லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 3 of 13)

டிகாப்ரியோ மரம்!

மத்திய ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டின் ‘எபோ’ காடுகள் இயற்கை வளம் மிகுந்தவை. மலை யானை, உலகின் மிகப்பெரிய கோலியாத் தவளை மிக அரிய  உலகின் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் Red colobuses குரங்குகள் பல அரிய தாவர வகைகள் என பலவற்றின் வாழிடம் இதுதான். உலகின் மழைப்பொழிவில் எபோ காடுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது .

இந்த எபோ காடுகளில் 1500 சதுர கிமீ அளவுக்கு மழைக்காடுகள் எபோ ஆற்றின் அருகில் இருக்கிறது.இங்கு 65 மிக முக்கிய உயிரினங்கள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன

உலகின் பிற இயற்கை வளங்களைப்போலவே எபோ காடுகளும் கனிம சுரங்கங்களுக்ககவும், சட்ட விரோத விலங்கு வேட்டை மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றால் அழியும் அபாயத்தில் இருந்தது. பல சூழலியல் ஆர்வலர்கள் இந்த பிரச்சனையை  சர்வதேச அளவில் முன்வைத்தபோது எபோ காடுகள் பாதுகாக்கப்பட்ட பூங்காவாக அறிவிக்கப்படும் என்று அரசுத்தரப்பில் 2010ல் சொல்லப்பட்டும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதன் பின்னரும் எபொ காடுகளின் 1,300  சதுர கிமீ அளவுள்ள பரப்பின் மரங்கள் வெட்டப்படுவதற்கான உரிமம்  அரசால் வழங்கப்பட்டது. எபோ காடுகளின் உயிரினங்களும் அங்கிருக்கும் தொல்குடிகளுக்குமான மாபெரும் அச்சுறுத்தலாக அது இருந்ததால் எதிர்ப்புகள் வலுத்தன. 

 எனவே அழிவின் விளிம்பில் இருந்த எபொ காடுகளை பாதுகாக்க கேமரூனின் ஆரய்ச்சியாளர்கள் சூழியலாளர்கள் ஆகியோர் இணைந்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு டிகாப்ரியோ உள்ளிட்ட பல பிரபலங்களின் கையெழுத்தை சேகரித்து  அரசுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினார்கள் கூடவே எபோ காடுகளின் இயற்கை வளத்தை பட்டியலிட்டு உலகிற்கு அதன் முக்கியத்துவத்தை காட்ட நினைத்தார்கள் அப்படி பட்டியலிடுகையில்தான் அதுவரை அறியப்பட்டிருக்காத ஒரு மரம் கண்டுபிடிக்கப்பட்டது

 சீதாப்பழத்தின் தாவரக்குடும்பமான அனோனேசியை சேர்ந்த, 2022ல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  இம்மரத்திற்கு புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரும் இயற்கை ஆர்வலரும், சூழியல் செயற்பாட்டாளருமான லியோனார்டோ டிகாப்ரியோ வின் பெயரிடப்பட்டிருக்கிறது. 

கேமரூன் நாட்டின் எபோ காடுகளின் பாதுகாப்பில் டிகாப்ரியோ காட்டிவரும் அக்கறையையும் அதை பாதுகாக்கும் அவரது முன்னெடுப்புக்களையும் சிறப்பிக்கும் பொருட்டு அக்காடுகளில் மட்டும் காணப்படும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மரத்திற்கு Uvariopsis dicaprio என்று அவரது பெயர் இடப்பட்டிருக்கிறது, 

குறிப்பாக அக்காடுகளில் மரம் வெட்டப்படுவதற்கான எதிரான அவரது செயல்பாட்டின் முக்கியத்துவத்தின் பொருட்டே இந்த கெளரவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

எபோ காடுகளில் 50க்கும் குறைவான டிகப்ரியோ மரங்கள் மட்டுமே இருக்கின்றன அதுவும் வெறும் 4 சதுர கி மீ பரப்பளவில் மட்டும் இருக்கிறது. பலமுறை எபோ காடுகளில் தேடியும் இவை வேறெங்கும் காணப்படவில்லை.

கடல் மட்டத்திற்கு 850 மீ உயரத்தில்,4 அடி உயரமும் கவிழ்ந்து தொங்கும் மஞ்சள் இதழ்களை கொண்ட ஆண்மலர்களையும் கொண்டிருக்கும் இம்மரம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அவசியம் பாதுகாக்கப்படவேண்டிய தாவரங்களில் ஒன்றாகி விட்டிருக்கிறது. இக்காடுகளின் மரம் வெட்டும் உரிமம் ரத்தானதில் டிகாப்ரியோவின் பங்கு மிக முக்கிய மானதென்பதால் இம்மரம் அவர் பெயரில் அழைக்கப்படுவது அவருக்கான பொருத்தமான அங்கீகாரம்.

இந்தப் பெயரிடல் கியூ தாவரவியல் பூங்காவின் தாவரவியலாளர் களான  Martin Cheek  மற்றும் George Gosline, ஆகிய இருவரின் பரிந்துரையின் பேரில் நடந்திருக்கிறது.

உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் எட்டு முறை இடம்பெற்ற செல்வந்தர் எனினும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயற்கை பாதுகாப்பில் அக்கறை கொண்டவராகவே இவர் பொதுவெளியில் அறியப்படுகிறார்

திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர் 2014ல் தயாரித்த மலை கொரில்லாகளைக் காப்பாற்ற போராடும் நான்கு நபர்கள் குறித்த பிரிட்டிஷ் ஆவணப்படம் ’விருங்கா’ மிக குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விவசாயம், விலங்குகள் பாதுகாப்பு போன்ற பேசு பொருட்களை கொண்ட படங்கள் தயாரிப்பதில் டிகாப்ரியோ ஆர்வம் கொண்டிருந்தார். 

2019ல் புவி வெப்பமாதல் குறித்த  ஆவணப்படமாகிய  Ice on Fire, அவரால் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து டிகாப்ரியோ சூழலியம் (Environmentalism)  தொடர்பான பல முன்னெடுப்புக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

புவிவெப்பமாதல் உலகின் மிகப்பெரிய சவால் என்று சொல்லும் இவர் மழைக்காடுகள் அழிந்து வருவதையும் வாழிடங்ளை இழந்து பல உயிரினங்களின் இருப்பு கேள்விக்குறியாகவும் கவலைக்குரியதாகவும் ஆகிவிட்டிருப்பது குறித்தும்  தொடர்ந்து ஆவணப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்

இயற்கை சார்ந்த விழிப்புணர்வு மற்றும் செயல்பாட்டின் பொருட்டு லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை ஒன்றையும் (Leonardo DiCaprio Foundation,) 1998ல் நிறுவினார். இந்த அறக்கட்டளை மூலம் வளரும் நாடுகளின் இயற்கை பேணுதலுக்காக நிதியுதவிகள் அளிக்கப்படுகின்றது. 

இத்துடன் சூழலுக்கு இணக்கமான மின் வாகனங்களைத்தான் அவர் பயன்படுத்துகிறார்.

2000த்தில் சூழல் பாதுகாப்பு குறித்த பில் கிளிண்டனுடனான டிகாப்ரியோவின் நேர்காணல் க முக்கியமானது

2007ல் Live earth எனப்படும் மாபெரும் சூழல் விழிப்புணர்வு நிகழ்வையும் நடத்தினார் அதே ஆண்டில் ரஷ்யாவின் வன உயிர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய புலிகளுக்கான் உச்சிமாநாட்டுக்கு 1மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினார். அந்த மாநாட்டிற்கு பல தடங்கல்களுக்கு இடையில், இரண்டு முறை அவர் செல்லவேண்டிய விமானம் ரத்தாகியும் அவர் முயற்சி எடுத்து கலந்துகொண்ட போது புதின் டிகாப்ரியோவை ’’இவரே உண்மையான் ஆண்’’ என்று புகழ்ந்தார்.

இந்தோனேசியாவின் எண்ணெய்ப்பனை வளர்ப்பினால் காடழிதல் குறித்து கண்டனம் தெரிவித்தது, 2016ல்; அமெரிக்க தொல்குடிகள், அவர்களின் வாழ்விடங்களின், வன உயிர்களின் பாதுகாப்புக்கென  15.6 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தது, 2017ல்  காலநிலை மாற்றம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பாராமுகக்தை கண்டித்து ஊர்வலம் சென்றது என டிகாப்ரியோவின் சூழல் செயல்பாடுகளை வரிசையாக சொல்லிக்கொண்டெ போகலாம்

சமீபத்தில் கிழக்கு பசிபிக் தீவுக் கூட்டங்களின் பாதுகாப்பிற்கென டிகாப்ரியோ 43 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்திருக்கிறார். அவரும் அவரது அன்னையுமாக பல நன்கொடைகளை சூழியல் சார்ந்த செயல்பாடுகளுக்கென அளிக்கிறார்கள். அவரின் விக்கி பக்கத்துக்குள் சென்றால் இவரது சூழியல் செயல்பாடுகள் குறித்து மேலும் அறியலாம்

டிகாப்ரியாவின் இத்தையக சூழல் சார்ந்த செயல்பாடுகளால் அவரை சிறப்பிக்கும் பொருட்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  மலேசியாவில் மட்டும் காணப்படும் ஒரு வண்டினத்துக்கு  Grouvellinus leonardodicaprioi,  என்றும் டொமினிக் குடியரசின் சிலந்தி ஒன்றுக்கு Spintharus leonardodicaprioi  என்றும் அவரது பெயர் முன்பே வைக்கப்பட்டிருக்கிறது.

டிகாப்ரியோ விற்கு  வாழ்த்துக்கள்!

https://en.wikipedia.org/wiki/Uvariopsis_dicaprio

 மரியா சிபில்லா!

கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னதான அரிய நீல நிற வைரக்கல்லான  ஹோப் வைரம் உள்ளிட்ட பதினான்கு கோடி பல்துறை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்மித்சோனியன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் (Smithsonian National Museum of Natural History) ஒரு மதிய வேளை அது. அறிவியலாளரான சினிச்சி நகஹரா (Shinichi Nakahara) தனது மேசையின் இழுப்பறையை திறந்து அந்த கண்ணாடிப் பெட்டியை கவனமாக எடுத்தார்.1981 லிருந்து  அதனுள் இருந்த பதப்படுத்தப்பட்டிருந்த  பட்டாம் பூச்சியை மீண்டும் கவனமாக ஆராய்ந்தார். 

பட்டாம்பூச்சி மற்றும் அந்துப்பூச்சிகள் துறையில் வல்லுநரான நகஹராவால் அந்த பட்டாம் பூச்சியை வெகு காலமாக, 2018  டிசம்பர் மாதமான அப்போது வரை இனம் காண முடியாமல் இருந்தது. அந்த அரிய கருப்பு வண்ண ஆண் பட்டாம்பூச்சியின் உடல் பனாமாவில் கிடைத்தது. ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் மாணவன் பாப்லோ (Pablo Sebastián Padrón) அதை கண்டு பிடித்து அதன் உடலை புகைப்படம் எடுத்து நகஹராவுக்கு அனுப்பி அதை இனம் கண்டு சொல்லும்படி கேட்டிருந்தான்.  பின்னர் அது பாடம் செய்து அங்கே சேமித்துவைக்கப்பட்டது. அந்த பட்டாம்பூச்சியை இனம் காண்பது பெரிய சவாலாக அமைந்துவிட்டது நகஹராவுக்கு. மேலும் ஒரு பட்டாம்பூச்சி கிடைத்தால் ஒப்பிட்டு பார்க்க உதவியாக இருக்கும் என அவர் நினைத்துக் கொண்டு காத்திருந்தார்.

பளபளக்கும் கரிய இறக்கைகளும், இறக்கைகளின் விளிம்புகளில் பாலாடை நிறப் புள்ளிகளின் வரிசையும் கொண்ட அந்த பட்டாம்பூச்சி மிக வசீகரமாயிருந்தது. இறகுகள் இணையும் இடத்தில் இருந்த செந்தீற்றல் அதை மேலும் அழகாக்கி இருந்தது.

அதன் உடல் அமைப்பு பட்டாம்பூச்சிகளின் மிகப்பெரிய குடும்பமான பியரிடேவை (Pieridae) சேர்ந்தது என தெரிவித்தாலும் அதன் கருப்பு நிறம் சந்தேகத்துக்கு இடமளித்தது. எனவே நகஹராவும் பாப்லோவும் காத்திருந்தனர். 

Shinichi Nakahara

அதிர்ஷ்டவசமாக, இரண்டு மாதங்கள் கழித்து மிஸிஸிபி பல்கலைக்கழகத்தின் பூச்சியியலாளரான ஜான் (John MacDonald) பனாமாவிலிருந்து தன்னால் இனம் காணமுடியவில்லை என்னும் குறிப்புடன் ஒரு கருப்பு நிற பட்டாம்பூச்சியின் புகைப்படத்தை நகஹராவுக்கு அனுப்பியிருந்தார்.

புகைப்படத்தில் இருந்த பட்டாம்பூச்சி தன்னிடம் இருந்த அதே கருப்பு பட்டாம்பூச்சியை போலிருந்ததால், நகஹரா, ஜானிடம் அந்த பூச்சி உடலின் ஒரு காலை மட்டும் உடனே  அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். இரண்டின் DNA சோதனைகளையும் செய்து அவை Catasticta  பேரினத்தை சேர்ந்த  மிக அரிய வகை பட்டாம்பூச்சிகள் என்பதை கண்டறிந்தார். 

அதுவரை விவரிக்கவும், கண்டுபிடிக்கப்பட்டும் அடையாளம் காணப்பட்டுமிராத அவற்றின் வேறு மாதிரிகள் எங்கேனும் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறதா என அடுத்த 30 மாதங்களும்  14  பட்டாம்பூச்சி அருங்காட்சியங்களில் தேடிப்பார்த்த போது எங்குமே அவை இல்லை. எனவே  புதிய கண்டுபிடிப்பான அதற்கு பொருத்தமான பெயரை தேடினார் நகஹரா

அத்தனை அரிய பட்டாம்பூச்சிகளான அவற்றிற்கு 17ம் நூற்றாண்டின் பிரபல ஓவியக்கலைஞரும் பூச்சியியலில் பெரும் கண்டுபிடிப்புக்கள் செய்தவரும் பட்டாம்பூச்சிகளில் பேரார்வம் கொண்டிருந்தவருமான  மரியா சிபில்லா மெரியனின் (Maria Sibylla Merian) பெயரை வைக்க முடிவு செய்து அந்தப் பட்டாம்பூச்சிக்கு  Catasticta sibyllae என்று பெயரிட்டார்.

மரியா சிபில்லா அவர் வாழ்ந்த நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் மற்றும் ஓவியக்கலைஞராக அறியப்பட்டவர். 17ம் நூற்றாண்டில் பெண்கள் இருந்த நிலைக்கு மாறாக பல அரிய சாதனைகளை தாவரவியலிலும், பூச்சியியலிலும் செய்தவர்.

17ம் நூற்றாண்டின் பிரபல  தாவரவியல் ஓவியக் கலைஞரான  ஜெர்மெனியை சேர்ந்த மரியா சிபில்லா (1647-1717) மிக இளைய வயதிலேயே கம்பளிப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள் மற்றும் பூச்சிகளிலும் அவை வாழும், உண்ணும் தாவரங்களிலும்  வெகுவாக  ஆர்வம் கொண்டிருந்தார். மரியாவின் மாமா ஒரு பட்டுப்புழு உற்பத்தியாளர், எனவே அவருக்கு அப்புழுக்களை கவனிப்பதில் இயற்கையாகவே ஆர்வம் உண்டானது

மரியா தனது 11ம் வயதிலிருந்தே ஓவியங்கள் வரையத் துவங்கினார். அவரது பொழுதுபோக்கு இறந்த பூச்சிகளை பாடம் பண்ணுவதில்  அவரது தாய் மாமாவுக்கு உதவுவதும், அவற்றை அலமாரிகளில் அடுக்கி வைப்பதும்தான். எனவே மரியாவிற்கு பூச்சிகளின் உலகில் நல்ல பரிச்சயமுண்டானது, 

ஜான்ஸ்டன் (Jonston) உருவாக்கிய முதல் விலங்கியல் அகராதியை அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான அச்சகம் மரியா சிறுமியாக இருக்கையிலேயே வெளியிட்டது. அந்த அகராதியின் அழகிய வண்ணப்படங்களால் மரியா வெகுவாக  ஈர்க்கப்பட்டிருந்தாள். 

மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டில் ஏப்ரல் 2,  1647 ல்  சிற்பியும் பதிப்பக உரிமையாளரும் ஓவியருமான மேத்யூஸுக்கும் (Matthaeus Merian) ஜோஹன்னாவுக்கும் (Johanna Sibylla Heim) பிறந்தார்.  ஜொஹன்னா மெரியனின் இரண்டாவது மனைவி. மரியாவுக்கு 3 வயதாக இருக்கையில் தந்தை மேத்யூஸ் இறந்த பின்னர் ஜோஹன்னா உருவப்பட ஓவியரான  ஜேகப்பை  (Jacob Marrel-1613/14 – 1681)   மணந்துகொண்டார். 

மரியா ஒவியம் வரைவதை அவரது தாய் மறுமணம் புரிந்துகொண்ட பிரபல ஓவியரும் அவளது வளர்ப்புத்தந்தையுமான ஜேகப்பிடமிருந்து  கற்றுகொண்டார் .   

ஜேகப் ஒரு மலர் ஓவியர், உருவ வரைபட நிபுணர் மற்றும் தேர்ந்த சிற்பி.

ஃப்ராங்க்ஃபர்ட்டின் பிரபல உருவ வரைபட நிபுணரான  ஜார்ஜின் (Georg Flegel -1566-1638),   மாணவராக இருந்து ஓவியக்கலையை கற்ற இவர்   Utrecht க்கு 1632 ல் குடிபெயர்ந்தார். அங்கு உயிர் ஓவியக்கலை வல்லுநரான  ஜேனின் (Jan Davidsz. de Heem -1606-1683/4) அறிமுகம் உண்டானது. அக்கலையையும் ஜேகப் கற்றுத்தேர்ந்தார்

ஜேகப்பின் படைப்புக்களில் மிகவும் பிரபலமானவை மேசையின் மீதிருக்கும் கூடைகளில் வைக்கப்பட்டிருக்கும் கனிவகைகளும், பூச்சாடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மலர்களும் தான். குறிப்பாக கனிகளின் மேற்புறத்தின் நுட்பமான அமைப்புக்களை ஜேகப் துல்லியமாக வரைந்திருப்பார்.

அழகிய உலோகக் கிண்ணங்களில் வைக்கப்பட்டிருக்கும் பீச், ரத்தினக்கற்களை போன்ற விதைமுத்துக்களை காட்டிக் கொண்டிருக்கும் மாதுளை, தோல் மீதிருக்கும் மெல்லிய வெண்படலத்துடன் காணப்படும் கொத்து கொத்தான திராட்சைகள்  ஆகியவை மிக தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும்.

ஜேகப்பின் ஓவியங்களில் பூச்சி அரித்த இலைகளும், பழுத்து அழுகிய கனிகளும் காணப்படும். எத்தனை அழகியதாயினும் அழிவு என்பது இயற்கையில் தவிர்க்க முடியாது என்பதை அவரது ஓவியங்கள் உணர்த்தின.

ஜேகப்,  ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் பிறந்தார். எண்ணெய் ஓவியங்கள் அவரது தனித்த பிரியத்துக்குரியவையாக இருந்தன. 1641ல் ஜேகப் கேதெரினா எலியட்டை மணந்தார். 1649ல் எலியட் மரணமடைந்த பின்னர் ஃப்ராங்க்ஃபர்ட்டில் வாழ்ந்துவந்த   பிரபல சிற்பியான மேத்யூஸ் மெரியனின் (Matthäus Merian) விதவையான  ஜொஹன்னா சிபில்லாவை (Johanna Sibylla Heimius)  1651ல் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அப்போதுதான் மனைவியின் மகளான மரியாவை தனது மாணவராக்கிக்கொண்டு ஓவியக்கலையை கற்பித்தார்.

அப்போதிலிருந்து  அவர் இறந்த 1681 வரை அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டிலேயே பெரும்பாலும் வாழ்ந்தார்.

ஜேகப்பின் ஓவியங்களில் குறியீடுகள் மிக சிறப்பானவை. மலர்களில் பல்லியோ  பட்டாம்பூச்சிகளோ இருந்தால் அவை உயிர்த்தெழுதலையும், நத்தைகள் சோம்பேறித்தனத்தையும் குறித்தன 

கூரிய இதழ்களுடன் இருக்கும் நீண்ட ஊதா மலர்மஞ்சரிகள் தூய ஆவியை, வாடிய மலர்கள் மரணத்தை,  லில்லிகள் பணிவையும் குறித்தன. ட்யூலிப் மலர்களே அவரின் சிறப்பு ஓவியங்கள் என கருதப்படுகின்றன. ட்யூலிப் மலர்களின் ஓவியங்களும் அவற்றின் விலைகளும் குறிப்பிடப்பட்டிருந்த ஜேகப்பின் நான்கு ஓவியத்தொகுதிகள் மிக புகழ்பெற்றவை. மரியாவும் அவரை போலவே ட்யூலிப்களின் ஓவியங்களை வரைந்தார்.

ஜேகப்பின்  மறைவுக்கு பின்னர் அவரது மகனும் மரியாவின் சகோதருமான கேஸ்பர் மெரியன் மரியாவுக்கு செம்புப் பட்டயங்களில் செதுக்கோவியங்களை வரைய கற்றுக்கொடுத்தார். அக்காலத்தில் ஜெர்மனியில் பெண்கள் ஓவியம் வரைவதும் விற்பதும்  சில நகரங்களில் தடை செய்யப்பட்டிருந்தது.  ஆனால் மரியா வாழ்நாள் முழுவதும் ஓவியங்களை வரைந்தார்

மரியா  சிறுமியாயிருந்த போதிலிருந்து கர்ப்பமுற்றிருந்த போதும் , குழந்தை வளர்ப்பு காலங்களிலும், இல்பேணிக்கொண்டிருக்கையிலும் எப்போதும் வரைந்துகொண்டே இருந்தார்.

