ஒரு முக்கியமான மொழியாக்கத்தை முடிக்க வேண்டி இந்த விடுமுறையை முழுக்க செலவிட்டுக்கொண்டிருக்கிறேன். இடையில் பரீட்சை பேப்பர் திருத்துவது காவிய முகாமில் கலந்துகொள்வது சரண் தருண் வருகை எதிர்பாரா வீட்டு மராமத்துப் பணிகள் என நாட்கள் தீர்ந்துவிட்டதால் இந்த மாதகடைசிக்குள் முடிக்க வேண்டும் என்னும் கெடு கழுத்துக்கு அருகில் வந்துவிட்டிருந்தது. ஏறக்குறைய முடித்துவிட்டிருக்கிறேன் எனவே ஒரு விடுபடலுக்காக ஏதேனும் ஒரு திரைப்படம் பார்க்க நினைத்தேன். பிரைமில் அநீதி இருந்தது. முன்பே அதை கேள்விப்பட்டிருந்ததால் அதையே பார்க்க முடிவு செய்தேன்

நேற்று முழுவதுமாக பார்த்து முடித்தேன். தன் குடும்பத்துக்கு நேர்ந்த அநீதியால் மனம் அல்லது மூளை பிறழ்கிறது ஒரு சிறுவனுக்கு. அவன் இளைஞனானதும் மேலும் மேலும் அநீதிகள் அவனுக்கும் அவனுக்கு வேண்டியவர்களுக்கும் தொடர்ந்து நடக்கிறது .அதில் அவன் மூளைக்கோளாறு தீவிரமடைந்து எல்லாரையும் கொல்லனும்னு நினைக்க மட்டும் செய்யறான். நிலைமை கைமீறிப்போகையில் அவனும் சகட்டுமேனிக்கு எல்லாரையும் கொல்லும் அநீதியை செய்கிறான்.

என்ன மூளைக்கோளாறானாலும் காதலியை கொல்லும் அநீதியை இறுதியில் செய்யமுடியவில்லை அவனால், ஏனென்றால் மூளை, மனப்பிறழ்வுகளையெல்லாம் கடந்ததுதானே காதல்.அல்லது காதலும் ஒரு தீவிரமான மனப்பிறழ்வுதானே? இதுதான் படம் என்று புரிந்து கொண்டேன். முகத்தை ரத்தத்தில் கழுவும் அளவுக்கு படத்தின் ரத்தக்களறி ஒரு அநீதியென்றால் அந்த நிலோஃப்ர் நகைச்சுவை மாபெரும் அநீதி அதை எதுக்கு உள்ளே கொண்டு வந்தார்கள் என்று புரியவேயில்லை!

நிலோஃபரின் மொக்கை நகைச்சுவை காட்சி முடிந்த அடுத்த காட்சியிலேயே வீட்டு வாசலில் அமெரிக்க பிள்ளைகள் வந்துவிடுகிறார்களே? ஏன் தேவை இல்லாமல் நிலோஃபர்?

வாசற்கதவின் இடைவெளி வழியே மருதாணி இட்ட கை வந்து பார்சலை வாங்கிக்கொள்வது, மழையில் நனைந்தவனுக்கு துவட்டிக்கொள்ள துண்டு தருவது போன்ற சாத்வீக காட்சிகள் ஒன்றிரண்டுதான் மீதி எல்லாமே ரத்தம் தெறிக்கிறது. அர்ஜுன்தாஸ் சவலைப்பிள்ளை போலிருக்கிறார். அந்த நாயகி பரவாயில்லை அவரைவிட ஆரோக்கியம்.

அநீதி இழைக்கப்பட்டதால் அநீதி இழைப்பவனாக மாறிய ஒருவனின் அநீதி நிறைந்த வாழ்வையும், அறியாப்பருவத்தில் நிகழும் அநீதி எப்படி ஒரு சிறுவனை வன்முறையாளனாக வளர்த்தெடுக்கிறது என்பதை படம் சொல்லுகிறது. மற்றபடி தீர்வெல்லாம் சொல்லவில்லை.

எனக்கு ஒரு உம்மை மட்டும் தெரிஞ்சாகனும்,ocd என்கிற பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு என்பதை நான் இதுவரை தீவிரமான சுத்தம் பேணுவது,எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கவிரும்புவது போன்ற உபத்திரவம் இல்லாத north 24 katham படத்தின்பகத்ஃபாசிலுக்கு இருக்கும் சிக்கல்போலத்தான் நினைத்திருந்தேன். ஆனால் அநீதியில் அர்ஜுன் தாஸின் கண் பாப்பாவெல்லாம் சுருங்கி விரிந்து கொலைவெறி எல்லாம் வருகிறதே! உண்மைதானா?