லோகமாதேவியின் பதிவுகள்

Author: logamadevi (Page 18 of 24)

ஊட்டி காவியமுகாம் 2018

முகாம் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே அதைக்குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்தேன். முதலில் சரணுடன் செல்வதாக இருந்து பின்னர் அவனுக்கு  மே 6 அன்று நுழைவுத்தேர்வு இருப்பதால் அவன் வரமுடியாதென்று நினைத்து, பின்னர் அதை ஆன்லைனில் எழுதலாமென்று முடிவுசெய்து மீண்டும் அவனும் பங்கேற்க அனுமதி வாங்கி ஒருவழியாக இரண்டு பேரும் செல்வதாக தீர்மானமாயிற்று

வீட்டிலிருக்கும் செடிகளுக்கு இக்கடும்கோடையில் எப்படி 3 நாட்கள் தண்ணிர் விடாமல் இருப்பதென்னும் அடுத்த கட்ட பிரச்சனைக்கு இயற்கையே தீர்வாகி பெருமழை பொழியத்துவங்கியது  2 ஆம் தேதியிலிருந்தே.

4அம் தேதி அதிகாலை எழுந்து தயாராகி, வெளிக்கதவைச்சாத்திவிட்டு காரில் ஏறுவதற்குள் தொப்பலாக நனையும் அளவிற்கு கொட்டும் மழையில் புறப்பட்டோம்.  கரிய நீண்டநனைந்திருந்த தார்ச்சாலையில் அவ்வளவாக போக்குவரத்து இல்லாமலிருந்த அதிகாலையில் ஜென்சியின் பாடல்களைக் கேட்டுக்கொண்டு மலைப்பயணம் துவங்கினோம்.

மேட்டுப்பாளையத்தில் காலை உணவு

குன்னூரிலிருந்தே வாகன நெரிசலில் சிக்கி வால்பிடித்துக்கொண்டே ஊர்ந்துகொண்டிருந்தோம். மலைச்சரிவெங்கும் மே மாதத்திற்கே உரிய ஜகரண்டாவும், தீக்கொன்றையும் பூக்கத்துவங்கி, அடர் ஊதாவும் ஆரஞ்சுமாக வர்ணஜாலம் காட்டிக்கொண்டிருந்தது. மழையில்லை ஊட்டியில்.

நான் குருகுலத்திற்கு வந்துசேர்கையில் காளிபிரசாத் ’காரணம் ’  கதையினரங்கை துவங்கிவிட்டிருந்தார்.  சாலக்கிராமக்கல் காணாமற்போவதும் ஒரு முதியபெண்ணின் வாழ்வின் மாற்றங்களுக்கு அது காரணமாயிருப்பதையும் குறித்த விவாதம்.. ஜெ அவர்கள் அருண்மொழி மற்றும் சைதன்யாவுடன் வந்திருந்தார். நானும் சரணும் அங்கு விரித்திருந்த கம்பளத்தில் அமர்ந்துகொண்டோம். நல்ல கூட்டமிருந்தது ஏராளம் புதுமுகங்கள் இளைஞர்கள், அதிகம் பெண்கள். கம்பளியைத்தாண்டி பனிக்கட்டிபோல குளிர்ந்திருந்த தரையின் சில்லிப்பை உணர முடிந்தது.

ஆசையாக வாங்கிவந்த கருப்பு ஸ்வெட்டரை அணிந்துகொண்டேன். முதலரங்கு முடியுமுன்னரே சரணுக்கு  மலைப்பயணம் ஒத்துக்கொள்ளாமல் வாயுமிழ்ந்துகொண்டிருந்தான். அவன் பின்னர் இரு அரங்குகளுக்கு வராமல் அறையில் ஓய்வெடுத்தான்

முதலரங்கு முடியும் தருவாயில் நாஞ்சில் அவர்கள் வந்து சேர்ந்தார்.தேனீர் இடைவேளையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டேன். குவிஸ் செந்திலிடம் எனக்கும் சரணுக்கும் அறை ஒதுக்கித்தரும்படி கேட்டுக்கொண்டேன்

மதியமே இரண்டுபேருக்குமாய் ஒரு அறை ஏற்பாடு செய்துதந்தார். நாஞ்சில் சாரின் கம்பராமாயண அரங்கு, யுத்தகாண்டம், ஆஹா என்ன அழகு விவரணை எத்தனை சரளம் எத்தனை இனிமை. அவர் சொல்லச்சொல்ல கேட்டுக்கொண்டே இருக்கலாமென்றிருந்தது

புகழ்பெற்ற ’நின்னொடும் ஐவரானோம்’ முதற்கொண்டு பல பாடல்களை பொருளுடன் விளக்கினார் ஆங்காங்கே அவருக்கே உரித்தான அங்கதங்களுக்கும் குறைவில்லை, மயில் என்று சீதாவைகுறிப்பிடும் இடமொன்றில் மயில் என்பது சீதையை குறிக்கின்றது ஸ்ரீதேவியை அல்ல, என்பதும், இலங்கையின் கிணறுகளில் குருதி ஊறிக்கொண்டிருக்கின்றது என்னும் குறிப்பினைச்சொல்லும்போது திருப்பூரில் எப்படி எங்கு தோண்டினாலும் பச்சையும் சிவப்புமாக நிலத்தடிநீர்  வருகின்றதோ  அப்படி என்பதுவுமாய் ,  எல்லாப்பாடல்களுக்கும் ஒரு கேலிக்குறிப்பிருந்தது அவரிடம், ரசிக்கும்படியுமிருந்தது அவரின் இந்த  இடைச்செருகல்கள்.

கம்பராமாயணத்தை முதல்முறையாகக்கேட்கும் சரண் ஆழ்ந்து போயிருந்தான், அரங்கு முடிந்த பின்னர் நாஞ்சில் சாரிடன்  சரண் தன்னை    அறிமுகம் செய்துகொண்டு. ’ ஏன் குகன் சுக்ரீவன் விபீஷணன் இவர்களை எல்லாம் சகோதரனாகப்பாவித்த ராமன் அனுமனை அப்படிச்சொல்லவில்லை’ என்று கேட்டான், அனுமனுக்கு சகோதரனைக்காட்டிலும் மேலாக தனக்கு இணையனாகவே ஓரிடத்தை  ராமன் வைத்திருந்தார் என்றும் , அனுமன் சாலிஸாவில் ராமனின் சகோதரன் அனுமன் என்னும் ஒருவரி வருகின்றதென்று சரண் மீண்டும் கேட்க அது பிற்பாடு துளசிதாஸ் எழுதியதென்றும்  சொன்னார். இன்னும் 1வாரம் தொடர்ந்து கம்பராமாயணமே அவர் தொடர்ந்து உரையாற்றுவாரெனினும் அமர்ந்து ஆர்வமாக கவனித்திருப்போம்

முதல் அமர்வு துவங்கியதிலிருந்து  நிறைவான அரங்குவரை, வழக்கம் போல  எந்த தொய்வும் குளறுபடிகளும் இன்றி குறித்த நேரத்திற்கு முறையாக அரங்குகள் நடந்தன. இந்த ஒழுங்கு எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. பல்வேறு தளங்களிலிருந்து , பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவன் உட்பட, பல அகவைகளில் வரும் இருபாலரும் பங்குகொள்ளும் கூடுகையில் ஒரு பிழையுமின்றி திட்டமிட்டபடியே எல்லாம் நடைபெறுவது மிக அரிதான ஒன்று, இம்முறையும் அப்படியே நடந்து முடி ந்தது

. நாஞ்சில் நாடன், P.A. கிருஷ்ணன், தேவ தேவன், லக்‌ஷ்மி மணிவண்ணன், அசோக், விஷால் ராஜா, சுனீல் உள்ளிட்ட பல எழுத்தாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். கதை, கவிதை கம்பராமாயண அரங்குகள் அனைத்துமே வெகு சிறப்பாக இருந்ததென்றாலும் , எனக்கென்னவோ இம்முறை கவிதை விவாத அரங்கு    மிக மிக நன்றாக அமைந்திருந்தது என்று தோன்றியது. அத்தனை விரிவாகவும் பலதரப்பட்ட கோணங்களிலிருந்தும் வந்த கருத்துக்களாலும், விளக்கங்களாலும் கவிதை அரங்கு சிறப்பாக இருந்தது

கவிதைகளின் சிறப்பம்சங்களை சில  விவாதங்களில்  பேசினோம் என்றாலும் நாகப்பிரகாஷ் தெரிவு செய்திருந்த கவிதையைக்குறித்தான விவாதத்தில்,  எது நல்ல கவிதை என்பதற்கான விளக்கமும், எப்படி நல்ல கவிதையை இனம் காண்பதென்றும், எதை நாம் கவிதைவாசிக்கையில்  கவனிக்கனுமென்றும் தெரிந்துகொண்டேன்.மூன்று நாட்களுக்கு முன்னரான என் கவிதை வாசிப்பிற்கும் இனிமேலான என் கவிதை வாசிப்பிற்கும், தெரிவிற்கும் நிச்சயம் நல்ல மாற்றமிருக்கும்

மோகனரங்கன் அவர்களின் ’முடிச்சு’ கவிதை விவாதம் ஆச்சர்யமளிக்கும் விதத்தில் விரிந்துகொண்டே போனது. எனக்கு அது மிகப்பிடித்த கவிதைகளிலொன்று அந்தக்கவிதையை முகாமிற்கு வரும்முன்னர் நான் தனிமையில் வாசிக்கையில் அது எனக்களித்த  உணர்வையும் புரிதலையும் விட விவாதத்தின் போது  ஜெ வும் பங்கேற்பளர்களும் பிற எழுத்தாளர்களுமாய் அதை பல கோணங்களிலிருந்து அர்த்தப்படுத்துகையில் அது ஒரு மிக அழகிய நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு வடிவிற்கு வந்து சேர்ந்தது. கலைடாஸ்கோப்பில் ஒவ்வொரு அசைவிற்கும் கோணங்கள் மாறி உள்ளிருக்கும் கண்ணாடிச்சில்லுகள் வேறு வேறு வண்ணச்சித்திரங்களைக் காண்பிப்பது போல. ஒரு சிறு புள்ளியாக என் மனதில் இருந்த அந்தக்கவிதையின் பொருள் விரிந்து விரிந்து மிக அழகிய சித்திரமானது

கரமசோவ் சகோதரர்களிலிருந்து ஜன்னல் வரை  ஆரோக்யமான விவாதங்களும், விளக்கங்களுமாய் நிறைந்திருந்தது   சிறுகதைஅரங்கு

நெற்றியில் விபூதிப்பட்டை துலங்க வெண்கலக்குரலுடன் திருக்குறள் உரையாற்றிய  திருமூலநாதன் என்னும் இளைஞரின் தமிழறிவை வணங்குகிறேன்.  என்ன தமிழறிவு, இலக்கணம் எல்லாம் அத்தனை அழகாக நாஞ்சில் சாருக்கே கூட தெளிவாக சொல்லித்தந்தார்

ஆடல்கோட்பாட்டில் ஜடாயு அவர்களிடம் முனைவர் பட்ட ஆய்வு முடித்திருக்கிறாராம். நல்ல குரல்வளம். முதல் நாளிலேயே தூரத்தில் அமர்ந்திருந்தவரை ஜெ அழைத்து, ’’வா பக்கத்தில்’’ என்றதும் ஓடோடி வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த அவரின் காலடியில் அமர்ந்துகொண்டார் அவர். ஜெ வின் அன்பிற்குரியவரென்று அப்போதே கண்டுகொண்டேன்

அவர் உரை முடிந்ததும் நான் ஜெ விடம் , திருமூலநாதனை கல்லூரிக்கு அழைத்துச்சென்று அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க சொல்லணும் என்றதும் ஜெ ’அவ்வளவுதான் 6 மாசத்தில் இவன் முழுக்க மழுங்கி எந்தப்பக்கமும் கிரிப் இல்லாம ஆயிருவானே’ என்றார். அரங்கு மொத்தமும் சிரித்தாலும் இது உண்மையென்பதை நானுமறிவேன். இன்றும் ஒவ்வொரு மாணவனாக எழுந்து ஒவ்வொரு பத்தியாக வாசிக்க அந்த பாடத்தை ‘’நடாத்தி’’ முடிக்கும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் தமிழாசிரியர்களை நானறிவேன்.

சூதில் வென்றாலும் அது தூண்டில்பொன் விழுங்கிய மீன் போல என்னும் குறளில் வரும்   ’’ தூண்டில் பொன்’’ என்பதற்கு ஜெ  சொல்லிய அந்த  பட்டு நூல் துண்டினை தூண்டிலில் கட்டுவது குறித்தான  விளக்கம் இனி எப்போதும் நினைவிலிருக்கும்.

சு ரா அவர்கள் ஒருமுறை ஜெ விடம் ’’என்னமோ இந்த கடற்கரைபயலுங்களுக்கு தங்கநிறச்சட்டைமீது அப்படி ஒரு மோகம் இன்னிக்கும் அந்த துணிதான் 15 மீட்டர் போயிருக்கு என்றிருக்கிறார், ஜெ அப்படி கடற்கரையில் தங்கநிறச்சட்டையணிந்தவரகளை அதிகம் பார்த்திருக்காத, தால் விசாரித்திருக்கிறார்

குமரி மாவட்ட மீனவர்கள், தங்கநிறத்துணிகளை வாங்கிச்சென்றுஇழை இழையாக அதை பிரித்து, தூண்டிலில் ஒற்றைநூலாக அதை கட்டிவிடுவதையும், நெளியும் பொன்புழுப்போலத்தெரியும் அதைநோக்கி மீன்கள் வந்து தூண்டிலில் மாட்டுவதையும் சொன்னார். இடைச்செருகலாக ‘’ ஆகவே வள்ளுவனும் குமரி மாவட்டம்தான் என்றார் நாஞ்சில், ஜெ மீண்டும் ’’வேற எங்க சார் இருப்பானுங்க எழுத்தாளரெல்லாம் நாகர்கோயிலைத்தவிர’’ என்றார்

வேளாவேளைக்கு சூடான சுவையான உணவும் , இடைவேளைகளில் தேனீருமாய் எல்லாம் கச்சிதமாக எப்போதும் போல நடந்தது

அரங்கில் அனைவரும் வசதியாக குடும்ப நிகழ்வொன்றில் அமர்ந்திருப்பது போல சாய்ந்தும் சம்மணமிட்டும் கம்பளியால் போர்த்திக்கொண்டும் சிலர் நாற்காலிமாய் அமர்ந்துகொண்டிருந்தோம் எனினும் அரங்கு ஒரு கட்டுக்குள் இருப்பதையும் உணர்ந்திருந்தோம்.  அருண் மொழியும் சைதன்யாவும் பல விவாதங்களில் கலந்துகொண்டார்கள். ’’நீர்க்கோல வாழ்வினைநச்சி’’  என்னும் பாடலை பள்ளியில் மனப்பாடமாக கற்றிருப்பதாக அருண்மொழி சொல்லவும்  ‘’ எங்கே சொல்லு பார்போம் ’’ என்றார் ஜெ அழகாக பிழையின்றி சொன்னார் அருண்மொழி

அவர்களின் அன்னியோன்யம் நான் எப்போதும் ரசிக்குமொன்று, ’’என்னமோ சொல்ல வந்தியே சொல்லு’’ என அவர் மனைவியை ஊக்கப்படுத்துவதும் காலடியில் அமர்ந்திருக்கும் சைதன்யாவின் கன்னங்களை வாஞ்சையுட்ன அவ்வப்போது வருடிகொண்டிருப்பதுமாய் அழகிய குடும்பம் அவர்களுடையது. முன்னொருமுறை என்னுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அருண்மொழியை ஜெ முதுகில் கொஞ்சம் பலமாகவே அடித்து ‘’ எழுந்து வா அரங்கு துவங்கபோகின்றது’’ என்றதும் பாய்ந்து எழுந்த அருண்மொழி அவரைத்துரத்திப்போய் பதிலுக்கு முதுகில் பளாரென ஒன்று வைத்தார்,’’ எதுக்கு ஜெயன் அப்படி அடிச்சே’’ என்றதும் அவர் அருண்மொழியின் முகவாயினைபிடித்துக்கொண்டு ’’இல்லை நேரமாசுன்னுதான் கூப்பிடேன்’’ என்றார், எங்கிருந்தானோ அஜிதன் இரண்டுபேருக்கும் இடையில் உடன் வந்து நின்றான்

இதை நான் அடிக்கடி நினைவுகொள்ளுவேன்

திருமணத்திற்குப்பின்னும் தொடரும் பேரன்புக்கு எனக்கு தெரிந்து  ஜெ உட்பட வெகுசிலரே இருக்கிறார்கள் சுட்டிக்காட்ட, இதை உள்ளார்ந்த மகிழ்ச்சியுடந்தான் ஒவ்வொருமுறையும் நினைவு கூறுகிறேன்

இரவு 10 மணிக்கு மேலும் அரங்கில், ஆர்வமுடன் அமைதியாக அனைவரும் கலந்துகொண்டதும். பெருமழை வரப்போகும் அறிகுறிகளையும் யாரும் பொருட்படுத்தவில்லை என்பதையும்,வியப்புடன் நினைவு கூறுகிறேன்.

