் என்ற பெயர் அவருக்கு ஒத்திருந்தாக நினைக்கிறேன்) வந்தனர். பல நாள் பேசிப்பழகிய உணர்வுடன் உண்மையாக இயல்பாக உள்நோக்கமில்லாமல் பேசுவது எளிது என்று அவர்கள் குடும்பத்தைப்பார்த்து தெரிந்து கொண்டேன். இது எனக்கு புதிது. நான் அவர்களில் வேறல்ல என்பதை ஒவ்வொரு உரையாடல்களிலும் இயல்பாக்கிக்கொண்டே வந்தார்கள்.  வெகு குறைவான நேரமே அங்கிருந்தோம்.

மதியம் ஒரு புது உணவகத்திற்க்கு அழைத்துச்செல்வதாக அகரன் கூறி இருந்தார். பிரபாவுடன் இணைந்து நால்வரும் விமலம் மெஸ் சென்றோம். தீர்கசுத்த அசைவ உணவகம். பசிக்காக அல்லாமல் எங்களை மகிழ்விக்க, புதிய உணவனுபவத்தை தருவதற்க்காகவே அகரன் அங்கு அழைத்து வந்தார் என்பதை பிறகு புரிந்து கொண்டோம். வெகுசிறப்பான அனுபவம்.

மறுநாள் அகரன் நடத்தவிருந்த திரு எம்.கோபலகிருஷ்ணனின்  கருத்தரங்கிற்கு  கூட்டிச்சென்றார். அவரின் தோழமைகள் கட்டளையின்றி வேலை செய்துகொண்டிருந்தார்கள். சில சிறப்பு மேற்பாற்வைகள் செய்துவிட்டு ஒரு தமிழ்த்திரைப்பட முன்னோட்டக் காட்சிக்கு ஆயத்தமானோம்.

”நூடில்ஸ்” என்ற படம். முதன் முறையாக நானும் அக்காவும் சென்றோம்.  அன்று முழுவதும் பேரலைச்சலாக இருந்ததால் முன்னூடே அகரன் எங்களிடம் முக்கிய ஒப்பந்த விதிகளை அறிவுருத்தினார். கண்டிப்பாக தூங்க கூடாது, குறட்டையேதும் மறந்தும் விட்டுவிடக்கூடாது, நல்ல விமர்சனமாக இருக்க வேண்டும்(திரைப்படம் கவலை மறந்து ஈடுபாட்டுடன் ரசிக்கும்படியாக இருந்தது).  வழி நெடுக கலைஞர்கள் வரவேற்றார்கள். சிறிய அரங்கம். அகரனைத்தெரியாதவர்கள் மிகச்சிலரே. சில நபர்களை அறிமுகம் செய்து வைத்தார். இரண்டு மணி நேரத்திற்க்கும் குறைவாக ஓடக்கூடிய நகைச்சுவைப் படம். 

ஞாயிறு காலை நானும் எனது அக்கா மற்றும் நீரதிகாரம் வெண்ணிலா அனைவரும் திரு எம்.கோபாலகிருஷ்ணனின்  கருத்தரங்கிற் கு சென்றோம். காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடக்கம். வெண்ணிலா அவர்கள் முதலில் பேசுவதாக நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்தது, சென்னையில் 8.30 க்கு தொடங்கி மண்டபம் வருவதற்க்குள் 10.20 ஆகி விட்டிருந்தது. மிகுந்த பதற்றத்தினூடே உள்சென்றோம், அது வரையில் அகரன் எங்களிடம் கைபேசியில் அழைக்கவில்லை,நாங்கள் எங்கிருக்கிறோம் என்று கேட்கவில்லை. மிகவும் இயல்பாக எங்களை வரவேற்று அமரச்செய்தார். ஒரு 11 மணிக்கு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று தகவல் கூறிச்சென்றார். எப்படி ஒருவர் மிகப்பெரும் ஆளுமைகள் கலந்து கொள்ளும் ஒரு கருத்தரங்கத்திற்க்கு நேரம் தவறியதற்கு பெரிய பதட்டம் ஏதுமில்லாமல் எரிச்சலில்லாமல் நிகழ்வை நேர்மறையாக கொண்டுசெல்ல முடியும்?

25 – 30 வருடத்திற்கும் குறையாமல் இலக்கிய பங்களிப்பை செய்து வருகிறார் திரு. எம்.கோபாலகிருஷ்ணன். 1994 ல் சிறுகதை எழுத ஆரம்பித்தார், 2002க்கு பிறகு தொடர்ச்சியாக எழுத்துலக பணிகளை செய்கிறார். பொதுவில், வளரும், வளர்ந்துவரும், அரியப்படாத இளம் இலக்கியவாதிகளை பெரும்படைப்பாளர்கள் முன்னிருத்துவது வழக்கம். புலம்பெயர் ஈழத்தமிழர் இளந்தமிழர் ஒருவர் , இலக்கியவட்டத்தில் , திரைத்துறையில், வேரூன்றிக்கொண்டிருக்கும் வேளையில் தன்னுடைய படைப்புகளை தரவேற்றிக்கொள்ளவே முனைவார்.   ஆனால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்று திரு எம்.கோபலாகிருஷ்ணனை சிறப்பிக்கும் விதமாக, தமிழில் தற்போது பிரபலமடைந்துவரும், முறையே பங்களிப்பாற்றிவரும், திறமைமிகுந்த இளம் எழுத்தாளர்களை, பேச்சாளர்களை திரு. எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் முக்கிய படைப்புகளை படித்தறிந்து கருத்தரங்கில் பேச அழைத்திருந்தார்.

திரை விமர்சனம் போலவே திரு. எம்.ஜி யின் படைப்புகளை பகுப்பாய்வு செய்தனர் இளம் பேச்சாளர்கள். மொத்தம் ஆறு தலைப்புகள், ஒவ்வொறு தலைப்பிற்கும் இரண்டு பேச்சாளர்கள். ஒரே தலைப்பில் ஒருவர் மட்டுமே வாசிப்பை செய்தால் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதால் இரண்டு பேரை கூராய்வு செய்ய அமர்த்தியிருந்தார் அகரன். 

சிற்றொளியில் வீற்றிருந்த  மூலவரை பேரொளியில் உற்சவமூர்த்தியாக உலவச் செய்யும் முயற்சி என்று அகரன் முதலுரையாய் பேசும்போதே கைதட்டல் முழங்கியது.  அது உண்மையும் கூட. பன்னிரண்டு பேரும் பகுத்தாய்ந்து பேசியதை ரசிகர்களுடன் சேர்ந்து தன் முதல் திரைப்படத்தை கான வந்த இயக்குநர் போல சலனமில்லாமல் உற்சவமூர்த்தி பார்த்துக்கொண்டிருந்தது. யாரும் ஒருவரை ஒருவர் போல் இல்லாமல் தங்கள் இயல்பில்  தனித்துவமாக பேசியது வியப்பும், மகிழ்வாகவும் இருந்தது. முதல் நூலாக “அம்மன் நெசவு” நீரதிகாரம் வெண்ணிலா மற்றும் திரு. விக்னேஷ் இருவரால் பேசப்பட்டது.

அடுத்த உரை தொடங்குமுன்னே பலரும் அம்மன் நெசவு புத்தகங்களை வாங்க வரிசைகட்டியதே முதல் வெற்றியைக்காட்டியது. ஒவ்வொரு உரையின் தொடக்கத்தில் முன்னுரை வழங்கிவிட்டு தேநீர் ஏற்பாட்டினை செய்யச்சென்றார் அகரன். உரை முடிந்ததும் வாழ்த்துரை வழங்கி பின் அடுத்த உரையை தொடங்கி விட்டு மதிய உணவிற்கான ஏற்ப்பாட்டிற்கு சென்றார் .  

ஒவ்வொருவருக்கும் தனித்தனியே விருந்துபச்சாரம் செய்து முடித்து மதிய அரங்கு ஆரம்பித்தது. பன்னிரண்டு ஆய்வுகள் முடிந்தவுடன், சிறப்பு அழைப்பாளர்கள் தங்கள் பங்கினைச் செய்ய  முடிவாக திரு எம்.ஜி அவர்கள் பேசினார். நிறைய இடங்களில் நெகிழ்ந்து, கண்பணித்து தனது இதயபூர்வமாண நன்றிகளை நெகிழ்வுடன் கூறினார்,  மிகச்சுருக்கமான பேச்சு.

ஞாயிற்றுக்கிழமை, சென்னை கூட்ட நெரிசல், மதிய அசைவ உணவு, ஒருநாள் விடுமுறை போன்ற பல காரணங்களைத் தாண்டி அகரனின் அன்பிற்கும்,  திரு. எம்.கோபாலகிருஷ்ணனின் தன்னலமற்ற இலக்கிய அர்ப்பணிப்பிற்கும், இதுபோல் கருத்தரங்கிற்கு இசைவாகாமல் இருப்பது எதிர்கால இலக்கிய  உலகிற்கு கேடு என்று வருகை தந்து அரங்கை நிறைத்த சொந்தங்களுக்கும் நன்றி கூறி விடை கொடுத்தது அந்நாள்.

போர்ச்சூழலில் பிறந்து, துயரங்களால் தத்தெடுக்கப்பட்ட தம்பி அகரன். புலம்பெயர்ந்தவர்கள் பொதுவில் தன்னை தன் குடும்பத்தை தன் சுற்றத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதிலேயே கவனமாக இருப்பர்.  பிறப்பிடத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்படுதலின் தாங்கொணாத்துயர் புதிய முயற்சிகளுக்கும், பெறிய முன்னேற்றத்திற்கும், துணிந்த பரிசோதனைகளுக்கும் தடையாகவே இருக்கும். அதற்கு நாம் திருப்திகொள்ளும் வகையில் சப்பைக்கட்டுகள் நிறைந்து கிடக்கும். திருமணத்தில், வேலையில், சமூகத்தில் நமது போரட்ட வைபவங்கள் மாறி மாறி அமையப்பெற்று நம்மைச் சமூகப்போராளியாக மாற்றுவது போல இல்லை இந்த வாழ்விடப்பெரும்பெயர்ச்சி. மிகச்சரியான திட்டமிடல், எளிய பணிவான வாழ்வு, கடும் பயிற்சி, தொடர் முயற்சி, நன்றியுணர்வு,  தாய்மொழிப்பற்று, வாசித்தல், நட்புபாரட்டுதல், பயணம், பக்தி என்று பலதுறைகளில் தன்னை அர்ப்பணிப்பவருக்கு மட்டுமே அருளப்படும். அகரன் அருளப்பட்டவன்.  அகரனின் நட்பை நான் பொக்கிஷமாக பாதுகாப்பேன்.

