லோகமாதேவியின் பதிவுகள்

Category: பொது (Page 1 of 3)

எச்சில் உணவு!

சீனாவின் யுனான் மாகாணத்தில் 1371-ல் இஸ்லாமியரான ஹாஜி மா’ வுக்கும் வென்’னுக்கும் பிறந்தார் மா ஹெ. 

மா என்பது முகமது என்பதின் சீனப்பெயர்.  இளம் மா, கன்ஃபூஷியஸ்,  மென்சியஸ் உள்ளிட்ட பல அறிஞர்களின் நூல்களை விரும்பிப் படித்தான். அவனது தந்தையும் சகோதரர்களும் சென்று திரும்பிய மெக்காவின் ஹஜ் புனித யாத்திரைகளைக் குறித்தும் உலகநாடுகள் குறித்தும் ஆர்வமாக கேட்டுத்தெரிந்து கொள்வான். மாவிற்கு உலகைச்சுற்றிப்பார்க்கவேண்டும் என்னும் பேராவல் இருந்தது.

1381-ல் மா’விற்கு 11 வயதானபோது மிங் சாம்ராஜ்யத்தின் பேரரசர் ஹோங் வு’வின் ராணுவம் யுனான் பிரதேசத்தை தாக்கிக் கைப்பற்றியது. யுனானிலிருந்து மா உள்ளிட்ட ஏராளமான சிறுவர்கள் மிங் அரசவையில் அடிமைகளாகப் பணியற்ற பிடித்துச்செல்லப்பட்டார்கள்.

பண்டைய சீனத்தில் அரசரின் அந்தப்புரத்தில் இருந்த அவரது ஏராளமான மனைவியர் மற்றும் ஆசைநாயகிகளுக்கு பணிவிடைசெய்ய ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஆணிலிகளைத்தான் அனுமதிப்பார்கள். ஆணிலிகளால் அந்தப்புரப் பெண்களுக்கு வாரிசு உண்டாகும் வாய்ப்பில்லை என்பதால் எதிர்காலத்தில் அரசரின் வாரிசுகளுக்கு போட்டியாக வேறு குழந்தைகள் உருவாகாமல் இருக்க இப்படிச் செய்யப்பட்டது.  அப்படி மா’வும் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு அந்தப்புரத்தில் பணியமர்த்தப்பட்டான். 

மா மிகக் கடினமாக உழைக்கும் சிறுவனாக இருந்தது பேரரசரின் கவனத்துக்கு வந்தது. அவர் மா’வுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க ஆணையிட்டார். மா பிற்பாடு இளவரசர் ஜு டி-யின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டு மங்கோலியர்களுக்கெதிரான பல போர்களில் அவருடன் இருந்து அவரைப் பாதுகாத்தார். பின்னர்  இளவரசர் ஜு டி  மிங் சாம்ராஜ்யத்தின் பேரரசரான பின்னர், பதவி உயர்வு பெற்று ஜெங் என்னும் அரசவைப் பெயரிடப்பட்டு மா ஹெ ஆக இருந்தவர் ஜெங் ஹெ ஆனார். (“Zheng” He)

ஏராளமான அதிகாரங்கள் கொண்டிருந்த ஜெங் ஹெ அரண்மனைக் கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டுமானங்களில் புகழ்பெற்றவரானார்.  சீனாவின் மாபெரும் கப்பற்படையை அவர் உருவாக்கினார். ஒரே சமயத்தில் இணையாக பல கப்பல்கள் இணைந்து செல்லும் கப்பற்தொகுதிகளில் 7 மாபெரும் கடற்பயணங்களை 1405-லிருந்து 1433 வரை ஜெங் ஹெ ஒருங்கிணைத்தார்.  செல்வங்களைத் தேடிச்செல்லும்  62  பொக்கிஷக்கப்பல்கள் உள்ளிட்ட நான்கு அடுக்குகள் கொண்ட 208  மரக்கப்பல்களில் 27800  வீரர்கள், அறிஞர்கள் உடைமைகளுடன் அவரது கப்பற்படை புறப்பட்டது.

உலகின் மிக முக்கியமான பிரதேசங்களுக்கு சென்று திரும்பிய அக்கப்பல்களில் ஜெங் ஹெ  உணவு, மசாலாப்பொருட்கள், உடை மேலும் பல வினோதப்பொருட்களை ஏராளமாகக்கொண்டு வந்து மன்னருக்கு அளித்தார். அவரது கடற்பயணங்களின் நோக்கம் போரோ, நாடுகளை கைப்பற்றுதலோ அல்லாமல் புதியபொருட்களை சேகரிப்பதும், வணிகமுமாக இருந்ததால் சென்ற அனைத்து இடங்களிலும் அவருக்கு வரவேற்பு இருந்தது.  தென்கிழக்காசியாவுக்குச் சென்ற அவரது  ஒரு கடற்பயணத்தில் தனித்தனித் தீவுகளில் இருந்த ஆட்சியாளர்கள் அவருக்கு மிக வினோதமான ஒரு உணவுப்பொருளைப் பரிசளித்தார்கள்.  

அத்தீவுகளில் நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்த ஒரு உணவுப்பொருளான அது பறவைகள் எச்சிலால் கட்டும் சிறு கிண்ணம் போன்ற உண்ணக்கூடிய கூடுகள்.

அக்கூடுகள் தீவின் சுண்ணாம்புக் குகையின் சுவர்களில் அமைக்கப்பட்டிருந்தன.  சின்ன உழவாரப்பறவைகள்  (swiftlets) முட்டையிட்டு குஞ்சுகள் வெளிவந்ததும் கைவிடப்பட்ட ஏராளமான கூடுகளைச்சேகரித்து உணவாக உண்பதை அத்தீவுவாசிகள் பலகாலமாக செய்துகொண்டிருந்தார்கள். அக்கூடுகள் சுவையாக இருந்ததோடு  உண்பவருக்கு நல்ல ஆற்றல் அளித்து அவர்களை இளமையாக வைத்திருக்கவும் உதவின.  மிகவும் அதிசயித்துப்போன ஜிங் ஹெ அந்தப்பறவைக்கூடுகளை  அப்போது பதவியேற்றிருந்த மிங் சாம்ராஜ்யத்தின்  புதிய இளம் பேரரசருக்குக் கொண்டு வந்தார்.

அரண்மனைச்சமையல்காரர்கள் அந்தப் பறவைக் கூட்டை கண்ணாடிபோல மின்னும் சூப்பாக செய்துகொடுத்து அதன் சுவையில் மயங்கிய  இளம்  பேரரசர் அப்பறவைக்கூடு உணவை அரச குடும்பத்துக்கான பிரத்யேக உணவாக அறிவித்தார். அப்போதிலிருந்து பறவைக் கூடு சூப்  செல்வச் செழிப்பு,  ஆரோக்கியம், நீளாயுள் மற்றும் புத்தம்புதிய சுவையின் அடையாளமானது. சமூகத்தின் மேல்தட்டு மக்களும் அதை சுவைக்கத்தலைப்பட்டனர்.   இந்த பறவைக்கூடு ஆயுளை அதிகரித்து ஆற்றல் அளிக்கும் என்பதோடு பாலுணர்வைத் தூண்டும் என்னும் கதையும் சேர்த்துப்பரப்பி விடப்பட்டபோது அதற்கான தேவை மிக அதிகமாகியது. 

ஆறு நூற்றாண்டுகள் கடந்தும் அந்த உணவின்மீதான விருப்பம் இன்றும் உலகெங்கிலும்  தொடர்கிறது.

இந்தக்கூடுகளை உருவாக்கும்  சின்ன உழவாரன்கள் தெற்காசியா, ஓசியானியா, வடகிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் வாழ்கின்றன. இந்திய சின்ன உழவாரன்  (Aerodramus unicolor) இந்தியா மற்றும் இலங்கையில் மட்டும் காணப்படுகிறது. கூட்டமாக குகைகளில் வாழும் இவை  கூட்டமாக அதிகாலை வெளியே சென்று மாலை அந்தி சாய்கையில் கூடு திரும்பும் தினசரி ஒழுங்கைக்கொண்டவை.  

தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளின் சுண்ணாம்புக்குகைகளில் இந்த சின்ன உழவாரன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.

உலகின் மிகப்பழமையான மழைக்காடுகளுக்கும் ஒராங்குட்டான் உள்ளிட்ட  விதம் விதமான வன உயிரினங்களுக்கும் பெயர்பெற்ற உலகின் மூன்றாவது பெரிய தீவான தென்கிழக்காசியாவின் போர்னியோ தீவுகளில் மாபெரும் கோமந்தோங் சுண்ணாம்புக் குகைளின் உச்சியில் இந்தப்பறவைகள்  ஏராளமான கூட்டை அமைக்கின்றன.

அபோடிடே பறவைக் குடும்பத்தைச்சேர்ந்த  Aerodramus, Collocalia, Hydrochous மற்றும் Schoutedenapus ஆகிய பேரினத்தைசேர்ந்த சின்ன உழவாரன் பறவைகளின் கூடுகளே இப்படி உணவாகப்பயன்படுகிறது. இவற்றின் ஏராளமான சிற்றினங்களில் 6 சிற்றினங்களின் கூடுகளே உணவாகப்பயன்படுகின்றன.

 இந்த உழவாரப்பறவைகள் 9 லிருந்து 16 செ மீ நீளமும் 8 லிருந்து 35 கிராம் எடையும் கொண்ட சிறு உடல் கொண்டவை. இவற்றின் இறகுகள் மங்கலான கருமை, மண் நிறம் அல்லது சாம்பல் நிறம் கொண்டிருக்கும். குறுகிய இறகுகளும் குட்டைக்கால்களும் கொண்டிருப்பதால் இவற்றால் வேகமாக பறக்கவும் குகைகளின் ஆபத்தான சரிவுகளில் அமர்ந்து கூடு கட்டவும் முடிகிறது.

சின்ன உழவாரன் பறவைகள் காற்றில் பறக்கையிலேயே பூச்சிகளைப் பிடித்து உண்பதோடு இணைசேர்வதையும் உறங்குவதையும் காற்றில் பறக்கையிலேயே செய்கின்றன. இனப்பெருக்கக்காலத்தில் முட்டையிடத்தான் குகைகளில் இடம் தேடி வருகின்றன இப்பறவைகள்

சின்ன உழவாரன்கள் ஒலியை எதிரொலிக்கச்செய்வதின் மூலம் இருண்ட  குகைகளின் உட்புறச் சுவர்களை உணர்கின்றன( echolocation) 

வாழ்நாள் முழுக்க ஒரே இணையுடன் மட்டும் வாழும் இவற்றின் இனப்பெருக்கக்காலம் 92-120 நாட்கள். கூடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் பிற சின்ன உழவாரன்களின் கூடுகளிலும் இவை முட்டையிடும் வழக்கம் கொண்டிருக்கின்றன.

 அடுக்கடுக்காக எச்சில் இழைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி ஆண் பறவைகளால் இந்தக்கூடு கட்டப்படுகிறது. சுமார் 30 நாட்களில் எச்சில் உலர்ந்து கெட்டியானபின் கூடுகளுக்குள் பழைய இறகுகளைக்கொண்டு வந்து வைத்து முட்டைகளுக்கு மென்மையான படுக்கையை  ஆணும் பெண்ணுமாக உருவாக்குகின்றன. கூடு தயாரானவுடன் பெண் பறவை இரண்டே இரண்டு வெண்ணிற முட்டைகளை கூட்டினுள் இடுகிறது. ஆண் பெண் இருபறவைகளும் நாளொன்றுக்கு ஒருவர் என்னும் சுழற்சி முறையில் முட்டைகளை அடைகாக்கும். 

குஞ்சுகள் வளர்ந்து பறந்தபின்னர் இந்தக்கூடுகள் கைவிடப்படுகின்றன. ஒரே கூட்டில் சின்ன உழவாரன்கள் மறுமுறை கூடுகட்டுவதில்லை.

கைவிடப்பட்ட கூடுகளே சேகரிக்கப்படுகின்றன. கூடுகள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வண்ணங்களில் இருக்கும்.  

உலகின் மிக விலைகொண்ட உணவுகளில் ஒன்றான இந்தப்பறவைக்கூடு சூப்புக்காக மிக அதிகமாக சேகரிக்கப்படுவதும் மதிப்பு மிக்கதும்  (Aerodramus fuciphagus),  என்னும்   உழவாரன்களின்  வெண்ணிறக் கூடுகள்தான். வெள்ளை மற்றும் மஞ்சள் நிறக்கூடுகள் கிலோவுக்கு 1500-லிருந்து 200 டாலர்கள் விலையென்றால், ரத்தக்கூடு என்றழைக்கப்படும் சிவப்புநிறக் கூடுகளின் விலை 10000 டாலர்களாக இருக்கிறது. பறவைக்கூடு சூப் ஒரு கிண்ணம் 100 டாலர்களிலிருந்து 500 டாலர்வரை இருக்கிறது.

இந்த பறவைக்கூடுகள் அமைந்திருக்கும் குகைச்சுவற்றில் இருக்கும் இரும்புச்சத்து கூடுகளின் புரதங்களுடன் வினை புரிந்து சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது

கருப்பு உழவாரன் எனப்படும்  (Aerodramus maximus), மற்றும் இந்திய சின்ன உழவாரனான (Aerodramus unicolor). ஆகியவற்றின் கூடுகளும் பிரதானமாக சேகரிக்கப்படுகிறது.

இம்மூன்றைத்தவிர மற்ற சின்ன உழவாரங்களின் கூடுகளில் குச்சிகள் இலைகள் போன்ற  தாவரபாகங்களும் இருப்பதால் அவை  சேகரிக்கப்பட்டாலும் தரம் குறைவானதாக கருதப்படுகின்றன. 

இந்தப் பறவைக்கூடுகளை சேகரிப்பவர்கள்  “busyadors,”  எனப்படுகின்றனர். கடற்பறவைகளின் எச்சங்களின் கடும்நெடி நிரம்பியிருக்கும், உழவாரன்கள் கூடுகட்டியிருக்கும் குகைப்பகுதியில்  ஆயிரக்கணக்கான சிறகடிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். உழவாரப்பறவைகள் குகையின் கூரைச்சுவற்றில் பொன் சரிகைப்பட்டுப்போல மினுங்கும் பிறை நிலவின் வடிவத்தில் இருக்கும் கையகலக் கூடுகளை அமைக்கின்றன.

ஆசியாவின் மிக ஆபத்தான பணியாகக்கருதப்படும் இந்தப் பறவைக்கூடு சேகரிப்பில் பலநூறு பேர் உயிரைப்பணயமாக வைத்து  தலைமுறைகளாக ஈடுபட்டுவருகின்றனர்.

ஒரு பறவைக்கூடு சுமார் 14 கிராம்  எடைகொண்டிருக்கும் .எனவே ஒரு கிலோ அளவுக்குக்கூடுகளைச் சேகரிக்கப் பலமணிநேரம் அவர்கள் இந்த ஆபத்தான வேலையை செய்யவேண்டி இருக்கும் 

 பலநூறு அடி உயரமுள்ள கூரைகளில் இருக்கும் கூடுகளைச் சேகரிக்க மூங்கில் கழிகளிலும் ஏணிகளிலும் கட்டப்பட்டிருக்கும் கயிறுகளில் தொங்கியபடி அடிதப்பினால் மரணம் நிச்சயம் என்னும் நிலையில் வெள்ளைத்தங்கம் எனப்படும் இந்தகூடுகள் சேகரிக்கப்படுகின்றன.  

சின்ன உழவாரன்களின் இனப்பெருக்கக்காலம் துவங்கியதும் கூடுகளைச்சேகரிப்போர் கடவுளுக்கு காணிக்கைச் செலுத்தி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி  தங்கள் உயிருக்கு பாதுகாப்பளிக்கும் வேண்டுதல்களைச் செய்வார்கள்.

குகையின் சுவர்களையும் கூட்டையும் கைகளால் தொடுவது கடவுளுக்கு கோபம் உண்டாக்கும் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் திரிசூலம் போல மூன்று முனைகள் கொண்ட  ராடா எனப்படும் ஒரு தடியையும் கையோடு எடுத்துச்சென்று அதைக்கொண்டுதான் கூட்டைச் சுவற்றிலிருந்து உரித்து எடுக்கிறார்கள். சூலம் போன்ற ராடா தடி கடவுளாக  உடனிருந்து அவர்களை காப்பாற்றும் எனவும் நம்புகிறார்கள். 

இத்தனை ஆபத்து இருந்தும் தவறமல் திரும்பத் திரும்ப இவர்கள் பறவைக்கூடுகளை உயிரைப் பணயம் வைத்து சேகரிப்பது பறவைக்கூடுகளுக்கிருக்கும் சந்தை மதிப்பினால்தான்.

சேகரித்த கூடுகளைச் சுத்தம் செய்வது அடுத்த கட்ட கடினமான பணி. கூடுகளை நீரில் ஊறவைத்து மிருதுவாக்கியபின்னர் ஊசிகளால் அதில் ஒட்டியிருக்கும் இறகுப்பிசிறுகளும் அசுத்தங்களும் பிரித்தெடுக்கப்படுகிறது.

பறவைக்கூட்டில் சுமார் 62% புரதம் 27% மாவுச்சத்து, கால்சியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின்கள், சில கனிமங்கள் கொழுப்பு இரும்புச்சத்து ஆகியவை இருக்கிறது.    

மிக அதிகவிலைக்கு விற்கப்படும் எல்லா உணவுப்பொருட்களையும் போலவே இதிலும் கலப்படங்களும் போலிகளும் இருக்கிறது. கடற்பாசிகள் சில பூஞ்சைக்காளான்கள் மற்றும் சில மரப்பிசின்களைச் சேர்த்து பறவைக்கூடு சூப் எனச்சொல்லி பிரபல உணவகங்களில் கூட ஏமாற்றுகிறார்கள்.

தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவின் கடற்கரையோரங்களில் கான்கிரீட் கட்டிடங்களின் மொட்டைமாடிகள் முழுக்க தகடுகளால் மூடி இருட்டாக்கி, பறவை நுழைய சிறு கீறல்கள் மட்டும் உண்டாக்கி பதிவு செய்யப்பட்ட பறவைக்குரலை எப்போதும்  ஒலிக்கச்செய்து சின்ன உழவாரப்பறவைகளை அங்கு வந்து கூடுகள் கட்டச்செய்யப்படுகிறது. இந்த வீட்டுக்குகைகளில் கூடுகளை சேகரிப்பது, குகைகளில் சேகரிக்கும் ஆபத்தை இல்லாம்லாக்குகிறது.

 வீட்டு உரிமையாளர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கிறது எனினும் அகற்றவே முடியாத பறவை எச்சங்களின் கடும் நெடியும் தொடர்ந்து கேட்கும் அவற்றின் குரலும் பெரும் தொந்தரவாகத்தான் அனைவருக்கும் இருக்கிறது.

பறவைகளால் வரும் நோய்கள் மக்களுக்கு இதனால் வெகுஎளிதில் பரவும் அபாயம் இருப்பதாக பறவையியலாளர்கள் தொடர்து எச்சரித்தவண்ன்ணம் இருக்கிறார்கள்,  ஆனால் குகைகளில் சேகரிக்கப்படும் கூடுகளுக்கு கிடைக்கும் அதே விலை, கட்டிடங்களில் எடுக்கப்படும் கூடுகளுக்கும் கிடைப்பதால் மேலும் பலர் இந்தக் கூடுகளை அவரவர் வீடுகளில் அமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்தப்பறவைக்கூடுகளின் தேவை மிக அதிகரித்திருப்பதால் முட்டைகள் இருக்கும்,  பறக்கமுடியாத இளம் குஞ்சுகள் பாதுகப்பாக இருக்கும் கூடுகளும் சேகரிக்கப்படுவதால் சின்ன உழவாரன்களின் எண்ணிக்கை அபாயகரமாக குறைந்து வருவதாகவும், கூடுகளைச் சேகரிப்போர் சந்திக்கும் ஆபத்துகள் மனித உரிமை மீறல்கள் எனவும் பறவைக்கூடு சூப்பின்  பயன்களாகச் சொல்லப்படுபவைகளைக்காட்டிலும்  தாவரசூப்களில் அதிக ப்பயன்கள் உள்ளது என்னும் கருத்துக்களும் தீவிரமாக முன்வைக்கப்படுகின்றன.

எச்சசரிக்கைகளும் கண்டனங்களும் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தாலும் பறவைக்கூடு சேகரிப்பும் அதன்தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

 மலேஷியாவில் மட்டும் சுமார் 60000 பேர் இநந்தப்பறவைக்கூடு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மலேசிய அரசு இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டிருப்போருக்கு கடனுதவிகளும் வழங்குகிறது., 

இத்தொழிலில் தலைமுறைகளாக ஈடுபட்டிருக்கும் மலேசியப்பழங்குடியினர் பத்து வருடங்களுக்கொருமுறை சீட்டுக்குலுக்கிப்போட்டு அடுத்த பத்து வருட ஒப்பந்ததாரரை முடிவு செய்கிறார்கள். இப்போது சீன முதலாளிகள் குகைகளை பெருந்தொகைக்கு ஏலம் எடுப்பதால் இதை நூற்றுக்கக்கான  வருடங்களாக வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பழங்குடியினர் பாதிப்படைந்திருக்கிறார்கள். பெருந்தொகைக்கு குகைகள் ஏலம் எடுக்கப்படுகின்றன.  ஏலம் எடுத்த முதலாளிகள் ஆயுதமேந்திய காவலர்களைக்ளைக்கொண்டு குகைகளைப் பாதுகாக்கின்றன்ர்.

பல லட்சங்கள் புழங்கும் இந்த பறவைக்கூடு தொழில் போட்டியில் கொல்லப்பட்டவர்கள்,  குகைகளில் தொங்கிக்கொண்டு கூடு சேகரிப்பில் இருக்கையில் உயிரிழப்பவர்கள் ஆகியோரின் விவரங்கள் வெளிஉலகிற்கு தெரிய வராமல் மறைக்கப்படுகிறது..

இந்தப் பறவைகூடு உணவு வீடுகளில் சூடுபடுத்தி அருந்தும் திரவ வடிவில் பாட்டில்களிலும், உலர் பொடியாகவும் இருவிதங்களில் சந்தைப்படுத்தப்படுகிறது, சுத்தப்படுத்தப்பட்ட கூடுகள் அப்படியேவும் விற்பனையாகின்றன.

உணவாக மட்டுமல்லாமல் இவற்றின் சருமத்தைப்பாதுகாக்கும் இயல்புகளால் அழகுசாதனப் பொருள் தயாரிப்பிலும் இக்கூடுகள் பயன்படுத்தப்படுகின்றன. வருடத்திற்கு சுமார் 200 டன் பறவைக்கூடுகள் உலகின் பலபாகங்களிலும் உண்ணப்படுகிறது. இதில் ஹாங்காங்கின் அளவே மிக அதிகம்.

 ஜின்செங் மற்றும் சர்க்கரை கலந்து எளிதாகத்  தயாரிக்கப்படும் இந்த சூப் இளமையை தக்கவைத்து ஆற்றலை அதிகரித்து சருமப்பொலிவுக்கும் கண்பார்வை கூர்மைக்கும் உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.

இந்தோனேஷியா வருடத்திற்கு 2000 மெ டன் பறவைக்கூடுகளைச் சேகரித்து உலகின் முதல் இடத்திலும் தொடர்ந்து 600 டன் சேகரிக்கும் மலேசியாவும் மூன்றாம் இடத்தில் 400 டன்  தாய்லாந்தும் இருக்கிண்றன.

இனி பறவைக்கூடு சூப்பை அருந்தும் வாய்ப்பு கிடைத்தால், மேசையில் நம் முன்பு கிண்ணத்தில் கண்ணாடி போல இருக்கும் அந்தத் திரவம் விலையுயர்ந்த ஒரு உணவு மட்டுமல்ல, பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜென் ஹெ பயணித்த பொக்கிஷ கப்பல்களின் மீது போதிய அலைகளின் ஓசை, உயிரைப்பணயம் வைத்து கயிற்றில் தொங்கிக்கொண்டு கூடுகளைச் சேகரிக்கும் தொழிலாளர்களின் நிழல், இதன் பட்டுப்போன்ற நூழிலைகள் ஆரோக்கியத்தையும் வாழ்நாளையும் நீட்டிக்கும் என் பேரரசர்கள் கொண்டிருந்த நம்பிக்கை இவை எல்லாம் கலந்த கலவைதான் அது என்பதை எண்ணிக்கொள்ளுங்கள்.

புளித்த முட்டைக்கோஸ்!

இரண்டடுக்குகளுடன் ஒரு மாபெரும் தீவைப்போலிருந்த HMS எண்டேவர் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் மிதமான வேகத்தில் தஹிதியை  நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இங்கிலாந்தின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்டு 12 நாட்கள் ஆகி இருந்தது. 

 HMS எண்டேவரில் கேப்டன் ஜேம்ஸ் குக்கின் அந்த முதல்,  அறிவியல் மற்றும் ஆய்வுகளுக்கான முக்கியமான பயணம் 1768 முதல் 1771 வரை திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயணத்திற்கு வெளிப்படையான மற்றும் இரகசியமான நோக்கங்கள் இருந்தன. இந்தப்பயணத்துக்கான பல ரகசியக்கடல் வழிகளை  குக் மட்டுமே அறிந்திருந்தார்.

இந்தப் பயணத்தின் அதிகாரப்பூர்வ நோக்கம் 1769-ம் ஆண்டு வீனஸ் கோள் சூரியனை கடந்து செல்லும் நிகழ்வை (transit of Venus) பசிபிக் கடலின் நடுவில் உள்ள தஹிதி   தீவிலிருந்து பார்ப்பது. இந்த நிகழ்வைப் பூமியின் பல்வேறு இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் பார்ப்பதன் மூலம், பூமியிலிருந்து சூரியனுக்கான தூரத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடியும் என அறிவியலாளர்கள்  நம்பினர்.

 இந்த நிகழ்வை முடித்தபிறகு, தெற்கு நோக்கிப்  பயணித்து, அப்போது நில வரைபடங்களில் இல்லாத, ‘டெரா ஆஸ்ட்ராலிஸ் இன்காக்னிட்டா’ (Terra Australis Incognita) என்று அழைக்கப்பட்ட பெரிய தெற்கு நிலப்பரப்பை  குக் தேட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு அவரிடம் ரகசியமாகக் கூறியிருந்தது. அப்படி ஒரு நிலப்பரப்பைக் கண்டால், அதன் கடற்கரைகளை வரைபடமாக்கி, அங்குள்ள மக்களைப் பற்றி ஆய்வு செய்து, பொருத்தமான இடங்களை இங்கிலாந்திற்காக உரிமை கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

கப்பல் மறுநாளிலிருந்து வேகமெடுக்கும் என்னும் அறிவிப்பைத் தொடர்ந்து முந்தைய நாள் அவர்கள் புதிதாகக் கண்டடைந்த  தீவு குறித்த விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்னும் சத்திய பிரமாணத்தை     கப்பலில் இருந்த  95 பேரும் எடுத்துக் கொண்டார்கள்.  பிறகு மதிய உணவுக்காக அனைவரும் கூடினார்கள்.

வழக்கமாக உணவுண்ணும் கீழ்த்தளத்து உணவுக்கூடத்திலல்லாமல் கப்பலின் கமாண்டர் ஜேம்ஸ் குக் ஆணையிட்டபடி அன்று  கப்பலின் மேல் தளத்தில் திறந்த வெளியில் மேசைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாலுமிகளுக்கும் பிற அதிகாரிகளுக்குமான மேசைகள் நடுவிலும், அதைச்சுற்றி நீள் வட்ட வடிவில் மற்றவர்களுக்கான மேசைகளும் போடப்பட்டிருந்தன.  அவரவருக்குத் தேவையான உணவை  எடுத்துக்கொண்டு அமர்ந்த பின்னர்  கமாண்டர் குக் தலைமை சமையைல்காரரை  அழைத்து ’’அதைக் கொண்டு வந்து அதிகாரிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மட்டும் பரிமாறுங்கள்’’ என்று சொன்னதும் அழகிய சிறு தட்டுகளில் புளித்த முட்டைகோஸான ’சாவெர்கிராட்’ பரிமாறப்பட்டது.

குக் அதைச் சுவைத்துப் பார்த்து விட்டு உரத்த குரலில் ’’ஆஹா! என்ன அற்புதமான சுவை’’ என்று பாராட்டினார். அதைச் சாப்பிட்ட அனைவருமே அதன் சுவையையும் அதனால் உண்டாகவிருக்கும் உடல் நலனையும்  வெகுவாகப் பாராட்டினர்.

மற்ற வீரர்களும் பயணிகளும் அதைக் கவனித்தும் கவனிக்காதது போல இருந்தனர். ஒருவாரத்தில் அந்தப் புளித்த முட்டைகோஸ் உணவான   ’சாவெர்கிராட் அந்தக் கப்பலில் இருக்கும் உயரந்தஸ்து கொண்டவர்களுக்கானது என்பது கப்பல் முழுக்க பேசு பொருளானது.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு வீரர் மட்டும் குக்கிடம் எனக்கும் ’சாவெர்கிராட்டைத் தருவீர்களா என்று கேட்டார். குக் மிகவும் சலித்துக் கொள்வதுபோல் பாவனை செய்து ’’பொதுவாக இந்த ஆற்றல் அளிக்கும்  உணவு உயரதிகாரிகளுக்கு மட்டும் தான் இருந்தாலும் நீ கேட்பதால் கொஞ்சம் தரச் சொல்கிறேன்’’ என்று அவனுக்கு அதைக் கொடுக்கச் சொன்னார். கப்பலில் அவனுடைய மரியாதை கிடு கிடுவென உயர்ந்தது. ’சாவெர்கிராட் உண்பது  உயரதிகாரிகளுக்கிணையான அந்தஸ்தை அளிப்பது என்னும் எண்ணம் உருவாகி வளர்ந்து  அனைவரும் அதைச் சாப்பிட விரும்பிக் குக்கிடம் வேண்டிக்கொண்டார்கள். பின்னர் ’சாவெர்கிராட் அனைவருக்கும் அன்றாடம் அளிக்கப்பட்டது.

அந்த மாபெரும் கப்பல் புறப்படுகையில் அதில் 8000 பவுண்டு ’சாவெர்கிராட்’ (sauerkraut) எனப்படும் நொதித்த முட்டைக்கோஸ் அடைக்கப்பட்டிருந்த பீப்பாய்கள் ஏற்றப்பட்டிருந்தன. பல காரணங்களால் அதைச் சாப்பிட விரும்பாத பிரிட்டிஷ் வீரர்களை, அதை விரும்பிச் சாப்பிட வைக்கத்தான் கமாண்டர் ஜேம்ஸ் குக் இந்த நாடகத்தை நடத்தினார்.

18 -ம் நூற்றாண்டு கடற்பயணிகளுக்கு நீண்ட கால கடற்பயணத்தில்   சத்தான புதிய காய்கறி மற்றும் பழங்கள் அடங்கிய உணவுகளின் பற்றாக்குறையால் ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் சி    குறைபாட்டால் உண்டாகும் நோய்த் தொற்று தவிர்க்க முடியாததாக இருந்தது. 

வைட்டமின் சி குறைபாடு நீண்ட நாட்களுக்கு நீடித்தால் இந்த நோய் வரும். பழங்காலத்தில், நீண்ட கடல் பயணங்களுக்குச் செல்லும் மாலுமிகளுக்கு இது ஒரு பொதுவான மற்றும் ஆபத்தான நோயாக இருந்தது. ஏனெனில், நெடுங்காலம் கடலில் பயணிக்கும் அவர்களின் உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்காது.

 மனித  உடல் வைட்டமின் சி-யை தானாக உற்பத்தி செய்யாது. எனவே, வைட்டமின் சி-யை   உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். வைட்டமின் சி, கொலாஜன் (collagen) என்ற புரதத்தை உற்பத்தி செய்ய மிகவும் முக்கியமானது. இந்தக் கொலாஜன் மனிதர்களின் தோல், ஈறுகள், இரத்த நாளங்கள் மற்றும் எலும்புகள் போன்ற இணைப்புத் திசுக்களுக்கு ஒரு முக்கியமான கட்டுமானப் பொருளாகும்.

வைட்டமின் சி குறைபாடு ஏற்படும் போது, கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்த திசுக்கள் பலவீனமடைகின்றன. இதுவே ஸ்கர்வி நோய்க்கு  வழிவகுக்கிறது.

கண்கள் பிதுங்கி, சருமம் செதில் செதிலாக உரிந்து ரத்தம் கசிந்து,  கேசம் வறண்டு போவது ஆகியவை ஸ்கர்வியின் விளைவுகள்.  நூற்றண்டுகளாகக் கடல் போரிலும். கப்பல் விபத்துகளிலும், கப்பலில் பரவும் பிற நோய்களிலும் இறந்தவர்களைக் காட்டிலும் ஸ்கர்வியினால் இறந்தவர்களே அதிகம்.

