லோகமாதேவியின் பதிவுகள்

Author: அதழ் (Page 5 of 26)

ப்ரெஞ்ச் ஃப்ரைஸ்!

சில நாட்களாகச்செய்திகளில் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸை  இத்தனை ஆண்டுகளாக ஏராளமாக இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா, சத்தமே இல்லாமல் உலகின் மிகப்பெரிய உருளைகிழங்கு பிங்கர் சிப்ஸ் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகி இருக்கிறது என்பதுதான் பேசுபொருளாகி இருக்கிறது.

 இருபது வருடங்களுக்கு முன்பு  இந்தியா, சுமார் 24 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைக் கொண்டிருக்கிற  உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸினால் உருவாக்கப்படும் ஃப்ரென்ச் ஃப்ரையின் உலகளாவிய  சந்தையில் இடம்பெற்றிருக்கவில்லை, ஏன் சந்தைக்கு அருகில் கூட இந்தியா  இல்லை.

ஆனால் இன்று நிலைமை அடியோடு மாறி விட்டிருக்கிறது. 

உருளைகிழங்கு இந்தியாவின் மிக அதிகம் உண்ணப்படும் கிழங்கு உணவாகி இருக்கிறது. மிகப்பெரிய மற்றும்  நவீன உணவகங்களில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த ஃப்ரென்ச் ஃப்ரை இப்போது  நடைபாதைக்கடைகளில் கூட கிடைக்கிறது.

இந்தியா  இப்போது (சீனாவுக்கு அடுத்தபடியாக) சுமார் 60 மில்லியன் டன் உருளைக்கிழங்குகளை  வருடாவருடம் உற்பத்தி செய்து உருளைக்கிழங்கு உணவை அதிகமாக உண்ணும் மக்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக மட்டுமல்லாமல், அதிகமாக உருளைக்கிழங்கை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது  நாடாகவும் இருக்கிறது.

2025-ல் மட்டும் இந்தியா, 1817 கோடி மதிப்பிலான உறையச்செய்து, பதப்படுத்தப்பட்ட உருளைகிழங்கை ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்த சந்தை மதிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பான  217 கோடி மதிப்பிலான உருளைக்கிழங்கு ஏற்றுமதியைவிட 9 மடங்கு அதிகம். இதே இந்தியாதான் 2000-ங்களின் மத்தியில்  வருடத்துக்கு 5-லிருந்து 7- ஆயிரம் டன் உருளைகிழங்குகளை இறக்குமதி செய்துகொண்டிருந்தது.

 எப்படி இந்தியா இந்த இடத்துக்கு வந்தது?

தக்காளியின் குடும்பமான சொலனேசியைச்சேர்ந்த உருளைக்கிழங்குப் பயிர் தென்னமெரிக்காவின் ஆண்டீஸ் மலைப்பகுதிக்கு சொந்தமானது. உருளைக்கிழங்கு 16 அல்லது 17-ம் நூற்றாண்டில் தான்  ஐரோப்பியர்களால் இந்தியாவுக்கு அறிமுகமாயிருக்கக்கூடும்.  7000-த்திலிருந்து 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருளைக்கிழங்கு மனிதர்களின் வளர்ப்புப்பயிராகி இருக்கக்கூடும் என்று நம்பப்டுகிறது.

பட்டாட்டா (‘batata’) என அழைக்கப்பட்ட இந்த கிழங்குகளை மலபார் கடற்கரைக்கு போர்த்துகீசியர்கள் முதலில் அறிமுகம் செய்தார்கள் என்றாலும் இதை இந்தியா முழுக்க,  குறிப்பாக வங்காளத்திற்கு கொண்டுவந்தது பிரிட்டிஷார் தான். பஞ்சகால உணவாக் கொண்டு வரப்பட்ட உருளைக்கிழங்கு இப்போது இந்தியாவின் எல்லாச் சமையலறைகளிலும் தவறாமல் இருக்கிறது.  உலகெங்கிலும் தற்போது சுமார் 5000 உருளைக்கிழங்கு வகைகள் உள்ளன.  இதில் 3000 வகை ஆண்டீஸ் மலைப்பகுதிக்கு சொந்தமானவை.

ஆனால் நாம் சமையலறையில் வைத்திருக்கும், சமைத்து உண்ணும் உருளைக்கிழங்குகள் எல்லாம் table potato வகையைச் சேர்ந்தவை.

ஏராளமாக விளையும் இவற்றால் இந்தியாவுக்கு பெரிய லாபம் எல்லாம் இல்லை. இந்த  டேபிள் வகையில், ஏற்றுமதி செய்யும் படியோ அல்லது சொல்லிக்கொள்ளும்படியோ சிறப்பாக ஏதுமில்லை. சர்வதேச உருளைக்கிழங்குச் சந்தை மிக கறாரானது. இந்திய சிறு விவசாயிகள் நெருங்கவே முடியாத  மிக இறுக்கமான தரக்கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டது.

மேலும் உருளைக்கிழங்குகளை உறையவைத்து பதப்படுத்திப் பாதுகாக்கும் வசதிகளும், விளைந்த இடத்திலிருந்து பல இடங்களுக்கு அனுப்பும் வசதியும் இல்லாத விவசாயிகளுக்கு சாதாரண வகையை விளைவித்து உள்ளூர் சந்தையில் விற்பது மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. சொல்லப்போனால் உத்திப்பிரதேசம்,  பீகார் மற்றும் மேற்கு வங்கத்து விவசாயிகள், விற்றால் முதலுக்கே மோசம் வந்துவிடும் எனும் நிலைமைகளில், அறுவடை செய்த  உருளைகிழங்குகளை மீண்டும் நிலத்தில் புதைத்து விளைவிப்பதைக்கூடச் செய்திருக்கிறார்கள்.

1992-ல்  உலகின் மிகப்பெரிய  பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்களை தயாரிக்கும்  அமெரிக்க நிறுவனமான Lamb Weston இந்தியாவிலிருந்த நட்சத்திர அந்தஸ்துகொண்ட மற்றும் உயர்ரக உணவகங்களுக்கு ஃப்ரென்ச் ஃப்ரை செய்வதற்கான பதப்படுத்தப்பட்ட , உறைந்த உருளைக்கிழங்குகளை அனுப்பத்துவங்கியது.  

பொன்னிறத்தில் மினுங்கிய மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சீவல்களின் ருசியில் மயங்கிய இந்திய மேல்தட்டு மக்களால் Lamb Weston நிறுவனம் இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியது. ஆனால் இந்த நிறுவனம் இந்தியாவில் எந்த தொழிற்சாலையையும் துவங்கவில்லை,  இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட உருளைகிழங்குகளை  உணவகங்களுக்கு அனுப்பியே பெரும் பணம் பார்த்துக்கொண்டிருந்தது.

இதை கவனித்துக் கொண்டிருந்த Lamb Weston நிறுவனத்தின் உலகளாவிய போட்டியாளரான  கனடாவைச் சேர்ந்த மற்றொரு மாபெரும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் நிறுவனமான  McCain Foods தானும் களத்தில் இறங்கி, பிரம்மாண்டமான உருளைக்கிழங்கு பதப்படுத்தும், பதப்படுத்திய உருளைக்கிழங்கை சேமிக்கும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட தொழிற்சாலையை   2007-ல் குஜராத்தில் மெக்சனா நகரத்தில் தொடங்கியது. ஃப்ரென்ச் ஃப்ரை மட்டுமல்லாது உடனடியாக தயாரித்துச் சாப்பிடக்கூடிய ஆலூ டிக்கி, பர்கர் போன்ற பல உருளைக்கிழங்கு உணவுகளையும் தயாரித்து இந்தியச் சந்தையை கையில் பிடித்து, உருளைக்கிழங்கின் சர்வதேச சந்தையில் இந்தியா கால் வைப்பதை மெக்கெய்ன் உறுதி செய்தது.  

குஜராத் விவசாயிகளுக்கு தரமான, நோயெதிர்ப்புச்சக்தி கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யத் தேவையான விவசாய நுணுக்கங்களையும்  பயிற்றுவித்து, வேண்டிய கடனுதவிகளையும் அளித்து, உருளைக்கிழங்குகளை அறுவடைசெய்து  தாங்களே எடுத்துக்கொள்ளும் ஒப்பந்தத்தையும் இந்த நிறுவனம் போட்டுக்கொண்டதால், ஃப்ரென்ச் ஃப்ரை செய்யத் தேவையான, நீளம் அதிகமான சீவல்களை அளிக்கும் உருளைக்கிழங்கு வகைகளான  Shepody, Santana மற்றும் Innovator ஆகிவற்றை குஜராத் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விளைவித்தார்கள். பிறகு இந்தியா தொட்ட அனைத்து உருளைக்கிழங்கும் ஃப்ரென்ச் ஃப்ரை என்னும் பொன்னானது.

இந்த அசுர வேகத்தை, இஸ்கான் பாலாஜி, ஃபன்வேவ் மற்றும் ஹைஃபன், சில்ஃபில்   போன்ற இந்திய உருளைகிழங்கு நிறுவனங்கள் கவனித்து தாங்களும் களத்தில் தீவிரமாக இறங்கி, மெக்கெயினுக்கு இணையாகவே  இந்தியாவை முன்னணி உருளைக்கிழங்கு ஏற்றுமதியாளராக்கி இருக்கிறார்கள்.

இந்த நிறுவனங்களும் விவசாயிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சாகுபடி நுட்பங்களை  அவர்களுக்குப் பயிற்றுவித்து,  தரமான விதைகளையும், கடனையும் அளித்து,  அறுவடைக்கான உத்திரவாதத்தையும் பெற்றுக்கொண்டு விலையை முன்கூட்டியே தீர்மானித்து, இருதரப்புக்கும் பலன்கிடைக்கும் படி பார்த்துக் கொண்டார்கள். 

இந்த உருளைக்கிழங்குகள், நாம் சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தும் நீர்ச்சத்தும் சர்க்கரைச்சத்தும் மிகுதியான வகையல்ல. குறிப்பாக, சண்டானா (Santana) மற்றும் ஃப்ரைசோனா (Friesona) போன்ற வகைகள் நீள்வட்ட வடிவில் இருக்கும். அவை மஞ்சள் நிற சதைப் பகுதியையும், அதிக மாவுச்சத்தையும், குறைந்த சர்க்கரைச்சத்தையும், குறைந்த நீர்ச்சத்தையும் கொண்டு, பிரெஞ்சு ஃப்ரைஸ் சீவல்களுக்கு ஏற்ற அளவில் விளைபவை. ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த வகை உருளைக்கிழங்குகள், பிரெஞ்சு ப்ரைக்குத் தேவையான முறுகலையும் பொன்னிறத்தையும் அளிப்பவை, எனவே உலகளவில் இவை மிக அதிகமாகச் சாகுபடி செய்யப்படும் வகைகளாக இருக்கின்றன.

இந்த இரண்டு ஐரோப்பிய உருளைக்கிழங்கு வகைகளும், இந்திய மண்ணில், குறிப்பாக நீண்ட பகல் பொழுதும், குளிர்ச்சியான இரவும், மிதமான வெயிலும் கொண்ட காலநிலையைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் நன்கு விளைகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, குஜராத்தில் உருளைக்கிழங்கைச் சேமித்து வைக்கும் வசதி கொண்ட தொழிற்சாலைகளும் இருப்பதால், உலகெங்கும் பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்களை சீனாவை விடக் குறைந்த விலையில் இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது.

இந்த சர்வதேச நிறுவனங்களுடனான ஒப்பந்தம், உள்ளூர் சந்தையில் உருளைக்கிழங்கை விற்றுக்கொண்டிருந்த விவசாயிகளின் வருமானத்தை 75% அதிகரித்தது. இது இந்திய விவசாயிகளின் வாழ்வை மாற்றியது மட்டுமல்லாமல், இந்திய உருளைக்கிழங்கு பதப்படுத்தும் நிறுவனங்களின் விதியையும், தரத்தையும் மாற்றி அமைத்து, 2017-ம் ஆண்டு முதல் உலகெங்கும் உருளைக்கிழங்குகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு  இந்தியாவை மாற்றியது.

இதற்கு முன்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும், பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்களுக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை, குறிப்பாக பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து சந்தைகளை மட்டுமே சார்ந்திருந்தன.

குஜராத்தின் உருளைக்கிழங்கு சேமிப்பு மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் எழுச்சிக்குப் பிறகு, இந்தியாவை நாடாத, அணுகி இருக்காத சந்தை வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கின.

இந்த மாற்றத்திலும் முன்னேற்றத்திலும், இந்தியத்தாவரவியலாளர்கள் மற்றும் விவசாய விஞ்ஞானிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (ICAR) கீழ் இயங்கும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் (CPRI – The Central Potato Research Institute), அதிக சதைப்பகுதியும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட, எண்ணெய் குடிக்காமல் பொன்னிறமாக முறுகி வறுபடுவதற்கு ஏற்ற உருளைக்கிழங்கு ரகங்களை உருவாக்கியது. இந்த உருளைக்கிழங்குகளும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகின்றன. 

CPRI உருவாக்கிய குஃப்ரி சிப்சோனா (Kufri Chipsona) மற்றும் ஃப்ரைசோனா (Frysona) போன்ற ரகங்கள், ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் மற்றும் சிப்ஸ் தயாரிப்புக்கு மிகவும் ஏற்றவை. இந்த ரகங்கள் இந்தியாவின் உருளைக்கிழங்கு ஏற்றுமதி வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கின்றன. 

இந்த முன்னணி நிறுவனங்களின் வளர்ச்சியும் வெற்றியும், மேலும் பல நிறுவனங்களை குஜராத்தில் உருளைக்கிழங்கு விளைவிக்க முன்வரச்செய்ததோடு, பதப்படுத்தும் நிறுவனங்களை அமைக்கவும் தூண்டியது. 2026-ல் மேலும் சில முக்கிய பெருநிறுவனங்கள் இங்கு அமைக்கப்படவிருக்கின்றன. 

2025 பிப்ரவரியில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட உறையவைக்கப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்களின்  அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 20,000 டன்னைத் தாண்டியது. இதில் குஜராத்தின் பங்கு மட்டுமே 80% மாக இருந்தது. இப்போது குஜராத் இந்தியாவின் பிரெஞ்சு ஃப்ரைஸ் தலைநகராகி இருக்கிறது.

2024-ல், சர்வதேச சந்தையில் சீனாவை விட இந்திய உருளைக்கிழங்குகளின் சராசரி விலை மிகக் குறைவாக இருந்ததும், இந்தியா இரண்டாவது முக்கிய உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இருப்பதற்கு முக்கியக் காரணமாகியது.

நகரமயமாக்கலும் மாறிவரும் வாழ்க்கைமுறையும் பிரெஞ்சு ஃப்ரைஸ் போன்ற உறைந்த உணவுகளின் அதீத நுகர்வுக்குக் காரணமாக இருக்கின்றன.

நீர் பாய்ச்சுவதிலிருந்து சொட்டுநீர்ப்பாசனத்துக்கு மாறியிருப்பதும், தொடர்ந்து பயிரிட்டுக்கொண்டே இருக்காமல் கோடையில் நிலத்தைத் தரிசாக விடுவதும், சாண உரம் இடுவதும்  உருளைக்கிழங்கு சாகுபடியை அதிகரிக்கும் என்பதை  அறிந்துகொண்டிருக்கும் குஜராத் விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடியின் களஆய்வுகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். 

விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உருளைக்கிழங்கு சாகுபடியால் உயர்ந்திருப்பதால், குஜராத் இளைஞர்கள் பலரும் இப்போது விவசாயப் படிப்பில் வெகுவாக ஆர்வம் காட்டுகிறார்கள்.  

புதிய வகை உருளைக்கிழங்கு விதைகளைப் பற்றி இனி அறிந்துகொள்ள இருப்பதாக இளம் குஜராத் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குஜராத்தில் விவசாயிகள் மட்டுமல்லாது, விவசாய இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் பெருகி இருக்கின்றன; லாபமும் பார்க்கின்றன.

மிகச்சிறந்த உருளைக்கிழங்குச் செடிகளை திசு வளர்ப்பு (Tissue Culture) முறையிலும் இப்போது பெருக்கிப் பயிரிடுகிறார்கள். 

சர்வதேச சந்தையில் இந்தியா இப்போது உருளைக்கிழங்கு சாகுபடியிலும் ஏற்றுமதியிலும் மிகவும் கவனிக்கத்தக்க நாடாக இருந்தாலும், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்துக்கு இணையாக இன்னும் வளர்ந்திருக்கவில்லை. உருளைக்கிழங்கு சந்தை மதிப்பை கணிப்பவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இந்த இரு நாடுகளுக்கு இணையாகவே வர வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கப்பட்ட, நீளமான இந்த உருளைக்கிழங்குச் சீவல்களான ‘ஃப்ரென்ச்  ஃப்ரைஸ்’  17-ம் நூற்றாண்டில் பெல்ஜியத்திலிருந்து உருவானதா அல்லது 18-ம் நூற்றாண்டில் பிரான்ஸிலிருந்து உருவானதா என்று காலங்காலமாக விவாதங்கள் நடைபெறுகின்றன. பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும் இது ‘ஃப்ரிட்ஸ்’ (Frites) என்றே அழைக்கப்படுகிறது. அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இது ‘சிப்ஸ்’ (Chips) என்றே அழைக்கப்படுகிறது.

பெல்ஜியத்தின் மியூஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் பல காலமாக நீளமாக நறுக்கப்பட்ட மீன் துண்டுகள் எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு கடும் பனிக்காலத்தில் நதி நீர் உறைந்துபோனபோது, மீனுக்கு மாற்றாக உருளைக்கிழங்குகளை அப்படி மெலிதாகச் சீவி எண்ணெயில் பொரித்தெடுத்தார்கள். அதுதான் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் என்று பெல்ஜியம் தரப்பு வாதிடுகிறது.

ஆனால், வரலாற்றாய்வாளர்கள், 18-ம் நூற்றாண்டின் மத்தியில்தான் பெல்ஜியத்துக்கு உருளைக்கிழங்குகள் அறிமுகமானது, எனவே இந்தக் கதையில் உண்மையில்லை என்று கூறுகிறார்கள்

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பாக 1780-களில், பாரிஸின் ‘பாண்ட் நஃப்’ (Pont Neuf) என்னும் பாலத்தை ஒட்டிய நடைபாதைக்கடைகளில் எண்ணெயில் பொரித்தெடுத்த உருளைக்கிழங்குச் சீவல்கள் விற்கப்பட்டன. இந்த உணவின் செய்முறை 1795-ல் வெளியான, உருளைக்கிழங்கு உணவுகளுக்கான பிரத்யேக நூலான ‘La Cuisinière Républicaine’ (The Republican Cookbook)) என்னும் நூலில், 31 உணவுத் தயாரிப்புகளில் ஒன்றாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தச் சீவல்தான் ஃப்ரென்ச் ஃப்ரை என்று ஃப்ரென்சுத்தரப்பினர் வாதிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் ‘Frites’ அல்லது ‘Pommes Frites’ என்று பெல்ஜியத்திலும் பிரான்ஸிலும் குறிப்பிடப்பட்ட இந்த சீவல்கள், மொழியியல் குழப்பத்தினால்தான்  ‘ஃப்ரென்ச்  ஃப்ரை’  என்று ஆனது.

முதல் உலகப் போரின்போது அமெரிக்க வீரர்கள் இந்தப் பொரித்தெடுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்களைச் சாப்பிட்டார்கள். அப்போது பெல்ஜிய இராணுவத்தினர் பிரெஞ்சு மொழி பேசியதால், அமெரிக்க வீரர்கள் அந்த உணவை ‘ஃப்ரென்ச்  ஃப்ரை’ என்று குறிப்பிட்டார்கள்.

“french fried potatoes”  என்ற சொற்றொடர் முதன்முதலில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டது 1856-ம் ஆண்டில் எலிசா வாரன் எழுதிய Cookery for Maids of All Work என்ற நூலில்தான். 

