அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

Page 9 of 35

பாஷைப்பாம்பு

PC Tharun

இப்போது தேர்வு கால விடுமுறை எனவே வீட்டிலிருந்தேன் விஷ்ணுபுரம் விழாவில் இருந்து நேற்றுத்தான் திரும்பினேன்.  மதிய உணவுக்கு பின்னர் அலைபேசியில் விழா புகைப்படங்களை  பார்த்துக்கொண்டிருந்தேன்.

திடீரென பின் தெருவிலிருந்து தீதி, தீதி’’ என்று அழைக்கும் குரல் கேட்டது

அப்படி யாரும் என்னை இங்கு அழைத்தது இல்லை.

வேகமாக வீட்டை சுற்றிக் கொண்டு சென்று பார்த்தேன் பின் தெருவின்  பேக்கரி செல்வத்தின் வீட்டில்  சில பிஹாரி இளைஞர்கள் வசிக்கிறார்கள் தேர்ந்த சமையல் வல்லுநர்கள். சில நாட்களில் வீட்டு வாசலில் அவர்கள் சமைக்கும் வாசனை தாளமுடியாத பசியுணர்வு அளிக்கும்.சுத்தமாக தமிழ் தெரியாது அவர்களுக்கு.

அவர்களில் ஒருவன் அங்கே மதிலுக்கு பின்னர் எனக்கென  காத்திருந்தான். என்னவென்று விசாரிக்க ’க்யா’?  என்றேன் எனக்கு மிக கொஞ்சமாக சல்மான், அமீர் மற்றும் ஷாருக் கான்கள் கற்றுக்கொடுத்த இந்திதான் தெரியும்.

அவன் அடர்ந்து வளர்ந்து மதிலை தழுவிப் படர்ந்திருந்த அலமண்டா புதர்செடியை  காட்டிக்காட்டி பரபரப்பாக ஏதோ சொன்னான். 

அலமண்டாவும் ராமபாணமும்

நான் புரிந்துகொண்டேன் கொம்பேறி மீண்டும் தலையை காட்டி இருக்கிறது. இவர்கள் முதன்முறையாக பார்க்கிறார்கள், அதுதான் பயந்து அழைத்திருக்கிறார்கள்.

 அந்த புதர் செடியில்  அடிக்கடி ஒரு கொம்பேறி நாகன் வந்து ஓய்வெடுத்துவிட்டு அதுபாட்டுக்கு சென்றுவிடும். தருண் அதை பாஸ்கிங் -Baskingஎன்று விளக்கி இருக்கிறான். சற்று நேரம் கொடியில் உடலைச்சுற்றி  தலையை மட்டும்  வெயிலில் காட்டியபடி கம்பீரமாக வெயில் காய்ந்துவிட்டு பின்னர் சரசரவென்று  செடிகளுக்குள் கரைந்து காணாமல் போய்விடும்.

அலமண்டாவில் எப்போதும் இருக்கும் கொம்பேறி மூக்கன் :புகைப்படம் தருண்

 

முன்பெல்லாம் அச்சப்பட்டுக் கொண்டிருந்தேன் , பின்னர் அது விஷமும், ஆபத்துமற்றது என்று தருண்  கற்பித்த பின்னால் அதுபாட்டுக்கு அதுவும் நான் பாட்டுக்கு  நானும் சேர்ந்தே பின்வாசலில் இருப்போம். சில சமயம் முன்வாசல் மோட்டார் சுவிட்ச் பெட்டிக்குள்ளே வயர்களோடு வயராக சுருண்டு கிடக்கும் நான் சுவிட்ச் போட போனால் ஒரு சம்பிரதாயத்துக்கு பயந்ததுபோல் கொஞ்சமாக உள்ளே சுருண்டு கொள்ளும், அவ்வளவுக்கு மரியாதை இருந்தால் போதுமென்று நானும் கண்டுகொள்ளாமல் இருப்பேன்.

 அந்த பையன்களிடம் ‘’அது ஒன்றுமில்லை பயப்பட வேண்டாம்’’ என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்ல தெரியவில்லை, ‘’ஸ்நேக் நோ ப்ராப்ளம் வெரி ஸ்மால்’’ என்று கைவிரலை பென்சில் போல காட்டி  சிரித்தேன். அவன் பலமாக தலையாட்டி கைகளை படம் எடுப்பது போல் ஒன்றின்  மீது ஒன்று குவித்து வைத்து காட்டினான்

 பிக் ஒன் ? என்றேன் அதற்கும் அதே கை பொதியும் சைகை. இப்போது எனக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டிருந்தது. இவன் காட்டும் அளவில் பத்தி கொண்ட பாம்பென்றால் கொம்பேறி அல்லவே. மீண்டும் செடிக்குள் நுழைந்து தேடினேன் .  கொம்பேறியை காணவில்லை ஆனால் சர சரவென்று சத்தம்  மட்டும் கேட்டது. 

அலமண்டா  தண்டுகளின் அதே வண்ணத்தில் அதே அளவில் தான் அதுவும் இருக்கும், எனவே நன்றாக தேடினேன் காணவேயில்லை.

ஒருவேளை  அடுத்திருந்த  ராமபாணம்  மல்லிகை பந்தலில் இருக்குமோ என்று அங்கே சென்று தேடினேன்

அந்த  இளைஞன் பரபரப்பாக என்னிடம் வானத்தை காட்டி அதிலிருந்து அலமண்டாவிற்கு வந்தது போல சைகை செய்து காட்டினான்.

PC Tharun

இப்போது கொஞ்சம் கவலையாகியது.ஏதோ பறவை வானில் இருந்து கொண்டு வந்து பாம்பை போட்டிருக்கிறது போல, அப்படியானால் அது விஷப் பாம்பாகத்தான் இருக்கும்.

PC Tharun

அருகிலே சமையலறை ஜன்னல் வேறு திறந்திருந்தது.மதியம் உண்ட களைப்பில் கண்ணசந்திருந்த  சில பெண்மணிகள்  எழுந்து வந்து கூடி நிற்க துவங்கினர்

 சிலர் நான் எதிர்பார்த்தது போலவே’ இப்படி புதராட்டம் செடிக இருந்தா பாம்பு வராம ‘ என்று துவங்கினர்கள். அய்யோ தருண் இருந்தால் அனைவருக்கும் ஒரு வகுப்பெடுத்திருப்பானே, அவனும் இல்லையே என்று கவலைப்பட்டேன்.

அதுமட்டும் அகப்படவில்லை கண்ணுக்கும் தட்டுப்படவில்லை

நான் பாம்பு படமெடுக்கும்சைகை செய்து எத்தனை பெரிது என்று எப்படியோ அவனுக்கு புரிய வைக்க முயன்றேன். அவன் அதே கைகளை பொதிந்து காட்டும் சைகை செய்தான். தலை வலித்தது.

ஒருவேளை மோட்டார் ரூமில் இருக்குமோ என்று தேடினேன், அங்கும் இல்லை அலமண்டாவின் ஒவ்வொரு தண்டாக பிரித்துப்பிரித்து தேடினேன்’ ‘’மகனைப்போலவே அம்மாவும் பாரு  பயமில்லாம பாம்பை தேடுது’’என்று ஒரு விமர்சன குரல் வந்தது.ஏறக்குறைய ஒரு மணி நேரம் தேடல் தொடர்ந்தது. திடீரென அந்த இளைஞன் ’’சுண்டூ’’ என உற்சாகமாக கத்தியபடி ராமபாண  புதருக்குள் கைகளை விட்டு ஒரு சிறு பழுப்பு நிற புறாவை எடுத்தான்.

 சுண்டூ அவன் வளர்ப்பு பறவையாம்  தீபாவளிக்கு ஊருக்கு போய் திரும்பியவன் அதையும் கூட கொண்டு வந்திருக்கிறேன். இன்று சுண்டு அவனை ஏமாற்றிவிட்டு பறந்து இங்கு வந்து ஒளிந்து கொண்டிருந்திருக்கிறது

சுண்டூவை செல்லமாக அதட்டி கோதுமை மாவு மூட்டைகளுக்குள் இறக்கி விட்டுவிட்டு என்ன பார்த்து கைகளை  கூப்பி மொச்சைகொட்டை பற்களை காட்டி பெரிதாக சிரித்து’’ நமஸ்தே தீதி’’ என்றான்.

PC Tharun

அத்தனை நேரம் எங்களுக்கிடையில் ஒளிந்து விளையாடிய  பாஷைப்பாம்பு அப்போதுதான் காணாமல் போனது.

கிறுஸ்துமஸ் மரங்களின் கதை

பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், மரக்கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது.

மர வழிபாடு ஐரோப்பிய பாகன் பழங்குடிகளின் மரபாக இருந்தது. (pagan European). 723ல் ஜெர்மானிய இறையியலாளர் புனித போனிபேஸ் கிறிஸ்தவத்தை பரப்பும் இறைப்பணியில் இருந்தபோது  பாகன் பழங்குடியினர்  அவர்களின் கடவுளாக கருதப்பட்ட ஓக் மரமொன்றை வழிபடுவதை கண்டார். கிறுஸ்துவை அல்லாது மரத்தை வழிபடும் அவர்கள் மீது கோபம் கொண்ட அவர் அந்த ஓக் மரத்தை கோடாலியால் வெட்டி வீழ்த்தினார். வீழ்ந்த ஓக் மரத்தின் அடியில் இருந்து ஒரு பசுமை மாறா மரம் அப்போதே முளைத்து எழுந்ததை கண்ட துறவி அம்மரத்தை உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அடையாளமாக கொண்டு வழிபட துவங்கினார்.  பகன் பழங்குடியினரும் கிறுஸ்துவத்தை தழுவினர்.

அதன் பிறகே கிறுஸ்துவ வழிபாடுகளில் பசுமை மாறா மரங்கள் பங்குபெற்று படிப்படியாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலும் அவை இடம்பெற்றன என நம்பப்படுகிறது.   கிறிஸ்துமஸ் மரத்தை குறித்து பெரும்பாலான ஜெர்மானிய மக்களால் சொல்லப்படும் இக்கதையின் நம்பகத்தன்மை ஆராய்ச்சிக்குரியது என்றாலும் இன்று வரை பசுமை மாறா மரங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் முக்கிய அங்கமாக இருக்கின்றன.

இவ்வாறு பசுமை மாறா மரக்கிளைகளை, இலை மற்றும் மலர்களால் ஆன வளையங்களை, மாலைகளை,அழியா வாழ்வின் குறியீடாக பயன்படுத்துவது பண்டைய எகிப்தியர்கள் மற்றும், சீனர்களின் வழக்கமாக இருந்தது.

ஸ்கேண்டினேவியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வீட்டை பசுமைமாறா புதிய மரக்கிளைகளால் அலங்கரிப்பதும் மரம் போன்ற அமைப்பை வீட்டு முன்பு அமைத்து அதில் பறவைகள் தங்க கூடுகளைஅமைப்பதும் தீய சக்திகளை விரட்டி, நீளாயுள் தரும் எனும் நம்பிக்கை இருந்தது, 

ஜெர்மனியில் வீட்டு முன்பாகவும் வீட்டினுள்ளும் யூல் மரக்கிளைகளை குளிர்கால விடுமுறையில்  நட்டு வைப்பது வழக்கம். நூற்றாண்டுகளாக கிருஸ்துமஸ் காலங்களில் வீட்டு முகப்பில் மிஸ்ஸெல்டோ-Mistletoe என்னும் ஒரு வகை மர ஒட்டுண்ணி செடியை வைப்பதும் அங்கு வழக்கமாக இருக்கிறது.   காலம் காலமாக காதலுணர்வின் அடையாளமாக இச்செடி கருதப்படுவதால் அச்செடியை கடந்து வீட்டினுள் நுழையும் யாராக இருந்தாலும் உடனே முத்தமிடப்படவேண்டும் என்பது ஒரு  மரபாக இருக்கிறது

பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் பசு மரக்கிளைகள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 

1500 களில் கிறித்துவத்தின் முதலாவது சமயச் சீர்திருத்தச் சிந்தனையாளர் மார்ட்டின் லூதர், ஒரு கிறிஸ்மஸ் கால பனி நாளில்  ஊசி இலைக்காடுகளின் வழியே காலைநடையில் ஈடுபட்டிருக்கையில், அப்பசுமை மாறா கூம்பு வடிவ மரங்களில் சூரிய ஒளி பட்டு அவை பொன்மஞ்சளில் ஒளிர்வதை கண்டார்.

அவ்வழகில் மனம் மயங்கிய அவர் ஒரு ஃபிர் மரத்தை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதை கிறிஸ்துமஸ் விழாவில் பயன்படுத்தினார். இதுவே அதிகார பூர்வமாக  கிறிஸ்மஸ் மரம் கிறிஸ்மஸ் விழாக்களில் இடம்பெற்ற தருணம்  என வரலாய்வாளர்கள் கருதுகிறார்கள்

நவீன கிறிஸ்துமஸ் மரம் மேற்கு ஜெர்மனியில் உருவானது. இதன் துவக்க கால நோக்கம்  ஆதாமுக்கும் ஏவாளுக்கும்  விலக்கப்பட்ட கனியை அளித்த  சொர்க்க மரம் போன்ற ஒன்றை கிறிஸ்துமஸ் சமயங்களில் அமைப்பதுதான். பதினைந்தாம் நூற்றாண்டுகளில் டிசம்பர் 24 நாளை ஆதாம், ஏவாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது அக்காலங்களில் அத்தி மரக்கிளைகளில் ஆப்பிள்களை கட்டி தொங்கவிட்டு ஏதென் தோட்டம் போல வீட்டை அலங்கரிப்பது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் முக்கிய அங்கமாக இருந்தது

அம்மரத்தில் கிறிஸ்துவின் கடைசி  இரவு உணவை குறிக்க வேஃபர் பிஸ்கட்டுகள் கட்டி தொங்கவிடப்பட்டன. தொடர்ந்த காலங்களில் வேஃபர்களுக்கு பதிலாக பல வடிவ பிஸ்கட்டுக்கள் இடம்பெற்றன. அத்துடன் மரக்கட்டைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிறிய பிரமிடும்  பிறகு இணைந்துகொண்டது அதில் தேவனின் புகைப்படங்களும், நட்சத்திர வடிவமும், உலகின் ஒளியான கிறிஸ்துவின் அடையாளமாக கருதப்பட்ட மெழுகுவர்த்திகளும்  வைக்கப்பட்டன 

16.’ம் நூற்றாண்டில் கிருஸ்துமஸ் மரங்களும் பிரமிடும் இணைந்து அலங்கரிக்கப்பட்ட கிருஸ்துமஸ் மரங்களாகின. 1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்கு பிறகு ஒரு கிறிஸ்மஸ் மரத்தை பாரிஸ் நகருக்கு கொண்டுவந்து விழா கொண்டாடியது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் நுழைந்ததன் முக்கிய நிகழ்வாக வரலாறு குறித்து வைத்திருக்கிறது. 

1790களில் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் மனைவியும் ஜெர்மானிய பெண்ணுமான சார்லட் விடுமுறை காலங்களில் தோட்டத்து மரங்களை  அலங்கரிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.  

இங்கிலாந்து அரசி விக்டோரியாவின் ஜெர்மனி பயணங்கள் அவருக்கு ஜெர்மன் நாட்டு இளவரசர் ஆல்பர்ட்டுடன் காதலை வளர்த்தது. இவர்களின் திருமணத்துக்க் பிறகு,  1841ல் அரசர் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்மஸ் மரத்தின்அதிகாரபூர்வமான இங்கிலாந்து பிரவேசம்.

அதன் பின்னர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் டிசம்பர் 24 அன்று  விக்டோரியன் கிறிஸ்துமஸ் மரம் என்றழைக்கப்பட்ட அவற்றில் கேக்குகளும், பல வண்ண ரிப்பன்களும், வண்னக்காகிதங்களும் வழக்கமான சிறு பரிசுகளுடன் இணைத்து தொங்கவிடப்பட்டன. பரிசுப்பொருட்கள் கிருஸ்துமஸ் தினத்தன்று திறந்து பார்க்கப்பட்டன.  

கிறிஸ்மஸ் மரத்தின் கிளைகள் இயற்கையாகவே சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பதும், தந்தை, மகன், தூய ஆவியை குறிக்கும்  முக்கோண வடிவம் அதில் காணப்படுவதும் மிக அதிர்ஷ்டமென்று கருதப்படுகிறது.

இங்கிலாந்தில் சுமார் நான்கடி உயரத்திலும், அமெரிக்காவில் 10 அடிக்கும் மதிகமாக வீட்டுக் கூரை வரை உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரங்களும் பயன்பாட்டில் உள்ளன.

17ம் நூற்றாண்டில் வடக்கு அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த ஜெர்மானியர்கள்  அங்கும் இவ்வழக்கத்தை அறிமுகம் செய்தார்கள்.  எனினும் துவக்கத்தில் இம்மரம் அமெரிக்கர்களால் அவ்வளவாக விரும்பப்படவில்லை

இவ்வழக்கம் 18  நூற்றாண்டு வரை  லூதரன் கிருஸ்துவர்களால் உலகெங்கும் பரவலாக்கப்பட்டது. 1820க்கு பிறகுதான் கிருஸ்மஸ் கொண்டாடங்கள்  அமெரிக்காவில் புத்துயிர் பெற்று, கிறுஸ்துமஸ் மரங்களும்புழக்கத்துக்கு வந்தன.

1830ல்தான் முதன்முறையாக நாட்டின் கிறிஸ்துமஸ் மரமொன்று  காட்சிக்கு வைக்கப்பட்டது. அதன்பிறகு கிறிஸ்துமஸ் மரங்களின் பிரபலத்துக்கு அப்போது செல்வாக்குடன் இருந்த  சஞ்சிகையான  Godey’s Lady’s Book,  ஒரு முக்கிய காரணமாயிருந்தது. 

 19ம் நூற்றாண்டில் ஜெர்மானிய கலாச்சாரத்தில் கிறிஸ்துமஸ் மரம் ஆழ வேரூன்றியது பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் வெகுவாகப் பரவிவிட்டது.

முதல் கிருஸ்துமஸ் மர விற்பனை அங்காடி அமெரிக்காவில் 1851ல் மார்க் சார் (Mark Carr ) என்பவரால் நியூ யார்க்கில் துவக்கப்பட்டது. 1887-1933 களில் அமெரிக்க துறைமுகங்களில் நங்கூரம் இடப்பட்ட கப்பல்களிலும் கிருஸ்துமஸ் மரங்கள் விற்பனையாகின.

1870களில் ஊது கண்ணாடி அலங்கார பொருட்கள் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் அறிமுகமாயின.  அப்போது  பல வண்ணங்களில் சிறு  மின்விளக்குகளும் கிருஸ்துமஸ் மரங்களில் கட்டி தொங்கவிடப்பட்டன.

