“Having too much on my plate”என்று சொல்லப்படும் நிலையில் இருக்கிறேன். பாதியிலிருக்கும் அக்டோபரில் முடித்தாக வேண்டிய ஒரு மொழியாக்கம், தமிழக மாவட்டங்களின் flora வை ஆவணப்படுத்தும் அரசுவேலை,வெளியாகிக்கொண்டிருக்கும் உணவு குறித்த தொடருக்கான கட்டுரைகளை எழுதுவது, அதற்கென வாசிப்பதும், தயாரிப்பதும்,காத்திருக்கும் ஒரு நூலறிமுகம், கல்லூரி வேலை, வீட்டு பராமரிப்பு, ஓணவெயில் காலமாதலால் தோட்டத்துக்கு நீரூற்றுதல், சமையல், பயணம், கடைவீதி ,விழாக்கள். இந்த வருட முடிவிற்குள் முடித்தாகவேண்டிய குடும்பச் சிக்கலொன்று,அதன்பொருட்டு நடக்கும் நாடகங்களை எதிர்கொள்வதும் சகித்துக்கொள்வதும், அடுத்து நடக்கவிருக்கும் அறக்கல்விக்கான வகுப்புக்களுக்கு (அரைத்த மாவையே அரைக்கக்கூடாது என்பதற்காக) கூடுதலான தகவல்களைச் சேகரிப்பது, என்று கண்ணைக்கட்டுகிறது.
நேற்று கல்லூரியில் தேர்வுப்பணி முடித்து அங்கிருந்து யான்அறக்கட்டளை துவங்கவிருக்கும் ஒரு முக்கிய நிகழ்சிக்கான முன்தயாரிப்புப் பேச்சுவார்த்தைக்கென கோவை சென்று விட்டு மாலை வீடு திரும்பி இரவு வெகுநேரம் எழுதிக்கொண்டிருந்து விட்டு பின்னிரவில்தான் உறங்கினேன்.
காலை 5 மணிக்கு வழக்கம்போல கண்ணைப்பிரிக்க முடியவில்லை. பள்ளியில் சேர்ந்த புதிதில் குட்டிச்சைது சொல்வதைப்போல இன்று வியாழன் என்று நினைவு வந்ததும் நானே மனதிற்குள் சண்டே சொல்லு சண்டே சொல்லு என அடம் பிடித்து ,உடனிருந்து தேற்ற யாருமில்லாததால் நானே சமாதானமாகி எழுந்து புறப்பட்டு, இதோ கல்லூரியில் இருக்கிறேன்.
இன்று tenuiflora விற்கும் parviflora விற்குமான வேறுபாட்டை அறிந்துகொள்ள அந்த இருவகைகளிலும் இருக்கும் மஞ்சரிகளை ஆராய்ந்துகொண்டிருந்தேன். இரண்டுமே மஞ்சரியின் சிறுமலர்களைத்தான் குறிக்கின்றன என்றாலும் நுட்பமான வேறுபாடு இருக்கிறது. துளசியுடையது tenuiflora தெட்சியின் வகைகளில் ஒன்று parviflora. இப்படி தாவரப்பெயர்களின் etymologyயின் பின்னால் போவது எனக்கு விருப்பமானதொன்று. சொல்லப்போனால் இந்ததுறையில் எனக்கு ஈடுபாடு வந்ததே இந்தப்பெயர்களில் இருகும் வசீகரம்தான்.
parviflora என்பது நுண்மலர்களைக்குறிக்கிறது ஆனால் அதே பேரினத்தில் இருக்கும் பிற மலர்கள் அல்லது மஞ்சரிகளில் இருக்கும் floret களின் அளவைக்காட்டிலும் சிறியவைகளுக்கே அந்தப்பெயரை லின்னேயஸ் வைத்திருக்கிறார். comparitively smaller உதாரணமாக இக்ஸோரா பார்விஃப்ளோராவைச்சொல்லலாம். தெட்சியின் மஞ்சரிகளை உருவாக்கியிருக்கும் சிறு மலர்களின் அளவைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் பார்விஃப்ளோராவின் அளவு.
லின்னேயஸ் பெயரிடுவதற்கு எத்தனை மெனக்கெட்டிருக்கிறார் என்று நினைக்கையில் வியப்பாயிருந்தது. இந்த இக்ஸோரா -Ixora என்னும் பெயரையே எடுத்துக்கொள்ளலாம். சிவனுக்கு பிரியமானது கோவில்களில் சிவனுக்கு பூஜைக்குபயன்படுத்துவது என்பதால் iswara என்பதை latinize செய்து ixora என்னும் பேரினப்பெயரை வைத்திருக்கிறார். ஸ்வீடிஷ் உயிரியலாளரான லின்னேயஸுக்கெப்படி நம் ஈஸ்வரனை தெரிந்தது? சுவாரஸ்யமான ஒரு வரலாறு இருக்கிறது இதன் பின்னே.
1669-லிருந்து 1676 வரை மலபாரில் கவர்னராகப்பணிபுரிந்த டச்சு ராணுவ அதிகாரி ஹெண்ட்ரிக் அட்ரியான் ரீட் அந்தப்பகுதியின் 740 தாவரங்களை விவரித்து எழுதிய நூல் hortus malabaricus. இந்த நூல் உருவாக்கத்தில் கேரளத்தின் மூலிகைவைத்தியரான இட்டி அச்சுதன் பெரும்பங்காற்றினார்.
ஈழவரான அச்சுதன் ஆயுர்வேதமருத்துவராக சேரத்தலாவில் இருந்தார். கொச்சி அரசரான வீர கேரள வர்மாதான் அச்சுதனை ஹெண்ட்ரிக் ரீடிக்கு அறிமுகம் செய்துவைத்தார். அச்சுதனின் பனையோலைச்சுவடிகளிலிருந்து பல தகவல்களை ரீடி எடுத்துக்கொண்டிருக்கிறார். மலையாளத்திலிருந்த அவற்றை ஆங்கிலத்தில் ஒரு குழுவாக பல பிராமணர்கள் மொழிபெயர்த்து உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் பெயர்களும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.அச்ச்சுதன் ஒவ்வொரு தாவரத்திற்குமான அந்தபிரதேசத்தின் வழங்குபெயர்களை தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். உண்மையில் இந்த நூல் ஒரு botanical treatise என்பதைக் காட்டிலும் ஒரு cultural storehouse என்றுதான் சொல்ல வேண்டும்.
இட்டி அச்சுதனின் ஓலைச்சுவடிகளில் பிற்பாடு பெரிய அளவில் ஆய்வுகள் நடந்தன.இட்டி அச்சுதனின் வாழ்க்கை வரலாற்றை A N Chithambaram எழுதி அதைக் கேரள சாகித்ய அகாதமி வெளியிட்டது. மேலும் அச்சுதனைப்பற்றி அறிந்துகொள்ள N S Arunkumar எழுதிய ‘’Horthoos malabarikoos charithavum Sasthravum’’ என்னும் நூல் உதவுகிறது.
திருவனந்த புரம் TBGRI யில் ஹார்டஸ் மலபாரிகஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாவரங்களுக்கெனத்தனியே ஒரு தோட்டம் அமைக்கப்பட்டது.இணையத்தில் ஹார்டஸ் மலபாரிகஸின் ஸ்கேன் பிரதி முழுமையாகக்கிடைக்கிறது.அதை மேலோட்டமாக பார்த்தேன், ஆயிரக்கணக்கான பக்கங்களில் இருப்பது பழங்குடித்தாவரவியல் தொகுப்புத்தான்.
1753-ல் லின்னேயஸ் இருபெயரீட்டு முறையை அறிமுகபப்டுதியபோது ரீடியின் நூலில் இருந்து மலபார் பகுதியில் ஈஸ்வரன் கோவில்களில் பயனபடுத்தப்படும் மலர் என்னும் குறிப்பைக்கொண்டே இக்ஸோரா பெயரிடப்பட்டது.
பார்விஃப்ளோராவிலிருந்து மலபாருக்கு வந்துவிட்டேன்
அடுத்த டென்யூஃப்ளோரா என்பது துளசியின் திர்சஸ் வகை சிறப்பு மஞ்சரிகளிலிருப்பதைப் போன்ற நுண்ணிய, வலிமையற்ற, மிக மெல்லிய மலர்களைக்குறிக்கிறது. எனக்கு ஜெ வின் மலர்த்துளி என்னும் சொல் நினைவுக்கு வந்தது. லின்னேயஸ் இப்போது இருந்திருந்தால் ஜெ விடம் ஆலோசனை கேட்டு மேலும் பல பொருத்தமான சொற்களில் பெயரிட்டிருப்பார்.
யானைப்புளி
இந்த ஹெண்ட்ரிக் ரீடியின் பெயரில் தான் ஆப்பிரிக்க கனவுக்கொடியும் மனம்மயக்கும், இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் இயல்புகளையுடையதுமான எண்டெடா ரீடி என்னும் யானைப்புளிக்கொடி பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படி தகவல்களுக்குள் தகவலாகத்தேடித்தேடிப் பயணிப்பது ஒரு போதை போலாகிவிட்டிருக்கிறது.
இனி நான் டென்யூஃப்ளோராவை மலர்த்துளி என்றே குறிப்பிடப்போகிறேன்.
இன்று ott யில் பறந்துபோ வெளியாகி இருந்தது. கடும் பணிச்சுமையில் இருக்கிறேன், கல்லூரியில் முதல் அகமதிப்பீட்டுக்கான தேர்வுகள் நெருங்குவதால் பாடங்களை முடிக்க வேண்டும், இப்போதும் மாணவர் சேர்க்கை நடக்கிறது,அதைப் பார்க்கவேண்டும். இந்தத்துறை சுவாரஸ்யமானதுதான் என்பதை தெரிவிக்க வாரா வாரம் ஏதேனும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது,வழக்கமான கட்டுரைகள் எழுதிச் சமயத்துக்கு அனுப்புவது, என்னவானாலும் தவறாமல் வாசிப்பது, புதிதாக ஏற்றுக்கொண்டிருக்கும் அரசுசார்ந்த எழுத்துப் பணி ஒன்று, வீட்டுவேலை, தோட்டவேலை, விளக்கேற்றுவது என்று அடுத்தடுத்த வேலைகளின் கவனத்தில். இரவு 11மணிக்கும் உறக்கம் வராமல் மனம் விழித்துக்கொண்டிருக்கிறது. நானே வலிய இணையத் தொடர்பை நிறுத்திவிட்டு உறங்கச்செல்கிறேன்.
இத்தனை இருந்தும் அகரமுதல்வன் உள்ளிட்ட பல நண்பர்கள் சிலாகித்திருந்ததால் இந்தப்படத்தை கொஞ்சநேரம் பார்க்க நினைத்தேன். ஆனால் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே என்னால் தொடரமுடியாமல் பழைய நினைவுகளின் எடையில் மூச்சுத்திணறயது.
படத்தை நிறுத்திவிட்டு வாசலில் துளசி மாடத்தில் காற்றில் துடிக்கும் தீபச்சுடரை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அந்தக் குட்டிப்பையனை வீட்டைப்பூட்டி உள்ளே விட்டுவிட்டு அம்மாவும் அப்பாவும் வேலைக்குச்செல்லும் காட்சி எங்கள் வாழ்வில் நடந்ததை ஒப்பிட்டால் உண்மையில் வீரியம் குறைவானது. சரணையும் தருணையும் அப்படி எத்தனயோ காலம் வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுப் போயிருக்கிறேன். பாவம்.
எல்லோராலும் கைவிடப்பட்டிருந்த நிர்க்கதியான காலமது.(இப்போதும் எங்கள் உலகில் நாங்கள் மூவர் மட்டும் தான் ஆனால் மகிழ்ந்திருக்கிறோம்) கல்லூரி விடுமுறைகளும் பள்ளி விடுமுறைகளும் வேறு வேறு மாதங்களில் இருக்குமென்பதால் அவர்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு கம்பி அழிபோட்ட வெளிகேட்டைப்பூட்டி சாவியை அவசரத்தேவைக்காக அவர்களிடமே கொடுத்துவிட்டு கல்லூரிக்குப்போவேன் .