மரியாவுடன் ஓவியம் வரைய கற்றுக்கொண்ட ஜேகப்பின் மாணவரான ஜோகன்ஸைத்தான் (Johann Andreas Graff)  மரியா  1665ல்  காதல் திருமணம் செய்துகொண்டார். மரியாவின் கணவரும் கட்டிடக்கலை ஓவியங்களில் வல்லுநர். அவரது 9 பெரிய தாள்களில் வரையப்பட்ட st. பீட்டர்ஸ்  தேவாலயத்தின்  ஓவியம் மிக பிரபலமானது. ஆனால் மரியாவுடையது தோல்வியுற்ற தாம்பத்யம் .  

 1668ல் மரியா அந்நகரின் இளம்பெண்களுக்கு மலரோவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார்,  Jungferncompaney (“Company of Young Misses,”) எனப்படும் திருமணத்திற்கு காத்திருக்கும் மேல்மட்ட குடும்பப்பெண்களின்  அத்தகைய குழுமங்களில் மலர்களின்  ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பது, லினென் துணிகளில் இயற்கை சித்திரங்களை எம்பிராய்டரி செய்வது, ஆகிய வகுப்புக்களின் மூலம் மரியாவுக்கு பல செல்வந்தர்களின் சொந்த தோட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடைத்தது. மேலும் பல பூச்சிகளை தாவரங்களை மரியா வரைய இவை உதவியாக இருந்தன

 பெரும்பாலான் ஐரோப்பிய பூச்சி இனங்களை ஆராய்ந்திருந்த மரியா எப்படி அவை பிறக்கின்றன, வளர்கின்றன,உணவுண்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன இறக்கின்றன என்பதை முழுமையாக ஆய்வு செய்து  ஓவியங்களாக ஆவணப்படுத்தினார். 

மரியாவுக்கு புழுக்கள் அழகிய பூச்சிகளாக உருமாறுவதை காண்பதில் பெருவிருப்பம் இருந்தது.  மரியா பூச்சிகளின் இனப்பெருக்க உறுப்புக்களை கவனித்து அவற்றின் ஆண் பெண்  வேறுபாட்டுடன் ஓவியங்கள் வரைந்தார்

பூச்சிகளை குறித்த பயமமேதுமில்லாமல் அவற்றை கைகளில் பிடித்து கவனமாக உற்று நோக்கி பல ஓவியங்களை அவர் வரைந்தார். பல வகையான பூச்சிகளை வீட்டில் பெட்டிகளில் வளர்த்தார்

மரியாவின் வீடு சீசாக்களிலும் பெட்டிகளிலும் அடைக்கப்பட்டு வளர்ந்த பூச்சிகளாலும் தொட்டிகளில் வளர்ந்த பல வகையான செடிகளாலும் நிறைந்திருந்தது

1679 ல் தனது இரண்டாவது மகள் பிறந்த ஒரு வருடத்தில், இரு வருடங்கள் கூர்ந்து கவனித்து வரைந்த ஓவியங்கள், தகவல்கள் அடங்கிய  ’’கூட்டுப்புழுக்களின் அதிசய உருமாற்றம்’’ என்னும் தனது    Der Raupen wunderbarer Verwandlung (the wondrous transformation of caterpillars  and their curios diet of flowers )  நூலை வெளியிட்டார். அவர் கைகளால் வரையப்பட்ட, பல வண்ணங்களில் இருந்த, வெகு அழகிய, மிக துல்லியமான பூச்சிகள், அவை அமரும் தாவரங்களின் ஓவியங்கள் அறிவியல் இலக்கியத்தின் புது வரவாக கவனம் பெற்றன,

அந்நூலில் பிற பூச்சியியல் நூல்களில் இருப்பதைப்போல செடிகொடிகளின் பின்னணியில் பூச்சிகளை வரையாமல் ஒவ்வொரு பூச்சிக்கும் அவற்றின் வாழிடத்துக்கும், உணவுக்கான தாவரத்துக்குமான தொடர்பையும் காட்சிப்படுத்தினார்.

உண்மையில் உலகின் முதல் சூழலியாளர் மரியாதான்  1683ல் இதன் இரண்டாம் படைப்பையும் மரியா வெளியிட்டார். தாவரங்களுக்கும்  விலங்குகளுக்குமான தொடர்புகளை மரியா அவரது ஓவியங்களில் ஆவணப்படுத்தியிருந்தார்.

லத்தீன் மற்றும் டச்சு மொழிகளில் சூழியல் அடிப்படைகளை தெளிவாக கொண்டிருந்த அந்நூல்கள் ஐரோப்பாவில் பெரும அதிர்வலைகளை எழுப்பியது

1681ல் தந்து வளர்ப்புத்தந்தை ஜேகப் இறந்தபின்னர் மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு திரும்பி தன் அன்னையுடன் வசித்தார் அப்போதும் பல படைப்புக்களை வெளியிட்டார்

1686ல் தவளைகள் அவற்றின் முட்டைகள், தலைப்பிரட்டைகளின் ஓவியங்களுடன் மரியா வெளியிட்ட ஓவியங்களும் குறிப்புக்களும் அவருக்கு பின்னர் வந்த டச்சு நுண்ணோக்கியலாளரான ஆண்டனி வான் லூவன் காக்கின் (1632-1723)  அதேபோன்ற கண்டுபிடிப்புக்கு   வெகுவாக முன்னால் இருந்தது. மரியாவே முதன் முதலில் இருவாழ்விகளின் இனபெருக்கவியலை ஆவணப்படுத்தியவர் 

1698ல் மரியா  தனது ஓவியங்களை ஏலம் விட்டு பெருந்தொகை பெற்று பூச்சிகளை அவற்றின் வாழ்விடத்துடன் இணைத்து வரையத் துவங்கினார். அதன் பின்னர் மரியா உலகெங்கும் ஒரு தாவரவியலாளராக, பூச்சியியலாளராக ஓவியக் கலைஞராக, இயற்கையியலாலராக அறியப்பட்டார்.

 அக்காலகட்டத்தில் பிரபலமாக  இருந்த  அலங்கார ஓவியங்களைப் போலல்லாமல் தேவையற்ற  வரியோ, வண்ணமோ இல்லாமல் தன் கண்களால் கண்டவற்றை அப்படியே  கைகளால்  வரைந்தார் மரியா 

17ம் நூற்றாண்டின் பழமையான கலாச்சாரத்தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியல் குறித்த  பல ஆய்வுகள் செய்தார், ஆனால் .அக்காலத்தில் இனப்பெருக்கம் குறித்த ஆய்வு பெண்களுக்கானதல்ல  என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்

அப்போதிலிருந்து இன்று வரைக்கும் மரியா கலாச்சார தடைகளை உடைத்து வென்று முன்னேறிய பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் கருதப்படுகிறார். மரியாவின் ஓவியங்கள் மிக துல்லியமான அறிவியல் அடிப்படைகளையும் மிகச்சரியான வண்ணங்களையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு பூச்சிகளையும் அவற்றின் முட்டைப் பருவத்திலிருந்து படிப்படியாக கவனித்து அவற்றின் இறப்பு வரை வரைந்து ஆவணப்படுத்தினார்

ஓவியங்களில்  இருந்த பூச்சிகள், தாவரங்கள் குறித்த இனப்பெருக்கவியல் உள்ளிட்ட பல   மிக விவரமான தகவல்களையும் மரியா எழுதினார் . மரியாவே பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் குறித்து ஓவியங்களில் காட்சிப்படுத்தி ஆவணப்படுத்திய முதல் பெண்மணி.   

 17 வருட மணவாழ்வு 1685ல் விவாகரத்தில் முடிந்த பின் மரியா நெதர்லாந்தின்  (Friesland) மதம்  சார்ந்த  Labadists என்னும் அமைப்பில் தன் சகோதர கேஸ்பருடன்  இணைந்துகொண்டார். அவ்வமைப்பு கிருத்துவம் சார்ந்த பல சேவைகளை செய்து வந்தது. அக்குழுவின் நோக்கமும் நம்பிக்கையும் இயற்கையின் படைப்புகளை நெருங்கி அறிவதன் மூலம் அவற்றை படைத்த கடவுளை அறியலாம் என்பது.  அங்கு மரியா மேலும் ஓவியங்கள் வரையலானார் இரண்டு வருடங்களில் மரியாவின் பல ஓவியங்களின் தொகுதிகள் அவ்வமைப்பின் அச்சுக்கூடத்தில் பிரசுரமாகியது.

அந்த மத அமைப்பில்  அவரது  கணவர்  Graff தானும் இணைந்துகொண்டு மீண்டும் மரியா தன்னுடன் வாழவேண்டுமென பல தகராறுகள் செய்தார். 1692 ல் தாயும் இறந்த பின்னர்  மரியா ஆம்ஸ்டர்டாமுக்கு சென்று  மகள்களுடன் வசித்தார். அங்குதான் பெண்களும் வணிகம் செய்யலாம் என்பதை கண்டுகொண்டார்   அங்குதனது  ஓவியங்களை விற்று கிடைத்த வருமானத்தில் சுயமாக வாழ்ந்தார்.

1698ல் மரியாவும் மகள்களும் ஆடம்பரமான ஒரு வீட்டில் வாழ்ந்தனர்.

ஆம்ஸ்டர்டாமில் மரியாவின் படைப்புகள் நல்ல விலைக்கு போனது. அங்கு அவர் உலகின் பல பாகங்களிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த பாடமாக்கப்பட்ட  பல பெரிய பட்டாம்பூச்சிகள் அருங்காட்சியகங்களின் கண்ணாடிச்சட்டகங்களில் ஊசியால் பிணைக்கப்பட்டிருந்ததை பார்த்தார்.எனினும் அவர் அவற்றை ஒரு போதும் வரையவில்லை. பூச்சிகளை அவற்றின் இயற்கையான வாழிடங்களில் வரையவே விருப்பம் கொண்டிருந்தார்.

1699ல் ஆம்ஸ்டர்டாம் அரசு  மரியாவிற்கும் மகள் டோரதியாவுக்கும் சுரிநாம் செல்ல அனுமதி அளித்தது. அங்கு ஐந்தாண்டுகள் இருப்பதாக பயணத்திட்டம் இருந்த்து எனினும் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மலேரியா தொற்று உண்டானதால் அவர் ஆம்ஸ்டர்டாமிற்கு திரும்பினார். அந்த  பயணத்திற்கான நிதி திரட்டும் பொருட்டு மரியா தனது 255 ஓவியங்களை விற்றிருந்தார். அப்போது அறிவியல் நூல்களுக்கான மொழியாக லத்தீன் இருந்தது. எனவே மரியா லத்தீன மொழியை கற்றுக்கொண்டார்

அப்போது அதிகம் அறியப்பட்டிருக்காத அறிவியல் ரீதியான தேடலுக்கென மரியா அந்தப் பயணத்தை மேற்கொண்டார். ஜூன் 1699ல்  தனது 52வது வயதில்  மகள் டோரதியாவுடன்     தென்னமெரிக்காவின் சுரிநாமிற்கு மரியா பயணப்பட்டார். அது ஒரு மிக துணிச்சலான பயணம் அதற்கு முன்பு வரை ஆண்களால் அரசியல், பொருளாதார ராணுவ காரணத்துக்காகவே அப்படியான தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்காலத்தில்  அரிய பொருட்களை தேடும் பொருட்டு கடற்பயணம் மேற்கொண்ட ஆண்களில் யாரும் மரியாவை உடனழைத்துச் செல்லவில்லை.

அப்போதைய ஆணாதிக்க உலகில் ஒரு 52 வயது பெண்ணாக அவர் அறிவியல் தேடலுக்கு ஒரு பயணத்தை முன்னெடுத்தது மிகப்பெரிய ஆச்சரியம். தனது ஓவியங்களை விற்றுக்கிடைத்த நிதியை கொண்டே மரியா பயணத்தை செய்துமுடித்தார்.

சுரிநாமில் 2 வருடங்கள் மரியா தன் கைகளில் கிடைத்தவற்றை எல்லாம் சேகரித்தார். தலைநகர் Paramariboவின் பூங்காக்களில், சுரிநாம் ஆற்றின் கரைகளில், கரும்புத் தோட்டங்களில் மட்டுமல்ல அந்த ஆற்றை சிறு படகில் கடந்து மழைக்காடுகளிலும் தனியே பயணித்து அங்கு வாழ்ந்த தொல்குடிகளை சந்தித்து அவர்களிடமிருந்தும் பல பூச்சிகளை பெற்றார். பூச்சி, புழுக்கள் மூலிகைகள் குறித்த தகவல்களை சேகரித்தார்.  தொல்குடியினரும் மரியாவின் மீதான அன்பினால் காடுகளுக்குள் துணையாக வந்து அவரது ஆய்வில் உதவினார்கள்.

சுரிநாமில் இரு அடிமைப் பணிப்பெண்கள் மரியாவிற்கு உதவினர். மரியாவின் அத்தனை புகழுக்கும் இந்த அடிமைபெண்களே காரணம் என சொல்லப்படுகிறது. சில படைப்புக்களில் அவர்களிருவரின் பெயர்களை குறிப்பிடாமல் இரு இந்திய அடிமைப் பணிப்பெண்களுக்கும் தனது நன்றியை மரியா தெரிவித்திருக்கிறார்.

பல மரங்களில் மரியா ஏணியில் ஏறி உயரங்களில் வாழ்ந்த பூச்சிகளை சேகரித்தார்.  மலேரியா காய்ச்சல் வந்ததால் 1701ல் தான் மரியா மீண்டும் ஆம்ஸ்டர்டாமுக்கு திரும்பினார். இந்தப் பயணத்தின் ஆய்வு முடிவுகள் தான் மரியாவின் பெரும்படைப்பான Metamorphosis insectorum Surinamensium

 1705.ல் அவரது மிக பிரபலமான படைப்பான  ’’Metamorphosis Insectorum Surinamensium’’ வெளியானது அந்நூலில் சுரிநாமின் புழுக்கள், தேரைகள், எறும்பு, பல்லி, நாகம், சிலந்திகள் மற்றும் பலவித  பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் தெளிவாக ஆவணப்படுத்த பட்டிருந்தன

லத்தீன் மொழியில் எழுதப்பட்ட  பல செதுக்கு ஓவியங்களுடன் கூடிய அந்த ஆடம்பரமான வண்ணமயமான  இந்த  நூலிலிருந்த மழைக்காடுகளின், தாவரங்களும், பல்லி பாம்புகள் உள்ளிட்ட பூச்சி இனங்களும் பல நாடுகளின் இயற்கை ஆர்வலர்களின் வீடுகளுக்குள் நுழைந்தன.

மலர்மஞ்சரிகளில் அமர்ந்திருக்கும் நீல பட்டாம்பூச்சிகளும், உணர்கொம்புகளை நீட்டிக்கொண்டிருக்கும் அந்துப்பூச்சிகளும், முட்டைகளும் தலைப்பிரட்டைகளும் சூழ இருக்கும் கொழுத்த தவளைகளும், பல இலைகளை தின்று கொண்டிருக்கும் வரிகளுடன் கூடிய கூட்டுப்புழுக்களும், மரங்களின் மீது ஏறிக்கொண்டிருக்கும் எறும்புகளும் இருக்கும் அவரது ஓவியங்கள் தத்ரூபமாகவும் அழகாகவும் மட்டுமல்லாது, அறிவியல் ரீதியாக மிகச் சரியாகவும் இருந்தன. பல ஓவியங்களில் மலரிதழ்களில் பூச்சிகள் உண்டாகிய துளைகளும் பாதி கடிக்கப்பட்ட இலைகளும், இதழ்களே இல்லாத மலர்களும் இருந்தன.

மரியாவின் நூல் ஏதேன் தோட்டம்போல அழகாக உருவாக்கப்பட்டதல்ல, இயற்கையின் விதிக்குட்பட்ட உயிரினங்கள் உள்ளபடிக்கே அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன

 மரியா இந்த நூலை வெளியிட்ட போது அவரது சமகால அறிஞர்கள் உயிர்களின் உயிர்களின் தன்னிச்சையான தோற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அரிஸ்டாட்டிலின் காலத்திலிருந்து நம்பப்பட்ட ’’உயிர்கள் உயிரற்றவைகளிலிருந்து தன்னிச்ச்சையாக தோன்றின என்னும் கருதுகோளான spontaneous generation விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மரியாவின் படைப்புக்கள் பூச்சிகளின் சிறுவிலங்குகளின் இனப்பெருக்கத்தை துல்லியமாக காட்டின. ஆண்பெண் வேறுபாட்டை இனப்பெருக்க உறுப்புக்களை துல்லியமாக விவரித்த மரியாவின் நூல் அப்போது பெரிய பேசு பொருளாக இருந்தது.

மாமிசம் உண்ணும் பூச்சிகள் அழுகும் இறைச்சியிலிருந்தும், மேலும் பல பூச்சிகள் புத்தகங்களுக்குள்ளிருந்தும், பனித்துளிகளிலிருந்து அந்துப்புச்சிகளும்,  எலிகளும் தேள்களும் பழைய நைந்து போன கம்பளியிலிருந்தும் தோன்றுவதாக  பலர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கையில் மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியலை ஓவியங்களில் ஆவணப்படுத்தினார். 

 மரியா உலகின் பல அறிவியல் அறிஞர்களுடன் தொடர்பில் இருந்தார். அவரது படைப்புக்கள் பலநாடுகளின் நூலகங்களில் பெருமைக்குரிய சேகரிப்பாக காட்சிப்படுத்தப்பட்டன. ஜெர்மனியின் மிகப்புகழ் பெற்ற கவிஞரும், பூச்சிகளின் வளர்சிதை மாற்றம் குறித்த ஆர்வம் கொண்டிருந்தவருமான  கோத்தி (Goethe) மரியாவை கலைக்கும் அறிவியலுக்குமிடையில் வண்ணமயமாக பயணித்தார் என்று புகழ்கிறார்.

 17ம் நூற்றாண்டில் பெண்கள் எளிதில் செய்துவிடமுடியாத துணிச்சலான பலவற்றை செய்தவரும் அசாதாரணமான அறிவியல் படைப்புக்களை உருவாக்கியவருமான மரியாவின் படைப்புகளின் முக்கியத்துவத்தை அந்த நூற்றாண்டில் பலரறிந்திருகக்வில்லை  

மரியா  ஓவியங்களை வரைய துவங்கி இருக்கையில் அவரது ஓவியங்களில் இருந்த பல பட்டாம்பூச்சிகள் இனம் காணப்பட்டிருக்கவில்லை. மரியாவிற்கு பூச்சிகளை இனங்கண்டு வகைப்படுத்தலில் ஆர்வமில்லை அவரே ஒருமுறை சொன்னது போல அவை எப்படி உருவாகி உருமாறி வாழ்வை முழுமை செய்கின்றன என்பதில்தான் ஆர்வமிருந்தது.  வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் பிற்பாடு மரியாவின் பல படைப்புக்களை பூச்சிகளின் வகைப்பாட்டின்போது உதவியாக வைத்துக்கொண்டார்.  

ஜெர்மானிய விலங்கியலாளர்  Ernst Haeckel  சூழலியல் என்று பொருள்படும்  Oecologie என்னும் சொல்லிலிருந்து ecology என்னும் சொல்லை உருவாக்கியதற்கு இரு  நூற்றாண்டுகள் முன்னரே மரியா சூழலியல் தொடர்புடைய பல நூறு ஓவியங்களை வரைந்திருந்தார்

 பல ஓவியங்களில் மரியா உணவுச்சங்கிலியையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். 

Metamorphosis நூலின் 18 வது ஓவியத்தில் ஒரு கொய்யா மரத்தின் இலைகளை எறும்புகளும், இலை வெட்டும் பூச்சிகளும் கடித்து தின்றுகொண்டு, தண்டில் ஏறிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில எறும்புகள், சிறு சிலந்தியொன்று, ஒரு கரப்பான்பூச்சியின் அருகில் ஒரு டாரன்டுலா சிலந்தி ஒரு தேன்சிட்டுவை தின்று கொண்டிருக்கிறது,  சினைப்பையுடன் ஒரு டாரண்டுலாவும் காணப்படுகிறது. 

உயிரினங்களின் வாழ்விற்கான போராட்டத்தை,  சார்லஸ் டார்வின் தனது   Origin of Species, வெளியிடுவதற்கு 150 வருடங்களுக்கு முன்னரே மரியா  தனது படைப்புகளில் விவரித்திருந்தார்.

1670 ல் அவர் வெளியிட்ட கேட்டர்பில்லர் நூலில் ஆண் பெண் பட்டாம்பூச்சிகள் கூடி முட்டை இட்டு புழுக்கள் உருவாகின்றன என்பதை முதன்முதலில் எழுதி ஆவணப்படுத்தி இருந்தார்.

மரியாவின் படைப்புகள் பிற அறிவியல் படைப்புகளில் இருந்து மிகவும் வேறுபட்டிருந்தன. உதாரணமாக வாழைமரத்தின் ஓவியத்தில் அவர் அதன் தாவரவியல் பண்புகளுடன் வாழைப்பழத்தின் சுவையையும் விவரித்திருந்தார். ஐரோப்பா அதுவரை அத்தகைய படைப்புகளை கண்டிருக்கதில்லை.

 பனையின் வேரை வெட்டி வேகவைத்து உண்ணலாம் என்னும் குறிப்புடன், அவை ஆர்டிசோக்குகளின் மையப்பகுதியை காட்டிலும் சுவையானவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பல ஓவியங்களில்  தாவரங்களின் மருத்துவ இயல்புகளையும் மரியா குறிப்பிட்டிருக்கிறார்.  

1715ல் பக்கவாதம் தாக்கி உடலின் ஒரு பாகம் செயலிழந்தது, அந்நிலையிலும் மரியா ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார்.

மரியாவிற்கு இரு மகள்கள் ஜொஹானா மற்றும் டோரதியா (Johanna Helena Herolt Graff&    Dorotea Maria Hendriks Graff).மரியாவின் மகளான  ஜொஹானாவும் மிகப்புகழ்பெற்ற ஓவியர். ஜொஹானாவின் பல படைப்புகளில் அவளது தாயின் கையெழுத்தையும் காணலாம்’

மரியா ஜனவரி 13, 1717 ல் அவரது 70 வது பிறந்த நாளுக்கு முன்னர் இறந்த போது அவரது இறப்புச்சடங்கிற்கு வந்திருந்த  ரஷ்யப் பேரரசர் முதலாம்  பீட்டர் அலெக்சியேவிச் ரொமானோவின் தூதுவர் மரியாவின் வீட்டில் மீதமிருந்த வண்ணக்கலவைகளை பெரும் விலைக்கு பெற்றுக்கொண்டார்.

