லோகமாதேவியின் பதிவுகள்

Category: திரைப்படம் (Page 4 of 5)

Changeling!

Changeling

ஐரோப்பிய நாட்டுப்புறக்கதைகளில் தேவதைகளும், யட்சிகளும் தங்களுக்கு பிடித்தமான மனிதக்குழந்தைகளை கடத்திக்கொண்டு போய் அடிமைகளாக்கி சேவை செய்ய வைத்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக அதே சாயலுள்ள, தீய குணங்களுள்ள வேறு குழந்தைகளை கொண்டு வந்து மாற்றி வைத்துவிடுவார்கள் என்று நம்பிக்கை நிலவுகிறது. அப்படி மாற்றபட்ட குழந்தைகளே ‘changelings’ எனப்படுவார்கள்.

லாஸ் ஏஞ்சலஸில் 1928 ஆம் வருடம், திருமதி கிரிஸ்டைன் கோலின்ஸ் பணியிலிருந்து வீடு திரும்பியபோது, வீட்டில் தனித்திருந்த அவரது 9 வயது மகன் வால்ட்டர் காணாமல் போயிருந்தான்.  காவல்துறையில் புகாரளித்தும் பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காத நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு  வால்ட்டர், இல்லினாய்ஸில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையிலிருந்து செய்து வருகின்றது. ஆனால்  ரயில் நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்த அன்னை கோலின்ஸிடம் வால்ட்டர் என்று ஒப்படைக்கப்பட்டதோ  உயரம், சாயல், உடல்மொழி, பாவனை என அனைத்திலும் வேறுபட்டிருந்த மற்றொரு சிறுவன். அது தன் மகனில்லை என்ற கோலின்ஸின் மறுப்புக்கு காவல்துறை செவிசாய்க்காமல், அது வால்ட்டர்தான் 5 மாதங்களில் சாயல் மாறிவிட்டது என்று சாதித்துவிட்டு, ஊடகங்களில் காணாமல்போன சிறுவனை விரைவில் கண்டுபிடித்த  தங்களின் சாகசத்தை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.

 அச்சிறுவன் தன் மகனில்லை என்பதை நிரூபிக்க கோலின்ஸ் செய்யும் முயற்சிகள், போராட்டங்கள் அனைத்தும் பயனற்றுப்போகையில், திருச்சபையின்  மதகுரு ஒருவரின் உதவியால்  லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறையின் செயலின்மையும், ஊழலும் வெளிச்சத்துக்கு  வந்து, கடத்திச்செல்லபட்டு கொடூரமாக கொலைசெய்யபட்ட பலகுழந்தைகளைப்பற்றியும் பின்னர் தெரிய வந்து புலன்விசாரணை நடக்கிறது. அதன்பிறகும் வால்டரைக்குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காததால், தன்னிடம் அளிக்கப்பட்ட சிறுவன் தன் மகனல்ல என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முயன்ற கோலின்ஸை மனநோயாளி என முத்திரை குத்தி காப்பகத்துக்கு அனுப்பி சித்ரவதை செய்கிறார்கள்.கடும் போராட்டத்துக்கு பிறகு காப்பகத்திலிருந்து வெளிவரும் கோலின்ஸ் மீண்டும் முழுவீச்சில் தன் மகனைதேடுவதை தொடர்கிறார்.

 இந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையிலான  குற்றமும் மர்மமும் கலந்த திரைப்படம்தான் 2008ல் வெளியான ’’Changeling’.’ தயாரிப்பும், இயக்கமும், பிண்ணனி இசையும் பிரபல இயக்குநர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood ). திரைக்கதை மிக்கேல் ஸ்ட்ரேக்ஜின்ச்கி (Michael Straczynski). இக்கதையில் அக்காலகட்டத்தின் குழந்தைக்கடத்தல்,  பெண்களுக்கெதிரான குற்றங்கள், வன்முறைகள், அரசியல் ஊழல், மனநோய் காப்பகங்களில் நடந்த அநீதிகள், ஆகியவையும் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஏஞ்சலினா ஜோலி, திருமதி கோலின்ஸ் ஆக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். திரைக்கதை எழுதியிருக்கும் மிக்கேல் எதேச்சையாக இந்த சம்பவத்தை குறித்து கேள்விப்பட்டு அதன்பின்னர் அதன் குற்றப்பின்ணனியை காவலதிகாரிகளால் எரிக்கப்படவிருந்த  பல்லாயிரக்கணக்கான பக்கங்களடங்கிய   குற்றம் தொடர்பான ஆவணங்களையும், கோலின்ஸுடனான நீதிமன்ற  விசாரணைகளையும் வாசித்து,  சம்பவத்துடன் தொடர்பிலிருந்த பல இடங்களுக்கு பிரயாணித்து, பல வருடங்கள் ஆய்வு செய்தே இக்கதையை எழுதியிருக்கிறார். இது அவரின் முதல் வெள்ளித்திரைக்கதை. ஊடகவியல் மற்றும் இதழியலில் அவருக்கிருந்த அனுபவம் திரைக்கதையை செம்மையாக்கியிருக்கிறது Imagine Entertainment மற்றும் Universal Pictures ஆகியவையும் தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் பங்கு கொண்டனர்

 Period film வகையிலான  இத்திரைப்படத்தில் மகனை இழந்த, நம்பிக்கை இழக்காமல் இறுதிவரை போராடும் அன்னையின் கதாபாத்திரத்திற்கு பல முன்ணனி நடிகைகள் போட்டியிட்டும், கிளிண்ட் ஈஸ்ட்வுட் 1920களில் நடக்கும் கதைக்கான முகமும்,  அன்னைமை மிளிரும் தோற்றமும் இருப்பவராக  ஏஞ்சலினாவையே   தேர்வு செய்தார். ஏஞ்சலினாவுடன்  Jeffrey DonovanJason Butler HarnerJohn MalkovichMichael Kelly, மற்றும் Amy Ryan.ஆகியோரும் முக்கியப்பாத்திரமேற்றிருக்கின்றனர்

2007 அக்டோபரில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் தெற்கு கலிஃபோர்னியாவில் துவங்கி நடத்தப்பட்ட படப்பிடிப்பு விரைவாக நடந்து 43 நாட்களில்  முடிவடைந்தது. அதன் பின்னர் post production வேலைகளாக கணினியில்  70 வருடங்களுக்கு முன்னரான நகரநிர்மாணம் மற்றும் சாலைப்போக்குவரத்து, உடையலங்காரம் உள்ளிட்ட பழமை ஒவ்வொரு காட்சியிலும்  பிழையின்றியும் சிறப்பாகவும் இருக்கும்படி கவனமாக இணைக்கப்பட்டது  

.அக்டோபர் 2008ல் உலகெங்கிலும் வெளியான இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் காட்டும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கான எதிர்ப்பும் கொஞ்சம் இருந்ததென்றாலும் 55 மில்லியனில் தயாரிக்கபட்ட இத்திரைப்படம் 113 மில்லியன் லாபமீட்டி பெருவெற்றி பெற்றது சந்தேகமில்லாமல். ஆஸ்கார் உள்ளிட்ட ஏராளமான விருதுகளுக்கு பரிந்துரைககப்பட்டு, மிக முக்கியமான பலவிருதுகளையும் பெற்றது ‘’changeling’’.

 ஏஞ்சலாவின் பிரமாதமான நடிப்புக்கு இப்படமும் மற்றுமொரு உதாரணம். படத்தின் துவக்கத்தில் அவரின் அழகியதோற்றத்தில், குறிப்பாக ரத்தச்சிவப்பு சாயமிட்ட அவரின் உதடுகளிலிருந்து கவனத்தை திருப்ப கொஞ்சம் பிரயத்தனப்படவேண்டியிருப்பினும் சில காட்சிகளிலேயே அவர் மகனை இழந்த அன்னையான கோலின்ஸ் ஆக மட்டுமே உணர்வுபூர்வமாக திரையில் தெரியத்தொடங்குவதால் கதையோட்டத்தில் நாமும் கலந்துவிடுகிறோம்.

மகனுடன் அவனுக்கு புரியும் மொழியில் உரையாடியபடியே நாளைத்துவங்குவது, தன் அப்பா ஏன் தன்னுடன் இல்லையென்ற அவன் கேள்விக்கு  வெகுசாமர்த்தியமான பதிலைச்சொல்லுவது, மகன் காணாமல் போனபின்பு பரிதவிப்பது, விடாமுயற்சியுடன் அவனை தேடுவது, அக்காலகட்டத்தில் வழக்கத்திலிருந்தது போல் ஸ்கேட்டிங் ஷூக்கள் அணிந்து லாவகமாக பணிசெய்வது, காவல் துறையினரிடம் தன் கருத்தை திரும்பத் திரும்ப மனம் தளராமல் எடுத்துரைப்பது, மகனல்லவென்று தெரிந்திருந்தும் அந்த மாற்றி அனுப்பப்பட்டிருந்த சிறுவனிடமும் கரிசனத்துடன் இருப்பது என ஏஞ்சலினா  கோலின்ஸாகவே மாறி விட்டிருக்கிறார்

இயற்கையில் மலரிதழ்களின் மிகச்சரியான எண்ணிக்கை, அவற்றிற்கிடையேயான  சீரான இடைவெளி, மிகத்துல்லியமான இடைவெளியில் அமைந்திருக்கும் சூரியகாந்திப்பூக்களின் விதைகள், பைன் கோன்கள் ஆகியவற்றின் அமைப்பை கணிதவியல் தங்கக்கோணம், Golden  Angle அல்லது Golden Ratio என்கிறது. அப்படியான மிகத்துல்லியமான அளவுகளில் தங்கவிதியின்படி அமைந்திருக்கும் முகம் கொண்டவரென்று (golen ratio face) அறியப்பட்ட பிரபலமான ஏஞ்சலினா தன் அழகுக்கு அழகு சேர்க்கும் நடிப்பை இப்படத்தில் அளித்திருக்கிறார்.  இல்லினாய்ஸிலிருந்து ரயிலில் வரும் காணாமல் போன மகனுக்காக  பரிதவிப்புடன் காத்திருப்பதும் மகனல்லவென்று சந்தேகம் வந்தாலும் ஊடகங்களின் முன்னால் எப்படி மறுத்துச்சொல்வதென்ற தயக்கமும், காவலதிகாரியின் வற்புறுத்தலால் வந்த குழப்பமுமாக இருக்கையில், இவர்தான் நாயகி என்னும் கிளிண்ட் ஈஸ்வுடின் கணிப்பு எத்தனை சரியென்பது புலனாகும் பார்வையாளர்களுக்கு.

 இத்திரைப்படத்தின் பொருட்டு ஸ்கேட்டிங் ஷூக்களில் விரைவாக நடப்பதற்கான பயிற்சியையும் ஏஞ்சலினா எடுத்துக்கொண்டிருக்கிறார்.

 திரும்ப கிடைத்திருப்பது தன் மகனல்ல, இன்னும் எங்கேயோ தன்மகன் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறான் என்பதை நிரூபிக்க அவர் செய்யும் முயற்சிகள் எல்லாமே  மனதை பிசைபவை. இப்படி ஒரு ஒற்றைத்தாய் முன்னெப்போதோ அல்லலுற்றிருக்கிறார் என்னும் உண்மையை கண்முன்னே கொண்டு வந்து காட்டிவிடுகிறார் ஏஞ்சலினா.

மாற்றபட்ட சிறுவனின் உயரம் குறைவாக இருப்பது, சிறுவனின் ஆணுறுப்பின் முனைத்தோல் நீக்கப்பட்டிருப்பது, அவன் பற்களின் அமைப்பு மாறியிருப்பது, அவன் பள்ளி ஆசிரியையின் இது வால்டரல்ல என்னும் வாக்குமூலம்  போன்ற மறுக்க முடியாத ஆதாரங்களை மறுநாள் ஊடகங்களின் முன்வைக்கப்போகிறார் என்று தெரிந்ததும் சொந்த மகனை மறுக்கும் மனப்பிறழ்வு உள்ளவரென காட்டி கோலின்ஸை காவல்துறை மனநோயாளிகளின் காப்பகத்துக்கு அனுப்புவதும், அங்கு அவருக்கு நடக்கும் இழிவுகளும், கிடைத்திருப்பது வால்ட்டர்தான் என்று ஒத்துக்கொள்ளும்படி அவருக்கு  கொடுக்கப்படும் நேரடியான மிரட்டல்களும், உயிராபத்துக்களுமாக திரைப்படம் உண்மைச்சம்பவம் நடைபெற்ற காலத்துக்கே நம்மை அழைத்துச்சென்று கலங்க வைத்து விடுகின்றது.

 மதகுருவின் ஒத்துழைப்பால் பல குழந்தைப்படுகொலைகள் வெளிச்சத்துக்கு வந்து குற்றவாளி நார்த்காட்(Northcott) பிடிபடுகிறான்.20 குழந்தைகளை கொன்று புதைத்தாக ஒத்துக்கொண்ட  அவனிடமிருந்து தப்பி வந்த சிறுவனின் வாக்கு மூலமும், அவனுடன் தப்பித்த சிறுவர்களைப்பற்றிய தகவல்களும், சிறைத்தண்டனையில் இருக்கும் நார்த்காட் 2 வருடங்களுக்கு பிறகு தூக்கிலிடப்படுவதற்கு முந்தின நாள், கோலின்ஸை சந்தித்து வால்டரைக்குறித்து பேச விருப்பப்படுவதாக சொல்லுவதும்,  தூக்கிலடப்படும் இறுதி நிமிடம்வரை பரிதவித்தபடி காத்திருக்கும் அன்னையிடம் அவன் என்ன சொன்னானென்பதுவும், வால்டர் மீண்டும் கிடைத்து அன்னையும் மகனும்  இணைந்தார்களா என்பதையும் திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்வதே உசிதம்.