வீட்டில் ஒரு லேண்ட் லைன் அப்போது இருந்தது வகுப்பு முடிந்ததும் அடித்துப்பிடித்து போன் செய்து இருவரிடமும் பேசிச் சண்டைகளைச் சமரசம் செய்து கொஞ்சி, கெஞ்சி அம்மா சீக்கிரமே வீடு வந்துவிடும் சத்தியங்களை அளித்து மாலை ஆட்டோவில் வந்திறங்கி ஓட்டமாக ஓடி வருவேன். சமயங்களில் சரணோ தருணோ அழைத்து ’’அம்மா எப்போ வருவே போரடிக்குது’’ என்பார்கள். கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் அழக்கூடாது என்பதற்காக மிகுந்த கஷ்டப்படவேண்டியிருக்கும் அப்போதெல்லாம்
மதிய உணவை விரிவாகச்சமைத்து கூடம் முழுவதும் நாளிதழ்களைப் பரப்பி அதில் தட்டு டம்ளரிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டுப் போயிருப்பேன். இருவருமாகச் சாப்பிட்டுவிட்டு குப்பையாகப் போட்டுவைத்திருப்பார்கள். மாலை அவற்றை அப்படியே சுற்றி எடுத்துத் தோட்டத்தில் இருக்கும் ஒரு ட்ரம்மில் நெருப்பு வைத்துவிட்டு வழக்கமான வீட்டுவேலைகளை மூவருமாகச் செய்வோம். இன்று இருவருமே கோலமிடுவதிலிருந்து சமைப்பதுவரை அதனால்தான் இஷ்டமாகச்செய்கிறார்கள்.
முக்கியமான அறுவை சிகிச்சைபிற்பாடு செய்யவேண்டி இருந்ததால் என் உடல்நிலையும் சரியில்லாமல் இருந்த அந்தகாலத்தில் எனக்குள் எதிர்மறை நினைவுகள் ஏதும் வந்துவிடக்கூடது என்பதில் மிகக்கவனமாக இருந்திருக்கிறேன். கூடவே மகன்களை எப்படியும் வளர்த்து ஆளாக்கவேண்டும் என்னும் உறுதியும் கொண்டிருந்தேன்.
வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை எனவே எங்களுக்குள் பேசிக்கொள்ள ஏராளமாக நேரம் கிடைத்தது. மாலையே இரவுணவை சமைத்து வைத்துவிட்டு மூவருமாகத் தெருமுனையில் புளிய மரத்தடியில் நின்றுகொள்வோம். இருட்டில் பளிச்சிடும் முகப்பு விளக்குகளோடு விரையும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டு யாருக்கு கார், யாருக்கு லாரி, யாருக்கு பஸ் என்னும் விளையாட்டு விளையாடுவோம்
நன்றாக இருட்டியபின்னர் வீடு திரும்புகையில் யாருடைய வாகனம் அதிக எண்ணிக்கையில் கடந்துசென்றதோ அவர் வெற்றியாளர் என்பதை நாங்களே அறிவித்துக்கொண்டு வெற்றிபெற்றவர்களுடன் மற்ற இருவரும் சேர்ந்து இனிப்பை எடுத்துக்கொள்வோம். எப்போதும் இனிப்பு இருக்கும் வீட்டில்.
மீண்டும் கதை சொல்லிக்கொண்டோ பாடல்கள் கேட்டுக்கொண்டோ மூவருமாக எதாவது பாடலைப்பாடிக்கொண்டோ சாப்பிடுவோம். இரவு வெகுநெரம் என் இரண்டு பக்கமும் படுத்திருக்கும் இருவருக்கும் தட்டிக்கொடுத்து கதைகள் சொல்லி உறங்க வைத்துவிட்டு பின்னர் எழுந்துவந்து கூடத்தில் இருந்து கல்லூரி வேலைகளைப்பார்ப்பேன். நிறைந்த இளமையில் வெறும் அன்னையாக மட்டும் இருக்க கற்றுக்கொண்டகாலமது.
உண்மையில் அவர்கள் சிறைப்பட்டதுபோலத்தான் இருந்தார்கள். ஒருநாள் தருண் அலமாரியின் தட்டுக்களைப்பிடித்து மேலே எறி முதுகு தரையில் படக் கீழே விழுந்துவிட்டான். சரண் பின் வீட்டிலிருக்கும் பெண்ணுக்குத் தகவல் சொல்லி அவள் வந்துபார்த்து எனக்குத் தகவல்வந்தபோது நான் வகுப்பில் இருந்தேன்.
அது அரசு வேலைக்குச் சேர்ந்த முதல் வருடம் எந்தக்காரணத்தைக்கொண்டும் விடுப்பு எடுக்கக்கூடாது கண்ணீருடன் முதல்வரிடம் அனுமதி வாங்கி ஓட்டமாகக் கல்லூரி வாசலுக்கு வந்தபோது நான் அறிமுகம் கூட அப்போது செய்துகொண்டிருக்காத ஹென்றி என்னும் கல்லூரியின் ஃப்ரெஞ்ச் பேராசிரியர் பைக்கில் கல்லூரிக்குள்ளே வந்துகொண்டிருந்தார் அவரிடம் விஷயத்தைச்சொல்லி என்னைப் பேருந்து நிறுத்ததில் கொண்டு விடும்படி கேட்டுக்கொண்டேன். மறுபேச்சில்லாமல் கொண்டு விட்டார். அன்று ஆட்டோவில் செல்லக் கையில் போதுமான பணம் இல்லை. அரசு வேலை கிடைத்து முதல் இரண்டரை வருடங்களுக்குச் சம்பளமே இல்லை எல்லாம் மொத்தமாகப் பிற்பாடு கொடுக்கப்பட்டது. அந்தக் கஷ்டப்பாட்டைச் சொன்னால் பெரியநாவலே எழுதவேண்டிவரும்.
பேருந்தில் அன்று நல்ல கூட்டம் கம்பியைப் பிடித்தபடி தாரைதாரையாகக் கண்ணீருடன் வீடுவந்தேன். தருண் கீழே படுக்கவைக்கப்பட்டிருந்தான். அந்த வீதியிலப்போது ஒரு கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த மேசனிடம் சென்று அவசரமாக ஹாஸ்பிட்டல் போகவேண்டும் என்று உதவி கேட்டேன். உடனே ஒத்துக்கொண்டார்.
சரணை வீட்டில் தனியே விட்டுவிட்டு அவரது டிவிஎஸ் 50 வண்டியில் அவருக்குப்பின்னால் தருணைத் தோளில் போட்டுக்கொண்டு அம்பராம்பாளையம் சென்றேன், நல்லவேலை வசந்த் இருந்தார் முதுகெலும்புக்கு ஒன்றும் அடியில்லை என்று சொல்லி சிகிச்சை அளித்தார். இப்படி பலவிஷயங்கள் நடந்தன பள்ளி விடுமுறைக்காலத்தில்
சில சமயம் கல்லூரிக்கு அழைத்துச்சென்றுவிடுவேன், சரண் சமத்தாக லைப்ரரியில் படித்துக்கொண்டிருப்பான். தருண் கல்லூரிமுழுக்க அவனே தனியாகக் கையில் கிடைத்தவற்றை வைத்து விளையாடிக்கொள்வான். சில சமயம் வகுப்புக்கு முன்னிருந்த ஒரு மைதானத்தில் இருவரும் விளையாடுவார்கள் அவர்களை ஒரு கண் பார்த்துக்கொண்டே கரும்பலகையில் எழுதிக்கொண்டிருப்பேன்.
சரணுக்கு கடும் காய்ச்சல் இருந்த ஒரு நாள் எனக்குத் தேர்வுப்பணி. அவனை லைப்ரரி மேசையில் மருந்துகொடுத்துப்படுக்க வைத்து ஒரு துண்டில் போர்த்திவிட்டு நான் 3 மணி நேர தேர்வுப்பணிக்கு போனேன். லைப்ரரி ஜோதி பார்த்துக்கொண்டாள் நான் வரும்வரை.
பேருந்தில் கதையான கதைபேசிக்கொண்டு திரும்பவருவோம் மூவருமாக. கஷ்டப்பாடுதான் என்றாலும் எங்களுக்குள் இருந்த பிணைப்பு மிக உறுதியானதும் அந்தக்காலத்தில்தான்.
கோவை காளப்பட்டியில் அப்போது பணிபுரிந்த ப்ரியா சில விடுமுறைகளில் உடன் வந்து இருந்து மகன்களை நான் வரும்வரை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள், அதை எந்நாளும் மறப்பதில்லை. திருமணத்துக்கு முந்தின இரவு காரில் ரோஜாப்பூக்கள் ஒட்டி இருக்கவில்லை என்னும் பிரச்ச்னை எழுந்தபோது அப்போது மணமாகி இருக்காத ப்ரியா நள்ளிரவு வரை டேப் கொண்டு ரோஜாக்களை ஒட்டிக்கொண்டிருந்தாள். அவளைத்தவிர வேறு யாரும் வந்திருந்து மகன்களைப் பார்த்துக்கொண்டதேயில்லை.
ஆனால் எல்லாக் கல்லூரி விடுமுறைகளிலும் வேன் வைத்துக்கொண்டு கூடக் கூட்டமாக வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். முகம் சுளிக்காமல் அனைவரையும் பார்த்திருக்கிறேன் எங்களை யாரும் ஒருபோதும் விடுமுறைக்கு வரச்சொன்னதில்லை அதில் எங்களுக்குக் குறையொன்றுமில்லை நாங்கள் எங்களுக்குள்ளேயே இன்று வரை மகிழ்ந்துதான் இருக்கிறோம்.
எத்தனை முயன்றும் என்னிலிருந்து உதிர்க்கவேமுடியவில்லை இந்த நினைவுகளை. சரண் தருணுக்கு இந்த விஷயங்களெல்லாம் பிற்பாடு நினைவுக்கு வந்து துயருற்றுவிடக்கூடாது என்பதை இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்
மகன்கள் தனிமையில் இருந்துவிடக் கூடாது என்பதற்காக வார இறுதி விடுமுறைநாட்களிலும் அதிகாலையில் எழுந்து மதியத்துக்கும் சேர்த்து சமைத்து வைத்துவிட்டு குளித்து வீட்டுவேலைகளை முடித்து அவர்கள் தூங்கி எழுந்திருக்கும் போதிலிருந்து இரவு வரை வேறெந்த அறைக்கும்கூடப் போகாமல் உடனிருப்பதை இன்று வரையிலுமே தொடர்கிறேன்.அவர்கள் கல்யாணம் வரை நான் இதைச்செய்யலாம்.
இதோ வளர்ந்து வலிதாகி இருக்கிறார்கள். இலக்கியப்பரிச்சயமும் இயற்கைமீது அக்கறையும் கொண்ட, அறத்தின் பால் நிற்கும் இளைஞர்கள் இப்போது சரணும் தருணும்.அவர்கள் குடும்பமும் குழந்தைகளும் உறவினர்களுமாகச் கூடி இருந்து வாழ்வதைப்பார்க்கக் கொதி இருக்கிறது எனக்கு.
இந்த நல்லபடத்தை என்னால் பார்க்கமுடியாமல் போனது வருத்தமளிக்கிறது. யாராவது குழந்தைகளை வைத்துக்கொண்டு வேலைக்கும் போகும், உடனிருக்க மனிதர்களற்ற அன்னையைப்பற்றி படம் எடுக்கவிருந்தால் என்னைச்சந்திக்கலாம். மிக உணர்வுபூர்வமான கணணீர் வரவழைக்கும் காட்சிகளுக்கு நான் உத்திரவாதம்.
இன்று காலை வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே கல்லூரிக்குச்சென்றுவிட்டேன். வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சிறப்பு நிகழ்வு இருக்கும்படி இந்தப் பருவத்தைக் கழிக்கவேண்டும் எனத் துறையில் முடிவு. எந்நேரமும் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தால் மாணவர்கள் சலிப்படையக்கூடும் எனவே துறைசார்ந்த சிறு சிறு நிகழ்வுகளை வாரா வாரம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்
இன்று பருத்திப்பைகளை உபயோகிப்பது, ப்ளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பது என்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கத் துறையில் அனைவரும் துணிப்பைகளை கொண்டு வந்தோம். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க சற்றுமுன்னதாகவே சென்றேன்.
வழியில் ஒரு வகுப்பறையின் முன்பு எனக்கு முன்னதாகவே வந்து எதிரெதிரே நின்று கொண்டிருந்தார்கள் ஒரு பெண்ணும் ஆணும். இன்று வெள்ளிக்கிழமையாதலால் அவள தலைக்குக்குளித்து இடைவரை யக்ஷி போல நீண்டிருந்த முடியில் சின்ன வண்ணத்துப்பூச்சியின் வடிவிலிருந்த கேட்ச் க்ளிப் மட்டும் போட்டிருந்தாள். கூந்தலின் நீர் சொட்டி அவளது இளஞ்சிவப்பு சுடிதாரின் கீழ்ப்புறம் ஈரமாகி இருந்தது.
அவனோ அவசரத்தில் புறப்பட்டிருப்பான் போல, கசங்கிய சட்டை, கலைந்த தலை. தூரத்திலேயே அவன் அவளிடம் ’’ஏய். சாரிடி. போன் அடிச்சது கேட்கலை,தூங்கிட்டேன் இதுக்குப்போய்க் கோவிச்சுப்பியா?’’…. என்று சொன்னது கேட்டது.