மரியாவின் இறப்புக்கு முன்னரே அவரது படைப்புகளில்  ரஷ்ய பேரரசர் பீட்டர் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது மறைவுக்குபின்னர் அவரது மீதமிருந்த பெரும்பாலான படைப்புக்களை அவரே பெருவிலை கொடுத்து வாங்கிக்கொண்டார்.  

மரியா இறந்தபின்னர் St. Petersburgல் அவரால் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தில்  ஓவியரான டோரதியாவின் கணவர் ஜார்ஜுக்கு (Georg Gsell) நல்ல பதவியளித்து அரசவை ஓவியராகவும் வைத்துக்கொண்டார். டோரதியாவும் அங்கேயே பின்னர் வாழ்ந்தார்.

மிக சிறப்பான படைப்பாளியாக இருந்தும் உலகால் அங்கீகரிக்கப்படாத ஜேகப் மரணப்படுக்கையில் இருக்கையில் ’’இல்லை நான் முற்றிலும் உலகால் மறக்கப் படமாட்டேன், நான்தான் மரியாவின் தந்தை என உலகம் என்னை நிச்சயம் ஒரு நாள் கொண்டாடும்’’ என்றார், மரியா ஜேகப்பை காட்டிலும் பிரபலமானார்.

மரியாவின் caterpillars நூலின் மூன்றாவது  தொகுப்பை மரியாவின் மறைவுக்கு பின்னர் டோரதியா வெளியிட்டார். அவரது metamorphosis நூல் 18 ம் நூற்றாண்டில் பல  மறுபதிப்புக்கள் வெளியாகி அவர் பெயரை  உலகெங்கும் பரப்பின

சிறப்புக்கள்

மரியாவின்றப்புக்கு வெகுகாலம் கழித்தே அவரது படைப்புக்களின்  முக்கியத்துவம் உலகால் அறியப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில்தான் மரியாவின் படைப்புகள் மீண்டும்  உலகின் கவனத்துக்கு வந்தன. அவரது பல படைப்புகள் அப்போது சிறப்பு செய்யப்பட்டன

  • 1905ல்  Opsiphanes cassina meriana என்னும் பட்டாம்பூச்சியும் 1967ல்  பட்டாம்பூச்சியின் துணை சிற்றினமொன்றிற்கும் postman butterfly Heliconius melpomene meriana; என்றும் மரியாவின் பெயரிடப்பட்டது.
  • க்யூபாவின் ஒரு அந்துபூச்சிக்கு  Erinnyis merianae என்றும் ஒரு  வண்ணமயமான வண்டினத்துக்கு  Plisthenes merianae என்றும் பெயரிடஒபட்டது. 
  • கும்பிடு  பூச்சியின் பேரினமொன்று  Sibylla என்றும், ஆர்கிட் வண்டினமொன்று Eulaema meriana என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.
  • Argentine black and white tegu (Salvator merianae), என்னும் வளர்ப்பு பிராணியாக வளர்க்கப்படும் பெரிய பல்லி வகைக்கும் அவரது பெயரடிப்பட்டிருக்கிறது.
  • மரியாவின் சிலந்திகள் குறித்த படைப்புகளை சிறப்பிக்கும் பொருட்டு  பறவைகளை பிடித்து உண்ணும் சிலந்தியொன்றிற்கு  Avicularia merianae  என்று பெயரிடப்பட்டது.
  • 2017ல் மற்றுமொரு சிலந்தி Metellina merianae என்று அவர் பெயரிடப்பட்டது 
  • ஒரு தேரை  Rhinella merianae என்றும் ஒரு நத்தை Coquandiella meriana  என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றன
  • ஆப்பிரிக சிறு பறவையினம் இன்றிற்கு Saxicola torquatus sibilla.   எனப்பெயரிடப்பட்டிருக்கிறது.
  • ஒரு தாவர பேரினத்துக்கு  Meriania எனவும், ஒரு தாவர சிற்றினம் Watsonia meriana   எனவும் பெயரிடப்பட்டது.
  • 2009  வெளியான The Year of th Flood   என்னும் நாவலில் மரியா ஒரு துறவியாக காட்டப்பட்டிருந்தார்.
  • மரியாவின் உருவப்படம் ஜெர்மனியின் 500 DM நோட்டில் சித்தரிக்கப்பட்டது
  • அதுபோலவே  0.40 DM தபால் தலையில் அவரது உருவப்படம் சித்தரிக்கப்பட்டு செப்டம்பர் 17 1987ல் வெளியிடப்பட்டது. மரியாவின் பெயரில்  ஐரோப்பாவில் பல பள்ளிகள் இருக்கின்றன,
  • மொசார்ட்டின் கச்சேரிகளில் இசைக்கருவிகளில் மரியாவின் மலரோவியங்கள் சித்தரிக்கப்பட்டன.
  • 2008ல்  பனாமாவின் அரிய கருப்பு பட்டாம்பூச்சியொன்றிற்கு Catasticta sibyllae  பெயரிடப்பட்டது.
  • 2013, ஏப்ரல் 2 ம் தேதி மரியாவின் 366 வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் அவரது  பூச்சிகள், பல்லிகள் தாவரங்களின் ஓவியங்களிலேயே கூகுள் என வடிவமைத்து சிறப்பித்திருந்தது .
  • ஜெர்மெனியின் இரண்டாவது  பெரிய நவீனமயமாக்கபப்ட்ட ஆய்வுக்கப்பலுக்கு   மரியாவை கெளரவப்படுத்தும் விதமாக  RV Maria S. Merian  என்று பெயரிடப்பட்டது
  • 2016ல் மரியாவின், Merian’s Metamorphosis insectorum Surinamensium  மறு பிரசுரம் செய்யபட்டது.
  • 2017ல்  மரியாவின் ஓவியங்கள் குறித்த ஒரு கருத்தரங்கு ஆம்ஸ்டர்டாமில் நிகழ்ந்தது 
  • மார்ச் 2017ல்,  ஓஹியோவின் Lloyd நூலகம் மற்றும்   அருங்காட்சியகத்தில்  மரியாவின் பல ஓவியங்களின் முப்பரிணாம  கண்காட்சியையும், பாடம் செய்யப்பட்ட பல பூச்சிகளின் கண்காட்சியையும்  ஏற்பாடு செய்திருந்தது
  • நியூயார்க் டைம்ஸின் 2017 ஜனவரி இதழில் மரியா உலகின் முதன் முதலாக பூச்சிகளை அவற்றின் வாழிடம் உணவு ஆகியவற்றுடன் வரைந்து ஒரு கூட்டு சூழலியல் தொகுப்பாக ஓவியங்களை வரைந்த முதல் ஆளுமை என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது

மரியா அசாதாரணமான , மிக ஆர்வமுள்ள, அதிபுத்திசாலியான சுயசார்புள்ள பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார்.

மரியா உயிரனங்களுக்கான தொடர்புகளை ஆவணப்படுத்திய முதல் அறிஞரும் கலைஞருமாவார் 

அப்போது உருவாகி இருக்காத சூழலியல் துறையை நிறுவியவரகவும் மரியாவே கருதப்படுகிறார் ஏனெனில் மரியாவின் ஓவியங்கள் உணவுச்சங்கிலி, உயிரினங்களின் ஒன்றுடன் ஒன்றான தொடர்பு, எவ்வாறு அவற்றின் வாழிடம் அவற்றின் வாழ்க்கையில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது, எப்படி வாழ்விற்கான போராட்டத்தில் வலியவை வெல்கின்றன ஆகியவற்றை  காட்டுகின்றன. இவற்றின் தொகுப்பைத்தான்  இப்போது சூழலியல் என்கிறோம்

 உயிரற்றவைகளிலிருந்து தானாகவே உயிரினங்கள் தோன்றுகின்றன என்னும் கருதுகோளை முதலில் பொய்ப்பித்தவரும் மரியாதான்.

அறிவியலை தங்களது பாதையாக தீர்மானம் செய்யும் பெண்கள் மரியாவை முன்னோடியாக கொள்ளலாம், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பாதையேதும் இல்லாத பிரதேசங்களில் மரியா புதிய பாதைகளையும், அறிவியலுக்கும் கலைக்குமிடையேயான பாலங்களையும் உருவாக்கினார் பூச்சியியலுக்கும் தாவரவியலுக்குமான  தொடர்புகளை கண்டறிந்து ஆவணப்படுத்தினார்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆர்டிஸ் லைப்ரரி அருங்காட்சியங்களில்  லின்னேயஸ், அரிஸ்டாட்டில், சார்லஸ் டார்வின் உள்ளிட்ட 35 ஆண் அறிஞர்களின் படைப்புக்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்களில்  M.S.Merian என்னும் பெயரைப்பார்த்தால் கூர்ந்து கவனியுங்கள்,  அறிவியல் வரலாற்றில் மரியா விட்டுச்சென்றிருக்கும் வண்ணச்சுவடுகள் அதில் இருக்கும்.

கீரைகளின் அரசி- பரட்டைக்கீரை

நுண்சத்துக்களும் வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்து, குறைவான கலோரிகளே உள்ள பச்சைக்கீரைகள் நம் ஆரோக்கிய உணவில் மிக முக்கியமான இடம்பெற்றிருப்பவை. கீரைகளை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ளுவது உடற்பருமனை குறைக்கவும், இதயப்பதுகாப்புக்கும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மிகவும் உதவும்

உலகின் சத்து நிறைந்த 100 உணவுகளின் பட்டியலில் முதல் பத்தில் இருக்கும் (Kale) கேல் எனப்படும் கீரை தற்போது உலகின் ஆரோக்கிய உணவுக்கான தேடலில் இருப்போரின் புதிய விருப்பக்கீரையாகி விட்டிருக்கிறது. முட்டைகோஸ். காலி ஃப்ளவர், பச்சைபூக்கோசு ஆகியவற்றின் அதே பிரேஸிக்கேசி குடும்பத்தை சேர்ந்தவை இக்கீரைகளும். இவற்றில் ஊதா, இளம் பச்சை, அடர்பச்சை, சிவப்பு, மண் நிறம், என பல நிறங்களும், இலைகள் சுருண்டவை, நேரானவை, மென்மையானவை என பல வகைகளும் உள்ளது. சுருண்ட கேசம்போன்ற இலைகளின் தோற்றத்தினாலேயே பரட்டைக்கீரை எனப்படுகின்ற இக்கீரை இதில் நிறைந்துள்ள சத்துக்களால் கீரைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.  

  இதன் பூர்வீகம் ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளாகும். புதராக வளரும் செடிகளின் நடுப்பகுதியில் காணப்படும் இலைகளைத் தவிர்த்து மற்றவை அறுவடை செய்யப்படுகிறது. சுமார் கி.பி நான்காம் நூற்றாண்டிலேயே கிரேக்க நாட்டில் இக்கீரையை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை பண்டைய ரோம் பகுதியிலும் அதிகம் காணப்பட்டிருக்கிறது.  இக்கீரையை கனடா நாட்டினருக்கு ரஷிய வணிகர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டிலேயே  உலகெங்கும் உணவில் அறிமுகபடுத்தும் பொருட்டு இவை சாகுபடி செய்யபட்டதென்றாலும் இப்போதுதான் இவை பெருமளவில் பயன்பாட்டில் இருக்கின்றன

இதன் பலவகைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் வகைகளின் தாவர அறிவியல் பெயர்கள்

  • Brassica oleracea ssp. acephala group
  • Brassica oleracea var. sabellica-சுருண்ட இலைகளைக்கொண்டது
  • Brassica oleracea var. palmifolia
  • Brassica oleracea var. ramosa
  • Brassica oleracea var. costata
  • B. napus ssp. napus var. pabularia

உலகெங்கிலும் இப்போது இக்கீரை பரவலாக சந்தைப்படுத்தப்பட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்டும் வருகின்றது

அதிகம் சந்தைகளில் கிடைக்கும் பரட்டைக்கீரையின் வகைகள்

  • சுருட்டையான இலைகளுல்லவை
  • அடர்ந்த புதர் போற இலைகளுள்ளவை
  • அகன்ற மிருதுவான இலைப்பரப்புளவை
  •  இறகுபோல அமைப்புள்ளவை

ஒரு கோப்பை பரட்டைக்கீரையில் விட்டமின் K, A, C, B1, B2, B3, B6, கால்சியம் மேங்கனீஸ், மெக்னீஷியம், காப்பர், பொட்டாஸியம், இரும்புச்சத்து, ஆகியவையும், லியூட்டின், பீட்டா கரோட்டின், புரதம் கார்போஹைட்ரேட்டுகளும் லினோலெனிக் அமிலமும் நிறைந்திருகின்றன. ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகளான  க்யூசெர்டின் மற்றும் கேம்ஃபிராலும் இதில் செறிந்து காணப்படுகின்றது.. ஈரல் செயலிழப்பு,  வைரஸ் தொற்று ஆகியவற்றுக்கு எதிராக இக்கீரை சிறப்பாக செயல்படுகின்றது.சல்ஃபரோபேன் நிறைந்துள்ளதால் இது புற்றுநோயை தடுக்கும்.

இக்கீரையில் ஒரு முழு ஆரஞ்சில் இருப்பதைக்காட்டிலும் அதிகமான் அளவில் வைட்டமின் C இருக்கிறது.  இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி, LDL எனபடும் கெட்ட கொழுப்பை பெருமளவில் குறைக்கும். இரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் K இதில் மிக அதிகம் உள்ளது. இதிலிருக்கும் அதிக மெக்னீஷியம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றது. கண்பார்வை குறைபாட்டை தடுக்கும் லூயிட்டினும் ஜியாஸேந்தினும் இதில் நிறந்து உள்ளன. நீர்ச்சத்தும் மிகுந்திருக்கின்றது

கீரைகளை நீரில் கொதிக்க வைத்து வேகவைக்கும்போது நுண்சத்துக்கள் பெருமளவில் அழிந்துவிடுவதால் நீராவியில் வேக வைத்து சாப்பிடலாம் அப்போது இதன் கொழுப்பை குறைக்கும் தன்மை மிக அதிகமாகிவிடுகிறது. சமைக்காமல் பச்சையாக சாலட்டுகளிலும், மைக்ரோவேவில் சமைத்தும் சாப்பிடுவது இன்னும் சிறப்பான பலன்களை அளிக்கும். 

சமைக்கையில் கெட்டியான தண்டுப்பகுதியையும், நார் நிறைந்து கடினமாக இருக்கும் நடு நரம்பையும் நீக்கிவிடுவது நல்லது

விதைகளிலிருந்து உருவாக்கப்படும் இக்கீரை மிக விரைவாக வளர்ந்துவிடும். உலகின் பல்வேறு நாடுகளிலும் இக்கீரை விரும்பப்பட்டாலும், இந்தியர்கள் கசப்பு சுவையுள்ள கீரைகளை விலக்கும் மனப்பான்மையுள்ளவர்களாகையால் இந்தியாவில் இதன் சாகுபடியும் பயன்பாடும் மிகக்குறைவாகவே இருக்கிறது.

 அமெரிக்காவில் இக்கீரையை அறிமுகப்படுத்திய பெருமை டேவிட் ஃபேர் சைல்ட் (David Fairchild) என்னும் தாவரவியலாளரையே சேரும்., அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ஜார்ஜியா, நியூ ஜெர்சி மற்றும் டெக்ஸாஸில் சுமார் 7500ஏக்கர்களிலான் பண்ணைகளில் இக்கீரைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. கேலின் உண்ணும் கீரை வகைகளோடு  அலங்காரச்செடி வகைகளும் அமெரிக்காவில் பரவலாக விரும்பப்படுகின்றது கீரைகளை தேர்வு செய்கையில் உறுதியான, உடையும் இலைகளும், ஈரமான நல்ல நிறத்தில் இருக்கும் தண்டும் இருப்பதாக பார்க்கவேண்டும்.

உடையாள், பெருந்தொற்றுக்கால வாசிப்பை குறித்து!

உடையாளில் ஜெ சொல்லிக்கொண்டு வரும் நுண்ணுயிர் மற்றும் தாவர அறிவியல் தகவல்களைக்குறித்து நான் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். தினமும் 9-4 மணிவரை இருக்கும் ஆன்லைன் வகுப்புக்கள். அதைக்காட்டிலும் அதிகமாக சமயம் எடுத்துக்கொள்ளும் அவற்றிற்கான முன் தயாரிப்புக்கள் என்று நாள் முழுவதுமே இதிலேயே தீர்ந்து போய்விடுகின்றது. உடையாள் காட்டும் மகரந்தசேர்க்கை, விதை முளைத்தல் உள்ளிட்ட பல தாவரஅறிவியல் தகவல்கள், புறக்காரணிகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நுண்ணியிர்களின் வளர்ச்சி போன்ற மிகச்சரியான அறிவியல் தகவல்களை குறித்தெல்லாம் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்

 ஜெ சொல்லி இருப்பது போலவே பசைபோன்ற சுரப்புக்களினால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பேக்டீரியாக்கள் திண்டு போல, முடிச்சுபோல கொத்துக்களாக காணப்படு்ம். Stromatolites பாறைகள் எனப்படுபவை மிகச்சரியாக அப்படி பசையினால் பலகோடி வருடங்களுக்கு முன்பு ஒன்றாக திரண்டு அடுக்கடுக்கான பாறைகளைப்போல இறுகியிருக்கும் நீலப்பச்சை பேக்டீரியக்காலனிகள்தான். Stromatolites என்றாலே கிரேக்க மொழியில் அடுக்குப்பாறைகள் என்றுதான் பொருள்

இவற்றிலிருக்கும் பேக்டீரியாக்கள் மற்ற பேக்டீரியாக்களை போலல்லாமல் பச்சையம் கொண்டிருக்கும், சூரியஒளியைக்கொண்டு ஒளிச்சேர்க்கை மூலம் உணவை தாவரங்களைப்போலவே தயாரிக்கவும் செய்யும் (Photosynthetic cyanoBacteria) உடையாளில் சொல்லி இருப்பது போலவே இப்படிமப்பாறைகள் மிக மிகமெதுவாக வளர்ந்திருக்கின்றன, 1 மைக்ரான் தடிமன் வளரவே 2000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

மனிதஇனம் தோன்றும் முன்னரே உருவாகியிருந்த இவற்றினால்தான் அப்போது 1 சதவீதம் மட்டுமே இருந்த ஆக்சிஜன் 20 சதவீதமாக அதிகரித்து மனித இனம் உள்ளிட்ட பிற உயிர்கள் தோன்றவும் காரணமாக இருந்திருக்கின்றது. இப்போது இவை பெருமளவில் அழிந்துபோய்விட்டன. இப்படிமப்பாறைகளில் உயிருடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பேக்டீரியாக்கள் இருப்பவை பஹாமா தீவுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் மட்டும்தான் இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் இந்த படிம பேக்டீரியாப்பாறைகள் இருக்கும் அதி உப்புநீர்நிலையான Hamelin Pool – பகுதி யுனஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இதைப்போலவே biofilms எனபப்டும் பேக்டீரியாக்களின் கூட்டத்தையும் நாம் கண்களால் காணமுடியும். உதாரணமாக அதிவெப்பத்திலும் உயிர்வாழும் thermophilic பேக்டீரியாகள் வெந்நீர் ஊற்றுக்களில் கூட்டம் கூட்டமாக காணப்படும். அமெரிக்காவின் Yellow stone மற்றும் Oregon னின் வெந்நீர் ஊற்றுக்களில் இப்படியான பேக்டீரியாக்களின் காலனிகள் அழுத்தமான மஞ்சள் பச்சை சிவப்பு என பல வண்ணங்களில் நீர்நிலைகளின் அடியிலும், கரைகளிலும் படிந்திருப்பதை பார்க்கலாம்.

உடையாளில் சொல்லி இருப்பதைப்போல ஒரு குறிப்பிட்ட சூழலில் இருக்கும் சத்துக்களை நுண்ணுயிரிகள் எடுத்துக்கொள்ள கையாளும் பல்வேறு வழிமுறைகளை ecological niche என்கிறது அறிவியல்.

ஆய்வகங்களிலும் பெட்ரி தட்டுக்களில் பேக்டீரி்யாக்கள் பல நிறங்களில் பல வடிவங்களில் திட்டுக்கள் போல் கூட்டமாக வளர்வதை சாதாரணமாக பார்க்கலாம்.

ஒளிச்சேர்க்கை செய்யும் திறனுள்ள பேக்டீரியாக்களைப் போலவே தன்னுடலில் இருக்கும் சில குறிப்பிட்ட காந்தத்தன்மையுடைய நுண்சத்துக்களை குட்டி காம்பஸ்களைபோல உபயோகித்து பூமியின் காந்தப்புலனை கண்டறிந்து அதில் போய் அப்பிக்கொள்ளும் magnetic bacteria’க்களும் கூட உள்ளன.

ஜனனி, ஜெனி போன்ற பெயர்களின் பொருளைக்குறித்தும் ஆவலாக வாசித்து குறிப்பெடுத்து வைத்தேன். எனக்கு இதில் தனித்த ஆர்வமுண்டு. சமீபத்தில் தாவரப்பெயர்களின் etymology குறித்தான உரையின் பொருட்டு கிரேக்க லத்தீன் தாவரப்பெயர்களில் மாறாத பொருளுள்ளவற்றை மட்டும், Alba என்றல் வெள்ளை nigrum என்றால் கருமை இப்படி, ஒரு நீண்ட பட்டியலாக தொகுத்து வைத்திருக்கிறேன்.

உடையாளில் ஜெ சொல்லிக்கொண்டு வரும் எல்லாமே நுண்ணுயிரியல் சொல்லும் உண்மைகள்தான். நான் இப்போது Bacteriology மற்றும் Virology பாடங்களைத்தான் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்

ஆய்வகங்களில் பேக்டிரியாக்களை வளர்க்கும் ஊடகத்தை தயாரிப்பதோ அல்லது நுண்ணுயிர்கள் வளரும் Micro environment குறித்தோ சொல்லுகையில் அவை எல்லாமே உடையாளில் இருப்பதை நினைத்துக்கொள்ளுகிறேன். தினமும் இந்த வகுப்பெடுக்கும் முன்பாக இன்னொரு முறை உடையாளை வாசித்துவிடுகிறேன்.

//மரத்தின் இலைகள் மிக அதிகமாக சூரிய ஒளியை பெறும்படி வடிவம் கொண்டவை. மரத்தின் இலைகளில் காற்று மிக அதிகமாகப் படும்// ஆம் இது தாவரவியலின் அற்புதங்களில் ஓன்று.

