லோகமாதேவியின் பதிவுகள்

Author: அதழ் (Page 10 of 26)

சிதறுண்டவைகளின் தொகுப்பு!

’’என் கிராமத்தில் இருந்து வந்திருக்கும் மதிப்பிற்குரியவரே,
உங்களுக்கு கிராமத்தில் நடப்பவை எல்லாம் தெரிந்திருக்கும் தானே?
சொல்லுங்கள், நீங்கள் அங்கிருந்து புறப்பட்ட நாளில்
என் வீட்டின் பனி படர்ந்த ஜன்னலின் எதிரே இருக்கும்
அந்த ப்ளம் மரம் மலர்ந்திருந்ததா?’’

இந்த புகழ்பெற்ற கவிதை சீன ஓவியரும் கவிஞருமாகிய வாங் வெய் எழுதியது.

சீன அரசவையின் உயர் பொறுப்பில் இருந்த வாங் வெய்  போர்க்கைதியாக கொண்டு செல்லப்பட்டு சிறைவைக்கப்பட்டு இருக்கையில் எழுதிய கவிதைகளும் கடிதங்களும் உலக பிரசித்தி பெற்றவை. அவற்றிலொன்றுதான் ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா? என்று கேட்கும் இந்த கவிதை.

 வாங் வெய் தன்னிடமிருந்த அரசியல் ரகசியங்கள் எதுவும் போராளிகளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக செவிடர் போல நடித்துக் கொண்டிருந்தார். வதைக்கு ஆளாகி எதையும் சொல்லாமலிருக்கும் பொருட்டு  மருந்துகளை விழுங்கி தன் குரலை சேதப்படுத்திக் கொண்டார். 

பல்வேறு சித்ரவதைகளுக்கிடையிலும் தன்வீட்டின் எதிரே  இருந்த ப்ளம் மரம் பூத்ததா என்று கேட்கும்  இக்கவிதை  சொந்த நிலத்தை பிரிந்து புதியதோர் இடத்தில் வாழும் பழைய நினவுகளின் இனிமையிலும் புதிய இடத்தில் தன்னை பொருந்திக் கொள்ள முடியாத துயருக்கும் இடையே அலைவுறும்  ஆன்மாவின் விசும்பல்தான்.

இதைப்போலவே   தன் ஈழத்து வீட்டின் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் நமக்கு இனி இல்லை கண்ணே’’ என்று துயர் கொள்ளும்  புலம்பெயர் கவிதை ஒன்றுண்டு.  போதமும் காணாத போதத்தில் இயக்கத்துக்கு சேரப் போகையிலும் தேமா மரத்தை பார்த்துக்கொள்ள சொல்லி கடிதம் எழுதும் தாயமும் வாங்வெய்யின் மற்றுமோர் வடிவம்தான்

புலம்பெயர் இலக்கியங்கள் அனைத்தும் ‘diasporic war literature’ எனப்படுகின்றன.  பண்டைய கிரேக்க மொழியில் Diaspora என்பதற்கு ‘சிதறுண்ட’ என்று பொருள். சொந்த நிலத்தை விட்டு பல்வேறு காரணங்களால் வேறு புதிய பகுதிகளில் தனித்தனியே சிதறுண்டவர்களின் படைப்புக்களுக்கு இதைக்காட்டிலும் பொருத்தமான பெயர் வேறென்ன இருக்க முடியும்? புலம்பெயர் இலக்கியங்கள் உலகெங்குமே இருக்கின்றன என்றாலும் பெரிதும் அவை ஈழத்து புலம்பெயர் படைப்புக்களை குறிப்பதாகவே இருக்கின்றன.

அகரமுதல்வனின் போதமும் காணாத போதமும் போர்ச்சூழலில் சிதறுண்ட  நினைவுகளின், உறவுகளின், நம்பிக்கைகளின் தொகுப்புத்தான்.   

அகரமுதல்வனின் கடவுள் பிசாசு நிலத்தை ஒரு மலைத் தங்குமிடத்தில் ஒரே நாளில்  கண்ணீருடன் வாசித்து முடித்தேன். கடவுள் பிசாசு நிலத்திலிருந்து முளைத்த விதைதான் போதமும் காணாத போதம்

இரண்டிலுமே அகரமுதல்வனின் மொழிவன்மை  திகைப்பூட்டுவது. இரண்டிலுமே வாழ்வும் தாழ்வும் சரிக்கு சரியான கலவையில்  இருக்கும். துயரைச் சொல்லும் அதே மொழியின் வீச்சில் காதலும் சொல்லப்பட்டிருக்கும் படைப்புக்கள் இரண்டுமே 

போரை செய்தித்தாள்களிலும் பிற ஊடகங்களிலும் மட்டுமே அறிந்திருக்கும் என் போன்றோருக்கு போதமும் காணாத போதும் காட்டும் அசல் போர்ச்சூழலும் கொடுமையும், துயரமும், வதையும், உயிரிழப்பும் அதிர்ச்சியையும் குற்றவுணர்வையும் ஊட்டுபவை. 

போர்ச்சூழல் படைப்புக்கள நாவல், கதை, கட்டுரை, கவிதை, திரைப்படம் என பல வகைகளில் இருக்கின்றன. அனைத்துமே போரின் அழிவை, போரினால் உண்டான இழப்புக்களை, வலியை, புலம்பெயர்தலின் அவலத்தை  வலுவாக உணர்வுபூர்வமாக சொல்லி இருப்பவைதான் எனினும் போதமும் காணாத போதத்தில் அகரமுதல்வன் மற்றுமொன்றையும் சொல்லுகிறார்

சமீபத்தில்  உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டிலிருக்கையில் இறந்தவரின் மனைவி அவர்களின்  மகளின் பெயரைச்சொல்லி ‘எங்க சித்ரா பெரியவளான பின்னாடி என் விரலைக்கூட தொட்டதில்லியே எஞ்சாமீ’ என்று பெருங்குரலெடுத்து கதறினார். துக்க வீட்டின் பெண்கள் அனைவரும் ஒரு கணம் திடுக்கிட்டனர்.அதை அவர் ஒரு புகாராகத்தான் சொன்னதாக எனக்குப் பட்டது.

கணவனை போரில் இழந்த பெண்களின் உடலின் சமரையும் போதமும் காணாத போதம் சொல்லுகிறது. உடலின் போரில் அமானுஷ்யமாக வெல்லுகிறார்கள் இதில் வரும் யசோவின் அம்மாவைபோன்ற பெண்கள்  

ஒவ்வொரு ஞாயிறன்றும் போதமும் காணாத போதம் நள்ளிரவில் வலையேற்றப்படும். அதன் இணைப்பு வரும் வரை உறக்கமின்றி காத்திருந்து வாசித்திருக்கிறேன்.வெண்முரசு வாசித்த நாட்களுக்கு பிறகு போதமும் காணாத போதம் வாசிக்கத்தான் இரவுகளில் உறங்காமல்  காத்திருந்தேன்.

வாசித்தபின் உறக்கம் முற்றிலும் நீங்கி  பல இரவுகளை  கண்ணீரில் கரைத்திருக்கிறேன். பல பத்திகளை தொடர்ந்து  வாசிக்க முடியமால் நிறுத்தி நிறுத்தி உணர்வெழுச்சிகளை மட்டுப்படுத்தி பின்னர் வாசித்திருக்கிறேன். 

25 வாரங்கள் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது.  நூல்வனம் வெளியீடு. ஒவ்வொரு வாரமும் காத்திருந்து ஏராளமானோர் வாசித்தோம் என்பதை விடவும் போதமும் காணாத போதம் காட்டிய  துயரில் பங்கு கொண்டோம் என்றுதான் சொல்லவேண்டும். கண்கள் ஈரமாகாமல் இதை ஒருவரும்  வாசிக்கவேயில்லை.

20 வருடங்களுக்கு முன்னர் கணவனை ஆர்மிக்காரர்களிடம்  பறிகொடுத்து,    பலநூறு இரவுகளை தனிமையில் கழித்த ஒருத்தி சாவிற்கு பின்னர் மகளாய் கலவியின் சுகம் காணும் அந்த உக்கிர இரவை சொல்லும் அத்தியாயம் பல இரவுகளின் உறக்கத்தை தின்றது.

காதலி நறுமுகையுடன் ஊரைவிட்டுசெல்லும்  அப்பனிடம்  கேட்கப்படும் ‘’சின்னஞ்சிறுசுகளாக இருக்கிறீர்களே’’ என்னும் கேள்விக்கு ’’எங்கள் நாட்டில் எல்லோரும் சீக்கிரம் வளர்ந்து விடுவோம் துவக்கேந்த வேண்டுமே” என்னும் அவன் பதிலில் முடியும் ஒரு அத்தியாயம்  தொடர்ந்த பல இரவுகளையும் பல பகல்களையும் தின்று தீர்த்தது 

’’தேவனே ஏன் என்னை கைவிட்டீர்’’ என்னும் விவிலிய வரிகளுடன் ஈரோடு கிருஷ்ணன் அவர்களின் மிகபொருத்தமான அணிந்துரை அமைந்து விட்டிருக்கிறது. //போதமும் காணாத போதம் ஈழத்தின் ஆழத்துக்குள் சென்று  துழாவும் பலமுள் தரித்த பாதாளக்கரண்டி// என்னும் கிருஷ்ணனின் வரிகளுக்கு மேலாக இந்நூலை குறித்து மேலதிகம் யாரும் சொல்லமுடியாது.

ஈரோடு கிருஷ்ணனின் அணிந்துரையை வாசிக்கையில் யூத வதை முகாமின் சுவற்றில் யாராலோ எழுதப்பட்டிருந்த ‘’ கடவுள் என ஒருவர் இருப்பாராயேனால்  அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு இறைஞ்ச வேண்டும்’’ என்னும் வாசகம் நினைவுக்கு வந்தது.

//தக்கன்ர சிரச கைவாளினால் அறுத்த வீரபத்திரர் எங்களை காப்பாற்றாமல் நிக்கேக்கயே அவர் வீரச்சாவு அடைஞ்சுட்டாரென்று உங்களுக்கு விளங்கேல்லையோ?// 

என்ற ஆரூரனின் கேள்வியை இந்த வாசகத்துடன் இணை வைக்கலாம்.

’’உலகம் போற்றும் மனுஷத்துவம்  முகம் குப்புற நந்திக்கடலில் வீழ்ந்துகிடந்தது’’ என்னும் அகரமுதல்வனின் ஒருவரியின் நீட்சிதான் மொத்த நூலும்.

போதமும் காணாத போதம் காட்டும் மனிதர்கள் ஒவ்வொருவரும் மிக தனித்துவமானவர்கள். போரென்பதை ஊடகங்களில் மட்டும் அறிந்திருக்கும் நமக்கெல்லாம் அவர்களில் ஒருவரைக்கூட  சந்திக்க சாத்தியமில்லை.

அஞ்சு இன்ச் ஷெல் விழுந்ததில் தலையில் பள்ளமுண்டான ஒருவரை நாம் ஒருபோதும் பேருந்துப் பயணமொன்றில் சந்தித்திருக்க மாட்டோம்தானே? துயிலில்லத்தின் விதைகுழிகளை தயார் செய்ய ஊதியம் வேண்டாமென மறுக்குமொருவரை கற்பனையிலும் கண்டதில்லை நாம்

அது போலத்தான் நாலே நாளில் பங்கரை உருவாக்கியது சாதரணமாக உரையாடலில்   பேசப்படுமொன்று என்பதயும் நாமறிந்திருக்கமாட்டோம். ஏனெனில் பங்கர்கள் அவர்களின் அன்றாட வாழ்வில் இணைந்திருந்தவை.

வியட்நாம் பெரியப்பா, வீரன், செவிடன் ரத்தினம், கிபிர் அடிச்சு வீரச்சாவடையும் மேஜர் பகீரதன் , புன்னகையுடன் வன்கவர் படையினரிடம்  ’’அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதை கடவுளுக்கும் கொடுக்கும் நீங்கள் எங்களுடையதை எங்களுக்குத்தான் அளிக்க வேண்டும்’’ என்னும் புண்ணியன்,

இயக்கத்துக்கு தான் போகாமல் அக்காவை அனுப்பிவிட்டு குற்றவுணர்வில் கதறும் அமலன், சாக்குப்பையில் சடலமாக மூட்டை கட்டப்படும் செட்டித்தாத்தா, ஊத்தைமாமா, ‘’நான் பயப்படலே, அதிகபட்சம் சுடுவாங்கள் அதானே நடக்கும்’’ என்கிற  சங்கிலி பெரியப்பா 

கழுத்திலும் உள்ளிலும் நஞ்சு கொண்டிருக்கும் சந்தனன், சந்தனனின் தந்தையை சுட்ட சரித்திரன், கொக்குவில் மாமா, அம்மாவை வேசி என்று வைய்யும் தகப்பனை கன்னத்தில் அறையும் அப்பன் என்னும் பெயர்கொண்ட மகனொருவன்

கோவிலில் திருடிவிட்டு முருகனிடமே   ’இத்தனை துன்பத்தை தந்த அரசாங்கத்தை தண்டிக்காத நீ என்னையும் தண்டிக்க மாட்டாய்’ என உரையாடும் சங்கன் 

தீக்காயம் பட்ட கரியன், பச்சை தூஷணத்தில் மருத்துவனைக்காரர்களை வசைபாடும் கால்கள் நீக்கப்பட்ட ஒருவர், அடுத்த படுக்கையிலிருந்தபடி  ’’மரணத்தினாலும் நான் மீதம் வைக்கப்படுவேன் நன்றி வணக்கம்’’ என்று பேருரையாற்றும் போராளி ஒருவர், என அகரமுதல்வன் காட்டும் மனிதர்கள் நமக்கும் உறவாகி விடுகிறார்கள். காந்தி மாமாவை கண்டதும் ’’அட, இவர் கடவுள் பிசாசு நிலத்தின் மாமா’’ என்று மனம் கூவியது

ஷெல்லடியும், கிபிர் தாக்குதலும் தோக்கு சத்தங்களும் நிறைந்து தாய்மண்ணும் முழங்காலிடும் போதும் ஒன்றும் செய்ய முடியாத கடவுள்களும் இருக்கின்றனர் இதில்

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர், காந்தள் மலர் சூடிய கொட்டடிக்காளி, தேக்கங்காட்டு வீரபத்திரர், வறாப்பளி அம்மன்,முல்லைதீவு தேவாலயத்தின் இறைவன், கருங்காலி முனி, பொக்கணை நாக தம்பிரான்  சண்டைக்கு செய்தியேதும்  அனுப்பாத ஆதிசேஷன், களவவோடை அம்மன், தெல்லிப்பழை துர்க்கை என இடையிடையே அத்தனை துயரிலும் ஒன்றும் செய்ய முடியாத  கடவுள்களும் வருகின்றனர்.காளியின் தலையிலும் ஷெல்லடிக் காயமிருக்கிறது.

’’கர்த்தாவே  எதுவரைக்கும் நீங்கள் எங்களை உதாசீனபப்டுத்துவீர்? எனும் கேள்வியை புண்ணியனுடன் சேர்ந்து நாமும் ஒருகட்டத்தில் கேட்டுவிடுகிறோம் 

இறந்த கணவனின் மூக்கிலும் வாயிலும் பெருகும் குருதியை தன் கர்ப்ப வயிற்றில் எடுத்தெடுத்து பூசிக்கொள்ளும் சுமதியக்கா, கொற்றவை என்னும் பெயர்கொண்ட அவளுக்கு பிறக்கும் பெண்குழந்தை 

போர் வெளியேற்றிய பாஸ்பரஸினால் புற்றுநோய் உண்டாகியிருந்த, பங்கருக்குள் மயங்கிக்கிடந்தவனை எந்த பதற்றமும் இல்லாமல் காணும் திலகா 

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்ய்பட்டவர்களின்  பத்துநாள் குழந்தை புலித்தேவனின் பசியழுகைக்கு  வற்றிய முலைகளை அளித்து போக்கு காட்டுகிறாள் பேரன்னை ஒருத்தி

மீள் குடியமர்த்தப்பட்ட நிலத்தின் மண்ணை அள்ளி உடலெங்கும் பூசிக்கொண்டு,  ‘’இந்த இடம் ராணுவத்துக்கு சொந்தமானது’’ என்னும் அறிவிப்பு பலகையை மிதித்தேறுகையில் கண்ணிவெடியில் உடல்சிதறி சாகும் சின்னாசி

சின்னாசியின் உடலைதிரட்டி  எரிக்கையில் ’தீமூளும் தீமூளுமென’ பாடியபடி முலைதிருகி வான் பார்த்து எறிவதைபோல பாவிக்கும் பெண்கள்

கொல்லப்பட்ட அப்பாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு ’’துரோகமென்றால் என்னம்மா?  என்று கேட்கும் மகனை அணைத்துக்கொண்டு ‘’மனுஷராய் பிறந்தது அதுவும் இந்த மண்ணில் பிறந்ததுதான் துரோகம்’’ என்று கதறுகிறாள் ஒர் அன்னை

தாய்மண்ணுக்காக போராடிய இருவருக்கு பிறந்து முற்றத்து மண்ணை அள்ளி அள்ளித் தின்கிறாள்  நந்திக்கடலென்னும் பெயர்கொண்ட மகளொருத்தி, உயிரற்ற சடலமாய் காலில் தட்டுபடுகிறாள் அறம்பாவை அத்தை. 

வீரச்சாவடைந்து சகிக்கமுடியாத கெடுநாற்றத்துடன் பேழையில் கிடக்கிறாள் போராளி அனலி, கூந்தலை அவிழ்த்து விட்டு ஒற்றைக்காலில் நின்றபடிக்கு உணவுண்னும் மனம் பிறழ்ந்த அக்கா, ‘’இஞ்ச எல்லா பிள்ளயளும் பாரம்தான் சுமக்கினம் அது சிலுவையோ துவக்கோ கவலைப்பட ஏதுமில்லை’’ என்று சொல்லும் அம்மா,சமர்க்களத்தில் கருப்பை சிதைந்த ஈகை இவர்களுடன்’’அதியமான் உனக்கு துரோகியோ தியாகியோ அல்ல உன் தந்தை’’ என்று மகனிடம் சொல்லும் ஒரு அன்னையும் இருக்கிறாள் 

’’இவ்வளவு யுத்தத்துக்கு மத்தியிலும் எங்கட ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பிறக்கிறார்கள்’’ என்று சொல்லும், கூந்தலில் காட்டுப்பூச்சூடி காமக்களிறை உருவேற்றும் ’’ யுத்தம் ஒழிக ஒழிக ‘’ என்றபடி முயங்கும் யசோ என்று அகரமுதல்வன் இதில் காட்டும் பெண்கள்  பிரத்யேகமும் விசேஷமுமானவர்கள்.

பங்கருக்குள் நேசத்துக்குரியவரின் ஆன்மாவை கண்டுகொள்ளும்  மூன்று கால் வீமனும் ஒரு பாத்திரம்தான் இதில். இத்தனை துயரிலும் மாமரங்கள் பூக்கின்றன, குளத்து மீன் ருசிக்கின்றது  .

தெய்வங்கள் உறைந்த வெளியில் பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்ட கொடுங்காலங்கள் நாம் ஒருபோதும் அறிந்திடாதவை.

அகரமுதல்வனின் மொழியில்  காடுறை தெய்வங்கள் கண் மலர்த்தி கசிந்த கண்ணீர் எரியூட்டும் இரவுகளை,  உக்கிரமான தாக்குதல்களின் போது  காலடியில் இறைஞ்கும் சொற்களை மிதித்து நசுக்கிவிட்டு முன்னேறி ஓடுகின்ற சனங்களை, போர்க்களத்தில்  பூ மாதிரி கிடக்கும் போராளி ஒருவனின் மூளையை,  காற்றில் அசையும் கருங்காலி மரத்திலிருந்து உதிரும் ரத்தம் கண்டிய பெருவிரலொன்றை, ஆலமரத்தின் வேர் இடுக்கில் கிடக்கும் கால்துண்டொன்றை காணும் நெஞ்சுரமும் நமக்குண்டாகி விடுகின்றது 

பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனவைகளை சொல்லிச்செல்லும் கதையோட்டத்தில் காதல் முகிழ்க்கிறது காமம் தகிக்கிறது.  காதலின் வெம்மை பொங்கும் ஐந்து அத்தியாயங்களும் இருக்கின்றன இதில். 

ஃப்ளாண்டர்ஸ் பெருவெளியில் நடந்த போரில்  பீரங்கி தாக்குதலில் உடல்சிதறி இறந்த உற்ற நண்பனின் உடலை திரட்டி  இறப்புச் சடங்குகள் செய்த பின்னர் அங்கேயே ஒரு மருத்துவ ஊர்தியின் அருகில் அமர்ந்து லெஃப்டினெண்ட் ஜான் மெக்ரே எழுதிய 

“ஃபிளாண்டர்ஸ் கல்லறைச்

சிலுவைகளுக்கிடையில்

காற்றில் ஆடுகின்றன பாப்பிச்செடிகள்,

என்று தொடங்கும் கவிதை மிகப்புகழ் பெற்றது, அக் கவிதைக்கு பின்னரே மாவீரர் நினைவு நாளில் செம்பட்டு பாப்பி மலர்களை அணிந்துகொள்ளும் வழக்கம் வந்தது. மரணத்துக்கிடையில் மலர்ந்திருந்த பாப்பிச்செடிகள் இந்த கவிதையை மிகச்சிறப்பாக்கி விட்டிருக்கி்னறன. 

அக்கவிதையில் இழப்பின் துயர்களுக்கிணையாகவே அங்கு மலர்ந்திருக்கும் ரத்தச்சிவப்பு  பாப்பிமலர்கள் சொல்லப்பட்டிருக்கும். அப்படித்தான் போதமும் காணாத போதம் காட்டும் அத்தனை துயரங்கள் துரோகங்கள் இழப்புக்கள் இறப்புக்களுக்கிடையிலும்  குருதிச்சிவப்பில் மலர்ந்திருக்கிறது காதல். 

அவளருளாலே அவள் தாள் வணங்கி, மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகளின் தாலாட்டில் மலர்ந்திருக்கும் பிரதீபாவை புதைத்த மேட்டில் படுத்துக்கொள்ளும் காதலனை, காயங்களின்  தழும்பில் முத்தம் ஈன்று மூர்ச்சையாகி போகும் வரை முயங்கும் ஆதாவை,  அங்கவீனமாய் போனபின்னும் புல்லாங்குழலின் கீதம் கேட்கும் நறுமுகையின் உடலை  தகிக்கும் தீவெளியில்  அணைத்துகொண்டு முத்தமிடும் காதலனை , உதிரும் மலரை மீண்டும் ஏந்தும் மலரினும் மெல்லிய காமத்தை, மஞ்ஞையின், யசோவின் காதலை சொல்லும் மொழியும் துயரை சொல்லிய அதே அகரமுதல்வனுடையதுதான் என்பதை வாசித்தாலே நம்ப முடியும்.