அவள் கண்களில் கனலும் கண்ணீருமாக, சில நோட்டுப்புத்தகங்களை மார்போடு சேர்த்து அணைத்துப்பிடித்துக்கொண்டு அவனைப்பார்க்காமல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தாள். அழகாகப் பட்டையாக மையெழுதிய கண்கள்.
‘’ நான் என்ன சொன்னேன் இப்போ? இனிமே உன்னைக் கூப்பிடலைனுதானே சொன்னேன், அதுக்கெதுக்கு சாரிகேட்கற? போய் வேலையைப்பாரு’’…. என்கிறாள்.
இவன் மீண்டும் பாவமாக ’’சாரி சொல்லிட்டனில்லடி, நீ ராத்திரி 12 மணிக்குக் கூப்பிடுவேன்னு எனக்குத் தெரியலை தூங்கினது குத்தமா’’ என்கிறான். அவள் ’’அய்யோ குத்தமில்லை சாமி நல்லா போத்திட்டுத்தூங்கு. நான் தான் இனி கூப்பிடமாட்டனே’’…. என்கிறாள். இதைச்சொல்லுகையில் அவள் குரல் உடைகிறது.
நான் அவர்களைக் கடந்துவிட்டேன். ’’சரிடி, இனிமே நான் தூங்கவேமாட்டேன், நீ எப்போ கூப்பிட்டாலும் போன எடுக்கறேன்’’… அன்று அவனும், பதிலுக்குச் சீற்றத்துடன் ’’ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு கூப்பிட்டா நீ போனே எடுக்கலை எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?’’… என அவள் மலை இறங்கி வந்ததையும் கடைசியாகக்கேட்டேன். புன்னகைத்துக்கொண்டே முதல் தளத்தில் இருக்கும் என் துறைக்கான படிகளில் ஏறினேன்.
இரவுகளில் பாடல் கேட்டுக்கொண்டோ கவிதைகள் வாசித்துக்கொண்டோ உறங்கச்செல்வது பலகாலமாக வழக்கத்தில் இருக்கிறது.விருப்பமான கவிஞர்களின் கவிதை நூல்கள் படுக்கைக்கு அருகிலேயே எப்போதும் இருக்கும்.
பாடல்களில் அதிகம் ஹிந்தியும் மலையாளமும் இருக்கும். ஒரு நாளின் அலுப்பு சோர்வு எல்லாம் போக இப்படி பாடல்களின் இனிமையான நினைவுகளுடன் உறங்கச்செல்வது பெரும் ஆறுதலளிக்கும். நான் புழங்கும் உலகு அத்தனையொன்றும் பிரியமானதல்ல புகைச்சலும் அறியாமையும் சில்லறைச்சச்சரவுகளும் மலிந்த ஒரு உலகத்தில் தான் 5 மணி நேரமிருக்கிறேன். எனவே இந்தப்பழக்கத்தைத் தவறவிடுவதில்லை. அன்றாடம் அதிகாலை வாசிப்பையும் கட்டாயமாக, ஆனால் உள்ளார்ந்த ஆர்வத்துடன் பிரியத்துடன் தொடர்கிறேன்.
மலையாள மொழியின்மீது எனக்கு சாய்வு அதிகம். நேற்றிரவு ’’எல்லாரும் சொல்லனு’’ பாடலைக்கேட்டேன். என் பிரியத்துக்குரிய மலையாளப்பாடல்களில் இதுவும் உண்டு. 1954-ல் வெளியான நீலக்குயில் என்னும் திரைப்படத்தின் பாடல். பாடலை எழுதியது புல்லூட்டுப்பாடத்து பாஸ்கரன்மாஷே.
ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர். 250 திரைப்படங்ளுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார்.இயக்குநரும் நடிகரும் கூட. கவிஞர் என்று சொல்ல வேண்டியதில்லை.இவரது 3000த்துக்குமதிகமான பாடல்களனைத்துமே நீள் கவிதைகள்தான்.நீலக்குயிலை இயக்கியதும் இவரே.இவரது தந்தையும் பெருங்கவிஞர்.
7ம் வகுப்பு படிக்கையிலிருந்தே கவிதைகள் எழுதிய இவர் துவக்கத்தில் கம்யுனிசப்பாடல்களை எழுதினார். இவரது முதல் சினிமாப்பிரவேசம் 1949- ல் வெளியான தமிழ்த்திரைப்படமான அபூர்வசகோதரர்களில் இருந்த பலமொழிப்பாடலொன்றின் மலையாளப் பகுதிகளை எழுதியதில் துவங்கியது.
2வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான அகில இந்திய தகுதிச் சான்றிதழை வென்று , இந்த விருதை வென்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது நீலக்குயில். நீலக்குயில் ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்க விருதையும் பெற்று மலையாளச் சினிமாவின் முதல் அரசு அங்கீகாரம் பெற்ற படமாகியது.நீலக்குயிலில் பாஸ்கரன் மாஷே நடித்துமிருக்கிறார்.
கலாசித்ரா அகாதமியும் கேரள அரசும் இணந்து மலையாளச் சினிமாவில் பாஸ்கரன் மாஷேவின் பங்களிப்பை போற்றும் விதமாக இவரது மார்பளவு சிலையை திருவனந்தபுரத்தில் நிறுவி இருக்கிறது.
நீலக்குயிலில் கே. ராகவன் இசையமைத்து பி. பாஸ்கரன் எழுதிய ஒன்பது பாடல்கள் உள்ளன .இவை அனைத்தும் கேரள நாட்டுப்புற மரபுஇசை வகைகளில் மாப்பிளப்பட்டு , கோயித்துபட்டு என்னும் அறுவடைப் பாடல்,பாரம்பரிய பிரார்த்தனைப்பாடல்கள்ஆகியவற்றின் வடிவங்களில் அடங்குபவை.
வாழ்நாளின் இறுதியில்அல்ஸைமரினால் பாதிக்கப்பட்டிருந்த மாஷே மனிதர்களையும் அவரது பாடல்களையும் முற்றிலும் மறந்தார். இவரது இறுதிக்காலத்தில் இவரது பாடல்களை ஏராளமாகப் பாடிய S. ஜானகியம்மா இவர் முன்பாக அவரது பல பாடல்களைப்பாடியபோது அவரால் எதையும் நினைவுகூற முடியவில்லை. 83 வயதில் இறந்தார் மாஷே.
1954-ல் தலித் பெண்ணுக்கும் உயர் சாதி பள்ளிக்கூட ஆசிரியருக்குமான காதலைச்சொன்ன படம் நீலக்குயில். இந்த நீலக்குயிலின் ’’எல்லாரும் சொல்லனு” எளிய மொழியில் எழுதப்பட்ட மிக அழகிய கவிதை
மிஸ் குமாரியும் சத்யனும் வெகு இயல்பான உடல்மொழியுடன் நடித்திருக்கும் பாடல்காட்சி. கொய்யாக்காயை கடித்துக்கொண்டும் மேலே தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டும் பாடும் காதல்பாடலை நான் இதற்கு முன்பும் பிறகும் கேட்டது இல்லை. ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளாமல் முழுப்பாடலையும் பாடிவிட்டு இறுதிக்காட்சியில் ‘கல்லானு, கருங்கல்லானு’ என்று சொல்லப்பட்ட சத்யனின் நெஞ்சில் தன் இருகைகளையும் வைத்துக்கொள்வார் குமாரி. ஜானம்மாடேவிட்டின் குரலில் நீலக்குயில் கொஞ்சுகிறது.
’’எல்லாரும் சொல்கிறார்கள்
உங்கள் இதயம் கல் என்று,
அதுவும் பெரும்
கருங்கல்லென்று’
ஆனால் நானதைத்
தொட்டுப்பார்த்தபோது
எனக்கது
ஒரு கரும்பின் துண்டாகத்தான் இருந்தது.
நாட்டார் எல்லாரும்
உன் இதயம் காடு
அதுவும் கொடும்காடு என்றார்கள்,
ஆனால்
அதில் நுழைந்த போது
நான் பார்த்தது
ஒரு நீலக்குயிலின் கூட்டை ,
சின்னஞ்சிறியதோர் கூட்டை.
என்ன பார்க்கிறாய் நிலவே?
ஏன் எங்களை மேலிருந்து பார்க்கிறாய் ?
நான் மேலே உன்னிடம் வரப்போவதில்லை
என் மணவாளன்
இங்கே கீழே அல்லவா இருக்கிறான்?
பூச்செண்டு வாங்கனும்
கல்யாண முண்டு வாங்கி உடுத்தனும்
பூக்கள் அமைத்த பொன்தாலியை
கழுத்தில் கட்டனும்
நானொன்றும்
விளையாட்டுக்குச்சொல்லவில்லை
நல்ல சுவையான துளிர் வெற்றிலையை
மென்று தின்று
என் உதடுகளை
ரத்தச்சிவப்பாக்கிக்கொள்ளனும்
ஆம்
என் உதடுகளை
ரத்தச்சிவப்பாக்கிக்கொள்ளனும்’’
எத்தனை நேரடியான காதல் சொல்லல் இல்லையா?
இடையில் அந்த அய்யா என்னும் விளி அவன் மீது அவளுக்கிருக்கும் மரியாதை கலந்த அன்பைக்காட்டுகிறது.
முதலில் நேரடியாக அவன் இதயத்துக்குள் தான் நுழைந்ததைச் சொல்லும் அவள், அவன் எத்தனைஇனியவன் என்கிறாள் கரும்பைச்சொல்லி.
பின்னர் நிலவிடம் சொல்லுவது போல் தன் மணவாளன் அவனே என்கிறாள். பிறகு கல்யாணத்துக்கு தயார், முண்டும் தாலியும் கெட்டனும் என்பவள் மேலும் துணிந்து உதடுகளை சிவப்பாக்கிக்கொள்வதையும் சொல்கிறாள்.
ஊழின் இரக்கமற்ற விதி இந்தப்பாடலைக் கூட பாஸ்கரன் மாஷே மறக்கும்படி செய்துவிட்டது
சமீபத்தில் ஒரு நிகழ்வுக்காக வெளியூர் சென்றிருந்தேன், விஷ்ணுபுரம் அமைப்பல்லாத நிகழ்வுகளின் நேரமேலாண்மை குறித்து முன்பே அறிந்திருப்பதால் கையோடு லக்ஷ்மி சரவணகுமாரின் பன்றிவேட்டையை எடுத்துச்சென்றிருந்தேன். யூகித்தபடியே குறித்த நேரத்துக்கு 2 மணி நேரம் தாண்டித்தான் விழா தொடங்கியது.
அதுவரை இசைக்கக்சேரி நடந்தது. நான் பன்றிவேட்டையை பொறுமையாக அடிக்கோடிட்டு வாசித்து முடித்துப் பன்றி வேட்டை என்னும் தலைப்புக்குள் லக்ஷ்மி சரவணகுமார் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதும் பாடல்கள் இசைக்கப்பட்டன. 2 மணிநேரத்துக்குப்பின்னர் அறிவிப்பாளர் வந்து விழா `குறித்த நேரத்துக்கு` துவங்கவிருப்பதால் அரங்கிற்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் திகைத்து `சீரியஸ்லி`? என்றது `மன் கி பாத்` என்பதால் அவருக்குக் கேட்கவில்லை.
விழா துவங்கியது. எனக்கு வலது புறம் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம் நல்ல அகடமிக் வாசனை வீசியது. 20 ஆண்டுகால பழக்கத்தில் அந்த வாசனை எனக்கு அத்துப்படி. அவர் என்னிடம் பன்றி வேட்டையைச் சுட்டிக்காட்டி“நீங்க இந்தப் புத்தகத்துக்குத்தான் விருது வாங்கறீங்களா?“ என்று கேட்டார். “இல்லைங்க என் நண்பரின் புத்தகம் இது. நான் எழுத்தாளர் இல்லை கட்டுரையாளர்தான் என் கட்டுரைத்தொகுப்புக்குத்தான் விருது“ என்றேன். “ தமிழ்த்துறையா ஆங்கிலத்துறையா?“ என்றார். “இரண்டும் இல்லை தாவாவியல் துறை“ என்றேன். குழப்பமானார்.
“பின்னே உங்க பேருக்கு முன்னாடி எழுத்தாளர்னு பத்திரிக்கையில் போட்ருக்காங்களே?“ என்றார். அவரை நன்றாக நிமிர்ந்து பார்த்தேன். ஆய்வு மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் தலைக்குக்குளித்து ஜிமிக்கியும் மல்லிகைப்பூவுமாக வருகையில் அவர்களைப்பார்க்கும் பெண் நெறியாளர்களின் (அந்தப்பட்டியலில் லோகமாதேவி இல்லை) கண்களில் தெரியும் அதே உக்கிரம் இருந்தது. அவரை மலையிறக்குவதற்காக “தவறுதலாபோட்டிருப்பாங்கம்மா“ என்றேன். அந்த அம்மா விகுதியும் அவரை எரிச்சலூட்டியதை அவரது உடல்மொழியிலிருந்து அறிந்தேன். பணிஓய்வு பெற்று 20 வருடமானவராதலால் அப்படி அழைக்கும் உரிமையை நானாக எடுத்துக்கொண்டிருந்தேன்.
