லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 3 of 17)

ஸாம்பா!

லோஸர் எனப்படும்  திபெத்திய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மிகத்தொன்மையான சடங்குகளுடன் ஒரு வாரம்வரை நடைபெறும். திபெத் மக்கள் பல நாட்களுக்கு முன்பிருந்தே வீடுகளை சுத்தம் செய்யத் தொடங்குவார்கள். வீட்டுச்சுவர்களுக்கு வர்ணம் அடித்து வீடெங்கும் மலர்களால் அலங்காரம் செய்து சுவர்களில் சூரியன், சந்திரன், தலைகீழ் ஸ்வஸ்திக் வடிவம் ஆகியவற்றை  வரைந்து வைப்பார்கள்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது ஊதுவர்த்திபோல எரிகையில்  வாசனைப்புகை தரும் செடார், ரோடோடென்ரான் மற்றும் ஜுனிபர் மரங்களின் சிறுகிளைகள் ஒடிக்கப்பட்டுச் சேகரித்து வைக்கப்படும்

புத்தாண்டுக்கு முன்பே கடன்கள் அடைக்கப்பட்டு, குடும்பத் தகராறுகள் பெரியவர்களால் பேசித் தீர்த்து வைக்கப்படும். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மட்டும் உண்ணப்படும், கடலைமாவில் வெண்ணெயும் சர்க்கரையும் கலந்து, கழுதைக்காது வடிவில் பொறித்தெடுக்கப்பட்டு, மீண்டும் சர்க்கரை தூவி உருவாக்கப்படும் காப்ஷே (Khapse) எனப்படும் பிஸ்கட்  போன்ற ஒரு பலகாரம்  ஏராளமாக செய்து வைக்கப்படும்.  சாங் (chang) எனப்படும் பார்லி மதுவும்  தயாரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படும். ஆட்டுத்தலை என்னும் சொல்லும் புதுவருடத்துவக்கம் என்னும் சொல்லும் திபெத்திய மொழியில் ஏறக்குறைய ஒன்றே போல் இருக்குமென்பதால் வீடுகளில் வெண்ணையால் ஆட்டுத்தலைபோல உருவம் செய்து வைக்கப்படும். 

வாளி போன்ற பாரம்பரிய மரத்தொட்டியான,  ஒரு மரக்கட்டையால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும்     ஐந்து தானியம் எனப்பொருள்படும் ஃபைமெரில் (phyemar)  ஒரு பாதியில் அரிசியும் மறுபாதியில் வறுத்த பார்லியைப் பொடித்த ஸாம்பாவும், பார்லி தானியங்களும், பார்லி தானியக்கதிரும், வர்ணமேற்றப்பட்ட வெண்ணெயும் நிறைத்து வீட்டுக்கு முன்பாக வைக்கப்படும். ஐந்து பொருட்களை நிறைத்து வைக்கப்படும் இந்த வாளி நல்ல அறுவடைக்கும் கடவுளின் ஆசிக்கும் அடையாளமாகக்  கருதப்படுகிறது.

புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் அந்த வாளியிலிருந்து  கொஞ்சம் ஸாம்பாவை எடுத்து காற்றில் மூன்று முறை சுண்டி விட்டு விரல்களில் ஒட்டி இருக்கும் ஸாம்பாவை வாயிலிட்டுச் சுவைத்த பின்னர் ‘’தாஷி டெலெக்’’  ( Tashi delek.) என்று உரக்கச் சொல்லி ஆசியளிப்பார்கள். ’’தாஷி’’ என்றால் நல்ல விஷயங்கள் ’’டெலெக்’’ என்றால் ’’ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ’’என்று பொருள்

இந்த ஸாம்பா திபெத்தியர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. திபெத்தியர்களின் வலிமை அவர்களின் வாழ்வு, பிரார்த்தனை எல்லாவற்றிலும் ஸாம்பாவின் பங்கு பெருமளவில் உள்ளது. ஸாம்பாவை அறிந்துகொள்வது திபெத்தை அறிந்து கொள்வது தான். 

ஸாம்பா  என்னும் திபெத்தியர்களின் பிரதான உணவைக் குறித்த பல நூறு நாட்டுப்புறக்கதைகள் திபெத்தில் பலநூறு ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளன. இது வெறும் உணவல்ல, திபெத்தின் வரலாறு, கலாச்சாரம், திபெத்தில் இதுநாள் வரை வாழ்ந்து மறைந்த மூதாதையைருடனான திபெத்தியர்களின் தொடர்பு என அனைத்துமே ஸாம்பாதான். ஸாம்பாவின் சுவைதான் திபெத்தின் சுவை   என்கிறார்கள் திபெத்தியர்கள்

திபெத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக  பிரதான உணவாக இருந்து வரும் மிக எளிமையான இந்த  ஸாம்பா என்னும் உணவு பார்லியை  வறுத்துப் பொடித்து செய்யப்படுகிறது. ஸாம்பா  எப்போதிலிருந்து திபெத்தின் முக்கிய உணவாக இருக்கிறது என்பதற்கான எழுத்துபூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றாலும் புத்த மதம் அங்கு அறிமுகமாகும் முன்பே ஸாம்பா உருவாகியிருக்கும் எனக் கருதப்படுகிறது. 7-ம் நூற்றாண்டில் ஸாம்பாவை காற்றில் வீசி எறியும் வழக்கம்  அரசர் முடிசூடிக்கொள்கையிலும்  அமைச்சர்கள் பதவி ஏற்கையிலும், திருமண விழாக்களிலும் நடந்தது. 13-ம் நூற்றாண்டிலிருந்து  பிறந்த நாள், புத்தாண்டு போன்ற  எல்லா முக்கியத்தருணங்களிலும்  ஸாம்பா பொடி தூவுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

திபெத்தில் இறைச்சி உணவு மிகக் குறைவாகவே  புழக்கத்தில் இருக்கிறது.  1993-லிருந்து வேட்டை தடை செய்யப்பட்டிருப்பதால், மிக குறைவான யாக் எனப்படும் இமயக்காளையின் இறைச்சியுடன் பெரும்பாலும் தானியங்களும் காய்கறிகளும் பால், நெய், வெண்ணெயுடன் சேர்ந்த உணவுதான் உண்ணப்படுகிறது. 

திபெத்தின் தாழ்வான நிலங்களில் உருளைக்கிழங்கு, பட்டாணி, கோதுமை, டர்னிப், ஆப்ரிகாட் ஆகியவையும், மேட்டு நிலங்களில் பார்லி சாகுபடியும் நடைபெறும், இவற்றோடு திபெத் எங்கும் அபரிமிதமாக வளரும் Argentina anserina என்னும் பிரகாசமான மஞ்சள் மலர்களைக் கொண்டிருக்கும் செடியின் கிழங்குகளும் உண்ணப்படுகிறது.

திபெத்தில் ஸாம்பா என்னும் சொல் பார்லி தானியத்தையும் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. சுமார் 5600 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திபெத்தின் முக்கிய உணவாக இருந்துவரும் ஸாம்பா,  பார்லி சாகுபடியின் வரலாற்றையும் உடன் கொண்டிருக்கிறது. திபெத்தில் ஸ்பிடி, சன்ஸ்கார்,  புராங், லடாக் மற்றும் பிர் பகுதிகளில்   மேட்டு நிலப்பயிராக பார்லி அதிகமாக சாகுபடியாகிறது.

வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கில் கிரேக்க தீவுகளிலும் கிழக்கில் திபெத் வரையிலும் பரவி இயற்கையாகவே வளர்ந்திருந்த   காட்டுபார்லியான Hordeum vulgare ssp. spontaneum தான் கிமு 9000-த்தில் மனிதர்களால் முதன்முதலாக சாகுபடி செய்யப்பட்ட தானியமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தப்பயிரின் பூர்வீகம் மற்றும் பரவலுக்கான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை எனினும் பாகிஸ்தான் இந்தியா, நேபாளம் வழியாக பார்லி திபெத்தின் தெற்குப் பகுதியில் அறிமுகமாகி இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 

திபெத்தில் மனிதக் குடியிருப்புகளுக்கருகே காட்டுபார்லி சாகுபடி செய்யப்பட்டது.  அப்போதிலிருந்தே திபெத் பார்லி சாகுபடியின் மையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.  மேட்டு நிலத்தில் நன்கு வளரத்துவங்கிய பார்லியோடு மனிதர்களும் திபெத்தின் உயரமான நிலங்களில் வாழத்துவங்கினார்கள்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக  பார்லியின் காட்டு மூதாதையில் தொடர்ந்து நடந்த கலப்பினச் சோதனைகளுக்குப்பிறகு கிடைத்த திபெத்திய மேட்டுநிலப்பார்லிதான் (Hordeum vulgare L., qingke)  மனிதனின் தேவைக்காக மாற்றியமைத்துப் பயிரிட்டவைகளில் மிக முக்கியமானதென்று வேளாண் வரலாறு குறிப்பிடுகிறது. தொல்லியலாளர்களால் திபெத்தின் கடல்மட்டத்துக்கு மேல் 3400 மீ உயரத்தில் இந்த வகை பார்லியின் எச்சங்கள் கண்டறியப் பட்டிருக்கின்றன. திபெத்தின் மனிதக்குடியேற்றத்தை பார்லியின் சாகுபடிதான் தீர்மானித்தது என்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்.  

தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக சாகுபடியும் கலப்பின உருவாக்கமும் செய்யப்பட்டதால் பார்லியின் காட்டுமூதாதைச் செடிகளின்  நீள் முட்டை வடிவ தானியங்கள் இப்போது உருண்டை வடிவமாகிவிட்டிருக்கிறது.

திபெத்தில் விளையும் பயிர்களில் 70% இருக்கும் இந்த மேட்டு நில பார்லிதான் திபெத்தின் தேசியபப்யிர். திபெத்தில் பயிராகும் அரிசி கோதுமை மற்றும் சோளப்யிர்களின் விளைச்சலைக் காட்டிலும் மேட்டுநில பார்லியின் விளைச்சல் சற்றுக்குறைவுதான் எனினும் சாகுபடியாகும் நிலபப்ரப்பு பார்லிக்குத்தான் மிக அதிகம். 

மிக அதிகக் குளிரையும் தாங்கும், ஐந்து மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும் இந்த திபெத்திய மேட்டு நிலப் பார்லி  கடல் மட்டதிலிருந்து 4200- 4500-மீ உயரத்தில் மிகச் செழிப்பாக  வளர்கிறது. கதிர்கள் மஞ்சள் நிறமாக மாறி, கதிர்மணிகளின் ஈரப்பதம்   20% to 22%. இருக்கையில்  அறுவடை செய்யப்படுகிறது. 

 திபெத்தின்  ஐந்து முக்கிய நிலப்பரப்புகளில்   பயிராகும் மேட்டு நிலப்பார்லி, திபெத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புராங் நிலப்பரப்பில் மிக அதிக அளவில் பயிராகிறது.   தெற்கு இமாலயப் பகுதியைச் சேர்ந்த இந்தப் பிரதேசத்தில் கடல் மட்டத்திற்கு மேலான உயரம் திபெத்தின் மற்ற  பகுதிகளை விட குறைவாக  3900-மீ தான் இருக்கிறது என்றாலும் இங்குதான்  மிக உயர் ரக பார்லி பயிராகிறது. பனியற்ற  100 நாட்களும் ஆண்டுக்கு 3270 மணிநேர சூரியஒளியும் கிடைப்பதால் இங்கு விளையும் முதல் தர பார்லி  அரசகுடும்பத்தினருக்கும் மேட்டுக்குடியினருக்குமானதாக்க கருதப்படுகிறது.

ஸாம்பா தயாரிக்கும் முறை:

மேட்டுநில பார்லி முதிர்ந்த பின்னர் அறுவடை செய்யப்பட்டு தூய்மைப் படுத்தப்படுகிறது

பார்லி  தானியம் சுடு மணலில் நல்ல வாசனை வரும் வரை வறுக்கப்படும்.

கல்செக்குகளில் வறுக்கபட்ட பார்லி உடைத்து மாவாக்காப்படும்

திபெத்திய காலநிலையில் இந்த உலர் மாவு கெட்டுப்போகாதென்பதால்  வருடக்கணக்காக  பிரத்யேகமான துணிப்பைகளில் சேமித்து வைக்கப்பட்டு தேவையானபோது ஸாம்பா தயாரிக்கப்படுகிறது.

ஸாம்பா மலையேறுபவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் சத்துணவாக இருக்கிறது. உலர் ஸாம்பாவை எடுத்துச் செல்பவர்கள் எளிதாக இதனுடன் பாலோ நீரோ  கலந்து உண்ணலாம். சூடாகவோ குளிர்ந்தோ அப்படியே உண்ணலாம். 

ஸாம்பா பெரும்பாலும் தேநீருடன்தான் உண்ணப்படுகிறது. உலர்பொடியான ஸாம்பாவை தேநீரில்லாமல்  விழுங்கச் சிரமமாக இருக்கும் என்பதாலும், திபெத்தியர்கள் தேநீர் பிரியர்களென்பதாலும் ஸாம்பாவுடன் தேநீரைக்கலந்து உண்பது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் அனுபவம் ஆகிவிடுகிறது.

அதிலும் வெண்ணெய்த் தேநீர் ஸாம்பாவுக்கு பொருத்தமான இணை உணவாகிறது.  ட்ரீ (dri) எனப்படும் இமயப்பசுவின்    பாலிலிருந்து கிடைக்கும் வெண்ணெய் கலந்த தேநீரும் திபெத்தின் சிறப்பு உணவுகளில் ஒன்று. வெண்ணெய்த் தேநீருக்கென்றே இருக்கும் ஒரு கிண்ணத்தில் சிறிது வெண்ணெய்  விட்டு உப்புக்கலந்து அதில் தேநீரை ஊற்றி மரக் கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கி வெண்ணெயும் தேநீரும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்தபின்னர் சிறிது சர்க்கரை சேர்த்து  வெறும் தேநீராகவோ அல்லது  ஸாம்பாப் பொடியுடன் சேர்த்தோ இந்தப்பானம் அருந்தப்படும். காய்ச்சல், சளி தொந்தரவுகளுக்கு இந்த வெண்ணெய்த் தேநீர்   மருந்தாகவும் அமைந்துவிடுகிறது. திபெத்திய யாக் வெண்ணெய் நல்ல புளித்த வாடையும், சுவையும் கொண்டிருக்குமென்பதால் ஸாம்பா வெண்ணெய்த் தேநீரின் சுவை பிரத்யேகமாக இருக்கும். திபெத்துக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள் 8-10 யுவானுக்கு கிடைக்கும் இந்த தேநீரை அவசியம் சுவைத்துப் பார்க்க வேண்டும். ட்ரியின் வெண்ணெயுடன் ஸாம்பாப் பொடியைக் கலந்த உலர் கட்டிகளும் திபெத்தில் விற்பனையாகின்றன. கொதிக்கும் தேநீரில்  அல்லது பாலில் கட்டிகளைப் போட்டு கலக்கி, உப்போ சர்க்கரையோ கலந்தால் ஸாம்பா தேநீர் தயரகிவிடும்

உலர் ஸாம்பாப் பொடியை சரி பாதி அளவுக்கு நீர் அல்லது பால் சேர்த்து  கைகளால் மெதுவாக கட்டியில்லாமல் கலக்கி  கொதிக்க வைத்தும் அருந்தலாம். அல்லது உலர் மாவைக் கொதிநீரில் மெல்ல மெல்லக் கலக்கி சர்க்கரை அல்லது உப்பு சேர்ந்து சிறு உருண்டைகளாகவும் உருவாக்கலாம்.

 ஸாம்பாவின் சுவை எப்படி இருக்கும்? சாதா தேநீருடன் கலந்த ஸாம்பா தனிச்சுவையுடனும் யாக்கின் வெண்ணய்த்தேநீருடன் அருந்துகையில் பிறிதொரு சுவையுடனும் இருக்கும். எனவே ஸாம்பாவின் சுவையை இப்படித்தான் இருக்கும் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இப்போது ஸாம்பா, நெய், பால்வண்டல், மசாலா பொருட்கள் கலந்து பல்வேறு சுவைகளிலும் கிடைக்கிறது.

ஸாம்பா திபெத்தின் கலாச்சார அடுக்குகளில் இரண்டறக் கலந்து விட்டிருக்கிறது. புத்த மத விழாக்களில் படையலாக ஸாம்பா படைக்கப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் காற்றில் தூவப்பட்டு ஆசியளிக்கப் பயன்படுகிறது. இறந்தவரின் ஆன்மா பயணப்பட துணையாகிறது என்று நம்பப்படுவதால் தவறாமல் ஸம்பா உணவு இறப்புச் சடங்குகளில் இடம்பெறுகிறது. பிராந்திய வேறுபாடுகள் மற்றும் பேச்சுவழக்கு வேறுபாடுகளைக் கடந்து திபெத்தை ஒன்றிணைக்கிறது ஸாம்பா. 

திபெத்திய அரசியலில் ஸம்பாவின் பங்கு மிக முக்கியமானது. உலகெங்கிலும் இருக்கும் திபெத்தியர்களின் ஒற்றை அடையாளமாக ஸாம்பா இருக்கிறது. ’’ஸாம்பா உண்பவர்கள்’’ என்னும் அழைப்பு திபெத்திய எழுச்சிப் போராட்டங்களின் போது அனைவரையும் ஒன்றிணைத்த ஒரு மந்திரச் சொல்லாக இருந்தது.

 1950-களில் திபெத் சீனாவுடன் இணைக்கப்பட்டபோது,  சீனா திபெத்தின் கலாச்சாரத்தை மாற்ற முனைந்தது. அப்போது திபெத்தியர்கள் ஒண்றிணைந்து ஸாம்பாவை தங்கள்  அடையாளமாகக் கொண்டு போராடினார்கள். சீன உணவுகளில் அரிசியே பிரதானமாக இருந்ததால்  ’’நாங்கள் ஸாம்பா உண்பவர்கள்’’ என்னும் முழக்கம் திபெத்தியர்களின் தனித்த அடையாளமாக இருந்தது. போராட்டத்தின் போது நாடு கடத்தப்பட்டவர்கள் தங்களுடன் ஸாம்பாவை எடுத்துச் சென்றார்கள், எங்கிருந்தாலும் ஸாம்பாவையே  உண்டார்கள் 

 1957-ல் திபெத்தின் மிரர் நாளிதழ் (Mirror of News) ’’ஸாம்பா உண்பவர்கள் அனைவரும்! வாருங்கள்!’’ என அறைகூவியது. 1959 -ல் நிகழ்ந்த  திபெத்திய எழுச்சியின் போது, ​​”சாம்பா-உண்பவர்கள்” என்ற பதாகையின் கீழ் புரட்சியாளர்கள் அணிவகுத்துச் சென்றதன் மூலம், திபெத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக ஸாம்பா மாறியது. 2008-லும் 2012-லும் நடந்த எழுச்சிப் போராட்டங்களின் போது ’’எழுந்திருங்கள் ஸாம்பா உண்னும் திபெத்தியர்களே’’ என்னும் முழக்கத்துடன் போராட்ட அணிவகுப்பில் உலர் ஸாம்பாப்பொடியை தூவிக்கொண்டே சென்றதும் ஸாம்பாவின் இன்றியமையை உலகிற்குக் காட்டியது. திபெத்திய எழுச்சிப் போராட்டங்கள் அனைத்துமே ஸாம்பாபோராட்டம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

புரட்சியாளர்கள்’’ நாங்கள் ’’ஸாம்பா உண்பவர்கள் எங்கள் வேர்களை மறக்கமாட்டோம்’’ என்று முழக்கமிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நவீன திபெத்திய  புரட்சி இயக்கங்களும் திபெத்தின் அடையாளமாக ஸாம்பாவையே குறிப்பிடுகிறது. வெகுவாக மாறிவிட்டிருக்கும் இன்றைய திபெத்திலும் ஸாம்பா  மையப்புள்ளியாக இருக்கிறது .

 தலாய் லாமா தனது உரையொன்றில்  ’’நாம் ஸாம்பா உண்பவர்கள், நம் எங்கு சென்றாலும், வாழ்வு நமக்கு எத்தனை கடினமாக இருந்தாலும் நம்முடன் எப்போதும் ஸாம்பாவைக் கொண்டுசெல்வோம்’’ எனக் குறிப்பிட்டார்.

 இப்போதும் திபெத்திய அரசியல் விவாதங்களில் ’’நான் ஸாம்பா உண்பவன்’’ என்று சொல்வது, எத்தனை எதிர்ப்பு வந்தாலும் திபெத்திய விழுமியங்கள் மீது மாறாத பற்றுக்கொண்டிருப்பதன் குறியீடாகச் சொல்லப்படுகிறது. 

புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக ஸாம்பாச் சண்டை எனப்படும் ஒருவர் மீது ஒருவர் ஸாம்பா உலர்பொடியை எறிந்து விளையாடும் நிகழ்வு நல்ல அறுவடையின் வேண்டுதலாக நடைபெறும். விருந்தினர்கள் வருகையின் போது அளிக்கப்படும் முதல் உணவும் ஸாம்பாதான்.

ஸாம்பா உலர்பொடியைத் தயாரித்து அதன் தேநீரை அல்லது உருணடைகளை தயாரிப்பது ஒரு தியானம் போல் புத்த துறவிகளால் கவனம் சிதறாமல் மனதை ஒன்றுபடுத்தி ஒரு சடங்காகவே  செய்யப்படும். ஸாம்பாவின் எளிமையும் தூய்மையும் புத்தமதத்தின்  குறியீடாகவும் திபெத்தில் கருதப்படுகிறது. செல்வச்செழிப்பின் அடையாளமாகவும் கருதப்படும் பார்லிதான் குருதட்சணையாகவும் அளிக்கப்படுகிறது. 

.இங்கு விளையும் பார்லியில் புரதம் கூடுதலாக இருக்கிறது எனவே அதிலிருந்து சங் பீர் தயாரிக்கப்படுகிறது. ஸாம்பாவில் மாவுச்சத்து, புரதம், வைட்டமின்கள்களோடு பல நுண்சத்துக்களும் நார்சத்தும் நிரம்பி இருக்கிறது.மிக அதிக அளவில் பீட்டா குளுக்கான் இருப்பதும் பார்லியில்தான்.

ஸாம்பா பார்லியின் ஏராளமான சத்துக்களால் இந்த எளிய உணவு இப்போது ஒரு Prebiotic உணவாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. Prebiotic உணவுகள் நம் வயிற்றில் இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை மேலும் பலமடங்காக்கும் இயல்புடையவை . மேலும் ஸாம்பா குறைந்த க்ளைசீமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவாக இருக்கிறது. தொடர்ந்து பார்லி உண்ணுவது ரத்தச் சர்க்கரை அளவையும் ரத்தக் கொழுப்பு அளவையும் குறைப்பது ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறது.  உலகின் எந்த நாட்டையும் விட பார்லியின் தனி நபர் பயன்பாடு திபெத்தில் தான் அதிகமாக இருக்கிறது.  திபெத்தியர்களின் அசாதாரண உடல் வலிமைக்கும் ஸாம்பாதான் காரணமாக இருக்கிற நவீன மயமாகி விட்டிருக்கும் இன்றைய திபெத்தியர்களுக்கும் ஸாம்பா இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது. உலகின் அனைத்துப்பகுதிகளையும் போலவே திபெத்திலும்  வாழ்க்கையின் போக்கிற்கு ஏற்ப உணவுக்கலாச்சாரமும்   மாறிவிட்டிருந்தாலும் ஸாம்பா திபெத்திய உணவில் காலத்தைக்கடந்தும் அப்படியே மையப்புள்ளியாக  நிலைத்து நின்றிருக்கிறது. 

ஸாம்பா திபெத்தின் பிரதான உணவு மட்டுமல்ல திபெத்திய நாகரீகத்தின் அடித்தளமும் ஸாம்பாதான். இன்றும் ஸாம்பா உலகெங்கிலும் இருக்கும் திபெத்தியர்களை ஒண்றினைத்து  அவர்களின் வேர்கள் இருக்கும் நிலப்பரப்பை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

குப்பை மட்குரமும் கோடையில்லா ஆண்டும்!

இந்தோனேஷியாவின் தென் பகுதியில் அமைந்திருக்கும் சும்பவா தீவிலிருந்த மாபெரும் எரிமலையான தம்போரா  1815  ஏப்ரல் 5 அன்று மிக லேசாக அதிர்ந்து நடுங்கி  சாம்பலையும் எரிமலைக் குழம்பையும் வாயுக்களையும் கொஞ்சமாகக் கக்கியபோது அது அடுத்து உண்டாக்கவிருந்த பேரழிவை அந்தத் தீவில் யாரும் எதிர்பார்த் திருக்கவில்லை. முந்தைய மூன்று ஆண்டுகளாக தம்போரா உறுமிக் கொண்டுதான் இருந்தது. அவ்வப்போது வாயுக்கள் கசிந்து, கரும்புகை மேகங்கள் எரிமலை உச்சியைச் சூழ்ந்திருந்தன. எனவே அதை தீவுவாசிகள் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள்.

மெல்ல மெல்ல நில அதிர்வு அதிகமாகி தம்போரா ஏப்ரல் 10 அன்று மாலை பெரும் வெடியோசையுடன் வெடித்துச்சிதறிய போது சும்பவா தீவின் 35000 வீடுகளும் எரிமலைக் குழம்பில் மூழ்கி காணாமலாகி,  அலறக்கூட நேரமில்லாமல் 110000 பேர் நெருப்பாற்றினால் விழுங்கப்பட்டார்கள்.

14,000 அடி உயரத்தில் இருந்த தம்போரா வெடித்தபோது அதன்  4,000 அடி உச்சி வானில் வெடித்துச் சிதறியது, நான்கு மைல்  அகலமும் 2,000 அடி ஆழமும் கொண்ட ஒரு குழியையும் அந்த பெருவெடிப்பு உருவாக்கி இருந்தது

எரிமலையின் நெருப்புத் தூள், விமானங்கள் பறக்கும் உயரத்தை விட அதிகமாக, 40 கி மீ உயரத்தை அடைந்தது. எரிமலைத் தூசி மேகம் 1000 கி மீ தொலைவு வரை சென்றது.  சுமார் 41 கி மீ³ DRE (dense rock equivalent) அளவுக்கு பாறைக்குழம்பு வெடித்துச் சிதறியது.

தொடர்ந்து 3 மணி நேர வெடிப்பிற்குப் பின்னர்   இரவு 10 மணியளவில் நெருப்புத் தூண் வீழ்ச்சியடைந்தபோது எரிமலையின் சரிவுகளில் 100 மைல் வேகத்தில் ஓடத் தொடங்கிய நெருப்பாறுகள்  கடலில் கலந்து அழிவுகரமான ஆழிப்பேரலையை ஏற்படுத்தின. தூசி மற்றும் சிதிலங்கள் பல வாரங்களாக விழுந்தன, பல கி மீ  தொலைவில் உள்ள வீடுகள் இடிந்து வீழ்ந்தன. நன்னீர் ஆதாரங்கள் அசுத்தமாக்கப்பட்டன, பயிர்கள் அழிந்தன,  கந்தக வாயு உருவாக்கிய நுரையீரல் தொற்றினால்   பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.

மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பசி மற்றும் நோயால் இறந்தனர், சும்பவா மற்றும் அருகிலுள்ள தீவுகளில் உயிரிழப்பு எண்ணிக்கை 60,000 முதல் 90,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பின் தீவிரம் 1-லிருந்து 8 வரையான கணக்கீட்டில்  Volcanic Explosivity Index (VEI), என்று குறிப்பிடப்படுகிறது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில்   8  அளவிலான  எரிமலை வெடிப்புகள் ஏதும் உருவாகி இருக்கவில்லை. தம்போராவின்  VEI 7 என்று அளவிடப்பட்டது.

எரிமலையியலாளர்கள் மனித குல வரலாற்றிலேயே தம்போரா எரிமலை வெடிப்புதான் ஆகப்பெரிய அழிவை, உலகளாவிய தாக்கத்தை உண்டாக்கிய அல்ட்ரா பிளினியன் வெடிப்பு என வகைப்படுத்துகிறார்கள்

கனமான தூசிப் பொழிவு சும்பவா, லொம்போக், பாலி தீவுகளையும் ஜாவாவின் மேற்குப் பகுதியையும் 20 முதல் 50 செ மீ தூசியால் மூடியது, மேலும் எரிமலையிலிருந்து 1000 கி மீ தொலைவில் கூட 1-2 செ மீ தூசி அடுக்கு காணப்பட்டது. தாம்போரா மலை வெடிப்பின் புகைமண்டலம் 27 மைல்கள் (43.5 கி மீ) உயரத்தை அடைந்தது.  

தம்போரா வெடித்தபோது ஏறத்தாழ 150 சதுர மைல் அளவுக்கு அதிலிருந்து எரிமலைக் குழம்போடு சாம்பலும், ப்யூமிஸ் கற்களும், உடைந்த பெரும் பாறைகளும், பலவகையான  வாயுக்களுடன் 60 மெகாடன் கந்தக வாயுவும் வெளியேறின.  

தம்போரா வெடிப்புகள் கந்தக வாயுக்களை வளிமண்டலத்தில் உயர்த்தியது, அங்கு அவை நீராவியுடன் கலந்து  கந்தக அமிலத்துளிகள் நிரம்பிய மேகங்களை உருவாக்கின. இந்தோனேஷியாவிற்கு வெகு தொலைவில் இருந்த நாடுகளிலும் சூரிய ஒளி இந்த மேகங்களால் மூடப்பட்டு சிவப்பு நிறமானது, காற்று மற்றும் மழையினால் மேகங்கள் சிதறவில்லை.   

கந்தக அமிலம் சூரிய கதிர்வீச்சை மறைத்ததால் உலகளாவிய வானிலை  மாறியது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சராசரியை விட குறைந்த வெப்பநிலையுடன் கூடிய கடுமையான குளிர் நிரம்பிய கோடையை எதிர்கொள்ள நேரிட்டது,   உலகின் சராசரி வெப்பநிலை 3°C குறைந்தது.  

தம்போரா வெடிப்பு மூன்று ஆண்டுகள் நீடித்து, உலகளாவிய வானிலை அழிவுகளை உண்டாக்கியது. தொடர்ந்து குளிர்ந்த வானிலை மற்றும் சூரிய வெளிச்சம் குறைவாக இருந்ததால் பயிர்கள் நாசமடைந்தன. பஞ்சம் மற்றும் குளிர்ந்த வானிலையை உலகின் பெரும்பகுதி அனுபவித்தது, எனவே 1816-ம் ஆண்டு “கோடை இல்லாத ஆண்டு” என அழைக்கப்பட்டது.

மனித குல வரலாற்றில்  பயங்கரமான எரிமலை வெடிப்புகள் ஏராளமாக நடந்துள்ளன. காலநிலைக்கு வெகுவாக குளிர்ச்சியைக் கொண்டு வந்த மவுண்ட் பினடுபோவின் “சிறிய உமிழ்வு” முதல், டோங்கா தீவுக்கூட்டத்தின் ஹுங்கா டோங்கா-ஹுங்கா ஹா’அபையின் அதிரடியாக நடந்த வெடிப்பு வரை எரிமலை வெடிப்புக்கள் உயிர்ச்சேதம், பொருட்சேதம் காலநிலை மாற்றம் போன்றவற்றை மட்டுமல்லாது வேறு வகையான தாக்கங்களையும் விளைவுகளையும் உண்டாக்கி இருக்கிறது. அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா பல காலகட்டங்களில் நிகழ்ந்த மூன்று மாபெரும் எரிமலை வெடிப்பினால் உருவான ஒரு பிரதேசம்தான்.   

மாபெரும் எரிமலை வெடிப்புகள் அவை நிகழ்ந்த இடத்திலிருந்து மிக மிகத் தொலைவில் இருக்கும் பகுதிகளிலும் காலநிலையில் அதீத தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. 17-ம் நூற்றாண்டின் எரிமலை வெடிப்புகள் தீவிரமான விவசாய நெருக்கடிகளை உலக நாடுகள் பலவற்றில் உருவாக்கின. 18-ம் நூற்றாண்டில் இத்தாலி மற்றும் ஜப்பானில் குறிப்பிடத்தக்க வீரியம் கொண்ட பல எரிமலை வெடிப்புக்கள் நிகழ்ந்தன. 

19-ம் நூற்றாண்டில் மிகத்தீவிரமான காலநிலைத்தாக்கத்தை உருவாக்கியது இந்தோனேஷியாவின் தம்போரா எரிமலை வெடிப்பு. உலகளாவிய அளவில், தாம்போரா வெளியிட்ட கந்தகம் விரைவாக உலகம் முழுவதும் பரவி, உலக வெப்பநிலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது, இது விவசாய உற்பத்தித்திறனைப் பாதித்தது,

அயர்லாந்தில் தொடர்ந்து நிலவிய குளிர் அதிகமான காலநிலை கோதுமை, ஓட்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களை அழித்து பஞ்சத்திற்கு வழிவகுத்தது. கோடை இல்லாத ஆண்டில் மலேரியா மற்றும் டைபஸ் நோய் பரவலும் உண்டானதால்  அங்கு 40,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தோனேஷியாவிற்கு வெகு தொலைவில் இருந்த பல நாடுகளிலும் வளிமண்டலத்தில் இருந்த வெடிப்புத் தூசியால் செம்பொன் நிற சூரியஸ்தமனங்கள் ஏற்பட்டன. 

சூரிய உதயத்தை காணக் காத்திருக்கும் பெண்ணின் சித்திரங்கள் காஸ்பர் டேவிட் பிரெட்ரிக் உள்ளிட்ட பல கலைஞர்களால் அப்போது வரையப்பட்டன. 