நெஞ்சுரத்தில் நிலம் விளைவிக்கும் அதிபத்தன் எனும் நண்பனுக்காக அணையாவிளக்கொன்றை ஏந்தும் அம்மாவை சொல்கிறான் ஒரு மகன்.  அச்சுடரை அணையாமல் பாதுகாக்கும் அவளின் உயிருருகிய வெளிச்சத்தில் வன்னியெங்கும் ஒளிபெருகுகிகிறது.

வித்துடல்கள் பொலிகின்றன என்பதை போர்ச்சூழலில் பிறந்த அகரமுதல்வன் சொல்லுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது 

ஈழத்தமிழின் இனிமையையும் தாண்டி தெரியும் துயரம், துயரின் மத்தியிலும் பெருகித் தகிக்கும் காமம், இறப்பினாலும் பிரிக்க முடியாத காதல், சொந்த நிலத்தின் பேரில் போராளிகளுக்கிருக்கும்  பிணைப்பு என இந்த படைப்பின் கலவை வேறெதிலும் கண்டதில்லை, அகரமுதல்வனுக்கு அன்பும் வாழ்த்துக்களும்!

துயரின் இருளிலும் போதமும் காணாத போதம் காட்டும்  போர் முற்றும், தாய்நிலமும், வாழ்வும் மீளும் என்னும் நம்பிக்கையையும், ஆயுதங்களுக்கு மத்தியில் இரண்டு தோமா மலர்களையும் வைத்துக் கொண்டிருக்கிற ஒருவனையும் வாசிக்கையில்   

தெற்குப்புறத்தில் கிளைகளெங்கும்
அடர்ந்து பழுத்திருக்கும் செங்கனிகளை
நம் காதலின் குறியீடாக
கை நிறைய அள்ளிக்கொண்டு
என் பொருட்டு வீட்டுக்கு போகிறாயா?

என்னும் வாங் வெய்யின்  ஒற்றை இதயம் என்னும் தலைப்பிடப்பட்ட மற்றுமொரு கவிதை நினைவுக்கு வருகிறது.

இரண்டு வெவ்வேறு வகையான தாவரங்கள் இணைத்து உருவாக்கப்படும் கலப்புயிரி தாவரங்களுக்கான் வலிமை மிகுதியாகவே இருக்கும். அப்படித்தான்  சொந்த நிலத்தின் நினைவுகளுடன் புதிய நிலத்தில் வாழும் அகரமுதல்வனின் வலிமையும், .

குமர குருபர சுவாமிகள் அருளிய   திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பாவின்  போதமும் காணாத போதம் எனும் வரி இப்படைப்பிற்கு வெகு பொருத்தமான தலைப்பாக அமைந்திருக்கிறது.

சொந்த நிலம் பாவித்த சுகப்பொழுதுகளை மீளத் தீண்டுகிறேன் என் அகமெரியும் சந்தம் இசைக்கிறேன் செவியுள்ளோர் கேட்கட்டும் என்று சொல்லும் அகரமுதல்வன் ’’ஈழமண்ணில் தீ என உறையும் திசைகளின் ஒளிக்கதிர்களை தான் இப்படைப்பில் படர விட்டிருக்கிறேன், சனங்களின் சீவிதத்தில் ஒளி பெருகுக’’ என்கிறார்இறுதியில்.

ஆம் அவ்வாறே ஆகுக!

திறந்திடு சீசேம்!

வெள்ளிமலை தாவரவியல் குழுவினர் இன்று வரை தொடர்பில் இருக்கிறார்கள். நானே அதிகாலையில் எழுந்து நாளைத்துவங்கும் ஒருத்தி என்றால் அதில் சிலர் நான் எழும்போதே எனக்கென ஏதேனும் தகவலோ கேள்வியோ புகைப்படமோ வைத்திருப்பார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவர்களுடன் இணைந்து நானும் புதிதுபுதுதாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

இன்று காலை பெங்களூர் பிரியா நிறைந்து பூத்திருந்த எள் வயலின் புகைப்படம் அனுப்பி எள்ளின் வகைகளைக்குறித்து கேட்டிருந்தார். நான் அதன் கருப்பு வெள்ளைபிரவுன் சிவப்பு வகைகளையும் அதன் ஆங்கிலப்பெயரான Sesame , தாவர அறிவியல் பெயரான Sesamum indicum (Sesamum indicum subsp. indicum)என்பதையெல்லாம் காரில் கல்லூரிக்கு வருகையில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அறிவியல் பெயரிலிருந்து வந்த இதன் sesame என்னும் ஆங்கிலப்பெயருக்குப்பின்னால் ஒருசுவாரஸ்யம் இருக்கிறது.

எள் இந்தியாவுக்கு சொந்தமான பயிர்.மனிதர்கள் பயிரிட்ட முதல் எண்ணெய்பயிர் எள் தான். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள் இந்தியாவில் பயிராகிறது. இந்து மதம் விஷ்ணுவின் வியர்வையிலிருந்து உருவான பயிர் என்று எள்ளைச்சொல்கிறது. தரிசு நிலங்களில் கூட எள் பயிராகும். பல மதங்களில் எள்ளும் எள் எண்ணெயும்புனிதமானதாகக் கருதப்படுகிறது.

பெடாலியேசியைச்சேர்ந்த (Pedaliaceae) எள்ளின் கனி எனப்படும் pods மிகச்சுவாரஸ்யமானது. பல நாகரீகங்களில் சத்துக்கள் அடங்கிய இதன் சிறு விதைகள் அந்த கனியிலிருந்து வெடித்து திறந்து வெளியாவதைப் புதையல் கிடைத்தது போல் எனக்கொள்வார்கள். எனவேதான் open sesame என்பது புதையல் இருக்கும் இடம் திறப்பதற்கான மந்திரச்சொல்லாக இருக்கிறது.

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையை திறக்க அலி ’’திறந்திடு சீசேம்’’ என்று சொல்வது இதனால்தான். பாபிலோனியாவில் பல மந்திர தந்திர வித்தைகளில் எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் உபயோகத்திலிருக்கிறது. யூதர்களின் மாயாவாத சடங்குகளில் எள் சொர்க்கத்தின் இன்னொரு பெயராகக் கருதப்படுகிறது. ஹீப்ரூ மொழியிலும் எள்ள்ளுக்கு கடவுள் என்னும் பொருள் இருக்கிறது

sesame என்னும் கிரேக்கச்சொல் பழமையான செமிடிக் மொழிகள் ஒன்றான, இப்போது புழக்கத்தில் இல்லாத பண்டைய மெசபடோமியர்களின் மொழியான அக்காடியனின் (Akkadian) தாவர எண்ணெய் என்னும் பொருள் கொண்ட்  šamaššamu என்னும் சொல்லில் இருந்து உருவானது.

57% எண்ணெய் அளவு கொண்டிருக்கும் எள்ளின் பல பயன்களில் ஒன்று அதிலிருக்கும் லிக்னன்களான sesamin & sesamolin ஆகியவற்றின் ரத்தக்கொழுப்பைக்குறைக்கும் இயல்பு. இதன் தமிழ்ப்பெயரில் ஒன்றான திலம் என்பதிலிருந்துதான் ஆங்கிலப்பெயரான் til என்பது வந்திருக்க வேண்டும்.எள் தான் எண்ணெய்ப்பயிர்களின் ராணி.

நேற்று Dr செளமியா அவரது தோட்டதில் இருந்த எள் சக்களத்தி என்று சொல்லப்படும் எள் பயிரைப்போலவே இருக்கும் Cleome monophylla வின் புகைப்படத்தை அனுப்பி இருந்தாள். எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள் தாவரங்களில் !

Cleome monophylla-PC Dr. Sowmiya

தாலியா!

அகரமுதல்வனின் வாட்ஸ்அப் நிலைத்தகவலில்  ரத்தச்சிவப்பில் ஒரு குட்டி தாலியா மலரைப் பார்த்தேன். அத்தனை வசீகரமாக இருந்தது பார்க்க.  color wheel -ல் பச்சைக்கு நேர் எதிரில் இருப்பது சிவப்பு என்பதால் பச்சை இலைகளுக்கிடையில் தெரிந்த அந்த மலர் அழகான அழகாயிருந்தது.

எனக்குத் தாலியாக்கள் மீதும் பிரியம்தான். பள்ளி கல்லூரிக் காலங்களில் வீட்டு வாசலில் காலை நேரத்தில்   ஊட்டி ரோஜாவும் தாலியாக்களும் விற்கப்படும். நான் ஊட்டி ரோஜாக்களை விரும்பியதில்லை. அது ஒரு வாரம் வரை வாடாமலிருப்பதும் அடுத்தநாளில் இருந்தே இதழ்களில் விளிம்புகளில் கருப்புப் படிந்துவிடுவதும்,  கனமாக இருப்பதும் காரணமென்றாலும் முதன்மைக்காரணம் அது மலராமல் கூம்பியே இருப்பதுதான்.எனக்கு மலரென்றால் மலர்ந்திருக்க வேண்டும்.

தாலியா அப்படியல்ல குழந்தையொன்று சிரிப்பதைப் போல  முழுக்க மலர்ந்திருக்கும் அதில் பல நிறங்கள் இருந்தாலும் நான் அதிகம் தேர்ந்தெடுப்பது வெள்ளையும் இளஞ்சிவப்பும்தான். கல்லூரி முதல் அவ்ருடம் படிக்கையில் (நானும் மித்ராவும் ஒன்றாகத்தான் கல்லூரிக்குள் நுழைந்தோம்)மித்ராவின் கல்லூரித்தோழர் அமல்ராஜ் கம்பீரமாக  ஒரு சைக்கிளில் பூக்களை விற்றுக்கொண்டு வருவார். கல்லூரிக்குச் செல்ல அரை மணி நேரம் முன்பு அவர் வீடு வீடாகப் பூக்களைச் சைக்கிளின் பின்னிருக்கும் கூடையில் வைத்துக்கொண்டு நிமிர்வுடன் வருவார். ஒருபோதும் அந்தச்செயலில் அவர் வருத்தமுற்றதும் தாழ்வாக உணர்ந்ததும் இல்லை. குளித்து நல்ல உடையணிந்து வரும் அவர் அப்படியே அதே உடையில் பின்னர் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் வந்துவிடுவார். பிற்பாடு அவர் உடற்பயிற்சி இயக்குனராகியதை அறிந்து கொண்டேன், அவரை, அவரது இளமைக்காலத்தை  அவருடன் பொருளாதாரம் படித்த   மித்ராவின் தங்கை நினைவு கூறுகிறாள் என்பதை  அவர் கற்பனை கூடச் செய்திருக்க  மாட்டார். தனக்கான செலவுகளுக்காகப் படிக்கையிலேயே ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்த அவர்மீது எனக்கு அப்போதும் இப்போதும் பெரும் மரியாதை உண்டு. 

தாலியாவுக்கு வருகிறேன். அப்படி நான் தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொண்டுதான் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அரிதாக டிசம்பர் பூச்சரமும் வைப்பதுண்டு. பின்னல் நல்ல அடர்த்தியாக இடைவரை நீண்டிருக்கும். (அந்த அடர்ந்த நீண்ட கூந்தலைத்தான் சரணுக்கும் தருணுக்குமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டேன்).மித்ராவுக்கு என்னைக் காட்டிலும் நீண்ட அடர்ந்த பின்னல். இப்போது தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொள்ளும் பெண்களைப் பார்ப்பதில்லை.ஏன் பூச்சரம் வைத்துக் கொள்பவர்களும் அதிகமில்லை. 

அந்தப்புகைப்படத்தில் தாலியா அப்படி கொள்ளை அழகாக இருந்தது. அநேகமாக அகரமுதல்வன் அதை ஒரு மலை வாசஸ்தலத்தில் எடுத்திருக்கக்கூடும் ஏனெனில் உடனிருந்த புகைப்படத்தில் ஒரு ஆப்பிரிக்கன் லில்லியும் இருந்தது. இவையிரண்டுமே கடல்மட்டத்துக்கு 1000 அடி மேலே இருக்கும் பகுதிகளில் மட்டுமே செழிப்பாக வளரும்.

தாலியாக்கள் வெகுசுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட மலர்கள்.

மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட இவை சூரியகாந்தியின் குடும்பமான அஸ்டரேசியைச் சேர்ந்தவை. தாலியா பேரினத்தில் சுமார் 50 சிற்றினங்களும் ஆயிரக்கணக்கான நிறங்களில் மலர்களும் இருக்கின்றன.

தாலியாக்கள் 14-லிலிருந்து 16-ம் நூற்றாண்டுவரை மீசோஅமெரிக்கப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி இனக்குழுக்களின் தொகுப்பான ஆஸ்டெக்குகளின் தாவரமாக மட்டுமே இருந்தது. ஸ்பானிஷ் படையெடுப்பின் பின்னரே தாலியாக்கள் ஐரோப்பாவிற்கு அறிமுகமாயின.

1525-ல் மெக்ஸிகோவிற்கு வந்த ஸ்பேனியர்கள் இந்த அழகிய மலரைப் பார்த்தார்கள் 1570-களில் மெக்ஸிகோவிற்கு ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் மன்னரால் அனுப்பப்பட்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் ஃப்ரான்சிஸ்கோதான் முதன் முதலாகத் தாலியாக்களை எழுத்தில் விவரித்தவர். மன்னரால் அந்த ப்பிரதேசத்தின் இயற்கைப் பொருட்களைக் குறித்து விரிவாக அறிந்துகொண்டு வரும்படி பிரான்சிஸ்கோ ஆணையிடப்பட்டிருந்தார். அச்சமயத்தில் தாலியாவின் வகைகளில் சிலவற்றின் கிழங்குகளைப் பழங்குடியினர் உணவாகப் பயன்படுத்துவதையும் ஃப்ரான்சிஸ்கோ ஆவணப்படுத்தினார். 

தண்டுகள் உள்ளே காலியாக இருப்பதைக்குறிக்கும் “water pipe”, “water pipe flower”, “hollow stem flower”, “cane flower” போன்ற பெயர்களில் தாலியாக்கள் அப்போது அஸ்டெக்குகளின் மொழியில் அழைக்கப்பட்டன. 7 வருடங்கள் மெக்சிகோவின் தாவரங்களை அறிந்து ஆராய்ந்து முடிவுகளை நான்கு தொகுதிகளாகப் பிரசுரித்த ஃப்ரான்சிஸ் மிக அழகிய சித்திரங்களையும் கைப்பட வரைந்திருந்தார்.

Nova Plantarum, Animalium et Mineralium Mexicanorum Historia, என்னும் அந்த நூல் 1578-ல் வெளியானது. அந்த நூலில் தாலியாவின் இரு சிற்றினங்களை பிரான்சிஸ்கோ விவரித்திருந்தார்.( Dahlia pinnata & Dahlia imperialis)1615-ல் அவை லத்தீன மொழியாக்கம் செய்யபட்டு இரு தொகுதிகளாக வெளியானது.

1787-ல் இரத்தச்சிவப்புச் சாயம் அளிக்கும் cochineal பூச்சிகளைத் திருடிவருவதற்காக மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்ட  ஃப்ரெஞ்ச் தாவரவியலாளர் நிக்கோலஸ் (Nicolas-Joseph Thiéry de Menonville) இந்தப் பிரகாசமான மலர்களைக் குறித்தும் ஆவணப்படுத்தினார். நிகோலஸ் அவருக்குச் சொல்லி அனுபியப்டி  cochineal  பூச்சிகளி திருடவில்லை மாறாக அவற்றை மெக்ஸிகோ பழங்குடியினரிடமிருந்து விலைக்கு வாங்கி அவை வளரும் சப்பாத்திக்கள்ளி வகைகளைத் தாவரவியல் பூங்காவில் வளர்த்து அந்தபூச்சிகளை பெருகச்செய்து அதற்கான பாராட்டையும் பெற்றார். இன்றும் அந்தப்பூச்சிகள் அந்த சப்பாதிக்கள்ளிகளில் தான் வாழ்கின்றன. இவற்றினல் தான் அடர்சிவப்பு நிறம் “coccineus,” எனப்பெயர் பெற்றது.

தாவரங்களின அறிவியல் பெயர்களில் காக்சினியா என்று இருப்பவைகளின் மலர்கள் எல்லாம் குருதிச்சிவப்பில் இருப்பதைப் பார்கக்லாம்.  அகரமுதல்வன் எடுத்த புகைப்படத்தில் இருப்பது Dahlia coccinea மலர்தான். ரத்தச்சிவப்பு தெட்சி மலரின் அறிவியல் பெயர் இக்ஸோரா காக்சீனியா.

பின்னர் பல வருடங்கள் தாலியாவின் நறுக்கப்பட்ட தண்டுகளும் விதைகளும் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு மெக்ஸிகோவிலிருந்து அனுப்பப்பட்டன. பின்னர் படிப்படியாக உலகநாடுகள் அனைத்திற்கும் தாலியா அறிமுகமானது. ஆயிரக்கணக்கான கலப்பின வகைகளும் உருவாகின.

தாலியா என்னும் இதன் பேரினப் பெயரிலேயே குழப்பம் நிலவியது. தாவர வகைப்பாட்டியலை நிறுவியவரான லின்னேயஸ் அவரின் மாணவரான  Anders Dahl, என்பவரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியா என்னும் பேரினத்தை வைத்தார் என பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தாலியா ஐரோப்பாவுக்கு அறிமுகமான 1789-க்கு 11 வருடங்கள் முன்பே லின்னேயஸ் இறந்துவிட்டார். மேட்ரிட் தாவரவியல் பூங்காவின் இயக்குனரான  Abbe Cavanilles,  தான் Anders Dahl யின் பெயரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியாவுக்கு வைத்தார் என்பது பிற்பாடு அறியபட்டது.

 1805-ல் ஜெர்மானிய தாவரவியலாளர்  கார்ல் (Carl Ludwig Willdenow, asserting) தாலியாவை  ஜார்ஜினா (Georgina) என்று பெயர் மாற்றம் செய்தார். 1810-ல் எழுத்துபூர்வமாக இம்மலர் மீண்டும் தாலியா எனக்குறிப்பட்டது.

கடல் மட்டத்துக்கு மேல் 1,500 – 3,700 m உயரதில் செழித்து வளரும் தாலியாக்கள்  பனிப்பொழிவற்ற உலகின் எல்லா பாகங்களிலும் வளருகின்றன.

தாலியாக்கள் பல வருடம் மலரளிக்கும் பெரினியல் வகையைச் சேர்ந்தவை. அவற்றின் மலர் எனச் சொல்லப்படுவது உண்மையில் மலர்த்தலை என்னும் மஞ்சரிதான். மலர்த்தலைகள் பிரகாசமான வண்ணங்களில் இருக்கும் பெரும்பாலும் தாலியாக்களில் மணம் இருக்காது. மகரந்தச்சேர்க்கைக்கு பூச்சிகளைக் கவர பிரகாசமான அதன் வண்ணங்களே போதுமென்பதால் நறுமணம் இருப்பதில்லை.

இங்கிலந்தின் புகழ்பெற்ற ராயல் ஹார்டிகல்சர் அமைப்பு 1969-ல் சர்வதேச தாலியா பெயர்களின் பதிவேட்டை உருவாக்கியது இந்தp பதிவேடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.(The International Register of Dahlia Names) தாலியாக்களின் உருவாக்கத்திலும் அவற்றின் உலகளாவிய பரவலிலும் மிக முக்கியப்பங்காற்றியவராக நியூயார்க்கின் ஜார்ஜ் தோர் பர்ன் (George C. Thorburn) அறியபப்டுகிறார்.

1963-ல் தாலியா மெக்சிகோவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது.

ஒற்றை அடுக்கு, பல அடுக்கு , மிகப்பெரியவை, மிகக்குட்டியான மினி வகைகள், நாடாபோன்ற இதழ்கொண்டவை, வெளியடுக்கு பெரிதாகவும் உள்ளடக்கு சிறியதாகவும் இருப்பவை பந்துபோன்ற பொம்பன் (Pompon) வகைகள் என இப்போது சுமார் 5700 வகை தாலியாக்கள்  நீலத்தைத்தவிர மற்ற எல்லா நிறங்களிலும், நிறக்கலவைகளிலும் இருக்கின்றன.

எடின்பர்க் தோட்டக்கலைதுறை1846- ல் நீல நிற தாலியாக்களை உருவாக்குபவர்களுக்கு 2000 பவுண்டு பரிசு அறிவித்தது.அது இன்று வரை உருவாக்கபடவில்லை.

அதன் காரணம் தாவரவியலாளரல்லாதோருக்கு புரிந்துகொள்ளக் கடினமென்றாலும் எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

நீல நிறம் உருவாக ஆந்தோசையானின் என்னும் நிறமி தேவை. தாலியாக்களில் ஆந்தோசையானின்கள் உள்ளன எனினும் தூய நீல நிறம் உருவாக delphinidin என்னும் ஆந்தோசையானின் ஒரு வகை நிறமியில் 6 ஹைட்ராக்சைல் தொகுப்புகள் இருந்தாக வேண்டும் ஆனால்  இன்று வரையிலும் தாலியாக்களில் 5 ஹைட்ராக்சைல் தொகுப்புக்களே உருவாகி இருக்கின்றன.

பொதுவாகவே இயற்கையில் நீல நிற மலர்கள் மிக அரியவை . நூற்றாண்டுகளாகத் தாவரப் பெருக்கவியலாளர்கள் முயற்சித்தும் இன்று வரை ட்யூலிப்களில் நீல நிற மலர்களைக் கொண்டு வர முடியவில்லை. இப்போது இருப்பவை எல்லாம் almost blue என்னும் வகையில் வருபவைதான். இயற்கையாக நீல நிறத்தில் ஹைட்ராஞ்சியா, கார்ன் மலர்கள், இமாலய பாப்பிகள் மற்றும் டெல்பீனியம் போன்ற  ஒருசிலமலர்களே இருக்கின்றன.

 பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தாலியா உலகின் மிக விரும்பப்படும் தோட்டமலராக  இருக்கிறது.

ரிதன்யா!

தற்கொலையாகி விட்டிருக்கும் ஒரு  ஆணவக்கொலை

ரிதன்யாவின் மரணம் செய்தித்தாளும் தொலைக்காட்சியும் இல்லாத வீடென்பதால் தாமதமாகத் தெரிந்தது. அவளது கடைசிக்குரல் பதிவுகளையும் துரதிர்ஷ்டவசமாகக் கேட்க வேண்டி வந்தது. 

அவள் குரலில் இருந்த குழந்தைத்தனம்தான் இப்போது வரை மனதைப் பிசைகிறது. உண்மையில் ரிதன்யாவுக்குத் தன்னை மாய்த்துக் கொள்வது என்றால் என்னவென்றே தெரியாமல் அதைச் செய்து கொண்டிருக்கிறாள்.

தன் அப்பாவுக்குத் தான் பூட்டி வைத்துவிட்டு வந்திருக்கும் ஒரு ட்ராயரில் இருக்கும் நகைகளை அத்தனை அறியாத்தன்மையுடன் மயில் தோடு ஒத்தை வளையல் அத்தை கொடுத்த செயின் என்று பட்டியலிடுகிறாள். அந்தக் குழந்தையின் அறியாமையை என்னவென்று சொல்வது?

