லோகமாதேவியின் பதிவுகள்

மும்பைக்கியா!

மறுநாள் நான்காவது சனிக்கிழமை சரணுக்கு விடுமுறை, காலை 10 மணிக்கு மேல் எழுந்து வந்து நான் சமைத்திருந்த அடையை வெண்ணெய் வைத்துச் சாப்பிட்டான். மதியமும் உப்புப்பருப்பு, கோஸ் கறி, ரசம், புதினா துவையல், குழல் வடகம் என்று விரிவாகச் சாப்பிட்டு ஓய்வெடுத்தோம். மாலை ஒரு மாலுக்குப் போய் சும்மா சுற்றிப் பார்த்துவிட்டுச் செருப்பு, ஷூ வாங்கிவிட்டு ஹல்திராமில் சோலே பட்டுராவும் பனீர் தோசையும் சாப்பிட்டோம்.

வீடு வந்து இரவு மீண்டும் புறப்பட்டு மும்பை IKEA சென்றோம். போகும் போதே இரவு 9 மணி, 11 வரை இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் 10 மணிக்கெல்லாம் அடைத்துவிடுவோம் என ஒருத்தி ஸ்பீக்கரில் கொஞ்சிக் கெஞ்சிக்கொண்டிருந்தாள். சரணுக்கு வேண்டிய ஒரு சிலவற்றை வாங்கினோம். பாய் போலவே ஆனால் ஜமக்காளம் போலக் கெட்டியில்லாமல் மெஷினில் துவைக்கும் ஒரு தரை விரிப்பு வாங்கினோம். எனக்கென்னவோ பெங்களூரு ஐகியா அளவுக்கு மும்பை ஐகியா இல்லை எனத் தோன்றியது. அதைச் சொன்னால் சரண் சண்டைக்கு வருவான், எனவே சொல்லவில்லை.

மாலிலும் சரி ஐகியாவிலும் சரி பெண்கள் அத்தனை அழகிகளாகக் கண்ணில் படவே இல்லை. எல்லோரும் கூடுதல் வெளுப்பு, மேலும் வெளுப்பாக்க வெள்ளை மேக்கப் அதுவும் திகட்டத் திகட்டப் போட்டு அவர்களின் இளமையின் இயற்கையான அழகை மேக்கப்பால் முழுக்க மறைத்திருந்தார்கள். ரத்தச் சிவப்பில் லிப்ஸ்டிக் தவறாமல் எல்லோரும் போட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லோரையும் கூட்டிப்போய் ஒரு குழாயடியில் உட்கார வைத்து தேய்த்து கழுவிவிடலாம் போல ஆத்திரமாக் இருந்தது. எதற்காகஅழகை மறைக்கும் மேக்கப்? எனக்குப்புரியவேயில்லை. அழகை துலக்கிகாட்டும் மேக்கப்பை அளவாகப் போட்டால் என்னவாம்? ரூபம் செம்மை செய்னுதானே சொல்லி இருக்கு?

சாலையைக் கூட்டிக்கொண்டிருந்த பெண் ஒருவர் பாதியில் பெருக்குவதை நிறுத்திச் சுரிதார் பாக்கெட்டில் இருந்து லிப்ஸ்டிக் எடுத்துத் தடவிக்கொண்டதைப் பார்த்தேன். பெண்கள் எல்லோரும் உடலைக் காட்டும் நவீன உடைதான், ஆனாலும் உடல் வாகுக்கேற்ப உடையை பெரும்பாலும் யாரும் போடவில்லை. ஒரே ஒருத்தி, நல்ல வறுத்த கோதுமை நிறத்தில், உயரமாக, வட்ட முகத்தில் அளவாக மேக்கப் போட்டுக்கொண்டு மிகப்பொருத்தமான நவநாகரீக உடையில் காதலனுடன் சிரித்துப் பேசியபடி கடந்து சென்றாள். அவள் கொண்டையில் செருகி இருந்த பன்பின் (Bun pin) வசீகரமாயிருந்தது.

மால் நுழைவு வாயிலில் நடக்க முடியாதவர்கள் உபயோகித்துக்கொள்ள நிறையச் சக்கர நாற்காலிகளும் குழந்தைகளை அமர வைத்துத் தள்ளிச் செல்லும் பிராம்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நான் இதை இங்கெல்லாம் பார்த்ததாகவே நினைவில்லை. நல்ல யோசனை, நிச்சயம் உபயோகமாக இருக்கும், பலர் பயன்படுத்திக்கொண்டார்கள். மற்றபடி வடக்கிலும் தெற்கிலும் எல்லா மால்களும் ஒரே ஜாடையில் தான் இருக்கின்றன.

