கோவிட் தொற்று காலத்தில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெறவில்லை. ஆன்லைன் என்பதை அப்போதுதான் அறியத் துவங்கி இருந்த மாணவர்கள் தட்டுத்தடுமாறி கல்லூரியில் சேர முயன்று மிகுந்த சிரமங்களுக்கிடையில் கல்லூரிக்கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி கிடைத்த படிப்பில் சேர்ந்தார்கள்
கடந்த இருவருடங்ளுமே மிக குறைந்த அளவில்தான் தாவரவியல் துறைக்கும் பிற அடிப்படை அறிவியல் துறைகளான இயற்பியல் வேதியியல் ஆகியவற்றிற்கும். மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள்.
பள்ளி இறுதியிலும் நேரடி வகுப்புகள் நடந்திராதலால் இங்கு வந்து சேர்ந்த மாணவர்களுக்கு எந்த அடிப்படை கல்வியறிவும் ஒழுக்கம் குறித்த உணர்வும் இல்லையென்பது வருந்தத்தக்க விஷயம் என்றால் அதை காட்டிலும் அதிர்ச்சியளித்தது ஆன்லைன் தேர்வுகளில் காப்பி அடித்து பழக்கம் ஆகிவிட்டிருக்கும் அவர்களுக்கு முறையான தேர்வெழுதும் பயிற்சிகளை அளிப்பதில் இருந்த சிக்கல்கள் தான். பெற்றோர்களுக்கும் அப்படி அவரவர் குழந்தைகள் காப்பியடித்து தேர்வெழுதியது பெரும்பாலும் தெரிந்திருந்தும் எவரும் கண்டித்திருக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் அவர்களை திருத்தி சரியான வழிக்கு கொண்டு வர திணறிக் கொண்டிருக்கிறோம்.
இந்த வருட மாணவர் சேர்க்கை வழக்கம் போல நேரடியாக கடந்த ஒருவாரமாக நடந்தது. கோவிட் காலத்துக்கு பிறகு பட்டிதொட்டிகளிலெல்லாம் கம்ப்யூட்டர் என்னும் சொல் புழங்கி அனைவருக்கும் பரிச்சயமாகி விட்டிருக்கிறது மேலும் கணிப்பொறித் துறையில் எப்படியும் அறுபதாயிரத்துக்கு குறையாமல் சம்பளம் வரும் என்பதும் மட்டும் தெரிந்திருக்கிறது
சங்கரன் கையேடு
எனவே அடிப்படை அறிவியல் துறைகளில் சேர்ந்து பயில மாணவர்கள் தயாராகவே இல்லை பெற்றோர்களுக்கும் அப்படியான துறைகள் இருப்பதும் அவற்றின் முக்கியத்துவமும் தெரியவில்லை. 90 சதவீதம் கணினி அறிவியல் படிப்பைத்தான் நாடுகிறார்கள் அவர்களின் குழந்தைகள் பள்ளி இறுதியில் கணினி அறிவியல் படித்திருக்கவில்லையெனினும் எப்படியும் அந்த படிப்பில் கல்லூரியில் சேர முயற்சிக்கிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்த நான் ஒரு மாணவனின் தந்தையிடம் அவர் மகன் பள்ளிப்படிப்பில் கணினி அறிவியல் படித்திருக்காததால் இப்போது அதில் கல்லூரி படிப்பை தொடர முடியாது என்று அரை மணி நேரம் செலவழித்து விளக்கினேன். அவர் பதிலுக்கு ‘’பணம் எத்தனை செலவானாலும் பரவாயில்லை, எப்படியும் கம்ப்யூட்டர் சயின்ஸில் ஒரு சீட் வேணுங்க’’ என்றார்.
தாவரவியல் படிப்பின் முக்கியத்துவத்தை கடந்த வாரத்தில் பலநூறு பெருக்கு நெஞ்சடைக்க, தொண்ட வரள விளக்கினேன் ஆனால் யாருக்கும் புரியவில்லை வேண்டா வெறுப்பாகவும், மிககுறைந்த மதிப்பெண் பெற்று வேறெங்கும் இடம் கிடைக்காதவர்களுமாக வெகு சிலரே இத்துறையில் சேர்ந்திருக்கிறார்கள். இதில்தான் சேர்ந்து படிக்க வேண்டும் என்று இரண்டே இரண்டு மாணவிகள் மட்டும்தான் வந்தார்கள்.
எமிலியின் ஒவியம்
என் மாணவிகள் பலர் கோவையை சுற்றி இருக்கும் நகரங்களில் காஃபி வாரியத்திலும், இந்திய தாவரவியல் அளவாய்வு அமைப்பு, வனமரபியல் மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனங்களில் நல்ல வேலைகளிலும், காட்டிலாகா அதிகாரிகளாகவும், நல்ல ஆராய்ச்சியாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள். இனி அப்படியான அமைப்புக்களில் எதிர்காலங்களில் பணியாற்ற எத்தனை பேர் தகுதி கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்,
கல்லூரிகளில் அடிப்படை அறிவியல் துறைகளின் எதிர்காலம் நிச்சயமற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வியின் போதே அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு அத்துறைகளின் மேதைகளை பற்றி, முக்கியத்துவத்தை பற்றியெல்லாம் கற்றுத்தரவேண்டும். அப்போதுதான் அப்படியான துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாகும். இப்போதைய பெற்றோர்களும் மருத்துவம், பொறியியல் அடுத்தாக கணினி அறிவியல் இவற்றைத் தவிர தங்கள் குழந்தைகளுக்கு வேறெதிலும் எதிர்காலம் இல்லையென்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம் குறித்து கவலைப் பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல.
J S Gamble 1847-1925 ல் உருவாக்கிய flora of madras presidency யின் அனைத்து தொகுப்புகளும் மிக அரிய பொக்கிஷங்கள். கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் நான் அவற்றை பலமுறை உதவிக்கென எடுத்து வாசித்திருக்கிறேன். அவற்றின் உதவிகொண்டு பல நூறு தாவரங்களை அடையாளம் கண்டிருக்கிறேன், அதைப்போலவே 1817-1911 ல் Hooker உருவாக்கிய Flora of British India தொகுப்புக்கள், பிலிப், ஃபைசன் 1915 ல் உருவாக்கிய பழனி கொடைக்கானல் மற்றும் ஊட்டி மலைப்பகுதிகளில் 6,500 அடி க்கு மேலான உயரத்திலிருக்கும் தாவரங்களை குறித்த அரிய நூலாகிய flora of Nilgiri and pulny hill tops, போன்ற நூல்களிலிருந்து பயனடைந்தவர்களே இப்போது இத்துறையில் பணியாற்றும் என்போன்ற ஆயிரக்கணக்கானோர். ஃபைசனின் இந்த நூலத்தொகுப்பு 1975க்குள் 15 பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிலிப் ஃபைசனின் நூல்
தமிழ் விக்கியில் இவர்களை குறித்த பதிவுகள் இருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.ஒரு பதிவை வாசிக்க துவங்கி ஒன்றிலிருந்து அதன் தொடர்புடைய மற்றொன்று என்று தொடர்ந்து வாசிப்பது பழக்கமாகிவிட்டிருக்கிறது அனைத்தும் அரிய பதிவுகள்
இந்திய தாவரவியல் கழக (Indian Botanical Society) அமைப்பை உருவாக்கி, நடத்த உதவி, அந்த அமைப்பு சார்ந்து இந்திய தாவரவியல் இதழ் (Journal of the Indian Botanical Society) வெளியிடுவதிலும் முன்முயற்சி எடுத்த. ஃபைசனின் பல மாணவர்களில் முதன்மையானவர் மா.கிருஷ்ணன்.
கிருஷ்ணன் தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளுக்கு முன்னோடி. மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமானவர். இவர் நீர்வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியை பிலிப் ஃபைசனின் மனைவி டயானா ரூத் ஃபைசனிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார். கொடைக்கானலில் ஃபைசனுடன் ஆய்வுக்குச் செல்கையில் புகழ்பெற்ற உயிரியலாளராரும், இந்திய இயற்கையியலின் முன்னோடிகளில் ஒருவருமானஆல்பர்ட் பெளர்ன் மற்றும் அவரது மனைவி எமிலி டிரீகிளேஷேர் ஆகியோருடனும் அவருக்கு தொடர்பு உருவானது.
பௌர்ன் நீர்வாழ் உயிர்களுக்கும் நீரின் ஆக்ஸிஜன் அளவுக்குமான உறவு பற்றிய முக்கியமான ஆய்வை செய்தவர். ஓவியரான அவர் மனைவி எமிலி இந்தியத் தாவரவியல் ஆய்வாளர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.ஃபைசனின் flora of kodaikanal நூலில் எமிலியின் தாவரவியல் சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.எந்த வசதியும் இல்லாத அந்தக்காலத்தில் இத்துறையின் மீதான ஈடுபாட்டினாலும் அப்பணிகளின் எதிர்கால முக்கியத்துவத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருந்ததாலும் இவற்றை செய்து முடித்திருக்கிறார்கள் .
நான் இளங்கலை அறிவியல் படித்த அதே துறையில்தான் இப்போது பணிபுரிகிறேன். துறையின் ஆய்வகம் நோய் தொற்றுக் காலத்தில் ஏகத்துக்கும் சேதமடைந்திருந்தது. பல அரிய தாவர சேகரிப்புகள் பூஞ்சைத்தொற்றில் அழிந்திருந்தன. மேலும் உலர் தாவரங்களில் பலவும் பூச்சி அரித்து வீணாகியிருந்தன. எனவே இரண்டு உதவியாளர்களுடன் பலநாட்கள் செலவழித்து ஆய்வகத்தை சமீபத்தில் சுத்தம் செய்தேன் ஆய்வக அலமாரிகளில் ஒன்றில். மறைந்த என் ஆசிரியரும் நன்னீரியலில் (Limnology) மிக முக்கியமான ஆய்வுகள் பலவற்றை செய்து பல புதிய பாசி வகைகளை கண்டறிந்தவரான திரு சங்கரன் 1972ல் இருந்து 1975 வரை தொடர்ச்சியாக திருமூர்த்திமலை, கொடைக்கானல், வால்பாறை அட்டகட்டி என பல மலைப்பிரெதேசங்களுக்கு பயணித்து அப்பகுதியின் தாவரங்களை பட்டியலிட்ட ஒரு சிறிய நோட்டுப் புத்தகம் குப்பையில் கிடந்தது.
தான் பயணித்த இடங்கள், கடல்மட்டத்திலிருந்து அப்பகுதியின் உயரம், நேரம் ஆகியவற்றுடன் 477 தாவரங்களை பட்டியலிட்டு சிலவற்றை கேள்விக்குறியிட்டும் சிலவற்றை அன்றைக்கு மேலதிகம் தேடி வாசிக்க வேண்டும் என்றும் குறிப்பு எழுதி இருக்கிறார், அவர் அந்த முக்கியமான ஆய்வை எந்த காரணத்தினால் முடிக்காமல் விட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த பட்டியல் தகவல்களுடன் மேலும் சில வருட ஆய்வை தொடர்ந்தால் அம்மலைப்பகுதிகளின் flora வை ஃபைசனைப்போல உருவாக்கிவிடலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் தான் இல்லை. பொக்கிஷமாக இதை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்
ஏன் தாவரவியல் படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மிக முக்கியமான இது போன்ற ஆய்வுகள் செய்த ஃபைசன், எமிலி, மா,கிருஷ்ணன் ஆகியோரின் விக்கி பதிவுகளை வாசித்தால் இத்துறையின் முக்கியத்துவம் புரிந்துவிடும். இவர்களை தமிழ் விக்கி ஆவணப்படுத்தியது எத்தனை முக்கியம் என்பதுவும் புரியும்
சமீபத்தில் பாலக்காடு தோனி வனத்தில் யானை சிவாவை பார்க்க சென்றிருந்தபோது அவனும் அவன் உடன்பணிபுரிபவர்களும் ஒரு யானையை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்கள். அந்த யானைக்கு மதநீர் வடிய துவங்கி விட்டிருந்தது. உடனிருந்த இளையவர்களுடன் பேசிக்கொண்டே சங்கிலியால், யானையை இறுக்க பிடித்து இழுத்துக்கொண்டிருந்த சிவா ’’அவனொரு சுக்கும் அறியில்லா”என்று யாரையோ திட்டிக்கொண்டிருந்தான்.
அதற்கு சில நாட்கள் முன்புதான் ஜிஞ்சிபர் அஃபிசினாலிஸ் என்னும் இஞ்சியை குறித்து பொருளாதார தாவரவியல் பாடம் நடத்தி இருந்தேன். உலர்ந்த இஞ்சி என்னும் சுக்கு அதன் பயன்கள் ஜிஞ்சரோல், ஷேகோல், ஜிஞ்சரோன் என்று அதன் பயன்களை வேதிச்சேர்மானங்களை நடத்திய எனக்கு ஏன் சுக்கை வசையாக பயன்படுத்துகிறார்கள் என்று யோசனையாக இருந்தது
நாம் இப்படி பல காய்கறி பழங்களின் பெயர்களை தாவரவியல் பொருட்களை வசையாக பயன்படுத்திகொண்டிருக்கிறோம்.
உனக்கு ஒரு வெங்காயமும் தெரியாது
போடா புண்ணாக்கு
மாங்காய் மடையன்
முந்திரிக்கொட்டையாட்டம் முன்னாடி நிக்கறான்
போடா புல்லே!
என்ன வெண்டைக்காயாட்டாம் பேசறே?
தேங்கா மண்டையன்
ஒரு கத்தரிக்காயும் வேண்டாம் சும்மாயிரு
போடா முட்டைகோஸ்
சமீபகாலங்களில் சூரியும் சிவகார்த்திகேயனும் அறிமுகம் செய்த்
போடா பொட்டேட்டோ, போடா டொமேட்டோ
பழந்தமிழும் கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்று சொல்லுகிறது கனி நல்லது காய் அல்லது என்னும் பொருளில்
இப்படி இந்திய மொழிகளில், உலகநாடுகளில், இலக்கியங்களில் இந்த வகையான vegetable insults இருக்குமாயிருக்கும், ஒவ்வொரு காய் வசவுக்கும் பின்னணியும், காரணமும் இருக்கும் இதைக்குறித்து ஒரு கட்டுரை எழுத உத்தேசித்திருக்கிறேன். பிற மொழி காய் கனி தாவர வசவுகள் அறிந்தவர்கள் உதவலாம்.
1971,ல் கலிபோர்னியாவின் சான் ராஃபெல் பள்ளியின் ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு தங்களை ’வால்டோஸ்’ என்று அழைத்துக் கொண்டனர். அவர்கள் கையில் தற்செயலாக கிடைத்திருந்த ஒரு வரைபடம் பள்ளியின் அருகிலிருக்கும் அடர் காட்டுக்குள் சட்டவிரோதமாக வளர்க்கப்படும் போதைச்செடிகளின் இருப்பிடத்தை காட்டியது.
ஸ்டீவ், டேவ், ஜெஃப்ரி, லேரி மற்றும் மார்க் ஆகிய அந்த ஐவரும் மாலை பள்ளி முடிந்த பின்னர் ரகசியமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று கூடி அந்த செடிகளை தேடிக்கண்டுபிடிக்க முடிவெடுத்தனர்.
வால்டோஸ் குழுவினர் தற்போது
மறுநாள் பள்ளி வளாகத்தின் பின்புறமிருந்த லூயி பாஸ்டரின் வெண்கலச்சிலையின் அருகிலிருந்த பீச் மரப்பொந்திற்குள் 4;20 என்று மட்டும் எழுதியிருந்த நீலகாகிதத்துண்டை வைத்துவிட்டு ஜெஃப்ரி சைக்கிளில் புறப்பட்டு சென்றான் அந்த காகிதத்தை குழுவின் மற்ற நால்வரும் தனித்தனியே எடுத்துப்பார்த்துவிட்டு அவர்கள் முன்பே பேசி வைத்திருந்ததை போல பள்ளியின் பின்புறம் விரிந்திருந்த காட்டின் தொடக்கத்தில் இருந்த மாபெரும் ஓக் மரத்தடியில் மிகச்சரியாக மாலை 4. 20 க்கு சந்தித்தார்கள்
தினந்தோறும் மாலை 4.20க்கு தேடல் பயணத்தை துவங்கிய அக்குழுவின் முயற்சி இரண்டு மாதங்களில் வெற்றியடைந்து, அங்கு வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளின் இலைகளை போதைப்பொருளாக உருவாக்கி பயன்படுத்தவும் துவங்கிய அவர்கள் தங்களுக்குள் போதைக்கான ரகசிய குறியீடாக 4.20 என்பதை புழங்கினர். பிற்பாடு இந்த நேரம் பிறருக்கும் தெரிந்து 420, 4.20, 4:20 4/20 என்பவை கஞ்சா புகைத்தலுக்கான ரகசிய குறியீட்டு சொல்லாக மாறிவிட்டிருந்தது’
1991லிருந்து கஞ்சா புகைப்பவர்களின் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 20 அன்று 4/20 வது தேதி என்பதை குறிக்க அமெரிக்க தெருக்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது தொடர்ந்த வருடங்களில் கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்களையும், அவற்றை கட்டுப்படுத்துவதையும் காவல் துறையும் அதே 4.20 என்னும் என்பதை சங்கேத குறியீடாக பயன்படுத்த துவங்கினர்
மே 1991ல் கஞ்சா பயன்பாட்டிற்கான பிரத்யேக மாத இதழான ‘’High times ‘’முதன் முறையாக கஞ்சா பயன்பாட்டிற்கான குறியீட்டு எண்களாக 4.20 என்பதை குறிப்பிட்டது. கஞ்சா பயன்படுத்திய பல ராக் இசைக்குழுக்களும் இந்த எண்களையும் மாலை 4.20க்கு கஞ்சா பயன்படுத்துவதையும் பெருமளவில் பரப்பினார்கள்.
பின்னர் அமெரிக்காவெங்கிலும் கஞ்சா புகைப்பதற்கான நேரம் மாலை 4.20 என குறிக்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் இந்த 4.20 கஞ்சா புகைத்தலை கஞ்சா உபயோகிப்பவர்களை, கஞ்சா குற்றங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது.
