லோகமாதேவியின் பதிவுகள்

மும்பை-பழையன கழிதல்.

காலை உணவைச் சரணுக்குச் சமைத்துக்கொடுத்து, மதிய உணவையும் அழகிய சிறு கண்ணாடித் கிண்ணங்களில் அடைத்துக் கொடுத்து அனுப்பினேன். பொறுமையாகக் குளித்து, எனக்குப் பிடித்த இலைப்பச்சை நிறப் புடவையை கட்டிக்கொண்டேன். வீட்டில் நிறைய மலர்ந்திருந்த ராமபாண மல்லிகைப் பூக்களைத் தொடுத்துக் கொண்டுவந்து, பிரிட்ஜில் வைத்திருந்தேன். எடுத்துத் தலையில் வைத்துக்கொண்டேன். ஒன்றிரண்டு வேலைகளை முடித்துவிட்டு, பால்கனி வழியே கிரிக்கெட் விளையாடுபவர்களின் உற்சாகக் கூச்சல்களை ரசித்துக் கொண்டிருந்தேன்.

என்னைச் சந்திக்க வருபவர் நண்பரா என்றால் இல்லை. தெரிந்தவரா என்றால், அதுவும் இல்லை; இதுவரை நான்கு முறைதான் சந்தித்திருக்கிறேன். வேண்டியவரா என்றால், இல்லவே இல்லை .வெறும் ஒருவர் வருகிறார்.

தில்லியில் 1997 பிப்ரவரி 13-ம் தேதி விடைபெற்றுக்கொண்ட பிறகு, அவரை இன்று சந்திக்கவிருக்கிறேன். எனக்கு எதுவானாலும் சரியான closure வேண்டும். அதற்காகத்தான் இந்தச் சந்திப்பை ஒத்துக்கொண்டேன். நெஞ்சில் உறுத்திக்கொண்டிருக்கும் அந்தப்பூ முள்ளை எடுக்க வேண்டும்.

முகவரி அல்லது கூகுள் லொகேஷன் அனுப்பும்படி செய்தி வந்தது

அனுப்பினேன் 10.15க்கு வருவதாக தகவல். 10.20க்கு வாசலில் இருந்த செக்யூரிட்டி இண்டர்காமில் அழைத்து எனக்கு விருந்தினர் வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள், அனுமதிக்கும்படி சொன்னேன். சரணுக்கும் தகவல் போயிருக்கிறது, அவனும் அனுமதிக்கும்படி சொல்லியிருக்கிறான்.

வந்தவர் வேறு மாதிரியான எதிர்பார்ப்புகளோடு, உணர்வுபூர்வமான ஒரு சந்திப்பை அல்லது கண்ணீரால் மிதக்கும் ஒரு சந்திப்பைக் கற்பனை செய்துகொண்டிருந்திருக்கலாம்.

மராத்தியிலும் “…கோப்பால் கோப்பால், ஏன் இப்படி செய்தீர்கள் கோப்பால்? எப்படி உங்களுக்கு மனசு வந்தது…” போன்ற கண்ணீர்க் காட்சிகள் கொண்ட படங்கள் இருக்குமாயிருக்கும். நான் கதவைத் திறந்து வைத்திருக்கவில்லை; அவர் வந்து அழைப்பு மணியை அழுத்தவும் திறந்தேன். மிக இயல்பாக “ஹலோ வாங்க” என்று சொல்லி, மருதாணியிட்டுச் சிவந்திருந்த கைகளை நீட்டிக் கைகுலுக்கினேன். இரண்டு கைகளிலும், கூடுதலாக பாதங்களிலும் மருதாணி வைத்துக்கொண்டிருந்தேன். அவர் கொஞ்சம் ஸ்தம்பித்துப் போன மாதிரிதான் இருந்தது; இத்தனை மகிழ்ச்சியான ஒருத்தியை அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்தானே!

கதவைச் சாத்தும்போது கவனித்தேன், அவர் போட்டிருந்தது புத்தம் புதிய செருப்புகள். ‘இம்ப்ரெஸ்’ பண்ணுவதற்காக இருக்கலாம்.