1856-களில் பிரபலமாக இருந்த ஆங்கில உணவு செய்முறை நூல்களில், நீளமான மெல்லிய உணவுச் சீவல்களை எண்ணெயில் பொரித்தெடுக்கும் முறையே “French fried” என்று குறிப்பிடப்பட்டது. நீண்ட மெல்லிய துண்டுகளாக எந்த உணவுப்பொருளையும் நறுக்குவதே பிற்பாடு “Frenching”  என்று குறிப்பிடபட்டது. இந்த இரண்டு காரணங்களால் ஃப்ரென்ச் ஃப்ரைக்கு இந்த பெயர் வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

20 -ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், “french fried”  என்பது வெங்காய வறுவல் அல்லது கோழி இறைச்சி போன்ற உணவு வகைகளுக்காக “ஆழமாகப் பொரித்தது” (deep-fried) என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்காவுக்கு ஃப்ரென்ச் ஃப்ரை அறிமுகமானது, அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெஃப்பர்சன் வெள்ளை மாளிகையில் அளித்த ஒரு விருந்தில்தான். தாமஸ் ஜெஃப்பர்சன் பிரான்ஸில் அமைச்சராக இருந்தபோது (1784–1789), சுவைத்துப்பார்த்த உருளைக்கிழங்கு வறுவலின் சுவையில் மயங்கி, அதன் செய்முறைக் குறிப்பைப் கையோடு கொண்டு வந்திருந்தார். அவரது தனிப்பட்ட சமையல்கலைஞரான ஜேம்ஸ் ஹெம்மிங்ஸ், 1802-ல் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு இரவு விருந்தில் இதை அனைவருக்கும் சமைத்துப் பரிமாறினார். அதிலிருந்து ஃப்ரென்ச் ஃப்ரைஸ் அமெரிக்கர்களின் நாக்குகளில் நீங்கா இடம்பிடித்தது.

துரித உணவுகள் அமெரிக்காவில் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்த 20-ம் நூற்றாண்டின் மத்தியில், ஃப்ரென்ச் ஃப்ரை மிக எளிய ஆனால் அனைவருக்கும் பிடித்தமான துணை உணவாகப் பிரபலமடைந்தது.

உலகளவில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் தயாரிப்புக்கும் பொதுவான பயன்பாட்டுக்கும் உள்ள உருளைக்கிழங்கு வகைகள் அவற்றின் மாவுச்சத்து (starch) மற்றும் நீர்ச்சத்து (moisture) அளவுகளைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.

உலகளவில்  ஃப்ரென்ச் ஃப்ரைகளுக்கான அதிகம் பயன்படுத்தப்படும் “மாவுச்சத்து நிறைந்தவை” அல்லது “உலர்ந்தவை”, பொரிக்கும்போது சீவல்களின் மேற்புறம் முறுகலாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் உருளைக்கிழங்கு வகைகளே ஃப்ரென்ச் ஃப்ரைஸுக்கு சிறந்த தேர்வாகும். அவற்றின் பட்டியல்:

  • Agria
  • Shepody
  • Ranger Russet
  • Russet Burbank 
  • Umatilla Russet
  • Innovator
  • Kennebec
  • Idaho Potato
  • Yukon Gold
  • Markies
  • Fontane
  • Umatilla Russet & Alturas

இவற்றில் ரஸ்ஸட் (Russet) வகைகளே உலகெங்கிலும் மிக அதிகமாகப் பயன்பாட்டில் இருப்பவை. ரஸ்ஸட் வகையில் குறிப்பாக, ரஸ்ஸட் பர்பேங்க் (Russet Burbank) வகைதான் மிக பிரபலமானது.

அமெரிக்கத் தாவரவியலாளரும் தோட்டக்கலை நிபுணருமான லூதர் பர்பேங்க் (Luther Burbank) என்பவரால், ஐரிஷ் உருளைக்கிழங்குப் பஞ்சத்துக்குப் பிறகு அதற்கான தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த ரஸ்ஸட் பர்பேங்க் உருளைக்கிழங்கு. இது கண்டுபிடிக்கப்பட்டபோது அவ்வளவாக வரவேற்கப்படவில்லை.

அமெரிக்காவில் 1930-களில் இந்த வகையை வெறும் 4% மக்கள் தான் விரும்பினார்கள். ஆனால், பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்குகளுக்கான தேவை உருவான 1940 மற்றும் 50களில் இதன் விற்பனை அதிகரித்து, 2010-ல் இதன் பயன்பாடு சுமார் 70% ஆனது.

நீளமான, பெரிய, உருளை வடிவ, தட்டையான மேற்புறம் கொண்ட, மாவுச்சத்து அதிகமாகவும் நீர்ச்சத்து குறைவாகவும் இருக்கும் இந்த உருளைக்கிழங்கு, மொறுமொறுவென்ற மேற்புறமும் மிருதுவான உட்பகுதியையும் கொண்டிருக்கும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் உருவாக்கத்துக்கு மிக பொருத்தமானது.

உருளைக்கிழங்குகளுக்குப் பொதுவாக ஏற்படும் நோய்களுக்கு இந்த ரஸ்ஸட்  வகை எதிர்ப்புத்திறன் கொண்டது.  தடித்த தோல் கொண்டிருப்பதால் 7°C -ல் இவற்றை சுமார் 5 மாதங்களுக்கு முளைக்காமல் சேமிக்கமுடியும். 

எனினும், அறுவடைக்குப் பின்னர் இவை முளைக்காமல் இருக்க * பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரென்ச் ஃப்ரை உருவாக்கம்

தோல் சீவப்பட்ட உருளைக்கிழங்குகளை நீளவாக்கில் மெலிதாக வெட்டி, குளிர்நீரில் கழுவி, துண்டுகளின் மேற்பரப்பில் இருக்கும் மாவுச்சத்து நீக்கப்படுகிறது.

உலர்த்திய பின்னர், மிதமான வெப்பத்தில் இருக்கும் எண்ணெயில் முதல் முறையும், பின்னர் மிக அதிக வெப்பத்தில் இருக்கும் எண்ணெயில் இரண்டாவது முறையும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கப்படுகிறது. பெரும்பாலும், இரண்டாவது முறை பொரித்தெடுக்கும்போதுதான் ஃப்ரென்ச் ஃப்ரைஸுக்கான மொறுமொறுப்பும் சுவையும் கிடைக்கிறது. பின்னர் உப்புத் தூவப்பட்டு, பலவிதமான சாஸ்களுடன் இது உண்ணப்படுகிறது.

பொரித்தெடுக்க பெரும்பாலும் தாவர எண்ணெய்களும் ஒரு சில நிறுவனங்களில் விலங்குக் கொழுப்பும் தாவர எண்ணெய் கலவையும் பயன்படுத்தப்படுகிறது.

விளைவுகள்

மாவுச்சத்து மிகுந்த உருளைக்கிழங்கைத் தொடர்ந்து பயன்படுத்துவது நீரிழிவு  நோயை உருவாக்கக்கூடும். எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும்போது அதிக எண்ணெயை உருளைக்கிழங்கு உறிஞ்சிக் கொள்வதால், அதிகக் கொழுப்புச் சத்தும் கலோரியும் கொண்டிருப்பதால், உடல் எடை கூடுவதும், அதீத பருமன் (Obesity) உள்ளிட்ட பிரச்சினைகளும் உண்டாகும் சாத்தியம் மிக அதிகமாக இருக்கிறது. அதிக உப்பு சேர்க்கப்படுவதால், சோடியத்தின் அளவு அதிகமாகி இரத்த அழுத்த நோய் உண்டாகலாம்.

உருளைக்கிழங்கின் சத்துக்கள் நிறைந்த தோல் நீக்கப்பட்ட பின்னரே ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்யப்படுவதாலும், அது ஆரோக்கியமானதல்ல என்கிறார்கள் வல்லுநர்கள்.

மீண்டும் மீண்டும் பொரித்தெடுத்த எண்ணெயை உபயோகிப்பதால் இருதய நோய்களும் வரக்கூடும். மேலும், மிக உயர்ந்த வெப்பத்தில் மாவுச்சத்து உள்ள உணவுகள் சமைக்கப்படுகையில் உருவாகும் அக்ரிலாமைடு (Acrylamide), புற்றுநோய் உருவாக்குவதில் முக்கியமான காரணியாக இருக்கிறது.

(இந்த ஆபத்துக்கள் அனைத்துமே அடிக்கடி ஃப்ரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவதால் உண்டாகலாம். எப்போதாவது சாப்பிடுவதால் இப்படியான ஆபத்துகள் உண்டாவதில்லை.)

எனினும், உலகின் பிரபலமான உணவு வல்லுநர்கள், பிரென்ச் ஃப்ரைஸ் ஆரோக்கியமான உணவு அல்ல என்றுதான் சொல்கிறார்கள்.

உருளைக்கிழங்கு மற்றும் இந்த உருளைக்கிழங்குச் சீவல்களின் சமையல் வரலாறு, விவசாயம் பாரமப்ரியம் ஆகியவற்றைச் சொல்வதற்கென்றே பெல்ஜியத்தின் ப்ரூஜஸ் நகரில் ‘ஃப்ரீட்மியூசியம்’ (Frietmuseum) என்னும் பெயரில் ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது.  

பிரென்ச் ஃப்ரைஸின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. இதற்கு, உறைந்த உணவுச் சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சி, வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் அதிகரித்து வரும் தேவை, ஆன்லைன் உணவு விநியோகம் மற்றும் ‘உடனடி உணவுப் பொருட்களுக்கான அதிகரிதுவரும் தேவை போன்றவை காரணமாக இருக்கின்றன.

சர்வதேச ஃப்ரென்ச் ஃப்ரைஸ் சந்தையானது, 2024-ல் $17.45 பில்லியனாக இருந்து, 2029-க்குள் $23.17 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் சந்தைகளில் உள்ள வலுவான பொருளாதார வளர்ச்சியும், துரித உணவு விடுதிகளின்  நிலையான வளர்ச்சியுமே இதற்கு முக்கியக் காரணிகளாகும்.

அக்ரிலாமைடு உருவாவதைக் கட்டுப்படுத்துவது மற்றும் ரஸ்ஸட் உருளைக்கிழங்கு விவசாயத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வது போன்ற சவால்கள்  ஃப்ரென்ச் ஃப்ரையின் எதிர்காலத்துக்கான முக்கியச்சவால்களாக உள்ளன. ஆரோக்கியமான எண்ணெய்  வகைகள், புதிய குறைந்த சர்க்கரைச்சத்து கொண்ட  உருளைக்கிழங்கு வகைகள் சமையலறை தொழில்நுட்ப மேம்ம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டால் இந்தப் பொன்னிற உணவு அதன் சுவையான பயணத்தை ஆரோக்கியமாகத் தொடரும்.  

*முளைப்புத் தடுப்பான்: நீண்ட காலச் சேமிப்பிற்காக, ரஸ்ஸட் உருளைக்கிழங்குகளில் முளைப்பதைத் தடுக்கும்  CIPC (Chlorpropham)n போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேப்பிள் ஸிரப்!

அந்த மாபெரும் திருட்டு மிக நூதனமாகத் திட்டமிடப்பட்டது. கனடாவின்  க்யூபெக் நகரின் முக்கிய சேமிப்புக்கிடங்கில் இருந்த மிக விலை மதிப்புள்ள ஒன்றைக் கொள்ளையடிக்க வருடங்களாக ஒரு குழு திட்டமிட்டது.    அந்தக்கிடங்கில் பணியாற்றிய பெண்மணி ஒருவரின் கணவரான அவிக் கரோன் (Avik Caron) அந்த சேமிப்புக்கிடங்கு இருந்த நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரும் கூட என்பதால் அவரும் அந்தக்கொள்ளையில் இணைந்திருந்தார்.

அவிக்கின் மனைவியிடமிருந்து  கிடங்கின் அமைப்பு, பீப்பாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதம் மற்றும் சேமிப்பின் அளவு ஆகியவற்றை கொள்ளையர்கள் தெரிந்துகொண்டார்கள்.

 
கள்ளச்சந்தை வணிகத்தில் மிகவும் பிரபலமாயிருந்த   ரிச்சர்ட் வாலியர் தான் அந்தக் கொள்ளையை தலைமையேற்று நடத்தினான். 

தொடர்ந்து மாதக்கணக்கில் யாருக்கும் தெரியாமல் யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள, சேமிப்பில் இருந்த ’’அந்த’’ மதிப்பு வாய்ந்த பொருள்,   ஆகஸ்ட் 2011-லிருந்து ஜூலை 2012 வரை சுமார் பத்துமாதங்களில் மெல்ல மெல்லக் கொள்ளையடிக்கபட்டது. 

கனடாவின் மிகப்பெரும் விவசாயக் கொள்ளை  என்று வரலாற்றில் குறிப்பிடப்படும், மிகப்பெரிய கொள்ளைச்சம்பவமான இது, வங்கியிலோ, வைரங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அருங்காட்சியகத்திலோ நகைக்கடையிலோ நடக்கவில்லை. 

க்யூபெக் நகரின் பரந்து விரிந்த மேப்பிள் சிரப் சேமிப்புக்கிடங்கில்  9571 பீப்பாய்களில் இருந்த  30 மில்லியன் டாலர் மதிப்புக்கொண்ட 3000 டன் நீர்மத்தங்கம் எனப்படும் மேப்பிள் சிரப்தான் கொள்ளை போனது.  சுவற்றுக்கு வெளியே லாரிகளை நிறுத்தி, துளையிட்டு ஃபோர்க் லிஃப்ட்கொண்டு பீப்பாய்களைத் தூக்கி, பீப்பாய்களிலிருந்து பம்ப் செய்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே இருந்த பீப்பாய்களில்  மேப்பிள் சிரப் சேகரிக்கப்பட்டு, பதிலுக்கு காலிப்பீப்பாய்களில் வெறும் தண்ணீர் நிரப்பப்பட்டது.

கொள்ளையிடப்பட்ட சிரப் யாருக்கும் எந்தச்சந்தேகமும் வராதபடி வெளிப்படையான சந்தையில் விற்கப்பட்டது.

கனடாவின் வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் கொள்ளையான இது 2012-ன் இறுதியில், வழக்கமான தரக்கட்டுப்பாட்டு சோதனையின் போது,  பொதுவாக 270 கிலோ அளவில் இருக்கும் மேப்பிள் சிரப் பீப்பாய்கள் மீது ஏறிப்பார்த்த அதிகாரிகள் பீப்பாய்கள் எடையில்லாமல் உருண்டபோது சந்தேகப்பட்டு திறந்து பார்க்கையில்தான் கண்டறியப்பட்டது.  க்யூபெக் சேமிப்புக்கிடங்கில் பல வருடங்களாக சேமிக்கபட்டிருந்த விலைமதிப்புள்ள மேப்பிள் சிரப் கொள்ளைபோனது உலகளவில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

 மிகப்பெரிய அளவிலான குற்றப்புலனாய்வு நடந்துதான் இந்தக்கொள்ளையில் ஈடுபட்ட சுமார் 25 பேர் கைதுசெய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது. 

விசாரணை நீண்டு கொண்டே சென்று 2016-ல் தான் ஒருவழியாக கொள்ளையர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். ரிச்சர்டுக்கு 10 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு 8 வருட சிறைத்தண்டனையும்,  உள்ளேயே இருந்து உதவியதற்காக அவிக்கின் மனைவிக்கு 5 வருட தண்டனையும் 1.2 மில்லியன் டாலர் அபராதமும், கொள்ளையடிக்கப்பட்ட மேப்பிள் சாற்றை ஏரளமாகப் பதுக்கி வைத்திருந்த  ரிச்சர்டின் அப்பாவுக்கு 2 வருட தண்டனையும் 10000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. * 

இந்த மேப்பிள் சிரப் என்னும் மேப்பிள் மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கையான இனிப்புச்சாறு எப்போதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு உபயோகத்தில் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைத்ததில்லை எனினும் உலகெங்கிலும் பிரபலமான ஒரு  கதை இப்படிச்சொல்கிறது:

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடஅமெரிக்காவின் கடும்பனிக்காலமொன்றில்,  இராகுயிஸ் பூர்வீக குடிகளின் தலைவரான  வொக்ஸிஸ் (Woksis)  வேட்டையிலிருந்து சோர்வுடன் திரும்பி வந்தார். கடும்பனிப்பொழிவினால்  மரம் செடிகொடிகள் உறைந்துபோனதோடு விலங்கினங்களும் மறைவிடங்களில் உறக்கநிலையில் இருந்ததால் பலநாட்களாகவே வேட்டையில்  விலங்குகள் கிடைக்காமல் பனிக்காலம் அவர்களுக்கு கடும் பசிக்காலமுமாகவே  இருந்தது. அன்றும் வெறும் கையுடன் குடிசைக்கு திரும்பிய அவர் சுற்றிலும் உயர்ந்து வளர்ந்திருந்த மேப்பிள் மரங்களில் ஒன்றில் தனது கோடாரியை ஓங்கிக் குத்திச்செருகி விட்டு அருகிலிருந்த ஆற்றுக்கு இறங்கிச் சென்றார்.

அவரது மனைவி மொஹுவாவுக்கு ஒரு சிறு உறைந்த மான் இறைச்சித்துண்டு அன்றைய உணவுக்கு இரவலாகக் கிடைத்திருந்தது. இறைச்சியுடன் வீடு திரும்பிய அவர், கணவர்  மேப்பிள் மரத்தில் குத்திச்சென்ற கோடாரி உண்டாக்கிய காயத்திலிருந்து சாறு வடிந்து மரத்துக்கு கீழே வைக்கப்பட்டிருந்த கூடையில் சொட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்தார்.  மெல்லிய நறுமணத்துடன் அந்த கூடையில் சேகரமாயிருந்த அந்தத் திரவத்தை சுவைத்துப்பார்த்த அவர் அதன் இனிப்பில் மகிழ்ந்து, சமைக்க  உறைந்துபோகாத நீர் இல்லாததால் அந்த மரச்சாற்றிலேயே இறைச்சியை சமைத்தார்.  

அன்றைய உணவின் சுவை அபாரமாக இருந்ததோடு மேப்பிள் மரங்களை காயப்படுத்தினால் அதிலிருந்து மிகச்சுவையான இனிப்பான சாறு கிடைக்கும் என்பதும் அந்தப் பூர்வீகக்குடிகளுக்கு அப்போதிலிருந்து தெரியவந்தது.

இந்தக்கதை மட்டுமல்லாது பல கதைகளும் மேப்பிள் சாறு கண்டுபிடிக்கப்பட்டதைக் குறித்து உலவுகிறது என்றாலும் இதுவே மிக அதிகம் புழக்கத்திலிருக்கிறது.

வட அமெரிக்காவின், வடகிழக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மேப்பிள் சாறு அங்கே ஐரோப்பியர்கள் வருவதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே  மரத்திலிருந்து சேகரிக்கப்பட்டு காய்ச்சிப் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தது.  அமெரிக்கப் பூர்வீகக் குடிகளின் சடங்குகளில் மேப்பிள் சாறு காய்ச்சி பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தபட்டது. வசந்தகாலத்தின் முதல் முழுநிலவில் மேப்பிள் சாற்றை அருந்தி மேப்பிள் நடனமிடுவதும் அவர்களின் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருந்தது.  அமெரிக்க பூர்வீகக்குடிகள் அனைத்துமே மேப்பிள் சாறு சத்துகளையும்  ஆற்றலையும் அளிப்பதையும் கண்டுகொண்டனர்.

பனிக்காலம் முடிந்து வசந்தம் துவங்குகையில் மேப்பிள் மரங்களில் சாறு நிரம்பி இருப்பதை அறிந்து கொண்டிருந்த அவர்கள் மரத்தில் V  வடிவ காயமுண்டாக்கி அதில் நாணல் தண்டுகளையும் , குழாய்களாக சுருட்டப்பட்ட மரபட்டைகளையும் செருகி சாற்றை சேகரிக்க கற்றுக்கொண்டனர்,

ஒழுகும் சாற்றை இறுக்கமாக பின்னப்பட்ட பிர்ச் மரபட்டைக்கூடைகளிலும் களிமண் பாத்திரங்களிலும்தான் சேமிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்துகொண்டனர்.

துவக்கத்தில் வடிந்த சாற்றை அப்படியே சுவைத்தவர்கள் காலப்போக்கில் அதை காய்ச்சி நீரைச் சுருக்கி கெட்டியாக்கினால் சுவை கூடுவதோடு நெடுங்காலத்துக்கு சேமிக்கமுடியும் என்பதையும் அறிந்தார்கள். அப்படி உருவானதுதான் மேப்பிள் சிரப்.

குறைந்த வெப்பத்தில் இரவெல்லாம் சூடாக்கப்பட்ட மேப்பிள் சாறு அடுத்த நாள் கலையில் சாற்றின் மேற்பரப்பில் படிந்திருக்கும் பனிப்படலம் நீக்கப்பட்டு பெரிய கலன்களில் வேகமாக எரியும் நெருப்பில் காய்ச்சி சிரப் ஆக தயாரிக்கப்பட்டு  சேமிக்கப்பட்டது. களிமண் பாத்திரங்களைப் போலவே கருங்கற்களில் குழி உருவாக்கி அதிலும் மேப்பிள்சாற்றை சேமித்தார்கள்.

