லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 6 of 15)

சோமக்கொடி

பழங்குடியினத்தவர்கள் தாவரங்களுடன் கொண்டிருக்கும் நெருக்கமான தொடர்பு குறித்தான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறேன். குறிப்பாக அவர்கள் சமயச் சடங்குகளில் பயன்படுத்தும் போதைப் பண்புகள்  கொண்ட  தாவரங்கள் குறித்து அறிய ஆர்வம் கொண்டிருக்கிறேன்.  இவை குறித்த ஆய்வுகளை கல்லூரியில் மாணவர்களுக்கு அளிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் நான்  தனிப்பட்ட முறையில் தரவுகளை சேகரித்து கட்டுரைகள் எழுதுகிறேன்.

எந்த பழங்குடியினப் பகுதிகளுக்கு சென்றாலும் இந்த தாவரங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பதில் ஆர்வமுடன் இருப்பேன்.  

திரு ஜெயமோகன் அவர்கள் ஏற்பாடு செய்த, கோவை பாலு அவர்களின் பண்ணை வீட்டில் நடந்த கவிதை முகாமில் கலந்து கொள்ளும் முந்தைய நாள் தருணுடன் பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு புகைப்படங்கள் எடுப்பதற்காக சென்றிருக்கையில் கொஞ்சமும் எதிர்பாராமல் யானைப் புளி எனப்படும் எண்டடா ரீடி என்னும் கொடியை பார்த்தேன். அதை நேரில் பார்க்க முடியும் என்று நினைத்திருக்கவில்லை. மாபெரும் பச்சை வாட்களைபோல அவற்றின் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன.  

இக்கொடியை ஆப்பிரிக்காவில் கனவுக்கொடி என்று அழைக்கிறார்கள். ஆப்பிரிக்க பழங்குடியினர் இதன் கடினமான விதைகளை உடைத்து, எரித்து அந்த போதை தரும் புகையை நுகர்கிறார்கள். இந்த புகை மறைந்துபோன முன்னோர்களிடம் தொடர்புகொள்ளவும், கடவுளிடம் பேசவும் வைப்பதாக நம்புகிறார்கள். 

அங்கிருந்த (ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் போலவே இருந்த) பழங்குடியின முதியவர் ஒருவரின் அனுமதி பெற்று கொஞ்சம் விதைகளை எடுத்து வந்தேன். சிலவற்றை பரிசளித்துவிட்டு சில விதைகளை  என் அலுவலக மேஜையில் வைத்திருக்கிறேன்.

கொழிஞ்சாம்பாறை எனும் கேரளப் பகுதியில் சந்தித்த ஒரு பழங்குடியினத்தவர் உலர்ந்த மிளகுக்கொடிகளை துண்டுகளாக்கி இடுப்பில் கட்டி வைத்திருக்கிறார், அவ்வப்போது அவற்றை பீடி போல புகைக்கிறார். அவர்கள் இனத்தில் அது பலநூறு ஆண்டுகளாக பழக்கம் என்றார் . மிக மிக புதிதாக  அந்த உபயோகத்தை கேள்விப்பட்டேன். 

யானைப்புளி

அவர் எனக்கு சில வெள்ளை இஞ்சித் துண்டுகளை அளித்தார். அவை ஷாம்பு ஜிஞ்சர் (Zingiber zerumbet) எனப்படும் தாவரத்தின் அடிக்கிழங்குகள். சிறு கூம்பு போல அவற்றிலிருந்து உருவாகும் மலர்களில் சேகரமாகும் பிசிபிசுப்பான திரவம் தலைமுடியை அலச பயன்படுத்தப்படுகிறது என்றார். இப்போது அவை என் வீட்டில் செழித்து வளர்கின்றன.  நாங்கள் அதை பயன்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். நல்லதொரு ஆய்வு கட்டுரையையும் அதை குறித்து எழுதி வெளியிட்டேன்.  இதுபோல தொல்குடித்தாவரவியல் துறை அளிக்கும் சுவாரஸ்யங்கள் எண்ணற்றவை.

யானைப்புளியின் பெரிய விதைகள்

முதன்முதலாக   நான் வாசித்த பழங்குடியினத்தவர்கள் சடங்குகளில் பயன்படுத்தப்படும் போதையேற்றும், மனமருட்சி உண்டாக்கும் மற்றும் இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் தாவரங்களான  Enthoegens குறித்த நூல் ’’தெய்வங்களின் தாவரங்கள்’’. 

அமெரிக்க உயிரியலாளர், மனிதவியலாளர் மற்றும் நான் ஈடுபட்டிருக்கும் தொல்குடித்தாவரவியல் துறையை தோற்றுவித்தவரான ரிச்சர்ட்,  புல்லரிசிப் பூஞ்சையிலிருந்து LSD யை கண்டறிந்த  வேதியியலாளர் ஆல்ப்ரெட் ஹாஃப் மேனுடன் இணைந்து எழுதிய நூல் இது.(“Plants of the Gods: Their Sacred, Healing, and Hallucinogenic Powers -Richard Evans Schultes & Albert Hofmann Christian Hofmann)

20 ஆண்டுகளுக்கு முன்னர் இரவலாக  வாசிக்க கிடைத்த இந்த நூலே நான் ஈடுபட்டிருந்த விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கழிவுகளை மட்க செய்து உரமாக மாற்றி மண்வளத்தை, பயிர்களின் சாகுபடியை மேம்படுத்தும் ஆய்வுகளிலிருந்து முற்றிலுமாக வெளிவந்து Ethnobotany என்னும் தொல்குடித்தாவரவியலுக்குள் என்னை அழைத்து சென்றது.

ரிச்சர்ட் பல ஆண்டுகள் அமேஸான் பழங்குடியினருடனேயே வாழ்ந்து இந்த நூலை எழுதினார்.இந்த நூல் போதைத்தாவரங்கள் ஏற்படுத்தும் உளவியல் மற்றும் சமூகவியல் தாக்கம்,  பழமையான சமூகங்களில் உள்ள இனவியல், வரலாறு மற்றும் நரம்பு மருந்தியல் தகவல்கள் அடங்கிய  மிக  பயனுள்ள தொகுப்பு. 

“தெய்வங்களின் தாவரங்கள்”  அமேஸான் பழங்குடிகள் உள்ளிட்ட உலகின் பல பழமையான கலாச்சாரங்களின் மதச் சடங்குகள் சார்ந்த, பரவசமூட்டும், கிளர்ச்சியடையச் செய்யும், மாயத்தோற்றம் உண்டாக்கும் அல்லது மனம் பிறழச் செய்யும் பொருட்களை அளிக்கும் தாவரங்கள், அச்சடங்குகளின் தெய்வங்கள், அவற்றின் வேதிப்பொருட்கள், பிற தாவரவியல் தகவல்கள், அவை கிடைக்கும் பருவங்கள் , குணப்படுத்தும் நோய்கள், அவற்றை மருந்தாக தயாரிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விவரிக்கிறது. இவற்றின் பக்க விளைவுகளும் நச்சுத்தன்மையால் விளையும் ஆபத்துக்களும் கூட குறிப்பிடப் பட்டிருக்கிறது.

பழங்குடியின மதச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் புனிதத் தாவரங்களின் நூற்றுக்கணக்கான அழகிய வண்ணப் புகைப்படங்களும், விரிவான விளக்கங்களும் கொண்ட இந்நூல் ஒரு  அரிய தாவரவியல் பொக்கிஷம்.

இதில் மாண்ட்ரேக் கிழங்குகள், ஊமத்தை மலர்கள், கொடைக்கானலில் இப்போது கிடைக்கும் போதைக்காளான்கள், அட்ரோபா பெல்லடோனா, மெக்ஸிகோவின் பெயோட்டி போதைக்கள்ளிகள் உள்ளிட்ட பல போதைத் தாவரங்கள் விவரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்நூல் அளித்த ஆர்வத்தினால் hallucinogenic plants குறித்து தமிழில் ஒரு நூல் எழுதவிருக்கிறேன். அவை குறித்த தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.மெக்ஸிகோவின் நீலக்கள்ளிகளிலிருந்து கிடைக்கும் டெக்கீலா, ஜப்பானின் அரிசி மதுவான ஸாகெ, கோவாவின் முந்திரிக்கனிச்சாற்றின் ஃபெனி ஆகியவற்றை குறித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.அவை ஒரு தொகுப்பு நூலாக வெளிவரவிருக்கின்றது.

வெண்முரசிலும் பல வகையான தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மது வகைகளும், சிவமூலி, அகிபீனா, சோமக்கொடி போன்றவைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பீமன் பாறைக்குழிவுளில் நொதிக்க வைத்து குரங்குகளுடன் அருந்தும் பழ மது, ஈச்சங்கள், பனங்கள், பிரபாச புல்லிலிருந்து வடித்தெடுக்கப்படும் மது, பீதர்நாட்டு எரி மது, யவன மது,  திரிகர்த்த நாட்டு கடும் மது, இன் தேறல்கள், தானியங்களை நொதிக்க செய்து எடுக்கும் சூரம், காட்டுக்கொடிகளை கலந்து நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுக்கப்பட்ட சோமகம், ஊனை புளிக்க வைத்து எடுக்கப்பட்ட துர்வாசம்.  அகிபீனாவின் இலைகளை கலந்து செய்யப்பட்ட ஃபாங்கம், மதூக மலரை அழுகச் செய்து நீரில் கொதிக்க வைத்து எடுக்கப்படும் மலர் மது,  பீமனுக்கு அளிக்கப்படும்  விஷம் கலந்த வடிநறவம் என்று பல வகைகள் வெண்முரசில் இருக்கின்றன.

பூரிசிரவஸின் நாட்டின் மத்யகீடம் என்னும் கடுமையான மலைமது இளம்சூடாக இருக்கையில்  சிறுவிரலளவான பெரிய வெண் புழுக்களை அதில் போடுவார்கள். அவை வெம்மையை அறிந்ததும் உயிர்கொண்டு எழும். விழித்த கணம் முதல் மதுவில் திளைத்து குடிக்கத்தொடங்கும். துழாவித் துடித்து உள்ளறைகளெங்கும் மது நிறைந்து தடித்து உயிரிழந்து ஊறி மிதக்க தொடங்கும்போது எடுத்து ஆவியில் வேகவைத்து அரிசி அப்பங்களின் நடுவே வைத்து உண்பார்கள்.  

கிழங்குகளிலிருந்தும் அரிசியிலிருந்தும் வாற்றி எடுக்கப்பட்ட எரியும் அனல் துளி போன்ற கடும் மது, வெல்லத்தை நீரில் ஊறவைத்து புளிக்கவிட்டு நொதித்த கலவையை மெல்லிய வெம்மை அளித்து ஆவியாக்கி அதை குளிரவைத்து எடுக்கும் மரபான மது, ஊன் புளிக்க வைத்த குமட்டும் கெடுமணம் கொண்டதும் பித்தெடுக்கவைப்பதுமான அரிதாக சிலரால் அருந்தப்பட்ட மது ஆகியவையும் வெண்முரசில் சொல்லப்படுகிறது. 

வெண்முரசின் வேள்விகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சோமக்கொடி, சோமச்சாறு, சோமரசம் ஆகியவை சடங்குகளில் பயன்படுத்தப்படும் entheogen  வகையில் வருகிறது.

இந்த சோமக்கொடி அல்லது செடி என்னவென்பது இன்னும் அவிழ்க்கப்படாத ஒரு புதிராகவே இருக்கிறது.

ராஜசூயம் போன்ற பெரு வேள்விகளில் மட்டுமல்லாது வேறு பல இடங்களிலும் சோமக்கொடியின் ரசம் வெண்முரசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

முதற்கனலில் பொற்கிண்ணத்தில் சியாமை கொண்டுவரும் சோமக்கொடி போட்டு காய்ச்சி எடுத்த புதுமணம் கொண்ட திராட்சை மதுவை சத்யவதி அருந்துகிறாள். அதை எடுத்து மெல்லக்குடித்தபடி இருளையே பார்த்துக்கொண்டிருக்கும் சத்யவதிக்கு அவ்விருளின் துளி ஒன்றை அவளுள் ஏற்றிக்கொள்வது போல, உள்ளே விரிந்து பரவும் ஒளிக்கு மேல் இருளைப் பரப்புவதே அதன் பணி என்பதுபோல சோமம் பரவுகிறது

//நீர்ச்சுனைகளுக்கு அருகே நீரோடும் பசுங்குழாயெனக் கிடக்கும் சோமச்செடி. அதற்கு நீராழத்தின் வாசனை. நீரிலிருந்து ஆழத்தை மட்டும் எடுத்து சேர்த்துக் கொள்கிறது. நிழல்களாடும் ஆழம். அடித்தட்டின் பல்லாயிரம் மென்சுவடுகள் பதிந்த மௌனம். சோமம் உடலுக்குள் ஒரு காட்டுக்கொடியை படரவிடுகிறது. நரம்புகளில் எங்கும் அது தளிர்விட்டுப் பரவுகிறது// 

இந்த வரிகள் சத்யவதிக்குள் சோமபானம் செய்வதென்ன என்பதை சொல்லுகின்றது 

வேதங்களில் சோமரசம் எடுப்பதை குறித்து பல இடங்களில்   வெண்முரசில் சொல்லப்பட்டிருப்பது போலவே சொல்லப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில் சோமரசம், சோமக்கொடிகளை கல்லில் இட்டு இடித்து சாறு எடுக்கப்பட்டிருக்கிறது  பார்லியுடன் சேர்த்து வேக வைக்கப்பட்டோ அல்லது பால்/ தயிரில் கலந்தும்  தயாரிக்கப்பட்டிருக்கிறது

பன்னிரு படைக்களத்தில் இந்திரபிரஸ்த வேள்வியில் பைலர் தௌம்யரிடம் சென்று ஆணை பெற்று வைதிகர்களின் அவைக்கு வந்து வேதம் பிறந்த தொல்மொழியில் அங்கே சோமம் பிழியவிருப்பதை அறிவிக்கிறார்.பதினெட்டு இளைய வைதிகர்கள் ஈரப்பசும்பாம்புக் குஞ்சுகளைப்போல சுருட்டப்பட்டிருந்த  சோமக் கொடிகளை மூங்கில்கூடைகளில் சுமந்துகொண்டு வந்து எரிகுளங்களுக்கு முன்னால் வைக்கின்றனர்.

 “தேவர்களுக்கு இனியதும் தெய்வங்களுக்கு உரியதுமாகிய சோமச்சாறு இங்கு பிழியப்படுவதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தருமன் ஆணையிட்டதும் மரத்தாலான நூற்றெட்டு உரல்களில் இளம் வைதிகர்கள் சோமக்கொடியை அவ்வுரல்களுக்குள் இட்டு வேதத்தின் சந்தத்திற்கு ஏற்ப மெல்லிய உலக்கைகளால் குத்தி நசுக்கி, அப்பசும்விழுதை எடுத்து வலக்கை கீழிருக்க பிழிந்து மரக்கிண்ணங்களில் தேக்குகின்றனர். நூற்றெட்டு கிண்ணங்களில் சேர்க்கப்பட்ட சோமச்சாறு முப்பத்தாறு எரிகுளங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.தர்ப்பையால் சோமச்சாறை தொட்டு எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்து வேதம் ஓதுகின்றனர் வைதிகர்கள்.

ரிச்சர்டின்  ’’தெய்வங்களின் தாவரங்கள்’’ நூலுக்கு அடுத்து வெண்முரசில் இவற்றை வாசிக்கையில் இரண்டும் இணைந்து தொல்காலத்தில் எப்படி சடங்குகளில் இவை பயன்படுத்தப்பட்டிருக்கும் என்னும் சித்திரம் உருவானது.

வெய்யோனில் கெளரவர்கள் ஜெயத்ரதனுடனும் நடத்தும் கள்ளாட்டில் துரியோதனன் “கள் அல்ல. இமய மது அது. திரிகர்த்தர்களின் நாட்டிலிருந்து வருகிறது. சோமக்கொடியின் நீரைப் பிழிந்து அதில் நறுமணம் சேர்த்து இந்த மதுவை செய்கிறார்கள். இதை அருந்துபவர்கள் விண்ணுலகுக்குச் சென்று அங்குள்ள தேவகன்னியருடன் ஆடி மீள்வர்’’ என்கிறான் 

இமைக்கணத்தில் அர்ஜுனனிடம் இறைவைன் ’’மூன்றுவேதம் அறிந்தோர், சோம மது உண்டோர், பழியகன்றோர் என்னை வேள்விகளால் வழுத்தி வானுலகை வேண்டுகின்றனர்’’ என்கிறார்

இமைக்கணத்திலேயே உதங்கரிடம் இளைய யாதவர் சோம மதுவின் இனிமையை குறிப்பிடுகிறார் 

வெண்முகில் நகரத்தில் திருதிராஷ்டிரர் திரௌபதி நகர் நுழைகையில் ’’நகரத்தையே சோமச்சாறால் நிரப்புங்கள்’’ என ஆணையிடுகிறார்.

பல வேள்விகளில் சோமரசம் சிறு பொற்கிண்ணங்களில் பரிமாறப்பட்டு அவையமர்ந்திருந்த அரசர்கள் அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. 

சோமனுக்குப் பிடித்த உணவு சோமரசத்தில் ஊறவைத்த மானுட இதயங்கள் என்கிறது பிரயாகை 

இப்படி சோமக்கொடி, அது முக்கிய சடங்குகளில் இடம்பெற்றிருப்பது, சோமக்கொடியிலிருந்து சாறு பிழிவது, சோம ரசம் அருந்துவது என பல இடங்களில் வெண்முரசு சோமக்கொடியை பேசுகிறது

அதர்வ வேதம் சோமச்செடியினை போன்ற இயல்புடைய பிற செடிகளையும் குறிப்பிடுகிறது அவற்றில் கசகசா செடி, பார்லி மற்றும் தர்ப்பை ஆகியவை உள்ளன. அதர்வ வேதம் கூனைப்புல் எனப்படும் Imperata cylindrica  என்னும் நாணல் வகையையும் போதை தருவதாக குறிப்பிடுகிறது. இந்த நாணலின் தோற்றம் வெண்முரசின் பிரபாச புல்லை ஒத்திருக்கிறது.

எளிதில் எரியும் தன்மை கொண்ட, காட்டெரிக்கு காரணமாக இருக்கும், வெண்னிற மலர்க்குவையை கொண்டிருக்கும் இந்த புல்லை வெண்முரசு படைப்புல் அத்தியாயத்தில்;

//அந்நாணல் தன்னுள் நெய் நிரப்பி வைத்திருப்பது. ஆகவே செந்தழலுடன் சீறி வெடித்து எரியத்தொடங்கியது. 