டாக்ஸி ஓட்டுநர்கள் கடிந்துகொள்வதில்லை, எங்குமே அமைதியாகக் காத்திருக்கிறார்கள், புக் செய்தவர்கள் வரும் வரை அது வீட்டு வாசலானாலும் மால், கடை வீதியானாலும். ஆட்டோக்காரர்களுமே அப்படித்தான்; எரிச்சலோ சிடுசிடுப்போ இல்லவே இல்லை. முக்கியமாகக் காரில், ஆட்டோவில் பாட்டுப் போடுவதில்லை, அமைதியாக ஓட்டுகிறார்கள். நானும் ஆம்புலன்ஸ் ஒலியை அங்கு இருந்தபோது கேட்கவே இல்லை.

டேராடூனில் ஒருமுறை அதிகாலைக் குளிரில் எழுந்து முசோரிக்குச் சென்றோம். டாக்ஸி டிரைவர் குடிபோதை விலகாமல் செக்கச்சிவந்த கண்களும் கலைந்த தலையுமாக மிக மிகச் சத்தமாக “நீ இத்தனை சுந்தரமாக இருந்தால் நான் என்ன செய்வேன், என்ன செய்வேன்” (மே க்யா கரூ, க்யா கரூ) என்று ஆணும் பெண்ணும் மாற்றி மாற்றிப் பாடும் பாடலைத் தூக்கத்தை விரட்டவோ என்னவோ கேட்டுக்கொண்டும், கூடவே பாடிக்கொண்டும், தலையை அவ்வப்போது பலமாக ஆட்டிக்கொண்டும் கலவரமாக மலைப்பாதையில் வண்டி ஓட்டினார். அன்று நான் வேண்டாத தெய்வமில்லை.

மும்பையில் மிக அமைதியாகப் பொறுமையாக ஓட்டுகிறார்கள். சாலையெங்கும் காவிச்சாமியர்களின் போட்டோ இருந்தது எல்லா போஸ்டர்களிலும் பிழிந்து பிழிந்து கொடியில் துணி காயப்போட்டதைப்போல எதையோ எழுதி இருந்தார்கள்.

எனக்கு மும்பை பிடிக்கவில்லை. முதல் காரணம் அத்தனை தூசும் மாசும்; அடுக்ககங்களும் பிடிக்கவில்லை. அடுத்த முக்கிய காரணம் மகனும் அவனுடன் இருப்பவர்களும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது அறவே புரியாமல் இருப்பதை மிக மிகத் தாழ்வாக உணர்ந்தேன். அனுமானிக்கவும் முடியவில்லை. பெங்களூருவில் கன்னடம் கொஞ்சம் சமாளித்துக்கொண்டேன், ‘எஷ்டு’, ‘சாக்கு’, ‘பேக்கு’! பஞ்சதந்திரம் படத்தில் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தார்கள். ஆனால் ஹிந்தி சுத்தம். பாலிவுட் சினிமாக்களும் பாடல்களும் புரிகிறதே என்பதும் விந்தைதான்.

ஐகியாவில் சரணுக்கு ஒரு காற்றைத் தூய்மையாக்கும் கருவி வாங்கினோம், 6 ஆயிரம் ரூபாய். எல்லோரும் அவரவர் வீடுகளில் இதை பெரும்பாலும் வைத்திருக்கிறார்கள். என்ன கொடுமை இது? அறிவியல் புனைவுக் கதைகளில் எதிர்காலத்தில் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டிக்கொள்வது என்று படிப்போமே, அதேதான் இதுவும். சனிக்கிழமை அந்தக்கருவியை மின்சாரத்தில் இணைத்து ஓடவிட்டுவிட்டுத் தூங்கினோம். அன்று சரண் தொண்டை கறகறப்பு இல்லாமல் உறங்கினான். இன்னொன்று வாங்கிக்கூடத்திலும் வைத்துக்கொள்ளச் சொன்னேன்.

