அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

Page 8 of 35

கடவுள் பிசாசு நிலம்

2022 விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் ஒன்றில்தான்  முதன்முதலில் அகர முதல்வனை கண்டேன். அதற்கு  முன்பு அவரைச் சந்தித்ததில்லை.  ஈர நெற்றியில் திருநீற்றுப் பட்டை துலங்க, நெஞ்சு நிமிர்த்தி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். தொடர் கேள்விகளுக்கு அசராத தெளிவான எதிர்வினைகள், இலங்கை என்று சொல்லப்பட்ட போதெல்லாம், ஈழம்  என்ற கறாரான திருத்தல்கள்,   பொருத்தமான இடங்களில்  சைவத்திருமுறைகளின் கம்பீர முழக்கங்கள், போருக்கு எதிரானவன் என்பதை சொல்லுகையில்  குரலில் இருந்த அழுத்தம் என அந்த அமர்வு முடிகையில் அகரமுதல்வனின் மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது.  அதன்பிறகு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன்.

அவருக்கு என்னை கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற தூரன் விருது விழாவிலேயே தெரிந்திருக்கிறது

முன்பு எப்போதோ ஒரு புலம்பெயர் இலக்கியமொன்றிலிருந்த  பல கவிதைகளில் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ எனும் ஒரு வரி என்னை பல காலம் இம்சித்தது. அந்த உணர்வை, அந்த பிரிவின் வலியை, தாய் மண்ணை, அதிலிருக்கும் தாவரங்களை சொந்த பந்தங்களை,  பிரிவதென்பதின் பெருவலியை அந்த வரி எனக்கு சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தது.

திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து 6 வருடங்கள் கொழும்புவில் வசிக்க நேர்ந்த போது நான் கண்ட இலங்கையில் போர்ச்சூழல் தீவிரமாக இருந்தது எனினும் பாதுகாப்பான பகுதியில் இருந்ததால் அதன் குரூரங்கள் எனக்கு முழுக்க தெரிந்திருக்கவில்லை. செய்தித்தாள்கள், பிற ஊடகங்கள் செவிவழிச் செய்திகள் அளித்தவற்றையே உண்மை என கருதினேன்.அவ்வப்போது வேவு விமானங்கள் பருந்தைப்போல வட்டமிடுவதை பார்க்க முடிந்தது.

பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்திருந்தது. ஒரு சுருள் கருவாப்பட்டை வாங்கியபோது அதன் விலை எனக்கு அதிர்ச்சி அளித்தது, ஏன் அத்தனை அதிக விலை? என்று அந்த சிறு கடைக்கரரிடம் கேட்டபோது ’’எல்லாம் போரால்’’ என்றார்.

கொழும்பு வீட்டிற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்லும் வழியெங்கும் ராணுவ வீரர்கள் மணல்மூட்டை தடுப்புக்கு பின்னால் துப்பாக்கி ஏந்தியபடி நின்றிருப்பார்கள். விசேஷ நாட்களில் வெண் தாமரைகளுடன் புத்தர் ஆலயங்களுக்கு செல்லும் வழியிலும், வீட்டருகிலும் கடைவீதியிலும் எங்கும் ராணுவம் இருந்தது. ஒருமுறை கடைவீதியில் இருந்து வீடு செல்லும் வழியில்  அப்படி ஒரு மணல்மூட்டை தடுப்பின் பின்னர் இருந்த கம்பிவேலி ஒன்றில் செங்காந்தள் கொடி அடர்ந்து படர்ந்து ஏராளமாக மலர்ந்திருந்தது. வழக்கமாக தாவரங்களை கண்டால் உண்டாகும் குதூகலத்துடன் ’’காந்தள் மலர்’’ என்று உரக்க சொல்லி அதை பறிக்க சென்றபோது கடுமையாக குடும்பத்தாரால் கண்டிக்கப்பட்டு வீட்டுக்கு ஏறக்குறைய இழுத்து வரப்பட்டேன். ஒரு மலரின் பெயரை சொல்லியது குற்றமாவென அன்று அது ஒரு பெரும் மனக்குறையாக இருந்தது.

சென்னை புத்தக விழாவில் வாங்கி வந்த சில முக்கிய புத்தகங்களில் அகரமுதல்வனின்  கடவுள் பிசாசு நிலமும் ஒன்று. அதை வாசிக்கையில்தான் அன்று அச்சூழலில் காந்தளின் பொருள் என்னவாயிருந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது. கண்டியின் அழகும், பேராதனை பல்கலைக்கழக தாவரவியல் தோட்டத்தின்  விரிவும், ரம்புட்டான் மரங்கள் அடர்ந்திருந்த அசங்க ராஜபக்‌ஷேவின் அழகிய வீடும், உதய தென்னக்கோனின் நாலுகட்டு வீட்டின் விசாலமும், மஞ்சுள ரணதுங்கவின் வீட்டின் விதைகளில்லா எலுமிச்சைகளும் எனக்கு அளித்திருந்த நிறைவையும் மகிழ்வையும் கடவுள் பிசாசு நிலம் முற்றிலுமாக துடைத்து அழித்ததோடில்லாமல் அக்காலகட்டத்தில் எனக்கிருந்த மகிழ்வை காட்டிலும் பல மடங்கு அதிக குற்ற உணர்வையும் அளிக்கிறது

அப்போதிருந்த இலங்கையின், யுத்தத்தின் உண்மை நிலவரமென்ன என்பதை இத்தனை காலம் கழித்து அகரன் மூலமாகத்தான் அறிந்து கொண்டிருக்கிறேன்

முதல் பக்கத்திலேயே //ஒரு பெருவேக அழிவுச் சூழலில் விழுந்து அதிலிருந்து பண்பு நலனால் அல்லாமல் நல்லூழ் காரணமாக மீண்டு வந்தவன்// என்னும் நாஜிகள் சித்திரவதைகளுக்கு உள்ளான இத்தலிய யூதரான  பிரைமோ லெவியின் வரிகள் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வரிகள் அகரனுகும் ஆதீரனுக்கும் முழுமையாக பொருந்துபவை.

போராளிகளுக்கு மரண வீட்டிலும் உணவளிக்கும்  அடைக்கல மாதாவான அன்னையர், வன்முறையை தவிர்க்க வேண்டும் என அன்றாடம் பிரார்த்தனையின் போது சொல்லும்  பள்ளி அதிபர், அம்புலி வளரும் இரவுகளில் சாமியாடி வாக்கு சொல்லும் பூட்டம்மா போன்ற பல வடிவங்களில் இருக்கும் கடவுளரையும்,  மது வெறியில் பைலா பாடல்களை கூச்சலிட்டு பாடிக்கொண்டு, கையறிகுண்டுகளை அப்பாவி சனங்களின் மண்டையோட்டுக்குள் எறியும், பல தந்திரங்கள் செய்து, அமைதி என்னும் போர்வைக்குள் பதுங்கி இருந்த, குருதி வெறி கொண்டிருக்கும் விலங்குகளா,ன அரசின் ஆர்மிக்கார பிசாசுகளையும், குருதியால் சிவந்து,ஓயாது அழுது துயர் புழுதி படிந்திருந்த நிலத்தையும் காணும், படிக்க போகாமல் ’’உந்த ஆர்மிக்காரங்களை கொழும்புக்கு அடிச்சு துரத்த போறேன்’’ என்று சொல்லும் பத்து வயது  ஆதிரனின்  கதையாக விரிகிறது கடவுள் பிசாசு நிலம்

ஒவ்வொரு வரியும் துயரிலும் குருதியிலும் தோய்ந்திருப்பினும் அவற்றையும் தாண்டி கொண்டு கவனிக்கச் செய்கிறது  நூலை உருவாக்கி இருக்கும் அழகு தமிழ் மொழி

போராளியான அண்ணன், வீட்டிற்கு வந்து போய் கொண்டிருக்கும் மற்றொரு போராளி மருதன், அவர் மீது நேசம் கொள்ளும் பின்னர் கால ஓட்டத்தில் போராளியாகும் அக்காள் என ஆதீரனுக்கு குடும்பமே இலங்கையின் போர்ச்சூழலை முழுக்க தெரிவித்துக் கொண்டிருக்கும் அமைப்பாக இருக்கிறது.

ஆர்மிக்காரங்களை எதிர்த்துப் பேசும், எப்போதும் வீடு தங்காமல் சுற்றித் திரிந்து கண்ணில் பட்டவை, காதில் கேட்டவைகளின் மூலம் நாட்டு நடப்பை மேலும் அறிந்து கொள்ளும் ஆதீரனுக்கு இயல்பாகவே போர்க்குணம் உருவாகிறது. போராளியாக வேண்டும் என்று துடிக்கும் ஆதீரனுக்கு அண்ணனின் கைத்துப்பாக்கியின் எதேச்சையான தீண்டல் வேட்கையின் குளிரை உண்டாக்குகின்றது.

பன்னிச்சையடி கிராமத்தின் அத்தனை பேருக்கும் ஆதரவாக, ஆறுதலாக, பற்றிக்கொள்ள பிடிப்பாக, தெய்வமாக இருக்கும் பன்னிச்சை மரமும் ஒருநாள் ஷெல்லடித்து சாம்பலாகிறது. அச்சாம்பலையும் நெற்றியிலிட்டு கொள்ளும் மக்களை, அவர்களின் மரபுகளை, வேர்களை,  வாழ்வின் இயங்கியலை, இடம் பெயருதலை, மரணங்களை, காதலை, நம்பிக்கைகளை, கனவுகளை காட்டுகிறது கடவுள் பிசாசு நிலம்

வாசகசாலைக்கு சென்று வாசிக்கும், போராளிகளோடு நட்பிலிருக்கும், மெல்ல வளர்ந்து வரும், போராளியாக வேண்டும் என ஒவ்வொரு கணமும் விரும்பும் ஆதீரன் பதின்மவயதில் காதல் கொள்கிறான்.

போரை, போராளிகளின் வாழ்வை, குருதியை, குப்பி கடித்தும், வெட்டியும் தூக்கிட்டும்,  கையறிகுண்டிலும் நிகழும் மரணங்களை போரின் துயர்களை, மேலும் பலகொடுமைகளை, இழப்பின் வலியை சொல்லும் அகரனும் அம்பிகையுடனான ஆதீரனின் காதலைச் சொல்லும் அகரனும் ஒரே ஆளுமை என்பதை சிரமப்பட்டுத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.

பிளவாளுமையாக இருந்தே அவற்றை அகரன்  எழுதியிருக்க முடியும். யுத்தத்தின்  தீவிரத்தை சொல்லும் வேகமும் உணர்வுபூர்வமும் காதலை சொல்லுகையில் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. அம்பிகாவிற்கும் ஆதீரனுக்குமான காதலை சொல்லுகையில் மற்றொரு அழகிய வடிவெடுத்து விடுகின்றது அகரனின் மொழி

தாகம் பெருகிய வழிப்போக்கனின் கையில் கிடைத்த செவ்விளநீர் போல காதல் ஆதீரனை கைகளில் ஏந்திக் கொள்கிறது பெண்ணின் கண் மொழியில் ஆயிரமிருக்கிறது ஆயுத எழுத்துக்கள் என்கிறான் ஆதீரன். கூழாங்கல் போல அடியாழத்தில் கிடந்து, பின்னர் மெல்ல மெல்ல ஒடும் நீரில் மேலேறி வரும் அம்பிகாவை காண்கையில் ஆதிரனுக்கு காதலைச்சொல்லவும் பொருத்தமாக சைவப்பாடல்களே தோன்றுகிறது. அப்பாடல்களை எல்லாம் அகரனின் கணீர் குரலிலேயே கேட்டேன்.

அம்பிகா எனும் கூழாங்கல்லை சுமந்து ஓடும் நதியாகிறான் ஆதீரன். அம்பிகா கூந்தலை சுழற்றுகையில் ஆதீரனின் ஞானத்தின் பசுந்தரையில் விதை வெடித்து செடி எழுகிறது.ஆதீரனால் முத்தமிடப்படும் அம்பிகா மேலும் வடிவு கொள்கிறாள்.

அம்பிகாவுடனான காதலை சொல்லும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு எழுத்தும் இனிப்பில் தோய்ந்திருக்கிறது. இந்த நூலில் அம்பிகா ஆதீரன் பகுதிகளை மட்டும் தனியே வாசிக்க வேண்டுமென்றிருக்கிறேன், நான் வாசித்த  ஆகச்சிறந்த காதல் கதைகளில் ஆதீரன் அம்பிகை கதையுமொன்று

உப்புக்காட்டில் நெடுவல் ராசனுடன் ஆதீரன் செல்லும் உடும்புவேட்டைகள் இதுவரை நான் வாசித்திராத தீவிரத்தன்மை கொண்டிருந்தன. அப்படியொரு வேட்டை குறித்து நான் முன்பெப்போதும் கேட்டிருந்ததுமில்லை

வெயிலில் காய்ந்து நாறும் உடும்பின் தோல்கள், அவற்றால் உருவாக்கப்படும் மேளம், காளி எழுந்து நின்றாடும் நெடுவல் ராசனின் தோள்கள், குப்பைத்தண்ணி வார்த்தல்,சமைந்த பெண்ணுக்கு அருந்த தரப்படும் கத்தரிக்காய் சாறு,  உடன் புக்கை,புட்டும் சொதியும் அப்பங்களும், முசுறு எறும்புகள், மரவள்ளிக்கிழங்கு, மரமடுவங்கள், இதரை வாழைகளும் இலுப்பையடி சுடலைலைக்காடும்,  சம்பா அரிசிச் சோறும் உடும்புகுழம்பும், பச்சை மிளகாய் சம்பலும், பூவரசங்குச்சிகளும்,  பருப்பும், பாகற்காய் குழம்பும், மோர்மிளகாய் பொரியலுமாக நானறிந்திருக்காத இலங்கை  ஆதீரனின் கண்கள் வழியே ஒவ்வொரு பக்கத்திலும் விரிந்து மலர்கிறது. பல் விழும் கனவு  கண்டால் துயர்மிகுந்த ஏதோ நிகழும் என்னும் நம்பிக்கையை போல நமக்கும் பொதுவான சிலவற்றையும் ஆதீரன் மூலமறிய முடிகின்றது.

கணபதிபிள்ளையும், தணிகை மாறனும்,தவா அண்ணனும், பழமும்,  அரிய ரத்தினம் கோபிதனும், பவி மாமனும், தாமோதரம்பிள்ளையும், காந்தியண்ணாவும், அல்லியக்காவும்,  ஓவியனும், கபிலனும்,  ’பட்டாம்பூச்சி’ வாசிக்கும் மருதனும், சலூன் இனியனும்  இலங்கைப்போரின் பல குருர பக்கங்களை காட்டுகிறார்கள். கபிர் அடிக்கும் இடங்களிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து இடம் பெயருகிறார்கள், எறும்புகள் கூட போரைப்பற்றியே யோசித்துக்கொண்டு மரங்களிலிருந்து கீழிறங்குகின்றன.

நிகழப்போவதை முன்பே யூகிக்கிறாள் பூட்டம்மா, குன்றிமணிகளையும் செங்கற்களையும் அரைத்து மண்ணுக்காய் நஞ்சுண்டு மடிந்த பொன்னாச்சியும் நஞ்சின் மீதியை நிலமுண்ண போகிறது என்கிறாள். வீரச்சாவும், வித்துடல்களும் விழுப்புண்களும் எரிதழல் வெளியில் ஒரு சொல்லைப்போல் அலர்கின்றன.

ஆதீரன் வீட்டிலும் அல்லியக்கா வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் மரணம் அழையா விருந்தாளியாக கதவை திறந்து வந்து கொண்டே இருக்கிறது

அமைதிப் பேச்சுவார்த்தை, சமாதான உடன்படிக்கை எனும் போர்வை களையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு யுத்தம் துவங்கி விடுகிறது.  யேசுதாஸ் குரலில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காதல் கருகிச்சாகிறது. யார் முதலில் வீரச்சாவடைவது என்று பேசிக்கொள்ளும்  இளவெயினியும் பூம்பாவையும் தூரிகையும் பெண்போராளிகளின் உலகை காட்டுகிறார்கள்.

கிபிர் தாக்குதலும்,  ஷெல்லடிப்பும், இயக்கத்தின் பின்னடைவும்,  விழுந்துகொண்டே இருக்கும் வித்துடல்களும்,அதிகரித்துக்கொண்டே இருக்கும் காயம்பட்டவர்களும், ஊரையே மூடும் கந்தகமணமுமாக ஆதீரன் காட்டும் போர்  உச்சம் மனதை கலங்கடிக்கிறது. அந்த மண்ணில் அப்போது வாழ்ந்த ஆதீரன் மீது கனிவும் தனித்த பிரியமும்  பொங்கிப்பெருகிறது.

யுத்தம் அமைதியை விட மேலானது என்று ஆதீரன் எழுதி வைக்கிறான். எளிய மனிதர்களின் பல வாழ்க்கை கணக்குகளை யுத்தம் தன் கோரக்கரங்களால் கிழித்தெறிகிறது.

அம்பிகையின் இறுதிச்சடங்கின் போது ஆதீரனின் தெளிவையும்,  பூட்டம்மா அடிவயிற்றில் மண் வைத்து நீரூற்ற சொல்வதையும், பன்னிச்சை மரத்துடனும் உப்புக்காட்டுடனும் நடுகற்களுடனும் ஆதீரனுக்கிருக்கும் உணர்வுபூர்வமான பந்தத்தையும் மனமும் கண்களும் கலங்க வாசித்தேன்.

அவ்வளவு நடந்தும் பெண்கள் கூந்தலில் காந்தளைச் சூடும் நாள் வரும், நிலம் விடியும் என்று  கதை முடிகின்றது. தூரிகையின் பதுங்கு குழிக்குள் அசைந்தாடுகிறது ஒரு தளிர்.

நேரடியாக யுத்தத்தை சொல்லாமல், யுத்தப் பின்னணியில் அந்நிலத்தை, அம்மனிதர்களின் வாழ்வை, புலம்பெயர்தலின் அவலத்தை சொல்லும் கதை இது. இதில் எத்தனை உண்மை, எத்தனை புனைவு எத்தனை சொல்லாமல் விடப்பட்டவை  என்பது ஆதிரனுக்கும் அகரனுக்கும்தான் தெரியும் எனினும் இந்நூல் ஒவ்வொரு பக்கம் வாசிக்கையிலும் அளித்த துயரம் நூறு சதவீதம் உண்மை.

இத்தனை உணர்வுபூர்வமாக  புலம்பெயர்ந்தவர்களின், யுத்தத்தின் போராளிகளின்,  இயக்கத்தின், காதலின் கதையை வாசித்ததில்லை.அகரனின் மொழி வன்மை திகைக்க வைக்கிறது.

விஷ்ணுபுரம் விழாவில் அகரனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் குடும்பத்துக்கு பரம்பரையாக சொந்தமாயிருந்த  வாள் ஒன்றை அவரது பூட்டம்மா போர்ச்சூழலில் எங்கோ மறைத்து வைத்தாரென்றும் அதை பின்னர் ஒருபோதும் கண்டுபிடிக்க  முடியவில்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.

அது வேறெங்குமில்லை, யுத்தகாலத்திலான தன் வாழ்வை   இத்தனை கனம் கொண்ட  மொழியில் சொல்லும்  அகரமுதல்வனாகத்தான்  அவ்வாள் கூர் கொண்டிருக்கிறது

அம்மாவின் கண்களை கொண்டிருக்கும் பொன்னாச்சி சொல்லியபடியே அகரனின் கால்கள் இனி சோர்வில்லாது நடக்கட்டும். அகரனுக்கு அன்பும் நன்றியும்.

குரங்கு முக ஆர்கிட்

குரங்கு முக ஆர்கிட் மலர்கள்

ஆர்கிடேசி குடும்பத்தை சேர்ந்த ஆர்கிட் (orchid) மலர்கள் அவற்றின் மிக அழகிய வடிவங்களாலும்  நிறங்களாலும் உலகப்பிரசித்தி பெற்றவை. ஆர்கிடேசி குடும்பத்தில் சுமார் 1000 பேரினங்களும் 25,000 சிற்றினங்களும் பல்லாயிரக்கணக்கான் கலப்பினங்களும் உள்ளன

இவற்றில் நிலத்தில் வாழ்வன, மரங்களில் மீது வளர்வன, என பலவகையான வாழிடங்களில் வளர்பவை உள்ளன.ஆர்கிடுகள் ஸ்பாஞ் போன்ற சிறப்பு வேர்களால் காற்றிலிருந்து ஈரத்தை எடுத்துக்கொண்டு உயிர்வாழும்

 பிற தாவர வகைகளிலிருந்து ஆர்கிடுகள் அவற்றின் வண்ணமயமான விதவிதமான  வடிவங்களில் இருக்கும் மலர்களால் வேறுபட்டு பிரபலமடைந்திருக்கின்றன. தோட்டக்கலைத்துறையில் மிக முக்கிய மற்றும் சிறப்பான இடம்பெற்றிருப்பவை ஆர்கிட்மலர்கள் .ஐஸ்கிரீம்களில் நாம் சுவைக்கும் வெனிலா  ஒரு  ஆர்கிடிலிருந்தே பெறப்படுகிறது

ஆர்கிட்மலர்களில் மனிதனைப்போன்றவை, வேற்றுகிரக வாசிகளை போன்றவை, பறவைகள் வண்டுகள் விலங்குகளை போன்றவை நடனமாடும் மங்கையை போன்றவை என  நம் கற்பனைக்கெட்டாத வடிவங்களில் மலர்கள் இருக்கின்றன

இவற்றில் மிகs சிறப்பான ஒன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஆஞ்சனேயர்  மலர் என்று வணங்கப்படுவதும் குரங்கு ஆர்கிட் எனப்படும் Dracula simia, ஆர்கிட்கள்

இவை மரங்களின் மீது தொற்றிப்படர்ந்து வளரும் ஆர்கிடுகள். மலரிதழ்கள் குரங்கின் முகத்தைப்போலவே அமைந்திருப்பது இயற்கையின் ஆச்சர்யங்களில் ஒன்று

ஒவ்வொரு பருவத்திலும் கொத்துக்கொத்தாக மலரும் இவை ஆரஞ்சின் இனிய மணம் கொண்டிருக்கும்

 இந்த குரங்கு முக ஆர்கிடுகள் பெருவின் குளிர்நிரம்பிய காடுகளில் 1000திலிருந்து 2000 மீ கடல்மட்டத்துக்கு மேல் உயரமான இடங்களில் ஏராளமாக காணப்படுகின்றன

இதன் அறிவியல் பெயரின் முதல் பாதி, இதன் புல்லிகளின் இரு நீட்சிகளால் டிராகுலாவின் பற்களை நினைவூட்டுவதால் டிராகுலா என பெயரிடப்பட்டது. அறிவியல் பெயரில் இரண்டாம் பாதி சிமியா என்பது குரங்கை குறிக்கும்

குரங்கு ஆர்கிட் தாவரத்தை தாவர வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் 1881ல் கண்டுபிடித்தார்.   

