லோகமாதேவியின் பதிவுகள்

Month: March 2026 (Page 2 of 2)

மகளிர்!

காலையிலேயே பெருங்கூச்சல் கேட்டது. சமையலறை ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரியும் தோட்டத்தின் உரிமையாளரின் காட்டுச்சாலை, வடக்கில் நம் வீட்டுச் சமையலறை ஜன்னலைப் பார்த்துத்தான் இருந்தது. ராசுக்கவுண்டர் பெரிதாகச் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.

‘’.. போடு, கீழே போடு,  இருக்கறது பூரா நீ வழிச்சுட்டுப் போயிட்டா நான் ஒரத்துக்கு என்ன பண்ணறது? அதுவும் கேட்கறதுமில்ல; என்னமோ கொப்பனூட்டிலிருந்து எடுக்கறவளாட்டம் போடு கீழே ..’’

முருங்கை இலைகளை பருப்பில் போட்டதும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஜன்னலில் எட்டிப்பார்த்தேன். ராசுவின் எதிரில்  கையில் அள்ளிய சாணியுடன் மாரியம்மாள் தலை குனிந்து நின்றிருந்தாள்.  விளிம்பு நிலை மக்களில் ஒருத்தி மாரியம்மாள். சனி ஞாயிறுகளில் அடுத்த நிறுத்தத்தில் இருக்கும் ஏராளமான கடைகளின் வாசலில் ஒன்றிரண்டில் சாணி போட்டு வழித்துவிட்டால் நூறோ இருநூறோ கிடைக்கும். அவ்வப்போது இப்படி அருகிலிருக்கும் தோப்புகளில் சாணியை பலர் இப்படி எடுத்துக்கொள்வார்கள்.  அது ஒரு உபரி வருமானம். 

மாரியம்மாள் இன்று ராசுக்கவுண்டரிடம் அதற்குத்தான் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறாள். 

ராசுக்கவுண்டர் தனி ஆள். ஒரு வகையில் எனக்கு உறவினரும் கூட. அவரின் நங்கையின் வகையில் ஒரு பெண்தான் என் அண்ணன் ஒருவர் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார். ஆனால் நான் ராசுவிடன் பேசியது கூட இல்லை. ஒரு பழைய சைக்கிளில் நான் கல்லூரிக்குச் செல்கையில் என்னை கடந்து அவர் பால் ஊற்றச் செல்கையில் அவ்வபோது பார்த்திருக்கிறேன். ஏனோ அவர் திருமணம் செய்துகொள்ளாமல் அந்த கோடிக்கணக்கான பெறுமதி உள்ள வீட்டில் ஓலைச்சாலையில் வசிக்கிறார். மாடும் கன்றும் எருமையும் ஆடும் கோழியும் தேங்காயும் மாங்காயுமாகச் செழிப்பான தோட்டம் அது.

சாணி அள்ளியதற்கு கொஞ்சம் அதிகமாகவே திட்டு , சத்தமும் அதிகமென்பதால் அக்கம்பக்கத்து ஆட்கள் எட்டிப் பார்த்தார்கள். ராசு மேலும் மகிழ்ந்து குரலுயர்த்தி, “எடுபட்ட சிறுக்கி, இனி தோட்டத்துப் பக்கம் வந்தீன்னா காலை முறிச்சுப்புடுவேன், போடி!” என்று கத்தினார்.

மாரியம்மாள் ஒதுங்கி ஓரமாகச் சென்று சாணியைக் கீழே போட்டுவிட்டுத் திரும்பி நடந்தாள். பின்னால் “சிறுக்கி மக” என்ற ராசுவின் குரல் எனக்கும் கேட்டது.

கோவிட் தொற்று முடிந்து கல்லூரி திறந்து சில மாதங்களில் ஒருநாள் ஏற்காட்டுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. கல்லூரியிலிருந்தே காலை 5.30-க்குப் பேருந்து புறப்படுவதாக ஏற்பாடு. நான் வேடசந்தூரிலிருந்து புறப்படும் 5 மணி  முதல்  பேருந்தைப் பிடிக்க கருக்கிருட்டில் டார்ச் அடித்தபடி வெளியே வந்தேன். 200 அடிகள் பேருந்து நிறுத்தத்திற்கு நடக்க வேண்டும். 

தாத்தாரப்புச்சி மரத்திற்கருகில் ஏதோ ஒரு அசைவு, அப்படியே திடுக்கிட்டு நின்று விட்டேன். திரும்பி வீட்டுக்குச் செல்வதும் முடியாது. முதுகுக்குப் பின்னால் அந்த அசைவு மேலும் பயமுறுத்தும். அந்நேரத்துக்கு எந்த நடமாட்டமும் இல்லை, மையச் சாலையில் ஒரே ஒரு பைக் வெளிச்சமாக அகன்று போனதைத் தவிர.

துணிச்சலை வரவழைத்துக்கொண்டு “யாரு அங்கே?” என்றேன் சத்தமாக.

தலையில் முக்காடிட்டுக்கொண்டிருந்த மாரியம்மாள் மெல்ல வெளியே வந்து என்னைச் சாதிப் பெயர் சொல்லி அழைத்து – “ச்சி நாந்தானுங்க” என்றாள்.

ஆச்சரியமாக இருந்தது, அந்த இருட்டில் அவள் அங்கே ஒளிந்திருந்தது. “என்ன மாரியம்மா, இந்நேரத்துல இங்கே?” என்றேன்.

அவள் சற்று நகர்ந்து முன்னே வந்து முக்காட்டை எடுத்துவிட்டாள். பொழுது துலங்கிக்கொண்டிருக்கையில், அவள் முகம்  கொஞ்சமாகத் தெரிந்தது. தலையில் நெற்றியைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வெள்ளைநிறக் கட்டில் ரத்தம் ஊறிக்கசிந்திருந்தது.

சில நாட்களுக்கு முன் தான் அவள் புருஷன் மாரி அவள் மீது சந்தேகப்பட்டு பாட்டிலில் ஓங்கி தலையில் அடித்த ரத்தப் பெருக்கோடு அப்பா வீட்டிற்குப் பஞ்சாயத்துக்கு வந்தார்கள். சமாதானம் செய்து அம்பரம்பாளையம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தபோது போட்ட கட்டுதான் அது.

மாரியம்மாள் அந்தச் சமூகத்திலேயே கொஞ்சம் வெளுப்பும் லட்சணமுமாக அழகி. மாரி வழக்கமான புருஷன்மார்களைப் போலத்தான், ஊதாரி, குடிகாரன். ஆனால் மாரியம்மாள் மீது எப்போதும் சந்தேகம். இரண்டு பிள்ளைகள் வேறு.

மாரியம்மாளிடம் “இங்கே வா, என்ன இந்நேரத்தில் இங்கே இருக்கே? என்ன?” என்றேன்.

“மன்னிச்சுருங்கம்மா” என்றாள். எனக்குப் புரியாமல் “என்ன சொல்லறே?” என்றேன்.

“ராசுக்கவுண்டர் சாலைக்குப் போயிட்டு வர்றேனுங்க. நீங்க கேட்டுக்கதவு திறக்கறதைப் பார்த்துட்டு இங்கே ஒளிஞ்சுகிட்டனுங்க” என்றாள்.

திகைப்பாய் இருந்தது. கீழ் சாதி மேல் சாதி எல்லாம் இந்தச்சுரண்டலுக்கு இல்லை போலிருக்கிறது. “என்ன மாரிம்மா? முதல்லயே வீட்டில் உனக்குப் பிரச்சனை, இப்படிப் பண்ணலாமா? மாரிக்குத் தெரிஞ்சா இன்னும் சண்டை ஜாஸ்தியாகுமில்ல?” என்றேன்.

“என்ன பண்ணறதுங்க அவரு செலவுக்கு காசே தரதில்லை, கவுண்டர், அப்பப்போ இப்படி கூப்பிடுவாருங்க, வெள்ளன புள்ளைங்க தூங்கையில போனா, கவுண்டரு கைச்செலவுக்கு  காசு கொடுப்பாருங்க. அதுங்க எதுனா ஆசையாச் சாப்பிடக் கேட்டா வாங்கிக்கொடுக்கலாம்னுதாங்க” என்றாள்.

’’..சரி வீட்டுக்குபோ யாராச்சும் பார்ப்பாங்க..’’ என்று சொல்லிவிட்டு விலகி பஸ் ஸ்டாப்பை நோக்கி  நடந்தேன். அன்று முழுவதும் மாரியம்மாளின் கீழுதட்டில்  ரத்தம் கசிந்த  காயம் நினைவிலேயே  இருந்தது.

அந்த மாரியம்மாள் தான் அதே ராசுக்கவுண்டரிடம் இன்று திட்டுவாங்குகிறாள் இருட்டில் நடப்பது யாருக்கும் தெரியாதுதான் என்றாலும் ஊரறிய  இப்படி வேஷம்போட்டால் ,சந்தேகமும் வராதல்லவா?

அங்கிருந்து வீட்டை  நோக்கி வந்த மாரியம்மாள் பின்  வாசலில் நின்றிருந்த என்னைப்பார்த்து’’.. லீவுங்களாங்க –ச்சி?,,’’ என்றாள் . ’’..ஆமா மாரிம்மா என்றேன்..’’சிரித்தபடி அவளது மாட்டை இழுத்துக்கொண்டு போனாள். நெற்றியில் மாரி  பாட்டிலில் அடித்த  காயம் தழும்பாகி இருந்தது.

உள்ளே வந்தேன். அலைபேசியில் ஏராளமான மகளிர் தின வாழ்த்துக்கள் வந்திருந்தது. எல்லோருக்கும் ’’ஹேப்பி வுமன்ஸ் டே ’’என்று பதில் சொல்ல வேண்டும்.

