அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

Page 6 of 35

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

சமீபத்தில் நடிகர் சரத்பாபு மரணம் என்று செய்தி பரவியது.  இப்போது வளர்ந்த பிள்ளைகளுடன் இருக்கும் என் வயது பெண்களின் இளவயது கனவு நாயகன் அவர். செய்தி கேட்டு, பலர் மனமுடைந்து போனோம். சரத்பாபுவின் பல திரைப்படங்கள் சிறப்பானவை, அதிலும் ரஜினி, ஷோபாவுடன் அவர் நடித்த ’முள்ளும் மலரும்’ பலரின் தனித்த பிரியத்துக்குரியது.

இப்படத்தின் ’செந்தாழம்பூவில்’ பாடலை இன்று வரையிலும் மீள மீளக் கேட்காத என் தலைமுறையினர் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த செய்தி கேள்விப்பட்ட அன்று மீண்டும் ’செந்தாழம்பூவில்’ பாடலை கேட்க நினைத்தேன்.

ஒரு மலைப்பாதையில் வயல் வேலையிலிருந்து திரும்பும் அல்லது செல்லும்  ஷோபா உள்ளிட்ட இளம்பெண்களை ஜீப்பின் பின்புறம் அமரவைத்து சரத்பாபு என்னும் எஞ்சினீயர்,  காடுகள் பெருமரங்கள் தேயிலை தோட்டங்கள் வழியில் இடைபடும் செம்மறியாட்டு கூட்டங்களை ஜீப்பில் கடந்துசென்றபடி பாடும் பாட்டாக இத்தனை வருடங்களாக அது மனதில் பதிந்திருந்தது. பெரும்பாலும் பலநூறு முறை அப்பாடலை ஒலிவடிவில்தான் கேட்டிருக்கிறேன், 

அதைக் காட்சியாகப் பார்க்கும் அவகாசமற்ற,  பரபரப்பான பல வருடங்களுக்குப் பின்னர்,  இப்போது திரையில் பார்க்கையில்தான்  சரத்பாபுவுக்கும் ஷோபாவுக்குமான காம்பினேஷன் காட்சிகளே இல்லாமல்,  அவர்களிருவரும் தனித்தனியாக படமாக்கப்பட்டிருக்கும் அநீதி தெரியவந்தது.

சரத்பாபு  பக்கவாட்டு காமிராவை பார்த்து முறுவலிக்கிறார், ஷோபா காமிராக்காரரை  அல்லது பாலுமகேந்திராவை பார்த்து நாணுகிறார். தூரக்காட்சிகளில்  ஷோபா இல்லாமல் பல பெண்கள்  ஜீப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.என்னவோ ஏமாற்றமாக இருந்தது.

இப்பாடலை  இறுதிக்காட்சிகளில் காண்பிக்கப்படும் மலைப்பிரதேசங்களில் மட்டும் வளரும் யுலெக்ஸ் யுரோப்பியா என்னும் மஞ்சள் நிற மலர்களும் கூர் முட்களும் நிறைந்த ஒரு பயறு வகை குடும்பத்தை சேர்ந்த செடியை  சுட்டிக்காட்டும் பொருட்டு நான் மாணவர்களுக்கு பரிந்துரைப்பேன். கூடவே கற்றலை சுவாரஸ்யமாக்க ஷோபா என்னும் பேரழகியைக் குறித்தும் சொல்வதுண்டு. அந்த பாடல்  ஜீப் கடந்து வரும் சில்வர் ஓக் மரங்கள் நிறைந்த  தேயிலைத் தோட்டங்கள், பெருமரங்களின் நிழலில் நனைந்திருக்கும் காட்டுப்பாதை, மலைச்சரிவுகள், மலைமுகடுகள் என மிக அழகிய காட்சிப்புலம் கொண்டிருக்கும்.

 தாவரவியல் துறை சார்ந்த பிரேமை கொஞ்சம் கூடுதலாகவே இருப்பதால் எல்லாக் காட்சிகளிலும் கதை மாந்தர்கள், திரைக்கதையில் உண்டாகி இருக்கும் உணர்வெழுச்சி, அக்காட்சியின் முக்கியத்துவம் போன்ற பலவற்றையும் கடந்து திரையில் தெரியும் செடிகொடிகளின் மீதுதான் என் கவனம் முற்றாக குவிந்திருக்கும்.

தாவரங்கள் மீதான அதீத கவனத்தில் புடவையில், படுக்கை விரிப்பில் இருக்கும் மலர், கனி வடிவங்களை கூட கவனமாக பார்ப்பதுண்டு. ஜோதிகா ’’திருமண மலர்கள் தருவாயா’’ பாடலில் ’’வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே’’ என்னும்போது ’’அட, மாதுளை sun demanding செடியாயிற்றே அதைப்போய் ஜோ வீட்டுக்குள் வைத்து இம்சைபண்ணி, தினமொரு கனியைத் தருமாறு கூடுதல் கோரிக்கை வேறு வைக்கிறாரே’’ என்று கவலைப் பட்டிருக்கிறேன்.

 காதல் காட்சிகளில் கூட ’’அடடே இந்த  மால்வாவிஸ்கஸ் மலர்ச்செடிகள் பின்னால் இன்னும் கொஞ்ச நேரம் அவர்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்திருக்கலாம், செடியை பார்த்தே ரொம்ப நாளாச்சு,’’ என்று அங்கலாய்ப்பது,  காதலர்கள் பெயர் பொறித்திருக்கும்  மரப்பட்டைகளை கண்டவுடன் ’’இது முதலை மரப்பட்டை அப்படின்னா இது மருத மரம்தான்,’’ என்று கூவுவது, ’’என்னதிது  பாட்டில் தாமரைன்னு வருது,  இவங்க என்னமோ அல்லிக்குளத்தில் நீந்தறாங்களே,’’ என்று கொதிப்பது,  காதலன் அல்லது காதலிகள் பேசிக்கொண்டே, காதல் வேகத்தில் அமர்ந்திருக்கும் புல்வெளியின் புற்களை பிய்த்து கொண்டே இருக்கும் காட்சிகளில் ’’அடப்பாவமே இந்த ஜோய்ஸியா ஆஸ்திரேலியப் புல் வளருவதே பெரும்பாடு அதை ஏன் பிச்சுகிட்டுப் பேசறே’’  என்று  மானசீக கண்டிப்புக்களுமாகவே இருப்பேன்.

வெட்டப்படும் வாழைகளையும், வைக்கோல் படப்புக்கு வைக்கப்படும் நெருப்பும், தூக்கிப்போட்டு உடைக்கப்படும் தொட்டிச்செடிகளுமாக  Anti Botanical சண்டைக்காட்சிகளில்,  மனம்வெதும்புவது எப்போதும் நடக்கும்.

எலுமிச்சை, கேரட், மக்காச்சோள லாரிகளில் படுத்துப்புரளும் காதலர்களும், காய்கறி மார்க்கெட்டில் எல்லாத் தள்ளுவண்டிகளிலும் ஏறிமிதித்து துவம்சம் செய்யும் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகளும் ஒரு தாவரவியலாளராகவும் ஒரு நல்ல இல்பேணுநராகவும் எனக்கு தாளமுடியாத வருத்தத்தை உண்டாக்குபவை.

 பல்வேறு நிலப்பரப்புக்கள், இயற்கை காட்சிகள், விலங்குகள், தாவரங்கள், நீர்நிலைகள் என பலவற்றுடன் இணைந்த  காதல், பாடல், சண்டை காட்சிகள் ஆகியவைதான்  கதைகளே இல்லாத பல  தென்னிந்திய திரைப்படங்களைத் தோள் தாங்கி நிமிர்த்திச் சில வாரங்கள் தாக்குப்பிடிக்கச் செய்திருக்கின்றன

காதலைச் சொல்லக்  கொடுப்பதிலிருந்து, மனம் சிதைந்த  தொடர் கொலையாளியால் கொல்லப்பட்ட பெண்களை  புதைத்த இடத்தில் நட்டு வைக்கும் குருதிச் சிவப்பு மலர்ச்செடிகள் வரை தமிழ் சினிமாவில் ரோஜா மலர்களின் தாக்கம் ஹாலிவுட் படங்களின் அளவுக்கே இருக்கிறது.

 அப்படியே மன்னன் மயங்கும் மல்லிகைகளும். 1974ல் வெளியான தீர்க்க சுமங்கலியில் ஏழுஸ்வரங்களின் நாயகி, சமீபத்தில் மறைந்த இசையரசி வாணி ஜெயராமின் குரலில் மணத்த அதே மல்லிகை கடந்த வருடத்தின் வெந்து தணியும் காட்டில்  ஒரு  நாயகனை பிரிந்த நாயகியின் தலையில் பிரிவுத் தாபத்தின் வெம்மையில்  வாடியது.

மல்லிகை என்றதும் கே ஆர் விஜயாவும் நினைவுக்கு வருகிறார், கிலோ கிலோவாக மல்லிகை  மலர்ச்சரம் சூடிவரும் அவரின் தலைக்கனத்தை அநேகமாக எல்லா பாடல்களிலும் வியப்பதுண்டு.

இதுபோலவே கருப்புவெள்ளைப்படமான கொடிமலரில், ’’மெளனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாடவேண்டும்’’ பாடலில் முத்துராமனும் விஜயகுமாரியும் செயற்கை குளம், செயற்கை தோட்டம் என அமைக்கப்பட்ட செட்டில்  இருப்பார்கள். விஜயகுமாரிக்கு கூந்தலில் குறைந்தபட்சமாக 4 கிலோ மல்லிகைச்சரமும், குழாயடியில் அமரவைத்து தேய்த்துக்கழுவி விடலாமென்னும் கொதியுருவாக்கும்  அதீத ஒப்பனையும் இருக்கும். கையில் ஒரு தாமரை மலரை நல்லவேளையாகக் கசக்காமல் முழுப்பாடலிலும் வைத்துக்கொண்டிருப்பார். அவர்களிருவரும் ஒரு மரத்தருகில் நின்றிருப்பார்கள், அம்மரத்தில் தாவர அறிவியல் அடிப்படையில்  சாத்தியமே இல்லாத  வகையில் மலர்கள் அமைக்கப்பட்டிருக்கும். 

 ’’ஆயிரம் தாமரை மொட்டுக்களே’’வில் ராதா மலர்ந்த தாமரை மலர்களின் மத்தியில் ட்ராலியில் பயணித்துக்கொண்டும், படுத்துக்கொண்டுமிருப்பார்.   நாயகனை காட்டிலும் நாயகியிடம் மிக நெருக்கமான இடம் பிடித்திருக்கும் தாமரைகள். குளக்கரையில் காதலிக்கும் அவர்களை சுற்றி பிடுங்கிப் போடப்பட்ட தாமரை இலைகளும், மலர்களும் சோர்ந்து கிடக்கும்.

காதலோவியம் பாடலிலும் ஏராளமாக இதழிதழாக பிய்த்துப் போடப்பட்ட மலர்கள் காதலர்கள் மீது பொழிந்துகொண்டே இருக்கும், காலடியிலும் மலர்கள் மிதிபடும்.

பல்வேறு மலர்களை காட்சிக்குள் கொண்டுவந்த புண்ணியத்தை பெரும்பாலும் பாரதிராஜா கட்டிக்கொண்டார்.

கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் அகலக்கண்களுடன் அருணா சலவை செய்த பாரதிராஜாவின் உடைகளை  எடுத்துக் கொண்டு வருவார். அறைக்குள் நுழையும் முன்னர் வாசலிலிருக்கும் ஒரு செடியின் சிறுமலர்க்கொத்தொன்றைப் பறித்து சலவை சட்டைகளின் மீது வைத்து அப்படியே மேசையில் வைத்துவிட்டு வந்துவிடுவார். கலைஞனான பாரதிராஜாவால் அம்மலர்களின் சுகந்தத்தை ரசிக்காமல் இருக்க முடியாதல்லவா, அவர் அருணா ஒளிந்திருந்து பார்ப்பது தெரியாமல் மலர்களை  நுகர்வார். அருணாவின்  இளமனதில் கிளைவிரித்து பெருமரமாகவிருக்கும் ஓர் காதல்விதையூன்றப்படுவதைக் காட்டும் அழகிய காட்சியது

ஆனால் மிகக் கோரமாக மலர்கள் தமிழ்சினிமாவில் மட்டுமல்லாமல்  இந்திய சினிமா முழுவதிலுமே காட்டப்பட்ட  இடமென்றால் அது முத்தக்காட்சிகளில் தான்.

காதலை உன்னதமாக காட்டிய திரைப்படங்களே அரிதினும் அரிதுதான் அக்காலத்தில். அப்போதைய சமூக கட்டுப்பாடுகள் அப்படி.

’’ஏரிக்கரை மேலே போறவளே பெண்மயிலே, நில்லுகொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போலாம் பெண்ணே’’ என்னும் பாடல் வெளியான போது மரபுகளில் ஊறித்திளைத்திருந்த வேறு ஒரு பாடலாசிரியர் இத்தனை வெளிப்படையாக காதலியை அழைக்கும் ஒரு பாடல் திரையில் காட்டப்படும் இந்த காலத்தில் நானும் திரைப்பாடலாசிரியர் என்று சொல்ல வெட்குவதாக அறிவிக்து  திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலகியதை பிற்பாடு கேள்விப்பட்டிருக்கிறேன். அதன்பின்னர் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழத்துக்கு பதிலாக என் கன்னம் வேண்டுமென்றான் பாடல் வெளிவந்தபோது அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

எனவே அத்தனை கட்டுப்பாடும் ஒழுக்க நெறிகள் என்னும் கற்பிதங்களும் நிறைந்திருந்த சமூகத்தில் முத்தக்காட்சிகள் காட்டப்படத் துவங்கியது பெரும் புரட்சியாகத்தான் இருந்திருக்கும்.

அப்போதைய இந்திய திரைப்படங்களில் காதல் இலைமறை காய் மறையாகவும்,  முத்தம் மலர்மறையாகவும் காட்டப்பட்டது. ஒரு பெருமலர் அல்லது மலர் நிறைந்த செடி, இவற்றில் ஏதேனும் ஒன்றின் பின்னர்  காதலனும் காதலியும், முகத்தை  அல்லது முழு உடல்களை  மறைத்துக் கொண்டபிறகு அவற்றை  வெகு வேகமாகவும் ஆபாசமாகவும் அசைத்து, அல்லது ஒன்றுடன் ஒன்று ஒட்டவும்முட்டவும் வைத்து  முத்தமிடப் பட்டதை பார்வையாளர்கள் யூகித்துக்கொள்ளுபடி காட்டினார்கள்.

இதைவிட கேவலமாக ஒரு முத்தத்தை  காட்டவே முடியாது .

பின்னர் கொஞ்சம் துணிவு வந்த காலத்தில் மலர்களின் தேவை மெல்லக் குறைந்து காதலி வெட்கப்பட்டு கொண்டே தன் உதட்டை துடைத்து கொள்ளும் நேரடிக்காட்சிகள் முத்தத்தை உணர்த்த வந்தன. மலர்களும் தப்பிப்பிழைத்தன. பின்னர்  ரகஸ்யமென்றோ உன்னதமென்றோ ஏதுமில்லா காதல்கள் மலிந்த திரைப்படங்கள் வந்தபோது  எல்லா உணர்வுகளுமே பரஸ்யமாக பட்டவர்த்தனமாக  காட்டப்பட்டன.

எம்ஜிஆர், லதாவின் ’’நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது’’ என்னும் பாடலை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மிக கவர்ச்சியான, உடலை ஒளிவு மறைவின்றி காட்டும் ஒரு சிங்கிள் பீஸ் உடையில் லதாவும், வழக்கம்போல அழுத்தமான நிறத்தில் கோட்டும் சூட்டுமாக கூடுதல் ஒப்பனையில் எம்ஜிஆரும் இருக்கும் அந்த பாடல்காட்சியை ஒலியை குறைத்துவிட்டு பார்த்தால்  முழுப்பாடலும் விரசமாக மட்டும்தான்  இருக்கும். லதாவின் ஒவ்வொரு அசைவும் ’’நான் அழகி என்னைப் பாருங்கள்’’ என்று எம்ஜிஆரை அழைத்துக்கொண்டே இருக்கும். வேடிக்கை என்னவென்றால் நடனம் என்னும் பெயரில் அந்த பாடலில் படுக்கை அறை காட்சிகள்தான் காட்டப்பட்டிருப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.

பல தமிழ்ப்பாடல்கள் அப்படிதான்.  ஆனால் இதில் அத்தனை நெருக்கமான காதல் காட்சிகளின்போது அவர்களை  சுற்றிலும் தடித்தடியாய் பல ஆண்களும் நல்ல அழகிய அலங்காரங்களுடன் பல பெண்களுமாக நின்று கொண்டு இவர்களின் நெருக்கத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுதான் தாங்க முடியவில்லை.

அந்த நடன இயக்குநரின் கரங்களை  மானசீகமாக கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். அத்தனை ரசனையான அசைவுகள் லதாவுக்கு, எம்ஜிஆருக்குத்தான்  எப்போதும் நடன அசைவுகள் தேவையில்லையே.   அவருக்கு மிகப்பிடித்த, எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம் என்னும் சாத்தியம் கொண்ட ஒரு உணவுப் பண்டத்தை போலவே பாடல் முழுவதும் லதாவை எம்ஜிஆர் பார்த்துக் கொண்டிருப்பார்.  காமிராக்கோணங்களை பற்றியெல்லாம் பொதுவில் பேசவே முடியாது.

’’நில்லு கொஞ்சம் நானும் வாரேன்’’ என்பதற்கே கோபித்துக்கொண்டவரை, இப்பாடலை பார்க்கும் போதெல்லாம் நினைத்துக்கொள்வது வழக்கம்.

காதலை, அத்தனை மறைவிலும், இத்தனை அப்பட்டமாகவும், இந்தியச் சினிமா எதிரெதிர் முனைகளில் நின்று காட்டி  கேவலப்பபடுத்திக் கொண்டேதான் இருக்கிறது. ஒரு சில மலையாளப் படங்களைத் தவிர பிற மொழிப் படங்களில் காதல்  பல்வேறு வழிகளில் சிதைக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

அழகிய உரையாடல்களில் எளிமையாக அழகாக, வார்த்தைகளில்  காதலை வெளிப்படுத்த முடியாதென்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பவை  தமிழ் சினிமாக்கள். மீசை  மாதவனில் ’’பிணங்கல்லே’ என்னும் காவ்யாவின் கொஞ்சலில் தெரிவிக்கப்படும் காதலுக்கீடாக  தமிழில் எந்த காட்சியை சொல்லமுடியும்?

சந்ரோல்ஸ்வம் திரைப்படத்தில் முன்காதலியும் அப்போது விதவையும் ஆகிவிட்டிருக்கும் மீனாவுடன்  நான்கு கட்டுவீட்டின் நடுமுற்றத்தின் தாமரைக்குளத்தில் மழை பெய்து கொண்டிருக்கையில் பழைய நினைவுகளை பேசிக்கொண்டு மீனாவின் எதிர்காலம் குறித்து படிகளில் எதிரெதிரே அமர்ந்தபடி லாலேட்டனும் மீனாவும் உரையாடும், மழையின் ஸ்ரீ ராகத்தில் ஒரு துண்டு கீர்த்தனையை மீனா பாடிக்காட்டும் அக்காட்சி முழுக்கவே காதல் நிறைந்திருக்கும்.