கிருஸ்துமஸ் மரங்களில் கட்டி தொங்கவிடுவதெற்கென்றே பலவகையான உலோகங்கள்,  பருத்தி, காகிதங்கள் மற்றும் கண்ணாடிகளால்  அலங்காரப் பொருட்கள் செய்யும் பணிமனைகள்  ஜெர்மனியிலும் பொஹிமியாவிலும் ஏராளமாக நடத்தப்பட்டன அமெரிக்காவின் பிரபல பொதுவணிக நிறுவனமான F.W. Woolworth 1890களில் மட்டுமே 25 மில்லியன்  மதிப்பிலான அலங்கார பொருட்களை சந்தைப்படுத்தின.

19 மற்றும் 20 ம் நூற்றாண்டுகளில்  சீனாவிலும் ஜப்பானிலும் மேற்கத்திய மிஷனரிகளால் அறிமுகமான கிருஸ்துமஸ் மரங்களில் சிக்கலான  காகித  வடிவங்கள் தொங்கவிடப்பட்டன

கிறிஸ்துமஸ் மரம் எனப்படும் பசுமை மாறா மரம் பொதுவாக பைன் ஸ்ப்ரூஸ் அல்லது ஃபிர் மரங்களாக இருக்கும்.  இம்மரங்கள் புதிதாக கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு வெட்டபடும் அல்லது  வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும். பலர் செயற்கை மரங்களையும் பயன்படுத்துகின்றனர். பலவிதமான பொருட்களை மறு சுழற்சி செய்தும் இம்மரங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன

இந்த வாரம் 2022 கிறுஸ்துமஸ் கொண்டாட்டத்தை சரண் ஆஃபன்பெர்கின் முதியவர்களுடன் கொண்டாடினான். அந்நகரில் வீழ்ந்த மரங்களின் பட்டைகளிலிருந்து கிறுஸ்துமஸ் மரங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

சுமார் மூன்று கோடியே முப்பது லட்சம் கிறிஸ்மஸ் மரங்கள் வட அமெரிக்காவில் வருடந்தோறும் விற்கப்படுகின்றன. மூன்று லட்சத்து முப்பதாயிரம் மரங்கள் இணையம் வழி விற்கப்படுகின்றன. கிறிஸ்மஸ் மர வளர்ப்பில் ஓரகன், வட கரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன், வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் போன்ற மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக உள்ளன.

அமெரிக்காவில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் கிறிஸ்மஸ் மர வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர். சுமார் பன்னிரண்டாயிரம் இடங்களில் நமக்குத் தேவையான மரத்தைத் தேர்வு செய்து வெட்டிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது

செயற்கை நாரிழைகளை கொண்டு உருவாக்கப்படும் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்களின் பயன்பாடு 1930களில் துவங்கியது 1950 மற்றும் 60களில் ஏராளமான செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக பச்சை மரங்கள் கிடைக்காத நாடுகளில்,இவை வேகமாக புகழ்பெற்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பைன்களின் பல வகைகளான வெள்ளை பைன்  (Pinus strobus),  ஸ்காட்ச் பைன்  (P. sylvestris), மற்றும் விர்ஜினியா பைன் (P. virginiana) ஆகியவைகளும், பால்சம் ஃபிர்  (Abies balsamea), ஃப்ரேசர் ஃபிர்  (A. fraseri), பெரும் ஃபிர்  (A. grandis),வெள்ளி ஃபிர்(A. alba) மற்றும் வெள்ளை ஃபிர் (A. concolor);மரங்களும் பல ஸ்ப்ரூஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் மரங்களாக பயன்படுகின்றன

சைப்ரஸ், செடார் மரங்கள் கிருஸ்துமஸ்  வளையங்கள்  செய்ய அதிகம் பயன்படுகின்றன.

அமெரிக்காவில் அம்ட்டும் 1500க்கும் அதிகமான கிருஸ்துமஸ் மரப்பண்னைகள்3லட்சத்து 5 ஆயிரம் எகர் நிலபப்ரப்பில் உள்ளன அங்கு ஏறக்குறிஅய 350க்மில்லியன் மர்னக்கள் வளர்ககப்டுகின்றன 

செயற்கை மரங்களுக்கான தயாரிப்பில் கொரியா, தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. கிறிஸ்மஸ் மரங்கள்,அவற்றை அலங்கரிப்பதற்காக தயாரிக்கப்படும்  பொருட்களுக்கான வணிகம் உலகின் மிகப்பெரிய வியாபாரத் தளமாகிவிட்டிருக்கிறது

அந்தரத்தாமரை, Pistia stratiotes

 நீர்வாழ்தாவரங்களில், மிதப்பவை,  முற்றிலுமாக நீரில் மூழ்கியிருப்பவை, நீரினாழத்தில் மண்ணில்  வேரூன்றிய, ஆனால் இலைகளும் மலர்களும் நீரின் மேல்மட்டத்தில் இருப்பவை, பாசிகள், என பலவகையான தாவரங்கள் உள்ளன. அவற்றில் நாம் அதிகம் காண்பது ஆகாயத்தாமரை அல்லது வெங்காயத்தாமரை என்னும் water hyacinth (Pontederia crassipes). அதைக்காட்டிலும் இன்னும் சற்று சிறிய அளவில் பச்சைரோஜா மலர்களைப்போல மிதந்தபடி இருக்கும், அந்தரத்தாமரையை அதிகம் யாரும் கவனிப்பதில்லை.. இதுவும் ஆகாயத்தாமரையைபோலவே ஒரு ஆக்ரமிப்பு நீர்க்களைத் தாவரம்தான்

 நீர் முட்டைகோஸென்றும் அழைக்கப்படும் இவை உண்ணத்தக்கவையல்ல. சிறிய மிதக்கும் வேர்கள் கன்ணுக்குப்புலப்படாமல் நீரில் மூழ்கி இருப்பதால் இவற்றை அந்தரத்தில் மிதக்கும் தாமரையென அழைப்பதுண்டு. இவை முதன்முதலில்  ஃப்ளோரிடாவில் ஜான் மற்றும் வில்லியம் ஆகியோரால் 1765-1774 ல்  அடையாளம் காணப்பட்டது. பிரேசிலை தாயகமாகக்கொண்ட ஒருவித்திலை தாவர வகையை சேர்ந்தவையான இவை (Monocot) அண்டார்டிகாவைத் தவிர பிற அனைத்து கண்டங்களிலும்  பரவியுள்ளன.   நைல் நதியிலும் இவை அடர்ந்து காணப்படுகின்றன

ஆங்கிலப்பொதுப்பெயர்கள்; Water Cabbage, Water Lettuce, Nile Cabbage,  Shellflower,  floating Aroid.

 Lettuce  (Lactuca sativa)  எனப்படும் சூரியகாந்தி குடும்பத்தைச்சேர்ந்த கீரைவகைச்செடியின் இலைகளைப்போல  இவற்றின் தோற்றமிருப்பதால் இவற்றின்  Water lettuce என்னும் பொதுப்பெயர் உலகெங்கிலும் பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. இவற்றில் மிகச்சிறிய (Dwarf water lettuce) வகையும் இருக்கின்றன. இவையே அலங்காரச்செடிகளாக  தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. குழித்தாமரை என்றும் இவை அழைக்கப்படுகின்றன.

ஒன்றிலிருந்து பலவாக அந்தரத்தாமரைகள்  மிக விரைவாக பெருகும் இயல்புடையது. இவை தனித்தும், பல தாவரங்கள் இணந்த கூட்டமாகவும் நீரில் மிதந்தபடி இருக்கும், சிறிய நீர்நிலைகளை முழுவதையும் ஆக்ரமிப்பதும் உண்டு

இணையறிவியல் பெயர்கள்; (Synonyms)

  • Pistia stratiotes var. cuneata 
  • Pistia stratiotes var. linguiformis 
  • Pistia stratiotes var. obcordata (Schleid.)
  • Pistia stratiotes var. spathulata (Michx.)

 இதன் Pistia stratiotes, என்னும் அறிவியல் பெயரில் Pistia  என்பது நீர் அல்லது திரவம் எனவும் stratiotes என்பது நீர்வீரன் எனவும் கிரேக்க மொழியில் பொருள்படும். ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீரில் மிதக்கும்  வகையான தாவரமான, இளம் பச்சை ரோஜா மலரைப்போல சற்றேறக்குறைய ரோஜா மலரின் அளவில் அல்லது அதைக்காட்டிலும் சிறிது பெரியதாக, பட்டுப்போன்ற மிருதுவான இதழமைப்பில் இருக்கும் காம்புகளற்ற இலைகளால் ஆன இவை ஏரேசியே (Araceae) குடும்பத்தை சேர்ந்தவை.

 பொதுவாக 3-25 செமீ உயரம் வரை வளரும் ஒற்றைத்தாவரம், 5 லிருந்து 25 செமீ விட்டம் கொண்டிருக்கும். காம்புகளற்ற, அடிகுறுகி நுனி அகன்று விரிந்து, சதைப்பற்றுடனுமிருக்கும். இலைகள் சாம்பல்பச்சை நிறத்தில், தெளிவான இணைக்கோடுகளும் மென்ரோமங்களும் கொண்டிருக்கும் இந்த மென்ரோமங்களுக்கிடையில் சிக்கிக்கொள்ளும் நீர்க்குமிழிகள் இவற்றின் மிதவைத்தன்மையை (Buoyancy) அதிகரிக்கும்.

 Offshoot/stolons எனப்படும் நீரின் மேற்பரப்பில் மிதக்கும் இலைகளை இணைந்திருக்கும் அடித் தண்டுகளிலிருந்து புதிய தாவரங்கள் முளைத்து வளரும். இந்த அடித்தண்டுகள் மிக மெலியதாக உடையும் இயல்புடன் இருக்கும். இறகு போன்ற,  மென்மையான, 50 செமீ நீளமுள்ள கிளைத்த,  நீரில் அசைந்துகொண்டு மிதந்தபடி இருக்கும் வேர்த்தொகுப்பைக் கொண்டிருக்கும்.

இலைகளின் அடியிலிருந்து உண்டாகும், சிறிய சதைப்பற்றான காம்புகளிலிருந்து  ஏராளமான நுண்ணிய மலர்கள் இலையிதழ்களுக்குள், மெல்லிய மங்கலான இளம்பச்சை நிறத்திலிருக்கும் செதில்போன்ற உறையினால் சூழப்பட்டு  மறைந்திருக்கும். ஒற்றைப்பெண்மலர் அடியிலும் அதன்மேலே  வட்டஅடுக்கில் நிறைய ஆண்மலர்களும் காணப்படும். மிகச்சிறிய 6-10 மிமி அளவுள்ள விதைகள் அடர்நிற நுண்விதைகளுடன் உருவாகும்

மிதக்கும் நீர்வாழ் தாவரங்களில் மிக முக்கியமான ஆக்ரமிப்புக்களையாக கருதப்படும் இவை (Invasive aquatic weed) இயற்கையான வாழ்விடங்களில் பல்கிப்பெருகி நீர்மாசை உண்டு பண்ணுகின்றது.  கால்வாய்களை அடைத்து நீரோட்டத்தை துண்டிக்கவும் செய்கின்றன.


உலகளாவிய ஆக்கிரமிப்பு இனங்களின் தரவுத்தளம் (Global Invasive Species Database GISD) இவற்றையும் உலகின் தொல்லைதரும் ஆக்ரமிப்பு களைகளின் பட்டியலில் இணைத்திருக்கின்றது. அமெரிக்காவிலும் இவை பரவுதலை கட்டுப்படுத்த வேண்டிய தாவரங்களின் பட்டியலில்தான் இருக்கிறன.

உயிரிக்கட்டுப்பாட்டு முறையில் சிலநாடுகள் இவற்றின் பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து கொண்டுமிருக்கின்றன. தாய்லாந்தில் அந்தரத்தாமரைகளின் இலையை உண்ணும். Neohydronomous affinis, பூச்சிகளை தென்னமரிக்காவிலிருந்து தருவித்து, இவற்றை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிலும் ஃபிஜி தீவுகளிலும் பரிந்துரைககப்பட்ட ரசாயனக் களைக்கொல்லிகளை உபயோக்கிறார்கள்.

அழுகிரந்தி குஷ்ட மடர்ந்த கரப்பான்

புழுவுறு மக்கூடு முதற்போகும் – அழகாகும்

மிந்திர நீலக்கருங்க ணேந்திழையே யெப்போழ்து

மத்திரத் தாமரையா லாய்.

என்னும் சித்த வைத்திய பதாற்தகுண விளக்கப்பாடலொன்று  இந்த  அந்தரத் தாமரை அழுகின ரணம், குஷ்டம், கரப்பான், மார்புக்குள் கூடு கட்டுகின்ற நுண் கிருமிகள் ஆகிவற்றை அழிக்கும் என்கின்றது. எனவே  இவற்றைக்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் ஆய்வுகளை செய்யலாமென்கிறன சித்தவைத்திய அமைப்புக்கள். இவற்றை உலர்த்தி சுட்ட சாம்பலை தொழுநோய்ப் புண்களுக்கும் மருந்தாக பயன்படுத்துகின்றனர்

இவை சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டிருப்பதால்  இவற்றை அதிகம் உண்ணும் கால்நடைகளுக்கு உடலுபாதைகள் உண்டாகும். சீனாவில் உலர்த்திய அந்தரத்தாமரைகளை கால்நடைத்தீவனங்களில் கலந்து (குறிப்பாக பன்றிகளுக்கு,) கொடுக்கப்படுகின்றது. சீன பாரம்பரிய மருத்துவத்தில் சில குறிப்பிட்ட நோய்களுக்கு இவை மருந்தாகவும் பயன்படுகின்றது. மீன் தொட்டிகளிலும் அலங்காரத்தொட்டிகளிலும் இவை அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.   அந்தரத்தாமரையின் சாற்றை துணிகளில் படிந்திருக்கும் கறைகளைப் போக்கவும் பயன்படுத்தலாம். உலர்ந்த இலைகளை பூச்சிகள் வராமலிருக்க அலமாரிகளில் போட்டுவைக்கலாம்.

.

செளசெள!

Image result for chayote

மனிதகுலம்  ஏறத்தாழ 6000 வகையான பயிரிடப்பட்ட தாவர இனங்களை உணவுத்தேவைக்காக நம்பியுள்ளது, இவற்றில் வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுபவை 170 பயிர்கள் மட்டுமே. இவற்றிலும் 30  பயிர்கள் மட்டுமே அதிக அளவில் மீண்டும் மீண்டும் சாகுபடி செய்யப்பட்டு  பயன்படுத்தப்படுகின்றன   ஒப்பீட்டளவில் சிறிய கவனம் கூட அளிக்கப்படாத பல முக்கிய காய் கனி வகைகளை அளிக்கும்  ஏராளமான பயிர்கள் உலகின் கவனத்துக்கே வராமல் இருக்கின்றன..  

சத்துக்கள் நிறைந்த  இத்தகைய உலகளாவிய அளவில் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதப்படும் பயிர்கள் தேசிய அல்லது பிராந்திய அளவில் பிரதானமானவை. அவற்றில் ஒன்றுதான் செள செள காய்.

Image result for chayote

 பூசணிக்காய் குடும்பமான குக்கர்பிட்டேசியின் சுரைக்காய், புடலை, பீர்க்கன், தர்பூசணி, பாகல் போன்றவை அதிகம் புழக்கத்தில் இருப்பவை. அதே குடும்பத்தில் இருக்கும் செள செள எனப்படும் காய் தென் தமிழகத்தில் அரிதாகவே  உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. 

 ஆங்கிலத்தில் cho cho , choko, mirliton, chayote  என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் Sechium edule.

இதய வடிவ இலைகளும், பற்றுக்கம்பிச்சுருள்களும், வேர்க்கிழங்குகளும் கொண்ட  செள செள  ஒரு ஏறுகொடித்தாவரம். ஆண் மலர்கள் கொத்தாகவும் பெண் மலர் ஒற்றையாகவும் தனித்தனியே ஒரே கொடியில் அமைந்திருக்கும். தண்டுகளில் நார் நிரம்பியிருக்கும்.

See the source image

உணவுக்காக சந்தைப்படுத்தப்படும் செள செள காய்கள் எனப்படுவது இதன் கனிகளே. இவை ஒழுங்கற்ற பேரிக்காய் வடிவில் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். பொதுவாக கனிகளில் முட்கள் காணப்படும். முட்களின்றியும், அடர்பச்சையிலும், வெளுத்த மஞ்சள் நிறத்திலும், அளவில் சிறிதாகவும் கூட காய்கள் இருக்கும்.  நீர் நிரம்பிய, சதைப்பற்றான காய்கள் இனிப்புச்சுவையுடைய பெரிய ஒற்றை விதை கொண்டிருக்கும்.

மெக்ஸிகோவை சேர்ந்த பல்லாண்டுத்தாவரமான இதன் ஒரு கொடி வருடத்திற்கு 80லிருந்து 100 காய்களையும் 25 கிலோ வேர்க்கிழங்குகளையும்  கொடுக்கும். 

 உலகெங்கும் இதன் பல வழங்கு பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. chayote, christophene, vegetable pear, mirliton, merleton choko ( ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில்), starprecianté, citrayota, citrayote (எக்குவடோர்  மற்றும் கொலம்பியா), chuchu (பிரேசில்), machucha, caiota, pipinela (போர்ச்சுக்கல்), chow chow (இந்தியா), cho cho (ஜமைக்கா), Sayote (பிலிப்பைன்ஸ்), güisquil (குவாத்தமாலா), pear squash / iskus(நேபாள்). 

இவை சௌசௌ / பெங்களூர் கத்தரிக்காய் / மேராக்காய் / சீமை கத்தரிக்காய்/சொச்சக்காய்  என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன. Custard marrow என்னும் இதன் ஆங்கிலப்பெயர்களில் ஒன்றுதான் தமிழில் மேராக்காய் ஆகி இருக்கிறது 

Image result for chayote foods

இதன் அறிவியல் பெயரின் பேரினப்பெயரான  ’Sechium’ என்பது  வெள்ளரிக்காயை குறிக்கும் பண்டைய கிரேக்கச் சொல்லான ’síkyos’  என்பதிலிருந்து பெறப்பட்டது. சிற்றினப்பெயரான  ’edule’’  என்பது உண்ணத்தகுந்த என்று பொருள்படும்.

செள செள உற்பத்தியில் மெக்ஸிகோவும் பிரேசிலும் முதலிடத்தில் இருக்கின்றன. இந்த நாடுகளில்  அவகேடோ, தக்காளி மற்றும் காபிக்கொட்டைகளுக்கு அடுத்த படியாக செளசெள அதிகம் விரும்பப்படும் நான்காவது உணவுப்பொருளாக இருக்கிறது.

இது அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும்கொண்ட சுவையான காய்களும்,“Quelites” எனப்படும் இதன் தளிரிலைகளும் “chayotextle” எனப்படும் வேர்க்கிழங்குகளும்  இங்கு விரும்பி உண்ணப்படுகிறது

இதன் இலைகளிலும், வேர்க்கிழங்குகளிலும், காயிலும் ஏராளமான கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்களும் பல வைட்டமின்களும் உள்ளன.

