லோகமாதேவியின் பதிவுகள்

Author: logamadevi (Page 4 of 24)

அன்பில் அழியுமடீ!

நேற்று மாலை  இஸ்திரி போடக்கொடுத்த துணிகளை வாங்க பொள்ளாச்சி சென்றிருந்தேன். கல்லூரிக்கு நேர் எதிரில் இருக்கும் கடை அது. எனக்கு அவரகளை 90களின் இறுதியில் இருந்து தெரியும். நான் அப்போது கல்லூரிப்பணியில் சேர்ந்த புதிது. வீட்டுக்கு பின்புறம் இருக்கும், அவ்வப்போது சர்க்கஸ் நடக்கும் ஒரு காலி மைதானத்தை கடந்து கல்லூரிக்கு வருகையில் மையச்சாலை துவங்கும் இடத்தில் இருக்கும் இந்த கடையை  கடந்தே செல்லவேண்டும்.

இந்தனை வருடத்தில் குடும்ப உறுப்பினர்கள் போல அவர்கள் நெருங்கி இருக்கின்றனர். பத்து நிமிஷமாவது நலம் விசாரித்துக்கொள்ளாமல் துணிகளை கொடுப்பதோ வாங்குவதோ இல்லை.  நேற்று கடையில் யாரும் இல்லை. ஒரு பேண்ட் பாதி தேய்ப்பில் அப்படியே கைவிடப்பட்டு கால் மடக்கி காத்திருந்தது. ’’குமார் குமார்’’ என குரல் கொடுத்தும் பதிலில்லை. புகையும் இஸ்திரிப்பெட்டி ஒரு சிவப்பு ஓட்டின் மீது இளைப்பாறிக்கொண்டிருந்தது. நானும் காத்திருந்தேன்

எதிர்ப்புறமிருந்து குறுக்கில் சாலையை கடந்து அந்த வீட்டு பையன் கேசத்தை ஒதுகியபடி உற்சாகமாய் ஓடிவந்து ,புன்னகையுடன் ’’அங்கே டெய்லர் கடையில் பேசிட்டிருந்தேன், உங்களை பார்த்துட்டுத்தான் ஓடிவந்தேன்’’ என்றான்

ஏற்கனவே அடுக்கிய துணிகளை மீண்டும் நிதானமாக அடுக்கி கொடுத்து பணம் வாங்கிக்கொண்டவன் நான் காரை நோக்கி திரும்புகையில் சத்தமாக ’’இதை சாப்பிட்டு பாருங்க’’ என்றான். திரும்பினேன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறிய மிட்டாயை எடுத்து ’’எனக்கு இது ரொம்ப பிடிச்ச மிட்டாய்ங்க, உங்களுக்கும் பிடிக்கும்’’ என்று கொடுத்தான். சிரித்தபடி வாங்கிக்கொண்டேன். பின்னால் அவன் குரல் கேட்டது ‘’சாப்பிட்டுபார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க ‘’ என்று

அந்தியின் அந்த அன்பை அளித்தல் முழுநாளையே இனிப்பாக்கிவிட்டபிறகு மிட்டாயின் இனிப்பு தனித்து தெரியாமல் அதில் கரைந்து விட்டிருக்கும் என்பதை அவனுக்கு சொன்னால் புரியப்போவதில்லை.  திரும்பி சிரித்துக்கொண்டே ‘’சரி சொல்லறேன்’’ என்று நானும் உரக்க சொல்லிவிட்டு புறப்படேன்

இப்படி முன்பு ஒருமுறையும் நடந்தது. தருண் அப்போது குட்டிப்பையன், சரண் இல்லாமல் அவன் மட்டும் ஒருநாள் பள்ளிக்கு செல்லவிருந்தான்.நான் வழக்கம் போல ஏதோ துயரிலிருந்தேன்.

 நல்ல மழை இரவின் மறுநாள் காலை அது. பள்ளிப்பேருந்து வந்ததும் அவனை ஏற்றிவிட்டேன். படிக்கட்டோரம் அமர்ந்திருந்த ஒரு குட்டிப்பெண் காத்திருந்து அவனுக்கு ஒரு பிறந்த நாள் மிட்டாயை கொடுப்பது தெரிந்தது.  ஜன்னல் வழியே அவன் கையசைக்க காத்திருந்தேன் . எதிர்பராமல் ஜன்னல் வழியே அந்த மிட்டாயை என்னை நோக்கி வீசிய தருண் ’’அம்மா எடுத்துக்கோ’’ என்று நகரும் பேருந்திலிருந்து கூவினான்.  நனைந்திருந்த கரிய தார்ச்சலையில் சரிகைக்காகிதம் சுற்றப்பட்டு கிடந்தது பேரன்பின் இனிமை.

துயர் துடைத்து அகத்தில் சுடர் ஏற்றிய நிகழ்வது. அதைப்போலத்தான் இதுவும்

முன்பே சொல்லப்பட்டிருக்கிறதே

‘’துன்ப நினைவும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடீ!’’ என்று!

இளையராஜா என்னும் இம்சை!

இளையராஜாவின் இம்சைகள் இப்போதெல்லாம் கூடிப்போய் விட்டிருக்கிறது. அவரது இசையை அவரது குரலை எப்போது கேட்கத் துவங்கினேன் என்று நினைவில்லை, சிறுமியாக இருக்கையில் எப்போதும் கேட்டது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் இசைதான். பின்னர் அப்பா எங்களை எழுப்பவென்றே உரக்க வைக்கும் பக்திப்பாடல்கள். ஐந்தாவது படிக்கும் வரை இவை மட்டுமே எனக்கான இசையாக இருந்தன

அப்போது திருமண வயதிலும் காதலிலும் இருந்த ஒரு அத்தை எப்போதும் வானொலியில் பாடல்கள் கேட்பார். அதிகம் கமல்ஹாசனின் குரலில் ’’ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் நானவள் பூவுடலில் புது அழகினை ரசிக்கவந்தேன்’’ என்னும் பாடல் அப்போது ஒலிபரப்பாகும் அத்தைக்கு அதில் தனித்த பிரியமுண்டு. அப்படி நல்லிசை எனக்கு அறிமுகமாகியது.

அன்னக்கிளி படம் பார்த்த நினைவிருக்கிறது //மச்சானை பார்த்தீங்களா// என்னும் கேள்வியை, தேடலை, பாடலை, அதன் இசையை விட கடைசிக் காட்சியில் சுஜாதா தியேட்டர் நெருப்பில்  முகமெல்லாம் தீக்காயத்துடன் செத்துப் போவது தான் மனதில் பாவமாக பதிந்திருந்தது.அந்த வயது அப்படி.

ஒருவேளை பதின்பருவத்தில் ராஜாவின் பாடல்கள் மனதில் நுழைந்திருக்கலாம். குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. வானொலியில் கேட்பது பேருந்தில் கேட்பது திரைப்படம் பார்க்கையில் கேட்பது என்பது மட்டுமல்லாமல் இசையை கேட்க வென்றெ பிரத்யேக நேரமொதுக்கி கேட்டதெல்லாம் முதுகலைப்படிப்பை முதன் முதலில் வீட்டிலிருந்து அகன்று,பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்த வருடங்களில் தான்.

அதற்குள் இளையராஜா, பாலகுமாரன் பித்துக்களுக்கு உள்ளாகி இருந்தேன். கிருஷ்ணசந்தர் குரலும் அப்போதுதனித்த பிரியம். கவிதையுலகிலும் பொற்தாழ்விலக்கி நுழைந்திருந்தேன்.(வாசிப்புத்தான்)

இப்போது வாழ்வின் இயங்கியலில் ராஜாவும் கூடவே இருக்கிறார். ராஜாவின்  இசையமைப்பில் பல திரைப்படங்களை பார்த்து அவரது இசைக்குள் நுழைந்து திளைக்கும் பல கோடியினரில் நானும் இருக்கிறேன். தன்னந்தனிமையில் காலை சமைக்கையில் எப்போதும் இவரும் கூட இருந்து பாடிக்கொண்டிருப்பார். ’’கொஞ்சம் அடுப்பை பார்த்துக்குங்க இதோ வந்துட்டேன்’’ என்று அவரிடம் சொல்லாத குறைதான். எனினும் கடந்த சில வருடங்களாக அவரது இசை பெரும் சித்திரவதை ஆகிவிட்டிருக்கிறது

இத்தனை வருடங்களில் பலவிதமான மனிதர்களை பார்த்தாகிவிட்டது, கொடுமைக்காரர்கள், கல்நெஞ்சர்கள் அப்பா என்பவரைப்போல வன்முறையாளர்கள், ஏமாற்றுக்காரர்கள் என்று ஆனால் இவர்களில் இளையராஜாவைபோல கொடூரர் ஒருவரும் இல்லை (கொடூரன் என சொல்ல முடியாதல்லவா, என்ன இருந்தாலும் பெரிய மனிதர்,  ஞானி) 

வெண்முரசில் சுநீதி சுருசி இருவரின் உளப்போராட்டங்களை சொல்லுகையில் அதிலொருத்தியின் கடுஞ்சொல், உடலுக்குள் கத்தியை சொருகி, சுழற்றி வெளியே இழுப்பது போல என்று ,அப்படித்தான் வெறுமனே இதயத்தை கீறிவிட்டுச்செல்வது, எளிதாக குத்திக் கொலைசெய்வதெல்லாம் இல்லை , இசையென்னும் பெயரில் ராஜா கத்தியை ஆழச்செருகி, சுழற்றி பின்னர் ஆன்மாவையும் பிடித்து வெளியே இழுப்பார்.  முன்னைக்காட்டிலும் இப்போது கூடுதல் பணிச்சுமை வயதும் கூடிகொண்டே இருக்கிறது இருந்தும் முன்னெப்போதையும் விட இப்போது ராஜாவின் இசையும் குரலும் படுத்தி எடுக்கிறது

ஒருவேளை கடந்த சில வருடங்களாக  முழுத்தனிமையில் இருப்பதாலும் இருக்கலாம்.

சமயங்களில் தோன்றும் ராஜா பாட்டுக்கு இசையமைக்கையிலேயே மிகுந்த வன்மத்துடன் ’’இதை இரவில் தனிமையில் முடிவற்று நீண்டிருக்கும் இருளை பார்த்துக்கொண்டு கேட்டிருப்பவர்களை ஒரேயடியாக கொல்லட்டும்’’ என்ற ஒரே உத்தேசத்துடன் இசையமைத்திருப்பாரோ என்று! அத்தனைக்கு கொடுமையாக இருக்கும் தனித்திருக்கும் இரவுகளில் கேட்க.

ராஜாவின் இசை பயங்கரவாதம் என்றால் அவருடன் கங்கைஅமரன் கூட்டுசேர்ந்தால் அதுவே தீவிரவாதமாகிவிடும்.’’சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும்’’ அந்த வகை கொலையாயுதம். நான் மீள மீள கேட்பவற்றில் இதுவுமொன்று.

சென்ற மாத முழுநிலவன்று நான் ஒரு இரவுப்பயணத்திலிருந்தேன். நிலவு கூடவே பயணித்துக்கொண்டிருந்தது காரில் இருந்த குட்டி மீனாக்‌ஷிக்கு வைத்திருந்த பாரிஜாதம்  மணக்கிறது, தலையில் வைத்திருந்த ராமபாணம் கூட சேர்ந்துகொண்டது ,ஒரு பாலத்தில்  கார் திரும்புகையில் நிலவு அப்படியே அள்ளி எடுத்து மடியில் வைத்துக்கொள்ளலாம்போல வெகு அருகிலிருக்கையில் ,ராஜா 

//தெளியாதது எண்ணம்

கலையாதது வண்ணம்

அழியாதது அடங்காதது

அணை மீறிடும் உள்ளம்// என்று பாடிக்கொண்டிருந்தார். ’’சார் கொஞ்சநேரம் சும்மா இருக்கீங்களா? ’’என்று கடிந்துகொண்டேன் அவர் காதில் போட்டுக்கொள்ளாமல்

//நிதமும் தொடரும் கனவும்

நினைவும் இது மாறாது//

என்று போய்கொண்டே இருந்தார். கொலைகாரப்பாவி என்று மனதில் வைதுகொண்டேன்

எப்படியோ துயரை அழைத்துக்கொண்டு வரும் அந்தியின் மழையைபோல ராஜாவின் பாடல்களும் தனிமையை மன்மடங்கு பெருக்கி தவிக்கச்செய்துவிடுபவை

பக்திப்பாடல்களிலும் மனதை கரையச்செய்துவிடுபவர் அவர் மட்டுமே

காமாட்சி கருணாவிலாசினியில் ’’மந்தஹாசினி மதுரபாஷினி சந்தரலோசனி சாபவிமோசனி ‘’என்னும் அவர் குரல் எப்போதும் துயர் துடைப்பது.

கல்லூரிக்காலங்களில் மிகவும் இம்சை செய்த குரலுடன் கூடிய அவர் பாடல் ’’வழிவிடுவழிவிடு என் தேவி வருகிறாள்’’ தான். பொதுவில் எவர் இசையமைத்திருந்தாலும், யார் குரலாயிருப்பினும் தேவி என்னும் பெயர் வருவதெல்லாமே எனக்கு தனித்த பிரியமுள்ள பாடல்களாகவே இருக்குமென்றாலும் இதில் ராஜாவின் குரல் காதலில் அதுவும் கொஞ்சம் மனம் பிசகின காதலில் தோய்ந்திருக்கும். 

’’என் மீதுதான் அன்பையே பொன் மாரியாய்த் தூவுவாள் என் நெஞ்சையே பூ என தன் கூந்தலில் சூடுவாள்’’ இவ்வரிகளை எத்தனை முறை கேட்டிருப்பேன் ?

அப்பாடல் வெளியான சமயத்தில் மனம் கலங்கிய, குழம்பிய, பிசகிய ஒருவரை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என பிரியப்பட்டதுண்டு, பிற்பாடு அதற்கென மெனக்கெட வேண்டியதில்லை என்று தெரிந்திருந்தது.

ராஜாவை குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். அவரது புதுவீட்டின் கட்டுமானம் பற்றிய ஒரு செய்தியில் அவர்மனைவி ஜீவா வீட்டு முகப்பில் ஒரு மாபெரும் கல்தாமரையை அமைத்திருக்கிறார் என கேள்விப்பட்டேன். கருங்கற்களில் செய்யப்பட்டவைகளில் தனித்த பிரியமுள்ளவள் என்பதால்  என்றைக்கேனும் அதை பார்க்கவேண்டும் என்னும் பெருவிருப்புள்ளது. அதை கல்லில் வடிக்க நினைத்ததே ராஜாவின் கலையின் அழிவின்மையை குறிக்கும் பொருட்டுத்தான் என நினைப்பேன்.  இன்னும் பார்த்திராத என்றேனும் உறுதியாக பார்க்கவிருக்கும் அந்த தாமரையில் அமர்ந்துகொண்டிருக்கும் சரஸ்வதியின் வடிவம்தான் அவர். 

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார். உலகெங்கிலும் எல்லார் வீட்டிலும் எப்போதும் இசைவடிவில் அழியாமல் இருக்கும் பேறுகொண்டவர் நீங்கள். 

அன்பு

புளிப்பும் இனிப்பும்,

 நாளை அகிலாவின் நிச்சயதார்த்தம். கோவை செல்ல வேண்டி இருக்கிறது. நினைத்துக்கொண்டாற்போல டெய்லர் சங்கீதாவிடம் இருக்கும்  தைத்து முடித்த புதுப்புடவைகளில் ஒன்றை வாங்கிகொள்ளலாமென்று புறப்பட்டேன். செந்திலை இனி பொள்ளாச்சியிலிருந்து வரச்சொல்லி பின்னர் புறப்பட மாலை ஆகிவிடும் எனவே பேருந்திலேயே செல்ல நினைத்தேன்.