அமெரிக்காவின் மிஸிஸிப்பி நதிக்கரையோர நகரத்தை சேர்ந்தவரும் ஆர்கிடேசி குடும்பத்தில் முக்கிய ஆய்வுகளை செய்த தாவரவியலாளருமான  Carlyle August Luer, இந்த ஆர்கிடுக்கு இந்த அறிவியல் பெயரை 1978ல் வைத்தார்.

அவரால் இது பல நாடுகளுக்கு அறிமுகமாகி ஆர்கிட் மலர் விரும்பிகள் இதை உலகெங்கிலும் ஆர்வமாக வளர்க்கத் துவங்கினார்கள்

20ம் நூற்றாண்டின் துவக்த்தில் குரங்கு ஆர்கிடுகள் ஏராளமாக சாகுபடி செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன

 பல கலப்பின சோதனைகளும் அப்போது செய்யப்பட்டு இதன் நூற்றுக்கணக்கான கலப்பின வகைகளும்  அப்போது உருவாக்காப்பட்டன

இப்போதும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பல அமெரிக்க  கடைகளில் இவை விற்பனை செய்யபடுகின்றன, இவற்றை மிக எளிதாக வீடுகளில் வளர்க்லாம்

 குரங்கு ஆர்கிட் மலர்கள் வெண்மை, இளஞ்சிவப்பு ஊதாமற்றும் மண் என பல நிறங்களில் இருக்கும்

  • The Dracula Simia ‘Taylors’  வகை மிக அழகிய  ஊதா நரம்புகளோடும் இளஞ்சிவப்பு மலர்களை கொண்டது
  • The Dracula Simia ‘Enchantment’ வகை அடர் ஊதா நிற இதழ்களில் வெண்திட்டுக்களை  கொண்டிருக்கும்
  • The Dracula Simia ‘Lilac Fire’  வகை மிக பிரகாசமனது இது இளஞ்சிவப்பில் வெண்கோடுகள் கொண்டிருக்கும்
  • The Dracula Simia ‘Mystic’ வகை மிக மிக அழகிய ஆழ்ந்த ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிற இதழ்களில் வெள்ளை மற்றும் மஞ்சள் தீற்றல்களுடன்  காணப்படும்

தாவரவியல் குறித்த அடிப்டை அறிவு இல்லாத சிலரும், வம்புகளையும் வதந்திகளையும், பொய்ச்செய்திகளையும் சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளும் இந்த குரங்கு ஆர்கிட்மலர்கள் 100 வருடத்துக்கு ஒருமுறைமலரும் அபூர்வகை மலர் என்றெல்லாம் செய்திகளை பகிர்கிறார்கள். இதன்  மலர்வடிவம் குரங்கின் முகம் போன்றிருப்பது மட்டும்தான் உண்மை, இவையும் பிற தாவரங்களை போலவே அவற்றிற்குரிய  பருவங்களில் தொடர்ந்து மலர்பவைதான்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அந்நியசெலவாணி ஈட்டுதலில் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும், உயர்ந்து கொண்டே இருக்கும் ஆர்கிட் சந்தை 2028ல்   அமெரிக்க டாலர்களில் 363.2 மில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

 ஆர்கிட் வளர்ப்பு மிகுந்த லாபம் தரும் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் அருணாச்சலபிரதேசம் ஆர்கிட் சாகுபடியில் முன்னணியில் இருக்கிறது. அருணாச்சலபிரதேசம் ஆர்கிடுகளின் இந்தியசொர்க்கம் என அழைக்கப்படுகிறது. சிக்கிம்மில் இருந்து மட்டும் சுமர் 560 வகையான ஆர்கிடுகள் பிற நாடுகளுக்கு எற்றுமதியாகின்றது

வீனஸ், பூச்சிஉண்ணும் தாவரம்

’’கார்ல் லெச்சே (karl Leche) வும் அவரது குழுவினரும் மடகாஸ்கரின் அடர்ந்த காட்டுக்குள்  கதோஸ்  பழங்குடியினர் அறியாது அவர்களைப் பின்தொடர்ந்து சென்று  சந்தடியில்லாமல்  அவர்களின் செயல்களை கவனித்துக்கொண்டிருந்தனர். 

பழங்குடியினர் அனைவரும் ஒரு ஆற்றங்கரையில் குழுமினர்.  அவர்கள் முன்னால்  சுமார் எட்டு அடி உயரமுள்ள அன்னாசியை போன்ற சதைப்பற்றான ஒரு தண்டும், அதன் உச்சியில் பெரும் நாகங்களைப் போன்ற, நீண்ட கைகளாக அமைந்திருந்த இலைகள் பச்சை நிறத்திலும் இருந்தன. இலைகளின் நுனி மாட்டின் கொம்புகளைப் போல கூராக இருந்தது. அம்மரத்தை பார்த்து பழங்குடிகள் அனைவரும்  ’’டீபே, டீபே’’ என்று கூவி வணங்கினார்கள். 

நிர்வாணமாக ஒரு பழங்குடி இளம்பெண்ணை அவர்கள் அம்மரத்தின் மீது ஏறும் படி சொன்னதும் அவள் மறுப்பேதும் சொல்லாமல்  ஏறினாள். இலைகள் அனைத்தும் குவிந்திருந்த மத்தியப் பகுதியில் இருந்த நீரை அருந்தும் படி அவர்கள் கீழிருந்து கூச்சலிட்டதும் அவள் அந்த நீரை அருந்தினாள்,  உடனே அம்மரத்தின் இலைகளான நாகங்களுக்கு உயிர் வந்ததுபோல அவை நெளிந்தன

’’கடும் பசிகொண்ட நாகங்களை போன்ற அந்த இலை நீட்சிகளால் அந்த பெண்ணை அம்மரம் சுற்றி வளைத்துக் கொண்டது.  கைகளையும் கழுத்தையும் பின்னர் தலையையும் சுற்றி சுற்றி அக்கைகளால்  இறுக்கப்பட்ட போது அந்த பெண் பயங்கரமாக ஓலமிட்டாள். பிறகு அந்த ஓலம் மெல்ல முனகலாக மாறி பின்னர் மெதுவாக அடங்கியது. மரத்தை சுற்றிலும் கொல்லப்பட்ட பெண்ணின் ரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பச்சை பாம்புகள் போன்ற அக்கைகள் தளர்ந்து விடுபட்டு மீண்டும் நீண்ட போது அந்த பெண் அதற்குள் இருந்த சுவடே இல்லாமல் அம்மரத்தால் முழுவதுமாக உண்ணப்பட்டிருந்தாள். அவளை பலி கொடுத்த  பழங்குடியினர் அம்மரத்தை பயபக்தியுடன் வணங்கினார்கள்’’

26 ஏப்ரல் 1874ல் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில்  ஜெர்மானிய  தாவரவியலாளர் “Karl Leche” என்பவரின் மடகாஸ்கர் காட்டுப் பயண அனுபவம் இப்படி ஒரு செய்திக் கட்டுரையாக    எட்மண்ட் ஸ்பென்சர்( Edmund Spencer) என்னும் கட்டுரையாளரால் எழுதப்பட்டிருந்தது. அடர்  காடுகளில் மனிதர்களை கொன்று தின்னும் மரங்கள் இருப்பதாக பல செவிவழி செய்திகளும் கதைகளும் பல காலமாக  மக்களிடையே நிலவி வந்தாலும் முதன் முதலாக அச்சில் மனிதர்களை கொன்று தின்னும் மரங்களைப்பற்றி வெளியான  இந்த கட்டுரை பெரிதும் வாசிக்கப்பட்டது.

நியூயார்க் டைம்ஸின்  இந்தக்கட்டுரை உண்டாக்கிய பரபரப்பால் இதே  கட்டுரை  பிற பிரபல நாளிதழ்களில்  அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டே இருந்தது. பலர் இந்த நரமாமிசம் உண்ணும் மரத்தையும் அந்த பழங்குடிகளையும் காண  மடகாஸ்கர் காடுகளுக்கு தேடல் பயணம் மேற்கொண்டார்கள். இந்த பரபரப்பு பல ஆண்டுகள் தொடர்ந்தது.

1889ல் வெளியான ’கடலும் நிலமும்’ என்னும்  நூலில் அதன் ஆசிரியர் ஜேம்ஸ் பூயல் (James W. Buel) கோபம் கொண்ட பெரும் நாகங்களை போன்ற, நச்சு முட்களும், நூற்றுக்கணக்கான  உறிஞ்சு வாய்களும் நிறைந்திருக்கும் கிளைகளுடன் இருக்கும் யா-டி-வியோ (ya te veo) என்னும்  ஆப்பிரிக்க காடுகளின் ஊனுண்ணி மரமொன்றைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்.

1891ல் லண்டன், நியூயார்க் மற்றும் மெல்பர்னில்  மாதமொருமுறை வெளியான சஞ்சிகையான Review of Reviews வின் ஆசிரியர்  வில்லியம் (William Thomas Stead) நிகரகுவாவின் மனிதர்களை உண்ணும் தாவரமொன்றைப் பற்றியும் அதனருகில் செல்லும் எவரையும் அது பிடித்து இரத்தத்தை உறிஞ்சி குடித்து கொல்லுவதையும் குறித்து எழுதினார்

19 ம் நூற்றாண்டில் இப்படி மனிதர்களையும், நாய்களையும் பிற விலங்குகளையும் பிடித்து கொன்று தின்னும் தாவரங்கள் பற்றிய பல கதைகளும் செய்திகளும் கட்டுரைகளும் உலகெங்கிலும் வெளியாகிக் கொண்டே இருந்தன. காடுகளில் பயணித்த மனிதர்களை நீண்ட கிளைகளால் சுற்றி வளைத்து விழுங்கிய கொலைகார தாவரங்களை பற்றிய கதைகள் வெகுவாக உலவின. 

அக்கதைகளில் வானளாவிய கிளைகளால் பறவைகளைக் கூட அத்தாவரங்கள் பிடித்து விழுங்கியது.. பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளரும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியவருமான ஆர்தர் கொனான்  (Arthur Conan Doyle)  தனது குற்றக்கதைகளில் மனிதர்களை இறுகப்பிடித்து விழுங்கும் வீனஸ் ஊனுண்ணும் தாவரங்களை அறிமுகப்படுத்தினார்.

மிச்சிகன் கவர்னரும் இயற்கை ஆர்வலருமான திரு சேஸ் ஓஸ்போர்ன் ( Chase Osborn ) எழுதி 1924 ல் வெளியான ’’மடகாஸ்கர்- மனிதர்களை கொன்று உண்ணும் மரங்களின் நிலம்’’  (Madagascar: Land of the Man-eating Tree)  என்னும் நூலிலும் மனிதர்களை கொன்றுண்ணும் மரங்களை பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது. மடகாஸ்கர் பழங்குடிகளுக்கு மனிதர்களை உண்ணும் மரத்தை  குறித்து  நன்கு தெரிந்திருக்கிறது என்று  சேஸ் குறிப்பிட்டிருந்தார்.பல கதைகளில் மனிதர்களை நெரித்துக் கொன்று உண்ணும் மரங்களை குறித்த சித்திரங்கள் இடம்பெற்றன.

1955ல் ஜெர்மானிய -அமெரிக்க அறிவியல் கட்டுரையாளரும்,  cryptozoology. என்னும் மர்மமான உயிரினங்களை குறித்த அறிவியல் துறையில் நிபுணருமான  வில்லி லே  (Willy Ley) தனது ’’சாலமண்டர்களும் பிற அற்புதங்களும்’’ என்னும் நூலில்  (Salamanders and other Wonders)  இவை அனைத்தும் கட்டுக்கதைகள் அப்படி ஒரு பழங்குடியினரோ, மனிதர்களை பிடித்துண்ணும் மரங்களோ எதுவுமே உலகில் இல்லை  இவை வெறும் பரபரப்பு செய்திகளுக்காக உருவாக்கப்பட்ட  வதந்திகள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனினும் ஊனுண்ணித் தாவரங்கள் இருக்கின்றன, இல்லை என்னும் இரு தரப்பும் அறிவியல் உலகில் வலுவாக  காலூன்றி இருந்தது. பல அறிவியலாளர்கள் தொடர்ந்து அவற்றை தேடிச்சென்று கொண்டிருந்தனர்.

நகரும் விலங்குகள் வேட்டையாடி இரைகளை பிடித்துண்ணுவது இயற்கையென்றும், ஓரிடத்தில் வேர்பிடித்து நகராமல் இருக்கும் தாவரங்கள் வேட்டையாடுவது என்பது இயற்கையில்  நடக்கவே நடக்காத காரியம் என்றும் பலரல் உறுதியாக நம்பப்பட்டது.

ஊனுண்ணித் தாவரங்கள் இருப்பது  உண்மையென்றும்,  வெறும் கற்பனையென்றும் இருவிதமான கருத்துக்கள் நிலவிக்கொண்டிறூந்த வேலையில்தான் சார்லஸ் டார்வின் கடற்பயணங்களை மேற்கொண்டிருந்தார்

 1875 ல் டார்வின் ஊனுண்ணித்தாவரங்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதை ஆதாரபூர்வமாக தெரிவித்தபோது உலகம் பெரும் ஆச்சர்யத்துக்கு உள்ளானது.  இங்கிலாந்தின் சுஸெக்ஸ் வனப்பகுதியின் ஊனுண்ணி பனித்துளி தாவரம் (Sundew plant)குறித்த விளக்கமான கட்டுரைகள் அவரால் எழுதப்பட்டிருந்தன.

 பூச்சிகளால் உண்ணப்படும் தாவரங்களை மட்டுமே அறிந்திருந்த உலகம் முதல் முறையாக பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் இருப்பதை அதன்பிறகே  அறிந்துகொண்டது

ஊனுண்ணி தாவரங்களின் பரிணாம வளர்ச்சி

சுமார் 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மாபெரும் டைனோசர்கள் காடுகளில் பல்கி பெருகிக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு இலைகளில் நடைபெற்ற ஒளிச்சேர்க்கையில் கிடைக்கும் உணவு போதாமலும், அவை வாழ்ந்த நிலத்தில் சத்துக்கள் குறைவாகவும் இருந்ததால் அவற்றின் இலைகள் பூச்சிகளை பிடிக்கும் பொறிகளாக மெல்ல மெல்ல மாறி பரிணாம வளர்ச்சி அடைந்தது.  அவற்றின் வளர்ச்சிக்கு  நிலத்திலிருந்து கிடைப்பதில் போதாமல் இருக்கும் சத்துக்களை இவ்வாறு பூச்சிகளை, சிறு விலங்குகளை உண்பதன் மூலம்  அவை சரி செய்து கொண்டன.

பச்சையத்தின் உதவியால் ஒளிச்சேர்க்கையின் மூலம் மட்டுமே உணவை தயாரித்து கொண்டிருந்த தாவரங்களில் சில இவ்வாறான ஊனுண்ணும் உயிரினங்களாக பரிணாம வளர்ச்சியடைந்தது சுமார் பத்துமில்லியன் வருடங்களுக்கும் மேலாக மெல்ல மெல்ல நடந்திருக்கும் என்று தாவரவியலாளர்கள் யூகிக்கிறார்கள்.1

இத்தாவரங்கள் பூச்சிகளை பிடித்து கொன்று உண்ணுவதை  பார்க்க முடிவதால் இவற்றை ஊனுண்ணிகள் என அடையாளம் காணமுடிந்தது. எனினும் இவற்றின் கொன்று தின்னுதலின் பிரத்யேக செயற்பாடுகள் குறித்து முழுமையான அறிதல் தாவரவியலாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, டார்வினின் காலத்திலிருந்தே இவற்றைக் குறித்து  ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தனை ஆண்டுகளில் இத்தாவரங்களில் இரையை ஜீரணிக்க உதவும் பலநூறு நொதிகளில் (Enzymes) Nepenthesin என்னும் ஒரே ஒரு நொதிதான் இனங்காணப்பட்டுள்ளது.

உலக நாடுகள் எல்லாவற்றிலும் காணப்படும் 600க்கும் மேற்பட்ட இந்த ஊனுண்ணித் தாவரங்கள் அண்டார்டிகா மற்றும் பசிபிக் தீவுகளில் மட்டும் இல்லை. 

பூச்சிகளை பிடிக்கும் எல்லா தாவரங்களும் ஊனுண்ணிகளல்ல. அரிஸ்டலோக்கியாவை (Aristolochia) போல சில தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக  பூச்சிகளை கவர்ந்து அவற்றை  தாவரங்களின் பாகங்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்யும். இவை ஊனுண்ணித் தாவரங்கள் அல்ல .ஏனெனில் இவை பூச்சிகளை ஒருபோதும் கொல்லுவதில்லை. மேலும் ஊனுண்ணித் தாவரங்கள் எப்போதும் அவற்றின்  மலர்களை பொறிகளாக பயன்படுத்துவதில்லை.

இதைப்போலவே மேய்ச்சல் விலங்குகளிடமிருந்தும், பூச்சிகள் இலைகளை  தாக்காதவண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும் இலைகளில் பிசினைசுரக்கும் தாவரங்களும் ஊனுண்ணித்தாவரங்களல்ல. அவை தங்களின் பாதுகாப்பிற்காக பிசினில் பூச்சிகளை சிக்க வைத்தாலும், அப்பூச்சிகளை கொன்று ஜீரணிப்பதில்லை. உதாரணமாக ஒட்டும் தன்மையுடைய இலைகளைக் கொண்டிருக்கும் ஐபிசெல்லா லூட்டியா ( Ibicella lutea), ப்ரொபோஸிடியா லூசியானிக்கா (Proboscidea louisianica) மற்றும் ப்ரொபோஸிடியா பார்விஃப்ளோரா (P. parviflora) ஆகியவை ஊனுண்ணிகளல்ல இவற்றின் ,இலைகளில் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகள் அப்படியே இறந்து உலர்ந்துவிடுகின்றன. இவைகளெல்லாம் pre carnivorous plants , அதாவது ஊனுண்னுவதற்கு முந்தைய நிலையிலிருப்பவையென்று கருதப்படுகின்றன. இவை காலப்போக்கில் ஊனுண்ணுபவைகளாக பரிணாம வளர்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது

பூச்சிகளை கொல்லும் நொதிகளை கொண்டிருக்காததால் பூச்சிகளை இலைகளில் பிடித்து மட்டும் வைத்துக்கொண்டு, சிக்கிய பூச்சிகளை உண்ண வரும் வண்டுகளின் கழிவுகளை உறிஞ்சி  அதிலிருக்கும் சத்துக்களை கிரகிக்கும் ரோரிடூலா (Roridula) எனப்படும் ஒரு தாவரம் விளிம்புநிலை ஊனுண்ணித்தாவரமென்று அழைக்கப்படுகிறது.(Marginal Carnivorous plant). இவையும் மெல்ல மெல்ல முழுமையான ஊனுண்ணுபவைகளாக மாறக்கூடும்

இந்த பரிணாம வளர்ச்சியை குறித்த ஆய்வுகள் பல்லாண்டுகளாக தொடர்கின்றன. சமீபத்தில் ஜெர்மனியின் வுஸ்பர்க் பல்கலைக்கழகத்டின் (University of Würzburg) தாவரவியலாளர்களின் குழு  குறிப்பிட்ட மூன்று ஊனுண்ணித் தாவரங்களில் விரிவான ஆய்வுகளை செய்தது.

  • அதிலொன்று பெரும்பாலானோர் அறிந்திருக்கும் வீனஸ் பூச்சி பிடிக்கும் தாவரமான  Venus flytrap 
  • இரண்டாவது அத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஊனுண்ணித் தாவரமான நீர்ச் சக்கரம்(waterwheel) என்னும் பெயர் கொண்ட Aldrovanda vesiculosa.
  • மூன்றாவது பனித்துளி தாவரமாகிய ட்ரஸீரா( sundew plant)

ஆய்வின் முடிவுகள்  70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊனுண்னும் தாவரங்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்றும் அதற்கு பின்னரே நிலச்சத்துக்குறைபாடுகளை சமன்செய்ய, நகர முடியாத தாவரங்கள் அவற்றின் அருகில் வரும் பூச்சிகளை பிடிக்க பொறிகளை உருவாக்கி அப்பூச்சிகளின் உடலிலிருக்கும் சத்துக்களை கிரகித்துக்கொள்ளும் ஊனுண்ணி தாவரங்களாக மாறிவிட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தன.

ஒளிச்சேர்க்கை செய்யும் இலைகளும், சத்துக்களை சாறு வடிவில் உறிஞ்சும் வேர்களும் உபயோகமற்றுப் போன ஒரு கட்டத்தில் தாவரங்கள் தங்கள் வாழ்வை,  இருப்பை உறுதி செய்து கொள்ள புதிய வழிகளை தேடி, அவ்வாறு கண்டறிந்ததுதான் ஊனுண்ணுதல் என்பது.இது  மரபணு மாற்றங்கள் மூலமே சாத்தியமாகி இருக்கும் என்கிறது இந்த ஆய்வு

ஒரு நீர்வாழ் ஊனுண்ணித் தாவரத்திலும், நிலத்தில் படர்ந்து வளரும் பிரேசிலின் மற்றோரு ஊனுண்ணித் தாவரத்திலும் 2013ல் நடந்த ஆய்வுகளும் இந்த மரபணு மாற்றத்தினால் பரிணாம வளர்ச்சியடைந்த விஷயத்தையே உறுதி செய்திருக்கின்றன. வேர்களின் உறிஞ்ம் திறனுக்கும் இலைகளின் சூரிய ஒளியை கிரகிக்கும் திறனுக்கும் காரணமான மரபணுக்களை கணிசமாக உதிர்த்துவிட்டு(gene drop) புதிய பூச்சிகளை கவர்ந்து பொறிகளில் பிடித்து அவற்றை செரித்து சத்துக்களாக எடுத்துக் கொள்ள உதவி செய்யும் மரபணுக்களை இவை மெல்ல மெல்ல காலபோக்கில் பெற்றிருக்கின்றன என்கிறது ஆய்வு முடிவுகள்.

