சமீபத்தில் பாலக்காடு தோனி வனத்தில் யானை சிவாவை பார்க்க சென்றிருந்தபோது அவனும் அவன் உடன்பணிபுரிபவர்களும் ஒரு யானையை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்கள். அந்த யானைக்கு மதநீர் வடிய துவங்கி விட்டிருந்தது. உடனிருந்த இளையவர்களுடன் பேசிக்கொண்டே சங்கிலியால், யானையை இறுக்க பிடித்து இழுத்துக்கொண்டிருந்த  சிவா ’’அவனொரு சுக்கும் அறியில்லா”என்று யாரையோ திட்டிக்கொண்டிருந்தான். 

அதற்கு சில நாட்கள் முன்புதான் ஜிஞ்சிபர் அஃபிசினாலிஸ் என்னும் இஞ்சியை குறித்து பொருளாதார தாவரவியல் பாடம் நடத்தி இருந்தேன். உலர்ந்த இஞ்சி என்னும் சுக்கு அதன் பயன்கள் ஜிஞ்சரோல், ஷேகோல், ஜிஞ்சரோன்  என்று அதன் பயன்களை வேதிச்சேர்மானங்களை நடத்திய எனக்கு ஏன் சுக்கை வசையாக பயன்படுத்துகிறார்கள் என்று யோசனையாக இருந்தது

நாம் இப்படி பல காய்கறி பழங்களின் பெயர்களை தாவரவியல் பொருட்களை வசையாக பயன்படுத்திகொண்டிருக்கிறோம்.

 உனக்கு ஒரு வெங்காயமும் தெரியாது

 போடா புண்ணாக்கு

மாங்காய் மடையன்

முந்திரிக்கொட்டையாட்டம் முன்னாடி நிக்கறான்

போடா புல்லே!

என்ன வெண்டைக்காயாட்டாம் பேசறே?

தேங்கா மண்டையன்

 ஒரு கத்தரிக்காயும் வேண்டாம் சும்மாயிரு

போடா முட்டைகோஸ்

சமீபகாலங்களில் சூரியும் சிவகார்த்திகேயனும் அறிமுகம் செய்த்

போடா பொட்டேட்டோ, போடா டொமேட்டோ

பழந்தமிழும் கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்று சொல்லுகிறது  கனி நல்லது காய் அல்லது என்னும் பொருளில்

இப்படி இந்திய மொழிகளில், உலகநாடுகளில், இலக்கியங்களில்  இந்த வகையான  vegetable insults இருக்குமாயிருக்கும், ஒவ்வொரு காய் வசவுக்கும் பின்னணியும், காரணமும் இருக்கும் இதைக்குறித்து ஒரு கட்டுரை எழுத உத்தேசித்திருக்கிறேன். பிற மொழி காய் கனி தாவர வசவுகள் அறிந்தவர்கள் உதவலாம்.