உரை முடிந்ததும் காட்சன் நன்றி சொன்னார். “இப்படி ஒரு உரை இந்தத் தேவாலயத்தில் இனி ஒருபோதும் நடக்கப் போவதில்லை” அவ்வளவு நன்றாக இருந்தது என்றார். கிறிஸ்தவரல்லாத என்னை அங்கே அழைப்பதற்கு அவர் பெரிதும் மெனக்கெட்டிருந்தார். அவர் பெயரையும் காப்பாற்றவேண்டி இருந்தது.
பலரும் வந்து உரையின் சில குறிப்பிட்ட பகுதியைச் சொல்லிப் பாராட்டிப் பேசினார்கள். ஒரு பெண்மணி முக்காடிட்டுக்கொண்டு, “ஆண்டவரே! இந்த அம்மாள் (நான்தான்), அவர் மகன் (சரண்) ஆகியோருக்கு இந்த அருமையான உரையின் பொருட்டு அருள் புரியுங்கள்” என்றார். ஒருவர் வந்து உபகாமத்தில் இருந்த 7 தாவரங்களைச் சொன்னதில் மகிழ்ந்ததாகச் சொன்னார். மேலும் பலர் வந்து நன்றி சொன்னார்கள்.
என் பின்னால் அமர்ந்திருந்த ஒரு மூத்த பெண்மணி என் கைகளைப் பற்றிக்கொண்டு, “நான் சி.எஸ்.ஐ பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து, மெதடிஸ்ட் பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறேன். வாராவாரம் சர்ச்சுக்கு வருகிறேன். ஆனாலும் என்ன ஏதுன்னு ஒன்றும் தெரிஞ்சுக்கிட்டதில்லை. நீங்க சொன்னது ரொம்ப நல்லா இருந்தது, நன்றி…” என்றார். இன்னொரு பெண், தன் சின்ன வயதில் தான் நட்ட பலாமரம் எப்படிப் பலருக்குப் பிரயோஜனமாக இருந்தது என்பதையும், ஒருபோதும் தான் நினைத்தேயிராத, மறந்திருந்த அந்த மரத்தை இன்று என் உரை நினைவூட்டியது என்றும் சொன்னார். இப்படிப் பலர் பேசின பின்னர் விடைபெற்றுப் புறப்பட்டோம்.
டாக்ஸி வந்துவிட்டது. காட்சனும் ஜாஸ்மினும் பலரும் டாக்ஸி புறப்படும் வரை உடன் வந்து நின்று விடையளித்தார்கள். எனக்குக் களைப்பும் தூக்கமும் பசியுமாயிருந்தது. உடல்நலக் குறைவுக்கு எடுத்துக்கொண்ட மருந்துகள் உறக்கம் வரவழைப்பவை. ஆனால், இந்த உரையின் பொருட்டுத் தூக்கத்தைப் பற்றி நினைக்காமலிருந்தேன்.
காரில் ஏறி அமர்ந்தேன்.நல்ல சொகுசுக் கார் .. எப்படி இந்த காரைச் சரண் புக் செய்தான்? மிக அதிகக் கட்டணம் இருக்குமே?” என்று நினைத்தேன் கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை. “நான் அடிக்கடி இந்த டாக்ஸியின் சேவையைப் பயன்படுத்துவதால், அவ்வப்போது அவர்களே இப்படி ப்ரீமியம் வண்டிகளைச் சாதாரணக் கட்டணத்தில் அனுப்புவார்கள்” என்றான்.
நான் பேசியது குறித்து அவன் அபிப்பிராயம் கேட்டேன். “நல்லா பேசினே… ஆனா ‘Rice Christians’ பத்தி சொல்லி இருக்க வேண்டாம். யாரு ஆடியன்ஸ்னு பார்த்துட்டு கவனமா பேசணும். ஒரே ஒருத்தர் கூட நம் உரையினால் புண்பட்டுடக் கூடாது” என்றான். “சரி” என்று கேட்டுக்கொண்டேன். பின்னர் நல்ல வசதியான கார் இருக்கையில் அப்படியே ஆழ்ந்து உறங்கி, ஒரு மணி நேரம் கழித்துத்தான் கண் விழித்தேன்.
வீடு வர 6 மணி ஆகிவிட்டது. கடும் பசியில் இருந்தேன். சரண் வீட்டில் சாப்பிட எதுவுமில்லை , எனக்கும் சமைத்துச் சாப்பிடும் தெம்பு இல்லை. பொதுவாகவே எனக்கு மாலை 5-6 மணிக்குப் பசிக்கும். ஒரு நல்ல ‘டார்மோனா’ தேநீரும், பிஸ்கட்டுகள் அல்லது சிற்றுண்டி ஏதாவது சாப்பிட்ட பின்னரே விளக்கேற்றப் போவேன். கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 12.15-க்கு உணவு இடைவேளை என்பதால் மாலை இப்படிப் பசிக்கும்.