மும்பை-  மீட்கப்பட்ட கொள்ளிக்கட்டை

சாமுவேல் மற்றும் சூசன்னா வெஸ்லே தம்பதியினருக்கு 19 பிள்ளைகள்.

19 பிள்ளைகளை வளர்ப்பதைக் குறித்துச் சிந்திப்பதை விட அத்தனை கர்ப்பகாலத்தையும் 19 பிரசவங்களையும் கற்பனை செய்யவே நடுக்கமாக இருக்கிறது. அதுவும் இப்போதிருக்கும் எந்த நவீன மருத்துவ வசதிகளும் இல்லாத காலத்தில். 

சாமுவேல் இறைப்பணியாளர். சூசன்னா இல்பேணுநர்.  ஆனால் சூசன்னாதான்  மெதடிஸப் பிரிவின் தாய் என்று குறிப்பிடப்படுகிறார். அப்படி ஒரு கட்டுக்கோப்பான முறையில் குடும்பத்தை அவர் நடத்தினார். 19-ல் 10 பிள்ளைகள் பல காரணங்களால் இறந்து போனார்கள் 9 பேரை நன்கு வளர்த்து ஆளாக்கினார்.

மூன்று தளங்கள் கொண்ட வசதியான பெரிய வீடு அவர்களுடையது. ஆனால் அந்த வீடு தேவாலயத்தால் அவர்கள் வசிக்க அளிக்கப்பட்டது, அவர்களுடைய சொந்த வீடு அல்ல. அது மரப்பலகைகளும் வைக்கோலும் கொண்டு கட்டப்பட்ட, எடையற்ற எளிதில் தீப்பிடிக்கும் படியான வீடு. அக்காலத்தில் இறைப்பணியாளர்கள் மேல்மட்டவாசிகளைப் போல இருக்க வேண்டும் என்று தேவாலயங்கள் எதிர்பார்த்தன. எனவே சாமுவேல்  அந்த வீட்டில் வசித்து, கண்ணியமான உயர்ந்த ஆடைகள் அணிந்து குழந்தைகளை ஆக்ஸ்போர்டு பள்ளியில் படிக்க அனுப்ப வேண்டியிருந்தது. அத்தனை வசதியில்லாத அவர் அதன் பொருட்டு பல கடன்களிலும் சிக்கி இருந்தார்.

அவர்கள் வசித்த Epworth என்னும் ஒருசதுப்பு நிலமும் சிறு சந்தைப்பகுதியையும் மையமாகக் கொண்ட சிறு நகரத்தில் இருந்த மக்கள், அயலவரை எதிர்கொள்வதில் பரிச்சயமற்றவர்களாகவும் அவர்களிடம் கடுமை காட்டுபவர்களாகவும் இருந்தனர். உள்ளூர்வாசிகளும் கிறிஸ்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் சாமுவேல் வெஸ்லே சார்ந்திருந்த கிறிஸ்தவப் பிரிவைச் சாராதோர். 

1700-களில் அங்கிருந்த அனைவருமே கிறிஸ்தவர்கள் தான் என்றாலும் அதில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என இரு பிரிவுகள் இருந்தனர். சாமுவேல் வெஸ்லே உள்ளூர்வாசிகளிடம் வரி வசூலிக்கும் தேவாலயத்தைச் சேர்ந்தவராக உயர்ந்த பிரிவிலும், பிற உழைக்கும் உள்ளூர் வாசிகள் தாழ்ந்த, தேவாலயங்களுக்கு வரி செலுத்தும் பிரிவிலும் இருந்தனர். மேலும் சாமுவேல் மிகுந்த கண்டிப்பான இறைப்பணியாளராக இருந்து உள்ளூர்வாசிகள் மது அருந்துவது, சுகாதாரமின்றி இருப்பது ஆகியவற்றைப் பாவம் எனக் கண்டித்தார். 

தேவாலயங்களுடன் அரசும் இணைந்து கொண்டு வழிபாடுக்கான விதிகளை மக்களிடையே திணித்தது. எனவே, வெளியூரிலிருந்து வந்து நம்மைக் கண்டித்து, விதிகளுக்குட்படச் செய்து, வரி வசூலித்து, எப்படி வழிபட வேண்டுமென வகுப்பெடுப்பவர்கள் என அந்தப் பிரிவின் மீது உள்ளூர்க்காரர்களுக்கு வெறுப்பு உண்டாகி அது சாமுவேலின் மீதான வெறுப்பாக வளர்ந்து கொண்டிருந்தது. 

சாமுவேலின் நாயைக் கல்லெறிந்து கால் ஒடித்தார்கள். சாமுவேல் வீட்டுப் பசுக்களுக்கு நஞ்சூட்டிக் கொன்றார்கள். இரவுகளில் பலமுறை வீட்டின் மீது கல்லெறியப்பட்டது. மிகச் சிறிய தீ விபத்து இரண்டு முறை உண்டாக்கப்பட்டு அப்போதே கவனிக்கப்பட்டதால் அணைக்கப்பட்டது. சாமுவேல் குடும்பத்தினர் மீது உள்ளூர்க்காரர்களுக்கு ஒரு புகைச்சல் இருந்தது.

எப்வொர்த் நகரிலிருந்து சிறு குளங்களும் நதிகளும் இணைந்த  மாபெரும் சதுப்புநிலத்தை நம்பியே அங்கிருந்தோர் வாழ்ந்தனர். அந்தச் சதுப்புநிலத்திலேயே நாணலைக் கொண்டு எடையற்ற வீடுகளைக் கட்டிக்கொண்டு மீன் பிடித்தும் பறவைகளை வளர்த்துக்கொண்டுமிருந்தார்கள்.மழையற்றுப்போய் சதுப்பு நிலம் வறண்டபோது அங்கு கால்நடைகளை மேய்த்தார்கள்.

ஆனால் முதலாம் சார்லஸ் மன்னர் காலத்தில் அரசு டச்சு பொறியாளர்களை வரவழைத்து “Draining the fens” என்னும் முரண்பாடுகள் அதிகமிருந்த ஒரு  பொறியியல் முறையை அறிமுகம் செய்து, அதை நடைமுறைப்படுத்தி அந்தச் சதுப்புநிலத்தின் நீரை முழுக்க வெளியேற்றி அங்கு மண்ணைக்கொட்டி மேடாக்கி கோதுமை வயல்களை உருவாக்கினார்கள். புதிய வயல்கள் பெரும் பணக்காரர்களுக்கும் , சாமுவேல் உள்ளிட்ட இறைப்பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு அங்கு விளைந்த தானியம் அரச குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டது.

நகர மேம்பாட்டுத் திட்டம் என்னும் பெயரில் இது நடந்ததால் உள்ளூர்க்காரர்களின் வாழ்வாதாரம் முழுக்கப்  அழிந்தது. சாமுவேல் இந்த நகர மேம்பாடு என்னும் அரசின் திட்டத்தை ஆதரித்ததாலும் அவர் மீது உள்ளூர் மக்களுக்கு விரோதம் வந்தது. சாமுவேலுக்குச் சொந்தமான வயல்வெளி முழுக்கத் தீயிட்டு எரிக்கப்பட்டது. அவரது வீடும் மீண்டும் தீக்கிரையாக்கப்பட்டது.

சாமுவேல் fenland மக்கள் என அழைக்கப்பட்ட அந்த சதுப்பு நில மக்களின் சுகாதாரமின்மையை இந்த வளர்ச்சித் திட்டம் மேம்படுத்துமென நினைத்தே அதற்குச் சாதகமாக நடந்துகொண்டார்.

உண்மையில் அந்த நகரவாசிகள் எதிர்த்தது சாமுவேல் என்னும் தனிமனிதரையல்ல, அரசையும் , வளர்ச்சித் திட்டங்கள் என்னும் பெயரில் அவர்கள் வாழ்வாதாரத்தை அழித்த அரசாங்கத்தையும், இழந்த பொருளாதாரத்திற்கான பழிவாங்கலாகவுமே அவர்கள் சாமுவேலை எதிர்த்தார்கள். அரசியல் பொருளாதாரம் மற்றும் இறையியல் காரணங்கள் அவர்களின் எதிர்ப்போடு பின்னப்பட்டிருந்தன. 

சூசன்னா குழந்தைகளை மிகவும் கட்டுக்கோப்புடன் வளர்த்தார். அனைவருக்கும் இறையியல், லத்தீன் மற்றும் கிரேக்க மொழிப் பாடங்கள் பள்ளிப் பாடங்களுடன் அன்றாடம்  வீட்டிலேயே நடந்தது. மிகக் கண்டிப்பாக மணி அடித்தால் சாப்பாடு என்பார்களே அப்படி  உணவுக்கான காலம் கடைப்பிடிக்கப்பட்டது. இரவு உணவு மாலை 6 மணிக்கே முடிந்து அனைவரும் படுக்கைக்குப் போக வேண்டும் என்னும் நெறியையும் சூசன்னா கட்டாயமாக்கி இருந்தார்.

எந்தப் பொருள் வேண்டுமென்றாலும் கம்பீரமாக வந்து அதைக் கேட்டுப் பெற வேண்டும்; ஒருபோதும் அழுது அடம்பிடிக்கக்கூடாது. அப்படி அடம்பிடித்தால் அந்தப் பொருள் கிடைக்கவும் கிடைக்காது என்பதை சூசன்னா நடைமுறைப்படுத்தி இருந்தார். இரவுகளில் ஒவ்வொரு குழந்தையின் அருகிலும் அவர் அமர்ந்து ஜெபித்தோ அல்லது கதைகள் சொல்லியோ பாடல்கள் பாடியோ உறங்கச் செய்து பின்னர் அடுத்த படுக்கைக்கு வருவார். இப்படி சூசன்னாவின் கட்டுப்பாடான முறைமைகளுக்குட்பட்ட வாழ்க்கை முறைதான் பின்நாட்களில் ஜான் வெஸ்லே மெத்தடிஸம் என்னும் பிரிவைத் துவங்க அடித்தளமிட்டது.

