நான் சீனுவை விஷ்ணுபுரம் அமைப்பை அறிந்துகொண்ட மிக ஆரம்பக்காலத்திலேயே அறிவேன். ஊட்டி ஃபெர்ன் ஹில் குருநித்யா ஆசிரம காவியமுகாமைக் குறித்த அவரது ஒரு பதிவில் ஊட்டியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்ட கதவொன்றை தலையால் முட்டியபடி கதறிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைக் குறித்து எழுதியதைத்தான் முதலில் வாசித்தேன். அதன்பின்னர் விஜயசூரியன் வீட்டில் மாதாமாதம் நடக்கும் வெண்முரசு விவாதக்கூட்டத்துக்கு பேருந்தில் 7 வது படித்துக்கொண்டிருந்த சரணையும் 5ல் இருந்த தருணையும் அழைத்துக்கொண்டு போய் கலந்துகொண்டம் நாட்கள் ஒன்றில் நேரில் சந்தித்தேன்.
சீனுவின் எல்லாக்கடிதங்களுமே உணர்வுபூர்வமானவை ஒரு வட இந்தியப்பெண் அவளது காதலனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்துதரும் வரைக்கும் காத்திருந்து வாங்கிப்போகும் ஒரு அரசு மருத்துவமனைக்காட்சியைக் குறித்து எழுதியிருந்த பதிவில் அவள் எழுந்துபோனபின்னர் அவள் அமர்ந்திருந்த பாறையில் அவளது காதலின் வெம்மை தகித்தது என்று எழுதியிருந்தார். நான் அதை வாசிக்கையில் என் மேசையில் வைக்கப்பட்டிருந்த ரெக்கார்ட் நோட்டுக்களின் சித்திரங்களை சரி பார்த்துக்கொண்டிருந்தேன். என்னையறியாமல் கண்ணிலிருந்து சொட்டுச்சொட்டாக வடிந்து ஒரு ரெக்கார்ட் நோட்டின் தாள் ஈரமானது. காணாமல் போன ஒரு சிறுமியைக் காப்பாற்றிய தள்ளுவண்டிக் கடைக்காரரைப்பற்றிய பதிவும் அப்படித்தான்.
எப்போதாவது வருடத்துக்கு ஒருமுறை விழாக்களில் சந்தித்துப் பேசிக்கொள்வோம். வாட்ஸாப்பில் அரிதாக தொடர்பிலிருப்போம். என்னை எப்போதும் அக்கா தங்கம் என்றழைக்கும் தம்பித்தங்கம் சீனு.
சரணுக்கு ரீமா சென்னை பிடிக்கும் என்றெழுதி இருந்த ஒரு குறிப்பிற்கு ’’ரசிகன்க்கா சரண்’’ என்று சீனு சொன்னது நினைவிருக்கிறது. நான் சீனுவின் எழுத்துக்களுக்கென்று ஒரு தனி இடம் வைத்திருக்கிறேன் என் இதயத்தில், ஆனால் ஒரு போதும் சீனுவிடன் சொன்னதில்லை.
இன்று சீனு என்னை அழைத்து மரங்களின் மறை வாழ்வு மொழியாக்க நூலைக் குறித்து ஒரு விமர்சனம் எழுதி இருப்பதாகவும் அதை என் இணையதளத்தில் பிரசுரித்து அதன் சுட்டியைத் தனக்கு அளிக்கும்படி கேட்டார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
இது வரை எனது 13 நூல்கள் வெளிவந்திருக்கின்றன.யாரும் ஒரு நூலைக்குறித்தும் எதுவும் எழுதியதில்லை. எனக்கு பெரும்பாலான எழுத்தாளர்களும் ஏராளமான வாசகர்களும் ஸ்நேகிதம்தான்.ஆனாலும் ஸாகே குறித்து ஜெ விற்கு ஒரு சில கடிதங்கள் வந்ததைத்தவிர எனது எந்த நூலும் கண்டுகொள்ளப்படவேயில்லை. நான் அதைக்குறித்து வருந்தவுமில்லை.
தாவரவியல் துறையே கீழானது, பயனற்றது, வேண்டாதது, உலகியல் பொருளியல் வெற்றிக்கு உதவாதது என்னும் அபிப்பிராயம்தான் பொதுவில் எல்லாரிடமும் இருக்கிறது. இதில் நூலைவாசித்து விமர்சனம் எழுதும் அளவுக்கு ஒருத்தரும் மெனக்கெடவில்லை. தாவரவியலைக்குறித்து எழுதுபவளைக் குறித்தும் அப்படித்தான் எண்ணுவார்களாக இருக்கும். நான் என் நூல்களைக் வாசிக்கும்படி கூடக் கேட்டதில்லை யாரிடமும்.
தன்னறம் வெளியீடாக வந்த இரு நூல்களுக்கு ஜெ எழுதிய முன்னுரை பல்லாயிரம் அறிவியலாளர்கள் எழுதிய விமர்சனங்களுக்கும் மேலானது. அதைக் கனவில் எழுப்பிக் கேட்டால் கூடச் சொல் சொல்லாக ஒப்புவிப்பேன் மனப்பாடம் ஆகிவிட்டிருக்கிறது. பெரும் கெளரவம் அது எனக்கு.
ஆனால் நான் நூல் விமர்சனம் எழுதுவேன். எனக்கு , தெரிந்தவர்கள்,வேண்டப்பட்டவர்களுக்காக, எனக்கு வேண்டப்பட்ட விஷயங்களை என்னை பாதித்த விஷயங்களைப்பேசிய நூல்களுக்காக, என்னை எழுதச்சொல்லி கேட்பவர்களுக்காக என்று, நூலை வாசித்ததைக் காட்டிலும் அதிக நேரம் எடுத்துக்கொண்டு மனமுவந்து அன்புடன் எழுதுவேன். என் அன்பு ஒருபோதும் எதிரொலிக்காகக் செவி கூர்ந்ததில்லை.
எனவே இன்று சீனு நூல் விமர்சனம் எழுதியது அதுவும் மிக நன்றாக எழுதியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தத்துறையும் துறைசார்ந்த நூல்களும் என்றைக்கேனும் பேசப்படும் என்னும் நம்பிக்கை இப்போது கொஞ்சம் துளிர்த்திருக்கிறது.
தனது தேவைக்கும் அதிகமானவற்றை எடுத்துக்கொண்டு, பதிலுக்கு தன்னிடமிருந்து எதையும் அளிக்காத உயிரினம், தான் வளரத் தேவையானவற்றை அழித்து, தன்னையும் அழித்துக் கொள்ளும்.
_ பீட்டர் வோலிபென் _
ஆலமரங்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு பிடித்த விஷயம். அதற்குள் நுழைந்து சுற்றி வருவது, ஆற்றங்கரை ஓர ஆலம் எனில் விழுதுகளில் ஊஞ்சல் ஆடி நீருக்குள் விழுவது, ஆல மரங்கள் சூழ்ந்த தோப்புக்குள் இருக்கும் அய்யனார் கோயில்கள் காண்பது, சாலை நடுவே நிற்கும் ஆல மரத்தின் விழுதுகள் வாகனங்கள் போகும் வண்ணம் யாரும் வெட்டாமலேயே குறிப்பிட்ட உயரத்தில் நின்று கொள்வது, ஆரோவில் தியான கோளத்தின் முன்னே கனிந்த யோகி என அமர்ந்திருக்கும் ஆலம், ஓசூர் அருகே ஆயிரம் கால் மண்டபம் போல விழுதுகள் நிறைந்து நிழல் பெருக்கி நிற்கும் ஆலம் என காணக் காண கண் நிறைத்து அகம் குளிர வைக்கும் அனுபவம் அளிப்பது ஆலம்.
இந்தியகண்ட நிலப்பரப்பு தோன்றிய காலத்தில் தோன்றிய மரம். இந்தியாவை தாயகம் கொண்ட மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த மரம் என்றெல்லாம் சிறுவயது பாடத்தில் படித்திருக்கிறேன். அங்கே துவங்கி ஆலமரங்களை காணும்போதெல்லாம் பிரும்மாண்டமான ஒரு பூர்வீக கூட்டுக்குடும்ப வீட்டுக்குள் செல்வதை போல உணர்வு. ஆல மரங்கள் குறித்த என் அனுபவத்தை அடியோடு பெயர்த்து எறிந்தது சமீபத்தில் தமிழக கேரள எல்லையில் நான் சென்ற கானுலா ஒன்றில் காட்டுக்குள் வைத்து நான் கண்ட ஆலமரம்.
காட்டுக்குள் அதன் வாழிடத்தில் அது அத்தனை உயிர்ப்போடும் உக்கிரத்தோடும் இருந்தது. கண்ட கணமே அடி வயிற்றில் பீதி கிளர்த்தும் காட்டுத்தனம். ஆம் காட்டுத்தனம் என்றால் என்ன என்பதை முதன் முதலாக தூலமாக கண்முன்னால் கண்டேன். உயிர்த்திருப்பேன் எனும் காட்டுத்தனம். வளர்வேன் எனும் காட்டுத்தனம். இருப்பேன் எனும் காட்டுத்தனம். பெரு வாழ்வு எனும் காட்டுத்தனம். மீண்டு நெடு நாள் ஆகியும் காட்டில் நான் கண்ட அந்த ஆலத்தில் இருப்பது எது? மனிதர்களுடன் பழகிய எல்லைக்குள் வாழும் ஆலத்தில் இல்லாமல் போனது எது என்ற வினா என்னைத் தொடர்ந்தது.
பார்ப்பதற்கு அவை ஒன்றுபோலவே இருந்தாலும் ஊருக்குள்ளும் காட்டுக்குள்ளும் என இரண்டு நிலங்களிலும் அவை கொண்ட மாற்றங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாக எனக்கு கிடைத்த நூலே மரங்களின் காதலரும், ஜெர்மனியின் ஹிம்மெல் பகுதியில் உள்ள வணிக காடுகளின் பராமரிப்பாளருமான பீட்டர் வோலிபென் எழுதிய மரங்களின் மறைவாழ்வு எனும் நூல்.
வணிக பயன்பாட்டின் பொருட்டு காடுகளை வளர்த்து, மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்யும் முன்னணி தேசம் ஜெர்மன். அதன் வணிக காடு ஒன்றின் பராமரிப்பாளர் பீட்டர். கசாப்பு கடைக்காரர் தான் வெட்டும் ஆட்டுடன் என்ன வகையான உணர்வு தொடர்ப்பு கொண்டிருப்பாரோ, அந்த வகையான தொடர்பு மட்டுமே தன்னை சூழ்ந்த மரங்களுடன் கொண்டிருந்தவர். மெல்ல மெல்ல அவர் கவனம் குவிகிறது. எங்கிருந்தோ இங்கே வந்து இந்த மரங்களை ஆவலுடன் பார்க்கும் வெளியாட்டுகளை அதிசயமாக பார்க்க துவங்கி, அவர்களின் கண்கள் வழியே தான் இருக்கும் காட்டை பார்க்க முயல்கிறார் பீட்டர். மெல்ல மெல்ல அவரது அறிதல் விரிதல் அடைகிறது. புதியதொரு வாழ்க்கைப்புலம் மனிதர்களுக்கு இணையான ஒன்று அவருக்கு காட்சி அளிக்கிறது. அந்த அறிதலைக் கொண்டு அவர் எழுதிய நூலே மரங்களின் மறைவாழ்வு நூல்.
நூல் முதன்மையாக, பழக்கி எடுத்த மரத்தொகுதி, காட்டில் இயல்பான வாழிடம் கொண்ட மரங்கள், இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை அந்த நிலத்துக்கு சொந்தமான பீச், பைன், ஓக், ஸ்ப்ரூக் மரங்களை வைத்துப் பேசினாலும், அடிப்படையில் இந்த நூல் உலகின் எந்த நிலபரப்புக்கும் அதன் காடுகள் குறித்த அறிதலுக்கும் பொதுவானது.
அங்கே வாழ்ந்து, அறிவியலின் துணை கொண்டு, கானகம் சார்ந்து தான் அறிந்தவற்றை பொது வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் பீட்டர் எழுதிய பாப்புலர் சயின்ஸ் வகைமை நூல் இது என்றாலும், இந்த நூலை வாசித்து முடிக்கையில் இந்த நூல் வழியே எழுந்த sub text வியக்க வைத்தது. பண்பாட்டு மானுடவியல் போலவே இந்த நூலை கொண்டு பண்பாட்டுத் தாவரவியல் என்ற புதிய துறையை தோற்றுவித்துவிடலாம் என்பதை போல ஒரு எண்ணம் எழுந்தது.
உதாரணமாக பண்பாட்டு மானுடவியல், உலகில் எத்தனை நூறு வேறுபட்ட கலாச்சாரம் இருந்தாலும், நாம் மானுடர்கள் என்ற வகையில் அத்தனை வேறுபட்ட கலாச்சாரத்திலும் ஒரு போதும் மாறாத ஏழு அடிப்படை அம்சங்கள் இருக்கும். அது பரிணாமவிதிக்கு உட்பட்டும் நமது மரபணுவின் இயல்போடும் இணைந்து இருக்கும். 1, வணங்குதல். 2, குடும்ப உறவு.3, சமூக உறவு. 4, வேலை பகிர்மாணம். 5, பேரிடர் மேலாண்மை (போர்கள் இத்தியாதி உட்பட பல இதில் வரும்) 6, சக்தி உறவுகள் வளங்கள் இவற்றின் பகிர்வு. 7, தன்னை பேணல். இவையே அவை என்று சொல்கிறது.
இந்த மரங்களின் மறைவாழ்வு நூலை வாசித்து முடிக்கும் போது மேற்கண்ட பண்பாட்டு மானுடவியல் பட்டியலில் உள்ள முதல் அம்சத்தை தவிர பிற ஆறு அம்சங்களும் கான்வாழ்வில் இருப்பதை அறியலாம். இந்த நூல் மனித ஆண் வீசி எறியும் பல லட்சம் விதை அணுக்களில் ஒன்று மட்டுமே பிறந்து வருவது போலத்தான், மரங்களும் விதைகளை வீச, அவை சரியான நிலத்தில் விழுந்து, பறவைகள் விலங்குகள் உண்டு பரவி, சரியான இடத்தில் விதைக்கப்பட்டு, சரியான மண், சரியான பருவ சூழல் என பலநூறு இயற்கையின் நிகழ்தகவு விளையாட்டுக்கு பிறகே (தன் மகரந்த சேர்க்கை இன்றி அயல் மகரந்த சேர்க்கை மட்டுமே நிகழும் ஆச்சர்யம் இன்னும் ஆய்வு புலத்தில்தான் இருக்கிறது) அவை தனது வாரிசை உயிர்பிக்கின்றது என்பதை விரிவாக சித்தரித்து காட்டுகிறது. (குழந்தைகளை போன்ற) கன்றுகளை பிற வளர்ந்த மரங்கள் (பெற்றோர்கள் போல) எவ்விதம் பேணி வளர்க்கிறது என்பதை பேசுகிறது. உதாரணமாக கன்று செடிகளின் தளிர் இலைகளுக்கு தான் எவ்வளவு சூரிய ஒளி உட்கொள்ள வேண்டும் என்று தெரியாது. பிற வளர்ந்த மரங்களே இந்த கன்றுகளுக்கு எவ்வளவு ஒளி தேவையோ அவ்வளவு மட்டும் அளித்து வளர்க்கிறது. இப்படி இன்னும் பலவற்றை இந்த நூல் விரிவாக பேசுகிறது.
மரங்கள் நிலத்துக்கு கீழே தனது வேர்கள் வழியே பூஞ்சைகளால் ஒரு பெரிய தொடர்பு வலைப்பின்னல் கொண்டு ஒரு சமூகமாக கொண்டும் கொடுத்தும் வாழ்வதை இந்த நூல் வியப்பூட்டும் வண்ணம் விவரிக்கிறது. உதாரணமாக மரங்களை பாதிக்கும் ரசாயனங்களை உண்டு பூஞ்சைகள் இந்த மரங்களை காப்பதும், நிலத்துக்கு கீழே வரும் பிற ஆபத்துக்களை தனது சக மரங்களுக்கு இந்த பூஞ்சைகள் வழியே தெரிவிப்பதும் உள்ளிட்ட பூஞ்சைகளுக்கும் மர வேர்களுக்குமான பல வகையான தொடர்பு பின்னல். நிலத்துக்கு மேலே குறிப்பிட்ட ரசாயனங்களை வெளியேற்றி சக மரங்களுடன் தொடர்பில் இருக்கிறது. ஆபத்துகளை தெரிவிப்பது, சூழ்ந்த காற்றில் உள்ள கெட்ட கிருமிகளை அழிப்பது உள்ளிட்ட பல காரியங்களை மரங்கள் ரசாயனங்கள் கொண்டு செய்கிறது. மனிதர்கள் சமூகமாக வாழ மொழி அளவுக்கே சங்கேதங்களுக்கும் இடம் உண்டு. மரங்கள் இந்த ரசாயனங்கள் வழியே சங்கேத மொழியில் பேசிக்கொள்கின்றன. மரங்கள் விலங்குகள் போல ஒலி எழுப்புவது உண்டா? ஆச்சர்யமாக ஆம் என்று அறிவியல் பூர்வமாக விளக்குகிறது இந்த நூல். அந்த ஒலி தொடர்பு கொள்வதற்கான ஒலியா என்பதன் மீது ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது என்பதையும் அது என்ன என்பதையும் இந்த நூல் சொல்கிறது.
வேலை பகிர்மாணம் என்று வருகையில் பலவீனமரங்கள் பலமான மரத்தை சார்ந்து வாழ்வதை, எல்லா மரங்களுக்கும் தேவையான புற ஆற்றல்களை எல்லா மரங்களும் கூடி இணைந்து (பலம் வாய்ந்தவை குறைவாகவும் பலம் குறைந்தவை நிறைய எனவும்) சமமாக எடுத்துக்கொள்வது குறித்து, நோயுற்ற மரங்களை மீட்க பிற மரங்கள் செய்யும் யத்தனம் இப்படி பலவற்றை நூலின் சில அத்தியாயங்கள் பேசுகிறது.
கொடும் பனி, பாலை, தொடர் காற்று இப்படி பட்ட சூழலை தாங்கி மரங்கள் எவ்விதம் தங்கள் வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன, பருவ சுழற்சியை, சூழல் சீர்கேட்டை மரங்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றன என்பதை 14000 ஆண்டுகளாக பனி யுக முடிவில் இருந்து வாழும் மரம் ஒன்றை கொண்டு இந்த நூல் விளக்குகிறது. மின்னல்கள் காட்டுத்தீ இவற்றை மரங்கள் எவ்விதம் எதிர்கொண்டு மீள்கின்றன என்பதை வியப்பூட்டும் வண்ணம் விவரிக்கிறது. அதன் உச்சம் என்பது இந்த நூல் விவரிக்கும் பறவைகள் போலவே மரங்களும் வலசை போகும் என்ற அறிவியல்பூர்வமான நிலை. (அது எப்படி என்பதை வாசகர்கள் நூல் வாசித்து அறிந்து கொள்ளவும்).