உள்ளே வந்ததும் “என்னம்மா அப்படியே இருக்காய், ஒரு சேஞ்சுமே இல்லாம” என்று ஒரு மகா பொய் சொன்னார். நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “அப்படியா?” என்று புன்னகைத்தேன். தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்தேன். “காபி சாப்பிடுறீங்களா?” என்றேன். “காத்தாலதான் சாப்பிட்டேன், வேண்டாம்” என்றார். ஒரு “நல்ல காபி போட்டுத் தர்றேன், சாப்பிடுங்க” என்று ஒரு காபி போட்டுக் கொடுத்தேன்.சொன்னதில் இருந்த சின்னப்பகடியை கவனித்தமாதிரி தெரியவில்லை

“எங்க ஆத்துக்கு உன்னைக் கூட்டிண்டு போகணும்னு நினைக்கிறேன், நீ என்ன சொல்றாய்?” என்று கேட்டார். “எனக்கு உங்க வீட்டுக்கு வர்றதுக்கு இஷ்டமில்லை, வெளியே எங்காவது பொது இடத்தில் உட்கார்ந்து பேசலாம்” என்றேன். “சரி, ஒரு பெரிய நல்ல மால் இருக்கு, அங்கே கூட்டிண்டு போறேன். மும்பையைச் சுத்திக் காமிக்கிறேன் நோக்கு” என்றார். “சரி போலாம்” என்று எழுந்தேன்.

வீட்டைப் பூட்டி லிஃப்டில் இறங்கி வாசலுக்கு வரும்வரைக்கும் நான் ஏதோ உணர்வுபூர்வமாகச் சொல்லப்போகிறேன் என்று அந்த முகத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. நான் மிக இயல்பாக இருந்தேன். உண்மையிலேயே மனம் துடைத்துச் சுத்தம் செய்தது போல நிச்சலனமாக இருந்தது; திரும்பி வரமுடியாத தொலைவிற்கு வந்துவிட்டேனல்லவா.

“மும்பையைச் சுற்றிப் பார்த்தியா நீ?” “இல்லையே, ரெண்டு நாள்தானே ஆச்சு.” “அப்படின்னா வா, நோக்குச் சுற்றிக் காமிக்கிறேன்.”

ஒரு நீல பஸ் கடந்துசென்றது. “இதோ இந்த பஸ்ஸில் போனா நன்னாச் சுத்திக் காமிப்பான். ஏசி பஸ், நன்னாயிருக்கும், கூட்டமும் இருக்காது.” “வேண்டாம், நான் பஸ்ஸில் வரவில்லை, டாக்ஸியில் போலாம்.” “இல்லைம்மா, உங்க ஊர் பஸ் போல இல்லை, இது நல்ல பஸ்ஸாக்கும்.”

“இல்லை வேண்டாம், டாக்ஸின்னாதான் ஓகே.” “சரி வா, உன் இஷ்டம்.”

ஒரு டாக்ஸி பிடித்து என்னவோ மராத்தியிலோ அல்லது இந்தியிலோ பேசி எங்கோ போகச் சொன்னார். நான் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நோக்கு மும்பை பிடிச்சிருக்கா?”

“இல்லை, சுத்தமா பிடிக்கல.”

“ஏன்ம்மா?”

“தூசி, சத்தம், கூட்டம், பாஷை புரியலன்னு நிறைய காரணம் இருக்கு.”

“நல்ல பிளேஸ்மா, நீ இருந்தேன்னா பிடிச்சுடும்.”

“நான் தான் இங்க இருக்கப் போறதில்லையே. அப்புறம் எதுக்கு எனக்குப் பிடிக்கணும்? நான் என் ஊரில் சந்தோஷமா இருக்கேன், அதுவே போதும்.”

பேச்சை மாற்ற “பாஷை என்னம்மா பாஷை? இங்கே எல்லாருமே இங்கிலீஷும் பேசுவா.” என்று சொல்லிய கையோடு டாக்ஸி ஓட்டுநரிடம் “பையா ஆப்கோ…” என்று துவங்கி, “இங்கிலீஷ் தெரியும் தானே? இந்த மேடம் பேசினா புரியும் தானே?” என்று கேட்டார். அதற்கு ஓட்டுநர், “நஹி சாப், எனக்கு அட்சரம் கூடத் தெரியாது. சில கஸ்டமர் இப்படி வந்து என்னைச் சோதிக்கிறார்கள்” என்றார். நான் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டேன்..

“அரே, இவரென்னமோ இப்படிச் சொல்றார்? ஆனா எல்லாருக்கும் இங்கிலீஷ் பேசத் தெரியுமே!”

“பார்த்தேனே… அவர் சொன்னாரே!”