’’நாணல் புல்லின் நுரை போன்ற வெண்மலரின் மகரந்தத்தையும் தேனையும் பிழிந்தெடுத்துச் செய்த மது.”

’’சதுப்பில் மலரும் பெருங்குவளை மலரின் தேனும் பொடியும் சேர்த்த மது பலராலும் விரும்பப்பட்டது. ஒருவகை கொடியின் தண்டு மதுவில் நுரையை நிறைத்தது.//

இந்த விவரிப்புக்கள் பிரபாசபுல்லென்பது  கூனைப்புல்லாக இருக்கலாம் என்று எண்ண வைக்கிறது

அதே பகுதியில் //பிரஃபாச க்ஷேத்திரத்தின் கடலோர எல்லையில் செறிந்திருக்கும் பெருநாணலின் இளந்தளிரைப் பிழிந்து சாறெடுத்து அதை மதுவுடன் கலக்கலாம் என்று கண்டுபிடித்தனர். அது மதுவின் மயக்கை மேம்படுத்தியது. அதை அருந்தினால் எண்ணங்களும் கனவுகளும் மட்டுமன்றி கண்முன் தெரியும் காட்சிகளும்கூட நொறுங்கி ஆயிரம் பல்லாயிரம் சிதறல்களாக மாறிவிடும் என்று கூறினார்கள்//. என்று சொல்லப்பட்டிருக்கும்.

மெக்ஸிகோ பழங்குடியினர் இப்போதும் பெயோட்டி கள்ளிகளை உலரவைத்து சமயச் சடங்குகளில் பயன்படுத்துகின்றனர். இந்த கள்ளியை உண்ணும் போது வெண்முரசில் சொல்லப்பட்டிருப்பதைப்போலவே  உலகம் கலைடாஸ்கோப்பின் வண்ணச்சிதறல்களாகி விடுவதாக சொல்லுகிறார்கள். மெக்ஸிகோவில் பெயோட்டிகள் நோய்களை குணப்படுத்தும் சடங்குகளிலும் உபயோகிக்கப்படுகின்றன.

வேதங்களும் புராணங்களும் , சோமக்கொடியை சுற்றி பெரும் மாயமும் தெய்வீக சக்தியும் இருந்ததாக சொல்கின்றன சோமக்கொடியே ஒரு  தெய்வமாகக் கருதப்பட்டது,   

சோமம் கடவுளாகவும் கருதப்பட்டு சோமன் என்னும் தெய்வமாகவும் வழிபடப்பட்டது. சோமன்   மண் சார்ந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வேதப்பாடல்கள்  பத்து  வெண்ணிறக் குதிரைகள் கொண்ட மூன்று சக்கரங்கள் கொண்ட தேரில் வரும் இவனைப் போற்றுகின்றன. “சோமலதை” எனும் ஒருவகைச் செடியிலிருந்து பெறப்பட்ட போதை தரும் பானமாக இவன் கருதப்படுகிறான்.  

டயோனிசஸ்

இதுபோலவே கிரேக்க தொன்மங்களில் டயோனிசஸ் திராட்சை அறுவடை, திராட்சை ரசம், செழிப்பு, பண்டிகைகள், மதக் கொண்டாட்டங்கள், சடங்கின் போது ஒருவருக்கு ஏற்படும் ஆவேசம் மற்றும் நாடகக்கலையின் கடவுளாகக் கருதப்படுகிறார் . இவரே ரோமானிய தொன்மங்களில் பேக்கஸ் எனப்படுகிறார்.

‘’சோமா குடிப்பவருக்கான  இரவு  இன்பத்திற்கானது

 தூய  சோமத்துளிகள் தயிருடன் கலக்கப்படுகின்றன

பரிபூரண பலத்துடன் இருக்கும் இந்திரனே 

நீ சோம பானத்தை அருந்தவே உருவானவன்

வலிமை மிக்க இந்திரனே, 

இசையை நேசிக்கிறவனே, இந்த வேகமான சோமபானம்

இந்த முனிவர்களுக்குள்  நுழைந்து 

அவர்களுக்கு  ஆனந்தத்தைக் கொண்டு வரட்டும்’’

இப்படி பல நூறு பாடல்களில் சோமத்தை குறித்து சொல்லும் ரிக் வேதம்  சோமத்தாவரங்களில் பல வகைகள் இருந்ததாகவும் சொல்லுகிறது

ரிக்வேதத்தின் 9வது மண்டலம் 114 பாடல்களில் சோம ரசத்தை தூய்மைப்படுத்துவதை விவரிக்கிறது.. ஒரு பெண் தன்னை ஆண்களின் முன்பாக கவர்ச்சியானவளாக காட்டிக்கொள்ள சோமச்செடிகளை மென்று தின்றாள் என்கிறது இதே வேதம்.

சோம ரசம் பிழிகையில அதனுடன் பொன்னும் அருமணிகளும் சங்குகளும் நன்முத்துக்களும் வைடூர்யமும் கலந்து இடிக்கப்பட்டதாவும் பண்டைய நூல்களில் குறிப்புகள் உள்ளன.

சோமத்தாவரம் ஒரு கொடி, ஒரு நீர்த்தாவரம், அது தாமரை, அது அல்லி, அது ஒரு மலைப்பகுதிச்செடி,  அது ஒரு பாலை நிலத்தாவரம் என பலவகையான யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன எனினும் உறுதியாக சோமக்கொடி அல்லது செடி என்பது இதுதான் என இப்போது வரை எதுவும் அடையாளம் படுத்தப்படவில்லை

அரளிக்குடும்பத்தை சேர்ந்த  மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் கொடித்தாவரமான Asclepias acida என்னும் தாவரம்தான் இது என்று  சிலர் கருதுகிறார்கள். சோமக்கொடியின் சாற்றுடன் கஞ்சா இலை, மாதுளங்கனி, நீலத்தாமரை கொடியின் தண்டு, பால் மற்றும்  சில நச்சுக்காளான்களும் சேர்ந்ததே சோமபானம் என்பது ஒரு தரப்பினரின் கருத்து

பலர் பெர்சியாவின் தாவரமான ephedra தான் சோமக்கொடி என யூகின்றனர். எனக்கும் இக்கருத்தில் உடன்பாடு உண்டு. மலர்களை உருவாக்காமல் சூலகங்களை நேரடியாக உருவாக்கும் கீழ்நிலைத்தாவரங்களாகிய ஜிம்னோஸ்பெர்ம்ஸ் என்னும் வகையை சேர்ந்த எஃபிட்ரா தான் சோமச்செடி என கருதுகிறேன்

சோமலதை என்னும் பெயரையும் கொண்டிருக்கும் இது கொடியை போன்ற வளரியல்பு கொண்டது. சீனாவில்  ’மா ஹுவாங்’ (Ma huang) எனப்படும் இந்த செடி இந்தியா, ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதிலிருந்து உருவாக்கப்படும் பல பானங்கள் செயலூக்கத்தை அதிகரிக்கும் (performance enhancers) பானங்களாக சந்தைப்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தியர்கள் இதை சோமபானம் என்றும் ஈரானியர்கள் இதை ஹோமபானமென்றும் அழைக்கின்றனர். 

சிறு தவறுக்கு கூட தலை கொய்யும் வழக்கமுடைய மங்கோலிய மகா பேரரசர் செங்கிஸ்கான்  வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுகையில், படைப்பிரிவினர் யாராவது  சோர்ந்தோ அல்லது உறங்குவதையோ பார்த்தால் அங்கேயே தலை வெட்டப்படும் என்பதால் அவரது படை வீரர்கள் அனைவரும், எப்போதும் விழிப்புடன் உற்சாகமாய் இருக்க வைக்கும் இந்த  மா ஹுவாங் தேநீரை அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்,

சரத்துஸ்திரர்களின் புனித நூலான அவெஸ்தா (Avesta) சோமக்கொடியை சிறு கிளைகள் கொண்டது, நறுமணம் மிக்கது,  பசுமஞ்சள் நிறம் கொண்டது, மலைப்பாங்கான இடங்களில் நெருக்கமான புதராக வளரும், அழுத்தி பிழியப்படும் வகையில் மெனமையானது என்கிறது.

Ephedra

இந்த விவரிப்புகள் அனைத்தும்  ஈரானில் haoma என்றும் குறிப்பிடப்படும் சோமலதையான் எஃபிட்ராவின் இயல்பை ஒத்திருக்கிறது. பலர் இதுதான் சோமக்கொடி என்று கருதுகிறார்கள் 

Avesta

1999  ல் நெதர்லாந்தில்  நடைபெற்ற  Haoma-Soma கருத்தரங்கில், Jan E. M. Houben  என்னும் விஞ்ஞானி தனது ஆய்வுக்கட்டுரையில் ’’இனி பேசிக்கொண்டிருக்க தேவையே இல்லை,சோமக்கொடி என்பது எஃபிட்ராதான்’’ என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.

ஈரான் நாட்டின் மாமுனிவரும், சரத்துஸ்திர சமயத்தை உருவாக்கியவருமான சரத்துஸ்தர், அவரது பெற்றோர்கள் ஹோமா கொடியை பாலில் கலக்கி அருந்திய பின்னர் பிறந்தார் என்கிறது அச்சமய வரலாறு.

James Darmesteter, 1875 ல் எழுதிய ’அவெஸ்தாவின் தொன்மங்கள்’ என்னும் ஆய்வேட்டில் எஃபிட்ராவின் குச்சிகள் ஒருபோதும் அழிவதில்லை என்பதை குறிப்பிட்டிருக்கிறார்.

ரிக் வேதம்.சோமச்செடி நீர்நிலைகளுக்கருகில் வளரும், அவற்றிலிருந்து பால் வடியும் என்கிறது. இது எஃபிட்ராவுக்கு பொருந்தாது. எஃபிட்ரா வறண்ட மலைப் பகுதிகளில் வளர்வது, பால் இல்லாதது.

Ephedra

மேலும் சில பண்டைய நூல்கள் சோமச்செடி என்பது  அரளிச்செடியின் குடும்பத்தை சேர்ந்த Cynanchum acidum என்கிறது. இதுவும் எஃபிட்ராவை போலவே இலைகளின்றி குச்சி குச்சியான தண்டுகளுடன் இருக்கும் புதர்ச்செடிதான்.

சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த கோஷ்டம் என்ப்படும் Saussurea lappa என்னும் தாவரத்தையும் சோமக்கொடியென்று சிலர் கருதுகிறார்கள்.

சரக மற்றும் சுஸ்ருத சம்ஹிதைகள் சோமச்செடியில் நாளொன்றுக்கு என 15 இலைகள் முழு நிலவு வரை வளர்ந்து பின்னர் கருநிலவு நாள் வரை ஒவ்வொன்றாக உதிர்ந்துவிடும் என்று குறிப்பிடுகின்றன..சுஷ்ருதர் சோமச்செடிகள் என 24 வகைகளையும் அவற்றை போலவே மனம் மயக்கும் இயல்பு கொண்ட வேறு 18 தாவரங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் 

Psilocybe cubensis

இன்னும் சில நூல்கள் Amanita muscaria, Psilocybe cubensis, Stropharia cubensis போன்ற நச்சுக்காளான்களை சோமச்செடி என்று குறிப்பிடுகின்றன ஆனால் நிச்சயம்  அது காளானாக இருக்க முடியாது. ஏனெனில்   பல நூல்களில் சோமக்கொடி வேள்விகளில் கழுத்தில் மாலையாக அணிவது சொல்லப்பட்டிருக்கிறது.

Stropharia cubensis 

1921ல்  கஞ்சா செடி தான் சோமச்செடி என் பிரஜாலால் முகர்ஜி (Braja Lal Mukherjee)  Royal Asiatic Society யின் சஞ்சிகையில் “The Soma Plant” என்னும் கட்டுரையில் எழுதினார்.

தனது  கட்டுரைக்கு ஆதரமாக முகர்ஜிவேதக் கிரியைகள், சுக்ல யஜுர் வேதத்தோடு தொடர்புடைய வரலாறுகள் தொன்மங்கள் ஆகியவற்றை விளக்கும் சதபதபிராமணம் என்னும் நூலில் சோமச்செடி  “Usana,”  என குறிப்பிடப் பட்டிருப்பதை காட்டியிருந்தார். கஞ்சா செடியின்  சமஸ்கிருத பெயரான “Sana.” என்பதை ஒப்பிட்டு இது கஞ்சாதான் என வாதிட்டு எழுதியிருந்தார்

கஞ்சாவின் பிறமொழிப்பெயர்களான் திபெத்திய ’’சோமரஸ்தா’’ மற்றும் திபெத்–பர்மா மொழிகளில் ஒன்றான சீனப்பழங்குடியினரின் தாங்குடு மொழியின் ’’ஸ்கோமா’’ (dschoma) ஆகியவற்றையும் தனது வாதத்திற்கு துணையாக்கிக் கொண்டார். சதபதபிராமணம், சோமச்செடி கிடைக்காதபோது உபயோகிக்கலாமென்னும் மாற்றுச்செடிகளையும் பட்டியலிடுகிறது 

ரஷ்யாவின் கரா–கம் பாலைவனத்தில் நடைபெற்ற அகழாய்வில் கஞ்சா எஃபிட்ரா மற்றும் கசகசா செடிகளின் இடித்த எச்சங்கள் கிடைத்ததை கொண்டு இம்மூன்றும் சேர்ந்த கலவையே சோமபானமாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது 

19 ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த   ஐரோப்பிய தாவர வியலாளர்கள், வேதவிற்பன்னர்கள் மற்றும் இறையியலாளர்கள்  சோமச்செடியை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்கள் அவர்களில்  Hillebrandt, (1891) மற்றும் Monnier- Williams (1899)ஆகிய இருவரும் மிக குறிப்பிட்டுச் சொல்லும்படியான தேடலில் ஈடுபட்டவர்கள்

20 ம் நூற்றாண்டில்  சோமச்செடியை தீவிரமாக தேடிய வாஸன் (R. Gordon Wasson-1968) ல் இது ஒரு காளான்தான் என  உறுதியாக அறிவித்த போது அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் எழுந்தன

இவர்  Amanita muscaria என்னும் காளான்தான் சோமச்செடி என்று பலவருடப் பயணம் மற்றும் ஆய்வுகளுக்கு பின்ன 1968 ல் வெளியான தனது     Soma: the Divine Mushroom of Immortality. என்னும் நூலில் விவரித்திருந்தார்

இந்நூலில் ‘’ இக்காளான்களை பிழிந்து சாறெடுத்து நீரில், பாலில், தயிரில் அல்லது தேனில் கரைத்து சோம பானமாக அருந்தலாம் என்றும், அக்காளான்களை உண்டவர்களின் சிறுநீரிலும் அதன் வேதிப்பொருட்கள் இருக்குமென்பதால் அதையும் சோமபானமென்று கருதலாமென்றும் வாஸன் குறிப்பிடுகிறார்

 வாஸன் இந்திய குகை ஓவியங்களின் காளான் சித்திரங்கள், வேதங்கள், மற்றும் பல தொல் நூல்களிலிருந்து ஆதாரங்களை அளித்திருந்ததால் இந்நூல் பிரபலமாக பேசப்பட்டது.

சோமத்தாவரம் குறித்த விவரங்கள் தெளிவாக எந்த பண்டைய நூலிலும் அளிக்காப்படாததற்கு இவை அதிக போதை உண்டாக்கும் தன்மை கொண்ட,  மதம் சார்ந்த முக்கியச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டது காரணமாயிருக்கலாம்.

இன்னும் சோமபானம் எடுக்கப்பட்ட தாவரம் எதுவென்று தெரியாவிட்டாலும்  ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் உரிய மனம் மயக்கும் போதை தாவரங்கள் இருப்பதால், அந்தந்த நிலப்பகுதியில் இருந்த தாவரங்கள் அப்பகுதி மக்களால்  சோமச்செடி என்னும் பெயரில் அழைக்கப்பட்டிருக்கும் சாத்தியங்களும் இருக்கிறது. . 

இன்று வரையிலும் சோமச்செடியை குறித்த தேடல்களும், கருத்துக்களும், சர்ச்சைகளும் நீடிக்கின்றன. புதிய போதை தாவரங்களும் கண்டறியப்பட்டு கொண்டிருக்கின்றன.சமீபத்தில்  சிரியாவின் தாவரமான Peganum harmala சோமச்செடியின் இயல்புகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பதால் இதுவே பண்டைய சோமச்செடி என்று பேசப்படுகிறது

கோவிட் தொற்றுக்கு முன்பு 2018ல் என் அமெரிக்க தோழி ஜாய்  பெரூ வில் நடக்கும் 6 நாட்களுக்கான ஆயவாஸ்கா (Ayahuasca) அனுபவத்தில் கலந்துகொண்டாள்  கட்டணம் 2000 டாலர்கள்  

தெய்வங்களின் தாவரங்கள் எழுதிய ரிச்சர்ட் தான் முதன்முதலில் ஆயவாஸ்கா என்கிற அமேஸான் பழங்குடியினத்தவர்களின் மதச்சடங்குகளிலும், குணப்படுத்தும் சடங்குகளிலும் அருந்தப்படும் சாற்றைக் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு உலகிற்கு அதை தெரியப்படுதியவர். அவருடன் இச்சடங்கு பானம் குறித்து வசியத்துயில் மருத்துவத்தையும் ஆன்மீக மரபுகளையும் இணைத்து சிகிச்சையளிக்கும் துறையின் முன்னோடிகளில் ஒருவரான கிளாடியோ பெஞ்சமினும் (Claudio Benjamín) இணைந்திருந்தார்.கிளாடியோ கடந்த 2019ல் மறைந்தார்.

எனக்கும் இந்த சிகிச்சை அல்லது அனுபவத்தில் ஆர்வம் இருந்தது என்றாலும் கட்டணம் மிக அதிகம்  என்பதால் அப்போது செல்லவில்லை. 