மறுநாள் நகரின் காற்று மாசுக்கான காரணங்களை சரண் சொல்லிக்கொண்டிருந்தான். நகரெங்கும் ராட்ஷச கட்டுமானங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அதிலும் லோதா, கோத்ரெஜ், ஓபராய் போன்ற பெரு நிறுவனங்கள் அசுர வேகத்தில் ஆயிரக்கணக்கில் அடுக்ககங்களைக் கட்டுகின்றன.ஆனால் தூசி வெளியே பரவாமல் இருக்கச் சுற்றிலும் போர்த்தப்பட வேண்டிய பச்சைத் துணியைச் சும்மா கண் துடைப்புக்காக ஆளுயரத்திற்குக் கட்டிவிட்டு 25, 30 மாடிகளைக் கட்டுகிறார்கள். நகரமே புழுதிக்காடாக இருக்கிறது. கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்துவிட்டுத் கட்டிடத்தைக் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வந்து 2 மாதங்கள் கூட ஆகவில்லை சரண் இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறான் என்பது ஆச்சர்யமளித்தது.

கட்டி முடிக்கப்படும் அடுக்ககங்களின் சிறு மாதிரி அடுக்ககங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. அதைப் போய்ப் பார்த்துப் பிடித்திருந்தால் வீட்டை புக் செய்து அட்வான்ஸ் கொடுக்கிறார்கள்.

ஞாயிறன்று காலை வெளியே மாசு குறைவாக, அந்த அலையாத்திக் காட்டின் மறு எல்லையில் மாபெரும் கட்டிடங்களோடு ஒரு நகரம் தெளிவாகத் தெரிந்தது. ’’..அதுதான் மும்பை, நாம இருக்கிறது நவி மும்பை..’’ என்றான் சரண். எப்படி அன்று மட்டும் தூசி குறைவாக இருக்கிறது என்று தேடிப் பார்த்தான். அன்று யாரோ ஒரு வெளிநாட்டு அதிபர் மும்பை வருகிறார், எனவே 1000 மெகா கட்டுமானங்களை அரசு அன்று மட்டும் நிறுத்தி இருந்தது. அன்று காற்று மாசு 85 இருந்தது. என்ன அநியாயம்! ஒரே ஒரு நாள் வரும் வெளிநாட்டவர்களுக்காக நிறுத்தி வைக்கப்படும் பணிகள் முறையாக நடந்தால் அங்கே வாழ்பவர்களுக்கு எத்தனை நன்றாக இருக்கும்? அறத்தின் பேரில் இருப்பவர்கள் பெரிய இடங்களில் இல்லவே இல்லை என்பதுதான் நம் அனைவரின் பிரச்சினையும்.

ஞாயிறன்று மும்பை மெதடிஸ்ட் சர்ச்சில் விவிலியம் காட்டும் தாவரவியலை குறித்து உரையாற்ற விருந்தேன்,. நான் மகாப்பெருமையாக அந்த உரைக்கு ஸ்லைட் போட்டுக்கொண்டு வந்து சரணிடம் காண்பித்தேன். ’’…எல்லாத்தையும் தூக்கிட்டு புதுசா போடனும் நீ எதுக்கு கிறிஸ்துவத்தைபத்தி பேசறே நீ தாவரவியலை மட்டும் தான் பேசனும். கிறைஸ்ட் என்று வரும் சொல்லைக்கூட நீ பயன்படுத்ததே கத்தி மேல் நடக்கறமாதிரி இது அறியாமையில் எதுவும் பேசி பிரச்சனை ஆயிரும்..’’ என்று சரண் கடுமையாக சனிக்கிழமை சொன்னான். பதட்டமாகி இரவெல்லாம் விழித்து மீண்டும் புதிதாக எல்லாம் தயாரித்தேன். ஞாயிறு காலை வெண் பொங்கல் சாப்பிட்டு விட்டு மும்பைக்கு இரண்டு மணி நேரப்பயணத்துக்கு டாக்ஸி பிடித்துப் புறப்பட்டோம். வழியெங்கும் எனக்கும் கிறிஸ்துவுக்குமான அணுக்கத்தை, என் பால்யத்தையெல்லாம் சரணிடம் சொல்லிக்கொண்டு வந்தேன்.

தொடரும்….

Leave a Reply to 💋 Available BTC. Next - yandex.com/poll/WRVjqbSX2yscgTuFhiPPi5?hs=c4dadea637f10ae01004dd7b1d0d0827& 💋 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