1816 -ம் ஆண்டு ஜூன் நடுப்பகுதியில் கடுங்குளிரினால் மேரி, பெர்சி ஷெல்லி, கவி பைரன் மற்றும் மற்ற இரு நண்பர்கள் சுவிட்சர்லாந்தில் சிக்கிக்கொண்டனர். அப்போது நேரம் போக்குவதற்காக பைரன் ஒவ்வொருவரும் ஒரு படைப்பை  எழுதலாம் எனப் பரிந்துரைத்தார், அதுவே மேரி ஷெல்லி பிராங்கன்ஸ்டீனை உருவாக்கவும் பைரன் டார்க்னஸ் என்னும் புகழ்பெற்ற துன்பியல் கவிதையை எழுதவும் காரணமாக அமைந்தது. 

ஜெ.எம்.டபிள்யு டர்னரின் அக்காலத்தைய ஓவியங்களில் சிவப்பு நிறம் அதிகமாக இருந்தது.   

தாம்போரா மலை வெடிப்பு இந்தியத் துணைக் கண்டத்திற்கு கிழக்கே உள்ள வங்காள விரிகுடாவின் சுற்றுச்சூழல் நிலைமைகளையும் சூழலியலையும் பாதித்தது, இதனால் வங்காளத்தில் காலராத் தொற்று ஏற்பட்டது. இந்த நோய் விரைவாகப் பரவி, 1823 வரை நீடித்த உலகளாவிய தொற்றுநோயில் பல கோடி மக்கள் உயிரிழந்தனர். சென்னையில் கடும் கோடையில் மழைப்பொழிவும் பனியும் உண்டானது. 

கிழக்கு ஆசியா முழுவதிலும் பருவமழைக் காலம் பாதிக்கப்பட்டது. சீனாவின் யுனான் மாகாணத்தில் விளைச்சல் காலம் முழுவதும் வெள்ளம் மற்றும் குளிர்ந்த வானிலை நிலவியதால் 1815-1818 வரை மூன்று ஆண்டுகள் கொடிய பஞ்சம் நிலவியது.

 யுனான் பஞ்சத்திற்குப் பிறகு, பணப்பயிர்கள் அழிந்ததால் பல உள்ளூர் விவசாயிகள் பாப்பிச்செடிகளை விளைவிக்கத் தொடங்கினர். பின்னர் யுனான் மாகாணம் உலகின் முக்கிய அபின் உற்பத்தி செய்யும் பகுதியாக மாறியது.

தாம்போரா மலை வெடிப்பு வட அமெரிக்கக் கண்டத்தில் வறட்சியை ஏற்படுத்தியது, அதனால் அட்லாண்டிக் பெருங்கடலில் நுழைந்த நன்னீரின் அளவு குறைந்தது. இது நீரின் உப்புத்தன்மையால் இயக்கப்படும் கடலோட்டங்களை பாதித்தது, இதனால் வடக்கு பெருங்கடல் தற்காலிகமாக சூடாகி அட்லாண்டிக் பெருங்கடல் குளிர்ந்தது.

பயிர்கள் முற்றிலும் அழிந்ததால் சுவிட்சர்லாந்தில் உண்பதற்கு பூனை இறைச்சி மட்டுமே எஞ்சியிருந்தது, 

நெப்போலியன் போர்கள் முடிவுக்கு வந்திருந்த காலத்தில் உண்டான தம்போரா வெடிப்பு  ஐரோப்பாவில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. ஆண்டுக்கணக்காக தொடர்ந்த கடும் குளிர், பெருமழைக்காலங்கள் மற்றும் பனியினால் ஐரோப்பாவில் கோதுமை, ஓட்ஸ்,  புல்லரிசி விளைச்சல் முழுவதும் இல்லாமல் போய்  பட்டினியும் கலவரமும் கொள்ளைகளும் நடந்தன. உணவின்றி ஏராளமான கால்நடைகளும் மடிந்தன. லட்சக்கணக்கானோர் நாடுவிட்டு உணவுக்காகவும் உயிர் வாழ்வதற்காகவும் புலம்பெயர்ந்தார்கள்.  பலர் தங்களைத்தாங்களே அடிமைகளாக விற்றனர். இந்த நிலைமை 1819 வரை தொடர்ந்தது.  

இந்த நிகழ்வு உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததோடு உணவு உற்பத்தி முறைகளில், சமூக அமைப்புகளில்  மாற்றமேற்படுத்தி இலக்கிய மற்றும் கலை வெளிப்பாடுகளிலும் தாக்கம் உண்டாக்கியது. தம்போரா வெடிப்புச் சுற்றுச்சூழல் அமைப்புகளின்  மீது மிக ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது.


எரிமலை வெடிப்பினால் உண்டான மிக நேரடியான விவசாய நெருக்கடிக்கு வரலாறு 1816-ன் கோடையில்லா ஆண்டை உருவாக்கிய தம்போரா வெடிப்பையே உதரணமாகக் காட்டுகிறது.

தொடர்ந்த ஆண்டுகளில் இந்த நெருக்கடியினால் உண்டான உணவுப் பாதுகாப்பின்மையை  களையும் பொருட்டு ஐரோப்பா முழுவதும் விவசாய வழிமுறைகள் மேம்படுத்தப்பட்டு பல புதிய முன்னெடுப்புகளும் மசோதாக்களும் உருவாகின. 

அச்சமயத்தில்தான் ஐரோப்பாவில் குப்பை மட்குரமான ஹ்யூமஸ் மண் வளத்தை அதிகப்படுத்துவதை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகள் துரிதப்படுத்தப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பா முழுவதும் வேளாண் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டு மண்வளத்தை, பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கச் செய்யும் ஆய்வுகள் தீவிரப்படுத்தப் பட்டன,

19-ம் நூற்றாண்டில் குப்பை மட்குரமான ஹ்யூமஸ் என்னும் சொல் ஐரோப்பாவெங்கும் மிக அதிகமாக புழங்கியதற்கு தம்போரா உருவாக்கிய பேரழிவு ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.

“Humus” என்னும் கிரேக்க வேர்களைக்கொண்ட லத்தீனச்சொல்லுக்கு பூமி, நிலம், மண் எனப் பலபொருட்கள் உள்ளன. மனிதர்கள், மண்ணில் வாழ்கிறவர்கள்  என்னும் பொருள் கொண்ட இந்திய ஐரோப்பிய வேர்களைக் கொண்டிருக்கும்    “Homo” என்பதுவும் இதனோடு இணைந்த சொல்தான்.


மண்ணிலிருந்து தோண்டி எடுத்தல் என்பதைக் குறிக்கும் Exhume மற்றும் மண்ணில் புதைக்கப்பட்ட பிற்பாடு என்பதைக் குறிக்கும் Posthumous ஆகிய சொற்களும் ஹ்யூமஸுடன் இணைந்தவைகளே. 

18-ம் நூற்றாண்டின் இறுதியில் நிலத்தில் இருக்கும்  தாவர மற்றும் விலங்குப் பொருட்களின் சிதைவால் உருவான, ஊட்டச்சத்துக்களும் நுண்ணுயிரிகளும்  நிறைந்த, மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் மண்ணில் உள்ள கரிமப் பொருளுக்க  மட்கு, மட்குரம், குப்பைமட்குரம் என்பவற்றைக் குறிக்கும்  “Humus” என்ற ஆங்கிலப் பெயர்   18-ம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகி 1790-களில் விவசாய மற்றும் தாவரவியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள், நூல்களில் இடம்பெற்றது.  

எனினும் மட்குரங்களினால் மண்வளம் மேம்படுத்தப்படுவதில் தீவிரமான ஆய்வுகள் தம்போரா வெடிப்பிற்குப் பிறகான உணவுப் பற்றாக்குறையின் போது ஐரோப்பா முழுக்க நடைபெற்றபோதுதான் Humus என்னும் சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக  இருந்தது. 

பண்டைய மெசபடோமிய, எகிப்திய சீன, மற்றும் இந்திய வேளாண் நாகரிகங்கள்   சாணம், மற்றும் தாவரக் கழிவுகளைச் சேர்ப்பதால் பயிர் விளைச்சல் மேம்படுகிறது என்பதை அறிந்திருந்தனர்.

ஹ்யூமஸ் என்கிற  மட்குரத்தின் வேதியியல் குறித்து அவர்கள் அறியாவிட்டாலும், மண் வளத்தைப் பராமரிக்க கழிவுகளைச் சேர்த்தல் மற்றும் பயிர் சுழற்சி ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினர்.

ரோமானிய எழுத்தாளர்களான கொலுமெல்லா மற்றும் பிளினி ஆகியோர் சாணம் மற்றும் சாம்பல் மூலம் மண்ணை வளப்படுத்தும் முறைகளைப் பற்றி எழுதினர்.

5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்திய வேளாண்மை, இயற்கையாக மண் ஆரோக்கியத்தை  மேம்படுத்துவதை வலியுறுத்தியது.

சுரபாலரால் எழுதப்பட்ட விருக்ஷாயுர்வேதம், கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், 12-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அபிலா சிதார்த்த சிந்தாமணி என்கிற மனஸோல்லாசா   போன்ற பண்டைய இந்திய நூல்கள்   உரம், தாவரக் கழிவுகள் மற்றும் கழிவுகளை உரமாக்கும் முறையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டன.

சீன விவசாயிகள் பசுந்தாள் உரமிடும் முறையைப் பின்பற்றினர். ரோமானியர்கள் விலங்குச் சாணத்தையும், மூடுபயிர்களையும் பயன்படுத்தி மண் வளத்தை அதிகரிக்கலாம் என அறிந்திருந்தனர்.

இடைக்காலத்தில்  பொதுமக்களின் அறிவுக்கு எட்டாத வகையில் மடாலயங்களில் மட்டும் மேம்படுத்தபட்ட வேளாண் அறிவு பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

விவசாய நிலங்களில் மண்ணை வளமாக்கும் கழிவுப்பொருட்கள் திரட்டப்பட்டன என்றாலும் அதற்கான அறிவியல் புரிதல் அப்போது குறைவாக இருந்தது.

அக்காலகட்டத்தில் இந்தியாவில் விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். மண் பராமரிப்பு என்பது வாய்வழியாகவும் விவசாயிகளின் அனுபவ அறிவு மூலமாகவும் கடத்தப்பட்டது. பயிர்களின் விளைச்சல் மற்றும் வருவாயைப் பராமரிக்க விவசாயிகளை மன்னர்கள் மற்றும் ஜமீந்தார்கள் ஊக்குவித்தனர்.

கிருஷி-பராசரா போன்ற பிராந்தியக் கையேடுகள் மற்றும் கட்டுரைகள் இந்திய வேளாண்மையில் இயற்கை வேளாண் முறைகளை வலியுறுத்தின.

பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் (1757–1947) பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வணிக ஒற்றைப் பயிர்களான அவுரி, பருத்தி, தேயிலை ஆகியவற்றை அறிமுகப்படுத்தினர்.

அப்போது இந்திய வேளாண் முறை பாரம்பரிய உயிரியல் முறையிலிருந்து விலகி, ரசாயனங்கள் உபயோகிக்கப்பட்டு  பல பகுதிகளில் மண் சோர்வுக்கு வழிவகுத்தது.

அச்சமயத்தில்தான் இந்தியாவில் பணியாற்றிய ஆங்கில தாவரவியலாளர் சர் ஆல்பர்ட் ஹோவர்ட்   கழிவுகளை உரமாக்கி மண் வளத்தை அதிகப்படுத்துதலுக்கு முன்னுரிமை அளித்து மண் வளத்தைக்காக்கும் ஆய்வுகளை முன்னெடுத்தார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலமான 1947–1980களில்  பசுமைப் புரட்சி உருவாகி ரசாயன உரங்களையும் அதிக விளைச்சல்  அளிக்கும் கலப்பின பயிர்களையும் அறிமுகப்படுத்தியது.

இந்திய வேளாண்மையின் கவனம் செயற்கை உரங்களின் பயன்பாட்டுக்கு மாறியதால் மட்குரம் மற்றும் உயிரி உரங்களில் இருந்து கவனம் குறைந்தது.

அதிக அளவிலான ரசாயன வேளாண்மை,மண் கரிம கார்பன் குறைப்பு,மண் சிதைவு மற்றும் பாரம்பரிய வேளாண் அறிவின் இழப்புக்கு வழிவகுத்தது. விளைவாக வேளாண் உற்பத்தித்திறன் அதிகரித்தாலும், நீண்டகால மண் ஆரோக்கியம் மற்றும் பல்லாண்டுகளாக உருவாகி வந்த குப்பை மட்குரத்தின் அளவு வெகுவாகக் குறைந்தது.

1990 களில் இருந்து தற்போதைய நவீன வேளாண் காலம் வரை சுபாஷ் பாலேகர் மற்றும் நம்மாழ்வார் போன்றோரால் உயிரியல் வேளாண்மை, இயற்கை வேளாண்மை முறைகள் மீட்டெடுக்கும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன   

அறிவியல் புரட்சி நிகழ்ந்த  17ம்-18ம் நூற்றாண்டுகளில்தான் “ஹியூமஸ்” என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.

1761-ல் வாலேரியஸ்  ஹ்யூமஸ் என்கிற குப்பை மட்குரத்தை மண்ணின் ஒரு அங்கமாக அல்லாது மண்ணின் தனித கூறாக அங்கீகரித்தார். இவர் ஹ்யூமஸை “சிதைந்த இயற்கைக்கரிமப் பொருள்” என்று வரையறுத்தார். ஆனால் அந்த நேரத்தில் ஹ்யூமஸின் வேதியியல் தன்மை பற்றிய அறிதல்கள் தெளிவற்று இருந்தன. இருப்பினும், வாலேரியஸின் பங்களிப்பு பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் இறுதியில் வளர்ந்து வந்த அறிவியல் முறைகளால் சோதிக்கக்கூடிய கருதுகோள்களை வழங்கியது. 

18-ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜெத்ரோ துல் (1674 –1741,) மண் தாவர வளர்ச்சிக்கு ஒரு ஊடகம் மட்டுமே, தாவரங்கள் நீரில் கரைந்த ஊட்டச்சத்துக்களை மட்டுமே உறிஞ்சுகின்றன என்று அறிவித்து   ஹ்யூமஸின் பங்கை குறைத்து மதிப்பிட்டார். 

ஜெர்மனியைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி ஆல்பிரெக்ட் தேயர் (1752-1828) ஹ்யூமஸை மண்வளத்திற்கான முதன்மை ஆதாரமாக மீண்டும் வலியுறுத்தினார், ஹ்யூமஸ்தான் தாவர ஊட்டச்சத்தின் முதன்மை ஆதாரம் என்று வலியுறுத்தினார். இதுவே “ஹ்யூமஸ் கருதுகோள்” என்று அழைக்கப்பட்டது.1809-ல் மட்குரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘’புத்திசாலித்தனமான வேளாண்மையின் கோட்பாடுகள்’’ என்ற நூலையும் அவர்  வெளியிட்டார். 

இந்த கருதுகோள் அதிக கரிமப் பொருள் இருப்பு மற்றும் அதிக மண் வளம் ஆகியவற்றுக்கு இடையேயான  தொடர்புகளுக்கான விளக்கத்தை உருவாக்கிய ஆரம்ப முயற்சியாகப் பார்க்கப்பட்டது.

தொடர்ந்த ஆண்டுகளில் ஹ்யூமஸின் கார்பன், தாவரங்களுக்கு முக்கியமான கார்பன் ஆதாரம் என்று அறியப்பட்டது, ஜெர்மானியத் தாவரவியலாளர் ஸ்ப்ரெங்கல் (1787–1859) 1826-ல் ஹ்யூமஸில் உள்ள கரையக்கூடிய உப்புகள்தான் உண்மையான ஊட்டச்சத்துக்கள் என்பதை நிரூபித்தார்

19-ம் நூற்றாண்டின் மத்தியில் ஹ்யூமஸ் கோட்பாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தது. 

வேளாண்மையில் ரசாயன புரட்சி உண்டான  இக்காலகட்டத்தில் ஜெர்மன் வேதியியலாளர் ஜஸ்டஸ் வான் லீபிக் (1803 – 1873) 1840 களில் மண் அறிவியலை புரட்சிகரமாக மாற்றினார். இவர் தாவரங்கள் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவற்றைப் போல் மண்ணிலிருந்து நேரடியாக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகின்றன, ஹ்யூமஸிலிருந்து நேரடியாக அல்ல என்பதை நிரூபித்தார்.  இவரே நவீன வேளாண் வேதியியலுக்கான அடித்தளத்தை அமைத்தார்.

இவர் ஹ்யூமஸ் மண்ணின் இயல்புகளை மேம்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தக்கவைக்கிறது என்பதை நிரூபித்தார், ஆனால் அது நேரடியாக தாவர உணவல்ல என்பதையும் காட்டினார்.

இவரது ஆய்வு முடிவுகள் வேதியியல் உரங்களின் மீது கவனம் செலுத்த வழிவகுத்தது, ஆனால் மண் ஆரோக்கியத்திற்கு ஹ்யூமஸ் முக்கியமானதாக இருந்ததென்பதை அவர் மறுக்கவில்லை.

 அவரது ஆய்வுகள் ஹ்யூமஸ்:

  • மண்ணின் பல்வேறு இயல்புகளை மேம்படுத்துகிறது
  • நீர் தக்கவைப்பை அதிகரிக்கிறது
  • மண் pH ஐ சமநிலைப்படுத்துகிறது
  • நுண்ணுயிர் செயல்பாட்டை ஆதரிக்கிறது என்பதை நிறுவின.

இவரது  ஆய்வு முடிவுகள் பெருமளவில் வேளாண் மாற்றங்கள் உருவாக்கி, செயற்கை உரங்களின் வளர்ச்சி மற்றும் பரவலான பயன்பாட்டுக்கு வழிவகுத்ததால், வேளாண்மை  உயிரியல் முறைகளிலிருந்து விலகி ரசாயன அடிப்படியிலானது. பயிர் விளைச்சல் அதிகரித்தது, ஆனால் நீண்டகால அதிகபட்ச  ரசாயனப் பயன்பாடு மண் சிதைவுக்கு வழிவகுத்தது.

19-ம் நூற்றாண்டின் இறுதிகளில் ரஷ்ய புவியியலாளரும்  மண் அறிவியலின் அடித்தளங்களை அமைத்த பெருமைக்குரியவருமான வாசிலி வாசிலியேவிச் டோகுசேவ் (1846–1903)  தீவிரமான களப்பணிகளுக்குப் பின்னர் மண்ணை வகைப்படுத்தினார். இவரது பங்களிப்பு மண் உயிரியல் ஆய்வுகளில் மிக முக்கியமானதாக இருந்தது

அதே காலகட்டத்தில் அமெரிக்க நவீன மண் அறிவியலின் தந்தையான   யூஜின் வோல்ட்மர் ஹில்கார்ட் (1833 – 1916)  தனது மண் வளம் குறித்த விரிவான ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். மண் வேதியியலில் இவரது பங்களிப்பு உலகளாவிய கவனம் பெற்றது. 

இவற்றைப்போன்ற 20- ம் நூற்றாண்டின் மண் நுண்ணுயிரியல் ஆராய்ச்சிகள் ஹ்யூமஸின் பங்களிப்பை  மறுமதிப்பீடு செய்தன. ஹ்யூமஸ் நேரடி தாவர உணவல்ல என்றாலும் மண்ணின் இயல்புகளை மேம்படுத்துதல், ஈரப்பதத்தைத் தக்கவைத்தல், நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கு உணவளித்தல் ஆகிய மிக முக்க்கியமானவற்றைச் செய்கிறது என்பது கண்டறியப்பட்டது.

மண் நுண்ணுயிரிகளின் கண்டுபிடிப்பு ஹ்யூமஸ் எவ்வாறு ஆரோக்கியமான மண் சூழலமைப்பை உருவாக்குகிறது என்பதை வெளிப்படுத்தியது.

1950 களின் நடுப்பகுதியில் சர் ஆல்பர்ட் ஹோவர்ட் உள்ளிட்டவர்களால் தலைமை தாங்கப்பட்ட உயிரியல் வேளாண்மை இயக்கத்தினால் கழிவுகளை உரமாக்கல்,  குப்பைமட்குரம், மற்றும் இயற்கை மண் வளம் ஆகியவற்றின் மீதான ஆர்வம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

20- நூற்றாண்டின் இறுதிகளில்  யூத அமெரிக்க கண்டுபிடிப்பாளர், உயிர்வேதியியளாலர், மற்றும் நுண்ணுயிரியலாளரான செல்மன் ஆபிரகாம் வாக்ஸ்மேன் (Selman Waksman) (1888-1973) மண்ணில் வாழும் உயிரினங்களின் சிதைவு குறித்த ஆராய்ச்சியின் போது ஸ்ட்ரெப்டோமைசின் உள்ளிட்ட  பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கண்டுபிடித்தார். இவரே  “மண் நுண்ணுயிரியல்” என்ற சொல்லை உருவாக்கினார், இவரது ஆய்வு மட்குரங்கள் மண் வளத்தில் உண்டாக்கும் தாக்கம் பற்றிய பெரும் புரிதலை அளித்தது.

ஆங்கிலேய தாவரவியலாலரும் இயற்கை வேளாண்மையின் தந்தை எனக் கருதப்படுபவருமான சர் ஆல்பெர்ட் ஹோவர்ட்  (1873 –  1947) இந்திய விவசாயிகளுடன் தங்கி இருந்து மட்குரம் குறித்த பல ஆய்வுகளின் கண்டுபிடிப்புக்களை வெளியிட்டார், அவர் இந்திய பயிர் நோயியலில் பெரும் பங்காற்றினார். 

மட்குரங்களால் மண்வளம் பெருகுவதை நிரூபித்தவர்களில் இவர் மிக முக்கியமானவர். இந்தியாவின் மத்திய பிரதேச, இந்தூரில் உள்ள பாரம்பரிய இந்திய வேளாண் முறைகளை ஆய்வு செய்தார். இந்தூர் கழிவுகளை உரமாக்கும் முறையை உருவாக்கினார்.ஆரோக்கியமான மண்ணுக்கு ஹ்யூமஸ் கட்டுமானம் அவசியம் என்று வலியுறுத்தினார். “அன் அக்ரிகல்சரல் டெஸ்டமெண்ட்” (1940) என்ற நூலை எழுதி உலகளாவிய உயிரியல் வேளாண்மையை வலியுறுத்தினார்.

இதன் விளைவாக இந்திய பாரம்பரியக் கழிவுகளை உரமாக்கும் முறைகள் உலகளாவிய நவீன மட்குரத்தின் அடிப்படையிலான உயிரியல் வேளாண்மைக்கு பங்களித்தது. இக்காலகட்டதுக்குப் பிறகே உயிரியல் வேளாண்மை பிரபலமடைந்து மண் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 

21-ம் நூற்றாண்டின் சுற்றுச்சூழல் நெறிமுறைகள், நீடித்த வேளாண்மை, காலநிலை எதிர்ப்புத்திறன், மற்றும் கார்பன் சேமிப்பிற்கு குப்பை மட்குரம் மிக அவசியம் எனக் கருதுகிறது.

நவீன மண் அறிவியல் ஹ்யூமஸை மண் நுண்ணுயிரியல், கார்பன் சுழற்சி, மற்றும் காலநிலையோடு இணைந்து செயல்படும் வேளாண்மைக்கு அத்தியாவசியம் என்கிறது

 நிலத்தின் மேற்பரப்பில் தான் இந்த மட்குதல் என்னும் செயல் நுண்ணுயிரிகளால் நடைபெறுகிறது. குப்பை மட்குரமான ஹ்யூமஸ் உருவாகும் நிகழ்வு ஹ்யூமிஃபிகேஷன் (Humification) எனப்படுகிறது

ஹ்யூமிஃபிகேஷன் என்பது இறந்த உடல்கள் அழுகி மட்குதல் என்னும் செயல்பாட்டின் (decomposition) ஒரு பகுதியாகும். இது மண்ணில் உள்ள உயிரினங்களின் சடலங்கள் மற்றும் செடியின் கழிவுகள் மண்ணில் விழுந்து அழிந்தபின்பு நிகழும் ஒரு முக்கியமான நிலை.

ஹ்யூமிஃபிகேஷன் செயல்முறை:

  • முதலில், செடி மற்றும் விலங்குகளின் சடலங்கள் மண்ணில் விழுகின்றன.
  • இவைகள் பாக்டீரியா, பூஞ்சைகள் போன்ற சிதைக்கும் நுண்ணுயிரிகளின் (decomposers) மூலம் சீரான முறையில் நொறுக்கப்படுகின்றன.
  • இதனால், கார்பன், நைட்ரஜன் போன்ற மூலக்கூறுகள் சிதைவடைகின்றன.
  • இதன் பின், மிகக் குறைவாக முற்றிலும் சிதைவடையாத கழிவுகள் மண்ணிலேயே இருந்து விடுகின்றன – இதுவே ஹ்யூமஸ்  எனப்படும் குப்பை மட்குரமாகிறது.

ஹ்யூமஸ் என்பது கருமை நிறமுடைய, நைட்ரஜனும் கார்பனும் நிறைந்த ஒரு சீரான இணைபொருள். இது மண்ணின், காற்றோட்டம், ஈரப்பதம், நீரைத் தக்கவைத்துக்கொள்ளும் இயல்பு மற்றும் வளத்தை மேம்படுத்துகிறது. ஹ்யூமிஃபிகேஷன் மிக மெதுவாக நடக்கும் ஒரு இயற்கை செயல்முறை ஆகும், மட்குரம் உருவாக பல ஆண்டுகளாகும். 

அனைத்து குப்பை மட்குரங்களும் ஒன்று போல் இல்லை. மண் அறிவியலில், மட்குரங்கள் மண்ணில் அது நீடித்திருக்கும் காலத்தின்  அடிப்படையில்  இரண்டாக வேறுபடுத்தப்படுகிறது. 

  1. ஊட்டச்சத்து மட்குரம் என்பது மண் உயிரினங்களால் விரைவாக நுகரப்படும் உயிரியல் பொருட்களைக் கொண்டுள்ளது. 
  2. மாறாக, நிரந்தர மட்குரம் என்பது உடைக்கப்படுவதற்கு கடினமான ஹியூமிக் பொருட்களால் ஆனது, இது மெதுவாக அழிக்கப்பட்டு மண்ணில் நீண்ட காலம் தங்கி இருக்கிறது. இந்த மட்குரம்தான் ஊட்டச்சத்துக்களையும் நீரையும் பிணைத்து வைத்து, வளமான மட்குர மண்ணின் உயிரியல் கட்டமைப்பின்  சுமார் 90 சதவீதத்தை உருவாக்குகிறது.

நிரந்தர மட்குரம் நிறைந்த மண் ’களிமண்-மட்குரம்’ தொகுப்புகளால் செழித்துக் காணப்படுகிறது. மட்குரப் பொருட்கள் மற்றும் களிமண் தாதுக்களுக்கு இடையேயான பிணைப்பானது மண் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டால் உருவாக்கப்படுகிறது.

நிரந்தர மட்குரம்  தாவரங்களின் வேர்களுக்கருகே எப்போதும்  நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்கிறது. குப்பை மட்குரம் இல்லாத மண்ணில், இந்த தொகுப்புகள் பெரும்பாலும் இல்லை. எனவே உரமிடல் மூலம் மண்ணுக்கு சேர்க்கப்படும் ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் தாவரங்களால் பயன்படுத்தப்படாமல் நீர்மட்டத்தில் இறங்குகின்றன, இதனால் தாவரங்கள் பலவீனமடைந்து நோய்க்கு ஆட்படுகின்றன.

பூமியின் மேற்பரப்பில் கிடைக்கக்கூடிய 4-12 அங்குல குப்பை மட்குரம் கொண்ட மண் எனும் விலைமதிப்பற்ற வளம் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டி இருக்கிறது.

ஒவ்வொரு தாவரமும் மண்ணில் வளர்ந்து பின்னர் அறுவடை செய்யப்படுகையில் மண் கணிசமான அளவில் ஊட்டச்சத்துக்களையும் மட்குரத்தையும் இழக்கிறது. காடுகள் மட்டுமே தங்கள் நுகர்வை விட அதிக மட்குரத்தை  உருவாக்க முடியும். மற்ற அனைத்து மண்ணும் தொடர்ந்து மட்குரத்தை இழக்கிறது. 

உலகெங்கிலும் உள்ள  விளைநிலங்களில் ஏற்கனவே மட்குரம் குறைவாக உள்ளது, அதாவது குறைந்த 1 முதல் 2 சதவீதம் அல்லது மிகக் குறைந்த < 1 சதவீதம்.

எனவே, நமது விளைநிலங்களில் இருக்கும் மட்குரத்தை  பாதுகாப்பது மட்டும் போதாது. உலகளாவிய மட்குர அளவுகளை  அதிகரிக்கக் கூடிய வகையில் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால், மட்குர மேலாண்மை மற்றும் மண்ணின் உயிரியல் அமைப்பு பற்றிய ஆழமான புரிதல் தேவைப்படுகிறது.

விளைநிலங்களில் மட்குரத்தை  பெறுவதற்கான எளிய முறை உயிரியல் கழிவுகளை திரட்டிச்சேகரிப்பது, ஊடு பயிர்கள் மற்றும் துணைப் பயிர்களின் பயிரிடல், உயிரி உரங்களின் சீரான விநியோகம் மற்றும் நிலத்தைத் தரிசாக விடுவதை தவிர்த்தல் ஆகியவை அடங்கும். நிரந்தர மட்குர உருவாக்கத்தில் ஹ்யூமிக் அமிலங்களைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க பயனை அளிக்கும்.

ஹியூமிக் அமிலங்கள் மட்குரம் நிரம்பிய  மண்ணில், பீட், கடல்நீர் மற்றும் லியோனார்டைட் என்று அழைக்கப்படும் மென்மையான லிக்னைட்டில் காணப்படுகின்றன. அதிக ஆக்சிஜனேற்றம் அடைந்த லியோனார்டைட்டிலிருந்து பெறப்படும் ஹ்யூமிக் அமிலங்கள் பாரம்பரிய ஆதாரங்களிலிருந்து பெறப்படும் ஹ்யூமிக் அமிலங்களை விட ஐந்து மடங்கு அதிக உயிரியல் செயல்பாட்டைக் கொண்டுள்ளன.

மண்ணில், ஹ்யூமிக் அமிலங்கள் பயிர்களின் தாவர வளர்ச்சி மற்றும் வேர் வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலமும், விரும்பத்தக்க மண் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை தூண்டுவதன் மூலமும் மட்குர உருவாக்கத்தைத் தூண்டுகின்றன. அவை தேவையான களிமண்-ஹ்யூமஸ் தொகுப்புகளின் உருவாக்கத்தை செயல்படுத்தி நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை பிணைத்து வைத்து, தேவைப்படும்போது தாவரங்களுக்கு அளிக்கின்றன.

மண்ணில் ஒரு சதவீதம் மட்குர அதிகரிப்பு ஒரு ஹெக்டேருக்கு 170,000 லிட்டர் அதிக நீர்த் தக்கவைப்புத் திறனை வழங்குகிறது,  இது வறட்சி எதிர்ப்புத்தன்மை மற்றும் நீர் பாதுகாப்பில் ஹ்யூமஸின் முக்கியமான பங்கை நிரூபிக்கிறது.  

மண் கட்டமைப்பை மேம்படுத்துதல், ஊட்டச்சத்துக்களை சேமித்தல், நீர் வளங்களை நிர்வகித்தல், கார்பனை தக்கவைத்தல், மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கான வாழ்விடமாக செயல்படுவது- ஆகிய ஐந்து முக்கிய செயல்பாடுகள் மூலம் ஹ்யூமஸ் வேளாண்மையில் மிக முக்கியப்பங்காற்றுகிறது

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம்  ஹியூமஸின் இருபங்கை இழந்திருப்பது வேளாண்மை நடைமுறைகளை  மறுகட்டமைப்புச் செய்யவேண்டியதன்  அவசியத்தை வலியுறுத்துகிறது. 

வேளாண் அறிவியல் ஹ்யூமஸின் சிக்கலான மூலக்கூறு கட்டமைப்புகள் மற்றும் தொடர்புகள் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றாலும் நமது உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது என்னும் உண்மை  நம் முன்னே தெளிவாக உள்ளது.

குப்பை மட்குரத்தின் முக்கியத்துவம் வெறும் மண் சேர்ப்புப் பொருள் என்பதற்கும் அப்பால் நீண்டு விரிகிறது,   மீட்டெடுக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய வேளாண் முறைகளும் புதிய ஆராய்ச்சிகளும் ஹ்யூமஸ் நிறைந்த மண்ணை உருவாக்கி வேளாண் உற்பத்தித்திறனை மாற்றுவதற்கான அற்புதமான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளன. 

எதிர்காலத்தில் உலக உணவுப்பாதுகாப்பு பெரும் அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும். மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும் விளைநிலப்பற்றாக்குறையாலும் உணவுக்கான தேவை அதிகரிப்பது, முக்கிய வேளாண் பகுதிகளில் நீர்வள மூலங்கள் குறைதல், மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக கடுமையான வானிலை மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இவை அனைத்தும் இந்த அழுத்தங்களுக்கு காரணமாக இருக்கும்.

இந்த சவால்களை எதிர்கொள்ள பல வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன, அவற்றில் செயல்திறன் குறைந்த நிலங்களில் பயிர் விளைச்சலை அதிகரிப்பதும், வேளாண் வளங்களின் பயன்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதும் (அதாவது நீர், உரம் மற்றும்  உயிரிப் பூச்சிக்கொல்லிகள்), உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவதும், உணவுக்கழிவுகளைக் குறைப்பதும் அடங்கும்  இந்த வழிமுறைகள் பயனுள்ளவை என்றாலும், உலக உணவுப்பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்புக்கு இவை நேரடியாக தீர்வு காணவில்லை.

எனவே மண்ணில் உள்ள ஹ்யூமஸினால் மேம்படும் மண்ணின் வளமென்பது தொடர்ந்து நீடிக்கக்கூடிய மற்றும் உறுதியான வேளாண் அமைப்புகளுக்கான அடித்தளமாக இருக்கிறது.  