1709 பிப்ரவரி 9-ம் தேதி இரவில் சூசன்னா உடல்நலமின்றி அவரது படுக்கையறையில் இருந்தார். சாமுவேல் அவரது அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். குழந்தைகள் அனைவரும் நர்சரி என அழைக்கப்பட்ட இரண்டாம் தளத்தில் இருந்த அவர்களுடைய படுக்கையறையில் இருந்தார்கள். அப்போது வீட்டின் கூரையில் சாமுவேலுக்கு எதிரானவர்களால் தீ வைக்கப்பட்டது. 

புகையில் விழித்துக்கொண்ட வேலைக்காரப் பெண் சாமுவேலையும் சூசன்னாவையும் எழுப்பினார். கூரையிட்டிருந்த காய்ந்த வைக்கோலில் தீ மளமளவெனப் பற்றி எரிந்ததால் சாமுவேல் மனைவியையும் மற்ற குழந்தைகளையும் தோட்டத்துக் கதவு வழியாகவும் ஜன்னல் வழியாகவும் விரைந்து காப்பாற்றி அழைத்துச் சென்றார். அத்தனை பேரும் வெளியே வந்தபோதுதான் தெரிந்தது, அப்போதுதான் 5 வயது முடிந்திருந்த ஜான் வெஸ்லே அங்கு இல்லை என்பது. சாமுவேல் பலமுறை மீண்டும் வீட்டுக்குள் நுழைய முயன்றும் தீக்கொழுந்துகளின் வேகம் அவரை நுழைய விடவில்லை. படிக்கட்டுக்கள் முழுவதுமாக எரிந்து விழுந்துவிட்டிருந்ததால் மேல் தளத்துக்குச் செல்ல வழியே இல்லை.

இரண்டாம் தளத்தின் ஜன்னல் வழியே அழுதுகொண்டு எட்டிப் பார்த்த ஜானைக் கண்ட உள்ளூர்வாசிகள் சிலர் (அவர்களில் நெருப்பு வைத்தவர்களும் இருந்தார்கள் எனினும் ஒரு குழந்தை நெருப்பில் இறப்பதை அவர்கள் விரும்பவில்லை), ஒருவர் தோள் மீது ஒருவர் நின்று ஒரு மனித ஏணியை உருவாக்கி ஜானைக் காப்பாற்றினார்கள். ஜானை ஒருவர் தனது தோளில் தாங்கிக்கொண்ட மறு வினாடி வீட்டின் கூரை முழுவதுமாக எரிந்து கீழே சரிந்து சாய்ந்தது.

சூசன்னா, ஜான் உயிர்பிழைத்தது ஒரு அற்புதம் என்றும், ஏதோ ஒரு பெரிய காரணத்திற்காகவே அவர் அந்தத் தீ விபத்திலிருந்து பிழைத்திருப்பதாகவும் நம்பினார்.

‘பைபிளில் குறிப்பிட்டிருக்கும்’ “இது அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளிக்கட்டையல்லவா?” “The Lord rebuke you, O Satan! The Lord who has chosen Jerusalem rebuke you! Is this not a brand plucked from the fire?” (Zechariah 3:2) என்னும் வசனத்தைச் சொல்லி, ஜான் அப்படி முழுமையாக எரிந்து சாம்பலாகப் போகும் ஒரு நெருப்புத் தணலிலிருந்து, ஒரு துண்டு விறகை மட்டும் கடைசி நேரத்தில் கையை விட்டு எடுப்பதைப் போலக் கடவுளால் காப்பாற்றப்பட்டவன் என்றார். இது ஜானின் மனதில் ஆழப் பதிந்தது.

ஜான் வெஸ்லே தன் வாழ்நாள் முழுக்க இந்த வாசகத்தை மறக்கவில்லை. ஒரு “மீட்கப்பட்ட கொள்ளிக்கட்டை”யான தான், தனக்குக் கிடைத்த இந்த மறுவாழ்வை மக்களுக்காகவும் இறைவனுக்காகவும் செலவிட வேண்டும் என்று கருதினார். பிற்காலத்தில் அவர் வரைந்த தனது அதிகாரப்பூர்வ ஓவியத்தில், பின்னணியில் எரியும் வீட்டையும், கீழே இந்த வாசகத்தையும் இடம்பெறச் செய்தார்.

தீவிபத்திற்குப் பிறகு சாமுவேல் வீட்டைப் புதுப்பிக்க 400 டாலர்கள் வரை தேவாலயத்திலிருந்து கடன் பெற்றார். ஏற்கனவே இருந்த பல கடன்களுடன் அதுவும் சேர்ந்துகொண்டு அவரை மரணம் வரை பெருங்கடனாளியாக்கியது. ஆனால் வீட்டை மீண்டும் அவர் புதுப்பித்தார்.

 1711-1712 காலப்பகுதியில், சாமுவேல் வெஸ்லே லண்டனில் நடந்த ஒரு முக்கிய மதக் கூட்டத்திற்குச் சென்றிருந்தார். அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்ற தற்காலிகப் பாதிரியார் திறமையாகப் பிரசங்கம் செய்யவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சூசன்னா, தனது குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் வீட்டிலேயே வேதாகமப் பாடங்களை நடத்தத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் சூசன்னாவின் குழந்தைகளும் உறவினர்களும் பணியாட்களும் கலந்துகொண்ட ஒரு குடும்ப வழிபாடாகத்தான் அது இருந்தது. ஆனால், இதைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் மெல்ல மெல்ல வர ஆரம்பித்தனர். விரைவில் சூசன்னாவின் சமையலறையில் 50 பேர், பிறகு 200 பேர் என மக்கள் குவியத் தொடங்கினர். இடமில்லாமல் பலர் வாசலுக்கு வெளியேயும் நின்று கவனித்தனர். அந்தக் காலத்தில் ஒரு பெண் பொதுமக்களுக்கு மதப் போதனை செய்வது என்பது மிகப்பெரிய புரட்சியாகவும், சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டது. 

ஊர் திரும்பிய சாமுவேல் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தேவாலயம் நிச்சயமாக இதை விரும்பாது என சூசன்னாவைக் கண்டித்துப் பிரசங்கக் கூட்டத்தை உடனே நிறுத்தச் சொன்னார்.சூசன்னா இதற்கு இப்படி ஒரு பதிலைச்சொன்னார்.

“நீங்கள் இதை நிறுத்தச் சொன்னால், நான் நிறுத்திவிடுவேன். ஆனால், இந்த மக்களின் ஆன்மீகத் தேவையை முறையாக  நிறைவேற்றாததற்காகக் கடவுள் கேட்கும் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். தீர்ப்பு நாளில் என்னை விடுவித்து, உங்கள் மீது அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக நீங்கள் எழுதிக் கொடுத்தால், நான் நிறுத்திவிடுகிறேன்.”

சாமுவேல் அதன்பினன்ர் மறுபேதும் சொலல்வில்லை

சாமுவேல் வெஸ்லே 1735 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று, தனது 72-வது வயதில் எப்வொர்த் நகரில் காலமானார்.

அவர் இறக்கும் தருவாயில் அவரது மகன்கள் ஜான் மற்றும் சார்லஸ் வெஸ்லே அவர் அருகில் இருந்தனர். அவர் தனது பிள்ளைகளை ஆசீர்வதித்து, அமைதியான முறையில் உயிர் நீத்தார்.அவர் இறந்தபோது குடும்பம் கடும் கடன் சுமையில் இருந்தது. அவரது மனைவி சூசன்னாவின் கையில் ஒரு பைசா கூட இல்லை. அடக்கச் செலவுக்காகவும் கடன்களை அடைக்கவும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சாமுவேல் வெஸ்லே  40 ஆண்டுகள் பணியாற்றிய எப்வொர்த் புனித ஆண்ட்ரூ தேவாலய முற்றத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

 பிற்காலத்தில் மெதடிச பிரிவை உருவாக்கிய காரணத்தால் தேவாலயங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஜான் வெஸ்லே புனித ஆண்ட்ரூ தேவாலயத்துக்கு வந்தபோது, தேவாலயத்திற்குள் பிரசங்கிக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கல்லறைத்தோட்டத்தில் அவர் தனது தந்தையின் கல்லறையின் மீது நின்றுகொண்டே அங்கு கூடிருந்த மக்களுக்குப் பிரசங்கம் செய்தது மிகக் குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்று நிகழ்வு.

சூசன்னா ஜூலை 23,1742-ல் இறக்கும் தருவாயில் பிள்ளைகளிடம் தன் உயிர் உடலைவிட்டுப்பிரிகையில் தேவைனைப்போற்றிப் பாடலொன்றை பாடும்படி கேட்டுக்கொண்டார். அப்படியே பாடப்பட்டது.

ஆகஸ்ட் 1, 1742 அன்று லண்டனில் ஒரு கல்லறைத் தோட்டத்தில் நடந்த தாயின் அடக்க ஆராதனைக் கூட்டத்தில் வழக்கமாக சம்பிரதாயமாக வாசிக்கப்படும் இரங்கல் செய்திக்கு மாற்றாக ஜான், தாய் தங்களை எப்படி வளர்த்தினார் என்பதை கூடியிருந்த ஆயிரக்காணோருக்கு முன்பாக வாசித்துச்சொன்னார். கூடவே கடவுளின் இறுதித்தீர்ப்பை, வெள்ளை நிற அரியாசனத்தில் வீற்றிருக்கபோகும் தேவனை, கிரியைகளின் புத்தகங்களும் ஜீவபுத்தகங்களும் திறககப்படுவதைக் குறித்தும் நீண்ட உரையாற்றினார்.