இச்சம்பவத்தில்  சம்பந்தப்பட்ட ஊழல் காவலதிரிகாரிகள் உண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் (Captain Jones & Chief Davis ) அரசியல்வாதி ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவே இல்லை. கலிஃபோர்னியவின் நீதித்துறை மனநாயாளிகளை விடுதியில்  சேர்ப்பது குறித்த முறையான சட்டங்களை இதன்பிறகே பிறப்பித்தது. குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட வைன்வில்லி (Wineville) நகரம் கொலைகளினாலேயே  பிரசித்தி பெற்றுவிட்டதால் சில வருடங்களுக்கு பிறகு நகரமே மிரா லோமா (Mira Loma ) எப்பெயர் மாற்றபட்டது   

 குற்றவாளி Northcott,  ஆக நடித்திருக்கும்   Jason Butler Harner  ன் நடிப்பை பாராட்ட வேண்டும். மனம் பிசகியவர்களுக்கேயான பித்தேறிய கண்களும் கொஞ்சம் குழறலான உச்சரிப்புமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

 படப்பிடிப்பு தளங்களில் பழையபாணி கட்டிடங்களும், அப்போதிருந்த புகைப்படக்கருவிகள், நெருப்பை உபயோக்கும் காமிரா ஃப்ளாஷ்கள் புகைவண்டி, 1918லிருந்து 1928 வரை புழக்கத்திலிருந்த கார்களை சேகரித்து வைத்திருந்தோரிடமிருந்து  வாங்கிய 150 கார்கள்  என மிகப்பொருத்தமாக அமைந்திருக்கும் பின்ணனி திரைக்கதையை உறுத்தாமல் கொண்டு போகின்றது. ஒரு சில காட்சிகள் கோலின்ஸ் வாழ்ந்த தெருவிலேயே படமாக்கவும் பட்டிருக்கிறது. பல வரலற்றுஆய்வாளர்களும் படப்பிடிப்பில் முக்கியப்பங்காற்றியுள்ளனர்

   ஆடைவடிவமைப்பளர் Deborah Hopper, பள்ளி , கல்லூரிகளின் மிகப்பழைய ஆண்டு மல்ர்கள்,  LIFE உள்ளிட்ட எராளமான பழைய சஞ்சிகைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தே உடைகளை வடிவமைத்திருக்கிரார். 1930ல் பிறந்தவரான கிளிண்ட் ஈஸ்ட்வுட் தனது பால்யகால நினைவுகலிருந்தும் சில விஷயங்களை சொல்லி உதவியிருக்கிறார்

 ஒளி இயக்குநர் டாமுக்கு ( Tom Stern)  இது ஆறாவது திரைப்படம். ஒளிப்பயன்பாட்டை வெகுவாக குறைத்து திரையில் ஏஞ்சலீனாவை மட்டும் முக்கியத்துவப்படுத்தும் காட்சியமைப்புக்களை  சிறப்பாக செய்திருக்கிறார். படத்தொகுப்பு மூன்றே நாட்களில் முடிவடைந்திருக்கிறது.

 தேவதைகளின் பிரதேசமென அறியப்பட்ட லாஸ் ஏஞ்சலஸ், மெல்ல மெல்ல   குற்றங்களும், வன்முறையும், ஊழலும் மலிந்த நகரமாக மாறியதையும் இப்படம் பதிவுசெய்கின்றது

குழந்தை கடத்தலை மையமாக கொண்ட எல்லா மொழித்திரைப்படங்களிலும் பழிவாங்குதலே பிரதானமாக இருக்கும். changeling இம்மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டு மகன் மீண்டும் கிடைக்கும் வரை போராடிக்கொண்டேயிருந்த  அன்னையின் கதையைசொல்லும் வகையில் மிக முக்கியமானதாகின்றது.. திரைக்கதையை காலையில் கேட்டுவிட்டு அன்று மதியமே இயக்குவதாக ஒப்பந்ததில் கையெழுத்திட்டிருக்கிறார் ஈஸ்ட்வுட்

 இயக்குநரின் மகள் கைல் இசையமைப்பில் உதவியிருக்கிறார். மற்றொரு மகள் மோர்கன், ’’வால்ட்டரை பார்க்கவில்லை’’ என்று கோலின்ஸிடம் சொல்லும் ஒரு சிறுமிகளில் ஒருவராக திரையில் ஒரே காட்சியில் தோன்றுகிறார்.

பலவருடங்களுக்கு முன்பான பழமையை திரையில் காட்டவென இத்திரைப்படத்திற்கென படக்குழுவினர் மேற்கொண்ட கடின உழைப்பைக்குறித்து இணையத்தில் வாசிக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.இதற்காகவே இப்படத்தை பார்க்கலாம்

பொன்மகள் வந்தாள்

சூர்யாவின் 2 D நிறுவனம் தயரித்துள்ள ’பொன்மகள் வந்தாள்’ திரையரங்குகளில் வெளியிடப்படாமல் நேரடியாக ஒ.டி.டி யில் (OTT, Over the top) வெளியாகியுள்ள தமிழ் சினிமாவின் முதல் பெரிய படம்.

மார்ச் மாத இறுதியிலேயே திரையரங்குகள் வைரஸ்தொற்றினால் மூடப்பட்டதால் ஓ.டி.டி தளங்களின் பார்வையாளர் எண்ணிக்கை 60%  அதிகரித்துள்ள நிலையில் நேரடியாக இதில் வெளியிடுவதாக ஒப்பந்தமிட்டால் கூடுதலாக சில கோடிகள் லாபமென்பதால் தயரிப்பாளர்கள் கவனம் முழுக்க இதை நோக்கியே திரும்பியிருக்கிறது. சூர்யாவின் நிறுவனமும் படத்தை அமேசான் பிரைமுக்கே கொடுத்ததால், மே 29 அன்று ரசிகர்களின் வீடுகளுக்கே பொன்மகள் வந்தாள்

படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், சுப்பு பஞ்சு, வினோதினி என்று நடிகர்களின் பட்டாளமே இருக்கிறது. ஒளிப்பதிவு    ராம்ஜி, இசை    கோவிந்த் வசந்தா,  ஜே.ஜே. ஃப்ரெட்ரிக்க்கின் இயக்கத்தில் இது முதல் படம். படத்தொகுப்பு ரூபன்.5 மாதஙகளில் முழுப்படப்படிப்பும் முடிந்திருக்கிறது. சூர்யாவின் தங்கை பிருந்தாவும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்

2004 ஆம் வருடத்தில் ஊட்டியில் பல குழந்தைகளை கடத்தி கொலை செய்ததாக சொல்லப்பட்ட சைக்கோ ஜோதி என்னும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கொலைகாரியின்  வழக்கை 15 வருடங்க.ள் கழித்து மீண்டும் தோண்டி எடுக்கும்  பெத்துராஜ் என்கிற பாக்கியராஜ், அவரது மகள் வழக்குரைஞர் வெண்பாவாக  ஜோ. சைக்கோ கொலையாளி எனப்படும் ஜோதி எப்படி கொலை செய்யப்பட்டாள், குழந்தைகளை கடத்தியதும் கொலைசெய்ததும் உண்மையில் யார்? வழக்கின் மறுவிசாரணைக்கான பலத்த எதிர்ப்பு,  மறுக்கப்பட்ட நீதியையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும்   வெண்பா போராடி வெளிச்சத்துக்கொண்டு வருவது, இந்த வழக்கில் ஏன் இவர்களுக்கு இத்தனை அக்கறை என்பதெல்லாம்தான் கதை

ஜோதி அப்பாவி, அரசியல் மற்றும் பணபலமுள்ளவர்களே உண்மைக்குற்றவாளிகள் என்னும் அதே அரதப்பழசான கதை. முதல் பாதி ஆமைவேகம் என்றால் பின்பாதி நத்தை வேகம். தேவையேயில்லாமல் 5 இயக்குநர்கள் வந்து, யாருக்கும் வலுவான கதாபாத்திரம் இல்லாமல் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். கோர்ட் வாசலில் இருக்கும் டீக்கடைக்காட்சிகள் அனைத்துமே அநாவஸ்யம் அங்கு பேசப்படும் வசனங்களும் அபத்தம். நமக்கு அறிமுகமான ஏராளமான துணைநடிகர்கள் திருமண வீடுபோல கும்பலாக வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.

தியாகராஜனுக்கு கழுத்திலே என்ன பிரச்சனையோ! இறுக்கமாக கழுத்தை வைத்துக்கொண்டு இயந்திர மனிதனைப்போல நடிக்கிறார். எளிய மக்களுக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு அவர்களை தொட்டுவிட்டு பின்னர்  கையை சோப் போட்டுக்கழுவும் வில்லனெல்லாம் போன ஜென்மத்துப்பழசு.

 ஜோவையும் பாக்கியராஜையும் தவிர அனைவருமே அநியாயத்துக்கு கெட்டவர்களாக இருக்கிறார்கள். Character assassination  பாக்கியராஜிலிருந்து துவங்குகிறது. மகள் 15 வருடஙகள் கழித்து திரும்ப எடுத்திருக்கும் அவர்களிருவருக்கும்  மிக முக்கியமான ஒரு வழக்கு, ஜோ முழுப்படத்திலுமே சோகமே உருவாக இருக்கிறார் , ஆனால் அப்பாவோ பெண் நீதிபதியை மாமி , மாமி என்பதும், அவரது பிரத்யேக நக்கல் பேச்சுகளுமாக இருக்கிறார். நீதியரசராக வரும் ப்ரதாப்போத்தனையும் திடீரென லஞ்சம் வாங்கவைத்து கெட்டவராக்கிவிட்டிருக்கிறார்கள்.அதைபோலவே  வில்லனுடன் அணுக்கமாக இருக்கும் சாட்சிகளை திசை திருப்பும் கெட்ட வழக்குரைஞராக பார்த்திபன், தேவையேயில்லாமல் திணிக்கபட்ட பாத்திரத்தில் பாண்டியராஜன்

மிகச்சிறிய இடைவெளிகளில் திரும்ப திரும்ப வரும் நீதிமன்றக் காட்சிகளும் உப்புச்சப்பில்லாத குறுக்கு விசாரணைகளும் அலுப்பூட்டுகின்றது. சட்டவல்லுநர்களை எல்லாம் இயக்குநர் கலந்தாலோசித்து எடுகப்பட்ட காட்சிகள் அவை என்றறியும் போது இன்னும் ஆயாசமாக இருக்கின்றது.

 நீதிமன்ற அவமதிப்பை குறித்து துவக்கத்தில் ஜோ பேசுவதும் பின்னர் தொடர்ந்து அதுவே அங்கு நடப்பதும் முரண். பிரதாப் போத்தனும் பார்த்திபனும் நேருக்கு நேராக உரக்கக் கத்தி சண்டை போட்டுக்கொள்கிறார்கள் நீதிமன்றத்தில்!

 நீதிமன்றக்காட்சிகள் எல்லாமே ஒட்டுமொத்த அபத்தம். எந்த வலுவான  விசரணையும் குறுக்கு விசாரணையுமே இல்லாமல் பார்த்திபன் ஜோவை அவருக்கேஉரித்தான் பாணியில் நையாண்டி செய்வதும்,  நீதிபதி குறுக்கிடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, இரண்டு வழக்குரைஞர்களும் இஷ்டத்துக்கு விவாதித்துக்கொண்டிருப்பது, பலமான சாட்சியங்கள் ஆணித்தரமான விவாதங்கள், மறுக்கமுடியாத உண்மைகள் என்று நிரூபிக்க வேண்டிய ஒரு வழக்கின் மறுவிசாரணையை கண்ணீரும் கம்பலையுமாக உணர்வுபூர்வமாக நீதிமன்றத்தில்  ஜோ முன்வைப்பது என்று வேடிக்கையாக இருக்கிறது. நீதிமன்றம் நாடகமேடையா என்ன?

ஜோ உள்ளிட்ட எல்லா முக்கிய கதாபாத்திரங்களுமே சொதப்பல்தான். புறப்பட்ட இடத்துக்கே திரும்பத்திரும்பவந்து திரைக்கதை முட்டிக்கொண்டு நிற்கிறது.

பெண்குழந்தைகளின்  பாதுகாப்பை வலியுறுத்தும் கருத்துச்சொல்லும் படமான இதில் வழக்குரைஞராக வரும் ஜோவை இறுதிகாட்சி நீங்கலாக எல்லா காட்சிகளிலும் பார்த்திபன் இழிவுபடுத்திக்கொண்டே இருக்கிறார். ஒரு குள்ளமான  பெண் நீதிபதி நிதிமன்றத்துக்கு வெளியே இருக்கும் கோவில் மணியை எட்டி அடிக்க முடியாத காட்சி எதற்கு திணிக்கப்பட்டிருக்கிறது? அது நகைச்சுவையா? அவரை  பாக்கியராஜ்  மாமி என அழைப்பதும் அப்படியே முற்றிலும் தேவையில்லாத காட்சி. இன்னொரு பெண் வக்கீல் நீதிமன்ற வாசலிலேயே பிரபல வழக்குரைஞரான பார்த்திபனுடன் செல்ஃபி எடுக்க முண்டியடிக்கிறார். அந்த செல்ஃபியைக்காட்டி பெருமையடித்துக்கொள்கிறார். சொல்ல வந்த கருத்துக்கு முரணாக பெண்களை கொச்சைப்படுத்தும், மலினப்படுத்தும் பலகாட்சிகளை சேர்த்திருப்பது சொந்தச்செலவில் சூனியம் வைத்துக்கொள்ளுவதல்லாமல் வேறென்ன?

இரண்டு தலைமுறையாக சினிமாவில் இருக்கும் குடும்பம், பிண்ணனிப்பாடகியான தங்கை உட்பட மொத்தம் 5 பேர் தமிழ்ச்சினிமாவில் காலூன்றி இருக்கும் குடும்பத்தின் சொந்த தயாரிப்பு என்னும் எந்த உண்மையையும் படத்தின் தரத்துடன் ஒப்பிடமுடியாத அளவில்தான் சூர்யா படத்தை தயாரித்திருக்கிறார்.

ஒரு நூற்றாண்டான  இந்தியச்சினிமாவை திரையரங்குக்கு சென்று வெள்ளித்திரையில் பார்ப்பதென்பது வெறும் திரையனுபவமாக மட்டும் இல்லாமல்   பல உளவியல் விடுதலைகளை அளிக்கும் ஒரு கேளிக்கை நிகழ்வாகவும்  இருந்து கொண்டிருக்கிறது. ஒன்றேபோலான அன்றாடங்கள் அளிக்கும் சோர்விலிருந்து விடுபடவும், சமையலறைக்கும் வீட்டுவேலைகளுக்கும் வெளியெ வந்து  சற்று மூச்சுவிட்டுக்கொள்ளவும், அலங்கரித்துக்கொள்ளவும்,  திரளாக அதே கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் மனிதர்களை காண்பதுவுமாக  திரைப்படம் பார்க்கும் அனுபவம் பலருக்கும் பல விதங்களில் தேவையாக இருந்துவருகின்றது.   அந்த அனுபவங்களுக்கு இணையாக ஓ.டி.டி வெளியீடு எதையும் செய்யமுடியாதென்றாலும் அவற்றிற்கு மாற்றாகவாவது ஏதேனும் செய்ய முயற்சித்திருக்கலாம்.