நல்ல உச்சிவெயிலில் புறப்பட்டு வேடசெந்தூர் பேருந்து நிறுத்தத்தில் 20 நிமிடம் நின்றேன்.பேருந்து வரும் அறிகுறியே இல்லை. என்னுடன் நிலா டைன் உணவகத்தில் பாத்திரம் தேய்க்கும் பணியிலிருக்கும் ஒரு பெண்மணியும் காத்திருந்தார், பின்னர் இருவருமாக பேசிக்கொண்டே அடுத்த சுங்கம் நிறுத்தம் வரை நடந்துவந்தோம்.அங்கு நான்கு வழிச்சாலையாதலால் அடிக்கடி பேருந்துகள் வரும்.

அவர் பெயர் கோகிலா, தினம் 3 மணிக்கு பணி முடிந்து புறப்படுவார் நாளொன்றுக்கு 300 ரூபாய் சம்பளம் என்பதை எல்லாம் பேசிக்கொண்டு வந்தார், நல்ல திருத்தமாக புடவை உடுத்திக்கொண்டு தலையில் பூச்சரம் வைத்துக்கொண்டு அழகாக இருந்தார்.

நான் என்னசெய்கிறேன் என்றுகேட்கப்பட்ட போது டீச்சர் என்று சொன்னேன். 

சுங்கத்திலும் நல்ல கூட்டம். இன்று முகூர்த்த நாள், ஏதோ திருமணவிருந்தில் பணிபுரிந்து வீடு திரும்பும் சரிகைக்கரை இட்ட  வெள்ளை முண்டும் அழுத்தமான நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்த பெண்கள் கூட்டமொன்றும்   இருந்தது. அனைவருமே வெகுவாக களைத்திருந்தார்கள்.

வெயில் முதுகில் அறைந்து மண்டையை பிளந்து உள்ளே இறங்கிக்கொண்டிருந்தது.  பேருந்து அங்கும் வெகுநேரம்வரக்காணோம். என்னருகில் நின்று கொண்டிருந்த பெண் போனில் உரக்க யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அன்றுதான் ICUவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்லவிருப்பதாகவும் கணவரும் உடன் சிகிச்சையில் இருந்து இப்போது அவரது அக்காவீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் எதிர்முனையில் இருந்தவரிடம் சொல்லிக்கொண்டார். 

20 நாட்களுக்கு முன்னர் அவர்களின் செல்ல நாய் சின்னுவுக்கு வெறி பிடித்து பால் சோறு கொடுக்க வந்த இவரை தலையில் கடித்து,காப்பாற்ற வந்த அவர் கணவரையும் கை,காலென்று ஏகத்துக்கும் கடித்துவிட்டது அக்கம்பக்கத்தினர் வந்து காப்பற்றி ஆம்புலன்ஸில் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்திருக்கிறார்கள். இனி 10 நாட்கள் கழித்தே தையல் பிரிக்கவேண்டும். ஊர்ப்பஞ்சாயத்தில் அந்த நாயை கொல்ல முடிவாகி கொன்றும் விட்டார்கள், அதை சொல்லுகையில் அவருக்கு குரல் கம்மியது. அவரது தலையின் மறுபக்கத்தில் பெரிய பாண்டேஜ் போடப்பட்டிருந்ததை பின்னரே கவனித்தேன். ’’நானே வளர்த்தி இப்படி கொல்லவேண்டியதாயிருச்சே’’ என்று புலம்பினார். ’’ பாடு தான் எப்பவும் பாடுதான் ஒருநாளும் விடியாது’’ என்றவர். தனக்கு ஏதேனும் வேலை இருந்தால் சொல்லும்படி மீள மீள எதிர்முனையை கேட்டுக்கொண்டார்

50 வந்தது,நானும் கோகிலாவும்  ஏறினோம். அகால வேளை என்பதால் இருக்கைகள் காலியாகவே இருந்தன. கோகிலா என்னருகில் அமர்ந்தார்.

அவரது வயர் கூடையில் இருந்த சிறு பெட்டியிலிருந்து பொன்மஞ்சள் வண்ணக் காகிதம் சுற்றப்பட்டிருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து, பிரித்து இரண்டாக உடைத்து எனக்கு பாதியை அளித்தார். வாங்கிக்கொண்டேன். அவருக்கு இனிப்பு மிகவும் பிடிக்குமென்றும் எப்போதும்  பயணங்களில் சாப்பிட கையோடு கொண்டு வருவதாகவும்சொன்னார்.  வாழ்வென்னும் பெருவதை அவருக்கான  இனிப்புச்சுவையை  எப்படியோ விட்டுவைத்திருக்கிறது. எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. இனிப்புப்பிரியையான நான் இத்தனைகாலம் சாப்பிட்டதிலேயே ஆகச்சிறந்த இனிப்பு அதுதான். கோகிலாவை கட்டிக்கொள்ள நினைத்தேன். பேருந்தில் சாத்தியமில்லாமல் போனது.அவரது கையை ஒரு முறை பிடித்துக்கொண்டேன்.

பலர் நல்ல உறக்கத்திலும் வெயிலின் கிறக்கத்திலும் இருந்தார்கள்.நடத்துனர் ஓட்டுநர் இருவருமே சுவாரஸ்யமில்லாமல் இருந்தார்கள் . கட்டணமில்லை பெண்களுக்கு என்பதை வெகுநேரம் கழித்தே உணர்ந்துகொண்டு கையில் வைத்திருந்த  பணத்தை பர்ஸில் வைத்துக்கொண்டேன். கோகிலாவிடம் விடைபெற்றுக்கொண்டு வஞ்சியாபுரம் பிரிவில் இறங்கிநடந்தேன். முந்தாநாள் மழையில் சங்கீதாவின் கடை வாசலில் குளமாக நீர் தேங்கி இருந்தது.

என் புடவை ரவிக்கையை தயாராக வைத்திருந்தார். திரும்ப வந்து சாலையை கடந்து எதிர்புறமாக நின்றேன்

20 நிமிட காத்திருப்பிற்கு மீண்டும்  சுங்கம் வழியே உடுமலை செல்லும் மற்றொரு50 வந்தது. நல்ல கூட்டமதில். மூன்றாவது இருக்கைக்கு அருகில் நின்று கொண்டேன். அந்த இருக்கையில் இரு பெண்களும் அவர்களை பார்த்து திரும்பியபடி நின்று கொண்டு மற்றொருத்தியுமாக இருந்தார்கள், தோழிகள்,  ஒரே இடத்தில் பணிபுரிவர்கள்  என தெரிந்தது. அவர்களில் மிக இளையவள் ‘’காலையில் 3 மணிக்கா, வீட்டைவிட்டு போன்னு சொல்லறாங்க்கா உள் ரூமை வேற பூட்டிவச்சுட்டான் பர்ஸ் அங்கே இருக்கு எங்கேக்கா போவேன் ஆட்டோ கூட இருக்காது அந்நேரெத்துக்கு ‘’என்றாள் அதை முன்னரே பல முறை பேசிஇருப்பார்கள் போல.’’மசநாயாயிருந்தாகூட குடும்பம் நடத்திடலாங்க்கா இவன்கூட முடியது கெரகம் மறுபடி அங்கேயே போரேன்பாருங்க இப்போ ‘’ என்றாள்.

 சின்னப்பெண், வயது  20 அல்லது 22 தான் இருக்கும் சிவப்பில் பழைய சுடிதார், எண்ணெய் இறங்கிய ஒரு மூக்குத்தி, கழுத்தில் அழுக்காக ஒரு வெறுஞ்சரடு, காதில் ஒரு பிளாஸ்டிக் மொட்டுத்தோடு. இவர்களெல்லாம் ஒரு டிகிரி படித்திருக்கலாம், கம்ப்யூட்டரில் பில் போட 8000, அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்தால் மேலும் 3000 என்று, அந்த அவன்களில் எவன்  எத்தனை மணிக்கு போகச்சொன்னாலும் புறப்பட்டு வந்து தனியே  கண்ணியமாக வாழ்ந்திருக்கலாம்.

சற்று நேரத்திலேயே மூவருமாக என்னமோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது

துயர்களை இவர்கள் பெருக்கிக்கொள்வதில்லை மேலும் அவை இருப்பதுதான் வாழ்க்கை என்றும் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. 

சுங்கத்தில் இறங்கி செல்வம் கடைக்கு வந்தேன், ரேகாவும் இருந்தாள்.அக்‌ஷய திருதியைஅன்று நகைக்கடைபோல கூட்டம் நெரிபட்டது.  இருவரிடமும் பேசிக்கொண்டிருந்துவிட்டு பச்சைமிளகாய்களும் புதினாஇலைகளும் மிதந்த குளிர்ந்த  எலுமிச்சை ரசத்தை குடித்தேன்.  வெயில் உறிஞ்சிக்கொண்டிருந்த உயிர் திரும்ப வந்தது. 

அங்கிருந்து நடந்து ஊருக்கு வரும் வழியில் பலர் என்னையும், ஏன் நடந்து வருகிறேனென்றும், அப்பா எப்படி இருக்கிறார் என்றும் விசாரித்தார்கள்.  ஊமைக்கவுண்டர் சரண் எப்படி இருக்கிறான் என்று சைகையில் கேட்டார் நலமென்று தெரிவித்தேன். ’’போ போ’’ என்று கையாட்டி சிரித்தார்.

காவலர் பிரபுவின் அப்பா தன்னந்தனியே கோவில் வாசல் கல்பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவரும் மனைவியை இழந்திருந்தார் சில வருடங்களுக்கு முன்னர். அப்பா தளர்ந்துவிட்டார் என்றதும் ’’என்ன கண்ணு பண்ணறது உங்கம்மவோட போச்சு எல்லாம்’’  என்ற படி சுய பச்சாதாபத்தில் கண் நிறைந்து  வேட்டி  நுனியில் துடைத்துக்கொண்டார். சங்கடமாக இருந்தது. 

மெல்ல நடந்துவந்தேன், வழியெங்கும் தீக்கொன்றைகள் மலரத் துவங்கி இருந்தன.புளியமரங்கள் தளிரும் மலருமாக நிறைந்திருந்தன புளியம்பூக்களை எனக்கு  சாப்பிட பிடிக்கும் ஆனால் எட்டாத உயரத்தில் இருந்தன. 

ஒரு வெள்ளை நாய் வாலாட்டிக்கொண்டே தொடர்ந்தது.  நாய் இன்று மூன்றாவது முறையாக இடைபடுகிறது. கொல்லப்பட்ட சின்னு,3 மணிக்கு வெளியே போகச்சொன்ன ஒன்று, பிறகு இது.

லண்டனில் ஒரு மகளையும் அமெரிக்காவில் இன்னொருத்தியையும் கட்டிக்கொடுத்துவிட்டு கணவரும் இல்லாமல் தனியே வாழ்ந்துவரும் அந்த அரசமரத்துக்கருகிலிருக்கும் வீட்டம்மா கூடத்தில் கையை தலைக்கு வைத்து உறங்கிக்கொண்டிருப்பது திறந்திருந்த கதவு வழியே தெரிந்தது. அருகில் பால்வாங்க பாத்திரம் வைத்திருந்தார். எங்கோ வெகு தொலைவில் இருக்கிறதென்று நான் நினைக்கும் எதிர்காலம் ஒரு கணம் மிக அருகிலென வந்துசென்றது.

நல்ல இளங்காற்றில் புளியம்பூக்கள் உதிர்ந்தன, இன்றும் மழை வரலாம்.  மணி அண்ணன் வொர்க்‌ஷாப் அருகில் வந்ததும் திரும்பி அந்த வெள்ளைநாயிடம் ’போடா’  என்று அதட்டினேன். உடனே சொல்பேச்சு கேட்டு பவ்யமாக திரும்பி நடந்தது, டீச்சர் என்று தெரிந்திருக்குமோ?

வீடு வந்து வெளிவாசல் கதவை திறக்கையிலேயே இன்று பறிக்காமல் விட்ட ராமபாண மணம் கமழ்ந்தது. 

குளிக்க செல்லுமுன்பு கொண்டைபோட தலை முடியை பிரிக்கையில்  தலையிலிருந்து ஒரு  புளியம்பூ விழுந்தது. வாயில் போட்டுக்கொண்டேன் நல்ல புளிப்பு.

அருகில்,

அத்தனை அருகில் நீ வந்திருக்கக்கூடாது

இப்போது பார்

என் அகந்தை விழித்துக்கொண்டது

இனி ஒன்றும் செய்வதற்கில்லை!

காத்திருத்தல்.

மறுபிறவியென்னும் சாத்தியமிருப்பின்

நான் ஒரு ஜகரண்டா மரமாகவே

நிச்சயம் பிறப்பேன்,

காலத்தை கடந்துநிற்கும்

மலைமுகடுகளை பார்த்தபடிக்கு

அப்போதும் ஒற்றையாய் ஓங்கியுயர்ந்து,

ஈரமற்று தகிக்கும் பாறைகள் மீது

அடர் ஊதா மலர்களை சொரித்தபடியிருப்பேன்,

அன்புக்குரியவர்கள் என்னை கடக்கையில்

அவர்களின்திசைநோக்கி

கூடுதலாய் மலர்களை பொழிவேன்.

அவர்களின் காலடியில்

மிதிபடும் மலர்களை மெளனமாய் பார்த்தபடி

காத்திருப்பேன்

மீண்டுமோர் கடும் கோடையொன்றில்

மேலும் மேலுமென மலர்களை பொழிய!

வளமை

நேற்று ஒரு பண்ணை வீட்டின் காணொளிகளையும் புகைப்படங்களையும் பார்த்தேன். பொதுவாக விஷ்ணுபுரம் நண்பர்கள் இப்படி சிறந்த இடங்களுக்கு செல்கையில் அவற்றை அனைவருடனும் பகிர்வார்கள்

அந்த பண்ணை வீட்டின் பேரில் தனித்த பிரியம் கொண்டிருக்கும், அங்கே அடிக்கடி கூடுகைகளுக்கு சென்று வரும் நண்பர்களில் சிலர் வாட்ஸப் குழுமங்களில் அவரது பண்ணையில் யானை வந்து நீரருந்திச்செல்வது, பலாப்பழங்களை பறித்துண்பது போன்ற காணொளிகளை பகிர்வது வழக்கம். நேற்று அப்படி பகிரப்பட்ட காணொளிகளில் கோடைக்கால கனிகளின் பல வகைகள் செறிந்து காய்த்தும் கனிந்தும் இருந்ததையும், அறுவடையையும் பகிர்ந்திருந்தார்கள்.

எனக்கு எப்போதுமே அறுவடை செய்வதும் அதை காண்பதும் பெரும் பரவசமளிப்பவை

அந்த பண்ணை வீட்டின் பிரியர்களில் நானும் ஒருத்தி. தென்னை, மா, பலா, நாவல், முந்திரி கொய்யா உள்ளிட்ட பல பழவகை மரங்களும் மந்தாரையிலிருந்து பல வண்ண மலர்ச்செடிகளும் நிறைந்த பல்லுயிர் பெருக்கில் ததும்பும், முறையாக பராமரிககப்படும் தோட்டம் அது

முதல்  முறை அங்கு சென்றபோது கோடைக்காலமாகையால் பகலில் பெண்கள் குழாம் நாவல் மரங்களை வேட்டியாடினோம், இரவில்  பாலுவே பலாச்சுளைகளை அனைவருக்குமாக அளித்தார்

அங்கு எனக்கு சுவாதீனமுண்டு, அடுப்படியில் தேநீர் தயாரிப்பது மாலை விளக்கு ஏற்றுவது என்று, விஷ்ணுபுரம்  வெறும் இலக்கியம் பேசும் குழுமம் மட்டும் அல்லவே அது ஒரு குடும்ப அமைப்புபோலத்தானே! 