தனது தாயார் ஒரு முன்மாதிரியான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்தவர் , அவருடைய பெயர் “ஜீவ புத்தகத்தில்” நிச்சயம் இருக்கும் என்பதை கூடியிருந்த மக்களுக்கு உணர்த்தவே இந்தப் பகுதியை ஜான் உரையாற்றத் தேர்ந்தெடுத்தார்.

தொடரும்……

மும்பை -நற்செய்தி!

எனக்கும் கிறிஸ்துவுக்குமான அணுக்கமென்பது பள்ளிக்காலத்திலிருந்தே இருக்கிறது. கிறிஸ்துவத்துடனல்ல, கிறிஸ்துவுடன் மட்டும்தான். Son preference உள்ள குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்லாது பெண்குழந்தைகளை பாரமாகவும் பெரும் சுமையாகவும் நினைத்து பாரபட்சமாக நடத்தும் குடும்பத்தில் பிறந்ததால் நானும் மித்ராவும் பெரும்பாலும் உதாசீனப்படுத்தப்பட்டோம். வீட்டுவேலைகள் செய்ய எங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள், அவ்வளவுதான். நல்ல உடை, போதுமான உணவு, கவனிப்பு, அன்பு, ஆதரவு எதுவுமில்லை.

அப்பாவைக் குறித்து பெரும் அச்சம் நிரம்பி இருந்த பால்யமாகையால், வீட்டிலிருந்து தப்பித்து பள்ளிக்குச்செல்வது பெரும் விடுதலையாக இருந்தது. வகுப்பறைகளில் நானே உருவாக்கிக்கொண்ட ஒரு கற்பனைக்குடும்ப வாழ்க்கையில் மூழ்கி இருப்பேன். அப்போதெல்லாம் அரசு இலவசமாகக் கொடுக்கும் நோட்டுப்புத்தகங்கள் தான். அதில் கடைசிப்பக்கத்தில் மனதில் துயர் நிரம்பி இருக்கையில்  அல்லது அவரது முறம் போன்ற கையால்  அடிவாங்கி  மூக்குச்சில்லுடைந்து ஈரக்கர்சீப்பை மூக்கில் வைத்துக்கொண்டு வரும் நாட்களில் என் கற்பனை அப்பாவுக்கு கடிதம் எழுதுவேன். அப்பாவுக்கு மட்டும்தான். அம்மா என்னிடம் அன்பாக இருந்ததில்லையெனினும், அப்பாவைப் போல அச்சுறுத்துதலும் மிரட்டலும் அம்மாவிடம் இல்லை. எனவே ஒரு அன்பான, அடிக்காத, கார்க் குண்டுகள் போட்ட துப்பாக்கியைக் காட்டி சுட்டுக்கொன்று விடுவதாய் மிரட்டும் அப்பாவுக்கு மாற்றாக மனதில் கற்பனை செய்து வைத்திருந்த அந்த அப்பாவுக்கு “ஏன் என்னை இங்கே கொண்டு வந்து விட்டீர்கள்? எப்போ வந்து கூட்டிப் போறீங்க? என்னால் இங்கே இருக்கவே முடியவில்லை” என்றும், பல சமயங்களில் ’ரொம்ப பசிக்குதுப்பா’ என்றும் கடிதம் எழுதுவேன்.

 கடிதம் எழுதி அந்த காகிதத்தை கிழித்து டெஸ்க்கிற்கு உள்ளே வைத்துவிடுவேன். அப்படி உள்ளே போட்டுவைத்த அந்த கடிதம் அந்த கற்பனை அப்பாவிடம் போய் சேர்ந்துவிடும் என்று எப்படியோ நம்பி, பதில் வருமென்று கூட காத்திருந்திருக்கிறேன்.  முற்றிலுமாக மனம் சிதைந்திருந்த நாட்கள் அவை . அப்படி கடிதம் எழுதுகையில் எல்லாம் சொட்டுச்சொட்டாக தாளில் விழும்படி கண்ணீருடன்தான் எழுதுவேன். இவையெல்லாம் 7, 8 வகுப்புகளின் போது.

 9-ல் படிக்கையில் ஒருநாள் மாலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருக்கையில், முறையாக அனுமதி பெற்ற கன்னியாஸ்திரீகள் சாம்பல் நிற அங்கியும், நீளமான சங்கிலியில் தொங்கும் சில்வர் சிலுவையுமாக வந்திருந்து, அழகிய சிறிய பைபிளை எங்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்கள். அத்தனை நல்ல உள்ளங்கை அளவிலான, விளிம்பில் ஆரஞ்சு வர்ணம் தீட்டிய, தோலட்டை போடப்பட்ட, மிக வசீகரமான என்னவோ  வாசனை அடிக்கும் ஒரு புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தது பெரிய விஷயமாக இருந்தது. அந்த பைபிளை பொக்கிஷமாக ஆனால் வகுப்பறையிலேயே வைத்துக்கொண்டேன்.

 வீட்டுக்குக்கொண்டு போனால் அடிவிழும் என்று எப்படியோ தெரிந்திருந்தது. அந்த பைபிளை மறுநாள் திறந்து பார்க்கையில், அதனுள்ளே கர்த்தரின் ஒரு வண்ணப்படம் இருந்தது. ஒரு கையை ஆசீர்வதிப்பதுபோல் உயர்த்தி, சிலுவை அணிந்து, பிடரி வரை புரண்ட பொன்னிற கூந்தலும், நீலக்கண்களும், தலைக்கு பின்னே வானிலிருந்து பாய்ந்த ஒளிவெள்ளமுமாய் இருந்த அவரது புகைப்படத்திற்குக் கீழே ‘’பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்’’ என்று எழுதியிருந்தது. அந்த வாசகமும், அந்த புகைப்படமும், கருணை நிரம்பிய அந்த கண்களும் எனக்களித்த ஆசுவாசத்தையும்,  நம்பிக்கையையும்  சொல்லவே முடியாது.

முரட்டு மீசையும் அரிவாளும் அலட்டலும் கட்டுச்சேவல் சண்டையும் ஜாதிவெறியுமாக இருந்த குடும்பத்து ஆண்களுக்கு மாற்றாக, கருணை ததும்பும் புன்னகைக்கும் நம்பியூட்டும் கர்த்தரே பதின்மவயதில் நான் கண்ட முதல் ஆணழகன். அந்தக் கைகைளை மானசீகமாக பற்றிக்கொண்டேன்.

அந்தப் புகைப்படத்தை லட்சக்கணக்கானமுறை எடுத்துப் பார்த்திருப்பேன். அதன் பிறகு அந்த கற்பனை அப்பாவுக்கு கடிதங்கள் ஏதும் எழுதியதில்லை.  கர்த்தர் உடனிருக்கிறார் நான் தனியாக இல்லை எதற்கும் பயப்படவேண்டாம் என எப்படியோ ஒரு குழந்தைத்தனமான தைரியம் வந்துவிட்டிருந்தது..

பைபிளின் எழுத்துக்கள் பொடிப்பொடியாக இருந்ததால் சரியாக வாசிக்க முடியவில்லை. எனினும் அந்த புகைப்படம் எனக்கு மிக மிக நெருக்கமானதாக இருந்தது. பல வருடங்களுக்குப்  பின்பு11-ம் வகுப்பிற்கு பள்ளி மாறுகையில், அதை வீட்டிற்கு கொண்டு வந்து அப்பாவிற்குத் தெரியாமல் ஒளித்து வைத்தது மட்டும் நினைவில் இருக்கிறது.  பின்பு அது காணாமல் போனது.

அப்படி எனக்கும் கர்த்தருக்கும் ஒரு நல்ல தொடர்பு இருந்தது. பிற்பாடு கல்லூரியில் பைபிள் வாசித்திருக்கிறேன். ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று பக்கத்து வீட்டு ஸேவியரின் மகள் பாரதியுடன் அவர்களது கத்தோலிக்க திருச்சபைக்குச் சென்று முழங்காலிட்டு அப்பமும் திராட்சைரசமும் பல் படாமல் விழுங்கி இருக்கிறேன். பசித்தவனுக்கு ரொட்டி தருவதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடு என்று சொன்ன ரேஷனலிஸ்டாக தேவனை வெகுவாகப் பிடித்திருந்தது. ஒரு சில பைபிள் வசனங்களும் மனதில் நினைவிலிருந்தது, அவ்வளவுதான்.

இப்போது இந்த மெதடிஸ்ட் திருச்சபைக்கு வந்தது ஒரு அற்புதம்தான். பல நாட்களாக நானும் காட்சனும் பைபிள் தாவரங்களைக் குறித்து பேசியிருக்கிறோம். எனினும் அதில் ஈடுபட்டு வாசிக்க எனக்குப் பொழுதே இல்லாமலிருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தாவரங்களின் உலகளாவிய பரவலைக் குறித்து, அதன் வரலாறுகளை வாசித்துக்கொண்டிருக்கையில், காற்றில், நீரில், பறவைகளால், விலங்குகளின் உடலில் ஒட்டிக்கொண்டு இப்படிப் பரவியது போலவே மனிதர்களாலும் தாவரங்கள் பரவியிருந்ததை வாசித்தேன்.

அதிலும் intentional, accidental என்று இரண்டு வகை. Accidental வகையில்,  மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களின்  உடல்களில், செருப்புகளில் ஒட்டிக்கொண்டும், சர்வதேச விளையாட்டு வீரர்களின் பைகளிலும், செருப்புகளில் ஒட்டும் விதைகள் வழியாகவும் பல தாவரங்கள் பரவியிருக்கின்றன.

