லோகமாதேவியின் பதிவுகள்

மும்பை- தத்புருஷன்.

இரவு டிமார்ட்டுக்கு ஆட்டோவில் போய் இறங்கி கொஞ்சம் பொருட்கள் வாங்கினோம். ஹேண்ட் பேக்கை வரிசையில் நின்று டேக் போடுகையில், எனக்கு முன்னே இருந்த ஒரு பெண் தோளில் போட்டுக்கொண்டிருந்த , இரண்டு இட்லிகளை கன்னத்துக்குள் திணித்தது  போல புட்டு புட்டென்று, ரசகுல்லாவே குழந்தையானது போலிருந்த பாப்பா என்னைப் பார்த்துச் சிரித்தது. நான் அதன் கையை மெல்லத் தொடப் போகையில், சரியாய் சரண் குறுக்கே வந்து என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “வேண்டாம்  மீ ப்ளீஸ்” என்றான். அந்தப் பாப்பா மறுபடியும் என்னைப் பார்த்துச் சிரித்தது. சரணிடம் கொஞ்ச நேரத்திற்கு கோபித்துக் கொண்டேன்.

திருவிழாக்கூட்டம் போல இருந்தது. கடைக்குள் டிராலியைத் தள்ளிக்கொண்டு வந்த சரண், நான் கூட்டத்தில் தொலைந்து போய்விடுவேன் என்று பதட்டமாக இருந்தான். நான் பாட்டுக்கு ஒவ்வொரு பிரிவாக வேகமாகத் தாண்டித் தாண்டி, எனக்குத் தெரிந்த பாஷையில் விசாரித்து, எனக்கு வேண்டியதைத் தேடி எடுத்துக்கொண்டிருந்தேன். சரண் என்னை விமானம் ஏற்றும் நேரத்திற்காக குலசாமியிடம் எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தான்.

வாங்கிய பொருட்களுடன் மீண்டும் ஆட்டோ பிடித்து, ஒரு பெரிய சைவக் கடையான ஜைன உணவகத்திற்குப் போனோம். அங்கே வாசலில் ஏராளமாக நாற்காலிகள் போட்டு, பார்சல் வாங்கக் காத்திருந்தார்கள். உள்ளேயும் கூட்டம். நாங்கள் எதிரெதிரே அமர்ந்து வேண்டியதை ஆர்டர் செய்தோம். கடைசியில் தயிர் சாதமும் ஆம் ரஸும்  கேட்டேன். தயிர் அப்படி ஒரு புளிப்பு! ஊறுகாய் மகா கேவலமாக இருந்தது. ஆம் ரஸ் அதற்கும் மேல் புளிக்கவே முடியாது என்பது போல இருந்தது. நம்மூரில் கூட ஆம் ரஸ் அருமையாகக் கொடுப்பார்களே!

ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு வரும் வழியெல்லாம், எல்லா அடுக்குமாடி வீட்டு வாசலிலும் நாம் போகிக்குச் செய்வது போலக் கட்டைகளைக் கூம்பாக நிறுத்தித் கட்டிக்கொண்டிருந்தார்கள்; ஏதோ ஒரு சடங்கு போல. “என்ன இது?” என்றேன். “நாளைக்கு ஹோலின்னா, முந்தின நாள் ராத்திரி இப்படி ஹோலிகா தகன் செய்வாங்க” என்றான். “அப்படின்னா  போய்ப் பார்க்கலாண்டா” என்றேன்.

எனவே, டாக்ஸியை அவன் அடுக்கத்துக்குச் சற்று முன்பாகவே நிறுத்திவிட்டு இறங்கி நடந்தோம். ஒரு சில தனி வீடுகளில் உள்ளேயே நெருப்பு எரிந்தது. சரண் தங்கியிருக்கும் அடுக்ககத்தின் வாசலில் பெருங்கூட்டம். எல்லா வீட்டினரும் அங்கே இருந்தார்கள். நல்ல ஜொலிக்கும் உடைகளில் பெண்கள்; எல்லாப் பெண்கள் கையிலும் தாம்பாளம், இனிப்பு, அகல்விளக்கு, மலர்சரங்கள் மற்றும் தேங்காய் இருந்தன.