கஞ்சா புகைப்பவர்களால் நேரிடும் வழிப்பறி உள்ளிட்ட அபாயம் இருக்கும் இடங்களில் 420 என்னும் எச்சரிக்கைப் பலகை காவல்துறையினரால் அப்போதிலிருந்து வைக்கப்படுகிறது. அப்பலகைகள் பெரும்பாலும் திருடப்பட்டு அகற்றப்படுகின்றன
2003ல் கஞ்சாவின் மருத்துவ உபயோகங்களுக்கான புதிய சட்டமும் California Senate Bill 420 என்றே பெயரிடப்பட்டது. 2015ல் குறிப்பிட்ட அளவு கஞ்சாவை மனமகிழ்ச்சிக்கு பயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டவரைவிற்கான போராட்டமான Initiative 71 என்பதை முன்னெடுத்த Adam Eidinger அதில் வெற்றி பெற்றதும் தனது கார் லைசென்ஸ் எண்ணாக 420 என்பதை வைக்துக்கொள்ள அனுமதி பெற்றார்.
கஞ்சா பயன்பாட்டை குறித்தான பலநூல்களின் தலைப்புக்களிலும் 420 இடம்பெற்றது. 2018ல் டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் பங்குகளை 420 டாலர்களாக அறிவித்தபோது அவர் கஞ்சா பயன்பாட்டை மறைமுகமாக ஊக்குவிக்கிறார் என்னும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் எலான் அந்த எண் கஞ்சா பயன்பாட்டுடன் தொடர்புள்ளதாக அமைந்தது தற்செயல் என்று சொல்லி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பொதுவாக கஞ்சாவை பயன்படுத்துவோரும் கஞ்சா என்பதை அறிந்து கொண்டுமட்டும் இருப்போரும் கஞ்சா என்பது ஒரு இலை, இலைப்பொடி இலைப்பசை என்று மட்டுமே நினைக்கின்றனர்.
கஞ்சாப்பயிரென்பது போதை அளிக்கும் வேதிச்சேர்மானங்களை கொண்டிருக்கும் கன்னாபிஸ் பேரினத்தின் மூன்று சிற்றினங்களான கன்னாபிஸ் சடைவா,இண்டிகா மற்றும் ருட்ராலீஸ் ஆகியவை. கஞ்சா ஆண் பெண் என தனித்தனி செடிகளாக இருக்கும். அரிதாக இருபால் மலர்களும் இருக்கும் கலப்பின வகைகளும் உண்டு.
இவற்றின் இலைகள், உலர்ந்த மலர்கள், தண்டு, மலரரும்பு பிசின் மற்றும் விதைகள் கஞ்சா மாரிவானா, வீட், டோப் அல்லது பாட் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளில் கஞ்சா செடியின் பாகங்களுக்கும், கஞ்சா பொருட்களுக்கும் பலவிதமான பெயர்கள் புழக்கத்தில் இருக்கின்றன.
பொதுவாக கஞ்சா செடியிலிருந்து பாங், கஞ்சா, சரஸ், ஹஷீஷ் என்னும் நான்கு வகையான போதைப்பொருட்கள் கிடைக்கின்றன.
பெண் கஞ்சா செடிகளின் பிசின் நிறைந்த உலர்ந்த மலர்த்தலை என்னும் மஞ்சரிகள் கஞ்சா எனப்படுகின்றன.
உலர்த்தப்பட்ட இலைகள், இலைப்பொடி, இலைச்சாறு இலைப்பசை உருண்டைகள் பாங் எனப்படுகின்றது. இது கரும்பச்சை நிறத்தில் காணப்படும்.
பச்சையாக பிரத்யேக நறுமணத்துடன் இருக்கும் சரஸ் இலை மற்றும் மலர்களின் பிசினை கொண்டு செய்யப்படுகிறது
மெல்லிய வளரிகள் கொண்டிருக்கும் பிசின் நிறைந்த பெண்மலரரும்புகள் நன்கு அழுத்தப்பட்டு பிசைந்து உருவாவது ஹஷீஷ். இது பழுப்பு கருப்பு மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்
10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மனித குல வரலாற்றுடன் நெருக்கமான தொடர்பிலிருக்கும் பல தாவரங்களில் கஞ்சாச்செடியை போல நெருக்கமான கலாச்சார தொடர்புடையவை வெகுசில தாவரங்கள் தான்.
கஞ்சா தனது காட்டுமூதாதையான ஹாப்ஸ் எனப்படும் தாவரத்திலிருந்து பிரிந்து புதிய நிலப்பகுதிகளில் 28 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தனித்த தாவரமாக தோன்றியது. வளமான மண்ணும் சூரிய ஒளியும் இருந்த இடங்களில் கஞ்சா செழித்து வளர்ந்தது.
மனிதகுடியிருப்புகள் தோன்றும் இடங்களிலெல்லாம் உடன் சென்று வளரும் “camp follower plants”. என்றழைக்கப்படும் தாவரங்களில் கஞ்சா செடியும் ஒன்று.
கஞ்சாச்செடி மனிதர்களால் மட்டுமே மிக விரைவாக உலகின் பல இடங்களுக்கு பரவியது. இவற்றின் கனிகள் மிகச்சிறியவை, மேலும் சதைப்பற்றோ சுவையோ இல்லாதவை எனவே விலங்குகளும் பறவைகளும் கஞ்சா செடியின் பரவலில் அதிகம் பங்கெடுக்கவில்லை இவை உருண்டையாக இறகுகள் இல்லாமல் இருப்பவை என்பதால் காற்றில் பறந்து பரவும் சாத்தியமும் இல்லை.
பெண் செடி
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாடோடிகளாக பல இடங்களுக்கு பெயர்ந்த மனிதர்களுடன் கஞ்சாசெடியின் விதைகளும் பயணித்து பலஇடங்களில் வளரத்துவங்கியது. இந்த கூட்டுப்புலம்பெயர்தல் மனிதர்களுக்கும் தாவரங்களுக்குமான பகிர்வாழ்விற்கான மிகசிறந்த உதாரணங்களிலொன்று.
ஒருமையப்புள்ளியில் இருந்து யூரேசியா முழுவதும் கஞ்சா பரவிப் பெருகியதை, இம்மாபெரும் நிலப்பரப்பின் பெரும்பாலான மொழிகளில் கஞ்சாச்செடியின் பெயரைக்குறிக்கும் ஒன்றுக்கொன்று வேர்த்தொடர்புடைய சொற்களைக்கொண்டும் அறியலாம்.
சணப்பை
கிரேக்க ” kannabia ” மற்றும் லத்தீன ” cannabis “ஆகிய பெயர்கள் சணப்பைக்கான அரேபிய சொல்லான “kinnab”லிருந்து தோன்றியிருக்கலாம்.
ஆங்கிலக்சொல்லான “assassin” என்பது ஹஷீஷ் உபயோகித்து போதையேற்றிக்கொள்ளும் hashishin என்னும் சொல்லில் இருந்தே உருவானது என்றும் சொல்லப்படுகிறது
ஆங்கிலத்தில் hemp ஜெர்மானிய மொழியில் Hanf ஆகிய இரண்டும் கிரேக்கத்தின் கவாபிக், லத்தீன கன்னாபிஸ், இத்தாலிய கனப்பா மற்றும் ருஷ்யாவின் கொனொப்லியா போன்ற சொற்களின் வேர்கொண்டவை.சணப்பையின் ஆங்கிலச்சொல்லான hemp பண்டைய ஆங்கிலச்சொல்லான hænep, லிருந்து வந்தது
அரபியில் இச்செடி qunnab, துருக்கியமொழியில் kendir, ஜார்ஜிய மொழியில் kanap’is என்றும் பெயர் கொண்டிருக்கிறது.
ஆண் செடி
மத்திய ஆசியாவின் அல்தாய் மலைத்தொடர்களில் 12000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கஞ்சா மத்திய ஆசியாவின் நாடோடி இனங்களால் கிமு 700ல் கிழக்கு ஐரோப்பாவுக்கு அறிமுகமானது. ஆங்காங்கே பயிராகிக்கொண்டிருந்த கஞ்சா செடியின் நார் மற்றும் எண்ணெய் உபயோகங்களுக்கு பின்னர் தற்செயலாகவே கஞ்சாவின் போதைப்பண்புகள் தெரியவந்து அதன் சாகுபடி அதிகரித்திருக்ககூடும்.
யுனானி மருத்துவ முறையை உருவாக்கியவரான கேலன் (Claudius Galen AD 129-199/217) இத்தாலியில் இரவுணவுக்கு பிறகு சிறிய கஞ்சா கட்டிகள் இனிப்புக்களுடன் பரிமாறப்பட்டது வழக்கமாக இருந்ததை குறிப்பிடுகிறார்.
ஒரு காலகட்டத்தில் கஞ்சா உண்பதைக்காட்டிலும் புகைப்பது அதிக போதையளிக்கும் என கண்டறியப்பட்டிருக்க கூடும்.
ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெரோடோட்டஸ் (c. 484-c. 425 bc) என்னும் வரலாற்றாய்வாளர் ஈரானிய தொல்குடிகளான சித்தியன்கள் (Scythians) சிறுசிறு நிலவறைகளுக்குள் தவழ்ந்து சென்று அமர்ந்து கம்பளியால் உடலை போர்த்திக்கொண்டு நெருப்பில் கஞ்சாசெடியின் விதைகளை இட்டு அந்த புகையை நுகர்ந்து மகிழ்ச்சியாக இருந்தததை விவரித்திருக்கிறார். ரோமனிய ஆட்சிக்காலத்தில் கஞ்சாவின் மருத்துவ பயன்பாடுகள் இருந்ததை பிளைனி, டயாஸ்கொரிடஸ் கேலன் ஆகியோர் பதிவு செய்திருக்கின்றனர்.
அரேபிய நூல்களின் மொழியாக்கங்களின் வழியே ஐரோப்பா கஞ்சாவின் மருத்துவப்பயன்களை அறிந்து கொண்டது. கிமு 2700 ல் எழுதப்பட்ட உலகின் மிகப்பழமையான சீன மருத்துவ நூலான pen-ts’ao, கஞ்சா செடியின் மருத்துவப்பயன்களை குறிப்பிடுகிறது
பண்டைய இந்தியாவில் கஞ்சா தயாரிப்பான பாங் விருந்தோம்பலின் அடையாளமாக அளிக்கப்பட்டிருக்கிறது. கிமு 10ம் நூற்றாண்டில் சிந்துச்சமவெளி நாகரிகத்திலும் ஓபியத்துடன் கஞ்சாவும் சாகுபடி செய்யப்பட்டு போதைப்பொருளாக பயன்பாட்டில் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றது.
சுஷ்ருதர் கஞ்சாவை உடலின் திரவங்களை சமப்படுத்துவதன் பொருட்டும் பாலுணர்வை ஊக்குவிக்கவும் வலிநிவாரணியாகவும் அளித்திருக்கிறார். சித்தர்களில் ஒருவரான கோரக்கர் கஞ்சாவை முதன்முதலில் மனச்சிக்கல்களுக்கு மருந்தாக பயன்படுத்தினார்.
பல எகிப்திய பிரமிடுகளில் கஞ்சாப்பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இரண்டாம் ராம்சேயின் கல்லறையில் இருந்து கஞ்சா மலர்களின் மகரந்தங்கள் கிடைத்தன.
1253ல் சூஃபி துறவிகள் மிக வெளிப்படையாகவே கெய்ரோவில் கஞ்சாவை சாகுபடி செய்தனர். எகிப்திய அரசு சூஃபியிசம் மக்களுக்கு அச்சுறுத்தலானது என்று அறிவித்து கஞ்சா வயல்களை முற்றிலுமாக அழித்தது. எனினும் நைல் நதிக்கரையோர விவசாயிகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட சூஃபிக்கள் பிற பயிர்களுடன் கலந்து கஞ்சாப்பயிரை சாகுபடி செய்தனர்.
1378ல் எகிப்திய அரசு கஞ்சாவுடன் சேர்த்து விவசாயிகளின் அனைத்துப்பயிர்களையும் அழித்தார்கள். கஞ்சா சாகுபடிக்கு உடந்தையாக இருந்த விவசாயிகளை கைது செய்து தலை கொய்தார்கள். எனினும் கஞ்சாவின் தேவை எகிப்தில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. தொடர்ந்த நூற்றாண்டுகளுக்கு எகிப்தில் கஞ்சா சட்டவிரோதமாக சாகுபடியானது. இன்று வரையிலுமே கஞ்சா சூபிக்களின் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.
சீனாவிலும் ஜப்பானிலும் மந்திர தந்திரங்களுக்கெனவும் மருத்துவ சிகிச்சையிலும் கஞ்சா பெருமளவில் பயன்படுத்தபட்டது. சீன மந்திரவாதிகள் கஞ்சா செடியின் தண்டுகளை பாம்புகளை போல் வளைத்து ஆவிகளை விரட்டும் சடக்குகளில் உபயோகித்தனர்
அஸிரியர்களின் களிமண்கட்டிகளில் கஞ்சாவின் மருத்துவ உபயோகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது
புகையிலையுடன் திரும்பி வந்த கொலம்பஸின் இரண்டாம் உலகப்பயணத்துக்கு பிறகுதான் கஞ்சா புகைத்தல் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது
திபெத்திய தாந்த்ரீக மரபில் கஞ்சா புகைநுகர்வு தீயஆவிகளை விரட்டும் என நம்பிக்கை உள்ளது.
கெளதம புத்தர் 1நாளுக்கு ஒன்று என 6 நாட்களுக்கு கஞ்சாவிதைகளை ஞானம் பெறு முன்பு எடுத்துக்கொண்டாரென்றும் சொல்லப்படுகிறது.
ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் கஞ்சா புகைக்கும் கஞ்சா பொருட்களை பயன்படுத்தும் வழக்கம் நெடுங்காலமாகவே இருக்கிறது. பசியை தூண்டவும் பல்வேறு சிகிச்சைகளுக்கு, போதைப்பொருளாகவும் வழிபாட்டிலும் கஞ்சா பெருமளவு அங்கு பயன்பாட்டில் இருந்தது . ஆப்பிரிக்க இனக்குழுக்கள் கஞ்சா வழிபாட்டிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.
பண்டைய இந்திய கிரேக்க ரோமானிய அசிரிய நூல்கள் பலவற்றிலும் கஞ்சாச்செடியின் மருத்துவ பயன்பாடுகள் கூறப்பட்டிருக்கிறது.
16ம் நூற்றாண்டில் பிரேசிலுக்கு கப்பலில் வந்த போர்த்துக்கீசிய அடிமைகள் தங்கள் உடைகளில் தைக்கப்பட்டிருந்த கஞ்சா விதைகளை பிரேஸிலில் விதைத்து அங்கு கஞ்சாவை அறிமுகம் செய்தனர் பிரேஸிலின் நிலத்தில் அடிமைகள் கொண்டு வந்த அனைத்து வகை கஞ்சாவிதைகளும் செழித்து வளர்ந்தது .
திபெத்திலிருந்து கஞ்சாச்செடி நாடோடிப் பழங்குடியினரால் இந்தியாவிற்குச் கிமு 2000த்தில் அறிமுகமானது கஞ்சா பரவலில் இந்தியாவின் பங்கு பெரும்பான்மையானது.
கன்னாபிஸ் இண்டிகா சிற்றினம் நூற்றாண்டுகளாக இமாலயமலைப்பகுதியிலும் சுற்றுப்புறங்களிலும் இயற்கையாக செழித்து வளர்ந்திருந்தது
கஞ்சா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் சடங்கு, மத, சமூக மற்றும் மருத்துவ பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையது .18ம் நூற்றாண்டில் சீக்கிய குரு கோவிந்த் சிங் மிகக்கடுமையான போர்களுக்கு செல்லும் வீரர்களுக்கு கஞ்சா உருண்டையான பாங் அளித்திருக்கிறார்
இந்தியாவில் கஞ்சா செடியின் உபயோகம் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே பக்தி மார்க்கத்திலும் மருத்துவத்திலும் இருந்தது.
மனிதர்களுக்கும் கஞ்சாச்செடிக்குமான நீண்ட நெடிய உறவை பல நாகரிகங்களின் தொன்மங்களும் உறுதிசெய்கின்றன. இந்திய தொன்மங்களில் கஞ்சா சிவனுடன் தொடர்புடையாதாகவே சித்தரிக்கப்படுகிறது. மகாபாரதத்தில் சிவமூலி என்று கஞ்சா குறிப்பிடப்படுகிறது
ஆலகாலவிஷம் தொண்டையில் நின்றதால் அவதிப்பட்ட சிவனுக்கு வலி நிவரணமாக கஞ்சா பார்வதியால் அளிக்கப்பட்டது என்றும், பாற்கடல் கடையப்பட்ட போது கிடைத்த அமுத்தத்தை சிவன் தனதுடலில் இருந்து உருவாக்கிய கஞ்சாவை கொண்டு தூய்மை படுத்தினாரென்றும்,ன்பாற்கடலில் கிடைத்த அமுதத்தின் ஒரு துளி பூமியில் விழுந்து கஞ்சா செடியானது என்றும் இந்திய தொன்மங்களில் கூறப்படுகிறது, சைவம் சிவனை கஞ்சாவின் தலைவன் என்கிறது
பண்டைய இந்தியாவிலும் இப்போதும் கஞ்சா பொருட்கள் சிவபக்தர்கள் சைவ துறவிகளால் பயனபடுத்தப்படுகிறது. சிவ வழிபாட்டில் கஞ்சா பரவலாக இந்தியாவெங்கிலும் உபயோகிக்கபடுகிறது .
கனவுகளில் கஞ்சா செடியை கண்டாலும் பயணங்களுக்கு முன் கஞ்சா வைத்திருப்பவரை காண்பதும் நல்ல சகுனம் என பண்டைய இந்தியாவில் நம்பப்பட்டது
நவராத்திரியின் போது சிவலிங்கங்கள் பாங்’கால் அபிஷேகம் செய்யப்படுவதும், பட்டினிவிரதம் இருக்கும் சாதுக்களுக்கு விரதம் முடித்து வைக்க பாங் பானம் அளிப்பதும் தொன்று தொட்டு மத்திய மற்றும் வட இந்தியாவில் இருக்கும் வழக்கம்
துர்கா பூஜையின் இறுதி நாளன்று வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு கஞ்சா கலந்த பானம் அளிப்பது இன்றும் வங்காளத்தில் வழக்கமாக இருக்கிறது. வங்காளத்தின் தாரகேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியில் கஞ்சா இலைகளால் சிவனை அர்ச்சனை செய்கிறார்கள்
ஒரிஸா ஜகன்னாதர் ஆலயத்தில் சிவராத்திரியின் போது இறைவனுக்கும் பக்தர்களுக்கும் கஞ்சா அளிக்கப்படுகிறது
இந்தியாவில் பல பாகங்களில் ஹோலி தீபாவளி மற்றும் திருமணம் உள்ளிட்ட விழாக்களில் கஞ்சா பொருட்கள் பயன்படுத்த படுகிறது. மார்வாரிகளும் சிவபூஜையில் கஞ்சாவை உபயோகிக்கின்றன.