அமர்ந்திருந்த நாற்காலி மிகச்சிறியதாக, அசெளகரியமாக அமரும்பொருட்டு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது என்பதால் முதுகு விண் விண் என்று தெறித்தது. எனக்கே அப்படி என்றால் விழாநாயகரும் பேருடல்கொண்டவருமான …… சரி வேண்டாம் சாமி கண்ணைக்குத்தும்.
எனவே கையில் இருந்த பன்றிவேட்டையையும் போனையும் கட்டிப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். “அப்ப இது என்னபுக்கு“ என்று மீண்டும் அவர் கேட்டதும் “இது என் நண்பர் எழுதினது“ என்றேன். “கொடுங்க“ என்றவர் நான் அதைக்கொடுக்க யத்தனிப்பதற்குள் கையிலிருந்து தட்டிப்பறித்தார். என் மனம் தின்னப்பழம் கொண்டு தருவானுக்குத் தாவியது.
அட்டையைத் தடவிப்பார்த்தவர் “ஓ இதுவா நல்லாருக்கும் நான் 50 வருஷம் முன்னாடியே படிச்சுருக்கேன் மறு பிரசுரமா?“என்றார். நான் “இல்லைங்க இது வர வெள்ளிக்கிழமைதான் வெளியாகுது;; என்றேன். “அப்ப உங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சுது?“ என்றார். “எழுதினவர் என் நண்பரென்பதால் எனக்கு முன்னாடியே அனுப்பி இருக்காரு“ என்றேன். மீண்டும் பின்னட்டையை தொட்டுத்தடவியவர் “இல்லை இதை நான் வாசிச்சுருக்கேன் அதே புக்தான்“ என்றார்.
அட்டையை வைத்து நூலைஎடைபோடாதே என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டிருப்பதை சார்ந்திருந்த தமிழ்த்துறையினால் அவருக்கு ஒருவேளை தெரிந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் என் கோபத்தை காட்டிக்கொள்ளாமல் “இல்லைங்க இது சினிமாவா வரப்போற கதை அவர் சினிமாவில் இருக்காரு நிச்சயமா இதை நீங்க படிச்சிருக்க முடியாது“ என்றேன்.அகங்காரம் சீண்டப்பட்டவராக“இல்லை வாசிச்சுருக்கேன் ஒரு காட்டில் நடக்கற பன்னி வேட்டையைப்பத்தித்தான கதை?“ என்றார்.
என்ன சாமர்த்தியம்!! பன்னி வேட்டை காட்டில் நடக்காமல் மும்பை தாஜ் ஹோட்டலிலா நடக்கும்?. சரிங்கம்மா என்று மட்டும் சொல்லிவிட்டு மறக்காமல் புத்தகத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன்.
இடதுபக்கம் வந்தமர்ந்த ஒரு பெண் என்னைப்பார்த்து புன்னகைத்து “மேடம் நீங்க——– கல்லூரியின் கரஸ்பான்டென்டா? என்றார். அச்சச்சோ முகத்தில் அத்தனை கடுமையா தெரிகிறது என்று துணுக்குற்று முகத்தை சாந்தமாக்கிக்கொண்டு “இல்லைங்க நான் வெறும் பேராசிரியர்தான்“ என்றேன்.
வலது பக்க அம்மாள் மேடையின் அச்சுபிச்சு நகைச்சுவைக்கெல்லாம் மகிழ்ந்து சிரித்துக்கொண்டும் கூடக்கூட அங்கிருந்தே மேடையில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டுமிருந்தார்.
எனக்கு மூச்சுலகில் தேவனிடம் கேட்கவென்று பல கோரிக்கைகள் இருக்கின்றன. அதில் இன்னார் இன்னாராக இன்னாருக்கு ஆகவேண்டும் என்னும் மறுபிறவிக்கான கோரிக்கைகள் தான் பிரதானமாக இருக்கும். எனக்குத் தனிப்பட்டதாக- எங்கேனும் ஒரு மலைஉச்சியில் நீலமாக மலர்களைச் சொரிந்துகொண்டிருக்கும் ஜகரண்டா மரமாக, தப்பிப்போனால் கணேஷ்பெரியசாமிக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்னும் இரண்டுகோரிக்கைகள் தான் இருக்கிறது,
எனக்குத்தெரிந்த ஒருவர் அடுத்த பிறவியில் பின் வீட்டில் இருக்கும், தன் கணவரைச் சட்டைக்காலரோடு கழுத்தை சுவற்றோடு சேர்த்துப்பிடித்து அடி சாத்தும் ஒரு பெண்ணின் கணவராகி விடவேண்டும் என்னும் விருப்பம் என் மன்றாட்டுகளில் அடிக்கடி இடம்பெறுமொன்று.
என்னையே பூமர் என்று சொல்லும் சரணையும் தருணையும் அடுத்த பிறவியில் எப்படியாவது இந்த வலதுபக்க அம்மாளின் மகனாக்கிவிடுங்கள் தேவனே என்று கண்ணீருடன் பிரார்த்தித்துக்கொண்டேன்,
’’என் கிராமத்தில் இருந்து வந்திருக்கும் மதிப்பிற்குரியவரே, உங்களுக்கு கிராமத்தில் நடப்பவை எல்லாம் தெரிந்திருக்கும் தானே? சொல்லுங்கள், நீங்கள் அங்கிருந்து புறப்பட்ட நாளில் என் வீட்டின் பனி படர்ந்த ஜன்னலின் எதிரே இருக்கும் அந்த ப்ளம் மரம் மலர்ந்திருந்ததா?’’
இந்த புகழ்பெற்ற கவிதை சீன ஓவியரும் கவிஞருமாகிய வாங் வெய் எழுதியது.
சீன அரசவையின் உயர் பொறுப்பில் இருந்த வாங் வெய் போர்க்கைதியாக கொண்டு செல்லப்பட்டு சிறைவைக்கப்பட்டு இருக்கையில் எழுதிய கவிதைகளும் கடிதங்களும் உலக பிரசித்தி பெற்றவை. அவற்றிலொன்றுதான் ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா? என்று கேட்கும் இந்த கவிதை.
வாங் வெய் தன்னிடமிருந்த அரசியல் ரகசியங்கள் எதுவும் போராளிகளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக செவிடர் போல நடித்துக் கொண்டிருந்தார். வதைக்கு ஆளாகி எதையும் சொல்லாமலிருக்கும் பொருட்டு மருந்துகளை விழுங்கி தன் குரலை சேதப்படுத்திக் கொண்டார்.
பல்வேறு சித்ரவதைகளுக்கிடையிலும் தன்வீட்டின் எதிரே இருந்த ப்ளம் மரம் பூத்ததா என்று கேட்கும் இக்கவிதை சொந்த நிலத்தை பிரிந்து புதியதோர் இடத்தில் வாழும் பழைய நினவுகளின் இனிமையிலும் புதிய இடத்தில் தன்னை பொருந்திக் கொள்ள முடியாத துயருக்கும் இடையே அலைவுறும் ஆன்மாவின் விசும்பல்தான்.
இதைப்போலவே தன் ஈழத்து வீட்டின் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் நமக்கு இனி இல்லை கண்ணே’’ என்று துயர் கொள்ளும் புலம்பெயர் கவிதை ஒன்றுண்டு. போதமும் காணாத போதத்தில் இயக்கத்துக்கு சேரப் போகையிலும் தேமா மரத்தை பார்த்துக்கொள்ள சொல்லி கடிதம் எழுதும் தாயமும் வாங்வெய்யின் மற்றுமோர் வடிவம்தான்
புலம்பெயர் இலக்கியங்கள் அனைத்தும் ‘diasporic war literature’ எனப்படுகின்றன. பண்டைய கிரேக்க மொழியில் Diaspora என்பதற்கு ‘சிதறுண்ட’ என்று பொருள். சொந்த நிலத்தை விட்டு பல்வேறு காரணங்களால் வேறு புதிய பகுதிகளில் தனித்தனியே சிதறுண்டவர்களின் படைப்புக்களுக்கு இதைக்காட்டிலும் பொருத்தமான பெயர் வேறென்ன இருக்க முடியும்? புலம்பெயர் இலக்கியங்கள் உலகெங்குமே இருக்கின்றன என்றாலும் பெரிதும் அவை ஈழத்து புலம்பெயர் படைப்புக்களை குறிப்பதாகவே இருக்கின்றன.
அகரமுதல்வனின் கடவுள் பிசாசு நிலத்தை ஒரு மலைத் தங்குமிடத்தில் ஒரே நாளில் கண்ணீருடன் வாசித்து முடித்தேன். கடவுள் பிசாசு நிலத்திலிருந்து முளைத்த விதைதான் போதமும் காணாத போதம்
இரண்டிலுமே அகரமுதல்வனின் மொழிவன்மை திகைப்பூட்டுவது. இரண்டிலுமே வாழ்வும் தாழ்வும் சரிக்கு சரியான கலவையில் இருக்கும். துயரைச் சொல்லும் அதே மொழியின் வீச்சில் காதலும் சொல்லப்பட்டிருக்கும் படைப்புக்கள் இரண்டுமே
போரை செய்தித்தாள்களிலும் பிற ஊடகங்களிலும் மட்டுமே அறிந்திருக்கும் என் போன்றோருக்கு போதமும் காணாத போதும் காட்டும் அசல் போர்ச்சூழலும் கொடுமையும், துயரமும், வதையும், உயிரிழப்பும் அதிர்ச்சியையும் குற்றவுணர்வையும் ஊட்டுபவை.
போர்ச்சூழல் படைப்புக்கள நாவல், கதை, கட்டுரை, கவிதை, திரைப்படம் என பல வகைகளில் இருக்கின்றன. அனைத்துமே போரின் அழிவை, போரினால் உண்டான இழப்புக்களை, வலியை, புலம்பெயர்தலின் அவலத்தை வலுவாக உணர்வுபூர்வமாக சொல்லி இருப்பவைதான் எனினும் போதமும் காணாத போதத்தில் அகரமுதல்வன் மற்றுமொன்றையும் சொல்லுகிறார்
சமீபத்தில் உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டிலிருக்கையில் இறந்தவரின் மனைவி அவர்களின் மகளின் பெயரைச்சொல்லி ‘எங்க சித்ரா பெரியவளான பின்னாடி என் விரலைக்கூட தொட்டதில்லியே எஞ்சாமீ’ என்று பெருங்குரலெடுத்து கதறினார். துக்க வீட்டின் பெண்கள் அனைவரும் ஒரு கணம் திடுக்கிட்டனர்.அதை அவர் ஒரு புகாராகத்தான் சொன்னதாக எனக்குப் பட்டது.
கணவனை போரில் இழந்த பெண்களின் உடலின் சமரையும் போதமும் காணாத போதம் சொல்லுகிறது. உடலின் போரில் அமானுஷ்யமாக வெல்லுகிறார்கள் இதில் வரும் யசோவின் அம்மாவைபோன்ற பெண்கள்
ஒவ்வொரு ஞாயிறன்றும் போதமும் காணாத போதம் நள்ளிரவில் வலையேற்றப்படும். அதன் இணைப்பு வரும் வரை உறக்கமின்றி காத்திருந்து வாசித்திருக்கிறேன்.வெண்முரசு வாசித்த நாட்களுக்கு பிறகு போதமும் காணாத போதம் வாசிக்கத்தான் இரவுகளில் உறங்காமல் காத்திருந்தேன்.
வாசித்தபின் உறக்கம் முற்றிலும் நீங்கி பல இரவுகளை கண்ணீரில் கரைத்திருக்கிறேன். பல பத்திகளை தொடர்ந்து வாசிக்க முடியமால் நிறுத்தி நிறுத்தி உணர்வெழுச்சிகளை மட்டுப்படுத்தி பின்னர் வாசித்திருக்கிறேன்.
25 வாரங்கள் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது. நூல்வனம் வெளியீடு. ஒவ்வொரு வாரமும் காத்திருந்து ஏராளமானோர் வாசித்தோம் என்பதை விடவும் போதமும் காணாத போதம் காட்டிய துயரில் பங்கு கொண்டோம் என்றுதான் சொல்லவேண்டும். கண்கள் ஈரமாகாமல் இதை ஒருவரும் வாசிக்கவேயில்லை.