 இப்படி பல உதாரணங்கள் காட்டலாம் வங்காள மற்றும் மலையாளப் படங்களில், அரிதாக பழைய இந்தி படங்களில். 

தமிழில் அதுபோன்ற  காட்சிகள் வணிக வெற்றியைத்தராதவை என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறது போல. அப்படியான  காட்சிகளை  கமல்ஹாசனைத் தவிர பிறர் சிந்திப்பதில்லை, அல்லது அவர்களுக்கு அமைவதில்லை. 

 ‘சலங்கைஒலி’ படத்தில் காதலி ஜெயப்ரதாவை கணவருடன் ரயிலேற்றிவிடுகையில்  அவரைப் புகைப்படமெடுக்க முனைவார் கமலின் பாத்திரம். காமிரா வழியே காணும் அவரின் பேரழகை, அதை இழப்பதின் துயரைத் தாங்கமுடியாத கமலின் நடிப்பை, அவர் உடல்மொழியில் தெரியும் காதலைப் போலவெல்லாம்  காட்சிகளை அதற்கு முன்பும் பின்பும் தமிழில் யாரும் கொண்டு வந்ததில்லை. சமீபத்தில் மறைந்த புகழ் பெற்ற இயக்குநர் கே. விஸ்வநாத் இந்தக் காட்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். 

 மலையாளப் படங்களுக்கு வரலாம் மீண்டும். கேரளாவின் பாரம்பரியமும் இயற்கை அழகும், நிலக்காட்சிகளும் இடம் பெறாத மலையாளப்படங்கள் அரிதினும் அரிது கப்பைக் கிழங்கு, மீன், கஞ்சி, தென்னை,வாழை, யானை,  சந்தனக் குறியிட்ட நெற்றிகள், அகலக் கண்களுக்கு மை எழுதிய நாயகிகள், முண்டும் துவர்த்தும் அம்பலமும், வாழையிலைப் பிரசாதமும், காடும் மலையும், மழையும், விவசாய பூமியும் இல்லாத மலையாளப்படங்களை தேடித்தான் பார்க்கவேண்டும்.

இப்படித் தங்களின் நிலத்தை, இனத்தை , மொழியை கலாச்சாரத்தை இயல்பாக பிரதிபலிக்கும் கலைகள் தான் காலத்தை கடந்தும் நிற்பவை.

தமிழிலும் கிராமியப்படங்களில் வயலும் வரப்பும் தோப்புமாக முழுக்க பொள்ளாச்சியை அதன் சுற்றுப்புறங்களை நம்பி எடுக்கப்பட்ட படங்கள் பலநூறிருக்கும். ஆனால் அனைத்திலும் பேசுபொருள் காதல் மட்டும்தான் என்பதுதான் ஆயாசமளிப்பது. அவற்றில் கதை என்று ஒன்று இருக்குமா என்னும் கேள்விக்கெல்லாம் போகவே வேண்டியதில்லை, ஆனால் கண்ணை நிறைக்கும் பசுஞ்சூழல் நிச்சயம் இருக்கும்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமலிருப்பதற்கு சினிமா படப்பிடிப்புக்களும் காரணம். அதிகாலை டிராக்டர்களிலும், குட்டியானை எனப்படும் சிறு பார வண்டிகளிலும் பேருந்து நிறுத்தத்தில்  காத்திருக்கும் ஆட்களை  திரட்டிக்கொண்டு போவர்கள் crowd artists எனப்படும் இவர்களுக்கு ஒப்பனை தேவையில்லை, நடிப்பும் சொல்லித் தர வேண்டியதில்லை.

ஆலமரத்தடி பஞ்சாயத்தில் வெறுமனே குந்தி அமர்ந்திருக்க வேண்டும் கோழிப்பண்ணையில் நடக்க்கும் சண்டையின்போது  நாலா திசைகளிலும் சிதறி ஓடவேண்டும்,  செட்போடப்பட்டிருகும் காய்கறி மார்க்கெட்டில் குறுக்கும் மறுக்கும் நடக்கவேண்டும், காய் வாங்க வேண்டும், வயலில்  களை எடுக்கவோ, நெல்லறுக்கவோ வேண்டும். இப்படி சிக்கலில்லாத வேலைதான். 400 ரூபாய்களும், மதிய உணவும் தண்ணீர் பாட்டிலும் அளிக்கப்படுகிறது பிறெகெங்கே  விவசாய கூலிவேலைகளுக்கு ஆட்கள் வருவது?

அதுபோலவே  மழை, அணை ஏரி கடல் குளம் குளக்கரை ஆறு போன்ற நீர்நிலைகளும் தமிழ்சினிமாவில் வழக்கமாக  காட்டப்படுவதுண்டு

பத்தில் 8 தமிழ் படங்களில் ஆளியார் அணை தவறாமல் இடம் பெற்றிருக்கும். கோழி (சேவல்) கூவி விடியும் தேனீர்க்கடையில் புகைபோகும் பாய்லர்கள்,,  சமையலறையில் ஆவிபறக்கும் இட்லிப்பாத்திரங்களும் கதிரெழும் துவக்கக்காட்சிகளும் மலிந்துதான் கிடக்கின்றது.

எனினும் தமிழ்சினிமாவில் அரிதாகவே  காதலர்கள் சாலையை குறுக்கே பத்திரமாகக் கடந்து தர்பூசணி கீற்று வாங்கி சாப்பிடுகிறார்கள் அப்படியான இயல்பான் காட்சிகளுக்கு மறுபடி நாம் மலையாளப்படங்களுக்கு தான் போகவேண்டி இருக்கிறது. 

நாடோடிக்காற்று படத்தில் ஷோபனாவுக்கு  அம்மியில் தேங்காய் அரைத்துக்கொடுத்து, வாசலில் கோலம் போட்டு, அவர் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கருகே இருக்கும் டீக்கடையில் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு வர்க்கி தொட்டுக்கொண்டு டீ குடித்தபடி,  ஷோபனாவையும்,  டீ குடிக்க வற்புறுத்தி அழைத்து செல்லும் அழகிய காட்சிகள் கொண்ட பாடலான ’’வைசாக சந்தியே’’ பாடல் நான் பலநூறு முறை கண்டு ரசிக்கும் பிரியப்பட்ட பாடல்களில் பட்டியலில் ஒன்று.

 இயல்பான காட்சிகளில் தமிழ் சினிமாக்காரர்களுக்கிருக்கும் ஒவ்வாமை ஆச்சர்யமூட்டும். பொள்ளாச்சி கரும்பு காட்டில் காதல் சொல்லப்பட்டதும் , காதலர்கள் கோட்டும் சூட்டும் உடலை இறுக்கிப்பிடிக்கும் உடையுமாக சுவிட்ஸர்லாந்தில் டூயட் பாடுவது நல்ல ரசனைக்காரர்களுக்கு எத்தனை துயரளிக்கும் என அவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை

பேருந்து நிறுத்தங்களும், ரயில்நிலையங்களும் இல்லாத தென்னிந்திய சினிமாவே இல்லையென்றே சொல்லலாம். தமிழ்சினிமாவில் பேருந்துநிறுத்தங்கள் என்னும் தலைப்பில் எளிதாக ஒரு முனைவர் பட்ட ஆய்வை செய்துவிடலாம், சுவாரஸ்யமாக இருக்கும்.

கமலின் பாபநாசம்  திரைப்படத்தின் கதையை மேலும் சுவாரஸ்யமாக்குவது  தென்னையும், காப்பியும், வாழையும் செறிந்து வளர்ந்திருக்கும் அந்த தோட்ட வீடு தான்  இல்லையா? ஜப்பானில் கல்யாணராமன் படத்தை நினைத்தாலே  செர்ரி மரங்களுக்கடியில்  ராதா பாடும்  ’’சின்னப்பூ சின்னப்பூ’’ பாடல் தான் நினைவுக்கு வரும்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரியில் தீபாவை காடுமலையெல்லாம் கூட்டிச்செல்லும் சிவச்சந்திரனின் புல்லட்டில் நாமுமல்லவா அமர்ந்திருப்போம்?

நிழல்கள் பாடலான  ’’இது ஒரு பொன்மாலைப் பொழுதில்’’ மரங்களடர்ந்த சாலையும் தீக்கொன்றைகளும், கடற்கரையும்,  புல்வெளியும், கதிரணைதலுமாக 80களின்  சென்னைச்சாலை அந்தியின் செவ்வொளியில் மூழ்கிக் கொண்டிருக்கும்.

தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பிரபல பாடலான ’’காதலின் தீபமொன்று’’  துவங்குகையில் பட்டைஉரித்திருக்கும் யூகலிப்டஸ் மரத்தில் சுமதி என்று பெயரெழுதி முத்தமிடும் ரஜினியை காட்டித்தான் துவங்கும், அந்தப் பாடலில் அவர்களுக்கிடையில்  உருவாகி இருக்கும் காதலை எண்ணியபடி ஓங்கி உயர்ந்த யூகலிப்டஸ் மரங்களின் காடுகளில் நடந்தபடி ரஜினி சென்று கொண்டிருப்பார். ரஜினியின் இயல்பான பாடல்களில் இதுவும் ஒன்று 

ஊட்டியின் யூகலிப்டஸ் காடுகளும் பொள்ளாச்சி அருகே இருக்கும் வனப்பகுதியான சர்க்கார்பதியின் முள்மரக்காடுகளும் பல காதலை சொல்லி இருக்கின்றன.

என் தனித்த பிரியத்துக்குரிய படமான பன்னீர்புஷ்பங்கள் திரைப்படத்திலும் ’’ஆனந்தராகம்’’ பாடலில் அந்த பள்ளியின் ஆரம் லில்லிகளும், பைன். யூகலிப்டஸ், சாம்பிராணி மரங்களுமாக திரையில் பச்சிலை வாசனையே அடிக்கும் 

அதிலேயே  ’’பூந்தளிராட’’  பாடல் லவ்டேலின் ரயில் நிலயத்தையும் தண்டவாள விளிம்பில் தடுமாறிக்கொண்டு நடந்துவரும் இளங்காதலர்களையும் புகைந்து கொண்டுவரும் ரயிலையும் பட்டையுரித்த   யூகலிப்ட்ஸ் மரங்களுக்கிடையில்  அழகாக காட்டும். 

பகத்ஃபாசிலின் மகேஷிண்ட ப்ரதிகாரம் படத்தின் துவக்க காட்சியிலேயே அவர் குளிக்கும் நதிநீரில் இரண்டு நட்சத்திர பழங்கள் மிதந்து வரும்.

அப்படியான வெகு இயல்பான இயற்கையுடன் நெருங்கிய காட்சிகள் அப்படங்களை அணுக்கமாக்கிவிடும்

உயரக்காட்சியில் படம் துவங்கும்போதே பாம்புபோல வளைந்து வளைந்து செல்லும் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, கொல்லிமலை, கேரளா என்று மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியை காண்பித்து துவங்கும் எந்தப்படமானாலும் கதையையோ கதைமாந்தரையோ பற்றி கவலையின்றி முழுப்படத்தையும் அவை எடுக்கப்பட்ட கதைக்களத்திற்கெனவே பார்த்து ரசிப்பதுண்டு. சில காட்சிகளில் தெரியும் சில அரிய தாவரங்களை பார்த்து பரவசமடைவதும் வழக்கம்.பல திரைப்படங்களில் உள்ளறை அலங்காரங்களில்  அழகிய பசுஞ்செடிகள் பிரமாதமாக காட்டப்பட்டதுண்டு.

தமிழ்சினிமாவில் இயல்பான இயற்கை காட்சிகளும் காதில் கேட்கும்படியானதும், என்றும் மறக்கமுடியாத நல்ல இயற்கைகாட்சிகளுமாக பாரதிராஜா இளையராஜா கங்கைஅமரன் ஆகியோரின் கூட்டணிக்காலத்தில்  நமக்கு காணக்கிடைத்தது 

குறிப்பிட்ட நிலப்பரப்புக் காட்சிகளில் திரைப்படங்களை காட்டுவது உலகசினிமாக்களின் முக்கிய அம்சமாகும், இது கதைக்களத்திற்கு பார்ப்பவர்களை அணுக்கமாக்கி, கதையில் அவர்களையும் ஈடுபடுத்துவதின் மூலம் பார்வையாளர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஈர்க்கின்றது    

திரைப்படங்களின் அழகியல் மற்றும் கதைப்போக்கு  இவ்விரண்டிலும் பங்களிப்பதில் நிலப்பரப்பின் முக்கியத்துவம்  வெகுவாக இருக்கும் போதிலும், இந்திய சினிமாவில்  நிலக் காட்சி பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம் பற்றி மிகக் குறைவாகவே அறியபட்டிருக்கிறது.

அடர் வனங்கள், பனிமூடிய மலைமுகடுகள், பாழ்நிலங்கள், பாலைவனபெருமணற்பரப்புக்கள், சந்தடியான நகரங்கள், இயற்கை எழில் நிறைந்த கிராமப்புறங்கள் கைவிடப்பட்ட பின்னி மில்ஆகியவற்றை திரையில் காண்பவருக்கும் அந்நிலப்பரப்புக்குமான அந்தரங்கமான நினைவுகளும் கதையோட்டத்துடன் கலந்து திரைப்படக்குழுவினர் எண்ணியிராத வடிவத்தில் ரசிகர்களிடம் அக்காட்சி சென்று சேரும். ரசிகர்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பை நினைவூட்டும் ஒரு ஊடகமாக இப்படியான காட்சிகள் அமைந்துவிடுகின்றன.

அவற்றின் மகத்தான குறியீட்டு மதிப்பினால், குறிப்பிட்ட நிலப்பரப்புக்காட்சிகள் கொண்ட படங்கள் அச்சினிமாவிற்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான பரந்த உரையாடலின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றன.

உதாரணமாக ஹாலிவுட் படமான ’The mountain between us’ என்பதை எடுதுக்கொள்ளலாம்.

துவக்கத்தில் சில காட்சிகளில் மட்டும் வரும் வால்டர் என்னும் விமான ஓட்டியும், இறுதிவரை பெயரிடப்படாத கோல்டன் ரெட்ரீவர்  நாயொன்றையும்  தவிர,  பரந்து விரிந்திருக்கும் பனிமலை முகடுகளுக்கு நடுவில் நாயக நாயகி இருவர் மட்டுமே கதைமுழுக்க வருகிறார்கள்.

பனிக்காற்றில் உலையும் பைன் மரங்களும்,  முகத்திலும் உடைகளிலும் ஒட்டியிருக்கும்   பனிப்பொருக்குகளும் , உலர்ந்த உதடுகளும், வழக்கமான ஒப்பனையின்றி வீங்கிய முகமும் ரத்தக்காயங்களுமாய்,   எப்போதுமாய் கொட்டிக்கொண்டிருக்கும் பனியும்,  அதில் கால் புதையப்புதைய இருவரும் நாட்கணக்காக நடப்பதுமாய்   வழமையான திரைக்காட்சிகளினின்றும் மிக வேறுபட்ட ஆனால்  அழகுக்காட்சிகள்.

 இவர்களிருவரும் சிக்கிக்கொண்டிருக்கும், முடிவற்றதுபோல தோற்றமளிக்கும் பனிமலையையல்ல இக்கதையும் அதன் தலைப்பும் பேசுவது,  அது ஒரு குறியீடுமட்டும்தான், வாழ்வு குறித்தான விழைவுகளும் அச்சங்களும் கவலைகளும் திட்டங்களுமாக இவர்கள் இருவருக்கும் இடையில்  உருவாகியிருந்த மாபெரும்  பனிமலையொன்றினைக்குறித்தும் அது மிக மெல்ல  அவர்களுக்குள் உருவாகும் காதலின் வெம்மையில்   கரைவதையுமே இத்திரைப்படம் பேசுகின்றது.

சில வருடங்களாகவே  சினிமா சுற்றுலா பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. ரஜினி பாறை, குணா குகை, குஷ்பூ குளம், தேவர் மகன் அரண்மனை வீடு, ஜியா ஜலே பாடலுக்கு பிறகு அதிரப்பள்ளி அருவி, குசேலனுக்கு பிறகு ஆலப்புழை, கடலோர கவிதைகளுக்கு பிறகு முட்டம் கடற்கரை என்று சொல்லிக்கொண்டே போகலாம் உதாரணங்களைக் கவனமாக கையாளப்படுகையில் நிலப்பரப்புகாட்சிகளை காட்டும் சினிமாக்கள்  நமது கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியங்களை அடுத்த தலைமுறைக்கு  கொண்டு செல்லவும் உதவுகிறது.இந்தியா கேட்டும், தாஜ்மகாலும்,   சார்மினார் சதுக்கமும் தலைமுறைகளாக நம் நினைவில் நின்றுகொண்டிருக்கிறதல்லவா?

பல்வேறு வகையான நிலப்பரப்பு மற்றும் வாழ்விடங்களை கொண்டிருக்கும் இந்தியா திரைப்படம் தயாரிக்கும் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும், சர்வதேச மற்றும் உள்நாட்டு சினிமாக்களை தயாரிப்பதற்கான ஒரு வசீகரமான  இடமாகவும்   இருக்கிறது.  

சினிமாக்கலையுடன் சினிமா அனுபவமும் மாறிக்கொண்டே இருக்கிறது. 70, 80களில் சினிமாவுக்கு செல்லுதல் என்பதே ஒரு பெரிய குடும்ப நிகழ்வாக, கூட்டு அனுபவமாக இருந்தது, அந்த சினிமாஅனுபவம் பலகாலங்களுக்கு நினைக்கப்படும் போற்றப்படும் ஒன்றாகவும் இருந்து. பின்னர் நகரங்களின் மல்டிப்ளெக்ஸுகள் வேறு விதமான அனுபவங்களை அளித்தன. 

கனிணி மயமாக்கல் இப்போது தொடுதிரைகளை நம் விரல்நுனிகளில் உயிர்ப்பித்து சினிமாவை  அந்தரங்க அனுபவமாக வீட்டறைகளுக்குள் கொண்டுவந்து விட்டிருக்கிறது. 

செந்தாழம்பூவில் காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்பது பல வருடங்கள் கழித்தே எனக்கு தெரியவந்திருக்கிறது. ஆனால் சினிமா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் அத்துப்படியாயிருக்கும் இந்த தலைமுறையினரை லேசாக நினைத்துவிடக்கூடாது.

பிரம்மாண்ட வெள்ளித்திரை அனுபவம் மீச்சிறு தொடுதிரை அனுபவமாகிவிட்டிருக்கும் இக்காலத்தில் நிலப்பரப்புகளை, இயற்கையின் அம்சங்களை, கலச்சாரங்களை, மரபை சினிமா என்னும் மாபெரும்  சக்திவாய்ந்த ஊடகத்தின் மூலம்  அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் பொறுப்பு சினிமாக்காரர்களின் தோளில்தான் இருக்கிறது. 

மாறிக்கொண்டு வரும் உலகை மனதில் கொண்டு  கண்ணியமாகவும் கவனமாகவும்,அதே சமயம் கொண்டாடும்படியும் சினிமாக்கள் உருவாக்கப்படவேண்டி இருக்கிறது.