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவர்கள் கஞ்சாவிதைகளை பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தினர். 1840களில ஐரிஷ்மருத்துவரன வில்லியம் புரூக் (William Brooke O’Shaughnessy) உள்ளிட்ட பல மருத்துவர்கள் கஞ்சாவை சிகிச்சையளிக்க பயன்படுத்த துவங்கினர்
1960களில் ஹிப்பி கலச்சாரம் உருவானபோது கஞ்சா மேலும் பரவலாக பயன்படுத்தப்பட்டது அவ்விளைஞர்களின் அடையாளமாகவே கஞ்சா புகைத்தல் சித்தரிக்கப்பட்டது.
1960களில் கஞ்சா பயன்பாடு உலகெங்கிலுமே அதிகரித்திருந்தது. பல்லாயிரக்கணக்கான அமெரிக்க இளைஞர்களின் உதடுகளில் கஞ்சா சிகரெட் புகைந்தது. ஆனால் அறிவியலாளர்களுக்கு அச்சமயத்தில் கஞ்சா குறித்து அதிகம் தெரிந்திருக்கவில்லை
அப்போது 30 வயதில் இருந்த இஸ்ரேலின் வைஸ்மேன் அறிவியல் நிறுவனத்தில் இளம் வேதியியலாளராக பணிபுரிந்த ரஃபேல் மெக்குலம் ஆர்வமூட்டும் இயற்கைப்பொருட்களுக்கான தேடலில் ஈடுபட்டிருந்தார். 1964ல் மெக்குலமும் அவரது குழுவும் முதன்முதலாக THC எனப்படும் Delta-9-tetrahydrocannabinol மற்றும் cannabidiol என்கிற CBDயையும் கஞ்சா செடியிலிருந்து கண்டறிந்தார்கள்
கஞ்சாவின் வரலாற்றில் கஞ்சாவுகெதிராகவும் கஞ்சா பயன்பாட்டை ஆதரித்தும் சட்டங்களும் சட்டத் திருத்தங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சமீப காலங்களில் கஞ்சாவின் மருத்துவ பயன்பாடுகள் பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மருத்துவத்தின் பொருட்டு கஞ்சா சாகுபடியும் சட்டபூர்வமாக தொடங்கப்பட்டிருக்கிறது
ஆச்சர்யமூட்டும் விதமாக மேற்கில் சமீபத்தில் துவங்கி இருக்கும் கஞ்சாவின் மருத்துவப்பயன்பாடுகள் குறித்த அறிதல் பண்டைய இந்தியாவில் பலநூறாண்டுகள் முன்பே புழக்கத்தில் இருந்திருக்கிறது
பல்வலிக்கு சரஸை வலிக்குமிடத்தில் வைப்பதும் தூக்கமின்மை மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கஞ்சா வீட்டு மருத்துவத்திலும் சாதாரணமாக பண்டைய இந்தியாவில் உபயோகிக்காப்ட்டது கஞ்சா பாலுணர்வு ஊக்கியாகவும் இந்தியாவில் பெரிதும் பயன்பாட்டில் இருந்தது
கஞ்சா பலநூறாண்டுகளாக உலகில் வலிநீக்கியாக, வலிப்புகள் குணமாக பசிஉணர்வை தூண்ட பதட்டத்தை குறைக்கவென்று பயன்பாட்டில் இருந்தது. ஆஸ்பிரின் போன்ற வலி நிவரணிகளும் தூக்கமருந்துகளும் கண்டறியப்பட்ட பின்னர் கஞ்சாவின் மருத்துவப்பயன்பாடுகள் மெல்ல மெல்ல குறைந்தன. தற்போது மீண்டும் கஞ்சா சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுவது பல நாடுகளில் சட்டபூர்வமாக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது
2018,ல் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட Epidiolex, வலிப்பு நோய்க்கான சிகிச்சைக்கென சந்தைப்படுத்தப்பட்டது
மேலும் மூளைப்பிளவாளுமைச்சிக்கல், புற்றுநோய், பார்கின்சன், OCD போன்றவற்றிற்கும் கஞ்சாபொருட்கள் உலகெங்கிலும் பரவலாக மருத்துவரின் பரிந்துரையுடன் உபயோகிக்கப்படுகின்றன
கடந்த செப்டம்பர் 2020ல் அமெரிக்கா கஞ்சா பயன்பாட்டிற்கான சட்டங்களையும் கெடுபிடிகளையும் தளர்த்தியது
THC மற்றும் THCக்கு இணையான செயற்கை பொருட்களை FDA புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் சிகிச்சையினால் உண்டாகும் பக்கவிளைவுகளுக்கான மருந்தாக அங்கீகரித்திருக்கிறது
ஆட்டிசம், வலி நிவாரணம், உறக்கம் வரவழைப்பது ஆகியவற்றில் கஞ்சா வேதிப்பொருட்களின் பங்கு குறித்து மேலும் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்த வண்ணம் இருக்கின்றன.
இந்தியாவில் முதன்முதலாக CSIR-IIIM ல் கஞ்சா ஆய்வுத்திட்டம் 2023ல் கனடாவைச்சேர்ந்த ஆய்வு நிறுவனத்துடன் கூட்டாக துவங்கப்பட்டு ஜம்முவில் மருத்துவ உபயோகங்களுக்காக கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது. ‘Cannabis Research Project’ of CSIR-IIIM என்னும் இத்திட்டத்தின் முதன்மை நோக்கம். வலிப்பு, புற்று மற்றும் நரம்பு நோய்களுக்கான வலி நிவாரணியாக கஞ்சாவை பயன்படுத்துதல். இத்திட்டத்தில் சாகுபடியாகும் கஞ்சாப்பயிர் ஏற்றுமதித்தரம் வாய்ந்தது
மனிதகுலத்துடன் பின்னிப்பிணைந்த கஞ்சாவின் பயன்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான உறவு சிக்கலானதாவே இருக்கிறது
இனி வரும்காலங்களில் , கஞ்சாவின் மருத்துவ உபயோகங்கள் மற்றும் கவனமான கஞ்சா நுகர்வு ஆகியவற்றிற்கான தீவிரமான ஆய்வுகள் தேவைப்படுகின்றது
போதைப்பொருளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியப்பட்டிருக்கும் கஞ்சா முறையான விரிவான ஆய்வுகள் நடந்தால் மனிதகுலத்திற்கு வரப்பிரசாதமாக மாறவும் கூடும்
வன சிகிச்சை, நிலச் சிகிச்சை,பசுமை சிகிச்சை, இயற்கை சிகிச்சை என்னும் பெயரால் அழைக்கப்படுவது, உடல், உள்ளம் மற்றும் ஆன்மாவிற்கான இயற்கையோடு இணைந்த ஒரு சிகிச்சை. இச்சிகிச்சை வனக்குளியல் என்று பொருள் படும் ஜப்பானிய சிகிச்சையான Shinrin-yoku வை அடிப்படையாக கொண்டது.
பாரசீக பேரரசை தோற்றுவித்தவரான பேரரசர் சைரஸ் 6ம் நூற்றாண்டில் நகரின் மையத்தில் மக்களின் ஆரோக்கியம் மேம்படும் பொருட்டு ஒரு பெரும் பூங்காவை அமைத்தார். இதுவே பசுமை சிகிச்சையின் தொடக்கமாக கருதப்படுகிறது. 16ம் நூற்றாண்டில் ஸ்வீடனை சேர்ந்த இறையியலாளரும் மருத்துவருமான பாராசெல்சஸ் ’’நோயிலிருந்து குணமடைதல் மருத்துவரிடமிருந்தல்ல, இயற்கையிடமிருந்தே கிடைக்கிறது’’ என்றார்.
1950 களில் உலகெங்கிலும் இயற்கைச் சூழலில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக 1982ல் ஜப்பானின் மீன்வளம், விவசாயம் மற்றும் வன அமைச்சகத்தின் அப்போதைய தலைவரான தோமோஹைட் அகியாமா ’’வனக்குளியல் ‘’ என்று பொருள் படும் Shinrin-yoku ( shinrin, “forest”, yoku, “bath, bathing” ) என்னும் சிகிச்சை முறையை உருவாக்கி காடுகளை நோக்கி அதிக அளவில் மக்களை வரச்செய்தார்.
இயற்கையிலிருந்து துண்டிக்கப்பட்ட மக்களை மீண்டும் அதனுடன் இணையச் செய்வதற்கும், தங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வனங்களை மக்கள் பாதுகாக்கவும் இது வழிவகுக்கும் என அவர் நினைத்தார்
தற்சமயம் உலகெங்கிலும் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் யோகா மற்றும் தியான முறைகளைப்பொல வனசிகிச்சையும் பரவலாயிருக்கிறது.
மிக குறைந்த நேரமாக ஐந்து நிமிடங்களும் அதிகபட்சமாக 120 நிமிடங்களும் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலஅளவு வனச்சூழலில் இருப்பவர்களின் ஆளுமைச்சிக்கல்கள் விலகி,மனழுத்தம் குறைந்து தேக ஆரோக்கியம் கூடுகிறது என்கிறார்கள் இந்த சிகிச்சையை அளிப்பவர்களும் மேற்கொள்பவர்களும்.
இவற்றுடன் வைட்டமின் D குறைபாடு மற்றும் கூடுதல் உடல் பருமன் ஆகியவையும் இதனால் குணமாகிறது .
சிகிச்சை முறை
வனங்களின் விதவிதமான ஒலிகளை மனம் குவித்து செவி கூர்ந்து கவனிப்பது
மலர்களையும் இலைகளையும் கனிகளியும் முகர்ந்து வாசனையை அறிந்து கொள்வது
வனச்சூழலை, அதன் அழகை ஆழ்ந்து கவனிப்பது
சுவாசத்தை கவனித்து தூய காற்றை மகிழ்ந்து அனுபவிப்பது
இந்த சிகிச்சையை இப்படி பொதுப்படுத்த முடியாது, காடுகளில் இருப்பதன் மூலம் மனநிலை மாற்றம் அடைவது என்பது மிக அந்தரங்கமானதும் தனி நபர்களின் மனநிலை சார்ந்துமாகும், மேலும் இப்படி காடுகளில் மனிதர்கள் நெருங்கிச் செல்வது இயற்கையின் அழிவிற்கு காரணமாகும் என் இச்சிகிச்சை குறித்து சில விமர்சனங்களும் எழுகின்றன.
உலகின் பல நாடுகளும் இந்த வன சிகிச்சையை அங்கீகரித்து ஆதரவு அளித்து வருகின்றன. ஃபின்லாந்தில் 5 மணி நேரம் வனங்களில் இருப்பது மிக நல்லது என ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்
மொத்த நிலப் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு வனங்களால் சூழப்பட்டிருக்கும் ஜப்பானில் இந்த சிகிச்சைக்கு அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. தென்கொரியாவில் 2009ல் சிகிச்சைவனமொன்று துவங்கப்பட்டு பலருக்கும் பயனளித்ததால் 2022ல் சுமார் 30க்கும் மேற்பட்ட சிகிச்சை வனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மனாழுத்தம் தற்கொலை எண்ணம் ஆகியவற்றிற்கு இந்த வனங்கள் சிகிச்சை அளிக்கின்றன
சமிபத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு பணி சார்ந்த மனஅழுத்தம் நீங்க இங்கு வனசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
சமீபத்தில் மரணமடைந்த பிரபல புகைப்பட நிபுணர் ஜான் ஐசக் போர்ச்சூழலில் புகைப்படமெடுத்து மனம் கலங்கிய தான் சூரியகாந்தி தோட்டங்களுக்குள் சென்ற பின்னர் மீண்டு வந்ததாக குறிப்பிட்டிருந்தார். கனடாவின் மருத்துவர்களும் பசுமை பரிந்துரையாக மனநல சிகிச்சைகளுக்கு வனத்தில் நேரம் செலவழிக்க அறிவுரை கொடுத்து வருகிறார்கள்.
அமெரிக்க வன அமைச்சகம் இதற்கென பயிற்சி பெற்ற நிபுணர்களைக்கொண்டு அடர் வனங்களில் இரண்டு மணி நேரம் சிகிச்சை அளிக்கிறது
தமிழகத்தில் இது பன்னெடுங்காலமாக வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஒரு சிறு முள் குத்தினால்கூட முள் நீக்குகையில் வலி தெரியாமலிருக்க பச்சையை பார்க்க சொல்லும் வழக்கம் இங்கு இருக்கிறது. பசுமை நிறம் குணமாக்கும் நிறம் என்பது தமிழர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது
இப்போதைய அடுக்கக வாழ்வில் அனைவருக்கும் வீடுகளில் பசிய செடிகளுடன் கூடிய தோட்டங்கள் வைத்திருக்க முடியாதென்றாலும் அருகிலிருக்கும் காடுகளுக்கு குடும்பத்துடன் சென்று அங்கு குறிப்பிட்ட நேரம் செலவழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
கி மு 2600 ல் தோன்றிய மாயா நாகரிக மக்களின் உணவு பெரும்பாலும் வேட்டை விலங்குகள், கீரை, பூச்சிகள் மற்றும் கிழங்குகளாகவே இருந்தது. அகழ்வாய்வுகளில் கிடைத்த அவர்களின் எலும்புகளில் நடைபெற்ற ஆய்வுகள் அவர்கள் அதிகம் மக்காச்சோளமும் மான்கறியும் இலையுணவுகளையும் எடுத்துக் கொண்டதை காட்டுகிறது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற தொல்குடியினரின் உணவுகள் குறித்த ஆய்வுகள் மாயன்கள் புரதச்சத்துக்காக உணவில் சேர்த்துக்கொண்ட மரக்கீரை ஒன்றின் முக்கியத்துவத்தை குறித்து தெரிவிக்கிறது.19.4% – 24.8% புரதச்சத்து கொண்டிருந்த பயறு வகைகளையும் அவர்கள் உணவில் இருந்தது என்றாலும் மாயன்களின் உணவில் பிரதான இடம்பெற்றிருந்த மரக்கீரையின் புரத அளவு 30 % இருந்தது
சாயா மரக்கீரை, கீரைமரம் என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் நிடோஸ்கோலஸ் அகோனிடிஃபோலியஸ் (Cnidoscolus aconitifolius)
மாயன் கீரை என இப்போது பெயர் பெற்றிருக்கும், உலகின் பல இடங்களிலும் வளர்க்கப்படும் இந்த கீரை வருடம் முழுவதும் கீரையை அளிக்கிறது. மிக எளிதாக இவற்றை பயிர் செய்ய முடியும். இவற்றில் பூச்சி/ நோய்த் தாக்குதல் மிக குறைந்த அளவே இருக்கும். மாயன் கீரை மரம் அனைத்து காலநிலைகளிலும் செழித்து வளரும், வறட்சியையும் தாங்கிக்கொள்ளும். இம்மரம் மிக அழகிய தோற்றம் கொண்டது இவற்றின் கீரையை கால்நடைகளுக்கு தீவனமாகவும் அளிக்கலாம்.
பார்ப்பதற்கு மரவள்ளிக்கிழங்கு செடியை போலிருக்கும் இக்கீரை மரம் சமீப காலங்களில் மிக அதிக கவனம் பெற்றிருக்கிறது.
மாயன்களின் காலத்து கீரை வகை கடல் மட்டதுக்கு வெகு உயரத்தில் அதிக கூர்மையான முட்களுடன் இருந்தது. 1944ல் தாவரவியலாளர் ரோஜெர் (Rogers McVaugh-1909 – 2009) மாயன் கீரைமரத்தின் காட்டுமூதாதையான Chaya brava என்னும் முட்கள் கொண்ட வகையிலிருந்து முட்களற்ற கலப்பினமான Chaya mansa வை உருவாக்கினார்,
மான்ஸா என்பதற்கு லத்தீன மொழியில் வீடு என பொருள் இந்த கீரையை வீடுகளில் வளர்க்கலாம் என்பதற்காக அப்பெயர் வைக்கப்பட்டிருந்தது. 1918ல் முட்கள் கொண்ட, முட்களற்ற மாயன் கீரை வகைகள் இரண்டுமே கியூபாவுக்கும் ஃப்ளோரிடா வுக்கும் மெக்சிகோவிலிருந்து அறிமுகமானது. பின்னர் அங்கிருந்து உலகமெங்கும் இக்கீரை வகை பரவியது
Mala Mujer, கெட்ட பெண்மணி என்ற வழங்கு பெயரில் மெக்சிகோவில் அதன் முட்கள் கொண்ட வகையும் சாயா மான்ஸா என்பது முட்களற்ற வகையுமாக உலக நாடுகள் பலவற்றிலும் இப்போது வளர்க்கப்படுகிறது.
மாயன்கீரையில்:
முட்களற்ற வகை Cnidoscolus chayamansa
முட்கள் கொண்டது Cnidoscolus aconitifolius
நெல்லிக்காய் குடும்பமான யுஃபோர்பியேசியை சேர்ந்த இவை சுமார் 15 அடி உயரம் வரை விரைவாக வளரும் எனினும் அடிக்கடி கத்தரித்து 2 அடி உயர அடர்ந்த புதராக வளர்க்கையில் கீரைகள் அதிகம் கிடைக்கும். கோடைக்காலத்தில் சிறு வெண்ணிற மலர்கள் தோன்றி வால்நட் போன்ற கனிகள் பிற்பாடு உருவாகும். இவற்றின் சதைப்பற்றான தண்டுகளில் வடியும் வெண்ணிற பால் போன்ற திரவம் சரும அழற்சியை உண்டுபண்ணும்.தண்டுகள் மூலம் இவை எளிதில் வளர்க்கப்படுகிறது. இவற்றின் இலைகளும் இளம்தண்டுகளும் உண்ணப்படுகின்றன.
இக்கீரையில் புரதம் கால்சியம் இரும்பு சத்துக்கள் A மற்றும் C வைட்டமின்களும் நிறைந்திருக்கிறது
மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்க உணவுகளில் பிரதான இடம்பெற்றிருக்கும் மிக அதிக சத்துக்களை கொண்டிருக்கும் மாயன் கீரையை ஒருபோதும் சமைக்காமல் உண்ணக்கூடாது இவற்றில் இருக்கும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் ஹைட்ரோ சயனிக் அமிலம் (hydrocyanic acid) கீரைகளை வெப்பமூட்டி சமைக்கையில் மட்டும்தான் வீரியமிழக்கும்.Blanching எனப்படும் கொதிநீரில் சில நிமிடங்கள் மூழ்கவைத்து பின்னர் சமைப்பதும் நல்லது.