அடுத்து தென்னைமரத்துக்கு வைக்கும் மிக வீரியமுள்ள விஷத்தை சாப்பிடப்போகிறாள், அந்த கொடும் நஞ்சு அவளை என்னவெல்லாம் செய்யும், சாவு என்றால் என்ன இதெல்லாம் ஒன்றுமே தெரியாமல் எல்லா கதவும் அவள் முன்னால் அறைந்து சாத்தப்பபட்ட தன்னிரக்கத்தில் நகைகளைப் பட்டியலிடுகிறாள் பாவம்.

அந்தக் குறிப்பிட்ட மருந்து மிகக் கொடுமையான விளைவுகளை உண்டாக்கியே உயிரைப்போக்கும் அதைச் சாப்பிட்டபின்னர் பிழைப்பது துர்லபம்.  பல வருடங்களுக்கு முன்பு   சின்னு மாமனின் மகன் மிக இளம் வயதில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட ஒரு தகராறில் மனமுடைந்து இதைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது நானும் உடன் இருந்தேன். அவன் துடித்த துடிப்பும் பட்டபாடும் அப்படியே இன்னும் நினைவிலிருக்கிறது. மருத்துவரிடம் அவனைக்காப்பாற்ற வழி இருக்கிறதாஎன்று கேட்டேன் ‘’ இல்லைங்க அந்த மருந்து உள்ளே போறப்பவே அது போற வழியெல்லாம் அழிச்சுட்டே போகும்’’ என்றார். ரிதன்யா சாப்பிட்டது  அதைத்தான்.

ரிதன்யா செல்வந்தர் வீட்டுப்பெண் என்பதாலும் இப்போது ஊடக வளர்ச்சி மிக விரிவாகியிருப்பதாலும் இந்த விஷயம் இத்தனை கவனம் பெற்றிருக்கிறது ஆனால் கொங்குப் பகுதியில் இது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொள்ளாச்சி தென்னைநகரென்பதால் இந்த மருந்து மிக எளிதில் கிடைக்குமொன்றாகத்தான் இப்போது வரை இருக்கிறது. 

 முதுகலை படித்த, கார் ஒட்டத் தெரிந்த ரிதன்யா செய்துகொண்டது தற்கொலை அல்ல அவளுடையது ஆணவக்கொலைதான். அவளைப்போல் பலருக்கு இப்படி இங்கு நடந்திருக்கிறது நடந்துகொண்டிருக்கிறது நாளையும் நடக்கும்.

இன்றைய செய்தித்தாள்களில் மகள் வேற்றுச்சாதியில் கல்யாணம் செய்துகொண்டதால் ரயில் முன் பாய்ந்து இறந்து போன அரசு அதிகாரி தம்பதிகளைக் குறித்துப் பார்த்த போதும் இதுதான் தோன்றியது.  குடும்ப கெளரவம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றைக்காப்பாற்ற அந்தப் பெண்ணுக்கு வாழ்நாள் முழ்க்க வாழவே முடியாத அளவுக்குக் குற்ற உணர்வை அளிப்பதைத் தவிர அந்தத் தற்கொலைக்கு வேறெந்த நோக்கமும் இல்லை.

இந்தக் கிராமத்தில் நான் வீடு கட்டி வந்த புதிதில் பக்கத்தில் ஒரு வீட்டில் மகளுக்குக் கல்யாணம். வீடு கட்டத்துவங்கி பணமுடையால் அதை முடிக்க முடியாமல் அவசரமாகப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள். பாதி முடிந்த அந்த வீட்டில் மணமக்களுக்கு முதலிரவு நடந்த அன்று இந்தப்பகுதி வழக்கமாகச் சந்தகை செய்து முதலில் மணமக்கள் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்று விட்டார்கள் மீதமிருந்த சந்தகையில்   விஷம் கலந்து மணப்பெண்ணின் தம்பி மற்றும் பாட்டிக்கும் கொடுத்துத் தாங்களும் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டார்கள் பெற்றோர்கள் இருவரும்.

காலையில் தன்னை வந்து யாரேனும் கதவைத்தட்டி எழுப்புவார்கள் என்று வெட்கத்துடன் காத்திருந்து காத்திருந்து வேறு வழியின்றி கதவைத் தானே திறந்துகொண்டு வந்த அந்தப்பெண் பார்த்தது சடலமான பெற்றோர்களையும் உயிருக்குப்போராடும் தம்பியையும் பாட்டியையும்தான். எத்தனை முட்டாள் தனம் அத்தனை கடன் வாங்கி வீடுகட்டி மேலும் கடன் வாங்கி கல்யாணம் செய்துவைத்து அந்தக் கல்யாணத்தில் அந்தப்பெண் வாழவே முடியாதபடிக்கு அன்றைக்கே செத்துப்போனார்கள். அந்த முட்டாள் பெற்றோர்கள். உலகம் போய்க்கொண்டிருக்கும் திசைக்கு நேர் எதிர் திசையில் செல்பவர்கள் கொங்குப் பகுதி ஆட்கள்.

உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்னுமறிதல் சிறிதும் இல்லாமல் தாங்கள் காலம் காலமாக  வசிக்கும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் இவர்கள்.

உண்மையில் ரிதன்யாவின் புகுந்தவீட்டினரையும் கணவன் கவினையும் வரிந்துகட்டிக்கொண்டு குற்றம் சொல்லும் அவளது சுற்றம் உட்பட்ட பொதுமக்கள் பலருமே அவள் அப்படி செய்ததற்கு காரணமான கொங்குப் பகுதியினரின் குடும்ப கெளரவத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்னும் முட்டாள்தனத்தினால் தான் இது நடந்தது என்பதைக் கவனிக்கவே இல்லையா? உண்மையில் ரிதன்யாவைக் கொன்றது இந்த வெற்றுஆணவம்தான். 

நம்ம வீட்டுப் பெண் நம் சாதியில்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் கல்யாண வாழ்க்கையில் என்ன இடர் வந்தாலும் அவள் ஒருபோதும் கணவன் என்னும் கடவுளை விட்டுவிட்டு திரும்ப வந்துவிடக்கூடாது என்பதை சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட, அப்படியும் தாங்கமுடியாமல் 5 முறை புகார் சொல்லி ஒவ்வொரு முறையும் அறிவுரையும் அறவுரையும் சொல்லி திருப்பி அனுப்பப்பட்ட ரிதன்யாதான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.

இப்படி எனக்குப் பல பெயர்களில் பிறந்து , தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாக்களைத் தெரியும். இன்னும் செத்துப்போகமால் தென்னை மர விஷத்தை குடித்தால் உண்டாகும் விளைவுகளைக்காட்டிலும் நூறுமடங்கு துயரை, வேதனையை உள்ளுக்குள் சகித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் ரிதன்யாக்களையும் அறிவேன். 

இந்க்த கொங்குப்பகுதி ஆட்களைக் காட்டுமிராண்டிகள் என முன்பு எண்ணியதுண்டு. ஆனால் பழங்குடித்தாவரவியலில் ஈடுபட்டப் பின்னர் காட்டில் இருப்பவர்களை கொங்குப்பகுதியினருடன் ஒப்பிட்டுக் கேவலப்படுத்தியதை எண்ணி வருந்தி இருக்கிறேன். ரிதன்யாவின் அப்பா அம்மா பேசுவதை அவ்வப்போது பல்லைக் கடித்துக்கொண்டுதான் பார்க்கிறேன். முத்தம் கொடுத்ததை, செல்லம் கொடுத்ததை, கல்வி கொடுத்ததை எல்லாம் சொல்லிச் சொல்லி அழும் அவர்கள், வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை அவளுக்கு அளிக்கவேயில்லை. என்னவானாலும் சகித்துத்கொண்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால்

எத்தனையோ செலவழித்துச் செய்த கல்யாணம் கேள்விக்குரியதாகிவிடும் குடும்ப கவுரவம் என்னும் மண்ணாங்கட்டி உடைந்துவிடும் என்றுதான் இங்கு எப்போதும் சொல்லப்படுமொன்று.இப்படியான பஞ்சாயத்துகள் இங்கு வாராவாரம் நடப்பதை நானறிவென். 

உடலெங்கும் கடித்துவைத்த ஒரு கணவனுடன் சகித்துக்கொண்டு வாழும்படி சொன்ன ஒரு தகப்பன் இருக்கிறார் அதைச் சொல்லிவிட்டு உடலிலிருந்த கடிபட்ட காயங்களுக்கு அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றது அந்தக்குடும்பம்.

பெண்கள் மடியில் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெருஞ்சுமை இங்கு பெற்றோர்களுக்கு, அவர்களை கல்யாணம் செய்து கொடுத்து விட்டால் தீர்ந்தது சுமை. இதோ இந்த வாரம், இறுதி ஆண்டில் தாவரவியல் படித்துக்கொண்டிருக்கும் மாணவிக்கு கல்யாணம் என்று வந்தார்கள். எத்தனையோ எடுத்துச் சொன்னேன் மிக இளம் வயது இன்னும் அவள் டிகிரி முடிக்கச் சில மாதங்கள் தான் இருக்கிறது. கொஞ்சம் தாமதிக்கக்கூடாதா? அவள் டிகிரி முடித்து அக்கம்பக்கம் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிகொடுத்து   3000. 4000 சம்பாதிக்கும் வாய்ப்பையும் ஏன் கெடுக்கிறீர்கள் என்று எத்தனை சொல்லியும் கேட்கவில்லை.  இப்படி வருடா வருடம் நடந்துகொண்டே இருக்கிறது.

சாம்பவிக்கு நாங்கள் நேரடியாக இப்படி எதேனும் நடந்தால் சரி செய்யவே முடியாதென்றால் புறப்பட்டு வந்துவிடு நாங்கள் இருக்கிறோம் என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்கவில்லை.   ஆனால் அவள் வாழ்வில் சவால்களைச் சந்திக்க போதுமான தைரியம் உள்ளவளாக வளர்ந்திருப்பதை உறுதி செய்திருக்கிறோம். 

இன்னொரு சாதியில் காதல் மணம் செய்து கொண்ட பெண்களை அடித்துக் கொன்றவர்களின் கதைகளை நான் இளமை முதலே கேட்டிருக்கிறேன்.

பல காதலை முறித்து, அந்தக் காதலை உறவினர்களின் முன்பாக   கூட்டம்போட்டுச் சொல்லும் பழக்கமும் இங்கு உண்டு. இப்படி விவாதித்து அந்தப் பெண்ணைச் சுயசாதியில் கல்யாணம் செய்துகொடுத்து அந்தக் கணவனுக்கு வெகுசீக்கிரம் விஷயம் தெரியவந்து பின்னர் காதலித்தவனை மறக்க முடியாமல், சந்தேகப்படும் கணவனுடன் வாழவும் முடியாமல் பிணம்போல் வாழும் மகளுக்கு வருடா வருடம் தவறாமல் சீர் செய்யும் பெற்றோரால்  ஆனதுதான் இந்தச் சமூகம். இந்தச் சமூகத்தில் வெற்று ஆணவம் மட்டுமே இருக்கிறது. அறிவென்பது  துளியும் இல்லை  உணர்வுகளுக்கோ உயிருக்கோ வாழ்க்கைக்கோ எந்தப்பொருளுமில்லாத ஒரு முட்டாள் சமூகம்இது. இதை இந்தச் சமூகத்தின் உள்ளிருந்துகொண்டே தான் சொல்கிறேன்.

சென்ற மாதம் கூடச் சொந்தத்தில்  ஒரு திருமணம், அந்த மாப்பிள்ளைப் பையன் வேறு சமூகப் பெண்ணுடன் காதலில் இருந்தான். காதலை முறித்து, என் பிணத்தைத் தாண்டித்தான் அவளைக்கலயாணம் செய்யப்போகனும் போன்ற அரதப்பழசான பொய்யான மிரட்டல்களால் அவனைப்பணிய வைத்து சொந்தச்சாதியில் கல்யாணம் நடந்தது.

மாப்பிள்ளை முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அந்த அறியா மணப்பெபெண் மலர்ந்து சிரித்தபடி மேடையில் இருந்தாள். எப்படி அவளுடன் அவன் மகிழ்ந்து வாழ்க்கையை நடத்துவான்? மாப்பிள்ளையின் பெற்றோர் வாய்கொள்ளாச் சிரிப்புடன் வரேவேற்பில் இருந்தார்கள். சாப்பாடெல்லாம் பரவாயில்லிங்களா? என்று என்னிடம் கேட்டார், தலையசைத்துவிட்டு வந்தேன். அந்த முறிந்த காதலில் இருக்கும் அந்தப் பெண்ணின் மனநிலையையும், அவளை ஏமாற்றியதாகி விட்டிருக்கும் நிலையில் இருக்கும் அந்தப் பையனின் மனதையும் எண்ணிக்கொண்டேன்

எனக்கு ஏதேனும் ஒரு அதிகாரம் கிடைத்தல் இந்தச்சாதியின் பெருசுகளை ஆண் பெண் வேறுபாடில்லாமல்    அப்படியே அள்ளிப் போட்டு அந்தமானுக்கப்பால் இருக்கும் ஒரு தனித்தீவில் கொண்டு போய் விட்டுவிடுவேன்.

என் மாணவர்களிடம் இதைக் குறித்து பேசினேன். ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக மணவாழ்வில் இடர்கள் வந்தால், சரி செய்யவே முடியாதென்றால் வெளியே வந்துவிடுங்கள் பெற்றோரிடம் செல்ல முடியாதென்றால் என் வீட்டுக்கு எந்நேரமானாலும் வந்துவிடுங்கள் கதவுகள் திறந்திருக்கும். ஒருவேளை அச்சமயத்தில் நான் உயிருடன் இல்லை என்றால் இந்தச் சமூகத்தின் சாயல்கூட இல்லாத என் மகன்கள் என்னைக் காட்டிலும் கதவை அகலத்திறந்து வைத்திருப்பார்கள் என்றேன்.

நண்பர் கார்த்திக் வேலு (சிட்னி) எழுதியிருக்கும் பதிவையும் இணைத்திருக்கிறேன்.

https://www.facebook.com/share/19LbTT4U1V/?mibextid=wwXIfr

அம்மச்சியுட கைப்புண்ணியம்!

கோடைவிடுமுறையில் சென்னையிலும் பங்களூருவிலும் இருந்தேன். (https://logamadevi.in/4222).

பெங்களூருவில் தங்கி இருக்கையில், தருணுடன் இப்போது கட்டிக்கொண்டிருக்கும் மேல் தளத்திற்கான உள் அலங்காரங்களுக்கென ஒருவரைப் பார்க்க நெடுந்தொலைவு பைக்கில் செல்ல வேண்டி வந்தது. எனக்கு பைக் பயணங்கள் உவப்பானதல்ல, பழக்கமில்லை என்பது முதன்மைக் காரணம் வேறு சில கசப்பான காரணங்களும்  கூடவே உண்டு.

மூத்த சகோதரர்கள் யாருமில்லை எனவே அவர்கள் பைக் வாங்கி ஓட்டி என்னை அழைத்துசெல்லும் சாத்தியங்கள் அற்ற இளமைப்பருவமே வாய்த்தது. அப்பா என்பவர் வாய்ச்சொல்லில் மட்டும்தான் வீரர் அவருக்கு சைக்கிள் கூட ஓட்டத்தெரியாது,  எதிர்க்கும் திராணியற்றவர்கள் மீது கட்டற்ற வன்முறையை செலுத்துவதைத்தவிர ஏதுமறியாதவர் அவர்.

என்னைவிட 7 வயது இளையவனாகிய தம்பி விஜி வளர்ந்து பைக் ஓட்டக் கற்றுக்கொண்டபோது துரதிர்ஷ்டவசமாக நான் திருமணமாகி அபிதாபியில் இருந்தேன். பலவருடங்களுக்கு முன்பு புதுதில்லியில் ஒரு பிப்ரவரி மாதம் நடந்த பைக் விபத்து  பெரும் வடுவாக வாழ்க்கையில் தங்கி விட்டது, எனவே பைக் பயணங்கள் எனக்கு எப்போதுமே ஒத்து வருவதில்லை. சென்னையில் எழுத்தாளரான நண்பர் ஒருவருடன் சிலவருடங்களுக்கு முன்னர் ஓரிரவு நீண்ட பைக் பயணமொன்று சென்றேன். அதை மட்டுமே மகிழ்வுடன் நினைவு கூற முடிகிறது.

  இத்தனை காலத்தில் பயந்தபடி ஒரு பத்துமுறை பைக்கில் பயணித்திருப்பேன் அவ்வளவுதான். டாக்ஸியில் போகலாம் என்றதை மறுத்து , வற்புறுத்தி என்னை அன்று தருண் பைக்கில் அழைத்துச்சென்றான். தருணுக்கு பைக் அலாதிப்பிரியம் மிகக்கவனமாக ஓட்டுவான். அவனது நேபாளத்தோழி ரெஜினியின் ஹெல்மெட் வீட்டில் இருந்தது அதை அணிந்துகொண்டு அவன் பின்னால் அமர்ந்து கொண்டேன்.சாலைப்போக்குவரத்து அசமஞ்சமாகத்தான் எப்போதும் போல் இருந்தது ஆனாலும் முழங்கால்களுக்கருகில் வரும் கார்க்கதவுகளும், பேருந்துகளின் மாபெரும் சக்கரங்களும் அச்சமூட்டின. 

அதிகாலையில் இருந்து , புறப்படும் வரை  பெரியதிரையில் சஞ்சய் சுப்ரமணியனின் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். சாலைக்காட்சிகளில் மனதைக்குவிக்காமல் ‘’ அன்பே இன்பம் சேர்க்க மாட்டாயா’’ என்று சஞ்சய் உருகுவதை மீள் மீள மனதில் நினைத்துக்கொண்டே பயணித்தேன். 

அந்த அலுவலகத்தில் எங்களது வேலை முடிய மதியமாகிவிட்டது. தருணுக்கு பைன்லேபில் (நாம் அட்டை பரிவர்த்தனை செய்யும் அந்த பெட்டியில் பைன்லேப் என்று எழுதி இருப்பதை பிற்பாடுதான் கவனிக்கிறேன்) இடைக்காலப்பயிற்சி நடந்து கொண்டிருப்பதால் அவனுக்கு உபகாரச்சம்பளம் அளிக்கப்பட்டிருந்தது.எனவே அன்று எனக்கு அவன் மதிய உணவு ட்ரீட் தருவதாக மேலும் தொலைவுக்கு அழைத்துச் சென்றான்.

பெங்களூருவின் புறநகர்ப்பகுதியின், புறநகரில் ஒரு காட்டின் எல்லையில் இருந்தது அம்மச்சியுடைய கைப்புண்ணியம் என்னும் அந்த அழகிய கேரள உணவகம். எல் வடிவில் அமைந்திருந்த சிவப்புச்செங்கல் கட்டிடம், நடுவில்  கூடத்தில் வளர்ந்திருந்த ஒரு அத்தி மரத்துக்கு இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருந்தது சிவப்பு ஓடுகளிட்ட கூரை.

முதல் தளத்தின் வெளிப்புறத்தில்  பெரிய புகைப்படத்தில் ஃபகத் ஃபாஸில் மேசையில் கையூன்றிக்கொண்டு வருபவர்களை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார். தென்னை மரங்களும் புல்வெளியுமாக அப்படியே கேரளாவில் இருக்கும் உணர்வளித்தது அந்த இடம், குறையில்லாமல் இருக்க  தென்னங்கீற்றை அசைபோடும் யானையை நானே மனத்தில் வடித்து முற்றத்தில் நிறுத்தினேன்.  உள்ளே சேட்டன்கள் கரை வேட்டி கட்டிக்கொண்டு ஓர்டர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். எல்லா மலையாளத்திரைநடிகர்களும் புகைப்படங்களாக சுவரில் இருந்தார்கள்

 பெரும்பாலும் மலையாளிகளே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். சிறு குழுவாக வந்திருந்த பெண்களில் வைன் சிவப்பில்  உடையணிந்திருந்த ஒரு சுருட்டை முடிக்காரி தருணை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். பதிமுகப்பட்டையிட்ட செந்நீர் ஒரு கண்ணாடிக் குடுவையில் வெதுவெதுப்பாக இருந்தது அந்த அத்தி மரத்தின் கிளைகளில்செயற்கை பொன்கொன்றைச் சரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. எங்கிருந்தோ ’’ஒன்னாம் ராகம் பாடி’’, கேட்டது தொடர்ந்து’’ பிரமதவனம் வீண்டும்’’, அதையடுத்து தாஸேட்டனின் குரலில் மம்மூட்டியும் லாலேட்டனும் சுரேஷ்கோபியுமாய் உடனிருந்தார்கள்.

ஒரு உருளிச்சோறும், கேரளா மீல்ஸும்   கறிமீன் பொளிச்சதும் ஓர்டர் செய்தோம். இறுதியாக பாலடைப்பிரதமன். மறக்க முடியாத தருணின் ட்ரீட். முன்பு  தருண் 10-ல் படிக்கையில் எனர்ஜி அம்பாஸடராக இருந்ததற்காக பத்தாயிரம் ரூபாய் பரிசை பள்ளியில் பெற்றான். அப்போது எனக்கு ஒரு அழகிய குளிர்கண்ணாடியும் குப்பண்ணாவில் ஒரு நல்ல அசைவ விருந்தும் பூமராங்கில் மரத்தட்டில் புகைந்துஎரிய கொண்டு வந்த ஒரு ஐஸ்கிரீமும் வாங்கிக்கொடுத்தான்.

 சரண்  ஐரோப்பாவில் வேலையில் சேர்ந்து சம்பளம் வாங்கியதும்  என்னை தனிஷ்க் அழைத்துச்சென்று 6 இதழ் கொண்ட தாமரை வடிவ வைரமூக்குத்தியும், மரகதக் கற்கள் பதித்த மோதிரமும், உடன் லோகமாதேவி என்று பெயர் எழுதிய ஒரு காரும் வாங்கிக்கொடுத்தான். அதில்தான் மிகப்பெருமையாக இப்போது கல்லூரிக்குச்செல்கிறேன். 

எனவே நல்ல கேரள உணவுக்குப் பின்னர் கல்லாவில் விற்ற சக்கைச் சிப்ஸ் வாங்கிக்கொண்டு மீண்டும் ஹெல்மெட் அணிந்து வீடு திரும்பினோம். வழியெல்லாம் பெருநிறுவனங்களின் வாசலில் அடுக்கடுக்கான இலைகளுடன் நின்றிருந்தது டெர்மினாலியா மாண்டலி. ஏன் பங்களூர்காரர்களுக்கு இதன் மேல் இத்தனை பிரியம் என்று நினைக்குமளவுக்கு அந்த மரங்கள் அதிகமாக இருந்தன. சிக்னலில் வெகுநேரம் காத்திருக்கையில் ஒரு பெண் மனதிற்குள் எதையோ பாடிக்கொண்டு விரல்களால்  தொடையில் தாளமிட்டபடி புன்னகையுடன் இருந்தாள், பையன்கள் எல்லா ஊர்களில் இருக்கும்படியே பொறுமையின்றி சந்துகளில் நுழைய முற்பட்டார்கள், 

ஒரு வளைவில் காத்திருக்கையில் குப்பைக் கூளங்களுக்குள்ளிருந்து ஒரு பூனைக்குட்டி கண்ணாடிக் கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு பெரிய லாரியின் சக்கரங்கள் என் அருகில் வந்த போது நான் அதை பொருட்படுத்தாமல் வியர்வை பூத்திருந்த முகத்துடன் சஞ்சய் ’’கன்னத்தில் முத்தமிட்டால்’’ என்பதை நிறுத்தி நிதானமாக  பாடுவதை எண்ணிக்கொண்டேன். 