இந்த கட்டுரையை வாசித்து முடித்ததும் உடனடியாக  ’’நீல நயனங்களில்’’பாடலை யூடூபில் பார்க்கச்செல்பவர்கள் அதற்கு பிழையீடாக மகேஷிண்ட பிரதிகாரத்தின் ’’இடுக்கி’’பாடலையோ அல்லது இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே   நம்மை விட்டுபிரிந்த சரத்பாபுவின் ’’செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றலை’’யோ சேர்த்துப் பார்க்கலாம். 

தாவரங்கள் காத்திருக்கின்றன

கோவிட் தொற்று காலத்தில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெறவில்லை. ஆன்லைன்  என்பதை அப்போதுதான் அறியத் துவங்கி இருந்த மாணவர்கள் தட்டுத்தடுமாறி கல்லூரியில் சேர முயன்று மிகுந்த சிரமங்களுக்கிடையில் கல்லூரிக்கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி கிடைத்த படிப்பில் சேர்ந்தார்கள்

கடந்த இருவருடங்ளுமே மிக குறைந்த அளவில்தான் தாவரவியல் துறைக்கும் பிற அடிப்படை அறிவியல் துறைகளான இயற்பியல் வேதியியல் ஆகியவற்றிற்கும். மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள்.

பள்ளி இறுதியிலும் நேரடி வகுப்புகள் நடந்திராதலால் இங்கு வந்து சேர்ந்த மாணவர்களுக்கு எந்த அடிப்படை கல்வியறிவும்  ஒழுக்கம் குறித்த உணர்வும் இல்லையென்பது வருந்தத்தக்க விஷயம் என்றால் அதை காட்டிலும் அதிர்ச்சியளித்தது ஆன்லைன் தேர்வுகளில் காப்பி அடித்து பழக்கம் ஆகிவிட்டிருக்கும் அவர்களுக்கு முறையான தேர்வெழுதும் பயிற்சிகளை அளிப்பதில் இருந்த சிக்கல்கள் தான். பெற்றோர்களுக்கும் அப்படி  அவரவர் குழந்தைகள் காப்பியடித்து  தேர்வெழுதியது பெரும்பாலும் தெரிந்திருந்தும் எவரும் கண்டித்திருக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் அவர்களை திருத்தி சரியான வழிக்கு கொண்டு வர  திணறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த வருட மாணவர் சேர்க்கை வழக்கம் போல நேரடியாக கடந்த ஒருவாரமாக நடந்தது. கோவிட் காலத்துக்கு பிறகு பட்டிதொட்டிகளிலெல்லாம் கம்ப்யூட்டர் என்னும் சொல் புழங்கி அனைவருக்கும் பரிச்சயமாகி விட்டிருக்கிறது மேலும் கணிப்பொறித் துறையில் எப்படியும் அறுபதாயிரத்துக்கு குறையாமல் சம்பளம் வரும் என்பதும் மட்டும் தெரிந்திருக்கிறது

சங்கரன் கையேடு

எனவே அடிப்படை அறிவியல் துறைகளில்  சேர்ந்து பயில மாணவர்கள்  தயாராகவே இல்லை பெற்றோர்களுக்கும் அப்படியான  துறைகள் இருப்பதும் அவற்றின்  முக்கியத்துவமும் தெரியவில்லை. 90 சதவீதம் கணினி அறிவியல் படிப்பைத்தான் நாடுகிறார்கள் அவர்களின் குழந்தைகள் பள்ளி இறுதியில் கணினி அறிவியல் படித்திருக்கவில்லையெனினும் எப்படியும் அந்த படிப்பில் கல்லூரியில் சேர முயற்சிக்கிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்த நான் ஒரு மாணவனின் தந்தையிடம் அவர் மகன் பள்ளிப்படிப்பில் கணினி அறிவியல் படித்திருக்காததால் இப்போது அதில் கல்லூரி படிப்பை தொடர முடியாது என்று அரை மணி நேரம் செலவழித்து விளக்கினேன். அவர் பதிலுக்கு ‘’பணம் எத்தனை செலவானாலும் பரவாயில்லை, எப்படியும் கம்ப்யூட்டர் சயின்ஸில் ஒரு சீட் வேணுங்க’’ என்றார்.

தாவரவியல் படிப்பின் முக்கியத்துவத்தை கடந்த  வாரத்தில் பலநூறு பெருக்கு நெஞ்சடைக்க, தொண்ட வரள விளக்கினேன் ஆனால் யாருக்கும் புரியவில்லை வேண்டா வெறுப்பாகவும், மிககுறைந்த மதிப்பெண்  பெற்று வேறெங்கும் இடம் கிடைக்காதவர்களுமாக வெகு  சிலரே இத்துறையில் சேர்ந்திருக்கிறார்கள். இதில்தான் சேர்ந்து படிக்க வேண்டும் என்று இரண்டே இரண்டு மாணவிகள் மட்டும்தான் வந்தார்கள்.

எமிலியின் ஒவியம்

என் மாணவிகள் பலர்  கோவையை சுற்றி இருக்கும் நகரங்களில் காஃபி வாரியத்திலும், இந்திய தாவரவியல் அளவாய்வு  அமைப்பு,  வனமரபியல்  மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனங்களில் நல்ல வேலைகளிலும், காட்டிலாகா அதிகாரிகளாகவும், நல்ல ஆராய்ச்சியாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள். இனி அப்படியான அமைப்புக்களில் எதிர்காலங்களில் பணியாற்ற எத்தனை பேர் தகுதி கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்,

கல்லூரிகளில் அடிப்படை அறிவியல் துறைகளின் எதிர்காலம் நிச்சயமற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வியின் போதே அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு அத்துறைகளின் மேதைகளை பற்றி, முக்கியத்துவத்தை பற்றியெல்லாம் கற்றுத்தரவேண்டும். அப்போதுதான் அப்படியான துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாகும். இப்போதைய பெற்றோர்களும் மருத்துவம், பொறியியல் அடுத்தாக கணினி அறிவியல் இவற்றைத் தவிர தங்கள் குழந்தைகளுக்கு  வேறெதிலும் எதிர்காலம் இல்லையென்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம் குறித்து கவலைப் பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல.

J S Gamble 1847-1925 ல் உருவாக்கிய  flora of madras presidency யின்  அனைத்து தொகுப்புகளும் மிக அரிய பொக்கிஷங்கள். கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் நான் அவற்றை பலமுறை உதவிக்கென எடுத்து வாசித்திருக்கிறேன். அவற்றின் உதவிகொண்டு பல நூறு தாவரங்களை அடையாளம் கண்டிருக்கிறேன், அதைப்போலவே  1817-1911 ல்  Hooker உருவாக்கிய  Flora of British India தொகுப்புக்கள்,  பிலிப், ஃபைசன் 1915 ல்  உருவாக்கிய  பழனி கொடைக்கானல் மற்றும் ஊட்டி மலைப்பகுதிகளில் 6,500 அடி க்கு மேலான உயரத்திலிருக்கும் தாவரங்களை குறித்த அரிய நூலாகிய  flora of Nilgiri and pulny hill tops,   போன்ற நூல்களிலிருந்து பயனடைந்தவர்களே இப்போது இத்துறையில் பணியாற்றும் என்போன்ற ஆயிரக்கணக்கானோர். ஃபைசனின் இந்த நூலத்தொகுப்பு  1975க்குள் 15 பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிலிப் ஃபைசனின் நூல்

தமிழ் விக்கியில் இவர்களை குறித்த  பதிவுகள் இருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.ஒரு பதிவை வாசிக்க துவங்கி ஒன்றிலிருந்து அதன் தொடர்புடைய மற்றொன்று என்று தொடர்ந்து வாசிப்பது பழக்கமாகிவிட்டிருக்கிறது  அனைத்தும் அரிய பதிவுகள்

இந்திய தாவரவியல் கழக (Indian Botanical Society) அமைப்பை உருவாக்கி, நடத்த உதவி, அந்த அமைப்பு சார்ந்து இந்திய தாவரவியல் இதழ் (Journal of the Indian Botanical Society) வெளியிடுவதிலும் முன்முயற்சி எடுத்த. ஃபைசனின்  பல மாணவர்களில் முதன்மையானவர்  மா.கிருஷ்ணன்.   

கிருஷ்ணன் தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளுக்கு முன்னோடி. மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமானவர். இவர் நீர்வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியை பிலிப் ஃபைசனின் மனைவி டயானா ரூத் ஃபைசனிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார். கொடைக்கானலில் ஃபைசனுடன் ஆய்வுக்குச் செல்கையில் புகழ்பெற்ற உயிரியலாளராரும், இந்திய இயற்கையியலின் முன்னோடிகளில் ஒருவருமானஆல்பர்ட் பெளர்ன்   மற்றும்  அவரது மனைவி எமிலி டிரீகிளேஷேர் ஆகியோருடனும் அவருக்கு  தொடர்பு உருவானது.

பௌர்ன்  நீர்வாழ் உயிர்களுக்கும் நீரின் ஆக்ஸிஜன் அளவுக்குமான உறவு பற்றிய முக்கியமான ஆய்வை செய்தவர். ஓவியரான அவர் மனைவி எமிலி இந்தியத் தாவரவியல் ஆய்வாளர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.ஃபைசனின் flora of kodaikanal நூலில் எமிலியின் தாவரவியல் சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.எந்த வசதியும் இல்லாத அந்தக்காலத்தில்   இத்துறையின் மீதான ஈடுபாட்டினாலும் அப்பணிகளின் எதிர்கால முக்கியத்துவத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருந்ததாலும்  இவற்றை  செய்து முடித்திருக்கிறார்கள் .

நான் இளங்கலை அறிவியல் படித்த அதே துறையில்தான் இப்போது பணிபுரிகிறேன். துறையின் ஆய்வகம் நோய் தொற்றுக் காலத்தில் ஏகத்துக்கும் சேதமடைந்திருந்தது. பல அரிய தாவர சேகரிப்புகள் பூஞ்சைத்தொற்றில் அழிந்திருந்தன. மேலும்  உலர் தாவரங்களில் பலவும் பூச்சி அரித்து வீணாகியிருந்தன. எனவே இரண்டு உதவியாளர்களுடன் பலநாட்கள் செலவழித்து  ஆய்வகத்தை  சமீபத்தில் சுத்தம் செய்தேன்  ஆய்வக அலமாரிகளில் ஒன்றில். மறைந்த என் ஆசிரியரும்  நன்னீரியலில் (Limnology) மிக முக்கியமான ஆய்வுகள்  பலவற்றை  செய்து பல புதிய பாசி வகைகளை கண்டறிந்தவரான திரு சங்கரன் 1972ல் இருந்து 1975 வரை தொடர்ச்சியாக திருமூர்த்திமலை, கொடைக்கானல், வால்பாறை அட்டகட்டி என பல மலைப்பிரெதேசங்களுக்கு பயணித்து அப்பகுதியின் தாவரங்களை பட்டியலிட்ட ஒரு சிறிய நோட்டுப் புத்தகம் குப்பையில்  கிடந்தது.

தான்  பயணித்த  இடங்கள்,  கடல்மட்டத்திலிருந்து அப்பகுதியின் உயரம், நேரம் ஆகியவற்றுடன் 477 தாவரங்களை  பட்டியலிட்டு சிலவற்றை கேள்விக்குறியிட்டும் சிலவற்றை அன்றைக்கு மேலதிகம் தேடி வாசிக்க வேண்டும் என்றும் குறிப்பு எழுதி இருக்கிறார், அவர் அந்த  முக்கியமான ஆய்வை எந்த காரணத்தினால் முடிக்காமல் விட்டிருக்கிறார் என்று  தெரியவில்லை. இந்த பட்டியல் தகவல்களுடன்  மேலும் சில வருட ஆய்வை தொடர்ந்தால் அம்மலைப்பகுதிகளின் flora வை ஃபைசனைப்போல  உருவாக்கிவிடலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் தான் இல்லை. பொக்கிஷமாக இதை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்

ஏன் தாவரவியல் படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மிக முக்கியமான இது போன்ற ஆய்வுகள் செய்த  ஃபைசன், எமிலி, மா,கிருஷ்ணன்  ஆகியோரின் விக்கி பதிவுகளை வாசித்தால் இத்துறையின் முக்கியத்துவம் புரிந்துவிடும். இவர்களை  தமிழ் விக்கி ஆவணப்படுத்தியது எத்தனை முக்கியம் என்பதுவும் புரியும்

மைத்ரி

அஜிதனை நான் முதலில் பார்த்தது பல வருடங்களுக்கு முன்னர் ஊட்டி காவிய முகாமில், அப்போதுதான் அருண்மொழியை முதலில் பார்த்ததும்.

நானும், அடர் நீலச் சதுரங்கள் கொண்ட வெண் பருத்தி புடவையில் அருண்மொழியும் குருகுலத்தின் உணவுக் கூடத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு மண் மேட்டில் அமர்ந்திருந்தோம், உணவுக் கூடத்திலிருந்து நண்பர்களுடன் மேலேறி வந்து கொண்டிருந்த ஜெ அருணாவின் முதுதில் ஒரு தட்டு தட்டி ’வா நேரமாச்சு’ என்றபடியே கடந்து சென்றார். அடி கொஞ்சம் பலமாக விழுந்துவிட்டது. அருணா ’இதை பிடிங்க’ என்று என்னிடம்  கைப்பையை  கொடுத்துவிட்டு எழுந்து, உங்களை தொடர்ந்து வந்து பலமாக ஒரு அடி முதுகில் வைத்து ’எதுக்கு ஜெயன் அடிச்சே’? என்றார்கள். ஜெ திரும்பி’ ’இல்லடி செஷனுக்கு நேரமாச்சு அதான்’ என்றதும் ’அதுக்கு? அடிப்பியா? வலிக்குது தெரியுமா? என்று  சொல்லிக் கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையில் எங்கிருந்தோ அஜிதன் வந்து நின்றான்.  (வெண்முரசில் இதுபோலவே பீமனும் இடும்பியும் பேசிக்கொண்டிருக்கையில் கடோத்கஜன் இருவருக்கும் இடையில் வந்து நிற்பான்). பின்னர் விஷ்ணுபுரம் விழாக்களில் சில சமயம் அஜிதனை பார்த்திருக்கிறேன்

அஜிதன் எடுத்த குறும்படத்தை பார்த்தபோது அந்த அஜிதனா என்று பிரமிப்பாக இருந்தது. சென்ற மாதம் ஒரு கூடுகையில் தத்துவ விளக்கங்கள் குறித்து உரையாற்றிய அஜிதன் அதுவரை நான் பார்த்திருந்த, நான் கொஞ்சமாக வேணும் அறிந்திருந்த அஜிதனே இல்லை.

அஜிதன் அன்று பேசியவை அனைத்தும் மிகப்பெரிய விஷயங்கள் என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது. அவற்றை பேசுகையில் அஜிதனின் உடல்மொழியும் ஆச்சர்யமூட்டியது மிக மிக சாதாரணமாக, எளிய அன்றாட நிகழ்வுகளை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல தான் அத்தனை தீவிரமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான்.

இளைஞர்கள் முக்கியமான, தீவிரமான விஷயங்களை பேசிக் கேட்கையில் நான் பிறரைக் காட்டிலும் மிக அதிகம் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் ஏழாயிரம் இளைஞர்கள் படிக்கும் கல்லூரியில் பல வருடங்களாக பணியிலிருக்கிறேன். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டு கொஞ்சம் அதிகப்படியான அறிவுடன் இருப்பவர்கள் என்றுகூட விரல்விட்டு எண்ணிச் சொல்லக் கூடிய அளவில்தான் சிலர் இருக்கிறார்கள். எனவே அஜிதனை போன்ற அரிதினும் அரிய இளைஞர்கள் எனக்களிக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளப்பரியது.

ஆனால் மைத்ரியில் கண்ட அஜிதன் முற்றிலும் வேறு. ஹரனின் பேருந்து பயணத்தின் தொடக்கத்திலேயே அஜிதன் என்னும் அரிய  படைப்பாளியை கண்டுகொள்ள முடிந்தது.  ஹரனின் பயணம் வாசிப்பவர்களின் பயணமும் ஆகிவிடுகிறது.

உடல் சூட்டை இருக்கைக்கு அளித்து அதை வாழ்விடமாக்க வேண்டும் என்னும் வரியில் இது நான் முன்பு அறிந்திருந்த அஜிதனல்ல என்று மீண்டும் எனக்கே சொல்லிக்கொண்டேன் .

மிக புதிய நிலப்பரப்பில் நாவல் விரிவதால் அக்கதையுடன் இன்னும் அணுக்கமாகி கதையையும் நிலப்பரப்பையும் சேர்ந்தே ரசிக்கவும் முடிந்தது அது மேலும் சுவாரஸ்யம் ஆக்கிவிடுகிறது வாசிப்பனுபவத்தை.

முழுவதும் வாசித்து முடித்த பின்னர் சில நாட்கள்தான் அந்த பயணமும் அக்கதை நிகழ்வதும் என்பதை நம்ப முடியவில்லை. பல நூறு வருடங்களுக்கான பயணம் அது. கதையை முழுக்க சொல்லி இன்னும் வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்பத்தை குலைக்கவிரும்பவில்லை.

ஹரனை பசுமைப் பெருக்கும் பெண்மைப்பெருக்கும் தொடர்ந்து சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. கெளரியும், அன்னையும், ரிது பெரியம்மாவும், சிவப்பு ஆடை அணிந்த சிறுமிகளும், மணப்பெண்ணும் மைத்ரியும் இன்னும் பலருமாக.

உணவை, கட்டிடங்களை, மனிதர்களை, நிலப்பரப்பை, வசந்த காலத்தை, காதலை, உறவுகளை, பிரிவை, வலியை என்று  ஹரன் வாழ்வை முழுக்க அறிந்துகொள்ளும் அந்த அழகிய அரிய பயணத்தில் அஜிதன் என்னையும் கைப்பிடித்தும் கச்சரில் ஏற்றியும், பேருந்திலும், ஜீப்பிலும் கூட்டி செல்கிறான்.

பைன் மரங்களின் ஊசியிலை சருகுகளும், கோன்களும் நிறைந்த அந்த பாதை வழியே சோனியாவின் கடிவாளக் கயிற்றை பிடித்துகொண்டு ஹரனையும் அவன் மொத்த வாழ்வையும் அத்தனை அழகாக அவள் எடுத்துச் செல்கிறாள்.  மறக்க முடியாத பயணம் எனக்கும்.

அன்னையை நினைத்துக் கொள்கையில் ’’தூய அன்பென்னும் திரைக்கு அப்பால் தன்னை மறைத்து வைத்திருந்தார்’’ என்னும் வரிகள்  கண்ணீர் விடச் செய்தன.

குழந்தை போன்ற உடல் கொண்ட தெய்வ வடிவங்களை,  காதில் கேட்கும் இசையை, புதிய உணவை, கண்கூசும் பின்னொளியில்  நிழலுருவாக  தெரியும் கோவிலை சொல்லுகையிலும். இளமைக்காலத்தை சொல்லிக்கொண்டிருக்கும் மைத்ரியை  மேய்ச்சல் நிலமகள் என்கையிலும் அஜிதன் என்னும் திரைவிலகி  ஜெ தெரிந்தார்.