உலகெங்கிலும் இருந்து பல நூறு பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் தொடக்கத்தில் பழங்குடியினத்தவர்கள் வந்து சில பிரார்த்தனை பாடல்கள் பாடி வழிபாடுகளில் இவர்களையும் ஈடுபட சொல்லி, அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு மிகக் கசப்பான மூன்று தாவரங்களின் சாற்றை கலந்து அருந்த கொடுத்திருக்கிறார்கள்

அரை மணி நேரத்தில் பலரும் வாந்தி எடுத்து அலறி கூச்சலிட்டு விழுந்து புரண்டு இருக்கிறார்கள். தானும் வாந்தி எடுத்ததாக சொன்ன ஜாய்’ யினால் அதன் பிறகு நடந்தவைகளை ஓரளவுக்கு விளக்க முயன்றாள்.

joi

அலறிக்கொண்டு கீழே பாயில் புரண்டு கொண்டிருந்த  அவளை, அவளிடமிருந்து பிரிந்து மேலே சென்ற   அவளே பார்த்துக்கொண்டிருந்தாள் என்றும் வெகு விரைவாக தான் எங்கெங்கோ பயணித்ததையும், மறைந்த தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததையும் சொல்லும்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

இதைக்கேட்ட பின்பு போதைத்தாவரங்கள் குறித்த நூலை எழுதும் முன்பு இந்த சடங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்று    தோன்றியது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இச்சடங்குகளில்  உபயோகப்படும் இந்த தாவரங்களில் ஒன்றோ அலல்து அனைத்துமோ கூட  சோமக்கொடியாக  இருக்கலாம்.  

பிக்மி பழங்குடியினர் Tabernanthe iboga, என்னும் மரத்தின் வேர்ப்பட்டைகளை மனம்பிறழவைக்கும் அனுபவத்தின் பொருட்டு சடங்குகளின் போது பயனபடுத்துகிறார்கள்.

வெண்முரசில் ’’மதுவுக்கு நம்மை அளிக்காவிட்டால் மதுவின் தெய்வம் இறங்கிவருவதில்லை” என்று துரியோதனன் கர்ணனிடம் சொல்லுவான்.

ஹரிதர் விருஷாலியிடம் ’’தன்னை தலைகீழாக்க மானுடன் கொள்ளும் உள்விழைவை தொட்டு முளைக்க வைக்கிறதா மது? தலைகீழாக நின்று இவ்வுலகையே அவ்வண்ணம் திருப்பிக்கொள்கிறார்களா?” என்று கேட்கிறார்.

கல்பொருசிறுநுரை மது வேட்கையை ’’உவகையை நோக்கிச் செல்லும் உயிரின் விழைவு அது. தன்னை மறந்தாடவும், தக்கவைத்துக்கொண்ட அனைத்தையும் கைவிடவும், அனைத்திலிருந்தும் விடுபடவும், வேறொரு வெளிக்குச் சென்று திளைக்கவும் உள்ளம் கொள்ளும் துடிப்பு’’ என்கிறது.  

கிராதம் “மதுவை நாடுபவர் அனைவரும் மதுவெனக் கொள்வது ஒன்றையே அல்ல. அஞ்சுபவர்களுக்கு அது துணை. பணிந்தவர்களுக்கு அது குரல். தனித்தவர்களுக்கு அனைத்து வாயில்களையும் திறக்கும் காற்று” என்கிறது. 

வெண்முரசு காட்டும் இதுபோன்ற மது குறித்தான செய்திகளையும், மது எழுப்பும் மெய்யிலி  உலகங்களையும், சோமம் உள்ளிட்ட தாவர மதுவகைகளையும், அவை பயன்படுத்தப்படும் தொல் சடங்குகளையும்  இணைத்து ஒன்றாக அறிந்து கொள்கையில்  கிடைக்கும் சித்திரம் மிக புதியது, மிக சுவாரஸ்யமானது..

மலர் உணவு-Floraphagia

 மனிதர்களின் வாழ்வில் மலர்கள் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டிருக்கின்றன. பண்டைய காலத்திலிருந்தே உலகின் அனைத்து நாகரிகங்களும் இறைவழிபாட்டில், பண்டிகைகளில், மங்கல நிகழ்வுகளில் பிறப்பு,இறப்பு திருமணம் உள்ளிட்ட  சடங்குகளிலும் தலையில் சூடிக் கொள்ள, மாலையாக,  மருந்தாக, மகிழ்ச்சிக்காக,  அழகுக்காக, பரிசளிக்க என்று பலவிதங்களில் மலர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மலர்களின் பொருள் என்னவென்பதை சொல்லும் மலர்மொழி உலகெங்கிலும் புழக்கத்தில் இருக்கிறது. மலர் மருத்துவமும் அனைவரும் அறிந்ததே.

 இவற்றோடு  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பல வகையான மலர்கள் சமையலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு உண்ணப்படுகிறது.  ஆங்கிலத்தில் Edible Flowers-EF என்று குறிப்பிடப்படும் இம்மலர்கள் பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. இவற்றில் பல சமைக்கப்படுகின்றன, ஒரு சில மலர்கள் சமைத்த பிற உணவுகளின் மீது அலங்காரம் செய்ய பயன்படுகின்றன மேலும் பல அப்படியே சமைக்காமல் உண்ணப்படுகின்றன. மருத்துவ காரணங்களுக்காகவும் அவற்றின் சுவைக்காகவும் மலர்களின் பிரத்யேக சத்துக்களின் பொருட்டும் இவை உணவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

பண்டைய ரோமானிய கிரேக்க, சீன மூலிகை மருத்துவர்கள் மலர்களின் உணவுப் பயன்பாட்டைக் குறித்தும் அவற்றால் குணமாகக்கூடிய நோய்களையும் விளக்கி இருக்கின்றனர். தொல்குடிகளான அஸ்டெக்குகள், இன்க்காக்களும் மலர்களை உணவாக எடுத்து கொண்டிருக்கின்றனர். இந்து மதம் உள்ளிட்ட பல மதச்சடங்குகளில் மலர்கள் உண்ணப்படுகின்றன. மெக்ஸிகன் பழங்குடியினர் பலநூற்றண்டுகளாக மலர்களை உண்டு வந்திருக்கின்றனர்.

மலர் உண்ணுதலை முதன் முதலாக  ‘floriphagia’ என்னும் சொல்லால் 2013ல் Lara-Cortés என்பவரின் குழுவினர் குறிப்பிட்டனர்.

சாமந்தி மலர்களை ரோமானியர்கள் உணவில் குங்குமப்பூ நிறம் கிடைக்க பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்போதும் சாமந்திப்பூ ’’ஏழைகளின் குங்குமப்பூ’’ என்று அழைக்கப்படுகிறது. குங்குமப்பூவில் கலப்படமாகவும் இம் மலரிதழ்கள் பயன்படுகின்றன.

ரோஜா இதழ்கள் பல பண்டைய நாகரிகங்களில் உணவுக்கு சுவை மணம் நிறம் அளிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் ரோஜா பன்னீரும் குல்கந்தும் இனிப்புகளும் நம்மிடையே பிரபலமாக இருக்கிறது. செம்பருத்தி தேநீர் சில வருடங்களாக பசுமை மருத்துவத்தின் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமாகி வருகிறது.

17ம் நூற்றாண்டில் வயோலா என்னும் அடர் ஊதா மலர், திரவ மருந்துகளுக்கும்  மதுபானங்களில் நிறமூட்டவும் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் மட்டும் சுமார்  35 வகையான மலர்கள் உண்ணப் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆர்டிசோக் எனப்படும் மலரரும்புகள் (Cynara scolymus). காலிஃப்ளவர் என்னும் பூக்கோசு (Brassica oleracea var. botrytis) புராக்கலி என்னும் பச்சைபூக்கோசு (Brassica oleracea var. italica), வாழைப்பூ, அகத்திப்பூ, முருங்கைப்பூ ஆகியவை பலரும் அறிந்திருக்கும் உணவில் சேர்க்கப்படும் மலர்கள்.  ஸ்ட்ராபெரி, கடுகு மற்றும் கொத்துமல்லி மலர்களும் உண்ணக்கூடியவையே.

 தாமரை மலரிதழ்கள் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் காஷ்மீரில் உண்ணப்படுகின்றன. இவற்றை தேநீர் தயாரிப்பில் அதிகம் உபயோகிக்கிறார்கள்.

 தாய்லாந்தில் சாமந்தியின் ஒரு வகையான டாஜிடஸ், காகித மலர் மற்றும் கேந்தி மலர்கள் உண்ணப்படுகின்றன. அமெரிக்காவில் டாஜிடஸ், அலரி எனப்படும் ஃப்ராங்கி பானி மலர்கள் மற்றும் கற்றாழை மலர்கள் உண்ணப்படுகின்றன. பிரேஸிலில் வாழைப்பூவுடன்  பூசணிப் பூவும் உண்ணப்படுகிறது.

மிகச்சாதாரணமாக பார்க்க முடிகின்ற சிறு வெண்ணிற டெய்ஸி மலர்கள் விழாக்கால விருந்துகளில் உணவுகளை அலங்கரிக்கவும் உணவுகளோடு சேர்த்து உண்ணவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Tisanes எனப்படும்  பருவ கால உலர் மலரிதழ்களில் உண்டாக்கப்படும் தேநீர் சர்க்கரை நோய் உள்ளிட் பல நோய்களுக்கான சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தபடுமொன்று

தென்தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் பொன்னாவாரை மலர்களில் தேநீர் தயாரித்து அருந்துவார்கள். நீலத்தேநீர் எனப்படுவது சங்கு புஷ்ப த்திலிருந்து உண்டாக்கப்படும் மருத்துவ குணங்கள் மிக்க நீலத்தேநீர். சங்கு புஷ்ப அரும்புகள் தாய்லாந்தில் அரிசியுடன் வேகவைக்கப்பட்டு நீலச்சோறு உண்டாக்கப்படுகிறது.

குங்குமப்பூவின் மூன்று சூலகமுடிகள் மட்டும்தான்  குங்குமப்பூ என சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. சோம்பு மலர்கள் சூப்’களில் புத்தம் புதிதாக சேர்க்கப்படுகின்றன. குழந்தையின்மைக்கு தீர்வாக சிலரால் நள்ளிருள் நாறி என்றும் நிஷாகந்தி, பிரம்மகமலம் என்றும் அழைக்கபடும் மலர்  உண்ணப்படுகின்றது.

கொரியாவில் Hwajeon எனப்படும் அரிசிமாவு இனிப்பொன்றில் அந்தந்த பருவ கால மலர்கள் சேர்க்கப்படுகின்றன. பிரபல நறுமணப்பொருளான கிராம்பு எனப்படுவது அம்மரத்தின் முதிரா மலர் அரும்புகள் தான், ஆக்ஸாலிஸ் எனப்படும் புளியாரைக்கீரை மலர்களும் உண்ணக்கூடியவைதான்..

அனைத்து மலர்களும் உண்ணத்தக்கவை அல்ல என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும் தாவரங்களில் பல நச்சுத்தனமை கொண்டவை எனவே நன்கு அறிந்திருந்தால் மட்டுமே புதிய தாவர வகைகளின் மலர்களை உண்ண வேண்டும். இன்னும் சில உண்ணப்படும் தாவர மலர்களில் நச்சுப்பொருட்கள் இருப்பதால் மிக குறைந்த அளவிலேயே அவை உண்ணப்படவேண்டும்.

உதாரணமாக ஆப்பிள் மலர்கள் உண்ணக்கூடியவையே எனினும் அவற்றின் சயனைட் நஞ்சைப்போன்ற நஞ்சு இருப்பதால் மிக மிக குறைவான அளவிலேயே அவற்றை உண்ணவேண்டும். அதுபோலவே வயோலா மற்றும் பொராஜ் மலர்கள் சிறுநீர் பெருக்கும் இயல்புடையவை என்பதால் கவனமாக அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் நஞ்சுகொண்டிருப்பவை  மட்டுமலல்ல. குறிப்பிடட்ட சில விளைவுகளை உண்டாக்கும்  வேதிப்பொருட்களை  கொண்டிருக்கும் மலர்களும் இருக்கின்றன.

பல வகையான மலர்கள் உண்ணத்தகுந்தவை மேலும் பல மலர்களின் உண்ணும் தன்மை இப்போது ஆராயப்பட்டு கொண்டிருக்கிறது. காய்களையும் கனிகளையும் இலைகளியும் வேர்க்கிழங்குகளையும் போல மலர்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அவற்றில் நஞ்சு கொண்டிருப்பவை, பல முக்கிய வேதிப்பொருட்களை கொண்டிருப்பவை எவையெவை என அறிந்து கொண்டு அவற்றை தவிர்த்துவிட்டு மற்றவற்றை உண்ணலாம்

  • உண்ணக்கூடிய மலர்களை குறித்து மேலும் தெரிந்து கொள்ள Monica Nelson Adrianna Glaviano ஆகிய இருவர் இணைந்து உருவாக்கிய நூற்றுக்கணக்கான உணவு மலர்களை குறித்த பிரபலமான Edible Flowers: How, Why, and When We Eat Flowers  என்னும் நூலை வாசிக்கலாம்.
  • மேலதிக தகவல்களுக்கு:https://www.healthline.com/nutrition/edible-flowers#TOC_TITLE_HDR_6

மரம் தழுவுதல்

பழந்தமிழ் இலக்கியங்கள் சதங்கை அணிந்த இளம்பெண்கள் கால்களால் உதைத்தால் மட்டுமே மலரும் மரங்களை குறிப்பிடுகின்றன.

தன் கணவனை காணாமல் துயருற்ற தமயந்தி ஒரு மரத்திடம் தான் சென்று புலம்புகிறாள்.

தான் விளையாட்டாக மணலில் புதைத்து வைத்த புன்னை விதை முளைத்து செடியாகிவிட்டது, தனக்கு சோறூட்டுகையில் அச்செடிக்கும் ஊட்டுவதாக தாய் பாவனை செய்வாள். எனவே என்னுடன் வளர்ந்த அப்புன்னை மரம் தன் தங்கை அதனருகில் தலைவனுடன் காதல் செய்ய நாணம் கொள்கிறேன் என்னும் தலைவியொருத்தியையும் நாம் அறிவோம்

நம் முன்னோர்கள் இயற்கையுடன் கொண்டிருந்த அணுக்கமும் பந்தமும் நம்மிடையே முற்றிலும் இப்போது இல்லை

இயற்கையை அறிந்துகொள்ளுதலின் குறைபாடென்னும் (nature deficit disorder) பெருநோய் உலகை பீடித்திருக்கிறது.இதற்கு தீர்வாக பல நாடுகள் பல முன்னெடுப்புக்களை கடந்த சில ஆண்டுகளாக துவங்கி இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் மரம் தழுவுதல்.

21 மார்ச் 2017’ல் கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த 4620 மக்கள்  மரங்கள் மற்றும் காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி என் மரம் என் வாழ்வு என்னும் முழக்கத்துடன்,மரங்களை தழுவிக்கொள்ளும் பிரம்மாண்ட நிகழ்வில் ஈடுபட்டார்கள். அந்த நாள் சர்வதேச  வன நாள் ஆகையால் அந்நிகழ்வு பெரும் கவனம் பெற்றது . அதில் பங்கு பெற்றோர் குறைந்தபட்சம் 60 நொடிகளாவது  மரங்களை ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

இது போன்ற நிகழ்வுகளுக்கு செப்டம்பர் 12  1730’ல் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு முன்னுதாரணமாக இருந்தது. வடஇந்தியாவின் தார்பாலைப்பகுதியின் ஒரு கிராமத்தில் தாவரங்களையும் காடுகளையும் வழிபடும் பிஷ்னோய் மார்க்கத்தை சேர்ந்த 294 ஆண்கள்  மற்றும் 69 பெண்கள் அப்பகுதி அரண்மனை கட்டுமானத்திற்காக பாலையின் பசுமைக்கு காரணமாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் இருந்த  பல நூறு வன்னி மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்தார்கள். அனைவரும் மரம் வெட்ட வந்தவர்ள் முன்பு மரங்களை ஆரத் தழுவிக்கொண்டு போராடினார்கள்.  போராட்டத்துக்கு அம்ரிதா தேவி என்னும் பெண் தலைமை தாங்கினார். மரங்களை வெட்டக் கூடாது என்று தழுவிக்கொண்டு போராடிய அம்ரிதா தேவி அவரது மூன்று மகள்கள் உள்ளிட்ட 300 போராட்ல்டகாரர்கள் அன்று வெட்டிக்கொல்லபட்டார்கள்.

 அதுவே ’தழுவுதல்’ என்னும் பொருள் கொண்ட 1970களில் துவங்கிய  சிப்கோ இயக்கத்துக்கும் முன்னுதாரணமாக அமைந்தது. உத்திரபிரதேசத்தில் துவங்கிய சிப்கோ இயக்கம் மர சத்தியாகிரகமென்னும் பெயரில் இந்தியாவெங்கும் வேகமாக பரவியது. இன்றும் மரம் தழுவுதல் ஒரு சிகிச்சையாகவும் வழிபாட்டு முறைகளிலொன்றாகவும் உலகின் பல பகுதிகளில் நடைபெறுகின்றது.

சிப்கோ போராட்டம்

மனிதர்களுக்குத்தான்  மரம் தழுவுதல் என்பது புதிய விஷயம், ஆனால் விலங்கினங்களுக்கு மரம் தழுவுதல் என்பது இயற்கையிலேயே அவை அறிந்திருக்கும்  ஒன்று.

தென்னமரிக்காவின் அசையாக்கரடி (sloth), கோலா கரடிகள், புலி, பூனை, அணில்,பாண்டாக்கள் மற்றும்  ஒராங்குட்டான்கள் மரம் தழுவுதலை அறிந்திருக்கின்றன..

.

2014ல் நடந்த ஒரு ஆய்வு இவ்விலங்குகளில் கோலா கரடியே மிக அதிகமாக  மரம் தழுவும் விலங்கு என்கிறது.

மர உச்சியில் வாழும் கோலா கரடிகள் தங்கள் உடலை குளிரச்செய்ய மரங்களை தழுவிக்கொள்கின்றன.

மரங்களின் உள்ளே எப்போதும் நீரும் , திரவ வடிவில் உணவும் சாற்றேற்றம் எனப்படும் தொடர் நிகழ்வாக நடந்துகொண்டே இருப்பதால், விலங்குகள் மரங்களை தழுவிக்கொள்ளுகையில் அவற்றின் உடலெப்போதும் குளிர்ச்சியாக இருக்க இது மிக உதவுகிறது. அகசிவப்பு கதிர் புகைப்படங்கள் மரங்களை தழுவிக்கொள்ளும் விலங்குகளின் உடல் வெப்பம் குறைவதை காட்டுகின்றன.

உலகின் பல்வேறு  நாடுகளும் மரம் தழுவும் நிகழ்வினை சூழல் பாதுகாப்பின் பொருட்டு முன்னெடுத்து நடத்துகின்றன. இந்நிகழ்வில் பெரும்பாலும் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மரம் தழுவுதல் என்பது ஒரு சிகிச்சையாகவும் நடைபெறுகிறது.உணர்வுபூர்வமான சமயங்களில் நம் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோசின் (Oxytocin) என்னும் ஹார்மோன் மரம் தழுவுகையிலும் உருவாவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது 

மரத்தை அணைத்துக் கொள்ளும்  மனிதர்களின் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி பெருகுகிறது.  மரங்களை இறுக அணைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் பேரியற்கையின்  ஒரு பகுதியாக அவர்களை மனப்பூர்வமாக உணர்கிறார்கள். 

வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்களான வழிபாடு, கேளிக்கை மற்றும் விருந்துகளுடன் இவ்வாண்டில் இருந்து குடும்பத்துடன் மரம் தழுவுதலையும் இணைத்துக்கொள்ளலாம்.அதுவே குடு்ம்ப ஆரோக்கியம், உடலாரோக்கியம் மற்றும் சூழலாரோக்கியதுக்கான இன்றியமையாத சிகிச்சை.

வீடுகளில் வளர்க்க முடியாதவர்கள் , மனம் இல்லாதவர்கள் சுற்றுப்புறங்களிலும், சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் காணப்படும் பெரு மரங்களையாவது ஆரத்தழுவிக்கொள்ளலாம்.

நேபாளத்தில் 2014ல் புத்த துறவிகள், அரசியல் தலைவர்கள்,பள்ளிக்குழந்தைகள், உள்ளிட்ட 2000 பேர் மரம் தழுவினர். பல நாடுகளில் இதுபோன்ற நிகழ்வுகளை கின்ன ஸ் சாதனைப் புத்தகத்தில் குறிப்பிடுவதன் பொருட்டு விண்ணப்பிக்கிறார்கள்.

கிறுஸ்துமஸ் மரங்களின் கதை

பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், மரக்கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது.

மர வழிபாடு ஐரோப்பிய பாகன் பழங்குடிகளின் மரபாக இருந்தது. (pagan European). 723ல் ஜெர்மானிய இறையியலாளர் புனித போனிபேஸ் கிறிஸ்தவத்தை பரப்பும் இறைப்பணியில் இருந்தபோது  பாகன் பழங்குடியினர்  அவர்களின் கடவுளாக கருதப்பட்ட ஓக் மரமொன்றை வழிபடுவதை கண்டார். கிறுஸ்துவை அல்லாது மரத்தை வழிபடும் அவர்கள் மீது கோபம் கொண்ட அவர் அந்த ஓக் மரத்தை கோடாலியால் வெட்டி வீழ்த்தினார். வீழ்ந்த ஓக் மரத்தின் அடியில் இருந்து ஒரு பசுமை மாறா மரம் அப்போதே முளைத்து எழுந்ததை கண்ட துறவி அம்மரத்தை உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அடையாளமாக கொண்டு வழிபட துவங்கினார்.  பகன் பழங்குடியினரும் கிறுஸ்துவத்தை தழுவினர்.

அதன் பிறகே கிறுஸ்துவ வழிபாடுகளில் பசுமை மாறா மரங்கள் பங்குபெற்று படிப்படியாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலும் அவை இடம்பெற்றன என நம்பப்படுகிறது.   கிறிஸ்துமஸ் மரத்தை குறித்து பெரும்பாலான ஜெர்மானிய மக்களால் சொல்லப்படும் இக்கதையின் நம்பகத்தன்மை ஆராய்ச்சிக்குரியது என்றாலும் இன்று வரை பசுமை மாறா மரங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் முக்கிய அங்கமாக இருக்கின்றன.

இவ்வாறு பசுமை மாறா மரக்கிளைகளை, இலை மற்றும் மலர்களால் ஆன வளையங்களை, மாலைகளை,அழியா வாழ்வின் குறியீடாக பயன்படுத்துவது பண்டைய எகிப்தியர்கள் மற்றும், சீனர்களின் வழக்கமாக இருந்தது.

ஸ்கேண்டினேவியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வீட்டை பசுமைமாறா புதிய மரக்கிளைகளால் அலங்கரிப்பதும் மரம் போன்ற அமைப்பை வீட்டு முன்பு அமைத்து அதில் பறவைகள் தங்க கூடுகளைஅமைப்பதும் தீய சக்திகளை விரட்டி, நீளாயுள் தரும் எனும் நம்பிக்கை இருந்தது, 

ஜெர்மனியில் வீட்டு முன்பாகவும் வீட்டினுள்ளும் யூல் மரக்கிளைகளை குளிர்கால விடுமுறையில்  நட்டு வைப்பது வழக்கம். நூற்றாண்டுகளாக கிருஸ்துமஸ் காலங்களில் வீட்டு முகப்பில் மிஸ்ஸெல்டோ-Mistletoe என்னும் ஒரு வகை மர ஒட்டுண்ணி செடியை வைப்பதும் அங்கு வழக்கமாக இருக்கிறது.   காலம் காலமாக காதலுணர்வின் அடையாளமாக இச்செடி கருதப்படுவதால் அச்செடியை கடந்து வீட்டினுள் நுழையும் யாராக இருந்தாலும் உடனே முத்தமிடப்படவேண்டும் என்பது ஒரு  மரபாக இருக்கிறது

பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் பசு மரக்கிளைகள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 

1500 களில் கிறித்துவத்தின் முதலாவது சமயச் சீர்திருத்தச் சிந்தனையாளர் மார்ட்டின் லூதர், ஒரு கிறிஸ்மஸ் கால பனி நாளில்  ஊசி இலைக்காடுகளின் வழியே காலைநடையில் ஈடுபட்டிருக்கையில், அப்பசுமை மாறா கூம்பு வடிவ மரங்களில் சூரிய ஒளி பட்டு அவை பொன்மஞ்சளில் ஒளிர்வதை கண்டார்.

அவ்வழகில் மனம் மயங்கிய அவர் ஒரு ஃபிர் மரத்தை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதை கிறிஸ்துமஸ் விழாவில் பயன்படுத்தினார். இதுவே அதிகார பூர்வமாக  கிறிஸ்மஸ் மரம் கிறிஸ்மஸ் விழாக்களில் இடம்பெற்ற தருணம்  என வரலாய்வாளர்கள் கருதுகிறார்கள்

நவீன கிறிஸ்துமஸ் மரம் மேற்கு ஜெர்மனியில் உருவானது. இதன் துவக்க கால நோக்கம்  ஆதாமுக்கும் ஏவாளுக்கும்  விலக்கப்பட்ட கனியை அளித்த  சொர்க்க மரம் போன்ற ஒன்றை கிறிஸ்துமஸ் சமயங்களில் அமைப்பதுதான். பதினைந்தாம் நூற்றாண்டுகளில் டிசம்பர் 24 நாளை ஆதாம், ஏவாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது அக்காலங்களில் அத்தி மரக்கிளைகளில் ஆப்பிள்களை கட்டி தொங்கவிட்டு ஏதென் தோட்டம் போல வீட்டை அலங்கரிப்பது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் முக்கிய அங்கமாக இருந்தது

அம்மரத்தில் கிறிஸ்துவின் கடைசி  இரவு உணவை குறிக்க வேஃபர் பிஸ்கட்டுகள் கட்டி தொங்கவிடப்பட்டன. தொடர்ந்த காலங்களில் வேஃபர்களுக்கு பதிலாக பல வடிவ பிஸ்கட்டுக்கள் இடம்பெற்றன. அத்துடன் மரக்கட்டைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிறிய பிரமிடும்  பிறகு இணைந்துகொண்டது அதில் தேவனின் புகைப்படங்களும், நட்சத்திர வடிவமும், உலகின் ஒளியான கிறிஸ்துவின் அடையாளமாக கருதப்பட்ட மெழுகுவர்த்திகளும்  வைக்கப்பட்டன 

16.’ம் நூற்றாண்டில் கிருஸ்துமஸ் மரங்களும் பிரமிடும் இணைந்து அலங்கரிக்கப்பட்ட கிருஸ்துமஸ் மரங்களாகின. 1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்கு பிறகு ஒரு கிறிஸ்மஸ் மரத்தை பாரிஸ் நகருக்கு கொண்டுவந்து விழா கொண்டாடியது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் நுழைந்ததன் முக்கிய நிகழ்வாக வரலாறு குறித்து வைத்திருக்கிறது. 

1790களில் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் மனைவியும் ஜெர்மானிய பெண்ணுமான சார்லட் விடுமுறை காலங்களில் தோட்டத்து மரங்களை  அலங்கரிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.  

இங்கிலாந்து அரசி விக்டோரியாவின் ஜெர்மனி பயணங்கள் அவருக்கு ஜெர்மன் நாட்டு இளவரசர் ஆல்பர்ட்டுடன் காதலை வளர்த்தது. இவர்களின் திருமணத்துக்க் பிறகு,  1841ல் அரசர் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்மஸ் மரத்தின்அதிகாரபூர்வமான இங்கிலாந்து பிரவேசம்.

அதன் பின்னர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் டிசம்பர் 24 அன்று  விக்டோரியன் கிறிஸ்துமஸ் மரம் என்றழைக்கப்பட்ட அவற்றில் கேக்குகளும், பல வண்ண ரிப்பன்களும், வண்னக்காகிதங்களும் வழக்கமான சிறு பரிசுகளுடன் இணைத்து தொங்கவிடப்பட்டன. பரிசுப்பொருட்கள் கிருஸ்துமஸ் தினத்தன்று திறந்து பார்க்கப்பட்டன.  

கிறிஸ்மஸ் மரத்தின் கிளைகள் இயற்கையாகவே சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பதும், தந்தை, மகன், தூய ஆவியை குறிக்கும்  முக்கோண வடிவம் அதில் காணப்படுவதும் மிக அதிர்ஷ்டமென்று கருதப்படுகிறது.

இங்கிலாந்தில் சுமார் நான்கடி உயரத்திலும், அமெரிக்காவில் 10 அடிக்கும் மதிகமாக வீட்டுக் கூரை வரை உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரங்களும் பயன்பாட்டில் உள்ளன.

17ம் நூற்றாண்டில் வடக்கு அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த ஜெர்மானியர்கள்  அங்கும் இவ்வழக்கத்தை அறிமுகம் செய்தார்கள்.  எனினும் துவக்கத்தில் இம்மரம் அமெரிக்கர்களால் அவ்வளவாக விரும்பப்படவில்லை

இவ்வழக்கம் 18  நூற்றாண்டு வரை  லூதரன் கிருஸ்துவர்களால் உலகெங்கும் பரவலாக்கப்பட்டது. 1820க்கு பிறகுதான் கிருஸ்மஸ் கொண்டாடங்கள்  அமெரிக்காவில் புத்துயிர் பெற்று, கிறுஸ்துமஸ் மரங்களும்புழக்கத்துக்கு வந்தன.

1830ல்தான் முதன்முறையாக நாட்டின் கிறிஸ்துமஸ் மரமொன்று  காட்சிக்கு வைக்கப்பட்டது. அதன்பிறகு கிறிஸ்துமஸ் மரங்களின் பிரபலத்துக்கு அப்போது செல்வாக்குடன் இருந்த  சஞ்சிகையான  Godey’s Lady’s Book,  ஒரு முக்கிய காரணமாயிருந்தது. 

 19ம் நூற்றாண்டில் ஜெர்மானிய கலாச்சாரத்தில் கிறிஸ்துமஸ் மரம் ஆழ வேரூன்றியது பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் வெகுவாகப் பரவிவிட்டது.

முதல் கிருஸ்துமஸ் மர விற்பனை அங்காடி அமெரிக்காவில் 1851ல் மார்க் சார் (Mark Carr ) என்பவரால் நியூ யார்க்கில் துவக்கப்பட்டது. 1887-1933 களில் அமெரிக்க துறைமுகங்களில் நங்கூரம் இடப்பட்ட கப்பல்களிலும் கிருஸ்துமஸ் மரங்கள் விற்பனையாகின.

1870களில் ஊது கண்ணாடி அலங்கார பொருட்கள் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் அறிமுகமாயின.  அப்போது  பல வண்ணங்களில் சிறு  மின்விளக்குகளும் கிருஸ்துமஸ் மரங்களில் கட்டி தொங்கவிடப்பட்டன.

கிருஸ்துமஸ் மரங்களில் கட்டி தொங்கவிடுவதெற்கென்றே பலவகையான உலோகங்கள்,  பருத்தி, காகிதங்கள் மற்றும் கண்ணாடிகளால்  அலங்காரப் பொருட்கள் செய்யும் பணிமனைகள்  ஜெர்மனியிலும் பொஹிமியாவிலும் ஏராளமாக நடத்தப்பட்டன அமெரிக்காவின் பிரபல பொதுவணிக நிறுவனமான F.W. Woolworth 1890களில் மட்டுமே 25 மில்லியன்  மதிப்பிலான அலங்கார பொருட்களை சந்தைப்படுத்தின.

19 மற்றும் 20 ம் நூற்றாண்டுகளில்  சீனாவிலும் ஜப்பானிலும் மேற்கத்திய மிஷனரிகளால் அறிமுகமான கிருஸ்துமஸ் மரங்களில் சிக்கலான  காகித  வடிவங்கள் தொங்கவிடப்பட்டன

கிறிஸ்துமஸ் மரம் எனப்படும் பசுமை மாறா மரம் பொதுவாக பைன் ஸ்ப்ரூஸ் அல்லது ஃபிர் மரங்களாக இருக்கும்.  இம்மரங்கள் புதிதாக கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு வெட்டபடும் அல்லது  வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும். பலர் செயற்கை மரங்களையும் பயன்படுத்துகின்றனர். பலவிதமான பொருட்களை மறு சுழற்சி செய்தும் இம்மரங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன

இந்த வாரம் 2022 கிறுஸ்துமஸ் கொண்டாட்டத்தை சரண் ஆஃபன்பெர்கின் முதியவர்களுடன் கொண்டாடினான். அந்நகரில் வீழ்ந்த மரங்களின் பட்டைகளிலிருந்து கிறுஸ்துமஸ் மரங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

சுமார் மூன்று கோடியே முப்பது லட்சம் கிறிஸ்மஸ் மரங்கள் வட அமெரிக்காவில் வருடந்தோறும் விற்கப்படுகின்றன. மூன்று லட்சத்து முப்பதாயிரம் மரங்கள் இணையம் வழி விற்கப்படுகின்றன. கிறிஸ்மஸ் மர வளர்ப்பில் ஓரகன், வட கரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன், வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் போன்ற மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக உள்ளன.

அமெரிக்காவில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் கிறிஸ்மஸ் மர வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர். சுமார் பன்னிரண்டாயிரம் இடங்களில் நமக்குத் தேவையான மரத்தைத் தேர்வு செய்து வெட்டிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது

செயற்கை நாரிழைகளை கொண்டு உருவாக்கப்படும் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்களின் பயன்பாடு 1930களில் துவங்கியது 1950 மற்றும் 60களில் ஏராளமான செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக பச்சை மரங்கள் கிடைக்காத நாடுகளில்,இவை வேகமாக புகழ்பெற்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பைன்களின் பல வகைகளான வெள்ளை பைன்  (Pinus strobus),  ஸ்காட்ச் பைன்  (P. sylvestris), மற்றும் விர்ஜினியா பைன் (P. virginiana) ஆகியவைகளும், பால்சம் ஃபிர்  (Abies balsamea), ஃப்ரேசர் ஃபிர்  (A. fraseri), பெரும் ஃபிர்  (A. grandis),வெள்ளி ஃபிர்(A. alba) மற்றும் வெள்ளை ஃபிர் (A. concolor);மரங்களும் பல ஸ்ப்ரூஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் மரங்களாக பயன்படுகின்றன

சைப்ரஸ், செடார் மரங்கள் கிருஸ்துமஸ்  வளையங்கள்  செய்ய அதிகம் பயன்படுகின்றன.

அமெரிக்காவில் அம்ட்டும் 1500க்கும் அதிகமான கிருஸ்துமஸ் மரப்பண்னைகள்3லட்சத்து 5 ஆயிரம் எகர் நிலபப்ரப்பில் உள்ளன அங்கு ஏறக்குறிஅய 350க்மில்லியன் மர்னக்கள் வளர்ககப்டுகின்றன 

செயற்கை மரங்களுக்கான தயாரிப்பில் கொரியா, தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. கிறிஸ்மஸ் மரங்கள்,அவற்றை அலங்கரிப்பதற்காக தயாரிக்கப்படும்  பொருட்களுக்கான வணிகம் உலகின் மிகப்பெரிய வியாபாரத் தளமாகிவிட்டிருக்கிறது

அந்தரத்தாமரை, Pistia stratiotes

 நீர்வாழ்தாவரங்களில், மிதப்பவை,  முற்றிலுமாக நீரில் மூழ்கியிருப்பவை, நீரினாழத்தில் மண்ணில்  வேரூன்றிய, ஆனால் இலைகளும் மலர்களும் நீரின் மேல்மட்டத்தில் இருப்பவை, பாசிகள், என பலவகையான தாவரங்கள் உள்ளன. அவற்றில் நாம் அதிகம் காண்பது ஆகாயத்தாமரை அல்லது வெங்காயத்தாமரை என்னும் water hyacinth (Pontederia crassipes). அதைக்காட்டிலும் இன்னும் சற்று சிறிய அளவில் பச்சைரோஜா மலர்களைப்போல மிதந்தபடி இருக்கும், அந்தரத்தாமரையை அதிகம் யாரும் கவனிப்பதில்லை.. இதுவும் ஆகாயத்தாமரையைபோலவே ஒரு ஆக்ரமிப்பு நீர்க்களைத் தாவரம்தான்

 நீர் முட்டைகோஸென்றும் அழைக்கப்படும் இவை உண்ணத்தக்கவையல்ல. சிறிய மிதக்கும் வேர்கள் கன்ணுக்குப்புலப்படாமல் நீரில் மூழ்கி இருப்பதால் இவற்றை அந்தரத்தில் மிதக்கும் தாமரையென அழைப்பதுண்டு. இவை முதன்முதலில்  ஃப்ளோரிடாவில் ஜான் மற்றும் வில்லியம் ஆகியோரால் 1765-1774 ல்  அடையாளம் காணப்பட்டது. பிரேசிலை தாயகமாகக்கொண்ட ஒருவித்திலை தாவர வகையை சேர்ந்தவையான இவை (Monocot) அண்டார்டிகாவைத் தவிர பிற அனைத்து கண்டங்களிலும்  பரவியுள்ளன.   நைல் நதியிலும் இவை அடர்ந்து காணப்படுகின்றன

ஆங்கிலப்பொதுப்பெயர்கள்; Water Cabbage, Water Lettuce, Nile Cabbage,  Shellflower,  floating Aroid.