Image result for Chayote Squash Mirlitons

இவை வேகவைத்தும், ஊறுகாய்களாகவும், அவித்தும், எண்ணையில் பொரித்தும் உண்ணப்படுகின்றன. காயின் அனைத்துப்பகுதிகளுமே உண்ணத்தகுந்தவை என்பதால் இதன் மெல்லிய தோலையும் விதையையும் நீக்க வேண்டியதில்லை. செள செளெவின் தோல் மற்றும் விதையையும்  சேர்த்து சமைத்தும், சமைக்காமல் பச்சையாகவும் உண்ணலாம்

இக்கொடியின்  காய் உள்ளிட்ட அனைத்துபாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை

Image result for Chayote Squash white

இவை சிறுநீர் பெருக்கும், சிறுநீரக கற்களுக்கும் வீக்கங்களுக்கும் எதிராக செயல்புரியும், இருதயத்தை பாதுகாக்கும், குருதிக்கொதிப்பை கட்டுப்படுத்தும் மற்றும் உடலை வலுப்படுத்தும்.

செளசெள முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. காய்கள் கொடியில் இருக்கும் பொழுதே அதனுள் இருக்கும் விதை முளைத்துவிடுகிறது. தண்டின் வெட்டுத் துண்டுகளையும் சாகுபடிக்கு பயன்படுத்தலாம்

See the source image

 பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருங்காலத்திற்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் உணவு அடிப்படையிலான அணுகுமுறைகளில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத இனங்களின் (Neglected and underutilized species-NUS)   பரவலான மீள் உபயோகங்கள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன.

See the source image

செள செள்  போன்ற ஊட்டச்சத்து நிறைந்த, அனைத்துக் காலநிலைகளிலும் வளரும் இயல்பு கொண்ட, நோய் எதிர்ப்புதிறன் மிக்க, லாபம்அளிக்கும், உள்நாட்டில் கிடைக்கக்கூடிய  எளிதில் வளர்க்க முடியும் பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதும், அவற்றின் நுண்சத்துக்கள் நிறைந்த காய்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதும் வருங்காலத்துக்கான உணவுசார்ந்த அணுகுமுறைகளில்  மிக முக்கியமானவை. 

Image result for Chayote Fruit

ரிஸ்ட்ரா!

ரிஸ்ட்ரா- Ristra

 மிளகாய்களை  உலகெங்கும் அறிமுகம் செய்த பெருமை கிரிஸ்டோஃபர் கொலம்பஸைத்தான் சேரும். அவரே மெக்ஸிகோவிலிருந்து அவற்றை பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார் என்கிறது வரலாறு.

மிளகாய்களின் பிறப்பிடம் மெக்ஸிகோ என்று சொல்லப்பட்டாலும்.  தாவரவியல் ஆய்வாளர்கள்  மிளகாய்கள் மெக்ஸிகோவிலிருந்து அல்ல பொலிவியாவிலிருந்தே தோன்றின என்றும் அங்கிருந்து அவை  பறவைகளின் மூலம் மெக்சிகோவிற்கு அறிமுகமாகியிருக்கும் என்றும் கருதுகிறார்கள். மிளகாயின் காரம் மனிதர்களைப் போல் பறவைகளுக்கு உரைப்பதில்லை என்பதும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று.

தக்காளி உருளைக்கிழங்கின் குடும்பமான சொலனேசியை சேர்ந்த மிளகாய் ஆங்கிலத்தில் chillies, chiles அல்லது peppers என அழைக்கப்படுகின்றன

 கிரிஸ்டோஃபர்  வருமுன்னரே  பழங்குடிகளான அஸ்டெக்குகள் மற்றும் மாயன்களின்  கலாச்சாரத்துடன் பிரிக்கமுடியாதபடி ஒன்றி இருந்தது மிளகாயும் அதன் காரமும்.

 மிளகாய்கள்  உணவுக்கான உபயோகங்களுக்கு மட்டுமல்லாது அவற்றின் மருத்துவ குணங்களுக்காகவும்,  பூச்சிகள் அண்டாமல் இருக்க வீடுகளுக்கு புகை போடவும்  மெக்ஸிகோவில் பெரிதும் உபயோகத்திலிருந்தன. மெக்ஸிகோவின் டெவாகனா பள்ளத்தாக்கில் (Tehuacán Valley)  மிளகாய்கள் கிமு  50000 வருடங்களுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்தற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

 மெக்ஸிகோவின் உணவுகளில் மிளகாய் பிராதான இடம்பெற்றிருக்கிறது உலர்ந்தவைகளும்  புத்தம் புதியவைகளுமாக பலநூறு மிளகாய் வகைகள் மெக்ஸிகோவில்  விளைந்து,பயன்பாட்டிலும் உள்ளன.  மெக்ஸிகோவின் வறண்ட, வெப்பம் மிகுந்த காலநிலை மிளகாய்களின் வளர்ச்சிக்கு ஏதுவாகவும் அவற்றின் பூச்சித்தாக்குதலுக்கு எதிராகவும் இருப்பதால் அங்கே மிளகாய்கள் அதிகம் விளைகின்றன

மெக்ஸிகோவில் மிளகாய்கள் அனைத்துவிதமான   உணவுகளிலும் சேர்க்கப்படும் சாக்கலேட்டுகளிலும், பானங்களிலும், இனிப்புகளிலும் மட்டுமல்லாது ஊறுகாய்களாகவும், பசையாகவும் பொடிகளாகவும் இவை கிடைக்கின்றன

 மெக்ஸிகொ பழங்குடிகள் மிளகாய்கள் உலர்ந்திருக்கையில் அவற்றை  சேமித்து வைக்கவும்  தொலைதூரங்ககளுக்கு எடுத்துச் செல்லவும் வசதியாக இருப்பதை கண்டறிந்திருந்தார்கள் அவ்வாறு உலர்ந்த மிளகாய்களை கட்டு கட்டாக சேமித்து வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அவ்வழக்கம் அவர்களின்  வளமையின் குறியீடாகவே காலப்போக்கில் மாறிப்போனது. 

இன்றளவிலும் மெக்ஸிகோ நகரின் பொது இடங்களில். அலங்கார வளைவுகளில்,  வணிக வளாகங்களில், வீடுகளின் முகப்புகளில் என்று பார்வையில் படும்படி உலர்மிளகாய்களின்  நீண்ட கொத்துக்களை கயிற்றில் அல்லது நாரில்  கட்டி அலங்காரமாக தொங்கவிடும் பழக்கம் தொடர்கிறது.

   

இதுபோன்று அலங்காரமாக தொங்கவிடப்பட்டிருக்கும் மிளகாய் கொத்துக்கள் ஆங்கிலத்தில் Ristras எனப்படுகின்றன. இவை வரவேற்புக்காகவும், வளமை மற்றும் செல்வத்தின் அறிகுறியாகவும் அதிர்ஷ்டம் தரும் என்னும் நம்பிக்கையின் பேரிலும் இப்படி பார்வைக்கு வைக்கப்படுகிறது. இவ்வாறு ரிஸ்ட்ராக்களாக்கப்பட்ட மிளகாய்கள் தீய  சக்திகளை விரட்டும் என்றும் அடுத்த வருட  விளைச்சலை பெருக்கும் எனவும் மெக்சிகோ மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது

 ரிஸ்ட்ரா என்றால் ஸ்பானிய மொழியில் ’ கோர்த்த மணி’ என்று பொருள்   தென்மேற்கு அமெரிக்காவின் அடையாளங்களாக  கருதப்படும்’ சகுரா கள்ளி, கெளபாய்  பூட்ஸ்’ இவற்றுடன் மிளகாய் ரிஸ்ட்ராக்களும் இருக்கின்றன.

 தரமான தேர்ந்தெடுத்த  மிளகாய்களை நன்கு வெயிலில் உலர வைத்து கயிறுகளில் இறுக்கமாக மாலை தொடுப்பதுபோல் கட்டி பல வடிவங்களில் வட்டமாகவும், நீளமாகவும், தனித்தனி கொத்துக்களாகவும்,  பலகொத்துக்களை ஒன்றிணைத்தும் ரிஸ்ட்ராக்கள் உருவாக்கப்படும். இவற்றை பல வருடங்களுக்கு  சேமித்து வைக்க முடியும்.

பல வீடுகளில் இவ்வாறு உலர செய்து ரிஸ்ட்ராக்களாக இருக்கும் மிளகாய்களை தேவைப்படும்போது  சமையலுக்கும் பயன்படுத்துவதுண்டு.

  உலகின் பல பகுதிகளிலும் இப்படி ரிஸ்ட்ராக்கள்  காய்,கனிகளை கொண்டு  உருவாக்கப்படுகின்றன. பூண்டு ரிஷ்ட்ராக்கள் தென்னிந்தியா உள்ளிட்ட  பல நாடுகளிலும் உள்ளன.  ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் முற்றிய மக்காச்சோளக்திர்களிலும், இலங்கையில் நிலக்கடலை மற்றும் பூண்டிலும் இந்தியாவில் கேரளாவில் முற்றிய நெற்கதிரிலும்  தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் நெற்றுத்தேங்காய்களிலும் ரிஸ்ட்ராக்கள் உருவாக்கப்படுகின்றன.

மெக்சிகோவிற்கு இனி செல்பவர்கள் மிளகாய் ரிஸ்ட்ராக்களை அவசியம் கவனித்து பார்க்கலாம்,

நாமனைவருமே  அந்தந்த பிரதேசத்தின் பிரபல காய்கறிகளை  உலர செய்து ரிஸ்ட்ராக்களை உருவாக்கலாம். இணைய வர்த்தகத்திலும் ரிஸ்ட்ராக்கள் விற்பனையாகின்றன.

ஆலை இல்லா ஊரில்!

’’ஆலை இல்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை’’ என்னும் முதுமொழியை இலுப்பை மரத்தின் இனிப்புச் சுவை கொண்ட மலர்களால் தான் புழக்கத்தில் வந்த்து ,

 இலுப்பை மரம், இருப்பை,  குலிகம் என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது. சப்போட்டேசி  குடும்பத்தை சேர்ந்த இம்மரத்தின் ஆங்கில பொதுப்பெயர்; Butter  tree, mahwa,, தாவர அறிவியல் பெயர்; Madhuca longifolia, இணைப்பெயர்கள்;.Bassia longifolia, Madhuca indica

இதன் தாயகம்; இந்தியா( தமிழகம்). இம்மரங்களின் மலரும்  காலம் – மார்ச்- ஏப்ரல்

இந்தியா முழுவதும் இலையுதிர் காடுகளில் பரவலாக காணப்படும், இம்மரங்கள் ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், வட மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளிலும், மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் காணப்படுகிறது.

மிக உயராமாக நூறு அடிக்கு மேல் வளரும் இலுப்பைமரம் கோடை காலத்தில் இலைகளை உதிர்த்து விடும். அச்சமயத்தில் சாறு நிரம்பிய அழகிய  வெண்ணிற மலர்கள் அதிக இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

இரும்பை மகாளேஸ்வரர் கோயில், இலுப்பைப்பட்டு நீலகண்டேஸ்வரர் கோயில், திருச்செங்கோட்டில் உள்ள திருக்கொடிமாட செங்குன்றூர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல்வேறு கோயில்களின் புனித மரமாக இலுப்பை மரம் உள்ளது. வள்ளுவர் மயிலாப்பூரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் பிறந்தார் என்று நம்பப்படுகிறது, எனவே ஏகாம்பரேஸ்வரர் கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் சன்னதியின் கருவறை மரமாகவும் இந்த இலுப்பை மரமே உள்ளது.

மஹுவா மரத்தின் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக, பிரிட்டிஷ் இந்தியாவின்  வன நிர்வாகிகள்  அதை வெட்டுவதற்கு தடை விதிதிருந்தார்கள். ஆது இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. இதன் விளைவாக, மஹுவா மரங்கள்  இந்திய வயல்களிலும் காடுகளிலும் மிக அதிக அளவில் இருக்கின்றன.  இந்திய வன மரங்களில் இவை மிகப் பழமையானவை மற்றும் மிகவும் பொதுவானவையும் கூட.

இவை குட்டையான அடித்தண்டை கொண்டிருக்கும். சொற சொறப்பான இலைகள் நீள் முட்டை வடிவில் கூர் நுனியுடன் இருக்கும். மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில்,  இந்த ​​மஹுவா மரம்  என்றூம் அழைக்கப்படும்  இலுப்பை சிறிய உருண்டையான . பச்சை-வெள்ளையில் மலர்களை உருவாக்கும். சிறிய அழகிய மணிகளை போல  நறுமணம் கொண்ட மலர்கள் கொத்துக்கொத்தாக  மலரும். முட்டை வடிவ சதைப்பற்றான கனிகள் 1 லிருந்து 4  தட்டையான எண்ணெய் நிரம்பிய பழுப்பு விதைகளை கொண்டிருக்கும்

விதைகளிலிருந்து எடுக்கப்படும் மருத்துவ உபயோகங்கள் கொண்ட .இலுப்பை எண்ணெய் அடுப்பு மற்றும் விளக்குகள் எரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது..இலுப்பை புண்ணாக்கு நல்ல உரமாகவும் பயனாகிறது. “மஹுவா எண்ணெய் தோல் நோய், வாத நோய் மற்றும் தலைவலி ஆகியவற்றின் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.   இலுப்பை எண்ணெய் பசு நெய்யில் கலப்படம் செய்யப்படுகிறது.  

டஸ்ஸர் பட்டை (tassar silk), உருவாக்கும் அந்துப்பூச்சிகளுக்கு (Antheraea paphia)  இலுப்பை இலைகள் தான் உணவாகின்றன இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் கால்நடை தீவனமாகவும் பயனாகின்றன  

மஞ்சள் நிற கனிகளும் உண்ணத்தவையே. .கனிகள்  சமையலிலும் உபயோகப்படுத்தப்ப்டும்.

மஹுவா இந்தியப் பழங்குடியினரிடையே புனிதமான மரமாக கருதப்படுகிறது. இது ‘வாழ்க்கை மரம்’ என்று அழைக்கப்படுகிறது. மலர்கள் மட்டும் அல்ல, மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுகிறது. பழத்தின் ஓடு கூட  சில பழங்குடி இனங்களில் இறுதிச் சடங்குகளின் போது பயன்படுத்தப்படுகிறது.

இனிப்புசாறு நிறைந்திருக்கும் இம்மலர்களுடன் வங்காளத்தில் மட்டும் விளையும் gobindo bhog  என்னும் அரிசிச்சோற்றை கலந்து சுவையான பாயசம்  பண்டிகைக்காலங்களில் செய்யப்படும்.

mahua butter

மலர்ச்சாற்றை பிற மூலிகைகளுடன் நொதிக்க வைத்து உண்டாக்கப்படும்  மஹுவா மது   பல  ஆந்திர மற்றும் தமிழக கிராமங்களில் புழக்கத்தில் உள்ளது .3 அல்லது 4 மணி நேரத்தில்  மஹுவா மலர் மது  கிரமவாசிகளாலும் பழங்குடியினரலும் எளிதாக  உருவாக்கப்படுகிறது.

India’s Adivasi Alcohol, Mahua, is Set to Hit Liquor Stores in Goa Next Week

மஹுவா மலர்கள் பழங்குடியினரால் பறிக்கப்படுவதில்லை இரவில் மரங்களுக்கடியில்   விரிக்கப்பட்டிருக்கும் துணிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் கூடைகளிலும் உதிரும் மலர்களை அதிகாலையில் சேகரித்துக்கொள்வார்கள்

கல்கத்தாவில் மஹுவா மலர்கள் அடைக்கப்பட்ட பூரிகளும் மஹுவா  மலர்களை உலர்த்திப்பொடித்த மாவில் செய்யப்படும் இனிப்புக்களும் பிரசித்தம். சில கிராமங்களில் மலர்களிலிருந்து ஜாமும் ஊறூகாயும் தயரிக்கப்படுகின்றன.

மருத்துவ ரீதியாகவும் இம்மரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. தொழுநோயைக் குணப்படுத்தவும், காயங்களைக் குணப்படுத்தவும் மரப்பட்டை பயன்படுகிறது, இருமல், பித்தம் மற்றும் இதயக் கோளாறுகளைப் போக்கமலர்கள்  உபயோகிக்கப்படுகின்றன.

உலர் மஹுவா மலர்கள் அமேஸான் உள்ளிட அனைத்து ஆன்லைன் வர்த்தகத்திலும் கிடைக்கின்றது.

கொண்டைக்கடலை

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மிக முக்கிய புரத உணவாக இருப்பது கொண்டைக்கடலை எனப்படும் chick pea . பட்டாணிக்குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த  இதன் அறிவியல் பெயர் Cicer arietinum. சென்னா, கடலை, கொண்டைக்கடலை, சுண்டல் கடலை என்று தமிழில் அழைக்கப்படும் இதன் பிறமொழிப் பெயர்கள்   chole, gram,  Bengal gram, garbanzo, garbanzo bean , Egyptian pea, ceci, cece & channa.Kichererbsen

உலகின் மிகப்பழமையான பயறு வகை தாவரங்களிலொன்றான கொண்டைக்கடலையின் 7500 வருட பழமையான தொல்எச்சங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைத்திருக்கின்றன. 10000 வருடங்களுக்கு முன்பிருந்தே கொண்டைக்கடலை தாவரம் துருக்கியில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கு ஆசியா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இவை பயிராகிக்கொண்டிருக்கின்றன. மொத்த உலக உற்பத்தியில் 70 சதவிதத்தை அளிக்கும் இந்தியாவே கொண்டைக்கடலையின்  உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது.

 உலகின் மூன்றாவது முக்கிய பயறு வகையான இவற்றில் அளவில் சிறிய அடர் நிறம் கொண்டவை நாட்டு ரகங்கள் (Cicer arietinum desi varity). முதிராக்காய்களின் கடலைகள் அதிக சத்துக்களுடன் சிறியதாக பச்சை நிறத்திலும் கிடைக்கின்றன.

அளவில் பெரிய நாட்டு வகைகளைக்காட்டிலும் சற்று மென்மையான, வெளுத்த  ஆஃப்கானிஸ்தானிலிருந்து வந்தவகை காபூலி வகை எனப்படும்.Cicer kabulium -( kabuli variety)

பல்லாண்டுகளாக இவை இரண்டுமட்டுமே புழக்கத்தில் இருந்தன . தற்போது தெற்கு இத்தாலியில் மட்டும் விளைவிக்கப்படும் Ceci neri என்னும் அறிவியல் பெயருடைய கருப்பு கொண்டைக்கடலைகளும் சந்தையில் உள்ளன.

Ceci neri

இவற்றை வேகவைத்தும், வறுத்தும்,  கடலைமாவாக பொடித்தும்  தாயாரிக்கப்படும்  கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த  பல வகை உணவுகள் உலகெங்கும்   மக்களின் விருப்ப உணவுகளாக இருக்கின்றன..