மைத்ரி முழுவதுமே எனக்கு தனித்த பிரியத்தை உண்டாக்கி இருக்கும் படைப்பு தான் எனினும் ஹரன் நினைப்பதுபோல் ’’ஒளியாலான, மனதில் என்றும் தங்கிவிடும் தருணமாக’’ எனக்கிருப்பது இருவரும் திரும்பும் வழியில் அந்த உன்னத  பின்மதியவேளையில் பொன்மழையின் ஆயிரம் ஊசிகள் புல்வெளியில் பெய்திறங்குவதை பார்த்தபடி குளிரில் இனிப்பை கொரித்துக்கொண்டு  நெருங்கி அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும்  அந்த சித்திரம்தான்  கூடவே .ஃபெர்ன்களின் அந்த சுருண்ட இளம் குருத்திலை உணவும், அந்த புக்யால் புல்வெளியும்.

மைத்ரிக்கு ஹரன் கஸ்தூரி மிருகு, மாயப்பொன்மான். அவனுக்கு அவள் வனதேவதை ஜீதுவைப்போல  அந்த 3 நாட்கள் ஹரனுக்கும் பலநூறு வருட வாழ்வு. அந்த நினைவுகளுடன் அந்த பெரு வலியுடன் ஹரன் வாழ்ந்துவிடுவான். அவனுக்கான மீதமிருக்கும் வாழ்வை என்றும், மைத்ரி மற்றுமொரு ரிது என்றும் எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்.

கோட் பைக்குள் ஹரனறியாமல் மைத்ரி வைத்திருந்த  வாடியிருந்தும் நிறம் இழக்காமலிருந்த  புல்வெளியின் பலவண்ண மலர்கள் மைத்ரி அவனுக்கு மீட்டுக்கொடுத்த கெளரி 

இந்த வாசிப்பனுபவம் எனக்கும் ஒரு பெருங்கனவுதான். எழில் நிறைந்த கனவு, என்றென்றும் மனதில் எஞ்சி நிற்கும் கனவு.

அன்பும் ஆசிகளும் அஜிதனுக்கு

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே –

குருகு இதழில் வெளியான கட்டுரை

பல வருடங்களுக்கு முன்பு பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாபெரும் நூலகத்தில்  தியடோர் பாஸ்கரன் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை ஒன்றை முதன் முதலில் வாசித்தேன். கட்டுரையின் உள்ளடக்கம் இப்போது நினைவிலில்லை, திரைப்பட வரலாறு குறித்ததென்று தேசலாக நினைவு. ஆனால் அவரது அபாரமான மொழிநடையும் உன்னத ஆங்கிலமும் மனதில் பதிந்துவிட்டது.

ஒரு குக்கிராமத்திலிருந்து வந்து பல்கலைக்கழகத்தில் நகரத்து மாணவர்களுக்கிடையில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல ஆங்கிலம்  பேசத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலம் கற்கவென்றே ஆங்கிலக் கட்டுரைகளையும் நாளிதழ்களையும் தேடி வாசிக்க துவங்கிருந்தேன். அதன்பிறகு அவரது கட்டுரைகளை தேடத் துவங்கினேன் அதிகம் ஆங்கிலமும் ஒரு சில தமிழ் கட்டுரைகளும் பிற்பாடு கிடைத்தன.  அவரது இருமொழிப் புலமை குறித்தான பிரமிப்பு அன்றிலிருந்து இன்று வரை  தொடர்கிறது. அதன்பிறகு முனைவர் பட்ட ஆய்வு, திருமணம் என்று எதையும் வாசிக்க நேரமில்லாத நீண்ட காலம் கடந்துவிட்டிருந்தது.

அவரது தமிழ் கட்டுரைகள் வெகுஜன ஊடகங்களில் அடிக்கடி வரத் தொடங்கிய காலத்தில் நான் கல்லூரியில் பணியாற்ற துவங்கியிருந்தேன். அச்சமயத்தில் அவர் தீவிரமாக தமிழில் பல துறைகள் குறித்து எழுதிக்கொண்டிருந்தார். இன்றைக்கு போல தரச்சான்றிதழ் அந்தஸ்திற்காக மெனக்கெட வேண்டிய காலம் இல்லாததால் வகுப்புகளுக்கான இடைவெளிகளில் அப்போது நூலகத்திற்கு செல்ல நேரம் இருந்தது.

தேடித் தேடி அவரது எழுத்துக்களை வாசிக்க துவங்கியிருந்தேன். ஒரு முறை  இந்து தமிழ் நாளிதழில்  சென்னையின் காணாமல் போகும் நீர் நிலைகளை குறித்து வெளியான அவரது மிகச் சிறப்பான ஒரு  கட்டுரையை குறித்து  அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். மின்னஞ்சல் முகவரியை தவறாக குறிப்பிட்டிருந்ததால் எனக்கே அது திரும்ப வந்து கொண்டிருந்தது. பின்னர் பொறுமையாக சரியாக அதை அவரது முகவரிக்கே forward செய்தேன். மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதையும் முன்னர் அனுப்பியவற்றில் நான் ஓரெழுத்தை விட்டுவிட்டதால்தான் அவை திரும்பின என்பதையும் குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார்.

மனைவி திலகா பேரனுடன் பாஸ்கரன்- 2007

மிகச் சிறிய விஷயங்களிலும் கவனமும் கரிசனமும் கொண்டிருப்பவர் அவர் என்பதற்கான சான்று அதுவும். அத்தனை நுண்மையான பார்வை வாழ்வின் மீதும் சூழலின் மீதும் இருப்பதால்தான் அவரது எழுத்துக்கள் அத்தனை வலிமையாக  இருக்கிறது. இந்த நுண்மையான அவதானிப்பு வாழ்வின் எல்லா தளங்களிலுமே அவருக்கு இருக்கிறது. ஒரு புதிய நிலப்பரப்பில் தேநீர் அருந்த போகையிலும் கூட அவருக்கு அருகிலிருந்த மரத்தின் சலசலப்பை கவனிக்க முடிந்திருக்கிறது. அங்கிருந்த அரிய இனமான ஹுலக் வெள்ளைப் புருவக் குரங்கு எனப்படும் வாலில்லா குரங்கை கவனித்து அதை பதிவு செய்கிறார். சூழல் எழுத்தாளர்களுக்கு இருக்கவேண்டிய  மிக முக்கியமான இயல்பு அதுவென்பதை அவரிடமிருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம். 

அத்தோடு மட்டுமல்லாது  அந்த அரிய உயிரினம் அஞ்சல் தலையில் இடம்பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். அரசு சில காரணங்களால் அப்போது அக்கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றாலும் இருபது ஆண்டுகள் கழித்து, காட்டுயிர் பாதுகாப்பின் அவசியம் உண்டான பின்னர்  ஓர் அஞ்சல் தலையில் அக்குரங்கு இடம்பெற்றது. அவரது கண்டுபிடிப்புக்களை இயற்கையின் அத்யாவசியமான அம்சங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் அக்கறை அவருக்கு எப்போதும் இருக்கிறது.

வாலில்லா குரங்காகட்டும், அரிய ஆர்கிட் மலராகட்டும், கிளிகளாகட்டும், வாழ்வாதாரம் இழந்த இசை வெள்ளாளர்களாகட்டும் அனைத்து உயிர்களின் மீதும் அவர் கொண்டிருக்கும் கரிசனமே அவரது எழுத்துக்களில் முதன்மையாக தெரியும். கூடவே சரியில்லாத மொழி மாற்றத்துக்கும், குழப்பமான மொழிநடைக்கும் அவரது கண்டனங்களையும் முன்வைக்கிறார். அவரது கம்பீரமான முரட்டு மீசையும் புன்னகைக்கும் கண்களையும் போல சூழல் சார்ந்த பல கட்டுரைகளில் இருக்கும் கரிசனமும் கண்டிப்புமான இந்தக்கலவையும் இருக்கிறது.   

கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இணைய வழி கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்து. அதன் பிறகு ஜெயமோகன் அவர்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக அவருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார். இரண்டிலும் அவர் மிக முக்கியமான சூழல் பாதுகாப்பு குறித்த உரையை வழங்கினார். தமிழக அளவில், இந்திய அளவில் என்று அவரது பிரபல்யத்தை சுருக்கிவிட முடியாது உலகளவில் அவர் ஒரு மிக முக்கியமான பல்துறை பேராளுமை என்பதை அக்கூடுகைகள் உணர்த்தின.

தியடோர் பாஸ்கரன் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக தீவிரமாக இயங்கி வரும் துறைகளை கவனித்தாலே பெரும் பிரமிப்பு உண்டாகும். இந்திய திரைப்பட தணிக்கை, திரைப்பட வரலாறு, சூழலியல், காட்டுயிர் பேணல், திரைப்படம், இயற்கை, இந்திய அரசியல் என்று அனைத்துமே வேறுபட்டவை.  இப்போது சூழல் இலக்கியம், பசுமை இலக்கிய படைப்புக்கள் நிறைய இருக்கின்றன என்றாலும் தியடோர் பாஸ்கரன் அவர்களே தமிழ் சூழலிலக்கியத்தின் முன்னோடியும் பிதாமகரும் ஆவார். 

தியடோர் பாஸ்கரனின் தாத்தா தில்லைக்கண் ஒரு இந்து. இளமையிலேயே அவர் வீட்டை விட்டு ஓடிவந்து கரூரில் அலைந்து கொண்டிருக்கையில் ஒரு கிருஸ்துவ பாதிரியாரின் அரவணைப்பு கிடைத்திருக்கிறது. அவரது  பொறுப்பில் இருக்கையில் தான் அவர் கிருஸ்துவராக மதம் மாற்றப்பட்டார். தியடோர் பாஸ்கரனின் தாத்தா ஒரு தமிழறிஞரும் கூட. அவர் பல தமிழ் பாடல்கள் எழுதியிருக்கிறார். தனது 50-வது வயதில் அவற்றை வாசித்த தியடோர் பாஸ்கரன் தன்னை இம்மண்ணின் வேருடன் பிணைத்து வைத்திருப்பது தமிழ்தான், தன் முதன்மை அடையளமாக தமிழன் என்பதையே முன்வைப்பேன் என்கிறார்.

வேட்டையில் விருப்பம் கொண்டிருந்த அவரது தந்தை பிரபல வேட்டைக்காரரும் அமெரிக்க அதிபராக இருந்தவருமான தியடோர் ரூஸ்வெல்டின் பெயரை தனது மகனுக்கும் வைத்தார். தந்தையுடன் வேட்டைக்கு சென்ற நாளொன்றில் ஆற்றுப்பாறையில் தன்னை நிற்க வைத்துவிட்டு துப்பாக்கியுடன் சற்றுத்தொலைவில் அவரது தந்தை காத்திருக்கையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு உண்டாகி இருக்கிறது. தன்னை கழுத்திலும் துப்பாக்கியை நீர்மட்டதுக்கு மேலும் வைத்துக்கொண்டு தன் தந்தை துணிச்சலாக ஆற்றைக்கடந்ததை தியடோர் பாஸ்கரன் நேர்காணலொன்றில் பகிர்ந்திருந்தார். வேட்டைக்காரரான தியடோர் ரூஸ்வெல்டின் பெயரை மகனுக்கு அவர் வைத்திருந்தால் என்னவோ அவரைப் போலவே இவரும் ஒரு இயற்கை விரும்பி ஆகிவிட்டிருக்கிறார். ஆசிரியர்களான தனது பெற்றோர்களை அந்த நேர்காணலில் நினைவுகூறும் தியடோர் பாஸ்கரன் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள கடுமையாக உழைத்த அவர்களைப்போல தான் எதிர்காலத்தில் அப்படி தேவைகளுக்காக உழைத்து வாழ்வை இழந்து விடக்கூடாது என்று  முடிவு செய்திருந்ததை பகிர்ந்துகொள்கிறார்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் வரலாறு படிக்கையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த அவரது கணிதப் பேராசிரியர் கிப்பிள் கல்லூரியை சுற்றி இருக்கும் புதர்க்காட்டில் பறவைகளை காணச்செல்கையில் தியடோர் பாஸ்கரனும் உடன் செல்வது வழக்கம். அவரோடு பறவைகளை காத்திருந்து கண்டது, அவற்றின் பல வகைகளை இனம் கண்டுகொண்டது, அவற்றின் வாழிடத்தை அறிந்து கொண்டதுமாக அந்த அனுபவங்களே தன்னை இயற்கையுடன் இணைத்த புள்ளி என்கிறார் தியடோர் பாஸ்கரன். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் அன்றிலிருந்தே விடுதி மாணவர்களுக்கு தனித்தனி அறை என்பதால்  அவருக்கு வாசிக்கவும் எழுதவும் நல்ல சுதந்திரமும் தனிமையும் அங்கு கிடைத்து.

அவரது கல்லூரிக்காலத்தில் ஆங்கிலப் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார். அவரது கிராமத்திற்கு  ஜான் என்னும் பிரிட்டிஷ் இளைஞர் வந்தபோது, அவருடன் ஆங்கிலம் பேச வேறுயாரும் இல்லாததால் தியடோர் பாஸ்கரன் அவருடன் பேசிப் பழகி நெருக்கமானார். ஜான் தனது சேகரிப்பில் இருந்த ஷேக்ஸ்பியரின் பல படைப்புக்களின் ஒலிநாடாக்களை இவருக்களித்திருக்கிறார். அவற்றை ஆழ்ந்து கவனித்து கேட்ட தியடோர் பாஸ்கரனுக்கு இலக்கியமும் நாடகமும் இசையும் அறிமுகமானது. மேலும்  ஜான் அளித்த பெர்னாட்ஷா, ரஸ்ஸல் ஆகியோரின் நூல்களும் அவரின் ஆளுமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கின. அந்த வாசிப்பனுபவம் அவரது வாழ்வு குறித்தான அடிப்படையான தேடல்களுக்கு விடையளிக்கவில்லை எனினும் பல புதிய கதவுகள் அவருக்கு அப்போது திறந்தன. அச்சமயத்தில் இறையுணர்விலிருந்து தியடோர் பெருமளவில் விலகிவிட்டிருந்தார். அந்த கிராமத்தில் இருந்து பெளத்தம் குறித்த நூலை எழுதிக் கொண்டிருந்த ஜான் இப்போதும் நலமாக இருக்கிறார் என்று 2021-ல் தியடோர் பாஸ்கரன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்

இவரது பணிச்சூழல்களும் மிக வித்தியாசமானவை. வரலாறு படித்து பட்டம் வாங்கிய இவர் தமிழக அரசு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக பணி புரிந்தார். அப்போது பல ரகசிய, முக்கிய ஆவணங்கள் அவர் பொறுப்பில் அளிக்கப்பட்டிருந்தது. அவர் அவற்றை சரியாக படித்து, தொகுத்து எழுத வேண்டியிருந்தது. ராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்கள் தொடர்புடையவைகளும், அங்கு நடந்த விடுதலைப் போராட்டம் சிதம்பரம் பிள்ளை, பாரதியார் ஆகியோரை குறித்தவைகள், ஆஷ்துரை கொலை வழக்கு போன்ற முக்கிய ஆவணங்களை எல்லாம் தியடோர் பாஸ்கரன் தொகுத்து எழுதினார். இரு வருட ஆவணக்காப்பக பணி முக்கிய ஆவணங்களை கையாள்வது தொகுத்தெழுதுவது ஆகியவற்றில் அவருக்கு நல்ல அனுபவத்தை அளித்தது. அந்த அனுபவங்கள் பின்னாட்களில் வரலாற்று பெரும்படைப்புக்களை எழுத அவருக்கு உதவியாக இருந்தன.

பல வருடங்களுக்கு முன்னர் திருச்சியில் (1967) அவர் இருக்கையில் அங்கிருக்கும் ஒரு ஏரிக்கு அரிய வகை பறவையினம் இமாலயத்திலிருந்து வரவிருப்பதாக ஒரு தகவல் கிடைக்கிறது. உடனே அவர் அதிகாலையில் புறப்பட்டு அங்கு செல்கிறார். அங்கிருந்த காவலாளி நடராஜனும் இவரும் அமர்ந்து அங்கு வரும் பறவைகளை அடையாளம் கண்டுகொண்டிருந்திருக்கிறார்கள். சற்று நேரத்தில் தொலைவிலிருந்து பறவை கூட்டமொன்றின் முழக்கம் கேட்டிருக்கிறது. அவர்கள் முன்னே பனித்திரையை கிழித்துக்கொண்டு வரித்தலை வாத்துகள் (Bar-headed Goose)  சாம்பல் நிற சிறகுகளை விரித்தபடி மெதுவாக ஏரியில் வந்து இறங்கி இருக்கின்றன. தியடோர் பாஸ்கரனுக்கு அது ஒரு மாயக்காட்சியை போல பரவசமளிக்கிறது. வெகுநேரம் அவற்றை பார்த்துவிட்டு திரும்பிய அவர்  ஏரிகளில் இனப்பெருக்கம் செய்து தெற்காசியாவிற்கு வலசை போகும் அப்பறவைகளை குறித்து வன அலுவலக ஆவணங்களில் தேடி வாசிக்கிறார். பின்னர் முதன் முதலில் 1967-ல் ஹிந்து பத்திரிகைக்கு அப்பறவையை குறித்த கட்டுரையை எழுதி அனுப்புகிறார். சில நாட்களிலேயே அக்கட்டுரை பிரசுரமானது. இக்கட்டுரையுடன் துவங்கி தொடர்ந்து ஹிந்து நாளிதழில் சூழல் இயற்கை காட்டுயிர் பறவைகள் என நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார் தியடோர் பாஸ்கரன்.

மற்றொரு சமயம் அவரது காதல் மனைவி திலகாவுடன் குஜராத்தில்  ஒரு பயணம் மேற்கொண்டிருக்கையில் வழியில் சாரஸ் பறவை இணையொன்றின் அழகிய நடனத்தை பார்த்து அதை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். குஜராத்தில் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் இளம் தம்பதிகளை வாழ்நாளில் ஒரே இணையுடன் வாழ்ந்து மடியும் காதல்பறவைகளான சாரஸ் இணையை காண பெரியவர்கள் அழைத்து செல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. இந்த  பறவைகளின் நினைவாகத்தான்  சூழலியல் மற்றும் காட்டுயிர் பற்றி தான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை சாரஸின் நடனம் (The Dance of the Sarus) என்னும் பெயரில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தாரால்  வெளியிட்டார்.

குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்று இந்திய தபால் துறையில் சேர்ந்தார். தபால் துறை பணி அவருக்கு  மிகுந்த நிறைவை அளித்தது. அக்காலகட்டத்தில் பணி நிமித்தம் குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மஹராஷ்ட்ரா, மேகாலயா, டெல்லி என தொடர்ந்து பயணித்தது அங்கிருந்து பலதரப்பட்ட மக்களின் வாழ்வின் இயங்கியலையும் இந்தியாவை குறித்த அறிதலையும் அவருக்கு அளித்தது. அச்சமயத்தில் ராஜீவ்காந்தி வாரம் 6 நாட்கள் வேலை என்பதை 5 வேலைநாட்களாக மாற்றினார். வார இறுதியில் முழுக்க இரண்டு நாட்கள் அவருக்கு விரும்பியவற்றை செய்யவும் பயணிக்கவும் கிடைத்தபோது மேலும் படைப்பாற்றலுடன் செயல்பட்டார். தபால் சேவை ஆட்கள் அதிகம் தேவைப்படும் ஒரு இலாகா, எனவே அப்பணியில் இருக்கையில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தது, பல கிராமங்களுக்கு பயணித்தும் கிடைத்த நேரங்களில் எழுதியும் வாசித்தும் தனக்குள்ளிருக்கும் ஆளுமையை வெளிக்கொணர முடிந்தது.