துவக்க கால ஐரோப்பிய குடியேற்றத்தின்போது அமெரிக்கப் பூர்வீகக்குடியினர் ஐரோப்பியர்களுஜ்கு மேப்பிள் சாற்றைச் சேகரிப்பதைக் கற்றுக்கொடுத்தார்கள். ஃப்ரான்ஸ் அரசின் பிரபஞ்சவியலாளரான  ஆன்றி திவெட் (André Thevet) பிரஞ்ச் கடற்பயணிகள் மேப்பிள் சிரப்பை அருந்தியதை அவரது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 

1680-களில் ஐரோப்பிய  தோல் வணிகர்கள் மேப்பிள் சிரப் வணிகத்தையும் செய்தார்கள். ஆனால் ஐரோப்பியர்கள் மரத்தில் காயமுண்டாகி சாற்றை வடியச்செய்யாமல், மரத்தில்  துளையிட்டு  மேப்பிள் சாற்றை சேகரித்தார்கள். ஒரே மரத்தில் பல துளைகளிட்டும் சாறு சேகரிக்கப்பட்டது. ஏராளமாக சாறு சேகரிக்கப்பட்டு மாபெரும் மரக்கொள்கலன்களில் நிறைத்து,சுமை தூக்கும் விலங்குகளைக் கொண்டு  இழுத்துச்செல்லப்பட்டு பிரத்யேக சேமிப்புக்கிடங்குகளில் வருடக்கணக்காக மேப்பிள் சாறு சேமித்துவைக்கப்பட்டது.

நீர்மத்தங்கமென்று (Liquid gold) அழைக்கப்படும் இந்த மேப்பிள் சாறு 1970-களிலிருந்து பிளாஸ்டிக் குழாய்களைச்செருகி சேமிக்கப்படுகிறது. தொழில்நுட்ப உதவியும் இப்போது சாற்றை வடிகட்டப் பயனாகிறது. இப்போது எல்லாவித கலன்களிலும் சாறுசேகரிக்கப்படுகிறது.

மேப்பிள் மரங்களின் நூற்றுக்கணக்கான சிற்றினங்களில் மேப்பிள் சாறு மூன்று வகை மரங்களிலிருந்து கிடைக்கிறது.

சர்க்கரை மேப்பிள் எனப்படும் Acer saccharum, கருப்பு மேப்பிளான  Acer nigrum, சிவப்பு மேப்பிளான Acer rubrum ஆகிய மூன்றிலிருந்துதான் மேப்பிள் சிரப் பிரதானமாக தயாரிக்கப்படுகிறது.

இந்த மரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் சேமிக்கும் மாவுச்சத்தை  இலையுதிர்காலத்தில் இலைகள் முழுவதும் உதிர்ந்துவிடுவதால் வேர்களில் சேமித்துவைக்கிறது. குளிர்காலம் முடிந்து வசந்தம் துவங்குகையில், வெப்பம் உயர்ந்து பனி உருகும்போது, நீர் உறிஞ்சும் வேர்களால், இந்த சேர்த்துவைக்கப்பட்ட மாவுச்சத்தான ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. தண்டின் மேலே சாற்றேற்றத்தினால்,  மரத்தின் ஸைலம் எனப்படும் நீர்கடத்தும் குழாய்கள் வழியே கடத்தப்படும் இந்தச்சாறுதான் மேப்பிள் சாறு.

தொல்காலத்திலிருந்தே சாறு சேகரிக்கப்படுகையில் மரத்துக்கு சேதமாகாமல் கவனம் கொள்ளப்படுகிறது.

 30 லிருந்து 40 வயதான, 12 அங்குலச் சுற்றளவு கொண்ட மேப்பிள் மரங்களிலிருந்து தான் சாறு கிடைக்கும்.  ஒரு மேப்பிள் மரம் சுமார் நூறு வருடங்களுக்கு தொடர்ந்து சாறு அளிக்கும். ஒரு பருவத்தில் ஒரு மரம் சுமார் 150 லிட்டர் சாற்றைக் கொடுக்கிறது. இந்த அளவானது, மரத்தின் ஆரோக்கியம், மண் வளம் மற்றும் காலநிலையைக் குறித்து மாறுபடும். சுமார் 150 லிட்டர் சாற்றை கொதிக்க வைத்தால்தான் 1 லிட்டர் சிரப் கிடைக்கும். 

மெல்லிய இனிப்புடன் 3% சர்க்கரையும் பெரும்பாலும் நீர் மட்டும் இருக்கும் சாறு காய்ச்சப்பட்டு அதிலிருக்கும் நீர் ஆவியான பின்பு  70-75% சர்க்கரை கொண்டிருக்கும் மிக இனிப்பான மேப்பிள் சிரப் தயாரிக்கப்படுகிறது.  

மரங்களிலிருந்து வடியும் முதல் சாறு தங்கசாறு-Gold maple syrup. , அடுத்து வருவது ஆம்பர்- Amber, அடுத்து அடர் சாறு-dark ,அடுத்ததும் கடைசியில் வடிவதும் மிக அடர்சாறு- very dark என்று நான்கு வகை சிரப்கள் ஒரே மரத்திலிருந்து கிடைக்கிறது.

ஜனவரி மாதத்தின் கடைசியிலிருந்து ஏப்ரல் கடைசிவரை இந்த சாறு சேகரிக்கப்படுகிறது. 

முதல் சாற்றில் நிறமும் நறுமணச்சுவையும் மிதமாகவும் பின்னர் வரும் சாற்றில் நிறம் அடர்த்தியாகவும் நறுமணச்சுவை (flavour ) அதிகமாகவும் இருக்கும்.

முதல்தர மேப்பிள் சாறு காக்டெயில்களிலும்,  யோகர்ட்டின் மீதும் பரிமாறப்படுகிறது. அம்பர் வகை பேன்கேக் மற்றும் வேஃப்ஃபில்களுடன் சேர்த்துச் சுவைக்கப்படுகிறது.

அடர் மேப்பிள் சாறு பார்பெக்யூ முறையில் சமைக்கப்படும் இறைச்சிகளின் மீது தடவவும், அவற்றிற்கான ஆணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

மிக அடர்ந்த மேப்பிள் சாறு இறைச்சியை பதப்படுத்தவும், பேக்கரிப்பொருட்கள் தயாரிப்பிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

 மேப்பிள் மரங்களின் ஏசர் பேரினத்தின் மூன்று வகைகள் அல்லாது மற்ற வகை மேப்பிள் மரங்களிலிருந்தும் சிரப் குறைந்த அளவில் தயாரிக்கப்படுகின்றது.

உதாரணமாக பாக்ஸ் எல்டர் எனப்படும் Acer negundo, சில்வர் மேப்பிள் மரமான A. saccharinum, பேரிலை மேப்பிளான A. macrophyllum மற்றும் ஃப்ளோரிடா மேப்பிளான  A.floridanum ஆகியவற்றிலிருந்தும் மிகக்குறைந்த அளவில் சாறு எடுக்கப்படுகிறது.

மேப்பிள் அல்லாத பிர்ச், வால்நட் மற்றும் பனை மர வகைகளிலிருந்தும் கூட சிரப் கிடைக்கிறது. 

மேப்பிள் சிரப் மிட்டாய்களாகவும், மேப்பிள் வெண்ணெய் மற்றும் மேப்பிள் சர்க்கரையாகவும் சந்தையில் கிடைக்கிறது. சிரப் காய்ச்சப்படுகையில் நுண்ணுயிரிகளைக் கொண்டு நொதிக்கச்செய்து மாறுபட்ட சுவையும், வாசனையுமாக பல வகை சிரப்களும் கிடைக்கின்றன.

மேப்பிள் சிரப் தயாரிப்பு பொதுவாக வடஅமெரிக்காவின் வடகிழக்குப்பகுதியில் தான் மையம் கொண்டிருக்கிறது. மேப்பிள் மரங்களை பெருமளவில் வளர்த்தி மேப்பிள் சிரப் தயாரிக்கும் பண்ணைகள் சுகர் புஷ் (sugar bush) என அழைக்கப்படுகின்றன.

1930 வரைக்கும் அமெரிக்காவே மேப்பிள் சிரப் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தது. அதன்பின்னர் கனடாதான் இன்றைய தேதி வரை மேப்பிள் சிரப் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது.

குறிப்பாக க்யூபெக் மாகாணத்தில்தான் மிக அதிக மேப்பிள் சாறு தயாராகிறது. அங்குதான் முன்பு குறிப்பிட மாபெரும் மேப்பிள் சாறு கொள்ளை நடந்தது. க்யூபெக்கில் நட்டுமே சுமார் 14 ஆயிரம் பண்ணையாளர்கள் மேப்பிள் மரங்களை வளர்க்கிறார்கள்.

மேப்பிள் சிரப் ஜப்பான் மற்றும் தென்கொரியாவிலும் தயாரிக்கப்படுகிறது.  தென்கொரியாவில் வடியும் சாறு சிரப்பாக காய்ச்சி எடுக்கப்படாமல் அப்படியே  gorosoe என்னும் பெயரில் சுவைக்கப் படுகிறது.

கனடாவிலிருந்து தயரிக்கப்படும் மேப்பிள் சிரப் சூடாகவே உலோக அல்லது கண்ணாடி டின்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. மேப்பிள் சிரப் என்னும் பெயர்  பாட்டில்களின் மேலே இருக்கும் லேபிளில் ஃப்ரென்ச் மற்றும் ஆங்கிலத்தில் 1.6  மிமீ என்னும் ஃபான்ட் அளவில் தான் இருக்கவேண்டும் எனும் விதியும் இருக்கிறது. 

சர்வதேச மேப்பிள் சிறப்பு நிறுவனமும்,(International Maple Syrup Institute-IMSI) பல மேப்பிள் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து, சிரப்பின் உற்பத்தி தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவின் மேப்பிள் சிரப் தயாரிப்பு விதிகளைத் திருத்தி இருநாடுகளுக்கும் பொதுவாக ஒரே மாதிரியான விதிகளையும்  உருவாக்கி இருக்கின்றன. 

மேப்பிள் சிரப்பில் ஏராளமான ஆற்றலும், மாவுச்சத்து, சர்க்கரைச்சத்து,  புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் கனிமங்கள் நிறைந்திருக்கிறது. 

உலகெங்கிலும் பல பிரதான உணவுகளுக்கு தொடு உணவாகவும், டாப்பிங்ஸ் எனப்படும் மேலே தடவி உண்ணப்படும் உணவாகவும் மேப்பிள் சிரப்  பயன்பாட்டில் இருக்கிறது. 

மேப்பிள் சிரப்பைவிட தரம் குறைவான மக்காச்சோள சிரப்புடன் சர்க்கரை கலந்த டேபிள் சிரப் – Table syrup வளரும் நாடுகளில் மேப்பிள் சிரப்புக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் நாம் உயர் விடுதிகளில் மேப்பிள் சிரப் என்று சுவைத்துப்பார்ப்பது  அநேகமாக டேபிள் சிரப்தான்

கனடாவின் கலாச்சாரத்தில் மிக முக்கியமான இடம் பெற்றிருக்கிறது மேப்பிள் மரமும் மேப்பிள் சிரப்பும். கனடவின் தேசியக்கொடியுலேயே மேப்பிள் இலை பொறிக்கப்பட்டிருக்கிறது. மேப்பிள் இலையே கனடாவுக்கான குறியீடாகத்தான் கருதப்படுகிறது.

கடந்த சில வருடங்களாகவே இயற்கை உணவுகளுக்கான தேடலும் தேவையும் அதிகரித்திருப்பதால் மேப்பிள் சிரப்பின் விற்பனையும் உலகளவில் மிக அதிகமாயிருக்கிறது. 

மாபெரும் மால்களிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏரளமான இனிப்பு பானங்களின் வரிசையில் நமக்கு இயற்கை அளித்திருக்கும் மாபெரும் கொடையான, தீங்கற்ற, ரசாயனங்களற்ற இந்த இனிப்புச்சாற்றையும் தேர்வு செய்து சுவைத்துப்பார்க்கலாம்.

*கனடாவின் மேப்பிள் சிரப் கொள்ளை குறித்த  the sticky என்னும் நகைச்சுவை தொடர் அமேஸான் பிரைமிலும் dirty money என்னும் ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது. மேலும் ஏராளமான crime podcast நிகழ்வுகளும் இந்த மேப்பிள் சிரப் கொள்ளை குறித்து வந்திருக்கிறது

இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச்!

ஜெர்மன் நாட்டுப்புறங்களில்  ஆல்ப் என்றொரு கண்ணுக்கு தெரியாத மிகத் தீங்கிழைக்கும் ஒரு  ஆவியைப் பற்றிய கதைகள் உண்டு. கதவின் சிறு இடைவெளி, சுவர்களின்  துளை, ஜன்னல்களின் விரிசல் என்று எந்த வழியாகவும் உள்ளே நுழைந்து உறங்கிக்கொண்டிருப்பவர்களின் நெஞ்சுக்குள் புகுந்துவிடும் ஆவி அது, அது உடலுக்குள் நுழைந்த பின்னர்தான் அதை உணரவே முடியும். பின்னர் ஆல்ப் பிடித்துக்கொண்டிருப்பவர் பலஹீனமாகி ஆற்றலையும் ரத்தத்தையும் இழந்து மெல்ல மெல்ல உயிரிழப்பார்கள்.  

இது வெறும் கதைதான் ஆனால் இப்போது    கண்ணுக்குதெரியாத இந்த  கெட்ட ஆவியைப்போலவே ஒன்று நம் அனைவரின் வீடுகளுக்குள்ளும்  நுழைந்து உணவு மேசையிலும் இடம் பிடித்து விட்டிருக்கிறது. அது நம் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல உறிஞ்சிக்கொண்டு இருப்பதை நம் அறியாமல் இருக்கிறோம்.

இப்போது நாம் அன்றாடம் உண்ணும்  பதப்படுத்தபப்ட்ட இறைச்சி, பழச்சாறு, தயிர், மருந்து, பேக்கரித்திண்பண்டங்கள் என பலவகையான உணவுகளில் இருக்கும் இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் என்னும் நம் கண்ணுக்குத்தெரியாத தொழிற்துறை மாவுப்பொருள் தான் ஏராளமான ஆரோக்கியக் கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 

பொதுவாக மைதா, வெள்ளைச்சோறு, சர்க்கரை இவைதான் உடல்நலனுக்குக் கெடுதல் என்னும்  புரிதலும் நம்பிக்கையும் பலருக்கு இருக்கிறது என்றாலும் 1940-களிலிருந்து உணவு அல்லாத காகிதம், மருந்து, பசை மற்றும் வேறு பல தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட இந்த இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் இப்போது பரவலாக உணவுத்தொழிற்சாலைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதையும் அது கலந்திருக்கும்  நாம் மிகச் சாதாரணமாகவும், அதிகமாகவும் வாங்கி உண்ணும் உணவுப்பொருட்கள் உண்டாக்கும் ஆரோக்கிய சீர்கேடுகளையும் நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை. 

இந்த தொழில்துறை மாவுப்பொருள் (Industrial starch) என்பது மக்காச் சோளம், கோதுமை, உருளைக்கிழங்கு மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து பெறப்படுகிற, பல்துறை திறன் கொண்ட, இயற்கையான, மட்கக்கூடிய  ஒரு  கார்போஹைட்ரேட் பாலிமர். இது காகிதத் தயாரிப்பு, ஜவுளி, மருந்துப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒரு மூலப்பொருளாகவும், பல்வேறு உணவு அல்லாத தொழில்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பண்டைய பல நாகரீகங்களில்  பாப்பிரஸ் புற்களிலிருந்து உருவாக்கப்பட்ட காகிதங்களை ஒட்டுவதற்காகத்  தயாரிக்கப்பட்ட இந்த ஸ்டார்ச் 18,19-ம் நூற்றாண்டுகளில் தொழில்புரட்சியின் போது ஜவுளி, காகிதம் மற்றும் அச்சுத்தொழில்களில் மிக அதிகமான அளவு பயனாகத்தொடங்கியது. பின்னர் அவற்றின் பலவகயான உபயோகங்களின் தேவை அதிகமானபோது அவற்றில் ரசாயன மாற்றங்களும் செய்யப்பட்டு உணவு மருந்து போன்ற தொழிற்சாலைகளிலும் அவற்றின் பயன்பாடு துவங்கியது.  

இந்த இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் மிக அதிகமாகப் புழங்குவது காகிதத்தொழிற்சாலைகளில்தான். காகிதங்களின் வலிமை, அச்சிடக்கூடிய தன்மை மற்றும் மேற்பரப்பின் மிருதுத்தன்மை ஆகியவை இந்த ஸ்டார்ச்சினால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.

ஜவுளித்துறையில் நெசவு இழைகளை வலுப்படுத்தவும் இதே ஸ்டார்ச் உபயோகப்படுத்தப்படுகிறது .

மருந்துத்தொழிற்சாலைகளிலும் இந்த ஸ்டார்ச் மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல்களில், செயல்புரியாத ஒரு துணை மூலப்பொருளாக மருந்துகளை ஒன்றிணைக்கும் பசையாகப் பயன்படுத்தபடுகிறது  மேலும் அழகுசாதனப் பொருட்களில் சருமத்திற்குள் உறிஞ்சப்படும்  பண்பை மேம்படுத்துவதற்காகவும் இந்த இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச்  பயன்படுத்தப்படுகிறது.

தொழில்துறை மாவுப்பொருட்கள் அவற்றின் இயற்கையான வடிவத்திலிருந்து குறிப்பிட்ட தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு  பிரத்யேகமாக மாற்றியமைக்கப்படுகிறது. இந்தச் செயல்முறைகள் தொழில்துறை மாவுப்பொருளின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை மாற்றி, அதன் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.

உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கோதுமை ,மக்காச்சோளம் போன்ற மூலப்பொருட்களை ஊறவைத்து அரைத்து, பிரித்தெடுத்து உலர்த்துதல் மூலம் மாவுச்சத்தைப் பெற்ற பிறகு, அதன் பாகுத்தன்மை, ஒட்டும் தன்மை மற்றும் நிலைப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த இவை  மாறுபடுத்தப்படுகிறது (Modified). 

மேலும் இந்த மாவுப்பொருட்களிலில் நார்ச்சத்து ,  க்ளூட்டன் உள்ளிட்ட புரதங்கள், கொழுப்பு, எண்ணெய் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அனைத்துச் சத்துக்களும் முற்றிலுமாக நீக்கப்படுவதால் இதில் அமைலோஸ் மற்றும் அமைலோபெக்டின் என்னும் ஸ்டார்ச் பாலிமர்கள் மட்டுமே இருக்கும். பலமுறை சுத்திகரிக்கப்பட்டு (Refining) தூய மாவாக மட்டுமே இவை தயாரிக்கப்படுவதால் இவற்றில் மாவல்லாது வேறு எந்த சத்துக்களுமே இருப்பதில்லை. 

முன்-ஜெலாட்டினேற்றம் (Pre-gelatinization) போன்ற இயற்பியல் மாற்றத்தில்  மாவுப்பொருளை சமைத்து மீண்டும் உலர்த்துவதன் மூலம், அதற்கு குளிர்ந்த நீரில் உடனடியாகக் கரையும் திறன் அளிக்கப்படுகிறது, இது உடனடி உணவுகளுக்கு மிகவும் ஏற்றதோர் இயல்பு. 

இறுதியாக, என்சைம்கள் பயன்படுத்தப்பட்டு  இந்த மாவின் சங்கிலிகள் உடைக்கப்பட்டு குளுக்கோஸ் சிரப், மால்டோடெக்ஸ்ட்ரின்ஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் போன்றவை உருவாக்கப்படுகின்றன.

இந்த மாறுபடுத்தப்பட்ட மாவுப்பொருட்கள் தான் தொழிற்சாலை மாவுப்பொருள் என்னும் பெயரில் அவற்றின் மேம்படுத்தப்பட்ட நிலைப்புத்தன்மை மற்றும் குளிர்ந்த நீரில் கரையும் திறன் போன்ற இயல்புகளின் காரணமாக, உணவு மற்றும் உணவு அல்லாத தொழில்களில் ஒரு அத்தியாவசியமான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

பிரதான செயல்பாடுகள் 

இந்தத் தொழிற்துறை மாவுப்பொருட்கள் பலவகையான உணவுப் பொருட்களில்  கீழ்க்கண்ட பயன்பாடுகளுக்காக உபயோகப்படுதப்படுகின்றன. 

