காலையில் கல்லூரிக்குப்போகத் தயாரான போது Striped lily எனப்படும் வாள்போன்ற பசிய இலைகளும், கவிழ்ந்த வெள்ளை மணிபோன்ற, கழுத்தில் இளஞ்சிவப்புக் கோடுகளுள்ள பெரியமலர்களும் கொண்ட, விளிம்பி மரத்தடியில் கூட்டமாக வளர்ந்திருந்த செடி சோர்ந்து வாடியிருந்தது. (பள்ளியில் படிக்கையில் ஆங்கில ஆசிரியை திரிபுரசுந்தரி ’’..லோகா இப்படி காம்பவுண்ட் செண்டென்ஸாவே எழுதிட்டே இருந்தா அதுவே பழக்கமாயிரும்..’’ என்று அதட்டுவதை இப்போதும் நினைத்துக்கொள்கிறேன்.)

பதறியபடி அருகில் சென்றேன். ஏராளமான வண்ணப்புழுக்கள் இலை மலர் அரும் பு என எல்லாவற்றையும் தின்றுகொண்டிருந்தது. கைப்பையை கீழே எறிந்துவிட்டு புழுக்களை திட்டிக்கொண்டே அப்புறப்படுத்த முனைந்தேன்.

“..நில்லு என்ன பண்ணறே! ” என்று தருண் வந்தான். “புழுடா பாவம் செடி”என்றேன். “எந்திரி முதல்ல இது லில்லி மோத்தோட இளம்புழுக்கள், இந்தச்செடியை மட்டும்தான் சாப்பிடும் இதோட அம்மா இந்தச்செடிதான் புழுக்களோட Host plantனு தெரிஞ்சு இதில் முட்டை வச்சிருக்கு. ஒரு செடியோட பயன் கண்ணுக்கு அழகா இருக்கறதும் சாப்பிடக்கொடுக்கறதும் நிழல் தரதும் தானா? நீயும் அப்படித்தான் நினைக்கறியா? பயோடைவர்சிட்டின்னா என்னன்னு நினைக்கறே?


இயற்கையின் அறம்னு வகுப்புவேற எடுக்கறே? வெண்முரசில் சொன்னியே இயற்கையின் இரக்கமற்ற விதிகளில் நாம் தலையிடக்கூடாது பார்வையாளராகத்தான் இருக்கனும்னு? விட்ரு அது சாப்பிட்டு இறக்கை வளர்ந்து பறந்து போகட்டும். தண்டடிக் கிழங்கிலிருந்து செடி மறுபடியும் வளர்ந்துரும் “என்றான்.
எனக்கு பதில் சொல்ல ஒன்றுமில்லாமல் போனது.லில்லியிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு கருநீலஉடலெங்கும் வெண்புள்ளிகளுடன் ஆர்வமாய் செடியை சாப்பிட்டுக்கொண்டிருந்த புழுக்களை பார்த்தபடியே புறப்பட்டேன். காரில் போகும்போது தருண் சொன்ன வெண்முரசு உவமையை யோசித்துப்பார்த்தேன்.

” இங்கு வாழ்வெனத் திகழ்வது என்ன? நெறியற்ற முட்டிமோதல். ஒன்றை ஒன்று தின்று செல்லும் வெறி. நெறியென்று எதையேனும் நம்பியிருப்போர் வீழ்ந்து மிதிபட்டு அழிய தன்னை எண்ணி தானொன்றே ஆக முன்செல்வோர் வெல்கிறார்கள்”

“வேட்டையில் விழுந்து சிம்மத்திற்கு உடலளிக்கும் மானுக்கு துயரில்லை. இப்புவியை ஆளும் இரக்கமற்ற நெறிக்கு தன்னை அளிக்கிறது அது!

ஆம் அவ்வாறே ஆகுக!