மறுநாள் காலை வழக்கம் போல அதிகாலை எழுந்து குளித்து இளவெயிலில் காய்ந்துகொண்டே அன்றைய வெண்முரசு  அத்தியாயம் வாசித்துக்கொண்டிருந்தேன்

ஜெ வுடன் பலர் நடைக்கு சென்றிருந்தார்கள், அன்றாடம் கதவு திறக்க, மேல்தொட்டி நீர் நிறைக்க, சமைக்க பால் வாங்க மதிய உணவு பேக் செய்ய மகன்களுக்கு உணவளிக்க வீடு பூட்டி கல்லூரிக்கு கிளம்ப என்று நான் மிகபரபரப்பாக ஆயிரம் கைகளுடன் இயங்கும் அதிகாலைபொழுதொன்றில் எந்த வேலையும் இல்லாமல் குளிர்காய்ந்துகொண்டிருப்பதில் என் உள்ளம் திடுக்கிட்டுப்போனது. அலைமோதியது என் மனம் என்ன செய்யலாம் ஏன் இப்படி ஓய்வாக இருக்கிறேன் என்று!!

சமையலறையில் ஒப்பந்த அடிப்படையில் எங்களுக்கான உணவு தயாராகிக்கொண்டிருந்தது எனவே அங்கு சென்று உதவ வழியில்லை.  Enforced rest  அதை என் உடலும் மனமும் ஏற்றுக்கொள்ள திண்டாடியது. மெல்ல குருகுலத்தைச்சுற்றி வந்தேன்

கவிஞர் தேவதேவன் வசமாகசிக்கினார், இது என்ன பூ வித்தியாசமாக இருக்கே என்று ஊழ் உறுத்துவந்து ஊட்ட என்னிடம் கேட்டே கேட்டுவிட்டார்,

அவரும் நானுமாக அங்கிருக்கும் அனைத்து மலர்களையும் ஆராய்ந்தும் பெயர் தெரிந்தவற்றிற்கு பெயர் சொல்லியும் தெரியாதவற்றிற்கு  நாங்களாகவே பெயரிட்டும் மலர்களைக்குறித்து அவர் எழுதிய கவிதைகளைக்குறித்து சிலாகித்துக்கொண்டுமிருந்தோம் அங்கிருந்த   dancing doll  மலரை அவருக்கு மிகப்பிடித்துப்போனது அதிலொன்றைப்பறித்துக்கொண்டார் அதைப்பற்றி ஒரு கவிதை எழுதி எனக்கு அனுப்புவதாகச்சொன்னார். என் பெயரும் மிக அழகென்றார்,  ஒரு சிறுவனைபோல கண்கள் விரிய பூக்களைப்பார்ப்பதும் அவசரமாக காகிதம் எடுத்து அதில் பெயரெழுதித்தரும்படி கேட்டுக்கொள்வதுமாய் அவரின் உற்சாகமென்னையும் தொற்றிக்கொண்டது, தேவதேவனின் இந்த அதீதமும் இயற்கை மீதான பெருவிருப்பும் அவரிடமிருக்கும் அந்த   madness ம் தான் அவரைக் கவிஞராக்கியிருக்கிறது

ஒரு சிறு குழுவுடன் அங்கிருக்கும் தாவரங்களை இனம்கண்டுகொண்டிருந்ததில் எப்படியோ அரங்குஇலாத சமயங்களில் என் நேரம் செலவானது திருப்திகரமாக

பொள்ளாசியிலிருந்து கொண்டுபோயிருந்த கரகரப்பான கடலை மிட்டாய்களும் சுதாமாமி  எப்போதும்போல செய்துகொண்டுவந்திருந்த வாயிலிட்டால் கரையும் இனிப்புகளுமாக எதோ கல்யாணவீடு போல இருந்தது முகாமின் மூன்று நாட்களுமே

14டிகிரி குளிரிலும்  குளியலறைக்கு வரிசையில் காத்திருந்து அனைவரும் அரங்கிற்கு சரியான நேரத்திற்கு வர அவசரமாய்  தயாராகி வந்தோம். எந்த குடும்ப நிகழ்விற்கும் இப்படி ஒரு மகிழ்ச்சியுடன் நாங்கள் கலந்துகொண்டிருக்க மாட்டோம் இதுவரை

அரங்கிற்கு வெளியேயும் உணவுண்ணும் போதும்  பேகிக்கொண்டிருந்ததில் மற்ற எழுத்தளர்களிடமிருந்தும், ஜெவிடமிருந்தும், பங்கேற்பாளர்களிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன். ஜெயந்தி என்னும்   வாசகி ஜெவின் வெண்முரசின் பெண்கள் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு துவங்க இருப்பதாசொன்னதும் சரண் அவரிடம்  winds of asthinapur  என்னும் நூலில் மகாபாரதத்தில்  வரும் எல்லாப்பெண்களையும் பற்றி எழுதியிருகிறதென்று சொல்லி என்னையும் அவரையும் ஒருசேர வியப்பிலாழ்த்தினான். அந்த புத்தகத்தைக்குறித்து ஜெயந்தி சரணிடம் கேட்டு எழுதிக்கொண்டார்

இரண்டாம் நாள் மாலையில் ஒரு சிறிய குழுவாக அங்கிருந்த  ஷாமியானாபந்தலில் நாங்கள் அமர்ந்து பலதையும் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென நல்ல கட்டஞ்சாயா குடிக்கணுமென்று ஒரு நண்பர் விரும்பினார்,  உடன் அத்தனைபேருக்கும் அந்த ஆவல் எழுந்தது. முகாமிற்கென சமையல் ஒப்பந்ததாரரிருக்கிறார் அம்ஜத்கானைப்போலவே இருப்பார், நானும் சுதா மாமியுமாய் அவரிடம் கட்டஞ்சாயா ஒரு 15பேருக்கு வேண்டுமென்றோம், அத்தனை சிறிய குழுவிற்கு சமைக்க ஏதுவான பாத்திரங்கள்  இல்லையென்று மறுத்துவிட்டார், அருகிலிருக்கும் சமையலறை அங்கிருக்கும் துறவிகளுக்கானது, ஒரு பெண் துறவி உள்ளிருந்தார் சுதா மாமியும் நானும் தயங்கியபடி விஷயத்தைசொல்ல அவர் அகமகிழ்ந்து தாராளமாய் போடுக்கொள்லாச்சொல்லிவிட்டார்,

2நாட்களாக சமைகாமல் ஏங்கிக்கொண்டிருந்த  நான் நண்வர் பெல்ஜியம் மாதவனின் செய்முறையின் பேரில் நல்ல அரபிசுலைமானி தயாரிக்க சென்றேன்

தேவையானவற்றை எடுத்துகொடுத்த அவரிடம்  நான் மாதவனைப்பற்றியும் அவரின் செய்முறைபப்டி மசாலாப்பொருட்கள் தேவைஎன்றும் சொல்ல உடன் தேடித்தேடி அவற்றையும் கொணர்ந்தார். கழுத்தில் காதில் கைகளில் ஏதும் அணிந்திராத அந்த இளம் துறவி சிரிக்கையில் இன்னும் பேரழகியாகத்தெரிந்தார், வெளிறிய மெல்லிய உதடுகளவருக்கு ஆனால் புன்னைகைக்கையில் முழுமுகமும் புன்னைகைக்கிறது. அத்தூய புன்னகையில் தான் அவர் இன்னும் அழகாகிறார் என்று தோன்றியது.

நான் தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கையில் இன்னொரு அமெரிக்கர் வந்தார்,  நல்ல பாலாடைக்கட்டியின் நிறத்திலிருந்தார், அழகாக புன்னகைத்தார், புன்னைகைக்கையில் அவரும் இன்னும் வசீகரமாக இருந்தார், பெரிய கெளபாய் தொப்பி அணிந்துகொண்டிருந்தார் அவரும் குருகுலத்தில் தங்கி இருக்கிறார், என்னையும் கஞ்சி சாப்பிடும்படி சொன்னார் நன்றி சொல்லி நான் மறுத்தேன்

ஒரு சின்னக்கிண்ணத்தில் பயறுசேர்த்து தயாரித்த கஞ்சியை சரித்து கரண்டியிலெடுத்து மெல்ல சுவைத்து எந்த தொடுகறியும் இல்லாமல் அமைதியாகச்சாப்பிட்டார், அவருடன் அந்த பெண் துறவியும் உணவருந்தினார். நேற்று அவர்கள் வாசித்த பிரபஞ்ச ரகசியம் குறித்த ஒரு புத்தகத்தைகுறித்து மெல்லிய குரலில் விவாதித்துக்கொண்டிருந்தார்கள் உன்னத ஆங்கிலத்தில், அத்தனை சாத்வீகமான உண்வைஅந்த குளிரில் சாப்பிடுவது உண்மையில் துறவுதானெறெண்னிக்கொண்டேன்

சாப்பிட்டதும் அவர் அந்த கிண்ணத்தை கழுவி ஒரு உலர்ந்த துணியில் துடைத்து, எடுத்த இடத்தில் மீண்டும் வைத்தார். என்னிடம் என் ஊரைக்குறித்தும் என் வேலைகுறித்தும் விசாரித்தார், தென்னைமரங்கள் நிரம்பிய இடமென்றஊம் ஒருமுறை வருவதாகச்சொன்னார். 50 சதவீத மரங்கள் கருகி மொண்ணையாக நிற்பதையும் பல தோப்புக்கள் அடுக்குமாடிக்கட்டிடங்களானதையும் சொல்லவில்லை நான். அவர் மனதில் எங்கோ இருக்கும் ஒரு தென்னைகள் நிறைந்த அழகிய கிராமமொன்று பசுமையாக இருகட்டுமே அவர் ஒருவேளை வருவாரேயெனில் அதுவரைக்கும்

இன்னொன்றையும் என் அகம் மீள மீள நினைத்துக்கொண்டே இருந்தது, இப்படி  அழகாக புன்னகைக்கும், உணவை தானே எடுத்துப்பொட்டுக்கொண்டு சாப்பிடும், சாப்பிட்ட பத்திரத்தைந்துலக்கி துடைத்தும் வைக்கும் இவரெல்லாம் அழகாக கல்யாணம் பண்ணிக்கொண்டு மகிழ்ந்து இல்லறத்தில் ஈடுபடாமல் பயறுகஞ்சி சாப்பிட்டுக்கொண்டு பிரபஞ்சரகஸ்யம்பற்றி விவாதித்துக்கொண்ட்ருப்பதும் வாழ்வின் நகைமுரண்களில் ஒன்று அல்லவா ?

எலுமிச்சைச்சாறுஇல்லையென்பதைத்தவிரவேறு குறையிலாது அந்தக்குளிரில் அனைவருமாக சுலைமானியை மாதவனின் பேர்சொல்லி அருந்தினோம்

முகாமிற்கு வரும்பொழுது நான் சுத்தமாக துடைத்த வெற்றுக்கலமாகவே வந்தேன். இப்போது நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறேன்3 நாட்களில் எத்தனை எத்தனை அறிதல்கள்?

இந்திய ஞானமரபில் தத்துவம் குறித்து சந்திரசேகரென்னும் இளைஞர் பேசினது எனக்கு மேலோட்டமாகவே புரிந்தது எனினும் அதற்கே அரங்கு முடிந்த போதுஎடை கூடினதுபோல பிரமையேற்பட்டது.  That was too much for me ,  இந்தியச்சிற்பக்கலை குறித்தும் சந்துரு  மாஸ்டர் உரையிலிருந்து நிறைய அறிந்துகொண்டேன், ஒருஅடிச்சிற்பமொன்றில் இருக்கும் நுணுக்கங்களைக்குறித்து 1 மணிநேரம் அழகிய உரையாற்றினார். பல வருடங்களுக்குப்பிறகு அத்தனை எளிய உடையில் ஒருவரைப்பார்க்கிறேன்.

சுவிஸ்ட்சர்லாந்திலிருந்து சுசித்ராவும் சிங்கையிலிருந்து சுபாவும் இதற்கெனவே வந்திருந்தார்கள்.  இறுதி நிகழ்வாக சுபா வைக்கம் முகமது ப்ஷீரின்  கதையினை விவரித்தார். ஒரு இளைஞன் சுபாவிடம், அவர் ஜெவினை அறிந்தபின்னரே இதுபோல பேசுகிறாரா அல்லது அவரது சுய சிந்தனையா இந்த உரை என்று கேட்டதற்கு சுபாவின்  defence  அபாரமாயிருந்தது, என் அறிதல் ஜெ விடமிருந்துதான் ஆனால் அந்த அறிதலென்னும் பீடத்திலிருந்துகொண்டு பேசுவதெல்லாம் நான் அறிந்தவற்றையே என்றார். மனமாரப்பாராட்டினேன் சுபாவை

My husaband and other animals  புத்தகம்குறித்து நிலாமுற்றத்தில் நான் சிலமாதங்களுக்கு முன்னர் உரையாற்றியதின் காணொளியைபார்க்கையில் நானும் திடுக்கிட்டுத்தான் போனேன் பாதி உரை ஜெ அவர்களிடமிறுந்து நான் கற்றுக்கொண்டதையே பேசியிருந்தேன். சுபா சொல்வது போல எனக்கான  source  உறுதியாக ஜெ அவர்கள் தான் எனினும் என் அறிதலென்பது அதன் பின்னர் என்னிடமிருந்துவருவது,

மேலும் ஜெவின் பாதிப்பில்லாது அவரின் வாசகர்கள் பேசவும் எழுதவும் இயலாதென்பதும் சத்தியமல்லவா?