இவ்வாறாகத்தான் உலகின் சாதாரண,  சாதுவான தாவரங்கள் மிகச்சிறந்த வேட்டைக்கார தாவரங்களாகி விட்டிருக்கின்றன. இந்த ஊனுண்ணித் தாவரங்களின் சாமார்த்தியங்களும் தகவமைப்புக்களும் தாவரங்களின் அதிசயங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

சுமார் 16 நீண்ட வருடங்கள் இந்த தாவரங்கள் குறித்தான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த டார்வின் சில தாவரங்களின் இலைகள் பிரத்யேகமாக பூச்சிகளை பிடிக்கும் பொறிகளைப்போல உருமாற்றம் கொண்டு அவற்றை    பிடித்து செரித்து சத்துக்களை உறிஞ்சி கொள்ளுவதையும் நிரூபித்தார்.

 டார்வினின் இந்தத்தாவரங்கள்  குறித்த விளக்கங்களை கொண்ட 1875ல் வெளியான ’’ஊனுண்ணித் தாவரங்கள்’’ என்னும் நூலும்,(Insectivorous Plants,) 1880 ல் வெளியான ’’தாவரங்களின் அசைதலின் ஆற்றல்’’ (The Power of Movement in Plants) என்னும் மற்றுமோர் நூலும் ஊனுண்ணும் தாவரங்கள் குறித்த பெரும்பாலான புதிர்கள், கேள்விகள், சந்தேகங்கள் அனைத்துக்கும் பதிலளித்திருந்தது 

டார்வினின் இந்த கண்டுபிடிப்புகள் சாதாரண மனிதர்களுக்கு பெரும் ஆர்வமூட்டியது. தாவரவியல், பூச்சியியல், வேதியியல் உள்ளிட்ட பல்துறை விஞ்ஞானிகள் தங்கள் கவனத்தை ஊனுண்ணித் தாவரங்களில் குவித்தார்கள்  

அவர்களின் முயற்சியாலும் தேடல்களினாலும் பலவகைப்பட்ட ஊனுண்ணித்தாவரங்கள் கண்டறியப்பட்டன. சில தாவரங்கள் குடுவைகளாக மாறிய இலைகளில் நொதிகளை நிரப்பி வைத்து அதில் பூச்சிகளை பிடித்தன.  சில ஒட்டும் தன்மையுள்ள இலைகளை கொண்டு அதில் பூச்சிகளை ஒட்டவைத்து  கொன்று உண்டன. இன்னும் சில பூச்சிகளை கவரும் நறுமணமுள்ள பனித்துளி போன்ற சுரப்பி நீர்ச் சொட்டுக்களால் பூச்சிகளை ஈர்த்து கொன்று தின்றன. நீருக்கடியிலும் கொன்று தின்னும் தாவரங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

வீனஸ் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது தாவரவியலாளர் ஜான் எல்லிஸ் (John Ellis) அதன் ஊனுண்ணுதல் குறித்து விவரித்து லின்னேயஸுக்கு கடிதம் எழுதினார்  அப்போது லின்னேயஸ் உலக புகழ் பெற்றிருந்த தாவரவியலாளர். தாவர வகைப்பாட்டியலின் தந்தையும் தீவிர இறையியலாளருமான லின்னேயஸினால் ஊனுண்ணும் தாவரங்கள் இருப்பதை நம்ப முடியவில்லை.

லின்னேயஸ் அப்படி  இறையை பிடித்துண்ணும் தாவரங்கள் இருப்பதை அடியோடு மறுத்தார். அது இயற்கையின் விதிகளுக்கு எதிரானது என்றும் அப்படி ஒரு உயிரினம் இயற்கையில் இருக்க வாய்ப்பே இல்லையென்றும் தீர்மானமாக பதில் எழுதினார். அவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னரும் அவர் இத்தாவரங்கள்  பொறிகளை உண்டாக்கி மழையிலிருந்து நனையாமல் இருக்க பூச்சிகளுக்கு அடைக்கலமாக செயல்படுகின்றன இரையாக பிடித்து தின்பதில்லை என்றார்

மேலும் நெஃபெந்தெஸ் போன்ற ஜாடிகளில் நொதிகளை கொண்டு பூச்சிகளை செரித்துண்ணும் தாவரங்கள் உண்மையில் உண்ணவில்லை அவற்றில் பூச்சிகளுக்கு அருந்த நீரளிக்கின்றன என்றார் அவர்.

இன்றைய நாள் வரையிலுமே இது தொடர்பான ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன வயிறு, இரைப்பை போன்ற பாகங்கள் இல்லாத தாவரங்கள் எவ்வாறு பூச்சி மற்றும் தவளை, எலி போன்ற சிறு விலங்குகளை செரித்து, சத்துக்களை முழுத்தாவர பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கின்றன என்பது இன்னும் சரியாக விளக்கப்படாத புதிராகவே இருக்கிறது.

Drosera  போன்ற இரையை ஒட்ட வைத்து பின்னர் சத்துக்களை எடுத்துக்கொள்ளும் ஊனுண்ணிகளிலிருந்து வீனஸ் ஊனுண்ணிகள் பரிணாம வளர்ச்சியில் உருவாகி இருக்கலாம் என்றும்    ஒரு கருத்து இருக்கிறது.      

ஊனுண்ணித்தாவரங்களுக்கு தொல்லுயிர் புதை படிவங்கள் அதிகம் கிடைக்கவில்லை எனவே இவற்றின் தோற்றம் குறித்து முழுமையான தகவல்கள் ஏதும் இல்லை என்று சொல்லும் ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழக  உயிரியற்பியலாளர்   Rainer Hedrich  2021ல் ஊனுண்ணுதலின் தோற்றம் என்னும் கட்டுரையில் (the origins of carnivory ) ஊணுன்னும் இயல்புக்கான மரபணு எது?  அது எப்போது தாவரங்களுக்குள் புகுந்தது? என்னும் ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது என்கிறார்.

வீனஸ் பொறித் தாவரம்

ஊனுண்ணித்தாவரங்களின் பல வகைகள் இருப்பினும் உலகெங்கிலும் பலருக்கு தெரிந்ததும் பலர் வீடுகளில் வளர்க்க விரும்புவதும் வீனஸ் ஃப்ளை ட்ராப் என்னும் வீனஸ் பொறி தாவரம்

டார்வினுக்கு இவற்றின் மீது தனி பிரியம் இருந்தது அவர் தனது நூலில் ’’வீனஸ் தாவரங்கள் உலகின் மிக அற்புதமான தாவரங்களில் ஒன்று’’ என குறிப்பிட்டிருக்கிறார். 

1759ல் வடக்கு கரோலினா கவர்னரான, ஆர்தர் (Arthur Dobbs) தாவரவியலாளர்  பீட்டர் (Peter Collinson) க்கு எழுதிய கடிதமொன்றில்:

“We have a kind of Catch Fly sensitive which closes upon anything that touches it, it grows in the Latitude 34 but not 35° – I will try to save the seed here.” என்று எழுதி இருந்தார்.

பீட்டர்  பிலடெல்ஃபியா இயற்கையியலாளர் ஜான் (John Bartram) என்பவருக்கு இந்த புதிய கண்டுபிடிப்பை எழுதினார். பார்ட்ரம்மின் மகன் வில்லியம் பார்ட்ரம் வடக்கு கரொலினாவிற்கு சென்று தன் தந்தைக்காக வீனஸ் தாவரங்களை சேகரித்தார்

வில்லியம் அனுப்பி வைத்த உலர் தாவரங்களை ஜான் பார்ட்ரம் லின்னேயஸுக்கும் பீட்டர் கோலின்சனுக்கும் அனுப்பினார்   யாராலும் யாருக்கும் உயிருடன் வீனஸ் தாவரங்களை  அனுப்ப முடியவில்லை

1763ல்  ஆர்தர் நண்பருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவை தாவர உலகத்தின் அற்புதங்களில் ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார். இவையே வீனஸ் தாவரங்கள்  குறித்த முதல் எழுத்து பூர்வமான ஆவணம்

பெயர்கள்

வீனஸ் ஃப்ளை ட்ராப் என்னும் பெயர் முதன் முதலில் 1768ல் ஒரு லண்டன் பத்திரிக்கையில் அச்சில் வந்தது. ஒரு புதிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது-“A New Sensitive Plant Discovered.”எனும் தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் இப்பெயர் வெளியாகி இருந்தது   1793 ல் உயிரியற்பியலாளர் வில்லியம் பார்ட்ரம் இவை துடிப்பான தாவரங்கள் கவனக்குறைவான உயிரினங்கள் இவற்றிற்கு இரையாகின்றன என்று குறிப்பிட்டிருந்தார்.  

வட அமெரிக்காவில் இருந்து பல இயற்கையான வீனஸ் தாவரங்களையும் அவற்றின் விதைகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பிய பிரிடிஷ் இயற்கையியலாளர் ஜான் எல்லிஸ் (John Ellis) இதற்கு 1768 ல் Dionaea muscipula என்று  அறிவியல் பெயரிட்டார்.  லண்டன் சஞ்சிகை ஒன்றில் எல்லிஸ் இத்தாவரத்துக்கு பெயர் வைக்க தான் பட்ட சிரமங்களை எழுதி இருந்தார். Dionaea muscipula என்னும் இப்பெயரை  ஆங்கிலத்தில் Venus flytrap அல்லது Venus mousetrap, என்று இருவிதங்களில் மொழிபெயர்க்கலாமென்றாலும் தனக்கு  flytrap என்னும் பெயரே பிடித்தமானது என்றும்  அதில் குறிப்பிட்டிருந்தார்.

பூச்சிகளை கவர்ந்திழுக்கும் இத்தாவரத்தின் பொதுவான வழங்கு பெயரான வீனஸ் என்பது காதல், காமம், வளமை மற்றும் அழகின் ரோமானிய  தெய்வமான வீனஸின் பெயரால் வைக்கப்பட்டது.  இதன் அறிவியல் பெயரின் Dionaea என்பதும் Dione ன் மகளான கிரேக்க தெய்வமான Aphrodite ஐ குறிக்கிறது, இதன் சிற்றினப்பெயரான muscipula,   இதன் இரை பிடிக்கும் செயலை குறிக்கும் விதமாக  எலிப்பொறி என்று பொருள் படுகிறது (mus (“mouse”) decipula (“trap”),  

வீனஸ் தாவரங்களை குறித்து ஆண் ஆய்வாளர்கள் மத்தியில்,அக்காலத்தில் கிண்டலான கருத்து பரிமாற்றங்களும் நடந்தன. வீனஸ் தாவரப் பொறிகள் பெண் இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்பதாக கருதி ஒரு வேடிக்கையான பெயரிட்டு அதை  “Tipitiwichit  என்று குறிப்பிட்டு தங்களுக்குள் கடிதம் எழுதிக்கொண்டனர். 

1962 ல்,பார்ட்ரம்  நண்பரான கோலின்சனுக்கு எழுதிய கடிதத்திலும் கோலின்சன் ஆர்தருக்கு 1762ல் எழுதிய கடிதங்களிலும் இப்பெயர் வேடிக்கையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது இந்த பெயரை  பார்ட்ரம் வைத்திருக்கலாமென்றும் யூகிக்கப்படுகிறது. 

தாவரவியல்

இயற்கையாக இவை அமெரிக்காவில் வடக்கு மற்றும் தெற்கு கரோலினாவில் மட்டுமே வளர்கின்றன. வடக்கு கரோலினாவின்  100 மைல் சுற்றளவில் இருக்கும் சதுப்பு நிலங்களில் இவை இயற்கையாக அடர்ந்து வளர்கின்றன

ட்ரொசிரேசி குடும்பத்தை சேர்ந்த வீனஸ் தாவரம் பொதுவாக 6-7 இன்ச் சுற்றளவு கொண்டிருக்கும். 5 அல்லது 6 தண்டுகளும் அவற்றில் பொறிகளாக உருமாற்றம் கொண்டிருக்கும் இலைகளும் கொண்டிருக்கும். ஒவ்வொரு இலைப்பொறியும் ஒரு இன்ச் அளவில் இருக்கும். சாதாரணமாக பொறிகள் விரல் நகங்களின் அளவில் இருக்கும். வீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கப்படும் வீனஸ் செடிகள் இயற்கையான செடிகளை காட்டிலும் சிறியவையாக இருக்கும். மலர்த்தண்டு தாவரத்திலிருந்து சுமார் 1 அடி உயரத்தில் மலர்களை தாங்கி நிற்கும்.வீனஸ் தாவரம் 4 ஆண்டுளில் மலரளிக்கத்துவங்கும்.

இவை பல்லாண்டு தாவரங்கள், வருடா வருடம் மலர்ந்து கனியளிக்கும் இவற்றின் மலர்களின் வெண்ணிற இதழ்களில் பசுமையான நரம்புகள் காணப்படும்

பூச்சிகளால்  மகரந்த சேர்க்கையும் பின்னர்  கருவுறுதலும் நிகழ்ந்து 4 லிருந்து 6 வாரங்களுக்குள் சிறிய பளபளப்பான நீர்த்துளி வடிவ கருப்பு விதைகள்  சிதறி புதிய தாவரங்கள் அதிலிருந்து முளைத்து வளரும். வீனஸ் தாவரங்கள் அடிக்கிழங்குகளிருந்தும் புதிய தாவரங்களை உருவாக்கும். 

மகரந்த சேர்க்கை

நூற்றுக்கணக்கான பூச்சி இனங்கள் வீனஸ் தாவரங்களின் மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டிருக்கின்றன. அவற்றில் பச்சை பூச்சியான Augochlorella gratiosa, வண்டினமான Trichodes apivorus மற்றும் நீள் மூக்கு வண்டினமான  Typocerus sinuatus ஆகியவை மூன்று முக்கிய இனங்கள். 

பூச்சிகளை வேறுபடுத்துதல்

இவற்றின் புத்திசாலித்தனமான உடல் அமைப்பு தாவரவியலாளர்களின் ஆச்சரியத்துக்கு உரியதாக பல நூற்றாண்டுகளாக இருக்கிறது மலர்க்காம்பு மிக நீண்டு தாவரத்தின் உடலுக்கு மேலே மலர்களை தோற்றுவிப்பதால் மகரந்த சேர்க்கை செய்பவரும் பூச்சிகள் பொறிகளில் அகப்படாமல் மகரந்த சேர்க்கை செய்துவிட்டு மலருக்கு மலர் தாவிச்செல்கின்றன

இரையை கவருவதற்கும் மகரந்த சேர்கைக்கான பூச்சிகளை கவரவும் இவை வேறுபட்ட வேதிப்பொருட்களை சுரப்பதும் மிக பெரிய புதிராக இருக்கிறது. எப்படி இவை இரையையும் மகரந்த சேர்க்கை செய்ய வரும் பூச்சிகளையும் வேறுபடுத்துகின்றன என்பதையும் இன்னும் பலநாடுகளின் நடைபெற்ற நடைபெறும் ஆராய்ச்சிகளின் மூலமும் கண்டறிய முடியவில்லை

எவ்வகையான் மலரமுதை (Nectar) இவை சுரக்கின்றன இவற்றை மகரந்த சேர்க்கை செய்யவரும் பூச்சி இனங்களுக்கும் இவற்றிற்குமான தொடர்பு ஆகியவற்றை குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன 

இரையை பிடித்தல்

வீனஸ் தாவரங்களின் பொறிகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. இரை தேவைப்படும் சமயங்களில் காற்றில் ஆவியாகி கலந்து மணம் பரப்பும் சில வேதிப்பொருட்களை இந்த தாவரம் சுரந்து பூச்சிகளைக் கவர்ந்து அவற்றை அருகில் வரவழைத்து பொறியில் பிடித்து உண்ணுகின்றன. 

சில வீனஸ் தாவரங்கள் நறுமணமும் சுவையும் மிக்க வேதிப்பொருட்களோடு செந்நிற நிறமிகளையும் சுரந்து பூச்சிகளை கவருகின்றன

இவற்றின் பொறிகளின் உட்புறம் மயிரிழைகள் போன்ற   கூர்மையான நீட்சிகள் காணப்படும்.   இந்த உணர் நீட்சிகள் வெளிப்புற தொடுகைக்கு   உடன் எதிர்வினை ஆற்றும்  thigmonasty எனப்படும் ஒரு செயலினால் இரைகளின் உடல் பட்டதும் உடனே வெகு விரைவாக மூடிக்கொண்டு இரையை தப்ப முடியாமல் இறுக்கிப் பிடித்துக்கொள்கின்றன.

 ஊசி போன்ற கூரிய இழைகளில் இரையின் முதல் தொடுகைக்குபின்னர்  பொறிகள் துடிப்புடன் காத்திருக்கின்றன இரண்டாம் தொடுகை நிகழ்ந்த மறுகணம் பொறிகள் மூடிக்கொள்கின்றன. இந்த தொடுகைகள் இரண்டும் முதல் 20 வினாடிகளுக்குள் நிகழ்ந்தால் மட்டுமே பொறிகளில் இரை சிக்கிக்கொள்ளும். உள்ளே மாட்டிக்கொண்ட இரை வெளியேறச் செய்யும் முயற்சிகளில் உண்டாகும் தொடரும் தொடுகைகளில் ஐந்தாவது தொடுகையில் பூச்சிகளை செரிக்கும் நொதிகள் பொறிகளில் உருவகின்றன

ஒரு வினாடியில் பத்தில் ஒருபங்கு கால அளவில் பொறிகள் மூடிக்கொள்கின்றன. பெரிய இரைகள் சிக்கிக்கொள்ளுகையில் 20 வினாடிகளில் பொறிகள் மூடிக்கொள்ள முடியாவிட்டால் இரையை பொறிகளை திறந்து இவை விடுவிக்கின்றன  

இரை முழுவதும் செரித்தபின்னர் பொறிகள் மீண்டும் திறந்து அடுத்த இரைக்காக காத்திருக்கும்.·ஒருமுறை இரையை பிடித்து செரித்து சத்துக்களை எடுத்துக் கொண்டால் பின்னர் அடுத்த இரையை பிடிக்க சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் இந்த தாவரங்கள் பொறியில் சிக்கிய இரைகளை முழுவதுமாக செரிக்க 3 அல்லது 4 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன.

பொதுவாக ஒரு தாவரத்தை பூச்சிகள் தொடுகையில் அவற்றால் உண்ணப்படும் ஆபத்தை தெரிவிக்கும் ஜாஸ்மோனிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் சுரந்து தாவரங்கள் தங்களை பூச்சிகள் உண்ணுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள எதிர்வேதிப்பொருட்களை சுரக்கும். பரிணாம வளர்ச்சியில் பூச்சிகள் தாவரங்களை உண்ணுவதற்கு மாறாக பூச்சிகளை தாவரங்கள் உண்ண வேண்டி வந்தபோது இதே வேதிப்பொருள் சுரப்பை மாற்றி வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என்கிறது இவற்றில் நடைபெற்ற பல ஆராய்ச்சிகளின் முடிவுகள். 

டார்வின் பொறிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகள் மிகச்சிறிய பூச்சிகளை வீனஸ் தாவரம் விரும்பாததால் அவை வெளியேறிச் செல்ல வசதியாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கருதினார். ஆனால் பிற்பாடு இக்கருத்து தவறென்று நிரூபிக்கப்பட்டது. வீனஸ் தாவரம் மிக சிறிய உயிர்களையும் இரையாக்குகிறது.

 வீனஸ் தாவரங்களின் பொறிகள் பலமுறை இரையை பிடித்தபின்னரே காய்ந்து கீழே விழுகின்றன. மீண்டும் புதிய பொறிகளை அடிமட்ட கிழங்கிலிருந்து இவை உருவாக்கிக்கொள்ளும். இவற்றின் வாழ்நாட்களை மிகச்சரியாக கணிக்க முடியவில்லை எனினும் வீனஸ் தாவரங்களின் வாழும் காலம் 20 வருடங்களுக்கும் மேல் என்றே கருதப்படுகிறது. பிற தாவரங்களை போலவெ வீனஸ் தாவரமும் சிறிய அளவில் ஒளிச்சேர்க்கை செய்தும் உணவை தயாரிக்கின்றது. மேலதிகமான சத்துக்களை இரையை பிடித்து உண்ணுவதால் பெறுகிறது

பல ஊனுண்ணித்தாவரங்கள் பிரத்யேக இரைகளை தேர்வு செய்கின்றன. வீனஸ் ஃப்ளை ட்ராப், வண்டுகள் சிலந்திகள் மற்றும் மெல்லுடலிகளையே  அதிகம் இரையாக்குகின்றது.  வீனஸ் தாவரத்தின் ஊன் உணவில் 33%  எறும்புகள், 30% சிலந்திகள், 10% வண்டுகள் மற்றும் 10% வெட்டுக்கிளிகள் இருக்கின்றன. இவற்றின் ’மெனு’வில்  5% மட்டுமெ பறக்கும் பூச்சிகள் உள்ளன

இரையின் அளவு

இலைப்பொறிகளின் அளவை காட்டிலும் சிறியதாக இருக்கும், பொறிகளின்  உள்ளே மாட்டிக் கொள்ளும் அளவிலான இரைகளையே இவை தேர்வு செய்கின்றன.ஒருபோதும் பொறிகளைக்காட்டிலும் பெரிதான இரைகளை இவை முயல்வதே இல்லை.  