சரண் “என்ன வேணும் சாப்பிட? நான் ஆர்டர் பண்ணறேன் என்றான். “எதாச்சும் பஜ்ஜி” என்றேன். “எதாச்சும்னா என்ன பஜ்ஜி’’? வெங்காயம், மிளகாய், வாழைக்காய்… எதாச்சும்” என்றேன். “நான் பிளிங்கிட்டில் ஆர்டர் போடறேன், நீ போய் குளி” என்றான். சரண் வீட்டுக்கு ஒரு கிருஷ்ணர் படமும் அகல் விளக்கும் கொண்டு வந்திருந்தேன். மாலை விளக்கேற்ற வேண்டும். எனவே, “சரிடா, நான் குளிச்சுட்டு வந்து டீ போடறேன். அதுக்குள் நீ ஆர்டர் போடு” என்று குளிக்கச் சென்றேன்.
குளித்து வசதியான உடை மாற்றி நான் ஹாலுக்கு வரும்போது, ஒரு அட்டைப்பெட்டியில் நல்ல சுவையான, சூடான மசாலா டீயும், இன்னொரு வெப்பம் தாங்கும் பெட்டியில் மிளகாய், வெங்காயம், வாழைக்காய் பஜ்ஜிகளும் தொட்டுக்கொள்ளச் சட்னியுடன் காத்திருந்தன. “டீயா?” என்றேன். “ஆமா, இவங்க ரொம்ப நல்லா போடுவாங்க, குடிச்சுப் பாரு” என்றான். அவனுக்கும் browni இருந்தது. விளக்கேற்றிவிட்டு வந்து, அத்தனை பசியில் அத்தனை ருசியான டீயும் திண்பண்டங்களுமாய் சாப்பிட்டேன்.
எத்தனை அவசரமான வாழ்க்கை ஆனாலும் , எத்தனை விரைவான வசதிகள் இந்த பெருநகர வாழ்வில்?
அன்று காலையும் அவனிடம் சாம் ஹிக்கின்பாதம் நூலைக் குறித்து ஒருவேளை நீண்ட நேரம் பேச வேண்டியிருந்தால் தேவைப்படுமே என 6 பக்கமிருக்கும் குறிப்புகளை பிரிண்ட் செய்ய வேண்டும் என்றேன். “வழியில் எடுத்துக்கலாம் வா” என்றான். நான் உடை மாற்றி வெளியே வரும்போது, என் கையில் ஒரு A4 அளவில் மஞ்சள் உறையை சிரித்தபடி கொடுத்தான். உள்ளே எனக்குத் தேவையான பிரிண்ட் இருந்தது. ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனேன். “எப்படிடா?” என்றேன்.

“பிளிங்கிட்டுக்கு வாட்ஸ்அப்பில் விஷயத்தை அனுப்பினா 3 நிமிஷத்தில் கொண்டு வருவாங்க. ஒரு பக்கத்துக்கு 6 ரூபாய்” என்றான். பிளம்பரோ, எலக்ட்ரீஷியனோ ரிப்பேர் வேலைகளுக்கோ ஆள் வேண்டுமென அழைத்தால், “சொல்லுங்கள் ஹுஜூர்” என்று அலாவுதீன் விளக்கு பூதமாக உடனே வந்து நிற்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு 99 ரூபாய்கள் என வீட்டு வேலைக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். சமைப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ, வீடு பெருக்கித் துடைத்துப் பாத்திரம் தேய்ப்பதற்கோ ஒரு மணி நேரத்துக்கு என்று உடனே வருகிறார்கள். மாதமொருமுறை முழு வீட்டையும் 400 ரூபாய்க்கு ஜன்னல் கம்பி வரை துடைத்துச் சுத்தம் செய்து தருகிறார்கள்.
ஆதங்கமாக இருந்தது எனக்கு, வேடசெந்தூரில் நான் இப்படியான வேலைகளை ஒன்றொன்றாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதும் வேலையாட்களுக்கு தொங்கு தொங்கென்று தொங்கிக்கொண்டிருப்பதையும் நினைத்துக்கொண்டேன். மேலும், இனி மகன்களுக்கெல்லாம் அம்மா, அத்தை, அக்கா வந்து உதவி செய்ய வேண்டிய அவசியமில்லாதது துயரளித்தது.

அலெக்ஸாவை பல வேலைகளுக்கு சரண் பணித்திருக்கிறான் . “அலெக்ஸா, ஹால் லைட்டைப் போடு” – போடுகிறாள். “அலெக்ஸா, பெட்ரூம் லைட்டைப் போடு” – போடுகிறாள். “பெட்ரூம் ஏசியைப் போடு, 25-ல் வை” – வைக்கிறாள். “அலெக்ஸா, பெட்ரூம் லைட்டை அணை” – அணைக்கிறாள்.அலெக்ஸா பெட்ரும் லைட்டை மஞ்சளாக்கு! ஆக்குகிறாள். என்ன அநியாயம் பாருங்கள்.
