லோகமாதேவியின் பதிவுகள்

Category: வாசிப்பு (Page 2 of 3)

ஜப்பான் ஒரு கீற்றோவியம்- ஜெ

ஜெ வின் ஜப்பான் பயண அனுபவங்களை சற்றே தாமதமாக வாசிக்கிறேன். ஜப்பானைக்குறித்த அனைத்தையும் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.   செர்ரி மலர்களுக்கான ஹனமி கொண்டாட்டத்தையும்  ,  ஹிரோஷிமாவின் குண்டுவீச்சில் அழிந்து பின்னர் மீண்டும் துளிர்த்து இன்று வரை இருப்பதாக  சொல்லப்படும் ஜிங்கோ மரத்தையும், Giant timber bamboo  எனப்படும்  மோஸோ மூங்கில்களையும் குறித்து அவர் எழுதப்போவதை வாசிக்க ஆவலாக இருந்தேன்

ஜெ அங்கே போகையில் மிகச்சரியாக செர்ரிமரஙகள் பூத்து முடிந்ததால் அவற்றை பார்க்க இயலவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஜிங்கோ மரம் குண்டுவீச்சின் பிறகும் துளிர்ந்து வளர்ந்ததால் நகரை புனரமைக்கையிலேயே சுமார்  16000 ஜிங்கோ மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு இன்று ஜப்பான் பூங்காக்களிலும் நெடுஞ்சாலைகளிலும்  அவற்றின் விதைகளினின்றும் வளர்ந்த ஜிங்கோக்கள் செறிந்து நிற்கின்றன. அழகிய சிறு கைவிசிறி போன்ற அதன்  இலைகள் பொன்மஞ்சளும் ஆரஞ்சுமாக பழுத்து உதிர்கையில் கொள்ளை அழகாக இருக்கும். டோக்கியோவில் நவம்பர் –டிசமப்ரில் ஜிங்கோதிருவிழா நடக்கும். ஜிங்கோ மரங்கள் எங்கேனும்  பிண்ணனியில் இருக்கின்றதா என்று  அவர் தளத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பெரிது பண்ணிப் பண்ணிப்பார்த்தேன். எதிலும் இல்லை

மோஸோ .மூங்கில் காடுகளின் புகைப்படங்கள் நிறைய இருந்தது பதிவில். மகிழ்ச்சியாக இருந்தது. இவை Phyllostachys edulis,  என்னும்  தாவர அறிவியல் பெயர் கொண்டவை. Timber bamboo என்றும்  அழைக்கப்படும் மோஸோ மூங்கிலும் ஜிங்கோவும் ஜப்பானை பிறப்பிடமாக் கொண்டவை அல்ல சீனாவை சேர்ந்தவை

இம்மூங்கில் குருத்துக்கள் மண்ணிலிருந்து வெளிவருகையில் , பிரவுன் நிற சாக்ஸ் போலான உறையினால் மூடப்பட்டிருக்கும்,  வெளியிட்டிருந்த புகைப்படங்களிலும் இவை இருக்கின்றது. ’மண்ணிலிருந்து வெளிவரும் யானைத்தந்தங்களைப்போல்’ என்று குறிப்பிடப்பட்டிருந்த இக்குருத்துக்களை ஜப்பானியர்கள் உணவில் சேர்த்துக்கொள்வார்கள். இதன் அறிவியல் பெயரின் பின் பகுதியில் இருக்கும் edulils என்பது ’உண்ணப்படுவது’ என்னும் பொருளில் வந்தது.

மஞ்சளும் பச்சையுமாக நிறைய மோஸோ மூங்கில்களின்பின்ணனியில் ஜெ மற்றும் அருணாவின் புகைப்படங்கள் மிக்க மகிழ்வளித்தன.

எப்போதும் போல பல சொற்றொடர்கள்  அத்தனை அழகு.பழைய புதிய ஜப்பான்களை பற்றிச்சொல்கையில் // அது நன்றாகப் பேணப்பட்டுவரும் ஒர் இறந்தகாலம். ஒரு வெறும் கனவு. //

நாய்களுக்கான சிலைகளை பற்றிய குறிப்பில் // நாம் நம் தேவைக்காக அவற்றை கொன்றோம் என்பதை நமக்கே சொல்லிக்கொள்வதற்காகவாவது இவை இருக்கட்டும்.// இதை வாசிக்கையில் மனம் கனத்தது

//சாகசங்களற்ற, கனவுகளற்ற நுகர்வின் இன்பம் மட்டுமே எஞ்சியிருக்கும் உலகே நமக்கு எஞ்சியிருக்கிறது//. என்னும் வரிகள் பெரும் சோர்வையும் துயரையும் அளித்தது

அதைப்போலவே ஸ்வெட்டரும் ஸ்கார்ஃபும் அணிவிக்கபப்ட்டிருந்த ஜிஸோ சிலைகள் மனதைபிசைந்தது. மறக்கவே முடியாத புகைப்படங்களில் இதுவும் ஒன்று

பச்சைத்தேநீர் குடித்தலில்  ஜெ அருந்தியது thick tea.  Thin tea யும் உண்டு ஜப்பானியர்களின் தேயிலை வளர்ப்பும், இந்த  uji matcha  எனப்படும் பச்சைதேநீரின் பொருட்டு பிரத்யேகமாக தேயிலைச்செடிகள்  நிழலில் குறிப்பிட்ட காலம் வரை வளர்க்கப்படுவதும், அவை மிக தனித்துவமான வகையில் பின்னர் தயாரிக்கப்படுவதும், தேநீர் அருந்தும் சடங்குகளும் அதிலும் வெண்முரசில் வருவது போன்ற ஒடுக்கு நெறிகளும் செலுத்து நெறிகளும் உள்ளதுமாய் வெகு சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.. மாணவர்களுக்கு தேயிலைச்செடியைக்குறித்து நடத்துகையில்  ஆர்வமூட்டும் பொருட்டு இவற்றைக்குறித்தும் சொல்லுவேன் பிறிதொரு முறை விரிவாக  இதைக்குறித்து எழுதுகிறேன்

.அரண்மனை என்றாலே ஆடம்பரம் விஸ்தீரணம் என்னும் உளசித்திரமே  இருந்தது சிறு பசுங்குன்றின் மீது அமந்திருக்கும்   சிறிய கச்சிதமான  ஜப்பானிய அரண்மனைகள் அழகு.

அபுதாபியில் இருக்கையில்  அப்போதைய  மன்னர்  எகிப்திலிருந்து புதிதாக மணம் செய்துகொண்டு வந்த 16 வயதேயான  இளம் ஷேக்கியாவின் அரண்மனை  அபுதாபி துபாய் நெடுஞ்சாலையில் ஈச்ச மரஙகள் சூழ நான்கு புறமும் பல கிலோமீட்டர்கள் அளவிலான மதில்சுவற்றுடன் பிரம்மாண்டமாக இருந்ததை பார்த்திருக்கிறேன்.

பல அளவுகளிலான  புத்தர் சிலைகளையும் இலங்கையில் இருக்கையில் பார்த்தற்கு பிறகு உங்களின் பதிவில்தான் பார்க்கிறேன். அதுவும் முழங்கையை முட்டுக்கொடுத்து ஒற்றைக்காலை மடித்து கன்னத்தில் கையைத்தாங்கி இருக்கும் குட்டி புத்தரை மடியில் எடுத்து வைத்துக்கொள்ளலாம் போலிருந்தது.

சுமி மூங்கில் கீற்றோவியங்களும் அதனுள்ளேயே பொறிக்கபட்டிருக்கும் கவிதையும் அற்புதமாக இருந்தது. உலக வரைபடத்தில் ஜப்பானே தூரிகையில் வரைந்த சிறு தீற்றல் போலத்தானே இருக்கும்

பழமையும் மரபும் கலந்த ஜப்பானிய தோட்டங்களை பற்றிய பதிவு மற்ற எல்லாவற்றையும்விட பிடித்திருந்தது. சில தோட்டங்களில் ஓடையில் நீருக்கு பதில் வெண்ணிற மென் மணலை பயன்படுத்தியிருப்பார்கள் என்றும் வாசித்திருக்கிறேன்

களைகளும் கூட பேணப்படுகின்றன என்று சொல்லியிருந்தீர்கள் அமெரிக்காவிலும் officcal weeds என்றே சிலவற்றை அறிவித்திருப்பார்கள். களைச்செடி என்பதும் ’ a right plant in a wrong place தான். பெரும்பாலான அல்லது அனைத்து களைச்செடிகளுமே மருத்துவப்பயன்பாடுகள் உள்ளவைதான் இந்தியாவில் அப்படியான காப்புக்கள் இவற்றிற்கு ஏதும் இல்லை. தாவரங்களைப்பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் ஏரளமான களைசெடிகள் அழிந்தே போய்விட்டன.

நான் மாணவியாக இருந்தபோது பார்த்த, குறிப்பெடுத்துக்கொண்ட களைச்செடிகளில் பாதிக்கு மேல் இப்போது அந்த இடங்களில் இல்லவே இல்லை. நாம் இழந்துகொண்டிருக்கும் பல வளங்களில்  களைச்செடிகளும்  இருக்கிறது.

ஜப்பானிய இல்லங்களின் முற்றத்தோட்டங்களைக்குறித்தும் நிறைய வாசித்திருக்கிறேன்.//தோட்டத்தை பேணுபவர் தோட்டத்தில் நிகழ்த்துவது தன் அகத்தை. அகம் பூக்கிறது, தளிர்விடுகிறது, ஒளிகொள்கிறது.//

இதுவே ஒரு அழகிய ஜப்பானிய கவிதை போலிருந்தது

நான் புத்தகங்களிலும் இணைய வழியிலும் மகன்களின் cross country cultures  பாடங்களின் வாயிலாகவும் மட்டுமே கண்டிருந்த ஜப்பானை இன்னும் நெருக்கமாக பார்த்தேன்  ஜெவின் பயண அனுபவக்கட்டுரை வாசிப்பில்.

. இருபுறங்களிலும் பைன்மரங்கள் நின்றிருக்கும் மிகச்சுத்தமான  தெரு,.  குழந்தையின்  உள்ளங்கைகளைப்போல சிவப்பும் பச்சையுமான  வசீகர இலைகளுடன் மேப்பிள் மரங்கள்  சாய்ந்திருக்கும் வழிபாட்டுத்தலங்களின் மதிற்சுவர்கள், வளைந்த மிகப்பழைய பைன்  சாய்ந்திருக்கும் நுழைவு வாயில், மாபெரும் புத்தர் சிலைகள் கணினித்திரையிலிருந்தே எடுத்து சாப்பிடுவிடலாம்போல உந்துதல் அளிக்கும் ஜப்பானிய உணவுகள் பச்சைப்பசேல் டோபியரி குன்றுகள் என பதிவிட்டிருக்கும் புகைப்படங்களில் இன்னும் அணுக்கமாக ஜப்பானை பார்க்கமுடிந்தது

காகித அன்னங்களோ , கன்னத்தில் கையை ஊன்றிய புத்தரோ,   அன்பு மிளிரும் கண்களால் என்னை பார்த்தபடியிருக்கும் ஒரு நாயோ இன்றிரவு  என் கனவில் வருமாயிருக்கும்

 

வெள்ளி நிலம்- ஜெ

கோவை புத்தகத்திருவிழாவில் வெள்ளிநிலம் வாங்கியிருந்தேன். இது தொடராக வந்தபோது ஒரு சில அத்தியாயங்கள் மட்டுமே வாசித்திருந்தேன் எனினும் அந்த பிட்சுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட துவக்கம் மனதில் அப்படியே பசுமையாக இருந்தது. புத்தகமாக வாசிக்க காத்திருந்து வாசித்தேன் இப்பொழுது.

பனிமனிதனும் இதுவுமே ஜெ சிறார்களுக்காக எழுதியவை. பனிமனிதனைக்காட்டிலும் வெள்ளிநிலம் சாகசங்களும் மர்மங்களும் பயணங்களும் ஆபத்துக்களுமாக  நிறைந்திருந்தது. முழுக்கதையுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் முக்கியமாக இரண்டு விஷயங்கள் மிகவும் வசீகரித்தது; சிறுவன் நோர்போவுடன் பேசிக்கொண்டிருப்பதால் வாசிப்பவர்களுடனும் பேசிக்கொண்டிருக்கும்  நாக்போ நாய்,  ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கதையோட்டத்துடன் தொடர்புள்ள மிக முக்கியமான பெட்டிச்செய்திகள்.

 சிறார்களுக்கானதுதான் என்று சொல்லிவிடவே முடியாதபடிக்கு அத்தனை அடர்த்தியான சம்பவங்கள் நிறைந்திருக்கும் கதை. பெரியவர்களுக்கானது  என்றும் சொல்ல முடியாதபடிக்கு  குறும்பு நாயும், அது பேசுவதும் அந்த அதிபுத்திசாலி  சிறுவனும், பார்த்தோ கேட்டோ இராத புதிய இடங்களின் விவரணைகளுமாக  கதை பொதுவில் அனைவருக்கும் ஏற்றதாக இருந்தது

 நேற்று ஓணம் விடுமுறை என்பதால் துவங்கி இன்று  புத்தகத்தை கீழேயே வைக்க முடியாததால் கல்லூரியில் வகுப்புக்களின் இடைவெளிகளில்  வாசித்து முடித்தேன்

 இணையமும் அலைபேசியும் இத்தனை வேக தொலைத்தொடர்பும் இல்லாத காலத்தில் உலகை கவனிக்கத் துவங்கிய 5 அல்லது 6 வயதில் அனைவருக்குள்ளும் இருந்த சாகசத்திற்கான் ஏக்கத்தை, இப்படியான சிறார் கதைகளே தீர்த்து வைத்துக்கொண்டிருந்தன. சிறுவர்களும் சிறுமிகளும் செல்லவே முடியாத ஆனால் அவர்களின் கற்பனைகளில் எப்போதும் அவர்கள் சென்று கொண்டே இருக்கக்கூடிய நிலப்பரப்புக்களுக்கு இக்கதைகளே வழிகாட்டின, அவர்களால் நிச்சயம் செய்ய முடியுமென்று அவர்கள் நம்பும் சாகசங்களை அவர்களே செய்தது போல் உணரவும், இதுபோன்ற கதைகளே அன்று இருந்தன. மாயாவிகளையும், தேவதைகளையும், பேசும் விலங்குகளையும் இளவரசன் இளவரசிகளையும் குதிரைகளையும் கொண்ட சாகச சிறார் கதைகளின் உலகிற்குள்ளேயே பலவருடங்கள் வாழ்ந்தவர்களே  இன்றைய பெரியவர்கள்.

