JMC எனப்படும் ஜப்பான் வானிலைக் கூட்டுஸ்தாபனம் (Japan Meteorological Corporation) ஒவ்வொரு வருடமும் செர்ரி மலரும் காலம் மற்றும் இலையுதிர் கால வண்ணங்கள் போன்றவற்றை முன்னறிவிக்கிறது. இந்த முன்னறிவிப்புகள் ஜப்பானிய மொழியில் மட்டுமல்லாது, தமிழ் போன்ற பிற மொழிகளிலும் வெளியாகிறது.
இந்த வருடத்திற்கான செர்ரி மலர்கள் மலரத் துவங்குகிற, மரம் முழுவதும் மலர்ந்திருக்கும் காலங்களை ஜப்பானின் முக்கிய நகரங்களில் கணித்து, 23.1.26 அன்று செர்ரி மலரும் முன்னறிவிப்புப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வருட வெப்பம் சற்று உயர்ந்திருப்பதால் வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாகவே செர்ரி மலர்க் கொண்டாட்டங்கள் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
செர்ரி மலர்களின் peak flowering காலம் 7-லிருந்து 10-நாட்கள் வரைதான் இருக்குமென்பதால் உலகெங்கிலும் இருந்து ஜப்பானுக்கு செர்ரி மலர்க் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வரும் சுற்றுலாப் பயணிகள் பயணத்தைத் திட்டமிட வசதியாகத்தான் இந்த முன்னறிப்பு வெளியிடப்படுகிறது.
பொதுவாக மார்ச், ஏப்ரலில் நிகழும் செர்ரி கொண்டாட்டத்துக்குச் சற்று முன்னதாக, பிப்ரவரியில் Kawazu-zakura என்றழைக்கப்படும் அடர் சிவப்பு செர்ரி மலர்கள் மட்டும் டோக்கியோவின் தென் பகுதிகளில் மலர்ந்திருக்கும்.
உலகெங்கிலும் அனைத்து நாகரீகங்களிலும் வசந்த கால மலர்க் கொண்டாட்டங்கள் வெறும் காட்சி இன்பத்திற்காக மட்டுமன்றி, நல்ல அறுவடை, செழுமை மற்றும் இயற்கையின் மறுபிறப்பை உறுதிப்படுத்தும் முக்கியச் சடங்குகளாகவே பண்டைய காலத்திலிருந்து நடைபெறுகின்றன.
பண்டைய தமிழ் நாள்காட்டிகளில் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் ‘இளவேனில்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தன, பல்வேறு கொண்டாட்டங்களும் அக்காலத்தில் நிகழ்ந்தன. சங்கப் பாடல்கள் வேங்கை மலர்வதைத் திருமணத்திற்கு உகந்த நேரமாகக் குறிப்பிட்டன. ஈழத்தில் பாலைமரங்கள் மலர்வதைக்காண்பது ஒரு பண்பாட்டு நிகழ்வாகவே இருக்கிறது.
மல்லிகை ஏராளமாக மலர்கையில் நடக்கும் மதுரையின் பிரபல சித்திரைத் திருவிழா, வாழ்க்கையின் சுவைகளை உணர்த்தும் தமிழ்/தெலுங்குப் புத்தாண்டின் வேப்பம்பூ பச்சடி மற்றும் நிலத்தின் வெப்பத்தைத் தணிக்க அம்மனுக்குக் கோடைக்காலங்களில் செய்யப்படும் பூச்சொரிதல் விழா ஆகியவை பண்டைய மலர்த்திருவிழாக்களின் நீட்சியாகத்தான் இன்றும் தொடர்கின்றன.
பண்டைய ரோமானிய மற்றும் ஐரோப்பியச் சடங்குகள்
ரோமானியர்கள் பயிர்களைக் காக்க மலர் தேவதைகளை வழிபட்டனர் :
புளோராலியா (Floralia) என்னும் விழா அவர்களின் மலர்த் தேவதையான ‘புளோரா’வுக்காக ஏப்ரல் இறுதியில் நடத்தப்பட்டது. மக்கள் பல வண்ண ஆடைகளை அணிந்து, மலர்களைச் சூடிக்கொண்டு செழுமையின் அடையாளமாக முயல்களை வீதிகளில் ஓடவிட்டும், அறுவடை நன்கு நடைபெற பீன்ஸ்களைத் தெருவில் வீசி எறிந்தும் கொண்டாடினார்கள்.
