இன்று மாலதிக்கு பிறந்த நாள். அதிகாலையிலேயே வாழ்த்தினேன். என் நட்பு வட்டம் மிகமிகச்சிறியதும் குறுகியதும். கல்லூரியிலும் சரி வெளியிலும் சரி யாரிடமும் நெருங்கிப்பழகுவதில்லை ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே அவர்களையும் நிறுத்தி நானும் கோட்டிற்கு வெளியே நின்று கொள்வதுதான் வழக்கம். அரிதாகவே நான் மிக நெருங்கி நட்பும் அன்பும் கொள்கிறேன்.
கல்லூரியில் மாலதியுடன் மட்டுமே நான் மிகுந்த பிரியமும் நட்பும் கொண்டிருந்தேன். வழக்கமாகவே நான் ஆசிரியர் அறையிலும் அமைதியாக என் வேலை, வகுப்பு. ஓய்வு நேரங்களில் வாசிப்பு என இருப்பேன். வம்பளப்பிலும் கலந்துகொள்வதில்லை. டீ காபி குடிக்க கேண்டீன் போவதே இல்லை. எப்போதாவது என்னைப்பார்க்க விருந்தினர்கள் வந்தால் அவர்களுடன் கேண்டீன் போய் காபி வாங்கிக்கொடுத்து நானும் குடிப்பதுண்டு இது வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை நடக்கும்.
ஒருமுறை அப்படி திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு கேண்டீன் போய் காபிக்கு சொல்லிவிட்டு பேராசிரியர்களுக்கென்று இருக்கும் தனிப்பட்ட இடத்தில் அவருடன் அமர்ந்திருக்கையில் மேசையைத் துடைத்து சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் என்னை ‘’.. இங்கெல்லாம் உட்காரக்கூடாதும்மா இது டீச்சர்கள் உட்காரும் இடம்..’’ என்று அதட்டினார்.
பக்கத்து மேசையில் உணவருந்திக்கொண்டிருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் பதறி ’’…ஏய்.ஏய் என்னப்பா இவங்க இங்கே 20 வருஷமா இருக்காங்க . அவங்களைபோயி..’’என்று அவரைக் கண்டிக்க எழுந்தார். நான் சிரித்தபடி அவருக்கு என்னைத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சமாதானம் செய்தேன். அந்த அளவில் தான் நான் கல்லூரி வளாகத்தில் புழங்குகிறேன்.
அப்படி வெகுகாலம் முன்பு எதற்கோ வரலாற்றுத்துறைப் பேராசிரியருடன் கேண்டீனுக்குபோயிருக்கையில் நல்ல கூட்டமென்பதால் ஒருமேசையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாலதியின் எதிரே அதே மேசையில் அமரவேண்டி இருந்தது, மாலதியை வரலாற்றுத்துறைப் பேராசிரியர் அறிமுகம் செய்தார், ஹல்லோ சொல்லிக்கொண்டோம்.
மாலதி பணிபுரியும் ஆங்கிலத்துறையில் அன்று யாருக்கோ பிறந்த நாள் எனவே சக ஆசிரியர்களுக்குக் கேண்டீனில் மதிய உணவு ட்ரீட். மாலதிக்கு வகுப்பு இருந்ததால் தாமதமாகத் தனியாக வந்து உணவருந்திக்கொண்டிருந்தாள். மாலதி அழகாக நளினமாக சாப்பிட்டதைப் பார்த்தேன் கூடவே உணவை ரசித்தும் சாப்பிட்டாள்.
(ள் விகுதி நானும் மாலாவும் தோழிகள், இருவருக்கும் சமவயது மற்றும் அன்பினால்)
மிக அழகாகக் கைவிரல் நுனிமட்டும் சாப்பாட்டில் படும்படி மெதுவாக அவ்வபோது உதட்டைத் துடைத்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு இறுதியாக ஒரு ஐஸ்கிரீமையும் சாப்பிட்டாள்.