  • ஸ்டார்ச் சூப், சாஸ், புட்டிங் போன்ற உணவுபொருட்களில் திண்மையாக்கியாக (thickening agents) மிக அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.
  • பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பேக்கரிப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களின் உள்ளடக்கங்களை ஒன்றாக இணைக்க  உதவுகிறது.
  • தயிர் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் நீர் தனியே பிரிவதைத் தடுத்து, இவ்வுணவுகளின் சீரான தன்மையைப் பராமரிக்க உதவுகிறது. 
  • இது கொழுப்புக் குறைக்கப்பட்ட பொருட்களில் கொழுப்பை மாற்றியமைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • மிட்டாய்கள், ஜெல்லிகள் மற்றும் பேக்கரி ஃபில்லிங்ஸ் போன்றவற்றில் உறுதியான கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுகிறது. 
  • மாவுச்சத்து மாற்றியமைப்பான்கள் (Starch modifiers) ஈரப்பதத்தை தக்கவைத்து, ரொட்டிகளில் புத்துணர்ச்சியை (freshness) நீட்டிக்கின்றன.
  • கேக்குகள், மிட்டாய்கள் மற்றும் பிஸ்கட்டுகளில் மிருதுத்தன்மையை மேம்படுத்துகின்றன. 
  • டெக்ஸ்ட்ரின்ஸ் (Dextrins) போன்ற தொழிற்சாலை மாவுப்பொருட்களின் வழித்தோன்றல்கள் இனிப்பு வகைகளில் சர்க்கரைப் பூச்சுகளுக்குப் (glazes)  பயன்படுத்தப்படுகின்றன.
  • உறைந்த உணவுகளில் நீர்ச்சத்து பிரிந்து வருவதை இவை தடுத்து நிறுத்துகின்றன. 
  • முன்-ஜெலாட்டினேற்றம் செய்யப்பட்ட மாவுப்பொருள் (Pre-gelatinized starch) உடனடியாகக் கரைந்து,  உடனடியாகத் தடிமனாகிறது. எனவே இது உடனடி சூப்கள், சாஸ்கள் மற்றும் டெஸர்ட்களில் அத்தியாவசியமானது.
  • பழச்சாறுகள் மற்றும் காய்கறிச் சாறுகள் போன்ற பானங்களில் கூழ்மத் துகள்களைப் பிடித்து வைத்திருக்கவும், பானத்தின் நிலைப்புத்தன்மையை அதிகரிக்கவும் இம்மாவு பயன்படுத்தப்படுகிறது.
  • வணிக ரீதியாகத் தயாரிக்கப்படும் வெள்ளை ரொட்டிகளில், கேக்குகள், பேஸ்ட்ரிகள்,மற்றும் பொரித்த பொருட்களின் Chips and Fried Snacks) மேல் பூச்சுக்கு அல்லது பிணைப்புக்கு இந்த மாவுப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது
  • ஊறுகாய்கள் மற்றும் சாஸ்களின்  கெட்டிப்புத் தன்மை மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்க  இந்த மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்துக்கள்  பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • மயோனைஸ், சூப் மிக்ஸ்கள் மற்றும் இன்ஸ்டன்ட் சூப்கள்,  மற்றும் சில வணிக ரீதியான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலாப் பொடிகளில் நிரப்பியாகவும் பிணைப்பானாகவும்  இந்த ஸ்டார்ச் சேர்க்கப்படுகிறது.
  • ஜாம் மற்றும் ஜெல்லிகளுக்குத் தேவையான கெட்டிப்புத் தன்மையைக் கொடுக்க  இந்த மாவுப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
  • குறைந்த கொழுப்புள்ள தயிர், ஐஸ்கிரீம்  (Low-Fat Dairy) போன்றவற்றில், கொழுப்பை நீக்கியதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய (கெட்டியாக்க) இந்த ஸ்டார்ச் பயன்படுத்தப்படுகிறது.
  • இன்ஸ்டன்ட்  நூடுல்ஸின் அமைப்பை மேம்படுத்த இந்தச் சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
  • பல இனிப்புப் பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் அதிக புருக்டோஸ் சோளப் பாகு (High Fructose Corn Syrup – HFCS)இந்த வகை ஸ்டார்ச்சில் , இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
  • சைவ பர்கர்கள் அல்லது மாற்று இறைச்சித் துண்டுகள்  (Meat Substitutes) போன்றவற்றில், கூறுகளை ஒன்றாகப் பிணைக்க  இந்த ஸ்டார்ச் பயன்படுத்தப்படுகிறது.
  • விளையாட்டுப் பானங்கள் (Sports Drinks), செயற்கை இனிப்புகள் (Artificial Sweeteners), இன்ஸ்டன்ட் ஓட்ஸ் போன்றவற்றிலும் இவை சேர்க்கப்படுகின்றன.

ஆரோக்கியக்கேடுகள்:

மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்துக்கள் (Modified Starches) இரத்தச் சர்க்கரை அளவில் ஏற்படுத்தும் தாக்கம்  என்பது அவற்றின் சர்க்கரை உயர்த்தல்  குறியீட்டை (Glycemic Index – GI) பொறுத்து மாறுபடும். 

சாதாரண மாவுப்பொருட்களை விட, அதிக செயலாக்கம் செய்யப்பட்ட மற்றும் என்சைம் மூலம் சிதைக்கப்பட்டஇந்த வகை மாவுப்பொருட்களின் வழித்தோன்றல்கள் (Maltodextrins, Dextrose) விரைவான இரத்த சர்க்கரை உயர்வுக்கு வழிவகுக்கும், ஏனெனில் அவை வேகமாக குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் அல்லது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இந்த வடிவங்களை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

இவற்றின் அதீத பயன்பாடு இதயநோய்களையும் உண்டாக்கலாம். நார்ச்சத்து இல்லாததால் ஜீரணமண்டலம் மற்றும் ஈரலின் செயல்பாடுகளும் இந்த மாவுப்பொருளினால் சீர்கெடும்

போலி ஸ்டார்ச் என்றும் உலகின் மிக மோசமான ஸ்டார்ச்  என்றும் அழைக்கப்படும் இவை உணவுப் பொருட்களின் அலமாரி வாழ்வையும் நீட்டிக்கின்றன என்பதால் பெரும்பாலான பேக்கரிகளில் இவை அதிகம் புழங்குகின்றன.

 உணவுப்பொருட்களில் கலக்கப்படும் தொழில்துறை ஸ்டார்ச் அதில் பயன்படுத்தப்படும் ரசாயனக் கலவைகளினால் மனித உடலுக்கு நஞ்சாகி, செரிமானக் கோளாறுகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.

இதன் உணவு சார்ந்த பயன்பாடுகளுக்கான தரக்கட்டுப்பாட்டு விதிகள் உருவாக்கப்படவேண்டி இருக்கிறது. இந்த வகை ஸ்டார்ச் கொண்டிருக்கும் உணவுபொருட்களில் இவை எத்தனைச் சதவீதம் இருக்கிறது என்பதையும் இதனால் உண்டாகக்கூடும் ஆரோக்கியக்கேடுகளும் தெளிவாகக்குறிப்பிடப்பட வேண்டும்.

லேபிள்களில் இருந்து தொழில்துறை மாவுப்பொருட்களை கண்டறிதல்:

தொழில்துறை மாவுப்பொருட்கள் அல்லது அதன் வழித்தோன்றல்கள் பல்வேறு பெயர்களில் லேபிள்களில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால், அது சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு எனப் புரிந்துகொள்ளலாம்:

  • சுத்திகரிக்கப்பட்ட மாவு (Refined Flour): மிகவும் பொதுவான வடிவம். நார்ச்சத்து முற்றிலும் நீக்கப்பட்டது.
  • சோள மாவு (Corn Starch): கெட்டிப்பாக்கி அல்லது நிரப்பியாகப் (Thickener or Filler) பயன்படுத்தப்படுகிறது.
  • மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்து (Modified Starch): இதன் பொருள், சோளம், உருளைக்கிழங்கு அல்லது அரிசியில் இருந்து எடுக்கப்பட்டு வேதியியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட ஸ்டார்ச். இது சாஸ்கள், சூப்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பொருட்களில்  சேர்க்கப்படுகிறது.
  • மால்டோடெக்ஸ்டிரின் (Maltodextrin): இது ஸ்டார்ச்சில் இருந்து பெறப்படும் ஒரு வகை சர்க்கரை/நிரப்பி. அதிக கிளைசெமிக் குறியீட்டைக் (High GI) கொண்டது. விளையாட்டுப் பானங்கள் மற்றும் மசாலாப் பொடிகளில் அதிகம் காணப்படும்.
  • உருளைக்கிழங்கு மாவு (Potato Starch) / அரிசி மாவு (Rice Starch): இவை பிணைப்பான்களாகப் (Binders) பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 

ஊட்டச்சத்து அட்டவணையைக் கவனிப்பதன் மூலமும் இந்த வகை ஸ்டார்ச்சின் சேர்க்கையைக் கண்டறியலாம்.

  • குறைந்த நார்ச்சத்து (Low Fiber): ஒரு உணவில் உள்ள மொத்த கார்போஹைட்ரேட்டுடன் ஒப்பிடும்போது, நார்ச்சத்து (Dietary Fiber) மிகக் குறைவாக இருந்தால், அந்த உணவு சுத்திகரிக்கப்பட்ட மாவைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு ரொட்டியின் 20 கிராம்  கார்போஹைட்ரேட்டுக்கு  1 கிராம் மட்டுமே நார்ச்சத்து இருந்தால், அது பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட மாவைக் கொண்டது என்று பொருள்.
  • சர்க்கரை அளவு (Sugar Content): மால்டோடெக்ஸ்டிரின் அல்லது HFCS போன்ற ஸ்டார்ச்-சார்ந்த இனிப்பான்கள் சேர்க்கப்பட்டிருந்தால், “சேர்க்கப்பட்ட சர்க்கரைகளின்” (Added Sugars) அளவு அதிகமாக இருக்கும்.

 தயாரிப்புத் தகவலை சரிபார்த்தல்:

உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பைப் பற்றி அளிக்கும் விளக்கங்களையும் கவனிக்கலாம்:

முழு தானிய முத்திரை (Whole Grain Stamp): உண்மையாக நார்ச்சத்து நிறைந்த முழு தானிய உணவுகளில், “100% முழு தானியம்” என்னும் வாசகமோ அல்லது அதற்குரிய  முத்திரையோ இருக்கிறதா என்று பார்க்கலாம். இந்த முத்திரை இல்லை என்றால், அது பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட  மாவுகளின் கலவையாக இருக்கலாம்.

“மைதாவற்றது” அல்லது “நார்ச்சத்து நிறைந்தது” (Maida-Free or High-Fiber): ஒரு  உணவுப்பொருள் இந்தத்தகவல்களைக்கொண்டிருந்தால், வாங்கும் முன்பு உள்ளடக்கப் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்துவது நல்லது.

காகிதத் தொழிற்சாலைகள்,  ஜவுளித் துறை, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மருத்துவத் தயாரிப்புகள் வரை தொழில்துறை ஸ்டார்ச்சின் பங்கு இன்றியமையாதது. அதன்   பரந்த பயன்பாடு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாக அமைகிறது என்றாலும்  அதன் பயன்பாட்டின் மறுபக்கம் மறைக்கப்பட்ட, நம் கண்ணுக்குத்தெரியாத ஆபத்துகள் நிறைந்திருக்கிறது. இந்தத் தொழில்துறை மூலப்பொருளின்  உணவு சார்ந்த பயன்பாட்டிற்கு சரியான கவனம் அளிக்கப்படாவிட்டால் மனித ஆரோக்கியத்திற்கு இது நிச்சயமாக  அச்சுறுத்தலாக மாறக்கூடும்.

வீடுகளில் சமைப்பது குறைந்துபோய் ஹோட்டல்களில் இருந்தும் பேக்கரிகளில் இருந்தும் வரவழைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டிருக்கும் இந்த அவசரயுகத்தில்  உணவு சார்ந்த ஆரோக்கியக்கேடுகள் வராமலிருக்க நாம் கவனம் கொள்ள வேண்டும். படிப்பு மற்றும் வேலைகளின் பொருட்டு வீட்டை, சொந்த மாநிலத்தை, நாட்டைவிட்டு வெளியே தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்திற்கு இந்த கண்ணுக்கு தெரியாத ஸ்டார்ச் பெரும் ஆபத்துக்களை உண்டு பண்ணக் கூடும் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். 

2025-ல்  14.92 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் இந்த வகை மாவுப்பொருட்களின் உலகச்சந்தை மதிப்பு 2030-ல்  17.30  பில்லியனாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கணிப்பு,  அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த மாவுப்பொருட்களின் உலகளாவிய தேவையைக் காட்டுகிறது.  எனவே  இவ்வகை ஸ்டார்ச் பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடு,  சத்தான உணவுகுறித்த விழிப்புணர்வு போன்றவை மிக மிக அவசியமாகிவிட்டிருக்கிறது.

அறிவியலே இலக்கியமாக!

(தன்னறம் வெளியீடாக 2025-ல் வந்த கல்லெழும் விதை, தந்தைப்பெருமரம் ஆகிய இரு நூல்களுக்கு ஜெ -வின் முன்னுரை)

இருபதாம் நூற்றாண்டுக்கே உரிய ஓர் இலக்கியத்துறை என்பது அறிவியல் இலக்கியம். அறிவியல்புனைவு என ஒன்று உண்டு, அது இலக்கியத்திற்கான கருப்பொருட்களையும்  படிமங்களையும் அறிவியலில் இருந்து எடுத்துக்கொள்வதுதான் அது. அறிவியல் இலக்கியம் என்பது அறிவியலையே இலக்கியமாக எழுதுவது. அறிவியலில் உள்ள தகவல்களும் கொள்கைகளும்தான் எழுதப்படும். கற்பனைக்கு இடமே இல்லை. ஆனால் அந்தத் தகவல்களையும் கொள்கைகளையும் கொண்டுவாசகனின் கற்பனையை விரிவாக்கி அறிவியலை புகட்டுபவை அறிவியல் இலக்கியங்கள்.

நான் அப்படிப் படித்த முதல்நூல் சோவியத் ருஷ்ய வெளியீடான யாக்கோப் பெரெல்மான் எழுதிய பொழுதுபோக்குப் பௌதீகம் என்னும் இரண்டு பகுதிகள் கொண்ட நூல். என் பள்ளிப்பருவத்தில் எந்த ஒரு மாயாஜாலப் படைப்பையும் விட என்னை ஆட்கொண்டது அந்த புத்தகம்தான். அந்நூலில் ஜூல்ஸ்வெர்ன் போன்ற அறிவியல் புனைவெழுத்தாளர்களை தொடர்ந்து மேற்கோள் காட்டியிருந்தார். பல நாவல்களை நான் முதன் முதலில் கேள்விப்பட்டதே அந்நூல் வழியாகத்தான்.

தொடர்ந்து சோவியத் வெளியீடுகளான அறிவியல்நூல்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. ‘அனைவருக்குமான உடலியங்கியல்’ என்னும் நூலை செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்று பயின்றதை நினைவுகூர்கிறேன். அதன்பிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பொதுவாசிப்புக்குரிய அறிவியல்நூல்கள் மேல் பெரும் பித்தே எனக்கு உருவாகியது. என்னை ஆங்கில அறிவியல் இலக்கியத்திற்குள் கொண்டுசென்ற நூல் டெஸ்மண்ட் மோரிஸ் எழுதிய நிர்வாணமான குரங்கு.இன்றுவரை அத்தகைய எழுத்துக்களின் தீவிரமான வாசகன் நான்.  அவற்றில் ரிச்சர்ட் ரிஸ்டாக், கார்ல் சகன் போன்ற அறிவியலாளர்கள் உண்டு. கொஞ்சம் கூடுதலான ஊகங்களை அளிக்கும் லயால் வாட்ஸன் போன்றவர்கள் உண்டு. பெரும்பாலும் புனைவா என்ற ஐயம் தோன்றச்செய்யும் எரிக் வான் டேனிகன் போன்றவர்களும் உண்டு.

தமிழில் அறிவியல் எழுத்துக்கு பலரும் சுஜாதாவை மேற்கோள் காட்டுவதுண்டு. எனக்கு சுஜாதாவின் நல்ல சிறுகதைகள், அதைவிட நாடகங்கள் மேல் பெருமதிப்புண்டு. தமிழின் சிறந்த சூழல்சித்தரிப்பாளர் என்ற எண்ணமும் உண்டு. ஆனால் அவர் மேலோட்டமான அறிவியல் எழுத்தாளர் , மிக மோசமான முன்னுதாரணம் என நினைக்கிறேன். நல்ல அறிவியல்நூல்கள் இல்லாத பொதுவாசிப்புச் சூழலில் அறிவியலை வேடிக்கையான துணுக்குச் செய்திகளாக கொண்டுசென்றவர். அறிவியல்கொள்கைகளை விளக்குவதற்கான மொழியோ புரிதலோ அவருடைய எழுத்தில் வெளிப்பட்டதில்லை.

பாமரர்களுக்கும் அறிவியலைக் கொண்டுசெல்வது என்பது அறிவியலை பாமரத்தனமாக ஆக்குவதோ, பாமர மொழியில் அறிவியலைச் சொல்வதோ அல்ல. சுஜாதாவுக்கு அறிவியல் சுவாரசியமாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. ஆகவே அறிவியலை எப்போதுமே மிக மேலோட்டமாகவும், பெரும்பாலும் அரைகுறையாகவும்தான் அவர் சொன்னார். (அதை அவர் சுருக்கிச் சொல்வது என நினைத்துக்கொண்டார்) பாமரவாசகர்களைக் கவரும் வேடிக்கை, கிண்டல் ஆகியவற்றை ஊடாகக் கலந்துகொண்டார். பெரும்பாலும் அவருடைய வாசகர்கள் அவருடைய அறிவியலெழுத்தில் ரசித்தது அந்த சில்லறை வேடிக்கைகளைத்தான். அத்தகைய விடலைத்தனமான மொழியில் எழுதப்படும் அறிவியல் சார்ந்த எழுத்துக்களை ஏராளமாக உருவாக்கினார் என்பதனால்தான் அவர் மோசமான முன்னுதாரணம்.

அறிவியல் இலக்கியம் சுவாரசியத்திற்காக அறிவியலுக்கு அப்பால் எதையும் நாடவேண்டியதில்லை. இந்தப் பிரபஞ்சத்தின் , இந்த உயிர்வெளியின் ஆழத்து மர்மங்களை நோக்கித் திறப்பது என்பதனாலேயே அறிவியல் பெரும் வசீகரம் கொண்டது. கற்பனையை அதன் எல்லை வரைக்கும் கொண்டுசெல்லக்கூடியது. தமிழில் அத்தகைய அறிவியல் சார்ந்த எழுத்துக்களை என்.ராமதுரை ஓரளவுக்கு எழுதியிருக்கிறார்.ஆனால் சூழியல் தளத்தில் தியடோர் பாஸ்கரன் எழுதிய நூல்களே மெய்யாகவே அறிவியல் இலக்கியம் என்று சொல்வதற்கான தகுதி கொண்டவை.

தியடோர் பாஸ்கரன் வாசகனை மொழியால் கிச்சுகிச்சு மூட்டவில்லை. அவர் அவனுடைய முதிர்ச்சியை நம்பினார். அறிவியல் செய்திகளைக் கொண்டு வாசகனை திகைப்படையச் செய்யவுமில்லை. அறிவியலின் தரவுகளையும் கொள்கைகளையும் கூரிய மொழியில், தெளிவாக முன்வைத்தார். அதற்குரிய கலைச்சொற்களை தானே உருவாக்கினார் . தனியொருவராக சுற்றுச்சூழலியல் அறிவியலை தமிழ் வாசிப்புலகில் நிலைநிறுத்தினார். அறிவியல் செல்லும் அறிதலின் ஆழங்களை, அது உருவாக்கும் பிரபஞ்ச தரிசனங்களையே தியடோர் பாஸ்கரன் முன்வைத்தார். தமிழில் அவர் அதற்கு மகத்தான முன்னுதாரணம்.

தியடோர் பாஸ்கரனின் வழியில் வந்த முதன்மையான அறிவியல் இலக்கிய ஆசிரியர் என்று லோகமாதேவியைச் சொல்வேன். அவர் தாவரவியல் நிபுணர், ஆய்வாளர், பேராசிரியர். தாவரங்களைப் பற்றிய அளப்பரிய ஆர்வத்தை தன் வாழ்க்கையாகக் கொண்டவர். தன் துறையில் பெரும் ஈடுபாடு கொண்ட ஓர் ஆசிரியர் என்ன செய்யமுடியும் என்பதற்கான சான்றாக அமையும் சிலரையே நாம் வாழ்க்கையில் சந்திக்க முடியும். லோகமாதேவி அத்தகையவர்களில் ஒருவர். அவ்வகையில் தமிழில் தாவரங்களைப் பற்றி பொதுவாசகர்களுக்காக உருவாக்கப்படும் இலக்கிய மரபு ஒன்று இனி உருவாகும் என்றால் அவரே அதன் முன்னுதாரணமும் முன்னோடியுமாகக் கருதப்படுவார்.

