இரவு வெகுநேரம் உறக்கமில்லை. சரண் இத்தனை காற்று மாசு இருக்கும் இடத்தில் இருப்பது வேதனையளித்தது. எப்பவோ தூங்கினேன். அதிகாலையிலேயே எழுந்து இருவரும் தயாரானோம். வாசலில் நேற்று ஹோலிகா தகன் நடந்த சுவடே இல்லை, துப்புரவாக இருந்தது. சாம்பலை நெற்றியில் வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்வார்கள் என்று சரண் சொல்லியிருந்தான், அதன்பின்னர் சுத்தம் செய்திருப்பார்களாக இருக்கும்.

காற்று மாசு 300-க்கு அருகில் இருந்தது. இந்த புழுதிமண்டலத்தில் மூழ்கி இருக்கும் நகரில் ,முரணாகச் சாலைகளை உடனுக்குடன் சுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்கள். எந்த அடிப்படையில் இந்தப் பெருநகரம் இயங்குகிறது என்றே எனக்குப் புரியவில்லை.

விமான நிலையத்தில் சாப்பிடலாம் என்று நினைத்து வந்தோம், ஆனால் அங்கு எந்த உணவகங்களும் வெளியே இல்லை. சரணுக்கு ஹோலி விடுமுறை, எனவே அவன் வீட்டுக்குப்போய் சாப்பிட்டுக் கொள்வதாகச் சொன்னான். நான் உள்ளே சென்று டிஜி யாத்ராவின் உதவியால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போர்டிங் பகுதிக்கு வந்தேன்.

பெண்களைச் சோதனையிடும் இடத்தில் இருந்த பெண்காவலர் ‘நமஸ்தே ஜி’ சொல்லி வணங்கி, “நீங்கள் சென்னையா?” என்றார். “இல்லை, கோயம்புத்தூர்” என்றேன். அவருக்கு ‘மனசிலாகவில்லை’. சென்னை நங்கநல்லூரில் சில வருடம் பணியாற்றியதாகச் இந்தியில் சொன்னார். எனக்குப்புரிந்தது இருவரும் பரஸ்பரம் புன்னகைத்துக்கொண்டோம்.

புத்தகக்கடை இருந்தது, ‘வெண்முரசு’ இருக்குமா என்று தேடினேன்; இல்லை. தமிழே இல்லை எந்த வரிசையிலும். புது தில்லி விமான நிலையத்திலெல்லாம் நிறைய தமிழ் நூல்கள் இருந்தன.

ஓர் இடத்தில் பலர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஹோட்டல் என நினைத்து அங்கே செல்ல முயன்றபோது ஒரு பணியாளர் மிக மென்மையாக, “அங்கே லவுஞ்சில் இருக்க சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டும்தான் வரலாம்” என்றார். சரி என்று திரும்பி வேறு உணவகத்தைத் தேடினேன். ‘Gully’ என்று ஒரு உணவகம் இருந்தது. என்ன பேரோ, என்ன அர்த்தமோ!

வரிசையில் நின்று ஒரு மசால் தோசையை 450 ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்தேன். அதிகாலைக் கொள்ளை! உணவகத்தின் பணிப்பெண் ஒருத்தி டோக்கன் எண்ணைக் கூவி கூவிச் சொல்லிக்கொண்டிருந்தாள். அழகி,இல்லையில்லை பேரழகி. கண்கள் முகத்தில் கால் பாகம் இருந்தன.காதில், மூக்கில் கழுத்தில் ஒன்றுமில்லை. கொண்டை போட்டு மேலே ஒரு தொப்பி, சாம்பல் நிறச் சீருடை. “உலக அழகிகள் கோடி உன் காலைக் கழுவலாம் வாடி” என்ற பாட்டை இவளுக்குத்தான் பாட வேண்டும்.

என் டோக்கன் 18. நான் அவளிடம் சென்று, “என்னைக் கூப்பிடுகையில் ஆங்கிலத்தில் எண்ணைச் சொல்ல வேண்டும், இந்தியில் வேண்டாம்” என்றேன். புன்னகைத்துத் தலையசைத்தாள். பத்து வரை இந்தியில் தெரியும், 18-க்கு என்ன செய்வது?

அந்த 450 ரூபாய் மசால் தோசை கால் கரண்டி மாவில் முறுகலாகச் செய்யப்பட்டிருந்தது. வெகு சுமாரான சட்னிகளுடன் கொடுத்தார்கள். வேடசெந்தூர் வந்து சமைத்துச் சாப்பிடுவதைப் பற்றி நினைத்துக்கொண்டே சாப்பிட்டேன்.

ஏர் பஸ்ஸில் அமர்ந்து தருண், சரணிடம் விமானம் ஏறப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். என் அருகில் ஓர் அம்மாள் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். நான் போன் பேசி முடித்ததும், “தமிழா?” என்று ஆர்வமாகக் கேட்டார். “ஆமாம்மா” என்றேன்.

“தமிழ் பேசிக் கேட்டு எத்தனை நாளாச்சு! சொந்த ஊர் சேந்த மங்கலம். இங்கே மகன் வீட்டுக்கு வந்து 26 வருஷமாச்சு. வீட்ல மராத்திதான் பேசறாங்க எல்லாரும். பேரப்பிள்ளைகளும் ஸ்கூல்லயும் மராத்தியும் இந்தியும்தான் படிக்கறாங்க, அதனால் வீட்ல தமிழ் பேசினா பாடம் படிக்கறது கஷ்டமாயிடும்னு பையனும் மருமகளும் சொல்றாங்க. எனக்கு தமிழே மறந்துபோயிருச்சு” என்றார்.எனக்கு அவரைப் புரிந்துகொள்ள முடிந்தது. மூன்று நாட்களே எனக்கு கண்ணைக்கட்டியதே!