ரோசாலியா (Rosalia) என்னும் மற்றுமோர் கொண்டாட்டம் ரோஜாக்கள் ஏராளமாக மலர்கையில் முன்னோர்களை நினைவுகூர நடத்தப்பட்ட வழிபாட்டுடன் இணைந்த கொண்டாட்டமாக அங்கு இருந்தது.
இவற்றோடு பண்டைய கிரேக்கத்தின் மது மற்றும் மலர் விழாவான ஆன்தெஸ்டீரியா, கெல்டிக் மக்களின் நெருப்பு மற்றும் நெருப்பு வண்ண மஞ்சள் மலர் வழிபாடான பெல்டேன் மற்றும் தார்கேலியா ஆகியவையும் முக்கியமானவை.
ட்யூலிப் மலர்த் திருவிழா
இன்று நெதர்லாந்துடன் இணைத்துப் பேசப்படும் ட்யூலிப் மலர்களின் பூர்வீகம் மத்திய ஆசியா மற்றும் துருக்கி… துருக்கிய சுல்தான்கள் தங்கள் தலைப்பாகையில் (Turban) அணிந்ததால், பாரசீகச் சொல்லான ‘டல்பாண்ட்’ என்பது மருவி ‘ட்யூலிப்’ ஆனது.
1634–1637- ல் நெதர்லாந்தில் ஒரு ட்யூலிப் கிழங்கின் விலை ஒரு மாளிகையின் விலைக்கு நிகராக உயர்ந்தது. இதுவே வரலாற்றின் முதல் பொருளாதாரக் குமிழியாகக் கருதப்படும் ட்யூலிப் மேனியா. 1949-லிருந்து நெதர்லாந்தின் பிரம்மாண்ட மலர் பூங்காவான கியூகென்ஹாஃப்-ல் ஒவ்வொரு ஆண்டும் நவீன ட்யூலிப் திருவிழா நடைபெறுகிறது.
1953-லிருந்து கனடாவில் இரண்டாம் உலகப் போரில் உதவியதற்காக நெதர்லாந்து கனடாவிற்கு வழங்கிய நன்றிப் பரிசான ஒரு மில்லியன் ட்யூலிப் மலர்களுக்கான நன்றி தெரிவிக்கும் ட்யூலிப் விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்தியாவின் காஷ்மீரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய ட்யூலிப் தோட்டத்திலும் வருடா வருடம் பிரமாண்டமாக ட்யூலிப் விழா கொண்டாடப்படுகிறது.
பண்டைய காலத்தில் ஒரு சிறு பனிப்பொழிவு கூட விளைச்சலைப் பாதிக்கும் என்பதால், மலர்களைப் பாதுகாப்பது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாகக் கருதப்பட்டது. இன்று அவை சுற்றுலா மற்றும் நட்புறவின் அடையாளமாக மாறினாலும், அவற்றின் அடிப்படை நோக்கம் இயற்கையின் செழுமையைக் கொண்டாடுவதுதான்.
ஜப்பானில் வசந்த காலத்தில் செர்ரி மலர்கள் (Cherry Blossoms) பூத்துக் குலுங்குவதைக் கொண்டாடும் நிகழ்வு ‘ஹனாமி’ (Hanami) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் ‘ஹனா’ என்றால் மலர், ‘மி’ என்றால் பார்ப்பது என்று பொருள். இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஜப்பானிய கலாச்சாரத்தின் ஆன்மாவோடு கலந்த ஒரு பாரம்பரியம்.
சகுரா கொண்டாட்டத்தின் வேர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை: இம்மரங்கள் வருடா வருடம் பூத்துக்குலுங்கும் காலம் ஹனாமி எனப்படும் பூக்காணுதல் விழாவாக ஜப்பானில் 3ஆம் நூற்றாண்டிலிருந்தே பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகின்றது. இறந்த மூதாதையர்களின் ஆன்மா செர்ரி மலரின் வண்ணங்களில் வாழ்கிறது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். மேலும் நல்ல அறுவடைக்கான கடவுள்களை வயலுக்கு வரவேற்கும் நிகழ்வாகவும் இந்த ஹனாமியை ஜப்பானியர்கள் கருதுகிறார்கள். மிக அழகாகப் பூத்துக்குலுங்கிப் பின்னர் சிலநாட்களிலேயே வாடி உதிரும் இவை மனித வாழ்வின் அநித்யத்தைச் சுட்டுவதாகவும் கருதப்படுகின்றது.