வேளாண்  அறிவியல் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வரும்போதும் மேம்படுத்தப்படும்போதும், ஹ்யூமஸ் வேளாண்மையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மேலும் முக்கியமான பங்கு வகிக்கும். இதன் பொருட்டு  ஹியூமஸ் மேலாண்மை உத்திகளில் ஆய்வுகள் தொடர வேண்டியது மிக முக்கியமான தேவையாயிருக்கிறது. 

ஹ்யூமஸ் நிறைந்த மண்ணின் மூலம் நாம் நிலத்தின் வளமையை மட்டும் மேம்படுத்தவில்லை  உணவுப் பாதுகாப்பிற்கான நாளைய சவால்களை சமாளித்து, எதிர்கால தலைமுறைகளுக்கான சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாத்து, நீடித்த உணவு உற்பத்திக்கான அடித்தளத்தையும் கட்டியெழுப்புகிறோம்.

(தாம்போரா இன்னும் உயிருடன் இருக்கிறது. அதன் கடைசி வெடிப்பு 1967-ல் நிகழ்ந்தது, 2011, 2012 மற்றும் 2013 களில் தம்போரா மெல்ல உறுமியபடி  கசிவுகளையும் வாயுக்களையும் வெளியேற்றியது)

திறந்திடு சீசேம்!

வெள்ளிமலை தாவரவியல் குழுவினர் இன்று வரை தொடர்பில் இருக்கிறார்கள். நானே அதிகாலையில் எழுந்து நாளைத்துவங்கும் ஒருத்தி என்றால் அதில் சிலர் நான் எழும்போதே எனக்கென ஏதேனும் தகவலோ கேள்வியோ புகைப்படமோ வைத்திருப்பார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவர்களுடன் இணைந்து நானும் புதிதுபுதுதாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

இன்று காலை பெங்களூர் பிரியா நிறைந்து பூத்திருந்த எள் வயலின் புகைப்படம் அனுப்பி எள்ளின் வகைகளைக்குறித்து கேட்டிருந்தார். நான் அதன் கருப்பு வெள்ளைபிரவுன் சிவப்பு வகைகளையும் அதன் ஆங்கிலப்பெயரான Sesame , தாவர அறிவியல் பெயரான Sesamum indicum (Sesamum indicum subsp. indicum)என்பதையெல்லாம் காரில் கல்லூரிக்கு வருகையில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அறிவியல் பெயரிலிருந்து வந்த இதன் sesame என்னும் ஆங்கிலப்பெயருக்குப்பின்னால் ஒருசுவாரஸ்யம் இருக்கிறது.

எள் இந்தியாவுக்கு சொந்தமான பயிர்.மனிதர்கள் பயிரிட்ட முதல் எண்ணெய்பயிர் எள் தான். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள் இந்தியாவில் பயிராகிறது. இந்து மதம் விஷ்ணுவின் வியர்வையிலிருந்து உருவான பயிர் என்று எள்ளைச்சொல்கிறது. தரிசு நிலங்களில் கூட எள் பயிராகும். பல மதங்களில் எள்ளும் எள் எண்ணெயும்புனிதமானதாகக் கருதப்படுகிறது.

பெடாலியேசியைச்சேர்ந்த (Pedaliaceae) எள்ளின் கனி எனப்படும் pods மிகச்சுவாரஸ்யமானது. பல நாகரீகங்களில் சத்துக்கள் அடங்கிய இதன் சிறு விதைகள் அந்த கனியிலிருந்து வெடித்து திறந்து வெளியாவதைப் புதையல் கிடைத்தது போல் எனக்கொள்வார்கள். எனவேதான் open sesame என்பது புதையல் இருக்கும் இடம் திறப்பதற்கான மந்திரச்சொல்லாக இருக்கிறது.

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையை திறக்க அலி ’’திறந்திடு சீசேம்’’ என்று சொல்வது இதனால்தான். பாபிலோனியாவில் பல மந்திர தந்திர வித்தைகளில் எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் உபயோகத்திலிருக்கிறது. யூதர்களின் மாயாவாத சடங்குகளில் எள் சொர்க்கத்தின் இன்னொரு பெயராகக் கருதப்படுகிறது. ஹீப்ரூ மொழியிலும் எள்ள்ளுக்கு கடவுள் என்னும் பொருள் இருக்கிறது

sesame என்னும் கிரேக்கச்சொல் பழமையான செமிடிக் மொழிகள் ஒன்றான, இப்போது புழக்கத்தில் இல்லாத பண்டைய மெசபடோமியர்களின் மொழியான அக்காடியனின் (Akkadian) தாவர எண்ணெய் என்னும் பொருள் கொண்ட்  šamaššamu என்னும் சொல்லில் இருந்து உருவானது.

57% எண்ணெய் அளவு கொண்டிருக்கும் எள்ளின் பல பயன்களில் ஒன்று அதிலிருக்கும் லிக்னன்களான sesamin & sesamolin ஆகியவற்றின் ரத்தக்கொழுப்பைக்குறைக்கும் இயல்பு. இதன் தமிழ்ப்பெயரில் ஒன்றான திலம் என்பதிலிருந்துதான் ஆங்கிலப்பெயரான் til என்பது வந்திருக்க வேண்டும்.எள் தான் எண்ணெய்ப்பயிர்களின் ராணி.

நேற்று Dr செளமியா அவரது தோட்டதில் இருந்த எள் சக்களத்தி என்று சொல்லப்படும் எள் பயிரைப்போலவே இருக்கும் Cleome monophylla வின் புகைப்படத்தை அனுப்பி இருந்தாள். எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள் தாவரங்களில் !

Cleome monophylla-PC Dr. Sowmiya

தாலியா!

அகரமுதல்வனின் வாட்ஸ்அப் நிலைத்தகவலில்  ரத்தச்சிவப்பில் ஒரு குட்டி தாலியா மலரைப் பார்த்தேன். அத்தனை வசீகரமாக இருந்தது பார்க்க.  color wheel -ல் பச்சைக்கு நேர் எதிரில் இருப்பது சிவப்பு என்பதால் பச்சை இலைகளுக்கிடையில் தெரிந்த அந்த மலர் அழகான அழகாயிருந்தது.

எனக்குத் தாலியாக்கள் மீதும் பிரியம்தான். பள்ளி கல்லூரிக் காலங்களில் வீட்டு வாசலில் காலை நேரத்தில்   ஊட்டி ரோஜாவும் தாலியாக்களும் விற்கப்படும். நான் ஊட்டி ரோஜாக்களை விரும்பியதில்லை. அது ஒரு வாரம் வரை வாடாமலிருப்பதும் அடுத்தநாளில் இருந்தே இதழ்களில் விளிம்புகளில் கருப்புப் படிந்துவிடுவதும்,  கனமாக இருப்பதும் காரணமென்றாலும் முதன்மைக்காரணம் அது மலராமல் கூம்பியே இருப்பதுதான்.எனக்கு மலரென்றால் மலர்ந்திருக்க வேண்டும்.

தாலியா அப்படியல்ல குழந்தையொன்று சிரிப்பதைப் போல  முழுக்க மலர்ந்திருக்கும் அதில் பல நிறங்கள் இருந்தாலும் நான் அதிகம் தேர்ந்தெடுப்பது வெள்ளையும் இளஞ்சிவப்பும்தான். கல்லூரி முதல் அவ்ருடம் படிக்கையில் (நானும் மித்ராவும் ஒன்றாகத்தான் கல்லூரிக்குள் நுழைந்தோம்)மித்ராவின் கல்லூரித்தோழர் அமல்ராஜ் கம்பீரமாக  ஒரு சைக்கிளில் பூக்களை விற்றுக்கொண்டு வருவார். கல்லூரிக்குச் செல்ல அரை மணி நேரம் முன்பு அவர் வீடு வீடாகப் பூக்களைச் சைக்கிளின் பின்னிருக்கும் கூடையில் வைத்துக்கொண்டு நிமிர்வுடன் வருவார். ஒருபோதும் அந்தச்செயலில் அவர் வருத்தமுற்றதும் தாழ்வாக உணர்ந்ததும் இல்லை. குளித்து நல்ல உடையணிந்து வரும் அவர் அப்படியே அதே உடையில் பின்னர் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் வந்துவிடுவார். பிற்பாடு அவர் உடற்பயிற்சி இயக்குனராகியதை அறிந்து கொண்டேன், அவரை, அவரது இளமைக்காலத்தை  அவருடன் பொருளாதாரம் படித்த   மித்ராவின் தங்கை நினைவு கூறுகிறாள் என்பதை  அவர் கற்பனை கூடச் செய்திருக்க  மாட்டார். தனக்கான செலவுகளுக்காகப் படிக்கையிலேயே ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்த அவர்மீது எனக்கு அப்போதும் இப்போதும் பெரும் மரியாதை உண்டு. 

தாலியாவுக்கு வருகிறேன். அப்படி நான் தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொண்டுதான் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அரிதாக டிசம்பர் பூச்சரமும் வைப்பதுண்டு. பின்னல் நல்ல அடர்த்தியாக இடைவரை நீண்டிருக்கும். (அந்த அடர்ந்த நீண்ட கூந்தலைத்தான் சரணுக்கும் தருணுக்குமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டேன்).மித்ராவுக்கு என்னைக் காட்டிலும் நீண்ட அடர்ந்த பின்னல். இப்போது தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொள்ளும் பெண்களைப் பார்ப்பதில்லை.ஏன் பூச்சரம் வைத்துக் கொள்பவர்களும் அதிகமில்லை. 

அந்தப்புகைப்படத்தில் தாலியா அப்படி கொள்ளை அழகாக இருந்தது. அநேகமாக அகரமுதல்வன் அதை ஒரு மலை வாசஸ்தலத்தில் எடுத்திருக்கக்கூடும் ஏனெனில் உடனிருந்த புகைப்படத்தில் ஒரு ஆப்பிரிக்கன் லில்லியும் இருந்தது. இவையிரண்டுமே கடல்மட்டத்துக்கு 1000 அடி மேலே இருக்கும் பகுதிகளில் மட்டுமே செழிப்பாக வளரும்.

தாலியாக்கள் வெகுசுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட மலர்கள்.

மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட இவை சூரியகாந்தியின் குடும்பமான அஸ்டரேசியைச் சேர்ந்தவை. தாலியா பேரினத்தில் சுமார் 50 சிற்றினங்களும் ஆயிரக்கணக்கான நிறங்களில் மலர்களும் இருக்கின்றன.

தாலியாக்கள் 14-லிலிருந்து 16-ம் நூற்றாண்டுவரை மீசோஅமெரிக்கப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி இனக்குழுக்களின் தொகுப்பான ஆஸ்டெக்குகளின் தாவரமாக மட்டுமே இருந்தது. ஸ்பானிஷ் படையெடுப்பின் பின்னரே தாலியாக்கள் ஐரோப்பாவிற்கு அறிமுகமாயின.

1525-ல் மெக்ஸிகோவிற்கு வந்த ஸ்பேனியர்கள் இந்த அழகிய மலரைப் பார்த்தார்கள் 1570-களில் மெக்ஸிகோவிற்கு ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் மன்னரால் அனுப்பப்பட்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் ஃப்ரான்சிஸ்கோதான் முதன் முதலாகத் தாலியாக்களை எழுத்தில் விவரித்தவர். மன்னரால் அந்த ப்பிரதேசத்தின் இயற்கைப் பொருட்களைக் குறித்து விரிவாக அறிந்துகொண்டு வரும்படி பிரான்சிஸ்கோ ஆணையிடப்பட்டிருந்தார். அச்சமயத்தில் தாலியாவின் வகைகளில் சிலவற்றின் கிழங்குகளைப் பழங்குடியினர் உணவாகப் பயன்படுத்துவதையும் ஃப்ரான்சிஸ்கோ ஆவணப்படுத்தினார். 

தண்டுகள் உள்ளே காலியாக இருப்பதைக்குறிக்கும் “water pipe”, “water pipe flower”, “hollow stem flower”, “cane flower” போன்ற பெயர்களில் தாலியாக்கள் அப்போது அஸ்டெக்குகளின் மொழியில் அழைக்கப்பட்டன. 7 வருடங்கள் மெக்சிகோவின் தாவரங்களை அறிந்து ஆராய்ந்து முடிவுகளை நான்கு தொகுதிகளாகப் பிரசுரித்த ஃப்ரான்சிஸ் மிக அழகிய சித்திரங்களையும் கைப்பட வரைந்திருந்தார்.

Nova Plantarum, Animalium et Mineralium Mexicanorum Historia, என்னும் அந்த நூல் 1578-ல் வெளியானது. அந்த நூலில் தாலியாவின் இரு சிற்றினங்களை பிரான்சிஸ்கோ விவரித்திருந்தார்.( Dahlia pinnata & Dahlia imperialis)1615-ல் அவை லத்தீன மொழியாக்கம் செய்யபட்டு இரு தொகுதிகளாக வெளியானது.

1787-ல் இரத்தச்சிவப்புச் சாயம் அளிக்கும் cochineal பூச்சிகளைத் திருடிவருவதற்காக மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்ட  ஃப்ரெஞ்ச் தாவரவியலாளர் நிக்கோலஸ் (Nicolas-Joseph Thiéry de Menonville) இந்தப் பிரகாசமான மலர்களைக் குறித்தும் ஆவணப்படுத்தினார். நிகோலஸ் அவருக்குச் சொல்லி அனுபியப்டி  cochineal  பூச்சிகளி திருடவில்லை மாறாக அவற்றை மெக்ஸிகோ பழங்குடியினரிடமிருந்து விலைக்கு வாங்கி அவை வளரும் சப்பாத்திக்கள்ளி வகைகளைத் தாவரவியல் பூங்காவில் வளர்த்து அந்தபூச்சிகளை பெருகச்செய்து அதற்கான பாராட்டையும் பெற்றார். இன்றும் அந்தப்பூச்சிகள் அந்த சப்பாதிக்கள்ளிகளில் தான் வாழ்கின்றன. இவற்றினல் தான் அடர்சிவப்பு நிறம் “coccineus,” எனப்பெயர் பெற்றது.

தாவரங்களின அறிவியல் பெயர்களில் காக்சினியா என்று இருப்பவைகளின் மலர்கள் எல்லாம் குருதிச்சிவப்பில் இருப்பதைப் பார்கக்லாம்.  அகரமுதல்வன் எடுத்த புகைப்படத்தில் இருப்பது Dahlia coccinea மலர்தான். ரத்தச்சிவப்பு தெட்சி மலரின் அறிவியல் பெயர் இக்ஸோரா காக்சீனியா.

பின்னர் பல வருடங்கள் தாலியாவின் நறுக்கப்பட்ட தண்டுகளும் விதைகளும் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு மெக்ஸிகோவிலிருந்து அனுப்பப்பட்டன. பின்னர் படிப்படியாக உலகநாடுகள் அனைத்திற்கும் தாலியா அறிமுகமானது. ஆயிரக்கணக்கான கலப்பின வகைகளும் உருவாகின.

தாலியா என்னும் இதன் பேரினப் பெயரிலேயே குழப்பம் நிலவியது. தாவர வகைப்பாட்டியலை நிறுவியவரான லின்னேயஸ் அவரின் மாணவரான  Anders Dahl, என்பவரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியா என்னும் பேரினத்தை வைத்தார் என பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தாலியா ஐரோப்பாவுக்கு அறிமுகமான 1789-க்கு 11 வருடங்கள் முன்பே லின்னேயஸ் இறந்துவிட்டார். மேட்ரிட் தாவரவியல் பூங்காவின் இயக்குனரான  Abbe Cavanilles,  தான் Anders Dahl யின் பெயரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியாவுக்கு வைத்தார் என்பது பிற்பாடு அறியபட்டது.

 1805-ல் ஜெர்மானிய தாவரவியலாளர்  கார்ல் (Carl Ludwig Willdenow, asserting) தாலியாவை  ஜார்ஜினா (Georgina) என்று பெயர் மாற்றம் செய்தார். 1810-ல் எழுத்துபூர்வமாக இம்மலர் மீண்டும் தாலியா எனக்குறிப்பட்டது.

கடல் மட்டத்துக்கு மேல் 1,500 – 3,700 m உயரதில் செழித்து வளரும் தாலியாக்கள்  பனிப்பொழிவற்ற உலகின் எல்லா பாகங்களிலும் வளருகின்றன.

தாலியாக்கள் பல வருடம் மலரளிக்கும் பெரினியல் வகையைச் சேர்ந்தவை. அவற்றின் மலர் எனச் சொல்லப்படுவது உண்மையில் மலர்த்தலை என்னும் மஞ்சரிதான். மலர்த்தலைகள் பிரகாசமான வண்ணங்களில் இருக்கும் பெரும்பாலும் தாலியாக்களில் மணம் இருக்காது. மகரந்தச்சேர்க்கைக்கு பூச்சிகளைக் கவர பிரகாசமான அதன் வண்ணங்களே போதுமென்பதால் நறுமணம் இருப்பதில்லை.

இங்கிலந்தின் புகழ்பெற்ற ராயல் ஹார்டிகல்சர் அமைப்பு 1969-ல் சர்வதேச தாலியா பெயர்களின் பதிவேட்டை உருவாக்கியது இந்தp பதிவேடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.(The International Register of Dahlia Names) தாலியாக்களின் உருவாக்கத்திலும் அவற்றின் உலகளாவிய பரவலிலும் மிக முக்கியப்பங்காற்றியவராக நியூயார்க்கின் ஜார்ஜ் தோர் பர்ன் (George C. Thorburn) அறியபப்டுகிறார்.

1963-ல் தாலியா மெக்சிகோவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது.

ஒற்றை அடுக்கு, பல அடுக்கு , மிகப்பெரியவை, மிகக்குட்டியான மினி வகைகள், நாடாபோன்ற இதழ்கொண்டவை, வெளியடுக்கு பெரிதாகவும் உள்ளடக்கு சிறியதாகவும் இருப்பவை பந்துபோன்ற பொம்பன் (Pompon) வகைகள் என இப்போது சுமார் 5700 வகை தாலியாக்கள்  நீலத்தைத்தவிர மற்ற எல்லா நிறங்களிலும், நிறக்கலவைகளிலும் இருக்கின்றன.

எடின்பர்க் தோட்டக்கலைதுறை1846- ல் நீல நிற தாலியாக்களை உருவாக்குபவர்களுக்கு 2000 பவுண்டு பரிசு அறிவித்தது.அது இன்று வரை உருவாக்கபடவில்லை.

அதன் காரணம் தாவரவியலாளரல்லாதோருக்கு புரிந்துகொள்ளக் கடினமென்றாலும் எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

நீல நிறம் உருவாக ஆந்தோசையானின் என்னும் நிறமி தேவை. தாலியாக்களில் ஆந்தோசையானின்கள் உள்ளன எனினும் தூய நீல நிறம் உருவாக delphinidin என்னும் ஆந்தோசையானின் ஒரு வகை நிறமியில் 6 ஹைட்ராக்சைல் தொகுப்புகள் இருந்தாக வேண்டும் ஆனால்  இன்று வரையிலும் தாலியாக்களில் 5 ஹைட்ராக்சைல் தொகுப்புக்களே உருவாகி இருக்கின்றன.

பொதுவாகவே இயற்கையில் நீல நிற மலர்கள் மிக அரியவை . நூற்றாண்டுகளாகத் தாவரப் பெருக்கவியலாளர்கள் முயற்சித்தும் இன்று வரை ட்யூலிப்களில் நீல நிற மலர்களைக் கொண்டு வர முடியவில்லை. இப்போது இருப்பவை எல்லாம் almost blue என்னும் வகையில் வருபவைதான். இயற்கையாக நீல நிறத்தில் ஹைட்ராஞ்சியா, கார்ன் மலர்கள், இமாலய பாப்பிகள் மற்றும் டெல்பீனியம் போன்ற  ஒருசிலமலர்களே இருக்கின்றன.

 பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தாலியா உலகின் மிக விரும்பப்படும் தோட்டமலராக  இருக்கிறது.

சர்க்கரைப்பூஞ்சை!

பல லட்சம் வருடங்களுக்கு முன்பு மூன்று கொம்புகளும், கிளியைப் போன்ற அலகும் கொண்டிருந்த ஆதிவிலங்கான ட்ரைசெரடாப்ஸ்கள் (Triceratops) சமவெளி தாவரங்களை மேய்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த சில பூக்கும் தாவரங்கள் தங்கள் விதைகளைப் போட்டிகள் குறைவாக இருக்கும் தொலைவுப் பிரதேசங்களுக்கு செலுத்த  புதிய உத்தியைக் கையாள முதன்முறையாக முயன்றன.

அது வரைமெல்லிய காகிதம் போன்ற உறையால் சூழப்பட்டு உருவாக்கிய விதைகள்,சுவையுள்ள, சதைப்பற்றான உறைகளால் சூழப்பட்டு உருவாகின. தாவரங்களின் கனிகளாகிய அவற்றை ட்ரைசெரடாப்ஸ்கள் போன்ற ஆதி விலங்குகள் உண்டு விதைகளை பல்வேறு திசைகளில் பரப்பின.கூடவே அவற்றின் கழிவுகள் மண்ணை மேலும் வளம் ஆக்கின

அக்கனிகளில் சர்க்கரையில் பூஞ்சைகள் விரைவாக வளரத்துவங்கின, அப்பூஞ்சைகள் சர்க்கரைச் சத்தை தங்களது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டன. ஆக்சிஜன் இல்லாத சமயங்களில் பூஞ்சைகள் சர்க்கரையை ஆல்கஹால் மற்றும் கரியமில வாயுவாக மாற்றின.

இந்த எளிய ஒற்றை செல் பூஞ்சைகள்  அரும்புகள் போல் துளிர்த்து விரைவில் பாலிலா இனப்பெருக்கம் செய்து பல்கிப்பெருகி பரவின. ஏராளமாக விளைந்த காட்டுமரங்களின் கனிகளில் இவை செழித்து வளர்ந்தன.

காட்டுக் குரங்குகள் மது நொதித்திருந்த கனிந்த பழங்களை உண்டு  மகிழ்ந்தன. குரங்குகளை பார்த்து அவற்றைப் போலவே கனிந்து நொதித்த பழங்களை ஆதி மனிதனும் சுவைக்க தொடங்கினான்.  மதுவைக் கொண்டாடும் ஆதிமனிதனின் ஜீன்கள்  அக்கணம் விழித்துக்கொண்டன.

அந்த புத்திசாலிப் பூஞ்சைகள் பின்னர் மனிதகுலத்தின் மிக இன்றியமையாத இரண்டு விஷயங்களான உணவு மற்றும் மதுவின் தயாரிப்பில் முக்கிய பங்காற்றின. அவையே பிற்பாடு சர்க்கரைப் பூஞ்சைகளான ஈஸ்டுகள் என அறியப்பட்டது.

மனிதர்கள் உணவு சமைக்க முதலில் கண்டுபிடித்ததும், பயன்படுத்தியதும் நெருப்பு, இரண்டாவது ஈஸ்ட்.

தற்போது கண்டறியப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஈஸ்ட் வகைகளில் சுமார் 250 வகைகள் மட்டுமே சர்க்கரை நொதித்தலில் பயன்படுகின்றன.அவற்றில் 25 மட்டுமே நல்ல ஈஸ்டுகள்.அதாவது அவையே மனிதர்கள் உண்ணக் கூடிய பொருட்களை சிறப்பாக உருவாக்க முடியும்.  

வரலாறு

ஈஸ்ட் என்பது என்ன? சிலருக்கு சரும அலர்ஜியை உண்டாக்கும் ஈஸ்டுகள்  நினைவுக்கு  வரலாம். அவையும் ஈஸ்டுகள்தான் என்றாலும் உணவுத் தொழிற்சாலைகளில் பயன்படுவது ஈஸ்டின் வேறு வகைகள். இட்லி மாவு அரைத்து வைத்து மறுநாள் புளித்திருப்பதும், சப்பாத்தி. பூரிக்கு மாவு பிசைந்து வைத்து சில மணி நேரங்களில் அவை மிருதுவாகவும்,  அளவில் சற்று அதிகரித்திருப்பதும் இந்த ஈஸ்டுகளால்தான்.

தமிழில் மதுகம் என்று அழைக்கப்படும் ஈஸ்டுகள் மனிதன் அன்றாட வாழ்வில்  பயன்படுத்திய  முதல் நுண்ணுயிரி. 

ஈஸ்டுகள் பேச்சு மொழி, எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பிருந்தே மனிதர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பண்டைய நாகரிகங்களின் சித்திர எழுத்து முறைகளை ஆராயும் வல்லுநர்கள், எகிப்தியர்கள் 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே ஈஸ்டுகள் கொண்டு  ரொட்டி மாவைப் புளிக்கச் செய்திருப்பதை உறுதி செய்கிறார்கள் 

பண்டைய எகிப்தின் அகழ்வாய்வுகளில் கிடைத்த  அடுமனை அறைகளும், மாவு அரைக்க உபயோகப்படுத்தப்பட்ட அரைகற்களும், தானிய சேமிப்பு நிலவறைகள், அடுமனைகள் மற்றும் வடிசாலைகளின் சுவரோவியங்கள் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பான  ஈஸ்ட் பயன்பாட்டிற்கான  அத்தாட்சிகளாயிருந்தன.

கி மு 3100 ல் எகிப்தை ஆண்ட ஸ்கார்பியன் எனும் மன்னர் இறந்தபோது (அப்போது பிரமிடுகள் கட்டப்பட்டிருக்கவில்லை)   அவரை பென்ச் என்று பொருள் கொண்ட தாழ்நிலை கல்லறையான mastaba  வில்  அடக்கம் செய்தார்கள். அந்தக் கல்லறையில் ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியலாளர்கள் 700 ஒய்ன் சீசாக்களையும் அவற்றிலிருந்து பிசினாகிவிட்டிருந்த 4500 லிட்டர் திராட்சை ரசத்தையும் கண்டுபிடித்தார்கள்.

 அப்போதெல்லாம் ஒரு மரப்பிசின் வைனுடன் கலக்கப்பட்டு வைன் விரைவாக ஆக்ஸிஜனேற்றம் அடைந்து வினிகர் என்னும் புளித்த திரவமாதல் தடுக்கப்பட்டது. அந்த வைன்  ரெசின் கலந்து உண்டாக்கப்படும் கிரேக்க வைனான ரெட்சினாவை போலிருந்தது,(Retsina) அந்த வைன் வண்டலில் ஆய்வாளர்கள் சர்க்கரை பூஞ்சையின் DNA துண்டுகளை கண்டார்கள். அந்த வைன் ஸ்கார்பியன் காலத்துக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்தது   

பண்டைய எகிப்தில் தாவர வேர்களை உலர்த்திப் பொடித்து ரொட்டிக்கான மாவை சுமார் 30,000 வருடங்களுக்கு முன்பே உருவாக்கினார்கள். பின்னர் தானியங்கள் பயிராக்கப்பட்டபோது  ஆரோக்கியமான ஆற்றல் மிக்க வாழ்விற்கான உணவாக கோதுமை மற்றும் பார்லியை சார்ந்திருந்தார்கள். பல வகை விதைகள், தேன், பேரீச்சை, முட்டை மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட  விதம் விதமான  ரொட்டிகள்  உருவாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அவை பறவைகள் மீன்கள் விலங்குகள் போன்ற வடிவங்களில் உருவாக்கப்பட்டன. .அன்றாட உணவுகளுக்கும் விழாக்கால உணவுகளுக்கும் என வேறு வேறு வகைகளில்  ரொட்டிகள் உருவாக்கப்பட்டன.

2450 விலிருந்து 2401 க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த எகிப்திய கல்லறை சுவர்ச் சித்திரங்களிலிருந்து அக்காலத்தில் மாவு பிசையப்பட்டு நேரடியாக அடுப்பில் வாட்டி நொதித்தலே நடைபெறாமல் ரொட்டியாகப் பட்டிருக்கிறது என்பதை அறிய முடிந்தது. பெரும்பாலும் அடிமட்ட தொழிலாளர்கள் அப்படி புளிக்காத மாவினால் ரொட்டி தயாரித்திருக்கிறார்கள். பின்னரே பூஞ்சைகளால் மாவு புளிக்கச் செய்யப்பட்டிருக்கின்றது. பிசைந்த  மாவை பலமணிநேரம் கால்களால் மிதித்து மிருதுவாக்கி காற்றில் இயற்கையாக இருந்த ஈஸ்டின் பங்கை முற்றிலும் அறியாமலேயே புளிக்கச்செய்து மிருதுவான  ரொட்டியை உருவாக்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் எகிப்தியலாளர்கள் குழுவொன்று அகழாய்வில் கிடைத்த பழைய வைன் சீசாக்களின் கசடுகளில் நீள் உறக்கத்திலிருந்த ஈஸ்டுகளை உயிர்ப்பித்து அவற்றைக்கொண்டு காட்டு கோதுமை மாவைப் புளிக்கச் செய்து ரொட்டி உருவாக்கினார்கள். ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதப்படும். அந்த ஈஸ்டை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

 எகிப்தியர்களுக்கு ஈஸ்ட் நுண்ணுயிரிகள் குறித்த அறிதல் ஏதும் இருந்திருக்கவில்லை அவர்கள் எப்படியோ பழைய ரொட்டியின் ஒரு சிறு பகுதியை புதிய மாவிலும், பழைய மதுவின் சில துளிகளை புதிய மதுவிலும் சேர்த்தால் அவை புளிக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். இவ்வழக்கத்தை  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைப்பிடித்தார்கள்.

ஈஸ்ட் ஆய்வுகள் இவை பல மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்த பூமியில் வாழ்ந்த நுண்ணுயிரிகள் என்று தெரிவிக்கின்றன. பொது யுகத்திற்கு 6000 ஆண்டுகள் முன்பிருந்தே பியர் நொதித்தலில் ஈஸ்டுகளின் பங்கிருந்ததை சுமேரியா பாபிலோனியா மற்றும் தற்கால ஜார்ஜியாவில் நடந்த அகழாய்வுகள் தெரிவிக்கின்றன.

தானியங்களை நொதிக்கச் செய்வதில் ஈஸ்டுகளின் பங்கு ரொட்டிகளில் அவை பயன்படுத்தப்படுவதற்கு முன்பிருந்தே இருந்திருக்கிறது என்று கருதப்படுகிறது. அதாவது விவசாயம் உலகில் துவங்கும் முன்பே கனிகளின் சர்க்கரை ஈஸ்டினால் நொதிக்கச் செய்யப்பட்டு மது உருவாக்கப்பட்டிருக்கிறது. 

யேசுவின் போதனைகளில் ’’parable of the yeast’’ என்பதும் ஒன்று. விவிலியத்தில்  புதிய ஏற்பாட்டில்  வரும் இந்த போதனைக்கதையில்   விண்ணரசுக்கு உவமையாக ஈஸ்ட் கொண்டு புளிக்க செய்யப்பட்ட மாவு குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

பெண்ணொருத்தி மூன்று மரக்கால் மாவில் மிகச்சிறிய அளவு ஈஸ்ட் சேர்த்து பிசைந்து வைக்கையில் முழு மாவிலும் அது பரவி மாவைப் புளிக்க செய்கிறது அதுபோலவே கிறிஸ்தவம் சிறிய துவக்கத்திலிருந்து பெரிய  அளவிற்கு  பரவும் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி. 45க்கு பின்னும் கி.பி. 140க்கு முன்னும் எழுதப்பட்டு சிறுக சிறுக சில நூற்றாண்டுகளாக ஒன்று சேர்க்கப்பட்டு, கிறிஸ்தவ திருச்சபையால் அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டது இந்த புதிய ஏற்பாடு.  பழைய ஏற்பாட்டிலும் புளிக்காத மாவில் செய்யப்பட்ட ரொட்டி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஈஸ்டின் பழமையை அவை குறிப்பிடப்பட்டிருக்கும் விவிலியத்தின் காலங்களிலிருந்தும் அறிந்துகொள்ளலாம்

எப்போது, எங்கிருந்து ஈஸ்ட் மனிதனால் நொதித்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என்று துல்லியமாக சொல்ல முடியாவிட்டாலும் அகழ்வாய்வுகள் அவை  பண்டைய எகிப்திலிருந்தே பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என சொல்லுகின்றன. 8000 ஆண்டுகள் பழமையான வைனும் 7000 ஆண்டுகள் பழமையான பியரும் நமக்கு கிடைத்திருக்கிறது எனினும் 1680 வரை அவை ஈஸ்டினால் உருவானவை என்று உலகிற்கு தெரிந்திருக்கவில்லை. 

அறிவியல் வரலாறு

1680 -ல் டச்சுக்காரரான ஆண்டனி வான் லூவன் ஹாக் முதன்முறையாக ஈஸ்டுகளை நுண்ணோக்கியில் கண்டார். அவர் அவற்றை உருண்டையான அமைப்புகள் என்று மட்டுமே குறிப்பிட்டார். அவை உயிருள்ளவை என்று அவரால் கண்டுகொள்ள முடியவில்லை.1837- ல் தான் தியடோர் ஸ்வான் (Theodor Schwann) அவை பூஞ்சைகள் என்று முதன் முதலில் கண்டுபிடித்தார்.

1856-ல்  லூயி பாஸ்டரின் ஆய்வு மாணவர்களில் ஒருவரின் தந்தை   பீட்ரூட் மதுத் தொழிற்சாலை உரிமையாளர்.   அங்கு தயாராகிய பீட்ரூட் மது பிற பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகையில் அவை விரைவாக புளித்துக் கெட்டு போகும் சிக்கலுக்கு பாஸ்டரிடம் உதவி கேட்கப்பட்டது. 

பாஸ்டர் தனது ஆய்வில் அது அப்படி விரைவில் புளிக்கக் காரணம் மது உருவாகும் வடிசாலையின் சுகாதாரமற்ற சூழல் என்பதைக் கண்டறிந்து கட்டுப்படுத்தப்பட்ட  சூழலில் மதுவை நொதிக்கச் செய்யும்,முறைகளைக் கண்டறிந்தார்.அச்சமயத்தில் பாஸ்டர் தனது குறிப்பேட்டில் நொதித்தலுக்கு காரணமாகும் ஈஸ்ட் ஒரு உயிருள்ள நுண்ணுயிர் மது வகைகள் புளித்துப் போகக் காரணம் ஈஸ்டுடன் வேறு பல நுண்ணுயிரிகளும் இணைவதால் தான் என்று எழுதியிருக்கிறார்.

