நிமோனியாவில் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அப்பா (!) கடந்த 2 வாரங்களாக இருக்கிறார். தம்பி மனைவி லஷ்மி, நான், தருண் மூவருமாக உடனிருக்கிறோம். தம்பிவிஜி முக்கிய வேலையாக வெளியே இருக்கிறான் எனவே அவனை தொந்தவரவு செய்யாமல் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.

வீடு, கல்லூரி, மருத்துவமனை என தொடர்ந்து அலைந்து பின்னிரவில் களைத்து வீடு திரும்புகையில் சமயங்களில் எனக்கு சுய பச்சாதாபமும் எதிர்படுவோர் மீது ஆத்திரமும் வந்துவிடுகிறது. ஆனால் வெளியில் காண்பித்துக்கொள்வதில்லை லக்‌ஷ்மியும் மருத்துவமனையே கதி என்றுதான் இருக்கிறாள்.

ஜூன் மாதம் தருண் கொச்சியில் அவனுக்கு கிடைத்திருக்கும் பணியில் இணைய வேண்டும். எதன்பொருட்டோ அது தாமதமாகி, வரும் ஆகஸ்டில் வந்தால் போதும் எனச்சொல்லிவிட்டதால் அவன் வீட்டில் இருந்து நல்லவேளையாக எங்களுக்கு உதவுகிறான்.

காலை, மதியம், இரவு என வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவது,அவ்வப்போது லக்ஷ்மியை வீட்டுக்கு அழைத்து வந்து அவள் குளித்து தயாரானதும் மீண்டும் மருத்துவமனைக்கு செல்வது, இது ஒரு கிராமத்து மருத்துவமனை என்பதால் ஸ்கேன் எடுக்க அடிக்கடி பொள்ளாச்சிக்கு அவரை ஆம்புலன்ஸில் அழைத்து வருவது, மருத்துவமனையிலேயே அடிக்கடி எக்ஸ்-ரேவுக்கு கூட்டிச்செல்வது இரவுணவு கொண்டுவருவது என ஓயாமல் கார் ஓட்டிக்கொண்டு, ஓய்வு கிடைக்கையில் அந்த சின்ன மருத்துவமனை அறையிலேயே அமர்ந்து போனை பார்த்துக்கொண்டு  இருக்கிறான். .

ஒருமுறைகூட சங்கடப்பட்டுக்கொண்டோ முகம்சுளித்தோ புகார் சொல்லியோ  அவனைப் பார்க்கவில்லை. ’’பாவம்டா நீ இத்தனை வேலை செய்யறே, ஸாரி’’ என்று நான் சொன்னாலும் “டேய் கார், ஓட்டறதெல்லாம் ஒரு வேலையா” என்பான்.

அவரை முழு அன்புடன் அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறான். இரு மகன்களுக்கும் மூத்தோரின் அன்பு என்பதே கிடைத்ததில்லை. முற்றிலுமாக அனைவராலும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.  நான் மகன்களைக் கல்லூரிக்கு என்னுடன் அழைத்து வந்துதான் வளர்த்தேன். அழைத்து வரமுடியாத சமயங்களில் இந்த வீட்டிற்குள் அவர்களை வைத்து கதவை பூட்டிவிட்டு கல்லூரிக்கு வந்திருக்கிறேன். 

ஆனாலும் அந்த நினைவுகளின் காயம் ஏதுமில்லாமல் என் வருத்தங்கள், துயரங்கள் அறிந்திருந்தும் அவை தொட்டுவிடாத தொலைவில் தருண் இருக்கிறான். 

இடையில் அவனது தோழிகளும் தோழர்களும் அழைத்தால் “டிரைவிங்கில் இருக்கிறேன் பிறகு பேசலாம்” என்பான். முகம் சுளிக்காமல் தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு, டயப்பர் மாற்ற செவிலியர்களுடன் இணைந்து கொள்கிறான். இரவு வீடு திரும்புகையில் எனக்கு பிடித்தமான பாடல்களை ஒலிக்கச் செய்வது, என்னிடம் கல்லூரிக் கதைகளைக் கேட்பது என்று சுவாரஸ்யமாகப் பயணத்தை அமைத்துக் கொள்கிறான்.