இக்கீரையின் வேதிப்பொருட்கள் அலுமினியத்துடன் வினைபுரிவதால், இக்கீரையை ஒருபோதும் அலுமினிய பாத்திரங்களில் சமைக்க கூடாது.
ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்களும் இக்கீரை உணவிற்கு உண்டு 20 நிமிடங்களுக்கு குறையாமல் இவற்றை வேகவைக்க வேண்டும். பிற கீரை வகைகள் அனைத்தையும் காட்டிலும் சுவையும் சத்துக்களும் மாயன்கீரையில் பலமடங்கு அதிகமாக இருக்கிறது.
மாயன்கீரையை குறித்த காணொளி;https://youtu.be/0f8-m0kPGxk?si=dKdUK_hGI6Tvcgpr
விஷ்ணுபுரம் குழும நண்பர்கள் உலகெங்கிலும் இருப்பதால் அந்தந்த நாடுகளின் சிறப்பான மலர்கள் செடி,கொடிகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்புவார்கள். நானும் செர்ரி மலர் கொண்டாட்டங்களை டோக்கியோ செந்திலிடமும், மேப்பிள் இலைகளை பழனி ஜோதியிடமும் வானவில் யூகலிப்டஸ் புகைப்படங்களை சுபாவிடமும், இலைகளே பொன்னாக பூத்து நிற்கும் ஜின்கோவை ஜெனிவா கணேஷிடமும் புகைப்படங்களாக கேட்டு வாங்கி கொள்ளுவேன். அவர்களின் கண்களின் வழியே உலகத் தாவரங்களை வேண்டுமட்டும் இப்போது பார்க்கும், ரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அப்படி சமீபத்தில நண்பர் பெல்ஜியம் மாதவன்-ப்ரியா அவர்களது வீட்டில் ஆப்பிள் மலர்ந்திருக்கும், கனிகள் செறிந்திருக்கும் புகைப்படங்களை அனுப்பியிருந்தார்கள்.
வெள்ளையும் இளஞ்சிவப்பும் கலந்த அழகிய ஐந்து இதழ் கொண்ட சிறு மலர்களும் அடர்சிவப்பு அரும்புகளும் கொத்துகொத்தாக நிறைந்து மயங்க வைத்தன. இளம்பச்சை ஆப்பிள் கனிகள் மரங்களில் செறிந்திருந்தன. அந்த புகைப்படங்கள் என்னை ஆப்பிளின் தாவரவியல் உள்ளிட்ட பிற தகவல்களின் பின்னே செல்ல வைத்தது.
சமீபத்தில் கிறிஸ்தவ இறையியல் குறிப்பிடும் விலக்கபட்ட கனியான ஆப்பிள் மீண்டும் பேசுபொருளாயிருந்தது.
ஹார்வேர்ட் மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான ஒரு மரபணு ஆய்வகத்தில் Joe Davis என்னும் ஒரு உயிரிக்கலைஞர் , (bio-artist) விவிலியம் சொல்லிய அதே அறிவு மரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பொருட்டு , உலகின் மிகபழைய ஆப்பிள் என கருதப்படும் 4000 வருடத்துக்கு முன்பான ஆப்பிளின் காட்டு மூதாதையான M. sieversiiயின் மரபணுவை தேர்ந்தெடுத்திருக்கிறார்.மிகுந்த ஆர்வமூட்டும் செய்தி இது.
மத்திய ஆசியாவில் தோன்றி பின்னர் உலகெங்கும் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் உலகில் அதிகம் பயிராக்கப்படும் கனிமரங்களில் ஒன்று. பல நாடுகளில், பல நாகரீகங்களில் ஆப்பிள் மலர் நீளாயுளின், அழகு இளமை காதல் வளமை ஆகியவற்றின் குறியீடாக கருதப்படுகின்றன
ஆப்பிள் மலரும்போது பல ஐரோப்பிய அமெரிக்க வீடுகளில் பூச்சாடிகளில் அவற்றை அமைத்து அழகுபடுத்துவதும், திருமண அலங்காரங்களில் பயன்படுத்துவதும் உண்டு . ஆப்பிள் மரங்களில் இலையுதிர்காலம் முடியும் போது இலைகளுக்கு முன்பாக மலர்கள் உருவாகிவிடும் என்பதால் முழுமரமும் மலர் நிறைந்து கொள்ளை அழகுடன் இருக்கும்.
இத்தனை அழகுடன் இருப்பினும் ஆப்பிள் மரத்தின் இலை தண்டு மற்றும் விதைகளில் Amygdalin என்னும் நச்சுப்பொருள் இருக்கும். இந்த நச்சுப்பொருள் அதை உண்பவர்களின் உடலில் சயனைடு நஞ்சாக மாறிவிடும். இவை மிக குறைந்த அளவே இருக்கிறது என்றாலும் ஆப்பிள் நஞ்சு கொண்டிருக்கும் மரம் எனும் கவனம் தேவைப்படுகிறது.
Malus domestica என்னும் ஆப்பிள் மரம் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே Malus sieversii, என்னும் அதன் காட்டுமூதாதையிடமிருந்து கலப்பினமாக உருவாக்கப்பட்டு இன்றைய கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில் சாகுபடி செய்யப்பட்டது. காட்டு மூதாதையான M. sieversii மிகச்சிறிய புளிப்பான கனிகளை கொண்டிருந்தது. எனவே அவற்றின் கலப்பினங்கள் உருவாக்கப்பட்டு மெல்ல மெல்ல புதிய வகைகள் உருவாகின.அவற்றின் சுவை, அழகிய நிறம், அதிக காலம் சேமித்துவைக்காலம் என்னும் வசதி ஆகியவற்றினால் ஆப்பிள்கள் உலகின் மிக விரும்பப்பட்ட கனிகளில் ஒன்றாக இருக்கின்றன.
ஆப்பிள்கள் ரோசேசியே குடும்பத்தை சேர்ந்தவை இதே குடும்பத்தில்தான் பேரிக்காய்களும் ரோஜாக்களும் செர்ரிகளும் ஸ்ட்ராபெர்ரிகளும், ப்ளம்களும் இருக்கின்றன.
விதையிலிருந்து உருவாகும் ஆப்பிள் அதன் இரண்டு பெற்றோரை போலவும் இருக்காது. இதனால் ஆப்பிள்களின் பரிணாம வளர்ச்சியில் பல்லாயிரக் கணக்கான வகைகள் உருவாகி இருக்கின்றன. உடல் இனப்பெருக்க முறையில் தண்டுகளிலிருந்தும் ஆப்பிள்கள் பயிராகின்றன.
ஆப்பிள்கள் பல பண்டைய நாகரிகங்களில் ஆதிக்கம் செலுத்தியதை வரலாற்றில் காணலாம்.பல நாகரீகங்களின் நூல்களில் தேவதைக்கதைகளில், காப்பியங்களில், நாட்டுப்புற பாடல்களில், தொன்மங்களில் ஆப்பிள்கள் இடம்பெற்றிருக்கின்றன.
மேற்கத்திய இலக்கியங்களில் மிக அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும் கனி ஆப்பிள்தான். பண்டைய கிரேக்க வரலாற்றின் ட்ரோஜன் போரை துவங்கி வைத்ததும் ஒரு ஆப்பிள் தான். பல வருடங்களாக வீட்டை பிரிந்திருந்த ஒடிசெஸ், ஆப்பிள் மரங்கள் சூழ்ந்த தோட்டத்தில் கழிந்த தனது பால்யத்தை நினைத்து நினைத்து ஏங்குகிறான்.
நார்ஸ் தொன்மங்களில் கவிதையின் கடவுளான இடுனா கடவுளர்க்கு இறவாமையை அளிக்கும் மந்திர தங்க ஆப்பிள் கனியை அவளது பொறுப்பில் வைத்திருந்தாள்.
கெல்டிக் தொன்மம் ஆப்பிளை என்றும் இளமையுடன் இறவாமல் இருக்க முடியும் மறு உலகிற்கான கனி என்கிறது. இப்படி ஆப்பிள்களின் மந்திர பண்புகளை கொண்டு ஆண்களை இளம்பெண்கள் வசியம் செய்யும் கதைகள் பல நாட்டுப்புறக்கதைகளில் உள்ளது.
ஐரிஷ் தொன்மங்களின் மாபெரும் நாயகனான கோன்லா, ஒரு அழகிய பெண் இறவாமையை அளிக்கும் என சொல்லி கொடுத்த ஒரு ஆப்பிளால் வசியம் செய்யப்படுகிறான்
ஆர்தரியன் புராணங்களில், ஆர்தர் மன்னருக்கு மிகப்பிரியமான அவலோன் என்னும் ஒரு தீவில் செறிந்து வளர்ந்திருந்த ஆப்பிள் மரங்களின் கனிகள் பல மந்திர பண்புகளை பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது
பல தொன்மங்களில் ஆப்பிள்கள் ஆசையை தூண்டுதல், இறவாமை, காதல், மெய்ஞானம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படும் கனியாகவே இருக்கிறது . அரேபிய இரவுக் கதைகளிலும் வருகிறது மனிதனின் அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரு மந்திர ஆப்பிள்.
பிரபல தேவதைக் கதையான ’’Snow White and the Poisoned Apple’’லில் ஸ்னோ ஒயிட் சூனியக்காரி கொடுத்த நச்சு ஆப்பிளால் மீளா உறக்கத்துக்கு போனபின்பு ஒரு காதல் முத்தமே அவள் எழுப்பும். இந்த பிரபல தேவதை கதை உலகின் பல மொழிகளில் பல கலாச்சாரங்களில் பல வடிவங்களில் இருக்கிறது
ஸ்வீடன் நாடோடிக்கதைகளின் வில்வித்தை நாயகனான வில்லியம் டெல் தன் மகனின் தலையிலிருந்த ஆப்பிளை ஒற்றை அம்பில் வீழ்த்தும் போட்டியில் வெற்றிபெறுகிறான்.வில்லியம்டெல்லும் ஆப்பிளும் என்னும் நாடன் பாடல் வீரத்துக்கான் பாடலாக பலகாலமாக அங்கு பிரசித்தி பெற்றிருக்கிறது.
ஐரோப்பிய நாட்டுப்புற கலாச்சாரத்திலும் ஆப்பிள் காதலின் அடையாளமாக கருதப்படுகிறது அங்கு நடைபெறும் ஆப்பிள் அறுவடை கொண்டாட்டங்களின் போது இளம்பெண்கள் நீளமாக சீவப்பட்ட ஆப்பிள் தோலை, தோள்களுக்கு பின்புறம் வீசி எறிவார்கள். அது எந்த ஆங்கில எழுத்தைப்போல விழுந்து வடிவம் கொண்டிருக்கிறதோ,அந்த எழுத்தை முதலாவதாக கொண்டிருக்கும் காதலன் அல்லது கணவன் கிடைப்பான் என்று அங்கு நம்பிக்கை உண்டு.
சேக்ஷ்பியரின் ரோமியோ ஜுலியட்டில், ரோமியோவை தனது விலக்கப்பட்ட கனி என்கிறாள் ஜூலியட்.
ஆங்கில பழமொழியொன்று //ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிளை உண்டால் மருத்துவரே தேவையில்லை என்கிறது. இந்தப் பழமொழி// an apple a day will keep the doctor away// முதன் முதலாக 1866 ல் அச்சில் வெளியானது.
பிரபல கவிஞர்களான Robert Frost, Emily Dickinson, Christina Rossetti, Dylan Thomas ஆகியோரும் ஆப்பிள்கள் பற்றி கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். பல பிரபல ஓவியர்கள் ஆப்பிளை வரைந்திருக்கிறார்கள். இயற்பியலாளர் ஐஸக் நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிள் புவியீர்ப்பு விசை குறித்த அறிதலை உலகிற்களித்தது.
நியூயார்க் நகரின் இணைப்பெயராகவே பெரிய ஆப்பிள் என்னும் பெயர் இருக்கிறது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூயார்க்கில் பிரபலமாக இருந்த குதிரை பந்தயத்தின் மிகப்பெரிய தொகையை குறிப்பிட பயன்படுத்தப்பட்ட “The Big Apple” என்னும் குறியீட்டுச் சொல் பின்னர் விரிவடைந்து நியூயார்க்கின் பெயராகவே நிலைத்துவிட்டது.
கிறிஸ்தவ இறையியலில், விவிலியத்தின் ஆதியாகமம், ஏதேன் தோட்டத்தின் விலக்கப்பட்ட கனியை உண்டதால் தண்டனைக்கு உள்ளான ஆதாமையும் ஏவாளையும் குறிப்பிடுகிறது. நூற்றாண்டுகளாக பல இறையியல் நூல்களில் விலக்கப்பட்ட கனியாக பெயரற்ற கனியே இருந்து வந்தது
ஆரம்பகால கிறிஸ்தவ படைப்புகள் இதை கடவுளுக்கு கீழ்படியாததால் கிடைத்த தண்டனை என்பதை சற்று விரிவாக சொல்லமுற்பட்டபோது கனி என்று பொதுவாக குறிப்பிடாமல் ஒரு குறிப்பிட்ட கனியின் பெயரை சேர்த்தன. அப்படி பல கனிகள் கிழங்குகள் தானியங்கள் குறிப்பிடப்பட்டு இறுதியில் அது ஆப்பிளாகி இருக்கிறது.
விலக்கப்பட்ட கனி என்பது கனியே அல்ல அது மனம் மயக்கும் ஒரு மது, திராட்சை ரசம் போல என்னுமோர் கருத்தும் அப்போது இருந்தது, வைன் அருந்துவது பாவம் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் அக்கருத்து முன்வைக்கப்பட்டிருக்கலாம்.
யூதர்களின் விவிலியமொன்று, கடவுளின் கட்டளையை கீழ்ப்படியாமையை விளக்கும் அந்த நிகழ்வை இப்படி விவரிக்கிறது
“When the woman saw that the tree was good for eating and a delight to the eyes, and that the tree was desirable as a source of wisdom, she took off its fruit and ate. She also gave some to her husband, and he ate” (Genesis 3:6)
ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட பழைய விவிலியத்திலும் விலக்கப்பட்ட கனி ஆப்பிள் என்று குறிப்பிட்டிருக்கவில்லை. பிற்கால ஹீப்ரூ விவிலியத்தில் கனியை குறிக்க உபயோகப்படுத்தபட்டிருந்த சொல் பெரி “peri”.
விவிலிய ஹீப்ரு மற்றும் நவீன ஹீப்ரூ இரண்டிலுமே பெரி என்பது கனி என்னும் பொதுவான பொருளைத்தான் கொண்டிருக்கிறது குறிப்பிட்ட கனியை அது சுட்டுவதில்லை. ஆப்பிளுக்கான ஹீப்ரூ சொல்லான “tapuach,” என்பது ஹீப்ரூ மொழியில் உருவான முதல் ஐந்து விவிலியங்களில் எங்குமே குறிப்பிடபடவில்லை.
ரபிஸ் என்றழைக்கப்படும் விவிலிய மொழியியல் ஆய்வாளர் மற்றும் மதகுருக்களில் ஒருவர் அது அத்திக்கனியாக இருக்கலாம் என்னும் கருத்தை முன்வைக்கிறார்.ஏனெனில் ஆதாமும் ஏவாளும் கனியை புசித்ததும் தங்களின் நிர்வாணத்தை உணர்ந்து வெட்கி அத்தி இலைகளில் ஆடையணிந்து கொண்டார்கள், எனவே அது அம்மரத்தின் கனியாக இருக்கலாம் என்கிறார்
ரபிஸ் ஒருவேளை அந்தக் கனி கோதுமை மணியாக கூட இருக்கலாம் என்னும் ஒரு கருத்தையும் சொல்கிறார். ஏனெனில் ஹீப்ரூ மொழியில் கோதுமை மணிகளுக்கான் சொல் “chitah,” ஹீப்ரூ மொழியில் பாவம்- sin, என்பதற்கான சொல்”cheit,” எனவே கோதுமை மணியும் விலக்கப்பட்ட கனி என்னும் சாத்தியங்களின் பட்டியலில் இருக்கிறது என்கிறார்,
ரபிஸ் அவரது ஆய்வுக்கட்டுரையில் கொஞ்சம் கசப்பு சுவை கொண்ட, சுருக்கங்கள் இருக்கும் மிக தடிமனான தோல் கொண்டிருக்கும் முட்டை வடிவ எலுமிச்சை கனியான citron என்பதை குறிக்கும் ஹீப்ரூ சொல்லான “etrog” என்பதை சுட்டிக்காட்டி அக்கனி எலுமிச்சை ஆகவும் இருக்கலாம் என்கிறார். யூதர்களின் பண்டிகைகளில் பண்டைய காலத்திலிருந்தே இந்த எலுமிச்சை கனி முக்கியமான இடம் கொண்டிருக்கிறது
அதைப்போலவே ஏதேன் தோட்டத்தின் இருப்பிடமும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. அது துருக்கியிலிருந்து ஓஹியோ வரை என்றும் இல்லை அது வடதுருவம் என்றும் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன
விலக்கப்பட்ட கனி அத்தி, ஆலிவ், திராட்சை,கோதுமை, எலுமிச்சை, ஆப்ரிகாட், வாழை மாதுளை என்றெல்லாம் மாறி மாறி வந்து கடைசியில்தான் ஆப்பிளில் வந்து நின்றிருக்கிறது. விலக்கப்பட்ட கனிகளுக்கான் இத்தனை சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கையில் எப்படி அது இறுதியாக ஆப்பிளாயிற்று?
துவக்க கால இறையியல் படைப்புகளில் விலக்கப்பட்ட கனியானது வளமையை பெருக்குமென நம்பப்பட்ட மாண்ட்ரேக் கனியாக கருதப்பட்டது,இதுவே வாழ்க்கை மரம்’’ tree of life’’ எனப்பட்டது. இனப்பெருக்கத்தின் ரகசியங்கள் கடவுளுக்கு மட்டுமே உரித்தானது என்பதால் இதன் கனிகள் மனிதர்களுக்கு விலக்கப்பட்டிருந்தது .பிறகு சாத்தானின் தூண்டுதலால் ஆதிமனிதன் அக்கனியை புசித்து இனப்பெருக்க ரகசியங்களை, காதலை காமத்தை அறிந்து கொண்டான்.
எனவே கோபம் கொண்ட கடவுளால், அந்த ஆதி தம்பதியினரும், விஷப்பாம்பாக மாற்றப்பட்ட சாத்தானும், சிறு செடியாக மாற்றப்பட்ட அந்த மாண்ட்ரேக் மரமும் கடவுளால் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.அதன் பின்னர் அக்காலப் படைப்புகளில் விலக்கப்பட்ட கனி மாண்ட்ரேக் என்னும் சிறு செடியின் கனியாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது.