குருகுலத்தைசுற்றியும் பச்சைபச்சேலென்று காரட் பயிரிட்டிருந்தார்கள் நிறையபுகைப்படமெடுத்துக்கொண்டோம் நானும் சரணும். புதிதாக கலந்துகொண்ட இளம் வாசகர்கள் ஆர்வமிகுதியிலும் பதட்டத்திலும் கோர்வையாக பேசமுடியாமல் கேட்கநினைத்ததை துண்டு துண்டாக  கேட்கையில், ஜெ அதை சரியாக தொகுத்து அழகாக முன்வைக்கிறார். உண்மையில் அதை மறுகட்டமைப்புச்செய்து ஜெ சொன்ன பிறகே எங்களுக்கு மட்டுமல்லாது கேள்வி கேட்டவருக்கே அவர் கேட்க நினைத்ததென்னவென்று  புரிந்தது

இன்னொரு விவாதத்தில் படைப்பாளி தான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்ல வேண்டும் தேவையற்றவற்றைச் சேர்த்து குழப்பக்கூடாது என்பதற்கு ஜெ spontaneous  ஆக சொன்ன உதாரணம், ஒரு  fruit salad  தயாரிக்கையில் அதனுடன் சர்க்கரை சேர்த்தால் பழங்களின் சுவை எப்படி தெரியும் ? என்பது. அழகான உதாரணம்

அவரைக்குறித்து இரவு நானும் சரணுமாய் பேசிக்கொள்கையில் எனக்கு ஜெ ஒரு சூப்பர் ஹுயூமன் என்றும் அவர் ஒரு gene level mutant  என்றும் சொன்னேன், சரண் திடுக்கிட்டான். ஆம் நான் அப்படித்தான் நினைக்கிறேன்

ஒரு நாளுக்கும் மற்றொன்றிற்கும், எந்த மாறறமுமில்லாத பணிச்சுமை எப்போதும் கூடி இருக்கும், மிகுந்த பரபரப்பான நாட்கள் நிறைந்த என் வாழ்வில் இந்த  3 நாட்களும் முழு ஓய்வு மட்டுமல்லாது, பற்பல புரிதல்களும், அறிதல்களும், தோழமையுமாய் நிறைந்திருந்த து

குருநித்யாவின் சமாதி இருக்கும் இடத்தில் எடுத்துக்கொண்ட குழுப்புகைப்படத்தை எனக்கு ஒரு தோழி பகிர்ந்திருந்தார். அதில் வாய்கொள்ளாச்சிரிப்புடன் இருக்கும் என்னை நானே வியப்புடன் பார்த்துக்கொண்டேன். இப்படி நான் மனம் விட்டுச்சிரிக்கும் ஒரு புகைப்படமும் வீட்டில் இல்லை ,ஏனெனில் அத்தகு தருணங்கள் இதுவரை வாய்த்ததில்லை.  இந்த 3 நாட்களைக்குறித்தான  இத்தனை நீளப்பதிவில் எழுதிய  அனுபவங்கள் அனைத்தையும்  அந்தப்புகைப்படத்திலிருக்கும்  என் சிரிப்பு சொல்லிவிடும்

அனைவரிடமும் விடைபெற்று ஊர் திரும்புகையில் மனம் கனத்திருந்தது. நிர்மால்யாவிடன் அனுமதி வாங்கி  குருகுலத்திலிருந்து நான் கொண்டுவந்து கூடத்தில் ஒரு கண்ணாடிக்குவளை நீரில்  வைத்திருக்கும் ஹைட்ராஞ்சியாவின்  இளநீலமும் வெள்ளையுமாய் மலர்கள் செறிந்திருக்கும் மிகப்பெரிய  ஒற்றை மலர்க்கொத்தொன்று , குருகுலத்தினின்றும் ஒரு சிறு பகுதியையே நான் என்னுடன்  கூடவே வீட்டிற்கு எடுத்துக்கொண்டுவந்ததுபோல  ஆறுதலை அளிக்கின்றது

இப்படி  முற்றிலும் மகிழ்வான நிறைவான நாட்கள் வேறெந்த வகையிலும் எனக்கு கிடைத்திருக்காது என்பதை நிச்சயமாகச்சொல்லமுடியும் என்னால். இம்மூன்று நாட்களின் இனிய நினைவுகள்,  இன்னும் சில வருடங்களுக்கு  உற்சாகமாக நான் வேலை செய்யவும் , தளரும் தருணங்களில் என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொள்ளவும் உதவி செய்யும்.

பெருமழை பெய்துகொண்டிருந்த வெள்ளியன்று காலை புறப்பட்டு இப்போது வீடுதிரும்பியது வரையிலான இம்மூன்று நாட்களின் நிறைவிலும் இனிமையிலுமாய்  மனம் நிறைந்திருக்கின்றது மிக நிறைவான இந்த முகாமிற்கும் ஏராளமாக நான் கற்றுக்கொண்டவைகளுக்குமாய்  ஜெவிற்கு மனமார்ந்த நன்றியும் அன்பும்

 

 

பான்ஸாய்

ச. துரையின் ‘’தண்ணீர்தொட்டிக்கடல்’’ கவிதையும் ஜெயமோகன் அவர்களின் பான்ஸாய்  மரங்கள் குறித்த பதிவையும்  வாசிக்கும் வரையிலும் பான்ஸாய் வளர்ப்பு குறித்தும் அம்மரங்களைக்குறித்தும் எனக்கும் ஒவ்வாமை இருந்தது.  பான்ஸாய் குறித்த வகுப்புக்களிலும் பயிலரங்குகளிலும் அம்மரங்களை வளர்க்கும் நுட்பங்களை சொல்லத்துவங்கும் முன்பே, ஒரு தாவரவியலாளராக இம்முறையில் எனக்கு துளியும் விருப்பமில்லை என்பதையும் இயற்கைக்குக்கு மாறானது இவ்வளர்ப்பு முறை என்றும் சொல்லிவிடுவேன். இலைகளை பரப்பி, கிளை விரித்து மேலுயர்ந்து வரவேண்டிய மரமொன்றை, வேர்களையும் தண்டுகளையும் வளர்நுனிகளையும் தொடர்ந்து கத்தரித்து, மிகக்குறைவாக உணவும் நீரும் அளித்து, ஒளிச்சேர்க்கையை கட்டுப்படுத்த நிமிஷக்கணக்கில் மட்டும் சூரிய ஒளியில் வைத்து, கிளைகளில் கம்பிகட்டி, முறுக்கி, இழுத்து, பிணைத்து என்று இயற்கையான வளர்ச்சியை பலவிதங்களில் கட்டுப்படுத்தி, கஷ்டப்படுத்தி, அழகாக மேசைமீது வைத்துக்கொள்கிறோம் என்னும் அபிப்பிராயம் மட்டுமே இருந்தது. ஜப்பானியர்கள் குள்ளமென்பதால் அவர்களுன் மரங்களும் குள்ளமாக வளர்க்க விரும்புகிறார்கள் என்றும் நினைத்திருக்கிறேன்,

பற்பல வடிவங்களில், பலநூறாண்டுகள் வளர்ந்த , பழங்கள் செறிந்து பான்ஸாய் மரங்கள், கொள்ளை அழகாக இருப்பினும், எனெக்கென்னவோ அவற்றை பார்த்தால் மகிழ்ச்சியே ஏற்பட்டதில்லை எப்போதும்.

எல்லா விதமான தாவரங்களையும் வீட்டுத்தோட்டத்தில் வளர்ந்தாலும் பான்ஸாயை இதுவரை நான் கல்லூரியைத்தவிர வேறெங்கும் வளார்க்க முயற்சித்ததில்லை.

// குறுகும்போது கூர்கொள்வது ஞானம் //

//எவ்வளவு வளரலாம் என அந்த மரத்துக்கு தெரிவிக்கவேண்டும். ஒவ்வொருநாளும். மெல்லமெல்ல மரம் அதைப்புரிந்துகொள்கிறது. அந்த சின்னஞ்சிறு வான்வெளிக்குள் , வான் எனும் குமிழிக்குள் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது//

// நோக்குகையில் நாம் சிறிதாகி அதுபெரிதாகத் தொடங்குகிறது.  எத்தனைச் சிறிய இடத்தில் நிகழ்ந்தாலும் அரசமரம் அரசமரமேதான். இப்புவியே பிரம்மம் அல்லது மகாதம்மம் தன்னை நிகழ்த்திக்கொண்ட மிகச்சிறிய வெளி அல்லவா? துளிகளெங்கும் விரிவது கடலே//

என்று ஜெ சொல்லியிருப்பதை வாசித்தபின்னர் பான்ஸாய் வளர்ப்பை  இப்படி ஒரு அழகான கோணத்திலும் பார்க்கலாமென்று அறிந்துகொண்டேன். ஆம் நோக்க நோக்க அந்த மீச்சசிறு வடிவில் மரத்தின் வயதும் வயதுக்கேற்ற பிரம்மாண்டமும்  தெரிகின்றது.  மிகச்சிறிய பாட்டில் மூடி அளவிலான தட்டுக்களிலும் கூட வளர்க்கப்படும் இவற்றை மீச்சிறு மரங்கள் என்று சொல்வதும் மிகபொருத்தமாக இருக்கின்றது

Once a teacher ,always a learner  என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இன்று ஜெ விடமி

ருந்து ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

இனி பான்ஸாய் மரங்களூம் வீட்டில் வளரும்

.

Aladdin -அலாவுதீன் , சில திருத்தங்களுடன்

உலகின் பல்வேறு இடங்களில் அனைத்து மொழிகளிலும், பல்வேறு மாற்றங்களுடன் சொல்லப்பட்டு வரும் மத்திய கிழக்கு நாடுகளின் நாட்டுப்புற பெருங்கதையான ‘’ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள்’  கதைகளில்  ஒன்றுதான்,  புகழ்பெற்ற  ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’. இந்தக்கதைதான் சமீபத்தில் லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் திரைப்படமாக ‘அலாவுதீன்’என்ற பெயரில் உலகம் முழுவதும் மே 24ம் தேதி வெளியானது.

1992ஆம் ஆண்டு வெளியான அலாவுதீன்  Animation படத்திற்குப்பிறகு  டிஸ்னி நிறுவனம் மீண்டும் அற்புத விளக்கைத் தேய்த்திருக்கிற்து. ஆணழகன் வில் ஸ்மித்  கவர்ச்சியும் மர்மமும் அசாராணமும் கலந்த, நீல நிறத்தில் , இடுப்புக்கு கீழே புகைப்படலமாக வரும் பிரம்மாண்டமான பூதமாக மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார். சிரிக்கும் கண்களும்,  மயக்கும் குரலும், கிண்டலும், கேலியும், காதலுமாக அவரின் பல்லாயிரக்கணக்கான ரசிகைகளை மீண்டும் கவர்ந்திருக்கிறார்.

படம் வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது; குழந்தைகளுடன் பெரியவர்களும் கொண்டாடுகிறார்கள். பல்லாயிரம் வருடங்களாக சின்னஞ்சிறு விளக்கினுள் அடைபட்டிருக்கும் பூதம், அற்புத விளக்கை தேய்த்து தன்னை விடுவித்தவர்களை மூன்று வரங்களின் மூலம் மகிழ்விப்பதுடன் , தானும் சுதந்திரமான வெளியில் உலவவும், தோழமைக்கும் காதலுக்கும்  ஏங்குவதுமாக பல்லாண்டு பழமையான ஒரு கதையில், சுவாரஸ்யமான சில திருத்தங்களுடன் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். நிறையகாட்சிகளில் பாடல்களின் மூலமே கதை சொல்லப்படுவதால்  இதை இசைத்திரைப்படமென்றும் சொல்லலாம்.

பெரும்பாலான சிறார் கதைகளில் வரும் ஏழையொருவன் இளவரசன் ஆவது என்னும் கதையென்பதால் அனைத்து வயதினரின் விருப்பத்துக்கும் உகந்த கதையிது.  தெருவில் சில்லறைத்திருட்டுக்கள் செய்து வாழும் யாருமற்ற இளம் நாயகன், அழகும் இளமையும் நிறைந்த இளவரசியை சந்தித்து காதல் கொள்வது, ஆட்சியை பறிக்க திட்டமிடும் வில்லன், மந்திர விளக்கு, அதிலிருந்து வரும் பூதம்,, பூதத்தின் காதல், பூதத்திற்கும் அலாவுதீனுக்குமான நட்பு  என அனைவரும் அறிந்திருக்கும்  கதையில், எதிர்பாரா அம்சங்களுடன் கதை அழகாக போகின்றது.

வில்லன் ஜாஃபர், அலாவுதீனை விளக்கை கொண்டு வரச்சொல்லுவதும், அலாவுதீன் விளக்கை தேய்த்தபின்னர் அவன் வாழ்வு மாறுவதும், அதன்பின்னரான சாகசங்களுமே கதை. மூலக்கதையைபோல இது அலாவுதீனை மையப்படுத்தாமல் பூதத்தை பிரதானமாக கொண்டிருக்கிறது

படத்தில்  மர்வான் கென்சார்நேவிட் நெகஹ்பான்பில்லி மக்னுஸ்ஸன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நீல பூதத்தைக்காட்டிலும் இளவரசன் அலியின் தோழனே அனைவருக்கும் பிரியமானவராக இருக்கிறார். பூதத்தின்காதலி டாலியாவாக  நாஸிம் பெடரட் மிகச்சரியான தேர்வு.

அலாவுதீனாக வரும் மசாட்  ஏழைச்சிறுவனாக கடைகளில் திருடி, தாவித்தாவி தப்பித்து செல்வதும், பூதம் அவனை இளவரசனாக மாற்றியும் அவனால் அந்த வேடத்தில் பொருந்தமுடியாமல்  தவிப்பதுமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

.Pink Power Ranger வேடத்தில் புகழ்பெற்ற நவாமி ஸ்கட் இதில் இளவரசி ஜாஸ்மின். மாறுவேடத்தில் அலாவுதீனை சந்திப்பதும் காதல் கொள்வதும் ஆட்சிபொறுப்பை ஏற்க விரும்புவதும், வில்லனை எதிர்ப்பதும் அழகிய குரலில் பாடுவதுமாக பலரின் விருப்பத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.  அவர் குரலில் முக்கியமான பாடலான speechless அவரை இன்னும் புகழின் உச்சிக்கு கொண்டு போகும்

படத்தில் ,குறும்புக்குரங்கும் பிரம்மாண்ட புலியும், வில்லனின் கிளியும் கணினி உபயம் வில் ஸ்மித்தின் நடிப்பு, அலாவுதீனாக நடிக்கும் மேனா மசூத்தின் மிகப்பொருத்தமான பாத்திரத்தேர்வு, ஜாஸ்மினாக வரும் நவோமி ஸ்கட்டின் தூய அழகு எல்லாம் ஈர்த்தாலும், அனிமேஷன் செட்கள் படத்தையும் டிஸ்னி ஸ்டுடியோவின் தரத்தையும் கொஞ்சம் கீழிறக்குகின்றன

 மூலக்கதையினின்றும் இத்திரைப்படம், சாதாரண மனிதனைப்போல அலாவுதீனின் நண்பனாக பூதம் வருவதிலும், இளவரசியை இளவரசன் அலி காதலிக்க பூதம் உதவி செய்வதிலும், பூதம் டேலியாவுடன் காதல் வயப்படுவதிலும், கொஞ்சம் வேறுபடுகின்றது இடைவேளையின் போது இளவரசன் அலி காதலை சொல்வதற்கு பதில் பலவகையான ஜாம்களை பட்டியலிடுவதும் பூதம் சலித்துக்கொள்வதுமாக அரங்கு சிரிப்பில் நிறைகின்றது.

.$183 மில்லியன் தயாரிப்புச்செலவில், சுமார் 5000 திரையரங்குகளில் உலகெங்கும்  வெளியான இப்படம், முதல் வாரத்திலேயே  $462.3 மில்லியன்களை வாரிக்குவித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

சதியும் காதலும் மந்திரமும் மாயக்கம்பளமும், சாகசங்களும், பூதமுமாக, அலாவுதீன் திரும்பக்கிடைத்த பால்யம்

aladdin

Blue bonnet-state flower of Texas

டெக்சஸ் மாநில மலர்

Lupinus texensis, என்னும் தாவர அறிவியல் பெயருடைய   Texas bluebonnet  அல்லது  Texas lupine என்பது டெக்சஸ்  மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்  வளரக்கூடிய அழகிய அடர்நீல மலர்களை தரும் தாவரமாகும். இம்மலர்களே டெக்சஸின் மாநில மலராகவும் இருக்கின்றன Lupines எனப்படும் பேரினத்தின்,  Lupinus subcarnosus, L. havardii, L. concinnus, L. perennis, மற்றும் L. plattensis  ஆகிய 5 சிற்றினங்களுமே நீல பொன்னெட் என்றே அழைக்கப்படுகின்றன.

