லோகமாதேவியின் பதிவுகள்

Category: திரைப்படம் (Page 6 of 6)

96

 

 

கொஞ்சநாளாகவே கல்லூரியிலும் விபு குழுமத்திலும் 96 பாட்டே பாடிக்கொண்டிருந்தார்கள்.

பலர் திரையரங்கைவிட்டு கண்ணீர் மல்கியபடியே வெளிவந்தார்களென்றும் இதைப்போல முன்காதலைச்சொல்லும் திரைப்படத்தை பார்த்ததில்லை என்றுமே பரவலாக பேச்சிருந்தது. நான் இந்தத்திரைப்படத்தைப் பார்க்கனுமென்று நினைக்கவேயில்லை. எனக்கு எப்போதுமே தமிழ்த்திரைப்படங்களின் மீது அத்தனை அபிமானமிருந்ததில்லை.

பார்வையாளர்களை அடிமுட்டாள்களென்று நினைப்பவையும், நகைச்சுவை என்னும்பெயரில் மூன்றாந்தர ஆபாசங்களை பேசவைப்பதையும், கட்டிக்கொடுத்தால் எட்டுப்பிள்ளை பெற்றுத்தருபவள் போலிருப்பவளை (நன்றி ஜெமொ-சுட்டிப்பெண்) 2ஆம் வகுப்பு படிக்கும் குழந்தையின் உடையில் காண்பித்து அதை கவர்ச்சியென்று சொல்லி சித்ரவதை செய்வதுவும்,  தமிழ்நாட்டில் இளைஞர்களே இல்லாத பஞ்சம் நிலவுவதுபோல 60 வயது கதாநாயகனை 14 வயதுப்பெண்ணின் காதலராக மனசாட்சியே இல்லாமல்  ஜோடி சேர்ப்பதும், திரைக்கதையைப்பற்றியும் அதிலிருக்கும் ஓட்டைகளைப்பற்றியெல்லாம் பெரிதாக  அலட்டிக்கொள்ளாமலும் இருப்பதால் அவற்றை பெரும்பாலும் தவிர்ப்பேன். ஒருசில நல்லுதாரணப்படங்களை அவ்வப்போது பார்ப்பதுவும் உண்டு

சமிபத்தில் வந்த கோகோ ஒரு உதாரணம்

அதிகம்கருப்பு வெள்ளைத்தமிழ்ப்படங்கள், மலையாளம் கொரியன் மற்றும் ஆங்கிலப்படங்களையே விரும்பிப்பார்ப்பேன்

எனவே 96 பார்ப்பது குறித்து  எனக்கு எந்த சிந்தனையும் இல்லாமலிருக்கையில் ஆயுதபூஜை விடுமுறையில் வீட்டுக்குவந்த சரண் 96 பார்க்கலாமென்றான். அவன் நண்பர்கள் இதை மிகவும் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கெளென்பதால் அவன் பார்க்க விரும்புகிறானென்பதால் இருவருமாக பார்த்தோம்

உண்மையில் இந்த விமர்சனம் எழுத எனக்கு தயக்கமும் அச்சமுமாகவே இருக்கின்றது. அனேகமாக பலநாடுகளின் வசிக்கும் ஆறிவுஜீவி விபு குழும நண்பர்கள் ஒட்டுமொத்தமாக 96க்கு பாராட்டுப்பத்திரம் வாசித்துவிட்டிருக்கும் இச்சமயத்தில் இதுகுறித்து நான் என்நேர்மையான  எண்ணங்களைச் சொல்ல உண்மையிலேயே தயங்குகிறேன்

நேற்று நண்பர் செளந்தர் காற்றின் நிழலில் 96 திரைப்படத்தைப்பற்றி எழுதியிருந்தார் முதலில் திகைத்தேன் இவருமா? என்று ஆனால் அவர் திரைப்படத்தை பற்றி ஓரிரு வரிகளும் பார்வையாளர்களைப்பற்றி பலவரிகளுமாய் சொல்லி மய்யமாய் எழுதியிருந்தார். நிம்மதியாயிருந்தது.

காதலையும் முன்காதலையும் சொல்லிச்சொல்லி இன்னும் அலுக்கவேயில்லை தமிழ்கூறும் நல்லுலகிற்கு. எத்தனையோ கதைக்களங்களை பலமொழிகளில் உலகத்திரைப்படங்களில் எடுத்தாளத்தொடங்கி பல வருடங்கள் ஆனபோதிலும் நாம் இன்னும் காதலைக் கைவிடவேயில்லை

இதிலும் முன்காதலும், பதின்பருவத்துக்காதலுமே மையமுடிச்சு ஆனால் புதிதாகவோ புனிதமாகவோ ஏதுமில்லை. அழகியில் சொல்லப்பட்டதுதான் ஆனால் அழுத்தமின்றி  சொல்லப்பட்டிருகின்றது.

திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு வருவது சகஜமே. ஏனெனில் ஒரு கதைக்கரு திரையில் வருவதற்குள் பலரின் தாக்கம் அதில் சேர்ந்திருக்கும்  அதைத்தவிர்க்கவே முடியாது .ஆனால் முழுக்கதையுமே   தொங்குபாலத்தில் தொங்கிக்கொண்டு செல்வது எரிச்சலாக இருந்தது .

ராம் ஜானகி பள்ளிப்பருவத்தில் காதல், எப்படியோ பிரிவு பின் பல வருடங்கள் கழித்து முன்னாள்  மாணவர்கள் சந்திப்பில் மீண்டும் சந்திக்கிறார்கள் இதை எலாஸ்டிக் போல இழுத்துஇழுத்து 2 மணிநேரத்திற்கும் மேல் கொண்டுபோயிருக்கிறார்கள்.

திரைப்பட விவாதத்திலேயே ஒன்றை முடிவு செய்துவிட்டார்கள் போல, இதற்கு முன்பு வந்த எந்தகாதல்கதையின் சாயலும் இருக்கக்கூடாதென்று எனவே வழமைக்கு மாற்றாக இதில் ஆண் அச்சம் மடம் நாணம் பயிர்ப்புடனும் பெண் கொஞ்சம் துடுக்குடனும் இருக்கிறாள்

இன்னொன்றும் முடிவுசெய்திருக்கிறர்கள், அது இந்த ராம் ஜானகி இருவர் மீதும் ஒரு கெட்டியான புனிதப்போர்வை போர்த்திவிடுவது அதை ஜானகி விமானத்திற்கு செல்லும் போதுதான் அகற்றுவது என.

இருவரையும் physical intimacy  குறித்து எள்ளளவும் நினைக்காத புனிதக்காதலர்களாகவே காட்டியிருக்கிறார்கள். நிச்சயம் அவர்களிருவரும் படுக்கையில் இருந்திருக்கவேண்டியதில்லை ஆனால் ஒரு தழுவலோ ஒரு முத்தமோ கூட இல்லையென்பது இயல்புக்கு எதிரானது. அதில் ஒன்றும் கெட்டுப்போயிருந்திருக்காது அவை அன்பை ஆதரவை கனிவை பிரியத்தை ஏக்கத்தைத் தெரிவிக்கும் உடல்மொழிகளில் சில அவ்வளவே. அதையும் கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள்

அப்படியான மென் உணர்வுவெளிப்படுதல்களில் ஈடுபட்டால் அது அவர்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திவிடும் என்று பயந்து அதை தவிர்த்தார்கள் என்றால் மனதிற்குள் நினைத்துவெளீயில் காட்டாமல் மறைத்தார்கள் என்றே பொருள்

கற்பை கற்பூரக்கட்டிபோல உள்ளங்கையில் வைத்து பொதிந்து காப்பாற்றும் முயற்சியில் இருப்பது போலக்காட்டியிருப்பதும்  எரிச்சலாக இருந்தது

பள்ளியில் பதின்பருவத்தில் வருவது இயற்கையாக ஆணுக்கு பெண்ணுடலின் மாற்றங்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சியின்பேரிலான காதலே.  பத்தாம் வகுப்பில் தெய்வீகக்காதெலெல்லாம் சாத்தியமே இல்லை

பெண்ணுக்கு ஆணின் உடல் ரீதியான கிளர்ச்சி எந்த வயதிலும் வராது எனினும் பதின்பருவத்தில் ஹார்மோன்களின் கலவரம் இருக்கும் அதே பள்ளிப்பருவத்துக்காதல் என்னும் புள்ளியில் நின்றுவிட்ட ராம் எப்படி உடல் ரீதியான எந்த ஈர்ப்புமின்றி ஜானுவை தவிர்க்கமுடியும் என எனக்குபுரியவில்லை. இதில் அவரை பலூன் எல்லாம் வைத்துக்கொண்டு ஒளீந்துகொண்டிருப்பவராக, நெஞ்சுபடப்டப்பில் மயங்கிவிழுபவராக வேறு காட்டுகிறார்கள்

மேலும் நாட்டுகட்டை வர்ஜின் என்னும் வர்ணனைகள் சங்கடப்படுத்தியது. இதற்கு பேசாமல் ஒருமுறை கட்டியணைத்து முத்தமிட்டிருக்கலாம்