ஒரே நிலத்தில் ஒரே மரங்கள் அருகருகே இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய தனித்தனி வளரியல்பை கொண்டிருக்கின்றன. மண் முதல் விண் வரை பல்வேறு ஆற்றல்களோடு தொடர்பு கொண்டு, கொண்டும் கொடுத்தும் வாழும் ஒரு பிரும்மாண்டமான உயிர்வலை பின்னலில் ஒரு பகுதியாக மனிதர்கள் போலவே பிறந்து, வாழ்ந்து, முதுமை எய்தி மடிகின்றன. மண்ணுக்கு உரமாகி இன்னும் பல நூறு உயிர்களை வாழ வைக்கின்றன. காடுகள் கடல்களை போலவே மேகங்களை உற்பத்தி செய்கின்றன, காடுகள் நதிகள் வழியே கடல் வளம்பெறும் பலவற்றை அளிக்கின்றன, எல்லா மரங்கள் இருக்கும் காடுகளும் புவி உஷ்ணத்துக்கு பதில் அளிக்காது, முதிய மரங்கள் நிறைந்த காடுகள் மட்டுமே சூடாகும் பூமியை காக்க வழி கொண்டவை, இவையெல்லாம் எவ்விதம் என்பதை விரிவாக பேசும் இந்த நூல் இவை அனைத்தையும் அறிவியல் பூர்வமாக முன்வைக்கிறது.
இந்த அறிவியல்பூர்வமான நூலின்படி மரங்களின் வேர்களும் இலைகளும் நினைவுகளை சேகரித்து வைத்துக் கொள்கின்றன. எனில் மரங்களின் மூளை முடிச்சு அல்லது நரம்பு அமைப்பு எது? கிட்டதட்ட மனிதர்கள் செய்யும் அனைத்தையும் மரங்களும் செய்கிறது என்று தெரியவரும்போது, மரங்களுக்கு நரம்பு மண்டலம் இல்லை ஆகவே அவற்றுக்கு வலி தெரியாது என்ற மானுட மைய்ய கருத்தோட்டம் ஆட்டம் காண்கிறது. வேர்கள் நீரை உறிஞ்சுகின்றன, இலைகள் அவற்றை தக்கவைத்துக்கொள்கின்றன, மிக நீண்ட தண்டு பகுதியில் நடப்பது என்ன? நீர் கீழே இருந்து மேலே எவ்விதம் போகிறது. இன்று வரை அது குறித்து மனிதர்கள் வசமிருப்பது அறிவியல் நோக்குக்கு அருகே வரும் ஊக உண்மை மட்டுமே. நிகர் உண்மை என்ன என்பது இன்று வரை ஆய்வுக்கு உரியதே. இப்படித்தான் தாவரவியல் சார்ந்த பல மர்மங்கள் அறிவு விளக்கம் பெறாமல் இருக்கிறது. அப்படி இருக்கையில் மரங்கள் இவ்விதம்தான் என்று மனிதர்கள் இடும் தீர்ப்புகள் எத்தனை ஆதிக்கம் கொண்டது.
மரங்கள் சூழலால் கட்டுப்படுத்தபட்ட ஒன்றல்ல, அவற்றுக்கு தொடர்பு உண்டு, மொழி உண்டு, நினைவு உண்டு, காலம் உண்டு நேரம் உண்டு, புலன்கள் உண்டு, மகிழ்ச்சி உண்டு, சமூக வாழ்வு உண்டு, இளமை முதுமை நோய் உண்டு, இங்கே தங்கி வாழ, பெற்று பெறுக எல்லா விழைவும் உண்டு என்று நிறுவி உயிரியலுக்கும் தாவரவியலுக்கும் இடையே இருக்கும் கோட்டினை அறிவியல்பூர்வமாக அழிக்கும் இந்த நூல் மானுட வாழ்க்கை நாடகங்கள் அடங்கிய நாவல் ஒன்றை படிப்பது போல உணர்ச்சிகரமாகவும்,நாம் அறியாத ஒன்றை திரை விலக்கி காட்டும் போது அறிவுப்பூர்வமாகவும் துப்பறியும் நாவல் ஒன்றை வாசிப்பதை போல பரபரப்பாகவும், இருக்கிறது. மோலியா கேக்லியானோ, மோனிகா கேக்கர்ஸ்லியானா, மோரிஸ் டோக்ரின் போன்ற தாவரவியல் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் வெளிப்படுத்திய வியப்பூட்டும் கண்டடைதல்களை அடிப்படையாக கொண்டு 36 சுவாரசியமான அத்தியாயங்களாக கட்டமைக்கப்பட்ட இந்த நூலின் பின்னுரை சூசன் சிம்மர்ட். பூஞ்சைகள் வழியே மரங்கள் நிலத்தடியில் நிகழ்த்திய மர்ம வலைப்பின்னல் ரகசியங்களை முதன்முறையாக கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர். நூலின் துவக்கத்தில் அதன் அணிந்துரையில் இந்த நூலின் அறிதல்களை இந்திய வன சூழலுக்கு பொருத்திப்பார்க்கும் வகைமைகளை இந்திய சூழலியலாளர் பிரதீப் கிருஷன் பேசுகிறார்.
உபநிஷத் ரிஷி உத்தாலகர் தனது மகனை ஆலமர விதை ஒன்றை பிளந்து பார்க்க சொல்லி, உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்கிறார். அவன் ஏதும் இல்லை என்று சொல்ல. “ஸ்வேத கேது… அறிக… அதுவே நீ” என்று அப்த வாக்கியம் உரைக்கிறார்.
காணும் காரியம் யாவிலும் பின்னால் இருப்பது கண்களால் அறிய இயலாத சூக்கும காரணம். அப்படி கண்களால் அறிய இயலாத ஒன்றை பீட்டர் வோலிபென் இந்த மரங்களின் மறைவாழ்வு நூல் கொண்டு திறந்து காட்டுவதன் வழியே மானுட ஞானம் மேலும் ஒரு அடி முன் நகரும் பரவசத்தை இந்த நூலின் வாசகர் ஒவ்வொருவரும் உணர முடியும். கம்பேஷன் என்பது ஆத்மீகமான ஒன்று மட்டுமே அல்ல,அறிவியல் பூர்வமாகவும் அதற்கு பாதை உண்டு என்பதை இந்த நூல் வழியே உணர முடியும். வாசிக்க இடர் இல்லாத சரளமான மொழியாக்கதை செய்திருக்கிறார் மொழிபெயர்பாளர் தாவரவியல் பேராசிரியர் லோகமாதேவி. ஒரு வெளிநாட்டு புத்தகத்தை கையில் வைத்திருப்பதை போல உணர்வு எழும் வகையிலான அட்டைப்படம், நூல் கட்டமைப்பு இவற்றுடன் காலச்சுவடு பதிப்பகம் அழகிய முறையில் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். நல்ல நூல்கள் வாசிக்க நேரும்போதெல்லாம் அதை பகிர்ந்து நான் சொல்லும் அதே சொல்தான் இந்த நூலுக்கும் சொல்வேன். தமிழ் அறிந்தோர் ஒவ்வொருவரும் தவறாது வாசித்திருக்கவேண்டிய நூல் இந்த மரங்களின் மறைவாழ்வு.
அந்த 6400 ஏக்கர் பரப்பளவில் இருந்த ரஜனீஷ்புரத்திலிருந்து சிறு பெட்டிகளில் பழுப்புத் திரவத்தை எடுத்துக்கொண்டு ரகசியமாக ஒரு சிறு குழு புறப்பட்டது.
அது 1984-ன் செப்டம்பர் மாதம். டாலஸ் நகரின் பிரபலமான அந்த பகுதி மக்கள் வழக்கமாகக் கூடும் உணவகங்களுக்குச் சென்ற அந்தக் குழு மிகச்சாதாரணமாக யாருக்கும் எந்தச்சந்தேகமும் வராதபடிக்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சாலட்களை தாங்களே தேர்வு செய்து தட்டுக்களில் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கும் ’சாலட் பார்’ பகுதிக்குச் சென்றார்கள். அங்கிருந்த காய்கறித்துண்டுகளில், தாங்கள் கொண்டுவந்திருந்த ’சல்சா’ என அவர்களால் குறிப்பிடப்பட்ட பழுப்புத் திரவத்தை யாருக்கும் தெரியாமல் கலந்தார்கள். செப்டம்பர் 9-லிருந்து 19-ம் தேதி வரையிலும் பின்னர் அக்டோபர் மாதம் 10-ம் தேதியிலுமாக பத்து உணவகங்களில் இதைச்செய்தார்கள்.
உணவகங்களின் கதவுக் குமிழ்களில் தடவப்பட்ட அந்தத் திரவம், குடிநீர்த்தொட்டிகளிலும் கலக்கப்பட்டது. சில நாட்களிலேயே டாலஸ் நகரிலிருந்த ஆயிரக்கணக்கோருக்கு காய்ச்சல், நடுக்கம், வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. அது ஒரு சிறு நகரமென்பதால் மருத்துவமனை வசதிகள் போதாமல் நகரமே பதற்றத்துக்குள்ளானது. அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கு பலர் விரைந்தார்கள். பல நாட்களாக இந்தச் சதி நடந்ததால் தொடர்ந்து நோயுற்று 700-க்குமதிகமானோர் ஆபத்தான நிலையிலும் 45 பேர் மிக ஆபத்தான நிலையிலும் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டார்கள்.
காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய ஆய்வுகளிலும் உணவுக் கூடத்தின் தொழிலாளர்களிடம் நடந்த விசாரணையிலும் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. சால்மோனெல்லா என்னும் பாக்டீரியாவினால் உணவு நஞ்சாகும் சால்மோனெல்லோசிஸினால் தான் நோயுண்டானது என்பதைக் கண்டுபிடித்தார்களே தவிர எப்படி அது உண்டானது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
குளிர்சாதனப் பெட்டியின் குளிர்வு சில உணவகங்களில் போதுமான அளவு இல்லாமலிருந்தாலும் அதனால் சால்மோனல்லோசிஸ் உண்டாயிருக்க வாய்ப்பில்லை என்பதால் அந்தக் காரணமும் சந்தேகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
காரணம் தெரியாவிட்டாலும் அடுத்து நவம்பரில் அந்த மாகாணத்துக்கான தேர்தல் வரவிருந்ததால் யாரோ வேண்டுமென்றே இதைச் செய்திருக்க கூடும் என உள்ளூர் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள். சாலட்களில் சால்மொனெல்லா கிருமி இருப்பது ஆய்வக சோதனையில் உறுதியானது என்றாலும் எப்படி அத்தனை உணவகங்களிலும் தொடர்ச்சியாக அது இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறியது.
Salmonella typhimurium (Salmonella enterica serovar Typhimurium ) என்னும் உணவை நஞ்சாக்கும் பாக்டீரியா அந்த விளைவுகளை உண்டாக்கியது, யாரும் மரணம் அடையவில்லை என்றாலும் நகரெங்கும் பெரும் அச்சம் நிலவியது. அமெரிக்க வரலாற்றிலேயே ஆகப்பெரிய உயிராயுதத் தாக்குதல் நடந்தது முதலும் கடைசியுமாக அதுதான்.
அமெரிக்காவின் CDC (நோய் தடுப்பு அமைப்பு) அதை சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவினால் உருவானது என்று சொன்னாலும் 751 பேர் ஒரே சமயத்தில் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது பெரும் சந்தேகத்தை எழுப்பியது. ஏற்கனவே ரஜனீஷ் ஆசிரமத்தின் எல்லாமுமாக இருந்த மா ஆனந்த ஷீலாவின் மீது கடும்கோபத்திலிருந்த டாலஸ் மக்கள் நவம்பர் தேர்தலில் ஷீலாவுக்கு வேண்டிய ரஜனீஷ் ஆசிரமவாசிகள் போட்டியிட்டதால் இது ஒருவேளை அவரது சதியாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். ஆனாலும் அதற்குச் சான்றாக எதுவுமே அவர்களிடம் இல்லை.
1980- களில் ஆண்டிலோப் என்னும் பெயரில் இருந்த அந்நகரத்தில் ரஜனீஷ் ஆசிரமத்துக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அங்கு வசித்த அவரின் சீடர்கள் புதிய ஓட்டுரிமையும் பெற்றார்கள். 1984-ல் ஒரு அதிகாரபூர்வ வாக்கெடுப்பு நடத்தி உள்ளூர்வாசிகளைவிட ஆசிரமவாசிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு இருந்ததால் அந்நகர் ரஜனீஷ்புரம் என்று அழைக்கப்படுமென்று முடிவானது.
தேர்தலுக்கு முன்பு ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தரும் ‘’ sharing home’’ திட்டத்தை துவங்கிய மா ஷீலா பல பேருந்துகளில் (ஓட்டுரிமை கொண்ட) ஆயிரக்கணக்கான வீடிழந்தோரை ரஜனீஷ்புரத்துக்கு அழைத்துவர முயன்றார். ஆனால் தேர்தல் கமிஷன் அந்தத் திட்டத்தை முறியடித்தது.
நவம்பரில் தேர்தலும் வந்தது. ரஜனீஷ்புரத்தின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக டாலஸ் நகரின் அனைத்து மக்களும் வரலாறு கண்டிராத அளவுக்கு திரண்டு வந்து ஓட்டுப்போட்டார்கள். ரஜனீஷ் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கானோர் சீடர்களாக இருந்தாலும் அவர்களில் அமெரிக்க பிரஜைகள் வெகு சிலரே என்பதால் அவர்களால் ஓட்டுப்போடமுடியாமல் டாலஸ் நகரவாசிகளே வெற்றிபெற்றார்கள்.
அம்மாகாணத்தின் பெரும்பாலான ஓட்டு டாலஸ் நகர வாசிகளுடையதுதான் எனவேதான் டாலஸைக் குறிவைத்து அந்த உயிரித்தாக்குதல் நடந்தது. டாலஸின் ஓட்டுப் போடும் வயதுள்ள கணிசமானோரை நோயாளிகளாக்கிவிட்டால், ஆசிரமத்தில் ஓட்டுப்போடும் தகுதியிலிருந்த சிறுகூட்டத்தினரை தங்களுக்குச் சாதகமாக ஓட்டுப்போடச்செய்து வெற்றி பெறும் நோக்கத்தில் அந்த சதி நடத்தப்பட்டது.
ஒரு வருடம் வரை காரணம் தெரியாமல் வெறும் சந்தேகமாக மட்டும் இருந்த விஷயம் ஆசிரமத்துக்குள் உண்டான அதிகார மோதல் மற்றும் உட்பூசலினால் மா ஆனந்த ஷீலா தன் ஆதரவாளர்களுடன் ஐரோப்பாவுக்கு சென்ற பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
1985-ல் ரஜனீஷ் ஆசிரமத்தின் மா ஆனந்த ஷீலா அந்த சால்மோனல்லோசிஸ் தொற்றை உருவாக்கியவர் என்று ரஜனீஷ் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
பல காலமாக மெளனமாகவே இருந்த பகவான் ரஜனீஷ் அமைதியை உடைத்து பேசத்தொடங்கினார். அளவற்ற அதிகாரமும் செல்வாக்கும் கொண்டிருந்த மா ஆனந்த ஷீலாதான் உணவில் சால்மோனெல்லா பாக்டீரிய நஞ்சைக்கலந்த குற்றச்செயலைச் செய்தார் என்றும் தனது பிரத்யேக மருத்துவரைக் கொலை செய்ய முயன்றதும் அவர்தான் என்றும் ரஜனீஷ் தெரிவித்தார்.
FBI-யின் தொடர்ந்த குற்றப்புலனாய்வு விசாரணையில் மா ஆனந்த ஷீலாவும் அங்கே செவிலியாக இருந்த மா ஆனந்த பூஜாவும் இந்த சதிக்கு முக்கியமான காரணமாயிருந்தார்கள். ஒரு மருந்துக் கடையிலிருந்து சால்மோனெல்லா பாக்டீரியாவைச் சிறிதளவு வாங்கிய அவர்கள் ஆசிரமத்திலிருந்த ஒரு ஆய்வகத்தில் அதை ஏராளமாக வளர்த்து சாலட்களில் கலந்தார்கள் என்பது தெரிய வந்தது.
ரஜனீஷ்புரத்தின் ஆசிரமத்துக்குள்ளேயெ இருந்த மிக வசதியான ஆய்வகமும் அதில் சாலட்களில் இருந்த அதே சால்மொனெல்லா கிருமிகள் வளர்த்தப்பட்டதும் கண்டுப்பிடிக்கபட்டது. ஆசிரமவாசிகளின் நேரடி சாட்சிகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் இருந்த மா ஆனந்த ஷீலா கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார்.
விசாரணையில் ஷீலா குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நன்னடத்தை காரணமாக 29 மாதங்களில் விடுதலை செய்யப்பட்ட ஷீலா சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார்.
அந்த ஆசிரமவாசிகள் மேலும் பல குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தது குற்றப்புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்ததால் மீண்டும் அந்நகரம் ஆண்டிலோப் என்றே பெயரிடப்பட்டது.
1949-ல் குஜராத்தில் ஒரு செல்வாக்கான குடும்பத்தில் 6-வது குழந்தையாக பிறந்த ஷீலா அம்பாலால் பட்டேல் தனது 18-ம் வயதில் நியூ ஜெர்ஸிக்கு பட்டப்படிப்பிற்கென வந்தார்.1968-ல் பகவான் ரஜனீஷை சந்தித்த அவர் ரஜனீஷ் இயக்தத்தினால் பெரிதும் கவரப்பட்டு அப்போதே அதில் இணைந்துகொண்டார்.
1972-ல் தனது முதல் கணவருடன் இந்தியாவில் இருந்து ஓஷோவின் ஆன்மீக ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தவர் 1980-ல் கணவரின் மறைவுக்கு பிறகு ஜான் செல்ஃபெர் என்னும் ரஜனீஷின் மற்றொரு சீடரை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்கா திரும்பிய ஷீலாவை மா ஆனந்த ஷீலா எனப்பெயர் சூட்டி 1981-ல் தனது அந்தரங்கக் காரியதரிசியாக்கிக் கொண்டார் பகவான் ரஜனீஷ்.