நானும் சரணும் எதிரே நின்று வேடிக்கை பார்த்தோம். ஒரு ஒல்லி இளைஞன் என்னிடம் “நமஸ்தே ஜி” என வணங்கிவிட்டு, சரணிடம் என்னவோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவன்தான் அந்தச் அடுக்கத்தின் மேற்பார்வையாளராம். பல கட்டைகள், அட்டைகள், மரப்பலகைகள் எல்லாவற்றையும் சேர்த்து கயிற்றால் கட்டி, தெருவில் ஒரு ஓரத்தில் நிறுத்தி, அது உறுதியாக இருக்கிறதா என்று ஆண்கள் சோதித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு சில இளைஞர்கள் ஓரக்கண்ணால் சுடிதார் அழகிகளைப் பார்த்துக்கொண்டு அவர்களுக்குள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். சின்னப் பிள்ளைகள் ஊடே ஓடிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு என்னவோ ‘7G ரெயின்போ காலனி’க்குள்ளே இருப்பது போலத் தோன்றியது.

வனஸ்பதி பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து ஒருவர் கட்டைகளுக்குள்ளே கொட்டினார். பெண்கள் கட்டைகளுக்கு மலர்சரம் அணிவித்து, ஆரஞ்சு நிறக் குங்குமம் இட்டார்கள். சில மாமியார்கள் இளம் மருமகள்களிடம் நாரியல்  எங்கே காணோம் பூரண் போளி எடுது வச்சியா என்றெல்லாம் கோபித்தார்கள். பின்னர் எல்லாரும் கூடி அந்தப் பெரிய கட்டைக் குவியலுக்கு நெருப்பு வைத்து, கைதட்டி ஆரத்தி காட்டி ஆரவாரம் செய்து இனிப்பு வழங்கினார்கள்.

ஒரு பெரியவர் அந்த எரியும் நெருப்பிற்கு முன்பாக நின்று மராத்தியில் உரையாற்றினார். எல்லோரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். “என்னடா சொல்றாரு?” என்றேன். ஹோலிகா தகனம் பத்திச்சொல்லறாரு”

’’..எனக்குப் புரியலையே..’’

வா, நான் உள்ளே வந்து சொல்றேன்” என்றான்.

அப்படி ஒரு மூத்தவர் சடங்குகள் நிகழுகையில், இளையோருக்கு அந்தச் சடங்கைப் பற்றிச் சொல்வது மிக முக்கியமாக எனக்குப் பட்டது. நாம் அப்படி ஏதும் செய்வதில்லை. நமக்கே பல சடங்குகள் என்னவென்று தெரியாது. அதிகபட்சமாக, “அதை எடுக்காதே, சாமி கண்ணைக் குத்தும்” என்று மட்டும்தான் சொல்கிறோம். கொஞ்சம் வெட்கமாக இருந்தது. எல்லா கலாசாரச் சடங்குகளிலும் இப்படி அதன் பொருள் என்ன என்று மூத்தவர்கள் இளையோருக்குச் சொன்னால்தானே அது தலைமுறைகளாகத் தொடரும்?

உள்ளே சென்றோம். லிஃப்ட்டுக்காகக் காத்திருக்கும் இடத்திற்கு அருகில், கண்ணாடிக் சுவர்களாலான ஒரு அறை இருக்கிறது. அங்கே அமர்வதற்கு வெளுத்துப் போன சிவப்பு நிறத்தில் சோஃபாக்கள் போடப்பட்டிருக்கும். அங்கே அமர்ந்தோம். வெளியே மதிலுக்கு மேலே நெருப்பு கொழுந்துவிட்டு எரிவது இங்கிருந்தே தெரிந்தது.

“சொல்லுடா” என்றேன்.

’’பிரகலாதனை தெரியுமில்ல…’’

‘’ ஆமா’’

’’…அவனை அவங்க அப்பா ஹிரண்யகசிபு, தன்னை மட்டும்தான் வழிபடணும்னு சொல்லிட்டே இருந்தாரு. ஆனா அவன் நாராயணனை மட்டும்தான் வணங்கினான். எனவே அவனை கொல்ல பல முயற்சி செய்தார் ஹிரண்யகசிபு, ஆனா அவனை கொல்ல முடியலை. ஹிரண்யகசிபுவின் தங்கை ஹோலிகா. அவளுக்கு நெருப்பில் மரணம் சம்பவிக்காதுனு ஒரு வரம் இருக்கு. அதனால் வாடி தங்கம் அத்தை மடியில் உட்கார்ந்துக்கோனு சொல்லி பிரகலாதனை உட்கார வச்சுட்டுச் சுற்றிக் கட்டைகளை அடுக்கி நெருப்பு வச்சாங்க. அப்போ பிரகலாதன் கை கூப்பி “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” னு திரும்பத் திரும்பச் சொல்லிட்டே இருந்தான். அந்த நெருப்பு நாராயண நெருப்பா மாறி ஹோலிகாவைச் சுட்டுக் கொன்னுடுச்சு. பிரகலாதன் ஒண்ணுமே ஆகாம வெளியே வந்தான். இதை ஹோலிக்கு முந்தின நாள் கொண்டாடுறாங்க…’’ என்றான்.