Dialogue delivery  யில் எப்போதும் விசே ஒரே மாடுலேஷனை காட்டுவாரென்றாலும் அவரை (96க்கு முன்பு) எனக்குப்பிடிக்கும். கூத்துப்பட்டறையிலிருந்து வந்தவர், சினிமாவை காதலிப்பவர், புதுமைகளை முயற்சிப்பவர், வசீகரக்குரல், மனதைக்காட்டும் கண்கள்  அழகிய உடல்மொழி, கூடவே விரிந்த தோள்கள்

எல்லா பிம்பத்தையும் இதில் விசே  தகர்த்துவிட்டார்

காட்சிஊடகமென்னும் பெரிய சக்தியில் முன்னனியில் இருப்பவர் கொஞ்சமாவது ஃபிட்னஸ் குறித்த கவனத்துடன் இருக்கவேண்டாமா/? தசைகள் தளும்பி உடல் கட்டின்றி வளர்ந்து shapeless  ஆக இருக்கிறார். அந்தந்த துறைக்கான   சின்சியாரிட்டி வேண்டாமா என்ன?

மிக மிக லோவாக அவர் கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது

அதே 10 ஆம் வகுப்பு பையனாக ஜானுவைப்பார்க்கும் போது மட்டும் இருக்கும் ராம் தனது மாணவிகளிடம் நல்ல கம்பீரமான ஆளுமையாக இருக்கிறார். டைட்டில் பாடலுக்குப்பிறகு காமிராவை அவர் தொடவேஇல்லை அவரின் கதாபாத்திரத்தை எப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்றே புரியவில்லை

’’எனக்கு உன்கூட இருக்கனும் நிறைய பேசனும் அவ்வளவுதான்’’  என்று தெளிவாக ராமிடம் சொல்லும் ஜானு,  ஏர்போர்ட் செல்ல்லும் வழியில் கியர் மாற்றும் போது ராம்  தன் கைகளைப்பற்றிக் கொள்ள வேண்டும் என விழைந்து அங்கு தன்  கையை வைத்துக்கொள்வதும், தன்வீட்டுக்கட்டிலில் ஜானு படுத்துக்கொள்ள ரொம்ப மரியாதையுடன் தரையில் படுத்துக்கொள்ளும் ராம் அப்போது மட்டும் ,ஜானுவின் கைகளைபற்றிக்கொண்டே கியர் மாற்றுவதும், தமாஷ்

தொட்டுக்கொள்ளும் விழைவென்றால் தொட்டுக்கொள்வதுதான் அதில் degree  வேறுபாடு இருக்கா என்ன? கைகளை மட்டும் தொட்டுக்கொல்ளலாம், ஏர்போர்ட் போகும்போது மட்டும் கொஞ்சம் கொள்கையை தளர்த்திக்கொள்ளலாம் அப்படியா?

இழந்த காதலினால் வேறு திருமணம் செய்துகொள்ளாமல் தொழிலில்  அர்ப்பணிப்புடன் கவனமாக இருந்து  அவ்விழப்பை ஈடுகட்டி அத்துறையில் வெற்றி பெற்றிருக்கிறாரா? அவரை அறிமுகப்படுத்த ஒரு தொழிலைகாட்டி இருக்கிறார்கள் அவ்வளவே!

உடல்மொழியில் எண்ணங்களை காட்டுவதில் ஃபர்ஹான் அக்தரிடமும் ஃபகத் ஃபாசிலிடமும் பாடம் படிக்கனும் இவங்கஎல்லாம்

த்ரிஷாவும் அத்தனை உணர்வெழுச்சியுடன் இதிலில்லை

அவர்  கல்லுரியில் தன்னைப்பார்க்க வந்தது ராம் என்று தெரிந்து குளியலறையில் கதறிஅழும் காட்சியில் மனம் ஒன்றவே இல்லை

மின்னலே’ வில்  ரீமாசென் வெண்மதி பாடலில் குளியலறையில் அழுவது கூட காட்சியுடன் ஒன்றவைக்கும் நம்மை

கல்லூரிக்கு அத்தனைவருஷம் கழித்து பார்க்க வந்த ராம் வசந்தியின் நோட்டுப்புத்தகத்தை வாங்கி முட்டாள் தனமாக ஏன் ஜானகி என்று எழுதிக்கொடுத்தார் கே ராமச்சந்திரனென்றல்லவா எழுதிக்கொடுக்கனும்?