நானும் அப்படியே.  5’ல் படிக்கையில்  வீட்டருகில் இருக்கும் இன்னும் சில சிறுவர்களுடன் சேர்ந்து ஒரு வருடம்   காமிக்ஸ்  புத்த்கம் போல  காட்சிகளை கைகளால் அடுத்தடுத்து (மகா கேவலமாக)  கைகளால் வரைந்து அதை வீடு வீடாக கொடுத்தனுப்பி அதற்கு காசு வசூல் பண்ணிகொண்டு இருந்த நாட்களை வெள்ளி நிலம் வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்

அதில் ஒரு பிரதி தன்னிடம் இருப்பதாகவும் ஒருநாள் என் மகன்களிடம்  அதைக்காட்டப் போவதாகவும் என் அக்கா பல வருடங்களாக என்னை பிளேக் மெயில் செய்துகொண்டே இருக்கிறாள்

 கதைகளில் ஜப்பானிய வில்லன்கள் அப்போது அடிக்கடி வருவார்கள்.  ஒரு ஜப்பானிய கெட்டவன் ’’எங்கே என் மகன் மாருமோச்சி’’ என்று கேட்கும் ஒரு கேள்வியை பலவருடங்கள் சொல்லிக்கொண்டு திரிந்திருக்கிறோம் இரும்புக்கை மாயாவியும், அவர் மனைவி டயானாவும் அவரின் டெவில் நாயும் இன்னுமே மனதில் அப்படியே இருக்கிறார்கள்.   அதன்பிறகு நான் இப்போது வாசிக்கும் அப்படியான சாகசக்கதை வெள்ளி நிலம்

 தோண்டி எடுக்கப்படும்  500 வருடங்களுக்கு முந்தைய பிட்சுவின் உடலிலிருந்து துவங்கும்  வெள்ளி நிலத்தின் கதை,  எந்த சிக்கலும் இல்லாமல் பல அடுக்குகளாக உடலை திருட நடக்கும் முயற்சி, இந்திய மற்றும் சீன ராணுவம், மதங்கள் அவற்றின் பிரிவுகள், பழங்கால எழுத்துக்களில் ஒளிந்திருக்கும் புதிர்கள்  உளவாளிகள், ஒற்றன், பனிப்பொழிவில் மலைகளுக்கு மேலே ஹெலிகாப்டர் பயணம், விபத்து, ராணுவ அதிகாரிகளுக்கு இணையாக  பெற்றவர்களின் துணையின்றி  வரும் ஒரு சிறுவன், அவனுடன் பேசிக்கொண்டே இருக்கும்  திறமையான வாயாடி நாய், துப்பாக்கிச்சூடு, கொலை, கொள்ளை, மர்மம் என திருப்பங்களாலும் சுவரஸ்யங்களாலும் வேடிக்கைகளாலும் மெல்ல மெல்ல வேகம் பிடிக்கின்றது

பெட்டிச்செய்திகளில் மிக அரிய விஷயங்களை ஜெ  சொல்லியிருக்கிறார். அவையெல்லாம், பாராசூட், தந்தி முறை போன்ற கண்டுபிடிப்புக்களின் தகவல்களாக மட்டுமல்லாது கதைக்கு மிகத்தேவையானவைகளாக இருப்பதால் கூடுதல் சுவாரஸ்யமாகின்றது வாசிப்பு

சீன எழுத்துருக்கள், உலகின் உயரமான ஆபத்தான சாலை, இமையமலையின் சிக்கலான தட்பவெப்பம்,  மாமிசம் உண்ணும் புத்த பிட்சுக்கள் பசுவதையை இந்துமதமும் பன்றி இறைச்சியை இஸ்லாமியமும் ஏன் தடைசெய்கின்றன, சிலுவைப்போர்களில்  இறந்த கோடிக்கணக்கானவர்கள் என  எல்லாமே நான் இதுவரையிலும் அறிந்திராதவை. குறிப்பாக பட்டினிப்புத்தர் பற்றிய தகவல் வெகு ஆச்சர்யம்.

//பயத்தினால் மனிதன் தெய்வங்களை உருவாக்கவில்லை// என்பதற்கான விளக்கத்தை வெள்ளி நிலத்தில், வாசிக்கும்  சிறுவர்களுக்கு இதுபோன்ற அறிதல்கள் எத்தனை பெரியதிறப்பை  உருவாக்கும் என்று நினைத்துக்கொண்டேன்

வெறும் சாகசகக்தைமட்டும் அல்ல, கதையில் எந்த இடத்திலும் லாஜிக் இடிக்கவில்லை. குழந்தைகளுக்கு அத்தனை எளிதில் எதையும் போகிறபோக்கில் சொல்லிவிடமுடியாது . வெகு நுட்பமாக கவனித்து எதிர்பாரா கேள்விகள் கேட்பார்கள்.

அவசர வான்வழிபயணத்திலும் ஆங்காங்கெ இறங்கி கழிவறை செல்வதும் எரிபொருள் நிரப்பியபின்னர் பயணம் தொடர்வதும், பனிக்குகைக்குள்ளே தேநீர் தயாரிக்க வேண்டிய பொருட்கள் எப்படி கிடைக்குமென்பதும், பாராசூட் இல்லாமல் குதிக்க சரியான உயரமுமாக  ஏராளமாக நுணுக்கமான,  சரியான தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள்.

நாக்போ மற்றும் நோர்போவை ஒரே மாதிரியான மூன்றெழுத்துப் பெயர்களாகையால் அவ்வப்போது யார் சிறுவன் யார் நாய் என குழப்பிக்கொண்டேன்.

 நாக்போ மிகப்பிடித்த ஒன்றாகிவிட்டது. விபத்துக்குள்ளாகும் ஹெலிகாப்டரிலும் அது உணவைப்பற்றியே யோசிப்பதும், பழமையான மனித எலும்புக்கூடுகளை தின்ன விரும்புவதும் மனிதர்களை தனக்கு  ஒருபடி கீழே இருப்பவர்களாக எடைபோடுவதும், அந்த ‘’கெட்ட’’ லசா நாயைக்கண்டு பயந்து சிறுநீர் கழித்துவிடுவதுமாய், நாக்போவை  கொண்டாடிக்கொண்டு வாசிப்பார்கள் சிறுவர்கள்.

பல இடங்களில் நானும் நாக்போவின் வாயாடித்தனத்தை புன்முறுவலுடனேதான் வாசித்தேன்.

பல புதிய உணவு வகைகளும் அவற்றின் பெயர்களும் ஆச்சர்யமூட்டின. பொடித்த உலர் இறச்சி, ஆட்டுரத்த கேக், வெண்ணைத்தேநீர்,கொழுப்பும் சீனியும் கலந்து உடலுக்கு உடனடி ஆற்றல் தரும்பொருட்டு தயாரிக்கபட்ட பிஸ்கட் என ஆச்சர்யங்களுக்கு மேல் ஆச்சர்யங்கள்

முகுளத்தில் அடிபட்டால் ஏன் உடல் சமனிலை இழக்கின்றது, கரியமில வாயு தரைப்பகுதியில் அதிகம் தங்கி இருப்பதால் நாய்க்கு வரும் ஆபத்து, குகைக்குள்ளிருக்கும் விஷ வாயுவை கண்டறியும் யுத்தி, ஸ்டால்கமைட்ஸ் எனும் பனிக்கூம்புகள் உருவாகும் விதம், இடுங்கிய கண்கள் எப்படி அந்த இடங்களுக்கேற்ற தகவமைப்பாகிறது,, என்பதுபோல பக்கத்துக்கு பக்கம் ஆச்சர்யமூட்டும் தகவல்கள் மிக சுவாரஸ்யமாக கதையுடன் இணைந்து வரும்படி சொல்லப்பட்டிடிருக்கின்றது. உதவ ராணுவ ஹெலிகாப்டர் வரும் பொருட்டு  பனிமலையில் கம்பி நட்டு ஏற்றப்படும் கொடியில்,ராடாரால் அடையாளம் காணப்படும் சாத்தியமுள்ள சிறு மின்னணுக்குறிப்பான் இணைக்கப்பட்டிருப்பதை வாசிக்கையில்  சிறுவர்கள் உள்ளம்  மிகப்புதிய அதிசயத்தகவலை கேட்கும்   கிளர்ச்யை நிச்சயம் அடையும்

கதைக்கு பெரும் பலமாக பிரேம் டாவின்ஸியின் சித்திரங்கள். அந்தசிறுவனை அத்தனை உயிர்ப்புடன் கொண்டுவந்திருகிறார். வெண்பனிச்சாலைகள், ஹெலிகாப்டரிலிருந்து தெரியும்  பாலை, குகைக்குள் டார்ச் வெளிச்சத்தில் தெரியும் தெய்வ உருவங்கள் என மறக்க முடியாதவை அனைத்து சித்திரங்க்ளும். இரட்டை கண்ணாடிக்கதவு வழியே நார்பா வெளியே பார்க்கும் காட்சியை மனதில் எப்படி கற்பனை செய்திருந்தேனோ, அப்படியே அடுத்த பக்கம் வரையபட்டிருந்த  சித்திரம் பெரும் மகிழ்வைக்கொடுத்தது

 வெள்ளி நிலம் எனக்கு திரும்பக்கிடைத்த பால்யம். இன்னும் பல வருடங்களுக்கு நான் குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டிருக்கப் போகும் அருமையான இந்தக்கதைக்கான ஜெ விற்கு நன்றியும் அன்பும்

சுரேஷ் பிரதீப்பின் அபி

இன்று எதேச்சையாக சுரேஷின் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் பார்க்கையில் ‘அபி’ குறித்த லின்க் பார்த்தேன். வேறேதேனும் தலைப்பாக இருந்திருந்தால் பின்னர் கூட வாசித்திருப்பேன் ஆனால் இந்த அபி எனக்கு மிக விருப்பமான பெயர், சங்கமித்ரா,  கருவுற்றிருந்தபோது  இங்கு பொள்ளாச்சி வீட்டிலிருந்தாள் பிரசவம் வரைக்கும். அப்போது ஷாரூக்கான் முதன் முதலில் சின்னத்திரையில் நடித்த தொலைக்காட்சியில் பிரபலமான ஹிந்தி தொடர் ஒன்று ’சர்க்கஸ்’  அதில்  ஷாரூக்கின் பெயர் அபி, அது எனக்கு மிகப்பிடித்த தொடர். இரவு பல்கலையிலிருந்து வீடு வந்த உடன் நான் செய்யும் முதல்காரியம் இந்த தொடரை பார்ப்பதுதான்

மித்ராவிற்கு என்ன குழந்தை பிறந்தாலும் அபியென்று தான் அழைக்கப்போவதாக சொல்லிக்கொண்டே இருந்தேன். மகன் பிறந்து மகாபாரதத்தின் மீதிருந்த பெருவிருப்பின் காரணத்தால் ’’சந்தனுபரீக்‌ஷித்’’ என்று அவனுக்கு பெயரிட்டாலும் ,கல்லூரியில் மட்டுமே அவன் அப்பெயரால் அழைக்கப்படுகிறான் நாங்கள் அனைவருமே அபியென்றே அழைக்கிறோம் அவனை

எனவே, அபியென்னும் தலைப்பில்  கவரப்பட்டு இன்று பின் மதியம்  வாசிக்கத்துவங்கினேன். பலத்த மழைக்கான ஆயத்தங்களுடன் வானிலையும் நல்ல குளிரும் இருந்ததால் அதிகாலை மட்டுமே  ஒரு சிறிய  கப் காபி என்னும் வழக்கத்திற்கு விரோதமாக இன்னொரு காபியும் கலந்துகொண்டு என் பிரிய கல்மேசைக்கு எதிரில் அமர்ந்து  வாசித்தேன்.  ஒரு பகுதி வாசித்தபின்னரே இது Non linear   narrative முறையில் எழுதபட்டது என்று மனசிலானதால் மீண்டும் முதலிலிருந்து வாசித்தேன்.

அபி, அச்சு,ஸ்ரீ,சரண்  நான்கு பேரின்  கதை. அபிக்கும் அர்ச்சனாவிற்கும் இரண்டு வாய்ப்பு தந்திருந்த நீங்கள் ஏன் சரணுக்கு அளித்த  ஒரு வாய்ப்புக்கூட ஸ்ரீக்கு கொடுக்கவில்லை என தெரியவில்லை. ஸ்ரீயின் பார்வையிலும் ஒரு பகுதி இருந்திருக்கலாம். மனைவியின் அலைபேசியை சோதிக்காத கணவர்களே இல்லாத உலகம் போலும் இது, எனினும் ஸ்ரீ குறித்து offensive  ஆக ஏதும் இல்லை இந்தக்கதையில்.  பயிற்றுவிக்கப்பட்ட கண்ணியத்துடனான நல்ல கணவன்,  மனைவியின்  extra marital affair  குறித்து தெரிந்ததும் விலகிக்கொள்கிறான் அவ்வளவே இல்லையா?

ஆனால் ஒரு பெண்ணாக எனக்கு இதில் ஸ்ரீயின் கோணம் என்னவென்று அறிந்துகொள்ளும் ஆவலிருந்தது. இதுபோன்ற தாம்பத்தியத்தை தாண்டின மீறின உறவுகள் மிக வெளிப்படையாக அதிகம் தெரியவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில்,  இதற்கு பெரும்பாலும் பெண்களின் அடங்காமை அல்லது அதீத பாலுறவு நாட்டமே காரணமாய் சித்தரிக்கப்படுகின்றது. நல்ல துணையொன்றிற்கான தேடல் பெண்களுக்கும் இருக்குமல்லவா? மேலும், பாலுறவைத்தாண்டிய சந்தோஷங்களை அறிந்துகொண்ட பெண்களும் இருக்கிறார்கள்

வேலிதாண்டுவதென்பது ஆண்களின் பிறப்புரிமை யாகவும் , நடத்தை கெட்ட பெண்களே எல்லைகளைத் தாண்டுவார்கள் என்பதுமே காலம் காலமாக நிலவிக்கொண்டிருக்கிறது இங்கு. நடத்தை, அதிலும் நல்ல நடத்தை என்பதற்கான  standardization   யார் நிறுவியது?

