காவல் துறை சார்ந்த ஒரு முக்கிய நடவடிக்கைக்கு பிறகு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜித் மதுரை தெப்பக்குளத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் ’’நாங்க வேற மாறி, வேற மாறி’’ என்று நடனமாடுகையிலேயே மீதி படத்தை யூகிக்க முடிகிறது. வலிமை வெளியாக வருடக்கணக்கில் காத்திருந்த ரசிகர்களை அஜித்  நிறைவுறச் செய்திருக்கிறாரா? உண்மையில் இது ’வேற மாறி’ படம்தானா?

 துவக்கம் வழக்கமான அஜித் படங்களைப் போலவே அந்நிய நாட்டில்தான். ஒரு காய்ந்த புதரிலிருந்து கொகெய்ன் இலைகள் பறிக்கப்பட்டு சுடச்சுட அங்கேயே அரைத்து பாலெடுத்து கலக்கி பொடியாக்கி பார்சல் செய்யப்பட்டு லாரியிலும் ஏற்றப்படுகிறது

அங்கிருந்து பாண்டிசேரி பின்னர் சென்னை என பல கைகள் மாறி அப்பாவி இளைஞர்களின் வாய்க்கும் மூக்குக்கும் வந்து சேர்கிறது. அஜித் முன்பே சொன்னதுபோல ’வேற மாறி’ காவல் அதிகாரி, உயிரடுப்பதில் விருப்பமில்லாதவர், கால் அல்லது கைக்கட்டு போடுகிறார். குற்றவாளிகள் போடும் ஸ்கெட்ச்சை முன்பே அறிந்து அந்த இடங்களுக்கெல்லாம் முன்னதாகவே போய்  அடி தூள் கிளப்புகிறார். நாயகி இல்லை. ஆனால் அறிமுகக்காட்சியில்  கொம்பும் சங்கும் துந்துபியும் முழங்க துர்க்கை பின்னணியில் எழுந்துவர, அஜித் காரின் டாப்பை திறந்து காட்சிதருவது போன்ற  மாமுலான காட்சிகளுண்டு.

இந்த காட்சிகளுக்கெல்லாம் அனைத்து சென்டர்களிலும் படம் ஓடவேண்டும் என்பதற்காக சமரசம் செய்து கொண்டிருக்கும் அஜித் நாயகி விஷயத்திலும் சமரசம் செய்து கொண்டிருக்கலாம். அசத்தலான காவல்துறை அதிகாரியின் வேற மாதிரி நடவடிக்கைகளை கண்டு பொதுமக்கள் ’’நீங்க வேற மாறி’’ என்று பாடி ஆட இவரும் இறங்கி கூட ஆடுவதில் மட்டும் ஏன் சமரசம் செய்து கொண்டார்? இதற்கு வழக்கமான நாயகி, அபத்த நகைச்சுவை, குத்து பாட்டு  என்றே படம் பண்ணி இருக்கலாமே? அரதப்பழசான குடும்ப செண்டிமெண்ட். தேவையில்லா குடிகார அண்ணன் காட்சிகள்.அஜித் கஷ்டப்பட்டு ஸ்டெப்ஸ் போட்டு  பாத்திரத்துக்கு பொருத்தமில்லாமல் நடனமாடுகிறார்

 அஜித் மீசையும் இல்லாமல்  மொழுமொழு முகத்தில் என்ன உணர்ச்சிகளை காண்பிக்கிறார் என்றும் அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் கருப்புக்கண்ணாடியும் போட்டுக்கொள்கிகிறார்.தமிழ் படத்தின் நாயகன் ஏன் தமிழ்நாட்டின்  ஆண்மகனை போல் இருக்கக் கூடாது?. தன்னை தல என்றும், அல்டிமேட் ஸ்டார் என்றும் அழைக்க வேண்டாம் அஜித் என்று அழைத்தால் போதும் என்று வேண்டி விரும்பி அஜித் கேட்டுக்கொள்ளும் போஸ்டர்கள் திரையரங்கங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. அந்த வித்தியாசமெல்லாம் படத்தில் காணோம்.