கி.பி. 710–794 இல் ஜப்பானியர்கள் சீனக் கலாச்சாரத்தின் தாக்கத்தால் ப்ளம் மரங்களின் ‘உமே’ (Ume) மலர்கள் மலருகையில் அந்தக் காலத்தைச் சிறு விழாவாகக் கொண்டாடினர்.
ஹீயன் காலத்தில்தான் (794–1185) சகுரா மலர்கள் முக்கியத்துவம் பெற்றன. கி.பி. 812-ல் பேரரசர் சாகா கியோட்டோவில் உள்ள அரச மாளிகையில் முதன்முதலில் சகுரா மலர் பார்க்கும் விருந்தை நடத்தினார். அதுவே இன்றைய ஹனாமி திருவிழாவின் தொடக்கமாக அமைந்தது.
பண்டைய ஜப்பானிய விவசாயிகள், செர்ரி மரங்களில் ‘காமி’ (Kami) எனப்படும் தெய்வங்கள் வசிப்பதாக நம்பினர். மலர்கள் பூப்பதை வைத்து அந்த ஆண்டின் அறுவடை எப்படி இருக்கும் என்று அவர்கள் கணித்தனர்.
சகுரா மலர்கள் மிகக் குறுகிய காலமே (சுமார் ஒரு வாரம்) பூத்திருக்கும். இது மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைக் குறிப்பதாக சாமுராய்கள் கருதினர். “வாழும் போது அழகாக வாழ்ந்து, வீழும் போது கௌரவமாக வீழ வேண்டும்” என்ற தத்துவத்தை இம்மலர்கள் அவர்களுக்கு உணர்த்துவதாக நம்பப்பட்டதால் ஹனமி கொண்டாட்டம் ஜப்பானின் பிரிக்கமுடியாத அங்கமானது.
இன்று சகுரா திருவிழா ஜப்பான் முழுவதும் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது :
செர்ரி மரங்கள் ப்ருனஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்தவை. காட்டுச்செர்ரியான–Prunus avium என்பதுதான் செர்ரிப் பழங்களுக்காக வளர்க்கப்படும் மரம். ஜப்பானியர்கள் செர்ரியின் காட்டு மூதாதைகளிடமிருந்து பல நூறு கலப்பின செர்ரி வகைகளை அவற்றின் அழகிய மலர்களின் பொருட்டு உருவாக்கினர். (ப்ளம் மரங்களான Prunus mume செர்ரி மரங்களிலிருந்து வேறுபட்டது, இரண்டும் ஒன்றல்ல).
செர்ரி வகைகளில் மலர்கள் தூய வெண்மையிலும், இளஞ்சிவப்பிலும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்தும் காணப்படும். ஐந்து இதழ்கள் ஒற்றையடுக்கிலும் பத்திலிருந்து இருபது இதழ்கள் அடுக்குகளிலும் வகைக்கேற்றபடி காணப்படும்.
ஜப்பானியர்கள் இதை சகுரா என்றழைக்கிறார்கள் ஜப்பானில் உள்ள பலவகையான செர்ரி மரங்களும் மொத்தமாக (sato zakura) சட்டோ சகுரா என்றும், ஒற்றையடுக்கு மலர்கள் யோஷினோ Yoshino (Prunus x yeodensis) என்றும் பல அடுக்குகள் உடையவை யேசகுரா (yaezakura) என்றும் அழைக்கப்படுகின்றன. இரட்டை அடுக்கு மலர்களுடைய மரங்களை 1862-ல் ஜப்பானிலிருந்து வட அமெரிக்காவிற்கு G.R. Hall என்பவர் கொண்டு வந்த பின்னர் அங்கும் இவை வளர்கின்றன.