பல காலமாக மாலுமிகள் கப்பலில் திரியும் எலிகளைப் பிடித்துச் சாப்பிட்டு எலியின் உடம்பில் தானாகவே உருவாகி இருக்கும் வைட்டமின் சி யை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அறிவியலாளர் மற்றும் வரைபட நிபுணரான ஜேம்ஸ் குக்     ஸ்கர்விக்குத் தீர்வு காணத்தான் வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கிய, நெடுநாட்களுக்கு சேமித்து வைக்கக்கூடிய   ’சாவெர்கிராட்’ எனும் முட்டைக்கோஸ் உணவைக் கப்பலில் ஏராளமான பீப்பாய்களில் கொண்டு வந்திருந்தார்.

அந்தக் கடற்பயணத்தில் கேப்டன் குக்கிற்கு பிரச்சனையாக இருந்தது  ஸ்கர்வி  மட்டுமல்ல  ’தார்கள்’ என அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் கடற்படை வீரர்கள் (தார்பாலின் துணிகளாலான ஆடைகளை இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அணிவதால் அவர்கள் அப்பெயரில் அழைக்கப்பட்டனர்) தாங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்பதில்    மிகப் பிடிவாதமாக இருந்ததும் அவருக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.  

பிரிட்டிஷ் வீரர்கள் அவர்களின் வழக்கமான உணவான செங்கல்லின் அளவு கொண்ட, மிகக்கடினமாக இருக்கும் பிஸ்கெட்டுக்களையும் உப்பிலிட்ட பன்றி இறைச்சியையும் மட்டுமே சாப்பிட்டார்கள்.

ஜெர்மெனி பாணியிலிருந்த முட்டைக்கோஸ் ஊறுகாயான ’சாவெர்கிராட்’டை சாப்பிடுவதில் அவர்களனைவருக்கும் விலக்கமும்,  புதிய உணவான அதைக் குறித்த சந்தேகமும் இருந்தது . அவர்களில் பலருக்கு ஸ்கர்வி தொற்று உருவாகி இருந்தாலும்  அந்த விநோதமான,  கடும் நெடிகொண்ட முட்டைக்கோஸை சாப்பிடுவதைக் காட்டிலும் ஸ்கர்வியின் பாதகங்களே பரவாயில்லை என்னும் மனநிலையில் இருந்தார்கள்.

நேரடியாக ’சாவெர்கிராட்’டை சாப்பிடச்சொல்லி ஆணையிட்டால் அவர்கள் மறுத்து ஒரு கிளர்ச்சியோ, எதிர்ப்போ கப்பலில் உண்டாவதற்கான சாத்தியங்களை அறிந்திருந்த கேப்டன் குக் இந்த உளவியல் நாடகத்தை நடத்தி அனைத்து வீரர்களும், ’சாவெர்கிராட்’டை சாப்பிடும்படி செய்தார்.

கட்டாயப்படுத்தியிருந்தால் தண்டனையாகிப் போயிருக்கும் விஷயத்தைக்   குக் பெருமைக்குரியதொன்றாக மாற்றிவிட்டார். அந்தப்பயணம் முழுக்கவே ஸ்கர்வியை குணமாக்கும் வைட்டமின் சி  கொண்டிருக்கும்  அந்த உணவு அனைவருக்கும் அன்றாடம் வழங்கப்படுவதை குக்  உறுதி செய்தார் அதன் விளைவு அற்புதமாக இருந்தது. மூன்றாண்டுகள் நீடித்த அந்த முதல் கடற்பயணத்தில் ஒரே ஒருவர் கூட ஸ்கர்வியினால் இறக்கவில்லை.

இதுமட்டுமல்லாது குக் கப்பலில் சுத்தம் பேணப்படுவதற்கும் மிகவும் முக்கியமளித்தார் போர்வை உள்ளிட்ட படுக்கையறைத் துணிகள் அவ்வப்போது வெயிலில் உலர்த்தப்படுவதை குக்  கட்டாயமாக்கியிருந்தார்.

சாவெர்கிராட் மட்டுமல்லாமல்   இறைச்சிப்பசையை கலந்து தயாரிக்கும் உடனடி சூப், பார்லிச்சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றையும் அன்றாட உணவில் இடம்பெறச்செய்திருந்தார். எந்தத் தீவில் கப்பல் நின்றாலும் அங்கிருந்து புத்தம் புதிய காய்கறிகள் கிழங்குகள், பழங்கள் மற்றும் இறைச்சியை  முடிந்தவரை கப்பலில் ஏற்றிக்கொண்டார் குக்.

குக் தனது கப்பலில் இருந்தவர்களின் உடலாரோக்கியத்தை சாவெர்கிராட்  அளித்துப் பாதுகாப்பது குறித்த ஒரு ஆய்வறிக்கையை லண்டன் ராயல் சொசைட்டிக்கு சமர்ப்பித்தார்.  நூற்றாண்டுகளாக இருந்து வந்த, பல லட்சம் மாலுமிகளின் உயிரைக் காவு வாங்கிய ஸ்கர்வி நோய்க்கு இந்த எளிய நொதித்த முட்டைகோஸைக் கொண்டு கேப்டன் குக்  தீர்வு கண்டதற்காக   அவருக்கு  லண்டன் ராயல் சொசைட்டியின் அறிவியல் சாதனைகளுக்காக அளிக்கப்படும் பிரசித்தி பெற்ற ’கோப்லே பதக்கம்’ அளிக்கப்பட்டது. சார்லஸ் டார்வின் மற்றும் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரும் இந்த விருது பெற்றிருக்கிறார்கள்.

எனினும் ஸ்கர்வியை சாவெர்கிராட்  குணப்படுத்தும் என்பதைக் கண்டுபிடித்தது கேப்டன் குக் அல்ல. நூற்றாண்டுகளாகவே ஸ்கர்விக்கான தீர்வுகளுக்கு  ஆய்வுகள் நடந்தவண்ணமிருந்தன. 

1622-ல் கடலாய்வாளர் ரிச்சர்ட் ஹாக்கின்ஸ் ’’ஸ்கர்வியை எலுமிச்சை குணப்படுத்தும், யாரேனும் இதை ஆராய்ந்து எழுதலாம்’’ என்று தெரிவித்திருந்தார். 

ஒரு நூற்றாண்டு கழித்து  1730-களில் அரசுக் கடற்படையில்  மருத்துவ உதவியாளராகப் பணியாற்றிய ஜேம்ஸ் லிண்ட்’தான்  ஸ்கர்விக்கு தீர்வளித்தார்.  1742-ல்  ஸ்கர்வியினால் பாதிக்கப்பட்டிருந்த 12 கடற்பயணிகளுக்கு தொடர்ந்து வைட்டமின் சி இருக்கும் உணவுகளைக் கொடுத்து அவர்கள் குணமானதை ஆதாரத்துடன் லிண்ட் நிறுவினார். 1753-ல்  அவரது ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு லிண்ட் எழுதிய , A Treatise on the Scurvy, என்னும் நூல் வெளியானது என்றாலும் அந்த வழிமுறைகளை யாரும் பின்பற்றவில்லை. அதை ஜேம்ஸ் குக் முயற்சி செய்யவே  மேலும் இருபதாண்டுகள் ஆயின. 

கடற்பயண நோய்களுக்கான சிகிச்சை உணவுகளில் கேப்டன் குக் அறிமுகம் செய்த இந்தப் புளித்த முட்டைக்கோஸான சாவெர்கிராட்  பின்னர் வெகுவாகப் பிரபலாமானது.

கேப்டன் குக் உண்மையில் இந்த சாவெர்கிராட் ஸ்கர்வியை குணப்படுத்தும் என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் செய்திருக்கவில்லை. பயணிகளின் நல்வாழ்வில் அவருக்கிருந்த அக்கறையினால் தான் இதை அவர் செய்தார். அதன் பிறகு   சாவெர்கிராட்டில்  பல ஆய்வுகள் நடந்து அதன் பல பயன்கள் வெளிச்சத்துக்கு வந்தது.  பிரிடிஷ்  கடற்படையிலிருந்தே ஸ்கர்வி முற்றிலும் நீங்கியது

ஐரோப்பாவையும் அண்டோலியா தீபகற்பத்தையும் சேர்ந்ததுதான் முட்டைக்கோஸ் என்றாலும் ஜெர்மானிய மொழியில் புளித்த முட்டைக்கோஸ் என்று பொருள் படும் சாவெர்கிராட் (sauer -sour -kraut -cabbage)) ஐரோப்பிய உணவல்ல.  இதன் வரலாறு சீனாவிலிருந்து தொடங்குகிறது.

2500 வருடங்களுக்கு முன்னர்  சீனப்பெருஞ்சுவரை உருவாக்கிக் கொண்டிருந்த  தொழிலாளர்கள் கடுங்குளிர் காலத்திலும் உணவைச் சேமிக்க முட்டைக்கோஸை  உப்பிலிட்டு ஊறவைத்த  ஊறுகாயைக் கண்டுபிடித்தார்கள். சீனாவுக்குள் ஊடுருவிய     செங்கிஸ்கானின் படையில் இருந்த மங்கோலிய நாடோடிகள்  இந்த ஊறுகாயை அரிசி மதுவிலிருந்து தயாரித்த வினிகரில் ஊற வைத்து   மேலும்  பல மாதங்களுக்கு முட்டைகோஸ் கெட்டுப் போகாமலிருக்கும் வழியைக் கண்டறிந்தார்கள்.

ரோமானியர்களும் மத்திய  ஐரோப்பாவைச் சேர்ந்த   ‘செல்ட்ஸ்’ (Celts)  பழங்குடிச் சமூகத்தினரும் ஐரோப்பா முழுவதும் இந்தப் புளித்த முட்டைக்கோஸை அறிமுகம் செய்தார்கள். 13-ம் நூற்றாண்டில் மங்கோலிய சாம்ராஜ்யம் ஐரோப்பாவுக்குள் விரிந்த போது பண்டமாற்றாகக் கொடுக்கப்பட்ட பொருட்களில் அரிசி மதுவின் வினிகரில் ஊற வைத்த முட்டைக்கோஸ் ஊறுகாயும்  இருந்தது. 

அறிமுகமானதோடு கிழக்கு ஐரோப்பியர்களின் உணவிலும் இது முக்கிய இடம் பிடித்தது. இந்த முட்டைக்கோஸ் ஊறுகாயை ஊற வைக்க அரிசி மது வினிகர் ஐரோப்பாவில் அச்சமயத்தில் இல்லாததால் லேக்டிக் அமில நொதித்தலுக்கு அதை உட்படுத்தி மேலும் காரமானதாகக் கடும் நெடி கொண்டதாக அதை மேம்படுத்தி இப்போதிருக்கும் இந்த சாவெர்கிராட்  வடிவம் ஐரோப்பாவில் கண்டறியப்பட்டது.

இந்த சாவெர்கிராட் இலையுதிர் காலத்தில்தான்  ஐரோப்பாவில் தயாராகிறது.  கோடைக்காலம் முடிகையில் முழுக்க அறுவடையாகி இருக்கும் முட்டைக்கோஸ்கள் சாவெர்கிராட் ஆகக் குறுகிய காலத்திலேயே தயாரிக்கப்பட்டு பின்னர் மாதக்கணக்கில் ஊறிக் கொண்டிருக்கும். 

ஐரோப்பியர்கள் காய்கறிகள் கிடைக்காத குளிர்காலத்திற்கான உணவாகவும், அந்தப் பருவம் முழுவதும் ஆற்றல் அளிக்கும் சுவையான உணவு தடையின்றி கிடைக்கவும் நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட, நீடித்த அலமாரிவாழ்வு கொண்டிருந்த இந்த சாவெர்கிராட்டையே பிரதானமாக நம்பி இருந்தார்கள். 1960-களிலிருந்து ஜெர்மனியின் பிரதான உணவாக ஆகிவிட்டிருக்கும்  சாவெர்கிராட் அங்கு சூப்பர் உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

உலகப்போரின்போது ஜெர்மானியப் போர்க்கப்பல்களில் சாவெர்கிராட் எப்போதும் நிறைத்துக் கொண்டு வரப்பட்டதால் ஜெர்மானிய வீரர்களின் செல்லப் பெயராகவே ’க்ராட்’ என்பது இருந்தது. சாவெர்கிராட் என்னும் ஜெர்மானியப் பெயரால்  அமெரிக்க வீரர்கள் இதை விரும்பாமல் போகக் கூடுமென்பதால் முதலாம் உலகப்போரின்போது சாவெர்கிராட் அமெரிக்கர்களுக்கு ’லிபர்டி முட்டைக்கோஸ்’ என்னும் பெயரில் அளிக்கப்பட்டது.

ஐரோப்பியக் குடியேறிகளால் 18-ம் நூற்றாண்டில்  அமெரிக்காவுக்கு அறிமுகமான இந்த சாவெர்கிராட் இப்போதுவரை அமெரிக்க உணவுகளில் மிக முக்கியமான இடம் பிடித்திருக்கிறது.

ஐயோவாவில்  ’சாவெர்கிராட் நாள்’ பல நகரங்களில் வேறு வேறு நாட்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது அப்பலேச்சியன் மலைப்பகுதிகளின் முட்டைக்கோஸ் நடவு   மற்றும் அறுவடை ஆகியவை ஜோதிடத்தின் அடிப்டையிலேயே நடக்கிறது. சாவெர்கிராட்டை தேய்பிறையில் தயாரித்தால் அது கெட்டுப் போய்விடும், வளர்பிறையில்தான் தயாரிக்க வேண்டும் என்னும்  நம்பிக்கையும் அங்கு இருக்கிறது.

அப்பகுதி முழுவதும் முட்டைக்கோஸ் அறுவடை நாளில் நாம் தீபாவளிப் பலகாரம் செய்வது போல நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து சாவெர்கிராட்டைத் தயாரித்து அவரவர் வீடுகளுக்கு அவரவர் பங்கைக் கொண்டு செல்லும் வழக்கமும் இருக்கிறது. அதன் சுவையும் அதிலிருக்கும் சத்துக்களாலும் அமெரிக்க சூப்பர் உணவுகளின் பட்டியலிலும்  முதலிடத்தில் இருப்பது இந்த சாவெர்கிராட் தான்.

பென்சில்வேனிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் சாவெர்கிராட்டை பன்றி இறைச்சியுடன் உண்பது நெடுங்கால மரபாக இருக்கிறது. பால்டிமோர் பகுதியில் நன்றி தெரிவிக்கும் நாள் விருந்துகளிலும் சாவெர்கிராட்  தவறாமல் இடம் பெறுகிறது

தயாரிக்கும் முறை

நல்ல அழுத்தமாகக் கடினமாக இருக்கும் பச்சை நிற  புத்தம் புதிய முட்டைகோஸ்கள் தேர்வு செய்யப்படுகின்றன. ஒரு சிலர் ஊதா முட்டைக்கோஸையும் உபயோகப்படுத்துகிறார்கள்.

பின்னர் முட்டைக்கோஸ் நீள நீளமாக ஒரே அளவிலான பட்டைகளாகச் சீவப்படுகிறது. ஒரு கிலோ முட்டைகோஸுக்கு 2% என்னும் அளவில் (அயோடின் இல்லாத) உப்பு சேர்க்கப்படுகிறது. பின்னர் இந்தக் கலவை ஒரு அகலமான (உலோகமல்லாத) பாத்திரத்தில் கொட்டப்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்குக் கைகளால் பிசைந்து  பிழியப்படுகிறது.

அப்படிச்செய்கையில் முட்டைக்கோஸ் செல்களின் சுவர் உடைந்து அதன் சாறு வெளியே வருகிறது. இப்போது இந்தக் கலவை பாதி திரவ நிலையில் இருக்கும்.

பீங்கான் அல்லது கண்ணாடி பாட்டிலில் இந்தக் கலவையைக்கொட்டி கைகளால் இடைவெளி இல்லாமல் நன்றாக அழுத்தி நிறைக்க வேண்டும். இப்படி அழுத்துகையில் முட்டைகோஸ் துண்டுகள் பாட்டிலின் அடியிலும் அதிலிருந்து வெளியே வந்த சாறு மேலே அதனை மூடியும் இருக்கும்படி நிறைக்க வேண்டும்

சாற்றில் மூழ்காமல் ஒரே ஒரு முட்டைக்கோஸ் துண்டு வெளியே தெரிந்தாலும் அதில் பூஞ்சைக்காளான் தொற்று உண்டாகி விடும். எனவே முட்டைக்கோஸ் முழுமையாகச் சாற்றில் மூழ்கும் வரை பொறுமையாக இந்தச் செயல் செய்யப்படுகிறது.

ஜாடி அல்லது பாட்டிலின் வாயைச் சுத்தமான மெல்லிய துணியால் கட்டி  நொதித்தலின் போது உள்ளிருந்து வெளியாகும் வாயு வெளியேற வசதியாக   இறுக்கமாக இல்லாமல் சற்றுத்  திறந்திருக்கும்படி மூடப்படும்இந்த பாட்டில் நல்ல காற்று இருக்கும், இருட்டான, குளிர்ந்த இடத்தில் 15-24°C வெப்பநிலை இருக்கும்படி வைக்கப்படுகிறது.

மற்ற நொதித்தலுக்கு தேவைப்படுவதைப் போல இதற்கு starter culture எனப்படும் நொதித்தலைத் துவக்கும் நுண்ணுயிர்கள் தேவையில்லை முட்டைகோஸிலேயே இந்த நொதித்தலுக்குத் தேவையான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இந்த நொதிக்கச் செய்யும் பாக்டீரியாக்கள்தான் முட்டைகோஸின் மாவுச்சத்தை லாக்டிக் அமிலமாக மாற்றி  சாவெர்கிராட்டின் பிரத்யேக புளிப்புச் சுவையை அளிக்கிறது

இந்த முட்டைக்கோஸ் உப்புக் கலவையில் நொதித்தல் நடந்து முடிய 3 நாட்களிலிருந்து பல வாரங்களாகும். இந்தக் காலத்தில் நன்கு நொதித்தல் நடந்து கொண்டிருப்பதன் அறிகுறிகளான கலவையின் மீது வெண்ணிறத் திரை உருவாதல், குமிழிகளும் நுரையும்  வெளியேறுதல் ஆகியவை நடைபெறும். இளஞ்சிவப்பு நிற அழுக்கு உருவாகி மிதக்கையில் அது உடனே அகற்றப்படுகிறது.

தேவையான அளவு நொதித்தல் நடந்ததை உறுதிப்படுத்திய பின்னர் பாட்டில் நன்கு இறுக்கமாக மூடப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுகிறது. குறைந்த வெப்பநிலையில் சாவெர்கிராட் சேமிக்கப்படுகையில் நொதித்தல் மேலும் நடக்காமல் தேவையான அளவில் அதன் சுவையும் மணமும் தங்கி நிற்கும்.

இதன் நன்மைகள் 

நொதித்தலில்  லேக்டோபேசில்லஸ் உள்ளிட்ட ஏராளமான நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் உருவாவதால் இதை ஒரு  Probiotics ஆக உபயோகிக்கலாம். நோயெதிர்ப்பு திறனை அதிகப்படுத்தவும், ஜீரணசக்தியை மேம்படுத்தவும் இது வெகுவாக உதவுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் கே, இரும்புச்சத்து மற்றும் மாங்கனீஸ் சத்து நிறைந்திருக்கிறது.

நாம் உண்ணும் பிற உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் விரைவாக உறிஞ்சிக்கொள்ள இதிலிருக்கும் நுண்ணுயிரிகள் உதவுகின்றன. முட்டைக்கோஸில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நொதித்தலின்போது மேலும் மேம்படுத்தப்படுவதால் புற்றுநோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல நலன்களும் கிடைக்கின்றன

  • கொரியாவில் முட்டைகோஸ், முள்ளங்கி,  கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நொதிக்கச் செய்த கிம்சி-(Kimchi)
  • முட்டைகோஸ், கேரட், வெங்காயம், ஓரிகேனோ, ஜலபினோ ஆகியவை கலந்து நொதிக்கச் செய்து   pupusas எனப்படும் சோளமாவும் பாலடைக்கட்டியும் கலந்த ஒரு உணவுடன் சேர்ந்து உண்ணப்படும்  எல் சால்வடோரின் கர்டிடோ-(Curtido) 
  • சீனாவின் கடுகு முட்டைக்கோஸை   உப்புச்சேர்த்து நொதிக்கச் செய்து கிடைக்கும் சுவான் காய் -(Suan Cai)
  • முட்டைக்கோஸுடன் இறைச்சி, உருளைக்கிழங்கு சேர்த்து நொதிக்கச் செய்து சாஸுடன் கலந்து உண்ணப்படும் ஃப்ரான்ஸின் சவுர் க்ரேட்- (Choucroute) 

என  இந்த சாவெர்கிராட் பல நாடுகளில் சிற்சில வேறுபாடுகளுடன் வேறு வேறு பெயர்களில் பயன்பாட்டில் இருக்கிறது.

சாவெர்கிராட்டை பாஸ்டுரைஸ் செய்யாமல் உண்ணும் போதுதான் இதன் பலன்கள் கிடைக்கிறது. பாஸ்டுரைஸ் செய்யும்போது கொடுக்கப்படும் வெப்பம் இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது.

சாவெர்கிராட் பல நாடுகளின் முக்கிய உணவாகியிருப்பதற்கு முக்கிய காரணமாயிருந்த ஜேம்ஸ் குக் அவரது இரண்டாம் கடற்பயணத்தில் 98 பீப்பாய்களில்  36000 பவுண்ட் சாவெர்கிராட்டை எடுத்துச் சென்றார். 

துரதிர்ஷ்டவசமாகக் குக்கின் இறுதிப்பயணமுமாகி விட்டிருந்த மூன்றாவது பயணத்திலும் சாவெர்கிராட் ஏராளமாக எடுத்துச்செல்லப்பட்டது. குக்கின் HMS ரிசல்யூஷன்,   HMS டிஸ்கவரி ஆகிய இரண்டு பெருங்கப்பல்களில் பல்லாண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது அந்த மூன்றாம் கடற்பயணம். 1779-ல் பழுதுகாரணமாக மாதக்கணக்கில் ஹவாய் தீவுகளிலேயே இரு கப்பல்களும் நிலை கொண்டிருந்தன.

ஹவாய் பழங்குடியினர் கேப்டன் குக்கின் குழுவினரை மரியாதையாக வரவேற்று உபசரித்தார்கள் என்றாலும் மாதக்கணக்காக  பெருந்திரளான கப்பற்பயணிகளுக்கு   உணவளிக்க வேண்டி இருந்ததும், கடற்பயணிகளால் பழங்குடியினப் பெண்களுக்கு பால்வினை நோய்கள் உருவாகி இருந்ததும் அவர்களைக் கோபம் கொள்ளச்செய்திருந்தது.

எனவே முதலில் கப்பலுக்குத் தேவையான எரிபொருளை அளிக்க ஹவாய் பழங்குடியினர் மறுத்தார்கள்.  குக்கின் குழுவினர் பலவந்தமாக பல  மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டதும், மயானங்களில் இருந்த வேலிகளையும், ஹவாய் பழங்குடியினச்சமூகத்தின் தொல்மரபில் முக்கியமானவைகளாகக் கருதப்பட்ட மரச்சிற்பங்களை உடைத்து எரிவிறகாகக் கொண்டு சென்றதும் அவர்களை ஆத்திரமூட்டியது.

எனவே பழங்குடியினர் மாதக்கணக்காக நின்றுகொண்டிருந்த கப்பலிலிருந்து இரவில் சில பொருட்களைத் திருடினால் பாதுகாப்பின்மை காரணமாகக்  கப்பல்கள் அங்கிருந்து புறப்படும் என நம்பினார்கள். 1779 பிப்ரவரி 13 அன்று இரவு  டிஸ்கவரி கப்பலிலிருந்து  ஒரு நீள் படகு ஹவாய் பழங்குடியினரால் திருடப்பட்டது.

கோபமடைந்த குக்   முந்தைய பயணங்களில் செய்தது போலவே பழங்குடியினத் தலைவரைச் சிறைப்பிடித்து பதிலுக்குத் திருடப்பட்ட  கப்பலைப் பெறும் திட்டத்தில் இறங்கினார். ஒரு சிறு குழுவினருடன் குக் பழங்குடியினத் தலைவரை கைது செய்துகொண்டு வர தீவுக்கு சென்றார்.
ஏற்கனவே கொந்தளித்துக் கொண்டிருந்த அவர்கள், தலைவர் கைதியாக பிடிக்கப்பட்டபோது பொறுமை இழந்தார்கள் 

1779 பிப்ரவரி 14 அன்று பணயக்கைதியாக குக்கினால் பிடிக்கபட்ட  பழங்குடியினத் தலைவர் குக்குடன் கப்பலுக்கு வரமறுத்து கடற்கரையில் அமர்ந்து கொண்டதும், ஏறத்தாழ 3000 ஹவாய் பழங்குடியினர் கப்பலைச் சூறையாடி அங்கிருந்த ஆயுதங்களுடனும் கட்டாரியும் அம்பும் வில்லுமாகக்  குக்கின் சிறு குழுவைச் சூழ்ந்து கொண்டார்கள் தற்காப்புக்காக குக் துப்பாக்கியில் கூட்டதைப் பார்த்துச்சுட்டபோது ஒரு பழங்குடியினத்தவர் கொல்லப்பட்டார்.

அதன்பின்னர் கூட்டம் கட்டுக்கடங்காத வன்முறையில் இறங்கியது. நிலைமை கைமீறி விட்டதை உணந்த குக் அவசரமாகக் கப்பலுக்குத் திரும்ப  முயற்சித்தார் ஆனால் வெறிகொண்ட கும்பல் அவரைப் பின்பக்கமிருந்து கத்தியால் பலமுறை குத்தியும் தலையில் கட்டையாலடித்தும் கொலை செய்தது. அவருடன் மேலும் நான்கு கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 

மூன்று கடற்பயணங்களிலும்  பல தீவுகளில் பழங்குடியினருடன் சுமுகமான உறவைப்பேணி வந்த, கடற்பயணிகளின் ஆரோக்கியத்தைக் குறித்துப் பெரிதும் கவனம் கொண்டிருந்த பேரறிஞரான குக் கலாச்சாரப் புரிதலின்மையால் கொல்லப்பட்டது பெரும் சோகம்

கொல்லப்பட்ட எதிரிகளில் மிக உயரிய இடத்தில் இருப்பவர்களின் இறப்புக்குக் கொடுக்கப்படும் மரியாதையாக ஹவாய் பழங்குடியினத்தவரால் குக்கின் உடல் பல பாகங்களாக துண்டு போடப்பட்டு உரிய சடங்குகள் செய்யப்பட்டு ஹவாய்த் தீவில் புதைக்கப்பட்டது. பிற்பாடு கப்பலின் பிற அதிகரிகள் வேண்டிக்கொண்டதற்கிணங்கி  சில எலும்புகள், துண்டாக்கப்பட்ட ஒரு கை ஆகியவை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. 

வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடலில் கழித்து, கடற்பயணியரின் ஆரோக்கியத்துக்காகப் பாடுபட்ட கேப்டன் ஜேம்ஸ் குக்கின் உடலின் மிச்சங்கள் பிப்ரவரி 22 அன்று உரிய மரியாதையுடன் கடலுக்கே அளிக்கப்பட்டது 

கேப்டன் குக்கின் பயணங்களின் குறிப்பிடத்தக்க வெற்றிக்குக் காரணம், அவரது குழுவினரின் சிறந்த ஆரோக்கியமே. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது, ஸ்கர்வி நோயைத் தடுக்க சாவெர்கிராட் உள்ளிட்ட சமச்சீரான உணவை அவர் கட்டாயப்படுத்தியதே ஆகும்.

அவரது வாழ்க்கை ஒரு கலாச்சார மோதலில் முடிவடைந்தாலும், பசிபிக் கடலில் அவர் மேற்கொண்ட விரிவான பயணங்களும், அவர் வரைந்த பல புதிய தீவுகள் மற்றும் நிலப்பரப்புகளின் துல்லியமான வரைபடங்களும் மிகவும் முக்கியமானவை.

மனித இயல்புகளை நன்கு உணர்ந்திருந்ததால், உளவியல் ரீதியாக தனது குழுவினரை ஸ்கர்வி நோயிலிருந்து காப்பாற்றிய ஜேம்ஸ் குக், அறிமுகமில்லாத புதிய நிலப்பரப்பு மனிதர்களின் செயல்களை கணிக்கத் தவறியதால் கொல்லப்பட்டது அவரது வாழ்க்கையின் ஒரு பெரிய முரண்பாடு.

மனிதன் எத்தனை சாதனைகள் செய்திருந்தாலும் எவ்வளவு மகத்தானாவனாக  இருந்தாலும் ஊழின் இரக்கமற்ற விதிகளுக்கு முன் மண்டியிட்டுப் பணியத்தான் வேண்டும் என்பதற்கு கேப்டன் ஜேம்ஸ் குக்கின் வாழ்வும் ஒரு உதாரணம்.

சால்மோனெல்லோசிஸ்!

அந்த 6400 ஏக்கர் பரப்பளவில் இருந்த ரஜனீஷ்புரத்திலிருந்து சிறு   பெட்டிகளில்  பழுப்புத் திரவத்தை  எடுத்துக்கொண்டு ரகசியமாக ஒரு சிறு குழு புறப்பட்டது.

அது 1984-ன் செப்டம்பர் மாதம். டாலஸ் நகரின்  பிரபலமான அந்த பகுதி மக்கள் வழக்கமாகக் கூடும் உணவகங்களுக்குச் சென்ற அந்தக் குழு மிகச்சாதாரணமாக யாருக்கும் எந்தச்சந்தேகமும் வராதபடிக்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சாலட்களை தாங்களே தேர்வு செய்து தட்டுக்களில் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கும் ’சாலட் பார்’ பகுதிக்குச் சென்றார்கள். அங்கிருந்த காய்கறித்துண்டுகளில், தாங்கள் கொண்டுவந்திருந்த ’சல்சா’ என அவர்களால் குறிப்பிடப்பட்ட பழுப்புத் திரவத்தை யாருக்கும் தெரியாமல் கலந்தார்கள்.  செப்டம்பர் 9-லிருந்து 19-ம் தேதி வரையிலும் பின்னர்  அக்டோபர் மாதம் 10-ம் தேதியிலுமாக பத்து உணவகங்களில் இதைச்செய்தார்கள்.

உணவகங்களின் கதவுக் குமிழ்களில் தடவப்பட்ட அந்தத் திரவம், குடிநீர்த்தொட்டிகளிலும்  கலக்கப்பட்டது.  சில நாட்களிலேயே டாலஸ் நகரிலிருந்த ஆயிரக்கணக்கோருக்கு காய்ச்சல், நடுக்கம், வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. அது ஒரு சிறு நகரமென்பதால் மருத்துவமனை வசதிகள் போதாமல் நகரமே பதற்றத்துக்குள்ளானது. அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கு பலர் விரைந்தார்கள். பல நாட்களாக இந்தச் சதி நடந்ததால் தொடர்ந்து நோயுற்று 700-க்குமதிகமானோர் ஆபத்தான நிலையிலும் 45 பேர் மிக ஆபத்தான நிலையிலும் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டார்கள்.

காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய ஆய்வுகளிலும் உணவுக் கூடத்தின் தொழிலாளர்களிடம் நடந்த விசாரணையிலும் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. சால்மோனெல்லா என்னும் பாக்டீரியாவினால் உணவு நஞ்சாகும்  சால்மோனெல்லோசிஸினால் தான் நோயுண்டானது என்பதைக் கண்டுபிடித்தார்களே தவிர எப்படி அது உண்டானது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

குளிர்சாதனப் பெட்டியின் குளிர்வு சில உணவகங்களில் போதுமான அளவு இல்லாமலிருந்தாலும் அதனால் சால்மோனல்லோசிஸ் உண்டாயிருக்க வாய்ப்பில்லை என்பதால் அந்தக் காரணமும் சந்தேகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

காரணம் தெரியாவிட்டாலும் அடுத்து நவம்பரில் அந்த மாகாணத்துக்கான தேர்தல் வரவிருந்ததால் யாரோ வேண்டுமென்றே இதைச் செய்திருக்க கூடும் என உள்ளூர் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள்.  சாலட்களில் சால்மொனெல்லா கிருமி இருப்பது ஆய்வக சோதனையில் உறுதியானது என்றாலும் எப்படி அத்தனை உணவகங்களிலும் தொடர்ச்சியாக அது இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறியது.