அலங்கார செடிகளாக வீனஸ்

இவை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே பல ஆர்வலர்கள் இவற்றை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.  தாமஸ் ஜெஃப்ஃபெர்ஸன் (Thomas Jefferson)  பாரீஸில் 1786ல் தங்கி இருந்தபோது வீனஸ் தாவரங்களை சேகரித்தார். மேலும் இவற்றின் விதைகளையும் கடல்வழி அனுப்ப ஏற்பாடுகளை  செய்துவிட்டே பாரீஸிலிருந்து புறப்பட்டார், தாமஸ் வீனஸை ’’சென்சிடிவ் தாவரம்’’ என்று கடிதங்களில் குறிப்பிட்டார்.  தாவரங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த பச்சை கட்டைவிரல்காரர் என்று அழைக்கப்பட்ட மாமன்னர் நெப்போலியனின் மனைவி ஜோஸபைன் வீனஸ் தாவரங்களை தனது  வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தார் 

  தொடர்ந்து நடைபெற்ற தாவர பெருக்க சோதனைகளில் பலவிதமான வீனஸ் தாவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன அவற்றில் மாபெரும் பொறிகளை கொண்டவைகளும், கூடுதல் பொறிகளை கொண்டவைகளும் அடங்கும்.  அவ்வாறான பிரபல  வகைகளுக்கு Sawtooth, Big Mouth மற்றும் Red Piranha போன்ற பெயர்கள் இடப் பட்டிருக்கின்றன.

புதிய வீனஸ் வகையான ஜஸ்டினா டேவிஸின்  (Justina Davis) பெயருக்கு பின்னால் சுவாரஸ்யமான ஒரு கதை இருக்கிறது.வடக்கு கரோலினாவின் கவர்னர் ஒருவர் தனது 73வது வயதில் இரண்டாவது மனைவியாக ஜஸ்டினா டேவிஸ் என்னும் 15 வயது பெண்னை மணம் புரிந்துகொண்டார் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன

ஜஸ்டினாவின் இளமையை கருத்தில்கொண்டு பொறிகளின் உட்புறம் ஒருபோதும் சிவப்புநிறம் கொண்டிராத, முழுத்தாவரமும் எப்போதும் பசுமை நிறைந்திருக்கும் வகைக்கு ஜஸ்டினா டேவிஸ் என பெயரிடப்பட்டது. இது முழு முதிர்ச்சி அடைந்த பின்னும் இளமையாவே தோற்றமளிக்கும் வகை

இவை சதுப்பு நிலங்களில் வளருபவை என்றாலும் மிக அதிகமாக நீர் தேங்கி இருக்கையில் வீனஸ் தாவரங்களின்  வேர்கள் அழுகி விடும், தொட்டிகளிலும், குடுவைத்தோட்டங்களிலும்(Terrarium)  இவற்றை வளர்க்கலாம். எதில் வளர்த்தாலும் மண்ணில் அமிலச்சத்து இருப்பது அவசியம்

இவை நச்சற்றவை எனவே வீடுகளில் வளர்க்கலாம், வீடுகளுக்கு வெளியில் வளர்கையில் இவை தனது இரையை தானே தேடிக்கொள்கின்றன. வீடுகளின் உள்ளே அலங்காரத் தாவரங்களாக வளர்க்கப்படுகையில் பிற தாவரங்களுக்கு நீரூற்றுவதைப் போல, ஒளி கிடைக்க வசதி செய்வதைப்போல வீனஸ் தாவரங்களுக்கு பூச்சிகள் இரையாக கிடைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.வீடுகளில் வளர்க்கப்படும் வீனஸ் தாவரங்களுக்கு,  மாதமொரு முறையாவது  பூச்சிகளை அளிக்கவேண்டும் இல்லாவிட்டால் அவை மெல்ல அழிந்துவிடும்

பூச்சிகளல்லாத பிற இறைச்சி இரைகள் வீனஸ் தாவரங்களை கொன்று விடும். மேலும் இறந்த பூச்சிகளை விட இவை உயிருள்ள இரைகளையே விரும்பும். 

 இவற்றின் குளிர்கால உறக்க நிலை சுமார் 10 மாதங்களுக்கு தொடரும்,  அலங்காரச் செடிகளாக இவற்றை வளர்ப்பவர்கள் மலர்கள் உருவானதும் மலர்களை அகற்றி விடலாம்.  இனப்பெருக்கத்துக்கு இத்தாவரம் செலவழிக்கும் ஆற்றலை இதன் மூலம் சேமிக்கலாம்

கடுங்குளிர் காலத்தில் கருகி மடியும் இவை மீண்டும் துளிர்த்து வளரும் எனவே அவை இறந்து விட்டதாக கருதி அவற்றை பிடுங்க வேண்டியதில்லை

இயற்கையாகவே வளம் குறைந்த நிலப்பகுதிகளில் வாழ்வதால் வீனஸ் தாவரங்களுக்கு அதிக உரம் இடுவதும் அவற்றை  கொல்லும்.

சூரிய ஒளி சுமார் 6 மணி நேரங்களுக்கு இவற்றிற்கு தேவைப்படுகிறது இதற்கும் குறைந்த அல்லது அதிகமான கால அளவில்  இருக்கும் ஒளி இவற்றின் வளர்ச்சியை பாதித்து தாவரத்தின் இலைகளை உதிரச்செய்துவிடும்.

இவை குளிர்ந்த காலநிலையில் நன்கு வளரும் ஆனால் அதிக குளிரும் அதிக வெப்பமும் இவற்றை அழித்துவிடும்.

அமேஸான் வீனஸ் தாவாங்களை ஆன்லைனில் விற்பனை செய்கிறது.திசு வளர்ப்பில் உருவாக்கப்பட்ட  ஒரு வீனஸ் தாவரம் 5 டாலர்களுக்கு கிடைக்கிறது.

பாதுகாக்க வேண்டிய இனம்

அரிய வகை தாவரங்களின் அழிவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 1976ல் தெற்கு கரோலினா பாரம்பரிய அறக்கட்டளை (The South Carolina Heritage Trust) உருவாக்கப்பட்டது. தெற்கு கரோலினா இயற்கை வளங்களுக்கான் துறை (South Carolina Department of Natural Resources) அதன் கட்டுப்பாட்டில்  83,000  ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை கொண்டிருக்கிறது. அந்நிலத்தில் சுமார் 3,000 இயல் தாவரங்கள் இருக்கின்றன அவற்றில் வீனஸ் தாவரங்கள் உள்ளிட்ட  700 வகைகள்  மிக மிக அரியவை. 2005ல் வீனஸ் தாவரம் வடக்கு கரோலினாவின் மாநில மலராக அடையாளப்படுத்தப்பட்டது.  

மரபணு மாற்றங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட அலங்கார வீனஸ் தாவரங்கள் பசுங்குடில்களில் வளர்க்கப்பட்டு வீடுகளில் வளருகின்றன   இவற்றில் ‘Akai Ryu மற்றும் ‘South West Giant’ ஆகிய வகைகள் ராயல் தோட்டக்கலை தங்க விருதை பெற்றுள்ளன

பசுங்குடில்களில் இவை சாகுபடி செய்யப்படுகின்றன எனினும் இயற்கையான வாழிடங்களில் 1979 லிருந்தவற்றின் எண்ணிக்கையில் தற்போது 7 சதவீத தாவரங்கள் மட்டுமே இருக்கின்றன 

வாழிட அழிப்பும் வீனஸ் தாவரங்களின் அழிவுக்கு காரணமாயிருக்கிறது.சமதளமான நிலப்பரப்பும் அமிலத்தன்மை உள்ள சதுப்பு மண்ணும் நல்ல ஒளியும் இருக்கும் இடங்களில் தான் இவை செழித்து  வளர்கின்றன சூழல் மாசு மற்றும் விவசாய நிலங்களாக இயற்கை வாழிடங்கள் மாற்றபடுவது ஆகியவற்றால் வீனஸ் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கரோலினாவின் மக்கள் தொகைப்பெருக்கத்தினால் சாலை உருவாக்கமும் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதுமாக இவற்றின் வாழிடங்கள் குறைந்து கொண்டே வருகின்றது.வடக்கு கரோலினாவில் வீனஸ் தாவரங்கள் சிறப்பு கவனம் கோரும் தாவரங்கள் என்னும் பிரிவில் வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன

வீனஸ் செடி அழியும் தாவரங்களில் ஒன்றாகவும் பாதுகாக்கபட வேண்டிய இனமாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தினால்  சிவப்பு பட்டியலிட பட்டிருக்கிறது.

இந்த தாவரங்களின் அழிவிற்கு இவற்றை சட்டவிரோதமாக சேகரிப்பதும் முக்கிய காரணமாயிருக்கிறது. பொது இடங்களில் இயற்கையாக வளரும் வீனஸ் தாவரங்களை  சேகரிப்பது சட்டப்படி குற்றமென வடக்கு கரோலினாவில் 1958லிருந்தே அறிவிக்கப்பட்டிருக்கிறது . பசுங்குடில்களில்  ஆயிரக்கணக்கான வீனஸ் தாவரங்கள் வளர்க்கப்பட்டு சந்தை படுத்தப்பட்டிருக்கிறது. 

எனினும் 2016 நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை பசுங்குடில்களில் வளர்க்கப்படும் வீனஸ் தாவரங்களை காட்டிலும் இயற்கையான வாழிடங்களில் வளரும் தாவரங்களுக்கான தேவையே அதிகம் என்கிறது. வடக்கு கரோலினாவில் இப்போது வீனஸ் தாவரங்களை சட்டவிரோதமாக சேகரிப்பது கடும் தண்டனை குரிய பெருங்குற்றமாக கருதப்படுகிறது (felony). 

2014லிருந்து அமெரிக்காவில் வீனஸ் செடிகளை  அனுமதியின்றி எடுப்பது 25 மாத சிறைத்தண்டனைக்கான குற்றமாக கருதப்படுகிறது. . கடத்தல்காரர்கள் இயற்கையான வாழிடங்களில் இருப்பவற்றில் மிகப்பெரிய தாவரங்களையே தேர்வு செய்து எடுக்கிறார்கள். எனவே அவற்றிலிருக்கும் ஏராளமான விதைகளும், அவ்விதைகளிலிருந்து முளைக்கவிருக்கும் நூற்றுக்கணக்கான அடுத்த சந்ததி தாவரங்களுக்கும் சேர்த்தே கூடுதல் சிறைத்தண்டனை அளிக்கப்படுகிறது

உள்ளங்கையிலும் சட்டை பாக்கெட்டுகளிலும் கூட பல வீனஸ் தாவரங்களை மறைத்து வைத்துக் கொள்ள முடியும் என்பதால் இவற்றின் கள்ளத்தனமான சேகரிப்பை கண்டுபிடித்து தடை செய்வது மிக கடினமாக இருக்கிறது.

இவற்றை வாங்குபவர்களுக்கு அவை இயற்கையான வாழிடங்களிலிருந்து திருடிகொண்டு வரப்பட்டதா அல்லது பசுங்குடில்களில் வளர்க்கப்பட்டதா என்று தெரியாததால் அவை எளிதில் சந்தைப்படுத்தப் படுகின்றன’

சர்வதேச அளவிலான வீனஸ் தாவரக் கடத்தல்களும் நடைபெறுகின்றன. பால்டிமோர்- வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பெரணிகள் என்னும் பெயரில் இருந்த பெட்டிகள் சோதனையிடப்பட்ட போது அவற்றில் 9000 வீனஸ் தாவரங்கள் இருந்தன.

இவை பொதுவாக மரங்களின் அடுக்குகளுக்கடியில் அவ்வப்போது காட்டு நெருப்பு உண்டாகும் இடங்களில் செழித்துவளர்கின்றன. குறிப்பாக விதைகள் முளைக்க நெருப்பு எரிந்த பின்னர் இருக்கும் சாம்பல் மண் மிகவும் அவசியமாக இருக்கிறது. நெருப்பின் வெப்பம் இவற்றின் வளர்ச்சிக்கு நேரடியாக தேவைப்படுகிறது. காட்டு நெருப்பு மனிதர்களுக்கு ஆபத்தேற்படுத்தும் என்பதால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படுவதும் இவற்றின் அழிவுக்கு காரணமாயிருக்கிறது.  

இவை கடல்மட்டத்திலிருந்து 2-4மீ உயரத்தில் இருப்பதால் புயல் மழை போன்றவற்றினால் கடல்மட்டம உயருகையில் இவை அழிகின்றன.

சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் வீனஸ் தாவரங்களின் இயற்கை வாழிடங்களை GPS  கருவி மூலம் கணக்கெடுத்தது. 1970களிலிருந்து நடைபெற்ற கணக்கெடுப்புக்களோடு ஒப்பிட்டதில் சுமார் 70 சதவீத வாழிடங்கள் இப்போது அழிந்துவிட்டிருப்பதாக  முடிவுகள் தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் அவற்களது வாழ்வில் ஈடுபட்டிருந்த அனைத்து ஆய்வுகளிலும் மனம் உடையும் ஒரு ஆய்வு இதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்

இந்த நிலைமை தொடர்ந்தால்  வீனஸ் தாவரம் புராணங்களிலும் காப்பியங்களிலும் தொன்மங்களிலும் இடம்பெற்றிருந்த ஒரு  தாவரமாக மாறிவிடும் சாத்தியமும் இருக்கிறது.

வீனஸ் தாவரத்தின் சாறு கார்னிவோரா  (Carnivora) என்னும் பெயரில்  மூலிகையாக சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளில் எய்ட்ஸ் மற்றும் சருமப்புற்று நோய்களுக்கான சிகிச்சையில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.ஆனால் இவை அந்நோயை குணமாக்குவதற்கான அறிவியல் ஆதாரங்கள் இதுவரை இல்லை.

இருக்கும் இடத்திலிருந்தே தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், தொடர்ந்து உயிர்வாழவும் தாவரங்கள் பலவகையான, மிக சாமர்த்தியமான தகவமைப்புகளை கொண்டிருக்கின்றன. மற்றொரு  உதாரணமாக புகையிலை செடிகளின்  இலைகளை உண்ணும் கம்பளிப்பூச்சிகளுக்கு நிகோடின் தசைபலவீனத்தை உடனடியாக உருவாக்குவதை சொல்லலாம்.  தசை பலவீனமடைவதால் அவை புகையிலை உண்ணுதலை தொடர்வதில்லை

இது போன்ற தாவரங்களின் சிறப்பு தகவமைப்புகள் ஆச்சர்ய மூட்டுபவை. ஒரு தாவரத்தின்  95% இலைகளை நீக்கிவிட்டாலும் அவை மீதமிருக்கும் இலைகளைக் கொண்டே உணவு தயாரித்து, உயிர்வாழ்ந்து இனப்பெருக்கமும் செய்யும். நம்மைக் காட்டிலும் சூழல் தகவமைப்பு கொண்டவை அவை. தாவரங்கள் மனிதர்களைக் காட்டிலும்  சூழலை மிக நுண்மையாக கவனித்து அவற்றின் பிரச்சினைகளுக்கு எப்படியும் தீர்வை கண்டுபிடித்து விடுகின்றன. 

தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதா? மூளை என்னும் அமைப்பு இருக்கிறதா? நரம்பு மண்டலம் இருக்கிறதா? எப்படி அவற்றை உயிருள்ளவை என சொல்ல முடியும் போன்ற கேள்விகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. மனிதர்களின் மூளை, நரம்பு மண்டலம் இவற்றுடன் மட்டும் தாவரங்களை ஒப்பிடாமல்   இப்போது பிரபலமாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்  ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதிலும் மூளை இல்லை நரம்பு மண்டலம் இல்லை ஆனால் ஒரு வலைப்பின்னல் போல அபாரமாக செயல்படும் அவற்றின் சாமார்த்தியங்களை நாம் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறோம், அதுபோலத்தான் இந்த தாவரங்களின் நுண்ணறிவும்,  

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து தாவரங்கள் கொண்டிருக்கும் அறிவைத்தான் இந்த நூற்றாண்டில் மனிதர்கள் மிகத்தாமதமாக கண்டறிந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். தாவரங்களும் விலங்குகளும்  நம்மைக்காட்டிலும் கீழ்நிலை உயிரிகள் அவற்றால் நம்மைப்போல சிந்திக்கும் தரமற்றவை என்று இன்னும் நம்புபவர்கள் டேவிட் அட்டன்பரோவின் BBC க்கான இந்த 

காணொளியை காணலாம். இதில்   வீனஸ் தாவரங்களின் இரை பிடிக்கும் பொறியமைப்பும், செயல்பாடுகளும்  துல்லியமாக காண்பிக்கப்படுகிறது.

  • ஏறுகொடியொன்று பற்றுக்கம்பிசுருள்களைக்கொண்டு ஆதரவாக  அருகிலிருக்கும் கம்பியை பற்றிக்கொண்டு மேலேறி வளர்வதை காட்டும் இந்த https://youtu.be/5NvlkEqMtVY காணொளியையும் பார்க்கலாம்.

1. https://logamadevi.in/2045

வாழைகளின் வகைகள்

 

வாழை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம் என தாவரவியலாளர்களால் கருதப்படுகிறது. உலகின் முதல் உண்ணும் பழமும் வாழைதான் என கருதப்படுகிறது. ஆதாம் ஏவாள் உண்டதும் வாழைதான் என்போரும் உண்டு.

தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்ட வாழை அரேபியர்களால் உலகின் பல பாகங்களுக்கு  கி மு 327 ல் அறிமுகம் செய்யப்பட்டது

வணிக ரீதியிலான வாழை சாகுபடி 1834 ல் தொடங்கியது.  1889களில் உலகெங்கும் மிக பரவலாக வாழை சாகுபடி ஆனது  

அலெக்ஸாண்டர் இந்திய படையெடுப்பின் போது கிடைத்த கதலிப்பழங்களின் சுவையை மிக விரும்பி இந்தியாவிலிருந்து வாழையை மத்தியகிழக்கு நாடுகளுக்கு அறிமுகம் செய்தார் அங்குதான் பொன்னிற பருத்த விரல்களை போன்ற வாழைப்பழங்களுக்கு  ’பனான்’ (banan)  என்னும் விரல்களை குறிக்கும் அரபிச்சொல் பெயராக வைக்கப்பட்டது

 பின்னர் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரிபியன் பகுதிகளுக்கு 15ம் நூற்றாண்டிலும் அங்கிருந்து பெர்முடாவுக்கும் வாழை அறிமுகமானது. பெர்முடாவிலிருந்து 17, 18ம் நூற்றாண்டுகளில் வாழை பெருமளவில் இங்கிலாந்துக்கு கடல்வழி அனுப்பப்பட்டது.

 1835 ல் இங்கிலாந்தின் பிரபல தோட்டக்காரர் ஜோஸஃப் பாக்ஸ்டன் ஒரு புதிய மஞ்சள் பழங்களை அளிக்கும் வாழை வகையை உருவாக்கினார். அவரது எஜமானர் வில்லியம் கேவெண்டிஷ்  பெயரிலேயே அதற்கு  Musa cavendishii என்று பெயரிடப்பட்டது.

வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நன்கு  பழுத்த வாழைப்பழங்களில் வைட்டமின் B6 ,C, மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. வாழைப்பழங்களும் வாழைத்தண்டும் வாழைப்பூக்களும் ஏராளமான மருத்துவ குணங்களும் கொண்டிருக்கிறது. வாழை இலையில் உணவுண்ணுவதும் ஆரோக்கியமான வழக்கம்.

ம்யூஸேசி குடும்பத்தை சேர்ந்த வாழையின் உண்ணக்கூடிய பழங்கள் ஆங்கிலத்தில் bananas  என்றும் சமைத்து உண்ணும் வாழைக்காய்கள்  plantains எனவும் குறிப்பிடப்படுகின்றன

இவை மரம் என்று சொல்லப்பட்டாலும் இவற்றின் சதைப்பற்றான தண்டுகள் இலைத்தாள்களின் சுற்றடுக்குகளால் ஆன போலித்தண்டுகள்தான் .

வாழையில் சுமார் 70 சிற்றினங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகளும் உள்ளன.  ஒருவித்திலை தாவர வகையை சேர்ந்த வாழை விரைவில் வளரும் இயல்புடையது.

இதன் கலப்பினங்கள் உயரத்திலும் அளவிலும் பழம் பூ இலை ஆகியவற்றிலும் வேறுபட்டிருக்கும். இவைஅதிக பட்சமாக 15 மீ உயரம் வரை வளரும்.ஓராண்டில் மலர்ந்து பலனளிக்கும்.

 உலகெங்கிலும் விரும்பி உண்ணப்படும் விதைகளற்ற சதைப்பற்றான வாழைப்பழங்களை கொடுக்கும் வாழைமரங்கள் அனைத்துமே  Musa acuminata மற்றும் Musa balbisiana  ஆகிய இரு காட்டு வாழைகளின் கலப்பினம் தான்

சிறப்பு வாழை வகைகள்

  • சீன குட்டை வாழை அல்லது தங்கத்தாமரை வாழை எனப்படும்  Musella lasiocarpa  கடல்மட்டத்துக்கு மேல் 2500 அடி உயரத்தில் வளரும் இவற்றின் போலித்தண்டின் உச்சி பொன்னிறத்தில்  இதழ்களாக விரிந்து தாமரை போலிருக்கும். இவை அலங்கார வாழைகள்  
  • Musa ornata, என்பது மலர் வாழை. இதன் கனிகள் உண்ணத்தகுந்தவையல்ல. அழகிய இளஞ்சிவப்பு மலர்களுக்காக இவை உலகெங்கிலும்  சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. 
  • Musa velutina,  வகை அஸ்ஸாம் மற்றும் கிழக்கு இமாலயப்பகுதிகளில் காணப்படும் மலர்களும் பழத்தோலும் அடர் ரோஜா நிறங்கொண்ட வாழை வகை
  • கேரட் வாழையின் (M×troglodytarum,L) கனிகள்  சிறிதாக  உருளைக்கிழங்கை போல் இருக்கும் இவற்றின் சதை நல்ல ஆரஞ்சு நிறம்  கொண்டிருக்கும். இவற்றில் ஆந்தோசயானின் நிறமிகள் உள்ளதால் பல மருத்துவ பயன்களும்கொண்டது
  • நீல ஜாவா வாழை ஐஸ்கிரீம் போன்ற வெனிலா வாசனைகலந்த  இனிப்புச்சுவை கொண்டிருக்கும். 
  • Musa textilis என்பது நார் வாழை. இந்த வாழை நார் ஆங்கிலத்தில் ’Abacá’  எனப்படுகிறது.  பின்னலாடை தொழிலுக்கேற்ற உறுதியான நாரிழைகளை கொடுக்கும் இந்த வாழை பிலிப்பைன்ஸில்  ஒரு முக்கிய வணிகப்பயிர். இவற்றின் சிறு கனிகள் உண்ணத்தகுந்தவை அல்ல.
  • இலைகளின் அடிப்பகுதியில் மழை நீரை சேர்த்துவைத்து, கடும் கோடையில் பயணிப்பவர்களுக்கு குடிநீர் அளிக்கும் விசிறி வாழை (Ravenala madagascariensis,) மடகாஸ்கரை தாயகமாக கொண்டது
  • உலகின் மிகப்பெரிய வாழையினமான ராட்சஷ வாழை எனப்படும்  Musa ingens,  இந்தோனேசியாவில் காணப்படுகிறது.