இவற்றை தோல் நீக்கி  உலரவைத்து இரண்டாக உடைத்ததுதான் கடலைப்பருப்பு. வறுத்து உடைத்தவையே வறுகடலை அல்லது பொட்டுக்கடலை

வறுத்து அரைக்கப்படும் கொண்டைக்கடலை  காபியாகவும் அருந்தப்படுகிறது முதல் உலகப்போரின் போது உண்டான காபி தட்டுப்பாட்டினால் இவை காபிக்கொட்டையை போலவே வறுத்தரைக்கப்பட்டு காபி தயாரிக்கப்பட்டது. இந்த பானம் இன்றும் உலகின் பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது.

அனைத்து விதமான மண் வகைகளிலும் வளரும் இவை வறட்சியையும் தாங்கும் திறன் கொண்டவை. 20 லிருந்து 60 செமீ உயரம் வரை வளரும் இவை இறகுக்கூட்டிலைகளையும் வெள்ளை அல்லது சிவப்பு சிறு  மலர்களையும் கொண்டிருக்கும். சிறு படகு போன்ற பச்சைக்காய்களில்  ஒன்று அல்லது மூன்று விதைகள் எனப்படும் சிறு அலகு போன்ற நீட்சியை உடைய கொண்டைக்கடலைகள் காணப்படும். தாவரம் முழுக்க மென்மையான ரோமம் போன்ற வளரிகள் காணப்படும் .இப்பயிர் சுமார் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். வளிமண்டல நைட்ரஜனை நிலத்தில் நிறுத்தி நிலவளத்தையும் இவை பாதுகாக்கின்றன.

கொண்டைக்கடலையில்  இரும்பு மற்றும் செம்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் இக்கடலையில் மாங்கனீஸ், தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன.  கொண்டைக்கடலையில்  குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் மிக அதிக அளவில் நார்ச்சத்துக்களும், புரதமும் இருக்கின்றது.

 கொண்டைக்கடலையின் இளம் காய்களும், இலைகளும் பச்சையாக உண்ணப்படுகின்றன புரதச்சத்துக்காக இவை கால்நடைகளுக்கும் தீவனமாக அளிக்கப்படுகின்றன

hummus

தென்னிந்தியாவில் கடலைமாவில் செய்யப்படும் பஜ்ஜி, மைசூர்பாக்கை போலவே உலகளவில் வேகவைத்து மசித்த கொண்டைக்கடலையுடன்  ஆலிவ் எண்ணெயும், எலுமிச்சைச்சாறும்,அரைத்த எள்ளும் கலந்து செய்யப்படும் Hummus  வெகு பிரபலம்.

குறைந்தது எட்டு மணி நேரம் ஊறவைத்து மிருதுவாக்கப்பட்ட கொண்டைக்கடலையை வேகவைக்கையில் அதிலிருக்கும் ஒவ்வாமையை அளிக்கும் சில பொருட்கள் நீங்கிவிடுகின்றன.  இவை 2 லிருந்து 3 நாட்கள் வரை ஊறவைத்து ,முளைவிட்டதும் உணவில் சேர்க்கப்படுகையில் கூடுதலான சத்துக்கள் கிடைக்கின்றன. ஒருபோதும் கொண்டைக்கடலையை ஊற வைத்த, வேகவைத்த நீரை உணவில் சேர்க்கக்கூடாது. அந்த நீரில் கொண்டைக்கடலையின் ஒவ்வாமையை உருவாக்கும் (antinutritinal substances) கரைந்திருக்கும்.  வேகவைப்பதால் கொண்டைக்கடலையின் சத்துக்கள் அதிகமாகின்றன. இந்தியாவின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த  நவராத்திரி விழாக்களின் கொலு பூஜைகளின் போது கொண்டைக்கடலை பிரசாதம்  கட்டாயம் இருக்கும்.

மேலதிகமாக இவற்றைக்குறிது அறிந்து கொள்ள;https://toriavey.com/the-history-science-and-uses-of-chickpeas/

புல்லரிசிப் பூஞ்சை!

சாலெம் என்னும் அந்த சிறு அமெரிக்க கிராமத்தில் திடீரென சூனியங்களினால் உண்டாகும் உடல்நலக் கோளாறுகள் தோன்ற ஆரம்பித்திருப்பதாக அனைவரும் நம்பினர். பல விசித்திரமான நோய் அறிகுறிகள் பலருக்கு உருவாகிக்கொண்டிருந்து. பலர் உயிரிழந்தார்கள் பலர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

 

1692ன் ஒரு துரதிர்ஷ்டவசமான நாளில் இளம் சிறுமிகளான பெட்டியும் அபிகாயிலும் வலிப்பு, உடல் நடுக்கம், தனக்குத்தானே பேசிக்கொள்வது, திடீரென உச்ச ஸ்தாயியில் அலறுவது என பல அசாதாரணமான இயல்புகளுடன் பித்துப் பிடித்தவர்களைப்போல் நடந்துகொண்ட போது ஊர்மக்கள் அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்து  விட்டதாக நம்பினர். கிராமத்து மருத்துவர் வில்லியமும் அதையே உறுதி செய்தார். 1

அச்சிறுமிகளின் சிறுநீரில் வேகவைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட கேக்கை அவர்களே சாப்பிட்டால் அவர்களுக்கு சூனியம் வைத்தவர்களை அடையாளம் காட்டுவார்கள் என ஒரு கருத்து எழுந்த போது அதுவும் நடந்தது. அந்த கேக்கை உண்டபின்னர் பெட்டியும் அபிகாயிலும்  தங்களை சூனியக்காரிகளாக்கிய மூன்று பெண்களை அடையாளம் காட்டினர்.  அம்மூவரும்  உடனடியாக தூக்கிலிடப்பட்டனர். தொடர்ந்து அச்சிறுமிகளுக்கு இருந்ததைப்போலவே அறிகுறிகுறிகள்  வேறு சிலருக்கும் தெரியவந்தபோது, கிராமத்தில் இருக்கும் பிற சூனியக்காரர்களையும் தேடும் வேட்டையில் கிராமத்தினர் முழுமூச்சாக இறங்கினர். அத்தைகைய அறிகுறிகள் கொண்டிருந்த  பலர் தாங்கள் சூனியக்காரர்கள் என்று அவர்களே முன்வந்து ஒத்துக்கொண்டார்கள்

1693 மே மாதத்திற்குள் சூனியக்காரர்கள் என்று நம்பப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் எரித்தும், தூக்கிலிடப்பட்டும், கற்களால் அடித்தும் கொல்லப்பட்டனர். 

அந்தோணியின் நெருப்பு நோய்

இதே போன்ற நோய் அறிகுறிகள் பிரான்ஸில் 11 ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே இருந்தது. நோய்வாய்ப்பட்டவர்கள் எகிப்திய துறவியான  அந்தோணியின் (St. Anthony 251 – 356 CE) தேவாலயத்தில்  குணமாக்கப்பட்டதாலும்,  நோய் அறிகுறிகளில் உடல் எரிச்சலும் இருந்ததால் அந்த குறிப்பிட்ட நோய் ’துறவி அந்தோனியின் நெருப்பு’ அல்லது புனித நெருப்பு என அழைக்கப்பட்டது (St. Anthony’s fire.(SAF),  ignis sacer or, “holy fire”) 2

செல்வந்தர்களின் குடும்பத்தில் பிறந்து தனது 25 வது வயதில் துறவியான அந்தோணி நைல் நதிக்கரையோரம் பல்லாண்டுகள் தனிமைத்தவத்தில் இருந்து கடவுளை தரிசித்து அற்புத சக்திகள் பெற்றவராக அறியப்பட்டவர். அவருக்கென ஒரு தேவாலயம் 1100 ல் பிரான்ஸில் உருவாக்கப்பட்டது. இந்த தேவாலயத்துடன் இணைந்து செயல்பட்ட மருத்துவமனையில்  வழிபட்டால்   எரிச்சல் நோய் குணமாகும் என்னும் நம்பிக்கை அதிகமாகி அந்நோய் கொண்டவர்கள் அங்கே ஆயிரக்கணக்கில் வரத் தொடங்கினர். அவர்களுக்கு சத்தான உணவும் மருந்துகளும் அளிக்கப்பட்டது சிகிச்சை அளித்த துறவிகள்  நீலச்சிலுவை சித்திரம் கொண்ட கருப்பு அங்கி அணிந்திருந்தனர். பலர் குணமாகினர். பலர் உயிரிழந்தனர். பலர் உடலுறுப்புக்களை இழந்தாலும் பிழைத்துக்கொண்டனர்.

 சூனியக்காரர்கள் சூனியம் வைப்பதும், அதனால் உயிரிழப்பவர்களும், கொல்லப்படுபவர்களுமாக இந்நோய் குறித்த மூட நம்பிக்கைகள் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நூற்றண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது. 994 ல் பிரான்ஸில் மட்டுமே சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய் அறிகுறிகளுடன் இறந்துபோனார்கள். பிரெஞ்ச் வரலாற்றாய்வாளரான ஃபிராகோய்ஸ் இதை கண்ணுக்கு தெரியாத நெருப்பினால் உருவான பிளேக் என்று குறிப்பிட்டிருந்தார்.( François Eudes de Mézeray)  

கத்தோலிக்க தேவாலயங்கள் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி இருந்த காலத்தில் இந்த நோய்க்கான காரணம் அறிவியல் பூர்வமாக ஆராயப்படாமல் பாவிகள்  நரகத்துக்குச் செல்லும் வழியாக  மட்டுமே கருதப்பட்டு மதம் சார்ந்த சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டன, 15 ம் நூற்றாண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவில் மட்டும் சுமார் 400 தேவாலயங்களுடன் இணைந்த மருத்துவமனைகள் இந்த நோய்க்கென்றே உருவாகி இருந்தன.

 பன்றிக் கொழுப்பில் கலக்கப்பட்ட மூலிகை எண்ணெய் உடலின் மீது தடவப்பட்டும் பல தாவரச்சாறுகள் கலக்கப்பட்ட திராட்சைமது புகட்டப்பட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 14லிருந்து 17 ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஆப்பிரிக்காவிலும் பிளேக் நடனம் என்ற இந்த வினோதமான நோய் பல்லாயிரக்கணக்கானவர்களை பாதித்தது.

பலர் எலும்புகள் முறிந்து உடையும் வரை, களைத்து இறக்கும் வரை அல்லது பலரால் தடுத்து நிறுத்தப்படும் வரையிலும் நாட்கணக்காக அலறலும் கண்ணீருமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்

பலருக்கு தோலில் சிவப்புப் படை, மயக்கம், பித்து  பார்வையிழப்பு, மற்றும் வலிப்பு ஆகியவை  உண்டானது. 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஃபிளாண்டர்ஸ் முழுவதும் இந்நோய் பரவியது. குறைவான நோய் அறிகுறி கொண்டவர்கள் தெருக்களில் போதையுடன் நடனமிட்டுக்கொண்டிருந்ததால் இந்த அந்தோணியின் நடன நோய், நடனபிளேக் என்றும் அழைக்கப்பட்டது.3. அப்போதுதான்  சாலெம் கிராமத்தைப்போன்ற பல இடங்களில் இது சூனியம் என்று நம்பப்பட்டு பலநூறுபேர் உயிரழந்தனர்.

புல்லரிசியும் பூஞ்சையும்–  நெடிய வரலாறு

கி மு 400 – 300 ல் எழுதப்பட்ட பார்ஸி இனமக்களின் புனித நூலில்  கர்ப்பிணிப் பெண்களின் கருகுழந்தைகளை கொன்று கர்ப்ப்பபைகளையும் அழிக்கும் புற்களைப் பற்றி குறிப்பிடப் பட்டிருந்தது

கிமு 1100  ல் சீன மருத்துவ ஏடு ஒன்று  மகப்பேறு சிகிச்சையில் ஒரு பூஞ்சைவிதை உபயோகிக்கப் பட்டதை குறிப்பிட்டிருந்தது . கிமு 600 ஐ சேர்ந்த அசிரியர்களின் களிமண் படிவமொன்றிலும்  பூஞ்சை கொப்புளமொன்றின் மருத்துவ உபயோகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

கிபி 857 ல் தொகுக்கப்பட்ட  Annales Xantenses என்னும்  பண்டைய ஃபிரான்ஸின்  வரலாற்று தொடர் ஆவணங்களில் கெட்டுப்போன ரொட்டியை உண்ட மக்களுக்கு கைகால்கள் இற்று விழும் கொடிய நோயும் உடலெங்கும் எரிச்சல் தரும் கொப்புளங்களும் உண்டானது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜெர்மனியின் ரைன் பள்ளத்தாக்கு பகுதிகளில் கிபி 857ல்  இந்த நோய் பரவியது வரலாய்வாளர்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறது  

கிருத்துவம் பரவத்துவங்கிய போது மேற்கு ஐரோப்பாவில் பரவிய    ஒரு புல்லரிசி பூஞ்சை நோய்பற்றிய குறிப்புக்களும்  பிற்பாடு கண்டறியபட்டிருக்கின்றன

நீளமான சிக்கலான ஆச்சர்யமூட்டும் இந்த நோயின் வரலாறு  புல்லரிசியின் வரலாற்றுடன் இணைந்திருக்கிறது. ஏழைகளின் தானியம் என அப்போது கருதப்பட்ட   புல்லரிசி ஐரோப்பாவெங்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் ஹாலந்திலிருந்து ஜெர்மனி வழியாக செக்கோஸ்லோவாக்கியா மற்றும் அஸ்திரியா வரை சாகுபடியானது.

 பின்னர் அங்கிருந்து போலந்து மற்றும் ரஷ்யாவிற்கும் புல்லரிசி சகுபடி பரவியது. மாற்றாக இங்கிலாந்தில் வெறும் 50 ஆயிரம் ஏக்கர்களில் மட்டும் புல்லரிசி சாகுபடியானது அவற்றிலும் 20 ஆயிரம் ஏக்கர்களில் புல்லரிசிப்பயிர் அப்படியே உழுது பசுந்தாள் உரமாக்கப்பட்டது. புல்லரிசி பயன்பாடு குறைவாக இருந்ததால் அந்தோணி நோய் தாக்குதலும் அதனாலான உயிரிழப்புகளும் இங்கிலாந்தில் ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாகவே இருந்தது.

1930ல் வெளியான ஒரு அறிவியல் கட்டுரை இந்த விகிதத்தை  போலந்தில் 4:1 என்றால் இங்கிலாந்தில் 100:1 என்று குறிப்பிட்டிருந்தது மேலும்  இங்கிலாந்தை காட்டிலும் ஐரோப்பாவின் காலநிலை புல்லரிசிக்கும் அதில் வளர்ந்த பூஞ்சைக்கும் ஏதுவானதாக இருந்தது

ஜெர்மெனியில் புல்லரிசி கதிர்மணிகளுக்குள் இருக்கும் கருப்பு நிறத்திலிருந்த     புல்லரிசி தானியமணிகளை காட்டிலும் சற்றே பெரிய ஸ்க்ளிரோஷியாக்கள் அன்னை தானியம் என்னும் பொருள்படும் Mutterkorn, (‘mother grain’)என  அப்போது அழைக்கப்பட்டன. அந்த விதைகள் பிரசவத்தை எளிதாக்கியதால் அவை அன்னை தெய்வமாகவும் கருதப்பட்டது

16ம் நூற்றாண்டின் இறுதியில் புல்லரிசிக்கு மாற்றாக் கோதுமைப் பயிர் சாகுபடி துவங்கியபோது இந்நோய் வெகுவாக குறைந்தது. எனினும் கைவிடப்பட்ட கோதுமைவயல்களில் களைப்பயிராக வளரும் புல்லரிசிப் பயிர்கள் செழித்து வளர்ந்தபோது அவை அறுவடை செய்யப்பட்டு கிராமப்புறங்களில் புல்லரிசி ரொட்டியே பிரதான உணவாக இருந்தது

புல்லரிசியான ரை (rye) மட்டுமே அப்போது ஏழைகளின் உணவாக இருந்தது. கருப்பு பூஞ்சை நோயினால் தாக்கப்பட்டு தரமற்றவையாக இருந்த கோதுமைகளும் ஏழைகளுக்கு விலை மலிவாக கிடைத்தது. அத்தகைய கருப்பு துகள்கள் கலந்திருந்த கோதுமையிலும் புல்லரிசிலும் செய்யப்பட்ட ரொட்டிகளை உணவாக எடுத்துக்கொண்டவர்களுக்கு விநோதமான் நோய் அறிகுறிகளும் போதையுணர்வும் எற்பட்டன

பூஞ்சை விதைகலந்த ரொட்டியை உணவாக எடுத்துக்கொள்ளும் வரை நன்றாக இருந்து உணவுக்குபின்னர் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்ளும் கிராமப்புறத்தினரைக்குறித்து வேடிக்கையான நாடகங்கள் பல பகுதிகளில் நடந்தன.

1582 ல் ஆடம் (Adam Lonitzer)  முதன் முதலாக  அவரது மூலிகை நூலான  Kräuterbuch ல்  புல்லரிசிக்கதிர்களில் தானியங்களுடன் கலந்து‘ இருக்கும் நீளமான, கருப்பான, கடினமான நெடி அடிக்கும்  விதைபோன்ற பொருள் உள்ளே வெள்ளையாகவும் அதிலிருந்து முளைத்திருக்கும் ஆணிகளைப் போன்றவற்றையும் கொண்டிருக்கிறது. இவ்விதைகளில் சிறியவற்றை மூன்றை கொடுத்தால் பிரசவ வலி விரைவாக உருவாகி மகப்பேறு எளிதில் நடக்கும் என குறிப்பிட்டிருந்தார்

1596 ல் மற்றொரு ஜெர்மானிய மருத்துவர் வெண்டெலியன் தீலியஸ் (W. Thelius) இந்த அந்தோணி எரிச்சல் நோய்க்கு   புல்லரிசியை தாக்கும் அதே பூஞ்சை காரணமாக இருக்கலாம் என கருதினார் கருப்பு விதை எனப்படுவது பூஞ்சையின் ஸ்போர்கள் அடங்கிய ஸ்கிளோரிஷியம் என்றுமவர் யூகித்தார். ஆனால் இக்கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்படவில்லை  ஐரோப்பாவின் குளிர்பிரதேசங்களிலும் புல்லரிசி பயிராகும் பகுதிகளிலும் அந்தோணி எரிச்சல் நோய் பரவலாக இருந்தது. புல்லரிசி சாகுபடியே இல்லாத இங்கிலாந்தில் இந்நோய் அரிதாகவே காணப்பட்டது. தீலியஸே  அந்நோய் தானியங்களினால் பரவியிருபதற்கான வாய்ப்புகள்  குறித்து முதன்முதலில்  எழுதியவர். 

இப்பூஞ்சையின் முதல் சித்திரம் தாவரவியலாளர் பாஹினால் (Gaspard Bauhin)1658  ல் அவரது  Theatrum Botanicum  என்னும் நூலில் வெளியானது.