மால் வந்துவிட்டது. முந்தின நாள் நானும் சரணும் போய் ‘ஹல்திராம்’ஸில் பூரி சாப்பிட்ட அதே மால். டாக்ஸிக்குப் பணம் கொடுத்துவிட்டுத் திரும்பி, “இந்த மால்…” என்று அவர் தொடங்குவதற்குள், “இதுக்குத்தான் நான் நேத்து வந்து ரொம்ப நேரம் இருந்தேனே” என்றேன்.

“என்னம்மா சொல்றாய்? ஏன் முன்னாடியே சொல்லலை? வேற எங்கேயாவது கூட்டிப் போயிருப்பேனே!”

“எனக்கெப்படி இந்த இடத்துக்கு நீங்க கூட்டிட்டு வரப்போறீங்கன்னு தெரியும்?”

முகம் சுண்டிப்போய், “சரி வாம்மா” என்று உள்ளே கூட்டிப்போனார். வேலைநாள் என்பதால் அத்தனை கூட்டமில்லை. மஞ்சளாக நாற்காலிகள் ஏராளம் போட்டிருந்த உணவுக் கூடத்தில் (Food Court) ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தோம்.

“என்ன சாப்பிடறே?”

“எதுவானாலும்.”

“இங்க ஊர் பண்டம் ஒன்னு வாங்கித் தர்றேன், நோக்கு பிடிக்கும்.”

“சரி.”

“போய், என்னவோ ஆர்டர் கொடுத்து விட்டு வந்து. ’’அவா டோக்கன் சொல்லி கூப்பிடுவா, அப்போ போய் வாங்கணும்” என்றார்.

எனக்கு இப்படியான மால்களுக்குச் சென்று பழக்கமிருக்காது என அவர் நினைப்பது அப்போதுதான் புரிந்தது. “ஓ அப்படியா!” எனக்கேட்டு வைத்தேன்.

பிறகு ’97-ல் 47 லட்சத்துக்கு தான் வாங்கிய புனே வீட்டு மதிப்பு, இப்போது கோடிக்கணக்கில் உயர்ந்திருப்பதைச் சொன்னார். அவரது ‘டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட்’ பயிற்சிகளின் எண்ணிக்கை நாலாயிரத்தைத் தாண்டியதை, அந்தப் பயிற்சி குறித்த சிலரின் புகழுரைகளை போனில் காட்டிக் கூறினார்.

“அப்படியா! எங்கே… காட்டுங்க, பிரமாதமாச் சொல்லியிருக்காங்களே!” என்று சிலாகித்தேன்.

மனிதன் தான் எத்தனை எளிய உயிர்!

“அதற்குள் அந்த கொத்தம்பரி வடா எனப்பட்ட ‘கொத்தமல்லி வடை’ என்கிற கடலைமாவில் சோம்பு, உப்பு, நறுக்கிய மல்லி இலைகள் போட்டு, கட்டம் கட்டமாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுத்த வடை வந்தது. சுமாராக இருந்தது. எனக்கு சாஸ் தொட்டுச் சாப்பிடப் பிடிக்காது என்பதால் ஒன்றை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அதன் அருமை பெருமைகளைச் சொல்லிக்கொண்டே வந்தார்.

பின்னர் மெதுவாகப் பேச்சு அவரது ராணுவக் காலத்திற்கு வந்தது. நான் அதற்குக் காத்துக்கொண்டிருந்தேன். கார்கிலில் என்ன நடந்தது, தான் அமிர்தசரஸ் போனது, அங்கே எப்படி மிகக் கடுமையான நாட்கள் என்றெல்லாம் அந்தப் பேச்சுப் போனது.

“நான் அமிர்தசரஸில் இருந்தேன், தெரியுமோல்லியோ?”

“தெரியும் சரண் பிறந்து 1வருஷம் ஆனப்போ’’,

’’ரொம்ப ரொம்பக் கஷ்டம் அங்கே வேலை செய்யறது’’

’’அப்படியா?’’

இப்போது சரண், தருண், சாம்பவி யார் உடன் இருந்திருந்தாலும் நான் ஃபார்முக்கு வந்துவிடேன் இனி அங்கே இருப்பது ஆபத்து எனப் புரிந்துகொண்டிருப்பார்கள்.ஒரே ஓட்டமாக ஓடிப்போயிருப்பார்கள்

’’பின்னே பொற்கோவில் பாதுகாப்புன்னா சும்மாவா? எப்போ வேணும்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கும். அங்கே சும்மா ஏப்பைசாப்பையான ஆளெல்லாம் போட மாட்டாங்க, திறமையானவங்க மட்டும்தான் அங்கே போக முடியும்.”