Phyllotaxy எனப்படும் தண்டுகளின் மீது இலைகள் எப்போதுமே சூரிய ஒளி படும்படியே அமைந்திருக்கும் இலையமைப்பை நான் மாணவர்களுக்கு நேரில் செடிகளை மரங்களை காட்டி கற்றுக்கொடுப்பேன். குப்பை மேனியின் இலையமைப்பை பார்த்தால் அத்தனை அழகாக இருக்கும் இலைக்காம்புகளின் நீளத்தை தேவைக்கேற்ப கூட்டியும் குறைத்தும் ஒரு பச்சைப்பூங்கொத்தைப்போல சூரியனை நோக்கியே எல்லா இலைகளையும் காட்டிக்கொண்டிருக்கும் அது.

பெருகவேண்டும் என்னும் துடிப்பான ’திருஷ்ணை’யை பற்றி சொல்லி இருக்கிறீர்கள். வைரஸின் திருஷ்ணையை குறித்து அறிகையில் ஆச்சர்யமாகவும் பயமாகவும் கூட இருக்கிறது. சாதாரண நுண்ணோக்கியால் கூட காணமுடியாத மிகச்சிறிய உயிரி்யான அதன் கொடூர புத்திசாலித்தனம் அச்சமூட்டுகிறது உண்மையில்.

கதையின் இறுதியில் ஜெ குறிப்பிட்டிருக்கும் தாவரங்களையும் விலங்குகளையும் இணைக்கும் கற்பனை வெகு சுவாரஸ்யம். Plantibodies என்பது அப்படியான தாவரங்களிலிருந்து நேரடியாக எதிர்ப்புசக்தியை நாம் பெற்றுக்கொள்ளும் ஒரு முயற்சிதான். ஒரு விறுவிறுப்பான் ஹாலிவுட் திரைப்படம் போலிருக்கிறது உடையாள்.

https://youtube.com/watch?v=EDkR2HIlEbc%3Ffeature%3Doembed

2019ல் வெளியான Fantastic Fungi என்னும் தாவரவியலாளர்களும் இ்ணைந்து தயாரித்திருக்கும் மிக நல்ல படத்தை முடிந்தால் பாருங்கள். பலகோடியாண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்கும் நுண்ணுயிரிகளான பூஞ்சைகளின் உலகை அத்தனை அழகாக காட்டியிருக்கிறார்கள். உடையாள் வாசிப்பவர்கள் இந்தப்படத்தை பார்ப்பது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

Symbiont என்பதற்கு ’’ஒத்துயிர்’’ என்பது மிகச்சரியான சொல். மாணவர்களுக்கு இதை சொல்லிவிட்டேன்.

உடையாளைப்பற்றி எழுத இன்னும் ஏராளம் இருக்கின்றது

தாவரக்குருடு

காக்கை கூடு பதிப்பகம் சமீபத்தில் ‘செங்கால் நாரை விருது’க்கான போட்டியை அறிவித்து இருந்தது! அவற்றில் முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்ட சுற்றுச் சூழல் சார்ந்த எனது கட்டுரை:

நம் தேவைகளுக்கான தாவரங்களை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்காததே தாவரக் குருடாகும்! நம்மை சுற்றியுள்ள தாவரங்கள், மரங்களை கவனிக்காதது, நமக்கும் அவற்றுக்குமான உறவை உணராமல் அழிப்பது! இவற்றை பயன்படுத்தாமலும், பாதுகாக்காமலும் வாழ்ந்து மடிகிறோம். இதை அறிந்தால், அரிய நன்மைகள்! 

உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தைத்தான் இந்தியா கொண்டிருக்கிறது எனினும்   இங்கு மட்டுமே  47,513 தாவர வகைகள் இருக்கின்றன. அதாவது உலகில் இதுவரை அறியப்பட்ட சுமார் 0.4 மில்லியன் தாவரங்களில், 11.4% இந்தியாவில் இருக்கின்றது.இவற்றில் 28% இந்தியாவில் மட்டுமே காணப்படும் எண்டெமிக் வகையை சேர்ந்தவை.

உலகின் மலரும் வகை தாவரங்களில் 6% இந்தியாவில் இருக்கிறது.  பலவகையான அரிய தாவரங்களை கொண்டிருப்பதால் உலகின் மூலிகைப் பூங்கா என்று அழைக்கப்படும் இந்தியாவின் வளங்களிலிருந்து  பல தாவரங்களை  கடந்த காலங்களில் முழுவதுமாக இழந்திருக்கிறோம் மேலும் பல அரிய தாவரங்கள்  மிக வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன.

நகரமயமாக்கல், காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாவது சுரங்கங்கள் உள்ளிட்ட காரணங்களினால் மட்டுமல்லாது தாவரகுருடினாலும் இவை அழியும் அபாயத்தில் இருக்கின்றன

கடந்த மாதம் NBR  எனப்படும் நீலகிரி உயிர்கோளத்தின் அரிய தாவரங்களை குறித்த ஆய்வுக்காக சென்றிருக்கையில் நீலகிரி மலைப்பாதை ஒரு பிரமுகரின் வரவுக்கென தூய்மைப் படுத்த பட்டுக்கொண்டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் இருந்த புதர்ச்செடிகள் மற்றும் சிறுசெடிகளனைத்தும் இயந்திரங்களால் அப்புறப்படுத்தப்பட்டன. இந்தியாவெங்கிலும் இப்படி பலநூறு தாவரங்கள்  தூய்மைப்படுத்துதல் என்னும் பெயரில் நிரந்தரமாக அழிக்கப்படுகின்றன.

அழிக்கப்படும் அரிய மூலிகைத் தாவரங்கள்!

அப்படி அகற்றப்படும் பல்லாயிரக்கணக்கான சிறு செடிகளில்   இன்னும் கண்டுபிடித்திருக்க பட்டிருக்காத புற்றுநோய்க்கான மருந்தளிப்பவைகளோ கொரோனா போன்ற பெருந்தொற்றிற்கு சிகிச்சையளிக்கும் மூலிகைகளோ இருக்கக்கூடும். மிகச்சாதாரணமாக சுற்றுப்புறங்களில் காணப்படும் நித்யகல்யாணி செடிகளிலிருந்துதான் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் பல மருந்துகள் கிடைக்கின்றன

பல வளர்ந்த நாடுகளில் களைச்செடிகள் அரசுடமையாக்க பட்டிருக்கின்றன. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் எந்த செடியையும் யாரும்  அனுமதியின்றி பறிக்கவோ, அகற்றவோ, பயன்படுத்தவோ முடியாது இப்படி கடுமையான சட்டங்கள் மூலம் தாவரங்கள் பாதுகாக்கப்படவேண்டிய வந்ததே தாவரக் குருட்டுத்தன்மையால்தான்.

ஜேம்ஸ் ஹெச்.வாண்டர்ஸி, எலிசபெத் சக்சீலர்

1999ல் தான்  J. H. Wandersee &  E. E. Schussler என்னும் இரு அமெரிக்க தாவரவியலாளர்களால் தாவர குருடு ’’plant blindness’’ என்னும் சொல் உருவாக்கப்பட்டது.

இப்போதைய விரைவான வாழ்க்கையில் நிலவோ மழையோ வெயிலோ நம்மை கடக்கும் சிறு பறவைகளோ எதையும் கவனிக்க நேரமில்லாதவர்களாகிப்போன நம்மில் பலரும் மிக நெருக்கடியான சாலை போக்குவரத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் போது கூட சாலையோரங்களில் நிழலும் குளிர்ச்சியும் அளிக்கும், அழகிய மலர்களுடன் கண்ணைக்கவரும் படி நின்றிருக்கும் பலவிதமான மரம், செடி கொடிகளை கவனிப்பதில்லை.

சாலை விரிவாக்கத்திற்காக காவு கொடுக்கப்படும் மரங்கள்!

சாலை விரிவாக்கத்தின் பேரில் பெருமரங்கள் இயந்திர ரம்பங்கள் கொண்டு வெட்டி அகற்றப் படுகையிலும் அங்கே சாலையை கடக்க காத்திருப்போர்  பல வருடங்கள் வளர்ந்து பயன் தந்து கொண்டிருந்த மரங்களை இழப்பதைக் குறித்தும், அங்கு நடப்பது  படுகொலைக்கு சமம் என்பதையும் உணர்வதில்லை. மரங்களும் உயிருள்ளவைதான்.அவை ரத்தம் பெருக்கி கதறுவதில்லை எனவே அவற்றை அழிப்பது யார் கவனத்துக்கும் வருவதில்லை.

கோடைக்காலங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு  காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கும் பலரில் ஒருவர் கூட பல நூறு மரங்கள் வெட்டப்படுகையில் அதை கண்டிக்க நினைப்பதில்லை. ஏனெனில் குடிநீருக்கும் மரங்களின் எண்ணிக்கைக்கும் இருக்கும் நேரடி தொடர்பு தெரியாத அளவிற்கு  தாவர குருடாக இருப்பதுதான்

தாவர குருடு என்பது நாம் முழுக்க முழுக்க நமது அடிப்படை தேவைகளுக்கு சார்ந்திருக்கும் தாவரங்களை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்காதது, நம்மை சுற்றி இருக்கும் தாவரங்களை கவனிக்காதது, முக்கியத்துவத்தை உணராமல் அழிப்பது, அவற்றை பாதுகாப்பதன் அவசியம் அறியாதது ஆகியவையே…!

நாமனைவரும் தெரிந்தும் தெரியாமலும் இயற்கையுடனான நமது தொடர்பை துண்டித்து கொண்டிருக்கிறோம். அடுக்கக வாழ்க்கையில் இயற்கையை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இல்லை. நவீனமய வாழ்வின் விசையால் இழுக்கப்படும் கிராமப்புற மனிதர்களுக்கும் இவற்றை அறிந்து கொள்ள அவகாசம் இருப்பதில்லை

நம் அன்றாட வாழ்வில் ஒரே ஒரு நாள் கூட உணவு, இருப்பிடம், மருந்து, குடிநீர், காற்று, போன்ற தாவரங்களினால் மட்டுமே கிடைக்கும் பயன்களை அனுபவிக்காமல் கழிவதில்லை. எனினும் அவற்றை குறித்த அறிவு நமக்கு இருப்பதே இல்லை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

பள்ளிக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியிலும் கூட ஆங்கில எழுத்துக்களுக்கு நம் தேசத்துக்கு சொந்தமான வேம்பும் மஞ்சளும்  அல்ல, ஆப்பிளும் கேரட்டும் தான் கற்றுக் கொடுக்கப் படுகிறது.  ஆனால் வெளிநாட்டவர் இந்திய இயல் தாவரங்களுக்கு பயன்பாட்டு உரிமம் வாங்கினால் வருந்துகிறோம் வழக்குத் தொடுக்கிறோம்.

நம் வீட்டை சுற்றி இருக்கும், நாம் அன்றாடம் காணும் தாவரங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க பெற்றோர்களும், இயற்கையுடன் நெருங்கின தொடர்பிலிருந்த முந்தைய தலைமுறையை சேர்ந்த வீட்டுப்பெரியவர்களும், பள்ளியை சுற்றி இருக்கும் மரம்,  செடி, கொடிகளை குறித்த அறிவை போதிக்க ஆசிரியர்களும் முன்வருவதில்லை.

கராத்தே, சிலம்பம், வாய்ப்பாட்டு, இசைக் கருவிகள், நடனம் பள்ளிப் பாடங்களுக்கான பிரத்யேக பயிற்சி என்று ஒரு நாளில் இரவு வரை பல சிறப்பு பயிற்சிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் முக்கிய தாவரங்களை, சில மூலிகைகளை, ஒரு சில மரங்களின் பெயர்களை, அவை மலரும் காலங்களை, அவற்றின் பயன்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பதில்லை. அவ்வப்போது இயற்கை நடைக்கு செல்ல அனுமதித்தால் அல்லது அழைத்துச் சென்றாலும் கூட போதும்.

நம்மை சுற்றியிருக்கும் மரங்களில் 10 பெயர்களையாவது தெரியுமாவென சுயசோதனை செய்து பார்த்தால், பலருக்கு தெரியவரும் தாங்கள் தாவரகுருடுகள் என்பது!

ஆனால்,  பலருக்கு விலங்குகளின் பெயர்கள் தெரிந்திருக்கிறது. குறிப்பாக நாய்களின் பல வகைகள் அவற்றின் விலை, அவை எந்த நாட்டை சேர்ந்தவை என்பதெல்லாம் தெரிந்திருக்கும். பலருக்கு பறவைகளை குறித்த அடிப்படை அறிவு இருக்கும் அதில் பலர் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால்  பெரும்பான்மையானோர் தாவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முன்வராதது தான் தாவரங்களின் அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது.

நகருதல், பல நிறம் கொண்டிருத்தல், வாலைக்குழைப்பது, கொஞ்சுவது, நம் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நம்மை மகிழ்விப்பது, வீட்டை பாதுகாப்பது போன்ற பலவற்றால் விலங்குகளை நாம் நேசிக்கிறோம் பாதுகாக்கிறோம்

வீட்டுத்தோட்டத்திலும், அலங்காரச்செடிகளாக வீட்டினுள்ளும் வெளியேவும் வளரும் தாவரங்கள், உணவு பயிர்கள் ஆகியவற்றை குறித்து அளவுக்கு தெரிந்திருக்கலாம் என்றாலும் காடுகளில் இருப்பவற்றையும்  மனிதர்களால் சாகுபடி செய்யப்படாத அரிய தாவரங்களையும், பழங்குடியினர் உணவுக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தும் எண்ணற்ற அரிய மூலிகைகளை குறித்தும் எதுவும் தெரியாது நகரத்து வாசிகளுக்கு.

உலகின் மிகச்சிறிய செடியான வுல்ஃபியா நம்மைச் சுற்றியுள்ள பல நீர்நிலைகளில் இருக்கிறது அவற்றை பாசிகள் என்று எண்ணி கடக்கிறோம். உலகின் மிகப்பெரிய மலரையும் மிகப்பெரிய மஞ்சரியையும் அறிந்துகொள்ளாமல் நம் குழந்தைகள் அடிப்படை கல்வியை தாண்டி உயர்கல்விக்கு செல்கிறார்கள்.

நீர்பரப்பில் பரந்து விரிந்து படர்ந்துள்ள பாசி! உள்படம் மஞ்சரி.

இந்த தாவர குருடு மனிதர்களுக்கு பழக்கப்பட்டு இயல்பான ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. மனித மூளை நகருகின்ற, பல வண்ணங்களில் இருப்பவற்றை உடனே அடையாளம் கண்டு கொள்கிறது. ஒரே நிறத்தில் பச்சைப் பெருக்கில்  அசையாமல் இருக்கும் தாவரங்களை அடுத்தபடியாகத்தான் மூளை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

ஓரிடத்தில்  நிலையாக இருப்பதால் தாவரங்கள் அலட்சியமாகவும், உயிரற்றவையெனவும் நினைக்கப்படுகின்றன. தாவரங்களும் வளர்கின்றன, நீரையும் உணவையும் தேடுகின்றன, உணவை சேமித்து வைக்கின்றன, காதல் செய்கின்றன, கருவுருகின்றன, சந்ததியை பெருக்குகின்றன.

இரண்டு தலைமுறைகள் முன்பு வரை தாவரங்கள் குறித்த அறிவு இத்தனை மோசமாக இல்லை அடிப்படை கல்வியில் மரங்கள், அவற்றின் சித்திரங்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

சிறார் நூல்களில் இயற்கையும் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. புலியும் அணிலும் கிளியும் குரங்குகளும், அவை  வாழும் காடும் மரங்களும் அவர்களுக்கான கதைகளில் இடம்பெற்றிருக்கும். சிறார் நூல்களின் பெயர்களே நிலவையும் காட்டையும் குறிக்கும் அம்புலிமாமா, அணில் அண்ணன் என்று இருக்கும்!

அவை இப்போது அடியோடு அழிந்து அதிபுனை கற்பனை கதாபாத்திரங்களான மாயாவிகள், இரும்பு மனிதர்கள் சிலந்தி மனிதர்கள் நிறைந்திருக்கும் கதைகளும் தொடர்களும்  இணைய விளையாட்டுக்களுமாக இயற்கையிலிருந்து விலகியிருக்கும் சிறார் உலகை யதார்த்த உலகிலிருந்தும் முற்றிலுமாக துண்டித்து விட்டிருக்கிறது.இயற்கை குறித்த அறிதலுக்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருக்கும் உலகில் வாழும் குழந்தைகளுக்கு தாவரங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்களே இல்லை.

செங்காந்தள் மலர்கள், செங்கால் நாரைகள்!

கரிய கண்களை உடைய விரால் மீன்கள், கனிகளை சிந்தி விளையாடும் மந்திகள், செங்கால் நாரைகள்,  செங்காந்தள் மலர்கள், மரங்கள் செடிகள் மலர்கள் என பலவகை உயிரினங்கள்  அப்போது அடிப்படை கல்வியிலேயே அறிமுகமாகி இருந்தன  எனவே அவற்றை குறித்து மேலதிகம் அறிந்து கொள்ளும் ஆர்வமும் குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டாகி இருந்தது

பொதுவில் காட்டுயிர் பாதுகாப்பென்று நிறைய பேசப்படுகின்றது ஆனால், காட்டுயிர் என்றதும் அனைவரும் நினைப்பதும் நம்புவதும் காட்டு விலங்குகளை மட்டும்தான். புலிகளை காப்பாற்ற வேண்டும், யானைகள் படுகொலையை தடுக்க வேண்டும், பறவைகளின் வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டும் … என்று பலர் குரல் கொடுக்கிறார்கள்! வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல அமைப்புகள் இருக்கின்றன. அவை, காப்பாற்றப்பட வேண்டியது மிக அவசியம் தான். ஆனால், காட்டுயிரென்பது அங்கிருக்கும் தாவரங்களும் தான் என்பதை நாம் உணர்வதில்லை!

காடுகளில் அழிந்து கொண்டு வரும் தாவரங்கள் குறித்தும், அரிய மூலிகைகளின் பாதுகாப்பு குறித்தும் அக்கறை கொள்ளும் அமைப்புகள் அதிகமில்லை.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் முழுக்காடும் பொன்னென மூங்கில் மலர்ந்திருந்தது. சாலையோரங்களில் அவற்றின் விளைந்த மூங்கிலரிசி மணிகள் கொட்டிக்கிடந்தது. ஆனால் அந்த வழியாக சென்ற  சுற்றுலாப் பயணிகள் அனைவரும் காடுகளின் விளிம்பில் தெரியும் யானைகளையும் மான்களையும் வியந்து கூச்சலிட்டு புகைப்படமெடுத்து கொண்டிருந்தனர்.

ஒரே ஒருவர் கூட அரிய மூங்கில் மலர்வை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.அந்த மூங்கில் மிகை மலர்வு எத்தனை அரியது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. 50 அல்லது 60 வருடங்கள் கழித்து ஒட்டுமொத்தமாக மலர்ந்து முற்றிலும் மூங்கில்கள்  அழியும் அரிதிலும் அரிய நிகழ்வு அது. அந்த மிகைமலர்வை அங்கிருந்த பலர் அவர்களின் வாழ்நாளில் மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் அரிது.  50 வருடங்கள் கழித்து அவர்களின் அடுத்த தலைமுறையினர் அந்த சாலை வழியாக வருகையில் மீண்டும் காண சாத்தியம் இருக்கிறது.

கண்ணைக் கவரும் அபூர்வமான மூங்கில் பூக்கள்!

இப்படி குறிப்பிட்ட இடைவெளியில் மலர்ந்து அழியும் மூங்கில்கள், 12 வருடங்களுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிகள் ஆகியவை எந்த குழப்பமும் இல்லாமல் மிகத்துல்லியமான காலக்கணக்குகளின் அடிப்படையில் அதே காலத்தில் மலரும் அதிசயத்தை வளரும் தலைமுறையினர் எத்தனை பேர் அறிந்து கொண்டிருக்கிறார்கள்?

தாவரங்களுக்கு ஒளிநாட்டக் கணக்குகளும் உண்டு. ஒவ்வொரு தாவரத்திற்கும் இந்த ஒளிநாட்டக் கணக்கு வேறுபடும். மிகுந்த ஒளிநாட்டமுடையவை, குறைந்த நாட்டமுடையவை, இவற்றுக்கிடையில் இருக்கும் மிகுதியும் குறைவும் இல்லாமல் மத்திம ஒளித்தேவை உள்ளவை என இவை வகைப்படுத்தப்படும். ஒளி, வெப்பம் மழை ஆகிய சமிக்ஞைகளை கொண்டு அவை இலைகளை உதிர்ப்பது, உறக்க நிலையில் இருப்பது, மலர்தல், கனி கொடுத்தல் ஆகியவற்றைக் காலக் கணக்கு பிசகாமல் செய்து வருகின்றன.  இரவிலும் நகரங்களில் எரிந்துகொண்டிருகும் விளக்குகளின் ஒளிமாசினால் இந்த கணக்கு பிறழ்கையில் தாவரங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பலவும் பெரும் குழப்பத்துக்குள்ளாகின்றன.

நெடுஞ்சாலைகளின் விளக்குகளின் எண்ணிக்கையை, ஒளியை கட்டுப்படுத்துதல், தேவையான இடங்களில் மட்டும் இரவு விளக்குகளை உபயோகித்தல் என்று இந்த ஒளிமசு தொடர்பான முறைப்படுத்தல்கள் சில நாடுகளில் துவங்கி இருக்கின்றன.நீர் மாசு, காற்று மாசு, நில மாசு என பல சூழல் மாசுபாடுகளை கவனித்து கவலைப்படும் உலகம் ஒளிமாசினால் தாவரங்களுக்கு ஏற்படும்  சிக்கல்களை பொருட்படுத்துவதில்லை.

அதிக ஒளி உமிழும் விளக்குகள் மரங்களை பாதிக்கவே செய்யும்!

ஆகாயத்தாமரை போன்ற நீர்வழித்தடங்களை ஆக்ரமிக்கும் களைகள்,  பார்த்தீனியம் போன்ற ஆக்ரமிப்பு நச்சுக்களைகள் பல்கிப்பெருகி பெரும் சூழல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.அதைக் குறித்த போதுமான அறிதல் இப்போது இல்லை.