மிகக்குறுகிய காலத்திலேயே ரஜனீஷ் இயக்கக்தின் தவிர்க்கமுடியாத பெரும் சக்தியாக மாறிய ஷீலா ஓரிகானில் 64000 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ரஜனீஷ்புரம் அமைவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தார். ரஜனீஷின் மெளன காலத்தில் ஷீலாவே ரஜனீஷ்புரத்தின் ஒரே குரலாக இருந்ததோடு ரஜனீஷ் ஆசிரமத்தின் சர்வதேச அமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
அவரது மூர்க்கமான குணத்தினாலும் நிலஅபகரிப்பு முயற்சிகளாலும் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றவும் அவர் முயன்றதாலும் உள்ளூர்வாசிகளுடன் ஏற்பட்ட மோதலினால் விரைவில் அவர் அமெரிக்கர்களால் மிகவும் வெறுக்கப்பட்ட பெண்ணானார்.
இப்போது சுவிட்சர்லாந்தில் ஷீலா பிர்ன்ஸ்டீல் என்னும் பெயரில் இரு முதியோர் இல்லங்களை நிர்வகித்து வரும் அவரைக்குறித்து நெட்ஃபிளிக்ஸில் Searching for Sheela என்னும் ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. ரஜனீஷ்புரவாழ்வு குறித்து My Own Rules என்னும் நினைவுக் குறிப்பையும் அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
ரஜ்னீஷ் என்னும் ஓஷோவின் மீதிருந்த அன்பினாலும் அபிமானத்தினாலுமே தான் பலவற்றைச் செய்ததாகவும் செய்தவற்றைக் குறித்து எந்த வருத்தமுமில்லை என்றும் சொல்லும் ஷீலாவுக்கு சீடர்கள் இருக்கிறார்கள்.
சால்மோனெல்லோசிஸ் உணவு நஞ்சை உருவாக்கும் இந்த Salmonellatyphimurium பாக்டீரியாவின் பேரினப்பெயர் இந்த பாக்டீரியாவை 1884-ல் முதலில் கண்டுபிடித்த Daniel E. Salmon என்பவரைக் கெளரவிக்க வைக்கப்பட்டது.(டேனியல் சால்மனின் உதவியாளரான Theobald Smith தான் பன்றிக்காலராவைக் குறித்த ஆய்வில் சால்மொனெல்லாவை முதலில் கண்டுபிடித்தாரென்றாலும்,).
இந்தப் பேரினத்தின் மற்றொரு சிற்றினமான Salmonella typhi தான் டைபாய்டு காய்ச்சலுக்கு காரணமாக இருக்கும் கிருமி.
Salmonella typhimurium விலங்குகள் வழியாகப் பரவி விலங்கு, பறவை இறைச்சி மற்றும் முட்டை உணவு வழியேவும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட தாவர உணவுகளாலும் சால்மோனல்லோசிஸை உருவாக்குகிறது.
சால்மோனெல்லோசிஸ் உலகளாவிய பல தொற்றுகளை உணவு நஞ்சாதல் மூலம் உருவாக்கி இருக்கிறது. 1985-ல் இல்லினாய்ஸில் முறையாக பாஸ்டுரைஸ் செய்யப்படாத பாலினால் பரவிய சால்மொனெல்லோசிஸினால் 2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள்.
1989-ல் லண்டனில் சால்மோனெல்லாவால் கெட்டுபோயிருந்த முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனேஸ் இருந்த சாண்ட்விட்ச் வழியாக பரவிய S. Typhimurium DT4 என்னும் வகை மிகப்பெரிய அளவில் நோய்த்தொற்றை உருவாக்கியது.
2005-ல் அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஆரஞ்சு பழச் சாற்றில் இருந்து சால்மோனல்லோசிஸ் பரவி பெருந்தொற்றை உருவாக்கியது.
1987-ல் நார்வே மற்றும் ஃபின்லாந்தில் சாக்லேட்டுகளில் இருந்த சால்மோனெல்லா கிருமி 350 பேர் வரையிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
2021-ல் ஃபின்லாந்தின் ஒரு குழந்தைகள் காப்பக விழாவில் மதிய உணவில் இருந்த லெட்யூஸ்களில் இருந்த சால்மொனெல்லாவினால் சுமார் 750-பேர் பாதிக்கப்பட்டனர்.
2021-ல் கனடாவில் சோயா பாலாடைக்கட்டியான டோஃபுவில் சால்மொனெல்லா இருந்ததால் ஒரு சிறு குழு நோய்வாய்பட்டதன் பின்பு சால்மோனெல்லா இறைச்சி உணவில் மட்டுமல்ல தாவர உணவுகளிலும் இருக்குமென்பது உறுதியாயிற்று.
2021-ல் பெல்ஜியத்தின் பிரபல சாக்லேட்டுகளில் சால்மொனெல்லா இருப்பது சாக்லேட்டுகள் விற்பனையாவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதால் உலகளாவிய பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
கடைசியாக 2023-ல் அமெரிக்காவில் பன்றிக் கொத்திறைச்சி மூலம் பரவிய சால்மொனெல்லா தொற்றுதான் மிகச்சமீபத்திய தொற்றுநிகழ்வு.
இன்று வரையிலும் உணவை நஞ்சாகும் பாக்டீரியாவாக சால்மோனெல்லா மிக குறிப்பிடத்தக்க ஆபத்தை உண்டு பண்னும் கிருமியாகத்தான் இருக்கிறது.
தொடர்ந்த ஆய்வுகளில் சால்மோனெல்லா, பன்றி மற்றும் கொறித்துண்னிகளில் அதிகம் தங்கி இருப்பதும் அவற்றிலிருந்து பிற விலங்குகளுக்கு பரவுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
மனிதர்களுக்கு முறையாக, சுகாதாரமாக சமைக்கப்படாத உணவுகளிலிருந்தும், வளர்ப்புப்பிராணிகள் மற்றும் பிற விலங்குகளிலிருந்தும் சால்மோனெல்லோசிஸ் பரவுகிறது.
உணவுத்தயாரிப்பு மற்றும் கையாளுவதில் சுகாதாரம் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை சால்மோனெல்லா பாக்டீரியா நமக்கு உணர்த்தியிருக்கிறது.
உணவைத்தயாரிக்கையிலும் கையாளுகையிலும் அடிக்கடி கைகளை கழுவிக்கொள்வது, உடல்சுத்தம் பேணுவது, சமைக்கப்பட வேண்டிய பொருட்களை நன்கு கழுவிப்பயன்படுத்துவது மற்றும் சமைத்த சமைக்காத பொருட்களை தனித்தனியே பிரித்து வைப்பது, இறைச்சி உணவுகளை முறையாகச் சமைப்பது ஆகியவற்றினால் சால்மோனெல்லோசிஸை தவிர்க்கலாம்.
சமீபத்தில் வெண்ணிலாவும் நானுமாகக் கோவையில் ஷாப்பிங் சென்றிருந்தோம். சென்னை சில்க்ஸில் வெண்ணிலா எனக்கு top & bottom ஒன்றே போலிருக்கும் சில உடைகளை வாங்கித்தந்தார். இரவுடையைப் போலல்லாமல் பயண உடையென்று சொல்லும்படியானது அது. தளர்வாகவும் வசதியாகவும் இருந்தது.
அப்படியொரு உடையை நான் அப்போதுதான் முதன்முதலில் பார்க்கிறேன். தூரத்திலிருந்த வெண்ணிலா கடைச்சிப்பந்தியிடம் கோஹார்ட் என்று அந்த உடையைக்குறிப்பிட்டதாக எனக்குக் காதில் விழுந்தது. அல்லது அப்படி நான் நினைத்துக்கொண்டேன்.
இன்று அந்த உடையை அணிந்துகொண்டிருந்தேன். மகன்களுடன் வழக்கமாக அன்றாடம் வீடியோ அழைப்பில் பேசுவதால் அந்த உடையைச் சுட்டிக்காட்டி தருணிடம் ….’’இது கோஹார்ட் வெண்ணிலா அத்தை வாங்கிக்கொடுத்தது நல்லாருக்கா….’’என்றேன். கோபமாக …’’அதுக்குப்பேரு கோஹார்ட் இல்லை co-ord மேலும் கீழுமாக மேட்சிங்காக இருப்பதால் “coordinate set” என்பதுதான் கோஆர்ட்….’’ என்றுவிட்டு…’’ஒரு டீச்சரா இருந்துட்டு நீ இப்படி தப்பா சொல்லலாமா ….’’? என்று கோபித்துக்கொண்டான்.
அந்த உடையைப் பற்றி நான் வசிக்கும் இந்தக்குக்கிராமத்தில் இன்னும் பேசப்பட்டிருக்காததாலும் எனக்குப் பெண்பிள்ளைகள் இல்லாததாலும் அந்தத் தவறைச்செய்துவிட்டேன் என்றுசொல்லி திருத்திக்கொண்டேன். ….’’எது புதுசா கேள்விப்பட்டாலும் அதைச்சொல்லறதுக்கு முன்னாடி முழுக்க தெரிஞ்சுக்கனுமில்ல…’’ என்று மேலும் ஒரு சின்ன அறிவுரையும் கொடுத்தான், ஏற்றுக்கொண்டேன்.
தருண் மிக இளமையிலிருந்தே பொதுவான உச்சரிப்பிலும் பெயர்களைச் சரியாகச் சொல்வதிலும் கவனம் கொண்டவன்.
சரண் ப்ரிகேஜி சென்ற, தருண் இன்னும் பள்ளிக்குச் சென்றிருக்காத காலத்தில் அப்பாவின் வீட்டில் ஒருவருடகாலம் வரை தங்கி இருக்கவேண்டிய கஷ்டமான சூழல் இருந்தது.
அப்போது அந்த மாடிப்போர்ஷனின் குறுகிய முன் வாசல் வராண்டாவின் கம்பிஅழியை பிடித்தபடி நின்றுகொண்டு தெருவை எந்நேரமும் வேடிக்கை பார்ப்பான் தருண். மாலையில் அவனது அண்ணன் சரண் வழக்கமாக வரும் ’சிவா ஆட்டோ’வின் சத்தம் கேட்டதும் நின்ற இடத்திலேயே மகிழ்ச்சிக் கும்மாளமிடுவான். அவன் வந்ததும் அண்ணனுக்குக் காலிலிருந்து ஷூக்களை கழட்டுவதும், சாக்ஸை உருவுவதும், பேக்கில் இருப்பவற்றை எடுத்துவைப்பதுமாக ராமனுக்கு லஷ்மணன் செய்த பணிவிடைகளை எல்லாம் பொருளற்றதாக்கிவிடும் சேவைகளை மனமுவந்து செய்வான்.
அப்படியொரு நாள் கம்பியைப் பிடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். நானும் அவனைக் கண்கொத்திப்பாம்பு போல (அச்சச்சோ பாம்பு கண்ணைக்கொத்தாதுன்னு உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கேன்னு இதுக்கும் சண்டைக்கு வருவானே பாம்புகளின் காவலன்!) பார்த்தபடி முன்னறையில் கையெட்டினால் அவனைப் பிடித்துவிடும் தொலைவில் இருந்தேன்.
அப்போது பொள்ளாச்சியில் பரோட்டா, இட்லி மாவு, சந்தகையெல்லாம் தெருவிலேயே கொண்டு வந்து கூவிக் கூவி விற்கத்தொடங்கி இருந்தார்கள்.
….’’புரோட்டா, புரோட்டா, புரோட்டா…..’’ என்று ஒரு இளைஞன் சைக்கிளில் விற்றுக்கொண்டு வந்தான். தருண் ஒரு கையால் கம்பியை இறுகப்பற்றிக்கொண்டு மற்றொரு குட்டிக்கையை அசைத்து …..’’மாமா, மாமா, இங்கே வாங்க ….’’என்றழைத்தான்.
நான் ஒருவேளை பரோட்டா வாங்க நினைக்கிறானோ என்னவோ என்று கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த இளைஞன் மகிழ்ந்து போய் வாசலில் ஒரு காலை ஊன்றிச் சைக்கிளை நிறுத்தி …’’தங்கம் புரோட்டா வேணுமா…’’? என்றான்.
குட்டித்தருண் ….’’இல்லை வேண்டாம் ஆனா நீங்க விக்கறது புரோட்டா இல்லை பரோட்டா….’’ என்றான். உண்மையிலேயே அந்த இளைஞன் பேயறைந்தது போலாகி அங்கிருந்து நகர்ந்தான். பிறகு வெகுநேரத்துக்கு அவன் குரலே கேட்கவில்லை.
இப்படி பல மாமாக்களை அவன் காவு கொடுத்திருக்கிறான். நல்ல கூட்ட நெரிசலான ஒரு பேருந்துப்பயணத்தில் நானும் சரணும் நின்றுகொண்டிருக்கையில், ஒரு ’மாமா’ தருணை வாங்கி மடியில் வைத்துக்கொண்டார். கொஞ்ச தூரம் கூட பேருந்து நகர்ந்திருக்கவில்லை ,அவர் மடியில் உட்கர்ந்தபடியே என்னைப்பிறாண்டத்தொடங்கினான்.
…’’ என்னடா…’’ என்றதும் ….’’அம்மா இந்த மாமா வாயில என்னமோ நாத்தம் அடிக்குது,நான் இறங்கி உன் கூடவே நின்னுக்கறேன்…’’ என்றான். அந்த ‘’மது’’ மாமா வெட்கி அவனை இருக்கையில் அமர வைத்துவிட்டு அவசரமாக அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச்சென்றுவிட்டார்.
நண்பர்களுடன் ஒரு முறை வால்பாறை சென்றிருக்கையில் கம்யூனிஸ்ட் பச்சைச் செடியைக் காண்பித்து…’’ இது யுபடோரியம் ஓடொரேட்டம்…’’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில். டேராடூனில் காட்டியல் படித்துக்கொண்டிருந்த தருண் இடைமறித்து …’’இதுக்கு குரோமோலீனா ஓடோரேட்டானு பேரு மாத்தினதுகூட உனக்குத் தெரியலையா….’’ என்றான்.
அம்மாவை மிஞ்சிய மகன்.
அவன் பிறந்தபோது ஜாதகம் எழுதியவர், தருண் எழுத்து அல்லது சொல் தொடர்பான் ஏதோ ஒரு, அப்போது அவரால் கணித்துச்சொல்ல முடியாத ஒரு துறையில் மிகப்பிரபலமானவனாக வருவான் என்றார். காட்டியல் படித்து வணிக மேலாண்மையும் படிக்கும், காட்டிலாகா அதிகாரியாக வரவிரும்பும் தருணின் எதிர்காலம் எதிலென்று தெரியவில்லை.
ஆனால் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணை முன்பே பார்ப்பேனாயானால்…’’ கொஞ்சம் நல்லா பேசிப்பழகிட்டு அப்புறமா வீட்டுக்கு வாம்மா மின்னல்…’’ என்று சொல்லிவிட வேண்டும். சொல்லின் செல்வனாயிற்றே கல்யாணம் செய்துகொள்ளப்போகிறவன்.
சமீபத்தில் வெளியான தாரணா 18 மைல்கள் என்கிற, தனுஷ்கோடிக்கும் ஈழத்திற்கும் இடையில் இருக்கும் தூர அளவுகளைக் குறிக்கும் 16 நிமிடங்கள் ஓடும் பாடலைக்குறித்து அகரமுதல்வன் எழுதியிருக்கும் கட்டுரையின்
//புகையைப் போல் ஒழிந்த எங்கள் வாழ்வையும், நடுக்கடலில் மீன்களின் இரையாய் மிதந்த எங்களின் குழந்தைகளையும், ஒரு கொள்ளியைப் போல எரியுண்ட எங்களின் வாழும் ஆசைகளையும் தூக்கிச் சுமந்து வந்து நின்ற பாடல்//
//அது கடலில் தத்தளிக்கும் அகதிகளை மட்டுமல்ல, தரையில் அகப்பட்டு பத்துக்கு பத்து கூடாரங்களில் காலங்காலமாய் அவஸ்தைப்படும் துன்பகரமான ஒரு வரலாற்றுச் சாட்சியையும் முன்வைத்திருக்கிறது// என்னும் வரிகள் அளித்த துயர் மனதில் நிறைந்திருக்கையில் தான் கடலின் நீண்ட இதழை வாசிக்கத் துவங்கினேன்.
வாசிப்பின் முடிவில் போரின் குரூரங்களும், அகதி வாழ்வின் அவலங்களும், அகதிகள் சந்திக்கும் சவால்களுமாய் நிறைந்திருக்கும் இந்த நாவலின் வாசிப்பனுபவம், யாருக்கோ எங்கோ நடந்ததென்றில்லாமல் எனக்கே நிகழ்ந்ததுபோல் ஒரு அந்தரங்கமான துயரை உருவாக்கிவிட்டது.
ஸ்பெயின் உள்நாட்டுப்போரின் பால்புட்டி கட்டாய ராணுவச்சேர்ப்பில் சண்டையிட வந்த பதினைந்து வயதிருக்கும் ஒரு இளைஞன் மார்பில் காயம்பட்டு, திறந்த பெருங்காயத்தின் வழியே தெரியும் துடிக்கும் இதயத்துடன் சிகிச்சைக்கென வந்திருப்பதில் தொடங்குகிறது கதை.
காப்பாற்ற முடியாது எனக்கைவிடப்பட்ட அவனை மருத்துவர் விக்டர் தல்மாவ் காப்பாற்ற நினைக்கிறார். ஆனால் அவர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இதயம் துடிப்பது நின்றுபோய், போரைக்குறித்த விக்டரின் நினைவுகளில் அழிக்கமுடியாத ஒன்றாகிறான் அவன்.
ஆனால் விக்டர் விரல்களால் அந்த இதயத்தை மெதுவாக அழுத்தி அவனை மீண்டும் உயிர்ப்பிக்கிறார் அதன் பிறகு விக்டரின் வாழ்வை நிர்ணயிக்கப்போகும் மருத்துவப்பணியில் இணைகிறார்.
நம்மில் அதிகம் பேர் முழுவதுமாக அறிந்திராத ஸ்பெயின் உள்நாட்டுப்போர், சிலியில் நடந்த ராணுவப்புரட்சி ஆகியவற்றை தனிப்பட்ட மனிதர்களின் கதைகளையும், காதலையும், விசித்திரமான உறவுகளையும் ஒரு பரந்த வரலாற்றுப் பின்னணியில் சொல்லும் இந்நூல் ஒரு மலரைப்போலவே மெல்ல மெல்ல விரிந்து தலைப்பை நினைவுட்டுகிறது.