ஒரு பாடல் கூட முழுதாக கேட்கமுடியாத ரகம். மனதில் நிற்காத வெண்டைக்காயை விளக்கெண்ணையில் வதக்கியதுபோல் வழவழ வசனங்கள், எந்த முக்கியத்துவுமும் இல்லாத ஏராளமான துணைக்கதாபாத்திரங்கள், தெளிவற்ற திரைக்கதை,  ஜோதி சரணடைந்தாள் பின்னர் சரணடையவில்லை, நானே கைதுசெய்தேன், இல்லை கைதுசெய்தது நானில்லை, உண்மையில் கைதுசெய்த அதிகாரி கொலை, வெளிநாட்டு சுற்றுலாப்பயணி எடுத்த வீடியோ, சிசிடிவிகாட்சி, கருப்பாக அம்மா ஜோ வெள்ளையாக துயரே உருவான  மகள் ஜோ என்று குழப்பியடித்து  கதை வாலறுந்த பட்டமாக மனம் போன போக்கில் போய்க்கொண்டிருக்கிறது

 திரைக்கதையில் உள்ள இத்தனை குழப்பங்கள் போதாமல் இறுதியில் வெண்பா ஏஞ்சலாவது என்னும் இன்னொரு திருப்பமும் இருக்கின்றது., எல்லாபக்கத்திலும் கோட்டைவிட்டிருக்கிறார் சூர்யா அத்தனை நாட்கள் ஜோவை  முடிந்தவரை கிண்டலடித்து விட்டு திடீரென காகிதத்தில் சிறகுகள் வரைந்து  பார்த்திபன் ஏஞ்சலை  பாராட்டுவது அம்புலி மாமா கதை  ரகம்

நேரடியாக ஓ.டி.டி வெளியீடு என்னும் முன்னெடுப்பிற்கும், அருமையான ஒளி இயக்கத்துக்கும் மட்டும் பொன்மகளைப் பாராட்டலாம்.

 கேளிக்கைகளுக்கு வழியில்லாத இரண்டு மாத சமூக விலகலின் போது நேரடியாக வீட்டுக்கே வரும் புதுப்படம் என்னும் எதிர்பார்ப்பில் அமேசான் பிரைமில் பொன்மகள் வெளியானதும் பார்த்துவிட ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவு வரை விழிந்திருந்தனர். இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் சூர்யா நியாயம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை,   ஒரு சொதப்பலான படத்தை தந்து அநியாயமல்லவா செய்துவிட்டிருக்கிறார்?

’’மின்னுவதெல்லாம் பொன்னல்ல!’’

நசீர்

நசீர் பார்த்த கையோடு இதை எழுதுகிறேன். கூடுதல் பணிச்சுமையிலிருந்தேன் இன்னும் ப்ரியாவின் கதையை சாயின் சுட்டிப்பேச்சை எதையுமே பார்க்கவில்லை. எனினும் நசீரை பார்த்துவிடுங்கள் என்று அதிக அழுத்தம்  மாதவனின் பேச்சில் தெரிந்தது. சொல்முகம் நரேனும் இதைபார்க்கவேண்டிய அவசியத்தை சொல்லிக்கொண்டிருந்தார் அதற்கு காரணமின்றி இருக்காது என்று தோன்றியது. படம் முழுக்க பார்த்தேன். பிரமாதம். இன்று உண்மையில் என்னால் மிக அவசரமாக எழுதி முடிக்கவேண்டிய எதையும் துவங்க முடியாத அளவிற்கு சோர்வாக இருந்தேன். நசீரைப் பார்த்த பின்பு அப்படி எழுதாமல் இருக்கவே முடியாது என்றே தோன்றியது.
இந்து இஸ்லாமிய பிரச்சனைகளைக் குறித்து “கருத்து” சொல்லும் ஏராளமான படங்களை சலிக்க சலிக்கப் பார்த்திருக்கிறேன், வருந்தியிருக்கிறேன், பின்னர் அப்படியே மறந்துமிருக்கிறேன். ஏனெனில் நசீர் சொல்லியிருப்பதைப் போல இத்தனை ஆழமாக, இவ்வளவு வலிக்கும் படியாக இதற்கு முந்தின எந்தப் படமும் இதை சொல்லியிருக்கவேயில்லை.
ஒரு சாமான்யனின்  ஒற்றை நாள் எப்படி துவங்கி எப்படி முடிகின்றது என்பதே கதை.  மிக மிக மெதுவாக நசீரின் காலை பள்ளியில் பாங்கு விளிப்பதிலிருந்து துவங்குகிறது. எல்லா கதாபாத்திரங்களுமே மிக மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். நடித்திருக்கிறரகள் என்று சொல்லவே தயக்கமாக இருக்கிறது. அத்தனை இயல்பாக வந்துசெல்கிறார்கள் திரைக்கதையில். அந்தச் சந்துகளில் மார்க்கெட்டின் அடைசலான வழிகளில், துணிக்கடையில் ஹாஸ்டலில் எல்லாம் உண்மையில் காமிரா இருந்ததா என்றே சந்தேகம் வந்துவிட்டது. அந்த வரிசையில் நின்று தண்ணீர் பிடிக்கும் காட்சியெல்லாம் அபாரம். நசீர் என்று டைட்டில் போடும்போதே அந்த எழுத்து வடிவத்தின் வித்தியாசம் படத்தின் பேரிலான கவனத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒவ்வொன்றாக பார்த்துப்பார்த்து செய்வதென்பார்களே, அப்படியான படைப்பு இது.
எழுத்தாளர் திலீப்குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ யை மையமாகக்கொண்டே இத்திரைப்படம் எடுக்கபட்டிருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவாளருக்கு ஒரு கைகுலுக்கல். பிரமாதப்படுத்தியிருக்கிறார். பேகத்தின் கம்மலும் கல்லு மூக்குத்தியும் பளிச்சிடும் அந்தக் காட்சியிலிருந்தே காமிராக் கண்களை சிலாகிக்காமல் படத்தை தொடர முடியவில்லை
நசீரின் பாத்திரப் படைப்பும் மிக நன்று. இளமை இறங்குமுகமாக இருக்கையிலும் அவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யமும் காதலும் , பேரன்பும் ரசிக்கும்படியாக இருந்தது. இக்பால் இவர்களின் குழந்தையல்ல என்பதும் வியப்பளித்தது.
எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை இழக்காத, சிடுசிடுக்காத, மனைவியின் மீது பிரேமையுடனும், அவளின் மூன்று நாள் பிரிவுக்கே முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளும், கடிதங்கள் எழுதும், பழைய காலத்தின் நினைவுகளில் மூழ்கும் பாடல்களை கவிதைகளை நினைவுகூரும், அம்மிஜானின் நோயைக்குறித்து வருந்தும், மிக நேர்மையான தொழில் சிரத்தையுள்ள,  அன்பான சகிப்புத்தன்மை கொண்ட ஒருவராக சித்தரிக்கபட்டுள்ள பாத்திரம். அத்தனை எளிய கதாபாத்திரம் என்பதாலேயே இறுதிக்காட்சியின் அநீதி  அதிகம் வலிக்கின்றது.
பின்னணியில் இசையின்றி அக்கம்பக்கத்தினர் பேசுவதே பிண்ணனியில் ஒலிப்பது  புதுமையாகவும் கவனிக்கும்படியும் இருப்பது படத்தின் காட்சியுடன் நம் அணுக்கத்தை இன்னும் கூட்டிவிடுகின்றது. நசீர் துணிக்கடைப் பெண் பொம்மையின் மூக்கை செல்லமாக நிமிண்டும் காட்சி அழகு. அவரின் தொழில் மீதான விருப்பத்தையும் அவரின் கலாரசனை மிகுந்த மனதினையும் நாம் உணரும் காட்சி அது.
மனைவியுடன் பேருந்து நிலையத்திற்கு நடந்து வருகையில் கடைவீதியில் இருக்கும் பல வண்ண பிள்ளையார் பொம்மைகளை  அவர்கள் கடக்கிறார்கள். அப்போதே மனம் படபடக்க துவங்கிவிட்டது.  கோவைக்காரியான எனக்கு இதில் பல  முன் நினைவுகள் இருந்ததால், என்னவோ சரியாக இல்லையே என்று  பதைபதைத்தது மனது. .
வெட்டி வெட்டிக் காட்டப்படும் காட்சிகள் நன்றாக இருந்தன. சாமன்யர்களின் வாழ்வின் வண்னங்களை சட் சட்டென்று காட்டிச் செல்லும் காட்சிகள் படம் முழுக்கவே நிறைந்திருந்தன. பொதுக் கழிப்பறை, அங்கிருக்கும் ஒற்றை ரோஜாச் செடி, இட்லி விற்கும் பெண்மணி, வர்ணப் பூச்சை இழந்து பல்லிளிக்கும் வீட்டுச் சுவர்கள் என்று  காட்சிகள் அடுத்தடுத்து வந்து அடித்தட்டு மக்களின் வாழ்வியலையே ஒரு சித்திரம் போல நம் முன்னால் வைத்து விடுகின்றது.
மிக இயல்பான உரையாடல்கள், காட்சிகள் வழியே நசீரின் எந்த திருப்பமும் இல்லாத ஒரு மிகச் சாதாரண வாழ்வு நமக்கு முன் அப்படியே திறந்து வைககப்டுகின்றது.
நசீருக்கு அவர் சார்ந்திருக்கும் இஸ்லாம் என்பது அவர் தொடர்ந்து வாழ்வை நடத்த உதவும் ஒரு மார்க்கம் அவ்வளவே. ஆகம விதிகளின் படி உடல் தூய்மை செய்துகொண்டு பள்ளிக்குப் போய் வேண்டிக்கொள்வதோடு அவரது மத உணர்வின் தீவிரமற்றத்  தன்மையைக் காட்டுகிறார்கள்.கடை முதலாளி “துலுக்கனுங்க” என்று பேசுகையிலும் நசீர் எந்த உணர்வுமின்றி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதிர்ந்துகூட பேசாத, தொழிலில் மிக நேர்மையாக இருக்கின்ற மனவளர்சியில்லா உறவுக் குழந்தையை சொந்த மகனைப் போல பார்த்துக்கொள்கிற, இசை கேட்கிற,  கவிதை எழுதுகின்ற மனைவி மீது பேரன்புடன் இருக்கிற முதலாளி சொல்லும் வேலைகளைத் தட்டாமல் செய்கிற என்று நசீரின் பாத்திரம் வெகு எளிமை.
அந்தத் துணிக்கடை, முதலாளியின் கொங்கு பாஷை நன்று. கோவை உணவகங்களின் விவரணையெல்லாம் இயக்குநரின் வாய்ஸ் ஓவெர் போலிருக்கிறது. முழுக்க சரிதான்):
மிக மெதுவே நகரும் படமாதலாலும் அந்த சந்துக்குள் தன் மனைவிக்கான கடிதத்தை மனதிற்குள் சொல்லியபடி வீட்டுக் கடமைகளை, கடன் கிடைக்காமல் போனதை  எல்லாம்  நினைத்தபடி வந்து கொண்டிருக்கும் நசீருக்கு திடீரென வெறியுடன் கோஷமிட்டபடி சந்தில் நுழையும் வெறிகொண்ட இளைஞர் கூட்டத்தால் என்ன நடந்தது, என்னதான் ஆகியிருக்கும் என அக்காட்சி முடிந்து திரை அமைதியாகும் வரையிலும் மனம் பதைபதைத்துகொண்டே இருந்தது.
அந்தச் சாலையில் மெல்லிய வெளிச்சத்தில் கிடப்பது நசீராக இருக்கக்கூடாது என்று  பதட்டத்துடனேயே பார்த்துக்கொண்டிருந்தேன் அது நசீர்தானென்று தெரிந்திருந்தும்.
நசீரைப்போலவே மதங்களின் வேறுபாடு குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் தான் பிறந்த மதத்தின் விதிகளை முழுமனதாக பின்பற்றிக்கொண்டு தனக்கேயான கடமைகளில் தவறாமல், தன் எல்லைக்குட்பட்ட மகிழ்வின் சாத்தியங்களை அனுபவித்துக்கொண்டு இருத்கும் பல்லாயிரக்கணக்கான சாமான்யர்களும் இப்படி சம்பந்தமே இல்லாமல் வெறியர்களால் தாக்கப்பட்டு மிச்சமின்றி அழிக்கபட்டிருக்கிறார்கள். கடைசிக் காட்சியின் பதட்டமும் யார் யாரை அடிக்கிறார்கள் என்னும் அச்சமும் நிச்சயம் படம் பார்த்த அனைவருக்கும் வந்திருக்கும்.
ஒரு சாமான்யனின் ஒரு நாளின் கதையைச்சொல்வதிலேயே வாழ்வின் அழகியலை அவலத்தை குரூரத்தை சொல்லமுடிவதென்னும் சவாலில் இயக்குநர் வெற்றிபெற்றிருக்கிறார் வெகு நிச்சயமாக.
பாய்ஸ் ஹாஸ்டல் கேட் வாட்ச்மேனும், நசீரும் பீடியை பகிர்ந்து கொள்ளும் காட்சியும் அழகு. எத்தனையோ அல்லல்கள் இருக்கின்றது நம் அனைவருக்கும் , எனினும் எளியவர்களுக்கு இப்படியான் ஒரு தோள் பகிரல், எடையை தற்காலிகமாக இறக்கிவைத்தல் என்பது எப்படியும் நடந்துவிடுகின்றது. பணத்தேவை, மனைவியின் தற்காலிய ’இன்மை’ இக்பால் அம்மிஜானின் உடல்நிலை, அலைச்சல் என்று கஷ்டங்கள் இருப்பினும் நசீரும் அவருமாக அந்த பீடியை பகிர்ந்துகொள்ளுதல் என்பது துயரையும் பகிர்ந்துகொள்வதுதான்.  கழுத்தை அழுத்தும் ஊழின் விரல்களை அகற்றி  கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ளும் தருணங்கள் அல்லவாஅவை? அக்காட்சி எனக்கு மிக நுண்மையானதாக பட்டது.
நசீரை நடக்கையில், ஸ்கூடர் ஓட்டுகையில், பல்தேய்க்கையில், குளிக்கையில் மனைவியை முத்தமிடுகையில், பணியில், புடவைகளை எடுத்துக்காட்டுகையில் என்று  காமிரா தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் வகையில் கதை சொல்லபட்டிருப்பதால், நாமும் அவரை நெருக்கமாக பின்தொடர்ந்து கொண்டே இருந்து ஒரு கட்டதில் நாமும் நசீராகிவிட்டிருக்கிறோம். அந்த கடைசிக்காட்சி அதனால்தான் மிகவும் அதிர்ச்சியாக அந்த வன்முறை நம்மீதே நடந்ததுபோன்ற உணர்வை தந்து, அந்த  கொஞ்சமும் எதிர்பாராத சந்துக்காட்சிகள்  நம்மையும் முற்றாக அழித்துவிட்டதுபோல செயலற்றுப்போய் பார்க்கவைத்து விடுகினறது.
அத்தனை நேரம் மிக மெல்ல ஓசைகள் அடக்கிவைக்கப்ட்ட காட்சிகளில் மூழ்கி இருக்கும் நமக்கு அந்த கூச்சலும் ஆரவாரமும் வெறியும் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் அதிர்ச்சியுமே படத்தின் வெற்றி
ஊருக்கு போயிருக்கும் மனைவி கருப்பைப் புற்றுநோயாளியான அம்மீஜான், மூளை வளர்ச்சியற்ற இக்பால் இவர்களில் யாருக்கு முதலில் தகவல் போய்ச்சேரும் என்று பார்வையாளர்களை கவலைப்பட வைத்து விட்டிருக்கும் படம் இது. கோவையின் மிகப் பரிச்சயமான தெருக்களில் காட்சிகள் இருப்பதால் திரைக்கதையுடன் இன்னும் நான் அணுக்கமாகி விட்டிருந்தேன்
அலங்கோலமான அந்தச் சாலையில் யாருமற்று கிடக்கும் நசீரின் உடல், அன்று மதியம் நசீர் சொல்லிகொண்டிருந்த வாழ்வென்பதே தனிமைதான் என்னும் கவிதை வரிகளை நினைவுப்படுத்தியது.
மனைவிக்கான மானசீக கடிதமொன்றை முடிக்குமுன்பே முடிந்துவிடுகின்றது நசீரின் துயர்களும் கனவுகளும் கடமைகளும் எல்லாமும்.”Shame on us” என்று வெட்கித் தலைகுனிய வைக்கும் வெகுசில படங்களில் நசீரும் ஒன்று.
இப்படி 24 மணி நேரம் மட்டுமே காணக்கிடைக்கும் என்னும் அழுத்தமும் நல்லதே.  பிறகு பார்த்துக்கொள்லலாம் என்று ஒத்திப்போடாமல் தரமான படைப்புக்களை அப்போதே பார்க்க ஒரு நல்வாய்ப்பல்லவா இந்த கட்டாயம்.
இயக்குநர் அருண் மற்றும் எழுத்தாளர் திலீப் குமார் இருவருக்கும் படப்பிடிப்புக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாரட்டுக்களும். இவர்கள் எட்டப்போகும் உயரங்களை இப்போதே யூகிக்க முடிகின்றது.
நீங்கள் சொல்லியிருக்கா விட்டால் நான் இதை நிச்சயம் தவற விட்டிருப்பேன்.
நன்றி தம்பி!