Prunus serrulata எனப்படும் மலர்களுக்கான செர்ரி சைனா, ஜப்பான், இந்தியா மற்றும் கொரியாவைத் தாயகமாகக் கொண்டது. இலைகளை உதிர்க்கும் இச்சிறுமரம் 26–39 அடி வரை வளரும். இம்மரத்தின் மரப்பட்டைகள் மிக மிருதுவாகவும் மூச்சுத்துவாரங்கள் (lenticels) நிறைந்தும் காணப்படும். இலைகள் ஓரங்களில் பற்கள் போன்ற அமைப்புடன் எதிரடுக்கில் நீள்முட்டை வடிவிலிருக்கும்.
மலர்கள் ரெசீம் மஞ்சரிகளில் உருவாகும். சதைப்பற்றான பழங்கள் 8-10 மி.மீ அளவில் இருக்கும். ஜப்பான் முழுவதும் செர்ரி மரங்கள் பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் அரண்மனைகள், கோயில்கள், சரணாலயங்கள் போன்ற பல இடங்களில் வளர்க்கப்படுகின்றன.
சகுரா மலர்கள் என்றாலே இளஞ்சிவப்பு நிறம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், ஜப்பானில் 200-க்கும் மேற்பட்ட சகுரா வகைகள் உள்ளன. சில பூக்கள் வெண்மையாகவும், சில அடர் சிவப்பாகவும், ‘கியோய்கோ’ (Gyoiko) என்ற வகை சகுரா பச்சை நிறத்திலும் பூக்கும்.
ஜப்பானில் பள்ளி மற்றும் அலுவலகங்களின் ‘புதிய ஆண்டு’ ஏப்ரல் மாதத்தில்தான் தொடங்குகிறது. சகுரா மலர்கள் பூக்கும் அதே நேரத்தில் இந்தப் புதிய தொடக்கமும் அமைவதால், இது மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு நம்பிக்கையான சூழலை உருவாக்குகிறது. பகலில் மலர்களைப் பார்ப்பது ஒரு ரகம் என்றால், இரவில் பார்ப்பது தனி அழகு. பூங்காக்களில் ஆயிரக்கணக்கான காகித விளக்குகள் (Paper Lanterns) ஏற்றப்படும். நிலவொளியிலும், செயற்கை விளக்கு ஒளியிலும் சகுரா பூக்கள் மின்னுவதை ’யோசகுரா’ (Yozakura – இரவு அழகு) என்று அழைக்கிறார்கள்.
ஜப்பானில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு: “ஹனா யோரி டாங்கோ”. இதன் பொருள், “மலர்களை ரசிப்பதை விட, அங்கு விற்கப்படும் இனிப்புப் பலகாரங்களை (Dango) உண்பதிலேயே மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்” என்பதாகும். கொண்டாட்டங்களில் உணவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தை இது குறிப்பிடுகிறது.
ஹனாமி சிறப்பு உணவுகள்
ஹனாமி டாங்கோ (Hanami Dango): இது இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் இருக்கும் இனிப்பு உருண்டைகள். இவை வசந்த காலம், பனிக்காலம் மற்றும் வரவிருக்கும் கோடை காலத்தைக் குறிக்கின்றன.
சகுரா மோச்சி (Sakura Mochi): இளஞ்சிவப்பு நிற அரிசி மாவினால் செய்யப்பட்டு, உள்ளே இனிப்பு பீன்ஸ் பேஸ்ட் வைக்கப்பட்டிருக்கும். இது உப்பில் நனைக்கப்பட்ட சகுரா இலையினால் சுற்றப்பட்டிருக்கும்.
சகுராவின் இளஞ்சிவப்பு, பனிப்பொழிவின் வெள்ளை மற்றும் ஒரு நறுமணத்தாவரத்தின் பச்சைநிறம் என மூவண்ணத்தில் இருக்கும் அரிசிச் சோற்று உருண்டைகளும் இதே பெயரில் இருக்கின்றன.
ஜப்பானியர்கள் ‘சாகே’ (Sake) எனப்படும் அரிசி மதுவில் செர்ரி மலர்களை மிதக்கவிட்டு அருந்திக் கொண்டே மலர்களை ரசிப்பார்கள்.
சகுரா மலர்களின் நறுமணத்துடன் தேநீர், சோயா பால் மற்றும் கோலா.
Hanami bento – ஹனாமி பெண்டோ எனப்படும் வறுத்த மீன் துண்டு, பொறித்த காய்கறிகள், போன்றவை இருக்கும் மதிய உணவுப்பெட்டி.