எல்லாக்காட்சிகளுமே மிகைபடுத்தபட்ட நாடகத்தனம்  தெரிந்தது. செயற்கையாக நிறைய நாடகபாணியிலான காட்சிகள் சிரமமாக இருந்தது. மேலும் கதை நத்தை வேகத்தில் நகர்கின்றது. நேர்க்கோட்டில் மிக மிக மெதுவே செல்லும் கதையில் திருப்பம் இல்லாவிட்டால்  போகிறது, ஒரு சந்து கிந்து வளைவு?  ஒன்றுமேயில்லை

நண்பர்கள்  சந்திப்பில் முன்காதலர்கள் சந்தித்தால் , அவர்களுக்குள் ஏதேனும் நடந்தால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளர்களை சிங்கப்பூர்காரன் கேள்விகேட்பான் என்று தேவதர்ஷினியும் நண்பரும் கவலைபப்டுவது அபத்தம். நிகழ்சி ஏற்பட்டாளர்கள் எதற்கெல்லாம் பொறுப்பெடுத்துக்கொள்ள முடியும்?

10 ல் படிக்கும் பையனும் பென்ணும் ஸ்கூல் வாட்ச்மேனிடம் காதலைபகிர்ந்துகொள்ள முடியுமென்பதும் அபப்டியே. வாட்ச்மேன் அவர்களின் காதலை  கவனிப்பதுபோல காட்டியிருக்கலாம்

த்ரிஷா ராமின் வீட்டில் பேசும் பல வசனங்களில் நுட்பமோ அழகுணர்வோ ஆழ்ந்த, இழந்த காதலின் வலியோ  இல்லை உண்மையில் ஜெயமோகனைப்படிக்கும் நான் கூட அந்த சந்தர்பத்தில் மிக ஆழமான உணர்வெழுச்சியுடன் வசனங்களை எழுதியிருக்க முடியுமென்றே  தோன்றீயது J

பள்ளிக்காலத்திலும் கல்லூரிக்காலத்திலும் காதலை யாரும் தவிர்த்துவிடவே முடியாது

காதல், கல்யாணத்திலும், கல்யாணம் ஆகாதபொழுதும் முடிவதுமில்லை இப்படி முறிந்த, நிறைவேறாத, இழந்த, தொலைத்,த சொல்லாத பல காதல்கள் இன்னும் இருக்கின்றன

கல்லூரியிலேயெ இருக்கும், இன்னும் இன்னுமென காதலின் பல வடிவங்களை அனுபவத்தில் பார்க்கும் எனக்கு, அழகாக  கொண்டு போயிருக்கலாம் இப்படத்தை  என்று ஆதங்கமாகத்தான் இருந்தது பார்க்கையில்

 

பலருக்கு கிடைக்காத காட்சி ஊடகமென்னும் அரிதாக கிடைத்த ஒரு வாய்ப்பில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மக்களுடன் தொடர்பில் உள்ள  வாய்ப்பினை  இப்படி வீணடிக்க  எப்படி முடிந்தது இவர்களுக்கு என்று வருந்தினேன்

இப்படம் மிக அருமை பலமுறை பார்த்தென் என்றெல்லாம் சொல்பவர்கள்  மனதில் ஒளிந்துகொண்டிருக்கும் காதலொன்றை மற்றவர்களுக்கு சொல்லிக்கொள்ள இப்படத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறார்களா என்ன?

எனக்கு இப்படம் ஏமாற்றத்தையே அளித்தது. ரோமாபுரியிலும் என்னால் பொள்ளாச்சிக்காரியாகவேதான் இருக்கமுடிகின்றது

இந்தத்திரைப்படத்தில் பாரட்டும்படி ஒன்றுமேயில்லை என்று  சொல்லிவிடமுடியாது  சிலவற்றை சொல்கிறேன்

நண்பர்கள் சந்திப்பு ராம் ஜானு தவிர மற்றபடி அழகாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது

ஒரு நண்பரைகுறித்த ஏதோ ஒன்றை சொல்லப்போக மற்றவர்கள் அவரை தள்ளி விழுந்துபுரண்டு வாயடைக்கும் காட்சி

தேவதர்ஷினியின் இயல்பான உடல்மொழியும் குரலும், ராம் பாத்திரத்துக்கு தேர்வுசெய்யப்பட பையனும் அவனின் கல்லூரிக்கால கொஞ்சம் மூத்த ஒருத்தனும் நல்ல தேர்வு

ஜானு குளியலறையிலிருந்து கொடுத்த ஈரத்துணிகளை ராம் பிழிந்துகாயப்போடுவது நல்ல  இயல்பானகாட்சி (ராம் அவள் மாங்கல்யத்தை தொட்டுக்கும்பிடுவதெல்லாம்  ரொம்பவே மிகை)