Arranged  திருமணங்கள்,  இனிமேல் அவனும் அவளும் ஒரே கூரையின் கீழ் ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு வாழ்வதற்கான ஒரு ஏற்பாடு , ஒரு ஒப்பந்தம் அவ்வளவே! பலருக்கு மணவாழ்வை பாதி முடித்தபின்னரே தனக்கு  எல்லாவிதத்திலும் இணையான, காதலும் சாத்தியமாகும் ஒருவரைச்சந்திக்கும் வாய்ப்பே வருகின்றது. முன்பைப்போலில்லாமல் இப்போது அப்படியான வாய்ப்புகளை பலரும் உபயோகப்படுத்தியும் கொள்கிறார்கள்.  காலம் மாறிக்கொண்டிருக்கையில் அதற்கேற்றபடி வாழ்வுமுறையும்  பெருமளவில் மாறிக்கொண்டிருக்கின்றது அப்படியான மாற்றமொன்றினை இலகுவாக ஆர்ப்பாட்டமின்றி சொல்லும் கதையே இது

ஜெ அவர்கள் இப்போது  ஊட்டி முகாமில் கூட சொல்லிக்கொண்டிருந்ததுபோல, ஒரு நல்ல கதை அல்லது நல்ல கவிதையை வாசித்து முடித்ததும் ஓகே   so what ?  என்று வாசகன் கேட்காதபடிக்கு இருக்கணும் அது. அபி ஸ்ரீயின் மனைவி அவளுக்கு சரணுடன் கூடுதல் நட்பு இதை தோழி அர்ச்சனாவும் அறிவாள் கணவனுக்கு தெரிந்து அவன் விலகிவிடுகிறான்,  so what?  என்று கேட்டிருக்கலாம் இதை linear  கதையாக எழுதி இருந்தீர்களென்றால்.

ஆனால் இக்கதையை இப்படி கதாபாத்திரங்களின் கோணங்களில்  மாற்றி மாற்றி வாசிக்கையில்,  அது ஏற்படுத்தும் பாதிப்பே இதன் வெற்றி

அதில் வரும் பல நிகழ்வுகளை  என் சொந்த வாழ்வுடன் தொடர்பு படுத்திக்கொண்டேன், கதை முடிந்தபின்னர் மழை துவங்கியதால் கொடியில் உலர்ந்துகொண்டிருந்த துணிகளை வாரிக்கொண்டுவருகையிலும்  தோழியை பேருந்தில் ஏற்றிவிட சென்ற சரணைக்காணோமென்று காத்திருக்கையிலும், கதையை உள்மனசு அசைபோட்டுக்கொண்டே இருந்தது

அர்ச்சனாவின் தோழமை அருமை கணவருடன் கொஞ்சிக்கொண்டிருந்துவிட்டு பிரிவுத்துயரில் கண்ணீர் விடும் அபிக்கும் ஆறுதல் அளிக்கிறாள், அலுவலகத்தில் புதிய நட்பை முன்பே யூகித்தும் தடையோ , பாக்கியராஜ் கதைகளில் வரும் பெரிய கண்ணாடி போட்டுக்கொண்டு வரும்  முதிர்கன்னியைப்போல புத்திமதியோ சொல்லாமல் அப்பொழுதும் உடனிருக்கிறாள்.  இந்த நேர்மறைத்தோழமை என்னவோ ஆறுதலாக இருந்தது ஏறக்குறைய அபியின் மனச்சாட்சியைபோல அச்சுவின் பாத்திரம் அர்ச்சனாவைப்போல இதை ஆரம்பத்திலிருந்து கவனித்தும், ஸ்ரீயுடனான உறவிலும் சரணுடனான உறவிலும் இரண்டுபேரும் இல்லாத பொழுதிலும் உடனிருக்கும் தோழமை நிஜத்தில் யாருக்கும் கிடைபதில்லை.

சரணின் முகம் இறுகியிருந்ததைத்தவிர வேறேதும் சொல்லாமலேயே அவன் என்ன சொல்லியிருப்பானென்று வாசகர்களை யூகிக்க வைத்ததும் அருமை

அபி இறுதியில்  ’இருக்கட்டும் ஒரு சேஃப்டிக்கு’ என்னுமிடத்தில் நானும் புன்னகைத்தேன்

சரண் வந்து எனக்கும் அவனுக்குமாக சிற்றுண்டி சமையலறையில் தயாரித்துக்கொண்டிருந்தான், இந்த கதையை கூடத்திலிருந்து  இன்னொரு முறை வாசித்து  HBO channel  ஐப்போல  suitably modified version  ஆக அவனுக்கும் சிலவற்றை மட்டும் கத்தரித்துவிட்டு சொல்லிக்கொண்டிருந்தேன். சரண் என்னும் பெயரைக்கேட்டதும் நான் வேண்டுமென்றே  அந்தப்பெயரைச்சொல்கிறேன்  என்றெண்ணிக்கொண்டான். வந்து வாசித்து ஊர்ஜிதம் பண்ணிவிட்டே மீண்டும் சமையலறைக்கு  போனான்

முழுக்க கேட்டு முடித்ததும்  எங்கள் வீட்டுக்குப்பின் வீட்டிலிருக்கும் கவிதாவின் இதுபோன்றதொரு சிறு மீறலுடனான வாழ்வொன்றினைக்குறித்து அவன் இக்கதையை  relate  பண்ணி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவனின் இந்த மனமுதிர்ச்சியையையும் இக்கதை அவனைபோன்ற பதின்பருவத்திலிருக்கும் இளைஞர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்குமென்பதையும்  நான் எதிர்பார்க்கவேயில்லை

இறுதியாக இன்னுமொன்று, சுரேஷ் எழுதுகிறான் என்று முகப்பில் வாசித்தாலும் கதையில் எங்கும் சுரேஷை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. இக்கதை சுரேஷின் முந்தைய எந்தக்கதையையும் நினைவூட்டவில்லை எந்த வரியிலும்  சுரேஷின் ஸ்டைல் என்று ஒன்றை அடையாளம் காணவும் முடியவில்லை முழுக்க வேறாகவே இருக்கின்றது இவரின் ஒவ்வொரு கதையும்

எப்போதுமே விரிவாகவே எழுதுபவள் நான் என்பதால் இக்கதையினைக்குறித்து மட்டும் எதிர்வினையாற்றாமல்  பலதையும் நினைவுக்கு கொண்டு வரும் கதையாகிவிட்டபடியால் இன்னுமே இதன் நீளம் அதிகமாகிவிட்டது

எப்போதும் நினைவிலிருக்கும் கதைகளில் ஒன்று அபி, நன்றி சுரேஷ்

அருண்மொழி ஜெயமோகன் அவர்களின் பனைகளின் இந்தியா குறித்து!

 எப்பொழுதும் ஜெ அவர்களின்  தளத்தை அன்றன்றே பார்த்துவிடுவேன். இந்த வாரம் முழுதும் ஊர்த்திருவிழாவென்பதால் நானும் சரணும் அதில் மும்முரமாக இருந்ததில் சிலநாட்கள் பதிவுகளை வாசிக்காமல் விட்டுவிட்டேன் அதில்  அருணா அவர்களின் பனைமரச்சாலை பதிவும் சேர்ந்து தவறிவிட்டது.

இன்று அதிகாலையிலேயே பனைமரச்சாலை பற்றிய  அவரது விமர்சனத்தை வாசித்தேன். அது குறித்துச்சொல்லும் முன்னர்  அவரது எழுத்தைக்குறித்த என் பொதுவான அபிப்ராயத்தையும் சொல்லிவிடுகிறேன். ஜெ சாரின் எழுத்துக்களை ஆழ்ந்து  வாசிக்கையில் அவரது மொழி எப்படியோ பெரும் பாதிப்பை உண்டு பண்ணி எங்களின் அகமொழியையும் மேம்படுத்திவிடுகிறது. 10 வருடங்களுக்கு முன்பிருந்த தேவியின் எழுத்துக்களுக்கும் (கடிதங்களிலும் விமர்சனங்களிலும்தான் ): ) இப்போதைக்குமான எழுத்துக்களுக்கும் இருக்கும் பெரும் வித்தியாசத்தை யாராலும் சொல்லிவிட முடியும். சமீபத்தில் நான் gender knowledge குறித்து ஒரு உரையாற்றியதின் ஒலிப்பதிவினை  கேட்டபொழுது திகைப்பாயிருந்தது. பெரும்பாலும் ஜெ சாரின் கருத்துக்களை அப்படியேதான் பேசியிருந்திருக்கிறேன். காப்பி அடிக்கலை ஆனால்  என் மனதில் அப்படி அவர் சொன்ன, எழுதின கருத்துக்கள் வலுவாக பதிந்திருக்கின்றன. என் உரைகளைக்கேட்ட்பவர்களும், நான் எழுதுவதை தொடர்ந்து வாசிப்பவர்களும் ஜெவின் எழுத்துக்களை வாசிப்பதனால் செம்மைப்படுத்தபட்டிருக்கும் எனது மொழியினைக்குறித்து சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

பேசும்போதும் அப்படியே! சரணின் ஆசிரியர் ஒருவரிடம் இரண்டு நாட்கள் முன்பு பேசிக்கொண்டிருக்கையில் அவரது நண்பரின் மரணம் எப்படி தவிர்க்கமுடியாமலானதென்று அவர் வருத்தப்பட்டுக்கொண்டபோது சமாதானமாக நான் ’’வேறென்ன சார் ஊழ்தான்’’ என்றேன். அவர் அச்சொல்லை முதன்முறையாக கேட்கிறார் போல. அப்படியே திகைத்து ’’என்ன சொன்னீங்க’’ என்றார். நான் சுதாரித்துக்கொண்டு ஊழ் சார், fate, destiny அது , என்றேன். உடனிருந்த சரண் கண்களால் புன்னகைத்தான்

ஆனால்  அருணாவின் எழுத்துக்களில் அப்படி  ஜெவின் influence ஏதும் இல்லாமலிருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை அளிக்கின்றது. சீரான ஆழ்ந்த தெளிவான முற்றிலும் சாரிடமிருந்து வேறுபட்டிருக்கின்ற மொழி உங்களது.  எப்போதும் போலவே இதையும் எழுதி விடுதியிலிருக்கும் சரணிடம்  அலைபேசியில் வாசித்துக்காட்டினதும் ’’ எப்போவும் ஏன் ஜெ சாருடனேயே எல்லாருடையதும் ஒப்பிட்டு பார்க்கிறே?, இதை செய்யாதேன்னு சொல்லியிருக்கிறேனில்ல ’’ என்று  கடிந்துகொண்டான் இதைமட்டும் உங்களுக்கு எழுதவே கூடாதென்றும் கண்டிப்பாக சொன்னான்.

இதற்கு முன்னரும் அவர் எழுதினதை வாசித்து ரசித்திருக்கேன். சோர்பா, நீல ஜாடி இப்படி

இப்போது  இந்த பனைகளின் இந்தியா வாசிக்கையில் அவருடையதைப்போலவே எங்களுக்கும் ஒரு அழகிய பால்யம் வாய்த்திருந்ததை நினைவுகூர்ந்தேன், நானும் சங்கமித்ராவும் (அக்கா) வேட்டைக்காரன் புதூரில் இப்படி வேம்பு, பனை மா என மரங்களுடனும் ஆடு மாடுகளுடனும் ஆத்தாவீட்டில் மகிழ்ந்து வாழ்ந்திருந்தோம். வாழ்வின் துயர்கள் தொட்டிராத காலமென்பதால் மீள மீள நினைவுக்கு கொண்டு வந்து மகிழும் வெகுசில நினைவுகளில் அந்த கிராமத்து நினைவும்   எப்போதும் இருக்கும்.  வேப்ப முத்துக்கள் எனப்படும் வேம்பின் பழக்கொட்டைகளை, இலந்தை மற்றும்  சூரிப்பழங்களை சேகரிக்கவும்,  பனங்கூம்புகளை வேகவைத்து சாப்பிடவும்,   பிடிக்க முயற்சிக்கும் விரல்களுக்குள் அடங்காமல்  உயிருள்ளவைபோல நெளிந்து தளும்பும் நொங்குகளை பனையோலையில் வைத்து  முகமெங்கும் ஈஷிக்கொண்டு சாப்பிடவும்,  விரல்கள் புண்ணாகும் அளவிற்கு  நொங்குகளை நோண்டி எடுத்து சுவைத்தபின்னர் பனம்பழங்களில் வண்டி செய்து தெருவெல்லாம் தள்ளிக்கொண்டே விளையாடவும் தான் விடுமுறை முழுக்க செலவாகும். அருளப்பட்ட நாட்கள் அவை

 பனை வசீகரிக்கும் ஒரு மரமல்ல, அருணா சொல்லியிருப்பது போல அது ஒரு அமானுஷ்ய மரமென்னும்  எண்ணத்தைத்தான் உருவாக்கும் என்றாலும் எனக்கு அம்மரத்தின் மீது  விருப்பும் வெறுப்பும் ஏதுமிருந்ததில்லை காட்சனை , அவர் எழுத்துக்களை சந்திக்கும் வரையிலும்

 ஒரு தாவரவியலாளராக மட்டுமே பிற மரங்களைப்போலவே பனையைக்குறித்தும் கொஞ்சம் அறிந்திருந்தேன். ஆனால் தளத்தில் காட்சனைக்குறித்தும் பனைமரச்சாலை பயணத்தைக்குறித்தும் அறிந்துகொண்டபின்னர் காட்சனுக்கு எழுதிய நீண்ட கடிதமொன்றுக்கு பதிலாக அவர் அனுப்பிய கடிதத்தின் பின்னர் பனையை நான் மிக நெருக்கமாக அறிந்துகொண்டது மட்டுமன்றி நேசிக்கவும், வழிபடவும் செய்தேன் அவரளவிற்கே!

இன்னும் அந்தப்புத்தகம் எனக்கு கைக்கு கிடைக்கவில்லை என்றாலும் அது அத்தியாயங்களாக எழுதப்பட்டபோது அனேகமாக எல்லாப்பதிவுகளையும் பின்னிரவில் காட்சன் வலையேற்றும் வரை காத்திருந்து வாசித்திருக்கிறேன். முழுமையாக புத்தகமாக வாசிக்கும்  நிறைவு இனிமேல் தான் கிடைக்கும் என்றாலும் அருணா எழுதியிருப்பது அப்படி ஒரு முழுமையான புத்தக வாசிப்பின் நிறைவை உண்டாக்கியது. அழகாக பனையைக்குறித்த பின்தொடரும் நிழலின் குரல் மேற்கோளில் துவங்கி  அவரின் ன் இளமைக்கால பனை தொடர்பான நினைவுகளைச் சொல்லி, பின்னர் காட்சனின் பயணத்தை,  வழித்தடத்தை அவர் பார்வையில் பனையை, அவரின் மொழிவளத்தை, காட்சன் பனையில் கிருஸ்துவையும் தன்னையும் கண்டு கொள்ளும் இடங்களை அருணாவின் இன்னாள் வரையிலான   பனை குறித்தான பிம்பம் வாசிப்பின் பின்னர் எப்படி மாறியிருக்கிறதென்பதையெல்லாம் சொல்லி முடிக்கிறார்.