சூழல் பாதுகாப்பில் மட்டுமல்லாது அன்றாடம் நாம் புழங்கும் கேசப்பராமரிப்பு சருமப்பாதுகாப்பு, நோய் சிகிச்சைகள் போன்றவற்றிலும்  இந்த தாவர குருடு பலவிதங்களில் நம்மை தவறாக வழிநடத்துகிறது. மஞ்சள் காமாலைக்கு மருந்து என சந்தைகளில் கிடைக்கும் மஞ்சல்கரிசலாங்கண்ணி அசல் மூலிகையல்ல, போலி மலைவல்லாரை, வல்லாரைக்கீரை என பயன்படுத்தப்படுகிறது,  தற்போது சூழலுக்கு புதிய அச்சுறுத்தல்களாகி இருக்கும் பொன்னாங்கண்ணி கீரை என விற்பனை செய்யப்படும் கழிவுநீரில் வளர்ந்து அந்நீரின் உலோக மாசுக்களை இலைகளில் சேமித்து வைத்திருக்கும்  சீமைப்பொன்னாங்கண்ணி, செழித்து வளர்ந்து வேகமாக நீர்நிலைகளை ஆக்ரமித்து வெறும் மணல் தடங்களாக மாற்றிக்கொண்டிருக்கும் நெய்வேலி காட்டாமணக்கு,  ஆகிய அயல் ஆக்ரமிப்பு தாவரங்களின் பரவலும்  உடனடி கவனம் கோருபவை.

கண்ணைக் கவரும் பூக்களுடன் அசோக மரம்! நெடிதுயர்ந்த நெட்டிலிங்க மரம்!

பலரால் அசோகமரமென்று அழைக்கப்பட்டு கொண்டிருப்பது அசோகமரமல்ல, அது நெட்டிலிங்கம் எனப்படும் போலி அசோகமரம். சரகா அசோகா என்னும் ஆரஞ்சு நிற மலர்க்கொத்துக்களை கொண்டிருக்கும் அழகிய மரமே அசோகம் என்பதையும் தெரிந்து கொள்ளாதவர்கள்  உண்டு!

நம்மை சுற்றி இருக்கும் பல தாவரங்களில் கடும் நஞ்சு கொண்டவையும் இருக்கின்றன.  ரைசின் என்னும் கடும்  நஞ்சு ஆமணக்கு கனிகளிலும், சிவப்பும் கறுப்புமாக அழகுடன் இருக்கும் குன்றிமணியில் ஏப்ரின் என்னும் கொடும் நஞ்சும் இருக்கிறது. பல கிராமப்புற குழந்தைகள் ஆண்டுதோறும் இவற்றை கடித்து சுவைத்து உயிரிழந்திருக்கிறார்கள் அல்லது உயிராபத்தை சந்திக்கிறார்கள்.

புலி யானை போன்றவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை தெரிந்து கொண்டிருக்கும் இப்போது பள்ளிக்கல்வியும் உயர்கல்வியும் கற்றுக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அழிந்துவரும் தாவர இனங்களில் ஒன்றையாவது தெரியுமா என்று சோதித்து பார்த்தால் தெரியும் இந்த தாவர குருடின் தீவிரத்தன்மை என்னவென்று.

காலநிலை மாற்றத்துக்கும் நீராதாரங்களுக்கும் உணவுப்பாதுகாப்புக்கும் மருந்துகளுக்கும் நமக்கிருக்கும் ஒரே ஆதாரம் தாவரங்களே.  அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது கவனிப்பதும் ஆராதிப்பதும் வழிபடுவதும்தான் இதிலிருந்து நிவாரணம் பெற ஒரே வழி

தொன்று தொட்டு மரத்தை வழிபடும் மகளிர்!

இதன் பொருட்டுத்தான் நம் முன்னோர்கள் திருமண சடங்கிலிருந்து பிறப்பு, இறப்பு சடங்குகள் வரை  தாவரங்களை முன்னிருத்தினர்.   தினசரி கோலமிடுகையிலேயே தாமரை  உள்ளிட்ட பல மலர்களின்  வடிவங்களை அமைக்கும் வழக்கமிருந்தது. கோடைக்கால நோய்களுக்கு எதிராக மூலிகைகளால் காப்புக் கட்டுவது, வேங்கைப்பாலில் பொட்டு வைப்பது,வேப்பிலையை அரைத்து பூசுவது, வேம்பையும், அரசையும் கடவுளாக வணங்குவது என்று சடங்குகள் வழியே தாவரங்களை அறிந்துகொள்ள எண்ணற்ற வழிகள் நமக்கிருந்தன. சடங்குகள் மெல்ல மெல்ல  மறைந்துபோகையில் இவற்றை அறிந்துகொள்வதும் நின்று போகின்றது.

தாவரங்களில் பாலினமுண்டு என்பதுவும் அவற்றில் ஆண் பெண் மரங்களும் மலர்களும் இணைந்தும் தனித்தும் இருப்பது பலருக்கு தெரியாது. ஆண் மரங்களை மலட்டுப்பெண் மரங்களென எண்ணி அவற்றை வெட்டியகற்றுபவர்களும் உண்டு!

சீமைக்கருவேலம் குறித்த பொது நல வழக்கொன்று சில வருடங்களுக்கு முன்னர் தொடுக்கப்பட்டது. தாவரவியலாளர்கள் சூழலியலாளர்கள் ஆகியோரிடம் அந்த வழக்கின் உண்மைத்தன்மை , அறிவியல் ஆதாரங்கள் ஆகியவை கேட்கப்படாமல் சீமைக்கருவேலங்களை வெட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அப்போது எது சீமை, எது நாட்டு மரமென்று தெரியாமல் பலநூறு நாட்டு கருவேல மரங்கள் வெட்டப்பட்ட கொடுமையும் நடந்தது!

ஊனுண்ணும் தாவரங்கள் தங்களது புரதசத்து குறைப்பாட்டை போக்க பூச்சிகளை பிடித்து உண்கின்றன, ஆண் மலர்களின் மகரந்தங்கள், சேர்க்கையின் பொருட்டு பெண் மலரை தேடி 20 கிமீ தூரம் வரை காற்றில் பயணிக்கும் என்னுமளவுக்கு ஆழமாக தாவரங்களை அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் தொட்டாசிணுங்கி தொடப்பட்டதும் உடனே எதிர்வினை ஆற்றுவதையாவது கவனித்து தாவரங்களும் நம்மைப்போலவே  புழு பூச்சிகளை, விலங்குகளைப்போல உயிருள்ளவைதான் என்று தெரிந்து கொள்ளலாம்

தற்போது தாவரங்களின் மீது ஈடுபாட்டுடன் இருப்பவர்களும், தாவரவியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்களும் தாவரங்களை நேசிப்பவர்களும் இயறகையோடு இணைந்த வாழ்வில் இருந்தவர்களாக இருப்பார்கள்.இன்னும் சிலருக்கு தாவரவியல் குறித்து  கற்பித்த  மிகச் சிறந்த ஆசிரியர்கள் கிடைத்திருப்பார்கள்.

அவற்றுடன் வாழ்ந்து அவற்றின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைக் குறித்து கவலைப்படவும் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை பாதுகாக்கவும் எண்ணுவார்கள். எனவேதான் சிறார்களின் உலகில் தாவரங்கள் இடம்பெறுவது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆரம்பக் கல்வியில் பிற துறைகளுக்கு ஈடாக நுண்ணுயிர்கள் தாவரங்கள் குறித்தும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்

தங்கள் குழந்தைகள் மருத்துவராக பொறியாளராக கணினி துறையில் வல்லுநராக வேண்டும் என விரும்பும் பெற்றோர்களில் சிலராவது எவற்றால் நாம் அனைவரும் உயிருடன் இருக்கிறோமோ, எவற்றால் சுவாசிக்க காற்றும் குடிக்க நீரும் கிடைக்கிறதோ, எவை இன்றி உலகம் இயங்க முடியாதோ அவற்றை குறித்து  தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொண்டு அத்துறையிலும் சாதிக்க வேண்டும் என்று விரும்பலாம்

உணவு, எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறை, குறைந்து கொண்டே வரும் சாகுபடிக்கான நிலப்பரப்பு, அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றங்கள் இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக இருப்பது தாவரங்களின் பாதுகாப்பும் பயன்பாடும் தான்உலக தாவரங்களில் 4269 வகைகள்  மிக மிக அதிக அழியும் அபாயத்தில் இருப்பவை என்றும் மேலும் 5725 தாவரங்கள் அழிவை நோக்கிய பாதையில் இருப்பதாகவும்   சிவப்பு பட்டியலிடப் பட்டிருக்கின்றது.  அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் போதுமான அளவில் நடைபெறவில்லை. அழியும் நிலையிலிருப்பவை என்று அடையாளப்படுத்தப் பட்டவைகளில் வெறும் 41 சதவீத தாவரங்கள்மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் வருகின்றன

மனித குலம் இப்பூமியில் தொடர்ந்து வாழ தாவரங்களின் பாதுகாப்பு மிக முக்கியம். சூழலுடனும் அதிலிருக்கும் தாவரங்களுடனும் மிக நெருக்கமான தொடர்பிலிருப்பது அவற்றின் பாதுகாப்பில் முதல் படி. தாவரங்களுக்கு உண்டாகும் பாதிப்பு மனிதர்களுக்கும் உண்டாகும் பாதிப்புத்தான்!

காக்கைக் கூடு நடத்திய ‘செங்கால் நாரை விருது’ போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை!

கட்டுரையாளர்; லோகமாதேவி

தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தாவரவியல் ஆய்வாளர். 2016 லிருந்து நாளிதழ்களிலும், இணைய இதழ்களிலும்  சூழலியல் சார்ந்த அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். இத்துடன் மொழியாக்க கட்டுரைகளையும், கதைகளையும் எழுதியிருக்கிறார். அரிஸோனா பல்கலைக்கழக இணையத்தில் அறிவியல் தகவல்களை தமிழாக்கம் செய்யும் பணியில் 2019 லிருந்து ஈடுபட்டிருக்கிறார்.

தற்போது தாவரவியல் அகராதியை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

குரங்கு முக ஆர்கிட்

குரங்கு முக ஆர்கிட் மலர்கள்

ஆர்கிடேசி குடும்பத்தை சேர்ந்த ஆர்கிட் (orchid) மலர்கள் அவற்றின் மிக அழகிய வடிவங்களாலும்  நிறங்களாலும் உலகப்பிரசித்தி பெற்றவை. ஆர்கிடேசி குடும்பத்தில் சுமார் 1000 பேரினங்களும் 25,000 சிற்றினங்களும் பல்லாயிரக்கணக்கான் கலப்பினங்களும் உள்ளன

இவற்றில் நிலத்தில் வாழ்வன, மரங்களில் மீது வளர்வன, என பலவகையான வாழிடங்களில் வளர்பவை உள்ளன.ஆர்கிடுகள் ஸ்பாஞ் போன்ற சிறப்பு வேர்களால் காற்றிலிருந்து ஈரத்தை எடுத்துக்கொண்டு உயிர்வாழும்

 பிற தாவர வகைகளிலிருந்து ஆர்கிடுகள் அவற்றின் வண்ணமயமான விதவிதமான  வடிவங்களில் இருக்கும் மலர்களால் வேறுபட்டு பிரபலமடைந்திருக்கின்றன. தோட்டக்கலைத்துறையில் மிக முக்கிய மற்றும் சிறப்பான இடம்பெற்றிருப்பவை ஆர்கிட்மலர்கள் .ஐஸ்கிரீம்களில் நாம் சுவைக்கும் வெனிலா  ஒரு  ஆர்கிடிலிருந்தே பெறப்படுகிறது

ஆர்கிட்மலர்களில் மனிதனைப்போன்றவை, வேற்றுகிரக வாசிகளை போன்றவை, பறவைகள் வண்டுகள் விலங்குகளை போன்றவை நடனமாடும் மங்கையை போன்றவை என  நம் கற்பனைக்கெட்டாத வடிவங்களில் மலர்கள் இருக்கின்றன

இவற்றில் மிகs சிறப்பான ஒன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஆஞ்சனேயர்  மலர் என்று வணங்கப்படுவதும் குரங்கு ஆர்கிட் எனப்படும் Dracula simia, ஆர்கிட்கள்

இவை மரங்களின் மீது தொற்றிப்படர்ந்து வளரும் ஆர்கிடுகள். மலரிதழ்கள் குரங்கின் முகத்தைப்போலவே அமைந்திருப்பது இயற்கையின் ஆச்சர்யங்களில் ஒன்று

ஒவ்வொரு பருவத்திலும் கொத்துக்கொத்தாக மலரும் இவை ஆரஞ்சின் இனிய மணம் கொண்டிருக்கும்

 இந்த குரங்கு முக ஆர்கிடுகள் பெருவின் குளிர்நிரம்பிய காடுகளில் 1000திலிருந்து 2000 மீ கடல்மட்டத்துக்கு மேல் உயரமான இடங்களில் ஏராளமாக காணப்படுகின்றன

இதன் அறிவியல் பெயரின் முதல் பாதி, இதன் புல்லிகளின் இரு நீட்சிகளால் டிராகுலாவின் பற்களை நினைவூட்டுவதால் டிராகுலா என பெயரிடப்பட்டது. அறிவியல் பெயரில் இரண்டாம் பாதி சிமியா என்பது குரங்கை குறிக்கும்

குரங்கு ஆர்கிட் தாவரத்தை தாவர வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் 1881ல் கண்டுபிடித்தார்.   

அமெரிக்காவின் மிஸிஸிப்பி நதிக்கரையோர நகரத்தை சேர்ந்தவரும் ஆர்கிடேசி குடும்பத்தில் முக்கிய ஆய்வுகளை செய்த தாவரவியலாளருமான  Carlyle August Luer, இந்த ஆர்கிடுக்கு இந்த அறிவியல் பெயரை 1978ல் வைத்தார்.

அவரால் இது பல நாடுகளுக்கு அறிமுகமாகி ஆர்கிட் மலர் விரும்பிகள் இதை உலகெங்கிலும் ஆர்வமாக வளர்க்கத் துவங்கினார்கள்

20ம் நூற்றாண்டின் துவக்த்தில் குரங்கு ஆர்கிடுகள் ஏராளமாக சாகுபடி செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன

 பல கலப்பின சோதனைகளும் அப்போது செய்யப்பட்டு இதன் நூற்றுக்கணக்கான கலப்பின வகைகளும்  அப்போது உருவாக்காப்பட்டன

இப்போதும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பல அமெரிக்க  கடைகளில் இவை விற்பனை செய்யபடுகின்றன, இவற்றை மிக எளிதாக வீடுகளில் வளர்க்லாம்

 குரங்கு ஆர்கிட் மலர்கள் வெண்மை, இளஞ்சிவப்பு ஊதாமற்றும் மண் என பல நிறங்களில் இருக்கும்

  • The Dracula Simia ‘Taylors’  வகை மிக அழகிய  ஊதா நரம்புகளோடும் இளஞ்சிவப்பு மலர்களை கொண்டது
  • The Dracula Simia ‘Enchantment’ வகை அடர் ஊதா நிற இதழ்களில் வெண்திட்டுக்களை  கொண்டிருக்கும்
  • The Dracula Simia ‘Lilac Fire’  வகை மிக பிரகாசமனது இது இளஞ்சிவப்பில் வெண்கோடுகள் கொண்டிருக்கும்
  • The Dracula Simia ‘Mystic’ வகை மிக மிக அழகிய ஆழ்ந்த ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிற இதழ்களில் வெள்ளை மற்றும் மஞ்சள் தீற்றல்களுடன்  காணப்படும்

தாவரவியல் குறித்த அடிப்டை அறிவு இல்லாத சிலரும், வம்புகளையும் வதந்திகளையும், பொய்ச்செய்திகளையும் சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளும் இந்த குரங்கு ஆர்கிட்மலர்கள் 100 வருடத்துக்கு ஒருமுறைமலரும் அபூர்வகை மலர் என்றெல்லாம் செய்திகளை பகிர்கிறார்கள். இதன்  மலர்வடிவம் குரங்கின் முகம் போன்றிருப்பது மட்டும்தான் உண்மை, இவையும் பிற தாவரங்களை போலவே அவற்றிற்குரிய  பருவங்களில் தொடர்ந்து மலர்பவைதான்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அந்நியசெலவாணி ஈட்டுதலில் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும், உயர்ந்து கொண்டே இருக்கும் ஆர்கிட் சந்தை 2028ல்   அமெரிக்க டாலர்களில் 363.2 மில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

 ஆர்கிட் வளர்ப்பு மிகுந்த லாபம் தரும் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் அருணாச்சலபிரதேசம் ஆர்கிட் சாகுபடியில் முன்னணியில் இருக்கிறது. அருணாச்சலபிரதேசம் ஆர்கிடுகளின் இந்தியசொர்க்கம் என அழைக்கப்படுகிறது. சிக்கிம்மில் இருந்து மட்டும் சுமர் 560 வகையான ஆர்கிடுகள் பிற நாடுகளுக்கு எற்றுமதியாகின்றது

வீனஸ், பூச்சிஉண்ணும் தாவரம்

’’கார்ல் லெச்சே (karl Leche) வும் அவரது குழுவினரும் மடகாஸ்கரின் அடர்ந்த காட்டுக்குள்  கதோஸ்  பழங்குடியினர் அறியாது அவர்களைப் பின்தொடர்ந்து சென்று  சந்தடியில்லாமல்  அவர்களின் செயல்களை கவனித்துக்கொண்டிருந்தனர். 

பழங்குடியினர் அனைவரும் ஒரு ஆற்றங்கரையில் குழுமினர்.  அவர்கள் முன்னால்  சுமார் எட்டு அடி உயரமுள்ள அன்னாசியை போன்ற சதைப்பற்றான ஒரு தண்டும், அதன் உச்சியில் பெரும் நாகங்களைப் போன்ற, நீண்ட கைகளாக அமைந்திருந்த இலைகள் பச்சை நிறத்திலும் இருந்தன. இலைகளின் நுனி மாட்டின் கொம்புகளைப் போல கூராக இருந்தது. அம்மரத்தை பார்த்து பழங்குடிகள் அனைவரும்  ’’டீபே, டீபே’’ என்று கூவி வணங்கினார்கள். 

நிர்வாணமாக ஒரு பழங்குடி இளம்பெண்ணை அவர்கள் அம்மரத்தின் மீது ஏறும் படி சொன்னதும் அவள் மறுப்பேதும் சொல்லாமல்  ஏறினாள். இலைகள் அனைத்தும் குவிந்திருந்த மத்தியப் பகுதியில் இருந்த நீரை அருந்தும் படி அவர்கள் கீழிருந்து கூச்சலிட்டதும் அவள் அந்த நீரை அருந்தினாள்,  உடனே அம்மரத்தின் இலைகளான நாகங்களுக்கு உயிர் வந்ததுபோல அவை நெளிந்தன

’’கடும் பசிகொண்ட நாகங்களை போன்ற அந்த இலை நீட்சிகளால் அந்த பெண்ணை அம்மரம் சுற்றி வளைத்துக் கொண்டது.  கைகளையும் கழுத்தையும் பின்னர் தலையையும் சுற்றி சுற்றி அக்கைகளால்  இறுக்கப்பட்ட போது அந்த பெண் பயங்கரமாக ஓலமிட்டாள். பிறகு அந்த ஓலம் மெல்ல முனகலாக மாறி பின்னர் மெதுவாக அடங்கியது. மரத்தை சுற்றிலும் கொல்லப்பட்ட பெண்ணின் ரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பச்சை பாம்புகள் போன்ற அக்கைகள் தளர்ந்து விடுபட்டு மீண்டும் நீண்ட போது அந்த பெண் அதற்குள் இருந்த சுவடே இல்லாமல் அம்மரத்தால் முழுவதுமாக உண்ணப்பட்டிருந்தாள். அவளை பலி கொடுத்த  பழங்குடியினர் அம்மரத்தை பயபக்தியுடன் வணங்கினார்கள்’’

26 ஏப்ரல் 1874ல் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில்  ஜெர்மானிய  தாவரவியலாளர் “Karl Leche” என்பவரின் மடகாஸ்கர் காட்டுப் பயண அனுபவம் இப்படி ஒரு செய்திக் கட்டுரையாக    எட்மண்ட் ஸ்பென்சர்( Edmund Spencer) என்னும் கட்டுரையாளரால் எழுதப்பட்டிருந்தது. அடர்  காடுகளில் மனிதர்களை கொன்று தின்னும் மரங்கள் இருப்பதாக பல செவிவழி செய்திகளும் கதைகளும் பல காலமாக  மக்களிடையே நிலவி வந்தாலும் முதன் முதலாக அச்சில் மனிதர்களை கொன்று தின்னும் மரங்களைப்பற்றி வெளியான  இந்த கட்டுரை பெரிதும் வாசிக்கப்பட்டது.

நியூயார்க் டைம்ஸின்  இந்தக்கட்டுரை உண்டாக்கிய பரபரப்பால் இதே  கட்டுரை  பிற பிரபல நாளிதழ்களில்  அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டே இருந்தது. பலர் இந்த நரமாமிசம் உண்ணும் மரத்தையும் அந்த பழங்குடிகளையும் காண  மடகாஸ்கர் காடுகளுக்கு தேடல் பயணம் மேற்கொண்டார்கள். இந்த பரபரப்பு பல ஆண்டுகள் தொடர்ந்தது.

1889ல் வெளியான ’கடலும் நிலமும்’ என்னும்  நூலில் அதன் ஆசிரியர் ஜேம்ஸ் பூயல் (James W. Buel) கோபம் கொண்ட பெரும் நாகங்களை போன்ற, நச்சு முட்களும், நூற்றுக்கணக்கான  உறிஞ்சு வாய்களும் நிறைந்திருக்கும் கிளைகளுடன் இருக்கும் யா-டி-வியோ (ya te veo) என்னும்  ஆப்பிரிக்க காடுகளின் ஊனுண்ணி மரமொன்றைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்.

1891ல் லண்டன், நியூயார்க் மற்றும் மெல்பர்னில்  மாதமொருமுறை வெளியான சஞ்சிகையான Review of Reviews வின் ஆசிரியர்  வில்லியம் (William Thomas Stead) நிகரகுவாவின் மனிதர்களை உண்ணும் தாவரமொன்றைப் பற்றியும் அதனருகில் செல்லும் எவரையும் அது பிடித்து இரத்தத்தை உறிஞ்சி குடித்து கொல்லுவதையும் குறித்து எழுதினார்

19 ம் நூற்றாண்டில் இப்படி மனிதர்களையும், நாய்களையும் பிற விலங்குகளையும் பிடித்து கொன்று தின்னும் தாவரங்கள் பற்றிய பல கதைகளும் செய்திகளும் கட்டுரைகளும் உலகெங்கிலும் வெளியாகிக் கொண்டே இருந்தன. காடுகளில் பயணித்த மனிதர்களை நீண்ட கிளைகளால் சுற்றி வளைத்து விழுங்கிய கொலைகார தாவரங்களை பற்றிய கதைகள் வெகுவாக உலவின. 