ஆனால் intentional வகையில் 1492-க்கு பிறகு கொலம்பஸ் பல நாடுகளுக்கும் பல கண்டங்களுக்குமிடையே தாவரங்களைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியதனால், 1492 என்னும் வருடம்  Columbian exchange என்னும் பரவலில் மிக முக்கியமானதாக இருந்தது. நான் எழுதும் கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட எந்தப் பதிப்பாளர்களும் முன்வருவதில்லை. எனினும் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறேன். 1492 என்னும் தலைப்பில் தாவரப் பரவலைக் குறித்து விரிவாக ஒரு நூல் எழுத, மீண்டும் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன்.

என் குருதி என திராட்சை ரசத்தை தேவனே கடைசி விருந்தில் சொல்லியதால் உலகெங்கிலும் தேவாலயங்கள் திராட்சை ரசம் மட்டும்தான் அளிக்க நினைத்தன ஆனால் எல்லா நாடுகளிலும் திராட்சைக்கொடி வளரவில்லை. எனவே கிறிஸ்துவ மிஷனரிகள் திராட்சைக்கொடியின் நறுக்கிய தண்டுகளை கப்பல் பயணங்களில் கொண்டு சென்று பல்வேறு நாடுகளிலும் திராட்சை வளர்ப்பைத் துவங்கி  அது ‘Mission Grapes’ என்று அழைக்கப்பட்டதை அறிந்து, அதன்பின்னேயே பல மாதங்கள் சென்று தரவுகள் சேகரித்தேன்.

திராட்சைக்கொடி வளர்க்க காலநிலை ஏதுவாக இல்லாத நாடுகளில், திராட்சை ரசம் அளிக்க முடியாதபோது என்ன செய்வது என்னும் பிரச்சனைக்கு அளிக்கப்பட்ட பலவிதமான பரிந்துரைகளில், கெட்டியான திராட்சை சிரப் கொண்டு வந்து அதை நீரில் கலந்து அளிக்கலாம் என்னும் யோசனை, மெதடிஸ்ட் கிறிஸ்துவ பிரிவை உருவாக்கியவரான ஜான் வெஸ்லேயும் சொல்லியதை வாசித்தேன்.

மீண்டும் காட்சன் அழைத்தபோது நான் மும்பை வர விருப்பதாகச் சொல்லி, அங்கே ஒரு ஞாயிறு உரையாற்றுவதாக முடிவானது. ஜான் வெஸ்லே இரண்டு தாவரவியல் நூல்கள் எழுதியிருந்தார். மேலும், பல பழங்குடியினர் தாவரங்களை எப்படி, எதற்குப் பயன்படுத்தினார்கள் என்பதை அவரது 2,50,000 மைல் தூர குதிரைப் பயணத்தில் கவனித்து எழுதியதையும் அறிந்தேன். காட்சன் சார்ந்திருந்ததும் மெதடிஸ்ட் தேவாலயம் என்பது எனக்கு பெரும் ஆச்சரியமளித்தது.

நான் வெஸ்லேவின் நூல்களைக் கொஞ்சமாகக் குறிப்பிட்டுவிட்டு, கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொள்வது மண்ணில் விதையை நடுவதுபோல் என்று துவங்கி, வேர்பிடித்து வளர்ந்து, மலர்ந்து, கனியளித்து அறுவடை செய்வது என்று என் உரையைத் தயாரித்தேன். பின்பு பைபிள் சொல்லும் 7 தாவரங்களை , Consider the lilies மற்றும் I am the vine, you are the branches, குருத்தோலை ஞாயிறுக்கு ஏன் பேரீச்சையின் குருத்தோலை மட்டும்,என்று தொடர்ந்து, கர்த்தர் எப்படி இந்த பூமியென்னும் தோட்டத்திற்குத் தோட்டக்காரராகவும், தாவரவியலாளராகவும் இருக்கிறார் என்பது போன்ற உரையைத் தயாரித்திருந்தேன்.  The duel role of christ as a gardener and botanist என்னும் அந்தத்தயாரிப்பைத்தான் கருணையின்றி சரண் முற்றிலும் மாற்றச் சொல்லிவிட்டான்.

சனியன்று நள்ளிரவு வரை அமர்ந்து  ஜான் வெஸ்லேயின் இறையியல் எப்படி தாவரங்களை அறிவதன் மூலம் படைத்தவனின் அற்புதங்களை அறியச் சொல்கிறது என்று புதிதாகத் தயாரித்தேன். உண்மையிலே முதல் உரை நான் தயாரித்தது, இரண்டாவது உரை நான் உணர்ந்து பேசியது. எனவே தேவாலயத்திற்குச் செல்கையில் மிகுந்த மனநிறைவுடன் சென்றேன்

மும்பைக்கியா!

மறுநாள் நான்காவது சனிக்கிழமை சரணுக்கு விடுமுறை, காலை 10 மணிக்கு மேல் எழுந்து வந்து நான் சமைத்திருந்த அடையை வெண்ணெய் வைத்துச் சாப்பிட்டான். மதியமும் உப்புப்பருப்பு, கோஸ் கறி, ரசம், புதினா துவையல், குழல் வடகம் என்று விரிவாகச் சாப்பிட்டு ஓய்வெடுத்தோம். மாலை ஒரு மாலுக்குப் போய் சும்மா சுற்றிப் பார்த்துவிட்டுச் செருப்பு, ஷூ வாங்கிவிட்டு ஹல்திராமில் சோலே பட்டுராவும் பனீர் தோசையும் சாப்பிட்டோம்.

வீடு வந்து இரவு மீண்டும் புறப்பட்டு மும்பை IKEA சென்றோம். போகும் போதே இரவு 9 மணி, 11 வரை இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் 10 மணிக்கெல்லாம் அடைத்துவிடுவோம் என ஒருத்தி ஸ்பீக்கரில் கொஞ்சிக் கெஞ்சிக்கொண்டிருந்தாள். சரணுக்கு வேண்டிய ஒரு சிலவற்றை வாங்கினோம். பாய் போலவே ஆனால் ஜமக்காளம் போலக் கெட்டியில்லாமல் மெஷினில் துவைக்கும் ஒரு தரை விரிப்பு வாங்கினோம். எனக்கென்னவோ பெங்களூரு ஐகியா அளவுக்கு மும்பை ஐகியா இல்லை எனத் தோன்றியது. அதைச் சொன்னால் சரண் சண்டைக்கு வருவான், எனவே சொல்லவில்லை.

மாலிலும் சரி ஐகியாவிலும் சரி பெண்கள் அத்தனை அழகிகளாகக் கண்ணில் படவே இல்லை. எல்லோரும் கூடுதல் வெளுப்பு, மேலும் வெளுப்பாக்க வெள்ளை மேக்கப் அதுவும் திகட்டத் திகட்டப் போட்டு அவர்களின் இளமையின் இயற்கையான அழகை மேக்கப்பால் முழுக்க மறைத்திருந்தார்கள். ரத்தச் சிவப்பில் லிப்ஸ்டிக் தவறாமல் எல்லோரும் போட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லோரையும் கூட்டிப்போய் ஒரு குழாயடியில் உட்கார வைத்து தேய்த்து கழுவிவிடலாம் போல ஆத்திரமாக் இருந்தது. எதற்காகஅழகை மறைக்கும் மேக்கப்? எனக்குப்புரியவேயில்லை. அழகை துலக்கிகாட்டும் மேக்கப்பை அளவாகப் போட்டால் என்னவாம்? ரூபம் செம்மை செய்னுதானே சொல்லி இருக்கு?

சாலையைக் கூட்டிக்கொண்டிருந்த பெண் ஒருவர் பாதியில் பெருக்குவதை நிறுத்திச் சுரிதார் பாக்கெட்டில் இருந்து லிப்ஸ்டிக் எடுத்துத் தடவிக்கொண்டதைப் பார்த்தேன். பெண்கள் எல்லோரும் உடலைக் காட்டும் நவீன உடைதான், ஆனாலும் உடல் வாகுக்கேற்ப உடையை பெரும்பாலும் யாரும் போடவில்லை. ஒரே ஒருத்தி, நல்ல வறுத்த கோதுமை நிறத்தில், உயரமாக, வட்ட முகத்தில் அளவாக மேக்கப் போட்டுக்கொண்டு மிகப்பொருத்தமான நவநாகரீக உடையில் காதலனுடன் சிரித்துப் பேசியபடி கடந்து சென்றாள். அவள் கொண்டையில் செருகி இருந்த பன்பின் (Bun pin) வசீகரமாயிருந்தது.

மால் நுழைவு வாயிலில் நடக்க முடியாதவர்கள் உபயோகித்துக்கொள்ள நிறையச் சக்கர நாற்காலிகளும் குழந்தைகளை அமர வைத்துத் தள்ளிச் செல்லும் பிராம்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நான் இதை இங்கெல்லாம் பார்த்ததாகவே நினைவில்லை. நல்ல யோசனை, நிச்சயம் உபயோகமாக இருக்கும், பலர் பயன்படுத்திக்கொண்டார்கள். மற்றபடி வடக்கிலும் தெற்கிலும் எல்லா மால்களும் ஒரே ஜாடையில் தான் இருக்கின்றன.

டாக்ஸி ஓட்டுநர்கள் கடிந்துகொள்வதில்லை, எங்குமே அமைதியாகக் காத்திருக்கிறார்கள், புக் செய்தவர்கள் வரும் வரை அது வீட்டு வாசலானாலும் மால், கடை வீதியானாலும். ஆட்டோக்காரர்களுமே அப்படித்தான்; எரிச்சலோ சிடுசிடுப்போ இல்லவே இல்லை. முக்கியமாகக் காரில், ஆட்டோவில் பாட்டுப் போடுவதில்லை, அமைதியாக ஓட்டுகிறார்கள். நானும் ஆம்புலன்ஸ் ஒலியை அங்கு இருந்தபோது கேட்கவே இல்லை.