பொ யு 250–200 ஆண்டுகளுக்கு முன்பான ஆதாமின் ஏழாம் தலைமுறை என கருதப்படும் ஏனோக்குவின் நூலில் கொத்துகொத்தாக திராட்சைகளை போன்ற கனிகள் விலக்கப்பட்ட கனிகளாக சித்தரிக்கப்பட்டன (Enoch 32:4). இது பின்னர் முதல் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது.
ஒரு நூற்றாண்டு கழித்தே திராட்சைகளின் இடத்தை அத்தி எடுத்துக்கொண்டது.
கிறிஸ்துவுக்கு பிறகான முதல் ஆயிரமாண்டு காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தகுந்த படைப்பான Life of Adam and Eve என்னும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரான ஆதாம் ஏவாளின் வாழ்க்கையை சொல்லும் படைப்பிலும் அது அத்திக்கனியென்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்ட கிரேக்க, லத்தீன அர்மீனிய, ஜார்ஜிய, ஸ்லேவினிக் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பல மொழிகளிலும் அப்படியே குறிப்பிடப்பட்டது. முக்கிய கிறிஸ்தவ இறையியல் எழுத்தாளர்களும் விவிலிய அறிஞர்களுமான அகஸ்டின், தியடோர் ஆகியோரும் அது அத்தியே என குறிப்பிட்டார்கள்
அந்நூல்களின் சித்தரிப்பை அடிப்படையாக கொண்டு பல ஓவியங்களும் அதே கனிகளை வரைந்தன.அவற்றில் மிக அதிகம் இடம்பெற்றது அத்தியும் திராட்சையும்தான். சில சித்திரங்களில் அத்திமரத்தில் திராட்சை காய்த்திருந்தது.இன்னும் சில சித்திரங்கள் மரத்தையோ கனியையோ அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் வரையப்பட்டிருந்தன.
பிரான்ஸின் வடக்குப்பகுதி நகரமான லையான் (Lyon) தேவாலயமொன்றில் சிறியதாக கருப்பு நிறத்தில் ஆலிவ் கனிகளை நினைவூட்டும் கனி வரையப்பட்டிருந்தது
வடக்கு பிரான்ஸில் ஒரு தேவாலயத்தில் 1180–90க்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்ட ஒரு சித்திரத்தில் ஏற்கனவே கடிக்கப்பட்டிருந்த ஒரு உருண்டையான கனியை ஆதாம் உண்ணும் சித்திரம் இருந்தது.அக்கனியில் ஆப்பிளை அடையாளம் காணும் மேற்புற பிளவு தெளிவாக தெரிந்தது.
3ம் நூற்றாண்டின் அலெக்ஸாண்டிரியா திராட்சையே ஆதமும் ஏவாளுமுண்ட விலக்கப்பட்ட கனி என்றார். பாரீஸின் வடக்கு புறநகர்ப்பகுதி தேவாலயங்களில் அக்காலத்து ஓவியங்களில் சாத்தானாகிய பாம்பு ஒரு கொத்து திராட்சைகளை வாயில் கவ்விக் கொண்டிருக்கும் சித்திரங்கள் இருந்தன.
4ம் நூற்றாண்டில் (அனேகமாக A.D. 382ல்) ரோம் நகரில்தான் இந்த ஆப்பிளின் வடிவம் துவங்கி இருக்கக்கூடும். போப் முதலாம் டமஸ்கஸ் , மொழியியலாளரான ஜெரோம் என்பவரிடம் விவிலியத்தை ஹீப்ரூவில் இருந்து லத்தீன மொழியில் மொழியாக்கம் செய்ய பணித்தபோது ஜெரோம் ஹீப்ரூவின் பெரி என்னும் சொல்லுக்கான லத்தீன இணைச்சொல்லாக மாலம் (“malum”) என்பதை உபயோகப்படுத்தினார். லத்தீன மொழியில் மாலம் என்பது சதைப்பற்றான உட்புறமும் ஏராளமான விதைகளையும் கொண்டிருக்கும் கனிகளின் பொதுப்பெயர். ஜெரோம் உபயோகப்படுத்திய மாலம் என்னும் சொல்லின் மற்றொரு இணைப்பொருள் ’’தீமை’’.
ஜெரோம் அப்பணியை 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு செய்தார். அவர் கையாண்ட canonical Vulgate எனப்பட்ட பேச்சுவழக்கு லத்தீன மொழியிலான அப்படைப்புத்தான் மாலம் என்னும் தீமைக்கும் கனிக்குமான் ஒரே பொதுச்சொல்லினால் கனியை குறிப்பிட்டு விலக்கப்பட்ட கனி ஆப்பிள் தான் என்னும் விதையை ஊன்றியது
ஜெரோம் மொழியியலாளர் மட்டுமல்ல ஒரு இறையியலாளர் மிக புத்திசாலியும் கூட . ஜெரோம் வேண்டுமென்றே அதை செய்திருக்க கூடும் என்று மொழியியலாளர்கள் பின்னர் யூகித்தனர். மொழிமாற்றத்தின்போது ஆப்பிளுக்கும் தீமைக்குமான ஒரு பொதுச்சொல்லை, தீமையை கொண்டு வரும் என்பதால் கடவுளால் விலக்கபட்ட ஒரு கனிக்கு உபயோகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம் என்கிறது அவர்கள் தரப்பு.எப்படியாகினும் மாலஸ் ஒரு நாகம் போல மெல்ல ஊர்ந்து வந்து வரலாற்றில் இடம் பிடித்தது ஜெரோமினால்தான்.
ஆனால் மாலஸ் என்பது சதைப்பற்றான எந்த கனியையும் குறிப்பதுதான் எனவே அக்கனி பேரிக்காய் அல்லது அத்தி அல்லது பீச் ஆக இருக்கலாம் என்ற கருத்தும் வலுவாக பின்னர் எழுந்தது.அதை சொன்னவர்கள் தங்கள் தரப்பு ஆதாரமாக 1508 லிருந்து 1512 க்கு இடைப்பட்ட காலத்தில் சிஸ்டைன் தேவாலய உட்கூரையில் மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த சித்திரத்தில் அத்தி மரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பை காட்டினார்கள்
எனினும் அதன் பின்னர் ஐரோப்பாவின் பல கலைவடிவங்களில் விலக்கப்பட்ட கனி ஆப்பிளாக சித்தரிக்கப்பட்டது. ஜெர்மானிய கலைஞரான Albrecht Dürer என்பவரின் 1504 ஆண்டின் புகழ்பெற்ற செதுக்கு சித்திரங்களில் ஆதாமும் ஏவாளும் ஆப்பிள் மரத்தடியில் நின்றுகொண்டிருக்கும் சித்திரத்தை உதாரணமாக சொல்லலாம்.
அந்த சித்திரம் பிற்பாடு உருவாக்கப்பட பல ஓவியங்களுக்கு அடித்தளமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்தது. உதாரணமாக ஜெர்மானிய ஓவியர் Lucas Cranach the Elder ன் ஆதாமும் ஏவாளும் சித்திரத்தில் மரத்திலிருந்து பளபளக்கும் ஆபரணங்களை போல ஏராளமான ஆப்பிள்கள் தொங்கிக்கொண்டு இருந்தன.
எனவே இது ஒரு மொழியில் ஏற்பட்ட நுண்மையான விளையாட்டு அல்லது தவறு என்பதை மக்கள் உணரும் முன்னேயே ஆதாமும் ஏவாளும் ஆப்பிளுடன் இருக்கும் சித்திரங்கள் ஏராளமாக உருவாகிவிட்டிருந்தன.
அதே சமயத்தில் எலுமிச்சையும் ஆப்ரிகாட்டும்,மாதுளைகளும் பல ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டன என்றாலும் ஆப்பிள் மிக அதிக இடமும் முக்கியத்துவமும் ஏற்றிருந்தது’
12ம் நூற்றாண்டின் வழிபாட்டு நாடகமான Jeu d’Adam ல் பல இடங்களில் விலக்கப்பட்ட கனி என்பதை மாதுளையை குறிக்கும் “forbidden pom” என்னும் சொற்களே குறிப்பிட்டன. ஜெர்மனியிலும் 10,12 நூற்றாண்டுகளில் விலக்கப்பட்ட கனியாக அத்தி மாதுளை ஆகியவை இடம் பெற்றிருந்தன ஆனால் 13ம் நூற்றாண்டில் அனைத்து கனிகளையும் விலக்கிவிட்டு ஆப்பிள் அந்த இடத்தில் அமைந்தது
அதன் பின்னர் ஆப்பிள் வலுவாக பிரான்சின் விலக்கப்பட்ட கனியின் இடத்தில் அமர்ந்தது. இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் அத்தனை விரைவில் மாற்றம் வந்திருக்காவிடினும் பிரான்சின் கலாச்சார தாக்கத்தில் 13ம் நூற்றாண்டின் பின்பகுதியில் அங்கும் ஆப்பிள் அறிமுகமானது.பிரான்சையும் விரைவில் கடந்து 13ம் நூற்றாண்டின் இறுதியில் பல நாடுகளில் அத்தியை நகர்த்திவிட்டு ஆப்பிள்கள் இடம்பெற்றன,
14ம் நூற்றாண்டில் ஆங்கிலம் பேசுமொழியாக இருந்த அனைத்து பிரதேசங்களிலும் பெரும்பாலான அத்திகள் ஆப்பிள்களாகியிருந்தன. . அதன் பின்னர் ஐரோப்பாவின் அனைத்து கலைகளிலும் அத்தி மறைந்து ஆப்பிள் நுழைந்தது
ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாவதற்கு அச்சு இயந்திரங்களும் ஒரு காரணமாயிருந்தன. 16ம் நூற்றாண்டின் துவக்ககாலங்களில் முக்கிய அச்சு தொழிற்சாலைகள் எல்லாம் வடக்கு ஐரோப்பாவில் அமைந்திருந்தன. அவை உருவாக்கிய அனைத்து படைப்புக்களிலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாக சித்தரிக்கப்பட்டது.
வடக்கு ஜெர்மனியின் புகழ்பெற்ற கலைஞர்களான Hugo van der Goes, Hieronymus Bosch, Lucas Cranach the Elder, Albrecht Dürer ஆகியோரின் சித்திரங்களில் விலக்கப்பட்ட கனி ஆப்பிளாகவே இருந்தது.
ஜான் மில்டன் தனது இழந்த சொர்க்கத்தை பதிப்பத்தாரிடம் 5 பவுண்டுகளுக்கு 1667ல் உரிமம் பெற்று இப்போது 356 வருடங்கள் ஆகின்றன.
அவரது அப்பெரும் படைப்பில் விவிலியத்தின் ஆதிக்கதைதான் பேசுபொருள் . கதாபாத்திரங்களும் நமக்கு தெரிந்தவர்கள் தான் கடவுள், ஆதாம், ஏவாள், பாம்பின் வடிவத்தில் சாத்தான் மற்றும் ஒரு ஆப்பிள்.
கடவுளுக்கெதிரான மனிதனின் முதல் மீறலும், உலகிற்கு மரணத்தின் சுவையையும் அழிவையும் கொண்டு வந்த அந்த விலக்கப்பட்ட மரத்தின் கனியை குறித்தான அறிமுகத்தில் ஜான் மில்டன் இப்படி குறிப்பிடுகிறார்
//Of Mans First Disobedience, and the Fruit
Of that Forbidden Tree, whose mortal taste
Brought Death into the World, and all our woe//
துவக்கத்தில் வெறும் கனி என்று சொல்லும் மில்டன் அந்த 1000 வரி கவிதையில் இரண்டு இடங்களில் ஆப்பிள் என்று குறிப்பிடுகிறார்.
மில்டன் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல அவருக்கு பன்மொழிப்புலமை இருந்தது. லத்தீன, கிரேக்க மற்றும் ஹீப்ரூ மொழிகளில் நல்ல புலமை இருந்த அவர் வெளிநாட்டு மொழிகளுக்கான செயலராகவும் பணிபுரிந்தார். அவருக்கு நிச்சயம் ஜெரோமின் நுண்மையான விளையாட்டு தெரிந்திருக்கும் இருந்தும் அவர் ஏன் ஆப்பிள் என்னும் சொல்லை தேர்வு செய்திருக்க கூடும்?
இதற்கு வரலாற்றாய்வாளர்கள் இருகருத்துகளை சொல்கிறார்கள்’ ஒன்று மில்டன் அக்கனி ஆப்பிள் என்றே நினைத்திருக்கலாம் . இரண்டு மில்டனும் ஆப்பிள்/மாலஸ் என்னும் சொல்லின் பொருளான சதைப்பற்றான விதைகள் நிரம்பிய ஏதோ ஒரு கனி என்னும் பொதுப்பெயரில் கூட அச்சொல்லை உபயோகப்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்’
மில்டனுக்கு பின் வந்த எழுத்தாளர்கள் அச்சொல்லை பிரத்யேகமாக ஆப்பிளை குறிக்கும் சொல்லாகவே உருவகப்படுத்தி பிரபலமாக்கினர்.அதன்பிறகே உலகெங்கிலும் விலக்கப்பட்ட கனியாக ஆப்பிள் நிலைத்துவிட்டது.
கடவுளுக்கு கீழ்படிந்திருந்தால் மற்றுமொரு நன்மை மரமான வாழ்க்கை மரத்தின் பலன்கள் மனிதனுக்கு கிடைத்திருக்கும் என்பதையே இறையியல் நூல்கள் விலக்கப்பட்ட கனி என்பதன் மூலம் குறிப்பிட்டன. அது ஒரு குறியீடு என்பதையும் தாண்டி பல நூற்றாண்டுகளாக அக்கனி எது என்பதற்கு இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டது வியப்புத்தான்.
ஏவாளும் ஆதாமும் கீழ்படியாமை, மீறல் ஆகிய பாவங்களின் பொருட்டே பூமிக்கு அனுப்பப்பட்டனர். அக்குற்றத்தை காட்டிலும் நூற்றாண்டுகளாக அது எந்தக்கனி என்பதில் இத்தனை ஆராய்சிகள் செய்யப்பட்டிருக்கிறது.
மொழியியலோ அழகியலோ தவறான புரிதலோ ஆலிவிலிருந்து, மாதுளை, அத்தி, கோதுமை, திராட்சை என்று பல வசீகரிக்கும் வடிவங்கள் கொண்டு இறுதியில் ஆப்பிளாயிருக்கிறது விலக்கப்பட்ட கனி. இப்படித்தான் தீமையும் பல அழகிய, வசீகரிக்கும், சபலப்படுத்தும் வடிவங்களில் நம்முன் வந்து நிற்கிறது.
அதிலும் செக்கசிவந்த நிறமும் சதைப்பற்றும் சுவையும் கொண்ட ஆப்பிள் வசீகரமென்றால், முன்பே கடிக்கப்பட்ட ஆப்பிள் கூடுதல் வசீகரம்தான்.
சிவப்பு நிறம்கொண்ட ஆப்பிள் ஆசையும் காதலும் நிரம்பி இருக்கும் மனிதனின் இதயத்துக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. உலகெங்குமே ஆப்பிள் வடிவம் தொழில்நுட்பம், மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களின் அடையாளமாக கருதப்படுகிறது.
ஜூன் 7 1954 ல் தனது 42வது வயதில் ஆலன் டூரிங் அவருக்கு மிக பிடித்தமான அடர்சிவப்பு ஆப்பிளில் சயனைடை ஊசியில் செலுத்தி அதை கடித்துண்டார் மறு நாள் காலையில் ஒரு துண்டு கடிக்கப்பட்ட ஆப்பிளின் அருகில் அவரது சடலம் கிடந்தது. அதே கடிக்கப்பட்ட ஆப்பிள் தான் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோவாக அமைந்திருக்கிறது.
விலக்கப்பட்ட கனி என்பது மாதுளையோ அத்தியோ ஆப்பிளோ திராட்சையோ அல்ல எவையெல்லாம் அறமற்றதோ அவையனைத்துமே விலக்கப்பட்ட கனிகள்தான்.
ஏவாள் அக்கனியை தாணுண்டு ஆதாமுக்கும் அளித்து அவர்கள் சொர்க்கத்தை இழந்தாலும் உலகை தோற்றுவித்தார்கள், வெண்முரசு நாவல் நிரையின் இமைக்கணத்தில் இந்த வாழ்வின் சுழற்சியை, தொடர்ச்சியை சிகண்டியும் இளைய யாதவரும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு அத்தியாயத்தின் இருவரிகள் சொல்லி விடுகிறது. //ஆணை பெண் உண்கிறாள். அவன் உடலின் பகுதியென்றாகிறாள். அவள் வயிற்றில் அவன் கருவாகிறான்” //
மத்திய ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டின் ‘எபோ’ காடுகள் இயற்கை வளம் மிகுந்தவை. மலை யானை, உலகின் மிகப்பெரிய கோலியாத் தவளை மிக அரிய உலகின் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் Red colobuses குரங்குகள் பல அரிய தாவர வகைகள் என பலவற்றின் வாழிடம் இதுதான். உலகின் மழைப்பொழிவில் எபோ காடுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது .
இந்த எபோ காடுகளில் 1500 சதுர கிமீ அளவுக்கு மழைக்காடுகள் எபோ ஆற்றின் அருகில் இருக்கிறது.இங்கு 65 மிக முக்கிய உயிரினங்கள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன
உலகின் பிற இயற்கை வளங்களைப்போலவே எபோ காடுகளும் கனிம சுரங்கங்களுக்ககவும், சட்ட விரோத விலங்கு வேட்டை மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றால் அழியும் அபாயத்தில் இருந்தது. பல சூழலியல் ஆர்வலர்கள் இந்த பிரச்சனையை சர்வதேச அளவில் முன்வைத்தபோது எபோ காடுகள் பாதுகாக்கப்பட்ட பூங்காவாக அறிவிக்கப்படும் என்று அரசுத்தரப்பில் 2010ல் சொல்லப்பட்டும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதன் பின்னரும் எபொ காடுகளின் 1,300 சதுர கிமீ அளவுள்ள பரப்பின் மரங்கள் வெட்டப்படுவதற்கான உரிமம் அரசால் வழங்கப்பட்டது. எபோ காடுகளின் உயிரினங்களும் அங்கிருக்கும் தொல்குடிகளுக்குமான மாபெரும் அச்சுறுத்தலாக அது இருந்ததால் எதிர்ப்புகள் வலுத்தன.