1670ல் பிரெஞ்ச் மருத்துவர்  தூய்லியர்(.Thuillier) புல்லரிசியையும் பூஞ்சைத்தொற்றுகொண்டிருக்கும் கோதுமைகளையும் உண்ணும் கிராமத்திருக்கு வரும் அந்த நோய் தரமான கோதுமைகளை உண்ணும் நகரத்தாருக்கு வருவதில்லை என்பதை கண்டறிந்து  தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி   பூஞ்சைக்காளனால் பாதிக்கப்பட்ட புல்லரிசி ரொட்டியை உண்பதால் இந்த அறிகுறிகள் வருகிறதென்று கண்டறிந்தார் ஆனால் கிராம மக்கள் ரொட்டியில் இருக்கும் சிறு கருப்பு தூசி நோயை உருவாக்கும் என்பதை முற்றிலுமாக நிராகரித்தார்கள்

1676 ல் டெனிஸ் (Denis Dodart) என்பவர்   French Royal Academy of Sciences க்கு  பூஞ்சைநோய் தாக்கிய தானியங்களிலிருந்து உருவாகும் கொடிய நோயைக் குறித்து கடிதம் எழுதியிருந்தார் . அதற்கு அடுத்த வருடம் இவரே எர்காட் என்னும் சொல்லையும் முதன் முதலில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டார். எனினும் எர்காடிசம் என்று இந்த நோய்த்தாக்குதல் குறிப்பிடப்பட்டது 1853ல் தான்

எர்காட் எனும் சொல் பண்டைய பிரெஞ்ச் சொல்லான argot  என்னும் கோழிக்கால் பிசிறினைக்குறிக்கும் சொல்லிலிருந்து  அதே போலிருக்கும் ஸ்கிளிரோஷியத்தை குறிக்க பயன்பட்டது. 

 நுண்ணோக்கி கண்டறியபட்டு நுண்ணுயிரியல் என்னும் அறிவியல் துறையின் பொற்காலமென்று கருதப்பட்ட 17 மற்றும் 18 ம் நூற்றாண்டில் இந்நோய் குறித்து பல ஆய்வுகள் முனைப்புடன் நடந்தன     .

1791. மருத்துவரும் இயற்கையாளரும் கவிஞருமாகிய எராஸ்மஸ் டார்வின் தனது  நீள் கவிதையான The Botanic Garden ல் இந்த எர்காட் பூஞ்சையை கருப்பு விஷம் என்று குறிப்பிட்டிருந்தார்.

Shield the young harvest from devouring blight,

The smut’s dark poison and the mildew white,

Deep-rooted mould and ergot’s horn uncouth,

And break the canker’s desolating tooth. – Part I Canto IV (lines 511–4)

கவிதையின் அடிக்குறிப்பாக ஃபிரான்ஸில் அதிகமும் இங்கிலாந்தில் அரிதாகவும் காணப்படும்  புல்லரிசி நோய்க்கு காரணமானது அதன் கருப்பு விதை என்பதையும் டார்வின் குறிப்பிட்டிருக்கிறார்

க்ளாட் மற்றும் பேரன் ஆகியோர் 1711 மற்றும்   1764ல் (Claude Joseph Geoffroy & Baron Otto von Münchhausen) இது ஒரு பூஞ்சைக்காளான் தொற்றாக இருக்கலாம் என்று அறிவித்தார்கள்.

1808 ல் நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர் ஜான் ஸ்டீம்ஸ் (John Stearns, ) நியூயார்க்கின் மருத்துவ சஞ்சிகையில்  ’’மகப்பேற்றை எளிதாக்கும் பிரசவப்பொடி’’ என்னும் பிரபல கட்டுரையை வெளியிட்டார். (An account of the pulvis parturiens, a remedy for quickening childbirth). அக்கட்டுரையில் கர்ப்பிணிகளுக்கு அளிக்கவேண்டிய கருக்குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்தில்லாத மருந்தின் அளவுகளை  துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.

நியூயார்க்கின் மற்றொரு மருந்தாளுனர் சாமுவேல்   1809ல்  (Samuel Akerley) எர்காட் பூஞ்சைச்சாறு கருக்கலைப்புக்கும், மாதவிடாய் துவக்கத்திற்கும் பயன்படுவதை விவரித்து கட்டுரை எழுதியிருந்தார்

1813,ல் ஆலிவர் பிரெஸ்காட்  (Oliver Prescott )எழுதிய எர்காட் பூஞ்சையின் இயற்கை வரலாறும் மருத்துவ பயன்களும் என்னும் கட்டுரை மிக பிரபலமாகி  பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது அதன் பிறகு அந்த பிரசவ பொடியின் உபயோகம் வேகமாக பிற இடங்களுக்கும் பரவியது.

ஆனால்  1822 ல் மருத்துவர் டேவிட்(  David Hosack ) பிரசவ பொடியின் உபயோகத்தால் நியூயார்க்கில் குழந்தைகளின் இறப்பு விகிதம் கூடிக்கொண்டு போவதை ஆதரங்களுடன் நிரூபித்தார் அதன் அடிப்படையில் விசாரணைக்குழுவொன்று ஏற்படுத்தப்பட்டு பிரசவ பொடி எனப்து உண்மையில் மரணப் பொடி அதை  பிரசவங்களுக்கென உபயோக்கூகடாது மகப்பேற்றுக்கு பின்னரான குருதியிழப்புக்கு மட்டுமே உபயோகிக்கவேண்டும் என  அறிவிக்கப்பட்டது

எனினும் எர்காட் தயாரிப்புக்கள் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவெங்கும் பரவலாக உபயோகத்தில் இருந்தது

1850 ல் லூயிஸ் ரெனி  இப்பூஞ்சையின் முழு வாழ்க்கை சுழற்சியையும் வெளியிட்டார். 1850ல் அமெரிக்க மருத்துவ ஏடுகளில் எர்காட் பூஞ்சையின் விதைபோன்ற கருப்புப்பொருளை பொடித்து சிறிய அளவில் அளிக்கையில் கர்ப்பிணிகளின் கர்ப்பப்பை விரைவாக சுருங்கி விரிந்து குழந்தை பிறப்பிற்கான நேரம் வெகுவாக குறைப்பதை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 1856ல் பிரெஞ்ச் தாவரவியலாளர் துரியன் (Durien) செயற்கையாக  புல்லரிசி மலர்களில் எர்காட் பூஞ்சைத் தொற்றை உருவாக்கி கிளாவிசெப்ஸின் நோயுண்டாக்கும் திறனை ஆதாரங்களுடன் நிரூபித்தபோதுதான் நூற்றாண்டுகளாக நீடித்திருந்த சூனிய மர்மம் முற்றிலும் விலகியது.

1969ல் மனிதர்களுக்கு ஏற்படும் அசாதாரண நிகழ்வுகளை குறித்த தனது  The Day of St Anthony’s Fire என்னும் நூலில் ஜான் கிராண்ட்   (John Grant Fuller)  இந்நிகழ்வுகள் குறித்து  விரிவாக எழுதியிருக்கிறார். 

19 ம் நூற்றாண்டின் இறுதியில் எர்காட் வேதிபொருட்கள் மருத்துவத்துறையில் மிக முக்கிய பங்காற்றுபவைகளாக அறியப்பட்டிருந்தன. புல்லரிசி வயல்களில் கிளாவிசெப்ஸ் பூஞ்சையின் வித்துக்களை தூவி  ஒரு ஏக்கருக்கு 500கிலோ ஸ்கிளிரோஷியம் வரை சாகுபடி செய்யப்பட்டு மருந்து நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது

அக்காலகட்டத்தில் புல்லரிசியின் விலையைவிட இருபது மடங்கு அதிக விலைக்கு எர்காட் கருப்பு விதைகள் விற்கப்பட்டன

 1789ல் நடந்த பிரஞ்சுப் புரட்சிக்கும் கூட கடும் பஞ்சத்தினால் தானியங்கள் கிடைக்காமல்  புல்லரிசியை உணவாகக் கொண்ட விவசாயிகளின் வன்முறைக்கு  அந்த அக்கருப்பு விதையின் வேதிப்பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று  பின்னர் பல வரலாற்றாய்வாளர்கள் கருதினர்

எர்காட் பூஞ்சை நோய் 

எர்காட் பூஞ்சை நோய் கிளாவிசெப்ஸ் பர்பூரியா (Claviceps purpurea ) என்னும் பூஞ்சையினால் 400க்கும் அதிகமான புல் வகைகளில் உண்டாகிறது. இவற்றில் ரை எனப்படும் புல்லரிசியே அதிகம் பாதிக்கப்படும் புல் வகை. கிளாவிசெப்ஸின் 40 சிற்றினங்களில் பர்பூரியா பலவகையான புல் வகைகளின் மலர்களின் சூலகங்களை மட்டும் தொற்றும் பூஞ்சையாக இருக்கிறது

கிளாவிசெப்ஸ் என்றால் ஆணி-தலை என்று கிரேக்க மொழியில் பொருள் இதன் ஸ்க்ளிரோஷியாவிலிருந்து முளைக்கும் வித்துக்கள் சிறு ஆணிகளை போலிருப்பதாலும் ஸ்கிளிரோஷியாவின் நிறம் கருப்பு கலந்த ஊதா என்பதாலும் இதன் அறிவியல் பெயர் கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்றிருக்கிறது. 

இந்த புல்லரிசி பூஞ்சை நோய் கனடா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் பரவலாக இருந்தது  (இப்பொழுதும் குறைவான வீரியத்துடன் இருக்கிறது). இந்தியாவில் இந்த பூஞ்சை தாக்குதல் அரிதாகவே நிகழ்ந்துள்ளது இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் மும்பையிலும் கர்நாடகத்திலும் சோளப் பயிர்களில் இந்நோய் கண்டறியப்பட்டது.

எர்காட் பூஞ்சைத்தாக்குதலால் கோதுமை பார்லி சோளம் போன்றவகைகளின்  மகசூல் குறைகிறது என்பதைவிட இந்த பூஞ்சையில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆல்கலாய்டுகள் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உண்டாக்கும் நோய்களாலும் அந்த ஆல்கலாய்டுகளின் மருத்துவப்பயன்களாலும் இப்பூஞ்சை முக்கியத்துவம் பெறுகிறது 

இப்போது இதன் ஸ்கிளிரோஷியாவிலிருக்கும் முக்கியமான ஆல்கலாய்டுகளுக்கென புல்லரிசியில் இப்பூஞ்சைத் தொற்று செயற்கையாக உண்டாக்கப்பட்டு இந்த ஆல்கலாய்டுகள் சேகரிக்கப்படுகின்றன. 

இப்பூஞ்சையைகுறித்து அறியாத  நூற்றாண்டுகளில்தான் சூனியக்காரர்கள் என்று பல்லாயிரம் அப்பாவிகள் கொலை செய்யப் பட்டிருந்தனர்.

எர்காட் புஞ்சைத்தொற்று எர்காட்டிசம் (Ergotism) எனப்படுகின்றது

கிளாவிசெப்ஸ் பர்பூரியா 

1853 ல் லூயிஸ் ரெனி (Louis Rene Tulanse) என்னும் பூஞ்சையியலளர் புல்லரிசி பயிர்களில் கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்னும் புஞ்சைநோய் தாக்குதல் உண்டாவதை கண்டறிந்தார்.  இந்த பூஞ்சை நோய் எர்காட் புல்லரிசியின் நோய் என அழைக்கப்ட்டது.(Ergot of Rye). அந்த பூஞ்சை பண்டைய காலத்தில் மகப்பேறு சிகிச்சையில் பயன்பட்டதற்கான குறிப்புக்களையும் அவர் தேடிக் கண்டறிந்தார்

புல்லரிசியின் மலர்க்கொத்துக்களில் படியும் பூஞ்சை வித்துக்கள் மலரின் சூலகங்களில் வளர்ந்து  வித்துக்கள் அடங்கியுள்ள சிறு மணிகள் மண்ணில் உதிர்கிறது.   குளிர்காலங்களில் நிலத்தில் காத்திருந்து அடுத்த பயிர் வளருகையில் அதிலும்  முளைத்த பூஞ்சை வித்துக்கள் தொற்றி நோய் உருவானது.  பூஞ்சை வித்துக்கள் குடைக்காளானைபோல   புல்லரிசிப்பயிரின் சூலகங்களில்வளர்ந்து பரவி அதன் வித்துக்களனைத்தும் சிறு கருப்பு கதிர்மணி போன்ற வடிவங்களில் உருவாவதையும், அக்கருப்பு மணிகள் புல்லரிசி கதிரில் அரிசிமணியைக்காட்டிலும் சற்றே நீளமாக இருப்பதையும் லூயிஸ் கண்டறிந்தார். அவற்றின் மருத்துவப்பயன்கள் முன்பே மக்களிடத்தில் பிரபலமாகி இருந்தாலும் அதன் அளவு கூடும்போது நோயும் பித்தும் உடலெரிச்சலும் வருவதை அதற்கு முன்பு யாரும் அறிந்திருக்கவில்லை

.

மனிதர்களில் எர்காட் நோய்

எர்காட் பூஞ்சை நோய் மனிதர்களை இரு விதங்களில் பாதிக்கிறது. ரத்த நாளங்களில் ஏற்படும் தொற்று gangrene  என்னும் தசை அழிவையும் மத்திய நரம்பு மண்டலத்தில் உண்டாகும் தொற்று போதை, பித்து, வெறி, வலிப்பு, உடல் எரிச்சல் போன்றவற்றையும் உண்டாக்குகிறது

எர்காட் மருந்துகள்4

உலகின் மிகப் பழமையானதும் கொடியதுமான இந்த ரொட்டிப் பூஞ்சை நோய் என்னும் எர்காடிசம் மருத்துவ உலகில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகள் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

 1820ல் அமெரிக்காவின் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகவே எர்காட்  ஆல்கலாய்டுகள் இருந்தன.1820 லிருந்து 1905 க்குள் 200க்கும் அதிகமான வேதிப்பொருட்களும் ergotamine, ergometrine  ergokryptine   உள்ளிட  12 ஆல்கலாய்டுகளும்  இந்தப் பூஞ்சையிலிருந்து  மட்டும் கண்டுபிடிக்கப்பட்டன.  இவற்றுடன் போலி ஆல்கலாய்டுகள் எனப்படும்  ergotoxine, ergotinine, ergosterene. ஆகியவையும் கண்டறியப்பட்டன. பிரெஞ்ச் வேதியியலாளர்  டேன்ரெட் (Charles Tanret) தன் வாழ்க்கையில் 20 வருடங்களை எர்காட் பூஞ்சை ஆல்கலாய்டுகளை கண்டுபிடிப்பதிலேயே செலவிட்டார். தூய ஆல்கலாய்டுகளை  இனம் கண்டார்.

டேன்ரெட் (Tanret) 1875ல் படிகங்களாக எர்காட் பூஞ்சையின் வேதிப்பொருட்களை முதன்முதலில் பிரித்தெடுத்தார். அது எர்காட்டினைன் எனப்பட்டது.

 இந்த பூஞ்சையின் மிக முக்கியமான் 4 ஆல்கலாய்டுகளான , ergotinine, ergotoxine, ergotamine மற்றும் ergotaminine, ஆகியவற்றை S. Smith , G. M. Timmis ஆகியோர் பிரித்தெடுத்தனர்.

1900 த்தில் எர்காட் ஒரு வேதிக்குழப்பமென்றே விஞ்ஞானிகளால் கருதப் பட்டது.  இதில் அடங்கி இருக்கும் பலவகையான வேதிப்பொருட்களை பிரிதெடுக்க பலவகையான முயற்சிகள் நடந்து தோல்வியடைந்து கொண்டிருந்தன. ஹென்ரி என்னும் ஒரு மருந்து தயாரிப்பாளர் குறிப்பிட்ட வேதியியலாளர்கள் சிலரை தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக இந்த பூஞ்சையின் நோயை குறித்து ஆராய அழைத்தார். அக்குழுவில் ஜார்ஜ் பெர்கர். கார்,  ஆர்தர் எவின்ஸ் மற்றும் ஹெரால் ட்யூல்டி ஆகியோர் இருந்தனர்.  (George Barger, Arthur Ewins,Dr. F. H. Carr & Harold Dudley) 

பார்ஜர் மற்றும் கார் (Prof. Barger  Dr. F. H. Carr) 1906 ல்  எர்கோடாக்ஸினை (ergotoxine ) பிரித்தெடுத்தார்கள். இக்குழுவினர் இவற்றை மட்டுமல்லாது அசிட்டைல் கோலைன், ஹிஸ்டமைன், மற்றும் திராமைன் ஆகிவற்றையும் கண்டுபிடித்தனர். எர்காட் பூஞ்சையில் பலர் வருடக்கணக்காக ஆய்வு செய்தார்கள் எனினும் Henry Dale, George Barger  Arthur Ewins , Arthur Stoll  மற்றும் Albert Hofmann ஆகியோரின் பங்களிப்பு மிக இன்றியமையாதது.

இந்த குழுவினரின் மிக முக்கிய கண்டுபிடிப்பான எர்கோமெட்ரின் (Ergometrine)   மகப்பேறுக்கு பின்னரான குருதியிழப்பு மரணங்களை இன்றளவும் தடுத்துக் கொண்டிருக்கிறது. 1917ல் ஆர்தர் ஸ்டோல் (Stoll) மற்றுமவரது குழுவினர் இணைந்து  மைக்ரேனுக்கு சிகிச்சையளிக்கும் எர்காட்டமைன் உள்ளிட்ட பல முக்கிய மருந்துகளை  இப்பூஞ்சையில் இருந்து பிரித்தெடுத்தனர்.   எர்காட்டமைன்  (Ergotamine) மைக்ரேன் என்னும் தலை நோய்க்கு மருந்தாகிறது. 

.

எல் எஸ் டி

மாயக்காட்சிகள், போதை  மற்றும் இல்பொருள் தோற்றம் அளிக்கும்  போதை மருந்தான (LSD,Lysergic acid diethylamide),லைசெர்ஜிக் ஆசிட் டைதலமைடு ,எல்எஸ் டி என்பதுவும் 1938 ல் ஆல்பர்ட் ஹாப்மனால் இந்த ரொட்டிப்பூஞ்சையிலிருந்து கிடைத்த  எர்கோட்டமைனிலிருந்து உருவாக்கப்பட்டது.  அது உருவாக்கப்பட்டபோது அதன் போதைப்பண்புகள் அறிந்திருக்கப்படவில்லை.

எல்எஸ்டி உருவாக்கபட்ட 5 வருடங்களுக்கு பிறகு April 19, 1943ல்  அதன் போதையூட்டும் பண்புகள் ஹாப்மன் அந்த வேதிபொருளை  தற்செயலாக சிறிதளவு உட்கொண்டபோதுதான் தெரியவந்தது. 