அப்படியான அந்த பண்ணையை நேற்று காணொளியில் பார்க்கையில் நூற்றுக்கணக்கில் மாங்கனிகள் மரத்தடியில் சிதறியும் இறைந்தும் கிடந்தன,பச்சைகாய்களை கொண்ட  தென்னைகள் நிறைந்த குலைகளுடன் நின்றது. பலாவின் பெருங்கனியொன்று கிளையிலிருந்து உதிர மனமின்றி அதிலேயே வெடித்து பிளந்து சுளைகளைக் காட்டி ஆசையூட்டிக் கொண்டிருந்தது.

இது ஒருவேளை என் இடமாக  இருந்திருந்தால், இப்போது இங்கு வேடசெந்தூர் வீட்டில் வெற்றிலைக்கொடியினருகிலேயே  சுணணாம்பும்,  இனிப்பூட்டிய பாக்குத்தூளுமாக அமர்ந்து மனம் நிறைய வெற்றிலை போட்டுக்கொள்ளுவதை போல பலா மரத்தடியில் அமர்ந்தே அச்சுளைகளை உண்டிருப்பேன்.

நேற்று மாலை அப்பா வீட்டில் பலாக்கனிகள் சில முற்றி நம் வீட்டில் விழுந்து உடைந்து சிதறிக்கிடந்தன. மாலை நல்ல மழையும் ஆதலால் வீடெங்கும் அதன் மணம் கமழ்ந்தது ஒருபோதும் நான் அந்த பழத்தை சுவைத்ததில்லை சுவைக்கவும் போவதில்லை. காலை அப்பா என்னிடம் பலாச்சுளைகளை சாப்பிடும்படி சொன்னார், அவர் கண்களை நேராக சந்தித்து ’’எனக்கு பலாப்பழமே பிடிக்காதே’’ என்றேன். 

ஆம், வஞ்சம்தான், அது எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது, இது என்னை அறமற்றவளென்று வகுக்குமேயானால் அவ்வாறே ஆகட்டும், அறியட்டும் உலகு  நான் அறமற்றவள் என்று, வஞ்சம் புகையும் கல்நெஞ்சக்காரி என்றும் கூட.  இப்பிறவியில் இவற்றிலிருந்து எனக்கு மீட்சியில்லை. மீட்சியை நான் விழையவும் இல்லை.

மனம் எங்கோ சென்றுவிட்டது பலாவின் மணத்துடன்,இதோ திரும்பி வருகிறேன்

ஆம் அறுவடை, அது எனக்களிப்பது பெரும் நம்பிக்கையை, காயும் கனியும் கீரையும் மலர்களுமாக தோட்டமும் பண்ணையும் வயல்களும் நிறைந்திருப்பதும் அறுவடை செய்யப்பட்டவை குவிந்துகிடப்பதையும் பார்க்கவே எனக்கு பெரும் கிளர்ச்சியண்டாகும்.

அறுவடை என்பது வளமையின் சாட்சி, செழிப்பின் சாட்சி தொடர்ந்து இவ்வுலகில் உயிர்கள் வாழும்  சாத்தியத்திற்கான  உத்திரவாதம்,  எனக்கு வாழ்வை தொடர வேண்டும் என்னும் பிடிப்பையும் பெருவிருப்பையும் அறுவடையும் அறுவடையை காணுதலும் உருவாக்கும்.

நீர் நிரம்பிய கலம் அவற்றில் மிதக்கும் வண்ண மலர்கள் தீபச்சுடரொளி இவைகளும் அப்படித்தான், மலரும் நீருமின்றி வீட்டிலிருந்து ஒருபோதும் பயணத்தை துவக்குவதில்லை, எப்போதும் காரில் ஓரிரு மங்கலங்கள் இருக்கவேண்டும் என்பதை மகன்களுக்கும் உணர்த்தியிருக்கிறேன்

மாலைவேளைகளில் விளக்கேற்றாவிட்டால் மனம் எப்படியோ வெறுமை கொண்டுவிடுகிறது, எவ்விதத்திலும் இருள் அணுகிவிடக்கூடாது என்னும்  ஆழ்மன விருப்பத்தின் வெளிப்பாடாகவும்  இது இருக்கலாம்.

அந்த பண்ணை வீட்டிலிருந்து முதல்முறை திரும்புகையில் கொண்டு வந்த ராம் சீதாப்பழத்தின் விதையினின்றும் ஒரு செடி இளம்பச்சை நீளிலைகளுடன் இங்கு வளர்ந்து நிற்கிறது.

அப்படி ஒரு நஞ்சில்லா நிலமொன்றில் பலவ்ற்றை விளைவித்து மகிழும் விழைவு எனக்குள் பல்லாண்டுகளாக நிறைவேறாமல் காத்திருக்கிறது. அவ்விழைவின் மீச்சிறு வடிவமாகவே வேடசெந்தூர்வீட்டிலும் வகை கனிமரங்களிலும் ஒவ்வொன்று, பாரதியின் காணி நிலம் போல 12 தென்னைகள், மலர்ச்செடிகளும் மூலிகைகளுமாக வைத்து வளர்த்து பசுமையும் செழுமையும் நிரம்பி, வளமை பொங்க வாழ்கிறேன்.

ஊட்டி ஃபெர்ன்ஹில் நித்யா ஆசிரமம் நல்ல மேட்டு நிலத்தில் அமைந்திருக்கும் முழுவதும் மலர்ச்செடிகளாலும் இயற்கை புல்வெளியாலும் சூழப்பட்டிருக்கும் சொர்க்கத்துக்கு இணையான இடம் அது.அங்கு எனக்கு தாளமுடியாததென்றால் குளிர்மட்டுமே மற்றபடி திரும்பிவராமல் இறுதி மூச்சுவரை இருக்க விரும்பும் ஒரு சில இடங்களில் அதுவும் ஒன்று.

அங்கு ஒரு கோடைக்கால காவிய முகாமின் போது தேவதேவன் அவர்களுடன் ஒரு மாலை நடை சென்றேன், மலர்கள் மலர்கள் மலர்களென்று முழுவதும் மலர்களை பார்த்து அவற்றின்  பெயர்களை தெரிந்துகொண்டு அவற்றின் மணம் நுகர்ந்து கொண்டு அவற்றை பறித்து கையில் ஏந்திக்கொண்டு ஒன்றை தலையிலும் சூடிக்கொண்டு அனைத்தையும் புகைப்படமெடுத்துக்கொண்டு மலர்களால் ஆன நாளாகவே  அமைந்தது அன்று.

அன்று பிற்பகல் ஊர் திரும்பவே எனக்கு மனதில்லை நிர்மால்யாவிடம் அனுமதி பெற்று வட்டத் தலையணைகள் போல் நெருக்கமான  வண்ணச்சிறுமலர்களால் ஆன  ஹைட்ராஞ்சியா  மலர்ப்பந்துகளில் ஒன்றை பறித்துக்கொண்டு பொள்ளாச்சி வந்தேன்

குருநித்யா ஆசிரமத்தின் ஒரு சிறு துண்டையே வீட்டுக்கு கொண்டு வந்தது போல் இருந்தது அம்மலரை பார்க்கையில் எல்லாம். கன்யாகுமாரி கவிதை முகாமிற்கு பிறகும் அங்கிருந்து என் கைக்கடிகாரப்பட்டையில் ஒட்டிக்கொண்டு வீடுவரை வந்த கடற்கரை மணலும் அப்படியான உணர்வை, அவ்விடத்தின் நினைவுகளின் நீட்சியை அளித்தது. அப்படித்தான் இந்த பண்ணை வீட்டு நினைவும். 

ராம் சீதாவும் அங்கிருக்கும் பல மரங்களில் ஒன்றொன்றாக இங்குமிருப்பதுமாக அப்பண்ணையின் ஒரு சிறு துண்டு தான் இங்குமிருக்கிறது, பெருமரங்களின் மீச்சீறு போன்சாய் வடிவங்களை போல.

இன்று ஜெ தன் பிறந்தநாளன்று அருணாவுடன் எர்ணாகுளம் சென்று  விட்டு,மழை பெய்திருந்த நாகர்கோவில் திரும்பியதை சொல்லியிருந்தது போலவே நானும் இன்று  நினைவுகளில் பசுமை வழியாகவே சென்று பசுமை வழியாகவே மீண்டேன்

நிலவிரவு!

வழக்கமில்லாத வழக்கமாக இந்த மாதம் இரண்டு முறை வார இறுதிகளில் 3 நாட்கள் விடுமுறை தினங்களாகிவிட்டது.

வெள்ளி சனி வீட்டில் ஓய்வாக இருந்தேன். நிறைய பாடல்கள் கேட்டேன்.குறிப்பாக லால் இஷ்க், அர்ஜித் சிங் குரலெல்லாம் தெய்வத்தினருள்தான்.  ராம் சீதா மரத்தடியில் நாளெல்லாம் அமர்ந்திருந்தேன். அதன் இளம்பச்சை நீள் இலைகளின் அடியில் மனமும் உடலும் குளிர்ந்திருந்தது.

 சில தினங்களாக ஏதும் எழுதவேயில்லை, எழுத மனம் குவியவில்லை. தினம் தொகுக்கும், திருத்தும் விக்கியின் பக்கங்களையும் 2 நாட்களுக்கு முன்னர் திருத்தியது மீண்டும் துவங்கவில்லை,கல்லூரியிலிருந்து வந்ததும் கணினியும் கையுமாக இருக்கும் அதே தேவிதானா இது என எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.

ஞாயிறு மாலா இனியா அபியுடன் ஜெகனின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கு போக வேண்டி இருந்தது. எனக்கு உண்மையில் கோவையில் மாலை நிகழ்வென்றால் நள்ளிரவில் வீடு திரும்புவதும் மறுநாள்; கல்லூரி செல்வதும் பெரும் சிரமமாகி விடும் எனினும் மாலா மிக விருப்பப்பட்டதால் மாலதியை பார்க்கவென்றே போக நினைத்தேன்.

மாலை 4 மணிக்கு நல்ல எதிர்வெயிலில் புறப்பட்டேன். வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் கூடவே ராமபாண சரம் வைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பிடித்த அடர் தேன் நிற ப்ளெயின் புடவை. இதே போலொரு புடவையை கட்டிக்கொண்டு ராஜீவ் காந்தி இறந்த தினம் பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தது  நினைவுக்கு வந்தது.

அபிக்கும் இனியாவுக்கும் இரண்டு சரங்கள் தனியே தொடுத்து எடுத்துக்கொண்டேன், மாலதிக்கு கொடுக்க முடியாமலாகிவிட்டது துயரளித்தது. ஆனால் மாலா ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது?

காரில்  பொதுவாக ஏஸி போட்டுக்கொள்வதில்லை எனினும் வெயில் தாளாமால் போட்டுக்கொண்டேன். பொள்ளாச்சி வருவதற்குள் ராமபாண சுகந்தம் கமழ்ந்தது.  தி ஜாவின் கதையில் வருமே ஸ்வாமி அலமாரியில் முந்தின நாள் வைத்திருந்த ஜாதிமல்லி அரும்புகளின் மணம் மறு நாள் காலையில் மனதை நிறைத்ததும் அந்த மனைவியை இழந்த ஒரு சிறு மகளின் தகப்பனார் உடனே ஒரு திருமணம் செய்துகொண்டுவிடுவாரே!அப்படி ஒரு மயக்கும் நறுமணம்.

கிணத்துக்கடவு வருகையில் மலர்மணம் பித்து பிடிக்க வைத்தது. மனம் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு மிதந்து பறந்துவிடும் போலானதும் ,ஏஸியை அணைக்க சொல்லிவிட்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டேன்.  

என்னவோ அதிசயமாக சாலையில் போக்குவரத்து மிகவும் நீர்த்திருந்தது. கற்பகம் வழியே பைபாஸ் சாலையில் சென்று நிகழ்வு நடைபெறும் அரங்கிற்கு முன்பாகவே வந்து சேர்ந்துவிட்டேன்.  யூ டர்ன் போடுகையில் கடந்த ஜென்னிஸ் கிளப் ஒரு மின்னலை உண்டாக்கியது. அந்த பழங்காலத்திய அரங்கிற்கு முதன் முதலாக வந்திருக்கிறேன்.

மாலதி அரைமணி கழித்து வருவதாக சொன்னதும் பாதியில் இருந்த நைட் ஏக்‌ஷன் தொடரை பார்க்க நினைத்தேன் எனினும் மனம் ஒரு நிலையில் இல்லை எனவே அமைதியாக அந்த மரநிழலில் காத்திருந்தேன்.

ஜெகனும் மாலதியும் ஒரே சமயத்தில் வந்தார்கள் ஜெகன் என்னை கண்டதும் வியப்பாகினான். நான் அவனிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தேன்.இனியா வந்திருந்தாள் அபி  மருத்துவமனையில் கூட்டமதிகமென்பதால் பின்னர் வரவிருந்தாள்.மாலதி என்னை இறுக்க கட்டிக்கொண்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டதும் நானும் கட்டிக்கொண்டேன். அரங்கில் அமர்ந்த பின்னரும் மற்றுமொரு முறை மாலா என் கன்னத்தில் முத்தமிட்டு ’’இன்னிக்கு என்னவோ ரொம்ப அழகா இருக்கீங்க’’ என்றாள்

.

ஓரளவுக்கு கூட்டம், எனக்கு தெரிந்த வேண்டிய முகங்களை தேடினேன் யாரும் இல்லை. நிகழ்ச்சியில் நானும் வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன் பலமுறை. அபியும் வந்துவிட்டாள் .

ஜெகன் ஜெ வின் சில நகைச்சுவைகளை நகலெடுத்தான். கூட்டத்தில் பலவயதுள்ளோரும் இருந்தோம் சிறு குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை. ஆடியன்ஸ் பல்ஸ் என்பார்களே அதை நன்றாக பார்த்து தக்கபடி பேசிய ஜெகன் அந்த கூட்டத்தில் பேசியிருக்க வேண்டாத பெரியவர்களுக்கேயான சிலவற்றை பேசியது எனக்கு உவக்கவில்லை.

அதில் நகைச்சுவை இருக்கலாம் எனினும் அத்தனை அந்தரங்கமான விஷயத்தை தன் சொந்த வாழ்வில் இணைத்து அப்படி பரஸ்யமாக்கியது எனக்கு ஒரு விலகலை அளித்தது, மாலதிக்காக முக மாறுபாடுகளை கவனமாக மறைத்துக்கொண்டேன்

நிகழ்ச்சி முடிய 9 மணியானது, பின்னர் அந்த தீப்பிடித்தது போலான போக்குவரத்து நெரிசலில் அண்ண பூர்ணா சென்று இரவுணவுக்கு பின்னர் புறப்பட இரவு 10 மணிக்கும் மேலானது. அபியை இருசக்கர வாகனத்தில் அனுப்பி விட்டு புறப்பட்டோம். பின்னாலேயே மாலதியும் இனியாவும் அவர்கள் காரில் வந்தனர்

மாலதி கார் ஒட்டிக்கொண்டு வந்தது எனக்கு பெரும் மனநிறைவை அளித்தது.