“நம்பின பெண்ணுக்கு ஒரு பதிலைச் சொல்ல முடியாமல் ஓடி ஒளிஞ்சுக்கிறவங்களுக்கும் அங்கே இடம் இருக்கு இல்லையா? சொந்த வாழ்க்கையைத் திட்டமிட முடியாமல், குடும்பமாக மூன்று சிட்டிங் உட்கார்ந்து பேசினப்புறம், அந்தப் பெண்ணுக்கு ஒரு முறையான பதிலோ அல்லது விடைபெறுதலோ கூடக் கொடுக்காமல் ஓடிப் போயிட்டு, எப்படி உங்களால் இதெல்லாம் பெருமையாகப் பேச முடியுது?” என்றேன், நேரடியாகக் கண்களைப் பார்த்துக் கொண்டு, குரலைச் சற்றும் உயர்த்தாமல்.

“இதில உங்க அம்மா, ‘பொம்மனாட்டிகளை மதிக்கணும்’னு சொல்லுவான்னு வேற சொல்றீங்க? இதான் உங்க ஊரில் பொம்மனாட்டியை மதிக்கிற லட்சணமா?”

அப்படியே ஷாக் ஆயிட்டார்னு வடிவேலு சொல்லுவாரே, அதுதான் நடந்தது.

“என்னம்மா நீ இப்படி அரோகண்ட்டாஆயிட்டாய்? எனக்கென்ன தெரியும்? அந்த வயசில் பெரியவங்க எல்லாம் என்ன சொன்னாங்களோ அதைக் கேட்கணும்னுதான் நினைச்சேன். நீ ஏன்மா இப்படி ஹார்ஷாப் பேசறாய்?”

“பெரியவங்க என்ன சொன்னாலும் செய்யறவர், இந்த விஷயத்துக்கு வந்திருக்கக் கூடாதல்லவா?”

“அப்போ சின்ன வயசு, மெச்சூரிட்டி இல்லைம்மா. அதுக்கு என்ன பண்ணச் சொல்றாய்?”

“என்ன வயசு அப்போ உங்களுக்கு? எனக்குத் தெரியாது. இப்போ வரைக்கும், உங்க வயசைச் சொல்லுங்க.”

“அப்போ எனக்கு 29.”

“அதென்ன சின்ன வயசா உங்க ஊர்ல?”

பதிலில்லை. தலை கவிழ்ந்தது.

வெண் முரசில் பெண்ணின் கண்ணீருக்கு ஏழு தலைமுறை பதில் சொல்லவேண்டி இருக்கும் என்று இருப்பதை சொல்லலாமா என்று யோசித்தேன். இவருக்கு வெண்முரசெல்லாம் மகா ஒவர் டோஸாகிவிடும். வீணாக கொலைப்பழிக்கு ஆளாவானேன் என்று அந்த யோசனையை கைவிட்டேன்.

“இல்லை, நான் மூணு தரம் உங்காத்துக்கு போன் பண்ணினேனாக்கும். உங்க அக்கா எடுத்து இனிமே போன் பண்ணப்படாதுன்னுட்டா.”

அத்தனை சீரியஸான உரையாடலில் எனக்கு ‘மைக்கேல் மதன காமராஜன்’ நினைவு வந்தது. “திருப்பு திருப்புன்னு சொல்லி நான் ஸ்கூட்டரைத் திருப்பி, இதோ முழங்கால்ல அடிபட்டு…”

சிரிப்பை விழுங்கிக்கொண்டேன்.

“சரி, எத்தனை லெட்டர் போட்டிருக்கீங்க? எத்தனை போன் பண்ணி இருக்கீங்க? அப்படி ஒரு லெட்டர் போட்டு, ‘இப்படி இப்படி மிரட்டுறாங்க, எனக்குப் பயமா இருக்கு, நான் அமிர்தசரஸ்க்கு ஓடிப் போறேன்’னு சொல்லிட்டுப் போயிருக்கலாமே!”

“ஏய், எனக்கொன்னும் பயமில்லை எதுக்கு வீண் பிரச்சனைன்னுதான் அங்க போனேன்.”