அவர் கையைப் பற்றிக்கொண்டேன், மகன் ஏதோ ஒரு தனியார் வங்கியின் பெயரைச் சொன்னார், அங்கே உதவி மேலாளர். வீட்டு வாடகை, பிள்ளைகள் படிப்பு, போன் கட்டணம் எல்லாம் வங்கியே கொடுக்கிறதாம். கல்யாணம் செய்து கொடுத்த பெண் கோவைப்புதூரில் இருக்கிறாள், அங்கே ரொம்ப வருஷம் கழித்துப் போவதாகவும், பெண் வயிற்று பேரப்பிள்ளைகளின் கோடை விடுமுறை வரை அங்கே இருந்துவிட்டு மீண்டும் இங்கே வரப்போவதாகச் சொன்னார். என்னைக் குறித்து அவர் எதுவுமே கேட்கவில்லை, அவருக்குத் தமிழில் யாரிடமாவது பேச வேண்டும் என்னும் ஆதங்கம் இருந்திருக்கும் போல.

விமானத்தில் கூட்டமில்லை. என் மூன்று இருக்கை வரிசையில் இரண்டு இருக்கை காலி, எனவே பணிப்பெண்ணிடம் சொல்லிவிட்டு ஜன்னலோரம் அமர்ந்துகொண்டேன். விமானி சுஷீல் குமார், துணை விமானி பபிதா.

இறக்கைக்கு நேர் மேலே இருந்த இருக்கை என்னுடையது. எட்டி இறக்கையின் ஸ்க்ரூவெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். எனக்கு முன் வரிசையில் இளம்தம்பதி கைக்குழந்தையுடன் வந்து அமர்ந்தார்கள். அந்தப் பாப்பா கொள்ளை அழகு, குட்டி முகம், கண்கள் கழுவிய குருவிமுட்டை போல பளபளப்பாக.

அவ்வப்போது பாப்பா சிணுங்கியது. அப்படிச் சிணுங்குகையிலெல்லாம் அந்தப் பெண், “அச்சோ அத்தை வர்றா பாரு” என்று மிரட்டினாள். என்ன அநியாயம்? நாத்தனார் மீது அப்படி ஒரு விரோதம் போல.

விமானம் புறப்படுகையில் அந்தப் பெண் கணவன் தோள் மீது தலைசாய்த்துக்கொண்டாள்; நான் அவசரமாகக் கண்களை விலக்கிக்கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தேன். Physical intimacy-யின் இப்படியான சின்னச் சின்ன விஷயங்களுக்கு ஏக்கம் இருக்கும் லட்சக்கணக்கான பெண்களின் கணவர்களுக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியாது. அந்தப்பாப்பா ஜன்னலோரம் எட்டி எட்டி வேடிக்கை பார்க்கையில் அதன் கருப்புவளையலிட்ட பிஞ்சுக்கைகள் தெரிந்தன.

சுஷீல் குமார் பாதிப் பயணத்தில் தேவையில்லாமல் விமானம் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் பறக்கிறது என்பதையெல்லாம் சொல்லி, வயிற்றில் உப்பு, புளி, காரமெல்லாம் கரைத்துக்கொண்டிருந்தார்.

கொஞ்சம் முன்னதாகவே கோவை வந்து சேர்ந்தேன். பெட்டிக்குக் காத்திருக்கையில், தன் சூட்கேஸை எடுக்கக் காத்திருந்த ஓர் இளம்பெண், கொஞ்சம் முன்னால் நின்று,பெல்ட்டில் வந்த அவளது சூட்கேஸைக் எடுத்துக்கொண்ட அப்பாவிடம் கோபித்துக்கொண்டு, தரையை உதைத்துச் சிணுங்கிக்கொண்டே சென்றாள். அவர் வேண்டுமென்றே செய்திருக்கிறார் போல. சிரித்துக்கொண்டு அவளை தழுவிக்கொண்டார். இப்படி அப்பாக்களும் இருக்கும் உலகுதான் இது. பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

காரில் ஏறுமுன்பு, கல்லூரியில் நான் விடுப்பு எடுக்கையில் இந்த வருடப் படிப்பை முடிக்கவிருக்கும் ஒரு மாணவி, தன் காதலனுடன் திருமணம் நடக்க வீட்டில் எதிர்க்கிறார்கள் என்றும், தன் மனம் மாற அக்கா வீட்டில் கொண்டு விட்டிருக்கிறார்கள் என்றும், தனக்கு விருப்பமில்லாத வேறு திருமணம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்றும் என்னிடம் அழுதுகொண்டிருந்தது திடீரென நினைவுக்கு வந்தது. “அவரை வந்து நேரே பார்த்துப் பேசச்சொல்லு தேவைன்னா நான் வந்து பேசறேன், கவலைப்படாதே” என்று தைரியம் சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தேன்.

கோவையில் வெயில் தொடங்கி இருந்தது. மதிய உணவை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன். 3 நாள்தான் என்றாலும் நீண்டதாக இருந்தது இந்த மும்பைப் பயணம்.

மறுநாள் கல்லூரியில் பணியில் சேர்ந்தேன். அந்தப் பெண் முதல் ஆளாகத் துள்ளிக் குதித்து என் அறைக்கு வந்தாள். “மேம், எங்க வீட்டுல சரின்னு சொல்லிட்டாங்க, 6-ம் தேதி நிச்சயதார்த்தம்” என்றாள். அவளின் கையைப் பிடித்து வாழ்த்துச் சொன்னேன். அவள் கையில் புதிதாக மஞ்சள் நிற நோன்புக்கயிறு கட்டியிருந்தாள்.

தெய்வங்களே கைவிடாது காத்துக்கொள்க!

நிறைவு.