சீனாவின் யுனான் மாகாணத்தில் 1371-ல் இஸ்லாமியரான ஹாஜி மா’ வுக்கும் வென்’னுக்கும் பிறந்தார் மா ஹெ.
மா என்பது முகமது என்பதின் சீனப்பெயர். இளம் மா, கன்ஃபூஷியஸ், மென்சியஸ் உள்ளிட்ட பல அறிஞர்களின் நூல்களை விரும்பிப் படித்தான். அவனது தந்தையும் சகோதரர்களும் சென்று திரும்பிய மெக்காவின் ஹஜ் புனித யாத்திரைகளைக் குறித்தும் உலகநாடுகள் குறித்தும் ஆர்வமாக கேட்டுத்தெரிந்து கொள்வான். மாவிற்கு உலகைச்சுற்றிப்பார்க்கவேண்டும் என்னும் பேராவல் இருந்தது.
1381-ல் மா’விற்கு 11 வயதானபோது மிங் சாம்ராஜ்யத்தின் பேரரசர் ஹோங் வு’வின் ராணுவம் யுனான் பிரதேசத்தை தாக்கிக் கைப்பற்றியது. யுனானிலிருந்து மா உள்ளிட்ட ஏராளமான சிறுவர்கள் மிங் அரசவையில் அடிமைகளாகப் பணியற்ற பிடித்துச்செல்லப்பட்டார்கள்.
பண்டைய சீனத்தில் அரசரின் அந்தப்புரத்தில் இருந்த அவரது ஏராளமான மனைவியர் மற்றும் ஆசைநாயகிகளுக்கு பணிவிடைசெய்ய ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஆணிலிகளைத்தான் அனுமதிப்பார்கள். ஆணிலிகளால் அந்தப்புரப் பெண்களுக்கு வாரிசு உண்டாகும் வாய்ப்பில்லை என்பதால் எதிர்காலத்தில் அரசரின் வாரிசுகளுக்கு போட்டியாக வேறு குழந்தைகள் உருவாகாமல் இருக்க இப்படிச் செய்யப்பட்டது. அப்படி மா’வும் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு அந்தப்புரத்தில் பணியமர்த்தப்பட்டான்.
மா மிகக் கடினமாக உழைக்கும் சிறுவனாக இருந்தது பேரரசரின் கவனத்துக்கு வந்தது. அவர் மா’வுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க ஆணையிட்டார். மா பிற்பாடு இளவரசர் ஜு டி-யின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டு மங்கோலியர்களுக்கெதிரான பல போர்களில் அவருடன் இருந்து அவரைப் பாதுகாத்தார். பின்னர் இளவரசர் ஜு டி மிங் சாம்ராஜ்யத்தின் பேரரசரான பின்னர், பதவி உயர்வு பெற்று ஜெங் என்னும் அரசவைப் பெயரிடப்பட்டு மா ஹெ ஆக இருந்தவர் ஜெங் ஹெ ஆனார். (“Zheng” He)
ஏராளமான அதிகாரங்கள் கொண்டிருந்த ஜெங் ஹெ அரண்மனைக் கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டுமானங்களில் புகழ்பெற்றவரானார். சீனாவின் மாபெரும் கப்பற்படையை அவர் உருவாக்கினார். ஒரே சமயத்தில் இணையாக பல கப்பல்கள் இணைந்து செல்லும் கப்பற்தொகுதிகளில் 7 மாபெரும் கடற்பயணங்களை 1405-லிருந்து 1433 வரை ஜெங் ஹெ ஒருங்கிணைத்தார். செல்வங்களைத் தேடிச்செல்லும் 62 பொக்கிஷக்கப்பல்கள் உள்ளிட்ட நான்கு அடுக்குகள் கொண்ட 208 மரக்கப்பல்களில் 27800 வீரர்கள், அறிஞர்கள் உடைமைகளுடன் அவரது கப்பற்படை புறப்பட்டது.
உலகின் மிக முக்கியமான பிரதேசங்களுக்கு சென்று திரும்பிய அக்கப்பல்களில் ஜெங் ஹெ உணவு, மசாலாப்பொருட்கள், உடை மேலும் பல வினோதப்பொருட்களை ஏராளமாகக்கொண்டு வந்து மன்னருக்கு அளித்தார். அவரது கடற்பயணங்களின் நோக்கம் போரோ, நாடுகளை கைப்பற்றுதலோ அல்லாமல் புதியபொருட்களை சேகரிப்பதும், வணிகமுமாக இருந்ததால் சென்ற அனைத்து இடங்களிலும் அவருக்கு வரவேற்பு இருந்தது. தென்கிழக்காசியாவுக்குச் சென்ற அவரது ஒரு கடற்பயணத்தில் தனித்தனித் தீவுகளில் இருந்த ஆட்சியாளர்கள் அவருக்கு மிக வினோதமான ஒரு உணவுப்பொருளைப் பரிசளித்தார்கள்.

