லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 13 of 15)

கிராம்பு


இந்தியச்சமையல் அதன் பலவகைகளிலான வறுத்தலும், பொடித்தலும், பொரித்தலும், அரைத்தலும் உள்ளடக்கிய மசாலாமணம் வீசும்  உணவு வகைகளுக்கு பிரபலமானது.  இந்தியசமமையலில் பயன்படுத்தப்படும் அனைத்து மசாலாப்பொருட்களுமே செரிமானத்தை தூண்டுவதிலிருந்து புறறுநோய்க்கு எதிராக செயல்பபடுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பவை. இவற்றில் கிராம்பு மிக அதிகமாக அசைவ உணவு வகைகளில் உபயோகப்படுத்தபடும் ஒன்று.

ஆங்கிலப் பெயர்: ‘கிளாவ்’ (Clove)
தாவரவியல் பெயர்: ‘சிசிஜியம் அரோமாடிகம்’ (Syzygium Aromaticum)
தாவரக் குடும்பம்: ‘மிர்டேசியே’ (Myrtaceae)
வேறு பெயர்: லவங்கம், அஞ்சுகம், உற்கடம், கருவாய்க் கிராம்பு, சோசம், திரளி, வராங்கம்

சமையலில் நறுமணப் பொருளாகவும், சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுவது கிராம்பு. இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் 2,000 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் தாயகம் இந்தோனேசியாவின் மலுகா தீவுகள். மரமாக வளரும் இந்தத் தாவரத்தின் நறுமணம் உள்ள உலர்ந்த, விரியாத மலர் மொட்டுகளே கிராம்பு எனப்படுகிறது.
கிரேக்க மொழியில் ‘கிளாவஸ்’ (Clavus) என்றால் ஆணி என்று பொருள். கிராம்பு மொட்டுகள் துருவேறிய ஆணி போல இருப்பதால் இதற்கு இந்தப் பெயர்.

கிராம்பு மலர்கள்

கிராம்பு குட்டையான கிளைகளை உடைய பசுமை மாறா மரம். 8 முதல் 12 மீட்டர் உயரம் வரை அடர்ந்து வளரும். பளபளப்பான இலைகளும் அடர்சிவப்பில் மூன்று மலர்கள் உள்ள சிறுசிறு கொத்துகளும் கொண்டது.

மலர் மொட்டுகள், இளஞ்சிவப்பாய் 1.5 முதல் 2 செ.மீ. வரை நீளம் இருக்கும்போது, கைகளால் அறுவடை செய்யப்படும். பூக்கள் 9 மாதங்களில் முதிர்ந்து கனியாகும். மரத்திலிருந்து ஆண்டு முழுவதும் கிராம்பை அறுவடை செய்யலாம்.

கிராம்பு மொட்டுகளில் குவிந்து உருண்டையாக இருக்கும் 4 இதழ்களும், வெளியில் சிறிய முக்கோண வடிவிலிருக்கும் 4 அல்லிகளும் இருக்கும். மொட்டுகளை உலர்த்தி, அவை துருவின் நிறத்தை (Rust color) அடைந்ததும் விற்பனை செய்யப்படுகின்றன.

மொட்டு, இலை, தண்டு போன்றவற்றில் 72 முதல் 90 சதவீதம் இருக்கும் ‘யூஜினால்’ (Eugenol) என்னும் எண்ணெயே இதன் நறுமணத்திற்கும் மருத்துவக் குணங்களுக்கும் காரணம். இது தவிர, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி, டி, ஏ, போன்றவையும் உள்ளன.மேங்கனீஸ் சத்து கிராம்பில் அதிகம் உள்ளது.

கிராம்பு எண்ணெயின் பயன்கள்

நறுமணத்தைக்கொண்டு நோய்களை குணமாக்கும் Aromatherapy  யில் கிராம்பு எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.  மலர் மொட்டுகளிலிருந்தும், இலைகளிலிருந்தும் குச்சிகளிலிருந்தும் கிராம்பு எண்ணெய் எடுக்கப்படுகின்றது.

செரிமானக் கோளாறு, கிருமி, பூஞ்சைத்தொற்று போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. பல் மருத்துவத்தில் சிறந்த வலி நிவாரணியாகவும், துத்தநாகத்துடன் கலக்கப்பட்டு பற்குழிகளை நிரப்பவும் பயன்படுத்தப்படுகிறது. வாசனைத்திரவியங்களிலும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. கிராம்பு புற்றுநோய்கெதிராகவும், ஈரல் பாதுகாப்பிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

கிராம்பு உற்பத்தியில் இந்தியா, மடகாஸ்கர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் சிறந்து விளங்கினாலும் ஆண்டிற்கு சுமார் ஒரு லட்சம் டன்களுக்கு மேல் உற்பத்தி செய்து இந்தோனேசியாவே முதல் இடத்தில் உள்ளது. மடகாஸ்கர், தான்ஸானி்யா மற்றும் ஜான்ஸிபர் நாடுகளே கிராம்பு ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றன,

தேயிலையும் தேநீரும்,

மனிதன் அருந்தும் திரவ உணவுகளனைத்தும் பானங்கள் எனப்படுகின்றன. தாகம் தீர்க்கும் தண்ணீரிலிருந்து பால், பழச்சாறுகள், காப்பி, தேநீர் உள்ளிட்ட பலவகையான பானங்கள் அனைத்துக் கலாச்சாரங்களிலும் தொன்று தொட்டே புழக்கத்தில் இருந்து வருகின்றது. பானங்களில் மென்பானங்கள், சூடான பானங்கள் மற்றும் மது பானங்கள் என பலவகைகள் இருக்கின்றன.

 உலகின் மிக அதிகமக்களால் அருந்தப்படும் விருப்பபானங்களில் முதன்மையாக குடிநீரும் தொடர்ந்து தேநீரும், பின்னர் மூன்றாவதாக பியரும் இருக்கின்றது.

தேநீரென்பது உலர்த்தி, பொடித்து, பதப்படுத்திய (Camellia sinensis) கமெலியா  சினென்ஸிஸ் என்னும் தாவரத்தின் இலைகளை கொதிநீரில் இட்டு உண்டாக்கப்படுவது.

இதன் தாவரப்பெயரிலிருந்து இவை சீனாவை தாயகமாக கொண்டவை என அறிந்துகொள்ள முடியமென்றாலும் தேயிலையின் தாயகம் இந்தியாதானென்கின்றன ஆய்வுகள். அஸ்ஸாமின் காடுகளில் இயற்கையாக செறிந்து வளர்ந்திருந்த Thea assamica  என்னும் தாவரத்தின் விதைகள், இந்தியாவிற்கு வந்துசென்ற சீனப்பயணிகளால் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு விளைவிக்கப்பட்டு பின்னர் அதுவே கமெலியா சினென்ஸிஸ் ஆனது என்பதே தாவரவியல் அடிப்படையிலான வரலாற்று உண்மை

தேயிலைச்செடிகளில் இரண்டு முக்கியவகைகளே உலகெங்கும் பெருமளவில் பயிராகின்றது ;

Camellia sinensis என்னும் சிறிய இலைகளை கொண்ட சீன வகை

Leavea of Assamica and Sinensis

Camellia assamica  என்னும் சற்றே பெரிய இலைகளை கொண்ட இந்திய வகை

தேயிலைச்செடிகள் நல்ல உயரமான மரமாக வளரும் இயல்புடையவை. ஆனால் இவற்றிலிருந்து தளிரிலைகளை தொடர்ந்து அறுவடை செய்வதன் பொருட்டு,இவற்றை குறிப்பிட்ட இடைவெளிகளில் குட்டையாக கத்தரித்துக்கொண்டே இருப்பதால் இவை புதர்களைப்போல தோன்றுகின்றன.

தேயிலைகளின் ஒரு இலையரும்பு மற்றும் அதனடியிலிருக்கும் இரண்டு தளிரிலைகள் மட்டுமே அறுவடை செய்யப்படுகின்றன. இந்த இலையரும்பும் இருஇலைகளுமான பகுதி Golden flush எனப்படும். இவை மூன்று வருடங்களான தேயிலைச்செடிகளிலிருந்து நூறு ஆண்டுகள் வரை 7 லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து ஆண்டு முழுவதும் அறுவடை செய்யப்படும். இந்த இடைவெளி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தேயிலை ரகத்துக்கும்  மாறுபடும்

Golden Flush உடன் மேலும் இரண்டு கீழடுக்கு இலைகளும் சேர்ந்த 5 இலைகள் அடங்கிய பகுதி flush எனப்படும் இவையும் பல நாடுகளில் அறுவடை செய்யப்படுகின்றது.

அறுவடை செய்யப்பட்ட இலைகள் உலர்த்தப்பட்டு,  அவற்றில் ஆக்ஸிஜனேற்றம் நடைபெரும் வகையில்  காயப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட வெப்பத்தில் உலர்த்தப்பட்டு, நொதிக்கவைக்கப்பட்டு ,பின்னர்  1500க்கும் மேற்பட்ட பலவகைகளில் தேயிலைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஆக்ஸிஜனேற்றத்தை பொருத்தே தேயிலைக்ளின் தரம் வேறுபடுகின்றது.  (உண்ணப்படாத வாழைப்பழங்கள் ஒருசிலநாட்களில் கருத்துப்போவது ஆக்ஸிஜனேற்றத்தால்தான்).  

100 சதவீதம் முழுமையான ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டவை

Black Tea

நாம் அனைவரும் சாதரணமாக அருந்தும் ’Black tea’ எனப்படும் கருப்புத்தேயிலை. 50 சதவிதம் மட்டுமே ஆக்ஸிஜனெற்றம் நடந்தால் கிடைப்பது.  ’Oolong tea; எனப்படும் ஊலாங் தேயிலை, பசுந்தேனீர் ’Green tea’ எனப்படுவது ஆக்ஸிஜனேற்றதுக்கே உட்படுத்தப்படாத உலர்ந்த தேயிலைகளிலிந்து தயாரிக்கப்படுவது.

இம்மூன்று வகைகள் அல்லாது இன்னும் நூற்றுக்கணக்கான ரகங்களில் தேயிலை உலகெங்கிலும். சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பசுந்தேநீரை உலரவைக்கையில் சிறு சிறு வட்டங்களாக சுருண்டு கொள்ளும் ரகம் அதன் தோற்றத்தினால்  ’Gunpowder tea’. எனப்படுகின்றது.

Gun powder Tea

White tea, என்பது குறிப்பிட்ட வெப்பநிலையில் மிகக்குறைந்த நேரம் மட்டுமே ஆக்ஸிஜனேற்றம் செய்கையில் கிடைபப்து. இது மிகவும்  மென்மையான் மணத்தையே கொண்டிருக்கும். வெள்ளை தேயிலை சீனாவுக்கு வெளியே அரிதாகவே கிடைக்கும்

 Yellow tea மஞ்சள் தேயிலையென்பது மூடிவைக்கப்பட்ட இலைகளில் ஆக்சிஜனேற்றம் துவங்கப்பட்டு, பச்சையம் மஞ்சளாக ஆனவுடன் நிறுத்தப்பட்டு பதப்படுத்தப்படுவது

Twig tea, குச்சி தேநீர் அல்லது குக்கிச்சா தேநீரென்பது (Kukicha tea) தேயிலைச்செடியின்  இலைகளுக்கு பதிலாக  குச்சிகளையும் தண்டுகளையும் மட்டுமே பதப்படுத்தி  பொடித்து தயரிக்கப்படும் தேநீராகும். இவ்வகைத்தேநீர் ஜப்பானில் மட்டுமே கிடைக்கும். குச்சிகளையும் கிளைகளையும் மூன்று வருடங்களுக்கு மேலான தேயிலைச்செடிகளிலிருந்து மட்டுமே எடுப்பதனால் இத்தேநீருக்கு மூன்றுவருட தேநீரென்றும் ஒரு பெயருண்டு. (Three year Tea ) .இதில் காஃபின் துளியும் இLலையென்பதால் உறக்கமிழப்பு, பக்கவிளைவுகள் என எந்தகவலையும் இல்லாமல் எப்போதுவேண்டுமானாலும் எத்தனைகோப்பைகள் வேண்டுமானாலும் அருந்தலாம்.

பதப்படுத்தப்பட்ட தேயிலைச்செடியின் குச்சிகள்

காப்பியிலும் கொக்கோ பீன்ஸ்களிலும் இருக்கும் காஃபின் ஆல்கலாய்டு தேநீரிலும் இருக்கின்றது. 250 மிலி அளவுள்ள ஒருகோப்பை தேநீரில் காஃபினின் அளவானது;

Black tea-  45-65 மில்லி கிராம்

Green, white and ooloog teas: 25- 45  மில்லி கிராம்

 தேநீரின் காஃபின் அளவானது தேயிலைதூளின் அளவு, நீரின் கொதிநிலை, தேயிலைத்தூள் கொதிக்கும் நேரம் ஆகியவற்றைப்பொருத்து மாறுபடும். பொதுவாக அதிகநேரம் கொதிக்க வைக்கையில் காஃபினின் அளவும அதிகமாகும்.

ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்காத, தரமான தேயிலைகளிலிருந்து உண்டாக்ப்பட்ட தேநீரை அருந்துவது இதயத்தை பாதுகாத்து, புற்றுநோய்க்கு எதிரக செயலபட்டு, உடலெடையை குறைத்து ரத்தத்தின் கொழுப்பையும் கட்டுப்படுத்துகின்றது

தேயிலைச்செடி வளரும் மண்ணில் இருக்கும் அலுமினியம் இலைகளிலும் இருக்கிறதென்றாலும் தினசரி சில கோப்பைகள் தேநீர் அருந்துகையில் இவை உடலாரோக்கியத்துக்கு எந்தவித ஆபத்தையும் உண்டாக்குவதிலை. நாளொன்றூக்கு 30 கோப்பைகளுக்கு மேல் தேநீர் அருந்தும் போதுதான் இந்த அலுமினிய உலோகம் நஞ்சாகி ஆரோக்கியகேட்டை உண்டாக்கும் வாய்ப்பு இருக்கிறது.

 பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்காத ஆர்கானிக் தேயிலைகளும் இப்போது சந்தைப்படுத்தப்  பட்டிருக்கின்றன.

Bubble Tea

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான் தேநீர் பிரபலமாக இருக்கும் இந்தியாவில் பால் கலக்காத கருப்புத்தேநீரும் பால் கலந்த தேநீரும் பிரபலம். தைவானில் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து செய்யப்படும் சிறு சிறு உருண்டைகளை தேநீரில் போட்டு தரப்படும் குமிழித்தேநீர் (Bubble tea) மிகபிரபலம். கீரைக்குழம்பைபோல பசுங்குழம்பாக அருந்தபடும் மாச்சா தேநீர் ஜப்பானின் பாரம்பரியத்துடன் கலந்துள்ள மிக்கியமான ஒன்று.

மாச்சா

எல்லா வகையான தேயிலைகளிலும் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ளன என்றாலும் தேயிலையின் வகைகளைப்பொருத்து இவற்றின் அளவு மாறுபடும். பொதுவாக பசும் தேயிலை மற்றும் வெள்ளைத்தேயிலையில் Epigallocatechin or ECGC எனப்படும் மிக முக்கியமான, ஆன்டிஆக்சிடன்ட்டுகள்  அதிகம் நிறைந்துள்ளது.. இவை இதயப்பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை உறுதிசெய்கின்றன

தென்னாப்பிரிக்காவில் வளரும் சிவப்புத்தேயிலைச் செடிகளிலிருந்து எடுக்கப்பட்டு ஆக்ஸிஜனேற்றமே செய்யப்டாத தேயிலைகளிலிருந்து கிடைப்பதே   Rooibos tea எனப்படும் செந்தேநீர்

Pu’er Tea

சீனாவின் யுனான் மாகாணத்தின் பிரத்யேக வகையான pu’er tea எனப்படுவது தேயிலைகளை நுண்ணுயிர்களால் நொதித்தலுக்கு உள்ளாக்கி பின்னர் ஆக்ஸிஜனேற்றமும் செய்யப்பட்டு கட்டிகளாக விற்பனை செய்யப்படும் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த ஒரு தேயிலை வகையாகும். இது முதியவர்களின் நோய் பிரச்சனைகளுக்கு  அருமருந்தாக கருதப்படுகின்றது

ஊதா தேயிலை எனப்படுவது  உலகின் மிக சமீபத்திய புதிய தேயிலை வரவாகும்

கென்யாவின் ஊதா தேயிலைச்செடிகள்

கென்யாவில்  கடல் மட்டதுக்குமேல் 7500அடி உயரங்களில் மட்டுமே வளர்க்கப்படும் கலப்பின தேயிலைச்செடிகளிலிருந்தே இவை கிடைக்கின்றது. நேரடியான சூரிய ஒளிபடும்படி வளர்க்கப்படும் இந்த செடிகளின் இலைகளில் நீல நிறமியான ஆந்தோசையானினின் அளவு பல ம்டங்கு அதிகரித்து இந்த ஊதா நிறம் வருகின்றது. இவை பல நுண்சத்துக்களும் மருத்துவப்பயன்களும் கொண்டவை. உடலெடையை குறைக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், புற்றுநோயை தடுக்கவும் இந்த ஊதா தேநீர் பெருமளவில் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தேயிலைத்தூளின் விலை சில நூறு ரூபாய்களிலிருந்து சில ஆயிரம்வரை வேறுபடுகின்றது  எனினும் தங்கத்தைக்காட்டிலும் 30 மடங்கு அதிகமான விலையுள்ள தேயிலையும் சந்தையில் உள்ளது

சீனாவின் தாது உப்புக்கள் நிறைந்திருக்கும், குறிப்பாக இரும்புச்சத்து நிறைந்த ’வூயி’ மலைப்பகுதியின் 1000 வருடங்களைக்கடந்த 3 தாய் தேயிலைச்செடிகளிலிருந்து  கிடைக்கும் ’’டா ஹாங் பாவ்’’  (Da Hong Pao) தேயிலையே உலகின் மிக விலையுயர்ந்த தேயிலை. இது கிராம் 1400 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகின்றது. பொதுவாக இத்தேயிலையில் உண்டாக்கப்படும் தேநீர் சீனாவிற்கு வருகைதரும் பிறநாட்டு தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது. தாவரப்பொருட்களிலேயே விலையர்ந்ததும் இதுவே.

டா ஹாங் பாவ் தேயிலைச்செடிகள்

வஸாபியும் வாஷோகுவும்!

 தேநீர் விருந்துகள், ஹனமி செர்ரி மலர்க்கொண்டாட்டங்கள், ஹைகூ கவிதைகள், இகபானா மலரமைப்புக்கள், தனித்துவமான தோட்டங்கள், ஓரிகாமி காகிதவடிவங்கள் மற்றும் பாரம்பரிய கலைகளுக்காக ஜப்பான் உலகளவில்  வெகு பிரபலம்.

ஹனமி கொண்டாட்டம்
ஓரிகேமி காகித மலர்கள்

1950’களிலிருந்தே ஜப்பானின் பதிப்பகத் துறையில் முக்கிய பகுதியாகியிருக்கும், அனைத்து வயதுக்காரர்களுக்குமான மாங்கா வரைகதை வடிவம், நூற்றாண்டுகளின் பாரம்பரியம் கொண்ட சுமோ மல்யுத்தம், தோளோடு தோள் சேர்ந்து நிற்குமளவிற்கான நெரிசலில் இயங்கும், நின்றபடியே மதுவருந்தும் டேக்கினோமியா (Tachinomiya) பார்கள், வண்ணமயமான நடைபாதைக்கடைகள், அவற்றில் கிடைக்கும் பலவிதமான உணவுகள், அடுக்கிவைக்க வசதியாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்ட சதுர தர்பூசணிகள், இதய வடிவிலான தர்பூசணிகள், அறுகோண ஆரஞ்சுகள், புகழ்பெற்ற  அனிமே (Anime)   இயங்குபடங்கள், என்று ஜப்பான் அதன் வரலாறு, பாரம்பரியம், உணவு, கலாச்சாரம், தொழில்நுட்பம், மக்களின் சுறுசுறுப்பு, ஒழுங்கு மற்றும் பணிவு,  உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் உலகநாடுகள் அனைத்துமே வியந்து பார்க்கும் நாடாக இருக்கின்றது. ஜப்பானே, பிரபல மீனுணவுகளான சுஷி மற்றூம் சஷிமியின் பிறப்பிடமுமாகும்,  

பல சுற்றுலா பயணிகளுக்கு ஜப்பானிய உணவு வகைகள் மட்டுமே ஜப்பானுக்கு செல்லப்போதுமான காரணம்! அதிலும் பலருக்கு சுஷி’யை சுவைப்பது பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்.