பைபாஸில் அத்தனை போக்குவரத்து இல்லை. பீளமேடு சாலையில்  வானில் நிலவில்லை,  சின்னியம்பாளையும் கிளைச்சாலையில் திரும்பியதும் என் இடப்பக்கம் பொன்னென முழுநிலவெழுந்தது,

நல்ல குளிர் காற்றில், வானின்  அப்பெரு வெளியில் ஒரு மேகப்பிசிறோ விண்மீனோ இன்றி தன்னந்தனித்திருந்தது நிலவு. முழு நிலவு தோன்றி சிலநாட்களாயிருந்தது,  நீர் பட்டுக்கலைந்த ஓவியம் போல கொஞ்சம் கலைந்திருந்தது. எனினும் கீழ்ப்பகுதியின் பிறை வடிவு மட்டும் கூடுதல் ஒளிகொண்டிருந்தது.

அத்தனை வசீகரமாக அத்தனை பேரழகுடன் அத்தனை தனித்திருந்த நிலவு பெரும் துயரளித்தது.போதாக்குறைக்கு வானொலியில் ’’செந்தாழம்பூவில்’’ பாடிக்கொண்டிருந்தார்  தாஸேட்டன்.

ஷோபாவின் எளிய அழகையும் சரத்பாபுவின் கனவில் மிதக்கும் கண்களையும் அந்த மலைப்பாதை ஜீப் பயணத்தையும் நினைவில் மீட்டிக்கொண்டேன்.

கற்பகம் சந்திப்பில் மாலாவிடம் விடைபெற்றுக் கொண்டேன். ஞாயிறென்பதால் பல கடைகள் அடைத்திருந்தன. பல தெருக்கள் சந்தடியின்றி இருந்தன. என்னவோ ஒரு இனம்புரியாத துக்கம் நெஞ்சில் கல்லைப்போல அழுத்திக்கொண்டிருந்தது

நிலவு என்னையும் நான் நிலவையும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டே பயணித்தோம்.  நிலவை புகைப்படம் எடுத்துக்கொண்டேன், ஒரு மேம்பால வளைவில் கொஞ்சம் முயன்றால் கையில் அள்ளி எடுத்து விடலாம் போல  நிலவு வெகுஅருகில் வந்தது.

சுப்ரமணிய ஸ்வாமி கோவில் வழி வருகையில் நள்ளிரவு 12 மணி ஒரு பூக்கடையின் வாசலில் ஆண்களும் பெண்களுமாக பலர் பூத்தொடுத்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்கும் மலரின் சுகந்தம் மனம் மயக்குமா, மலர் தொடுத்தலை ஒரு தொழிலாக அகாலத்தில் செய்து கொண்டிருக்கையில் அப்படியான இனிமையை மனம் உணருமா?

வால்பாறை சாலையில் ஓரிடத்தில்  வரிசையான விளக்குகள் ஒளிர ஒரு அம்மன் கோவில் விழா நடந்த அடையாளங்கள் மிச்சமிருந்தன, சிம்மவாஹினியை ஒளிரும் பலவண்ண சிறு விளக்குகளால் சாலையோரம்  அமைத்திருந்தார்கள் சற்றுத்தள்ளி இளமுருகனும் வேலும் மயிலுமாக குறுஞ்சிரிப்புடன் ஒளிர்ந்தான,கைகூப்பி வணங்கி  இருக்கிறீர்கள் தானே தெய்வங்களே ?என்று மானசீகமாக வினவினேன் கண் நிறைந்தது.  நெஞ்சின் எடையுடன் தொண்டைக்குழியிலும் ஒன்று அடைத்துக்கொண்டது.

வீட்டுக்கு வரும்வரை நிலவு தொடர்ந்துகொண்டிருந்தது. என் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறதோ என்னவோ என்று நினைத்துக்கொண்டேன்

சரி நிலவாவது இருக்கிறதே என்னுடன் இணைந்து பயணிக்க!

வீடு திரும்பும்அரசமர வளைவிலும் தொடர்ந்த நிலவு மலைவேம்பின் கிளைகளுக்குள் புகுந்து புன்னையின் மின்னிலைகளுக்கு மேல் நின்று கொண்டு விடை கொடுத்தது.

ஏன் இந்த ஒற்றை நிலவு இன்று  இத்தனை துயரளித்தது?

என்னைபோலத்தான் அதுவும், தனித்தது, துயருற்றது, மனதளவில் எங்கோ வெகு தொலைவில் இருப்பது, லேசாக கலைந்திருந்தாலும் எங்கோ ஒரு ஓரத்திலாவது மினுங்கலை  மிச்சம் வைத்திருப்பது. களைத்திருந்தேன் எனினும்  இன்றைய நாளை எழுதவிரும்பினேன்.

அத்தனை அமைதியாக  என் முன்னே முடிவற்று நீண்டு கிடந்த  இரவை முன்வாசல் அகல்விளக்கின் சுடரொளி திரைச்சீலை அசைகையில் உண்டான இடைவெளிகளின் வழியே கீறி கீறிச் சென்றுகொண்டிருக்கிறது.

இளையவனா ,மூத்தவனா?

சில நாட்கள் முன்பு அம்மாவின் அண்ணனும் எனது தாய் மாமனும்,  சென்ற மாதம் அம்மா காலமாகும் வரை நாங்கள் பார்த்தே இராதவருமாகிய மருதமுத்து மாமன் வீட்டு திருமணத்தில் அம்மாவின் சார்பாக கலந்து கொண்டேன். எனக்கு அம்மாவின் சாயலே இல்லை நான் அப்பாவை கொண்டிருப்பவள் எனினும் அங்கிருந்த பலருக்கு நான் , 55 வருடங்கள் தன் பிறந்த வீட்டையே பார்த்திராத,  வைராக்கியமாக மின்மயானம் சென்ற அம்மாவை நினைவுபடுத்தி இருப்பேன் போலிருக்கிறது.

பலர் வந்து பேசினார்கள் பலர் தொலைவில் இருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் கைகளை  பிடித்துக் கொண்டும், முகத்தை தடவியும் வாஞ்சையுடன் பேசினார்கள். குற்றவுணர்வில் ஒரு சிலர் கண்ணீர் வடித்தார்கள் 

நான் பொதுவாக பொன்நகைகளில் விருப்பமில்லாதவள், எனக்கான அங்கீகாரம் என் தோற்றத்தில் மட்டும் இல்லை என்று நம்புபவள் மேலும் எனக்கு அணிகலன்களில் அத்தனை விருப்பமும் இல்லை. ஆனால் அன்று நான் அங்கு அம்மாவின் சார்பாக சென்றதால் வழக்கத்துக்கு மாறாக நகைகள் அணிந்திருந்தேன் அவற்றையும் பல கண்கள் கணக்கெடுத்துக்கொண்டன.

மாமன் நடுங்கும் விரல்களால் எனக்கு நெற்றாக உலர்ந்துபோன அடுக்கு நீல சங்குமலர்காய்களை கொடுத்தார். உலர்ந்துவாடி இருந்த அக்காய்களுக்குள் விதைமணிகள் புறாக்கண்களைபோல சிறு குழிவுகளில் அமர்ந்திருந்தன. அவற்றில் உயிர் நிறைந்திருந்தது  பளபபளப்பிலேயே தெரிந்தது. அவற்றில் இருந்து புதிய சந்ததிகள் இனி முளைத்து வருமாயிருக்கும்.

இரவு உணவுக்கு முன்னர் மணமக்கள் அலங்காரம் முடிந்து வர அனைவரும் நெடுநேரம் காத்திருந்தோம். என் பின்னாலிருந்த ஒரு அம்மாள் ’’என் கல்யாணத்தப்போ அதிகமா மஞ்சள் தேச்சுகிட்டேன்  அவ்வளவுதான் இப்ப என்னன்னா ஆளே அடையாளம் தெரியாம பூசி மெழுகி பொம்மையாட்டம் பண்றதுக்கு இத்தனை நேரம் ,கொள்ளை காசு’’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்.

சுமார் 2 மணி நேரமானபின்னர்  மணமகள் இளஞ்சிவப்பு உடையில் பார்பி பொம்மைபோல மேடைக்கு வந்தார்,

அதன்பின்னர் அரைமணி நேரம் கழித்து மணமகன் வந்தார், காத்திருந்த இடைவெளியில் என் அருகில் இருந்த  ஆத்தா என்னிடம் ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு அழைப்பு வந்தது, நான் என் அலைபேசியை எடுத்து பேசிவிட்டு அணைத்தேன். என் அலைபேசியின் லாக் ஸ்கிரீனை பார்த்த ஆத்தா அதிலிருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ’’யாரு கண்ணு, மகனா? என்றார் நான் திகைத்து திடுக்கிட கூட சமயம் கொடுக்காமல் மூத்தவனா இளையவனா?  என்றார்

நான் சமாளித்து  பதில் சொல்லமுயற்சிப்பதற்குள்  ‘’பின்னர் எங்கே காட்டு’’ பாப்போம் என்றார் நான் ஒரு நிமிடம் யோசித்தேன் நிச்சயம் நான் அந்த ஸ்கிரீனில் வைத்திருக்கும் நபரை இங்குள்ளோருக்கு , குறிப்பாய் இந்த ஆத்தாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை   எனவே தைரியமாக எடுத்து காட்டினேன்.

ஆத்தா  பார்த்துவிட்டு  ’’ மூத்தவனா, ராமராஜ் வூட்டு கலியாணத்துக்கு வந்தப்போ இத்துணூன்டு கீரைத்தண்டாட்டம் இருந்தான் இப்போ வெள்ளைகாரனாட்டம் இருக்கானே? என்றார். நான் சிரிப்பை மென்று விழுங்கினேன்

அவரே தொடர்ந்து இப்போ என்ன செய்யறான்? என்றார். ’’வெளிநாட்டில் படிக்கறான்’’ என்றேன்.

’’ஆ அதான்  அமெரிக்கா போன பின்ன மீசை வச்சுகிட்டா இருப்பான், , சரி இருக்கட்டும் விடு பையன் நல்ல மூக்கும் முழியுமா இருக்கான் நம்ம சனத்தில் இவனுக்கு பொண்ணே இல்லை கேட்டுக்கோ’’ என்றார்

பொண்ணா இவருக்கா ஏற்கனவே 4 கல்யாணம் பண்ணிகிட்டவராச்சே என்று மனசில் நினைத்துக்கொண்டேன். அமெரிக்கா இல்லை என்று சொல்ல நினைத்து அதை சொல்லவேண்டாம் என் விட்டுவிட்டேன். ஆத்தாவிற்கு வெளிநாடென்றால் அமெரிக்கா அதை ஏன் மாற்றனும்?

ஆத்தா  தொடர்ந்து நினைவுகளில் மூழ்கி முத்தெடுத்து ’’நம்ம ஏரிப்பட்டி பாப்பாத்தி இருக்காளே, உனக்கு நங்கையாதானே,அவங்க  வகையில் ஒருத்தி  அமெரிக்காவில் இருக்கா, என்னமோ பெரிய படிப்பு படிக்கறாளாம், மூக்கும் முழியுமா நல்லத்தான் இருப்பா, நிறந்தான் மட்டு எதுக்கும் சாதகம் வாங்கட்டா ? என்றார்.

நான் ’’இல்லீங்க  ஆத்தா அவன் இன்னும் படிச்சுட்டு இருக்கான் 2 3 வருஷம் போகட்டும்’’ என்றேன் ஆத்தா விட்டால் அப்போதே நிச்சயதார்த்தம் கூட செய்து முடித்திருப்பார்

லாக் ஸ்கிரீனில் இருக்கும் அந்த ஹாலிவுட் நாயகன் பக்கவாட்டில் திரும்பி சிரித்துகொண்டிருக்கும் அந்த புகைப்படத்தை சமீபத்தில்தான் என் அலைபேசியில் தருண்  வைத்து கொடுத்தான், கல்லூரி காலத்திலிருந்து நான் அவரின் ரசிகை.ஆத்தா சொன்னதுபோல மூக்கு ரொம்பவே ஸ்பெஷல்தான் அந்த நடிகருக்கு

நல்லவேளை ஹோம் ஸ்கிரீனில் இருக்கும் புதிய பாதைக்காரரை ஆத்தா பார்க்கவில்லை, பார்த்திருந்தால் இவனாரு இளையவனா? என்று கேட்டு அவனுக்கும் ஒரு பெண்பார்த்திருப்பார்

வீனஸ், பூச்சிஉண்ணும் தாவரம்

’’கார்ல் லெச்சே (karl Leche) வும் அவரது குழுவினரும் மடகாஸ்கரின் அடர்ந்த காட்டுக்குள்  கதோஸ்  பழங்குடியினர் அறியாது அவர்களைப் பின்தொடர்ந்து சென்று  சந்தடியில்லாமல்  அவர்களின் செயல்களை கவனித்துக்கொண்டிருந்தனர். 

பழங்குடியினர் அனைவரும் ஒரு ஆற்றங்கரையில் குழுமினர்.  அவர்கள் முன்னால்  சுமார் எட்டு அடி உயரமுள்ள அன்னாசியை போன்ற சதைப்பற்றான ஒரு தண்டும், அதன் உச்சியில் பெரும் நாகங்களைப் போன்ற, நீண்ட கைகளாக அமைந்திருந்த இலைகள் பச்சை நிறத்திலும் இருந்தன. இலைகளின் நுனி மாட்டின் கொம்புகளைப் போல கூராக இருந்தது. அம்மரத்தை பார்த்து பழங்குடிகள் அனைவரும்  ’’டீபே, டீபே’’ என்று கூவி வணங்கினார்கள். 

நிர்வாணமாக ஒரு பழங்குடி இளம்பெண்ணை அவர்கள் அம்மரத்தின் மீது ஏறும் படி சொன்னதும் அவள் மறுப்பேதும் சொல்லாமல்  ஏறினாள். இலைகள் அனைத்தும் குவிந்திருந்த மத்தியப் பகுதியில் இருந்த நீரை அருந்தும் படி அவர்கள் கீழிருந்து கூச்சலிட்டதும் அவள் அந்த நீரை அருந்தினாள்,  உடனே அம்மரத்தின் இலைகளான நாகங்களுக்கு உயிர் வந்ததுபோல அவை நெளிந்தன

’’கடும் பசிகொண்ட நாகங்களை போன்ற அந்த இலை நீட்சிகளால் அந்த பெண்ணை அம்மரம் சுற்றி வளைத்துக் கொண்டது.  கைகளையும் கழுத்தையும் பின்னர் தலையையும் சுற்றி சுற்றி அக்கைகளால்  இறுக்கப்பட்ட போது அந்த பெண் பயங்கரமாக ஓலமிட்டாள். பிறகு அந்த ஓலம் மெல்ல முனகலாக மாறி பின்னர் மெதுவாக அடங்கியது. மரத்தை சுற்றிலும் கொல்லப்பட்ட பெண்ணின் ரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பச்சை பாம்புகள் போன்ற அக்கைகள் தளர்ந்து விடுபட்டு மீண்டும் நீண்ட போது அந்த பெண் அதற்குள் இருந்த சுவடே இல்லாமல் அம்மரத்தால் முழுவதுமாக உண்ணப்பட்டிருந்தாள். அவளை பலி கொடுத்த  பழங்குடியினர் அம்மரத்தை பயபக்தியுடன் வணங்கினார்கள்’’

26 ஏப்ரல் 1874ல் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில்  ஜெர்மானிய  தாவரவியலாளர் “Karl Leche” என்பவரின் மடகாஸ்கர் காட்டுப் பயண அனுபவம் இப்படி ஒரு செய்திக் கட்டுரையாக    எட்மண்ட் ஸ்பென்சர்( Edmund Spencer) என்னும் கட்டுரையாளரால் எழுதப்பட்டிருந்தது. அடர்  காடுகளில் மனிதர்களை கொன்று தின்னும் மரங்கள் இருப்பதாக பல செவிவழி செய்திகளும் கதைகளும் பல காலமாக  மக்களிடையே நிலவி வந்தாலும் முதன் முதலாக அச்சில் மனிதர்களை கொன்று தின்னும் மரங்களைப்பற்றி வெளியான  இந்த கட்டுரை பெரிதும் வாசிக்கப்பட்டது.