குட்ஸு

உலகெங்கிலும் பிரபலமான ஒரு சிறார் கதை. “Jack and the Beanstalk’’. இதில் தகப்பனை இழந்த ஜேக் தனது அம்மாவுடன் வறுமையில் வாழ்கிறான். அவர்களது மாட்டையும் விற்க வேண்டி வந்தபோது சிறுவனான ஜேக் சந்தையில் மாட்டை விற்றுவிட்டு பதிலாக கிடைத்த ஐந்து  மந்திர பீன்ஸ் விதைகளை கொண்டு வருவான். கோபம் கொண்ட ஜேக்கின் அம்மா அவற்றை ஜன்னல் வழியே வீசி எறிவாள்.

ஆனால் மறுநாள் காலையில் ஜேக் அந்த பீன்ஸ் கொடி பிரம்மாண்டமாக வளர்ந்து வானுயர சென்றிருப்பதை  பார்க்கிறான், அந்த  பீன்ஸ் செடியில் ஏறி  சூனியக்காரியொருத்தியின்  மாயக்கோட்டைக்குச் சென்று  பொன்முட்டையிடும் கோழியை கொண்டு வரும் ஜேக்,  துரத்தி வந்த சூனியக்காரியை பீன்ஸ் கொடியை கோடாலியால் வெட்டி கொல்கிறான்.பின்னர் அவனும் அம்மாவும் செல்வச்செழிப்புடன் வாழ்கிறார்கள்.

1734  ல் வெளியான இந்த ஜேக் மற்றும் மந்திர பீன்ஸ் கொடியின் கதை பின்னர் பற்பல வடிவங்களில் உருமாறி உலகெங்கும் பரவியது. இதை கேட்காத குழந்தைகளே இல்லை எனலாம் 

இப்படி ராட்சஷத்தனமாக ஓரிரவில்  வளரும்  மந்திர செடிகள், மாயக்கொடிகள் குறித்த சிறார் கதைகள் ஏராளமுண்டு.

ஒரு வீட்டின் அளவில் பெரிதாக இருக்கும் மந்திர பண்புகள் கொண்ட இலைகள் கொண்டிருக்கும் மரம் குறித்த The Giving Giant,கதை.

அந்த மரத்தடியில் வந்து நிற்பவர்களை  கிளைகளை பெருக்கி கட்டித் தழுவி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி அவர்களை அறிவாளியாக்கும் வில்லோ மரத்தின் கதையான The Wisdom Willow,

ஒரு பள்ளத்தாக்கு கிராமத்தில் வளரும்   மேகங்களுக்குள் மறையும் கிளைகளையும் பாதாளம் வரை செல்லும் வேர்களையும் கொண்ட மரங்களின் கதையான The Legend of Titan Sprout Valley.

மிக வேகமாக வளர்ந்து தனது பற்றுக்கம்பிசுருள்களால் அருகில் வருபவர்களை இழுத்து பிடிக்கும் ஒரு ஐவி கொடியை பற்றிய  Enchanted Ivy என்னும் கதை,

இது போன்ற தேவதைக்கதைகளில் கற்பனையில் உருவாக்கப்பட்ட தாவரங்களை காட்டிலும் மிக அதிகம் வளரும் தாவரங்கள்  உண்மையிலேயே இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் குட்ஸூ கொடி (Kudzu). இக்கொடியை குறிக்கும் ஜப்பானிய பெயரான  “kuzu”, என்பதன் ஆங்கில தழுவல்தான் Kudzu.

ஆசியாவை தாயகமாக கொண்ட பயறு வகை குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த   பல்லாண்டு கொடி வகை தாவரமான குட்ஸூ மிக வேகமாக வளரக்கூடிய ஆக்கிரமிப்பு தாவரம்

ஆசியாவிலிருந்து அறிமுகமாகி அமெரிக்காவின் சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை அளித்துக் கொண்டிருக்கிறது இந்த குட்ஸூ கொடி. இக்கொடிக்கு அமெரிக்காவில் ’’தெற்கை தின்ற கொடி’’ என்றே பெயர் .(the vine that ate the South) ஏனெனில் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் மிக வேகமாக பரவி ஆக்கிரமித்திருக்கும் இக்கொடியை அகற்ற  களைக்கொல்லிகள்  பயன்படுத்துவது, வெட்டியகற்றுவது ஆகியவற்றிற்கு மட்டும் ஆண்டுக்கு சுமார்  6 மில்லியன் டாலர்கள் செலவாகிறது. 

அமெரிக்க வனத்துறையும் விவசாயத்துறையும் குட்ஸூவை எத்தனை கட்டுப்படுத்தியும் ஆண்டுக்கு சுமார் 1, 50,000 ஏக்கர்களில் இவை விரைந்து செழித்துப் பரவுகிறது என 2015ல்  ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

வளையும் தன்மை கொண்ட உறுதியான தண்டுகளையும் பற்றுகம்பி சுருள்களையும் கொண்டு அருகில் இருக்கும் ஆதாரங்களை தழுவிப்பிணைத்து மிக வேகமாக அவற்றையே கம்பளியை போல் மூடி  வளரும் இலையுதிர்க்கும் இதற்கு Japanese arrowroot , Chinese arrowroot என்றும் பெயர்களுண்டு

Pueraria  பேரினத்தை சேர்ந்த இவற்றின் ஐந்து சிற்றினங்களுமே அகன்ற முக்கூட்டிலைகளை கொண்டிருப்பவை, ஆக்ரமிக்கும் இயல்பு கொண்டவை .(P. montana, P. lobata, P. edulis, P. phaseoloides, P. thomsoni)

Pueraria montana var. Lobata என்னும் சிற்றினம் இவற்றில் மிக அதிகம் காணப்படுமொன்று.

இக்கொடியின் தண்டுக்கணுக்கள் மண்ணில் பட்டால் வேர் பிடிக்கும் இயல்புடையவை என்பதால்  தண்டு மண்ணில் படும் இடங்களிலெல்லாம் இவை மிக வேகமாக வளர்ந்து அடர்த்தியாக பரவும்.. வேர்க்கிழங்குகள் மாவுச்சத்தும் நீர்சத்தும் நிரம்பியவை, வேர்தொகுப்பு மிக அடர்த்தியாக முழுத்தாவரத்தின் எடையில் 40 சதவீதத்தை கொண்டிருக்கும், அகன்ற இலைகள் வளிமண்டல நைட்ரஜனை ஈர்த்து தாவரத்துக்கு அளிக்கும்.

பொதுவாக தண்டுகள் மூலம் இவை பரவி வளருமென்றாலும் மகரந்த சேர்க்கை நடைபெறுகையில் விதைகளும் உருவாகும். விதைகள் வேர்க்கிழங்குகள் மூலமும் குட்ஸூ இனப்பெருக்கம் செய்யும். காடுகளின் விளிம்புகளில் இவை அதிகம் காணப்படும்

குட்ஸு ஜப்பானில் தோன்றி பின்னர் சீனாவுக்கும் கொரியாவுக்கும் அலங்காரத்தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஜப்பானிலும் அதை சுற்றியுள்ள பல தீவுகளிலும் , கொரியாவிலும் இவை செழித்து வளர்ந்திருக்கின்றன.  

உலகின் முதல் சர்வதேச கண்காட்சி பிலடெல்பியாவில் 1876, ல் நடைபெற்ற போது குட்ஸூ அங்கு காட்சிப்படுத்தபடுவதற்காக ஜப்பானிலிருந்து கொண்டுவரப்படடது. அதன் அழகிய  அகன்ற இலைகளுக்காகவும்  நறுமணமிக்க வண்ணமயமான மலர்களுக்காகவும் இவை பெரிதும் விரும்பப்பட்டன. பின்னர் வீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கவும் நிழல் தரும் செடிகளாகவும் இவை சந்தைப்படுத்தப்பட்டன. இதன் விரைவான வளர்ச்சியினால் ’அதிசயக்கொடி’ என்று அப்போது பரவலாக இதற்கு பெயர் இருந்தது. இவற்றின் அதிகப்படியான  புரதத்தினால் கால்நடை தீவனமாகவும்,  அதிகம் சாகுபடி செய்யப்பட்டன.

தாவரவியல் பண்புகள்

 ஒரு நாளில்  0.3 மீ வளரும் குட்ஸு புனைவுகதைகளில் வரும் ராட்ஷச தாவரங்களை காட்டிலும் அச்சுறுத்துவது.

ஒரு குட்ஸு கொடி சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். ஒரு நாளில் 3செ மீ தூரம் கீழ்நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் இவற்றின்    வேர்கிழங்குகள் 200 கிலோ அளவு எடைகொண்டிருக்கும்,

இவற்றின் இலைகள் நல்ல அகலமாக அடர்பச்சை நிறத்தில் இருக்கும். இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிற  நறுமணம் மிக்க மலர்கள் நீண்ட தொங்கு மஞ்சரிகளில்  உருவாகும்.

மண் நிறத்தில் தட்டையான நீண்ட பீன்ஸ் போன்ற  மென்மயிர் போன்ற வளரிகள் சூழந்திருக்கும் கனிகள் 3 லிருந்து 10 கடினமான விதைகளை கொண்டிருக்கும்,

குட்ஸு அனைத்து விதமான காலநிலைகளையும் தாங்கி வளரும் இயல்புடையது அதிக பனிக்காலத்தில் கூட இவற்றின் மேல் பகுதி மட்டும் உலர்ந்து வாடிவிடும். சாதகமான காலம் திரும்புகையில் வேர்கிழங்குகளிலிருந்து இவை மீண்டும் முளைத்து வளரும். இவை வறட்சியையும் தாங்கி வளரக்கூடியவை.

பரவலும் ஆக்கிரமிப்பும்

இதன் அகன்ற வேர்த்தொகுப்பினால் தென்னமெரிக்காவில் மண் அரிப்பை தடுக்க சரிவான நிலங்களில் குட்ஸூ ஏராளமாக பயிரிடப்பட்டது, 1946ல் சுமார் 85 மில்லியன் குட்ஸு விதைகள் இதன்பொருட்டு சரிவுகளில் விதைக்கப்பட்டு 1,200,000 ஹெக்டேர்களில் குட்ஸு பரவியது, விவசாய நிலங்களின் விளிம்புகளில் இவை பசுமைவேலிகளாக பரவி வளர்ந்தன.  