Albert Hofmann அவரது ஆய்வகத்தில்

சுவிட்ஸர்லாந்தின் சண்டோஸ் மருந்துநிறுவனம் (Sandoz Laboratories) 1947லிருந்து எல்எஸ்டியை  மூளைப்பிளவாழுமையான சிஸோஃப்ரெனியாவுக்கு சிகிச்சையளிக்கவும், குற்றவாளிகளுக்கான, மது அடிமைகளுக்கான சிகிச்சைக்கான மருந்தென்று விளம்பரபடுத்தி சந்தைக்கு கொண்டு வந்தது. 

அந்நிறுவனம்  எல்எஸ்டியை ஆராய்ச்சியாளர்களுக்கு இலவசமாக கொடுத்து உதவியது 1963ல் சாண்டோஸ் நிறூவனத்தின் எல்எஸ்டிக்கான் உரிமம் காலாவதியான பின்பு அதனை வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. எல்எஸ்டி பயன்பாடு 1968 அக்டோபரிலிருந்து சட்டவிரோதம் என அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது

25 கிலோ எர்காட்டமைன் டார்டரேட்டிலிருந்து 6 கிலோ தூய எல்எஸ்டி படிகங்களாக கிடைக்கிறது.  “Microdots’’ எனப்படும் நுண் மாத்திரைகளாகவும், “window panes”  ’ஜன்னல் சதுரங்கள்’ என்னும் பெயரில் ஜெலாட்டின் சதுரங்களாகவும் சமயங்களில் உறிஞ்சும் தாள்களில் நனைக்கப்பட்டும் கூட எல்எஸ்டி விற்பனையாகிறது. அரிதாக திரவ நிலையிலும் கிடைக்கும் எல் எஸ் டி  எந்த வடிவில் கிடைத்தாலும் உபயோகிப்பவர்களை  யதார்த்த உலகிலிருந்து உடனடியாக  துண்டித்துவிடும் என்பது உண்மை

எல்எஸ்டியின் மிகக்குறைந்த அளவே மிக அதிக போதை உண்டாக்குமென்பதாலும், நிறமற்ற, மணமற்ற இதன் பண்புகளாலும் பிற போதை மருந்துகளைக்காட்டிலும் இதுவே கள்ளச்சந்தை வணிகத்தில் அதிக புழக்கத்தில் இருக்கிறது.

பயிர்ப்பூஞ்சை நோய்

இப்பூஞ்சை தாக்குதல் இப்போதும் ஆங்காங்கே தானியப்பயிர்களில் தென்பட்டுக்கொண்டிருக்கிறது. சமீப காலங்களில் ஏற்பட்ட எர்காட் பூஞ்சை தொற்று

  • 1975ல் இந்தியாவில்
  • 1977ல் எத்தியோப்பியாவில்
  • 1987ல் ஆஸ்திரேலியாவில்
  • 1996 அமெரிக்காவில்
  • 1999 பிரேஸிலில்

எர்காட் மருந்துகள் இப்போது

இப்பூஞ்சையை போன்ற பல்வேறு  இயற்கைப் பொருட்களின் கண்டுபிடிப்புக்கள்   மனிதர்களுக்கான சிகிச்சைகளில்  தங்களது செல்வாக்கை செலுத்திய  விஷயங்களால்  நிரம்பியுள்ளது உலக மருத்துவ வரலாறு  .

இப்போது அறியபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான  பூஞ்சை இனங்களில் எர்காட் ரொட்டிப்பூஞ்சையான கிளாவிசெப்ஸைபோல மருந்தியல்,  மகப்பேறியல், உளவியல் மற்றும் நரம்பியல் துறைகளில் மிக முக்கியமான சிகிச்சைகளுக்கு பயனாகும் மருந்துகள் அளிக்கும் பூஞ்சை வேறெதுவும் இல்லை

எர்காட்டிலிருந்து எல்.எஸ்.டி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிச்சேர்மங்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன  

பல ஆண்டுகளாக மருத்துவத் துறையில் விஞ்ஞானம் எத்தகைய முன்னேற்றம் அடைந்திருந்தாலும், நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பல முக்கியமான மருந்துகளின் முதன்மை ஆதாரமாக புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளை தரும் நித்தியகல்யாணி, இதயநோய்களை குணப்படுத்தும் டிஜிட்டாலிஸ் போன்ற தாவரங்களும்,  கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை முதன்மை பாக்டீரீயா கொல்லியாக இருக்கும் பெனிசிலின் மற்றும் ரொட்டிப்பூஞ்சையான கிளாவிசெப்ஸ் போன்றவைகளும்  உள்ளன .

பூமியின் பல்லுயிர்ப் பெருக்கத்தின் பெரும்பகுதி இன்னும் இன்றியமையாத மருந்துகளின் கண்டுபிடிப்புக்காக பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.   இயற்கையின் எண்ணற்ற  ரகசியங்களை கண்டறியும் பாதைகளில் எர்காட் மருந்துகளை போன்ற பல்லாயிரம் தூங்கும் இயற்கை அழகிகள் நாம் அவற்றை தொட்டெழுப்பவேண்டி காத்திருக்கின்றன 

  1. https://kids.nationalgeographic.com/history/article/salem-witch-trials

திம்மம்மா ஆலமரம்

திம்மம்மா ஆலமரம் / திம்மம்மா மரிமானு

வெகு உயரத்தில் இருந்து   பார்க்கையில் ஆந்திராவின் அனந்தபூர்  மாவட்டத்தின் ஒரு பகுதி  அடர்ந்த காடு போல தோற்றமளிக்கும். ஆனால் உண்மையில்  திம்மம்மா ஆலமரம் என்று உள்ளூர் வாசிகளால் அழைக்கப்படும்  படர்ந்து வளர்ந்திருக்கும் மிகப்பெரிய  ஒற்றை ஆலமரம்தான் அப்படி காடு போல் தோற்றமளிக்கிறது. இந்த மரத்தின் மேல் பரப்பு 19,107 m2 (4.721 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய  ஒற்றை மர இலைப்பரப்பு .

“மரி என்பது ஆல் என்றும் மானு என்பது மரத்தையும் குறிப்பதால் ஆந்திர மக்களால் திம்மம்மா மாரிமானு என்றழைக்கப்படும் இப்பெருமரம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இம்மாபெரும் இலைப்பரப்பின்பொருட்டு 1989ல் இடம் பெற்றிருக்கிறது

இம்மரத்திற்கு சுமார் 550 வருடங்கள் வயதிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. 

இம்மரம் காண்பதற்கு அளிக்கும் வியப்பைப்போலவே மரத்தின் பின்னிருக்கும் தொன்மமும் மிக ஆச்சர்ய மளிக்குமொன்றுதான். 

ஆந்திரமக்களின் வாய்வழிச் செய்திகளின்படி அந்த ஊரில் கி.பி. 1394 ல் வாழ்ந்து வந்த  சென்னக்க வெங்கடப்பா, மங்கம்மா ஆகியோரின் மகள்  திம்மம்மாவை பால வீரைய்யா என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். பாலவீரைய்யா 1434 ல் தொழுநோயால் இறந்தபோது அக்கால வழக்கப்படி  கணவருடன் திம்மம்மாவும் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். கணவனும் மனைவியும் இறந்த சிலநாட்களில்  அந்த சிதைச் சாம்பலின் வடகிழக்கு பகுதியிலிருந்து ஒரு ஆலமரம் முளைத்ததாகவும் அதற்கு தெய்வீக சக்திகள் இருப்பதாகவும் அம்மக்களால் நம்பப்பட்டு அதுவே திம்மம்மா மரம் எனப்படுகின்றது 

அங்கு திம்மம்மா தம்பதியினருக்கு  ஒரு சிறு கோவிலும் மரத்தடியில் இருக்கிறது. மத வேறுபாடின்றி இங்கு உலகெங்கிலும் இருந்து மக்கள் வருகிறார்கள்.

திம்மம்மாவை வேண்டிக்கொண்டால் நல்ல குடும்ப வாழ்வும் குழந்தைபேறும் கிடைக்குமென்னும் நம்பிக்கை இருப்பதால் புதுமணத் தம்பதியினரின்  கூட்டம் இங்கு அலைமோதுகிறது. தாவரவியல் ஆர்வலர்களும் சுற்றுலாப்பயணிகளும் இம் மரத்தை கண்டு மகிழ்கிறார்கள்

இந்த ஆலமரத்தின் அடியில்   சிவராத்திரி நாளில்  ஜத்ரா என்னும் விழா நடத்தப்படுகிறது. இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

இம்மரத்தில் இரவில் பறவைகள் தங்குவதில்லை என்றும் இம்மரத்திற்கருகில் இருக்கும் எந்த உயிரையும் தாங்கள் தீண்டுவதில்லை என்று நாகங்கள் சத்தியம் செய்திருப்பதாகவும் இம்மரம் குறித்த சில கதைகளும் அங்கு காலம்காலமாக உலவுகின்றன.

இந்த மரத்தை முதன் முதலில் கவனித்து, உலகின் கவனத்திற்கு கொண்டுவந்தவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர்மற்றும் ஒளிப்படக் கலைஞரான சத்யநாராயண ஐயர் என்பவர். இவரே பின்னர் கின்னஸ் உலக சாதனை பதிவில் இந்த மரத்தை பதிவு செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டார்.  2017ல் கின்னஸ் புத்தகத்தின் இப்பதிவு திருத்தப்பட்ட மரத்தின் அளவுகளுடன்  மேம்படுத்தப் பட்டிருக்கிறது.

Thimmamma Marrimanu is so large that it holds an entire temple at its centre (Credit: Chris Griffiths)

உலகின் மாபெரும் மரங்களில் இந்தியாவில்  இருக்கும் 7 மரங்களில் திம்மம்மா ஆலும் ஒன்று . 4000த்திற்கும் அதிகமான விழுதுகள் மண்ணில் இறங்கி இம்மரத்தை  மாபெரும் பசும்குவையாக்கி விட்டிருக்கின்றன. சுமார் 20 ஆயிரம் மக்கள் இதன் நிழலில் ஒரே சமயத்தில் இளைப்பாற முடியும் என்னும் அளவிற்கு இம்மரம் பரந்துவளர்ந்திருக்கிறது. இந்தனை நூற்றண்டுகளில் பல இயற்கைசீரழிவுகளை சந்தித்திருந்தும் இம்மரம் சேதமின்றி கம்பீரமாக காலத்தை கடந்து நின்றுகொண்டிருக்கிறது. 

பொதுவில் ஆலமரம் நீளாயுள் மற்றும் வளர்ச்சியின் குறியீடாக இந்தியாவில் கருதப்படுகின்றது. இந்துமதத்தின் பல புண்ணிய மரங்களைப்போலவே மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மரமும் வழிபடப்படுகிறது எனினும் இப்போது  இந்த மரம் மிகப்பிரபலம் ஆகிவிட்டிருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இயற்கை ஆர்வலர்களும் சுற்றுலாப்பயணிகளும்  அங்கு வருவதால் இம்மரத்தின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிட்டிருக்கிறது. பக்தியின் பேரில் இம்மரத்தில் ஆணி அடித்து தொட்டில்கட்டுவதும் பலவண்ண துணிகளை கட்டி விடுவதுமாக அன்றாடம் நூற்றுக்கணக்கில் வழிபாடுகள் நடக்கின்றன. காலப்போக்கில் இவ்வழக்கங்கள் மரத்திற்கு பாதிப்பை உண்டு பண்ணக்கூடும்.

  

 கிராம வன அலுவலர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு இம்மரத்தின் வேர்களை பாதுகாக்க மூங்கில் கழிகளை  நட்டுவைத்தும், மக்கள் கூட்டத்தை ஒழுங்கு செய்து வழிபடும் பாதை அமைத்தும் இம்மரத்தை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கிறார்கள். சமீபத்தில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து இம்மரத்துக்கு கிடைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன அவ்வாறு அளிக்கப்பட்டால் இம்மரத்தை அழிவிலிருந்தும் இதுபோன்ற பாதுகாப்பின்மைகளிலிருந்தும் நிச்சயம் காப்பாற்ற முடியும்.

Thimmamma Marrimanu has more than 4,000 roots making up its canopy (Credit: Chris Griffiths)

திம்மம்மா  மரம்  பிபிசியின் ‘தி ட்ரீ ஸ்பிரிட்ஸ்’ (29 ஆகஸ்ட் 2017) தொடரின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

ஸாகே!

2015  ஏப்ரல் 16 அன்று ஜப்பானில் வெளியான அந்த ஆவணப்படம் பிற ஆவணப்படங்களிலிருந்து  மிகவும் வேறுபட்டிருந்தது. மிக அழகிய கேமரா கோணங்கள், ஒளியின் ஜாலங்கள், மெல்லிய உறுத்தாத இசை, எல்லாவற்றையும் விட , ஒரு தேசத்தின் கலாசாரத்துடன் ஒன்றிணைந்து விட்ட 2000 வருட பழமையான ஒன்றைக்குறித்தான  அதன் பேசுபொருள், அதுதான் அந்த ஆவணப்படத்தை வித்தியாசப்படுத்தியது. The birth of sake, ‘ஸாகேவின் பிறப்பு’ என்னும்  94 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த ஆவணப்படம் பிரபல புகைப்பட நிபுணரும், திரைப்பட இயக்குநருமான  எரிக்  ஷிரோயினால் உருவாக்கப்பட்டு அவருக்கு சிறந்த இயக்குனர் விருதை பெற்றுத்தந்து,  மிகச்ச்கிறந்த ஆவணப்படத்திற்கான விருதையும் பெற்றது

the birth of sake வில் ஒரு காட்சி

துவக்கக் காட்சியில் வடக்கு ஜப்பானில்  இசிகாவா பிரதேசத்தில்  கடலை பார்த்தபடி அமைந்திருக்கும் வடிசாலைக்கு கடும் பனிக்காலமொன்றில் குளிருக்கு உடலைக்குறுக்கியபடி  வரிசையில் செல்கிறார்கள் சீருடைப் பணியாளர்கள். 

2000 வருடங்களாக ஜப்பானியர்களின் குருதியில் கலந்துள்ள அரிசி மதுவான ஸாகேவை 144 வருடங்களாக பாரம்பரிய முறையில் தயாரிக்கும் அந்த யோஷிடா ஷுஜொ (Yoshida Shuzo) வடிசாலையின் முகப்பில்  செடார் தளிரிலைகளல் உருவாக்கிய பச்சைப் பந்து ஒன்று கயிற்றில் கட்டி தொங்கவிடப் பட்டிருக்கிறது.

மூட்டைகளிருந்து பிரித்து கொட்டப்பட்டு, ஊற வைக்கப்படும் அரிசி, பெரிய கொள்கலன்களில் நீராவியில் வேகவைக்கப்படுகின்றது வேகும் அரிசியின் மணத்தை கவனமாக அதே வடிசாலையில் 60 வருடங்களாக பணியாற்றும் முதியவர் தன் முகத்தை அந்த நீராவிப்புகை எழும்பும் கலனுக்கு வெகு அருகில் வைத்துக்கொண்டு கவனித்துக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் நீரவியின் அளவை சிறிது அதிகரிக்கச்சொல்லி உத்தரவிடுகிறார்.

பணியாளர்களின் முகபாவனைகள், வயதான  டோஜி எனப்படும் ஸாகே உற்பத்தியில் வல்லுநராக  இருப்பவரின் (Tōji) சுருக்கங்கள் நிறைந்த முகத்தின் தீவிரம்,  அரிசித்தாளங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் அரிசியை கையில் அள்ளி முகத்தோடு வைத்து அழுத்தி அதன் மணத்தை நுகர்ந்து வாயிலிட்டு மென்று அதன் சுவையை முதியவர் ஒருவர் அறிவது போன்ற   மிக நுட்பமான பல காட்சிகளும் இதிலுண்டு.

குறிப்பிட்ட  வெப்பநிலையில் இருக்கும் ஒரு அறையில் பணியாற்றுபவர்களின் முகத்தில் பூக்கும் வியர்வைத் துளிகள், நீரவிப்புகையின் பின்புலத்தில் தெரியும் பணியாளர்கள், உணவு இடைவேளையில் பாரம்பரிய முறையில் மூத்தோருக்கான மரியாதையுடன் பணியாளர்கள் உணவருந்துவது, பூஞ்சைக்காளான் ஸ்போர்கள் துணிப்பொதியிலிருந்து மெல்லிய புகைப்படலம்போல  தூவப்படுவது,  இவற்றோடு இடையிடையே உலர்ந்து கொண்டே வரும் பச்சை செடார் இலைப்பந்தின்மீது மெளனமாய் பனி பெய்துகொண்டே இருப்பதுவமாக கவிதைக்காட்சிகள் இதில் பெரும்பாலானவை. ஸாகே உற்பத்தி மட்டுமல்ல ஜப்பானிய கலாச்சாரத்தையும் இந்த ஆவணப்படம் கூடவே காட்டுகிறது.

ஸாகே உருவான பின்னர் பணியாளர்கள் அங்கிருக்கும் கடவுள் படங்களுக்கு முன்னர் பாரம்பரிய முறையில் வணங்கி நன்றி தெரிவித்து வழிபடுவதுடன் முடிகிறது இந்த ஆவணப்படம்.

கடவுளின் பரிசாக நெல் கருதப்படுவதால் அரிசி உணவு ஜப்பானியர்களின்  பிரியத்துக்குரிய பிரதான உணவு. அரிசியிலிருந்து. உருவாகும் மதுவான ஸாகேவும் அப்படியே ஜப்பானியர்களின் தனித்த பிரியத்துகுரியதொன்று. 

