லோகமாதேவியின் பதிவுகள்

Category: வாசிப்பு (Page 3 of 3)

‘’ எல்லா இடமும் ஆண்களுக்கல்ல’’

 

திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்றைய இந்து நாளிதழில் ‘’ எல்லா இடமும் ஆண்களுக்கல்ல’’ என்னும் பதிவினை இட்டிருந்தார். இப்படி’’ பெண் இன்று ‘’ என்னும் பெயரில்  ஒரு துணை இதழ், இந்து நாளிதழுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதையே நான் அறிந்திருக்கவில்லை வேலை நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளிலேயே அதிக பணிச்சுமையுடன் இருப்பதால், நகுலன் சொன்னது போல ’’நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை’’ அல்லவா?

1 மாத விடுமுறையின் ஒரு ஞாயிறென்பதால் இன்று இதை முழுதும் வாசிக்க சமயம் கிடத்தது எனக்கு.

இப் பதிவு எனக்கு மிக பிடித்திருந்தது மட்டுமல்ல ஒரு ஆணாய் இதை தமிழ்ச்செல்வன் சொல்லி இருந்ததில் பெரும் நிம்மதியும் இருந்தது. ஆம் சமையலறைகள் மிகச்சிறியதாய் எப்போதும் இருப்பது  நிச்சயம் தற்செயலல்லவே அல்லதான். எங்களுக்கானதென்று யுகம் யுகமாய் ஒதுக்கப்பட்ட இடம் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்காற்றும் உணவினை நாங்கள் வியர்த்து வழிந்து உருவாக்குமிடம் ஏன் எப்பொழுதும் மிகச்சிறியதாகவே இருக்கவேண்டும்?

Man spreading    குறித்த அவரின் கருத்துக்கள் அனைத்தும் உண்மைதான். சக்தி சக்தி எனச் சொல்லப்பட்டுக்கொண்டே நாங்கள் ஆண்களின் காலடியில் மிச்சமின்றி  தேய்த்து நசுக்கபட்டுக்கொண்டே இருக்கிறோம் என்றென்றைக்குமாய். எங்களுக்கான இடம் எங்கும் இல்லைதான்

8 ஆம் வகுப்பிலிருந்து சமையல் செய்துகொண்டிருக்கும் நான் 10 பேருக்கானாலும் சரி 4 பேருக்கானாலும் சரி மிக விரிவான சுவையான சமையலை 1மணிநேரத்திற்கும் குறைவான சமயத்தில் சமைத்து விட்டு சமையலறையில் இருந்து வெளியெ வந்துவிடுவதை வழமையாகக்கொண்டிருக்கிறேன். எனக்கான தளங்கள் சமையலறைக்கு வெளியிலும் இருக்கிறதல்லவா? பொதுவாகவே எனக்கு விசாலமான வசதியான காற்றோட்டமுள்ள சமையலறைகள் மீது பெரும் காதலுண்டு  நான் பல விடுமுறை நாட்களில் தென்னைமரத்தினடியில் விறகடுப்பில் மகிழ்வுடன் சமைப்பதும் கூட  சின்ன சமையலறையிலிருந்து, வெளியேறி பரந்த வானின் கீழிருந்து  சமைக்கும் சந்தோஷத்தின் பொருட்டுத்தானென்று இன்று இந்த பதிவினை வாசித்தபின்னர் தோன்றுகிறது

பலபெண்களின் சார்பாக இந்த பதிவிற்கு அவருக்கென் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்

இதை அதிகம் இன்று நான் பகிர்ந்தும் கொண்டிருக்கிறேன்

இன்னும் இதுபோன்ற பலவற்றை பேசித்தான் ஆகவேணும் அல்லவா?