நஸ்ரியாவின் சற்றே பெரிதுபடுத்தபட்ட வெர்ஷன் போலிருக்கும்   விசேவிற்கு காரோட்டும் , அவரை அவ்வபோது விழுங்கிவிடுவதுபோல பார்க்கும்  அந்தப் பெண்ணும் அழகு

எனக்கு மிக மிக அந்தரங்கமாக பிடித்த  ஒன்றென்றால் இறுதிக்காட்சியில் ராம் தன்னந்தனியே பால்கனியில் நின்றிருக்கையில் அவருக்கு பின்னே இரண்டு பக்கமும் தொட்டிகளில் இருந்த பசுஞ்செடிகள் தான் J

 

 

 

கோலமாவு கோகிலா

 

நண்பர்கள் சுரேஷும் செளந்தரும் இத்திரைப்படத்தைப்பற்றி சிலாகித்துச்சொல்லியிருந்தார்கள்.  நல்ல படம் , பார்க்கலாமென்று சுரேஷ் பரிந்துரைத்திருந்தார். செளந்தர்  விமர்சனம் எழுதியிருப்பதாய்  சொன்னார். நேற்று விபு  குழுமத்திலும் இதைக்குறித்துப்பேசினோம். சரி ஒருநாள் பார்க்கனும்னு  நினைச்சேன்.

அமேசான் ப்ரைமில் சீக்கிரம் வந்துரும்னு கூட நினைத்தென். என்னமோ  நினைத்துக்கொண்டாற்போல், விடுப்பில் வீட்டிலிருந்த சரணும் நானுமாக மதியம் திடீரெனக்கிளம்பி  பஸ் பிடித்து சென்றேவிட்டோம்.

விகடன் உள்பட  எதிலும் விமர்சனம் பார்க்கலை , கேட்கலை, செளந்தர் எழுதினதும் இன்னும் வாசிக்கலை. கிரேஸி மோகன் ஒரு நூலின் முன்னுரையில் //புத்தகத்தை வாசிக்கும் அல்லது  திரைப்படத்தை பார்க்கும் முன்னர் விமர்சனம் தெரிஞ்சுகிட்டு பின்னர் அதை வாசிக்கறப்போ அல்லது பார்க்கறப்போ என்னமோ ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்ட மாதிரி இருக்கும்//னு சொல்லியிருந்தது போல நான் முன்கூட்டியே தெரிஞ்சுக்காமத்தான் எப்போவும் போவேன்

படம் ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்த நல்ல படமா இருந்தது. அலுப்புத்தட்டாத திரைக்கதை.  திரைப்படங்களின் லாஜிக், நம்பகத்தன்மை பற்றியெல்லாம் நான் எப்போவும் மெனக்கெடுவதிலை எனவே மிகப்பிடித்திருந்தது. முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வுதான் அதுவுமந்த வேன் காட்சிகள் தேவைக்கும் அதிகமான நீளம்

ஆனால் striking feature of the movie  என்று சொன்னால் சந்தேகமில்லாமல் நயன்தாராதான். முழுக்க முழுக்க அவங்களை நம்பியே எடுக்கப்பட்ட படம். வாட்ட சாட்டமான நாயகன் இல்லை, டூயெட் பாடல்கள் இல்லை, காமெடியன்கள் (நல்லவேளையாக) இல்லை, 5 பாடல்களும்,  குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றைச்சமன் செய்ய 5 சண்டைக்காட்சிகளும் என்னும் தமிழ்சினிமாவின் மரபான   frame ற்குள்ளும் இத்திரைப்படம் வரவில்லை. இரட்டை அர்த்த வசனங்கள், குத்துப்பாடல்களும் இல்லை. இத்தனை இல்லை’களையும் ஈடுகட்ட ஒரே ஒரு நயன்தாரா இருக்கிறார் என்பதே படத்தின் பலம்

நயன்தாராவை பிடிக்கும் எனக்கும்’ னு சொல்லவேண்டியதில்லை ஏனெனில் எல்லாருடைய ப்ரியப்பட்ட  நடிகை என்றும் அவங்களைச்சொல்லலாம். அப்படி ஒரு தூய அழகு அவங்களுடையது. நயனின் அந்தரங்க வாழ்வின் அவலங்கள் துயர்கள் எல்லாம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தும் வழக்கமாக உருவாகும் கசப்பும் கீழ்மையான, தாழ்மையான அவதானிப்புகளும்  ஏளனமும், அவர் மேல் வராமல் இன்னும் எல்லா மனதிலும் அழகாக அமர்ந்திருக்கிறார். காழ்ப்புகளுக்கு அப்பாற்பட்ட தூய அழகு அவருடையது