 Salmonella typhimurium (Salmonella enterica serovar Typhimurium ) என்னும் உணவை நஞ்சாக்கும் பாக்டீரியா அந்த விளைவுகளை உண்டாக்கியது, யாரும் மரணம் அடையவில்லை என்றாலும்  நகரெங்கும் பெரும் அச்சம் நிலவியது. அமெரிக்க வரலாற்றிலேயே ஆகப்பெரிய உயிராயுதத் தாக்குதல்  நடந்தது முதலும் கடைசியுமாக  அதுதான்.

அமெரிக்காவின்  CDC (நோய் தடுப்பு அமைப்பு) அதை சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவினால் உருவானது என்று சொன்னாலும் 751 பேர் ஒரே சமயத்தில் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது பெரும் சந்தேகத்தை எழுப்பியது. ஏற்கனவே ரஜனீஷ் ஆசிரமத்தின் எல்லாமுமாக இருந்த  மா ஆனந்த ஷீலாவின் மீது கடும்கோபத்திலிருந்த டாலஸ் மக்கள் நவம்பர் தேர்தலில் ஷீலாவுக்கு வேண்டிய ரஜனீஷ் ஆசிரமவாசிகள் போட்டியிட்டதால் இது ஒருவேளை அவரது சதியாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். ஆனாலும் அதற்குச் சான்றாக எதுவுமே அவர்களிடம் இல்லை.

1980- களில் ஆண்டிலோப் என்னும் பெயரில் இருந்த அந்நகரத்தில் ரஜனீஷ் ஆசிரமத்துக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அங்கு  வசித்த அவரின் சீடர்கள் புதிய ஓட்டுரிமையும் பெற்றார்கள். 1984-ல் ஒரு அதிகாரபூர்வ வாக்கெடுப்பு நடத்தி  உள்ளூர்வாசிகளைவிட ஆசிரமவாசிகளின் எண்ணிக்கை  கணிசமான அளவு இருந்ததால் அந்நகர் ரஜனீஷ்புரம் என்று அழைக்கப்படுமென்று முடிவானது.

தேர்தலுக்கு முன்பு ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தரும் ‘’ sharing home’’ திட்டத்தை துவங்கிய மா ஷீலா பல பேருந்துகளில் (ஓட்டுரிமை கொண்ட) ஆயிரக்கணக்கான வீடிழந்தோரை ரஜனீஷ்புரத்துக்கு அழைத்துவர முயன்றார். ஆனால் தேர்தல் கமிஷன் அந்தத் திட்டத்தை முறியடித்தது.

நவம்பரில் தேர்தலும் வந்தது. ரஜனீஷ்புரத்தின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக டாலஸ் நகரின் அனைத்து மக்களும் வரலாறு கண்டிராத அளவுக்கு திரண்டு வந்து ஓட்டுப்போட்டார்கள். ரஜனீஷ் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கானோர் சீடர்களாக இருந்தாலும் அவர்களில் அமெரிக்க பிரஜைகள் வெகு சிலரே என்பதால் அவர்களால் ஓட்டுப்போடமுடியாமல் டாலஸ் நகரவாசிகளே வெற்றிபெற்றார்கள்.   

அம்மாகாணத்தின் பெரும்பாலான ஓட்டு டாலஸ் நகர வாசிகளுடையதுதான் எனவேதான் டாலஸைக் குறிவைத்து அந்த உயிரித்தாக்குதல் நடந்தது. டாலஸின் ஓட்டுப் போடும் வயதுள்ள கணிசமானோரை  நோயாளிகளாக்கிவிட்டால், ஆசிரமத்தில் ஓட்டுப்போடும் தகுதியிலிருந்த சிறுகூட்டத்தினரை தங்களுக்குச் சாதகமாக ஓட்டுப்போடச்செய்து வெற்றி பெறும் நோக்கத்தில் அந்த சதி நடத்தப்பட்டது.

ஒரு வருடம் வரை காரணம் தெரியாமல் வெறும் சந்தேகமாக மட்டும் இருந்த விஷயம் ஆசிரமத்துக்குள் உண்டான அதிகார மோதல் மற்றும் உட்பூசலினால்  மா ஆனந்த ஷீலா தன் ஆதரவாளர்களுடன் ஐரோப்பாவுக்கு சென்ற பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.

1985-ல் ரஜனீஷ் ஆசிரமத்தின் மா ஆனந்த ஷீலா அந்த சால்மோனல்லோசிஸ் தொற்றை உருவாக்கியவர் என்று ரஜனீஷ் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

பல காலமாக மெளனமாகவே இருந்த பகவான் ரஜனீஷ் அமைதியை உடைத்து பேசத்தொடங்கினார். அளவற்ற அதிகாரமும் செல்வாக்கும் கொண்டிருந்த மா ஆனந்த ஷீலாதான் உணவில் சால்மோனெல்லா பாக்டீரிய நஞ்சைக்கலந்த குற்றச்செயலைச் செய்தார் என்றும் தனது பிரத்யேக மருத்துவரைக் கொலை செய்ய முயன்றதும் அவர்தான் என்றும்  ரஜனீஷ்  தெரிவித்தார்.

FBI-யின் தொடர்ந்த குற்றப்புலனாய்வு  விசாரணையில் மா ஆனந்த ஷீலாவும் அங்கே செவிலியாக இருந்த மா ஆனந்த பூஜாவும் இந்த சதிக்கு முக்கியமான காரணமாயிருந்தார்கள். ஒரு மருந்துக் கடையிலிருந்து சால்மோனெல்லா பாக்டீரியாவைச் சிறிதளவு வாங்கிய அவர்கள் ஆசிரமத்திலிருந்த ஒரு ஆய்வகத்தில் அதை ஏராளமாக வளர்த்து  சாலட்களில்  கலந்தார்கள் என்பது தெரிய வந்தது.

ரஜனீஷ்புரத்தின் ஆசிரமத்துக்குள்ளேயெ இருந்த மிக வசதியான ஆய்வகமும் அதில் சாலட்களில் இருந்த அதே சால்மொனெல்லா கிருமிகள் வளர்த்தப்பட்டதும் கண்டுப்பிடிக்கபட்டது. ஆசிரமவாசிகளின் நேரடி சாட்சிகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் இருந்த  மா ஆனந்த ஷீலா கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார்.

விசாரணையில் ஷீலா குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நன்னடத்தை காரணமாக 29 மாதங்களில் விடுதலை செய்யப்பட்ட ஷீலா சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார்.

அந்த ஆசிரமவாசிகள் மேலும் பல குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தது குற்றப்புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்ததால் மீண்டும் அந்நகரம் ஆண்டிலோப் என்றே பெயரிடப்பட்டது.

1949-ல் குஜராத்தில் ஒரு செல்வாக்கான குடும்பத்தில் 6-வது குழந்தையாக பிறந்த ஷீலா அம்பாலால் பட்டேல்  தனது 18-ம் வயதில் நியூ ஜெர்ஸிக்கு பட்டப்படிப்பிற்கென வந்தார்.1968-ல் பகவான் ரஜனீஷை சந்தித்த அவர் ரஜனீஷ் இயக்தத்தினால் பெரிதும் கவரப்பட்டு அப்போதே அதில் இணைந்துகொண்டார். 

1972-ல் தனது முதல் கணவருடன் இந்தியாவில் இருந்து ஓஷோவின் ஆன்மீக ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தவர் 1980-ல் கணவரின் மறைவுக்கு பிறகு ஜான் செல்ஃபெர் என்னும் ரஜனீஷின் மற்றொரு சீடரை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்கா திரும்பிய ஷீலாவை மா ஆனந்த ஷீலா  எனப்பெயர் சூட்டி  1981-ல் தனது அந்தரங்கக் காரியதரிசியாக்கிக் கொண்டார் பகவான் ரஜனீஷ்.

மிகக்குறுகிய காலத்திலேயே ரஜனீஷ் இயக்கக்தின் தவிர்க்கமுடியாத பெரும் சக்தியாக மாறிய ஷீலா ஓரிகானில் 64000 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ரஜனீஷ்புரம் அமைவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தார். ரஜனீஷின் மெளன காலத்தில் ஷீலாவே ரஜனீஷ்புரத்தின் ஒரே குரலாக இருந்ததோடு  ரஜனீஷ் ஆசிரமத்தின் சர்வதேச அமைப்பின் தலைவராகவும் இருந்தார். 

அவரது மூர்க்கமான குணத்தினாலும் நிலஅபகரிப்பு முயற்சிகளாலும் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றவும் அவர் முயன்றதாலும் உள்ளூர்வாசிகளுடன் ஏற்பட்ட மோதலினால் விரைவில் அவர் அமெரிக்கர்களால் மிகவும் வெறுக்கப்பட்ட பெண்ணானார். 

 இப்போது சுவிட்சர்லாந்தில் ஷீலா பிர்ன்ஸ்டீல் என்னும் பெயரில் இரு முதியோர் இல்லங்களை நிர்வகித்து வரும் அவரைக்குறித்து  நெட்ஃபிளிக்ஸில் Searching for Sheela  என்னும் ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. ரஜனீஷ்புரவாழ்வு குறித்து My Own Rules என்னும் நினைவுக் குறிப்பையும் அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

ரஜ்னீஷ் என்னும் ஓஷோவின் மீதிருந்த அன்பினாலும் அபிமானத்தினாலுமே  தான் பலவற்றைச் செய்ததாகவும் செய்தவற்றைக் குறித்து எந்த வருத்தமுமில்லை என்றும் சொல்லும் ஷீலாவுக்கு சீடர்கள் இருக்கிறார்கள்.

சால்மோனெல்லோசிஸ் உணவு நஞ்சை உருவாக்கும் இந்த Salmonella typhimurium  பாக்டீரியாவின் பேரினப்பெயர் இந்த பாக்டீரியாவை 1884-ல் முதலில் கண்டுபிடித்த Daniel E. Salmon என்பவரைக் கெளரவிக்க வைக்கப்பட்டது.(டேனியல் சால்மனின் உதவியாளரான Theobald Smith தான்  பன்றிக்காலராவைக் குறித்த ஆய்வில் சால்மொனெல்லாவை முதலில் கண்டுபிடித்தாரென்றாலும்,).

இந்தப் பேரினத்தின் மற்றொரு சிற்றினமான Salmonella typhi தான் டைபாய்டு காய்ச்சலுக்கு காரணமாக இருக்கும் கிருமி.

Salmonella typhimurium விலங்குகள் வழியாகப் பரவி விலங்கு, பறவை இறைச்சி மற்றும் முட்டை உணவு வழியேவும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட தாவர உணவுகளாலும் சால்மோனல்லோசிஸை உருவாக்குகிறது.

சால்மோனெல்லோசிஸ் உலகளாவிய பல தொற்றுகளை உணவு நஞ்சாதல் மூலம் உருவாக்கி இருக்கிறது. 1985-ல் இல்லினாய்ஸில் முறையாக பாஸ்டுரைஸ் செய்யப்படாத பாலினால் பரவிய சால்மொனெல்லோசிஸினால்  2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள்.

1989-ல் லண்டனில்  சால்மோனெல்லாவால் கெட்டுபோயிருந்த முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனேஸ் இருந்த சாண்ட்விட்ச் வழியாக பரவிய S. Typhimurium DT4  என்னும் வகை மிகப்பெரிய அளவில் நோய்த்தொற்றை உருவாக்கியது.

2005-ல் அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஆரஞ்சு பழச் சாற்றில் இருந்து சால்மோனல்லோசிஸ் பரவி பெருந்தொற்றை உருவாக்கியது.

1987-ல் நார்வே மற்றும் ஃபின்லாந்தில் சாக்லேட்டுகளில் இருந்த சால்மோனெல்லா கிருமி 350 பேர் வரையிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

2021-ல் ஃபின்லாந்தின் ஒரு குழந்தைகள் காப்பக விழாவில் மதிய உணவில் இருந்த லெட்யூஸ்களில் இருந்த சால்மொனெல்லாவினால் சுமார் 750-பேர் பாதிக்கப்பட்டனர்.

2021-ல் கனடாவில் சோயா பாலாடைக்கட்டியான டோஃபுவில் சால்மொனெல்லா இருந்ததால் ஒரு சிறு குழு நோய்வாய்பட்டதன் பின்பு சால்மோனெல்லா  இறைச்சி உணவில் மட்டுமல்ல தாவர உணவுகளிலும்  இருக்குமென்பது உறுதியாயிற்று.

2021-ல் பெல்ஜியத்தின் பிரபல சாக்லேட்டுகளில் சால்மொனெல்லா இருப்பது சாக்லேட்டுகள் விற்பனையாவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதால்  உலகளாவிய பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

கடைசியாக 2023-ல் அமெரிக்காவில் பன்றிக் கொத்திறைச்சி மூலம் பரவிய சால்மொனெல்லா தொற்றுதான் மிகச்சமீபத்திய தொற்றுநிகழ்வு. 

இன்று வரையிலும் உணவை நஞ்சாகும் பாக்டீரியாவாக சால்மோனெல்லா மிக குறிப்பிடத்தக்க ஆபத்தை உண்டு பண்னும் கிருமியாகத்தான் இருக்கிறது.

தொடர்ந்த ஆய்வுகளில் சால்மோனெல்லா, பன்றி மற்றும் கொறித்துண்னிகளில் அதிகம் தங்கி இருப்பதும் அவற்றிலிருந்து பிற விலங்குகளுக்கு பரவுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

மனிதர்களுக்கு முறையாக, சுகாதாரமாக சமைக்கப்படாத உணவுகளிலிருந்தும், வளர்ப்புப்பிராணிகள் மற்றும் பிற விலங்குகளிலிருந்தும் சால்மோனெல்லோசிஸ் பரவுகிறது.

உணவுத்தயாரிப்பு மற்றும் கையாளுவதில் சுகாதாரம் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை சால்மோனெல்லா பாக்டீரியா நமக்கு  உணர்த்தியிருக்கிறது.

உணவைத்தயாரிக்கையிலும் கையாளுகையிலும் அடிக்கடி கைகளை கழுவிக்கொள்வது, உடல்சுத்தம் பேணுவது, சமைக்கப்பட வேண்டிய பொருட்களை நன்கு கழுவிப்பயன்படுத்துவது மற்றும் சமைத்த சமைக்காத பொருட்களை தனித்தனியே பிரித்து வைப்பது,  இறைச்சி உணவுகளை முறையாகச் சமைப்பது ஆகியவற்றினால் சால்மோனெல்லோசிஸை தவிர்க்கலாம்.

ஃபுகு- மரணத்தின் சுவை!

1975-ன் மிகக்குளிரான ஒரு மாலை அது. ஜப்பானியர்களின் பிரியத்துக்குகந்த கபுகி கலைஞரும் கபுகி பரம்பரையின் எட்டாவது தலைமுறையைச் சேர்ந்த வருமான ’பேண்டோ மிட்ஷுகோரோ’ டோக்கியோவின்   “Living National Treasure,”  என்னும் உணவகத்துக்குள் சென்றார். உணவகத்தில் இருந்த அனைவரும் அவரை பாரம்பரிய முறைப்படி எழுந்து குனிந்து வணங்கினார்கள். 

அவர் ஜப்பான் முழுவதும் பிரபலமான ஒரு கலைஞர். தனது 7வயதிலிருந்தே கபுகி கலையில் ஈடுபட்டிருப்பவர். கபூகி என்பது ஜப்பானிய பாரம்பரிய நடனமும் மேடை நாடகமும் இணைந்த ஒரு கலை. பகட்டான ஆடைகளும் ஆபரணங்களும் ஒப்பனைகளையும் கொண்ட அது இந்தியாவின் கதகளி, யஷகானக்கலைகளுக்கு இணையானது.

அந்த உணவகம் ஜப்பானில் தடை செய்யப்பட்டிருந்த, நஞ்சு நிறைந்த ஃபுகு மீனின் ஈரலில் செய்யபப்டும் fugu kimo, என்னும் உணவுக்குப் பிரசித்தி பெற்றது. அன்று மிட்ஷுகோரோ அவரது மேடைகளில் காண்பிக்கும் தைரியத்தை உணவுத்தேர்ந்தெடுப்பிலும் காட்ட நினைத்தாரோ என்னவோ ஒரு முறை ஃபுகுமீன் ஈரலை வாங்கி சுவைத்தவர் மீண்டும் அதையே கொண்டு வரச் சொன்னார்.

 அது ஆபத்தை உண்டாக்குமென உணவக ஊழியர்கள் எச்சரித்த போது தனக்கு TTX  எனப்படும் ஃபுகுமீனின் நஞ்சுக்கு எதிரான நோயெதிர்ப்பு இருப்பதாக சொன்னார். இரண்டாம் முறையும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மீண்டும் கேட்டு நான்கு முறை ஃபுகுவின் ஈரல் உணவைச் சாப்பிட்டார். 

 ஒரு தட்டில் இருந்த நஞ்சு பலரைக்கொல்லும் அளவுக்கு வீரியம் கொண்டது அவரோ நான்கு தட்டுக்கள் வாங்கி உண்டிருந்தார்.

 ஃபுகு நஞ்சூட்டலின் துவக்க அறிகுறியாக அங்கேயே அவருக்கு நாக்கும் உதடுகளும்  ஊசி குத்தியதைப்போல சிலிர்த்து  முகம் லேசாக மரத்துப்போனது.

விடுதி அறைக்குத் திரும்பிய மிட்ஷுகோரோ முழு நினைவில் இருக்கையிலேயே தசைச்செயலிழப்பும் பக்கவாதமும் உண்டாகியது. பேசவும் கைகால்களை அசைக்கவும் முடியாமல் அத்தனை ஆயிரம் முறை மேடைகளில் நடித்து ஜப்பானியர்களின் மனம் கவர்ந்த  அவர்  அன்று உடலே சிறையாகி கைகால்கள் அசைவின்றி இருந்த 8 மணி நேரத்துக்குப்பின் உயிரிழந்தார்.

விசாரணைக்குப் பிறகு அவருக்கு ஈரலை அளித்த சமையல் கலைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவரது ஃபுகு சமைப்பதற்கான உரிமம் குறிப்பிட்ட வருடங்களுக்கு ரத்துசெய்யப்பட்டது. ஆனால் ஜப்பான்  ஒரு மாபெரும் கலைஞரை அவர் மரணத்தைச் சுவைக்க விரும்பியதால்  இழந்தது. 

 ஜப்பானில் அன்றிலிருந்து இன்றுவரை மிட்ஷுகோரோவின் மரணம் பெரும் எச்சரிக்கைப் பாடமாகவே அருக்கிறது. புதிய உணவுகளைத்தேடிச்செல்லும் சாகசக்காரர்களுக்கு மிட்சுகோரோவின் கதை எப்போதும் சொல்லப்படுகிறது

உலகெங்கிலும் உணவுக்கலாச்சாரம் என்பது சுவையான முரண்பாடுகளால் ஆனது. முறையாக சமைக்கப்படாத்தால், சரியான இடத்தில் சேமிக்கப்படாததால், கலப்படத்தால் என உணவு நஞ்சாகிறது. கிளாஸ்ட்ரிடியம் பொட்டுலினம் போல  ஆபத்தான பாக்டீரியாக்கள் உணவிலிருந்து உயிரைக் கொல்வதுமுண்டு. 

ஆனால் ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிந்தே அந்த  உணவுகளை விரும்பி உண்பது என்பதும் உலகில் இருக்கிறது.

மரவள்ளிக்கிழங்கிலிருக்கும் வேகவைத்தால் நீங்கும் சயனைடுக்கு இணையான நஞ்சு,  உண்னும் காளானைப் போலவே இருக்கும்  அமடாக்ஸின் நஞ்சைக் கொண்டிருக்கும் உலகின் மிக மோசமான் விஷக்காளானான டெத் கேப் காளான், ஆப்பிள் மற்றும் செர்ரி பழங்களின் நஞ்சு கொண்ட விதைகள், முழுமையாக பழுக்காவிட்டால் ஹைபோகிளைசின் A என்னும் நஞ்சைக்கொண்டிருக்கும் ஜமைக்காவின் தேசிய உணவான அக்கிப்பழம், பக்கவாதத்தை உண்டாக்கும் நஞ்சை ஈரலில் கொண்டிருக்கும் கிழக்கு ஜப்பான் கடலில் கிடைக்கும் மீனான கிம்ச்சிஜ்ஜி, கொரிய உணவுகளில் பிரபலமான, உயிருடன் இருக்கையிலேயே துண்டுகளாக்கப்பட்டு துள்ளத்துடிக்கச் சாப்பிடுகையில், தொண்டையில் ஒட்டிக்கொண்டு உயிரைப்போக்கும்  ஆபத்தான சானாகிச் ஆக்டோபஸ்  என இந்தப்பட்டியல் நீண்டது.

உலகம் முழுவதும், மிக நுணுக்கமான தயாரிப்பு இல்லாவிட்டால் உயிரைப் பறிக்கக்கூடிய உணவுகளும் உண்டு. அவற்றின் தனித்துவமான சுவைகளுக்காகவும் ஆபத்தை சந்திக்கும் சாகசத்துக்காகவும், மனிதர்கள் விரும்பி உண்ணும் அபாயகரமான உணவுக்கு எடுத்துக்காட்டுதான் ஜப்பானின் ஃபுகு (Fugu) மீன்.

  கடலால் சூழப்பட்ட ஜப்பனில்  பண்டைய காலத்திலிருந்தே கடலுணவுகளின் அனைத்துவிதங்களையும் அவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஜப்பானில் கடல் உணவுகள் வெறும் உணவாக அல்ல, வாழ்க்கை முறையின் ஒரு அவசியமான பகுதியாகக் கருதப்படுகின்றன. சுமார் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட இந்தத்தீவு நாடு, பசிபிக் பெருங்கடல், ஜப்பான் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் போன்ற வளமான நீர்நிலைகளில் இருந்து பல்வேறு வகையான மீன்கள் மற்றும் கடல் உயிரிகளைக் கொண்டிருக்கிறது. இந்தக்கடல் உயிரியல் வளங்கள் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கும்,  வாழ்வாதாரத்திற்கும் மிக முக்கியமாக இருக்கிறது.

உலகெங்கிலும் இருக்கும் 350 வகையான கோளமீன்களில் 35  வகையான  ஃபுகு (Fugu) மீன்கள் ஜப்பானிய கடல்களில் இருக்கின்றன.  அவற்றில் பெரும்பாலானவை நச்சுமீன்களே. ஜப்பானில் மட்டுமே 22 வகையான ஃபுகு மீன்கள் உண்ணப்படுகின்றன, இவை மிக அதிகப் புரதம், மிகக்குறைந்த கலோரி, ஏராளமான நுண் தாதுக்களும் வைட்டமின்களும், அபாரமான சுவையும் கொண்டிருப்பவை. 

அதிர்ஷ்டம் என்று பொருள் கொண்ட Fuku என்றும் வழங்கு பெயர் கொண்டிருக்கும் ஃபுகு மீன் ஜப்பனியர்களுக்கு அதிர்ஷடமீனாகவும் இருக்கிறது. 

ஃபுகுவிற்கு  pufferfish, porcupine fish,  blowfish என்னும் ஆங்கிலப் பெயர்களுண்டு. 

 இது ஒரு விலையுயர்ந்த ,மிகச்சுவையான உணவாகக் கொண்டாடப்பட்டாலும், ஃபுகு மீனின் கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளில் டெட்ரோடோடாக்சின் என்ற சக்திவாய்ந்த நரம்பு நஞ்சு நிறைந்துள்ளது. சயனைடை  விட 1200 மடங்கு அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த விஷம், சரியான முறையில் அகற்றப்படாமல் மீனை உட்கொண்டால் சில நிமிடங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும். இவ்வளவு கொடிய விஷம் இருந்தும், இதன் அபாரமான  சுவையினால் ஃபுகு, உலகின் மிகவும் விரும்பப்படும், அதே சமயம் மிகவும் ஆபத்தான உணவுகளில் ஒன்றாகத் இருக்கிறது.  

ஃபுகு எனப்படும் இந்த மீன் puffer fish எனப்படும் உடலை பலூன் போல் தேவைப்படுகையில் உப்பச்செய்யும் கோளமீன் வகையயைச் சேர்ந்தது. இதன் உடல் பாகங்களில் குறிப்பாக தோல் கண்கள் ஈரல் மற்றும் சினைப்பையில்  tetrodotoxin என்னும் நரம்புகளை செயலிழக்க செய்யும் கடும் நஞ்சு இருக்கிறது.  இந்த நஞ்சுக்கு இன்றைய தேதி வரை முறிமருந்தேதும் இல்லை.

இதை சாப்பிட்டவருக்கு  பக்கவாதம் உண்டாகி பின்னர் மரணம் சம்பவிக்கும். நஞ்சு உடலிலிருந்து இயற்கையாக  நீங்கும் வரை சிகிச்சையளிக்கப்பட்டால் மட்டுமே உயிர்பிழைக்க முடியும்.

ஜப்பானில் மிக அதிக அளவிலும், கொரியாவிலும் சீனத்திலும் ஓரளவுக்கும் இந்த மீன் உணவு பிரபலமாக இருக்கிறது. இம்மூன்று நாடுகளிலுமே ஃபுகு மீனை சமைக்கவும் கையாளவும் உரிமம் பெற்ற சமையல் நிபுணர்கள் மட்டுமே சமைக்க முடியும் என்னும் சட்ட ரீதியான கட்டுப்பாடு இருக்கிறது. ஃபுகு உணவை தயாரிக்க உணவகங்களும் உரிமம் பெற்றிருக்கவேண்டும். 

வரலாற்றுக்காலத்திலிருந்தே கிழக்காசியாவின் பிரபலமான உணவாக ஃபுகு இருந்து வருகிறது. ஜப்பானில் சுமார் 2300 ஆண்டுகளாக பிரபல உணவாக இருக்கும் ஃபுகு கொரியா மற்றும் சீனாவிலும் பண்டைய காலத்திலிருந்தே விரும்பி உண்ணப்படுகிறது.

ஜப்பானியக் கடற்கரைக் கிராமங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் 4000 வருடங்களுக்கு முன்பிருந்தே ஃபுகு உணவாக பயன்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றாக மீனின் எலும்புகள் கிடைத்திருக்கின்றன, ஜோமோன் வம்ச ஆட்சிக் காலத்தில்  2,300ஆண்டுகளுக்கு  முன்னர் ஃபுகுவின் நஞ்சால் அதை உண்ணத் தடைச்சட்டம் இருந்திருக்கிறது. 

அடிக்கடி பல பேரரசர்களின் காலத்தில் இம்மீனை உண்ணத் தடைச்சட்டம் கொண்டுவரப்படுவதும் பிற்பாடு அதன் சுவையில் மயங்கிய பேரரசர்கள் தடையை நீக்குவதும் ஜப்பபான் வரலாறெங்கும் காணப்படுகின்றது.  மெஜ்ஜி வம்ச ஆட்சியில் (Meiji Era 1868– 1912),  இளவரசர் ஹிரோபுமி ஃபுகுவின் சுவையில் மயங்கி  ஒரு சில பிராந்தியங்களில் மட்டும் தடைச்சட்டங்களை நீக்கினார்.

இதைப்போலவே சீனாவிலும் கொரியாவிலும் கூட தடைச்சட்டங்கள் போடப்படுவது, விலக்கப்படுவது மீண்டும் யாராவது ஃபுகுவை உண்டு உயிரிழக்கையில் தடைச்சட்டம் இயற்றப்படுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது.சீனாவில் சோங் வம்ச ஆட்சியின் போது  அரசு அங்கீகரித்த மூன்று சுவையான உணவுகளில் ஃபுகு மீனுணவும் இருந்தது. 

கேப்டன் ஜேம்ஸ் குக்கின் இரண்டாம் கடற்பயணத்தின் போது அவரும் அவரது நண்பர் ஜோஹானும் காலிடோனியாவில் ஃபுகு மீன் ஈரலைச் சாப்பிட்டு ஏறக்குறைய மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டார்கள். இந்தத்தகவல் உலகெங்கும் ஃபுகுவின் பெயரை மேலும் பரிச்சயமாக்கியதே ஒழிய அதன்மீதான அச்சத்தை அதிகமாக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

ஜப்பானில் டோக்குகவா (Tokugawa Shogunate-1603–1868), காலத்திலிருந்துதான் ஃபுகுவை நஞ்சு நீக்கி சமைக்கவும் உண்ணவுமான முறையான வழிமுறைகள் உருவாகின.

 1888-ல் தான் முதல் ஃபுகு ஒழுங்குமுறை உணவகமான ஷன்பான்ரோ (Shunpanro_ ஷிமோனோசெக்கி நகரில் திறக்கப்பட்டது ஃபுகு உணவுண்பதில் ஒரு பெரும் திருப்பு முனையாகக் கருதப்பட்டது, இதே நகர்தான், 

ஃபுகு மீனின் உடலில் இந்த Tetrodotoxin நரம்பு நஞ்சு (TTX)  உருவாவதில்லை. ஃபுகு மீனின் உணவுச்சங்கிலியில் இருக்கும் நஞ்சுதான் அதன் உடலில் சேமிக்கபப்டுகிறது. நீரில் இருக்கும் Vibrio, Pseudomonas, மற்றும் Shewanella ஆகிய பாக்டீர்ய பேரினங்களில் இந்த நஞ்சு காணப்டுகிறது. இந்த பாக்டீரியாக்களை மிதவை உயிரினங்கள் புழுக்கள் ஆகியவை உண்கின்றன.

இந்தச் சிற்றுயிர்களை உண்ணும்   நத்தைகள், நட்சத்திர மீன்கள் மற்றும் சில மெல்லுடலிகளின் உடலில் இந்த நஞ்சு சேர்கிறது. அவற்றை உண்ணும் ஃபுகுவின் ஈரல், தோல், சினைப்பை, குடல், கண்கள் ஆகியவற்றில் இந்த நஞ்சு மிக அதிக அளவில் சேமிக்கப்படுகிறது.  TTX நஞ்சு ஃபுகு மீன்களில் மட்டுமல்லாது நீல வளைய ஆக்டோபஸ்கள், சில வகை நண்டுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றிலும் இருக்கிறது.

இதன் பொருட்டுத்தான் ஜப்பானில் பண்ணைகளில் மிதவைக்கூண்டுகளில் ஃபுகு வளர்க்கப்படுகிறது.  ஜப்பானின் ஃபுகு வல்லுநர்களில் ஒருவரும் கடல் நஞ்சு நிபுணருமான டமயோ நொகுச்சி 2000-திலிருந்து 2008- வரை 7000 பண்னை ஃபுகுமீன்களில் ஆய்வு செய்து அதில் ஒன்று கூட நஞ்சுகொண்ட மீனில்லை என்று நிரூபித்தார்.   

எனவே ஃபுகு பண்ணையாளர்கள் பண்னை மீன்களின் ஈரலை உணவாக அளிக்க உரிமம் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தாலும்  பண்ணை மீன்களின் ஈரலில் நஞ்சில்லை என்பதற்கான போதுமான ஆய்வுகளும் ஆதாரங்களில்லை எனவே ஃபுகுவின் ஈரல் விற்கப்படுவதை அனுமதிக்க வாய்ப்பே இல்லை என்று மறுக்கிறது  தேசிய ஃபுகு கூட்டமைப்பு. பண்ணைகளில் இருந்து கிடைக்கும் ஃபுகுவின் விலை  2023 நிலவரப்படி ஒரு கிலோ 50 அமெரிக்க டாலர்கள்.

ஜப்பானில் 1958-லிருந்து ஃபுகுவை சமைக்க உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகியது. ஃபுகு மீனின் நஞ்சு நீக்கி சமைப்பதற்கான மூன்று   வருட பயிற்சியுடன் கூடிய கல்வியைக் கற்றவர்களுக்கு மட்டுமே ஃபுகு மீன் உணவை கையாள, சமைக்க, பிறருக்கு அளிக்க, உணவகங்களில் பணியாற்ற உரிமம் அளிக்கப்படுகிறது. செய்முறைத்தேர்வில் ஒருபகுதி ஃபுகுவின் நச்சுப்பாகங்களை நீக்கி சமைத்து அதை சமைத்தவரே சாப்பிட வேண்டும். 35 % மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படுகிறது.

கொரியாவிலும் ஃபுகுவிற்கென பிரத்யேகமான படிப்பை படித்து முடித்தால்தான் உரிமம் கிடைக்கும். அங்கு 60% மதிப்பெண்கள் கட்டாயம்.