சந்துகளின் சரித்திரம்

தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் இன்றைய தமிழ் இந்துவில் சந்துகளின் சரித்திரம் பற்றி சுவையாக பதிவிட்டிருந்தார் அதை வாசித்ததும் எனக்கு இவையெல்லாம்  மீள நினைவிற்கு வந்தது. சந்துகளையெல்லாம் எங்கே நினைவிருக்கும் மனிதர்களுக்கு? எனக்கும் பல சந்துகளின் நினைவு வந்தது இதை வாசித்ததும்

சிறு பெண்ணாய் பள்ளிக்கு சென்று திரும்புகையில் என் சகோதரியிடம் என்புத்தகப்பையை கொடுத்துவிட்டு அந்த குக்கிராமத்தின் பல சந்துகளில் என் பல்லுயிரி ஆய்வினை மேற்கொண்டு என்னைத்தேடி வருமென் தாத்தா பாட்டியிடன் அடிவாங்கியதை முதலில் நினைத்துக்கொண்டேன். அந்த ஆய்வுகளின் போது சந்துகளில் கிடக்கும் பெரிய பெரிய கற்களையெல்லாம் புரட்டி அதனடியில் இருக்கும் ஜந்துக்களை ஆராய்வது என் பொழுதுபோக்கு, அப்படி ஒன்றினை அரும்பாடுபட்டு புரட்டி அதனடியில்  கோலி விளையாடி யாரோ சேர்த்து வைத்திருந்த குவியல்  குவியலாக பெருந்தோகையாக இருந்த காசுகளையெல்லாம் மகிழ்வுடன் அள்ளிக்கொண்டு வந்ததும் நினைவிற்கு வந்தது.

பதின்பருவத்தில் உடன் படிக்கும் துணிச்சல் தோழிகள் சந்துகளில் காதலனைச்சந்திப்பார்கள், காதலனே இன்றியும அந்த சந்துகள்  மற்ற எங்களுக்கு பெரும் கிளர்ச்சியளிக்கும் இடங்களாகவும் இருந்தன அப்போது

ஒரு மாலை நேரத்தில்  பொள்ளாச்சியில் அப்போதிருந்த சப்ஜெயிலொன்றிலிருந்து தப்பித்த ஒரு குற்றவாளி நாங்கள் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் சந்து சந்தாக ஒடித்தப்பிக்க முன்றான் காவலர்கள் அவன் பின்னடியே துரத்தியதும் முதல் முதலாக துப்பாக்கி சத்தத்தைக்கேட்டதும் அப்பொழுதுதான்

கணிதம் சரியாகப்புரியாததால் ஒரு சந்தினுள் இருக்கும் டுடோரியல் கல்லூரிக்கு கூட்டமாய் சென்று  வந்து  பத்தாம் வகுப்பில் எப்படியோ தேர்ச்சி பெற்றது, படித்துமுடித்து வேலையில் சேர்ந்ததும்  கோவையில் பூரா மார்க்கெட்டில் சந்து சந்தாய் திரிந்து அச்சிலி பிச்சிலி சாமான்களெல்லாம் மகிழ்வுடன் சம்பளப்பணத்தில் வாங்கியது என்று பலவற்றை இன்று என் மகன்களுடன் இந்தப் பதிவினைப்பார்த்த பின்னர் பகிர்ந்துகொண்டேன்

அயினிப்புளிக்கறி

திரு ஜெயமோகன் அவர்களின் ‘’அயினிப்புளிக்கறி’’ வாசித்தேன்.கனிந்த முதிர்ந்த காதலின் அழகு மிளிரும் கதை இது