பெரும்பாலான பருத்திப்பயிர்களில்  பூச்சித்தாக்குதல் உண்டாகி விளைநிலங்கள் கைவிடப்பட்டபோது குட்ஸு வேகமாக பரவி விளைநிலங்களுக்குள் ஊடுருவியது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியின்  காலநிலை குட்ஸுவுக்கு சாதகமாக இருந்ததால் அவற்றின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாமலாகியது.

அவற்றின் மண்ணரிப்பை தடுக்கும் பயன்கள் பலராலும் வியந்து பாரட்டப்பட்டு 1930–1940 களில் அமெரிக்க குட்ஸு கிளப் துவங்கப்பட்டு 1943ல் அதில் 2000  உறுப்பினர்கள் இணைந்திருந்தார்கள்.

இவற்றின் அச்சுறுத்தும் வளர்ச்சியினால் மண்ணரிப்பை தடுப்பதற்கென்று குட்ஸுவை பயிரிடுவது 1950களில் முற்றிலும் நிறுத்தப்பட்டது

இரண்டாம் உலகப்போரின் போது குட்ஸு அமெரிக்க படையினர் மறைந்துகொள்ள வசதியாக இருந்ததால் பசிஃபிக் தீவுகளின் அருகில் இருக்கும் வனட்டு மற்றும் பிஜி தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1970. ல் அமெரிக்க விவசாய துறை குட்ஸு ஒரு ஆக்கிரமிப்புக் களை என அறிவித்து சில விளைநிலங்களில் அவற்றை அப்புறப்படுத்தியது

1997ல் குட்ஸூ தொந்தரவு தரும் களைச்செடிகளின் பட்டியலில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டது 

தற்போது குட்ஸூ அமெரிக்காவின் தென்கிழக்கு பிரதேசங்களில் மட்டும் சுமார் 7,400,000  ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது

அச்சுறுத்தல்

குட்ஸூ அருகில் இருக்கும் மரங்களை கம்பளி போல மூடி அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி கொல்கிறது பல மரங்கள் குட்ஸுவின் எடையினால் கிளைகள் முறிந்தும் வேரோடு பெயர்ந்தும் அழிந்திருக்கின்றன. கட்டுப்படுத்த முடியாத   வளர்ச்சியால் குட்ஸூ அமெரிக்காவின் இயல் தாவரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

வளிமண்டல நைட்ரஜனை அம்மோனியாவாக மாற்றி அருகிலிருக்கும் தாவரங்களுக்கான நைட்ரஜனையும் குட்ஸூ  தான் எடுத்துக்கொள்கிறது. ஒரு ஆண்டில் சுமார் 235 கிலோ நைட்ரஜனை குட்ஸு எடுக்கிறது. இந்த வேகம் இயல் தாவரங்கள் நைட்ரஜனை எடுத்துக்கொள்ளும் வேகத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமென்பதால் இயல்தாவரங்கள் மெல்ல மெல்ல நைட்ரஜன் சத்து இல்லாமல் மடிகின்றன. அருகில் எந்த தாவரமும் வளராமல் மண்ணும் நல்ல நைட்ரஜன் சத்துடன் இருக்கையில் குட்ஸு ராட்ஷத்தனமாக வளர்கிறது.

குட்ஸு அமெரிக்காவின் 32 மாநிலங்களில் பெரும் சூழல் அச்சுறுத்தலை கொடுக்கிறது. 

ஆசிய பிரிவெட்களும், ஆக்ரமிப்பு ரோஜா செடிகளும் குட்ஸுவைகாட்டிலும் தீவிரமான அச்சுறுத்தலை அமெரிக்க சூழலுக்கு அளிக்கின்றன என்றாலும்  விரைந்து வளருவதால் குட்ஸுவே அதிக ஆக்ரமிப்பு தாவரமாக அமெரிக்க மக்களால் கருதப்படுகிறது. குட்ஸு ஒரு நாளில் 1 மைல் தூரம் வளரும் என்னும் கதைகளெல்லாம் கூட அமெரிக்காவில் உலவுகின்றன, 

வன எல்லைகளில் மரங்களினடியில் கவனிக்காமல் விட்டுவிட்ட வாகனங்களை குட்ஸு ஒரு வாரத்தில் முழுவதும் பரவி மூடிவிடுகிறது, கட்டிடங்களையும் இவை ஆக்கிரமித்து மூடிவிடுகின்றன.

ஐரோப்பாவில் 2016ல் குட்ஸு, ஆக்ரமிப்பு களைகளின் பட்டியலில் இணைக்கப்பட்டது. ஐரோப்பாவில் குட்ஸுவை இறக்குமதி செய்வது, சாகுபடி செய்வது மற்றும்  அதன் விதைகளை சந்தைப்படுத்துவது  ஆகியவை சட்டப்படி குற்றம்

சமீபத்தில் குட்ஸூ வடகிழக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்ஸர்லாந்து, வடக்கு இத்தாலி ஆகிய பிரதேசங்களில் ’’தேவையற்ற தாவரம்’’ என்று வகைப்படுத்தப் பட்டிருக்கிறது  

அமெரிக்க வனப்பொருட்களின் விளைச்சலில் குட்ஸுவினால் மட்டும் ஆண்டுக்கு  $100 லிருந்து $500 மில்லியன் நஷ்டம் உண்டாகிறது. குட்ஸுவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 2000 டாலர்களும்,  குட்ஸு,  தொழிற்சாலைகளின் நிலத்தடி குழாய்களை சுற்றி இறுக்கி உடைத்துவிடுவதை சரிசெய்யமட்டும் 1. 5 மில்லியன் டாலர்களும் ஆண்டு தோறும் செலவாகிறது.

அமெரிக்க தேசிய பூங்காக்களில்  பல ஏக்கர்களில் குட்ஸூ ஊடுருவியிருப்பதால் பூங்காக்களின் முக்கியத்துவமும் அழகும் குறைகிறது.

கட்டுப்படுத்தல்

குட்ஸுவை இயந்திரங்கள் கொண்டும் ரசாயனங்கள் கொண்டும் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றாலும், தண்டு,விதை, வேர்கிழங்குகளின் மூலம் இவை தொடர்ந்து பெருகி வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் உடைந்த சிறு துண்டு வேர்க்கிழங்கு கூட மிக வேகமாக வளர்ந்து விடும்.

குட்ஸு ஆக்கிரமித்திருக்கும் பிற இயல் தாவரங்களை அதிகம் சேதப்படுத்தாமல் குட்ஸுவில் மட்டும் நோயுருவாக்கும் Myrothecium verrucariap பூஞ்சையை அறிமுகப்படுத்தி இவற்றை கட்டுப்படுத்தும் முயற்சி  1998லிருந்து அமெரிக்க விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு இன்னும் ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றது.

வெற்றிகரமான முறையாக இப்போது நடைபெறுவது ஆடுகளும் பன்றிகளும் குட்ஸுவை மேய்வதுதான். ஒரு சிறு ஆட்டுக்கூட்டம் ஒருநாளில் ஒரு ஏக்கரில் பரவியுள்ள குட்ஸுவை உண்டு விடுகிறது.

உணவுப்பயன்கள்

கொரியாவின் பிரபல நுடுல்ஸ் உணவான naengmyon குட்ஸுவின் வேர்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது

 இதன் வேர் கிழங்கு மாவு சீன, ஜப்பானிய, கொரிய உணவுகளில் அதிகம் பயன்படுகிறது, கொரியாவில் வேர் கிழங்கிலிருந்து தேநீர்  போன்ற பானம் தயாரிக்கப்படுகிறது. ஜப்பானில் இந்த மாவு சூப்களை கெட்டியாக்க உபயோகப்படுகிறது

இதன் மலர்களும் இலைகளும் கூட உணவாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் மலர்களிலிருந்து கிடைக்கும்  ஊதா நிற தேன் திராட்சையின் சுவை கொண்டிருக்கும்.

 மருத்துவப்பயன்கள்

குட்ஸுவின் மற்றொரு பயன் அதிலிருக்கும் மருத்துவகுணம் உள்ள வேதிப்பொருட்கள்  Puerarin, daidzein, daidzin,, mirificin, மற்றும் salvianolic அமிலம் ஆகியவை பாரம்பரிய சீன மருத்துவத்தில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது

சீன மருத்துவத்தில் மது அடிமைகளை மீட்க குட்ஸுவிலிருந்து எடுக்கப்படும் மருந்துகள் உபயோகிக்கப்படுகின்றன.

பிற பயன்கள்

குட்ஸு கால்நடை தீவனமாகவும்,  மட்கச்செய்தபின் பயிர்களுக்கு உரமாகவும் பயனாகிறது.

குட்ஸுவின் தண்டுகளிலிருந்து நார் எடுக்கப்பட்டு ஆடைகளும் காகிதங்களும் உருவாக்கப்படுகின்றன .இவற்றை தொழிற்சாலைகளில் தயாரிக்கும் முன்னெடுப்புகளும் நடந்துகொண்டிருக்கின்றன. குட்ஸுவிலிருந்து அழகுசாதன பொருட்கள், எத்தனால் ஆகியவையும் கிடைக்கின்றன 

உலகின் மாபெரும் சவால்களான காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு அகியவற்றுடன் இந்த  அயல் ஆக்கிரமிப்புக்களைகள், அயல் ஆக்கிரமிப்பு உயிரினங்களின் அச்சுறுத்தலும் இணைந்திருக்கிறது எனினும் இதுகுறித்து போதுமான கவனம் இன்னும் உலக நாடுகள் பலவற்றில் உண்டாகி இருக்கவில்லை

 இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்கின் மனைவி ஹூக்ளி நதியில்  அறிமுகப்படுத்திய ஆகாயத்தாமரைகள் இப்போது இந்தியாவின் நீர் நிலைகள் பலவற்றை மாசுபடுத்தி பல நீர்வழித்தடங்களை அடைத்திருக்கிறது

குட்ஸுவை போலத்தான் தென்னமெரிக்காவில் இருந்து லண்டானா அழகுத்தாவரமாக உலகின் பல நாடுகளுக்கு அறிமுகமாகி உலகின் முதல் பத்து ஆக்ரமிப்பு களைகளின் பட்டியலில் இருக்கிறது

 தென்னமரிக்காவிலிருந்து நமக்கு விறகுக்காக  சீமைக்கருவேலம் அறிமுகமாகி இப்போது கட்டுக்கடங்காமல் வளர்ந்துகொண்டிருக்கிறது.  

இந்தியாவுக்குள் கோதுமை தானியங்களுடன் கலந்து வந்ததுதான் பார்த்தீனியம்.