1857-ல் லூயி தானியக்கரைசலில் காற்றைச் செலுத்துவதன் மூலம் அதிலிருக்கும் பூஞ்சையின் ஒற்றைச் செல்கள் இரட்டிப்பாகும் வேகத்தை அதிகரிக்கலாம் என்பதையும், நொதித்தல் என்னும் வேதிவினை  அப்போது நிகழாமல் இருப்பதையும் நிரூபித்தார், இது பாஸ்டர் விளைவு என்று அழைக்கப்பட்டது

அப்போது அவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் திரவங்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெப்பமூட்டி அவற்றிலிருக்கும் நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்தும் pasteurization முறை .

1857-ல் லூயி பாஸ்டர் தனது,  “Mémoire sur la fermentation alcoolique”  என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையில் மதுவை நொதிக்கச் செய்வதில் சர்க்கரை பூஞ்சைகளின் இன்றியமையாத பங்கு குறித்து ஆதாரபூர்வமாக விளக்கி இருந்தார்.

அப்படியாக Saccharomyces cerevisiae தான்  நொதித்தலுக்கான பிரத்யேக ஈஸ்ட் வகை என  கண்டறியப்பட்டது. நொதித்தலின் பிற விதிகளும் லூயியால் உருவாக்கப்ட்டன. பிரான்ஸில் வணிக ரீதியாக ஈஸ்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாகின.

1870-ல் பிரான்ஸ்-ப்ருஸியா போரில்  பிரான்ஸ் தோற்றிருந்தது எனவே நொதித்தல் கலையின் தந்தை என அறியப்பட்ட லூயி பாஸ்டர் அவரது நாட்டுக்கென ஒரு நொதித்தல் முறையை ஜெர்மானியர்களுக்கு போட்டியாக வெற்றிகரமாக வடிவமைக்கஅ விரும்பினார். அதை வெற்றிகரமாக உருவாக்கினார். 

பிரான்ஸின் மது வகைகள் கெட்டுப் போகாமல் உலகின் பிற பாகங்களுக்கு    அனுப்பபட்டன. பிரென்ச் பியர் தொழில் சக்திவாய்ந்ததாகவும் வெற்றிகரமாகவும் மாறியது.பாஸ்டர் 1876- ல் வெளியிட்ட நொதித்தலின் மர்மங்கள்  “Etudes sur la bière”என்னும் ஆய்வுக்கட்டுரையும்  மிக பிரபலமானது. 

18-ம் நூற்றாண்டின் இறுதியில் மது நொதித்தலில் பயன்படும் Saccharomyces cerevisiae மற்றும்  S. carlsbergensis என்னும் இருவகையான ஈஸ்டுகள் அடையாளப் படுத்தப்பட்டிருந்தன. S.cerevisiae நொதித்தலில் மிதக்கும் வகை நுண்ணுயிர், S.carlsbergensis  தொட்டிகளின் அடியில் தங்கி செயல்புரியும் வகை.

1870- களிலிருந்து டச்சுக்காரர்களால் ஈஸ்டுகள் ரொட்டி தயாரிப்புக்காக விற்கப்பட்டன  1800களில் ஜெர்மனியர்கள்   S.cerevisiae வை ஒரு கிரீமை போல தயாரித்து சந்தைப்படுத்தினர்  

ஈஸ்ட் உருவாக்கம்

இன்றைய ஈஸ்ட் பல அறிவியல் சோதனைகளால் மேம்படுத்தப்பட்ட  ஒரு நுண்ணுயிர். வரலாற்றில் ஈஸ்ட் உருவாக்கம் குறித்து இன்றும் சர்ச்சைகள் நீடிக்கின்றன. ஒரு தரப்பு 1792 -ல் மேசன் என்னும் ஆங்கிலேயரால் முதன் முதலில் நன்கு செயல்புரியும், சோதனைச்சாலையில் கண்டறிந்த ஈஸ்ட் வகை வளர்ப்பு ஊடகங்களில் வளர்க்கப்பட்டு புழக்கத்தில் வந்தது என்கிறது. 

பிறிதொரு தரப்பு  1781- ல் ஹாலந்தில் ஈஸ்ட்டின் மேம்படுத்தப்பட்ட வகை கண்டறியப்பட்டது என்கிறது.ஆனால் 1868-ல் லூயி பாஸ்டரின் கண்டுபிடிப்புக்கு பின்னர்தான் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஈஸ்ட் விற்பனைக்கு வந்தது. 

லூயி பாஸ்டர் நுண்ணுயிரியியலில் உண்டான பல முன்னேற்றங்களைக் கொண்டு ஈஸ்ட் உருவாக்கத்திலும் பல முன்னெடுப்புக்கள் நிகழ்த்தினார். கலப்படமில்லாத தூய ஈஸ்டின் பல வகைகளை அவர் உருவாக்கினார். 1879-ல்  சக்காரோமைசீஸ் செரிவிசியேவை வளர்க்கவென்றே பிரத்யேகமான நொதித்தல் தொட்டிகள் உருவாகின.

அமெரிக்கா தொட்டிகளுக்குள் சுழல் காற்றடிகளை அமைத்து, வளரும் ஈஸ்டுகளை அடிப்பகுதியில் தேங்கச் செய்யும் முறையை கண்டறிந்தது. Slurry yeast  எனப்பட்ட இந்த ஈஸ்ட்  வண்டல்  அடுமனை தொழில் வல்லுநர்களால் மேம்படுத்தபட்டு க்ரீம் ஈஸ்ட் என்ற புது வடிவம் கொண்டது

அமெரிக்காவில் ஃப்ளைஷ்மன் (Fleischmann)  ஈஸ்ட் நிறுவனத்தை துவங்கியவரான ஃப்ளைஷ்மன் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்திற்கெனவே தனிப்பட்ட முறையில், உலரந்த  ஈஸ்ட் குருணைகளை உருவாகி அளித்தார். அக்குருணைகளை குளிர்பதனப்படுத்தத் தேவையின்றி சாதாரண அறையின் வெப்பநிலையில் சேமிக்கவும் உபயோகப்படுத்தவும் முடிந்தது   

ஈஸ்ட் குருணைகள் மாவை இரண்டு மடங்கு விரைவாகப் புளிக்கச் செய்து, மிக  கூடுதலாக மிருதுவாக்கி அடுப்பில் மாவு வேகும் கால அளவையும் கணிசமாகக் குறைத்தன.

1973- ல் உலகளவில் அடுமனைத் தொழிலில் புகழ்பெற்ற லுஸாஃபர் (Lesaffre) குழுமம் moment yeast என்னும் மற்றொரு  உலர் ஈஸ்ட் வகையை அறிமுகப்படுதியது. இவை இரண்டுமே உலகளாவிய பயன்பாடுகளை அன்றிலிருந்து இன்று வரையிலும் கொண்டிருக்கின்றன

ஈஸ்ட் இன்று வரையிலும் தொடர்ந்து மேம்பட்ட செயல்திறனுக்கான சோதனைகளிலும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு கொண்டேயிருக்கிறது. 

இருப்பிடம்

இந்த ஈஸ்டுகள் நம் கண்களுக்கு புலப்படாத நுண் அளவுகளில் நம்மைச் சுற்றி எங்கும் காற்றில்  நிறைந்திருப்பன. நம் உடலின் மீதும் புழுதியிலும் சில பூச்சிகளின் உடலிலும் மனிதர்களின் கால் நகங்களில், சருமத்தில், பாலூட்டிகளின் குடல் பகுதியிலும், மண்ணிலும் ஈஸ்ட் காணப்படும். கடல்நீரில் ஈஸ்டின் பல வகைகள் காணப்படுகின்றன.  சாக்கடை நீரில், கறையான் புற்றுகளில் மரப்பட்டைகளில், குதிரைச்சாணம், பழ ஈ, மனித ரத்தம்,அழுகிய வாழைப்பழம் இவற்றிலும் ஈஸ்ட் உள்ளது. 

இயற்கை ஈஸ்ட்

பெல்ஜியத்தின் lambic வடிசாலைகளைப் போல ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்பட்ட ஈஸ்டுகளைத் தவிர்த்து காற்றில் இயற்கையாக இருக்கும் ஈஸ்டின் காட்டு மூதாதைகளைக் கொண்டும்  மது தயாரிக்கப்படுகிறது. Lambic  வடிசாலையில் தானியங்களை உடைத்து நீரில் கொதிக்க வைத்த   திரவத்தை அப்படியே திறந்து காற்றுப்படும்படி சில நாட்கள் வைத்திருக்கிறார்கள். காற்றில் இயற்கையாக கலந்திருக்கும் நொதித்தலுக்கான ஈஸ்டுகள் அத்திரவத்தை  நொதிக்கச்செய்து மதுவாக  மாற்றுகின்றன. 

இயற்கையான ஈஸ்டுகள்  திராட்சை ஆப்பிள் போன்ற உள்ளிட்ட பல வகைப்பட்ட பழங்களின் தோலில்,பழைய மது பீப்பாய்களில்  கள்ளிச்செடிகளின் கசிவுகளில், செர்ரி மலரிதழ்களிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. நல்ல தரமான ஈஸ்டுகளை ஈஸ்ட் வங்கிகளிலிருந்தும் பெறலாம்.

 Saccharomyces exiguous எனப்படும் இயறகையாகப் பழங்களிலும் தாவரங்களிலும் காணப்படும்  ஈஸ்டும் சில சமயங்களில் நொதித்தலுக்கு பயன்படுகிறது. 

பெயர்கள்

ஈஸ்ட் என்னும் சொல் 1859 வரை மது நொதித்தலில் நேரடியாக தொடர்புபடுத்தப் படவில்லை, 1859- ல் வேன் டென் ப்ரூக்  (J. H. van den Broek) என்னும் ஆய்வாளர் ஈஸ்டின் ஒற்றைச் செல்களை அடையாளம் கண்டு அவை அரும்பு விட்டு பெருகி நொதித்தல் நடத்துவதை கண்டறிந்து அவற்றை வேடிக்கையாக ஈஸ்ட் என அழைத்தார்.  இந்திய ஐரோப்பிய வேர்களை கொண்ட பழைய ஆங்கிலத்தின்   gest,  என்னும் நுரைத்தல் குமிழி இடுதல் மற்றும் கொதித்தலைக் குறிக்கும் சொல்லில் இருந்து ஈஸ்ட் என்னும் பெயர் உருவாகியது.

1837- ல்  ஆய்வுகளின் வழி ஈஸ்டுகள் உயிருடன் இருப்பதை நிரூபித்த ஜெர்மானியரான , Theodore Schwann,   அவை பூஞ்சைகள் என்பதையும் கண்டறிந்தார். ஜெர்மானிய மொழியில் அவர் ஈஸ்டை  சர்க்கரைப்பூஞ்சை என்னும் பொருளில்  Zuckerpilz என்று பெயரிட்டார்.

இந்த பெயரைத்தான்  1838 ல் மற்றொரு ஜெர்மானியரான ஜூலியஸ் (Julius Meen) லத்தீன் மொழியாக்கம் செய்து ஈஸ்டின் அறிவியல் பெயரான, சர்க்கரைப் பூஞ்சை என்னும் பொருள் கொண்ட Saccharomyces என்பதை உருவாக்கினார். எனினும் பல வேதியியலாளர்கள் இந்த புதிய கண்டுபிடிப்பை அடியோடு மறுத்து அவை உயிருள்ளவைகள் அல்ல, வெறும் சர்க்கரை கசடுகள் என்றே வாதிட்டனர். பாஸ்டர் வந்து தியடோருக்குக் கைகொடுத்த பிறகே அவ்விவாதங்கள்  முடிவுக்கு வந்தன.  

1903-ல் டென்மார்க்கின்  Carlsberg  ஆய்வகத்தில் பணியாற்றிய, Niels Hjelte Claussen, மிக பழமையான பியர் பீப்பாயிலிருந்து எடுக்கப்பட்ட முற்றிலும் வேறு விதமான ஈஸ்ட் ஒன்றிற்கு பிரிட்டிஷ் பூஞ்சை என்னும் பொருள் படும்படி,  Brettanomyces என லத்தீன் பெயரிட்டார்.

அந்த பிரிட்டிஷ் பூஞ்சை சர்க்கரை பூஞ்சை செல்ல முடியாத ஆழங்களுக்கு சென்று, சக்காரோமைசீஸ்னால்  கைவிடப்பட்ட கரைசல்களையும் நொதிக்கச்செய்து மதுவாக்கியது. அம்மதுவின் பிரத்யேக நெடியும் மதுப்பிரியர்களால் கொண்டாடப்பட்டது

ஈஸ்டின் பரவல்

வரலாற்றாய்வாளர்கள் தானியங்கள் மற்றும் ரொட்டி நொதித்தலின் அகழாய்வு சான்றுகளைக்கொண்டு  ஈஸ்ட் பயன்பாடு பண்டைய எகிப்திலிருந்து பாபிலோனுக்கும் அங்கிருந்து கிரேக்கத்துக்கும் பின்னர் பண்டைய யூத நாகரீகங்களுக்கும் அறிமுகமாயிருக்கும் என கருதுகின்றனர்

கிரேக்கத்திலிருந்து ரோமுக்கு அறிமுகமானது ஈஸ்ட் என்பதை பிளைனி 168 BCE க்கு முன்பு வரை தொழில்ரீதியான ரொட்டி தயாரிப்பு ரோமில் இல்லை என்று குறிப்பிட்டதில் இருந்து அறிய முடியும்.

ரொட்டி ஈஸ்ட் என அழைக்கப்படும், S. cerevisiae, சீனாவில் இருந்து பட்டுப்பாதை வழியே உலகின் பிற பகுதிகளில் பரவியது. 

இனப்பெருக்கம்

 ஒற்றை செல் உடலியான ஈஸ்டுகள் பாலினப்பெருக்கம் செய்தாலும் மொட்டு/அரும்பு விடுதல் எனப்படும் பாலிலா இனப்பெருக்கமே அதிக அளவில் செய்கின்றன. இம்முறையில் ஒரு முதிர்ந்த ஈஸ்ட்டின் ஒற்றைச்செல் பலூனைப்போல பருத்து வீங்கி அதிலிருந்து பல புதிய அரும்புகள் தோன்றி ஒவ்வொன்றும் தாய் ஈஸ்டிலிருந்து பிரிந்து உதிர்ந்து தனியே வளரும். 

வகைகள்

சாக்கரோமைசிஸ் செரிவிசியே என்னும் இந்த ஈஸ்ட் நொதித்தலின் போது திரவத்தின் மேற்பரப்பில் நுரையெனப் பொங்கி நின்றது. அதற்கு ஏல் ஈஸ்ட்-Ale yeast  அல்லது டாப் ஈஸ்ட் என பெயர் வந்தது

அதேசமயத்தில் ஜெர்மனியின் முனிச் பகுதி வடிசாலை உரிமையாளரான Gabriel Sedlmayr அவரது வடிசாலைகளில் நல்ல குளிரான சூழலிலும் நொதித்தலை நடத்தி, நொதித்தல் தொட்டிகளின் அடியில் கசடென தங்கும் ஈஸ்டுகளை கவனித்தார் அவற்றை பலநாட்களுக்கு  சேமிக்கவும் முடிந்தது. “story beer”, “lager beer” என்பதை உருவாக்கிய கீழ்நிலை ஈஸ்ட்   இவ்வாறு கண்டறியப்பட்டது

அதன்பிறகு 1908-ல்  Hansen  தனியே பிரித்து வளர்த்திய ஈஸ்ட் வகையொன்றிற்கு தனது எஜமானரின் பெயரை வைத்து Saccharomyces carlsbergiensis என்று சந்தைப்படுத்தினார்.

அந்த  S.carlsbergiensis ஈஸ்ட்  திராட்சைக் கனிகளின் தோலில் இருக்கும் ஈஸ்ட்டான S bayanus க்கும் பியர் மற்றும் ரொட்டி ஈஸ்டான Saccharomyces cerevisiae க்குமான கலப்புயிரிதான் என்பது பின்னர் மரபியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டது  

பின்னர் பல ஈஸ்டுகள் கலந்தும் நொதித்தலில் ஈடுபடுத்தப்பட்டன, பிரிட்டனில் S.carlsbergensis ன் மரபு கட்டமைப்பு சற்று மாற்றியமைக்கப்பட்டு Saccharomyces pastorius உருவாக்கப்ட்டது. 

ஈஸ்டுகள் சூழலுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக்கொள்ளும் அபாரமான திறன் கொண்டிருப்பவை.எனவே இயற்கையாகவே நொதித்தல் நடைபெறுகையில் பல புதிய கலப்பினங்கள் உருவாகின்றன. சில ஈஸ்டுகள் நொதித்தலுக்கு உபயோகிக்கப்படும் தானியங்களுக்கு தகுந்த படியும் தங்களை  மாற்றி அமைத்து கொள்கின்றன

வணிகம்

1860-ல் லூயி பாஸ்டர் ஈஸ்டுகளை கண்டறிந்த பின்னரே ஒரு நுண்ணுயிர், மது நொதித்தலில், ரொட்டி உருவாக்குவதிலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது உலகிற்கு தெரிய வந்தது/ அதன் பின்னர் குறுகிய காலத்திலேயே ஈஸ்டுகள் தனியே பிரித்தெடுத்து வளர்க்கப்பட்டு சந்தைப்படுத்தல் ஆரம்பமாகியது.

வணிக நோக்கதிற்கான ஈஸ்ட் விற்பனை 1700-களில் உலகளாவிய அளவில் தொடங்கியது. அதற்கு முன்பு வரை பியர் தயாரிக்கையில் கிடைக்கும் பொங்கு நுரைகளில் அடர்த்தியான ஈஸ்ட் தொகை இருக்குமென்பதால் அந்த நுரை சேகரிக்கப்பட்டு வடிசாலைகளுக்கு விற்கப்பட்டது.

1780 மற்றும் 1890 -களில் தான் கட்டியாகப் பட்ட ஈஸ்டுகள்   விற்பனைக்கு வந்தன. அவை உலர்ந்த ஈஸ்ட் முளைவிட்ட தானியப்பொடிகள் ஆகியவற்றை கொண்டிருந்தன. இவை இங்கிலாந்து ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் அதிகம்  விற்பனையாகின

1771-ல்  மரச்சாம்பலுடன் கலக்கப்பட்டு வெயிலில் உலரவைக்கப்பட்ட ஈஸ்டுகளும் பின்னர் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டன.

1822- க்கு பிறகு வியன்னாவில் ஈஸ்டுகள் பாட்டிலில் அடைக்கப்பட்டும் எண்ணையுடன் கலந்து பிசையப்பட்டும் விற்பனையாகின. வியன்னாவில்தான் மண்ணுக்கடியில் பல அடி ஆழத்தில் ஈஸ்டுகளை குளிரவைத்து சேமிக்கும் முறையும் கண்டறியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது 

1872 -ல் வியென்னாவிலிருந்து கற்றுக் கொண்டு வந்த  press yeast பயன்படுத்தும் யுத்தியை கொண்டு பேரொன் (Baron Max de Springer)  என்பவர் நொதிக்கும் தானியங்களிலிருந்து ஈஸ்ட்டை பிரித்தெடுத்து அடுமனையாளர்களுக்கு விற்பனை செய்ய துவங்கினர், அவரால் பிரான்ஸில்  தொடங்கப்பட்டதுதான்  உலகின் முதல்   ஈஸ்ட் தொழிற்சாலையான , Bio Springer.

20 நூற்றாண்டின் துவக்கத்தில் அடுமனையாளர்களும் மது உற்பத்தியாளர்களும் தங்களின் தயாரிப்புக்களுக்கேற்ற பிரத்யேகமான ஈஸ்டுகளை வளர்த்து சந்தைப்படுத்தவும் பயன்படுத்தவும் ஆரம்பித்தார்கள் 

காப்புரிமை

1800-களில் அடுமனை தொழிற்சாலைகளில் தூய ஈஸ்டுகளின் தேவை அதிகரித்தது. ஏராளமான முறைகளில் ஈஸ்ட் தயாரிக்கப்பட்டது ஈஸ்டுகளுக்கான காப்புரிமங்கள் 1891-ல் இருந்து பெறப்பட்டன.

முதல் ஈஸ்ட் காப்புரிமை 1891-ல் ஸ்வீடனை சேர்ந்த   வடிசாலைகளின் உரிமையாளர்களும் சொந்தமாக ஈஸ்ட்ஆய்வகங்களை வைத்திருந்தவர்களுமாகிய  Alfred Jörgensen மற்றும்   Axel Berg ஆகியோரால் பெறபட்டது.   

ஜான் (John C. Pennington) ஒரு நுண்ணோக்கியில் ஈஸ்டின் ஒற்றசெல்லை கவனித்து, அதை மட்டும் கவனமாக பிரித்தெடுத்து வளர்த்தார்

ஆக்ஸிஜன் இல்லாதபோது கரியமில வாயுவாகவும் ஆல்கஹாலாகவும் சர்க்கரையை ஈஸ்டுகள் மாற்றும் வேதிவினையின் பெயர்தான் நொதித்தல்.

வடிசாலைகளின் அடிப்படை விதி அங்கு பயன்படுத்தப்படும் ஈஸ்டுகள் மகிழ்ச்சியானவைகளாவும் ஆரோக்கியமானவைகளாகவும் இருக்க வேண்டும் என்பதே. அவை அப்படி  இருந்தால் மட்டுமே உருவாக்கப்படும் மது ருசித்து அருந்தப்படும் விதத்தில் இருக்கும். சில ஈஸ்டுகள் குறிப்பிட்ட மணத்தையும் நொதித்தலில் கிடைக்கும் பொருளில் உருவாக்கும்.

வடிசாலையாளரின் கதை ’என்னும் நூலில் வில்லியம்(William Bostwick)’’மது வகைகள் எதுவும் மனிதர்களால்  உருவாக்கப்படுவதில்லை ஈஸ்டுகளே உணமையில் அவற்றை உண்டாக்குகின்றன’’ என்கிறார்

வெப்பம், கால அளவு மற்றும் ஆக்ஸிஜன் அளவுகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஈஸ்டுகளை நாம் விரும்பிய வகையில் வளர்க்க முடியும்.கண்ணுக்கு தெரியாத இந்த நுண்ணுயிர்களின் விளைவால் நாம் எண்ணற்ற உணவு பொருட்களை சுவைத்து கொண்டிருக்கிறோம்

மது வடிசாலைகளிலும், தரக்கட்டுபாட்டு ஆய்வகங்களிலும் ஈஸ்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டு சரியான நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு துல்லியமான அளவில் நொதிகலங்களில் சேர்க்கப்படுகின்றன.  மிக குறைந்த அளவில் சர்க்கரையை பயன்படுத்தும் Saccharomyces cerevisiae var. chevalieri, போன்ற ஈஸ்டுகளை கொண்டு ஆல்கஹால் இல்லாத மது வகைகள் உருவாக்கலாம்

பயன்பாடுகள்

ஈஸ்ட்  உலகளாவிய  பிரபல உணவுப் பொருட்களின் நொதித்தலில் பயன்படுகிறது. சாக்லேட், கோகோ, காபி மற்றும் கேஃபிர், சோடாக்கள், எலுமிச்சை பானங்கள் மற்றும் வினிகர் போன்ற குறைந்த ஆல்கஹால் கொண்ட அல்லது ஆல்கஹால் அறவே அல்லாத பொருட்களின் உற்பத்தியில் இவை மிக முக்கிய பங்கேற்கின்றன.

ஈஸ்டுகளிலிருந்து  உயிரி எரிபொருள் மற்றும் பிற இரசாயனங்களும் தயாரிக்கபப்டுகின்றன. பாலாடைக்கட்டி உள்ளிட்ட் அபல பால்பொருட்களின் உற்பத்திக்கும் ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது .  பல லட்சம் மக்களின் ப்ரியதுக்குகந்த சோயா சாஸ் தயாரிப்பிலும்  ஈஸ்ட்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

சர்க்கரை பூஞ்சை ஈஸ்டுகள் ஒற்றை செல்களால் ஆன உடலம் கொண்டவை எனவே அறிவியல் சோதனைகளுக்கு சிறிய அளவு கொண்ட உயிரிகளான இவை அதிகம் பயன்படுகின்றன. இவற்றைக்கொண்டு உயிர்வேதியியல் மரபியல், பரிணாம வளர்ச்சி மற்றும் மனித நோய்கள் குறித்த ஆய்வுகள் செய்யப்படுகின்றன

 ஈஸ்டுகளும் மனிதர்களும் பொதுவான ஒரு காட்டு மூதாதையிடமிருந்து தோன்றியவர்கள், எனவே மனிதர்களுக்கும் ஈஸ்டுகளுக்கும் பல ஜீன்கள் பொதுவாக இருப்பது இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு பேருதவியாக இருக்கிறது. 

ஈஸ்ட் ஜீன்களை எப்படி வேண்டுமானாலும் திருத்தலாம், மாற்றி அமைக்கலாம், நீக்கலாம் என்பதால்  மனிதர்கள் தொடர்பான மரபியல் ஆய்வுகளுக்கு ஈஸ்டுகள் மிக இன்றியமையாததாக இருக்கிறது

ஈஸ்டிலிருந்து பல உணவு சேர்மானங்களும் தயாரிக்கப்படுகின்றன ஈஸ்டுகள் monosodium glutamate (MSG) போலவே பிரத்யேக சுவைக்காக பல உணவுகளில் சேர்க்கப்படுகின்றன 

சத்து மாத்திரைகளை போல ஈஸ்ட் சாறு மற்றும் சத்தான ஈஸ்ட் குருணைகளும் சந்தையில் கிடைக்கின்றன. உலர்ந்த ஈஸ்ட் பல சத்துக்கள் கொண்டதென்பதால் சோளப்பொறியில் தூவப்பட்டும் கேப்ஸ்யூல்களாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.ஈஸ்ட் திவலைகளும் இப்போது கிடைக்கின்றன ஈஸ்டின் ஒரு வகையான S. boulardii குடற்பகுதியின் நன்மை பயக்கும் நுண்னுயிரிகளின் குழுமத்தை தக்கவைக்கவும், குடல்நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும்  நல நுண்ணுயிரியாக (Probiotic) பயனாகிறது. 

உயிரிதொழில்நுட்பம் 

மரபணு மாற்றப்பட்ட ஈஸ்டுகளிலிருந்து தயாராகும் இன்சுலின் லட்சக்கணக்கான ரத்தசர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது. மேலும்   human papilloma virus தடுப்பு மருந்தைப்போல பல உயிர்காக்கும் மருந்துகளும்  ஈஸ்டினால் உருவாக்கப்படுகின்றன  

ஆதிகாலத்திலிருந்தே ஈஸ்டுகள் மனிதர்கள் வாழ்வில் இன்றியமையாத இடம் கொண்டிருக்கிறது.இனி வரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஈஸ்டுகளுடனான நமது உறவு மென்மேலும் அதிகரிக்கும் சாத்தியங்களே உள்ளது

அமெரிக்க பொருளாதாரத்தில் 900 million டாலர்கள் மதிப்பிலான பொருளாதாரம் ஈஸ்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது .2022ல்  உலகளாவிய ஈஸ்ட் வணிகம்  5.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, 2030க்குள் இது 11.6 பில்லியனாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மிகநுண்ணிய ஒற்றை செல் உடலம் கொண்ட, கண்ணுக்கு தெரியாத இந்த ஈஸ்டுகள் மது, உணவு, அறிவியல் ஆய்வுகள். உயிர்ரிபொருள் மருந்து தயாரிப்பு என  உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது பெரும் வினோதம்தான்.

தென்னிந்தியாவில் இட்லி, தோசை, வட இந்தியாவின் ரொட்டியும் சப்பாத்தியும், உலகநாடுகளின் பர்கர் பீட்சா ஹாட்டாக்குகள் , நெடுஞ்சாலைகளில் 1 கிமீக்கு 2 என்னும் விகிதத்தில் முளைத்து வெற்றிகரமாக இயங்கும் பேக்கரிகளில் என்று கோடிக்கணக்கில் ஈஸ்டுகள் புழங்குகின்றன.  ஈஸ்டின்றி இயங்காது உலகென்று புது மொழியை உருவாக்கிவிடலாம் என்னும் அளவுக்கு அவை நம் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

வைன், பியர், ரொட்டி, இட்லி என இனி  நாம் சுவைப்பது எதுவானாலும்  அதில் கலந்திருக்கும்  பல்லாயிரக்கணக்கான ஆண்டுக்கு முன்பான உணவு வரலாற்றின் சுவையையும் ருசிக்கலாம்.

மேலதிக தகவல்களுக்கு:

  1. https://www.forbes.com/sites/linhanhcat/2019/09/15/tasting-history-ancient-yeast/?sh=65816eae6b26
  2. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7686800/
  3. https://elifesciences.org/articles/05835

பெல்லடோனா!

புடவி நெசவில் மானுடர் ஒவ்வொருவருக்கான இழையையும் நெய்பவள் க்ளோத்தோ, இழையின் நீளத்தை கணக்கிட்டு அளந்து வைப்பவள் லேச்செஸிஸ்,  வாழ்நாளில் மானுடர் சந்திக்க வேண்டிய இன்னல்களை மொத்தமாகக் கணக்கிட்டு இழைகளில் அமைப்பவளும் இவளே, இவர்கள் இருவரையும் விடச் சிறிய உருவம் கொண்டவளும், மூத்தவளுமான அட்ரோபோஸ், அளந்து இணைக்கப்பட்டிருக்கும்  பிறவிச்சரடை அறுத்து மரணத்தை அளிப்பவள்.  

மரணத்தின் தேவதையான அட்ரோபோஸ் இரக்கமற்றவளாகவும் பிடிவாதக்காரியாகவும் அறியப்படுகிறாள். 

க்ளோத்தோ, லேச்செஸிஸ் மற்றும் அட்ரோபோஸ்   (Clotho, Lachesis & Atropos) ஆகிய மூன்று சகோதரிகளும் கிரேக்கத் தொன்மங்களில்  ஊழின் தேவதைகளாகக் கருதப்படுகிறார்கள்.  இவர்கள்  மூவரும் இருளின் தெய்வமாகிய எர்பஸுக்கும் (Erebus) இரவின் தேவதையான நைக்ஸுக்கும் (Nyx) பிறந்தவர்கள். 

மரணத்தையளிக்கும் மூத்த சகோதரி அட்ரோபோஸின் பெயரில் பல அறிவியல் பெயர்கள் உள்ளன. திரும்பிச் செல்ல முடியாத, மாற்றமுடியாத  என்று பொருள் கொண்ட Atropos என்னும் சொல்லைக்கொண்டு  தென்னாப்பிரிக்காவின் மலைப்பகுதியில் வாழும் விஷமுள்ள விரியன் வகைப் பாம்பொன்றிற்கு Bitis atropos என்றும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும்  தலைப்பகுதியில் மனித மண்டையோட்டின் வடிவத்தைக் கொண்டிருப்பதால் Death’s-head hawk moth என்றழைக்கப்படும் அந்துப்பூச்சிக்கு Acherontia atropos என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியின் குடும்பமான சொலனேசியைச் சேர்ந்த,  இலைகளிலும் கனிகளிலும் உயிரைப் போக்கும் கடும் நஞ்சு கொண்டிருக்கும்  ஒரு தாவரம், இதே அட்ரோபோஸ் என்னும் பெயரைக்கொண்டு தாவர வகைப்பாட்டியலின்  தந்தையான லின்னேயஸினால்  Atropa bella donna என்று 1753-ல் பெயரிடப்பட்டது. bella donna  என்று இரு சொற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது தவறு என்று பலர் கண்டனம் தெரிவித்ததால் பிற்பாடு இரு சொற்களுக்கிடையில்  ஒரு  சிறு கோடு இணைக்கப்பட்டு இதன் அறிவியல் பெயர் bella-donna  என்றாகியது. 

பெல்லடோனாவின் பிற வழங்கு பெயர்களாக  deadly nightshade, devil’s cherries, devil’s herb, divale, dwale, dwayberry, naughty man’s cherries, gray morel,  poison black cherry,  Dilber grass, bear flower, மற்றும் wolfberry ஆகியவை இருக்கின்றன. 

பெல்லடோனா மேற்கு ஆப்பிரிக்காவையும் ஐரோப்பாவையும் பூர்வீகமாகக் கொண்டது. கனடா, அமெரிக்கா மற்றும் வடஆப்பிரிக்காவின் இயற்கையான வாழிடங்களிலும் பெல்லடோனா  அறிமுகப் படுத்தப் பட்டு  வளர்கிறது. இது சுண்ணாம்புச் சத்து மிகுந்த நிழலான  நிலத்தில் நன்கு செழித்து வளரும்.  

வரலாற்றில் அட்ரோபா பெல்லடோனா

அட்ரோபா பெல்லடோனா மருந்தாக, நஞ்சாக, அழகு சாதனப் பொருளாக நீண்ட வரலாறு கொண்டிருக்கிறது. 

முதல் நூற்றாண்டைச் சேர்ந்த மருந்தியலின் தந்தையான டயாஸ்கொரிடஸ் அட்ரோபின் கொண்டிருந்த மாண்ட்ரேக்கின் சாற்றை அறுவை சிகிச்சைகளின்போது வலி நிவாரணியாகவும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கவும் பரிந்துரைத்திருந்தார். அட்ரோபா பெல்லடோனாவும் அட்ரோபினைக் கொண்டிருப்பதால் மாண்ட்ரேக்கைப் போலவே இதுவும் பயன்படுத்தப்பட்டது.

பண்டைய ரோமானியர்கள் நஞ்சு கொண்டிருந்த பெல்லடோனாவை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள். எதிரிகளின் உணவில் பெல்லடோனாவை கலந்து அவர்களைக் கொல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தில்  எதிரிகளின் மதுவில் பெல்லடோனா சாற்றைக் கலந்து ஸ்காட்லாந்த்துப் படையினர் அவர்களைக் கொன்றது சொல்லப்பட்டிருக்கும். 