எனக்குச் சாப்பாட்டை ரசித்துப் பிகுபண்ணிக்கொள்ளாமல் சாப்பிடுபவர்களைப் பிடிக்கும். ’’….சாப்பிடறீங்களா…’’ என்று யாரேனும் கேட்டால் உடனே சரி என்று சொல்லுபவளாதலால், அப்படி என்னைப்போலவே சரி என்பவர்களையும் பிடிக்கும். அந்தக்கணத்திலிருந்து நானும் மாலதியும் தோழிகளானோம். நாஞ்சில் நாடனை ,ஜெவை, சுந்தரராமசாமியைல்லாம் வாசிக்கும் ஒருவரை நான் கல்லூரியில் சந்திப்பேனென்று நினைத்திருக்கவே இல்லை.

சிலநாட்களில் இருவருக்கும் பொதுவான தோழியான (சுதந்திரா அம்மா) உமாவுடன் மாலதியின் வயலூர் தோட்டத்துக்கு போயிருந்தேன். முதுகலைப் பட்டதாரியான மாலதியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி அண்ணன் தென்னைமரங்களின் நிழலில் கயிற்றுக்கட்டிலைபோட்டுக்கொண்டு அமர்ந்து ஜெ வின் ஒரு நூலைப் படித்துக்கொண்டிருந்தார். அந்தக்காட்சி அப்படியே ஒரு புகைப்படம் போல என் மனதில் பதிந்திருக்கிறது. அவர்மீது அன்று கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அபி நிலாவும் இனிய மதியும் சுதந்திராவும் வாய்கொள்ளாமல் அத்தை அத்தை என்றழைக்கும் மருமகள்களாகினர். சரணும் தருணும் அத்தை மாமாவென்று அவர்களுடன் ஒட்டிக்கொண்டார்கள்.
நாங்களிருவரும் கல்லூரியில் தினமும் பார்த்துக்கொள்வது, மாலதியின் தோட்டதுக்கு நாங்களும், இங்கே வீட்டுக்கு மாலதி குடும்பத்தினரும் அடிக்கடி சென்று வந்துகொண்டும் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்வதுமாக இருந்தோம். தாவரவியல் ஆசிரியர்கள் அறைக்கு நேர் கீழே மாலதியின் அறை இருந்தது. சில சமயம் நான் எனக்குக் கீழே மாலா இருப்பாள் என்று நினைத்துக்கொண்டு புன்னகைத்துக்கொள்வேன்.
மாலதி சுயநிதிப்பிரிவில் பணியாற்றியதால் 10-4pm அவளது பணிநேரம். எனக்கு 9-3pm. பெரும்பாலும் நான் 9 மணி வகுப்பிலிருப்பேன். புத்தம் புதிதாக மாணவர்களைச் சந்திப்பதிலும் அவர்கள் சோர்வடையும் முன்னரே உற்சாகமாகக் கற்பிப்பதிலும் நான் கவனமாக இருப்பேன், டைம்டேபிள் போடும்போதே சொல்லிவிடுவேன் எல்லா முதல் வகுப்பும் எனக்குக் கொடுக்கும்படி.
இன்றுவரையிலும் அது தொடர்கிறது. எனவே 10 மணிக்கு வகுப்பை முடித்துவிட்டு சாக்பீஸ் கறைபடிந்த கையும் எல்லா வகுப்பிலும் கரும்பலகைக்கு முன்பாக ஃபேன் இருப்பதால் சாக்கட்டித்தூள் படிந்த தலைமுடியுமாக நான் வருகையில் தாவரவியல் துறைக்குப் படியேறும் இடத்தில் மாலதி ’நீட்டாக’ புடவை உடுத்திக்கொண்டு நின்றிருப்பாள். கொஞ்ச நேரம் பேசிவிட்டே இருவரும் பிரிவோம்.
நானும் மாலதியும் சகோதரிகளா என்று கல்லூரியில் பலரும் கேட்கத்துவங்கினார்கள்.
மாலதியின் கைகளில் எனக்குக்கொடுக்கவென்று எதாவது கட்டாயம் இருக்கும். சின்னச்சின்ன டப்பாவில் அன்று காலைச் செய்த சிவப்பரிசிப்புட்டோ எனக்கு (இன்றுவரை செய்யத்தெரியாத) எண்ணெய்க் கத்தரிக்காய்க்குழம்போ, காட்டுக்கீரையோ, காயோ, கனியோ, புத்தகமோ தலைக்குவைத்துக் கொள்ள மலர்ச்சரமோ இருக்கும்.