அய்யோ மதனகாமராஜா…

பேச்சை மாற்ற,”என்னம்மா உன் புள்ளாண்டான் சரண்? நான் நாலு வார்த்தை கேட்டா, ஒரு வார்த்தையில பதில் சொல்றானே!”like mom like son”

நான் கொஞ்சம் சேரில் முன்னால் நகர்ந்து அமர்ந்து, “ஊரில் எங்க வீட்டுக்கு ரைட் சைடுல ஒரு வீடு இருக்கு” என்று ஆரம்பித்தேன். அவர் அகமகிழ்ந்து, “ஆஹா! இப்பதான் கூட்டிலிருந்து எட்டிப் பார்க்கிறாய் பெண்ணே, சொந்தக் கதையையெல்லாம் சொல்லப்போகிறாய்” என்று நினைத்து ஆவலாக, “சரி சொல்லு” என்றார்.

“அந்த ரைட் சைடு வீட்ல இருக்கார் பாருங்க, அவர் பேரு பழனிச்சாமி.”

“சரி.”

“அவர் மனைவி பேரு செல்வி.”

“சரி.”

“அந்தச் செல்வி மாதிரியா சரண் இருப்பான். என்னை மாதிரித் தானே இருப்பான்?

“ரொம்ப ஹார்ஷா பேசக் கத்துக்கிட்டிருக்கே நீ! முன்னாடியெல்லாம் இப்படிப் பேசவே மாட்டாய் .”

“இருக்கலாம்.”

மனம் முழுக்க ஒரு புகை போல மகிழ்ச்சி பரவுவதை உணர்ந்தேன்.அமைதி நிலவியது.

“சரி, மணி ஒன்னாயிடுத்தே, சாப்பிடப் போலாமா? ராஜஸ்தான் சாப்பாடு வேணுமா மராத்தி சாப்பாடு வேணுமா நோக்கு?”

“நான் ஏற்கனவே பல ராஜஸ்தான் சாப்பாடு சாப்பிட்டிருக்கேன். நாம மராத்தி உணவகம் போலாம்” என்றேன்.

இடையில் சரண், “All good?” என்று கேட்டிருந்தான். “எல்லாம் நல்லாத்தான் போகுது, கவலைப்பட ஒண்ணுமில்லை. ஒரு மராத்தி பவன்ல சாப்பிட்டுட்டு வீட்டுக்கு வந்துருவேன்” என்று பதில் சொன்னேன்.

தருண், “I hope you can handle the situation very well. If you are not comfortable, please leave the place” என்று செய்தி அனுப்பினான்.

நான் உற்சாகமாக ஒரு குரல் பதிவை அந்த ‘கொத்தமல்லி வடை’யைக் குறித்துச் சொல்லி அனுப்பிவிட்டு, அந்தப் பண்டத்தைப் புகைப்படமும் எடுத்ததையும் அனுபினேன் . நான் நிகழ்வை ‘left hand’-இல் டீல் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்பது அவனுக்குப்புரியும்

“டேக் கேர்” என்று இருவரும் செய்தி அனுப்பினார்கள்.

மற்றொரு டாக்ஸி பிடித்து உட்கார்ந்ததும், ‘மராத்தி பவன்’ போகுமாறு சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பி, “இப்போ சொல்லேன், என்னைப்பத்தின உன் ஒப்பினியன் மாறியிருக்கான்னு?” என்று கேட்டார்.

அதாவது லிஃப்டில் என்னை முதலில் போகச்சொன்ன, கார்க்கதவை நான் ஏறுவதற்காக திறந்து பிடித்துக்கொண்ட, எனக்கு சாப்பிட என்னத்தயோ வாங்கிக்கொடுத்த, டாக்ஸிக்கு எதையும் யோசிக்காமல் பணம் செலவு செய்த,கோடிக்கணக்கில் மதிப்புள்ள வீடு வைத்திருக்கிற, பலர் பாராட்டிப் புகழும் ஒரு முக்கியப்பணியில் இருக்கிற. இப்போது தன்னந்தனிமையில் இருக்கும் ஒருத்தரைப் பற்றிய என் ஒப்பினியன்!!!!!!

வான்டடா வண்டியில் ஏறுபவர்களை என்னதான் செய்வது?