 பல நூற்றாண்டுகளாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய உணவு முறை, புதிய புதிய தாவரப்பொருட்கள், கடல்வாழ்உயிரிகள் மற்றும் கடற்பாசிகளின்  சேர்மானம், பருவகால உணவுகள், சில எளிய ஆனால்  பிரத்யேக  சுவையை அளிக்கும் சுவையூட்டிகளும் இணைந்தது.

’’வாஷோகு’’ என்பது ஜப்பானிய உணவு, சமையல் மற்றும், ஒன்றுக்கொன்று மிகப்பொருத்தமாக சேர்ந்துகொண்டு சுவையளிக்கும் ஜப்பானிய உணவு வகைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.  Wa (வா)  என்பது ஜப்பானின் பாரம்பரியத்தையும் Shoku (ஷோகு) என்பது உணவையும் உணவு கலாச்சாரத்தையும்,  உண்ணுதலையும் சேர்த்தே குறிக்கின்றது. முதலில் கண்களால் உணவை உண்டபின்பே வாயினால் உண்ணவேண்டும் என்பது ஜப்பானியர்களின் பொதுவான கூற்று. அத்தனை வண்ணமயமாக, அழகாக உணவுகள் தயாரிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு பரிமாறப்படும். மிசெலின் நட்சத்திர அந்தஸ்து கொண்டிருக்கும் உணவகங்களை அதிகம் கொண்டிருக்கும் முதல் மூன்றுநாடுகளிலும்  ஜப்பான்  இருக்கிறது.

இறைச்சி உணவை பெரும்பாலும் தவிர்த்தே வந்த ஜப்பானியர்கள், பேரரசர்  மெய்ஜி தலைமையில் 1868’ல் நடைபெற்ற  ஜப்பானின் நவீனமயமாக்கலுக்கு பிறகே பாரம்பரிய உணவிலும் இறைச்சியை சேர்த்துக்கொண்டனர்.

ஜப்பானிய உணவில் பிரதானமான அரிசிச்சோற்றுடன், ஏராளமான  பக்க உணவுகள், தொடுகறிகள், மீன், “சுகேமோனோ”  எனப்படும், காய்கறி ஊறுகாய்கள், டோஃபூ, பாலாடைக்கட்டி, சோயா, காளான்கள், நூடுல்ஸ், என கலவையான, அதிகம் வேகவைக்கப்படாத, பெரிதும் பச்சையாகவே தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இருக்கும், முழுமையான ஜப்பானிய உணவு முறை எத்தனை ஆரோக்கியமானதென்பதை ஜப்பானியர்களின் நீளாயுளையும், உடற்கட்டையும் பார்த்தே அறிந்துகொள்ளலாம். ஜப்பானில். கொழுத்த உடலுடையவர்களை அரிதாகவே காணமுடியும் .

ஜப்பானில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமைகொண்ட சிறப்பான பலசேர்மானங்களையும், விதம் விதமான உணவு வகைகளை உருவாக்கும் கலைகளையும் உள்ளடக்கிய இந்த வாஷோகு, 2013 ஆம் ஆண்டில்  யுனெஸ்கோவின் புலனாகா கலாச்சார பாரம்பரிய அந்தஸ்தை (UNESCO Intangible cultural heritage) பெற்றது, ஜப்பானில் இத்துடன் சேர்த்து 23 யுனெஸ்கோ அந்தஸ்துகள் உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. உண்ணுதல் மட்டுமல்ல, வாஷோகு ஒரு சமையல் அனுபவமும் கூட .

ஜப்பானிய உணவுகளில் மிக முக்கியமானது சுஷி மற்றும் சஷிமி. இவ்வுணவுகளுடன் தவறாமல் பச்சைநிறத்தில் மிகச்சிறிய அளவில் விழுதாக அளிக்கப்படும் ஒரு துணை உணவே வஸாபி. வஸாபியை சுவைத்தவர்கள், கேள்விப்பட்டிருப்பவர்கள், அதன் பச்சை நிறத்தைக்கொண்டு அது ஏதோ ஒரு செடியின் இலைகளின் பசையென்றோ அல்லது செடியை அரைத்த விழுதென்றோ நினைக்கக்கூடும்.

ஆனால் உருளைக்கிழங்குகளைப் போலவே விளையும் வஸாபிச்செடியின் சதைப்பற்றான, சத்துக்களும் பச்சையமும் நிறைந்துள்ள கிழங்குகளைப்போலிருக்கும், தண்டுப்பகுதியின் நீட்சிகளை (Stem tubers)  துருவி எடுக்கப்படுவதே வஸாபி. வஸாபிதான் சுஷி, சஷிமியுடனான மிகப்பொருத்தமான இணையுணவு. இதன் பிரத்யேக சுவை, வாசனை மற்றும் எரிவு உலகின் வேறெந்த தாவரப்பொருட்களுக்குமே இருக்காது, மேலும் இது மிக மிக புதிதாகவே பரிமாறப்படுமொன்று.

ஷஷிமியுடன் வஸாபி விழுது

சுஷியை சுவைத்திருப்பவர்கள் வஸாபியையும் சுவைத்திருக்கக்கூடும் ஆனால் அது அசல் வஸாபிதானா என்பது சந்தேகம்தான். ஏனெனில் ஜப்பானிலேயே 5 சதவீதம்தான் அசல் வஸாபி கிடைக்கின்றதென்றும், இப்போது வஸாபி என அளிக்கப்படுவதும் சுவைக்கப்படுவதும் வஸாபியல்ல, வஸாபியின் நிழல் அல்லது சாயல் என்கிறார்கள் தலைசிறந்த  ஜப்பானிய சமையல் கலை வல்லுநர்கள்.

போலி வஸாபி விழுதில், வஸாபி  இலை, இலைக்காம்பு, கடுகு மற்றும் வஸாபியின் தாவரக்குடும்பத்தை சேர்ந்த முள்ளங்கி வகையொன்று (Cochlearia armoracia ), பச்சைசாயம், மிகக்குறைந்த அளவில் வஸாபியின் மலர்கள்  ஆகியவைகள் கலக்கப்பட்டிருக்கும்.

முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கடுகு ஆகியவற்றின் குடும்பமான பிராசிகேசியேவை (Brasicaceae) சேர்ந்த வஸாபியா ஜப்பானிகா, (Wasabia japonica,  இணை அறிவியல் பெயர் Eutrema japonica) செடிகள் மெதுவாக வளரும் இயல்புடைய, ஆண்டு முழுதும் பூக்கும்,  வெண்ணிற இருபால் மலர்களையும், தடிமனான அடித்தண்டும், நீளகாம்புகளுள்ள சிறுநீரக வடிவிலான பெரிய இலைகளையும் கொண்டவை.

 இதன் தாவர அறிவியல் பெயரின் பேரினப்பெயரான Wasabia’வின் பொருள் சரிவர எங்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. வஸாபி என்னும் ஜப்பானிய புழங்குபெயரின் லத்தீன் வடிவமாக வஸாபியாவே வைக்கப்பட்டது. சிற்றினமான japonica  ஜப்பானை பிறப்பிடமாக கொண்டதை குறிப்பிடுகின்றது. இதுபோலவே தாவர அறிவியல் பெயர்களின் சிற்றினங்களில் indica என்பது இந்தியாவை, sinensis என்பது சீனாவை, Canadensis  கனடாவை என்று அவற்றின் தாயகத்தை குறிப்பிடும் பெயர்களில் அமைந்திருக்கும் 

இக்குடும்பத்தின் அனைத்து தாவரங்களுமே விசேஷமான நொதியான மைரோசினேஸை, குளுகோசினோலேட்டுக்களை, அய்சோதயோனேட்டுக்களை  கொண்டிருக்கும்.  ((Myrosinase, Glucosinolates. Isothiocyanates). இச்செடிகளை அல்லது செடிகளின் பாகங்களை நறுக்கும் போதும், காயப்படுத்தும் போதும்  இவை ஒன்று கலந்து கசப்பும், எரிவும், மணமுமாக வெளிப்படுகின்றன.  முட்டைக்கோஸிலிருக்கும் அய்சோதயோனேட்டின் அளவை விட வஸாபியில் 3000 மடங்கு அதிகமென்பதால் இதன் சுவையும், மணமும், எரிவும் அலாதியாக இருக்கின்றது.

வளர்ந்த இச்செடியின் அடித்தண்டு சுமார் 18 லிருந்து 24 மாதங்களில், 12 லிருந்து 18 இன்ச் உயரமும் 40 மிமி அகலமும் வளர்ந்ததும் முழுச்செடியும் வேருடன் அறுவடை செய்யப்படும். இலைகள் நீக்கப்பட்ட அடித்தண்டுகளே வஸாபி கிழங்குகள். இவை மேலும் வளருமென்றாலும் இந்த அளவில் அடித்தண்டுகள் இருக்கையிலேயே வஸாபி விழுதின் பிரத்யேக சுவையும் எரிவும் மிகச்சரியாக இருக்கும்..

வஸாபி ஜப்பானில் எப்போதிலிருந்து, யாரால், எங்கு விளைவிக்கபட்டதென்பதை குறித்து ஜப்பானிலேயெ பலவிதமான வாய்வழிக்கதைகளும்  கருத்துக்களும் நிலவுகின்றது.

  பன்னெடுங்காலத்திற்கு முன்பு வேட்டைக்காரர்களாக இருந்த, மீனும், விலங்குகளும், கனிகளும் விதைகளும் கடலுணவுகளுமாக உண்டு கொண்டிருந்த ஜப்பானியர்கள் அப்போதே காடுகளில் இயற்கையாக கிடைத்த வஸாபி கிழங்குகளையும் உணவில் சேர்த்துக்கொண்டிருந்திருக்கலாமென்று பரவலாக நம்பப்படுகின்றது. சாமுராய் வீரர்களுக்கு அவர்களின் சேவைகளை பாராட்டும் விதமாக பரிசளிக்கப்பட்டன வஸாபி பண்ணைகள் என்றும் சொல்லப்படுகின்றது.

மியி மாகாணத்தில்  786ல் புத்த துறவியான  கோஹ்போ-டாய்ஷி ( Kohbou-Daishi) காடுகளில் வளர்ந்திருந்த வஸாபி செடிகளை கொண்டு வந்து கோயா மலைகளிலும் (Mount Koya) அதன் அடிவாரத்திலும் பயிரடச்செய்ததற்கான ஆவணங்களே வஸாபியைக்குறித்து கிடைத்திருக்கும் முதல் வரலாற்று சான்று. 794’ல் உருவான ஜப்பானிய  தாவரவியல் அகராதிகளிலும்  வஸாபி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  918’ல் ஃபுகானே நோ சுககிட்டோ (Fukane-no-Sukehito) தொகுத்தளித்த ஹோன்ஸோ வாம்யோ (Honzo Wamyo) எனப்படும் ஜப்பானின் மிகப்பழமையான மூலிகைஅகராதியில் மலைகளைக்குறிக்கும் சொல்லான ’யாமாய்’ என்று அழைக்கப்பட்ட, மலைகளில் மட்டும் வளர்ந்த  இந்த இச்செடியின் பெயர் பின்னர்  மருவி வஸாபி என அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இவை 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜப்பானில் இயற்கையான வாழிடங்களில் வளர்பவையென்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் எங்கிஷ்கி (Engishiki) எனப்படும் ஜப்பானிய அரசுக்கான சட்டதிட்டங்கள், சடங்குகள் குறித்தான பழமையான் நூலிலும்  வரிசெலுத்தியவர்கள் பணத்துக்கு பதிலாக வஸாபி கிழங்குகளை அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது .

931–938 ல் தொகுக்கபட்ட வாம்யோ ருயிஜுஷா (Wamyo Ruijusho)  எனப்படும் ஜப்பானின் முதல் அகராதியிலும் வஸாபியைப்பற்றிய குறிப்புக்கள் உள்ளன. ஜப்பான் வெற்றி பெற்ற பல போர்களுக்கு பிந்தைய உண்டாட்டுகளில் வஸாபியை உணவில் சேர்க்கப்பட்டதற்கான குறிப்புக்கள் பல ஆவணங்களில் இருக்கின்றன.

ஜப்பானியர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும் இந்த வஸாபி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து மருந்துப்பொருளாகவே இருந்து, பின்னர் படிப்படியாக உணவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

 1338 லிருந்து  1573 வரைக்குமான காலத்தில், ஜப்பானின் அரசகுடும்பங்களில் மட்டும்  உணவில் சேர்க்கப்பட்டிருந்த வஸாபி,. 1596-1615க்கு இடைப்பட்ட காலத்திலிருந்துதான்  வணிக ரீதியாக பயிரிடப்படுகின்றது. 

 ஜப்பானிய சமையலில் கடுகைப்போல ஒரு மசாலாப்பொருளாக பயன்பாட்டிலிருந்த வஸாபி, பின்னர் மெல்ல மெல்ல சுஷி, பிற மீனுணவுகள்,  நூடுல்ஸ் மற்றும் சூப்பில் வாசனைக்காக சிறிதளவு சேர்க்கப்பட்டது

17ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஜப்பானை ஒன்றிணைத்த மூவரில் ஒருவரான  லியாஷு டோகுகவா (Ieyasu Tokugawa)  வஸாபி பிரியராக இருந்திருக்கிறார் 

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்துதான் வஸாபி பொதுமக்களுக்கும் கிடைத்திருக்கிறது. 1971  வரை பசையாக்கப்பட்ட வஸாபிதான் பாக்கட்டுகளில் விற்பனை செய்யப்பட்டது. 1973’ற்கு பிறகுதான் புத்தம் புதிய கிழங்குகளிலிருந்து வஸாபியை துருவி உண்ணும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

ஜப்பானில் பல்லாண்டுகளாகவே வஸாபி உணவிலும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும்,  20 ஆம் நூற்றாண்டில் சுஷி/சஷிமி உணவுகள் பிரபலமானதும் அதன் இணைஉணவான வஸாபியும் உலகளவில் மிகபிரபலமடைந்தது. சுஷி உணவுக்கும் வஸாபிக்குமான பொருத்தம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக ஜப்பானியர்கள் வேடிக்கையாக சொல்லுவதுண்டு. சுஷியின் பச்சை வாசனையை மறைக்க, பச்சை சுஷியின் கிருமிகளால் பாதிப்பு வராமலிருக்க பொருத்தமான  துணையுணவாக வஸாபி அதிகம் பயன்பாட்டுக்கு வந்தது

  20’ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் வஸாபியை தூளாக்கி சந்தைப்படுத்துதலும் துவங்கியது. இதன் சுவை புதிய வஸாபி விழுதைப்போல இருக்காதெனினும் இதையும் ஏராளமானோர் வீட்டு உபயோகத்திற்கென வாங்குவார்கள். தற்போது  (-196°C) உறை நிலையில் திரவ நைட்ரஜனில் சேமிக்கப்பட்டு வஸாபியின் சுவையும் நிறமும் மணமும் பாதுகாக்கப்படுகின்றது.

வஸாபி கிழங்கை துருவுதல் என்பது உண்மையில் தேய்த்தல்தான் இவற்றிற்கென இருக்கும் விசேஷ சுறாத்தோலினால் உருவாக்கப்பட்ட ஓரோஷி (oroshi) சதுரத்துருவான்களிலோ, அல்லது கருங்கல்லிலோ, உலோகத்துருவான்களிலோ  கிழங்குகள் வட்டசுழற்சியில்  தேய்ககப்பட்டு விழுதாக்கப்படும். வஸாபியின் சுவையும் மணமும் குணமும் அது துருவப்படும் விதத்தை பொருத்தும் மாறுபடுகிறது..

இதிலிருக்கும் எளிதில் ஆவியாகக்கூடிய வேதிச்சேர்மங்களின்  சுவையை அனுபவிக்கவேண்டி பாரம்பரியமான உணவகங்களில் வஸாபி, அவ்வப்போது புத்தம் புதிதாகவே விழுதாக்கப்பட்டு பரிமாறப்படுகின்றது. சில உயர்தர உணவகங்களில் வஸாபியை வாடிக்கையாளர்களே துருவிக்கொள்ளவும் வசதியுண்டு. பரிமாறப்பட்ட 15 நிமிடங்களில் வஸாபியை சுவைக்காவிட்டால் அதன் அசல்சுவை மறைந்துவிடும்.

பச்சைத்தங்கமெனப்படும் வஸாபி நாவில் பட்டதும் மூளையில் ஒரு மெல்லிய உதையை, நாசியில் உடனே ஒரு எரிச்சலை, பின்னரே நாவில் அதன் சுவையை உணருவீர்கள் என்கிறார்கள் ஜப்பானியர்கள். தேள் கொட்டியது போலவும் தீயில் சுட்டுக்கொண்டது போலவுமிருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

வஸாபியின் புகைகலந்த செவிகேட்காதவர்களுக்கான தீவிபத்து எச்சரிக்கை கருவியை வடிவமைத்த ஜப்பானிய தொழில்நுட்பத்திற்கு அசாதாரண அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான   Ig நோபல் பரிசு 2011ல்  கிடைத்தது. இதன் எரிச்சல் அத்தனை துரிதமாக மூளைக்கு செல்லும்.

 வஸாபியின் எரிவு, மிளகாயிலிருக்கும் கேப்ஸைஸினைபோல் நெடுநெரம் தங்கி இருக்காமல் விரைவில் நாக்கிலிருந்து நீங்கிவிடும்  வஸாபி விழுதை உண்ணுகையில் கண்களிலும் மூக்கிலும் நேரடியாக பட்டுவிடாமல் கவனமாக இருக்கவேண்டும். வஸாபி மிகசிறிதளவே உணவில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் இதன் சுவை மறைந்திருந்து மிக குறைவாக தென்படுமொன்றல்ல, முழு உணவையும் முன்னின்று வழிநடத்திச்செல்லும் சுவை கொண்டதென்கிறார்கள் ஜப்பானியர்கள். மிககுறைந்த அளவிலேயெ இவ்விழுது எடுத்துக்கொள்ளப்படுவதால்  இதன் பக்கவிளைவுகள் வெகு அரிதாகவே இருக்கும். வஸாபியை பொருத்தவரை குறைவே மிகுதி.

துருவிய அல்லது தேய்த்த வஸாபியின் மணமும் சுவையும் நிலைபெற இரண்டே இரண்டு நிமிடங்கள் காத்திருந்து பின்னர் இவை பரிமாறப்படும். கண்ணீல் நீரை நிறைத்து மூக்கை தூண்டி எரிச்சலடைய வைத்து எரிவை உடனடியாக மூளையில் உணரச்செய்யும் வஸாபியின் சுவையை வேறெந்தெ சுவையுடனும் ஒப்பிடவே முடியாது.

வஸாபி பண்ணை

ஜப்பானுக்கு செல்லாதவர்கள் ஜப்பான் முழுவதும் பச்சைப்பசேலெனெ செழித்து வளர்ந்திருக்கும் வஸாபிக்காடுகள் இருக்கும் என கற்பனை செய்து கொள்ளவேண்டாம். வஸாபி அத்தனை எளிதில் வளரும் தாவரமல்ல.. நேரடியான சூரியஒளிபடாத ஆற்றங்கரைகளிலும் மலைச்சரிவுகளிலும் வேர்கள் தூயநீரில் மூழ்கி இருக்கும்படியே இவை வளரும். சாதாரணமாக நம்வீட்டு தோட்டங்களில் எலுமிச்சை கறிவேப்பிலை வளர்பப்தைபோல வஸாபியை வளர்க்கமுடியாது. இவற்றை கட்டுப்படுத்திய சூழலில் பசுங்குடில்களில் வளர்க்கும் முயற்சிகள் அவ்வளவாக  வெற்றி பெறவில்லை. வஸாபி கிலோ 160லிருந்து 250 டாலர்கள் வரை விலை இருக்கும். மிககுறைந்த அளவில் விளைச்சலும், அதைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமான உலகளாவிய தேவையும் கொண்டது வஸாபி.