வகுப்பில்லாதபோது ஆங்கிலத்துறைக்கெதிரில் இருக்கும் சின்னச் சிமெண்டுத்திட்டில் அமர்ந்து பேசுவோம். சில சமயம் நூலகத்தில் சந்திப்பதும் உண்டு. மாலதியின் அம்மா பிரமாதமாகச் சமைப்பவர்கள். சரண் தருணுக்கு பிடித்த பலகாரங்கள் செய்து கொடுத்தனுப்புவார்கள். எனக்குபிடித்த கோதுமை மாவில் சர்க்கரையும் கனிந்த வாழைப்பழமும் கலந்து செய்யும் பழப்பணியாரம் அடிக்கடி செய்து கொடுத்தனுப்புவார்கள். வாயில் கரையும் அது.
இன்று வரை மாலாவீட்டில் மிக்ஸி உபயோகப்படுத்துவதில்லை என்பதும் அவர்கள் வீட்டுணவின் அபாரமான சுவைக்குக்காரணம். ஆட்டி ஆட்டி மினுங்கும் பளபளப்பான ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் சமையலறைக்குபின்னால் இருக்கும் நேர்த்தியாகப்பராமரிக்கப்படும் தோட்டம், உருளியில் மிதக்கும் மலர்கள் என்று மாலதியின் வீடு அழகாக இருக்கும்.
கல்லூரியில் மாலதி என்னைப்போலவேதான், நேரத்துக்கு வருவதும் மிகுந்த ஈடுபாட்டுடன் வகுப்பெடுப்பதும் வாக்ஸ் பாப்புலை போன்ற கல்லூரி நேரம் முடிந்தபின்னர் செய்யும் வேலைகளையும் மனதார இழுத்துபோட்டுக்கொண்டு செய்வதுமாக எந்நேரமும் வேலையாகவே இருப்பாள்.
அரசுவேலை ஆங்கிலத்துறைக்கு வந்தபோது தான் விண்ணப்பிக்கவில்லை என்று மறுத்த மாலதியை நண்பர்கள் வற்புறுத்தி விண்ணப்பிக்கசெய்தோம்.
22 வருடங்களாக அயராது பணியாற்றிய, துறை சார் அறிவில் யாருக்கும் நிகர் கூடச் சொல்லமுடியாத, அந்த வேலைக்கான எல்லாத்தகுதிகளும் இருந்த, ஏராளமான வேலைகளைக் கல்லூரிக்கு அந்தச் சொற்பச் சம்பளத்தைப் பற்றி எண்ணாமல் செய்துகொடுத்த மாலதிக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இத்தனைக்கும் ஆங்கிலத்துறையில் பல இடங்கள் அப்போது நிரப்பப்பட்டன, வெளியிலிருந்து கூட 3 பேர் தேர்வானர்கள். ஒரு தனி மனிதரின் காழ்ப்பால் மாலதிக்கு அரசுவேலை தரப்படவில்லை. அந்தக்காழ்ப்பு மாலதியின் செயலாற்றலால் தான் அவருக்குஉருவானது,

தீச்சொல்லிடும் உரிமை தெய்வங்களுத்தான் இருக்கிறது இல்லையா? சரி போகட்டும்.
மாலதி மனமுடந்துவிடவில்லை நான்தான் பெருங்கோபமடைந்திருந்தேன். மாலா வழக்கம்போல வேலைகளில் மூழ்கி இருந்தாள் ஆனால் ஊழ் என்ற இரக்கமில்லாத ஒன்று இருக்கிறதல்லவா?