இவற்றின் இலைகள் 1மீ அகலம் 16 மீ நீளமும் கொண்டிருக்கும்.தண்டு 50 அடி உயரம் வரை வளரும் உச்சியில் சுமார் 20 நீண்ட இலைகளும் மிகப்பெரிய வாழைத்தாரும் கொண்டிருக்கும் இவையே உலகின் மென்மரங்களில் மிக உயரமானவை. இவற்றின் சுற்றளவு1- 2 மீ இருக்கும். ஒரு பழம் சுமார் 3 லிருந்து 4 கிலோ எடை கொண்டிருக்கும் இதன் மிகப்பெரிய மலரிலிருந்து  லேசான புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை கொண்டிருக்கும் 18லிருந்து 25 செ மீ நீளமிருக்கும்  300 பெரிய பழங்கள் உருவாகும். 

உலகிலேயே அதிக நீளம் கொண்ட இலைக்காம்பு சுமார் 15 மீ நீளம் கொண்டது

1989ல் தாவரவியலாளர்   ஜெஃப் டேனியல்ஸ் (Jeff Daniels), இந்த ராட்சஷ வாழையை இந்தோனேசியாவில் கடல்மட்டதுக்கு 2000 மீ உயரத்தில்  முதன்முதலாக கண்டறிந்தார்

இந்தியாவில் வாழை கலச்சார முக்கியத்துவம் வாய்ந்தது வாழையடி வாழையாக என்னும் பழமொழி தொடர்ந்து வரும் சந்ததிகளைகொண்ட குடும்பத்தை குறிக்கும் முது சொல்லாக இருக்கிறது

பூத்து காய்த்து, கனியளித்து தானழிந்து சந்திகள் வளர வழிசெய்யும் வாழை இந்தியாவில் தெய்வமாகவும் வணங்கப்படுகிறது,. இந்திய  மங்கல நிகழ்வுகளில் வாழை நுழைவுவாயிலை அலங்கரிக்கும்

 இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழை கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது. வாழையின் வேர், இலை, மலர், கனி, காய், தண்டு, நார் என அனைத்தும் உபயோகம் கொண்டதால் கற்பக விருட்சம் என்றும் இதற்கு பெயருண்டு.

துரியான் – முள் நாறி

முள் நாறிப்பழம்- துரியான்

துரியான் மரம் Durio zibethinus என்னும் அறிவியல் பெயர் கொண்டது.இது கனிகளின் அரசன் என்றும் அழைக்கப்படுகிறது

நல்ல வெப்பமுள்ள இடங்களில் மட்டுமே செழித்து வளரும் இயல்புடையவை இந்த துரியன் மரங்கள். போர்னியோ ,சுமத்ரா தீவுகளை தாயகமாக கொண்ட  இம்மரங்களின் அறிவியல் பெயரின்  duri  என்பது மலாய் மொழியில் ’முள்’ என்று பொருள்படும். துரியான் பழங்களின் முட்களை இச்சொல் குறிக்கிறது.

 15 ம் நூற்றாண்டில் துரியான் பழங்களும் முட்களை கொண்ட முள்சீதா (Annona muricata) பழங்களும் ஒன்று  என கருதபட்டு குழப்பம் நிலவியது.  17ம் நூற்றாண்டில் ஜெர்மானிய தாவரவியலாளர் ஜி இ ரம்ஃபிஸ் என்பவர் துரியான் பழ மரங்களை குறித்தான விரிவான விளக்கங்கள் கொண்ட நூல் ஒன்றை வெளியிட்ட போதுதான் இக்குழப்பம் தீர்ந்தது.

 ரம்ஃபிஸ் அந்த நூலில் எப்படி அமெரிக்க பழங்குடி வேட்டைக்காரர்கள் துரியானின் கெடுமணத்தையும் சுவைமிகுந்த கனிச்சுளைகளையும் கொண்டு புனுகுப் பூனைகளை (civet cat) பிடிக்கிறார்கள் என்பதை விவரித்திருந்தார். துரியானின் அறிவியல் பெயரின் zibethinus என்பது இத்தாலிய சொல்லான  zibetto என்பதன் பொருளான  புனுகுப்பூனையை குறிக்கிறது.

நிமிர்ந்த தண்டும், அகன்ற அடிப்பகுதியும் முட்டைவடிவ இலைப்பரப்புமாக மிக கம்பீரமான தோற்றமுடையது இம்மரம்.

இலைகள் லென்ஸ் வடிவத்தில் இரு நுனிகளும் கூராக  இருக்கும் இலைகளின் மேற்பரப்பு மென்மையாகவும் பளபளப்பாகவுமிருக்கும் அடிப்பகுதி  மங்கலான நிறத்திலிருக்கும். வனப்பகுதிகளில் 130 அடி உயரம் வரை வளரும் துரியான் மரங்கள் சுமார் 200 வருடங்கள் வாழும்.

கலப்பின துரியான் மரங்கள் இவற்றில் பாதி உயரத்தையே கொண்டிருக்கும். 20லிருந்து 30 மலர்களை கொண்ட தொங்கு மஞ்சரிகள் மிக அழகாக  கவிந்த மணிகளை போலிருக்கும்.

 மலர்கள் நல்ல தடித்த கிளைகளில் மட்டுமே தோன்றும். மலர்களின் நிறம் கனிகளின் நிறத்தை ஒத்திருக்கும் மஞ்சள் கலந்த மலர்களிலிருந்து மஞ்சள் நிற சுளை கொண்ட கனிகளும் வெள்ளை அல்லது சிவப்பு மலர்களிலிருந்து வெள்ளை அல்லது சிவப்பு சதைப்பகுதியை கொண்ட கனிகளும் உருவாகும்

 அரும்பு மலர ஒரு மாத காலமாகும். துரியான் மரங்களில்  அயல் மகரந்த சேர்க்கை வவ்வால்கள் தேனீக்கள் பறவைகள் மற்றும் எறும்புகளினால் நடைபெறும். மகரந்த சேர்க்கை முடிந்த மலர்களிலிருந்து 3 மாத்த்தில் கனிகள் உருவாகும்.

 துரியான் கனிகள் 12 இன்ச் குறுக்களவும் முட்கள் நிறைந்த மேல்தோலும் கொண்டவை. ஒரு பழம் சுமார் 6லிருந்து 8 கிலோ எடைகொண்டிருக்கும். ஒரு மரத்தில் நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பலன் கிடைக்கும்..

கனிகளில் பெரிதான 5 சுளைகளே காணப்படும் பொதுவாக மஞ்சளிலும்  அரிதாக இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது நீலநிறத்திலும் சுளைகள் இருக்கும்.  இக்கனிகளின் தனித்துவமாக இவற்றின் கெடுமணம் இருக்கிறது

பலருக்கு இம்மணம் விருப்பத்துக்குகந்ததாகவும் பலருக்கு இம்மணம் கெடு நாற்றமாகவும் இருக்கிறது. சிலர் இம்மணத்தை கெட்டுப்போன வெங்காய மணத்தை, டர்பன்டைனின் நெடியை ஒத்திருக்கிறது என்பார்கள். சுவையும் அப்படியே பலருக்கு இது பிடித்தமானதாகவும் பலரால் இதை உண்ணுவதை நினைத்துப்பார்க்கக்கூட முடியாததாகவும் இருக்கிறது. மலேசியாவில் இது பலரின் விருப்பக் கனியாக இருக்கிறது. சிங்கப்பூரில் இந்த கெடுமணத்தினால் இவற்றை ரயில் மற்றும் பேருந்துகளில் எடுத்துச்செல்ல சட்டப்படி தடை விதிக்கப்பட்டிருக்கிறது

 வருட்த்திற்கு இருமுறை கிடைக்கும் துரியான் கனியை உடைத்து உடனே சிலமணி நேரத்தில் உண்டுவிடவேண்டும் இல்லாவிட்டால் இதன் சுவையும் சத்துக்களும் மாறுபட்டுவிடும். இவற்றின் கொட்டை மிக மிக கடினமானது.

முள்நாறிப்பழமான துரியானில் சுமார் 35 க்கும் அதிகமான் வகைகள் உள்ளன. பல பழங்கள் காயாக இருக்கையிலேயே  முட்கள் நீக்கப்பட்டு  முள்ளில்லா துரியான் என விற்பனை செய்யப்படுகின்றன . இயற்கையிலேயே முள்ளில்லா துரியான் கனிவகை  இன்னும்  உருவாக்கப்படவில்லை.

தோட்டக்கலைத்துறையினால் உருவாக்கப்பட்ட துரியான் மரங்களின் பெயர்கள் அனைத்தும் D என்னும் எழுத்தை கொண்டிருக்கும். D24, D99, D158 , D159 போன்றவை முள்நாறியின் புகழ் பெற்ற ரகங்கள்.

துரியன் கனிகளின் ஏற்றுமதியில் தாய்லாந்து  முதன்மை வகிக்கின்றது. தென் கிழக்காசியாவைத்தவிர ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் இப்பழம் விளைகின்றது.

துரியான் கனிகளில் மாவுச்சத்து புரதம் நார்ச்சத்து இவற்றோடு வைட்டமின் B12, C,B 6, மேங்கனீஸ் மெக்னீஷியம் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவற்றுடன் ஆந்த்தோசயானின் போன்ற பல முக்கிய நிறமிகளையும் இக்கனி கொண்டுள்ளது. பல சத்துக்கள் கொண்டுள்ள இக்கனி புற்று நோய்க்கெதிராகவும் உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உடலை வலுவாக்கவும் பயன்படுகிறது.

 துரியன் கனிகளுடன் மதுவை சேர்துக்கொலவ்து ஆபத்தை  விளைவிக்கும்.

ஈஸ்ட்ரொஜென்னை போன்ற இயக்கச்சாற்றை (Hormone) கொண்டிருக்கும் துரியான் கனிகள் குழந்தை பேறற்றவர்களின் குறையைபோக்கும் என்னும் நம்பிக்கை உலகின் பல நாடுகளில் இருக்கிறது. எனினும் இதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை.

மெத்தூசலா!

உலகின் மிகப் பழமையான மரம்மெத்தூசலா

சுமார் 4500 வருடங்களுக்கு முன்பு, கிஸாவில் எகிப்திய பிரமிடுகள் கட்டப்பட்ட சமயத்தில் பிரிஸில் கோன் பைன் மரமான பைனஸ் லாங்கேவா (Pinus longaeva) மரத்தின் விதையொன்று கிழக்கு கலிஃபோர்னியாவின் வெண்மலைத் தொடரின் சரிவொன்றில் விழுந்தது. 

இறகுகள் கொண்டிருக்கும் அந்த விதை காற்றில் பறந்து வந்திருக்கலாம் அல்லது விதைகளை கூடுகளில் சேமித்து வைக்கும் பழக்கம் கொண்ட பறவை ஒன்றினால் கொண்டு வரப் படுகையில் தவறி அங்கு விழுந்திருக்கலாம். எப்படியோ எங்கிருந்தோ வந்து, அந்த பைன் விதை அங்கு  விழுந்த போது நிலம் ஈரமாக இருந்திருக்கிறது  சில நாட்களிலேயே அது முளைத்து இளம்பச்சை  நிற தண்டும் குருதிலையுமாக வளரத்துவங்கியது

 அந்த சரிவின் நிலம் மிக அதிக சுண்ணாம்புச்சத்து கொண்டிருக்கும் எனவே, அங்கு முளைக்கும் பெரும்பாலான  தாவரங்கள்  விரைவிலேயே அழிந்துவிடும் அந்த மலைச்சரிவு முழுக்க அப்படி மடிந்துபோன பல  இளம் பைன் மரங்களின் உடைந்த துண்டுகள்  நிறைந்திருக்கும்.

இந்த  பைன் விதை தனது முன்னோர்களின் மட்கிய உடல்களிலிருந்து சத்துக்களை எடுத்துக்கொண்டு நன்றாக வளர துவங்கியது. பைன் மரங்கள் பிற மரங்களை போலல்லாது மிக மெதுவாக வளரும் இயல்பு கொண்டது.  5 வருடங்களில் அந்த விதை சில இன்ச்  அளவுக்குத்தான் வளர்ந்திருந்து.அதன்அடர் பச்சை நிற  ஊசி இலை குருத்துக்கள் அழகாக வெளியே தெரிய துவங்கி இருந்தன.  பல  பத்தாண்டுகள் கடந்த பின்னர் அம்மரம் ஒரு மனிதனின் உயரத்துக்கு வந்திருந்தது

  கிறிஸ்துமஸ் மரத்தை போல தோன்றிய அம்மரம் சில நூற்றாண்டுகள் கழித்து பண்டைய எகிப்து அரசின் வீழ்ச்சிக்கு பின்னர் 45 அடி உயரம் வளர்ந்திருந்தது

 ஊசியிலை மரங்கள்  சாதாரணமாகவே  நூற்றாண்டுகளை கடந்தும் வாழும். செகுவா மரம், யூ மரம், ஓக், சைப்பரஸ் மற்றும் ஜூனிபர் மரங்களிப்படி நூற்றாண்டுகளுக்கு மேலும் வளர்ந்து கொண்டிருக்கும்.

 பிரிஸில் கோன் பைன் மரங்கள் சுண்ணம்புச்சத்து மண்ணிலும் வறண்ட் மண்ணிலும் நன்கு வளரும் இயல்புடையது எனவே அச்சரிவின் வறண்ட மண்ணும்,  காலநிலை மாற்றங்களும் அதன் வளர்ச்சிக்கு இடையூறாக இல்லை.

பொதுவாக மலை மரங்களை துளையிட்டு சேதப்படுத்தும் மலைவண்டுகள் பிரிஸில் பைன் மரத்தை துளையிட முடியாதபடிக்கு மிக கடினமான மரப்பட்டையை இவை கொண்டிருந்தன.

அக்காலத்தில் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பல சாம்ராஜ்யங்கள் உதித்து எழுந்தன பல அழிந்தன பல நூறு போர்கள் நடந்தன ஆனால் கிமு 2500 லிருந்து அந்த மரம் எந்த சேதமும் இல்லாமல் மிக மெதுவாக வளர்ந்துகொண்டிருந்தது. ஒரு வருடத்திற்கு  1 இன்ச்சில் 200 பங்கு அளவில் இதன் பருமன் அதிகரித்துக்கொண்டிருந்தது. அவற்றில் ஆண்டு வளையங்கள் தோன்றின

ஆண்டுவளையங்கள் அந்த குறிப்ட்ட ஆண்டுகளின் கால்நிலையை குறிப்பிடும் அடையாளங்களை கொண்டிருப்பவை. அதிக மழைப்பொழிவு இருந்த சமயங்களில் அகலமான வளையங்கள் உண்டாகின. எரிமலை வெடிப்பு இருந்த காலங்களில், கடும் வறட்சியின் போது தீ விபத்து நடந்த போது அதற்கேற்ற அடையாளாங்கள் ஆண்டு வளையங்களில் உருவாகின. இவ்வளையங்களை கொண்டே பொதுவாக மரங்களின் வயது கணக்கிடப்படுகிறது.

 1957ல் டூசான் (Tucson)  மரவளைய ஆய்வகத்தின் விஞ்ஞானி எட்மண்ட் ஷூல்மேன்   (Edmund Schulman)  மற்றும் டாம் ஹார்லன் ஆகியொர் இம்மரம் 4,789  வருடங்கள் பழமையானது என்று கணித்தனர். 

எகிப்தின் பிரமிடுகளை காட்டிலும் பழமையான இந்த பைன் மரம் உலகின் மிகப் பழமையான மரம் என்பதை  மரவளைய கணக்கீட்டு ஆய்வுகளின் மூலம் இவர்கள் கண்டறிந்தனர்.

Edmund Schulman

 இம்மரத்திற்கு எட்மண்ட், மிகப் பழமையான மனிதரும் மிக அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்றும் பைபிளில்  சொல்லப்பட்ட மெத்தூசலாவின்  பெயரிட்டார். (Methuselah).  

அடுத்த வருடத்திலிருந்து அமெரிக்க வனத்துறை அவ்விடத்தில் பிரிஸில் சோன் பைன் மரக்காடுகளை உருவாக்கியபோது அக்காட்டின் பிரத்யேக அடையாளமாக நின்றது மெத்தூசலா மரம். அம்மாம் அங்கிருப்பதை கேள்விப்பட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத்துவங்கினர். 

அதன் பின்னர் மரத்தின் பாதுகாப்பை  உறுதி செய்ய அம்மரம் இருக்கும் இடம் மட்டும் பார்வையாளர்களுக்கு தடைசெய்யப்பட்டது.அம்மரத்தை பாதுகாக்கும் பொருட்டு  அதனருகில் செல்லும் யாராகினும்  அவர்களது ஆயுட்காலத்தையும் அம்மரம் எடுதுக்கொண்டுவிடுவதால், இளமையிலேயெ இறந்துவிடுவார்கள் என்னும் கட்டுக்கதைகளும் உலவுகின்றன.

இந்த பழமையான பிரிஸில் பைன் மரம் ஒரு துறவியாக  கடவுளாக கருதப்படுகிறது.  இம்மரம் வளரும் பள்ளத்தாக்கு மூதாதையர்களின் காடு என்று அழைக்கப்படுகிறது. மெத்தூசலா மரத்தின் அருகில் மேலும் பல ஆயிரமாண்டுகள் பழமையான மரங்கள் வளர்கின்றன. மெத்தூசலாவின் அருகிலிருக்கும் இன்னொரு மரம் மெத்தூசலா விற்கு 2300 ஆண்டுகளுக்கு பின்னர் வளரத்துவங்கியது 

Old Tjikko

சமிபத்தில் ஸ்வீடன் பனிப் பகுதியில் இருக்கும்  Old Tjikko. என்று பெயரிடப்பட்டிருக்கும் ஒரு ஸ்புரூஸ் மரத்தின் வயது 9500 வருடங்கள் என கணக்கிடப்பட்டது. எனினும் இந்த ஸ்புரூஸ் மரம் தன் பழைய தண்டுகள் கிளைகளை இழந்து இழந்து பல புதிய கிளைகளை உண்டாக்கி வளர்வதால் இதை  clonal வகை மரங்களில்  மிகப்பழமையானது என்றும் மெத்தூசலா non clonal வகையில் பழமையானமரம்  என்றும் கருதப்படுகிறது. கின்னஸ் புத்தகத்தில் மெத்தூசலா மரம் உலகின் பழமையான மரம் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.


ரெஃப்லேஸியா மலர்த்தாவரம்

  1818 ம் ஆண்டு மே மாதத்தில் சுமத்ரா தீவுகளுக்கு வந்திருந்த தேடல் பயணக்குழுவினருடன்   சுமத்ராவின் பிரிட்டிஷ் கவர்னர் த  திரு ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் ஒரு காலை நடைக்கு புறப்பட்டிருந்தார். அவருடன்  தாவரவியலாளரான மனைவி சோபியாவும், மருத்துவரும் இயற்கையார்வலருமான திரு ஜோசப் அர்னால்டும் இணைந்துகொண்டனர். (Sir Stamford Raffles,  Lady Sophia Raffles &  Dr Joseph Arnold)

Sir Stamford Raffles

காட்டுப்பயணங்களில் உடன் வரும் பழங்குடியினப் பணியாள் ஒருவர் ஒரு மாபெரும் மலரை அன்று காண்பிப்பதாக சொல்லி இருந்ததால் ஆர்வமுத்துடன் மூவரும்  மன்னா ஆற்றங்கரையோரமாக நடந்து கொண்டிருந்தனர். குழுவின் பிற அங்கத்தினர் அவர்களுக்கு பின்னே வெகு தூரத்தில் அப்போதுதான் நடையை துவங்கி இருந்தனர்.

Sophia hull

பழங்குடியின பணியாள் அடர்ந்த மரங்களினடியில் ஒரு மாபெரும் மலரொன்றை காட்டியபோது ஜோசப் அதிர்ச்சியில் அப்படியே திகைத்து நின்றுவிட்டர். பொதுவில் மலரென்று சொல்லப்படும் வரையறைகளுக்குள் அடங்காத மாபெரும் இரத்தசிவப்பு மலரொன்று அங்கு இதழ்விரித்து கெடுமணம் வீசிக்கொண்டு மலர்ந்திருந்தது. அவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்ததுபோல ஒரு செடியில் இலைகளும் கிளைகளும் சூழ இருக்கும் சாதாரண மலர்களை போலல்லாது வெறும் மலர் மட்டுமே தண்டுகளோ இலைகளோ வேர்களோ இன்றி இருந்தது. முழுத்தாவரம் என்பதே மலர்தான் என்பது அதுவரை அவர்கள் காணாதது கற்பனையிலும் கண்டிருக்காதது

Dr Joseph Arnold

அவருக்கு சற்று பிந்தி வந்த ஸ்டாம்ஃபோர்ட் மற்றும் சோபியாவும் கூட ஆச்சர்யத்தில் அப்படியே உறைந்து போனார்கள்.  மலரின் மீது பெருங்கூட்டமாக சிறு பூச்சிகள் பறந்துகொண்டும் முட்டையிட்டுக் கொண்டும் இருந்தன. அப்பழங்குயினர் அம்மலரை சாத்தானின் வெற்றிலை பெட்டி என அழைத்தார்கள்.