1930-களின் பிற்பகுதியில் ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தக் கதை, விக்டர் தல்மாவ் என்ற மருத்துவரின் வாழ்க்கையையும், அவனுக்கு மனைவியாக நடிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கும் ரோஸர் என்னும் பியானோ கலைஞரின் கதையையும் பிரதானமாகச் சித்தரிக்கிறது. இந்தப் போரினால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மலைகள் வழியாகப் பயணிக்கின்றனர்.
தான் காதலித்த விக்டரின் சகோதரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்ப்பிணியான ரோஸர், விக்டரின் பொறுப்பில் வந்து சேர்கிறார். இவர்கள் பிரான்ஸ் வழியாகச் சிலிக்கு பயணம் செய்து, பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அகதி வாழ்க்கையின் சவால்கள், அரசியல் நிகழ்வுகளின் தாக்கம், காதல் மற்றும் உறவுகள், போரின் விளைவுகள் ஆகியவற்றை இந்த இருவரின் தனிப்பட்டக் கதையை மையமாகக் கொண்டு, நாவல் விரிவாகப்பேசுகிறது
சொந்தநாட்டை விட்டுச்செல்லவேண்டி வந்த அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க சிலியில் அடைக்கலம் தேடுகின்றனர். ஆனாள் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளால் மீண்டும் ஒருமுறை தங்கள் வாழ்வை இழக்கும் அபாயத்துக்கு உள்ளாகின்றனர்.
இந்தக்கதையில் மிக முக்கியமான இரண்டு கதைமாந்தர்களாக விக்டரும் ரோஸரும் இருக்கிறார்கள்.
விக்டர் தல்மாவ்:
ரோஸரை, அவளின் பாதுகாப்பிற்காகத் திருமணம் செய்துகொள்கிறார். துவக்கத்தில் இந்தத் திருமணம் ஒரு தேவையின், ஒரு கடமையின் அடிப்படையில் அமைந்தது. சிலியில் குடியேறிய பின் தனது மருத்துவப் படிப்பை முடித்து, சிறந்த இருதயநோய் நிபுணராகிவிடும் விக்டர் ஒருபோதும் தனது கடந்தகாலத்தை மறக்கவில்லை. சிலியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், அவரை மீண்டும் அகதியாகப் பயணிக்க வைக்கிறது. இறுதியில், வாழ்க்கையின் முடிவில், அவர் தான் மேற்கொண்ட பயணங்களையும், தான் கடந்து வந்த காதலையும் உறவுகளையும் திரும்பிப் பார்க்கிறார்.
ரோஸர்:
ரோஸர் ஒரு திறமையான பியானோ கலைஞர். மிகவும் உறுதியானவள், சுதந்திரமானவள். அவள் வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்கிறாள். போரும் அகதி வாழ்க்கையும் அவளை உடைக்கவில்லை, மாறாக இன்னும் வலிமையாக்குகின்றது. எதைக்கண்டும் அஞ்சியிராத ரோஸராகவே அவர் நாவல் முழுவதும் வருகிறார்.
நாவலின் துவக்கத்தில், அவள் விக்டரின் சகோதரனான கியூலியமை காதலிக்கிறாள். அவர் போரில் இறந்துவிட, அவள் கர்ப்பிணியாகவும் விதவையாகவும் தனித்து விடப்படுகிறாள். உயிர் வாழ்வதற்காகவும், தனது குழந்தையின் பாதுகாப்பிற்காகவும் விக்டரைத் திருமணம் செய்யச் சம்மதிக்கிறாள்.
சிலியில் அவள் ஒரு பியானோ ஆசிரியையாகவும், கலைஞராகவும் தனது திறமையை வளர்த்துக்கொள்கிறாள். விக்டருடன் ஏற்பட்ட வெறும் தேவையின் பொருட்டான அவளது உறவு மெதுவாக ஒரு ஆழமான அன்பும், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுமுள்ள உறவாக மாறுகிறது. தனது இறுதி நாட்கள்வரை அவள் விக்டருக்கு ஒரு துணைவியாக இருக்கிறாள்
விக்டர் மற்றும் ரோஸரின் கதை இரண்டு வெவ்வேறு மனநிலைகளைக் கொண்ட மனிதர்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, வாழ்க்கையின் கொந்தளிப்பான தருணங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைச்சொல்கிறது.
நாவலின் கதைக்களம் மூன்று முக்கிய வரலாற்று நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. ஒன்று, ஸ்பெயின் நாட்டில் நடந்த உள்நாட்டுப் போர். மற்றொன்று, சிலி நாட்டில் நடந்த இராணுவப்புரட்சி, மூன்றாவது வின்னிபெக் கப்பல் பயணம்.
எஸ்.எஸ். வின்னிபெக் கப்பல் பயணம் ஒரு வரலாற்று உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. சிலி நாட்டின் பிரபல கவிஞர் பாப்லோ நெரூடோ, பிரான்ஸில் இருந்த ஸ்பானிய அகதிகளுக்காக இந்த கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்தார்.
பிரான்ஸில், விக்டர் மற்றும் ரோஸர் இருவரும் அகதி முகாம்களில் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். முகாம்கள் கூட்ட நெரிசல், பசி, மற்றும் நோய்களால் நிரம்பி வழிகின்றன. இந்தச் சவால்களுக்கு மத்தியிலும், விக்டர் நோயாளிகளுக்கு உதவுகிறார். அதே நேரத்தில் ரோஸருக்கு மகன் மார்சல் பிறக்கிறான். உயிர் பிழைக்க வேண்டும் என்ற அவர்களின் பொதுவான எண்ணம் அவர்களை ஒன்றிணைக்கிறது. இந்தத் துன்பங்களுக்கு மத்தியில், சிலிக்குக் குடிபெயரும் வாய்ப்பு பற்றி அவர்கள் கேள்விப்படுகிறார்கள். இது ஒரு புதிய தொடக்கத்திற்கான நம்பிக்கையின் அடையாளமாக அவர்களுக்குத் தெரிகிறது.
பிரான்ஸ் அகதி முகாம்களில் அவதிப்பட்ட சுமார் 2,200 ஸ்பானிய அகதிகளைக் காப்பாற்ற பாப்லோ நெரூடோ ஒரு கப்பலை ஏற்பாடு செய்கிறார். இந்தக் கப்பல் பயணம், அகதிகள் சிலியில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான நம்பிக்கையை அளித்தது. நாவலில் விக்டரும், ரோஸரும் இந்தக் கப்பலில் பயணிக்கும் அகதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிலிக்கு செல்வதற்கான விக்டரின் கோரிக்கைப்பத்திரத்தில் முத்திரையைப் பதிக்கையில் ரோஸரின் இசைப்புலமையை கேள்விப்பட்டு , அத்தனை இக்கட்டிலும் பாப்லோ ’’எங்களுக்குப் பியானோ கலைஞர்கள் தேவை’’ என்று சொல்லுவது, நெருக்கடி மிகுந்த சாலையில் நடக்கையில் திடீரென நம் முன் விழும் ஒரு மலர் அளிக்கும் ஆசுவாசத்தை அளிக்கிறது.
போரின் பயங்கரங்களிலிருந்து அவர்களை விடுவித்து ஒரு நிச்சயமற்ற, ஆனால் நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் நம்பிக்கையின் சின்னமாகிறது அந்தக்கப்பல், போரின் அழிவுக்குப் பிறகு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கும் கவிஞர் பாப்லோ நெரூடாவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கப்பல் பயணம், வெறும் அகதிகளின் நகர்வு அல்ல, நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களையும் கனவுகளையும் சுமந்து செல்லும் ஒரு நம்பிக்கையாகவே இருக்கிறது.
வின்னிபெக் கப்பலில் அகதிகள் ஒன்றாகப் பயணிக்கும்போது, அவர்கள் ஒரு புதிய சமூகமாக உருவாகிறார்கள். இந்தச் சமூகத்தை உருவாக்குவதில் நெரூடாவின் பங்கு மறைமுகமானது. ஆனால், அவர் உருவாக்கிய இந்த வாய்ப்புதான் அகதிகள் தங்கள் கடந்த கால துயரங்களைப் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, எதிர்காலத்திற்கான கனவுகளைப் பார்க்க உதவுகிறது
அந்தக்கப்பல் பயணத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கான பிரத்யேகப்பாடல், கப்பலில் கூட்டு இசை நிகழ்ச்சி நடப்பது, ரோஸரின் துணிகளை மற்றவர்கள் துவைத்துக்கொடுக்க முன்வருவது, சீட்டாட்டம் எனப் புலம்பெயர்தலின் துயரத்தை மறக்க ஏராளமான கேளிக்கைகள் நிறைந்திருக்கையில் பாப்லோ, சிலி ஒரு சொர்க்கபூமியல்ல என்பதை அறிவிக்கும் இடம் இடம் மிக முக்கியமானது.
கப்பல் பயணத்தில் நடக்கும் பல சம்பவங்களில் மிக உணர்வுபூர்வமான ஒன்று ஆக்னஸ் அமெரிக்கா வின்னிபெக் என்று பெயரிடப்பட்ட பெண்குழந்தை பிறப்பதுதான். மரணத்தை அனைத்து வித வடிவங்களிலும் பார்த்திருந்த விக்டருக்கு அந்தக் குழந்தைப்பிறப்பின்போது முதன்முதலாகக் காணும் உயிரின் தோற்றம் உண்டாக்கும் உணர்வெழுச்சி வாசிப்பவர்களுக்கும் உருவாகிவிடுகிறது.
விக்டரும் ரோஸரும், ரோஸரின் மகனுடன் சிலியில் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பின்னர், அங்கு நடந்த இராணுவப் புரட்சி அவர்களின் வாழ்க்கையில் மற்றொரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் புரட்சி, அந்தப் புதிய தாயகத்திலும் அகதிகளாக வாழ வேண்டிய அவலநிலையை விக்டருக்கும் ரோஸருக்கும் ஏற்படுத்தியது.
சிலியில் அவர்களின் வாழ்வு புதிய சூழலுக்கு ஏற்ப மாறுவது பற்றியதாகவே பெரும்பாலும் இருக்கிறது. விக்டர் மற்றும் ரோஸருக்கு புதிய வாழ்க்கையொன்று அமைந்துவிடுகையில், விக்டர் ஒஃபீலியாவுடன் காதலில் ஈடுபடுகிறார். தீவிரமான அவர்களின் காதல் விக்டர்-ரோஸர் திருமணத்தினால் சிக்கலாகிறது. இன்னொருவருடன் திருமணம் நிச்சயமான ஒஃபீலியா, தனது கடமைக்கும் விருப்பங்களுக்கும் இடையே முடிவெடுக்க முடியாமல் திண்டாடுகிறார். இவர்களின் ரகசிய சந்திப்புகள், விக்டர் மற்றும் ரோஸர் கஷ்டப்பட்டு உருவாக்கிய வாழ்க்கையை உடைத்துவிடும் அபாயத்தை உருவாக்குகின்றன.
விகடரின் காதலால் ஒஃபீலியா கர்ப்பமுற்று ஒரு பெண்ணைப் பெற்றெடுக்கிறாள். குழந்தை இறந்து விட்டது என்று ஒஃபீலியாவிடம் பொய்சொல்லப்படுகிறது.
விக்டர் மற்றும் ஒஃபீலியாவின் காதலில் பிறந்த மகள் இங்கிரிட் ஒரு பாதிரியாரின் தந்திரத்தால் தாயிடமிருந்து பிரிக்கப்படுகிறாள். தனது பிறப்பைப் பற்றி அறிந்ததும், இங்கிரிட் தனது தந்தையைக் கண்டறியும் பயணத்தைத் தொடங்குகிறாள். கண்டுபிடிகிறாள். இது அவருக்கும், விக்டருக்கும் இடையிள் பல ஆண்டுகளாக இருந்த இடைவெளியை நிரப்பி அவர்களின் உறவை வலுப்படுத்துகிறது,
இங்கிரிட் தனது கணவர் மற்றும் குழந்தைகளையும் விக்டருக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்கள் விக்டரை அன்புடன் வரவேற்கிறார்கள். இந்தப் புதிய தொடர்பு, இழப்பின் தனிமையை உணர்ந்த விக்டருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
நாவலின் பேசுபொருள், போர்கள், அரசியல் மாற்றங்கள், மற்றும் புலம்பெயர்வு ஆகியவை தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கம்தான். கதைமாந்தர்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாகவும், குடியேறியவர்களாகவும், போரில் தப்பிப் பிழைத்தவர்களாகவும் வாழ நேரும் அனுபவங்கள் அவர்கள் பார்வைகளையும், மனித உறவுகளையும் எவ்வாறு மாற்றுகின்றன என்பதை நாவல் உணர்வுபூர்வமாகக் காட்டுகிறது.
இது ஒரு வரலாற்றுக் கதை மட்டுமல்ல; காதல், இழப்பு, தியாகம் இவற்றோடு உலகில் நடந்த பல அரசியல் கொந்தளிப்புகள், பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தனிப்பட்ட கதைகளையும் இந்த நாவல் விவரிக்கிறது.
கடலின் நீண்ட இதழ், போர், அகதி வாழ்க்கை, புலம்பெயர்தல் மற்றும் புதிய தாயகம் தேடுதல் போன்ற உலகளாவிய விஷயங்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்தத் தலைப்புகள் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானவை. குறிப்பாக, இன்று உலகம் முழுவதும் அகதிகள் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், இந்த நாவலின் கதை வாசகர்களுக்கும் நெருக்கமான ஒரு கதையாக மாறுகிறது.
இந்த நாவலில் சொல்லப்படும் காதல் கதை, வழக்கமான காதல் கதைகளில் இருந்து வேறுபட்டது. இது போர்ச்சூழலில் அகதிவாழ்வில் பரஸ்பர ஆதரவின் அடிப்படையில் வளரும் ஒரு அன்பைக் காட்டுகிறது.
ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவனது சொந்த மண்ணுடன் எவ்வளவு தூரம் பிணைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது.
விக்டரும் ரோஸரும் தங்கள் ஸ்பானிய அடையாளத்தை ஒருபோதும் மறப்பதில்லை, அதே சமயம் சிலியின் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ஸ்பானியர்களாகவே இருக்க விரும்புகிறார்களா, அல்லது சிலியின் குடிமக்களாக மாறுகிறார்களா என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த உணர்வு, புலம்பெயர்ந்த பலருக்கு பொதுவாக ஏற்படும் ஒன்று. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழாமல், தங்கள் சொந்த உணர்வுகளையும், நினைவுகளையும் மட்டுமே தங்களின் “வீடாக” கருதும் ஒரு நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்
அரசியல் நிகழ்வுகள் தனிமனித வாழ்க்கையை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கின்றன என்பதையும். இந்த நாவல் காட்டுகிறது.
அதைப்போலவே முறிந்த காதலின் வலியில் விக்டர் இருந்த ஒருநாளில் அவனுக்கு அன்பால் சிகிச்சையளிக்க ரோஸர் முடிவு செய்வதும், அதே நாளில் ஒரு கணவனின் இயல்புடன் அவளைத் தன் கைகளில் விக்டர் ஏந்திக்கொள்வதும் இந்த நாவலின் அற்புதமான தருணங்களில் ஒன்று. விக்டருக்கும் ரோஸருக்குமிடையில் புரிதலும் இயல்பான அன்பும் முகிழ்க்கும் 11-ம் அத்தியாயம் மற்றவற்றிலிருந்து வேறுபட்டும் வாசிப்பனுபவதில் மிகுந்த மனநிறவைத் தருமொன்றாகவும் இருக்கிறது
இடையிடையே வரும் பூவரசம் பூக்களும், பெயரிடப்படாத, தேதி குறிப்பிட்டிருக்காத கல்லறைச் சிலுவையில் வைக்கும் வெள்ளைப்பூக்களும், மழையில் நனைந்த பாப்லர் மரங்களும் கதையோட்டத்தின் கொந்தளிப்பைக் கொஞ்சம் தணிக்கின்றன
இந்தக் கதையில் கடிதங்கள் முக்கியமான பங்காற்றுகின்றன. கடிதங்கள் கதைமாந்தர்களின் தொடர்புகளுக்கும், அவர்கள் நம்பிக்கையையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்வதற்கும், அவர்களின் துயர் நிரம்பிய வாழ்க்கையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதற்கும், முக்கியமான திருப்பங்களுக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இடையிடையே பாப்லோ நெரூடோவின்
//நான் இப்போது வாழும் நாடு மிகவும் மென்மையானது இலையுதிர்கால திராட்சையின் தோல் போல//
போன்ற கவிதைகள் இனம்புரியாத பதற்றத்தை மனதில் உருவாக்குகின்றன.
கதையின் முடிவில், விக்டரும் ரோஸரும் மீண்டும் தங்கள் சொந்த நாடான ஸ்பெயினுக்குத் திரும்புகிறார்கள். அவர்கள் திரும்பி வரும்போது, ஸ்பானிய சர்வாதிகாரி ஃபிராங்கோ இறந்துவிட்டதால், ஸ்பெயின் மீண்டும் ஜனநாயகம் ஆகிறது. தங்கள் வாழ்நாளில் இரண்டு கண்டங்களைக் கடந்து, இரண்டு பெரிய போர்களையும் அரசியல் மாற்றங்களையும் எதிர்கொண்டாலும், அவர்களின் அன்பு மற்றும் ஆதரவு அவர்களை வழிநடத்துகிறது.
மனைவி இறந்த பிறகு, விக்டர் தல்மாவ் சிலியில் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். தனது கடந்த காலத்தையும், ரோஸருடன் பகிர்ந்து கொண்ட காதலையும் நினைத்துப் பார்க்கிறார்.
கடலின் நீண்ட இதழ் (A Long Petal of the Sea) நாவலில், போரின் சோகத்தையும், அகதி வாழ்க்கையின் துன்பங்களையும் தாண்டி, மனித உணர்வுகளின் அழகிய தருணங்கள் பல கவித்துவமாகப் சித்தரிக்கப்பட்டுள்ளன. நாவலில் போர், வன்முறை, மரணம் போன்ற கடுமையான யதார்த்தங்கள் இருந்தாலும், அதன் அடிநாதமாகக் காதல், நம்பிக்கை, மற்றும் மனித மன உறுதி ஆகியவை உள்ளன.
நெரூடா, சிலியின் நீண்ட, குறுகிய புவியியல் வடிவத்தினால் அந்நாட்டை “நீண்ட கடலின் இதழ்” (A long petal of the sea) என ஒரு கவிதையில் வர்ணித்தார். இதுவே இந்நாவலின் மிகப்பொருத்தமான தலைப்பாகவும் அமைந்துவிட்டது. அதே வேளையில், போர், இடம்பெயர்வு, மற்றும் கடினமான வாழ்க்கைச் சூழல்களுக்குப் பிறகு புதியதாக மலரும் வாழ்வையும் தலைப்பு குறிப்புணர்த்துகிறது. கடலின் நீண்ட இதழ் என்னும் தலைப்பே நாவலின் ஆன்மாவாக மாறி, கதைக்கு ஆழமான பொருளை அளிக்கிறது.