டோக்கியோவின் ஷிஜுவோகாவில் பல நூற்றாண்டுகளாக இயற்கையான வாழிடங்களில் வஸாபி பயிரிடப்படுகின்றது. ஜப்பானில் வருடா வருடம் விளையும்  வஸாபி கிழங்குகளில் சரிபாதி இங்கிருந்துதான் கிடைக்கின்றது  

நீரோடைகளின் பாறைகளின் மீதடுக்கப்பட்ட சரளைக்கற்களின் மீது மணலைப்பரப்பி வஸாபியை  பயிரிடும் பழமையான முறை டட்டாமி இஷி (tatami ishi) எனப்படும். இம்முறையில் நீர் இயற்கையாகவே வடிகட்டப்படுவதால் வஸாபியின் சுவையும் தரமும் முதல் தரத்திலிருப்பதாக சொல்லப்படுகின்றது.

 ஜப்பானில் இயற்கையாக விளையும் வஸாபி ஹான் வஸாபி எனப்படும்.(Hon wasabi). விதைகள் மூலம் நிலத்தில் பயிராகும் வஸாபி ஹடக் வஸாபி எனப்படும் (Hatake-wasabi) “hatake” என்றால் நிலமென்று பொருள். நிலத்தில் வளர்க்கப்படும் செடிகளிலிருந்து கிடைக்கும் வஸாபிக்கிழங்குகளை விடநீரில் வேர்களை பதித்து நிலத்தில் இலைகளுடன் இருக்கும் சவா செடிகளே (sawa wasabi) தரமான  வஸாபிக்கிழங்குக்ளை கொடுக்கின்றன தரம்குறைவான் ஓக்கா வஸாபியும் அதிகம் பயிரிடப்படுகின்றது (oka wasabi ). ஜப்பானிய வஸாபியில் தருமா வகை( Daruma  ) அழகிய வசீகரிக்கும் இளம் பச்சையிலும், மசுமா வசாபி (Mazuma ) நல்ல எரிவுடனுமிருக்கும்.  

ஜப்பானில் உணவுகள் மிகப்பிரபலமென்றாலும் உணவுகளுக்கு நாம் பெருந்தொகையை செலவிட வேண்டியதில்லை, பெரும்பாலும் ஒரு  முழு பாரம்பரிய உணவுக்கு  5 முதல்  10 அமெரிக்க டாலர் வரைதான் செலவாகும். வஸாபி உணவுக்கட்டணம்  2 லிருந்து 5 டாலர் வரையே இருக்கும்

துணை உணவாக மட்டுமன்றி வஸாபியின் மருத்துவகுணங்களுக்காகவும்  ஜப்பானியர்கள்  வஸாபியை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். வஸாபியின் வேதிப்பொருட்கள் ஜீரணத்தை துரிதப்படுத்தி வயிற்றுப்புண்களை ஆற்றுதல், புற்றுநோய்கெதிராக செயல்படுதல், பற்சிதைவை  தடுப்பது,  ரத்தக்கட்டிகளின் சிகிச்சைக்கு என பல்வேறு முக்கிய மருத்துவப்பயன்களையும் கொண்டிருக்கின்றது ஒவ்வாமை நோய்களுக்கும் ஆஸ்த்மாவுக்கும் கூட வஸாபி மருந்தாகின்றது. வஸாபி கிழங்குகளில் அதிக அளவில் வைட்டமின் C, முக்கிய தாது உப்புக்கள்,பொட்டாஷியம் மற்றும் கால்ஷியம் சத்துக்களும் உள்ளது

உலகநாடுகள் பலவற்றிலும் உணவுப்பிரியர்களின் விருப்பத்திற்குகந்த  வஸாபி தேவைக்கேற்ற அளவுகளில் விளைவிக்கப்படாததால்தான் வஸாபி போலிகளும் சந்தையில் அதிகம் புழங்குகின்றது.

பசுங்குடில்களில் வஸாபி

எளிதில் நோய்வாய்ப்படுவது , மிகத்தூய நீர் தேவைப்படுவது, கிழங்குகள் முற்றி அறுவடை செய்ய ஏறத்தாழ 2 வருடங்கள் தேவைப்படுவது ஆகிய காரணங்களினால்தான் வஸாபி அதிகம் பயிராவதில்லை. 2013 ல்  ஜப்பானில் மட்டும் 17.000 டன் வஸாபி கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டும் உலகளாவிய இதன் தேவை பலமடங்கு அதிகமாவே இருந்துவருகிறது

புவியியல் ரீதியாக, வசாபி சந்தை வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா-பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உட்பட ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வஸாபி சந்தை 279.7 மில்லியன் அமெரிக்க டாலர்களக மதிப்பிடப்பட்டிருக்கிறது, 2027’ல் இது 590 மில்லியனாக உயருமென்றும் அனுமானிக்கப்படுகிறது

தற்போது வஸாபி சாகுபடி அமெரிக்கா, கனடா, தைவான், ஆகிய நாடுகளிலும் வேகம் பிடித்திருக்கிறது. நியூஸிலாந்தில் நீரியல் வளர்ப்பில் LED விளக்கொளியில் வஸாபி க்ளோன்களை வளர்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.

வஸாபி கிழங்குகளாகவும், தூளாக்கப்பட்டும், விழுதாகவும், துருவியும் சந்தையில் கிடைக்கின்றது. ஜப்பானுக்கு செல்லுகையில் அசல் வஸாபியை சுவைக்கும் அனுபவத்தை  தவறவிடக்கூடாது. வஸாபி ஐஸ்கிரீம்களாகவும், பியரில், ஜின்னில், சோளப்பொறியில், நூடுல்ஸீல், சிற்றுண்டிகளில்  கலக்கப்பட்டும் ஜப்பானில் பரவலாக கிடைக்கின்றது. வஸாபி விழுது கலக்கப்பட்ட பழரசங்களும் உண்டு. இனிப்பும் காரமும் வஸாபி மணமுமாக இளம்பச்சைநிற கிட்கேட் சாக்லேட்டுக்கள் ஜப்பானில் வெகு பிரபலம். வஸாபியின் இளம்பச்சை வண்ணத்திலிருக்கும் வஸாபி  பொம்மைகளும் ஜப்பானிய குழந்தைகளுக்கு பிரியமானவை.

வஸாபி கிட் கேட்

எந்திரனில் நீலகண்ணழகி ஐஸ்வர்யாவை வைரமுத்து’’ செந்தேனில் வஸாபி ‘’ என்றிருப்பார். அப்படியொரு வித்தியாசமான சுவைதானிது

யூ ட்யூபில் வஸாபி சாகுபடியைக் குறித்தும், விழுதின் தயாரிப்பு, பயன்பாடு மற்றும் சுவை குறித்தும் ஏராளமான காணொளிகள் கிடைக்கின்றன . இவற்றில் தலைமுறைகளாக வஸாபி பயிரிடும் குடும்பத்தினரின் பண்ணையைக்குறித்த  உணர்வுபூர்வமான   காணொளி இந்த இணைப்பில் இருக்கின்றது.

 https://www.youtube .com/watch?v=fhlklE9wBSY

வஸாபி ஐஸ்கிரீம்

பியர்- கசக்கும் உண்மை,

மனித மூதாதையர்கள் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்தியிருப்பதற்கான  சாத்தியங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.குகை ஓவியங்கள், தகவல்கள் பொறிக்கப்பட்ட களிமண் கட்டிகள், அகழ்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டங்களின் மிச்சங்கள், பாப்பிரஸ் சுருள்களின் குறிப்புக்கள், கல்லறை சித்திரங்கள், எகிப்து பிரமிடுகளின் சீசாக்களும் மதுக்கோப்பைகளும் குடுவைகளும், என நமக்கு கிடத்திருக்கும் எல்லா ஆதாரங்களுமே மதுபானங்கள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெற்றிருந்ததை சொல்கின்றன.

மதுவைக் குறித்துப் பேசாத உலக இலக்கியங்களே இல்லை. தண்ணீரை திராட்சை ரசமாக்கியதுதான் ஏசு நிகழ்த்திய முதல் அதிசயமே. நோவா, திராட்சை ரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகி சுயநினைவிழந்து படுத்திருந்தததை சொல்லுகின்றது விவிலியம். வளர்பிறையில் வளர்ந்து தேய்பிறையில் சிறுத்துக்கொண்டு போகும் சோமனுக்குரிய கொடியை பிழிந்து எடுக்கும் சோமபானம் நம்மை துயரிலிருந்தும் பிணியிலிருந்தும் விடுவிக்குமென அதர்வவேதம் குறிப்பிடுகின்றது. வேதகாலத்தில் வாழ்ந்த அசுரர்களும், கிராதர்களும் அரிசி, பார்லி மற்றும் தினை மாவுகளிருந்து தயாரிக்கப்பட்ட சுர’ பானம் அருந்தியதாக  வேதம் கூறுகிறது

 புராதன இந்தியாவில்  வாழ்ந்த ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளித்த சரக மகரிஷி (Charaka) சுரபானத்தை  வலிநீக்கியாகவும், மயக்கமூட்டியாகவும் பயன்படுத்தியதற்கும், அவருக்கும் முந்தைய காலத்தை சேர்ந்த சுஷ்ருதர் கருச்சிதைவான பெண்ணொருத்திக்கான சிகிச்சையின் போது அவளுக்கு வலிதெரியாமலிருக்க சுரபானத்தை அளித்ததற்கும் சான்றுகள் உள்ளன.

 ராமாயணத்தில் பல இடங்களில் மதுஅருந்துதல் பற்றிய குறிப்புகள் உள்ளன. மகாபாரத்திலும் யவனமது, தேறல் உள்ளிட்ட பலவகையான் மதுவை ஆண்கள் பெண்கள் என வேறுபாடின்றி அனைவரும்   அருந்தியிருப்பதை காணலாம்.  கடவுளின் கட்டளையின்படி சேகரித்த தாவங்களை கடலில் கரைத்து அமிர்தமெடுத்து பருகி வலிமைமிக்கவர்களாவதை  குறிப்பிடுகின்றது வால்மீகி ராமாயணம் .புத்தமத நூல்கள் கரும்பின் சாற்றுடன் பல தாவரங்களை சேர்த்து உண்டாக்கும் சுரா என்னும்  பானத்தையும், தேனை புளிக்க வைத்து உண்டாக்கும் மதுவையும் பற்றி சொல்லுகின்றது

  சங்க இலக்கியங்களில் தமிழர் பயன்படுத்திய மதுவகைகள் குறித்துப் பல செய்திகள் விரிவாகக் காணப்படுகின்றன.  மனிதகுலத்தின் வரலாறோடு இணைந்தேதான் இருந்திருக்கிறது போதையூட்டும் பானங்களும் பிற வஸ்துக்களும்.

பழமரங்கள் தங்களின் விதை பரவுதலை பழங்களை உண்ணும் விலங்குகளின் மூலம் உறுதிப்படுத்த   முற்றிக்கனிந்த பழத்தின் வாசனையிலேயே அவற்றில் சர்க்கரை உள்ளதையும் அவை உண்ணத் தகுந்ததாயிருப்பதையும் விலங்குகளுக்கு தெரிவிக்கிறது.

உதிர்ந்து கேட்பாரற்றுக் கிடக்கும் அழுகிய பழங்களின் சர்க்கரைகளை இயற்கையாகவே காற்றிலும் மண்ணிலும்  இருக்கும் ஈஸ்ட்கள் உட்கொள்ளத் தொடங்கும் போது சர்க்கரை ஆல்கஹாலாக மாறுகிறது இவற்றை உண்ணும் குரங்குகள்  போதையை அறிந்து, பின்னர் தொடர்ந்து இத்தகைய கனிந்த, நொதித்த பழங்களையே உண்ணத்துவங்குகையில், விலங்குகளையும் பறவைகளையும் பின்தொடர்ந்தே, உண்ணக்கூடிய உணவையும் தேவையான மருந்தையும் கண்டறிந்த ஆதிமனிதர்களும் அதையே    உண்ணத்துவங்கி, பின்னர் தேவைக்கேற்ப பழங்களை நொதித்தலுக்கு உள்ளாக்கி  மதுவை உருவாக்க துவங்கியிருக்கலாமென்கிறது மதுபானங்களின் வரலாற்றை சொல்லும் பல அனுமானங்களில் மிகபிரபலமான ஒன்றான  drunken monkey hypotheis.

   ஆதிமனிதர்கள்  உணவைப் பாதுகாக்கவும், வேட்டையாடவும் விவசாயம் செய்யவும்  வழியற்ற குளிர்காலங்களுக்கான உணவை சேமிக்கவும், பலவிதமான நுட்பங்களைப் பயன்படுத்தினர், அதிலொன்றுதான் தானியங்களை உடைத்து மாவாக்கி கரைத்து கொதிக்கவைத்து நொதித்தலுக்குள்ளாக்குவது .

 பண்டைய மனிதகுலத்தின் குறிப்பிடத்தக்க  திருப்புமுனைகளில் ஒன்றாக  இயற்கைபொருட்களிலிருந்த  சர்க்கரையை புளிக்கவும் நொதிக்கவும் வைத்து  ஆல்கஹால்  உருவாகும் நுட்பத்தை அறிந்துகொண்டதும் சொல்லப்படுகின்றது. கற்கால மனிதர்கள் மட்டுமல்லாது பூச்சிகள், பறவைகள், யானைகள், பழ வெளவால்கள், குரங்குகள் என  அனைத்துமே மதுவின் நுகர்வுக்கு ஆட்பட்டிருந்தவைதான் மனிதனும் பிற விலங்குகளும் மதுபானங்கள், அதிகப்படியான உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றிலிருந்து கிடைத்த நன்மைகளுக்கு ஏற்பத்தான் பரிணாமம் அடைந்திருக்கிறோம் .  

பலவகையான பானங்கள் ஆதிகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பினும்  திராட்சை ரசத்திலிருந்து  வைனும் தானியங்களிலிருந்து கிடைத்த பியரும் அவற்றுள் முக்கியமானது.  தண்ணீருக்கும் தேநீருக்கும் அடுத்தபடியாக உலகின் மிக அதிகமாக அருந்தப்படும் விருப்ப பானமாக பியரே இருக்கின்றது. பியரை உருவாக்கும் கலையும் அறிவியலும் ஜைத்தாலஜி (Zythology)  எனப்படுகின்றது..  பியர் பிரியர்களுக்கு Zythophiles என்று பெயர்.

 பியரின் வரலாறும் மிகச்சுவையானது, உண்மையில், மனித நாகரிகத்தின் வரலாறென்பதே பியரின் வரலாறுதான் என்கிறார்கள்  மானுடவியலாளர்கள்.  மனிதன் வேட்டை வாழ்விலிருந்து விலகி, தானியங்களை பயிரிடும், விவசாயத்தை அடிப்படையாக கொண்ட ஒரு வாழ்க்கைக்கு மாறியபோதே பியர் தயாரிப்பும் தொடங்கியிருக்கலாமென்று கருதப்படுகின்றது. . தாவரப்பயன்பாட்டியலான Economic Botany’யும், பல்லாயிரம் வருடங்ளுக்கு முன்பு, தானிய வகைகள் சாகுபடி செய்யப்பட்டபோதே பியரும் உருவாகியிருக்கக்கூடும் என்கிறது.

 சுமேரியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள் மற்றும் பிரிட்டிஷ் உட்பட பல கலாச்சாரங்களிலும் நாகரிகங்களிலும் பியர் அழுத்தமான அடையாளத்தை பதித்திருக்கிறது.

அகழ்வாய்வில் 5000 வருடங்களுக்கு முன்பான சுமேரயாவின் களிமண் கட்டிகளில் ரொட்டியின் கடவுளான நின்காசி (Ninkasi) பியரின் தயாரிப்பை பலருக்கு கற்றுக்கொடுத்ததற்கான குறிப்புகள் இருந்தன.. பாபிலோனியர்கள் சுமேரியாவை வென்று சுமேரியர்களின் பியர் தயாரிக்கும் திறன்களைப் பின்பற்றினர். பாபிலோனிய மன்னர், ஹமுராபி, பியர் தயாரிப்பின் சட்டங்களை அறிவித்து பியரை 20 வெவ்வேறு வகைகளாக வகைப்படுத்தியிருந்தார்

சுமேரியாவின் பியர் கலாச்சாரம் பின்னர் எகிப்துக்குள்ளும் நுழைந்து, எகிப்திய கலாச்சாரத்தின்  முக்கிய பகுதியாக மாறியது எகிப்தியர்கள் பார்லி மற்றும் பண்டைய கோதுமை வகையான எம்மர் உள்ளிட்ட பல தானியங்களிலிருந்தும் பியரை காய்ச்சினர். அவர்களிடம் அடர்ந்த நிற, இனிக்கும், கலங்கிய, நட்புக்கான, அழகுபடுத்தப்பட்ட, சத்தியத்தின் பியர்களும், மறு வாழ்விலும் நீடிக்கும் இறுதிச் சடங்குகளுக்கான தனித்த வகையும், கல்லறைகளுக்கு “புளிப்பில்லாதவையும்”  இறப்பற்ற நித்திய பியருமாக பல வகைகள் இருந்தன. பிரமிடுகளை கட்டியவர்கள் உள்ளிட்ட பல தொழிலாளிகளுக்கு நாளொன்றிற்கு 4 லிட்டர் பி்யரே சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது

பல நாகரிகங்களின் விருப்பமான மற்றும் பாதுகாப்பான பானங்களில் ஒன்றாக பியர் வேகமாக புகழ்பெற்றது.  கூடவே காய்ச்சும் முறைகளின், சேர்மானங்களின் மாற்றங்களுக்கு தகுந்தபடி பியரின் சுவையும், இயல்பும் மாறிக்கொண்டுமிருந்தது. பாபிலோனியர்கள் அடர்ந்த கலங்கலான தானியமிச்சங்கள் அப்படியே இருக்கும் பியரை  வைக்கோலால் உறிஞ்சிக் குடித்தார்கள். பல நாடுகளில் ஆலிவ் எண்ணெய், பாலாடைக்கட்டி, புல்வகைகள்,, கேரட் போன்றவற்றையும், கஞ்சா மற்றும் பாப்பி போன்ற மயக்கமூட்டிகளையும் கூட பியரில் கலந்து அருந்தினார்கள்

.அத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே புழக்கத்தில் இருந்த உலகின் மிகப்பழமையான மதுபானம் பியரே. எனினும் கசப்பு சுவையுடன் இருக்கும் பியர் கி.பி 822 வரை உருவாகி இருக்கவில்லை.

பல சோதனை முயற்சிகள் பியரின் சுவையை மேம்படுத்தவும் முளைவிட்ட தானியங்களின் இனிப்புச்சுவையை மட்டுப்படுத்தவும் உலகின் பலபகுதிகளில் நடந்த வண்ணமே இருந்திருக்கின்றன. இந்த சேர்மானங்கள் நாட்டுக்கு நாடு, இடத்திற்கு  இடம் மாறுபட்டிருந்தது. பிற வாசனைப்பொருட்கள் சேர்க்க்கபட்டவை க்ரூட்’பியர் (Gruit beer) என்னும் பொதுப்பெயரில் அழைக்கப்பட்டன.(“Gruit” என்பது ஜெர்மானிய மொழியில் மூலிகை என பொருள்படும்)

செம்பருத்தி, தேயிலை. உலர்ந்த ஆரஞ்சின் தோல், பலவகையான கிழங்குகள், லவங்கப்பட்டை, லாவண்டர் அரும்புகள், Achilea milefolium  எனப்படும் Yarrow, நல்ல நெடியுடைய  செடியான ஹிஸ்ஸாப் (Blue giant hyssop), ஜூனிபர் பழங்கள், இஞ்சி, கேரவே விதை, சோம்பு, ஜாதிக்காய், புதினா, கிராம்பு, குருமிளகு, சீரகம், வனிலா, கொத்துமல்லி நெல்லிக்கனிகள், பைன் மர ஊசியிலைகள், சில கடல்பாசிகள், கொக்கோ, மிளகாய்கள், கசகசாவிதைகள், மஞ்சள்   என பலதாவரப்பொருட்கள் பியரில் கலந்து சுவை மாறுபாடு சோதிக்கப்பட்டது

 நாம் கிணற்று நீர் இனிப்புச் சுவையாக மாற நெல்லிமரக்கட்டைகளை போடுவது போல்  குறிப்பிட்ட சில மரங்களின் சிறு சிறு கிளைகளை உடைத்து கொதிக்கும் பியரில் சேர்க்கும் வழக்கம் கூட இருந்திருக்கிறது. இனிப்பை அதிகமாக்கவும் ஆப்ரிகாட், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ஆகியவற்றை சேர்த்திருக்கிறார்கள்.