கருங்கடலில் இருந்து வட அமெரிக்காவுக்கு கப்பல்களின் அடியில் ஒட்டிக்கொண்டு வரிக்குதிரை சிப்பி உயிரினங்கள் சென்று  பல்கிபெருகி இன்று ஆக்கிரமிப்பு உயிரினங்களாக, பல கடல்வாழ் இயல் உயிர்களுக்கு அச்சுறுத்தலாகி விட்டிருக்கின்றன

1949ல் இந்தியபெருங்கடலின் தென்பகுதியின் மரியோன் தீவுக்கு ஐந்து பூனைகள் எலிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு கொண்டுவரப்பட்டன. 1977ல் மூவாயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அப்பூனைகள் பல்கிப்பெருகி அங்கிருந்த இயல் பறவைகள் பலவற்றை  வேட்டையாடி அழித்தன.

வளர்ப்பு பிராணியாக வைத்திருந்த மலைப்பாம்புகளை ஃப்ளோரிடாவில் காடுகளுக்குள் சிலர் கொண்டு வந்து விட்டனர். 6 மீட்டருக்கும் அதிகமான நீளம் வளரக்கூடிய அப்பெரும் பாம்புகள் அப்பிரதேசத்தின் இரு முக்கிய பறவை இனங்களை வேட்டையாடி முற்றிலும் அழித்தன

Bighead மற்றும் silver carp  எனப்படும் இரு பெரிய மீன் வகைகள் மீன் பண்ணைகளில் இருந்து தப்பி மிஸோரி ஆற்றுக்கு வந்தன. அவை அங்கிருந்த சிறு மீன்களின் உணவுகளை வேகமாக உண்டு அவற்றை பெருமளவில் அழித்தன.

இப்படி ஏராளமான அயல் உயிரினங்கள் தெரிந்தும் தெரியாமலும் புதிய இடங்களில் அறிமுகமாகி இயல் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறுகின்றன.

ஜேக் ஏறிச்சென்று மாயக் கோட்டையிலிருந்து பொன்முட்டையிடும் கோழியை கொண்டு வந்தது போலல்ல இதுபோன்ற அயல் ஆக்கிரமிப்பு தாவரங்களின் பரவல். இவை  சூழல் படுகொலைக்கு  காரணமாகிவிடுகின்றன.

பல நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களின் காலணிகளின் அடியிலிருக்கும் மண்ணிலிருந்தும் பல அயல் தாவர விதைகளும் மகரங்தங்களும் புதிய பிரதேசங்களுக்கு அறிமுகமாகின்றன, எனவே உலக நாடுகள் அனைத்தும் மிக கவனமுடன் இருந்து இந்த அயல் உயிரினங்களின் அறிமுகத்தை, ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த வேண்டும். 

Pet poisons

வளர்ப்புப்பிராணிகள் நம் வாழ்வில்  மகிழ்ச்சியையும் தோழமையையும் நிறைவையும் தருகின்றன, ஆனால் அவற்றின் உரிமையாளர்களாக, அவற்றைப் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதும் மிக முக்கிய கடமையாகும். வளர்ப்பு பிராணிகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருட்கள் நம் வீட்டிலும் வீட்டுதோட்டத்திலும் நாம் பிரியம் என்னும் பேரில் அவற்றிற்கு அளிக்கும் உணவுபொருட்களிலும் இருக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன

 நச்சுத்தன்மையுள்ள தாவரங்கள் அல்லது சில உணவுகள் என  செல்லப்பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது உயிருக்கே ஆபத்தான பல பொருட்கள் நம்மை சுற்றிலும் அநேகமாக அனைத்து வீடுகளிலும் உள்ளன.  

வீடுகளில் தோட்டம் வைத்திருப்பவர்கள் பலர் செடிகொடிகளை செல்லமாக வளர்ப்பதுண்டு. செடிகளுக்கு நீரும் உரமும் அளித்தால் போதும் ஆனால் செல்லப்பிராணிகளுக்கு எதை உணவாக்க கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர்களும் உண்டு. 

கோடைவிடுமுறைக்கென சமீபத்தில் ஊட்டி சென்றிருந்த போது தங்கி இருந்த விடுதி ஒன்றில் தங்கள் வீட்டு பொமரேனியன் நாயையும் உடன் அழைத்து வந்திருந்த ஒரு குடும்பத்தினர், ரமேஷ் என்று பெயரிடப்பட்டிருந்த அதை மடியில் அமர்த்தி மூன்று வேளையும் தயிர் சாதம் ஊட்டினார்கள்.  நல்லவேளை தொட்டுக்கொள்ள ஊறுகாய் கொடுக்கவில்லை.

பிராணிகளின் உடலியல்புக்கு தகுந்த. மனிதர்களின் சீரண மண்டலத்தை காட்டிலும் வேறுபட்ட சீரணமண்டலத்தை கொண்டிருக்கும் விலங்குகளுக்கு, அவற்றின் உடலியக்கங்களுக்கு தேவையான மற்றும் ஏற்ற உணவுகளை அளிப்பதுதான் சரி

அவற்றை நம் குடும்பத்தின் உறுப்பினர் போல நடத்துவதும் நினைப்பதும் அன்புமிகுதியால் தான் எனினும் அவற்றின் உணவுத்தேவைகள் மனிதர்களை காட்டிலும் வேறானது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். மேலும் பல உணவுப்பொருட்கள் செல்லப்பிராணிகளுக்கு மிக ஆபத்தானதாகி விடுவதுமுண்டு. அப்படியான சிலவற்றின் பட்டியல் இங்கே:

  • அவகேடோ-அல்லது பட்டர் பழம் (Avocado): (Persea americana) அவகேடோவின் இலைகள், கனிகள் மற்றும் விதைகளில் இருக்கும் பெர்சின் (persin,) என்னும் வேதிப்பொருள் பறவைகளின் உயிருக்கு ஆபத்தானது 
  • ரோடோடென்ரான்  (Rhododendron)செடிகளில்  இருக்கும் க்ரேயான் (grayantoxins,)  நஞ்சு பறவைகளின் இதயத்தை செயலிழக்கச் செய்யும்
  • Lily of the Valley என்றழைக்கப்படும் மிக அழகிய  வெண்ணிற மணிகளை போன்ற மலர்களைக் கொண்டிருக்கும் செடியில்   (Convallaria majalis) கார்டியாக் கிளைகோசைடுகள் எனப்படும் இதயத்துடிப்பை நிறுத்தும் பொருட்கள் உள்ளன. அவை பறவைகளுக்கு மிகவும் ஆபத்தானது
  • டேஃபோடில்கள் எனப்ப்டும் மிக அழகிய மலர்களை கொண்டிருக்கும் அலங்கார செடியின் (Daffodils,Narcissus spp.) வேர்க்கிழங்குகள் லைகோரின் (lycorine) என்னும் ஆல்கலாய்டை கொண்டிருக்கும் இது பறவைகளின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்
  • தென்னிந்தியாவில் மிக சாதாரணமாக காணப்படும் கோவில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் அழகிய நறுமணமுள்ள மலர்களை அளிக்கும் அரளிச் (Oleander Nerium oleander) செடியின் அனைத்து பாகங்களுமே மிக மிக நஞ்சுகொண்டது. இவையும் பறவைகள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கும் கார்டியாக் கிளைக்கோசைடுகள் கொண்டிருக்கின்றது.
  • பல நிறங்களில் மிக அழகிய மலர்களை அளிக்கும் லில்லிகள் உண்டு (Lilium spp.) ஈஸ்டர் லில்லி, டைகர் லில்லி, டே லில்லி என பலவகைகளில் இருக்கும் இவை பூனைகளுக்கு மிக ஆபத்தானது இவற்றின் இலை மலர் மகரந்தம் என எதை பூனைகள் சாப்பிட்டலும் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழப்பு உண்டாகும்
  • மதன காமராஜ மரம் என்றழைக்கப்டும் சிறிய தென்னை மரங்களை போலிருக்கும் சைகஸ்  மரங்கள் (Sago Palm ,Cycas spp )  உலகெங்கிலும் மிக அதிகமாக விரும்பி வளர்க்கப்படும்  பிரபலமான  அலங்கரவகை தாவரங்கள். இதன் கொட்டைகள் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ஈரல் செயலிழப்பை, வலிப்பை உண்டாக்கி உயிரிழக்கச் செய்யும்
  • ட்யூலிப் மற்றும் வெங்காயத்தாமரை செடிகளும் (Tulips and Hyacinths) ட்யூலிபாலின் மற்றும் ஹையாசிந்தின் என்னும் நஞ்சினை கொண்டிருக்கின்றன. இவை செல்லப்பிராணிகளுக்கு உடலுபாதைகளை உண்டாக்கும்
  • சோற்றுக்கற்றாழை மனிதர்களுக்கு பல நன்மைகளை அளிக்கும் ஒரு மூலிகை தாவரம் ஆனால் இது நாய்களுக்கும் பூனைகளுக்கும் வயிற்று உபாதைகள் உண்டாக்க்கி அதிகமான அளவில் உட்கொள்ளப்பட்டால் உயிரிழப்பையும் உண்டாக்கும்
  • மிக சாதாரணமாக வீடுகளில் அழகிய இலைகளுக்காக பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும்  ஊமைப்பிரம்பு என்றழைக்கப்படும் (Dieffenbachia (Dieffenbachia spp, Dumb Cane) செடியில் ஆக்ஸலேட் கிரிஸ்டல்கள் உள்ளன. இவை வாய் மற்றும் தொண்டையில் அழற்சி மற்றும் வீக்கம் உண்டாக்கி குரல் இழப்பை தற்காலிகமாக உண்டாக்கும். இச்செடிகள் வளர்ப்பு பிராணிகள் மற்றும் மனிதர்களுக்கும் மிக ஆபத்தானவை
  • மிக மிக குறைந்த அளவில் கொடுக்கப்பட்டாலும் தியோபுரோமின், காஃபின் ஆகியவற்றை கொண்டிருக்கும் சாக்கலேட்டுகள் கிளி உள்ளிட்ட அனைத்து பறவைகளுக்கும் நஞ்சாகி உயிராபத்தை உண்டாக்கும்
  • இவற்றோடு மிக அதிக உப்பு, கொழுப்பு, வெங்காயம் பூண்டு, திராட்சை, ஈஸ்ட் கலக்கப்பட்ட மாவு ஆகியவைகளும் செல்லப்பிராணிகளுக்கு உடல்நல கோளாறுகள் உண்டாக்கும்.