Finger food எனப்படும் சகுரா கலந்த உணவுகள், நறுக்கப்பட்ட பழத்துண்டுகள் இறால், சுஷி மீன் மற்றும் சமைத்த காய்கறிகள்.
மஞ்சள் கலந்த குடிநீர்.

சகுரா இதழ்கள் காற்றில் விழுவதைப் பார்ப்பதற்கு “இளஞ்சிவப்பு பனிப்பொழிவு” (Sakura Fubuki) போல இருக்கும். ஜப்பானியக் கவிதைகளில் இது வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கும் ஒரு அழகான குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக ஜப்பான் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட சகுராவின் பூக்கும் காலத்தில், நாட்டில் 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை விடப்படுகிறது.
ஹனமியின் போது பூத்துக்குலுங்கும் செர்ரி மரங்களுக்குக் கீழ் ஜப்பானியர்கள் விருந்துபசாரம் செய்வார்கள். ஹனமி கொண்டாட்டத்தின் போது பிரபலமான பூங்காக்களில் இடம் பிடிப்பது மிகவும் கடினம். அலுவலகத்தின் இளநிலை ஊழியர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அதிகாலையிலேயே சென்று ‘ப்ளூ ஷீட்’ எனப்படும் நீல நிற விரிப்பை விரித்து இடம் பிடித்துக் காத்திருப்பார்கள்.
ஹனாமி பெண்டோ எனப்படும் பிரத்யேகமான உணவுப் பெட்டிகள் தயார் செய்யப்படும். இதில் வண்ணமயமான சுஷி, காய்கறிகள் மற்றும் மீன் உணவுகள் இருக்கும். இம்மரங்களினடியில் மக்கள் உறவு மற்றும் நட்புக்களுடன் குழுமி உணவுண்டும் கவிதைகள் வாசித்தும் ஓய்வெடுத்தும் மகிழ்ந்து பொழுதைக் கழிப்பார்கள்.
பல இடங்களில் இணைவரிசையில் எதிரெதிராக நடப்பட்டு வளர்ந்திருக்கும் இம்மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கால்களின் கீழ் இதழ்களாலான ஒரு மென்மையான கம்பளம் விரித்த பூக்கும் நடைபாதையை உருவாக்கியிருக்கும். வசந்த காலத்தில், பசுமை போர்த்திய மலைப் பகுதியில் இலைகளற்ற மரத்தில், சகுரா மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அற்புதமான மலர்களைக் காண உலகின் பிற பகுதிகளிலிருந்தும் ஜப்பானுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வருகை தருகின்றனர்.
இங்கு 100 யென் நாணயம் செர்ரி மலர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. பல நாடன் பாடல்களும், பாப் பாடல்களும் சகுராவிற்கென்றே பிரத்யேகமாக ஜப்பானில் உள்ளன. சகுரா பூக்கும் காலத்தில் கிமானோ என்னும் தேசிய உடையிலிருந்து நோட்டுப்புத்தகங்கள், குடைகள், அலங்காரப் பொருட்கள், கைப்பைகள் என பலவற்றிலும் இம்மலர்களின் சித்திரம் வரையப்பட்டிருக்கும். டாட்டூ எனப்படும் பச்சைகுத்துதலிலும் ஜப்பான் முழுக்க டிராகன் உருவத்துக்கு அடுத்தபடியாக இம்மலர்களின் வடிவமே உள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு சகுரா என்று பெயரிடுகிறார்கள்.

நதிகள் மற்றும் ஏரிக்கரைகளில் உள்ள சகுரா மரங்களை ரசிக்க மக்கள் படகு சவாரி செய்வார்கள். உதாரணமாக, டோக்கியோவின் சிடோரிகாபுச்சி (Chidorigafuchi) போன்ற இடங்களில் படகில் சென்று கொண்டே மலர்களைப் பார்ப்பது மிகவும் பிரபலம்.
ஜப்பானியர்கள் கொண்டாட்டத்தின் போதும் சில விதிகளைத் தவறாமல் பின்பற்றுவார்கள் :
தங்களின் குப்பைகளைத் தாங்களே வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் போட வேண்டும்.
மரக்கிளைகளை ஒடிக்கவோ அல்லது பூக்களைப் பறிக்கவோ கூடாது. மரங்களின் வேர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவற்றின் மீது மிதிக்காமல் அமர வேண்டும். ஆகியவை மிக அடிப்படையான விதிகள்.