ஹாப்ஸ் மஞ்சரி

பியர் வெகுநாட்களுக்கு கெட்டுப் போகாமலிருக்கவும் சுவையை மேம்படுத்தவும் அலமாரி வாழ்வை (Shef life) அதிகரிக்கவும் பியரில் பல்வேறு தாவரங்களும் தாவர பொருட்களும் சேர்க்கப்பட்டு சோதிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில்,   மடாலயங்கள் இப்படி சுவை மாறுபாட்டிற்காக சேர்க்கப்படும் மூலிகைகளுக்கு வரி விதித்ததால் அந்த வரிவிதிப்பு பட்டியலில் இல்லாத பிறவற்றை சோதித்து பார்க்கும் முயற்சியாகத்தான் அப்போது மருத்துவத்தாவரமாக பயன்பட்டுக்கொண்டிருந்த ஹாப்ஸ் என்கிற ஹுமுலஸ் லுபுலஸ் (Humulus lupulus) என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்தச்செடி பியர் உலகிற்குள் கொண்டு வரப்பட்டது,  பின்னர் பியரின் கசப்புச்சுவை வரலாறானது.

ஹாப்ஸின் பயன்பாடு துவங்கிய பின்னர் சுவைக்காக சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்த பிற தாவர  உபயோகங்கள் மெல்ல மெல்ல குறைந்து பின்னர் இல்லாமலே ஆனது. 1516ல் ஹாப்ஸின் உபயோகம் குறித்து சட்டமே இயற்றும் அளவிற்கு ஹாப்ஸ் பியருக்கு அளித்த சுவையும் நன்மையும் இருந்தது

பியரின் தூய்மை விதி எனப்படும் 1487ல் பரிந்துரைக்கப்பட்டு பின்னர் 23 ஏப்ரல் 1516’ல் அமலாக்கப்பட்ட ஜெர்மனியின் “ரெய்ன்ஹீட்ஸ்ஜ்போட்” (Reinheitsgebot) பியர் தூய்மைச் சட்டம் நீர், ஹாப்ஸ் மற்றும் பார்லி தவிர பிற அனைத்தையும் பியரை காய்ச்சும் பொருட்களிலிருந்து நீக்கியது. ஜெர்மனியின்  இந்த பியர் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான கட்டுப்பாட்டு விதியே உலகின் முதல் உணவுசார்ந்த தரக்கட்டுப்பாட்டு விதியாகும். பின்னர் 300 ஆண்டுகளுக்கு பின்னரே நொதித்தலில் ஈஸ்ட்டின் பங்கு லூயிஸ் பாஸ்டரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இவ்விதியில் ஈஸ்ட் நான்காவதாக  சேர்க்கப்பட்டது

தானியங்களுடனும் பழக்கூழ்களுடனும் ரொட்டித்துண்டுகளை சேர்த்து    நொதித்தலுக்கு உ்ள்ளாக்கி மதுபானங்களை உண்டாக்குவது நம் வரலாற்றில் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே இருந்தும், லூயிஸ் பாஸ்டருக்கு முன்பு ரொட்டித்துண்டுகளில்  ஈஸ்ட் இருப்பது தெரியாமலேயே உபயோகப்படுத்திக் கொண்டிருந்தது  ஒரு மர்மம்தான்.

 இன்றளவும் பியர் தயாரிப்பில் ஈஸ்ட்டின் இரண்டு வகைகளான, நொதித்தல் முடிந்தபின்னர் பியர் திரவத்தின் மேலே மிதக்கும் சக்காரோமைஸீஸ் செரிவிசியே (Saccharomyces cerevisiae)  மற்றும் அடியில் வண்டலாக படிந்துவிடும் சக்காரோமைஸீஸ் கார்ல்பெர்ஜென்ஸிஸ் (Saccharomyces carlsbergensis).) ஆகியவையே உபயோகப்படுத்தப் படுகின்றன. முந்தையது top beer எனப்படும் Ale , பிந்தையது bottom beer எனபடும் Lager.

பியரில் சேர்க்கப்படுவதற்கு முன்பே ஹாப்ஸ் செடிகள் வேறு பயன்பாட்டிற்காக வளர்க்கப்பட்டிருக்கலாம்..  கிபி 7ஆம் நூற்றாண்டில்  பலவகையான தானியங்களை நீரில் கலந்து கொதிக்கவும் நொதிக்கவும் வைத்து, கசக்கும் மலர்களும் கலந்து செய்யப்படும் பலபெயர்களில் அழைக்கப்பட்டாலும் ஒரே சுவையுடன் இருந்த போதையூட்டும் பானெமென்று பியரை குறிப்பிட்டிருக்கிறார். இயற்கைஆர்வலரும் தீராப்பயணியுமான ப்ளைனி தனது இயற்கையின் வரலாறு ( Naturalis Historia) நூலில்.

ஹாப்ஸ் தோட்டங்கள்

 கி.பி 822 ல் வடக்கு பிரான்ஸின்  பிகார்டியில் பெனடிக்டைன் மடத்தின் மடாதிபதி அடால்ஹார்ட் எழுதிய மடத்திற்கான நெறிகளைக் குறித்தான நூலில் பியர் தயரிக்கும் பொருட்டு காடுகளிலிருந்து ஹாப்ஸ் மலர்க்கொத்துக்களை சேகரிப்பதும் குறிப்பிடப்பட்டிருந்ததே ஹாப்ஸின் பயன்பாடு குறித்த முதல் முக்கிய வரலாற்று ஆவணம். 1150,களில் ஜெர்மானிய மடாதிபதிகள் கசப்புச்சுவைக்கும், அதிக நாட்கள் பியர் கெட்டுப்போகாமல் இருக்கவுமாக   ஹாப்ஸின் பயன்பாட்டை அதிகமாக்கினர்.

பியர் தயரிப்பில்  சேர்க்கப்பட்ட இந்த மலர்க்கொத்து அத்தனை ஆயிரமாண்டு கால  பியர் சுவையை  மாற்றியமைத்தது. ’க்ரூட்’ தாவரங்களின் விற்பனையில்  வருமானம் பெற்றுக்கொண்டிருந்த கத்தோலிக்க திருச்சபைகள் ஹாப்ஸின் பயன்பாட்டை, கடுமையாக எதிர்த்தனர். ஆனால் ஹாப்ஸ் பியரின் வரலாற்றில்  ஆழமாக வேர்களை வளர்க்கத் தொடங்கியது.

கசப்பு, பிரத்யேக சுவை மற்றும் நறுமணத்திற்காக உலகெங்கிலும் பியரில் சேர்க்கபட்ட ஹாப்ஸ் , வணிக ரீதியாக பெருமளவில் பயிராக்கவும் பட்டது. மாசசூசெட்ஸ் நிறுவனம் 1629 ஆம் ஆண்டில் ஹாப்ஸை வட அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தியது, ஆனால் இது ஒரு முக்கியமான வணிகப் பயிர் ஆவதற்கு 1800 வரை ஆனது.  இன்று பெரும்பாலான ஹாப்ஸ் ஒரிகான், வாஷிங்டன், இடாஹோ மற்றும் கலிபோர்னியாவில் வளர்க்கப்படுகின்றன.  

மஞ்சள் நிறப்பிசினுடன் பெண்மஞ்சரிகள்

பார்லி அல்லது பிற தானியங்களை ஊறவைத்து பின்னர் அவற்றை முளைக்கச்செய்து, வறுத்து,உடைத்து, பொடித்து, நீர் கலந்து கொதிக்க வைத்த பின்  கிடைக்கும் இனிப்புச்சுவையுடன் இருக்கும் கலவையான வொர்ட் (wort) ல் குறிப்பிட்ட சமயத்தில் இந்த ஹாப்ஸ் செடியின் பெண்மலர்கொத்துக்களை (சிறு சிறு மலர்கள் நெருக்கமாக இணைந்திருக்கும் கனகாம்பர மலர்க் கொத்தைபோன்ற மலர்மஞ்சரிகளை) உருவிப்போடுவார்கள். பின்னர் நொதித்தலுக்காக ஈஸ்ட்  சேர்க்கப்பட்டு பியர் தயாரிக்கப்படும்

கசக்கும் பியருக்கான் விருப்பம் உலகெங்கிலும்  பரவி. ஹாப்ஸின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியபோதே இதன் கலப்பினங்களும்  உருவாக்கப்பட்டன. ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா மற்றும் வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஆண்டு முழுவதும் பூத்துகாய்க்கும் வகையான, கஞ்சாச்செடியின் கன்னாபேசியே cannabaceae  குடும்பத்தைச் சேர்ந்தது இந்தத்தாவரம்.  இதன் பெண்மஞ்சரிகளை மட்டுமே பியர் தயாரிப்பில் பயன்படுத்துவதாலும் இம்மஞ்சரிகள் சரங்களாக தொங்கிக் கொண்டிருப்பதாலும் தமிழில் இவற்றை சரலதை என அழைப்பது பொருத்தமாக இருக்கும்.   

சரலதை (பெயரிட்ட சுபாவுக்கு நன்றி)

ஆண்டு முழுவதும் பூத்துக்காய்க்கும் பல்லாண்டுத்தாவரமான இது சுமார் 50 வருடங்கள் தொடர்ந்து பலன் தரும். ஆண் பெண் கொடிகள் தனித்தனியே காணப்படும். ஆண் பூக்கள் தளர்வான மஞ்சரிகளகவும் ,பெண் மஞ்சரி சரமாக, நெருக்கமாக, இலைச்செதில்களால் சூழப்பட்ட சிறிய மலர்களுடனும் காணப்படும். பொதுவாக உலகெங்கிலும் பயிரிடப்படுவது Humulus lupulus  ஜப்பானில் பயிரிடப்படுவது, Humulus japonicas, சீனாவில் பயிரப்படுவது Humulus yunnanensis  என்னும் வகைகளாகும்.;

இந்தியாவில் இமாச்சலபிரதேசத்தின் லஹால் (Lahaul ) பழங்குடியினரின் கிராமத்தில்தான் 1973ல் ஹாப்ஸ் சாகுபடி  துவங்கியது. அதற்கு முன்பு வரை இம்மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

ஹாப்ஸ் கொடிகள் வைன்ஸ் (Vines) என்றழைக்கப்படுவதற்கு மாறாக பைன்ஸ்’ (Bines) என்று அழைக்கப்படுகின்றன, ஏனென்றால்  அருகிலிருக்கும் ஆதரவை தனது வளைந்த கொடிபோன்ற தண்டுகளால் சுற்றி வளைத்துக்கொண்டு ஏறும் வைன்களை போலல்லாது இவை தண்டுகளிலிருக்கும் கடினமான முட்களைப் பயன்படுத்தி  ஆதரவை பற்றிக்கொண்டு, கடிகார வளைவில் சுற்றிக் கொண்டு ஏறுகின்றன.   

ஹாப்ஸ் கொடிகள்

இதயவடிவில்  பற்களுடன் கூடிய விளிம்புகளை கொண்டிருக்கும், எதிரடுக்கில் அமைந்திருக்கும் இலைகளுடன் இருக்கும் இக்கொடிகளின் பெண் மஞ்சரிகள்   மகரந்த சேர்க்கை நடைபெறும் முன்னர் அறுவடை செய்யப்பட்டுவிடும். விதைகளுக்காக மட்டும் 200 பெண் கொடிகளுக்கு ஒன்று  என்னும் விகிதத்தில் விட்டுவிட்டு மற்ற ஆண் கொடிகள் அகற்றப்பட்டுவிடும். .

ஆழமான ஆணிவேர்களையும் நீரை சேகரிக்கும் மேற்பரப்பு வேர்களையும் அடிக்கிழங்கையும் கொண்டிருக்கும் இவை, கிழங்குகள், நறுக்க்கபட்ட தண்டுகள் மற்றும் விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை விரைந்து வளரும் இயல்புடையவை, 30 அடிவரை வளரும் இவை 18 அடியில் நறுக்கபட்டு அடர்த்தியாக வளர்க்கப்படும். ஒரு ஏக்கரில் சுமார் 1000 கொடிகளை வளர்த்தலாம்..  

ஹாப்ஸ் மலர்கள் கசப்புச்சுவையை மட்டும் அளிக்கும் ஆல்ஃபா மலர்கள் மற்றும்  நறுமணம் அளிக்கும் அரோமா மலர்கள் என இருவகைப்படும். இரண்டு பண்புகளையும் கொண்ட மலர்களுக்கான கலப்பின முயற்சிகள் தாவரவியலாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பியரின் கசப்புச்சுவைக்கும் பிற இயல்புகளுக்கும் காரணமாயிருப்பது இம்மலர்களில் உள்ள ஆல்ஃபா அமிலங்களான ஹுமுலோன், பீட்டா அமிலங்கலான லுபுலோன் உள்ளிட்ட ஏராளமான வேதிச்சேர்மானங்கள் ( humulones , lupulones , leucine, valine, isoleucine, cohumulone colupulone, adhumulone, adlupulone),  இவை மலர்களின் எடையில் 25 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முளைவிட்ட பார்லியின் மிதமான இனிப்புச்சுவையை  ஈடுகட்ட ஹாப்ஸ் பெண்மலர்களிலிருக்கும் மஞ்சள் நிறப்பிசினின் கசப்புச்சுவை மிகபொருத்தமானது. ஹாப் மஞ்சரிகள் பழுத்து, பிசினின் அளவு மிக அதிகமாகவும் இருக்கும்போது அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் இவை  பிசின் உதிர்ந்துவிடமால் கவனமாக உலர்த்தப்படுகின்றன.

பொதுவாக ஹாப்ஸ் மலர்கள் புத்தம் புதியதாக கொதிக்கும் பியர் கலவையில் சேர்க்கப்படுகின்றன. மாறாக உலர்ந்த மலர்க்கொத்துக்களும், பிசினை உலர்த்தி பொடித்த பொன்மஞ்சள் பொடியும், மலர்கொத்துக்களை உலர்த்தி அரைத்து பிசைந்து செய்யபட்ட கட்டிகளும் கூட உபயோகப்படுத்தபடுகின்றன 

ஹாப்ஸ் உலர் கட்டிகள்

ஹாப்ஸ் மலர்கள் கொதிக்க வைக்கப்படும் நேர அளவு, அவற்றின் கசப்பின் அளவீடு (IBUs), மலர்களின் தரம் ஆகியவையே இறுதியில் பியரின் சுவை மணம் தரம் ஆகியவற்றை முடிவுசெய்கின்றது

ஹாப் பிசின்களின் பியர் நுரையை மேம்படுத்தவும் உறுதிப்படுத்தவும் உதவுகின்றன மற்றும்  வொர்ட் கலவையை தெளியவைத்து அதிலிருக்கும் நுண்ணியிரிகளை நீக்குகின்றன. கோப்பைகளில் பியர் ஊற்றப்படும் போது கோப்பையின் விளிம்பில்  பொங்கி நுரைத்து நிலைத்து நிற்கும் ’head’  என்னும் இயல்பையும் அதிகப்படுத்தும். பிரத்யேக வாசனையையும், விரும்பத்தக்க கசப்புச்சுவையையும் அளிக்கும் நெடுங்காலம் பியரை சேமித்துவைக்கவும், பியர்  கெட்டுப்போகாமலும்,  புளித்து விடாமலும் பாதுகாக்கும். இதிலேயே அதிக கசப்புடைய storng hoppy beers, மிதமான கசப்புடைய  weaker hoppy beer ஆகிய வேறுபடும் உள்ளது

உலகெங்கிலுமே சாகுபடி செய்யப்படும் இந்த ஹாப்ஸ் அவை வளரும் சூழலை, நிலப்பரப்பை பொருத்து வளரியல்புகளிலும் வேதிச்சேர்மாங்களிலும் நுண்ணிய மாற்றங்களை கொண்டிருக்கும்.

ஜெர்மனியின் Hallertau  பகுதியில்தான் உலகின் அதிகமான ஹாப்ஸ் கொடிகள் பல்லாண்டுகளாக பயிரிடப்பட்டு வந்தன.  இப்போது அதிகமாக,  அதாவது உலகின் மொத்த ஹாப்ஸ் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு  ஹாப்ஸ் சாகுபடி செய்யும் நாடு  அமெரிக்காதான்

பியரின் கசப்புச்சுவை சர்வதேச கசப்பு அலகில் IBU (international bittering units) அளவிடப்படும் வெவ்வேறு வகையான பியர்களின் கசப்புச்சுவையை அளவிட்டு விளம்பரப்படுத்துகின்றன பல பியர் தயரிப்பு நிறுவனங்கள். IBU அலகின் வரம்பு  0-1,000 ஆகும், ஆனால் மனித சுவை ஏற்பிகள் அதிகபட்சமாக 120 IBU கசப்பை மட்டுமே ஏற்க முடியும். 20க்கும் குறைவான IBU உள்ளவைகள் மிக மிக குறைவான ஹாப்ஸ் சேர்ககப்பட்டவையென்றும், 20 லிருந்து 45 வரை IBU உள்ளவை சாதாரண கசப்பு சுவையுள்ளவையென்றும், 45க்கும் மேல் இருப்பவையே மிகத்தரமான  அதிகளவு ஹாப்ஸ் சேர்க்கப்பட்டவையென்றும் பியர்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அரிதாக 70 கும் மேல் IBU அளவு இருக்கும் வகைகளும் தயாரிக்கப்படுகின்ற்ன

ஹாப்ஸ் பியருக்கென்றே உருவான தாவரமென்றே சொல்லலாம். பியரின் ஆன்மா என்றழைக்கப்படும் ஹாப்ஸ் மலர்களைக்குறித்த ஆய்வுகள் தொடர்ந்து பலவருடங்களாக நடந்தபடியே இருக்கின்றன. இம்மலர்களின் வேறு பல பயன்பாடுகளும் பரிசீலனையில் உள்ளன ஹாப்ஸ் ஆராய்ச்சியென்பது ஹாப்ஸின் இனப்பெருக்கம, வளர்ச்சி, அறுவடை மற்றும் உலர்த்தல், அவற்றின் வேதியியல் மற்றும் பியர் தரத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கம்  என அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியது, உலகெங்கிலும் உள்ள நாடுகளில்  விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களால் விரிவான சர்வதேச ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது.   

பியரின் சுவை மேம்பாட்டிற்கான  சோதனை முயற்சிகள் இன்னும் தீரவில்லை. இப்போதும் ஃபின்லாந்தின் ஒரு வகை பியரை ஜுனிபர் மரக்கிளைகளின் வழியே ஊற்றி வடியச்செய்து பின்னர் அருந்துகிறார்கள். நோக்னே (Nøgne) என்னும் நார்வீஜியாவின் புதிய வகை பியரில் ஒன்றுக்கு மூன்று வகையான ஈஸ்ட் உபயோகப்படுத்தப்பட்டு ஹாப்ஸும் தேனும் சேர்க்கப்படுகின்றது

கடந்த 100 ஆண்டுகளில் உலகளாவிய பீர் உற்பத்தி ஏழு மடங்கு அதிகரித்திருக்கின்றது. தானியங்களின் இனிப்பை மட்டுமல்லாது, வாழ்வின் கசப்பையும் பியரின் கசப்பு சமன்செய்கிறதோ என்னவோ, கடந்த நான்கு தசாப்தங்களில் (1970–2010) உலகளாவிய பியர் உற்பத்தி 630 மில்லியனிலிருந்து 1846 மில்லியன் ஹெக்டாலிட்டர்களுக்கு அதிகரித்திருக்கிறது.  உலகின் அதிகம் விரும்பி அருந்தப்படும் மதுபானங்களில் முதன்மையானதாக பியர் இருப்பதற்கு காரணமாயிருக்கும் ’ஹாப்ஸ்’ தாவர உலகம் நமக்களித்திருக்கும் எண்ணற்ற பயன்களில் மற்றுமொன்று.