செல்லப்பிராணிகள் இப்போது காவலுக்கு மட்டுமல்ல  நடைபயணத்தோழமைக்கும்  விழியற்றவர்களுக்கு வாழ்க்கைத் துணையாகவும் பலருக்கு பெற்ற பிள்ளைகளுக்கிணையாகவுமே இருக்கின்றன. அவற்றின் உணவுத்தேவையை சரியாக அறிந்துகொண்டு அவற்றிற்கு உணவளிக்க வேண்டும்.  அவற்றிற்கு ஆபத்துண்டாக்கும் உணவுகளைக்குறித்தும் நாமறிந்திருக்க வேண்டியது மிக அவசியம்

குருதி மரம்

 இந்தியப்பெருங்கடலில் ஆப்பிரிக்க கடற்கரைக்கு அடுத்து அமைந்திருக்கும் நான்கு தீவுகள் அடங்கியது  சொகோட்ரோ தீவுக்கூட்டம். இது 34 மில்லியன் வருடங்களுக்கு முன்பே அரேபிய நிலப்பரபிலிருந்து தனியே பிரிந்த நிலப்பரப்பு. யேமான் குடியரசின் பகுதியாகிய இங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை.

டிராகன் குருதி மரங்கள் என்பவை தாவர உலகின் அதிசயங்களில் ஒன்று.இத்தீவுக்கூட்டங்களில் ஒரு தீவில் மட்டுமே காணப்படும் இவற்றை நாம் விரைவில்   நிரந்தரமாக இழக்கவிருக்கிறோம். 

இம்மரங்கள் 1835ல்    அத்தீவுக்கூட்டங்களுக்கு சென்ற கிழக்கிந்திய கம்பெனியின் லெஃப்டினண்ட் வெல்ஸ்டெட் (Lieutenant Wellsted) என்பவரால்  முதன் முதலில் விவரிக்கப்பட்டது. முதலில் இவை Pterocarpus draco என்று பெயரிடப்பட்டன. பின்னர் 1880ல்தான் ஸ்காட்லாந்து  தாவரவியலாளர் ஐஸக் பேலே இதை   Dracaena cinnabari என்று  முறையாக மறுபெயரிட்டார். டிரசீனா பேரினத்தின் 100 சிற்றினங்களில் சின்னபரி உள்ளிட்ட 6 சிற்றினங்களே மரமாக வளரக்கூடியவை.

30 அடி உயரம் வளரும் 600 வருட வாழ்வை கொண்டிருக்கும் இம்மரங்கள் அத்தீவின் மலைக்குன்றுகளில் வளர்கின்றன. மரங்களில் இருந்து வடியும் குருதி போன்ற  அடர்சிவப்புநிற  கசிவு  இம்மரத்தின் பெயருக்கு காரணமாகிவிட்டிருக்கிறது.  டிராகனின் குருதி என்றழைக்கப்படும் இக்கசிவை அத்தீவு வாசிகள் ’emzoloh’ என்றழைக்கிறார்கள். 

அத்தீவின் பழங்குடியினரால் அந்த செஞ்சாறு உதட்டுக்கு சாயமிடுவதிலிருந்து மருந்துப்பொருளாக, வயலினுக்கு மெருகேற்ற என பல நூறு பயன்பாடுகளை நூற்றாண்டுகளாக கொண்டிருக்கிறது.

அத்தீவின் தொல்குடிகளின் பாரம்பரிய இசைகக்ருவியான Stradivarius violin எனப்படும் செந்நிற வயலின் இம்மரத்தின் செந்நிற கசிவினால் நிறமேற்றப்படுகிறது.

மாபெரும் குடைக்காளான்களை போலவும் பெரிய மழைக்குடை போலவும் அமைந்திருக்கும் இம்மரங்களின் தோற்றம் பிரமிக்க வைக்கும்.

இயற்கையில் எந்த ஒரு உயிரினத்தின் பாதுகாப்பு, பலநூறு பிற உயிர்களின் வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் காரணமாக இருக்கின்றதோ அவை குடை உயிரினங்கள் – umbrella species  எனப்படுகின்றன. டிராகன் குருதி மரங்கள் பார்ப்பதற்கு குடை போலிருப்பது மட்டுமின்றி அப்பிரதேசத்தின் குடை உயிரினங்களாகவும் இருக்கின்றன. எனவேதான் அழியும் ஆபத்திலிருக்கும் இவற்றின் பாதுகாப்பு தற்போது உலகின் கவனத்துக்கு வந்திருக்கின்றது.

நேரடியாகவும் மறைமுகமாகவும்  அவற்றின் வாழ்விடங்களிலும். அவற்றிற்கு அருகிலும்  இருக்கும் பல உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் வாழ்விற்கும் காரணமாக இருக்கும் குடை உயிரினங்களின் பட்டியலில் புள்ளி ஆந்தைகள், பாண்டா கரடிகள் மற்றும் மலை கொரில்லாக்கள் போன்ற பறவை விலங்கினங்களும் இருக்கின்றன.

அஸ்பரகேசி (Asparagaceae) குடும்பத்தை சேர்ந்த ஒருவித்திலை தாவரமான  டிராகன் குருதி மரங்களின் அறிவியல் பெயர் Dracaena cinnabari. Dracaena என்பதன் கிரேக்க பொருள் டிராகன், cinnabari  என்பது செங்குழம்பு அல்லது சிவப்புக் கசிவு என பொருள்படும். இம்மரங்கள்  இத்தீவை வறளச்செய்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றம், விதைகளையும் இளம் செடிகளையும் மேய்ச்சல் விலங்குகள் உண்பது மற்றும் வாழ்விட அழிப்பு ஆகியவற்றால் அழியும் ஆபத்திலிருக்கிண்றன. ஆய்வாளர்கள் தற்போது 10 சதவீத வாழ்விடங்களில்  மட்டும் வளரும் இவை 2080ல் முற்றிலும் அழியும் என்கிறார்கள்.

 பச்சை வெள்ளை நிறங்கள் கலந்த சிறுமலர்களின் கொத்துக்கள் மார்ச் மாதத்தில் தோன்றி ஐந்து மாதங்களில் ஆரஞ்சு நிற சிறுகனிகள் உருவாகும். கனிகளில் 1லிருந்து 4 விதைகள் இருக்கும். கனிகளிலும் சிவப்பு சாறு இருக்கும். பறவைகளின் விருப்ப உணவு இக்கனிகள்.

இவற்றின் நாற்றுக்களை வளர்த்து பாதுகாக்கும் திட்டமும் தற்போதைய ஏமானின் அரசியல் காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையியலாளர்கள் இவற்றை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

இவற்றை குறித்து மேலும் அறிந்துகொள்ள : https://youtu.be/hnIBdNqx2So

ஆலிவ், கனி மரம்.

கனி மரம்

ஆலிவ் மரக்காடுகளுக்குள் சென்றிருக்கிறீர்களா? காற்றில் மண் மணமும், மரங்களினடியில்  குளிர்ந்த நிழலும் கவிந்திருக்கும், வெள்ளியென மினுங்கும் ஆலிவ் இலைகள் உரசும் ஒலி ஒரு நாடன் பாடலைப்போல் காதில் கேட்கும், ஆலிவ் மரங்களை சிறிதளவாவது அறிந்து கொண்டிருப்பவர்களுக்கு, அந்த அனுபவம்,அந்த அற்புத மரங்கள் தோன்றிய கடந்தகாலத்துக்கே அழைத்துச் சென்றுவிடும்

6000 வருடங்களுக்கு முன்பிருந்தே மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் ஆலிவ் மரங்கள், பல சாம்ராஜ்யங்களின், நாகரீகங்களின் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும், பற்பல கலாச்சாரங்களை சேர்ந்த பல கோடி மக்களின் வாழ்வையும் பார்த்து கொண்டிருப்பவை, 

ஆலிவ் மரங்களின் வரலாறு மனித குல வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருப்பது. பண்டைய கிரேக்கத்தில் இருந்து ரோமாபுரி வரை, போனிஷியாவிலிருந்து பாலஸ்தீனம் வரை ஆலிவ், சமாதானத்தின் அமைதியின், வளமையின் குறியீடாக இருந்து வருகிறது

 அவற்றின் குறியீட்டு முக்கியத்துவங்களை கடந்தும் ஆலிவ் மரங்கள் அவற்றின் கனிகளால், ஆலிவ் எண்ணெயால் பல கலாச்சாரங்களின் சமையலறைகளில் இன்றியமையாத இடம் கொண்டிருக்கிறது. இன்று குக்கிராமங்களுக்கும் அறிமுகமாகி இருக்கும் பீட்ஸாக்களில் இருப்பது எங்கோ தொலைதூர நாடொன்றில் விளைந்த ஆலிவின் கனிகள் என்பதை எத்தனை இளைஞர்கள் அறிந்து உண்ணுகிறார்கள் ? 

கிரேக்க தொன்மங்களில் ஆலிவ் மரங்கள் அதிகம் பேசப்பட்டிருக்கின்றன அதில் முதன்மையானது எவ்வாறு ஆலிவ் மரங்கள் முதன் முதலில் உருவாகின என்பதுதான். அதனுடன் சேர்ந்தே ஏதென்ஸ் நகரத்துக்கு அப்பெயர் எப்படி வந்ததென்பதும் சொல்லப்பட்டிருக்கும்

மெய்ஞானத்தின் தெய்வமான ஏதினாவுக்கும் கடலின் தெய்வமாகிய பொசைடனுக்கும் நடந்த போட்டியில் உருவானதுதான் ஆலிவ் மரம் என்கிறது கிரேக்க  தொன்மம்.

ஆட்டிக்காவில்  புத்தம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு நகர் யாருக்கு சொந்தம், யார் அந்நகரின் பாதுகாவல் தெய்வம் என முடிவு செய்வதில் சிக்கல் உண்டாகியது, அந்நகரின் குடியேறவிருக்கும் மக்களின் தீர்ப்பே இறுதி எனவும்,  யார் வெல்கிறார்களோ அவர்களின் பெயராலேயே அந்த நகரும் அழைக்கப்படும் என்றும்  தீர்மானிக்கப்பட்டது. 

ஏதென்ஸ் என அப்போது பெயரிடப்பட்டிருக்காத அப்பெரு நகரம் யாருக்கானது என்னும் போட்டி ஏதீனாவுக்கும் பொஸைடனுக்கும் நடுவே நடந்தது. கிரேக்க கடவுளர்களின்  அரசரான ஜீயஸ் இதை ஏற்பாடு செய்திருந்தார். மன்னர் செக்ராப்ஸின் (Cecrops ) முன்னிலையில் இந்த போட்டி ஏற்பாடானது. 