4-ம் நூற்றண்டைச் சேர்ந்த தியோஃப்ராஸ்டஸ்  அட்ரோபின் கொண்டிருந்த மாண்ட்ரேக் சாற்றை பாலுணர்வைத் தூண்டும் காதல் பானமாகவும், காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பரிந்துரைத்தார். அட்ரோபின் நிறைந்திருந்த எகிப்திய ஹென்பேன் தாவரத்தின் சாற்றைப் பேரழகி கிளியோபாட்ரா கண்மணியை விரிவாக்க பயன்படுத்தினாள்.

பண்டைய ரோமானிய மற்றும் உக்ரைன் பகுதிகளில் இளம் பெண்கள் மிக அழகிய தோற்றம் கொண்டிருக்கச் செய்யும் சடங்குகள் இருந்தன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இச்சடங்குகளில். ரொட்டியும் உப்பும் பிராந்தியும்  கொண்டுவரும் இளம்பெண் தன் தாயுடன் காட்டுக்குள் சென்று, கொண்டு வந்ததை அட்ரோபா பெல்லடோனா செடிக்கடியில் புதைத்துவைப்பாள்.  

பின்னர் தோண்டி எடுத்த அட்ரோபா பெல்லடோனாவின்  வேரை தலையில் வைத்துக் கொண்டு வீடு திரும்புவாள் வழியில் எதிர்ப்படும் யாரிடமும் எதுவும் பேசாமல் இருக்கவேண்டும் என்பதும் கட்டாயம். பேசினால் சடங்கின் பலன் கிடைக்காமல் போகும் என்று நம்பிக்கை நிலவியது

கிரேக்க மருத்துவரும், மருந்தியலின் தந்தையுமான  பெடானியஸ் டயாஸ்கொரிடஸ், அப்போது பெல்லடோனா என்று அறிவியல் பெயரிடப்பட்டிருக்காத இந்தத்தாவரத்தைக் குறித்து:

//மனிதர்களைப் பைத்தியமாக்குகிற இதன், வேர்ச்சாற்றை வைனுடன் கலந்து அருந்தினால் மனம்மயக்கி, மகிழ்ச்சியளித்து கூடவே விசித்திரமான உருவங்களைக் கண்ணில் தெரியச்செய்கிறது. வேர்ச்சாற்றின் அளவை இருமடங்காக்கினால் அருந்தியவர் இந்த உலகைவிட்டே 3  நாட்களுக்கு வெளியே சென்ற அனுபவத்தை அடைவார், நான்கு மடங்காக்கினால் உயிரிழப்பு ஏற்படும். இதைத்தான் சூனியக்காரிகள்  தங்கள் சருமத்தில் பூசிக்கொள்கிறார்கள்// என்று  அவரது மெட்டீரியா மெடிக்கா என்னும் நூலில்  குறிப்பிட்டிருந்தார்.

பெல்லடோனா மற்றும் அதைப்போலவே நஞ்சு கொண்டிருக்கும்   மாண்ட்ரேக் மற்றும் ஹென்பேன் ஆகிய மூன்று தாவரங்களுமே முன்காலத்தில் மந்திர தந்திரம் மற்றும் சூனியச்செயல்களுக்குப்  பயன்படுத்தப்பட்டன. சூனியக்காரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் பழங்காலத்திலிருந்தே பெல்லடொனாவின் விழுதைப் பூசிக்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர். 

வரலாற்றில் பல போர்களில் எதிரிப்படைகளை அழிக்கவும், பலர் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டதிலும் அட்ரோபாவின் பெரும்பங்கு இருந்திருக்கிறது.

இதன்சாற்றை அம்பு நுனிகளில் தடவி வேட்டையாடுவதில் தொடங்கிய இதன் பயன்பாடு மெல்ல விரிவடைந்து பண்டைய ரோமானியப் பேரரசர்கள் மனைவிகளால் கொல்லப்படுவதற்கும் அட்ரோபா பெல்லடோனா காரணமாயிருந்தது.

பெல்லடோனா சாற்றின் உயிரைக்கொல்லும் அளவென்பது வெறும் 600 மி கி தான். ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் மற்றும் கிளாடியஸ் ஆகியோர் இருவரும அவரவர் மனைவிகளால் பெல்லடோனா நஞ்சளித்துக் கொல்லப்பட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது.

கொலைசெய்யப்படும் அபாயம் இருந்ததால் பேரரசர் அகஸ்டஸ் அன்றாடம் அவர் கண்முன்பாகப் பறிக்கப்படும் அத்திப்பழங்களைத்தான் உண்பார். அவரது மனைவி அத்திப்பழங்களின் மீது அவை பறிக்கப்படுவதற்கு முந்தைய நாளே பெல்லடோனா சாற்றைத் தடவியதாக நம்பப்படுகிறது.

1659-களில் ரோமானியப் பேரரசில் கொடுமைக்காரக் கணவர்களைக் கொல்லவிரும்பிய பெண்களுக்கென ஒரு ரகசிய அமைப்பு செயல்பட்டது. அதில் உறுப்பினராக இருந்த குல்லியா டொஃபானா (Giulia Tofana) என்னும் பெண் தனது கணக்கற்ற கணவர்கள். இரண்டு போப்கள்  உள்ளிட்ட சுமார் 600 நபர்களை  ஆர்சனிக்கும் பெல்லடோனாச்சாறும் கலந்த திரவத்தை “Aqua Toffana,” என்று பெயரிட்டு, ஆண் பெண் இருபாலருக்கான ஒப்பனை பொருட்கள் அடங்கியது என்று    பாட்டில்களில் அளித்துக் கொலைசெய்தாள். 

“Aqua Toffana,” வின் ஓரிரு சொட்டுக்களே தடயமே இல்லாத  மரணத்தை அளித்தது.  பெல்லடோனா நஞ்சூட்டி பலரைக் கொலைசெய்த குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தன் தாயிடமிருந்து நஞ்சூட்டுதலை கற்றுக்கொண்ட குல்லியா  தொழில்முறை நஞ்சூட்டுபவளாகவே வரலாற்றில் அறியப்படுகிறாள். 

கிமு 4-ம் நூற்றாண்டிலிருந்தே பெல்லடோனாவின் சாறு அழகுக்காகப்  பயன்பாட்டில் இருந்திருக்கிறது

இத்தாலியில் பெல்லடோனா இலைச்சாறு அழகுசாதனப்பொருளாக  பலகாலம் முன்பிருந்தே புழக்கத்தில் இருந்தது. இத்தாலியப் பெண்கள் பெல்லடொனாவின் இலைச்சாற்றை ஒரு துளி கண்களில் விட்டுக்கொள்கையில் கண்மணி பெரிதாகி  வசீகரமாகியது கன்னமேடுகளை வண்ணமாக்க கனிச்சாற்றையும் அப்போது பெண்கள் பூசிக்கொண்டனர்.  எனவே இது  பெண்களுக்கான அழகுப்பொருளாகப் பெருமளவில் உபயோகப்பட்டது. 

இதனால்தான் இந்தத்தாவரத்தின் சிற்றினப்பெயர் இத்தாலிய மொழியில் அழகிய பெண் என்று பொருள் படும் பெல்ல-டோனா என்று வைக்கப்பட்டது. இன்றும் அட்ரோபைன் ஆல்கலாய்டு கொண்டிருக்கும் பெல்லடோனாச்சாறு கண்மணியைப் பெரிதாக்க கண் அறுவைசிகிச்சைகளில் பயன்படுகிறது.

130,000  பங்கு நீருக்கு 1 என்னும் அளவில் இருக்கும் பெல்லடோனாச் சாற்றின் அளவே கண்மணியை விரிவாக்கப் போதுமானது. பெல்லடோனாவின் குடும்பமான சொலனேசியைச் சேர்ந்த மாண்ட்ரேக் மற்றும் ஹென்பேன் தாவரங்களிலுமே அவற்றிலுமிருந்த அட்ரோபினுக்காகப் பன்னெடுங்காலமாகவே அழகுச்சாதனப் பொருளாக  உபயோகத்தில் இருந்தன.

கண்மணியைப் பெரிதாக்க இது நஞ்சு என தெரிந்தும்   14, 16-ம் நூற்றாண்டுகளில் இத்தாலிய பெண்கள் மிக அதிகமாக இதை  உபயோகப் படுத்தினார்கள்.  தொடர்ந்த உபயோகத்தால் பார்வையிழப்பு,  நரம்புச்சிக்கல்கள் போன்ற அபாயங்கள் ஏற்பட்டும் இந்தப் பயன்பாடு  பல்லாண்டு காலம் புழக்கத்தில் இருந்தது

காபியிலிருக்கும் காஃபின் ஆல்கலாய்டை கண்டறிந்தவரான ஜெர்மானியத் தாவரவியலாளர் ஃப்ரெட்லிப் (Friedlieb Ferdinand Runge) தான் பெல்லடோனாவின் கண்மணியை விரிவாக்கும் இயல்பையும அறிவியல் பூர்வமாக நிருபித்தவர்.

பெல்லடோனா என்னும் பெயர் வெகுவாகப் புழக்கத்தில் இருந்ததால் 1597-ல் மூலிகை மருத்துவரான ஜான் (John Gerard)  தனது ’தாவர வரலாறு’ என்னும் நூலில் இதன் பெயரைப் பெல்லடோனா முதன் முதலாகக் குறிப்பிட்டிருந்தார்.  

16-ம் நூற்றாண்டில் தான் பெல்லடோனா தாவரவியல் ரீதியாக விவரிக்கப்பட்டு அதன் சித்திரங்கள் வெளியாகின.

இதன் முதல்  பெயரான Solarium horrense nigrum என்பது 1532-ல் Traps J என்பவரால் பாரிஸில் பிரசுரமான் ஒரு நூலில் குறிப்பிடப்பட்டது . பின்னர் 1542- ல்  Fuchso என்பவரால்  Solanum somniferum,  என்று பெயரிடப்பட்டு விவரிக்கப்பட்டது

1753-ல் தான் லின்னேயஸ் அட்ரோபா பெல்லடோனா என்று இதன் பேரின மற்றும் சிற்றினப்பெயர்களை அதிகாரபூர்வமாகப் பிரசுரித்தார்.

லண்டன் பார்மகோபியாவில் அட்ரோபா பெல்லடோனாவின் இலைளின் மருத்துவ இயல்புகள் 1809-ல் வெளியாகின. 1860-ல் இதன் வேர்களின் மருத்துவப் பண்புகள்    விவரிக்கப்பட்டு பிரிட்டிஷ் மருந்துத்துறையில் இணைக்கப்பட்டது.

1831- ல் ஜெர்மானிய மருந்தாளுநர் ஹெம்ரிச் (Heinrich F. G.) இந்தத் தாவரத்திலிருந்து தூய அட்ரோபினை (atropine) குருணைகளாகப் பிரித்தெடுத்தார்.

பெல்லடோனாவின் தாவரவியல் பண்புகள்

அட்ரோபா பெல்லடோனா ஒரு பல்லாண்டுத் தாவரம். சதைப்பற்றான நன்கு கிளைத்த வேர்த்தொகுதியும். உருளைவடிவ நிமிர்ந்த  இரண்டிரண்டாகக் கிளைத்த, தடித்த 3 அடி உயரமுள்ள தண்டுப்பகுதியையும் கொண்டது. 

இரண்டிரண்டாகப் பக்கவாட்டில் அமைந்திருக்கும் நீண்ட இலைகள் புகையிலையின் இலைகளைப் போலிருக்கும். இலைக்காம்பு குறுகியது. இலைகள்  கீழ்ப்பகுதியில் மாற்றடுக்கிலும்,மேல்பகுதியில் எதிரடுக்கிலும் அமைந்திருக்கும்

பெல்லடோனாவின் ஊதா நிற மணி வடிவ மலர்கள் மிக  அழகியவை. காம்பு கொண்டிருக்கும், தனித்த அழகிய மணி வடிவ  ஐந்து மடிப்புகள் கொண்ட இம்மலர்கள்  பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன. 

பெல்லடோனா மணத்தக்காளியின் கருப்புக்கனிகளைப் போலவே  ஆனால் அளவில் சற்றுப் பெரிதாக இருக்கும் தனித்த கனிகளைக் கொண்டிருக்கும். அடர் ஊதா அல்லது ஆழ்ந்த கருப்பு நிறத்தில்  சாறு நிரம்பிய, 2 அறைகள் கொண்ட கருப்புக்கனிகள்  தேய்த்தால் கெடுமணம் அளிப்பவை. கனிகளில் சிறுநீரக வடிவில் பல நுண் விதைகள் நிறைந்திருக்கும். இவை  விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்பவை.

அட்ரோபா பெல்லடோனாவின் வேதிச்சேர்மானங்கள்

அட்ரோபாவின் கனிகளிலும், இலைகள் மற்றும் வேரிலும் 20 வகையான கடும் நச்சுத்தன்மை கொண்ட வேதிச் சேர்மங்கள் உள்ளன. இலைகளிலும் வேர்களிலும் சக்திவய்ந்த  பெல்லடோனா ஆல்கலாய்டுகள் 0.13 to 0.70 % வரை அடங்கியிருக்கின்றன,

பெல்லடோனாவில் hyoscyamine, atropine, atropamine, belaplomine மற்றும் scopolamine, போன்ற ஆல்கலாய்டுகள் எல்லாத் தாவரப்பாகங்களிலும் இருக்கின்றன. இலைகள் மற்றும் கனிகளில் இவை மிக அதிக அளவில் இருக்கின்றன. 

பெல்லடோனாவின் ஆல்கலாய்டுகளில் மிகவும் சக்திவாய்ந்தவை அட்ரோபைன் மற்றும் ஸ்கோபோலமைன் இரண்டும் தான். (Atropine & scopolamine). இவ்விரண்டும் அட்ரோபா பெல்லடோனாவில் மட்டுமல்ல ஊமத்தை போன்ற சொலனேசி குடும்பத்தின் பிற தாவரங்களிலும் காணப்படுகின்றன. 

பெல்லடோனா விழுதை உடலில் பூச்சிக்கொள்கையிலும், அருந்துகையிலும் மனமயக்கம், இல்பொருள் தோற்றம் உண்டாகுதல், உடல் எடை குறைந்து பறக்கும் உணர்வு தோன்றுதல் ஆகியவை உண்டாகிறது. மிக அதிக அளவில் உட்கொள்ளுகையில் பெல்லடோனா கண் விழித்திருக்கையிலேயே மாயத்தோற்றங்களை உருவாக்கி மனம் பிறழச்செய்து கோமா அல்லது இறப்புக்குக் கொண்டு செல்கிறது.

இதயநோய், ஆஸ்துமா, வலிப்பு நோய் மற்றும்  பார்கின்ஸன் சிகிச்சைகளில்  பெல்லடோனாவின் அட்ரோபைன் ஆல்கலாய்டு (Atropine) இப்போது பயன்படுகிறது. பல்வேறு வகையான நஞ்சுகளுக்கு பெல்லடோனா முறிமருந்தாகவும் பயனாகிறது. 

16-ம் நூற்றாண்டில் இருந்துதான் நச்சுத்தாவரமான இதன்  மருத்துவ உபயோகங்கள் பரவலாகின.1700-த்தில் மருந்துச்சரக்குகள் குறித்த பிரசுரங்கள் அனைத்திலுமே பெல்லடோனாவின் பெயர் இடம்பெற்றிருந்தது

1813-ல் இந்தத்தாவரத்திலிந்து அட்ரோபைன் ஆல்கலாய்டு தனியே பிரித்தெடுக்கப்பட்டது. 

1950-களில் இருந்து பெல்லடோனா ஆல்கலாய்டுகள் தடவப்பட்ட பிளாஸ்டர்கள் அதிகம் புழக்கத்துக்கு வந்தன. அவை முடக்குவாதத்திலிருந்து சுவாச அழற்சி வரை பல்வேறு மருத்துவப் பயன்பாடுகள் கொண்டிருந்தன.

தன்னியக்க நரம்பு மண்டல (autonomic nervous system) சிகிச்சைகளில் இதன் ஆல்கலாய்டுகள் பயன்படுகின்றன. கால்நடை சிகிச்சைகளிலும் அட்ரோபா பெல்லடோனா பயன்படுத்தப்படுகிறது

இப்போது அட்ரோபினின் உபயோகம் அத்தனை அதிகமில்லை என்றாலும் கண் மருத்துவத்தில் கண்மணியைப் பெரிதாக்க மிககுறைந்த அளவில்  இந்த ஆல்கலாய்டு மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் இயற்கையாக இவை வளர்ந்திருக்கும் இடங்களில் இவற்றின் நச்சுத்தன்மையை அறியாமல் அதன் கனிகள் தவறுதலாக உண்ணப்படும் அபாயம் உலகெங்கிலும் இருக்கிறது. 

நத்தைகள்,முயல்கள் மற்றும் பறவைகள் அட்ரோபாவின் கனிகள்  மற்றும் இலைகளை உண்கின்றன. எனினும் பறவைகளுக்கு மட்டும் அட்ரோபா நஞ்சினால் பாதிப்பு உண்டாவதில்லை.   அட்ரோபா பெல்லடோனாவின் இலைகள் கனிகளை உண்ட முயல் போன்ற சிறு விலங்குகளின் இறைச்சியை உண்பதாலும்  பெல்லடோனா ஆல்கலாய்டுகளின் பாதிப்பு உண்டாகிறது. அரிதாக பெல்லடோனா ஆல்கலாய்டுகள் போதை உண்டாக்கவும், தற்கொலைக்கும், கொலை செய்யவும் பயன்படுகின்றன. 

பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவமுறைகளில் பெல்லடோனா   வலி நிவாரணியாக, வீக்கங்களுக்கெதிராக,மாதவிடாய்க்கோளாறுச் சிகிச்சைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

ஹோமியோபதியில் பெல்லடோனா

ஹோமியோபதி மருத்துவமுறையை தோற்றுவித்தவரான சாமுவேல் ஹானிமேன். பெல்லடோனாவை  பலவிதமான நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தினார். ஹோமியோபதி மருந்துகளில் பயன்படுத்தப்படும் தாவரப்பொருட்களின் அளவு பல்லாயிரம் முறை நீர்க்கச்செய்யபடுவதால் அதன் விளைவுகள் பெரிதாக இல்லை.

அமெரிக்காவிலும் கனடாவிலும் இயங்கும் ஹைலேண்ட்ஸ் ஹோமியோபதி மருந்து நிறுவனத்தின் அட்ரோபா பெல்லடோனாவின் ஆல்கலாய்டுகள் கலந்திருக்கும் குழந்தைகளுக்கு பல் முளைக்கையில் உண்டாகும் வலிநிவாரண மாத்திரைகள் 2004-லிருந்து உலக அளவில் இரண்டாம் இடத்தில் பிரபலமாக இருந்தன. 

ஆனால் 2010-ல் FDA அந்த மருந்துகளில் அபாயகரமான அளவில் அட்ரோபா பெல்லடோனாவின் ஆல்கலாய்டுகள் இருப்பதாக தெரிவித்தது. ஹைலேண்ட்ஸ் தனது மருந்துகளைத் திரும்பப் பெற்று வேறு புதிய மருந்துகளைச் சந்தைப்படுத்தியது. 

அதன் பிறகும் அந்த மருந்துகளின் தொடர்ந்த பயன்பாட்டில் பத்துக் குழந்தைகளின் இறப்பு மற்றும் சுமார் 400 குழந்தைகளுக்கு உண்டான உடல்பாதிப்பு மீண்டும் இந்தப் பிரச்சனையை எழுப்பியபோது ஹைலேண்ட்ஸ் நிறுவனம் அந்த மருந்துக்கும் குழந்தைகளின்   இறப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை என வாதிட்டது 

எனினும் 2017-ல் மீண்டும் ஆதாரபூர்வமாக அந்த பல்வலி மருந்துகளில் பெல்லடோனாவின் அளவு அபாயகரமாக இருந்தது FDA-வால் நிரூபிக்கப்பட்டபோது அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டன.

பெல்லோடா நஞ்சின் அறிகுறிகள்

• பேச்சுக் குழறல் மற்றும் குழப்பமான மனநிலை

• மாயத்தோற்றங்கள் உண்டாகுதல்

• மனநிலை பிறழ்தல் 

• கட்டுப்படுத்தமுடியாத வன்முறைச்செயல்பாடுகள் வலிப்பு

• கோமா நிலை 

• கண்மணி விர்வடைதல் 

• சிறுநீர் கழிக்க முடியாமை

• அதிகரிக்கும் இதயத்துடிப்பு 

• ரத்த அழுத்த மாறுபாடுகள்

அஞ்சல்தலைகளில் பெல்லடோனா

அட்ரோபா பெல்லடோனா 1957 மற்றும் 1965-ல்  வெளியிடபப்ட்ட  யூகோஸ்லேவியாவின் இரண்டு அஞ்சல் தலைகளில் இடம்பெற்றது

போலந்தில் 1980-ல். ஆஸ்திரியாவில் 2022-ல் அட்ரோபா பெல்லடோனா வின் சித்திரம் அஞ்சல் தலைகளில் சித்தரிக்கப்பட்டு வெளியானது

ஸ்விட்சர்லாந்து 1974-ல் காடுகளில் இருக்கும் நச்சுத்தாவரங்களின் வரிசையில் அட்ரோபா பெல்லடோனாவின் சித்திரத்தை  அஞ்சல்தலையில் வெளியிட்ட்டது

அல்பானியாவும் 1976-ல் அட்ரோபா பெல்லடோனாவின் சித்திரத்தை  அஞ்சல்தலையில் வெளியிட்டது. 

இந்த அஞ்சல்தலைகள் அட்ரோபா பெல்லடோனாவின் உலகளாவிய முக்கியத்துவத்துக்குச் சான்றளிக்கின்றன.  

தற்போது மருந்துத் தயாரிப்புக்கென பெல்லடோனா சாகுபடி ஐரோப்பா, பாகிஸ்தான், வட அமெரிக்கா மற்றும் பிரேஸிலில் சட்டபூர்வமாகவே நடக்கிறது.

ஜெர்மனியில் மருந்துக்கடைகளில் பெல்லடோனாவின் வேர் மற்றும் இலைகள் மருத்துவரின் பரிந்துரைகளின் பேரில் கடைகளில் கிடைக்கின்றன 

அமெரிக்காவில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பெல்லடோனா ஆல்கலாய்டுகளைக் கொண்டிருக்கும் மருந்துகள் கிடைக்கின்றன. அதற்கு இணையாகவே  இருமல் சளி நிவாரணியாக 0.2 மி கி அளவில் பெல்லடோனா மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளாகவும் கிடைக்கின்றன. 

ஊழின் தெய்வங்களான மூன்று சகோதரிகள் பிறப்பையும் இறப்பையும் முடிவு செய்வதுபோல  சிகிச்சையளிக்கவும் உயிரைப்போக்கவுமான இயல்பினை கொண்டிருக்கும் அட்ரோபா பெல்லடோனாவும் ஊழின் தெய்வங்களில் ஒன்றுதான்.  

கடுகில் மரபணு மாற்றம்!

DMH-11 கடுகு

நறுமணப் பொருட்களுக்கு பிரபலமான இந்திய  உணவுகளில் கடுகு மிக முக்கியமான காரச் சுவையூட்டி. பல வகைப்பட்ட கடுகுகள் இந்தியச் சமையலில் பயன்படுகின்றன. சுவையூட்டியாக மட்டுமல்லாது கடுகு பல சத்துக்கள் அடங்கிய, உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும் ஒரு பொருள். ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட கடுகின் உலகளாவிய பயன்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துள்ளது. 

முட்டைக்கோஸ் குடும்பமான பிரேசிகேசியை சேர்ந்த கடுகுச் செடியின் நீளமான பச்சைக்காய்களின் சிறிய உருண்டை விதைகளே கடுகு எனப்படுகின்றது. கடுகுச் செடியின் சத்துக்கள் நிறைந்த இலைகளும் கீரைகளாக உண்ணப்படுகின்றன. இவற்றில் சுமார் 40க்கும் மேற்பட்ட  வகைகள் இருந்தாலும் உலகெங்கும் மிக அதிகம் உபயோகத்தில் இருப்பவை வெண்கடுகு, பழுப்பு கடுகு மற்றும் கருங்கடுகு ஆகிய மூன்றும் தான்.

முழுவிதையாக, எண்ணெயாக, பொடியாக, அரைத்த விழுதாக என்று பல விதங்களில் சமையலில்  கடுகு உபயோகப்படுத்தப்படுகிறது 

பாவையர் கண்ணின் கடைக்கோடியை காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகு, கடுகு சிறுத்தாலும் காரம் போகாது  போன்ற முதுமொழிகளின் வழியாகவும், கடுகளவும் மலையளவும், கடுகு போலப் பொரிதல் போன்ற ஒப்புமை நோக்கல்கள் மூலமும் நம் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பில்  இருந்து வரும் கடுகு சமீபத்தில் சர்ச்சைக்குரிய பேசு பொருளாகி இருக்கிறது.

இந்தியாவின் இரண்டாவது முக்கிய எண்ணெய் பயிர் கடுகுதான் (நிலக்கடலைக்கு அடுத்ததாக). பெரும்பாலான இந்திய கடுகுப் பயிர்கள் வடஇந்தியாவில் பயிராகின்றன. கடுகின் நுண் விதைகளில் 45 சதவீதம் கடுகு எண்ணெய் அடங்கியிருக்கிறது.  இந்தியாவின் மொத்த கடுகு உற்பத்தியில் 60 சதவீதம் உத்தரபிரதேசத்தில் பயிராகின்றது. இந்தியாவில் மிக அதிகமாக பயிராகும் கடுகு வகைகள்:

1.      பழுப்பு கடுகு-Brassica juncea

2.      மஞ்சள்/வெண் கடுகு-Brassica alba

3.      கருங்கடுகு-Brassica nigra

இந்தியாவில் கடுகுப் பயிர் 87.44 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடியாகிறது.எனினும் இந்திய கடுகு உற்பத்தி 7 மில்லியன் டன்களாகத்தான் இருக்கிறது. இந்தியாவிற்கான உணவு எண்ணெய் தொடர்ந்து  வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது வருடா வருடம் இந்தியா 14.5 மில்லியன் டன்  உணவு எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக மட்டும் சுமார் 60 ஆயிரம் கோடிகளை செலவு செய்கிறது.

இந்தியக் கடுகு விவசாயிகளின் சவால்களாக தரமான கடுகு விதைகள் கிடைக்காதது, கடுகுப் பயிர்களின் பூச்சி, பூஞ்சை தாக்குதல்கள் மற்றும் களை ஆகியவை இருக்கின்றன.

எனினும் கடந்த ஐந்து வருடங்களில் கடுகு விவசாயிகள் புதிய விவசாய தொழில் நுட்பங்களை மேற்கொண்டதால் இந்தியக் கடுகு விளைச்சல் வெகுவாக அதிகரித்திருக்கிறது. புதிய விவசாயத் தொழில்நுட்பங்கள்  உணவுப்பயிர்களில் இது போன்ற சவால்ளைத் தீர்க்கப்  பெரிதும் உதவுகின்றன.   

1996 ல், Genetically Modified (GM) Crops  என்னும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 6 நாடுகளில் முதன்முதலாக வளர்க்கப்பட்டன. 2009ல் இப்பயிர்கள் 25 நாடுகளிலும் 2019 ல் 29 நாடுகளிலும் பயிராகின

மரபணு மாற்றப்பட்ட  மக்காச்சோளம், சோயாபீன், சோளம், உருளைக்கிழங்கு ஆப்பிள்,பப்பாளி, இளஞ்சிவப்பு அன்னாசி,பருத்தி ஆகியவை இந்நாடுகளில் பயிராகும் மரபணு மாற்றப் பயிர்கள் 

மரபணு மாற்றுப் பயிர்கள் என்பவை  டி.என்.ஏ வில் மரபணு பொறியியல் தொழில்நுட்பத்தின் மூலம் குறிப்பிட்ட,தேவையான மாற்றங்கள் உருவாக்கப்பட்ட பயிர்கள். அதாவது  ஒரு தாவரத்தில் இயற்கையாக இல்லாத ஒரு புதிய இயல்பை தொழில்நுட்பத்தின் உதவியுடன்  புகுத்துதல்தான் மரபணு மாற்றம்.உதாரணமாக தடித்த தோல் கொண்ட  சதைப்பற்றான தக்காளியை பெற அதில் உருளைக்கிழங்கின் மரபணுக்கள் கலக்கப்பட்டதை சொல்லலாம்.

இவ்வாறு உணவுப் பயிர்களும், உணவல்லாத பிற மருந்துப் பயிர்கள், உயிரி எரிபொருள் பயிர்கள் ஆகியவற்றில் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

 சோயா, தக்காளி, பருத்தி விதை போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 1990ல் சந்தைக்கு வர ஆரம்பித்தன. இவற்றின் மரபணு மாற்றப்பட்ட இயல்புகளாக  பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு, ஊட்டச்சத்து மற்றும் விளைச்சல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் உப்புத் தன்மையை தாங்கி பயிர் வளர்தல் போன்றவை கூறப்படுகின்றன.

இவற்றில்:

Transgenic பயிர்கள் என்பவை பிற இனங்களின் மரபணு புகுத்தப்பட்டவை.

Cisgenic பயிர்கள் அவற்றுடன் தொடர்புடைய அல்லது அதே இனத்தை சேர்ந்த பயிர்களின் மரபணுக்களை பெற்றவை.

Sub Genic  பயிர்கள் புதிய மரபணுக்கள் புகுத்தப்படாமல் அவற்றின் மரபுக்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்  மட்டும் செய்யப்பட்டவை

 அமெரிக்கா பிரேசில் கனடா ஆகியவற்றுடன் இந்தியாவும் மரபணு மாற்ற பயிராய்வில் ஈடுபட்டிருக்கிறது.கடந்த 23 வருடங்களில் சுமர் 17 மில்லியன் விவசாயிகள் வளர்ந்த நாடுகளின் மரபணு மாற்றம் உள்ளிட்ட பல உயிரி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பயிர் விளைச்சலை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட, 2002ல் வணிகரீதியாக சாகுபடியும் செய்யப்பட்ட பயிர் Bt பருத்தி. இது   அமெரிக்க நிறுவனமான   Monsanto வுடன் இணைந்து மகாராஷ்டிரா கலப்புயிர் விதை நிறுவனத்தினால் ( MAHYCO) உருவாக்கப்பட்ட்து.

இந்தியாவில் மரபணு மாற்று சோதனைகள் முடிந்து, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு பிரிவான மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee -GEAC) வின் அனுமதி பெற்று வணிக ரீதியான பயன்பாட்டிற்கான அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த மூன்று பயிர்கள் கத்தரிக்காய், கடுகு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை. 

கத்தரிக்காயின் சோதனை சாகுபடிக்கு மேலதிகச் சோதனைகள் தேவைப்படுவதாக பரிந்துரைகளும் செய்யப்பட்டு அப்போதைய வேளாண் அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. GEAC 2009ல் கத்தரிக்காயின் சோதனைகள் முடிவடைந்துவிட்டதாக தெரிவித்தன எனினும் மரபணு மாற்றப் பயிர்களை சாகுபடி செய்வதை எதிர்க்கும் அமைப்புகளின் போராட்டத்தினால், கத்தரிக்காய் சோதனைச் சாகுபடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்புகள் உணவுப்பயிர்களில் உருவாக்கப்படும்  மரபணு மாற்றங்கள் மனித உடலிலும் ஆதிக்கம் செலுத்துமென்பதால்  தொடர்ந்து  அத்தகைய சோதனைகளை ஆட்சேபித்து வருகின்றன. கடுகுப் பயிரின் மரபணு மாற்றத்துக்கான கலப்புயிரி உருவாக்க சோதனைகளும் ஆராய்சிகளும் பல ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வருகின்றன. 

DMH-11கடுகு

 இந்நிலையில் கடந்த அக்டோபர் 18,  2022ல்  மரபணு மாற்றபட்ட கடுகு வகையான் DMH-11 என்பதை வணிக ரீதியாக  சாகுபடி செய்வதற்கான சோதனைகளை செய்யலாம் என்று GEAC அனுமதி அளித்திருப்பதுதான் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது.  சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்புக்களில் இந்த கடுகினால் உண்டாகும் விளைவுகள், தேனீ உள்ளிட்ட பிற மகரந்த சேர்க்கை நடத்தும் பூச்சி இனங்களுக்கு  மரபணு மாற்றப்பட்ட கடுகுப்பயிரினால்  உண்டாகும் மாற்றங்களை சோதனை  சாகுபடி செய்து அறிந்துகொள்ளலாம் என்றும் GEAC பரிந்துரைத்திருந்தது.  .இதற்கு அனுமதி  அளிக்கப்பட்டு இக்கடுகு சந்தைப்படுத்தப்பட்டால், இதுவே இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிராக இருக்கும்.

Dhara Mustard Hybrid-11,  எனப்படும்  DMH – 11 கடுகு டெல்லி பல்கலைக்கழகத்தின்  பயிர்த்தாவரங்களின் மரபணு கையாளுதல் மையத்தில் (CGMCP) உருவாக்கப்பட்டது. டெல்லி பல்கலைக்கழக மரபியல் பேராசிரியரும் துணைவேந்தருமான தீபக் பெண்டால் ( Deepak Pental) தலைமையேற்று வழிநடத்திய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.    இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகின் வெற்றிகரமான உருவாக்கத்துக்கு 14 நீண்ட  வருடங்களும் 700 மில்லியனும் செலவாகி இருக்கிறது.

2002ல் நிலத்தில் வாழும், நோயுருவாக்காத பாக்டீரியாவிலிருந்து  மரபணுவை பிரித்து இந்த கடுகில் புகுத்தி புதிய வகை கடுகு உருவாக்கப்படும் ஆய்வுகள் துவங்கின.

