சில நாட்கள் முன்பு அம்மாவின் அண்ணனும் எனது தாய் மாமனும்,  சென்ற மாதம் அம்மா காலமாகும் வரை நாங்கள் பார்த்தே இராதவருமாகிய மருதமுத்து மாமன் வீட்டு திருமணத்தில் அம்மாவின் சார்பாக கலந்து கொண்டேன். எனக்கு அம்மாவின் சாயலே இல்லை நான் அப்பாவை கொண்டிருப்பவள் எனினும் அங்கிருந்த பலருக்கு நான் , 55 வருடங்கள் தன் பிறந்த வீட்டையே பார்த்திராத,  வைராக்கியமாக மின்மயானம் சென்ற அம்மாவை நினைவுபடுத்தி இருப்பேன் போலிருக்கிறது.

பலர் வந்து பேசினார்கள் பலர் தொலைவில் இருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் கைகளை  பிடித்துக் கொண்டும், முகத்தை தடவியும் வாஞ்சையுடன் பேசினார்கள். குற்றவுணர்வில் ஒரு சிலர் கண்ணீர் வடித்தார்கள் 

நான் பொதுவாக பொன்நகைகளில் விருப்பமில்லாதவள், எனக்கான அங்கீகாரம் என் தோற்றத்தில் மட்டும் இல்லை என்று நம்புபவள் மேலும் எனக்கு அணிகலன்களில் அத்தனை விருப்பமும் இல்லை. ஆனால் அன்று நான் அங்கு அம்மாவின் சார்பாக சென்றதால் வழக்கத்துக்கு மாறாக நகைகள் அணிந்திருந்தேன் அவற்றையும் பல கண்கள் கணக்கெடுத்துக்கொண்டன.

மாமன் நடுங்கும் விரல்களால் எனக்கு நெற்றாக உலர்ந்துபோன அடுக்கு நீல சங்குமலர்காய்களை கொடுத்தார். உலர்ந்துவாடி இருந்த அக்காய்களுக்குள் விதைமணிகள் புறாக்கண்களைபோல சிறு குழிவுகளில் அமர்ந்திருந்தன. அவற்றில் உயிர் நிறைந்திருந்தது  பளபபளப்பிலேயே தெரிந்தது. அவற்றில் இருந்து புதிய சந்ததிகள் இனி முளைத்து வருமாயிருக்கும்.

இரவு உணவுக்கு முன்னர் மணமக்கள் அலங்காரம் முடிந்து வர அனைவரும் நெடுநேரம் காத்திருந்தோம். என் பின்னாலிருந்த ஒரு அம்மாள் ’’என் கல்யாணத்தப்போ அதிகமா மஞ்சள் தேச்சுகிட்டேன்  அவ்வளவுதான் இப்ப என்னன்னா ஆளே அடையாளம் தெரியாம பூசி மெழுகி பொம்மையாட்டம் பண்றதுக்கு இத்தனை நேரம் ,கொள்ளை காசு’’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்.

சுமார் 2 மணி நேரமானபின்னர்  மணமகள் இளஞ்சிவப்பு உடையில் பார்பி பொம்மைபோல மேடைக்கு வந்தார்,

அதன்பின்னர் அரைமணி நேரம் கழித்து மணமகன் வந்தார், காத்திருந்த இடைவெளியில் என் அருகில் இருந்த  ஆத்தா என்னிடம் ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு அழைப்பு வந்தது, நான் என் அலைபேசியை எடுத்து பேசிவிட்டு அணைத்தேன். என் அலைபேசியின் லாக் ஸ்கிரீனை பார்த்த ஆத்தா அதிலிருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ’’யாரு கண்ணு, மகனா? என்றார் நான் திகைத்து திடுக்கிட கூட சமயம் கொடுக்காமல் மூத்தவனா இளையவனா?  என்றார்

நான் சமாளித்து  பதில் சொல்லமுயற்சிப்பதற்குள்  ‘’பின்னர் எங்கே காட்டு’’ பாப்போம் என்றார் நான் ஒரு நிமிடம் யோசித்தேன் நிச்சயம் நான் அந்த ஸ்கிரீனில் வைத்திருக்கும் நபரை இங்குள்ளோருக்கு , குறிப்பாய் இந்த ஆத்தாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை   எனவே தைரியமாக எடுத்து காட்டினேன்.

ஆத்தா  பார்த்துவிட்டு  ’’ மூத்தவனா, ராமராஜ் வூட்டு கலியாணத்துக்கு வந்தப்போ இத்துணூன்டு கீரைத்தண்டாட்டம் இருந்தான் இப்போ வெள்ளைகாரனாட்டம் இருக்கானே? என்றார். நான் சிரிப்பை மென்று விழுங்கினேன்

அவரே தொடர்ந்து இப்போ என்ன செய்யறான்? என்றார். ’’வெளிநாட்டில் படிக்கறான்’’ என்றேன்.

’’ஆ அதான்  அமெரிக்கா போன பின்ன மீசை வச்சுகிட்டா இருப்பான், , சரி இருக்கட்டும் விடு பையன் நல்ல மூக்கும் முழியுமா இருக்கான் நம்ம சனத்தில் இவனுக்கு பொண்ணே இல்லை கேட்டுக்கோ’’ என்றார்

பொண்ணா இவருக்கா ஏற்கனவே 4 கல்யாணம் பண்ணிகிட்டவராச்சே என்று மனசில் நினைத்துக்கொண்டேன். அமெரிக்கா இல்லை என்று சொல்ல நினைத்து அதை சொல்லவேண்டாம் என் விட்டுவிட்டேன். ஆத்தாவிற்கு வெளிநாடென்றால் அமெரிக்கா அதை ஏன் மாற்றனும்?

ஆத்தா  தொடர்ந்து நினைவுகளில் மூழ்கி முத்தெடுத்து ’’நம்ம ஏரிப்பட்டி பாப்பாத்தி இருக்காளே, உனக்கு நங்கையாதானே,அவங்க  வகையில் ஒருத்தி  அமெரிக்காவில் இருக்கா, என்னமோ பெரிய படிப்பு படிக்கறாளாம், மூக்கும் முழியுமா நல்லத்தான் இருப்பா, நிறந்தான் மட்டு எதுக்கும் சாதகம் வாங்கட்டா ? என்றார்.

நான் ’’இல்லீங்க  ஆத்தா அவன் இன்னும் படிச்சுட்டு இருக்கான் 2 3 வருஷம் போகட்டும்’’ என்றேன் ஆத்தா விட்டால் அப்போதே நிச்சயதார்த்தம் கூட செய்து முடித்திருப்பார்

லாக் ஸ்கிரீனில் இருக்கும் அந்த ஹாலிவுட் நாயகன் பக்கவாட்டில் திரும்பி சிரித்துகொண்டிருக்கும் அந்த புகைப்படத்தை சமீபத்தில்தான் என் அலைபேசியில் தருண்  வைத்து கொடுத்தான், கல்லூரி காலத்திலிருந்து நான் அவரின் ரசிகை.ஆத்தா சொன்னதுபோல மூக்கு ரொம்பவே ஸ்பெஷல்தான் அந்த நடிகருக்கு

நல்லவேளை ஹோம் ஸ்கிரீனில் இருக்கும் புதிய பாதைக்காரரை ஆத்தா பார்க்கவில்லை, பார்த்திருந்தால் இவனாரு இளையவனா? என்று கேட்டு அவனுக்கும் ஒரு பெண்பார்த்திருப்பார்