வானம் கொட்டட்டும்!

 

வானம் கொட்டட்டும்

பிப்ரவரி 7 , 2020ல் தேதி உலகெங்கிலும் ரிலீஸானது வானம் கொட்டட்டும்.. இயக்குனர் காற்றுவெளியிடையில் மணிரத்தினத்திடம் உதவியாளராயிருந்த படைவீரன் தனா. திரைக்கதையை தனாவும் மணிரத்தினமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர். மணிரத்னத்தின் மெட்ரஸ் டாக்கீஸுடன் லைக்கா  அல்லிராஜா சுபாஷ்கரனும் இணைந்து தயாரித்துள்ளனர்

வெகு எளிமையான, தமிழ்த்திரையுலகிற்கு மிகப்பரிச்சயமான  வெட்டுப்பழி குத்துப்பழி கதைதான். சட்டென வந்த ஒரு கோபத்தில் அண்ணனை வெட்டியவர்களை, பிள்ளைகளின் முன்னிலையிலேயே வெட்டிச்சாய்த்துவிடுகிறார் சரத். அதுவும். இரட்டைப்பிள்ளைகளின் முன்னால். கொலைக்குற்றத்துக்காக சரத் சிறைக்குச் சென்ற பின்னர் மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து படாதபாடுபட்டு குழந்தைகளை வளர்க்கிறார் ராதிகா. எதிர்த்தரப்பிலோ, இறந்தவரின் இரட்டைப்பிள்ளைகளில், ஒருவன் கோபமாகவும் இன்னொருவன் பழியுணர்வுடனும் வளர்கிறார்கள்.

சிறைக்கு சென்ற சரத் திரும்ப வருகையில் மகன் மகளுக்கும் அவருக்குமிடையேயான இடைவெளி அதிகமாவது, அவரின் இருப்பு குழந்தைகளுக்கு சங்கடமாக இருப்பது,  வாழ்வின் இயங்கியலில் வழக்கமாக  ஏற்படும் மனஸ்தாபங்கள், கோபதாபங்கள், சண்டைகள் என முட்டிமோதி, அந்த மோதலிலேயெ ஒருவரை ஒருவர் புரிந்து, அறிந்து இணங்கி, மீண்டும் அவர்கள் ஒரு குடும்பமாவது, அவரைக்கொல்ல காத்திருக்கும் இரட்டையரில் ஒரு நந்தா, சகோதரன் அவரைக்கொல்லாமல் தடுக்க நினைக்கும் இன்னொரு நந்தா, தங்கையான ஐஸ்வர்யா ராஜேஷின் காதல், அவளை விரும்பும் உறவினரான திரையில் கொஞ்சநேரமே வரும் (அந்த கொஞ்சநேரத்திலும் பைக்கிலேயே வரும்) சந்தனு பாக்கியராஜ், ஐஸ்வர்யாவை விரும்பும் இன்னோரு காதலன், (வேலையில்லா பட்டதாரி இளம்வில்லன்) அப்பாவைப்போலவே கோபக்கார விக்ரம் பிரபு, அவரின் வாழைத்தார் மண்டி வியாபாரம்  அதன் பிரச்சனைகள், இறுதி சண்டைக்காட்சி பின்னர் சுபம்.

இது விக்ரம்பிரபுவுக்கு நல்ல பாத்திரம் கொடுத்தால் அருமையாக நடிப்பார் என்று சொல்லும் படமும் கூட

ஆக்ரோஷமாக அடிதடியில் இறங்குகையிலும், அப்பாவுடன் முறைத்துக்கொள்ளும்போதும்,  பல காட்சிகளில் உடல்மொழியிலும் கூட அக்னிநட்சத்திரம் கார்த்திக்கை நினைவூட்டுகிறார். ஆனால் படம் முழுவதுமே முகத்தில் கோபம் நிறைந்து சீரியஸாக விறைப்பாகவே இருக்கிறார். காதலியுடன் நெருக்கமாக இருக்கும் அந்த ஒற்றைக்காட்சியிலும் கூட அப்படித்தான். கொஞ்சம் சிரிங்க பாஸ்  இனிவரும் படங்களில்.

மடோனா செபாஸ்டியன் மட்டுமே எந்த வேலையும் இன்றி சம்பந்தமில்லாமல் அப்பா பிசினஸ், இன்கம் டேக்ஸ்,  கடன்,  குடி என்று குழப்பியடித்து எப்படியோ விக்ரம்பிரபு காதலித்ததும்  (அதாவது அப்பா இறந்த அன்று இரவு விக்ரம் பிரபு மடோனாவை மெல்ல அணைத்துக்கொள்வதை காதலென்று நாம் எடுத்துக்கொண்டால்)  அவர் பாத்திரத்துக்கு முற்றும் போடப்படுகின்றது. காதலி இல்லாமலும் விக்ரம் பிரபுவின் பாத்திரம் நன்றாக பேசப்பட்டிருக்கும்

ஐஸ்வர்யா ராஜேஷ் வசீகரம். இயல்பாக பொருந்தி நடிக்கிறார். சமீபத்திய படங்களை பார்க்கையில் இவர்  தமிழ்சினிமாக்களில் நிரந்தர தங்கச்சியாகிவிடும் அபாயம் தெரிகின்றது. பாலாஜி சக்திவேல் பிரமாதம். நல்ல குணசித்திர நடிகரராக அசத்தியிருக்கிறார்.

ராதிகா, சரத்குமார்  மிகப்பிரமாதமான ஜோடி. அவர்கள் சந்திக்கும் உணர்வுமயமான காட்சிகளிலெல்லாம் பிண்ணனியில் வரும் ’’ கண்ணு, தங்கம் ராசாத்தி” பாடல்  மனதைஉருக்குகின்றது. அது ஒன்றுதான் படத்தில் உருப்படியான பாடலும் கூட

சித்ஸ்ரீராம் அறிமுக இசைஇயக்குனர், ஆனால் பாடல்களில் மட்டுமல்ல பிண்ணனி இசையிலும் ஏமாற்றமளிக்கிறார்.

எளிய பழைய கதை ஆனால் தனாவின் இயக்கத்தில் பல காட்சிகள் குறிப்பிட்டுசொல்லும்படியாக இருக்கின்றது. திரையரங்கில் தன்னை கண்டிக்கும் சரத்தை  ஐஸ்வர்யா ”அப்பா”வென முதன்முதலில் அழைப்பது, அப்பாவின் சட்டையில் மகன் பணம் வைப்பது, மழைநாளில் குடையுடன் அப்பாவைத்தேடி அம்மா கிளம்புகையில் தடுத்துவிட்டு மகன் போவது வாழைத்தாரின் கைப்பகுதியை சீவி அதில் கணக்கை பேனாவால் எழுதுவது, பெரியப்பா வாங்கி வந்த முறுக்கு பாக்கட்டை அப்போதே ஐஸ்வர்யா பல்லில்கடித்து திறப்பது,  கொலைக்குப்பிறகு ரத்தக்கறைச் சட்டையுடன் இருக்கும் சரத் ராதிகாவிடம் கோவிலில் பேசிக்கொண்டிருக்கையில் பிண்ணனியில் தெரியும் நேர்த்திக்கடன் மரத்தொட்டில், கம்பிக்கு வெளியில் மனைவியை பார்க்கும் சரத்தின் உணர்வுபூர்வமான் நடிப்பு, வானம் கொட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாலையில் வாழைக்காய் பாரமேற்றிய லாரியின் மேல் அமர்ந்து சரத் வரும் காட்சி, ஒரே பாடலில் அண்ணாமலையைபோல் பணக்காரராகாமல் கஷ்டப்பட்டு  படிப்படியாக விக்ரம் பிரபு  வாழைமண்டி வியாபாரத்தில் முன்னுக்கு வருவது என்று  தனா பல  எளிய, இயல்பான அழகிய இடங்களில் நம்மை கவனிக்க வைக்கிறார்.

விக்ரம் பிரபு வெகுநாட்களுக்கு பிறகு மிக நன்றாக பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் படம் இது.

அபியும் நானும்புகழ் பிரீதா ஜயராமன் ஒளி இயக்குனர் ஒளிப்பதிவு  மணிரத்தினம் படத்திற்கேயானது. மலையடிவார கிராமத்தில் துவங்கிய கதைக்களம்  சென்னையிலும்  தொடர்கின்றது உயிரோட்டத்துடன்

ராதிகா சென்னையில் தங்கியிருக்கும், குடியிருப்பு வளாகம், சந்துகள், எதிரில் ஓடிவந்து மோதும் குழந்தைகள், குதூகலித்துக்கொண்டு கன்றுக்குட்டிபோல் துள்ளித்திரியும், விளையாட்டாய் சிகரட் கூட பிடித்துப் பார்த்திருக்கும் ஐஸ்வர்யா, மர்மமான குடும்பப்பிண்ணனி கொண்ட கதாநாயகி, முறுக்கிகொண்டே விரைப்பாகத் திரியும் நாயகன் என மணிரத்தினம்  தயாரிக்கும் படத்தின்  எல்லா அம்சங்களும்  இதிலும் இருக்கின்றது காதலர்களின் நெருக்கமான காட்சிகள் நீங்கலாக.

சரத் கம்பீரம் குறையாமல் அப்படியே இருக்கிறார். ராதிகாவும் அழகு, அவருக்கு வயதானாலும் அவரின் கொஞ்சும் குரல் என்றென்றும் இளமையுடன் அப்படியே இருக்கிறது. இவர்கள் இருவரையும் இன்னும் கொஞ்சம் மையப்படுத்தி திரைக்கதையை கொண்டுபோயிருந்தால் திரைப்படம் இன்னும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும், கதாபாத்திரங்களின் எண்ணிக்கையையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம், தெலுங்கு பண்ணையார் அவரது குடும்பத்தினர், அவரது மகனான இன்னொரு காதலன் என்று, ஒரே கூட்டமாக இருக்கின்றது திரையில்.

சரத்தின் அண்ணன் உழுதவயலில் வெட்டுப்பட்டு விழும் காட்சியுடன் துவங்கும் படத்தின் விறு விறுப்பு போகப்போக குறைந்து மிக மெதுவே நகருவதும் குறைதான்.

மடோனா ஏன் கதைக்குள் வந்தார்? எப்படி, ஏன் அவர் கதாபாத்திரம் முடிகின்றது, ஏன் எதற்கு அவரை விக்ரம் பிரபு காதலிக்கவேண்டும்  என்ற கேள்விகளெல்லாம் அப்படி அப்படியே கிடக்கின்றது படம் முடிந்த பின்னரும்

ஒரு நந்தாவே பழிவாங்க போதுமென்றிருக்கையில் எதுக்கு இன்னொரு நந்தா?

்இப்படி ஒருசில குறைபாடுகள் இருப்பினும், பகையும் பழிவாங்கலுமான அதே பழைய கதைதான் என்றாலும் சொல்லப்பட்டிருக்கும் விதத்திலும் கதாபாத்திரத்தேர்விலும், அவர்களின் மிகபொருத்தமான நடிப்பிலும், நேர்த்தியான திரைமொழியிலும், தனாவின் இயக்கத்திலும் வானம்  திருப்தியாகவே கொட்டியிருக்கின்றது. வெகுநாட்களுக்கு பின்னர் வந்திருக்கும் ஒரு குடும்பக்கதை. குடும்பத்துடன் சென்று பார்க்கலாமென்னும் படமும் கூட

வாழ்த்துக்கள் தனா!