லோகமாதேவி அறிவியல் திரட்டியுள்ள தரவுகளையும், அறிவியல் நிரூபித்துள்ள கொள்கைகளையும் மட்டும்தான் சொல்கிறார். ஆனால் அவற்றை இன்றைய வாழ்க்கைச்சூழலுடன் இணைத்துக்கொண்டு, நாம் அறிந்த நம் சூழலில் நாமறியாத என்னென்ன உள்ளது என்ற பிரமிப்பை உருவாக்கும்படி முன்வைக்கிறார். அந்தப் பிரமிப்பு இயற்கை என்னும் இந்த மாபெரும் உயிர்வெளி பற்றிய ஒரு மெய்யியல்தரிசனமாக வாசகனில் விரிவடைகிறது. அந்த தரிசனமே அவருடைய கட்டுரைகளை வாசிப்பவர்கள் அவற்றை இலக்கியமாகக் கொள்ளச் செய்கிறது.

உதாரணமாக, ஒரு தாவரவியலாளரின் பார்வையில் பயிர் என்றும் களை என்றும் பேதமில்லை. எல்லாமே செடிகள்தான். களைகளும் ஓரு சூழலின் பிரிக்கமுடியாத பகுதிதான், அவையும் ஒருவகை தேசியச் செல்வம்தான், அரசு களைகளின் அழிவையும் கண்காணிக்கவேண்டும் என்று லோகமாதேவி சொல்லும் இடம். எனக்கு அது மெய்சிலிர்ப்பூட்டும் ஒரு வேதாந்த தரிசனமாகவே இருந்தது. களை,களையப்பட வேண்டியது என்னும் சொல்லே தாவரங்கள்மீதான பொறுப்பற்ற பார்வையை காட்டுவது என நினைத்தேன்.

தமிழில் சூழியல் பற்றிப் பேசியவர்களே அதிகமும் இயற்கை பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக இயற்கையின் அழிவைப் பற்றிய அபாயமணியை அடிப்பவர்களாக, அதற்காகக் கொஞ்சம் அறிவியலை கடந்து செல்பவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, சீமைக்கருவேலத்தை ஒரு மாபெரும் நோய்க்கூறாக அவர்கள் சித்தரிப்பதைச் சொல்லலாம். ஆனால் அவர்கள் சொல்லும் எந்தத் தீங்கையும் சீமைக்கருவேலம் இழைப்பதில்லை, அதற்கான ஒரு அறிவியல்சான்றுகூட உருவாக்கப்படவில்லை என்று லோகமாதேவி சொல்லுமிடத்தைக் குறிப்பிடலாம்.

இயற்கையை காக்கும் பொறுப்புள்ளவனாக மனிதனை லோகமாதேவி சித்தரிக்கவில்லை. இயற்கை மேல் பரிவுணர்ச்சி (sympathy) கொள்ள மனிதனுக்கு தகுதி உண்டா என்ன?  இயற்கையைப் புரிந்துகொள்ள, அதில் தன்னை இணைத்து உணர மட்டுமே அவருடைய கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. அவற்றிலுள்ளது ஓர் ஆழ்ந்த தன்மய உணர்வுதான் (empathy). உதாரணமாக நகரங்களில் செயற்கை மின்வெளிச்சத்தில் இரவெல்லாம் நின்றிருக்கும் தாவரங்கள் இரவும் பகலும் மாறிவருவதை உணரமுடியாதபடி ஆகின்றன, இது ஒரு சித்திரவதை, அவற்றின் உயிரியல்பே தாறுமாறாகிவிடுகிறது என்னும் குறிப்பைச் சுட்டிக்காட்டுவேன். இங்கே எவருமே யோசிக்காத ஒரு கோணம் அது.

லோகமாதேவி ஒரு வாசகராக எனக்கு அறிமுகமானவர். கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தவரை கட்டுரைகள் எழுதும்படி கோரி, வற்புறுத்தி எழுதச் செய்தேன். ஏனென்றால் தமிழில் அறிவியல் இலக்கியம் உருவாகவேண்டும் என்னும் விழைவு எனக்கு இருந்தது. மிகமிகக் குறைவாகவே பொறுப்புணர்வுடன், அறிவார்ந்த நடையில், எழுதப்படும் அறிவியல் இலக்கியம் தமிழில் வெளிவருகிறது. அதற்கான வாசகர்கள் இங்கே இன்னும் பெருவாரியாக உருவாகவில்லை. அறிவியலை  வேலைக்கான கல்வியாகவே நாம் கற்கிறோம், அறிவுத்தேடலுக்காக வாசிப்பதே இல்லை. ஆயினும் அறிவியக்கச் செயல்பாடு என்பது அது இயல்பானது என்பதனால், தேவை என்பதனால் நிகழவேண்டியதே ஒழிய சூழலின் ஆதரவு அதற்கு ஒரு பொருட்டு அல்ல என எண்ணினேன்.

லோகமாதேவி என் இணையப்பக்கத்தில்தான் நீண்ட அறிவியல் கட்டுரைகளை எழுதினார். பல கட்டுரைகள் எனக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இன்று லோகமாதேவியின் பலநூல்கள் வெளிவந்துவிட்டன. அவர் ஓர் ஆய்வாளராக சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறார். தாவரவியல் வகுப்புகள் நடத்துகிறார். தமிழகத்தில் தேவையான,முற்றிலும் புதிய ஓர் அறிவுத்தளத்தை அறிமுகம் செய்யும் வாசகராகவும் அறியப்பட்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

ஜெயமோகன்

கரையோர நாணல்கள்!

நாணல்கள்

 நீர்நிலைகளின் கரைகளிலும் சதுப்பு நிலங்களிலும் வளரும் உயரமான புல் வகைத் தாவரங்கள் நாணல் எனப்படுகின்றன. நாணல் பூங்கொத்துக்கள்   பெரிய அளவில் தூய வெள்ளையிலும் இளஞ்சிவப்பிலும் ஊதாநிறத்திலும் பறவையின் இறகுபோல இருக்கும்.

புல் குடும்பமான போயேசியை சேர்ந்த இவற்றின் அறிவியல் பெயர் Phragmites australis. பேரினப்பெயரான Phragmites  வரப்புகளில் புதராக வளர்பவை என்றும் சிற்றினப்பெயர்  ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவை என்றும் பொருள் கொண்டிருக்கிறது.

60 செ மீ நீளமுள்ள இலைகளுடன் இவை சுமார் 2 லிருந்து 4 மீ உயரம் வரை வளரும்.  கோடைக்காலத்தின் இறுதியில் இளம் ஊதா நிற மலர்மஞ்சரிகள் 40 செமீ அளவில் உருவாகும். கூர்மையான சிறு மலர்களின் நுனியில் சாம்பல் நிறத்தில் பட்டுப்போன்ற நீளமான இழைகள் இருக்கும். இவ்விழைகள் நாணலின் நுண் விதைகளைக் காற்றில் பல இடங்களுக்கும் கொண்டு செல்ல உதவும்.

இவை  உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்களில் (அண்டார்டிகாவைத் தவிர) காணப்படுகிறது.  உயரமான, மெல்லிய, அதிக உற்பத்தித் திறன் கொண்ட புல் வகையான  நாணல் பல்லாயிரமாண்டுகளாக மனிதர்களுக்குப் பல விதங்களில் பயன்படுகிறது. 

நாணல்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களால்  விவசாயம் , தீவனம் கூரை, சுவர்கள், மீன் பொறிகள் முதலிய கட்டுமான நோக்கங்களுக்காகவும் ,காற்று , உறைபனிக்கு எதிராகப் பாதுகாக்கும் பாய்கள், வேலிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், கூழ் மற்றும் காகிதம் உருவாக்கும் தொழில்துறையை உள்ளடக்கிய பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கும்,  எரிபொருளாக  ஆற்றல் உருவாக்கத்திலும் பயன்படுகிறது.

ஏராளமான இதன் இலைகள் மலிவான, எளிதில் கிடைக்கும் ஓலைப் பொருளாகக் கூரைவேய்வதில் உலகெங்கும் மிக அதிகம் பயன்படுகிறது. இவற்றிற்கு நீர் நாணல் என்றும் பெயருண்டு.

இந்த நாணல் மட்டுமல்லாது நாணலில் பல வகைகள் உண்டு

  • பெருநாணல்

பெருநாணலான  Arundo donax என்பது 6 லிருந்து 10 மீ உயரம் வளரக்கூடியது. இதற்கு யானைப்புல் என்றும் பெயருண்டு.இதன் தண்டுகளிலிருந்து இசைக்கருவிகள் செய்யப்படும். இதன் நாரிழைகளிலிருந்து துணிகளும் நெய்யப்படுகின்றன. வெட்ட வெட்டth தொடர்ந்து 25 வருடங்களுக்கு வளர்ந்துகொண்டே இருக்கும் இவற்றிலிருந்து உயிரி எரிபொருளும் உருவாக்கப்படுகின்றது.

பல பழங்குடியினர் இதன்  மாவுச்சத்து நிறைந்த வேர்க்கிழங்குகளிலிருந்து மதுபானமும் உருவாக்குகிறார்கள். புல்லாங்குழல் உள்ளிட்ட பல காற்றிசைக் கருவிகள் இதிலிருந்து செய்யப்படுகின்றது. தெற்கு பிரான்ஸ் பகுதியில்  இசைக்கருவிகளுக்கென  இப்பெருநாணல் சாகுபடி செய்யப்படுகின்றது.

  • பர்மா நாணல் 

Neyraudia reynaudiana என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்த நாணல் பட்டு நாணல், போலிநாணல் என்றும் அழைக்கப்படுகிறது.  இதன் அறிவியல் பெயர் Reynaudia என்னும் க்யூபாவின் நீலப்பச்சை புல்லின் பெயரை மாற்றியமைத்து வைக்கப்பட்டது. 3 அடி நீளம் கொண்ட ஆயிரக்கணக்கான நுண்மலர்களை கொண்ட பட்டுப்போன்ற மலர் மஞ்சரியினால் இந்த நாணலுக்கு பட்டுநாணல் என்னும் பொயர் வந்தது

  • ரிப்பன் நாணல்

Phalaris arundinacea என்னும் அறிவியல் பெயர் கொண்ட ரிப்பன் நாணல் இளஞ்சிவப்பு இலைகளுடன் மிக அழகிய தோற்றம் கொண்டிருக்கும். இவை நீரிலிருக்கும் மாசை உறிஞ்சி எடுத்துக்கொள்ளும் என்பதால் கழிவுநீர் சுத்திகரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. சத்து நிறைந்த இலைகள் கால்நடைதீவனமாகவும் உலர் இலைகள்   கட்டிகளாக்கப்பட்டு எரிபொருளாகவும் பயனாகின்றன.

  • இனிப்பு நாணல்

Glyceria maxima என்னும் இனிப்பு நாணல் சீனாவை சேர்ந்தது.  இந்த நாணல் கால்நடை தீவனமாகப் பயனாகிறது. இதன் நாரிலிருந்து கூடைகள் பின்னப்படுகிறது

  • சிறு நாணல்

Calamagrostis பேரினத்தின் 200-க்கும் அதிகமான  சிற்றினங்கள் அனைத்தும் சிறு நாணல் எனப்படுகின்றன. மிக அழகிய தோற்றம் கொண்ட குட்டையான நாணல் வகையான  இவை அலங்கார புல்வகைகளாகப் பெரிதும் பயன்பாட்டில் இருக்கின்றன

சூழலுக்கு இணக்கமான இந்த நாணல்களின் பல்வேறு வகைகளும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உலகின் பல பாகங்களிலும் மீண்டும் பெருமளவு பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

விவேகானந்தரும் விஜயகாந்தும்!

இன்று விவேகானந்தர் ஜெயந்தி கல்லூரியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. விவேகானந்தரையும், இளமையில் அவரைப் போலாக வேண்டும் என்று கனவுகொண்டிருந்த தருணையும் நினைத்துக்கொள்கிறேன்.

சரண், தருணை நான்தான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்வேன். அப்படியொரு மாலையில் 1-ம் வகுப்பிலிருந்த தருணின் வகுப்பாசிரியை கீதா மிஸ் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் எனத் தகவல் சொல்லி இருந்ததால் அவருக்காக ஆசிரியர் அறையில் காத்திருந்தேன். அவரது மேசை முழுக்க குழந்தைகள் வரைந்த படங்களும் திருத்தவேண்டிய தாள்களும் நிரம்பிக்கிடந்தன. களைத்துப்போய் தலையில் சாக்பீஸ் துகள்களுடன் வந்த அவர் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டே எதிரில் இருந்த நாற்காலியில் அமரும்படிச் சொன்னார். வழக்கமாக அவரது முகத்தில் இருக்கும் புன்னகை அன்று இல்லை என்பதை கவனித்தேன்.

எடுத்த எடுப்பிலேயே ...வீட்டில் நிறைய டிவி பார்ப்பிங்களா... என்றார் ... இல்லைங்க எங்க வீட்டில் டிவியே இல்லையே!..என்றேன்

. ... அப்போ அடிக்கடி பசங்களை சினிமாக்கு கூட்டுட்டு போவீங்களா?.. என்றார்.

.. இல்லைங்க, எப்பவாவதுதான் போவோம்…“

என்னை நம்பாமல் முறைத்துப்பார்த்துவிட்டு“ ..அப்புறம் எப்படிங்க வகுப்பில் மாணவர்களை எல்லாரும் எதிர்காலத்தில் என்னவாகப் போறீங்கன்னு வரிசையாச் கேட்டு, ஒவ்வொருத்தருனும் டாக்டர், இஞ்சினீயர், கலெக்டர், கண்டக்டர்னு சொல்லிட்டிருக்கறப்போ தருண் எழுந்து விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொல்லறான்?, ஏன்னு நான் கேட்டா எங்கம்மாதான் அப்படி ஆகனும்னு சொன்னாங்கன்னு சொல்லறான், சின்னக்குழந்தைகளை இந்த வயசிலெயெ சினிமாவை நோக்கித் தள்ளறது சரியா ? அதுவும் நீங்களே ஒரு டீச்சரா இருந்துகிட்டு?... என்றார்.

அயர்ந்து போனேன். தருணுக்கு விஜயகாந்தைத் தெரியும் என்பதே எனக்குத்தெரியாது, அன்னையின் விழைவுகள் ஜீன் வழியாகக் கடத்தப்படுமென்பது உண்மையென்றால் அவன் பார்த்திபன் ஆக வேண்டும் என்றுதானே நியாயமாகச்சொல்லி இருக்க வேண்டும் ஆனால் எப்படி விஜயகாந்த்?

கீதா மிஸ்ஸிடம் அப்படி நான் எதுவும் சொன்னதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு அது சம்பந்தமாகத் தருணைக்கண்டிக்கிறேன், சினிமா மோகத்திலிருந்து அவனைத் திருப்பித் திருந்திய குமரனாக்கி நல்வழிப்படுத்துகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு மகன்களை அழைத்துக்கொண்டு வந்தேன்.

தருணுக்கு எதிர்காலத்தில் ஒரு பன்றிகுட்டியாக வேண்டும் என்னும் ஒரு பெருவிருப்பம் இருந்ததுதான் எனக்குத்தெரியும், பள்ளியிலிருந்து வீடு செல்லும் வழியில் ஒரு சாக்கடையில் பன்றிக்குடும்பமொன்று இருந்தது, கட்டாயம் அங்கே காரை நிறுத்தி மனங்குளிர அவன் பன்றிகளைப் பார்த்து ரசித்தபின்னரே காரை எடுக்கமுடியும்.

கொஞ்சம் வளர்ந்து, நம்மைப்போல எளியமானுடர்கள் பிற்காலத்தில் பன்றிகளாக முடியாது என்று தருண் அறிந்துகொண்ட போது அவன் 3-ம் வகுப்பு முடித்து விட்டிருந்தான். அப்போதும் மனம் தளராமல் கண்ணாடி முன்பு நின்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மட்டும் பன்றிக்குட்டியைப்போல மாற்றிக்கொள்ளும் சாத்தியங்களைப்பற்றி யோசிப்பான்.

ஒரு ஞாயிறன்று உயரமாக தலையணைகளை அடுக்கி வைத்து அவற்றின் மேலிருந்து தரையில் குதிக்கும் பரிசோதனையொன்று நூழிழையில் பிசகிப்போய் தரையில் குப்புற விழுந்து உதடுகள் வீங்கி பத்துப்பதினைந்துநாட்கள் அசல் பன்றிக்குட்டியைப் போலவே முகம் இருந்ததை நொடிக்கொருதரம் கண்ணாடி முன்பு நின்று பார்த்துப்பார்த்துத் துயருற்றவன் பிறகு ஒருபோதும் பன்றிகுட்டிகளைப் பற்றிப் பேசவேயில்லை

இரவு சமைக்கையில் அதே யோசனையில் இருந்தேன் கொஞ்சநாள் முன்பு ரமணா திரைப்படத்தை லேப்டாப்பில் மகன்களுடன்பார்த்து, கல்லூரிப் பேராசிரியராரன விஜயகாந்த் குற்றங்களைத் தட்டிக்கேட்பதை, சண்டைக்காட்சிகளில் எதிராளியின் நெஞ்சுக்குநேரே அவர் கால்கள் உயர்ந்ததை எல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது அதனால் சொல்லி இருப்பானோ என்றூ ஒரு சம்சயமும் உண்டானது.

இரவு இருவருக்கும் கதைசொல்லித் தூங்கவைக்கையில் மெதுவாக“.. தருண், கீதா மிஸ் கிட்ட என்னடா சொன்னே?.. என்றேன்.

..அதுவா நான் பெரிசாகி விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொன்னேன், கீதா மிஸ் முறைச்சுப்பார்த்து இனிமே அப்படிச்சொன்னா அடிப்பேன்னாங்க..ஆனா நான் பயந்துக்கலை அவங்க அடிக்கவே மாட்டாங்கனு எனக்குத்தெரியும்..“ என்றான்.

``...எதுக்குடா அப்படிசொன்னே? உனக்கு விஜயகாந்த் பிடிக்குமா?..

..ஆமா பிடிக்கும் நீதான சொன்னே அவர் ரொம்ப நல்லவரு நமக்கு நிறைய நல்லது பண்ணி இருக்காருன்னு அதான் நான் சொன்னேன்..

..நானா, நான் எப்படா சொன்னேன்..?

... மீ மறந்துட்டியா நீயே? அந்த பெட்ருமில் அவர் போட்டோ கூட இருக்கே நீ அதைக்காமிச்சு சொல்லி இருக்கே, தலையில் துண்டு கட்டிட்டு, கையை இப்படி கட்டிட்டு நிப்பாரே அந்த விஜயகாந்த்,,, என்றான்.

..அடப்பாவி அவர் விஜயகாந்த் இல்லடா விவேகானந்தர்..

... ஹி ஹி ஆமா வி- ல ஆரம்பிச்சதால நான் மாத்திச் சொல்லிட்டேன் நாளைக்கு கீதா மிஸ்கிட்ட சொல்லிடறேன் நான் விவேகானந்தராகப் போறேன்னு.. என்றான்.

வேடசெந்தூ ர் வீடு கிரஹப்பிரவேசத்துக்கு வந்திருந்த என் ஆசிரியர் திரு ராஜகுமார் அவர்கள் விவேகானந்தரின் சட்டமிடப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தைப் பரிசளித்திருந்தார் இன்றுமவர் அதே இடத்திலிருந்து சைடாக எங்களைப்பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார், அந்தப் புகைப்படத்தைக்காட்டி அவரைக் குறித்து மகன்களிடம் பேசி இருக்கிறேன்.அதில் வந்த வினை அது. இதையெல்லாம் இன்னுமே வீட்டில் பேசிப்பேசி சிரித்து தருணை கோபமூட்டுவோம்.

சில வருடங்களுக்கு முன்பு இதே நாளில் என்னைத் தெரியாத்தனமாக விவேகானந்தரைக் குறித்து உரையற்றச் சொன்னார்கள். நானும் ஜெ வின் தளத்திலிருந்தும் விவேகானந்தரைக் குறித்த நூல்களிலிருந்தும் மிகத்தரமான ஒரு உரையைத் தயாரித்துகொண்டு போய் விவேகானந்தரின் பயணங்கள் என்னும் செறிவான உரையாற்றினேன்.

அதுவரை அரைத்தமாவே அரைக்கப்பட்ட அந்த அரங்கில அது மிகப்புதியதோர் எழுச்சி உரை (என்பதையும் நானே சொல்லிக்கொள்கிறேன்). மேடையில் அமர்ந்திருந்த ஒரு பெரும் பேராசிரியர் பிரமை பிடித்ததுபோல் இருந்தார், வேறு வழியில்லாமல் என்னைப்பாராட்டி விட்டு, தான் அந்த உரையைப் பதிவு செய்திருப்பதாகவும், கல்லூரி நிர்வாகத்துக்கு அதைஅனுப்பி என்னைக்குறித்துச் சொல்லப்போவதாகவும் சொன்னார்.

அவர் பணி ஓய்வு பெற்று இரண்டு வருடங்களாகிது பாவம் அவரால் அதை இன்று வரை செய்ய முடியவில்லை என்பதையும் என்னை அதன்பிறகு நிர்வாக அங்கத்தினர் இடம்பெறும் முக்கிய விழாக்களில் உரையாற்ற அழைப்பதில்லை என்பதையும் இந்த நன்னாளிலே புன்னைகையுடன் நினைவு கூறுகிறேன்.