சீனாவிலும் இதே கட்டுப்பாடுகள் உள்ளன என்றாலும் 2017-லிலிருந்து ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவும் ஃபுகு மீன்களின் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக   fugu hiki எனப்படும் ஃபுகு மீனுக்கெனவே இருக்கும் மிகக்கூர்மையான கத்தியைப் பயன்படுத்துதல், அந்தக் கத்தியை பிற கத்திகளுடன் சேர்க்காமல் தனியே வைத்திருத்தல்,  நீக்கப்பட்ட நஞ்சு கொண்ட பாகங்களை தனியே பிரித்து வைத்து முறையாக அப்புறப்படுத்துதல் மற்றும் நஞ்சுள்ள பாகங்களை நீக்குவதை ஆவணப்படுத்துதல் ஆகியன பொதுவான விதிகளாக இருக்கின்றன

சீனாவில்  ஃபுகுவை சமைப்பதற்கான உணவகங்களுக்கான உரிமம் 2003-லிருந்தும், வீடுகளுக்கு ஃபுகு வாங்கிக்கொள்வதற்கான் தனிப்பட்ட உரிமம் 2017-லிருந்தும் அளிக்கப்படுகிறது.

ஐரோப்பா மொத்தமாகவே ஃபுகு உபயோகத்தைச் சட்டப்படி தடை செய்திருக்கிறது விதிவிலக்காக சுவிட்ஸர்லாந்தில் மட்டும் தனிநபர் இறக்குமதிக்கான உரிமம் வழங்கப் பட்டிருக்கிறது

2003 நிலவரப்படி அமெரிக்காவில் 17 உணவகங்கள் மட்டுமே ஃபுகு மீன் உணவுகளைத் தயாரிக்கவும்  வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும் உரிமம் பெற்றிருக்கின்றன. இதில்  நியூயார்க்கில் மட்டும் 12 உணவகங்கள் இருக்கின்றன. ஜப்பானைப் போலவே ஃபுகு சமைப்பதில் படித்துச் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே இங்கும் சமையல் கலைஞர்களாக இருக்கிறார்கள்.

அக்டோபர் 2012-லிருந்து வேறெங்காவது உரிமம் பெற்ற சமையலற்கலைஞரால் நஞ்சு நீக்கப்பட்டு அனுப்பப்பட்ட ஃபுகுவை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு  அளிக்கலாம் என்னும் அனுமதி ஜப்பானிய உணவகங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இத்தனை சட்டங்கள் ஒழுங்குமுறைகள் இருந்தும் ஜப்பானில் ஆண்டுக்கு 20 பேர்  ஃபுகு நஞ்சூட்டலால் மரணமடைகின்றனர். இதற்கான காரணங்கள்:

  1. அவர்களுக்கு ஃபுகு நஞ்சிற்கு உடலெதிர்புச்சக்தி இயற்கையாகவே இருக்கிறது  என்று நம்புவது.
  2. மிகத்தேர்ந்த, அனுபவம் வாய்ந்த  சமையல் நிபுணரும் தவறு செய்வதற்கான  சாத்தியமிருப்பதை நினைவில் கொள்ளாதது.
  3. சரியாக ஃபுகு மீனை அடையாளம் காணத் தெரியாமல் நஞ்சற்றது என ஃபுகுவை எண்ணி சமைத்துச் சாப்பிடுவது.
  4. சுத்தமாக  முறையாக நஞ்சு கொண்ட பகுதிகளை  நீக்காமலிருப்பது.

இறப்பவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் ஏனெனில் அவர்களுக்கு கடலில் கிடைக்கும் ஃபுகுவை வீட்டுக்குக் கொண்டு வந்து சமைத்துச் சாப்பிடுகையில் நஞ்சை முழுக்க நீக்கி இருக்க மாட்டார்கள்

ஃபுகுவை சட்டத்துக்கு புறம்பாக சுவைப்பது என்பது மரணத்தை சுவைப்பது போலத்தான் எனினும் ஜப்பானியர்களுக்கு ஃபுகுவின் மீதான மோகம் குறைந்தபாடில்லை எனவே கள்ளச்சந்தை ஃபுகு வணிகமும் ஜப்பானில் நீண்டகாலமாக இருக்கிறது. 

உருகி நகரில் சட்டத்தின் கண்ணில் இருந்து மறைந்து அல்லது சட்டம் கண்டும் காணமலும் விட்டுவிடுவதால், ஃபுகு ஈரல் பல உணவகங்களில் கிடைக்கிறது. அவர்களின் மெனுவில் வெளிப்படையாக இது இருக்காது எனினும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதுதான் இந்த உணவகங்களின் கொள்கை.

2018-களின் துவக்கத்தில் கேமோகரி நகரின் மீன் சந்தையில் ஈரல் நீக்கப்பட்டிருக்காத ஐந்து ஃபுகு மீன் (yorito fugu) பொதிகள் விற்கப்பட்டது தெரியவந்தது.  ஜப்பான் முழுவதும் இதைக்குறித்த  எச்சரிக்கை சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்கான அறிவிப்புக்களை அளிக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள் வாயிலாக தொடர்ந்து வெளியானதில் ஐந்தில் 3 பொதிகள் திருமபக்கிடைத்தன.

ஃபுகு உணவு மிக அதிக விலைகொண்டதாக இருக்கக் காரணம் அதைத் தயாரிக்கும் வழிமுறைகளும்  அதன் பிரத்யேக சுவையும்தான். ஒரு கிலோ ஃபுகு 7-லிருந்து 10 அமெரிக்க டாலர் வரை விலை கொண்டிருக்கிறது. ஃபுகு அப்படியே பச்சையாகவும், சமைத்தும், ஆவியில் வேகவைத்தும், வாட்டியும், புகைத்தும், வறுக்கப்பட்டும், பொறிக்கப்பட்டும் உண்ணப்படுகிறது. ஃபுகுவின் சதை மட்டுமல்லால் அதன் துடுப்புகளும்  வாலும் விரும்பி உண்ணப்படுகிறது.

பலவகையான ஃபுகு உணவுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன.

  • ஃபுகுவில் செய்யப்படும் உணவுகளில் மிகபிரபலமானது  டெஸ்ஸா  (  Tessa)  எனப்படும் ஷஷிமி.  

ஷஷிமி என்பது  சமைக்காமல் மீனை மிக லேசான, ஒரே அளவுள்ள  சீவல்களாகச் செதுக்கி அப்படியே சோயா சாஸ் அல்லது வஸாபி அல்லது  இஞ்சி ஊறுகாயுடன் சேர்த்து  சாப்பிடுவது. மிக அழகாக  மலரிதழ்களைப் போல தட்டில் அடுக்கி வைக்கப்பட்டு பரிமாறப்படும் ஷஷிமி, ஃபுகு மட்டுமல்லாது எல்லா வகை மீன்களிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. 

  • மில்ட் எனப்படுவடுது கிரில் செய்யப்பட்ட ஆண் ஃபுகுமீனின் விதைப்பை (மெல்லிய் சவ்வால் சூழப்பட்டிருக்கும் விந்து நீர்) இது ஃபுகு உணவில் மிக ஆடம்பரமானதும் மிக விலையுயர்ந்ததுமாகும்.
  • ஃபுகு காரா-அகே (Fugu Kara-age) என்பது எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஃபுகு.
  • ஃபுகு கிரெ ஸாகே (Hire-zake) . இது ஸாகே அரிசிமதுவுடன்  இணைந்து உண்ணப்படும் ஃபுகுவின் துடுப்புப்பகுதி.
  • ஃபுகு சிரி எனப்படுவது (Fugu-chiri) -காய்கறிகளுடன் கலந்து உண்ணப்படும் ஃபுகு.
  • யுபிகி (yubiki) என்பது நஞ்சு மிக அதிகமாக இருக்கும் முட்களை நீக்கி விட்டு தோல் துண்டுகளை தோலில் இருக்கும் சாலடில் கலந்த உணவு.
  • ஜப்பானின் ஹாகுசான் நகரில் ஃபுகுவின் சினைமுட்டைகளை  மூன்று வருடகாலம் உப்பிலிட்டு ஊறுகாயாக்கி நஞ்சு நீங்கியதும் உணவாகச் சமைத்துப்பறிமாறும் உணவகங்கள் இருக்கின்றன. அவற்றில் நஞ்சு முழுக்க நீங்கியதை பரிசோதித்த பின்னரே அது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜப்பானில் இந்த உணவு வேறெங்கும் கிடைப்பதில்லை.

மிக மிக அதிக நஞ்சு கொண்ட ஃபுகுவான டோரா ஃபுகு (tora fugu) தான் ஃபுகு மீன்களிலேயே மிக அதிக விலை கொண்டது. ஃபுகுவின் துடுப்புக்களில் நஞ்சில்லை என்பதால் மிக அதிகம் உண்ணப்படுவது இந்தப்பகுதிதான்.   

பல உணவகங்களில் நீரில் நீந்திக்கொண்டிருக்கும் புத்தம் புதிய ஃபுகுவை வாடிக்கையளர்கள் மேசையில் அமர்ந்த பின்ன்ர் தயாரித்துக் கொடுப்பதும் உண்டு.

ஜப்பானின் ஃபுகு மையமான ஷிமோனோசெக்கி நகரில் ஒவ்வொரு பிப்ரவரியிலும் ஃபுகு திருவிழா நடைபெறுகிறது. அதுவரையிலும் ஜப்பானியர்கள் உண்ட ஃபுகுவின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளுக்குப் பின்னர் ஏராளமான ஃபுகுமீன்கள் பிடிக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்படுகின்றன.  உலகிலேயே ஃபுகு அதிகமாகப்பிடிக்கப்பட்டு,  நஞ்சு நீக்கப்படுவது இங்கு மட்டும்தான்.

 இந்த ஃபுகு உணவு பருவகால உணவாகவும் இருக்கிறது.. பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரை  கடலில் கிடைக்கும் இவை உணவகங்களில் தயாரிக்கப்படுகிறது;  டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலத்தை எதிர்கொள்ள அதனைச் சேமிப்பதால், மீனில் கொழுப்பு அதிகமாக இருக்கும்,   இதனால் அந்த மாதங்களில் ஃபுகு மிகச் சுவையானதா இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஜப்பானிய உணவகங்கள் இந்தக்காலத்தில் ஃபுகு உணவை சிறப்பான மதிப்புடன் அணுகுகின்றன.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான வசந்தகாலம் ஃபுகு மீனின் இனப்பெருக்கக் காலமாகையால் அவற்றின் உடலில் அதிக நச்சுத்தன்மை இருக்கும் எனவே அந்தக் காலம் ஃபுகு உணவுகளை தயாரிக்க உகந்த பருவமாகக் கருதப்படுவதில்லை.

 சீனாவிலும் ஜப்பானிலும் ஃபுகுவின் சுவைகுறித்து கவிதைகளும், சொலவடைகளும், வட்டார கிண்டல் வழக்குகளும்,  பழமொழிகளும் உள்ளன. அதில் பிரபலமானவை:

ஃபுகுவை சாப்பிடுபவன் முட்டாள் ஃபுகுவை சாப்பிடாதவனும் முட்டாள்.

ஜப்பானில்  ஏதேனும் ஒரு செயலைச்செய்ய விரும்பி அதன் ஆபத்துகளைக் குறித்து தயக்கம் கொண்டிருப்பவர்களை

 ’’’ஃபுகுவும் சாப்பிடனும் உயிரும் போகக்கூடாதாமா’’ என்று கேலி செய்வார்கள், ” (“Fugu wa kuitashi inochi wa oshishi” ). 

நஞ்சுள்ள மீனைச்சாப்பிட்டால் பிழைக்க வழியே இல்லை என்பது ஜப்பானில் “Ataru to, ippatsu de shinu” —  அதாவது’’ ஒரே குண்டு தான் உயிர் போய்விடும் என்று குறிப்பிடுவார்கள்.

ஜப்பான் குடும்பங்களில் தங்களது கொள்ளுப்பாட்டி, கொள்ளுப்பாட்டன் அல்லது ஏதாவது ஒரு முன்னோர் ஃபுகுவின் நஞ்சால் உயிரிழந்த துயரக்கதைகளும், ஃபுகுவின் நஞ்சிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்னும் வீரக்கதைகளும் வழிவழியாக சொல்லப்படுவதுண்டு.  ஜப்பானில் ஃபுகு உண்டு தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு. 1690-களிலேயே ஜப்பானில் வசித்த ஜெர்மானிய மருத்துவர் எஞ்செல்பெர்ட் (Engelbert Kaempfer), இதை பதிவு செய்திருக்கிறார்.

ஜப்பானில் டோக்கியோவிலிருக்கும் டேகேஃபுகு (Takefuku) என்னும் உணவகமும் ஒஸாகாவிலிருக்கும் ஜுபோரயா (Zuboraya) என்னும் உணவகமும் ஃபுகு பீன் உணவுகளுக்கு உலகப்பிரசித்தி பெற்றவை. 

ஃபுகுவின் பதப்படுத்தப்பட்ட உடலுக்குள் விளக்கெரித்து அலங்காரம் செய்வது, ஃபுகுவின் தோலில் கைப்பை பொம்மைகள் ஆகியவற்றைச் செய்வதெல்லாம் ஜப்பானில் பிரசித்தம். தூய வெண்ணிறத்தில் இருக்கும் ஃபுகுவின் சதைப்பகுதியில் மிக அழகிய சிற்பங்களையும் செய்கிறார்கள் ஜப்பானிய ஃபுகு சமையல் கலை வல்லுநர்கள்.  ஃபுகு

BBC யின் ஒரு ஆவணப்படம் கடலில் டால்ஃபின்கள் ஃபுகு மீன் கூட்டத்துக்கு வெகுஅருகில் நெடுநேரம் சுற்றித்திரிந்து அவற்றை வாயில் கவ்வி விளையாடி ஃபுகுவின் தோலில் இருக்கும் நஞ்சினால் லேசாக போதை ஏற்றிக் கொண்டு திரும்பிச்செல்வதைக் காட்டுகிறது.

ஆவணப்படத்தின் இணைப்பு

கடல் வாழ் உயிரினங்கள் இப்படி  போதை ஏற்றிக்கொள்வது இதில்தான்  முதன்முதலில் ஆவணப் படுத்தப்பட்டிருக்கிறது. 

ஆபத்தானதும், மிக விலையுயர்ந்ததும், அந்தத் தீவுநாட்டின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்திருப்பதுமான ஜப்பானின் ஃபுகு உணவு,  ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருக்கும் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் அந்த நிலப்பரப்பின் வளங்களையே முற்றிலும் சார்ந்திருப்பதையும், அதைக்கொண்டே அந்தச் சமூகத்தின் கலாச்சாரம் வடிவமைக்கப் பட்டிருப்பதையும் காட்டும் முக்கியமான உதாரணமாக இருக்கிறது.

சால்மோனெல்லோசிஸ்!

அந்த 6400 ஏக்கர் பரப்பளவில் இருந்த ரஜனீஷ்புரத்திலிருந்து சிறு   பெட்டிகளில்  பழுப்புத் திரவத்தை  எடுத்துக்கொண்டு ரகசியமாக ஒரு சிறு குழு புறப்பட்டது.

அது 1984-ன் செப்டம்பர் மாதம். டாலஸ் நகரின்  பிரபலமான அந்த பகுதி மக்கள் வழக்கமாகக் கூடும் உணவகங்களுக்குச் சென்ற அந்தக் குழு மிகச்சாதாரணமாக யாருக்கும் எந்தச்சந்தேகமும் வராதபடிக்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சாலட்களை தாங்களே தேர்வு செய்து தட்டுக்களில் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கும் ’சாலட் பார்’ பகுதிக்குச் சென்றார்கள். அங்கிருந்த காய்கறித்துண்டுகளில், தாங்கள் கொண்டுவந்திருந்த ’சல்சா’ என அவர்களால் குறிப்பிடப்பட்ட பழுப்புத் திரவத்தை யாருக்கும் தெரியாமல் கலந்தார்கள்.  செப்டம்பர் 9-லிருந்து 19-ம் தேதி வரையிலும் பின்னர்  அக்டோபர் மாதம் 10-ம் தேதியிலுமாக பத்து உணவகங்களில் இதைச்செய்தார்கள்.

உணவகங்களின் கதவுக் குமிழ்களில் தடவப்பட்ட அந்தத் திரவம், குடிநீர்த்தொட்டிகளிலும்  கலக்கப்பட்டது.  சில நாட்களிலேயே டாலஸ் நகரிலிருந்த ஆயிரக்கணக்கோருக்கு காய்ச்சல், நடுக்கம், வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. அது ஒரு சிறு நகரமென்பதால் மருத்துவமனை வசதிகள் போதாமல் நகரமே பதற்றத்துக்குள்ளானது. அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கு பலர் விரைந்தார்கள். பல நாட்களாக இந்தச் சதி நடந்ததால் தொடர்ந்து நோயுற்று 700-க்குமதிகமானோர் ஆபத்தான நிலையிலும் 45 பேர் மிக ஆபத்தான நிலையிலும் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டார்கள்.

காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய ஆய்வுகளிலும் உணவுக் கூடத்தின் தொழிலாளர்களிடம் நடந்த விசாரணையிலும் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. சால்மோனெல்லா என்னும் பாக்டீரியாவினால் உணவு நஞ்சாகும்  சால்மோனெல்லோசிஸினால் தான் நோயுண்டானது என்பதைக் கண்டுபிடித்தார்களே தவிர எப்படி அது உண்டானது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

குளிர்சாதனப் பெட்டியின் குளிர்வு சில உணவகங்களில் போதுமான அளவு இல்லாமலிருந்தாலும் அதனால் சால்மோனல்லோசிஸ் உண்டாயிருக்க வாய்ப்பில்லை என்பதால் அந்தக் காரணமும் சந்தேகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

காரணம் தெரியாவிட்டாலும் அடுத்து நவம்பரில் அந்த மாகாணத்துக்கான தேர்தல் வரவிருந்ததால் யாரோ வேண்டுமென்றே இதைச் செய்திருக்க கூடும் என உள்ளூர் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள்.  சாலட்களில் சால்மொனெல்லா கிருமி இருப்பது ஆய்வக சோதனையில் உறுதியானது என்றாலும் எப்படி அத்தனை உணவகங்களிலும் தொடர்ச்சியாக அது இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறியது.

 Salmonella typhimurium (Salmonella enterica serovar Typhimurium ) என்னும் உணவை நஞ்சாக்கும் பாக்டீரியா அந்த விளைவுகளை உண்டாக்கியது, யாரும் மரணம் அடையவில்லை என்றாலும்  நகரெங்கும் பெரும் அச்சம் நிலவியது. அமெரிக்க வரலாற்றிலேயே ஆகப்பெரிய உயிராயுதத் தாக்குதல்  நடந்தது முதலும் கடைசியுமாக  அதுதான்.

அமெரிக்காவின்  CDC (நோய் தடுப்பு அமைப்பு) அதை சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவினால் உருவானது என்று சொன்னாலும் 751 பேர் ஒரே சமயத்தில் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது பெரும் சந்தேகத்தை எழுப்பியது. ஏற்கனவே ரஜனீஷ் ஆசிரமத்தின் எல்லாமுமாக இருந்த  மா ஆனந்த ஷீலாவின் மீது கடும்கோபத்திலிருந்த டாலஸ் மக்கள் நவம்பர் தேர்தலில் ஷீலாவுக்கு வேண்டிய ரஜனீஷ் ஆசிரமவாசிகள் போட்டியிட்டதால் இது ஒருவேளை அவரது சதியாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். ஆனாலும் அதற்குச் சான்றாக எதுவுமே அவர்களிடம் இல்லை.

1980- களில் ஆண்டிலோப் என்னும் பெயரில் இருந்த அந்நகரத்தில் ரஜனீஷ் ஆசிரமத்துக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அங்கு  வசித்த அவரின் சீடர்கள் புதிய ஓட்டுரிமையும் பெற்றார்கள். 1984-ல் ஒரு அதிகாரபூர்வ வாக்கெடுப்பு நடத்தி  உள்ளூர்வாசிகளைவிட ஆசிரமவாசிகளின் எண்ணிக்கை  கணிசமான அளவு இருந்ததால் அந்நகர் ரஜனீஷ்புரம் என்று அழைக்கப்படுமென்று முடிவானது.

தேர்தலுக்கு முன்பு ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தரும் ‘’ sharing home’’ திட்டத்தை துவங்கிய மா ஷீலா பல பேருந்துகளில் (ஓட்டுரிமை கொண்ட) ஆயிரக்கணக்கான வீடிழந்தோரை ரஜனீஷ்புரத்துக்கு அழைத்துவர முயன்றார். ஆனால் தேர்தல் கமிஷன் அந்தத் திட்டத்தை முறியடித்தது.

நவம்பரில் தேர்தலும் வந்தது. ரஜனீஷ்புரத்தின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக டாலஸ் நகரின் அனைத்து மக்களும் வரலாறு கண்டிராத அளவுக்கு திரண்டு வந்து ஓட்டுப்போட்டார்கள். ரஜனீஷ் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கானோர் சீடர்களாக இருந்தாலும் அவர்களில் அமெரிக்க பிரஜைகள் வெகு சிலரே என்பதால் அவர்களால் ஓட்டுப்போடமுடியாமல் டாலஸ் நகரவாசிகளே வெற்றிபெற்றார்கள்.   

அம்மாகாணத்தின் பெரும்பாலான ஓட்டு டாலஸ் நகர வாசிகளுடையதுதான் எனவேதான் டாலஸைக் குறிவைத்து அந்த உயிரித்தாக்குதல் நடந்தது. டாலஸின் ஓட்டுப் போடும் வயதுள்ள கணிசமானோரை  நோயாளிகளாக்கிவிட்டால், ஆசிரமத்தில் ஓட்டுப்போடும் தகுதியிலிருந்த சிறுகூட்டத்தினரை தங்களுக்குச் சாதகமாக ஓட்டுப்போடச்செய்து வெற்றி பெறும் நோக்கத்தில் அந்த சதி நடத்தப்பட்டது.

ஒரு வருடம் வரை காரணம் தெரியாமல் வெறும் சந்தேகமாக மட்டும் இருந்த விஷயம் ஆசிரமத்துக்குள் உண்டான அதிகார மோதல் மற்றும் உட்பூசலினால்  மா ஆனந்த ஷீலா தன் ஆதரவாளர்களுடன் ஐரோப்பாவுக்கு சென்ற பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.

1985-ல் ரஜனீஷ் ஆசிரமத்தின் மா ஆனந்த ஷீலா அந்த சால்மோனல்லோசிஸ் தொற்றை உருவாக்கியவர் என்று ரஜனீஷ் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

பல காலமாக மெளனமாகவே இருந்த பகவான் ரஜனீஷ் அமைதியை உடைத்து பேசத்தொடங்கினார். அளவற்ற அதிகாரமும் செல்வாக்கும் கொண்டிருந்த மா ஆனந்த ஷீலாதான் உணவில் சால்மோனெல்லா பாக்டீரிய நஞ்சைக்கலந்த குற்றச்செயலைச் செய்தார் என்றும் தனது பிரத்யேக மருத்துவரைக் கொலை செய்ய முயன்றதும் அவர்தான் என்றும்  ரஜனீஷ்  தெரிவித்தார்.

FBI-யின் தொடர்ந்த குற்றப்புலனாய்வு  விசாரணையில் மா ஆனந்த ஷீலாவும் அங்கே செவிலியாக இருந்த மா ஆனந்த பூஜாவும் இந்த சதிக்கு முக்கியமான காரணமாயிருந்தார்கள். ஒரு மருந்துக் கடையிலிருந்து சால்மோனெல்லா பாக்டீரியாவைச் சிறிதளவு வாங்கிய அவர்கள் ஆசிரமத்திலிருந்த ஒரு ஆய்வகத்தில் அதை ஏராளமாக வளர்த்து  சாலட்களில்  கலந்தார்கள் என்பது தெரிய வந்தது.

ரஜனீஷ்புரத்தின் ஆசிரமத்துக்குள்ளேயெ இருந்த மிக வசதியான ஆய்வகமும் அதில் சாலட்களில் இருந்த அதே சால்மொனெல்லா கிருமிகள் வளர்த்தப்பட்டதும் கண்டுப்பிடிக்கபட்டது. ஆசிரமவாசிகளின் நேரடி சாட்சிகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் இருந்த  மா ஆனந்த ஷீலா கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார்.

விசாரணையில் ஷீலா குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நன்னடத்தை காரணமாக 29 மாதங்களில் விடுதலை செய்யப்பட்ட ஷீலா சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார்.

அந்த ஆசிரமவாசிகள் மேலும் பல குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தது குற்றப்புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்ததால் மீண்டும் அந்நகரம் ஆண்டிலோப் என்றே பெயரிடப்பட்டது.

1949-ல் குஜராத்தில் ஒரு செல்வாக்கான குடும்பத்தில் 6-வது குழந்தையாக பிறந்த ஷீலா அம்பாலால் பட்டேல்  தனது 18-ம் வயதில் நியூ ஜெர்ஸிக்கு பட்டப்படிப்பிற்கென வந்தார்.1968-ல் பகவான் ரஜனீஷை சந்தித்த அவர் ரஜனீஷ் இயக்தத்தினால் பெரிதும் கவரப்பட்டு அப்போதே அதில் இணைந்துகொண்டார். 

1972-ல் தனது முதல் கணவருடன் இந்தியாவில் இருந்து ஓஷோவின் ஆன்மீக ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தவர் 1980-ல் கணவரின் மறைவுக்கு பிறகு ஜான் செல்ஃபெர் என்னும் ரஜனீஷின் மற்றொரு சீடரை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்கா திரும்பிய ஷீலாவை மா ஆனந்த ஷீலா  எனப்பெயர் சூட்டி  1981-ல் தனது அந்தரங்கக் காரியதரிசியாக்கிக் கொண்டார் பகவான் ரஜனீஷ்.

மிகக்குறுகிய காலத்திலேயே ரஜனீஷ் இயக்கக்தின் தவிர்க்கமுடியாத பெரும் சக்தியாக மாறிய ஷீலா ஓரிகானில் 64000 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ரஜனீஷ்புரம் அமைவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தார். ரஜனீஷின் மெளன காலத்தில் ஷீலாவே ரஜனீஷ்புரத்தின் ஒரே குரலாக இருந்ததோடு  ரஜனீஷ் ஆசிரமத்தின் சர்வதேச அமைப்பின் தலைவராகவும் இருந்தார். 

அவரது மூர்க்கமான குணத்தினாலும் நிலஅபகரிப்பு முயற்சிகளாலும் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றவும் அவர் முயன்றதாலும் உள்ளூர்வாசிகளுடன் ஏற்பட்ட மோதலினால் விரைவில் அவர் அமெரிக்கர்களால் மிகவும் வெறுக்கப்பட்ட பெண்ணானார். 

 இப்போது சுவிட்சர்லாந்தில் ஷீலா பிர்ன்ஸ்டீல் என்னும் பெயரில் இரு முதியோர் இல்லங்களை நிர்வகித்து வரும் அவரைக்குறித்து  நெட்ஃபிளிக்ஸில் Searching for Sheela  என்னும் ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. ரஜனீஷ்புரவாழ்வு குறித்து My Own Rules என்னும் நினைவுக் குறிப்பையும் அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

ரஜ்னீஷ் என்னும் ஓஷோவின் மீதிருந்த அன்பினாலும் அபிமானத்தினாலுமே  தான் பலவற்றைச் செய்ததாகவும் செய்தவற்றைக் குறித்து எந்த வருத்தமுமில்லை என்றும் சொல்லும் ஷீலாவுக்கு சீடர்கள் இருக்கிறார்கள்.

சால்மோனெல்லோசிஸ் உணவு நஞ்சை உருவாக்கும் இந்த Salmonella typhimurium  பாக்டீரியாவின் பேரினப்பெயர் இந்த பாக்டீரியாவை 1884-ல் முதலில் கண்டுபிடித்த Daniel E. Salmon என்பவரைக் கெளரவிக்க வைக்கப்பட்டது.(டேனியல் சால்மனின் உதவியாளரான Theobald Smith தான்  பன்றிக்காலராவைக் குறித்த ஆய்வில் சால்மொனெல்லாவை முதலில் கண்டுபிடித்தாரென்றாலும்,).

இந்தப் பேரினத்தின் மற்றொரு சிற்றினமான Salmonella typhi தான் டைபாய்டு காய்ச்சலுக்கு காரணமாக இருக்கும் கிருமி.

Salmonella typhimurium விலங்குகள் வழியாகப் பரவி விலங்கு, பறவை இறைச்சி மற்றும் முட்டை உணவு வழியேவும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட தாவர உணவுகளாலும் சால்மோனல்லோசிஸை உருவாக்குகிறது.

சால்மோனெல்லோசிஸ் உலகளாவிய பல தொற்றுகளை உணவு நஞ்சாதல் மூலம் உருவாக்கி இருக்கிறது. 1985-ல் இல்லினாய்ஸில் முறையாக பாஸ்டுரைஸ் செய்யப்படாத பாலினால் பரவிய சால்மொனெல்லோசிஸினால்  2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள்.

1989-ல் லண்டனில்  சால்மோனெல்லாவால் கெட்டுபோயிருந்த முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனேஸ் இருந்த சாண்ட்விட்ச் வழியாக பரவிய S. Typhimurium DT4  என்னும் வகை மிகப்பெரிய அளவில் நோய்த்தொற்றை உருவாக்கியது.

2005-ல் அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஆரஞ்சு பழச் சாற்றில் இருந்து சால்மோனல்லோசிஸ் பரவி பெருந்தொற்றை உருவாக்கியது.

1987-ல் நார்வே மற்றும் ஃபின்லாந்தில் சாக்லேட்டுகளில் இருந்த சால்மோனெல்லா கிருமி 350 பேர் வரையிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

2021-ல் ஃபின்லாந்தின் ஒரு குழந்தைகள் காப்பக விழாவில் மதிய உணவில் இருந்த லெட்யூஸ்களில் இருந்த சால்மொனெல்லாவினால் சுமார் 750-பேர் பாதிக்கப்பட்டனர்.

2021-ல் கனடாவில் சோயா பாலாடைக்கட்டியான டோஃபுவில் சால்மொனெல்லா இருந்ததால் ஒரு சிறு குழு நோய்வாய்பட்டதன் பின்பு சால்மோனெல்லா  இறைச்சி உணவில் மட்டுமல்ல தாவர உணவுகளிலும்  இருக்குமென்பது உறுதியாயிற்று.

2021-ல் பெல்ஜியத்தின் பிரபல சாக்லேட்டுகளில் சால்மொனெல்லா இருப்பது சாக்லேட்டுகள் விற்பனையாவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதால்  உலகளாவிய பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

கடைசியாக 2023-ல் அமெரிக்காவில் பன்றிக் கொத்திறைச்சி மூலம் பரவிய சால்மொனெல்லா தொற்றுதான் மிகச்சமீபத்திய தொற்றுநிகழ்வு. 

இன்று வரையிலும் உணவை நஞ்சாகும் பாக்டீரியாவாக சால்மோனெல்லா மிக குறிப்பிடத்தக்க ஆபத்தை உண்டு பண்னும் கிருமியாகத்தான் இருக்கிறது.

தொடர்ந்த ஆய்வுகளில் சால்மோனெல்லா, பன்றி மற்றும் கொறித்துண்னிகளில் அதிகம் தங்கி இருப்பதும் அவற்றிலிருந்து பிற விலங்குகளுக்கு பரவுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

மனிதர்களுக்கு முறையாக, சுகாதாரமாக சமைக்கப்படாத உணவுகளிலிருந்தும், வளர்ப்புப்பிராணிகள் மற்றும் பிற விலங்குகளிலிருந்தும் சால்மோனெல்லோசிஸ் பரவுகிறது.

உணவுத்தயாரிப்பு மற்றும் கையாளுவதில் சுகாதாரம் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை சால்மோனெல்லா பாக்டீரியா நமக்கு  உணர்த்தியிருக்கிறது.

உணவைத்தயாரிக்கையிலும் கையாளுகையிலும் அடிக்கடி கைகளை கழுவிக்கொள்வது, உடல்சுத்தம் பேணுவது, சமைக்கப்பட வேண்டிய பொருட்களை நன்கு கழுவிப்பயன்படுத்துவது மற்றும் சமைத்த சமைக்காத பொருட்களை தனித்தனியே பிரித்து வைப்பது,  இறைச்சி உணவுகளை முறையாகச் சமைப்பது ஆகியவற்றினால் சால்மோனெல்லோசிஸை தவிர்க்கலாம்.

எஸ்கமோல் எறும்பு உணவு!

அகாவே (Agave) என்னும் சொல் கிரேக்க மொழியின் பிரம்மாண்டமான, கம்பீரமான, புனிதமான, பாராட்டத்தக்க என்னும் பொருள் கொண்ட ’அகாவ்’விலிருந்து வந்தது.  கள்ளிக்கற்றாழைத் தாவரங்களான இவை அமெரிக்காவின் வறள் நிலத்தாவரங்கள். அகாவே பயிர்கள் மெக்சிகோவின் கலாச்சாரத்துடனும் மெக்சிகோ மக்களின் அன்றாட வாழ்வுடனும் மிக நெருங்கிய தொடர்பில் இருப்பவை.

