லோகமாதேவியின் பதிவுகள்

மலர்த்துளியும் ஈஸ்வரனும்!

இன்று tenuiflora விற்கும் parviflora விற்குமான வேறுபாட்டை அறிந்துகொள்ள அந்த இருவகைகளிலும் இருக்கும் மஞ்சரிகளை ஆராய்ந்துகொண்டிருந்தேன். இரண்டுமே மஞ்சரியின் சிறுமலர்களைத்தான் குறிக்கின்றன என்றாலும் நுட்பமான வேறுபாடு இருக்கிறது. துளசியுடையது tenuiflora  தெட்சியின் வகைகளில் ஒன்று  parviflora. இப்படி  தாவரப்பெயர்களின் etymologyயின் பின்னால் போவது எனக்கு விருப்பமானதொன்று. சொல்லப்போனால் இந்ததுறையில் எனக்கு ஈடுபாடு வந்ததே இந்தப்பெயர்களில் இருகும் வசீகரம்தான்.  

parviflora   என்பது நுண்மலர்களைக்குறிக்கிறது ஆனால் அதே பேரினத்தில் இருக்கும் பிற மலர்கள் அல்லது மஞ்சரிகளில் இருக்கும் floret களின் அளவைக்காட்டிலும் சிறியவைகளுக்கே அந்தப்பெயரை லின்னேயஸ் வைத்திருக்கிறார். comparitively smaller உதாரணமாக இக்ஸோரா பார்விஃப்ளோராவைச்சொல்லலாம். தெட்சியின் மஞ்சரிகளை உருவாக்கியிருக்கும் சிறு மலர்களின் அளவைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் பார்விஃப்ளோராவின் அளவு. 

லின்னேயஸ் பெயரிடுவதற்கு எத்தனை மெனக்கெட்டிருக்கிறார் என்று நினைக்கையில் வியப்பாயிருந்தது. இந்த இக்ஸோரா -Ixora என்னும் பெயரையே எடுத்துக்கொள்ளலாம். சிவனுக்கு பிரியமானது கோவில்களில் சிவனுக்கு பூஜைக்குபயன்படுத்துவது என்பதால் iswara என்பதை latinize செய்து ixora  என்னும் பேரினப்பெயரை வைத்திருக்கிறார். ஸ்வீடிஷ் உயிரியலாளரான லின்னேயஸுக்கெப்படி நம்  ஈஸ்வரனை தெரிந்தது? சுவாரஸ்யமான ஒரு வரலாறு இருக்கிறது இதன் பின்னே.

1669-லிருந்து 1676 வரை மலபாரில் கவர்னராகப்பணிபுரிந்த டச்சு ராணுவ அதிகாரி ஹெண்ட்ரிக் அட்ரியான் ரீட் அந்தப்பகுதியின் 740 தாவரங்களை விவரித்து எழுதிய நூல் hortus malabaricus. இந்த நூல் உருவாக்கத்தில் கேரளத்தின் மூலிகைவைத்தியரான இட்டி அச்சுதன் பெரும்பங்காற்றினார். 

ஈழவரான அச்சுதன் ஆயுர்வேதமருத்துவராக சேரத்தலாவில் இருந்தார். கொச்சி அரசரான வீர கேரள வர்மாதான் அச்சுதனை ஹெண்ட்ரிக் ரீடிக்கு அறிமுகம் செய்துவைத்தார். அச்சுதனின் பனையோலைச்சுவடிகளிலிருந்து பல தகவல்களை ரீடி எடுத்துக்கொண்டிருக்கிறார். மலையாளத்திலிருந்த அவற்றை ஆங்கிலத்தில் ஒரு குழுவாக பல பிராமணர்கள் மொழிபெயர்த்து உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் பெயர்களும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.அச்ச்சுதன் ஒவ்வொரு தாவரத்திற்குமான அந்தபிரதேசத்தின் வழங்குபெயர்களை தெளிவாகத்  தெரிவித்திருக்கிறார். உண்மையில் இந்த நூல் ஒரு botanical treatise என்பதைக் காட்டிலும் ஒரு cultural storehouse என்றுதான் சொல்ல வேண்டும்.

இட்டி அச்சுதனின் ஓலைச்சுவடிகளில் பிற்பாடு பெரிய அளவில் ஆய்வுகள் நடந்தன.இட்டி அச்சுதனின் வாழ்க்கை வரலாற்றை A N Chithambaram  எழுதி அதைக் கேரள சாகித்ய அகாதமி வெளியிட்டது. மேலும் அச்சுதனைப்பற்றி அறிந்துகொள்ள N S Arunkumar எழுதிய ‘’Horthoos malabarikoos charithavum Sasthravum’’ என்னும் நூல் உதவுகிறது.

திருவனந்த புரம் TBGRI யில் ஹார்டஸ் மலபாரிகஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாவரங்களுக்கெனத்தனியே ஒரு தோட்டம் அமைக்கப்பட்டது.இணையத்தில் ஹார்டஸ் மலபாரிகஸின் ஸ்கேன் பிரதி முழுமையாகக்கிடைக்கிறது.அதை மேலோட்டமாக பார்த்தேன், ஆயிரக்கணக்கான பக்கங்களில் இருப்பது பழங்குடித்தாவரவியல் தொகுப்புத்தான்.

1753-ல் லின்னேயஸ் இருபெயரீட்டு முறையை அறிமுகபப்டுதியபோது ரீடியின் நூலில் இருந்து மலபார் பகுதியில் ஈஸ்வரன் கோவில்களில் பயனபடுத்தப்படும் மலர் என்னும் குறிப்பைக்கொண்டே  இக்ஸோரா பெயரிடப்பட்டது. 

பார்விஃப்ளோராவிலிருந்து மலபாருக்கு வந்துவிட்டேன்

அடுத்த டென்யூஃப்ளோரா என்பது துளசியின் திர்சஸ் வகை சிறப்பு மஞ்சரிகளிலிருப்பதைப் போன்ற நுண்ணிய,  வலிமையற்ற, மிக மெல்லிய மலர்களைக்குறிக்கிறது. எனக்கு ஜெ வின் மலர்த்துளி என்னும் சொல் நினைவுக்கு வந்தது. லின்னேயஸ் இப்போது இருந்திருந்தால் ஜெ விடம் ஆலோசனை கேட்டு மேலும் பல பொருத்தமான சொற்களில் பெயரிட்டிருப்பார். 

யானைப்புளி

இந்த ஹெண்ட்ரிக் ரீடியின் பெயரில் தான் ஆப்பிரிக்க கனவுக்கொடியும் மனம்மயக்கும், இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் இயல்புகளையுடையதுமான எண்டெடா ரீடி என்னும் யானைப்புளிக்கொடி பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படி தகவல்களுக்குள் தகவலாகத்தேடித்தேடிப் பயணிப்பது ஒரு போதை போலாகிவிட்டிருக்கிறது. 

இனி நான் டென்யூஃப்ளோராவை மலர்த்துளி என்றே குறிப்பிடப்போகிறேன்.

1 Comment

  1. Priya

    Iswara to ixora,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