ஜப்பான் மட்டுமல்லாது இந்தியா, சைனா, வாஷிங்டன், கொரியா, ஜெர்மனி, பிரேசில், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ் உள்ளிட்ட உலகின் பலபகுதிகளில் வெவ்வேறு காலங்களில் செர்ரி மலர்க் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் மேகாலயாவில் Prunus cerasoides வகைச் செர்ரிமரங்களின் மலர்தல் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
சகுரா மலரும் ஹனமி கொண்டாட்டம் முடிந்த பிறகு, ஜப்பானின் நிலப்பரப்பையே இளஞ்சிவப்பு நிறமாக மாற்றும் மற்றொரு பிரமாண்டமான மலர்க் கொண்டாட்டமான ஷிபாசகுரா நடைபெறுகிறது. ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் ஜப்பான் சென்றால், இந்த ஷிபாசகுரா திருவிழாவைக் கண்டு மகிழலாம்.

ஷிபாசகுரா விழாவில் கொண்டாடப்படுவது ‘மாஸ் பிளாக்ஸ்’ (Moss Phlox) என அழைக்கப்படும் Phlox subulata என்னும் தரையை ஒட்டி அதிகபட்சமாக 10 செ.மீ உயரம் மட்டுமே வளரும், ஒரு கம்பளம் போலப் படர்ந்து வளரும் ஒரு தரை படர்த் தாவரத்தின் இளஞ்சிவப்பு மலரைத்தான். இந்தத் தாவரம் ஜப்பானைப் பூர்வீகமாகக் கொண்டதல்ல; இது வட அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது.
ஜப்பானிய மொழியில் ‘ஷிபா’ என்றால் புல்வெளி என்று பொருள். இந்த மலர்களும் மரங்களில் பூக்கும் சகுரா மலர்களைப் போலவே இருப்பதால், இது ‘புல்வெளி சகுரா’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தத் திருவிழாக்களில் சுமார் 8-வகை பிளாக்ஸ் மலர்கள் கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக:
McDaniel’s Cushion: அடர் இளஞ்சிவப்பு நிறம்.
Mont-blanc: தூய வெள்ளை நிறம்.
Autumn Rose: மென்மையான ரோஜா நிறம்.
Oakington Blue-eye: நீல நிறச் சாயல் கொண்ட மலர்.
இது ஜப்பானின் இயல் தாவரமில்லையென்றாலும் இந்த மலர்தலும் ஜப்பானின் வசந்த கால அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஹனமி கொண்டாட்டங்களின் போதே வயோலா மலர்களும் ஜப்பானியப் பூங்காக்களில் நிறைந்து மலர்ந்து கண்ணைக் கவரும்.
பண்டைய ரோமின் ஆரவாரமான ‘புளோராலியா’ முதல் ஜப்பானின் அமைதியான ‘ஹனாமி’ மற்றும் நவீன கால ‘ட்யூலிப்’ திருவிழாக்கள் வரை, மனிதகுலம் மலர்களை வெறும் அழகிற்காக மட்டும் கொண்டாடவில்லை; அவை வாழ்வின் நம்பிக்கையையும், மறுபிறப்பையும் குறிக்கும் குறியீடுகளாகவும் இருக்கின்றன. காலப்போக்கில் இந்தச் சடங்குகளின் தீவிரம் குறைந்து அதன் வடிவங்கள் மாறிவிட்டிருந்தாலும், இயற்கையின் அழகிய மாற்றங்களை ரசிப்பதும், நிலத்தின் வளமைக்கு நன்றி செலுத்துவதும் இன்றும் மாறாமல் உள்ளன.
2026-ல் நிகழவிருக்கும் சகுரா மற்றும் ஷிபாசகுரா போன்ற திருவிழாக்கள், மனிதர்களுக்கும் இயற்கைக்குமான ஆழமான பிணைப்பை மீண்டும் புதுப்பிக்கும் ஒரு பாலமாக அமைகின்றன. மலர்ந்து உதிரும் ஒவ்வொரு இதழும் நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான்—வாழ்க்கை நிலையற்றது, எனவே மலரும் ஒவ்வொரு கணத்தையும் முழுமையாகக் கொண்டாடுவோம்!
Leave a Reply