பிகில்

AGS எண்டர்டயின்மெண்ட் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் அட்லீ விஜய் கூட்டணியில் (மூன்றாவதாக), இந்த மாதம், அக்டோபர் 2019,  தீபாவளி ரிலீஸ் திரைப்படமாக உலகெங்கிலும் வெளியானது ‘’பிகில்’’. இசை ரஹ்மான், இசைக் கூட்டணியும் மூன்றாவது முறை, நாயகி நயன்தாரா.

இந்நாள் ரவுடியும் முன்னாள் கால்பந்தாட்ட வீரருமான மைக்கேல் ராயப்பன், அவரின் காதலி ஏஞ்சல், நண்பரும் பெண்களின் கால்பந்தட்ட பயிற்சியளருமான கதிர், மைக்கேலின் எதிரி டேனியல் என்று கதை துவங்கி, கதிருக்கு டேனியலினால்  முதுகெலும்பு முறிந்ததால் 7 வருடத்திற்கு முந்தைய மைக்கேலின் ஃப்ளேஷ் பேக்’கிற்கு நகர்கின்றது

ரவுடி ராயப்பனின் மகன் மைக்கேலும் நண்பன் கதிரும் கால்பந்தாட்ட வீரர்கள். மகன் தன்னைபோலல்லாமல் நல்ல விளையாட்டு வீரராக வர விரும்பும் அப்பா ராயப்பன் ரவுடி அலெக்ஸினால் மகன் கண்முன்னாலேயே கொல்லப்படுகிறார். பழிக்கு பழி வாங்க கால்பந்தட்ட கனவை மறந்து ரவுடியாகி, பின்னர் மீண்டும் கால்பந்தாட்டத் துறைக்கே பயிற்சியாளராகிறார் பிகில் என்றழைக்கப்படும் மைக்கேல்

நட்புக்காக மைக்கேல் பயிற்சியாளராவது, ஷர்மா அவரை பழி வாங்குவது, குற்றப்பிண்ணனி உள்ள விஜயை ஆட்சேபித்து, வெறுத்து பயிற்சிக்கு உடன்பட  மறுக்கும் விளையாட்டு வீராங்கனைகள், கொலை முயற்சி அடிதடி, கடத்தல், கொக்கைன், அமில வீச்சு , கால்பந்தாட்ட  விளையாட்டில் மைக்கேலின் அணி வெற்றி பெறாமல் இருக்க நடக்கும் உள்ளடி வேலைகள் என்று ஏராளம் பிரச்சனைகளுடனும் எளிதாக  யூகிக்க முடியும் அரதப்பழசான திருப்பங்களுடனும் படம் நகர்கின்றது.

துவக்க காட்சியிலேயே விஜய் ’’தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா’’ என்று சொல்ல அரங்கம் ரசிகர்களின் கூச்சலில் அதிர்கின்றது.

ஏறத்தாழ 3 மணிநேர நீளமுள்ள இத்திரைப்படத்தில் எந்த கணக்குமின்றி திரைக்கதை துண்டு துண்டாக இணைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான முந்தைய தமிழ் மற்றும் பிறமொழிப் படங்களிலிருந்து காட்சிகளை அப்பட்டமாக நினைவூட்டும், நிறைய லாஜிக் ஓட்டைகளும் இருக்கும் திரைக்கதை. பாதிக்குமேல் பாட்ஷாவின் ரீமேக் என்றே சொல்லிவிடலாம் அதில் முன்பு ரவுடியாக இருந்து ஆட்டோ ஒட்டுவார் இதில் பின்னர் ரவுடி, ஆட்டாவுக்கு பதில் கால்பந்தாட்டம் அவ்வளவுதான்.

ஏஞ்சலாக .நயன் தாராவுக்கு அழகாய் திரையில் தோன்றுவதைத்தவிர வேறு வேலையே இல்லை. ’’நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ, போ, போ’’ என்று பாடாத குறையாக விஜயுடன் கூடவே வந்து கொண்டிருக்கிறார்

ஜாக்கி ஷெராஃப் ஷர்மாவாக சோபிக்கவேயில்லை.  தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத அம்சங்களில் ஒன்றாகிவிட்டிருக்கும் யோகிபாபுவும் இருக்கிறார்.

90 களில் இந்தியாவின் புகழ்பெற கால்பந்தாட்ட வீரராக இருந்த  அர்ஜுனா விருது பெற்ற  கேரளாவைச் சேர்ந்த திரு  I M விஜயனை (Inivalappil Mani Vijayan), பிகிலில் வில்லனாக நடிக்க வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து உலகப்புகழ்பெற்ற விளையாட்டு வீரராக இருக்கும் ஒருவரை இப்படியா எதிர்மறையாக திரையில் சித்தரிப்பது? அதுவும் அவர் ஈடுபட்டிருந்த அதே விளையாட்டுத்துறையை சார்ந்த திரைக்கதையில்?

30 மணி நேரத்தில் சொல்ல வேண்டிய விஷயங்களை 3 மணிநேரத்தில் கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையை திணிப்பதென்பார்களே அப்படித் திணிக்கிறார் அட்லீ. வேலுநாயக்கரை, பாட்ஷாவை, அமீர்கானை ஏன் சிவகார்த்திகேயனைக்கூட நினைவுக்கு கொண்டு வரும் காட்சிகள் ஏராளம்..  பல  காட்சிகளில் வசனங்களும்  பெண்கள் அணியின் பயிற்சியாளருக்கானதாக இல்லாமல் விஜய் என்னும் அரசியல் உத்தேசம் உள்ள நடிகருக்கானவையாகவே இருப்பதும் ஆதங்கமாக இருக்கிறது.. விஜயை தமிழகத்தின் தன்னிகரில்லா தனிப்பெரும்தலைவனாக காட்ட நினைத்திருக்கிறார் அட்லீ.

விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த  அறிமுகப்பாடல், சண்டை, கால்பந்து  விளையாட்டு என அடுக்கிக்கொண்டே போகும் காட்சிகளால் முன்பாதி இழுவை , அறுவை மற்றும் ஓவர் டோஸ். பின்பாதியில் கால்பந்தட்ட போட்டிகளின் விறுவிறுப்பு மட்டுமே கதையை தாங்கிப்பிடித்து கரைசேர்க்கின்றது.

கடந்த ஜூன் மாதம் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு மெதுமெதுவே இரட்டை வேடமென்பதையும் நள்ளிரவில் விஜயின் பிகிலுக்கான தோற்றமென்னவென்பதையும் அறித்தபோது எழுந்த ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கைக்கூட  திரைப்படம் முழுதாய் பார்க்கும் போது ஏற்படுத்தவில்லை

படத்தின் ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்பு முற்றிலும் அணைந்தேவிட்டது படம் பார்க்கையில். முதல்பாதியிலியே. லாஜிக் மீறலின் எல்லைகளை தாண்டிய ஹீரோயிசம் செய்கிறார் விஜய். காவல் நிலையத்தில் குண்டு வைப்பது முதலமைச்சர் வரும் வழியில் தகராறு என . இவற்றை எல்லாம் ரசிகர்கள் கொண்டாடி கூச்சலிடுவதை பார்க்கையில் திகிலாயிருக்கிறது..

இத்திரைப்படம் காட்சி ஊடகம் என்பதையே படக்குழுவினர் மறந்தது  போல பல விஷயங்கள் காட்டப்படுவதற்குப்பதில்  சொல்லப்படுவது  எரிச்சலைத்தருகின்றது. பாடல்களில் ’சிங்கப்பெண்ணே’   பரவாயில்லை. ரஹ்மானும் அட்லியும் சிறப்புத்தோற்றத்தில் வருகிறார்கள்

விஜய், இந்தப்படத்திற்கும் இத்தனை வசூலை அள்ளிக்கொடுத்திருக்கும், திரையில் விஜயின் தோற்றத்திற்கே வெறிக்கூச்சலிடும் ரசிகர்களுக்கு இன்னும் கவனமாக கதையை தேர்வு செய்திருக்கலாம். பண்டிகைக்காலங்களில் புதிய திரைப்படங்களை பார்ப்பதென்பது முக்கால் நூற்றாண்டாக தமிழகத்தில் ஒரு மரபாகிவிட்டிருக்கையில் தீபாவளீ ரிலீஸ் படமான இதில் 63 படங்களில் நடித்திருக்கும் விஜய் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் விவேக், ரோஹினி, தேவதர்ஷிணி, போன்ற தேர்ந்த முக்கிய நடிக, நடிகையர்களும் கூட இதில் சில காட்சிகளில் மட்டும் வந்து  வீணடிக்கபட்டிருக்கிறார்கள். படத்தின்  ஒரே ஆறுதல் விஜய் மட்டுமே! முன்னை விட இள்மையாக முன்னை விட துடிப்புடன் இருக்கிறார்.

அப்பா கெட்டப்பில் உப்பும் மிளகுமான தலைமுடியில் வந்தாலும் இளமையையும் மிடுக்கையும் ஸ்டைலையும் மறைக்க முடியவில்லை ஒப்பனையாலும். ஆச்சர்யம் ! நடனம்  மற்றும் சண்டைக்காட்சிகளிலும் அதே வேகமும் ஸ்டைலும்

G.K விஷ்னுவின் ஒளிப்பதிவுக்கு பாராட்டுக்களை சொல்லியே ஆகவேண்டும் . அனல் அரசுவும் சண்டைக்காட்சிகளை திருப்தியாகவே  அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு திணறியிருக்கிறது .

முதன்முதலாக எகிப்தில் திரையிடப்படும் தமிழ்த்திரைப்படமாகிறது பிகில். இரண்டே நாட்களில் ஒரு கோடியே 85 லட்சங்களை தாண்டி  சாதனை வசூல் படைத்து ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையினரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது

விஜய்  படம் எப்படி இருப்பினும் திரையில் அவரை பார்த்தாலே போதும் என  படத்தை கொண்டாடி வசுலை அள்ளிகுவிக்கும் ரசிகப்பட்டாளங்களுக்காகவாவது இன்னும் கவனமாக  நன்றாக பிகிலை ஊதியிருக்கலாம்

 

நேர் கொண்ட பார்வை

ஹெச். வினோத்தின்  எழுத்து மற்றும் இயக்கத்தில் போனிகபூரின் தயாரிப்பில் 2016 ல் வந்த (’’பின்க்’’ஹிந்தித் திரைப்படத்தின் மறுஆக்கமான) நேர்கொண்ட பார்வை 8/8/2019 அன்று  உலகெங்கும் வெளியானது அஜித் குமாருடன்  கன்னட நடிகை ஸ்ரத்தா, அபிராமி , ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ள legal drama வகைப்படம் இது. ஆண்ட்ரியா மட்டுமே மூலப்படமான பின்க்’ கிலும் நடித்தவர். இசை யுவன் ஷங்கர் ராஜா. வித்யா பாலன் அஜித்தின் ஜோடியாக தமிழில் இப்படத்தில் அறிமுகமாகிறார்.பிரபல நடிகை கல்கி கோச்லினும் துவக்க பாடலில்  மட்டும் வருகிறார்

பின்க் சொன்ன அதே கதைதான்  எனினும் இதில்  அஜீத்திற்கு ஏற்ப கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். அமிதாப் நடித்த வயதான ஒரு பாத்திரத்திற்கு ஒத்துக்கொண்டதற்கும் மிக அழகாக இப்பாத்திரத்தை கையாண்டதற்கும் அஜித்தை பாராட்டியே ஆகவேண்டும்.

நிகழ்வுகளில் நடனமாடும் ஸ்ரத்தா,  கால் சென்டரில் வேலைபார்க்கும், மணமுறிவான பேராசிரியருடன் வாழ்வை பகிர்ந்துகொண்டிருக்கும் பேரிளம்பெண்ணான அபிராமி, ஒரு சலூனில்   சிகை அலங்கார நிபுணராக இருக்கும் ஆண்ட்ரியா, இவர்கள் மூவரும் சென்னையில், பூந்தொட்டிகளும் டெராரியமும்  மூலை முடிச்செல்லாம் பசுஞ்செடிகளும் நிறைந்திருக்கும் ஒரு அழகிய வீட்டில் வாடகைக்கு  வசித்து வருகிறார்கள்.

ஸ்ரத்தா நடனமாடும் ஒரு நிகழ்வுக்கு மூவருமாக சென்றுவிட்டு திரும்ப எத்தனிக்கும் ஓரிரவில் அவர்கள்  சில  இளைஞர்களை சந்திக்கின்றனர். அதன்பின்னர் நடக்கும் எதிர்பாரா விஷயங்களால் அப்பெண்களின் வாழ்வே முற்றிலுமாக மாறிவிடுகிறது.,  வழக்கறிஞர் உத்யோகத்திலிருந்து ஓய்வு பெற்ற அஜித்  அரசியல்  மற்றும் குண்டர்கள் தொல்லைகளையும், கடந்த கால வாழ்வின் கசப்புகளினால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நிலையையும் சமாளித்து மூன்று பெண்களுக்கும் உதவி எப்படி அனைத்தையும் சீராக்குகிறார் என்பதே கதை

 துடிக்கும் இசையுடன் நடனம் , கொப்பளித்து ததும்பும் இளைஞர் கூட்டம்,   விரையும் காரினுள் இருக்கும் இளைஞனின் மண்டை உடைந்து கொட்டும் இரத்தம்,, இறுகிய முகத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் பயணிக்கும் மூன்று பெண்கள், மிக அருகே என மோத வரும் ஒரு லாரி என துவக்க காட்சிகளே படத்தை  பரபரப்பாக்குகிறது

வழக்கம் போலவே எந்த ஒப்பனையும் இல்லாது முகத்தை கழுவிவிட்டு அப்படியே படப்பிடிப்பிற்கு வந்தாற்போல  உப்பும் மிளகுமான தலைமுடியுடன்  அஜீத்.  அவர் திரையில் தோன்றியதும் அவரது ரசிகர்கள் ததும்பி வெறி கொண்டு கூச்சலிடுகிறார்கள்.. பென்சில் மீசையும், பொய்த்தலைமுடியும் லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகளும் சேர்ந்து அளிதது வந்திருந்த   வந்த நாயகன் என்னும் பிம்பமெல்லாம் வழக்கொழிந்துபோய், திரைக்கு பின்னும் முன்னுமான   ஆளுமையால் மட்டுமே இப்போது நாயகர்கள் இளைஞர்களை ஈர்க்கமுடியுமென்பதை , ,திரையில் அவரை நோக்கி வீசப்பட்ட  வண்ணக்காகிதங்களும் காது கிழியும் படியான விசிலும் கூச்சலும் உணர்த்தின

என்ன நடந்தது என்பதை பிற்பாடு நீதிமன்றத்தில் தன் நாம் புரிந்துகொள்கிறோமென்றாலும் பெண்கள் மூவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அரசியல் செல்வாக்குடைய ஆதிக்’தான் அடிபட்டது என்று தெரியும் போதும், ஸ்ரத்தா கடத்தபடுகையிலும்  நாமும் பதட்டமாகிறோம்.