அக்கதைகளில் வானளாவிய கிளைகளால் பறவைகளைக் கூட அத்தாவரங்கள் பிடித்து விழுங்கியது.. பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளரும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியவருமான ஆர்தர் கொனான்  (Arthur Conan Doyle)  தனது குற்றக்கதைகளில் மனிதர்களை இறுகப்பிடித்து விழுங்கும் வீனஸ் ஊனுண்ணும் தாவரங்களை அறிமுகப்படுத்தினார்.

மிச்சிகன் கவர்னரும் இயற்கை ஆர்வலருமான திரு சேஸ் ஓஸ்போர்ன் ( Chase Osborn ) எழுதி 1924 ல் வெளியான ’’மடகாஸ்கர்- மனிதர்களை கொன்று உண்ணும் மரங்களின் நிலம்’’  (Madagascar: Land of the Man-eating Tree)  என்னும் நூலிலும் மனிதர்களை கொன்றுண்ணும் மரங்களை பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது. மடகாஸ்கர் பழங்குடிகளுக்கு மனிதர்களை உண்ணும் மரத்தை  குறித்து  நன்கு தெரிந்திருக்கிறது என்று  சேஸ் குறிப்பிட்டிருந்தார்.பல கதைகளில் மனிதர்களை நெரித்துக் கொன்று உண்ணும் மரங்களை குறித்த சித்திரங்கள் இடம்பெற்றன.

1955ல் ஜெர்மானிய -அமெரிக்க அறிவியல் கட்டுரையாளரும்,  cryptozoology. என்னும் மர்மமான உயிரினங்களை குறித்த அறிவியல் துறையில் நிபுணருமான  வில்லி லே  (Willy Ley) தனது ’’சாலமண்டர்களும் பிற அற்புதங்களும்’’ என்னும் நூலில்  (Salamanders and other Wonders)  இவை அனைத்தும் கட்டுக்கதைகள் அப்படி ஒரு பழங்குடியினரோ, மனிதர்களை பிடித்துண்ணும் மரங்களோ எதுவுமே உலகில் இல்லை  இவை வெறும் பரபரப்பு செய்திகளுக்காக உருவாக்கப்பட்ட  வதந்திகள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனினும் ஊனுண்ணித் தாவரங்கள் இருக்கின்றன, இல்லை என்னும் இரு தரப்பும் அறிவியல் உலகில் வலுவாக  காலூன்றி இருந்தது. பல அறிவியலாளர்கள் தொடர்ந்து அவற்றை தேடிச்சென்று கொண்டிருந்தனர்.

நகரும் விலங்குகள் வேட்டையாடி இரைகளை பிடித்துண்ணுவது இயற்கையென்றும், ஓரிடத்தில் வேர்பிடித்து நகராமல் இருக்கும் தாவரங்கள் வேட்டையாடுவது என்பது இயற்கையில்  நடக்கவே நடக்காத காரியம் என்றும் பலரல் உறுதியாக நம்பப்பட்டது.

ஊனுண்ணித் தாவரங்கள் இருப்பது  உண்மையென்றும்,  வெறும் கற்பனையென்றும் இருவிதமான கருத்துக்கள் நிலவிக்கொண்டிறூந்த வேலையில்தான் சார்லஸ் டார்வின் கடற்பயணங்களை மேற்கொண்டிருந்தார்

 1875 ல் டார்வின் ஊனுண்ணித்தாவரங்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதை ஆதாரபூர்வமாக தெரிவித்தபோது உலகம் பெரும் ஆச்சர்யத்துக்கு உள்ளானது.  இங்கிலாந்தின் சுஸெக்ஸ் வனப்பகுதியின் ஊனுண்ணி பனித்துளி தாவரம் (Sundew plant)குறித்த விளக்கமான கட்டுரைகள் அவரால் எழுதப்பட்டிருந்தன.

 பூச்சிகளால் உண்ணப்படும் தாவரங்களை மட்டுமே அறிந்திருந்த உலகம் முதல் முறையாக பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் இருப்பதை அதன்பிறகே  அறிந்துகொண்டது

ஊனுண்ணி தாவரங்களின் பரிணாம வளர்ச்சி

சுமார் 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மாபெரும் டைனோசர்கள் காடுகளில் பல்கி பெருகிக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு இலைகளில் நடைபெற்ற ஒளிச்சேர்க்கையில் கிடைக்கும் உணவு போதாமலும், அவை வாழ்ந்த நிலத்தில் சத்துக்கள் குறைவாகவும் இருந்ததால் அவற்றின் இலைகள் பூச்சிகளை பிடிக்கும் பொறிகளாக மெல்ல மெல்ல மாறி பரிணாம வளர்ச்சி அடைந்தது.  அவற்றின் வளர்ச்சிக்கு  நிலத்திலிருந்து கிடைப்பதில் போதாமல் இருக்கும் சத்துக்களை இவ்வாறு பூச்சிகளை, சிறு விலங்குகளை உண்பதன் மூலம்  அவை சரி செய்து கொண்டன.

பச்சையத்தின் உதவியால் ஒளிச்சேர்க்கையின் மூலம் மட்டுமே உணவை தயாரித்து கொண்டிருந்த தாவரங்களில் சில இவ்வாறான ஊனுண்ணும் உயிரினங்களாக பரிணாம வளர்ச்சியடைந்தது சுமார் பத்துமில்லியன் வருடங்களுக்கும் மேலாக மெல்ல மெல்ல நடந்திருக்கும் என்று தாவரவியலாளர்கள் யூகிக்கிறார்கள்.1

இத்தாவரங்கள் பூச்சிகளை பிடித்து கொன்று உண்ணுவதை  பார்க்க முடிவதால் இவற்றை ஊனுண்ணிகள் என அடையாளம் காணமுடிந்தது. எனினும் இவற்றின் கொன்று தின்னுதலின் பிரத்யேக செயற்பாடுகள் குறித்து முழுமையான அறிதல் தாவரவியலாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, டார்வினின் காலத்திலிருந்தே இவற்றைக் குறித்து  ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தனை ஆண்டுகளில் இத்தாவரங்களில் இரையை ஜீரணிக்க உதவும் பலநூறு நொதிகளில் (Enzymes) Nepenthesin என்னும் ஒரே ஒரு நொதிதான் இனங்காணப்பட்டுள்ளது.

உலக நாடுகள் எல்லாவற்றிலும் காணப்படும் 600க்கும் மேற்பட்ட இந்த ஊனுண்ணித் தாவரங்கள் அண்டார்டிகா மற்றும் பசிபிக் தீவுகளில் மட்டும் இல்லை. 

பூச்சிகளை பிடிக்கும் எல்லா தாவரங்களும் ஊனுண்ணிகளல்ல. அரிஸ்டலோக்கியாவை (Aristolochia) போல சில தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக  பூச்சிகளை கவர்ந்து அவற்றை  தாவரங்களின் பாகங்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்யும். இவை ஊனுண்ணித் தாவரங்கள் அல்ல .ஏனெனில் இவை பூச்சிகளை ஒருபோதும் கொல்லுவதில்லை. மேலும் ஊனுண்ணித் தாவரங்கள் எப்போதும் அவற்றின்  மலர்களை பொறிகளாக பயன்படுத்துவதில்லை.

இதைப்போலவே மேய்ச்சல் விலங்குகளிடமிருந்தும், பூச்சிகள் இலைகளை  தாக்காதவண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும் இலைகளில் பிசினைசுரக்கும் தாவரங்களும் ஊனுண்ணித்தாவரங்களல்ல. அவை தங்களின் பாதுகாப்பிற்காக பிசினில் பூச்சிகளை சிக்க வைத்தாலும், அப்பூச்சிகளை கொன்று ஜீரணிப்பதில்லை. உதாரணமாக ஒட்டும் தன்மையுடைய இலைகளைக் கொண்டிருக்கும் ஐபிசெல்லா லூட்டியா ( Ibicella lutea), ப்ரொபோஸிடியா லூசியானிக்கா (Proboscidea louisianica) மற்றும் ப்ரொபோஸிடியா பார்விஃப்ளோரா (P. parviflora) ஆகியவை ஊனுண்ணிகளல்ல இவற்றின் ,இலைகளில் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகள் அப்படியே இறந்து உலர்ந்துவிடுகின்றன. இவைகளெல்லாம் pre carnivorous plants , அதாவது ஊனுண்னுவதற்கு முந்தைய நிலையிலிருப்பவையென்று கருதப்படுகின்றன. இவை காலப்போக்கில் ஊனுண்ணுபவைகளாக பரிணாம வளர்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது

பூச்சிகளை கொல்லும் நொதிகளை கொண்டிருக்காததால் பூச்சிகளை இலைகளில் பிடித்து மட்டும் வைத்துக்கொண்டு, சிக்கிய பூச்சிகளை உண்ண வரும் வண்டுகளின் கழிவுகளை உறிஞ்சி  அதிலிருக்கும் சத்துக்களை கிரகிக்கும் ரோரிடூலா (Roridula) எனப்படும் ஒரு தாவரம் விளிம்புநிலை ஊனுண்ணித்தாவரமென்று அழைக்கப்படுகிறது.(Marginal Carnivorous plant). இவையும் மெல்ல மெல்ல முழுமையான ஊனுண்ணுபவைகளாக மாறக்கூடும்

இந்த பரிணாம வளர்ச்சியை குறித்த ஆய்வுகள் பல்லாண்டுகளாக தொடர்கின்றன. சமீபத்தில் ஜெர்மனியின் வுஸ்பர்க் பல்கலைக்கழகத்டின் (University of Würzburg) தாவரவியலாளர்களின் குழு  குறிப்பிட்ட மூன்று ஊனுண்ணித் தாவரங்களில் விரிவான ஆய்வுகளை செய்தது.

  • அதிலொன்று பெரும்பாலானோர் அறிந்திருக்கும் வீனஸ் பூச்சி பிடிக்கும் தாவரமான  Venus flytrap 
  • இரண்டாவது அத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஊனுண்ணித் தாவரமான நீர்ச் சக்கரம்(waterwheel) என்னும் பெயர் கொண்ட Aldrovanda vesiculosa.
  • மூன்றாவது பனித்துளி தாவரமாகிய ட்ரஸீரா( sundew plant)

ஆய்வின் முடிவுகள்  70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊனுண்னும் தாவரங்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்றும் அதற்கு பின்னரே நிலச்சத்துக்குறைபாடுகளை சமன்செய்ய, நகர முடியாத தாவரங்கள் அவற்றின் அருகில் வரும் பூச்சிகளை பிடிக்க பொறிகளை உருவாக்கி அப்பூச்சிகளின் உடலிலிருக்கும் சத்துக்களை கிரகித்துக்கொள்ளும் ஊனுண்ணி தாவரங்களாக மாறிவிட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தன.

ஒளிச்சேர்க்கை செய்யும் இலைகளும், சத்துக்களை சாறு வடிவில் உறிஞ்சும் வேர்களும் உபயோகமற்றுப் போன ஒரு கட்டத்தில் தாவரங்கள் தங்கள் வாழ்வை,  இருப்பை உறுதி செய்து கொள்ள புதிய வழிகளை தேடி, அவ்வாறு கண்டறிந்ததுதான் ஊனுண்ணுதல் என்பது.இது  மரபணு மாற்றங்கள் மூலமே சாத்தியமாகி இருக்கும் என்கிறது இந்த ஆய்வு

ஒரு நீர்வாழ் ஊனுண்ணித் தாவரத்திலும், நிலத்தில் படர்ந்து வளரும் பிரேசிலின் மற்றோரு ஊனுண்ணித் தாவரத்திலும் 2013ல் நடந்த ஆய்வுகளும் இந்த மரபணு மாற்றத்தினால் பரிணாம வளர்ச்சியடைந்த விஷயத்தையே உறுதி செய்திருக்கின்றன. வேர்களின் உறிஞ்ம் திறனுக்கும் இலைகளின் சூரிய ஒளியை கிரகிக்கும் திறனுக்கும் காரணமான மரபணுக்களை கணிசமாக உதிர்த்துவிட்டு(gene drop) புதிய பூச்சிகளை கவர்ந்து பொறிகளில் பிடித்து அவற்றை செரித்து சத்துக்களாக எடுத்துக் கொள்ள உதவி செய்யும் மரபணுக்களை இவை மெல்ல மெல்ல காலபோக்கில் பெற்றிருக்கின்றன என்கிறது ஆய்வு முடிவுகள்.

இவ்வாறாகத்தான் உலகின் சாதாரண,  சாதுவான தாவரங்கள் மிகச்சிறந்த வேட்டைக்கார தாவரங்களாகி விட்டிருக்கின்றன. இந்த ஊனுண்ணித் தாவரங்களின் சாமார்த்தியங்களும் தகவமைப்புக்களும் தாவரங்களின் அதிசயங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

சுமார் 16 நீண்ட வருடங்கள் இந்த தாவரங்கள் குறித்தான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த டார்வின் சில தாவரங்களின் இலைகள் பிரத்யேகமாக பூச்சிகளை பிடிக்கும் பொறிகளைப்போல உருமாற்றம் கொண்டு அவற்றை    பிடித்து செரித்து சத்துக்களை உறிஞ்சி கொள்ளுவதையும் நிரூபித்தார்.

 டார்வினின் இந்தத்தாவரங்கள்  குறித்த விளக்கங்களை கொண்ட 1875ல் வெளியான ’’ஊனுண்ணித் தாவரங்கள்’’ என்னும் நூலும்,(Insectivorous Plants,) 1880 ல் வெளியான ’’தாவரங்களின் அசைதலின் ஆற்றல்’’ (The Power of Movement in Plants) என்னும் மற்றுமோர் நூலும் ஊனுண்ணும் தாவரங்கள் குறித்த பெரும்பாலான புதிர்கள், கேள்விகள், சந்தேகங்கள் அனைத்துக்கும் பதிலளித்திருந்தது 

டார்வினின் இந்த கண்டுபிடிப்புகள் சாதாரண மனிதர்களுக்கு பெரும் ஆர்வமூட்டியது. தாவரவியல், பூச்சியியல், வேதியியல் உள்ளிட்ட பல்துறை விஞ்ஞானிகள் தங்கள் கவனத்தை ஊனுண்ணித் தாவரங்களில் குவித்தார்கள்  

அவர்களின் முயற்சியாலும் தேடல்களினாலும் பலவகைப்பட்ட ஊனுண்ணித்தாவரங்கள் கண்டறியப்பட்டன. சில தாவரங்கள் குடுவைகளாக மாறிய இலைகளில் நொதிகளை நிரப்பி வைத்து அதில் பூச்சிகளை பிடித்தன.  சில ஒட்டும் தன்மையுள்ள இலைகளை கொண்டு அதில் பூச்சிகளை ஒட்டவைத்து  கொன்று உண்டன. இன்னும் சில பூச்சிகளை கவரும் நறுமணமுள்ள பனித்துளி போன்ற சுரப்பி நீர்ச் சொட்டுக்களால் பூச்சிகளை ஈர்த்து கொன்று தின்றன. நீருக்கடியிலும் கொன்று தின்னும் தாவரங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

வீனஸ் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது தாவரவியலாளர் ஜான் எல்லிஸ் (John Ellis) அதன் ஊனுண்ணுதல் குறித்து விவரித்து லின்னேயஸுக்கு கடிதம் எழுதினார்  அப்போது லின்னேயஸ் உலக புகழ் பெற்றிருந்த தாவரவியலாளர். தாவர வகைப்பாட்டியலின் தந்தையும் தீவிர இறையியலாளருமான லின்னேயஸினால் ஊனுண்ணும் தாவரங்கள் இருப்பதை நம்ப முடியவில்லை.

லின்னேயஸ் அப்படி  இறையை பிடித்துண்ணும் தாவரங்கள் இருப்பதை அடியோடு மறுத்தார். அது இயற்கையின் விதிகளுக்கு எதிரானது என்றும் அப்படி ஒரு உயிரினம் இயற்கையில் இருக்க வாய்ப்பே இல்லையென்றும் தீர்மானமாக பதில் எழுதினார். அவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னரும் அவர் இத்தாவரங்கள்  பொறிகளை உண்டாக்கி மழையிலிருந்து நனையாமல் இருக்க பூச்சிகளுக்கு அடைக்கலமாக செயல்படுகின்றன இரையாக பிடித்து தின்பதில்லை என்றார்

மேலும் நெஃபெந்தெஸ் போன்ற ஜாடிகளில் நொதிகளை கொண்டு பூச்சிகளை செரித்துண்ணும் தாவரங்கள் உண்மையில் உண்ணவில்லை அவற்றில் பூச்சிகளுக்கு அருந்த நீரளிக்கின்றன என்றார் அவர்.

இன்றைய நாள் வரையிலுமே இது தொடர்பான ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன வயிறு, இரைப்பை போன்ற பாகங்கள் இல்லாத தாவரங்கள் எவ்வாறு பூச்சி மற்றும் தவளை, எலி போன்ற சிறு விலங்குகளை செரித்து, சத்துக்களை முழுத்தாவர பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கின்றன என்பது இன்னும் சரியாக விளக்கப்படாத புதிராகவே இருக்கிறது.

Drosera  போன்ற இரையை ஒட்ட வைத்து பின்னர் சத்துக்களை எடுத்துக்கொள்ளும் ஊனுண்ணிகளிலிருந்து வீனஸ் ஊனுண்ணிகள் பரிணாம வளர்ச்சியில் உருவாகி இருக்கலாம் என்றும்    ஒரு கருத்து இருக்கிறது.      

ஊனுண்ணித்தாவரங்களுக்கு தொல்லுயிர் புதை படிவங்கள் அதிகம் கிடைக்கவில்லை எனவே இவற்றின் தோற்றம் குறித்து முழுமையான தகவல்கள் ஏதும் இல்லை என்று சொல்லும் ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழக  உயிரியற்பியலாளர்   Rainer Hedrich  2021ல் ஊனுண்ணுதலின் தோற்றம் என்னும் கட்டுரையில் (the origins of carnivory ) ஊணுன்னும் இயல்புக்கான மரபணு எது?  அது எப்போது தாவரங்களுக்குள் புகுந்தது? என்னும் ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது என்கிறார்.

வீனஸ் பொறித் தாவரம்

ஊனுண்ணித்தாவரங்களின் பல வகைகள் இருப்பினும் உலகெங்கிலும் பலருக்கு தெரிந்ததும் பலர் வீடுகளில் வளர்க்க விரும்புவதும் வீனஸ் ஃப்ளை ட்ராப் என்னும் வீனஸ் பொறி தாவரம்

டார்வினுக்கு இவற்றின் மீது தனி பிரியம் இருந்தது அவர் தனது நூலில் ’’வீனஸ் தாவரங்கள் உலகின் மிக அற்புதமான தாவரங்களில் ஒன்று’’ என குறிப்பிட்டிருக்கிறார். 

1759ல் வடக்கு கரோலினா கவர்னரான, ஆர்தர் (Arthur Dobbs) தாவரவியலாளர்  பீட்டர் (Peter Collinson) க்கு எழுதிய கடிதமொன்றில்:

“We have a kind of Catch Fly sensitive which closes upon anything that touches it, it grows in the Latitude 34 but not 35° – I will try to save the seed here.” என்று எழுதி இருந்தார்.

பீட்டர்  பிலடெல்ஃபியா இயற்கையியலாளர் ஜான் (John Bartram) என்பவருக்கு இந்த புதிய கண்டுபிடிப்பை எழுதினார். பார்ட்ரம்மின் மகன் வில்லியம் பார்ட்ரம் வடக்கு கரொலினாவிற்கு சென்று தன் தந்தைக்காக வீனஸ் தாவரங்களை சேகரித்தார்

வில்லியம் அனுப்பி வைத்த உலர் தாவரங்களை ஜான் பார்ட்ரம் லின்னேயஸுக்கும் பீட்டர் கோலின்சனுக்கும் அனுப்பினார்   யாராலும் யாருக்கும் உயிருடன் வீனஸ் தாவரங்களை  அனுப்ப முடியவில்லை

1763ல்  ஆர்தர் நண்பருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவை தாவர உலகத்தின் அற்புதங்களில் ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார். இவையே வீனஸ் தாவரங்கள்  குறித்த முதல் எழுத்து பூர்வமான ஆவணம்

பெயர்கள்

வீனஸ் ஃப்ளை ட்ராப் என்னும் பெயர் முதன் முதலில் 1768ல் ஒரு லண்டன் பத்திரிக்கையில் அச்சில் வந்தது. ஒரு புதிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது-“A New Sensitive Plant Discovered.”எனும் தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் இப்பெயர் வெளியாகி இருந்தது   1793 ல் உயிரியற்பியலாளர் வில்லியம் பார்ட்ரம் இவை துடிப்பான தாவரங்கள் கவனக்குறைவான உயிரினங்கள் இவற்றிற்கு இரையாகின்றன என்று குறிப்பிட்டிருந்தார்.  

வட அமெரிக்காவில் இருந்து பல இயற்கையான வீனஸ் தாவரங்களையும் அவற்றின் விதைகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பிய பிரிடிஷ் இயற்கையியலாளர் ஜான் எல்லிஸ் (John Ellis) இதற்கு 1768 ல் Dionaea muscipula என்று  அறிவியல் பெயரிட்டார்.  லண்டன் சஞ்சிகை ஒன்றில் எல்லிஸ் இத்தாவரத்துக்கு பெயர் வைக்க தான் பட்ட சிரமங்களை எழுதி இருந்தார். Dionaea muscipula என்னும் இப்பெயரை  ஆங்கிலத்தில் Venus flytrap அல்லது Venus mousetrap, என்று இருவிதங்களில் மொழிபெயர்க்கலாமென்றாலும் தனக்கு  flytrap என்னும் பெயரே பிடித்தமானது என்றும்  அதில் குறிப்பிட்டிருந்தார்.