இடையே பனை குறித்த ஒரு நாட்டுப்புறக்கதையொன்றினையும் சொல்லியிருக்கிறார். அதை இது வரையிலும் எந்த வடிவிலும் நான் கேள்விப்பட்டதேயில்லை. ஆர்வமாக வாசித்தேன். எங்களூரில் கணவரின்றி குறைப்பட்டுபோன பெண்களுக்கு ஒரு முருங்கை மரமும் எருமையும் கொடுத்தால் போதும் ஒழுக்கமாக ஜீவித்துக்கொள்வாளென்று சொல்வதைத்தான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். எருமையும் பனையும்   முருங்கையும் நிச்சயம் அடித்தட்டு மக்களின் வாழவாதாரங்களில் மிக முக்கியமானவை

பனையில் காட்சனைப்போல ஏசுவைக்காண வாசிக்கும் அனைவராலும் இயலாதென்றாலும் பனை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான மிக முக்கியமான ஒரு மரமென்பதை கட்டாயம்  பனைமரச்சாலையை வாசிக்கும் அனைவருமே உணரமுடியும் .  இந்தப் பதிவில் காட்சன் எங்கு பயணத்தை துவங்கினார், நீண்ட அப்பயணத்தில் எங்கெங்கு தங்கினார், யாரையெல்லாம் சந்தித்தார், எப்படி பனையை ,பனையின் பாதையை, பனையை நம்பியிருக்கும் மக்களை தொடர்ந்தார், என்பதையெல்லாம் சுருங்க ஆனால் சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார் அருணா

காட்சனின் பதிவுகளை, அவரது இலட்சியத்தினை அவரது கனவுகளை கொஞ்சமும் அறியாதவர்களுக்கும் இப்புத்தகத்தை வாங்கும் ஆவலை உருவாக்கும் விதமாக பதிவு எழுதப்பட்டுள்ளது.

//  நம்பிக்கையும் சோர்வும் மாறி மாறி வரும் பயணம்// பனை சார்ந்த தொழிலாளர்கள் குறைந்துவருவதென்பது கடக்க முடியாத அகழியாக மாபெரும் சுவராக முன் நிற்கும் பிரச்சனை // அரசே  மதுக்கடைகளை ஏற்று நடத்தும் தமிழகத்தில் பனை சார்ந்த பிரச்சனைகள் அத்தனை சுலபத்தில் தீராது என்பதையெல்லாம் எளிமையாக ஆனால் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் அருணா

 உலகளாவிய பனைப்பயன்பாட்டின் கூறுகளை காட்சனின் பார்வையிலும்,    கிருத்துவ மதபோதகரான அவர் பனையின்  பிறசமயத்தொடர்புகளை தேடிச்செல்வதையும், அவரின் ரசனையை கலையுணர்வை இப்படி எல்லாவறையும் அழகாக தொட்டுத்தொட்டு எங்கள் முன்னால் தீற்றி  பனைமரச்சாலையைக்குறித்த ஒரு அழகிய  சித்திரத்தை விரிக்கிறார் அருணா

//போகிற வழியில் அவர் மயங்கி நிற்கும் கோட்டைகள் , கோவில்கள், தேவாலயங்கள், ஏரிகள், அஸ்தமனசூரியன் எரிந்தணையும் பனங்காடுகள் என முழுமையான ஒரு பயண அனுபவம் இந்நூல்// இதை ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க அருணா.

//பயணம்  நம்முள் நிகழ்த்துவது என்ன? மனதின் சுருள்கம்பி மெல்ல முறுக்கவிழ்கிறது. மனம் இலகுவாகிறது.நிலக்காட்சிகள் மாறத் தொடங்கும்போது வீடு, வாசல், சுற்றம் விலகிப் போக நாம் புதிய உலகிற்குள்நுழைகிறோம். அக்கணங்களில் நேற்று இல்லை, நாளை இல்லை, சஞ்சலங்கள் இல்லை. முதலில் ஒரு பரவசம்,உற்சாகம். பிறகு அதன் அலைகளடங்கி அதுவே ஆழ்நிலை தியானமாகிறது// இந்த பத்தியில் எனக்கு அத்தனை அறிமுகமில்லாத அருண்மொழி நங்கை என்பவரை மிக அணுக்கமாக அறிந்துகொண்டேனென்றே சொல்லலாம்

//பெண்கள்  கால் பதிக்க இயலா நிலவெளிகளில் அலைந்து திரிவது ஆண்களுக்கு மட்டுமேயான ஒரு வரம்இந்தியாவில். அதன் விடுதலையும்  அவர்களுக்கே இன்றுள்ளது.// இதையும் நான் மிக ரசித்தேன். இனி அருணாவின் எழுத்துக்களை அவர் பெயரைப்பார்க்கும் முன்னரே நான் அடையாளம்  கண்டுகொள்ளக்கூட முடியுமென்று  இவ்வரிகளை வாசிக்கையில் நம்பிக்கை வந்தது

எனக்கும் ஒற்றைப்பனையை காண்கையில் துக்கமாக  இருக்கும்  இவ்வுலகு தாட்சண்யமின்றி கைவிடப்பட்டவைகளில் அதுவும் ஒன்றெனத் தோன்றும். புகைப்படங்கள் இல்லையென்னும் குறையையும் புகைப்படங்கள் நம்முடன் மிக அதிகமாக உரையாடுகின்றன என்பதையும் அருணா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இறுதியாக  அருணா   அவருக்குள் செய்துகொண்டதைபோலவே   பனைமரச்சாலையை  வாசித்து முடித்த அனைவருக்கும் இனி அவரவர் மனதில் அதுவரை இருந்த  பனைசார்ந்த பிம்பங்களை மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டிருக்கும்

அருணாவிற்க்கு பனை தூய  கருப்பட்டியின்  இனிப்பாக,  பனங்கற்கண்டின்  படிக ஒளியாக, அக்கானியின்சுவையாக, நுங்கின் குளிர்ச்சியாக  வளர்ந்திருக்கிறது. எனக்கு பனை என்பது தாவரவியல் பாடங்களில் ஒன்றாக  மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டிய மரங்களில் ஒன்றாக  மட்டுமல்ல,  வானளாவி நின்றுகொண்டு எளிய மானுடத்தை, அவற்றின் கீழ்மைகளை  குனிந்தபடி  புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் இறையின் வடிவமும் கூட

காட்சனின் பனைப்பயணத்தைக்குறித்த  ஒரு அழகிய அறிமுகத்துடன் அதில்  அவருடன் பயணிக்கவும் பலருக்கு விருப்பத்தை உண்டாக்கியிருக்கும் பதிவு இது

அருணாவிற்கு நன்றி

தும்பி ஜனவரி 2019 இதழ்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் விஷ்ணுபுரம் குழுமத்தில் தும்பி என்னும் சிறுவர் இதழில் வந்திருந்த  உலகமே அழிந்துபோனபின் ஒற்றை மலரிருக்கும் ஒரு செடியை கண்டு பிடித்த சிறுவனும் சிறுமியுமாய் அதை வளர்த்து காடாக்கி மீண்டும் ஒரு உலகை படைக்கும் கதையொன்றினை குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அக்கதை மிகவும் பிடித்திருந்தது

நான் என் மகன்கள் இப்போது வளர்ந்து கல்லூரிக்கும் பள்ளி இறுதி வகுப்பிற்கும் சென்றுவிட்டபோதிலும் அவர்களின் பால்யத்திலிருந்து , இரவிலும் நேரமிருந்தால் பகலிலும் கூட இன்னுமே கதை சொல்லிக்கொண்டேயிருக்கும் ஒரு கதை சொல்லி.

அப்பொழுதே ஒரு நண்பரிடம் தொடர்பு எண்னை வாங்கி  அந்த வாரமே தும்பியின் சந்தாதரர் ஆனேன்

 பின்னர் தொடர்ந்த சில மாதங்களாகவே தும்பியை வாசிக்கிறேன். அழகுப் பதிவுகள் ,நான் சிறு வயதில் மிகப்பிரியமாக வாசிக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் வெளியீடாக வரும் ரஷ்யமொழிக்கதைகளின் தமிழாக்கம் வரும் புத்தகங்களை அச்சாக அபடியே நினைவூட்டும் தாள்களும் சித்திரங்களும் வடிவமைப்புமாக இருக்கின்றது தும்பி.

தமிழிலும் ஆங்கிலத்திலும் இருப்பதால் வளரும்  குழந்தைகளுக்கு இது மிக விருப்பமுள்ள ஒன்றாகவும்  ஏக சம்யத்தில் இருவேறு மொழிகளில்   சொற்களை விளையாட்டாக விரும்பிக் கற்றுக்கொள்ளும்படியாகவும் இருப்பது மிகவும் பிடித்திருந்தது. தும்பியின்  சில பிரதிகளை சில மாதங்களாக வாசித்து அவற்றைக்குறித்து எழுதனும்னு நினைத்தாலும் எழுதியதில்லை எப்படியோ விட்டுப்போய்விட்டது ஆனால் இந்த இதழ் எழுதியே ஆகவேண்டும் என்னும் விருப்பத்தை பக்கத்துக்குப்பக்கம் உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது

ஜனவரி மாத தும்பி 22  முன்னட்டைப்படமும் வடிவமைப்பும் மிக அழகு. மேலிருந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து சிரிக்கும் பெண்ணும், கீழே கோழிக்குஞ்சு தோளில் அமர்ந்திருக்க கிளர்ந்து சிரிக்கும் சிறுவனும் அதுவும்  கருப்பு வெள்ளையில். Wonderful !  இதன் பொருட்டு முகம்மது மஹ்திக்கு பிரியத்துடன் கைகுலுக்கல்கள். முன்னட்டை துவங்கி, வசீகரிக்கும் உள்ளடக்கங்களுடன் பின்னட்டையில் கணேசனின் நிழல் கவிதை மற்றும் அந்த எளிய கோலச்சித்திரம்   வரைக்குமே கண்னையும் மனசையும் நிறைத்தது தும்பி.

கருப்பு வெள்ளையிலும் வண்ணத்திலுமாய் இதழ் முழுக்க இருக்கும் பிரமாதமான புகைப்படங்களூக்கு கார்த்திகேயன் பங்காருவிற்கு அன்பும் நன்றியும்.

தண்ணீரை சிதறடித்து விளையாடியபடி குளிப்பாட்டப்பட்டுக்கொண்டிருக்கும் குழந்தயும் அதை உயரத்தில் அமர்ந்தபடிக்கு  வேடிக்கை பார்க்கும் யாரோவின்  சின்னஞ்சிறு பாதங்களும், உடை நனையாமல் தூக்கிப்பிடித்தபடி ஓடிவரும், தோழியின் தோள்களை கட்டிக்கொண்டு சிரிக்கும், குடைக்குள் மூக்கை சுருக்கிக்கொண்டும் கன்னக்குழியுடனும் மலர்ந்து சிரிக்கும், கடற்கரை மணலில் கால்பாடாமல் எம்பிக்குதிக்கும் சிறு துணிப்பையில் எதையோ ஆர்வமாக எடுக்கும் , அதை எட்டிபார்க்கும், பள்ளிக்கைப்பிடிச்சுவற்றில்  கூட்டமாக பூப்பூத்ததுபோல் அமர்ந்திருக்கும் சிறுமிகளும்.  கலங்கிய நீரில் வெங்காயத்தாமரைகளுடன் சேர்ந்து குளிக்கும்,  பலூன் விட்டுக்கொண்டு மகிழ்ந்துகொண்டும், கோவில் மணியை அடிக்க தோழியையோ சகோதரியையொ தூக்கிக்கொண்டிருக்கும், மாட்டுக்கொம்பினிடைவெளியில் தெரியும் குதிநீச்சலுக்கு தயாராகி இருக்கும் நனைந்த சிறுவர்களுமாய்  காமிரா சிறுவர்களின் உற்சாக உலகினை அப்படியே கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது. அனைத்துப் புகைப்படங்களும்  அற்புதம்

சின்ன சின்னதா கதையில் வரும் லேன் மோர்லோவின் ஓவியங்கள் வெகு அருமை+அழகு. படம் பார்த்துக்கதை சொல்லுகையில் கேட்கும், பார்க்கும் குழந்தைகளூக்கு இக்கதை மறக்கமுடியாத ஒன்றாக மனதில் எப்போதைக்குமாய் இருக்கும்படிக்கான புகைப்படங்கள். தும்பிகளும் வண்ணத்துபூச்சிகளும் பறந்துகொண்டிருக்கும் நீர்நிலை, மரத்தடியில் படுத்துக்கொண்டு இடக்கையில் எழுதும் நீர்நாய்க்குட்டி. அதை கிளைமேலிருந்து பார்க்கும் ஒரு மீன்கொத்தி , தாவரவியல் இலக்கணம் பிழைக்காத ரெசீம் மஞ்சரிகளுடனான பூச்செடிகள், நீரில் மிதக்கும், பல்டி அடிக்கும் கரடிகள், வாஞ்சையுடன் மகனை தழுவிக்கொண்டிருக்கும் அம்மா நீர்நாய், வழுக்குப்பாறைகள் அதன் மேல் பச்சைத்தவளைகள், மீன்கள், நத்தைகள், நீர்க்குமிழிகள்,  டைஃபா, வேலிஸ்னேரியா போனற நீர்த்தாவரங்கள், கரைகளில் செறிந்து வளர்ந்து பூத்துமிருக்கும் சேம்புச்செடிகள் என அற்புதமான சித்திரங்கள். சிறுவர்களுக்கு மட்டுமல்ல  மூத்த வாசகர்களுக்குமே மிக இஷ்டமான ஒரு கதையாகிவிட்டது ,,

தாவரவியல் ஆசிரியையாக நான் பலமுறை பக்கங்களை திருப்பித்திருப்பி சித்திரஙகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இதை விட மேலாக  அச்சில் ஒரு கதையை சிறுவர்களுக்கு  வேறெப்படியும் சொல்லிவிடவே முடியாது,

யூமா வாசுகியின் பதிவும் அபாரம். பெற்றோர் அவசியம் இதை வாசித்திருக்கனும்

 இந்த பதிவு என் மனதிற்கு மிக நெருக்கமானதொன்று. என் மகன்கள் மிகச்சிறு வயதில் இருக்கையிலேயே மரமும் செடியும் பூக்களும் பறவைகளும், தவளைகளுமாக அவர்கள் வளரும்படி ஒரு குக்கிராமத்தில் வீடு கட்டியபோது உலகே என்னை எதிர்த்தது. படிப்பு பாழாகிவிடும்  ட்யூஷன் போக முடியாது என்றெல்லாம் எனக்கு  ஆலோசனைகளும் அச்சுறுத்தல்களும் வந்தவண்ணமே இருந்தன.