நியூயார்க் டைம்ஸின்  இந்தக்கட்டுரை உண்டாக்கிய பரபரப்பால் இதே  கட்டுரை  பிற பிரபல நாளிதழ்களில்  அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டே இருந்தது. பலர் இந்த நரமாமிசம் உண்ணும் மரத்தையும் அந்த பழங்குடிகளையும் காண  மடகாஸ்கர் காடுகளுக்கு தேடல் பயணம் மேற்கொண்டார்கள். இந்த பரபரப்பு பல ஆண்டுகள் தொடர்ந்தது.

1889ல் வெளியான ’கடலும் நிலமும்’ என்னும்  நூலில் அதன் ஆசிரியர் ஜேம்ஸ் பூயல் (James W. Buel) கோபம் கொண்ட பெரும் நாகங்களை போன்ற, நச்சு முட்களும், நூற்றுக்கணக்கான  உறிஞ்சு வாய்களும் நிறைந்திருக்கும் கிளைகளுடன் இருக்கும் யா-டி-வியோ (ya te veo) என்னும்  ஆப்பிரிக்க காடுகளின் ஊனுண்ணி மரமொன்றைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்.

1891ல் லண்டன், நியூயார்க் மற்றும் மெல்பர்னில்  மாதமொருமுறை வெளியான சஞ்சிகையான Review of Reviews வின் ஆசிரியர்  வில்லியம் (William Thomas Stead) நிகரகுவாவின் மனிதர்களை உண்ணும் தாவரமொன்றைப் பற்றியும் அதனருகில் செல்லும் எவரையும் அது பிடித்து இரத்தத்தை உறிஞ்சி குடித்து கொல்லுவதையும் குறித்து எழுதினார்

19 ம் நூற்றாண்டில் இப்படி மனிதர்களையும், நாய்களையும் பிற விலங்குகளையும் பிடித்து கொன்று தின்னும் தாவரங்கள் பற்றிய பல கதைகளும் செய்திகளும் கட்டுரைகளும் உலகெங்கிலும் வெளியாகிக் கொண்டே இருந்தன. காடுகளில் பயணித்த மனிதர்களை நீண்ட கிளைகளால் சுற்றி வளைத்து விழுங்கிய கொலைகார தாவரங்களை பற்றிய கதைகள் வெகுவாக உலவின. 

அக்கதைகளில் வானளாவிய கிளைகளால் பறவைகளைக் கூட அத்தாவரங்கள் பிடித்து விழுங்கியது.. பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளரும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியவருமான ஆர்தர் கொனான்  (Arthur Conan Doyle)  தனது குற்றக்கதைகளில் மனிதர்களை இறுகப்பிடித்து விழுங்கும் வீனஸ் ஊனுண்ணும் தாவரங்களை அறிமுகப்படுத்தினார்.

மிச்சிகன் கவர்னரும் இயற்கை ஆர்வலருமான திரு சேஸ் ஓஸ்போர்ன் ( Chase Osborn ) எழுதி 1924 ல் வெளியான ’’மடகாஸ்கர்- மனிதர்களை கொன்று உண்ணும் மரங்களின் நிலம்’’  (Madagascar: Land of the Man-eating Tree)  என்னும் நூலிலும் மனிதர்களை கொன்றுண்ணும் மரங்களை பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது. மடகாஸ்கர் பழங்குடிகளுக்கு மனிதர்களை உண்ணும் மரத்தை  குறித்து  நன்கு தெரிந்திருக்கிறது என்று  சேஸ் குறிப்பிட்டிருந்தார்.பல கதைகளில் மனிதர்களை நெரித்துக் கொன்று உண்ணும் மரங்களை குறித்த சித்திரங்கள் இடம்பெற்றன.

1955ல் ஜெர்மானிய -அமெரிக்க அறிவியல் கட்டுரையாளரும்,  cryptozoology. என்னும் மர்மமான உயிரினங்களை குறித்த அறிவியல் துறையில் நிபுணருமான  வில்லி லே  (Willy Ley) தனது ’’சாலமண்டர்களும் பிற அற்புதங்களும்’’ என்னும் நூலில்  (Salamanders and other Wonders)  இவை அனைத்தும் கட்டுக்கதைகள் அப்படி ஒரு பழங்குடியினரோ, மனிதர்களை பிடித்துண்ணும் மரங்களோ எதுவுமே உலகில் இல்லை  இவை வெறும் பரபரப்பு செய்திகளுக்காக உருவாக்கப்பட்ட  வதந்திகள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனினும் ஊனுண்ணித் தாவரங்கள் இருக்கின்றன, இல்லை என்னும் இரு தரப்பும் அறிவியல் உலகில் வலுவாக  காலூன்றி இருந்தது. பல அறிவியலாளர்கள் தொடர்ந்து அவற்றை தேடிச்சென்று கொண்டிருந்தனர்.

நகரும் விலங்குகள் வேட்டையாடி இரைகளை பிடித்துண்ணுவது இயற்கையென்றும், ஓரிடத்தில் வேர்பிடித்து நகராமல் இருக்கும் தாவரங்கள் வேட்டையாடுவது என்பது இயற்கையில்  நடக்கவே நடக்காத காரியம் என்றும் பலரல் உறுதியாக நம்பப்பட்டது.

ஊனுண்ணித் தாவரங்கள் இருப்பது  உண்மையென்றும்,  வெறும் கற்பனையென்றும் இருவிதமான கருத்துக்கள் நிலவிக்கொண்டிறூந்த வேலையில்தான் சார்லஸ் டார்வின் கடற்பயணங்களை மேற்கொண்டிருந்தார்

 1875 ல் டார்வின் ஊனுண்ணித்தாவரங்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதை ஆதாரபூர்வமாக தெரிவித்தபோது உலகம் பெரும் ஆச்சர்யத்துக்கு உள்ளானது.  இங்கிலாந்தின் சுஸெக்ஸ் வனப்பகுதியின் ஊனுண்ணி பனித்துளி தாவரம் (Sundew plant)குறித்த விளக்கமான கட்டுரைகள் அவரால் எழுதப்பட்டிருந்தன.

 பூச்சிகளால் உண்ணப்படும் தாவரங்களை மட்டுமே அறிந்திருந்த உலகம் முதல் முறையாக பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் இருப்பதை அதன்பிறகே  அறிந்துகொண்டது

ஊனுண்ணி தாவரங்களின் பரிணாம வளர்ச்சி

சுமார் 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மாபெரும் டைனோசர்கள் காடுகளில் பல்கி பெருகிக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு இலைகளில் நடைபெற்ற ஒளிச்சேர்க்கையில் கிடைக்கும் உணவு போதாமலும், அவை வாழ்ந்த நிலத்தில் சத்துக்கள் குறைவாகவும் இருந்ததால் அவற்றின் இலைகள் பூச்சிகளை பிடிக்கும் பொறிகளாக மெல்ல மெல்ல மாறி பரிணாம வளர்ச்சி அடைந்தது.  அவற்றின் வளர்ச்சிக்கு  நிலத்திலிருந்து கிடைப்பதில் போதாமல் இருக்கும் சத்துக்களை இவ்வாறு பூச்சிகளை, சிறு விலங்குகளை உண்பதன் மூலம்  அவை சரி செய்து கொண்டன.

பச்சையத்தின் உதவியால் ஒளிச்சேர்க்கையின் மூலம் மட்டுமே உணவை தயாரித்து கொண்டிருந்த தாவரங்களில் சில இவ்வாறான ஊனுண்ணும் உயிரினங்களாக பரிணாம வளர்ச்சியடைந்தது சுமார் பத்துமில்லியன் வருடங்களுக்கும் மேலாக மெல்ல மெல்ல நடந்திருக்கும் என்று தாவரவியலாளர்கள் யூகிக்கிறார்கள்.1

இத்தாவரங்கள் பூச்சிகளை பிடித்து கொன்று உண்ணுவதை  பார்க்க முடிவதால் இவற்றை ஊனுண்ணிகள் என அடையாளம் காணமுடிந்தது. எனினும் இவற்றின் கொன்று தின்னுதலின் பிரத்யேக செயற்பாடுகள் குறித்து முழுமையான அறிதல் தாவரவியலாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, டார்வினின் காலத்திலிருந்தே இவற்றைக் குறித்து  ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தனை ஆண்டுகளில் இத்தாவரங்களில் இரையை ஜீரணிக்க உதவும் பலநூறு நொதிகளில் (Enzymes) Nepenthesin என்னும் ஒரே ஒரு நொதிதான் இனங்காணப்பட்டுள்ளது.

உலக நாடுகள் எல்லாவற்றிலும் காணப்படும் 600க்கும் மேற்பட்ட இந்த ஊனுண்ணித் தாவரங்கள் அண்டார்டிகா மற்றும் பசிபிக் தீவுகளில் மட்டும் இல்லை. 

பூச்சிகளை பிடிக்கும் எல்லா தாவரங்களும் ஊனுண்ணிகளல்ல. அரிஸ்டலோக்கியாவை (Aristolochia) போல சில தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக  பூச்சிகளை கவர்ந்து அவற்றை  தாவரங்களின் பாகங்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்யும். இவை ஊனுண்ணித் தாவரங்கள் அல்ல .ஏனெனில் இவை பூச்சிகளை ஒருபோதும் கொல்லுவதில்லை. மேலும் ஊனுண்ணித் தாவரங்கள் எப்போதும் அவற்றின்  மலர்களை பொறிகளாக பயன்படுத்துவதில்லை.

இதைப்போலவே மேய்ச்சல் விலங்குகளிடமிருந்தும், பூச்சிகள் இலைகளை  தாக்காதவண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும் இலைகளில் பிசினைசுரக்கும் தாவரங்களும் ஊனுண்ணித்தாவரங்களல்ல. அவை தங்களின் பாதுகாப்பிற்காக பிசினில் பூச்சிகளை சிக்க வைத்தாலும், அப்பூச்சிகளை கொன்று ஜீரணிப்பதில்லை. உதாரணமாக ஒட்டும் தன்மையுடைய இலைகளைக் கொண்டிருக்கும் ஐபிசெல்லா லூட்டியா ( Ibicella lutea), ப்ரொபோஸிடியா லூசியானிக்கா (Proboscidea louisianica) மற்றும் ப்ரொபோஸிடியா பார்விஃப்ளோரா (P. parviflora) ஆகியவை ஊனுண்ணிகளல்ல இவற்றின் ,இலைகளில் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகள் அப்படியே இறந்து உலர்ந்துவிடுகின்றன. இவைகளெல்லாம் pre carnivorous plants , அதாவது ஊனுண்னுவதற்கு முந்தைய நிலையிலிருப்பவையென்று கருதப்படுகின்றன. இவை காலப்போக்கில் ஊனுண்ணுபவைகளாக பரிணாம வளர்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது

பூச்சிகளை கொல்லும் நொதிகளை கொண்டிருக்காததால் பூச்சிகளை இலைகளில் பிடித்து மட்டும் வைத்துக்கொண்டு, சிக்கிய பூச்சிகளை உண்ண வரும் வண்டுகளின் கழிவுகளை உறிஞ்சி  அதிலிருக்கும் சத்துக்களை கிரகிக்கும் ரோரிடூலா (Roridula) எனப்படும் ஒரு தாவரம் விளிம்புநிலை ஊனுண்ணித்தாவரமென்று அழைக்கப்படுகிறது.(Marginal Carnivorous plant). இவையும் மெல்ல மெல்ல முழுமையான ஊனுண்ணுபவைகளாக மாறக்கூடும்

இந்த பரிணாம வளர்ச்சியை குறித்த ஆய்வுகள் பல்லாண்டுகளாக தொடர்கின்றன. சமீபத்தில் ஜெர்மனியின் வுஸ்பர்க் பல்கலைக்கழகத்டின் (University of Würzburg) தாவரவியலாளர்களின் குழு  குறிப்பிட்ட மூன்று ஊனுண்ணித் தாவரங்களில் விரிவான ஆய்வுகளை செய்தது.

  • அதிலொன்று பெரும்பாலானோர் அறிந்திருக்கும் வீனஸ் பூச்சி பிடிக்கும் தாவரமான  Venus flytrap 
  • இரண்டாவது அத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஊனுண்ணித் தாவரமான நீர்ச் சக்கரம்(waterwheel) என்னும் பெயர் கொண்ட Aldrovanda vesiculosa.
  • மூன்றாவது பனித்துளி தாவரமாகிய ட்ரஸீரா( sundew plant)

ஆய்வின் முடிவுகள்  70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊனுண்னும் தாவரங்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்றும் அதற்கு பின்னரே நிலச்சத்துக்குறைபாடுகளை சமன்செய்ய, நகர முடியாத தாவரங்கள் அவற்றின் அருகில் வரும் பூச்சிகளை பிடிக்க பொறிகளை உருவாக்கி அப்பூச்சிகளின் உடலிலிருக்கும் சத்துக்களை கிரகித்துக்கொள்ளும் ஊனுண்ணி தாவரங்களாக மாறிவிட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தன.

ஒளிச்சேர்க்கை செய்யும் இலைகளும், சத்துக்களை சாறு வடிவில் உறிஞ்சும் வேர்களும் உபயோகமற்றுப் போன ஒரு கட்டத்தில் தாவரங்கள் தங்கள் வாழ்வை,  இருப்பை உறுதி செய்து கொள்ள புதிய வழிகளை தேடி, அவ்வாறு கண்டறிந்ததுதான் ஊனுண்ணுதல் என்பது.இது  மரபணு மாற்றங்கள் மூலமே சாத்தியமாகி இருக்கும் என்கிறது இந்த ஆய்வு

ஒரு நீர்வாழ் ஊனுண்ணித் தாவரத்திலும், நிலத்தில் படர்ந்து வளரும் பிரேசிலின் மற்றோரு ஊனுண்ணித் தாவரத்திலும் 2013ல் நடந்த ஆய்வுகளும் இந்த மரபணு மாற்றத்தினால் பரிணாம வளர்ச்சியடைந்த விஷயத்தையே உறுதி செய்திருக்கின்றன. வேர்களின் உறிஞ்ம் திறனுக்கும் இலைகளின் சூரிய ஒளியை கிரகிக்கும் திறனுக்கும் காரணமான மரபணுக்களை கணிசமாக உதிர்த்துவிட்டு(gene drop) புதிய பூச்சிகளை கவர்ந்து பொறிகளில் பிடித்து அவற்றை செரித்து சத்துக்களாக எடுத்துக் கொள்ள உதவி செய்யும் மரபணுக்களை இவை மெல்ல மெல்ல காலபோக்கில் பெற்றிருக்கின்றன என்கிறது ஆய்வு முடிவுகள்.