ஒரு வழியாக மாலை வீடுவந்து சேர்ந்தபோது தருண் எப்படி இருந்தது இந்த நாள்? பைக் பயம் போயிருச்சா என்றான் ? என்றான்.  ’’நல்லாதான் இருந்தது ஆனா பயம் போகலை பயப்படாம இருக்க வழிபூரா நான் சஞ்சய் சுப்ரமணியணியனை நினைத்துக்கொண்டேன்’’ என்றேன்.

’’அடிப்பாவி கட்டிளங்காளை நான் முன்னாடி உட்கார்ந்திருக்கும் பொது நீ சஞ்சய்சுப்ரமணியனை நினைச்சுகிட்டு வந்தியா?’’ என்றான். நான் ’’ஆம்’’ என்றேன். 

சர்க்கரைப்பூஞ்சை!

பல லட்சம் வருடங்களுக்கு முன்பு மூன்று கொம்புகளும், கிளியைப் போன்ற அலகும் கொண்டிருந்த ஆதிவிலங்கான ட்ரைசெரடாப்ஸ்கள் (Triceratops) சமவெளி தாவரங்களை மேய்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த சில பூக்கும் தாவரங்கள் தங்கள் விதைகளைப் போட்டிகள் குறைவாக இருக்கும் தொலைவுப் பிரதேசங்களுக்கு செலுத்த  புதிய உத்தியைக் கையாள முதன்முறையாக முயன்றன.

அது வரைமெல்லிய காகிதம் போன்ற உறையால் சூழப்பட்டு உருவாக்கிய விதைகள்,சுவையுள்ள, சதைப்பற்றான உறைகளால் சூழப்பட்டு உருவாகின. தாவரங்களின் கனிகளாகிய அவற்றை ட்ரைசெரடாப்ஸ்கள் போன்ற ஆதி விலங்குகள் உண்டு விதைகளை பல்வேறு திசைகளில் பரப்பின.கூடவே அவற்றின் கழிவுகள் மண்ணை மேலும் வளம் ஆக்கின

அக்கனிகளில் சர்க்கரையில் பூஞ்சைகள் விரைவாக வளரத்துவங்கின, அப்பூஞ்சைகள் சர்க்கரைச் சத்தை தங்களது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டன. ஆக்சிஜன் இல்லாத சமயங்களில் பூஞ்சைகள் சர்க்கரையை ஆல்கஹால் மற்றும் கரியமில வாயுவாக மாற்றின.

இந்த எளிய ஒற்றை செல் பூஞ்சைகள்  அரும்புகள் போல் துளிர்த்து விரைவில் பாலிலா இனப்பெருக்கம் செய்து பல்கிப்பெருகி பரவின. ஏராளமாக விளைந்த காட்டுமரங்களின் கனிகளில் இவை செழித்து வளர்ந்தன.

காட்டுக் குரங்குகள் மது நொதித்திருந்த கனிந்த பழங்களை உண்டு  மகிழ்ந்தன. குரங்குகளை பார்த்து அவற்றைப் போலவே கனிந்து நொதித்த பழங்களை ஆதி மனிதனும் சுவைக்க தொடங்கினான்.  மதுவைக் கொண்டாடும் ஆதிமனிதனின் ஜீன்கள்  அக்கணம் விழித்துக்கொண்டன.

அந்த புத்திசாலிப் பூஞ்சைகள் பின்னர் மனிதகுலத்தின் மிக இன்றியமையாத இரண்டு விஷயங்களான உணவு மற்றும் மதுவின் தயாரிப்பில் முக்கிய பங்காற்றின. அவையே பிற்பாடு சர்க்கரைப் பூஞ்சைகளான ஈஸ்டுகள் என அறியப்பட்டது.

மனிதர்கள் உணவு சமைக்க முதலில் கண்டுபிடித்ததும், பயன்படுத்தியதும் நெருப்பு, இரண்டாவது ஈஸ்ட்.

தற்போது கண்டறியப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஈஸ்ட் வகைகளில் சுமார் 250 வகைகள் மட்டுமே சர்க்கரை நொதித்தலில் பயன்படுகின்றன.அவற்றில் 25 மட்டுமே நல்ல ஈஸ்டுகள்.அதாவது அவையே மனிதர்கள் உண்ணக் கூடிய பொருட்களை சிறப்பாக உருவாக்க முடியும்.  

வரலாறு

ஈஸ்ட் என்பது என்ன? சிலருக்கு சரும அலர்ஜியை உண்டாக்கும் ஈஸ்டுகள்  நினைவுக்கு  வரலாம். அவையும் ஈஸ்டுகள்தான் என்றாலும் உணவுத் தொழிற்சாலைகளில் பயன்படுவது ஈஸ்டின் வேறு வகைகள். இட்லி மாவு அரைத்து வைத்து மறுநாள் புளித்திருப்பதும், சப்பாத்தி. பூரிக்கு மாவு பிசைந்து வைத்து சில மணி நேரங்களில் அவை மிருதுவாகவும்,  அளவில் சற்று அதிகரித்திருப்பதும் இந்த ஈஸ்டுகளால்தான்.

தமிழில் மதுகம் என்று அழைக்கப்படும் ஈஸ்டுகள் மனிதன் அன்றாட வாழ்வில்  பயன்படுத்திய  முதல் நுண்ணுயிரி. 

ஈஸ்டுகள் பேச்சு மொழி, எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பிருந்தே மனிதர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பண்டைய நாகரிகங்களின் சித்திர எழுத்து முறைகளை ஆராயும் வல்லுநர்கள், எகிப்தியர்கள் 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே ஈஸ்டுகள் கொண்டு  ரொட்டி மாவைப் புளிக்கச் செய்திருப்பதை உறுதி செய்கிறார்கள் 

பண்டைய எகிப்தின் அகழ்வாய்வுகளில் கிடைத்த  அடுமனை அறைகளும், மாவு அரைக்க உபயோகப்படுத்தப்பட்ட அரைகற்களும், தானிய சேமிப்பு நிலவறைகள், அடுமனைகள் மற்றும் வடிசாலைகளின் சுவரோவியங்கள் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பான  ஈஸ்ட் பயன்பாட்டிற்கான  அத்தாட்சிகளாயிருந்தன.

கி மு 3100 ல் எகிப்தை ஆண்ட ஸ்கார்பியன் எனும் மன்னர் இறந்தபோது (அப்போது பிரமிடுகள் கட்டப்பட்டிருக்கவில்லை)   அவரை பென்ச் என்று பொருள் கொண்ட தாழ்நிலை கல்லறையான mastaba  வில்  அடக்கம் செய்தார்கள். அந்தக் கல்லறையில் ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியலாளர்கள் 700 ஒய்ன் சீசாக்களையும் அவற்றிலிருந்து பிசினாகிவிட்டிருந்த 4500 லிட்டர் திராட்சை ரசத்தையும் கண்டுபிடித்தார்கள்.

 அப்போதெல்லாம் ஒரு மரப்பிசின் வைனுடன் கலக்கப்பட்டு வைன் விரைவாக ஆக்ஸிஜனேற்றம் அடைந்து வினிகர் என்னும் புளித்த திரவமாதல் தடுக்கப்பட்டது. அந்த வைன்  ரெசின் கலந்து உண்டாக்கப்படும் கிரேக்க வைனான ரெட்சினாவை போலிருந்தது,(Retsina) அந்த வைன் வண்டலில் ஆய்வாளர்கள் சர்க்கரை பூஞ்சையின் DNA துண்டுகளை கண்டார்கள். அந்த வைன் ஸ்கார்பியன் காலத்துக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்தது   

பண்டைய எகிப்தில் தாவர வேர்களை உலர்த்திப் பொடித்து ரொட்டிக்கான மாவை சுமார் 30,000 வருடங்களுக்கு முன்பே உருவாக்கினார்கள். பின்னர் தானியங்கள் பயிராக்கப்பட்டபோது  ஆரோக்கியமான ஆற்றல் மிக்க வாழ்விற்கான உணவாக கோதுமை மற்றும் பார்லியை சார்ந்திருந்தார்கள். பல வகை விதைகள், தேன், பேரீச்சை, முட்டை மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட  விதம் விதமான  ரொட்டிகள்  உருவாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அவை பறவைகள் மீன்கள் விலங்குகள் போன்ற வடிவங்களில் உருவாக்கப்பட்டன. .அன்றாட உணவுகளுக்கும் விழாக்கால உணவுகளுக்கும் என வேறு வேறு வகைகளில்  ரொட்டிகள் உருவாக்கப்பட்டன.

2450 விலிருந்து 2401 க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த எகிப்திய கல்லறை சுவர்ச் சித்திரங்களிலிருந்து அக்காலத்தில் மாவு பிசையப்பட்டு நேரடியாக அடுப்பில் வாட்டி நொதித்தலே நடைபெறாமல் ரொட்டியாகப் பட்டிருக்கிறது என்பதை அறிய முடிந்தது. பெரும்பாலும் அடிமட்ட தொழிலாளர்கள் அப்படி புளிக்காத மாவினால் ரொட்டி தயாரித்திருக்கிறார்கள். பின்னரே பூஞ்சைகளால் மாவு புளிக்கச் செய்யப்பட்டிருக்கின்றது. பிசைந்த  மாவை பலமணிநேரம் கால்களால் மிதித்து மிருதுவாக்கி காற்றில் இயற்கையாக இருந்த ஈஸ்டின் பங்கை முற்றிலும் அறியாமலேயே புளிக்கச்செய்து மிருதுவான  ரொட்டியை உருவாக்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் எகிப்தியலாளர்கள் குழுவொன்று அகழாய்வில் கிடைத்த பழைய வைன் சீசாக்களின் கசடுகளில் நீள் உறக்கத்திலிருந்த ஈஸ்டுகளை உயிர்ப்பித்து அவற்றைக்கொண்டு காட்டு கோதுமை மாவைப் புளிக்கச் செய்து ரொட்டி உருவாக்கினார்கள். ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதப்படும். அந்த ஈஸ்டை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

 எகிப்தியர்களுக்கு ஈஸ்ட் நுண்ணுயிரிகள் குறித்த அறிதல் ஏதும் இருந்திருக்கவில்லை அவர்கள் எப்படியோ பழைய ரொட்டியின் ஒரு சிறு பகுதியை புதிய மாவிலும், பழைய மதுவின் சில துளிகளை புதிய மதுவிலும் சேர்த்தால் அவை புளிக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். இவ்வழக்கத்தை  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைப்பிடித்தார்கள்.

ஈஸ்ட் ஆய்வுகள் இவை பல மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்த பூமியில் வாழ்ந்த நுண்ணுயிரிகள் என்று தெரிவிக்கின்றன. பொது யுகத்திற்கு 6000 ஆண்டுகள் முன்பிருந்தே பியர் நொதித்தலில் ஈஸ்டுகளின் பங்கிருந்ததை சுமேரியா பாபிலோனியா மற்றும் தற்கால ஜார்ஜியாவில் நடந்த அகழாய்வுகள் தெரிவிக்கின்றன.

தானியங்களை நொதிக்கச் செய்வதில் ஈஸ்டுகளின் பங்கு ரொட்டிகளில் அவை பயன்படுத்தப்படுவதற்கு முன்பிருந்தே இருந்திருக்கிறது என்று கருதப்படுகிறது. அதாவது விவசாயம் உலகில் துவங்கும் முன்பே கனிகளின் சர்க்கரை ஈஸ்டினால் நொதிக்கச் செய்யப்பட்டு மது உருவாக்கப்பட்டிருக்கிறது. 

யேசுவின் போதனைகளில் ’’parable of the yeast’’ என்பதும் ஒன்று. விவிலியத்தில்  புதிய ஏற்பாட்டில்  வரும் இந்த போதனைக்கதையில்   விண்ணரசுக்கு உவமையாக ஈஸ்ட் கொண்டு புளிக்க செய்யப்பட்ட மாவு குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

பெண்ணொருத்தி மூன்று மரக்கால் மாவில் மிகச்சிறிய அளவு ஈஸ்ட் சேர்த்து பிசைந்து வைக்கையில் முழு மாவிலும் அது பரவி மாவைப் புளிக்க செய்கிறது அதுபோலவே கிறிஸ்தவம் சிறிய துவக்கத்திலிருந்து பெரிய  அளவிற்கு  பரவும் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி. 45க்கு பின்னும் கி.பி. 140க்கு முன்னும் எழுதப்பட்டு சிறுக சிறுக சில நூற்றாண்டுகளாக ஒன்று சேர்க்கப்பட்டு, கிறிஸ்தவ திருச்சபையால் அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டது இந்த புதிய ஏற்பாடு.  பழைய ஏற்பாட்டிலும் புளிக்காத மாவில் செய்யப்பட்ட ரொட்டி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஈஸ்டின் பழமையை அவை குறிப்பிடப்பட்டிருக்கும் விவிலியத்தின் காலங்களிலிருந்தும் அறிந்துகொள்ளலாம்

எப்போது, எங்கிருந்து ஈஸ்ட் மனிதனால் நொதித்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என்று துல்லியமாக சொல்ல முடியாவிட்டாலும் அகழ்வாய்வுகள் அவை  பண்டைய எகிப்திலிருந்தே பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என சொல்லுகின்றன. 8000 ஆண்டுகள் பழமையான வைனும் 7000 ஆண்டுகள் பழமையான பியரும் நமக்கு கிடைத்திருக்கிறது எனினும் 1680 வரை அவை ஈஸ்டினால் உருவானவை என்று உலகிற்கு தெரிந்திருக்கவில்லை. 

அறிவியல் வரலாறு

1680 -ல் டச்சுக்காரரான ஆண்டனி வான் லூவன் ஹாக் முதன்முறையாக ஈஸ்டுகளை நுண்ணோக்கியில் கண்டார். அவர் அவற்றை உருண்டையான அமைப்புகள் என்று மட்டுமே குறிப்பிட்டார். அவை உயிருள்ளவை என்று அவரால் கண்டுகொள்ள முடியவில்லை.1837- ல் தான் தியடோர் ஸ்வான் (Theodor Schwann) அவை பூஞ்சைகள் என்று முதன் முதலில் கண்டுபிடித்தார்.

1856-ல்  லூயி பாஸ்டரின் ஆய்வு மாணவர்களில் ஒருவரின் தந்தை   பீட்ரூட் மதுத் தொழிற்சாலை உரிமையாளர்.   அங்கு தயாராகிய பீட்ரூட் மது பிற பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகையில் அவை விரைவாக புளித்துக் கெட்டு போகும் சிக்கலுக்கு பாஸ்டரிடம் உதவி கேட்கப்பட்டது. 

பாஸ்டர் தனது ஆய்வில் அது அப்படி விரைவில் புளிக்கக் காரணம் மது உருவாகும் வடிசாலையின் சுகாதாரமற்ற சூழல் என்பதைக் கண்டறிந்து கட்டுப்படுத்தப்பட்ட  சூழலில் மதுவை நொதிக்கச் செய்யும்,முறைகளைக் கண்டறிந்தார்.அச்சமயத்தில் பாஸ்டர் தனது குறிப்பேட்டில் நொதித்தலுக்கு காரணமாகும் ஈஸ்ட் ஒரு உயிருள்ள நுண்ணுயிர் மது வகைகள் புளித்துப் போகக் காரணம் ஈஸ்டுடன் வேறு பல நுண்ணுயிரிகளும் இணைவதால் தான் என்று எழுதியிருக்கிறார்.

1857-ல் லூயி தானியக்கரைசலில் காற்றைச் செலுத்துவதன் மூலம் அதிலிருக்கும் பூஞ்சையின் ஒற்றைச் செல்கள் இரட்டிப்பாகும் வேகத்தை அதிகரிக்கலாம் என்பதையும், நொதித்தல் என்னும் வேதிவினை  அப்போது நிகழாமல் இருப்பதையும் நிரூபித்தார், இது பாஸ்டர் விளைவு என்று அழைக்கப்பட்டது

அப்போது அவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் திரவங்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெப்பமூட்டி அவற்றிலிருக்கும் நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்தும் pasteurization முறை .

1857-ல் லூயி பாஸ்டர் தனது,  “Mémoire sur la fermentation alcoolique”  என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையில் மதுவை நொதிக்கச் செய்வதில் சர்க்கரை பூஞ்சைகளின் இன்றியமையாத பங்கு குறித்து ஆதாரபூர்வமாக விளக்கி இருந்தார்.

அப்படியாக Saccharomyces cerevisiae தான்  நொதித்தலுக்கான பிரத்யேக ஈஸ்ட் வகை என  கண்டறியப்பட்டது. நொதித்தலின் பிற விதிகளும் லூயியால் உருவாக்கப்ட்டன. பிரான்ஸில் வணிக ரீதியாக ஈஸ்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாகின.

1870-ல் பிரான்ஸ்-ப்ருஸியா போரில்  பிரான்ஸ் தோற்றிருந்தது எனவே நொதித்தல் கலையின் தந்தை என அறியப்பட்ட லூயி பாஸ்டர் அவரது நாட்டுக்கென ஒரு நொதித்தல் முறையை ஜெர்மானியர்களுக்கு போட்டியாக வெற்றிகரமாக வடிவமைக்கஅ விரும்பினார். அதை வெற்றிகரமாக உருவாக்கினார். 

பிரான்ஸின் மது வகைகள் கெட்டுப் போகாமல் உலகின் பிற பாகங்களுக்கு    அனுப்பபட்டன. பிரென்ச் பியர் தொழில் சக்திவாய்ந்ததாகவும் வெற்றிகரமாகவும் மாறியது.பாஸ்டர் 1876- ல் வெளியிட்ட நொதித்தலின் மர்மங்கள்  “Etudes sur la bière”என்னும் ஆய்வுக்கட்டுரையும்  மிக பிரபலமானது. 

18-ம் நூற்றாண்டின் இறுதியில் மது நொதித்தலில் பயன்படும் Saccharomyces cerevisiae மற்றும்  S. carlsbergensis என்னும் இருவகையான ஈஸ்டுகள் அடையாளப் படுத்தப்பட்டிருந்தன. S.cerevisiae நொதித்தலில் மிதக்கும் வகை நுண்ணுயிர், S.carlsbergensis  தொட்டிகளின் அடியில் தங்கி செயல்புரியும் வகை.

1870- களிலிருந்து டச்சுக்காரர்களால் ஈஸ்டுகள் ரொட்டி தயாரிப்புக்காக விற்கப்பட்டன  1800களில் ஜெர்மனியர்கள்   S.cerevisiae வை ஒரு கிரீமை போல தயாரித்து சந்தைப்படுத்தினர்  

ஈஸ்ட் உருவாக்கம்

இன்றைய ஈஸ்ட் பல அறிவியல் சோதனைகளால் மேம்படுத்தப்பட்ட  ஒரு நுண்ணுயிர். வரலாற்றில் ஈஸ்ட் உருவாக்கம் குறித்து இன்றும் சர்ச்சைகள் நீடிக்கின்றன. ஒரு தரப்பு 1792 -ல் மேசன் என்னும் ஆங்கிலேயரால் முதன் முதலில் நன்கு செயல்புரியும், சோதனைச்சாலையில் கண்டறிந்த ஈஸ்ட் வகை வளர்ப்பு ஊடகங்களில் வளர்க்கப்பட்டு புழக்கத்தில் வந்தது என்கிறது. 

பிறிதொரு தரப்பு  1781- ல் ஹாலந்தில் ஈஸ்ட்டின் மேம்படுத்தப்பட்ட வகை கண்டறியப்பட்டது என்கிறது.ஆனால் 1868-ல் லூயி பாஸ்டரின் கண்டுபிடிப்புக்கு பின்னர்தான் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஈஸ்ட் விற்பனைக்கு வந்தது. 

லூயி பாஸ்டர் நுண்ணுயிரியியலில் உண்டான பல முன்னேற்றங்களைக் கொண்டு ஈஸ்ட் உருவாக்கத்திலும் பல முன்னெடுப்புக்கள் நிகழ்த்தினார். கலப்படமில்லாத தூய ஈஸ்டின் பல வகைகளை அவர் உருவாக்கினார். 1879-ல்  சக்காரோமைசீஸ் செரிவிசியேவை வளர்க்கவென்றே பிரத்யேகமான நொதித்தல் தொட்டிகள் உருவாகின.

அமெரிக்கா தொட்டிகளுக்குள் சுழல் காற்றடிகளை அமைத்து, வளரும் ஈஸ்டுகளை அடிப்பகுதியில் தேங்கச் செய்யும் முறையை கண்டறிந்தது. Slurry yeast  எனப்பட்ட இந்த ஈஸ்ட்  வண்டல்  அடுமனை தொழில் வல்லுநர்களால் மேம்படுத்தபட்டு க்ரீம் ஈஸ்ட் என்ற புது வடிவம் கொண்டது

அமெரிக்காவில் ஃப்ளைஷ்மன் (Fleischmann)  ஈஸ்ட் நிறுவனத்தை துவங்கியவரான ஃப்ளைஷ்மன் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்திற்கெனவே தனிப்பட்ட முறையில், உலரந்த  ஈஸ்ட் குருணைகளை உருவாகி அளித்தார். அக்குருணைகளை குளிர்பதனப்படுத்தத் தேவையின்றி சாதாரண அறையின் வெப்பநிலையில் சேமிக்கவும் உபயோகப்படுத்தவும் முடிந்தது   

ஈஸ்ட் குருணைகள் மாவை இரண்டு மடங்கு விரைவாகப் புளிக்கச் செய்து, மிக  கூடுதலாக மிருதுவாக்கி அடுப்பில் மாவு வேகும் கால அளவையும் கணிசமாகக் குறைத்தன.

1973- ல் உலகளவில் அடுமனைத் தொழிலில் புகழ்பெற்ற லுஸாஃபர் (Lesaffre) குழுமம் moment yeast என்னும் மற்றொரு  உலர் ஈஸ்ட் வகையை அறிமுகப்படுதியது. இவை இரண்டுமே உலகளாவிய பயன்பாடுகளை அன்றிலிருந்து இன்று வரையிலும் கொண்டிருக்கின்றன

ஈஸ்ட் இன்று வரையிலும் தொடர்ந்து மேம்பட்ட செயல்திறனுக்கான சோதனைகளிலும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு கொண்டேயிருக்கிறது. 

இருப்பிடம்

இந்த ஈஸ்டுகள் நம் கண்களுக்கு புலப்படாத நுண் அளவுகளில் நம்மைச் சுற்றி எங்கும் காற்றில்  நிறைந்திருப்பன. நம் உடலின் மீதும் புழுதியிலும் சில பூச்சிகளின் உடலிலும் மனிதர்களின் கால் நகங்களில், சருமத்தில், பாலூட்டிகளின் குடல் பகுதியிலும், மண்ணிலும் ஈஸ்ட் காணப்படும். கடல்நீரில் ஈஸ்டின் பல வகைகள் காணப்படுகின்றன.  சாக்கடை நீரில், கறையான் புற்றுகளில் மரப்பட்டைகளில், குதிரைச்சாணம், பழ ஈ, மனித ரத்தம்,அழுகிய வாழைப்பழம் இவற்றிலும் ஈஸ்ட் உள்ளது. 