தியடோர் பாஸ்கரன் வங்காள இயக்குநர் சித்தானந்த தாஸின் டான்ஸ் ஆஃப் சிவா என்ற ஆவணப்படத்தை குறித்து சிவ தாண்டவம் என்னும் கட்டுரையை கசடதபற இதழில் வெளியிட்டார். அக்கட்டுரைக்கு பிறகே அமெரிக்க வரலாற்று ஆய்வாளரான சார்லஸ் ஏ. ரையர்சன் அவரை தமிழ் திரைப்பட ஆய்வில் ஈடுபடும்படி ஊக்குவித்தார். இரண்டாண்டுகள் பணி விடுப்பு பெற்றுக்கொண்டு திரைப்பட பகுப்பாய்வு வகுப்பில் சேர்ந்து பல திரைத்துறை குறித்த பல விஷயங்களை அப்போது கற்றுக்கொண்டார். அங்கு அவரது ஆசிரியராயிருந்த  பி.கே. நாயர் தியடோர் பாஸ்கரனை புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் மேலாண்மைக் குழுவில்  உறுப்பினராக்கினார். அங்கு இரண்டாண்டுகள் பல பழைய திரைப்படங்களை பார்த்த பாஸ்கரன் மீண்டும் தபால் பணியில் சேர்ந்தபோது கல்கத்தாவிற்கு பணிமாறுதல் பெற்றார். கல்கத்தாவிலும் திரைப்பட சங்கத்தில் உறுப்பினரானார்.

இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை பற்றி அவர் எழுதிய கட்டுரையை 1977-ல் நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயத்தில் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இக்கட்டுரையையும் மேலும் சில கட்டுரைகள் சேர்ந்த தொகுப்பு  1981-ல் தி மெசேஜ் பியரர்ஸ் (The Message Bearers) என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. தேசிய இயக்கத்தில் தமிழ்த் திரைப்பட மற்றும் நாடகத் துறையினரின் பங்கினை விவரிக்கும் பல அரிய தரவுகளை கொண்ட  இந்த நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றுத் துறையில் மிக அரியதும் மிக மிக முக்கியமானதும் கூட. தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய அறிமுகம் செய்த அவருடைய அடுத்த  நூல், தி ஐ ஆஃப் தி செர்பன்ட் (The Eye of the Serpent) சிறந்த திரைப்படத்துறை புத்தகத்திற்கான தங்கத் தாமரை பெற்றது. தமிழ் சினிமா வரலாற்றை மிகச்சரியான வடிவத்தில் அடுத்த தலைமுறையினர் முன்னர் கொண்டு வந்து சேர்த்தவர் தியடோர் பாஸ்கரன். ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல முக்கியமான  புத்தகங்கள் இவர் எழுதியுள்ளார்.

தியடோர் பாஸ்கரன் ஷில்லாங்கில் இருக்கையில் முரசொலி மாறன் ஒரு மாலை அவரை சந்தித்தபோது பொதுவாக சினிமா குறித்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த உரையாடலில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் திரைப்படங்களை குறித்த ஆழமான அறிவை அடையாளம் கண்டுகொண்ட முரசொலி மாறன் அவரது வார இதழில் சினிமாவை குறித்து எழுதும்படி கேட்டுக்கொண்டதோல்லாமல் ஒவ்வொரு தொடருக்கும் 1000 ரூபாய்கள் சன்மானம் அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அப்படித்தான் சினிமா குறித்து இவர் எழுத துவங்கினார்.

ராஜீவ் காந்தியுடன் பாஸ்கரன்-1985

பணி நிமித்தம் மேகாலயாவிலிருந்த போது பங்களாதேஷ் விடுதலைப் போர்ச்சூழலில் தியடோர் பாஸ்கரன் தபால் தந்தி துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார்.  அவருக்கு அப்போது 45 வயது. அப்போது அகர்தலாவில் முன்னணி படைப்பிரிவில் பணி புரிந்தார். அவர்களது  குடியிருப்புகளினருகே தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ள பதுங்கு குழிகள்  அமைக்கப்பட்டிருந்தன. எந்த சூழலிலும் தியடோர் பாஸ்கரன்  படைப்பிரிவுகளின் பல விதங்கள், அவை இயங்கும் விதம் ஆகியவற்றை கற்று கொண்டார் 

தேசிய டிஃபென்ஸ் கல்லூரியில் ஒரு வருட படிப்பை முடித்த அவருக்கு அந்த அமைச்சகத்தின் மூலம் பல உலக நாடுகளுக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மனி, கென்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்திய அரசின் விருந்தாளியாக சென்று அங்கும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு நாட்டை குறித்து அறிந்து கொண்டார். தபால் துறையில் படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டின் தலைமை தபால் அதிகாரியாக ஓய்வு பெற்றார். 

பணி ஓய்வு பெற்ற சில மாதங்களில் ரோஜா முத்தையா நூலகத்தில் இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.  மூன்று வருடங்கள் அந்த பணியில் இருந்தவர் மீண்டும் தனது  விருப்பத்திற்குகந்த இயற்கையை பேணுதல்,  காட்டுயிர்களை குறித்த கட்டுரைகள் எழுதுதல் ஆகியவற்றை தொடர்ந்தார். தற்பொழுது அந்த நூலகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ள அவர் தனது நூல் சேகரிப்பு முழுவதையும் அந்த நூலகத்துக்கே அளித்துவிட்டார்.  

பாஸ்கரன் புகழ்பெற்ற விலங்கியலாளரான உல்லாஸ் காரந்தின் தி வே ஆஃப் தி டைகர் (The way of the Tiger) என்ற நூலை ”கானுறை வேங்கை” (2006) என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சூழல் குறித்த அறிதலை அளிப்பவற்றுள் மிக முக்கியமான நூல் இது. தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து படைப்புகளும் இன்றியமையாதவை எனினும் சூழல் முக்கியத்துவம் கொண்ட ‘சோலை என்னும் வாழிடம், தாமரை பூத்த தடாகம், இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,வானில் பறக்கும் புள்ளெல்லாம், கானுறை வேங்கை, மழைக் காலமும் குயில் ஓசையும்’ ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்.

அவரது படைப்புகளில் தரவுகள் மிக துல்லியமாக இருக்கும் புள்ளிவிவரங்கள், பெயர்கள், படங்கள் என்று அனைத்தும் மிகச் சரியாக அமைந்திருக்கும். கச்சிதமான வடிவமைப்பும், ஒழுங்கும் கொண்டிருக்கும் கட்டுரைகள் மிக சுவாரஸ்யமாக துவக்கி ஒரு சொல்லோ ஒரு வார்த்தையோ தேவையற்று  இடம்பெறாமல் உருவாகியிருக்கும். பசுமை இலக்கியத்தில் கட்டுரைகளை எழுதும் பயிற்சிகளுக்கு முன்னுதாரணமாக எக்காலத்திலும் சுட்டிக்காட்டப்படும் தகுதி கொண்டவை தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து கட்டுரைகளும். 

உயிர்மை இதழில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தியடோர் பாஸ்கரன் அவர்களின் சூழல் குறித்த கட்டுரைகள் வெளிவந்தன. ஒரு சிற்றிதழில் இத்தனை ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஒருவரின் கட்டுரைகள் வருவதிலிருந்தே அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். அக்கட்டுரைகளின் தொகுப்பே ’கையிலிருக்கும் பூமி’. சில கட்டுரைகளை கவித்துவமாக துவங்கப்பட்டிருக்கும். கிளிகளை பற்றிய  ஒரு  கட்டுரை இப்படி துவங்குகிறது: ”நீலவானப் பின்புலத்தில் பனித்திவலைகள் மிதந்து வருவதைப் போன்ற தோற்றம். இருநோக்கியில் பார்த்தபோது அது வெள்ளை நிறக்கிளிகளின் திரள் என்பது புலப்பட்டது”. 

நீர்நாய்களுக்காக ஆளியாறு அணையருகே காத்திருப்பது, டாப்ஸ்லிப்பில் புதைக்கப்பட்ட ’ஹியூகோ வுட்’ உயிலை தேடி செல்வது, ஒரு  புதிய கிராமத்தில் ஓநாய்களை காண இரவெல்லாம் கயிற்றுக்கட்டிலில் டார்ச் அடித்து பார்த்துக்கொண்டு காத்திருப்பது என்று இயற்கை குறித்த பேரார்வத்தினால் அவர் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் ஆர்வமூட்டுபவை. ஒநாய்களை பார்த்த அனுபவத்தை சொல்லுகையில்  ”அவை உணவின்றி மெலிந்திருக்கும் அல்சேஷன் நாய்களைப் போன்ற தோற்றத்துடன்” இருந்ததாக குறிப்பிடுகிறார். இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் நோய்களை குணமாக்கும் மருந்து எனும் நம்பிகைக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் குறித்த வருத்தமும் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆட்கொல்லி புலியை குறித்த பதிவில் அறம் எனப்படுவது குறித்தும், இசை வெள்ளாளர்களின் வாழ்வாதாரம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தினால் பாதிக்கப்படுவது குறித்துமான தியடோர் பாஸ்கரனின் கருத்துக்கள் கரிசனமன்றி வேறில்லை. ஒரு கட்டுரையில் தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களின் சித்தரிப்பை குறித்த வருத்தத்தை முன்வைக்கிறார். ஓவியக்கலை போன்ற தொன்மையான அழகியல் பாரம்பரியம் அழிந்து போவதை குறித்து கவலைப்படுகிறார்.

சூழியல் தளத்தில் இவர் உருவாக்கிய பல புதிய தமிழ்ச்சொற்கள் தற்போது புழக்கத்தில் இருக்கிறது. மேலும் பல புதிய சொற்களின் தேவை இருக்கிறதென்றும் அவை உருவாக்காப்பட்டால்தான் மொழி வலுப்பெறும் என்று கருதுகிறார். இவர் உருவாக்கும் மூலச்சொற்கள், தமிழ் வழங்குபெயர்கள், சிறந்த மொழியாக்கங்கள் எல்லாம் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமானவை. ஒரு உரையில் ’தேன்சிட்டுவை’ என்கிறார் நாம் ’தேன்சிட்டை’ என்பது தவறென்று அவர் சரியாக உச்சரிக்கையில் தான் தெரிகிறது. இயற்கையை எழுதுபவர்கள் ஒருபோதும் அரசியலை  தவிர்க்கமுடியாது, எனினும் இவரது கட்டுரைகள் அறிவியல் பூர்வமானவை மட்டுமல்ல அனுபவபூர்வமானவைகளும் கூட. 

மொழியாக்க கட்டுரைகளின் தரம் குறித்து சொல்லுகையில்: ”இயற்கை சார்ந்த நூல் ஒன்றை மொழிபெயர்க்கத் துணிபவருக்குப் புறச்சூழல், மரங்கள், காட்டுயிர் ஆகியவை பற்றிய பட்டறிவு அடிப்படை அளவிலாவது இருக்க வேண்டும். அது மட்டுமல்ல இயற்கை சார்ந்த கருதுகோள்களையும் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். இவற்றைப் பற்றி ஒன்றும் தெரியாமல் அத்துறை சார்ந்த நூல்களில் கைவைக்கக் கூடாது.” என்கிறார்.

50-வது பிறந்தநாள், மேகதாட்டு, 1990

சங்க இலக்கிய தாவரங்கள், விலங்குகள் என்று பலர் தங்களது வலைப்பக்கத்திலும் முகநூல் பக்கங்களிலும் எழுதுகின்றனர் அவற்றில் 90 சதவீதம் எந்த கவனமும், உயிரினங்கள் குறித்த அடிப்படை அறிவும் இல்லாமல் எழுதப்படுபவை. பலர் முருக்க மரம் என்பதற்கு கல்யாண முருங்கையின் புகைப்படத்தை பலாச மரத்திற்கு பதிலாக  வைத்திருக்கிறார்கள். கஞ்சக்கொல்லை என்னும் துளசி வகை கஞ்சாச்செடி என்று சொல்லப்பட்டிருக்கிறது பல வலைப்பக்கங்களில். முக்கியமான சூழல் சார்ந்த விஷயத்தை  பிறருக்கு தெரிவிக்கையில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச அக்கறையும் கவனமும் இன்றி எழுதப்படும் கட்டுரைகள் மலிந்து கிடக்கும் இச்சூழலில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் கருத்துக்களும், கட்டுரைகளும் உரைகளும் நூல்களும் மிக முக்கியமானவை. அவரை போல ஆயிரக்கணக்கான மைல் பயணம் செய்வது, நூற்றுக்கணக்கான நூல்களை வாசிப்பது, பல்துறை ஆளுமைகளுடன் நட்பு கொள்வதெல்லாம் செய்ய முடியாவிட்டாலும், அவரது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தாலே இதுபோன்ற பிழைகளை தவிர்க்கலாம். 

தியடோர் பாஸ்கரன் அவரது சகோதரரின் மறைவின் போதும் மகளின் காதல் திருமணத்தின் போது தேவாலயங்களும் மதகுருக்களும் காண்பித்த மற்றொரு முகத்தை கண்டு வருந்தினார். அப்போது ஜே. கிருஷ்ணமுர்த்தியின் எழுத்துக்களும் அறிமுகமானதால் தான் அதுவரை சார்ந்திருந்த மதத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார். அதன் பிறகு ’’இந்தியாவில் ஒரு கிறிஸ்தவனாக இருப்பது என்பதென்ன’’ என்பதை குறித்த தொடர் கட்டுரைகள் எழுதினார். ஒரு பல்கலைக்கழகம் அந்த கட்டுரைகளுக்காக  அவருக்கு DD எனப்படும் doctrine of divinity என்னும் பட்டம் அளித்து சிறப்பித்தது.  

மா. கிருஷ்ணன், ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் தியடோர் பாஸ்கரனின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தியவர் சுவாமி என்னும் ஜென் குரு ஒருவர். இப்போது கொடைக்கானல் மடமொன்றில் இருக்கும் சுவாமியின் பல பயிற்சி வகுப்புகளில் தியடோர் பாஸ்கரன் கலந்து கொண்டிருக்கிறார். ஜென் மதம் தன் அடிப்படை கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை, தன் வாழ்க்கையை பெருமளவில் மாற்றவும் இல்லை எனினும் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்தை பெருமளவு மாற்றிவிட்டிருக்கிறது என்கிறார் இவர்.

50 வருடங்களாக கூரிய சூழல் எழுத்துக்களை எழுதி வரும் தியடோர் அவர்கள் சமீபத்திய ஒரு மேடை உரையில் வாசகர்கள் ஆர்வமுடன் வாசிப்பதே தன்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது என்கிறார் மிகுந்த பணிவுடன். அவரது பணி, பணிச்சூழல், பயணங்கள், அவர் எழுத்துக்களுக்கென அளிக்கும் கடும் உழைப்பு, அவரது தோழமைகள், அவரது வாசிப்பு, அவரது இத்தனை ஆண்டு கால அயராத எழுத்துப்பணி உள்ளிட பல பணிகள் ஒவ்வொன்றுமே சாதனைகள்தான். அவரது எழுத்துக்கள் வழியே நாம் காண்பது இயற்கையின் தரிசனத்தை தான்.

தியடோர் பாஸ்கரன் உலகக் காட்டுயிர் நிதியத்தின் இந்தியக் கிளையின் (WWF – India) அறங்காவலர் குழுவில் இடம் பெற்றிருந்த்தார். பெங்களூரு உயர் கல்விக்கான தேசிய ஆய்வுக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கும் தியடோர் பாஸ்கரன். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராகவும் இருந்தார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் சினிமாவை போதித்திருக்கிறார். இந்தியாவில், சர்வதேச கல்வி நிலையங்களில் முக்கிய தலைப்புக்களில் உரையாற்றியிருக்கிறார். இந்திய  தேசியத் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் நடுவராகவும் இருந்தார். 

தற்போது பெங்களூருவின் புறநகர் பகுதியில் இயற்கையின் அமைதியில் எப்போதும் பறவைகளின் குரல் கேட்டுக் கொண்டிருக்கும்  ஒரு வீட்டில் வசிக்கிறார். அன்று  ஏரியில், அமைதியான அதிகாலையில் இமாலயத்தில் இருந்து ஒரு தெய்வம் போல வந்து தியடோர் பாஸ்கரன் முன்பாக தரிசனம் தந்து அவர் அயராது எழுத காரணமாயிருந்த அந்த பறவைகளையும், அவற்றிற்கு பிறந்த, இனி பிறக்கப் போகும் பல தலைமுறைகளையும்  பணிந்து வணங்குகிறேன்.

 

கீரைகளின் அரசி- பரட்டைக்கீரை

நுண்சத்துக்களும் வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்து, குறைவான கலோரிகளே உள்ள பச்சைக்கீரைகள் நம் ஆரோக்கிய உணவில் மிக முக்கியமான இடம்பெற்றிருப்பவை. கீரைகளை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ளுவது உடற்பருமனை குறைக்கவும், இதயப்பதுகாப்புக்கும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மிகவும் உதவும்

உலகின் சத்து நிறைந்த 100 உணவுகளின் பட்டியலில் முதல் பத்தில் இருக்கும் (Kale) கேல் எனப்படும் கீரை தற்போது உலகின் ஆரோக்கிய உணவுக்கான தேடலில் இருப்போரின் புதிய விருப்பக்கீரையாகி விட்டிருக்கிறது. முட்டைகோஸ். காலி ஃப்ளவர், பச்சைபூக்கோசு ஆகியவற்றின் அதே பிரேஸிக்கேசி குடும்பத்தை சேர்ந்தவை இக்கீரைகளும். இவற்றில் ஊதா, இளம் பச்சை, அடர்பச்சை, சிவப்பு, மண் நிறம், என பல நிறங்களும், இலைகள் சுருண்டவை, நேரானவை, மென்மையானவை என பல வகைகளும் உள்ளது. சுருண்ட கேசம்போன்ற இலைகளின் தோற்றத்தினாலேயே பரட்டைக்கீரை எனப்படுகின்ற இக்கீரை இதில் நிறைந்துள்ள சத்துக்களால் கீரைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.  