 கொத்துக்கொத்தாக தோன்றும் மஞ்சரிகளில் வரிசையாக அமைந்திருக்கும் மலர்களின் இதழ் அமைப்பு பெண்களும் குழந்தைகளும் அணியும் தாடைக்கு கீழ் நாடாவால் இணைக்கப்பட்டிருக்கும் bonnet என்னும் தொப்பியை போலிருப்பதால் இதற்கு blue bonnet  என பெயரிடப்பட்டிருக்கின்றது. Buffalo Clover, Wolf Flower என்னும் பெயர்களும் இதற்குண்டு  இவை பட்டாணி ,அவரைச்செடிகளின்  குடும்பமான Fabaceae (Pea Family) யை சேர்ந்தவை

5-7 பிரிவுகளாக விரல்கள்போல் விரிந்திருக்கும், கூரான நுனிகளையுடைய  பசுமைக்கூட்டிலைகளுடனும் , பீன்ஸ் பொன்ற காய்களினுள்ளே 6 அலல்து 7  மிகச்சிறிய மணிகளாக கடினமான மேலுறையுடன்  இருக்கும் விதைகளையும் கொண்டிருக்கும் இந்த ஓராண்டுத்தாவரம், அதிகபட்சமாக 3 மீட்டர் உயரம் வரை வளரும்

20லிருந்து 50 செ மீ  உயரமுள்ள தண்டிலிருந்து  சுமார் 50 அடர் நீல மலர்களையுடைய மிதமான வாசனையுடன் மஞ்சரி உண்டாகும். மஞ்சரியின் நுனியில் மட்டும் தூவெண் நிறத்தில் மொட்டுக்கள் காணப்படும்.  முதிர்ந்தபின் மலர்கள் ஆரஞ்சு நிறத்திலிருக்கும்.  பூக்கும்பருவம் மார்ச்சிலிருந்து ஏப்ரல் வரை, அரிதாக மே மாதத்திலும் இவற்றைக்காணலாம். புல்வெளிகளிலும் நெடுஞ்சாலை வழியின் சரிவுகளிலும், பயிரிடப்படாத திறந்த வெளிகளிலும் இவை  செறிந்து காணப்படும். மிகக்குறைவான நீரும் அதிக சூரிய வெளிச்சமும்  நீர் தேங்காத மண்ணும்  இவை செழித்து வளர தேவைப்படும்

1901 மார்ச் 7 அன்று  டெக்சஸீன் மாநிலமலராக Lupinus subcarnosus  என்னும் மற்றொரு சிற்றினமே  முதலில்அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பெரும்பாலான டெக்சஸ் மக்களின் விருப்பத்தின்பேரில் L.texensis  மாநில மலராக மாற்றப்பட்டது. இம்மலருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கும், இவை  கொண்டாடப்படுவதற்கும் பிண்ணனியில் ஒரு முக்கியப்பெண்மணி இருந்திருக்கிறார்கள்

’’எங்கு மலர்கள் மலர்கிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையும் மலரும்’’ என்று அடிக்கடி சொல்லும் கல்வியாளரும் இயற்கை ஆர்வலரும் அமெரிக்காவின் 36 ஆவது அதிபரரான லிண்டன் பி ஜான்சனின் (Lyndon B Johnson) மனைவியுமான”Lady Bird” Johnson    என்பவரின் முயற்சியால்தான்  இன்று டெக்சஸின் நெடுஞ்சாலைகள் பலவண்ன வனமலர்களால் அழகுறக்காணப்படுகின்றது. 1965ல் அவரால் முன்னெடுக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட HBA –  highway beautification Act  என்னும் நெடுஞ்சாலைகளை அழகுபடுத்தும் சட்டத்தின் பின்னரே இந்த செடி மிக அதிகமாக சாலியோர சரிவுகளில் பயிரிடப்பட்டது.

அதன்பின்னரே பொட்டல் வெளிகளெல்லாம் பூத்துக்குலுங்கும் ரம்மியமான இடங்களாகின  சலிப்பும் சோர்வும் தரும் நெடுஞ்சாலைப்பயணங்கள் பார்வைக்கு இனிய மலர்களின் காட்சிகளுடன் மிக இனிதான விரும்பத்தக்க பயணங்களாகியது. இதன் பொருட்டு இவருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதுகளான presidential Medal of Freedom   மற்றும்  Congressional Gold Medal,  ஆகியவை அளிக்கப்பட்டன. 1982:ல் ஆஸ்டினில் இவரால் உருவாக்கப்பட்ட   தேசிய வனமலர்கள் ஆராய்ச்சி நிலையம் பின்னர் 2006ல் டெக்சஸ் பல்கலையுட்ன இணைக்கப்பட்டது..

இவரது வழிகாட்டலின் பேரில் 1932ல் ஜெக் கப்பல்ஸ் (Jac Gubbels) என்னும் புகழ்பெற்ற நிலவடிவமைப்பாளரை டெக்சஸின் நெடுஞ்சாலைத்துறை  பணியிலமர்த்தி நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும் சரிவுகளிலும் வனச்செடிகளை வளர்க்கத்துவங்கினார்கள், இன்றும் வருடத்திற்கு  30  ஆயிரம் பவுண்டுகள்  வனமலர்ச்செடிகளின் விதைகளை இத்துறை வாங்குகின்றது

 

1912ல் பிறந்து பெரும்பாலான நிலப்பரப்புக்களை கொள்ளை அழகாகவும் வண்ண மயமாகவும் மாற்றிய இவர் தனது வாழ்நாளின் பிற்பாதியிலிருந்து மரணம் வரை உடல்நலக்குறைவால் கண் பார்வையின்றி இருந்தது வாழ்வின் முரண்களிலொன்று, 1912ல் பிறந்து 2007ல்  தனது 94 வயதில் இவர்  மரணமடைந்தார்

டெக்சஸ் மக்கள் அனைவருமே இம்மலர்கள் பூக்கும் பருவத்தில் குடும்பத்துடனும் வளர்ப்பு பிராணிகளுடனும் சென்று மலர்களின் இடையிலும் அவற்றின் பிண்ணனியிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்வர். டெக்சஸ் நகரவாசிகளின் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்ட இம்மலரைக்குறித்தும் அச்செடிகள் வளர்ந்து மலர தயாராகிவிட்டதாவெனவும்  கிருஸ்துமஸ் முடிந்த உடனேயே    மக்கள் பேசிக்கொள்ள துவங்குவார்கள்

1933 லேயே இம்மலர்களுக்கான பிரத்யேக பாடலொன்றும்  டெக்சஸின் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. பாடலை இணையத்தில் காணலாம். டெக்சஸின் Chappell Hill என்னுமிடத்தில் இம்மலர்களுக்கான வருடந்திர விழா நடைபெற்று வருகின்றது

காற்று மண் மற்றும்  நீரிலிருந்து நச்சுப்பொருட்களை இவை  கிரகித்துக்கொள்ளும்.  எனவே விதைகளிலும் தாவரபாகங்களிலும் மிதமான நச்சுத்தன்மை காணப்படும். வீட்டிலும்  தொட்டிகளில் அலங்கரச்செடியாக இவற்றை வளர்க்கலாம். மே மாதத்தில் இவற்றின் காய்கள் பழுத்து  மஞ்சள் நிறமான பின்பு உள்ளிருக்கும் விதைகளை சேகரித்து ஓரிரவு முழுதும் நீரில் ஊற வைத்தோ , அல்லது  ஃப்ரீஸரில் ஓரிரவு உறைய வைத்து பின்னர் கொதிநீரில் நனைத்தோ கடின விதைஉறையை உடைத்து பின்னர் விதைக்கலாம்

இவை பூக்கும் காலத்தில் எங்கெங்கு மலர்கள் அதிகமாக  காணப்படும் என்னும் விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக GPS  சேவைகளும், புகைப்ப்டமெடுக்க வழிகாட்டுதல்களும், மக்கள் கூட்டமாக நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தி இவற்றை கண்டுமகிழ்வதால் அப்போது பின்பற்றவேண்டிய போக்குவரத்து ஒழுங்குமுறைகளும் பரவலாக தெரியப்படுத்தப்படுகின்றன. இப்பருவத்தில் சுற்றுலாப்பயணிகளை வரவேற்று  அழைத்துச்செல்ல  பல சுற்றுலா குழுமங்களும் இயங்குகின்றன. கடந்த பத்து வருடங்களில் ,இப்போது 2019ல் தான் இவை மிக அதிகமாக பூத்திருப்பதாக சொல்லப்படுகின்றது .இவற்றின் புகைப்படங்களுக்கென்றே பல இணையதளங்களும் இருக்கின்றன

அயர்லாந்தின் ஷம்ராக் மற்றும் ஜப்பானின் செர்ரி மலர்களுக்கும் ஃபிரான்ஸின் லில்லிகளுக்கும் இங்கிலாந்தின் ரோஜாக்களுக்கும்  ஹாலந்தின் ட்யூலிப் மலர்களுக்கும் இணையானதாக சொல்லப்படும் இம்மலரைக்குறித்த கவிதைகளும் கதைகளும் கூட ஏராளம் இருக்கின்றன. இவை பூக்கும் காலத்தில் இவற்றின் சித்திரங்கள் தீட்டப்பட்ட உடைகளும் திரைச்சீலைகளும் அதிகம் விற்பனைக்கு வரும் டெக்சஸுக்கு இம்மலருக்காகவேனும் ஒருமுறை வரவேண்டும் என இந்தியாவிலிருக்கும் அனைவரையும் நினைக்கவைக்கும்படியான பிரமிக்க வைக்கும் அழகினைக்கொண்ட  சுவாரசியமான மலர்  இந்த blue bonnet.

செர்ரி மலருக்கு கொண்டாட்டம்!

செர்ரி மரங்கள்  ப்ருனஸ் என்னும் பேரினத்தை சேர்ந்தவை. wild செர்ரியான –Prunus avium என்பதே செர்ரி பழங்களுக்காக வளர்க்கப்படும் மரமாகும்.  ஜப்பானியர்கள் பல நூறு கலப்பின செர்ரி வகைககளை  அவற்றின் அழகிய மலர்களின் பொருட்டு உருவாக்கினர்.

 செர்ரி வகைகளில் மலர்கள் தூய வெண்மையிலும், இளஞ்சிவப்பிலும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்தும் காணப்படும்.  ஐந்து இதழ்கள் ஒற்றையடுக்கிலும் பத்திலிருந்து இருபது இதழ்கள் அடுக்குகளிலும்  வகைக்கேற்றபடி காணப்படும்.

ஜப்பானியர்கள் இதை சகுரா அல்லது ஊமி மரம் (Umi) என்றழைக்கிறார்கள் ஜப்பானில் உள்ள பலவகையான செர்ரி மரங்களும் மொத்தமாக  (sato zakura)  சட்டோ சகுரா என்றும், ஒற்றையடுக்கு மலர்கள்  யோஷினோ Yoshino (Prunus x yeodensis) என்றும் பல அடுக்குகள் உடையவை  யேசகுரா (yaezakura) என்றூம் அழைக்கப்படுகின்றன.   இரட்டை அடுக்கு மலர்களுடைய மரங்களை 1862ல்  ஜப்பானிலிருந்து  வட அமெரிக்காவிற்கு G.R. Hall  என்பவர் கொண்டு வந்தபின்னர் அங்கும் இவை வளர்கின்றன.

Prunus serrulata  எனப்படும் செர்ரி சைனா, ஜப்பான், இந்தியா மற்றும் கொரியாவை தாயகமாக கொண்டது. இலைகளை உதிர்க்கும் இச்சிறுமரம்   26–39 அடி வரை (7.9–11.9 m). வளரும் மரப்பட்டைகள் மிக மிருதுவாகவும் மூச்சுத்துவாரஙகள் எனப்படும்  lenticels நிறைந்தும் காணப்படும். இலைகள்  ஓரங்களில் பற்கள்போன்ற அமைப்புடன் எதிரடுக்கில்  நீள்முட்டை வடிவிலிருக்கும். மலர்கள் ரெசீம் மஞ்சரிகளில் உருவாகும். சதைப்பற்றான பழங்கள் 8-10 மிமி அளவில் இருக்கும். ஜப்பான் முழுவதிலும் செர்ரி மரங்கள் பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் அரண்மனைகள், கோயில்கள், சரணாலயங்கள் போன்ற பல இடங்களில்  வளர்க்கப்படுகின்றன

 

sakuramochi.jpg

இம்மரங்கள் வருடா வருடம்  பூத்துக்குலுங்கும் காலம் ஹனாமி எனப்படும் பூக்காணுதல் விழாவாக  ஜப்பானில் 3ஆம் நூற்றாண்டிலிருந்தே பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகின்றது.. இறந்த மூதாதையர்களின் ஆன்மா செர்ரி மலரின் வண்ணங்களில் வாழ்கிறது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். மேலும் நல்ல அறுவடைக்கான கடவுள்களை வயலுக்கு வரவேற்கும் நிகழ்வாகவும் இந்த ஹனாமியை ஜப்பானியர்கள் கருதுகிறார்கள். மிக அழகாக பூத்துக்குலுங்கி பின்னர் சிலநாட்களிலேயே வாடி உதிரும் இவை மனித வாழ்வின் அநித்யத்தை சுட்டுவதாகவும் கருதப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும்  ஜப்பானிய வானிலை தகவல் தளத்தில் பல்வேறு பிரதேசத்திலும் பூப்பூக்க தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்.. ஹனமியின் போது பூத்துக்குலுங்கும்  செர்ரி மரங்களுக்கு கீழ் ஜப்பானியர்கள் விருந்துபசாரம் செய்வார்கள். இரவில நடத்தப்படும் ஹனாமி யோசகுரா (இரவு நேர சகுரா) எனப்படும். இதன் பொருட்டு வண்ணமயமான விளக்குகள் பூங்காக்களில் தொங்கவிடப்பட்டிருக்கும்.

பல நூற்றாண்டுகளாக ஜப்பான் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட சகுராவின் பூக்கும்  காலத்தில்,  நாட்டில் 7 முதல் 10 நாட்கள் வரை  விடுமுறை விடப்படுகிறது,  இம்மரங்களினடியில் மக்கள் உறவு மற்றும் நட்புக்களுடன் குழுமி உணவுண்டும் கவிதைகள் வாசித்தும்  ஓய்வெடுத்தும்  மகிழ்ந்து பொழுதைக் கழிப்பார்கள்,

பல இடங்களில் இணைவரிசையில் எதிரெதிராக நடப்பட்டு  வளர்ந்திருக்கும் இம்மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கால்களின் கீழ் இதழ்களாலான  ஒரு மென்மையான கம்பளம் விரித்த பூக்கும் நடைபாதையை உருவாக்கியிருக்கும். வசந்த காலத்தில், பசுமை போர்த்திய மலைப் பகுதியில் இலைகளற்ற மரத்தில், சகுரா மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அற்புதமான மலர்களைக்காண  உலகின் பிற பகுதிகளிலிருந்தும் ஜப்பானுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வருகை தருகின்றனர்

. இங்கு  100 யென் நாணயம் செர்ரி மலர்களுக்காக வெளியிடபட்டுள்ளது. பல நாடன் பாடல்களும் பாப் பாடல்களும் சகுராவிற்கென்றே பிரத்யேகமாக ஜப்பானில் உள்ளன. சகுரா பூக்கும் கால்த்தில் கிமானோ என்னும் தேசிய உடையிலிருந்து நோட்டுபுத்தகங்கள், குடைகள், அலங்காரப்பொருட்கள், கைப்பைகள் என பலவற்றிலும் இம்மலர்களின் சித்திரம் வரையப்பட்டிருக்கும். டாட்டூ எனப்படும் பச்சைகுத்துதலிலும் ஜப்பான் முழுக்க டிராகன் உருவத்துக்கு அடுத்தபடியாக இம்மலர்களின் வடிவமே உள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு  சகுரா என்று பெயரிடுகிறார்கள்.