’’…இன்னொரு வெர்ஷனில் ஹோலிகாகிட ஒரு ஷால் இருந்தது அது நெருப்பில் எரியாது அதை போர்த்திகிட்டு பிரகலாதனை மடியில் வச்சுகிட்டா ஆனா பிரகலாதன் அந்த மந்திரம் சொன்னதும் ஷால் பிரகலாதனமேல விழுந்து அவனை மூடிருச்சு ஹோலிகா எரிஞ்சுபோயிட்டா…’’

“இதெல்லாம் எப்படிடா உனக்குத் தெரிஞ்சுது?”

’’..இரு வர்றேன்… ஹோலிக்கு ஏன் கலர் பூசிக்கிறாங்கன்னு சொல்லேன்..’’

எனக்கு தெரியவில்லை. உண்மையிலேயே வெட்கம் அதிகமானது. என்னது ஒண்ணுமே தெரியாம இருக்கோமே என்று! ஹோலியைத் தான் வருஷக்கணக்கா கொண்டாடுறாங்க. ஆனா ஏன், என்னனு ஒரு நாளும் நினைச்சுப் பார்த்ததே இல்லையே!

’’….ஏன்னா கிருஷ்ணர் ஒருநாள் தான் ரொம்ப கருப்பா இருக்கோம்னு வருத்தப்பட்டாராம். ராதா அதுக்கு அவர் மேல பல வண்ணங்களைத் தூவி வண்ணமயமா ஆக்கினாளாம். கிருஷ்ணரும் அங்கிருந்த ராதைக்கும் கோபிகைகளுக்கும் பூசி எல்லாருமா விளையாடினாங்களாம். அதுதான் ஹோலி பண்டிகை.

’’…நிற பாகுபாடு இல்லாம எல்லோரும் ஒரே நிறம்னு சொல்லறதும் ஹோலியின் ஒரு அர்த்தம் மீ..’’

“முன்னடியெல்லாம் குளிர்காலம் முடிஞ்சு கோடைக்காலம் துவங்கும்போது ஹோலி கொண்டாடுவாங்க. பருவங்கள் மாறும்போது உடலில் உண்டாகும் மாற்றங்களைத் தணிக்க, கோடையில் ரத்தம் போல் மலரும் பலாச மலர்களின் சாற்றையும், மஞ்சள் மற்றும் வேம்பு அரைத்த சாற்றையும் உடலில் பூசி அறுவடையைக் கொண்டாடுவார்கள். அது அப்படியே மருவி இப்படி ஆயிருச்சு” என்றான்.

வழக்கமாகவே சரண் மீது, அவன் அறிதலின் மீது எனக்குப் பெரும் மரியாதை இருக்கும். இப்போது பெரும் பிரமிப்பு இருந்தது. எங்கே இவன் இதையெல்லாம் தெரிந்துகொள்கிறான்? எனக்கு வெட்கமாக இருந்தது, எனக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை என்று. பேசிக்கொண்டிருக்கையிலேயே தருண் கல்லூரியில் அன்றே ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை அனுப்பியிருந்தான்.

சரண் என் கண்களைப் பார்த்து ’’..மீ என்ன சொன்னான் பிரகலாதன் தீக்குள்ள உட்கார்ந்துட்டு” என்றான். நான் திகைத்து, திக்கித்திணறி ” வந்து ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்று எப்படியோ சொல்லிவிட்டேன்.

எனக்கு என்ன தெரியும் என்று என்னைச்சுற்றியிருக்கும் சிலருக்குத் தெரியும் ஆனால் எனக்கு என்ன தெரியாது என்று சரண் தருணுக்குத் தான் தெரியும்

சரண் மீண்டும் என் கண்களை உற்றுப் பார்த்து, “..வாசுதேவாய அப்படின்னா?” என்றான். “கிருஷ்ணர்டா, வசுதேவரின் மகன் வாசுதேவன்” என்றேன் பெருமையாக.