  இதன் பூர்வீகம் ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளாகும். புதராக வளரும் செடிகளின் நடுப்பகுதியில் காணப்படும் இலைகளைத் தவிர்த்து மற்றவை அறுவடை செய்யப்படுகிறது. சுமார் கி.பி நான்காம் நூற்றாண்டிலேயே கிரேக்க நாட்டில் இக்கீரையை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை பண்டைய ரோம் பகுதியிலும் அதிகம் காணப்பட்டிருக்கிறது.  இக்கீரையை கனடா நாட்டினருக்கு ரஷிய வணிகர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டிலேயே  உலகெங்கும் உணவில் அறிமுகபடுத்தும் பொருட்டு இவை சாகுபடி செய்யபட்டதென்றாலும் இப்போதுதான் இவை பெருமளவில் பயன்பாட்டில் இருக்கின்றன

இதன் பலவகைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் வகைகளின் தாவர அறிவியல் பெயர்கள்

  • Brassica oleracea ssp. acephala group
  • Brassica oleracea var. sabellica-சுருண்ட இலைகளைக்கொண்டது
  • Brassica oleracea var. palmifolia
  • Brassica oleracea var. ramosa
  • Brassica oleracea var. costata
  • B. napus ssp. napus var. pabularia

உலகெங்கிலும் இப்போது இக்கீரை பரவலாக சந்தைப்படுத்தப்பட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்டும் வருகின்றது

அதிகம் சந்தைகளில் கிடைக்கும் பரட்டைக்கீரையின் வகைகள்

  • சுருட்டையான இலைகளுல்லவை
  • அடர்ந்த புதர் போற இலைகளுள்ளவை
  • அகன்ற மிருதுவான இலைப்பரப்புளவை
  •  இறகுபோல அமைப்புள்ளவை

ஒரு கோப்பை பரட்டைக்கீரையில் விட்டமின் K, A, C, B1, B2, B3, B6, கால்சியம் மேங்கனீஸ், மெக்னீஷியம், காப்பர், பொட்டாஸியம், இரும்புச்சத்து, ஆகியவையும், லியூட்டின், பீட்டா கரோட்டின், புரதம் கார்போஹைட்ரேட்டுகளும் லினோலெனிக் அமிலமும் நிறைந்திருகின்றன. ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகளான  க்யூசெர்டின் மற்றும் கேம்ஃபிராலும் இதில் செறிந்து காணப்படுகின்றது.. ஈரல் செயலிழப்பு,  வைரஸ் தொற்று ஆகியவற்றுக்கு எதிராக இக்கீரை சிறப்பாக செயல்படுகின்றது.சல்ஃபரோபேன் நிறைந்துள்ளதால் இது புற்றுநோயை தடுக்கும்.

இக்கீரையில் ஒரு முழு ஆரஞ்சில் இருப்பதைக்காட்டிலும் அதிகமான் அளவில் வைட்டமின் C இருக்கிறது.  இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி, LDL எனபடும் கெட்ட கொழுப்பை பெருமளவில் குறைக்கும். இரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் K இதில் மிக அதிகம் உள்ளது. இதிலிருக்கும் அதிக மெக்னீஷியம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றது. கண்பார்வை குறைபாட்டை தடுக்கும் லூயிட்டினும் ஜியாஸேந்தினும் இதில் நிறந்து உள்ளன. நீர்ச்சத்தும் மிகுந்திருக்கின்றது

கீரைகளை நீரில் கொதிக்க வைத்து வேகவைக்கும்போது நுண்சத்துக்கள் பெருமளவில் அழிந்துவிடுவதால் நீராவியில் வேக வைத்து சாப்பிடலாம் அப்போது இதன் கொழுப்பை குறைக்கும் தன்மை மிக அதிகமாகிவிடுகிறது. சமைக்காமல் பச்சையாக சாலட்டுகளிலும், மைக்ரோவேவில் சமைத்தும் சாப்பிடுவது இன்னும் சிறப்பான பலன்களை அளிக்கும். 

சமைக்கையில் கெட்டியான தண்டுப்பகுதியையும், நார் நிறைந்து கடினமாக இருக்கும் நடு நரம்பையும் நீக்கிவிடுவது நல்லது

விதைகளிலிருந்து உருவாக்கப்படும் இக்கீரை மிக விரைவாக வளர்ந்துவிடும். உலகின் பல்வேறு நாடுகளிலும் இக்கீரை விரும்பப்பட்டாலும், இந்தியர்கள் கசப்பு சுவையுள்ள கீரைகளை விலக்கும் மனப்பான்மையுள்ளவர்களாகையால் இந்தியாவில் இதன் சாகுபடியும் பயன்பாடும் மிகக்குறைவாகவே இருக்கிறது.

 அமெரிக்காவில் இக்கீரையை அறிமுகப்படுத்திய பெருமை டேவிட் ஃபேர் சைல்ட் (David Fairchild) என்னும் தாவரவியலாளரையே சேரும்., அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ஜார்ஜியா, நியூ ஜெர்சி மற்றும் டெக்ஸாஸில் சுமார் 7500ஏக்கர்களிலான் பண்ணைகளில் இக்கீரைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. கேலின் உண்ணும் கீரை வகைகளோடு  அலங்காரச்செடி வகைகளும் அமெரிக்காவில் பரவலாக விரும்பப்படுகின்றது கீரைகளை தேர்வு செய்கையில் உறுதியான, உடையும் இலைகளும், ஈரமான நல்ல நிறத்தில் இருக்கும் தண்டும் இருப்பதாக பார்க்கவேண்டும்.

மாமரக்கிளியும் மயிலும் சிவகுமாரும்.

சமீபத்தில் நெடும்பயணமொன்று சென்றிருந்தேன். பயணத்தில் வழக்கம் போல யூ ட்யூபில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கையில்  சுமித்ரா சிவகுமார் டூயட் பாடலான ‘’அடடட மாமரக்கிளியே’’ வும் பார்த்தேன். அந்த பாடல் முன்பே பலமுறை கேட்டிருக்கிறேன் எனினும் காட்சியாக பார்ப்பது அதுவே முதன் முறை.

முந்திரித்தோப்பென்று பின்புலத்தில் இருக்க பின்கொசுவ சேலையை கணுக்கால் தெரிய கவர்ச்சியாக  கட்டிக்கொண்டு ஏராளமான எனர்ஜியுடன் சுமித்ரா துள்ளிக்குதித்து ஆடிவருகையில் சிவக்குமார் ’’எனெக்கென்ன’’ என்னும் பாவனையில் மரத்தடியில் அசுவராஸ்யமாக கல்லைப் பொறுக்கி வீசிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். 

பொதுவாகவே சிவகுமார் சாருக்கு காதல் காட்சிகள் டூயட்டுகள் என்றால் எட்டிக்காய்தான்.

காதலை முகத்தில், உடல்மொழியில் காண்பிப்பது என்பது அவருக்கு பெருவலிதான். அதுபோன்ற சமயங்களில் அவர் முகத்தில் பள்ளிக்கு இஷ்டமில்லாமல் புறப்படும் சிறுவனின் அல்லது PMS வேதனையில் இருக்கும் இளம் பெண்ணின் முகபாவனை இருக்கும்.(PMS ன்பொருளை கூகிள் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்).

சரி அவருக்குத்தான் பிரியமில்லையே, இந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்  அவரை விட்டுவிடலாமல்லவா? விடமாட்டார்கள் காதலியுடன் நெருக்கமாக காதலன் இல்லாவிட்டால் அது எப்படி காதல் டூயட் ஆகும்? தமிழ் சினிமாவுக்கென்று ஒரு மரபிருக்கிறதல்லவா? 

நெருக்கமாக போனால் சிவகுமாருக்கு இன்னும் சங்கடம் எனவே அவர் மையமாக காதலியின் கழுத்தோரம் கடிக்கப்போவது போல் பாசாங்கு செய்வார் அதுவே  சிவகுமாரின் அதிகபட்ச நெருக்கக் காட்சி, எனக்கென்னவோ அக்காட்சிகளெல்லாமே  ஆண் வேடமிட்டிருக்கும் வேம்பையர் வவ்வால்கள் இளம் பெண்களை மயக்கி கொஞ்சுவது போல போய் கழுத்தை கடித்து ரத்தம் குடித்துக் கொல்லுமே அதுதான் நினைவுக்கு வரும்,சிவகுமார் சாருக்கு எங்கள் வீட்டில் செல்லப்பெயர் வேம்பையர் பேட்!

சுமித்ரா தண்டை அணிந்த வெறுங்காலில் மணலில் புதையப் புதைய குதித்தாடி வந்து சிவகுமாரை  வம்படியாய் இழுத்துச்செல்கிறார். (தயாரிப்பு சுமித்ராவோ?)

வேறு ஏதோ ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு கிளியை அவுட் ஆஃப் ஃபோகஸில் பார்த்து ’’மாமரக்கிளியே’’ என்று துவக்கத்திலேயே தாவரவியல் தவறு செய்கிறார் சுமித்ரா.

மணலில் ஸ்டெப்ஸ் போடும் கஷ்டத்துடன் கூடுதல் கஷ்டமாக சிவகுமாரையும் இழுத்துச்செல்கிறார் அவரோ கையை  வெடுக்கென்று உதறி விலக்கி தப்பித்து தப்பித்து  வேறு திசையில் போகிறார்.//உன்னை நினைச்சே மஞ்சள் அரைச்சேன் மாசக்கணக்கா பூசிக்குளிச்சேன்// என்னும் வரிகளில் மட்டும்  மஞ்சள் தெரிகிறதா என்று சுமித்ராவின் முகத்தை கொஞ்சமாக ஆராய்கிறார். 

‘’கிட்ட வாயேன், தொட்டுப்போயேன், உன்னை நான் தடுக்கலியே தடுக்கலியே ‘’ என்று ஹஸ்கியாக பாடிக்கொண்டே சுமி  அவரை இழுத்து முகத்துக்கருகில் வைத்துக் கொள்ளும் போது ‘’அப்படின்னா’’ என்னும் பாவனையுடன் வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அந்த படத்தை பார்க்கவேண்டும். ஏன் இத்தனை காதலை, நேரடியான அழைப்பை இவர் உதாசீனம் செய்து வயிற்றுவலிக்காரரைபோல் உட்கார்ந்திருக்கிறார்?

சுமித்ரா கொஞ்சம் கூடுதல் புஷ்டியாக இருப்பதாலா ? சே சே இருக்காது அப்போதெல்லாம் அதுதானே அழகு தமிழ்சினிமாவில்.

கதையில் அவருக்கு வேலை கிடைக்காத விரக்தியா? கிராமத்து கதைக்களமாச்சே தோப்பும் துரவுமாக இருக்குமிடத்தில் வேலையென்ன அப்படி பிரச்சனை?  

அல்லது சுமித்ராவுக்கு பிளட் கேன்சரா? இல்லியே கமல் சாருக்கு பிளட் கேன்சர் வந்து ஸ்ரீதேவியை மறுக்கும் வாழ்வே மாயத்துக்கு பிறகுதானே தமிழ் சினிமாவுக்கே கேன்சர் வந்தது. இது அதற்கு முந்தினதாச்சே? மேலும் அப்போதுதான்  பிடுங்கின கிழங்கு போலிருக்கும் சுமித்ராவுக்கு கேன்சரா? வாய்ப்பேயில்லை

கடற்கரை லொகேஷனுக்கு மாறி மிகக் கவர்ச்சியான அசைவுகளுடன் ஆடும் சுமியை முற்றாக புறக்கணித்து ஒரு பெரும் பாறைமீது சாய்ந்து தேமேவென்று அமர்ந்திருக்கும் அவரை நோக்கி //அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சி’’ என்று வெட்கம் மேலிட சுமி பாடியதும் சிவகுமார் ‘’அதிர்ந்து என்னது? பரிசமா?போட்டாச்சா’’ என்று  திகைக்கிறார்

என்ன அநியாயக்கொடுமை ஒரு மனுஷனுக்கு இதைக் கூட சொல்ல  மாட்டீங்களா? என்று எனக்கும் கோபமாகத்தான் இருந்தது.

ஆனாலும் அடுத்தகாட்சியில் தமிழ் சினிமாவின் மரபுக்குட்பட்டு வேதனை வழியும் முகத்துடனேயே சுமித்ராவை அணைத்து கொஞ்சம்போல் வாசனை பார்த்துவிட்டு பின்னர் விலகிக்கொள்கிறார் என்னதான் கதாநாயகனுக்கு வேதனை இருக்கட்டும் படம் ஓடனுமே?

அடுத்த ஸ்டேன்சாவிலும் சுமியின் அத்தனை துள்ளலுக்கும் எதிர்வினையேது மில்லாமல் எதிலிருந்தோ தப்பிப்பதை குறித்த தீவிர ஆலோசனை செய்யும் பாவனையிலேயேதான் சிவகுமார் இருக்கிறார்.

கோரியோகிராபி யாரென்று தெரியவில்லை ஒரு சில நளினமான அசைவுகள் சுமித்ராவுக்கு இருந்திருக்கிறது எனினும் அவரது சதைத் திரட்சியை தாண்டி அவை வெளிப்பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.

அந்த சேலைக்கட்டு படம் முழுக்கவேவா அல்லது பாடலுக்கெனெ பிரத்யேக உடையலங்காரமா என்றும் தெரியவில்லை. சிட்டுக்குருவி என்னும் அப்படத்தை அவசியம் இந்த காரணங்களை அறிந்து கொள்ளும் பொருட்டாவது பார்க்க வேண்டும். ராஜாவின் இசை மட்டுமே மாபெரும் ஆறுதல் இப்பாடலில்,

சிவகுமாரின் காதல் கஷ்டங்களுக்கென ’’மயிலே மயிலே உன் தோகை எங்கே’’ பாடலையும் பார்க்கலாம். அதிலும் சுமித்ராதான் இவருடன். துவக்கத்திலேயே நீலத்தில் வெள்ளை பூப்போட்ட சட்டையும் பெல்பாட்டம் பேண்டுமாக மெல்ல அடிமேல் அடிவைத்து இரையை நெருங்கும் உச்சநிலை ஊனுண்ணியைபோல சுமித்ராவை நோக்கி வருவார். எப்படியும் சிவக்குமாரை முத்தம் கொடுக்க சொல்ல முடியாது எனவே நிழல்கள் முத்தமிடுகின்றன. காட்சி மாறி, காதல்பொங்க நின்றிருக்கும் சுமித்ராவை கண்டுகொள்ளாமல் பூத்திருக்கும் தீக்கொன்றைகளில் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மார்ச் பாஸ்ட் செய்வார்.

அடுத்த காட்சியில் டிபிகல் வேம்பையர் கழுத்துக்கடி இருக்கும். பொன்னுமூட்டை தூக்கியும், குடல் வாயில் வரும்படி தலைகீழாக தூக்கிசுற்றியும் சுமித்ராவை ஒருவழிபண்ணி பாடல் முடியும். சுமித்ராவின் மாராப்பை உருவும் காட்சியிலும் எப்படியோ துணிச்சலை வரவழைத்துக்கொண்டு நடித்திருப்பார். வெள்ளைச்சட்டையில் வருகையில் அப்படியே பருத்திவீரன் கார்த்தி தெரிகிறார். ஜென்ஸியின் குரல் தேனாய் வழியும் பாடல்களில் இதுவுமொன்று

உடையாள், பெருந்தொற்றுக்கால வாசிப்பை குறித்து!

உடையாளில் ஜெ சொல்லிக்கொண்டு வரும் நுண்ணுயிர் மற்றும் தாவர அறிவியல் தகவல்களைக்குறித்து நான் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். தினமும் 9-4 மணிவரை இருக்கும் ஆன்லைன் வகுப்புக்கள். அதைக்காட்டிலும் அதிகமாக சமயம் எடுத்துக்கொள்ளும் அவற்றிற்கான முன் தயாரிப்புக்கள் என்று நாள் முழுவதுமே இதிலேயே தீர்ந்து போய்விடுகின்றது. உடையாள் காட்டும் மகரந்தசேர்க்கை, விதை முளைத்தல் உள்ளிட்ட பல தாவரஅறிவியல் தகவல்கள், புறக்காரணிகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நுண்ணியிர்களின் வளர்ச்சி போன்ற மிகச்சரியான அறிவியல் தகவல்களை குறித்தெல்லாம் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்

 ஜெ சொல்லி இருப்பது போலவே பசைபோன்ற சுரப்புக்களினால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பேக்டீரியாக்கள் திண்டு போல, முடிச்சுபோல கொத்துக்களாக காணப்படு்ம். Stromatolites பாறைகள் எனப்படுபவை மிகச்சரியாக அப்படி பசையினால் பலகோடி வருடங்களுக்கு முன்பு ஒன்றாக திரண்டு அடுக்கடுக்கான பாறைகளைப்போல இறுகியிருக்கும் நீலப்பச்சை பேக்டீரியக்காலனிகள்தான். Stromatolites என்றாலே கிரேக்க மொழியில் அடுக்குப்பாறைகள் என்றுதான் பொருள்

இவற்றிலிருக்கும் பேக்டீரியாக்கள் மற்ற பேக்டீரியாக்களை போலல்லாமல் பச்சையம் கொண்டிருக்கும், சூரியஒளியைக்கொண்டு ஒளிச்சேர்க்கை மூலம் உணவை தாவரங்களைப்போலவே தயாரிக்கவும் செய்யும் (Photosynthetic cyanoBacteria) உடையாளில் சொல்லி இருப்பது போலவே இப்படிமப்பாறைகள் மிக மிகமெதுவாக வளர்ந்திருக்கின்றன, 1 மைக்ரான் தடிமன் வளரவே 2000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

மனிதஇனம் தோன்றும் முன்னரே உருவாகியிருந்த இவற்றினால்தான் அப்போது 1 சதவீதம் மட்டுமே இருந்த ஆக்சிஜன் 20 சதவீதமாக அதிகரித்து மனித இனம் உள்ளிட்ட பிற உயிர்கள் தோன்றவும் காரணமாக இருந்திருக்கின்றது. இப்போது இவை பெருமளவில் அழிந்துபோய்விட்டன. இப்படிமப்பாறைகளில் உயிருடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பேக்டீரியாக்கள் இருப்பவை பஹாமா தீவுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் மட்டும்தான் இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் இந்த படிம பேக்டீரியாப்பாறைகள் இருக்கும் அதி உப்புநீர்நிலையான Hamelin Pool – பகுதி யுனஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இதைப்போலவே biofilms எனபப்டும் பேக்டீரியாக்களின் கூட்டத்தையும் நாம் கண்களால் காணமுடியும். உதாரணமாக அதிவெப்பத்திலும் உயிர்வாழும் thermophilic பேக்டீரியாகள் வெந்நீர் ஊற்றுக்களில் கூட்டம் கூட்டமாக காணப்படும். அமெரிக்காவின் Yellow stone மற்றும் Oregon னின் வெந்நீர் ஊற்றுக்களில் இப்படியான பேக்டீரியாக்களின் காலனிகள் அழுத்தமான மஞ்சள் பச்சை சிவப்பு என பல வண்ணங்களில் நீர்நிலைகளின் அடியிலும், கரைகளிலும் படிந்திருப்பதை பார்க்கலாம்.

உடையாளில் சொல்லி இருப்பதைப்போல ஒரு குறிப்பிட்ட சூழலில் இருக்கும் சத்துக்களை நுண்ணுயிரிகள் எடுத்துக்கொள்ள கையாளும் பல்வேறு வழிமுறைகளை ecological niche என்கிறது அறிவியல்.

ஆய்வகங்களிலும் பெட்ரி தட்டுக்களில் பேக்டீரி்யாக்கள் பல நிறங்களில் பல வடிவங்களில் திட்டுக்கள் போல் கூட்டமாக வளர்வதை சாதாரணமாக பார்க்கலாம்.

ஒளிச்சேர்க்கை செய்யும் திறனுள்ள பேக்டீரியாக்களைப் போலவே தன்னுடலில் இருக்கும் சில குறிப்பிட்ட காந்தத்தன்மையுடைய நுண்சத்துக்களை குட்டி காம்பஸ்களைபோல உபயோகித்து பூமியின் காந்தப்புலனை கண்டறிந்து அதில் போய் அப்பிக்கொள்ளும் magnetic bacteria’க்களும் கூட உள்ளன.