ஆனால் நான் அங்குதான் சென்றேன் என் மகன்களுடன். பதிவில் சொல்லியிருபதைபோலவே மகன்கள் இருவரும் கதைகேட்டுக்கொண்டு, மரம் செடிகொடிகளுடன் உரையாடிக்கொண்டு, பட்டாம்பூச்சிகளை துரத்தி விளையாடி, மயில்களை, முயல்களை அண்மையிலென அடிக்கடி பார்த்துக்கொண்டு, கைநீட்டினால் தொட்டுவிடலாம் போல நெருக்கத்திலிருக்கும் மலைத்தொடர்ச்சிகள் பிண்ணனியிலான இவ்வீட்டில் பல்லுயிர்ப்பெருக்கின் மத்தில் வளர்ந்தார்கள், பதின்மவயதுபிள்ளைகள் இருக்கும் வீட்டினர் சொல்லும் எந்த புகாரும் இதுவரை இந்த வீட்டில் வந்ததே இல்லை, ஆரோக்கியமாக மிகச்சிறந்து  படிப்பவர்களாக அவர்கள் வளர்ந்திருப்பது இயற்கையுடன் இணைந்த இவ்வாழ்வில் அவர்கள் வாழ்வறியும் திறன் பெற்றமையால்தான்.

 பெரிதுபடுத்தப்பட்ட  எங்களின் வீட்டைப்போலவே இருக்கும் இயற்கை எழிலுடனான ஒரு இடத்தில் இவ்வருடத்திலிருந்து  விடுதியில் தங்கி பள்ளி இறுதி படிக்கும் மகனிடம் நான் தொலைபேசுகையில் நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்பதற்கு முன்னர் நூலக அலமாரியில் தங்கியிருக்கும் அணில் குட்டி போட்டுவிட்டதா என்றே கேட்கிறான். இன்னும் குட்டிகள் வரவில்லையென்றும்  ருத்ரமல்லியும்,  மாவும்,   கலாக்க்காய்ச்செடியும் பூக்கத்துவங்கிவிட்டதென்றும்  நானும் சொல்லி மகிழ்கிறேன்..

ஜான் சுந்தரின் கவிதையில் வகுப்பறை வாசலில் எப்போது வேண்டுமானாலும் பாப்பா அழைப்பாளென காத்திருக்கும் பிங்கி யானைக்குட்டி,  வாலாட்டும் டாமி, சிறகு நறுக்கப்பட்ட கிளியென எல்லாம் மனதில் நுழைந்து தங்கிவிட்டது. முதல் பகக்த்திலேயே முதியவரகளுக்கு பிரார்த்தனையும் பூனைக்குட்டிக்கு நன்றியும் சொல்லும் தும்பிக்கு குழந்தைகளின் தூய உள்ளத்தில் எத்தனை பிரியமான இடமிருக்கும்?

வழக்கமாக தும்பியை வாசித்தும் கதை சொல்லியும் முடித்தபின்னர் உறவினர்களின் குழந்தைகளுக்கு பிரதியை கொடுப்பதை வழமையாக்கியிருந்தேன். ஆனால் இந்த பிரதியை கொடுக்கவே மனசில்லை. வருத்தமாகத்தான் இருக்கின்றது  எனினும் வேறோன்றும் செய்வதற்கில்லை

thumbi.jpg

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்

சாம்ராஜை 2018 டிசம்பர் விஷ்ணுபுரம் விழாவில்  சந்தித்தேன், மேடையில்  இருந்தபோதும், அரங்கிற்கு வெளியே சந்தித்து கவிதைகளைக்குறித்து உரையாடியபோதும் ,எப்போதும் எங்கு இருந்தாலும்  வார்த்தைக்கு வார்த்தை அவரிடமிருந்து வெளிப்பட்ட இயல்பான பகடியில் உடனிருந்தவர்களுக்கும் அரங்கிலும் சிரிப்பு ததும்பிக்கொண்டிருந்தது. மேடையில் அற்புதங்கள் பற்றிச்சொல்கையில் ’ஏசுநாதரைவிட’ என்றதெல்லாம் அத்தனை ரசிக்கும் படியிருந்தது. வாழ்வை இத்தனை இலகுவாக எதிர்கொள்ளும் ஒருவரை நான் சந்தித்து வெகுவருஷமாயிற்று (அல்லது  சந்த்தித்திருக்கவேயில்லை). வாய்கொள்ளாச்சிரிப்புடனேயே அவரை இப்போதும் என்னால் நினைவுகூற முடிகின்றது

 வாழ்வுக்கணங்களை போகிறபோக்கில் சொல்லிச்செல்லும் சாம்ராஜின் கவிதைகளுக்கு நான் ரசிகை

விழாவில் நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் வாங்கிவந்தேன், இன்று 9/1/19 மாலை கல்லூரியிலிருந்து வந்ததும் வழக்கமான வீட்டுவேலைகளுக்கு பின்னர் அதைஒரேமூச்சில்  வாசித்து முடித்ததும்  இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்

விழாவில் பேசும்போதே மலையாளத்திரைப்படங்களுக்கும் அவருக்குமான அணுக்கத்தைப்பற்றி சொல்லியிருந்தாரென்பதால் எனக்கும் அப்படியே என்பதால்  வாசிப்பில் ஆழ்ந்திருந்தேன். மலையாள பாஷைக்கும் திரைப்படங்களுக்கும் நானும் அவரளவிற்கே ரசிகையாதலால் இப்புத்தகத்தில் சாம்ராஜ் சொல்லியிருப்பவற்றை வாசிப்பது நானே என்னுடன் நிலைக்கண்ணாடியில் பேசிக்கொண்டிருப்பது போலிருந்தது.

இந்த புத்தகம் என் மகிழ்வை பலமடங்காக்கி இருக்கிறது.

எனக்கும் மலையாளபாஷைக்குமான உறவை சொல்லிக்கொள்ள யாருமில்லை இங்கு. ஜெ வின் தளத்தில் ஒருமுறை எழுதினேன் கொஞ்சமாக

எனவேஇந்தபுத்தகம் எனக்கு  மிகப்பிரியமான ஒன்றாய் நானே எழுதினதுபோல மயக்கத்தை தருமொன்றாக இருந்தது

மலையாளிகள் அதிகம் புழங்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்தவள் என்பதால்  சின்னவயதிலெயே மலையாளம் அங்கும் இங்குமாக காதில் விழுந்துகொண்டே இருந்தது

என் சகோதரர்கள் திருச்சூரில் வியாபாரம் செய்தார்கள் வெகுகாலம் முன்பு அப்பாவீட்டிலும் மலையாளிகள் வாடகைக்கு குடியிருந்தனர்

ஆனாலும் அப்பாவுக்கு மலையாளிகள் மீது வெறுப்பு இருந்தது ( அப்பாவிற்கு இப்பிரபஞ்சத்தில் அனைவரின் மீதும் வெறுப்பு இருந்தது , இருக்கிறது) கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பக்கூடாது போன்ற பழமொழியை அடிக்கடி சொல்லுவார்

அப்பா எதை மறுக்கிறாரோ அதில் எனக்கு கடும் விருப்பம் உண்டாகும் அப்படியே மலையாள விஷயத்திலும்

அங்கும் இங்குமாக சில மலையாளிகளிடம் சிநேகிதம் வைத்துக்கொண்டேன்  யாத்ரா சித்திரம் வரவேழ்பு என்று மலையாளப்படங்களாக பார்த்தது பள்ளிப்பருவத்தில்

மஞ்சில் விரிஞ்ச பூக்களில் ஷங்கரும் நரிமாமாவும அறிமுகமானர்கள். அந்தபடத்திலிருந்து ஜீப் எனக்கு இந்த நாள் வரை பிரியமான வாகனம். சொல்லிக்கொண்டேயிருக்கிறேன் ஒரு ஜீப் வாங்கனும்னு இன்னும்

ஷங்கரை பிற்பாடு மிக அந்தரங்கமான ஒரு காரணத்தினால் பிடித்திருந்தது. முகில் மாலைகள் வெகுகாலத்துக்கு விழியோரம் நனஞ்சொழுகிக்கொண் டேயிருந்தது

பூர்ணிமா அங்கிருந்து தமிழ்படக்கதாநாயகியானதும் பெயருக்குப்பின்னால் பாக்கியராஜை சேர்த்துக்கொண்டதுமெல்லாம் அறப்பிழை

பல்கலையில் படிக்கையில் துரதிர்ஷ்டவசமாய் யாரும் மலையாளிகள் உடனில்லை. ஆய்வை முடித்து நான் படித்த பாலக்காட்டுச்சாலையிலிருக்கும் அதே கல்லூரியில் பணிபுரியத்துவங்கியதும் மீண்டும் மலையாளப்பிராந்து தலைக்கேறியது

மலையாள மாணவர்களிடம் பாஷையைக்கற்றுக்கொள்ளத்துவங்கினேன். கல்லூரி காலை 8 மணிக்கு துவங்கி மதியம் 1 மணிக்கு முடியும்

வீட்டின் புழக்கடையில் தான் கல்லூரி மதியம் கல்லூரி முடிந்து  1. 20க்கு நடந்து வீட்டுக்கு வந்ததும் தொலைகாட்சியில் 1.15க்கு போடும் மலையாளப்படம் பார்ப்பேன். தினம் தவறாமல் இது நடந்தது  சோஃபாவில் சம்மணம் கட்டிக்கொண்டு அமர்ந்து மடியில் சாப்பாட்டுத்தட்டை வைத்துக்கொண்டு  எச்சில்கை உலர்ந்து காய்ந்துபோகும் வரை முழுப்படமும் பார்ப்பேன் இப்படி ஒரு ஒன்றரை வருடங்களில் நன்றாகவே மலையாளப்படங்கள் பரிச்சயமானது

இந்த மலையாள வட்டு என் வீட்டினரை அச்சமூட்டியது.  வாழ்வின் எல்லாக்கணங்களுமே கல்யாணத்தை நோக்கியே நகர்த்தபட்ட அக்காலகட்டத்தில், கொங்குப்பகுதியைச்சேர்ந்த, பெண்கள் அதிகம் படிக்க சாத்தியமில்லாத ஒரு குடும்பத்தில் அதிகம் படித்ததும், மலையாளம் பேசுவதும் அதில் பித்துப்பிடித்ததும் என் திருமணம் நடக்காமல் போவதற்கான காரணமாகுமென்றெல்லாம் அப்பா மிகைக்கற்பனை செய்துகொண்டிருந்தார். அப்படியெல்லாம் இல்லாமல் துரதிர்ஷ்டவசமாக கல்யாணம் நடந்து அபுதாபி சென்றேன்

அங்கு  மருந்துக்குக்கூட தமிழர்கள் யாருமில்லை  அத்தனை திசையிலும் மலையாளிகள் ஆனால் சோதனையாக எல்லாரும் மாப்ளாஸ் என்று சொல்லப்படும் இஸ்லாமிய மலையாளிகள்

எனக்கு அந்த மலையாளம் மனசிலாக நெடுங்காலமாயிற்று

கொஞ்சம் வேகமும் அதிகம்  அவர்கள் பேசுகையில். எங்களுடன் வீட்டைபகிர்ந்துகொண்டிருந்த ஒரு குடும்பத்துக்குழந்தைகள் என்னை ’மூத்தம்மே’ என்றே விளித்தன, //எந்தா சேச்சி கண்னடை இட்டிருக்குனு காழ்ச்சி கொறைவுண்டோ/? பாங்கு விளிக்குன்ன சப்தம்கேட்டோ ஏச்சி இப்படி விரைவாகவே பேசினார்கள்

முதலில் கலக்கமாக இருந்தது பொள்ளாச்சியில் கேட்டிருந்த  அ மதுர பாஷை கொஞ்சம் கரடுமுரடானது போல

பின்னர் அதுவும் பழகியது

தினம் ஏசியானட் ஆசிரியரைக்கொண்டு மலையாளம் படித்தேன் அந்த 6 வருடங்களில்

இப்போது சரளமாக மலையாளம் பேசுவதற்கு அப்போது  பார்த்த மலையாளத்திரைப்படங்களே காரணம்

சுரேஷ் கோபியிடமிருந்துதான் பல சீத்த வார்த்தைகள் கற்றது. பா, புல்லே விலிருந்து தெண்டி தெம்மாடி  வரைக்கும் அவர்தான் ஆசிரியர்

சுகோ  படங்களை (சரண் அப்பா விசனப்படும்/ கோபப்படும் அளவிற்கு) ரசித்துப்பார்ப்பேன்.அபுதாபி வாழ்வில் நான் இன்றும் திரும்பிப்பார்த்து புன்னகைக்கமுடியும் விஷயமென்று ஒன்றிருந்தால் அது மலையாளப்படங்களை தொலைக்காட்சியிலும் அல்கத்தாரா என்னும் ஒரு விடியோ கேசட் கடைக்கரன் எனக்கென்ன எடுத்து வைத்திருக்கும் புதிய மலையாளப்படங்களை தன்னந்தனியே அமர்ந்தும் மகன்களை மடியிலிருத்திக்கொண்டும் பார்த்திருந்த நாட்கள் மட்டும்தான். மணவாழ்வு காலடியிலிட்டு மிச்சமின்றி தேய்த்து நசுக்கிய பலவற்றில் நல்லவேளையாக மலையாளம் இல்லை. அது  யாருமறியாத  ஒரு ரகசியம் போல உள்ளே ஒளிந்திருந்தது எந்தக்காயமும் படாமல்.

சாம்ராஜ் எழுதியிருக்கும் எல்லாப்படங்களையும் நான சிலமுறையாவது பார்த்திருக்கிறேன் பலேறி மாணிக்யம் தவிர்த்து.