ஒரு புதிய கலப்பின கடுகு வகை, வருணா  மற்றும் Early Heera-2 ஆகிய இருவகை கடுகுகளை கலப்பினம் செய்து உண்டாக்கப்பட்டது.Bacillus amyloliquefaciens என்னும் பாக்டீரியாவிலிருந்து  Bar, Barnase , Barstar ஆகிய மரபணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு இந்தக் கடுகில் புகுத்தப்பட்டு மரபணு மாற்றப்பட்ட DMH – 11 கடுகு உருவாக்கபட்டிருக்கிறது. 

Barnase மரபணு ஆண் மலட்டுத்தன்மையை கடுகில் உருவாக்குகிறது ஆனல் Barstar மரபணு கடுகின்  வளமிக்க விதைகளை உருவாக்கும் திறனை தக்கவைக்கிறது, Bar மரபணு கடுகுப்பயிருக்கு களைக்கொல்லி (glufosinate-ammonium tolerance) சகிப்புத் தன்மையை அளிக்கிறது. 

புதிய மரபணுக்கள் கடுகுப்பயிரில் மகரந்த சேர்க்கை மற்றும் கருவுருதலில் ஆதிக்கம் செலுத்தி மகசூலை அதிகப்படுத்தும் திறன் கொண்டவை என சொல்லப்படுகின்றது.  ஆய்வகச் சோதனைகள் இந்த புதிய வகை கடுகு 19 லிருந்து 30 சதவீதம்  அதிக மகசூல் அளிப்பதாக தெரிவிக்கின்றன.

இதனால் உண்டாகும் சூழல் சீர்கேடு மற்றும் மனிதர்களுக்கான  ஆரோக்கிய கேடுகள் குறித்து இப்போது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன   

இந்தியாவின் முக்கிய உயிரி தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த புதிய கடுகு வகை மிகத்தேவயான ஒன்று, பருவநிலை மாற்றங்களினால் உணவுப் பற்றாக்குறை உண்டாகி இருக்கும் இச்சமயத்தில் இதுபோன்ற வரவுகள் உண்மையில் அத்தியாவசியமானவை என்கிறார்கள். 

இது வெற்றிகரமாக நடந்தால் பல புதிய மரபணு மாற்ற பயிர்கள் உருவாக இது வழிவகுக்கும் என்பதால் பல ஆய்வாளர்கள் இதை வரவேற்கிறார்கள். 

’’மரபணு மாற்றுப் பயிர்கள் இல்லா இந்தியா’’ போன்ற எதிர்ப்பமைப்புக்களோ இக்கடுகு இன்னும் பலகட்டச் சோதனைகளை கடந்த பின்னரே சூழலுக்கு அறிமுகமாக வேண்டும் என எச்சரிக்கிறார்கள். இப்போது  நடத்தப்பட்ட சோதனைகளின் போதாமையை சுட்டிகாட்டும் இவர்கள் இக்கடுகு இப்போது சூழலில் அறிமுகமானால் பெரும் சூழல் சீர்கேடு உண்டாகும் என தெரிவிக்கிறார்கள்.

 மரபணு மாற்றப் பயிர்களை எதிர்க்கும் அமைப்புக்களினால் உச்ச நீதிமன்ற அனுமதியை காத்திருக்கும் இந்த கடுகுச் சோதனைச் சாகுபடி பெரும் சர்ச்சைக்குரியதாயிருக்கிறது  நவம்பர் மாதத்திலிருந்து இது தொடர்பான விசாரணைகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

உச்ச நீதிமன்றம் அனுமதித்தாலும் பலகட்ட சோதனைகளை இன்னும் கடந்த பின்னரே விவசாயிகளுக்கு DMH – 11 கடுகுப்பயிர்  விதைகள் அளிக்கப்படும் என்றாலும், இயற்கையான சூழலில் நடைபெறவிருக்கும்  இந்த சோதனைகளுக்கு இப்போது கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. GEAC தனது அக்டோபர் அறிக்கையிலேயே இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகில் தீங்கு விளைவிக்கும் தன்மைகள் உள்ளதாக ஆதாரங்கள்  இருப்பின் இந்த ஒப்புதல் ரத்து செய்யப்படும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது

நீதிமன்றம் இன்னும் சிலமாதங்கள் தொடரும் விசாரணைக்கு பின்னர் தான் தீர்ப்பை அறிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள். ஆனால்  எதிர்ப்பமைப்புக்கள் முன்னரே கையிலிருக்கும்  ஆய்வு  முடிவுகளின் அடிப்படையில் தீர்ப்பளிக்காமல் குரங்குகள் உள்ளிட்ட சில விலங்குகளில் DMH – 11 கடுகு எண்ணெயை கொண்டு  சோதனை நடத்தி அந்த ஆய்வு முடிவுகளின் பேரில்தான் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் அதற்கு மேலும் ஐந்தாண்டுகளாவது அவகாசம் தேவைப்படும் என்கின்றன. 

ஏற்கனவே GEAC யிடம்  2017ல் இதே கடுகை வெளியிட அனுமதி கோரிய பயிர்த்தாவரங்களின் மரபணு கையாளுதல் மையத்தினர், பின்னர் எதிர்ப்பாளர்களின் குரலுக்கு செவி மடுத்து தேனீக்களிலும்  மகரந்த சேர்க்கை நடத்தும் மற்ற பூச்சி இனங்கள் மற்றும் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகளில்  நடத்தவேண்டிய சோதனைகளுக்கு அவகாசம் கேட்டு  அவர்களே  அதை நிறுத்தினார்கள். 

2015லிருந்து  DMH – 11 கடுகில் நடத்தப்பட்ட சூழல் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு ஆகிவற்றிற்கான பலகட்ட சோதனைகளின் முடிவுகள் திருப்திகரமாக இருந்தன என்று சொல்லப்பட்டாலும், களைக்கொல்லி மரபணு மாற்றத்துக்கான சோதனைகளின் முடிவுகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை

இந்த சோதனைகளின் அனைத்து முடிவுகளையும் விண்ணப்பத்தின் பேரில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் யாரும் காணமுடியும் என்னும் வசதியும் உள்ளது

 இந்த DMH – 11 கடுகு பயிருக்கு குறைந்த அளவே தண்ணீரும், உரமும் களைக்கொல்லிகளும் தேவைப்படும் என்பதால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்றும் உருவாக்கியவர்களின் தரப்பில் கூறப்படுகிறது

 எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வரும் Alliance for Sustainable and Holistic Agriculture அமைப்பு இந்த ஒப்புதலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்  பல சோதனைகள்  முழுமையடையவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது

 ஏற்கனவே பல எதிர்ப்புக்களிடையேயும் அறிமுகமாகி தோல்வியடைந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தியையும், அதன் நஷ்டங்களால் நடைபெற்ற கணக்கற்ற  விவசாயிகளின் தற்கொலைகளும் இந்த எதிர்ப்பாளர்களால் சுட்டிகாட்டப்படுகிறது. மேலும் இது சாகுபடி செய்யப்படுகையில் இந்தியக்கடுகின் தூய மரபணுக்கள் கலப்படமாகிவிடும் அபாயமும் உள்ளது என்கிறார்கள்.

இக்கடுகின் மற்றொரு அபாயமாக சொல்லப்படுவது இதன் களைக்கொல்லி (glufosinate-ammonium tolerance ) சகிப்புத்தன்மை. இதனால் விவசாயிகள் பல மடங்கு அதிகம் களைக்கொல்லி ரசாயனங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என எச்சரிக்கப்படுகிறது. 

இதன்  பல பரிசோதனைகளில்  மகசூல் அதிகரிப்பு இருப்பதாக முடிவுகள் காட்டினாலும் சில பரிசோதனைகளில் கடுகின் அளவும் காய்களின் நீளமும் கணிசமாக குறைந்திருந்தன. மகசூலுக்கு இவ்விரண்டும் மிக முக்கியமான காரணிகள்.

மிக அதிக விதை விலையும் குறைந்த மகசூலும் மீண்டும் ஏற்படுமானால் மீண்டும் பருத்தி தற்கொலைகளைப் போல கடுகு தற்கொலைகளும் நிகழலாம் என்னும் அபாயம்  போராடும் அமைப்பினரால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

உணவு ஒவ்வாமைக்கான சோதனைகளில் இந்த கடுகில் இருக்கும்  Bar, Barnase மற்றும் Bastar proteins புரதங்களின் ஒவ்வாமை குறித்த ஒப்புமை ஆய்வு நடத்தப்பட்டதில் இவற்றால் எந்த ஒவ்வாமையும் உண்டாவதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும் மனிதர்களின் நோய் எதிர்ப்பு திறன் தொடர்பான மேலதிக ஆய்வுகள் இதில் நடத்தப்படவேண்டி இருக்கிறது.

இந்த கடுகை எதிர்ப்பவர்கள் முக்கியமாக சுட்டிக்காட்டுவது மரபணு மாற்றப்பட்ட கடுகு மண்ணிலும் சூழலிலும் மகரந்த சேர்க்கையிலும் உண்டாக்கவிருக்கும் மிக ஆபத்தான விளைவுகளைத்தான், 

இது நடைமுறைப்படுத்தப்பட்டால் மீட்டெடுக்கவெ முடியாத சூழல் சீர்கேடுகள் உருவகும் என்பதே மரபணுப்பயிர்களை எதிர்க்கும் அமைப்பினரின் ஆணித்தரமான வாதம்.   

மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு இந்த கடுகை வணிக ரீதியாக சாகுபடி செய்வதற்கு முன்னரான சோதனைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த கடுகை உருவாக்கியவர்களே அனுமதியளிக்கும் குழுவில் உறுப்பினர்களாக இருப்பது தான் சர்ச்சைகளின் அடிப்படையாக இருக்கிறது.

இப்போது இந்த சோதனை முயற்சியை உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகின் சாகுபடியினால் தேனீக்களுக்கும் மற்ற  பூச்சி இனங்களுக்கும் உண்டாகும் தாக்கம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட் டுள்ளது.

இதன் ஆதரவாளர்களும் இதை உருவாக்கிய குழுவினரும் இந்த கடுகினால் அதிக கடுகு விளைச்சல், குறைந்த உணவு உற்பத்திக்கான முதலீடு, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைதல் அகியவற்றை தெரிவிக்கின்றனர்

இக்கடுகை எதிர்ப்பவர்கள் இதன் களைக்கொல்லி சகிக்கும் இயல்பினால் உண்டாககூடிய உயிரியல் மற்றும் சூழலியல் அபாயங்களையும் இப்பயிர் மண்னிற்கு உண்டாக்கும் தீங்குகளையும்   நடத்தபட்ட ஆய்வுகளில் இருக்கும் நிரப்பப்படாத இடைவெளிகளையும் முன்வைக்கின்றனர்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான புதிய சந்தையையும்,அதன் காப்புரிமையை குறிவைக்கும் அமைப்புக்களும் மேலும் ஆபத்தை விளைவிப்பார்கள் எனவும் இத்தரப்பு கூறுகிறது இந்த கடுகு சாகுபடி சோதனைகளுக்கு உச்சநீதிமன்றம்  தடை விதிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் எதிர்ப்பமைப்புக்கள் தெரிவித்திருக்கின்றன.’

2011ல் வெளியான உயிரி தொழில் நுட்ப விதைகளால் நிகழ்ந்த இந்திய விவசாயிகளின் தற்கொலையை பேசும் Bitter Seeds எனும்  பிரபல ஆவணப்படம் இந்தியாவில் மரபணு பயிர்களின் விளைவுகளை விளக்குகிறது. பல சூழலியலாளர்கள் இந்த ஆவணப்படம் அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று என்று பரிந்துரைக்கிறார்கள்.  

விரைவில்  இதற்கான தீர்ப்பை அளிக்கவிருக்கும் உச்சநீதிமன்றத்துக்கு   இந்திய  தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau of India) 1995 லிருந்து 2006 வரையிலான 12 வருடங்களில் மட்டும் சுமார் 200,000 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்னும் ஆதாரத்தைக்  காட்டியதும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

மாற்றங்கள் தேவைதான் என்றாலும், தங்க ஊசியென்பதால் கண்ணைக் குத்திக்கொள்ள முடியாது. வேலியே கடுகுப்பயிர்களை மேயுமா அல்லது உணவுப்பயிர்களின் விளைச்சலை மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் அதிகரித்து உணவுப்பாதுகாப்புக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

***

மேலதிகத் தகவல்களுக்கு:

Seed balls!

Seed balls represent an innovative approach to natural reforestation and habitat restoration, combining traditional wisdom with modern ecological understanding. These compact spheres contain everything needed for successful plant growth, packaged in a protective clay coating that ensures optimal germination conditions.

What Are Seed Balls?

Seed balls (also referred to as ‘seed pellets’ or ‘seed bombs, nendo dango in Japanese’) are structures typically made of clay, compost, water and seed (but can include a huge range of ingredients including soil, rock dust, cat litter, coffee grounds, cayenne pepper, sand, worm castings and mycorrhizal fungi). A seed ball is a seed that has been wrapped in soil materials, usually a mixture of clay and compost, and then dried. 

These structures can ameliorate conditions that contribute to failure in arid land restoration , including dry conditions that exacerbate seed desiccation stress and create soil crusts that limit seedling establishment, as well as seed loss via predation (typically by rodents and ants).

Seed balls also serve to enhance seed to soil contact and reduce seed redistribution by wind. In theory, seeds are protected in the structure until adequate rainfall removes the surrounding clay and a small pocket of nutrients from the compost component of the seed ball nourishes the seedlings as they emerge. Seed balls are cheap and easy to make and can enhance germination of seeded species.

A seed ball consists of three primary components carefully combined to create a self-contained planting system:

  1. Seeds (preferably native species)
  2. Clay (as a protective barrier)
  3. Compost (for nutrient supply) 

Essentially, the seed is ‘pre-planted’ and can be sown by depositing the seed ball anywhere suitable for the species, keeping the seed safely until the proper germination window arises. Seed balls are an easy and sustainable way to cultivate plants in a way that provides a larger window of time when the sowing can occur. They also are a convenient dispersal mechanism for guerrilla gardeners and people with achy backs.

Seed Balls vs Seed Bombs?

The only substantial difference is what you call them. “Bomb” sounds more subversive, and so it’s gaining popularity among gardeners. When properly made, the seed ball or bomb will have enough seed to ensure germination, but not so many seeds that the plants will choke each other. Since the idea is to grow healthy plants, we should use enough seed to ensure good likelihood of germination, but not so many that the seedlings are stressed from crowding and fail to thrive.  

Historical Significance

 The seed balls are primarily used and invented by Egyptians. The reason behind this invention would be the safety measure taken for the welfare of seeds and farming after any natural calamity that effects the farming lands or farms. Nile flooding is more common in Egypt as it also erodes the farm lands and it was a major worrisome factor for Egyptians. As a matter of fact, they developed the methodology of creating seed balls to safeguard their farming from flooding.

Though the originated land is Egypt, seed balls are also commonly used in Asian countries. More closely, Japanese farmers are the second massive users of seed balls. It is said that Japanese have re-invented the seed balls after the Egyptian dynasty.

In 1700, the West African slave women of Carolinas used seed balls. They were commanded to cultivate rice using the seed balls. These rice seed balls have been made with a rice seed, red clay and soil composite.  Rice seeds were coated in clay, dried, and pressed into the mud flats with the heel of the foot. This served two purposes, protecting the seed from the birds, and also preventing it from floating off when the fields were flooded.  

 They mainly prepared to safeguard the rice seeds from insects and birds even from the flooding. This method helped in rice cultivation and improved the rice seed’s security. Ancient people found this technique as a successful one.

Masanobu Fukuoka, founder of Japanese natural farming promoted seed balls in his 1975 book the one straw revolution. fukuoka used seed balls also known as seed dumplings to sow in his farm without cultivating them first.

Today, seed balls are fun for green-minded kids and adults,  and are also an important tool of the gardening movement.

Seed ball making

Materials to Collect

  • Soil/compost mix 
  • Red clay (primary component)
  • Seeds (typically native species)
  • Water
  • Compost/humus
  • Optional additives (cotton fibers or paper for extra protection) 
  • A tray to work on

Proportions and Size

  • Mix approximately 5 parts clay to 1part seeds
  • Form balls between 10mm and 80mm in diameter
  • 24-48 hours drying time 

Method

  1. Chop the clay up into small pieces to make it easier to work with
  2. Mix the clay, the soil/compost mix, and the seeds together. A 1:1 clay to soil/compost ratio works pretty well we have found, but play around with different ratios! You want your mixture to be able to hold together in a ball-shape, but still be loose and crumbly enough to break apart when it has been dispersed. Add some water if your mixture is too dry and crumbly. 
  3. Form small balls of your mixture and lay them out on your tray. 
  4. Allow the seed balls to dry.
  5. Go on an adventure and disperse your seed balls! If you want to give your seeds the best chance, find a bare patch of ground to place them. You can also throw the seedballs, or create patterns with them on the ground!

  1. Clay coating

The clay coating in seed balls serves as a sophisticated natural protection system that plays multiple crucial roles in ensuring seed survival and successful germination

Primary Protective Functions:

Physical Barrier

  • Creates a hardened shell around the seed  
  • Acts as armor against mechanical damage
  • Protects against erosion forces
  • Shields seeds from physical abrasion
  • Environmental Shield
  • Regulates moisture penetration
  • Controls temperature fluctuations
  • Blocks harmful UV radiation
  • Prevents premature germination triggers
  • Advanced Protection Mechanisms
  • Moisture Management System
  • Gradually releases moisture as needed  
  • Prevents seed rot from excessive water
  • Maintains optimal humidity levels
  • Ensures controlled hydration during germination
  • Thermal Regulation
  • Insulates seeds from extreme temperatures
  • Creates stable microenvironment
  • Delays germination until optimal conditions
  • Helps synchronize growth with seasonal patterns

Scientific Composition

  • The effectiveness of the clay coating comes from its precise formulation:
  • Combines mineral soil with specialized compost mixtures  
  • Includes multiple types of compost for balanced nutrition
  • Creates optimal pH balance for seed development
  • Provides sustained nutrient release during early growth

Practical Benefits

  • Extended Viability
  • Allows flexible planting schedules
  • Enables storage until ideal conditions
  • Maintains seed health during dormancy
  • Reduces immediate germination pressure
  • Natural Timing Control
  • Breaks dormancy naturally with rainfall.
  • Coordinates growth with environmental cues
  • Prevents premature sprouting
  • Ensures synchronized emergence

The clay coating creates a significant transformation in both the size and weight of the original seeds, effectively turning tiny seeds into compact, protected packages. Let me break down these changes precisely.

Size Transformation

  • The clay coating dramatically increases the dimensions of the original seed:
  • Final diameter ranges from 10mm to 80mm.
  • Typically becomes 20-40 times larger than the original seed
  • Creates uniform spheres regardless of irregular seed shapes
  • Produces consistent handling size for distribution

Weight Impact

  • The clay coating adds substantial mass to the original seed:
  • Uses approximately 5 parts clay to 1 part seeds.
  • Increases total weight by roughly 400-500%
  • Adds protective bulk while maintaining portability
  • Creates manageable units for handling and distribution 

Seed Ball Anatomy

Seeds are scarified if necessary prior to placing in the seed ball. Depending on the size and requirements of the plants, seeds are either mixed in with the soil before the seed balls are made or placed individually within the moist seed ball. The seed balls are then air-dried, providing a safe haven for its contents until germination.

Seed balls are packaged in a small recyclable brown paper bag. Nothing fancy, nothing that leaves an unnecessary footprint.

Pressed gently on the soil, about 2/3 of the way down.  

Optimal Growing Conditions

Moisture Requirements

Consistent rainfall or irrigation

Well-draining soil to prevent waterlogging

Moderate humidity levels

Regular moisture availability during germination phase .

Temperature Parameters

Species-appropriate temperature ranges

Stable diurnal cycles

Absence of extreme thermal fluctuations

Seasonal synchronization with native growth patterns

Seed Germination 

Key Factors Influencing Germination Time

  • Environmental Conditions
  • Moisture levels – consistent rainfall or watering is essential climatekids.nasa.gov
  • Temperature variations
  • Seasonal timing
  • Soil quality at planting location

While exact germination times vary by species and conditions, the seed ball method is designed to provide natural protection and flexibility in planting schedules. Success rates improve significantly when environmental conditions match the native requirements of the chosen plant species.

Best Practices for Optimal Results

Timing Considerations: Plant during the appropriate growing season for your region

Ensure consistent moisture availability

Monitor temperature ranges suitable for your chosen species

Storage Guidelines

Keep seed balls dry if planting is delayed

Maintain room temperature storage

Protect from direct sunlight and moisture exposure

Best Practices For successful implementation:

  • Choose appropriate locations avoiding private property and sensitive ecosystems
  • Select native species adapted to local conditions
  • Avoid overcrowding to ensure healthy plant development
  • Consider seasonal timing for optimal germination rates 

Practical Applications

  • Seed balls serve multiple purposes in modern environmental conservation:
  • Urban Renewal: Used extensively in gardening initiatives to beautify neglected spaces
  • Wildlife Support: Provides habitat restoration opportunities
  • Educational Tool: Engages communities in environmental stewardship
  • Conservation Method: Helps maintain biodiversity through strategic planting

Environmental Significance

The importance of seed balls extends beyond simple gardening:

  • Native Species Preservation: Promotes the growth of indigenous plants that naturally belong in local ecosystems 
  • Ecosystem Balance: Helps counteract the effects of non-native species invasion
  • Carbon Sequestration: Contributes to greenhouse gas reduction through increased plant growth
  • Natural Protection: Safeguards seeds from predators and adverse conditions until optimal growing conditions arise 

This ancient technique continues to evolve as a powerful tool for environmental restoration and community engagement, combining traditional wisdom with modern sustainability goals.

This dramatic transformation from tiny seed to substantial seed ball represents a remarkable adaptation of ancient technology, combining natural materials with practical functionality to ensure successful plant establishment.

Seed balls perform optimally under specific environmental conditions and face challenges in others. Understanding these conditions is crucial for successful implementation.

Challenging Environments

Adverse Conditions

Prolonged drought periods

Extreme temperature fluctuations

Poor soil quality

High winds causing displacement

Excessive rainfall leading to waterlogging

Sensitive Periods

Initial germination phase requires careful monitoring

Young seedlings need protection from extremes

Establishment period demands consistent conditions

Vulnerable to sudden environmental shifts

Best Practices for Challenging Environments

Before Planting :

  • Conduct thorough site assessment
  • Test soil conditions
  • Evaluate local microclimate
  • Choose appropriate species for conditions
  • During Establishment
  • Monitor moisture levels closely
  • Provide supplemental care when needed
  • Protect from extreme weather events
  • Maintain consistent conditions during critical growth phases

Long-term Maintenance

  • Regular assessment of environmental impacts
  • Adjust strategies based on performance
  • Document successful approaches for future reference
  • Share knowledge with other practitioners

Recent developments

Recent developments in seed ball technology reflect ongoing innovation in addressing environmental challenges. Here’s a comprehensive overview of current advances and adaptations:

Enhanced Materials and Coatings
Advanced Clay Formulations
Integration of specialized mineral soil compositions
Enhanced moisture retention properties
Improved thermal regulation capabilities
Protective Additives
Strategic incorporation of cotton fibers
Implementation of liquefied paper reinforcement
Customized coating thickness optimization
Species-specific formulation adaptations
Climate-Specific Adaptations
Drought Resistance Solutions
Enhanced moisture retention systems
Improved clay matrix formulations
Strategic timing optimization
Species selection for water-stressed conditions.
Temperature Management
Thermal regulation improvements
Seasonal adaptation strategies
Microclimate creation techniques
Climate-appropriate species matching
Sustainable Innovations
Eco-Friendly Materials
Recyclable packaging solutions
Minimal environmental footprint
Natural decomposition properties
Locally sourced materials integration .
Distribution Improvements
Precise placement methodologies
Targeted dispersal techniques
Efficient coverage patterns
Reduced waste protocols.

 Scientific Benefits

  • Seed balls address several critical challenges in arid landscape restoration  
  • Protection Against Desiccation
  • Prevents seed drying out
  • Maintains optimal moisture levels
  • Reduces stress on emerging seedlings
  • Predator Prevention
  • Protects seeds from rodents and ants
  • Ensures higher germination success rates
  • Maintains seed placement integrity
  • Enhanced Soil Contact
  • Improves seed-to-soil interface
  • Reduces wind dispersal
  • Creates localized nutrient pockets

Ecological Impact

  • Seed balls serve multiple ecological purposes 
  • Pollinator Support
  • Promotes native flower growth
  • Provides food sources for pollinators
  • Supports local insect populations
  • Habitat Restoration
  • Enables natural regeneration
  • Works with existing ecosystems
  • Requires minimal maintenance

Seed balls in urban environments

Seed balls can indeed be effective in urban environments, though their implementation requires careful consideration of specific urban challenges and opportunities. Let me break down their effectiveness across different settings

Urban Implementation Success Factors

Protected Areas
Community gardens
Park perimeters
Green spaces along waterways
Abandoned lots (with permission)
Vertical Spaces
Green roofs
Wall planters
Balcony gardens
Window boxes
Rural Implementation Success Factors
Natural Areas
Forest edges
Wildlife corridors
Stream banks
Abandoned agricultural land
Restoration Zones
Erosion control areas
Wildlife habitat restoration
Native species reintroduction sites
Buffer zones around protected areas
Urban Challenges and Solutions
Environmental Factors
Higher temperatures
Urban heat island effects
Variable soil quality
Limited space
Human Impact
Foot traffic
Maintenance activities
Pet disturbance
Litter accumulation
Rural Advantages
Natural Conditions
Better soil quality
More consistent moisture
Less human interference
Existing wildlife support
Space Availability
Larger areas for dispersal
Fewer restrictions
Natural seed dispersal patterns
Better ecosystem integration

What is the Science? 

The compost in the seed balls give the emerging seedlings some nutrients to help get them started on their journey. The clay’s job is to hold the seed balls together long enough to be dispersed. The clay will break down in the rain and allow the seeds and compost to spread out over and into the ground. 

The reason that we encourage native flower seeds in your seed balls is because native flowers feed and support our native insects – many of whom are important pollinators or food web members. Insects are not able to feed from every single flower in the world, many have a small amount of flowers they can feed from or raise their young on. Some insects are only able to feed from one type of flower! Planting native flowers gives these important pollinators a feeding station to help them through the year. 

Successful seed ball implementation in urban environments requires patience and thorough assessment. While some areas may initially seem unsuitable, creative solutions such as vertical installations or container gardens might still make seed ball projects viable in challenging urban spaces.

Conclusion

Seed balls can be highly effective in both urban and rural environments when properly implemented. Urban areas require more careful planning and protection measures, while rural settings often benefit from natural conditions. Success depends primarily on choosing appropriate locations and understanding local challenges rather than the environment type itself. 

Seed  balls- in a nutshell

A seed ball (or plant seed bomb) is a plant seed which has been pre-planted in a small round lump of soil materials, mainly a mixture of clay and compost along with other necessary nutrients, and the entire ball containing the seed is then dried.

The seed ball is a mini soil pocket which contains the seed and all other necessary ingredients for the seed’s survival in the same pocket. This enables the seed to germinate for a few days initially and then be produced when the conditions are right.

Each seed is pre-planted and is generally sown by depositing the seed ball anywhere where it is suitable for the plant species. This keeps the seed safe from birds and other animals till the right moment for germination.

Seed balls are an easy and sustainable method to achieve plant cultivation as it provides a large window of time when during the time period of the sowing.

A seed ball is easy to transport and easy to plant.

Seed balls are also a type of nature-based solution. The materials for making seed balls – seeds, soil, and humus– are simple, affordable, and locally available.  Seed balls, are a mechanism for seed encapsulation and dispersal increasingly being used in the context of ecological restoration. For seed balls to achieve their desired effect they need to be stable enough to facilitate handling but then be able to uptake water to allow for seed imbibition. 

Tips

Don’t sow in others’ gardens or crops.

Never plant invasive species.  

Don’t put too many seeds

Don’t disturb pristine or vulnerable ecosystems with non-native species.

And… don’t throw seed balls at siblings or animals (or people, vehicles, buildings, etc.).

References:

https://seed-balls.com/?srsltid=AfmBOoq9ZXHAxqaS1zKKvEzrl26pgjREz7X-3vanHrW7yr5HMiIbsVt1

https://igsss.org/seed-balls-promoting-biodiversity/#:~:text=It%20is%20made%20of%20clay,time%20in%20a%20shady%20place.

https://www.tandfonline.com/doi/full/10.1080/0028825X.2025.2463505

https://www.researchgate.net/publication/366204175_Seed_Ball_Campaign_An_Effective_Implementation_Tool_against_Global_Warming_and_Deforestation

https://seedballs.in/blogs/news/history-of-seed-balls?srsltid=AfmBOooVdcDakjjXX_oKpnFH5_3aKEFHBl32Hsy4_7jPV0a4y_lJ2kxs

https://www.researchgate.net/publication/361129763_Future_Perspective_of_Seed_Ball_Technology_For_Creating_New_Ecosystem

புதிய தொடர் -போய்!

இந்த வாரம் முழுவதும் தொழுநோய் சிகிச்சைக்குச் சருமத்தில் தடவப்பட்டுச் சிகிச்சையளிக்கப் பயன்பட்ட, ஒரு விதை எண்ணெயிலிருந்து, ஊசிமருந்தை முதன் முதலாகத்தயாரித்து, அந்த ஆராய்ச்சிக்கட்டுரை வெளியாகும் முன்பே 78 நோயாளிகளைக் குணப்படுத்திய, ஹவாய் பல்கலைக்கழகத்தின் முதல் அறிவியல் முதுகலைப்பட்டதாரியான, ஆப்பிரிக்க அமெரிக்கப்பெண் ஆலிஸ் பால் குறித்து வாசித்துக்கொண்டிருந்தேன்.

கிளை கிளையாகப்பிரிந்த வாசிப்பில் ஹவாயிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 8000 தொழுநோயாளிகள் வசித்த ஒரு தீவையும், அவர்களுக்குச் சவப்பெட்டி செய்வதிலிருந்து அடக்கக்குழிதோண்டுவது, வீடு கட்டிக்கொடுப்பது, வீட்டுக்கு வர்ணமடிப்பது, அவர்களுடனேயே தங்கி சமைத்து உண்பது என்று சேவை செய்த ஒரு பாதிரியைக்குறித்தும் அறிந்துகொண்டேன். 3000 அடி உயர செங்குத்துப்பாறைகளால் புற உலகிலிருந்து விலகி இருந்த அந்தத்தீவில் இறையியலை போதித்து தானும் தொழுநோயாளியாகி அங்கேயே இறந்தும் போன அவரைக்குறித்து பெருமதிப்பு உண்டாகி இருக்கிறது.

அவரைக்குறித்தும் 24 வயதில், தன் கண்டுபிடிப்பை வெளியிடாமலேயே ஆய்வகத்தின் குளோரின் நஞ்சினால் உயிரிழந்த ஆலிஸைக் குறித்தும் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அந்தப்பாதிரி தொழுநோயாளிகளுடன் இணைந்து உண்ட பாலினேசியாவின் பிரதான உணவான சேம்பின் கிழங்கிலிருந்து உண்டாக்காப்படும் போய் (Poi) குறித்து வாசிக்கையில் தான் உலெகெங்கிலும் இருக்கும் இப்படியான, அதிகம் பேர் அறிந்திருக்காத தாவர உணவுகளைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் வந்தது.

போய், வஸாபி, ஃபலாஃபல்,புரிட்டோஸ், ராசவள்ளிக்கிழங்கு, நோச்சி, குயினா, சில அரிய மதுவகைகள், இந்த உணவுகள் தயாரிக்கப்படும் முறை, அந்தத்தாவரத்தின் இயல்புகள் என்று விரிவாகச் சுமார் 25 கட்டுரைகள் எழுதவிருக்கிறேன்.

இன்று போய் எழுதிமுடித்து, தொடர்ந்து நாலைந்து கட்டுரைகள் எழுதியபின்னர் அவற்றைத் தொடர்ந்து வெளியிட உத்தேசித்திருக்கிறேன். இந்தத் தொகுப்பை நூலாக வெளியிடுகையில் வைக்க ஒரு நல்ல தலைப்பையும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். பஞ்ச கால உணவுகள் குறித்தும் சட்டரீதியான அல்லது மதம், கலாச்சாரம் சார்ந்த தடைசெய்யபட்ட உணவுகள் மற்றும் பானங்கள் (Taboo food and drink) குறித்தும் தொடர்கள் எழுதவெண்டும்.

காய்ச்சல் மரம்!

மமானியை தேடி பொலிவிய வனக்காவலர்கள் காட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தார்கள். அயலவர் ஒருவருக்கு மமானி உதவுவதை வெறுத்த இன்கா இனத்தின் இளைஞர்கள் அவனை காவலர்களுக்கு காட்டிக் கொடுத்திருந்தார்கள்.

அதை அறியாத மமானி தனக்குள்ளேயே பேசிக்கொண்டு காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தான். அவன் அதிர்ஷ்டத்தின் மீது அவனுக்கு சில வருடங்களாகவே அவநம்பிக்கை வந்துவிட்டது. மரப்பட்டைகளையும் விதைகளையும் சேகரிப்பது அவன் குலத்தொழிலாக  இருந்தும் இத்தனை வருடங்களாக அவன் எஜமானுக்கு தேவையான அந்த மரத்தை தேடிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு அம்மரத்தை நன்றாகவே அடையாளம் தெரியும். இலைகளின் அடிப்புறம் சிவப்பாகவும் மேற்புறம் பளபளக்கும் பச்சை நிறத்திலும் இருக்கும். அவற்றின் பட்டை மிக கசக்கும் அதைத்தான் எஜமானர் சார்லஸ் லெட்ஜரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். கசக்கும் பட்டையை கொண்டிருக்கும் குயினா என்றழைக்கப்படும் எல்லா மரங்களும் ஒன்று போலவே இருந்தாலும் நுட்பமான வேறுபாடுகளும், கனத்த மரப்பட்டையும் கொண்டிருக்கும் ஒன்றைத்தான் அவன் தேடிக்கொண்டிருந்தான்.

