அந்த கொலையை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை ஆஸ்திரிய காவல்துறை எத்தனை முயன்றும்கொலையானவரின்உடலும்,கொலை குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை. எனினும் டான்யூப்(Danube) ஆற்றில் ஒரு படகுச்சவாரிக்கு சென்ற அந்த சுற்றுலா பயணி பின்னர் ஒருபோதும் வீடு திரும்பவில்லை, யாரும் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்பட்டது. அவரது நண்பரும் தொழில் பங்குதாரருமான ஒருவரை குடும்பமும் காவல்துறையும் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்திருந்தது. எனினும் இறந்தவரின்உடல் கிடைக்காததால்அவரை ,குற்றம் சாட்டவும் முடியவில்லை. அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து வைத்திருந்த காவல்துறை கொலை நடந்ததாக சந்தேகப்படும் அந்த மோட்டார் படகில் மீண்டும் சோதனையிட்டபோது குற்றவாளியென சந்தேகப்படுபவரின் சேறு படிந்த காலணிகள் மட்டும் கிடைத்தன.

அப்போதுதான் முதன்முறையாக வியன்னா பல்கலைக்கழகத்தின் தொல் தாவரவியல் துறையின் விஞ்ஞானி வில்ஹெம் (Wilhelm Klaus)  குற்றப்புலனாய்வில் இணைந்தார். அந்தக் காலணியின்சேற்று மண்ணில் இருந்த பலவகையான மகரந்ததுகள்களை ஆராய்ந்த துகளியலாளரான வில்ஹெம் அவை ஸ்ப்ரூஸ், வில்லோ, ஆல்டர் மரங்களின் மகரந்தங்கள் என்பதையும் அவற்றுடன்  ஹிக்கரி மரமொன்றின் புதைபடிம மகரந்தங்களும் (Fossil pollen) இருந்ததை தெரிவித்தார்.

அந்த ஹிக்கரி மரச் சிற்றினம் அழிந்து போய் பலகாலம் ஆகி இருந்தது. அவற்றின்   மகரந்த தொல்படிமங்கள் டான்யூப் ஆற்றங்கரையின் ஒரு பகுதியில்  5-33 மில்லியன் வருடங்களுக்கு முன்பான படிவப்பாறைகளில் மட்டுமே இருந்தன.

இந்த தடயம் காவல்துறைக்கு போதுமானதாக இருந்தது. குற்றவாளியிடம் ’அந்த படிவப்பாறைகள் இருக்குமிடத்தில் தானேஉடலைப் புதைத்தாய்’ என்று கேட்டபோது குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டு அந்த வழக்கு முடிக்கப்பட்டது.

1959ல் ஆஸ்திரியாவின் இந்த கொலைவழக்கிற்கு பிறகு துகளியல் எனப்படும் palynology பல குற்றப்புலனாய்வுகளில் உலகெங்கும் பெரும் பங்கு வகித்துக்கொண்டிருக்கிறது.

மற்றுமொரு உதாரணமாக  2002 ஆகஸ்டில்  இங்கிலாந்தில் நடந்த  10 வயதுப்பெண்குழந்தைகளின்  இரட்டைக் கொலை குற்றப் புலனாய்வை குறிப்பிடலாம்.

பெண் குழந்தைகள் இரண்டும் காணாமல் போன இவ்வழக்குவிசாரணையில் 400க்கும் மேற்பட்ட காவலதிகாரிகள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், இரண்டு குழந்தைகளின்  குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள், தொலைகாட்சி, செய்தித்தாள், சுவரொட்டி விளம்பரங்கள் என் பலவகை முயற்சிகளும் தோல்வியடைந்தது.  பிரிட்டிஷ் குற்றப் புலனாய்வுகளிலேயே மிக கடினமானதும் மிக அதிகம் பேர் விசாரிக்கப்பட்டதும் இவ்வழக்கில்தான்.

13 நாட்கள் கழித்து எதேச்சையாக  அழுகிய நிலையிலிருந்த இரு பெண் குழந்தைகளின்உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்கள் கிடைத்த இடத்தில் இருந்த  தாவர உயிரியல்  தடயங்களை கொண்டு தாவரவியலாளர் பெட்ரிசியா (Patricia Wiltshire) அந்த கொலையை புலனாய்வு செய்து கொலையாளியை  அடையாளம் காட்டினார்.