கள்ளிக்கற்றாழைகளில் இருந்துதான் மெக்சிகோவில் பழங்காலத்திலிருந்து உணவு, மதுபானம், நூல் ஆகியவை தயாரிக்கப்பட்டது. இன்று டெக்கீலா, மெஸ்கால் போன்ற பானங்களும் இதிலிருந்துதான் தயாராகின்றன. மெக்சிகோவின் கலாச்சாரமும், பொருளாதாரமும் இந்தத் தாவரத்துடன் நேரடியாகத்தொடர்புடையது.

மெக்சிகோவில் டெக்கீலா தயாரிக்கும் நீலக்கற்றாழை 3,00,000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. கள்ளிக்கற்றாழைகளின் 157 சிற்றினங்களில் 76 சதவிகிதம் மெக்சிகோவில் தான் இருக்கிறது. இந்த 76-ல் 71 சிற்றினங்கள் மெக்சிகோவுக்கு மட்டும் சொந்தமான வேறெங்கும் வளராத ஓரிடப்பயிர்கள்(Endemic plants). 25 வருடங்கள் வரி உயிர் வாழும் இவற்றை வவ்வால்களும் தேன்சிட்டுக்களும் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன.

மெஸ்கால் என்னும் மதுபானம் தயாரிக்க பல்வேறு வகை கற்றாழைகள் பயன்படுத்தப்படுகின்றன. மெஸ்கால் மாநிலங்களில் (ஒஷாகா, துராங்கோ, சான் லூயிஸ் போன்றவை) கூடுதலாக 1,00,000 ஹெக்டேருக்கும் மேல் இவ்வகைக்கற்றாழைகளின் சாகுபடி நடைபெறுகிறது.மொத்தத்தில், சுமார் 4,00,000–5,00,000 ஹெக்டேருக்கு மேல் மெக்சிக்கோவில் கற்றாழைச் சாகுபடி நடைபெறுகிறது. அவர்களின் அன்னைத்தெய்வம் மயாஹ்வெல்(Mayahuel) முலையூட்டிய மதுவே கற்றாழை மதுவான மெஸ்கால் என்னும் தொன்மம் மெக்சிகோவில் பிரபலம். மெஸ்கால் மதுவைக் குறித்த’’ அனைத்துத் துயர்களுக்கும் தீர்வு மெஸ்கால் அனைத்து மகிழ்வுகளுக்கும் அதுவேதான்‘’ என்னும் முதுசொல் அங்கு வெகுவாகப் புழக்கத்திலிருக்கிறதுமெக்சிகோ மக்களைப் போல உலகின் வேறெந்த பகுதி மக்களும் தாவரங்களுடன் இத்தனை நெருங்கிய தொடர்பில் இல்லை.

மாகேய் (Maguey) என்பது  அகாவே செடிகலான கள்ளிக் கற்றாழைகளை குறிக்கும் ஸ்பானிஷ் சொல். இந்த க்கற்றாழைகளின் இரண்டு வகைகள் டெக்கீலா அளிக்கும் Agave tequilana  மற்றும் மெஸ்கால் மது அளிக்கும் Agave americana, 

இவ்விரண்டு மட்டுமல்லாமல் மெக்சிகோவில் விளைந்த பல வகைக்கற்றாழைகள் மெக்சிகோ மக்களின் பலவிதமான தேவைகளுக்கு ஆதாரமாக இருந்தன. அகாவே அட்ரோவைரன்ஸ் (Agave atrovirens), என்னும் வகைக்கற்றாழை பல மருத்துவப்பயன்கள் கொண்டது

இந்தக் கள்ளிக்கற்றாழை மலர்மொட்டுகள் மெக்ஸிகோவில் விரும்பி உண்ணப்படுகின்றன. கற்றாழையின் மஞ்சரிக்காம்பும்  நறுக்கி உண்ணப்படுகிறது. அங்கு விரும்பி அருந்தப்படும் மலரமுதும் சிரப் போல ப்பாட்டில்களில் விற்பனையாகிறது. இந்தக் கற்றாழைச்செடிகளினடியில் வாழும் எறும்புகளின் முட்டைகளும் மெக்சிகோ மக்களின் மிகக் குறிப்பிடத்தக்க உணவாக இருக்கிறது,

மெக்சிகோவின் பழங்குடி இனத்தவர்களான் அஸ்டெக்குகளின் காலத்திலிருந்தே புரதத்தேவைக்காக பூச்சிகளை உண்ணும் வழக்கம் இருந்து வருகிறது.  உலகெங்கிலும் பயிர்களை சாகுபடி செய்யும் வளமான நிலப்பரப்பு இல்லாத, மிகுந்த வறட்சி நிலவும் பிரதேசத்து மக்கள் இப்படி பூச்சிகளை உண்பது வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 மெக்சிகோ ஐரோப்பாவின் பிடிக்குள் வந்தபின்னரும் தொடர்ந்த அந்த பழக்கம் இன்றும் கலாச்சார அடையாளத்தை இழக்காமல் இருக்கும் பொருட்டு தொடர்கிறது. வெட்டுக்கிளி, எஸ்கமோல் என்னும் எறும்பு முட்டை மற்றும் மேகுவே புழுக்கள் ஆகியவை மெக்சிகோ உணவு கலாச்சாரத்தில் மிக முக்கியமான இடம் கொண்டிருப்பவை. மெக்சிகோவில் மட்டும் சுமார் 400 உண்ணத்தகுந்த பூச்சிகள் அபரிமிதமாக இருக்கின்றன என்பதுவும் இந்த பூச்சி உண்ணுதலுக்கு முக்கியமான காரணம்.  மெக்சிகோவின் ஒஷாகா (Oaxaca) மாநிலம் இந்த பூச்சி உணவுகளுக்கு பெயர் பெற்றது.

எண்ணெயில் பொறிக்கப்பட்ட மொறுமொறுப்பான பூச்சிகள் மெக்சிகோவின் கடைதெருக்களில் மூட்டை மூட்டையாக விற்கப்படுகின்றன. ஓக் மரப்பூச்சியான ஜுமிலே, தேன் எறும்பு வகையொன்று, குளவி, தட்டான், வெல்வெட்  எறும்பு ஆகியவற்றின் முட்டைகள் போன்றவை அப்படியே சமைக்கப் படாமல் உண்னபடுகிறது

மெக்சிகோவின் பிரபல உணவுகளில் ஒன்றுதான் எஸ்கமோல் என்னும் எறும்பு முட்டை உணவு. இந்த எஸ்கமோல் கற்றாழைச்செடிகளின் அடியில் கூடுகட்டி வாழும் இரண்டு வகை எறும்புகளின் முட்டையில் செய்யப்படும் உலகப்புகழ்பெற்ற உணவு.

எஸ்கமோல் என்னும் சொல் ஆஸ்டெக்குகளின் நவாட்டி( Nahuatl.) மொழியில்  எறும்பைக்குறிக்கும் அஸ்ட்ல் (azatl), மற்றும் உணவைக்குறிக்கும் மோலி(molli) ஆகியவற்றிலிருந்து உருவாகியது.

இந்தக் குறிப்பிட்ட வகை எறும்பு முட்டைகளை உண்பது மெக்சிகோவில் 16-ம் நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்பேனியர்கள் ஆக்கிரமிக்கும் முன்பே இருந்தது.

அஸ்டெக் பழங்குடியினரின் சடங்குகள் விழாக்கள் பாடல்கள், நடனம், விருந்துகள் என எல்லாவற்றிலும் எஸ்கமோல் உணவு தவறாமல் இடம் பெற்றிருந்தது. 1503-1520-வரை அஸ்டெக்கின் மன்னராக இருந்த மோக்டெஸுமாவுக்கு (Moctezuma Xocoyotzin) சிறப்பு நிகழ்வுகளின் போதெல்லாம் எஸ்கமோல் உணவு  பரிசளிக்கப்பட்டதை பல வரலாற்றாய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

16-ம் நூற்றாண்டில் ஸ்பெயினைச்சேர்ந்த இனவரைவியலாளரும் இறையியலாலருமான ஃப்ரே (Fray Bernardino de Sahagún) பல பழங்குடியினத்தவர்களுடன் இணைந்து எழுதிய “General History of the Things of New Spain”, என்னும் ஸ்பெயினின் ஆக்கிரமிப்புக்கு முன்பாக  அஸ்டெக்குகளின் வாழ்க்கை அவர்களின் உணவு , கலாச்சாரம் ஆகியவை விவரிக்கப்பட்ட நூலில் எஸ்கமோல் உள்ளிட்ட பல சிறப்பு உணவுகள் முதல் முறையாக விவரிக்கபட்டிருக்கின்றன.

ஃப்ரே  இந்த ஆய்வுக்காக 1545 லிருந்து அவர் மரணமடைந்த 1590 வரை தொடர்ந்து 50 ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார். 2500,பக்கங்கள் 12 தொகுதிகளாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் சுமார் 2000 சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன.உணவு எப்படி அஸ்டெக்குகளின் கலாச்சாரத்துடன் இணைந்திருந்தது எனச்சொல்லும் இந்நூல் அஸ்டெக்குகள் கடவுள்களுக்கு   படைத்த உணவுகளையும் விவரிக்கிறது.

எஸ்கமோல் (escamoles) எனப்படும் இந்த இருவகை எறும்புகளின் முட்டைகள் மெக்சிகோ, லத்தீன அமெரிக்கா. ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரத்யேகமான உணவாக இருக்கிறது.  அகாவே  கற்றாழைகள், பாறைப்பிளவுகள் சப்பாத்திக்கள்ளி உள்ளிட்ட பிற கள்ளிச்செடிகள், சிதைந்த மரக்கட்டைகள் ஆகியவற்றில் இந்த எறும்புகள் கூடுகட்டும். Liometopum apiculatum மற்றும் Liometopum occidentale var. luctuosum ஆகிய இரண்டு எறும்புகளின் முட்டைகள் தான் எஸ்கமோல் உணவுக்காக சேகரிக்கப்படுபவை.

இந்த எறும்புகள் பிற எறும்புகளையும் சிறு பூச்சிகளையும் தான் உண்ணும் தாவரங்களை உண்பதில்லை என்பதால் இந்தக் கற்றாழைகளின் வேர்களை அவை சேதப்படுத்துவதில்லை. அகாவே மஞ்சரிகளின் மலரமுதினையும் இந்த எறும்புகள் விரும்பி உண்ணும்.

கற்றாழைச்செடிகளின் அடியில் சுமார் 2 அடி ஆழத்தில் இந்த எறும்புக்கூடு அமைந்திருக்கும்.  இந்த கூடுகளை எறும்புகள் மண்ணை உமிழ் நீருடன் சேர்ந்து பிசைந்து  ஸ்விஸ் சீஸ் போல ஆங்காங்கே துளைகள் கொண்ட  அட்டைப்பெட்டி போன்றதொரு அமைப்பாக உருவாக்கும். கூட்டினுள் 4 அல்லது 5  trabecula என்னும்  பெரிய அறைகள் நடுவில் இருக்கும்படி கட்டப்பட்டு அதில் முட்டைகள் சேமிக்கப்படும். 

 மாபெரும் கூடுகளான இவற்றில் இந்த அறைகளிலிருந்து தள்ளி 4 அல்லது 5 மீ  தொலைவில் பாதுகாப்பாக ராணி எறும்பு வாழும் அறை இருக்கும் ஒவ்வொரு அறையும் பிற அறைகளுடன் ஒரு குறுகிய திறப்பு வழியாக இணைக்கப்பட்டிருக்கும்.

ஒரு ராணி எறும்பு ஒரு நாளில் சுமார் 5000 முட்டையிடும். ராணி அல்லாத வேலைக்கார எறும்புகளும்  கருவில்லாத முட்டைகளிடும். புரதம் நிரம்பிய அவற்றைப் பிற எறும்புகள் உண்ணும். 

எறும்புக்காலனிகளில் சுமார் 40,000-த்திலிருந்து 60,000 வேலைக்கார எறும்புகள் இருக்கும். ஒவ்வொரு வருடமும் இந்த எறும்புக்கூடுகள் ஒவ்வொன்றும் சுமார் 3-லிருந்து 4 கிலோ முட்டைகளை உருவாக்கும். ஒரு பருவத்திற்கு 3 முதல் 5 முறை இவை முட்டையிடுகின்றன.

இந்த எறும்பு முட்டை சேகரிப்பது அத்தனை எளிய காரியமல்ல. Escamoleros  எனக்குறிப்பிடபப்டும் இந்த எறும்பு முட்டை சேகரிப்பவர்கள் கூட்டமாக வாகனங்களில் அந்தப்பாலை நிலத்துக்குச் செல்வார்கள் எறும்புக்கூடு இருக்கும் வயல்பகுதிகளுக்கு  வாகனங்கள் வரமுடியாதென்பதால் இறங்கி அகாவே கற்றாழை வயல்களுக்குள் நடந்து செல்வார்கள்.

 தூத்துக்குடியில் முத்தெடுக்க கடலுக்குள் செல்பவர்கள் தங்கள் மனைவியின் சகோதரன் கையில்  இடுப்புக்கயிற்றைக் கொடுத்து விட்டுத்தான் மூழ்குவார்கள். அப்படித்தான் இங்கும் மிக நம்பிக்கையான ஒருவருடன் இரண்டிரண்டு பேர்களாக பிரிந்து சென்று எறும்புக்கூடுகளைத் தேடிச் செல்வார்கள். பெரும்பாலும் இந்த ஜோடி வருடக்கணக்காக மாறாமலிருப்பதுண்டு. அப்பா மகன் ஜோடியையும் இங்கு சாதாரணமாகப் பார்க்கலாம்.

 ஒருவருக்கு 1-லிருந்து 5 எறும்புக்கூடுகள் வரை  சொந்தமாக வைத்திருப்பதும் உண்டு. எறும்பு முட்டைச் சேகரிப்பை அவர்கள் அறுவடை என்னும் பொருளில்  capar  என்று குறிப்பிடுகிறார்கள்

மிக ஆக்ரோஷமாகக் கடிக்கும் எறும்புகளிடமிருந்து தப்பிக்க உடலெங்கும் பன்றிக்கொழுப்பை பூசியபின்னர் தங்கள் பாதங்களைப் பிளாஸ்டிக் காகிதத்தால் சுற்றி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளும் இவர்கள் கற்றாழையின் வேருக்கடியில் செல்லும் எறும்பு வரிசையைப் பின்தொடர்ந்து கூட்டை கண்டுபிடிப்பார்கள். கரண்டி போன்ற ஒரு கம்பியால் மண்ணைத்தோண்டி கூட்டைப் பார்த்ததும் எறும்புக்கூட்டின் மேல்மண்ணை மண்வெட்டியால் மெல்லத்தட்டி உதிர்ப்பார்கள். ஒவ்வொரு செயலிலும் எறும்புகளைக் கொல்லக்கூடாது, முட்டைகளை சேதப்படுத்தக் கூடாது என்னும் கவனம் இருக்கும். கூட்டை திறந்தவுடன் கூட்டிலிருந்து கடுமையான நெடி கிளம்பும்.

எறும்புகள் உருவாக்கும் இந்த நெடி கெட்ட வாயு எனப்பொருள்படும்;  ’la pedorrilla’ என்ப்படுகிறது. இந்த எறும்புகளையுமிவர்கள் கெட்ட வாயு உண்டாக்குபவை என்று செல்லமாகக் குறிப்பிடுவார்கள்.( “the farty ant.”)

பிறகு கூட்டுக்குள் கையைவிட்டு trabecula வைத் தேடி குப்பைக்கூளங்களுடன் எறும்பு முட்டைகளை மெல்ல வெளியே எடுத்து ஒரு சல்லடையில் வைப்பார்கள். உடனிருக்கும் மற்றொருவர் சல்லடையால்  குப்பைகளிலிருந்து முட்டைகளைச் சலித்தெடுப்பார். சுமார் அரைக்கிலோ வரை ஒரு நாளைக்கு சேகரித்த பின்னர் எறும்புக்கூடுகள் மீண்டும் பாதுகாப்பாக மூடி வைக்கப்படும்.    70% முட்டைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்றவற்றை சேதமில்லாமல்  கூட்டிலேயே விட்டுவிட்டு கூட்டைப் பழையபடி மூடிவிட்டு திரும்புவார்கள். எல்லா முட்டைகளையும் அறுவடை செய்தால் அடுத்த பருவத்தில் எறும்புகளும் முட்டைகளும் இருக்காது அல்லது எறும்புகள் மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் முட்டையிடத்துவங்கும் என்பதால் முட்டை அறுவடை மிகக்கவனமாக நடைபெறும்

முட்டைகளைஒரு வாளியில் எடுத்துக்கொண்டு அந்தி சாய்கையில் அனைவரும் வாகனங்களில் வீடுதிரும்புவார்கள்.

பிறகு குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வாசலில் வட்டமாக அமர்ந்து இறந்த எறும்புகள் பிற குப்பைகளிலிருந்து  முட்டைகளைச் சுத்தப்படுத்தும் வேலை பின்னிரவு வரை ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும்

இடைத்தரகர்கள் மறுநாள் காலையில் வந்து கிலோவுக்கு 200 லிருந்து 300 பெசோக்கள் கொடுத்து முட்டைகளை விலைக்கு வாங்கிக் கொள்வார்கள்.  ஒரு பொது இடத்தில் வைத்து எடைபோட்டு விலையை உரக்க கூவிக்கூவிச்சொல்வார்கள் யாருடைய வாளியில் அதிக முட்டை இருந்தது, எந்த வாளி அதிக விலைக்குச்சென்றது என்பது  உரக்கச் சொல்லப்படும்போது பிறர் அன்றைய வெற்றியாளரைக்கட்டிக்கொண்டு வாழ்த்தி  க் கொண்டாடுவார்கள்.

அந்த வரள் நிலத்தின் முக்கியமான வருமானமாக இந்த எறும்பு முட்டை சேகரிப்பு இருக்கிறது.ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு 4 லிருந்து 5 கிலோ முட்டைகளைச் சேகரிக்கும்.  ஒரு வருடத்தில் சுமார் 8000 பெசொக்கள் இவர்களுக்கு இந்த  எஸ்கமோல் சேகரிப்பில் கிடைக்கும்.

இந்த எறும்பு முட்டைகள் பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரையில் மட்டுமே கிடைக்கும் என்பதால் இந்தச் சமயத்தில் மெக்சிகோவிற்கு இந்த உணவைச் சுவைக்க வென்றே பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள்  செல்வதுண்டு.

 தரகர்களால்  உணவகங்களுக்குச் கொண்டுசெல்லப்படும் முட்டைகள் அங்கு மிக அதிக விலைக்கு விற்கப்பட்டு குளிர் சாதனப்பெட்டிகளில் சேமிக்கப்படும்.

இந்த முட்டைகள் மிக லேசாகச் சுமார்  5 நிமிடம்வரை வெங்காயம், வெண்ணெய் மற்றும் மெக்சிகன் தேயிலையான epazote வின் நல்ல நெடிகொண்ட இலைகளுடன் சேர்ந்து சமைக்கப்படும்.

வறுத்த பொரியைப்போல தோற்றமளிக்கும், வெள்ளையிலிருந்து தந்தம் அல்லது பழுப்பு நிறமாகி இருக்கும் இந்தச் சமைத்த எறும்பு முட்டை உணவு லேசான இனிப்புடன் சீஸ் சுவையுடன் இருக்கும்.

எஸ்கமோல் தனி உணவாகவோ, இணை உணவாகவோ அல்லது தொடுகறியாகவோ கிடைக்கிறது.இது கிடைப்பது அரிது என்பதாலும் சேகரிப்பது மிகுந்த கடினமென்பதாலும் இந்த உணவின் விலை மிக அதிகமாக இருக்கிறது.

பரிமாறப்படும் எஸ்கமோல் உணவின் அளவு 10 லிருந்து 15 கிராம் தான் இருக்கும்.  உலகின் பல பாகங்களிலும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவகங்களில் இந்த உணவின் விலை 15-லிருந்து 50 அமெரிக்க டாலர் வரை இருக்கிறது.

எஸ்கமோல் உணவுகளின் உலகப்பிரசித்தி காரணத்தால் இந்த எறும்புகள் இப்போது பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன,

மெக்ஸிகோவிலிருந்து 130 கி மீ தொலைவில்  மெஸ்குவிட்டல் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் தனியார் பண்ணையான Teotlacualli யில் பலதரப்பட்ட காய்கனிகளும் கீரைகளும் கூடவே எஸ்கமோல் எறும்புகளும்  வளர்கின்றன. இங்கு மெக்சிகோ மக்களின் விருப்பத்துக்குரிய பூச்சிகளும் உருவாக்கப்படுகின்றன

தனது தாய்மாமாவிடமிருந்து தன் 11 வது வயதில் எஸ்கமோல் முட்டைகளைச்சேகரிக்க கற்றுக்கொண்ட, கடந்த பத்தாண்டுகளாக எஸ்கமோல் முட்டைகளை உருவாக்கிவரும் அந்தப்பண்ணையின் உரிமையாளரான ஜோஸ் இந்த முட்டைகளைச் சேகரிப்பதற்கான பயிற்சி தலைமுறைகளாக மெக்சிகோ மக்களால் கற்றுக்கொள்ளப் படுகிறது என்கிறார்.

எஸ்கமோலைப்போலவெ  நீலக்கற்றாழையான Agave tequilana-வின் சதைப்பற்றான இலைகளில் ஒட்டி இருக்கும் meocuiles எனப்படும் பட்டாம்பூச்சிகளின் முட்டையயும் இங்கு பிரபல உணவுதான்    

அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பூச்சியியலாளர் லூயிஸ் (Louis Sorkin) கடந்த ஐந்து வருடங்களில் பூச்சிகளை உண்பதில் மக்களின் விருப்பம் கணிசமாக உயர்ந்திருக்கிறது என்கிறார்.

உலகெங்கிலும் சுமார் 1900 பூச்சி வகைகளும் முட்டை வகைகளும் 60% மக்களால் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது இந்தியக் கிராமங்களில் நூற்றாண்டுகளாக ஈசலை உண்ணும் வழக்கம் இருக்கிறது. நான் சிறுமியாக இருக்கையில் பொரியுடன் வறுத்த ஈசல் உருண்டைகளைப் பலமுறை சுவைத்திருக்கிறேன். மழைக்காலங்களில் கூடைகளில் ஈசலை விற்றுக்கொண்டு வருபவர்களையும் பார்த்திருக்கிறேன், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், கம்போடியா, நெதர்லாந்து ஆகிய பல நாடுகளில் இந்த பூச்சி உணவு புழக்கத்தில்  இருக்கிறது.

நிச்சயமாக பூச்சி உணவுகள் வருங்கால சூப்பர் உணவுகளாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை அதிக புரதம், முக்கியமான அமினோ அமிலங்கள், ஒமேகா 3 கொழுப்பமிலம், குறைந்த கொழுப்புக் கொண்டிருக்கும் பூச்சிகள் நிச்சயம் நல்ல ஊட்டச்சத்து உணவாக இருக்கும். 2050-ல்  9 பில்லியனாகவிருக்கும் மக்கள் தொகைக்கு உணவளிப்பதில் விவசாயிகளுக்கு உண்டாகவிருக்கும் பெரும் அழுத்தத்தையும் இந்த பூச்சி உணவு குறைக்கும் வாய்ப்பிருக்கிறது.

இன்னும் இவற்றைச் சுவைக்காதவர்கள் முயன்று பார்க்கலாம்.

எச்சில் உணவு!

சீனாவின் யுனான் மாகாணத்தில் 1371-ல் இஸ்லாமியரான ஹாஜி மா’ வுக்கும் வென்’னுக்கும் பிறந்தார் மா ஹெ. 

மா என்பது முகமது என்பதின் சீனப்பெயர்.  இளம் மா, கன்ஃபூஷியஸ்,  மென்சியஸ் உள்ளிட்ட பல அறிஞர்களின் நூல்களை விரும்பிப் படித்தான். அவனது தந்தையும் சகோதரர்களும் சென்று திரும்பிய மெக்காவின் ஹஜ் புனித யாத்திரைகளைக் குறித்தும் உலகநாடுகள் குறித்தும் ஆர்வமாக கேட்டுத்தெரிந்து கொள்வான். மாவிற்கு உலகைச்சுற்றிப்பார்க்கவேண்டும் என்னும் பேராவல் இருந்தது.

1381-ல் மா’விற்கு 11 வயதானபோது மிங் சாம்ராஜ்யத்தின் பேரரசர் ஹோங் வு’வின் ராணுவம் யுனான் பிரதேசத்தை தாக்கிக் கைப்பற்றியது. யுனானிலிருந்து மா உள்ளிட்ட ஏராளமான சிறுவர்கள் மிங் அரசவையில் அடிமைகளாகப் பணியற்ற பிடித்துச்செல்லப்பட்டார்கள்.

பண்டைய சீனத்தில் அரசரின் அந்தப்புரத்தில் இருந்த அவரது ஏராளமான மனைவியர் மற்றும் ஆசைநாயகிகளுக்கு பணிவிடைசெய்ய ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஆணிலிகளைத்தான் அனுமதிப்பார்கள். ஆணிலிகளால் அந்தப்புரப் பெண்களுக்கு வாரிசு உண்டாகும் வாய்ப்பில்லை என்பதால் எதிர்காலத்தில் அரசரின் வாரிசுகளுக்கு போட்டியாக வேறு குழந்தைகள் உருவாகாமல் இருக்க இப்படிச் செய்யப்பட்டது.  அப்படி மா’வும் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு அந்தப்புரத்தில் பணியமர்த்தப்பட்டான். 

மா மிகக் கடினமாக உழைக்கும் சிறுவனாக இருந்தது பேரரசரின் கவனத்துக்கு வந்தது. அவர் மா’வுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க ஆணையிட்டார். மா பிற்பாடு இளவரசர் ஜு டி-யின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டு மங்கோலியர்களுக்கெதிரான பல போர்களில் அவருடன் இருந்து அவரைப் பாதுகாத்தார். பின்னர்  இளவரசர் ஜு டி  மிங் சாம்ராஜ்யத்தின் பேரரசரான பின்னர், பதவி உயர்வு பெற்று ஜெங் என்னும் அரசவைப் பெயரிடப்பட்டு மா ஹெ ஆக இருந்தவர் ஜெங் ஹெ ஆனார். (“Zheng” He)

ஏராளமான அதிகாரங்கள் கொண்டிருந்த ஜெங் ஹெ அரண்மனைக் கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டுமானங்களில் புகழ்பெற்றவரானார்.  சீனாவின் மாபெரும் கப்பற்படையை அவர் உருவாக்கினார். ஒரே சமயத்தில் இணையாக பல கப்பல்கள் இணைந்து செல்லும் கப்பற்தொகுதிகளில் 7 மாபெரும் கடற்பயணங்களை 1405-லிருந்து 1433 வரை ஜெங் ஹெ ஒருங்கிணைத்தார்.  செல்வங்களைத் தேடிச்செல்லும்  62  பொக்கிஷக்கப்பல்கள் உள்ளிட்ட நான்கு அடுக்குகள் கொண்ட 208  மரக்கப்பல்களில் 27800  வீரர்கள், அறிஞர்கள் உடைமைகளுடன் அவரது கப்பற்படை புறப்பட்டது.

உலகின் மிக முக்கியமான பிரதேசங்களுக்கு சென்று திரும்பிய அக்கப்பல்களில் ஜெங் ஹெ  உணவு, மசாலாப்பொருட்கள், உடை மேலும் பல வினோதப்பொருட்களை ஏராளமாகக்கொண்டு வந்து மன்னருக்கு அளித்தார். அவரது கடற்பயணங்களின் நோக்கம் போரோ, நாடுகளை கைப்பற்றுதலோ அல்லாமல் புதியபொருட்களை சேகரிப்பதும், வணிகமுமாக இருந்ததால் சென்ற அனைத்து இடங்களிலும் அவருக்கு வரவேற்பு இருந்தது.  தென்கிழக்காசியாவுக்குச் சென்ற அவரது  ஒரு கடற்பயணத்தில் தனித்தனித் தீவுகளில் இருந்த ஆட்சியாளர்கள் அவருக்கு மிக வினோதமான ஒரு உணவுப்பொருளைப் பரிசளித்தார்கள்.  

அத்தீவுகளில் நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்த ஒரு உணவுப்பொருளான அது பறவைகள் எச்சிலால் கட்டும் சிறு கிண்ணம் போன்ற உண்ணக்கூடிய கூடுகள்.

அக்கூடுகள் தீவின் சுண்ணாம்புக் குகையின் சுவர்களில் அமைக்கப்பட்டிருந்தன.  சின்ன உழவாரப்பறவைகள்  (swiftlets) முட்டையிட்டு குஞ்சுகள் வெளிவந்ததும் கைவிடப்பட்ட ஏராளமான கூடுகளைச்சேகரித்து உணவாக உண்பதை அத்தீவுவாசிகள் பலகாலமாக செய்துகொண்டிருந்தார்கள். அக்கூடுகள் சுவையாக இருந்ததோடு  உண்பவருக்கு நல்ல ஆற்றல் அளித்து அவர்களை இளமையாக வைத்திருக்கவும் உதவின.  மிகவும் அதிசயித்துப்போன ஜிங் ஹெ அந்தப்பறவைக்கூடுகளை  அப்போது பதவியேற்றிருந்த மிங் சாம்ராஜ்யத்தின்  புதிய இளம் பேரரசருக்குக் கொண்டு வந்தார்.

அரண்மனைச்சமையல்காரர்கள் அந்தப் பறவைக் கூட்டை கண்ணாடிபோல மின்னும் சூப்பாக செய்துகொடுத்து அதன் சுவையில் மயங்கிய  இளம்  பேரரசர் அப்பறவைக்கூடு உணவை அரச குடும்பத்துக்கான பிரத்யேக உணவாக அறிவித்தார். அப்போதிலிருந்து பறவைக் கூடு சூப்  செல்வச் செழிப்பு,  ஆரோக்கியம், நீளாயுள் மற்றும் புத்தம்புதிய சுவையின் அடையாளமானது. சமூகத்தின் மேல்தட்டு மக்களும் அதை சுவைக்கத்தலைப்பட்டனர்.   இந்த பறவைக்கூடு ஆயுளை அதிகரித்து ஆற்றல் அளிக்கும் என்பதோடு பாலுணர்வைத் தூண்டும் என்னும் கதையும் சேர்த்துப்பரப்பி விடப்பட்டபோது அதற்கான தேவை மிக அதிகமாகியது. 

ஆறு நூற்றாண்டுகள் கடந்தும் அந்த உணவின்மீதான விருப்பம் இன்றும் உலகெங்கிலும்  தொடர்கிறது.

இந்தக்கூடுகளை உருவாக்கும்  சின்ன உழவாரன்கள் தெற்காசியா, ஓசியானியா, வடகிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் வாழ்கின்றன. இந்திய சின்ன உழவாரன்  (Aerodramus unicolor) இந்தியா மற்றும் இலங்கையில் மட்டும் காணப்படுகிறது. கூட்டமாக குகைகளில் வாழும் இவை  கூட்டமாக அதிகாலை வெளியே சென்று மாலை அந்தி சாய்கையில் கூடு திரும்பும் தினசரி ஒழுங்கைக்கொண்டவை.  

தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளின் சுண்ணாம்புக்குகைகளில் இந்த சின்ன உழவாரன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.

உலகின் மிகப்பழமையான மழைக்காடுகளுக்கும் ஒராங்குட்டான் உள்ளிட்ட  விதம் விதமான வன உயிரினங்களுக்கும் பெயர்பெற்ற உலகின் மூன்றாவது பெரிய தீவான தென்கிழக்காசியாவின் போர்னியோ தீவுகளில் மாபெரும் கோமந்தோங் சுண்ணாம்புக் குகைளின் உச்சியில் இந்தப்பறவைகள்  ஏராளமான கூட்டை அமைக்கின்றன.

அபோடிடே பறவைக் குடும்பத்தைச்சேர்ந்த  Aerodramus, Collocalia, Hydrochous மற்றும் Schoutedenapus ஆகிய பேரினத்தைசேர்ந்த சின்ன உழவாரன் பறவைகளின் கூடுகளே இப்படி உணவாகப்பயன்படுகிறது. இவற்றின் ஏராளமான சிற்றினங்களில் 6 சிற்றினங்களின் கூடுகளே உணவாகப்பயன்படுகின்றன.

 இந்த உழவாரப்பறவைகள் 9 லிருந்து 16 செ மீ நீளமும் 8 லிருந்து 35 கிராம் எடையும் கொண்ட சிறு உடல் கொண்டவை. இவற்றின் இறகுகள் மங்கலான கருமை, மண் நிறம் அல்லது சாம்பல் நிறம் கொண்டிருக்கும். குறுகிய இறகுகளும் குட்டைக்கால்களும் கொண்டிருப்பதால் இவற்றால் வேகமாக பறக்கவும் குகைகளின் ஆபத்தான சரிவுகளில் அமர்ந்து கூடு கட்டவும் முடிகிறது.