“இந்த நரசிம்ம அவதாரம் நடக்கிறப்போ வசுதேவரே இல்லை. பிறக்கலை அப்புறம் எப்படி வாசுதேவனும் கிருஷ்ணரும் வந்திருப்பாங்க? அவதார வரிசை தெரியும் இல்லையா உனக்கு? நரசிம்ம அவதாரத்துக்கு அப்புறம்தானே ராம, கிருஷ்ண அவதாரமெல்லாம்?” என்றான். அப்படியே திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன்.

சரணின் முகத்தின் பின்னால் வெளியே எரியும் நெருப்பின் செந்நிறம் பூசியது போல ஒளிர்ந்தது. குருவின் முன்பாக அமர்ந்து பாடம் கேட்பது போல அமர்ந்திருந்தேன்.’’..என்னடா எனக்கு ஒன்னுமே தெரியலையே..’’

சிரித்து என் தோளைத் தழுவிக்கொண்டு, “சரி பரவாயில்லை, வா நாம் மேலே போய் மீதியப் பேசலாம். வசுதேவரின் மகன் வாசுதேவரைப் பிரகலாதன் அன்னைக்குக் கும்பிடலை. ‘வாசுதேவன்’னு அவன் அப்போ சொன்னது… ‘வசு’ன்னா வாழ்க்கை, ‘தேவா’ன்னா இறை. எங்கும் எல்லா உயிரிலும் நிறைந்திருப்பவனே வாசுதேவன் என்று வணங்கினான். சரியா? வா போய் வசு, வாசு மாதிரி என்னென்ன இருக்குன்னு பேசலாம்” என்றான். ஒரு மாதிரி மந்திரித்து விட்டது போல் மேலே போனேன்.

ஹாலில் ஐக்கியா விரிப்பில் இருவருமாக அமர்ந்துகொண்டோம்.

’’…அப்பாவோட பெயரில் முதல் எழுத்தைக் கொஞ்சமா மாத்தி மகன்பேரச் சொல்லற வழக்கத்தில்தான் நீ நினைச்ச வசுதேவரின் மகன் வாசுதேவன்கிறது,

ராமரோட காயத்ரியில சொல்றதைப்போல தசரதனின் மகனான தாசரதின்னு அந்த காயத்ரி தொடங்கும்” என்றான். பலர் தசரத ராமனு சொல்றாங்க, அப்படி இல்லை அது தப்பு. அவன் தாசரதி… தாசரத ராமன்” என்றான்…’’

நான், “இரு இரு… என்னடா காயத்ரி மந்திரம் ராமனுக்குன்னு சொல்ற? காயத்ரி மந்திரங்கிறது பெண் தெய்வத்துக்குானதுதானே, லலிதா சகஸ்ரநாமம் மாதிரி?” என்றேன்.

கண்கள் கனிய’’… மீ ரொம்ப இல்லன்னாலும் அடிப்படையாவாவது சிலது நீ தெரிஞ்சுக்கணும். காயத்ரிங்கிறது அப்படி ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கான வழிபாட்டு மந்திரம் இல்லை. காயத்ரிங்கிறது ஒரு பொயடிக் மீட்டர் , மூணு 8 – 24 அக்ஷரங்களில் அமைந்த ஒரு பாட்டு, அல்லது கவிதை மாதிரி. அது எந்த சாமிக்கும் போட்டுக்கலாம். திருக்குறள் எப்படி எல்லா விஷயங்களையும் இரண்டு அடியில் சொல்லுதோ, அப்படி எந்தக் கடவுளுக்கு காயத்ரி சொல்லுறோமோ, அந்தக்கடவுளின் வீரத்தையோ, தோற்றத்தையோ, அவருக்குப் பிடிச்சமானவங்களையோ அல்லது அவர் யாருக்கு உறவோ, யார் அவர் கணவனோ அப்படிச் சொல்லிக்கலாம்.”

“உதாரணமா ராமன் காயத்ரியையே எடுத்துக்கோ. ‘ஓம் தசரதாய வித்மஹே சீதா வல்லபாய தீமஹி தன்னோ ராம: ப்ரசோதயாத்’

தசரதனின் மகனே… வித்மஹேன்னா அறிதல். உன்னை அறிகின்றோம். சீதா வல்லபாயன்னா சீதாவின் கணவனே… தீமஹின்னா தியானிக்கிறது. தன்னோ ராம… அந்த ராமச்சந்திர மூர்த்தி… ப்ரசோதயாத்… நமக்கு ஒளி அளிக்கட்டும் இல்லைன்னா நல்வழிகாட்டட்டும் இல்லைன்னா அறிவைத் தூண்டட்டும்னு அர்த்தம்” என்றான்.