கெட்டுப்போன மாட்டிறைச்சியின் கெடுமணம் கொண்டிருந்த அந்த மலர் 1.5 மீ சுற்றளவுடன், சுமார் 12 கிலோ எடையுடன் இருந்தது.உலகின்  மிகப்பெரிய மலரான  அதன் பெயர் பின்னர்  ரெஃப்லேசியா அர்னால்டி என அதை முதன் முதலில் பார்த்த, அடையாளப்படுத்திய ஜோசப் அர்னால்டின் பெயரில் சிற்றினப்பெயரும்,  சுமத்ரா கவர்னரான ராஃபில்ஸின் பெயரில் பேரினமும் கொண்ட Rafflesia arnoldi  அழைக்கப்படுகிறது

இதன் தாவரக்குடும்பம் ரெஃப்லேஸியேசி( Rafflesiaceae) அர்னால்டு அம்மலரை அப்போதே  வண்ணச்சித்திரமாக வரைந்து, அம்மலரை பற்றிய குறிப்புக்களையும் அங்கேயே எழுதி பத்திரப்படுத்திக் கொண்டார். அப்பழங்குடிப்  பணியாளிடம்  அம்மலரை கவனமாக எடுத்து பாதுகாப்பாக வைக்கும்படி  பணித்தார். பத்திரப்படுத்தியும் அம்மலர் சிலநாட்களிலேயே உலர்ந்தும், பூச்சித்தாக்குதலால் அழிந்தும் போனது.

 துரதிர்ஷ்டவசமாக சில மாதங்களில்  சுமத்ரா தீவில் உண்டான நோய்த் தொற்றினாலும் காய்ச்சலினாலும்  ஜூலை 1818ல்  அர்னால்ட் மறைந்தார்.    இந்த மலரை கண்டுபிடித்ததை குறித்து திரு ரேஃபில்ஸ் ராயல் சொசைட்டிக்கு 13 ஆகஸ்ட் 1818ல் எழுதியனுப்பினார். அக்கடிதத்தில் அர்னால்டின் மறைவையும் ரேஃபில்ஸ் குறிப்பிட்டிருந்தார். பிற்பாடு அர்னால்டின் சித்திரங்களும், குறிப்புக்களும் இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டு இங்கிலாந்தின்   பிரபலமான இயற்கை ஆர்வலரான ராபர்ட் பிரவுனிடம் சேர்ப்பிக்கப்பட்டது.

ராபர்ட் பிரவுன் 1820ல் லண்டன் லின்னேயஸ் சொசைடியில் ’’ரெஃப்லேஸியா என்னும்  ஒரு புதிய பேரினம்’’ என்னும் தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார்.அக்கட்டுரையில்தான் இம்மலருக்கு   அர்னால்ட் மற்றும்  அந்த தேடல் பயணத்துக்கு நிதி உதவி அளித்த ரேஃபில்ஸின் பெயர்களை இணைத்து அறிவியல் பெயர் வைக்காலமென்னும் பரிந்துரையையும் அளித்திருந்தார். 

இக்கண்டுபிடிப்பிற்கு   20 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 1794ல் இப்படியான ஒரு மாபெரும் மலரை ஜாவா தீவுகளில்  பிரெஞ்சு மருத்துவர் அகஸ்டே என்பவர் கண்டறிந்திருந்தார்.அது Rafflesia patma, என்று  பிற்பாடு பெயரிடப்பட்டது.

  ரெஃப்லேஸியா சுமத்ரா, ஜாவா மழைக்காடுகளில், மலேசியா மற்றும் தாய்லாந்தில் இருக்கும் ஒரு வேர் ஒட்டுண்ணி தாவரம். குறிப்பாக டெட்ராஸ்டிக்மா என்னும் வகை மரக்கொடிகளை (Tetrastigma woody vines.)ஒட்டியே இவை உயிர் வாழும்.

 மிக அரிய தாவரமன இவற்றை ஆய்வகங்களில்  உருவ]வாக்கவும் மலர்களை பாதுகாக்கவும் முடியாது. உலகின் மிகப்பெரிய அதிக எடைகொண்ட மலரான ரெப்லேஸியா. 9 லிருந்து 12கிலோ எடைகொண்டிருக்கும். இந்த தாவரத்துக்கு வேர்களோ இலைகளோ தண்டுகளோ இல்லாமல் மரக்கொடிகளில் அரும்புகளாக முளைத்து பின்னர் பெரிதாக மலரும்

பொதுவாக மலரில் ஆண் பெண் இரு இனப்பெருக்க உறுப்புக்களும் இருக்கும். அரிதாக ஆண் மலரும் பெண் மலரும் தனித்தனியாகவும் மலருவதுண்டு.இது இறைச்சி மலர் பிணமலர் என்று பல மொழிகளில் அழைக்கப்படுகிறது.( corpse flower) ஐந்து சதைப்பற்றான இதழ்கள் ஒரு மீட்டர் சுற்றளவில்  பெரிதாக மலர்ந்திருக்கும்.இதழ்களில்  மங்கிய வெள்ளை நிறத்தில் பெரிய திட்டுக்களும் புள்ளிகளும் காணப்படும்.

 முழுவதும் மலர்ந்து 7 நாட்களுக்கு வாடாமல் இருக்கும் இவற்றை தேடி வரும் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சி இனங்களை கவர கெடுமணத்தை பரப்பும்.

சிவப்பு நிறம் கொண்ட மலரின் நடுப்பகுதி ஊதா கலந்த சிவப்பில் இருக்கும்/ கிண்ணம் போன்ற மத்திய அமைப்பில் இனப்பெருக்க உறுப்புகள் அமைந்திருக்கும்.இதன் கனியில் பிசுபிசுப்பாக ஒட்டும் தன்மையுள்ள விதைகள் இருக்கும். இவற்றை கொறித்துண்ணும் சிறு விலங்குகளால் இவை இயற்கையாகவே பரவி காடுகளில் வளரும்.

அர்னால்டினால் கண்டறியப்படுவதற்கு முன்னரே பழங்குடியினர் இம்மலரை மருத்துவ சிகிச்சையில் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். மகப்பேற்றிற்கு பிறகான கருப்பை சுருங்குதலுக்கும் ரத்தப்போக்கை நிறுத்தவும் இம்மலரின் அரும்புகளை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

 மலேய பழங்குடியினர் பாலுணர்வு ஊக்கியாக இம்மலரின் சாற்றை பருகினர்.

தாய்லாந்து பழங்குடியினர் இம்மலரின் சதைப்பற்றான இதழ்களை நறுக்கி உண்ணுகின்றனர். மலேசியாவின் சில பகுதிகளில் இதை சாத்தானின் மலரென்று அதன் கெடுமணத்தினால் கருதி மங்கல நிகழ்வுகளில் பயன்படுத்த கூடாத மலரென்று கருதப்படுகிறது.

1990களில் தாய்லாந்தின் மூன்று தேசிய மலர்களில் ரெஃப்லேஸியாவும் ஒன்றாக வைக்கப்பட்டது..

அரிய வகை மலரான இவற்றின் எண்ணிக்கை இப்போது மிக குறைந்து விட்டதால் தாய்லாந்து அரசு அந்நாட்டின் பழங்குடியினரை இம்மலரின் பாதுகவாலர்களாக  அறிவித்து அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.

சிங்கப்பூர் தேசிய பூங்காவில் ரேஃப்லேசியாவின்   சிற்றினங்கலான  Rafflesia hasseltii மற்றும்  Rafflesia tuan-mudae  ஆகியவற்றின் இரு உலர் மலர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  1985ல் ரெஃப்லேஸியா சார்ந்து வளரும் மரக்கொடியான Tetrastigma lanceolarium வை வளர்த்து அதனருக்கில் ரெஃப்லேஸியாவின் விதைகளை வளர்க்கும் முயற்சி சிங்கப்பூரில் முன்னெடுல்லப்பட்டது எனினும்   அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.

ரெஃப்லேஸியாவின் பிற மொழிபெயர்கள்: Bunga patma, Yak-yak, Patma raksasa, Patma kemubut, Krubut, Pakma (Sarawak), Kukuanga (Sabah), Wusak-tombuakar (Tambunan), Ambun ambun, Kemubut (Sumatra), Kerubut, Petimun Sikinlili (Sumatra). Devil’s betel box, sun toadstool, stinking corpse lily.

 2001 ல் அதிகார பூர்வமாக ரெஃப்லேஸியாவின் சிற்றினங்களும், அவை கண்டுபிடிக்கப்பட்ட் ஆண்டுகளும் வெளியாகின

1821: Rafflesia arnoldi, Sumatra, Borneo.

1841: Rafflesia manillana, Leyte Island, Philippines.

1850: Rafflesia rochussenii, Sumatra, Java.

1868: Rafflesia tuan-mudae, Borneo.

1879: Rafflesia hasseltii, Sumatra.

1884: Rafflesia schadenbergiana, Mindanao, Philippines

1910: Rafflesia cantleyi, Peninsular Malaysia

1918: Rafflesia borneensis, Borneo.

1918: Rafflesia ciliata, Borneo.

1918: Rafflesia witkampii, Borneo.

1984: Rafflesia gadutensis, Sumatra.

1984: Rafflesia keithii, Borneo.

1984: Rafflesia kerrii, Thailand and Peninsular Malaysia.

1984: Rafflesia micropylora, Sumatra.

1984: Rafflesia pricei, Borneo.

1989: Rafflesia tengku-adlinii, Borneo

இதன் ஒரு சிற்றினமான R. magnifica மிக ஆபத்தில் இருக்கும்  அழிந்து வரும் இனமாக சிவப்பு பட்டியலிட பட்டிருக்கிறது. ( IUCN Red List of Threatened Species)

சோமக்கொடி

பழங்குடியினத்தவர்கள் தாவரங்களுடன் கொண்டிருக்கும் நெருக்கமான தொடர்பு குறித்தான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறேன். குறிப்பாக அவர்கள் சமயச் சடங்குகளில் பயன்படுத்தும் போதைப் பண்புகள்  கொண்ட  தாவரங்கள் குறித்து அறிய ஆர்வம் கொண்டிருக்கிறேன்.  இவை குறித்த ஆய்வுகளை கல்லூரியில் மாணவர்களுக்கு அளிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் நான்  தனிப்பட்ட முறையில் தரவுகளை சேகரித்து கட்டுரைகள் எழுதுகிறேன்.

எந்த பழங்குடியினப் பகுதிகளுக்கு சென்றாலும் இந்த தாவரங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பதில் ஆர்வமுடன் இருப்பேன்.  

திரு ஜெயமோகன் அவர்கள் ஏற்பாடு செய்த, கோவை பாலு அவர்களின் பண்ணை வீட்டில் நடந்த கவிதை முகாமில் கலந்து கொள்ளும் முந்தைய நாள் தருணுடன் பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு புகைப்படங்கள் எடுப்பதற்காக சென்றிருக்கையில் கொஞ்சமும் எதிர்பாராமல் யானைப் புளி எனப்படும் எண்டடா ரீடி என்னும் கொடியை பார்த்தேன். அதை நேரில் பார்க்க முடியும் என்று நினைத்திருக்கவில்லை. மாபெரும் பச்சை வாட்களைபோல அவற்றின் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன.  

இக்கொடியை ஆப்பிரிக்காவில் கனவுக்கொடி என்று அழைக்கிறார்கள். ஆப்பிரிக்க பழங்குடியினர் இதன் கடினமான விதைகளை உடைத்து, எரித்து அந்த போதை தரும் புகையை நுகர்கிறார்கள். இந்த புகை மறைந்துபோன முன்னோர்களிடம் தொடர்புகொள்ளவும், கடவுளிடம் பேசவும் வைப்பதாக நம்புகிறார்கள். 

அங்கிருந்த (ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் போலவே இருந்த) பழங்குடியின முதியவர் ஒருவரின் அனுமதி பெற்று கொஞ்சம் விதைகளை எடுத்து வந்தேன். சிலவற்றை பரிசளித்துவிட்டு சில விதைகளை  என் அலுவலக மேஜையில் வைத்திருக்கிறேன்.

கொழிஞ்சாம்பாறை எனும் கேரளப் பகுதியில் சந்தித்த ஒரு பழங்குடியினத்தவர் உலர்ந்த மிளகுக்கொடிகளை துண்டுகளாக்கி இடுப்பில் கட்டி வைத்திருக்கிறார், அவ்வப்போது அவற்றை பீடி போல புகைக்கிறார். அவர்கள் இனத்தில் அது பலநூறு ஆண்டுகளாக பழக்கம் என்றார் . மிக மிக புதிதாக  அந்த உபயோகத்தை கேள்விப்பட்டேன். 

யானைப்புளி

அவர் எனக்கு சில வெள்ளை இஞ்சித் துண்டுகளை அளித்தார். அவை ஷாம்பு ஜிஞ்சர் (Zingiber zerumbet) எனப்படும் தாவரத்தின் அடிக்கிழங்குகள். சிறு கூம்பு போல அவற்றிலிருந்து உருவாகும் மலர்களில் சேகரமாகும் பிசிபிசுப்பான திரவம் தலைமுடியை அலச பயன்படுத்தப்படுகிறது என்றார். இப்போது அவை என் வீட்டில் செழித்து வளர்கின்றன.  நாங்கள் அதை பயன்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். நல்லதொரு ஆய்வு கட்டுரையையும் அதை குறித்து எழுதி வெளியிட்டேன்.  இதுபோல தொல்குடித்தாவரவியல் துறை அளிக்கும் சுவாரஸ்யங்கள் எண்ணற்றவை.

யானைப்புளியின் பெரிய விதைகள்

முதன்முதலாக   நான் வாசித்த பழங்குடியினத்தவர்கள் சடங்குகளில் பயன்படுத்தப்படும் போதையேற்றும், மனமருட்சி உண்டாக்கும் மற்றும் இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் தாவரங்களான  Enthoegens குறித்த நூல் ’’தெய்வங்களின் தாவரங்கள்’’. 

அமெரிக்க உயிரியலாளர், மனிதவியலாளர் மற்றும் நான் ஈடுபட்டிருக்கும் தொல்குடித்தாவரவியல் துறையை தோற்றுவித்தவரான ரிச்சர்ட்,  புல்லரிசிப் பூஞ்சையிலிருந்து LSD யை கண்டறிந்த  வேதியியலாளர் ஆல்ப்ரெட் ஹாஃப் மேனுடன் இணைந்து எழுதிய நூல் இது.(“Plants of the Gods: Their Sacred, Healing, and Hallucinogenic Powers -Richard Evans Schultes & Albert Hofmann Christian Hofmann)

20 ஆண்டுகளுக்கு முன்னர் இரவலாக  வாசிக்க கிடைத்த இந்த நூலே நான் ஈடுபட்டிருந்த விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கழிவுகளை மட்க செய்து உரமாக மாற்றி மண்வளத்தை, பயிர்களின் சாகுபடியை மேம்படுத்தும் ஆய்வுகளிலிருந்து முற்றிலுமாக வெளிவந்து Ethnobotany என்னும் தொல்குடித்தாவரவியலுக்குள் என்னை அழைத்து சென்றது.

ரிச்சர்ட் பல ஆண்டுகள் அமேஸான் பழங்குடியினருடனேயே வாழ்ந்து இந்த நூலை எழுதினார்.இந்த நூல் போதைத்தாவரங்கள் ஏற்படுத்தும் உளவியல் மற்றும் சமூகவியல் தாக்கம்,  பழமையான சமூகங்களில் உள்ள இனவியல், வரலாறு மற்றும் நரம்பு மருந்தியல் தகவல்கள் அடங்கிய  மிக  பயனுள்ள தொகுப்பு. 

“தெய்வங்களின் தாவரங்கள்”  அமேஸான் பழங்குடிகள் உள்ளிட்ட உலகின் பல பழமையான கலாச்சாரங்களின் மதச் சடங்குகள் சார்ந்த, பரவசமூட்டும், கிளர்ச்சியடையச் செய்யும், மாயத்தோற்றம் உண்டாக்கும் அல்லது மனம் பிறழச் செய்யும் பொருட்களை அளிக்கும் தாவரங்கள், அச்சடங்குகளின் தெய்வங்கள், அவற்றின் வேதிப்பொருட்கள், பிற தாவரவியல் தகவல்கள், அவை கிடைக்கும் பருவங்கள் , குணப்படுத்தும் நோய்கள், அவற்றை மருந்தாக தயாரிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விவரிக்கிறது. இவற்றின் பக்க விளைவுகளும் நச்சுத்தன்மையால் விளையும் ஆபத்துக்களும் கூட குறிப்பிடப் பட்டிருக்கிறது.

பழங்குடியின மதச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் புனிதத் தாவரங்களின் நூற்றுக்கணக்கான அழகிய வண்ணப் புகைப்படங்களும், விரிவான விளக்கங்களும் கொண்ட இந்நூல் ஒரு  அரிய தாவரவியல் பொக்கிஷம்.

இதில் மாண்ட்ரேக் கிழங்குகள், ஊமத்தை மலர்கள், கொடைக்கானலில் இப்போது கிடைக்கும் போதைக்காளான்கள், அட்ரோபா பெல்லடோனா, மெக்ஸிகோவின் பெயோட்டி போதைக்கள்ளிகள் உள்ளிட்ட பல போதைத் தாவரங்கள் விவரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்நூல் அளித்த ஆர்வத்தினால் hallucinogenic plants குறித்து தமிழில் ஒரு நூல் எழுதவிருக்கிறேன். அவை குறித்த தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.மெக்ஸிகோவின் நீலக்கள்ளிகளிலிருந்து கிடைக்கும் டெக்கீலா, ஜப்பானின் அரிசி மதுவான ஸாகெ, கோவாவின் முந்திரிக்கனிச்சாற்றின் ஃபெனி ஆகியவற்றை குறித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.அவை ஒரு தொகுப்பு நூலாக வெளிவரவிருக்கின்றது.

வெண்முரசிலும் பல வகையான தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மது வகைகளும், சிவமூலி, அகிபீனா, சோமக்கொடி போன்றவைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பீமன் பாறைக்குழிவுளில் நொதிக்க வைத்து குரங்குகளுடன் அருந்தும் பழ மது, ஈச்சங்கள், பனங்கள், பிரபாச புல்லிலிருந்து வடித்தெடுக்கப்படும் மது, பீதர்நாட்டு எரி மது, யவன மது,  திரிகர்த்த நாட்டு கடும் மது, இன் தேறல்கள், தானியங்களை நொதிக்க செய்து எடுக்கும் சூரம், காட்டுக்கொடிகளை கலந்து நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுக்கப்பட்ட சோமகம், ஊனை புளிக்க வைத்து எடுக்கப்பட்ட துர்வாசம்.  அகிபீனாவின் இலைகளை கலந்து செய்யப்பட்ட ஃபாங்கம், மதூக மலரை அழுகச் செய்து நீரில் கொதிக்க வைத்து எடுக்கப்படும் மலர் மது,  பீமனுக்கு அளிக்கப்படும்  விஷம் கலந்த வடிநறவம் என்று பல வகைகள் வெண்முரசில் இருக்கின்றன.

பூரிசிரவஸின் நாட்டின் மத்யகீடம் என்னும் கடுமையான மலைமது இளம்சூடாக இருக்கையில்  சிறுவிரலளவான பெரிய வெண் புழுக்களை அதில் போடுவார்கள். அவை வெம்மையை அறிந்ததும் உயிர்கொண்டு எழும். விழித்த கணம் முதல் மதுவில் திளைத்து குடிக்கத்தொடங்கும். துழாவித் துடித்து உள்ளறைகளெங்கும் மது நிறைந்து தடித்து உயிரிழந்து ஊறி மிதக்க தொடங்கும்போது எடுத்து ஆவியில் வேகவைத்து அரிசி அப்பங்களின் நடுவே வைத்து உண்பார்கள்.  

கிழங்குகளிலிருந்தும் அரிசியிலிருந்தும் வாற்றி எடுக்கப்பட்ட எரியும் அனல் துளி போன்ற கடும் மது, வெல்லத்தை நீரில் ஊறவைத்து புளிக்கவிட்டு நொதித்த கலவையை மெல்லிய வெம்மை அளித்து ஆவியாக்கி அதை குளிரவைத்து எடுக்கும் மரபான மது, ஊன் புளிக்க வைத்த குமட்டும் கெடுமணம் கொண்டதும் பித்தெடுக்கவைப்பதுமான அரிதாக சிலரால் அருந்தப்பட்ட மது ஆகியவையும் வெண்முரசில் சொல்லப்படுகிறது. 

வெண்முரசின் வேள்விகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சோமக்கொடி, சோமச்சாறு, சோமரசம் ஆகியவை சடங்குகளில் பயன்படுத்தப்படும் entheogen  வகையில் வருகிறது.

இந்த சோமக்கொடி அல்லது செடி என்னவென்பது இன்னும் அவிழ்க்கப்படாத ஒரு புதிராகவே இருக்கிறது.