முதலில் கதையை எப்போதும் போல  ஒரே ஓட்டமாய் அவசரமாய் வாசித்துவிட்டு பின் நிதானமாய் சில முறை மீள வாசித்தேன். அயினியை தாவரவியலில் நான் இதுவரையிலும் தெரிந்திருக்கவில்லை, ஆதலால் முதலில் அதன் தாவரவியல் பெயரையும் (Artocarpus hirsutus) படங்களையும் பார்த்து அறிந்துகொண்டேன், எப்பொழுதுமே அவரின் எழுத்துக்களில் வரும் உணவு குறித்த வர்ணனைகளை மிக ரசிப்பதுடன் அவற்றில் சிலவற்றை செய்தும் பார்த்துவிடுவேன். இதிலும் அந்த இஞ்சியை சதைப்பதிலும் தாளித்து அது வெண்ணையாய் உருகிவருகையில் இறக்குவதுமாய் அயினிப்பிஞ்சு கிடைத்தால் உடன் செய்துசாப்பிட்டிருப்பேன் . அத்தனை வசீகரித்தது  செய்முறையின் விவரிப்பு.

மோகன்லாலின் ஒரு  மலையாளப்படத்தில் வீட்டு முன்பு நிற்கும் ஒரு பெரிய பலாமரத்தை வெட்ட ஆட்கள் வருவதும்  இளமை முழுதும் துபாயிலிருந்து பணம் சம்பாதித்து குடும்பத்தை மேலேற்றிவிட்டு திருமணம் ஆகாமல் குடும்பத்தினருக்கு பாரமாய் இருக்கும் அவரும், அந்த காய்ப்பு நின்ற பலாவும் ஒன்றெனக்காட்டுவதையும் இந்த கதையை வாசித்ததும்.  நினைவிற்கு வந்தது.

பணத்திற்காக,  அள்ளித்தருகிற அன்னையைப்போன்ற மரத்தை  வெட்டவும் ,வளர்த்த அப்பனை அன்னியர் முன்னால் அடிக்கவும் துணிந்த தலைமுறையின் கதையாகவும், சின்ன வயசில் பிடித்த பீடியை மீண்டும் பிடிக்க விரும்பும் 40 வருடத்திற்கு முன்னர் மூத்தவள் கையால் உண்ட அயினிப்புளிக்கறிக்கு ஏங்குபவராகவும், கடவுள் அள்ளித் தந்திருக்கும் கோடிக்கணக்கான ருசிகளில்  இளமையில் புளிப்பைஅறிந்துவிட்டு, முதுமையில் இனிப்பையும் ருசிக்க, ஏங்கும் ஆசானின் உள்ளுறங்கும் காதலையும் , தனிமையின் தவிப்பையும் சொல்கிறது இந்தக்கதை

காயில் புளித்தது இன்று கனியில் இனிக்கிறது, முன்பு கடுத்து விலக்கிவைத்துவிட்டு, இன்று கனிந்துமூத்தபின் இனிக்கும் ஆசானின் நேசமல்லவா அயினி?

வெறும் ஒன்பது மாசத்தில் கசந்த ஒன்று இன்று  முதிர்ந்து,தனித்து, கனிந்து இனிப்பது அழகு. ’’வாறியாடி’’ ? என்னும் ஒற்றைக்கேள்வியில் முடிந்த அத்தனை வருட பிணக்கும்,பாய்ந்து  வேலியைச்சாடி இறங்கும் மூத்தவளின் மனதிலும் இருக்கும் நேசமும்,  சுவை சரியாக வராத அயினிப்புளிக்கறியாயினும் சுயமாக செய்துசாப்பிட்ட நிறைவை வாசிக்கையில் உணரமுடிந்ததது. இனி ஆசான் கனவிலிருந்ததைப்போலவே திடமாய் இளமையாய்  இருக்க முடியாவிட்டாலும், வயசுக்காலத்தில் காற்றும் வெளிச்சமுமாய் அவர் வாழ்வு இருக்கும் அயினிப்புளிக்கறி இனி சரியாகவும் வரும் பின்னால் தொடர்ந்து வருபவளால்!

http://www.jeyamohan.in/102279#.WfyFnzdx3IU

அத்தனை கணிப்புகளுக்கும் அப்பால் பிறிதொன்று நின்று கொண்டிருக்கிறது. அதுவே மெய்

-ஜெயமோகன்

Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