உடல்கள் கிடைத்த இடத்தில் முளைவிட்டிருந்த  stinging nettles என்னும் சொறிச்செடிகள் உறுதியாக 13 நாட்களுக்கு முன்னர் வேறெங்கிருந்தோ அங்கு விதைகளாக விழுந்து முளைத்தவை என்பதன் மூலம் குழந்தைகள் வேறிடத்தில் கொலை செய்யப்பட்டு அங்கு சடலம் கொண்டு வரப்பட்டது என்பதையும், உடல் கிடந்த இடத்தில் மண்ணிலிருந்த மகரந்த துகள்கள் கொலையாளியின் வீட்டருகில் இருக்கும் மரங்களிலிருந்து வந்தவை என்பதையும் கொண்டு ஹோலி, ஜெசிகா ஆகிய இரு அப்பாவிக் குழந்தைகளையும் கொலை செய்தது   ஹண்ட்லி (Ian Huntley) என்பவர்தான் என சந்தேகத்துக்கு இடமில்லாமல் பெட்ரிஷியா தெளிவுபடுத்தினார்.

40 வருட சிறை தண்டனையில் இருக்கும் ஹண்ட்லி  2042ல் விடுதலை ஆகலாம். இந்த கொலை வழக்கை கனத்த மனதுடன் தான் வாசிக்க முடியும்:

https://forensictales.com/the-soham-murders/embed/#?secret=LiZf6Asr1u#?secret=VnVfH1vEdC

நியூஸிலந்தில் 2005ல் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கொலையாளிகளின் உடையில் இருந்த  ஹைப்பீரியம் செடியின் மகரந்த துகள்களே புலனாய்வில் அவர்களை கைது செய்ய உதவியது

மற்றொரு பெண் குழந்தையின் கொலை வழக்கிலும் சடலத்தின் உடையில் இருந்த  மகரந்தம் அந்த மரம் இருக்கும் பூங்காவிற்கு வழிகாட்டி, பூங்காவின் அருகிலிருந்த கொலையாளியை கைது செய்ய உதவியது

கொலை வழக்குகள் மட்டுமல்ல குடிமையியல் வழக்குகளிலும் இந்த துகளியல் தடயங்கள் உதவுகின்றன.

முதல் உதாரணமாக 1970ல் அமெரிக்காவில் நடந்த  தேன் வழக்குகளை குறிப்பிடலாம்

அமெரிக்க விவசாய அமைச்சகம் தேனி வளர்ப்போரிடம்  அமெரிக்க எல்லைக்குள் தேனீக்கள் வளர்க்கப்படவேண்டும்  என்னும்  நிபந்தனையின் பேரில் அவர்களது தேனுக்கு உலகின் அப்போதைய  சந்தை மதிப்பை அளிப்பதாக வாக்குறுதி அளித்து தேனி வளர்க்க ஊக்குவித்திருந்தது. அப்படி சட்டத்துக்குட்பட்ட வகையில் தேன் சேகரிக்காமல் பிற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்து தேனை கொடுத்த விவசாயிகளை அந்த தேனில் இருந்த மகரந்த துகள்கள் எந்த பிரதேசத்தில் வளரும் தாவரங்களை சேர்ந்தவை என்னும் துகளியல் தடய சோதனைகளை கொண்டு கண்டறிந்த வழக்குகளும் நடந்தன. 

கடந்த 50 ஆண்டுகளாக forensic palynology எனப்படும் இந்த துகள் தடயவியல் துறை பல சட்டபூர்வமான விசாரணைகளில் ஈடுபடுத்தப்படுகிறது.