ராஜசூயம் போன்ற பெரு வேள்விகளில் மட்டுமல்லாது வேறு பல இடங்களிலும் சோமக்கொடியின் ரசம் வெண்முரசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

முதற்கனலில் பொற்கிண்ணத்தில் சியாமை கொண்டுவரும் சோமக்கொடி போட்டு காய்ச்சி எடுத்த புதுமணம் கொண்ட திராட்சை மதுவை சத்யவதி அருந்துகிறாள். அதை எடுத்து மெல்லக்குடித்தபடி இருளையே பார்த்துக்கொண்டிருக்கும் சத்யவதிக்கு அவ்விருளின் துளி ஒன்றை அவளுள் ஏற்றிக்கொள்வது போல, உள்ளே விரிந்து பரவும் ஒளிக்கு மேல் இருளைப் பரப்புவதே அதன் பணி என்பதுபோல சோமம் பரவுகிறது

//நீர்ச்சுனைகளுக்கு அருகே நீரோடும் பசுங்குழாயெனக் கிடக்கும் சோமச்செடி. அதற்கு நீராழத்தின் வாசனை. நீரிலிருந்து ஆழத்தை மட்டும் எடுத்து சேர்த்துக் கொள்கிறது. நிழல்களாடும் ஆழம். அடித்தட்டின் பல்லாயிரம் மென்சுவடுகள் பதிந்த மௌனம். சோமம் உடலுக்குள் ஒரு காட்டுக்கொடியை படரவிடுகிறது. நரம்புகளில் எங்கும் அது தளிர்விட்டுப் பரவுகிறது// 

இந்த வரிகள் சத்யவதிக்குள் சோமபானம் செய்வதென்ன என்பதை சொல்லுகின்றது 

வேதங்களில் சோமரசம் எடுப்பதை குறித்து பல இடங்களில்   வெண்முரசில் சொல்லப்பட்டிருப்பது போலவே சொல்லப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில் சோமரசம், சோமக்கொடிகளை கல்லில் இட்டு இடித்து சாறு எடுக்கப்பட்டிருக்கிறது  பார்லியுடன் சேர்த்து வேக வைக்கப்பட்டோ அல்லது பால்/ தயிரில் கலந்தும்  தயாரிக்கப்பட்டிருக்கிறது

பன்னிரு படைக்களத்தில் இந்திரபிரஸ்த வேள்வியில் பைலர் தௌம்யரிடம் சென்று ஆணை பெற்று வைதிகர்களின் அவைக்கு வந்து வேதம் பிறந்த தொல்மொழியில் அங்கே சோமம் பிழியவிருப்பதை அறிவிக்கிறார்.பதினெட்டு இளைய வைதிகர்கள் ஈரப்பசும்பாம்புக் குஞ்சுகளைப்போல சுருட்டப்பட்டிருந்த  சோமக் கொடிகளை மூங்கில்கூடைகளில் சுமந்துகொண்டு வந்து எரிகுளங்களுக்கு முன்னால் வைக்கின்றனர்.

 “தேவர்களுக்கு இனியதும் தெய்வங்களுக்கு உரியதுமாகிய சோமச்சாறு இங்கு பிழியப்படுவதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தருமன் ஆணையிட்டதும் மரத்தாலான நூற்றெட்டு உரல்களில் இளம் வைதிகர்கள் சோமக்கொடியை அவ்வுரல்களுக்குள் இட்டு வேதத்தின் சந்தத்திற்கு ஏற்ப மெல்லிய உலக்கைகளால் குத்தி நசுக்கி, அப்பசும்விழுதை எடுத்து வலக்கை கீழிருக்க பிழிந்து மரக்கிண்ணங்களில் தேக்குகின்றனர். நூற்றெட்டு கிண்ணங்களில் சேர்க்கப்பட்ட சோமச்சாறு முப்பத்தாறு எரிகுளங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.தர்ப்பையால் சோமச்சாறை தொட்டு எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்து வேதம் ஓதுகின்றனர் வைதிகர்கள்.

ரிச்சர்டின்  ’’தெய்வங்களின் தாவரங்கள்’’ நூலுக்கு அடுத்து வெண்முரசில் இவற்றை வாசிக்கையில் இரண்டும் இணைந்து தொல்காலத்தில் எப்படி சடங்குகளில் இவை பயன்படுத்தப்பட்டிருக்கும் என்னும் சித்திரம் உருவானது.

வெய்யோனில் கெளரவர்கள் ஜெயத்ரதனுடனும் நடத்தும் கள்ளாட்டில் துரியோதனன் “கள் அல்ல. இமய மது அது. திரிகர்த்தர்களின் நாட்டிலிருந்து வருகிறது. சோமக்கொடியின் நீரைப் பிழிந்து அதில் நறுமணம் சேர்த்து இந்த மதுவை செய்கிறார்கள். இதை அருந்துபவர்கள் விண்ணுலகுக்குச் சென்று அங்குள்ள தேவகன்னியருடன் ஆடி மீள்வர்’’ என்கிறான் 

இமைக்கணத்தில் அர்ஜுனனிடம் இறைவைன் ’’மூன்றுவேதம் அறிந்தோர், சோம மது உண்டோர், பழியகன்றோர் என்னை வேள்விகளால் வழுத்தி வானுலகை வேண்டுகின்றனர்’’ என்கிறார்

இமைக்கணத்திலேயே உதங்கரிடம் இளைய யாதவர் சோம மதுவின் இனிமையை குறிப்பிடுகிறார் 

வெண்முகில் நகரத்தில் திருதிராஷ்டிரர் திரௌபதி நகர் நுழைகையில் ’’நகரத்தையே சோமச்சாறால் நிரப்புங்கள்’’ என ஆணையிடுகிறார்.

பல வேள்விகளில் சோமரசம் சிறு பொற்கிண்ணங்களில் பரிமாறப்பட்டு அவையமர்ந்திருந்த அரசர்கள் அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. 

சோமனுக்குப் பிடித்த உணவு சோமரசத்தில் ஊறவைத்த மானுட இதயங்கள் என்கிறது பிரயாகை 

இப்படி சோமக்கொடி, அது முக்கிய சடங்குகளில் இடம்பெற்றிருப்பது, சோமக்கொடியிலிருந்து சாறு பிழிவது, சோம ரசம் அருந்துவது என பல இடங்களில் வெண்முரசு சோமக்கொடியை பேசுகிறது

அதர்வ வேதம் சோமச்செடியினை போன்ற இயல்புடைய பிற செடிகளையும் குறிப்பிடுகிறது அவற்றில் கசகசா செடி, பார்லி மற்றும் தர்ப்பை ஆகியவை உள்ளன. அதர்வ வேதம் கூனைப்புல் எனப்படும் Imperata cylindrica  என்னும் நாணல் வகையையும் போதை தருவதாக குறிப்பிடுகிறது. இந்த நாணலின் தோற்றம் வெண்முரசின் பிரபாச புல்லை ஒத்திருக்கிறது.

எளிதில் எரியும் தன்மை கொண்ட, காட்டெரிக்கு காரணமாக இருக்கும், வெண்னிற மலர்க்குவையை கொண்டிருக்கும் இந்த புல்லை வெண்முரசு படைப்புல் அத்தியாயத்தில்;

//அந்நாணல் தன்னுள் நெய் நிரப்பி வைத்திருப்பது. ஆகவே செந்தழலுடன் சீறி வெடித்து எரியத்தொடங்கியது. 

’’நாணல் புல்லின் நுரை போன்ற வெண்மலரின் மகரந்தத்தையும் தேனையும் பிழிந்தெடுத்துச் செய்த மது.”

’’சதுப்பில் மலரும் பெருங்குவளை மலரின் தேனும் பொடியும் சேர்த்த மது பலராலும் விரும்பப்பட்டது. ஒருவகை கொடியின் தண்டு மதுவில் நுரையை நிறைத்தது.//

இந்த விவரிப்புக்கள் பிரபாசபுல்லென்பது  கூனைப்புல்லாக இருக்கலாம் என்று எண்ண வைக்கிறது

அதே பகுதியில் //பிரஃபாச க்ஷேத்திரத்தின் கடலோர எல்லையில் செறிந்திருக்கும் பெருநாணலின் இளந்தளிரைப் பிழிந்து சாறெடுத்து அதை மதுவுடன் கலக்கலாம் என்று கண்டுபிடித்தனர். அது மதுவின் மயக்கை மேம்படுத்தியது. அதை அருந்தினால் எண்ணங்களும் கனவுகளும் மட்டுமன்றி கண்முன் தெரியும் காட்சிகளும்கூட நொறுங்கி ஆயிரம் பல்லாயிரம் சிதறல்களாக மாறிவிடும் என்று கூறினார்கள்//. என்று சொல்லப்பட்டிருக்கும்.

மெக்ஸிகோ பழங்குடியினர் இப்போதும் பெயோட்டி கள்ளிகளை உலரவைத்து சமயச் சடங்குகளில் பயன்படுத்துகின்றனர். இந்த கள்ளியை உண்ணும் போது வெண்முரசில் சொல்லப்பட்டிருப்பதைப்போலவே  உலகம் கலைடாஸ்கோப்பின் வண்ணச்சிதறல்களாகி விடுவதாக சொல்லுகிறார்கள். மெக்ஸிகோவில் பெயோட்டிகள் நோய்களை குணப்படுத்தும் சடங்குகளிலும் உபயோகிக்கப்படுகின்றன.

வேதங்களும் புராணங்களும் , சோமக்கொடியை சுற்றி பெரும் மாயமும் தெய்வீக சக்தியும் இருந்ததாக சொல்கின்றன சோமக்கொடியே ஒரு  தெய்வமாகக் கருதப்பட்டது,   

சோமம் கடவுளாகவும் கருதப்பட்டு சோமன் என்னும் தெய்வமாகவும் வழிபடப்பட்டது. சோமன்   மண் சார்ந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வேதப்பாடல்கள்  பத்து  வெண்ணிறக் குதிரைகள் கொண்ட மூன்று சக்கரங்கள் கொண்ட தேரில் வரும் இவனைப் போற்றுகின்றன. “சோமலதை” எனும் ஒருவகைச் செடியிலிருந்து பெறப்பட்ட போதை தரும் பானமாக இவன் கருதப்படுகிறான்.  

டயோனிசஸ்

இதுபோலவே கிரேக்க தொன்மங்களில் டயோனிசஸ் திராட்சை அறுவடை, திராட்சை ரசம், செழிப்பு, பண்டிகைகள், மதக் கொண்டாட்டங்கள், சடங்கின் போது ஒருவருக்கு ஏற்படும் ஆவேசம் மற்றும் நாடகக்கலையின் கடவுளாகக் கருதப்படுகிறார் . இவரே ரோமானிய தொன்மங்களில் பேக்கஸ் எனப்படுகிறார்.

‘’சோமா குடிப்பவருக்கான  இரவு  இன்பத்திற்கானது

 தூய  சோமத்துளிகள் தயிருடன் கலக்கப்படுகின்றன

பரிபூரண பலத்துடன் இருக்கும் இந்திரனே 

நீ சோம பானத்தை அருந்தவே உருவானவன்

வலிமை மிக்க இந்திரனே, 

இசையை நேசிக்கிறவனே, இந்த வேகமான சோமபானம்

இந்த முனிவர்களுக்குள்  நுழைந்து 

அவர்களுக்கு  ஆனந்தத்தைக் கொண்டு வரட்டும்’’

இப்படி பல நூறு பாடல்களில் சோமத்தை குறித்து சொல்லும் ரிக் வேதம்  சோமத்தாவரங்களில் பல வகைகள் இருந்ததாகவும் சொல்லுகிறது

ரிக்வேதத்தின் 9வது மண்டலம் 114 பாடல்களில் சோம ரசத்தை தூய்மைப்படுத்துவதை விவரிக்கிறது.. ஒரு பெண் தன்னை ஆண்களின் முன்பாக கவர்ச்சியானவளாக காட்டிக்கொள்ள சோமச்செடிகளை மென்று தின்றாள் என்கிறது இதே வேதம்.

சோம ரசம் பிழிகையில அதனுடன் பொன்னும் அருமணிகளும் சங்குகளும் நன்முத்துக்களும் வைடூர்யமும் கலந்து இடிக்கப்பட்டதாவும் பண்டைய நூல்களில் குறிப்புகள் உள்ளன.

சோமத்தாவரம் ஒரு கொடி, ஒரு நீர்த்தாவரம், அது தாமரை, அது அல்லி, அது ஒரு மலைப்பகுதிச்செடி,  அது ஒரு பாலை நிலத்தாவரம் என பலவகையான யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன எனினும் உறுதியாக சோமக்கொடி அல்லது செடி என்பது இதுதான் என இப்போது வரை எதுவும் அடையாளம் படுத்தப்படவில்லை

அரளிக்குடும்பத்தை சேர்ந்த  மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் கொடித்தாவரமான Asclepias acida என்னும் தாவரம்தான் இது என்று  சிலர் கருதுகிறார்கள். சோமக்கொடியின் சாற்றுடன் கஞ்சா இலை, மாதுளங்கனி, நீலத்தாமரை கொடியின் தண்டு, பால் மற்றும்  சில நச்சுக்காளான்களும் சேர்ந்ததே சோமபானம் என்பது ஒரு தரப்பினரின் கருத்து

பலர் பெர்சியாவின் தாவரமான ephedra தான் சோமக்கொடி என யூகின்றனர். எனக்கும் இக்கருத்தில் உடன்பாடு உண்டு. மலர்களை உருவாக்காமல் சூலகங்களை நேரடியாக உருவாக்கும் கீழ்நிலைத்தாவரங்களாகிய ஜிம்னோஸ்பெர்ம்ஸ் என்னும் வகையை சேர்ந்த எஃபிட்ரா தான் சோமச்செடி என கருதுகிறேன்

சோமலதை என்னும் பெயரையும் கொண்டிருக்கும் இது கொடியை போன்ற வளரியல்பு கொண்டது. சீனாவில்  ’மா ஹுவாங்’ (Ma huang) எனப்படும் இந்த செடி இந்தியா, ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதிலிருந்து உருவாக்கப்படும் பல பானங்கள் செயலூக்கத்தை அதிகரிக்கும் (performance enhancers) பானங்களாக சந்தைப்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தியர்கள் இதை சோமபானம் என்றும் ஈரானியர்கள் இதை ஹோமபானமென்றும் அழைக்கின்றனர். 

சிறு தவறுக்கு கூட தலை கொய்யும் வழக்கமுடைய மங்கோலிய மகா பேரரசர் செங்கிஸ்கான்  வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுகையில், படைப்பிரிவினர் யாராவது  சோர்ந்தோ அல்லது உறங்குவதையோ பார்த்தால் அங்கேயே தலை வெட்டப்படும் என்பதால் அவரது படை வீரர்கள் அனைவரும், எப்போதும் விழிப்புடன் உற்சாகமாய் இருக்க வைக்கும் இந்த  மா ஹுவாங் தேநீரை அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்,

சரத்துஸ்திரர்களின் புனித நூலான அவெஸ்தா (Avesta) சோமக்கொடியை சிறு கிளைகள் கொண்டது, நறுமணம் மிக்கது,  பசுமஞ்சள் நிறம் கொண்டது, மலைப்பாங்கான இடங்களில் நெருக்கமான புதராக வளரும், அழுத்தி பிழியப்படும் வகையில் மெனமையானது என்கிறது.

Ephedra

இந்த விவரிப்புகள் அனைத்தும்  ஈரானில் haoma என்றும் குறிப்பிடப்படும் சோமலதையான் எஃபிட்ராவின் இயல்பை ஒத்திருக்கிறது. பலர் இதுதான் சோமக்கொடி என்று கருதுகிறார்கள் 

Avesta

1999  ல் நெதர்லாந்தில்  நடைபெற்ற  Haoma-Soma கருத்தரங்கில், Jan E. M. Houben  என்னும் விஞ்ஞானி தனது ஆய்வுக்கட்டுரையில் ’’இனி பேசிக்கொண்டிருக்க தேவையே இல்லை,சோமக்கொடி என்பது எஃபிட்ராதான்’’ என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.

ஈரான் நாட்டின் மாமுனிவரும், சரத்துஸ்திர சமயத்தை உருவாக்கியவருமான சரத்துஸ்தர், அவரது பெற்றோர்கள் ஹோமா கொடியை பாலில் கலக்கி அருந்திய பின்னர் பிறந்தார் என்கிறது அச்சமய வரலாறு.

James Darmesteter, 1875 ல் எழுதிய ’அவெஸ்தாவின் தொன்மங்கள்’ என்னும் ஆய்வேட்டில் எஃபிட்ராவின் குச்சிகள் ஒருபோதும் அழிவதில்லை என்பதை குறிப்பிட்டிருக்கிறார்.

ரிக் வேதம்.சோமச்செடி நீர்நிலைகளுக்கருகில் வளரும், அவற்றிலிருந்து பால் வடியும் என்கிறது. இது எஃபிட்ராவுக்கு பொருந்தாது. எஃபிட்ரா வறண்ட மலைப் பகுதிகளில் வளர்வது, பால் இல்லாதது.

Ephedra

மேலும் சில பண்டைய நூல்கள் சோமச்செடி என்பது  அரளிச்செடியின் குடும்பத்தை சேர்ந்த Cynanchum acidum என்கிறது. இதுவும் எஃபிட்ராவை போலவே இலைகளின்றி குச்சி குச்சியான தண்டுகளுடன் இருக்கும் புதர்ச்செடிதான்.

சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த கோஷ்டம் என்ப்படும் Saussurea lappa என்னும் தாவரத்தையும் சோமக்கொடியென்று சிலர் கருதுகிறார்கள்.

சரக மற்றும் சுஸ்ருத சம்ஹிதைகள் சோமச்செடியில் நாளொன்றுக்கு என 15 இலைகள் முழு நிலவு வரை வளர்ந்து பின்னர் கருநிலவு நாள் வரை ஒவ்வொன்றாக உதிர்ந்துவிடும் என்று குறிப்பிடுகின்றன..சுஷ்ருதர் சோமச்செடிகள் என 24 வகைகளையும் அவற்றை போலவே மனம் மயக்கும் இயல்பு கொண்ட வேறு 18 தாவரங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் 

Psilocybe cubensis

இன்னும் சில நூல்கள் Amanita muscaria, Psilocybe cubensis, Stropharia cubensis போன்ற நச்சுக்காளான்களை சோமச்செடி என்று குறிப்பிடுகின்றன ஆனால் நிச்சயம்  அது காளானாக இருக்க முடியாது. ஏனெனில்   பல நூல்களில் சோமக்கொடி வேள்விகளில் கழுத்தில் மாலையாக அணிவது சொல்லப்பட்டிருக்கிறது.

Stropharia cubensis 

1921ல்  கஞ்சா செடி தான் சோமச்செடி என் பிரஜாலால் முகர்ஜி (Braja Lal Mukherjee)  Royal Asiatic Society யின் சஞ்சிகையில் “The Soma Plant” என்னும் கட்டுரையில் எழுதினார்.

தனது  கட்டுரைக்கு ஆதரமாக முகர்ஜிவேதக் கிரியைகள், சுக்ல யஜுர் வேதத்தோடு தொடர்புடைய வரலாறுகள் தொன்மங்கள் ஆகியவற்றை விளக்கும் சதபதபிராமணம் என்னும் நூலில் சோமச்செடி  “Usana,”  என குறிப்பிடப் பட்டிருப்பதை காட்டியிருந்தார். கஞ்சா செடியின்  சமஸ்கிருத பெயரான “Sana.” என்பதை ஒப்பிட்டு இது கஞ்சாதான் என வாதிட்டு எழுதியிருந்தார்

கஞ்சாவின் பிறமொழிப்பெயர்களான் திபெத்திய ’’சோமரஸ்தா’’ மற்றும் திபெத்–பர்மா மொழிகளில் ஒன்றான சீனப்பழங்குடியினரின் தாங்குடு மொழியின் ’’ஸ்கோமா’’ (dschoma) ஆகியவற்றையும் தனது வாதத்திற்கு துணையாக்கிக் கொண்டார். சதபதபிராமணம், சோமச்செடி கிடைக்காதபோது உபயோகிக்கலாமென்னும் மாற்றுச்செடிகளையும் பட்டியலிடுகிறது 

ரஷ்யாவின் கரா–கம் பாலைவனத்தில் நடைபெற்ற அகழாய்வில் கஞ்சா எஃபிட்ரா மற்றும் கசகசா செடிகளின் இடித்த எச்சங்கள் கிடைத்ததை கொண்டு இம்மூன்றும் சேர்ந்த கலவையே சோமபானமாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது 

19 ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த   ஐரோப்பிய தாவர வியலாளர்கள், வேதவிற்பன்னர்கள் மற்றும் இறையியலாளர்கள்  சோமச்செடியை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்கள் அவர்களில்  Hillebrandt, (1891) மற்றும் Monnier- Williams (1899)ஆகிய இருவரும் மிக குறிப்பிட்டுச் சொல்லும்படியான தேடலில் ஈடுபட்டவர்கள்

20 ம் நூற்றாண்டில்  சோமச்செடியை தீவிரமாக தேடிய வாஸன் (R. Gordon Wasson-1968) ல் இது ஒரு காளான்தான் என  உறுதியாக அறிவித்த போது அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் எழுந்தன

இவர்  Amanita muscaria என்னும் காளான்தான் சோமச்செடி என்று பலவருடப் பயணம் மற்றும் ஆய்வுகளுக்கு பின்ன 1968 ல் வெளியான தனது     Soma: the Divine Mushroom of Immortality. என்னும் நூலில் விவரித்திருந்தார்

இந்நூலில் ‘’ இக்காளான்களை பிழிந்து சாறெடுத்து நீரில், பாலில், தயிரில் அல்லது தேனில் கரைத்து சோம பானமாக அருந்தலாம் என்றும், அக்காளான்களை உண்டவர்களின் சிறுநீரிலும் அதன் வேதிப்பொருட்கள் இருக்குமென்பதால் அதையும் சோமபானமென்று கருதலாமென்றும் வாஸன் குறிப்பிடுகிறார்

 வாஸன் இந்திய குகை ஓவியங்களின் காளான் சித்திரங்கள், வேதங்கள், மற்றும் பல தொல் நூல்களிலிருந்து ஆதாரங்களை அளித்திருந்ததால் இந்நூல் பிரபலமாக பேசப்பட்டது.

சோமத்தாவரம் குறித்த விவரங்கள் தெளிவாக எந்த பண்டைய நூலிலும் அளிக்காப்படாததற்கு இவை அதிக போதை உண்டாக்கும் தன்மை கொண்ட,  மதம் சார்ந்த முக்கியச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டது காரணமாயிருக்கலாம்.

இன்னும் சோமபானம் எடுக்கப்பட்ட தாவரம் எதுவென்று தெரியாவிட்டாலும்  ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் உரிய மனம் மயக்கும் போதை தாவரங்கள் இருப்பதால், அந்தந்த நிலப்பகுதியில் இருந்த தாவரங்கள் அப்பகுதி மக்களால்  சோமச்செடி என்னும் பெயரில் அழைக்கப்பட்டிருக்கும் சாத்தியங்களும் இருக்கிறது. . 