 பூங்காவில் அமர்ந்திருக்கும் அஜீத் மாத்திரைகளை போட்டுக்கொள்ளாமல் இருக்கையில் அவருக்குள்ளிருந்து திமிறிக்கொண்டு, கட்டுக்களையும் தளைகளையும் அறுத்துக்கொண்டு வெளிவரத்துடிக்குமொன்றை அவர் கட்டுப்படுத்திக்கொள்வதை மிக நன்றாக காட்டியிருக்கிறார். அந்த பூங்காவில் நடக்கும் சண்டைக்ககாட்சி ( கதைக்கு தேவையற்றது எனினும் ) பிரமாதம். உடைந்த குழாயிலிருந்து பீறிட்டு வரும் நீரின் பிண்ணணியில், யுவனின் பொருத்தமான இசையுடன் ஒவ்வொரு அடியும் இடியாக நம் இதயத்தில் விழுகிறது. தமிழில் வித்யா பாலன், நல்ல புஷ்டியாக கொழுக் முழுக்கென்றூ இருக்கிறார். Close up காட்சிகளில் கண் பட்டுவிடும் என்றூ சொல்லும் அளவிற்கு பேரழகியாக இருக்கிறார்.அகலாதே மனதை விட்டு அகலாத பாடல்.

மகேசின்டெ பிரதிகாரத்தின் வில்லனாகிய சுஜித் இதிலும் வருகிறார் மிக இயல்பான உடல்மொழி அசத்தல் நடிப்பு. தமிழுக்கு ஒரு நல்ல உருப்படியான வில்லன் கிடைத்திருக்கிறார்.

நீதிமன்ற நிகழ்வுகள் மிக நன்றாக காட்சிப்படுத்தபட்டிருக்கின்றன. அரங்கு மொத்தமும் மிக அமைதியாக கவனிக்கிறது வசனங்களை. Are you a virgin ? என்று அஜித் ஸ்ரத்தாவை கேட்கும் கேள்வியைப்போல, தமிழ் சமூகமும், திரையுலகும் கொஞ்சமும் நினைத்திராத பல திடுக்கிடும் கேள்விகள் நம்முன் கேட்கப்படுகின்றன.

nerkonda-paarvai-et00104821-12-06-2019-04-13-49

இப்படம் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தவறுசெய்யலாம் என்று சொல்லும் படமல்ல. வெகுவாகவும் விரைவாகவும் மாறிவரும் கலாச்சார சூழலில், சில பண்பாட்டுக்கூறுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதை நாம் விசால மனதுடன் புரிந்துகொள்ள வேண்டுமென்றும், கற்பை மட்டுமல்ல இதுபோன்ற தவிர்க்கவே முடியத சில அம்சங்களையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக வைக்கவேண்டும் என்றும் சொல்லுகிறது

இறுதியாக அஜித் சொல்லும் ’”NO என்றால் அது NO’” தான் என்பது, அவர் குரலாக மட்டுமல்லாது பல்லாயிரம் பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவும் ஒலிப்பதால் பெரும் ஆறூதலளித்தது .தினமலர், ஆயுத எழுத்து, என் கேள்விக்கென்ன பதில் போன்ற நிகழ்ச்சிகளில் பிரபலமான தொலைக்காட்சி புகழ் ரங்கராஜ் பாண்டே இதில் அரசுத்தரப்பு வக்கீல். மிக மிகப்பொருத்தமான பாத்திரம் அவருக்கு. இருக்கையிலிருந்து எழுந்து அவரை ஓங்கி அறைந்துவிடலாமாவென்று நினைக்க வைக்கும் உடல்மொழியும் வசனவெளிப்பாடும். பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

டெல்லி கணேஷும் ஸ்ரத்தாவின் அப்பாவாக வருகிறார். புராதன அப்பாவாக இன்றி மகள் குடிப்பது கன்னித்தன்மையை இழந்தது பற்றியெல்லாம் கேட்டபின்னரும் நீதிமன்றத்தில் இருக்கிறார், வருந்துகிறார். ஆனால் எந்த காட்சியிலும் ’’அடிப்பாவி மகளே! மோசம் பண்ணிட்டியே,   என்று  கண்ணீர் விட்டு கதறியோ  வழக்கமான தமிழ்சினிமாவில் போல்  மொத்துமொத்தென்று மொத்தியோ இருந்தால் இப்படம் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போயிருக்கும். இப்போது காலம் மாறியிருக்கிறது என்பதை டெல்லி கணேஷ் பாத்திரமும் நமக்கு உணர்த்துகிறது

பெண்களின் பாலுறவு தொடர்பான   சிக்கல்களுக்கும், வீட்டிற்கு வெளியே அவர்களுக்கு  எப்போதும் கூர் நகங்களுடனும் கோரைப்பற்களுடனும் காத்திருப்பதாக நாம் நம்பும் ஒரு ஆபத்தான உலகிற்கும் அவர்கள் அணிந்துகொள்ளும் ஆடைகளும், அவர்கள் சுயமாக எடுக்கும் துணிச்ச்சலான முடிவுகளும், அவர்களும் மது அருந்துவதும் தான் என்று காரணங்களை நாம் அடுக்காமல் இதற்கு நாம் எத்தனை தூரம் காரணமாயிருக்கிறோம் என்றும் யோசனை செய்ய சொல்லும் படமிது. கூட்டுக்குடும்பம் இல்லை பல வீட்டில் ஒற்றை பெற்றோர் அல்லது ஒற்றை பிள்ளைகள்.  சொந்தம் பந்தம் என்று எதுமில்லா சூழலில் உள்ளத்திலுள்ள பதின்பருவ சிக்கலகளை பகிர்ந்துகொள்ள யாருமற்ற ஒரு சமூகத்தில் அவர்கள் வளரவேண்டி வந்திருப்பதில் நம் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டும்

 பெண்களும் ஆண்களும் எதையெதையெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது என்று பாடம் எடுக்கும் படமுமல்ல இது.கலாச்சார மாறுதல் என்பது ஒரு சுனாமி போல வெகு விசையுடன் இளைஞர்களை உள்ளிழுத்துகொண்டிருக்கையில் நாம் இன்னும் பெண்கள் எதை செய்யலாம் செய்யக்கூடாது என்று பட்டியல் போட்டுக்கொண்டிருக்காமல் அவர்களை, அவர்களின் வயதை, ஹார்மோன்கள் செய்யும் கலவரங்களை, உடல் சார்ந்த தேவைகளை  வீட்டுக்கு  வெளியே அவர்களை ஈர்க்க காத்திருக்கும் ஒரு வேகமான உலகை, நாமும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நமக்கு சொல்லும் ஒரு படம்

  பெண்களுக்கு தளைகளை பிணைப்பதற்கு முன்பு, குற்றம் சாட்டுவதற்கு முன்பு  அவர்களை  பரிர்ந்துகொள்வதும் , அவர்கள் தரப்பு நியாயங்களையும் அநியாயங்களையும் நாம் அறிந்துகொள்வதன் அவசியத்தை சொல்லும் படமிது

ஸ்ரீதேவி இருக்கும் போது அவருக்கு அளித்த வாக்கின்படி போனி கபூரின் தயாரிப்பில் அஜித் நடித்துக்கொடுத்திருக்கும் இப்படத்தை சென்ற தலைமுறையை சேர்ந்தவர்களும் இத்தலைமுறையினரும் இணைந்து பார்க்கலாம்

கும்பளாங்கி நைட்ஸ்

கும்பளங்கி நைட்ஸ், 2019 பெப்ரவரி 7ல் வெளியான         மலையாளத் திரைப்படம். மது சி. நாராயணன் இயக்கத்தில் சௌபின் ஷகீர், ஷான் நிகாம், ஸ்ரீநாத் பாஸி, பகத் பாசில் நடித்திருக்கின்றார்கள்

 திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன், பகத் பாசில், நஸ்ரியா நசீம் ஆகியோரின்  வர்க்கிங் க்ளாஸ் ஹீரோ என்னும் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஸுஷின் ஷாம் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன

திரைக்கதை கும்பளாங்கி என்னும் கொச்சியைஅடுத்துள்ள, தேவதை கதைகளில் வருவது போன்ற மிக அழகிய, ஒரு  கடற்காயல்(Back waters) கிராமத்தில் நடக்கிறது. அதிகம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருமிடமென்பதால் கதையிலும் சுற்றுலாப்பயணிகளும் அவர்களின் தங்குமிடங்களும் வருகின்றது

 முழுதாக கட்டி முடிக்காத, செங்கற்களாலான சுவர்களுடன் இருக்கும், எந்த ஒழுங்குமின்றி பல சாமான்கள் அடைந்த ஒரு வீட்டில் வசிக்கும் நான்கு சகோதரர்கள் அதில் ஒருவர் வாய் பேச இயலாதவர் இவர்களின் வாழ்வும் இடையே  எட்டிப்பார்க்கும் சில காதல்களுமே கதை. துவக்கத்தில் யார் யாருக்கு யார் யார் பெற்றோர் என்பதில் குழப்பமிருக்கிறது எனினும் பிற்பாடு மெல்ல மெல்ல ஒரு மலர் அவிழ்வது போல கதை அவிழ்கையில் நமக்கு ஒவ்வொன்றாக புரிகின்றது..

ஃபகத் ஃபாசில் எப்போதும் போல அசத்தியிருக்கிறார். முதல்காட்சியில் கண்ணை உருட்டி விழித்தபடிக்கு தன் அடர்ந்த மீசையை கண்ணாடியில் பார்த்து மீண்டும் மீண்டும் சரி செய்கையிலேயே என்னவோ ஒரு பிழையென்று நமக்கு சந்தேகம் வருகின்றது அப்பிழை என்னவென்று இறுதிக்காட்சியில்,  கயிறுகளால் கட்டி,கட்டிலுக்கடியில் தள்ளப்பட்டிருக்கும் ஃபகத்தின் மாமியார் வெளியே இழுக்கப்பட்டு வாயைச்சுற்றி கட்டப்பட்டிருக்கும் கட்டுக்களை அவிழ்த்த உடனே சொல்கிறார்

மனைவியும்  கொழுந்தியும் அந்தரங்கமாக பேசிக்கொண்டிருக்கையில் கதவோரம் நின்று என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்று கேட்கையில் ஃபகத்தின் உடல்மொழி அசத்தல், கடைசியில் அந்த பைத்தியக்காரத்தனமான சண்டையிலும் அப்படியே. மனைவி கோபித்துக்கொள்ளும் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மணிக்கணக்காக சுவர் மூலையில் திரும்பி நின்று கொள்வதுமாக ஃபகத் கலக்கியிருக்கிறார்.  உன்னத உடைகளுடன் மிடுக்காக அவர் பைக்கில் புறபட்டு போகும் அந்த அந்தஸ்தான வேலை என்னவென்று தெரியவருகையிலும் வியப்பும் சிரிப்பும்  வருகின்றது.

ஃபகத்தை விட அதிகம் ஸ்கோர் பண்னுவது என்றால்  அது ஸாஜியாக வரும்  செளபின் தான்.  மேல் சட்டையிறி மீன் சோறும் கள்குடியுமாக  கேரளக்காரருக்கே உரித்தான இயல்பான உடல்மொழி, மனநல மருத்துவரின் சட்டை நனையும் அளவிற்கு கட்டிபிடித்து கதறுவது  திடீரென ஏற்பட்ட உணர்வெழுச்சியில் தூக்கிட்டுக்கொள்வது, இறந்த நண்பனின் மனைவியிடம் பரிவாக இருப்பது என்று அவரின் நடிப்பு மிளிர்கிறது. கேரளத்தின் மற்றொரு இணையில்லா நடிகன் செளபின்.  இறந்த நண்பனின் மனைவியையும் அவருக்கு பிறந்த பச்சிளம் சிசுவையும் மருத்துவமனையில் பார்க்கும் செளபினின் முகத்திலும் கண்களிலும் ஓராயிரம் உணர்வுகளை படிக்கலாம். அற்புதக்கலைஞன் இவர். திலீஷ் போத்தனும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்யாம் புஷ்கரன் கும்பளாங்கிக்கு சென்றிருக்கையில் அங்கு நடந்த சில நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டு இக்கதையை எழுதியிருக்கிறார். பல இடங்களில் வசனங்களும் அழகு. ’’அவங்கல்லாம் கிருஸ்துவங்களாச்சே’’ எனும் அக்காவிடம் ’’ஜீசஸ் நமக்கு தெரியாதவரா என்ன’’ என்கிறாள் தங்கை

 ரிசார்ட்டில் பணிபுரியும் பெண்ணின் காதலும் அமெரிக்க அழகி நைலா- போனி காதலும் அருமை. எனினும் பேபி- பாபி காதலே படத்தின் மையப்புள்ளி. ஷைஜு காலித்தின் காமிராவுக்கு திருஷ்டி சுற்றி போடவேண்டும் என்ன அழகு எத்தனைஅழகு! சைஜு ஸ்ரீதரனின் படத்தொகுப்பு படத்திற்கு ஒளிப்பதிவிற்கு இணையான முக்கியத்துவம் கொண்டிருக்கிறது.

ஃபாசிலின் மனைவி சிம்மியாக வரும் கிரேஸும் அசத்துகிறார். பைக் ஹார்ன் திடீரென அடிக்கையில் திடுக்கிடுவது, பயந்துகொண்டே கணவனுடன் உள்ளறைக்கு போவது, தங்கையை கணவன் பேச்சில் இழிவு படுத்துகையில் மேசை மேலிருக்கும் கொசுஅடிக்கும் மட்டையை  ஒரே அடியில் அடித்து உடைத்தபடி கணவனை எச்சரிப்பது, திருமண விருந்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் தங்கையின் திருமண பேச்சுவார்த்தை  நடக்கையில் அசெளகரியமக அமர்ந்திருப்பது என்று பிரமாதப்படுத்துகிறார். கண்கள்   அதிகம் பேசுகிறது அவருக்கு.