இயற்கை ஈஸ்ட்

பெல்ஜியத்தின் lambic வடிசாலைகளைப் போல ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்பட்ட ஈஸ்டுகளைத் தவிர்த்து காற்றில் இயற்கையாக இருக்கும் ஈஸ்டின் காட்டு மூதாதைகளைக் கொண்டும்  மது தயாரிக்கப்படுகிறது. Lambic  வடிசாலையில் தானியங்களை உடைத்து நீரில் கொதிக்க வைத்த   திரவத்தை அப்படியே திறந்து காற்றுப்படும்படி சில நாட்கள் வைத்திருக்கிறார்கள். காற்றில் இயற்கையாக கலந்திருக்கும் நொதித்தலுக்கான ஈஸ்டுகள் அத்திரவத்தை  நொதிக்கச்செய்து மதுவாக  மாற்றுகின்றன. 

இயற்கையான ஈஸ்டுகள்  திராட்சை ஆப்பிள் போன்ற உள்ளிட்ட பல வகைப்பட்ட பழங்களின் தோலில்,பழைய மது பீப்பாய்களில்  கள்ளிச்செடிகளின் கசிவுகளில், செர்ரி மலரிதழ்களிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. நல்ல தரமான ஈஸ்டுகளை ஈஸ்ட் வங்கிகளிலிருந்தும் பெறலாம்.

 Saccharomyces exiguous எனப்படும் இயறகையாகப் பழங்களிலும் தாவரங்களிலும் காணப்படும்  ஈஸ்டும் சில சமயங்களில் நொதித்தலுக்கு பயன்படுகிறது. 

பெயர்கள்

ஈஸ்ட் என்னும் சொல் 1859 வரை மது நொதித்தலில் நேரடியாக தொடர்புபடுத்தப் படவில்லை, 1859- ல் வேன் டென் ப்ரூக்  (J. H. van den Broek) என்னும் ஆய்வாளர் ஈஸ்டின் ஒற்றைச் செல்களை அடையாளம் கண்டு அவை அரும்பு விட்டு பெருகி நொதித்தல் நடத்துவதை கண்டறிந்து அவற்றை வேடிக்கையாக ஈஸ்ட் என அழைத்தார்.  இந்திய ஐரோப்பிய வேர்களை கொண்ட பழைய ஆங்கிலத்தின்   gest,  என்னும் நுரைத்தல் குமிழி இடுதல் மற்றும் கொதித்தலைக் குறிக்கும் சொல்லில் இருந்து ஈஸ்ட் என்னும் பெயர் உருவாகியது.

1837- ல்  ஆய்வுகளின் வழி ஈஸ்டுகள் உயிருடன் இருப்பதை நிரூபித்த ஜெர்மானியரான , Theodore Schwann,   அவை பூஞ்சைகள் என்பதையும் கண்டறிந்தார். ஜெர்மானிய மொழியில் அவர் ஈஸ்டை  சர்க்கரைப்பூஞ்சை என்னும் பொருளில்  Zuckerpilz என்று பெயரிட்டார்.

இந்த பெயரைத்தான்  1838 ல் மற்றொரு ஜெர்மானியரான ஜூலியஸ் (Julius Meen) லத்தீன் மொழியாக்கம் செய்து ஈஸ்டின் அறிவியல் பெயரான, சர்க்கரைப் பூஞ்சை என்னும் பொருள் கொண்ட Saccharomyces என்பதை உருவாக்கினார். எனினும் பல வேதியியலாளர்கள் இந்த புதிய கண்டுபிடிப்பை அடியோடு மறுத்து அவை உயிருள்ளவைகள் அல்ல, வெறும் சர்க்கரை கசடுகள் என்றே வாதிட்டனர். பாஸ்டர் வந்து தியடோருக்குக் கைகொடுத்த பிறகே அவ்விவாதங்கள்  முடிவுக்கு வந்தன.  

1903-ல் டென்மார்க்கின்  Carlsberg  ஆய்வகத்தில் பணியாற்றிய, Niels Hjelte Claussen, மிக பழமையான பியர் பீப்பாயிலிருந்து எடுக்கப்பட்ட முற்றிலும் வேறு விதமான ஈஸ்ட் ஒன்றிற்கு பிரிட்டிஷ் பூஞ்சை என்னும் பொருள் படும்படி,  Brettanomyces என லத்தீன் பெயரிட்டார்.

அந்த பிரிட்டிஷ் பூஞ்சை சர்க்கரை பூஞ்சை செல்ல முடியாத ஆழங்களுக்கு சென்று, சக்காரோமைசீஸ்னால்  கைவிடப்பட்ட கரைசல்களையும் நொதிக்கச்செய்து மதுவாக்கியது. அம்மதுவின் பிரத்யேக நெடியும் மதுப்பிரியர்களால் கொண்டாடப்பட்டது

ஈஸ்டின் பரவல்

வரலாற்றாய்வாளர்கள் தானியங்கள் மற்றும் ரொட்டி நொதித்தலின் அகழாய்வு சான்றுகளைக்கொண்டு  ஈஸ்ட் பயன்பாடு பண்டைய எகிப்திலிருந்து பாபிலோனுக்கும் அங்கிருந்து கிரேக்கத்துக்கும் பின்னர் பண்டைய யூத நாகரீகங்களுக்கும் அறிமுகமாயிருக்கும் என கருதுகின்றனர்

கிரேக்கத்திலிருந்து ரோமுக்கு அறிமுகமானது ஈஸ்ட் என்பதை பிளைனி 168 BCE க்கு முன்பு வரை தொழில்ரீதியான ரொட்டி தயாரிப்பு ரோமில் இல்லை என்று குறிப்பிட்டதில் இருந்து அறிய முடியும்.

ரொட்டி ஈஸ்ட் என அழைக்கப்படும், S. cerevisiae, சீனாவில் இருந்து பட்டுப்பாதை வழியே உலகின் பிற பகுதிகளில் பரவியது. 

இனப்பெருக்கம்

 ஒற்றை செல் உடலியான ஈஸ்டுகள் பாலினப்பெருக்கம் செய்தாலும் மொட்டு/அரும்பு விடுதல் எனப்படும் பாலிலா இனப்பெருக்கமே அதிக அளவில் செய்கின்றன. இம்முறையில் ஒரு முதிர்ந்த ஈஸ்ட்டின் ஒற்றைச்செல் பலூனைப்போல பருத்து வீங்கி அதிலிருந்து பல புதிய அரும்புகள் தோன்றி ஒவ்வொன்றும் தாய் ஈஸ்டிலிருந்து பிரிந்து உதிர்ந்து தனியே வளரும். 

வகைகள்

சாக்கரோமைசிஸ் செரிவிசியே என்னும் இந்த ஈஸ்ட் நொதித்தலின் போது திரவத்தின் மேற்பரப்பில் நுரையெனப் பொங்கி நின்றது. அதற்கு ஏல் ஈஸ்ட்-Ale yeast  அல்லது டாப் ஈஸ்ட் என பெயர் வந்தது

அதேசமயத்தில் ஜெர்மனியின் முனிச் பகுதி வடிசாலை உரிமையாளரான Gabriel Sedlmayr அவரது வடிசாலைகளில் நல்ல குளிரான சூழலிலும் நொதித்தலை நடத்தி, நொதித்தல் தொட்டிகளின் அடியில் கசடென தங்கும் ஈஸ்டுகளை கவனித்தார் அவற்றை பலநாட்களுக்கு  சேமிக்கவும் முடிந்தது. “story beer”, “lager beer” என்பதை உருவாக்கிய கீழ்நிலை ஈஸ்ட்   இவ்வாறு கண்டறியப்பட்டது

அதன்பிறகு 1908-ல்  Hansen  தனியே பிரித்து வளர்த்திய ஈஸ்ட் வகையொன்றிற்கு தனது எஜமானரின் பெயரை வைத்து Saccharomyces carlsbergiensis என்று சந்தைப்படுத்தினார்.

அந்த  S.carlsbergiensis ஈஸ்ட்  திராட்சைக் கனிகளின் தோலில் இருக்கும் ஈஸ்ட்டான S bayanus க்கும் பியர் மற்றும் ரொட்டி ஈஸ்டான Saccharomyces cerevisiae க்குமான கலப்புயிரிதான் என்பது பின்னர் மரபியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டது  

பின்னர் பல ஈஸ்டுகள் கலந்தும் நொதித்தலில் ஈடுபடுத்தப்பட்டன, பிரிட்டனில் S.carlsbergensis ன் மரபு கட்டமைப்பு சற்று மாற்றியமைக்கப்பட்டு Saccharomyces pastorius உருவாக்கப்ட்டது. 

ஈஸ்டுகள் சூழலுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக்கொள்ளும் அபாரமான திறன் கொண்டிருப்பவை.எனவே இயற்கையாகவே நொதித்தல் நடைபெறுகையில் பல புதிய கலப்பினங்கள் உருவாகின்றன. சில ஈஸ்டுகள் நொதித்தலுக்கு உபயோகிக்கப்படும் தானியங்களுக்கு தகுந்த படியும் தங்களை  மாற்றி அமைத்து கொள்கின்றன

வணிகம்

1860-ல் லூயி பாஸ்டர் ஈஸ்டுகளை கண்டறிந்த பின்னரே ஒரு நுண்ணுயிர், மது நொதித்தலில், ரொட்டி உருவாக்குவதிலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது உலகிற்கு தெரிய வந்தது/ அதன் பின்னர் குறுகிய காலத்திலேயே ஈஸ்டுகள் தனியே பிரித்தெடுத்து வளர்க்கப்பட்டு சந்தைப்படுத்தல் ஆரம்பமாகியது.

வணிக நோக்கதிற்கான ஈஸ்ட் விற்பனை 1700-களில் உலகளாவிய அளவில் தொடங்கியது. அதற்கு முன்பு வரை பியர் தயாரிக்கையில் கிடைக்கும் பொங்கு நுரைகளில் அடர்த்தியான ஈஸ்ட் தொகை இருக்குமென்பதால் அந்த நுரை சேகரிக்கப்பட்டு வடிசாலைகளுக்கு விற்கப்பட்டது.

1780 மற்றும் 1890 -களில் தான் கட்டியாகப் பட்ட ஈஸ்டுகள்   விற்பனைக்கு வந்தன. அவை உலர்ந்த ஈஸ்ட் முளைவிட்ட தானியப்பொடிகள் ஆகியவற்றை கொண்டிருந்தன. இவை இங்கிலாந்து ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் அதிகம்  விற்பனையாகின

1771-ல்  மரச்சாம்பலுடன் கலக்கப்பட்டு வெயிலில் உலரவைக்கப்பட்ட ஈஸ்டுகளும் பின்னர் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டன.

1822- க்கு பிறகு வியன்னாவில் ஈஸ்டுகள் பாட்டிலில் அடைக்கப்பட்டும் எண்ணையுடன் கலந்து பிசையப்பட்டும் விற்பனையாகின. வியன்னாவில்தான் மண்ணுக்கடியில் பல அடி ஆழத்தில் ஈஸ்டுகளை குளிரவைத்து சேமிக்கும் முறையும் கண்டறியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது 

1872 -ல் வியென்னாவிலிருந்து கற்றுக் கொண்டு வந்த  press yeast பயன்படுத்தும் யுத்தியை கொண்டு பேரொன் (Baron Max de Springer)  என்பவர் நொதிக்கும் தானியங்களிலிருந்து ஈஸ்ட்டை பிரித்தெடுத்து அடுமனையாளர்களுக்கு விற்பனை செய்ய துவங்கினர், அவரால் பிரான்ஸில்  தொடங்கப்பட்டதுதான்  உலகின் முதல்   ஈஸ்ட் தொழிற்சாலையான , Bio Springer.

20 நூற்றாண்டின் துவக்கத்தில் அடுமனையாளர்களும் மது உற்பத்தியாளர்களும் தங்களின் தயாரிப்புக்களுக்கேற்ற பிரத்யேகமான ஈஸ்டுகளை வளர்த்து சந்தைப்படுத்தவும் பயன்படுத்தவும் ஆரம்பித்தார்கள் 

காப்புரிமை

1800-களில் அடுமனை தொழிற்சாலைகளில் தூய ஈஸ்டுகளின் தேவை அதிகரித்தது. ஏராளமான முறைகளில் ஈஸ்ட் தயாரிக்கப்பட்டது ஈஸ்டுகளுக்கான காப்புரிமங்கள் 1891-ல் இருந்து பெறப்பட்டன.

முதல் ஈஸ்ட் காப்புரிமை 1891-ல் ஸ்வீடனை சேர்ந்த   வடிசாலைகளின் உரிமையாளர்களும் சொந்தமாக ஈஸ்ட்ஆய்வகங்களை வைத்திருந்தவர்களுமாகிய  Alfred Jörgensen மற்றும்   Axel Berg ஆகியோரால் பெறபட்டது.   

ஜான் (John C. Pennington) ஒரு நுண்ணோக்கியில் ஈஸ்டின் ஒற்றசெல்லை கவனித்து, அதை மட்டும் கவனமாக பிரித்தெடுத்து வளர்த்தார்

ஆக்ஸிஜன் இல்லாதபோது கரியமில வாயுவாகவும் ஆல்கஹாலாகவும் சர்க்கரையை ஈஸ்டுகள் மாற்றும் வேதிவினையின் பெயர்தான் நொதித்தல்.

வடிசாலைகளின் அடிப்படை விதி அங்கு பயன்படுத்தப்படும் ஈஸ்டுகள் மகிழ்ச்சியானவைகளாவும் ஆரோக்கியமானவைகளாகவும் இருக்க வேண்டும் என்பதே. அவை அப்படி  இருந்தால் மட்டுமே உருவாக்கப்படும் மது ருசித்து அருந்தப்படும் விதத்தில் இருக்கும். சில ஈஸ்டுகள் குறிப்பிட்ட மணத்தையும் நொதித்தலில் கிடைக்கும் பொருளில் உருவாக்கும்.

வடிசாலையாளரின் கதை ’என்னும் நூலில் வில்லியம்(William Bostwick)’’மது வகைகள் எதுவும் மனிதர்களால்  உருவாக்கப்படுவதில்லை ஈஸ்டுகளே உணமையில் அவற்றை உண்டாக்குகின்றன’’ என்கிறார்

வெப்பம், கால அளவு மற்றும் ஆக்ஸிஜன் அளவுகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஈஸ்டுகளை நாம் விரும்பிய வகையில் வளர்க்க முடியும்.கண்ணுக்கு தெரியாத இந்த நுண்ணுயிர்களின் விளைவால் நாம் எண்ணற்ற உணவு பொருட்களை சுவைத்து கொண்டிருக்கிறோம்

மது வடிசாலைகளிலும், தரக்கட்டுபாட்டு ஆய்வகங்களிலும் ஈஸ்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டு சரியான நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு துல்லியமான அளவில் நொதிகலங்களில் சேர்க்கப்படுகின்றன.  மிக குறைந்த அளவில் சர்க்கரையை பயன்படுத்தும் Saccharomyces cerevisiae var. chevalieri, போன்ற ஈஸ்டுகளை கொண்டு ஆல்கஹால் இல்லாத மது வகைகள் உருவாக்கலாம்

பயன்பாடுகள்

ஈஸ்ட்  உலகளாவிய  பிரபல உணவுப் பொருட்களின் நொதித்தலில் பயன்படுகிறது. சாக்லேட், கோகோ, காபி மற்றும் கேஃபிர், சோடாக்கள், எலுமிச்சை பானங்கள் மற்றும் வினிகர் போன்ற குறைந்த ஆல்கஹால் கொண்ட அல்லது ஆல்கஹால் அறவே அல்லாத பொருட்களின் உற்பத்தியில் இவை மிக முக்கிய பங்கேற்கின்றன.

ஈஸ்டுகளிலிருந்து  உயிரி எரிபொருள் மற்றும் பிற இரசாயனங்களும் தயாரிக்கபப்டுகின்றன. பாலாடைக்கட்டி உள்ளிட்ட் அபல பால்பொருட்களின் உற்பத்திக்கும் ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது .  பல லட்சம் மக்களின் ப்ரியதுக்குகந்த சோயா சாஸ் தயாரிப்பிலும்  ஈஸ்ட்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

சர்க்கரை பூஞ்சை ஈஸ்டுகள் ஒற்றை செல்களால் ஆன உடலம் கொண்டவை எனவே அறிவியல் சோதனைகளுக்கு சிறிய அளவு கொண்ட உயிரிகளான இவை அதிகம் பயன்படுகின்றன. இவற்றைக்கொண்டு உயிர்வேதியியல் மரபியல், பரிணாம வளர்ச்சி மற்றும் மனித நோய்கள் குறித்த ஆய்வுகள் செய்யப்படுகின்றன

 ஈஸ்டுகளும் மனிதர்களும் பொதுவான ஒரு காட்டு மூதாதையிடமிருந்து தோன்றியவர்கள், எனவே மனிதர்களுக்கும் ஈஸ்டுகளுக்கும் பல ஜீன்கள் பொதுவாக இருப்பது இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு பேருதவியாக இருக்கிறது. 

ஈஸ்ட் ஜீன்களை எப்படி வேண்டுமானாலும் திருத்தலாம், மாற்றி அமைக்கலாம், நீக்கலாம் என்பதால்  மனிதர்கள் தொடர்பான மரபியல் ஆய்வுகளுக்கு ஈஸ்டுகள் மிக இன்றியமையாததாக இருக்கிறது

ஈஸ்டிலிருந்து பல உணவு சேர்மானங்களும் தயாரிக்கப்படுகின்றன ஈஸ்டுகள் monosodium glutamate (MSG) போலவே பிரத்யேக சுவைக்காக பல உணவுகளில் சேர்க்கப்படுகின்றன 

சத்து மாத்திரைகளை போல ஈஸ்ட் சாறு மற்றும் சத்தான ஈஸ்ட் குருணைகளும் சந்தையில் கிடைக்கின்றன. உலர்ந்த ஈஸ்ட் பல சத்துக்கள் கொண்டதென்பதால் சோளப்பொறியில் தூவப்பட்டும் கேப்ஸ்யூல்களாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.ஈஸ்ட் திவலைகளும் இப்போது கிடைக்கின்றன ஈஸ்டின் ஒரு வகையான S. boulardii குடற்பகுதியின் நன்மை பயக்கும் நுண்னுயிரிகளின் குழுமத்தை தக்கவைக்கவும், குடல்நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும்  நல நுண்ணுயிரியாக (Probiotic) பயனாகிறது. 

உயிரிதொழில்நுட்பம் 

மரபணு மாற்றப்பட்ட ஈஸ்டுகளிலிருந்து தயாராகும் இன்சுலின் லட்சக்கணக்கான ரத்தசர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது. மேலும்   human papilloma virus தடுப்பு மருந்தைப்போல பல உயிர்காக்கும் மருந்துகளும்  ஈஸ்டினால் உருவாக்கப்படுகின்றன  

ஆதிகாலத்திலிருந்தே ஈஸ்டுகள் மனிதர்கள் வாழ்வில் இன்றியமையாத இடம் கொண்டிருக்கிறது.இனி வரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஈஸ்டுகளுடனான நமது உறவு மென்மேலும் அதிகரிக்கும் சாத்தியங்களே உள்ளது

அமெரிக்க பொருளாதாரத்தில் 900 million டாலர்கள் மதிப்பிலான பொருளாதாரம் ஈஸ்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது .2022ல்  உலகளாவிய ஈஸ்ட் வணிகம்  5.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, 2030க்குள் இது 11.6 பில்லியனாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மிகநுண்ணிய ஒற்றை செல் உடலம் கொண்ட, கண்ணுக்கு தெரியாத இந்த ஈஸ்டுகள் மது, உணவு, அறிவியல் ஆய்வுகள். உயிர்ரிபொருள் மருந்து தயாரிப்பு என  உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது பெரும் வினோதம்தான்.

தென்னிந்தியாவில் இட்லி, தோசை, வட இந்தியாவின் ரொட்டியும் சப்பாத்தியும், உலகநாடுகளின் பர்கர் பீட்சா ஹாட்டாக்குகள் , நெடுஞ்சாலைகளில் 1 கிமீக்கு 2 என்னும் விகிதத்தில் முளைத்து வெற்றிகரமாக இயங்கும் பேக்கரிகளில் என்று கோடிக்கணக்கில் ஈஸ்டுகள் புழங்குகின்றன.  ஈஸ்டின்றி இயங்காது உலகென்று புது மொழியை உருவாக்கிவிடலாம் என்னும் அளவுக்கு அவை நம் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

வைன், பியர், ரொட்டி, இட்லி என இனி  நாம் சுவைப்பது எதுவானாலும்  அதில் கலந்திருக்கும்  பல்லாயிரக்கணக்கான ஆண்டுக்கு முன்பான உணவு வரலாற்றின் சுவையையும் ருசிக்கலாம்.

மேலதிக தகவல்களுக்கு:

  1. https://www.forbes.com/sites/linhanhcat/2019/09/15/tasting-history-ancient-yeast/?sh=65816eae6b26
  2. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7686800/
  3. https://elifesciences.org/articles/05835

பெல்லடோனா!

புடவி நெசவில் மானுடர் ஒவ்வொருவருக்கான இழையையும் நெய்பவள் க்ளோத்தோ, இழையின் நீளத்தை கணக்கிட்டு அளந்து வைப்பவள் லேச்செஸிஸ்,  வாழ்நாளில் மானுடர் சந்திக்க வேண்டிய இன்னல்களை மொத்தமாகக் கணக்கிட்டு இழைகளில் அமைப்பவளும் இவளே, இவர்கள் இருவரையும் விடச் சிறிய உருவம் கொண்டவளும், மூத்தவளுமான அட்ரோபோஸ், அளந்து இணைக்கப்பட்டிருக்கும்  பிறவிச்சரடை அறுத்து மரணத்தை அளிப்பவள்.  

மரணத்தின் தேவதையான அட்ரோபோஸ் இரக்கமற்றவளாகவும் பிடிவாதக்காரியாகவும் அறியப்படுகிறாள். 

க்ளோத்தோ, லேச்செஸிஸ் மற்றும் அட்ரோபோஸ்   (Clotho, Lachesis & Atropos) ஆகிய மூன்று சகோதரிகளும் கிரேக்கத் தொன்மங்களில்  ஊழின் தேவதைகளாகக் கருதப்படுகிறார்கள்.  இவர்கள்  மூவரும் இருளின் தெய்வமாகிய எர்பஸுக்கும் (Erebus) இரவின் தேவதையான நைக்ஸுக்கும் (Nyx) பிறந்தவர்கள். 