வெனிலா (Vanilla)

வெனிலா (Vanilla) என்பது மெக்ஸிகோவை பிறப்பிடமாகக் கொண்ட வெனிலா ஆர்க்கிட்களிடமிருந்து பெறப்படும்  வாசனைப்பொருள். வெனிலா என்றவார்த்தை ஸ்பானிஷ் வார்த்தையான, சிறுநெற்று (small pod)  என்பதிலிருந்து பெறப்பட்டது 

உலகளவில் வெனிலா பிளானிஃபோலியா;  (Vanilla  planifolia). வெனிலா டாஹிடென்ஸிஸ் , (Vanilla tahitensis, )  மற்றும் வெனிலா பம்போனா (Vanilla pompona,), ஆகிய மூன்று முக்கியமான இனங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் வெனிலா பிளானிஃபோலியா அதிகம்பயிரிடப்படுகின்றது .இச்செடி1808.ல் அறிவியல் பெயரிடப்பட்டது.

கொடியாக வளரும் வெனிலா, ஏதேனும் ஒருமரம், அல்லது பிற ஆதாரங்களில் சதைப்பற்றுள்ள வேர்களால் பற்றிக்கொண்டு மாற்றடுக்கில் அமைந்திருக்கும் தடிமனான அடர்பச்சைஇலைகளுடன் 35 மீட்டர் நீளம் வரை படர்ந்து வளரும்.ஒற்றை மலர்க்கொத்தில் 100 வரை பெரிய அழகிய வெள்ளை மற்றும் பச்சை கலந்த நிறத்தில் மலர்கள் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

நீண்ட சதைப்பற்றுள்ள 10-20 செமீநீளமுள்ள, நறுமணம் உள்ள காய்கள் சிறிய விதைகளைக்கொண்டிருக்கும். பூக்கள் ஆண் (மகரந்தப்பை) மற்றும்பெண் (மலர்சூலகம்) ஆகிய இரண்டு இனப்பெருக்கஉறுப்புகளையுமே கொண்டிருக்கின்றன; இருப்பினும் சுய-மகரந்த சேர்க்கையைத் தவிர்க்க ஒருசவ்வு இந்த இரண்டு உறுப்புகளையும் பிரித்து வைக்கிறது. வெனிலா நடவு செய்த மூன்றாவது வருடத்திலிருந்து பூக்கத்தொடங்கும். மலர்ந்த 6 முதல் 9 மாதங்களில் காய்கள் உருவாகி அவைபச்சை நிறத்திலிருந்து இளமஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில்அறுவடைசெய்யப்படும்.

வெனிலாபயிர்களில் மெலிபோன் தேனியால் நடைபெறுவதை தவிர சுயமகரந்த சேர்க்கை நடைபெற 1% வாய்ப்பே உள்ளதால் 1836 ஆம்ஆண்டு, தாவரவியலாளரான சார்லஸ்பிரான்கஸ் மோரன் கைகளால் மகரந்தச்சேர்க்கை செய்வதை பரிசோதிக்கத்தொடங்கினார்.   1841 ஆம் ஆண்டு, கையால் மகரந்தச்சேர்க்கை செய்யும் எளிய முறைஒன்று  12 வயதான எட்மண்ட் ஆல்பியஸ் என்ற அடிமையால் உருவாக்கப்பட்டது.

ஒரு ஆரோக்கியமான கொடி வருடத்திற்கு 50 முதல் 100 காய்கள் வரை உற்பத்திசெய்கிறது; அறுவடைக்கு பிறகு கொடி மீண்டும் 12 முதல் 14 ஆண்டுகளுக்கு  உற்பத்தித்திறன்  உள்ளதாக இருக்கிறது.

இதனுடைய வர்த்தகமதிப்பு காய்களின் நீளத்தை பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றது.  15 செமீ நீளத்திற்கும் அதிகமாக இருந்தால் இது முதல்தரவகையிலும். 10 முதல் 15 செமீ நீளமாக இருந்தால்   இரண்டாவது  தரமாகவும் 10 செமீக்கும் குறைவானவை மூன்றாவது தரத்தின் கீழும் வருகின்றன.

சாகுபடி செய்யப்பட்ட பச்சைக்காய்கள் அப்படியே  விற்கப்படலாம் அல்லது சிறந்த சந்தைவிலையை பெறுவதற்கு   உலரவைக்கப்படலாம். வெனிலா பச்சைக்காய்களின் விலை கிலோ ரூ 3500. இதுவே பதப்படுத்தப்பட்டால், கிலோ ரூ 22,500.

வெனிலாவை உலரவைப்பதற்கு சந்தையில் நான்கு அடிப்படை நிலைகள் இருக்கின்றன: அழித்தல், வியர்ப்பூட்டுதல், மெதுவாக-உலரவைத்தல் மற்றும்  தகுந்தமுறையில் பாதுகாத்தல். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட காய்கள் சேமிக்கப்பட்டு, தரப்படுத்தப்பட்டு, பாரஃபின் உறையில் கட்டாக  சுற்றி வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உலரவைக்கப்பட்ட வெனிலாகாய்கள் சராசரியாக 2.5%  வென்னிலினைக் கொண்டிருக்கிறது.

வெனிலாக்காய்கள்..பிரத்யேகவாசனையுள்ள மூலப்பொருள்கள் நிறைந்தது. வெனிலாவின் சாறில் உள்ள வென்னிலின் (4-ஹைட்ராக்ஸி-3-மெத்தாக்ஸிபென்ஸல்டெஹைட்) இதன் வாசனைப்பண்பு மற்றும் நறுமணத்திற்கு காரணமாகிறது. வென்னிலின் முதல்முறையாக 1858 ஆம் ஆண்டு கோப்லே என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது. 

மற்றொரு சிறிய துணைப்பொருளான பைபரானல் (ஹெலியோடிராபின்).உள்ளிட்ட   பலஉட்பொருட்கள் வெனிலாவின் வாசனைக்கு காரணமாகின்றன.

உலகச்சந்தையில் குங்குமப்பூவிற்கு அடுத்த இடத்திலிருக்கும் வெனிலா, உணவுவகைகளிலும், அழகுசாதன தயாரிப்புகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெனிலாவின் உலகளாவிய உற்பத்தியில் பாதியளவிற்கு. மடகாஸ்கரிலிருந்தே வருகிறது. வெனிலாவில் இருந்து பெறப்படும் எசன்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், குளிர்பானங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.  

வெனிலாவின் அத்தியாவசிய எண்ணைகள் மற்றும் வென்னிலின் ஆகியவை தற்போது நறுமணசிகிச்சையிலும் (Aroma therapy) பயன்படுத்தப்படுகின்றன.

நள்ளிருள் நாறி

நள்ளிருள் நாறி / பிரம்ம கமலம் Epiphyllum oxypetalum

பிரம்மகமலம் நள்ளிருள் நாறி, இரவு ராணி, நிஷாகந்தி, குலேபகாவலி மலர், நள்ளிருள் ஒளிரி, அனந்த சயன மலர் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த அரிய அழகு மலர்ச்செடி கள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்தது. (Cactaceae)

இதற்கு Orchid cactus, Jungle cactus, Night blooming cereus, Dutchman’s Pipe. King of the Himalayan Flowers,  Queen of the Night,  Orchid cactus,  என்னும் ஆங்கிலப் பொதுபெயர்களும் உள்ளன.  இதன் அறிவியல் பெயரான Epiphyllum oxypetalum  என்பதில்  epi, phylum என்றால் இலையில் மேற்பரப்பிலிருந்து என்றும்  oxus என்றால் கூரிய,  petalum என்றால் இதழ்கள் என்றும் பொருள், இலைகளின் மேற்பரப்பிலிருந்து உண்டாகும் கூரிய நுனிகளையுடைய  இதழ்களுடனான மலர்களைக் கொடுக்கும் தாவரம் என்று பொருள்

உண்மையில் இவை இலைகளிலிருந்து மலர்களை தோற்றுவிப்பதில்லை. கள்ளி இனமாதலால் தண்டுகளே தட்டையாக இலைகளைப்போல இருக்கும். இந்த இலைத்தண்டிலிருந்தே மலர்கள் உருவாகும். வழவழப்பான, கொடியைப்போல இருக்கும் இவற்றை தாங்கும் இளம் காம்புகள் சிவப்புநிற செதில் போன்ற அமைப்புக்களால் சூழப்பட்டிருக்கும் எனவே பார்ப்பதற்கு தொப்புள் கொடியைப் போலவே இருக்கும். எனவேதான் இது பிரம்மகமலம் என்று இந்தியாவின் பல மொழிகளில் அழைக்கப்படுகின்றது, பிற பூக்களைப்போல, பகலில் பூத்து, இரவில் உதிர்ந்து விடாமல். பிரம்ம கமலம், இரவில் பூத்து, பகலில் உதிரும். 

வெண்ணிறத்தில் மயக்கும் நறுமணத்துடன் பெருமலர்கள் பின்னிரவில் மலரும்.  ஒரே செடியில் ஒரே சமயத்தில்  40 -100’ க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களைப்போலல்லாது, இவற்றின்   இலைகளைப் போலிருக்கும் தண்டுகளை நறுக்கி நட்டு வைத்தாலே புதியசெடி முளைத்துவிடும்.  இந்த மலர்கள் பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து ஓரிரு நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவை.

இவை  இரவில் மலர்வதனால் நிலவொளியில் இவற்றை   வௌவால்களும், Humming bird moth எனப் பெயர் கொண்ட பெரும் அந்திப்பூச்சிகளும்  (moths) தான் மகரந்தச்சேர்க்கை செய்யும். இரவின் நிலவு, நட்சத்திரம் ஆகியவற்றின் மிகக்குறைந்த ஒளியிலும் மகரந்தச்சேர்க்கை செய்யும் சிறு உயிரினங்களுக்கு இவற்றின் இருப்பு தெரியவேண்டுமென்றே இவை வெண்ணிறத்திலும். நல்ல வாசனையுடனும் இருக்கின்றன.  இப்படி இரவில் மலர்ந்து இரவாடிகள் எனப்படும் (nocturnals ) இரவில் மட்டும் செயலாற்றும் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை செய்யpபடும் மலர்கள் அனைத்திற்கும் பொதுவாக நிலவு மலர்களென்று பெயர்.( moon light flowers ) இந்தப் பூவின் நறுமணத்திற்கு காரணம் இதிலிருக்கும் , Benzyl Salicylate என்னும் வேதிப் பொருள்.

2லிருந்து 3 மீட்டர் உயரம் வரையே இவை வளரும் அதிகம் வளர்கையில் இலைத்தண்டுகளை வெட்டி எடுத்து வேறு புதிய இடங்களில் நட்டு வளர்க்கலாம்.. இச்செடி வளர்ந்து 3 வருடங்களில் 12லிருந்து 17 செமீ அளவிலிருக்கும், மெழுகுபோன்ற வழவழப்பான இதழ்கள் கொண்ட மலர்களை அளிக்கத்துவங்கும்

 சமூக ஊடகங்களில் சொல்லப்படும்  //இது  இமய மலைகளில் மட்டும் வளரும். பத்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வளரும் என்பதெல்லாம் கட்டுக்கதைகள்// இமயத்தில் மட்டுமல்ல , எங்கும் வளரும் இயல்புடையது இச்செடி ,

  தென் அமெரிக்காவின் மெக்ஸிகோ காடுகளைக் தாயகமாகக் கொண்ட இத்தாவரம், அங்கிருந்து உலகமெங்கும் பரவியுள்ளது. நல்ல வளமான மண்ணில் அதிகம் சூரியஒளி படாதவாறு அருகில் இவை பற்றிப்படர கொழுகொம்போ அல்லது மரமோ இருக்குமிடங்களில் வளர்க்கலாம் மரங்களினடியில் வளருகையில்  விரைவாக அவற்றைப் பற்றிக்கொண்டு ஏறி வளரும். மிக அதிகமாக நீர் விடத் தேவையில்லை

இரவின் மலர் என பொருள்படும் இந்த நிஷாகந்தி மலையாள இலக்கியங்களில் சிறப்பான இடம்பெற்றிருக்கின்றது. கேரளத்தில், ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு    ‘நிஷாகந்தி விழா’ என்றே பெயர்.

பின்னிரவில் மலர்ந்து நல்ல மணம் வீசும் இம்மலர் பழந்தமிழ்ப் பாடல்களில் நள்ளிருள் நாறி என்று அழகிய பெயரில் குறிப்பிடபட்டுள்ளது.  இருவாட்சி மற்றும் முல்லையும் இதே பெயரில் சில இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனினும் இவையிரண்டும் பகலில் மலர்ந்து மாலை மணம் வீசுபவை. பிரம்மகமலமே இரவில் மலர்ந்து மணம்பரப்பும் எனவே இதற்குத்தான் இப்பெயர் மிகபொருத்தமாந்தாக இருக்கும்.


 Epiphyllum  பேரினத்தில் 15 சிற்றினங்கள் இருப்பினும் oxypetalum என்னும் சிற்றினமே உலகெங்கிலும் அதிகம் வளர்ககப்படுகின்றது. இலங்கையில் இதன் இரண்டு சிற்றினங்கள் வளர்கின்றன பிரமம்கமலத்தை விட மெல்லிய மலரிதழ்களை கொண்டிருக்கும்  Epiphyllum hookeri யும் இங்கு அதிகம் காணப்படுகின்றது

பிரம்மகமல மலர்கள் சில உடல் நோய்களுக்கு சிகிச்சைக்காக  உண்ணப்படுகின்றன. ஆனால் வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள மலராதலால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இவற்றை உண்ணுதல் கூடாது

 வியட்நாமில் இம்மலரிதழ்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு மருந்தை பாலுணர்வை தூண்டும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவிலும் இம்மலர் பெண் மலட்டுத்தன்மையை நீக்க பழங்குடியினரால் உண்ணப்படுகின்றது. இதயநோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ரத்தக் கொழுப்பை குறைக்கவும் இம்மலர் பயன்படுகின்றது

  மிக மிக அரிதாகவே இச்செடியில் சிறு விதைகளுடனிருக்கும் இளஞ்சிவப்பு கனிகள் உருவாகும். கலப்பின செடிகளில் நிஷாகந்தி மலர்கள் வெள்ளயல்லாத ஆரஞ்சு மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு  நிறங்களிலும்   இருக்கின்றன.

பல கலாச்சாரங்களில் இம்மலரை காண்பது நல்ல சகுனமென்றும், மலரைக் காண்கையில் நினைத்தது நடக்குமென்றும், இந்தச்செடி மலர்வது,  நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் கருதப்படுகின்றது சில தென்தமிழக கிராமங்களில் இச்செடியில் மலர் விரியும் இரவில் அதற்கென பூசைகள் கூட செய்யப்படுவதுண்டு.  சிலர் தங்கள் வீடுகளில் இம்மலர் பின்னிரவில் மலருகையில் நண்பர்களுக்கு விருந்துவைத்து மகிழ்வதும் உண்டு.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஏசு பிறந்தபோது அவரைக்காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக  இம்மலரை கருதி இதை பெத்லகேமின் நட்சத்திரம் என்று அழைக்கின்றனர்.

இலங்கை இந்தியா சீனா ஜப்பான் ஆகிய பலநாடுகளின் தொன்மங்களில் இம்மலர் பலவிதங்களில் இறைத்தன்மையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இலங்கையில் புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகுக்கு வரும் மலரின் வடிவமாக கருதப்படும் இது சொர்க்க மலர் என்று அழைக்கப்படுகிறது.   

சீனாவில் இம்மலர்களை பற்றிய குறிப்புக்கள் 1645ல் எழுதப்பட்ட நூல்களில் உள்ளது. சீனாவில் இது தோன்றியதும் மறைந்துவிடும் புகழின் நிலையாமைக்கு குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. ஜப்பானில் இம்மலரை  கெக்கா பிஜின் அதாவது நிலவில் காணும் அழகு என்று அழைக்கிறார்கள்.  (Gekka Bijin)

 பொதுவாக இதை தாய் மகளுக்கும், நண்பர்கள் பிற  நண்பர்களுக்கும் பரிசாக அளித்து வளர்ப்பதென்றும் ஒரு வழக்கம் இருக்கிறது இச்செடிகளை விலைகொடுத்து வாங்கக்கூடாது யாரிடமேனும் பரிசாக வாங்கவேண்டும் என்னும் நம்பிக்கையும் உலகின் பலநாடுகளில் பொதுவாக இருக்கிறது.

உலகின் மிக விலையுயர்ந்த மலர்களில் இதுவும் ஒன்று சந்தைகளில் விற்கப்படாத மலரும் கூட.

சோற்றுக்கற்றாழை-Aloe vera

ஆஃப்பிரிக்காவின் வடக்குப்பகுதியில் தோன்றிய ஆலோ வீரா (Aloe vera)  உலகெங்கிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நோய் தீர்க்கவும் அழகை மேம்படுத்தவும் அலங்காரச்செடியாகவும் பயன்பட்டு வருகின்றது. இதன் 360 சிற்றினங்களில் 130 மட்டுமெ ஆப்பிரிக்காவில் தோன்றியவை. மற்றவை கலப்பின வகைகள்.

 இதன் சதைப்பற்றான இலைகளினுள்ளிருக்கும் கெட்டியான சாறு பல்வேறு மருத்துவ குணங்களுடையது. கெட்டியான இந்த சாற்றினாலேயே இது சோற்றுக்கற்றாழை என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் இது பிள்ளைக்கற்றாழை.

உலகின் பல நாடுகளில் இந்த தாவரம் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு மருந்துகளும், அழகு சாதனப்பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. சோற்றுக்கற்றாழையின் மருத்துவக்குணங்கள் பண்டைய எகிப்து மற்றும் சீனாவில்  பெரிதும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. மாவீரர் அலெக்ஸாண்டர் தனது குருவான அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் சொகோட்ரா (Socotra) தீவுகளை கைப்பற்றியதே அங்கு செழித்து வளர்ந்திருந்த இந்த கற்றாழைகளுக்காவே என்கின்றது வரலாறு.

நெஃப்ரிடியும்  கிளியொபாட்ராவும்

எகிப்தின் பேரழகிகள் நெஃப்ரிடியும்  கிளியொபாட்ராவும் (Nefertiti and Cleopatra) சருமப்பொலிவிற்கு இதன் சாற்றை பயன்படுத்தினார்கள். எகிப்தியர்கள் இதனை ’’அழியாத்தாவரமென்றார்கள்’’, கிரேக்கர்கள் இதை உலகின் எல்லாப்பிணியையும் போக்கும் மாமருந்தென்றார்கள். மெசாபடோமியாவில்  கிறிஸ்துக்கு 2200 வருடங்களுக்கு முன்பே  சோற்றுக்கற்றாழையின் பயன்கள் இருந்ததை அகழ்வாய்வில் கிடைத்திருக்கும்  களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.

கொலம்பஸ் தனது கடற்பிரயாணங்களில் கப்பலுக்குள்ளேயே தொட்டிகளில் இந்த செடியை வளர்த்தி, உடனிருந்தவர்களின் காயங்களுக்கும், நோய்களுக்கும் சிகிச்சையளித்திருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பேனிஷ் துறவிகள் சோற்றுக்கற்றாழையை பலவிதங்களில் மருந்தாக பயன்படுத்தி , அதன்  பயன்களை பலருக்கும் தெரியப்படுதினார்கள், மாயன்கள் இதை  ”இளமையின் ஊற்று” என அழைத்தார்கள்.

புனித வேதகாமம் சிலுவையிலிருந்து எடுத்த கர்த்தரின் உடலை சோற்றுக்கற்றாழைச் சாற்றில் பதப்படுத்தியதை சொல்கின்றது.  சோற்றூக்கற்றாழையைக் குறித்து 5 இடங்களில் வேதகாமத்தில் குறிப்பிடபட்டிருக்கின்றது.

நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்த பண்டைய எகிப்து நகரமான தெபெஸிலிருந்து, 1858ல் கண்டெடுக்கப்பட்ட, கிறிஸ்து பிறப்பிற்கு 1,550 வருடங்கள் முன்பு எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படும் எகிப்தியர்களின் மருத்துவநூலான  “papyrus of Eber”  ல்  சோற்றுக்கற்றாழைகளின் பல பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நூல் தற்போது ஜெர்மனியின் ஜெர்மனியின் லெய்ப்ஸிக் (Leipzig)  பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. எகிப்தியர்கள் சோற்றுக்கற்றாழையை கடவுளாக வழிபட்டதோடல்லாது, புனிதச்சின்னமாகவும் கருதினார்கள். இறந்த உடல்களை மம்மிகளாக்குதல் என்னும் பதப்படுத்துதலுக்கும் சோற்றுக்கற்றாழையை அதிகம் பயனபடுத்தி இருக்கிறார்கள்.