 அந்நகர மக்களுக்கு அரிய பரிசை அளிப்பவர் யாரோ அவருக்கே அந்த நகரம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. பொஸைடன் தனது திரிசூலத்தை  அக்ரோபொலிஸ் கற்கோட்டையின் பாறை ஒன்றில் வேகமாக ஊன்றி ஒரு பெரும் உப்பு நீரூற்றை உருவாகினார்.  கடலின் தெய்வமாகிய அவர் அந்த உப்பூநிரூற்றை தனது கடலின் சக்தியாக காட்டினார். அவ்வூற்று நீர் பீறிட்டுக்கொண்டு வந்து நிலத்தை ஈரமாக்கியபடி நகரினுள் பாய்ந்தது. ஏதீனா அந்த ஈரநிலத்தில் மண்டியிட்டு ஒரு சிறு நாற்றை  நட்டுவைத்தாள், சில நொடிகளில் அந்நாற்று  வெள்ளியென மினுங்கும் பச்சிலைகளும் கொத்துகொத்தான கனிகளுமாக  அமைதியின், வளமையின்,நம்பிக்கையின் குறியீடான ஒரு ஆலிவ் மரமாக முளைத்து எழுந்தது. மக்களுக்கு உப்புநீரூற்றைவிட ஆலிவ் மரங்களே பிடித்திருந்ததால் அந்நகரம் ஏதினாவுக்கானதாகி அன்றிலிருந்து ஏதென்ஸ் என அழைக்கப்பட்டது. ஏதீனாவே எப்போதைக்குமாக ஏதென்ஸின் தெய்வமாகவும் ஆனாள் .

 இன்று வரையிலும் ஏதென்ஸின் கலாச்சாரத்தில் இரண்டற கலந்திருக்கிறது ஆலிவ் மரங்கள். ஆலிவ் இலைகள் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் தலையில் கிரீடமென, ராணுவ தளபதிகளின் தலையில், அரசர்களின் மணிமகுடத்தில் மகுடமென சூட்டப்படுகிறது. ஆலிவ் மரக்கட்டைகள் வீடுகள், படகுகள் செய்யவும் ஆலிவ் எண்ணெய் உணவாகவும், விளக்குகளுக்கு எரிபொருளாகவும் உடலில் தடவிக் கொள்ளவும் பயனாகிறது. ஆலிவ் கனிகள் ஏராளமான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. பண்டைய ரோமானிய கிரேக்க  நாணயங்களில் ஆலிவ் இலைக் கொத்து பொறிக்கப்பட்டிருந்தது

 அக்ரோபொலிஸ் நகரின் மத்தியில் கோட்டைகளின் இடிபாடுகளுக்கிடையில் ஏதீனாவின் ஆலிவ் மரம்தான் இன்றும் இருக்கிறது என கருதப்படுகிறது,  பலநூறு  ஆண்டுகளாக அங்கேயே இருக்கும் அம்மரம் மிகப்பழமையாகும் போதெல்லாம் அதிலிருந்து ஒரு கிளை எடுக்கப்பட்டு புதிய மரம் அதிலிருந்து அதே இடத்தில் உருவாக்கப்படுகிறது.

 சுமார் 2500 வருடங்களாக அந்த ஆலிவ் மரம் ஏதென்ஸின் வளமை நம்பிக்கை அமைதி மற்றும் உயிர்த்தெழுதலின் குறியீடாக காலத்தை கடந்து நின்றுகொண்டிருக்கிறது. கனிகளும் அளிக்கிறது.

 கிமு 480 ல் பெர்சியன் படையெடுப்பின் போது ஏதென்ஸின் புனித கோட்டை தரைமட்டமாகப்பட்டு அந்த ஆலிவ் மரமும் நெருப்பிட்டு அழிக்கப்பட்டது . அழிந்த அந்த ஆலிவ் மரம் அன்றே மீண்டும் ஒரு அடி உயரம் வளர்ந்ததாகவும் அதிலிருந்து மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்ட ஆலிவ் மரமே இன்று அதே புனிதமான ஏதீனா ஆலிவ்மரமாக நிற்கிறதென்றும் நம்பப்படுகிறது. பாதகமான சூழலிலும் முளைத்தெழும். அழித்தபின்னரும் உயிர்த்தெழும்   ஏதென்ஸ் மக்களின் இயல்பை குறிக்கும் மரமாக கருதப்படும் அந்த ஆலிவ் மரம்  கடவுளாகவும் வணங்கப்படுகிறது. 

 அந்த ஆலிவ் மரக்கிளைகளிருந்து உருவாக்காப்பட்ட 12 மரங்களும் ஒரு சரணாலயத்தில் வளர்கின்றன அவற்றிற்கு   moriai என்று பெயர். இச்சொல்லிற்கு ’’ஒரு பகுதி’’ என்று பொருள் அதாவது அவை ஏதென்ஸ் அரசின் ஒரு பகுதி, அதற்கு சொந்தமானது என்று பொருள். பண்டைய கிரேக்கத்தில் அம்மரங்கள் ஏதீனாவின் சொத்துக்களாக கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இன்றும் ஏதென்ஸில் இருக்கும் ஆலிவ் மரங்களனைத்துமே ஏதீனா உருவாக்கிய மரத்தின் சந்ததிகள் என நம்பப்படுகிறது.

கிரேக்கத்தில் ஆலிவ் அறுவடை அக்டோபரில் துவங்கி டிசம்பரில் முடிவடையும். குடும்பமாக நண்பர்களுடன் சேர்ந்து ஆலிவ் அறுவடை ஒரு கொண்டாட்டமாகவே அங்கு நிகழும். அறுவடை முடிந்த பின்னர் காய்ந்த ஆலிவ் மரக் குச்சிகளில் நெருப்புண்டாக்கி மகிழ்வதும் அங்கு வழக்கம். சில ஆலிவ் தோட்டங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் அந்த அறுவடையில் பங்குகொள்ளும் வாய்ப்பளிக்கிறார்கள். அவர்களே பறித்த ஆலிவ் கனிகளிலிருந்து , எண்ணெய் எடுத்து, கையோடு சில பாட்டில் ஆலிவ் எண்ணெயும் வீட்டுக்கு எடுத்து செல்லும் அந்த அனுபவத்துக்கு சுற்றுலாப் பயணிகள் போட்டி போடுகிறார்கள்.   

வரலாறு

இத்தாலியில் கிடைத்த ஆலிவின் புதைபடிவ எச்சங்கள் இவை 40 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே பூமியில் இருந்ததற்கான சான்றளிக்கின்றன

.கிரேக்க கோவில்களின் தீபங்களிலும் , ஒலிம்பிக் தீபத்திலும் ஆலிவ் எண்ணெயே உபயோகப்படுத்தப்பட்டது.

பிளைனி, ஹோரேஸ் மற்றும் தியோஃப்ராஸ்டஸ் ஆகியோரும் ஆலிவ் மரங்களை அவர்களின் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்

கிரேக்கத்தில் ஹோமரின் காலத்திலிருந்தே ஆலிவ் எண்ணெய் உடலில் தேய்த்து கொள்ளப்  பயன்பட்டது. கிமு 600களில் ரோமானியர்களின் முக்கிய பயிராக ஆலிவ் இருந்திருக்கிறது. ஆலிவ்களை  சித்தரிக்கும்  பல நூற்றாண்டுகளுக்கு முன்பான ஓவியங்கள் அகழ்வாய்வில்  கிடைத்திருக்கின்றன

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முதன் முதலில் குறிப்பிடப் பட்டிருக்கும் மரம் ஆலிவ் தான்.ஜெருசேலத்தின் ஆலிவ் மலைக்குன்றுகள் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கிறிஸ்தவ தொன்மம் ஒன்று ஏசு கிறிஸ்துவின் சிலுவை ஆலிவ் மரங்களில் செய்யபபட்டதென்றும்  அதன்பிறகே குற்றவுணர்வில் அவை நிமிர்ந்து வளர்வதில்லை என்கிறது.

திருக்குரானில் ஆலிவ் மரங்களும் கனிகளும் எண்ணெயும் 7 முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது

முகமம்து நபி அவர்கள் புனிதமரமான ஆலிவின் எண்ணெயை தேய்த்து குளிப்பதை குறித்து சொல்லி இருக்கிறார். பல நாடுகளில் ரமலான் நோன்பில் பேரீச்சைகளுக்கு பதிலாக ஆலிவ் கனிகள் உண்ணப்படுகின்றன.

சாலமன் அரசர் உலகின் அனைத்து உயிரினங்களின் மொழியுமறிந்தவர். அனைத்துயிர்களின் பேரிலும் பேரன்பு கொண்டிருந்தவர், அவர் உயிரிழந்தபோது அனைத்து விலங்கு,பறவை, பூச்சி இனங்களும் கண்ணீர் விட்டழுதன ,உலகத்தின் மரங்களெல்லாம் இலைகளை கண்ணீரை போல் உதிர்த்து துக்கத்தை காட்டின.  ஆனால் ஆலிவ் மரங்கள் மட்டும் இலை உதிர்க்கவில்லை, பிற மரங்கள் அதை நன்றி கெட்ட மரமென்று ஏசின, அப்போது ஆலிவ் மரம் ’’சாலமன் அரசரின் மீதுள்ள எனதன்பை நான் இலைகளை உதிர்த்தல்ல ஏராளமான கனிகளை அளித்தே காட்டுவேன்’’ என்று சொல்லியதாம் இப்படி சிரிய நாட்டுப்புறக் கதைகளிலும் ஆலிவ் மரம் இருக்கிறது.

மற்றொரு ஆலிவ் தொன்மம் சிறுவனாயிருந்த ஹெர்குலிஸ் ஒரு சிங்கத்தை ஆலிவ் மரக்கட்டையால் அடித்து கொன்றான் என்கிறது

பொ யு 3700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கணிக்கப்பட்ட, உறைந்த கிரேக்க எரிமலை குழம்புகளிலிருந்து  கிடைத்த ஒரு ஆலிவ் இலையில் நோய் உண்டாகி இருந்த வெள்ளை ஈ யும் படிவமாயிருந்தது. அதே வெள்ளை ஈயான  whitefly Aleurobus olivinus என்பது இன்றும் ஆலிவ் மரங்களில் அரிதாக உண்டாகும் நோய்க்கு காரணமாக இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த ’’தாவர – பூச்சி பரிணாம- இணை’’  அறிவியலில் மிக முக்கியமாக கவனிக்கப்படும் ஒன்று.

