இன்று தினமணியில் திரு அருள் செல்வன் அவர்களுக்கு அளித்த நேர்காணல் வெளியாகியிருக்கிறது. நான் நாளிதழ்கள் எதுவும் வாங்குவதில்லை .ஏதேனும் குறிப்பிட்ட செய்தி வாசிக்கவேண்டியிருந்தால் நூலகம் சென்று வாசிக்கிறேன். அதுவும் அரிதினும் அரிதாகத்தான்.
இப்போதெல்லாம் இந்து தமிழில் வெளியாகும் நண்பர் ஸ்ரீராமின் வியாழக்கிழமை கட்டுரைகளுக்காகச்செல்கிறேன். நாளிதழ்களும் தொலைக்காட்சித்தொடர்பும் இல்லாத இயற்கையுடன் இணைந்த வாழ்வின் ஆடம்பரம் இது.
முன்பு தினமலர் பட்டம் நாளிதழில் தொடர்ச்சியாகக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்ததற்குப்பிறகு அறவே நாளிதழ்கள் வாசிப்பதில்லை. எல்லாச்சேதியும் யாருடனும் தொடர்பிலில்லாமல் தனியறையில் கல்லூரியிலும், தன்னந்தனிமையில் வீட்டிலும் இருக்கையிலும் எனக்கு வந்து சேர்ந்துவிடுகிறது.
இன்று தினமணியில் என்னைக்குறித்த பதிவை வாசிக்கையில் தினமணிக்கும் எனக்குமான தொடர்பு நினைவுக்கு வந்தது.
நான் சிறுமியாக இருக்கையில் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். அந்த வீடு அங்குலம் அங்குலமாக எனக்கு நினைவிருக்கிறது. வீட்டைஒட்டி இருக்கும் ஐய்யப்பன் கோயிலில் தான் பெரும்பாலும் இருப்பேன். விறகடுப்பு பம்ப் ஸ்டவ் திரிஸ்டவ் என்று படிப்படியாக மேலே வந்ததும் நினைவிலிருக்கிறது. வாரா வாரம் செவ்வாய்க்கிழமை ஒரு ட்ரம் இணைக்கப்பட்ட தள்ளு வண்டியில் ’’….கிஷ்ணாயில்ல்ல்ல்ல்ல்ல்ல்…’’ என்று கூவி விற்றுக்கொண்டு ஒருவர் வருவார் அவரிடம் காத்திருந்து வாங்கிக்கொள்வது வழக்கம்.
அந்த தெருவின் கோடியில் இருந்த கொஞ்சம் வசதியான ஒரு வீட்டில் மட்டும்தான் தினமணியும் மாதாமாதம் ராணிமுத்துவும் வாங்குவார்கள். காலை 11 மணி வாக்கிலிருந்து அந்ததெருவே ஒவ்வொருவராக அவர்கள் வாசித்து முடித்த தினமணிப்பேப்பரை கடன்வாங்கி வாசித்து மாலை திருப்பிக்கொடுப்போம் பெரும்பாலும் நான் தான் போய் வாங்கிவருவேன். ஞாயிற்றுக்கிழமை இணைப்பான கதிர் பலர் வீட்டில் வாரக்கணக்காக இருக்கும் அதில் வரும் குறுக்கெழுத்துப்போட்டிகளை அம்மாமார்கள் சமையலறை வேலை முடிந்தபின்னர் குழுவாக அமர்ந்து போடுவார்கள். செல்போனும் தொலைக்காட்சியும் இல்லாத பொற்காலமது.
அந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார்கள் அவர்களின் பெயரே கதிரக்காதான் ஏனெனில் கதிர் புத்தகத்தை கடன் கேட்ப்பவர்களுக்கு அவர்தான் எடுத்துக்கொடுப்பது வழக்கம். அவரது அசல் பெயர் எனக்கு நினைவிலில்லை. அந்தக்கதிரக்காவுக்கு கத்தரித்து விட்டபின்னரும் கணுக்கால்வரை நீண்ட பின்னல் இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் அவரது வீட்டுக்கு ஓட்டமாய் ஓடிப்போய் அவரது யக்ஷிபோல விரிந்திருக்கும் நீண்ட தலைமுடியை துவைக்கும் கல்லில் பரப்பி கதிரக்காவின் அம்மா அரப்புபோட்டு அலசுவதை வேடிக்கைப்பார்ப்பேன். அதைக்குறித்து வீட்டுக்கு வந்து நான் கண்கள் விரிய’’.. எத்தனை நீளம் தெரியுமா ..’’என்று பேசுகையில் அம்மா ’’…ஆமா சீவக்கட்டையாட்டம் எதுக்கு ஒருத்திக்கு அத்தனை முடி’’அதிகமுடி ஆளைக்கொல்லும்டீ’ என்பார்கள்.
பின்னர் ஒரு கூடையில் சாம்பிராணி போட்டு அக்காவின் முடியை அதில் விரித்துப்போட்டு உலர்த்துகையில் நானும் கூட ஒத்தாசை செய்வேன். கதிரக்காவின் கறுத்த களையான முகம் எனக்கும் அப்படியே நினைவில் இருக்கிறது. ஒருநாள் புளியை சர்க்கரையும் உப்பும் கலந்து உருட்டி ஈர்க்குச்சியில் செருகி அவருக்கும் எடுத்துக்கொண்டு எனக்கும் ஒன்று கதிரக்கா கொடுத்ததும் அதன் ருசியும் நினைவிருக்கிறது. கதிரக்காவுக்கு எப்போது கல்யாணம் ஆனது என்பதெல்லாம் எனக்கு நினைவிலில்லை நான் எப்போதிலிருந்து அந்த வீட்டுக்கு கதிரை தினமணியை வாங்கச்செல்வதையும் தலைமுடி அலசுவதை வேடிக்கை பார்ப்பதையும் நிறுத்தினேன் என்பது நினவிலில்லை.
ஆனால் கல்யாணம் ஆன சில நாட்களிலேயே அம்மாவீட்டுக்கு விருந்துக்கு வந்த கதிரக்கா, உடலெல்லாம் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துக்கொண்டு தெருவுக்கு வந்து சம்மணமிட்டு அமர்ந்து ஒரு சின்ன கதறலோ கூவலோ சத்தமோ இல்லாமல் எரிந்தழிந்துபோனதையும், அதற்கு முந்தின நாள் பொள்ளாச்சியின் மிகப்பிரபலமான மற்றொரு குடும்பத்து இளைஞரொருவர் விஷமருந்திச் செத்துப்போனதையும் பிற்பாடு அம்மாவும் அத்தையுமாய் மாய்ந்துமாய்ந்து பேசிக்கொண்டிருக்கையில் கேட்டுத்தெரிந்துகொண்டேன். சண்முகம் என்னும் அந்த இளைஞரின் புகைப்படத்துடன் அஞ்சலிப் போஸ்டர்கள் பல இடங்களில் தெருவெல்லாம் ஒட்டப்பட்டிருந்தது.
Leave a Reply