’’ ஒப்பினியன் மாறறதுக்கு முதல்ல ஒப்பினியன்னு ஒன்னு இருக்கணுமே! அப்படி ஒன்னு இல்லவே இல்லை. நீங்க பார்க்கணும்னு நினைச்சீங்க, எனக்கும் சிலதையெல்லாம் கேட்கணும்னு இருந்தது, அவ்வளவுதான்!” எனக்கு இந்த கொங்கு பெல்ட்டில் இருந்து தப்பிக்கனும்னு தோணிருக்கு அதான் நானும் உங்களை விரும்ப காரணமாயிருந்திருக்கும். சோ ஒப்பினியனெல்லாம் ஒன்னுமே இல்லை

(“என்னடா… எப்படிப்போனாலும் கேட்டுப் போடறாளே!”) மீண்டும் பேச்சை மடை மாற்றி,

“நன்னாச் சமைப்பாயாமே! சரண் சொன்னான். ஒருநாள் உன் கையால சாப்பிடணும்.”

“அந்த வாய்ப்பே இல்லை. நீங்க எங்கேயோ இருக்கீங்க, நான் எங்கேயோ இருக்கேன்.”

அடுத்த முயற்சிக்குப்போனார்.

’’நீ என்னவோ நிறைய எழுதறாயாமே? ஏன்மா எழுதறதை இங்லீஷில் எழுதினா என்ன? நானும் வாசிப்பேனே’’

’’அதை விட ஈஸி நீங்க தமிழ் வாசிக்க கத்துக்கறது’’

’’ Why are you so harsh?”

“இல்லை, நான் உண்மையைச் சொல்றேன்.”

மகாராஷ்டிரா பவன் வந்துவிட்டது.

சின்ன உணவகம். தடியாய் ஒரு அம்மா தான் ஓனர் போல முன்னால் உட்கார்ந்திருந்தாள். ஒரு உயரமான திட்டில் பூனை ஒன்று தூங்கிக்கொண்டிருந்தது. மெல்ல அதன் காதில் மியாவ் என்றேன் திடுக்கிட்டு விழித்து கோபமாய்முறைத்தது. அதை போட்டோ எடுத்துக்கொண்டேன்.

உள்ளே போய் எதிரெதிரே போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் அமர்ந்தோம் ஓரளவுக்கு கூட்டம் இருந்தது.

“என்ன சாப்பிடறாய்?

‘’அதுதான் மகாராஷ்டிரா சாப்பாடுன்னு சொன்னீங்களே?’’

’’இல்லம்மா, நான் வெஜ் சாப்பிடறியான்னு கேட்டேன்.”

(என்ன ஒரு பெருந்தன்மை!).

“இல்லை வேண்டாம், நான் வீட்லதான் அசைவம் சாப்பிடறேனே. வெஜ் போதும்.”

“இல்லை, நீ சாப்பிடு. நன்னா இருக்கும்னு சொல்லுவா இங்கே எல்லாரும். மீன் சாப்பிடறியா?”

“சரி சொல்லுங்க.”

ஆர்டர் எடுக்க வந்தவன் அச்சு அசல் தனுஷின் ஜாடையிலேயே இருந்தான். ’’அவனிடம், தனுஷ் மாதிரி இருக்கான்னு நான் சொன்னேன்னு சொல்லுங்க” என்றேன். சொன்னதும் அவனுக்குப் பிடிபடவில்லை. “அரே, ரஜினி மருமகன்” என்று மராத்தியில் சொன்னதும், அவன் ஒளிர்ந்தான், வெட்கி மேலும் வசீகரமானான். நிஜமாகவே தனுஷின் சாயல் அப்படியே இருந்தது அவனுக்கு.

இரண்டு மீல்ஸ், ஒரு மீன் வறுவல் சொன்னார்.

மீல்ஸ் பெரிய தட்டில் ஏராளமான தொடுகறிகளுடன் வந்தது. தட்டின் நடுவில் காம்பஸ் வைத்து வரைந்தது போல நல்ல வட்டத்தில், மிக மிக மிருதுவான சோள ரொட்டிகள் இருந்தன. தணலில் வாட்டியவை.அப்படி ஒரு மிருதுவான சோள ரொட்டியை நான் செய்யக் கற்றுக்கொள்வேனானால், என் வாழ்நாள் முழுக்க அதைமட்டுமே சாப்பிடுவேன்.

ஒரு கத்தரிக்காய் கிரேவி மிகச் சுவையாக இருந்தது. பாசிப்பருப்பு கடைந்ததும், கடலைப் பருப்பைக் கரைத்துச் சாம்பார் போல இருந்ததும் ஓகே. நம்மூரிலும் செய்வதுதான்.

“நீ நான்-வெஜ் சாப்பிடறதில் நேக்கொன்னும் பிரச்சனை இல்லை” என்று மீண்டும் சொன்னார். அந்த மீன் கிழங்கு வேகவைத்தது போல மிக மென்மையாக கொஞ்சம் தித்திப்பாகவேறு இருந்ததால், (நேக்கே) பிடிக்கவில்லை என்று அப்போதே சொல்லிவிட்டேன்.