ஸாகே மூன்று விதங்களில் அங்கு முக்கியத்துவம் பெறுகிறது முதலாவதாக கடவுள்களுக்கு படைக்கப்படும் உணவுகளில் ஸாகே முதன்மையான உன்னதமான ஒன்று. எப்போது அருந்தினாலும் ஸாகேவை முதலில் கடவுளர்க்கு படைத்தபின்னரே அருந்துவார்கள், இரண்டாவது  இது பிற மது வகைகளை போலவே மன மகிழ்ச்சியளிக்கும்  பானம், மூன்றாவதாக மருத்துவ உபயோகங்களுக்காகவும் ஸாகே அதிகம்  விரும்பப்படுகிறது. ஜப்பனிய மது என்று பொருள் படும் ஸாகே (sake)  ஜப்பானிய மொழியில் செய்ஷு  (seishu) எனப்படுகிறது

ஜப்பனிய தொன்மங்களிலும் ஸாகே இடம்பெற்றிருக்கிறது. ஒரு கிராமத்தில் யமட்டா நோ ஒரோச்சி (Yamata-no-Orochi) என்னும் எட்டுத்தலைகள் கொண்ட நாகமொன்று  ஒவ்வொரு வருடமும்  ஒரு இளம்பெண்ணை  விழுங்க வரும்,  எட்டாவது வருடம்  அப்படி விழுங்க வருகையில் கிராமத்தினரின் அழுகையை அந்த வழியே வரும் கடலின் கடவுளான  சுசானோ கேட்கிறார். அவர்களுக்கு உதவ முன்வரும் அவர்  அந்த மாநாகத்துக்கு எட்டு மாபெரும் பீப்பாய்களில்  கடும் ஸாகே  மதுவை  நிரப்பி வைக்கிறார். ஸாகே மீது விருப்பம்  கொண்டிருந்த  மாநாகம் எட்டுத்தலைகளையும் பீப்பாய்களுக்குள்   நுழைத்து ஸாகேவை அருந்தி மயங்குகையில் கடவுள் அதன் தலைகளை வெட்டிக்கொல்கிறார் ஜப்பானிய குழந்தைகள் மிக இளமையிலேயே கேட்டு மகிழும் கதைகளில் இதுவும் ஒன்று

யுவர் நேம் என்கிற ஜப்பானிய பிரபல அனிமே சித்திரப் படத்தில் (your name- kimi – no nava)  ஒரு காட்சியில் முக்கிய நாயகியான மிட்ஸுஹா மியாமிஜூயும் அவளது தங்கையும் அவர்களின் குலவழக்கப்படி தொன்மையான சடங்கு ஒன்றில் ஈடுபட்டிருக்கும் காட்சி இருக்கும். அக்குலத்தில் பெண்களே சடங்குகளை செய்யும்  உரிமைகொண்டவர்கள். 

your name ல் ஒரு காட்சி

பாரம்பரிய உடையில் தொல்குடிப் பாடலை மென்மையாக பாடியபடி கையில் வைத்திருக்கும் ஒரு சிறு மணியை இசைத்துக்கொண்டு சுழன்று சுழன்று ஆடிமுடிக்கும் இருவரும், அங்கிருக்கும் சிறு துணிப்பொதியை மெல்ல அவிழ்க்கிறார்கள். அதனுள் இருக்கும் வெண்ணிற குழைந்த அரிசிசோற்றை மந்திரங்களை முணுமுணுத்தபடி வாயிலிட்டு மென்று, கைகளில் வைத்திருக்கும் சிறு மரப்பெட்டியில் வாயை துணியால் மறைத்தபடி  உமிழ்கிறார்கள். பெட்டியை மூடி வண்ணத் துணிகளால் கட்டி அதை ஸாகே வடிசாலைக்கு அனுப்புகிறார்கள்.  

2000 வருடங்களுக்கு முன்பு இந்த அரிசி மது,  வாயிலிட்டு மென்று உருவாக்கிய ஸாகே என்று பொருள்படும் ’குச்சிகாமி ஜாகே’ (kuchikami-zake) என்னும் பெயரில் இப்படித்தான் தொல்குடியினரின் எச்சில் கலந்த சோற்றிலிருக்கும் நுண்ணுயிரிகளாலும் நொதிகளாலும் உருவாக்கப்பட்டது.

பூஞ்சைக்காளானாகிய கோஜி கண்டுபிடித்த பின்னர் இந்த வழக்கம் மறைந்து போய்விட்டதென்றாலும் இதை ஒரு சடங்காக இன்னும் தொடரும் பழங்குடிகளும் இருக்கிறர்கள்.  இம்மதுவைக் குறித்த வரலாற்று ஆவணங்கள் கிடைத்திருக்கும் காலத்துக்கு முன்பே ஸாகே உருவாகி புழக்கத்திலும் இருந்தாலும்,  துல்லியமாக இம்மதுவகை எப்போது எங்கே யாரால் உருவக்கப்பட்டது என்றறிய முடியவில்லை. எனினும்  கிமு 500ல் சீனாவில் தோன்றி 700களில் ஜப்பனுக்கு வந்திருக்கலம் என்று பொதுவாக வரலாற்றாய்வாளர்களால் நம்பப்படுகிறது, 

வரலாறு

பண்டைய ஜப்பானிய விருந்துகளை குறித்து விரிவாக சொல்லும்  551 – 554 ல் தொகுக்கப்பட்ட நூலான  Wei Shu வில் தான் முதன்முதலாக விருந்துகளில் வழங்கப்பட்ட மதுவகைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. 

712, ல் தொகுக்கப்பட்டு வெளியான ஜப்பானிய வரலாறு,  தொன்மங்கள், ஆளுமைகள், அரசர்களின் கொடி வழிகள்  கடவுள்கள், வாய்வழியாக கடத்தப்பட்ட மரபுகள் மற்றும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை மிக விரிவாக சொல்லும் ஜப்பானிய நூலான கொஜிகி’யில்  (Kojiki)  ஜப்பானிய மதுவகைகள் பட்டியலிடப்பட்டு இருந்தன.ஸாகே வகை அரிசி மதுவின் பிறப்பு குறித்த துல்லியமான விவரங்கள் இதிலும் இல்லையெனினும், அரிசி, நீர், ஈஸ்ட் மற்றும் கோஜி எனப்படும் அஸ்பர்ஜில்லஸ் ஒரைஸே என்னும் பூஞ்சை வகையும் கொண்டு தயாரிக்கப்படும் ஸாகே, நரா வம்ச ஆட்சியின் போது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஜப்பானில் நம்பப்படுகிறது.(Nara period – 710–794).

மடங்களிலும் அரண்மனைக் கோவில்களிலும் சடங்குகளின் போது அருந்தவென ஸாகே தயாரிக்கப்படத்துவங்கிய 10 ம் நூற்றாண்டு வரை இந்த மது ஜப்பானிய அரசால் மட்டுமே தயாரிக்கப் பட்டுக்கொண்டிருந்தது.  தொடர்ந்த 500 வருடங்களில்தான் மெல்ல மெல்ல  இன்றைய தெளிந்த நீர் போன்ற  வடிவத்துக்கு இது வந்து சேர்ந்திருக்கிறது. பண்டைய ஜப்பானிய ஸாகே குறைந்த ஆல்கஹால் அளவுடன் அடர்த்தியான மஞ்சள் நிற திரவமாக இருந்தது 

காய்ச்சி வடிகட்டும் தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வந்த 16ம் நூற்றாண்டில் ஜப்பானின் ரூகியூ (Ryukyu) பிரதேசத்தில் வடித்தெடுக்கபட்ட சோச்சு (shōchū )  எனப்பட்ட எரிசாராய வகைகளான கோமே அரிசி மது, முகி பார்லி மது, சட்ஸுமா இமோ சர்க்கரவள்ளி கிழங்கு மது, சோபா கோதுமை மது மற்றும் கொகுட்டொ எனப்படும் கரும்பு சர்க்கரை மது ஆகியவை காய்ச்சி வடிகட்டி உருவாக்கப்பட்டன. (kome, mugi, satsuma-imo,soba, kokutō), 

அப்போது எள், உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டிலிருந்தும் கூட  மதுவகைகள் அங்கு உருவாக்கப்பட்டன. இவற்றின் சராசரி ஆல்கஹால் அளவு 25 சதவீதம் இருந்தது. 17 லிருந்து 19 ம் நூற்றாண்டு வரை ஜப்பானின் பிரதான தொழி்ல்களில் ஒன்றாக ஸாகே உற்பத்தி இருந்தது. ஸாகே ஜப்பானின் தேசிய பானமும் கூட.

ஸாகே மதுவகைகள் புழக்கத்தில் வந்து பிரபலமான போது வசதி இருந்த அனைவருமே தங்களுக்கென சொந்த வடிசாலையை உருவாக்கி கொண்டனர். அப்போது சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வடிசாலைகள் அப்பகுதியில் மட்டும் செயல்பட்டன. தாமதமான விழித்துக்கொண்ட அரசு தனியார் வடிசாலைகளுக்கு  வரி விதித்த பின்னர் அவற்றின் எண்ணிக்கை 8 ஆயிரமாக குறைந்தது.

மெல்ல மெல்ல பிற வகைகளின் தயாரிப்பும் அவற்றின் மீதான விருப்பமும் குறைந்து அரிசி மதுவே ஜப்பானின் பிரியத்துக்குரியதானது.  20’ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஸாகே பாரம்பரிய தயாரிப்பு முறைகளிலிருந்து வெகு தூரம் விலகி வந்திருந்தது. குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டும் பலநூறு வருடங்கள் தொன்மையான முறையில்தை உருவாக்கினர் என்றாலும் ஸாகே நவீன வடிசாலைகளில்தான் பிரதானமாக தயாரானது.

அரிசி பற்றாக்குறை நிலவிய முதல் உலகப்போரின் போது ஸாகே உற்பத்தியும் வெகுவாக குறைந்தது. போருக்கு பின்னர் மீண்டும் புத்துயிர் பெற்ற ஸாகேவுடன் பிற மது வகைகளான பியர் வைன் போன்றவைகளும் பிரபலமாக இருந்தது. முதலும் கடைசியுமாக 1960ல் ஸாகேவை காட்டிலும் அதிகமாக  பியர்  அருந்தப் பட்டது. அதன் பின்னர் எப்போதும் முதலிடத்தில் ஸாகேதான் இருக்கிறது. ஜப்பானில் இப்போது சுமார் 20000 ஸாகே வடிசாலைகள் இருக்கின்றன. வீடுகளில் சிறிய அளவில் ஸாகே தயாரிப்பதை ஜப்பானிய அரசு 1904–1905ல் தடைசெய்தது. அந்த தடை இன்றும் நீடிக்கிறது.

இடுபொருட்கள்

ஸாகே தயாரிப்பில் மிக முக்கியமான நான்கு இடுபொருட்கள்:

  1. புரதம் குறைவான அரிசி,
  2.  குறிப்பிட்ட சத்துக்கள் கொண்டுள்ள சுவையான நீர்
  3. அஸ்பெர்ஜில்லஸ் ஒரைஸே எனப்படும் கோஜி பூஞ்சை
  4. தேர்ந்தெடுக்கப்பட்ட ஈஸ்ட்.

இந்த நான்குமே மிகத் தரமானதாக இருப்பது அவசியம் 

அரிசி ரகங்கள்

உலக மக்கள் தொகையில் சரிபாதியினரின் உணவுத்தேவையை நிறைவேற்றும் ஆசிய அரிசியான ஒரைஸா சட்டைவாவின்  ஏராளமான வகைகளில் முதன்மையானவை இந்தியாவின் Oryza sativa subsp.indica  மற்றும் ஜப்பானில் உபயோகப்படுத்தப்படும் இருவகைகளான Oryza sativa subsp. japonica  மற்றும் Oryza sativa subsp.javanica ஆகிய மூன்று. 

இந்திய வகை  அரிசி மணி நீளமாக  அமைலோஸ் என்னும் மாவுச்சத்துடன் பசைத்தன்மை குறைவாகவும், ஜப்பானிய வகை குட்டையாக அதிக பசைத்தன்மைடனும் இருக்கும். சாப்ஸ்டிக்குகள் எனப்படும் உணவுக்குச்சிகளில் எடுத்து சாப்பிட  அமைலோ பெக்டின் எனப்படும் மாவுச்சத்து அதிகம் இருக்கும், பசையுள்ள அரிசி வகைகளே ஜப்பானிய உணவுக் கலாச்சாரத்துக்கு ஏற்றவை. ஜவானிக்கா வகை  ஜப்பானின் வறண்ட நிலப்பகுதிகளில் மட்டும் பயிராகிறது.    

ஜப்பானிய அரிசி வகை சுமார் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய சீனாவின் யாங்ஸி ஆற்றுபடுகையில் பயிராகியது. அங்கிருந்து ஜப்பானுக்கு அறிமுகமான இந்த வகை அரிசி இன்று வரை ஜப்பானின் முதன்மை உணவுப்பயிராக இருந்து வருகிறது. அரிசி ஜப்பானுக்கு அறிமுகமானபோதிலிருந்தே அரிசி மதுவும் தோன்றியிருக்கக் கூடும்

1951லிருந்து உணவுத் தேவைக்கான ஷின்பாகுமாய் (shinpakumai)  அரிசியிலிருந்து  வேறுபட்ட, ஸாகே தயாரிப்பிற்கு உதவும் பிரத்தியேக அரிசி வகைகள் பயிராக்கப்பட்டன இந்த அரிசி வகை ’’ஸாகே மது உருவாக்க பயன்படும்’’ என்று பொருள் படும் ’’shuzo kotekimai’’ என்றழைக்கப்பட்டன. jozoyo genmai என்னும்’’ பட்டை தீட்டப்படாதா ஸாகே விற்கான வகை’’ என்றும் இவற்றிற்கு பெயருண்டு.

1998 ல் ஜப்பானிய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் “Hatsushizuku” என்னும் புதிய மேம்படுத்தப்பட்ட ஸாகே மதுவுக்கான அரிசி  வகை ஒன்றை உருவாக்கியது இவற்றின் மூன்று முக்கிய ரகங்கள் ஜின்பு, சுய்செய் மற்றும் கிடாஷிஜுகு ஆகியவை (Ginpu, Suisei &  Kitashizuku). 90  வகையான ஸாகே அரிசி ரகங்கள் ஜப்பானில் மட்டும்  சாகுபடியாகிறது.

அரிசியில் எவ்வளவு குறைவாக புரதம் இருக்கிறதோ அத்தனை அதிக தரத்துடன் ஸாகே கிடைக்கும் என்பதால் அரிசி ரகங்கள் ஸாகேவிற்கென உருவாக்கப்படுகையில் புரத அளவும் மிக முக்கியமாக கவனிக்கப்படும்

அரிசியின் கண் எனப்படும் மத்தியில் இருக்கும் ஷின்பாகு (shinpaku)  வெள்ளை திட்டு இந்த வகை அரிசிகளில் பெரியதாக இருக்கும். ஸாகே வுக்கான அரிசியை தேர்ந்தெடுக்கையில் இந்த வெள்ளைத்திட்டின் அளவு சதவீதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கப்படும்.

வடிசாலைகளில்  மாவுச்சத்து நிரம்பிய இந்த வெள்ளைத்திட்டை செல்லமாக கண்மணி என்னும் பொருளில் மென்டாமா (mentama) என்பார்கள்.  கோஜி பூஞ்சைகள் இந்த கண்மணியின் வழியாக எளிதில் அரிசியை ஊடுருவும் என்பதால் ஸாகே அரிசி வகைகளில் இது மிக இன்றியமையாததாக கருதப்படுகிறது

அதிக வெள்ளைத்திட்டு, கூடுதல் பசைத்தன்மை, குறைந்த புரதம் ஆகியவை மதுவிற்கான அரிசியின் விரும்பத்தக்க இயல்புகளாக கருதப்படுகின்றன

அரிசியின் அளவில் ஏறக்குறைய பாதி அளவுக்கு வெள்ளை திட்டுக்கள் கொண்ட Yamada nishiki  என்னும் ரகமே ஸாகே மதுவுக்கான உயர் ரகமாக ஜப்பானில்  கருதப்படுகிறது.

ஸாகே உற்பத்தியாளர்கள் விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அரிசியின் எடைக்கு விலையென்றில்லாமல் குறிப்பிட்ட அளவிலான நிலப்பரப்புக்கு குத்தகையைப்போல விலை பேசிக்கொள்கிறார்கள். எனவே இயற்கை சீற்றங்களினால் விளைச்சல் பாதிக்கப்பட்டாலும் விவசாயிகளுக்கு நஷ்டம் உண்டாவதில்லை. அனைத்து ஜப்பாய விவசாயிகளும் ஸாகே மதுச்சாலைகளுக்கு அரிசியை கொடுப்பதை பெரும் கெளரவமாக கருதி விளைச்சலை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கின்றனர்.

அரிசியின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை மற்றும் அரிசியின் வெளிப்புறம் கடினமாகவும் உட்புறம் மிருதுவாகவும் இருப்பதும் மது தயாரிப்பில் மிக முக்கியம் .

நீர்

A diorama of Fushimi’s waterways
fushimi யின் நீர் வழிகள்

ஜப்பானின் ஏழு பெரிய நகரங்களிலொன்றான கோபெ’யின் கிரானைட் படுகைகள் வழியே பாயும் ஆற்று நீர்தான் ஸாகே உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாகவும் இரும்புச்சத்து குறைவாகவும் உள்ள இந்த ஆற்று நீரில் ஸாகே தயாரிப்பின் உபயோகம். 1830-44 ல்  கண்டறியப்பட்டது.  ஃபுஷிமி பகுதியில் (Fushimi) மட்டும் கிடைக்கும் தூய மிகச்சுவையான இயற்கை ஊற்று நீரும் பயன்படுகிறது. 

கோஜி பூஞ்சை

ஸாகே உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் அஸ்பெர்ஜில்லஸ் ஒரைஸே என்னும்  கோஜி பூஞ்சை ஜப்பானின் தேசிய பூஞ்சை என்னும் அந்தஸ்தை பெற்றிருக்கிறது

சோயா சாஸ், மிஸோ மற்றும் வினிகர் தயாரிப்பிலும் பங்காற்றும் இந்த பூஞ்சை நொதித்தலில் ஈஸ்டுகள் பயன்பாட்டுக்கு முன்னர்  1333- 1573 ல் முராமாச்சி காலத்திலிருந்தே  சந்தைப்படுத்த பட்டிருந்தது.  ஈஸ்டு்களால் அரிசியின் சர்க்கரை சத்துகளை நேரடியாக ஆல்கஹாலாக மாற்ற முடியாது அதன்பொருட்டு ஈஸ்டுகளுக்கு தேவைப்படும் என்ஸைம்களை கோஜி பூஞ்சை அளிக்கிறது இவ்விரண்டு பூஞ்சைகளின் புரிதலில் ஸாகே மது உருவாகிறது. 

ஈஸ்டு

ஈஸ்டுகளின்  30 க்கும் மேற்பட்ட பல வகைகள் ஸாகே தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகின்றன. 1893 ல் கிகுஜி யபே என்னும் ஸய்மாலஜிஸ்ட் (நொதித்தலில் ஈஸ்டுகளின் பங்கைக்குறித்த சிறப்பு துறையான ஸய்மாலஜியில் வல்லுநர்-zymology) பிரித்தெடுத்த ஈஸ்ட் வகை 1895 லிருந்து  அவரது பெயராலேயே  Saccharomyces sake Yabe  என வழங்கப்பட்டது . இந்த வகை ஈஸ்டுகளும் பரவலாக ஸாகே தயாரிப்பில் பங்களிக்கிறது .