மரணத்தையளிக்கும் மூத்த சகோதரி அட்ரோபோஸின் பெயரில் பல அறிவியல் பெயர்கள் உள்ளன. திரும்பிச் செல்ல முடியாத, மாற்றமுடியாத  என்று பொருள் கொண்ட Atropos என்னும் சொல்லைக்கொண்டு  தென்னாப்பிரிக்காவின் மலைப்பகுதியில் வாழும் விஷமுள்ள விரியன் வகைப் பாம்பொன்றிற்கு Bitis atropos என்றும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும்  தலைப்பகுதியில் மனித மண்டையோட்டின் வடிவத்தைக் கொண்டிருப்பதால் Death’s-head hawk moth என்றழைக்கப்படும் அந்துப்பூச்சிக்கு Acherontia atropos என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியின் குடும்பமான சொலனேசியைச் சேர்ந்த,  இலைகளிலும் கனிகளிலும் உயிரைப் போக்கும் கடும் நஞ்சு கொண்டிருக்கும்  ஒரு தாவரம், இதே அட்ரோபோஸ் என்னும் பெயரைக்கொண்டு தாவர வகைப்பாட்டியலின்  தந்தையான லின்னேயஸினால்  Atropa bella donna என்று 1753-ல் பெயரிடப்பட்டது. bella donna  என்று இரு சொற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது தவறு என்று பலர் கண்டனம் தெரிவித்ததால் பிற்பாடு இரு சொற்களுக்கிடையில்  ஒரு  சிறு கோடு இணைக்கப்பட்டு இதன் அறிவியல் பெயர் bella-donna  என்றாகியது. 

பெல்லடோனாவின் பிற வழங்கு பெயர்களாக  deadly nightshade, devil’s cherries, devil’s herb, divale, dwale, dwayberry, naughty man’s cherries, gray morel,  poison black cherry,  Dilber grass, bear flower, மற்றும் wolfberry ஆகியவை இருக்கின்றன. 

பெல்லடோனா மேற்கு ஆப்பிரிக்காவையும் ஐரோப்பாவையும் பூர்வீகமாகக் கொண்டது. கனடா, அமெரிக்கா மற்றும் வடஆப்பிரிக்காவின் இயற்கையான வாழிடங்களிலும் பெல்லடோனா  அறிமுகப் படுத்தப் பட்டு  வளர்கிறது. இது சுண்ணாம்புச் சத்து மிகுந்த நிழலான  நிலத்தில் நன்கு செழித்து வளரும்.  

வரலாற்றில் அட்ரோபா பெல்லடோனா

அட்ரோபா பெல்லடோனா மருந்தாக, நஞ்சாக, அழகு சாதனப் பொருளாக நீண்ட வரலாறு கொண்டிருக்கிறது. 

முதல் நூற்றாண்டைச் சேர்ந்த மருந்தியலின் தந்தையான டயாஸ்கொரிடஸ் அட்ரோபின் கொண்டிருந்த மாண்ட்ரேக்கின் சாற்றை அறுவை சிகிச்சைகளின்போது வலி நிவாரணியாகவும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கவும் பரிந்துரைத்திருந்தார். அட்ரோபா பெல்லடோனாவும் அட்ரோபினைக் கொண்டிருப்பதால் மாண்ட்ரேக்கைப் போலவே இதுவும் பயன்படுத்தப்பட்டது.

பண்டைய ரோமானியர்கள் நஞ்சு கொண்டிருந்த பெல்லடோனாவை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள். எதிரிகளின் உணவில் பெல்லடோனாவை கலந்து அவர்களைக் கொல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தில்  எதிரிகளின் மதுவில் பெல்லடோனா சாற்றைக் கலந்து ஸ்காட்லாந்த்துப் படையினர் அவர்களைக் கொன்றது சொல்லப்பட்டிருக்கும். 

4-ம் நூற்றண்டைச் சேர்ந்த தியோஃப்ராஸ்டஸ்  அட்ரோபின் கொண்டிருந்த மாண்ட்ரேக் சாற்றை பாலுணர்வைத் தூண்டும் காதல் பானமாகவும், காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பரிந்துரைத்தார். அட்ரோபின் நிறைந்திருந்த எகிப்திய ஹென்பேன் தாவரத்தின் சாற்றைப் பேரழகி கிளியோபாட்ரா கண்மணியை விரிவாக்க பயன்படுத்தினாள்.

பண்டைய ரோமானிய மற்றும் உக்ரைன் பகுதிகளில் இளம் பெண்கள் மிக அழகிய தோற்றம் கொண்டிருக்கச் செய்யும் சடங்குகள் இருந்தன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இச்சடங்குகளில். ரொட்டியும் உப்பும் பிராந்தியும்  கொண்டுவரும் இளம்பெண் தன் தாயுடன் காட்டுக்குள் சென்று, கொண்டு வந்ததை அட்ரோபா பெல்லடோனா செடிக்கடியில் புதைத்துவைப்பாள்.  

பின்னர் தோண்டி எடுத்த அட்ரோபா பெல்லடோனாவின்  வேரை தலையில் வைத்துக் கொண்டு வீடு திரும்புவாள் வழியில் எதிர்ப்படும் யாரிடமும் எதுவும் பேசாமல் இருக்கவேண்டும் என்பதும் கட்டாயம். பேசினால் சடங்கின் பலன் கிடைக்காமல் போகும் என்று நம்பிக்கை நிலவியது

கிரேக்க மருத்துவரும், மருந்தியலின் தந்தையுமான  பெடானியஸ் டயாஸ்கொரிடஸ், அப்போது பெல்லடோனா என்று அறிவியல் பெயரிடப்பட்டிருக்காத இந்தத்தாவரத்தைக் குறித்து:

//மனிதர்களைப் பைத்தியமாக்குகிற இதன், வேர்ச்சாற்றை வைனுடன் கலந்து அருந்தினால் மனம்மயக்கி, மகிழ்ச்சியளித்து கூடவே விசித்திரமான உருவங்களைக் கண்ணில் தெரியச்செய்கிறது. வேர்ச்சாற்றின் அளவை இருமடங்காக்கினால் அருந்தியவர் இந்த உலகைவிட்டே 3  நாட்களுக்கு வெளியே சென்ற அனுபவத்தை அடைவார், நான்கு மடங்காக்கினால் உயிரிழப்பு ஏற்படும். இதைத்தான் சூனியக்காரிகள்  தங்கள் சருமத்தில் பூசிக்கொள்கிறார்கள்// என்று  அவரது மெட்டீரியா மெடிக்கா என்னும் நூலில்  குறிப்பிட்டிருந்தார்.

பெல்லடோனா மற்றும் அதைப்போலவே நஞ்சு கொண்டிருக்கும்   மாண்ட்ரேக் மற்றும் ஹென்பேன் ஆகிய மூன்று தாவரங்களுமே முன்காலத்தில் மந்திர தந்திரம் மற்றும் சூனியச்செயல்களுக்குப்  பயன்படுத்தப்பட்டன. சூனியக்காரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் பழங்காலத்திலிருந்தே பெல்லடொனாவின் விழுதைப் பூசிக்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர். 

வரலாற்றில் பல போர்களில் எதிரிப்படைகளை அழிக்கவும், பலர் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டதிலும் அட்ரோபாவின் பெரும்பங்கு இருந்திருக்கிறது.

இதன்சாற்றை அம்பு நுனிகளில் தடவி வேட்டையாடுவதில் தொடங்கிய இதன் பயன்பாடு மெல்ல விரிவடைந்து பண்டைய ரோமானியப் பேரரசர்கள் மனைவிகளால் கொல்லப்படுவதற்கும் அட்ரோபா பெல்லடோனா காரணமாயிருந்தது.

பெல்லடோனா சாற்றின் உயிரைக்கொல்லும் அளவென்பது வெறும் 600 மி கி தான். ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் மற்றும் கிளாடியஸ் ஆகியோர் இருவரும அவரவர் மனைவிகளால் பெல்லடோனா நஞ்சளித்துக் கொல்லப்பட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது.

கொலைசெய்யப்படும் அபாயம் இருந்ததால் பேரரசர் அகஸ்டஸ் அன்றாடம் அவர் கண்முன்பாகப் பறிக்கப்படும் அத்திப்பழங்களைத்தான் உண்பார். அவரது மனைவி அத்திப்பழங்களின் மீது அவை பறிக்கப்படுவதற்கு முந்தைய நாளே பெல்லடோனா சாற்றைத் தடவியதாக நம்பப்படுகிறது.

1659-களில் ரோமானியப் பேரரசில் கொடுமைக்காரக் கணவர்களைக் கொல்லவிரும்பிய பெண்களுக்கென ஒரு ரகசிய அமைப்பு செயல்பட்டது. அதில் உறுப்பினராக இருந்த குல்லியா டொஃபானா (Giulia Tofana) என்னும் பெண் தனது கணக்கற்ற கணவர்கள். இரண்டு போப்கள்  உள்ளிட்ட சுமார் 600 நபர்களை  ஆர்சனிக்கும் பெல்லடோனாச்சாறும் கலந்த திரவத்தை “Aqua Toffana,” என்று பெயரிட்டு, ஆண் பெண் இருபாலருக்கான ஒப்பனை பொருட்கள் அடங்கியது என்று    பாட்டில்களில் அளித்துக் கொலைசெய்தாள். 

“Aqua Toffana,” வின் ஓரிரு சொட்டுக்களே தடயமே இல்லாத  மரணத்தை அளித்தது.  பெல்லடோனா நஞ்சூட்டி பலரைக் கொலைசெய்த குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தன் தாயிடமிருந்து நஞ்சூட்டுதலை கற்றுக்கொண்ட குல்லியா  தொழில்முறை நஞ்சூட்டுபவளாகவே வரலாற்றில் அறியப்படுகிறாள். 

கிமு 4-ம் நூற்றாண்டிலிருந்தே பெல்லடோனாவின் சாறு அழகுக்காகப்  பயன்பாட்டில் இருந்திருக்கிறது

இத்தாலியில் பெல்லடோனா இலைச்சாறு அழகுசாதனப்பொருளாக  பலகாலம் முன்பிருந்தே புழக்கத்தில் இருந்தது. இத்தாலியப் பெண்கள் பெல்லடொனாவின் இலைச்சாற்றை ஒரு துளி கண்களில் விட்டுக்கொள்கையில் கண்மணி பெரிதாகி  வசீகரமாகியது கன்னமேடுகளை வண்ணமாக்க கனிச்சாற்றையும் அப்போது பெண்கள் பூசிக்கொண்டனர்.  எனவே இது  பெண்களுக்கான அழகுப்பொருளாகப் பெருமளவில் உபயோகப்பட்டது. 

இதனால்தான் இந்தத்தாவரத்தின் சிற்றினப்பெயர் இத்தாலிய மொழியில் அழகிய பெண் என்று பொருள் படும் பெல்ல-டோனா என்று வைக்கப்பட்டது. இன்றும் அட்ரோபைன் ஆல்கலாய்டு கொண்டிருக்கும் பெல்லடோனாச்சாறு கண்மணியைப் பெரிதாக்க கண் அறுவைசிகிச்சைகளில் பயன்படுகிறது.

130,000  பங்கு நீருக்கு 1 என்னும் அளவில் இருக்கும் பெல்லடோனாச் சாற்றின் அளவே கண்மணியை விரிவாக்கப் போதுமானது. பெல்லடோனாவின் குடும்பமான சொலனேசியைச் சேர்ந்த மாண்ட்ரேக் மற்றும் ஹென்பேன் தாவரங்களிலுமே அவற்றிலுமிருந்த அட்ரோபினுக்காகப் பன்னெடுங்காலமாகவே அழகுச்சாதனப் பொருளாக  உபயோகத்தில் இருந்தன.

கண்மணியைப் பெரிதாக்க இது நஞ்சு என தெரிந்தும்   14, 16-ம் நூற்றாண்டுகளில் இத்தாலிய பெண்கள் மிக அதிகமாக இதை  உபயோகப் படுத்தினார்கள்.  தொடர்ந்த உபயோகத்தால் பார்வையிழப்பு,  நரம்புச்சிக்கல்கள் போன்ற அபாயங்கள் ஏற்பட்டும் இந்தப் பயன்பாடு  பல்லாண்டு காலம் புழக்கத்தில் இருந்தது

காபியிலிருக்கும் காஃபின் ஆல்கலாய்டை கண்டறிந்தவரான ஜெர்மானியத் தாவரவியலாளர் ஃப்ரெட்லிப் (Friedlieb Ferdinand Runge) தான் பெல்லடோனாவின் கண்மணியை விரிவாக்கும் இயல்பையும அறிவியல் பூர்வமாக நிருபித்தவர்.

பெல்லடோனா என்னும் பெயர் வெகுவாகப் புழக்கத்தில் இருந்ததால் 1597-ல் மூலிகை மருத்துவரான ஜான் (John Gerard)  தனது ’தாவர வரலாறு’ என்னும் நூலில் இதன் பெயரைப் பெல்லடோனா முதன் முதலாகக் குறிப்பிட்டிருந்தார்.  

16-ம் நூற்றாண்டில் தான் பெல்லடோனா தாவரவியல் ரீதியாக விவரிக்கப்பட்டு அதன் சித்திரங்கள் வெளியாகின.

இதன் முதல்  பெயரான Solarium horrense nigrum என்பது 1532-ல் Traps J என்பவரால் பாரிஸில் பிரசுரமான் ஒரு நூலில் குறிப்பிடப்பட்டது . பின்னர் 1542- ல்  Fuchso என்பவரால்  Solanum somniferum,  என்று பெயரிடப்பட்டு விவரிக்கப்பட்டது

1753-ல் தான் லின்னேயஸ் அட்ரோபா பெல்லடோனா என்று இதன் பேரின மற்றும் சிற்றினப்பெயர்களை அதிகாரபூர்வமாகப் பிரசுரித்தார்.

லண்டன் பார்மகோபியாவில் அட்ரோபா பெல்லடோனாவின் இலைளின் மருத்துவ இயல்புகள் 1809-ல் வெளியாகின. 1860-ல் இதன் வேர்களின் மருத்துவப் பண்புகள்    விவரிக்கப்பட்டு பிரிட்டிஷ் மருந்துத்துறையில் இணைக்கப்பட்டது.

1831- ல் ஜெர்மானிய மருந்தாளுநர் ஹெம்ரிச் (Heinrich F. G.) இந்தத் தாவரத்திலிருந்து தூய அட்ரோபினை (atropine) குருணைகளாகப் பிரித்தெடுத்தார்.

பெல்லடோனாவின் தாவரவியல் பண்புகள்

அட்ரோபா பெல்லடோனா ஒரு பல்லாண்டுத் தாவரம். சதைப்பற்றான நன்கு கிளைத்த வேர்த்தொகுதியும். உருளைவடிவ நிமிர்ந்த  இரண்டிரண்டாகக் கிளைத்த, தடித்த 3 அடி உயரமுள்ள தண்டுப்பகுதியையும் கொண்டது. 

இரண்டிரண்டாகப் பக்கவாட்டில் அமைந்திருக்கும் நீண்ட இலைகள் புகையிலையின் இலைகளைப் போலிருக்கும். இலைக்காம்பு குறுகியது. இலைகள்  கீழ்ப்பகுதியில் மாற்றடுக்கிலும்,மேல்பகுதியில் எதிரடுக்கிலும் அமைந்திருக்கும்

பெல்லடோனாவின் ஊதா நிற மணி வடிவ மலர்கள் மிக  அழகியவை. காம்பு கொண்டிருக்கும், தனித்த அழகிய மணி வடிவ  ஐந்து மடிப்புகள் கொண்ட இம்மலர்கள்  பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன. 

பெல்லடோனா மணத்தக்காளியின் கருப்புக்கனிகளைப் போலவே  ஆனால் அளவில் சற்றுப் பெரிதாக இருக்கும் தனித்த கனிகளைக் கொண்டிருக்கும். அடர் ஊதா அல்லது ஆழ்ந்த கருப்பு நிறத்தில்  சாறு நிரம்பிய, 2 அறைகள் கொண்ட கருப்புக்கனிகள்  தேய்த்தால் கெடுமணம் அளிப்பவை. கனிகளில் சிறுநீரக வடிவில் பல நுண் விதைகள் நிறைந்திருக்கும். இவை  விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்பவை.

அட்ரோபா பெல்லடோனாவின் வேதிச்சேர்மானங்கள்

அட்ரோபாவின் கனிகளிலும், இலைகள் மற்றும் வேரிலும் 20 வகையான கடும் நச்சுத்தன்மை கொண்ட வேதிச் சேர்மங்கள் உள்ளன. இலைகளிலும் வேர்களிலும் சக்திவய்ந்த  பெல்லடோனா ஆல்கலாய்டுகள் 0.13 to 0.70 % வரை அடங்கியிருக்கின்றன,

பெல்லடோனாவில் hyoscyamine, atropine, atropamine, belaplomine மற்றும் scopolamine, போன்ற ஆல்கலாய்டுகள் எல்லாத் தாவரப்பாகங்களிலும் இருக்கின்றன. இலைகள் மற்றும் கனிகளில் இவை மிக அதிக அளவில் இருக்கின்றன. 

பெல்லடோனாவின் ஆல்கலாய்டுகளில் மிகவும் சக்திவாய்ந்தவை அட்ரோபைன் மற்றும் ஸ்கோபோலமைன் இரண்டும் தான். (Atropine & scopolamine). இவ்விரண்டும் அட்ரோபா பெல்லடோனாவில் மட்டுமல்ல ஊமத்தை போன்ற சொலனேசி குடும்பத்தின் பிற தாவரங்களிலும் காணப்படுகின்றன. 

பெல்லடோனா விழுதை உடலில் பூச்சிக்கொள்கையிலும், அருந்துகையிலும் மனமயக்கம், இல்பொருள் தோற்றம் உண்டாகுதல், உடல் எடை குறைந்து பறக்கும் உணர்வு தோன்றுதல் ஆகியவை உண்டாகிறது. மிக அதிக அளவில் உட்கொள்ளுகையில் பெல்லடோனா கண் விழித்திருக்கையிலேயே மாயத்தோற்றங்களை உருவாக்கி மனம் பிறழச்செய்து கோமா அல்லது இறப்புக்குக் கொண்டு செல்கிறது.

இதயநோய், ஆஸ்துமா, வலிப்பு நோய் மற்றும்  பார்கின்ஸன் சிகிச்சைகளில்  பெல்லடோனாவின் அட்ரோபைன் ஆல்கலாய்டு (Atropine) இப்போது பயன்படுகிறது. பல்வேறு வகையான நஞ்சுகளுக்கு பெல்லடோனா முறிமருந்தாகவும் பயனாகிறது. 

16-ம் நூற்றாண்டில் இருந்துதான் நச்சுத்தாவரமான இதன்  மருத்துவ உபயோகங்கள் பரவலாகின.1700-த்தில் மருந்துச்சரக்குகள் குறித்த பிரசுரங்கள் அனைத்திலுமே பெல்லடோனாவின் பெயர் இடம்பெற்றிருந்தது

1813-ல் இந்தத்தாவரத்திலிந்து அட்ரோபைன் ஆல்கலாய்டு தனியே பிரித்தெடுக்கப்பட்டது. 

1950-களில் இருந்து பெல்லடோனா ஆல்கலாய்டுகள் தடவப்பட்ட பிளாஸ்டர்கள் அதிகம் புழக்கத்துக்கு வந்தன. அவை முடக்குவாதத்திலிருந்து சுவாச அழற்சி வரை பல்வேறு மருத்துவப் பயன்பாடுகள் கொண்டிருந்தன.

தன்னியக்க நரம்பு மண்டல (autonomic nervous system) சிகிச்சைகளில் இதன் ஆல்கலாய்டுகள் பயன்படுகின்றன. கால்நடை சிகிச்சைகளிலும் அட்ரோபா பெல்லடோனா பயன்படுத்தப்படுகிறது

இப்போது அட்ரோபினின் உபயோகம் அத்தனை அதிகமில்லை என்றாலும் கண் மருத்துவத்தில் கண்மணியைப் பெரிதாக்க மிககுறைந்த அளவில்  இந்த ஆல்கலாய்டு மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் இயற்கையாக இவை வளர்ந்திருக்கும் இடங்களில் இவற்றின் நச்சுத்தன்மையை அறியாமல் அதன் கனிகள் தவறுதலாக உண்ணப்படும் அபாயம் உலகெங்கிலும் இருக்கிறது. 

நத்தைகள்,முயல்கள் மற்றும் பறவைகள் அட்ரோபாவின் கனிகள்  மற்றும் இலைகளை உண்கின்றன. எனினும் பறவைகளுக்கு மட்டும் அட்ரோபா நஞ்சினால் பாதிப்பு உண்டாவதில்லை.   அட்ரோபா பெல்லடோனாவின் இலைகள் கனிகளை உண்ட முயல் போன்ற சிறு விலங்குகளின் இறைச்சியை உண்பதாலும்  பெல்லடோனா ஆல்கலாய்டுகளின் பாதிப்பு உண்டாகிறது. அரிதாக பெல்லடோனா ஆல்கலாய்டுகள் போதை உண்டாக்கவும், தற்கொலைக்கும், கொலை செய்யவும் பயன்படுகின்றன. 

பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவமுறைகளில் பெல்லடோனா   வலி நிவாரணியாக, வீக்கங்களுக்கெதிராக,மாதவிடாய்க்கோளாறுச் சிகிச்சைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

ஹோமியோபதியில் பெல்லடோனா

ஹோமியோபதி மருத்துவமுறையை தோற்றுவித்தவரான சாமுவேல் ஹானிமேன். பெல்லடோனாவை  பலவிதமான நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தினார். ஹோமியோபதி மருந்துகளில் பயன்படுத்தப்படும் தாவரப்பொருட்களின் அளவு பல்லாயிரம் முறை நீர்க்கச்செய்யபடுவதால் அதன் விளைவுகள் பெரிதாக இல்லை.

அமெரிக்காவிலும் கனடாவிலும் இயங்கும் ஹைலேண்ட்ஸ் ஹோமியோபதி மருந்து நிறுவனத்தின் அட்ரோபா பெல்லடோனாவின் ஆல்கலாய்டுகள் கலந்திருக்கும் குழந்தைகளுக்கு பல் முளைக்கையில் உண்டாகும் வலிநிவாரண மாத்திரைகள் 2004-லிருந்து உலக அளவில் இரண்டாம் இடத்தில் பிரபலமாக இருந்தன. 

ஆனால் 2010-ல் FDA அந்த மருந்துகளில் அபாயகரமான அளவில் அட்ரோபா பெல்லடோனாவின் ஆல்கலாய்டுகள் இருப்பதாக தெரிவித்தது. ஹைலேண்ட்ஸ் தனது மருந்துகளைத் திரும்பப் பெற்று வேறு புதிய மருந்துகளைச் சந்தைப்படுத்தியது. 

அதன் பிறகும் அந்த மருந்துகளின் தொடர்ந்த பயன்பாட்டில் பத்துக் குழந்தைகளின் இறப்பு மற்றும் சுமார் 400 குழந்தைகளுக்கு உண்டான உடல்பாதிப்பு மீண்டும் இந்தப் பிரச்சனையை எழுப்பியபோது ஹைலேண்ட்ஸ் நிறுவனம் அந்த மருந்துக்கும் குழந்தைகளின்   இறப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை என வாதிட்டது 

எனினும் 2017-ல் மீண்டும் ஆதாரபூர்வமாக அந்த பல்வலி மருந்துகளில் பெல்லடோனாவின் அளவு அபாயகரமாக இருந்தது FDA-வால் நிரூபிக்கப்பட்டபோது அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டன.