மருத்துவமனையிலிருந்து வீடு வந்ததும் உலக வழக்கமான, ஆண்கள் நேரே வீட்டிற்குள் சென்று உடைமாற்றி சாப்பாட்டுக்கு காத்துக்கொண்டிருப்பது என்பதற்கு மாறாக  காரில் இருக்கும் பைகள், சாவி, பாட்டில்கள், அழுக்குத்துணி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாடிக்கு வருவது, என்னை அதிகம் நடக்காமல் பார்த்துக்கொள்வது என எதைச்செய்தாலும் சிரித்த முகத்துடன் செய்கிறான். 

இரவு குளித்து சமைக்க வருகையில் அவனும் தயாராகி இயல்பாக சமையலறையில் கூட ஒத்தாசை செய்வது, அல்லது முதலில் என்னை சாப்பிட வைத்து பிறகு அவன் சாப்பிடுவது என்று கவனமாக இருக்கிறான். இடையிடையே அடுத்த கானுலாவைக் குறித்து திட்டமிடுவது, வீட்டில் இளநீர் குடித்துவிட்டு மரத்திலேயே குடியிருந்து  கொழுத்திருந்த எலியை கூண்டில் பிடித்து வேறெங்காவது கொண்டு விட்டுவிட்டு வருவது என எந்நேரமும் பிஸியாகவே இருக்கிறான். 

அவ்வப்போது சூழலின் இறுக்கத்தை உணர்ந்து, நானும் மகன்களும் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் நகைச்சுவையாக ஏதேனும் சொல்லி தளர்த்துவதையும் செய்கிறான். நேற்று புரோட்டீன் பார் எனக்கு அனுப்புவதாக சரண் சொன்னதும் நான் ’’ அப்புறமா நான் சொன்னபுறமா வாங்கலாம்ஆர்டர் போடாதே’’ என்றேன். தருண் அண்ணனிடம் ’’டேய் அம்மாட்டெ ஆர்டர் போடலாமா பொறுமையா பேசு’’ என்கிறான் 🙂

ஆனைமலை விவசாய பூமி வழியே தினமும் மருத்துவமனைக்கு செல்லுகையில் மரங்களடர்ந்த அந்தச் சாலையைப் புகைப்படம் எடுப்பது, வயலில் இருக்கும் கருந்தலை அரிவாள் மூக்கன்களை கவனித்து வீடியோ எடுத்து எனக்கு அனுப்புது என அவனையும் உடன் இருப்பவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறான்.

நான் தாவரங்களிடமிருந்து ஒளியை நோக்கியே செல்வது என்னும் பாடத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன்தான் எனினும்  களைச்செடிகளின் தொல்லை தாங்கமுடியாமலாகும்போது சலிப்படைந்துவிடுகிறேன் ஆனல் மகன்கள் அப்படியல்ல என்பதில் மகிழ்கிறேன்

மாலை வாசல் தெளித்துக் கோலமிட்டு விளக்கேற்றிக் கொண்டிருப்பார்கள், தோட்டத்தில் பூப்பறித்து நெருக்கமாக தொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்றெல்லாம்  சொல்வதற்கில்லைதான் எனினும் எங்கோ கொடுத்து வைத்த மகராசிகள் இருவர் நெட்ஃப்ளிக்ஸ் பார்த்துக்கொண்டோ, அஸைன்மென்ட் எழுதிக்கொண்டோ, மால்களில் சுற்றிக்கொண்டோ இருப்பார்கள். அவர்கள் இருவரையும் நினைத்தால் கொஞ்சமே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.

. அருட்காப்பு.