 Lettuce  (Lactuca sativa)  எனப்படும் சூரியகாந்தி குடும்பத்தைச்சேர்ந்த கீரைவகைச்செடியின் இலைகளைப்போல  இவற்றின் தோற்றமிருப்பதால் இவற்றின்  Water lettuce என்னும் பொதுப்பெயர் உலகெங்கிலும் பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. இவற்றில் மிகச்சிறிய (Dwarf water lettuce) வகையும் இருக்கின்றன. இவையே அலங்காரச்செடிகளாக  தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. குழித்தாமரை என்றும் இவை அழைக்கப்படுகின்றன.

ஒன்றிலிருந்து பலவாக அந்தரத்தாமரைகள்  மிக விரைவாக பெருகும் இயல்புடையது. இவை தனித்தும், பல தாவரங்கள் இணந்த கூட்டமாகவும் நீரில் மிதந்தபடி இருக்கும், சிறிய நீர்நிலைகளை முழுவதையும் ஆக்ரமிப்பதும் உண்டு

இணையறிவியல் பெயர்கள்; (Synonyms)

  • Pistia stratiotes var. cuneata 
  • Pistia stratiotes var. linguiformis 
  • Pistia stratiotes var. obcordata (Schleid.)
  • Pistia stratiotes var. spathulata (Michx.)

 இதன் Pistia stratiotes, என்னும் அறிவியல் பெயரில் Pistia  என்பது நீர் அல்லது திரவம் எனவும் stratiotes என்பது நீர்வீரன் எனவும் கிரேக்க மொழியில் பொருள்படும். ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீரில் மிதக்கும்  வகையான தாவரமான, இளம் பச்சை ரோஜா மலரைப்போல சற்றேறக்குறைய ரோஜா மலரின் அளவில் அல்லது அதைக்காட்டிலும் சிறிது பெரியதாக, பட்டுப்போன்ற மிருதுவான இதழமைப்பில் இருக்கும் காம்புகளற்ற இலைகளால் ஆன இவை ஏரேசியே (Araceae) குடும்பத்தை சேர்ந்தவை.

 பொதுவாக 3-25 செமீ உயரம் வரை வளரும் ஒற்றைத்தாவரம், 5 லிருந்து 25 செமீ விட்டம் கொண்டிருக்கும். காம்புகளற்ற, அடிகுறுகி நுனி அகன்று விரிந்து, சதைப்பற்றுடனுமிருக்கும். இலைகள் சாம்பல்பச்சை நிறத்தில், தெளிவான இணைக்கோடுகளும் மென்ரோமங்களும் கொண்டிருக்கும் இந்த மென்ரோமங்களுக்கிடையில் சிக்கிக்கொள்ளும் நீர்க்குமிழிகள் இவற்றின் மிதவைத்தன்மையை (Buoyancy) அதிகரிக்கும்.

 Offshoot/stolons எனப்படும் நீரின் மேற்பரப்பில் மிதக்கும் இலைகளை இணைந்திருக்கும் அடித் தண்டுகளிலிருந்து புதிய தாவரங்கள் முளைத்து வளரும். இந்த அடித்தண்டுகள் மிக மெலியதாக உடையும் இயல்புடன் இருக்கும். இறகு போன்ற,  மென்மையான, 50 செமீ நீளமுள்ள கிளைத்த,  நீரில் அசைந்துகொண்டு மிதந்தபடி இருக்கும் வேர்த்தொகுப்பைக் கொண்டிருக்கும்.

இலைகளின் அடியிலிருந்து உண்டாகும், சிறிய சதைப்பற்றான காம்புகளிலிருந்து  ஏராளமான நுண்ணிய மலர்கள் இலையிதழ்களுக்குள், மெல்லிய மங்கலான இளம்பச்சை நிறத்திலிருக்கும் செதில்போன்ற உறையினால் சூழப்பட்டு  மறைந்திருக்கும். ஒற்றைப்பெண்மலர் அடியிலும் அதன்மேலே  வட்டஅடுக்கில் நிறைய ஆண்மலர்களும் காணப்படும். மிகச்சிறிய 6-10 மிமி அளவுள்ள விதைகள் அடர்நிற நுண்விதைகளுடன் உருவாகும்

மிதக்கும் நீர்வாழ் தாவரங்களில் மிக முக்கியமான ஆக்ரமிப்புக்களையாக கருதப்படும் இவை (Invasive aquatic weed) இயற்கையான வாழ்விடங்களில் பல்கிப்பெருகி நீர்மாசை உண்டு பண்ணுகின்றது.  கால்வாய்களை அடைத்து நீரோட்டத்தை துண்டிக்கவும் செய்கின்றன.


உலகளாவிய ஆக்கிரமிப்பு இனங்களின் தரவுத்தளம் (Global Invasive Species Database GISD) இவற்றையும் உலகின் தொல்லைதரும் ஆக்ரமிப்பு களைகளின் பட்டியலில் இணைத்திருக்கின்றது. அமெரிக்காவிலும் இவை பரவுதலை கட்டுப்படுத்த வேண்டிய தாவரங்களின் பட்டியலில்தான் இருக்கிறன.

உயிரிக்கட்டுப்பாட்டு முறையில் சிலநாடுகள் இவற்றின் பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து கொண்டுமிருக்கின்றன. தாய்லாந்தில் அந்தரத்தாமரைகளின் இலையை உண்ணும். Neohydronomous affinis, பூச்சிகளை தென்னமரிக்காவிலிருந்து தருவித்து, இவற்றை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிலும் ஃபிஜி தீவுகளிலும் பரிந்துரைககப்பட்ட ரசாயனக் களைக்கொல்லிகளை உபயோக்கிறார்கள்.

அழுகிரந்தி குஷ்ட மடர்ந்த கரப்பான்

புழுவுறு மக்கூடு முதற்போகும் – அழகாகும்

மிந்திர நீலக்கருங்க ணேந்திழையே யெப்போழ்து

மத்திரத் தாமரையா லாய்.

என்னும் சித்த வைத்திய பதாற்தகுண விளக்கப்பாடலொன்று  இந்த  அந்தரத் தாமரை அழுகின ரணம், குஷ்டம், கரப்பான், மார்புக்குள் கூடு கட்டுகின்ற நுண் கிருமிகள் ஆகிவற்றை அழிக்கும் என்கின்றது. எனவே  இவற்றைக்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் ஆய்வுகளை செய்யலாமென்கிறன சித்தவைத்திய அமைப்புக்கள். இவற்றை உலர்த்தி சுட்ட சாம்பலை தொழுநோய்ப் புண்களுக்கும் மருந்தாக பயன்படுத்துகின்றனர்

இவை சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டிருப்பதால்  இவற்றை அதிகம் உண்ணும் கால்நடைகளுக்கு உடலுபாதைகள் உண்டாகும். சீனாவில் உலர்த்திய அந்தரத்தாமரைகளை கால்நடைத்தீவனங்களில் கலந்து (குறிப்பாக பன்றிகளுக்கு,) கொடுக்கப்படுகின்றது. சீன பாரம்பரிய மருத்துவத்தில் சில குறிப்பிட்ட நோய்களுக்கு இவை மருந்தாகவும் பயன்படுகின்றது. மீன் தொட்டிகளிலும் அலங்காரத்தொட்டிகளிலும் இவை அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.   அந்தரத்தாமரையின் சாற்றை துணிகளில் படிந்திருக்கும் கறைகளைப் போக்கவும் பயன்படுத்தலாம். உலர்ந்த இலைகளை பூச்சிகள் வராமலிருக்க அலமாரிகளில் போட்டுவைக்கலாம்.

.

செளசெள!

Image result for chayote

மனிதகுலம்  ஏறத்தாழ 6000 வகையான பயிரிடப்பட்ட தாவர இனங்களை உணவுத்தேவைக்காக நம்பியுள்ளது, இவற்றில் வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுபவை 170 பயிர்கள் மட்டுமே. இவற்றிலும் 30  பயிர்கள் மட்டுமே அதிக அளவில் மீண்டும் மீண்டும் சாகுபடி செய்யப்பட்டு  பயன்படுத்தப்படுகின்றன   ஒப்பீட்டளவில் சிறிய கவனம் கூட அளிக்கப்படாத பல முக்கிய காய் கனி வகைகளை அளிக்கும்  ஏராளமான பயிர்கள் உலகின் கவனத்துக்கே வராமல் இருக்கின்றன..  

சத்துக்கள் நிறைந்த  இத்தகைய உலகளாவிய அளவில் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதப்படும் பயிர்கள் தேசிய அல்லது பிராந்திய அளவில் பிரதானமானவை. அவற்றில் ஒன்றுதான் செள செள காய்.

Image result for chayote

 பூசணிக்காய் குடும்பமான குக்கர்பிட்டேசியின் சுரைக்காய், புடலை, பீர்க்கன், தர்பூசணி, பாகல் போன்றவை அதிகம் புழக்கத்தில் இருப்பவை. அதே குடும்பத்தில் இருக்கும் செள செள எனப்படும் காய் தென் தமிழகத்தில் அரிதாகவே  உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. 

 ஆங்கிலத்தில் cho cho , choko, mirliton, chayote  என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் Sechium edule.

இதய வடிவ இலைகளும், பற்றுக்கம்பிச்சுருள்களும், வேர்க்கிழங்குகளும் கொண்ட  செள செள  ஒரு ஏறுகொடித்தாவரம். ஆண் மலர்கள் கொத்தாகவும் பெண் மலர் ஒற்றையாகவும் தனித்தனியே ஒரே கொடியில் அமைந்திருக்கும். தண்டுகளில் நார் நிரம்பியிருக்கும்.

See the source image

உணவுக்காக சந்தைப்படுத்தப்படும் செள செள காய்கள் எனப்படுவது இதன் கனிகளே. இவை ஒழுங்கற்ற பேரிக்காய் வடிவில் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். பொதுவாக கனிகளில் முட்கள் காணப்படும். முட்களின்றியும், அடர்பச்சையிலும், வெளுத்த மஞ்சள் நிறத்திலும், அளவில் சிறிதாகவும் கூட காய்கள் இருக்கும்.  நீர் நிரம்பிய, சதைப்பற்றான காய்கள் இனிப்புச்சுவையுடைய பெரிய ஒற்றை விதை கொண்டிருக்கும்.

மெக்ஸிகோவை சேர்ந்த பல்லாண்டுத்தாவரமான இதன் ஒரு கொடி வருடத்திற்கு 80லிருந்து 100 காய்களையும் 25 கிலோ வேர்க்கிழங்குகளையும்  கொடுக்கும். 

 உலகெங்கும் இதன் பல வழங்கு பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. chayote, christophene, vegetable pear, mirliton, merleton choko ( ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில்), starprecianté, citrayota, citrayote (எக்குவடோர்  மற்றும் கொலம்பியா), chuchu (பிரேசில்), machucha, caiota, pipinela (போர்ச்சுக்கல்), chow chow (இந்தியா), cho cho (ஜமைக்கா), Sayote (பிலிப்பைன்ஸ்), güisquil (குவாத்தமாலா), pear squash / iskus(நேபாள்). 

இவை சௌசௌ / பெங்களூர் கத்தரிக்காய் / மேராக்காய் / சீமை கத்தரிக்காய்/சொச்சக்காய்  என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன. Custard marrow என்னும் இதன் ஆங்கிலப்பெயர்களில் ஒன்றுதான் தமிழில் மேராக்காய் ஆகி இருக்கிறது 

Image result for chayote foods

இதன் அறிவியல் பெயரின் பேரினப்பெயரான  ’Sechium’ என்பது  வெள்ளரிக்காயை குறிக்கும் பண்டைய கிரேக்கச் சொல்லான ’síkyos’  என்பதிலிருந்து பெறப்பட்டது. சிற்றினப்பெயரான  ’edule’’  என்பது உண்ணத்தகுந்த என்று பொருள்படும்.

செள செள உற்பத்தியில் மெக்ஸிகோவும் பிரேசிலும் முதலிடத்தில் இருக்கின்றன. இந்த நாடுகளில்  அவகேடோ, தக்காளி மற்றும் காபிக்கொட்டைகளுக்கு அடுத்த படியாக செளசெள அதிகம் விரும்பப்படும் நான்காவது உணவுப்பொருளாக இருக்கிறது.

இது அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும்கொண்ட சுவையான காய்களும்,“Quelites” எனப்படும் இதன் தளிரிலைகளும் “chayotextle” எனப்படும் வேர்க்கிழங்குகளும்  இங்கு விரும்பி உண்ணப்படுகிறது

இதன் இலைகளிலும், வேர்க்கிழங்குகளிலும், காயிலும் ஏராளமான கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்களும் பல வைட்டமின்களும் உள்ளன.

Image result for Chayote Squash Mirlitons

இவை வேகவைத்தும், ஊறுகாய்களாகவும், அவித்தும், எண்ணையில் பொரித்தும் உண்ணப்படுகின்றன. காயின் அனைத்துப்பகுதிகளுமே உண்ணத்தகுந்தவை என்பதால் இதன் மெல்லிய தோலையும் விதையையும் நீக்க வேண்டியதில்லை. செள செளெவின் தோல் மற்றும் விதையையும்  சேர்த்து சமைத்தும், சமைக்காமல் பச்சையாகவும் உண்ணலாம்

இக்கொடியின்  காய் உள்ளிட்ட அனைத்துபாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை

Image result for Chayote Squash white

இவை சிறுநீர் பெருக்கும், சிறுநீரக கற்களுக்கும் வீக்கங்களுக்கும் எதிராக செயல்புரியும், இருதயத்தை பாதுகாக்கும், குருதிக்கொதிப்பை கட்டுப்படுத்தும் மற்றும் உடலை வலுப்படுத்தும்.

செளசெள முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. காய்கள் கொடியில் இருக்கும் பொழுதே அதனுள் இருக்கும் விதை முளைத்துவிடுகிறது. தண்டின் வெட்டுத் துண்டுகளையும் சாகுபடிக்கு பயன்படுத்தலாம்

See the source image

 பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருங்காலத்திற்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் உணவு அடிப்படையிலான அணுகுமுறைகளில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத இனங்களின் (Neglected and underutilized species-NUS)   பரவலான மீள் உபயோகங்கள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன.

See the source image

செள செள்  போன்ற ஊட்டச்சத்து நிறைந்த, அனைத்துக் காலநிலைகளிலும் வளரும் இயல்பு கொண்ட, நோய் எதிர்ப்புதிறன் மிக்க, லாபம்அளிக்கும், உள்நாட்டில் கிடைக்கக்கூடிய  எளிதில் வளர்க்க முடியும் பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதும், அவற்றின் நுண்சத்துக்கள் நிறைந்த காய்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதும் வருங்காலத்துக்கான உணவுசார்ந்த அணுகுமுறைகளில்  மிக முக்கியமானவை. 

Image result for Chayote Fruit

ரிஸ்ட்ரா!

ரிஸ்ட்ரா- Ristra

 மிளகாய்களை  உலகெங்கும் அறிமுகம் செய்த பெருமை கிரிஸ்டோஃபர் கொலம்பஸைத்தான் சேரும். அவரே மெக்ஸிகோவிலிருந்து அவற்றை பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார் என்கிறது வரலாறு.

மிளகாய்களின் பிறப்பிடம் மெக்ஸிகோ என்று சொல்லப்பட்டாலும்.  தாவரவியல் ஆய்வாளர்கள்  மிளகாய்கள் மெக்ஸிகோவிலிருந்து அல்ல பொலிவியாவிலிருந்தே தோன்றின என்றும் அங்கிருந்து அவை  பறவைகளின் மூலம் மெக்சிகோவிற்கு அறிமுகமாகியிருக்கும் என்றும் கருதுகிறார்கள். மிளகாயின் காரம் மனிதர்களைப் போல் பறவைகளுக்கு உரைப்பதில்லை என்பதும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று.

தக்காளி உருளைக்கிழங்கின் குடும்பமான சொலனேசியை சேர்ந்த மிளகாய் ஆங்கிலத்தில் chillies, chiles அல்லது peppers என அழைக்கப்படுகின்றன

 கிரிஸ்டோஃபர்  வருமுன்னரே  பழங்குடிகளான அஸ்டெக்குகள் மற்றும் மாயன்களின்  கலாச்சாரத்துடன் பிரிக்கமுடியாதபடி ஒன்றி இருந்தது மிளகாயும் அதன் காரமும்.

 மிளகாய்கள்  உணவுக்கான உபயோகங்களுக்கு மட்டுமல்லாது அவற்றின் மருத்துவ குணங்களுக்காகவும்,  பூச்சிகள் அண்டாமல் இருக்க வீடுகளுக்கு புகை போடவும்  மெக்ஸிகோவில் பெரிதும் உபயோகத்திலிருந்தன. மெக்ஸிகோவின் டெவாகனா பள்ளத்தாக்கில் (Tehuacán Valley)  மிளகாய்கள் கிமு  50000 வருடங்களுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்தற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

 மெக்ஸிகோவின் உணவுகளில் மிளகாய் பிராதான இடம்பெற்றிருக்கிறது உலர்ந்தவைகளும்  புத்தம் புதியவைகளுமாக பலநூறு மிளகாய் வகைகள் மெக்ஸிகோவில்  விளைந்து,பயன்பாட்டிலும் உள்ளன.  மெக்ஸிகோவின் வறண்ட, வெப்பம் மிகுந்த காலநிலை மிளகாய்களின் வளர்ச்சிக்கு ஏதுவாகவும் அவற்றின் பூச்சித்தாக்குதலுக்கு எதிராகவும் இருப்பதால் அங்கே மிளகாய்கள் அதிகம் விளைகின்றன

மெக்ஸிகோவில் மிளகாய்கள் அனைத்துவிதமான   உணவுகளிலும் சேர்க்கப்படும் சாக்கலேட்டுகளிலும், பானங்களிலும், இனிப்புகளிலும் மட்டுமல்லாது ஊறுகாய்களாகவும், பசையாகவும் பொடிகளாகவும் இவை கிடைக்கின்றன

 மெக்ஸிகொ பழங்குடிகள் மிளகாய்கள் உலர்ந்திருக்கையில் அவற்றை  சேமித்து வைக்கவும்  தொலைதூரங்ககளுக்கு எடுத்துச் செல்லவும் வசதியாக இருப்பதை கண்டறிந்திருந்தார்கள் அவ்வாறு உலர்ந்த மிளகாய்களை கட்டு கட்டாக சேமித்து வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அவ்வழக்கம் அவர்களின்  வளமையின் குறியீடாகவே காலப்போக்கில் மாறிப்போனது. 

இன்றளவிலும் மெக்ஸிகோ நகரின் பொது இடங்களில். அலங்கார வளைவுகளில்,  வணிக வளாகங்களில், வீடுகளின் முகப்புகளில் என்று பார்வையில் படும்படி உலர்மிளகாய்களின்  நீண்ட கொத்துக்களை கயிற்றில் அல்லது நாரில்  கட்டி அலங்காரமாக தொங்கவிடும் பழக்கம் தொடர்கிறது.