பாலினலஜி எனப்படும் இந்த துறையில் அதிகம் மகரந்தங்களை குறித்த ஆய்வுகள் நடைபெறுவதால் இத்துறைக்கு மகரந்ததுகளியல் என்னும் இணைப்பெயரும் உண்டு. எனினும் இந்த துறை மகரந்தங்களை மட்டுமல்ல, 5 லிருந்து 500 மைக்ரோமீட்டர் (ஒரு மீட்டரின் பத்து லட்சத்தில் ஒரு பங்கு ஒரு மைக்ரோமீட்டர்) அளவுகளுக்குள் இருக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட பிற நுண்ணுயிர்கள், மகரந்த துகள்கள், பெரணி, பூஞ்சைகளின் ஸ்போர்கள், தாவர உடல் உடல்பாகங்கள்,  நுண்கட்டிகள், பாசிகள், ஈஸ்ட் போன்ற ஒரு செல் பூஞ்சைகள், மண் குருணைகள், பேருயிர்களின் நுண் துண்டுகள் ஆகிய பலவற்றை குறித்தான துறையும் தான் இது.

இந்த துறை நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டு, நுண்ணுயிரியல் என்னும் துறை அதிலிருந்து உருவான காலத்தில் தொடங்கியது. குறிப்பாக 1640களில் ஆங்கிலேய தாவரவியலாளர் நீஹாமியா (Nehemiah Grew)  நுண்ணோக்கியில் கண்ட மகரந்த துகள் மற்றும் மகரந்தங்களின் வடிவங்களை விவரித்து மகரந்த துகள்களே தாவரங்களின் பால் இனப்பெருக்கத்துக்கு முதற்காரணம் என்று தெரிவித்தபோது உருவானது இத்துறை.

1870களி ல்நுண்ணோக்கிகள் மேம்படுத்தப்பட்டபோது தொல்படிமங்களாக கிடைத்த மகரந்தங்களும் ஸ்போர்களும் ஆராயப்பட்டு  அவற்றின் காலமும் கணிக்கப்பட்டது.

பாலினாலஜி, Palynology , என்னும் சொல்லால் இத்துறை குறிக்கப்பட்டது 1940ல் தான்.

இங்கிலாந்தை சேர்ந்த ஹெரோல்ட் மற்றும் டேவிட்  (Harold Hyde மற்றும் David Williams) ஆகிய இருவரும்  தூவுதல் என்பதை குறிக்கும்கிரேக்கசொல்லான  paluno (to sprinkle) மற்றும் தூசி /துகள் என்பதை குறிக்கும்சொல்லான pale (dust) ஆகிய சொற்களிலிருந்து Palynology  என்னும் சொல்லை உருவாக்கி மகரந்தங்கள் குறித்த ஆய்வுகளுக்கான புகழ்பெற்ற அறிவியல் சஞ்சிகையான  Pollen Analysis Circular ல் முதன் முதலில் குறிப்பிட்டார்கள்.

 அதன் பிறகு துகளியல் அறிவியலில் மிக முக்கியமான ஒரு துறையாகியது. இத்துறை தாவரவியல், புவியியல், தொல்லியல்,  அடுக்கு வரைவியல் ஆகிய துறைகளின் வேர்களை கொண்டது.

ஜெர்மானிய தாவரவியலாளரும்1921ல்  ‘An Introduction to Swedish Pollen Analysis’  எனும் மிக முக்கியமான தாவரவியல் நூலைஎழுதியவருமானபிரெடிரிக்  (Friedrich Hermann Hugo Pfeffer -1845-1920) இத்துறையில் அவர் செய்த மிக முக்கியமான ஆய்வுகளால் இத்துறையை நிறுவியவர் என கருதப்படுகிறார்

 இந்திய துகளியல்துறையை நிறுவியவராக  பரமேஸ்வரன் கிருஷ்ணன் நாயர் என்கிற பி. கே. கேநாயர் (1930,2017) கருதப்படுகிறார்.இவர் மகரந்தங்களின் வெளிப்புறத் தோற்றம் குறித்த முக்கியமான ஆய்வுகளையும் மகரந்தங்களை கொண்டு தாவரங்களை வகைப்படுத்துவதை குறித்தும் பல முக்கியமான ஆய்வுகளை செய்தார்.