என் நண்பருக்கு செய்தி அனுப்பி என்னை கூப்பிடச் சொன்னேன்.அவரிடம் நான் இவருடன் வெளியெ வந்ததைச் சொல்லி இருந்தேன் முன்னாடியே. என்ன கவலையானாலும் உடனே பகிர்ந்துகொள்ளும், கண்ணீரை வெட்கமின்றி காட்ட முடியும் நண்பர் அவர்.

உடனே அழைத்தார். எப்போதுமிருக்கும் அதேஅணுக்கத்துடன் பேசி வைத்தேன்

எதிர்பார்த்தபடியே.’’ ஆராக்கும்’’

என் நண்பர் நெருங்கிய நண்பர் என்றவள் அவர் யாரென்றும், அவர் இருக்கும் இடத்தையும் சொன்னேன். பேச்சுமூச்சே இல்லை கொஞ்ச நேரத்துக்கு.

குடம்புளியை எதிலோ கரைத்துக் கலந்து உப்பிட்டு ரசம் போல இளஞ்சிவப்பில் ஒரு கிண்ணத்தில் கொடுத்தார்கள். எனக்குக் குமட்டியது.அதற்குப் பெயர் என்னவோ! அதைத் தனுஷிடம் கேட்டுகேட்டு வாங்கிப் பருகினார்கள் அவர் உள்ளிட்ட எல்லோருமே.

நம்மூரில் அன்லிமிட்டட் சாப்பாடு போல அங்கே அந்தச் சோள ரொட்டி கேட்கக் கேட்கக் கொண்டு வந்து அடுக்கினார்கள்.

“எனக்குச் சாதம் வேண்டும்” என்றேன். ஒரு சின்னக் கிண்ணத்தில் குழைய வேகவைத்த, கலங்கலான நிறம் கொண்டிருந்த அரிசி சாதத்தை லேசாக நெய்விட்டுக் கொண்டு வந்து தந்தான் தனுஷ். பார்க்கவே பிடிக்கவில்லை எனக்கு; மல்லிகைப்பூ போல இருக்கும் நம்மூர் பொன்னி எங்கே என்று நினைத்துக்கொண்டே, “தயிர் வேணும்” என்று சொல்லிவிட்டு கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டேன்;

என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு சுவையான அரிசிச் சாதம் சாப்பிட்டதே இல்லை,இனி சாப்பிடப் போவதுமில்லை. என்ன மணம் என்ன சுவை. அன்றைய நாள் அப்படி ஒருவருடன் கழிந்ததற்கான பிழையீடு என்று சொல்லலாம் அந்தச் சாதத்தை.

தனுஷ் தயிர் கொண்டு வந்ததும் நானே அவனிடம் “இது என்ன அரிசி?” என்று தமிழில் கேட்க, அவனுக்கும் அது புரிந்தது. “இது மகாரஷ்டிராவில் விளையும் இந்திரயாணி அரிசி” என்றான். பொருத்தமான அழகுப் பெயர்; சுவையென்றால் அப்படி ஒரு சுவை! வெறும் சாதத்தை அப்படியே சாப்பிடலாம். வரும்போது வாங்கிவர நினைத்தேன், நேரமில்லாமல் போனது. ஆன்லைனில் கிடைத்தால் வாங்கவிருக்கிறேன். Love you Indrayani!

வெளியே வந்தோம். வாசலில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. மறுநாள் ஹோலி என்பதால் இளைஞர் பட்டாளம் ஒன்று வர்ணங்களை வீசி எறிந்து, தப்பித்து ஓடி, துரத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். “போலாம்” என்றேன்.

டாக்ஸிக்கு காத்திருக்கையில் கட்டக்கடைசி முயற்சியாக “நோக்கு என்கிட்ட எதுனா கேட்கணுமா?” என்று கேட்டார். கொஞ்சம் யோசித்துவிட்டு “ஆமா” என்றேன்.

அவர் பரவசமாகி, “என்ன வேணும்னாலும் கேளு” என்றார்.

“பாவோபாப் மும்பையில் இருக்கா பார்க்கனும்?”

“என்னவாக்கும் அந்த சாதனம்?”

புன்னகைத்து, “விடுங்க, சொன்னா புரியாது. எனக்கு வீட்டுக்கு போகணும், டாக்ஸி பிடித்துக் கொடுங்க” என்றேன்.