இந்தப்படத்தில் அவருக்கென்றே பிரத்யேகமாய் ஒரு காமிராவை நிறுத்தினது போல எல்லா ஃப்ரேமிலும் நயன் நயன் நயன். அவங்களை விட்டு வேறெதிலும் நம் சித்தத்தை குவிக்க முடியவில்லை. அதிலும் அந்த  மிகச்சாதாரணமான, கவர்ச்சியாக அவர்களைக்காட்டவே காட்டாத சட்டையிலும், கணுக்கால் வரையில்மட்டுமே இருக்கும் பாவாடையிலுமாக வேறு யாரும் இத்தனை கொள்ளை அழகாக இருக்கவும், தெரியவும் முடியாது. எளிய ஆயில் மேக்கப், கொஞ்சமாக நிறமேற்றபட்ட கேசம்,  gun மெட்டலில் சின்னஞ்சிறிய தோடு அவ்வளவுதான், ஆனால் திரையில், அந்த சிதிலமடைந்த மிகப்பழைய வீடும்,  மங்கின சூழலும் நயன் வந்ததும்  பிரகாசமாகிவிடுகின்றது. அவரின் பட்டுப்  போன்ற  சருமத்தின் மென்மையை பார்க்கிறவர்கள் தொட்டுப்பார்க்காமலேயே உணரமுடிகின்றது.

முகத்தில் கால்பாகமும், வெள்ளித்திரையில் பாதியளவிற்கும் இருக்கும்  நயனின் அகன்ற கண்களிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை. அதுவும் அடிக்கடி,  நீர்நிரம்பிய குளம்போல தளும்பி ஒருகணம் தயங்கி பின் சட்டென உடைந்து அகலமாக மையெழுதிய கரைகளை உடைத்துக்கொண்டு கண்ணீர் சொட்டுவது அத்தனை ரசிக்கும்படி இருக்கு, ஆம் நயன் அழுவதும் அத்தனை அழகு.

அழகென்று சொல்கையில் இன்னொன்றும் சொல்லனும்,   பொதுவாக அலங்காரச்செடிகளை நர்சரியிலோ வேறு யாருடைய வீட்டிலோ பார்க்கையில் சிலசமயம்  இதுபோல செடிகள் நம் வீட்டில் இல்லையேன்னு ஏக்கமாக வருத்தமாக இருக்கும், சிலசமயம் இதெல்லாம் நம்ம வீட்டுக்கு பொருந்தாதுன்னு தோணும், சிலதைப்பார்க்கையில் அறவுணர்வு எல்லாம் மறந்து, திருட்டுத்தனமாகவேணும் கொஞ்சம் கிள்ளியாவது எடுத்துட்டுபோய் வீட்டில் நட்டு வச்சுக்கணும்னு  தூண்டல் இருக்கும்,   ஆனால் துளசிச்செடியை  மாடத்தில் பார்க்கையில் ஒரு நிறைவு இருக்கும் நமக்கு. இதுபோல வேணும் வேண்டாம்னு எதுவும் தோணாம நிறைவு மட்டுமெ இருக்கும்

அப்படி அழகு நயனுடையது. பிற நாயகிகளைப்பார்க்கையில் அவர்களின் தளுக்கும் மினுக்கும் செயற்கையான பாவனைகளும், அதீத ஒப்பனையும்,  ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும். (எனக்கு). ஆனால் நயனைப்பார்ககையில் அவர்களின் அழகு ஒரு  divine and dignified  என்று தோன்றும். ஷோபனாவைப்பார்க்கையில் மட்டும் அப்படியிருக்கும் எனக்கு முன்னால் எல்லாம்.  Sex appeal  இல்லாத நிறைவு மட்டுமே உண்டாக்கும் அபூர்வ அழகு இது

அலியா பட் , மீரா ஜாஸ்மின் இரண்டுபேரும் கூட இப்படியான நிஷ்களங்கிகள் தானென்றாலும் அவர்களிடம் இருக்கும் அந்த சிறுமித்தனம் நயனிடம் இல்லாமல் ஒரு கண்ணியமும் முதிர்ச்சியும் இருக்கும்

ஒரு காட்சியில்  வீட்டு வாசலில் நயனும் அவள் அப்பாவும் அமர்ந்திருப்பார்கள் மிகக்குறைந்த வெளிச்சத்தில் பக்கவாட்டுத்தோற்றத்தில் அந்த சீர்மையும் கூர்மையுமான மூக்கும் , பெரிய இமைப்பீலியும் கலைந்த கேசம் நெற்றிக்கு முன்னால் வந்துவிழ உணர்வுகள் மாறி மாறி  நிழலாடிக்கொண்டிருக்கும் நயன்  ஒரு கவிதைத்துணுக்குபோலிருந்தார். அந்தக்காட்சியே ஒரு கவிதைதான்