மூலக்கதையான ‘’A long petal of the sea-யின் ஆசிரியர் இசபெல் அலேந்தேவின் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் அவரது குடும்ப வரலாறு ஆகியவை இந்த நாவலின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளன. குறிப்பாக, வின்னிபெக் கப்பலில் பணியாற்றிய அவரது வளர்ப்புத் தந்தையின் அனுபவங்கள் இந்தக் கதைக்களத்தை அலேந்தே உருவாக்க உத்வேகமளித்திருக்கக்கூடும். விக்டர் மற்றும் ரோஸரின் அகதி வாழ்க்கையை விவரிப்பதில் அவரது சொந்த அனுபவங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.
அலேந்தேவின் எழுத்து எப்போதும் அவரது வாழ்க்கை அனுபவங்களில் வேரூன்றி உள்ளது. காதல், குடும்ப உறவுகள், மற்றும் பெண்களின் வலிமை ஆகியவை அவரது படைப்புகளில் மீண்டும் மீண்டும் தோன்றும் கருப்பொருள்கள். இந்த நாவலிலும், அவரது சொந்த அனுபவங்களான புலம்பெயர்வு, அரசியல் மாற்றங்கள், மற்றும் சிக்கலான மனித உறவுகள் ஆகியவை கதைக்களத்திற்கும் கதாபாத்திரங்களுக்கும் ஆழமான அடித்தளத்தை அளித்துள்ளன. இந்த நாவல் அவரது வாழ்க்கை வரலாற்றின் நேரடி விவரிப்பு இல்லையென்றாலும், அவரது அனுபவங்களால் உருவாக்கப்பட்ட ஓர் இலக்கியப் படைப்பாக விளங்குகிறது.
மூன்று பாகங்களையும் பதின்மூன்று அத்தியாயங்களையும் கொண்ட இந்த ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் வரலாற்றுக் களத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆழமான மனித உறவுகளை வெளிப்படுத்தும் நீண்ட புனைகதையின் மொழிபெயர்ப்பு, மூலப் படைப்பின் உணர்ச்சி ஆழத்தையும் கலாச்சார நுணுக்கங்களையும் பாதுகாத்து தமிழ் வாசகர்களிடையே கொண்டு செல்லவேண்டிய ஒரு சவாலையும் மொழிபெயர்ப்பாளருக்கு அளித்திருக்கிறது. அதில் சுபஸ்ரீ பீமன் வெற்றி கண்டுள்ளார்.
மூல நூலின் கவிதையின் சாயல் கொண்ட எழுத்துநடை, கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான இயல்புகள், ஆழமான உணர்வுப் பதிவுகள், மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் துல்லியமான விவரிப்புகள் ஆகிய அனைத்தும் மொழிபெயர்ப்பிலும் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. சுபஸ்ரீக்கு அன்பும் வாழ்த்துக்களும்.
பொள்ளாச்சியில் இட்லி மாவை அரைத்தும் சந்தகையை பிழிந்தும் விற்பது சாதாரணமாகவும் மிக அதிகமாகவும் நடக்கும் ஒரு குடிசைத்தொழில். விருந்தினர்கள் வருகையின்போது அங்கு சென்று பிழிந்த சந்தகையை சூடாக வாங்கிக்கொள்வேன்.
மிகச்சுத்தமாகவும் சோடா உப்பு சேர்க்காமலும் தயாரிப்பார்கள் என்பதால் வழக்கமாகவே அங்கு நல்ல கூட்டம் நெரியும். சமீபத்தில் அந்தக் கடைக்காரரின் மகளுக்கு 100 சவரன் நகை கொடுத்துத் திருமணம் செய்துகொடுத்தார்கள். அத்தனை ஓட்டம் கடையில்.
அறக்கல்வி வகுப்புகளுக்காக ஈரோடு மற்றும் திருப்பூருக்குச்சென்று விட்டுக் களைத்துப்போய் திரும்பிய அன்று இட்லி மாவு வாங்கச்சென்றபோது கூட்டத்தில் காத்திருக்கும்படியானது. கொஞ்சம் தள்ளி ஒருவர் கையில் கார்ச்சாவியுடன் நின்றிருந்தார். வெள்ளைக் குட்டிக்காரொன்றும் சாலையோரம் நின்றது. அவரின் கீழுதட்டில் கொஞ்சமாக வைத்திருந்த ஆட்டுத்தாடி அல்லது பிரெஞ்சுத்தாடி எப்போதும் ஏன் எனக்குக் கடும் ஒவ்வாமையை உருவாக்குகிறது என்பது ஆய்வுக்குரியது.
இப்போதுமட்டுமல்ல எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்த ஒவ்வாமை இருக்கிறது என் கல்லூரித்தோழி ஷர்லி சொல்லுவாள்
’’ டீ நான் ஒரு கிறுக்கனை, முடவனை, குருடனை ஏன் ஒரு தொழுநோயாளியைக்கூட கல்யாணம் பண்ணிக்குவேன் ஆனா சுருட்டைமுடிக்காரனைமட்டும் பண்ணிக்கவே மாட்டேன்’’ என்று. எனக்கும் அப்படித்தான் இந்தக் குறுந்தாடிக்கரர்களைக் குறித்த அபிப்பிராயமிருந்தது. (அச்சச்சோ எழுத வந்ததை விட்டுவிட்டு எங்கெங்கோ மனக்குதிரை பாய்கிறதே.)
இதோ வருகிறேன்.
அவர் மனைவியிடம் அலைபேசியில் அழைத்துப்பேசிக்கொண்டிருந்தார் . பேசிக்கொண்டிருந்தது மனைவியிடம் தான் என்பது ’பைத்தியக்காரி’ என்னும் அவரது விளியில் இருந்து தெரிந்துகொண்டது.
சந்தகை வாங்கட்டுமா என்று கேட்டிருக்கிறார். பதிலுக்கு மனைவி இரவில் வழக்கம் போல அவர் சாப்பிடும் சாதமும் வேண்டுமா என்று கேட்டதற்குத்தான் அந்தப்பேச்சு. அத்தனை கடுமையாக அத்தனை உரக்க அத்தனை கோபமாக.
’’பைத்தியக்காரி மாதிரி உளறக்கூடாது சந்தகை வேணுமான்னு கேட்டா ஆமா இல்லைன்னு மட்டும்தான் சொல்லனும் நைட் சாப்பாடு வேணுமான்னெல்லாம் தேவையில்லாம பேசக்கூடாது’’ என்று கத்திக்கொண்டிருந்தார். காரெல்லாம் வைத்திருக்கிற, (குறுந்தாடிகூட) அவர் வெறும் 40 ரூபா சந்தகைக்காகப் பொது இடத்தில் எப்படி அத்தனை தரம் தாழ்ந்து நடந்துகொள்ளமுடிகிறது?
இதுவே அவருக்கு கல்யாணம் நிச்சயமான போதோ அல்லது கல்யாணமாகி கொஞ்ச நாளிலோ நடந்திருக்காது. சில வருடங்களானபின்னர் என்ன செய்தாலும் எத்தனை அநீதி இழைத்தாலும் எப்படி தாழ்வாக நடத்தினாலும் மனைவி வீட்டையோ மணவுறவையோ விட்டுவிட்டு போக வாய்ப்பே இல்லை அவள் உணவுக்கும் உடைக்கும் மற்ற எல்லவற்றிற்கும் முழுக்க முழுக்க தன்னைத்தான் சார்ந்திருக்கிறாள் அவளை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதை தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே இதுவெல்லாம் தொடங்குகிறது.
இப்படித்தான் இங்கு லட்சக்கணக்கான குடும்பங்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்கிறார்கள். பரஸ்பர புரிதலும் மரியாதையும் அன்பும் காதலும் கத்தரிக்காயுமெல்லாம் இங்கு இல்லவே இல்லை. இதைப்பார்த்து வளரும் ஆண் பிள்ளைகள் அப்பாவைப்போலவே அம்மாவை நடத்தலாம் என்பதை கற்றுக்கொள்கிறார்கள் அவர்களின் மனைவியரையும் அப்படியேதான் நடத்த வேண்டும் என்பது அவ்ர்களின் ஆழ்மனதிலும் பதிந்து விடுகிறது.
பெண்பிள்ளைகளும் இதே கீழ்மை அவர்களுக்கும் பின்னர் நடக்கையில் அது எதிர்க்கப்படவேண்டிய கண்டிக்கப்படவேண்டியதொன்று என்பதைக் கூட அறியாமல் வழி வழியாக அதை இயல்பாக ஏற்றுக்கொண்டு அதே வாழ்க்கையிலுழன்று மாய்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் அம்மாவும் அத்தையும் அப்பத்தாவும் அக்காவும் அப்படியே வாழ்ந்ததை அவர்கள் பார்த்து வளர்ந்திருந்திருந்திருப்பார்கள்.
அந்த தாடிக்காகவும் அந்த நடத்தைக்காவும் பளாரென ஒரு அறையை மானசீகமாகக்கொடுத்துவிட்டு வந்தேன்.வேடிக்கை என்னவென்றால் மும்முரமாக மனைவியின் மீதான தன் ஆணவத்தைக்காட்டிக் கொண்டிருந்தவர் சந்தகை அப்போதுதான் அடுப்பில் இருந்தது அது தயாராக இன்னும் 1மணி நேரமாகும் என்று சொல்லபட்டதை காதிலேயே கேட்டுக்கொள்ளவில்லை.
துல்கரின் லோகாவை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்கமுடியவில்லை. பொள்ளாச்சியில் வெளியானதாகக்கூட தகவலில்லை. கோவைக்குத் தனியே சென்று பார்ப்பதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமே இல்லை. ஆனால் நீலியின் கதை என்றதும் அதைக்காண கொதியாகிவிட்டிருக்கிறது. ஜெ வின் பல கதைகளில் ,அவருடைய அம்மாவைபற்றிய பதிவுகளில் எல்லாம் வரும் நீலிகள் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் பிரியத்துக்குரியவர்கள்.
இந்த வேடசெந்தூர் வீட்டின் பல மரங்களில் சமையலைறைக்கு வெளியே சமையலறை ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரிவது போலச் செண்பக மரமொன்றும் நிற்கிறது.
பலாச்சுளைகள் போலிருக்கும் அதன் பொன்னிற மலர்களை பறித்துச்சூடிக்கொண்ட காலமிருந்தது ,இப்போது அதன் உச்சி வெகு உயரத்துக்குபோய்விட்டதால் மலர்களைப்பார்க்கக்கூட முடிவதில்லை. ஆனால் என் இறப்பிற்குப்பிறகு அதில் தான் செண்பகமரத்து யட்சியாக வாழ(?) உத்தேசம்.
தருண் ‘’ இருந்துக்கோ ஆனா இறங்கி வந்து பயப்படுத்தக்கூடாது ’’ என்றிருக்கிறான்.
எனவே இந்த யட்சிக் கதையைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். சரண் கல்யாணியின் படங்களைப் பிரத்யேகக் காரணமொன்றினால் தவறவிடுவதில்லை. எனவே ஜெர்மெனியில் வெளியானதுமே அதைப்பார்த்துவிட்டு விடீயோ அழைப்பில் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தான். தியேட்டரில் அத்தனைசிரிப்பொலியாம்.
’’கல்யாணி வரும் காட்சிகளிலெல்லாம் யட்சிப்பாலைமரமும் அதன் மலர்களும் காட்டினாங்க யாரெல்லாம் கவனிச்சாங்களோ?’’ என்றான். மேலும் மகிழ்ச்சியடைந்தேன்.யட்சிப்பாலை என்னும் அல்ஸ்டோனியா ஸ்காலாரிஸ் என் பிரிய மரங்களில் ஒன்று அதைச் சரண் திரையில் கவனித்தது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. அம்மையுட மோன். யட்சிகள் அந்த மரத்தில் வாழ்வதைப்பற்றி நிறையப்பேசி இருக்கிறோம் நாங்கள்.
முன்பெல்லாம் இந்தியப்பல்கலைக்கழகங்களில் இதன் ஸ்காலாரிஸ் என்னும் சிற்றினப்பெயரே அறிவுடையவர்களுக்கான மரம் என்னும் பொருளில் வைக்கப்பட்டிருந்ததால் பட்டமளிப்பின்போது யட்சிப்பாலை என்னும் இந்த ஏழிலைப்பாலையின் சிறு கிளையொன்றையும் உடனளிப்பார்களாம்.
முனைவர் பட்ட ஆய்வின் துவக்க காலத்தில் தனி அழைப்பின் பேரில்புது தில்லியின் வன மற்றும் சூழல் அமைச்சகத்துக்குள்ளே அதன் இயக்குனரான திரு அட்ரியைக்காண 25 வயது இளம்பெண்ணாகத் தயக்கத்துடன் நுழைந்து, அந்தப்பிரம்மாண்டமான கட்டிடங்களுக்குள்ளே நீண்ட நடைபாதையின் இருபுறமும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு மூச்சடைக்கும்படியான நெடியுடன், கொத்துக்கொத்தாக மலர்களுடன் நின்றிருந்த ஏழிலைப்பாலைகளை முதன்முதலில் பார்த்ததை நினைத்துக்கொண்டேன். லோகா என்று படத்தின் பெயர் இருப்பதிலும் கூடுதல் மகிழ்ச்சி
அந்துவன் கூட்டத்தில் பெண் பிறப்பதும் ஆனை குட்டி போடுவதும் ஒன்று என கொங்குப் பகுதியில் பொதுவாக சொல்லப்படுவதுண்டு, அத்தனை அரிது அந்துவன் குலத்தில் பெண்கள் பிறப்பது என்னும் பொருளில். ஆனால் அந்துவன் குலச் செல்வியான என் அம்மாவுடன் மேலும் இரு மூத்த சகோதரிகள் இருந்தனர். மூன்று பெண்களும் 7 சகோதரர்களுமாக 10 குழந்தைகள் கொண்ட பெருங்குடும்பத்தில் பரமேஸ்வரி என்னும் என் அம்மா பத்தாவது செல்லப் பெண்.
நிலபுலன்களுடன் ஓரளவு வசதியாக இருந்த குடும்பம், அம்மா பிறந்த பின்னர் மேலும் செல்வச் செழிப்பானதால் அம்மா கடைக்குட்டி செல்லமாக வளர்ந்தார்.
கடந்த மாதம் அம்மா மறைந்தைக் கேள்விப்பட்டு முதல் முறையாக எங்கள் வீட்டுக்கு வந்தார் அம்மாவின் அண்ணன். அவர் மட்டுமே சகோதரர்களில் உயிருடன் இருப்பவர் இப்போது. கடைசியாக 25 வயது இளம் பெண்ணாகப் பார்த்த தங்கையை, 55 வருடங்கள் கழித்து ஒரு கண்ணாடிப் பெட்டியில் சவமாக பார்த்த 96 வயதான அவர் மார்பிலறைந்துகொண்டு ”அய்யோ காஃபி குடிச்ச டம்ளரைக் கழுவக் கூடப் போட விடமாட்டோமே, அப்படிச் செல்லமா இருந்தாளே பாப்பாத்தி’’ என்று கதறினார்.
எங்கள் குடும்பங்களில் அனைவருமே நிறம் மட்டுத்தான். அபூர்வமாகவே வெள்ளைத்தோல் கொண்டவர்களை காணமுடியும். கொங்குப்பகுதியில் நல்ல நிறமுள்ள பெண்கள் என்றால் பிராமணப்பெண் என்னும் பொருளில் பாப்பாத்தி என பெயர் வந்துவிடும். பரமேஸ்வரியாகிய அம்மா நல்ல வெளுப்பு என்பதால் பாப்பாத்தி என்று அழைக்கப்பட்டார்.
அப்படிக் கதறிய என் தாய் மாமனை நான் அன்றுதான் முதன் முதலாக பார்த்தேன். அந்தக் கண்ணீரால் கரைக்க முடியாத கடந்த காலமொன்று குளிர்ந்து விறைத்திருந்த அம்மாவின் உடலுக்கும் அவருக்கும் இடையில் நின்றிருந்திருந்தது. இதன் பொருட்டே அவர் இன்னும் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்தாரோ என்னவோ என்று துக்க வீட்டில் பலரும் பேசிக்கொண்டனர்.
பத்துப் பேரில் மூத்தவரான ஞானம் பெரியம்மாவுக்கு 7 குழந்தைகள். அவருக்கு மூன்றாம் மகன் பிறக்கையில்தான் சில நாட்கள் இடைவெளியில் அம்மாவும் பிறந்திருக்கிறார்கள்.
தாயும் மகளும் ஒன்றாகப் பிரசவிப்பதை, ஏதோ பழைய கதையைச் சொல்லக் கேட்பதுபோல் அம்மா கதையாகச் சொல்லக் கேட்டிருப்போம். அம்மாவின் வாழ்க்கையே புனைவை மிஞ்சும் நிகழ்வுகளால் ஆனதுதான். அக்காள் மகன் துரையும் அம்மாவும் ஒரு சிலநாட்கள் இடைவெளியில் பிறந்தவர்கள் என்பதால் துரை அண்ணன் அம்மாவை ’பாப்பி சித்தி’ என்று பெயர் சொல்லித்தான் அழைப்பார்
பெரியண்ண கவுண்டருக்கும், வெள்ளையம்மாளுக்கும் 1942 பிப்ரவரி 20 அன்று அம்மா பிறந்தார். மிகச் செல்லமாக எந்த வீட்டு வேலையும் செய்யாமல், ராணியைப் போலவே வளர்ந்திருக்கிறார்கள். அக்காலத்திய பெரும்பாலான குடும்பங்கள் போலவே அம்மாவின் குடும்பமும் சாதிப்பற்று மேலோங்கிய குடும்பமாக ஊரில் நல்ல செல்வாக்குடன் இருந்திருக்கிறது.
அம்மா மட்டுமே சகோதர சகோதரிகள் அத்தனை பேரில் பள்ளி இறுதி முடித்து ஆசிரியர் பயிற்சிக்கு சென்றவர்.
அம்மாவின் அப்பா, நான் இப்போது வசிக்கும் இந்த குக்கிராமத்தில் ஒரு பெரிய அரிசி ஆலையில் கணக்கராக இருந்திருக்கிறார். அம்மாவின் ஒரு அண்ணன் பெரும் பொருட்செலவில் இந்தியா முழுவதும் செல்லும் பெர்மிட்டுடன் ஒரு லாரி வாங்கிய போது குடும்பம் எதிர்பாராமல் நொடிக்கத் துவங்கியிருக்கிறது. ஆனால் மீண்டு விடலாம் என்னும் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். லாரி அடிக்கடி பாம்பே சென்று வந்ததால் அந்த அண்ணன் பாம்பேக்காரர் என்று கிராமத்தவர்களால் அழைக்கப்பட்டிருக்கிறார்.