 தயாரிப்பு

 புத்தம் புதிதாக வேகவைக்கப்பட்ட மதுவிற்கான பிரெத்யேக   அரிசியின் மாவுச்சத்து சர்க்கரையாக நொதித்து பின்னர் ஆல்கஹாலாக மாறி ஸாகே உருவாகிறது

தேர்ந்தெடுக்கப்பட்ட அரிசி உமி தவிடு நீக்கி சுத்தமாக்கப்பட்டு நீரில் ஊற வைக்கப்படுகிறது. ஊற வைத்த அரிசி (உணவுகான அரிசியைப்போல நீரில் வேகவைக்கப்படாமல்) நீராவில் வேக வைக்கப்படுகிறது. நீராவியில் வேகவைத்த அரிசியின் மேற்புறம் கடினமாகவும் உட்பகுதி மென்மையாகவும் இருக்கும். அந்தப் பதமுள்ள அரிசியிலிருதே நல்ல தரமான ஸாகே உருவாக்கப்படும்

வேகவைக்கப்பட்ட குழைந்த அரிசி நன்கு பரத்தப்பட்டு கைகளால் பிசைந்தும் உதிர்த்தும் கட்டிகளின்றி சீராக்கப்பட்டு பின்னர் குளிர்ந்த காற்றில் உலர செய்யப்படுகிறது

 பின்னர்  இவை கோஜி எனப்படும் அஸ்பர்ஜில்லஸ் பூஞ்சையின் ஸ்போர்கள் தூவப்படும் அறைக்கு கொண்டு செல்லப்படும். சுமார் 48 மணி நேரம் எடுக்கும் இந்த ஸ்போர் தெளித்தல் , கிருமிகளை அழிக்கும் இயற்கை பிசின் கொண்டிருக்கும் செடார் மரப்பலகைகளால் ஆன கோஜி முரோ என்னும் (koji muro)  அறையில் நடைபெறும். இவ்வறையின் வெப்பம் எப்பொதும் கோஜிக்கு தேவையான் 30 -32 டிகிரியில் இருக்கும் இந்த அஸ்பர்ஜில்லஸ் பூஞ்சைதான்  வேகவைத்த அரிசியின் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றி ஸாகே திரவத்திற்கு பனிவெண்மையை அளித்து இனிப்பு சுவையும் நறுமணத்தையும் அளிக்கிறது.

 குளிர்ந்த ஊற்று நீரில் பிசையப்பட்ட கோஜி ஸ்போர்கள் கலந்த அரிசி டொகோ எனப்படும் நீண்ட மேசைகளில் விரிக்கப்பட்டிருக்கும் துணியில்  கொட்டப்பட்டு  குளிரவைக்க படுகின்றது. பின்னர் இக்கலவை  ஈஸ்டுடன் கலக்கப்பட்டு பெரும் கொள்கலன்களில் கொட்டப்படும். மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த நொதித்தலின் போது மூன்று முறை இந்த கலங்கள் நிறைக்கப்பட்டு வேறு கலன்களுக்கு மாற்றப்படும். 21 நாட்கள் மூன்று கட்டங்களாக நடைபெறும் நொதித்தலின் போது அரிசியின் சர்க்கரைச்சத்தை ஆல்கஹாலாக ஈஸ்டுகள் மாற்றுகின்றன இப்போது கிடைக்கும் கலங்கலான மரொமி  (moromi) என்னும் திரவம் பெரும் மரத்துடுப்புக்களால் அடிக்கடி கிளறிவிடப்படும். ஒவ்வொருநாளின் இறுதியிலும் இத்திரவத்தின் அமில மற்றும் ஆல்கஹால் அளவுகள் கணக்கிடப்படும்

தேர்ந்த ஸாகே வல்லுநர்களால் கவனமாக கண்காணிக்கப்படும்  இந்த மரொமி முதிர்ந்தவுடன் துணிப்பைகளில் சேகரிக்கப்பட்டு மரக்கட்டைகளால் அழுத்தி முதல் கட்ட ஸாகேவான “arabashiri.” பிரித்தெடுக்கபடுகிறது.     நவீன வடிசாலைகளில் யபுட்டா  (yabuta0 எனப்படும் இயந்திரங்கள் கொண்டும் இது அழுத்தப்படுகிறது

Hiire எனப்படும் வெப்பமூட்டுதல் முறையில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட  இறுதி ஸாகே கோ(go) எனப்படும் தொல் அளவை முறையில் அளக்கப்பட்டு கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்படுகிறது. (6 அவுன்சுகள் ஒரு கோ)

1, 2, 4 அல்லது 10 கோ அளவுகள் கொண்ட ஸாகே மது பாட்டில்களில் அடைக்கப்படுகிறது. (180 mL (1 go), 360 ml (2 go), 720 mL (4 go), 1800 mL (10 go,)

ஸாகே உருவாக்கம் மொத்தம் 45 லிருந்து 60 நாட்களுக்கும் முடிந்துவிடும். உருவானதிலிருந்து 1 வருடத்திற்குள் ஸாகே அருந்தப்படவேண்டும் பிற மதுவகைகளைப்போல பழமையாக்குதல் ஸாகேவின் தரத்தை உயர்த்துவதில்லை. ஸாகே’யின் ஆல்கஹால்அளவு 15  லிருந்து 20  சதவீதம் இருக்கும். தோராயமாக  800 கிராம் அரிசியிலிருந்து 720 மி லி ஸாகே கிடைக்கிறது.

ஸாகே தயாரிப்பு துவங்குகையில் செடார் மரங்களின் இளம் இலைகளை கொண்டு sugidama எனப்படும் ஒரு பந்து உருவாக்கப்பட்டு வடிசாலைகளின் முகப்பில் தொங்கவிடப்படுகிறது. ஸாகே உருவாகி முடியும்போது  செடார் இலைப்பந்து உலர்ந்து வடிசாலை வழியே செல்வோருக்கு  ஸாகே தயாராகி விட்டது  என்பதை அறிவித்துவிடும்.

ஸாகே மதுபானம் மட்டுமல்லாது பாரம்பரிய ஜப்பனிய சமையலிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.  நொதிக்க வைத்த அவரை விதை விழுது,  (miso) சோயா சாஸ் மற்றும் கடற்பாசி மீன் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படும் ஜப்பனிய டாஷி (dashi)  ஆகியவற்றுடன் நான்காவதாக ஸாகே ஜப்பனியர்களின் பாரம்பரிய உணவுகளில் மிக முக்கியமானது. ஸாகே அசைவ உணவுகளின் இறைச்சி நெடியை வெகுவாக குறைந்து விடுவதால் அதிகம் அசைவ உணவுகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.

வகைகள்

ஸாகேவின் இரு முக்கிய வகைகளில் ஒன்றான Jozo-shu வில் நொதித்தலுக்கு பிறகும்  கூடுதலாக  ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கும். மற்றொரு வகையான  junmai-shu வில் நொதித்தலின் போது உருவாகும் ஆல்கஹால் மட்டுமே இருக்கும். 

Kijo shu எனப்படும் ஸாகே பெண்களுக்கான பிரத்யேக வகை. சாதாரணமாக ஸாகே தயாரிப்பில் 100 கிலோ அரிசிக்கு 130 லிட்டர் நீர் தேவைப் படும் கிஜோ ஷூ தயாரிக்கு 100 கிலோ அரிசிக்கு 60 லிட்டர் நீர் மட்டுமே உபயோகப்படுத்தபடுகிறது

கிகிசோக்கொ (Kikichoko) எனப்படும் அடிப்புறத்தில் இரு நீல வளையங்கள் கொண்டிருக்க்கும்  பீங்கான் கோப்பையில் தான் ஸாகே வல்லுநர்கள் மதுவின் தரத்தை  நிர்ணயிப்பார்கள்.

அருந்தும் முறை

டோக்குரி என்னும் கழுத்து நீண்ட கண்ணாடிக் குடுவையில் ஸாகே நிரப்பப்பட்டிருக்கும் அதனுள்ளே அமிழ்ந்திருக்கும் சின்னஞ்சிறு சாடியில் நிறைந்திருக்கும் ஐஸ் துண்டங்கள்  ஸாகேவை குளிர்விக்கும்.

ஜப்பனிய சைப்ரஸ் மரங்களிலிருந்து செய்யப்படும் சிறு சதுர மரப்பெட்டியான மாஸு (Masu) ஸாகே தயாரிக்கையில்  அரிசியை அளக்க பயன்படுத்தபடுவது.  ஜப்பானிய பழங்குடியினர் அந்த பெட்டியின் ஓரத்தில் சிறிது உப்பை தடவி அதில் ஸாகே ஊற்றி அருந்துவார்கள். அதிமுக்கியமான விருந்தினர்களுக்கு ஸாகே பரிமாறுகையில் கோப்பையை மரப்பெட்டியில் வைத்து அதில் நிரம்பி வழியும்படி ஸாகே ஊற்றுவதும் மரபு. மாஸு ஒரு சம்பிரதாயத்துக்காக ஸாகே பரிமாறப் படுகையில் மேசையில் வைக்கப்படுவதும் உண்டு

அருந்து முன்பு ஸாகே டோக்கிரி (tokkuri)  என்னும் பீங்கான பானைகளில்  சூடாக்கப்பட்டு வெதுவெதுப்பாகவும்  அருந்தப்படும் ஸாகேவிற்கென  கன்ஜாகே (kanzake) என்னும் பிரத்யேக பெயருமுண்டு. 108 லிருந்து 122 டிகிரி வரை மட்டுமே சூடாக்காப்படும் ஸாகேவின் ஆல்கஹால் விரைவில் ரத்தத்தில் கலந்துவிடும் மேலும் மனம் மயக்கும் அரிசியின்  நறுமணமும் கொண்டிருக்கும். ஸாகேவிற்கான ஒசொகோ கிண்ணங்கள் ஜோடியாக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது

பிற பெயர்கள்

மனைவியே அன்னையாகவும் காதலியாகவும் களித்தோழியாகவும் இருப்பதைபோல் ஸாகே ஒவ்வொரு தருணங்களிலும் சிறப்பான பெயர்களை கொண்டிருக்கும் 

  • ஹனமி மலர் கொண்டாட்டங்களின் போது சகுரா மரங்களினடியில் அருந்துகையில் இதன் பெயர் ஹனமி ஜாகே ( Hanami Zake)
  • புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர்  உறவு நிலைப்படுதற்கான உறுதிமொழிகளுடன் ஸாகே மதுக்கோப்பைகளை  கை மாற்றிக்கொண்டு அருந்துகையில்  இதன் பெயர் டோஸோ (Toso)
  • இலையுதிர்கால முழுநிலவு நாளில் அருந்துகையில் இது  ஸுகிமி ஜாகேT(sukimi Zake)
  • பொழியும் பனியை ரசித்துக்கொண்டே வீட்டுக்குள் இருந்து அருந்துகையில் இது  யுகிமி ஜாகே (Yukimi Zake) 
  • ஸாகேவில் மூலிகைகள் கலந்து புத்தாண்டில் அனைவரும் உடல்நலனுடன் இருக்க அருந்துகையில் அது  ஓ டோஸோ (o-toso)

மெக்ஸிகோவில் மட்டுமே டெக்கீலா தயாரிக்கப்படும் என்பது போன்ற விதிகள் எல்லாம் ஸாகே’விற்கில்லை உலகின் பல பாகங்களிலும் ஸாகே தயாரிக்கப்படுகின்றது.

நூதன முயற்சிகள்

ஃபுகுஷிமா பகுதியை சேர்ந்த ஸாகே தயாரிப்பாளர் ஒருவர் தனது வடிசாலையில் மொசார்ட்டின் இசைக்கோவையை  ஒரு குறிப்பிட்ட ஒலி அளவில் எப்போதும் ஒலிக்கச் செய்கிறார். நொதித்தலில் ஈடுபட்டிருக்கும் ஈஸ்டுகள் இந்த இசையினால் தூண்டப்பட்டு குறைந்த கசப்புச்சுவையும் நல்ல தரமும் கொண்ட ஸாகேவை உருவாக்குகிறதென்று நம்பும் அவரின் இந்த நூதன முயற்சியும், இசையறிந்த ஈஸ்ட்டுகளால் உருவாகும் ஸாகேவும்  ஜப்பானெங்கும்  புகழ்பெற்றிருக்கிறது

கியோட்டொவின் கிழக்கு பகுதியை சேர்ந்த ஸாகே உற்பத்தியாளர் ஒருவர் பொதுவாக நொதித்தலில் உபயோகப்படும் ஈஸ்டுகளை தவிர்த்துவிட்டு அடுக்கு செர்ரி மலர்களின் இதழ்களில் இருந்து  தானே கண்டறிந்த  ஈஸ்டுகளை மட்டும் பயன்படுத்தி ஸாகே தயாரிக்கிறார் செர்ரி மலர்கள் மட்டுமல்லாது ரோடோடென்ரான் மற்றும் பெகொனியா மலர்களின் இதழ்களின் ஈஸ்டுகளை இப்படி முயற்சிப்பவர்களும் ஜப்பானில் இருக்கிறார்கள் .

ஜப்பானின் கோச்சி பகுதியில் விண்வெளி ஸாகே (Space Sake) வகை புதிதாக உருவாகி கவனம் ஈர்த்துள்ளது. ரஷ்ய விண்கலம் ஒன்றின் மூலம் விண்வெளிக்கெடுத்துச் செல்லப்பட்டு 8 நாட்கள் விண்வெளியில் இருந்த ஈஸ்ட் வகையிலிருந்து உருவான ஈஸ்டுகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த விண்வெளி ஸாகே  பலரின் பிரியதுக்குரியதாக  விற்பனையாகின்றது 

2013ல், 15 ஸாகே உற்பத்தியாளர்கள் ஒண்றிணைந்து ஸாகே பாட்டில்களை கடலுக்கு அடியில் இருக்கும் கம்பிக்கூண்டிற்குள் வைத்து 6 மாதங்கள் பழமையடைய செய்கிறார்கள் . இம்முயற்சியும் கவனம் பெற்று வருகிறது

ஜப்பானில் ஸாகே

 Hakutsuru Sake Brewery Museum —  ஜப்பானில் ஒரு பழைய ஸாகே வடிசாலையை ஸாகே அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறார்கள். தொன்மையான  ஸாகே மது நொதித்த செடார் மரத்தொட்டிகளிலிருந்து ஸாகே அரிசி ரகங்கள் வரை  காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இங்கு ஸாகே உருவாக்கும் படிநிலைகள் அனைத்தும் புகைப்படங்களுடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் புத்தம் புதிதாக ஸாகே சுவைத்துப்பார்க்கவும்  அளிக்கப்படுகிறது. ஆளுயர பொம்மைகள் ஸாகே தயாரிப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும், ஸாகே தயாரிப்பின் காணொளிகளும் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது

இன்னும் சில நாட்களில் அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று ஜப்பானில் ஸாகே நாள் கொண்டாடப்படும். அக்டோபரில்  நெல்அறுவடை முடிந்திருக்குமாதலால், அக்டோபர் முதள் நாளில் அரிசி மதுவுக்கான கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறும். 1978லிருந்து ஜப்பானில் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ல ஸாகே பிரியர்களும் இந்நாளை கொண்டாடுவார்கள்.   

ஸாகே ஜப்பனியர்களின் அனைத்து சடங்குகளிலும் இடம்பெற்றிருக்கும்  . புதிதாக வீடு கட்டும் போது நிலத்தில் ஸாகேவை ஊற்றி அதை கடவுளுக்கு அளித்துவிட்டு பின்னர்  பூஜைகள் நடைபெறும். ஸாகே வடிசாலைகள் அனைத்திலும் சிறிய பூஜை அறை இருக்கும். அன்றாடம் ஸாகேவை சிறு கிண்ணங்களில் கடவுளுக்கு படைக்தபின்னரே வடிசாலை பணிகள் துவங்கும்.

 நமது திருமணங்களில் மாலை மாற்றிக்கொள்வதைப்போலவே  ஜபபானிய திருமணங்களில் மணமக்கள்  மூன்று முறை மூன்று கிண்ணங்களில் இருக்கும் ஸாகேவை  மாறி மாறி அருந்துவது வழக்கம். இந்த சடங்கு  san-san-ku-do அதாவது ’மூன்று -மூன்று- ஒன்பது- ஒன்பது முறை’ என்று அழைக்கப்படும். ஒவ்வொரு கோப்பையிலிருந்தும் மூன்று முறை ஸாகேவை அருந்தி இனி அவர்கள் கணவனும் மனைவியும் என்று பிறருக்கு அறிவிப்பார்கள்.

அலுவலகங்களிலும் குடும்ப நிகழ்வுகளும் உறவை வலுவாக்க அடிக்கடி ஸாகே விருந்துகள் ஏற்படுத்தப்படும். ஜப்பானிலும் சமுதாய அடுக்குகள் பல இருக்கின்றன எனினும விருந்துகளில் அந்த ஏற்றத்தாழ்வுகளை ஸாகே கரைத்தழித்துவிடும், அங்கு யாரும் யாருக்கும் மதுவை பரிமாறி மகிழலாம்.

ஸாகே பீப்பாய்களின் மரமூடிகளை திறக்கும் சடங்கு Kagami-biraki, எனப்படும் கண்ணாடி பதித்திருக்கும் இந்த பீப்பாய் மூடிகளை திறந்து அனைவரும் ஸாகேவை அருந்துவது உறவை பலப்படுத்தும் என்றும் நல்ல ஆரோக்கியத்தை அருந்தும் அனைவருக்கும் அளிக்கும் என நம்பப்படுகிறது.

ஜப்பானின் தேசிய வரி நிறுவனம் கொரோனா தொற்றுக்கு பிறகு ஜப்பானிய இளைஞர்கள் ஸாகே மதுவை குடிப்பது மிக குறைவாகிவிட்டதால்’ sake viva‘ என்னும் பிரச்சாரத்தை துவங்கி மதுவை இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் புதிய யோசனைகளை தெரிவிப்போருக்கு  பரிசுகளை அறிவித்திருக்கிறது.1 உலகின் பிற நாடுகளின் விமர்சனங்களை ஜப்பானிய அரசு இதன்பொருட்டு சந்தித்துக்கொண்டிருப்பினும், இதற்கான  யோசனைகளும் குவிந்துவருகின்றன.

ஜப்பானில் கடவுளர்க்கும் மனிதர்களுக்கும் இடையேயான ஊடகமாகவும்  ஏற்றத்தாழ்வுகளை கடந்து மனிதர்களும் ஒன்றிணைக்கும் பாலமாகவும்  ஸாகே இருக்கிறது. மதுவினால் சீரழியும் குடும்பங்கள் பல்லாயிரக்கக்கில் இருக்கும் இந்தியாவிலிருந்து கொண்டு உறவுகளை பலப்படுத்தும் ஜப்பானிய மதுவகை ஒன்றை அறிந்துகொள்வது வேறுபட்ட அனுபவமாக இருக்கிறது.

ஜப்பானிய தேநீர் சடங்கை போலவே ஸாகே அருந்துவதும் ஒரு சிறப்பான சடங்குதான். 18 ம் நூற்றாண்டில் ஸாகே சடங்குகள் குறித்த விரிவான் நூலகள் வெளியாகின.  இன்றும் ஸாகே விருந்துகளில் ஒடுக்கு நெறிகள் மறற்றும் செலுத்துநெறிகள் கற்றுத்தரப்படுகின்றன. அவற்றை விரிவாக அறிந்துகொள்ள;  Basic Sake Etiquette | JSS (japansake.or.jp) 

‘ஸாகேவின் பிறப்பு’ ஆவணப்படத்தின் சில காட்சிகள்.https://www.pbs.org/video/pov-birth-sake-craft-making-sake/

  1. https://whiskeyraiders.com/article/japanese-government-backlash-encouraging-young-people-drink-booze/
« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