அவன் ஸ்பஷ்டமாக அந்த மந்திரங்களைச் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. மானசீகமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்திடன் ’’ இதெல்லாம் எங்களுக்கு புரியாது ,நாங்க சொல்லகூடாது, சொல்ல முடியாதுன்னுதான, நீங்க மேல நாங்க கீழேன்னு சொல்லிட்டு இருக்கீங்க இதோ சொல்லறானே என் மகன்’’ என்று கேட்டேன்.

“ஆனா 24 அக்ஷரம்னு சொன்னியே, இதில் எழுத்து அதிகமா இருக்கே?” என்றேன்.

“இல்ல, அது ஒரு கணக்கு. அந்தச் சந்தத்தில் புள்ளி வச்ச எழுத்துகளைக் கணக்கில் எடுத்துக்கறதில்லை. அத்தனை தூரம் போன உனக்குத் தாங்காது விட்ரு” என்று புன்னகைத்தான்.

“இப்படி அப்பா பேரின் முதல் எழுத்தை மாத்தி, அம்மா பேரின் முதல் எழுத்தை மாத்தின்னு பேர் இருக்கு.

வேணும்னா வெண்முரசின் ரசிகையே இதைக் கேளு.

திருதராஷ்டிரனின் மகன்கள்தான் ‘தார்த்தராஷ்டிரர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். சமஸ்கிருத இலக்கணப்படி, ஒரு தந்தையின் பெயரிலிருந்து மகனின் பெயரைக் குறிக்கும்போது அந்தப் பெயரில் சின்ன மாற்றம் இருக்கும். திருதராஷ்டிர என்ற பேரிலிருந்து உருவான ‘தார்த்தராஷ்ட்ர’ என்ற சொல்லுக்கு ‘திருதராஷ்டிரனின் வாரிசு’ ன்னு அர்த்தம்.

கர்ணனுக்கு அவனது வளர்ப்பு அம்மா ராதையின் மகன் என்னும் அர்த்தத்தில் ராதேயன் என்று பெயர் இருக்கு.”

“இப்போ சொல்லு மீ ஆஞ்சநேயர் யாரு?”

நான் உற்சாகமாக, “அஞ்சனையின் மகன்” என்று ஏறக்குறைய கத்தினேன்.

“அவ்வளவுதான்! அஞ்சனையின் மகன் ஆஞ்சநேயன். கங்கையின் மகன் காங்கேயன் குந்தியின் மகன் கௌந்தேயன் அர்ஜுனனுக்கு அப்படி ஒரு பேர் இருக்கு, ஏன்னா அப்பா யாருன்னு தெரியாதே அதனால அம்மா குந்தி பேரு. அம்மா பேருக்கு முன்னாடி ஒரு ‘ஆ’ சேர்த்துக்கிட்டாலும் மகன்தான். பிருதையின் மகன் பார்த்தன்.”

வாய் பிளந்து என்பார்களே, அப்படி கேட்டுக்கொண்டிருந்தேன். “இதெல்லாம் எப்படிடா படிச்சே?

காயத்ரி படிச்சா ரொம்ப நல்லாருக்கும்மா? கேளேன்.”

“கிருஷ்ணருக்கு ‘ஓம் தாமோதராய வித்மஹே ருக்மிணி வல்லபாய தீமஹி’ன்னு வரும். தாம்புக் கயிறால் கட்டப்பட்டவன்னு அவர் லீலையைச் சொல்லி, ருக்மிணியின் கணவன்னு சொல்லுது இது.

ராதாவுக்கு பார்… ‘விருஷபானுஜாயை வித்மஹே கிருஷ்ணப்ரியாயை தீமஹி’ன்னு வரும். விருஷபானுவின் மகளே, கிருஷ்ணனுக்குப் பிரியமானவளேங்குறது ராதா காயத்ரி” என்றான்.

நான், “ஏண்டா ராதா கிருஷ்ணப்பிரியாங்கிறது ராதா வீட்டுக்காரருக்குத் தெரியுமா?” என்றேன்.

முறைக்க வந்தவன் வெடித்துச் சிரித்து, “நீ வேற… மீ, இங்க பாரு. ராதா கிருஷ்ண பிரேமம்ங்கிறது ஒரு பரகீய ரசம். அதாவது ஆன்மா பரமாத்மாவோட கொண்டிருக்கும் காதல். நீ உலகியல் காதலோடு அதை கம்பேர் பண்ணக்கூடாது” என்று சிரித்தான்.