ஜப்பானில் மருத்துவருக்கு வேலையில்லாமல் செய்யும் தாவரமென்றே இதற்குப் பெயர். அங்கு இந்த ஜெல்லை தயிரில் கலந்து சாப்பிடுவதுண்டு.

இஸ்லாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதங்களில் பயன்படும் இந்த கற்றாழையை அற்புதச் செடி (Miracle plant) என்றே குறிப்பிடுகின்றது. ஷார்ஜாவில்  2014ல் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும், சோற்றுக்கற்றாழை, கருஞ்சீரகம், எலுமிச்சம்புல், அத்தி, ஆலிவ் உள்ளிட்ட  50  மருத்துவ தாவரங்களுக்கென்றே ஒரு பிரத்யேக பூங்காவை உருவாக்கி இருக்கிறார்கள்.

1800 களிலிருந்து இதன் உலகளாவிய பயன்பாடு மருத்துவத்துறையிலும் அழகுசாதனத்துறையிலும் மிகப்பெரும் அளவில் துவங்கியது.1944ல் ’A bomb’ அணுகுண்டு வீச்சில் காயம்பட்ட ஜப்பானிய வீரர்கள் கற்றாழைச்சாற்றை தடவியே விரைவில் நலம்பெற்றார்கள்.  இதன் தாவர அறிவியல் பெயரான Aloe vera வில் Aloe  என்பது கசப்புத்தன்மையுடைய பளபளக்கும் பொருள் என்னும் பொருள்படும் ‘’Alloeh’’  என்னும் அரபிச்சொல்லிலிருந்தும் இதன் சிற்றினப்பெயராகிய vera என்பது கிரேக்கமொழியில் ‘’True’’ உண்மையான என்னும் பொருளையும் கொண்டது. இதன் அறிவியல் பெயரையே உலகெங்கிலும் பொதுப்பெயராகவே வழங்கும் அளவிற்கு இது புழக்கத்தில் இருக்கும் ஒரு தாவரமாகிவிட்டிருக்கிறது.

பாரம்பரிய மருத்துவமுறைகளின் தாய் எனக்கருதப்படும் ஆயுர்வேதத்தில் சோற்றுக்கற்றாழை ‘Ghrita- kumari” எனப்படுகின்றது. பெண்களின் நலனுள்ளிட்ட இதன் பல்வேறு  பயன்களை  இம்மருத்துவ முறை விளக்கமாக சொல்லி இருக்கிறது.. பல்வேறு நோய்களுக்கும் இதிலிருந்து எடுக்கப்படும் மருந்துகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கின்றது

பூஞ்சைத்தொற்று, பேக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் இந்த சோற்றுக்கற்றாழையில் மனித உடலுக்கு மிக அத்யாவசியமான 8 முக்கிய அமினோ அமிலங்களும் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும், பிற முக்கிய சத்துக்களும்  நிறைந்துள்ளது

 உலகெங்கிலும் வளரும் இந்த தாவரத்தின் பேரினமான Aloe பல சிற்றினங்களை உள்ளடக்கியது.  3அல்லது 4 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் இத்தாவரம் அதிகபட்சமாக 21 சதைப்பற்றான இலைகளை உருவாக்கி 30-70செமீ உயரம் வரை வளரும். இதன் சாற்றில் ஏறக்குறைய 200 வகையான முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கோண வடிவில் இருக்கும் சதைப்பற்றான இலைகள் விளிம்புகளில் கூரான பற்களைப்போன்ற அமைப்பை கொண்டிருக்கும் இவை அஸ்போலேடேசியே (Asphodelaceae) குடும்பத்தை சேர்ந்தவை. சிவப்பும் மஞ்சளுமான சிறு மலர்கள்  செடியின் மத்தியிலிருந்து உருவாகும் நீளமான ஒற்றைத்தண்டின் நுனியில் கொத்தாக இருக்கும். இலைச்சோறும், மஞ்சள் நிற இலைப்பிசினும் புற்றுக்கட்டிகளை அழிப்பது, ஜீரணத்துக்கு உதவுவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

 இவற்றில் கொடிபோல படருவது, மரம்போல வளருவது, மிக சிறியது, குறுகிய இலைகள் கொண்டது,செந்நிறமானது என பல அழகிய வகைகள் காணப்படுகின்றன.

சோற்றுக்கற்றாழையின் பயன்கள்

சருமப்பாதுகாப்பு

புற்றுநோயை தடுக்கும்

மலமிளக்கி

கேச வளர்ச்சியை ஊக்குவிக்கும்

உடலை குளிர்விக்கும்

வயிற்று உபாதைகளை குணமாக்கும்

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்

புண்களை ஆற்றும்

நோயெதிர்ப்புச்சக்தியை கொடுக்கும்

 நல்ல முதிர்ந்த இலைகளை செடியின் கீழ்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கலாம். ஒரு சமயத்தில் 3 அல்லது 4 இலைகளை இப்படி எடுக்கலாம். நன்கு கழுவி மேல்தோலை கத்தியால் பிளந்து உள்ளிருக்கும் சோறு போன்ற பிசுபிசுப்பான கண்ணாடிபோல பளபளக்கும் ஜெல் பகுதியை எடுக்கவேண்டும்

இதிலிருந்து வடியும் மஞ்சள் நிறபிசினை வடியவிட்டு ஜெல் போன்ற பகுதியை மட்டும் தனியே எடுத்து உபயோக்கிக்கலாம்.

நேரடியாக உடலின் மேற்புறத்திலோ அல்லது கேசத்திலோ இந்த ஜெல்லை தடவலாம் அல்லது இதை நன்கு கழுவி நொங்கு போன்ற இதன் சதையை சாப்பிடலாம், ஜூஸ் போல தயாரித்தும் அருந்தலாம். பலநாட்களுக்கு இவறை குளிர்பதனப்பெட்டியில் சேமித்தும் வைக்கலாம்

  மாறிவரும் வாழ்வுமுறைகளாலும் மருந்துகளின் பக்கவிளைவுகளினாலும் தாவர மருந்துப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உலகெங்கிலும் இருக்கிறது. கடந்த 20 வருடங்களில் சோற்றூக்கற்றாழையின் தேவை  அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. உலகளவில் தாய்லாந்து சோற்றூக்கற்றாழை ஜெல் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருகிலோ கற்றாழை ஜெல்லின் விலை சுமார்  100 லிருந்து 250 ரூபாய்கள் வரை இருக்கும். பொடியாகவும் ஜெல்லாகவும் சாறாகவும் கழுவி சுத்தம் செய்யப்பட்ட துண்டுகளாக்வும் சந்தையில் இவை கிடைக்கின்றன. வீட்டில் தொட்டிகளில் மிக எளிதாக இவற்றை நல்ல சூரிய ஒளி இருக்கும் இடங்களில் மிககுறைந்த நீரூற்றி வளர்க்கலாம்.

இரண்டு ஏக்கர் நிலத்தில் பெரிதாக எந்த பராமரிப்புச்செலவுமின்றி 20 லிருந்து 30 டன் எடையுள்ள கற்றாழைகளை வளர்த்து 5 அல்லது 6 லட்சம் லாபம் பார்க்கலாம்.அரிதாக சிலருக்கு சோற்றுக்கற்றாழை ஒவ்வாமையை உண்டாக்கும்.

கடுகு- Mustard

வாசனை மற்றும் மசாலாபொருட்களின் தேசமான,உலகின் மசாலாப்பொருட்களின் கிண்ணம் என்றும் அழைக்கப்படும் இந்தியா  ( Land of Spices / Worlds Spice Bowl) அனைத்து மசாலாப்பொருட்களின் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனமான ISO பட்டியலிட்டிருக்கும் 109 மசாலாப்பொருட்களில் 75 இந்தியாவில் விளைகின்றது. இந்தியா இவற்றின் உற்பத்தி, உபயோகம் மற்றும் ஏற்றுமதியிலும் முன்னணியில் இருந்து உலக வாசனைப்பொருட்கள் வர்த்தகத்தில் மிக முக்கியமான இடம் பெற்றிருக்கிறது. அமெரிக்கா, சீனா, வியட்நாம், வளைகுடா நாடுகள், ஜெர்மனி, மலேஷியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்திய மசாலாபொருட்களை மிக அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. இந்திய மசலாப்பொருட்களின் நறுமணம், தரம் மற்றும் சுவை  உலகநாடுகளின் விருப்பத்துக்குகந்ததாக இருந்துவருகின்றது.

வறுத்தும்,அரைத்தும் பொடித்தும் தாளித்தும் பலவிதமானஇயற்கைச் சேர்மானங்கள் சேர்க்கப்பட்டு, உலகெங்கிலும் மிகப்பிரபலமாக உள்ள, அறிவியல் அடிப்படையிலான இந்தியச்சமையலில், குறிப்பாக தென்னிந்திய சமையலில் மசாலாபொருட்களின் இடமும் பயனும் மிககுறிப்பிடத்தகக்து. பல மருத்துவ குணங்களும் சத்துக்களும் நிறைந்த இடுபொருட்கள் இந்தியச்சமையலில் நிரந்தர இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் தாளிதம் செய்யும் மசாலாபொருட்களில் மிக முக்கியமானது கடுகு. கடுகு பல வகைப்படும்.  முழுவிதையாக, எண்ணெயாக, பொடியாக, அரைத்த விழுதாக என்று பல விதங்களில் சமையலில்  கடுகு உபயோகப்படுத்தப்படுகின்றது

கடுகுச்செடிகளின் நீளமான பச்சைக்காய்களின் சிறிய உருண்டை விதைகளே கடுகு எனப்படுகின்றது. ஐரோப்பாவை தாயகமாகக்கொண்ட கடுகின் உலகளாவிய பயன்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துள்ளது.  கடுகில் சுமார் 40க்கும் அதிகமான வகைகள் உள்ளன.

பிரேசிகேசியே குடும்பத்தை சேர்ந்த கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு சிறிய செங்கடுகு பெரிய செங்கடுகு என பலவகைகள் உண்டு.  90 லிருந்து 160 நாட்களுக்குள் முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகும் கடுகுச்செடி நீளமான பசும் இலைகளுடன் மென்மையான இளம் பச்சை தண்டுகளுடனும் இருக்கும். 90 செ மி லிருந்து 4 அடி உயரம் வரை இவை  வளரும்.  கூட்டல் குறியைப்போன்ற வடிவில் அமைந்திருக்கும் நான்கு  மஞ்சள் இதழ்களுடன் கூடிய அழகிய  சிறுமலர்கள் இருக்கும். 

சிலிகுவா (siliqua) என்றழைக்கப்படும் இச்செடியின் காய்களுக்குள்ளே சிறிய கடுகு விதைகள் பொதிந்து இருக்கும். கடுகு விதைகள் 1-2 மி மீ அளவில் இருக்கும்

பலநாடுகளில் கடுகு பயிரிடப்படுகின்றது. களைச்செடியாகவும் கடுகுச்செடிகள் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் செழித்து வளரும். வெள்ளைக்கடுகு  white mustard (Sinapis alba)  வட அமெக்காவின் காடுகளில் இயற்கையாக விளைந்து அங்கிருந்து உலகின் பிற பாகங்களுக்கு சாகுபடி மூலம்  பரவியது.

தங்க மஞ்சள் கடுகு oriental mustard (Brassica juncea),  இமாலய மலைபிரதேசங்களில் வளர்ந்து பின்னர் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் டென்மார்க்கிலும் சாகுபடி செய்யப்பட்டு பரவலாகியது

brown, yellow and oriental mustard seeds

 கருப்பு கடுகு  black mustard (Brassica nigra) அர்ஜெண்டினாவை சேர்ந்தது அங்கிருந்து சிலி, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் சாகுபடி செய்யபட்டு பரவலகியது

நசுக்கப்பட்ட கடுகு சேர்த்த வைனை குறிப்பிடும் லத்தீன் சொற்களான  ‘mustum ardens’(burning wines) என்பதிலிருந்தே  mustard எனப்படும் ஆங்கிலப்பிரயோகம் வந்தது.

காரசாரமான கடுகு உணவுகளை சாப்பிடுகையில் கண்களில் நீர் வருவதால், பண்டைய கிரேக்கர்கள் கடுகை ‘ கண்ணுக்கு தொந்தரவு தருகின்ற ஒன்று’ ( Si ‘na-pi’ ) என்றழைத்தனர்.

 சிந்துச்சமவெளியின் சன்ஹூதரோ பகுதி அகழ்வாய்வில் கடுகின் பயன்பாடு  இருந்ததற்கான சான்றுகள் கிடத்துள்ளன. உலகெங்கும் கடுகை பிரபலமாக்கிய பெருமை ரோமானியர்களையே சேரும். கடுகை சாகுபடி செய்து ஏற்றுமதியும் செய்துகொண்டிருந்த ரோமனியர்களிடமிருந்து 10 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ்  மடாலயத்தின் துறவிகள், சாகுபடி நுட்பங்களை கற்றுக்கொண்டு அங்கும் சாகுபடியை துவங்கி இருக்கின்றனர்

பாரீஸ் அரசகுடும்பத்தினரின் உணவுகளில் கடுகின் பயன்பாட்டை குறித்த  1292 ன் எழுத்துப்பதிவுகள் கிடைத்துள்ளன. பிரான்ஸ் 13 நூற்றாண்டின் மிக முக்கிய கடுகு சாகுபடி மற்றும் பயன்பாட்டிற்கான இடமாக இருந்திருக்கிறது. அங்கு  1336ல்  நடைபெற்ற ஒரு விருந்தில்  ஒரே நாளில்  320 லிட்டர் கடுகு க்ரீமை உண்டதற்கான வரலாற்றுக்குறிப்பும் உள்ளது

1904 ல் அமெரிக்காவில் நடந்த ஒரு  பன்னாட்டு கண்காட்சியில் தான் முதல்முதலாக பிரபல உணவு வகையான ஹாட் டாக்கில் (hot dog) கடுகு சாஸின் சேர்மானம் அறிமுகம் செய்யபட்டு பின்னர் உலகெங்கிலும் பிரபலமாகி இருக்கின்றது.( St. Louis world fair Missouri 1904)

மத வேறுபாடிகளின்றி பல மதநூல்களில் கடுகு குறிப்பிடப்பட்டிருக்கின்றது

புனித வேதகாமத்தில், இயேசு தனது போதனைகளின் போது கூறியதாக மூன்று நற்செய்திகளில் கடுகு குறிப்பிடப்பட்டுள்ளது.

//இஸ்ரேலில் விதைக்கப்பட்ட விதைகளில் மிகவும் சிறியது கடுகே//

 // பரலோக அரசாங்கம் என்பது கடுகு விதையைப்போன்றது//

  // உங்களுக்கு கடுகளவு விசுவாசம் இருந்தால் கூட உங்களால் கூடாத காரியம் ஏதுமில்லை/

”தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்”  என்கிறது இஸ்லாம்

என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன். என்கிறது குர் ஆன்.

சங்கத்தமிழர்கள் கடுகினை ஐயவி என்றனர். மணிமேகலை பேய்கள் பயப்படும் பொருட்களில் ஒன்றாக கடுகை குறிப்பிடுகின்றது. போரில் காயமுற்ற வீரனை இரவில் குருதி குடிக்கும் பேய்களிடமிருந்து காப்பாற்ற கடுகுப்புகையிட்டதை சொல்கின்றது புறநானூறு

பிறந்த குழந்தையை பேயணுகாதிருக்க அதன் தலையில் கடுகைஅரைத்து பூசும் வழக்கமிருந்ததை நற்றிணை  குறிப்பிடுகிறது.கடுகும் நெய்யும் சேர்த்த குழைத்த சோறு, கடுகன்னம் என்று பண்டைய தமிழர்களால் உண்ணப்பட்டிருக்கிறது.

பழந்தமிழர் இறப்பு சார் நிகழ்வுகளில் இறுதி ஊர்வலத்தின் போது கடுகு சிதறுதல் வழக்கத்தில் இருந்திருக்கிறது.   பண்டைய இந்தியாவில் கடுகை வீட்டிற்கு  வெளியே இறைத்துவிடுவது  துஷ்டசக்திகள் வீட்டினுள் நுழையாமலிருக்க உதவும் என்னும்  நம்பிக்கை நிலவியது.

கடைக்கண்ணை பாவையர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்.‘ – என்பது காதலின் வலிமையைப் பற்றி பாரதிதாசன் பாடியது

’’கடுகுப்பூக்களை பார்த்தல்’’ என்பது ஒர் அதிர்ச்சிக்கு பின்னர் திகைத்து நிற்பதை குறிக்கிறது நேபாளத்தில்

பிரான்ஸில் ’’கடுகு மூக்கில் ஏறிவிட்டது’’ என்பது கோபப்படுதலுக்கு இணை வைத்துச் சொல்லப்படும் ஒரு வாக்கியம்

தமிழிலும் உண்டு கோபமான பேச்சை சொல்லுகையில்  ”பேச்சில் கடுகு பொரிந்தது” என்று சொல்லும் வழக்கம்.

கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.

போன்ற முதுமொழிகளும் தமிழகத்தில் பிரபலமானவையே!

கடுகை நறுமணமூட்டியாக பயன்படுத்துவதை குறித்து பெளத்த நூல்களும் சொல்கின்றன

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ரோமின் மிகச்சிறந்த உணவு நிபுணரும் ஆடம்பர உயர்தர உணவு வகைகளை உருவாக்கும் கலையை அறிருந்தவருமான   ஆபிக்யூஸ் (Marcus Gavius Apicius) என்பவரே இன்று நாம் உபயோகப்படுத்தும் கருங்கடுகின் பல உணவுச்சேர்மானங்களை அவரது சொந்தத்தயாரிப்பாக உருவாக்கினார். அவரது தயரிப்பான கடுகு, உப்பு, வினிகர், ஆல்மண்டுகள், பைன் கொட்டைகள் ஆகியவை சேர்ந்த ஒரு தயாரிப்பு இன்றும் ரோமில் மிகப்பிரபல உணவு வகையாக இருந்து வருகின்றது. ரோமானியர்களின்  பிரபல சமையற்கலை நூல்கள் abicius என்னும் பெயரிலேயே  உள்ளன.

19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குடும்பத்தொழிலாக கடுகு உணவுகளை தயாரித்த ஜெரோமியா கல்மேன் (Jeremiah Colman) என்பவர் பிரிட்டிஷ் பேரரசின் மீதே கடுகுப்பொடியைத் தூவி நிரப்பினார் என்கிறது வரலாறு அவரது நிறுவன தயாரிப்புக்களான கடுகுப்பொடி வகைகள் அக்காலகட்டத்தில் தண்ணீரிலும், பீரிலும் பாலிலும் கலக்கப்பட்டு, பரவலாக விரும்பி அருந்தப்பட்டன. J.& J.  Colman என்னும் அந்நிறுவனம் அப்போதே 200 பணியாட்களை அமர்த்தியிருந்தது. இன்று வரையிலுமே இந்நிறுவனம் கடுகுத்தயாரிப்பில் முன்னணியில் இருந்து வருகின்றது

வெண்கடுகைவிட  (Brassica alba) கருங்கடுகில் (Brassica nigra) தான் காரம் மிகுந்து காணப்படும். மிதமான நறுமணம் உள்ள மஞ்சள்/வெள்ளைக்கடுகு  (Sinapis alba)  வட அமெரிக்க உணவு வகைகளில் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றது. அடர் காப்பிக்கொட்டை நிறத்திலிருக்கும்  கடுகின் சுவை (brown mustard-Brassica juncea)aஉலகெங்கிலும் விரும்பப்படுகின்றது. தங்க மஞ்சள் நிற கடுகுதான் (Oriental mustard-Brassica juncea)  கடுகு வகைகளில் முக முக்கியமானது. ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் இந்த கடுகின் விழுது பெருமளவில் உபயோகத்தில் இருக்கிறது. இதன் பொடியும் சூப்களிலும் சாஸ்களிலும்  அதிகமாக சேர்க்கப்படுகிறது.