We are the millers  என்னும் படத்தின்  தழுவலென்று சரண் இப்போது சொல்கிறான் அதுபற்றியெல்லாம் நான் அதிகம் கவலைப்படுவதில்லை

சுமாரான திரைக்கதை ஆனால்  எல்லாவற்றையும் compensate  செய்துவிடுகிறது நயனின் இருப்பு

முதல்காட்சியிலிருந்தே மிகவும் underplay  தான் நயன் செய்வது, மிகக்கொஞ்சமாக  அவர்  பேசினாலும் மிக மிக அதிகமாக அவரின் கண்கள் பேசுகின்றது.  வசனங்களும் மிக மென்மையான மாடுலேஷனில் தன் நயனுக்கு

துவக்கக்காட்சியில் தவறாக அவரை அழைக்கும் மேலாளரிடன் நயன் பேசும் மறுமொழி நச்

சரண்யா பொன்வண்னன் மீள மீள  ஒரே மாதிரியான அம்மாவாகவே இருக்கிறார். அந்த அப்பா கதாபாத்திரம் என்னவோ எனக்கு கொஞ்சம் பொருந்தாத தேர்வெனத்தோன்றியது. வேறுயாரையாவது போட்டிருக்கலாம். டெல்லி கணேஷ் சாரைப்போல  உணர்வுகளை இயல்பாக வெளிக்காட்டும் நடிகராக இருந்திருக்கலாம். இவர் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளாமல் கடனேனு வந்துபோவது போலிருந்தது. அந்த இரண்டு காதலர்களும் ஓகே நகைச்சுவைஇல்லாத குறைக்கு இருக்கிறார்கள்.

கடத்தல் மற்றும்  பாலியல் அத்துமீறல்கள் நடக்கும் காட்சிகளிலெல்லாம் இந்துக்கடவுள்களை அதிகம் காட்டி கேவலப்படுத்துகிறாரகள்,  என்பதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுக்களையெல்லாம் நான் கவனிக்கவே இல்லை,  (அல்லது நயன் கவனிக்க விடவில்லை).  இதுபோன்ற   விதிமீறல்கள் எல்லாம் மதம் இனம் மொழியையெல்லாம் கடந்தது அல்லவா? பின்பாதியில் வேனிலேயே ரொம்பநேரம் பயணித்ததில் இடுப்பு வலித்தது, மேலும் அதிகம் இழுவை காட்சிகள்.

தலைப்பை நியாயப்படுத்த இறுதியில் நயன் கோலமாவு விற்காவிட்டாலும் எனக்கு படம் பிடித்துத்தான் இருந்திருக்கும்.

நல்ல பொழுதுபோக்குஅம்சங்களுடனான படம், வழக்கமான மொக்கைத்தமிழ் படங்களினின்றும்  மாறுபட்ட படமும் கூட

 

 

 

 

 

 

 

லக்‌ஷ்மி

 

கடந்த மாதத்திலிருந்தே பரவலாக ஊடகங்களில் பேசப்பட்ட லக்‌ஷ்மி என்னும் இந்த குறும்படத்தை நேற்றுத்தான் பார்த்தேன். முதலில் வந்த உணர்வு ஏமாற்றம்.

என்ன இருக்கிறதென்று இதனை இத்தனை பெரிதாய் பேசினார்கள் என்றே தெரியவில்லை. இதைக்காட்டிலும் என்று சொல்ல முடியாதபடிக்கு இதனுடன் ஒப்பிடவே முடியாத தரத்தில் பல நூறு குறும்படங்கள்  வந்திருக்கின்றதே!

கதையைபார்த்தால்,  அலுப்பூட்டும் வாழ்வில் இருக்கும் ஒருத்தி, அவள் ஆயிரக்கணக்கான பெண்களின் பிரதிநிதிதானே ஒழிய புதியதாய் ஒன்றும் சொல்லப்படவில்லை. தினசரி சீறும் குக்கரும்,  பள்ளிக்கு தயாராகும் மகனும் அவனுக்கு அணிவிக்கப்படும் சீருடையும் அன்பில்லாத கணவனும் மதிய உணவு கொடுத்ததும் போய் வருகிறேன்  என்று கூட சொல்லாமலும் உணவு பறிமாறுகையில் போதும் என்பதைக்கூட சொற்களன்றி சைகையில்  சொல்லும் கணவனும்அமையப்பெற்றவள்  அதன் பின்னர் அடித்துப்பிடித்து அலுவலகம் கிளம்புவதும், களைத்துத்திரும்புவதுமமாய் நகலெடுத்த நாட்களில் இருக்கிறாள். இரவில் அவள் மேல் நிகழ்வதும் அவளுக்கு தொடர் அலுப்பூட்டும். மகன் விழித்துவிடுவானோ என்று அச்சமும் ஊட்டும் ஒன்றாகவே இருக்கிறது.

