லோகமாதேவியின் பதிவுகள்

இதுவா ரகசியம்?

 

சில வாரங்களுக்கு முன்னர் பிரபல புலனாய்வுப்பத்திரிக்கை ஒன்றில்   சில கோடிகள் செலவில் பள்ளிப்பெண்களுக்கான சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் குறித்த ஒரு பதிவு வந்திருந்தது. அதற்கான புகைப்படத்தில் சில பெண்கள் சீருடையில் அந்த இயந்திரத்தினின்றும் நாப்கின்களை எடுக்கிறார்கள். அவர்கள் முகத்தை முழுவதுமாக மறைத்து வெளியிட்டு இருக்கிறார்கள். ஏன்?
பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்கள் கூட முன்வந்து சமுதாயத்தில் முகம் காட்டி நீதி பெறும் இந்த நாளில், பாலியல் தொழிலிருந்து மீண்டு வந்த ஒரு பெண் தன் கடந்து வந்த பாதையை புத்தகமாக வெளியிட்டிருக்கும் காலத்தில், நாப்கின் எடுத்து உபயோகிப்பது இன்னும் மறைக்கப்பட வேண்டிய விஷயமா? வெகு ஜன ஊடகங்களே இதிலிருந்து இன்னும் வெளி வரவில்லையெனில் எப்படி மற்றவர்களிடம் இதற்கான் புரிதலை எதிர்பர்க்க முடியும்?  மாதவிடாயென்பது, தவிர்க்க முடியாத, பெண்கள் எதிர்கொண்டே ஆக வேண்டிய ஒன்றென   ஆண்களின் உலகம் அறிந்து கொள்வதெப்போது?

சானிடரி நாப்கின் விற்கும் பன்னாட்டு கம்பெனியே பெயரை whisper என்று தானே சொல்லிகொள்கிறது/? இது ரகசியமாய் இருக்க வேண்டியது ஆனால் பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு தெருவடைத்து   பந்தலிட்டு அழைப்பிதழ் கொடுத்து, ஊரெங்குமாய் போஸ்டர் அடித்து, முரசறிவிக்காத குறையாக  அந்த இளம் பெண்  உடல் ரீதியாக கருத்தரிப்புக்கு தயாராகிவிட்டதை அனைவருக்கும் அறிவித்துக் கொண்டாடி மகிழலாம் இல்லையா? என்ன முரண் இது?

மருத்துவ இயலின் படி  ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium), ஒருவேளை அந்த முதிர்ந்த முட்டை கருவாகுமேயானால், அதற்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காக போதிய இரத்தம் கருப்பையின் உட்புற மடிப்புக்களில் தேங்கி இருக்கும்

விளம்பரங்களில் வருவது போல ஒரு சில சொட்டுக்களல்ல இந்த மாதவிடாய் குருதிப்போக்கென்பது. பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில் உள்ள  இழையங்களும்,  நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் சேர்ந்து  வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. உடன் சிலருக்கு கடும் வலியும் தசைப்பிடிப்பும் கால் குடைச்சலும்  கூட இருக்கும். இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது.

 

பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள். ஒரு பெண் தன்  வாழ்நாளில் சுமார் 3,500 நாட்கள் மாதவிடாயில்  இருக்கிறாள்
இந்த நாட்களில் தங்கள் உள்ளாடைகள் கறைபடாதிருக்கவே அணையாடை அல்லது அடைப்பான்  எனப்படும் நாப்கின்களை உபயோகிக்கின்றனர். உடலில் இருந்து வெளியாகும் அனைத்து கழிவுகளைப்போலவேதான் மாதவிலக்கு உதிரமும்  தூய்மையற்றது.  கசியும் தன்மை கொண்ட அதனை கட்டுப்படுத்தவும் முடியாது

 

சூடாயியம், இந்து  இசுலாமிய மற்றும் பல்வேறு மதங்கள் மாதாந்திர சுழற்சியில் இருக்கும்  பெண்களை பல நிகழ்வுகளிலும் தடை செய்து அவர்கள் அப்போது தனித்து இருக்க வேண்டுமெனவே வலியுறுத்துகிறது

மாதவிலக்கு நாட்களில் இவ்வாறு விலக்கபப்டுவதும், இதோடு வலி, எரிச்சல், சோர்வு, கசகசப்பு தனிமை எல்லாம் சேர, பெண்களும் இந்த நாட்களை பெரும்பாலும் வெறுக்கிறார்கள்.