   

இதுபோன்று அலங்காரமாக தொங்கவிடப்பட்டிருக்கும் மிளகாய் கொத்துக்கள் ஆங்கிலத்தில் Ristras எனப்படுகின்றன. இவை வரவேற்புக்காகவும், வளமை மற்றும் செல்வத்தின் அறிகுறியாகவும் அதிர்ஷ்டம் தரும் என்னும் நம்பிக்கையின் பேரிலும் இப்படி பார்வைக்கு வைக்கப்படுகிறது. இவ்வாறு ரிஸ்ட்ராக்களாக்கப்பட்ட மிளகாய்கள் தீய  சக்திகளை விரட்டும் என்றும் அடுத்த வருட  விளைச்சலை பெருக்கும் எனவும் மெக்சிகோ மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது

 ரிஸ்ட்ரா என்றால் ஸ்பானிய மொழியில் ’ கோர்த்த மணி’ என்று பொருள்   தென்மேற்கு அமெரிக்காவின் அடையாளங்களாக  கருதப்படும்’ சகுரா கள்ளி, கெளபாய்  பூட்ஸ்’ இவற்றுடன் மிளகாய் ரிஸ்ட்ராக்களும் இருக்கின்றன.

 தரமான தேர்ந்தெடுத்த  மிளகாய்களை நன்கு வெயிலில் உலர வைத்து கயிறுகளில் இறுக்கமாக மாலை தொடுப்பதுபோல் கட்டி பல வடிவங்களில் வட்டமாகவும், நீளமாகவும், தனித்தனி கொத்துக்களாகவும்,  பலகொத்துக்களை ஒன்றிணைத்தும் ரிஸ்ட்ராக்கள் உருவாக்கப்படும். இவற்றை பல வருடங்களுக்கு  சேமித்து வைக்க முடியும்.

பல வீடுகளில் இவ்வாறு உலர செய்து ரிஸ்ட்ராக்களாக இருக்கும் மிளகாய்களை தேவைப்படும்போது  சமையலுக்கும் பயன்படுத்துவதுண்டு.

  உலகின் பல பகுதிகளிலும் இப்படி ரிஸ்ட்ராக்கள்  காய்,கனிகளை கொண்டு  உருவாக்கப்படுகின்றன. பூண்டு ரிஷ்ட்ராக்கள் தென்னிந்தியா உள்ளிட்ட  பல நாடுகளிலும் உள்ளன.  ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் முற்றிய மக்காச்சோளக்திர்களிலும், இலங்கையில் நிலக்கடலை மற்றும் பூண்டிலும் இந்தியாவில் கேரளாவில் முற்றிய நெற்கதிரிலும்  தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் நெற்றுத்தேங்காய்களிலும் ரிஸ்ட்ராக்கள் உருவாக்கப்படுகின்றன.

மெக்சிகோவிற்கு இனி செல்பவர்கள் மிளகாய் ரிஸ்ட்ராக்களை அவசியம் கவனித்து பார்க்கலாம்,

நாமனைவருமே  அந்தந்த பிரதேசத்தின் பிரபல காய்கறிகளை  உலர செய்து ரிஸ்ட்ராக்களை உருவாக்கலாம். இணைய வர்த்தகத்திலும் ரிஸ்ட்ராக்கள் விற்பனையாகின்றன.

ஆலை இல்லா ஊரில்!

’’ஆலை இல்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை’’ என்னும் முதுமொழியை இலுப்பை மரத்தின் இனிப்புச் சுவை கொண்ட மலர்களால் தான் புழக்கத்தில் வந்த்து ,

 இலுப்பை மரம், இருப்பை,  குலிகம் என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது. சப்போட்டேசி  குடும்பத்தை சேர்ந்த இம்மரத்தின் ஆங்கில பொதுப்பெயர்; Butter  tree, mahwa,, தாவர அறிவியல் பெயர்; Madhuca longifolia, இணைப்பெயர்கள்;.Bassia longifolia, Madhuca indica

இதன் தாயகம்; இந்தியா( தமிழகம்). இம்மரங்களின் மலரும்  காலம் – மார்ச்- ஏப்ரல்

இந்தியா முழுவதும் இலையுதிர் காடுகளில் பரவலாக காணப்படும், இம்மரங்கள் ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், வட மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளிலும், மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் காணப்படுகிறது.

மிக உயராமாக நூறு அடிக்கு மேல் வளரும் இலுப்பைமரம் கோடை காலத்தில் இலைகளை உதிர்த்து விடும். அச்சமயத்தில் சாறு நிரம்பிய அழகிய  வெண்ணிற மலர்கள் அதிக இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

இரும்பை மகாளேஸ்வரர் கோயில், இலுப்பைப்பட்டு நீலகண்டேஸ்வரர் கோயில், திருச்செங்கோட்டில் உள்ள திருக்கொடிமாட செங்குன்றூர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல்வேறு கோயில்களின் புனித மரமாக இலுப்பை மரம் உள்ளது. வள்ளுவர் மயிலாப்பூரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் பிறந்தார் என்று நம்பப்படுகிறது, எனவே ஏகாம்பரேஸ்வரர் கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் சன்னதியின் கருவறை மரமாகவும் இந்த இலுப்பை மரமே உள்ளது.

மஹுவா மரத்தின் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக, பிரிட்டிஷ் இந்தியாவின்  வன நிர்வாகிகள்  அதை வெட்டுவதற்கு தடை விதிதிருந்தார்கள். ஆது இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. இதன் விளைவாக, மஹுவா மரங்கள்  இந்திய வயல்களிலும் காடுகளிலும் மிக அதிக அளவில் இருக்கின்றன.  இந்திய வன மரங்களில் இவை மிகப் பழமையானவை மற்றும் மிகவும் பொதுவானவையும் கூட.

இவை குட்டையான அடித்தண்டை கொண்டிருக்கும். சொற சொறப்பான இலைகள் நீள் முட்டை வடிவில் கூர் நுனியுடன் இருக்கும். மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில்,  இந்த ​​மஹுவா மரம்  என்றூம் அழைக்கப்படும்  இலுப்பை சிறிய உருண்டையான . பச்சை-வெள்ளையில் மலர்களை உருவாக்கும். சிறிய அழகிய மணிகளை போல  நறுமணம் கொண்ட மலர்கள் கொத்துக்கொத்தாக  மலரும். முட்டை வடிவ சதைப்பற்றான கனிகள் 1 லிருந்து 4  தட்டையான எண்ணெய் நிரம்பிய பழுப்பு விதைகளை கொண்டிருக்கும்

விதைகளிலிருந்து எடுக்கப்படும் மருத்துவ உபயோகங்கள் கொண்ட .இலுப்பை எண்ணெய் அடுப்பு மற்றும் விளக்குகள் எரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது..இலுப்பை புண்ணாக்கு நல்ல உரமாகவும் பயனாகிறது. “மஹுவா எண்ணெய் தோல் நோய், வாத நோய் மற்றும் தலைவலி ஆகியவற்றின் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.   இலுப்பை எண்ணெய் பசு நெய்யில் கலப்படம் செய்யப்படுகிறது.  

டஸ்ஸர் பட்டை (tassar silk), உருவாக்கும் அந்துப்பூச்சிகளுக்கு (Antheraea paphia)  இலுப்பை இலைகள் தான் உணவாகின்றன இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் கால்நடை தீவனமாகவும் பயனாகின்றன  

மஞ்சள் நிற கனிகளும் உண்ணத்தவையே. .கனிகள்  சமையலிலும் உபயோகப்படுத்தப்ப்டும்.

மஹுவா இந்தியப் பழங்குடியினரிடையே புனிதமான மரமாக கருதப்படுகிறது. இது ‘வாழ்க்கை மரம்’ என்று அழைக்கப்படுகிறது. மலர்கள் மட்டும் அல்ல, மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுகிறது. பழத்தின் ஓடு கூட  சில பழங்குடி இனங்களில் இறுதிச் சடங்குகளின் போது பயன்படுத்தப்படுகிறது.

இனிப்புசாறு நிறைந்திருக்கும் இம்மலர்களுடன் வங்காளத்தில் மட்டும் விளையும் gobindo bhog  என்னும் அரிசிச்சோற்றை கலந்து சுவையான பாயசம்  பண்டிகைக்காலங்களில் செய்யப்படும்.

mahua butter

மலர்ச்சாற்றை பிற மூலிகைகளுடன் நொதிக்க வைத்து உண்டாக்கப்படும்  மஹுவா மது   பல  ஆந்திர மற்றும் தமிழக கிராமங்களில் புழக்கத்தில் உள்ளது .3 அல்லது 4 மணி நேரத்தில்  மஹுவா மலர் மது  கிரமவாசிகளாலும் பழங்குடியினரலும் எளிதாக  உருவாக்கப்படுகிறது.

India’s Adivasi Alcohol, Mahua, is Set to Hit Liquor Stores in Goa Next Week

மஹுவா மலர்கள் பழங்குடியினரால் பறிக்கப்படுவதில்லை இரவில் மரங்களுக்கடியில்   விரிக்கப்பட்டிருக்கும் துணிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் கூடைகளிலும் உதிரும் மலர்களை அதிகாலையில் சேகரித்துக்கொள்வார்கள்

கல்கத்தாவில் மஹுவா மலர்கள் அடைக்கப்பட்ட பூரிகளும் மஹுவா  மலர்களை உலர்த்திப்பொடித்த மாவில் செய்யப்படும் இனிப்புக்களும் பிரசித்தம். சில கிராமங்களில் மலர்களிலிருந்து ஜாமும் ஊறூகாயும் தயரிக்கப்படுகின்றன.

மருத்துவ ரீதியாகவும் இம்மரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. தொழுநோயைக் குணப்படுத்தவும், காயங்களைக் குணப்படுத்தவும் மரப்பட்டை பயன்படுகிறது, இருமல், பித்தம் மற்றும் இதயக் கோளாறுகளைப் போக்கமலர்கள்  உபயோகிக்கப்படுகின்றன.

உலர் மஹுவா மலர்கள் அமேஸான் உள்ளிட அனைத்து ஆன்லைன் வர்த்தகத்திலும் கிடைக்கின்றது.

கொண்டைக்கடலை

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மிக முக்கிய புரத உணவாக இருப்பது கொண்டைக்கடலை எனப்படும் chick pea . பட்டாணிக்குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த  இதன் அறிவியல் பெயர் Cicer arietinum. சென்னா, கடலை, கொண்டைக்கடலை, சுண்டல் கடலை என்று தமிழில் அழைக்கப்படும் இதன் பிறமொழிப் பெயர்கள்   chole, gram,  Bengal gram, garbanzo, garbanzo bean , Egyptian pea, ceci, cece & channa.Kichererbsen

உலகின் மிகப்பழமையான பயறு வகை தாவரங்களிலொன்றான கொண்டைக்கடலையின் 7500 வருட பழமையான தொல்எச்சங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைத்திருக்கின்றன. 10000 வருடங்களுக்கு முன்பிருந்தே கொண்டைக்கடலை தாவரம் துருக்கியில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கு ஆசியா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இவை பயிராகிக்கொண்டிருக்கின்றன. மொத்த உலக உற்பத்தியில் 70 சதவிதத்தை அளிக்கும் இந்தியாவே கொண்டைக்கடலையின்  உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது.

 உலகின் மூன்றாவது முக்கிய பயறு வகையான இவற்றில் அளவில் சிறிய அடர் நிறம் கொண்டவை நாட்டு ரகங்கள் (Cicer arietinum desi varity). முதிராக்காய்களின் கடலைகள் அதிக சத்துக்களுடன் சிறியதாக பச்சை நிறத்திலும் கிடைக்கின்றன.

அளவில் பெரிய நாட்டு வகைகளைக்காட்டிலும் சற்று மென்மையான, வெளுத்த  ஆஃப்கானிஸ்தானிலிருந்து வந்தவகை காபூலி வகை எனப்படும்.Cicer kabulium -( kabuli variety)

பல்லாண்டுகளாக இவை இரண்டுமட்டுமே புழக்கத்தில் இருந்தன . தற்போது தெற்கு இத்தாலியில் மட்டும் விளைவிக்கப்படும் Ceci neri என்னும் அறிவியல் பெயருடைய கருப்பு கொண்டைக்கடலைகளும் சந்தையில் உள்ளன.

Ceci neri

இவற்றை வேகவைத்தும், வறுத்தும்,  கடலைமாவாக பொடித்தும்  தாயாரிக்கப்படும்  கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த  பல வகை உணவுகள் உலகெங்கும்   மக்களின் விருப்ப உணவுகளாக இருக்கின்றன..

இவற்றை தோல் நீக்கி  உலரவைத்து இரண்டாக உடைத்ததுதான் கடலைப்பருப்பு. வறுத்து உடைத்தவையே வறுகடலை அல்லது பொட்டுக்கடலை

வறுத்து அரைக்கப்படும் கொண்டைக்கடலை  காபியாகவும் அருந்தப்படுகிறது முதல் உலகப்போரின் போது உண்டான காபி தட்டுப்பாட்டினால் இவை காபிக்கொட்டையை போலவே வறுத்தரைக்கப்பட்டு காபி தயாரிக்கப்பட்டது. இந்த பானம் இன்றும் உலகின் பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது.

அனைத்து விதமான மண் வகைகளிலும் வளரும் இவை வறட்சியையும் தாங்கும் திறன் கொண்டவை. 20 லிருந்து 60 செமீ உயரம் வரை வளரும் இவை இறகுக்கூட்டிலைகளையும் வெள்ளை அல்லது சிவப்பு சிறு  மலர்களையும் கொண்டிருக்கும். சிறு படகு போன்ற பச்சைக்காய்களில்  ஒன்று அல்லது மூன்று விதைகள் எனப்படும் சிறு அலகு போன்ற நீட்சியை உடைய கொண்டைக்கடலைகள் காணப்படும். தாவரம் முழுக்க மென்மையான ரோமம் போன்ற வளரிகள் காணப்படும் .இப்பயிர் சுமார் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். வளிமண்டல நைட்ரஜனை நிலத்தில் நிறுத்தி நிலவளத்தையும் இவை பாதுகாக்கின்றன.

கொண்டைக்கடலையில்  இரும்பு மற்றும் செம்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் இக்கடலையில் மாங்கனீஸ், தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன.  கொண்டைக்கடலையில்  குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் மிக அதிக அளவில் நார்ச்சத்துக்களும், புரதமும் இருக்கின்றது.

 கொண்டைக்கடலையின் இளம் காய்களும், இலைகளும் பச்சையாக உண்ணப்படுகின்றன புரதச்சத்துக்காக இவை கால்நடைகளுக்கும் தீவனமாக அளிக்கப்படுகின்றன

hummus

தென்னிந்தியாவில் கடலைமாவில் செய்யப்படும் பஜ்ஜி, மைசூர்பாக்கை போலவே உலகளவில் வேகவைத்து மசித்த கொண்டைக்கடலையுடன்  ஆலிவ் எண்ணெயும், எலுமிச்சைச்சாறும்,அரைத்த எள்ளும் கலந்து செய்யப்படும் Hummus  வெகு பிரபலம்.

குறைந்தது எட்டு மணி நேரம் ஊறவைத்து மிருதுவாக்கப்பட்ட கொண்டைக்கடலையை வேகவைக்கையில் அதிலிருக்கும் ஒவ்வாமையை அளிக்கும் சில பொருட்கள் நீங்கிவிடுகின்றன.  இவை 2 லிருந்து 3 நாட்கள் வரை ஊறவைத்து ,முளைவிட்டதும் உணவில் சேர்க்கப்படுகையில் கூடுதலான சத்துக்கள் கிடைக்கின்றன. ஒருபோதும் கொண்டைக்கடலையை ஊற வைத்த, வேகவைத்த நீரை உணவில் சேர்க்கக்கூடாது. அந்த நீரில் கொண்டைக்கடலையின் ஒவ்வாமையை உருவாக்கும் (antinutritinal substances) கரைந்திருக்கும்.  வேகவைப்பதால் கொண்டைக்கடலையின் சத்துக்கள் அதிகமாகின்றன. இந்தியாவின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த  நவராத்திரி விழாக்களின் கொலு பூஜைகளின் போது கொண்டைக்கடலை பிரசாதம்  கட்டாயம் இருக்கும்.

மேலதிகமாக இவற்றைக்குறிது அறிந்து கொள்ள;https://toriavey.com/the-history-science-and-uses-of-chickpeas/

புல்லரிசிப் பூஞ்சை!

சாலெம் என்னும் அந்த சிறு அமெரிக்க கிராமத்தில் திடீரென சூனியங்களினால் உண்டாகும் உடல்நலக் கோளாறுகள் தோன்ற ஆரம்பித்திருப்பதாக அனைவரும் நம்பினர். பல விசித்திரமான நோய் அறிகுறிகள் பலருக்கு உருவாகிக்கொண்டிருந்தது. பலர் உயிரிழந்தார்கள், பலர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

1692-ன் ஒரு துரதிர்ஷ்டவசமான நாளில் இளம் சிறுமிகளான பெட்டியும், அபிகாயிலும் வலிப்பு, உடல் நடுக்கம், தனக்குத்தானே பேசிக்கொள்வது, திடீரென உச்ச ஸ்தாயியில் அலறுவது என பல அசாதாரணமான இயல்புகளுடன் பித்துப் பிடித்தவர்களைப்போல் நடந்துகொண்ட போது ஊர்மக்கள் அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்து  விட்டதாக நம்பினர். கிராமத்து மருத்துவர் வில்லியமும் அதையே உறுதி செய்தார். 1

அச்சிறுமிகளின் சிறுநீரில் வேகவைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட கேக்கை அவர்களே சாப்பிட்டால் அவர்களுக்கு சூனியம் வைத்தவர்களை அடையாளம் காட்டுவார்கள் என ஒரு கருத்து எழுந்த போது அதுவும் நடந்தது. அந்த கேக்கை உண்டபின்னர் பெட்டியும் அபிகாயிலும்  தங்களை சூனியக்காரிகளாக்கிய மூன்று பெண்களை அடையாளம் காட்டினர்.  அம்மூவரும்  உடனடியாக தூக்கிலிடப்பட்டனர். தொடர்ந்து அச்சிறுமிகளுக்கு இருந்ததைப்போலவே அறிகுறிகுறிகள்  வேறு சிலருக்கும் தெரியவந்தபோது, கிராமத்தில் இருக்கும் பிற சூனியக்காரர்களையும் தேடும் வேட்டையில் கிராமத்தினர் முழுமூச்சாக இறங்கினர். அத்தகைய அறிகுறிகள் கொண்டிருந்த  பலர் தாங்கள் சூனியக்காரர்கள் என்று அவர்களே முன்வந்து ஒத்துக்கொண்டார்கள்.