பெல்லோடா நஞ்சின் அறிகுறிகள்

• பேச்சுக் குழறல் மற்றும் குழப்பமான மனநிலை

• மாயத்தோற்றங்கள் உண்டாகுதல்

• மனநிலை பிறழ்தல் 

• கட்டுப்படுத்தமுடியாத வன்முறைச்செயல்பாடுகள் வலிப்பு

• கோமா நிலை 

• கண்மணி விர்வடைதல் 

• சிறுநீர் கழிக்க முடியாமை

• அதிகரிக்கும் இதயத்துடிப்பு 

• ரத்த அழுத்த மாறுபாடுகள்

அஞ்சல்தலைகளில் பெல்லடோனா

அட்ரோபா பெல்லடோனா 1957 மற்றும் 1965-ல்  வெளியிடபப்ட்ட  யூகோஸ்லேவியாவின் இரண்டு அஞ்சல் தலைகளில் இடம்பெற்றது

போலந்தில் 1980-ல். ஆஸ்திரியாவில் 2022-ல் அட்ரோபா பெல்லடோனா வின் சித்திரம் அஞ்சல் தலைகளில் சித்தரிக்கப்பட்டு வெளியானது

ஸ்விட்சர்லாந்து 1974-ல் காடுகளில் இருக்கும் நச்சுத்தாவரங்களின் வரிசையில் அட்ரோபா பெல்லடோனாவின் சித்திரத்தை  அஞ்சல்தலையில் வெளியிட்ட்டது

அல்பானியாவும் 1976-ல் அட்ரோபா பெல்லடோனாவின் சித்திரத்தை  அஞ்சல்தலையில் வெளியிட்டது. 

இந்த அஞ்சல்தலைகள் அட்ரோபா பெல்லடோனாவின் உலகளாவிய முக்கியத்துவத்துக்குச் சான்றளிக்கின்றன.  

தற்போது மருந்துத் தயாரிப்புக்கென பெல்லடோனா சாகுபடி ஐரோப்பா, பாகிஸ்தான், வட அமெரிக்கா மற்றும் பிரேஸிலில் சட்டபூர்வமாகவே நடக்கிறது.

ஜெர்மனியில் மருந்துக்கடைகளில் பெல்லடோனாவின் வேர் மற்றும் இலைகள் மருத்துவரின் பரிந்துரைகளின் பேரில் கடைகளில் கிடைக்கின்றன 

அமெரிக்காவில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பெல்லடோனா ஆல்கலாய்டுகளைக் கொண்டிருக்கும் மருந்துகள் கிடைக்கின்றன. அதற்கு இணையாகவே  இருமல் சளி நிவாரணியாக 0.2 மி கி அளவில் பெல்லடோனா மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளாகவும் கிடைக்கின்றன. 

ஊழின் தெய்வங்களான மூன்று சகோதரிகள் பிறப்பையும் இறப்பையும் முடிவு செய்வதுபோல  சிகிச்சையளிக்கவும் உயிரைப்போக்கவுமான இயல்பினை கொண்டிருக்கும் அட்ரோபா பெல்லடோனாவும் ஊழின் தெய்வங்களில் ஒன்றுதான்.  

இருபெருநகரங்களில் !

இரு பெருநகரங்களில்!

கல்லூரியில் கோடை விடுமுறை சுமார் 40 நாட்கள். பொதுவாக விடுமுறையிலும் தேர்வுப்பணி,  ஆய்வுப்பணி, விடைத்தாள் திருத்துதல் ,  ஜூன் மாதம் புதிய மாணவர் சேர்க்கை என ஓடியே போய்விடும்.பத்து நாள் சேர்ந்தாற்போல வீட்டில் இருந்தாலே அதிசயம்தான். ஆனால் இந்தமுறை மேனகாவின் ஆய்வு முடிந்துவிட்டது. தேர்வுப்பணியை முதல்நாளே முடித்துவிட்டேன். விடைத்தாள் திருத்தும் பணிக்கும் மாணவர் சேர்க்கைக்கும் முதன்முறையாக என்னைக்காட்டிலும் இளைய, இன்னும் பல ஆண்டுகள் துறையில் பணியாற்றவிருக்கும் பேராசிரியர்களைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். சொல்லப்போனால் இதுதான் 22 வருட ஆசிரியப்பணியில் முதல் விடுமுறை என்றும் சொல்லலாம்.

சமீப காலங்களில் மாணவர் சேர்க்கையும் பெரும் அயர்ச்சியளிக்கிறது. காமர்ஸ் கணினி துறைகளுக்கான நீண்ட வரிசையில் காத்திருப்பவர்கள் தாவரவியல் துறை என்னும் ஒன்று இருப்பதே அறியாதவர்களாக கல்லூரி நிறைந்திருப்பதை இப்போதெல்லாம் பார்க்க பெரும் துயரேற்படுகிறது. 

அழிந்து போகத்தான் போகிறது அடிப்படை அறிவியல் துறைகள் எல்லாம் என்றால் நடக்கட்டும். என்னால் ஆனவற்றை நான்  தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறேன் மேலும் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

கல்லூரி கடைசி வேலைநாள் 24 ஏப்ரல் அடுத்த நாள் ரயிலேறி சென்னை வந்தேன்.  வீட்டில் முதல்தளம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒப்பந்த அடிப்படை என்பதால் என் இருப்பு அங்கு தேவைப்படவில்லை என்றாலும் வீடு முழுக்க கட்டுமானப் பொருட்கள் இறைந்துகிடக்க சிமெண்ட் பட்டு பல செடிகள் வாடியும் உயிரிழந்தும் போயிருக்கும் கடும் கோடையில் ஏறக்குறைய 1 மாதம் வீட்டை விட்டு போவது என்னும் கலக்கம் இருந்தது.  

தோட்டதுக்கு இரண்டு நாட்களுக்கொருமுறை நீரூற்ற ஒருவரையும் வராந்தாவில் இருக்கும் நிழல் விரும்பிகளுக்கு மாணிக்காவை நீருற்றவும் ஏற்பாடு செய்துவிட்டு வாசல் மேசையில் வைத்திருந்த இரண்டு போன்சாய் மரங்களையும் மாணிக்காவிடமே ஒப்படைத்து தினமும் நீர் ஸ்ப்ரே செய்து பாதுகாத்து வைக்கும் படி கேட்டுக் கொண்டேன்

கோவை புறப்படுகையில் பால் பீச்சும் மாட்டை விட்டு, பஞ்சாரத்தில் கோழியை விட்டு புறப்படும் பொன்னுத்தாயைபோலவே கலங்கினேன்.

முதலில் சென்னை அங்கிருந்து பெங்களூர் அங்கிருந்து வெள்ளிமலை அங்கிருந்து குக்கூ காட்டுப்பள்ளி சென்று மே 28 வீடு திரும்ப உத்தேசம்.

சென்னையில் வேணுவை , அகரமுதல்வனின் மகன் அங்கணனை வெண்ணிலாவை  சந்திக்கவேண்டி இருந்தது. சென்னை மாம்பாக்கத்தில் ஒரு அடுக்ககத்தில் மீனாட்சி ரவீந்திரன் தம்பதியினர் ஒரு நாள்  தாவரவியல் பயிற்சிக்கு அழைத்திருந்தார்கள்.  மகன்கள் ’’இந்த வெயிலில் ஒரு நாள் பயிற்சிக்காக சென்னை வரை போறியா?’’ என்றார்கள். ’’ஆம்’’ என்றேன். செயலாக இருக்கும் வரைக்கும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தாவரவியலின் முக்கியத்துவத்தை இயற்கையை அறிதலை கற்றுக்கொடுக்கத்தான் போகிறேன்.  வெள்ளிமலை வகுப்புக்குப் பிறகு இப்போது பலருக்கு இயற்கையை அறிதலுக்கான விருப்பமிருக்கிறது.

மதிய ரயிலாதலால் இரவு 10.30க்கு சென்னை வந்துசேர்ந்தேன். மீனாட்சி ரவீந்திரன் மற்றும் குக்கூ சத்யா எனக்காக ரயிலடியில்  காத்திருந்தார்கள். மேலும் 35 கி மீ அந்நேரத்துக்கிருந்த வாகன நெரிசலில் நீந்தி பின்னிரவில் அந்த அடுக்ககம் வந்து சேர்ந்தேன். நல்ல அசதியும் கால்வலியும் இருந்தது. நான் கேட்டுக்கொண்டிருந்த படி தனியறை ஒதுக்கித்தந்திருந்தார்கள். குளித்து உடைமாற்றி உறங்க நள்ளிரவானது.  100 பேர் வரை பங்கேற்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்து 15 பேர் கூட தயாராக இல்லை . எனவே முதல்நாள் நான் ஓய்வெடுத்துக்கொண்டு அங்த பிரம்மாண்டமான அடுக்கத்தின் தாவரங்களைப்பார்த்தேன் அருகில் இருந்த பெரிய புகழ்பெற்ற பள்ளியில் அனுமதி வாங்கி அங்கும் வகுப்பை நடத்த திட்டமிட்டோம். பள்ளி வளாகத்தில் இருந்த ஆலமரத்தடிவகுப்புக்கென  சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. 

ஒரு மாமரத்தில் பெயர்ப்பலகை இருந்தது. அருகில் சென்று பார்த்தேன். அறிவியல் பெயர் சரியாகவும் குடும்பம் தவறாக மால்வேசி என்றும் இருந்தது . அனகார்டியேசி  என திருத்தச் சொன்னேன்.

இப்படி பல முக்கியமான இடங்களில் தவறாக பெயர்ப்பலகைகளைப் பார்க்கிறேன்.

வேதாரண்யம் சென்றிருந்த போது பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஸ்தல மரத்தின் அறிவியல் பெயர் தவறாக எழுதபட்டிருந்ததைப் பார்த்தேன் அதை திருத்த யாரிடம் சொல்வதென தெரியவில்லை தருணின் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலையில் கூட ஒரு மாபெரும் ட்ரீ ஃபெர்ன் மரம் சில்வர் ஓக் என தவறான பெயரிடப்பட்டு இருந்தது. மேட்டுப்பாளையம் பள்ளி ஒன்றிலும் பல மரங்கள் மிகத்தவறாக பெயரிடப் பட்டிருந்தன நான் அந்தபள்ளியின் தாளாளருக்கு புகைப்படங்களுடன் தகவல் சொல்லியும் எந்த பலனும் இல்லை.

வெயில் முதுகில் அறைந்துகொண்டிருந்தது. ஏராளம் விசிறி வாழைகளும் ப்ளுமீரியாக்களும் அங்கிருந்தன. காலை மதியம் மீனாட்சி வீட்டில் உணவு.அன்றைய அந்தி மிக இனியது. மறக்கமுடியாதது.என்றேனும் அதைக்குறித்தெழுதுவேனாயிருக்கும்.

 மறுநாள் எப்படியோ 20 பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். போர்டு ரூம் போலிருந்த ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு துவக்க உரை அவர்களுக்கு தெரிந்த vegetable insult குறித்தும் பொதுவான தாவரவியல் குறித்தும்  சில கேள்விகள்  பின்னர் குழந்தைகளுக்கான ஒரு ppt பின்னர் அடுக்கக வளாகத்தில் களத்தாவரவியல். ஆலமரத்தடியில் 45 நிமிட வகுப்பு பின்னர் மரம் தழுவல் . குளிர்ச்சியாக லிச்சி குளிர்பானம் ஒன்றை குடித்த பின்னர் மீண்டும் அரங்கில் பெரியவர்களுக்கான ppt. 

மதிய உணவு பின்னர் ஓய்வு . மாலை வெயில் தாழ botanical hunt 1 மணி நேரம். அதில் அனைவரும் ஆர்வமாக கலந்துகொண்டனர். பின்னர் அங்கிருந்த ஒரு அரைவட்ட வடிவ திறந்த வெளி அரங்கில் அமர்ந்து இருட்டும் வரை அன்றாட வாழ்வில் தாவரங்களைக் குறித்துப் பேசியும் விவாதித்தும்கொண்டிருந்தோம். எனக்கு நிறைவாக வகுப்பாக இருந்தது. மீனாட்சி ரவீந்திரன் தம்பதியினர் அவர்களின் சொந்தச்செலவில் இதை முன்னெடுத்துச்செய்தார்கள்.

 மறுநாள்  அதிகாலை அங்கிருந்து விடைபெற்று அகரமுதல்வன் வீட்டுக்கு சென்றேன். முழுநாளும் அங்கிருந்துவிட்டு அங்கிருந்து வெண்ணிலா வீடு. 3 நாட்கள் அங்கிருந்து விட்டு பெங்களூருக்கு வந்து சேர்ந்தேன்.

………

துடரும்!

பெங்களூரில் தருண் வீட்டில் இருக்கிறேன். 10 நாட்கள் இருப்பதாக உத்தேசம்.முந்தைய நாள் ஹிட் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் 3-ம் பாகம் பார்த்தோம் அதன் வன்முறைக்காட்சிகள் உண்டாக்கிய ஒவ்வாமை தீர இன்னும் நெடுநாட்களாகும். எந்தக் குறிக்கோளுமில்லாமல் கதைக்கும் தொடர்பு இல்லாமல் அல்லது கதையென்ற ஒன்றே இல்லாமல் ரத்தக்களறியாக ஒரு படம். அதன் முந்தைய 2 பாகங்களைப் பார்த்தவர்களுக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லை எனக்கு எரிச்சலாகவும் கோபமாகவும் இருந்தது. ரத்தம் நன்றாகத்தெரிய வெள்ளைவெளேரென்ற கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு நானி வரும் இறுதிக்காட்சிகளெல்லாம் எப்படி தணிக்கையில் தப்பித்ததென்றே தெரியவில்லை.

அதற்குப்பிழையீடாக நேற்று லாலேட்டனின் ’துடரும்’ பார்க்கசென்றொம். எளிய கதைக்கரு, அசாதாரணமான திரைக்கதை, திரைப்படத்தின் பெரும் பலமாக இசை, லாலேட்டனின் பிரமாதமான நடிப்பு எனப் பிரமிப்பாக இருந்தது.

டைட்டிலில் காட்டும் புகைப்படங்களிலிருந்து சாதாரணமாகத் தோன்றும் சின்ன சின்ன நிகழ்வுகளெல்லாம் இரண்டாம் பாகத்தில் இணைந்து குற்றமென்னும் ஒற்றைச்சரடில் கோர்க்கப்பட்டு நம் முன்னே விரிகையில் திகைப்பெழுகிறது.

அப்படி இருக்கும், இப்படி இருக்கும் காரில் சாய்ந்து நின்று போன் பேசிக்கொண்டிருக்கும் இளைஞனாயிருக்கும், வொர்க்‌ஷாப்பில் இருந்த மணியனாயிருக்கும் என்று நம்மை ஏதேதோ யூகிக்கவைத்து கொஞ்சமும் எதிர்பாராமல் மற்றொரு புதிய பரிமாணத்தைக்காட்டி கதை விரிவது மிரட்டலாக இருந்தது. இசை லாலேட்டனுக்கு இணையாகப் பங்களித்திருக்கிறது.

ஒரு காட்சியில் லாலேட்டனின் நிழல் ஜார்ஜின் நிழலுக்கு பின்னால் தோன்றி மெல்ல நெருங்கி வருகையில் இசை ’’சான்ஸே இல்லை’’ என்போமே அதுதான் அதேதான்.

லாலேட்டனை எனக்குப்பிடிக்கும் அவரது ஸ்டைல் குரல் எல்லாமாகத்தான். ஆனால் இதில் அவர் ஒரு கலைஞனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது அபாரமாக இருக்கிறது. எல்லாம் முடிந்த பின்னர் அந்த சலசலத்தோடும் ஆற்றில் தனது KL4455 கருப்பு அம்பாஸடர் காரை நிறுத்திவிட்டு தளர்ந்து அமரும் காட்சிவரையில் கொஞ்சமும் இறங்காமல் உச்சகட்ட உணர்வு நிலையில் சன்னதம் கொண்டும் பித்தேறியுமே இருக்கிறார்.

இடையிட்டையே காட்சிகளில் தோன்றி சாலையைக் கடந்துசெல்லும் கேரள நாடன் நிகழ்த்துகலைகளின் தெய்வவேடம் பூண்டவர்கள் லாலின் அபோதைய உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார்கள்.

காவல் நிலையத்தின் நிலவறையில் லாலைக்கொல்ல முயற்சி நடக்கையில் வேட்டியில்லாமல் ட்ரவுசரும் முழுக்கைச்சட்டையுமாக அவர் போடும் சண்டையை, நிதானமாக கருப்பு வேட்டியை எடுத்து இறுக்கிகட்டிக்கொண்டு சண்டையை தொடருவதையெல்லாம், புருவம் வரைந்து உதடுகளில் சிகப்பெழுதி உன்னத உடைகள் உடுத்தி அரசியல்வாதியாகும் கனவெல்லாம் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்கதாநாயகர்கள் பார்த்துப் படிக்கவேண்டும்.

ஷோபனாவும் லாலேட்டனும் இணைந்துநடிக்கும் 56 வது படம் இது என்றாலும் ஷோபனாவுக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. சொல்லப்போனால் லாலைத்தவிர யாருக்குமே இதில் வேலை இல்லை முழுப்படத்தையும் யானையைபோல தானே தாங்கிக்கொண்டிருக்கிறார் லால்.

எதற்கு ஒருசில காட்சிகளில் மட்டும் பாரதிராஜா, போன்ற ஒரு சில கேள்விகள்முதல் பாதியில் எழுந்தாலும் எல்லாவற்றையும் இரண்டாம்பாகம் கனெக்ட் செய்கிறது.

லாலின் மகளாக வரும் பெண் வாயில் பிரஷ் வைத்துக்கொண்டே பேசுவதும், அப்பாவின் சட்டைப்பாக்கெட்டிலிருந்து இயல்பாகப் பணம் எடுத்துக்கொள்ளுவதும், அடுப்படியில் அட்டகாசமாக உட்கார்ந்துகொண்டு கதைப்பதும் அப்படியே சாம்பவியை பார்ப்பதுபோல இருந்தது. அதே வயதில்தான் அந்தபெண்ணும் இருக்கிறாள்.

மனைவி மகள் காவல்நிலையத்தில் இருக்கையில் வழக்கமாக எல்லா மொழிகளிலும் எல்லாக்கதாநாயகர்களும் செய்வதுபோல ’’என் மனைவியை ஒன்னும் செஞ்சுறாதே’’ எனக் கெஞ்சும் வேலையெல்லாம் அறவே இல்லாமல் தான் நினைத்ததை செய்துமுடிக்கும் வரை வெறிகொண்டு இருக்கும் லாலேட்டனின் கதாபாத்திரம் வெகுசிறப்பு.

இறுதியில் கோர்ட் காட்சியில்தான் ஷோபனாவையும் மகளையும் பார்க்கையில் அவர் கண்களுக்கு அவர்கள் அடையாளமே தெரிகிறார்கள். அப்பா என்ன ஒரு நடிப்பு!

மேரியும் ஷோபனாவும் கட்டிக்கொண்டு கதறும் காட்சியில் அவர்களை லாலின் மகளும் கட்டிக்கொண்டு கதறுவாள். அந்தக்காட்சியின் உணர்வுவேகம் தாளாமல் தருண் சட்டென உடைந்து கண்ணீர் விட்டு அழுதான். அவன் அக்காட்சியில் மேரியாக, பவியாக, ஷோபனாவாக எல்லாருமாகவே இருந்திருந்திருப்பான்

யாரேனும் இன்னும் இந்தத்திரைப்படம் பார்க்கவில்லை என்றால் உடனே பார்த்து விடுதல் நலம். ஓடிடியில் வருமாயிருக்கும் ஆனால் அந்தக் காடும் மழையும் இடியும் மின்னலும் லாலேட்டனின் சிலைபோன்ற உடலை, உணர்வெழுச்சியை குறிப்பாக இசையை எல்லாம் பெரியதிரையில் பார்ப்பதுமட்டுமே இந்தப் படத்தின் உரியகாட்சி அனுபவத்தை நமக்குக் கொடுக்கும்.நான் மீளமீள இந்தத்திரைப்படத்தைப் பார்க்கவிருக்கிறேன்.

இந்தப்படத்தைப் போலத்தான் திரைப்படங்கள் இருக்கனும் இப்படிப்பட்ட படங்களைத்தான் பார்க்கவேண்டும் என்பதையெல்லாம் தாண்டி இந்தத் திரைப்படத்தில் ஏதேனும் ஒரு சிறு பங்காற்றி இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று எனக்கு ஏக்கமாக இருக்கிறது. வாழ்நாளில் பெரும் நிறைவடைந்திருப்பேன் அப்படிஏதேனும் செய்திருந்தால். திரைப்படக்குழுவினருக்கு ஒரு நல்ல தேநீராவது போட்டுக்கொடுத்திருக்கலாம் என்றெண்ணிக்கொண்டேன்

இதை தமிழில் மொழிமாற்றம் பண்ணாமலிருக்கட்டும் எண்ட குருவாயூரப்பா என்று மனதார பிரார்த்தித்துக்கொண்டேன். இந்தப்படத்தின் மொழி வழியே தெரியும் அசல் உணர்வுகளை கொல்லவேண்டி இருக்கும் மொழிமாற்றுகையில்.

நட்பான உடல்மொழியுடன் ஜார்ஜ் சொல்லும் ஹல்லோ நம்மை அப்படி எரிச்சலூட்டுகிறது. திரையரங்கில் பலர் உரக்க காதுகூசும் கெட்ட வார்த்தைகளில் ஜார்ஜையும் பென்னியையும் வசைபாடினார்கள். ஃப்ர்ஹான் ஃபாசிலை முதன் முதலாக திரையில் பார்க்கிறேன். அண்ணனுக்கும் தம்பிக்கும் பெரிதாக சாயல் ஒற்றுமை இல்லை. ஆனால் நன்றாகவே நடித்திருக்கிறார்

துடரும் படத்தைப்போல படம் எடுப்பது,லாலேட்டனைப்போல நடிக்க முயற்சிப்பது, துடரும் படத்தின் இசையைப்போல இசையைக் கொடுக்க முயல்வதெல்லாம் சாத்தியமே இல்லை தமிழ்ச் சினிமாத் துறையினருக்கு. எனினும் குறைந்தபட்சமாக சவப்பெட்டியின் மீதேறி நின்றபடியும், ரத்தவாடைகொண்ட கார் டிக்கிக்கருகே நின்றுகொண்டும் தொடர்ந்து குரைக்கும் அந்த நாய் கொடுக்கும் உணர்வெழுச்சியில் 100ல் ஒரு பங்கையாவது கொடுக்கும்படியான படங்களை எடுக்க முயற்சிக்கலாம் நமது ஆட்கள். லால் சலாம்!

கடுகில் மரபணு மாற்றம்!