சின்ன உழவாரன் பறவைகள் காற்றில் பறக்கையிலேயே பூச்சிகளைப் பிடித்து உண்பதோடு இணைசேர்வதையும் உறங்குவதையும் காற்றில் பறக்கையிலேயே செய்கின்றன. இனப்பெருக்கக்காலத்தில் முட்டையிடத்தான் குகைகளில் இடம் தேடி வருகின்றன இப்பறவைகள்

சின்ன உழவாரன்கள் ஒலியை எதிரொலிக்கச்செய்வதின் மூலம் இருண்ட  குகைகளின் உட்புறச் சுவர்களை உணர்கின்றன( echolocation) 

வாழ்நாள் முழுக்க ஒரே இணையுடன் மட்டும் வாழும் இவற்றின் இனப்பெருக்கக்காலம் 92-120 நாட்கள். கூடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் பிற சின்ன உழவாரன்களின் கூடுகளிலும் இவை முட்டையிடும் வழக்கம் கொண்டிருக்கின்றன.

 அடுக்கடுக்காக எச்சில் இழைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி ஆண் பறவைகளால் இந்தக்கூடு கட்டப்படுகிறது. சுமார் 30 நாட்களில் எச்சில் உலர்ந்து கெட்டியானபின் கூடுகளுக்குள் பழைய இறகுகளைக்கொண்டு வந்து வைத்து முட்டைகளுக்கு மென்மையான படுக்கையை  ஆணும் பெண்ணுமாக உருவாக்குகின்றன. கூடு தயாரானவுடன் பெண் பறவை இரண்டே இரண்டு வெண்ணிற முட்டைகளை கூட்டினுள் இடுகிறது. ஆண் பெண் இருபறவைகளும் நாளொன்றுக்கு ஒருவர் என்னும் சுழற்சி முறையில் முட்டைகளை அடைகாக்கும். 

குஞ்சுகள் வளர்ந்து பறந்தபின்னர் இந்தக்கூடுகள் கைவிடப்படுகின்றன. ஒரே கூட்டில் சின்ன உழவாரன்கள் மறுமுறை கூடுகட்டுவதில்லை.

கைவிடப்பட்ட கூடுகளே சேகரிக்கப்படுகின்றன. கூடுகள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வண்ணங்களில் இருக்கும்.  

உலகின் மிக விலைகொண்ட உணவுகளில் ஒன்றான இந்தப்பறவைக்கூடு சூப்புக்காக மிக அதிகமாக சேகரிக்கப்படுவதும் மதிப்பு மிக்கதும்  (Aerodramus fuciphagus),  என்னும்   உழவாரன்களின்  வெண்ணிறக் கூடுகள்தான். வெள்ளை மற்றும் மஞ்சள் நிறக்கூடுகள் கிலோவுக்கு 1500-லிருந்து 200 டாலர்கள் விலையென்றால், ரத்தக்கூடு என்றழைக்கப்படும் சிவப்புநிறக் கூடுகளின் விலை 10000 டாலர்களாக இருக்கிறது. பறவைக்கூடு சூப் ஒரு கிண்ணம் 100 டாலர்களிலிருந்து 500 டாலர்வரை இருக்கிறது.

இந்த பறவைக்கூடுகள் அமைந்திருக்கும் குகைச்சுவற்றில் இருக்கும் இரும்புச்சத்து கூடுகளின் புரதங்களுடன் வினை புரிந்து சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது

கருப்பு உழவாரன் எனப்படும்  (Aerodramus maximus), மற்றும் இந்திய சின்ன உழவாரனான (Aerodramus unicolor). ஆகியவற்றின் கூடுகளும் பிரதானமாக சேகரிக்கப்படுகிறது.

இம்மூன்றைத்தவிர மற்ற சின்ன உழவாரங்களின் கூடுகளில் குச்சிகள் இலைகள் போன்ற  தாவரபாகங்களும் இருப்பதால் அவை  சேகரிக்கப்பட்டாலும் தரம் குறைவானதாக கருதப்படுகின்றன. 

இந்தப் பறவைக்கூடுகளை சேகரிப்பவர்கள்  “busyadors,”  எனப்படுகின்றனர். கடற்பறவைகளின் எச்சங்களின் கடும்நெடி நிரம்பியிருக்கும், உழவாரன்கள் கூடுகட்டியிருக்கும் குகைப்பகுதியில்  ஆயிரக்கணக்கான சிறகடிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். உழவாரப்பறவைகள் குகையின் கூரைச்சுவற்றில் பொன் சரிகைப்பட்டுப்போல மினுங்கும் பிறை நிலவின் வடிவத்தில் இருக்கும் கையகலக் கூடுகளை அமைக்கின்றன.

ஆசியாவின் மிக ஆபத்தான பணியாகக்கருதப்படும் இந்தப் பறவைக்கூடு சேகரிப்பில் பலநூறு பேர் உயிரைப்பணயமாக வைத்து  தலைமுறைகளாக ஈடுபட்டுவருகின்றனர்.

ஒரு பறவைக்கூடு சுமார் 14 கிராம்  எடைகொண்டிருக்கும் .எனவே ஒரு கிலோ அளவுக்குக்கூடுகளைச் சேகரிக்கப் பலமணிநேரம் அவர்கள் இந்த ஆபத்தான வேலையை செய்யவேண்டி இருக்கும் 

 பலநூறு அடி உயரமுள்ள கூரைகளில் இருக்கும் கூடுகளைச் சேகரிக்க மூங்கில் கழிகளிலும் ஏணிகளிலும் கட்டப்பட்டிருக்கும் கயிறுகளில் தொங்கியபடி அடிதப்பினால் மரணம் நிச்சயம் என்னும் நிலையில் வெள்ளைத்தங்கம் எனப்படும் இந்தகூடுகள் சேகரிக்கப்படுகின்றன.  

சின்ன உழவாரன்களின் இனப்பெருக்கக்காலம் துவங்கியதும் கூடுகளைச்சேகரிப்போர் கடவுளுக்கு காணிக்கைச் செலுத்தி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி  தங்கள் உயிருக்கு பாதுகாப்பளிக்கும் வேண்டுதல்களைச் செய்வார்கள்.

குகையின் சுவர்களையும் கூட்டையும் கைகளால் தொடுவது கடவுளுக்கு கோபம் உண்டாக்கும் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் திரிசூலம் போல மூன்று முனைகள் கொண்ட  ராடா எனப்படும் ஒரு தடியையும் கையோடு எடுத்துச்சென்று அதைக்கொண்டுதான் கூட்டைச் சுவற்றிலிருந்து உரித்து எடுக்கிறார்கள். சூலம் போன்ற ராடா தடி கடவுளாக  உடனிருந்து அவர்களை காப்பாற்றும் எனவும் நம்புகிறார்கள். 

இத்தனை ஆபத்து இருந்தும் தவறமல் திரும்பத் திரும்ப இவர்கள் பறவைக்கூடுகளை உயிரைப் பணயம் வைத்து சேகரிப்பது பறவைக்கூடுகளுக்கிருக்கும் சந்தை மதிப்பினால்தான்.

சேகரித்த கூடுகளைச் சுத்தம் செய்வது அடுத்த கட்ட கடினமான பணி. கூடுகளை நீரில் ஊறவைத்து மிருதுவாக்கியபின்னர் ஊசிகளால் அதில் ஒட்டியிருக்கும் இறகுப்பிசிறுகளும் அசுத்தங்களும் பிரித்தெடுக்கப்படுகிறது.

பறவைக்கூட்டில் சுமார் 62% புரதம் 27% மாவுச்சத்து, கால்சியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின்கள், சில கனிமங்கள் கொழுப்பு இரும்புச்சத்து ஆகியவை இருக்கிறது.    

மிக அதிகவிலைக்கு விற்கப்படும் எல்லா உணவுப்பொருட்களையும் போலவே இதிலும் கலப்படங்களும் போலிகளும் இருக்கிறது. கடற்பாசிகள் சில பூஞ்சைக்காளான்கள் மற்றும் சில மரப்பிசின்களைச் சேர்த்து பறவைக்கூடு சூப் எனச்சொல்லி பிரபல உணவகங்களில் கூட ஏமாற்றுகிறார்கள்.

தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவின் கடற்கரையோரங்களில் கான்கிரீட் கட்டிடங்களின் மொட்டைமாடிகள் முழுக்க தகடுகளால் மூடி இருட்டாக்கி, பறவை நுழைய சிறு கீறல்கள் மட்டும் உண்டாக்கி பதிவு செய்யப்பட்ட பறவைக்குரலை எப்போதும்  ஒலிக்கச்செய்து சின்ன உழவாரப்பறவைகளை அங்கு வந்து கூடுகள் கட்டச்செய்யப்படுகிறது. இந்த வீட்டுக்குகைகளில் கூடுகளை சேகரிப்பது, குகைகளில் சேகரிக்கும் ஆபத்தை இல்லாம்லாக்குகிறது.

 வீட்டு உரிமையாளர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கிறது எனினும் அகற்றவே முடியாத பறவை எச்சங்களின் கடும் நெடியும் தொடர்ந்து கேட்கும் அவற்றின் குரலும் பெரும் தொந்தரவாகத்தான் அனைவருக்கும் இருக்கிறது.

பறவைகளால் வரும் நோய்கள் மக்களுக்கு இதனால் வெகுஎளிதில் பரவும் அபாயம் இருப்பதாக பறவையியலாளர்கள் தொடர்து எச்சரித்தவண்ன்ணம் இருக்கிறார்கள்,  ஆனால் குகைகளில் சேகரிக்கப்படும் கூடுகளுக்கு கிடைக்கும் அதே விலை, கட்டிடங்களில் எடுக்கப்படும் கூடுகளுக்கும் கிடைப்பதால் மேலும் பலர் இந்தக் கூடுகளை அவரவர் வீடுகளில் அமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்தப்பறவைக்கூடுகளின் தேவை மிக அதிகரித்திருப்பதால் முட்டைகள் இருக்கும்,  பறக்கமுடியாத இளம் குஞ்சுகள் பாதுகப்பாக இருக்கும் கூடுகளும் சேகரிக்கப்படுவதால் சின்ன உழவாரன்களின் எண்ணிக்கை அபாயகரமாக குறைந்து வருவதாகவும், கூடுகளைச் சேகரிப்போர் சந்திக்கும் ஆபத்துகள் மனித உரிமை மீறல்கள் எனவும் பறவைக்கூடு சூப்பின்  பயன்களாகச் சொல்லப்படுபவைகளைக்காட்டிலும்  தாவரசூப்களில் அதிக ப்பயன்கள் உள்ளது என்னும் கருத்துக்களும் தீவிரமாக முன்வைக்கப்படுகின்றன.

எச்சசரிக்கைகளும் கண்டனங்களும் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தாலும் பறவைக்கூடு சேகரிப்பும் அதன்தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

 மலேஷியாவில் மட்டும் சுமார் 60000 பேர் இநந்தப்பறவைக்கூடு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மலேசிய அரசு இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டிருப்போருக்கு கடனுதவிகளும் வழங்குகிறது., 

இத்தொழிலில் தலைமுறைகளாக ஈடுபட்டிருக்கும் மலேசியப்பழங்குடியினர் பத்து வருடங்களுக்கொருமுறை சீட்டுக்குலுக்கிப்போட்டு அடுத்த பத்து வருட ஒப்பந்ததாரரை முடிவு செய்கிறார்கள். இப்போது சீன முதலாளிகள் குகைகளை பெருந்தொகைக்கு ஏலம் எடுப்பதால் இதை நூற்றுக்கக்கான  வருடங்களாக வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பழங்குடியினர் பாதிப்படைந்திருக்கிறார்கள். பெருந்தொகைக்கு குகைகள் ஏலம் எடுக்கப்படுகின்றன.  ஏலம் எடுத்த முதலாளிகள் ஆயுதமேந்திய காவலர்களைக்ளைக்கொண்டு குகைகளைப் பாதுகாக்கின்றன்ர்.

பல லட்சங்கள் புழங்கும் இந்த பறவைக்கூடு தொழில் போட்டியில் கொல்லப்பட்டவர்கள்,  குகைகளில் தொங்கிக்கொண்டு கூடு சேகரிப்பில் இருக்கையில் உயிரிழப்பவர்கள் ஆகியோரின் விவரங்கள் வெளிஉலகிற்கு தெரிய வராமல் மறைக்கப்படுகிறது..

இந்தப் பறவைகூடு உணவு வீடுகளில் சூடுபடுத்தி அருந்தும் திரவ வடிவில் பாட்டில்களிலும், உலர் பொடியாகவும் இருவிதங்களில் சந்தைப்படுத்தப்படுகிறது, சுத்தப்படுத்தப்பட்ட கூடுகள் அப்படியேவும் விற்பனையாகின்றன.

உணவாக மட்டுமல்லாமல் இவற்றின் சருமத்தைப்பாதுகாக்கும் இயல்புகளால் அழகுசாதனப் பொருள் தயாரிப்பிலும் இக்கூடுகள் பயன்படுத்தப்படுகின்றன. வருடத்திற்கு சுமார் 200 டன் பறவைக்கூடுகள் உலகின் பலபாகங்களிலும் உண்ணப்படுகிறது. இதில் ஹாங்காங்கின் அளவே மிக அதிகம்.

 ஜின்செங் மற்றும் சர்க்கரை கலந்து எளிதாகத்  தயாரிக்கப்படும் இந்த சூப் இளமையை தக்கவைத்து ஆற்றலை அதிகரித்து சருமப்பொலிவுக்கும் கண்பார்வை கூர்மைக்கும் உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.

இந்தோனேஷியா வருடத்திற்கு 2000 மெ டன் பறவைக்கூடுகளைச் சேகரித்து உலகின் முதல் இடத்திலும் தொடர்ந்து 600 டன் சேகரிக்கும் மலேசியாவும் மூன்றாம் இடத்தில் 400 டன்  தாய்லாந்தும் இருக்கிண்றன.

இனி பறவைக்கூடு சூப்பை அருந்தும் வாய்ப்பு கிடைத்தால், மேசையில் நம் முன்பு கிண்ணத்தில் கண்ணாடி போல இருக்கும் அந்தத் திரவம் விலையுயர்ந்த ஒரு உணவு மட்டுமல்ல, பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜென் ஹெ பயணித்த பொக்கிஷ கப்பல்களின் மீது போதிய அலைகளின் ஓசை, உயிரைப்பணயம் வைத்து கயிற்றில் தொங்கிக்கொண்டு கூடுகளைச் சேகரிக்கும் தொழிலாளர்களின் நிழல், இதன் பட்டுப்போன்ற நூழிலைகள் ஆரோக்கியத்தையும் வாழ்நாளையும் நீட்டிக்கும் என் பேரரசர்கள் கொண்டிருந்த நம்பிக்கை இவை எல்லாம் கலந்த கலவைதான் அது என்பதை எண்ணிக்கொள்ளுங்கள்

பிளாஸம் என்கிற வேக்கா!

இங்கிலாந்த்தின்  கிளாஸ்டுஷா* மாகாணத்தில் அமைந்திருக்கும் பார்க்லீகோட்டையின் விரிந்த மைதானத்தில்  நண்பர்கள் பலர் இணைந்து வெப்பக்காற்றுபலூன்களைஉயரப்பறக்கவிட்டும், அது எத்தனை எடைதாங்கும் என்பதை கணக்கிட்டுக்கொண்டுமிருந்தார்கள். அது 1784-ன் செப்டம்பர் மாதம்.

ஃப்ரஞ்ச்சகோதரர்களான  ஜோசப் மற்றும் எட்டியன் இருவரும் எடையற்ற ஒரு பொருளுக்குள்வெப்பக்காற்றைநிறைத்தால் அது உயரே பறக்கும், அதில் பயணம் செய்யலாம் என்பதை பல சோதனைகள் மூலம் 1782- ல் தான் நிரூபித்திருந்தார்கள். வைக்கோல் மற்றும் கம்பளியை எரித்து ஒரு பலூனுக்குள்வெப்பக்காற்றைச் செலுத்தி அந்தப் பலூனை3000 அடி உயரத்தில் 10 நிமிடம் வானில் நிற்க வைத்த முதல் சோதனைக்குப் பிறகு 1783-ல் அந்த வெப்பக்காற்றுபலூனில் ஒரு ஆடு, சேவல் மற்றும் வாத்து ஆகியவற்றையும் அனுப்பி  8 நிமிடம் பறந்தபலூன்10 மைல் தொலைவில் தரையிறங்கியசோதனையையும்வெற்றிகரமாகச் செய்தனர். 

அதே வருடம் நவம்பர் மாதம் மனிதர்கள் வானில் பயணம் செய்த  உலகின் முதல்  வெப்பக்காற்றுபலூனையும் அவர்கள் பறக்கச் செய்தனர். 3 பயணிகளுடன்அந்த  ஹைட்ரஜன்வெப்பக்காற்றுபலூன் சுமார் 10 கிமீபயணித்தது. இந்த வெற்றிக்குப் பிறகு உலகின் பல பாகங்களிலும்இந்தச்சோதனைகள் செய்து பார்க்கப்பட்டது.

கேலப்ஹில்லியர் பாரி (Caleb Hillier Parry) என்பவர் ஆளில்லா வெப்பக் காற்று பலூனைப்பட்டுத்துணியில் உருவாக்கி  ஹைட்ரஜன்வெப்பமூட்டி1784- ஜனவரியில்19 மைல்தொலைவுக்குப்பறக்கக் செய்தார். பாரியின் நெருங்கிய நண்பரானஎட்வர்ட்ஜென்னெரும்அந்தச்சோதனையில் ஆர்வம் கொண்டார்.

இன்றைக்கு சரியாக 240 வருடங்களுக்கு முன்பாக 1784-ன் செப்டம்பர் 2-ம் தேதி மதியம் 2 மணிக்கு  வெப்பக்காற்றுபலூன்களின்சோதனையில்எட்வர்ஜென்னரும்பாரியும்பார்க்லீ கோட்டை மைதானத்தில்   இருந்தனர். ஜென்னரின்பலூன்உயரப் பறந்து  10 மைல் தொலைவில் இருந்த ஆண்டனிகிங்ஸ்காட்என்பவருக்குச் சொந்தமான மாபெரும் எஸ்டேட்டில்தரையிறங்கியது.  அங்கு தோட்ட வேலையில் இருந்தவர்கள் அந்தப் பலூனைக்கண்டு பயந்து கூச்சலிட்டுக்கொண்டிருக்கையில்ஜென்னர்  பலூனைத்தேடிக்கொண்டு அங்கே சென்றார்.  

பலூனைக் காண்பதற்கு முன்னர் எஸ்டேட்உரிமையாளரின்மகளானகேத்தரினை  கண்டதும் காதல் கொண்டார்எட்வர்ட்ஜென்னெர். அவர்களிருவரும்1788-ல் மணம் புரிந்து கொண்டனர்.அவர்களின்திருமணத்தின்போது இருவரின் காதலைக் குறித்த கவிதைகள் எழுதப்பட்டவெப்பக் காற்று பலூன்   திருமணம் நடந்த தேவாலத்திலிருந்துபறக்கவிடப்பட்டது. அந்த பலூன் சென்று தரையிறங்கிய20 மைல் தொலைவில் இருந்த இடம் இன்றும் அவர்களின் காதலின் நினைவுச்சின்னமாக “Air Balloon Inn”. என்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கானபொழுதுபோக்கும் இடமாக இருக்கிறது.

ஜென்னர்வெப்பக்காற்றுபலூன்களிலும், விலங்கு மற்றும் பறவைகளிலும், இயற்கையை அணுகி ஆராய்வதிலும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஜென்னர்தான்பறவைக்கூடுகளில் வைக்கப்படும் குயில் முட்டைகளில் இருந்து வெளிவந்த குயில் குஞ்சுகள் பிற பறவைகளின்முட்டைகளைகூட்டிற்கு வெளியே தள்ளி விடும் brood parasitism என்பதை கண்டறிந்தவர்.

மருத்துவரானஜென்னர்angina pectoris என்கிற மார்பு நெரிப்பு, கண் அழற்சி, போன்ற பலவற்றைக் குறித்து ஆராய்ந்து கட்டுரைகளைவெளியிட்டிருக்கிறார்.  பறவைகள் வலசைபோவதையும்ஆராய்ந்திருக்கிறார்ஜென்னெர்.

கோவிட்பெருந்தொற்றிலிருந்துபலகோடிப்பேர்பிழைத்திருப்பதற்கும்எட்வர்ட்ஜென்னர்தான் காரணம். நவீன நோய் எதிர்ப்பு அறிவியலுக்கானஅடித்தளத்தைஅமைத்தவரானஜென்னரேஉலகின் முதல் அதிகாரபூர்வமானதடுப்பூசியைஉருவாக்கியவர்.அவர்அமைத்துக்கொடுத்த பாதையில் சென்றவர்களால்தான்கோவிட்-19 தடுப்பூசிகள் விரைவாக உருவாக்கப்பட்டு, உலகளவில்கோடிக்கணக்கானஉயிர்களை காப்பாற்ற முடிந்தது.

நோயெதிர்ப்பறிவியலின் (Immunology) தந்தை எனக் கருதப்படும் ஜென்னெர்1796 மே மாதம் 14-ம் தேதி மருத்துவ அறிவியல் வரலாற்றின் பாதையை முழுவதுமாக மாற்றி அமைத்தார். அன்றுதான் பெரியம்மை நோய்க்கு எதிராக,  மாட்டம்மையிலிருந்துஉருவாக்கப்பட்ட  உலகின் முதல் தடுப்பூசி வெற்றிகரமாக அவரால் அளிக்கப்பட்டது.

ஜென்னருக்கு இருபது ஆண்டுகள் முன்பே  இங்கிலாந்திலும்ஜெர்மனியிலும் ஐந்து ஆய்வாளர்கள் (Sevel, Jensen, Jesty, Rendell & Plett) பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசியைமாட்டம்மைக்கொப்புளங்களிலிருந்துகண்டுபிடித்திருந்தார்கள் 

1774-ல்இங்கிலாந்தின்டார்செட்பகுதியைச்சேர்ந்த  விவசாயிபெஞ்சமின்ஜெஸ்டிக்கும், நிறைய  மாடுகள் வளர்ந்த அவரது பண்ணையில் வேலை செய்தவர்களுக்கும்மாட்டம்மை தொற்று உண்டாகி இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கும் குழந்தைகளுக்கும்மாட்டமைத் தொற்று உண்டாகி இருக்கவில்லை. நகரில் பெரியம்மைத்தொற்றுவிரைவாகப்பரவியபோது அக்கம்பக்கம் இருந்தவர்களின்  பலத்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஜெஸ்டி தன் குடும்பத்தினரின் கைகளில் சருமத்துக்கடியில்மாட்டம்மைச்சீழை  ஊசியால்குத்திச்  செலுத்தினார், அவர்களுக்கு பெரியம்மை வரவில்லை. இப்படி ஜென்னெருக்கு முன்பே பலர் இந்த சோதனையை செய்திருந்தார்கள்.

ஆனாலும் பொதுவெளியில்பலருக்கு முன்பு இந்தச்சோதனையைச் செய்து அதன் முடிவுகளை மேலும் பல முறை சரிபார்த்து தடுப்பூசியின்செயல்பாட்டுகுறித்தானஆய்வறிக்கைகளையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டவர் என்னும் வகையில் எட்வர்ட்ஜென்னரே இந்த நோயெதிர்ப்பறிவியல்துறையைஉருவாக்கியவராகிறார். 

தொற்றுநோய்த்தடுப்புமுறைகளின் வரலாறு

பெரியம்மைநோய் வரலாற்றுக்காலத்திலிருந்தே ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் சீனாவில் இருந்தது. பெரியம்மையினால் இறப்பு, கண் பார்வை இழப்பு மற்றும் தழும்புகளால் முகம் விகாரமாவது ஆகியவை உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்தது. இதற்கான ஆதரங்கள்கிமு1200-த்தைச்சேர்ந்தஎகிப்தியமம்மிகளிலிருந்துகிடைத்தன.

நூற்றாண்டுகளாகசீனாவிலும்இந்தியாவிலும் காய்ந்த அம்மைப்பொருக்குகளை  உலர்த்தித் தூளாக்கி மூக்குப்பொடி போல உறிஞ்சி நோயெதிர்ப்பைப் பெறும்வேரியோலேஷன்என்னும் வழக்கம் இருந்தது. கொப்புளப்பொடியை மூக்கில் ஊதவெள்ளியாலான சிறு ஊது குழல்கள்பயன்பாட்டில் இருந்தன. பண்டைய சீனாவில்இந்தக்கொப்புளப்பொருக்குத்துகள்கள்உலோகக்கூடைகளில் வைத்து தெருக்களில்விற்கப்பட்டன.

16-ம்நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியாவில் வங்காள பிராமணர்கள் மத்தியில் இந்த தடுப்பு முறை புழக்கத்தில் இருந்தது என்றும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்த அது குறித்த ஆவணங்கள் காலனியாதிக்கத்தின்போதுமறைக்கப்பட்டுஜென்னரின் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்த பொருக்குப்பொடியை பிறருக்கு தடுப்பு மருந்தாக அளித்த மருத்துவர்கள் ’திக்காதர்கள்’ (Tikadars) என அழைக்கப்பட்டனர். இன்றும் பல இந்திய மொழிகளில்  தடுப்பூசிபோட்டுக்கொள்வது  திக்கா’’ (tika) என்று அழைக்கப்படுகிறது.

கான்ஸ்டண்டினோபிலில்கொப்புளப்  பொருக்குகளைநோய்த்தடுப்புக்காகநுகரும் முறை புழக்கத்தில் இருந்தது. அதை அறிந்த ஒட்டமான்பேரரசின் அரசவை மருத்துவர் இம்மானுவேல் (Emmanuel Timoni) அந்த முறையை  1714-ல்விளக்கமாக எழுதி ராயல்சொசைட்டிக்குசமர்ப்பித்திருந்தார்.

1720-களில்  கான்ஸ்டண்டினோபிலின்பிரிடிஷ்தூதரின் மனைவி மேரி (Lady Mary Wortley Montegue) இந்தியாவிலும்சீனாவிலும், கான்ஸ்டண்டினோபிலிலும் பரவலாக அப்போது  புழக்கத்தில் இருந்த  பெரியம்மைக்கெதிராகமாட்டம்மைக்கொப்புளங்களின் உலர்ந்த பொடியை மூக்கில் உறிஞ்சும் தடுப்பு முறையைக்கற்றுக்கொண்டு இங்கிலாந்து வந்தார்.1717-ல் மேரி  இதை எழுத்துப்பூர்வமாக அவரது தோழி சாராவுக்குகடிதமொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 

மேரியின் சகோதரர்   1713-ல்பெரியம்மையினால் இறந்தார், இறப்பதற்கு முன்னர் அவரிடமிருந்து மேரிக்கும்அம்மைத்தொற்று உண்டானது எனினும் உடலிலும் முகத்திலும் விகாரமான, நிரந்தரமான தழும்புகளுடன்  மேரி பிழைத்துக்கொண்டார். (அவரது உருவச்சித்திரங்கள்வரையப்படுகையில் அந்தத் தழும்புகள் கவனமாக தவிர்க்கப்பட்டன.) 

1721-ல்லண்டனில் பெரியம்மை நோய்த்தொற்றுபரவியபோது  மேரி தனது 4 வயதுமகளுக்கும், 5 வயது மகனுக்கும்  அரசவை மருத்துவரும்அறுவைச்சிகிச்சைநிபுணருமாகியசார்லஸைக் (Charles Maitland) கொண்டு  மாட்டம்மைக்கொப்புளங்களின்உல்ர்பொடியைஉறிஞ்சச்செய்தார். அவரது குழந்தைகளுக்கு பெரியம்மைத் தொற்று உண்டாகவில்லை. அதன்பின்னர் ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதுமே  சிறைக்கைதிகளுக்கும்அனாதைக்குழந்தைகளுக்கும் வெற்றிகரமாக சார்லஸால்அந்தச்சோதனை செய்து பார்க்கப்பட்டது, பின்னர் அந்த பெரியம்மை நோய்த்தடுப்பு முறை உலகெங்கிலுமே  பரவலாகியது.

ராணுவ வீரர்களுக்கும்குழந்தைகளுக்கும்உலகெங்கிலும் இந்த வேரியோலேஷன் என அழைக்கப்ட்ட தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது. 1757-ல்இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது அச்சிறுவர்களில்8 வயது எட்வர்ட்ஜென்னரும் இருந்தார்.

18-ம்நூற்றாண்டின் இறுதியில் சூடானில் அம்மை நோய்கண்ட குழந்தை இருக்கும் வீட்டுக்குச் செல்லும் தாய்மார்கள், கொப்புளங்களின்எண்ணிக்கைக்குஈடாக கட்டணம் செலுத்தி நோயுற்றகுழந்தையின் கைகளில் கட்டப்பட்ட துணியை கொண்டு வந்து தங்களின் ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளுக்கு கட்டிவிடும் வழக்கம் பரவலாக இருந்தது. இதன் நவீன வடிவமாகத்தான் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்  அம்மை நோயுற்ற குழந்தைகளின் வீட்டுக்கு பலர் குழந்தைகளை அழைத்துவந்து கூடும் அம்மைப் பார்ட்டிகள்2010 வரையிலுமே நடந்தன.(Pox party)*

இந்த தடுப்பு முறைக்குஉலகெங்கிலும்கண்டனங்களும்எதிர்ப்புமிருந்தது, அரசகுடும்பத்தினர் உள்ளிட்ட சிலருக்கு இந்த தடுப்பு முறைக்குப்பிறகுஇறப்பும் உண்டானது எனினும் உலகெங்கிலுமே  பரவலாக இந்த நுகரும் முறை புழக்கத்தில் இருந்தது,பெரியம்மை நோயினால் உண்டான இறப்பு வெகுவாககுறைந்தும் இருந்தது.

1779-களிலிருந்தே பலரும் மாட்டம்மைக்கொப்புளங்களின் தொற்று நோயெதிர்ப்புத்திறனைச்சோதிக்கும்ஆய்வுகளைமனிதர்களில்செய்யத்தொடங்கினர் என்றாலும், 20 ஆண்டுகள் கழித்து ஜென்னர் அதை நிரூபிக்கும் வரை அந்த தடுப்பூசி  அதிகாரபூர்வமாகபுழக்கத்துக்குவந்திருக்கவில்லை.  

ஜென்னர்

ஸ்டீஃபன்ஜென்னருக்கும்சாராஜென்னருக்கும்1749,  மே 17 அன்று அவர்களின் 9 குழந்தைகளில், எட்டாவதாகப் பிறந்தார் எட்வர்ட்ஜென்னர். 

ஜென்னர் பிறந்த சமயத்தில் பிரிடிஷ்மருத்துவப் பயிற்சி மற்றும் கல்வி பெரும் மாற்றம் கண்டிருந்தது. ஆக்ஸ்ஃபோர்டிலும்கேம்பிரிட்ஜிலும் பயின்று வந்த மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள்  ஆகியோர் உடனே தொழிலை தொடங்காமல்அனுபவத்தின் பொருட்டு அவரவர் துறைகளில்பிரபலமானவர்களிடம்உதவியாளர்களாக சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டபிறகே தனியே தொழிலைத்தொடங்கினார்கள். பலர் பயிற்சிக்குப்பின்னரேமருத்துவப்படிப்புக்குச்சென்றார்கள். தொற்றுநோய்களின்பரவலால்மருத்துவச்சேவை அப்போது உச்சகட்ட  தேவையான தொழிலாக இருந்தது 

ஜென்னரின் தந்தை மதகுருவாக இருந்தவர், ஜென்னரின் மிக இளம் வயதிலேயே1754-ல் அவரது  தந்தையும்தாயும்  மறைந்தனர்.அவரை அவரது மூத்த சகோதரர் அன்னையும்தந்தையுமாக இருந்து வளர்த்தார். ஜென்னருக்குஇளமையிலிருந்தேஇயற்கையை கூர்ந்து கவனிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அடிப்படைக்கல்வியை வீட்டுக்கு  அருகில் இருந்த பள்ளியில் படித்த ஜென்னர், 13 வயதில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் ஜார்ஜிடம் (George Harwicke). உதவியாளராக பணியில் இணைந்தார்.அடுத்த8 வருடங்களில் ஜென்னர் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சையின்அடிப்படைக்கல்வியைப்பெற்றிருந்தார்.