20 வருடங்களுக்கு முன்னர் கணவனை ஆர்மிக்காரர்களிடம் பறிகொடுத்து, பலநூறு இரவுகளை தனிமையில் கழித்த ஒருத்தி சாவிற்கு பின்னர் மகளாய் கலவியின் சுகம் காணும் அந்த உக்கிர இரவை சொல்லும் அத்தியாயம் பல இரவுகளின் உறக்கத்தை தின்றது.
காதலி நறுமுகையுடன் ஊரைவிட்டுசெல்லும் அப்பனிடம் கேட்கப்படும் ‘’சின்னஞ்சிறுசுகளாக இருக்கிறீர்களே’’ என்னும் கேள்விக்கு ’’எங்கள் நாட்டில் எல்லோரும் சீக்கிரம் வளர்ந்து விடுவோம் துவக்கேந்த வேண்டுமே” என்னும் அவன் பதிலில் முடியும் ஒரு அத்தியாயம் தொடர்ந்த பல இரவுகளையும் பல பகல்களையும் தின்று தீர்த்தது
’’தேவனே ஏன் என்னை கைவிட்டீர்’’ என்னும் விவிலிய வரிகளுடன் ஈரோடு கிருஷ்ணன் அவர்களின் மிகபொருத்தமான அணிந்துரை அமைந்து விட்டிருக்கிறது. //போதமும் காணாத போதம் ஈழத்தின் ஆழத்துக்குள் சென்று துழாவும் பலமுள் தரித்த பாதாளக்கரண்டி// என்னும் கிருஷ்ணனின் வரிகளுக்கு மேலாக இந்நூலை குறித்து மேலதிகம் யாரும் சொல்லமுடியாது.
ஈரோடு கிருஷ்ணனின் அணிந்துரையை வாசிக்கையில் யூத வதை முகாமின் சுவற்றில் யாராலோ எழுதப்பட்டிருந்த ‘’ கடவுள் என ஒருவர் இருப்பாராயேனால் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு இறைஞ்ச வேண்டும்’’ என்னும் வாசகம் நினைவுக்கு வந்தது.
என்ற ஆரூரனின் கேள்வியை இந்த வாசகத்துடன் இணை வைக்கலாம்.
’’உலகம் போற்றும் மனுஷத்துவம் முகம் குப்புற நந்திக்கடலில் வீழ்ந்துகிடந்தது’’ என்னும் அகரமுதல்வனின் ஒருவரியின் நீட்சிதான் மொத்த நூலும்.
போதமும் காணாத போதம் காட்டும் மனிதர்கள் ஒவ்வொருவரும் மிக தனித்துவமானவர்கள். போரென்பதை ஊடகங்களில் மட்டும் அறிந்திருக்கும் நமக்கெல்லாம் அவர்களில் ஒருவரைக்கூட சந்திக்க சாத்தியமில்லை.
அஞ்சு இன்ச் ஷெல் விழுந்ததில் தலையில் பள்ளமுண்டான ஒருவரை நாம் ஒருபோதும் பேருந்துப் பயணமொன்றில் சந்தித்திருக்க மாட்டோம்தானே? துயிலில்லத்தின் விதைகுழிகளை தயார் செய்ய ஊதியம் வேண்டாமென மறுக்குமொருவரை கற்பனையிலும் கண்டதில்லை நாம்
அது போலத்தான் நாலே நாளில் பங்கரை உருவாக்கியது சாதரணமாக உரையாடலில் பேசப்படுமொன்று என்பதயும் நாமறிந்திருக்கமாட்டோம். ஏனெனில் பங்கர்கள் அவர்களின் அன்றாட வாழ்வில் இணைந்திருந்தவை.
வியட்நாம் பெரியப்பா, வீரன், செவிடன் ரத்தினம், கிபிர் அடிச்சு வீரச்சாவடையும் மேஜர் பகீரதன் , புன்னகையுடன் வன்கவர் படையினரிடம் ’’அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதை கடவுளுக்கும் கொடுக்கும் நீங்கள் எங்களுடையதை எங்களுக்குத்தான் அளிக்க வேண்டும்’’ என்னும் புண்ணியன்,
இயக்கத்துக்கு தான் போகாமல் அக்காவை அனுப்பிவிட்டு குற்றவுணர்வில் கதறும் அமலன், சாக்குப்பையில் சடலமாக மூட்டை கட்டப்படும் செட்டித்தாத்தா, ஊத்தைமாமா, ‘’நான் பயப்படலே, அதிகபட்சம் சுடுவாங்கள் அதானே நடக்கும்’’ என்கிற சங்கிலி பெரியப்பா
கழுத்திலும் உள்ளிலும் நஞ்சு கொண்டிருக்கும் சந்தனன், சந்தனனின் தந்தையை சுட்ட சரித்திரன், கொக்குவில் மாமா, அம்மாவை வேசி என்று வைய்யும் தகப்பனை கன்னத்தில் அறையும் அப்பன் என்னும் பெயர்கொண்ட மகனொருவன்
கோவிலில் திருடிவிட்டு முருகனிடமே ’இத்தனை துன்பத்தை தந்த அரசாங்கத்தை தண்டிக்காத நீ என்னையும் தண்டிக்க மாட்டாய்’ என உரையாடும் சங்கன்
தீக்காயம் பட்ட கரியன், பச்சை தூஷணத்தில் மருத்துவனைக்காரர்களை வசைபாடும் கால்கள் நீக்கப்பட்ட ஒருவர், அடுத்த படுக்கையிலிருந்தபடி ’’மரணத்தினாலும் நான் மீதம் வைக்கப்படுவேன் நன்றி வணக்கம்’’ என்று பேருரையாற்றும் போராளி ஒருவர், என அகரமுதல்வன் காட்டும் மனிதர்கள் நமக்கும் உறவாகி விடுகிறார்கள். காந்தி மாமாவை கண்டதும் ’’அட, இவர் கடவுள் பிசாசு நிலத்தின் மாமா’’ என்று மனம் கூவியது
ஷெல்லடியும், கிபிர் தாக்குதலும் தோக்கு சத்தங்களும் நிறைந்து தாய்மண்ணும் முழங்காலிடும் போதும் ஒன்றும் செய்ய முடியாத கடவுள்களும் இருக்கின்றனர் இதில்
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர், காந்தள் மலர் சூடிய கொட்டடிக்காளி, தேக்கங்காட்டு வீரபத்திரர், வறாப்பளி அம்மன்,முல்லைதீவு தேவாலயத்தின் இறைவன், கருங்காலி முனி, பொக்கணை நாக தம்பிரான் சண்டைக்கு செய்தியேதும் அனுப்பாத ஆதிசேஷன், களவவோடை அம்மன், தெல்லிப்பழை துர்க்கை என இடையிடையே அத்தனை துயரிலும் ஒன்றும் செய்ய முடியாத கடவுள்களும் வருகின்றனர்.காளியின் தலையிலும் ஷெல்லடிக் காயமிருக்கிறது.
’’கர்த்தாவே எதுவரைக்கும் நீங்கள் எங்களை உதாசீனபப்டுத்துவீர்? எனும் கேள்வியை புண்ணியனுடன் சேர்ந்து நாமும் ஒருகட்டத்தில் கேட்டுவிடுகிறோம்
இறந்த கணவனின் மூக்கிலும் வாயிலும் பெருகும் குருதியை தன் கர்ப்ப வயிற்றில் எடுத்தெடுத்து பூசிக்கொள்ளும் சுமதியக்கா, கொற்றவை என்னும் பெயர்கொண்ட அவளுக்கு பிறக்கும் பெண்குழந்தை
போர் வெளியேற்றிய பாஸ்பரஸினால் புற்றுநோய் உண்டாகியிருந்த, பங்கருக்குள் மயங்கிக்கிடந்தவனை எந்த பதற்றமும் இல்லாமல் காணும் திலகா
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்ய்பட்டவர்களின் பத்துநாள் குழந்தை புலித்தேவனின் பசியழுகைக்கு வற்றிய முலைகளை அளித்து போக்கு காட்டுகிறாள் பேரன்னை ஒருத்தி
மீள் குடியமர்த்தப்பட்ட நிலத்தின் மண்ணை அள்ளி உடலெங்கும் பூசிக்கொண்டு, ‘’இந்த இடம் ராணுவத்துக்கு சொந்தமானது’’ என்னும் அறிவிப்பு பலகையை மிதித்தேறுகையில் கண்ணிவெடியில் உடல்சிதறி சாகும் சின்னாசி
சின்னாசியின் உடலைதிரட்டி எரிக்கையில் ’தீமூளும் தீமூளுமென’ பாடியபடி முலைதிருகி வான் பார்த்து எறிவதைபோல பாவிக்கும் பெண்கள்
கொல்லப்பட்ட அப்பாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு ’’துரோகமென்றால் என்னம்மா? என்று கேட்கும் மகனை அணைத்துக்கொண்டு ‘’மனுஷராய் பிறந்தது அதுவும் இந்த மண்ணில் பிறந்ததுதான் துரோகம்’’ என்று கதறுகிறாள் ஒர் அன்னை
வீரச்சாவடைந்து சகிக்கமுடியாத கெடுநாற்றத்துடன் பேழையில் கிடக்கிறாள் போராளி அனலி, கூந்தலை அவிழ்த்து விட்டு ஒற்றைக்காலில் நின்றபடிக்கு உணவுண்னும் மனம் பிறழ்ந்த அக்கா, ‘’இஞ்ச எல்லா பிள்ளயளும் பாரம்தான் சுமக்கினம் அது சிலுவையோ துவக்கோ கவலைப்பட ஏதுமில்லை’’ என்று சொல்லும் அம்மா,சமர்க்களத்தில் கருப்பை சிதைந்த ஈகை இவர்களுடன்’’அதியமான் உனக்கு துரோகியோ தியாகியோ அல்ல உன் தந்தை’’ என்று மகனிடம் சொல்லும் ஒரு அன்னையும் இருக்கிறாள்
’’இவ்வளவு யுத்தத்துக்கு மத்தியிலும் எங்கட ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பிறக்கிறார்கள்’’ என்று சொல்லும், கூந்தலில் காட்டுப்பூச்சூடி காமக்களிறை உருவேற்றும் ’’ யுத்தம் ஒழிக ஒழிக ‘’ என்றபடி முயங்கும் யசோ என்று அகரமுதல்வன் இதில் காட்டும் பெண்கள் பிரத்யேகமும் விசேஷமுமானவர்கள்.
பங்கருக்குள் நேசத்துக்குரியவரின் ஆன்மாவை கண்டுகொள்ளும் மூன்று கால் வீமனும் ஒரு பாத்திரம்தான் இதில். இத்தனை துயரிலும் மாமரங்கள் பூக்கின்றன, குளத்து மீன் ருசிக்கின்றது .
தெய்வங்கள் உறைந்த வெளியில் பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்ட கொடுங்காலங்கள் நாம் ஒருபோதும் அறிந்திடாதவை.
அகரமுதல்வனின் மொழியில் காடுறை தெய்வங்கள் கண் மலர்த்தி கசிந்த கண்ணீர் எரியூட்டும் இரவுகளை, உக்கிரமான தாக்குதல்களின் போது காலடியில் இறைஞ்கும் சொற்களை மிதித்து நசுக்கிவிட்டு முன்னேறி ஓடுகின்ற சனங்களை, போர்க்களத்தில் பூ மாதிரி கிடக்கும் போராளி ஒருவனின் மூளையை, காற்றில் அசையும் கருங்காலி மரத்திலிருந்து உதிரும் ரத்தம் கண்டிய பெருவிரலொன்றை, ஆலமரத்தின் வேர் இடுக்கில் கிடக்கும் கால்துண்டொன்றை காணும் நெஞ்சுரமும் நமக்குண்டாகி விடுகின்றது
பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனவைகளை சொல்லிச்செல்லும் கதையோட்டத்தில் காதல் முகிழ்க்கிறது காமம் தகிக்கிறது. காதலின் வெம்மை பொங்கும் ஐந்து அத்தியாயங்களும் இருக்கின்றன இதில்.
ஃப்ளாண்டர்ஸ் பெருவெளியில் நடந்த போரில் பீரங்கி தாக்குதலில் உடல்சிதறி இறந்த உற்ற நண்பனின் உடலை திரட்டி இறப்புச் சடங்குகள் செய்த பின்னர் அங்கேயே ஒரு மருத்துவ ஊர்தியின் அருகில் அமர்ந்து லெஃப்டினெண்ட் ஜான் மெக்ரே எழுதிய
“ஃபிளாண்டர்ஸ் கல்லறைச்
சிலுவைகளுக்கிடையில்
காற்றில் ஆடுகின்றன பாப்பிச்செடிகள்,
என்று தொடங்கும் கவிதை மிகப்புகழ் பெற்றது, அக் கவிதைக்கு பின்னரே மாவீரர் நினைவு நாளில் செம்பட்டு பாப்பி மலர்களை அணிந்துகொள்ளும் வழக்கம் வந்தது. மரணத்துக்கிடையில் மலர்ந்திருந்த பாப்பிச்செடிகள் இந்த கவிதையை மிகச்சிறப்பாக்கி விட்டிருக்கி்னறன.