ஒவ்வொரு கோடையிலும் மினுங்கும் பச்சை இலைக்குவையுடன் தெரியும் ஒவ்வொரு மரத்தையும் தேடித்தேடி பார்ப்பான். மாமனி ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் பனி மூடிய மலை முகடுகளில் ஏறி அழகிய இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த மலர் கொத்துக்கள் தெரிகிறதா என்று தேடுவான். 28 மரவகைகள் கண்டறிந்தும் அவன் தேடிய ஒன்று கிடைக்கவில்லை இன்னும்.

காட்டின் உயரமான ஒரு குன்றின் மீதிருந்து உரக்க கத்தி்னான் மமானி. ‘’அபூ, எங்கள் மலைத் தெய்வமே! உனக்குப் பிரியமான கொக்கோ இலைகளையும் சோளத்தையும் எத்தனை முறை படைத்து வழிபட்டேன்? நீ நிறைவுறவில்லையா? நான் துரதிர்ஷ்டக்காரன் தானா ? எஜமான் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்துவிடப் போகிறதா?

கோன்! காற்றுக்கும் மழைக்குமான தெய்வமான நீயுமா என் மீது இரங்கவில்லை? உனக்கும் பல நூறு பிராரத்தனைப் பாடல்களை பாடினேனே! எத்தனை கரிய பறவைகளை உனக்கென பலி கொடுத்தேன்? எத்தனை தலைமுறைகளாக நாங்கள் பட்டை சேகரிக்கிறோம்? ஏன் இப்போது கனியமாட்டேனென்கிறீர்கள்?’’

’’ சரி நான் காத்திருக்கிறேன் நீங்கள் இறங்கி வருவீர்கள் என்று எனக்கு தெரியும். இது எனக்கான காலம். 22 வருடங்களாக என் நான்கு மகன்களை கூட பார்க்காமல் எஜமானருடன்தானே இந்த காட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதற்கு பலனில்லாமல் போகாது. எத்தனையோ மக்களின் உயிரைக் காப்பாற்றத்தானே இதை தேடுகிறேன் என்று உனக்கு தெரியாமலா இருக்கும்? என் அபூ! எஜமானர் சார்லஸ்க்கு எத்தனையோ விதைகளையும், பட்டைகளையும் தேடித்தேடி சேகரித்து தந்திருக்கிறேன், இந்த ஒன்றை மட்டும் ஏன் கண்ணில் காட்டாமல் மறைத்து வைத்திருக்கிறாய்?’’

மமானிக்கு அந்த வருடத்தின் வசந்தம் அதிர்ஷ்டத்தை கொண்டு வருமென்று நம்பிக்கை இருந்தது. தேடியதை கொடுத்தால் இன்னும் சில அல்பகாக்களை எஜமான் அவனுக்கு கொடுப்பாரென்பதால் மட்டும் அல்ல, அந்த மரத்தை காண்கையில் அவருக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்காகத்தான் அதைத் தேடுகிறான்.

அவன் உள்ளுணர்வு சொன்னது சரிதான் அவன் அந்த மரத்தை பார்த்தே விட்டான். ஒரு மலைச்சரிவில் மலர்ந்து நின்றிருந்தது அது. குழல் போல சிவப்பில் மலர்கொத்துக்களும், கனத்த பட்டையுமாக அங்கே நிற்பது அதேதான்,

மலைத்தெய்வங்களே! மனமிரங்கி விட்டீர்கள் என்று கூவியபடி கண்ணீருடன் மமானி அங்கே சென்றபோது மரத்தடியில் ஏராளமான விதைகளும் சிதறிக் கிடந்தன. காட்டின் மறுபுறத்திலிருந்து அங்கு வந்து கொண்டிருக்கும் அவன் எஜமானர் அத்தனை வருடங்களாக இதைத்தான் தேடினார். விதைகளை சேகரித்து மண்ணில் பிசைந்து பல உருண்டைகளாக உருட்டி தண்டுகள் சூலாயுதம் போல கிளைத்திருக்கும் தாரா மரப்பொந்துக்குள் ஒளித்து வைத்து விட்டு மமானி சார்ல்ஸுக்கு கொடுத்த சங்கேத குரல் சார்ல்ஸ் லெட்ஜெருக்கும் அங்கே காவலிருந்த பொலிவியா காவலர்களுக்கும் ஒரே சமயத்தில் கேட்டது.

மமானிக்கு நினைவு அடிக்கடி தப்பிக்கொண்டே இருந்தது நினைவு வரும் போதெல்லாம் வலியும் தெரிந்தது. நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் கண்ணில் வழிந்து யார் அடிக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. உயிரே போனாலும் எஜமானரின் பெயரை சொல்லப்போவதில்லை என்பதில் மமானி உறுதியாக இருந்தான்.

எத்தனை நாளாயிருக்கும் காட்டில் பிடிபட்டு இங்கே வந்து என்றும் அவனுக்கு நினைவில் இல்லை. எஜமானருக்கு அந்த விதைகளை கொடுப்பதற்குள் பிடித்துவிட்டார்களே என்பதுதான் அவனுக்கு வருத்தம், ஆனால் தாரா மரப்பொந்துக்குள் இருப்பவற்றை அவர் நிச்சயம் எடுத்துக்கொள்வார் என்று நம்பிக்கை இருந்தது.

பெரு மற்றும் அதன் அண்டை நாடுகளில் வளரும் சின்கோனா மரங்களின் பட்டைகளையும் விதைகளையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த காலம் அது.

மலேரியா சிகிச்சைக்காக பல நாடுகளில் இருந்தும் அவற்றை திருடிச் செல்ல பலர் அக்காட்டுக்குள் ஊடுருவுவதால் அங்கு பலத்த காவல் இருந்தது. மமானி யாருக்கு உதவி செய்தான் என்பதை அறியத்தான் அவனை காவலர்கள் சித்திரவதை செய்தனர். ஆனால் 20 நாட்களாக அடித்தும் மமானியிடமிருந்து எந்த விவரமும் கிடைக்கவில்லை.

குகைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மமானியால் நடக்க முடியவில்லை. உடலெங்கும் எலும்பு முறிவும், ரத்தக்காயங்களுமாக மெல்ல தவழந்து தன் வீட்டை நோக்கி நகர முயன்ற மமானியின் கண்கள் குருதியிழப்பால் உயிரிழக்குமுன்னர் கடைசியாக ஒருமுறை தாரா மரம் இருக்கும் திசையை பார்த்தன.

1818 ல் லண்டனில் பிறந்த சார்லஸ் லெட்ஜர், அல்பாகாவின் ரோம விற்பனையின் பொருட்டு தனது 18வது வயதில் (1836ல்) பெருவிற்கு சென்றார் .1852 ல் ஆஸ்திரேலியாவில் அல்பாகாக்களை அறிமுகம் செய்ய அவர் சிட்னிக்கு பயணித்தார். அப்போது அல்பாகாக்களை பிற நாடுகளுக்கு கொண்டு செல்ல சட்டப்படி தடை இருந்தது. இருந்தும் தென்னமெரிக்காவிற்கு திரும்பிய லெட்ஜர் பல நூறு அல்பாகாக்களை பெருவின் பழங்குடியினரின் உதவியுடன் சிட்னிக்கு 1859 ல் கொண்டு சென்றார். அங்கு அவருக்கு அல்பாகா வர்த்தகம் செழிப்பாக நடந்தது.

1864ல் தென்னமரிக்கா திரும்பிய அவர் அப்போது பலரும் ஈடுபட்டிருந்த சின்கோனா பட்டைகளை தேடும் முயற்சியில் கவனம் செலுத்தினார். முன்பே நெருக்கமாக இருந்த மானுவல் இன்க்ரா மமானி (Manuel Incra Mamani) என்னும் பொலிவிய பட்டை மற்றும் விதை வேட்டையாடும் (காஸ்கரில்லெரோ) இன்கா பழங்குடியின பணியாளுடன் பொலிவியா மற்றும் அதன் அருகிலிருந்த காடுகளில் சின்கோனா விதைகளையும் பட்டைகளையும் தேடித்தேடி சேகரித்துக்கொண்டிருந்தார்.

அந்த தேடுதல் வேட்டையில் பிறரால் நுழைய முடியாத அடர் காட்டுப்பகுதிகளுக்குள் பல சிரமங்களுக்கிடையே அவர்கள் இருவரும் பயணித்து சின்கோனா விதைகளை சேகரித்தனர்

லெட்ஜரிடம் 1843 லிருந்து பணியாற்றிய மமானி சின்கோனாவின் 29 வகைகளை ஏராளமான ஆபத்துகளுக்கிடையில் கண்டறிந்தார். அயலவருக்கு உதவி செய்ததற்காக தன் இனத்தவர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்ட மமானி யாருக்கு உதவி செய்தேன் என்று கடைசி வரை தெரிவிக்காததால் 1871 ல் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

மமானியின் இறப்பால் மனமுடைந்த லெட்ஜர் பிற்பாடு மமானியின் குடும்பத்தின் பொருளாதார தேவை உள்ளிட்ட முழுப்பொறுப்பையும் ஏற்றுகொண்டார். மமானிக்கும் லெட்ஜருக்கும் மட்டும் தெரிந்த ரகசிய இடத்தில் சேர்த்து வைத்திருந்த சின்கோனா விதைகளை லண்டனில் இருக்கும் தனது சகோதரர் ஜார்ஜுக்கு அனுப்பி வைத்தார்.

ஜார்ஜ் அளித்த சின்கோனா விதைகளில் பிரிட்டிஷ் அரசு அத்தனை ஆர்வம் காட்டாததால் மீதமிருந்த விதைகளை டச்சு அரசிடம் கையளித்தார் ஜார்ஜ்.

டச்சுக்காரர்களுக்கு விதைகளின் அருமை தெரிந்ததால் அவற்றை பாதுகாத்து, விதைத்து மரங்களாக்கினர். இம்மரங்கள் பின்னர் லெட்ஜரின் பெயராலேயே Cinchona ledgeriana என்றழைக்கப்பட்டன. இவை 8 லிருந்து 13 சதவீதம் குயினைனை அளித்தன.

மலேரியா

மலேரியா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகில் இருந்து கொண்டிருக்கும் ஒரு பழமையான நோய். மாசடைந்த காற்றினால் உருவாகும் காய்ச்சல் என துவக்க காலத்தில் கருதப்பட்டதால்’’அசுத்தமான காற்று’’ எனப்பொருள்படும் இத்தாலிய சொல்லால் இந்நோய் ’மலேரியா’ என அழைக்கப்பட்டது (“bad air” -mal’ aria).

அறிவியலாளர்கள் 30 மில்லியன் வருடங்களுக்கு முன்பு கல்மரப்பிசினில் (amber) பாதுகாக்கப்பட்டிருந்த, கொசுக்களில் மலேரியா ஒட்டுண்ணிகளை கண்டறிந்திருக்கிறார்கள்.

மலேரியா பிளாஸ்மோடியம் என்ற நுண்ணிய ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது, இந்த ஒட்டுண்ணியை கொண்டிருக்கும் பெண் அனோபிலஸ் கொசு மனிதர்களை கடிக்கும் போது நோய் அவர்களையும் பாதிக்கிறது. நோயுற்ற மனிதர்களின் உடலினுள் ஒட்டுண்ணி கல்லீரல் மற்றும் இரத்த சிவப்பணுக்களில் பெருகி காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

பல நூற்றாண்டுகளாக ரோமானிய நகரங்களின் செல்வந்தர்கள் மலேரியா தாக்கும் பருவத்தில் குளிர்ந்த காலநிலை கொண்ட பிரதேசங்களுக்கு சென்று நோயிலிருந்து தப்பினர். ஏழைகள் நோய்த்தொற்றினால் காய்ச்சல் மற்றும் உடல் பலவீனத்தால் பாதிக்கப்பட்டனர்,ரோமாபுரி 17 ம் நூற்றாண்டின் மலேரியாவின் தலைமைப் பிரதேசமாக இருந்தது.

அக்காலங்களில் மருத்துவர்கள் மலேரியா சிகிச்சைகளாக நோயாளிகளுக்கு மண்டையோட்டில் துளையிடுதல், (trepanning,) குருதி நீக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புக்களை வெட்டி அகற்றுவது ஆகியவற்றுடன் ஆர்டிமிசியா, பெல்லடோனா ஆகிய மருந்துகளையும் பயன்படுத்தினர்

ஆண்டு முழுவதும் மலேரியா ஒட்டுண்ணி செழித்து வளர்ந்த ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதி மக்களுக்கு மலேரியா ஒட்டுண்ணியிடமிருந்து பாதுகாக்கும் இரத்த சிவப்பணு பிறழ்வு நோயான, அரிவாள் செல் இரத்த சோகை உருவானது., இந்த பிறழ்வு நோய், அவர்களை மலேரியாவிலிருந்து பாதுகாத்தாலும் அதுவும் ஒரு முக்கிய நோயாக இருந்தது

டச்சு, போர்த்துகீசியர் மற்றும் ஆங்கிலேயர்கள் மலேரிய ஒட்டுண்ணிக்கும், உடலை வெகுவாக பலவீனப்படுத்தும் காய்ச்சலுக்கும் எதிரான நோய்த்தடுப்பு இல்லாதவர்களாதலால் மலேரியாவின் பேரழிவை அஞ்சி பல தசாப்தங்களாக ஐரோப்பியப் படைகளை ஆப்பிரிக்காவின் உட்புறத்திலிருந்து விலக்கியே வைத்திருந்தனர்.

ஆனால் மத்திய அமெரிக்காவில் ஸ்பெயின் படையெடுப்பாளர்களுடன் வந்த, இத்தாலிய பாதிரியார்கள் மலேரியா கொசுக்களைக் கொண்டு வந்து, அமேசோனிய படுகை மற்றும் ஆண்டிஸ் மலைப்பகுதிகளுக்கு நோயை அறிமுகப்படுத்தினர். அப்போதுதான், இன்கா பழங்குடியினர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கும் குய்னா-குய்னா அல்லது , காஸ்காரில்லா என்றழைக்கப்பட்ட பெருவியன் மரத்தின் பட்டைத்தூளை பயன்படுத்துவது தெரிய வந்தது அதுவே சின்கோனா மரப்பட்டை.

1860 களில் ஒன்றிணைந்த இத்தாலியின் முதல் பிரதமர் மலேரியாவில் 1861ல் உயிரிழந்த போதும் மலேரியா நோய் குறித்த அறிதல் மிக குறைவாகவே அங்கு இருந்து.

1878 ல் இத்தாலியின் மாபெரும் ரயில் பாதை பணியில் ஈடுபட்டிருந்த 2,200 பணியாளர்களில் 1455 பேருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்ட போதுதான் இத்தாலி மலேரியாவின் தீவிரத்தை முதன் முதலாக அறிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை தொடங்கியது

1880 வரை மலேரியாவை உருவாக்கும் ஒட்டுண்ணி கண்டறிய பட்டிருக்கவில்லை 1880ல் தான் பிரெஞ்ச் மருத்துவர் அல்ஃபோன்ஸ் (Alphonse Laveran) நோயாளியின் ரத்தத்தில் மலேரியா ஒட்டுண்ணியை கண்டறிந்தார்

நாடு தழுவிய மலேரியா கட்டுப்பாடு மற்றும் கண்டறிதல் பரிசோதனைகள் பின்னர் வேகமாக நடந்து, முடிவில் இத்தாலியின் 8362 குடியிருப்பு பிரதேசங்களில் 3075 பகுதிகள் மலேரியாவினால் பீடிக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது.

பெருவின் பழங்குடியினர் காய்ச்சலுக்கு பயன்படுத்தும் சின்கோனா மரப்பட்டைகளை குறித்து உலகம் அப்போது அறியத் துவங்கி இருந்ததால், இத்தாலி முழுவீச்சில் சின்கோனா மரப்பட்டைளை உபயோகப்படுத்தி மலேரியாவை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை தொடங்கியது

19 ம் நூற்றாண்டில் மருத்துவர்கள் மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க குருதி நீக்க சிகிச்சையை பயன்படுத்தியதால் ரத்தசோகையினால் நோயாளிகள் மிகவும் பலவீனமடைந்தார்கள். பலருக்கு உடல் உறுப்புக்கள் அகற்றப்படவேண்டி இருந்து. ஒரு சிலரே மலேரியாவுக்கு குயினைனை பயன்படுத்தினர். ஆனால் அதன் பக்க விளைவுகள் அதிகமென்பதால் ராணுவ மருத்துவர்கள் யான் ஆன்றி ஆண்டனி மற்றும் ஃப்ரான்கோயிஸ் ஆகியோர் (Jean Andre Antonini மற்றும் Francois Clement Maillot) காய்ச்சலுக்கு குயினைனை பயன்படுத்தக்கூடாது என்று வெகுவாக எதிர்த்தனர் . எனினும் குயினைனின் பயன்பாடு மலரியா காய்ச்சலை போலவே பெருகிக்கொண்டேதான் இருந்தது.

1840 களின் மத்தியில் தங்க கடற்கரையின் ஐரோப்பியர்கள் குயினைன் மாத்திரைப்புட்டியை படுக்கை அருகில் வைத்திருப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர். அக்காலங்களில் மலேரியா இறப்பு கணிசமாக குறைந்திருந்தது. அதன்பிறகு பிரிட்டிஷ் ராணுவத்திலும் குயினைன் பயன்பாடு துவங்கியது.

1947 ல் அமெரிக்காவில் தொடங்கிய மலேரியா கட்டுப்பாட்டு முயற்சி 1950 வரை முழுமூச்சாக நடைபெற்று , 1951 ல் மலேரியா அமெரிக்காவில் முற்றிலும் ஒழிக்கப்பட்டது

2018ல் உலகெங்கும் மலேரியாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 405,000 ஆக இருந்தது. இதில் 67% ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள். தவிர்க்க முடிந்த நோயான மலேரியாவில் இத்தனை ஆயிரம் மக்கள் இறந்தது வேதனைக்குரியதுதான் என்றாலும் கடந்த 20 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவான மரண எண்ணிக்கைதான்.

2019 ன் .உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை 2010ல் இருந்த 251 மில்லியன் மலேரிய நோயாளிகளைக் காட்டிலும் 2018 ல் குறைவாக 228 மில்லியன் மட்டும் இருந்ததை சுட்டிக்காட்டியது. தற்போது உலகின், 2.9% சதவீதத்தினர் மலேரியாவினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

சின்கோனாவின் வரலாறு

ஸ்பெயினின் மருத்துவரும் தாவரவியலாளருமான நிக்கோலஸ் (Nicolás Monardes) 1574ல் மரப்பட்டைப்பொடி ஒன்றின் காய்ச்சல் குணமாக்கும் பண்புகளை எழுதி வெளியிட்டிருந்தார் .மற்றொரு மருத்துவரான ஜுவான் (Juan Fragoso) அடையாளம் காண முடியாத ஒரு மரத்தின் பட்டைப் பொடி பல நோய்களை தீர்ப்பதாக 1600களில் குறிப்பிட்டிருந்தார்.

1638ல் இரண்டு நாணயங்களின் அளவிற்கு உருட்டி எடுத்துக் கொள்ளப்பட்ட தென்னமரிக்காவின் Loja பகுதியை சேர்ந்த மரமொன்றின் பட்டைப் பொடி நீரில் கலந்து குடிக்கையில் காய்ச்சலை குணமாக்குவதைக் குறித்து ஃப்ரே (Fray Antonio de La Calancha என்பவர் குறிப்பிட்டிருந்தார்

ஆனால் சின்கோனாவைப் பொறுத்தவரை முதல் விஞ்ஞானிகளாக கருதப்படுபவர்கள் 16 ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இயேசு சபையின் உறுப்பினர்களான Jesuits என்றழைக்கப்பட்ட அருட்பணியாளர்கள் தான். இவர்கள் அனைத்து கண்டங்களிலும் இறைப்பணியுடன் மருத்துவப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டிருந்தனர். மனித குலத்துக்கு உபயோகப்படும் சாத்தியங்கள் கொண்ட எதுவாகினும் சோதித்து, சேகரித்து உலகின் பல பாகங்களுக்கும் அவற்றை அறிமுகம் செய்தார்கள் அவர்களால் கிடைக்கப் பெற்றவைகள் தான் டோலு என்னும் இருமல் நிவாரணி, நன்னாரி டானிக் மற்றும் கோகோ இலைகள்,

தென்னமரிக்க பழங்குடியினர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க அருந்திய மரப்பட்டைச்சாற்றை குறித்து கேள்விப்பட்ட Jesuits அவற்றை தேடி பயணித்தனர். பெரு, பொலிவியா பகுதிகளின் கெச்சுவா (Quechua) பழங்குடியினரால் ஒரு மரப்பட்டைச்சாறு தசை தளர்வுக்கும் காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்பட்டது. மரப்பட்டையை பொடித்து இனிப்பு நீரில் அதை கலந்து கசப்பை குறைத்து அவர்கள் அருந்தினார்கள் அம்மரத்தை அவர்கள் காய்ச்சல் மரமென்று அழைத்தனர்.

வெனிசுவேலாவிலிருந்து பொலிவியா வரை பரவியிருந்த ஆண்டிஸ் மலைத்தொடரில் செறிந்து வளர்ந்திருந்த பசுமை மாறா அம்மரங்களின் விதைகளையும் பட்டைகளையும் பட்டைச்சாற்றையும் ஐரோப்பாவில் அருட்பணியாளர்கள் 1640களில் அறிமுகப்படுத்தினர்.

மெக்ஸிகோ மற்றும் பெருவின் நிலப்பரப்புகளில் ஆய்வுகளை செய்த கிருத்துவ போதகர் பார்னெபி (Barnabé de Cobo -1582–1657),தான் ஐரோப்பாவிற்கு சின்கோனா பட்டையை அறிமுகம் செய்தவர். பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து ஸ்பெயினுக்கும் பின்னர் ரோம் மற்றும் இத்தாலியின் பிற பாகங்களுக்கும் இவரே 1632 ல் சின்கோனாவை அறிமுகம் செய்தார் .1650களில் ஸ்பெயினுக்கு தொடர்ந்து சின்கோன மரப்படைகள் கப்பல்களில் அனுப்பி வைக்கபட்டுக்கொண்டிருந்தன.

இந்த அருட்பணியாளர்கள் 1640 ல் ஐரோப்பாவெங்கும் காய்ச்சல் மரத்தின் பட்டைப் பொடி வர்த்தகத்துக்கான வழிகளை உருவாக்கியதால். 1681ல் மலேரியாவிற்கான சிகிச்சையளிக்கும் மருத்துவ மரப்பட்டையாக சின்கோனா உலகெங்கும் அறியப்பட்டது.

1653ல் இத்தாலிய தாவரவியலாளர் பியட்ரோ (Pietro Castelli) மருத்துவம் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் கைப்பட எழுதி வெளியிட்ட நூற்றுக்கணக்கான சிறு சிறு துண்டுப் பிரசுரங்களில் ஒன்றில் சின்கோனா மரத்தைக் குறித்தும் மலேரியாவுக்கு எதிரான அதன் செயல்பாட்டையும் எழுதியிருந்தார். இதுவே சின்கோனா மரத்தைக்குறித்த முதல் இத்தாலிய ஆவணம்.

1677ல் பெருவியன் மருத்துவப் பொடி என்னும் பெயரில் சின்கோனா மரப்பட்டை பொடி அதிகாரபூர்வமாக லண்டன் பார்மகோபியாவில் (London Pharmacopoeia) “Cortex Peruanus” என்னும் பெயரில் பிரசுரமானது

Myroxylon peruiferum என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட பெருவியன் பால்ஸம் என்னும் மற்றொரு பிசின் மரத்தின் பட்டைகளும் சின்கோனாவின் பட்டைகளுடன் கலப்படம் செய்யப்பட்டது. அம்மரப்பட்டைக்கும் காய்ச்சலை குணமாக்கும் மருத்துவ பண்புகள் இருந்ததால் அம்மரமும் லண்டன் பார்மகோப்பியாவில் 1677ல் இடம்பெற்றது,

பிரஞ்ச் சின்கோனா தேடல் பயணத்தில் 1743ல் பெறப்பட்ட சின்கோனா விதைகள் மற்றும் நாற்றுக்கள் யாவும் ஒரு பெரும் கடற்புயலின்போது கடலில் மூழ்கின

சின்கோனா 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அரச குடும்பத்தினர்ர்களையும் குடிமக்களையும் சிகிச்சையளித்து காப்பாற்றுவதில் பங்களித்துடன் காலனித்துவம் மற்றும் போர்களுக்கும் காரணமாக இருந்தது.

எக்குவடோரின் தலைநகரான குயிடோவிற்கு (Quito) 1735ல் வருகைபுரிந்த வானியலாளர் சார்லஸ் (Charles Marie de la Condamine) இந்த மரத்தை முதல் முதலாக சரியாக விவரித்தார்.அவரால் அடையாளம் காணப்பட்டு விவரிக்கப்பட்ட மரம் Cinchona officinalis,

1735,ல் பாரிஸின் அறியிவில் அமைப்பு தாவரவியலாளர் ஜோஸப் என்பவரை (Joseph de Jussieu) தென்னமெரிக்காவின் தாவரங்கள் குறித்து அறிய அனுப்பி வைத்தது அப்போது அவர் சின்கோனா மரத்தை பிரெஞ்ச் மொழியில் காய்ச்சல் மரம் என்று பொருள் படும் “l’arbre des Fièvres” என்று பெயரிட்டார்.

Jesuits எனப்பட்ட அருட்பணியாளர்களால இவை அறிமுகப்படுத்தபட்டதால், இந்த பட்டைப்பொடி பல நாடுகளில் ஜீசுட்ஸ் பட்டை அல்லது ஜீசுட்ஸ் பொடி (Jesuit’s bark Jesuit’s powder) என அழைக்கப்பட்டது

கிரானடா வைஸ்ராயின் பிரத்யேக மருத்துவரான ஜோஸ் (José Celestino Mutis) கொலம்பியாவின் சின்கோனா மரங்களை 1760 லிருந்து ஆய்வு செய்து ‘’El Arcano de la Quina’’ என்னும் நூலை சின்கோனா மரங்களின் சித்திரங்களுடன் 1793 ல் வெளியிட்டார்

அவர் வணிகரீதியான பலன் அளிக்கும் சின்கோனா வகைகளைக் கண்டறிய ஒரு திட்டத்தையும் முன்மொழிந்தார். அந்த திட்டம் 1783ல் அரசால் அனுமதிக்கப்பட்டு அவரது இறுதிக்காலமான 1808 வரை வெற்றிகரமாக நடந்தது.

கோவிட் பெருந்தொற்றுக்கான மருந்துகளுக்காக 2 வருடங்கள் முன்பு எப்படி நாம் அலைபாய்ந்து கொண்டிருந்தோமோ அதுபோலவே அன்று மலேரியாவுக்கான மருந்துகளுக்கு உலகம் காத்துக்கொண்டிருந்தது. .சின்கோனா கிடைத்தபோது வேறு எதைப்பற்றியும் கவலையில்லாமல் அவற்றை வெட்டி சாய்த்தது

பின்னர் 19 ம் நூற்றாண்டில் குயினைனின் தேவை பலமடங்கு அதிகமாகி பெரும் தட்டுப்பாடு உருவாகியது குயினைன் மரப்பட்டைச் சாறளித்து காய்ச்சலை குணமாக்குவது பாரம்பரிய மருத்துவ முறையாகத்தான் இருந்தது, எனினும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு அப்பட்டைப்பொடி ஐரோப்பாவின் மிக விலை உயர்ந்த மருந்து பொருளாகவே இருந்தது

டச்சு அரசு ஜாவாலிருந்து 1854ல் சின்கோனா நாற்றுக்களின் பட்டையையும் விதைகளையும் சேகரிக்க ஜஸ்டஸ் (Justus Hasskarl) என்பவரை அனுப்பியது

பிரபல பிரிட்டிஷ் தாவரவியலாளர் ரிச்சர்ட் ஸ்ப்ரூஸ் 1849 லிருந்து 1864 வரை 15 ஆண்டுகள் தென்னமெரிக்க காடுகளில் உதவிக்கு கியூ பூங்காவின் தோட்டக்காரர் ராபர்ட் கிராஸ் மற்றும் ஆங்கில புவியலாளரும் கள ஆய்வாளருமான கிளிமென்ஸ் மர்ஹாம் ஆகியோருடன் (Richard Spruce, Robert Cross & Clemens Markham) சின்கோனா விதைகள் நாற்றுக்கள் மற்றும் பட்டைகளை திருட்டுத்தனமாக சேகரித்தார். உதவிக்கு தென்னரிக்க பழங்குடியினரையும் உபயோகப்படுத்திக் கொண்டார்.

பெருவிற்கு இக்குழு வந்தபோது சின்கோனா மரங்கள் ஆயுதமேந்திய காவலாளிகளால் அல்லும் பகலும் பாதுகாக்கபட்டன. இத்தனை ஆபத்துக்கள் இருந்தும் மார்ஹம் பெரு அரசின் அனுமதி இல்லாமல், அவர்களுக்கு தெரியாமல் சின்கோனா விதைகளையும் நாற்றுக்களையும் சேகரித்து மேற்கிந்திய தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் அனுப்பினார்.

கிராஸ் மற்றும் ஸ்ப்ரூஸ் மட்டும் 100,000 சின்கோனா சுக்கி ரூப்ரா (Cinchona succirubra) வகையின் விதைகளையும் 637 நாற்றுக்களையும் சேகரித்தனர். ரகசியமாகவும் பத்திரமாகவும் இந்தியாவிற்கு அவற்றில் 463 நாற்றுக்கள் வந்தன. மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பட்ட அவற்றில் பெரும்பாலானவை துரதிர்ஷ்டவசமாக பிழைக்கவில்லை. ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரு சில நாற்றுக்கள் வளர்ந்தன.

17ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து 19 ம் நூற்றாண்டு வரை சின்கோனா பட்டைகள் உலகெங்கிலும் பயணித்தன.

1840 ல் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் ராணுவ வீரர்களுக்குமான மலேரியா சிகிச்சைகளுக்கு மட்டும் வருடத்திற்கு 700 டன் சின்கோனா மரப்பட்டை உபயோகிக்கப்பட்டது 19ம் நூற்றாண்டில்தான் ஐரோபியர்கள் அதீத சந்தைப்படுத்தலால் சின்கோனா மரங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள்.

எனவே அவரவர் நாடுகளில் சின்கோனா பயிரிடுவது மற்றும் இருக்கும் சின்கோனா மரங்களை பாதுகாப்பது ஆகியவற்றில் ஒவ்வொரு நாடும் முனைப்பாக இருந்தனர். பிறகு சின்கோனா உலகின் பல பாகங்களிலும் பரவலாக வளர்க்கப்பட்டது. டச்சு மற்றும் பிரிட்டிஷார் சின்கோனா வளர ஏதுவானவை என தாவரவியலாளர்களால் அடையாளம் காட்டப்பட்ட பிரதேசங்களை பாதுகாத்தனர். சின்கோனா விதைகள் வேறெங்கும் கொண்டு செல்லப் படுவதையும் தடை செய்தனர்.1852ல் டச்சு அரசு ஜஸ்டஸ் (Justus Charles Hasskarl) என்பவரை தென்கிழக்காசியாவில் சின்கோனாவை பயிரிட முனைந்த்தாக குற்றம் சாட்டி கைது செய்தது.

அச்சமயத்தில்தான் 1840களில் துவங்கி பல வருடங்கள் சார்லஸ் லெட்ஜர் மமானியின் உதவியுடன் ரகசியமாக பெருவின் காடுகளில் அதிக குயினைன் அளிக்கும் மரத்தை தேடிக்கொண்டிருந்தார்,

  • பொலிவியாவிலிருந்து பலரால் 1846ல் சேகரிக்கப்பட்ட விதைகளை கொண்டு உருவானவையே ஐரோப்பாவின் சின்கோனா வகையான C. Calisaya
  • பெருவிலிருந்து உலகின் பிற பாகங்களுக்கு அறிமுகமான மற்றொரு முக்கிய வகை சிவப்பு பட்டை கொண்ட Cinchona succirubra, (இப்போது C. pubescens– இதன் பட்டைச்சாறு காற்றில் கலக்கையில் சிவப்பு நிறமாக மாறும்)

கியூ பூங்காவில் சின்கோனாக்களுக்கென்றே பிரத்யேக பசுங்குடில்கள் உருவாககப்பட்டன. இந்தியாவில் நீலகிரி மற்றும் கொல்கத்தா தாவரவியல் பூங்காக்களில் இவை வளர்க்கப்பட்டன.

1880களில் நீலகிரியின் சின்கோனா தோட்டங்கள் தேயிலை தோட்டங்களாக மாறும்வரை இந்தியா மற்றும் டச்சு அரசுகளே சின்கோனா உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் இருந்தன.

தென்னமெரிக்க சின்கோனா பட்டையின் முக்கிய ஆல்கலாய்டுகள் குயினைன் மற்றும் குயினைடின்((quinine & quinidine.) இரண்டும் மருத்துவத்துறையில் வெகுவாக பயன்பட்டு அவற்றின் தேவை உலகெங்கும் அதிகரித்தபோது மரங்களை பாதுகாக்கும் நடவடிகைகளும் கடுமையாகின.

பல நாடுகளுக்கும் அப்போது சின்கோனா மரப்பட்டை தேவைப்பட்டது எனவே அவை பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை இதன் பொருட்டு செலவழித்தன. 1857ல் பிரிடிஷ் இந்தியா வருடத்திற்கு சுமார் 7000 ரூபாய்கள் குயினைனுக்கு மட்டும் செலவளித்தது.

டச்சு , பிரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷாருக்கு முன்பாக ’’தங்களின் தேவைக்கேற்ற இயற்கை குயினைனை தாங்களே தயாரிப்பது, அல்லது குயினைனை வேதிப்பொருட்களிலிருந்து தயாரிப்பது ’’ ஆகிய இரண்டு வழிகள் மட்டும் இருந்தபோத,..1850ல் பிரெஞ்ச் மருந்து நிறுவனங்கள் ஜனவரி 1, 1851 க்குள் ரசாயன குயினைன் தயாரிப்பவர்களுக்கு 4000 பிராங்குகள் பரிசாக அளிக்கப்படும் என்றுகூட அறிவித்தார்கள் எனினும் 1944 வரை ரசாயன குயினைன் உருவாகி இருக்கவில்லை.