20,000 மகரந்த துகள் ஸ்லைடுகளைஉருவாக்கியவரும் மகரந்ததுகளியலில் பல முக்கிய ஆய்வுகளை செய்தவரும் இந்தியாவின் ஆகசிறந்த மகரந்த துகளியலாலரும்,  ’’மகரந்த துகள் உருவமைப்பியல்’’ என்னும் நூலின் ஆசிரியருமானவர் திரு. கணபதி தணிகைமணி 

1986ல்  அவர் கடல் தாவரங்களின் மகரந்தங்கள் குறித்த உரையாற்றும் பொருட்டு அமெரிக்காவுக்கு அறிவியல் மாநாட்டிற்கு பயணம் செய்த விமானம் பாதி வழியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கராச்சியில் தரையிறக்கப்பட்டபோது  நடந்த துப்பாகிச் சண்டையில் குண்டடிபட்டு அங்கேயே  திரு  கணபதி தணிகைமணி பலியானார். மகரந்ததுகளியலின் மாபெரும் இழப்பு அவர் மரணம்.

 தணிகைமணியை சிறப்பிக்கும் பொருட்டு  புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மூன்று புதைபடிவ மகரந்ததுகள்களுக்கு  Retimonocolpitesthanikaimonii, Spinizonocolpitesthanikaimonii , Warkallopollenitesthanikaimonii என பெயரிடப்பட்டிருக்கின்றன.

மகரந்த ஆய்வுகள் குற்றப்புலனாய்வில் மட்டுமல்லாது  மருந்துகளில் கலப்படங்களை கண்டுபிடிக்க,  அருங்காட்சியங்களில் இருக்கும் மிகப்பழைய ஓவியங்களின் காலத்தை நிர்ணயிக்க, தொல்படிம மகரந்த தாவர துகள்களைக் கொண்டு ஹைட்ரோ கார்பன் படிமங்கள் இருக்குமிடத்தை எண்ணெய் நிறுவனங்கள் கண்டறிய என்று பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

அகழ்வாய்வுகளில் கிடைக்கும் படிம மகரந்த துகள்கள் அவை எந்த காலத்தை சேர்ந்தவை என்பதையும் அக்காலத்து தாவரவகைகள், காலநிலை,அக்காலத்து மனிதர்கள் தாவரங்களை பயன்படுத்திய விதம் என பலவற்றை அறிய உதவுகிறது.

தொல் தாவரவியலாளர்கள் இந்த துகளியல் பரிசோதனைகளின் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான சூழலை மறுகட்டமைப்பு செய்கிறார்கள்.

இப்படியான ஆய்வுகளில் மகரந்தங்களின் பயன்பாடும் முக்கியத்துவமும் அவற்றின் ஏராளமான உற்பத்தியையும் மிகப் பரந்தஇடங்களுக்கு அவை பரவுவதையும் அடிப்படையாக கொண்டது. அனைத்து தாவரங்களும்   மலர்களின் கருவுறுதலை உறுதி செய்யும் பொருட்டு மிக மிக அதிக அளவில் மகரந்தங்களை உற்பத்தி செய்கின்றன

அதீத மகரந்தப் பொழிவு தாவரவியலில்  மகரந்த மழை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு நடுத்தர உயரமுள்ளபைன் மரம் சுமார் 10 பில்லியன்மகரந்தங்களை ஒவ்வொரு வருடமும் ஒரே வாரத்தில் உற்பத்தி செய்யும். அதீத உற்பத்தி மட்டுமல்லாது அழிவுக்கெதிரான தாங்கும் தன்மையும் மகரந்தங்களுக்கு மிக அதிகமென்பதால் இவை பல்லாயிரக்கான ஆண்டுகளுக்கு  சேதமின்றி இருக்கின்றன.

நுண்ணோக்கியில் காணப்படும் மகரந்தங்கள்பந்துகளை போல, மெத்தைகளைப் போல மிக அழகிய நுண் செதுக்கு வேலைப்பாடுகளுடன் இருக்கும்

வவ்வாலொன்றின் மூக்கு நுனியிலோ, தேனியின் சிறு கால் ஓரங்களிலோ ஒட்டிக் கொண்டு இவை வெகுதூரம் பயணித்து பெண் மலர்களை கருவுறச்செய்யும் ஆண் விந்தணுக்களை சுமந்துசெல்லவேண்டி இருப்பதால் இவற்றின் பாதுகாப்பை இரண்டடுக்கு உறையினால் இயற்கை உறுதி செய்திருக்கிறது

மகரந்தங்கள் அழகிய  நுண்வேலைப்பாடுகள் அமைந்த கடினமான எக்ஸன் எனும் வெளியுறையும் மெல்லிய சவ்வு போன்ற உள்ளுறையும் கொண்டிருக்கும். சில மகரந்தங்கள் காற்றில் பறந்து செல்ல ஏதுவாக இறகு கொண்டிருக்கும். மேலும் சில நீர் உட்புகாத வண்ணம் பிரத்யேக வெளியுறையுடன் நீர்வழி பயணித்து பெண் மலர்களை அடையும்.