டேராடூனில் ஒருமுறை அதிகாலைக் குளிரில் எழுந்து முசோரிக்குச் சென்றோம். டாக்ஸி டிரைவர் குடிபோதை விலகாமல் செக்கச்சிவந்த கண்களும் கலைந்த தலையுமாக மிக மிகச் சத்தமாக “நீ இத்தனை சுந்தரமாக இருந்தால் நான் என்ன செய்வேன், என்ன செய்வேன்” (மே க்யா கரூ, க்யா கரூ) என்று ஆணும் பெண்ணும் மாற்றி மாற்றிப் பாடும் பாடலைத் தூக்கத்தை விரட்டவோ என்னவோ கேட்டுக்கொண்டும், கூடவே பாடிக்கொண்டும், தலையை அவ்வப்போது பலமாக ஆட்டிக்கொண்டும் கலவரமாக மலைப்பாதையில் வண்டி ஓட்டினார். அன்று நான் வேண்டாத தெய்வமில்லை.

மும்பையில் மிக அமைதியாகப் பொறுமையாக ஓட்டுகிறார்கள். சாலையெங்கும் காவிச்சாமியர்களின் போட்டோ இருந்தது எல்லா போஸ்டர்களிலும் பிழிந்து பிழிந்து கொடியில் துணி காயப்போட்டதைப்போல எதையோ எழுதி இருந்தார்கள்.

எனக்கு மும்பை பிடிக்கவில்லை. முதல் காரணம் அத்தனை தூசும் மாசும்; அடுக்ககங்களும் பிடிக்கவில்லை. அடுத்த முக்கிய காரணம் மகனும் அவனுடன் இருப்பவர்களும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது அறவே புரியாமல் இருப்பதை மிக மிகத் தாழ்வாக உணர்ந்தேன். அனுமானிக்கவும் முடியவில்லை. பெங்களூருவில் கன்னடம் கொஞ்சம் சமாளித்துக்கொண்டேன், ‘எஷ்டு’, ‘சாக்கு’, ‘பேக்கு’! பஞ்சதந்திரம் படத்தில் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தார்கள். ஆனால் ஹிந்தி சுத்தம். பாலிவுட் சினிமாக்களும் பாடல்களும் புரிகிறதே என்பதும் விந்தைதான்.

ஐகியாவில் சரணுக்கு ஒரு காற்றைத் தூய்மையாக்கும் கருவி வாங்கினோம், 6 ஆயிரம் ரூபாய். எல்லோரும் அவரவர் வீடுகளில் இதை பெரும்பாலும் வைத்திருக்கிறார்கள். என்ன கொடுமை இது? அறிவியல் புனைவுக் கதைகளில் எதிர்காலத்தில் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டிக்கொள்வது என்று படிப்போமே, அதேதான் இதுவும். சனிக்கிழமை அந்தக்கருவியை மின்சாரத்தில் இணைத்து ஓடவிட்டுவிட்டுத் தூங்கினோம். அன்று சரண் தொண்டை கறகறப்பு இல்லாமல் உறங்கினான். இன்னொன்று வாங்கிக்கூடத்திலும் வைத்துக்கொள்ளச் சொன்னேன்.

மறுநாள் நகரின் காற்று மாசுக்கான காரணங்களை சரண் சொல்லிக்கொண்டிருந்தான். நகரெங்கும் ராட்ஷச கட்டுமானங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அதிலும் லோதா, கோத்ரெஜ், ஓபராய் போன்ற பெரு நிறுவனங்கள் அசுர வேகத்தில் ஆயிரக்கணக்கில் அடுக்ககங்களைக் கட்டுகின்றன.ஆனால் தூசி வெளியே பரவாமல் இருக்கச் சுற்றிலும் போர்த்தப்பட வேண்டிய பச்சைத் துணியைச் சும்மா கண் துடைப்புக்காக ஆளுயரத்திற்குக் கட்டிவிட்டு 25, 30 மாடிகளைக் கட்டுகிறார்கள். நகரமே புழுதிக்காடாக இருக்கிறது. கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்துவிட்டுத் கட்டிடத்தைக் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வந்து 2 மாதங்கள் கூட ஆகவில்லை சரண் இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறான் என்பது ஆச்சர்யமளித்தது.

கட்டி முடிக்கப்படும் அடுக்ககங்களின் சிறு மாதிரி அடுக்ககங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. அதைப் போய்ப் பார்த்துப் பிடித்திருந்தால் வீட்டை புக் செய்து அட்வான்ஸ் கொடுக்கிறார்கள்.

ஞாயிறன்று காலை வெளியே மாசு குறைவாக, அந்த அலையாத்திக் காட்டின் மறு எல்லையில் மாபெரும் கட்டிடங்களோடு ஒரு நகரம் தெளிவாகத் தெரிந்தது. ’’..அதுதான் மும்பை, நாம இருக்கிறது நவி மும்பை..’’ என்றான் சரண். எப்படி அன்று மட்டும் தூசி குறைவாக இருக்கிறது என்று தேடிப் பார்த்தான். அன்று யாரோ ஒரு வெளிநாட்டு அதிபர் மும்பை வருகிறார், எனவே 1000 மெகா கட்டுமானங்களை அரசு அன்று மட்டும் நிறுத்தி இருந்தது. அன்று காற்று மாசு 85 இருந்தது. என்ன அநியாயம்! ஒரே ஒரு நாள் வரும் வெளிநாட்டவர்களுக்காக நிறுத்தி வைக்கப்படும் பணிகள் முறையாக நடந்தால் அங்கே வாழ்பவர்களுக்கு எத்தனை நன்றாக இருக்கும்? அறத்தின் பேரில் இருப்பவர்கள் பெரிய இடங்களில் இல்லவே இல்லை என்பதுதான் நம் அனைவரின் பிரச்சினையும்.

ஞாயிறன்று மும்பை மெதடிஸ்ட் சர்ச்சில் விவிலியம் காட்டும் தாவரவியலை குறித்து உரையாற்ற விருந்தேன்,. நான் மகாப்பெருமையாக அந்த உரைக்கு ஸ்லைட் போட்டுக்கொண்டு வந்து சரணிடம் காண்பித்தேன். ’’…எல்லாத்தையும் தூக்கிட்டு புதுசா போடனும் நீ எதுக்கு கிறிஸ்துவத்தைபத்தி பேசறே நீ தாவரவியலை மட்டும் தான் பேசனும். கிறைஸ்ட் என்று வரும் சொல்லைக்கூட நீ பயன்படுத்ததே கத்தி மேல் நடக்கறமாதிரி இது அறியாமையில் எதுவும் பேசி பிரச்சனை ஆயிரும்..’’ என்று சரண் கடுமையாக சனிக்கிழமை சொன்னான். பதட்டமாகி இரவெல்லாம் விழித்து மீண்டும் புதிதாக எல்லாம் தயாரித்தேன். ஞாயிறு காலை வெண் பொங்கல் சாப்பிட்டு விட்டு மும்பைக்கு இரண்டு மணி நேரப்பயணத்துக்கு டாக்ஸி பிடித்துப் புறப்பட்டோம். வழியெங்கும் எனக்கும் கிறிஸ்துவுக்குமான அணுக்கத்தை, என் பால்யத்தையெல்லாம் சரணிடம் சொல்லிக்கொண்டு வந்தேன்.

தொடரும்….

மும்பை- வயிறும் வாழ்வும்.

சரண் மார்புக்கு குறுக்கே ஒரு பை போட்டுக்கொண்டிருந்தது வித்தியாசமாக இருந்தது. “என்னடா இது பையோட?” என்றேன். “…. லேப்டாப் பேக் மீ..” என்றான். “அதை எதுக்கு ஏர்போர்ட் வரப்போ கொண்டு வந்தே? ஆபீஸிலேயே விட்டுட்டு வரவேண்டியதுதானே…?” “….அம்மா நீ வேலை செய்யற அரசுக்கல்லூரிக்கும் கார்ப்பரேட் செக்டாருக்கும் ஸ்நானப்ராப்தி கூட இல்லை, எனக்கு எப்பவுமே வேலை இருக்கும், உனக்கு சொன்னா புரியாது, வா வேகமா, கேப் காத்திருக்கு..” என்றான்.

“….வைஸ் பிரசிடெண்ட் மாதிரி இல்லாம தோளில் இந்த பேக்கோட உன்னை பார்த்தா சேல்ஸ் ரெப் மாதிரி இருக்குடா..”

“….என்னது சேல்ஸ் ரெப் பேக்கா? மீ இது மொகோபரா மீ..” என்றான். அந்த பிராண்ட் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதைக் காட்டிக்கொள்ளாமல் “..சரி வா போலாம்..” என்று ஏர்போர்ட் சாலையை குறுக்கில் அவன் கை பிடித்துக் கடந்தேன்.

பிரம்மாண்டமான விமான நிலையம் கடந்த அக்டோபரில்தான் மோடி ஜி திறந்து வைத்திருக்கிறார். இப்போதும் சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. லண்டனைச் சேர்ந்த Zaha Hadid Architects-ன் தாமரை வடிவ கட்டிடம் என்பதால் எனக்கு கூடுதலாகவே அந்த இடத்தைப் பிடித்திருந்தது. விமான நிலையத்துக்கான மையச்சாலையில் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு நிரந்தரமாகவே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இக்ஸோராக்களும் , டிரஸீனாக்களும், புத்தம் புதிதாய் வைக்கப்பட்டிருந்தன.