கடுக்குக்கென்று தனியே சுவை இல்லை. கடுகின் மேல்தோல் அகற்றப்படும் போது  மைரோஸினேஸ் எனப்படும் நொதியம் (enzyme) வெளிப்படுகிறது. . இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம்.  கடுகு நீருடன் சேர்கையில் அலைல் ஐஸோ தையோனேட் என்னும் காரமான நெடியுடைய வேதிப்பொருள் வெளிப்பட்டு எரியும் நெடி வருகின்றது..

 கடுகில் செலினியம், மெக்னீசியம் , உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம் போன்ற, பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் இதில் உள்ளன

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்தும்,  கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

கடுகுச்செடியின் எல்லாப்பாகங்களுமே பயனுள்ளவை. இந்திய கடுகுக்செடியின் (Brassica juncea) கீரையும் உணவாக பயன்படுகின்றது. முளைவிட்ட கடுகு ஆரோக்கிய உணவில் மிக முக்கியமானது. இதில் அதிக கலோரி ஆற்றலும்  நார்ச்சத்தும் ஆண்டிஆக்சிடண்ட்களும், வைட்டமின் K,A,C, கால்சியம், இரும்புச்சத்து பொட்டாஷியம், மேங்கனீஸ் உள்ளிட்ட பல தாவர வேதிச்சேர்மங்களும் நிறைந்துள்ளன கடுகில் மூன்றில் ஒரு பங்கு எண்ணையும் நான்கில் ஒரு பங்கு புரதமும் உள்ளது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.

நியாசின் (விட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன

 மிதமான காரமும், நெடியும், கசப்புமான கடுகின் இயல்பு பலவகையான உணவுகளுக்கு பொருத்தமானதாக இருப்பதால் உலகநாடுகளின் விருப்பத்துகுரிய சுவையாகிவிட்டிருக்கிறது

இந்திய சமையலில் கடுகை வறுத்தோ அலல்து  சூடான எண்ணெயில் பொரித்தோ, மேல் தோலை அகற்றுகிறார்கள். மேலை நாடுகளில் கடுகை பொடித்தோ அல்லது அரைத்த விழுதாகவோ அல்லது முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட தையோ  உணவில் பயன்படுத்துகிறார்கள்.

கடுகின் மருத்துவப்பயன்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தெ அறியப்பட்டிருக்கின்றது. உணவுப்பொருளாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பே கடுகு கிரேக்கர்களால் பல்வலிக்கும் ரத்தஓட்டத்தை சீராக்கவும் பசியுணர்வை தூண்டவும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு உள் உறுப்புகளை தூண்டும் தன்மையை உடையது. பசியை தூண்டக் கூடியது. பூச்சி, வண்டு கடி , தேள் விஷத்தை முறிக்கும் தன்மை கடுகுக்கு உண்டு.

வேனல் கட்டிகள் குணமாக  கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. முடக்கு வாதம், ரத்தச்சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்த்மாவிற்கு தொடர்ந்து கடுகை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல சிகிச்சையாக இருக்கும்.

இருமலை கட்டுப்படுத்தும், ஜீரணத்தை  சீராக்கும், ஒற்றை தலைவலியை போக்கும, விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. 

  கடுகை மருந்தாகவோ உணவகவோ எப்படி பயன்படுதினாலும்  குறைந்த அளவிலேயே உபயோகப்படுத்த வேண்டும்.அதிகளவில் எடுத்துக் கொண்டால் குமட்டல், வாந்தி ஏற்படும்..

கடுகு எண்ணெய்

 பிரான்ஸின்  கடுகு தலைநகரென அறியப்படும் பர்கண்டியிலுள்ள டீஜான் நகரில் நிலத்திலிருக்கும் பொட்டாசியம் சத்தினால் மிகச்சிறப்பான கடுகு உற்பத்தி செய்யப்படுகின்றது. தற்போது பிரான்ஸ் 80 சதவீத கடுகை கனடாவிலிருந்து இறக்குமதி செய்தாலும் டீஜன் கடுகு உலகப்பிரசித்தம்

இங்கிலாந்தின்  பிரபல கடுகுத்தயரிப்பான கோல்மான் (Colman’s) ஜெர்மனியின்   பாரம்பரிய கடுகு தயாரிப்பான க்யூன்,(Kühne), பிரான்ஸின் அமோரா மற்றும்  மெய்லீ Amora (Unilever), Maille , நெதர்லந்தின் மர்னெ (Marne )ஆகியவை உலகப்புகழ் பெற்ற கடுகுஉணவுகள்.

 இந்தியாவில் வட இந்தியப்பகுதிகளில் கடுகு அதிகம் விளைவிக்கபடுகின்றது.. மேற்கு வங்கத்தை கடுகு உணவிற்கான மாநிலமென்றெ சொல்லிவிடலாம். கடுகெண்ணை சமையல், கடுகுப்பொடி உபயோகம் என்று சைவம், சைவம் இரண்டிற்குமே கடுகை பிரதானமாக உபயோகபடுத்துவார்கள் இம்மாநில மக்கள். ஜப்பானில் சுஷி மீன் உணவுடன் தரப்படும் காரசாரமான வசாபியைப்போலவே வங்காளத்தின்  கடுகு சேர்த்து செய்யப்படும் கசுண்டி எனப்படும் கண்ணில் நீர் வரவழைக்கும் சுவையான  உணவு வகை ஒன்று மிகப்பிரபலம். மீனுணவில் கடுகைச்சேர்ப்பது காஷ்மீரி மக்களின் வழக்கம்.

கசுண்டி

உலகெங்கிலும் சுமார்  700 மில்லியன் பவுண்டு கடுகு ஒரு வருடத்தில் உட்கொள்ளப்படுகின்றது உலகிலேயே கடுகை உணவில் அதிக அளவில் பயன்படுத்துவது அமெரிக்கர்கள் தான். தேசிய கடுகு தினம் அமெரிக்காவில் ஆகஸ்டின் முதல் சனிக்கிழமையில் கடுகு தொடர்பான கேளிக்கைகளும் விளையாடுக்களும் , உணவுப்பொருட்களுமாக விமர்சையாக கொண்டாடப்படும்

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பப்லோ விரிகுடாவிற்கு வடக்கே அமைந்துள்ள, திரட்சைதோட்டங்களுக்கும் வை தொழிற்சாலைகளுக்கும் பிரசித்தி பெற்ற  நாபா கவுன்ட்டி (Napa County) பகுதியில் வருடம்தோறும் கடுகுத்திருவிழா மிக விமர்சையாக நடக்கும்.

Napa valley

 கடுகு வாயு என அழைக்கப்படும் முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட, லட்சக்கணக்கணவர்களின் மரணத்திற்கு காரணமாயிருந்த     இரசாயன திரவமான Mustard gas என்பதற்கு கடுகுடன் எந்த தொடர்பும் இல்லை காரமான நெடியுள்ளதாலும், மஞ்சள் நிற புகையினாலும் இப்பெயர் வந்திருக்கலாம்

mustard gas

 பிராசிகேஸியே குடும்பத்தைச் சேர்ந்த, முட்டைகோஸ் மற்றும் கடுகு  வகைகளின் மரபணு மூலத்தையும், உலகெங்கிலும் தற்போதிருக்கும் கடுகுகளின் மரபணுத்தொடர்புகளையும் கணக்கிடும்  சுவாரஸ்யமான  முறை ’’U முக்கோணம்’’(U triangle) எனபடுகின்றது.  இது 1935ல்  வூ ஜங் சூன் (Woo Jang-choon) என்னும் கொரிய தாவரவியலாளரால் உருவாக்கப்பட்டது 

அரிதான அருங்காட்சியங்களின் ஒன்றான  தேசிய கடுகு  அருங்காட்சியகம் அமெரிக்காவின் விஸ்கான்ஸினில் உள்ளது  18986. பேரி லீவென்சனால் (Barry Levenson,) துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் தற்போது 60 நாடுகளிருந்து  தருவிக்கபட்ட 5,300 கடுகு வகைகள் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றது,

கடுகின் வரலாறு மற்றும் அரிய தகவல்களையும் இங்கு அறிந்துகொள்லலாம்.காலை 10 லிருந்து மாலை 5 மணி வரை திறந்திருக்கும்  இங்கு அனுமதி இலவசம். இங்கு இருக்கும் உணவகத்தில் பலதரப்பட்ட கடுகு சேர்க்கப்பட்ட உணவு வகைகள் இலவசமாக சுவைக்கவும் கிடைக்கின்றது

Mustard Museum

 உலகின் மொத்த  கடுகு உற்பத்தியில் கனடா முதல் இடத்திலும் ,   தொடர்ந்து நேபாளமும், மியான்மரும், ரஷ்யா மற்றும் சீனாவும் இருக்கின்றன.  இந்தியா இந்த வரிசையில் 10 ஆவது இடத்தில் தான் இருக்கின்றது.

காஷ்மீர கடுகு வயல்

கள்ளிக்கற்றாழை- Agave

 பாலைக்கற்றாழை அல்லது கள்ளிக்கற்றாழை பேரினமான   Agave என்பது சுமார் 200 சிற்றினங்களை கொண்ட  அஸ்பராகேசியே (Asparagaceae) (துணைக்குடும்பம் அகேவேசியே _ (Agavaceae), குடும்பத்தை சேர்ந்தது. அமெரிக்காவின்  வறண்ட பகுதிகளில் தோன்றிய இவற்றில் 150 சிற்றினங்கள்  மெக்சிகோ மற்றும் கரீபியன் கடற்கரைப்பகுதிகளில்   காணப்படுகின்றன. 12 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றி உலகெங்கிலும் பரவியிருக்கலாம் என்று தாவரவியலாளர்களால் கருதப்படும் இந்த கள்ளிக்கற்றாழைகள் மிகுந்த பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.

இப்பேரினத்தைச்சேர்ந்த பல தாவரங்களிலிருந்து மதுபானங்கள், நார், வலை, கைவினைப்பொருட்கள் எரிபொருட்கள் ஆகியவை பெறப்படுகின்றன. பல தாவரங்கள்  அலங்காரச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன.  53 சிற்றினங்களிலிருந்து பல வித மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றது.

கள்ளிக்கற்றாழைகளின்  சதைப்பற்றுடன் கூடிய வாள் போன்ற இலைகள் ரோஜா மலரிதழ்களைப்போல அடுக்கடுக்காக அழகாக அமைந்திருக்கும். இலைகள் 2லிருந்து 3 மீட்டர் நீளமிருக்கும். பெரும்பாலானவை இலைகளின் விளிம்புகளிலும் நுனியிலும் கூரிய முட்களிக்கொண்டிருக்கும். இதன்காரணத்தாலேயே இவை கள்ளிக்கற்றாழைகள் எனப்பெயர்பெற்றன.

இலைகள் இளம்பச்சை, அடர் பச்சை, சாம்பல், நீலம், வெள்ளி மினுங்கும் பச்சை, நீலச்சாம்பல் என பல வண்ணங்களில் இருக்கும். இலைகளின் விளிம்புகளில் வேறு வண்ணமிருப்பவையும், வரிகள் உள்ளவையும் உண்டு   பெரும்பாலான கள்ளிக்கற்றாழை வகைகளில் இலைகளினடியிலிருக்கும் கிழங்குகளிலிருந்தே புதிய தாவரங்கள் முளைக்கும்

கள்ளிக்கற்றாழைகள் அனைத்துமே ஒரு முறை பூத்துக்காய்த்தபின் மடிந்துவிடும் monocarpic வகையை சேர்ந்தவை. அதிகபட்சமாக 35 வருடங்களே இவை உயிர்வாழும். இலையடுக்குகளின் மத்தியிலிருந்து வளரும் 9-12 மீட்டர் உயரம் வரையிருக்கும் தண்டுகளில், இளம்பச்சை பழுப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண மலர்க்கொத்துக்கள் உருவாகும். 6 இதழ்களுடன் இருக்கும் மலர்களில் இனிப்புச்சுவையுள்ள சாறு நிறைந்திருப்பதால் பூச்சிகள், தேன்சிட்டுக்கள் பட்டாம்பூச்சிகள் , அந்துப்பூச்சிகள், வவ்வால்கள் ஆகியவற்றை கவர்ந்திழுக்கும்.

கற்றாழை இலை முள்

மெக்சிகோ முழுக்கவே இக்கள்ளிக்கற்றாழைகள் பரவியுள்ளதால் இவற்றின் பல்வேறுபட்ட பயன்பாடுகளை மெக்சிகோவின் பழங்குடியினர் தொன்றுதொட்டே அறிந்திருந்தனர். கயிறுகள், பிரஷ்கள், செருப்புக்கள், பாய்கள், போன்றவறை இச்செடிகளின் இலைநாரிலிருந்து தயாரிக்கும் வழக்கம் மெக்சிகோவில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றது.

Sisal எனப்படும் இலைகளின் நாரை நுனியிலிருக்கும் ஊசிபோன்ற முள்ளுடனேயே உருவி எடுத்து ஊசியும் நூலும் போல உபயோகப்பபடுத்தும் பழக்கமும் அவர்களுக்கு இருக்கின்றது. இலைகளை செதுக்கி விட்டு அன்னாசிப்பழம்போன்ற  அடிப்பகுதியை நெருப்பில் வாட்டியும், அரைத்தபின்னர் சமைத்தும் உண்ணும் வழக்கமும் உண்டு. இந்த அடிப்பகுதியில் நிறைந்திருக்கும் மாவுச்சத்தைத்தான் நொதிக்க வைத்து மது பானமாக்குகிறார்கள்.

 மலர்ச்சாற்றை சர்க்கரைக்கு பதிலாக உபயோகப்படுத்துவார்கள். Agave syrup எனப்படும் இந்த கற்றாழைத்தேன் மிக பிரபலமான சர்க்கரை மாற்றுப்பொருளாக உலகெங்கிலும் உபயோகத்திலிருக்கின்றது. இலைசாற்றில் நஞ்சிருப்பதால் சமைக்காமல் உண்ணுவது ஆபத்தானது

ஒருவித்திலை (Monocot) வகையைச்சேர்ந்த  கள்ளிக்கற்றாழைகள்    அனைத்துமே மிக மெதுவாக வளரும் இயல்புடைய பல்லாண்டுத்தாவரங்கள்

சோற்றுக்கற்றாழையும் கள்ளிக்கற்றாழையும்

பொதுவாகவே Aloe  எனப்படும் சோறறுக்கற்றாழைகளையும் இந்த கள்ளிக்கற்றாழையான Agave களையும் ஒன்றென குழப்பிக்கொள்ளுபவர்கள் உண்டு. நம் அனைவருக்கும் மிகவும் தெரிந்த மருத்துவப்பயன்கள் ஏராளம் கொண்டிருக்கும் சோற்றுக்கற்றாழை Aloe vera,.

 தரிசு நிலங்களிலும் வேலியோரங்களிலும் ரயில் தண்டவாள ஓரங்களிலும் மாபெரும் பச்சை ரோஜாஇதழ்களை போல வளர்ந்திருப்பவையே Agave பேரினத்தைச்செர்ந்த கள்ளிக்கற்றாழை வகைகள்.

சோற்றுக்கற்றாழையான Aloe ஆப்பிரிக்காவின் சஹாரா பாலையின் தென்பகுதியில் தோன்றியவை. கள்ளிக்கற்றாழையான Agave  மெக்சிகோவில் தோன்றியவை.  இரண்டு வகைச்செடிகளுமே சதைப்பற்றான , கூர் நுனிகளை உடைய, விளிம்புகளில் முட்கள் இருக்கும் இலைகளையும் இனிப்பான திரவத்தைச் சுரக்கும் மலர்களையும், கொண்டிருந்தாலும், இவை இரண்டும் வேறு வேறு தாவரக்குடும்பங்களை  சேர்ந்தவை Agave, Asparagaceae குடும்பம் Aloe ,  Asphodelaceae குடும்பம்.

Agave ,இலைகளின் அளவிலும் முட்களின் நீளத்திலும் Aloe வை விட பெரியது. Agave வின் சாறு நச்சுத்தன்மை கொண்டது, Aloe வின் சாறு உண்ணத்தக்கது மருத்துவ குணங்களுடையது, இப்படி இரண்டிற்கும்  நிறைய வேறுபாடுகள் உள்ளன

கள்ளிக்கற்றாழையின் முக்கியமான சில வகைகள்;

நரிவால் கற்றாழை-Fox Tail Agave- Agave attenuata

வெள்ளி நிறம் மினுங்கும் இளம்பச்சையில் ரோஜா இதழ்களைப்போல அடுக்கில் அமைந்திருக்கும் இந்த கற்றாழை மிக அழகிய தோற்றமுள்ளது. மேலும் பிற கற்றாழை வகைகளைப்போல இலையின் ஓரங்களில் முட்களும் இல்லாதது. பச்சையும் மஞ்சளும் கலந்த இதன் நீண்ட மலர்க்கொத்துக்கள் நரிவாலைப்போல உயரமான தண்டில் அமைந்திருப்பதால்  இப்பெயர் பெற்றிருக்கும் இவை தோட்டங்களில் அழகுச்செடியாக வளர்க்க மிகவும் ஏற்றது

கரீபியன் கற்றாழை-Carribean Agave- Agave angustifolia

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த கற்றாழை இளம்பச்சையில் வெண்ணிற ஓரங்களுடன் நீண்ட வாள் போன்ற உறுதியான,  விளிம்புகளில் உறுதியான முட்களை கொண்டிருக்கும் இலைகளைக்கொண்டது. அடர்ந்த இலை அமைப்பினுள்ளிருந்து 10அடி உயரமுள்ள மலர்த்தண்டு உருவாகி அதன் உச்சியில்  இளம் பச்சைநிற கிளைத்த  மலர்கொத்துக்கள் உருவாகும். இவற்றை தோட்டங்களின் ஓரங்களில் வளர்க்கலாம். இச்செடியின் இலைகள் இணைந்திருக்கும்

அன்னாசிப்பழத்தைபோன்ற heart  எனப்படும் அடிப்பகுதியிலிருந்து  மெஸ்கல் (mezcal) என்னும் மதுபானம் தயாரிக்கப்படுகின்றது. முட்டை வடிவ இலைநுனியில் கூரான ஊசிபோன்ற அமைப்பிருக்கும்

நீலக்கற்றாழை- Blue Agave- Agave tequilana

நீலக்கற்றாழை

மெக்ஸிகோவின் டெக்யூலா நகரில் எரிமலை மண்ணில் வளரும் இந்த நீலக்கத்தாழைச்செடிகளிலிருந்து, அந்நகரின் பெயருடைய  ’’டெக்யூலா’’ என்னும் மதுபானம் தயாரிக்கப்படுகின்றது.
 (Tequila). டெக்யூலா தயாரிக்க கற்றாழையின் இலையடியில் அன்னாசிப்பழம் போன்ற வடிவை வெட்டி தயாராக்கும் முறை  அங்கிருக்கும் பழங்குடியினரால் மட்டுமே செய்யப்படுகின்றது.

‘Heart ‘ எனப்படும் இலைகளின் அடிப்பகுதி

பெயருக்கேற்றபடி நீலப்பச்சையில் அகலமும் நீளமும் உடைய வாள்போன்ற உறுதியான இலைகளின் ஓரங்களில் கூரிய முட்களை உடைய இந்த கற்றாழை 5 வருடங்களானபின்பு அழகிய மஞ்சள் நிற மலர்க்கொத்துக்களை உருவாக்கும்

நூற்றூக்கற்றாழை- American  Century Agave-Agave Americana

 குட்டையான, மிகக்கூரிய நுனிகளையும் இளமஞ்சள்பட்டைகள் உள்ள ஓரங்களையும் கொண்டிருக்கும் இலைகளைக்கொண்ட, பெருங்கள்ளி வகைச்செடியான இந்த கற்றாழையின் மலர்கள் தேன்சிட்டுக்களை வெகுவாக கவரும். தோட்டக்கலைத்துறை விருதுகள் பலவற்றை பெற்றிருக்கும் மிக அழகிய தோற்றமுள்ள கற்றாழை இது. உலகெங்கும் அதிகம் அலங்காரச்செடியாக வளர்க்கப்படும் கற்றாழையும் இதுவே. மலர்கள் நீள மூக்கு வவ்வால்களாலும், தேன்சிட்டுக்களினாலும் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன.நூற்றூக்கற்றாழை என அழைக்கப்பட்டாலும் இவை 35 வருடங்கள் வரையே உயிர் வாழும்.