பூச்சிகளை கவர்ந்திழுக்கும் இத்தாவரத்தின் பொதுவான வழங்கு பெயரான வீனஸ் என்பது காதல், காமம், வளமை மற்றும் அழகின் ரோமானிய  தெய்வமான வீனஸின் பெயரால் வைக்கப்பட்டது.  இதன் அறிவியல் பெயரின் Dionaea என்பதும் Dione ன் மகளான கிரேக்க தெய்வமான Aphrodite ஐ குறிக்கிறது, இதன் சிற்றினப்பெயரான muscipula,   இதன் இரை பிடிக்கும் செயலை குறிக்கும் விதமாக  எலிப்பொறி என்று பொருள் படுகிறது (mus (“mouse”) decipula (“trap”),  

வீனஸ் தாவரங்களை குறித்து ஆண் ஆய்வாளர்கள் மத்தியில்,அக்காலத்தில் கிண்டலான கருத்து பரிமாற்றங்களும் நடந்தன. வீனஸ் தாவரப் பொறிகள் பெண் இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்பதாக கருதி ஒரு வேடிக்கையான பெயரிட்டு அதை  “Tipitiwichit  என்று குறிப்பிட்டு தங்களுக்குள் கடிதம் எழுதிக்கொண்டனர். 

1962 ல்,பார்ட்ரம்  நண்பரான கோலின்சனுக்கு எழுதிய கடிதத்திலும் கோலின்சன் ஆர்தருக்கு 1762ல் எழுதிய கடிதங்களிலும் இப்பெயர் வேடிக்கையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது இந்த பெயரை  பார்ட்ரம் வைத்திருக்கலாமென்றும் யூகிக்கப்படுகிறது. 

தாவரவியல்

இயற்கையாக இவை அமெரிக்காவில் வடக்கு மற்றும் தெற்கு கரோலினாவில் மட்டுமே வளர்கின்றன. வடக்கு கரோலினாவின்  100 மைல் சுற்றளவில் இருக்கும் சதுப்பு நிலங்களில் இவை இயற்கையாக அடர்ந்து வளர்கின்றன

ட்ரொசிரேசி குடும்பத்தை சேர்ந்த வீனஸ் தாவரம் பொதுவாக 6-7 இன்ச் சுற்றளவு கொண்டிருக்கும். 5 அல்லது 6 தண்டுகளும் அவற்றில் பொறிகளாக உருமாற்றம் கொண்டிருக்கும் இலைகளும் கொண்டிருக்கும். ஒவ்வொரு இலைப்பொறியும் ஒரு இன்ச் அளவில் இருக்கும். சாதாரணமாக பொறிகள் விரல் நகங்களின் அளவில் இருக்கும். வீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கப்படும் வீனஸ் செடிகள் இயற்கையான செடிகளை காட்டிலும் சிறியவையாக இருக்கும். மலர்த்தண்டு தாவரத்திலிருந்து சுமார் 1 அடி உயரத்தில் மலர்களை தாங்கி நிற்கும்.வீனஸ் தாவரம் 4 ஆண்டுளில் மலரளிக்கத்துவங்கும்.

இவை பல்லாண்டு தாவரங்கள், வருடா வருடம் மலர்ந்து கனியளிக்கும் இவற்றின் மலர்களின் வெண்ணிற இதழ்களில் பசுமையான நரம்புகள் காணப்படும்

பூச்சிகளால்  மகரந்த சேர்க்கையும் பின்னர்  கருவுறுதலும் நிகழ்ந்து 4 லிருந்து 6 வாரங்களுக்குள் சிறிய பளபளப்பான நீர்த்துளி வடிவ கருப்பு விதைகள்  சிதறி புதிய தாவரங்கள் அதிலிருந்து முளைத்து வளரும். வீனஸ் தாவரங்கள் அடிக்கிழங்குகளிருந்தும் புதிய தாவரங்களை உருவாக்கும். 

மகரந்த சேர்க்கை

நூற்றுக்கணக்கான பூச்சி இனங்கள் வீனஸ் தாவரங்களின் மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டிருக்கின்றன. அவற்றில் பச்சை பூச்சியான Augochlorella gratiosa, வண்டினமான Trichodes apivorus மற்றும் நீள் மூக்கு வண்டினமான  Typocerus sinuatus ஆகியவை மூன்று முக்கிய இனங்கள். 

பூச்சிகளை வேறுபடுத்துதல்

இவற்றின் புத்திசாலித்தனமான உடல் அமைப்பு தாவரவியலாளர்களின் ஆச்சரியத்துக்கு உரியதாக பல நூற்றாண்டுகளாக இருக்கிறது மலர்க்காம்பு மிக நீண்டு தாவரத்தின் உடலுக்கு மேலே மலர்களை தோற்றுவிப்பதால் மகரந்த சேர்க்கை செய்பவரும் பூச்சிகள் பொறிகளில் அகப்படாமல் மகரந்த சேர்க்கை செய்துவிட்டு மலருக்கு மலர் தாவிச்செல்கின்றன

இரையை கவருவதற்கும் மகரந்த சேர்கைக்கான பூச்சிகளை கவரவும் இவை வேறுபட்ட வேதிப்பொருட்களை சுரப்பதும் மிக பெரிய புதிராக இருக்கிறது. எப்படி இவை இரையையும் மகரந்த சேர்க்கை செய்ய வரும் பூச்சிகளையும் வேறுபடுத்துகின்றன என்பதையும் இன்னும் பலநாடுகளின் நடைபெற்ற நடைபெறும் ஆராய்ச்சிகளின் மூலமும் கண்டறிய முடியவில்லை

எவ்வகையான் மலரமுதை (Nectar) இவை சுரக்கின்றன இவற்றை மகரந்த சேர்க்கை செய்யவரும் பூச்சி இனங்களுக்கும் இவற்றிற்குமான தொடர்பு ஆகியவற்றை குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன 

இரையை பிடித்தல்

வீனஸ் தாவரங்களின் பொறிகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. இரை தேவைப்படும் சமயங்களில் காற்றில் ஆவியாகி கலந்து மணம் பரப்பும் சில வேதிப்பொருட்களை இந்த தாவரம் சுரந்து பூச்சிகளைக் கவர்ந்து அவற்றை அருகில் வரவழைத்து பொறியில் பிடித்து உண்ணுகின்றன. 

சில வீனஸ் தாவரங்கள் நறுமணமும் சுவையும் மிக்க வேதிப்பொருட்களோடு செந்நிற நிறமிகளையும் சுரந்து பூச்சிகளை கவருகின்றன

இவற்றின் பொறிகளின் உட்புறம் மயிரிழைகள் போன்ற   கூர்மையான நீட்சிகள் காணப்படும்.   இந்த உணர் நீட்சிகள் வெளிப்புற தொடுகைக்கு   உடன் எதிர்வினை ஆற்றும்  thigmonasty எனப்படும் ஒரு செயலினால் இரைகளின் உடல் பட்டதும் உடனே வெகு விரைவாக மூடிக்கொண்டு இரையை தப்ப முடியாமல் இறுக்கிப் பிடித்துக்கொள்கின்றன.

 ஊசி போன்ற கூரிய இழைகளில் இரையின் முதல் தொடுகைக்குபின்னர்  பொறிகள் துடிப்புடன் காத்திருக்கின்றன இரண்டாம் தொடுகை நிகழ்ந்த மறுகணம் பொறிகள் மூடிக்கொள்கின்றன. இந்த தொடுகைகள் இரண்டும் முதல் 20 வினாடிகளுக்குள் நிகழ்ந்தால் மட்டுமே பொறிகளில் இரை சிக்கிக்கொள்ளும். உள்ளே மாட்டிக்கொண்ட இரை வெளியேறச் செய்யும் முயற்சிகளில் உண்டாகும் தொடரும் தொடுகைகளில் ஐந்தாவது தொடுகையில் பூச்சிகளை செரிக்கும் நொதிகள் பொறிகளில் உருவகின்றன

ஒரு வினாடியில் பத்தில் ஒருபங்கு கால அளவில் பொறிகள் மூடிக்கொள்கின்றன. பெரிய இரைகள் சிக்கிக்கொள்ளுகையில் 20 வினாடிகளில் பொறிகள் மூடிக்கொள்ள முடியாவிட்டால் இரையை பொறிகளை திறந்து இவை விடுவிக்கின்றன  

இரை முழுவதும் செரித்தபின்னர் பொறிகள் மீண்டும் திறந்து அடுத்த இரைக்காக காத்திருக்கும்.·ஒருமுறை இரையை பிடித்து செரித்து சத்துக்களை எடுத்துக் கொண்டால் பின்னர் அடுத்த இரையை பிடிக்க சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் இந்த தாவரங்கள் பொறியில் சிக்கிய இரைகளை முழுவதுமாக செரிக்க 3 அல்லது 4 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன.

பொதுவாக ஒரு தாவரத்தை பூச்சிகள் தொடுகையில் அவற்றால் உண்ணப்படும் ஆபத்தை தெரிவிக்கும் ஜாஸ்மோனிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் சுரந்து தாவரங்கள் தங்களை பூச்சிகள் உண்ணுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள எதிர்வேதிப்பொருட்களை சுரக்கும். பரிணாம வளர்ச்சியில் பூச்சிகள் தாவரங்களை உண்ணுவதற்கு மாறாக பூச்சிகளை தாவரங்கள் உண்ண வேண்டி வந்தபோது இதே வேதிப்பொருள் சுரப்பை மாற்றி வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என்கிறது இவற்றில் நடைபெற்ற பல ஆராய்ச்சிகளின் முடிவுகள். 

டார்வின் பொறிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகள் மிகச்சிறிய பூச்சிகளை வீனஸ் தாவரம் விரும்பாததால் அவை வெளியேறிச் செல்ல வசதியாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கருதினார். ஆனால் பிற்பாடு இக்கருத்து தவறென்று நிரூபிக்கப்பட்டது. வீனஸ் தாவரம் மிக சிறிய உயிர்களையும் இரையாக்குகிறது.

 வீனஸ் தாவரங்களின் பொறிகள் பலமுறை இரையை பிடித்தபின்னரே காய்ந்து கீழே விழுகின்றன. மீண்டும் புதிய பொறிகளை அடிமட்ட கிழங்கிலிருந்து இவை உருவாக்கிக்கொள்ளும். இவற்றின் வாழ்நாட்களை மிகச்சரியாக கணிக்க முடியவில்லை எனினும் வீனஸ் தாவரங்களின் வாழும் காலம் 20 வருடங்களுக்கும் மேல் என்றே கருதப்படுகிறது. பிற தாவரங்களை போலவெ வீனஸ் தாவரமும் சிறிய அளவில் ஒளிச்சேர்க்கை செய்தும் உணவை தயாரிக்கின்றது. மேலதிகமான சத்துக்களை இரையை பிடித்து உண்ணுவதால் பெறுகிறது

பல ஊனுண்ணித்தாவரங்கள் பிரத்யேக இரைகளை தேர்வு செய்கின்றன. வீனஸ் ஃப்ளை ட்ராப், வண்டுகள் சிலந்திகள் மற்றும் மெல்லுடலிகளையே  அதிகம் இரையாக்குகின்றது.  வீனஸ் தாவரத்தின் ஊன் உணவில் 33%  எறும்புகள், 30% சிலந்திகள், 10% வண்டுகள் மற்றும் 10% வெட்டுக்கிளிகள் இருக்கின்றன. இவற்றின் ’மெனு’வில்  5% மட்டுமெ பறக்கும் பூச்சிகள் உள்ளன

இரையின் அளவு

இலைப்பொறிகளின் அளவை காட்டிலும் சிறியதாக இருக்கும், பொறிகளின்  உள்ளே மாட்டிக் கொள்ளும் அளவிலான இரைகளையே இவை தேர்வு செய்கின்றன.ஒருபோதும் பொறிகளைக்காட்டிலும் பெரிதான இரைகளை இவை முயல்வதே இல்லை.  

அலங்கார செடிகளாக வீனஸ்

இவை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே பல ஆர்வலர்கள் இவற்றை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.  தாமஸ் ஜெஃப்ஃபெர்ஸன் (Thomas Jefferson)  பாரீஸில் 1786ல் தங்கி இருந்தபோது வீனஸ் தாவரங்களை சேகரித்தார். மேலும் இவற்றின் விதைகளையும் கடல்வழி அனுப்ப ஏற்பாடுகளை  செய்துவிட்டே பாரீஸிலிருந்து புறப்பட்டார், தாமஸ் வீனஸை ’’சென்சிடிவ் தாவரம்’’ என்று கடிதங்களில் குறிப்பிட்டார்.  தாவரங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த பச்சை கட்டைவிரல்காரர் என்று அழைக்கப்பட்ட மாமன்னர் நெப்போலியனின் மனைவி ஜோஸபைன் வீனஸ் தாவரங்களை தனது  வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தார் 

  தொடர்ந்து நடைபெற்ற தாவர பெருக்க சோதனைகளில் பலவிதமான வீனஸ் தாவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன அவற்றில் மாபெரும் பொறிகளை கொண்டவைகளும், கூடுதல் பொறிகளை கொண்டவைகளும் அடங்கும்.  அவ்வாறான பிரபல  வகைகளுக்கு Sawtooth, Big Mouth மற்றும் Red Piranha போன்ற பெயர்கள் இடப் பட்டிருக்கின்றன.

புதிய வீனஸ் வகையான ஜஸ்டினா டேவிஸின்  (Justina Davis) பெயருக்கு பின்னால் சுவாரஸ்யமான ஒரு கதை இருக்கிறது.வடக்கு கரோலினாவின் கவர்னர் ஒருவர் தனது 73வது வயதில் இரண்டாவது மனைவியாக ஜஸ்டினா டேவிஸ் என்னும் 15 வயது பெண்னை மணம் புரிந்துகொண்டார் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன

ஜஸ்டினாவின் இளமையை கருத்தில்கொண்டு பொறிகளின் உட்புறம் ஒருபோதும் சிவப்புநிறம் கொண்டிராத, முழுத்தாவரமும் எப்போதும் பசுமை நிறைந்திருக்கும் வகைக்கு ஜஸ்டினா டேவிஸ் என பெயரிடப்பட்டது. இது முழு முதிர்ச்சி அடைந்த பின்னும் இளமையாவே தோற்றமளிக்கும் வகை

இவை சதுப்பு நிலங்களில் வளருபவை என்றாலும் மிக அதிகமாக நீர் தேங்கி இருக்கையில் வீனஸ் தாவரங்களின்  வேர்கள் அழுகி விடும், தொட்டிகளிலும், குடுவைத்தோட்டங்களிலும்(Terrarium)  இவற்றை வளர்க்கலாம். எதில் வளர்த்தாலும் மண்ணில் அமிலச்சத்து இருப்பது அவசியம்

இவை நச்சற்றவை எனவே வீடுகளில் வளர்க்கலாம், வீடுகளுக்கு வெளியில் வளர்கையில் இவை தனது இரையை தானே தேடிக்கொள்கின்றன. வீடுகளின் உள்ளே அலங்காரத் தாவரங்களாக வளர்க்கப்படுகையில் பிற தாவரங்களுக்கு நீரூற்றுவதைப் போல, ஒளி கிடைக்க வசதி செய்வதைப்போல வீனஸ் தாவரங்களுக்கு பூச்சிகள் இரையாக கிடைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.வீடுகளில் வளர்க்கப்படும் வீனஸ் தாவரங்களுக்கு,  மாதமொரு முறையாவது  பூச்சிகளை அளிக்கவேண்டும் இல்லாவிட்டால் அவை மெல்ல அழிந்துவிடும்

பூச்சிகளல்லாத பிற இறைச்சி இரைகள் வீனஸ் தாவரங்களை கொன்று விடும். மேலும் இறந்த பூச்சிகளை விட இவை உயிருள்ள இரைகளையே விரும்பும். 

 இவற்றின் குளிர்கால உறக்க நிலை சுமார் 10 மாதங்களுக்கு தொடரும்,  அலங்காரச் செடிகளாக இவற்றை வளர்ப்பவர்கள் மலர்கள் உருவானதும் மலர்களை அகற்றி விடலாம்.  இனப்பெருக்கத்துக்கு இத்தாவரம் செலவழிக்கும் ஆற்றலை இதன் மூலம் சேமிக்கலாம்

கடுங்குளிர் காலத்தில் கருகி மடியும் இவை மீண்டும் துளிர்த்து வளரும் எனவே அவை இறந்து விட்டதாக கருதி அவற்றை பிடுங்க வேண்டியதில்லை

இயற்கையாகவே வளம் குறைந்த நிலப்பகுதிகளில் வாழ்வதால் வீனஸ் தாவரங்களுக்கு அதிக உரம் இடுவதும் அவற்றை  கொல்லும்.

சூரிய ஒளி சுமார் 6 மணி நேரங்களுக்கு இவற்றிற்கு தேவைப்படுகிறது இதற்கும் குறைந்த அல்லது அதிகமான கால அளவில்  இருக்கும் ஒளி இவற்றின் வளர்ச்சியை பாதித்து தாவரத்தின் இலைகளை உதிரச்செய்துவிடும்.

இவை குளிர்ந்த காலநிலையில் நன்கு வளரும் ஆனால் அதிக குளிரும் அதிக வெப்பமும் இவற்றை அழித்துவிடும்.

அமேஸான் வீனஸ் தாவாங்களை ஆன்லைனில் விற்பனை செய்கிறது.திசு வளர்ப்பில் உருவாக்கப்பட்ட  ஒரு வீனஸ் தாவரம் 5 டாலர்களுக்கு கிடைக்கிறது.

பாதுகாக்க வேண்டிய இனம்

அரிய வகை தாவரங்களின் அழிவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 1976ல் தெற்கு கரோலினா பாரம்பரிய அறக்கட்டளை (The South Carolina Heritage Trust) உருவாக்கப்பட்டது. தெற்கு கரோலினா இயற்கை வளங்களுக்கான் துறை (South Carolina Department of Natural Resources) அதன் கட்டுப்பாட்டில்  83,000  ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை கொண்டிருக்கிறது. அந்நிலத்தில் சுமார் 3,000 இயல் தாவரங்கள் இருக்கின்றன அவற்றில் வீனஸ் தாவரங்கள் உள்ளிட்ட  700 வகைகள்  மிக மிக அரியவை. 2005ல் வீனஸ் தாவரம் வடக்கு கரோலினாவின் மாநில மலராக அடையாளப்படுத்தப்பட்டது.  

மரபணு மாற்றங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட அலங்கார வீனஸ் தாவரங்கள் பசுங்குடில்களில் வளர்க்கப்பட்டு வீடுகளில் வளருகின்றன   இவற்றில் ‘Akai Ryu மற்றும் ‘South West Giant’ ஆகிய வகைகள் ராயல் தோட்டக்கலை தங்க விருதை பெற்றுள்ளன

பசுங்குடில்களில் இவை சாகுபடி செய்யப்படுகின்றன எனினும் இயற்கையான வாழிடங்களில் 1979 லிருந்தவற்றின் எண்ணிக்கையில் தற்போது 7 சதவீத தாவரங்கள் மட்டுமே இருக்கின்றன 

வாழிட அழிப்பும் வீனஸ் தாவரங்களின் அழிவுக்கு காரணமாயிருக்கிறது.சமதளமான நிலப்பரப்பும் அமிலத்தன்மை உள்ள சதுப்பு மண்ணும் நல்ல ஒளியும் இருக்கும் இடங்களில் தான் இவை செழித்து  வளர்கின்றன சூழல் மாசு மற்றும் விவசாய நிலங்களாக இயற்கை வாழிடங்கள் மாற்றபடுவது ஆகியவற்றால் வீனஸ் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கரோலினாவின் மக்கள் தொகைப்பெருக்கத்தினால் சாலை உருவாக்கமும் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதுமாக இவற்றின் வாழிடங்கள் குறைந்து கொண்டே வருகின்றது.வடக்கு கரோலினாவில் வீனஸ் தாவரங்கள் சிறப்பு கவனம் கோரும் தாவரங்கள் என்னும் பிரிவில் வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன

வீனஸ் செடி அழியும் தாவரங்களில் ஒன்றாகவும் பாதுகாக்கபட வேண்டிய இனமாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தினால்  சிவப்பு பட்டியலிட பட்டிருக்கிறது.

இந்த தாவரங்களின் அழிவிற்கு இவற்றை சட்டவிரோதமாக சேகரிப்பதும் முக்கிய காரணமாயிருக்கிறது. பொது இடங்களில் இயற்கையாக வளரும் வீனஸ் தாவரங்களை  சேகரிப்பது சட்டப்படி குற்றமென வடக்கு கரோலினாவில் 1958லிருந்தே அறிவிக்கப்பட்டிருக்கிறது . பசுங்குடில்களில்  ஆயிரக்கணக்கான வீனஸ் தாவரங்கள் வளர்க்கப்பட்டு சந்தை படுத்தப்பட்டிருக்கிறது. 

எனினும் 2016 நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை பசுங்குடில்களில் வளர்க்கப்படும் வீனஸ் தாவரங்களை காட்டிலும் இயற்கையான வாழிடங்களில் வளரும் தாவரங்களுக்கான தேவையே அதிகம் என்கிறது. வடக்கு கரோலினாவில் இப்போது வீனஸ் தாவரங்களை சட்டவிரோதமாக சேகரிப்பது கடும் தண்டனை குரிய பெருங்குற்றமாக கருதப்படுகிறது (felony). 

2014லிருந்து அமெரிக்காவில் வீனஸ் செடிகளை  அனுமதியின்றி எடுப்பது 25 மாத சிறைத்தண்டனைக்கான குற்றமாக கருதப்படுகிறது. . கடத்தல்காரர்கள் இயற்கையான வாழிடங்களில் இருப்பவற்றில் மிகப்பெரிய தாவரங்களையே தேர்வு செய்து எடுக்கிறார்கள். எனவே அவற்றிலிருக்கும் ஏராளமான விதைகளும், அவ்விதைகளிலிருந்து முளைக்கவிருக்கும் நூற்றுக்கணக்கான அடுத்த சந்ததி தாவரங்களுக்கும் சேர்த்தே கூடுதல் சிறைத்தண்டனை அளிக்கப்படுகிறது

உள்ளங்கையிலும் சட்டை பாக்கெட்டுகளிலும் கூட பல வீனஸ் தாவரங்களை மறைத்து வைத்துக் கொள்ள முடியும் என்பதால் இவற்றின் கள்ளத்தனமான சேகரிப்பை கண்டுபிடித்து தடை செய்வது மிக கடினமாக இருக்கிறது.