ஜனனி, ஜெனி போன்ற பெயர்களின் பொருளைக்குறித்தும் ஆவலாக வாசித்து குறிப்பெடுத்து வைத்தேன். எனக்கு இதில் தனித்த ஆர்வமுண்டு. சமீபத்தில் தாவரப்பெயர்களின் etymology குறித்தான உரையின் பொருட்டு கிரேக்க லத்தீன் தாவரப்பெயர்களில் மாறாத பொருளுள்ளவற்றை மட்டும், Alba என்றல் வெள்ளை nigrum என்றால் கருமை இப்படி, ஒரு நீண்ட பட்டியலாக தொகுத்து வைத்திருக்கிறேன்.

உடையாளில் ஜெ சொல்லிக்கொண்டு வரும் எல்லாமே நுண்ணுயிரியல் சொல்லும் உண்மைகள்தான். நான் இப்போது Bacteriology மற்றும் Virology பாடங்களைத்தான் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்

ஆய்வகங்களில் பேக்டிரியாக்களை வளர்க்கும் ஊடகத்தை தயாரிப்பதோ அல்லது நுண்ணுயிர்கள் வளரும் Micro environment குறித்தோ சொல்லுகையில் அவை எல்லாமே உடையாளில் இருப்பதை நினைத்துக்கொள்ளுகிறேன். தினமும் இந்த வகுப்பெடுக்கும் முன்பாக இன்னொரு முறை உடையாளை வாசித்துவிடுகிறேன்.

//மரத்தின் இலைகள் மிக அதிகமாக சூரிய ஒளியை பெறும்படி வடிவம் கொண்டவை. மரத்தின் இலைகளில் காற்று மிக அதிகமாகப் படும்// ஆம் இது தாவரவியலின் அற்புதங்களில் ஓன்று.

Phyllotaxy எனப்படும் தண்டுகளின் மீது இலைகள் எப்போதுமே சூரிய ஒளி படும்படியே அமைந்திருக்கும் இலையமைப்பை நான் மாணவர்களுக்கு நேரில் செடிகளை மரங்களை காட்டி கற்றுக்கொடுப்பேன். குப்பை மேனியின் இலையமைப்பை பார்த்தால் அத்தனை அழகாக இருக்கும் இலைக்காம்புகளின் நீளத்தை தேவைக்கேற்ப கூட்டியும் குறைத்தும் ஒரு பச்சைப்பூங்கொத்தைப்போல சூரியனை நோக்கியே எல்லா இலைகளையும் காட்டிக்கொண்டிருக்கும் அது.

பெருகவேண்டும் என்னும் துடிப்பான ’திருஷ்ணை’யை பற்றி சொல்லி இருக்கிறீர்கள். வைரஸின் திருஷ்ணையை குறித்து அறிகையில் ஆச்சர்யமாகவும் பயமாகவும் கூட இருக்கிறது. சாதாரண நுண்ணோக்கியால் கூட காணமுடியாத மிகச்சிறிய உயிரி்யான அதன் கொடூர புத்திசாலித்தனம் அச்சமூட்டுகிறது உண்மையில்.

கதையின் இறுதியில் ஜெ குறிப்பிட்டிருக்கும் தாவரங்களையும் விலங்குகளையும் இணைக்கும் கற்பனை வெகு சுவாரஸ்யம். Plantibodies என்பது அப்படியான தாவரங்களிலிருந்து நேரடியாக எதிர்ப்புசக்தியை நாம் பெற்றுக்கொள்ளும் ஒரு முயற்சிதான். ஒரு விறுவிறுப்பான் ஹாலிவுட் திரைப்படம் போலிருக்கிறது உடையாள்.

https://youtube.com/watch?v=EDkR2HIlEbc%3Ffeature%3Doembed

2019ல் வெளியான Fantastic Fungi என்னும் தாவரவியலாளர்களும் இ்ணைந்து தயாரித்திருக்கும் மிக நல்ல படத்தை முடிந்தால் பாருங்கள். பலகோடியாண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்கும் நுண்ணுயிரிகளான பூஞ்சைகளின் உலகை அத்தனை அழகாக காட்டியிருக்கிறார்கள். உடையாள் வாசிப்பவர்கள் இந்தப்படத்தை பார்ப்பது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

Symbiont என்பதற்கு ’’ஒத்துயிர்’’ என்பது மிகச்சரியான சொல். மாணவர்களுக்கு இதை சொல்லிவிட்டேன்.

உடையாளைப்பற்றி எழுத இன்னும் ஏராளம் இருக்கின்றது

தாவரக்குருடு

காக்கை கூடு பதிப்பகம் சமீபத்தில் ‘செங்கால் நாரை விருது’க்கான போட்டியை அறிவித்து இருந்தது! அவற்றில் முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்ட சுற்றுச் சூழல் சார்ந்த எனது கட்டுரை:

நம் தேவைகளுக்கான தாவரங்களை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்காததே தாவரக் குருடாகும்! நம்மை சுற்றியுள்ள தாவரங்கள், மரங்களை கவனிக்காதது, நமக்கும் அவற்றுக்குமான உறவை உணராமல் அழிப்பது! இவற்றை பயன்படுத்தாமலும், பாதுகாக்காமலும் வாழ்ந்து மடிகிறோம். இதை அறிந்தால், அரிய நன்மைகள்! 

உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தைத்தான் இந்தியா கொண்டிருக்கிறது எனினும்   இங்கு மட்டுமே  47,513 தாவர வகைகள் இருக்கின்றன. அதாவது உலகில் இதுவரை அறியப்பட்ட சுமார் 0.4 மில்லியன் தாவரங்களில், 11.4% இந்தியாவில் இருக்கின்றது.இவற்றில் 28% இந்தியாவில் மட்டுமே காணப்படும் எண்டெமிக் வகையை சேர்ந்தவை.

உலகின் மலரும் வகை தாவரங்களில் 6% இந்தியாவில் இருக்கிறது.  பலவகையான அரிய தாவரங்களை கொண்டிருப்பதால் உலகின் மூலிகைப் பூங்கா என்று அழைக்கப்படும் இந்தியாவின் வளங்களிலிருந்து  பல தாவரங்களை  கடந்த காலங்களில் முழுவதுமாக இழந்திருக்கிறோம் மேலும் பல அரிய தாவரங்கள்  மிக வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன.

நகரமயமாக்கல், காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாவது சுரங்கங்கள் உள்ளிட்ட காரணங்களினால் மட்டுமல்லாது தாவரகுருடினாலும் இவை அழியும் அபாயத்தில் இருக்கின்றன

கடந்த மாதம் NBR  எனப்படும் நீலகிரி உயிர்கோளத்தின் அரிய தாவரங்களை குறித்த ஆய்வுக்காக சென்றிருக்கையில் நீலகிரி மலைப்பாதை ஒரு பிரமுகரின் வரவுக்கென தூய்மைப் படுத்த பட்டுக்கொண்டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் இருந்த புதர்ச்செடிகள் மற்றும் சிறுசெடிகளனைத்தும் இயந்திரங்களால் அப்புறப்படுத்தப்பட்டன. இந்தியாவெங்கிலும் இப்படி பலநூறு தாவரங்கள்  தூய்மைப்படுத்துதல் என்னும் பெயரில் நிரந்தரமாக அழிக்கப்படுகின்றன.

அழிக்கப்படும் அரிய மூலிகைத் தாவரங்கள்!

அப்படி அகற்றப்படும் பல்லாயிரக்கணக்கான சிறு செடிகளில்   இன்னும் கண்டுபிடித்திருக்க பட்டிருக்காத புற்றுநோய்க்கான மருந்தளிப்பவைகளோ கொரோனா போன்ற பெருந்தொற்றிற்கு சிகிச்சையளிக்கும் மூலிகைகளோ இருக்கக்கூடும். மிகச்சாதாரணமாக சுற்றுப்புறங்களில் காணப்படும் நித்யகல்யாணி செடிகளிலிருந்துதான் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் பல மருந்துகள் கிடைக்கின்றன

பல வளர்ந்த நாடுகளில் களைச்செடிகள் அரசுடமையாக்க பட்டிருக்கின்றன. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் எந்த செடியையும் யாரும்  அனுமதியின்றி பறிக்கவோ, அகற்றவோ, பயன்படுத்தவோ முடியாது இப்படி கடுமையான சட்டங்கள் மூலம் தாவரங்கள் பாதுகாக்கப்படவேண்டிய வந்ததே தாவரக் குருட்டுத்தன்மையால்தான்.

ஜேம்ஸ் ஹெச்.வாண்டர்ஸி, எலிசபெத் சக்சீலர்

1999ல் தான்  J. H. Wandersee &  E. E. Schussler என்னும் இரு அமெரிக்க தாவரவியலாளர்களால் தாவர குருடு ’’plant blindness’’ என்னும் சொல் உருவாக்கப்பட்டது.

இப்போதைய விரைவான வாழ்க்கையில் நிலவோ மழையோ வெயிலோ நம்மை கடக்கும் சிறு பறவைகளோ எதையும் கவனிக்க நேரமில்லாதவர்களாகிப்போன நம்மில் பலரும் மிக நெருக்கடியான சாலை போக்குவரத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் போது கூட சாலையோரங்களில் நிழலும் குளிர்ச்சியும் அளிக்கும், அழகிய மலர்களுடன் கண்ணைக்கவரும் படி நின்றிருக்கும் பலவிதமான மரம், செடி கொடிகளை கவனிப்பதில்லை.

சாலை விரிவாக்கத்திற்காக காவு கொடுக்கப்படும் மரங்கள்!

சாலை விரிவாக்கத்தின் பேரில் பெருமரங்கள் இயந்திர ரம்பங்கள் கொண்டு வெட்டி அகற்றப் படுகையிலும் அங்கே சாலையை கடக்க காத்திருப்போர்  பல வருடங்கள் வளர்ந்து பயன் தந்து கொண்டிருந்த மரங்களை இழப்பதைக் குறித்தும், அங்கு நடப்பது  படுகொலைக்கு சமம் என்பதையும் உணர்வதில்லை. மரங்களும் உயிருள்ளவைதான்.அவை ரத்தம் பெருக்கி கதறுவதில்லை எனவே அவற்றை அழிப்பது யார் கவனத்துக்கும் வருவதில்லை.

கோடைக்காலங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு  காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கும் பலரில் ஒருவர் கூட பல நூறு மரங்கள் வெட்டப்படுகையில் அதை கண்டிக்க நினைப்பதில்லை. ஏனெனில் குடிநீருக்கும் மரங்களின் எண்ணிக்கைக்கும் இருக்கும் நேரடி தொடர்பு தெரியாத அளவிற்கு  தாவர குருடாக இருப்பதுதான்

தாவர குருடு என்பது நாம் முழுக்க முழுக்க நமது அடிப்படை தேவைகளுக்கு சார்ந்திருக்கும் தாவரங்களை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்காதது, நம்மை சுற்றி இருக்கும் தாவரங்களை கவனிக்காதது, முக்கியத்துவத்தை உணராமல் அழிப்பது, அவற்றை பாதுகாப்பதன் அவசியம் அறியாதது ஆகியவையே…!

நாமனைவரும் தெரிந்தும் தெரியாமலும் இயற்கையுடனான நமது தொடர்பை துண்டித்து கொண்டிருக்கிறோம். அடுக்கக வாழ்க்கையில் இயற்கையை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இல்லை. நவீனமய வாழ்வின் விசையால் இழுக்கப்படும் கிராமப்புற மனிதர்களுக்கும் இவற்றை அறிந்து கொள்ள அவகாசம் இருப்பதில்லை

நம் அன்றாட வாழ்வில் ஒரே ஒரு நாள் கூட உணவு, இருப்பிடம், மருந்து, குடிநீர், காற்று, போன்ற தாவரங்களினால் மட்டுமே கிடைக்கும் பயன்களை அனுபவிக்காமல் கழிவதில்லை. எனினும் அவற்றை குறித்த அறிவு நமக்கு இருப்பதே இல்லை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

பள்ளிக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியிலும் கூட ஆங்கில எழுத்துக்களுக்கு நம் தேசத்துக்கு சொந்தமான வேம்பும் மஞ்சளும்  அல்ல, ஆப்பிளும் கேரட்டும் தான் கற்றுக் கொடுக்கப் படுகிறது.  ஆனால் வெளிநாட்டவர் இந்திய இயல் தாவரங்களுக்கு பயன்பாட்டு உரிமம் வாங்கினால் வருந்துகிறோம் வழக்குத் தொடுக்கிறோம்.

நம் வீட்டை சுற்றி இருக்கும், நாம் அன்றாடம் காணும் தாவரங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க பெற்றோர்களும், இயற்கையுடன் நெருங்கின தொடர்பிலிருந்த முந்தைய தலைமுறையை சேர்ந்த வீட்டுப்பெரியவர்களும், பள்ளியை சுற்றி இருக்கும் மரம்,  செடி, கொடிகளை குறித்த அறிவை போதிக்க ஆசிரியர்களும் முன்வருவதில்லை.

கராத்தே, சிலம்பம், வாய்ப்பாட்டு, இசைக் கருவிகள், நடனம் பள்ளிப் பாடங்களுக்கான பிரத்யேக பயிற்சி என்று ஒரு நாளில் இரவு வரை பல சிறப்பு பயிற்சிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் முக்கிய தாவரங்களை, சில மூலிகைகளை, ஒரு சில மரங்களின் பெயர்களை, அவை மலரும் காலங்களை, அவற்றின் பயன்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பதில்லை. அவ்வப்போது இயற்கை நடைக்கு செல்ல அனுமதித்தால் அல்லது அழைத்துச் சென்றாலும் கூட போதும்.

நம்மை சுற்றியிருக்கும் மரங்களில் 10 பெயர்களையாவது தெரியுமாவென சுயசோதனை செய்து பார்த்தால், பலருக்கு தெரியவரும் தாங்கள் தாவரகுருடுகள் என்பது!

ஆனால்,  பலருக்கு விலங்குகளின் பெயர்கள் தெரிந்திருக்கிறது. குறிப்பாக நாய்களின் பல வகைகள் அவற்றின் விலை, அவை எந்த நாட்டை சேர்ந்தவை என்பதெல்லாம் தெரிந்திருக்கும். பலருக்கு பறவைகளை குறித்த அடிப்படை அறிவு இருக்கும் அதில் பலர் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால்  பெரும்பான்மையானோர் தாவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முன்வராதது தான் தாவரங்களின் அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது.

நகருதல், பல நிறம் கொண்டிருத்தல், வாலைக்குழைப்பது, கொஞ்சுவது, நம் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நம்மை மகிழ்விப்பது, வீட்டை பாதுகாப்பது போன்ற பலவற்றால் விலங்குகளை நாம் நேசிக்கிறோம் பாதுகாக்கிறோம்

வீட்டுத்தோட்டத்திலும், அலங்காரச்செடிகளாக வீட்டினுள்ளும் வெளியேவும் வளரும் தாவரங்கள், உணவு பயிர்கள் ஆகியவற்றை குறித்து அளவுக்கு தெரிந்திருக்கலாம் என்றாலும் காடுகளில் இருப்பவற்றையும்  மனிதர்களால் சாகுபடி செய்யப்படாத அரிய தாவரங்களையும், பழங்குடியினர் உணவுக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தும் எண்ணற்ற அரிய மூலிகைகளை குறித்தும் எதுவும் தெரியாது நகரத்து வாசிகளுக்கு.

உலகின் மிகச்சிறிய செடியான வுல்ஃபியா நம்மைச் சுற்றியுள்ள பல நீர்நிலைகளில் இருக்கிறது அவற்றை பாசிகள் என்று எண்ணி கடக்கிறோம். உலகின் மிகப்பெரிய மலரையும் மிகப்பெரிய மஞ்சரியையும் அறிந்துகொள்ளாமல் நம் குழந்தைகள் அடிப்படை கல்வியை தாண்டி உயர்கல்விக்கு செல்கிறார்கள்.

நீர்பரப்பில் பரந்து விரிந்து படர்ந்துள்ள பாசி! உள்படம் மஞ்சரி.

இந்த தாவர குருடு மனிதர்களுக்கு பழக்கப்பட்டு இயல்பான ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. மனித மூளை நகருகின்ற, பல வண்ணங்களில் இருப்பவற்றை உடனே அடையாளம் கண்டு கொள்கிறது. ஒரே நிறத்தில் பச்சைப் பெருக்கில்  அசையாமல் இருக்கும் தாவரங்களை அடுத்தபடியாகத்தான் மூளை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

ஓரிடத்தில்  நிலையாக இருப்பதால் தாவரங்கள் அலட்சியமாகவும், உயிரற்றவையெனவும் நினைக்கப்படுகின்றன. தாவரங்களும் வளர்கின்றன, நீரையும் உணவையும் தேடுகின்றன, உணவை சேமித்து வைக்கின்றன, காதல் செய்கின்றன, கருவுருகின்றன, சந்ததியை பெருக்குகின்றன.

இரண்டு தலைமுறைகள் முன்பு வரை தாவரங்கள் குறித்த அறிவு இத்தனை மோசமாக இல்லை அடிப்படை கல்வியில் மரங்கள், அவற்றின் சித்திரங்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

சிறார் நூல்களில் இயற்கையும் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. புலியும் அணிலும் கிளியும் குரங்குகளும், அவை  வாழும் காடும் மரங்களும் அவர்களுக்கான கதைகளில் இடம்பெற்றிருக்கும். சிறார் நூல்களின் பெயர்களே நிலவையும் காட்டையும் குறிக்கும் அம்புலிமாமா, அணில் அண்ணன் என்று இருக்கும்!

அவை இப்போது அடியோடு அழிந்து அதிபுனை கற்பனை கதாபாத்திரங்களான மாயாவிகள், இரும்பு மனிதர்கள் சிலந்தி மனிதர்கள் நிறைந்திருக்கும் கதைகளும் தொடர்களும்  இணைய விளையாட்டுக்களுமாக இயற்கையிலிருந்து விலகியிருக்கும் சிறார் உலகை யதார்த்த உலகிலிருந்தும் முற்றிலுமாக துண்டித்து விட்டிருக்கிறது.இயற்கை குறித்த அறிதலுக்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருக்கும் உலகில் வாழும் குழந்தைகளுக்கு தாவரங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்களே இல்லை.

செங்காந்தள் மலர்கள், செங்கால் நாரைகள்!

கரிய கண்களை உடைய விரால் மீன்கள், கனிகளை சிந்தி விளையாடும் மந்திகள், செங்கால் நாரைகள்,  செங்காந்தள் மலர்கள், மரங்கள் செடிகள் மலர்கள் என பலவகை உயிரினங்கள்  அப்போது அடிப்படை கல்வியிலேயே அறிமுகமாகி இருந்தன  எனவே அவற்றை குறித்து மேலதிகம் அறிந்து கொள்ளும் ஆர்வமும் குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டாகி இருந்தது

பொதுவில் காட்டுயிர் பாதுகாப்பென்று நிறைய பேசப்படுகின்றது ஆனால், காட்டுயிர் என்றதும் அனைவரும் நினைப்பதும் நம்புவதும் காட்டு விலங்குகளை மட்டும்தான். புலிகளை காப்பாற்ற வேண்டும், யானைகள் படுகொலையை தடுக்க வேண்டும், பறவைகளின் வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டும் … என்று பலர் குரல் கொடுக்கிறார்கள்! வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல அமைப்புகள் இருக்கின்றன. அவை, காப்பாற்றப்பட வேண்டியது மிக அவசியம் தான். ஆனால், காட்டுயிரென்பது அங்கிருக்கும் தாவரங்களும் தான் என்பதை நாம் உணர்வதில்லை!