இன்று வரையிலும் சோமச்செடியை குறித்த தேடல்களும், கருத்துக்களும், சர்ச்சைகளும் நீடிக்கின்றன. புதிய போதை தாவரங்களும் கண்டறியப்பட்டு கொண்டிருக்கின்றன.சமீபத்தில்  சிரியாவின் தாவரமான Peganum harmala சோமச்செடியின் இயல்புகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பதால் இதுவே பண்டைய சோமச்செடி என்று பேசப்படுகிறது

கோவிட் தொற்றுக்கு முன்பு 2018ல் என் அமெரிக்க தோழி ஜாய்  பெரூ வில் நடக்கும் 6 நாட்களுக்கான ஆயவாஸ்கா (Ayahuasca) அனுபவத்தில் கலந்துகொண்டாள்  கட்டணம் 2000 டாலர்கள்  

தெய்வங்களின் தாவரங்கள் எழுதிய ரிச்சர்ட் தான் முதன்முதலில் ஆயவாஸ்கா என்கிற அமேஸான் பழங்குடியினத்தவர்களின் மதச்சடங்குகளிலும், குணப்படுத்தும் சடங்குகளிலும் அருந்தப்படும் சாற்றைக் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு உலகிற்கு அதை தெரியப்படுதியவர். அவருடன் இச்சடங்கு பானம் குறித்து வசியத்துயில் மருத்துவத்தையும் ஆன்மீக மரபுகளையும் இணைத்து சிகிச்சையளிக்கும் துறையின் முன்னோடிகளில் ஒருவரான கிளாடியோ பெஞ்சமினும் (Claudio Benjamín) இணைந்திருந்தார்.கிளாடியோ கடந்த 2019ல் மறைந்தார்.

எனக்கும் இந்த சிகிச்சை அல்லது அனுபவத்தில் ஆர்வம் இருந்தது என்றாலும் கட்டணம் மிக அதிகம்  என்பதால் அப்போது செல்லவில்லை. 

உலகெங்கிலும் இருந்து பல நூறு பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் தொடக்கத்தில் பழங்குடியினத்தவர்கள் வந்து சில பிரார்த்தனை பாடல்கள் பாடி வழிபாடுகளில் இவர்களையும் ஈடுபட சொல்லி, அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு மிகக் கசப்பான மூன்று தாவரங்களின் சாற்றை கலந்து அருந்த கொடுத்திருக்கிறார்கள்

அரை மணி நேரத்தில் பலரும் வாந்தி எடுத்து அலறி கூச்சலிட்டு விழுந்து புரண்டு இருக்கிறார்கள். தானும் வாந்தி எடுத்ததாக சொன்ன ஜாய்’ யினால் அதன் பிறகு நடந்தவைகளை ஓரளவுக்கு விளக்க முயன்றாள்.

joi

அலறிக்கொண்டு கீழே பாயில் புரண்டு கொண்டிருந்த  அவளை, அவளிடமிருந்து பிரிந்து மேலே சென்ற   அவளே பார்த்துக்கொண்டிருந்தாள் என்றும் வெகு விரைவாக தான் எங்கெங்கோ பயணித்ததையும், மறைந்த தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததையும் சொல்லும்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

இதைக்கேட்ட பின்பு போதைத்தாவரங்கள் குறித்த நூலை எழுதும் முன்பு இந்த சடங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்று    தோன்றியது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இச்சடங்குகளில்  உபயோகப்படும் இந்த தாவரங்களில் ஒன்றோ அலல்து அனைத்துமோ கூட  சோமக்கொடியாக  இருக்கலாம்.  

பிக்மி பழங்குடியினர் Tabernanthe iboga, என்னும் மரத்தின் வேர்ப்பட்டைகளை மனம்பிறழவைக்கும் அனுபவத்தின் பொருட்டு சடங்குகளின் போது பயனபடுத்துகிறார்கள்.

வெண்முரசில் ’’மதுவுக்கு நம்மை அளிக்காவிட்டால் மதுவின் தெய்வம் இறங்கிவருவதில்லை” என்று துரியோதனன் கர்ணனிடம் சொல்லுவான்.

ஹரிதர் விருஷாலியிடம் ’’தன்னை தலைகீழாக்க மானுடன் கொள்ளும் உள்விழைவை தொட்டு முளைக்க வைக்கிறதா மது? தலைகீழாக நின்று இவ்வுலகையே அவ்வண்ணம் திருப்பிக்கொள்கிறார்களா?” என்று கேட்கிறார்.

கல்பொருசிறுநுரை மது வேட்கையை ’’உவகையை நோக்கிச் செல்லும் உயிரின் விழைவு அது. தன்னை மறந்தாடவும், தக்கவைத்துக்கொண்ட அனைத்தையும் கைவிடவும், அனைத்திலிருந்தும் விடுபடவும், வேறொரு வெளிக்குச் சென்று திளைக்கவும் உள்ளம் கொள்ளும் துடிப்பு’’ என்கிறது.  

கிராதம் “மதுவை நாடுபவர் அனைவரும் மதுவெனக் கொள்வது ஒன்றையே அல்ல. அஞ்சுபவர்களுக்கு அது துணை. பணிந்தவர்களுக்கு அது குரல். தனித்தவர்களுக்கு அனைத்து வாயில்களையும் திறக்கும் காற்று” என்கிறது. 

வெண்முரசு காட்டும் இதுபோன்ற மது குறித்தான செய்திகளையும், மது எழுப்பும் மெய்யிலி  உலகங்களையும், சோமம் உள்ளிட்ட தாவர மதுவகைகளையும், அவை பயன்படுத்தப்படும் தொல் சடங்குகளையும்  இணைத்து ஒன்றாக அறிந்து கொள்கையில்  கிடைக்கும் சித்திரம் மிக புதியது, மிக சுவாரஸ்யமானது..

மலர் உணவு-Floraphagia

 மனிதர்களின் வாழ்வில் மலர்கள் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டிருக்கின்றன. பண்டைய காலத்திலிருந்தே உலகின் அனைத்து நாகரிகங்களும் இறைவழிபாட்டில், பண்டிகைகளில், மங்கல நிகழ்வுகளில் பிறப்பு,இறப்பு திருமணம் உள்ளிட்ட  சடங்குகளிலும் தலையில் சூடிக் கொள்ள, மாலையாக,  மருந்தாக, மகிழ்ச்சிக்காக,  அழகுக்காக, பரிசளிக்க என்று பலவிதங்களில் மலர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மலர்களின் பொருள் என்னவென்பதை சொல்லும் மலர்மொழி உலகெங்கிலும் புழக்கத்தில் இருக்கிறது. மலர் மருத்துவமும் அனைவரும் அறிந்ததே.

 இவற்றோடு  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பல வகையான மலர்கள் சமையலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு உண்ணப்படுகிறது.  ஆங்கிலத்தில் Edible Flowers-EF என்று குறிப்பிடப்படும் இம்மலர்கள் பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. இவற்றில் பல சமைக்கப்படுகின்றன, ஒரு சில மலர்கள் சமைத்த பிற உணவுகளின் மீது அலங்காரம் செய்ய பயன்படுகின்றன மேலும் பல அப்படியே சமைக்காமல் உண்ணப்படுகின்றன. மருத்துவ காரணங்களுக்காகவும் அவற்றின் சுவைக்காகவும் மலர்களின் பிரத்யேக சத்துக்களின் பொருட்டும் இவை உணவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

பண்டைய ரோமானிய கிரேக்க, சீன மூலிகை மருத்துவர்கள் மலர்களின் உணவுப் பயன்பாட்டைக் குறித்தும் அவற்றால் குணமாகக்கூடிய நோய்களையும் விளக்கி இருக்கின்றனர். தொல்குடிகளான அஸ்டெக்குகள், இன்க்காக்களும் மலர்களை உணவாக எடுத்து கொண்டிருக்கின்றனர். இந்து மதம் உள்ளிட்ட பல மதச்சடங்குகளில் மலர்கள் உண்ணப்படுகின்றன. மெக்ஸிகன் பழங்குடியினர் பலநூற்றண்டுகளாக மலர்களை உண்டு வந்திருக்கின்றனர்.

மலர் உண்ணுதலை முதன் முதலாக  ‘floriphagia’ என்னும் சொல்லால் 2013ல் Lara-Cortés என்பவரின் குழுவினர் குறிப்பிட்டனர்.

சாமந்தி மலர்களை ரோமானியர்கள் உணவில் குங்குமப்பூ நிறம் கிடைக்க பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்போதும் சாமந்திப்பூ ’’ஏழைகளின் குங்குமப்பூ’’ என்று அழைக்கப்படுகிறது. குங்குமப்பூவில் கலப்படமாகவும் இம் மலரிதழ்கள் பயன்படுகின்றன.

ரோஜா இதழ்கள் பல பண்டைய நாகரிகங்களில் உணவுக்கு சுவை மணம் நிறம் அளிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் ரோஜா பன்னீரும் குல்கந்தும் இனிப்புகளும் நம்மிடையே பிரபலமாக இருக்கிறது. செம்பருத்தி தேநீர் சில வருடங்களாக பசுமை மருத்துவத்தின் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமாகி வருகிறது.

17ம் நூற்றாண்டில் வயோலா என்னும் அடர் ஊதா மலர், திரவ மருந்துகளுக்கும்  மதுபானங்களில் நிறமூட்டவும் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் மட்டும் சுமார்  35 வகையான மலர்கள் உண்ணப் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆர்டிசோக் எனப்படும் மலரரும்புகள் (Cynara scolymus). காலிஃப்ளவர் என்னும் பூக்கோசு (Brassica oleracea var. botrytis) புராக்கலி என்னும் பச்சைபூக்கோசு (Brassica oleracea var. italica), வாழைப்பூ, அகத்திப்பூ, முருங்கைப்பூ ஆகியவை பலரும் அறிந்திருக்கும் உணவில் சேர்க்கப்படும் மலர்கள்.  ஸ்ட்ராபெரி, கடுகு மற்றும் கொத்துமல்லி மலர்களும் உண்ணக்கூடியவையே.

 தாமரை மலரிதழ்கள் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் காஷ்மீரில் உண்ணப்படுகின்றன. இவற்றை தேநீர் தயாரிப்பில் அதிகம் உபயோகிக்கிறார்கள்.

 தாய்லாந்தில் சாமந்தியின் ஒரு வகையான டாஜிடஸ், காகித மலர் மற்றும் கேந்தி மலர்கள் உண்ணப்படுகின்றன. அமெரிக்காவில் டாஜிடஸ், அலரி எனப்படும் ஃப்ராங்கி பானி மலர்கள் மற்றும் கற்றாழை மலர்கள் உண்ணப்படுகின்றன. பிரேஸிலில் வாழைப்பூவுடன்  பூசணிப் பூவும் உண்ணப்படுகிறது.

மிகச்சாதாரணமாக பார்க்க முடிகின்ற சிறு வெண்ணிற டெய்ஸி மலர்கள் விழாக்கால விருந்துகளில் உணவுகளை அலங்கரிக்கவும் உணவுகளோடு சேர்த்து உண்ணவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Tisanes எனப்படும்  பருவ கால உலர் மலரிதழ்களில் உண்டாக்கப்படும் தேநீர் சர்க்கரை நோய் உள்ளிட் பல நோய்களுக்கான சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தபடுமொன்று

தென்தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் பொன்னாவாரை மலர்களில் தேநீர் தயாரித்து அருந்துவார்கள். நீலத்தேநீர் எனப்படுவது சங்கு புஷ்ப த்திலிருந்து உண்டாக்கப்படும் மருத்துவ குணங்கள் மிக்க நீலத்தேநீர். சங்கு புஷ்ப அரும்புகள் தாய்லாந்தில் அரிசியுடன் வேகவைக்கப்பட்டு நீலச்சோறு உண்டாக்கப்படுகிறது.

குங்குமப்பூவின் மூன்று சூலகமுடிகள் மட்டும்தான்  குங்குமப்பூ என சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. சோம்பு மலர்கள் சூப்’களில் புத்தம் புதிதாக சேர்க்கப்படுகின்றன. குழந்தையின்மைக்கு தீர்வாக சிலரால் நள்ளிருள் நாறி என்றும் நிஷாகந்தி, பிரம்மகமலம் என்றும் அழைக்கபடும் மலர்  உண்ணப்படுகின்றது.

கொரியாவில் Hwajeon எனப்படும் அரிசிமாவு இனிப்பொன்றில் அந்தந்த பருவ கால மலர்கள் சேர்க்கப்படுகின்றன. பிரபல நறுமணப்பொருளான கிராம்பு எனப்படுவது அம்மரத்தின் முதிரா மலர் அரும்புகள் தான், ஆக்ஸாலிஸ் எனப்படும் புளியாரைக்கீரை மலர்களும் உண்ணக்கூடியவைதான்..

அனைத்து மலர்களும் உண்ணத்தக்கவை அல்ல என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும் தாவரங்களில் பல நச்சுத்தனமை கொண்டவை எனவே நன்கு அறிந்திருந்தால் மட்டுமே புதிய தாவர வகைகளின் மலர்களை உண்ண வேண்டும். இன்னும் சில உண்ணப்படும் தாவர மலர்களில் நச்சுப்பொருட்கள் இருப்பதால் மிக குறைந்த அளவிலேயே அவை உண்ணப்படவேண்டும்.

உதாரணமாக ஆப்பிள் மலர்கள் உண்ணக்கூடியவையே எனினும் அவற்றின் சயனைட் நஞ்சைப்போன்ற நஞ்சு இருப்பதால் மிக மிக குறைவான அளவிலேயே அவற்றை உண்ணவேண்டும். அதுபோலவே வயோலா மற்றும் பொராஜ் மலர்கள் சிறுநீர் பெருக்கும் இயல்புடையவை என்பதால் கவனமாக அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் நஞ்சுகொண்டிருப்பவை  மட்டுமலல்ல. குறிப்பிடட்ட சில விளைவுகளை உண்டாக்கும்  வேதிப்பொருட்களை  கொண்டிருக்கும் மலர்களும் இருக்கின்றன.

பல வகையான மலர்கள் உண்ணத்தகுந்தவை மேலும் பல மலர்களின் உண்ணும் தன்மை இப்போது ஆராயப்பட்டு கொண்டிருக்கிறது. காய்களையும் கனிகளையும் இலைகளியும் வேர்க்கிழங்குகளையும் போல மலர்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அவற்றில் நஞ்சு கொண்டிருப்பவை, பல முக்கிய வேதிப்பொருட்களை கொண்டிருப்பவை எவையெவை என அறிந்து கொண்டு அவற்றை தவிர்த்துவிட்டு மற்றவற்றை உண்ணலாம்

  • உண்ணக்கூடிய மலர்களை குறித்து மேலும் தெரிந்து கொள்ள Monica Nelson Adrianna Glaviano ஆகிய இருவர் இணைந்து உருவாக்கிய நூற்றுக்கணக்கான உணவு மலர்களை குறித்த பிரபலமான Edible Flowers: How, Why, and When We Eat Flowers  என்னும் நூலை வாசிக்கலாம்.
  • மேலதிக தகவல்களுக்கு:https://www.healthline.com/nutrition/edible-flowers#TOC_TITLE_HDR_6

மரம் தழுவுதல்

பழந்தமிழ் இலக்கியங்கள் சதங்கை அணிந்த இளம்பெண்கள் கால்களால் உதைத்தால் மட்டுமே மலரும் மரங்களை குறிப்பிடுகின்றன.

தன் கணவனை காணாமல் துயருற்ற தமயந்தி ஒரு மரத்திடம் தான் சென்று புலம்புகிறாள்.

தான் விளையாட்டாக மணலில் புதைத்து வைத்த புன்னை விதை முளைத்து செடியாகிவிட்டது, தனக்கு சோறூட்டுகையில் அச்செடிக்கும் ஊட்டுவதாக தாய் பாவனை செய்வாள். எனவே என்னுடன் வளர்ந்த அப்புன்னை மரம் தன் தங்கை அதனருகில் தலைவனுடன் காதல் செய்ய நாணம் கொள்கிறேன் என்னும் தலைவியொருத்தியையும் நாம் அறிவோம்

நம் முன்னோர்கள் இயற்கையுடன் கொண்டிருந்த அணுக்கமும் பந்தமும் நம்மிடையே முற்றிலும் இப்போது இல்லை

இயற்கையை அறிந்துகொள்ளுதலின் குறைபாடென்னும் (nature deficit disorder) பெருநோய் உலகை பீடித்திருக்கிறது.இதற்கு தீர்வாக பல நாடுகள் பல முன்னெடுப்புக்களை கடந்த சில ஆண்டுகளாக துவங்கி இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் மரம் தழுவுதல்.

21 மார்ச் 2017’ல் கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த 4620 மக்கள்  மரங்கள் மற்றும் காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி என் மரம் என் வாழ்வு என்னும் முழக்கத்துடன்,மரங்களை தழுவிக்கொள்ளும் பிரம்மாண்ட நிகழ்வில் ஈடுபட்டார்கள். அந்த நாள் சர்வதேச  வன நாள் ஆகையால் அந்நிகழ்வு பெரும் கவனம் பெற்றது . அதில் பங்கு பெற்றோர் குறைந்தபட்சம் 60 நொடிகளாவது  மரங்களை ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

இது போன்ற நிகழ்வுகளுக்கு செப்டம்பர் 12  1730’ல் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு முன்னுதாரணமாக இருந்தது. வடஇந்தியாவின் தார்பாலைப்பகுதியின் ஒரு கிராமத்தில் தாவரங்களையும் காடுகளையும் வழிபடும் பிஷ்னோய் மார்க்கத்தை சேர்ந்த 294 ஆண்கள்  மற்றும் 69 பெண்கள் அப்பகுதி அரண்மனை கட்டுமானத்திற்காக பாலையின் பசுமைக்கு காரணமாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் இருந்த  பல நூறு வன்னி மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்தார்கள். அனைவரும் மரம் வெட்ட வந்தவர்ள் முன்பு மரங்களை ஆரத் தழுவிக்கொண்டு போராடினார்கள்.  போராட்டத்துக்கு அம்ரிதா தேவி என்னும் பெண் தலைமை தாங்கினார். மரங்களை வெட்டக் கூடாது என்று தழுவிக்கொண்டு போராடிய அம்ரிதா தேவி அவரது மூன்று மகள்கள் உள்ளிட்ட 300 போராட்ல்டகாரர்கள் அன்று வெட்டிக்கொல்லபட்டார்கள்.

 அதுவே ’தழுவுதல்’ என்னும் பொருள் கொண்ட 1970களில் துவங்கிய  சிப்கோ இயக்கத்துக்கும் முன்னுதாரணமாக அமைந்தது. உத்திரபிரதேசத்தில் துவங்கிய சிப்கோ இயக்கம் மர சத்தியாகிரகமென்னும் பெயரில் இந்தியாவெங்கும் வேகமாக பரவியது. இன்றும் மரம் தழுவுதல் ஒரு சிகிச்சையாகவும் வழிபாட்டு முறைகளிலொன்றாகவும் உலகின் பல பகுதிகளில் நடைபெறுகின்றது.

சிப்கோ போராட்டம்

மனிதர்களுக்குத்தான்  மரம் தழுவுதல் என்பது புதிய விஷயம், ஆனால் விலங்கினங்களுக்கு மரம் தழுவுதல் என்பது இயற்கையிலேயே அவை அறிந்திருக்கும்  ஒன்று.

தென்னமரிக்காவின் அசையாக்கரடி (sloth), கோலா கரடிகள், புலி, பூனை, அணில்,பாண்டாக்கள் மற்றும்  ஒராங்குட்டான்கள் மரம் தழுவுதலை அறிந்திருக்கின்றன..

.

2014ல் நடந்த ஒரு ஆய்வு இவ்விலங்குகளில் கோலா கரடியே மிக அதிகமாக  மரம் தழுவும் விலங்கு என்கிறது.

மர உச்சியில் வாழும் கோலா கரடிகள் தங்கள் உடலை குளிரச்செய்ய மரங்களை தழுவிக்கொள்கின்றன.

மரங்களின் உள்ளே எப்போதும் நீரும் , திரவ வடிவில் உணவும் சாற்றேற்றம் எனப்படும் தொடர் நிகழ்வாக நடந்துகொண்டே இருப்பதால், விலங்குகள் மரங்களை தழுவிக்கொள்ளுகையில் அவற்றின் உடலெப்போதும் குளிர்ச்சியாக இருக்க இது மிக உதவுகிறது. அகசிவப்பு கதிர் புகைப்படங்கள் மரங்களை தழுவிக்கொள்ளும் விலங்குகளின் உடல் வெப்பம் குறைவதை காட்டுகின்றன.

உலகின் பல்வேறு  நாடுகளும் மரம் தழுவும் நிகழ்வினை சூழல் பாதுகாப்பின் பொருட்டு முன்னெடுத்து நடத்துகின்றன. இந்நிகழ்வில் பெரும்பாலும் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மரம் தழுவுதல் என்பது ஒரு சிகிச்சையாகவும் நடைபெறுகிறது.உணர்வுபூர்வமான சமயங்களில் நம் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோசின் (Oxytocin) என்னும் ஹார்மோன் மரம் தழுவுகையிலும் உருவாவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது 

மரத்தை அணைத்துக் கொள்ளும்  மனிதர்களின் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி பெருகுகிறது.  மரங்களை இறுக அணைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் பேரியற்கையின்  ஒரு பகுதியாக அவர்களை மனப்பூர்வமாக உணர்கிறார்கள். 

வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்களான வழிபாடு, கேளிக்கை மற்றும் விருந்துகளுடன் இவ்வாண்டில் இருந்து குடும்பத்துடன் மரம் தழுவுதலையும் இணைத்துக்கொள்ளலாம்.அதுவே குடு்ம்ப ஆரோக்கியம், உடலாரோக்கியம் மற்றும் சூழலாரோக்கியதுக்கான இன்றியமையாத சிகிச்சை.

வீடுகளில் வளர்க்க முடியாதவர்கள் , மனம் இல்லாதவர்கள் சுற்றுப்புறங்களிலும், சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் காணப்படும் பெரு மரங்களையாவது ஆரத்தழுவிக்கொள்ளலாம்.

நேபாளத்தில் 2014ல் புத்த துறவிகள், அரசியல் தலைவர்கள்,பள்ளிக்குழந்தைகள், உள்ளிட்ட 2000 பேர் மரம் தழுவினர். பல நாடுகளில் இதுபோன்ற நிகழ்வுகளை கின்ன ஸ் சாதனைப் புத்தகத்தில் குறிப்பிடுவதன் பொருட்டு விண்ணப்பிக்கிறார்கள்.

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