எனவே அழிவின் விளிம்பில் இருந்த எபொ காடுகளை பாதுகாக்க கேமரூனின் ஆரய்ச்சியாளர்கள் சூழியலாளர்கள் ஆகியோர் இணைந்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு டிகாப்ரியோ உள்ளிட்ட பல பிரபலங்களின் கையெழுத்தை சேகரித்து அரசுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினார்கள் கூடவே எபோ காடுகளின் இயற்கை வளத்தை பட்டியலிட்டு உலகிற்கு அதன் முக்கியத்துவத்தை காட்ட நினைத்தார்கள் அப்படி பட்டியலிடுகையில்தான் அதுவரை அறியப்பட்டிருக்காத ஒரு மரம் கண்டுபிடிக்கப்பட்டது
சீதாப்பழத்தின் தாவரக்குடும்பமான அனோனேசியை சேர்ந்த, 2022ல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இம்மரத்திற்கு புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரும் இயற்கை ஆர்வலரும், சூழியல் செயற்பாட்டாளருமான லியோனார்டோ டிகாப்ரியோ வின் பெயரிடப்பட்டிருக்கிறது.
கேமரூன் நாட்டின் எபோ காடுகளின் பாதுகாப்பில் டிகாப்ரியோ காட்டிவரும் அக்கறையையும் அதை பாதுகாக்கும் அவரது முன்னெடுப்புக்களையும் சிறப்பிக்கும் பொருட்டு அக்காடுகளில் மட்டும் காணப்படும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மரத்திற்கு Uvariopsis dicaprio என்று அவரது பெயர் இடப்பட்டிருக்கிறது,
குறிப்பாக அக்காடுகளில் மரம் வெட்டப்படுவதற்கான எதிரான அவரது செயல்பாட்டின் முக்கியத்துவத்தின் பொருட்டே இந்த கெளரவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
எபோ காடுகளில் 50க்கும் குறைவான டிகப்ரியோ மரங்கள் மட்டுமே இருக்கின்றன அதுவும் வெறும் 4 சதுர கி மீ பரப்பளவில் மட்டும் இருக்கிறது. பலமுறை எபோ காடுகளில் தேடியும் இவை வேறெங்கும் காணப்படவில்லை.
கடல் மட்டத்திற்கு 850 மீ உயரத்தில்,4 அடி உயரமும் கவிழ்ந்து தொங்கும் மஞ்சள் இதழ்களை கொண்ட ஆண்மலர்களையும் கொண்டிருக்கும் இம்மரம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அவசியம் பாதுகாக்கப்படவேண்டிய தாவரங்களில் ஒன்றாகி விட்டிருக்கிறது. இக்காடுகளின் மரம் வெட்டும் உரிமம் ரத்தானதில் டிகாப்ரியோவின் பங்கு மிக முக்கிய மானதென்பதால் இம்மரம் அவர் பெயரில் அழைக்கப்படுவது அவருக்கான பொருத்தமான அங்கீகாரம்.
இந்தப் பெயரிடல் கியூ தாவரவியல் பூங்காவின் தாவரவியலாளர் களான Martin Cheek மற்றும் George Gosline, ஆகிய இருவரின் பரிந்துரையின் பேரில் நடந்திருக்கிறது.
உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் எட்டு முறை இடம்பெற்ற செல்வந்தர் எனினும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயற்கை பாதுகாப்பில் அக்கறை கொண்டவராகவே இவர் பொதுவெளியில் அறியப்படுகிறார்
திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர் 2014ல் தயாரித்த மலை கொரில்லாகளைக் காப்பாற்ற போராடும் நான்கு நபர்கள் குறித்த பிரிட்டிஷ் ஆவணப்படம் ’விருங்கா’ மிக குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விவசாயம், விலங்குகள் பாதுகாப்பு போன்ற பேசு பொருட்களை கொண்ட படங்கள் தயாரிப்பதில் டிகாப்ரியோ ஆர்வம் கொண்டிருந்தார்.
2019ல் புவி வெப்பமாதல் குறித்த ஆவணப்படமாகிய Ice on Fire, அவரால் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து டிகாப்ரியோ சூழலியம் (Environmentalism) தொடர்பான பல முன்னெடுப்புக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
புவிவெப்பமாதல் உலகின் மிகப்பெரிய சவால் என்று சொல்லும் இவர் மழைக்காடுகள் அழிந்து வருவதையும் வாழிடங்ளை இழந்து பல உயிரினங்களின் இருப்பு கேள்விக்குறியாகவும் கவலைக்குரியதாகவும் ஆகிவிட்டிருப்பது குறித்தும் தொடர்ந்து ஆவணப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்
இயற்கை சார்ந்த விழிப்புணர்வு மற்றும் செயல்பாட்டின் பொருட்டு லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை ஒன்றையும் (Leonardo DiCaprio Foundation,) 1998ல் நிறுவினார். இந்த அறக்கட்டளை மூலம் வளரும் நாடுகளின் இயற்கை பேணுதலுக்காக நிதியுதவிகள் அளிக்கப்படுகின்றது.
இத்துடன் சூழலுக்கு இணக்கமான மின் வாகனங்களைத்தான் அவர் பயன்படுத்துகிறார்.
2000த்தில் சூழல் பாதுகாப்பு குறித்த பில் கிளிண்டனுடனான டிகாப்ரியோவின் நேர்காணல் க முக்கியமானது
2007ல் Live earth எனப்படும் மாபெரும் சூழல் விழிப்புணர்வு நிகழ்வையும் நடத்தினார் அதே ஆண்டில் ரஷ்யாவின் வன உயிர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய புலிகளுக்கான் உச்சிமாநாட்டுக்கு 1மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினார். அந்த மாநாட்டிற்கு பல தடங்கல்களுக்கு இடையில், இரண்டு முறை அவர் செல்லவேண்டிய விமானம் ரத்தாகியும் அவர் முயற்சி எடுத்து கலந்துகொண்ட போது புதின் டிகாப்ரியோவை ’’இவரே உண்மையான் ஆண்’’ என்று புகழ்ந்தார்.
இந்தோனேசியாவின் எண்ணெய்ப்பனை வளர்ப்பினால் காடழிதல் குறித்து கண்டனம் தெரிவித்தது, 2016ல்; அமெரிக்க தொல்குடிகள், அவர்களின் வாழ்விடங்களின், வன உயிர்களின் பாதுகாப்புக்கென 15.6 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தது, 2017ல் காலநிலை மாற்றம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பாராமுகக்தை கண்டித்து ஊர்வலம் சென்றது என டிகாப்ரியோவின் சூழல் செயல்பாடுகளை வரிசையாக சொல்லிக்கொண்டெ போகலாம்
சமீபத்தில் கிழக்கு பசிபிக் தீவுக் கூட்டங்களின் பாதுகாப்பிற்கென டிகாப்ரியோ 43 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்திருக்கிறார். அவரும் அவரது அன்னையுமாக பல நன்கொடைகளை சூழியல் சார்ந்த செயல்பாடுகளுக்கென அளிக்கிறார்கள். அவரின் விக்கி பக்கத்துக்குள் சென்றால் இவரது சூழியல் செயல்பாடுகள் குறித்து மேலும் அறியலாம்
டிகாப்ரியாவின் இத்தையக சூழல் சார்ந்த செயல்பாடுகளால் அவரை சிறப்பிக்கும் பொருட்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மலேசியாவில் மட்டும் காணப்படும் ஒரு வண்டினத்துக்கு Grouvellinus leonardodicaprioi, என்றும் டொமினிக் குடியரசின் சிலந்தி ஒன்றுக்கு Spintharus leonardodicaprioi என்றும் அவரது பெயர் முன்பே வைக்கப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னதான அரிய நீல நிற வைரக்கல்லான ஹோப் வைரம் உள்ளிட்ட பதினான்கு கோடி பல்துறை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்மித்சோனியன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் (Smithsonian National Museum of Natural History) ஒரு மதிய வேளை அது. அறிவியலாளரான சினிச்சி நகஹரா (Shinichi Nakahara) தனது மேசையின் இழுப்பறையை திறந்து அந்த கண்ணாடிப் பெட்டியை கவனமாக எடுத்தார்.1981 லிருந்து அதனுள் இருந்த பதப்படுத்தப்பட்டிருந்த பட்டாம் பூச்சியை மீண்டும் கவனமாக ஆராய்ந்தார்.
பட்டாம்பூச்சி மற்றும் அந்துப்பூச்சிகள் துறையில் வல்லுநரான நகஹராவால் அந்த பட்டாம் பூச்சியை வெகு காலமாக, 2018 டிசம்பர் மாதமான அப்போது வரை இனம் காண முடியாமல் இருந்தது. அந்த அரிய கருப்பு வண்ண ஆண் பட்டாம்பூச்சியின் உடல் பனாமாவில் கிடைத்தது. ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் மாணவன் பாப்லோ (Pablo Sebastián Padrón) அதை கண்டு பிடித்து அதன் உடலை புகைப்படம் எடுத்து நகஹராவுக்கு அனுப்பி அதை இனம் கண்டு சொல்லும்படி கேட்டிருந்தான். பின்னர் அது பாடம் செய்து அங்கே சேமித்துவைக்கப்பட்டது. அந்த பட்டாம்பூச்சியை இனம் காண்பது பெரிய சவாலாக அமைந்துவிட்டது நகஹராவுக்கு. மேலும் ஒரு பட்டாம்பூச்சி கிடைத்தால் ஒப்பிட்டு பார்க்க உதவியாக இருக்கும் என அவர் நினைத்துக் கொண்டு காத்திருந்தார்.
பளபளக்கும் கரிய இறக்கைகளும், இறக்கைகளின் விளிம்புகளில் பாலாடை நிறப் புள்ளிகளின் வரிசையும் கொண்ட அந்த பட்டாம்பூச்சி மிக வசீகரமாயிருந்தது. இறகுகள் இணையும் இடத்தில் இருந்த செந்தீற்றல் அதை மேலும் அழகாக்கி இருந்தது.
அதன் உடல் அமைப்பு பட்டாம்பூச்சிகளின் மிகப்பெரிய குடும்பமான பியரிடேவை (Pieridae) சேர்ந்தது என தெரிவித்தாலும் அதன் கருப்பு நிறம் சந்தேகத்துக்கு இடமளித்தது. எனவே நகஹராவும் பாப்லோவும் காத்திருந்தனர்.
Shinichi Nakahara
அதிர்ஷ்டவசமாக, இரண்டு மாதங்கள் கழித்து மிஸிஸிபி பல்கலைக்கழகத்தின் பூச்சியியலாளரான ஜான் (John MacDonald) பனாமாவிலிருந்து தன்னால் இனம் காணமுடியவில்லை என்னும் குறிப்புடன் ஒரு கருப்பு நிற பட்டாம்பூச்சியின் புகைப்படத்தை நகஹராவுக்கு அனுப்பியிருந்தார்.
புகைப்படத்தில் இருந்த பட்டாம்பூச்சி தன்னிடம் இருந்த அதே கருப்பு பட்டாம்பூச்சியை போலிருந்ததால், நகஹரா, ஜானிடம் அந்த பூச்சி உடலின் ஒரு காலை மட்டும் உடனே அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். இரண்டின் DNA சோதனைகளையும் செய்து அவை Catasticta பேரினத்தை சேர்ந்த மிக அரிய வகை பட்டாம்பூச்சிகள் என்பதை கண்டறிந்தார்.
அதுவரை விவரிக்கவும், கண்டுபிடிக்கப்பட்டும் அடையாளம் காணப்பட்டுமிராத அவற்றின் வேறு மாதிரிகள் எங்கேனும் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறதா என அடுத்த 30 மாதங்களும் 14 பட்டாம்பூச்சி அருங்காட்சியங்களில் தேடிப்பார்த்த போது எங்குமே அவை இல்லை. எனவே புதிய கண்டுபிடிப்பான அதற்கு பொருத்தமான பெயரை தேடினார் நகஹரா
அத்தனை அரிய பட்டாம்பூச்சிகளான அவற்றிற்கு 17ம் நூற்றாண்டின் பிரபல ஓவியக்கலைஞரும் பூச்சியியலில் பெரும் கண்டுபிடிப்புக்கள் செய்தவரும் பட்டாம்பூச்சிகளில் பேரார்வம் கொண்டிருந்தவருமான மரியா சிபில்லா மெரியனின் (Maria Sibylla Merian) பெயரை வைக்க முடிவு செய்து அந்தப் பட்டாம்பூச்சிக்கு Catasticta sibyllae என்று பெயரிட்டார்.
மரியா சிபில்லா அவர் வாழ்ந்த நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் மற்றும் ஓவியக்கலைஞராக அறியப்பட்டவர். 17ம் நூற்றாண்டில் பெண்கள் இருந்த நிலைக்கு மாறாக பல அரிய சாதனைகளை தாவரவியலிலும், பூச்சியியலிலும் செய்தவர்.
17ம் நூற்றாண்டின் பிரபல தாவரவியல் ஓவியக் கலைஞரான ஜெர்மெனியை சேர்ந்த மரியா சிபில்லா (1647-1717) மிக இளைய வயதிலேயே கம்பளிப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள் மற்றும் பூச்சிகளிலும் அவை வாழும், உண்ணும் தாவரங்களிலும் வெகுவாக ஆர்வம் கொண்டிருந்தார். மரியாவின் மாமா ஒரு பட்டுப்புழு உற்பத்தியாளர், எனவே அவருக்கு அப்புழுக்களை கவனிப்பதில் இயற்கையாகவே ஆர்வம் உண்டானது
மரியா தனது 11ம் வயதிலிருந்தே ஓவியங்கள் வரையத் துவங்கினார். அவரது பொழுதுபோக்கு இறந்த பூச்சிகளை பாடம் பண்ணுவதில் அவரது தாய் மாமாவுக்கு உதவுவதும், அவற்றை அலமாரிகளில் அடுக்கி வைப்பதும்தான். எனவே மரியாவிற்கு பூச்சிகளின் உலகில் நல்ல பரிச்சயமுண்டானது,
ஜான்ஸ்டன் (Jonston) உருவாக்கிய முதல் விலங்கியல் அகராதியை அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான அச்சகம் மரியா சிறுமியாக இருக்கையிலேயே வெளியிட்டது. அந்த அகராதியின் அழகிய வண்ணப்படங்களால் மரியா வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்தாள்.
மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டில் ஏப்ரல் 2, 1647 ல் சிற்பியும் பதிப்பக உரிமையாளரும் ஓவியருமான மேத்யூஸுக்கும் (Matthaeus Merian) ஜோஹன்னாவுக்கும் (Johanna Sibylla Heim) பிறந்தார். ஜொஹன்னா மெரியனின் இரண்டாவது மனைவி. மரியாவுக்கு 3 வயதாக இருக்கையில் தந்தை மேத்யூஸ் இறந்த பின்னர் ஜோஹன்னா உருவப்பட ஓவியரான ஜேகப்பை (Jacob Marrel-1613/14 – 1681) மணந்துகொண்டார்.
மரியா ஒவியம் வரைவதை அவரது தாய் மறுமணம் புரிந்துகொண்ட பிரபல ஓவியரும் அவளது வளர்ப்புத்தந்தையுமான ஜேகப்பிடமிருந்து கற்றுகொண்டார் .
ஜேகப் ஒரு மலர் ஓவியர், உருவ வரைபட நிபுணர் மற்றும் தேர்ந்த சிற்பி.
ஃப்ராங்க்ஃபர்ட்டின் பிரபல உருவ வரைபட நிபுணரான ஜார்ஜின் (Georg Flegel -1566-1638), மாணவராக இருந்து ஓவியக்கலையை கற்ற இவர் Utrecht க்கு 1632 ல் குடிபெயர்ந்தார். அங்கு உயிர் ஓவியக்கலை வல்லுநரான ஜேனின் (Jan Davidsz. de Heem -1606-1683/4) அறிமுகம் உண்டானது. அக்கலையையும் ஜேகப் கற்றுத்தேர்ந்தார்
ஜேகப்பின் படைப்புக்களில் மிகவும் பிரபலமானவை மேசையின் மீதிருக்கும் கூடைகளில் வைக்கப்பட்டிருக்கும் கனிவகைகளும், பூச்சாடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மலர்களும் தான். குறிப்பாக கனிகளின் மேற்புறத்தின் நுட்பமான அமைப்புக்களை ஜேகப் துல்லியமாக வரைந்திருப்பார்.
அழகிய உலோகக் கிண்ணங்களில் வைக்கப்பட்டிருக்கும் பீச், ரத்தினக்கற்களை போன்ற விதைமுத்துக்களை காட்டிக் கொண்டிருக்கும் மாதுளை, தோல் மீதிருக்கும் மெல்லிய வெண்படலத்துடன் காணப்படும் கொத்து கொத்தான திராட்சைகள் ஆகியவை மிக தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும்.
ஜேகப்பின் ஓவியங்களில் பூச்சி அரித்த இலைகளும், பழுத்து அழுகிய கனிகளும் காணப்படும். எத்தனை அழகியதாயினும் அழிவு என்பது இயற்கையில் தவிர்க்க முடியாது என்பதை அவரது ஓவியங்கள் உணர்த்தின.
ஜேகப், ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் பிறந்தார். எண்ணெய் ஓவியங்கள் அவரது தனித்த பிரியத்துக்குரியவையாக இருந்தன. 1641ல் ஜேகப் கேதெரினா எலியட்டை மணந்தார். 1649ல் எலியட் மரணமடைந்த பின்னர் ஃப்ராங்க்ஃபர்ட்டில் வாழ்ந்துவந்த பிரபல சிற்பியான மேத்யூஸ் மெரியனின் (Matthäus Merian) விதவையான ஜொஹன்னா சிபில்லாவை (Johanna Sibylla Heimius) 1651ல் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அப்போதுதான் மனைவியின் மகளான மரியாவை தனது மாணவராக்கிக்கொண்டு ஓவியக்கலையை கற்பித்தார்.
அப்போதிலிருந்து அவர் இறந்த 1681 வரை அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டிலேயே பெரும்பாலும் வாழ்ந்தார்.
ஜேகப்பின் ஓவியங்களில் குறியீடுகள் மிக சிறப்பானவை. மலர்களில் பல்லியோ பட்டாம்பூச்சிகளோ இருந்தால் அவை உயிர்த்தெழுதலையும், நத்தைகள் சோம்பேறித்தனத்தையும் குறித்தன
கூரிய இதழ்களுடன் இருக்கும் நீண்ட ஊதா மலர்மஞ்சரிகள் தூய ஆவியை, வாடிய மலர்கள் மரணத்தை, லில்லிகள் பணிவையும் குறித்தன. ட்யூலிப் மலர்களே அவரின் சிறப்பு ஓவியங்கள் என கருதப்படுகின்றன. ட்யூலிப் மலர்களின் ஓவியங்களும் அவற்றின் விலைகளும் குறிப்பிடப்பட்டிருந்த ஜேகப்பின் நான்கு ஓவியத்தொகுதிகள் மிக புகழ்பெற்றவை. மரியாவும் அவரை போலவே ட்யூலிப்களின் ஓவியங்களை வரைந்தார்.