இவ்வாறாகத்தான் உலகின் சாதாரண,  சாதுவான தாவரங்கள் மிகச்சிறந்த வேட்டைக்கார தாவரங்களாகி விட்டிருக்கின்றன. இந்த ஊனுண்ணித் தாவரங்களின் சாமார்த்தியங்களும் தகவமைப்புக்களும் தாவரங்களின் அதிசயங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

சுமார் 16 நீண்ட வருடங்கள் இந்த தாவரங்கள் குறித்தான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த டார்வின் சில தாவரங்களின் இலைகள் பிரத்யேகமாக பூச்சிகளை பிடிக்கும் பொறிகளைப்போல உருமாற்றம் கொண்டு அவற்றை    பிடித்து செரித்து சத்துக்களை உறிஞ்சி கொள்ளுவதையும் நிரூபித்தார்.

 டார்வினின் இந்தத்தாவரங்கள்  குறித்த விளக்கங்களை கொண்ட 1875ல் வெளியான ’’ஊனுண்ணித் தாவரங்கள்’’ என்னும் நூலும்,(Insectivorous Plants,) 1880 ல் வெளியான ’’தாவரங்களின் அசைதலின் ஆற்றல்’’ (The Power of Movement in Plants) என்னும் மற்றுமோர் நூலும் ஊனுண்ணும் தாவரங்கள் குறித்த பெரும்பாலான புதிர்கள், கேள்விகள், சந்தேகங்கள் அனைத்துக்கும் பதிலளித்திருந்தது 

டார்வினின் இந்த கண்டுபிடிப்புகள் சாதாரண மனிதர்களுக்கு பெரும் ஆர்வமூட்டியது. தாவரவியல், பூச்சியியல், வேதியியல் உள்ளிட்ட பல்துறை விஞ்ஞானிகள் தங்கள் கவனத்தை ஊனுண்ணித் தாவரங்களில் குவித்தார்கள்  

அவர்களின் முயற்சியாலும் தேடல்களினாலும் பலவகைப்பட்ட ஊனுண்ணித்தாவரங்கள் கண்டறியப்பட்டன. சில தாவரங்கள் குடுவைகளாக மாறிய இலைகளில் நொதிகளை நிரப்பி வைத்து அதில் பூச்சிகளை பிடித்தன.  சில ஒட்டும் தன்மையுள்ள இலைகளை கொண்டு அதில் பூச்சிகளை ஒட்டவைத்து  கொன்று உண்டன. இன்னும் சில பூச்சிகளை கவரும் நறுமணமுள்ள பனித்துளி போன்ற சுரப்பி நீர்ச் சொட்டுக்களால் பூச்சிகளை ஈர்த்து கொன்று தின்றன. நீருக்கடியிலும் கொன்று தின்னும் தாவரங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

வீனஸ் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது தாவரவியலாளர் ஜான் எல்லிஸ் (John Ellis) அதன் ஊனுண்ணுதல் குறித்து விவரித்து லின்னேயஸுக்கு கடிதம் எழுதினார்  அப்போது லின்னேயஸ் உலக புகழ் பெற்றிருந்த தாவரவியலாளர். தாவர வகைப்பாட்டியலின் தந்தையும் தீவிர இறையியலாளருமான லின்னேயஸினால் ஊனுண்ணும் தாவரங்கள் இருப்பதை நம்ப முடியவில்லை.

லின்னேயஸ் அப்படி  இறையை பிடித்துண்ணும் தாவரங்கள் இருப்பதை அடியோடு மறுத்தார். அது இயற்கையின் விதிகளுக்கு எதிரானது என்றும் அப்படி ஒரு உயிரினம் இயற்கையில் இருக்க வாய்ப்பே இல்லையென்றும் தீர்மானமாக பதில் எழுதினார். அவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னரும் அவர் இத்தாவரங்கள்  பொறிகளை உண்டாக்கி மழையிலிருந்து நனையாமல் இருக்க பூச்சிகளுக்கு அடைக்கலமாக செயல்படுகின்றன இரையாக பிடித்து தின்பதில்லை என்றார்

மேலும் நெஃபெந்தெஸ் போன்ற ஜாடிகளில் நொதிகளை கொண்டு பூச்சிகளை செரித்துண்ணும் தாவரங்கள் உண்மையில் உண்ணவில்லை அவற்றில் பூச்சிகளுக்கு அருந்த நீரளிக்கின்றன என்றார் அவர்.

இன்றைய நாள் வரையிலுமே இது தொடர்பான ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன வயிறு, இரைப்பை போன்ற பாகங்கள் இல்லாத தாவரங்கள் எவ்வாறு பூச்சி மற்றும் தவளை, எலி போன்ற சிறு விலங்குகளை செரித்து, சத்துக்களை முழுத்தாவர பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கின்றன என்பது இன்னும் சரியாக விளக்கப்படாத புதிராகவே இருக்கிறது.

Drosera  போன்ற இரையை ஒட்ட வைத்து பின்னர் சத்துக்களை எடுத்துக்கொள்ளும் ஊனுண்ணிகளிலிருந்து வீனஸ் ஊனுண்ணிகள் பரிணாம வளர்ச்சியில் உருவாகி இருக்கலாம் என்றும்    ஒரு கருத்து இருக்கிறது.      

ஊனுண்ணித்தாவரங்களுக்கு தொல்லுயிர் புதை படிவங்கள் அதிகம் கிடைக்கவில்லை எனவே இவற்றின் தோற்றம் குறித்து முழுமையான தகவல்கள் ஏதும் இல்லை என்று சொல்லும் ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழக  உயிரியற்பியலாளர்   Rainer Hedrich  2021ல் ஊனுண்ணுதலின் தோற்றம் என்னும் கட்டுரையில் (the origins of carnivory ) ஊணுன்னும் இயல்புக்கான மரபணு எது?  அது எப்போது தாவரங்களுக்குள் புகுந்தது? என்னும் ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது என்கிறார்.

வீனஸ் பொறித் தாவரம்

ஊனுண்ணித்தாவரங்களின் பல வகைகள் இருப்பினும் உலகெங்கிலும் பலருக்கு தெரிந்ததும் பலர் வீடுகளில் வளர்க்க விரும்புவதும் வீனஸ் ஃப்ளை ட்ராப் என்னும் வீனஸ் பொறி தாவரம்

டார்வினுக்கு இவற்றின் மீது தனி பிரியம் இருந்தது அவர் தனது நூலில் ’’வீனஸ் தாவரங்கள் உலகின் மிக அற்புதமான தாவரங்களில் ஒன்று’’ என குறிப்பிட்டிருக்கிறார். 

1759ல் வடக்கு கரோலினா கவர்னரான, ஆர்தர் (Arthur Dobbs) தாவரவியலாளர்  பீட்டர் (Peter Collinson) க்கு எழுதிய கடிதமொன்றில்:

“We have a kind of Catch Fly sensitive which closes upon anything that touches it, it grows in the Latitude 34 but not 35° – I will try to save the seed here.” என்று எழுதி இருந்தார்.

பீட்டர்  பிலடெல்ஃபியா இயற்கையியலாளர் ஜான் (John Bartram) என்பவருக்கு இந்த புதிய கண்டுபிடிப்பை எழுதினார். பார்ட்ரம்மின் மகன் வில்லியம் பார்ட்ரம் வடக்கு கரொலினாவிற்கு சென்று தன் தந்தைக்காக வீனஸ் தாவரங்களை சேகரித்தார்

வில்லியம் அனுப்பி வைத்த உலர் தாவரங்களை ஜான் பார்ட்ரம் லின்னேயஸுக்கும் பீட்டர் கோலின்சனுக்கும் அனுப்பினார்   யாராலும் யாருக்கும் உயிருடன் வீனஸ் தாவரங்களை  அனுப்ப முடியவில்லை

1763ல்  ஆர்தர் நண்பருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவை தாவர உலகத்தின் அற்புதங்களில் ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார். இவையே வீனஸ் தாவரங்கள்  குறித்த முதல் எழுத்து பூர்வமான ஆவணம்

பெயர்கள்

வீனஸ் ஃப்ளை ட்ராப் என்னும் பெயர் முதன் முதலில் 1768ல் ஒரு லண்டன் பத்திரிக்கையில் அச்சில் வந்தது. ஒரு புதிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது-“A New Sensitive Plant Discovered.”எனும் தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் இப்பெயர் வெளியாகி இருந்தது   1793 ல் உயிரியற்பியலாளர் வில்லியம் பார்ட்ரம் இவை துடிப்பான தாவரங்கள் கவனக்குறைவான உயிரினங்கள் இவற்றிற்கு இரையாகின்றன என்று குறிப்பிட்டிருந்தார்.  

வட அமெரிக்காவில் இருந்து பல இயற்கையான வீனஸ் தாவரங்களையும் அவற்றின் விதைகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பிய பிரிடிஷ் இயற்கையியலாளர் ஜான் எல்லிஸ் (John Ellis) இதற்கு 1768 ல் Dionaea muscipula என்று  அறிவியல் பெயரிட்டார்.  லண்டன் சஞ்சிகை ஒன்றில் எல்லிஸ் இத்தாவரத்துக்கு பெயர் வைக்க தான் பட்ட சிரமங்களை எழுதி இருந்தார். Dionaea muscipula என்னும் இப்பெயரை  ஆங்கிலத்தில் Venus flytrap அல்லது Venus mousetrap, என்று இருவிதங்களில் மொழிபெயர்க்கலாமென்றாலும் தனக்கு  flytrap என்னும் பெயரே பிடித்தமானது என்றும்  அதில் குறிப்பிட்டிருந்தார்.

பூச்சிகளை கவர்ந்திழுக்கும் இத்தாவரத்தின் பொதுவான வழங்கு பெயரான வீனஸ் என்பது காதல், காமம், வளமை மற்றும் அழகின் ரோமானிய  தெய்வமான வீனஸின் பெயரால் வைக்கப்பட்டது.  இதன் அறிவியல் பெயரின் Dionaea என்பதும் Dione ன் மகளான கிரேக்க தெய்வமான Aphrodite ஐ குறிக்கிறது, இதன் சிற்றினப்பெயரான muscipula,   இதன் இரை பிடிக்கும் செயலை குறிக்கும் விதமாக  எலிப்பொறி என்று பொருள் படுகிறது (mus (“mouse”) decipula (“trap”),  

வீனஸ் தாவரங்களை குறித்து ஆண் ஆய்வாளர்கள் மத்தியில்,அக்காலத்தில் கிண்டலான கருத்து பரிமாற்றங்களும் நடந்தன. வீனஸ் தாவரப் பொறிகள் பெண் இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்பதாக கருதி ஒரு வேடிக்கையான பெயரிட்டு அதை  “Tipitiwichit  என்று குறிப்பிட்டு தங்களுக்குள் கடிதம் எழுதிக்கொண்டனர். 

1962 ல்,பார்ட்ரம்  நண்பரான கோலின்சனுக்கு எழுதிய கடிதத்திலும் கோலின்சன் ஆர்தருக்கு 1762ல் எழுதிய கடிதங்களிலும் இப்பெயர் வேடிக்கையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது இந்த பெயரை  பார்ட்ரம் வைத்திருக்கலாமென்றும் யூகிக்கப்படுகிறது. 

தாவரவியல்

இயற்கையாக இவை அமெரிக்காவில் வடக்கு மற்றும் தெற்கு கரோலினாவில் மட்டுமே வளர்கின்றன. வடக்கு கரோலினாவின்  100 மைல் சுற்றளவில் இருக்கும் சதுப்பு நிலங்களில் இவை இயற்கையாக அடர்ந்து வளர்கின்றன

ட்ரொசிரேசி குடும்பத்தை சேர்ந்த வீனஸ் தாவரம் பொதுவாக 6-7 இன்ச் சுற்றளவு கொண்டிருக்கும். 5 அல்லது 6 தண்டுகளும் அவற்றில் பொறிகளாக உருமாற்றம் கொண்டிருக்கும் இலைகளும் கொண்டிருக்கும். ஒவ்வொரு இலைப்பொறியும் ஒரு இன்ச் அளவில் இருக்கும். சாதாரணமாக பொறிகள் விரல் நகங்களின் அளவில் இருக்கும். வீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கப்படும் வீனஸ் செடிகள் இயற்கையான செடிகளை காட்டிலும் சிறியவையாக இருக்கும். மலர்த்தண்டு தாவரத்திலிருந்து சுமார் 1 அடி உயரத்தில் மலர்களை தாங்கி நிற்கும்.வீனஸ் தாவரம் 4 ஆண்டுளில் மலரளிக்கத்துவங்கும்.

இவை பல்லாண்டு தாவரங்கள், வருடா வருடம் மலர்ந்து கனியளிக்கும் இவற்றின் மலர்களின் வெண்ணிற இதழ்களில் பசுமையான நரம்புகள் காணப்படும்

பூச்சிகளால்  மகரந்த சேர்க்கையும் பின்னர்  கருவுறுதலும் நிகழ்ந்து 4 லிருந்து 6 வாரங்களுக்குள் சிறிய பளபளப்பான நீர்த்துளி வடிவ கருப்பு விதைகள்  சிதறி புதிய தாவரங்கள் அதிலிருந்து முளைத்து வளரும். வீனஸ் தாவரங்கள் அடிக்கிழங்குகளிருந்தும் புதிய தாவரங்களை உருவாக்கும். 

மகரந்த சேர்க்கை

நூற்றுக்கணக்கான பூச்சி இனங்கள் வீனஸ் தாவரங்களின் மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டிருக்கின்றன. அவற்றில் பச்சை பூச்சியான Augochlorella gratiosa, வண்டினமான Trichodes apivorus மற்றும் நீள் மூக்கு வண்டினமான  Typocerus sinuatus ஆகியவை மூன்று முக்கிய இனங்கள். 

பூச்சிகளை வேறுபடுத்துதல்

இவற்றின் புத்திசாலித்தனமான உடல் அமைப்பு தாவரவியலாளர்களின் ஆச்சரியத்துக்கு உரியதாக பல நூற்றாண்டுகளாக இருக்கிறது மலர்க்காம்பு மிக நீண்டு தாவரத்தின் உடலுக்கு மேலே மலர்களை தோற்றுவிப்பதால் மகரந்த சேர்க்கை செய்பவரும் பூச்சிகள் பொறிகளில் அகப்படாமல் மகரந்த சேர்க்கை செய்துவிட்டு மலருக்கு மலர் தாவிச்செல்கின்றன

இரையை கவருவதற்கும் மகரந்த சேர்கைக்கான பூச்சிகளை கவரவும் இவை வேறுபட்ட வேதிப்பொருட்களை சுரப்பதும் மிக பெரிய புதிராக இருக்கிறது. எப்படி இவை இரையையும் மகரந்த சேர்க்கை செய்ய வரும் பூச்சிகளையும் வேறுபடுத்துகின்றன என்பதையும் இன்னும் பலநாடுகளின் நடைபெற்ற நடைபெறும் ஆராய்ச்சிகளின் மூலமும் கண்டறிய முடியவில்லை

எவ்வகையான் மலரமுதை (Nectar) இவை சுரக்கின்றன இவற்றை மகரந்த சேர்க்கை செய்யவரும் பூச்சி இனங்களுக்கும் இவற்றிற்குமான தொடர்பு ஆகியவற்றை குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன 

இரையை பிடித்தல்

வீனஸ் தாவரங்களின் பொறிகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. இரை தேவைப்படும் சமயங்களில் காற்றில் ஆவியாகி கலந்து மணம் பரப்பும் சில வேதிப்பொருட்களை இந்த தாவரம் சுரந்து பூச்சிகளைக் கவர்ந்து அவற்றை அருகில் வரவழைத்து பொறியில் பிடித்து உண்ணுகின்றன. 