“அவ்வளவுதானா? என்கிட்ட சொல்ல ஒன்னுமில்லையா நோக்கு?”

“சொல்லணும்னு இருந்ததைச் சொல்லிட்டேன், அவ்வளவுதான்!”

முகம் வாடிப் போய், “சரி… ஆனா அப்படி டாக்ஸியில் அனுப்பி வைக்க முடியுமா? நான் வந்து ஆத்தில் விட்டுட்டுதான் போவேன். அடுத்த முறை நீ மும்பை வந்தியானா எங்காத்துக்குக் கட்டாயம் வரணும். ஒரு மாமி நன்னாச் சமைக்கறா, நோக்கு அவளைச் சமைச்சுப் போடச் சொல்றேன்” என்றார்.

“வந்தால் பார்க்கலாம்” என்றேன்.

டாக்ஸி பிடித்து அமைதியாகப் பயணித்தோம். தெருவெங்கும் வண்ணமயமாக இருந்தது. வீடு வந்து இறங்கியதும், “நான் வீட்டுக்குள்ளே வரவேணாமா? இங்கேயே பை சொல்றியே?” என்றார்.

“இல்லை, சரண் வந்ததும் நான் வெளியே கிளம்பணும். நீங்களும் ரொம்பத் தூரம் போகணுமே, அதான்” என்றேன்.

“அப்போ சரி… பை, பை!”

முடிந்தது.

வாழ்கையையே புரட்டிப்போட்டதாக நினைத்த,முழு வாழ்க்கையையுமே பலியிடத் துணிந்த ஒன்று வெறும் இளமையின் அசட்டுத்தனங்களில் ஒன்று அவ்வளவுதான். அவ்வளவேதான். உண்மையில் அடுப்பில் இருந்து தப்பித்தான் வாணலியில் விழுந்திருக்கிறேன். முழுக்க கருகுவதற்குள் வாணலியிலிருந்தும் வெளியே தப்பித்து வந்துவிட்டேன்.

16-வது தளத்திற்கு ஏறுகையில் என் முகம் புன்னகையில் மலர்ந்திருந்ததை லிஃப்ட் கண்ணாடியில் பார்த்தேன்.

ஆத்துக்குள், சீ ….வீட்டுக்குள் நுழைந்து கைகால் கழுவிவிட்டு, அலெக்ஸாவை ஏசி போடச் சொல்லிவிட்டு ஆழ்ந்து உறங்கினேன். மாலை எழுந்து குளித்து விளக்கேற்றுகையில், நெஞ்சில் உறுத்திக்கொண்டிருந்த அந்தப் பூமுள் இருக்கிறதா என்று தடவிப் பார்த்தேன்; இல்லவே இல்லை!

சரண் சீக்கிரமே வந்துவிட்டான். மறுநாள் நான் கோவை புறப்பட வேண்டியிருந்ததால், இரவு எங்கேயாவது நல்ல பெரிய ஹோட்டலில் போய்ச் சாப்பிடலாம் என்று சொன்னான்.

என் முகத்தைப் பார்த்து, “நல்லாதானே இருக்கே?” என்றான். “ரொம்ப நல்லா இருக்கேன். இங்கே ‘ஆம் ரஸ்’ கிடைக்கும் இடத்திற்கு போய் சாப்பிடலாம்” என்றேன்.

அகல் விளக்கின் சுடர் முத்துப்போல் ஒளிர்ந்தது சரண் ஒற்றி கண்களில் வைத்துக்கொண்டான்.

2 Comments

  1. ஈஸ்வரி

    அன்புள்ள லோகமாதேவி அவர்களுக்கு,
    ஒருவிதமான அமைதியும் தீர்க்கமான மன நிலையை பார்க்க முடிகிறது உங்களிடம்.
    கண்டிப்பாக ஒரு ஆணுக்கு இந்த பதட்டமற்ற நிலை கிடைக்க போவதே இல்லை.
    தங்களை போல அம்மாக்கள் வளர்க்கும் ஆண் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இருக்கும் என்று நினைக்கிறேன்.
    அன்புடன்
    ஈஸ்வரி

  2. Preethi

    குடும்பத்துடன் நாங்கள் பங்கேற்ற தாவரவியல் வகுப்பு நாட்களை நினைத்து கொள்கிறேன். மகிழ்வான செறிவான நாட்கள்.
    Love u Indrayani ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