லோகமாதேவியின் பதிவுகள்

சஹேலி!

 சிறுமியாக இருந்தபோதிலிருந்தே மருதாணி வைத்துக்கொள்வதில் பிரியமுண்டு.   வீட்டு முற்றத்தில் வளர்ந்த மருதாணிச் செடியிலிருந்து இளந்தளிர் இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, புளி, சர்க்கரை, கிராம்பு, எலுமிச்சைச் சாறு எல்லாம் சேர்த்து அரைத்து, இரவு முழுவதும் விரல்களில் தொப்பியும், உள்ளங்கையில் பெரிய வட்டமும் அதைச் சுற்றி சின்னச் சின்ன வட்டங்களுமாக  ’’இட்லி தோசை டிசைன்” என்று அழைக்கப்படும் அந்த எளிய வடிவம் மறுநாள் ரத்தசிவப்பில் கைகளை அழகாக்குவது ஒரு மாயம் போல் இருக்கும் எனக்கு. அம்மா சமயங்களில் உயிருடன் கட்டெறும்புகளையும் வைத்து அரைப்பதை கண்ணை பாதி மூடிக்கொண்டு பார்த்திருக்கிறேன்

 இப்போதும் மருதாணி வைத்துக்கொள்கிறேன் நிறம் மங்க மங்க தொடர்ந்து வைத்துக்கொள்வது வழக்கமாகி இருக்கிறது. மருதாணிச்சிவப்பு இல்லாத உள்ளங்கை எனக்கு வளையல் இல்லாத கை, கம்மல் இல்லாத காது போல ஒரு மூளியான உணர்வை கொடுக்கும்.

வீட்டுத்தோட்டத்தில்  மருதாணிச்செடி இருக்கிறது என்றாலும் பறித்து அரைக்க இப்போது நேரம் இருப்பதில்லை .  செயற்கை ஹென்னாக் குழம்புகளை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. அதனால்தான் ராஜஸ்தானிலிருந்து நேரடியாக வரவழைக்கும் சஹேலி (Saheli) இயற்கை மருதாணிப் பசையை இப்போது பயன்படுத்துகிறேன்.சஹேலி என்றால் தோழி என்று பொருள்  உருது மொழியில்.எத்தனை பொருத்தமான அழகுப்பெயர்.

சஹேலி மருதாணி தயாரிக்கப்படுவது ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள சோஜத் (Sojat) பகுதியில் சோஜத் தான் உலகின் “மருதாணி நகரம்” என்றே அழைக்கப்படும் இடம். அங்குள்ள வறண்ட, வெப்பமான காலநிலையும் மணல் கலந்த களிமண்ணும் Lawsonia inermis தாவரத்தின் இலைகளில் லாசோன் (lawsone) என்ற இயற்கை நிறமியை அதிக அளவில் சேர்க்கின்றன. இதனால்தான் சோஜத் மருதாணி மற்ற பகுதிகளின் மருதாணியை விட அடர் நிறத்தையும் நீடித்த தன்மையையும் தருகிறது.  

ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய பாலைவனப் பகுதிகளில் மக்கள் கடும் வெப்பத்திற்கு நடைமுறை சிகிச்சையாக கை, கால்களில் மருதாணிக் குழம்பைப் பூசிக்கொண்டனர் — ஈரமான குழம்பு ஆவியாகும்போது ஏற்படும் குளிர்ச்சி, நவீன குளிரூட்டும் தொழில்நுட்பம் இல்லாத அக்காலத்தில் சிறிது நேர நிவாரணத்தை அளித்தது. காலப்போக்கில் இந்த நடைமுறைப் பயன்பாடு அலங்கார, சடங்கு, மங்கல அர்த்தங்களுடன் இணைந்தது, குறிப்பாக திருமணங்கள் மற்றும் திருவிழாக்களில் . இப்பகுதியே  மருதாணித் தாவரத்தின் முதன்மையான வளரும் மண்டலமாக இருந்ததால், மருதாணி ஏராளமாகவும் மலிவாகவும் கிடைத்து, பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கலாம்.

ராஜஸ்தான் ஒரு முக்கிய உற்பத்தி மையமாக இருந்ததால், அதன் மருதாணியும் (கை, கால்களில் நுணுக்கமான வடிவங்களை வரையும் மெஹந்தி கலைப் பாரம்பரியமும்) வர்த்தக வழிகள் மற்றும் திருமண உறவுகள் வழியாக வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், பின்னர் இதே போன்ற காலநிலை மற்றும் பண்பாட்டு சூழல் கொண்ட மத்திய கிழக்கிற்கும் பரவியது.

