நான் சீனுவை விஷ்ணுபுரம் அமைப்பை அறிந்துகொண்ட மிக ஆரம்பக்காலத்திலேயே அறிவேன். ஊட்டி ஃபெர்ன் ஹில் குருநித்யா ஆசிரம காவியமுகாமைக் குறித்த அவரது ஒரு பதிவில் ஊட்டியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்ட கதவொன்றை தலையால் முட்டியபடி கதறிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைக் குறித்து எழுதியதைத்தான் முதலில் வாசித்தேன். அதன்பின்னர் விஜயசூரியன் வீட்டில் மாதாமாதம் நடக்கும் வெண்முரசு விவாதக்கூட்டத்துக்கு பேருந்தில் 7 வது படித்துக்கொண்டிருந்த சரணையும் 5ல் இருந்த தருணையும் அழைத்துக்கொண்டு போய் கலந்துகொண்டம் நாட்கள் ஒன்றில் நேரில் சந்தித்தேன்.
சீனுவின் எல்லாக்கடிதங்களுமே உணர்வுபூர்வமானவை ஒரு வட இந்தியப்பெண் அவளது காதலனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்துதரும் வரைக்கும் காத்திருந்து வாங்கிப்போகும் ஒரு அரசு மருத்துவமனைக்காட்சியைக் குறித்து எழுதியிருந்த பதிவில் அவள் எழுந்துபோனபின்னர் அவள் அமர்ந்திருந்த பாறையில் அவளது காதலின் வெம்மை தகித்தது என்று எழுதியிருந்தார். நான் அதை வாசிக்கையில் என் மேசையில் வைக்கப்பட்டிருந்த ரெக்கார்ட் நோட்டுக்களின் சித்திரங்களை சரி பார்த்துக்கொண்டிருந்தேன். என்னையறியாமல் கண்ணிலிருந்து சொட்டுச்சொட்டாக வடிந்து ஒரு ரெக்கார்ட் நோட்டின் தாள் ஈரமானது. காணாமல் போன ஒரு சிறுமியைக் காப்பாற்றிய தள்ளுவண்டிக் கடைக்காரரைப்பற்றிய பதிவும் அப்படித்தான்.
எப்போதாவது வருடத்துக்கு ஒருமுறை விழாக்களில் சந்தித்துப் பேசிக்கொள்வோம். வாட்ஸாப்பில் அரிதாக தொடர்பிலிருப்போம். என்னை எப்போதும் அக்கா தங்கம் என்றழைக்கும் தம்பித்தங்கம் சீனு.
சரணுக்கு ரீமா சென்னை பிடிக்கும் என்றெழுதி இருந்த ஒரு குறிப்பிற்கு ’’ரசிகன்க்கா சரண்’’ என்று சீனு சொன்னது நினைவிருக்கிறது. நான் சீனுவின் எழுத்துக்களுக்கென்று ஒரு தனி இடம் வைத்திருக்கிறேன் என் இதயத்தில், ஆனால் ஒரு போதும் சீனுவிடன் சொன்னதில்லை.
இன்று சீனு என்னை அழைத்து மரங்களின் மறை வாழ்வு மொழியாக்க நூலைக் குறித்து ஒரு விமர்சனம் எழுதி இருப்பதாகவும் அதை என் இணையதளத்தில் பிரசுரித்து அதன் சுட்டியைத் தனக்கு அளிக்கும்படி கேட்டார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
இது வரை எனது 13 நூல்கள் வெளிவந்திருக்கின்றன.யாரும் ஒரு நூலைக்குறித்தும் எதுவும் எழுதியதில்லை. எனக்கு பெரும்பாலான எழுத்தாளர்களும் ஏராளமான வாசகர்களும் ஸ்நேகிதம்தான்.ஆனாலும் ஸாகே குறித்து ஜெ விற்கு ஒரு சில கடிதங்கள் வந்ததைத்தவிர எனது எந்த நூலும் கண்டுகொள்ளப்படவேயில்லை. நான் அதைக்குறித்து வருந்தவுமில்லை.
தாவரவியல் துறையே கீழானது, பயனற்றது, வேண்டாதது, உலகியல் பொருளியல் வெற்றிக்கு உதவாதது என்னும் அபிப்பிராயம்தான் பொதுவில் எல்லாரிடமும் இருக்கிறது. இதில் நூலைவாசித்து விமர்சனம் எழுதும் அளவுக்கு ஒருத்தரும் மெனக்கெடவில்லை. தாவரவியலைக்குறித்து எழுதுபவளைக் குறித்தும் அப்படித்தான் எண்ணுவார்களாக இருக்கும். நான் என் நூல்களைக் வாசிக்கும்படி கூடக் கேட்டதில்லை யாரிடமும்.
தன்னறம் வெளியீடாக வந்த இரு நூல்களுக்கு ஜெ எழுதிய முன்னுரை பல்லாயிரம் அறிவியலாளர்கள் எழுதிய விமர்சனங்களுக்கும் மேலானது. அதைக் கனவில் எழுப்பிக் கேட்டால் கூடச் சொல் சொல்லாக ஒப்புவிப்பேன் மனப்பாடம் ஆகிவிட்டிருக்கிறது. பெரும் கெளரவம் அது எனக்கு.
ஆனால் நான் நூல் விமர்சனம் எழுதுவேன். எனக்கு , தெரிந்தவர்கள்,வேண்டப்பட்டவர்களுக்காக, எனக்கு வேண்டப்பட்ட விஷயங்களை என்னை பாதித்த விஷயங்களைப்பேசிய நூல்களுக்காக, என்னை எழுதச்சொல்லி கேட்பவர்களுக்காக என்று, நூலை வாசித்ததைக் காட்டிலும் அதிக நேரம் எடுத்துக்கொண்டு மனமுவந்து அன்புடன் எழுதுவேன். என் அன்பு ஒருபோதும் எதிரொலிக்காகக் செவி கூர்ந்ததில்லை.
எனவே இன்று சீனு நூல் விமர்சனம் எழுதியது அதுவும் மிக நன்றாக எழுதியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தத்துறையும் துறைசார்ந்த நூல்களும் என்றைக்கேனும் பேசப்படும் என்னும் நம்பிக்கை இப்போது கொஞ்சம் துளிர்த்திருக்கிறது.
நன்றியும் அன்பும் சீனு!
Leave a Reply