இன்று இன்ஸ்டாவில் கும்ப்ளாங்கி நைட்ஸ் -ன் சில காட்சிகளை மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு எவர்கிரீன் படமாகிவிட்டிருக்கிறது கேரளத்திலும் என்னைபோல அரைமலையாளிகளுக்கும்.
இனி கேரளா இல்லை தெரியும் தானே? இந்த வாரத்திலிருந்து கேரளமானு.

அன்னா பென், கன்னக்குழியழகன் ஷான் நிகாமிடம் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளுக்கென வீண்டும் ஒருக்கில் மீன் வலையை வீசச்சொல்லிக் கேட்டுக்கொள்வதும், அநாயசமாக வலை வீசும் ஷான், அகலக்கண்ணி அன்னாவின் காதல் வலையில் சிக்கிக்கொள்ளும் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னொரு முறை படத்தைப் பார்க்கவேண்டும் நேரம் கிடைக்கையில். பசுமை கண்ணை நிறைக்கிறது காட்சிக்கு காட்சி.

இன்னொரு துண்டு ரீல்ஸில் ஷெளபின் ஷாகீரிடம், ஷான் தனது காதலை லேசாகச்சொல்லி, காதலியின் அக்காள் கணவனாகிய ஃபகத்திடன் வந்து பேசச் சொல்லிக்கேட்கும் காட்சியைப்பார்த்தேன். உண்மையிலேயே ஷெளபின் அசாத்தியமான கலைஞன். அதே காட்சியை உலகின் வேறெந்த நடிகரும் அத்தனை சரியாக சிறப்பாக நடிக்கவெ முடியாது. சாம்பவியுடன் ஷாகிரின் மகள்(மனைவியின் மகள்) படிக்கிறாள் என்று எனக்கு இன்று பெருமையாக இருந்ததென்றால் பாருங்களேன். நான் அவரின் ரசிகை (டென்ஸைல் வாஷிங்டன், இட்ரிஸ் எல்பா, பார்த்திபன் மற்றும் டாம் க்ரூஸ் இவர்களுடன்).

சட்டையிலாமல் இடிந்த திண்ணையில் படுத்துக்கொண்டு தேங்காயை கரண்டியபடி, அவ்வப்போது கடித்துக்கொள்ள,வெற்று மார்பில் துண்டு வெல்லத்தை வைத்துக்கொண்டு நடிக்க தமிழில் யாராவது இருக்கிறார்களா என்ன? அப்படி ஒரு காட்சியை ஒரு நடிகரிடம் சொல்லும் துணிவு கொண்ட இயக்குநர்களோ உதவி இயக்குநர்களோ இருப்பார்களா முதலில்?

அண்ணன் என்று கூப்பிடச்சொல்லி, ஷான் அப்படிக் கூப்பிடுகையில் செளபினின் நடிப்பு அபாரம் அபாரம். இன்று நினைத்துப் பாரக்கையில் கும்பளாங்கி நைட்ஸுக்கு நான் எழுதிய திரைவிமர்சனம் அசட்டுத்தனமானது என்று தோன்றுகிறது ஆனால் படம் பார்த்ததும் உணர்வெழுச்சியில் அப்போதே எழுதியது என்பதால் மன்னிக்கலாம்.
Mam, photography shyju khalid has done a nice job