அப்படி பாம்பே சென்ற அவர் ஒருமுறை அங்கே பூரி என்னும் உணவைச் சுவைத்து விட்டு, அந்தப் பதார்த்தத்தைச் செய்யும் முறையையும் கற்றுக் கொண்டு வந்திருக்கிறார். அம்மாவின் ஊரான வேட்டைக்காரன் புதூரில் அப்போது பூரி அறிமுகமாயிருக்கவில்லை. வீட்டு முற்றத்தில் விறகடுப்பு கூட்டி பலர் முன்னிலையில் பூரியை அண்ணன் செய்து காண்பித்ததை அம்மா கதைபோல நீட்டி நீட்டிச் சொல்லுவார்கள். எப்போது பூரி செய்தாலும் அம்மா விவரித்த அக்காட்சி மனதில் வரும்.
அம்மா இப்படி தன் நினைவுகளிலிருந்து பலநூறு சம்பவங்களை கதை போலச் சொல்லுவார். அக்கதைகளின் கையை பிடித்துக் கொண்டு, தான் ஒருபோதும் திரும்பிச் செல்லவே முடியாத இடங்களுக்கு தன் நினைவில் சென்று கொண்டிருந்திருக்கிறார் என்பது புரிய வெகுகாலமாயிற்று. ஒருபோதும் அக்கதைகள் என் அப்பாவின் முன்னிலையில் சொல்லப்பட்டதில்லை.
அதே கிராமத்தில் மாடுகள், குதிரை மற்றும் யானைகளை வியாபாரம் செய்துவந்த ஒருவரின் வீட்டில் தாயும் குட்டியுமாக யானைகள் வந்திருப்பதை வேடிக்கை பார்க்க 10 வயது சிறுமியாக அம்மா சென்றிருக்கிறார். அந்த பெரிய வீட்டின் முற்றத்தில் தாய் யானை, குட்டிக்கு பாலூட்டி கொண்டிருந்திருக்கிறது. குட்டி பாலருந்துகையில் சிந்திய பால் ஒரு சிறு ஓடைபோல வாசலைத்தாண்டி ஓடிக்கொண்டிருந்ததாம். அதை சொல்லுகையில் எல்லாம் அம்மா பத்து வயது சிறுமியாகவே மாறிவிட்டிருப்பார்
பாம்பே அண்ணன் வடநாட்டுப் பயணமொன்று சென்று வந்தபோது ஒரு வைரக்கல்லையும் அக்காலத்தில் சாதாரணக் குடும்பத்தினர் நினைத்துப் பார்க்கவே முடியாத தொகை கொடுத்து வாங்கி வந்திருக்கிறார். அதன்பிறகு அம்மாவின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் நொடித்துப் போயிருக்கிறது. அப்போது பலரும் சொன்னபடியும், நம்பியபடியும் அந்த வைரம் நீரோட்டம் சரியில்லாதது என்றும் அதனால்தான் குடும்பம் நொடித்துப் போனதென்றும் அம்மாவும் நம்பினார்.
அந்த வைரத்தை யாருக்கும் விற்கவும் முடியாமல் பலவருடங்கள் கழித்து மிக மிகச் சாதாரண தொகை ஒன்றிற்கு கொடுத்திருக்கிறார்கள். அப்போது குடும்பம் மீண்டு வர முடியாத அளவிற்கு நொடித்து விட்டிருந்தது
அம்மாவும் ஆசிரியப் பயிற்சி முடிந்து அரசு வேலையும் கிடைத்து ஒரு அரசுப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றத் துவங்கி இருந்தார். வீட்டில் பொருளாதார நிலைமை மாறி இருந்தாலும் வழக்கம்போல செல்லப் பெண்ணாகவே இருந்தார்
இரண்டாவது அக்காவான மீனாட்சி ஒருமுறை அம்மா காபி குடித்த டம்ளரை எடுக்க மறுத்தபோது, கோபித்துக்கொண்டு அக்காவுடன் ஒரு வருடம் அம்மா பேசவே இல்லையாம். இப்போதும் மீனாட்சி பெரியம்மா ’’பிடிவாதக்காரிடி உங்கம்மா’’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகும்.
இன்னொரு பெரியம்மாவான ஞானம் கடும் சுத்தக்காரர், நாங்கள் சிறுமிகளாய் இருக்கையில் அவர் வீட்டுக்கு வந்தாலே அழத்துவங்கி விடுவோம். தலையில் பேன் பார்த்து, ஒட்ட நகம் வெட்டி, கொதிக்க கொதிக்க சுடுநீர் ஊற்றிக் குளிக்க வைத்து இம்சைப்படுத்துவார். உடலே சிவந்துபோய் ஆவி பறக்கும், குளியலுக்கு பின்னர். அம்மா வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தது அந்த இரண்டு பெரியம்மாக்கள் மட்டும்தான்.
அத்தனை செல்லமாய் வளர்ந்த அம்மாவுக்குத்தான், அவர் உயிருடன் இருக்கையிலேயே கடைசிக் காரியங்கள் செய்து, 16 ஆம் நாள் கருமாதியும் அவர் வீட்டில் செய்தார்கள்
நொடித்துக்கொண்டு இருந்த குடும்பத்தில் இரு சகோதரிகளுக்கும், நாலு சகோதரர்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. ஒரு அண்ணன் சாமியாராகி விட்டிருந்தார். பாம்பே அண்ணனுக்கு திருமணம் தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்திருக்கிறது.
பக்கத்து கிராமமான பூச்சனாரியின் ஜமீன் குடும்பமொன்றில் 6 மகள்கள், அனைவருக்கும் வரன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த ஜமீன் குடும்பத்தில் முன்னெப்போதோ நிகழ்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் தற்கொலையின் போது அக்குடும்பத்தில் இனி ஆண்வாரிசு தங்காது என்றும், பெண்கள் அனைவரும் விதவைகளாகவே இருப்பார்கள் என்றும் சாபம் இருந்திருக்கிறது. அதனால் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருந்த பெண்களை அந்த ஜமீன்தார், சாதாரண குடும்பங்களுக்கே கொடுக்க முனைந்தார், அதில் ஒரு பெண்ணான பச்சைநாயகியை அந்த பாம்பே அண்ணன் திருமணம் செய்துகொண்டார்.
பேரழகி அந்த அத்தை. அவரை முதன் முதலில் பார்த்தபோதே அவர் வெள்ளுடையில் விதவையாகத்தான் இருந்தார். தன் கடைசி காலம் வரை எங்களுடன் தொடர்பில் இருந்தார். பச்சை நாயகி அத்தையின் முதல் மகன் பிறந்த இரண்டாவது நாள் இறந்துபோனான். “பழனி முருகனாட்டம் நீள அகலமா இருந்தானே என் மகன், சுடுகாட்டுக்குக் கொண்டு போறப்போ அவனை கையில தூக்கிட்டு வாசல்வழியா நேரா போக முடியாம, கையை சாச்சுத்தானே கொண்டு போனாங்க’’ என்று அழுவார்கள் அடிக்கடி.
மீண்டும் அத்தை நிறை கர்ப்பிணியாக இருக்கையில் பாம்பே அண்ணன் ஒரு விபத்தில் காலமானார். ஒரு பெண் குழந்தையுடன் அத்தையும் அவரின் ஐந்து சகோதரிகளுமே இளம் விதவைகளாத்தான் இருந்தார்கள்.. அவர்களின் ஆண் வாரிசுகளில் ஒரே ஒருவரைத் தவிர பிறர் அனைவருமே மர்மமான முறையில் அல்லது அகாலமாய் மரணித்தார்கள். அவர்களுக்குப் பிறந்த பெண்கள் நலமுடன் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையிலும் ஆண் வாரிசுகள் தங்குவதில்லை. இந்த இணைய யுகத்தில் இது என் குடும்பத்தில் நடப்பதால் மட்டுமே என்னாலும் நம்ப முடிகிறது.
என் அம்மாவை அவர்களின் குடும்பமே மறந்து , கடைசிக் காரியங்கள் செய்து, எங்கள் மகள் இறந்துவிட்டாள் என்று புகைப்படத்துடன் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து விட்டிருந்தனர். எனினும் பச்சை நாயகி அத்தை தூயவெண் பருத்திப் புடவையுடன் நெற்றி நிறைந்த திருநீறு துலங்க அடிக்கடி வீட்டுக்கு வருவார். 7 குழந்தைகளுடன் விதவையாக இருந்த ஞானம் பெரியம்மா, குழந்தைகளே இல்லாத மீனாட்சி பெரியம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாய் எப்போதாவது அம்மாவுடன் பார்க்கப்போகும் பொள்ளாச்சி சுப்பிரமணிய சாமி கோவில் வாசலில் காவியுடுத்திப் பிச்சைக்காரர்களுடன் அமர்ந்திருக்கும் அம்மாவின் சாமியார் அண்ணன், பச்சைநாயகி அத்தை ஆகியோர் மட்டுமே எங்களுக்கு அம்மாவின் குடும்பத்தினருடனான கண்ணிகள்.
மீனாட்சிப் பெரியம்மா அம்மாவுக்கு வலுக்கட்டாயமாக விஷம் அளித்துக் கொல்லப்பார்த்ததை மீனாட்சிப் பெரியம்மாவே சொல்லிச் சொல்லி பலமுறை அழுவார்கள். வஞ்சமெனும் கொடுந்தெய்வம் மனத்தில் குடியேறினால் செய்ய முடிந்த அனைத்தையும் அம்மாவின் குடும்பம் செய்திருக்கிறது.
அம்மாவுக்கு 25 வயதான போது குடும்பம் நொடித்திருந்தாலும் அரசு வேலையும், அழகும், அம்மாவுக்கு நல்ல வரன்களைக் கொணர்ந்து வந்திருந்திருக்கின்றன. எனினும் அம்மா வீட்டினர் ஒரு அரசாங்க வேலையிலிருக்கும் மணமகனே உகந்தவரென்று அபிப்ராயப்பட்டதால் என் அப்பாவை சம்பந்தம் பேச விழைந்திருக்கின்றனர். அம்மாவுடன் ஒப்பிட்டால் பொருளாதார ரீதியாக மிகப் பின்தங்கியவர்கள் அப்பாவின் குடும்பம்.
இரு சகோதரிகள், இரு சகோதரர்களுடன் குடும்பத்தில் மூத்தவராக பல கடமைகள் கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்தாலும் சென்னையில் படித்து அரசுப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்ததால் அப்பாவுக்கு அம்மாவைக் கொடுப்பதாக வெற்றிலை பாக்கு மாற்றி எளிமையாக இரு குடும்பத்தினர் கூடி திருமணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மிக எளிமையாக மூன்று மாதங்களில் நடந்து முடிந்திருக்க வேண்டிய அம்மாவின் திருமணம் எதிர்பாராமல் பெரும் சிக்கலை சந்தித்திருக்கிறது. யார் பக்கம் தவறென்று சொல்லவே முடியாதபடிக்கு அம்மாவின் மொத்த வாழ்வையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டிருக்கிறது ஊழ்.
வெண்முரசில் ’’மாமலைகளைப்போல உங்கள் நெஞ்சின்மேல் பெருந்துயரை தூக்கி வைக்கக் காத்திருக்கிறது ஊழ்’’ என்று சொல்லப்பட்டிருக்கும். ஊழன்றி வேறெதெற்கு இத்தனை வல்லமை இருக்கும்?
அந்த திருமண உறுதிப்பாட்டின் போதுதான் அம்மவுக்கு தெரியவந்திருக்கிறது யானை பாலருந்தி ஓடையாய் பால் வழிந்தோடியது அப்பாவின் வீட்டு வாசலில் என்று. அத்தனை செல்வாக்கோடு இருந்த குடும்பம் என் தாத்தாவின் (அப்பாவின் அப்பா) திருமணத்தைத் தாண்டிய பந்தமொன்றினால் சரிந்திருக்கிறது
அந்தத் தொடர்பு என் தாத்தாவிற்கு அவரது இறுதிக்காலம் வரைக்கும் இருந்தது.
நான் சிறுமியாக இருந்தபோது தாத்தாவுடன் மிகப்பெரிய முற்றமும், விறகு எடைபோடும் தராசும், அடுக்கப்பட்டிருந்த விறகுக்குவியல்களுமாக இருந்த ‘அந்த’ பெரிய ஓட்டு வீட்டுக்கு சென்றது எனக்கு தேசலாய் நினைவிருக்கிறது.
அந்த மாபெரும் தராசுத்தட்டில் உட்கார வைக்கப்பட்டு சிறு துண்டு வெல்லம் எனக்கு அந்த வெற்றிலையால் சிவந்த உதடுகளுடன் இருந்த அம்மாள் அளித்தார்கள். அன்று இரவு என்னைப் பாட்டி ’’அங்கே போவியா போவியா’’ என்று கண்ணீருடன் அடித்தார்கள். அந்த அடிகள் எனக்கானவை அல்ல என்பது புரியவும் பல வருடங்களானது.
பாட்டியின் பிறந்த வீட்டிலிருந்து அனுப்பப்படும் வருஷத்துக்கான நெல்மூட்டை வண்டியும் அந்த விறகுக் கடை வீட்டுக்குத் திருப்பிவிடப்பட்டது. அப்போதைய வாயில்லாப் பூச்சி மனைவிகளில் ஒருவரான பாட்டி, வீட்டு செலவுகளுக்கென நிலக்கடலை உரிக்கவும் , வேப்பமுத்து பொறுக்கவும், வயல்களுக்குக் கூலி வேலைக்கும் போய்க் கொண்டிருந்தார்
அப்பா படித்து ஆசிரியராகி குடும்பம் நிமிரத்துவங்கி இருந்த நேரத்தில், இந்த சம்பந்தமும், அம்மாவின் அரசுவேலையும் பெரும் நம்பிக்கை ஊட்டுவதாகவும், திருமண வயதில் இருந்த இரு அத்தைகளின் எதிர்காலத்திற்கான பிடிமானமாகவும் இருந்திருக்கிறது
நிச்சயதார்த்தம் முடிந்து சில வாரங்கள் கழித்து அம்மாவின் பள்ளியில் நடந்த ஒரு அரசு விழாவில் அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரும், பெரும் செல்வாக்கான பதவியும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்களும் கொண்டிருந்த ஒருவர் அம்மாவை அந்த விழாவில் பார்த்திருக்கிறார்.
அம்மாவுக்குத் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட விவரம் தெரியாத அவர், அம்மாவின் அழகும் எளிமையும் பிடித்திருந்ததால் தன் குடும்பத்தினருடன் அன்றே அம்மா வீட்டுக்கு சென்று பெண் கேட்டிருக்கிறார் உடனடியாக திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
வேகமாக வீழ்ந்து கொண்டிருந்ததால் எதைப் பற்றிக்கொண்டாவது மேலே ஏறி மூச்சு விட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அம்மாவின் குடும்பத்தினர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள விரும்பியிருக்கின்றனர். மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு பற்றிக்கொள்ள ஒரு மரத்துண்டு கிடைத்தால் போதும் என்றிருக்கையில் ஒரு சொகுசுக் கப்பலே வந்தது போல, அவர்களுக்கு அனைத்தையும் கடந்து குடும்பம் நிமிர்தல் என்னும் ஒன்று மட்டுமே மிக முக்கியமானதாக தெரிந்திருக்கிறது.
அம்மாவுக்கு வெற்றிலை மாற்றி நிச்சயம் செய்துவிட்டதைச் சொன்னபோதும் மணமகன் வீட்டார் ’ வெறும் உறுதி செய்தலான அந்த நிகழ்வில் அவர்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, பெண் வீட்டினருக்கு சம்மதமென்றால் உடன் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னபோது அறமென்னும் ஒன்றை அம்மாவின் குடும்பம் மறந்து விட்டிருக்கிறது.
புதிய சம்பந்தமொன்றிற்கு சம்மதம் சொல்லப்பட்டது அம்மாவுக்கு மிகத் தாமதமாகவும், அப்பாவின் குடும்பத்திற்கு மிக மிகத் தாமதமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இது தெரிய வந்தபோது நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதிக்கு சரியாக ஒரு வாரம் இருந்திருக்கிறது
இதை அம்மா திகைப்புடன் எதிர் கொண்டிருக்கிறார்கள். அப்பா குடும்பத்தினர் இதில் சீண்டப்பட்டவர்களாகவும், இழிவு படுத்தப்பட்டவர்களாகவும் உணர்ந்திருக்கின்றனர்.
செல்வாக்கு மிக்க ஒரு குடும்பத்தினரின் தலையீடு, திருமணக்கனவில் இருந்த இரு இ்ளம் உள்ளங்களின் கணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கிறது.
அப்போது திராவிட கட்சியிலும் கடவுள் மறுப்புக்கொள்கையிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த அப்பா தனது நண்பர்களுடன் அம்மா வீட்டிற்குப் பேச்சு வார்த்தைக்குப் போன போது சிறுமைப்படுத்தப் பட்டிருக்கிறார்.
அம்மா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். பலமுறை வீட்டிலிருந்து வெளியேற முயன்று கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கிறார். அப்பா வழித்தாத்தா வறுமையில் இருந்தாலும் ஊரில் நல்ல செல்வாக்கு கொண்டவர். அவரும் இதில் தலையிட்டு உதவியதால், குறித்த நாளுககு முந்தைய இரவு தன் நண்பர்கள் உதவியுடன் அம்மாவை வீட்டிலிருந்து வெளியேறச் செய்து, தன் வீட்டு முற்றத்தில் எளிமையாக மாலைமாற்றி தாலி கட்டி அப்பா திருமணம் செய்துகொண்டார்.
விஷயம் தெரிந்து அந்தப் பெரிய வீட்டினர் எந்த மனவருத்தமும் இன்றி விலகிக்கொண்டனர். ஆனால் அம்மா வீட்டினர் இதில் அவமானப்பட்டு மிக மிகப் புண்பட்டுவிட்டனர். மறுநாளே அம்மாவை இறந்தவளாக அறிவித்து நாளிதழில் விளம்பரம் கொடுத்து வீட்டில் முறையாக நீத்தார் சடங்கும் செய்திருக்கிறார்கள்.