அதன் பின்னர் தனது  21-ம் வயதில் லண்டனுக்குச் சென்று செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனையில்  பணியிலிருந்தலண்டனின் புகழ்பெற்ற  அறுவை சிகிச்சை நிபுணரான  திரு ஜான்ஹண்டரின்மாணவராகஜென்னர் இணைந்தார். ஜான்ஹண்டர்லண்டனின்முதன்மையான  உடற்கூறாய்வாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்

ஹண்டருக்கும்ஜென்னருக்கும் இடையே நல்ல புரிதலும் நட்பும் உண்டானது. அந்தப் பிணைப்பு ஹண்டர்1793-ல்மரணமடையும் வரை தொடர்ந்தது. ஹண்டரிடமிருந்துஜென்னர்இயறகையை மேலும் அணுகி ஆராய்வது, எந்தக்கருத்தானாலும் அதற்கான அறிவியல் அடிப்படையைதேடிக்கண்டடைவதன் அவசியம், இயற்கை உயிரியல் நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் ஆர்வம் மற்றும் தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றைக்கற்றுக்கொண்டார். 

ஹண்டர் சொல்லித்தான் குயில் குஞ்சுகளின் ’ஒட்டுண்ணியை அடைகாத்தல்’ என்னும் வழக்கத்தைஜென்னெர் கண்டறிந்தார். அந்தக் கண்டுபிடிப்புக்காகத்தான்ஜென்னருக்குராயல்சொசைட்டியின் அங்கத்தினர் என்னும் அந்தஸ்து கிடைத்தது.

ஹண்டருடன்பணிபுரிகையில்தான்ஜென்னருக்கு கேப்டன் குக்கின்கடற்பயணத்தில்உடனிருந்தஜோசப்பேங்க்ஸ்அறிமுகமானார். கடற்பயணத்திலிருந்துபேங்க்ஸ் கொண்டு வந்திருந்த பல உயிரினங்களின்பதப்படுத்தப்பட்டஉடல்களை வகைபிரித்து அடுக்கிவைக்கும் பணியை ஜென்னர் செய்து கொடுத்தார். 

ராயல்சொசைட்டியின்தலைவராக40 வருடங்கள் பணியாற்றிய பேங்க்ஸினால் தான் ஜென்னருக்குஉலகின் தலைசிறந்த அறிவியலாளர்களின், மருத்துவர்களின்அறிமுகமும், நட்பும் கிடைத்தது.  கேப்டன் குக் தனது இரண்டாம் உலகப்பயணத்தில்இணைந்துகொள்ளும் படி விடுத்தஅழைப்பைஜென்னெர்ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு பறவையியலில், நிலவியலில், இயற்கை வரலாற்றில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவற்றில் கவனம் செலுத்தினார். புதைபடிவங்களானஃபாஸில்களைதேடுவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.  வெப்பக்காற்றுபலூன்களிலும் சோதனை செய்து இரண்டு முறை சுமார் 12 மைல்தொலைவுக்கு அவரே உருவாக்கிய பலூன்களைஜென்னர்பறக்கச்செய்தார்.

ஹண்டருடன்20 வருட தீவிரமான மருத்துவப்பணிக்குப் பிறகு ஜென்னர் தனது மருத்துவ மேற்படிப்பைஸ்காட்லாந்தின்செயிண்ட்ஆண்ட்ரூஸ்பல்கலைக்கழகத்தில்1792-ல்முடித்துப் பட்டம் பெற்றார். தனது பெயருக்குப் பின்னே  MD, FRS, என்னும் பட்டங்களை குறிப்பிட்ட பிறகே தனது தனிப்பட்ட மருத்துவத் தொழிலை ஜென்னர்தொடங்கினார். 

ஜென்னருக்கு அப்போது டைஃபஸ்பாக்டீரியாக் காய்ச்சல் உண்டானது. அதிலிருந்து குணமாக  ஏராளமான கனிம நீரூற்றுக்கள் இருக்கும் இங்கிலாந்தின் பிரபல நகரமாகியசெல்டென்ஹாமிற்குகோடைக்காலங்களில்நீரூற்றுக்குளியலின்பொருட்டுச்செல்லத்துவங்கினார். அங்கு ஜென்னருக்குமேல்தட்டுமக்களுடனான அறிமுகம் கிடைத்தது. அங்கு அவர் வயலினும்புல்லாங்குழலும்வாசிக்கக்கற்றுக்கொண்டார். கவிதைகள் எழுதினார்.அங்கு ஓய்வில் இருக்கையில் எல்லாம் சீனாவிலும்இந்தியாவிலும்புழக்கத்திலிருந்த  வேரியோலாஷன்எனப்படும்அம்மைக்கொப்புளங்களின்உலர்பொடியைநுகரும்நோய்த்தடுப்புப்முறையைக் குறித்த  கட்டுரைகளைவாசித்துகுறிப்பெடுத்துக்கொண்டார். தனது மருத்துவ அனுபவங்களையும்வாசித்தமருத்துவக்கட்டுரைகளையும்  பிரசுரிக்கத்தகுந்தபடி   ஒழுங்கமைத்துக்கொண்டார்.

ஜென்னர்மருத்துவப்பணியில் இருந்த நகரின்பால்காரப்பெண்மணிகளுக்குமாடுகளின்மடியிலிருந்து பரவிய மாட்டமையினால் மிக லேசான பாதிப்புகள் மட்டுமே உருவானதையும் அவர்களுக்கெல்லாம் பெரியம்மைக்கு எதிரான நோயெதிர்ப்புஇருப்பதாகச்சொல்லப்பட்டகதைகளை அவர் ஹண்டருடன்பணிபுரிகையிலேயே அறிந்திருந்தார்.  பால்காரப்பெண்மணிகள்கர்வத்துடன்“எங்களின் முக அழகு ஒருபோதும் தழும்புகளால்கெட்டுப்போகாது ஏனென்றால் எங்களுக்கு மாட்டம்மைதான் வரும் பெரியம்மை வராது“ என்று சொல்வது கிராமப்புறங்களில்  வாடிக்கையாக இருந்தது. 

அப்போது பெரியம்மையினால் இறப்பு, குறிப்பாக குழந்தைகளின் இறப்பு மிக அதிகமாக இருந்தது.  எனவே ஜென்னர்அதற்கெதிரான தடுப்பு மருந்துகளுக்காக ஆய்வு செய்யத்தொடங்கினார்.

1796-ல்ஜென்னர்13 மனிதர்களுக்குமாட்டம்மைக்கொப்புளங்களின்பொருக்குத்துகள்கள்முகரச்செய்யப்பட்டுபெரியம்மைக்கெதிரானநோயெதிர்ப்பை உருவாக்கிய தகவலை அறிகையாக  ராயல்சொசைட்டிக்குஅனுப்பினார். ஆனால் அக்கட்டுரையின் முக்கியத்துவம் அப்போது சரியாகப்புரிந்துகொள்ளப்படாமல் அந்த ஆய்வறிக்கை ஜென்னருக்கே திரும்ப அனுப்பப்பட்டது.

ஜென்னர் மீண்டும் மீண்டும் அந்த ஆய்விலேயே மூழ்கி இருந்தார். மாட்டம்மை (Cowpox) மாடுகளின்மடிக்காம்புகளில் பெரிய கொப்புளங்களை உருவாக்கியது. பால் கறப்பவர்களுக்கு கைகளில் கொப்புளங்களையும் லேசான காய்ச்சலையும் மட்டுமே உருவாக்கிய மாட்டம்மை வேறு சிக்கல்கள் எதையும் உருவாக்கவில்லை, எனவே மாட்டம்மை மிக லேசான அறிகுறிகள் கொண்ட ஆபத்தில்லாத ஒரு நோயென்பதை அறிந்த ஜென்னர்   மாட்டம்மைக்கொப்புளங்களின்சீழை  மிகக்குறைந்த அளவு உடலில் செலுத்துவதன் மூலம் பெரியமைக்கான் நோய் எதிர்ப்பைப் பெற முடியும் எனக் கருதினார். 

ஜென்னரின்சோதனையும்தடுப்பூசிஉருவாக்கமும்

1796-ல்50 வயதை நெருங்கி கொண்டிருந்த ஜென்னரின் வீட்டுக்கு பால்கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருந்த  சாராவின் (Sarah Nelmes) பிளாஸம் (Blossom) என்னும் பசுமாட்டிற்குமாட்டம்மை உண்டாகி இருந்தது. அந்தப் பசுவிடமிருந்துசாராவுக்கும்மாட்டம்மை தொற்றி அவரது புறங்கைகளில் பெரிய கொப்புளங்கள் உருவாகி இருந்தன,

அப்போதுதான் ஜென்னர்மிகச்சவாலானதும்  நவீன அறிவியலின்படிஅறமற்றதுமான ஒரு சோதனையைச் செய்ய முற்பட்டார். 

சாராவின் கைகளில் இருந்த மாட்டம்மைக்கொப்புளங்களின்சீழிலிருந்து உலர்ந்த பொடியைத் தயாரித்த ஜென்னர்1796 மே மாதம் 4-ம் தேதி அவரது தோட்டக்காரரின்8 வயது பேரன் ஜேம்ஸ்பிப்ஸின் இரு கைகளிலும் லேசான கீறல்களை உருவாக்கி அவற்றின் மீது அந்தப் பொடியைலேசாகத்தேய்த்துவிட்டார். 

சிலநாட்களில்ஜேம்ஸுக்கு மிக லேசான மாட்டம்மைஅறிகுறிகளும்காய்ச்சலும் உண்டானது. எனவே மாட்டம்மை ஒரு தொற்றுநோய் என்பதை ஜென்னர்நிரூபித்தார்.அடுத்தகட்டமாகமாட்டம்மை நோய் எப்படி பெரியம்மைக்கெதிரானஎதிர்ப்பைக் கொடுக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டி இருந்தது. பிப்ஸுக்கு லேசான காய்ச்சல் பசியின்மைஆகியவற்றைத் தவிர வேறு சிக்கல்கள் எழவில்லை, 10ம் நாள் பிப்ஸ் முழுக்க நலமடைந்தான்.

அந்தச்சிறுவனுக்குஜென்னர்பெரியம்மைக்கொப்புளங்களிலிருந்து எடுக்கப்பட்ட  சீழ் ஊசியை ஜூலை 1-ம் தேதி அளித்தார். அவனுக்கு பெரியம்மை நோய்த்தொற்று  உண்டாகவே இல்லை.

அதன்பிறகு வரலாற்றுச்சிறப்பு மிக்க அந்தத் தடுப்பூசியை தனது மகன்  உள்ளிட்ட மேலும் 25 மனிதர்களுக்கு செலுத்தி அவர்களுக்கும் பெரியம்மை உண்டாகவில்லை என்பதை நிரூபித்து,ஆய்வு முடிவுகளை லண்டனில் தனது சொந்தச்செலவில்`An Inquiry into the Causes and Effects of the VariolaeVaccinae` என்னும் தலைப்பில் ஒரு சிறு நூலாக  ஜென்னர்பிரசுரித்தார். அதன்பின்னரேராயல்சொசைட்டிக்கு அந்த அறிக்கை குறித்த தகவல்கள்தெரியவந்தது.மூன்றுபாகங்களாகஅமைக்கப்பட்டிருந்த அந்த நூலில்ஜென்னர் மாடு என்பதற்கானலத்தீனச்சொல்லானவேக்கா(vacca) என்பதை உபயோகித்து அந்த தடுப்பூசி செலுத்தும் முறைக்குவேக்ஸினேஷன்-vaccination என பெயரிட்டிருந்தார்.

பின்னர் ஜென்னெர்லண்டனுக்குச் சென்று இந்தத்தடுப்பூசிபோட்டுக்கொள்ளதன்னார்வலர்களைத்தேடிக்கண்டுபிடித்தார். ஜென்னரிடமிருந்து சீழ் மருந்தை வாங்கி இருந்த  ஜார்ஜ் பியர்சன், ஹென்றி மற்றும் வில்லியம்ஆகியோரும்லண்டனில் அந்த ஊசியைசெலுத்திக்கொண்டிருந்தார்கள். George Pearson , William Woodville &  Henry Cline 

அதிலும் ஜென்னெருக்கு பல பிரச்சனைகள்உருவாகின. பியர்சன்தடுப்பூசிகண்டுபிடிப்பில்ஜென்னருக்குஎந்தத் தொடர்பும் இல்லை தானே அதைக்கண்டறிந்த்தாகலண்டனில் சொல்லிக்கொண்டிருந்தார்.

வில்லியம்மாட்டம்மைச்சீழுடன் பெரியம்மை சீழை கலந்து நோய்த்தடுப்பைசிக்கலாக்கியிருந்தார்.

பலரும் ஜென்னர்கட்டியவழியிலேயேதடுப்பூசி தயாரித்து உபயோகித்தார்கள் எனினும் ஜென்னர் தயாரித்தது போல மிகச்சரியாக பலர் தயாரிக்கவில்லை எனவே அதன் செயல்பபாடுகள் சில இடங்களில் திருப்தியளிக்கவில்லை.

மாட்டம்மைஉலகின் எல்லா பகுதிகளிலும்பரவியிருக்கவில்லை எனவே தூய மாட்டம்மைச் சீழ் கிடைப்பதும்அதைப் பாதுகாத்து வைப்பதும், ஊசியாகஉபயோப்பதும்அனைவருக்கும் எளிதாக இல்லை.மேலும் உடலின் நோயெதிர்ப்புக் குறித்த அறிவியல் அடிப்படை அப்போது பலருக்கும் தெளிவாக இல்லாததும் கூடுதல் சிக்கலை உருவாக்கியது. 

மாட்டம்மைக்கொப்புளங்களின் சீழ் தேவைப்படுவோர்ஜென்னரையேநாடவேண்டி இருந்தது.   மாட்டம்மைச்சீழை  உலர்த்தி பத்திரப்படுத்தி உலகின் பல பாகங்களுக்கும்எந்தச்  சலிப்புமின்றிஜென்னர் தொடர்ந்து அனுப்பி வைத்துகொண்டிருந்தார். அவரே அவரை உலகின்தடுப்பூசி அலுவலர் என்றழைத்துக்கொண்டார்.  

ஆங்காங்கே சில தவறுகள் நடந்தாலும் ஜென்னரின் அந்தத் தடுப்பூசி முறை வேகமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கும்  பின்னர் அங்கிருந்து  உலகின் மற்ற பகுதிகளுக்கும்பரவியது.   பெரியம்மை இறப்பு வெகுவாகக் குறைந்தது. 

ஜென்னரின் புகழ் உலகெங்கும் பரவியது. எனினும் ஜென்னர் இந்த பாராட்டுகளில் அதிக ஆர்வம் காட்டாமல்பெரியம்மையை உருவாக்கும் காரணிகளைகண்டுபிடிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார். அவரது மருத்துவத்தொழிலும் குடும்ப நிர்வாகமும் இதனால் வெகுவாகப்பாதிக்கப்பட்டாலும்ஜென்னர் பெரியம்மை நோய்க்கிருமியைகண்டுபிடிப்பதிலேயே தன் கவனத்தைச்செலுத்தினார். 

அப்போது வைரஸ் என்னும் நுண்ணுயிர் கண்டுபிடிக்க பட்டிருக்கவில்லை எனவே ஜென்னருக்குப் பெரியம்மை எப்படி எதனால் உருவானது என்பது தெரிந்திருக்கவில்லை ஆனால் உலகெங்கிலும் பெரியம்மை நோயால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க இந்த மாட்டம்மைத்தடுப்பூசியைபிரபலமாக்கினார். அவரது Chantry என்னும்  பெரிய வீட்டின் ஒரு பகுதியில் ஒரு சிறு குடிசையை உருவாக்கிய ஜென்னர் அதற்கு தடுப்பூசிக் கோவில் (“Temple of Vaccinia”) என்று பெயரிட்டு அங்கே அன்றாடம் ஏராளமான ஏழைகளுக்கு இலவசமாக அந்த தடுப்பூசியைஅளித்துக்கொண்டிருந்தார்.    அவரது சேமிப்பு கரைந்துகொண்டே இருந்தது.

எனவே அரசு  அவருக்கு முதல்தவணையாக10ஆயிரம் பிரிட்ஷ் பவுண்டு நிதியையும் இரண்டாவது தவணையாக20 ஆயிரம் பவுண்டு நிதியையும் பரிசாக அளித்து அவரது ஆராய்ச்சியையும்மக்களுக்குத்தடுப்பூசி தொடர்ந்து அளிக்கப்படுவதையும் ஊக்குவித்தது. 

உலகெங்கும் ஜென்னரின் புகழ் வேகமாகப்பரவியது. ஜென்னர் பல மருத்துவர்களுக்கு அந்தத் தடுப்பூசியை உருவாக்கி செலுத்தும் முறையைபயிற்றுவித்தார்.ஜென்னர்  உருவாக்கிய அதே பாதையில் தான் 100 வருடங்கள் கழித்து லூயிபாஸ்டரும்  பயணித்து ரேபிஸுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்தார், ஜென்னரைபெருமைப்படுத்தும் விதமாக லூயி அந்த முறைக்குஜென்னர்உபயோகப்படுத்திய அதே  வேக்ஸினேஷன் என்னும் பெயரையேவைத்துக்கொண்டார்.

ஜென்னருக்கு ஏராளமான விருதுகளும்பாராட்டுகளும்கிடைத்தன.1821-ல்நான்காம் ஜார்ஜ் மன்னரின்பிரத்யேகமருத்துவராக  ஜென்னர் நியமனம் செய்யப்பட்டார். 

ஜென்னருக்குஅளிக்கப்பட்டவிருதுகளில் மிகச் சிறப்பானதாகநெப்போலியன்1804-ல் அளித்த ஒரு பதக்கமும், ரஷ்யப்பேரரசி அளித்த ஒரு மோதிரமும் கருதப்படுகிறது. டோக்கியோவிலும்லண்டனிலும்ஜென்னரின்உருவச்சிலைநிறுவப்பட்டது.  

ஜென்னர் அவரது சொந்த ஊரின்மேயராகவும்அமைதிக்கானநீதிபதியாகவும்நியமிக்கப்பட்டார்

பெயரும்புகழும்விருதுகளும் இருந்த அளவுக்கேஜென்னருக்கெதிரான  கண்டனங்களும்,  அந்த தடுப்பூசிக்குஎதிர்ப்புகளும்  இருந்தன. அவரைக் குறித்த அவதூறுகள் பரப்பப்பட்டன ஆனால் ஜென்னர் அவற்றை சற்றும் பொருட்படுத்தவில்லை.

ஜென்னரை கடுமையாக விமர்சித்தவர்களில்  சமயகுருக்கள்அதிகம்பேர் இருந்தனர்.  நோயுற்றஉடலிலிருந்துஎடுத்தவற்றைஆரோக்கியமானவர்களின் உடலில் செலுத்துவதுஇயற்கைக்கும்கடவுளுக்கும் எதிரானது என்னும் கண்டனத்தை வலுவாக ஜென்னருக்கெதிரே அவர்கள் முன்வைத்தார்கள். 

1802-ல்ஜென்னரின்  மாட்டம்மைதடுப்பூசியைப்போட்டுக்கொண்டவர்களுக்குமாட்டுத்தலைமுளைப்பதாகவும், குளம்புகள்  உருவாவதாகவும்கேலிச்சித்திரங்கள். நாளிதழ்களில்வெளியாகின. ஆனால் மாட்டம்மைத்தடுப்பூசியின்   பெரியம்மைகெதிரான   வெற்றிகரமான செயல்பாட்டினால் ஜென்னரின் புகழ்  அப்படியான கேலி, கண்டனங்கள்எதிர்ப்புக்களுக்குமத்தியிலும்வெகுவாகப்பரவியது. 

ஜென்னர்தடுப்பூசியை மேம்படுத்துவதிலும் பெரியம்மை நோய்க்கான காரணத்தை அறிந்து கொள்வதிலும் தொடர்ந்து ஆய்வுகள் செய்துகொண்டிருந்தார். அவரது காதல் மனைவி கேதரின் காசநோயால்1815-ல்மரணிக்கும் வரை தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த ஜென்னர் மனைவியின் மரணத்குப் பிறகு முற்றிலும் அவற்றிலிருந்து விலகினார்.எட்வர்ட்ஜென்னர்  1823-ல்மரணமடைந்தார்   

அவரது வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது.அந்தப் பூங்காவில் ஜென்னர் அரண்மனையில்மருத்துவராகப்பணியிலிருக்கையில் அங்கிருந்து கொண்டு வந்த திராட்சைக் கொடியின் தண்டுகளிலிருந்து உருவாகிய  ஏராளமான திராட்சைக் கொடிகள் தோட்டத்தில் வளர்கின்றன.

ஜென்னரின்இந்தக் கண்டுபிடிப்பில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மருத்துவ வரலாற்றில் பல்லாயிரக் கணக்கான மனிதர்களைக் காப்பாற்றியவர்களில் ஜென்னர் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.  

1967-லிருந்து உலக சுகாதார  நிறுவனம் பெரியம்மை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.  70-களில் நான் பள்ளிச்சிறுமியாக இருக்கையில் சுவர்களில் பெரியம்மை இருப்பதாக அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தால் ஆயிரம் ரூபாய் பரிசு என்றெழுதப்பட்ட வாசகங்களைக் கண்டிருக்கிறேன். என் பள்ளித்தோழன் மணிகண்டனுக்கு பெரியம்மை கண்டு அவன் பார்வையிழந்ததையும் அறிந்திருக்கிறேன்.

உலக சுகாதார நிறுவனத்தின் பணியாளர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெரியம்மை கொப்புளச்சீழ் உலர்பொடிகளை தேடிக் கண்டறிந்து அழித்தார்கள்.

1975 -ல் பங்களாதேஷில் ரஹிமா பானு என்னும் 3 வயது பெண் குழந்தைக்கு பெரியம்மை நோய் உண்டாகி இருந்தது. பில்கிஸுன்னிஸா என்னும் 8 வயதுச் சிறுமி அது பெரியம்மையாக இருக்கக்கூடும் என்று பெரியம்மை ஒழிப்பு சுகதார அலுவலர்களிடம் தெரிவித்தாள். ரஹிமா தனிமைப்படுத்தப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுக் குணமாக்கப்பட்டாள் . ரஹிமாவே ஆசியாவின் கடைசி பெரியம்மை நோயாளி,பில்கிஸுன்னிஸாவுக்கு பெரியம்மை நோயை தெரிவித்ததற்காக 250 Taka (180 இந்திய ரூபாய்) பரிசாக அளிக்கப்பட்டது.

ரஹிமா

உலகின் கடைசி பெரியம்மைத் தொற்றுசோமாலியாவில்1977-ல் கண்டறியப்பட்டது. சொமாலியாவின் அலி மாவோ மாலின் (Ali Maow Maalin ) என்பவருக்கு உண்டான பெரியம்மை அக்டோபர் 30, 1977 அன்று முழுக்கக் குணமாக்கப்பட்டது.

அலி மலேரியாவினால் ஜூலை 22, 2013 -ல் மரணமடைந்தார். அவரே இயற்கையாக பெரியம்மை தொற்று உண்டான உலகின் கடைசி மனிதர். 1980-ல் உலக சுகாதார நிறுவனம் பெரியம்மை உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்று அறிவித்தது.   உலகின்மிக அபாயகரமான தொற்று நோய்களில் முதலில் ஒழிக்கப்பட்டதுபெரியம்மைதான்.

பெரியம்மையை உருவாக்கும்  வேரியோலாவைரஸின்மாதிரிகள் தற்போது சைபீரியா மற்றும் அமெரிக்காவின் இரு ஆய்வகங்களில் பல அடுக்கு பாதுகாப்புடன்வைக்கப்பட்டிருக்கின்றன.  

A WHO poster commemorating the eradication of smallpox in October 1979, which was officially endorsed by the 33rd World Health Assembly on May 8, 1980.

சாராவின்பசுமாடுபிளாஸம்இறந்த பின்னர் அதன்  பதப்படுத்தப்பட்ட தோல் ஜென்னரால்  லண்டன் செயிண்ட் ஜார்ஜ் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பரிசளிக்கப்பட்டது.  நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெருநோய்த் தொற்று ஒன்றிலிருந்துமனிதகுலத்தை விடுவிக்க ஜென்னர்ஈடுபட்டிருந்த பெரும் போராட்டமொன்றின் சாட்சியாக அந்த பசுமாட்டின் தோல் இன்றும் மிகப் பத்திரமாக அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது .

ஜென்னர்வெப்பக்காற்றுபலூன்சோதனையில்ஈடுபட்டநாளின்240 வது நினைவு தினம் 2024. செப்டம்பரில்அதுபோலவேவெப்பக்காற்றுபலூன்களைப்பறக்கவிட்டுகொண்டாடப்பட்டது.  

அத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஜென்னரின்கண்டுபிடிப்பிலிருந்து சமீபத்திய கோவிட்பெருந்தொற்றுவரையிலான மருத்துவ வரலாற்றின்சங்கிலியில்கோவிட்தடுப்பூசியினால் பிழைத்து இந்தக்கட்டுரையைவாசித்துக்கொண்டிருக்கும் நாமும் கண்ணிகள்தான்.

 பிரான்ஸிஸ்கால்டன் (Francis Galton)

’’In science credit goes to the man who convinces the world, not the man to whom the idea first occurs’’ 

என்று சொல்லி இருக்கிறார். இதற்கு ஜென்னரைத் தவிர வேறு யாரும் அத்தனை பொருத்தமாக இருக்கமாட்டார்கள்

மேலதிகத்தகவல்களுக்கு:

  1. https://www.who.int/news-room/spotlight/history-of-vaccination/a-brief-history-of-vaccination
  2. https://www.nlm.nih.gov/exhibition/smallpox/sp_vaccination.html
  3. How One Daring Woman Introduced the Idea of Smallpox Inoculation to England‘, 
  4.  ‘Edward Jenner and the history of smallpox and vaccination‘, 
  5. https://www.jameslindlibrary.org/wp-data/uploads/2010/05/J-R-Soc-Med-2018-07-Morabia-255-257.pdf  6.https://artuk.org/discover/stories/the-smallpox-vaccine-edward-jenner-and-a-cow-called-blossom
  6. * The TV series South Park (“Chickenpox“) and The Simpsons (“Milhouse of Sand and Fog“) each aired an episode featuring a pox party intended to spread varicella.
  7. *Gloucestershire.

சுநீதி, நிர்மலா மற்றும்  நூரி!

சென்னை காட்பாடி இரவு ரயிலில் நிர்மலாவும் அவரது கணவரும்  கையில் வைத்திருந்த ஒரு சிறிய பெட்டியுடன் ஏறினார்கள். பெட்டியில் ஐஸ் துண்டங்களுக்கு மத்தியில்  ரத்த மாதிரிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சீரம்   80 சோதனைக்குழாய்களில்  பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை வேலூர் போய்ச் சேர்ந்த இருவரும் அங்கிருந்து ஆட்டோவில் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு (CMC) சென்றனர்.

அங்கு  வைராலஜி துறையின் இயக்குநர் ஜேகப் (Jacob T John) அவர்களுக்காகக் காத்திருந்தார். நிர்மலா கொண்டு வந்திருந்த  மாதிரிகளைச் சோதனை செய்ய உதவிக்கு ஜார்ஜ் பாபு மற்றும் எரிக் சைமோஸ் (P George Babu and Eric Simoes) ஆகியோரை அனுப்பினார்.

அப்போது சென்னையில் ELISA சோதனை செய்யும் ஆய்வகங்கள் இல்லை எனவேதான் நிர்மலா வேலூர் வந்திருந்தார்.  காலை 8.30-லிருந்து சோதனைகள் ஆரம்பமாகின. நிர்மலாவின் கணவர் ஆய்வகத்துக்கு வெளியே பொறுமையாகக் காத்திருந்தார். மூவரும் மும்முரமாக ஆய்வைத் தொடர்ந்தனர். மதியம் மின்சாரம் தடைப்பட்ட போதுதான்  ஒரு சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு ஆய்வகத்திலிருந்து வெளியே சென்று  அனைவரும் தேநீர் அருந்தினார்கள். 

தேநீர்க் கடையிலிருந்து திரும்பி ஆய்வகத்துக்குள் முதலில் நுழைந்து, 80  மாதிரிகள் இருந்த அந்த  ELISA சோதனையின் தட்டுப் போன்ற அமைப்பின் மூடியை மெல்ல தூக்கிய ஜார்ஜ் பாபு, அதிர்ந்துபோய் உடனே அதை மூடினார். 

நிர்மலா அதன் அருகே சென்றதும் ’’விளையாடாதீர்கள் எடுக்க வேண்டாம்’’ என்று  ஜார்ஜ் பாபு எச்சரித்தார். ஆனால் அதற்குள் அதில் 6 மாதிரிகள் மஞ்சள் நிறமாகி இருந்ததை  நிர்மலா  பார்த்துவிட்டார். இந்த ஆய்வின் துவக்கத்திலிருந்தே இதை ஆரம்பிக்கக் காரணமாயிருந்த Dr.சுநீதியும், Dr நிர்மலாவும் இந்த முடிவுகள் இப்படி வராது என்றே நினைத்திருந்தனர். ஆனால்  அந்த 6 மாதிரிகள் இந்தியாவுக்குள் நுழைந்திருந்த பேராபத்தை அடையாளம் காட்டி இருந்தன.

பின்னர்  வந்த சைமோஸ் இதை அறிந்ததும் இயக்குநரை அழைக்க ஓடினார்.  அடுத்த நிமிடம் இயக்குனர் ஜேகப் அங்கே வந்தார். அந்த 6 மாதிரிகளும் அவர்கள் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தன.

ஜேகப் நிர்மலாவிடம் அப்போதுதான் ’’இந்த ரத்த மாதிரிகளை எங்கிருந்து எடுத்தீர்கள்’’? என்று கேட்டார்.

நிர்மலா அவற்றைச் சென்னையின் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடமிருந்து பெற்றதைச் சொன்னார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஜேகப் நிர்மலாவிடமும் அவரின் கணவரிடமும் அந்தச் சோதனையின் முடிவுகள் குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வரை ரகசியம் காக்கும் படி அறிவுறுத்தினார்.

அவர்கள் இருவரும் அதிர்ச்சி நீங்காமலேயே சென்னை திரும்பினார்கள். சென்னை வந்த உடனேயே நிர்மலா சுநீதியை சந்தித்து 6 மாதிரிகள் நிறம் மாறியதை தெரிவித்தார்.

ஆபத்தை உணர்ந்து கொண்ட சுநீதி உடனடியாக அந்த 6 பெண்களிடமும் மீண்டும் ரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு, அவற்றை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றார். அமெரிக்காவில் அந்த ரத்த மாதிரிகளில்  நடந்த  Western Blot ஆய்வு இந்தியாவில் எய்ட்ஸ் அறிமுகமாயிருப்பதை  உறுதி செய்தது.

உடனடியாக அந்த  முக்கியமான செய்தி அப்போதைய பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தமிழக சுகாதார அமைச்சர் எச்,வி ஹண்டேவுக்கும் தெரிவிக்கப்பட்டது. எச்,வி ஹண்டே தமிழக சட்டசபையில்  இதை அறிவித்தபோது பார்வையாளர்கள் அமரும் இடத்தில் சுநீதியும் நிர்மலாவும் இருந்தனர்.

38 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் எய்ட்ஸ் இருப்பதை சுநீதி, நிர்மலா என்னும் இந்த இரு பெண்களும் தான் முதலில் கண்டறிந்தவர்கள்.

1981, 82-ல்தான் எய்ட்ஸ் இருப்பது உலகுக்கு தெரியவந்தது.   அதிகாரபூர்வமாக   எய்ட்ஸ் தொற்று இருப்பது 1981, ஜூன் 5 அன்று அட்லாண்டாவில் இயங்கும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. 

18981-ல் லாஸ் ஏஞ்சலீஸ் மருத்துவமனையில் ஐந்து ஓரினச் சேர்க்கையாளர்களான இளைஞர்கள் அரிய வகை நிமோனியா மற்றும் சருமப்புற்றுக்காகச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். (Pneumocystis pneumonia (PCP) &  Kaposi’s sarcoma) அவர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக மிகக் குறைவாக இருந்தது.   மேலும் சில  மருத்துவமனைகளிலும் இப்படியான சிகிச்சைக்கு தொடர்ந்து இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டபோது,  இந்த உடல்நிலை பிரத்யேகமாக  ஓரினச் சேர்கையாளர்களுக்கானது எனக் கருதப்பட்டு GRID-Gay related immune disease  என்று  பெயரிடப்பட்டது. எனினும் தொடர்ந்த 18 மாதங்களில் எல்லாத் தரப்பினருக்கும் இந்த அறிகுறிகள் தென்பட்டன. 

எனவே  1982, ஜூனில்  இது பாலுறவின் வழி பரவும், நோய் அறிகுறிகளின் தொகுப்பு (Syndrome) எனக் கண்டறியப்பட்டு அந்த ஆண்டு ஆகஸ்டில் இது எய்ட்ஸ் என  நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் பெயரிடப்பட்டது.