விமான நிலையத்திலிருந்தே அதிகபட்சமாக 800 ரூபாய்களுக்குள் எலிஃபண்டா குகை உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல டாக்ஸி இயங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக அருகிலிருக்கும் கடல் பகுதிக்கு அங்கிருந்தே நேராகச் செல்ல வாட்டர் டாக்ஸி எனப்படும் மின்சார வாகனங்களும் இயங்குகின்றன. நவி மும்பை செல்லவிருந்ததால் முன்கூட்டியே இவற்றைத் தெரிந்துகொண்டு சென்றேன்.

சரளமாக சரண் டாக்ஸி ஓட்டுநரிடமும், நொச்சு நொச்சென்று வந்துகொண்டே இருந்த அலைபேசி அழைப்புகளுக்கும் ஹிந்தியில் பேசியது ஆச்சரியமளித்தது. “ஹிந்தி நஹி மாலும்” என்பது மட்டும்தான் எனக்கு ஹிந்தியில் தெரிந்த ஒரே வாக்கியம்.

வழியில் மதுரை பவனில் சாப்பிட்டுவிட்டுப் போகலாமென்றான். நான் கொலைப்பசியில் இருந்தேன். அங்கே போனோம். ஒரு மாபெரும் அடுக்ககம், அதில் இயங்கும் பல நூறு அலுவலகங்களில் மதுரை பவனும் ஒன்று. பல அலுவலகங்களுக்கும் சேர்த்து பொதுவாக ரொம்ப தூரத்தில் இருக்கும் ஒரு இடத்தில் கைகழுவிவிட்டு வரவேண்டும். சூட்கேஸை வெளியே வைத்துவிட்டு உள்ளே போனோம். 90-களின் தமிழ்சினிமாப் பாடல்கள் மெல்லிசாய் ஒலித்தது. தலைவாழை இலை போட்டு வரிசையாகத் தொடுகறிகள் பரிமாறினார்கள்.தமிழில் பேசினார்கள்

வடை,சுண்டல், அவியல், பொரியல், வெண்டைக்காய் தயிர்பச்சடி, கூட்டு, துவரன், அப்பளம் என்று தொடர்ந்து 15-க்கும் மேலான கறிகளை வைத்து இலையே நிரம்பிவிட்டது. மேலும் கொண்டு வந்ததை வேண்டாமென்று மறுத்தேன். அழகிய செம்புக் கிண்ணங்களில் குழம்பு, ரசமெல்லாம். பரவாயில்லாத சுவை. “ஒரு சாப்பாடு எத்தனை?” என்று கேட்டேன் சரணிடம். “அது எதுக்கு உனக்கு?” என்று அந்தக் கேள்வியை அப்படியே கடந்து சென்றான். விலையைச் சொன்னால் வேடசெந்தூர்காரிக்குச் சாப்பாடு நெஞ்சிலேயே நிற்கும் என்று தெரிந்திருக்கிறான்.

மீண்டும் டாக்ஸி பிடித்து வீடு வந்தோம். வழியிலும் சரண் அலுவலக வேலையை லேப்டாப்பைத் திறந்து மடியில் வைத்துப் பார்த்துக்கொண்டே வந்தான். “என்னடா இப்படி பிஸியா இருக்கே?” என்றேன். “வெளியில் பாத்தியா எத்தனை செடி கொடி மரம் எல்லாம்… அதைப் பார்த்துட்டே வருவியாம்… எனக்கு வேலை இருக்கு ப்ளீஸ் ரொம்ப கேள்வி கேட்காதே” என்றான்.

சரிதான் என்று வெளியே பார்த்துக்கொண்டு வந்தேன். எல்லாப் பக்கமும் அழகிய பசும் அடுக்குகளுடன் டெர்மினலியா மாண்டலி (Terminalia mantaly) வளர்க்கிறார்கள். இந்தியாவில் அதிகம் வளர்க்கப்படும் அலங்கார மரம் என்று கணக்கெடுத்தால் இதுதான் இருக்குமாயிருக்கும். காம்ப்ரிடேசியின் (Combretaceae) உறுப்பினர்கள் ரத்தம் போல் சிவந்த இலைகளுடன் நின்றிருந்தார்கள். பெருங்கொன்றை மலரத்தொடங்கி இருந்தது. ஒரு குறுங்காட்டைக் கடந்து சென்றோம்.

சரண் இருக்கும் இடத்திற்கு வந்தோம். உயர்ந்த அடுக்ககங்கள் எனக்களிக்கும் அதே பட்டாம்பூச்சி சிறகடிப்பு இப்போதும் நெஞ்சுக்குள் இருந்தது. வாசலில் அமர்ந்திருந்த 3 காவலர்கள் சரணைப் பார்த்துப் புன்னகைத்தது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. லிஃப்டில் 16 அழுத்தி மேலே போனோம். லிஃப்ட் சுவர் முழுக்க பிளம்பர், எலெக்ட்ரிஷியன், வீட்டு வேலையாட்களின் எண்கள் எழுதப்பட்ட அட்டைகள் செருகப்பட்டிருந்தது.

சரண் இருக்கும் அடுக்ககத்தின் பெயர் ‘ராதே மோகன்’. எனக்கு இந்தப் பெயர் பிடித்திருந்தது. வீட்டு நுழைவாயிலில் கிரகப்பிரவேச சாமந்தி மலர்மாலை துவண்டு கிடந்தது. மலர்களுடன் இருந்த இலை என்னவென்று பார்த்தேன்; மாவிலையை இடையிடையே மடித்து வைத்துக் கட்டியிருந்தார்கள். அலங்காரமாக கண்ணாடி பதித்த ஒரு வெளிக்கதவு, அதைத் திறந்தால் 4 ஜோடி செருப்பு வைக்கும் அளவுக்கான ஒரு சதுரம், பின்னால் வீட்டுக் கதவு.

பெங்களூரு தருண் வீட்டைப் போலல்லாமல் இது கொஞ்சம் வசதியான, விசாலமான அறைகளுடன் இருந்தது. நான் நினைத்தது போலல்லாமல் வீடு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது.ஹால், சமையலறை, பெட்ரூம் மூன்றிலும் கண்ணாடி பதித்த பால்கனி இருந்தது. பாத்ரூம் கதவை எனக்குத் திறக்க வரவில்லை. சரண் திறந்து காட்டினான். தான் இரவு 7 மணிக்குள் வந்துவிடுவதாகவும், அதுவரைக்கும் தயவுசெய்து வேலை செய்யாமல் ஏஸி போட்டுக்கொண்டு படுத்துத் தூங்குமாறும் சொல்லிவிட்டு போன் பேசிக்கொண்டே புறப்பட்டான்.

அப்படியெல்லாம் தூங்க முடியுமா என்ன? கொண்டு வந்திருந்த சூட்கேஸைத் திறந்து பொருட்களை எடுத்து அடுக்கி, சரண் துவைக்காமல் வைத்திருந்த துணிகளை மெஷினில் போட்டு எடுத்துப் பால்கனியைத் திறந்து காயப்போட்டேன். வெளியே ஒரு பெரும் அலையாத்திக்காடு விரிந்து கிடந்தது. அப்படியே திகைத்துப் போனேன். மாபெரும் காடு அது. காட்டிற்கு மறு எல்லையில் நீர்ப்பரப்பும் அதன்பிறகு ஒரே புகைமூட்டமாகவும் இருந்தது.

காட்டின் துவக்கத்தில் ஒரு பெரிய கிரிக்கெட் மைதானம், அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய திரையிலும் விளையாட்டு ஒளிபரப்பானது. சிக்ஸர் அடிக்கப்படுகையிலெல்லாம் களேபரமாக ஒரு பாட்டுப் போட்டார்கள். சமீபத்தில் லப்பர் பந்தில் பார்த்தது போலவே, ஹாலைத் தாண்டி படுக்கையறை வரை பாட்டுச் சத்தமும் உரத்த உற்சாக வர்ணனையும் நிறைந்து வழிந்தது.

குளித்து உடை மாற்றினேன். சரண் வந்துவிட்டான். “என்னடா சமைக்கட்டும்?” என்றேன். “சமைக்கறியா எதுக்கு? வா வா வடா பாவ், பானிபூரியெல்லாம் சாப்பிடலாம்” என்றான். இருவரும் வெயில் தணிந்ததும் நடந்து சென்றோம். நகரமே புழுதிக்காடாக இருந்தது. சரண் அடிக்கடி தொண்டையைக் கமறிக் கொண்டிருந்தான். காற்று மாசு எவ்வளவு என்று அடுக்ககங்களின் முன்பும் சாலைகளின் சந்திப்பிலும் டிஜிட்டல் பலகையில் காட்டப்படுகிறது. அன்று 214 இருந்தது. முந்த்ன நாள் 300 இருந்ததாம்.

கவலையாக இருந்தது.தூய காற்றும், பசுமையும், லைக்கன்களும் இருக்குமிடத்தில் நானும், 26 வயதே ஆன சரண் இத்தனை மாசு நிறைந்த இடத்தில் வசிப்பதும் குற்றவுணர்வை அளித்தது.

சரண் களைத்திருந்தான். நான் இல்லாமலிருந்தால் அவன் ஓய்வெடுத்திருப்பான். ஆனால் அவன் உற்சாகமாக பேசிக்கொண்டே வந்தான். ’’மீ இங்கே கடும் வறுமையிலும் அதீத மத நம்பிக்கையிலும் இருக்கறவங்களைப் பார்க்கிறேன். கடவுள் மீதும் மனிதம், அறம் மீதெல்லாம் நம்பிக்கை கொண்ட ஒருவனை இங்கே 3 மாசம் இருக்கச்சொன்னா அவன் நம்பிக்கையெல்லாம் அழிஞ்சு போயிரும்..’’ என்றான். சரண் சொன்னது கவலையளித்தது, அவன் இதையெல்லாம் கவனிப்பது மேலும் துயரளித்தது. பெருமூச்சுவிட்டுக்கொண்டேன்.