லாலேட்டனைப்பத்தி சொல்லும்போது சாம்ராஜ்  ’’வெயிலைப்போல என்றைக்கும் உள்ள மோகன்லால்’’ என்றது அழகு. ஆம் பெரிதாக தோற்ற மாறுபடுகள் இருக்காது லாலேட்டனிடம், இருப்பினும் திரையில் எப்போதும் நாம லாலேட்டனைத் தவிர்த்து அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் பாத்திரத்தை பார்த்துவிடுகிறோம்

கமல் ரஜினியிடம் அப்படியில்லை  என்ன பாத்திரம்னாலும்  ஏற்று நடிக்கும் ரஜினையும் கமலையும் உணர்ந்தவாறே இருப்பேன்

இயல்பாக பகடி கலந்துசொல்லிக்கொண்டே வரும் சாம்ராஜ்  எதிர்பாராமல்  எடை கூடிய ஒரு சொல்லாட்சியை பிரயோகித்து  திகைத்துபோகச்செய்கிறார்

// உண்மை என்று நாம் நம்புவது எத்தனை சதமானம் உண்மை // மாதிரி

இன்னும் செம்மீன் தமிழுக்கு கொண்டு வரனூம்னு சொல்பவர்கள் இருப்பதை சாம்ரஜுடன் நானும் சேர்ந்து வியக்கிறேன்

’’இத்தர மாத்ரமே மலையாள சினிமாவில்’’  சாம்ராஜ் சொன்னது எப்பொவும் நானும் நினைப்பதுதான். இயல்பா உலகில் இருக்கும் சகமனுஷங்களை ஏன் தமிழ் சினிமாவில் அதிகம் காட்டலைன்னுட்டு

எல்லாருமே அதிமானுடர்களாகத்தான் காட்டப்படறாங்க அதிமானுடர்களா தேவதுதர்களா கடவுளாதான் தான் அங்க நிஜ வாழ்விலும் இருக்காங்க

கேரளாவில அப்படியில்லவேயில்லை

நடிகர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் சாதாரணர்களா இருக்காங்கங்கறதை எனக்கு முதலில் நம்பவே மிடியலை

1 மாதம் நான் ஒரு பயிற்சியின் பொருட்டு திருவனந்தபுரத்தில் தங்கியிருக்கும் போது தமிழகத்தின் ஆர்ப்பாட்டமெல்லாம் கேரள அரசியலில் இல்லையென்றே தோன்றியது எனக்கு. பல்கலையில் ஒரு இளம்பேராசிரியையுடன் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தேன், பின்னரே அறிந்தேன் அப்பெண் முன்முதல்வரொருவரின் மகளென்று. இங்கே வார்டு கவுன்சிலர் அலப்பறையே தாங்க முடியாததென்னும் சூழலில் எனக்கு இது பெருவியப்பளித்தது

அதைப்போலவே தமிழ்சினிமாத்துறையிலிருக்கும் இளைஞர்கள் அனுபவிக்கும் கஷ்டப்பாடுகளையும் மலையாளத்துறையுடன் ஒப்பிட்டும் சாம்ராஜ் சொல்லியிருப்பதும் சத்தியம்தான்

நார்த் 24 காதம் எனக்கு மிகப்பிடித்த ஒருபடம். ஃபகத்தை நான் டையமண்ட் நெக்ல்ஸ் படப்பிடிப்பு   இங்கே வீட்டு வாசலில் சிலநாட்கள் நடந்தபோது பார்த்தேன் முதலில்.  ம்தல் பார்வையில் அப்படி ஒன்னும் சிலாக்கியமாக தோண்றவில்லை. மேலும் அவருடன் கூட இருந்த  நடியின் இடுப்புக்கு கீழிறங்கிய கேசத்தில் நிலையழிந்திருந்தேன். அவரைத் தேடி மம்முட்டியும் மறுநாள் வந்தபோதான் யாரு என்னன்னு  விசாரிச்சேன். ஃபாசிலின் மகனென்று அப்போதான் தெரியும்

இப்போ ஃபகத்தைபோல அத்தனை அழகா இயல்பா நடிக்கற உடல்மொழியிலேயே பாத்திரத்தின் உணர்வுகளைக் நமக்கு காண்பிக்கற ஒருத்தரும் இல்லை. மகேஷிண்டபிரதிகாரம் படத்தின் துவக்கக்காட்சியில் நீல வாரிட்ட ஹவாய்செருப்பை கரையோரம் கழற்றி வைத்துவிட்டு, மேல்சட்டையின்றி ஆற்றில் முங்கிக்குளித்து, நீரில் அடித்துவரப்பட்ட இரண்டு நட்சத்திரப்பழங்களை சேகரித்துக்கொண்டு ஃபகத் கரையேறும் அக்காட்சியில் அப்படியே நடிக்க தமிழிலும் பிறமொழிகளிலும் இனி ஒருத்தர் பிறந்துதான் வரணும்

 மலையாளத்திலும் சேர்த்து. டொவினோ தாமஸ் கொஞ்சம் கிட்டக்க வராருன்னு நினைக்கிறேன் மாயாநதியிலெல்லாம் பிரமாதமா இருந்தது அவர் நடிப்பு.

24 காதத்தில் பிரமாதமா பண்ணியிருப்பாரு ஃபகத். கொஞ்சம் கொஞ்சமா அவரின் ஆளுமை மாறிட்டு வரத பார்க்கறவங்க நுட்பமா உணரமுடியும். ஸ்வாதியும்  நல்லா பண்ணியிருக்கும் அதில். ’ செம்பான் ஜோஸ் வீட்டில் குட்டிப்பாப்பா பிறந்திருக்கற காட்சியெல்லாம்  ரொம்ப நல்லாயிருக்கும்

த்ரிஷ்யம் பிடிச்ச அளவுக்கு பாபநாசம் எனக்கும் பிடிக்கலை ஆசான் ஜெ வசனங்கறதுனாலதான் பார்த்தேன். லாலேட்டனுக்கும் மீனாவுக்கும் நல்ல சேர்ச்சை கமலை விடவுமே.சாம்ராஜ் சொல்லியிருப்பது போல //ஒரு மொழியின் நுட்பத்தை, கலாச்சாரத்தை மற்றொருமொழிக்கு கடத்துவது சாத்தியமிலை// ரொம்ப சரி. த்ருஷ்யத்தின் எதோவொன்று பாபநாசத்தில் மிஸ்ஸிங் என்பதை விட த்ருஷ்யம் பார்த்த த்ருப்தி பாபாநாசம் பார்த்ததில் குறைந்து அல்லது மாசுபட்டுப்போனது போலிருந்தது. பாபநாசம் கமலுக்கு ஏத்தபடி தன்னை மாத்திக்கிட்டது  த்ருஷ்யம். அதான் சோபிக்கலை

அப்புறம் மஞ்சு வாரியர். சாம்ராஜைப்போலவே எனக்கும் அவங்களைப் பிடிக்கும்.ஆறாம் தம்புரானில் உன்னிமாயாவின் பரிசுத்த அழகை அப்படியே மனசில் வச்சுருக்கேன். சின்னமுகத்தில் மாறி மாறி உணர்சிகளை  அற்புதமாகக்காட்டும் திறமை உள்ளவர் மஞ்சு

 அவங்க ரகசிய திடீர் கல்யாணத்தைக்குறிச்சு இந்தியா டுடே தமிழ்பதிப்பில் என்ன அவசரம் இந்தபெண்ணுக்கு? என்று எழுதினாங்க அப்படியேதான் ஆச்சு இல்லையா?. காவ்யாவை அவங்க  அபரிமிதமான கேசத்தின் பொருட்டு மாத்திரம்தான் அதுவரைக்கும் யட்சின்னு சொல்லிட்டுஇருந்தேன். செரிக்கும் யட்சியானு அவளு

இதோ அயூபிண்ட புஸ்தகம் குறித்து சாம்ராஜ் எழுதியதை வாசிக்கும் போது அதே திரைப்படம்  தொலைக்காட்சியில் ஒடிட்டு இருக்கு

’’ஞான்’’ படத்தப்பத்தி சொல்லறப்போ,  பட்டாம்பினு ஒரு ஸ்தலத்தை சொல்லியிருக்கிறார் சாம்ராஜ். நம் ரேவதியுடன் லாலேட்டன் இரட்டை வேஷத்தில் அபிநயிச்ச ஒரு சித்திரத்தில் ’’ஜனிச்சது பட்டம்பியிலா’’ என்பார். அது நினைவுக்கு வந்த்து

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்னும் பேரில், முண்டு கட்டிக்கொண்டிருக்கும் சேச்சிகளை character assassinate பண்ணுவதை நிறுத்தனும் நாமும்

உதயனானு தாரம் நான் மிக ரசிச்ச ஒரு படம்

மீனாவும் லாலேட்டனும் விரும்பி ஆனா திருமணம் செஞ்சுக்காம போயிட்டு பின்னர் மீனா விதவையானபின்னால் ஒருக்கில் அவங்க ஒரு தாமரைக்குளத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து பேசும் படம் ஒண்ணும் என் மனசில் உள்ளே ரொம்ப ஆழத்தில் இருக்குஅழகா

ஆயாள் கதைஎழுதுகையானு, மாயாநதி சார்லி மகேஷிண்டெ பிரதிகாரம் இப்படி பெரிய நீள பட்டியல் இருக்குஎன்கிட்டே

மலையாளப்படம் பார்க்கையில் தனியே பார்த்தாலும் உடன் மிகபிரியமான ஒருத்தரின் கைகளைக்கோர்த்துக்கொண்டு பார்க்கறதுபோல  இருக்கும். அப்படித்தான் இந்த புஸ்தகம் வாசிக்கும் போதும் இருந்தது. சாம்ராஜின் இந்த புத்தகம் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது வாசிக்கையில்

 எப்போதும் மலர்ந்து, இதயத்திலிருந்து சிரித்தபடி இருக்கும் சாம்ராஜ், பகடியை  வெகு சரளமாக வெளிப்படுத்தும் சாம்ராஜ், கவிஞர் சாம்ராஜ், மலையாளப்படங்களை என்னைப்போலவே விரும்பிப்பார்க்கும் சாம்ராஜ் இப்படி அவரின் வேறுபட்ட பரிமாணங்களை இப்போது நான் அறிந்திருந்தாலும், அன்று விஷ்ணுபுரம் நிகழ்வில்  குணமாக்க முடியாத தசைத்தளர்வினால் நலிவுற்றிருக்கும் வல்லபியின் நாற்காலியின் சக்கரத்துக்கு அருகில் முழந்தாளிட்டு அவளுக்கு இணையாக அமர்ந்து வாஞ்சையுடன் அவளிடம் பேசிக்கொண்டிருந்த சாம்ராஜ் என்னும் அவ்விளைஞரையே நான அதிகம் நேசிக்கிறேன்

யாவற்றிற்கும் வந்தனம் சாம்ராஜ்

ஒரு இந்தியப்பயணம்- ஜெ

இந்த ஒருமாத செமெஸ்டர் விடுமுறையில் எந்த பிரயணமும் இல்லாமல் புத்ததகங்களாகப் படித்துக்கொண்டே இருக்கிறேன். விஷ்ணுபுரம் மீள் வாசிப்பு 4 நாட்களில் முடித்தேன். காலை 9 மணிக்குள்  எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு புத்தகமும் கையுமாக தென்னை மரத்தடியில் அமர்ந்து நாள் முழுதும் வாசிக்கும் அருமையை, சுகத்தை எந்த இடையூறுமின்றி இப்போதுதான் அனுபவிக்கிறேன்

இந்தியா என்னும் கனவிற்குள் ஒருதவம் போல  ஜெ பிரயணம் செய்த ’’இந்தியப்பயணத்தை’’ நேற்று ஒரே மூச்சில் வாசித்தேன். வழக்கமாக  அவரின் பயண அனுபவங்கள்  எனக்கு ஏற்படுத்தும் பொறாமை உணர்ச்சி இம்முறை இல்லாமல், என்னவோ நானே நீண்ட பயணமொன்றை போய் வந்ததுபோல மகிழ்ச்சியாக இருந்தது.    பழகிப்போன செளகரியங்களிலிருந்து வெளியே வந்தால் எனக்கும் சாத்தியமான் ஒரு பயணம்தான்  இது என்றும் தோன்றியது. இதுவரை போகலைன்னாலும் இனி போகலாமென்னும் நம்பிக்கையும் வந்திருக்கின்றது

’’இந்தியா இன்னும் தீர்ந்துபோகவில்லை, எஞ்சி இருக்கின்றது’’, எனறு அவர் சொல்லியிருப்பதை எனக்கும் நான் சொல்லிக்கொள்கிறேன்

எப்படி அவருக்கு இப்பயணம் மறக்கமுடியாத ஒன்றோ அப்படியே இந்த பயண அனுபவத்தின் வாசிப்பு, எனக்கும் மறக்கமுடியாத ஒன்று. அன்றன்றைக்கான  நிகழ்வுகளை இரவு உறங்கப்போகும் முன்னர் சுடச்சுட எழுதியிருக்கிறாரென்பதால் உடன் நானும் பயணிக்கும் உணர்வுடனே வாசித்தேன்.  .

இருள் பிரியா நேரத்தில்  கவித்துவமாக துவங்கிய இந்த பிரயாணம் அத்தனை அழகாக   சென்றிருந்த அனைவரின் பார்வையிலும் இந்தியா என்னும் கனவினை எனக்கும் விரித்து விரித்து காட்டிக்கொண்டே செல்கிறது

சென்ற இடங்களையும் ஊர்களையும் மட்டும் சொல்லிச்செல்லாமல் அந்த நிலக்காட்சிகளை, அரசியலால் அங்கு நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை, உடைகளும் உணவும் மாறிக்கொண்டே வருவதை, விவசாயத்தை, தேனீர் கூட  அரைப்பங்கு கால்பங்காகி, அவுன்ஸ் கணக்கில் குறைந்ததை, தங்குமிட செளகரியங்கள் அசெளகரியங்களை, அறை வாடகைகள் உணவுக்கான செலவு, அங்கங்கு இருக்கும் சாதி அமைப்புக்களை,  நதிகளை, கால்நடைகளை, அவற்றின் வகைகளை அவ்வப்போது வரலாற்றை,  பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி பல இந்தியப்புராதன சின்னங்களை நாம் இழந்துகொண்டிருப்பதன் பொருட்டான அவரின் ஆதங்கத்தை, எல்லாம்   தொடர்ச்சியாக சுவாரஸ்யமாகவும் மனவருத்தத்துடனும், சொல்லிக்கொண்டேயிருப்பதால் ஒரு அழகிய நெடுங்கதையொன்றினை வாசிப்பதுபோல தொடர்ந்து வாசிக்க முடிந்தது.

திரைப்படத்தில் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பது போல நிலப்பரப்பும் மக்களும், தட்பவெப்பமும் சம்பவங்களுமாய் மாறிக்கொண்டே வருகின்றது ஜெ வின் விவரிப்பில்

சிற்பக்கலை, கோவில் கட்டுமானம் போன்ற மிக நுட்பமான விஷயங்களுடன், சாப்பிடுகையில் ‘ஆ’ கேட்ட குட்டிப்பெண்னை, ஆங்கிலம் தெரிந்த ஒரே ஒருத்தரை, 9 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டே கோவிலில் பூஜை செய்யும் சிறுவனை, கடந்து  சென்ற பேரழகிகளை, எரியும் சவங்களை, இப்படி ஏராளம் தகவல்களுடன்  பயணத்தை சொல்லுகிறார்

தீயாக கொட்டிய  வெயிலில்  வாடியும், பொழிந்த நிலவின் புலத்தில் நனைந்தும், நதிநீரில் திளைத்தும், தூசியிலும், பசியிலும்  களைத்தும், பல்லாயிரம் முகங்களைக்கண்டபடி எத்தனை எத்தனை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன  அவர்களுக்கு   இந்த ஒரே பயணத்தில்?