பாலி மாவட்டத்தில் உள்ள சோஜத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் இப்போதும் 2026 ரிலும் இந்தியாவின் மொத்த மருதாணி உற்பத்தியில் தோராயமாக 80% வழங்குகின்றன, ( இது 90%க்கும் மேல் கூட இருக்கலாம்). இந்தியா உலக மருதாணி விநியோகத்தில் சுமார் 80% வழங்குவதால், சோஜத் ஒன்றே உலக மருதாணி வர்த்தகத்தின் பெரும்பகுதியை நிர்ணயிக்கிறது என்று கூட ச்சொல்லலாம்.

இதற்குக் காரணம் தாவரவியல் ரீதியானது, வர்த்தக ரீதியானது மட்டுமல்ல காலநிலை சார்ந்ததும் கூட. சோஜத்தின் அரை-வறண்ட காலநிலை, மணல் கலந்த களிமண், கடுமையான வறண்ட வெப்பம் (கோடையில் வெப்பநிலை அடிக்கடி 45°C கடக்கும்) ஆகியவை Lawsonia inermis என்னும் மருதாணிச்செடியின் வளர்ச்சிக்கு சிறந்த சூழலை உருவாக்குகின்றன. இந்த வறட்சியில் வளரும் தாவரங்கள் குளிர்ந்த அல்லது ஈரப்பதமான பகுதிகளில் வளரும் மருதாணியை விட கணிசமாக அதிக lawsone செறிவை உருவாக்குகின்றன — இதுவே அடர்ந்த, நீடித்த சாயத்திற்கு நேரடியாக வழிவகுக்கிறது

இந்த ஊரின் மருதாணிப் பொருளாதாரம் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது — சோஜத் ஒரு முழுமையான மருதாணி பதப்படுத்தல் சுற்றுச்சூழல் அமைப்பையும் கட்டியெழுப்பியுள்ளது: சுத்தம் செய்யும் யூனிட்டுகள், அரைக்கும் ஆலைகள், ஈரப்பத கட்டுப்பாட்டு பேக்கேஜிங் வசதிகள், தர சோதனை ஆய்வகங்கள், தரகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் அடர்ந்த வலையமைப்பு ஆகியவை UAE, சவூதி அரேபியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகளின் வாங்குபவர்களை நேரடியாக சோஜத்துடன் இணைக்கின்றன .

சோஜத்  60 ஆயிரம் மக்கள் தொகை கொண்டிருக்கும் ஒரு சிறிய நகரம்தான் .ஒப்பீட்டளவில் இந்தியாவின் பல மாவட்டத் தலைநகரங்களைக் காட்டிலும் மக்கள்தொகை குறைவு. ஆனால் இந்த ஒரு சிறு நகரமும் அதைச் சுற்றியுள்ள பாலி மாவட்டப் பகுதியும் இணைந்து இந்தியாவின் மொத்த மருதாணி உற்பத்தியில் 80%-90% வரை வழங்குகின்றன,  

சஹேலி பசையின் தன்மைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன . எந்த ரசாயனமும் சேர்க்கப்படாமல், காபிக்கொட்டைச்சாறு மட்டும் சேர்ககப்பட்டு மிக மென்மையாகக் குழைக்கப்பட்டு, தரமான பாக்கெட்டுகளில் கிடைக்கிறது; குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பல மாதங்கள் பயன்படுத்தலாம். ஒரு மணி நேரத்திலேயே கைகள் ரத்தச்சிவப்பு நிறத்தில் சிவந்துவிடும் என்பது, இதன் லாசோன் செறிவு உண்மையிலேயே அதிகம் என்பதற்குச் சான்று. காய்ந்த பிறகு அதைச் சுரண்டி எடுத்தவுடன் தண்ணீரில் கழுவாமல், நீலகிரி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவினால், நிறம் இன்னும் நீண்ட நாட்களுக்கு அடர்த்தியாக நிலைத்திருக்கும் என்பது என் அனுபவம்.

இந்த “லாசோன்” என்ற வேதிப் பெயரின் மருதாணிச்செடியின் பேரினப்பெயரின் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது.

18-ம் நூற்றாண்டில் இன்று தாவரவியல் வகைப்பாட்டு முறையின் தந்தை என்று போற்றப்படும் கார்ல் லின்னேயஸ்   ஒரு ஏழைப் போதகரின் மகனாக ஸ்வீடனின் ஸ்மாலண்டு எனும் வறிய பிராந்தியத்தில் பிறந்தார். இளமையில் அவரிடம் பணமே இல்லை; பல்கலைக்கழகக் காலத்தில் ஆசிரியர்களின் நூலகங்களையும் தயாள மனப்பான்மையையும் நம்பியே கல்வி கற்றார். 1735-ல் ஹாலந்துக்குச் சென்று தன் புரட்சிகரமான Systema Naturae கையெழுத்துப் பிரதியை வெளியிட முயன்றபோதும், அவரிடம் அச்சிடச் செலவு செய்யப் பணம் இல்லை.