ஜேகப்பின் மறைவுக்கு பின்னர் அவரது மகனும் மரியாவின் சகோதருமான கேஸ்பர் மெரியன் மரியாவுக்கு செம்புப் பட்டயங்களில் செதுக்கோவியங்களை வரைய கற்றுக்கொடுத்தார். அக்காலத்தில் ஜெர்மனியில் பெண்கள் ஓவியம் வரைவதும் விற்பதும் சில நகரங்களில் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் மரியா வாழ்நாள் முழுவதும் ஓவியங்களை வரைந்தார்
மரியா சிறுமியாயிருந்த போதிலிருந்து கர்ப்பமுற்றிருந்த போதும் , குழந்தை வளர்ப்பு காலங்களிலும், இல்பேணிக்கொண்டிருக்கையிலும் எப்போதும் வரைந்துகொண்டே இருந்தார்.
மரியாவுடன் ஓவியம் வரைய கற்றுக்கொண்ட ஜேகப்பின் மாணவரான ஜோகன்ஸைத்தான் (Johann Andreas Graff) மரியா 1665ல் காதல் திருமணம் செய்துகொண்டார். மரியாவின் கணவரும் கட்டிடக்கலை ஓவியங்களில் வல்லுநர். அவரது 9 பெரிய தாள்களில் வரையப்பட்ட st. பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஓவியம் மிக பிரபலமானது. ஆனால் மரியாவுடையது தோல்வியுற்ற தாம்பத்யம் .
1668ல் மரியா அந்நகரின் இளம்பெண்களுக்கு மலரோவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார், Jungferncompaney (“Company of Young Misses,”) எனப்படும் திருமணத்திற்கு காத்திருக்கும் மேல்மட்ட குடும்பப்பெண்களின் அத்தகைய குழுமங்களில் மலர்களின் ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பது, லினென் துணிகளில் இயற்கை சித்திரங்களை எம்பிராய்டரி செய்வது, ஆகிய வகுப்புக்களின் மூலம் மரியாவுக்கு பல செல்வந்தர்களின் சொந்த தோட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடைத்தது. மேலும் பல பூச்சிகளை தாவரங்களை மரியா வரைய இவை உதவியாக இருந்தன
பெரும்பாலான் ஐரோப்பிய பூச்சி இனங்களை ஆராய்ந்திருந்த மரியா எப்படி அவை பிறக்கின்றன, வளர்கின்றன,உணவுண்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன இறக்கின்றன என்பதை முழுமையாக ஆய்வு செய்து ஓவியங்களாக ஆவணப்படுத்தினார்.
மரியாவுக்கு புழுக்கள் அழகிய பூச்சிகளாக உருமாறுவதை காண்பதில் பெருவிருப்பம் இருந்தது. மரியா பூச்சிகளின் இனப்பெருக்க உறுப்புக்களை கவனித்து அவற்றின் ஆண் பெண் வேறுபாட்டுடன் ஓவியங்கள் வரைந்தார்
பூச்சிகளை குறித்த பயமமேதுமில்லாமல் அவற்றை கைகளில் பிடித்து கவனமாக உற்று நோக்கி பல ஓவியங்களை அவர் வரைந்தார். பல வகையான பூச்சிகளை வீட்டில் பெட்டிகளில் வளர்த்தார்
மரியாவின் வீடு சீசாக்களிலும் பெட்டிகளிலும் அடைக்கப்பட்டு வளர்ந்த பூச்சிகளாலும் தொட்டிகளில் வளர்ந்த பல வகையான செடிகளாலும் நிறைந்திருந்தது
1679 ல் தனது இரண்டாவது மகள் பிறந்த ஒரு வருடத்தில், இரு வருடங்கள் கூர்ந்து கவனித்து வரைந்த ஓவியங்கள், தகவல்கள் அடங்கிய ’’கூட்டுப்புழுக்களின் அதிசய உருமாற்றம்’’ என்னும் தனது Der Raupen wunderbarer Verwandlung (the wondrous transformation of caterpillars and their curios diet of flowers ) நூலை வெளியிட்டார். அவர் கைகளால் வரையப்பட்ட, பல வண்ணங்களில் இருந்த, வெகு அழகிய, மிக துல்லியமான பூச்சிகள், அவை அமரும் தாவரங்களின் ஓவியங்கள் அறிவியல் இலக்கியத்தின் புது வரவாக கவனம் பெற்றன,
அந்நூலில் பிற பூச்சியியல் நூல்களில் இருப்பதைப்போல செடிகொடிகளின் பின்னணியில் பூச்சிகளை வரையாமல் ஒவ்வொரு பூச்சிக்கும் அவற்றின் வாழிடத்துக்கும், உணவுக்கான தாவரத்துக்குமான தொடர்பையும் காட்சிப்படுத்தினார்.
உண்மையில் உலகின் முதல் சூழலியாளர் மரியாதான் 1683ல் இதன் இரண்டாம் படைப்பையும் மரியா வெளியிட்டார். தாவரங்களுக்கும் விலங்குகளுக்குமான தொடர்புகளை மரியா அவரது ஓவியங்களில் ஆவணப்படுத்தியிருந்தார்.
லத்தீன் மற்றும் டச்சு மொழிகளில் சூழியல் அடிப்படைகளை தெளிவாக கொண்டிருந்த அந்நூல்கள் ஐரோப்பாவில் பெரும அதிர்வலைகளை எழுப்பியது
1681ல் தந்து வளர்ப்புத்தந்தை ஜேகப் இறந்தபின்னர் மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு திரும்பி தன் அன்னையுடன் வசித்தார் அப்போதும் பல படைப்புக்களை வெளியிட்டார்
1686ல் தவளைகள் அவற்றின் முட்டைகள், தலைப்பிரட்டைகளின் ஓவியங்களுடன் மரியா வெளியிட்ட ஓவியங்களும் குறிப்புக்களும் அவருக்கு பின்னர் வந்த டச்சு நுண்ணோக்கியலாளரான ஆண்டனி வான் லூவன் காக்கின் (1632-1723) அதேபோன்ற கண்டுபிடிப்புக்கு வெகுவாக முன்னால் இருந்தது. மரியாவே முதன் முதலில் இருவாழ்விகளின் இனபெருக்கவியலை ஆவணப்படுத்தியவர்
1698ல் மரியா தனது ஓவியங்களை ஏலம் விட்டு பெருந்தொகை பெற்று பூச்சிகளை அவற்றின் வாழ்விடத்துடன் இணைத்து வரையத் துவங்கினார். அதன் பின்னர் மரியா உலகெங்கும் ஒரு தாவரவியலாளராக, பூச்சியியலாளராக ஓவியக் கலைஞராக, இயற்கையியலாலராக அறியப்பட்டார்.
அக்காலகட்டத்தில் பிரபலமாக இருந்த அலங்கார ஓவியங்களைப் போலல்லாமல் தேவையற்ற வரியோ, வண்ணமோ இல்லாமல் தன் கண்களால் கண்டவற்றை அப்படியே கைகளால் வரைந்தார் மரியா
17ம் நூற்றாண்டின் பழமையான கலாச்சாரத்தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியல் குறித்த பல ஆய்வுகள் செய்தார், ஆனால் .அக்காலத்தில் இனப்பெருக்கம் குறித்த ஆய்வு பெண்களுக்கானதல்ல என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்
அப்போதிலிருந்து இன்று வரைக்கும் மரியா கலாச்சார தடைகளை உடைத்து வென்று முன்னேறிய பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் கருதப்படுகிறார். மரியாவின் ஓவியங்கள் மிக துல்லியமான அறிவியல் அடிப்படைகளையும் மிகச்சரியான வண்ணங்களையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு பூச்சிகளையும் அவற்றின் முட்டைப் பருவத்திலிருந்து படிப்படியாக கவனித்து அவற்றின் இறப்பு வரை வரைந்து ஆவணப்படுத்தினார்
ஓவியங்களில் இருந்த பூச்சிகள், தாவரங்கள் குறித்த இனப்பெருக்கவியல் உள்ளிட்ட பல மிக விவரமான தகவல்களையும் மரியா எழுதினார் . மரியாவே பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் குறித்து ஓவியங்களில் காட்சிப்படுத்தி ஆவணப்படுத்திய முதல் பெண்மணி.
17 வருட மணவாழ்வு 1685ல் விவாகரத்தில் முடிந்த பின் மரியா நெதர்லாந்தின் (Friesland) மதம் சார்ந்த Labadists என்னும் அமைப்பில் தன் சகோதர கேஸ்பருடன் இணைந்துகொண்டார். அவ்வமைப்பு கிருத்துவம் சார்ந்த பல சேவைகளை செய்து வந்தது. அக்குழுவின் நோக்கமும் நம்பிக்கையும் இயற்கையின் படைப்புகளை நெருங்கி அறிவதன் மூலம் அவற்றை படைத்த கடவுளை அறியலாம் என்பது. அங்கு மரியா மேலும் ஓவியங்கள் வரையலானார் இரண்டு வருடங்களில் மரியாவின் பல ஓவியங்களின் தொகுதிகள் அவ்வமைப்பின் அச்சுக்கூடத்தில் பிரசுரமாகியது.
அந்த மத அமைப்பில் அவரது கணவர் Graff தானும் இணைந்துகொண்டு மீண்டும் மரியா தன்னுடன் வாழவேண்டுமென பல தகராறுகள் செய்தார். 1692 ல் தாயும் இறந்த பின்னர் மரியா ஆம்ஸ்டர்டாமுக்கு சென்று மகள்களுடன் வசித்தார். அங்குதான் பெண்களும் வணிகம் செய்யலாம் என்பதை கண்டுகொண்டார் அங்குதனது ஓவியங்களை விற்று கிடைத்த வருமானத்தில் சுயமாக வாழ்ந்தார்.
1698ல் மரியாவும் மகள்களும் ஆடம்பரமான ஒரு வீட்டில் வாழ்ந்தனர்.
ஆம்ஸ்டர்டாமில் மரியாவின் படைப்புகள் நல்ல விலைக்கு போனது. அங்கு அவர் உலகின் பல பாகங்களிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த பாடமாக்கப்பட்ட பல பெரிய பட்டாம்பூச்சிகள் அருங்காட்சியகங்களின் கண்ணாடிச்சட்டகங்களில் ஊசியால் பிணைக்கப்பட்டிருந்ததை பார்த்தார்.எனினும் அவர் அவற்றை ஒரு போதும் வரையவில்லை. பூச்சிகளை அவற்றின் இயற்கையான வாழிடங்களில் வரையவே விருப்பம் கொண்டிருந்தார்.
1699ல் ஆம்ஸ்டர்டாம் அரசு மரியாவிற்கும் மகள் டோரதியாவுக்கும் சுரிநாம் செல்ல அனுமதி அளித்தது. அங்கு ஐந்தாண்டுகள் இருப்பதாக பயணத்திட்டம் இருந்த்து எனினும் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மலேரியா தொற்று உண்டானதால் அவர் ஆம்ஸ்டர்டாமிற்கு திரும்பினார். அந்த பயணத்திற்கான நிதி திரட்டும் பொருட்டு மரியா தனது 255 ஓவியங்களை விற்றிருந்தார். அப்போது அறிவியல் நூல்களுக்கான மொழியாக லத்தீன் இருந்தது. எனவே மரியா லத்தீன மொழியை கற்றுக்கொண்டார்
அப்போது அதிகம் அறியப்பட்டிருக்காத அறிவியல் ரீதியான தேடலுக்கென மரியா அந்தப் பயணத்தை மேற்கொண்டார். ஜூன் 1699ல் தனது 52வது வயதில் மகள் டோரதியாவுடன் தென்னமெரிக்காவின் சுரிநாமிற்கு மரியா பயணப்பட்டார். அது ஒரு மிக துணிச்சலான பயணம் அதற்கு முன்பு வரை ஆண்களால் அரசியல், பொருளாதார ராணுவ காரணத்துக்காகவே அப்படியான தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்காலத்தில் அரிய பொருட்களை தேடும் பொருட்டு கடற்பயணம் மேற்கொண்ட ஆண்களில் யாரும் மரியாவை உடனழைத்துச் செல்லவில்லை.
அப்போதைய ஆணாதிக்க உலகில் ஒரு 52 வயது பெண்ணாக அவர் அறிவியல் தேடலுக்கு ஒரு பயணத்தை முன்னெடுத்தது மிகப்பெரிய ஆச்சரியம். தனது ஓவியங்களை விற்றுக்கிடைத்த நிதியை கொண்டே மரியா பயணத்தை செய்துமுடித்தார்.
சுரிநாமில் 2 வருடங்கள் மரியா தன் கைகளில் கிடைத்தவற்றை எல்லாம் சேகரித்தார். தலைநகர் Paramariboவின் பூங்காக்களில், சுரிநாம் ஆற்றின் கரைகளில், கரும்புத் தோட்டங்களில் மட்டுமல்ல அந்த ஆற்றை சிறு படகில் கடந்து மழைக்காடுகளிலும் தனியே பயணித்து அங்கு வாழ்ந்த தொல்குடிகளை சந்தித்து அவர்களிடமிருந்தும் பல பூச்சிகளை பெற்றார். பூச்சி, புழுக்கள் மூலிகைகள் குறித்த தகவல்களை சேகரித்தார். தொல்குடியினரும் மரியாவின் மீதான அன்பினால் காடுகளுக்குள் துணையாக வந்து அவரது ஆய்வில் உதவினார்கள்.
சுரிநாமில் இரு அடிமைப் பணிப்பெண்கள் மரியாவிற்கு உதவினர். மரியாவின் அத்தனை புகழுக்கும் இந்த அடிமைபெண்களே காரணம் என சொல்லப்படுகிறது. சில படைப்புக்களில் அவர்களிருவரின் பெயர்களை குறிப்பிடாமல் இரு இந்திய அடிமைப் பணிப்பெண்களுக்கும் தனது நன்றியை மரியா தெரிவித்திருக்கிறார்.
பல மரங்களில் மரியா ஏணியில் ஏறி உயரங்களில் வாழ்ந்த பூச்சிகளை சேகரித்தார். மலேரியா காய்ச்சல் வந்ததால் 1701ல் தான் மரியா மீண்டும் ஆம்ஸ்டர்டாமுக்கு திரும்பினார். இந்தப் பயணத்தின் ஆய்வு முடிவுகள் தான் மரியாவின் பெரும்படைப்பான Metamorphosis insectorum Surinamensium
1705.ல் அவரது மிக பிரபலமான படைப்பான ’’Metamorphosis Insectorum Surinamensium’’ வெளியானது அந்நூலில் சுரிநாமின் புழுக்கள், தேரைகள், எறும்பு, பல்லி, நாகம், சிலந்திகள் மற்றும் பலவித பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் தெளிவாக ஆவணப்படுத்த பட்டிருந்தன
லத்தீன் மொழியில் எழுதப்பட்ட பல செதுக்கு ஓவியங்களுடன் கூடிய அந்த ஆடம்பரமான வண்ணமயமான இந்த நூலிலிருந்த மழைக்காடுகளின், தாவரங்களும், பல்லி பாம்புகள் உள்ளிட்ட பூச்சி இனங்களும் பல நாடுகளின் இயற்கை ஆர்வலர்களின் வீடுகளுக்குள் நுழைந்தன.
மலர்மஞ்சரிகளில் அமர்ந்திருக்கும் நீல பட்டாம்பூச்சிகளும், உணர்கொம்புகளை நீட்டிக்கொண்டிருக்கும் அந்துப்பூச்சிகளும், முட்டைகளும் தலைப்பிரட்டைகளும் சூழ இருக்கும் கொழுத்த தவளைகளும், பல இலைகளை தின்று கொண்டிருக்கும் வரிகளுடன் கூடிய கூட்டுப்புழுக்களும், மரங்களின் மீது ஏறிக்கொண்டிருக்கும் எறும்புகளும் இருக்கும் அவரது ஓவியங்கள் தத்ரூபமாகவும் அழகாகவும் மட்டுமல்லாது, அறிவியல் ரீதியாக மிகச் சரியாகவும் இருந்தன. பல ஓவியங்களில் மலரிதழ்களில் பூச்சிகள் உண்டாகிய துளைகளும் பாதி கடிக்கப்பட்ட இலைகளும், இதழ்களே இல்லாத மலர்களும் இருந்தன.
மரியாவின் நூல் ஏதேன் தோட்டம்போல அழகாக உருவாக்கப்பட்டதல்ல, இயற்கையின் விதிக்குட்பட்ட உயிரினங்கள் உள்ளபடிக்கே அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன
மரியா இந்த நூலை வெளியிட்ட போது அவரது சமகால அறிஞர்கள் உயிர்களின் உயிர்களின் தன்னிச்சையான தோற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அரிஸ்டாட்டிலின் காலத்திலிருந்து நம்பப்பட்ட ’’உயிர்கள் உயிரற்றவைகளிலிருந்து தன்னிச்ச்சையாக தோன்றின என்னும் கருதுகோளான spontaneous generation விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மரியாவின் படைப்புக்கள் பூச்சிகளின் சிறுவிலங்குகளின் இனப்பெருக்கத்தை துல்லியமாக காட்டின. ஆண்பெண் வேறுபாட்டை இனப்பெருக்க உறுப்புக்களை துல்லியமாக விவரித்த மரியாவின் நூல் அப்போது பெரிய பேசு பொருளாக இருந்தது.
மாமிசம் உண்ணும் பூச்சிகள் அழுகும் இறைச்சியிலிருந்தும், மேலும் பல பூச்சிகள் புத்தகங்களுக்குள்ளிருந்தும், பனித்துளிகளிலிருந்து அந்துப்புச்சிகளும், எலிகளும் தேள்களும் பழைய நைந்து போன கம்பளியிலிருந்தும் தோன்றுவதாக பலர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கையில் மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியலை ஓவியங்களில் ஆவணப்படுத்தினார்.
மரியா உலகின் பல அறிவியல் அறிஞர்களுடன் தொடர்பில் இருந்தார். அவரது படைப்புக்கள் பலநாடுகளின் நூலகங்களில் பெருமைக்குரிய சேகரிப்பாக காட்சிப்படுத்தப்பட்டன. ஜெர்மனியின் மிகப்புகழ் பெற்ற கவிஞரும், பூச்சிகளின் வளர்சிதை மாற்றம் குறித்த ஆர்வம் கொண்டிருந்தவருமான கோத்தி (Goethe) மரியாவை கலைக்கும் அறிவியலுக்குமிடையில் வண்ணமயமாக பயணித்தார் என்று புகழ்கிறார்.