தருணுக்கு இன்னும் விவேகானந்தராகும் உத்தேசம் இருக்குமேயானால் அவனது ஏராளமான தோழிகள் அதற்கு அனுமதி தரவேண்டி இருக்கும் சிக்கலும் இப்போது இருக்கிறது என் பதை அவனுக்கு நினைவூட்ட வேண்டும்.

// இன்னும் இருந்துகொண்டிருக்கிறது அந்த அழகிய முகம். என்றும் மாறாத இளமையிலேயே அவரை நம் நினைவுகளில் நீடிக்கச் செய்த விதி பெரும் கருணைகொண்டது//- ஜெ

அம்மை அப்பன் அயோனிகன்!

மிக மிக அரிதாகவே கண்ணீர் விட்டு அழுகிறேன். அப்படியான உறுதிப்பாடோ முன்முடிவோ எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் துயர்களுக்கும் கஷ்டப்பாடுகளுக்கும் immune ஆகிவிட்டிருக்கிறேன். அந்த shield ஐயும் கடந்து உள்ளே செல்லும் கூர்நுனிகள் உண்டாக்கும் காயங்களுக்கான கண்ணீரை மிக நெருங்கியவர்கள் மட்டுமே கண்டிருக்கிறார்கள். 

ஆனால் அகரமுதல்வன் இயக்கத்தில் ரமேஷ் பிரேதனின் அம்மை, அப்பன், அயோனிகன் ஆவணப்படம் பார்க்கையில் என்னையுமறியாமல் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தேன். ரமேஷ் பிரேதன் இறந்த  செய்தியைக் கேட்டபோது மெய்யாகவே வருந்தினேன்தான். அதற்குச் சிலநாட்கள் முன்புதான் விருதுக்கான வாழ்த்து தெரிவித்த எனக்கு ’’நன்றி தோழர்’’ என்று ரமேஷ்பிரேதன் முதலும் கடைசியுமாகப் பதிலனுப்பி இருந்தார்.

ஒரு அறைக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கும் அவர், அத்தனை திரளான வாசகர்களையும் அந்த விழாவையும் அந்த அங்கீகாரத்தையும்  நேரில் அனுபவித்தபின், இந்த விருதை வாங்கிய பின் அவர் இறந்திருக்கலாமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன், எனினும் தேற்ற யாருமில்லாத தனிமையில் பெருகிய அந்தக்கண்ணீர்தான் ரமேஷின் இழப்புக்கான என் இதயபூர்வமான அஞ்சலி.

இந்த ஆவணப்படப்படபிடிப்பின் பல வித்தியாசமான களங்கள், மாந்தர்கள். பிரபலங்களின் நினைவுத்தொகுப்புக்கள், மிகச்சிறப்பான இயக்கம், mystic ஆன ஒரு பொதுத்தனமை எல்லாவற்றையும் விட பிரேமாவின் இழப்பின் துயரும் அவரின் உடைந்த இதயத்தின் குருதிக் கசிவெனப் பெருகிய கண்ணீரும்தான் எனக்கு முதன்மையாகத் தெரிந்தது. ’’என்னைப் பிரேமான்னு கூப்பிடமாட்டாரு பன்னிக்குட்டின்னு, பூனைக்குட்டின்னு கூப்பிடுவாரு’’ என்று அவர் கண்ணீர் பெருக்கியபோது நானும் உடைந்து அழுதேன்.

அவரைப்  பருமனான உடலுடன் கழிவறைக்கு அழைத்துச்செல்கையில்   எடை தாளாமல்   ஒருவர் மீது ஒருவர் விழுந்து விடுவதை கண்ணீரும் சிரிப்புமாகச்சொன்னதும், தான் கோபித்துக்கொண்டு இருந்தாலும் ’’பன்னிக்குட்டி வா உனக்கு வைன் வாங்கித்தரேன்’’ என்று ரமேஷ் சொல்லுவதையும், இன்னும் அவர் தன்னோடு தான் இருக்கிறார் என்ற அவரின் காதலில் தோய்ந்த நம்பிகையுமாக, ஜெ சொல்லி இருப்பது போல தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்ல, அன்பென்பதை மறந்தே போயிருக்கும் மொத்த மானுடமே அவருக்கு கடமைப்பட்டிருப்பதாவே எண்ணுகிறேன். ரமேஷ் பிரேதனின் நூலில் பிரேமாவை மழையெனச் சித்தரித்திருப்பதுதான் எத்தனை பொருத்தம். அப்படித்தான் அன்பை அவர் ரமேஷ் பிரேதன் மீது பொழிந்துகொண்டிருந்தார்,

ரமேஷ் செயலாக இருக்கையில் பிரேமா அவரிடம் சென்று சேரவில்லை அவர் படுக்கையில் இருக்கையில்தான் அவரிடம் சென்றிருக்கிறார். அவருக்குப் பணிவிடைகள் செய்வதன் மூலம்தான் அவரை நேசித்திருக்கிறார்.அந்த அன்பில், நேசத்தில், காதலில்   தளும்பிக் கொண்டிருந்த அவருக்கு இப்போது ரமேஷின் இழப்பு உண்டாக்கியிருக்கும் துயரைத்தான் என்னால் தாளமுடியவில்லை.

அசலான காதலோ நேசமோ இப்போதெல்லாம் அரிதினும் அரிதாகவே நிகழ்கிறது, காணக்கிடைக்கிறது. சொல்லப்போனால் பெரும்பாலான இப்போதைய நேசம், உறவு,காதல் எனப்படுவதெல்லாமே மிக வெளிப்படையான கணக்கீடுகள் அல்லது ஏமாற்றுதல்கள் மட்டுமே. நம்பிக்கையூட்டும் அணுகுமுறைகள், மிக எளிய நாடகங்கள் மூலமே அன்பைப்பெறமுடிகிறது பலருக்கும். பின்னர் அணுகியதைக் காட்டிலும் எளிதாக விரைவாக அதிலிருந்து விடுபட்டுப் புதியவற்றை நோக்கிச் செல்கிறார்கள்.

ஆகப்பெரிய நம்பிக்கைத்துரோகங்கள் படுக்கையிலல்ல இப்படியான விலக்குதல்களிலும் விலகிச்செல்லுதல்களில்தான் நிகழ்கின்றன. எனினும் ஆணும் பெண்ணுமாக இருபாலாருக்கும் நேசமென்பது மிகத்தேவையாக இருப்பதால் அதன்பொருட்டு தொடர்ந்து பலியாகிக் கொண்டும் பலிவாங்கிக்கொண்டும் இருக்கிறார்கள்.

இளமையில் இருப்போருக்கும், ஆரோக்கியமானவர்களுக்கும் உண்மையான அன்பு கொண்டிப்பவர்களுக்கும் மிக நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும் இதுவே நிகழ்கையில், இளமை இறங்கு முகத்திலிருக்கையில், குணப்படுத்த முடியாத மரபுரீதியான உடல்நிலையும், அசாதாரணமான உடலெடையும் கொண்ட சொல்லிக்கொள்ளும்படியான பொருளாதார நிலையுமில்லாத ரமேஷ் பிரேதன் மீதான பிரேமாவின் தூய அன்பு என்னை அசைத்துவிட்டது, I sway!

விஷ்ணுபுரம் விழாவன்று பிரேமாவை  இறுகக்கட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த வருடத்திய பயணங்களின் பட்டியலில்  முதன்மையாகப் பிரேமாவைச் சந்திக்கவிருக்கிறேன் ஆரத்தழுவிக்கொள்ளப்போகிறேன்.

அந்தத் தூய அன்பை, கண்ணீரையும் துயரத்தையும் விழுங்கும் முயற்சியில் தோற்று கட்டுக்கள் அவிழ்ந்து அவர் உடைந்தழுவதெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  

பிரேமாவையும் ரமேஷ்பிரேதனையும் நினைத்தால் பொறாமையாகவும் இருந்தது. மிகத்தூய அன்பை அளித்தும் பெற்றுக்கொண்டுமிருந்த  இருவரல்லவா?

ஒரு பிழையீட்டைப் போலப் பிரேமாவின் காதலின்பொருட்டும் இழப்பின் பொருட்டும்   நானும் அழுது கொண்டிருந்தேன்

13 வருடங்கள் ஒரே அறையில் படுக்கையிலேயே வாழ்ந்து, எழுந்து நடக்கவும் வெளி உலகை, வானைக்காண  பெருவிருப்பம் கொண்டிருந்தவரின் மறைவுக்குப் பின்னர்   அந்த வீட்டுக்கு வந்து, வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்த சிட்டுகுருவியை அது அவர்தான் என்று பிரேமா சொன்னது உண்மைதான். நான் நம்புகிறேன் அவரது ஆன்மா 16 நாட்கள் அங்கேயே தான் இருந்திருக்கும்.

எடை கொண்டிருந்த உடலற்ற ஆன்மாவாகவாவது பரந்த வானை அந்தச் சில நாட்களில் பார்க்கவும் அனுபவிக்கும் வாய்ப்பிருந்தும், தன்னை எந்தக்  கணக்கீடும் நோக்கமும் இல்லாமல் நேசித்த பிரேமாவுடன் 2 நாட்கள்  இருக்கவும் சிட்டுகுருவியென வந்தது ரமேஷ் பிரேதன் தான்.

அம்மா சிலவருடங்களுக்கு முன்பாக ஒரு பண்டிகை நாளில் இரவில் நெஞ்சடைத்து இறந்துபோனார்கள். தினமும் மாலையும் குளிக்கும் பழக்கம் அம்மாவுக்கும் இருந்தது என்னைப்போலவே அல்லது எனக்கிருக்கிறது அம்மாவைபோலவே.

அன்று மாலையும் குளித்து, உடல் துவட்டிய ஈரிழைத்துண்டை இனி ஒருபோதும் உடலைத் துவட்டப்போவதில்லை, நெருப்புக்கு தின்னக்கொடுக்கபோகிறோம் என்றறியாமல். வராந்தா கம்பி மீது கடைசியாகக் காயப்போட்டிருந்தார்கள்.

அம்மா இறந்து உடலை வீட்டுக்குக் கொண்டுவந்த நள்ளிரவில் எதேச்சையாகக் கவனித்தபோது அந்தத் துண்டில் வழக்கத்தைக் காட்டிலும் பெரிய அளவிலான வெட்டுக்கிளிஒன்று அமர்ந்திருந்தது. அதே துண்டின்  மீது 2 நாட்கள் அந்தப் பூச்சி அசையாமல் அமர்ந்திருந்து எங்கள் கதறலை, கண்ணீரை, பொருளற்ற சடங்குகளை, இனி யார் மீதும் பிரயோகிக்க முடியாத,  அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் ஆணவத்தையெல்லாம்   பார்த்துக்கொண்டிருந்தது.

பின்னர் எங்கோ எப்படியோ மறைந்துவிட்ட அந்தப்பூச்சி அம்மாவின் அஸ்தியை  மின்மயானத்திலிருந்து  வாங்கிக்கொண்டு வருகையில் தம்பி விஜியின் முதுகிலும் அஸ்தியை பாரதப்புழாவில் கரைத்துவிட்டு திரும்புகையில் உடனிருந்த இன்னொருவரின்  தோளிலும் இருந்தது. அது அம்மாதான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த  ஆவணப்படத்தின் மிஸ்டிக்கான பகுதிகளாக கருப்புவெள்ளையில் காட்சிப்படுத்தப்பட்டவைகளும்  அந்த வண்ணத்துப்பூச்சியும் பறக்கும் பன்றியுமிருந்தன என்றாலும் பிரேமாவின் கண்ணீரும் அவர் சிட்டுகுருவியைப்பற்றி தொண்டையடைக்கச்  சொன்னதும் தான்  ஆவணப்படத்தின் உச்சம்.

 இந்த ஆவணப்படத்தின் இறுதியில்  இயக்கம் அகரமுதல்வனென்னும் பெயரைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.  வெள்ளித்திரையில் இதே பெயரின் ஓரெழுத்து சிவப்பில் தனித்துத் தெரிகையில் முன்வரிசையில் அமர்ந்து பார்க்கக் காத்திருக்கிறேன்.

பிரேமாவுக்கும் அகரனுக்கும் அன்பு.

மலையின் மறு சரிவில் இறங்குதல்!

தங்களுக்குக் கல்யாணம் ஆக வேண்டுமென்பதற்காகச் சொந்தச் சகோதரியின் 16 நாட்களேயான பெண் குழந்தையை கால்களால் மிதித்தே கொன்ற மூன்று சகோதரிகளைக் குறித்து நவம்பரில் செய்திகள் தொடர்ந்து வந்தன. எனக்கு அதற்குள் சென்று மேலும் அறிந்துகொள்ளும் துணிவில்லை.  எனினும்  இதற்கிணையான அல்லது இதைக்காட்டிலும் வன்முறையானவற்றை செய்தவர்களை இந்த வருடமும் அறிந்துகொண்டேன்.

துரோகங்களை அதிகம் மிக அண்மையில் சந்தித்தவளாதலால் கழுத்தறுபடுகையில் வெளியாகும் முதல் குருதிச்சொட்டின் பச்சை வீச்சத்தை என்னால்  உடனே தெரிந்துகொள்ளமுடியும். புதிதாக வருந்த ஏதுமில்லை என்றாலும் அதே துரோகம் மகன்களுக்கும் நடப்பதுதான் துயரளிக்கிறது. இந்த உலகில்தான் அவர்களை நான் விட்டுச்செல்லவிருக்கிறேன் என்பதும் பெருந்துயரளிக்கிறது. எதுவுமே மாறவில்லை. சுழன்று சுழன்று வந்துகொண்டே இருக்கிறது. எனக்கு நிகழ்ந்ததே மகன்களுக்கும் நிகழ்கிறது.

தருண் சிறகு கொண்டவன் அவனுக்கு உலகே வீடு என்பதால் காயங்களை அவன் பெரிதாக கவனிப்பதில்லை, சொல்லப்போனால் புதிய காயங்களுக்காக மனதை திறந்து தயாராக வைத்துக்கொள்பவன் அவன். ஆனால் சரண் வேர்கொண்டவன் அவனுக்கு குடும்பமும் வீடும்தான் உலகு. மேலும் மனிதர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டவன் அவன். அவனால் காயங்களிலிருந்து விரைவில் விடுபடமுடிவதில்லை. எப்போதும் மானசீகமாக அவன் தலைகோதும் கரமொன்று எனக்கிருக்கிறது.   ஆழமான அந்தத் தழும்புகளை அவ்வப்போது  நிரடிப்பார்த்துக் புன்னகைத்துக் கொள்ளும் மனவலிமையுடன் அவன் முற்றிலுமாக மீண்டு வரவேண்டும்  என்பதுதான் இப்போது என் ஒரே விருப்பமும் வேண்டுதலுமாக இருக்கிறது. தெய்வங்களே காத்துக்கொள்க!

வழக்கத்தைக் காட்டிலும் தீவிரமான வருடமிது. அதிகம் பயணித்த, அதிகம் வாசித்த, அதிகம் எழுதிய, அதிகம் கற்றுக்கொண்ட வருடமும் கூட. 

அதிகம் மோசமான அனுபவங்களிலிருந்து  ஆகச்சிறந்த பாடங்களைக் கற்றுக்கொண்ட வருடமும் கூட. இன்னும் அத்தகைய பாடங்களின் பொருட்டு ஆசிரியர்கள் எனக்கெதிரே  நீண்ட வரிசையில் நிற்கிறார்கள் என்றும் அறிந்திருக்கிறேன். 

மிக முக்கியமாக நான் மகிழ்ந்திருந்த வருடமும் இதுதான். தன்னறம் வெளியீடாக வந்த இரு நூல்களுக்கு ஜெ எழுதிய முன்னுரையைக்காட்டிலும் ஆகப்பெரிய அங்கீகாரம் இனி வேறு ஏதுமில்லை. நிறைய மேடை உரைகள் நிறைய நிறைய அங்கீகாரங்கள் நிறைய விருதுகள் புதிய தோழமைகள், மகிழ்வளிக்கும் சில விலகல்கள் என கலவையான வருடமிதுவும்.   

முத்தச்சிறுகிளை நூலுக்காக செந்தமிழ்க்கோதை விருது சிவகாசியில் அளிக்கப்பட்டது, இந்திய மருத்துவக்கழகம் ‘’women of wonder’’ விருதளித்தார்கள். டிசம்பர் இறுதியில் உலகத்தமிழ் பண்பாட்டுக்கழகத்தின் சிறப்பு விருதும் 50,000 காசோலையும் அளிக்கப்பட்டது. அந்தத்தேதியில் நான் வெள்ளிமலையில் (மூன்றாவது வகுப்பு இது) இருந்ததால் தருண் சென்று விருதை வாங்கிக்கொண்டான். அதே நாள் நான் திருமணத்திற்கு முன்பு இந்தத் துறையில் பணியாற்றிய  போது படித்த மாணவர்கள் எனக்கு outstanding educator award  அளித்தார்கள். அந்த நிகழ்விலும் கலந்துகொள்ள முடியாததால் அதையும் நான் திரும்ப வந்து பெற்றுக்கொண்டேன். 

வேடிக்கையாக ஒன்று நிகழ்ந்தது. திருப்பூரின் சக்தி விருது எனக்களிக்கப்பட்டிருப்பதாக அழைப்பிதழ் வந்தது. பலர் அவர்களுக்கும் செய்தி தெரிந்து வாழ்த்தும் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தபட்டவர்கள் என்னை இன்று வரையிலும் அழைத்து முறையாக விருது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. விருதுபெறுபவர்கள் விழா நடக்குமிடத்தை அழைப்பிதழிலிருந்து தெரிந்து கொண்டு நேரில் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அந்த விருதை நான் பெற்றுக்கொள்ளவில்லை.

சரண் கல்லூரிக்கு வந்து ethics of AI என்று ஒரு உரையாற்றினான். அவனை உண்மையில் நான் என் கல்லூரிக்கு வரவேண்டாம் என்றுதான் சொன்னேன் ஆனால் அழைப்பு வந்தபோது ’’இல்லம்மா நான் வரேன் மாணவர்களுக்காக’’ என்று சொல்லி வந்தான். சிறப்பான உரை, அரங்கில் முன் வரிசையில் அமர்ந்து பெருமிதமாக கவனித்துக்கொண்டிருந்தேன். 

இறுதித்தளையொன்றிலிருந்தும் விடுபட்டேன். மிகுந்த தாமதமாகிவிட்டதுதான் இருந்தாலும் என் தரப்பில் தாமதிக்கச் சில காரணங்கள் வலுவாக இருந்தன.  என்னை இந்த வெர்ஷனில் ஏற்றுக்கொள்ள பலருக்கு தயக்கமிருக்கிறது அதைக்குறித்து எனக்கெந்த ஆட்சேபணையும் இல்லை. இதுதான் நான் இப்படித்தான் இனி நான் இருக்கப்போகிறேன். ’’அறிக இவ்வுலகு இனி நான்   தனியள் தன்னந்தனியள்’’ என்று ஏதேனும் ஒரு குன்றின் மீதிருந்து கூவலாமென்றிருக்கிறது. என் இந்த வெர்ஷனை எதிர்கொள்ளச் சங்கடப்படுபவர்கள் தள்ளிநில்லுங்கள் அல்லது விலகிச்செல்லுங்கள். 

வாழ்வு மொத்தத்தையும் பொருளற்ற சடங்குகளுக்காகவும் வற்புறுத்திப் போர்த்தப்பட்ட புனிதப்போர்வைகளுக்காகவும் என்னால் பலியிடமுடியாது .என் ஆத்தா, அம்மா, அத்தைகள், சித்திகள் அண்ணிகளைப் போல ஒருகூரைக்குக்கீழ் கடித்துக்குதறப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்து சமூகத்தின் முன்னால் பட்டுப்புடவையும் கூந்தலில் பூச்சரமும் கழுத்தில் காதில் நகைகளும் முகத்தில் வரவழைத்துக்கொண்ட புன்னகையுமாய் வாழும் நாடகத்தில் எனக்கு விருப்பமில்லை. அப்படியொரு முகமூடியை நான் இதுவரை அணிந்து கொண்டதுமில்லை. நான் அன்னை மட்டுமே என்று பெருமிதமாகத்தான் என்னை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேன். 

மேலும் மணவுறவின் பிணக்குகள் தீர்க்கமுடியாமலாகும் போது வெளியேறி மூச்சுவிட்டுக்கொண்டு மகிழ்ந்துவாழலாம் என்பதற்கு பின்வருங்காலத்துப் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் நான் இருக்க விரும்புகிறேன்.