அவளருளாலே அவள் தாள் வணங்கி, மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகளின் தாலாட்டில் மலர்ந்திருக்கும் பிரதீபாவை புதைத்த மேட்டில் படுத்துக்கொள்ளும் காதலனை, காயங்களின் தழும்பில் முத்தம் ஈன்று மூர்ச்சையாகி போகும் வரை முயங்கும் ஆதாவை, அங்கவீனமாய் போனபின்னும் புல்லாங்குழலின் கீதம் கேட்கும் நறுமுகையின் உடலை தகிக்கும் தீவெளியில் அணைத்துகொண்டு முத்தமிடும் காதலனை , உதிரும் மலரை மீண்டும் ஏந்தும் மலரினும் மெல்லிய காமத்தை, மஞ்ஞையின், யசோவின் காதலை சொல்லும் மொழியும் துயரை சொல்லிய அதே அகரமுதல்வனுடையதுதான் என்பதை வாசித்தாலே நம்ப முடியும்.
நெஞ்சுரத்தில் நிலம் விளைவிக்கும் அதிபத்தன் எனும் நண்பனுக்காக அணையாவிளக்கொன்றை ஏந்தும் அம்மாவை சொல்கிறான் ஒரு மகன். அச்சுடரை அணையாமல் பாதுகாக்கும் அவளின் உயிருருகிய வெளிச்சத்தில் வன்னியெங்கும் ஒளிபெருகுகிகிறது.
வித்துடல்கள் பொலிகின்றன என்பதை போர்ச்சூழலில் பிறந்த அகரமுதல்வன் சொல்லுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது
ஈழத்தமிழின் இனிமையையும் தாண்டி தெரியும் துயரம், துயரின் மத்தியிலும் பெருகித் தகிக்கும் காமம், இறப்பினாலும் பிரிக்க முடியாத காதல், சொந்த நிலத்தின் பேரில் போராளிகளுக்கிருக்கும் பிணைப்பு என இந்த படைப்பின் கலவை வேறெதிலும் கண்டதில்லை, அகரமுதல்வனுக்கு அன்பும் வாழ்த்துக்களும்!
துயரின் இருளிலும் போதமும் காணாத போதம் காட்டும் போர் முற்றும், தாய்நிலமும், வாழ்வும் மீளும் என்னும் நம்பிக்கையையும், ஆயுதங்களுக்கு மத்தியில் இரண்டு தோமா மலர்களையும் வைத்துக் கொண்டிருக்கிற ஒருவனையும் வாசிக்கையில்
தெற்குப்புறத்தில் கிளைகளெங்கும் அடர்ந்து பழுத்திருக்கும் செங்கனிகளை நம் காதலின் குறியீடாக கை நிறைய அள்ளிக்கொண்டு என் பொருட்டு வீட்டுக்கு போகிறாயா?
என்னும் வாங் வெய்யின் ஒற்றை இதயம் என்னும் தலைப்பிடப்பட்ட மற்றுமொரு கவிதை நினைவுக்கு வருகிறது.
இரண்டு வெவ்வேறு வகையான தாவரங்கள் இணைத்து உருவாக்கப்படும் கலப்புயிரி தாவரங்களுக்கான் வலிமை மிகுதியாகவே இருக்கும். அப்படித்தான் சொந்த நிலத்தின் நினைவுகளுடன் புதிய நிலத்தில் வாழும் அகரமுதல்வனின் வலிமையும், .
குமர குருபர சுவாமிகள் அருளிய திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பாவின் போதமும் காணாத போதம் எனும் வரி இப்படைப்பிற்கு வெகு பொருத்தமான தலைப்பாக அமைந்திருக்கிறது.
சொந்த நிலம் பாவித்த சுகப்பொழுதுகளை மீளத் தீண்டுகிறேன் என் அகமெரியும் சந்தம் இசைக்கிறேன் செவியுள்ளோர் கேட்கட்டும் என்று சொல்லும் அகரமுதல்வன் ’’ஈழமண்ணில் தீ என உறையும் திசைகளின் ஒளிக்கதிர்களை தான் இப்படைப்பில் படர விட்டிருக்கிறேன், சனங்களின் சீவிதத்தில் ஒளி பெருகுக’’ என்கிறார்இறுதியில்.
வெள்ளிமலை தாவரவியல் குழுவினர் இன்று வரை தொடர்பில் இருக்கிறார்கள். நானே அதிகாலையில் எழுந்து நாளைத்துவங்கும் ஒருத்தி என்றால் அதில் சிலர் நான் எழும்போதே எனக்கென ஏதேனும் தகவலோ கேள்வியோ புகைப்படமோ வைத்திருப்பார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவர்களுடன் இணைந்து நானும் புதிதுபுதுதாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
இன்று காலை பெங்களூர் பிரியா நிறைந்து பூத்திருந்த எள் வயலின் புகைப்படம் அனுப்பி எள்ளின் வகைகளைக்குறித்து கேட்டிருந்தார். நான் அதன் கருப்பு வெள்ளைபிரவுன் சிவப்பு வகைகளையும் அதன் ஆங்கிலப்பெயரான Sesame , தாவர அறிவியல் பெயரான Sesamum indicum (Sesamum indicum subsp. indicum)என்பதையெல்லாம் காரில் கல்லூரிக்கு வருகையில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அறிவியல் பெயரிலிருந்து வந்த இதன் sesame என்னும் ஆங்கிலப்பெயருக்குப்பின்னால் ஒருசுவாரஸ்யம் இருக்கிறது.
எள் இந்தியாவுக்கு சொந்தமான பயிர்.மனிதர்கள் பயிரிட்ட முதல் எண்ணெய்பயிர் எள் தான். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள் இந்தியாவில் பயிராகிறது. இந்து மதம் விஷ்ணுவின் வியர்வையிலிருந்து உருவான பயிர் என்று எள்ளைச்சொல்கிறது. தரிசு நிலங்களில் கூட எள் பயிராகும். பல மதங்களில் எள்ளும் எள் எண்ணெயும்புனிதமானதாகக் கருதப்படுகிறது.
பெடாலியேசியைச்சேர்ந்த (Pedaliaceae) எள்ளின் கனி எனப்படும் pods மிகச்சுவாரஸ்யமானது. பல நாகரீகங்களில் சத்துக்கள் அடங்கிய இதன் சிறு விதைகள் அந்த கனியிலிருந்து வெடித்து திறந்து வெளியாவதைப் புதையல் கிடைத்தது போல் எனக்கொள்வார்கள். எனவேதான் open sesame என்பது புதையல் இருக்கும் இடம் திறப்பதற்கான மந்திரச்சொல்லாக இருக்கிறது.
அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையை திறக்க அலி ’’திறந்திடு சீசேம்’’ என்று சொல்வது இதனால்தான். பாபிலோனியாவில் பல மந்திர தந்திர வித்தைகளில் எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் உபயோகத்திலிருக்கிறது. யூதர்களின் மாயாவாத சடங்குகளில் எள் சொர்க்கத்தின் இன்னொரு பெயராகக் கருதப்படுகிறது. ஹீப்ரூ மொழியிலும் எள்ள்ளுக்கு கடவுள் என்னும் பொருள் இருக்கிறது
sesame என்னும் கிரேக்கச்சொல் பழமையான செமிடிக் மொழிகள் ஒன்றான, இப்போது புழக்கத்தில் இல்லாத பண்டைய மெசபடோமியர்களின் மொழியான அக்காடியனின் (Akkadian) தாவர எண்ணெய் என்னும் பொருள் கொண்ட் šamaššamu என்னும் சொல்லில் இருந்து உருவானது.
57% எண்ணெய் அளவு கொண்டிருக்கும் எள்ளின் பல பயன்களில் ஒன்று அதிலிருக்கும் லிக்னன்களான sesamin & sesamolin ஆகியவற்றின் ரத்தக்கொழுப்பைக்குறைக்கும் இயல்பு. இதன் தமிழ்ப்பெயரில் ஒன்றான திலம் என்பதிலிருந்துதான் ஆங்கிலப்பெயரான் til என்பது வந்திருக்க வேண்டும்.எள் தான் எண்ணெய்ப்பயிர்களின் ராணி.
நேற்று Dr செளமியா அவரது தோட்டதில் இருந்த எள் சக்களத்தி என்று சொல்லப்படும் எள் பயிரைப்போலவே இருக்கும் Cleome monophylla வின் புகைப்படத்தை அனுப்பி இருந்தாள். எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள் தாவரங்களில் !
அகரமுதல்வனின் வாட்ஸ்அப் நிலைத்தகவலில் ரத்தச்சிவப்பில் ஒரு குட்டி தாலியா மலரைப் பார்த்தேன். அத்தனை வசீகரமாக இருந்தது பார்க்க. color wheel -ல் பச்சைக்கு நேர் எதிரில் இருப்பது சிவப்பு என்பதால் பச்சை இலைகளுக்கிடையில் தெரிந்த அந்த மலர் அழகான அழகாயிருந்தது.
எனக்குத் தாலியாக்கள் மீதும் பிரியம்தான். பள்ளி கல்லூரிக் காலங்களில் வீட்டு வாசலில் காலை நேரத்தில் ஊட்டி ரோஜாவும் தாலியாக்களும் விற்கப்படும். நான் ஊட்டி ரோஜாக்களை விரும்பியதில்லை. அது ஒரு வாரம் வரை வாடாமலிருப்பதும் அடுத்தநாளில் இருந்தே இதழ்களில் விளிம்புகளில் கருப்புப் படிந்துவிடுவதும், கனமாக இருப்பதும் காரணமென்றாலும் முதன்மைக்காரணம் அது மலராமல் கூம்பியே இருப்பதுதான்.எனக்கு மலரென்றால் மலர்ந்திருக்க வேண்டும்.
தாலியா அப்படியல்ல குழந்தையொன்று சிரிப்பதைப் போல முழுக்க மலர்ந்திருக்கும் அதில் பல நிறங்கள் இருந்தாலும் நான் அதிகம் தேர்ந்தெடுப்பது வெள்ளையும் இளஞ்சிவப்பும்தான். கல்லூரி முதல் அவ்ருடம் படிக்கையில் (நானும் மித்ராவும் ஒன்றாகத்தான் கல்லூரிக்குள் நுழைந்தோம்)மித்ராவின் கல்லூரித்தோழர் அமல்ராஜ் கம்பீரமாக ஒரு சைக்கிளில் பூக்களை விற்றுக்கொண்டு வருவார். கல்லூரிக்குச் செல்ல அரை மணி நேரம் முன்பு அவர் வீடு வீடாகப் பூக்களைச் சைக்கிளின் பின்னிருக்கும் கூடையில் வைத்துக்கொண்டு நிமிர்வுடன் வருவார். ஒருபோதும் அந்தச்செயலில் அவர் வருத்தமுற்றதும் தாழ்வாக உணர்ந்ததும் இல்லை. குளித்து நல்ல உடையணிந்து வரும் அவர் அப்படியே அதே உடையில் பின்னர் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் வந்துவிடுவார். பிற்பாடு அவர் உடற்பயிற்சி இயக்குனராகியதை அறிந்து கொண்டேன், அவரை, அவரது இளமைக்காலத்தை அவருடன் பொருளாதாரம் படித்த மித்ராவின் தங்கை நினைவு கூறுகிறாள் என்பதை அவர் கற்பனை கூடச் செய்திருக்க மாட்டார். தனக்கான செலவுகளுக்காகப் படிக்கையிலேயே ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்த அவர்மீது எனக்கு அப்போதும் இப்போதும் பெரும் மரியாதை உண்டு.
தாலியாவுக்கு வருகிறேன். அப்படி நான் தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொண்டுதான் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அரிதாக டிசம்பர் பூச்சரமும் வைப்பதுண்டு. பின்னல் நல்ல அடர்த்தியாக இடைவரை நீண்டிருக்கும். (அந்த அடர்ந்த நீண்ட கூந்தலைத்தான் சரணுக்கும் தருணுக்குமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டேன்).மித்ராவுக்கு என்னைக் காட்டிலும் நீண்ட அடர்ந்த பின்னல். இப்போது தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொள்ளும் பெண்களைப் பார்ப்பதில்லை.ஏன் பூச்சரம் வைத்துக் கொள்பவர்களும் அதிகமில்லை.