ஒடிஸியில், குரானில், விவிலியத்திலென பல முக்கிய இலக்கிய படைப்புகளில் தொன்று தொட்டு இடம்பெற்றிருக்கும் ஒரு கனிமரம் ஆலிவ்.

அமைதி, வளமை, செல்வம், வெற்றி ஆகியவற்றின் குறியீடாக, புனித மரமாக,  பல நாகரீகங்களில் இருந்து, இன்றும் அதே பொருளில் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் ஒரு மரம் ஆலிவ்.

 நோவாவின் படகுக்கு திரும்பிய புறா வாயில் கொண்டு வந்த ஆலிவ் சிறுகிளைதான் பூமியில் வாழ்வதற்கான சாத்தியத்தை அறிவித்தது.

  1782   ல் வெளியிடபட்ட அமெரிக்காவின் முதல் அதிகார பூர்வமான அரசு முத்திரையில் ஒரு கழுகு தன் கால்களில் ஆலிவின் சிறுகிளையை பற்றியிருக்கும் சித்திரம் அமைதியின் வலிமையை குறிப்பிட சித்தரிக்கபட்டது.

 1946ல் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் கொடியில் உலக வரைபடத்தில் இருபுறமும் ஆலிவ் கிளைகள் இருக்கின்றன.

மத்திய தரைக்கடல் பகுதி உணவுகளின் ‘Triad’’  எனப்படும் மூன்று’  முக்கிய இடுபொருட்களில் ரொட்டிக்கான கோதுமை, வைன் தயாரிப்புக்கான திராட்சைகளுடன் மூன்றாவதாக ஆலிவ் இருக்கின்றது..

பரவல்

.கிமு 16 ஆம் நூற்றாண்டில் பீனிசியர்கள் கிரேக்க தீவுகள் முழுவதும் ஆலிவ் சாகுபடியை தொடங்கினர், பின்னர் கிமு 14 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிரேக்க நிலப்பகுதிக்கு ஆலிவை அவர்கள் அறிமுகப்படுத்தினர், அங்கு அதன் சாகுபடி வெகுவாக.அதிகரித்தது . 

கிமு 4 ஆம் நூற்றாண்டில்  (கிரேக்க நாட்டின்) ஏதென்சின் அரசியல்வாதியும், சட்ட நிபுணரும், கவிஞரும்  நெருக்கடியான மற்றும் குழப்பமான நிலையில் இருந்த ஏதென்சில் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் பல மாற்றங்கள் செய்தவருமான  சோலோன் ஆலிவ் நடவு ஒழுங்குமுறை ஆணையை வெளியிட்டபோது உலகெங்கிலுமே ஆலிவ் சாகுபடி பெரும் முக்கியத்துவம் பெற்றது.  கிமு 6ம் நூற்ரண்டில்  சிசிலி வழியாக இத்தாலிக்கு நுழைந்த ஆலிவ்கள் பின்னர் உலகெங்கிலும் பரவின.

2007ல்தான் இண்டியாவில் ஆலிவ் வளர்ப்பு தொடங்கியது. முதன் முதலில் ராஜஸ்தான்  தார் பாலை நிலங்களில் ஆலிவ் சாகுபடியாகப்பட்டது.  

தமிழில் இடலி மரமென்றும்,  விரலிக்காய் எனவும் அழைக்கப்படும் ஆலிவ் இந்தியாவின் பல மாநிலங்களில் வளர்கிறது எனினும் இந்தியாவில் ஆலிவ் மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது

தாவரவியல்

ஐரோப்பிய ஆலிவ் என்று பொருள்படும்  Olea europaea என்னும் அறிவியல் பெயர் கொண்ட ஆலிவ் ஒருபசுமை மாறா குறுமரம் மற்றும் புதர் வகையைச் சேர்ந்தது. மல்லிகைப்பூவின் குடும்பமான ஓலியேசீ குடும்பத்தை சேர்ந்த இவற்றின் புதர் வகைகள் ஆங்கிலத்தில்  Olea europaea ‘Montra’, dwarf olive, அல்லது  little olive. என அழைக்கப்படுகின்றன

3 லிருந்து 12 மீ உயரம் வரை வளரும் இவை  ஏராளமான கிளைகள் கொண்டிருக்கும்.  எதிரெதிராக அமைந்திருக்கும் ஜோடி இலைகளின் மேற்பரப்பு அடர் பச்சையிலும் அடிப்பரப்பு வெள்ளிபோல மினுக்கமும் கொண்டிருக்கும். இதன் மரக்கட்டை மிகவும் உறுதியானது. மரத்தின் மேல் பாகம் பழமையாகி இற்றுப்போய்  மடிந்தால் வேர்களிலிருந்து மீண்டும் ஒரு புதிய மரம் உருவாகி வளரும்.

 ஆலிவ் மரங்கள் 4 வருடங்களில் மலர்களும் கனிகளும் அளிக்கத் துவங்குகின்றன. வசந்த காலத்தில் இலைக் கோணங்களிலிருந்து  சிறு வெண்மலர்களின் தளர்வான மலர் கொத்துக்கள் உருவாகும். மாமரங்களை போலவே ஆலிவ் மரங்களிலும் கனிகளை அளிக்கும் இருபால் மலர்களும், வெறும் மகரந்தங்களை மட்டும் கொண்டிருக்கும் ஆண்மலர்களும் ஒரே மஞ்சரியில் அமைந்திருக்கும் (Polygamous inflorescence). ஆலிவ் மலர்களின் மகரந்தம்  மனிதர்களுக்கு ஒவ்வாமையை உருவாக்கும்.

காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும் இம்மரங்கள் பொதுவாக  ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் கனியளிக்கும், சில மரங்கள் வருடா வருடம் கனியளிப்பதும் உண்டு. கனிகள் பீச், பிளம், மா போல ட்ரூப் வகையை சேர்ந்தவை, கனிகளின் மத்தியில் கடினமான உறைகொண்ட இருவிதைகள் இருக்கும்

பச்சை நிறத்தில் இருக்கும் கனி முதிர்கையில் கரிய நிறம் கொள்ளும் விதைகளில்  30- 40 % எண்ணெய் அடங்கி இருக்கும். சுமார் 7 கிலோ கனிகளிலிருந்து 1 லிட்டர் ஆலிவ் எண்ணெய் கிடைக்கும் 

ஆலிவ்கள்  விதைகள் மூலம் இனப்பெருக்கம்  செய்வதில்லை, இவற்றில் தண்டுகள், வேர்கள் அல்லது இலைகள் மூலமே இனப்பெருக்கமும் சாகுபடியும் நடைபெறுகிறது.

ஆலிவ்களில் ஆயிரக்கணக்கான கலப்பின வகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன, பொதுவில் உண்ணக்கூடிய கனிகள்  “table olives’’ எனப்படுகின்றன. உண்ணும் கனிகளுக்கெனவும் எண்ணெய்க்கெனவும் பிரத்யேக வகைகள் வளர்க்கப்படுகின்றன

உலகின் மொத்த ஆலிவ் உற்பத்தியில் 80% எண்ணெய் தயாரிப்பிலும், 20 சதவீதம் மட்டுமே உண்ணும் கனிகளுக்காகவும் பயன்படுகின்றன.

இதன் பல கலப்பின வகைகளில் இருப்பதிலேயே பெரிய ஆலிவ் மரம் டாங்கி ஆலிவ்  (“donkey olive” ) என்றும் ஆகச்சிறிய ஆலிவ்  மரம் புல்லட் மரம்  ( “bullet”) என்றும் பெயர் கொண்டிருக்கிறது.

 ஆலிவ் மரங்கள் கடற்கரையில் செழித்து வளர்பவை எனினும் இவை பாறை குன்றுகளிலும் வறள் நிலப்பகுதிகளிலும் நன்கு வளரும், அதிக காற்றையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது ஆலிவ். 

கனிகளின்  வகைகள்

சர்வதேச ஆலிவ் சபையான  International Olive Council (IOC)  உண்ணக்கூடிய ஆலிவ்களை  மூன்றாக வகைப்படுத்தி இருக்கிறது

  1. முற்றிலும் பழுத்திருக்காத கொஞ்சம் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும்  கசப்பு சுவை கொண்ட பச்சை ஆலிவ்கள்
  2. சிவப்பும் பழுப்பும் பச்சையும் கொண்டிருக்கும் பாதி பழுத்த ஆலிவ்கள்

     3. நன்கு கனிந்த கருப்பு ஆலிவ்கள்

கனிந்த ஆலிவின் கசப்பை நீக்க மரச்சாம்பலிலிருந்து கிடைக்கும் ‘’லெ’’ (lye) எனும் வேதிப்பொருள் உலகெங்கும் உபயோகிக்கப்படுகிறது.

ஆலிவ்களின் கசப்புக்கு காரணமான oleuropein என்னும் வேதிப்பொருளை  நீக்க உப்பு நீரில் அவை  நனைக்கப்பட்டு நொதிக்கச்செய்யாப்படுகிறது.  இதை அறிந்துதான் ஏதீனா உப்பூ நீரூற்றின் அருகே ஆலிவ் மரத்தை  உருவாக்கி இருக்கிறாள் போலிருக்கிறது.

இந்த ஆலிவ் நொதித்தல் உலகின் பலநாடுகளில் பலவிதமான முறைகளில் நிகழ்கிறது.

கனிகள் பலமுறை அழுத்தப்பட்டு சாறெடுத்தும், வேதிபொருட்கள் கலக்கப்பட்டும் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் ஆண்டுத்தோறும் 3 மில்லியன் டன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது 

உலகின் மிக அதிகம் விளைவிக்கப்படும் கனிகளில் ஆப்பிள், வாழை, மா இவற்றுடன் ஆலிவ்களும் இருக்கின்றன. உலகில் எண்ணெய்க்காக சாகுபடி செய்யப்பட்ட கனிகளில் மிகபழமையாதும் ஆலிவ்தான். 7000 வருடங்களுக்கு முன்னர் மத்தியதரைக்கடல் பகுதியில் ஆலிவ் சாகுபடி  செய்யப்பட்டு எண்னெய் பிழிந்து எடுக்கபப்ட்டதற்கான சான்றுகள் உள்ளன  

ஆயில்-Oil  என்னும் ஆங்கிலச் சொல்லின் வேர் இந்த ஆலிவ் என்னும் சொல்லிலிருந்தே வந்தன.  உலகின் மிக அதிகமாக சுவைத்து மகிழப்படும் கனியும் ஆலிவ்தான்,  

 ஆலிவ் மரங்களும் கற்பக விருட்சங்கள் தான் அவற்றில் பயனற்றவை என எந்தப் பகுதியும் இல்லை. கனிகள் உண்ணத்தகுந்தவை, கனிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உலகெங்கிலும் பலவிதமான பயன்பாட்டில் இருக்கிறது. 