கிருஷ்ணமூர்த்தி அண்ணன் சுகவீனப்பட்டதும் மண் மறைந்ததும் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது. புங்கைமரங்கள் பூத்து முடிந்திருந்த ஒருநாளில் அதனடியில் கண்ணீருடன் மாலா அதைப்பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. மாலா அவரை அடிக்கடி அழைத்துக்கொண்டு சிசிகிச்சைக்கெனக் கேரளாசெல்லவேண்டி இருந்தது. கல்லூரி வேலை, மருத்துவச்செலவுகள், கல்யாண வயதிலிருந்த மருத்துவம் படித்துக்கொண்டிருந்த அபி, பள்ளி இறுதியிலிருந்த இனியா, வயதான அம்மா என எல்லாப்பொறுப்பையும் மாலா பார்த்துக்கொண்டாள். கொச்சிக்கு சிகிச்சைக்குச் சென்ற ஒருநாளில் வழியில் விற்றுக்கொண்டிருந்த சுவற்றில் பதிக்கும் பூந்தொட்டிகளிரண்டை எனக்கென வாங்கி வந்த மாலாவின் அன்பை என்னவென்று சொல்வது?
என் இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் என்தரப்பில் என்னுடனிருந்த மாலா, அண்ணன் மறைந்த பின்னர் எந்தப் புகாரும் இல்லாமல் வேலையை ராஜி வைத்தாள். 25 வருட ஆசிரியப்பணியின் அனுபவம், முனைவர் பட்டம், கற்பித்தலில் இருந்த ஆர்வம் எல்லாவற்றையும் நொடியில் ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தை மகள்களை விவசாயத்தை முழுமனதுடன் ஏற்க மாலாவுக்கு இருந்த மனக்கட்டி லட்சக்கணக்கான பெண்களுக்கு இல்லை. இப்போது பல ஏக்கர்கள் விரிந்திருக்கும் தோட்டத்தை தான் ஒருத்தியாகபார்த்துக்கொள்கிறாள். காலை 6 மணிக்குத் தோட்டம் சென்றால் இரவுதான் வீடு திரும்புகிறாள்.

நானும் சிலநாட்கள் மாலாவுடன் தோப்பில் இருப்பதுண்டு. சரியாக நேரத்துக்குச் சாப்பிடாமல் விவசாய வேலைகளைப் புதிதாகக் கற்றுக்கொண்டு முழு விவசாயத்தையும் தானே சிறப்பாகச் செய்கிறாள்.
வர்ஜீனியா வுல்ஃபின் படைப்புக்களில் முனைவர் பட்டம் பெற்ற மாலா தன் துறைசார் அறிவை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தென்னை மரங்களுக்கு உரமிடுவதும், சாம்பு புற்களைக் களை எடுப்பவர்களை மேற்பார்வையிடுவது, மிளகாய் பறிக்க ஆட்களை ஏற்பாடுசெய்வதும், தோட்டப் பணியாளருக்குமாகச் சேர்த்து சமைத்து எடுத்துக்கொண்டு போவதுமாக முழுமையாக வேறொரு ஆளுமையாக மாறி இருக்கிறாள்.
நாங்கள் தினமும் பேசிக்கொள்வதில்லை. வாட்ஸ்ஸாப்பிலும் தொடர்பிலில்லை எப்போதாவது பேசிக்கொள்வோம் ஆனால் முந்தினநாள் விட்ட இடத்திலிருந்து பேசுவதுபோல் பேசிக்கொள்வோம். மாலதிக்குப்பின்னர் கல்லூரியில் எனக்கு யாருடனும் தோழமை இல்லை. அவளுக்கான இடம் நிரந்தரமாகக் காலியாகத்தான் இருக்கிறது. அதை மாலதியால் மட்டுமே நிரப்ப முடியும்.

மாலதி இன்று கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறாள். மகள்களைப் பார்க்கச் செல்லவோ, உரம்வாங்கவோ, வங்கி வேலைகளோ, நல்லதுகெட்டதுக்கோ எங்கு வேண்டுமானாலும் மாலதி யாரையும் சார்ந்திராமல் தனியே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறாள். சுதந்திரா, அபி, இனியா, சரண், தருண் சாம்பவி ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஒன்றாக ஆரோக்கியமான நட்புடன் இருக்கிறார்கள்.நானும் மாலதியும் உமாவும் மூச்சுலகிலிருந்து இதைமட்டுமே பார்க்க விழைகிறோம்.

பெண்களை அழகாக்குவது அவர்கள் கொண்டிருக்கும் விடுதலையே. மாலா என்னும் பேரழகிக்கு அன்பும் கட்டிமுத்தங்களும்.
Leave a Reply