கட்டிய புடவையுடன் எளிமையாக அப்பாவின் வீட்டுக்கு வந்த அம்மாவுக்கு இடப்பட்ட முதல் கட்டளையே இனி பிறந்த வீட்டை நினைக்க கூடாது அங்கு போகக்கூடாது என்பதுதான். அதை கடந்த மாதம் மாரடைப்பால், என் தோளில் சாய்ந்து உயிரை விட்ட தனது 82 வது வயது வரை அம்மா கடைப்பிடித்தார்
தனது பெற்றோர் இறந்த செய்தி வந்தபோது கூடத்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கதறி அழுதுகொண்டிருந்த அம்மாவின் சித்திரம் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.
அந்தத் திருமணம் அப்பாவின் ஆணவத்தின், ஆண்மையின் வெற்றியாக அமைந்தது என்றாலும் ஒரு மிகப்பெரிய சம்பந்தத்தை உதறிவிட்டு அவர்களுடன் இணை சொல்லவே முடியாத இடத்தில் இருந்த தன்னை பரமேஸ்வரி மணம் செய்து கொண்டது அப்பாவை எங்கோ காயப்படுத்தி இருக்கிறது.
வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் மூத்த மகனாக இருந்த அந்த ஆணின் உள்ளுறைந்திருந்த விலங்கொன்று அப்போதிலிருந்து விழித்துக்கொண்டது. அம்மா ஒருபோதும் அந்த இணை வைத்தலை மனத்திலும் கனவிலும் நினைத்து விடக்கூடாது என்பதை இத்தனை வருட தாம்பத்ய வாழ்வில் அப்பா என்கிற பெரும் வன்முறையாளர் கணம் கணமாக நினைத்துக் கொண்டே தான் இருந்தார். தன் எல்லாச்செயல்களிலும் அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அம்மாவை வதைத்துக்கொண்டே இருந்தார்.
அம்மா ஒரு திருமண உறுதிப்பாட்டினை மீறக் கூடாது என்னும் எளிய அறத்தினால் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்திருக்க கூடும்.
ஆனால் கடைசிக்கணம் வரைக்கும் ஒரு தென்னிந்தியப் பெண்ணிற்கு உரித்தான அனைத்து குடும்ப வன்முறைகளும், அநீதிகளும் இழைக்கப்பட்டு, உதறிவிட்டு வந்த அந்த உறவை நினைத்துவிடக்கூடாது என்பதற்காக மேலதிகமாக, சித்ரவதையும் செய்யப்பட்டார். அறத்தின் மீது நின்றமைக்காக அம்மா இழந்ததும் பெற்றதும் ஏராளம்
இதை ஒருபோதும் அப்பாவும் அம்மாவும் வெளிப்படையாகப் பேசிக் கொண்டதில்லை எனினும் அப்பாவின் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த அந்தக் கனல் அவ்வப்போது தழலாடி எங்கள் அனைவரையும் பொசுக்கும்.
அப்பா செய்த அனைத்து இழிவுகளையும் மறு பேச்சின்றி ஏற்றுக்கொண்டு, அவரது எல்லாச் செயல்களுக்கும் மறுப்பேதும் தெரிவிக்காமல் மெளன சாட்சியாக இருந்த அநீதியை அம்மா இறுதிவரை செய்தார். ஒரு போதும் அப்பாவை மீறி ஒரு சொல் அம்மா சொன்னதில்லை, நினைத்ததும் இல்லை
புகுந்த வீட்டின் நான்கு திருமணங்களையும் அம்மா சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார். கழுத்தில், காதில், கைகளில் ஏதும் நகைகள் இன்றி வெறும் கழுத்தாக வந்த அம்மாவுக்கு அப்பா வாங்கிக்கொடுத்த ஒரேொரு பீட்ரூட் கல் நெக்லஸ் பெரும் பிரியத்துக்குரியதாக இருந்தது
கண்ணை விழித்துக் கொண்டு பெரிய பெரிய அடர் சிவப்பு நிற உருண்டைக்கற்களுடன் இருக்கும் அந்த பழமையான நெக்லஸை அம்மா எனக்கு திருமணத்தின் போது கொடுத்திருக்கிறார்கள். அம்மாவின் கழுத்திலும் வீட்டு அலமாரியிலும் இருந்ததை விட அதிக காலம் அது வங்கியில் கடனாக வைக்கப்பட்டிருந்தது.
அம்மாவின் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகி அம்மாவின் பெற்றோர் இறந்து, நானும் அக்காவும், தம்பியுமாக மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னர் அம்மாவின் இரு சகோதரிகளும் மெல்ல மெல்ல வீட்டுக்கு வரத் தொடங்கினர்.
கல்யாண பிரச்சனைகளின் போது அம்மா வீட்டைவிட்டு வெளியேறத் தயாராகிவிட்டதை தெரிந்துகொண்டு வலுக்கட்டாயமாக விஷம் புகட்ட முனைந்த மீனாட்சி பெரியம்மாவும், மகளைப் போல வளர்த்த சின்னத்தங்கையை கொல்ல உடந்தையாக இருந்த ஞானம் பெரியம்மாவும் சொல்லித்தான் எங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்தன. மீனாட்சி பெரியம்மா என் பாதுகாப்பில் இருக்கிறார்கள். சுத்தக்காரரான ஞானம் பெரியம்மா பல வருடங்களுக்கு முன்னர் ஒரு வாரம் வெறும் நீர் மட்டும் அருந்தும் கடும் சஷ்டி விரதம் இருந்து, ஏழாம் நாள் சூர சம்ஹாரம் பார்த்துவிட்டு வீடுதிரும்பி பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு புடவைக் கொசுவத்தை சொருகிக்கொண்டிருக்கையில் அப்படியே மாரடைத்து இறந்துபோனார். விழுந்து கிடந்த அவர் கைகளுக்கு வெகு அருகே விரதம் முடித்துவைக்க வேண்டிய முருகனின் தண்டு பிரசாதம் இருந்தது.
பல கஷ்டப்பாடுகளுக்கிடையில் எங்களை வளர்த்தெடுத்தாலும் அப்பாவின் அநீதிகளுக்கெல்லாம் மெளனமாக இருந்தே உடந்தையாக இருந்தார் என்னும் வருத்தம் அம்மாவின் மீது எங்கள் மூவருக்கும் உண்டு.
அம்மா கடைசி நாள் வரை தனக்கு தானே எல்லா வேலைகளையும் செய்து கொண்டார். விநாயக சதுர்த்திக்கு கொளுக்கட்டைகளை அவராகவே அன்று செய்தார். மறுநாள் செப்டம்பர் முதல்நாள்அன்று இரவு 1 மணிக்கு மூச்சு விட சிரமாயிருக்கிறெதென்று சொன்ன அம்மாவை உடனே காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
அவசரமாய் காரில் ஏற வந்த என்னை ’அந்தப் பக்கம் வந்து உடகாரு தேவி’’ என்றார் அம்மா. அதுவே அவரது வாழ்வில் கடைசியாக பேசிய வாக்கியம் என்பது அப்போது எனக்கும் அவருக்கும் தெரிந்திருக்கவில்லை. வயோதிகத்தினால் ஏற்பட்ட உடல் நலிவினால் அவ்வப்போது மூச்சுவிட சிரமப்படுவார்கள் அப்படியான ஒன்று தான் என அன்றும் நினைத்தேன்.
20 நிமிட பயண தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அப்பாவையும் அழைத்துக்கொண்டு என் மகன் ஓட்ட, காரில் விரைகையில் கண்களை மூடிக்கொண்டு கார் கூரையிலிருக்கும் சிறு கைப்பிடியை பிடித்துக்கொண்டே வந்த அம்மாவுக்குள் நான் பேசியவை எதுவும் சென்று சேரவே இல்லை.
மருத்துவமனையை நெருங்க 5 நிமிடங்கள் இருக்கையில் கைப்பிடியை விட்டுவிட்டு ஒரு கையால் என் இடது கையை இறுகப் பற்றிக் கொண்டு என் தோளில் சாய்ந்துவிட்டார்கள்.
அவ்வளவுதான். 82 வருட வாழ்வும் 55 வருட தாம்பத்யமும் எண்ணிலடங்கா துயர்களும், வேதனைகளும், அனுபவங்களும், நினைவுகளும் நிறைவுற்றன.
அம்மாவின் இறுதிச் சடங்குகளின் போது அவர்களை அலங்கரித்து எங்கோ தூர தேசத்துக்கு அனுப்புவது போல் தயார்படுத்துவதாக நான் நினைத்துக்கொண்டேன். உறுதியாக மின்மயானத்துக்கு வர மறுத்து விட்டேன். அம்மாவின் அலங்கரித்த தோற்றமே என் மனதின் கடைசி சித்திரமாக இருக்கட்டுமென்று.
சிதை ஏற்றுகையில் சொல்லப்பட்டிருக்கிறது முன்பு சுடுகாடாக இருந்த அங்குதான் அம்மாவின் அப்பாவினுடைய உடல் சாம்பலாக்கப் பட்டிருக்கிறதென்று. இந்த விசித்திரமான வாழ்வு நம்மை அழைத்துச் செல்லும் இடங்களை ஒருபோதும் நம்மால் கணிக்கவே முடிவதில்லை.
குழந்தையாக, கன்னியாக, மனைவியாக, அன்னையாக, முதியவளாக 82 நீண்ட வருடங்கள் வாழ்ந்து மறைந்த அம்மாவை மூன்றாம் நாள் ஒரு சிறு மண் சட்டியில் அஸ்தியாக எடுத்துக்கொண்டு பாரதப்புழா ஆற்றில் கரைத்துவிட்டு, கரையோரம் இருந்த நவ முகுந்தனை தரிசித்து விட்டு அம்மாவின் ஆன்மா சாந்திக்கென வேண்டிக்கொண்டு திரும்பினோம். திரும்பும் பயணத்தில் அனைவரின் மனதிலும் இனி அம்மா வெறும் நினைவாகவே எஞ்சுவார் என்பது ஒரு பெரும் பாறை போல அழுத்திக் கொண்டிருந்தது. வாழ்வென்னும் வதையிலிருந்து விலக்குகையில் இறப்பு ஒரு விடுதலையாகத்தான் இருக்கும்.
பாதி தூரத்தைக் கடந்தபோது கார் ஓட்டிக் கொண்டிருந்த என் தம்பி என்னிடம்’’ நீ கொஞ்ச நேரம் முன்னால் சாமி கும்பிடும் போது அப்படியே அம்மாவின் சாயலில் இருந்தே’’ என்றான். நான் பெருமூச்சு விட்டுக் கொண்டேன் அம்மாவின் இடத்துக்கு காலம் என்னை நகர்த்தி விட்டிருக்கிறது
அம்மாவின் இறப்பு நிகழ்ந்த அந்த வாரம் வீட்டிலிருந்த பெரு மரங்களைத் தறித்துக் கொண்டிருந்தோம். அம்மாவின் இறப்பு, மனத்திலும் வீட்டிலும் உருவாக்கி இருந்த வெறுமையை அத்தனை காலம் பசுமைப் பெருக்கினால் வீட்டை மூழ்கடித்து கொண்டிருந்த மரங்களும் அவற்றின் நிழலும் குளுமையும் இல்லாதிருந்தமை மேலும் அதிகரித்திருந்தது.
மிக எளிய இறப்பு அம்மாவுடையது. ஒரு மலர் உதிர்வதைப்போல உதிர்ந்து விட்டார்கள். இப்போது தினம் அம்மாவை நினைத்துக் கொள்கிறோம். மெல்ல மெல்ல வாழ்வின் இயக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கையில் அம்மாவை மெல்ல மறக்கவும் தொடங்குவோம். பின்னர் வருடா வருடம் ஒரு சடங்கு போல நினைவுகூர்ந்து வழிபடுவோம். எனினும் என் தோளில் அம்மாவின் அந்த கடைசிச் சாய்தலின் எடை என் இறுதிக்கணம் வரைக்கும் இருக்கும். இவ்வுலகின் இரக்கமற்ற நெறிகளுக்கும் வஞ்சங்களுக்கும் இடமில்லா மூச்சுலகில் அம்மா அமைதி கொள்ளட்டும்.
48 நாட்கள் கடந்துவிட்டன அம்மா இல்லாமல்.
தறிக்கப்பட்டு வெறுமை சூடி நின்ற மரக்கிளைகளில் செம்புநிறத் தளிர்கள் எழுந்திருக்கின்றன. சருகுகளை உதிரச்செய்யும் புடவியின் அதே நெறிதான் புதுத்தளிர்களையும் எழச் செய்கிறது.
அம்மாவின் ஆசி எங்களுக்கு பரிபூரணமாகக் கிடைத்து, உயிரொளிரும் தளிர்களும் மலர்களும் அவற்றின் குளுமையுமாக வீடு நிறையட்டும்.
70-களில் தமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் நடித்த எல். விஜயலக்ஷ்மியை நினைவிருக்கிறதா? இந்தப் பாடலைச் சொன்னால் உடனே நினைவுக்கு வருவார். மாறுவேடத்தில் முறுக்கு மீசை வைத்துக்கொண்டு பஞ்சாபி உடையில் இருக்கும் எம். ஜி. ஆருடன் ’’ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’’ என்று பாங்கரா நடனமாடுவாரே அதே விஜயலக்ஷ்மிதான்.
பூனாவில் வசித்த தமிழ்பிராமணக் குடும்பத்துப் பெண்ணான விஜயலக்ஷ்மி, 5 வயதிலிருந்தே , இசை மற்றும் நாட்டியக்கலைஞரான தன் தாயிடமிருந்து நடனம் கற்றுக்கொண்டார். 9-வது வயதில் குடும்பத்துடன் சென்னை வந்த விஜயலக்ஷ்மி வழுவூர் ராமையா பிள்ளையிடம் நடனம் கற்றுக்கொண்டார்.
சென்னையில் விஜயலக்ஷ்மியின் அரங்கேற்றம் குமாரி கமலா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. பல தென்னிந்திய மொழிகளில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பல முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த விஜயலக்ஷ்மி இந்தப் பாடலினால் வெகுவாக பிரபலமானார். சுமார் பத்தாண்டுகள் தென்னிந்திய திரைஉலகில் பிரகாசமான நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தார் விஜயலக்ஷ்மி.
1969-ல் ஊட்டி வரை உறவு திரைப்படத்தில் இரு விஜயாக்களில் ஒருவராக கே ஆர் விஜயாவுடன் நடித்துக் கொண்டிருக்கையில் படப்பிடிப்புத் தளத்தில் அவரது சகோதரனின் நண்பரும் பிலிப்பைன்ஸின் IRRI அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்திய வேளாண் விஞ்ஞானியுமான சுரஜித் குமார் தத்தாவை (Surajit Kumar De Dutta ) சந்தித்தார் விஜயலக்ஷ்மி.
காதல் வயப்பட்ட தத்தாவும் விஜயலக்ஷ்மியும் அந்த ஆண்டே திருமணம் செய்து கொண்டார்கள். ஊட்டி வரை உறவுதான் விஜயலக்ஷ்மியின் கடைசித் திரைப்படம், அதன்பிறகு அவர் நடிக்கவில்லை. பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் மிக முக்கியமான நெல் கண்டுபிடிப்பிற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த கணவர் தத்தாவுடன் அவரும் பிலிப்பைன்ஸ் சென்றார்.
தத்தா பணியாற்றிக் கொண்டிருந்தது பிலிப்பைன்ஸ் நாட்டின், லாகுனா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான IRRI யில் . IRRI பதினேழு நாடுகளில் 1,300 ஊழியர்கள் பணியாற்றும் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
1960- களில் ஆசியாவில் நிலவிய தானியப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அரிசி இனங்களை வளர்க்கும் பசுமைப் புரட்சி இங்கு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பல விஞ்ஞானிகளின் முயற்சியால் உருவான நவீன நெல் ரகங்கள், விவசாயிகளுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது, IRRI-ல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நெல் ரகங்கள் மூன்று மடங்கு உற்பத்தியை அளித்தன.
இந்த ஆராய்ச்சியால் அரிசியை பிரதானமான உணவாகக் கொண்டிருந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றன. அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்தான் சுரஜித் தத்தா.
சுரஜித் குமார் தத்தா பசுமைப்புரட்சியில் மிக முக்கிய பங்காற்றியவர். ஆனால் அவரது பங்களிப்பு போதுமான அளவு உலகின் கவனத்துக்கு வரவில்லை.
சுரஜித் தத்தா என்னும் இளம் வேளாண் விஞ்ஞானியான இவர்தான் IRRI-ல் தொடர்ந்து நடைபெற்ற வேளாண்மைச் சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட IR-8 எனப்படும் புதிய நெல் வகையின் ஆய்வுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருந்த விஞ்ஞானியாக இருந்தவர்.
உலகின் பல லட்சம் மக்களின் பிரதான உணவான அரிசி பல உலக நாடுகளில் விளைகிறது என்றாலும் மிக அதிகமாக விளைவது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் தான்.
1960-களில் பல காரணங்களால் அரிசி உற்பத்தி உலகெங்கிலும் மிகக்குறைவாக இருந்தது. நெற்பயிரின் உயரம் மிக அதிகமாக இருந்ததால் காற்றில் பயிர்கள் உடைந்து விழுந்தது, மிகக்குறைவான நெல்மணிகளை உருவாக்கிய ரகங்கள், உரங்கள் மண்ணில் சேர்க்கப்பட்டாலும் அவற்றை எடுத்துக்கொள்ளாத ரகங்கள் எனப்பல காரணங்களால் உலகளாவிய நெல்லுற்பத்தி கடும் வீழ்ச்சியில் இருந்த காலமது.
எனவே வறுமை மற்றும் பட்டினியைக் குறைக்கவும், நெல் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மற்றும் நெல் விவசாயத்தின் சுற்றுச் சூழலை மேம்படுத்துதலையும் நோக்கமாகக் கொண்டு பிலிப்பன்ஸில் International Rice Research Institute என்கிற IRRI நிறுவனம் 1960-களில் ஆரம்பிக்கப்பட்டது.
IRRI நிறுவனம் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் 15 விவசாய ஆராய்ச்சி மையங்களில் ஒன்று. ஆசியாவின் மிகப்பெரிய இலாபநோக்கமற்ற விவசாய ஆராய்ச்சி மையமாகவும் இருக்கிறது IRRI,
IRRI யின் கிளைகள் உருவாக்கப்பட்ட நாடுகளில் தேசிய விவசாயக் கூட்டு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்த முக்கியமான வேளாண் விஞ்ஞானிகள் IRRI-ல் இணைந்தனர்.