ஒரு பிரபல தெருமுனைக்கடையில் வடா பாவ் ஆர்டர் கொடுத்தான். பிளந்த பன்னில் உருளைக்கிழங்கு போண்டாவைத் திணித்து, கூடவே எண்ணெயில் பொரித்து உப்பில் பிரட்டிய பச்சை மிளகாய்களையும் தட்டில் வைத்துத் தருகிறார்கள். நான் உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை, எனவே போண்டாவை டிசெக்ட் பண்ணி கிழங்குத் திணிப்பை அகற்றி மிளகாயுடன் பன்னைச் சாப்பிட்டேன். ” இப்படிச் சாப்பிட்டா எப்படி உனக்கு பிடிக்கும்?” என்றான். “வடா பாவை எப்படிச் சாப்பிட்டாலும் எனக்குப் பிடிக்காதுடா” என்றேன்.

அடுத்து பானிபூரி. வரிசையாக நின்று சின்ன தட்டில் ஒன்றொன்றாக வாங்கி வாயில் போட்டுச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். அதிலும் உருளைக்கிழங்கு திணித்து வண்ண நீரூற்றிக் கொடுத்தார்கள். ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு வேண்டாமென்றேன். சரண் முகம் பாவமாகியது. “கடைசி பானிபூரி ஸ்பெஷலா நிறைய உள்ளே வச்சுக்கொடுப்பாங்க அதைச் சாப்பிடுறியா?” என்றான். மறுத்தேன். “தஹிபூரியாவது சாப்பிடு” என்று வாங்கிக் கொடுத்தான். அதிலும் என்னென்னவோ கலந்து காரசாரமாகக் கொடுத்தார்கள். எனக்குப் பிடிக்கவில்லை. “வீட்டுக்குப் போலாம்” என்றேன்.

நடந்தோம். “என்னடா இங்கே பொண்ணுங்க எல்லாம் அவ்வளவு அழகாவே இல்லை, பெங்களூருல எத்தனை பேர் இருக்காங்க?” என்றேன். “காலையில நேரா ஃப்ளைட் இருக்கு, வேணும்னா சொல்லு சின்னவன்ட்டெ அனுப்புறேன், இங்க இவ்வளவு அழகாத்தான் இருப்பாங்க என்ன செய்யறது?” என்றான்.

“சரி நாளைக்கு எங்காவது மால் போனா அங்கே பார்க்கலாம்” என்றேன். இன்னும் 3 நாள் என்னை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்னும் பயம் சரண் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

தொடரும்….

மும்பை!

பிப்ரவரியில் ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவு காரணமாக, வேறு வழியின்றி மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் உருவானது. சிகிச்சைக்கு எடுத்துக்கொண்ட மருந்துகள் நல்ல உறக்கத்தைத் தந்ததால், வீட்டில் ஓய்வெடுத்தேன். விடுமுறையின் கடைசி நான்கு நாட்களை மும்பையில் உள்ள சரண் வீட்டுக்கு போகலாம் என நினைத்தேன். சரண் ஜனவரியில் மும்பை சரஸ்வத் இன்ஃபோ டெக்கில் பணியில் இணைந்தான் பிப்ரவரி முதல் வாரத்தில்தான் புதிய வீட்டிற்கு குடிபோயிருந்தான்.

பனைகாட்சனும் நீண்ட நாட்களாக அவர்களது மும்பை மெதடிஸ்ட் சர்ச்சில் ‘விவிலியத் தாவரங்கள்’ குறித்து உரையாற்றச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார். எனவே ஒரு வெள்ளிக்கிழமை காலை விமானத்தில் பயணம் உறுதியானது. எனக்கு எப்போதும் ரயில் பயணமும், விமானப் பயணமும் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அதிலும் விமானப் பயணம் கடும் ஒவ்வாமை அளிப்பதுடன், அது இயற்கைக்கு மாறானது என்ற எண்ணம் இருப்பதால் எனக்கு எப்போதும் அச்சமூட்டுவதாகவே இருக்கும். தருண் டேராடூனில் படித்தபோது அவ்வப்போது சென்றதோடு சரி, கடந்த சில வருடங்களாக விமானப் பயணமே இல்லை. இப்போது வேறு வழியின்றி இண்டிகோ விமானத்தில் பயணம் . சரண் டிக்கட் போட்டான்.

சரணுக்குச் சில பொருட்கள் கொண்டு செல்ல வேண்டியிருந்தது, 15 கிலோதான் எடுத்துச் செல்ல முடியும் என்பதால், சாம்பவியும் நானுமாகச் சேர்ந்து எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து பேக் செய்தோம்.கைப்பை 7 கிலோ இருக்க வேண்டும். அதன் அளவுகளைச் சாம்பவி டேப் வைத்துத் துல்லியமாக அளந்து, “115 x 32 x 12 இந்த அளவில்தான் பை இருக்க வேண்டும் அத்தை, இல்லாவிட்டால் மேலே வைத்து மூட முடியாது என்பார்கள்; நீங்க தனியாகப் போறீங்க, தேவையில்லாமல் டென்ஷன் ஆவீங்க” என்று அக்கறையுடன் அனைத்தையும் செய்து கொடுத்தாள்.

சரியான நேரத்திற்கு விமான நிலையம் சென்றேன். டிஜியாத்ராவில் சாம்பவி முன்பே விபரங்களை ஏற்றியிருந்ததால், சிரமமில்லாமல் உள்ளே சென்று நுழைவு வாயிலின் அறிவிப்புக்காகக் காத்திருந்தேன். எனக்கு முன் ஒரு வட இந்தியக் குடும்பம் அமர்ந்திருந்தது. வயதான பெற்றோர், மகன், மருமகள் மற்றும் இரட்டை ஆண் குழந்தைகள். உடன் அவர்களின் பெண் இருந்தார்,

அந்த இரட்டையர்களில் ஒருவன், அவன் அம்மா அலுமினியம் ஃபாயிலில் சுற்றிக் கொண்டு வந்திருந்த எதையோ எடுத்துக் கொடுத்ததும் உடனடியாகக் கண்ணீர் மல்கினான். மற்றொருவன் சமத்தாக வாங்கிக் கொண்டான். அழுதவன் பிறகு தன் குட்டிப் பையிலிருந்து குர்குரேவை எடுத்துப் பொறுமையாக வயிறு நிறையச் சாப்பிட்டான். ஒரு பாப்கார்ன் வாங்கிக்கொண்டு அவர்கள் இருவரும் விளையாடுவதைப் பார்த்தபடி நேரத்தைக் கழித்தேன்.

பின்னர் 9-ம் எண் நுழைவு வாயில் வழியாக, சிரிப்போ முகமனோ காட்டாத பணிப்பெண்களைக் கடந்து என் இருக்கைக்குப்போனேன் ஜன்னலோரம் ஒரு மிலிட்டரிக்காரர் அமர்ந்திருந்தார். அவர் காலடியில் துணிக்கடைகளில் கொடுக்கும் கட்டைப்பையைத் திணறத் திணறத் திணித்து வைத்திருந்தார். எனக்கும் அவருக்குமிடையில் இருக்கை காலியாக இருந்தது. மற்றவர்களும் நல்ல பெரிய பெரிய சூட்கேஸ்களை வைத்திருந்ததைப் பார்த்தபோது, “சாம்பவி, பார்த்தியா அநியாயத்தை?” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்.

விமானம் டேக் ஆஃப் ஆகும்போது எனக்கு எப்போதும் வயிற்றைக் கலக்கும். அச்சத்தில் கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டு கண்ணை மூடிக்கொள்வேன். ஆனால், இந்த முறை அருகில் ஆஜானுபாகனாக, கட்டுமஸ்தாக, தாட்டியாக, கம்பீரமாக சீருடையில் பெரிய மீசையுடன் கூடிய ஒரு ராணுவ வீரர் அமர்ந்திருந்தது எனக்குக் கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. விமானி மற்றும் துணை விமானி இருவருமே பெண்கள். அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது கவனிக்கத் தவறியதால், அவர்களுக்கு ‘லில்லி’ மற்றும் ‘ரோஸ்’ என்று நானே பெயர் வைத்துக் கொண்டேன்.

ஓடுதளத்தில் விமானம் தறிகெட்டு ஓடியபோது, மனதில் கவசம் சொல்லியபடியே ஒரு மாரல் சப்போர்டுக்காக திரும்பி அந்த ராணுவ வீரரைப் பார்த்தேன். அவர் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, முகம் அஷ்டகோணலாக மாறி, கையில் ஒரு ருத்ராட்ச மாலையை உருட்டியபடி ஏதோ ஜெபித்துக் கொண்டிருந்தார்! ’’…ஒன்னுமில்ல சார் பயப்படாதீங்க..’’ என்று மானசீகமாக அவருக்கு தைரியம் சொன்னேன்.

லில்லி விமானத்தை வெண்ணெய்க்கட்டியில் கத்தி இறங்குவது போல அழகாக நவி மும்பையில் தரையிறக்கினாள். பெண்களுக்கு பைக் காரெல்லாம் தான் சரியாக ஓட்டத்தெரிவதில்லை.

வெளியே காத்திருந்த சரண் ஆச்சரியத்துடன், “என்னம்மா, வீடியோ கால் கூட வரலை, நீயே தைரியமா வந்துட்டயே!” என்றான். நான் புன்னகையுடன், “ஒரு மிலிட்டரிக்காரர் ஹெல்ப் பண்ணினாருடா” என்றேன்.

தொடரும்….

    Newer posts »

    © 2026 அதழ்

    Theme by Anders NorenUp ↑