அந்தப்புகைப்படத்தில் தாலியா அப்படி கொள்ளை அழகாக இருந்தது. அநேகமாக அகரமுதல்வன் அதை ஒரு மலை வாசஸ்தலத்தில் எடுத்திருக்கக்கூடும் ஏனெனில் உடனிருந்த புகைப்படத்தில் ஒரு ஆப்பிரிக்கன் லில்லியும் இருந்தது. இவையிரண்டுமே கடல்மட்டத்துக்கு 1000 அடி மேலே இருக்கும் பகுதிகளில் மட்டுமே செழிப்பாக வளரும்.
தாலியாக்கள் வெகுசுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட மலர்கள்.
மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட இவை சூரியகாந்தியின் குடும்பமான அஸ்டரேசியைச் சேர்ந்தவை. தாலியா பேரினத்தில் சுமார் 50 சிற்றினங்களும் ஆயிரக்கணக்கான நிறங்களில் மலர்களும் இருக்கின்றன.
தாலியாக்கள் 14-லிலிருந்து 16-ம் நூற்றாண்டுவரை மீசோஅமெரிக்கப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி இனக்குழுக்களின் தொகுப்பான ஆஸ்டெக்குகளின் தாவரமாக மட்டுமே இருந்தது. ஸ்பானிஷ் படையெடுப்பின் பின்னரே தாலியாக்கள் ஐரோப்பாவிற்கு அறிமுகமாயின.
1525-ல் மெக்ஸிகோவிற்கு வந்த ஸ்பேனியர்கள் இந்த அழகிய மலரைப் பார்த்தார்கள் 1570-களில் மெக்ஸிகோவிற்கு ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் மன்னரால் அனுப்பப்பட்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் ஃப்ரான்சிஸ்கோதான் முதன் முதலாகத் தாலியாக்களை எழுத்தில் விவரித்தவர். மன்னரால் அந்த ப்பிரதேசத்தின் இயற்கைப் பொருட்களைக் குறித்து விரிவாக அறிந்துகொண்டு வரும்படி பிரான்சிஸ்கோ ஆணையிடப்பட்டிருந்தார். அச்சமயத்தில் தாலியாவின் வகைகளில் சிலவற்றின் கிழங்குகளைப் பழங்குடியினர் உணவாகப் பயன்படுத்துவதையும் ஃப்ரான்சிஸ்கோ ஆவணப்படுத்தினார்.
தண்டுகள் உள்ளே காலியாக இருப்பதைக்குறிக்கும் “water pipe”, “water pipe flower”, “hollow stem flower”, “cane flower” போன்ற பெயர்களில் தாலியாக்கள் அப்போது அஸ்டெக்குகளின் மொழியில் அழைக்கப்பட்டன. 7 வருடங்கள் மெக்சிகோவின் தாவரங்களை அறிந்து ஆராய்ந்து முடிவுகளை நான்கு தொகுதிகளாகப் பிரசுரித்த ஃப்ரான்சிஸ் மிக அழகிய சித்திரங்களையும் கைப்பட வரைந்திருந்தார்.
Nova Plantarum, Animalium et Mineralium Mexicanorum Historia, என்னும் அந்த நூல் 1578-ல் வெளியானது. அந்த நூலில் தாலியாவின் இரு சிற்றினங்களை பிரான்சிஸ்கோ விவரித்திருந்தார்.( Dahlia pinnata & Dahlia imperialis)1615-ல் அவை லத்தீன மொழியாக்கம் செய்யபட்டு இரு தொகுதிகளாக வெளியானது.
1787-ல் இரத்தச்சிவப்புச் சாயம் அளிக்கும் cochineal பூச்சிகளைத் திருடிவருவதற்காக மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்ட ஃப்ரெஞ்ச் தாவரவியலாளர் நிக்கோலஸ் (Nicolas-Joseph Thiéry de Menonville) இந்தப் பிரகாசமான மலர்களைக் குறித்தும் ஆவணப்படுத்தினார். நிகோலஸ் அவருக்குச் சொல்லி அனுபியப்டி cochineal பூச்சிகளி திருடவில்லை மாறாக அவற்றை மெக்ஸிகோ பழங்குடியினரிடமிருந்து விலைக்கு வாங்கி அவை வளரும் சப்பாத்திக்கள்ளி வகைகளைத் தாவரவியல் பூங்காவில் வளர்த்து அந்தபூச்சிகளை பெருகச்செய்து அதற்கான பாராட்டையும் பெற்றார். இன்றும் அந்தப்பூச்சிகள் அந்த சப்பாதிக்கள்ளிகளில் தான் வாழ்கின்றன. இவற்றினல் தான் அடர்சிவப்பு நிறம் “coccineus,” எனப்பெயர் பெற்றது.
தாவரங்களின அறிவியல் பெயர்களில் காக்சினியா என்று இருப்பவைகளின் மலர்கள் எல்லாம் குருதிச்சிவப்பில் இருப்பதைப் பார்கக்லாம். அகரமுதல்வன் எடுத்த புகைப்படத்தில் இருப்பது Dahlia coccinea மலர்தான். ரத்தச்சிவப்பு தெட்சி மலரின் அறிவியல் பெயர் இக்ஸோரா காக்சீனியா.
பின்னர் பல வருடங்கள் தாலியாவின் நறுக்கப்பட்ட தண்டுகளும் விதைகளும் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு மெக்ஸிகோவிலிருந்து அனுப்பப்பட்டன. பின்னர் படிப்படியாக உலகநாடுகள் அனைத்திற்கும் தாலியா அறிமுகமானது. ஆயிரக்கணக்கான கலப்பின வகைகளும் உருவாகின.
தாலியா என்னும் இதன் பேரினப் பெயரிலேயே குழப்பம் நிலவியது. தாவர வகைப்பாட்டியலை நிறுவியவரான லின்னேயஸ் அவரின் மாணவரான Anders Dahl, என்பவரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியா என்னும் பேரினத்தை வைத்தார் என பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தாலியா ஐரோப்பாவுக்கு அறிமுகமான 1789-க்கு 11 வருடங்கள் முன்பே லின்னேயஸ் இறந்துவிட்டார். மேட்ரிட் தாவரவியல் பூங்காவின் இயக்குனரான Abbe Cavanilles, தான் Anders Dahl யின் பெயரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியாவுக்கு வைத்தார் என்பது பிற்பாடு அறியபட்டது.
1805-ல் ஜெர்மானிய தாவரவியலாளர் கார்ல் (Carl Ludwig Willdenow, asserting) தாலியாவை ஜார்ஜினா (Georgina) என்று பெயர் மாற்றம் செய்தார். 1810-ல் எழுத்துபூர்வமாக இம்மலர் மீண்டும் தாலியா எனக்குறிப்பட்டது.
கடல் மட்டத்துக்கு மேல் 1,500 – 3,700 m உயரதில் செழித்து வளரும் தாலியாக்கள் பனிப்பொழிவற்ற உலகின் எல்லா பாகங்களிலும் வளருகின்றன.
தாலியாக்கள் பல வருடம் மலரளிக்கும் பெரினியல் வகையைச் சேர்ந்தவை. அவற்றின் மலர் எனச் சொல்லப்படுவது உண்மையில் மலர்த்தலை என்னும் மஞ்சரிதான். மலர்த்தலைகள் பிரகாசமான வண்ணங்களில் இருக்கும் பெரும்பாலும் தாலியாக்களில் மணம் இருக்காது. மகரந்தச்சேர்க்கைக்கு பூச்சிகளைக் கவர பிரகாசமான அதன் வண்ணங்களே போதுமென்பதால் நறுமணம் இருப்பதில்லை.
இங்கிலந்தின் புகழ்பெற்ற ராயல் ஹார்டிகல்சர் அமைப்பு 1969-ல் சர்வதேச தாலியா பெயர்களின் பதிவேட்டை உருவாக்கியது இந்தp பதிவேடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.(The International Register of Dahlia Names) தாலியாக்களின் உருவாக்கத்திலும் அவற்றின் உலகளாவிய பரவலிலும் மிக முக்கியப்பங்காற்றியவராக நியூயார்க்கின் ஜார்ஜ் தோர் பர்ன் (George C. Thorburn) அறியபப்டுகிறார்.
1963-ல் தாலியா மெக்சிகோவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது.
ஒற்றை அடுக்கு, பல அடுக்கு , மிகப்பெரியவை, மிகக்குட்டியான மினி வகைகள், நாடாபோன்ற இதழ்கொண்டவை, வெளியடுக்கு பெரிதாகவும் உள்ளடக்கு சிறியதாகவும் இருப்பவை பந்துபோன்ற பொம்பன் (Pompon) வகைகள் என இப்போது சுமார் 5700 வகை தாலியாக்கள் நீலத்தைத்தவிர மற்ற எல்லா நிறங்களிலும், நிறக்கலவைகளிலும் இருக்கின்றன.
எடின்பர்க் தோட்டக்கலைதுறை1846- ல் நீல நிற தாலியாக்களை உருவாக்குபவர்களுக்கு 2000 பவுண்டு பரிசு அறிவித்தது.அது இன்று வரை உருவாக்கபடவில்லை.
அதன் காரணம் தாவரவியலாளரல்லாதோருக்கு புரிந்துகொள்ளக் கடினமென்றாலும் எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.
நீல நிறம் உருவாக ஆந்தோசையானின் என்னும் நிறமி தேவை. தாலியாக்களில் ஆந்தோசையானின்கள் உள்ளன எனினும் தூய நீல நிறம் உருவாக delphinidin என்னும் ஆந்தோசையானின் ஒரு வகை நிறமியில் 6 ஹைட்ராக்சைல் தொகுப்புகள் இருந்தாக வேண்டும் ஆனால் இன்று வரையிலும் தாலியாக்களில் 5 ஹைட்ராக்சைல் தொகுப்புக்களே உருவாகி இருக்கின்றன.
பொதுவாகவே இயற்கையில் நீல நிற மலர்கள் மிக அரியவை . நூற்றாண்டுகளாகத் தாவரப் பெருக்கவியலாளர்கள் முயற்சித்தும் இன்று வரை ட்யூலிப்களில் நீல நிற மலர்களைக் கொண்டு வர முடியவில்லை. இப்போது இருப்பவை எல்லாம் almost blue என்னும் வகையில் வருபவைதான். இயற்கையாக நீல நிறத்தில் ஹைட்ராஞ்சியா, கார்ன் மலர்கள், இமாலய பாப்பிகள் மற்றும் டெல்பீனியம் போன்ற ஒருசிலமலர்களே இருக்கின்றன.
பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தாலியா உலகின் மிக விரும்பப்படும் தோட்டமலராக இருக்கிறது.
ரிதன்யாவின் மரணம் செய்தித்தாளும் தொலைக்காட்சியும் இல்லாத வீடென்பதால் தாமதமாகத் தெரிந்தது. அவளது கடைசிக்குரல் பதிவுகளையும் துரதிர்ஷ்டவசமாகக் கேட்க வேண்டி வந்தது.
அவள் குரலில் இருந்த குழந்தைத்தனம்தான் இப்போது வரை மனதைப் பிசைகிறது. உண்மையில் ரிதன்யாவுக்குத் தன்னை மாய்த்துக் கொள்வது என்றால் என்னவென்றே தெரியாமல் அதைச் செய்து கொண்டிருக்கிறாள்.
தன் அப்பாவுக்குத் தான் பூட்டி வைத்துவிட்டு வந்திருக்கும் ஒரு ட்ராயரில் இருக்கும் நகைகளை அத்தனை அறியாத்தன்மையுடன் மயில் தோடு ஒத்தை வளையல் அத்தை கொடுத்த செயின் என்று பட்டியலிடுகிறாள். அந்தக் குழந்தையின் அறியாமையை என்னவென்று சொல்வது?
அடுத்து தென்னைமரத்துக்கு வைக்கும் மிக வீரியமுள்ள விஷத்தை சாப்பிடப்போகிறாள், அந்த கொடும் நஞ்சு அவளை என்னவெல்லாம் செய்யும், சாவு என்றால் என்ன இதெல்லாம் ஒன்றுமே தெரியாமல் எல்லா கதவும் அவள் முன்னால் அறைந்து சாத்தப்பபட்ட தன்னிரக்கத்தில் நகைகளைப் பட்டியலிடுகிறாள் பாவம்.
அந்தக் குறிப்பிட்ட மருந்து மிகக் கொடுமையான விளைவுகளை உண்டாக்கியே உயிரைப்போக்கும் அதைச் சாப்பிட்டபின்னர் பிழைப்பது துர்லபம். பல வருடங்களுக்கு முன்பு சின்னு மாமனின் மகன் மிக இளம் வயதில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட ஒரு தகராறில் மனமுடைந்து இதைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது நானும் உடன் இருந்தேன். அவன் துடித்த துடிப்பும் பட்டபாடும் அப்படியே இன்னும் நினைவிலிருக்கிறது. மருத்துவரிடம் அவனைக்காப்பாற்ற வழி இருக்கிறதாஎன்று கேட்டேன் ‘’ இல்லைங்க அந்த மருந்து உள்ளே போறப்பவே அது போற வழியெல்லாம் அழிச்சுட்டே போகும்’’ என்றார். ரிதன்யா சாப்பிட்டது அதைத்தான்.