கிராஃபிட்டி, ஸ்கேன், ஹேக்கிங், பிளாக் செய்வது போன்ற காட்சிகள் புரிந்ததோ இல்லையோ அஜித் என்று பெயர் வருகையிலும் அஜித் தோன்றுகையிலும் அப்பாவி ரசிகர்கள் ஆராவாரம் கூரையை பிளக்கிறது.  அஜித் ரசிகர்களுக்கு நியாயம் செய்யாவிட்டாலும் அநியாயம் செய்யாமலாவது இருந்திருக்கலாம்’

 நாயகிக்கு பதில்பில்லாவை நினைவுட்டும் உடைகளில் இரு சக பெண் அலுவலர்கள்,, நகைச்சுவையும் வில்லனும் டூ இன் ஒன் கார்த்திகேயாவேதான். இளம் நெப்போலியனை நினைவுட்டும் முகச்சாயல். தனக்குத்தானே கெக்க பிக்கேவென்று அவ்வப்போது சிரித்துக்கொண்டு வெறும் வாய் சவடால் பேசிக்கொண்டு நகைச்சுவைக்கென்று தனி நடிகர் இல்லாத குறையை வெகுவாக தீர்க்கிறார். தமிழ்சினிமாவின் மாறாத  நூற்றாண்டு மரபுப்படி இறுதிக்காட்சியில் சட்டையை கிழித்து விட்டு திமிறும் தசைத்திரளை  காண்பிக்கிறார். நல்லவேளைக்கு அஜித் பதிலுக்கு சட்டையை கழற்றவில்லை என்பதில் ஆசுவாசப்பட்டுக்கொள்ளலாம்

நீதி போதிக்கும் வசனங்கள், தேவைக்கும் அதிகமான நீளத்தில் துரத்தல் காட்சிகள், தேவையற்ற கடத்தல் தொடர் கண்ணிகள் என்று நீண்டுகொண்டே போகிறது படம்.கடைசி காட்சியில் முத்தாய்ப்பாக என் ’’குடும்பத்தை ஒன்னும் பண்ணாதே’’ என்று வில்லனிடம் இறைஞ்சுகிறார் நாயகன் அஜித்

 வலிமையை எந்த காலத்தில் நினைத்தலும் உறுமிக்கொண்டு சீறிப்பாய்ந்த பைக்குகள் தான் நினைவில் வரும்.  ஏராளம் பைக்குகள் என்றால்  பைக் சண்டைகளோ தாராளம். 3 மணி நேரத்துக்கான படம் எப்போது முடியும் என கடிகரத்தை பார்க்காதவர்கள் இல்லை திரையரங்கில்.

இந்த படத்துக்கு  எதற்கு இத்தனை நேரம்? இந்த படத்திற்கு எதற்கு இத்தனை இத்தனை வருட காத்திருப்பு?

இறுதிகாட்சியில் அஜித்தின் அண்ணன் கையில் இருக்கும் ஜிபிஎஸ் உதவுவதை காட்டவா அத்தனை நீநீநீநீநீநீள குடிகார அண்ணன், அண்ணி சண்டை என்று காட்சிகள்?

கார்த்திகேயாவுடன் சுமித்ராம்மாவும் இன்னொரு வில்லியென்றுதான் சொல்லவேண்டும். துறைசார்ந்த  டார்ச்சர் போதாதென்று சுமித்ராம்மாவும் அவர் பங்குக்கு வீட்டில் சாப்பிட முடியாதென்று சொல்லி  அஜித்தை படுத்தி எடுத்து, படுத்துக் கொள்கிறார் கடைசியில் காதலியை சுட்ட குட்டியை மிதி மிதியென்று மிதித்துவிட்டு, சுமித்ராம்மாவையும் வில்லன் இரண்டு மிதி மிதிக்கையில்  நாம் அஜித்தாக இருந்து ஆசுவாசமடையலாம்  அத்தனைக்கு டார்ச்சர் அம்மா. இளம் சுமித்ராவாக  உமா வருவது இதமளித்தது

410 இன்ஜினியரிங் படித்த  மாணவர்கள் பிச்சை எடுக்கிறார்களா?? எங்கு இத்தனை துல்லியமான  புள்ளி விவரக்கணக்கு கிடைத்தது? வேலையில்லா பட்டதாரி, குடும்ப செண்டிமெண்ட், வேற மாதிரி காவலதிகாரி,  போதும் போதும் என்னும் அளவுக்கு  பைக் ரேஸ் என்று கலந்துகட்டி குழப்பி ஒரு படம் 2.55 மணி நேரத்துக்கு

வில்லனே சொல்வதுபோல ஒருத்தருக்கும் தொழில்நுட்ப காட்சிகள் விளங்கவில்லை. சர்வர், இடம் மாறிக்கொண்டே இருக்கும் தலைமையகம் அதை ஹேக் செய்வது, ஆயிரக்கணக்கான கணினி திரையின் முன் கூட்டமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் அதிகாரிகள் சிஸ்டம் கிராஷ் ஆனதும் ’ஓ’ என்று கத்திக்கொண்டு தலையில் கை வைத்துக் கொண்டு எழுந்து நிற்பதெல்லாம் எப்படி யோசித்திருப்பார்கள் திரைக்குழுவினர் என்று நாம் தனியாக ரூம் போட்டு  யோசிக்க வேண்டி இருக்கிறது