 ’’..சீதாக்கு இருக்கா,,’’

’’..இருக்கே..’’ 

“‘ஓம் ஜனகநந்தின்யை வித்மஹே ராமப்ரியாயை தீமஹி தன்னோ சீதா: ப்ரசோதயாத்’…

ஏண்டா இங்கே ஜனகனின் மகள் ஜானகினு தானே வரணும்? ஏன் ஜனகநந்தினினு வருது?”

“இதுல ‘ஜா’ போட்டா மீட்டர் உதைக்கும்னு நினைக்கிறேன். அதனால் ஜனகனின் மகளேன்னு சொல்லாம, ஜனகனுக்கு மகிழ்ச்சி அளிப்பவளே, ராமனுக்குப் பிரியமானவளேங்கிறாங்க.”

உனக்கு எல்லாமே மனப்பாடமா தெரியுமா சரணா? ’

’…மனப்பாடமெல்லம் இல்லை மனப்பாடமே பண்ணக்கூடாது,என்றவன் நெற்றியைத்தொட்டுக்காட்டி புரிஞ்சுகிட்டதெல்லாம் இங்கே இருக்கு, எல்லாம் தெரியாது ஆனா கொஞ்சம் தெரியும்..’’

” சரிடா கணபதிக்கு?”

“தத்புருஷாய வக்ரதுண்டாயன்னு வரும்.’’

இரு இரு… நானே சொல்லறேன். வக்ரதுண்டாயன்னா உடைஞ்ச கொம்புன்னு தானே அர்த்தம்?

மறுபடி ஒரு கனிந்த புன்னகையுடன் ‘’..இல்லை மீ, வக்ரதுண்டாயன்னா வளைஞ்ச தும்பிக்கை கொண்டவனே!

சே! வெட்கம் வேதனை அவமானம்!

தொடர் தோல்வியில் நான் புண்பட்டுவிடக்கூடது என்பதற்காக உடனே  “இரு மீ… உன் ஏரியாவுக்கே வரேன். மரத்துக்குக் கூட விருக்ஷ காயத்ரி இருக்கு” என்று போனில் எடுத்து காண்பித்தான்.

“ஓம் வனராஜாய வித்மஹே மஹாவ்ருக்ஷாய தீமஹி தந்நோ வ்ருக்ஷ: ப்ரசோதயாத்”

காடுகளின் அரசனான இறைசக்தியை அறிவோமாக. பிரம்மாண்டமான விருட்சமாக இருப்பவரை நாம் தியானிப்போமாக. அந்த மரம் போன்ற உறுதியான சக்தி, நம்மை நல்வழிப்படுத்தட்டும்.

“இப்படி மிகப்பெரிய அரசமரத்துக்கு ‘மஹாராஜ்ய விருக்ஷ மந்திரம்’னே ஒண்ணு இருக்கு. இதுக்குள்ள போனா போயிட்டே இருக்கலாம்” என்றான்.

திகைப்பும் பெருமிதமுமாக ஆக இருந்தேன். சரண் சமஸ்கிருதக் கட்டுரைகளை ஆங்கிலமாக்கி இருக்கிறான் முன்பே. அவன் வாசிப்பின் தீவிரம் என்னால் எட்ட முடியாதது அல்ல, கற்பனை கூட செய்ய முடியாதது. இருந்தும் இன்று பெரிய திகைப்பும், ஒரு தத்புருஷன் முன்னால் அமர்ந்துகொண்டிருக்கிறோம் என்னும் உணர்வையும் அளித்தது.

இவனது மேதாவித்தனத்திற்கு இணையாக ஒரு பெண் கிடைக்கணும். அல்லது இவன் மேதாவித்தனத்தைப் புரிந்துகொண்டு இவன் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் பக்குவம் உள்ளவளாகவாவது இருக்கணும்.

“நாளைக்கு நேரமே ஏர்போர்ட் போகணும், போய் தூங்குவோம்” என்றான்.

திகைப்பு விலகாமலேயே உள்ளே போனேன்.

தத்புருஷன் சரண்.

Leave a Reply to 💶 Get the transfer of 36,824.41 US Dollars. Next ➵ graph.org/Transfer-04-14-3?hs=8e35f460c28065bb4a181f0fde7adfa5& 💶 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