ஜப்பான் மட்டுமல்லாது இந்தியா, சைனா,  வாஷிங்டன், கொரியா, ஜெர்மனி, பிரேசில், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ் உள்ளிட்ட உலகின்  பலபகுதிகளில் வெவ்வேறு காலங்களில் செர்ரி மலர்க்கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன

ஹனாமியின் சிறப்பு உண்வு வகைகள்

“cherry blossom sake,” – சகுரா மலர்கள் மிதக்கும் அரிசி மது

சகுரா மலர்களின் நறுமணத்துடன் தேனீர், சோயா பால் மற்றும் கோலா

Hanami bento –  ஹனாமி பெண்டோ எனப்படும்  வறுத்த மீன் துண்டு,பொறித்த காய்கறிகள், போன்றவைகள் இருக்கும் மதிய உணவுப்பெட்டி

Finger food  எனப்படும் சகுரா கலந்த உணவுகள், நறுக்கப்பட்ட பழத்துண்டுகள் இறால் , சுஷி மீன் மற்றும்  சமைத்த காய்கறிகள்

sakura mochi  எனப்படும்  சகுரா இலைகளால் சுற்றி வைக்கபட்டிருக்கும் சகுராவின் இளஞ்சிவப்பு, பனிப்பொழிவின் வெள்ளை மற்றும்   ஒரு நறுமணத்தாவரத்தின் பச்சைநிறம் என மூவண்ணத்தில் இருக்கும் அரிசிச் சோற்று உருண்டைகள்

மஞ்சள் கலந்த குடிநீர்

GULLY BOY

பாலிவுட்டின் பிரபலங்களான ஜாவீத் அக்தர் -ஹனி இராணி இணையின் மகளும் பிரபல நடிகர் ஃபர்ஹான் அக்தரின் சகோதரியுமான ஜோயாஅக்தரின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி 2019,ல் திரைக்கு வந்து பலத்த வரவேற்பு பெற்றிருக்கும் ஹிந்திமொழி திரைப்படம் ‘’ Gully Boy’’.

இந்திய ராப் பாடகர்களான டிவைன் மர்றும் நேஜியின் (Divine and Naezy) வாழ்வின் மீதான ஈர்ப்பில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. ஆசியாவின் இரண்டாவது பெரிய குடிசைக்குடியிருப்பான (சேரி) தாராவியை சேர்ந்த ஒரு இளைஞனின்   ராப் இசைக்கனவையும் பயணைத்தையும் சொல்லும் படமிது.

Gully_Boy_poster

முராத் ஆக ரன்வீர் சிங்கும், சஃபீனாவாக அலியாபட்டும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்

தாராவியின் நெரிசலான தெருக்களில் ஒன்றில் வசிக்கும், கல்லூரி இறுதியாண்டு படிக்கும், ராப் இசையின் மீதான காதலுடன் இருக்கும் முராத் நாயகன்.அவன் தந்தை மகனை விட இளைய ஒருபெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு வருகிறார்.  முராதுடன் தீவிர காதலில்  மருத்துவம் படிக்கும் சஃபீனா.அடிக்கடி ரகசிய சந்திப்பும் முத்தங்களுமாக காதல் தொடருகிறது. முராதின் ராப் இசையின் மீதான  ஆர்வத்தை  அப்பா கண்டிக்கிறார்.  ஒரு செல்வந்தரின் கார் ஓட்டுநராக இருக்கும் அப்பாவிற்குக்கு காலில் அடிபட்டதையடுத்து தற்காலிக ஓட்டுநராக அங்கு செல்லும் முராத் வாழ்வின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், மன அமைதிக்கும் மகிழ்வுக்கும் பணம் ஒருபொருட்டாக இல்லாமலிருப்பதையும், மிக அண்மையிலென காணும் அந்நாட்களில் அவ்வனுபவங்களையும், வாழ்வின் முரண்களையும்,  இவையனைதிற்குமிடையில் துளிர்க்கும் நம்பிக்கைகளையும்  பாடல்களாக சந்தங்களுடன் எழுதத்துவங்குகிறான்

MC Sher  என்னும் பெயரில் ராப் இசைப்பாடகனாக புகழ்பெற்றிருக்கும் ஒருவனின் நட்புடன் முராதும் தன் பாடல்களை மெட்டமைத்து யூ ட்யூபில் பதிவேற்றுகிறான்.அது புகழ்பெறுகின்றது. போஸ்டன் இசைக்கல்லூரியில் பயிலும் ஸ்கை  (கல்கி கோச்லின்) ஒரு புதிய பாடலை தாராவியில் MC Sher மற்றும் முராத்தின் ராப் இசை, மற்றும் நடனத்துடன் பதிவுசெய்து  வெளியிட,அதுவும் மிகப்பிரபலமாகின்றது. Gully Boy என்னும் பெயரில் முராத் ராப் இசைப்பாடகனாக புகழ்பெறுகிறான்

தவிர்க்கமுடியாமல் ஒருமுறை இரவில் ஸ்கையுடன் நெருக்கமாக இருந்துவிடும் முராத் இதை சஃபீனாவிடன் மறைக்கிறான்.உண்மை தெரிந்து காதலியுடன்  மனக்கசப்பு,   அதே சமயத்தில் மாற்றாந்தாய் வந்தபின்னால் அம்மாவுக்கு ஏற்படும் அவமானங்களால் வீட்டை விட்டு தாயுடன் முராத் வெளியேறும் நிலை.  இசைக்கனவை மூட்டைக் கட்டி தூர வைத்துவிட்டு வாழ்வின் நிதர்சனங்களை ஏற்கும்  கட்டாயத்தில் தன் மாமாவிடம் வேலைக்கு சேருகிறான் முராத்

படத்தின் இறுதிக்காட்சிகளில் அமெரிக்க ராப் இசைப்பாடகரான  நாஸ் (Nas) மும்பையில் நடத்தும் ஒரு இசைப்போட்டியில் கலந்துகொள்ளும் முராத் இறுதிசுற்றுக்கு வருகிறாரா, வெல்கிறாரா, காதலியுடனான கசப்பு மறைந்ததா என்பதே மீதிக்கதை

இசையை அடிப்படையாக கொண்ட படமென்பதால்  நிறைய பாடல்கள் இருக்கின்றன.  டிவைன், நேஜி, மற்றும் அமெரிக ராப் பாடகர் நாஸ் உடன் ரன்வீர் சிங்கும் பல ராப் இசைக்கலைஞர்களும் இணைந்து பாடி படத்தின் இசையனுபவத்தை மறக்கமுடியாததொன்றாக்கி இருக்கிறார்கள். ’’அப்னா டைம் ஆயகா’’  இப்போது  பெரும்பாலான இளைஞர்களின் விருப்பப்பாடல்.

காதலர் தினத்தன்று உலகிங்கிலும் சுமார் 4000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு  தயாரிப்புச்செலவான 84 கோடிக்கு மேல்  234 கோடியை வசூலித்து, இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற இத்திரைப்படம், 8 mile  என்னும் 2002ல் வெளியான ஆங்கிலத் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி எனும் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது

ரன்வீர் மற்றும் அலியாவின் நடிப்பிற்கு இணையாக ஜோயாவின் இயக்கமும்  விஜய் மெளரியாவின் வசனங்களும் படத்தின் மிகப்பெரும் பலங்களென்று சொல்லலாம். தாராவியின் நெரிசலான தெருக்களிலும், அடைசலான தீப்பெட்டிகளை கலைத்துக்கட்டியது போன்ற வீடுகளுக்குள்ளும் நம்மை அநாயாசமாக அழைத்துசெல்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே ஒஸா, நிதினின் படத்தொகுப்பும் வெகுவாக பாராட்டப்படவேண்டியது

கள்ளத்தனமும் குறும்பும் நிறைந்த அலியா நாயகி. மர்மமான சிரிப்பும் ,படபடவென பொரியும்  பேச்சும் , துள்ளலும் துடிப்பும், ஸ்கையை பாட்டிலில் அடித்து மண்டையை உடைக்கும் ஆங்காரமும், தீவிரக்காதலும் அப்பா அம்மாவிடம் சர்வசதாரணமாக காதலின் பொருட்டு சொல்லும் பொய்களுமாக மிக மிகப்பொருத்தமான, அலியாமட்டுமே இயல்பாக செய்யவும் பொருந்தவும் முடிகின்ற பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது அவருக்கு. பொங்கித்ததும்பும் இளமையும் நிஷ்களங்கமான  அழகுமாக அலியா வருகையில் திரையே  கூடுதலாக ஒளிர்கின்றது.

ராப் இசைக்கனவு, மாற்றாந்தாயுடனிருக்கும் கண்டிப்பான அப்பா, வறுமை, துயரிலிருக்கும் தாய், நண்பன், கூடுதல் பிடிப்புடனிருக்கும் காதலி, இப்படி கலவையான விஷயங்களால் அலைக்கழிக்கப்படும் சேரிப்பகுதியைச்சேர்ந்த இளைஞனாகவே வாழ்ந்திருக்கும் ரன்வீரை எத்தனை பாராட்டினாலும் தகும்,

வேலைக்காரனின் மகன் வேலைக்காரன்தான் ஆகவேண்டும் என அடிக்கடி முராதின் மாமா சொல்லும் அவ்விதியை கடின உழைப்பும் அதிர்ஷ்டமும் கூடிவந்ததால் மாற்றியமைத்து, விரும்பிய கனவை நனவாக்கும் ஒரு சேரிப்பகுதி இளைஞனின் கதையை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் படம் இது.

தெருவிலிருக்கும், எளிய, சாதாரண பையன் என்னும் பொருள்படும் Gully Boy  என்னும் பெயரில்  இத்திரைபப்டம் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வாழ்வின் பின்புலங்களும் வசிப்பிடமும் பொருளாதாரமும் ஒரு பொருட்டல்ல என்று சொல்கிறது.

 Under play செய்திருக்கறார் என்றுகூட  சொல்லும் அளவிற்கு ரன்வீரும் மிக மென்மையான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். கூச்சமும் தயக்கமுமாக அவர் தன் முதல்பாடலை பாடுவதும், நெருக்கமான காட்சிகளில் அலியாவின் கை சற்றே மேலோங்குகையில் அவற்றை கண்களில் காதலுடன்  ஆமோதித்து எற்றுக்கொள்வதும் நண்பர்களுடன் இயல்பாய் கூடிக்கொள்வதும் தன் சொந்த சேரி மக்களின் வாழ்வை படம்பிடித்து  உலகிற்கு காட்டியதில் பெருமிதம் அடைவதுமாய் நடிப்பில் மிளிர்கிறார்

ராப் இசையையே பிரதானமாக சொல்லும் படமென்றாலும் வழக்கத்தைக்காட்டிலும் கொஞ்சம் நீளமான இப்படம் எந்தவிதத்திலும் சலிப்புபூட்டாமல் அழகாக  நகர்கின்றது.. இசை, காதல்,  பிறிதொரு காதல் ,கூடல், ஊடல், கடின உழைப்பு குடும்பப்பிரச்சினைகள், நட்பு என்று பல உணர்வெழுச்சிகளுடனான கண்ணிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒருவனின் வாழ்வையும் கனவையும் சொல்லும் இப்படம்  அமேசான் பிரைமிலும் தற்போது வெளியிடபட்டிருக்கிறது.

To-let

செழியன்,  ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் ’To let’’  திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். 21 பிப்ரவரி 2019,ல் திரைக்கு வந்த இதுவே இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம். பிரேமா செழியன் இப்படத்தை தயாரித்துள்ளார். 25 நாட்களில் படமாக்கி முடிக்கப்பட்ட, பாடல்கள் இல்லாத ஒரு அழகிய தமிழ்திரைப்படம் இது

மிக எளிய திரைக்கதை. திரைப்படத்துறையில் கதாசிரியனாகும் பெரும் கனவுடன் இருக்கும், தற்போது கிடைக்கும் சின்ன சின்ன திரைத்துறை சார்ந்த வேலைகளை செய்துவரும் இளங்கோ என்னும்  இளைஞன்,  வேற்று மதத்தை சேர்ந்த காதல் மனைவியுடனும் இளம் மகனுடனும் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார். IT துறையில்  பணிபுரிபவர்கள் அதிக வாடகை கொடுக்க முடியும் என்பதால் அவர்களுக்கு வீட்டின் உரிமையாளர் வீட்டை வடகைக்கு கொடுக்க முடிவு செய்து இவர்களை ஒரு குறிப்பிட்ட, வெகு சமீபத்திலிருக்கும் ஒரு தேதிக்குள் காலி செய்ய சொல்வதும் வீடுதேடி இவர்கள் குடும்பமாக அலைவதும், வீடு கிடைப்பது  சார்ந்த துயரங்களுமே கதை

மொத்தம் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள். செழியனின் உதவியாளரும் கவிஞர் விக்ரமாதித்யனின் மகனுமான  சந்தோஷ் இளங்கோவாகவும் , அவர் மனைவி அமுதாவாக நடனக்கலைஞர் ஷீலாவும்,  குட்டிப்பையன் தருணாக சித்தார்த்தும், வீட்டின் உரிமையாளராக நாடகக்கலைஞர் ஆதிரா பாண்டிலட்சுமியும் நடித்திருக்கின்றனர்.பத்திரிகையாளர் அருள் எழிலன், கவிஞர் ரவி சுப்ரமணியன், முனைவர் மருது மோகன், எழுத்தாளர் எம்.கே.மணி ஆகியோரும்  நடிப்பில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும் மிகச்சாதாரண 3 அறைகள் இருக்கும் வீடுதான் கதைக்களம். மிகச்சிறிய பேசுபொருள் ஆனால் மிக அழகாக திரைமொழியை கையாண்டு இதை ஒரு அற்புதமான திரைப்படமாக செழியன் உருவாக்கியிருக்கிறார்.

 இப்படத்தில் பிண்ணனி இசையும் இல்லை. இயல்பான வாகனப்போக்குவரத்து ஒலிகளும் தொலைக்காட்சி, வானொலிச் சத்தங்களும், மகன் ஏதேதொ மிளற்றியவாறே விளையாடும் ஓசைகளும்  அமைதியுமே படத்தை நடத்திக்கொண்டு போகின்றது. தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவுக்கு மன்மார்ந்த பாராட்டுக்கள்.

குடியிருக்கும் அவ்வீட்டின் கதவு திறக்கையில் துவங்கி அதே கதவை மூடுகையில் முடிகின்றது திரைக்கதை.  சந்தோஷ் மற்றும் அமுதா தமிழ்திரையுலகிற்கு  நம்பிக்கையூட்டும் புது வரவு. ’’திட்டமாட்டியே’’ என்று தயக்கமாக துவங்கி உரையாடுவதும், அவமானத்தை கணவனிடம் கொட்டித்தீர்ப்பதுவும் வீடு வீடாக கனவுகளுடன் சென்று பார்ப்பதுமாய்  ஷீலா அசத்துகிறார். மூக்கும் முழியும் நீளப்பின்னலுமாய் லட்சணமாய் பாத்திரத்துக்கு பாந்தமாய் பொருந்தி இருக்கிறார்..