சில வீனஸ் தாவரங்கள் நறுமணமும் சுவையும் மிக்க வேதிப்பொருட்களோடு செந்நிற நிறமிகளையும் சுரந்து பூச்சிகளை கவருகின்றன

இவற்றின் பொறிகளின் உட்புறம் மயிரிழைகள் போன்ற   கூர்மையான நீட்சிகள் காணப்படும்.   இந்த உணர் நீட்சிகள் வெளிப்புற தொடுகைக்கு   உடன் எதிர்வினை ஆற்றும்  thigmonasty எனப்படும் ஒரு செயலினால் இரைகளின் உடல் பட்டதும் உடனே வெகு விரைவாக மூடிக்கொண்டு இரையை தப்ப முடியாமல் இறுக்கிப் பிடித்துக்கொள்கின்றன.

 ஊசி போன்ற கூரிய இழைகளில் இரையின் முதல் தொடுகைக்குபின்னர்  பொறிகள் துடிப்புடன் காத்திருக்கின்றன இரண்டாம் தொடுகை நிகழ்ந்த மறுகணம் பொறிகள் மூடிக்கொள்கின்றன. இந்த தொடுகைகள் இரண்டும் முதல் 20 வினாடிகளுக்குள் நிகழ்ந்தால் மட்டுமே பொறிகளில் இரை சிக்கிக்கொள்ளும். உள்ளே மாட்டிக்கொண்ட இரை வெளியேறச் செய்யும் முயற்சிகளில் உண்டாகும் தொடரும் தொடுகைகளில் ஐந்தாவது தொடுகையில் பூச்சிகளை செரிக்கும் நொதிகள் பொறிகளில் உருவகின்றன

ஒரு வினாடியில் பத்தில் ஒருபங்கு கால அளவில் பொறிகள் மூடிக்கொள்கின்றன. பெரிய இரைகள் சிக்கிக்கொள்ளுகையில் 20 வினாடிகளில் பொறிகள் மூடிக்கொள்ள முடியாவிட்டால் இரையை பொறிகளை திறந்து இவை விடுவிக்கின்றன  

இரை முழுவதும் செரித்தபின்னர் பொறிகள் மீண்டும் திறந்து அடுத்த இரைக்காக காத்திருக்கும்.·ஒருமுறை இரையை பிடித்து செரித்து சத்துக்களை எடுத்துக் கொண்டால் பின்னர் அடுத்த இரையை பிடிக்க சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் இந்த தாவரங்கள் பொறியில் சிக்கிய இரைகளை முழுவதுமாக செரிக்க 3 அல்லது 4 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன.

பொதுவாக ஒரு தாவரத்தை பூச்சிகள் தொடுகையில் அவற்றால் உண்ணப்படும் ஆபத்தை தெரிவிக்கும் ஜாஸ்மோனிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் சுரந்து தாவரங்கள் தங்களை பூச்சிகள் உண்ணுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள எதிர்வேதிப்பொருட்களை சுரக்கும். பரிணாம வளர்ச்சியில் பூச்சிகள் தாவரங்களை உண்ணுவதற்கு மாறாக பூச்சிகளை தாவரங்கள் உண்ண வேண்டி வந்தபோது இதே வேதிப்பொருள் சுரப்பை மாற்றி வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என்கிறது இவற்றில் நடைபெற்ற பல ஆராய்ச்சிகளின் முடிவுகள். 

டார்வின் பொறிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகள் மிகச்சிறிய பூச்சிகளை வீனஸ் தாவரம் விரும்பாததால் அவை வெளியேறிச் செல்ல வசதியாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கருதினார். ஆனால் பிற்பாடு இக்கருத்து தவறென்று நிரூபிக்கப்பட்டது. வீனஸ் தாவரம் மிக சிறிய உயிர்களையும் இரையாக்குகிறது.

 வீனஸ் தாவரங்களின் பொறிகள் பலமுறை இரையை பிடித்தபின்னரே காய்ந்து கீழே விழுகின்றன. மீண்டும் புதிய பொறிகளை அடிமட்ட கிழங்கிலிருந்து இவை உருவாக்கிக்கொள்ளும். இவற்றின் வாழ்நாட்களை மிகச்சரியாக கணிக்க முடியவில்லை எனினும் வீனஸ் தாவரங்களின் வாழும் காலம் 20 வருடங்களுக்கும் மேல் என்றே கருதப்படுகிறது. பிற தாவரங்களை போலவெ வீனஸ் தாவரமும் சிறிய அளவில் ஒளிச்சேர்க்கை செய்தும் உணவை தயாரிக்கின்றது. மேலதிகமான சத்துக்களை இரையை பிடித்து உண்ணுவதால் பெறுகிறது

பல ஊனுண்ணித்தாவரங்கள் பிரத்யேக இரைகளை தேர்வு செய்கின்றன. வீனஸ் ஃப்ளை ட்ராப், வண்டுகள் சிலந்திகள் மற்றும் மெல்லுடலிகளையே  அதிகம் இரையாக்குகின்றது.  வீனஸ் தாவரத்தின் ஊன் உணவில் 33%  எறும்புகள், 30% சிலந்திகள், 10% வண்டுகள் மற்றும் 10% வெட்டுக்கிளிகள் இருக்கின்றன. இவற்றின் ’மெனு’வில்  5% மட்டுமெ பறக்கும் பூச்சிகள் உள்ளன

இரையின் அளவு

இலைப்பொறிகளின் அளவை காட்டிலும் சிறியதாக இருக்கும், பொறிகளின்  உள்ளே மாட்டிக் கொள்ளும் அளவிலான இரைகளையே இவை தேர்வு செய்கின்றன.ஒருபோதும் பொறிகளைக்காட்டிலும் பெரிதான இரைகளை இவை முயல்வதே இல்லை.  

அலங்கார செடிகளாக வீனஸ்

இவை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே பல ஆர்வலர்கள் இவற்றை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.  தாமஸ் ஜெஃப்ஃபெர்ஸன் (Thomas Jefferson)  பாரீஸில் 1786ல் தங்கி இருந்தபோது வீனஸ் தாவரங்களை சேகரித்தார். மேலும் இவற்றின் விதைகளையும் கடல்வழி அனுப்ப ஏற்பாடுகளை  செய்துவிட்டே பாரீஸிலிருந்து புறப்பட்டார், தாமஸ் வீனஸை ’’சென்சிடிவ் தாவரம்’’ என்று கடிதங்களில் குறிப்பிட்டார்.  தாவரங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த பச்சை கட்டைவிரல்காரர் என்று அழைக்கப்பட்ட மாமன்னர் நெப்போலியனின் மனைவி ஜோஸபைன் வீனஸ் தாவரங்களை தனது  வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தார் 

  தொடர்ந்து நடைபெற்ற தாவர பெருக்க சோதனைகளில் பலவிதமான வீனஸ் தாவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன அவற்றில் மாபெரும் பொறிகளை கொண்டவைகளும், கூடுதல் பொறிகளை கொண்டவைகளும் அடங்கும்.  அவ்வாறான பிரபல  வகைகளுக்கு Sawtooth, Big Mouth மற்றும் Red Piranha போன்ற பெயர்கள் இடப் பட்டிருக்கின்றன.

புதிய வீனஸ் வகையான ஜஸ்டினா டேவிஸின்  (Justina Davis) பெயருக்கு பின்னால் சுவாரஸ்யமான ஒரு கதை இருக்கிறது.வடக்கு கரோலினாவின் கவர்னர் ஒருவர் தனது 73வது வயதில் இரண்டாவது மனைவியாக ஜஸ்டினா டேவிஸ் என்னும் 15 வயது பெண்னை மணம் புரிந்துகொண்டார் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன

ஜஸ்டினாவின் இளமையை கருத்தில்கொண்டு பொறிகளின் உட்புறம் ஒருபோதும் சிவப்புநிறம் கொண்டிராத, முழுத்தாவரமும் எப்போதும் பசுமை நிறைந்திருக்கும் வகைக்கு ஜஸ்டினா டேவிஸ் என பெயரிடப்பட்டது. இது முழு முதிர்ச்சி அடைந்த பின்னும் இளமையாவே தோற்றமளிக்கும் வகை

இவை சதுப்பு நிலங்களில் வளருபவை என்றாலும் மிக அதிகமாக நீர் தேங்கி இருக்கையில் வீனஸ் தாவரங்களின்  வேர்கள் அழுகி விடும், தொட்டிகளிலும், குடுவைத்தோட்டங்களிலும்(Terrarium)  இவற்றை வளர்க்கலாம். எதில் வளர்த்தாலும் மண்ணில் அமிலச்சத்து இருப்பது அவசியம்

இவை நச்சற்றவை எனவே வீடுகளில் வளர்க்கலாம், வீடுகளுக்கு வெளியில் வளர்கையில் இவை தனது இரையை தானே தேடிக்கொள்கின்றன. வீடுகளின் உள்ளே அலங்காரத் தாவரங்களாக வளர்க்கப்படுகையில் பிற தாவரங்களுக்கு நீரூற்றுவதைப் போல, ஒளி கிடைக்க வசதி செய்வதைப்போல வீனஸ் தாவரங்களுக்கு பூச்சிகள் இரையாக கிடைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.வீடுகளில் வளர்க்கப்படும் வீனஸ் தாவரங்களுக்கு,  மாதமொரு முறையாவது  பூச்சிகளை அளிக்கவேண்டும் இல்லாவிட்டால் அவை மெல்ல அழிந்துவிடும்

பூச்சிகளல்லாத பிற இறைச்சி இரைகள் வீனஸ் தாவரங்களை கொன்று விடும். மேலும் இறந்த பூச்சிகளை விட இவை உயிருள்ள இரைகளையே விரும்பும். 

 இவற்றின் குளிர்கால உறக்க நிலை சுமார் 10 மாதங்களுக்கு தொடரும்,  அலங்காரச் செடிகளாக இவற்றை வளர்ப்பவர்கள் மலர்கள் உருவானதும் மலர்களை அகற்றி விடலாம்.  இனப்பெருக்கத்துக்கு இத்தாவரம் செலவழிக்கும் ஆற்றலை இதன் மூலம் சேமிக்கலாம்

கடுங்குளிர் காலத்தில் கருகி மடியும் இவை மீண்டும் துளிர்த்து வளரும் எனவே அவை இறந்து விட்டதாக கருதி அவற்றை பிடுங்க வேண்டியதில்லை

இயற்கையாகவே வளம் குறைந்த நிலப்பகுதிகளில் வாழ்வதால் வீனஸ் தாவரங்களுக்கு அதிக உரம் இடுவதும் அவற்றை  கொல்லும்.

சூரிய ஒளி சுமார் 6 மணி நேரங்களுக்கு இவற்றிற்கு தேவைப்படுகிறது இதற்கும் குறைந்த அல்லது அதிகமான கால அளவில்  இருக்கும் ஒளி இவற்றின் வளர்ச்சியை பாதித்து தாவரத்தின் இலைகளை உதிரச்செய்துவிடும்.

இவை குளிர்ந்த காலநிலையில் நன்கு வளரும் ஆனால் அதிக குளிரும் அதிக வெப்பமும் இவற்றை அழித்துவிடும்.

அமேஸான் வீனஸ் தாவாங்களை ஆன்லைனில் விற்பனை செய்கிறது.திசு வளர்ப்பில் உருவாக்கப்பட்ட  ஒரு வீனஸ் தாவரம் 5 டாலர்களுக்கு கிடைக்கிறது.

பாதுகாக்க வேண்டிய இனம்

அரிய வகை தாவரங்களின் அழிவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 1976ல் தெற்கு கரோலினா பாரம்பரிய அறக்கட்டளை (The South Carolina Heritage Trust) உருவாக்கப்பட்டது. தெற்கு கரோலினா இயற்கை வளங்களுக்கான் துறை (South Carolina Department of Natural Resources) அதன் கட்டுப்பாட்டில்  83,000  ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை கொண்டிருக்கிறது. அந்நிலத்தில் சுமார் 3,000 இயல் தாவரங்கள் இருக்கின்றன அவற்றில் வீனஸ் தாவரங்கள் உள்ளிட்ட  700 வகைகள்  மிக மிக அரியவை. 2005ல் வீனஸ் தாவரம் வடக்கு கரோலினாவின் மாநில மலராக அடையாளப்படுத்தப்பட்டது.  

மரபணு மாற்றங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட அலங்கார வீனஸ் தாவரங்கள் பசுங்குடில்களில் வளர்க்கப்பட்டு வீடுகளில் வளருகின்றன   இவற்றில் ‘Akai Ryu மற்றும் ‘South West Giant’ ஆகிய வகைகள் ராயல் தோட்டக்கலை தங்க விருதை பெற்றுள்ளன

பசுங்குடில்களில் இவை சாகுபடி செய்யப்படுகின்றன எனினும் இயற்கையான வாழிடங்களில் 1979 லிருந்தவற்றின் எண்ணிக்கையில் தற்போது 7 சதவீத தாவரங்கள் மட்டுமே இருக்கின்றன 

வாழிட அழிப்பும் வீனஸ் தாவரங்களின் அழிவுக்கு காரணமாயிருக்கிறது.சமதளமான நிலப்பரப்பும் அமிலத்தன்மை உள்ள சதுப்பு மண்ணும் நல்ல ஒளியும் இருக்கும் இடங்களில் தான் இவை செழித்து  வளர்கின்றன சூழல் மாசு மற்றும் விவசாய நிலங்களாக இயற்கை வாழிடங்கள் மாற்றபடுவது ஆகியவற்றால் வீனஸ் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கரோலினாவின் மக்கள் தொகைப்பெருக்கத்தினால் சாலை உருவாக்கமும் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதுமாக இவற்றின் வாழிடங்கள் குறைந்து கொண்டே வருகின்றது.வடக்கு கரோலினாவில் வீனஸ் தாவரங்கள் சிறப்பு கவனம் கோரும் தாவரங்கள் என்னும் பிரிவில் வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன

வீனஸ் செடி அழியும் தாவரங்களில் ஒன்றாகவும் பாதுகாக்கபட வேண்டிய இனமாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தினால்  சிவப்பு பட்டியலிட பட்டிருக்கிறது.

இந்த தாவரங்களின் அழிவிற்கு இவற்றை சட்டவிரோதமாக சேகரிப்பதும் முக்கிய காரணமாயிருக்கிறது. பொது இடங்களில் இயற்கையாக வளரும் வீனஸ் தாவரங்களை  சேகரிப்பது சட்டப்படி குற்றமென வடக்கு கரோலினாவில் 1958லிருந்தே அறிவிக்கப்பட்டிருக்கிறது . பசுங்குடில்களில்  ஆயிரக்கணக்கான வீனஸ் தாவரங்கள் வளர்க்கப்பட்டு சந்தை படுத்தப்பட்டிருக்கிறது. 

எனினும் 2016 நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை பசுங்குடில்களில் வளர்க்கப்படும் வீனஸ் தாவரங்களை காட்டிலும் இயற்கையான வாழிடங்களில் வளரும் தாவரங்களுக்கான தேவையே அதிகம் என்கிறது. வடக்கு கரோலினாவில் இப்போது வீனஸ் தாவரங்களை சட்டவிரோதமாக சேகரிப்பது கடும் தண்டனை குரிய பெருங்குற்றமாக கருதப்படுகிறது (felony). 