இந்தியாவில் சின்கோனா

பிரிட்டிஷ் இந்தியாவில் 1880களிலிருந்து சின்கோனா நீலகிரி மலையிலும் டார்ஜிலிங்கிலும் வளர்க்கப்பட்டது. கேரள மாநிலத்தின் மூணாரில் உள்ள மலைகளில் பிரிடிஷ் இந்தியாவின் அதிகாரிகள், பூஞ்சார் அரசரிடமிருந்து குத்தகைக்கு எடுத்த பூஞ்சார் பகுதி நிலத்தில் தேயிலை மற்றும் காபியுடன் சின்சோனா வளர்ந்தது.

இந்தியாவில் தற்போது சின்கோனா வணிக ரீதியாக பயிரிடப்படுவது டார்ஜிலிங்கில் மட்டுமே 1862 ல் தொடங்கப்பட்ட சின்கோனா மற்றும் பிற மருத்துவ தாவரங்களின் இயக்குநரகத்தின் (Directorate of Cinchona and Other Medicinal Plant (DCOMP)) 6900 ஏக்கரில் வளரும் சின்கோனா மரங்களிலிருந்து சுமார் 1,50,000 லிருந்து 2,00,000 கிலோ சின்கோனா மரப்பட்டை உருவாகிறது.

தாவரவியல் பண்புகள்

29 மீ உயரம் வரை வளரும், காபி பயிரின் குடும்பமான ரூபியேசியை சேர்ந்த சின்கோனா மரங்கள் பசுமை மாறா வகையை சேர்ந்தவை. எதிரடுக்கில் அமைந்திருக்கும் பளபளப்பான இலைகளையும் குழல் போன்ற வெண்மையும் இளம் சிவப்பும் கலந்த அழகிய சிறு மலர்களையும் கொண்டிருக்கும் கொத்துக்களாக காணப்படும் மலர்களின் இதழ்களில் மென்மயிர்களைப்போல வளரிகள் பரவியிருக்கும். சின்கோனா மரத்தின் கனி மிகச்சிறியது

7 லிருந்து 8 வருடம் வளர்ந்த சின்கோனா மரங்களிலிருந்து மரப்பட்டை எடுக்கையில் குயினைன் அளவு அதில் அதிகமிருக்கும். சின்கோனா

மரப்பட்டைகளில் குயினைன் மட்டுமல்லாது 35 வகையான பிற முக்கியமான ஆல்கலாய்டுகளும் கிடைக்கின்றன

கதைகள்

சின்கோனா மரப்பட்டையில் குயினைன் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து பல கதைகள் இருந்தன அவற்றில் பிரபலமானது 1928 ல் சி ஜே எஸ் தாம்ஸன் (C.J.S. Thompson) பிரிடிஷ் மருத்துவ சஞ்சிகையில் எழுதியது. காய்ச்சலில் அவதியுற்ற இந்தியர் ஒருவர் சின்கோனா மரம் முறிந்து வீழ்ந்து கிடந்த ஏரித் தண்ணீரை அருந்தி குணமான கதையை அதில் விவரித்திருந்தார்

ஐரோப்பிய குயினைன் கதையொன்று உலகெங்கிலும் பரவலாக இருந்த ஒன்று. அதுதான் உண்மை என இன்னும் நம்பிக்கொண்டிருப்பவர்களும் உண்டு.

17 நூற்றாண்டில் ஸ்பெயினின் சின்கோன் பகுதியை சேர்ந்தவரும் count என்னும் நிலப்பிரபுவும், மன்னருக்கு அடுத்த நிலையில் இருந்தவரும் பெருவின் வைஸ்ராயுமான லூயியின் (Luis Jerónimo Fernández de Cabrera Bobadilla Cerda y Mendoza) மனைவி அன்னாதான் (Ana de Osorio (1599–1625) மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கையில் முதன்முதலில் குயினைன் அளிக்கப்பட்டு மலேரியாவிலிருந்து குணமானவர் என்னும் ஒரு புனைவு உலகெங்கும் பிரபலமாக இருந்தது. குணமான அவர் ஸ்பெயினுக்கு திரும்பிச் சென்ற போது தன்னுடன் சின்கோனா மரப்பட்டைகளை எடுத்துச்சென்று ஐரோப்பாவில் அவற்றை அறிமுகப்படுத்தினார் என்றது அந்தக்கதை. எனவே சின்கோன் பகுதியின் பிரபுவின் மனைவியாதலால் countess chinchon என அழைக்கப்பட்ட அவரின் பெயராலேயே அந்த மரமும் சின்கோனா மரம் என்று அழைக்கப்பட்டதாக கதை சொன்னது.

1859ல் இந்தியாவிற்கான சின்கோனா தேவையின் ரகசிய செயல்பாட்டாளராக இரண்டு வருடங்கள் தென்னமரிக்காவில் செயல்பட்ட க்ளிமென்ஸ் மர்ஹாம் தனது தென்னமரிக்க அனுபவங்களை நூலாக்கினார். , அவருக்கு பழங்குடியினர் செய்த உதவிகளை, அக்காட்டின் அனைத்து தாவரங்களையும் அடையாளம் கண்டுகொண்ட பழங்குடியினரின் அறிவையெல்லாம் அந்நூலில் விவரித்த, அவரே ’’சின்கோன் என்னும் பிரபுவின் மனைவி மலேரியாவால் நோயுற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்து உயிர் காத்த மரப்ட்படை அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டு சின்கோனா மரம் என்னும் பெயர் பெற்றது’’ என்னும், இன்று வரையிலும் புழக்கத்தில் இருக்கும் புனைவை நூலில் எழுதி மேலும் பிரபலமாக்கியவர்.

வைஸ்ராய் லூயியின் அதிகாரபூர்வ நாட்குறிப்பு 1930 ல் கிடைத்த போது அவரது முதல் மனைவியான அனா இவர் வைஸ்ராயாவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே ஸ்பெயினில் மறைந்து விட்டார் என்னும் உண்மை தெரிந்தது

கணவருடன் தென்னமரிக்காவிற்கு வந்த அவரது இரண்டாம் மனைவி பிரான்சிஸ்கா (Francisca Henríquez de Ribera) நல்ல உடலாரோக்கியத்துடன் இருந்தார். அவருக்கும் பட்டைச்சாறு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. வைஸ்ராய்க்கும் பலமுறை கடும் காய்ச்சல் வந்திருக்கிறது எனினும் அவர் ஒருமுறைகூட சின்கோனா பட்டை பொடியை நிவாரணமாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை. மேலும் வைஸ்ராயின் இரண்டாம் மனைவியும் ஸ்பெயினுக்கு திரும்பிச்செல்லும் வழியில் உடல்நலக்குறைவால் கொலம்பியா துறைமுகத்திலேயே உயிரிழந்தார்.அவரும் ஸ்பெயினுக்கு செல்லவே இல்லை. எனவே பிரபுவின் மனைவிகள் மூலம் இந்தப்பொடி ஐரோப்பாவிற்கு அறிமுகமானது என்பது வலிந்து உருவக்காப்பட்ட புனைவுதான் என்பதை அவரின் நாட்குறிப்பு உறுதி செய்தது.

ஆனால் இக்கதை மிகப்பிரபலமானதாக அக்காலத்தில் இருந்ததால் 1742ல் தாவர வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் சின்கோன் அரசியின் பெயரால் சின்கோனா அஃபிஸினாலிஸ் என்று அம்மரத்துக்கு பெயரிட்டார். 

இந்த அறிவியல் பெயரில் chinchon என்பது தவறாக cinchon என்றிருப்பதால் 1874 ல் இது Chinchona. என சரியாக திருத்தப்பட வேண்டும் என்னும் வேண்டுகோள் பலரால் முன்வைக்கப்பட்டும் பெயர் இன்று வரை மாற்றப்படவில்லை.

கெச்சுவா பழங்குடியின மொழியில் குயினா (quina) என்றால் புனித மரப்பட்டை என்று பொருள். இது சில சமயம் பட்டைகளின் பட்டை எனும் பொருளில் quinquina என்றும் குறிப்பிடப்பட்டது. சின்கோனா மரப்பட்டை, பெருவிய பிசின் மரப்பட்டை இரண்டுமே குயினா என்றே குறிப்பிடப்படுகிறது. எனவே இதிலிருந்து ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டபோது அது குயினைன் என்று பெயரிடப்பட்டது.

கண்டுபிடிப்புக்கள்

ஆங்கிலேய மருத்துவரான தாமஸ் (Thomas Sydenham -1624–89) மிகத் திறமையாக சின்கோனா மரப்பட்டை சாற்றை சிகிச்சைகளுக்கு உபயோகித்து மலேரியா காய்ச்சலை பிற காய்ச்சல்களிலிருந்து வேறுபடுத்துவதை கண்டறிந்தவர்.

1790 ல் பிரெஞ்ச் வேதியியலாளர் ஆண்டனி (Antoine François de Fourcroy (1755–1809) சின்கோனா மரப்பட்டையிலிருந்து சிவப்பு நிறத்தில் ஒரு பிசினை பிரித்தெடுத்தார் அதில் ஆல்கலாய்டுகளைப் போன்ற குணங்கள் கொண்ட வேதிப்பொருட்கள் இருப்பதாக அறிவித்தார் எனினும் அந்த செம்பிசின் மலேரியாவை குணமாக்கவில்லை.

1800 வரை சின்கோனா மரப்பட்டை கரைசலாக்கப்பட்டு குடிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. 1811ல் போர்த்துக்கீசிய கப்பற்படை அறுவை சிகிச்சை மருத்துவரான பெர்னார்டினோ (Bernardino Antonio Gomez) சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைன் ஆல்கலாய்டை பிரித்தெடுத்து “cinchonino.” என பெயரிட்டார்.

1820 ல், பிரான்ஸின் வேதியியலாளர்கள் பியரி மற்றும் ஜோசப் (Pierre Joseph Pelletier & Joseph Bienaim Caventou) ஆகியோர் cinchonino” என்பது “quinine” மற்றும் “cinchonine.” இரு முக்கிய ஆல்கலாய்டுகளின் கலவை என கண்டறிந்தார்கள்

சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைனை பிரித்தெடுக்கும் முறையையும் இவர்கள் கண்டறிந்தார்கள். இது நவீன மருந்துத் தொழிலின் தொடக்கம் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.. அவர்கள் குயினைன் பிரித்தெடுக்க பாரிசில் ஒரு தொழிற்சாலையையும் நிறுவினர்,

அடுத்த முக்கிய திருப்பமாக 1833ல் ஹென்ரி மற்றும் டிலோண்டரால் குயினிடைன் (quinidine) பிரித்தெடுக்கப்பட்டது ( Henry and Delondre),

1844ல் சின்கோனிடைன் (cinchonidine) வின்க்கில் (Winckle) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு 1853 ல் இறுதியாக அது quinidine என பாஸ்டரால் பெயரிடபட்டது (Pasteur).

இதன் மூலக்கூறு வடிவம் 1854ல் ஸ்டெரெக்கரால் கண்டறியப்பட்டது( Strecker)

உலகின் முதல் செயற்கைச்சாயமான மாவீன் 5 (mauveine) வில்லியம் ஹென்ரியால் (William Henry Perkin) குயினைனை கண்டுபிடிக்கும் முயற்சியின் போது1856ல் கண்டறியபட்டது,

குயினைனின் ரசாயனத்தயாரிப்பு பல சிக்கல்களை தாண்டி 1944ல் சாத்திமாமயிற்று. பலர் இந்த முயற்சியில் இறங்கி படிப்படியாக முன்னேற்றம் கண்டனர்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில் சின்கோனா மரப்பட்டை மற்றும் குயினைன் வர்த்தகத்தில் டச்சு உலகின் ஆகப்பெரிய நாடாக இருந்து 1944 ல் ரசாயன குயினைன் தயாரிப்பு துவங்கும் வரை டச்சு அரசே குயினைன் சந்தையில் கோலோச்சியது

ஹோமியோபதி என்னும் மருத்துவ முறையும் சின்கோனா பட்டையின் மருத்துவ பண்புகளை சோதிக்கும் முயற்சியில் தான் உருவானது. ஹோமியோபதியை தோற்றுவித்தவர். சாமுவேல் ஹானிமன்(1755-1843)

மருத்துவரான இவர் அக்காலத்தின் மருத்துவ ஆய்வு முறையின் மீது கடும் அதிருப்தி கொண்டிருந்தார். இரத்தம் சுத்திகரிக்க நோயாளி மீது அட்டையை விட்டு உறிஞ்ச செய்வது, இருதயத்தின் இரத்தக் குழாய்களை வெட்டி இரத்தத்தை வடியவிடுவது போன்ற கொடிய சிகிச்சையால் பலர் கொல்லப்பட்டனர்.

இவற்றால் டாக்டர் ஹானிமென் மருத்துவ தொழிலை விட்டு விட்டார். பல ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர் .1796 ல் வில்லியம் கல்லன் என்பவரின் மருத்துவ நூலை ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கு மொழி மாற்றிக் கொண்டிருக்கையில் பெருவின் மரப்பட்டை காய்ச்சலை குணமாக்குவது குறித்து எழுதி இருப்பதை கண்டார். அதை பரிசோதித்து பார்க்கையில் தான் ’’ஒத்தது ஒத்ததை குணமாக்கும்’’ என்னும் விதியின் அடிப்படையிலான சிகிச்சை முறையான ஹோமியோபதி 15 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவரால் உருவாக்கப்பட்டது.

யுனானி மருத்துவ முறையை தோற்றுவித்தவரான காலனின் குருதி நீக்கச் சிகிச்சையும் குயினைனின் வெற்றிக்கு பிறகுதான் நிறுத்தப்பட்டது

தொற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்பட்ட முதல் இயற்கை இரசாயன கலவை குயினைன் தான் இன்று, குயினைன் மருத்துவ நோக்கங்களுக்காக அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இது மலேரியாவைத் தடுக்கப் பயன்படுவதில்லை, மாறாக நோய்க்கு காரணமான உயிரினமான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்தின் ஹீமோகுளோபினை கரைத்து வளர்சிதைமாற்றம் செய்யும் திறனில் குயினைன் குறுக்கிடுகிறது.

சிகிச்சை வரலாறு

சின்கோனாவின் எந்த வகை மரத்தின் பட்டை வீரியமிக்கது, பட்டைபொடியில் செய்யப்படும் போலி மலேரிய மருந்துகள், குயினைனின் பக்க விளைவுகள் இவை அனைத்தும் சேர்ந்து சின்கோனாவை மலேரியாவுக்கான தீர்வாக மட்டும் இல்லாமல் பெரும் கேள்விக்குறியாகவே ஆக்கி இருந்தது,

இம்மருந்தை எடுத்துக்கொண்ட நோயாளிகள் சிலருக்கு கொப்புளங்கள் உண்டாகின சிலருக்கு உதடுகள் எரிந்து புண்னாகின இன்னும் சிலருக்கு காதுகளில் விசித்திரமான ஓலிகள் கேட்டன பலருக்கு காது செவிடாகி, கண்பார்வையும் குறைந்தது .

.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் பயன்பட்டு வரும் ஆர்டிமிசின் என்னும் தாவரமருந்தும் மலேரியாவுக்கு எதிரானதுதான். இதுவும் குயினைனுக்கு மாற்றாக பயன்படுத்த பட்டது

மலேரியாவினால் இறப்பு அதிகமாகிக்கொண்டே இருந்தாலும் சின்கோனா மரப்பட்டைகளை சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள பலரும் தயங்கினார்கள் ஆங்கிலேய மருந்தாளுநர் ராபர்ட் டால்போர்தான் (Robert Talbor) 17 ம் நூற்றாண்டின் இறுதியில் சின்கோனா பட்டையின் உபயோகங்களை எளியவர்களுக்கும் புரியும்படி விளக்கினார். அப்படியும் பலருக்கு சின்கோனாவை சிகிச்சைக்கு எடுதுக்கொள்ள பெரும் மனத்தடை இருந்ததால், 1670களில் சின்கோனாவைவிட சிறந்தது என்னும் பெயரில் அதே சின்கோனா என வெளிப்படையாக தெரிவிக்காமல் ஒரு ரகசிய மருந்து என சொல்லி சின்கோனா பட்டைச்சாற்றினால் பலரை குணமாக்கினார்.

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் மற்றும் அவரது இளம் மகன் பதினாலாம் லூயிஸ் ஆகியோரையும் டால்போர் வெற்றிகரமாக சின்கோனா மரப்பட்டையை சிகிச்சையாக அளித்து மலேரியாவிலிருந்து மீட்டார்

டால்போர் சின்கோனா மரப்பட்டை கஷாயாங்களின் பலவித தயாரிப்பு முறைகளை இளவரசர் லூயிஸ்க்கு தனது இறப்புக்கு பின்னரே அவை வெளியிடப்படவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் எழுதிக் கொடுத்திருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவர் எழுதிய சின்கோனாவை குறித்த அனைத்தும் அடங்கிய நூலான ” Le remede Anglais pour la guerison des fievres. 1682 ல் பிரான்ஸ் மன்னரால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதன் ஆங்கில வடிவம் ‘Talbor’s wonderful secret for curing of agues and fevers. வெளியானது இவ்விரண்டு நூல்களும் மக்கள் மத்தியில் அதுவரை இருந்த குயினைன் குறித்த சித்திரத்தை அடியோடு மாற்றியது

சின்கோனா மரப்பட்டையின் விலை 25 லிருந்து 100 ஃப்ரேங்க்குகள் உடனடியாக உயர்ந்தது. ’’இறை நம்பிக்கையும் பிரார்த்தனையும் செய்யாத அற்புதங்களை கப்பல்களில் வந்து கொண்டிருக்கும் சின்கோனா மரப்பட்டைகள் செய்யும்’’ என்பது அப்போது பிரபலமான ஒரு வாசகமாக புழக்கத்தில் இருந்தது

1866 லிருந்து 68 வரை தென்னிந்தியாவின்’ மெட்ராஸ் சின்கோனா’ கமிஷனால் பெருமளவில் சின்கோனா பட்டைகளின் காய்ச்சல் குணமாக்கும் திறன் பரிசோதிக்கப்பட்டது. 2472 மலேரியா நோயாளிகளில் சோதனை நடத்தி அவர்களில் 846 பேருக்கு குயினைனும்,664பேருக்கு குயினிடைனும், 559 பேருக்கு சின்கோனைனும் 403 பேருக்கு சின்கோனிடைனும் அளிக்கப்பட்டது. இவர்களில் 2445 நோயாளிகள் குணமடைந்தனர் 27 பேர் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

குணமாக்கும் இயல்புக்கு சமமாகவே நச்சுத்தன்மையும் கொண்டிருக்கும் ஆல்கலாய்டுகளான குயினைன் மற்றும் குயினைடைன் ஆகியவை மிக அதிகமாக மலேரியா சிகிச்சையில் உபயோகப்படுத்தப்பட்டன.

முதல் உலகப்போரின் போது குயினைன் மட்டுமே மலேரியாவிற்கான ஒரே சிகிச்சையாக இருந்தது ரொனால்ட் ரோஸ்.(Ronald Ross) கொசுக்களின் மூலம் மலேரியா பரவுதலை கண்டறிந்த பின்னர் குயினைன் உபயோகம் பல மடங்கு அதிகரித்தது

உலகப்போர் மருத்துவ முகாம்களில்தான் ரத்தத்தில் இருந்த மலேரிய ஒட்டுண்ணிகளுக்கெதிராக குயினைன் வீரியமிக்க மருந்தாக செயல்பட்டாலும், ஈரலை தாக்கும் மலேரியா ஒட்டுண்ணிகளுக்கெதிராக அவை வேலை செய்வதில்லை என்பது கண்டறியப்பட்டது. அது எதனால் என்றும் அப்போது அறிந்து கொள்ள முடியவில்லை.

1917 ல் சர் வில்லியம் ஆஸ்லர் மலேரியாவை குயினைன் கொண்டு குணப்படுத்த முடியாதவர்கள் மருத்துவத்துறையை விட்டு விலகிவிடலாம் என்று அறிவிக்கும் அளவுக்கு மலேரியாவுக்கு எதிராக குயினன் 1920 வரை வெற்றிகரமாக செயல்பட்டது. 1920ல் மலேரியா சிகிச்சையில் குளோரொகுயின் அறிமுகமானபோது குயினைனின் பயன்பாடு ஏறக்குறைய நின்றுபோனது.

ஒட்டுண்ணிகளால் குளோரோகுயினுக்கான உயிர்ம எதிர்ப்பு (resistance) உருவானபோது மீண்டும் குயினைன் தனது இடத்தை பிடித்துக் கொண்டது

மலேரியா சிகிச்சைகள் வெற்றிகளைத் தந்தாலும், சின்கோனா ஆல்கலாய்டுகளின் பயன்பாடு உயிருக்கு ஆபத்தான எதிர்விளைவுகளையும் உருவாக்கி இரு முனைகளும் கூர் கொண்ட கத்தியை போலிருந்தது.

சிகிச்சை முறைகள்

கசப்புச் சுவையுடன் சிறிது எலுமிச்சை நறுமணம் கொண்டிருக்கும் குயினைன் பட்டைப்பொடி. பெரும்பாலும் நீரில் கரைத்து அருந்தப்படும் இவை மாத்திரைகளாகவும் தயாரிக்கப்பட்டன.

பிரிட்டிஷ் அதிகாரிகள் சோடா மற்றும் சர்க்கரையில் குயினைன் பொடியை கரைத்து தயாரித்த டானிக்கை அருந்தினர். இந்தக் கலவையை உருவாக்கிய எராமஸ் (Erasmus Bond) 1858ல் அதற்கு காப்புரிமை பெற்றார். பல மருந்து நிறுவனங்கள் 1860 களில் இந்த டானிக் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டன. 1880 களில் பிரிட்டிஷ் இந்தியாவின் செயல்பாட்டாளர்களாயிருந்த சில நைஜீரியர்கள் இந்த டானிக்குடன் சிறிதளவு ஜின்னையும் கலந்தனர். சிறிது போதையும் அளித்த இந்த மலேரிய டானிக் ஒரு நூற்றாண்டு காலம் மக்களிடையே வெகுவாக புழங்கியது

மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் போது, ​​குயினின் மாத்திரை வடிவில் கொடுக்கப்படுகிறது. குயினின் நீர் அல்லது டானிக் நீர் வடிவிலும் விற்கப்படுகிறது, இது ஜின் மற்றும் ஓட்கா போன்ற மது வகைகளுடன் ஒரு பிரபலமான கலவையாக உலகம் முழுவதும் அருந்தப்படுகிறது. குயினின் கலந்த பானங்களில் “Q” என்ற எழுத்து குறிக்கப்பட்டிருக்கும்.

1889லிருந்து புரோமோ குயினைன் (Bromo Quinine) என்னும் பெயரில் சந்தைப்படுத்தப்பட்ட குயினைன் 1960 வரை விற்பனையானது. குயினைன் கோகெயின் மற்றும் ஹெராயின் போன்ற போதை மருந்துகளில் கலப்படம் செய்யப்படுகிறது

செயற்கை குயினைன் தயாரிப்பு மிகுந்த செலவு பிடித்த ஒன்றாக இருந்தது. தொடர்ந்து chloroquine, primaquine, proguanil, மற்றும் artemisinin ஆகியவை மலேரியாவிற்கு எதிராக செயல்படுவதை நிரூபிக்க முடிந்ததென்றாலும் இன்னும் இயற்கை குயினைனுக்கு இணையான பாதுகாப்பான ஒன்றை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடர்கின்றன. மொத்த குயினைன் உற்பத்தியில் 40 சதவீதம் மருத்துவத்துறையிலும் 60சதவீதம் உணவுத் தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றது

அதன் செயல்திறன் முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்ட 400 ஆண்டுகளுக்குப் பிறகும் குயினின் ஒரு முக்கியமான மலேரியா எதிர்ப்பு மருந்தாகவே உள்ளது. இருப்பினும், 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேரியாவிற்கான முதல்-வரிசை சிகிச்சையாக உலக சுகாதார அமைப்பால் (WHO) குயினின் பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் குறைவான பக்கவிளைவுகளுடன் குயினைனுக்கு இணையாக பலனளிக்கும் பிற மருந்துகள் உள்ளன. எனெவே ஆர்ட்டெமிசினின் இல்லாதபோது மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கின்றது. மூட்டுவலி மற்றும் காக்காய்வலிப்புக்கு சிகிச்சையளிக்கவும் குயினின் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது chloroquine மற்றும் Atabrine இரண்டும்தான் மலேரியா சிகிச்சையில் பயன்படுகின்றன. இம்மருந்துகளுக்கான எதிர்ப்புத்தன்மையை மலேரியா ஒட்டுண்ணிகள் உலகின் சில பகுதிகளில் உருவாக்கி உள்ளன. வியட்நாமில் அப்படியான எதிர்ப்புத்திறன் கொண்ட ஒட்டுண்ணிகள் இருப்பதால் அங்கு மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க இயற்கை குயினைன் உபயோகபடுத்தப்படுகிறது.

குயினின் இன்று

குயினின் இன்றும் தென் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றாலும், உலக குயினைன் சந்தையின் பெரும்பகுதி தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவால் வழங்கப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தாலும் உலக மருந்து சந்தையில் போட்டியிட முடியாமல் ஒதுங்கி இருக்கிறது

இயற்கையாக கிடைக்கும் குயினைன் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் பன்னாட்டு நிறுவனங்களால் காப்புரிமை பெற்றவையாதலால் அவை உற்பத்தியாகும் நாடுகளுக்கும், அவற்றின் பயன்பாடுகளை முதலில் உருவாக்கிய பழங்குடிச் சமூகங்களுக்கும் எந்த நன்மையும் கிடைப்பது இல்லை என்பதற்கு குயினைன் வர்த்தகமும் மற்றுமோர் எடுத்துக்காட்டு.

லெட்ஜர்

1890 ல் தனது இறுதிக் காலத்தில் வறுமையில் வாடிய லெட்ஜருக்கு உதவ கிளிமென்ஸ் மர்ஹான் பெரிதும் முயன்றார் இந்திய மற்றும் டச்சு அரசுகள் ஆரம்பத்தில் அவரின் வேண்டுகோளை பரிசீலிக்கவில்லை. எனினும் 1897ல் டச்சு அரசு லெட்ஜெருக்கு வருடத்திற்கு 100 டாலர் உதவித்தொகை அளிக்க ஒத்துக்கொண்டது. உதவித்தொகை கிடைத்த 9 வருடங்கள் கழித்து 1906 ல் தனது 87 வது வயதில் 1906ல் லெட்ஜெர் உயிரிழந்தார்

இந்தியாவிலும் ஜவாவிலும் வளரும் ஆயிரக்கணக்கான சின்கோனா மரங்கள் லெட்ஜெரினால் தருவிக்கப்பட்ட விதைகளிலிருந்து உருவனாவை.
1900த்தில் உலகின் மொத்த குயின்னைன் உற்பத்தியில் ⅔ பங்கு ஜாவாவில் இருந்து கிடைத்தது. இத்தனை வருடங்கள்,கழித்தும் லெட்ஜர் வகை சின்கோனாக்களே அதிக குயினைன் அளிக்கின்றன.

Gabriele Grammiccia, எழுதிய சார்ல்ஸ் லெட்ஜரின் வாழ்க்கை 5 என்னும் நுல் அவர் எத்தனை அசாதாரணமான மனிதர் என்பதை நமக்கு சொல்கிறது. 18 வயதில் அல்பகா ஆடுகளுடன் துவங்கிய லெட்ஜரின் வாழ்க்கையை அல்பகா ஆடுகளின் ரோமமும் சின்கோனா மரப்பட்டையுமே வடிவமைத்தது என்று சொல்லலாம்.

சிட்னியில் இருந்த லெட்ஜரின் கல்லறை (Rockwood Methodist Cemetery in Sydney) சிதிலமடைந்து அவரின் இரண்டாவது மனைவியின் சகோதர சகோதரிகளின் பெயர் மட்டும் அதில் மீதமிருந்தது. சமீபத்தில் அவரின் சுயசரிதை எழுதிய கிரேமிசியாவால் கல்லறை புதுப்பிக்கப்பட்டு சார்லஸ் லெட்ஜரின் பெயரும் அதன் கீழே உலகிற்கு குயினைன் அளித்தவர் என்றும் பொறிக்கப்பட்டது

தற்போது மலேரியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன, சின்கோனா இனத்தின் வரலாற்று ரீதியான அதிகப்படியான சுரண்டலால் அதன் 17 இனங்கள் பெருவில் அழிந்துவரும் இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன,

1895ல் ஆய்வாளர்கள் ஆண்டஸ் மலைப்பகுதிகளில் 25000 சின்கோனா மரங்கள் இருந்ததை கணக்கிட்டிருந்தார்கள் இப்போது அதே நிலப்பரப்பில் இருக்கும் போடோகார்பஸ் தேசிய பூங்காவில் வெறும் 29 மரங்கள் மட்டுமே இருக்கின்றன,

பெருவின் தேசிய கொடியில் இம்மரம் பொறிக்கப்பட்டிருக்கிறது தென்னமரிக்க உள்ளூர் இயற்கை பாதுகாப்பு அமைப்புக்கள் சின்கோனா மரங்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. ’’ஆசிர்வதிக்கபட்ட விதைகள்’’ என்னும் பொருள் கொண்ட சூழல் அமைப்பான செமில்லா பெண்டிட்டா (Semilla Bendita) 2021 ல் பெரு தன்னாட்சி பெற்ற 200 வது ஆண்டை கொண்டாடும் விதமாக 2021 சின்கோனா விதைகளை நட்டுவைத்து அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது மேலும் இவ்வமைப்பு பல்துறை வல்லுநர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒருங்கிணைத்து சின்கோனா மரங்களின் மரபியல் வளரியல்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை முன்னெடுக்கிறது உள்ளூர்வாசிகளின் பங்களிப்பு இம்மரங்களின் பாதுகாப்பில் இருப்பதையும் இந்நிறுவனம் உறுதி செய்து கொள்கிறது

கியூ பூங்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு முக்கிய இடங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்னமரிக்கவிலிருந்து கொண்டு வரப்பட்ட சின்கோனா மரப்பட்டைகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்துவந்த பாதைகளை ஆராய்ந்தோமானால் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கும் சாகசக்கதைகளையெல்லாம் மிஞ்சும் சாகசமும் மர்மமும் நிறைந்தவையாக அவை இருக்கும் .

குயினைன் கடந்துவந்த பாதை ஒரு மாபெரும் வலையென வரலாற்றில் விரிந்திருக்கிறது சின்கோனா மரப்பட்டை பெறப்பட்ட , தென்-அமெரிக்காவின் ஆண்டஸ் காடுகளிலிருந்து பிரிட்டிஷ் தாவரவியல் பூங்காவிற்கும், தென்னிந்தியாவின் காலனித்துவ தோட்டங்கள் முதல் இந்தோனேசியாவின் ஜாவா தீவு வரையிலும் உலகம் முழுவதும் குயினைனின் வரலாறு விரிந்துள்ளது..

மிக எளிதாக தாவர அடிப்படையிலான மருந்துகளை மாற்று மருத்துவம்’ என்று நினைத்து மக்கள் கடந்து விடுகிறார்கள். மேற்கத்திய கலாச்சாரத்தில் மருத்துவர்களால் தற்போது பரிந்துரைக்கப்படும் 7000 க்கும் மேற்பட்ட மருத்துவ கலவைகள் தாவரங்களிலிருந்து பெறப்பட்டவை, ஆனால் மனித குல வரலாற்றில் குயினைன் உள்ளிட்ட பல முக்கிய உயிர்காக்கும் மருந்துகளின் பொருட்டு நாம் தாவரங்களுக்கு என்றென்றைக்குமாக கடன் பட்டிருக்கிறோம். பல்லுயிர் பெருக்கமும் மனித ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக்கொண்டு செல்வதைத்தான் குயினைனின் இந்த கதை காட்டுகிறது.

மமானியைப்போல பல்லாயிரக்கணக்கான மனிதர்களை பலி கொண்டபின்னரே மலைத்தெய்வங்கள் நமக்கு பலவற்றை அருளியிருக்கின்றன மமானியின் பெயரில் அந்த சின்கோனா மரம் பெயரிடப்படவில்லை. அவர் வரலாற்றில் மறக்கப்பட்டவர். மறைக்கப்பட்டவர். ஆனால் வரலாற்றின் கண்களுக்கு தெரியாமல் பலியான பல்லாயிரக்கணக்கானோர் நம் உயிர்காக்கும் மருந்துகள் கடந்து வந்த பாதையில் குருதிப்பலி கொடுத்திருக்கிறார்கள்

கோவிட் தொற்றில் தப்பி பிழைத்திருக்கும் நமக்கு இனி மலேரியா வரவேண்டாம், சாதாரண காய்ச்சல் வந்தால் கூட நம் நலனுக்கென உயிரிழந்த மமானி, உயிருக்கு துணிந்து பல சாகசங்கள் செய்து அடுத்த தலைமுறைகளுக்கு தேவையானவற்றை அபாயங்களை பொருட்படுத்தாமல் கண்டறிந்தவர்கள், எந்த சொந்த நலனுக்காகவும் இன்றி மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த கிருஸ்துவ அருட்பணியாளர்கள் என சிலரையாவது நினைத்துப்பார்க்கலாம்

*2021ல் மலேரியாவுக்கான அங்கீகரிக்கப்பட ஒரே தடுப்பு மருந்து Mosquirix. என்னும் சந்தைப் பெயரில் இருக்கும் RTS, S. உலக சுகாதார நிறுவனம் இதனை மலேரியா தொற்று இருக்கும் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பரிந்துரை இருக்கிறது

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