அஜித் பைக் பிரியர் என்பதால் படம் முழுக்க பைக் துரத்துகிறது. உண்மையிலேயே இதயம் பலவீனமானவர்கள் கர்ப்பிணிகள் ஆகியோர் படம் பார்க்க செல்லாமல் இருப்பது உசிதம், அத்தனை வன்முறை காட்சிகள். கழுத்து செயின் பறிக்கபட்டு அத்தனை பெண்கள் சாலையில் விழுந்து இறக்கும் காட்சிகள்,  கார் ஓட்டுநர்களை கழுத்தில் செயின் கட்டி காருக்குள் இருந்து வெளியில் இழுத்துக் கொல்வது, பைக் சேஸிங் காட்சியில் உச்சம் தொடும் இசையுமாக ரத்த கொதிப்பு இருப்பவர்களும் பார்க்கக்கூடாத படம்

யாரையும் என்கவுண்டர் செய்யக் கூடாது குற்றவாளிகளை திருந்தவேண்டும் என்றெல்லாம் முதல் பாதியில் சொல்லும் ’’வேற மாறி அஜித்’ சர்வசாதாரணமாக பைக்கில் துரத்துபவர்களை  பஸ்ஸால் அடித்து தள்ளி விட்டு  போவதும், துரத்தி வரும் கார் மற்றும் பைக்குகளின் மீது குண்டுகளை எறிந்து தீப்பிழம்புகளில் புகுந்து வெளியே வருவதுமாக இரண்டாம் பாதியில். வேற வேற மாறி ஆகிவிடுகிறார் என்ன லாஜிக்கோ?

பல ஸ்லீப்பர் செல்கள் தலைமையை நேரில் பார்த்ததில்லை பலர் கட்ட க்கடைசியில் தான் பார்க்கிறார்கள் ஆனால் அஜித் தம்பி குட்டி மட்டும் முதலிலேயே வில்லனால் கவனிக்கப்பட்டு ,அடுத்த காட்சியிலேயே வில்லனுடன் பைக்கில் ஊர் சுற்றுவது எப்படி என்று புரியவில்லை. குட்டி  வசனம் பேசுவதும் நடிப்பதும் செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுத்தது போலத்தான். வேலை இல்லாத விரக்தியாம், ஆனால்  காதல் மட்டும் செய்வாராம் குட்டி. 

பாராட்டும்படியானவைகள் என்றால் அருமையான நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் மெனக்கெட்டு இருப்பதுதான். திலீப் சுப்பராயன் ஹாலிவுட்டுக்கு நிகராக அமைத்திருக்கிறார் பல காட்சிகளை. அந்த மழையில் நடக்கும் சண்டை பிரமாதம். ஒளி இயக்கமும் பாராட்டுக்குரியது. செல்வம் என்னும் பாத்திரத்தில் நடித்தவர் தனித்துத் தெரிகிறார் நல்ல தேர்வு.வேற மாறி நடனக்காட்சியில் குழுவினரின் உடையலங்காரம் சிறப்பு.

உதிரிப்பூக்கள் விஜயன் சாயலில் இருக்கும் அஜித்தின்  குடிகார அண்ணனுக்கும், போலீஸ் கமிஷனருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமை வேறு குழப்புகிறது.  முதல் பாதிமுழுக்க அஜித்தின் அண்ணன் கமிஷனர் ஆனால்  பாவம் குடிகாரர், அஜித் துணை கமிஷனர் என்று நினைத்துக் கொண்டிருந்து, இரண்டாம் பாதியில் தான் தெளிந்தேன்

அப்பாவி(?).பைக் இளைஞர்களை கைது செய்திருக்கையில் காவல் நிலையத்துக்கு வெளியே கதறிக்கொண்டு காத்திருக்கும் அம்மாக்களும், அஜித்தின் போதனைகளில் உடனடியாக திருந்தி கதவை திறந்ததும்  கூட்டமாக ஓடி வந்து அவரவர் அம்மாக்களை கட்டிக்கொண்டு கதறும் திருந்திய குமரர்களுமாக   ஏகத்துக்கும் நெஞ்சை பிழிந்த்தெடுக்கிறார்கள்.கடைசிகாட்சியிலும் விடாமல் அறம் போதிக்கிறர்கள். வினோத் என்னதான் பிரச்சனை உங்களுக்கு?

மொத்தத்தில் புரியாத தொழில்நுட்பக் காட்சிகள், நீளமான நெஞ்சை பதறவைக்கும் பைக் துரத்தல்கள், அரைத்து புளித்து நொதித்துப்போன கொலம்பிய கொகெய்ன் கடத்தல் கதை, மெழுகு பொம்மைபோல அஜித் என்று தாறுமாறாக கட்டமைக்கப்பட்ட படம்.

புதுமாறியும் வேற மாறியும் எதுவுமில்லாமல் அதே பழைய மாறியான படம்தான்