17ம் நூற்றாண்டில் பெண்கள் எளிதில் செய்துவிடமுடியாத துணிச்சலான பலவற்றை செய்தவரும் அசாதாரணமான அறிவியல் படைப்புக்களை உருவாக்கியவருமான மரியாவின் படைப்புகளின் முக்கியத்துவத்தை அந்த நூற்றாண்டில் பலரறிந்திருகக்வில்லை
மரியா ஓவியங்களை வரைய துவங்கி இருக்கையில் அவரது ஓவியங்களில் இருந்த பல பட்டாம்பூச்சிகள் இனம் காணப்பட்டிருக்கவில்லை. மரியாவிற்கு பூச்சிகளை இனங்கண்டு வகைப்படுத்தலில் ஆர்வமில்லை அவரே ஒருமுறை சொன்னது போல அவை எப்படி உருவாகி உருமாறி வாழ்வை முழுமை செய்கின்றன என்பதில்தான் ஆர்வமிருந்தது. வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் பிற்பாடு மரியாவின் பல படைப்புக்களை பூச்சிகளின் வகைப்பாட்டின்போது உதவியாக வைத்துக்கொண்டார்.
ஜெர்மானிய விலங்கியலாளர் Ernst Haeckel சூழலியல் என்று பொருள்படும் Oecologie என்னும் சொல்லிலிருந்து ecology என்னும் சொல்லை உருவாக்கியதற்கு இரு நூற்றாண்டுகள் முன்னரே மரியா சூழலியல் தொடர்புடைய பல நூறு ஓவியங்களை வரைந்திருந்தார்
பல ஓவியங்களில் மரியா உணவுச்சங்கிலியையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
Metamorphosis நூலின் 18 வது ஓவியத்தில் ஒரு கொய்யா மரத்தின் இலைகளை எறும்புகளும், இலை வெட்டும் பூச்சிகளும் கடித்து தின்றுகொண்டு, தண்டில் ஏறிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில எறும்புகள், சிறு சிலந்தியொன்று, ஒரு கரப்பான்பூச்சியின் அருகில் ஒரு டாரன்டுலா சிலந்தி ஒரு தேன்சிட்டுவை தின்று கொண்டிருக்கிறது, சினைப்பையுடன் ஒரு டாரண்டுலாவும் காணப்படுகிறது.
உயிரினங்களின் வாழ்விற்கான போராட்டத்தை, சார்லஸ் டார்வின் தனது Origin of Species, வெளியிடுவதற்கு 150 வருடங்களுக்கு முன்னரே மரியா தனது படைப்புகளில் விவரித்திருந்தார்.
1670 ல் அவர் வெளியிட்ட கேட்டர்பில்லர் நூலில் ஆண் பெண் பட்டாம்பூச்சிகள் கூடி முட்டை இட்டு புழுக்கள் உருவாகின்றன என்பதை முதன்முதலில் எழுதி ஆவணப்படுத்தி இருந்தார்.
மரியாவின் படைப்புகள் பிற அறிவியல் படைப்புகளில் இருந்து மிகவும் வேறுபட்டிருந்தன. உதாரணமாக வாழைமரத்தின் ஓவியத்தில் அவர் அதன் தாவரவியல் பண்புகளுடன் வாழைப்பழத்தின் சுவையையும் விவரித்திருந்தார். ஐரோப்பா அதுவரை அத்தகைய படைப்புகளை கண்டிருக்கதில்லை.
பனையின் வேரை வெட்டி வேகவைத்து உண்ணலாம் என்னும் குறிப்புடன், அவை ஆர்டிசோக்குகளின் மையப்பகுதியை காட்டிலும் சுவையானவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பல ஓவியங்களில் தாவரங்களின் மருத்துவ இயல்புகளையும் மரியா குறிப்பிட்டிருக்கிறார்.
1715ல் பக்கவாதம் தாக்கி உடலின் ஒரு பாகம் செயலிழந்தது, அந்நிலையிலும் மரியா ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார்.
மரியாவிற்கு இரு மகள்கள் ஜொஹானா மற்றும் டோரதியா (Johanna Helena Herolt Graff& Dorotea Maria Hendriks Graff).மரியாவின் மகளான ஜொஹானாவும் மிகப்புகழ்பெற்ற ஓவியர். ஜொஹானாவின் பல படைப்புகளில் அவளது தாயின் கையெழுத்தையும் காணலாம்’
மரியா ஜனவரி 13, 1717 ல் அவரது 70 வது பிறந்த நாளுக்கு முன்னர் இறந்த போது அவரது இறப்புச்சடங்கிற்கு வந்திருந்த ரஷ்யப் பேரரசர் முதலாம் பீட்டர் அலெக்சியேவிச் ரொமானோவின் தூதுவர் மரியாவின் வீட்டில் மீதமிருந்த வண்ணக்கலவைகளை பெரும் விலைக்கு பெற்றுக்கொண்டார்.
மரியாவின் இறப்புக்கு முன்னரே அவரது படைப்புகளில் ரஷ்ய பேரரசர் பீட்டர் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது மறைவுக்குபின்னர் அவரது மீதமிருந்த பெரும்பாலான படைப்புக்களை அவரே பெருவிலை கொடுத்து வாங்கிக்கொண்டார்.
மரியா இறந்தபின்னர் St. Petersburgல் அவரால் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தில் ஓவியரான டோரதியாவின் கணவர் ஜார்ஜுக்கு (Georg Gsell) நல்ல பதவியளித்து அரசவை ஓவியராகவும் வைத்துக்கொண்டார். டோரதியாவும் அங்கேயே பின்னர் வாழ்ந்தார்.
மிக சிறப்பான படைப்பாளியாக இருந்தும் உலகால் அங்கீகரிக்கப்படாத ஜேகப் மரணப்படுக்கையில் இருக்கையில் ’’இல்லை நான் முற்றிலும் உலகால் மறக்கப் படமாட்டேன், நான்தான் மரியாவின் தந்தை என உலகம் என்னை நிச்சயம் ஒரு நாள் கொண்டாடும்’’ என்றார், மரியா ஜேகப்பை காட்டிலும் பிரபலமானார்.
மரியாவின் caterpillars நூலின் மூன்றாவது தொகுப்பை மரியாவின் மறைவுக்கு பின்னர் டோரதியா வெளியிட்டார். அவரது metamorphosis நூல் 18 ம் நூற்றாண்டில் பல மறுபதிப்புக்கள் வெளியாகி அவர் பெயரை உலகெங்கும் பரப்பின
சிறப்புக்கள்
மரியாவின் இறப்புக்கு வெகுகாலம் கழித்தே அவரது படைப்புக்களின் முக்கியத்துவம் உலகால் அறியப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில்தான் மரியாவின் படைப்புகள் மீண்டும் உலகின் கவனத்துக்கு வந்தன. அவரது பல படைப்புகள் அப்போது சிறப்பு செய்யப்பட்டன
1905ல் Opsiphanes cassina meriana என்னும் பட்டாம்பூச்சியும் 1967ல் பட்டாம்பூச்சியின் துணை சிற்றினமொன்றிற்கும் postman butterflyHeliconius melpomene meriana; என்றும் மரியாவின் பெயரிடப்பட்டது.
2009 வெளியானThe Year of th Flood என்னும் நாவலில் மரியா ஒரு துறவியாக காட்டப்பட்டிருந்தார்.
மரியாவின் உருவப்படம் ஜெர்மனியின் 500 DM நோட்டில் சித்தரிக்கப்பட்டது
அதுபோலவே 0.40 DM தபால் தலையில் அவரது உருவப்படம் சித்தரிக்கப்பட்டு செப்டம்பர் 17 1987ல் வெளியிடப்பட்டது. மரியாவின் பெயரில் ஐரோப்பாவில் பல பள்ளிகள் இருக்கின்றன,
2008ல் பனாமாவின் அரிய கருப்பு பட்டாம்பூச்சியொன்றிற்குCatasticta sibyllae பெயரிடப்பட்டது.
2013, ஏப்ரல் 2 ம் தேதி மரியாவின் 366 வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் அவரது பூச்சிகள், பல்லிகள் தாவரங்களின் ஓவியங்களிலேயே கூகுள் என வடிவமைத்து சிறப்பித்திருந்தது .
ஜெர்மெனியின் இரண்டாவது பெரிய நவீனமயமாக்கபப்ட்ட ஆய்வுக்கப்பலுக்கு மரியாவை கெளரவப்படுத்தும் விதமாக RV Maria S. Merian என்று பெயரிடப்பட்டது
2016ல் மரியாவின், Merian’s Metamorphosis insectorum Surinamensium மறு பிரசுரம் செய்யபட்டது.
2017ல் மரியாவின் ஓவியங்கள் குறித்த ஒரு கருத்தரங்கு ஆம்ஸ்டர்டாமில் நிகழ்ந்தது
மார்ச் 2017ல், ஓஹியோவின் Lloyd நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் மரியாவின் பல ஓவியங்களின் முப்பரிணாம கண்காட்சியையும், பாடம் செய்யப்பட்ட பல பூச்சிகளின் கண்காட்சியையும் ஏற்பாடு செய்திருந்தது
நியூயார்க் டைம்ஸின் 2017 ஜனவரி இதழில் மரியா உலகின் முதன் முதலாக பூச்சிகளை அவற்றின் வாழிடம் உணவு ஆகியவற்றுடன் வரைந்து ஒரு கூட்டு சூழலியல் தொகுப்பாக ஓவியங்களை வரைந்த முதல் ஆளுமை என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது
மரியா அசாதாரணமான , மிக ஆர்வமுள்ள, அதிபுத்திசாலியான சுயசார்புள்ள பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார்.
மரியா உயிரனங்களுக்கான தொடர்புகளை ஆவணப்படுத்திய முதல் அறிஞரும் கலைஞருமாவார்
அப்போது உருவாகி இருக்காத சூழலியல் துறையை நிறுவியவரகவும் மரியாவே கருதப்படுகிறார் ஏனெனில் மரியாவின் ஓவியங்கள் உணவுச்சங்கிலி, உயிரினங்களின் ஒன்றுடன் ஒன்றான தொடர்பு, எவ்வாறு அவற்றின் வாழிடம் அவற்றின் வாழ்க்கையில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது, எப்படி வாழ்விற்கான போராட்டத்தில் வலியவை வெல்கின்றன ஆகியவற்றை காட்டுகின்றன. இவற்றின் தொகுப்பைத்தான் இப்போது சூழலியல் என்கிறோம்
உயிரற்றவைகளிலிருந்து தானாகவே உயிரினங்கள் தோன்றுகின்றன என்னும் கருதுகோளை முதலில் பொய்ப்பித்தவரும் மரியாதான்.
அறிவியலை தங்களது பாதையாக தீர்மானம் செய்யும் பெண்கள் மரியாவை முன்னோடியாக கொள்ளலாம், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பாதையேதும் இல்லாத பிரதேசங்களில் மரியா புதிய பாதைகளையும், அறிவியலுக்கும் கலைக்குமிடையேயான பாலங்களையும் உருவாக்கினார் பூச்சியியலுக்கும் தாவரவியலுக்குமான தொடர்புகளை கண்டறிந்து ஆவணப்படுத்தினார்.
ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆர்டிஸ் லைப்ரரி அருங்காட்சியங்களில் லின்னேயஸ், அரிஸ்டாட்டில், சார்லஸ் டார்வின் உள்ளிட்ட 35 ஆண் அறிஞர்களின் படைப்புக்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்களில் M.S.Merian என்னும் பெயரைப்பார்த்தால் கூர்ந்து கவனியுங்கள், அறிவியல் வரலாற்றில் மரியா விட்டுச்சென்றிருக்கும் வண்ணச்சுவடுகள் அதில் இருக்கும்.
நுண்சத்துக்களும் வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்து, குறைவான கலோரிகளே உள்ள பச்சைக்கீரைகள் நம் ஆரோக்கிய உணவில் மிக முக்கியமான இடம்பெற்றிருப்பவை. கீரைகளை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ளுவது உடற்பருமனை குறைக்கவும், இதயப்பதுகாப்புக்கும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மிகவும் உதவும்
உலகின் சத்து நிறைந்த 100 உணவுகளின் பட்டியலில் முதல் பத்தில் இருக்கும் (Kale) கேல் எனப்படும் கீரை தற்போது உலகின் ஆரோக்கிய உணவுக்கான தேடலில் இருப்போரின் புதிய விருப்பக்கீரையாகி விட்டிருக்கிறது. முட்டைகோஸ். காலி ஃப்ளவர், பச்சைபூக்கோசு ஆகியவற்றின் அதே பிரேஸிக்கேசி குடும்பத்தை சேர்ந்தவை இக்கீரைகளும். இவற்றில் ஊதா, இளம் பச்சை, அடர்பச்சை, சிவப்பு, மண் நிறம், என பல நிறங்களும், இலைகள் சுருண்டவை, நேரானவை, மென்மையானவை என பல வகைகளும் உள்ளது. சுருண்ட கேசம்போன்ற இலைகளின் தோற்றத்தினாலேயே பரட்டைக்கீரை எனப்படுகின்ற இக்கீரை இதில் நிறைந்துள்ள சத்துக்களால் கீரைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் பூர்வீகம் ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளாகும். புதராக வளரும் செடிகளின் நடுப்பகுதியில் காணப்படும் இலைகளைத் தவிர்த்து மற்றவை அறுவடை செய்யப்படுகிறது. சுமார் கி.பிநான்காம் நூற்றாண்டிலேயேகிரேக்க நாட்டில் இக்கீரையை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை பண்டைய ரோம் பகுதியிலும் அதிகம் காணப்பட்டிருக்கிறது. இக்கீரையை கனடா நாட்டினருக்கு ரஷிய வணிகர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
19 ஆம் நூற்றாண்டிலேயே உலகெங்கும் உணவில் அறிமுகபடுத்தும் பொருட்டு இவை சாகுபடி செய்யபட்டதென்றாலும் இப்போதுதான் இவை பெருமளவில் பயன்பாட்டில் இருக்கின்றன
இதன் பலவகைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் வகைகளின் தாவர அறிவியல் பெயர்கள்
Brassica oleracea ssp. acephala group
Brassica oleracea var. sabellica-சுருண்ட இலைகளைக்கொண்டது
Brassica oleracea var. palmifolia
Brassica oleracea var. ramosa
Brassica oleracea var. costata
B. napus ssp. napus var. pabularia
உலகெங்கிலும் இப்போது இக்கீரை பரவலாக சந்தைப்படுத்தப்பட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்டும் வருகின்றது
அதிகம் சந்தைகளில் கிடைக்கும் பரட்டைக்கீரையின் வகைகள்
சுருட்டையான இலைகளுல்லவை
அடர்ந்த புதர் போற இலைகளுள்ளவை
அகன்ற மிருதுவான இலைப்பரப்புளவை
இறகுபோல அமைப்புள்ளவை
ஒரு கோப்பை பரட்டைக்கீரையில் விட்டமின் K, A, C, B1, B2, B3, B6, கால்சியம் மேங்கனீஸ், மெக்னீஷியம், காப்பர், பொட்டாஸியம், இரும்புச்சத்து, ஆகியவையும், லியூட்டின், பீட்டா கரோட்டின், புரதம் கார்போஹைட்ரேட்டுகளும் லினோலெனிக் அமிலமும் நிறைந்திருகின்றன. ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகளான க்யூசெர்டின் மற்றும் கேம்ஃபிராலும் இதில் செறிந்து காணப்படுகின்றது.. ஈரல் செயலிழப்பு, வைரஸ் தொற்று ஆகியவற்றுக்கு எதிராக இக்கீரை சிறப்பாக செயல்படுகின்றது.சல்ஃபரோபேன் நிறைந்துள்ளதால் இது புற்றுநோயை தடுக்கும்.
இக்கீரையில் ஒரு முழு ஆரஞ்சில் இருப்பதைக்காட்டிலும் அதிகமான் அளவில் வைட்டமின் C இருக்கிறது. இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி, LDL எனபடும் கெட்ட கொழுப்பை பெருமளவில் குறைக்கும். இரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் K இதில் மிக அதிகம் உள்ளது. இதிலிருக்கும் அதிக மெக்னீஷியம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றது. கண்பார்வை குறைபாட்டை தடுக்கும் லூயிட்டினும் ஜியாஸேந்தினும் இதில் நிறந்து உள்ளன. நீர்ச்சத்தும் மிகுந்திருக்கின்றது
கீரைகளை நீரில் கொதிக்க வைத்து வேகவைக்கும்போது நுண்சத்துக்கள் பெருமளவில் அழிந்துவிடுவதால் நீராவியில் வேக வைத்து சாப்பிடலாம் அப்போது இதன் கொழுப்பை குறைக்கும் தன்மை மிக அதிகமாகிவிடுகிறது. சமைக்காமல் பச்சையாக சாலட்டுகளிலும், மைக்ரோவேவில் சமைத்தும் சாப்பிடுவது இன்னும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
சமைக்கையில் கெட்டியான தண்டுப்பகுதியையும், நார் நிறைந்து கடினமாக இருக்கும் நடு நரம்பையும் நீக்கிவிடுவது நல்லது
விதைகளிலிருந்து உருவாக்கப்படும் இக்கீரை மிக விரைவாக வளர்ந்துவிடும். உலகின் பல்வேறு நாடுகளிலும் இக்கீரை விரும்பப்பட்டாலும், இந்தியர்கள் கசப்பு சுவையுள்ள கீரைகளை விலக்கும் மனப்பான்மையுள்ளவர்களாகையால் இந்தியாவில் இதன் சாகுபடியும் பயன்பாடும் மிகக்குறைவாகவே இருக்கிறது.
அமெரிக்காவில் இக்கீரையை அறிமுகப்படுத்திய பெருமை டேவிட் ஃபேர் சைல்ட் (David Fairchild) என்னும் தாவரவியலாளரையே சேரும்., அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ஜார்ஜியா, நியூ ஜெர்சி மற்றும் டெக்ஸாஸில் சுமார் 7500ஏக்கர்களிலான் பண்ணைகளில் இக்கீரைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. கேலின் உண்ணும் கீரை வகைகளோடு அலங்காரச்செடி வகைகளும் அமெரிக்காவில் பரவலாக விரும்பப்படுகின்றது கீரைகளை தேர்வு செய்கையில் உறுதியான, உடையும் இலைகளும், ஈரமான நல்ல நிறத்தில் இருக்கும் தண்டும் இருப்பதாக பார்க்கவேண்டும்.