இவற்றுடனேதான் பெண்கள் இந்த ஆண்களின் உலகில் எல்லா துறையிலுமே முன்னடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். உயிரியல் ரீதியாக பலவீனமானவர்கள் என்று சொல்லப்படும் பெண்கள்தான் ஆண்களுக்கான உணவு, உடை அவர்களுக்கான பாதுகப்பான சுத்தமாக பரமரிக்கப்பட்டிருக்கும் வீடு ஆகியவற்றை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். மாத விலக்கு நாட்களில் பெண்களுக்கு தேவையானது கருணையோ இரக்கமோ அல்ல அப்படி ஒன்று இருக்கிறது எனும் புரிதல் மட்டுமே

பெண்களை பெரும்பாலும்  வெறும் உடலாக மட்டுமே அறிந்துகொண்டிருக்கும் இந்த ஆண்களுக்கானது என்று சொல்லப்படும் உலகில் இந்த உடல்ரீதியான ஒரு நிகழ்வு குறித்த புரிதல் இல்லாமலிருப்பது அநீதி. மளிகைக்கடையிலும் மருந்துக்கடையிலும் இந்த நாப்கின்களை பெண்களே வெட்கப்பட்டுக்கொண்டு கேட்பதும் கடைக்காரர் ஒரு நாளிதழில்  அதை  மறைவாக சுற்றிஎடுத்துக்கொண்டு வருவதும்  தேவையே இல்லை.

1960 இல் இருந்து  பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றும் மருந்துகளைக் கொண்டு மாதவிடாய் நேருவதையும் கருத்தரிப்பதையும் கூட தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளத்துவங்கி இருக்கிறார்கள்.

உரக்க சொல்லப்படவேண்டியதுமில்லை, ரகசியமும் இல்லை, இந்த மாதவிடாய் எனும் உடலியல் நிகழ்வை.  ஒரு மருந்துக்கடையில் feminine hygienic  பொருளொன்றை நான் கேட்கையில் அங்கிருக்கும் பெண்கள் நமுட்டுச்சிரிப்புடன் அதை எடுத்துக்கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது, பெண்கள் முதலில் நமக்கு நிகழ்வதென்ன என்னும் புரிதலுடன் இருக்க   வேண்டும்

எல்லா நாளையும் போலவே குருதிக்கசிவு இருக்கும் இந்த நாட்களில் விளம்பரங்களில் காட்டுவது போல  விமானம் ஓட்டும் , குதிரை சவாரி செய்யும், நீளம்தாண்டும் பெண்கள் மட்டுமன்றி பேருந்தின் நெரிசலில் சிக்கி பயணிக்கும் பெண்களையும் ஓய்வின்றி குடும்பதிற்காக உழைக்கும் பெண்களையும், இது போல அவர்கள்  இயங்கும் பல தளங்களையும் ஆண்கள் கட்டாயம் எண்ணிப்பார்க்கவேண்டும். இந்த சில  நாட்கள் விலக்கி வைக்கப்படவேண்டியது அல்லவே அல்ல என்பதை இதுபோன்றதோர் சுழற்சியின் முட்டையிலிருந்து உருவான ஆண்களாலும் பெண்களாலும் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த உலகம் புரிந்துகொள்ளவேண்டும்

உலகம் தொடர்ந்து இயங்க காரணமாயிருக்கும் மாதாந்திர முட்டை உற்பத்தி பெண்கள் வெட்கப்பட வேண்டிய விஷயமும் ஆண்கள் அருவருப்பு படவேண்டிய விஷயமும் ரசியமாய் வைத்துக்கொள்ள்ப்பட வேண்டிய விஷயமும் அல்ல இது சரியான புரிதலுடன் எதிர்கொள்ள வேண்டிய ஒன்று. அதற்காக சுகாதாரமான நாப்கின்கள் பயன்படுத்துவோரின் முகங்கள் நிச்சயம் மறைக்க படவேண்டியதல்லவே அல்ல

1 Comment

  1. KANNAN.m

    சபாஷ்! தெளிவான பதிவு. ஆண்கள் மட்டுமல்ல பெண்களுக்கு ம் இந்த விழிப்புணர்வு வரவேண்டும். இன்னும் நிறைய பேருக்கு இந்த விஷயம் போய் சேரணும்.

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