1983-லிருந்து  ஃபிரான்ஸின் பாஸ்டர் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களால் ஆராயப்பட்டு, LAV, HTLV-III, ARV  ஆகிய பெயர்களில்  எய்ட்ஸ் வைரஸ் குறிப்பிடப்பட்டது. ஆனால்   வைரஸை இனங்காணும் சர்வதேச அமைப்பு அந்தப் பெயர்களை நிராகரித்து எய்ட்ஸ் உருவாக்கும் வைரஸுக்கு  HIV என்னும் பெயரை இறுதியாகப் பரிந்துரைத்தது.

பிறகு உலகெங்கும் எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். எய்ட்ஸ் 1930-1950-களிலேயே இருந்ததும் முதல் எய்ட்ஸ் நோயாளி காங்கோவைச் சேர்ந்த பழங்குடியினத்தவர் என்பது முன்பே  வேறொரு நோயின் பொருட்டு எடுக்கப்பட்டு சேமிப்பில் இருந்த அவரது ரத்த மாதிரியிலிருந்து  பின்னர் உறுதி செய்யப்பட்டது.

1960-களில் மேற்கு ஆப்பிரிக்காவில் HIV-2 வகை வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. 

1983-க்கு பிறகு அடுத்தடுத்து உலகின் பல நாடுகளில்  எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைகளும் மருந்துகளுக்கான ஆராய்ச்சிகளும் முழுவேகத்தில் நடந்தன.

1985-ல் HIV வைரஸ் கண்டுபிடிப்பதற்கான சோதனையான ELISA பெருநகரங்கள் பலவற்றில் பயன்பாட்டுக்கு வந்தது. ரத்த வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் ரத்த வகைகளிலும் இந்த சோதனைமூலம் நோய்க்கிருமியைக் கண்டறிய முடிந்தது. 

உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால்   பாதிக்கப்பட்டிருப்பதும் எய்ட்ஸ் ஒரு உலகளாவிய தொற்று (Pandemic) என்பதும் உறுதியானது. ஆனால் இந்தியாவில் எய்ட்ஸ் அப்போது கண்டறியப்பட்டு இருக்கவில்லை.

1984. 85-ல் உலகில் எய்ட்ஸ் தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கையில் இந்தியாவிலும்  எய்ட்ஸ் இருக்குமா என்னும் ஆய்வுகள் மும்பை மற்றும் பூனேவில்  நடத்தப்பட்டன, ஆனால் அந்த ஆய்வின் முடிவுகள் இந்தியாவில் எய்ட்ஸ் இல்லை என்று தெரிவித்தன.

அப்போதுதான் 1985-ல் மருத்துவரான நிர்மலா   மருத்துவர் சுநீதியிடம் தனது நுண்ணுயிரியல் மேற்படிப்பின் ஆய்வுக்காக இணைந்திருந்தார். சர்வதேச சஞ்சிகைகளில் உலகின் பிற நாடுகளில் பரவிருந்த எய்ட்ஸ் குறித்து வாசித்தறிந்திருந்ததால், இந்தியாவிலும் எய்ட்ஸ் இருக்குமா என அறிய விரும்பிய சுநீதி ’Surveillance for Aids in Tamil Nadu’ என்னும் தலைப்பில் சென்னையில்  எய்ட்ஸ் இருக்கிறதா என்று நிர்மலாவிடம் ஆய்வு செய்யச் சொன்னார்.

38 வருடங்களுக்கு முன்னர் பக்தி, கூட்டுக்குடும்பம், பாலியல் ஒழுக்கம் இவற்றுக்கெல்லாம் உதாரணமாக இருந்த இந்தியாவில் எய்ட்ஸ் வருவதற்கு சாத்தியமே இல்லையெனக் கருதப்பட்டது.

அப்போது 32 வயதாக இருந்த பள்ளி செல்லும் இரு குழந்தைகளின் தாயான நிர்மலா ஒரு பாரம்பரிய இந்துக்குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது கணவர்  நிர்மலாவை அந்த மருத்துவ ஆய்வில் ஈடுபடச் சொல்லி  ஊக்குவித்தார். 

நிர்மலாவும் அந்த ஆய்வைத் தொடங்கும்போது இந்தியாவில் எய்ட்ஸ் இருக்கும் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று என்றுதான் நம்பி இருந்தார்.

இந்திய நாளிதழ்கள் அப்போது எய்ட்ஸ் என்பது   கட்டட்ற்ற பாலியல் சுதந்திரமும், ஓரினச் சேர்க்கையாளர்களும் நிறைந்த   மேற்குலகின் நோய் என்றுதான் குறிப்பிட்டன.

மேலும் சில பத்திரிக்கைகள் அப்படி ஒருவேளை இந்தியாவுக்கு எய்ட்ஸ் வருமேயானால் அதற்குள் அமெரிக்கா அதற்குச் சிகிச்சையளிக்க மருந்தைக் கண்டுபிடித்து விடும் என்றும் எழுதின.

மும்பையிலும் புனேவிலும் நடந்த சோதனைகள் அங்கு எய்ட்ஸ் இல்லை என்று தெரிவித்ததால் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் எய்ட்ஸ் வர வாய்ப்பே இல்லை என்று தான் நம்பப்பட்டது.

இந்த ஆய்வுக்காக ஆப்பிரிக்க மாணவர்கள்,  போதை அடிமைகள்,பாலியல் தொழிலாளிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களிடமிருந்து  200 ரத்த மாதிரிகள் நிர்மலா சேகரிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டது. 

ஆனால் அது நிர்மலாவிற்கு அத்தனை எளிதாக நடக்கவில்லை.  இந்த ஆய்வுக்கு முன்பு நிர்மலா நாய்கள் மற்றும் கொறித்துண்ணிகளுக்கு உண்டாகும் பாக்டீரிய நோயைக் குறித்து ஆய்வு செய்திருந்தார். எய்ட்ஸ் குறித்து அவருக்கு எதுவும் அப்போது தெரிந்திருக்கவில்லை. 

மும்பை போன்ற நகரங்களில் இருப்பதுபோலப் பாலியல் தொழிலுக்கென்று குறிப்பிட இடம் சென்னையில் இல்லை. எனவே  நிர்மலா சென்னை அரசுப் பொது  மருத்துவமனைக்குப் பால்வினை நோய்களுக்குச் சிகிச்சை பெற வரும் பாலியல் தொழில் செய்யும் பெண்களைத் தேடிச் சென்றார். 

மருத்துவமனைக்கு வந்த   பாலியல் தொழில் செய்யும் இரு பெண்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் நட்பும் கொண்ட நிர்மலா அவர்களின் உதவியுடன் பாலியல் தொழிலுக்காகக் கைதுசெய்யப்பட்டு, அவர்களில் பெயில் தொகை கட்ட வசதி இல்லாதவர்கள் திருந்தி வாழ்வதற்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் (vigilance home) அரசுக் காப்பகத்தில்  இருந்த பெண்களைச் சந்தித்தார்.

நிர்மலா எய்ட்ஸ் ஆய்வுக்கான ரத்த மாதிரிகளைப் பல இடர்பாடுகளுக்கு மத்தியில்  சேகரித்தார்.  அந்தப் பெண்கள் காப்பகத்திலிருந்து மொத்தம் 102 மாதிரிகளைச் சேகரித்த நிர்மலா ஓரினச்சேர்க்கையாளர்களின் ரத்த மாதிரிகளுக்காகச் சென்னை சிறைச்சாலைக்குச் சென்றார். அங்கும் பலத்த முயற்சிக்குப் பிறகு  21 ஓரினச்சேர்க்கையாளர்களின் ரத்த மாதிரியைப் பெற்றார்.

ஒரே ஊசியை மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்ளும் போதை அடிமைகளை நிர்மலாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் ஒரு ரத்ததான நிகழ்ச்சிக்கு வந்திருந்த 9 வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸுக்கான பரிசோதனைக்காக  ரத்த மாதிரி தேவைப்படுகிறது என்று உண்மையைச் சொல்லி ரத்தம் பெற்றுக்கொண்டார்.

ரத்த மாதிரிகளை சேகரிக்க நிர்மலா ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அங்கு வந்து விடுவார். நிர்மலாவை அரசுக்காப்பகத்தில்  அவரது கணவர் ஸ்கூட்டரில் கொண்டு வந்து இறக்கிவிடுவார். 80-களில் சென்னை போன்ற   பெருநகரில் தமிழ்க்குடும்பத்தின் திருமணமான பெண் இப்படியான ஆய்வில் ஈடுபட்டிருந்ததும், அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் உறுதுணையாக இருந்ததும் அரிதினும் அரிது.

மூன்று மாதங்களில் நிர்மலா தேவையான ரத்த மாதிரிகளைக் கையுறையோ வேறு எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லாமல் சேகரித்தார்.  ரத்தம் அளித்த பெண்களிடம் நிர்மலா எய்ட்ஸுக்கான ஆராய்ச்சியைக் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அந்தப் பெண்களுக்கும் எய்ட்ஸ் குறித்து அப்போது எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் பால்வினை நோய் சிகிச்சைக்கென நிர்மலா ரத்தம் சேகரிக்கிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தனர். 

ஒருவேளை நிர்மலா எய்ட்ஸ் குறித்து சொல்லி இருந்தாலும் படிப்பறிவற்ற அந்த ஏழைப் பெண்களுக்கு அதைப் புரிந்து கொண்டிருக்க முடியாது.

எய்ட்ஸின் தீவிரம் அறியாத நிர்மலா, சேகரித்த ரத்த மாதிரிகளைத் தனது வீட்டில் குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்திருந்து பின்னர் சுநீதியிடம் கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

சுநீதியின் கணவர் சாலமன்   இதயம் மற்றும் நுரையீரல் சிறப்பு மருத்துவர். அவர் உதவியுடன் சுநீதி ஒரு சிறிய ஆய்வகத்தை உருவாக்கி இருந்தார் அந்த ஆய்வகத்தில் நிர்மலா சேகரித்த ரத்த மாதிரிகளின் சீரத்தை பிரித்தெடுத்து சுநீதி சேமித்து வைத்திருந்தார். அவற்றைத்தான்  வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு நிர்மலாவும் அவரது கணவரும் கொண்டு சென்றனர்.

வேலூர் ஆய்வகத்தில் எலிஸா சோதனையில்  மஞ்சள் நிறமாக மாறி    எய்ட்ஸ் இருப்பதை காட்டிய அந்த 6 மாதிரிகளை மீண்டும் இரண்டு முறை நிர்மலா சோதித்து உறுதிப்படுத்திய பிறகுதான் சென்னை திரும்பிச் சுநீதியை சந்தித்தார்.

இரு பெண் ஆய்வாளர்களும் பலரின் கண்டனங்களையும் கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்கள். பலர் அப்படி எய்ட்ஸ் இந்தியாவில் இருக்க வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆய்வு தவறாகச் செய்யப்பட்டிருக்கிறது என்றும்  பலர் கருத்து தெரிவித்தார்கள்.

பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான் என்றாலும் மகாராஷ்டிர தோல் வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால்   ’எப்படி ஒரு வட இந்தியப் பெண் தமிழகப் பெண்களின் ஒழுக்க குறைவினால் நோய் வந்ததாகத் தெரிவிக்கலாம்’ என்றும் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. மருத்துவப்படிப்பு முடித்தபின்னர் சிகாகோவிலும் லண்டனிலும் பணியாற்றி விட்டே சுநீதி சென்னை மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல் பிரிவில்  1973-ல் இணைந்தார்.  அவரது ஆய்வின் நோக்கம்  பல்லாயிரக்கணக்கானோரை காப்பாற்றுவதுதான் என்பது அப்போது பலரால் புரிந்து கொள்ள பட்டிருக்கவில்லை  

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் தலைவர் நிர்மலாவிடன் ’’நீங்கள் கண்டுபிடித்திருப்பது கடலின் மேற்பரப்பில் தெரியும் பனி மலையின் உச்சியை மட்டும்தான், பேராபத்தை நாம் இனி வரும் காலங்களில் சந்திக்கவிருக்கிறோம்’’ என்றார்.

பொதுமக்களுக்கும் அரசுக்குமிருந்த அதே அதிர்ச்சி இதை வெளிக்கொண்டு வந்த இரு பெண்களுக்கும் இருந்தது. உடனடியாக நாடு தழுவிய எய்ட்ஸ் கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு நிகழ்வுகள்  1900-லிருந்து 2000 வரை ஒருங்கமைக்கப்பட்டன. அதன் முடிவுகள் எய்ட்ஸ்  என்னும் பெருந்தொற்று இந்தியாவின் மூலை முடுக்குகள் எங்கும் பரவி இருந்ததை உறுதிப்படுத்தின.

மேலும் சில வாரங்கள் காப்பகங்களுக்கும் சிறைச்சாலைக்கும் சென்று ரத்த மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வைத் தொடர்ந்து நடத்திய நிர்மலா 1987-ல் Surveillance for Aids in Tamil Nadu -தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கண்காணிப்பு என்னும் தனது ஆய்வேட்டை சமர்ப்பித்து அதற்கான் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றார். பின்னர் சென்னை கிண்டியில் அமைந்துள்ள  கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தடுப்பூசி ஆராய்ச்சிப் பிரிவில் இணைந்து பணியாற்றி 2010-ல் பணி ஓய்வு பெற்றார். 

தகுந்த நேரத்தில் எய்ட்ஸ் இருப்பதை கண்டுபிடித்துப் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய இத்தனை முக்கியமான ஆய்வுக்கான  அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்காததில் வருத்தம் இல்லையா? என்று கேட்கப்பட்டபோது நிர்மலா ‘’நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் இப்படி அங்கீகாரங்கள் குறித்தெல்லாம் யோசித்ததில்லை சமுதாயத்துக்கு ஏதோ ஒன்றை செய்யமுடிந்த மகிழ்ச்சியே எனக்குப் போதும்’’ என்றார்.

அச்சமயத்தில் ஒரு சில நாளேடுகள் நிர்மலாவையும் சுநீதியையும் குறிப்பிட்டு  கட்டுரை வெளியிட்டது. சுநீதிக்கு கெளரவ டாக்டர் பட்டமும், தமிழகத்தின்  எய்ட்ஸ் அமைப்புகள் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவையும் பிற்பாடு அளிக்கப்பட்டது. சுநீதியின் மறைவுக்குப் பிறகு தான் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ அளிக்கப்பட்டது. சுநீதியும் நிர்மலாவும் மருத்துவ வரலாற்றிலும்  பொது சமூகத்திலும் பின்னர் மறக்கப்பட்டார்கள்.  

நிர்மலா சேகரித்த  6 ரத்த மாதிரிகளில் ஒன்று 13 வயதே ஆன ஒரு சிறுமியுடையது. கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டு இருந்த அந்தச்  சிறுமி இந்த ஆய்வு முடிவுகள் வெளியான சில மாதங்களில் நோய் முற்றி மரணம் அடைந்தாள்.

அந்த முதல் 6 பெண்களில் நூரி என்னும் திருநங்கையும் இருந்தார் அவர் அந்த முடிவுகளுக்குப் பிறகு எப்படி எய்ட்ஸ் வந்தது என்னும் விசாரணையில் தாங்கள்  கடுமையாகத் தண்டிக்கப்பட்டதை இப்போதும் கசப்புடன் நினைவுகூறுகிறார்.

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் முகமது என்னும் பெயரில் இருந்த நூரி தனது 4-வது வயதிலிருந்தே தனக்குள் பெண்மையை உணரத் தொடங்கி இருந்தார். அவரது பெண்மை உணர்வை, நடவடிக்கைகளைச் சரியாக்க அவரின் அப்பா  கடும் வன்முறையைப் பிரயோகித்தார். 13 வயதில் அந்த வன்முறையின் குரூரத்தை தாங்க  முடியாமல் சென்னைக்கு ஓடி வந்த நூரி பிழைக்க வழி இல்லாமல் பாலியல் தொழிலுக்குத் தள்ளப் பட்டார்.

 நூரியின் அந்த இருள் நிறைந்த நாட்களின் ஒரே வெளிச்சக்கீற்றாக ஒரு ராணுவ வீரரின் காதல் இருந்தது. முறையாகப் பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறிய நூரி அவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த மகிழ்சியும் அதிக காலம் நீடிக்கவில்லை அவரது கணவர் அந்தமான் பகுதிக்குப் பணி மாற்றம்  செய்யப்பட்டபோது நூரி அவருடன் செல்லாமல் சென்னையில் தங்கிவிட்டார் 

அப்போதுதான் சுநீதியின் ஆய்வுக்கென நூரியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நூரி தனக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்த அந்த 1987-ன் ஜுலை 22-ம் , நாளை மறக்க முடியாமல் நினைவில் வைத்திருக்கிறார்.  

அதிகபட்சமாக இன்னும் இரண்டு வருடங்கள் தான் உயிர் வாழ முடியும் என்னும் செய்தியும் பேரிடியாக அவர்மேல் அப்போது விழுந்தது. மனம் உடைந்து போனவரைத் தேற்றி அரவணைத்துக் கொண்டது  உஷா ராகவன் என்னும் மருத்துவர்.  சிகிச்சை எடுத்துக்கொண்ட  நூரியை தையல் வேலையில் சேர்த்து  மாதம் 750 ரூபாய் வருமானம் கிடைக்க வழி செய்தார் உஷா ராகவன்

உஷா ராகவனுடன் இணைந்து நூரி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். ஒரு மருத்துவமனையில் உதவியாளராக இருந்த   நூரி அங்கு பணிபுரிந்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில்   தானே சொந்தமாக எய்ட்ஸ்  நோயாளிகளின்   நலனுக்காக     2001 அக்டோபர் 10 அன்று  South India Positive (SIP) Network என்னும் அரசு சாரா அமைப்பை  முறையாகப் பதிவு செய்து உருவாக்கினார். 

அந்த அமைப்பின் மூலம் இன்று வரை நூரி எய்ட்ஸ் இருப்போருக்கு ஆரோக்கிய வழிகாட்டல், சிகிச்சை, கைத்தொழில் பயிற்சி மற்றும் நிலையான  வருமானத்துக்கு உதவி பலரை பாலியல் தொழிலிருந்தும் மீட்டிருக்கிறார்.

எய்ட்ஸினால் இறந்து போன தனது மூன்று தோழிகளான  செல்வி, இந்திரா  மற்றும் பழனி ஆகியோரின் நினைவாக ஒரு அறக்கட்டளையையும் நூரி உருவாக்கி இருக்கிறார். 

மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் நூரி இப்போது தென்னிந்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு அமைப்பின் தலைவராக இருக்கிறார். நூரியின் 2 அறைகள் மட்டும் கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான அலுவலகம் முழுக்க எய்ட்ஸ் தினத்திலும் சர்வதேச மகளிர் தினத்திலும் திருநங்கயர் தினத்திலும்  அவருக்கு  அளிக்கப்பட்ட பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் பரிசுகளும் நிறைந்திருக்கிறது.

நூரிக்கு 2005-ல் வந்த ஒரு தகவல் அவரது சேவை அமைப்பை மேலும் விரிவாக்கியது. குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தை கிடப்பதாகச் செய்திவந்தவுடன் நூரி  அங்கு சென்று, பிறந்து 2 நாட்களாயிருந்த அந்தப்பெண் குழந்தையை எடுத்துக்கொண்டார். அதனருகில் இருந்த கடிதத்தில் அதன் தாய்க்கு எய்ட்ஸ் இருந்த தகவல் எழுதப்பட்டிருந்தது.

இளமைப்பருவம் என்ற ஒன்று இல்லாத தன் வாழ்க்கையின் பிழையீடாக அந்தக் குழந்தையை நன்றாக வளர்க்க முடிவு செய்த நூரி உடனடியாக எய்ட்ஸ் இருக்கும் குழந்தைகளுக்காக ஒரு அமைப்பையும் உருவாக்கினார். குழந்தைகள் நல அமைப்புடன் இணைந்து செயல்படும் இந்த அமைப்பு  200-க்கும் அதிகமான குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை  பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கிறது.  

அவர்களில் பல பெண்கள் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ்கிறார்கள். அவர்களின் குழந்தைகளும் பேரக்குழந்தைகளுமாக நூரி ஒரு மகிழ்ச்சியான தாயும், பாட்டியும், கொள்ளுப்பாட்டியுமாக வாழ்கிறார்.

இப்போது எய்ட்ஸுக்கான சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்டு வாழ்நாளை நீட்டிக்கும் மருந்துகளும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது உச்சத்தை தொட்டிருந்த எய்ட்ஸ் இருப்போரின் எண்ணிக்கை இப்போது வெகுவாகக் குறைந்திருக்கிறது. கடந்த 25 வருடங்களில் எய்ட்ஸ் சிகிச்சை. தடுப்பு மற்றும் விழிப்புணர்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும்  எய்ட்ஸ் சிகிச்சை  பெறுவோர் கண்ணியக்குறைவாக நடத்தப்படுவதும் அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

2009-ல் ஒரு நேர்காணலில் சுநீதி எய்ட்ஸ் இருப்பவரைக் கொல்வது வைரஸ் மட்டுமல்ல இந்தச் சமூகம் அவர்களை நடத்தும் விதமும்தான் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் எய்ட்ஸ் வரலாறை சுநீதிக்கு முன்னும் பின்னுமென இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். 

அந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு சுநீதி இந்தியாவின் முதல்  எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் சோதனைக்கான தன்னார்வ அமைப்பைச் சென்னை மருத்துவக் கல்லூரியில் துவங்கினார். 1988-93 வரையில் எய்ட்ஸ் வைரஸ்குறித்த கல்வி, சிகிச்சை மற்றும் விழிப்புணர்வில் இந்த அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டது  1993-ல் சுநீதி சொந்தமாக லாபநோக்கமற்ற  Y. R. Gaitonde Centre for AIDS Research and Education (YRGCARE) என்னும் அமைப்பைச் சென்னையில்   தோற்றுவித்தார். 

2015-ல் தனது 76-வது வயதில் கணையப் புற்று நோயினால் சுநீதி  மறைந்த பிறகு அவரது மகனும் மருத்துவருமான சுனில் சாலமன் அதை நிர்வகித்துத் தாயின் சேவையைத் தொடர்ந்து செய்கிறார். 

இந்த அமைப்பு எய்ட்ஸ் இருப்போரின் பள்ளிக்கல்வி,  நோய்த் தடுப்பு, சிகிச்சை, நிதியுதவி, வழிகாட்டுதல் இவற்றோடு எய்ட்ஸ் இருப்போருக்கான திருமண தகவல் மையத்தையும் நடத்துகிறது. இதுகுறித்து 2017-ல் வெளியான ஆவணப்படம் Lovesick பெரும் கவனம் பெற்றது.

எய்ட்ஸ் இருப்போருடன் கைகுலுக்கவும் கண்ணீர் துடைக்கவும் கூடத் தயங்கும் மறுக்கும் உலகில் சுநீதி அவர்களுக்கிடையே  மண உறவை அமைத்துக் கொடுத்தார். 3 பேருடன் துவங்கிய இந்த அமைப்பு இந்தியாவின் 28 மாநிலங்களில், பரவி விரிந்து ஆயிரக்கணக்கான பணியாளர்களுடன் இந்திய அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து எய்ட்ஸ் நோய்த் தடுப்பு சிகிச்சையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. 2022-ல் அகார் வளர்ப்பு ஊடகத்தில் உருவங்கள் அமைக்கும் போட்டியில் சுநீதியின் உருவம பரஸ்மிதா என்பவரால் உருவாக்கப்பட்டிருந்தது. உலக அறிவியல் தளத்தில்  இந்திய நுண்ணுயிரியல் முக்கியமான இடத்திற்கு  கொண்டு வந்த சுநீதிக்கு இந்த அகார் ஊடக உருவ அமைப்பு பொருத்தமான கெளரவம் தான்.

2011-க்குப் பிறகு எய்ட்ஸ் தொற்றும் வேகம் வெகுவாகக் குறைந்திருந்தாலும், இப்போது இந்தியாவில் சுமார் 24 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் இருக்கிறது.

இவர்களில் 77%த்தினருக்கு தங்களுக்கு HIV தொற்று இருப்பது தெரிந்திருக்கிறது  65%த்தினர் எய்ட்ஸுக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர்  55%த்தினரின் உடலில் இருக்கும் HIV  வைரஸின் அளவு குறைக்கப்பட்டு அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது

HIV மற்றும் எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டத்தின் குறிக்கோளான 2025-ல் சிகிச்சை, உடலின் வைரஸ் அளவை குறைப்பது மற்றும் எய்ட்ஸ் குறித்த அறிதலை தொற்று இருப்பவர்களுக்கு உண்டாக்குவது  ஆகிய மூன்றிலும் 95%த்தை எட்டுவது என்னும் குறிக்கோளை நோக்கித்தான்  இந்தியாவும் பயணிக்கிறது. 

சுநீதி இந்தியாவில் எய்ட்ஸ் இருப்பதை அப்போது கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளிகளும், பிராத்தல் அமைப்புக்களும், லட்சக்கணக்கில் வெளிமாநிலங்களில் வீட்டைப்பிரிந்து வேலை செய்வோரும் லாரி ஓட்டுநர்களுமாக எய்ட்ஸ் இந்தியாவில் பெருகி மாபெரும் அழிவைக் கொண்டு வந்திருக்கும் 

இப்போது எய்ட்ஸ் தொற்றுக்காளானவர்களை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் தொற்று உண்டாகும் வேகம் மிகக்குறைவாகத்தான் இருக்கிறது. இதற்கு நிச்சயம் சுநீதி மிக முக்கியமான பங்களித்திருக்கிறார். நூரி சொல்வது போலச் சுநீதி அறிவியல் உலகின் முக்கியமான கண்டுபிடிப்பை மட்டும் செய்யவில்லை, ஆயிரக்கணக்கில் எய்ட்ஸ் தொற்றுக்காளானவர்கள் ஆரோக்கியமாக வாழவும் கற்றுக்கொடுத்தார்,

அறிவியல் கண்டுபிடிப்புகள் சாதனைகள் என்றால் மேரி க்யூரியைத் தவிர வேறு பெண்களின் நினைவு வருவதே இல்லை. அப்படி  வளர்ப்பு ஊடகங்களில் பயன்படும் அகார் அகாரை கண்டுபிடித்த ஃபேனி ஹெஸ்ஸி, DNA-வின் வடிவத்தை முதன் முதலில் கண்டுபிடித்த ரோஸலிண்ட், சூழியலை தனது ஓவியங்களில் முதன்முதலாகச் சித்தரித்த மரியாசிபில்லா போன்றோரின் நீண்ட வரிசையில் சுநீதியும் நிர்மலாவும் இருக்கிறார்கள்.

எய்ட்ஸ் இருப்போருடன் கைகுலுக்கவும் கண்ணீர் துடைக்கவும் தயங்கிய காலத்தில் அவர்களுக்குத் தொடர்ந்து வாழ நம்பிக்கை அளித்த சுநீதி, தனக்கு எய்ட்ஸ் இருந்தும் அதனுடன் போராடிக்கொண்டே தன்னைப் போன்றோருக்காகச் சேவை செய்யும் நூரி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு முக்கிய ஆய்வைச் செய்த நிறைவுடன் தனது வாழ்வை அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிர்மலா ஆகியோரை  தமிழ்நாட்டிலேயே பலர் அறிந்து கொள்ளாமல் இருப்பதும்.  இவர்களைத் தாமதமாக அறிந்துகொள்வதற்கான பிழையீடாகவும் தான் இந்தக் கட்டுரை உருவா கியது.

 .

மேலதிக தகவல்களுக்கு:

தெய்வமதி!

சாம்பவி சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு இளங்கலை பொறியியல், தொழில்நுட்ப மற்றும் கட்டிடக்கலை படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய அளவில் தரப்படுத்தப்பட்ட கணினி அடிப்படையிலான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு -முதன்மை (பயப்பட ஒன்றுமில்லை JEE (Main என்பதை தமிழில் சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான்)  எழுதியிருந்தாள். 

வீட்டில் சரணுக்கு பிறகு சாம்பவிதான் இதை எழுதினாள். தருண் இந்த வழிக்கே போகவில்லை அவனது இலக்கான காட்டியலுக்கான தேர்வை மட்டும் எழுதினான். சரணும் சாம்பவியும் இந்த நுழைவுத்தேர்வுக்கென ஒருபோதும் பிரத்யேகமாக தயாரித்துக் கொள்ளவில்லை இதற்கென இருக்கும் சிறப்பு கட்டண கல்வி வகுப்புகளில் சேரவும் இல்லை. 

சரண் 1 வார க்ரேஷ் வகுப்புகளில் சேர்ந்திருந்தான். முதல்நாளின் முதல் வகுப்பில் ஆசிரியர் தவறாக சொல்லிக் கொடுத்த ஒரு பாடத்தின் பகுதியை வகுப்பில் திருத்தினான் பின்னர் அவனும் வகுப்புகளுக்கு செல்லவில்லை. மிக நல்ல மதிப்பெண்களை பெற்றான்.

சாம்பவி சரண்  தருண் மூவருமே அடிப்படையில் புத்திசாலிகள். தரமற்ற பள்ளிக்கல்வியும், பொருந்தாத வகுப்பறைச்சூழலும் ஆசிரியப்பணிக்கான அர்ப்பணிப்பும் தகுதியுமில்லாத,  தரப்படுகின்ற  சொற்ப சம்பளத்தின் அதிருப்தியை மாணவர்கள் மீதான வெறுப்பாக வெளிப்படுத்தும் ஆசிரியர்களுமாக மொண்ணையாக்கியதன் பிறகும் தப்பித்து வந்தவர்கள் மூவரும். 

சரணும் தருணும் ஒரு நல்ல பள்ளியில் பள்ளி இறுதியை கற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார்கள்.ஆனால் சாம்பவி அதை தவறவிட்டாள். வெண்முரசில் அம்பையை’’ நெய்யுண்ட வேள்விச்சுடர் போல்’’ என்று வர்ணிக்கும் ஒரு வரி வரும். அப்படி வீட்டின் கொற்றவையாக குலக்கொழுந்தாக இருக்கும் ஒற்றை மகளை வெளியே எங்கும் அனுப்ப முடியாத, அவள் முகம் காணமுடியாத மாலைகளில் வீடுதிரும்புவதை கற்பனையிலும் காணச் சகியாத விஜி என்னும் தகப்பனின் பலவீனத்தின் பலனை சாம்பவி இந்த இரு வருடங்கள் அனுபவித்தாள். 

 இந்த இருவருடங்களும் அவள் கல்வி கற்ற (அல்லது அவள் இருந்த ) அந்த இடம் அவளை ஏகத்துக்கும் சிதைத்தது. கல்வியை வியாபாரமாக்கிய பல நிறுவனங்களில் அப்பள்ளியும் ஒன்று.   இனி திரும்பக்கிடைக்கவே கிடைக்காத இளமைப்பருவத்தின் அரிய தருணங்களை அவளுக்கான ஓய்வை அவளுக்கான விருப்பங்களை இழந்தாள். தொடர்ந்த கடும் உழைப்பாலும் ஓய்வில்லாதாலும் கேசமிழப்பும் இருந்தது. அவளின் பத்திரத்தை உறுதி செய்யவும் அவள் மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்ளவும் விஜியும் இத்தனை ஆண்டுகள் பாடுபட்டதை காட்டிலும் இந்த இருவருடங்கள் கடுமையாக உழைத்தான். 

எளிதாக மகிழ்ச்சியாக பள்ளிக்கல்வியை நிறைவு செய்த காலங்கள் காணாமல் ஆகிவிட்டன. ஒரு விஷக்காய்ச்சல் போல அனைவரும் தாங்களாகவே கற்பிதம் செய்து கொண்டு இந்த இறுதி வகுப்புக்களை கடினமாக்கிக்கொண்டு  குழந்தைகளையும் கொடுமைப்படுதிக்கொண்டு கல்விக்கூடங்களுகு வருமானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

சாம்பவி மிக எளிதாக விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல் இந்த தேர்வை எழுதினாள். இந்த குறிப்பிடத்தக்க மதிப்பெண்களை அவள் எந்த சிரமமும் இல்லாமல் பெற்றது எனக்கு மகிழ்ச்சி மேலும் இதுபோன்ற சிறப்பு வகுப்புக்களின் அவசியமின்மையையும் இந்த தேர்வு முடிவுகள் காட்டுகிறது. 

சாம்பவி  புறத்தில் மட்டுமல்லாது அகத்திலும் அத்தையின் சாயலை கொண்டிருப்பவள். அவள் ஈடுபட்டிருக்கும் அனைத்திலும் அத்தையை கொண்டுதானே இருப்பாள்? 

தெய்வமதி ஸ்ரீ சாம்பவிக்கு  அன்பும் ஆசிகளும்!

« Older posts

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