இவற்றை வாங்குபவர்களுக்கு அவை இயற்கையான வாழிடங்களிலிருந்து திருடிகொண்டு வரப்பட்டதா அல்லது பசுங்குடில்களில் வளர்க்கப்பட்டதா என்று தெரியாததால் அவை எளிதில் சந்தைப்படுத்தப் படுகின்றன’

சர்வதேச அளவிலான வீனஸ் தாவரக் கடத்தல்களும் நடைபெறுகின்றன. பால்டிமோர்- வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பெரணிகள் என்னும் பெயரில் இருந்த பெட்டிகள் சோதனையிடப்பட்ட போது அவற்றில் 9000 வீனஸ் தாவரங்கள் இருந்தன.

இவை பொதுவாக மரங்களின் அடுக்குகளுக்கடியில் அவ்வப்போது காட்டு நெருப்பு உண்டாகும் இடங்களில் செழித்துவளர்கின்றன. குறிப்பாக விதைகள் முளைக்க நெருப்பு எரிந்த பின்னர் இருக்கும் சாம்பல் மண் மிகவும் அவசியமாக இருக்கிறது. நெருப்பின் வெப்பம் இவற்றின் வளர்ச்சிக்கு நேரடியாக தேவைப்படுகிறது. காட்டு நெருப்பு மனிதர்களுக்கு ஆபத்தேற்படுத்தும் என்பதால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படுவதும் இவற்றின் அழிவுக்கு காரணமாயிருக்கிறது.  

இவை கடல்மட்டத்திலிருந்து 2-4மீ உயரத்தில் இருப்பதால் புயல் மழை போன்றவற்றினால் கடல்மட்டம உயருகையில் இவை அழிகின்றன.

சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் வீனஸ் தாவரங்களின் இயற்கை வாழிடங்களை GPS  கருவி மூலம் கணக்கெடுத்தது. 1970களிலிருந்து நடைபெற்ற கணக்கெடுப்புக்களோடு ஒப்பிட்டதில் சுமார் 70 சதவீத வாழிடங்கள் இப்போது அழிந்துவிட்டிருப்பதாக  முடிவுகள் தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் அவற்களது வாழ்வில் ஈடுபட்டிருந்த அனைத்து ஆய்வுகளிலும் மனம் உடையும் ஒரு ஆய்வு இதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்

இந்த நிலைமை தொடர்ந்தால்  வீனஸ் தாவரம் புராணங்களிலும் காப்பியங்களிலும் தொன்மங்களிலும் இடம்பெற்றிருந்த ஒரு  தாவரமாக மாறிவிடும் சாத்தியமும் இருக்கிறது.

வீனஸ் தாவரத்தின் சாறு கார்னிவோரா  (Carnivora) என்னும் பெயரில்  மூலிகையாக சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளில் எய்ட்ஸ் மற்றும் சருமப்புற்று நோய்களுக்கான சிகிச்சையில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.ஆனால் இவை அந்நோயை குணமாக்குவதற்கான அறிவியல் ஆதாரங்கள் இதுவரை இல்லை.

இருக்கும் இடத்திலிருந்தே தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், தொடர்ந்து உயிர்வாழவும் தாவரங்கள் பலவகையான, மிக சாமர்த்தியமான தகவமைப்புகளை கொண்டிருக்கின்றன. மற்றொரு  உதாரணமாக புகையிலை செடிகளின்  இலைகளை உண்ணும் கம்பளிப்பூச்சிகளுக்கு நிகோடின் தசைபலவீனத்தை உடனடியாக உருவாக்குவதை சொல்லலாம்.  தசை பலவீனமடைவதால் அவை புகையிலை உண்ணுதலை தொடர்வதில்லை

இது போன்ற தாவரங்களின் சிறப்பு தகவமைப்புகள் ஆச்சர்ய மூட்டுபவை. ஒரு தாவரத்தின்  95% இலைகளை நீக்கிவிட்டாலும் அவை மீதமிருக்கும் இலைகளைக் கொண்டே உணவு தயாரித்து, உயிர்வாழ்ந்து இனப்பெருக்கமும் செய்யும். நம்மைக் காட்டிலும் சூழல் தகவமைப்பு கொண்டவை அவை. தாவரங்கள் மனிதர்களைக் காட்டிலும்  சூழலை மிக நுண்மையாக கவனித்து அவற்றின் பிரச்சினைகளுக்கு எப்படியும் தீர்வை கண்டுபிடித்து விடுகின்றன. 

தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதா? மூளை என்னும் அமைப்பு இருக்கிறதா? நரம்பு மண்டலம் இருக்கிறதா? எப்படி அவற்றை உயிருள்ளவை என சொல்ல முடியும் போன்ற கேள்விகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. மனிதர்களின் மூளை, நரம்பு மண்டலம் இவற்றுடன் மட்டும் தாவரங்களை ஒப்பிடாமல்   இப்போது பிரபலமாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்  ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதிலும் மூளை இல்லை நரம்பு மண்டலம் இல்லை ஆனால் ஒரு வலைப்பின்னல் போல அபாரமாக செயல்படும் அவற்றின் சாமார்த்தியங்களை நாம் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறோம், அதுபோலத்தான் இந்த தாவரங்களின் நுண்ணறிவும்,  

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து தாவரங்கள் கொண்டிருக்கும் அறிவைத்தான் இந்த நூற்றாண்டில் மனிதர்கள் மிகத்தாமதமாக கண்டறிந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். தாவரங்களும் விலங்குகளும்  நம்மைக்காட்டிலும் கீழ்நிலை உயிரிகள் அவற்றால் நம்மைப்போல சிந்திக்கும் தரமற்றவை என்று இன்னும் நம்புபவர்கள் டேவிட் அட்டன்பரோவின் BBC க்கான இந்த 

காணொளியை காணலாம். இதில்   வீனஸ் தாவரங்களின் இரை பிடிக்கும் பொறியமைப்பும், செயல்பாடுகளும்  துல்லியமாக காண்பிக்கப்படுகிறது.

  • ஏறுகொடியொன்று பற்றுக்கம்பிசுருள்களைக்கொண்டு ஆதரவாக  அருகிலிருக்கும் கம்பியை பற்றிக்கொண்டு மேலேறி வளர்வதை காட்டும் இந்த https://youtu.be/5NvlkEqMtVY காணொளியையும் பார்க்கலாம்.

1. https://logamadevi.in/2045

வாழைகளின் வகைகள்

 

வாழை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம் என தாவரவியலாளர்களால் கருதப்படுகிறது. உலகின் முதல் உண்ணும் பழமும் வாழைதான் என கருதப்படுகிறது. ஆதாம் ஏவாள் உண்டதும் வாழைதான் என்போரும் உண்டு.

தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்ட வாழை அரேபியர்களால் உலகின் பல பாகங்களுக்கு  கி மு 327 ல் அறிமுகம் செய்யப்பட்டது

வணிக ரீதியிலான வாழை சாகுபடி 1834 ல் தொடங்கியது.  1889களில் உலகெங்கும் மிக பரவலாக வாழை சாகுபடி ஆனது  

அலெக்ஸாண்டர் இந்திய படையெடுப்பின் போது கிடைத்த கதலிப்பழங்களின் சுவையை மிக விரும்பி இந்தியாவிலிருந்து வாழையை மத்தியகிழக்கு நாடுகளுக்கு அறிமுகம் செய்தார் அங்குதான் பொன்னிற பருத்த விரல்களை போன்ற வாழைப்பழங்களுக்கு  ’பனான்’ (banan)  என்னும் விரல்களை குறிக்கும் அரபிச்சொல் பெயராக வைக்கப்பட்டது

 பின்னர் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரிபியன் பகுதிகளுக்கு 15ம் நூற்றாண்டிலும் அங்கிருந்து பெர்முடாவுக்கும் வாழை அறிமுகமானது. பெர்முடாவிலிருந்து 17, 18ம் நூற்றாண்டுகளில் வாழை பெருமளவில் இங்கிலாந்துக்கு கடல்வழி அனுப்பப்பட்டது.

 1835 ல் இங்கிலாந்தின் பிரபல தோட்டக்காரர் ஜோஸஃப் பாக்ஸ்டன் ஒரு புதிய மஞ்சள் பழங்களை அளிக்கும் வாழை வகையை உருவாக்கினார். அவரது எஜமானர் வில்லியம் கேவெண்டிஷ்  பெயரிலேயே அதற்கு  Musa cavendishii என்று பெயரிடப்பட்டது.

வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நன்கு  பழுத்த வாழைப்பழங்களில் வைட்டமின் B6 ,C, மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. வாழைப்பழங்களும் வாழைத்தண்டும் வாழைப்பூக்களும் ஏராளமான மருத்துவ குணங்களும் கொண்டிருக்கிறது. வாழை இலையில் உணவுண்ணுவதும் ஆரோக்கியமான வழக்கம்.

ம்யூஸேசி குடும்பத்தை சேர்ந்த வாழையின் உண்ணக்கூடிய பழங்கள் ஆங்கிலத்தில் bananas  என்றும் சமைத்து உண்ணும் வாழைக்காய்கள்  plantains எனவும் குறிப்பிடப்படுகின்றன

இவை மரம் என்று சொல்லப்பட்டாலும் இவற்றின் சதைப்பற்றான தண்டுகள் இலைத்தாள்களின் சுற்றடுக்குகளால் ஆன போலித்தண்டுகள்தான் .

வாழையில் சுமார் 70 சிற்றினங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகளும் உள்ளன.  ஒருவித்திலை தாவர வகையை சேர்ந்த வாழை விரைவில் வளரும் இயல்புடையது.

இதன் கலப்பினங்கள் உயரத்திலும் அளவிலும் பழம் பூ இலை ஆகியவற்றிலும் வேறுபட்டிருக்கும். இவைஅதிக பட்சமாக 15 மீ உயரம் வரை வளரும்.ஓராண்டில் மலர்ந்து பலனளிக்கும்.

 உலகெங்கிலும் விரும்பி உண்ணப்படும் விதைகளற்ற சதைப்பற்றான வாழைப்பழங்களை கொடுக்கும் வாழைமரங்கள் அனைத்துமே  Musa acuminata மற்றும் Musa balbisiana  ஆகிய இரு காட்டு வாழைகளின் கலப்பினம் தான்

சிறப்பு வாழை வகைகள்

  • சீன குட்டை வாழை அல்லது தங்கத்தாமரை வாழை எனப்படும்  Musella lasiocarpa  கடல்மட்டத்துக்கு மேல் 2500 அடி உயரத்தில் வளரும் இவற்றின் போலித்தண்டின் உச்சி பொன்னிறத்தில்  இதழ்களாக விரிந்து தாமரை போலிருக்கும். இவை அலங்கார வாழைகள்  
  • Musa ornata, என்பது மலர் வாழை. இதன் கனிகள் உண்ணத்தகுந்தவையல்ல. அழகிய இளஞ்சிவப்பு மலர்களுக்காக இவை உலகெங்கிலும்  சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. 
  • Musa velutina,  வகை அஸ்ஸாம் மற்றும் கிழக்கு இமாலயப்பகுதிகளில் காணப்படும் மலர்களும் பழத்தோலும் அடர் ரோஜா நிறங்கொண்ட வாழை வகை
  • கேரட் வாழையின் (M×troglodytarum,L) கனிகள்  சிறிதாக  உருளைக்கிழங்கை போல் இருக்கும் இவற்றின் சதை நல்ல ஆரஞ்சு நிறம்  கொண்டிருக்கும். இவற்றில் ஆந்தோசயானின் நிறமிகள் உள்ளதால் பல மருத்துவ பயன்களும்கொண்டது
  • நீல ஜாவா வாழை ஐஸ்கிரீம் போன்ற வெனிலா வாசனைகலந்த  இனிப்புச்சுவை கொண்டிருக்கும். 
  • Musa textilis என்பது நார் வாழை. இந்த வாழை நார் ஆங்கிலத்தில் ’Abacá’  எனப்படுகிறது.  பின்னலாடை தொழிலுக்கேற்ற உறுதியான நாரிழைகளை கொடுக்கும் இந்த வாழை பிலிப்பைன்ஸில்  ஒரு முக்கிய வணிகப்பயிர். இவற்றின் சிறு கனிகள் உண்ணத்தகுந்தவை அல்ல.
  • இலைகளின் அடிப்பகுதியில் மழை நீரை சேர்த்துவைத்து, கடும் கோடையில் பயணிப்பவர்களுக்கு குடிநீர் அளிக்கும் விசிறி வாழை (Ravenala madagascariensis,) மடகாஸ்கரை தாயகமாக கொண்டது
  • உலகின் மிகப்பெரிய வாழையினமான ராட்சஷ வாழை எனப்படும்  Musa ingens,  இந்தோனேசியாவில் காணப்படுகிறது.

இவற்றின் இலைகள் 1மீ அகலம் 16 மீ நீளமும் கொண்டிருக்கும்.தண்டு 50 அடி உயரம் வரை வளரும் உச்சியில் சுமார் 20 நீண்ட இலைகளும் மிகப்பெரிய வாழைத்தாரும் கொண்டிருக்கும் இவையே உலகின் மென்மரங்களில் மிக உயரமானவை. இவற்றின் சுற்றளவு1- 2 மீ இருக்கும். ஒரு பழம் சுமார் 3 லிருந்து 4 கிலோ எடை கொண்டிருக்கும் இதன் மிகப்பெரிய மலரிலிருந்து  லேசான புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை கொண்டிருக்கும் 18லிருந்து 25 செ மீ நீளமிருக்கும்  300 பெரிய பழங்கள் உருவாகும். 

உலகிலேயே அதிக நீளம் கொண்ட இலைக்காம்பு சுமார் 15 மீ நீளம் கொண்டது

1989ல் தாவரவியலாளர்   ஜெஃப் டேனியல்ஸ் (Jeff Daniels), இந்த ராட்சஷ வாழையை இந்தோனேசியாவில் கடல்மட்டதுக்கு 2000 மீ உயரத்தில்  முதன்முதலாக கண்டறிந்தார்

இந்தியாவில் வாழை கலச்சார முக்கியத்துவம் வாய்ந்தது வாழையடி வாழையாக என்னும் பழமொழி தொடர்ந்து வரும் சந்ததிகளைகொண்ட குடும்பத்தை குறிக்கும் முது சொல்லாக இருக்கிறது

பூத்து காய்த்து, கனியளித்து தானழிந்து சந்திகள் வளர வழிசெய்யும் வாழை இந்தியாவில் தெய்வமாகவும் வணங்கப்படுகிறது,. இந்திய  மங்கல நிகழ்வுகளில் வாழை நுழைவுவாயிலை அலங்கரிக்கும்

 இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழை கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது. வாழையின் வேர், இலை, மலர், கனி, காய், தண்டு, நார் என அனைத்தும் உபயோகம் கொண்டதால் கற்பக விருட்சம் என்றும் இதற்கு பெயருண்டு.

துரியான் – முள் நாறி

முள் நாறிப்பழம்- துரியான்

துரியான் மரம் Durio zibethinus என்னும் அறிவியல் பெயர் கொண்டது.இது கனிகளின் அரசன் என்றும் அழைக்கப்படுகிறது

நல்ல வெப்பமுள்ள இடங்களில் மட்டுமே செழித்து வளரும் இயல்புடையவை இந்த துரியன் மரங்கள். போர்னியோ ,சுமத்ரா தீவுகளை தாயகமாக கொண்ட  இம்மரங்களின் அறிவியல் பெயரின்  duri  என்பது மலாய் மொழியில் ’முள்’ என்று பொருள்படும். துரியான் பழங்களின் முட்களை இச்சொல் குறிக்கிறது.

 15 ம் நூற்றாண்டில் துரியான் பழங்களும் முட்களை கொண்ட முள்சீதா (Annona muricata) பழங்களும் ஒன்று  என கருதபட்டு குழப்பம் நிலவியது.  17ம் நூற்றாண்டில் ஜெர்மானிய தாவரவியலாளர் ஜி இ ரம்ஃபிஸ் என்பவர் துரியான் பழ மரங்களை குறித்தான விரிவான விளக்கங்கள் கொண்ட நூல் ஒன்றை வெளியிட்ட போதுதான் இக்குழப்பம் தீர்ந்தது.

 ரம்ஃபிஸ் அந்த நூலில் எப்படி அமெரிக்க பழங்குடி வேட்டைக்காரர்கள் துரியானின் கெடுமணத்தையும் சுவைமிகுந்த கனிச்சுளைகளையும் கொண்டு புனுகுப் பூனைகளை (civet cat) பிடிக்கிறார்கள் என்பதை விவரித்திருந்தார். துரியானின் அறிவியல் பெயரின் zibethinus என்பது இத்தாலிய சொல்லான  zibetto என்பதன் பொருளான  புனுகுப்பூனையை குறிக்கிறது.

நிமிர்ந்த தண்டும், அகன்ற அடிப்பகுதியும் முட்டைவடிவ இலைப்பரப்புமாக மிக கம்பீரமான தோற்றமுடையது இம்மரம்.

இலைகள் லென்ஸ் வடிவத்தில் இரு நுனிகளும் கூராக  இருக்கும் இலைகளின் மேற்பரப்பு மென்மையாகவும் பளபளப்பாகவுமிருக்கும் அடிப்பகுதி  மங்கலான நிறத்திலிருக்கும். வனப்பகுதிகளில் 130 அடி உயரம் வரை வளரும் துரியான் மரங்கள் சுமார் 200 வருடங்கள் வாழும்.

கலப்பின துரியான் மரங்கள் இவற்றில் பாதி உயரத்தையே கொண்டிருக்கும். 20லிருந்து 30 மலர்களை கொண்ட தொங்கு மஞ்சரிகள் மிக அழகாக  கவிந்த மணிகளை போலிருக்கும்.

 மலர்கள் நல்ல தடித்த கிளைகளில் மட்டுமே தோன்றும். மலர்களின் நிறம் கனிகளின் நிறத்தை ஒத்திருக்கும் மஞ்சள் கலந்த மலர்களிலிருந்து மஞ்சள் நிற சுளை கொண்ட கனிகளும் வெள்ளை அல்லது சிவப்பு மலர்களிலிருந்து வெள்ளை அல்லது சிவப்பு சதைப்பகுதியை கொண்ட கனிகளும் உருவாகும்

 அரும்பு மலர ஒரு மாத காலமாகும். துரியான் மரங்களில்  அயல் மகரந்த சேர்க்கை வவ்வால்கள் தேனீக்கள் பறவைகள் மற்றும் எறும்புகளினால் நடைபெறும். மகரந்த சேர்க்கை முடிந்த மலர்களிலிருந்து 3 மாத்த்தில் கனிகள் உருவாகும்.

 துரியான் கனிகள் 12 இன்ச் குறுக்களவும் முட்கள் நிறைந்த மேல்தோலும் கொண்டவை. ஒரு பழம் சுமார் 6லிருந்து 8 கிலோ எடைகொண்டிருக்கும். ஒரு மரத்தில் நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பலன் கிடைக்கும்..

கனிகளில் பெரிதான 5 சுளைகளே காணப்படும் பொதுவாக மஞ்சளிலும்  அரிதாக இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது நீலநிறத்திலும் சுளைகள் இருக்கும்.  இக்கனிகளின் தனித்துவமாக இவற்றின் கெடுமணம் இருக்கிறது

பலருக்கு இம்மணம் விருப்பத்துக்குகந்ததாகவும் பலருக்கு இம்மணம் கெடு நாற்றமாகவும் இருக்கிறது. சிலர் இம்மணத்தை கெட்டுப்போன வெங்காய மணத்தை, டர்பன்டைனின் நெடியை ஒத்திருக்கிறது என்பார்கள். சுவையும் அப்படியே பலருக்கு இது பிடித்தமானதாகவும் பலரால் இதை உண்ணுவதை நினைத்துப்பார்க்கக்கூட முடியாததாகவும் இருக்கிறது. மலேசியாவில் இது பலரின் விருப்பக் கனியாக இருக்கிறது. சிங்கப்பூரில் இந்த கெடுமணத்தினால் இவற்றை ரயில் மற்றும் பேருந்துகளில் எடுத்துச்செல்ல சட்டப்படி தடை விதிக்கப்பட்டிருக்கிறது

 வருட்த்திற்கு இருமுறை கிடைக்கும் துரியான் கனியை உடைத்து உடனே சிலமணி நேரத்தில் உண்டுவிடவேண்டும் இல்லாவிட்டால் இதன் சுவையும் சத்துக்களும் மாறுபட்டுவிடும். இவற்றின் கொட்டை மிக மிக கடினமானது.

முள்நாறிப்பழமான துரியானில் சுமார் 35 க்கும் அதிகமான் வகைகள் உள்ளன. பல பழங்கள் காயாக இருக்கையிலேயே  முட்கள் நீக்கப்பட்டு  முள்ளில்லா துரியான் என விற்பனை செய்யப்படுகின்றன . இயற்கையிலேயே முள்ளில்லா துரியான் கனிவகை  இன்னும்  உருவாக்கப்படவில்லை.

தோட்டக்கலைத்துறையினால் உருவாக்கப்பட்ட துரியான் மரங்களின் பெயர்கள் அனைத்தும் D என்னும் எழுத்தை கொண்டிருக்கும். D24, D99, D158 , D159 போன்றவை முள்நாறியின் புகழ் பெற்ற ரகங்கள்.

துரியன் கனிகளின் ஏற்றுமதியில் தாய்லாந்து  முதன்மை வகிக்கின்றது. தென் கிழக்காசியாவைத்தவிர ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் இப்பழம் விளைகின்றது.

துரியான் கனிகளில் மாவுச்சத்து புரதம் நார்ச்சத்து இவற்றோடு வைட்டமின் B12, C,B 6, மேங்கனீஸ் மெக்னீஷியம் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவற்றுடன் ஆந்த்தோசயானின் போன்ற பல முக்கிய நிறமிகளையும் இக்கனி கொண்டுள்ளது. பல சத்துக்கள் கொண்டுள்ள இக்கனி புற்று நோய்க்கெதிராகவும் உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உடலை வலுவாக்கவும் பயன்படுகிறது.

 துரியன் கனிகளுடன் மதுவை சேர்துக்கொலவ்து ஆபத்தை  விளைவிக்கும்.

ஈஸ்ட்ரொஜென்னை போன்ற இயக்கச்சாற்றை (Hormone) கொண்டிருக்கும் துரியான் கனிகள் குழந்தை பேறற்றவர்களின் குறையைபோக்கும் என்னும் நம்பிக்கை உலகின் பல நாடுகளில் இருக்கிறது. எனினும் இதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை.

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