அபரிமிதமான உற்பத்தி மற்றும்  நீடித்திருக்கும் தன்மை ஆகியவற்றால் மகரந்தங்கள் நெடுங்காலம் தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களை கணிக்க, ஆராய உதவும் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

தொல் தாவரவியலாளர் ஆண்ட்ரூ (Andrew Leslie)  470 மில்லியன்வருடங்களுக்கு முன்பான பெரணிச் செடிகளின் ஸ்போர்களும், 375 மில்லியன் வருடங்களுக்கு முன்பான மகரந்த துகள்களும் கூட எந்த மாற்றமுமின்றி தொல் படிவங்களாக கிடைக்கும் என்கிறார்.

ஆவணப்போலிகள், பாலியல் குற்றங்கள், வாகன விபத்துக்குற்றங்கள், கள்ளச்சந்தை வணிகம், பயங்கர வாதம் ஆகிய பல குற்றவியல் விசாரணைகளில் துகளியலாளர்கள்  தற்போது பங்களிக்கிறார்கள்.

தடய சூழியல் என்னும் forensic ecology தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் முக்கியமான அறிவியல் துறைகளில் ஒன்று.  

உலகநாடுகளின் மகரந்த துகள்கள் சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படுவது துரிதமாக்கப்பட்டு உலகளாவிய மகரந்த வங்கி அனைவரும் அணுகும் வகையில் இருக்குமானால் தடயவியல்  ஒப்புநோக்கு ஆய்வுகள் மிக எளிதில்  நடைபெறும். PalDat போன்ற மகரந்த சேமிப்பு தளங்கள் மேலும் விரிவுபடுத்தப்படவெண்டும்

இந்த பிரபஞ்சமே நுண்துகள்களால் ஆனதும் நிரம்பியதும்தான். ஒளி நுண்ணொக்கியில் கூட காண முடியாத நுண் துகளான ஒரு வைரஸினால்தான் பல்லாயிரம் மனிதர்களை காவு கொடுத்துவிட்டு உலகம் இரண்டு வருடங்கள் முடங்கி இருந்தது.

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டவெளியில் இருந்த ஒரு தீத்துகளில்நிகழ்ந்தபெருவெடிப்பில்தோன்றியதுதான் காலமும்  வெளியும்.  

’’உலகை ஒரு மணல் துகளிலும்,

சொர்க்கத்தைவனமலரொன்றிலும்

முடிவிலியைஉள்ளங்கையிலும்

வாழ்வின்நித்தியத்தை

காலக்கணக்குகளிலும்  கண்டுவிடமுடியும்’’ 

என்னும் கவிதையை எழுதிய, பிரிட்டன் இதுவரை உருவாக்கிய மிகச் சிறந்த கலைஞர்”  என புகழப்பட்டவரும், கவிஞரும் ஓவியரும் புனைவியம் மற்றும் காட்சிக்கலை வரலாற்றில்மிக முக்கியவராக கருதப்படுபவருமான வில்லியம்பிளேக்கும் (William Blake, 1757 –  1827) 

மலர்கொண்டு நிற்கும் மரத்திலிருந்து மகரந்தத்தை கொண்டு செல்லும் சிறுவண்டு அம்மரத்தின் நுண்சாரத்தையே கொண்டு செல்கிறது என்னும் ஜெயமோகனும்

விசும்பின் துளி பசும்புல்லின் தலையாகின்றதென சொன்ன வள்ளுவனும்,

வான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளை காண வரைபடம் எதற்கு? வானமோ இரு மண் துகள்களுக்கிடையில் இருக்கிறது என்ற தேவதேவனும் துகளியலையும் மகரந்தவியலையும் கவித்துவமாகஅணுகியவர்கள் தான்