சந்தோஷ் அபாரமான இயல்பான நடிப்பு. அமுதாவிடம் கடுமையாக பேசிக்கொண்டிருக்கும் ஆதிரா ‘’உங்ககிட்டெ பேசலீங்க.‘’ என்று  இவரிடம் சொல்கையில் ஆத்திரத்துடன் ’’நானும் உங்ககிட்டெ பேசலீங்க!’’ என்று கத்துவதொன்றையெ சொல்லலாம் அவரின் அருமையான நடிப்பிற்கு உதாரணமாக. பல காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன. காதல் வாழ்வு, சின்ன சின்ன ரொமான்ஸ், மகனின் படிப்பு எதிர்காலம் என கவலைப்படுவது, அவ்வபோது பூசலிட்டுக்கொள்வது என அவர்களின் வாழ்வை மிக அண்மையிலென நாமும் அவ்வீட்டிலிருந்தே காண்கிறோம், ஒவ்வொரு முறை வீடு கிடைப்பதற்காக அலைபேசி ஒலிக்க காத்திருக்கையில் ’’கடவுளே, வீடு கிடைச்சுடனும்’’ என்று நாமும் பிரார்த்திக்க துவங்கிவிடுவோம். அந்த சுட்டிப்பையன் சுவற்றில் வரையும் படங்களும் அப்படியே மனதில் ஒட்டிக்கொள்கின்றது. அழகிய வீடொன்றை வர்ணங்களில் வரைந்துகொண்டிருக்கும் அச்சிறுவன் பிற்பாடு அப்பா அம்மாவுடன் பள்ளியிலிருந்து நேராக வீடு வீடாக தேடிக்கொண்டிருந்ததில் பழகிப்போய் அழகிய வீடு ஒன்றை வரைந்து அதில் to-let என்றும் எழுதுகிறான். நகர வாழ்வின் போதாமைகளும் பொருளியல் சிக்கல்களும், பெரியவர்களுடையதை மட்டுமல்லாது, வளரும் ஒரு அறியாக்குழந்தையின் கனவுகளையும்   சிதைத்து விடுவதை இயல்பாக  காட்டும் காட்சியது.

அவ்வபோது அவ்வீட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் ஒரு குருவி ஒருநாள் மின்விசிறியில் அடிபட்டு செத்துப்போவதைப்போல அவர்களின் எளிய வாழ்விலான கனவுகளனைத்தும் சொந்தமாக வீடும் பொருத்தமான வாடகைவீடும் இல்லையென்னும் காரணத்தினால் அடிபட்டுப்போகின்றது.

ஜன்னல் வழியே எதிர்வீட்டின் சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருப்பது, சின்ன தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது, விருப்பம் போல சுவற்றில் வரைந்து மகிழ்வது என்று எல்லாவற்றிலிருந்தும் வீடு மாற்றும் நிர்பந்தம் காரணமாக அச்சிறுவன் விலகிக்கொண்டெ வருவது வலிதருகின்றது. ’’அப்பா! இந்த tv  நம்மளுதா, இந்த வண்டி நம்மளுதா என்றெல்லாம் கேட்டு ஆமென்று பதில் சொல்லும் தகப்பனிடம் ’’அப்புறம் ஏம்ப்பா இந்த வீடு மட்டும் நம்பளுதில்லை? ’’ என்று கேட்கையில் அதற்கான பதில் அந்த அப்பாவிடமும் நம்மிடமும் இல்லையென்பதை வருத்தத்துடன் உணருகிறோம்

அந்த வீட்டு எஜமனியம்மாவான ஆதிராவின் கண்டிப்பும் கடுமையுமான நடிப்பு மிகப்பிரமாதம்.  அதட்டலும் அலட்சியமுமாய் அசத்துகிறார். அனைவருமே புதுமுக நடிகர்கள் என்பதை நம்பவே முடியாது, பெரிய அவமதிப்புக்களை சாதாரணமாக அவர்  நிகழ்த்துகையில் கூனிக்குறுகியபடி அமுதாவுடனேயே நாமும் படியிறங்கி வந்து அறைக்கதவை தாளிட்டுக்கொண்டு அழுவோம்.

பணம் தொடர்பான ஒரு சின்ன மனஸ்தாபத்தின் பின்னர் கிரைண்டரில் மாவரைத்துக்கொண்டிருக்கும் அமுதாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பாக்கட்டிலிருந்தும் இளங்கோ நோட்டுக்களை எடுத்துக்கொடுப்பதும், வீட்டை காலி செய்கையில் ஒட்டடை படிந்திருக்கும் மனைவியின் தலையிலிருந்து மென்மையாக அவற்றை  அப்புறப்படுத்துவதுமாய், நெருக்கடியிலும் அடுத்த கனம் என்னவென்று முன்முடிவு செய்ய இயலா வேதனையிலும் கூட அவர்களுக்கிடையேயான  காதல் இழையோடும் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும் விதம்அழகோ அழகு

எளிய தளத்திலியங்கும் மனிதர்களின் பிரச்சனைகளை கண் முன்னே கொண்டுவந்து காட்டி நல்லதொரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கும் செழியனுக்கு வாழ்த்துக்கள். பெருநகரமென்னும் இயந்திரத்தில் சின்னசின்னதான அந்தரங்க வாழ்வின் கனவுகள் எந்த மிச்சமுமின்றி நசுக்கப்படுவதை சொல்லும் படமிது. இந்தப் படத்துக்கு  2017 கொல்கத்தா திரைப்பட விழாவில், சிறந்த இந்தியப் படத்துக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இது 65வது தேசிய திரைப்படவிழாவில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினையும், கோவா வில் நடைபெற்ற 49வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பரிந்துரை விருதினையும் பெற்றது. ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

 தென்னிந்திய சினிமாவின் மரபான பாடல், நடனம், நகைச்சுவை, ஆபாச வசனங்கள் என்னும் எவ்விதக்கேளிக்கைகளும் இல்லாத இத்திரைப்படம் பல ஊர்களில் திரையிடப்படவேயில்லை என்பது வருத்ததிற்குரியது. திரைமொழியை ஒரு உன்னதக்கலை என்று  உணர்ந்தவர்கள் அவசியம் தேடிப் பார்க்க வேண்டிய ஒன்று TOLETtolet

மேடைப்பேச்சு

இன்று காலை முதல்வரிடமிருந்து சிறப்பு பேச்சாளரின் உரையொன்று இருப்பதாக தகவல் வந்தது, இன்று மாணவர்களுக்கு கல்லூரியில் கடைசி நாள் எனவே முக்கியமாக ஏதேனும் பேசும்படியான ஒருவரே வந்திருப்பாரென்றெண்ணினேன். பெயரை தெரிந்துகொண்டதும் ஆச்சர்யமாயிருந்தது. அவரை பத்தி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கேன். வாரமலரில் எல்லாம் மொக்கை கவிதைகளா எழுதுவாரு சரி எழுத்துதான் அப்படி பேச்சு பேச்சாயிருக்குமோ என்னமோ,  என்னதான் பேசறாருன்னு பார்ப்போம்னு போனேன்.

நல்ல கூட்டம் அரங்கில்  MOC யில் அவரைபத்தி ஆஹா ஓஹொன்னு அறிமுகப்படுத்த துவங்கினப்போ அவர் கையை அமர்த்தலா காட்டி நிறுத்தும்படியும் சுருக்கமா சொல்லலைன்னா  அவரின் சாதனைகளின் பட்டியல் தான் பேசவே நேரமின்றி  நீண்டுகொண்டே போயிரும்னு சொன்னாரு ஆச்சர்யமா இருந்துது எனக்கு சபையில் இப்படி ஒருத்தர்  அப்பட்டமான தற்புகழ்ச்சியுடன் நடந்துக்க முடியுங்கறதை பார்த்துட்டு

நல்ல கருப்பாக்கப்பட்ட தலைமுடி, உன்னத உடை, அடுக்கடுக்கான ஒப்பனையுடன் (குழாயடியில் உட்கார்த்திவச்சு தேச்சு கழுவிறலாமான்னு ஆத்திரமா இருந்துது)  மேடைக்கு வந்தார், பல பேச்சாளர்கள் போடியத்திற்கு வந்ததும்  அவங்க உயரத்துக்கேற்றபடி மைக்கை அட்ஜஸ்ட் பண்ணுவாங்க பார்த்திருப்போம். இவர் கொஞ்சம் கூடுதலா  இரண்டு கைகளாலும் போடியத்தையே தூக்கி நகர்த்தி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டாரு அதாவது மேடையெல்லாம் தனக்கு தண்ணி பட்ட பாடுன்னு சொல்லறாரு போல . ஆரம்பமே எனக்கு பீதியாக இருந்துது

ஒரு மேடையில் இளைஞர்களுக்கு என்னவெல்லாம் சொல்லவேண்டியதில்லையோ அதையெல்லாம்  உற்சாகமா சொல்லிட்டு இருந்தாரு. பல கல்லூரிகளில் 4 லட்சம் மாணவர்களுக்கு மேல் இவர் சந்தித்து உரையாடியிருக்காருன்னும் இன்னிக்கு நாங்கள்ளாம் அதிர்ஷ்டம் செய்திருப்பதால் அவரை சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கெல்லாம் கிடச்சிருக்குனு வேற அவரே சொல்லிக்கிட்டாரு. இத்தனை வெட்கம் கெட்டவரை சமீபத்தில் நான் சந்தித்திருக்கவில்லை

கிராமப்புறத்தைச் சேர்ந்த வெளியுலகம் அவ்வளவாக தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்கள் குறைந்த மாணவர்களிடையே, கல்லூரியின் கடைசி நாள் அன்று எப்படி அழகா அருமையா பேசலாம். இவரானா துவங்கினதுமே ’’உப்பில்லாம கூட சாப்பிட்டுரலாம் ஆனா நட்பில்லாம வாழமுடியாது’’ன்னாரு. ’’கண்ணீரை துடைப்பவனல்ல நண்பன் கண்ணிரே வராமல் பார்த்துக்கொள்பவனே நண்பன் ’’ இப்படி ஒரே நட்பு மழையா இருந்துது

ஒரே கைதட்டல், அதில்  குஷியாகிட்டாரு மீண்டும் நட்பு குறித்து தான் எழுதின மொண்ணைக்கவிதைகளா எடுத்து விட்டுகிட்டே இருந்தாரு

இடையிடையே வாட்ஸ் அப்பில் வந்த சில  நான்காம் தர ஜோக்குகள் வேறு

’ அவர் பேச வந்த தலைப்பு ’’தன்னம்பிக்கையே வெற்றி ‘’

தான் எழுதிய அரியர்ஸ் இல்லா மனிதன் அரை மனிதன் என்னும் பழஞ்சொல்லை அத்தனை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கிட்டாரு

பசங்களும் ஓயாம கைதட்டிகிட்டே இருக்காங்க

தானும் அரியர் வாங்கினவன்தானென்றும் பின்னர் தமிழின் மேல் உளள காதலினால்  அதை படித்துப்படித்து இப்படி உயரத்துக்கு வந்துட்டதாவும் சொன்னார். அவர் மேடையிலிருப்பதை உயரம்னு வேன்னா சொல்லிடலாம் மத்தபடி  அவர் உயரத்துக்கு வந்ததுன்னு சொல்லறதெல்லாம் மிகு புனைவு.  எல்லா பேரசிரியர்களும் சிரிச்சுட்டு கையடிச்சுகிட்டு இருக்காங்க எனக்கானா வயத்தை பிசையுது

என் தீயூழ் நான் முன்னாடி வேற உட்கார்ந்துட்டேன். கொடுமையிலும் கூடுதல் கொடுமையா அப்பப்போ என்னையும் பார்த்து ’’என்ன மிஸ் நான் சொல்லறது சரிதானே’’ங்கறார். சும்மாவே என்னை மிஸ் னு சொன்னா எனக்கு பத்திட்டு வரும் இதில் இவர் வேறெ

அப்பொவெல்லாம் என்னால அமைதியா புன்னகைக்க முடிஞ்சதுங்கறதைத்தான் நான் இன்னமும் வியந்து நினச்சுக்கறேன். எனக்கும் முதிர்ச்சி வந்துருச்சு . முதிர்ச்சி மட்டுமல்ல ஏறக்குறைய இன்னிக்கு அந்த முன்வரிசையில் எந்த உணர்வையும் வெளிக்காட்டிக்காம விண்  விண் னுன்னு தெறிக்கற தலைவேதனையை தாங்கிகிட்டு அவ்வப்பொது அவர் என்னை பார்த்து எதாச்சும் சொல்ல நான் அழகா மென்மையா புன்னகைச்சுட்டும் இருந்தேன். ஒரு மாதிரி ஊழ்க நிலை அது

என் வாழ்வில் இந்த 2 மணி நேரமே என்னால் தாங்க முடியாது என்னும் எல்லையையும் தாண்டி நான் தாங்கிட்டும் சகிச்சுட்டும் இருந்த காலம்

உயரமென்றால் எவெரெஸ்ட் நீ உயரனும்னா நெவர் ரெஸ்ட் இல்லைனா யு வில் ரஸ்ட் அண்ட் பிகம்  ஏ  டஸ்ட் என்னும் பழமொழியை

இறக்கை இருக்கும் வரையிலும் பட்டாம்பூச்சிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்னும் தான் எழுதிய பிரபல கவிதையை

சாகும் போதும் கைதட்டல் வாங்கிட்டு சாகும் கொசுவைப்போல் இருக்கனும்னு அறிவுரைகளை

தான் எழுதியிருக்கும் சிகரங்களை தொட்டுவிடு என்னும் (தலைப்பையே மாற்றி மாற்றி வைத்து வெளியிட்டிருக்கும் ) 67 புத்தகங்களை

அவற்றை வாங்கி மாணவர்கள் படிச்சு உலக வாழ்வில் உய்ய வேண்டியதன் அவசியத்தை

கலாமுடன் தனக்கிருந்த நெருக்கத்தை ,சில பல அவருக்கு மனப்படமாகி இருந்த திருக்குறள்களை

இப்படி தாளிச்சுக்கொட்டிட்டு இருந்தார்

பேசும்போது கைகளை பலமாக  ஆட்டுக்கல்லில் மாவாட்டி தோண்டி எடுப்பது போலவும், பெரிய கிரைண்டரின் குளவிக்கல்லை தூக்க முடியாமல் தூக்குவது போலவும் கரகரவென்று எதையோ  கையில்  வைத்து சுற்றுவது போலவும், கம்பிகளில் சிக்கிக்கொண்ட மாஞ்சா கயிற்றை விடுவித்து பட்டத்தை எடுப்பது போலவும் செய்கைகளும் அல்லது சேஷ்டைகளும் செய்துகொண்டிருந்தார்

குரலையும் அவ்வபொது MR ராதா போல திடீரென்று உயர்த்தி உச்சஸ்தாயியிலும், பின்னர் கிசுகிசுப்பாக காதலனிடமோ காதலியிடமோ ரகசியமாய் பேசும் குழைவான கொஞ்சும் குரலிலும் திடீரென்று முழங்கியும் மாடுலேஷனில் வித்தியாசம் வேறு காட்டிக்கொண்டிருந்தார்

 இவையனைத்துக்கும் மேல் அவ்வபோது முஷ்டியை மடக்கி போடியத்தை படார் படாரென பலமாக் குத்திக்கொண்டும் ஆவேசமாகவும் பேசிக்கொண்டிருந்த போதெல்லாம் எனக்கு வயிற்றில் உப்பு புளி காரம் எல்லாம் சேர்த்து கலக்கினாற்போலிருந்தது

இறுதியாக என்பதையே பலமுறை சொல்லிக்கொண்டிருந்தாரே ஒழிய அந்த இறுதியே  பேச்சில் வரக்காணோம். இந்த லட்சணத்தில் மேஜர் சுந்தரராஜனை போல தமிழில் சொன்னதையே ஆங்கிலத்திலும் அடுத்தடுத்து சொல்லி ரெண்டிற்கும் கைதட்டல் வேறு வாங்கிக்கொண்டிருத்னார்