காடுகளில் அழிந்து கொண்டு வரும் தாவரங்கள் குறித்தும், அரிய மூலிகைகளின் பாதுகாப்பு குறித்தும் அக்கறை கொள்ளும் அமைப்புகள் அதிகமில்லை.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் முழுக்காடும் பொன்னென மூங்கில் மலர்ந்திருந்தது. சாலையோரங்களில் அவற்றின் விளைந்த மூங்கிலரிசி மணிகள் கொட்டிக்கிடந்தது. ஆனால் அந்த வழியாக சென்ற  சுற்றுலாப் பயணிகள் அனைவரும் காடுகளின் விளிம்பில் தெரியும் யானைகளையும் மான்களையும் வியந்து கூச்சலிட்டு புகைப்படமெடுத்து கொண்டிருந்தனர்.

ஒரே ஒருவர் கூட அரிய மூங்கில் மலர்வை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.அந்த மூங்கில் மிகை மலர்வு எத்தனை அரியது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. 50 அல்லது 60 வருடங்கள் கழித்து ஒட்டுமொத்தமாக மலர்ந்து முற்றிலும் மூங்கில்கள்  அழியும் அரிதிலும் அரிய நிகழ்வு அது. அந்த மிகைமலர்வை அங்கிருந்த பலர் அவர்களின் வாழ்நாளில் மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் அரிது.  50 வருடங்கள் கழித்து அவர்களின் அடுத்த தலைமுறையினர் அந்த சாலை வழியாக வருகையில் மீண்டும் காண சாத்தியம் இருக்கிறது.

கண்ணைக் கவரும் அபூர்வமான மூங்கில் பூக்கள்!

இப்படி குறிப்பிட்ட இடைவெளியில் மலர்ந்து அழியும் மூங்கில்கள், 12 வருடங்களுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிகள் ஆகியவை எந்த குழப்பமும் இல்லாமல் மிகத்துல்லியமான காலக்கணக்குகளின் அடிப்படையில் அதே காலத்தில் மலரும் அதிசயத்தை வளரும் தலைமுறையினர் எத்தனை பேர் அறிந்து கொண்டிருக்கிறார்கள்?

தாவரங்களுக்கு ஒளிநாட்டக் கணக்குகளும் உண்டு. ஒவ்வொரு தாவரத்திற்கும் இந்த ஒளிநாட்டக் கணக்கு வேறுபடும். மிகுந்த ஒளிநாட்டமுடையவை, குறைந்த நாட்டமுடையவை, இவற்றுக்கிடையில் இருக்கும் மிகுதியும் குறைவும் இல்லாமல் மத்திம ஒளித்தேவை உள்ளவை என இவை வகைப்படுத்தப்படும். ஒளி, வெப்பம் மழை ஆகிய சமிக்ஞைகளை கொண்டு அவை இலைகளை உதிர்ப்பது, உறக்க நிலையில் இருப்பது, மலர்தல், கனி கொடுத்தல் ஆகியவற்றைக் காலக் கணக்கு பிசகாமல் செய்து வருகின்றன.  இரவிலும் நகரங்களில் எரிந்துகொண்டிருகும் விளக்குகளின் ஒளிமாசினால் இந்த கணக்கு பிறழ்கையில் தாவரங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பலவும் பெரும் குழப்பத்துக்குள்ளாகின்றன.

நெடுஞ்சாலைகளின் விளக்குகளின் எண்ணிக்கையை, ஒளியை கட்டுப்படுத்துதல், தேவையான இடங்களில் மட்டும் இரவு விளக்குகளை உபயோகித்தல் என்று இந்த ஒளிமசு தொடர்பான முறைப்படுத்தல்கள் சில நாடுகளில் துவங்கி இருக்கின்றன.நீர் மாசு, காற்று மாசு, நில மாசு என பல சூழல் மாசுபாடுகளை கவனித்து கவலைப்படும் உலகம் ஒளிமாசினால் தாவரங்களுக்கு ஏற்படும்  சிக்கல்களை பொருட்படுத்துவதில்லை.

அதிக ஒளி உமிழும் விளக்குகள் மரங்களை பாதிக்கவே செய்யும்!

ஆகாயத்தாமரை போன்ற நீர்வழித்தடங்களை ஆக்ரமிக்கும் களைகள்,  பார்த்தீனியம் போன்ற ஆக்ரமிப்பு நச்சுக்களைகள் பல்கிப்பெருகி பெரும் சூழல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.அதைக் குறித்த போதுமான அறிதல் இப்போது இல்லை.

சூழல் பாதுகாப்பில் மட்டுமல்லாது அன்றாடம் நாம் புழங்கும் கேசப்பராமரிப்பு சருமப்பாதுகாப்பு, நோய் சிகிச்சைகள் போன்றவற்றிலும்  இந்த தாவர குருடு பலவிதங்களில் நம்மை தவறாக வழிநடத்துகிறது. மஞ்சள் காமாலைக்கு மருந்து என சந்தைகளில் கிடைக்கும் மஞ்சல்கரிசலாங்கண்ணி அசல் மூலிகையல்ல, போலி மலைவல்லாரை, வல்லாரைக்கீரை என பயன்படுத்தப்படுகிறது,  தற்போது சூழலுக்கு புதிய அச்சுறுத்தல்களாகி இருக்கும் பொன்னாங்கண்ணி கீரை என விற்பனை செய்யப்படும் கழிவுநீரில் வளர்ந்து அந்நீரின் உலோக மாசுக்களை இலைகளில் சேமித்து வைத்திருக்கும்  சீமைப்பொன்னாங்கண்ணி, செழித்து வளர்ந்து வேகமாக நீர்நிலைகளை ஆக்ரமித்து வெறும் மணல் தடங்களாக மாற்றிக்கொண்டிருக்கும் நெய்வேலி காட்டாமணக்கு,  ஆகிய அயல் ஆக்ரமிப்பு தாவரங்களின் பரவலும்  உடனடி கவனம் கோருபவை.

கண்ணைக் கவரும் பூக்களுடன் அசோக மரம்! நெடிதுயர்ந்த நெட்டிலிங்க மரம்!

பலரால் அசோகமரமென்று அழைக்கப்பட்டு கொண்டிருப்பது அசோகமரமல்ல, அது நெட்டிலிங்கம் எனப்படும் போலி அசோகமரம். சரகா அசோகா என்னும் ஆரஞ்சு நிற மலர்க்கொத்துக்களை கொண்டிருக்கும் அழகிய மரமே அசோகம் என்பதையும் தெரிந்து கொள்ளாதவர்கள்  உண்டு!

நம்மை சுற்றி இருக்கும் பல தாவரங்களில் கடும் நஞ்சு கொண்டவையும் இருக்கின்றன.  ரைசின் என்னும் கடும்  நஞ்சு ஆமணக்கு கனிகளிலும், சிவப்பும் கறுப்புமாக அழகுடன் இருக்கும் குன்றிமணியில் ஏப்ரின் என்னும் கொடும் நஞ்சும் இருக்கிறது. பல கிராமப்புற குழந்தைகள் ஆண்டுதோறும் இவற்றை கடித்து சுவைத்து உயிரிழந்திருக்கிறார்கள் அல்லது உயிராபத்தை சந்திக்கிறார்கள்.

புலி யானை போன்றவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை தெரிந்து கொண்டிருக்கும் இப்போது பள்ளிக்கல்வியும் உயர்கல்வியும் கற்றுக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அழிந்துவரும் தாவர இனங்களில் ஒன்றையாவது தெரியுமா என்று சோதித்து பார்த்தால் தெரியும் இந்த தாவர குருடின் தீவிரத்தன்மை என்னவென்று.

காலநிலை மாற்றத்துக்கும் நீராதாரங்களுக்கும் உணவுப்பாதுகாப்புக்கும் மருந்துகளுக்கும் நமக்கிருக்கும் ஒரே ஆதாரம் தாவரங்களே.  அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது கவனிப்பதும் ஆராதிப்பதும் வழிபடுவதும்தான் இதிலிருந்து நிவாரணம் பெற ஒரே வழி

தொன்று தொட்டு மரத்தை வழிபடும் மகளிர்!

இதன் பொருட்டுத்தான் நம் முன்னோர்கள் திருமண சடங்கிலிருந்து பிறப்பு, இறப்பு சடங்குகள் வரை  தாவரங்களை முன்னிருத்தினர்.   தினசரி கோலமிடுகையிலேயே தாமரை  உள்ளிட்ட பல மலர்களின்  வடிவங்களை அமைக்கும் வழக்கமிருந்தது. கோடைக்கால நோய்களுக்கு எதிராக மூலிகைகளால் காப்புக் கட்டுவது, வேங்கைப்பாலில் பொட்டு வைப்பது,வேப்பிலையை அரைத்து பூசுவது, வேம்பையும், அரசையும் கடவுளாக வணங்குவது என்று சடங்குகள் வழியே தாவரங்களை அறிந்துகொள்ள எண்ணற்ற வழிகள் நமக்கிருந்தன. சடங்குகள் மெல்ல மெல்ல  மறைந்துபோகையில் இவற்றை அறிந்துகொள்வதும் நின்று போகின்றது.

தாவரங்களில் பாலினமுண்டு என்பதுவும் அவற்றில் ஆண் பெண் மரங்களும் மலர்களும் இணைந்தும் தனித்தும் இருப்பது பலருக்கு தெரியாது. ஆண் மரங்களை மலட்டுப்பெண் மரங்களென எண்ணி அவற்றை வெட்டியகற்றுபவர்களும் உண்டு!

சீமைக்கருவேலம் குறித்த பொது நல வழக்கொன்று சில வருடங்களுக்கு முன்னர் தொடுக்கப்பட்டது. தாவரவியலாளர்கள் சூழலியலாளர்கள் ஆகியோரிடம் அந்த வழக்கின் உண்மைத்தன்மை , அறிவியல் ஆதாரங்கள் ஆகியவை கேட்கப்படாமல் சீமைக்கருவேலங்களை வெட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அப்போது எது சீமை, எது நாட்டு மரமென்று தெரியாமல் பலநூறு நாட்டு கருவேல மரங்கள் வெட்டப்பட்ட கொடுமையும் நடந்தது!

ஊனுண்ணும் தாவரங்கள் தங்களது புரதசத்து குறைப்பாட்டை போக்க பூச்சிகளை பிடித்து உண்கின்றன, ஆண் மலர்களின் மகரந்தங்கள், சேர்க்கையின் பொருட்டு பெண் மலரை தேடி 20 கிமீ தூரம் வரை காற்றில் பயணிக்கும் என்னுமளவுக்கு ஆழமாக தாவரங்களை அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் தொட்டாசிணுங்கி தொடப்பட்டதும் உடனே எதிர்வினை ஆற்றுவதையாவது கவனித்து தாவரங்களும் நம்மைப்போலவே  புழு பூச்சிகளை, விலங்குகளைப்போல உயிருள்ளவைதான் என்று தெரிந்து கொள்ளலாம்

தற்போது தாவரங்களின் மீது ஈடுபாட்டுடன் இருப்பவர்களும், தாவரவியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்களும் தாவரங்களை நேசிப்பவர்களும் இயறகையோடு இணைந்த வாழ்வில் இருந்தவர்களாக இருப்பார்கள்.இன்னும் சிலருக்கு தாவரவியல் குறித்து  கற்பித்த  மிகச் சிறந்த ஆசிரியர்கள் கிடைத்திருப்பார்கள்.

அவற்றுடன் வாழ்ந்து அவற்றின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைக் குறித்து கவலைப்படவும் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை பாதுகாக்கவும் எண்ணுவார்கள். எனவேதான் சிறார்களின் உலகில் தாவரங்கள் இடம்பெறுவது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆரம்பக் கல்வியில் பிற துறைகளுக்கு ஈடாக நுண்ணுயிர்கள் தாவரங்கள் குறித்தும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்

தங்கள் குழந்தைகள் மருத்துவராக பொறியாளராக கணினி துறையில் வல்லுநராக வேண்டும் என விரும்பும் பெற்றோர்களில் சிலராவது எவற்றால் நாம் அனைவரும் உயிருடன் இருக்கிறோமோ, எவற்றால் சுவாசிக்க காற்றும் குடிக்க நீரும் கிடைக்கிறதோ, எவை இன்றி உலகம் இயங்க முடியாதோ அவற்றை குறித்து  தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொண்டு அத்துறையிலும் சாதிக்க வேண்டும் என்று விரும்பலாம்

உணவு, எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறை, குறைந்து கொண்டே வரும் சாகுபடிக்கான நிலப்பரப்பு, அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றங்கள் இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக இருப்பது தாவரங்களின் பாதுகாப்பும் பயன்பாடும் தான்உலக தாவரங்களில் 4269 வகைகள்  மிக மிக அதிக அழியும் அபாயத்தில் இருப்பவை என்றும் மேலும் 5725 தாவரங்கள் அழிவை நோக்கிய பாதையில் இருப்பதாகவும்   சிவப்பு பட்டியலிடப் பட்டிருக்கின்றது.  அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் போதுமான அளவில் நடைபெறவில்லை. அழியும் நிலையிலிருப்பவை என்று அடையாளப்படுத்தப் பட்டவைகளில் வெறும் 41 சதவீத தாவரங்கள்மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் வருகின்றன

மனித குலம் இப்பூமியில் தொடர்ந்து வாழ தாவரங்களின் பாதுகாப்பு மிக முக்கியம். சூழலுடனும் அதிலிருக்கும் தாவரங்களுடனும் மிக நெருக்கமான தொடர்பிலிருப்பது அவற்றின் பாதுகாப்பில் முதல் படி. தாவரங்களுக்கு உண்டாகும் பாதிப்பு மனிதர்களுக்கும் உண்டாகும் பாதிப்புத்தான்!

காக்கைக் கூடு நடத்திய ‘செங்கால் நாரை விருது’ போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை!

கட்டுரையாளர்; லோகமாதேவி

தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தாவரவியல் ஆய்வாளர். 2016 லிருந்து நாளிதழ்களிலும், இணைய இதழ்களிலும்  சூழலியல் சார்ந்த அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். இத்துடன் மொழியாக்க கட்டுரைகளையும், கதைகளையும் எழுதியிருக்கிறார். அரிஸோனா பல்கலைக்கழக இணையத்தில் அறிவியல் தகவல்களை தமிழாக்கம் செய்யும் பணியில் 2019 லிருந்து ஈடுபட்டிருக்கிறார்.

தற்போது தாவரவியல் அகராதியை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

அன்பில் அழியுமடீ!

நேற்று மாலை  இஸ்திரி போடக்கொடுத்த துணிகளை வாங்க பொள்ளாச்சி சென்றிருந்தேன். கல்லூரிக்கு நேர் எதிரில் இருக்கும் கடை அது. எனக்கு அவரகளை 90களின் இறுதியில் இருந்து தெரியும். நான் அப்போது கல்லூரிப்பணியில் சேர்ந்த புதிது. வீட்டுக்கு பின்புறம் இருக்கும், அவ்வப்போது சர்க்கஸ் நடக்கும் ஒரு காலி மைதானத்தை கடந்து கல்லூரிக்கு வருகையில் மையச்சாலை துவங்கும் இடத்தில் இருக்கும் இந்த கடையை  கடந்தே செல்லவேண்டும்.

இந்தனை வருடத்தில் குடும்ப உறுப்பினர்கள் போல அவர்கள் நெருங்கி இருக்கின்றனர். பத்து நிமிஷமாவது நலம் விசாரித்துக்கொள்ளாமல் துணிகளை கொடுப்பதோ வாங்குவதோ இல்லை.  நேற்று கடையில் யாரும் இல்லை. ஒரு பேண்ட் பாதி தேய்ப்பில் அப்படியே கைவிடப்பட்டு கால் மடக்கி காத்திருந்தது. ’’குமார் குமார்’’ என குரல் கொடுத்தும் பதிலில்லை. புகையும் இஸ்திரிப்பெட்டி ஒரு சிவப்பு ஓட்டின் மீது இளைப்பாறிக்கொண்டிருந்தது. நானும் காத்திருந்தேன்

எதிர்ப்புறமிருந்து குறுக்கில் சாலையை கடந்து அந்த வீட்டு பையன் கேசத்தை ஒதுகியபடி உற்சாகமாய் ஓடிவந்து ,புன்னகையுடன் ’’அங்கே டெய்லர் கடையில் பேசிட்டிருந்தேன், உங்களை பார்த்துட்டுத்தான் ஓடிவந்தேன்’’ என்றான்

ஏற்கனவே அடுக்கிய துணிகளை மீண்டும் நிதானமாக அடுக்கி கொடுத்து பணம் வாங்கிக்கொண்டவன் நான் காரை நோக்கி திரும்புகையில் சத்தமாக ’’இதை சாப்பிட்டு பாருங்க’’ என்றான். திரும்பினேன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறிய மிட்டாயை எடுத்து ’’எனக்கு இது ரொம்ப பிடிச்ச மிட்டாய்ங்க, உங்களுக்கும் பிடிக்கும்’’ என்று கொடுத்தான். சிரித்தபடி வாங்கிக்கொண்டேன். பின்னால் அவன் குரல் கேட்டது ‘’சாப்பிட்டுபார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க ‘’ என்று

அந்தியின் அந்த அன்பை அளித்தல் முழுநாளையே இனிப்பாக்கிவிட்டபிறகு மிட்டாயின் இனிப்பு தனித்து தெரியாமல் அதில் கரைந்து விட்டிருக்கும் என்பதை அவனுக்கு சொன்னால் புரியப்போவதில்லை.  திரும்பி சிரித்துக்கொண்டே ‘’சரி சொல்லறேன்’’ என்று நானும் உரக்க சொல்லிவிட்டு புறப்படேன்

இப்படி முன்பு ஒருமுறையும் நடந்தது. தருண் அப்போது குட்டிப்பையன், சரண் இல்லாமல் அவன் மட்டும் ஒருநாள் பள்ளிக்கு செல்லவிருந்தான்.நான் வழக்கம் போல ஏதோ துயரிலிருந்தேன்.

 நல்ல மழை இரவின் மறுநாள் காலை அது. பள்ளிப்பேருந்து வந்ததும் அவனை ஏற்றிவிட்டேன். படிக்கட்டோரம் அமர்ந்திருந்த ஒரு குட்டிப்பெண் காத்திருந்து அவனுக்கு ஒரு பிறந்த நாள் மிட்டாயை கொடுப்பது தெரிந்தது.  ஜன்னல் வழியே அவன் கையசைக்க காத்திருந்தேன் . எதிர்பராமல் ஜன்னல் வழியே அந்த மிட்டாயை என்னை நோக்கி வீசிய தருண் ’’அம்மா எடுத்துக்கோ’’ என்று நகரும் பேருந்திலிருந்து கூவினான்.  நனைந்திருந்த கரிய தார்ச்சலையில் சரிகைக்காகிதம் சுற்றப்பட்டு கிடந்தது பேரன்பின் இனிமை.

துயர் துடைத்து அகத்தில் சுடர் ஏற்றிய நிகழ்வது. அதைப்போலத்தான் இதுவும்

முன்பே சொல்லப்பட்டிருக்கிறதே

‘’துன்ப நினைவும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடீ!’’ என்று!

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