எனக்கு என் குடும்பத்தில்  அப்படிச் சொல்லிக்கொள்ள யாருமில்லை. கழுத்தில் கயிறு இறுக்கிய அடையாளத்துடன் செத்துப்போய் சடலமாகக் கிடந்த பெண்கள் இருக்கிறார்கள், அம்மாவைப்போல் கடைசிநாள் வரை வதையனுபவித்து கண்ணீருடன் மின்மயானம் சென்றவர்கள் இருக்கிறார்கள், மனதில் ஒருவரை மறக்கவே முடியாமல் கணம் கணமாக நினைத்துகொண்டு வேறொருவருடன் வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு செத்துப்போனவர்கள் இருக்கிறார்கள், படிப்பும் வேலையும் வெறும் ஏட்டுச்சுரைக்காயாகி இளமை, அழகு, பொருளாதாரம், ஆற்றல், ஓய்வு நேரம் என அத்தனையும் சுரண்டும் ஆணை முற்றிலும் சார்ந்து இருப்பதே குடும்ப தர்மம் என்னும் முட்டாள்தனத்தில் மூழ்கி மடிந்தவர்களும், வாழ்பவர்களுமான வரலாறு கொண்டது என் குடும்பம். நான் அவர்களில் ஒருத்தி அல்ல அல்லவே அல்ல . 

பாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்களல்ல, மேலும் பல மடங்கு வலிமையானவர்களும்தான். என் சுதந்திரம் என்பது வேலி சாடுவதல்ல எதுவரை போகலாம் என்றறிந்திருக்கிறேன், எத்தனை உயரம் பறக்கமுடியுமோ அத்தனைக்கு  பறக்கவிருக்கும் சுதந்திரம் இது. எனக்கு பிடித்தமானவைகளை செய்தேன், செய்கிறேன் இனியும் செய்யவிருக்கிறேன்.

என்னவானாலும் மகன்களின்  கைகள் என்னை இறுகப்பற்றிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். நான் அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது. சரண் இந்தியா வந்திருக்கிறான் இந்தியாவிலேயே இனி இருப்பதாகவும் இருக்கிறான் மும்பையில் பணியாற்றவிருக்கிறான். தருண் கடைசி செமஸ்டரில் இருக்கிறான், அவனுக்கும் வேலை கிடைத்திருக்கிறது காலூன்றி விட்டார்கள் இருவரும்.

முன்பொருமுறை தருணை தோளிலும் சரணை கையிலும் பிடித்துக்கொண்டு அம்பராம்பாளையம் செல்லும் பேருந்தில் நின்றுகொண்டு பயணிக்கையில்  முழுப் பைத்தியக்காரனொருவன் (அப்படி தனித்து யாரையும் அடையாளப்படுத்த முடியாதென்றாலும்)  ஒரு பெரிய பாறாங்கல்லை வேகமாகச்சென்று கொண்டிருந்த பேருந்தின் முன்னால் போட்டுவிட்டடான். திடீரென பிரேக் பிடித்து நின்ற பேருந்திலிருந்து வாசலுக்கருகில் நின்றிருந்த நானும் மகன்களும் தூக்கி எறியப்பட்டோம். பேருந்தின் படிக்கட்டுக்கு கீழே என் பாதி உடலிருந்தது ஆனாலும் பேருந்துக்குள்ளே இருந்த சரணையும் தருணையும் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டிருந்தேன்.  இனியும் இப்படி பாறாங்கற்களுடன் பைத்தியக்காரர்கள் குறுக்கே வருவார்களென்னும் கவனம் எனக்கும் மகன்களுக்குமிருக்கிறது. அவர்களின் நலனைத்தவிர வேறு எதுவுமே இவ்வுலகில் எனக்கு பொருட்டல்ல அல்லவே அல்ல.

அவர்களைப் புரிந்துகொள்ளாதவர்கள், அவர்களை ஏமாற்றுபவர்கள்  அவர்களைச் சுரண்டுபவர்கள் அவர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு என் வாழ்விலும் இடமில்லை. சட்டையில் படியும் புழுதியைத் தட்டி உதறுவதுபோல எளிதாக நான் அவர்களை ஒரு சிறு தட்டலில்  உதறிவிடுவேன்.

மனிதர்கள் குறைநிறைகளுடன் எனக்கும் தேவையாக இருக்கிறார்கள் தான். இப்படி பலரும் என் வாழ்வில் தோழமையுடன் இருக்கிறார்கள், எனினும் ஒரு கோடு இருக்கிறது எனக்கு  அந்தக்கோட்டையும் தாண்டிச்செல்பவர்களுக்கு ஒருபோதும் என் வாழ்வில் இடமில்லை.

வெட்கப்படும் விஷயங்களையும் செய்திருக்கிறேன் இந்த வருடம். எங்களது SR (service register)-ல் பணிக்காலத்து தவறுகளை கரும்புள்ளியில் குறிப்பிடும் வழக்கமிருக்கிறது. 

நான் பொதுவாக குரல் உயர்த்துவதில்லை எந்த சிக்கலான காலத்திலும் அப்படிச்செய்ததே இல்லை வருத்தத்துடன், கோபத்துடன் விலகி இருக்கிறேன் சொல்லிக்கொண்டும் சொல்லிக்கொள்ளாமல். ஒருபோதும் குரலுயர்த்திக் கத்தியதில்லை எனினும் கல்லூரியில் கடந்த செமஸ்டரில் ஒரு முக்கியமான மீட்டிங்கில்  தலைமைப் பொறுப்பிலிருந்த ஒருவர் சிக்கலை எதிர்கொள்ள முடியாத போது தப்பிக்கும் விதமாக வழக்கமாகக் கத்துவதைப் போலத்தான் என்னிடமும் கத்தினார் என்றாலும் நான் எப்படியோ பொறுமையிழந்து எல்லாக்கட்டுக்களும் தளர்ந்து பதிலுக்கு கத்திவிட்டேன். குற்றவுணர்வு கொள்கிறேன் இப்போதும் அதன்பொருட்டு. போர்ட் ரூமுக்கு வெளியே காத்திருந்த ஆங்கிலத்துறை ராதா ’’…அக்கா நீயாக்கா ஏங்க்கா…’’ என்றாள் அந்தக்கேள்வி நானே என்னைக் கேட்டுக்கொண்டதுதான் என்பதால் பதிலளிக்கவில்லை.shame on me

அதுபோலவே வீட்டில் ஒரு போன் அழைப்பு எனக்கு உண்டாக்கிய குமுறல் அடங்காமல் ’’..மீ போனை எடுக்காதே..’’ என்று தருண் சொல்லச்சொல்லவே அந்தக் கணத்தின் உணர்வுநிலையில் அடித்துச்செல்லப்பட்டு போனை எடுத்து நானும் மறுதரப்புக்கு இணையாகவே பேசிவிட்டேன். அப்படிப் பேசியது வருத்தமென்றால் அதை தருணும் கேட்டது மேலும் வருத்தம் இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்த வருடத்தில் எனக்கு நானே வைத்துக்கொண்ட கரும்புள்ளிகள் தான்.

வழக்கம் போல ஆர்வமாகவும் விரிவாகவும் சமையல் செய்கிறேன் சாப்பிடுகிறேன். புதிய புதிய சமையல் செய்முறைகளையும் கற்றுக்கொண்டு முயற்சிக்கிறேன். 2025-ல் வீட்டுக்கு வெளியே சாப்பிட்டதில் சொல்லிக்கொள்ளும் படி சிறப்பான உணவுகள் ஏதுமில்லை. மிக நெருங்கிய நண்பர்களுடன் சாப்பிட்ட நினைவுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன் ஆனாலும் சிறப்பான உணவு என்றால் தீபாவளிக்கு தருண் சமைத்துக் கொடுத்ததுதான்.  அன்று அழுக்குசுவாமி கோயிலுக்குபோய் விட்டு வீடு திரும்பவே மதியம் 2 மணி ஆனது அதன் பின்னர் தருண்  ஆட்டுக்கறி வறுவலும் சாதமும் உப்புப்பருப்பும் சமைத்து சாப்பிட 3,30 ஆனது நான் 1 மணிக்கப்புறமாக  சாப்பிட்டதே இல்லை எப்போதுமே பசி தாங்காதவளான நான் அன்று மிகத்தாமதமாக தருணின் அந்தச் சமையலை ரசித்துச்சாப்பிட்டேன்  இந்த வருடத்திற்கானது மட்டுமல்ல எப்போதைக்குமான மிகச்சிறப்பான அசைவ உணவு அதுதான்.

சாப்பிடுகையில் தருணைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் அந்தப் பெண்ணைக் குறித்த பொறாமை எழுந்துவந்து தழலாடியதை தவிர்க்கவே முடியவில்லை.

// தேவி கைகழுவின தண்ணியில் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டாக்கூட ரசம்னு ஊத்திச்சாப்பிடலாம்//போன்ற என்னைக்குறித்த அதிபுனைவுகளையெல்லாம் காற்றில்  ஊதிப்பறக்க விட்டுவிட்டான்.

விரிவாகச் சமைத்து விரிவாக பேக் செய்து கல்லூரிக்கு கொண்டு செல்கிறேன்.  பலர் என்னிடம் எதிர்பார்க்கும் ’’…ஒருத்திக்கு என்னன்னு தனியா செய்யறது எலுமிச்சைசாதம், புளிசாதம் செஞ்சு கொண்டு வந்தேன்..’’ என்று சொல்லும் தியாகத்திருவுருத் தாயெல்லாம் நானில்லை எனக்குப் பிடித்தவற்றை செய்து சாப்பிடுகிறேன்.

உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறேன். புதிதாக ஜப்பானிய நடைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன், உண்மையிலேயே பயனுள்ளதுதான். (தகவல் தேவைப்படுபவர்கள் தனியே கேட்டுக்கொள்ளவும்) அதிகாலையில் நடக்கிறேன் நானிருக்கும் தெருவில் 5 வீடுகளில் 3-ல் தான் புழக்கம், அதில் நான் சமையலை முடித்துவிட்டு,நடப்பேன் காமாட்சியின் வீட்டில் மட்டும் பருப்பும் காயும் புளியும் வேகும், சோறு வடிக்கும் மணமும் அடிக்கும்.  சமயங்களில் வீட்டிலிருக்கும் மகிழமோ பாரிஜாதமோ ட்ரசீனாவோ செண்பகமோ மணக்கும். இளையராஜா, யுவன், சங்கர் மகாதேவன், ரஹ்மான் அல்லது வித்யாசாகர் என்று குறிப்பிட்ட யாரோ ஒருவரின் பாடல்களைக் கேட்டுக்கொண்டு நடப்பேன்.  

வெள்ளிக்கிழமைதான் விளக்கேற்றனும், வியாழக்கிழமைகளில் மட்டும் சாய்பாபா, செவ்வாயில் முருகன் என்றெல்லாம் எனக்கு நாள் கால பேதமில்லை எல்லா நாளும் விளக்கேற்றுவேன், கூட்டமில்லாத நாட்களில் தோன்றினால் கோவிலுக்குப் போவேன் எப்போதும் வீட்டைத்துடைத்து சுத்தமாக அழகாக உருளிகளில் மலர்களிட்டு  அழகாக வைத்துக்கொள்வேன்,

வழக்கம்போல காலை 5-லிருந்து இரவு 11 வரை ஒருநாளுக்கான நேரமாக இருக்கிறது எனக்கு.  எழுந்ததும் ஜெ தளத்தை முழுக்க வாசிக்கிறேன். வெண்முரசை மீள மீள வாசிக்கிறேன் நேரம் கிடைக்கையிலெல்லாம்.

இந்த  வருடத்திய disaster என்றால் முதல் தளம் வீடு கட்டநினைத்து, அதை செயல்படுத்தியதுதான். மகன்கள் சிறுவர்களாக இருக்கையில் அப்போதிருந்த பொருளாதார மற்றும் வங்கிக்கடன் வாங்கும் வசதிக்கேற்ப  சமையலறை உட்பட 4 அறைகள் கொண்ட சிறிய வீட்டைக் கட்டினேன். இப்போது ஊரிலிருந்து மகன்கள் வந்தால் சூட்கேஸ் வைத்தாலே வீடு நிறைந்துவிடுகிறது இனி கல்யாணம் காட்சி என்று சொந்தங்கள் அதிகரிக்கக்கூடும் எனவே மேல்தளம் எடுக்கலாம் என நினைத்தேன்.

பலரை சந்தித்துப் பேசியும், நம்பிக்கையூட்டும் பொறியாளர்கள் அமையவில்லை எனவே தள்ளித்தள்ளிப் போனது. சரண் ஜெர்மனியில் இருந்து சில நாட்கள் விடுமுறையில் வந்திருந்து வீடு கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் போட்டுவிட்டு செல்லவிருந்தான் எனவே தருணின் நண்பன் இன்னொரு தருண் கட்டுமானப் பொறியாளர், அவன் பரிந்துரைத்த இரு இளைஞர்களை முழுமையாக நம்பி கட்டிட வேலையை துவங்கினேன். 

சமீபத்தில் எனக்கேற்பட்ட ஆகப்பெரிய துயரம் வருத்தம் சங்கடம் எல்லாம் அந்த இளைஞர்களை நம்பியதுதான் என்றாகிவிட்டது. அவர்களுக்கு வழக்கமாகிவிட்ட துவக்கத்தில் நம்பிக்கையூட்டும் விதமாக நடந்துகொண்டு போகப்போக தேய்வதை இவர்களும் நடைமுறைப்படுத்தினார்கள். வீட்டு வேலைகளை நிறுத்தவும் முடியாமல் ஏகப்பட்ட பணத்தை முடக்கி, தொடரவும் முடியாமல் பெரும் சங்கடமாகியது.

தனியாக வீடு கட்டுவது பெரும் சவாலென்றால் எந்தத்திறமையும் பொறுப்புமில்லாத முடிந்தவரை ஏமாற்றுபவர்களிடம் வேலையை ஒப்படைத்தால் அது எப்படிப்பட்ட சவாலாக இருக்கும்? 

மேல்வீட்டு பணியின் அதிர்வுகளை சமாளிக்க கீழ்வீடு முழுக்க பெரிய தூண்கள் நிறுவப்பட்டிருந்தன எனவே எனக்கு நடமாட்டம்  மிகச்சிக்கலானது பணியாளர்கள் வீட்டுக்கெதிரே குடிசைபோட்டு தங்கி இருந்தார்கள் மாலைவேளைகளில்  துவைக்கும் கல்லருகே அவர்கள்  குளிப்பது வழக்கமாதலால் நான நடைசெல்வது வாசலில் அமர்வது எல்லாமே நின்றுபோனது. ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு புது பிரச்சனை உருவாகும் அதைச்சரி செய்வது குறித்து  பொறியாளர்களுக்கும் வீட்டிலேயே தங்கிக்கொண்ட  மேற்பார்வையாளர் என்று அமர்த்தப்பட்டிருந்த ஒருவருக்கும் மொத்தக்குழுவினருக்குமே எதுவும் தெரியாது.

திரும்ப அவற்றை நினைத்துப்பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது.

கடைசி நாளில் மதில்சுவற்றில்  அவர்கள் அடைக்காமல் விட்டிருந்த ஒரு துளையை அடைக்கச் சொன்னதற்கு, மேற்பார்வையாளரான மேஸ்திரி, அவரது வெறும் கைகளில் சிமெண்ட் கலவையை எடுத்து அந்தத் துளையில் அப்பி அடைத்துவிட்டு கையைகழுவி விட்டுப் போன அந்த அலட்சியமாக செயல்தான் முழு வீட்டு கட்டுமானத்துக்கும் நடந்ததது. எலக்ட்ரீஷியனோ ப்ளம்பரோ மேசனோ ஒருவருக்கும் எந்த திறமையும் துறைசார்ந்த அறிவும் இல்லாமல் குழப்பி அடித்தார்கள் ஆனால் ஒப்பந்தப்படி பணம் மட்டும் சரியாக கொடுக்க வேண்டி இருந்தது.

என் சுபாவமே மாறிப்போய் கடும் தலைவலியும், பின் கழுத்தில் வேதனையும் பாரமுமாக எப்போதுமிருந்தேன். ஒப்பந்தத் தொகைக்கும் ஆன செலவுகளுக்கும் எந்தச் சம்பந்தமுமே இல்லமாலானது. இளமையின் மீதும் கல்வியின் மீதும் எனக்கிருந்த நம்பிக்கையை முழுவதுமாக அவர்கள்  இருவருமழித்தார்கள். 

மனஅழுத்தம்  தாங்க முடியாமல் வெண்ணிலாவிடம் கண்ணீர் விட்டு அழுத நாட்களும் உண்டு. கடைசியில் கையெடுத்து வணங்கி அவர்களை அனுப்பவேண்டி இருந்தது.  இதோ இன்று வரை அவர்கள் செய்த தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு இப்போதைக்கு குடி போகவே முடியாது. 

இந்த வருடத்தின் மாபெரும் தவறு அவர்களை நம்பியதுதான் காலம்காலமாக இதை நினைத்து  வருத்தப்படப்போகிறேன்.

வீடு கட்டியதில் ஒரே ஒரு நல்ல நினைவு மற்றும் கிடைத்த உதவி என்றால் திரு பாலு மனைவி மகன்களுடன் இரண்டு நாட்கள்  செலவழித்து வீட்டுக்குத் தேவையான டைல்ஸ் போன்றவற்றை  கோவையில்  வாங்கிக் கொடுத்ததுதான். அந்த உதவியை ஒருபோதும் மறப்பதற்கில்லை. வீடுகட்டிய நினைவுகளில் மற்ற எல்லாமே மறக்க வேண்டியவை.  வாழ்நாள் முழுவதுக்குமான மிகக் கசப்பான நினைவு இதுதான். கட்டிடப்பணியின் பொது நிரந்தரமாக ல்யூகோபில்லம் ஃப்ரூட்டிகோசம், மொசுண்டா, ஒரு போன்சாய், தெபியா ஆரியா, சில ரோஜாக்கள் மற்றும் சில செம்பருத்திச்செடிகளை இழந்தேன். அன்னைமரமாக இருந்த நாவலைக் கொல்லவேண்டி வந்தது.

சில இறப்புகளும் மறக்கமுடியாதவைகள் இந்த வருடம். தாவரவியலாளர் டொனோவன் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து இறந்தது பெரும் துக்கமளித்தது. 51 வயதுதான் அவருக்கு. அதிலிருந்து நான் இன்னும் மீளவே இல்லை. ஜேன் குடாலின் இழப்பும் துயரளித்தது என்றாலும் அவர் நிறை வாழ்வு வாழ்ந்து இயற்கையாக மரணித்தார்.  எனக்குப்பிரியமான மலையாளத் திரைப்பட நடிகர் சீனிவாசன் மறைந்தார்.   

கரூர் நெரிசலில் இறந்தவர்களை நினைத்து பெரிதும் வருந்தினேன். துக்கம் விசாரிக்க குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டதும்,  அவர்கள் இறப்புக்கு பணம் வாங்கிக்கொண்டதும் எனக்கு பெரும் அவமானமாக இருக்கிறது இன்றும்.

 கேரள நடிகை ஆக்கிரமிக்கப்பட வழக்கின் தீர்ப்புக்காக நானும் காத்திருந்தேன், ஆனால் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்தது . இத்தனை வெளிப்படையாக ஒருவர் சட்டத்திலிருந்து தப்பியது எனக்குத்தெரிந்து இதுதான் முதல்முறை.  தீர்ப்பு நாளில் அந்த நபரின் கைகளில் ஏகப்பட்ட நிறங்களில் கோவில் கயிறுகள் நெற்றியில் குங்குமமும் சந்தனமும். அவரைக் காப்பாற்றிய கடவுளர்கள் நடிகையை ஏன் கைவிட்டார்கள்? அந்த மனக்குமுறல் எனக்கு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

இடவேலா பாபுவும் சித்திக்கும் மொழிமாற்றியதில் எனக்கு ஆச்சர்யமேதும் இல்லை ஆனால் பிந்து பணிக்கர் செய்தது வருத்தமளித்தது ஒரு பெண்ணால் கூட நடந்த அநீதியை புரிந்துகொள்ள முடியவில்லை. 

எல்லாவற்றையும் விட தீர்ப்பை ஒரு பெருங்கூட்டம் நீதிமன்றத்தின் வாசலில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக்கொண்டாடியதுதான் பெரும் வெட்கக்கேடாக இருந்தது . எதைக் கொண்டாடினார்கள் அப்படிக் கூட்டமாக? அந்தகூட்டத்தில் சில பெண்களுமிருந்தார்கள், குழந்தை மிதிபட்டுச் செத்துபோன அன்னை ’’..விஜய வரச்சொல்லுங்க..’’ என்று கத்தியதற்கு இணையானதுதான் அதுவும்.