திமிங்கல நாக்குக்கற்றாழை-. Whale’s Tongue Agave -Agave ovatifolia

உட்புறம் குழிந்த,  கிண்ண வடிவில்,  திமிங்கல நாக்கைப்போன்ற அழகிய இலைகளில் நுனியில் 25 செமீ நீளமுள்ள  ஊசிபோன்ற  நீட்சி இருக்கும். இளம்பச்சை நிற இலைகளின் மத்தியிலிருந்து உருவாகும் தண்டில் மலர்க்கொத்து  வர 10 ஆண்டுகளாகும். பசுமஞ்சள் நிற மலர்கொத்து மிக அழகியதாக இருக்கும்.  மிக அழகிய   இக்கற்றாழைகள் பெரும்பாலும் தனித்தே காணப்படும். செடியின் மத்தியிலிருந்து உண்டாகும் உயரமான தண்டிலிருந்து அழகிய மஞ்சள் நிற மலர்கொத்துகள் உண்டாகும்.

இதன் அடித்தண்டை வெட்டினால் சுரக்கும் இனிப்பான திரவத்தை நொதிக்க வைத்து  புல்க்யூ (Pulque) என்னும் மதுபானம் தயரிக்கப்படுகின்றது.

pulque பானம் தயாரிக்க கற்றாழைத்தண்டின் சாறு பாரம்பரிய முறையில் சேகரிக்கப்படுகின்றது

பிட்டா (pitta) எனப்படும் இலைநார்கள் கயறு, பாய், கெட்டியான துணிகள் ஆகியவற்றை உருவாக்கபயன்படுகின்றது. இதன் நார்களைக்கொண்டு எம்பிராய்டரி செய்யபட்ட தோல்பொருட்கள்  பிடெடோ piteado எனப்படுகின்றன.

உலர வைக்கப்படும் கற்றாழை நாரானா’ பிட்டா’
piteado belt

ஆக்டோபஸ் கற்றாழை- Octopus Agave- Agave vilmoriniana (கணவாய் கற்றாழை)

இக்கற்றாழைச்செடிகள் 1899 ல் ஜோசஃப் நெல்சன் ரோஸ் என்பவரால் மெக்சிகோவின் கெளடாலஜரா  நகரில்  கண்டறியபட்டது.

  நீண்ட ரிப்பன்களைப்போன்ற நுனி வளைந்து சுருண்டிருக்கும் இலைகள் எண்காலி எனப்படும் ஆக்டோபஸின் உணர்கொம்புகளைப்போல இருப்பதால் இவற்றிற்கு ஆக்டோபஸ் கற்றாழை என்றே பெயர் வந்தது. இவை  10 வருடங்களில் 40 அடி உயரமுள்ள தண்டில் மஞ்சள் நிற மலர்கொத்துக்களை உருவாக்கும். 18 ஆம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸில் வாழ்ந்த வில்மோர் என்பவர் உலகின்  பலநாடுகளிலிருந்து மரங்களின் விதைகளை  வரவழைத்தவர். இவரது பெயர் ஃப்ரான்ஸின் வரலாற்றில் மிக முக்கியமான இடம்பெற்றிருக்கின்றது. இவரை கெளரவிக்கும் பொருட்டே இந்த கற்றாழைக்கு வில்மோரியான் என்று பெயரிடப்பட்டது.

இதன் இலைகளில் நுரைக்கும் தன்மையுள்ள வேதிப்பொருளான saponin  இருப்பதால், மெக்சிகோவின் சில பகுதிகளில் வெட்டி உலர்த்தபட்ட நார்களுக்குள்  சோப்புதுண்டங்களை வைத்து துணி துவைக்கும் பிரஷ்கள் செய்யப்படுகின்றன. (brush with built-in-soap) பல பூங்காக்களில் இவை  அலங்காரச்செடிகளாக வளர்க்கப்படுகின்றன.

விக்டோரிய மகாராணி கற்றாழை- Queen Victoria Agave -Agave victoriae-reginae

கற்றாழைகளிலேயெ அரிதான இந்த வகையை தொட்டிகளிலும் வளர்க்கலாம். மகுடம் போன்ற அமைப்பில் மிக நெருக்கமாக செருகப்பட்டது போல  இலைகள் அமைந்திருப்பதால் விக்டோரிய மகாராணியின் பெயரால் இக்கற்றாழை அழைக்கப்படுகின்றது

.

தூரிகையால் தீட்டியதுபோல இலைகளின் ஒரத்தில் மெல்லிய  வெள்ளைக்கோடு காணப்படும். மெக்சிகோவின் சிக்குவாஹுவன் பாலையில் (Chihuahuan Desert) இவை பரவலாக  காணப்படும். பச்சை மற்றும் பழுப்பு நிற மலர்கள் கொத்தாக இலைகளின் நடுவிலிருந்து உண்டாகும் தண்டின் நுனியில் காணப்படும்

நூல்கற்றாழை -Thread –leaf Agave- Agave filifera

சிறிய வகை கற்றாழையான இதில் தளர்வான அடுக்குகளாக அமைந்திருக்கும் இலைகளுடன் இலைமொட்டுக்கள் உரிக்கும் நூல் போன்ற இழைகள் நூலகண்டை பிரித்து போட்டதுபோல காணப்படும். இளம்பச்சையில் உலோகப்பளபளப்புடன் காணப்படும் இச்செடி அதிகபட்சமாக 3 அடி வரையே வளரும்.

 இலைகளின் அடியில் இருக்கும்  மொட்டுக்களிலிலிருந்து புதிய செடிகள்  முளைக்கும். தொட்டிகளில் வளர்க்க ஏதுவானது இந்த கற்றாழை Royal horticultural society வழங்கும் தோட்டக்கலைத்துறை விருதையும் பெற்றிருக்கிறது இந்த அழகிய கற்றாழை. பிரகாசமான மஞ்சளும் சிவப்புமான மலர்களுடன் மலர்கொத்து உண்டாகும்.

கடற்கரைக்கற்றாழை-Coastal Agave- Agave shawii

மிகமிக அரிதான இந்தக்கற்றாழை மிஸவ்ரி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய   Henry Shaw என்பவரை கெளரவிக்கும் விதமாக shaw Agave எனப்பெயரிடப்பட்டது. நகரமயமாக்களில்  பெருமளவில் அழிந்துபோய்விட்ட இவை  தற்போது கலிஃபோர்னிய கடற்கரைகளில் மட்டுமே காணப்படுகின்றன. மிக மெதுவாக வளரும் இயல்புடைய இதன் இலைகள் 50 செமீ அளவில் முட்டை வடிவில் அமைந்திருக்கும். இலை விளிம்புகளில் ரம்பம் போல முட்கள் அமைந்திருக்கும். இலைகளின் மத்தியிலிருந்து தோன்றும் உயரமான மலர்காம்பிலிருந்து ஊதாவண்ண  இலைச்செதில்களால் (Bracts) சூழப்பட்ட மஞ்சள் – சிவப்பு மலர்கள் உருவாகும். இவை மணற்பாங்கான இடங்களில் நன்கு வளரும் இயல்புடையவை

இரட்டை மலர்க்கற்றாழை – Twin flower Agave -Agave geminiflora

மெக்ஸிகோவின் 32 மாநிலங்கலில் ஒன்றான  நயாரிட்டில் (Nayarit)  மட்டுமே காணப்படும் இவ்வரிய வகைக்கற்றாழை குட்டையானது   2 அடி வரை வரையே வளரும். 12 அடி உயுர மலர்த்தண்டின் இருபுறமும்  வரிசையாக  இளஊதாமஞ்சள் நிற மலர்கள் தோன்றுவதால் இக்கற்றாழைக்கு இந்தப்பெயர் வந்தது.. ஒரு செடியில்  60 செமீ நீளமுள்ள 100 லிருந்து 200 இலைகள் அடுக்கடுக்காக அமைந்திருக்கும்,

இலை விளிம்புகளின் நார்கள் நூலிழைகளைப்போல உரிந்து வந்து இலைகளின் அடுக்குகளுக்குள் சிக்கி இருப்பதும் அழகாக இருக்கும்

மலைக்கற்றாழை-Mountain Agave-Agave Montana villarreal

நீலக்கற்றாழையைப்போலவே இதன் இலைகள் இருக்கும் ஆனால் இளம்பச்சை நிறத்தில் அதிக சதைப்பற்றுடன்  இருக்கும்.  இலைகளின் ஓரங்களில் லவங்கபட்டையின் அடர் சிவப்பில் கோடுகள் இருக்கும்.

10 வருடங்களுக்கு பிறகு 20 அடி நீள மலர்த்தண்டு உருவாகி  பிரகாசமான மஞ்சள் நிற மலர்கள் உண்டாகும். இக்கற்றாழை 4 அடி உயரம் வரை வளரும். எந்த நோயும் இந்த கற்றாழையை தாக்காது. இது கற்றாழைகளின் அரசி என அழைக்கப்படுகின்றது. இனிப்புச்சுவை உள்ள இதன் மலர்களை உள்ளூர் மக்கள்  சாப்பிடுவதுண்டு. மலர்கள் வண்ணத்துபூச்சிகளை அதிகம் கவரும். இலைச்சாறு பட்டால் தோல் அழற்சியை உண்டாகும்.

பெருங்கற்றாழை-Agave salmiana ferox-Feroceous/Giant Agave

11 அடி உயரம் வரை வளரும் இந்தக் கற்றாழை அடர்பச்சை நிறத்தில் அகன்ற உறுதியான இலைகளைக் கொண்டது. இலைகள் ரோஜா இதழ்களைப்போல அடுக்கடுக்காக ஆனால் தளர்வாக அமைந்திருக்கும். இலைகளின் விளிம்புகளில் மிகக் கூரிய   8 செமீ நீளமுள்ள பெரிய முட்கள் அமைந்திருக்கும். 15லிருந்து 25 வருடங்களில் நீண்ட மலர்த்தண்டின் நுனியில் பசுமஞ்சள் நிற மலர்களை உருவாக்கும். இவற்றை தொட்டிகளிலும் வளர்க்கலாம்.

ஒரு சில மென்மையான இலைகளைக்கொண்டிருக்கும் வகைகளைத்தவிர பிற கள்ளிக்கற்றாழைகள் அனைத்திற்குமே நல்ல சூரிய ஒளி தேவைப்படும். அதிகமாக நீர் ஊற்றினால் வேர்கள் அழுகிவிடும். மணற்பாங்கான இடங்களில் செழித்து வளரும். வாடிய இலைகளை வெட்டுகையில் ஆங்கில ‘v’ வடிவத்தில் இலையின் கீழ்பகுதி இருக்கும்படி வெட்டவேண்டும். இல்லாவிடில் அடித்தண்டு உலர்ந்துவிடும்.

மதுபானங்களுக்காக கள்ளிக்கற்றாழைகளை ’ஜிமாதர்’கள் (jimador) எனப்படும் பழங்குடி இனத்தை சேர்ந்த  திறமையானவ்ர்கள், (Coa ),கோவா எனப்படும் நீண்ட கைப்பிடியின் நுனியில் வட்ட வடிவ மிகக் கூரான கத்தியை உடைய உபகரணத்தால் இலைகளை பாதுகாப்பாக  செதுக்கி அடித்தண்டை எடுப்பார்கள்.

கள்ளிக்கற்றாழைகளின் புகைப்படங்களை பார்க்க; https://www.shutterstock.com/search/agave

கோரைப்புல்

 Sedge, nut grass, coco grass என்றெல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற Cyperus rotundus என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட கோரைப்புல், 92 நாடுகளில் பரவி 52 வகையான உணவு மற்றும் உழவுப்பயிர்களுக்கு இடையூறு செய்யும் களைகளில் மிக முக்கியமானதாகும். ’one of the world’s worst weeds’. என்று குறிப்பிடப்படும்  மிகசுவாரஸ்யமான  களைச்செடியான இது சைப்பரசியே (Cyperaceae) குடும்பதைச் சேர்ந்தது.

புல்லினத்தைச்சேர்ந்த இக்கோரை தாவரவியலாளர்களால் ஹவாய் தீவுகளில் முதன் முறையாக 1850ல் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

பல்லாண்டுத்தாவரமான இதன் தாயகம் ஆப்பிரிக்கா, விரைவிலேயே இது தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிப்பெருகியது. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான அடர் பச்சை நிறத்தில் மூன்று வரிசைகளாக அடிப்பக்கம் இலையுறையுடன் கூடிய நீண்ட இலைகளையுடையது.   இளம்பச்சை நிறத் தண்டுகள்  முக்கோண வடிவிலிருக்கும்

 இவை பெருங்கோரை சிறுகோரை என்று இருவகைப்படும். சுமார் 150 செமீ வரைகூட பெருங்கோரை வகைகள் வளரும். சல்லிவேர்கள் மட்டும் இருக்கும் கிழங்குகளற்ற  இந்த பெருங்கோரை வகையைத்தான் வயல்களில் வளர்த்திப்பின் அதை பாயாகப் பின்னுவார்கள்

பெருங்கோரை

 மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலங்களிலும்  பயிர்களுக்கு இடையே களையாகவும் கோரை வளர்ந்திருக்கும்கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாகவும், உட்புறம் வெள்ளையாகவும் இருக்கும். இது மென் கசப்புத்தன்மையுடையது. ஆனாலும் விரும்பத்தக்க நறுமணத்துடனும் இருக்கும். இக்கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும்.

கோரையின் கிழங்குகள் மண்ணிற்கடியிலும் பக்கவாட்டிலும் எல்லா திசைகளிலுமாக வளர்ந்து ஒரு கிழங்குத்துண்டிலிருந்து சுமார் 600 செடிகள் வரை வளர்ந்து ஒரு குழுவாக அடர்ந்து காணப்படுவதால் Colonial  grass என்றே விவரிக்கப்படுகின்றன. கிழங்குகள் சதைப்பற்றுடன் தொடர் சங்கிலிகளை போன்ற வடிவங்களில்  இருக்கும்.  கிழங்குகளின் dormancy period அதிகமென்பதால் மண்ணிற்கடியிலேயே ஆழப் புதைந்திருந்தாலும்   7 வருடங்களுக்குப் பிறகும் முளைக்கும் திறனுள்ளவை. நல்ல வளமான மண்ணில் ஒரே வாரத்தில் 20 முதல் 30 லட்சம் கிழங்குகள் வளர்ந்து விடும். கோரை 20 முதல் 90 சதமானம் பயிர்களின் விளைச்சலை குறைத்துவிடும். கோரையை முற்றிலுமாக அழிக்க முடியாது அவ்வபோது கட்டுக்குள் கொண்டுவருவது மட்டுமே பெரும் முயற்சிகளுக்கு பின்னர் சாத்தியம்.

 2000 வருடங்களாகவே இக்களை உலகெங்கும் மிக வேகமாக பரவியிருக்கிறது ஆப்பிரிக்காவிலும் சீனாவிலும் உணவு மருந்து மற்றும் நறுமணத்தைலங்கள் தயாரிக்க இக்கோரை  பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன கசக்கும் சுவையுடைய கிழங்குகள் பஞ்ச காலதில் உணவாகப் பயன்பட்டிருக்கின்றன. கோரைக்கிழங்குகளை பன்றிகள் விரும்பித் தின்னும். பண்டைய இந்தியாவில் கோரையைக் கட்டுப்படுத்த பன்றிகளை வளர்த்திருக்கிறார்கள்.ஒரு பன்றி 5 கிலா வரையிலும் கிழங்குகளை அகழ்ந்தெடுத்து விடுவதால் கோரைகளை இவற்ற்றின் மூலம் பெரிதும் கட்டுக்குள் கொண்டு வரமுடிந்திருக்கின்றது

கோரையைப்பற்றிய முதல்குறிப்புக்கள் சீன மருத்துவ நூலில் முதன்முதலில் கிருஸ்துவுக்கு  500வருடங்களுக்கு முன்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது . 

மருத்துவப் பயனுடைய கோரைக்கிழங்குகள் பழந்தமிழ் இலக்கியங்களில் முத்தக்காசு எனக்குறிக்கப்பட்டுள்ளன. இதன் இலக்கியபெயர் எருவை, சேற்று நிலத்தில் சண்டையிட்டுக்கொள்ளும் எருமைகளின் காலில் மிதிபட்டு கோரைகள் மடியும் என்கிறது பெரும்பாணாற்றூப்படை

(கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை,விளைந்த செறுவில் தோன்றும் நாடன்,)

. கோரைப்புல்லில் பாவைகளை செய்யும் வழக்கமும் முன்பு இருந்திருப்பதை குறிப்பிடும் ஐங்குறுநூறு இதனை பைஞ்சாய் என்கிறது

பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானேஐங் 155/5 (நான் பஞ்சாய்க் கோரைப் பாவையாகிய பிள்ளையை ஏற்கனவே பெற்றுவிட்டேன்)

தலைவன்பள்ளத்து நீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த ஒளிரும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினைக்கொண்டவன் எனிறாள் தலைவி   அகநானூற்றில்,

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன

நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்அகம் 62/1,2

கோரை புல் மூலம், பொதுமக்கள் உறங்க பயன்படுத்தும் பாய்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கோரைப் பாய் உடலின் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருவதால் நல்ல உறக்கம் கிடைக்கும். மேலும், கான்கீரிட் அமைக்கவும், திரைச்சீலை அமைக்கவும் கோரை புல் பயன்படுகிறது

 ஒருமுறை சாகுபடி செய்து விட்டால் , குறைந்த பட்சம் 20 ஆண்டு வரை, ஆறு மாதத்துக்கு, ஒருமுறை அறுவடை செய்யலாம். அதிகளவில் தண்ணீர், உரம் மற்றும் பராமரிப்பு செலவில்லாத கோரைப்புல், கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எல்லா வகையான காலநிலையிலும் கோரையை வளர்க்கலாம்.

சாயவனேஸ்வரர்

 நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சாய்க்காட்டில் கோச்செங்கட்சோழன் கட்டிய குயிலினும் இனிமொழியம்மை உடனுறை சாயாவனேஸ்வரர் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது கோரையாகும். இது ஒரு புல் வகையெனினும் தலமரமாகவே குறிக்கப்படுகின்றது.

தாவரவியலில் களை ,என்பது a right plant in a wring place . இத்தனை செழித்து வளரும், மருத்துவப்பயன்களுள்ள இக்கோரையை கிழங்குகளின் மருத்துவ பயன்களுக்காக தனியே சாகுபடி செய்கிறார்கள் ஆயுர்வேதத்தில் பல முக்கியமான மருந்துகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் முஸ்தக் அல்லது முத்தா என்றழைக்கப்படும் இக்கிழங்கில் எண்ணிலடங்கா வேதிச்சேர்மானங்கள் உள்ளதால் பல  வகையான நோய்களுக்கு இதிலிருந்து  மருந்துகள் பெறப்படுகின்றன

கோரைக்கிழங்கிலும் தாவரத்திலுமுள்ள முக்கிய வேதிப்பொருட்கள்:

Cyperene terpene, flavonoids,sitosterol, ascorbic acid , cyperene. Alpha-cyperone, Alpha-rotunol, Beta-cyperone, Beta-pinene, Beta-rotunol, Beta-selinene, Calcium, Camphene, Copaene, Cyperene, Cyperenone, Cyperol, Cyperolone Cyperotundone Dcopadiene, D-epoxyguaiene, D-fructose, D-glucose, Flavonoids, Gamma-cymene, Isocyperol, Isokobusone, Kobusone, Limonene, Linoleic-acid, Linolenic-acid, Magnesium, Manganese, C. rotunduskone, Myristic-acid, Oleanolic-acid, Oleanolic-acid-3-oneohesperidoside, Oleic-acid, P-cymol, Patchoulenone, Pectin, Polyphenols, Rotundene, Rotundenol, Rotundone, Selinatriene, Sitosterol, Stearic-acid, Sugeonol, Sugetriol.

 களையென கருதப்படும் ஆனால் இத்தனை வேதிப்பொருட்கள் கொண்டிருக்கும் கோரை என்னும் மூலிகை  தோல்நோய்களை குணப்படுத்துகிறது. வியர்வை நாற்றத்தை போக்குகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது. மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு குணமாக உதவுகிறது. சீன, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இது  அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

« Older posts Newer posts »

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