1693- மே மாதத்திற்குள் சூனியக்காரர்கள் என்று நம்பப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் எரித்தும், தூக்கிலிடப்பட்டும், கற்களால் அடித்தும் கொல்லப்பட்டனர். 

அந்தோணியின் நெருப்பு நோய்

இதே போன்ற நோய் அறிகுறிகள் பிரான்ஸில் 11- ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே இருந்தது. நோய்வாய்ப்பட்டவர்கள் எகிப்திய துறவியான  அந்தோணியின் (St. Anthony 251 – 356 CE) தேவாலயத்தில்  குணமாக்கப்பட்டதாலும்,  நோய் அறிகுறிகளில் உடல் எரிச்சலும் இருந்ததால் அந்த குறிப்பிட்ட நோய் ’துறவி அந்தோனியின் நெருப்பு’ அல்லது புனித நெருப்பு என அழைக்கப்பட்டது (St. Anthony’s fire.(SAF),  ignis sacer or, “holy fire”) 2

செல்வந்தர்களின் குடும்பத்தில் பிறந்து தனது 25- வது வயதில் துறவியான அந்தோணி, நைல் நதிக்கரையோரம் பல்லாண்டுகள் தனிமைத்தவத்தில் இருந்து கடவுளை தரிசித்து அற்புத சக்திகள் பெற்றவராக அறியப்பட்டவர். அவருக்கென ஒரு தேவாலயம் 1100- ல் பிரான்ஸில் உருவாக்கப்பட்டது. இந்த தேவாலயத்துடன் இணைந்து செயல்பட்ட மருத்துவமனையில்  வழிபட்டால்   எரிச்சல் நோய் குணமாகும் என்னும் நம்பிக்கை அதிகமாகி அந்நோய் கொண்டவர்கள் அங்கே ஆயிரக்கணக்கில் வரத் தொடங்கினர். அவர்களுக்கு சத்தான உணவும் மருந்துகளும் அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த துறவிகள்  நீலச்சிலுவைச் சித்திரம் கொண்ட கருப்பு அங்கி அணிந்திருந்தனர். பலர் குணமாகினர். பலர் உயிரிழந்தனர். பலர் உடலுறுப்புக்களை இழந்தாலும் பிழைத்துக்கொண்டனர்.

 சூனியக்காரர்கள் சூனியம் வைப்பதும், அதனால் உயிரிழப்பவர்களும், கொல்லப்படுபவர்களுமாக இந்நோய் குறித்த மூட நம்பிக்கைகள் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது. 994 ல் பிரான்ஸில் மட்டுமே சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய் அறிகுறிகளுடன் இறந்துபோனார்கள். பிரெஞ்ச் வரலாற்றாய்வாளரான ஃபிராகோய்ஸ் இதை ‘க’’ண்ணுக்கு தெரியாத நெருப்பினால் உருவான பிளேக்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.( François Eudes de Mézeray)  

கத்தோலிக்க தேவாலயங்கள் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி இருந்த காலத்தில் இந்த நோய்க்கான காரணம் அறிவியல் பூர்வமாக ஆராயப்படாமல் பாவிகள்  நரகத்துக்குச் செல்லும் வழியாக  மட்டுமே கருதப்பட்டு மதம் சார்ந்த சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டன, 15 ம் நூற்றாண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவில் மட்டும் சுமார் 400 தேவாலயங்களுடன் இணைந்த மருத்துவமனைகள் இந்த நோய்க்கென்றே உருவாகி இருந்தன.

 பன்றிக் கொழுப்பில் கலக்கப்பட்ட மூலிகை எண்ணெய் உடலின் மீது தடவப்பட்டும், பல தாவரச்சாறுகள் கலக்கப்பட்ட திராட்சைமது புகட்டப்பட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 14-லிருந்து 17- ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஆப்பிரிக்காவிலும் பிளேக் நடனம் என்ற இந்த வினோதமான நோய் பல்லாயிரக்கணக்கானவர்களை பாதித்தது.

பலர் எலும்புகள் முறிந்து உடையும் வரை, களைத்து இறக்கும் வரை அல்லது பலரால் தடுத்து நிறுத்தப்படும் வரையிலும் நாட்கணக்காக அலறலும் கண்ணீருமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்

பலருக்கு தோலில் சிவப்புப் படை, மயக்கம், பித்து  பார்வையிழப்பு, மற்றும் வலிப்பு ஆகியவை  உண்டானது. 15 மற்றும் 16-ம் நூற்றாண்டுகளில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஃபிளாண்டர்ஸ் முழுவதும் இந்நோய் பரவியது. குறைவான நோய் அறிகுறி கொண்டவர்கள் தெருக்களில் போதையுடன் நடனமிட்டுக்கொண்டிருந்ததால் இந்த அந்தோணியின் நடன நோய், நடனபிளேக் என்றும் அழைக்கப்பட்டது.3. அப்போதுதான்  சாலெம் கிராமத்தைப்போன்ற பல இடங்களில் இது சூனியம் என்று நம்பப்பட்டு பலநூறுபேர் உயிரழந்தனர்.

புல்லரிசியும் பூஞ்சையும்–  நெடிய வரலாறு

கி மு 400 – 300- ல் எழுதப்பட்ட பார்ஸி இனமக்களின் புனித நூலில்  கர்ப்பிணிப் பெண்களின் கருகுழந்தைகளை கொன்று கர்ப்ப்பபைகளையும் அழிக்கும் புற்களைப் பற்றி குறிப்பிடப் பட்டிருந்தது

கிமு 1100-  ல் சீன மருத்துவ ஏடு ஒன்று  மகப்பேறு சிகிச்சையில் ஒரு பூஞ்சைவிதை உபயோகிக்கப் பட்டதை குறிப்பிட்டிருந்தது . கிமு 600- த்தைச் சேர்ந்த அசிரியர்களின் களிமண் படிவமொன்றிலும்  பூஞ்சைக் கொப்புளமொன்றின் மருத்துவ உபயோகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

கிபி 857- ல் தொகுக்கப்பட்ட  Annales Xantenses என்னும்  பண்டைய ஃபிரான்ஸின்  வரலாற்றுத் தொடர் ஆவணங்களில் கெட்டுப்போன ரொட்டியை உண்ட மக்களுக்கு கைகால்கள் இற்று விழும் கொடிய நோயும், உடலெங்கும் எரிச்சல் தரும் கொப்புளங்களும் உண்டானது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜெர்மனியின் ரைன் பள்ளத்தாக்கு பகுதிகளில் கிபி 857-ல்  இந்த நோய் பரவியது வரலாய்வாளர்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  

கிருஸ்துவம் பரவத்துவங்கிய போது மேற்கு ஐரோப்பாவில் பரவிய    ஒரு புல்லரிசி பூஞ்சை நோய்பற்றிய குறிப்புக்களும்  பிற்பாடு கண்டறியபட்டன.

நீளமான. சிக்கலான. ஆச்சர்யமூட்டும் இந்த நோயின் வரலாறு  புல்லரிசியின் வரலாற்றுடன் இணைந்திருக்கிறது. ஏழைகளின் தானியம் என அப்போது கருதப்பட்ட   புல்லரிசி ஐரோப்பாவெங்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் ஹாலந்திலிருந்து ஜெர்மனி வழியாக செக்கோஸ்லோவாக்கியா மற்றும் அஸ்திரியா வரை சாகுபடியானது.

 பின்னர் அங்கிருந்து போலந்து மற்றும் ரஷ்யாவிற்கும் புல்லரிசி சகுபடி பரவியது. மாற்றாக இங்கிலாந்தில் வெறும் 50 ஆயிரம் ஏக்கர்களில் மட்டும் புல்லரிசி சாகுபடியானது. அவற்றிலும் 20 ஆயிரம் ஏக்கர்களில் புல்லரிசிப்பயிர் அப்படியே உழுது பசுந்தாள் உரமாக்கப்பட்டது. புல்லரிசி பயன்பாடு குறைவாக இருந்ததால் அந்தோணி நோய் தாக்குதலும் அதனாலான உயிரிழப்புகளும் இங்கிலாந்தில் ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாகவே இருந்தது.

1930-ல் வெளியான ஒரு அறிவியல் கட்டுரை இந்த விகிதத்தை  போலந்தில் 4:1 என்றால் இங்கிலாந்தில் 100:1 என்று குறிப்பிட்டிருந்தது மேலும்  இங்கிலாந்தை காட்டிலும் ஐரோப்பாவின் காலநிலை புல்லரிசிக்கும் அதில் வளர்ந்த பூஞ்சைக்கும் ஏதுவானதாக இருந்தது.

ஜெர்மெனியில் புல்லரிசி கதிர்மணிகளுக்குள் இருக்கும் கருப்பு நிறத்திலிருந்த,     புல்லரிசி தானியமணிகளை காட்டிலும் சற்றே பெரிய ஸ்க்ளிரோஷியாக்கள் அன்னை தானியம் என்னும் பொருள்படும் Mutterkorn, (‘mother grain’)என  அப்போது அழைக்கப்பட்டன. அந்த விதைகள் பிரசவத்தை எளிதாக்கியதால் அவை அன்னைத் தெய்வமாகவும் கருதப்பட்டன.

16-ம் நூற்றாண்டின் இறுதியில் புல்லரிசிக்கு மாற்றாக கோதுமைப் பயிர் சாகுபடி துவங்கியபோது இந்நோய் வெகுவாக குறைந்தது. எனினும் கைவிடப்பட்ட கோதுமை வயல்களில் களைப்பயிராக வளரும் புல்லரிசி செழித்து வளர்ந்தபோது அவை அறுவடை செய்யப்பட்டு,மலிவாக கிடைத்ததால் கிராமப்புறங்களில் புல்லரிசி ரொட்டியே பிரதான உணவாக இருந்தது

புல்லரிசியான ரை (rye) அப்போது ஏழைகளின் உணவாக இருந்தது. கருப்புப் பூஞ்சை நோயினால் தாக்கப்பட்டுத் தரமற்றவையாக இருந்த கோதுமைகளும் ஏழைகளுக்கு விலை மலிவாக கிடைத்தது. அத்தகைய கருப்புத் துகள்கள் கலந்திருந்த கோதுமையிலும் புல்லரிசிலும் செய்யப்பட்ட ரொட்டிகளை உணவாக எடுத்துக்கொண்டவர்களுக்கு விநோதமான் நோய் அறிகுறிகளும் போதையுணர்வும் ஏற்பட்டன.

பூஞ்சை விதைகலந்த ரொட்டியை உணவாக எடுத்துக்கொள்ளும் வரை நன்றாக இருந்து உணவுக்குபின்னர் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்ளும் கிராமப்புறத்தினரைக்குறித்து வேடிக்கையான நாடகங்கள் பல பகுதிகளில் நடந்தன.

1582- ல் ஆடம் (Adam Lonitzer)  முதன் முதலாக  அவரது மூலிகை நூலான  Kräuterbuch- ல்  புல்லரிசிக்கதிர்களில் தானியங்களுடன் கலந்து‘ இருக்கும் நீளமான, கருப்பான, கடினமான, நெடி அடிக்கும்  விதைபோன்ற பொருள் உள்ளே வெள்ளையாகவும் அதிலிருந்து முளைத்திருக்கும் ஆணிகளைப் போன்றவற்றையும் கொண்டிருக்கிறது. இவ்விதைகளில் சிறியவற்றை மூன்றை கொடுத்தால் பிரசவ வலி விரைவாக உருவாகி மகப்பேறு எளிதில் நடக்கும் என குறிப்பிட்டிருந்தார்

1596- ல் மற்றொரு ஜெர்மானிய மருத்துவர் வெண்டெலியன் தீலியஸ் (W. Thelius) இந்த அந்தோணி எரிச்சல் நோய்க்கு   புல்லரிசியை தாக்கும் அதே பூஞ்சை காரணமாக இருக்கலாம் என கருதினார். கருப்பு விதை எனப்படுவது பூஞ்சையின் ஸ்போர்கள் அடங்கிய ஸ்கிளோரிஷியம் என்றுமவர் யூகித்தார். ஆனால் இக்கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்படவில்லை  ஐரோப்பாவின் குளிர்ப்பிரதேசங்களிலும், புல்லரிசி பயிராகும் பகுதிகளிலும் அந்தோணி எரிச்சல் நோய் பரவலாக இருந்தது. புல்லரிசி சாகுபடியே இல்லாத இங்கிலாந்தில் இந்நோய் அரிதாகவே காணப்பட்டது. தீலியஸே  அந்நோய் தானியங்களினால் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள்  குறித்து முதன்முதலில்  எழுதியவர். 

இப்பூஞ்சையின் முதல் சித்திரம் தாவரவியலாளர் பாஹினால் (Gaspard Bauhin)1658 – ல் அவரது  Theatrum Botanicum  என்னும் நூலில் வெளியானது.

1670-ல் பிரெஞ்ச் மருத்துவர்  தூய்லியர்(.Thuillier) புல்லரிசியையும் பூஞ்சைத்தொற்றுக் கொண்டிருக்கும் கோதுமைகளையும் உண்ணும் கிராமத்திருக்கு வரும் அந்த நோய் தரமான கோதுமைகளை உண்ணும் நகரத்தாருக்கு வருவதில்லை என்பதை கண்டறிந்து  தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி   பூஞ்சைக்காளானால் பாதிக்கப்பட்ட புல்லரிசி ரொட்டியை உண்பதால் இந்த அறிகுறிகள் வருகிறதென்று கண்டறிந்தார் ஆனால் கிராம மக்கள் ரொட்டியில் இருக்கும் சிறு கருப்புத் தூசி நோயை உருவாக்கும் என்பதை முற்றிலுமாக நிராகரித்தார்கள்

1676- ல் டெனிஸ் (Denis Dodart) என்பவர்   French Royal Academy of Sciences- க்கு  பூஞ்சைநோய் தாக்கிய தானியங்களிலிருந்து உருவாகும் கொடிய நோயைக் குறித்து கடிதம் எழுதியிருந்தார் . அதற்கு அடுத்த வருடம் இவரே எர்காட் என்னும் சொல்லையும் முதன் முதலில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டார். எனினும் எர்காடிசம் என்று இந்த நோய்த்தாக்குதல் குறிப்பிடப்பட்டது 1853-ல் தான்

எர்காட் எனும் சொல் பண்டைய பிரெஞ்ச் சொல்லான argot  என்னும் கோழிக்கால் பிசிறினைக்குறிக்கும் சொல்லிலிருந்து,  அதே போலிருக்கும் ஸ்கிளிரோஷியத்தை குறிக்கப் பயன்பட்டது. 

 நுண்ணோக்கி கண்டறியபட்டு நுண்ணுயிரியல் என்னும் அறிவியல் துறையின் பொற்காலமென்று கருதப்பட்ட 17 மற்றும் 18 ம் நூற்றாண்டில் இந்நோய் குறித்து பல ஆய்வுகள் முனைப்புடன் நடந்தன.

1791-ல் மருத்துவரும், இயற்கையாளரும், கவிஞருமாகிய எராஸ்மஸ் டார்வின் தனது  நீள் கவிதையான The Botanic Garden ல் இந்த எர்காட் பூஞ்சையை கருப்பு விஷம் என்று குறிப்பிட்டிருந்தார்.

Shield the young harvest from devouring blight,

The smut’s dark poison and the mildew white,

Deep-rooted mould and ergot’s horn uncouth,

And break the canker’s desolating tooth. – Part I Canto IV (lines 511–4)

கவிதையின் அடிக்குறிப்பாக ஃபிரான்ஸில் அதிகமும் இங்கிலாந்தில் அரிதாகவும் காணப்படும்  புல்லரிசி நோய்க்கு காரணமானது அதன் கருப்பு விதை என்பதையும் டார்வின் குறிப்பிட்டிருக்கிறார்

க்ளாட் மற்றும் பேரன் ஆகியோர் 1711 மற்றும்  1764-ல் (Claude Joseph Geoffroy & Baron Otto von Münchhausen) இது ஒரு பூஞ்சைக்காளான் தொற்றாக இருக்கலாம் என்று அறிவித்தார்கள்.

1808- ல் நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர் ஜான் ஸ்டீம்ஸ் (John Stearns) நியூயார்க்கின் மருத்துவ சஞ்சிகையில்  ’’மகப்பேற்றை எளிதாக்கும் பிரசவப்பொடி’’ என்னும் பிரபல கட்டுரையை வெளியிட்டார். (An account of the pulvis parturiens, a remedy for quickening childbirth). அக்கட்டுரையில் கர்ப்பிணிகளுக்கு அளிக்கவேண்டிய, கருக்குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்தில்லாத இம்மருந்தின் அளவுகளை  துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.

நியூயார்க்கின் மற்றொரு மருந்தாளுனர் சாமுவேல்   1809ல்  (Samuel Akerley) எர்காட் பூஞ்சைச்சாறு கருக்கலைப்புக்கும், மாதவிடாய் துவக்கத்திற்கும் பயன்படுவதை விவரித்து கட்டுரை எழுதியிருந்தார்.

1813,ல் ஆலிவர் பிரெஸ்காட்  (Oliver Prescott) எழுதிய எர்காட் பூஞ்சையின் இயற்கை வரலாறும் மருத்துவப் பயன்களும் என்னும் கட்டுரை மிக பிரபலமாகி  பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது அதன் பிறகு அந்த பிரசவப் பொடியின் உபயோகம் வேகமாக பிற இடங்களுக்கும் பரவியது.

ஆனால்  1822 ல் மருத்துவர் டேவிட்(  David Hosack ) பிரசவப் பொடியின் உபயோகத்தால் நியூயார்க்கில் குழந்தைகளின் இறப்பு விகிதம் கூடிக்கொண்டு போவதை ஆதாரங்களுடன் நிரூபித்தார். அதன் அடிப்படையில் விசாரணைக்குழுவொன்று ஏற்படுத்தப்பட்டு பிரசவப் பொடி என்பது உண்மையில் மரணப் பொடி அதை  பிரசவங்களுக்கென உபயோகிக்கக்கூடாது, மகப்பேற்றுக்கு பின்னரான குருதியிழப்புக்கு மட்டுமே உபயோகிக்கவேண்டும் என  அறிவிக்கப்பட்டது.

எனினும் எர்காட் தயாரிப்புக்கள் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவெங்கும் பரவலாக உபயோகத்தில் இருந்தது.