அழுகல் பழங்களையே திரும்ப திரும்ப  தலையில் கட்டியவர்களை, அறைவாடகையை உயர்த்தி ஏமாற்றியவர்களை,   உணவிற்கான தொகையை கூடுதலாக வாங்கியவர்களை என்று இவர்களைப்பற்றி சொல்லும் போதும் புகாராகவோ குற்றசாட்டாகவோ இல்லாமல் ,  வாழ்வின் இயங்கியலில்  அவர்களுக்கு ஏமாற்றுதல் ஒரு அங்கமாகிப் போயிருப்பதை ஆதங்கத்துடன்தான்  ஜெ சொல்லுகிறார்.

ஆணும் பெண்ணுமாய் பேசிக்கொண்டே  கூட்டம் கூட்டமாய் வெட்டவெளியில் மலம் கழிப்பது, மின்சாரமே இல்லாமல் இருளிலேயே இயல்பாக வாழ்க்கையை நடத்துவது, சேறு மிதிபடும் தரையுள்ள வீடுகள்  இவையெல்லாம்  இன்றைக்குமிருக்கும்  இதே இந்தியாவில்,  நானும், கதவைபூட்டிவிட்டு, இரவுடையை அணிந்துகொண்டு , குளியலறை இணைந்த படுக்கையறையில் கொசுவலைக்குள் பாதுகாப்பாக உறங்குவதும் , அனைத்து வசதிகளுடனான வாழ்வை வாழ்வதும் குற்ற உணர்வைத்தருகின்றது

ஜெ சென்றிருந்த இத்தனை ஊர்களில் நாக்பூருக்கும் காசிக்கும் மட்டுமே நான் சென்றிருக்கிறேன்

ஆராய்சி மாணவியாக இருந்த போது, நாக்பூருக்கு ஒரு கருத்தரங்கின் பொருட்டு, ஃப்ரிட்ஜில் வைத்தது போல குளிர்ந்த ரயில் பெட்டியில் நடுங்கிக்கொண்டே சென்று, ஸ்ரீகுந்த் எனப்படும் அங்கு மட்டுமே கிடைக்கும் எனச்சொல்லப்பட்ட ஒரு இனிப்பையும்,  ஆரஞ்சுகளையும் சுவைத்திருக்கிறேன். அங்கு விளையும் ஒரு குட்டி ஆரஞ்சுப்பழத்தின் சாகுபடி நுட்பங்களை அங்கேயெ சிலகாலம் தங்கியிருந்து தெரிந்துகொண்டு வந்த என் உறவினர் ஒருவர் அதை இங்கு அவர்   தோட்டத்தில்  வெற்றிகரமாக விளைவித்தார்

7ஆம் வகுப்பிலோ 8ஆம் வகுப்பிலோ படித்துக்கொண்டிருக்கும் போது  தலைமை ஆசிரியராக இருந்த அம்மா பள்ளிக்குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்கையில் குடும்பத்தினர் இலவசமாக உடன்  பயணிக்கலாமென்னும் வசதியினால் நானும் அக்காவும் அவர்களுடன் காசிக்கு சென்றிருந்தோம். ஜெ விவரித்திருந்த எதுவுமே எனக்கு பார்த்ததாக நினைவிலில்லை எல்லா இடங்களையும் போலவே அங்கும்  சந்தடியும் நெரிசலுமாயிருந்தது. மறக்க முடியாத ஒன்றென்றால் எங்கோ, ஒரு அகல அகலமான படிக்கட்டில் வரிசையாக  உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு , ஒரு பச்சைப்புடவையை வித்தியாசமாக கட்டிக்கொண்டிருந்த, நெற்றியில் பெரியவட்டமாக குங்குமம் வைத்திருந்த, வெள்ளை வெளேரென்ற ஒரு அம்மாள் தங்கம் போல பளபளத்த ஒரு தூக்குச்சட்டியில் பிசைந்த தயிர்சாப்பாட்டையும் அவருக்கு பின்னால் ஒரு மாமா  எவர்சில்வர் பாத்திரத்தில் ஜிலேபியுமாக  கொடுத்துக்கொண்டே வந்தார்கள். என்னால நம்பமுடியாதபடிக்கு அதில் பெரும்பாலான பிச்சைக்காரர்கள், எட்டி பாத்திரத்தில்  என்ன இருக்கிறதென்று பார்த்துவிட்டு  வேண்டாமென்று  மறுத்துவிட்டார்கள்’

அப்போது  நாங்கள் மிக வறுமையிலிருந்தோம். வயிறு நிறைய சாப்பிட்ட நினைவே இல்லாத காலமது .  அந்த தயிர்சோற்றையும் இனிப்பையும் அவர்கள் மறுத்தது எனக்கு பெரும் துக்கமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. இப்போதும் அது ஏனென்று எனக்கு புரியவில்லை. அதற்கு முந்தைய கணம் வரைபுதிய இடம் அளித்த அச்சத்தினால், கூட்டத்தில் தொலைந்துவிடுவேன்னும் பயத்தில் யாராவது ஒருத்தரின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டே வந்த நான், அதற்கப்புறம் தொலைந்து போகவேண்டுமென்று விரும்பினேன். என்னை கண்டுபிடிக்க முடியாமல் எல்லோரும் திரும்பிப்போன பின்னால், அங்கே பிச்சைக்காரியாக இருந்து சோற்றை வேண்டாமெனச்சொல்லாமல் அள்ளி அள்ளி உண்பதை கற்பனை செய்துகொண்டேயிருந்தேன. ஆனால் பத்திரமாக அதே பழைய வாழ்க்கைக்கு என்னை திரும்பக்கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்

காசி என்றால் இது மட்டுமே இன்னும் நினைவிலிருக்கிறது.

நிச்சயம் இந்த  எல்லா ஊர்களுக்கும் இதே வரிசைப்படி மகன்களுடன் கூடிய விரைவில் செல்லப்போகிறேன்.அருமையான இப்பயண அனுபவங்களுக்கான நன்றிகள் ஜெ விற்கு

 

இன்று இப்பதிவு ஜெ அவர்களின் தளத்தில் வெளியானதில் கூடுதல் மகிழ்ச்சி

https://www.jeyamohan.in/115216#.XA0UKmgzY2w

 

ஈட்டி

 

 

நண்பர் குமார் அம்பாயிரத்தின் ஈட்டி என்னிடம் வந்து சேர்ந்து சற்றேறக்குறைய ஒரு மாதமே ஆகிவிட்டது எனினும் கல்லூரி வேலை நாட்கள் முடிந்து விடுமுறை துவங்கிய பின்னர் வாசிக்கலாமென்றே இத்தனை காலம் எடுத்துக்கொண்டேன்.  ஆனால் கூர் நுனிகளைக்காண்கையிலும்,  வெண்முரசுபோர்க்களககாட்சிகளில் அவற்றைக்குறித்து வாசிக்கையிலும்  எப்போதும் என் வீட்டைக்கடக்கும் ஏராளமான பறவைக்கூட்டம் ஈட்டிமுனை வடிவில் பறக்கையிலும் அந்த புத்தகம் பிரிக்கப்படவும் வாசிக்கப்படவும் காத்திருபப்தை நினைத்துக்கொள்வேன்

புத்தகத்தின் முகப்புப்படம் எப்படியோ எனக்கு வாட்ஸப்பில் விளையாட்டிற்கான காகிதத்தொப்பிகளை வைத்துக்கொண்டு இருக்கும் எளிய குழந்தைகள் சூழ அம்பாயிரம் இருக்கும்  படத்தை  நினைவூட்டியது . தொகுப்பை வாசித்து முடித்ததும்தான் இத்தொகுப்பில் உள்ள  அனைத்துக்கதைகளுமே மாய யதார்த்தக்கதைகள் என்பதை முன்னரே அப்படம் சொல்லியிருக்கிறது என்றறிந்தேன்

.இதுபோலக்கதைகளை அவ்வப்போது யுவன், கோணங்கி இவர்கள் எழுத்தில் வாசித்திருந்தாலும்  ஒரு தொகுப்பாக  எட்டுக்கதைகளை இப்போதுதான் சேர்ந்தாற்போல வாசிக்கிறேன்,

காணாமற்போகையில் அவரைத்தேடுபவர்களுக்காக இத்தொகுப்பை சமர்ப்பித்திருப்பது  புன்னைகையை வரவழைத்தது  அவரை கொஞ்சம் அறிந்திருப்பவள் என்னும் வகையில்

ஈட்டியை வாசித்துமுடித்த பிரமிப்பிலிருக்கிறேன் இன்னும். நிலவடிவமைப்பாளராக வாசு சாரால் அறிமுகம் செய்யபட்டு பின் நேரில் பார்க்கையில் அலையலையாகப்படிந்த சிகையும், ஒற்றைக்காதுக்கடுக்கனும் கனவில் தோய்ந்த கண்களுமாக இசைக்கலைஞரைபோலிருந்த, கைவிடபப்ட்ட பாழ்நிலங்களில், வறண்ட பூமிகளில் மறைந்திருக்கும் உயிரைத்தேடிக்கண்டுபிடித்து அதை வளமானதாக மட்டுமன்றி அழகானதாகவும் வஞ்சமின்றி விளையும் மண்ணாகவும் மாற்றும், அழைக்காத பாதைகளையெல்லாம் தேடித்தேடிச் சென்று வாழ்வைத்தொடரும், , அவ்வப்போது அழகியகவிதைகள் சொள்லும், வெட்டப்பட்ட இரண்டு ஆரஞ்சு மரங்களுக்காக துக்கிக்கும் ஒருவரான குமாரிடமிருந்து இப்படி ஒரு ஆழ்ந்த படைப்பினை நான் எதிர்ப்பார்க்கவேயில்லை  என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்

பல ரகசிய உலகங்களுக்கு கைப்பிடித்துகூட்டிச்செல்கிறார். கதைகளின் தலைப்புக்களும் கதாபாத்திரங்களின் பெயர்களும் மர்மமாகவும் கேள்விப்படாததாகவும் வசீகரிப்பதாகவும் உள்ளன, ’’ன்யாக், டிங்கோ(சைக்கிளீல் வரும் ’’டிங்கா எனப்பெயரிடப்பட்ட அந்த கரிய அழகியை நினைத்துக்கொண்டேன் இதை வாசிக்கையில்), அக்,  தேடூ, என்று

தொகுப்பு முழுவதும் என்னுடனேயே, காகங்களும், காக்கட்டான் பூக்களூம், சுற்றிக்கட்டப்பட்ட துணியுடன் குழியிலிருந்து மேலெலும்பிய பிரேதமும், நாய்களும், கன்றை இழந்த பசுவும், பனையும், எருமையும் பன்றியும், ஆச்சா  மரமும், குறிசொல்பவனும், தேள்களும் நட்சந்திரங்களும், குதிரையும், குர்தையும், கழுதையும், ’’ன்யாக்’’ ஆவிகளும், புறாக்களும் அலைந்துகொண்டிருந்தன.

கதைசொல்லியான குமார் புனைவு மற்றும் மர்மத்தன்மை கொண்ட இக்கதைகளை  இவ்வுலகிற்கு வெளியேயிருந்துதான் எழுதியிருப்பார் நிச்சயம்

சில இடங்களில் அவரின் மொழிநடையும் விவரிப்பும் வியப்பளித்தது மேலும் அவை என்றென்றைக்கும் மறக்கவியலாதவையாகவும்  ஆகிவிட்டன மனதில்

பாழடைந்த இரவுகளின் கருநீலம் நொறுங்கிக்கிடக்கும், வயிறு கிழிந்து இறந்துபோன் புறாக்களின் கண்கள்,  மயானத்தின் சூரை முட்களில் மாட்டிக்கொண்டு வா வா என அழைத்துக்கொண்டிருக்கும்  கிழிந்த சவத்தின்மேல் போர்த்தப்பட்ட துணிகள்,கண்ணாடியின் குறுக்கே வழியும் நீரொழுக்கைபோல கண்ட ‘ன்யாக்’, அது  இதயத்திற்கருகே வந்து கிசுகிசுப்பது, ஒரு போர்வையைப்போல கதப்பாக அது அளிக்கும் ஸ்னேகிதம், அன்பின் பெயரால் கட்டாயப்படுத்தலும், கட்டாயப்படுத்தலே அன்பாகவும் நொறுக்கப்படும் ஒரு பெண், பற்கள் தடுத்ததால் உதிராமல் வாய்க்குள்ளேயே  நிறைந்து விட்ட மரணப்பூ,, எதிர் எதிர் திசையில் கிளம்பி ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும் நெருப்புவரிகள் எச்சுவையும் இல்லாத ன்யாக்கின் தேனீரைக்குடித்ததும்  நொறுங்கும் இரவுகளின் ஆழத்தால் பின்னப்பட்ட உணர்வுகளின் உறைநிலை , காலையில் அழைதத ஒலி மாலையில் எதிரொலித்துக் கேட்பது, மேகங்களில் தங்கியும் விடுபட்டும் தொடரும்  நிலா, வாழ்வின் சகலத்த்தையும் இழந்த பின்னும் உயிர் தரித்திருப்பதற்கான உந்துதல், நம் சக்திகளுக்கு அப்பாற்பட்ட நியதிகளால் கிழித்தெறியப்படும், வாழ்தலுக்கான கதகதப்பின் வெண்ணிறப்போர்வை, காகங்களின் இறகு மடிப்புகளுக்குள்  மின்னும் கருத்த ஆழங்கள், காகத்தை ’கருஞ்சாந்து’ என்பது, பிச்சைப்பாத்திரத்தில் பூக்கும் ரத்த நிற மலர்கள், சுனைகளைக்கடந்து வரும் காற்றின் குளிர்மை, சாராயக்கடையில் நீந்தமுடியாமல் சிதறிக்கிடக்கும் மீனின் எலும்புகள் இப்படி ஏராளம் சொல்லிக்கொண்டேயிருக்கலாம். ஏன் குமார் தொடர்ந்து எழுதுவதில்லை என்னும் கேள்வி எனக்குள் 2 பக்கங்களுக்கு ஒருமுறை  எழுந்துகொண் டேயிருந்தது.