சரண் ஒரு எலக்ட்ரிக் குக்கர் வைத்திருக்கிறான். அதிலேயே தாளிப்பு, பொரித்தல், வேகவைத்தல் எனச் சகலமும் செய்யலாம். இரவு படுக்கப் போகையில் உள்ளே அரிசி, பருப்பு , காய்கறிகளை வைத்து 7 மணி நேரம் கழித்துச் சமைக்கத் தொடங்க ஆணையிட்டுவிட்டுத் தூங்கலாம். அது காலையில் நான் எழுந்திருக்கையில் சமைத்து முடித்துச் சூடாகக் காத்திருக்கிறது. 6 மணி நேரத்துக்கு வெம்மையாக வைக்கவும் அறிவுறுத்துகிறான்.
Food Processor-ல் பொடிப் பொடியாகக் காய்கறிகளை நறுக்கிக்கொள்கிறான். எனக்கென்னவோ கையொடிந்தது போல இருந்தது. இனி எதற்கு அம்மாவும் அவளின் ஒத்தாசைகளும்?
வீட்டில் தோட்டத்திற்குச் சொட்டுநீர்ப் பாசனம் போட்டபோது இப்படித்தான் உணர்ந்தேன். எனக்கும் செடிகளுக்குமான தொடர்பே போய்விட்டது போல ஏக்கமாகியது. சில மாதங்களிலேயே அந்த குழாய்களைப் பிரித்தெடுத்து மாடியில் போட்டுவிட்டு, நானே நீரூற்றத் தொடங்கினேன். 50,000 செலவு செய்த வேலையை வீணடித்த என் செடிக்கிறுக்கிற்காக பல வருடம் திட்டு வாங்கினேன்.
தாளிக்க வாணலியில் எண்ணெய் ஊற்றிவிட்டு ஆர்டர் கொடுத்தால், எண்ணெய் சூடாவதற்குள் கடுகு வந்துவிடும் போலிருக்கிறது. நொடியில் ஆட்டோவோ காரோ வாசலுக்கு வருகிறது. எல்லாம் வேகம், வேகம், வேகம்தான். வேலை செய்யவும், சம்பாதிக்கவும், வாழவும் ஏராளமாய் வாய்ப்புகள் அங்கே. ஆனால், “ஏன் இத்தனை வறுமை?” என்று கேட்டேன்.
சாதிபற்று அல்லது வெறிதான் என்றான்
அலுவலகத்திலும் வெளியே அவன் சந்திக்கும் நபர்களும் “உன் பேர் என்ன?” என்றால் “சரண்” என்பானாம். சரணுக்கு அப்புறம்? ஒரு பெயரைச் சொன்னால், “அதன்பின்னர் என்ன?” என்கிறார்கள். “அப்படி ஒன்றும் இல்லை” என்றால், சரண் தாழ்ந்த பிரிவைச் சேர்ந்தவன் போலிருக்கிறது, அதனால் குடும்பப் பெயரைச் சொல்லாமல் இருக்கிறான் என்று விலகி நிற்கிறார்களாம்.
உணவு இடைவேளையில் சரண் சைவம் என்று சொன்னதும், முகமும் மனமும் மகிழ்ந்து தோளைத் தொட்டு தழுவிப் பேசுகிறார்களாம். சைவ உணவுக்காரன் நிச்சயம் உயர்ந்த ஜாதிதான் என்னும் நம்பிக்கை இருக்கிறதுஅங்கே
’’..அடுத்த முறை ஆக்டோபஸ் வரை விரும்பிச் சாப்பிடும் தம்பியை கூட்டிட்டுப்போ, சரண்” என்றேன்.
ஒரு ஆட்டோ ஓட்டினால் எளிதாக ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் அந்தத் தொழிலில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டினால் பல சாதிக்காரனும் வந்து ஆட்டோவில் உட்காருவான் என்பதால் ஓட்டாமல் வறுமையில் இருப்பவர்களை அறிவேன் என்றான்.
சிறு குழந்தைகள் ஒரு ரூபாய்க்காகக் காலில் விழுந்தும், தெருவிலிருந்து அப்படியே தொற்றி கூடவே ஆட்டோவில் அமர்ந்து கெஞ்சியும் பிச்சை எடுப்பதைப் மிகுந்த வேதனையுடன் சொல்லிக் கொண்டிருந்தான். வேதனையாக இருந்தது.

இரவு வெகுநேரம் வரை பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் காலை சரணுக்கு அலுவலகம் செல்ல வேண்டும் நானும் என்னைசந்திக்க கேட்ட மும்பைக்காரர் ஒருவருக்குச் சரி என்று சொல்லி இருந்தேன். சொல்லப்போனால் மும்பை வந்தது அந்த சந்திப்புக்காகவும் தான்.
இரவு எளிமையாகச் சமைத்துச் சாப்பிட்டுவிடு உறங்கப் போனோம்.காட்சனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. ’’..ஒரு புதிய சகாப்தத்தை துவங்கிவிட்டிருக்கிறீர்கள் கத்தி மேல் நடப்பது போன்ற சவாலான உரை ஆனால் சாமார்த்தியமாக கையாண்டீர்கள் நன்றி…’’ என்றிருந்தார். பதிலுக்கு ஒரு ஸ்மைலியை அனுப்பினேன்.
Leave a Reply