கடந்த மாதத்திலிருந்தே பரவலாக ஊடகங்களில் பேசப்பட்ட லக்‌ஷ்மி என்னும் இந்த குறும்படத்தை நேற்றுத்தான் பார்த்தேன். முதலில் வந்த உணர்வு ஏமாற்றம்.

என்ன இருக்கிறதென்று இதனை இத்தனை பெரிதாய் பேசினார்கள் என்றே தெரியவில்லை. இதைக்காட்டிலும் என்று சொல்ல முடியாதபடிக்கு இதனுடன் ஒப்பிடவே முடியாத தரத்தில் பல நூறு குறும்படங்கள்  வந்திருக்கின்றதே!

கதையைபார்த்தால்,  அலுப்பூட்டும் வாழ்வில் இருக்கும் ஒருத்தி, அவள் ஆயிரக்கணக்கான பெண்களின் பிரதிநிதிதானே ஒழிய புதியதாய் ஒன்றும் சொல்லப்படவில்லை. தினசரி சீறும் குக்கரும்,  பள்ளிக்கு தயாராகும் மகனும் அவனுக்கு அணிவிக்கப்படும் சீருடையும் அன்பில்லாத கணவனும் மதிய உணவு கொடுத்ததும் போய் வருகிறேன்  என்று கூட சொல்லாமலும் உணவு பறிமாறுகையில் போதும் என்பதைக்கூட சொற்களன்றி சைகையில்  சொல்லும் கணவனும்அமையப்பெற்றவள்  அதன் பின்னர் அடித்துப்பிடித்து அலுவலகம் கிளம்புவதும், களைத்துத்திரும்புவதுமமாய் நகலெடுத்த நாட்களில் இருக்கிறாள். இரவில் அவள் மேல் நிகழ்வதும் அவளுக்கு தொடர் அலுப்பூட்டும். மகன் விழித்துவிடுவானோ என்று அச்சமும் ஊட்டும் ஒன்றாகவே இருக்கிறது.

ஒரு நாளின் இரவுணவின் போது  கணவனுக்கு வரும் ஒரு கைப்பேசி அழைப்பின் பெண்குரல் கணவனின் மீதான சந்தேகத்தை எற்படுத்துகிறது என்பதே வலுவில்லாத ஒரு  அம்சம்.அந்த அடிப்ப்படையிலேயே இந்த கதை நகர்கிறது என்பது மேலும் அபத்தம். நேரடியான எந்த நிகழ்வுகளியும் அவள் காணவில்லை அவளுக்கு  அலுப்பூட்டும் வாழ்வு Xerox  எடுத்தது போல மாற்றமில்லா வாழ்வு என்பதைத்தவிர வேறு ஏதும் ப்ரச்சனைகளூம் சொல்லபடவில்லை, அவளின் ஆர்வங்கள் ஏதும் காட்டப்படவில்லை

வாசிக்கும் ஆர்வம் எழுதும் ஆர்வம் வரையும் ஆர்வம் இப்படி ஏதும் இல்லை அவற்றை கண்வன் கட்டுப்படுத்தினான் என்ற பேச்சுக்கும் இடமில்லை

வெறும் ஒரு அலைபேசி அழைப்பு, பின்னர் அவள் இரவில் திரும்பி படுத்துக்கொண்டு கண்ணீர் வடிக்கிறாள், உடன் தனக்கும் ஒரு மாற்றம் வேண்டுமென நினைக்கிறாள். இதுவும் அசாதாரணமே

.கணவனின் திருமணபந்தத்தைத்தாண்டிய உறவினைக்குறித்து தெரியவந்த மனைவி வருத்தம் கோபம் படலாம் உடன் தனக்கும் ஒரு மாற்றம் வேண்டுமென நினைப்பதில் கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லை. அதைவிட  அவள் நினைத்த அடுத்தநாளே கதிர் எனும் இளைஞன் கவனிக்கும் படி அவளருகில் வந்து ரயிலில் அமர்வது அபத்தத்திலும் அபத்தம். கணவனின் துரோகத்திற்கு  பதிலாக தானும் துரோகம் செய்வதை பிழையீடாக நினைக்கும் மனைவிகள் இருக்கிறார்கள் என்கிறதா இப்படம்?

கதிரின் மீது ஏன் இவளுக்கு ஈர்ப்பு வருகிறது என்பதற்கு ஒரே ஒரு காரணம் கூட இதில் சொல்லப்படவில்லை, அவன் அவசியமில்லாமல் பாரதியார் பாடல்களை பாடிக்காட்டுவதும் எரிச்சலூட்டுகிறது, பாரதியையும் அறியாத வாசிப்பிலும் ஆர்வமுள்ளவளாக கட்டப்படாத கதாநாயகி ஒரு நாளின் போக்குவரத்து துண்டிப்பில் கதிருடன் சிற்பக்கூடத்திற்கு செல்வது உணவுண்ணுவது இறுதியில் படுக்கையிலும் அவனைச்சந்திப்பதெல்லம் மேலும் மேலும் சொல்லப்பட்டிருக்கும் அபத்தங்கள்

கடைசிக்காட்சியில் அதே குக்கரின் சீற்றத்தின் போது இவள்  முகத்திலொரு புன்னைகையையாவது காட்டியிருந்தால் அவளுக்கு அந்த ரகசிய அனுபவத்தில் ஒரு ரகசிய மகிழ்ச்சி இருக்கு என்று கூட நாம் நினைக்கலாம் ஆனால் அப்படி எதும் இன்றி அவள் இனி கொஞ்ச நாள் ரயிலில் செல்லாமல் ,அதாவது கதிரைப் பார்ப்பதை தவிர்த்து பேருந்தில் செல்கிறாள் என்று முடிகிறது படம்

என்னதான் சொல்ல வருகிறார்கள் இதில்? எதற்கு இத்தனை பிரபல்யம் இதற்கு? இணைப்பைக்கொடுத்துள்ளேன் பார்க்காதவர்கள் பாருங்கள் கருத்துக்கள் இருப்பின் பகிருங்கள்