நேற்றுத்தான் நித்யவனம் மகளிர் மட்டும் 3 நாட்கள் வகுப்பிலிருந்து வீடு திரும்பினேன். அந்த வகுப்புகளில் ஒன்றில் லலிதா என்னும் ஆசிரியரின் (அபாரமான) ஓவியம் குறித்தும், ராணுவத்தில் காமிராக்கள் கண்டுபிடிக்கப்படும் முன்பு அனைவரும் ஓவியப் பயிற்சி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டதையும், குற்றவாளிகளின் உருவத்தை,  வரைபடங்களை, நிலப்பரப்புக்களை ராணுவத்தினர் அப்போதெல்லாம் துல்லியமாக கைகளாலேயே வரைவார்கள் என்றும்  ஜெ சொன்னார். எனக்கு அது மிகப்புதிய தகவல்.

நான் இந்தக் கல்லூரியில் இளங்கலை படிக்கையில் மைக்ரோஸ்கோப்புகளின் கண் பொருத்தும் லென்சில் இணைக்கப்படும் கேமரா லூசிடா என்னும் ஒரு சிறு எளிய சாதனம் இருந்தது. அனாடமி வகுப்புக்களுக்குச் செல்லும்போது மிகவும் பயமாக இருந்ததற்கு இந்த கேமரா லூசிடாவும் ஒரு முக்கியக் காரணம். தண்டோ இலையோ வேரோ செக்‌ஷன் எடுத்து அதை மைக்ரோஸ்கோப்பில் அழகாக வைத்துவிடுவேன், அருமையாக மெல்லியதாக செக்‌ஷன் எடுக்கும் திறமைகொண்டவள் என்னும் பெயரும் எனக்கு இருந்தது. ஆனால் அதை காமிரா லூசிடா வழியே பார்த்து, வலக்கை பக்கத்தில் வைத்திருக்கும் வெள்ளைத் தாளின் மீது இருக்கும் கூராக சீவப்பட்ட பென்சிலின் நுனியும், மைக்ரோஸ்கோப்பில் தெரியும் ஸ்பெசிமெனின் பிம்பமும் ஒரே தளத்தில் தெரிய , கண்களைப் பழக்கவே அரை மணி நேரமாகிவிடும். அதன் பின்னர் அச்சுப் பிசகாமல் அப்படியே சித்திரத்தை வரைந்து கையெழுத்து வாங்கிவிட்டே லேபிலிருந்து புறப்பட முடியும். பெரும் பதட்டத்துடன் அந்த வேலையைச் செய்வேன், பலமுறை தாமதமாகச் சித்திரம் வரைந்ததற்கு திட்டு வாங்கியும் இருக்கிறேன்.

ஆனால்  அந்த அனுபவத்தில் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கச் சென்றபோது, மிக அழகிய செல் அமைப்புகளை  அவற்றின் வேறுபாடுகளுடன் துல்லியமாகக் காண்பிக்கும் சித்திரம் வரைபவளாக அறியப்பட்டிருந்தேன். பெரும்பாலும் என் அனாடமி சித்திரங்கள் பாராட்டப்பட்டு, பையன்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டு அவர்களை ஒருமுறை பார்க்கச் சொல்லும்படியாகவே இருக்கும். எனக்கும் அனாடமி சித்திரங்களை சரியாக அழகாக வரைபவள் என்னும் பெருமை (கொஞ்சம் அகங்காரமும்) இருந்தது.  முதுகலை முதலாம் ஆண்டில் அனாடமி லேபில் நறுமணத்துயர் மரமான (பவளமல்லி) நைக்டாந்தஸின் தண்டை செக்‌ஷன் எடுத்து அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வரைந்ததை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

எனவே கேமரா லூசிடா (Camera Lucida) என்பது புகைப்படக் கருவி அல்ல, அது ஒரு ஒளியியல் சாதனம் — ஒரு மாணவர் அல்லது ஆய்வாளர் ஒரு மாதிரியின் (specimen) துல்லியமான உருவத்தை காகிதத்தில் நகலெடுக்க ( இது உதவுகிறது.

வரையும் மேசைக்கு மேலே ஒரு கைப்பிடியில் பழைய மைக்ரோஸ்கோப்களில் ஒரு சாய்ந்த கண்ணாடியும், புதிய மைக்ரோஸ்கோப்புகளில் ஒரு பிரிஸமும் பொருத்தப்பட்டிருக்கும். மைக்ரோஸ்கோப்பின் eyepiece வழியே பார்க்கும்போது, லென்ஸ் வழியாக தெரியும் ஸ்பெசிமனின் பிம்பம் மற்றும் கீழே இருக்கும் காகிதமும் கையும் பென்சில் நுனியும் —எல்லாம் ஒரே பார்வைத் தளத்தில் ஒன்றன் மேல் ஒன்றாகத்  தெரியும், தெரியவேண்டும். இதனால் கண்ணில் காணும் பிம்பத்தை நேரடியாக பென்சிலால் தொடர்ந்து அச்சு அசலாக வரையலாம், அது துல்லியமாக அமைந்துவிடும்.

இதை 1806-ல் ஆங்கில விஞ்ஞானி வில்லியம் ஹைட் வோலஸ்டன் (William Hyde Wollaston) காமரா லூசிடா என்னும் பெயரில் காப்புரிமை பெற்றார். காமரா லூசிடா  என்பது லத்தீன் மொழியில் “ஒளியூட்டப்பட்ட அறை” என்று பொருள்படும், இது பழைய “கேமரா ஆப்ஸ்குரா” (இருண்ட அறை) என்பதன் நேரெதிர்.

அறிவியல் சித்திரங்கள் துல்லியமாக வரையப்படுவது இதன் மிகப் பெரிய பங்களிப்பாக இருந்தது. தாவரவியலாளர்கள், விலங்கியலாளர்கள், உடற்கூற்றியலாளர்கள், புவியியலாளர்கள் ஆகியோர் நூற்றாண்டுகளாக மாதிரிகளின் துல்லியமான வரைபடங்களை உருவாக்க இதைப் பயன்படுத்தினர், குறிப்பாக நுண்ணோக்கியில் பொருத்தப்படும்போது பெரிதாக்கப்பட்ட பிம்பங்களுக்கு. புகைப்பட நுண்ணோக்கம் (photomicrography) நடைமுறைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, லென்ஸ் வழியாகப் பார்க்கப்பட்டதை துல்லியமாகப் பதிவு செய்வதற்கான ஒரே தரமான வழி இதுவாகவே இருந்தது.

கள ஆய்வாளர்கள் (field naturalists) துல்லியமாக நிலப்பரப்புகளையும் மாதிரிகளையும் வரைவதற்கு   காமிரா லூஸிடாவை பெரிதும்   பயன்படுத்தினர்.

20-ம் நூற்றாண்டு வரை வகைப்பாட்டியல் (taxonomic), வடிவவியல் (morphological) மற்றும் உடற்கூறியல் பணிகளில் நுண்ணோக்கிக்கான கேமரா லூசிடா இணைப்புகள் ஒரு முக்கியமான பகுதியாக இருந்தன. அந்தக் காலத்து தாவரவியல் மோனோகிராஃப்களில் (monographs), “கேமரா லூசிடா உதவியுடன் வரையப்பட்டது” என்று படங்களின் தலைப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போது இருண்ட அலமாரிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது காமிரா லூசிடா.