ரிதன்யா செல்வந்தர் வீட்டுப்பெண் என்பதாலும் இப்போது ஊடக வளர்ச்சி மிக விரிவாகியிருப்பதாலும் இந்த விஷயம் இத்தனை கவனம் பெற்றிருக்கிறது ஆனால் கொங்குப் பகுதியில் இது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொள்ளாச்சி தென்னைநகரென்பதால் இந்த மருந்து மிக எளிதில் கிடைக்குமொன்றாகத்தான் இப்போது வரை இருக்கிறது.
முதுகலை படித்த, கார் ஒட்டத் தெரிந்த ரிதன்யா செய்துகொண்டது தற்கொலை அல்ல அவளுடையது ஆணவக்கொலைதான். அவளைப்போல் பலருக்கு இப்படி இங்கு நடந்திருக்கிறது நடந்துகொண்டிருக்கிறது நாளையும் நடக்கும்.
இன்றைய செய்தித்தாள்களில் மகள் வேற்றுச்சாதியில் கல்யாணம் செய்துகொண்டதால் ரயில் முன் பாய்ந்து இறந்து போன அரசு அதிகாரி தம்பதிகளைக் குறித்துப் பார்த்த போதும் இதுதான் தோன்றியது. குடும்ப கெளரவம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றைக்காப்பாற்ற அந்தப் பெண்ணுக்கு வாழ்நாள் முழ்க்க வாழவே முடியாத அளவுக்குக் குற்ற உணர்வை அளிப்பதைத் தவிர அந்தத் தற்கொலைக்கு வேறெந்த நோக்கமும் இல்லை.
இந்தக் கிராமத்தில் நான் வீடு கட்டி வந்த புதிதில் பக்கத்தில் ஒரு வீட்டில் மகளுக்குக் கல்யாணம். வீடு கட்டத்துவங்கி பணமுடையால் அதை முடிக்க முடியாமல் அவசரமாகப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள். பாதி முடிந்த அந்த வீட்டில் மணமக்களுக்கு முதலிரவு நடந்த அன்று இந்தப்பகுதி வழக்கமாகச் சந்தகை செய்து முதலில் மணமக்கள் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்று விட்டார்கள் மீதமிருந்த சந்தகையில் விஷம் கலந்து மணப்பெண்ணின் தம்பி மற்றும் பாட்டிக்கும் கொடுத்துத் தாங்களும் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டார்கள் பெற்றோர்கள் இருவரும்.
காலையில் தன்னை வந்து யாரேனும் கதவைத்தட்டி எழுப்புவார்கள் என்று வெட்கத்துடன் காத்திருந்து காத்திருந்து வேறு வழியின்றி கதவைத் தானே திறந்துகொண்டு வந்த அந்தப்பெண் பார்த்தது சடலமான பெற்றோர்களையும் உயிருக்குப்போராடும் தம்பியையும் பாட்டியையும்தான். எத்தனை முட்டாள் தனம் அத்தனை கடன் வாங்கி வீடுகட்டி மேலும் கடன் வாங்கி கல்யாணம் செய்துவைத்து அந்தக் கல்யாணத்தில் அந்தப்பெண் வாழவே முடியாதபடிக்கு அன்றைக்கே செத்துப்போனார்கள். அந்த முட்டாள் பெற்றோர்கள். உலகம் போய்க்கொண்டிருக்கும் திசைக்கு நேர் எதிர் திசையில் செல்பவர்கள் கொங்குப் பகுதி ஆட்கள்.
உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்னுமறிதல் சிறிதும் இல்லாமல் தாங்கள் காலம் காலமாக வசிக்கும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் இவர்கள்.
உண்மையில் ரிதன்யாவின் புகுந்தவீட்டினரையும் கணவன் கவினையும் வரிந்துகட்டிக்கொண்டு குற்றம் சொல்லும் அவளது சுற்றம் உட்பட்ட பொதுமக்கள் பலருமே அவள் அப்படி செய்ததற்கு காரணமான கொங்குப் பகுதியினரின் குடும்ப கெளரவத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்னும் முட்டாள்தனத்தினால் தான் இது நடந்தது என்பதைக் கவனிக்கவே இல்லையா? உண்மையில் ரிதன்யாவைக் கொன்றது இந்த வெற்றுஆணவம்தான்.
நம்ம வீட்டுப் பெண் நம் சாதியில்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் கல்யாண வாழ்க்கையில் என்ன இடர் வந்தாலும் அவள் ஒருபோதும் கணவன் என்னும் கடவுளை விட்டுவிட்டு திரும்ப வந்துவிடக்கூடாது என்பதை சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட, அப்படியும் தாங்கமுடியாமல் 5 முறை புகார் சொல்லி ஒவ்வொரு முறையும் அறிவுரையும் அறவுரையும் சொல்லி திருப்பி அனுப்பப்பட்ட ரிதன்யாதான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.
இப்படி எனக்குப் பல பெயர்களில் பிறந்து , தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாக்களைத் தெரியும். இன்னும் செத்துப்போகமால் தென்னை மர விஷத்தை குடித்தால் உண்டாகும் விளைவுகளைக்காட்டிலும் நூறுமடங்கு துயரை, வேதனையை உள்ளுக்குள் சகித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் ரிதன்யாக்களையும் அறிவேன்.
இந்க்த கொங்குப்பகுதி ஆட்களைக் காட்டுமிராண்டிகள் என முன்பு எண்ணியதுண்டு. ஆனால் பழங்குடித்தாவரவியலில் ஈடுபட்டப் பின்னர் காட்டில் இருப்பவர்களை கொங்குப்பகுதியினருடன் ஒப்பிட்டுக் கேவலப்படுத்தியதை எண்ணி வருந்தி இருக்கிறேன். ரிதன்யாவின் அப்பா அம்மா பேசுவதை அவ்வப்போது பல்லைக் கடித்துக்கொண்டுதான் பார்க்கிறேன். முத்தம் கொடுத்ததை, செல்லம் கொடுத்ததை, கல்வி கொடுத்ததை எல்லாம் சொல்லிச் சொல்லி அழும் அவர்கள், வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை அவளுக்கு அளிக்கவேயில்லை. என்னவானாலும் சகித்துத்கொண்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால்
எத்தனையோ செலவழித்துச் செய்த கல்யாணம் கேள்விக்குரியதாகிவிடும் குடும்ப கவுரவம் என்னும் மண்ணாங்கட்டி உடைந்துவிடும் என்றுதான் இங்கு எப்போதும் சொல்லப்படுமொன்று.இப்படியான பஞ்சாயத்துகள் இங்கு வாராவாரம் நடப்பதை நானறிவென்.
உடலெங்கும் கடித்துவைத்த ஒரு கணவனுடன் சகித்துக்கொண்டு வாழும்படி சொன்ன ஒரு தகப்பன் இருக்கிறார் அதைச் சொல்லிவிட்டு உடலிலிருந்த கடிபட்ட காயங்களுக்கு அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றது அந்தக்குடும்பம்.
பெண்கள் மடியில் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெருஞ்சுமை இங்கு பெற்றோர்களுக்கு, அவர்களை கல்யாணம் செய்து கொடுத்து விட்டால் தீர்ந்தது சுமை. இதோ இந்த வாரம், இறுதி ஆண்டில் தாவரவியல் படித்துக்கொண்டிருக்கும் மாணவிக்கு கல்யாணம் என்று வந்தார்கள். எத்தனையோ எடுத்துச் சொன்னேன் மிக இளம் வயது இன்னும் அவள் டிகிரி முடிக்கச் சில மாதங்கள் தான் இருக்கிறது. கொஞ்சம் தாமதிக்கக்கூடாதா? அவள் டிகிரி முடித்து அக்கம்பக்கம் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிகொடுத்து 3000. 4000 சம்பாதிக்கும் வாய்ப்பையும் ஏன் கெடுக்கிறீர்கள் என்று எத்தனை சொல்லியும் கேட்கவில்லை. இப்படி வருடா வருடம் நடந்துகொண்டே இருக்கிறது.
சாம்பவிக்கு நாங்கள் நேரடியாக இப்படி எதேனும் நடந்தால் சரி செய்யவே முடியாதென்றால் புறப்பட்டு வந்துவிடு நாங்கள் இருக்கிறோம் என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால் அவள் வாழ்வில் சவால்களைச் சந்திக்க போதுமான தைரியம் உள்ளவளாக வளர்ந்திருப்பதை உறுதி செய்திருக்கிறோம்.
இன்னொரு சாதியில் காதல் மணம் செய்து கொண்ட பெண்களை அடித்துக் கொன்றவர்களின் கதைகளை நான் இளமை முதலே கேட்டிருக்கிறேன்.
பல காதலை முறித்து, அந்தக் காதலை உறவினர்களின் முன்பாக கூட்டம்போட்டுச் சொல்லும் பழக்கமும் இங்கு உண்டு. இப்படி விவாதித்து அந்தப் பெண்ணைச் சுயசாதியில் கல்யாணம் செய்துகொடுத்து அந்தக் கணவனுக்கு வெகுசீக்கிரம் விஷயம் தெரியவந்து பின்னர் காதலித்தவனை மறக்க முடியாமல், சந்தேகப்படும் கணவனுடன் வாழவும் முடியாமல் பிணம்போல் வாழும் மகளுக்கு வருடா வருடம் தவறாமல் சீர் செய்யும் பெற்றோரால் ஆனதுதான் இந்தச் சமூகம். இந்தச் சமூகத்தில் வெற்று ஆணவம் மட்டுமே இருக்கிறது. அறிவென்பது துளியும் இல்லை உணர்வுகளுக்கோ உயிருக்கோ வாழ்க்கைக்கோ எந்தப்பொருளுமில்லாத ஒரு முட்டாள் சமூகம்இது. இதை இந்தச் சமூகத்தின் உள்ளிருந்துகொண்டே தான் சொல்கிறேன்.
சென்ற மாதம் கூடச் சொந்தத்தில் ஒரு திருமணம், அந்த மாப்பிள்ளைப் பையன் வேறு சமூகப் பெண்ணுடன் காதலில் இருந்தான். காதலை முறித்து, என் பிணத்தைத் தாண்டித்தான் அவளைக்கலயாணம் செய்யப்போகனும் போன்ற அரதப்பழசான பொய்யான மிரட்டல்களால் அவனைப்பணிய வைத்து சொந்தச்சாதியில் கல்யாணம் நடந்தது.
மாப்பிள்ளை முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அந்த அறியா மணப்பெபெண் மலர்ந்து சிரித்தபடி மேடையில் இருந்தாள். எப்படி அவளுடன் அவன் மகிழ்ந்து வாழ்க்கையை நடத்துவான்? மாப்பிள்ளையின் பெற்றோர் வாய்கொள்ளாச் சிரிப்புடன் வரேவேற்பில் இருந்தார்கள். சாப்பாடெல்லாம் பரவாயில்லிங்களா? என்று என்னிடம் கேட்டார், தலையசைத்துவிட்டு வந்தேன். அந்த முறிந்த காதலில் இருக்கும் அந்தப் பெண்ணின் மனநிலையையும், அவளை ஏமாற்றியதாகி விட்டிருக்கும் நிலையில் இருக்கும் அந்தப் பையனின் மனதையும் எண்ணிக்கொண்டேன்
எனக்கு ஏதேனும் ஒரு அதிகாரம் கிடைத்தல் இந்தச்சாதியின் பெருசுகளை ஆண் பெண் வேறுபாடில்லாமல் அப்படியே அள்ளிப் போட்டு அந்தமானுக்கப்பால் இருக்கும் ஒரு தனித்தீவில் கொண்டு போய் விட்டுவிடுவேன்.
என் மாணவர்களிடம் இதைக் குறித்து பேசினேன். ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக மணவாழ்வில் இடர்கள் வந்தால், சரி செய்யவே முடியாதென்றால் வெளியே வந்துவிடுங்கள் பெற்றோரிடம் செல்ல முடியாதென்றால் என் வீட்டுக்கு எந்நேரமானாலும் வந்துவிடுங்கள் கதவுகள் திறந்திருக்கும். ஒருவேளை அச்சமயத்தில் நான் உயிருடன் இல்லை என்றால் இந்தச் சமூகத்தின் சாயல்கூட இல்லாத என் மகன்கள் என்னைக் காட்டிலும் கதவை அகலத்திறந்து வைத்திருப்பார்கள் என்றேன்.
நண்பர் கார்த்திக் வேலு (சிட்னி) எழுதியிருக்கும் பதிவையும் இணைத்திருக்கிறேன்.