2014லிருந்து அமெரிக்காவில் வீனஸ் செடிகளை  அனுமதியின்றி எடுப்பது 25 மாத சிறைத்தண்டனைக்கான குற்றமாக கருதப்படுகிறது. . கடத்தல்காரர்கள் இயற்கையான வாழிடங்களில் இருப்பவற்றில் மிகப்பெரிய தாவரங்களையே தேர்வு செய்து எடுக்கிறார்கள். எனவே அவற்றிலிருக்கும் ஏராளமான விதைகளும், அவ்விதைகளிலிருந்து முளைக்கவிருக்கும் நூற்றுக்கணக்கான அடுத்த சந்ததி தாவரங்களுக்கும் சேர்த்தே கூடுதல் சிறைத்தண்டனை அளிக்கப்படுகிறது

உள்ளங்கையிலும் சட்டை பாக்கெட்டுகளிலும் கூட பல வீனஸ் தாவரங்களை மறைத்து வைத்துக் கொள்ள முடியும் என்பதால் இவற்றின் கள்ளத்தனமான சேகரிப்பை கண்டுபிடித்து தடை செய்வது மிக கடினமாக இருக்கிறது.

இவற்றை வாங்குபவர்களுக்கு அவை இயற்கையான வாழிடங்களிலிருந்து திருடிகொண்டு வரப்பட்டதா அல்லது பசுங்குடில்களில் வளர்க்கப்பட்டதா என்று தெரியாததால் அவை எளிதில் சந்தைப்படுத்தப் படுகின்றன’

சர்வதேச அளவிலான வீனஸ் தாவரக் கடத்தல்களும் நடைபெறுகின்றன. பால்டிமோர்- வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பெரணிகள் என்னும் பெயரில் இருந்த பெட்டிகள் சோதனையிடப்பட்ட போது அவற்றில் 9000 வீனஸ் தாவரங்கள் இருந்தன.

இவை பொதுவாக மரங்களின் அடுக்குகளுக்கடியில் அவ்வப்போது காட்டு நெருப்பு உண்டாகும் இடங்களில் செழித்துவளர்கின்றன. குறிப்பாக விதைகள் முளைக்க நெருப்பு எரிந்த பின்னர் இருக்கும் சாம்பல் மண் மிகவும் அவசியமாக இருக்கிறது. நெருப்பின் வெப்பம் இவற்றின் வளர்ச்சிக்கு நேரடியாக தேவைப்படுகிறது. காட்டு நெருப்பு மனிதர்களுக்கு ஆபத்தேற்படுத்தும் என்பதால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படுவதும் இவற்றின் அழிவுக்கு காரணமாயிருக்கிறது.  

இவை கடல்மட்டத்திலிருந்து 2-4மீ உயரத்தில் இருப்பதால் புயல் மழை போன்றவற்றினால் கடல்மட்டம உயருகையில் இவை அழிகின்றன.

சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் வீனஸ் தாவரங்களின் இயற்கை வாழிடங்களை GPS  கருவி மூலம் கணக்கெடுத்தது. 1970களிலிருந்து நடைபெற்ற கணக்கெடுப்புக்களோடு ஒப்பிட்டதில் சுமார் 70 சதவீத வாழிடங்கள் இப்போது அழிந்துவிட்டிருப்பதாக  முடிவுகள் தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் அவற்களது வாழ்வில் ஈடுபட்டிருந்த அனைத்து ஆய்வுகளிலும் மனம் உடையும் ஒரு ஆய்வு இதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்

இந்த நிலைமை தொடர்ந்தால்  வீனஸ் தாவரம் புராணங்களிலும் காப்பியங்களிலும் தொன்மங்களிலும் இடம்பெற்றிருந்த ஒரு  தாவரமாக மாறிவிடும் சாத்தியமும் இருக்கிறது.

வீனஸ் தாவரத்தின் சாறு கார்னிவோரா  (Carnivora) என்னும் பெயரில்  மூலிகையாக சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளில் எய்ட்ஸ் மற்றும் சருமப்புற்று நோய்களுக்கான சிகிச்சையில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.ஆனால் இவை அந்நோயை குணமாக்குவதற்கான அறிவியல் ஆதாரங்கள் இதுவரை இல்லை.

இருக்கும் இடத்திலிருந்தே தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், தொடர்ந்து உயிர்வாழவும் தாவரங்கள் பலவகையான, மிக சாமர்த்தியமான தகவமைப்புகளை கொண்டிருக்கின்றன. மற்றொரு  உதாரணமாக புகையிலை செடிகளின்  இலைகளை உண்ணும் கம்பளிப்பூச்சிகளுக்கு நிகோடின் தசைபலவீனத்தை உடனடியாக உருவாக்குவதை சொல்லலாம்.  தசை பலவீனமடைவதால் அவை புகையிலை உண்ணுதலை தொடர்வதில்லை

இது போன்ற தாவரங்களின் சிறப்பு தகவமைப்புகள் ஆச்சர்ய மூட்டுபவை. ஒரு தாவரத்தின்  95% இலைகளை நீக்கிவிட்டாலும் அவை மீதமிருக்கும் இலைகளைக் கொண்டே உணவு தயாரித்து, உயிர்வாழ்ந்து இனப்பெருக்கமும் செய்யும். நம்மைக் காட்டிலும் சூழல் தகவமைப்பு கொண்டவை அவை. தாவரங்கள் மனிதர்களைக் காட்டிலும்  சூழலை மிக நுண்மையாக கவனித்து அவற்றின் பிரச்சினைகளுக்கு எப்படியும் தீர்வை கண்டுபிடித்து விடுகின்றன. 

தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதா? மூளை என்னும் அமைப்பு இருக்கிறதா? நரம்பு மண்டலம் இருக்கிறதா? எப்படி அவற்றை உயிருள்ளவை என சொல்ல முடியும் போன்ற கேள்விகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. மனிதர்களின் மூளை, நரம்பு மண்டலம் இவற்றுடன் மட்டும் தாவரங்களை ஒப்பிடாமல்   இப்போது பிரபலமாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்  ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதிலும் மூளை இல்லை நரம்பு மண்டலம் இல்லை ஆனால் ஒரு வலைப்பின்னல் போல அபாரமாக செயல்படும் அவற்றின் சாமார்த்தியங்களை நாம் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறோம், அதுபோலத்தான் இந்த தாவரங்களின் நுண்ணறிவும்,  

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து தாவரங்கள் கொண்டிருக்கும் அறிவைத்தான் இந்த நூற்றாண்டில் மனிதர்கள் மிகத்தாமதமாக கண்டறிந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். தாவரங்களும் விலங்குகளும்  நம்மைக்காட்டிலும் கீழ்நிலை உயிரிகள் அவற்றால் நம்மைப்போல சிந்திக்கும் தரமற்றவை என்று இன்னும் நம்புபவர்கள் டேவிட் அட்டன்பரோவின் BBC க்கான இந்த 

காணொளியை காணலாம். இதில்   வீனஸ் தாவரங்களின் இரை பிடிக்கும் பொறியமைப்பும், செயல்பாடுகளும்  துல்லியமாக காண்பிக்கப்படுகிறது.

  • ஏறுகொடியொன்று பற்றுக்கம்பிசுருள்களைக்கொண்டு ஆதரவாக  அருகிலிருக்கும் கம்பியை பற்றிக்கொண்டு மேலேறி வளர்வதை காட்டும் இந்த https://youtu.be/5NvlkEqMtVY காணொளியையும் பார்க்கலாம்.

1. https://logamadevi.in/2045

வாழைகளின் வகைகள்

 

வாழை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம் என தாவரவியலாளர்களால் கருதப்படுகிறது. உலகின் முதல் உண்ணும் பழமும் வாழைதான் என கருதப்படுகிறது. ஆதாம் ஏவாள் உண்டதும் வாழைதான் என்போரும் உண்டு.

தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்ட வாழை அரேபியர்களால் உலகின் பல பாகங்களுக்கு  கி மு 327 ல் அறிமுகம் செய்யப்பட்டது

வணிக ரீதியிலான வாழை சாகுபடி 1834 ல் தொடங்கியது.  1889களில் உலகெங்கும் மிக பரவலாக வாழை சாகுபடி ஆனது  

அலெக்ஸாண்டர் இந்திய படையெடுப்பின் போது கிடைத்த கதலிப்பழங்களின் சுவையை மிக விரும்பி இந்தியாவிலிருந்து வாழையை மத்தியகிழக்கு நாடுகளுக்கு அறிமுகம் செய்தார் அங்குதான் பொன்னிற பருத்த விரல்களை போன்ற வாழைப்பழங்களுக்கு  ’பனான்’ (banan)  என்னும் விரல்களை குறிக்கும் அரபிச்சொல் பெயராக வைக்கப்பட்டது

 பின்னர் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரிபியன் பகுதிகளுக்கு 15ம் நூற்றாண்டிலும் அங்கிருந்து பெர்முடாவுக்கும் வாழை அறிமுகமானது. பெர்முடாவிலிருந்து 17, 18ம் நூற்றாண்டுகளில் வாழை பெருமளவில் இங்கிலாந்துக்கு கடல்வழி அனுப்பப்பட்டது.

 1835 ல் இங்கிலாந்தின் பிரபல தோட்டக்காரர் ஜோஸஃப் பாக்ஸ்டன் ஒரு புதிய மஞ்சள் பழங்களை அளிக்கும் வாழை வகையை உருவாக்கினார். அவரது எஜமானர் வில்லியம் கேவெண்டிஷ்  பெயரிலேயே அதற்கு  Musa cavendishii என்று பெயரிடப்பட்டது.

வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நன்கு  பழுத்த வாழைப்பழங்களில் வைட்டமின் B6 ,C, மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. வாழைப்பழங்களும் வாழைத்தண்டும் வாழைப்பூக்களும் ஏராளமான மருத்துவ குணங்களும் கொண்டிருக்கிறது. வாழை இலையில் உணவுண்ணுவதும் ஆரோக்கியமான வழக்கம்.

ம்யூஸேசி குடும்பத்தை சேர்ந்த வாழையின் உண்ணக்கூடிய பழங்கள் ஆங்கிலத்தில் bananas  என்றும் சமைத்து உண்ணும் வாழைக்காய்கள்  plantains எனவும் குறிப்பிடப்படுகின்றன

இவை மரம் என்று சொல்லப்பட்டாலும் இவற்றின் சதைப்பற்றான தண்டுகள் இலைத்தாள்களின் சுற்றடுக்குகளால் ஆன போலித்தண்டுகள்தான் .

வாழையில் சுமார் 70 சிற்றினங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகளும் உள்ளன.  ஒருவித்திலை தாவர வகையை சேர்ந்த வாழை விரைவில் வளரும் இயல்புடையது.

இதன் கலப்பினங்கள் உயரத்திலும் அளவிலும் பழம் பூ இலை ஆகியவற்றிலும் வேறுபட்டிருக்கும். இவைஅதிக பட்சமாக 15 மீ உயரம் வரை வளரும்.ஓராண்டில் மலர்ந்து பலனளிக்கும்.

 உலகெங்கிலும் விரும்பி உண்ணப்படும் விதைகளற்ற சதைப்பற்றான வாழைப்பழங்களை கொடுக்கும் வாழைமரங்கள் அனைத்துமே  Musa acuminata மற்றும் Musa balbisiana  ஆகிய இரு காட்டு வாழைகளின் கலப்பினம் தான்

சிறப்பு வாழை வகைகள்

  • சீன குட்டை வாழை அல்லது தங்கத்தாமரை வாழை எனப்படும்  Musella lasiocarpa  கடல்மட்டத்துக்கு மேல் 2500 அடி உயரத்தில் வளரும் இவற்றின் போலித்தண்டின் உச்சி பொன்னிறத்தில்  இதழ்களாக விரிந்து தாமரை போலிருக்கும். இவை அலங்கார வாழைகள்  
  • Musa ornata, என்பது மலர் வாழை. இதன் கனிகள் உண்ணத்தகுந்தவையல்ல. அழகிய இளஞ்சிவப்பு மலர்களுக்காக இவை உலகெங்கிலும்  சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. 
  • Musa velutina,  வகை அஸ்ஸாம் மற்றும் கிழக்கு இமாலயப்பகுதிகளில் காணப்படும் மலர்களும் பழத்தோலும் அடர் ரோஜா நிறங்கொண்ட வாழை வகை
  • கேரட் வாழையின் (M×troglodytarum,L) கனிகள்  சிறிதாக  உருளைக்கிழங்கை போல் இருக்கும் இவற்றின் சதை நல்ல ஆரஞ்சு நிறம்  கொண்டிருக்கும். இவற்றில் ஆந்தோசயானின் நிறமிகள் உள்ளதால் பல மருத்துவ பயன்களும்கொண்டது
  • நீல ஜாவா வாழை ஐஸ்கிரீம் போன்ற வெனிலா வாசனைகலந்த  இனிப்புச்சுவை கொண்டிருக்கும். 
  • Musa textilis என்பது நார் வாழை. இந்த வாழை நார் ஆங்கிலத்தில் ’Abacá’  எனப்படுகிறது.  பின்னலாடை தொழிலுக்கேற்ற உறுதியான நாரிழைகளை கொடுக்கும் இந்த வாழை பிலிப்பைன்ஸில்  ஒரு முக்கிய வணிகப்பயிர். இவற்றின் சிறு கனிகள் உண்ணத்தகுந்தவை அல்ல.
  • இலைகளின் அடிப்பகுதியில் மழை நீரை சேர்த்துவைத்து, கடும் கோடையில் பயணிப்பவர்களுக்கு குடிநீர் அளிக்கும் விசிறி வாழை (Ravenala madagascariensis,) மடகாஸ்கரை தாயகமாக கொண்டது
  • உலகின் மிகப்பெரிய வாழையினமான ராட்சஷ வாழை எனப்படும்  Musa ingens,  இந்தோனேசியாவில் காணப்படுகிறது.

இவற்றின் இலைகள் 1மீ அகலம் 16 மீ நீளமும் கொண்டிருக்கும்.தண்டு 50 அடி உயரம் வரை வளரும் உச்சியில் சுமார் 20 நீண்ட இலைகளும் மிகப்பெரிய வாழைத்தாரும் கொண்டிருக்கும் இவையே உலகின் மென்மரங்களில் மிக உயரமானவை. இவற்றின் சுற்றளவு1- 2 மீ இருக்கும். ஒரு பழம் சுமார் 3 லிருந்து 4 கிலோ எடை கொண்டிருக்கும் இதன் மிகப்பெரிய மலரிலிருந்து  லேசான புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை கொண்டிருக்கும் 18லிருந்து 25 செ மீ நீளமிருக்கும்  300 பெரிய பழங்கள் உருவாகும். 

உலகிலேயே அதிக நீளம் கொண்ட இலைக்காம்பு சுமார் 15 மீ நீளம் கொண்டது

1989ல் தாவரவியலாளர்   ஜெஃப் டேனியல்ஸ் (Jeff Daniels), இந்த ராட்சஷ வாழையை இந்தோனேசியாவில் கடல்மட்டதுக்கு 2000 மீ உயரத்தில்  முதன்முதலாக கண்டறிந்தார்

இந்தியாவில் வாழை கலச்சார முக்கியத்துவம் வாய்ந்தது வாழையடி வாழையாக என்னும் பழமொழி தொடர்ந்து வரும் சந்ததிகளைகொண்ட குடும்பத்தை குறிக்கும் முது சொல்லாக இருக்கிறது

பூத்து காய்த்து, கனியளித்து தானழிந்து சந்திகள் வளர வழிசெய்யும் வாழை இந்தியாவில் தெய்வமாகவும் வணங்கப்படுகிறது,. இந்திய  மங்கல நிகழ்வுகளில் வாழை நுழைவுவாயிலை அலங்கரிக்கும்

 இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழை கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது. வாழையின் வேர், இலை, மலர், கனி, காய், தண்டு, நார் என அனைத்தும் உபயோகம் கொண்டதால் கற்பக விருட்சம் என்றும் இதற்கு பெயருண்டு.

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