’’செத்த மீனைத்தான் ஆற்றுத்தண்ணீர் இழுத்துக்கொண்டு போகும் உயிருள்ள மீன்தான் நீரை எதிர்த்துச்செல்லும் எனவே’’  எனற போது அவர் முடிச்சுட்டாரென்றெ நான் உளம் மகிழ்ந்தேன்

ஆனால் அதான் இல்லை ’’எனவே, எப்படி எதிர்த்து வாழ்வதென்று’’ கற்பிக்க துவங்கிவிட்டார்

பின்னர் போன ஜென்மத்து குரு சிஷ்ய ஜோக்குகளை எடுத்து விட்டார்

கேள்விகளை வேறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுஇருந்தார் இடைக்கிடைக்கு

’’ஒரு வரிதான் வாசிக்க முடியும்னா ஆத்திசூடி  படி

இரண்டென்றால் குறள்  படி

மூன்றென்றால் விவேகானந்தரின் பொன்மொழிகள்   படி

நான்கு வரிகளே வாசிக்க முடியும்னா நாலடியார்  படி

எதுவுமே வாசிக்க முடியலைனா செத்து மடி’’

இதை அவரெழுதியதாகச்சொன்னதில் எனக்கு விரோதமெல்லாமில்லை என்ன என்னவோ யார் யாரோவெல்லாம் எழுதறாங்களே இப்போல்லாம் ஆனா இதை அவர் எழுதின கவிதைங்கறாரே? அதைத்தான் தாங்கவே முடியாம கண்ணில் ஜலம் வச்சுக்கிட்டேன். செய் அல்லது செத்து மடிங்கறதை மகாத்மாவுக்கு அடுத்து தானே சொல்லியிருப்பதாகவும் உபரித்தகவலை சொன்னார்

இதை மட்டும் 3 முறை திரும்ப திரும்ப சொல்லிவிட்டு நான்காவது முறையாக  முதல் பாதி இவரும் மறுபாதி மாணவர்களுமா சொல்லச்சொல்லி fill in the blanks  விளையாட்டு வேற நடத்தினார்

நான் கைதட்டவேயில்லை எனபதை அவவ்போது ஓரக்கண்ணால் கவனித்தார் எனினும் என் முகத்திலிருந்த மந்தகாச புன்னகையில் அவரை நான் மதிக்கிறேன் அல்லது ரசிக்கிறேன் என்றே அவர் யூகித்துக்கொண்டிருந்தார்

இந்தம்மா நம்ம பேச்சை ரொம்ப கவனமா ஆழ்ந்து கவனிக்கறாங்க என்றும் புளகாங்கிதமடைந்திருக்கக்கூடும்

ஒருவழியாக அவரின் பலத்த கைதட்டல்களுக்கிடையேயான பேச்சு முடிந்ததும் நான் முதல் ஆளாக வெளியெ வந்து லேபில் இருந்த முதலுதவி பெட்டியிலிருந்து பஞ்சு எடுத்து காதில் வழிந்துகொண்டிருந்த ரத்தத்தை துடைத்து சுத்தம் செய்துகொண்டேன்

21 அன்று நடக்கும் ஜெ வின் கட்டணக்கூட்டதிற்கு எப்படியும் இடம் கிடைக்கனும் என்றும் கிடைத்தால் இன்றைய பேச்சாளரின் பேச்சை  ரசித்துக்கொண்டிருந்த பேராசிரியர்களில் யாருக்காவது மொட்டை போடுவதாகவும் குலசாமிக்கு வேண்டிக்கொண்டேன்

ஜெ வின் பேச்சைக்கேட்பதுதன் இன்னிக்கு நடந்த அநீதிக்கான  ஆகச்சிறந்த பிழையீடு அல்லது பிராயசித்தமாக இருக்கும்

அலுவலக்தில் பேச்சாளருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கவரினுள்ளே எத்தனை  சன்மானமிருந்ததுன்னு கேட்கலமான்னு நினச்சுட்டு உடன் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். தெரிஞ்சுகிட்டேன்னா ரொம்ப காலத்துக்கு  தூக்கம் வராது எனக்கு

ஜெ சொல்லுவாரில்லியா தீயூழ்னு அடிக்கடி. இன்னிக்கு அந்த தீயுழை மிக அருகில் முன்வரிசையில் அமர்ந்து பார்த்துகிட்டு இருந்தேன்.

பி கு

 இந்த பேச்சாளரின், எழுத்தாளரின் நூல்களில் பன்முகத்தன்மைன்னு ஒரு முனைவர் பட்ட ஆய்வும் நடந்திருக்காம்

கலி முத்திடுச்சுன்னு கேட்டுருக்கோம் இப்போதான் நிதர்சனமா தெரியுது இதெல்லாம் எழுதினப்புறம் தான் நெஞ்சில் என்னவோ கல்லாட்டம் ஒண்ணு அடைச்சுகிட்டு இருந்தது அதை இறக்கி வச்சாப்பல இருக்கு

அருண்மொழி ஜெயமோகன் அவர்களின் பனைகளின் இந்தியா குறித்து!

 எப்பொழுதும் ஜெ அவர்களின்  தளத்தை அன்றன்றே பார்த்துவிடுவேன். இந்த வாரம் முழுதும் ஊர்த்திருவிழாவென்பதால் நானும் சரணும் அதில் மும்முரமாக இருந்ததில் சிலநாட்கள் பதிவுகளை வாசிக்காமல் விட்டுவிட்டேன் அதில்  அருணா அவர்களின் பனைமரச்சாலை பதிவும் சேர்ந்து தவறிவிட்டது.

இன்று அதிகாலையிலேயே பனைமரச்சாலை பற்றிய  அவரது விமர்சனத்தை வாசித்தேன். அது குறித்துச்சொல்லும் முன்னர்  அவரது எழுத்தைக்குறித்த என் பொதுவான அபிப்ராயத்தையும் சொல்லிவிடுகிறேன். ஜெ சாரின் எழுத்துக்களை ஆழ்ந்து  வாசிக்கையில் அவரது மொழி எப்படியோ பெரும் பாதிப்பை உண்டு பண்ணி எங்களின் அகமொழியையும் மேம்படுத்திவிடுகிறது. 10 வருடங்களுக்கு முன்பிருந்த தேவியின் எழுத்துக்களுக்கும் (கடிதங்களிலும் விமர்சனங்களிலும்தான் ): ) இப்போதைக்குமான எழுத்துக்களுக்கும் இருக்கும் பெரும் வித்தியாசத்தை யாராலும் சொல்லிவிட முடியும். சமீபத்தில் நான் gender knowledge குறித்து ஒரு உரையாற்றியதின் ஒலிப்பதிவினை  கேட்டபொழுது திகைப்பாயிருந்தது. பெரும்பாலும் ஜெ சாரின் கருத்துக்களை அப்படியேதான் பேசியிருந்திருக்கிறேன். காப்பி அடிக்கலை ஆனால்  என் மனதில் அப்படி அவர் சொன்ன, எழுதின கருத்துக்கள் வலுவாக பதிந்திருக்கின்றன. என் உரைகளைக்கேட்ட்பவர்களும், நான் எழுதுவதை தொடர்ந்து வாசிப்பவர்களும் ஜெவின் எழுத்துக்களை வாசிப்பதனால் செம்மைப்படுத்தபட்டிருக்கும் எனது மொழியினைக்குறித்து சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

பேசும்போதும் அப்படியே! சரணின் ஆசிரியர் ஒருவரிடம் இரண்டு நாட்கள் முன்பு பேசிக்கொண்டிருக்கையில் அவரது நண்பரின் மரணம் எப்படி தவிர்க்கமுடியாமலானதென்று அவர் வருத்தப்பட்டுக்கொண்டபோது சமாதானமாக நான் ’’வேறென்ன சார் ஊழ்தான்’’ என்றேன். அவர் அச்சொல்லை முதன்முறையாக கேட்கிறார் போல. அப்படியே திகைத்து ’’என்ன சொன்னீங்க’’ என்றார். நான் சுதாரித்துக்கொண்டு ஊழ் சார், fate, destiny அது , என்றேன். உடனிருந்த சரண் கண்களால் புன்னகைத்தான்

ஆனால்  அருணாவின் எழுத்துக்களில் அப்படி  ஜெவின் influence ஏதும் இல்லாமலிருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை அளிக்கின்றது. சீரான ஆழ்ந்த தெளிவான முற்றிலும் சாரிடமிருந்து வேறுபட்டிருக்கின்ற மொழி உங்களது.  எப்போதும் போலவே இதையும் எழுதி விடுதியிலிருக்கும் சரணிடம்  அலைபேசியில் வாசித்துக்காட்டினதும் ’’ எப்போவும் ஏன் ஜெ சாருடனேயே எல்லாருடையதும் ஒப்பிட்டு பார்க்கிறே?, இதை செய்யாதேன்னு சொல்லியிருக்கிறேனில்ல ’’ என்று  கடிந்துகொண்டான் இதைமட்டும் உங்களுக்கு எழுதவே கூடாதென்றும் கண்டிப்பாக சொன்னான்.

இதற்கு முன்னரும் அவர் எழுதினதை வாசித்து ரசித்திருக்கேன். சோர்பா, நீல ஜாடி இப்படி

இப்போது  இந்த பனைகளின் இந்தியா வாசிக்கையில் அவருடையதைப்போலவே எங்களுக்கும் ஒரு அழகிய பால்யம் வாய்த்திருந்ததை நினைவுகூர்ந்தேன், நானும் சங்கமித்ராவும் (அக்கா) வேட்டைக்காரன் புதூரில் இப்படி வேம்பு, பனை மா என மரங்களுடனும் ஆடு மாடுகளுடனும் ஆத்தாவீட்டில் மகிழ்ந்து வாழ்ந்திருந்தோம். வாழ்வின் துயர்கள் தொட்டிராத காலமென்பதால் மீள மீள நினைவுக்கு கொண்டு வந்து மகிழும் வெகுசில நினைவுகளில் அந்த கிராமத்து நினைவும்   எப்போதும் இருக்கும்.  வேப்ப முத்துக்கள் எனப்படும் வேம்பின் பழக்கொட்டைகளை, இலந்தை மற்றும்  சூரிப்பழங்களை சேகரிக்கவும்,  பனங்கூம்புகளை வேகவைத்து சாப்பிடவும்,   பிடிக்க முயற்சிக்கும் விரல்களுக்குள் அடங்காமல்  உயிருள்ளவைபோல நெளிந்து தளும்பும் நொங்குகளை பனையோலையில் வைத்து  முகமெங்கும் ஈஷிக்கொண்டு சாப்பிடவும்,  விரல்கள் புண்ணாகும் அளவிற்கு  நொங்குகளை நோண்டி எடுத்து சுவைத்தபின்னர் பனம்பழங்களில் வண்டி செய்து தெருவெல்லாம் தள்ளிக்கொண்டே விளையாடவும் தான் விடுமுறை முழுக்க செலவாகும். அருளப்பட்ட நாட்கள் அவை

 பனை வசீகரிக்கும் ஒரு மரமல்ல, அருணா சொல்லியிருப்பது போல அது ஒரு அமானுஷ்ய மரமென்னும்  எண்ணத்தைத்தான் உருவாக்கும் என்றாலும் எனக்கு அம்மரத்தின் மீது  விருப்பும் வெறுப்பும் ஏதுமிருந்ததில்லை காட்சனை , அவர் எழுத்துக்களை சந்திக்கும் வரையிலும்

 ஒரு தாவரவியலாளராக மட்டுமே பிற மரங்களைப்போலவே பனையைக்குறித்தும் கொஞ்சம் அறிந்திருந்தேன். ஆனால் தளத்தில் காட்சனைக்குறித்தும் பனைமரச்சாலை பயணத்தைக்குறித்தும் அறிந்துகொண்டபின்னர் காட்சனுக்கு எழுதிய நீண்ட கடிதமொன்றுக்கு பதிலாக அவர் அனுப்பிய கடிதத்தின் பின்னர் பனையை நான் மிக நெருக்கமாக அறிந்துகொண்டது மட்டுமன்றி நேசிக்கவும், வழிபடவும் செய்தேன் அவரளவிற்கே!

இன்னும் அந்தப்புத்தகம் எனக்கு கைக்கு கிடைக்கவில்லை என்றாலும் அது அத்தியாயங்களாக எழுதப்பட்டபோது அனேகமாக எல்லாப்பதிவுகளையும் பின்னிரவில் காட்சன் வலையேற்றும் வரை காத்திருந்து வாசித்திருக்கிறேன். முழுமையாக புத்தகமாக வாசிக்கும்  நிறைவு இனிமேல் தான் கிடைக்கும் என்றாலும் அருணா எழுதியிருப்பது அப்படி ஒரு முழுமையான புத்தக வாசிப்பின் நிறைவை உண்டாக்கியது. அழகாக பனையைக்குறித்த பின்தொடரும் நிழலின் குரல் மேற்கோளில் துவங்கி  அவரின் ன் இளமைக்கால பனை தொடர்பான நினைவுகளைச் சொல்லி, பின்னர் காட்சனின் பயணத்தை,  வழித்தடத்தை அவர் பார்வையில் பனையை, அவரின் மொழிவளத்தை, காட்சன் பனையில் கிருஸ்துவையும் தன்னையும் கண்டு கொள்ளும் இடங்களை அருணாவின் இன்னாள் வரையிலான   பனை குறித்தான பிம்பம் வாசிப்பின் பின்னர் எப்படி மாறியிருக்கிறதென்பதையெல்லாம் சொல்லி முடிக்கிறார்.

இடையே பனை குறித்த ஒரு நாட்டுப்புறக்கதையொன்றினையும் சொல்லியிருக்கிறார். அதை இது வரையிலும் எந்த வடிவிலும் நான் கேள்விப்பட்டதேயில்லை. ஆர்வமாக வாசித்தேன். எங்களூரில் கணவரின்றி குறைப்பட்டுபோன பெண்களுக்கு ஒரு முருங்கை மரமும் எருமையும் கொடுத்தால் போதும் ஒழுக்கமாக ஜீவித்துக்கொள்வாளென்று சொல்வதைத்தான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். எருமையும் பனையும்   முருங்கையும் நிச்சயம் அடித்தட்டு மக்களின் வாழவாதாரங்களில் மிக முக்கியமானவை

பனையில் காட்சனைப்போல ஏசுவைக்காண வாசிக்கும் அனைவராலும் இயலாதென்றாலும் பனை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான மிக முக்கியமான ஒரு மரமென்பதை கட்டாயம்  பனைமரச்சாலையை வாசிக்கும் அனைவருமே உணரமுடியும் .  இந்தப் பதிவில் காட்சன் எங்கு பயணத்தை துவங்கினார், நீண்ட அப்பயணத்தில் எங்கெங்கு தங்கினார், யாரையெல்லாம் சந்தித்தார், எப்படி பனையை ,பனையின் பாதையை, பனையை நம்பியிருக்கும் மக்களை தொடர்ந்தார், என்பதையெல்லாம் சுருங்க ஆனால் சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார் அருணா

காட்சனின் பதிவுகளை, அவரது இலட்சியத்தினை அவரது கனவுகளை கொஞ்சமும் அறியாதவர்களுக்கும் இப்புத்தகத்தை வாங்கும் ஆவலை உருவாக்கும் விதமாக பதிவு எழுதப்பட்டுள்ளது.

