லோகமாதேவியின் பதிவுகள்

மும்பை- வயிறும் வாழ்வும்.

சரண் மார்புக்கு குறுக்கே ஒரு பை போட்டுக்கொண்டிருந்தது வித்தியாசமாக இருந்தது. “என்னடா இது பையோட?” என்றேன். “…. லேப்டாப் பேக் மீ..” என்றான். “அதை எதுக்கு ஏர்போர்ட் வரப்போ கொண்டு வந்தே? ஆபீஸிலேயே விட்டுட்டு வரவேண்டியதுதானே…?” “….அம்மா நீ வேலை செய்யற அரசுக்கல்லூரிக்கும் கார்ப்பரேட் செக்டாருக்கும் ஸ்நானப்ராப்தி கூட இல்லை, எனக்கு எப்பவுமே வேலை இருக்கும், உனக்கு சொன்னா புரியாது, வா வேகமா, கேப் காத்திருக்கு..” என்றான்.

“….வைஸ் பிரசிடெண்ட் மாதிரி இல்லாம தோளில் இந்த பேக்கோட உன்னை பார்த்தா சேல்ஸ் ரெப் மாதிரி இருக்குடா..”

“….என்னது சேல்ஸ் ரெப் பேக்கா? மீ இது மொகோபரா மீ..” என்றான். அந்த பிராண்ட் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதைக் காட்டிக்கொள்ளாமல் “..சரி வா போலாம்..” என்று ஏர்போர்ட் சாலையை குறுக்கில் அவன் கை பிடித்துக் கடந்தேன்.

பிரம்மாண்டமான விமான நிலையம் கடந்த அக்டோபரில்தான் மோடி ஜி திறந்து வைத்திருக்கிறார். இப்போதும் சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. லண்டனைச் சேர்ந்த Zaha Hadid Architects-ன் தாமரை வடிவ கட்டிடம் என்பதால் எனக்கு கூடுதலாகவே அந்த இடத்தைப் பிடித்திருந்தது. விமான நிலையத்துக்கான மையச்சாலையில் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு நிரந்தரமாகவே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இக்ஸோராக்களும் , டிரஸீனாக்களும், புத்தம் புதிதாய் வைக்கப்பட்டிருந்தன.

விமான நிலையத்திலிருந்தே அதிகபட்சமாக 800 ரூபாய்களுக்குள் எலிஃபண்டா குகை உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல டாக்ஸி இயங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக அருகிலிருக்கும் கடல் பகுதிக்கு அங்கிருந்தே நேராகச் செல்ல வாட்டர் டாக்ஸி எனப்படும் மின்சார வாகனங்களும் இயங்குகின்றன. நவி மும்பை செல்லவிருந்ததால் முன்கூட்டியே இவற்றைத் தெரிந்துகொண்டு சென்றேன்.

சரளமாக சரண் டாக்ஸி ஓட்டுநரிடமும், நொச்சு நொச்சென்று வந்துகொண்டே இருந்த அலைபேசி அழைப்புகளுக்கும் ஹிந்தியில் பேசியது ஆச்சரியமளித்தது. “ஹிந்தி நஹி மாலும்” என்பது மட்டும்தான் எனக்கு ஹிந்தியில் தெரிந்த ஒரே வாக்கியம்.

வழியில் மதுரை பவனில் சாப்பிட்டுவிட்டுப் போகலாமென்றான். நான் கொலைப்பசியில் இருந்தேன். அங்கே போனோம். ஒரு மாபெரும் அடுக்ககம், அதில் இயங்கும் பல நூறு அலுவலகங்களில் மதுரை பவனும் ஒன்று. பல அலுவலகங்களுக்கும் சேர்த்து பொதுவாக ரொம்ப தூரத்தில் இருக்கும் ஒரு இடத்தில் கைகழுவிவிட்டு வரவேண்டும். சூட்கேஸை வெளியே வைத்துவிட்டு உள்ளே போனோம். 90-களின் தமிழ்சினிமாப் பாடல்கள் மெல்லிசாய் ஒலித்தது. தலைவாழை இலை போட்டு வரிசையாகத் தொடுகறிகள் பரிமாறினார்கள்.தமிழில் பேசினார்கள்

வடை,சுண்டல், அவியல், பொரியல், வெண்டைக்காய் தயிர்பச்சடி, கூட்டு, துவரன், அப்பளம் என்று தொடர்ந்து 15-க்கும் மேலான கறிகளை வைத்து இலையே நிரம்பிவிட்டது. மேலும் கொண்டு வந்ததை வேண்டாமென்று மறுத்தேன். அழகிய செம்புக் கிண்ணங்களில் குழம்பு, ரசமெல்லாம். பரவாயில்லாத சுவை. “ஒரு சாப்பாடு எத்தனை?” என்று கேட்டேன் சரணிடம். “அது எதுக்கு உனக்கு?” என்று அந்தக் கேள்வியை அப்படியே கடந்து சென்றான். விலையைச் சொன்னால் வேடசெந்தூர்காரிக்குச் சாப்பாடு நெஞ்சிலேயே நிற்கும் என்று தெரிந்திருக்கிறான்.