பேபி,பள்ளிப்பருவத்திலிருந்தே தான் காதலிக்கும் பாபியிடம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மீன் பிடிக்க வலை வீசி காண்பிக்க சொல்கையில் பாபி வீசுகிறார் ஒரக்கண்ணால் பேபியை பார்த்தபடிக்கே காதலெனும் மாயவலையையும். அவ்வலையில்  மீட்சியின்றி அகப்பட்டுக்கொண்டவர்களின்  கதையைத்தான் சொல்கிறது கும்ப்ளாங்கி இரவுகள்.

நான்கு பாடல்களில் ’’எழுதாக்கதை போல் இது ஜீவிதம்’’  மிக அருமையான மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். அக்குரலும் இசையும் உள்ளத்தை உருக்குகிறது. எழுதாக்கதையை கேட்கையில் இசையமைத்து பாடிய ஸுஷின் ஷாமின் கரஙகளை இறுக பற்றிக்கொள்ள  வேண்டும் போலிருக்கிறது.

காட்சிக்கு காட்சி மனதை அள்ளுகிறது அல்லது கண்களை ஈரமாக்குகிறது. இறைப்பணியில் இணைந்து விட்ட தாயை கல்யாணத்தின் பொருட்டு கொஞ்ச நாள் வந்து உடன் இருக்கசொல்கையில், தாய் ஒரு மகனின் கைகளைப்பற்றியபடிக்கு வர இயலாதென்றும் அவர்களுக்காக பிரார்த்தித்து கொள்வதாகவும் சொல்கையில் கண்கள் ஈரமாவதை தவிர்க்கவே முடியாது. மலர்த்திய அகலக்கண்களுடன் பேபி மோளாக வரும் அன்னாவும் சுட்டிப்பெண்தான்.

இத்திரைப்படம் காட்டும் கும்ளாங்கியின்  சில இரவுகள் மறக்க இயலாதவை. சாஜி தற்கொலை செய்ய முயன்று, எதிர்பாராவிதமாக நண்பன் இறக்கும் இரவு, நிலவு பொழிகையில் கடலில் போனியும் நைலும் களித்திருக்கும் இன்னுமொரு இரவு, விருந்துக்கு  ஃபகத்தும் மனைவியும் சிற்றப்பன் வீட்டுக்கு செல்லும் இரவு, காயல் நீரில் படகு ஒழுகிச்செல்லும் இரவு,காதலின் பொருட்டு சண்டை நடக்கும் அந்த இறுதியிரவு,  இப்படி சொல்லிக்கொண்டேயிருக்கலாம்

இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரும் முன்னடி எடுத்து வைத்திருக்கும் இத்திரைப்படம் காதலென்னும் ஒரு  எளிய, இயல்பான, சின்னஞ்சிறு புள்ளியை தொட்டு தொட்டு கடற்காயல் அளவிற்கே விரித்து   அழகாக்கியிருக்கிறது

கும்பளாங்கி கிராமம் அழகோ அழகு. காயலும் அதன் கரையிலிருக்கும் வீடும், நடுவில் இருக்கும் பசுந்திட்டும் அங்கு காதலர்கள் ஒரு சிறு படகில் சென்று சந்திப்பதும் அத்தனை அழகு. ஒரு காட்சியில்  அங்கு  கொண்டு வந்த பிளாஸ்டிக் தண்ணீர்பாட்டிலை  திரும்ப எடுத்துக்கொண்டு வரசொல்கிறார் காதலி. சூழல்பாதுகாப்பில் கேரளம் காண்பிக்கும் கவனம் திரைப்படம் வரை நீண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

முதல் பாதியைக்காட்டிலும் இரண்டாம் பாதி

kumbalangi nightsகூடுதலாக ஈர்க்கின்றது. பாபியாக வரும் ஷேன் நிகாமின் கன்னக்குழிகளும் காது வரை நீளும்புன்னகையும் வெகு வசீகரம்.

எந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அதிகம், யார் கதநாயகன் என்னும் கேள்விகளெல்லாம் இன்றி கதையும் கதைக்களமும் கதாபாத்திரங்களின் உணர்வெழுச்சிகளுமே கதையை நகர்த்திக்கொண்டு போகின்றன. நடிகர்கள்  திரையில் தங்களை பெரிய நடிகர்களாக காட்டிக்கொள்ளாமல் கதாபாத்திரங்களாக மட்டுமே மிளிர்கிறார்கள். எந்த காட்சியும் வலுக்கட்டாயமாக திணிக்கப்படவில்லை. கதையினூடே அனைத்துக்காட்சிகளும் காயலில் படகு போல இயல்பாக  ஒழுகிச்செல்கின்றது

பலதரப்பட்ட உறவுகளை, அவற்றின் சிக்கலான பல அடுக்குகளை, இவற்றினிடையே முகிழ்க்கும் காதலை, உணர்வெழுச்சிகளை மனத்தடுமாற்றங்களை காயலின் பிண்ணனியில் குளிரக்குளிரச் சொல்லும், மிக அழகிய, உலகெங்கிலும் பல வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக்குவித்த இத்திரைப்படத்தை தவறாமல் பார்ப்பதோடு கும்பளாங்கிக்கும் ஒருமுறை போய் வரவேண்டும்

கேசரி

 

2019 ல் வெளி வந்த போர் குறித்தான திரைப்படம் கேசரி. தர்மா ப்ரொடக்‌ஷனில் கரன் ஜோஹரும் சேர்ந்து தயாரித்த படம் இது. அக்‌ஷய் குமார் நாயகனாகவும்  பரினிதி சோப்ரா உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1897செப்டம்பர் 12 ஆம் தேதி  ஏறக்குறைய பத்தாயிரம் வரை இருந்த ஆஃப்கான் பழங்குடியினருக்கும் (அப்போதைய பிரிடிஷ் ராணுவத்திலிருந்த) 21 பேர் மட்டுமே கொண்ட சீக்கிய படையினருக்கும் நடந்த மிக உணர்ச்சிகரமான, வீரமான, நம்மில் பலர் அறிந்திருக்காத ஒரு போரைப்பற்றியது

80 கோடி தயாரிப்புச்செலவில் உலகம் முழுக்க ஹோலிப்பண்டிகை அன்று  ஜீ ஸ்டுடியோவால் திரையிடப்பட்டது. படம் வெளியான சில வாரங்களிலேயே அதிக வசூலான பாலிவுட் திரைப்பட வரிசையில் இணைந்தது

உண்மைக்கதையான இது எந்த மாற்றமும் இன்றி எடுக்கப்பட்டிருக்கின்றது. பிரிட்டிஷ் இந்தியாவில் ஆஃப்கான் எல்லையில் இருந்த சரகரி கோட்டையில் 20 சீக்கியர்கள் மட்டுமே கொண்ட ஒரு  படைப்பிரிவு அமைத்திருந்தது. ஹவல்தார் இஷார் சிங் என்னும் சீக்கியர் இந்திய ஆஃப்கான் எல்லையில் இருந்த  குலிஸ்தான் கோட்டையில் புகழ்பெற்ற படைவீரராக இருந்தவர். அவரது பிரபல்யத்தைக்கண்ட, இந்தியர்கள் கோழைகள் என்னும் தீர்மானமான முடிவில் இருந்த  அவரது பிரிட்டிஷ் உயரதிகாரி அவர் மீது பொறாமைகொண்டார். ஒரு நாள் அவரது கோட்டை அருகிலேயே முல்லா என்னும் ஒரு ஆஃப்கன் பழங்குடித்தலைவன், கட்டாயத்திருமணத்தில் விருப்பமில்லாமல் இனத்தை விட்டு தப்பியோடிய ஒரு பெண்ணை அவளது கணவனை விட்டே கொல்லச்சொல்கிறார். இதை பார்த்துக்கொண்டிருந்த இஷார் சிங் அவரது மேலதிகாரியின் கட்டளையையும் மீறி அந்த பெண்ணை அவளது கணவனைக்கொன்று காப்பாற்றுகிறார்.

இந்த ஒரு காரணத்தினாலேயே இஷார் சிங்கை மேலதிகாரியின் கட்டளையை மதிக்காத குற்றத்தின் பொருட்டு குலிஸ்தானுக்கும் லாக்கர்ட் கோட்டைக்குமிடையிலிருக்கும் சரகரி கோட்டைக்கு இடமாற்றம் செய்கிறார்.அங்கு 20 சிப்பாய்கள் மட்டுமே இருந்தாலும் ஒழுங்கின்மையே பிரதானமாக இருக்கிறது. அங்கு பொறுப்பேற்றுக்கொண்டு அனைவரின் அன்புக்கும் உரியவராகி ஒழுங்கான ஒரு படைப்பிரிவை தயார் செய்கிறார் இஷார் சிங்.

விரைவிலேயே இஷார் காப்பாற்றிய அதே பெண்னை சரகிரி கோட்டைக்கு முன்பாகவே வெட்டிக்கொன்று பத்தாயிரம் பழங்குடியினருடன் முல்லா போருக்கு வருகிறான். வரும் பொழுது பிறர் இவர்களின்  உதவிக்கு வரும்  எல்லா வழியையும் அடைத்தும் விடுகிறான்

அப்போது 21 பேர் மட்டுமே இருக்கும் அப்படைபிரிவில் தனது காவி நிற (kesari)  டர்பனை அணிந்துகொண்டு உணர்ச்சிகரமான உரையாற்றும் இஷார் 21 பேரிடத்திலும் சாகும் வரும் வரை போரிடும் உறுதியை உருவாக்குகிறார்.

மிககுறைந்த ஆட்களே அப்படைபிரிவில் இருப்பதால் படம் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே அனைவரும் நமக்கு மிக நெருக்கமாகி விடுகிறார்கள். குள்ளமான சமையல்காரர், எப்போதும் சிரிக்கவே சிரிக்காத ஒருவர், 6 வாரமே ஆன மகளின்  கைகளின் அச்சு பதிந்திருக்கும் அஞ்சல் அட்டையை எடுத்து எடுத்து பார்த்துக்கொள்ளும் ஒருவர், சகிக்க முடியாத இசையை அடிக்கடி வாசிக்கும் ஒருவர் என்று அனைவரும் நமக்கு விருப்பமானவர்களாகிவிடுகிறார்கள் இந்த போருக்கு முன்பே. செல்லுமிடங்களிலும் போர் நடைபெறும் போதும் கற்பனையில் தன் மனைவியுடன் அடிக்கடி இஷாரும் பேசிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் இருக்கிறார்

21பேரும் பல ஆஃப்கனியர்களை கொன்று தாங்களும் உயிரைவிடுவதும் இறுதிக்காட்சியில் மானசீகமாக தன் மனைவியுடன் பேசியபின்னர் தீயில் பழுக்க காய்ச்சிய வாளுடன் பலரை கொன்றுவிட்டு தன் டர்பனை யாரும் தொடாமல் பார்த்துக்கொண்டு இஷாரும் உயிர்விடும் காட்சிகளில் நம் அனைவரும் கண் கலங்குவோம்.

இஷார் சிங்கிற்கு பிரிட்டிஷ் படைகளின் மிக உயரிய விருதான விக்டோரியா க்ராஸ் என்னும் விருது அளிக்கப்பட்டது. இறந்து போன 21 சிப்பாய்களுக்குமாக பிரிட்டிஷ் பாராளுமன்றம் 2 நிமிட அமைதி காத்ததும் குறிப்பிடத்தக்கது. .ராணுவ வரலாற்றில் எவராலும் மறக்கமுடியாத நிகழ்வு சீக்கிய படையினரின் இந்த சரகிரி போர். இனிமையான பல பாடல்களும் இத்திரைப்படத்தில் இருக்கின்றது.

nationalism patriotism heroism  என எல்லாம் கலந்த பிரமாதமான் நடிப்பை தந்திருக்கிறார் அக்‌ஷய்குமார். படத்தொகுப்பு பிண்ணனி இசை ஒளிப்பதிவு உடையமைப்பு என எல்லாம் பிரமாதம் கேசரியில்

.சீக்கியர்கள் போற்றும் அவர்களது விழுமியங்களையும் வீரத்தினூடே சொல்லும் படமிது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் பரவலாக போற்றப்படும் போர் நினைவுப்படமான இதனை நம் இளைஞர்கள் அவசியம் காணவேண்டும்.

Aladdin -அலாவுதீன் , சில திருத்தங்களுடன்

உலகின் பல்வேறு இடங்களில் அனைத்து மொழிகளிலும், பல்வேறு மாற்றங்களுடன் சொல்லப்பட்டு வரும் மத்திய கிழக்கு நாடுகளின் நாட்டுப்புற பெருங்கதையான ‘’ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள்’  கதைகளில்  ஒன்றுதான்,  புகழ்பெற்ற  ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’. இந்தக்கதைதான் சமீபத்தில் லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் திரைப்படமாக ‘அலாவுதீன்’என்ற பெயரில் உலகம் முழுவதும் மே 24ம் தேதி வெளியானது.

1992ஆம் ஆண்டு வெளியான அலாவுதீன்  Animation படத்திற்குப்பிறகு  டிஸ்னி நிறுவனம் மீண்டும் அற்புத விளக்கைத் தேய்த்திருக்கிற்து. ஆணழகன் வில் ஸ்மித்  கவர்ச்சியும் மர்மமும் அசாராணமும் கலந்த, நீல நிறத்தில் , இடுப்புக்கு கீழே புகைப்படலமாக வரும் பிரம்மாண்டமான பூதமாக மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார். சிரிக்கும் கண்களும்,  மயக்கும் குரலும், கிண்டலும், கேலியும், காதலுமாக அவரின் பல்லாயிரக்கணக்கான ரசிகைகளை மீண்டும் கவர்ந்திருக்கிறார்.

படம் வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது; குழந்தைகளுடன் பெரியவர்களும் கொண்டாடுகிறார்கள். பல்லாயிரம் வருடங்களாக சின்னஞ்சிறு விளக்கினுள் அடைபட்டிருக்கும் பூதம், அற்புத விளக்கை தேய்த்து தன்னை விடுவித்தவர்களை மூன்று வரங்களின் மூலம் மகிழ்விப்பதுடன் , தானும் சுதந்திரமான வெளியில் உலவவும், தோழமைக்கும் காதலுக்கும்  ஏங்குவதுமாக பல்லாண்டு பழமையான ஒரு கதையில், சுவாரஸ்யமான சில திருத்தங்களுடன் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். நிறையகாட்சிகளில் பாடல்களின் மூலமே கதை சொல்லப்படுவதால்  இதை இசைத்திரைப்படமென்றும் சொல்லலாம்.