//  நம்பிக்கையும் சோர்வும் மாறி மாறி வரும் பயணம்// பனை சார்ந்த தொழிலாளர்கள் குறைந்துவருவதென்பது கடக்க முடியாத அகழியாக மாபெரும் சுவராக முன் நிற்கும் பிரச்சனை // அரசே  மதுக்கடைகளை ஏற்று நடத்தும் தமிழகத்தில் பனை சார்ந்த பிரச்சனைகள் அத்தனை சுலபத்தில் தீராது என்பதையெல்லாம் எளிமையாக ஆனால் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் அருணா

 உலகளாவிய பனைப்பயன்பாட்டின் கூறுகளை காட்சனின் பார்வையிலும்,    கிருத்துவ மதபோதகரான அவர் பனையின்  பிறசமயத்தொடர்புகளை தேடிச்செல்வதையும், அவரின் ரசனையை கலையுணர்வை இப்படி எல்லாவறையும் அழகாக தொட்டுத்தொட்டு எங்கள் முன்னால் தீற்றி  பனைமரச்சாலையைக்குறித்த ஒரு அழகிய  சித்திரத்தை விரிக்கிறார் அருணா

//போகிற வழியில் அவர் மயங்கி நிற்கும் கோட்டைகள் , கோவில்கள், தேவாலயங்கள், ஏரிகள், அஸ்தமனசூரியன் எரிந்தணையும் பனங்காடுகள் என முழுமையான ஒரு பயண அனுபவம் இந்நூல்// இதை ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க அருணா.

//பயணம்  நம்முள் நிகழ்த்துவது என்ன? மனதின் சுருள்கம்பி மெல்ல முறுக்கவிழ்கிறது. மனம் இலகுவாகிறது.நிலக்காட்சிகள் மாறத் தொடங்கும்போது வீடு, வாசல், சுற்றம் விலகிப் போக நாம் புதிய உலகிற்குள்நுழைகிறோம். அக்கணங்களில் நேற்று இல்லை, நாளை இல்லை, சஞ்சலங்கள் இல்லை. முதலில் ஒரு பரவசம்,உற்சாகம். பிறகு அதன் அலைகளடங்கி அதுவே ஆழ்நிலை தியானமாகிறது// இந்த பத்தியில் எனக்கு அத்தனை அறிமுகமில்லாத அருண்மொழி நங்கை என்பவரை மிக அணுக்கமாக அறிந்துகொண்டேனென்றே சொல்லலாம்

//பெண்கள்  கால் பதிக்க இயலா நிலவெளிகளில் அலைந்து திரிவது ஆண்களுக்கு மட்டுமேயான ஒரு வரம்இந்தியாவில். அதன் விடுதலையும்  அவர்களுக்கே இன்றுள்ளது.// இதையும் நான் மிக ரசித்தேன். இனி அருணாவின் எழுத்துக்களை அவர் பெயரைப்பார்க்கும் முன்னரே நான் அடையாளம்  கண்டுகொள்ளக்கூட முடியுமென்று  இவ்வரிகளை வாசிக்கையில் நம்பிக்கை வந்தது

எனக்கும் ஒற்றைப்பனையை காண்கையில் துக்கமாக  இருக்கும்  இவ்வுலகு தாட்சண்யமின்றி கைவிடப்பட்டவைகளில் அதுவும் ஒன்றெனத் தோன்றும். புகைப்படங்கள் இல்லையென்னும் குறையையும் புகைப்படங்கள் நம்முடன் மிக அதிகமாக உரையாடுகின்றன என்பதையும் அருணா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இறுதியாக  அருணா   அவருக்குள் செய்துகொண்டதைபோலவே   பனைமரச்சாலையை  வாசித்து முடித்த அனைவருக்கும் இனி அவரவர் மனதில் அதுவரை இருந்த  பனைசார்ந்த பிம்பங்களை மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டிருக்கும்

அருணாவிற்க்கு பனை தூய  கருப்பட்டியின்  இனிப்பாக,  பனங்கற்கண்டின்  படிக ஒளியாக, அக்கானியின்சுவையாக, நுங்கின் குளிர்ச்சியாக  வளர்ந்திருக்கிறது. எனக்கு பனை என்பது தாவரவியல் பாடங்களில் ஒன்றாக  மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டிய மரங்களில் ஒன்றாக  மட்டுமல்ல,  வானளாவி நின்றுகொண்டு எளிய மானுடத்தை, அவற்றின் கீழ்மைகளை  குனிந்தபடி  புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் இறையின் வடிவமும் கூட

காட்சனின் பனைப்பயணத்தைக்குறித்த  ஒரு அழகிய அறிமுகத்துடன் அதில்  அவருடன் பயணிக்கவும் பலருக்கு விருப்பத்தை உண்டாக்கியிருக்கும் பதிவு இது

அருணாவிற்கு நன்றி

தும்பி ஜனவரி 2019 இதழ்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் விஷ்ணுபுரம் குழுமத்தில் தும்பி என்னும் சிறுவர் இதழில் வந்திருந்த  உலகமே அழிந்துபோனபின் ஒற்றை மலரிருக்கும் ஒரு செடியை கண்டு பிடித்த சிறுவனும் சிறுமியுமாய் அதை வளர்த்து காடாக்கி மீண்டும் ஒரு உலகை படைக்கும் கதையொன்றினை குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அக்கதை மிகவும் பிடித்திருந்தது

நான் என் மகன்கள் இப்போது வளர்ந்து கல்லூரிக்கும் பள்ளி இறுதி வகுப்பிற்கும் சென்றுவிட்டபோதிலும் அவர்களின் பால்யத்திலிருந்து , இரவிலும் நேரமிருந்தால் பகலிலும் கூட இன்னுமே கதை சொல்லிக்கொண்டேயிருக்கும் ஒரு கதை சொல்லி.

அப்பொழுதே ஒரு நண்பரிடம் தொடர்பு எண்னை வாங்கி  அந்த வாரமே தும்பியின் சந்தாதரர் ஆனேன்

 பின்னர் தொடர்ந்த சில மாதங்களாகவே தும்பியை வாசிக்கிறேன். அழகுப் பதிவுகள் ,நான் சிறு வயதில் மிகப்பிரியமாக வாசிக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் வெளியீடாக வரும் ரஷ்யமொழிக்கதைகளின் தமிழாக்கம் வரும் புத்தகங்களை அச்சாக அபடியே நினைவூட்டும் தாள்களும் சித்திரங்களும் வடிவமைப்புமாக இருக்கின்றது தும்பி.

தமிழிலும் ஆங்கிலத்திலும் இருப்பதால் வளரும்  குழந்தைகளுக்கு இது மிக விருப்பமுள்ள ஒன்றாகவும்  ஏக சம்யத்தில் இருவேறு மொழிகளில்   சொற்களை விளையாட்டாக விரும்பிக் கற்றுக்கொள்ளும்படியாகவும் இருப்பது மிகவும் பிடித்திருந்தது. தும்பியின்  சில பிரதிகளை சில மாதங்களாக வாசித்து அவற்றைக்குறித்து எழுதனும்னு நினைத்தாலும் எழுதியதில்லை எப்படியோ விட்டுப்போய்விட்டது ஆனால் இந்த இதழ் எழுதியே ஆகவேண்டும் என்னும் விருப்பத்தை பக்கத்துக்குப்பக்கம் உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது

ஜனவரி மாத தும்பி 22  முன்னட்டைப்படமும் வடிவமைப்பும் மிக அழகு. மேலிருந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து சிரிக்கும் பெண்ணும், கீழே கோழிக்குஞ்சு தோளில் அமர்ந்திருக்க கிளர்ந்து சிரிக்கும் சிறுவனும் அதுவும்  கருப்பு வெள்ளையில். Wonderful !  இதன் பொருட்டு முகம்மது மஹ்திக்கு பிரியத்துடன் கைகுலுக்கல்கள். முன்னட்டை துவங்கி, வசீகரிக்கும் உள்ளடக்கங்களுடன் பின்னட்டையில் கணேசனின் நிழல் கவிதை மற்றும் அந்த எளிய கோலச்சித்திரம்   வரைக்குமே கண்னையும் மனசையும் நிறைத்தது தும்பி.

கருப்பு வெள்ளையிலும் வண்ணத்திலுமாய் இதழ் முழுக்க இருக்கும் பிரமாதமான புகைப்படங்களூக்கு கார்த்திகேயன் பங்காருவிற்கு அன்பும் நன்றியும்.

தண்ணீரை சிதறடித்து விளையாடியபடி குளிப்பாட்டப்பட்டுக்கொண்டிருக்கும் குழந்தயும் அதை உயரத்தில் அமர்ந்தபடிக்கு  வேடிக்கை பார்க்கும் யாரோவின்  சின்னஞ்சிறு பாதங்களும், உடை நனையாமல் தூக்கிப்பிடித்தபடி ஓடிவரும், தோழியின் தோள்களை கட்டிக்கொண்டு சிரிக்கும், குடைக்குள் மூக்கை சுருக்கிக்கொண்டும் கன்னக்குழியுடனும் மலர்ந்து சிரிக்கும், கடற்கரை மணலில் கால்பாடாமல் எம்பிக்குதிக்கும் சிறு துணிப்பையில் எதையோ ஆர்வமாக எடுக்கும் , அதை எட்டிபார்க்கும், பள்ளிக்கைப்பிடிச்சுவற்றில்  கூட்டமாக பூப்பூத்ததுபோல் அமர்ந்திருக்கும் சிறுமிகளும்.  கலங்கிய நீரில் வெங்காயத்தாமரைகளுடன் சேர்ந்து குளிக்கும்,  பலூன் விட்டுக்கொண்டு மகிழ்ந்துகொண்டும், கோவில் மணியை அடிக்க தோழியையோ சகோதரியையொ தூக்கிக்கொண்டிருக்கும், மாட்டுக்கொம்பினிடைவெளியில் தெரியும் குதிநீச்சலுக்கு தயாராகி இருக்கும் நனைந்த சிறுவர்களுமாய்  காமிரா சிறுவர்களின் உற்சாக உலகினை அப்படியே கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது. அனைத்துப் புகைப்படங்களும்  அற்புதம்

சின்ன சின்னதா கதையில் வரும் லேன் மோர்லோவின் ஓவியங்கள் வெகு அருமை+அழகு. படம் பார்த்துக்கதை சொல்லுகையில் கேட்கும், பார்க்கும் குழந்தைகளூக்கு இக்கதை மறக்கமுடியாத ஒன்றாக மனதில் எப்போதைக்குமாய் இருக்கும்படிக்கான புகைப்படங்கள். தும்பிகளும் வண்ணத்துபூச்சிகளும் பறந்துகொண்டிருக்கும் நீர்நிலை, மரத்தடியில் படுத்துக்கொண்டு இடக்கையில் எழுதும் நீர்நாய்க்குட்டி. அதை கிளைமேலிருந்து பார்க்கும் ஒரு மீன்கொத்தி , தாவரவியல் இலக்கணம் பிழைக்காத ரெசீம் மஞ்சரிகளுடனான பூச்செடிகள், நீரில் மிதக்கும், பல்டி அடிக்கும் கரடிகள், வாஞ்சையுடன் மகனை தழுவிக்கொண்டிருக்கும் அம்மா நீர்நாய், வழுக்குப்பாறைகள் அதன் மேல் பச்சைத்தவளைகள், மீன்கள், நத்தைகள், நீர்க்குமிழிகள்,  டைஃபா, வேலிஸ்னேரியா போனற நீர்த்தாவரங்கள், கரைகளில் செறிந்து வளர்ந்து பூத்துமிருக்கும் சேம்புச்செடிகள் என அற்புதமான சித்திரங்கள். சிறுவர்களுக்கு மட்டுமல்ல  மூத்த வாசகர்களுக்குமே மிக இஷ்டமான ஒரு கதையாகிவிட்டது ,,

தாவரவியல் ஆசிரியையாக நான் பலமுறை பக்கங்களை திருப்பித்திருப்பி சித்திரஙகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இதை விட மேலாக  அச்சில் ஒரு கதையை சிறுவர்களுக்கு  வேறெப்படியும் சொல்லிவிடவே முடியாது,

யூமா வாசுகியின் பதிவும் அபாரம். பெற்றோர் அவசியம் இதை வாசித்திருக்கனும்

 இந்த பதிவு என் மனதிற்கு மிக நெருக்கமானதொன்று. என் மகன்கள் மிகச்சிறு வயதில் இருக்கையிலேயே மரமும் செடியும் பூக்களும் பறவைகளும், தவளைகளுமாக அவர்கள் வளரும்படி ஒரு குக்கிராமத்தில் வீடு கட்டியபோது உலகே என்னை எதிர்த்தது. படிப்பு பாழாகிவிடும்  ட்யூஷன் போக முடியாது என்றெல்லாம் எனக்கு  ஆலோசனைகளும் அச்சுறுத்தல்களும் வந்தவண்ணமே இருந்தன.

ஆனால் நான் அங்குதான் சென்றேன் என் மகன்களுடன். பதிவில் சொல்லியிருபதைபோலவே மகன்கள் இருவரும் கதைகேட்டுக்கொண்டு, மரம் செடிகொடிகளுடன் உரையாடிக்கொண்டு, பட்டாம்பூச்சிகளை துரத்தி விளையாடி, மயில்களை, முயல்களை அண்மையிலென அடிக்கடி பார்த்துக்கொண்டு, கைநீட்டினால் தொட்டுவிடலாம் போல நெருக்கத்திலிருக்கும் மலைத்தொடர்ச்சிகள் பிண்ணனியிலான இவ்வீட்டில் பல்லுயிர்ப்பெருக்கின் மத்தில் வளர்ந்தார்கள், பதின்மவயதுபிள்ளைகள் இருக்கும் வீட்டினர் சொல்லும் எந்த புகாரும் இதுவரை இந்த வீட்டில் வந்ததே இல்லை, ஆரோக்கியமாக மிகச்சிறந்து  படிப்பவர்களாக அவர்கள் வளர்ந்திருப்பது இயற்கையுடன் இணைந்த இவ்வாழ்வில் அவர்கள் வாழ்வறியும் திறன் பெற்றமையால்தான்.

 பெரிதுபடுத்தப்பட்ட  எங்களின் வீட்டைப்போலவே இருக்கும் இயற்கை எழிலுடனான ஒரு இடத்தில் இவ்வருடத்திலிருந்து  விடுதியில் தங்கி பள்ளி இறுதி படிக்கும் மகனிடம் நான் தொலைபேசுகையில் நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்பதற்கு முன்னர் நூலக அலமாரியில் தங்கியிருக்கும் அணில் குட்டி போட்டுவிட்டதா என்றே கேட்கிறான். இன்னும் குட்டிகள் வரவில்லையென்றும்  ருத்ரமல்லியும்,  மாவும்,   கலாக்க்காய்ச்செடியும் பூக்கத்துவங்கிவிட்டதென்றும்  நானும் சொல்லி மகிழ்கிறேன்..

ஜான் சுந்தரின் கவிதையில் வகுப்பறை வாசலில் எப்போது வேண்டுமானாலும் பாப்பா அழைப்பாளென காத்திருக்கும் பிங்கி யானைக்குட்டி,  வாலாட்டும் டாமி, சிறகு நறுக்கப்பட்ட கிளியென எல்லாம் மனதில் நுழைந்து தங்கிவிட்டது. முதல் பகக்த்திலேயே முதியவரகளுக்கு பிரார்த்தனையும் பூனைக்குட்டிக்கு நன்றியும் சொல்லும் தும்பிக்கு குழந்தைகளின் தூய உள்ளத்தில் எத்தனை பிரியமான இடமிருக்கும்?

வழக்கமாக தும்பியை வாசித்தும் கதை சொல்லியும் முடித்தபின்னர் உறவினர்களின் குழந்தைகளுக்கு பிரதியை கொடுப்பதை வழமையாக்கியிருந்தேன். ஆனால் இந்த பிரதியை கொடுக்கவே மனசில்லை. வருத்தமாகத்தான் இருக்கின்றது  எனினும் வேறோன்றும் செய்வதற்கில்லை

thumbi.jpg

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