1850 ல் லூயிஸ் ரெனி  இப்பூஞ்சையின் முழு வாழ்க்கை சுழற்சியையும் வெளியிட்டார். 1850-ல் அமெரிக்க மருத்துவ ஏடுகளில் எர்காட் பூஞ்சையின் விதைபோன்ற கருப்புப்பொருளை பொடித்து சிறிய அளவில் அளிக்கையில் கர்ப்பிணிகளின் கர்ப்பப்பை விரைவாக சுருங்கி விரிந்து குழந்தை பிறப்பிற்கான நேரம் வெகுவாக குறைவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 1856-ல் பிரெஞ்ச் தாவரவியலாளர் துரியன் (Durien) செயற்கையாக  புல்லரிசி மலர்களில் எர்காட் பூஞ்சைத் தொற்றை உருவாக்கி கிளாவிசெப்ஸின் நோயுண்டாக்கும் திறனை ஆதாரங்களுடன் நிரூபித்தபோதுதான் நூற்றாண்டுகளாக நீடித்திருந்த சூனிய மர்மம் முற்றிலும் விலகியது.

1969-ல் மனிதர்களுக்கு ஏற்படும் அசாதாரண நிகழ்வுகளை குறித்த தனது  The Day of St Anthony’s Fire என்னும் நூலில் ஜான் கிராண்ட்   (John Grant Fuller)  இந்நிகழ்வுகள் குறித்து  விரிவாக எழுதியிருக்கிறார். 

19- ம் நூற்றாண்டின் இறுதியில் எர்காட் வேதிபொருட்கள் மருத்துவத்துறையில் மிக முக்கிய பங்காற்றுபவைகளாக அறியப்பட்டிருந்தன. புல்லரிசி வயல்களில் கிளாவிசெப்ஸ் பூஞ்சையின் வித்துக்களை தூவி  ஒரு ஏக்கருக்கு 500கிலோ ஸ்கிளிரோஷியம் வரை சாகுபடி செய்யப்பட்டு மருந்து நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது.

அக்காலகட்டத்தில் புல்லரிசியின் விலையைவிட இருபது மடங்கு அதிக விலைக்கு எர்காட் கருப்பு விதைகள் விற்கப்பட்டன.

 1789-ல் நடந்த பிரஞ்சுப் புரட்சிக்குக் கூட, கடும் பஞ்சத்தினால் தானியங்கள் கிடைக்காமல்  புல்லரிசியை உணவாகக் கொண்ட விவசாயிகளின் வன்முறைக்கு  அந்த அக்கருப்பு விதையின் வேதிப்பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று  பின்னர் பல வரலாற்றாய்வாளர்கள் கருதினர்,

எர்காட் பூஞ்சை நோய் 

எர்காட் பூஞ்சை நோய் கிளாவிசெப்ஸ் பர்பூரியா (Claviceps purpurea ) என்னும் பூஞ்சையினால் 400க்கும் அதிகமான புல் வகைகளில் உண்டாகிறது. இவற்றில் ரை எனப்படும் புல்லரிசிச்செடியே அதிகம் பாதிக்கப்படும் புல் வகை. கிளாவிசெப்ஸின் 40 சிற்றினங்களில் பர்பூரியா பலவகையான புல் வகைகளின் மலர்களின் சூலகங்களை மட்டும் தொற்றும் பூஞ்சையாக இருக்கிறது.

கிளாவிசெப்ஸ் என்றால் ஆணி-தலை என்று கிரேக்க மொழியில் பொருள். இதன் ஸ்க்ளிரோஷியாவிலிருந்து முளைக்கும் வித்துக்கள் சிறு ஆணிகளை போலிருப்பதாலும், ஸ்கிளிரோஷியாவின் நிறம் கருப்பு கலந்த ஊதா என்பதாலும் இதன் அறிவியல் பெயர் கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்றிருக்கிறது. 

இந்த புல்லரிசிப் பூஞ்சை நோய் கனடா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் பரவலாக இருந்தது  (இப்பொழுதும் குறைவான வீரியத்துடன் இருக்கிறது). இந்தியாவில் இந்த பூஞ்சை தாக்குதல் அரிதாகவே நிகழ்ந்துள்ளது இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் மும்பையிலும் கர்நாடகத்திலும் சோளப் பயிர்களில் இந்நோய் கண்டறியப்பட்டது.

எர்காட் பூஞ்சைத்தாக்குதலால் கோதுமை, பார்லி, சோளம் போன்றவகைகளின்  மகசூல் குறைகிறது என்பதைவிட இந்த பூஞ்சையில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆல்கலாய்டுகள் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உண்டாக்கும் நோய்களாலும் அந்த ஆல்கலாய்டுகளின் மருத்துவப்பயன்களாலும் இப்பூஞ்சை முக்கியத்துவம் பெறுகிறது ,

இப்போது இதன் ஸ்கிளிரோஷியாவிலிருக்கும் முக்கியமான ஆல்கலாய்டுகளுக்கென புல்லரிசியில் இப்பூஞ்சைத் தொற்று செயற்கையாக உண்டாக்கப்பட்டு இந்த ஆல்கலாய்டுகள் சேகரிக்கப்படுகின்றன. 

இப்பூஞ்சையைக் குறித்து அறியாத  நூற்றாண்டுகளில்தான் சூனியக்காரர்கள் என்று பல்லாயிரம் அப்பாவிகள் கொலை செய்யப் பட்டிருந்தனர்.

எர்காட் புஞ்சைத்தொற்று எர்காட்டிசம் (Ergotism) எனப்படுகின்றது

கிளாவிசெப்ஸ் பர்பூரியா 

1853- ல் லூயிஸ் ரெனி (Louis Rene Tulanse) என்னும் பூஞ்சையியலளர் புல்லரிசி பயிர்களில் கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்னும்பூஞ்சைநோய்த் தாக்குதல் உண்டாவதை கண்டறிந்தார்.  இந்த பூஞ்சை நோய் எர்காட் புல்லரிசியின் நோய் என அழைக்கப்ட்டது.(Ergot of Rye). அந்த பூஞ்சை பண்டைய காலத்தில் மகப்பேறு சிகிச்சையில் பயன்பட்டதற்கான குறிப்புக்களையும் அவர் தேடிக் கண்டறிந்தார்

புல்லரிசியின் மலர்க்கொத்துக்களில் படியும் பூஞ்சை வித்துக்கள் மலரின் சூலகங்களில் வளர்ந்து  வித்துக்கள் அடங்கியுள்ள சிறு மணிகள் மண்ணில் உதிர்கிறது.   குளிர்காலங்களில் நிலத்தில் காத்திருந்து அடுத்த பயிர் வளருகையில் அதில்  முளைத்த பூஞ்சை வித்துக்கள் தொற்றி நோய் உருவானது. 

பூஞ்சை வித்துக்கள் குடைக்காளானைபோல   புல்லரிசிப்பயிரின் சூலகங்களில் வளர்ந்து பரவி அதன் வித்துக்களனைத்தும் சிறு கருப்பு கதிர்மணி போன்ற வடிவங்களில் உருவாவதையும், அக்கருப்பு மணிகள் புல்லரிக்சி கதிரில் அரிசிமணியைக்காட்டிலும் சற்றே நீளமாக இருப்பதையும் லூயிஸ் கண்டறிந்தார். அவற்றின் மருத்துவப்பயன்கள் முன்பே மக்களிடத்தில் பிரபலமாகி இருந்தாலும் அதன் அளவு கூடும்போது நோயும் பித்தும் உடலெரிச்சலும் வருவதை அதற்கு முன்பு யாரும் அறிந்திருக்கவில்லை.

.

மனிதர்களில் எர்காட் நோய்

எர்காட் பூஞ்சை நோய் மனிதர்களை இரு விதங்களில் பாதிக்கிறது. ரத்த நாளங்களில் ஏற்படும் தொற்று gangrene  என்னும் தசை அழிவையும், மத்திய நரம்பு மண்டலத்தில் உண்டாகும் தொற்று போதை, பித்து, வெறி, வலிப்பு, உடல் எரிச்சல் போன்றவற்றையும் உண்டாக்குகிறது

எர்காட் மருந்துகள்4

உலகின் மிகப் பழமையானதும் கொடியதுமான இந்த ரொட்டிப் பூஞ்சை நோய் என்னும் எர்காடிசம் மருத்துவ உலகில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகள் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

 1820-ல் அமெரிக்காவின் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகவே எர்காட்  ஆல்கலாய்டுகள் இருந்தன.1820 லிருந்து 1905 க்குள் 200க்கும் அதிகமான வேதிப்பொருட்களும் ergotamine, ergometrine  ergokryptine   உள்ளிட  12 ஆல்கலாய்டுகளும்  இந்தப் பூஞ்சையிலிருந்து  மட்டும் கண்டுபிடிக்கப்பட்டன.  இவற்றுடன் போலி ஆல்கலாய்டுகள் எனப்படும்  ergotoxine, ergotinine, ergosterene. ஆகியவையும் கண்டறியப்பட்டன. பிரெஞ்ச் வேதியியலாளர்  டேன்ரெட் (Charles Tanret) அவர் வாழ்க்கையில் 20 வருடங்களை எர்காட் பூஞ்சை ஆல்கலாய்டுகளை கண்டுபிடிப்பதிலேயே செலவிட்டார். தூய ஆல்கலாய்டுகளையும்  இனம் கண்டார்.

டேன்ரெட் (Tanret) 1875ல் படிகங்களாக எர்காட் பூஞ்சையின் வேதிப்பொருட்களை முதன்முதலில் பிரித்தெடுத்தார். அது எர்காட்டினைன் எனப்பட்டது.

 இந்த பூஞ்சையின் மிக முக்கியமான 4 ஆல்கலாய்டுகளான ergotinine, ergotoxine, ergotamine மற்றும் ergotaminine, ஆகியவற்றை S. Smith , G. M. Timmis ஆகியோர் பிரித்தெடுத்தனர்.

1900- த்தில் எர்காட் ஒரு வேதிக்குழப்பமென்றே விஞ்ஞானிகளால் கருதப்பட்டது.  இதில் அடங்கி இருக்கும் பலவகையான வேதிப்பொருட்களைப் பிரிதெடுக்க பலவகையான முயற்சிகள் நடந்து தோல்வியடைந்து கொண்டிருந்தன. ஹென்ரி என்னும் ஒரு மருந்துத் தயாரிப்பாளர், குறிப்பிட்ட வேதியியலாளர்கள் சிலரை தேர்ந்தெடுத்து இந்த பூஞ்சை நோயைக் குறித்து ஆராய ஒரு குழுவை அழைத்தார். அக்குழுவில் ஜார்ஜ் பெர்கர். கார்,  ஆர்தர் எவின்ஸ் மற்றும் ஹெரால் ட்யூல்டி ஆகியோர் இருந்தனர்.  (George Barger, Arthur Ewins,Dr. F. H. Carr & Harold Dudley) 

பார்ஜர் மற்றும் கார் (Prof. Barger  Dr. F. H. Carr) 1906- ல்  எர்கோடாக்ஸினைப் (ergotoxine) பிரித்தெடுத்தார்கள். இக்குழுவினர் அசிட்டைல் கோலைன், ஹிஸ்டமைன், மற்றும் திராமைன் ஆகிவற்றையும் கண்டுபிடித்தனர். எர்காட் பூஞ்சையில் பலர் வருடக்கணக்காக ஆய்வு செய்தார்கள் எனினும் Henry Dale, George Barger  Arthur Ewins , Arthur Stoll  மற்றும் Albert Hofmann ஆகியோரின் பங்களிப்பு மிக இன்றியமையாதது.

இந்த குழுவினரின் மிக முக்கியக் கண்டுபிடிப்பான எர்கோமெட்ரின் (Ergometrine)   மகப்பேறுக்கு பின்னரான குருதியிழப்பு மரணங்களை இன்றளவும் தடுத்துக் கொண்டிருக்கிறது. 1917-ல் ஆர்தர் ஸ்டோல் (Stoll) மற்றுமவரது குழுவினர் இணைந்து  ஒற்றைத்தலைவலியான மைக்ரேனுக்கு சிகிச்சையளிக்கும் எர்காட்டமைன் உள்ளிட்ட பல முக்கிய மருந்துகளை  இப்பூஞ்சையில் இருந்து பிரித்தெடுத்தனர்.  எர்காட்டமைன்  (Ergotamine) மைக்ரேன் என்னும் தலைவலி நோய்க்கு மருந்தாகிறது. 

.

எல் எஸ் டி

மாயக்காட்சிகள், போதை  மற்றும் இல்பொருள் தோற்றம் அளிக்கும்  போதை மருந்தான (LSD,Lysergic acid diethylamide),லைசெர்ஜிக் ஆசிட் டைதலமைடு ,எல்எஸ் டி என்பதுவும் 1938- ல் ஆல்பர்ட் ஹாப்மனால் இந்த ரொட்டிப்பூஞ்சையிலிருந்து கிடைத்த  எர்கோட்டமைனிலிருந்து உருவாக்கப்பட்டது.  அது உருவாக்கப்பட்டபோது அதன் போதைப்பண்புகள் அறிந்திருக்கப்படவில்லை.

எல்எஸ்டி உருவாக்கபட்ட 5 வருடங்களுக்கு பிறகு ஏப்ரல்19, 1943-ல்  அதன் போதையூட்டும் பண்புகள் ஹாப்மன் அந்த வேதிபொருளைத்  தற்செயலாகச் சிறிதளவு உட்கொண்டபோதுதான் தெரியவந்தது. 

Albert Hofmann அவரது ஆய்வகத்தில்

சுவிட்ஸர்லாந்தின் சண்டோஸ் மருந்துநிறுவனம் (Sandoz Laboratories) 1947-லிருந்து எல்எஸ்டியை  மூளைப்பிளவாழுமையான சிஸோஃப்ரெனியாவுக்கு சிகிச்சையளிக்கவும், குற்றவாளிகளுக்கான, மது அடிமைகளுக்கான சிகிச்சைக்கான மருந்தென்று விளம்பரப்படுத்தி சந்தைக்கு கொண்டு வந்தது. 

அந்நிறுவனம்  எல்எஸ்டியை ஆராய்ச்சியாளர்களுக்கு இலவசமாக கொடுத்து உதவியது 1963-ல் சாண்டோஸ் நிறுவனத்தின் எல்எஸ்டிக்கான் உரிமம் காலாவதியான பின்பு அதனை வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. எல்எஸ்டி பயன்பாடு 1968 அக்டோபரிலிருந்து சட்டவிரோதம் என அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது

25 கிலோ எர்காட்டமைன் டார்டரேட்டிலிருந்து 6 கிலோ தூய எல்எஸ்டி படிகங்களாக கிடைக்கிறது.  “Microdots’’ எனப்படும் நுண் மாத்திரைகளாகவும், “window panes” -ஜன்னல் சதுரங்கள்’ என்னும் பெயரில் ஜெலாட்டின் சதுரங்களாகவும், சமயங்களில் உறிஞ்சும் தாள்களில் நனைக்கப்பட்டும் கூட எல்எஸ்டி விற்பனையாகிறது. அரிதாக திரவ நிலையிலும் கிடைக்கும் எல் எஸ் டி  எந்த வடிவில் கிடைத்தாலும் உபயோகிப்பவர்களை  யதார்த்த உலகிலிருந்து உடனடியாக  துண்டித்துவிடும் என்பது உண்மை

எல்எஸ்டியின் மிகக்குறைந்த அளவே மிக அதிக போதை உண்டாக்குமென்பதாலும், நிறமற்ற, மணமற்ற இதன் பண்புகளாலும் பிற போதை மருந்துகளைக்காட்டிலும் இதுவே கள்ளச்சந்தை வணிகத்தில் அதிக புழக்கத்தில் இருக்கிறது.

பயிர்ப்பூஞ்சை நோய்

இப்பூஞ்சை தாக்குதல் இப்போதும் ஆங்காங்கே தானியப்பயிர்களில் தென்பட்டுக்கொண்டிருக்கிறது. சமீப காலங்களில் ஏற்பட்ட எர்காட் பூஞ்சை தொற்று:

  • 1975ல் இந்தியாவில்
  • 1977ல் எத்தியோப்பியாவில்
  • 1987ல் ஆஸ்திரேலியாவில்
  • 1996 அமெரிக்காவில்
  • 1999 பிரேஸிலில்

எர்காட் மருந்துகள் இப்போது:

இப்பூஞ்சையை போன்ற பல்வேறு  இயற்கைப் பொருட்களின் கண்டுபிடிப்புக்கள்   மனிதர்களுக்கான சிகிச்சைகளில்  தங்களது செல்வாக்கை செலுத்திய  விஷயங்களால்  நிரம்பியுள்ளது உலக மருத்துவ வரலாறு  .

இப்போது அறியபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான  பூஞ்சை இனங்களில் எர்காட் ரொட்டிப்பூஞ்சையான கிளாவிசெப்ஸைப்போல மருந்தியல்,  மகப்பேறியல், உளவியல் மற்றும் நரம்பியல் துறைகளில் மிக முக்கியமான சிகிச்சைகளுக்கு பயனாகும் மருந்துகள் அளிக்கும் பூஞ்சை வேறெதுவும் இல்லை.

எர்காட்டிலிருந்து எல்.எஸ்.டி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிச்சேர்மங்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.  

பல ஆண்டுகளாக மருத்துவத் துறையில் விஞ்ஞானம் எத்தகைய முன்னேற்றம் அடைந்திருந்தாலும், நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பல முக்கியமான மருந்துகளின் முதன்மை ஆதாரமாக புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளை தரும் நித்தியகல்யாணி, இதயநோய்களை குணப்படுத்தும் டிஜிட்டாலிஸ் போன்ற தாவரங்களும்,  கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை முதன்மை பாக்டீரீயாக் கொல்லியாக இருக்கும் பெனிசிலின் மற்றும் ரொட்டிப்பூஞ்சையான கிளாவிசெப்ஸ் போன்றவைகளும்  உள்ளன .

பூமியின் பல்லுயிர்ப் பெருக்கத்தின் பெரும்பகுதி இன்னும் இன்றியமையாத மருந்துகளின் கண்டுபிடிப்புக்காக பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.   இயற்கையின் எண்ணற்ற  ரகசியங்களை கண்டறியும் பாதைகளில் எர்காட் மருந்துகளை போன்ற பல்லாயிரம் தூங்கும் இயற்கை அழகிகள் நாம் அவற்றை தொட்டெழுப்பவேண்டி காத்திருக்கின்றன 

  1. https://kids.nationalgeographic.com/history/article/salem-witch-trials
« Older posts Newer posts »

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