பெரும்பாலான சிறார் கதைகளில் வரும் ஏழையொருவன் இளவரசன் ஆவது என்னும் கதையென்பதால் அனைத்து வயதினரின் விருப்பத்துக்கும் உகந்த கதையிது.  தெருவில் சில்லறைத்திருட்டுக்கள் செய்து வாழும் யாருமற்ற இளம் நாயகன், அழகும் இளமையும் நிறைந்த இளவரசியை சந்தித்து காதல் கொள்வது, ஆட்சியை பறிக்க திட்டமிடும் வில்லன், மந்திர விளக்கு, அதிலிருந்து வரும் பூதம்,, பூதத்தின் காதல், பூதத்திற்கும் அலாவுதீனுக்குமான நட்பு  என அனைவரும் அறிந்திருக்கும்  கதையில், எதிர்பாரா அம்சங்களுடன் கதை அழகாக போகின்றது.

வில்லன் ஜாஃபர், அலாவுதீனை விளக்கை கொண்டு வரச்சொல்லுவதும், அலாவுதீன் விளக்கை தேய்த்தபின்னர் அவன் வாழ்வு மாறுவதும், அதன்பின்னரான சாகசங்களுமே கதை. மூலக்கதையைபோல இது அலாவுதீனை மையப்படுத்தாமல் பூதத்தை பிரதானமாக கொண்டிருக்கிறது

படத்தில்  மர்வான் கென்சார்நேவிட் நெகஹ்பான்பில்லி மக்னுஸ்ஸன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நீல பூதத்தைக்காட்டிலும் இளவரசன் அலியின் தோழனே அனைவருக்கும் பிரியமானவராக இருக்கிறார். பூதத்தின்காதலி டாலியாவாக  நாஸிம் பெடரட் மிகச்சரியான தேர்வு.

அலாவுதீனாக வரும் மசாட்  ஏழைச்சிறுவனாக கடைகளில் திருடி, தாவித்தாவி தப்பித்து செல்வதும், பூதம் அவனை இளவரசனாக மாற்றியும் அவனால் அந்த வேடத்தில் பொருந்தமுடியாமல்  தவிப்பதுமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

.Pink Power Ranger வேடத்தில் புகழ்பெற்ற நவாமி ஸ்கட் இதில் இளவரசி ஜாஸ்மின். மாறுவேடத்தில் அலாவுதீனை சந்திப்பதும் காதல் கொள்வதும் ஆட்சிபொறுப்பை ஏற்க விரும்புவதும், வில்லனை எதிர்ப்பதும் அழகிய குரலில் பாடுவதுமாக பலரின் விருப்பத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.  அவர் குரலில் முக்கியமான பாடலான speechless அவரை இன்னும் புகழின் உச்சிக்கு கொண்டு போகும்

படத்தில் ,குறும்புக்குரங்கும் பிரம்மாண்ட புலியும், வில்லனின் கிளியும் கணினி உபயம் வில் ஸ்மித்தின் நடிப்பு, அலாவுதீனாக நடிக்கும் மேனா மசூத்தின் மிகப்பொருத்தமான பாத்திரத்தேர்வு, ஜாஸ்மினாக வரும் நவோமி ஸ்கட்டின் தூய அழகு எல்லாம் ஈர்த்தாலும், அனிமேஷன் செட்கள் படத்தையும் டிஸ்னி ஸ்டுடியோவின் தரத்தையும் கொஞ்சம் கீழிறக்குகின்றன

 மூலக்கதையினின்றும் இத்திரைப்படம், சாதாரண மனிதனைப்போல அலாவுதீனின் நண்பனாக பூதம் வருவதிலும், இளவரசியை இளவரசன் அலி காதலிக்க பூதம் உதவி செய்வதிலும், பூதம் டேலியாவுடன் காதல் வயப்படுவதிலும், கொஞ்சம் வேறுபடுகின்றது இடைவேளையின் போது இளவரசன் அலி காதலை சொல்வதற்கு பதில் பலவகையான ஜாம்களை பட்டியலிடுவதும் பூதம் சலித்துக்கொள்வதுமாக அரங்கு சிரிப்பில் நிறைகின்றது.

.$183 மில்லியன் தயாரிப்புச்செலவில், சுமார் 5000 திரையரங்குகளில் உலகெங்கும்  வெளியான இப்படம், முதல் வாரத்திலேயே  $462.3 மில்லியன்களை வாரிக்குவித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

சதியும் காதலும் மந்திரமும் மாயக்கம்பளமும், சாகசங்களும், பூதமுமாக, அலாவுதீன் திரும்பக்கிடைத்த பால்யம்

aladdin

GULLY BOY

பாலிவுட்டின் பிரபலங்களான ஜாவீத் அக்தர் -ஹனி இராணி இணையின் மகளும் பிரபல நடிகர் ஃபர்ஹான் அக்தரின் சகோதரியுமான ஜோயாஅக்தரின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி 2019,ல் திரைக்கு வந்து பலத்த வரவேற்பு பெற்றிருக்கும் ஹிந்திமொழி திரைப்படம் ‘’ Gully Boy’’.

இந்திய ராப் பாடகர்களான டிவைன் மர்றும் நேஜியின் (Divine and Naezy) வாழ்வின் மீதான ஈர்ப்பில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. ஆசியாவின் இரண்டாவது பெரிய குடிசைக்குடியிருப்பான (சேரி) தாராவியை சேர்ந்த ஒரு இளைஞனின்   ராப் இசைக்கனவையும் பயணைத்தையும் சொல்லும் படமிது.

Gully_Boy_poster

முராத் ஆக ரன்வீர் சிங்கும், சஃபீனாவாக அலியாபட்டும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்

தாராவியின் நெரிசலான தெருக்களில் ஒன்றில் வசிக்கும், கல்லூரி இறுதியாண்டு படிக்கும், ராப் இசையின் மீதான காதலுடன் இருக்கும் முராத் நாயகன்.அவன் தந்தை மகனை விட இளைய ஒருபெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு வருகிறார்.  முராதுடன் தீவிர காதலில்  மருத்துவம் படிக்கும் சஃபீனா.அடிக்கடி ரகசிய சந்திப்பும் முத்தங்களுமாக காதல் தொடருகிறது. முராதின் ராப் இசையின் மீதான  ஆர்வத்தை  அப்பா கண்டிக்கிறார்.  ஒரு செல்வந்தரின் கார் ஓட்டுநராக இருக்கும் அப்பாவிற்குக்கு காலில் அடிபட்டதையடுத்து தற்காலிக ஓட்டுநராக அங்கு செல்லும் முராத் வாழ்வின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், மன அமைதிக்கும் மகிழ்வுக்கும் பணம் ஒருபொருட்டாக இல்லாமலிருப்பதையும், மிக அண்மையிலென காணும் அந்நாட்களில் அவ்வனுபவங்களையும், வாழ்வின் முரண்களையும்,  இவையனைதிற்குமிடையில் துளிர்க்கும் நம்பிக்கைகளையும்  பாடல்களாக சந்தங்களுடன் எழுதத்துவங்குகிறான்

MC Sher  என்னும் பெயரில் ராப் இசைப்பாடகனாக புகழ்பெற்றிருக்கும் ஒருவனின் நட்புடன் முராதும் தன் பாடல்களை மெட்டமைத்து யூ ட்யூபில் பதிவேற்றுகிறான்.அது புகழ்பெறுகின்றது. போஸ்டன் இசைக்கல்லூரியில் பயிலும் ஸ்கை  (கல்கி கோச்லின்) ஒரு புதிய பாடலை தாராவியில் MC Sher மற்றும் முராத்தின் ராப் இசை, மற்றும் நடனத்துடன் பதிவுசெய்து  வெளியிட,அதுவும் மிகப்பிரபலமாகின்றது. Gully Boy என்னும் பெயரில் முராத் ராப் இசைப்பாடகனாக புகழ்பெறுகிறான்

தவிர்க்கமுடியாமல் ஒருமுறை இரவில் ஸ்கையுடன் நெருக்கமாக இருந்துவிடும் முராத் இதை சஃபீனாவிடன் மறைக்கிறான்.உண்மை தெரிந்து காதலியுடன்  மனக்கசப்பு,   அதே சமயத்தில் மாற்றாந்தாய் வந்தபின்னால் அம்மாவுக்கு ஏற்படும் அவமானங்களால் வீட்டை விட்டு தாயுடன் முராத் வெளியேறும் நிலை.  இசைக்கனவை மூட்டைக் கட்டி தூர வைத்துவிட்டு வாழ்வின் நிதர்சனங்களை ஏற்கும்  கட்டாயத்தில் தன் மாமாவிடம் வேலைக்கு சேருகிறான் முராத்

படத்தின் இறுதிக்காட்சிகளில் அமெரிக்க ராப் இசைப்பாடகரான  நாஸ் (Nas) மும்பையில் நடத்தும் ஒரு இசைப்போட்டியில் கலந்துகொள்ளும் முராத் இறுதிசுற்றுக்கு வருகிறாரா, வெல்கிறாரா, காதலியுடனான கசப்பு மறைந்ததா என்பதே மீதிக்கதை

இசையை அடிப்படையாக கொண்ட படமென்பதால்  நிறைய பாடல்கள் இருக்கின்றன.  டிவைன், நேஜி, மற்றும் அமெரிக ராப் பாடகர் நாஸ் உடன் ரன்வீர் சிங்கும் பல ராப் இசைக்கலைஞர்களும் இணைந்து பாடி படத்தின் இசையனுபவத்தை மறக்கமுடியாததொன்றாக்கி இருக்கிறார்கள். ’’அப்னா டைம் ஆயகா’’  இப்போது  பெரும்பாலான இளைஞர்களின் விருப்பப்பாடல்.

காதலர் தினத்தன்று உலகிங்கிலும் சுமார் 4000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு  தயாரிப்புச்செலவான 84 கோடிக்கு மேல்  234 கோடியை வசூலித்து, இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற இத்திரைப்படம், 8 mile  என்னும் 2002ல் வெளியான ஆங்கிலத் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி எனும் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது

ரன்வீர் மற்றும் அலியாவின் நடிப்பிற்கு இணையாக ஜோயாவின் இயக்கமும்  விஜய் மெளரியாவின் வசனங்களும் படத்தின் மிகப்பெரும் பலங்களென்று சொல்லலாம். தாராவியின் நெரிசலான தெருக்களிலும், அடைசலான தீப்பெட்டிகளை கலைத்துக்கட்டியது போன்ற வீடுகளுக்குள்ளும் நம்மை அநாயாசமாக அழைத்துசெல்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே ஒஸா, நிதினின் படத்தொகுப்பும் வெகுவாக பாராட்டப்படவேண்டியது

கள்ளத்தனமும் குறும்பும் நிறைந்த அலியா நாயகி. மர்மமான சிரிப்பும் ,படபடவென பொரியும்  பேச்சும் , துள்ளலும் துடிப்பும், ஸ்கையை பாட்டிலில் அடித்து மண்டையை உடைக்கும் ஆங்காரமும், தீவிரக்காதலும் அப்பா அம்மாவிடம் சர்வசதாரணமாக காதலின் பொருட்டு சொல்லும் பொய்களுமாக மிக மிகப்பொருத்தமான, அலியாமட்டுமே இயல்பாக செய்யவும் பொருந்தவும் முடிகின்ற பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது அவருக்கு. பொங்கித்ததும்பும் இளமையும் நிஷ்களங்கமான  அழகுமாக அலியா வருகையில் திரையே  கூடுதலாக ஒளிர்கின்றது.

ராப் இசைக்கனவு, மாற்றாந்தாயுடனிருக்கும் கண்டிப்பான அப்பா, வறுமை, துயரிலிருக்கும் தாய், நண்பன், கூடுதல் பிடிப்புடனிருக்கும் காதலி, இப்படி கலவையான விஷயங்களால் அலைக்கழிக்கப்படும் சேரிப்பகுதியைச்சேர்ந்த இளைஞனாகவே வாழ்ந்திருக்கும் ரன்வீரை எத்தனை பாராட்டினாலும் தகும்,

வேலைக்காரனின் மகன் வேலைக்காரன்தான் ஆகவேண்டும் என அடிக்கடி முராதின் மாமா சொல்லும் அவ்விதியை கடின உழைப்பும் அதிர்ஷ்டமும் கூடிவந்ததால் மாற்றியமைத்து, விரும்பிய கனவை நனவாக்கும் ஒரு சேரிப்பகுதி இளைஞனின் கதையை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் படம் இது.

தெருவிலிருக்கும், எளிய, சாதாரண பையன் என்னும் பொருள்படும் Gully Boy  என்னும் பெயரில்  இத்திரைபப்டம் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வாழ்வின் பின்புலங்களும் வசிப்பிடமும் பொருளாதாரமும் ஒரு பொருட்டல்ல என்று சொல்கிறது.

 Under play செய்திருக்கறார் என்றுகூட  சொல்லும் அளவிற்கு ரன்வீரும் மிக மென்மையான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். கூச்சமும் தயக்கமுமாக அவர் தன் முதல்பாடலை பாடுவதும், நெருக்கமான காட்சிகளில் அலியாவின் கை சற்றே மேலோங்குகையில் அவற்றை கண்களில் காதலுடன்  ஆமோதித்து எற்றுக்கொள்வதும் நண்பர்களுடன் இயல்பாய் கூடிக்கொள்வதும் தன் சொந்த சேரி மக்களின் வாழ்வை படம்பிடித்து  உலகிற்கு காட்டியதில் பெருமிதம் அடைவதுமாய் நடிப்பில் மிளிர்கிறார்

ராப் இசையையே பிரதானமாக சொல்லும் படமென்றாலும் வழக்கத்தைக்காட்டிலும் கொஞ்சம் நீளமான இப்படம் எந்தவிதத்திலும் சலிப்புபூட்டாமல் அழகாக  நகர்கின்றது.. இசை, காதல்,  பிறிதொரு காதல் ,கூடல், ஊடல், கடின உழைப்பு குடும்பப்பிரச்சினைகள், நட்பு என்று பல உணர்வெழுச்சிகளுடனான கண்ணிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒருவனின் வாழ்வையும் கனவையும் சொல்லும் இப்படம்  அமேசான் பிரைமிலும் தற்போது வெளியிடபட்டிருக்கிறது.

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