கரிய ஆலிவ் கனிகளில் செம்பு இரும்பு உள்ளிட்ட பல சத்துக்களும் ஓலியிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.. எனினும் நன்கு பழுக்காத ஆலிவ் காய்களை உண்ணுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். 

 ஆலிவ் எண்ணெய் அழகு சாதன  பொருட்கள் தயாரிப்பிலும் வெகுவாக பயன்படுகிறது. ஆலிவின் மரக்கட்டைகள்  மரச்சாமான்கள் செய்ய பயன்படுகிறது. ஆலிவ் கனிகளும் எண்ணெயும் ஏராளமான மருத்துவ பலன்களும் கொண்டிருக்கின்றன.

 கிரேக்க ஆலிவ் எண்ணெய் உலகின் முதல் தரமானது ஆனால் உலகின் முன்னணி ஆலிவ் எண்ணெய் உற்பத்தியாளராக இருப்பது ஸ்பெயின், இரண்டாவது இத்தாலி பின்னரே கிரேக்கம்.

புகழ்பெற்ற ஒரு ஆலிவ் மரம்

 இத்தாலிய மரபுகள், இயற்கை காட்சிகள்,, வரலாறு, கலைப் பாரம்பரியம், மீயுயர் பண்பாட்டில் தாக்கம் ஆகியவற்றிற்காக பெரிதும் அறியப்படுகின்ற டுஸ்கான்  (Tuscany ) பிரதேசத்தில்  15 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயமான  சாண்டிஸிமா (Santissima Annunziata) வின் பின்புறம்    3500 வருட பழமையான Olivo della Strega, என்னும் பெயர் கொண்ட ஆலிவ் மரமொன்று கடந்த கால தொன்மங்களின் நினைவுச்சின்னமாக நின்றுகொண்டிருக்கிறது. இதுவே உலகின் மிக பழமையான உயிருள்ள ஆவணமென்று கருதப்படுகிறது. ஐரோப்பாவின் மிக பழமையான மரமும் இதுதான்.

மரத்தண்டும் கிளைகளும்   திருகிக் கொண்டிருக்கும் இந்த சூனியக்காரிகளின் ஆலிவ் மரம் என்று பெயர் கொண்ட மரத்திற்கு பின்னால் ஒரு மர்மம் கலந்த தொன்மம் இருக்கிறது.  

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு  பாகன் பழங்குடியினரின் கொண்டாட்டங்களின் ஓரிரவில் சூனியக்காரிகளும் பாதி குதிரை- பாதி மனிதன், பாதி மனிதன்- பாதி ஆடு என்னும் உடலமைப்பு கொண்டிருக்கும் உயிரினங்களும் இம் மரத்தின் கீழ் கூடி மகிழ்வார்கள். அவர்களில் மிக சக்திவாய்ந்த சூனியக்காரி என்று தேர்வு செய்யப்படுபவள் அன்றிரவு முழுக்க அம்மரத்தின் முன்னால் நடனம் ஆடுவது வழக்கம். நடனத்தின் உச்சத்தில் அம்மரத்தில் உறையும் தீய ஆவிகள் எழும்பி உடன் நடனமாடும், விடியும்போது நடனத்தில் ஈடுபட்ட  சூனியக்காரி ஒளிரும் கண்கள் கொண்ட ஒரு மாபெரும் பூனையாக  உருமாறி அம்மரத்துக்கு அடுத்த வருடம் வரை காவலிருப்பாள் என்கிறது அத்தொன்மம்.

 உபகதையொன்று அந்த மரக்கிளைகளில் அமர்ந்திருந்த ஒரு ராபின் பறவையை நோக்கி கல்லெறிந்த ஒரு சிறுவனை  காவலிருந்த சூனியக்காரி ஆலிவ் கனிகளை வீசியெறிந்து துரத்தினாள் என்கிறது. இக்கதையை கேட்காத இத்தாலிய சிறுவர்களே இல்லை எனலாம். 

சூனியக்காரிகள் ஆலிவ் மரத்தினருகில் கூட்டமாக நடனமிட்டு ஆவிகளை எழுப்பும் சித்திரம் அந்நாட்டு கலாச்சாரத்துடன் இணைந்து தலைமுறைகளாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது

 இத்தாலியின் பண்டைய கலாசாரத்தின் நீட்சியாக இன்றும் அங்கு நின்றிருக்கும் இம்மரத்தின் கார்பன் ஆய்வுகள் இவை 3500 வருடத்திற்கு முற்பட்டவை என்றும் இன்னும் 90 வருடங்களில், இம்மரம் உயிரிழக்கும் எனவும் தெரிவிக்கின்றது.   இப்போதும் சிறுகிளையொன்றில் சில ஆலிவ் கனிகளை வருடம்தோறும் அளிக்கும் இம்மரம் இத்தாலியின் புகழ்மிக்க சொத்தாக கருதப்படுகிறது. இத்தாலிய சுற்றுலாவின் மிக முக்கிய பகுதியாகவும் இது விளங்குகிறது. 

9 மீ சுற்றளவும் 10 மீ உயரமும் கொண்டிருக்கும் 3500 ஆண்டு பழமையான தெற்கு நோக்கிய இம்மரமும் அதனுடன் இணைந்து வளர்ந்திருக்கும் அதன் அடிப்பாகத்திலிருந்து தோன்றிய 200 வருட பழமையான ஒரு புதிய மரமுமாக இணைந்து திருகி நிற்கும் இந்த மரத்தை சுற்றிலும் வேலியிட்டு அரசு பாதுகாத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சிறந்த ஆலிவ் எண்ணெய் தயாரிப்பிற்கு இம்மரத்தின் பெயரால் ஒரு விருதும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆலிவ் மரங்கள் சாதாரணமாக 500- 600  வருடங்கள் உயிர் வாழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளை தாண்டி வாழ்ந்து இன்னும் கனியளித்துக்கொண்டிருக்கும் பல ஆலிவ் மரங்களும் உலகெங்கிலும் உள்ளன.

கிரேக்கத்தில் ஆலிவ் அருங்காட்சியகமொன்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான  பல ஆலிவ் மரங்கள் இருக்கும் காட்டினருகில் அமைந்திருக்கிறது. அங்கு ஆலிவ் மரக்காட்டு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுகிறது, ஆலிவ் மரங்களை எப்படி வளர்ப்பது, பாதுகாப்பது, அவற்றிலிருந்து மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரிப்பது ஆகியவையும், ஆலிவ் மரங்களுடன் இணைந்த கிரேக்க கலாச்சரா அம்சங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகிறார்கள்.

உலகெங்கிலும் எப்படி வைன் சுவைத்தல் என்பது ஒரு சடங்காக கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கிறதோ அப்படி கிரேக்கத்திலும் இத்தாலி மற்றும் ஸ்பெயினியில் ஆலிவ் எண்ணெய் சுவைத்தலும்  விமரிசையாக நடக்கிறது.பல நாகரீகங்களின் கலாச்சாரத்துடன் பிணைந்திருக்கும் திராட்சைக்கனியின் எதிர்த்தரப்பென்றால் அது நிச்சயம் ஆலிவ்தான்.  

ஆலிவ் கனி, எண்ணெய் மற்றும் சிறு கிளை ஆகியவை பல பண்பாடுகளின் குறியீடாக அமைந்திருக்கின்றன. நட்புறுதிக்கென நண்பர்கள் உலகெங்கிலும் கைமாற்றிக் கொள்வதும் ஆலிவ் கிளைகளைத்தான். மனிதர்களின் சரும நிறத்தில் ஒரு வகை ஆலிவ் நிறம் எனப்படுகிறது

பப்பாயி என்னும் புகழ்பெற்ற கார்டூன் கதாநாயகனின் மனைவியின் பெயர் ஆலிவ் ஆயில் என்பது அதை சிறுவயதில் பார்த்தவர்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும்

 ஸ்பெயினின் புகழ்பெற்ற  கால்பந்தாட்ட  நிர்வாகியும், பிரீமியர் லீக் அர்சினால் குழுவின் தற்போதைய நிர்வாகியுமான மைக்கேல் அர்டேட், குழுவினருடன் நடக்கும் ஒவ்வொரு முக்கிய கூடுகைகளுகும் ஒரு சிறு ஆலிவ் மரக்கன்றை  அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பொருட்டு எடுத்துச்செல்வதாக சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.150 வருடங்கள் பழமையான  போன்ஸாய் மரமான அதை தன் குழுவின் குறியீடாக காட்டுகிறார் அவர்

2015 ன் ஸ்பெக்டர் திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டான டேனியல் கிரெய்க் தனது வழக்கமான பானத்துக்கு மாற்றாக ஆலிவ் கனிகள் அலங்கரிக்கும் மார்டினி அருந்துவதை கவனித்தீர்களா யாரேனும்?

 வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றிருப்பது  மட்டுமல்ல நம் ஆரோக்கியத்தின் மகிழ்ச்சியின் கலாச்சாரத்தின் அங்கமாகவும் ஆகிவிட்டிருக்கும் ஆலிவ்களை குறித்து  உலகமொழிகளில் பல அழகிய கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன, பெரும்பாலும் பிரிவுத்துயரை சொல்லி மீண்டும் சந்திக்கையில் ஆலிவ் மரங்களினடியில் முத்தமிட்டுக்கொள்வதை குறித்தானவைகளாக இருக்கும்.  

இனி எப்போதேனும் ஆலிவ் காடுகளுக்குள் செல்ல நேர்ந்தால் அவற்றின் காலம் கடந்த அழகை ஆராதிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள், அவை கடந்து வந்திருக்கும் காலத்தை, அவற்றை பேணிப்பாதுகாத்த நம் முன்னோர்களின் தலைமுறைகளை எண்ணிப்பாருங்கள். ஆலிவ் கனிகளின் வாசனையையும் சுவையையும் அனுபவியுங்கள். அதன் மூலம் இயற்கைக்கும், கலாச்சாரங்களுக்கும் மனிதனுக்குமான பிரிக்க முடியாத தொடர்பையும் நீங்கள் உணரலாம் 

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