DMH-11 கடுகு

நறுமணப் பொருட்களுக்கு பிரபலமான இந்திய  உணவுகளில் கடுகு மிக முக்கியமான காரச் சுவையூட்டி. பல வகைப்பட்ட கடுகுகள் இந்தியச் சமையலில் பயன்படுகின்றன. சுவையூட்டியாக மட்டுமல்லாது கடுகு பல சத்துக்கள் அடங்கிய, உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும் ஒரு பொருள். ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட கடுகின் உலகளாவிய பயன்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துள்ளது. 

முட்டைக்கோஸ் குடும்பமான பிரேசிகேசியை சேர்ந்த கடுகுச் செடியின் நீளமான பச்சைக்காய்களின் சிறிய உருண்டை விதைகளே கடுகு எனப்படுகின்றது. கடுகுச் செடியின் சத்துக்கள் நிறைந்த இலைகளும் கீரைகளாக உண்ணப்படுகின்றன. இவற்றில் சுமார் 40க்கும் மேற்பட்ட  வகைகள் இருந்தாலும் உலகெங்கும் மிக அதிகம் உபயோகத்தில் இருப்பவை வெண்கடுகு, பழுப்பு கடுகு மற்றும் கருங்கடுகு ஆகிய மூன்றும் தான்.

முழுவிதையாக, எண்ணெயாக, பொடியாக, அரைத்த விழுதாக என்று பல விதங்களில் சமையலில்  கடுகு உபயோகப்படுத்தப்படுகிறது 

பாவையர் கண்ணின் கடைக்கோடியை காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகு, கடுகு சிறுத்தாலும் காரம் போகாது  போன்ற முதுமொழிகளின் வழியாகவும், கடுகளவும் மலையளவும், கடுகு போலப் பொரிதல் போன்ற ஒப்புமை நோக்கல்கள் மூலமும் நம் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பில்  இருந்து வரும் கடுகு சமீபத்தில் சர்ச்சைக்குரிய பேசு பொருளாகி இருக்கிறது.

இந்தியாவின் இரண்டாவது முக்கிய எண்ணெய் பயிர் கடுகுதான் (நிலக்கடலைக்கு அடுத்ததாக). பெரும்பாலான இந்திய கடுகுப் பயிர்கள் வடஇந்தியாவில் பயிராகின்றன. கடுகின் நுண் விதைகளில் 45 சதவீதம் கடுகு எண்ணெய் அடங்கியிருக்கிறது.  இந்தியாவின் மொத்த கடுகு உற்பத்தியில் 60 சதவீதம் உத்தரபிரதேசத்தில் பயிராகின்றது. இந்தியாவில் மிக அதிகமாக பயிராகும் கடுகு வகைகள்:

1.      பழுப்பு கடுகு-Brassica juncea

2.      மஞ்சள்/வெண் கடுகு-Brassica alba

3.      கருங்கடுகு-Brassica nigra

இந்தியாவில் கடுகுப் பயிர் 87.44 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடியாகிறது.எனினும் இந்திய கடுகு உற்பத்தி 7 மில்லியன் டன்களாகத்தான் இருக்கிறது. இந்தியாவிற்கான உணவு எண்ணெய் தொடர்ந்து  வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது வருடா வருடம் இந்தியா 14.5 மில்லியன் டன்  உணவு எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக மட்டும் சுமார் 60 ஆயிரம் கோடிகளை செலவு செய்கிறது.

இந்தியக் கடுகு விவசாயிகளின் சவால்களாக தரமான கடுகு விதைகள் கிடைக்காதது, கடுகுப் பயிர்களின் பூச்சி, பூஞ்சை தாக்குதல்கள் மற்றும் களை ஆகியவை இருக்கின்றன.

எனினும் கடந்த ஐந்து வருடங்களில் கடுகு விவசாயிகள் புதிய விவசாய தொழில் நுட்பங்களை மேற்கொண்டதால் இந்தியக் கடுகு விளைச்சல் வெகுவாக அதிகரித்திருக்கிறது. புதிய விவசாயத் தொழில்நுட்பங்கள்  உணவுப்பயிர்களில் இது போன்ற சவால்ளைத் தீர்க்கப்  பெரிதும் உதவுகின்றன.   

1996 ல், Genetically Modified (GM) Crops  என்னும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 6 நாடுகளில் முதன்முதலாக வளர்க்கப்பட்டன. 2009ல் இப்பயிர்கள் 25 நாடுகளிலும் 2019 ல் 29 நாடுகளிலும் பயிராகின

மரபணு மாற்றப்பட்ட  மக்காச்சோளம், சோயாபீன், சோளம், உருளைக்கிழங்கு ஆப்பிள்,பப்பாளி, இளஞ்சிவப்பு அன்னாசி,பருத்தி ஆகியவை இந்நாடுகளில் பயிராகும் மரபணு மாற்றப் பயிர்கள் 

மரபணு மாற்றுப் பயிர்கள் என்பவை  டி.என்.ஏ வில் மரபணு பொறியியல் தொழில்நுட்பத்தின் மூலம் குறிப்பிட்ட,தேவையான மாற்றங்கள் உருவாக்கப்பட்ட பயிர்கள். அதாவது  ஒரு தாவரத்தில் இயற்கையாக இல்லாத ஒரு புதிய இயல்பை தொழில்நுட்பத்தின் உதவியுடன்  புகுத்துதல்தான் மரபணு மாற்றம்.உதாரணமாக தடித்த தோல் கொண்ட  சதைப்பற்றான தக்காளியை பெற அதில் உருளைக்கிழங்கின் மரபணுக்கள் கலக்கப்பட்டதை சொல்லலாம்.

இவ்வாறு உணவுப் பயிர்களும், உணவல்லாத பிற மருந்துப் பயிர்கள், உயிரி எரிபொருள் பயிர்கள் ஆகியவற்றில் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

 சோயா, தக்காளி, பருத்தி விதை போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 1990ல் சந்தைக்கு வர ஆரம்பித்தன. இவற்றின் மரபணு மாற்றப்பட்ட இயல்புகளாக  பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு, ஊட்டச்சத்து மற்றும் விளைச்சல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் உப்புத் தன்மையை தாங்கி பயிர் வளர்தல் போன்றவை கூறப்படுகின்றன.

இவற்றில்:

Transgenic பயிர்கள் என்பவை பிற இனங்களின் மரபணு புகுத்தப்பட்டவை.

Cisgenic பயிர்கள் அவற்றுடன் தொடர்புடைய அல்லது அதே இனத்தை சேர்ந்த பயிர்களின் மரபணுக்களை பெற்றவை.

Sub Genic  பயிர்கள் புதிய மரபணுக்கள் புகுத்தப்படாமல் அவற்றின் மரபுக்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்  மட்டும் செய்யப்பட்டவை

 அமெரிக்கா பிரேசில் கனடா ஆகியவற்றுடன் இந்தியாவும் மரபணு மாற்ற பயிராய்வில் ஈடுபட்டிருக்கிறது.கடந்த 23 வருடங்களில் சுமர் 17 மில்லியன் விவசாயிகள் வளர்ந்த நாடுகளின் மரபணு மாற்றம் உள்ளிட்ட பல உயிரி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பயிர் விளைச்சலை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட, 2002ல் வணிகரீதியாக சாகுபடியும் செய்யப்பட்ட பயிர் Bt பருத்தி. இது   அமெரிக்க நிறுவனமான   Monsanto வுடன் இணைந்து மகாராஷ்டிரா கலப்புயிர் விதை நிறுவனத்தினால் ( MAHYCO) உருவாக்கப்பட்ட்து.

இந்தியாவில் மரபணு மாற்று சோதனைகள் முடிந்து, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு பிரிவான மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee -GEAC) வின் அனுமதி பெற்று வணிக ரீதியான பயன்பாட்டிற்கான அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த மூன்று பயிர்கள் கத்தரிக்காய், கடுகு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை. 

கத்தரிக்காயின் சோதனை சாகுபடிக்கு மேலதிகச் சோதனைகள் தேவைப்படுவதாக பரிந்துரைகளும் செய்யப்பட்டு அப்போதைய வேளாண் அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. GEAC 2009ல் கத்தரிக்காயின் சோதனைகள் முடிவடைந்துவிட்டதாக தெரிவித்தன எனினும் மரபணு மாற்றப் பயிர்களை சாகுபடி செய்வதை எதிர்க்கும் அமைப்புகளின் போராட்டத்தினால், கத்தரிக்காய் சோதனைச் சாகுபடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்புகள் உணவுப்பயிர்களில் உருவாக்கப்படும்  மரபணு மாற்றங்கள் மனித உடலிலும் ஆதிக்கம் செலுத்துமென்பதால்  தொடர்ந்து  அத்தகைய சோதனைகளை ஆட்சேபித்து வருகின்றன. கடுகுப் பயிரின் மரபணு மாற்றத்துக்கான கலப்புயிரி உருவாக்க சோதனைகளும் ஆராய்சிகளும் பல ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வருகின்றன. 

DMH-11கடுகு

 இந்நிலையில் கடந்த அக்டோபர் 18,  2022ல்  மரபணு மாற்றபட்ட கடுகு வகையான் DMH-11 என்பதை வணிக ரீதியாக  சாகுபடி செய்வதற்கான சோதனைகளை செய்யலாம் என்று GEAC அனுமதி அளித்திருப்பதுதான் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது.  சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்புக்களில் இந்த கடுகினால் உண்டாகும் விளைவுகள், தேனீ உள்ளிட்ட பிற மகரந்த சேர்க்கை நடத்தும் பூச்சி இனங்களுக்கு  மரபணு மாற்றப்பட்ட கடுகுப்பயிரினால்  உண்டாகும் மாற்றங்களை சோதனை  சாகுபடி செய்து அறிந்துகொள்ளலாம் என்றும் GEAC பரிந்துரைத்திருந்தது.  .இதற்கு அனுமதி  அளிக்கப்பட்டு இக்கடுகு சந்தைப்படுத்தப்பட்டால், இதுவே இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிராக இருக்கும்.

Dhara Mustard Hybrid-11,  எனப்படும்  DMH – 11 கடுகு டெல்லி பல்கலைக்கழகத்தின்  பயிர்த்தாவரங்களின் மரபணு கையாளுதல் மையத்தில் (CGMCP) உருவாக்கப்பட்டது. டெல்லி பல்கலைக்கழக மரபியல் பேராசிரியரும் துணைவேந்தருமான தீபக் பெண்டால் ( Deepak Pental) தலைமையேற்று வழிநடத்திய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.    இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகின் வெற்றிகரமான உருவாக்கத்துக்கு 14 நீண்ட  வருடங்களும் 700 மில்லியனும் செலவாகி இருக்கிறது.

2002ல் நிலத்தில் வாழும், நோயுருவாக்காத பாக்டீரியாவிலிருந்து  மரபணுவை பிரித்து இந்த கடுகில் புகுத்தி புதிய வகை கடுகு உருவாக்கப்படும் ஆய்வுகள் துவங்கின.

ஒரு புதிய கலப்பின கடுகு வகை, வருணா  மற்றும் Early Heera-2 ஆகிய இருவகை கடுகுகளை கலப்பினம் செய்து உண்டாக்கப்பட்டது.Bacillus amyloliquefaciens என்னும் பாக்டீரியாவிலிருந்து  Bar, Barnase , Barstar ஆகிய மரபணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு இந்தக் கடுகில் புகுத்தப்பட்டு மரபணு மாற்றப்பட்ட DMH – 11 கடுகு உருவாக்கபட்டிருக்கிறது. 

Barnase மரபணு ஆண் மலட்டுத்தன்மையை கடுகில் உருவாக்குகிறது ஆனல் Barstar மரபணு கடுகின்  வளமிக்க விதைகளை உருவாக்கும் திறனை தக்கவைக்கிறது, Bar மரபணு கடுகுப்பயிருக்கு களைக்கொல்லி (glufosinate-ammonium tolerance) சகிப்புத் தன்மையை அளிக்கிறது. 

புதிய மரபணுக்கள் கடுகுப்பயிரில் மகரந்த சேர்க்கை மற்றும் கருவுருதலில் ஆதிக்கம் செலுத்தி மகசூலை அதிகப்படுத்தும் திறன் கொண்டவை என சொல்லப்படுகின்றது.  ஆய்வகச் சோதனைகள் இந்த புதிய வகை கடுகு 19 லிருந்து 30 சதவீதம்  அதிக மகசூல் அளிப்பதாக தெரிவிக்கின்றன.

இதனால் உண்டாகும் சூழல் சீர்கேடு மற்றும் மனிதர்களுக்கான  ஆரோக்கிய கேடுகள் குறித்து இப்போது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன   

இந்தியாவின் முக்கிய உயிரி தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த புதிய கடுகு வகை மிகத்தேவயான ஒன்று, பருவநிலை மாற்றங்களினால் உணவுப் பற்றாக்குறை உண்டாகி இருக்கும் இச்சமயத்தில் இதுபோன்ற வரவுகள் உண்மையில் அத்தியாவசியமானவை என்கிறார்கள். 

இது வெற்றிகரமாக நடந்தால் பல புதிய மரபணு மாற்ற பயிர்கள் உருவாக இது வழிவகுக்கும் என்பதால் பல ஆய்வாளர்கள் இதை வரவேற்கிறார்கள். 

’’மரபணு மாற்றுப் பயிர்கள் இல்லா இந்தியா’’ போன்ற எதிர்ப்பமைப்புக்களோ இக்கடுகு இன்னும் பலகட்டச் சோதனைகளை கடந்த பின்னரே சூழலுக்கு அறிமுகமாக வேண்டும் என எச்சரிக்கிறார்கள். இப்போது  நடத்தப்பட்ட சோதனைகளின் போதாமையை சுட்டிகாட்டும் இவர்கள் இக்கடுகு இப்போது சூழலில் அறிமுகமானால் பெரும் சூழல் சீர்கேடு உண்டாகும் என தெரிவிக்கிறார்கள்.

 மரபணு மாற்றப் பயிர்களை எதிர்க்கும் அமைப்புக்களினால் உச்ச நீதிமன்ற அனுமதியை காத்திருக்கும் இந்த கடுகுச் சோதனைச் சாகுபடி பெரும் சர்ச்சைக்குரியதாயிருக்கிறது  நவம்பர் மாதத்திலிருந்து இது தொடர்பான விசாரணைகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

உச்ச நீதிமன்றம் அனுமதித்தாலும் பலகட்ட சோதனைகளை இன்னும் கடந்த பின்னரே விவசாயிகளுக்கு DMH – 11 கடுகுப்பயிர்  விதைகள் அளிக்கப்படும் என்றாலும், இயற்கையான சூழலில் நடைபெறவிருக்கும்  இந்த சோதனைகளுக்கு இப்போது கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. GEAC தனது அக்டோபர் அறிக்கையிலேயே இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகில் தீங்கு விளைவிக்கும் தன்மைகள் உள்ளதாக ஆதாரங்கள்  இருப்பின் இந்த ஒப்புதல் ரத்து செய்யப்படும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது

நீதிமன்றம் இன்னும் சிலமாதங்கள் தொடரும் விசாரணைக்கு பின்னர் தான் தீர்ப்பை அறிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள். ஆனால்  எதிர்ப்பமைப்புக்கள் முன்னரே கையிலிருக்கும்  ஆய்வு  முடிவுகளின் அடிப்படையில் தீர்ப்பளிக்காமல் குரங்குகள் உள்ளிட்ட சில விலங்குகளில் DMH – 11 கடுகு எண்ணெயை கொண்டு  சோதனை நடத்தி அந்த ஆய்வு முடிவுகளின் பேரில்தான் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் அதற்கு மேலும் ஐந்தாண்டுகளாவது அவகாசம் தேவைப்படும் என்கின்றன. 

ஏற்கனவே GEAC யிடம்  2017ல் இதே கடுகை வெளியிட அனுமதி கோரிய பயிர்த்தாவரங்களின் மரபணு கையாளுதல் மையத்தினர், பின்னர் எதிர்ப்பாளர்களின் குரலுக்கு செவி மடுத்து தேனீக்களிலும்  மகரந்த சேர்க்கை நடத்தும் மற்ற பூச்சி இனங்கள் மற்றும் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகளில்  நடத்தவேண்டிய சோதனைகளுக்கு அவகாசம் கேட்டு  அவர்களே  அதை நிறுத்தினார்கள். 

2015லிருந்து  DMH – 11 கடுகில் நடத்தப்பட்ட சூழல் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு ஆகிவற்றிற்கான பலகட்ட சோதனைகளின் முடிவுகள் திருப்திகரமாக இருந்தன என்று சொல்லப்பட்டாலும், களைக்கொல்லி மரபணு மாற்றத்துக்கான சோதனைகளின் முடிவுகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை

இந்த சோதனைகளின் அனைத்து முடிவுகளையும் விண்ணப்பத்தின் பேரில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் யாரும் காணமுடியும் என்னும் வசதியும் உள்ளது

 இந்த DMH – 11 கடுகு பயிருக்கு குறைந்த அளவே தண்ணீரும், உரமும் களைக்கொல்லிகளும் தேவைப்படும் என்பதால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்றும் உருவாக்கியவர்களின் தரப்பில் கூறப்படுகிறது

 எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வரும் Alliance for Sustainable and Holistic Agriculture அமைப்பு இந்த ஒப்புதலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்  பல சோதனைகள்  முழுமையடையவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது

 ஏற்கனவே பல எதிர்ப்புக்களிடையேயும் அறிமுகமாகி தோல்வியடைந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தியையும், அதன் நஷ்டங்களால் நடைபெற்ற கணக்கற்ற  விவசாயிகளின் தற்கொலைகளும் இந்த எதிர்ப்பாளர்களால் சுட்டிகாட்டப்படுகிறது. மேலும் இது சாகுபடி செய்யப்படுகையில் இந்தியக்கடுகின் தூய மரபணுக்கள் கலப்படமாகிவிடும் அபாயமும் உள்ளது என்கிறார்கள்.

இக்கடுகின் மற்றொரு அபாயமாக சொல்லப்படுவது இதன் களைக்கொல்லி (glufosinate-ammonium tolerance ) சகிப்புத்தன்மை. இதனால் விவசாயிகள் பல மடங்கு அதிகம் களைக்கொல்லி ரசாயனங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என எச்சரிக்கப்படுகிறது. 

இதன்  பல பரிசோதனைகளில்  மகசூல் அதிகரிப்பு இருப்பதாக முடிவுகள் காட்டினாலும் சில பரிசோதனைகளில் கடுகின் அளவும் காய்களின் நீளமும் கணிசமாக குறைந்திருந்தன. மகசூலுக்கு இவ்விரண்டும் மிக முக்கியமான காரணிகள்.

மிக அதிக விதை விலையும் குறைந்த மகசூலும் மீண்டும் ஏற்படுமானால் மீண்டும் பருத்தி தற்கொலைகளைப் போல கடுகு தற்கொலைகளும் நிகழலாம் என்னும் அபாயம்  போராடும் அமைப்பினரால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

உணவு ஒவ்வாமைக்கான சோதனைகளில் இந்த கடுகில் இருக்கும்  Bar, Barnase மற்றும் Bastar proteins புரதங்களின் ஒவ்வாமை குறித்த ஒப்புமை ஆய்வு நடத்தப்பட்டதில் இவற்றால் எந்த ஒவ்வாமையும் உண்டாவதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும் மனிதர்களின் நோய் எதிர்ப்பு திறன் தொடர்பான மேலதிக ஆய்வுகள் இதில் நடத்தப்படவேண்டி இருக்கிறது.

இந்த கடுகை எதிர்ப்பவர்கள் முக்கியமாக சுட்டிக்காட்டுவது மரபணு மாற்றப்பட்ட கடுகு மண்ணிலும் சூழலிலும் மகரந்த சேர்க்கையிலும் உண்டாக்கவிருக்கும் மிக ஆபத்தான விளைவுகளைத்தான், 

இது நடைமுறைப்படுத்தப்பட்டால் மீட்டெடுக்கவெ முடியாத சூழல் சீர்கேடுகள் உருவகும் என்பதே மரபணுப்பயிர்களை எதிர்க்கும் அமைப்பினரின் ஆணித்தரமான வாதம்.   

மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு இந்த கடுகை வணிக ரீதியாக சாகுபடி செய்வதற்கு முன்னரான சோதனைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த கடுகை உருவாக்கியவர்களே அனுமதியளிக்கும் குழுவில் உறுப்பினர்களாக இருப்பது தான் சர்ச்சைகளின் அடிப்படையாக இருக்கிறது.

இப்போது இந்த சோதனை முயற்சியை உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகின் சாகுபடியினால் தேனீக்களுக்கும் மற்ற  பூச்சி இனங்களுக்கும் உண்டாகும் தாக்கம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட் டுள்ளது.

இதன் ஆதரவாளர்களும் இதை உருவாக்கிய குழுவினரும் இந்த கடுகினால் அதிக கடுகு விளைச்சல், குறைந்த உணவு உற்பத்திக்கான முதலீடு, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைதல் அகியவற்றை தெரிவிக்கின்றனர்

இக்கடுகை எதிர்ப்பவர்கள் இதன் களைக்கொல்லி சகிக்கும் இயல்பினால் உண்டாககூடிய உயிரியல் மற்றும் சூழலியல் அபாயங்களையும் இப்பயிர் மண்னிற்கு உண்டாக்கும் தீங்குகளையும்   நடத்தபட்ட ஆய்வுகளில் இருக்கும் நிரப்பப்படாத இடைவெளிகளையும் முன்வைக்கின்றனர்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான புதிய சந்தையையும்,அதன் காப்புரிமையை குறிவைக்கும் அமைப்புக்களும் மேலும் ஆபத்தை விளைவிப்பார்கள் எனவும் இத்தரப்பு கூறுகிறது இந்த கடுகு சாகுபடி சோதனைகளுக்கு உச்சநீதிமன்றம்  தடை விதிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் எதிர்ப்பமைப்புக்கள் தெரிவித்திருக்கின்றன.’

2011ல் வெளியான உயிரி தொழில் நுட்ப விதைகளால் நிகழ்ந்த இந்திய விவசாயிகளின் தற்கொலையை பேசும் Bitter Seeds எனும்  பிரபல ஆவணப்படம் இந்தியாவில் மரபணு பயிர்களின் விளைவுகளை விளக்குகிறது. பல சூழலியலாளர்கள் இந்த ஆவணப்படம் அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று என்று பரிந்துரைக்கிறார்கள்.  

விரைவில்  இதற்கான தீர்ப்பை அளிக்கவிருக்கும் உச்சநீதிமன்றத்துக்கு   இந்திய  தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau of India) 1995 லிருந்து 2006 வரையிலான 12 வருடங்களில் மட்டும் சுமார் 200,000 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்னும் ஆதாரத்தைக்  காட்டியதும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

மாற்றங்கள் தேவைதான் என்றாலும், தங்க ஊசியென்பதால் கண்ணைக் குத்திக்கொள்ள முடியாது. வேலியே கடுகுப்பயிர்களை மேயுமா அல்லது உணவுப்பயிர்களின் விளைச்சலை மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் அதிகரித்து உணவுப்பாதுகாப்புக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

***

மேலதிகத் தகவல்களுக்கு:

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