மீண்டும் டாக்ஸி பிடித்து வீடு வந்தோம். வழியிலும் சரண் அலுவலக வேலையை லேப்டாப்பைத் திறந்து மடியில் வைத்துப் பார்த்துக்கொண்டே வந்தான். “என்னடா இப்படி பிஸியா இருக்கே?” என்றேன். “வெளியில் பாத்தியா எத்தனை செடி கொடி மரம் எல்லாம்… அதைப் பார்த்துட்டே வருவியாம்… எனக்கு வேலை இருக்கு ப்ளீஸ் ரொம்ப கேள்வி கேட்காதே” என்றான்.

சரிதான் என்று வெளியே பார்த்துக்கொண்டு வந்தேன். எல்லாப் பக்கமும் அழகிய பசும் அடுக்குகளுடன் டெர்மினலியா மாண்டலி (Terminalia mantaly) வளர்க்கிறார்கள். இந்தியாவில் அதிகம் வளர்க்கப்படும் அலங்கார மரம் என்று கணக்கெடுத்தால் இதுதான் இருக்குமாயிருக்கும். காம்ப்ரிடேசியின் (Combretaceae) உறுப்பினர்கள் ரத்தம் போல் சிவந்த இலைகளுடன் நின்றிருந்தார்கள். பெருங்கொன்றை மலரத்தொடங்கி இருந்தது. ஒரு குறுங்காட்டைக் கடந்து சென்றோம்.

சரண் இருக்கும் இடத்திற்கு வந்தோம். உயர்ந்த அடுக்ககங்கள் எனக்களிக்கும் அதே பட்டாம்பூச்சி சிறகடிப்பு இப்போதும் நெஞ்சுக்குள் இருந்தது. வாசலில் அமர்ந்திருந்த 3 காவலர்கள் சரணைப் பார்த்துப் புன்னகைத்தது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. லிஃப்டில் 16 அழுத்தி மேலே போனோம். லிஃப்ட் சுவர் முழுக்க பிளம்பர், எலெக்ட்ரிஷியன், வீட்டு வேலையாட்களின் எண்கள் எழுதப்பட்ட அட்டைகள் செருகப்பட்டிருந்தது.

சரண் இருக்கும் அடுக்ககத்தின் பெயர் ‘ராதே மோகன்’. எனக்கு இந்தப் பெயர் பிடித்திருந்தது. வீட்டு நுழைவாயிலில் கிரகப்பிரவேச சாமந்தி மலர்மாலை துவண்டு கிடந்தது. மலர்களுடன் இருந்த இலை என்னவென்று பார்த்தேன்; மாவிலையை இடையிடையே மடித்து வைத்துக் கட்டியிருந்தார்கள். அலங்காரமாக கண்ணாடி பதித்த ஒரு வெளிக்கதவு, அதைத் திறந்தால் 4 ஜோடி செருப்பு வைக்கும் அளவுக்கான ஒரு சதுரம், பின்னால் வீட்டுக் கதவு.

பெங்களூரு தருண் வீட்டைப் போலல்லாமல் இது கொஞ்சம் வசதியான, விசாலமான அறைகளுடன் இருந்தது. நான் நினைத்தது போலல்லாமல் வீடு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது.ஹால், சமையலறை, பெட்ரூம் மூன்றிலும் கண்ணாடி பதித்த பால்கனி இருந்தது. பாத்ரூம் கதவை எனக்குத் திறக்க வரவில்லை. சரண் திறந்து காட்டினான். தான் இரவு 7 மணிக்குள் வந்துவிடுவதாகவும், அதுவரைக்கும் தயவுசெய்து வேலை செய்யாமல் ஏஸி போட்டுக்கொண்டு படுத்துத் தூங்குமாறும் சொல்லிவிட்டு போன் பேசிக்கொண்டே புறப்பட்டான்.

அப்படியெல்லாம் தூங்க முடியுமா என்ன? கொண்டு வந்திருந்த சூட்கேஸைத் திறந்து பொருட்களை எடுத்து அடுக்கி, சரண் துவைக்காமல் வைத்திருந்த துணிகளை மெஷினில் போட்டு எடுத்துப் பால்கனியைத் திறந்து காயப்போட்டேன். வெளியே ஒரு பெரும் அலையாத்திக்காடு விரிந்து கிடந்தது. அப்படியே திகைத்துப் போனேன். மாபெரும் காடு அது. காட்டிற்கு மறு எல்லையில் நீர்ப்பரப்பும் அதன்பிறகு ஒரே புகைமூட்டமாகவும் இருந்தது.

காட்டின் துவக்கத்தில் ஒரு பெரிய கிரிக்கெட் மைதானம், அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய திரையிலும் விளையாட்டு ஒளிபரப்பானது. சிக்ஸர் அடிக்கப்படுகையிலெல்லாம் களேபரமாக ஒரு பாட்டுப் போட்டார்கள். சமீபத்தில் லப்பர் பந்தில் பார்த்தது போலவே, ஹாலைத் தாண்டி படுக்கையறை வரை பாட்டுச் சத்தமும் உரத்த உற்சாக வர்ணனையும் நிறைந்து வழிந்தது.