ஒரு நாளின் இரவுணவின் போது  கணவனுக்கு வரும் ஒரு கைப்பேசி அழைப்பின் பெண்குரல் கணவனின் மீதான சந்தேகத்தை எற்படுத்துகிறது என்பதே வலுவில்லாத ஒரு  அம்சம்.அந்த அடிப்ப்படையிலேயே இந்த கதை நகர்கிறது என்பது மேலும் அபத்தம். நேரடியான எந்த நிகழ்வுகளியும் அவள் காணவில்லை அவளுக்கு  அலுப்பூட்டும் வாழ்வு Xerox  எடுத்தது போல மாற்றமில்லா வாழ்வு என்பதைத்தவிர வேறு ஏதும் ப்ரச்சனைகளூம் சொல்லபடவில்லை, அவளின் ஆர்வங்கள் ஏதும் காட்டப்படவில்லை

வாசிக்கும் ஆர்வம் எழுதும் ஆர்வம் வரையும் ஆர்வம் இப்படி ஏதும் இல்லை அவற்றை கண்வன் கட்டுப்படுத்தினான் என்ற பேச்சுக்கும் இடமில்லை

வெறும் ஒரு அலைபேசி அழைப்பு, பின்னர் அவள் இரவில் திரும்பி படுத்துக்கொண்டு கண்ணீர் வடிக்கிறாள், உடன் தனக்கும் ஒரு மாற்றம் வேண்டுமென நினைக்கிறாள். இதுவும் அசாதாரணமே

.கணவனின் திருமணபந்தத்தைத்தாண்டிய உறவினைக்குறித்து தெரியவந்த மனைவி வருத்தம் கோபம் படலாம் உடன் தனக்கும் ஒரு மாற்றம் வேண்டுமென நினைப்பதில் கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லை. அதைவிட  அவள் நினைத்த அடுத்தநாளே கதிர் எனும் இளைஞன் கவனிக்கும் படி அவளருகில் வந்து ரயிலில் அமர்வது அபத்தத்திலும் அபத்தம். கணவனின் துரோகத்திற்கு  பதிலாக தானும் துரோகம் செய்வதை பிழையீடாக நினைக்கும் மனைவிகள் இருக்கிறார்கள் என்கிறதா இப்படம்?

கதிரின் மீது ஏன் இவளுக்கு ஈர்ப்பு வருகிறது என்பதற்கு ஒரே ஒரு காரணம் கூட இதில் சொல்லப்படவில்லை, அவன் அவசியமில்லாமல் பாரதியார் பாடல்களை பாடிக்காட்டுவதும் எரிச்சலூட்டுகிறது, பாரதியையும் அறியாத வாசிப்பிலும் ஆர்வமுள்ளவளாக கட்டப்படாத கதாநாயகி ஒரு நாளின் போக்குவரத்து துண்டிப்பில் கதிருடன் சிற்பக்கூடத்திற்கு செல்வது உணவுண்ணுவது இறுதியில் படுக்கையிலும் அவனைச்சந்திப்பதெல்லம் மேலும் மேலும் சொல்லப்பட்டிருக்கும் அபத்தங்கள்

கடைசிக்காட்சியில் அதே குக்கரின் சீற்றத்தின் போது இவள்  முகத்திலொரு புன்னைகையையாவது காட்டியிருந்தால் அவளுக்கு அந்த ரகசிய அனுபவத்தில் ஒரு ரகசிய மகிழ்ச்சி இருக்கு என்று கூட நாம் நினைக்கலாம் ஆனால் அப்படி எதும் இன்றி அவள் இனி கொஞ்ச நாள் ரயிலில் செல்லாமல் ,அதாவது கதிரைப் பார்ப்பதை தவிர்த்து பேருந்தில் செல்கிறாள் என்று முடிகிறது படம்

என்னதான் சொல்ல வருகிறார்கள் இதில்? எதற்கு இத்தனை பிரபல்யம் இதற்கு? இணைப்பைக்கொடுத்துள்ளேன் பார்க்காதவர்கள் பாருங்கள் கருத்துக்கள் இருப்பின் பகிருங்கள்

 

 

Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