அப்போது அவருக்கு உதவிய இருவரில் ஒருவர் — ஐசாக் லாசன் (Isaac Lawson) என்ற ஸ்காட்லாந்து மருத்துவர். மரபுரிமையாகப் பெற்ற செல்வத்தைக் கொண்டிருந்த லாசன், தன் நண்பர் க்ரோனோவியஸுடன் இணைந்து, லின்னேயஸின் அந்த நூலின் அச்சிடல் செலவை ஏற்றுக்கொண்டார். அந்த ஒரு உதவியே, இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் தாவர வகைப்பாட்டு முறையை சாத்தியமாக்கியது.

நன்றியுணர்வுடன், லின்னேயஸ் தன் நண்பரின் பெயரை என்றென்றைக்கும் நினைவுகூரும் வகையில், கிழக்கத்திய பாலைவனங்களில் காணப்பட்ட ஒரு தாவரத்திற்கு — நம் மருதாணிக்கு — Lawsonia என்று பெயரிட்டார். அந்தத் தாவரத்தில் காணப்படும் சிவப்பு-ஆரஞ்சு நிறமியும் அதே பெயரிலிருந்தே lawsone (லாசோன்) என்று அழைக்கப்பட்டது.

“Lawson” என்பது ஓர் ஆங்கில/ஸ்காட்டிஷ் தந்தைவழிப் பெயர் (patronymic surname) , இதை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

  • Law — “Lawrence” (Laurence) என்ற முதற்பெயரின் இடைக்கால சுருக்க வடிவம். “Lawrence” இலத்தீன் “Laurentius” என்பதிலிருந்து பிறந்தது — அதாவது “Laurus” (லாரல் மரம்/இலை) என்பதுடன் தொடர்புடையது; மூலப் பொருள் “லாரல் மரத்துடன் தொடர்புடையவர்” என்பதே.
  • -son — “மகன்” எனப் பொருள்படும்.

எனவே “Lawson” = “லா(ரன்ஸின்) மகன்”, அதாவது “லாரல் மரத்துடன் தொடர்புடையவனின் மகன்” எனும் நீண்ட வழிமுறையில் ஒரு மரத்தின் பெயரிலிருந்தே இப்பெயர் தோன்றியுள்ளது — Johnson (John-ன் மகன்), Robertson (Robert-ன் மகன்) போன்ற அதே அமைப்பு முறையில் உருவான ஒரு பொதுவான ஸ்காட்டிஷ் குடும்பப்பெயர்தான் இது.

 ஒரு மரத்தின் (லாரல்) பெயரிலிருந்து தொடங்கிய குடும்பப்பெயர், தலைமுறை தலைமுறையாகக் கடந்து, ஐசாக் லாசன் என்ற மனிதர் வழியாக, இறுதியில் இன்னொரு தாவரத்தின் மருதாணியின் , விஞ்ஞானப் பெயராகவே மாறியிருப்பது  எத்தனை அழகு?.

உள்ளங்கையில் மருதாணி வைத்துக்கொளும் போதெல்லாம், அதன் பின்னணியில் இருக்கும் இந்தச் சங்கிலியை நினைத்துப் பார்க்கிறேன் — சோஜத்தின் வறண்ட மண், ஒரு ஏழை ஸ்வீடிஷ் இளைஞனுக்கு உதவிய செல்வந்த மருத்துவரின் நட்பு, ஒரு மரத்தின் பெயரிலிருந்து பிறந்த குடும்பப்பெயர், இறுதியில் என் உள்ளங்கையில் பதிந்த சிவப்பு நிறம்.

ஒரு சிறிய தாவரம், இத்தனை நூற்றாண்டுகளையும் கண்டங்கள் கடந்த கதைகளையும் எடுத்துக்கொண்டு, நம் கையில் வந்து செக்கச்செவேலெனச் சேர்ந்திருக்கிறது!

இயற்கையான, தூய்மையான மருதாணியைப் பயன்படுத்துவது வெறும் அழகுக்காக மட்டுமல்ல — அது ஒரு பாரம்பரியத்தைத் தொடர்ச்சியும் கூடத்தான். சஹேலி மருதாணியை நான் அனைவருக்கும் மனப்பூர்வமாகப் பரிந்துரைக்கிறேன்.

1 Comment

  1. Thamizh

    Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