குளித்து உடை மாற்றினேன். சரண் வந்துவிட்டான். “என்னடா சமைக்கட்டும்?” என்றேன். “சமைக்கறியா எதுக்கு? வா வா வடா பாவ், பானிபூரியெல்லாம் சாப்பிடலாம்” என்றான். இருவரும் வெயில் தணிந்ததும் நடந்து சென்றோம். நகரமே புழுதிக்காடாக இருந்தது. சரண் அடிக்கடி தொண்டையைக் கமறிக் கொண்டிருந்தான். காற்று மாசு எவ்வளவு என்று அடுக்ககங்களின் முன்பும் சாலைகளின் சந்திப்பிலும் டிஜிட்டல் பலகையில் காட்டப்படுகிறது. அன்று 214 இருந்தது. முந்த்ன நாள் 300 இருந்ததாம்.

கவலையாக இருந்தது.தூய காற்றும், பசுமையும், லைக்கன்களும் இருக்குமிடத்தில் நானும், 26 வயதே ஆன சரண் இத்தனை மாசு நிறைந்த இடத்தில் வசிப்பதும் குற்றவுணர்வை அளித்தது.

சரண் களைத்திருந்தான். நான் இல்லாமலிருந்தால் அவன் ஓய்வெடுத்திருப்பான். ஆனால் அவன் உற்சாகமாக பேசிக்கொண்டே வந்தான். ’’மீ இங்கே கடும் வறுமையிலும் அதீத மத நம்பிக்கையிலும் இருக்கறவங்களைப் பார்க்கிறேன். கடவுள் மீதும் மனிதம், அறம் மீதெல்லாம் நம்பிக்கை கொண்ட ஒருவனை இங்கே 3 மாசம் இருக்கச்சொன்னா அவன் நம்பிக்கையெல்லாம் அழிஞ்சு போயிரும்..’’ என்றான். சரண் சொன்னது கவலையளித்தது, அவன் இதையெல்லாம் கவனிப்பது மேலும் துயரளித்தது. பெருமூச்சுவிட்டுக்கொண்டேன்.

ஒரு பிரபல தெருமுனைக்கடையில் வடா பாவ் ஆர்டர் கொடுத்தான். பிளந்த பன்னில் உருளைக்கிழங்கு போண்டாவைத் திணித்து, கூடவே எண்ணெயில் பொரித்து உப்பில் பிரட்டிய பச்சை மிளகாய்களையும் தட்டில் வைத்துத் தருகிறார்கள். நான் உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை, எனவே போண்டாவை டிசெக்ட் பண்ணி கிழங்குத் திணிப்பை அகற்றி மிளகாயுடன் பன்னைச் சாப்பிட்டேன். ” இப்படிச் சாப்பிட்டா எப்படி உனக்கு பிடிக்கும்?” என்றான். “வடா பாவை எப்படிச் சாப்பிட்டாலும் எனக்குப் பிடிக்காதுடா” என்றேன்.

அடுத்து பானிபூரி. வரிசையாக நின்று சின்ன தட்டில் ஒன்றொன்றாக வாங்கி வாயில் போட்டுச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். அதிலும் உருளைக்கிழங்கு திணித்து வண்ண நீரூற்றிக் கொடுத்தார்கள். ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு வேண்டாமென்றேன். சரண் முகம் பாவமாகியது. “கடைசி பானிபூரி ஸ்பெஷலா நிறைய உள்ளே வச்சுக்கொடுப்பாங்க அதைச் சாப்பிடுறியா?” என்றான். மறுத்தேன். “தஹிபூரியாவது சாப்பிடு” என்று வாங்கிக் கொடுத்தான். அதிலும் என்னென்னவோ கலந்து காரசாரமாகக் கொடுத்தார்கள். எனக்குப் பிடிக்கவில்லை. “வீட்டுக்குப் போலாம்” என்றேன்.

நடந்தோம். “என்னடா இங்கே பொண்ணுங்க எல்லாம் அவ்வளவு அழகாவே இல்லை, பெங்களூருல எத்தனை பேர் இருக்காங்க?” என்றேன். “காலையில நேரா ஃப்ளைட் இருக்கு, வேணும்னா சொல்லு சின்னவன்ட்டெ அனுப்புறேன், இங்க இவ்வளவு அழகாத்தான் இருப்பாங்க என்ன செய்யறது?” என்றான்.

“சரி நாளைக்கு எங்காவது மால் போனா அங்கே பார்க்கலாம்” என்றேன். இன்னும் 3 நாள் என்னை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்னும் பயம் சரண் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

தொடரும்….

2 Comments

  1. Kalaivani

    நானும் உங்களுடன் மும்பையில் இருந்தது போல சுவாரசியமாக ரசித்து படித்தேன். 💐💐💐😍

  2. செல்வக்குமார்

    ‌‌நீங்கள் பூமர் அங்கிள் போல கேள்வி கேட்டால் என்ன செய்வார் அவர் பாவம்? 🙂🙂

Leave a Reply to செல்வக்குமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