இக்கதைகளிலிருக்கும் மாயத்தன்மைகளை, மர்மங்களை , புனைவுகளை வெளியில் நம்பமுடியாதென்று சொல்லிக்கொண்டே என் உள்மனம் ரகசியமாய் அவற்றில் ஆழ்ந்து அவ்வுலகிலேயே ஊறும் நிழல்களையும், உதிரும் மலர்களையும் பார்த்தபடி , பால்பிடித்த கதிர்களை நெருப்பில் வாட்டி தின்றுகொண்டு, கரையில் கையைப்பிசைந்தபடி  காத்திருக்கின்றது வெளியேறும் விருப்பையும் விருப்பமின்மையையும் ஒருசேர சுமந்துகொண்டு

பல கவிதைக்கணங்களுமிருக்கின்றது தொகுப்பில்.//சூரிய ஒளியில் வண்ணமாகத்தெறிக்கும்  நீர்த்தெறிப்பில் டிங்கோ துள்ளிக்கொண்டிருப்பது,,  முன்கால் முடங்கிய வீனஸுடன் நிலவின் புலத்தில் திரும்பிவருவது,, நரிகளுக்கெட்டாத திராட்சைகளைப்போல நட்சத்திரங்கள் முளைவிடுவது, இலைகள் மேல்காற்றிலும், இரவுகள் கீழ்க்காற்றிலும் உதிர்வது, கூர்மையான வளைந்த சொற்களால் சதையைக்கீறுவது//  இப்படி. எல்லாம் அழகு

க அத்தனைகதைகளிலும் எனக்கு ஈட்டி அந்தரங்கமாகப்பிடித்திருக்கிறது.

பாலுறவுச்சித்தரிப்புக்களும் பாலுறுப்புக்களின் வர்ணனைகளும் சில கதைகளில் அதிகமிருப்பதை தவறென்றோ சரியென்றோ சொல்லத்தோணறவில்லை , இதுபோன்ற அப்பட்ட விவரிப்புக்கள் அதிகம் இருக்கும் கதைகளை முதல்முறையாகப்படிக்கிறேன் என்பதைத்தவிர

குறைகள் என்றால் அதிகம் தட்டச்சுப்பிழைகள் இருக்கின்றன. மறுபதிப்பு செய்யபடுமேயானால் அவற்றை கட்டாயம் தவிர்க்கவேண்டும். (’அவன்’ பல இடங்களில் ’அவளாகி’ வருவதும் மாயக்கதைச்சூழலில் சரிதான் என்பதுபோல ஒரு மயக்கத்தைத் தந்தது. )

குமார் இன்னும் நிறைய எழுத வேண்டும்

லடாக்

திரு ஜெ அவர்களின் லடாக் பயண அனுபவம் வாசித்தேன். லடாக் அடிக்கடி சென்று வரும் என்  பல்கலைஆசிரியரின் அனுபவங்களைக்கேட்டுக்  கேட்டு அங்கிருக்கும் தாவரங்களுக்காக  லடாக் செல்லவேண்டும் என நினைத்திருந்தேன் இதுவரை.

அவரின்  அனுபவத்தை படித்தபின் அங்கு போகவேண்டும் என்று மட்டுமல்ல, போனபின்பு அங்கேயே இருந்துவிடலாமென்றும் கூட தோன்றுகிறது. எதன் பொருட்டு இப்படி நாமெல்லாரும் பரபரப்பாய் அலைகிறோம்? எத்தனை இனிமை அவர்களின்   அந்த மெதுவான வாழ்க்கை?

காலம் என்னை கடந்து செல்வதை நான் ஒவ்வொரு கணமும் உணர்கிறேன் அதற்காக வருந்தவும் கூட செய்கிறேன் பல சமயங்களில் (குறிப்பாக பிறந்தநாளின் போதும், பிறந்த குழந்தைகளை காணும் போதும்).

காலை 5.30 மணியிலிருந்து ஓயாமல் பதட்டமாக இரவு 10, 11 மணிவரை அலையும் எனக்கு அவர் விவரித்த “ கம்பளி ஆடைகளை அனிந்துகொண்டு ஹூக்காவை பிடித்தபடி இளவெயிலில்  மலைச்சரிவுகளைப்பார்த்தபடி நாளெல்லாம்  அமர்ந்திருக்கும்  காலமற்ற அவர்களின் வாழ்க்கை”   ஏகத்துக்கும் பொறாமையை அளிக்கிறது.

அவர்களுக்கு இன்று மட்டுமே எனக்கொ நேற்று இன்று நாளை எல்லாமே இருக்கிறது. வரும் ஞாயிறு என்ன சமைப்பது என்று. அதற்கு முந்தின 3 நாட்களில் யோசித்து இட்லிக்கோ அடைக்கோ மாவு தயாரிக்கிறேன்.என் மகன்களின் வருங்கால மனைவிகள் அவர்களுக்கு நன்றாக வயிறு நிறைய சமைத்துப்போடுவார்களா என்று இப்போதெல்லாம்  தொலைநோக்குப்பார்வையோடு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

பரபரப்பான அலைச்சல் மிகுந்த என்  வாழ்க்கையின் மீதும், உட்காரவிடாத ஒடிக்கொண்டே இருக்க சொல்கிற பதற்றமாக பதட்டமாக கவலையோடே  இருக்கிற   உள்ளத்தின் மீதும் கோபமும் அவமானமுமாய் இருந்தது இந்த லடாக் கட்டுரை படித்தபின்னர்.

நான் நினைப்பதுண்டு  , மின்மயானத்திற்கு என்னைக் கொண்டு செல்கையிலும் குக்கர் வைத்துவிட்டு 3 விசிலில் நிறுத்தச்சொல்லிவிட்டுதான் போவெனென்று!!!!
..

புன்னகையுடன் மடியில் கைகளை வத்துக்கொண்டு கண்மூடி தியானத்தில் இருக்கும் புத்தரும், அந்த ஆழ்ந்த  அமைதியில் இருக்கும் மலைச்சிகரங்களும்,  அந்த மக்களும்   அவர்களின் நீர்த்துளிக்கண்களும்  நூற்றாண்டுகளை மிகச்சாதாரணமாய்க்கடந்து எள்ளுப்பேத்திகளைக்கையில் வைத்துக்கொஞ்சும் அவர்களின் பாக்கியமும் ,என்ன  சொல்லுவது? they live and i exist என்றுதான் தோன்றுகிறது

comfort zone லிருந்து வெளியெ வரப்பழக்கமில்லாத அல்லது விரும்பாத எனக்கு ,ஜெ கையில் எடுத்துக்கொண்டிருக்கும் ,பனிபோல குளிர்ந்த அந்த குட்டி ரித்திகா அவர் கண்ணை நேராகப்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நிழற்படம் அவரின் எழுத்துக்களின் மீதான மதிப்பையும்   அனுபவங்கள் மீதான பொறாமையையும் ஒரு சேர ஏற்படுத்துவதை தடுக்கவே முடியவில்லை

பெயர்கள்

 ஜெ அவர்களின்  தளத்தில் வெளியான ‘ பெயர்கள் ‘ பதிவை  சில மாதங்களுக்கு முன்பு வாசித்தேன்.  நவீனப்பெயர்களான ரினீஷ், துமேஷ், ஜிலீஷ் ரமேஷ் குமெஷில்  வாய் விட்டுச்சிரித்து, செட்டியார்கள் வருமானம் என்று பெயரிடுவதில் சிரிப்பை அடக்க சிரமப்பட்டென், இடுப்பில் தாயத்து மட்டுமணிந்த குஷ்பூவை வாசிக்கையில் குபீரென் சிரித்து  ஓட்டுனரே திடுக்கிட்டுத்திரும்பிப் பார்த்தார்.

’பெரும்பன்னி’  என்பது உயர் சாதியினர் விளிம்பு நிலை மக்களுக்கு  இட்ட பெயராயிருக்கலாமென்பதையும்  ’கும்பிடெறேன் சாமி’ என்று  தலித் ஒருவர் உயர் சாதியினர் கூப்பிட சங்கடப்படட்டும் என்று வைத்துக்கொண்ட பெயரும் நிறைய யோசிக்க வைத்தது.
நான் முனைவர் பட்ட ஆய்விலிருக்கையில் அந்த பல்கலையின்

துணைவேந்தரின் பெயரிலிருந்த ஒரு அலுவலகப்பணியாளரை பெயர் மாற்றி பேபி என்றழைத்ததையும், மெஸ்ஸில் இரவு எங்களு/க்கு ஒரு தம்ளர் பால் தருவதன் பொருட்டு வாசலில் காத்திருக்கும் அக்காவை, வேண்டுமென்றெ ’’பாலக்கா ’’என அழைத்ததையும்,கொழும்புவில் இருந்த சில வருடங்களில்
கேட்ட மிக அழகிய தமிழ் பெயர்களையும் நினைவு கூர்ந்தேன்
 தருண் பிறந்த போது சரணுக்கு ரைமிங்காக தருண் என பெயரிட நான் பெரிதும் விரும்பினேன் ஆனால் சரண் அப்பாவோ ராகுல் என்றே பெயரிட முடிவு செய்தார். பின்னர் இரண்டுபேருக்கும் பொதுவாக ராகுல் தருண் என்றே வைத்தோம். நான் எப்போதாவது அவனை முழுப்பெயரிட்டு ‘’ ராகுல் தருண் ‘’ என்றழைத்தால்அரண்டு போய்’’ ஏம்மா கோபமா இருக்கியா ?என்று கேட்பான். ஆம் கோபமயிருக்கையில் கூப்பிட ராகுல் , பிரியத்திற்குரிய பெயர் தருண்!!!
எங்கள் வீட்டில் தோட்டம் எல்லாம் சுத்தம் செய்ய உதவும் பெண்ணின் பெயர் ஓவியா,  நல்ல கருப்பாய் அழகிய கருங்கல் சிற்பம் போல இருப்பாள், தெரிந்தே வைத்திருப்பார்கள் போல.
என்னுடன் பணி புரியும் ஒரு பேராசிரியர்  மகனுக்கு ’பியாரி மக்ரே’ என்று பெயரிட்டிருக்கிறார்.கேட்டதற்கு ரஷ்ய புரட்சியாளர் பெயரென்றார் அடுத்து பிறந்த மகனுக்கும் என்னவோ பெயர் சொன்னார் என் சிற்றறிவிற்கு அதை  நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை
எங்கள் கல்லுரி முதல்வர் தமிழ்த்துறையை சார்ந்தவர், அவர் மனைவி ஆங்கிலத்துறை ,ஒரெ மகள் ’மொழி
ஒவ்வொரு வருடமும் முதலாம் ஆண்டு மாணவர்களின் வருகைப்பதிவேட்டில் அழகிய வித்தியாசமான பெயர்கள் இருக்கும் சரியாக உச்சரிக்க கண்ணாடியை துடைத்துப்போட்டுக்கொண்டுதான் வகுப்பிற்கு செல்வேன்
சென்ற விடுமுறையில்  சரணை  விடுதியிலிருந்து அழைத்து  வந்தேன்.
வழக்கம் போல இந்த பெயர்களைபற்றிய  பதிவைச் சொல்லிக்கொண்டிருந்தேன்
அவன் பள்ளியில் அவனுடன்  படிக்கும் ’’ தண்ணீர்மலை, தீர்த் , அனுபவ் அகர்வால், துளிர்’’  பற்றியெல்லாம்  அவன் சொன்னதும் வியப்பாக இருந்தது. ஐஷ்வர்யா முல்லாமாரீ’  எனும் பெண்ணுக்கு ஏன் தமிழ் பசங்க எல்லாம் தன் அப்பா பெயரைச்சொல்லி கிண்டல் பண்ணுகிறார்கள் என்று   தெரியாவிட்டாலும்    இவன்களை எங்கு பார்த்தாலும் ஒரே ஒட்டமாய் ஓடிவிடுவாளென்றும்  சொல்லிக்கொண்டிருந்தான்
தவமாய் தவமிருந்து  இரண்டு பெண்களுக்கு பிறகு  ஒரு   மகனை பெற்றெடுத்த என் பெற்றோர் எனக்கும் அக்காவிற்கும் லோகமாதேவி , சங்கமித்ரா என்று சுருக்கமாக பெயரிட்டு விட்டு அவனுக்கு மட்டும்
 ’விஜயரகுனாத பாஸ்கர சேதுபதி தொண்டைமான் பூபதி காளிங்கராய சுப்ரமணிய சுந்தர வடிவேல்  எனப்பெயரிட்டு அவன் மீதான் பிரியத்தை காட்டி  இருக்கிறார்கள் அவன்  திருமண் அழைப்பிதழிலும்  கூட இப்படியேதான் அச்சிட்டோம்
  பாரதியார் பல்கலையில் மொழியியலில், நீலகிரி தோடர்கள்,  படுகர்கள்  பெயர்களில் ஆய்வு செய்த என் தோழியுடன் 97ல் கள ஆய்விற்கு  நானும் சென்றிருந்த  போது ஒரு வீட்டில்  3 பெண்குழந்தைகளுக்கு  வயலெட், ஆரன்ஞ், மற்றும் ரோஸ் என்று பெயரிட்டிருந்தார்கள்,  அங்கிருந்த அக்குழந்தைகளின் பாட்டன் என்  பெயரைக்கேட்டு விட்டு லோகமாதேவி என்பது  மிக புராதானமாயிருக்கிறது என்று  அபிப்ராயபட்டார், வயலட்டிற்கு இது புராதானம்தான்.
வெண்முரசில் சமீபத்தில் வாசித்த மென்மொழி என்னும் பெயர் என்னவோ மிக பிடித்து விட்டது. என் பெயரையே அப்படி மாற்றிக்கொள்ளலாமா என்று கூட நிறைய யோசித்தேன் பின்னர் இந்த வலைப்பூவிற்கு  பெயராக  வைத்துக்கொண்டேன்
பின்னும் ஆசை அடங்காமல் சரண் தருணிடம் அவர்களூக்கு பிறக்கும் பெண்களுக்கு மென்மொழி என்று பெயரிட வேண்டும் என சத்தியம் வாங்கிக்கொண்டிருக்கிறேன்.கல்லூரியில் ஒரு பேரசிரியையின் மகளின்இரட்டைக்குழந்தைகளுக்கு ஹாசினி ,பாஷினி என்ப்பெயரிட்டேன்.
இப்படி என்பிரியத்திற்கு உகந்த பல பெயர்கள் உண்டு ஹைமாவதி, தாம்ரா, அதிதி, ஸ்துதி,…………………
 நிறைய சிந்திக்க வைத்த பதிவு இது
« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