இந்த வருடத்துக்கான சில  பயணங்களை திட்டமிட்டிருக்கிறேன். கோடையில் காஷ்மீர் ட்யூலிப் கொண்டாட்டத்துக்கு செல்லவிருக்கிறேன். நண்பர்கள் உடன் வரவிருக்கிறார்கள். ’’…காஷ்மீரா அங்கே போனால் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று விடுவார்கள்…’’ என்று ஒருசிலர் பயப்படுத்தினார்கள், ட்யூலிப் தோட்டத்தில் இருக்கையில் நெஞ்சில் குண்டு பாயுமானால் அதைக்காட்டிலும் நல்லிறப்பு தேவிக்கென்ன இருக்கமுடியும்?

அந்தமான் செல்லவேண்டும் என்னும் விருப்பம் பல ஆண்டுகளாக இருக்கிறது அதை இந்த வருடம் செயலாக்கவேண்டும்

அடுத்து லவ்டேலுக்கு சென்று நான் சுற்றிய தெருக்களை, நீலப்பச்சை இலைகள் கொண்டிருக்கும் யூகலிப்டஸ் மரங்களை, பனிக்கட்டிபோல சில்லிட்டிருக்கும் சிற்றோடைகளை வழியெங்கும், குட்டிக்குட்டிப் பட்டுதலையணைகளைபோல மலர்ந்திருக்கும் ஹைட்ராஞ்சியாக்களை எல்லாம் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏன் அதை ஒத்திப்போடவேண்டும் இப்போதே போகலாம் என்று மகன்கள் சொன்னதால் விஷ்ணுபுரம் விழாவிலிருந்து அப்படியே சாம்பவியையும் அழைத்துக்கொண்டு லவ்டேல் சென்றோம்.

எனக்கு பால்யத்தின் சொல்லிக்கொள்ளும்படியான நினைவுகளென்றால் அது லவ்டேலில் மட்டும்தான் இருந்தது. எல்லா பள்ளி விடுமுறைகளும் லவ்டேலில்தான் இருந்தேன். அத்தையின் அன்பு, லாரன்ஸ் பள்ளியின் ஆடம்பரம், அருமையான உணவு, கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் என்று மகிழ்ந்திருந்தேன் அங்கு.

பிள்ளையில்லாத அபயமத்தை அந்தக்குளிரில் அண்டாவில் வெந்நீர் வைத்து அத்தனை தலைமுடிக்கும் அரப்பு போட்டுக் குளித்துவிட்டது, அப்போதுதான் அறிமுகமாயிருந்த கோன் ஐஸ்கிரீமை  பெரிய பெரிய பாத்திரங்களில் வாங்கிவந்து சாப்பிட்டுவிட்டு, தனியே கோன் பிஸ்கட்டுகளை சேர்த்துவைத்து சாப்பிட்டது, 1 ரூபாய்க்கு கிடைக்கும் கோழிமுட்டை மிட்டாயை பலவண்ணங்களில் வாங்கி வாயில் அதக்கிக்கொண்டே திரிந்தது,  பள்ளி சமையலறையில் எண்ணெய் சட்டியில் முட்டையை உடைத்து ஊற்றி பூரி போல ஆம்லெட் போடுவதையும், கஸ்டர்ட் என்று ஒன்றிருப்பதையும் தெரிந்துகொண்டது, தினந்தோறும் கஸ்டர்டுடன் விரிவான மதிய உணவு சாப்பிட்டது, அங்கே எனக்கென நான் தெரிவு செய்து வைத்துக்கொண்ட நீலவிளிம்பு கொண்ட குழிவான வெள்ளை பீங்கான் தட்டு(இன்னும் அப்படி ஒரு தட்டை தேடிக்கொண்டிருக்கிறேன்), மாலைவேளைகளில் புல்வெளியில் நாற்காலி போடப்பட்டு வெள்ளுடைப்பணியாளர்கள் பரிமாறிய தேநீரும் வாட்டிய ரொட்டியும், கமல் ,ஸ்ரீதேவி, தர்மேந்திரா, ஹேமமாலினி, அமிதாப் என தினமும் ஷுட்டிங் பார்த்தது. மலைரயில் பயணம், பொட்டானிக்கல் கார்டன் செல்வது, பெரிய பெரிய வெள்ளைப் பொத்தான்கள் வைத்த வான் நீலத்தில் ஒரு ஸ்வெட்டரை சேரிங் கிராஸ் நடைபாதைக்கடையில் வாங்கிப்போட்டுக்கொண்டது, பொட்டனிக்கல் கார்டனின் ரோலிங் க்ராஸிலிருந்து உருண்டு உருண்டு சரிந்து விளையாடியது என லவ்டேலின் நினைவுகளை மீண்டும் ஒருமுறை அங்கு சென்று பார்க்க ஆசையாக இருந்தது.

லாரன்ஸ் பள்ளியை மீண்டும் பார்த்தது அத்தனை பரவசமளித்தது.  நான் விளையாடிய லவ்டேல் ரயில்வே ஸ்டேஷனில் நின்று புகைப்படமெடுத்துக்கொண்டேன்.

லவ்டேலில் தங்கி இருந்த வில்லாவில் காரை விட்டு இறங்கியதுமே புல்வெளி எங்கும் மலர்ந்துகிடந்த வெள்ளைக்ளோவரை பார்த்துவிட்டேன். அதைபறித்து முகர்ந்ததும் எனக்கு தெரிந்தது என் நினைவில் எங்கேயோ ஆழத்தில் இருந்த லவ்டேலின் வாசனை அந்த க்ளோவரின் வாசனைதான் என்று.  எத்தனையோ மலைப்பிரதேசங்களுக்கு சென்றிருக்கும் நான் இதுவரை லவ்டேலில் அல்லாமல் அந்த க்ளோவரை வேறெங்குமே பார்க்காமலிருந்ததும் விநோதம்தான். க்ளோவர் மலர்களை தலையிலும் வைத்துக்கொண்டேன். நான் லாரன்ஸ் பள்ளி வளாகத்தின் பக்கவாட்டு எல்லையிலிருந்து சறுக்கி கீழிறங்கி ஒருபெட்டிக் கடைக்கும் செல்லும் வழியும், அந்தக்கடையும் இருந்தது அருகில் ஒரு பஸ் நிலையம் கூடுதலாக.

லாரன்ஸ் பள்ளியில் அத்தை மாமாவின் மரவீட்டுக்கருகே இருந்த வீட்டில் அப்பள்ளியின் ஃப்ரெஞ்ச் ஆசிரியரின் வீடு இருந்தது.  அங்கேயும் சென்று விளையாடுவேன். அந்த வீட்டுப்பெண் நல்ல பருமனாக வெள்ளை வெளேரென்று இருப்பார் பெயர் நினைவிலில்லை. அவர் கணவர் தான் பிரஞ்ச் ஆசிரியர் மஞ்சள் நிறத்தில் இருப்பார் எப்போதும் ஏதோ எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டுமிருப்பார். அவரின் மயிரடர்ந்த புறங்கை எனக்கு நினைவிருக்கிறது. அடிக்கடி அந்தப்பெண் என்னை அதிகாலைகளில் அழைத்துக்கொண்டு பல ஏக்கரில் பரந்து விரிந்திருந்த லாரன்ஸ் பள்ளியின் பின்புறம் இருந்த பல  சிற்றோடைகளின் கரையிலிருக்கும்   கேலா லில்லிகளை

(சதைப்பற்றான புனல் வடிவ வெள்ளை இதழ்களைக் கொண்டிருக்குமே அது ) பறிக்க அழைத்து செல்வார். 

அவரது கைகளில் சிறிய ஆனால் மிகக்கூரிய கத்தி இருக்கும், பத்துப் பதினைந்து மலர்களை அவற்றின் நீளக்காம்புகளுடன் நறுக்கி இருவருமாக எடுத்துக்கொண்டு வருவோம். அவர் உடைந்த தமிழில் பேசுவார் ‘’..உறக்கத்துக்காக அதிகாலைகளை தவறவிடக்கூடாது..’’ என்பார் என்னிடம்.  கண்ணாடிக் குடுவைகளில் நீர் நிரப்பி பூக்களை அதில் இருவருமாக அடுக்குவோம், 

அடிக்கடி தங்கச் சரிகை சுற்றிய சாக்லெட்டுகள் தருவார் அருமையாக இருக்கும். அவருடன் நடக்கையில் எனது நீலவார்களிட்ட ஹவாய்செருப்புகள் புல்லின் மீதிருக்கும் பனியில் ஒட்டிக்கொண்டு நடக்க சிரமப்பட்டது நினைவுக்கு வருகிறது.

அந்த நினைவுகளின் நீட்சிதான் நான் இன்று வீட்டில் மலர்களை அமைக்கிறேன் போலும்.

வழக்கம் போல வேடசெந்தூரில் மழையும்,வெயிலும்,குளிரும் இருந்தது.இந்த வருடம் ஏராளமாக சீம்பால் இனிப்பு சாப்பிட்டு ரத்தச் சர்க்கரை அளவைக் கூட்டினேன். வீட்டு மரங்களின் மாம்பழங்ளை கணக்கு வழக்கில்லாமல் ருசித்தேன். எனக்கு மிகப் பிரியமான முந்திரி நிறைந்த ஜப்பான் கேக்கை இந்த வருடம் சாப்பிடவே இல்லை, எப்படியோ தவறவிட்டுவிட்டேன்.

நான் மலையடிவாரத்திலிருந்து இத்தனையாண்டு காலமாக மெல்ல மெல்ல மேலேறி வந்துகொண்டிருந்தேன். வழியில் பல வகையான அனுபவங்கள், கைகோர்த்து இறுதிவரை உடன் பயணிப்பதாகச் சொன்னவர்கள் காணாமல் போனார்கள், பயணத்துணையாக சேர்த்து வைக்கப்பட்டவர்கள் லாயக்கில்லாதவர்களாக இருந்தார்கள், கடந்துசென்ற குளிர்மேகங்களைப் போல சிலர் இனிய நினைவுகளுடன் பிரிந்து போனார்கள், சிலர் முதுகுக்கு பின்னாலிருந்து தள்ளிவிட்டார்கள், சிலசமயம் நானே காலிடறி விழுந்திருக்கிறேன், தலைகுப்புற விழுந்த அனுபவங்களும், ஆழம் தெரியாமல் கால்விட்ட  சம்பவங்களும் கொல்விலங்குகளிடமிருந்து மயிரிழையில் தப்பித்த, பிரியமான மலர்மரங்களுக்கருகில் மகிழ்ந்து கழித்த சமயங்களும் உண்டு. 

இந்தப்பயணத்தில் இந்த வருடம் ஒரு சில மயிலிறகுகளையும் சேகரித்து  மனப்பக்கங்களுக்கிடையே பத்திரமாக வைத்திருக்கிறேன். சமீபத்தில் கருக்கிருட்டில் சென்ற ஒரு   கார்ப்பயணத்தில் அப்படியொரு மயிலிறகை எடுத்து வைத்துக்கொண்டேன். சென்னைத் தெருக்களில்  7 மணி நேரம் காரில் பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டு கூடவே  பாடிக்கொண்டு being judged என்னும் கவனமோ கவலையோ இல்லாமல் மகிழ்ந்து பயணித்த மற்றொரு கார்ப்பயணமும்  நான் பாடம் பண்ணியிருக்கும் என்றைக்கும் வண்ணம் குறையாத மயிலிறகு.  பூமார்க்கெட்டுக்குள் சுற்றிவந்த  நாளொன்று, என சில மயிற்பீலிகள் என்றென்றைக்குமாக பாடமாகி பொக்கிஷமாக மனதிற்குள் இருக்கின்றன. மேலும் சில வண்ணச்சிறகுகளும் கூழாங்கற்களும் மினுங்கும் காக்கைப்பொன்னும் கண்ணாடிச்சில்லுகளுமாக மனதின் மூலையிலல்ல, நட்டநடுவிலொரு சிறு பெட்டியில் சேகரித்துவைத்திருக்கிறேன்.

பொதுவாகப் பரிசுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் வழக்கத்துக்கு விரோதமாக இந்த வருடம் சில பரிசுகளை பெற்றுக்கொண்டேன். ,அதில்  புடவைகள், புத்தகங்கள், மலர்ச்சரங்கள், இனிப்புகள் அடக்கம்.  

எனக்கு மிகப்பிரியமான ஜகரண்டாவின் இளம் ஊதா நீறப்புடவையொன்று பரிசளிக்கப்பட்டது. மனமுவந்து பெற்றுக்கொண்டேன்.  எங்கள் குடும்பங்களில் பெண்களின் சடலத்தின் மீது அவர்களுப்பிரியமான அல்லது  வளைகாப்பு, கல்யாணப் புடவையைப் போர்த்திய பின்னரே எரிக்க எடுத்துச்செல்வது வழக்கம். அப்படி அம்மாவுக்கு   பிரியமான புடவையை கட்டிவிட முயன்று, உடல் விரைத்துவிட்டதால் தோற்று உடம்பில் சுற்றிக்கட்டிவிட்டோம். அந்தப்புடவை சுற்றப்பட்டிருந்த அம்மாவின் மீதுதான் விஜி மின்மயானத்தில் கற்பூரக்கட்டியை ஏற்றினான்.

இந்தப்பிரியத்துக்குரிய புடவை என் நெஞ்சின் மீதிருக்கையில்தான்,என்மீது உள்ளங்கை அகலக் கற்பூரக்கட்டி  வைக்கப்பட்டு சிதைநெருப்பு ஏற்றப்படவேண்டும்.  மகிழ்ந்தெரிந்து மறைவேன்.

இனி மலையுச்சியிலிருந்து மறுசரிவில் இறங்கும் காலமெனக்கு. மிக நல்ல நண்பர்கள் அமைந்திருக்கிறார்கள் அவர்களின் தோழமையில் இந்த இறங்குமுகப் பயணத்தை மகிழ்ந்து செல்லவிருக்கிறேன்.

‘’…ஏன் நானழைத்தபோது போன் எடுக்கவில்லை..’’ என்று குறைப்பட்டுக்கொண்டது  ’’…தேவி என்னை ஒருமுறை அழைத்து நான் எடுக்கவில்லை என்றால் இரண்டாவது முறை அழையுங்கள் எடுக்கவில்லை என்றால் மூன்றாவது முறை அழையுங்கள் அப்போதும் எடுக்கவில்லை என்றால் நான் எடுக்கும்வரை தொடர்ந்து விடாமல் அழைத்துக்கொண்டே இருங்கள்…’’ என்று சொல்லும் நண்பர்,  ஏழு பேருந்துகள் மாறி மாறி ஊரிலிருந்து கோவை வந்து வீட்டுத்தோட்டத்துக்கு கொடுக்கவென உலர்ந்த வாழையிலைச் சருகுகளில்  பாதுகாப்பாகச் சுற்றப்பட்டு மண்ணில் பொதியப்பட்ட 8 வாழைக்கன்றுகளை சுமந்துகொண்டு வந்து கையளித்த நண்பர்,  ஒன்றுமே சொல்லாமல் திடீரென ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று பவோபாப் மரத்தைக்காட்டி நான் அதை வாயை பிளந்துகொண்டு வேடிக்கை பார்க்கையில் பின்னிருந்து என்னை புகைப்படமெடுத்து கொடுத்த நண்பர், நான் மிகப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணரும் அண்மையை அளிக்குமொருவர், ’’…அம்மா வீட்டுக்குவர லேட் ஆயிருச்சு இங்கே ஒருபக்கம் பயணத்தில் இருக்கேன் என்று சொல்லுகையில்’’.. ஜாலியா இருடா மெதுவா வா ஒன்னும் பிரச்சனை இல்லை..’’ என்று சொல்லும் சரண்,’’… நீ ஏன் பாண்டிச்சேரி போகமுடியலைனு வருத்தப்படறே நான் இன்னிக்கே நைட் புறப்பட்டு வரேன் நான் கூட்டிட்டுப்போறேன்..’’ என்று  கவனமாக இருக்கும் தனது அட்டெண்டன்ஸ் குறித்து கவலைப் படாமல் புறப்பட்டு வரும் தருண்,  என் மகிழ்ச்சியான வெர்ஷனாக நானே திரும்பப் பார்த்துக்கொள்ளும் சாம்பவி, லடாக்கில் இருந்து எனக்கென wind chimes வாங்கி வந்த, நான் வருடங்களாக தேடிக்கொண்டிருந்த காலையில் தூய வெள்ளையில் மலர்ந்து மாலை அது இளஞ்சிவப்பாகி, மறுநாள் குருதிச்சிவப்பாகும் மலர்களை அளிக்கும் ஹைபிஸ்கஸ் ம்யூட்டாபிலிஸ் செடியையும் வாங்கிக்கொடுத்த நண்பர்,  எந்தெந்த நாடுகளில் இருந்தோ இலைகளையும் மலர்களையும் பார்த்த உடனே எனக்கு புகைப்படமெடுத்து அனுப்பும் தோழமைகள் என்னுடன் இருக்கிறார்கள்.

எனக்குப் பிடித்தமான நான்  தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் இந்த தாவரவியல் துறை இன்னும் வாசிக்க வேண்டிய எழுதவேண்டியவைகள் என்று இப்போது மலையின் மறு சரிவிலிறங்குகையிலும் ஏராளம் பணிகள் காத்திருக்கின்றன.

புதிய வருடத்திற்கான  தீர்மானங்கள் ஏதுமில்லை

வாழ்க்கை அத்தனை இனியது அத்தனை துயர் மிக்கது எப்படியாகினும் அதை மகிழ்ந்து வாழவிருக்கிறேன்.

என்னுடன் இருந்தவர்களுக்கும்,  என்னவானாலும் உடன் நிற்பவர்களுக்கும், விலகிச்சென்றவர்களுக்கும், இனி இணைந்து பயணிக்க விருப்பவர்களுக்கும்,  புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்பு!

மன்மத ஏசு!!!!

ஆண்டவரே!

உங்கள் மீதான பக்திப்பாடல்களில் கானா வடிவப்பாடல்கள் பல வருடங்களாகவே புழக்கத்தில் இருக்கின்றன. அம்மாடி ,இதுதான் காதலா மெட்டில்

``மாதாவை வணங்கிட வாருங்க அஹ அஹ ஹ அஹஹா!

செம்பருத்தி செம்பருத்தி பூவைப்போல பெண்ணொருத்தி மெட்டில் ``ஏத்திவச்ச மெழுவத்தி எரியுதம்மா வூட்டைசுத்தி

இந்தப்பாடல்களையெல்லாம் நீங்களும் கேட்டிருப்பீர்கள் உங்களுக்கும் ஆட்சேபணை இருந்திருக்காது என்று நம்புகிறேன் .

இந்த கிருஸ்துமஸ் காலத்தில், சமீபத்தில் பிரபலமான காந்தா ஞானும் வரான் திருச்சூரு பூரம் காணாம் பாடலை சாந்தா, ஞானும் வராம் திருச்சூரு கரோல் காணாம் “என்று மாற்றி மெட்டமைத்ததும் கூட நன்றாகத்தான் இருந்தது என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்

ஆனாலும் மன்மத ராசா மெட்டில் மன்மத ஏசு மன்மத ஏசு'' கொஞ்சம் வரம்பு மீறிவிட்டதுதானே ? இதையெல்லாம் கொஞ்சம் தட்டிக்கேட்கக்கூடதா?

பிதாவே இந்தப்பாவிகளை மன்னிக்காதீர்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

லைக்கன்கள்-Lichens!

இன்று காலைதான் புன்னை மரத்தில் crustose லைக்கன்கள் வளர்ந்திருப்பதைப்பார்த்தேன். ஏகத்துக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. பாசிகளும் பூஞ்சைகளும் இணைந்து வாழும் கூட்டுயிரிகளான லைக்கன்கள் எனப்படும் கீழ்நிலைத்தாவரங்கள் தூய சூழல்களில் மட்டுமே வளர்பவை. வேர்களற்ற இவை நேரடியாகக்காற்றிலிருந்து உணவையும் நீரையும் உறிஞ்சிக்கொள்பவை எனவே மாசுபட்ட்ட சூழலில் இவை வளரவே வளராது. இந்தத் துண்டு நிலத்தில் 17 வருடங்களாக உரங்களோ பூச்சிக்கொல்லிகளோ ரசாயன மருந்துகளோ எதுவுமே பயன்படுத்தாமல் இருந்ததில் இப்போது லைக்கன்கள் வளர்ந்திருக்கின்றன. தூய சூழல் இருக்கும் இடம் இந்த வீடுஎன்பதை இந்த லைக்கன்கள் காட்டுகின்றன.

இயற்கையான இடங்களில் வளர்ந்திருக்கும் லைக்கன்கள் அந்தசூழல் மாசுபடும் போது,மெல்ல மெல்ல அங்கிருந்து மறைந்துவிடுவதால் அவற்றிற்கு pollution indicatorஎன்றே பெயருண்டு. crustose, foliose fruticose எனப்பலவகை லைக்கன்கள் உண்டு வீட்டில் இருப்பது crustose.

தேவி ஹேப்பி!

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