IRRI-ன் இயக்குநராக சாண்ட்லர் நியமிக்கப்பட்டார். அமெரிக்க தோட்டக்கலைத்துறை நிபுணரான சாண்ட்லரின் தலைமையின் நவீன நெல் கலப்பின உருவாக்கத்துக்கான குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவில் சுரஜித் தத்தாவும் இருந்தார், உலகெங்கிலும் இருந்த பல முக்கியமான வேளாண் விஞ்ஞானிகள் சாண்ட்லரின் தலைமையில் ஆயிரக்கணக்கான நெல் வகைகளைச் சேகரித்து பிலிப்பைன்ஸுக்கு அனுப்பி கலப்பின ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
IRRI விஞ்ஞானிகள் உயரம் குறைவான, உரங்களை எடுத்துக்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கும் கலப்பின High Yielding Variety என்பதைக் குறிக்கும் HYV நெல் ரகங்களை உருவாக்கும் சோதனைகளைத் துவங்கினார்கள்.
தொடர்ந்து நடந்த கலப்பினச் சோதனைகளில் இந்தோனேஷியாவின் நெட்டை நெல் ரகமான பீட்டாவையும் (Peta) சீனாவின் டீ ஜியோ வூ ஜென் (Dee Geo Woo Gen – DGWG) என்னும் நடுத்தர உயரம் கொண்ட நெல் வகை ஒன்றையும் கலந்து ஒரு புதிய கலப்பின நெல் ரகத்தை உருவாக்கினார்கள்.
அந்த கலப்பின நெல் ரகம் பீட்டாவை விட உயரம் குறைவாகவும், DGWG-யை விட உறுதியாகவும், நேராக நிமிர்ந்தும் இருந்தது. அதன் இலைகள் மிக அதிகச் சூரிய ஒளியை பெறும்படி அமைந்திருந்தன எனவே அவற்றில் வழக்கமாக உருவாவதைக் காட்டிலும் மிக அதிகமான நெற்கதிர்கள் உருவாகின.
இந்த சோதனையில் ஈடுபட்டிருந்தவர்களில் முதன்மையானவரான சுரஜித் தத்தா. இந்த மிக முக்கியமான, நெல் உற்பத்தி வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த ஆய்வின் முடிவை பல வேளாண் சஞ்சிகைகளிலும் IRRI-யின் சஞ்சிகைகளிலும் வெளியிட்டார். அந்த நெல் ரகம் உரம் போடாமல் ஒரு ஹெக்டேருக்கு 5 டன்னும் உரமிட்டால் 9.4 டன்னும் உற்பத்தியை அளித்தது என்பது உலகெங்கிலும் பெரும் ஆச்சர்யத்தை உண்டாகியது. அதற்கு முன்பு எந்த நெல் வகையும் எங்கும் 9.4 டன்/ஹெ உற்பத்தியை அளித்தது இல்லை.
இந்த புதிய நெல் ரகம் IRRI-யில் நடைபெற்ற 38 கலப்பின சோதனைகளில் 8 ஆவது சோதனையில் உருவானது என்பதால் ஆய்வுக்கட்டுரைகளில் IR8-288-3 என்று குறிப்பிடப்பட்டது.
அந்த நவீன, அதிக விளைச்சல் தரும் நடுத்தர உயரம் கொண்ட நெல் ரகம் IR-8 என இறுதியாக IRRI-யினால் பெயரிடப்பட்டு வெப்பமண்டலத்தின், பாசன வசதி கொண்ட தாழ் நிலங்களில் பயிர் செய்ய அறிமுகமானது.
IR-8 நெல் ரகத்தின் ஒரு குறிப்பிட்ட ஜீன் (semidwarf-1 gene – Os01g0883800) நெற்பயிரின் உயரத்தைக் கட்டுப்படுத்தும் இயக்கச்சாறான ஜிப்பரலினை ஒழுங்குபடுத்துவதால் அது நடுத்தர உயரம் கொண்டிருந்தது. அதன் விளைச்சல் ஒரு ஹெக்டேருக்கு 6- லிருந்து 10 டன் வரை இருந்தது.
1966-ன் வறட்சி நிலவிய பருவத்தில் நைட்ரஜன் உரத்தை எடுத்துக்கொண்டு முன்னைக்காட்டிலும் மூன்று மடங்கு விளைச்சல் கொடுத்த IR-8 ஐக் குறித்து தத்தா மீண்டும் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டார்.
பிலிப்பைன்ஸில் 88 கிலோ நெல் விதைகள் விதைக்கப்பட்டு 71 டன் நெல் அறுவடை செய்யப்பட்டதை கேள்விப்பட்ட அப்போதைய பிலிப்பன்ஸ் பிரதமர் மார்கோஸ் (Ferdinand Marcos) IRRI நிறுவனத்துக்கு 1966-ல் வருகை தந்து தத்தாவின் ஆய்வுகளைக் குறித்து தெரிந்துகொண்டு அவரை மனமாரப் பாராட்டியதோடு கையோடு தத்தாவிடிமிருந்து 2 கிலோ IR-8 நெல் விதைகளையும் பெற்றுக்கொண்டார்.
தனது ஆட்சிக்காலத்தில் பிலிப்பைன்ஸின் பஞ்சத்தைப் போக்குவதாக சபதமேற்ற மார்கோஸ் ’’Masagana 99’’ என்னும் பெயரிடப்பட்ட நெல்பயிரிடும் இயக்கத்தைத்தொடங்கி இந்த விதைகளை விவசாயிகளுக்கு அளித்து 3 ஆண்டுகளில் பிலிபபைன்ஸை நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடையச்செய்தார்
அதற்குப் பின்னர்தான் நெல் ரகங்களைத்தேடி தாய்நாடு வந்த தத்தா தனது நண்பரின் தங்கை நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பு நடந்த ஊட்டிக்கு வந்து தன் காதல் மனைவி விஜயலக்ஷ்மியைச் சந்தித்தார்.
உலகளவில் பெரும் புரட்சியை உண்டாக்கிய ஒரு IR-8 நெற் பயிர் 1970-களில் இந்தியாவில் பட்டினியை, பசியைப் போக்கி பல உயிர்களைக் காப்பாற்றியது
1950, 60- களில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலமென்பதால் உருவான உணவுப்பற்றாக் குறையோடு பெரும் வறட்சியும் பஞ்சமும் இந்தியாவில் உருவாகி இருந்தது. பிரிட்டிஷ் அரசு புகுத்திய நவீன வேளாண் முறைகளோடு இந்தியாவின் பாரம்பரிய வேளாண் முறைகளும் கலந்திருந்த காலகட்டமும் அதுதான்.
எனவே இந்தியா பசுமைப்புரட்சியை 60-களில் தழுவிக்கொண்டு அரிசி மற்றும் கோதுமையின் விளைச்சலை அதிகரித்தது. பிலிப்பைன்ஸின் IR -8 நெல் விதைகள் இந்தியாவில் அறிமுகமானது.
மேற்கு கோதாவரியைச் சேர்ந்த 29 வயது இளம் விவசாயி நெக்கந்தி சுப்பாராவ்தான் (Nekkanti Subba Rao) 1967-ல் இந்தியாவில் IR-8 பயிரிட்ட முதல் விவசாயி. IR-8 நெல் ரகத்தை தனது நிலத்தில் பயிரிட்டு அதன் அதீத விளைச்சலை மற்ற விவசாயிகளுக்கும் சுப்பாராவ் காண்பித்தார்,
தனது நிலத்தில் IR8 ரகத்தை தொடர்ந்து பயிரிட்டதோடு சுப்பாராவ் சுற்றியிருந்த சுமார் 2000 ஏக்கர் நிலத்திலும் IR-8 பயிரிடுவதை, அவற்றிற்கான பாசன வசதியை, உரமிடுப்படுவதை எல்லாம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும் இருந்தார்.
சுப்பாராவுக்கு ஆந்திராவில் Mr.IR8 என்றும் அரிசி விற்பன்னர் என்றும் பெயர் வந்துவிட்டிருந்தது. இதே சுப்பாராவ்தான் வெள்ளத்தினால் பாதிக்கப்படாத Swarna-Sub1, என்னும் 1979-ல் கண்டுபிடிக்கப்பட்ட நெல் ரகத்தை IR-8 ஐப்போலவே பிரபலபடுத்தியவர்.
தொடர்ந்து தமிழ்நாட்டிலும் IR-8 பரவலாகப் பயிரிடப்பட்டது. ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் IR-8ன் விளைச்சல் விவசாயிகள் நம்பமுடியாத அளவுக்கு இருந்தது. அற்புத அரிசி IR-8 என்றே அதற்குப் பெயர் வந்துவிட்டிருந்தது.
திருவண்ணாமலை விவசாயியான கணேசன் IR-8 பயிரிட்டு அதன் அதீத விளைச்சலால் குடும்பம் நிமிர்ந்ததால் அப்போது பிறந்த தன் மகனுக்கு ’அய்யாரெட்டு’ என்றே பெயரிட்டார். ஹெக்டேருக்கு 2 டன் நெல் விளைந்துகொண்டிருந்த அவரது நிலத்தில் IR-8 பயிரிட்டபோது 16 டன் /ஹெ கிடைத்தது.
இந்தியா மட்டுமல்லாது வியட்நாம், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் IR-8 உணவுப் பற்றாக் குறையைப் போக்கி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது.
பிலிப்பன்ஸ் தீவொன்றில் உரங்களிடாமல் பயிரிடும்போது ஹெக்டேருக்கு 7 டன்னும் உரங்களிட்டபோது 10 டன் விளைச்சலும் கிடைத்தது.
மற்ற நெல் ரகங்கள் 150-170 நாட்களில் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கையில் IR-8 ரகம் 105 – 130 நாட்களில் முதிர்ந்து அறுவடைக்கு தயாராகிறது.
IR- 8 பயிரிட்டு ஒரே ஒரு சாகுபடியில் லாபம் கிடைத்து ஹோண்டா பைக் வாங்க முடிந்ததால் வியட்நாமில் IR-8 க்கு ஹோண்டா அரிசி எனப் பெயர் வந்திருந்தது.
IR-8, அற்புத அரிசி எனப் பெயர்வந்தது அதன் மிக உயர்வான தன்மைகளினால் அல்ல. IR-8 எளிதில் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும் இயல்பு கொண்டிருந்த, தடிமனான, வேகவைத்த பிறகு மேலும் தடிமனாகவும் கடினமாகவும் சுண்ணாம்பு போலவும் ஆகிவிடுகிற அரிசியை அளிக்கும் நெற்பயிர்தான் என்றாலும் பஞ்சகாலத்தில் பல உயிர்களைக் காப்பாற்றி பட்டினியைப் போக்கியதால் அது அற்புத அரிசியாக இருந்தது.
எனவே IR-8 நெல் ரகம் மேம்படுத்தப்பட வேண்டி இருந்தது. IRRI-யின் தாவரப் பெருக்கத்துறையின் தலைவராக 1972-ல் பொறுப்பேற்றுக்கொண்ட இந்திய தாவரவியலாளரான குருதேவ் சிங் குஷ் இந்தப்பணியை முன்னெடுத்தார்.
IR-8 நெல் ரகத்தை மேலும் பல கலப்பின ஆய்வுகளுக்குள்ளாக்கி IR-36, எனும் நோயெதிர்ப்பு திறன் அதிகம் கொண்டிருக்கும், மெல்லிய, சுவையான அரிசியை அளிக்கும், IR-8 ரகத்தைக் காட்டிலும் விரைவிலேயே முதிர்ந்துவிடும் ரகத்தை குஷ் கண்டுபிடித்தார்.
IR-36, 80-களில் மிகப்பரவலாக சாகுபடியான ரகமாக இருந்தது. தொடர்ந்த ஐந்து ஆண்டுகளில் குஷ் IR- 20 , மற்றும் IR-50 ரகங்களையும் கண்டறிந்து விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார். அவரது பணிக்காலத்தில் 300-க்கும் மேற்பட்ட நவீன நெல் ரகங்கள் கண்டறியப்பட்டு ஆசியா,ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நெல் பயிராகும் பிரதேசங்களுக்கு அறிமுகமானது,
குஷ் 1996-ல் அரிசி உற்பத்தியில் மிகச்சிறந்த சேவையாற்றியதற்காக அமெரிக்கப் பயிர்பெருக்க நிபுணரான ஹென்றியுடன் (Dr. Henry Beachell) உலக உணவு விருதினைப் பகிர்ந்துகொண்டார்.
2016 நவம்பரில் IR-8-ன் 50-வது பிறந்த நாள் தலைநகர் தில்லியில் அரசியல் தலைவர்கள். வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. 2021 நவம்பர் 28 அன்று IR-8 -ன் 55 வது பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது
நியூயார்க்கில் 1981-ல் வெளியிடப்பட்ட தத்தாவின் Principles and Practices of Rice Production என்னும் நூல் அரிசிச்சாகுபடியின் அகராதி என்றே கருதப்படுகிறது.
அதற்கு முன்பே தத்தா மேலும் இரண்டு முக்கியமான நூல்களை எழுதி யிருந்தார்.
“Availability of Phosphorus and Utilization of Phosphate Fertilizers in Some Great Soil Groups of Hawaii”என்னும் நூல் 1963-லும் “Availability of Phosphorus to Sugar Cane in Hawaii as Influenced by Various Phosphorus Fertilizers and Methods of Application” என்னும் நூல் 1965-லும் வெளியானது.
தத்தா 27 வருடங்கள் IRRI நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக நெல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
தத்தாவிற்கு 1992-ல் இந்தியாவின் வேளாண் அறிவியல் பங்களிப்பிற்காகவும் பசுமைப்புரட்சியில் அவரது முக்கியப் பங்களிப்பிற்கும் பெருமை மிக்க Norman Borlaug விருது அளிக்கப்பட்டது.
2004-ல் தத்தா பிலிப்பைன்ஸ் குடியரசுத் தலைவரால் கவுரவிக்கப்பட்டார்.
IRRI – பணிக்குபின்னர் தத்தா அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய வர்ஜீனியா பல தொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Virginia Polytechnic Institute and State University) சர்வதேச ஆராய்ச்சி, கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனமான OIRED-ல் இணைத்தலைவராக 20 வருடங்கள் பணியாற்றி அந்நிறுவனத்தின் நிதி நிலைமையை வெகுவாக மேம்படுத்தினார், (Office of International Research, Education, and Development). அதே பல்கலைக் கழகத்தில் விஜயலக்ஷ்மியும் பணியிலிருந்தார்.
தத்தாவின் சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் அவருக்கு ஏராளமான விருதுகள் அளிக்கப்பட்டன. அமெரிக்காவின் சர்வதேச வேளாண் சேவைக்கான விருதைப்பெற்ற முதல் நபர் தத்தாதான். தற்போது ஓய்வு பெற்றிருக்கும் தத்தாவும் விஜயலஷ்மியும் கலிஃபோர்னியாவில் டேவிஸ் நகரில் வசிக்கிறார்கள். அவர்களது ஒரே மகன் சிலிகான் பள்ளத்தாக்குப் பகுதியில் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறார்.
அமெரிக்காவின் உலக அரிசி ஆராய்ச்சி அறக்கட்டளை விஜயலக்ஷ்மி மற்றும் தத்தா ஆகிய இருவரின் பெயரிலும் (SK and Vijji De Datta Award for Rice Research) சிறந்த அரிசி ஆராய்ச்சிக்கு US$130,000 பரிசுத்தொகை அளிப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.
’ஆடலுடன் பாடலைக்கேட்டு’ நடனத்தில் விஜயலக்ஷ்மி ஆடப்போவதாகத் தெரிந்துகொண்ட எம்ஜிஆர் அவரது நடனத்திறமையை முன்பே கேள்விப்பட்டிருந்ததால் 5 நாட்கள் ஒத்திகை பார்த்த பின்னரே படப்பிடிப்புக்கு வந்தார் என சொல்லப்படுகிறது. அத்தனை பிரபலமான நட்சத்திரமாக இருந்த அவர் கணவரின் வேளாண் ஆராய்சிக்கென தனது மிகப் பிரகாசமான எதிர்காலத்தை துறந்து பிலிப்பைன்ஸுக்குச் சென்றது சாதாரணத் தியாகமல்ல.
திருமணத்துக்குப் பிறகு மெட்ரிகுலேஷன் தனித்தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்ற விஜயலஷ்மி சென்னைப்பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வியில் வணிகவியல் பட்டம் பெற்றார். பின்னர் பல ஆண்டுகள் ஆடிட்டராகப் பணியாற்றினார்
எல். விஜயலட்சுமி கலப்பின அரிசி வளர்ச்சியின் அறிவியல் ஆய்வுகளில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும் அவரது மனப்பூர்வமான ஆதரவு தத்தாவை தனது புதிய ஆய்வுகளை எந்த இடைஞ்சல்களுமின்றித் தொடர அனுமதித்தது. அந்த வகையில்,IR-8 கண்டுபிடிப்பில் விஜயலக்ஷ்மியின் பங்களிப்பு மறைமுகமானது ஆனால் மிகவும் முக்கியமானது.
தனது பொது வாழ்க்கையைத் துறந்து, கல்வியைத் தொடர்ந்து, குடும்பப் பொறுப்புகளை நிர்வகித்ததன் மூலம், கணவர் தனது கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த விஜயலக்ஷ்மி உதவினார். கணவருடன் பிலிப்பைன்ஸுக்கும் பின்னர் கண்டம் தாண்டியும் பயணித்தார்.
ஒரு ஆணின் வெற்றிக்குபின்னால் இருக்கும் பெண்ணிற்கான மிகச்சிறந்த உதாரணமாக விஜயலக்ஷ்மி இருக்கிறார்.
IRRI-யின் தொடர்ந்த ஆய்வுகளால் 1966-ல் 257 மில்லியன் டன்னாக இருந்த உலக அரிசி உற்பத்தி 2010-த்தில் 686 மில்லியன் டன்னாக உயர்ந்தது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் பசியாறினார்கள்.
இந்திய மணவிழாக்களில் மஞ்சள் கலந்த பொன்னிற அரிசியை அக்ஷதையாக மணமக்களின் மீது தூவுதல் என்பது நூற்றாண்டுகள் பழமையான இந்திய பண்பாட்டையும் வரலாற்றையும் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த அக்ஷதைதான் மணமக்களின் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான ஆசிகளை அளிக்கிறது.
இந்தியாவின் பஞ்சத்தைப் போக்க ஒரு புதிய அரிசி வகையை கண்டறிந்த காதல் கணவருடனான விஜயலக்ஷிமியின் வாழ்க்கைக்கான ஆசீர்வாதம் லட்சோபலட்சம் பசித்த வயிறுகள் குளிர்ந்த போது அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும். இன்னும் பல்லாண்டுகள் இதே பேரன்புடன் இவர்கள் வாழ்வு தொடரட்டும். இருவருக்கும் வணக்கங்களும் அன்பும்.