அத்தீவுகளில் நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்த ஒரு உணவுப்பொருளான அது பறவைகள் எச்சிலால் கட்டும் சிறு கிண்ணம் போன்ற உண்ணக்கூடிய கூடுகள்.
அக்கூடுகள் தீவின் சுண்ணாம்புக் குகையின் சுவர்களில் அமைக்கப்பட்டிருந்தன. சின்ன உழவாரப்பறவைகள் (swiftlets) முட்டையிட்டு குஞ்சுகள் வெளிவந்ததும் கைவிடப்பட்ட ஏராளமான கூடுகளைச்சேகரித்து உணவாக உண்பதை அத்தீவுவாசிகள் பலகாலமாக செய்துகொண்டிருந்தார்கள். அக்கூடுகள் சுவையாக இருந்ததோடு உண்பவருக்கு நல்ல ஆற்றல் அளித்து அவர்களை இளமையாக வைத்திருக்கவும் உதவின. மிகவும் அதிசயித்துப்போன ஜிங் ஹெ அந்தப்பறவைக்கூடுகளை அப்போது பதவியேற்றிருந்த மிங் சாம்ராஜ்யத்தின் புதிய இளம் பேரரசருக்குக் கொண்டு வந்தார்.
அரண்மனைச்சமையல்காரர்கள் அந்தப் பறவைக் கூட்டை கண்ணாடிபோல மின்னும் சூப்பாக செய்துகொடுத்து அதன் சுவையில் மயங்கிய இளம் பேரரசர் அப்பறவைக்கூடு உணவை அரச குடும்பத்துக்கான பிரத்யேக உணவாக அறிவித்தார். அப்போதிலிருந்து பறவைக் கூடு சூப் செல்வச் செழிப்பு, ஆரோக்கியம், நீளாயுள் மற்றும் புத்தம்புதிய சுவையின் அடையாளமானது. சமூகத்தின் மேல்தட்டு மக்களும் அதை சுவைக்கத்தலைப்பட்டனர். இந்த பறவைக்கூடு ஆயுளை அதிகரித்து ஆற்றல் அளிக்கும் என்பதோடு பாலுணர்வைத் தூண்டும் என்னும் கதையும் சேர்த்துப்பரப்பி விடப்பட்டபோது அதற்கான தேவை மிக அதிகமாகியது.
ஆறு நூற்றாண்டுகள் கடந்தும் அந்த உணவின்மீதான விருப்பம் இன்றும் உலகெங்கிலும் தொடர்கிறது.
இந்தக்கூடுகளை உருவாக்கும் சின்ன உழவாரன்கள் தெற்காசியா, ஓசியானியா, வடகிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் வாழ்கின்றன. இந்திய சின்ன உழவாரன் (Aerodramus unicolor) இந்தியா மற்றும் இலங்கையில் மட்டும் காணப்படுகிறது. கூட்டமாக குகைகளில் வாழும் இவை கூட்டமாக அதிகாலை வெளியே சென்று மாலை அந்தி சாய்கையில் கூடு திரும்பும் தினசரி ஒழுங்கைக்கொண்டவை.
தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளின் சுண்ணாம்புக்குகைகளில் இந்த சின்ன உழவாரன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.
உலகின் மிகப்பழமையான மழைக்காடுகளுக்கும் ஒராங்குட்டான் உள்ளிட்ட விதம் விதமான வன உயிரினங்களுக்கும் பெயர்பெற்ற உலகின் மூன்றாவது பெரிய தீவான தென்கிழக்காசியாவின் போர்னியோ தீவுகளில் மாபெரும் கோமந்தோங் சுண்ணாம்புக் குகைளின் உச்சியில் இந்தப்பறவைகள் ஏராளமான கூட்டை அமைக்கின்றன.
அபோடிடே பறவைக் குடும்பத்தைச்சேர்ந்த Aerodramus, Collocalia, Hydrochous மற்றும் Schoutedenapus ஆகிய பேரினத்தைசேர்ந்த சின்ன உழவாரன் பறவைகளின் கூடுகளே இப்படி உணவாகப்பயன்படுகிறது. இவற்றின் ஏராளமான சிற்றினங்களில் 6 சிற்றினங்களின் கூடுகளே உணவாகப்பயன்படுகின்றன.
இந்த உழவாரப்பறவைகள் 9 லிருந்து 16 செ மீ நீளமும் 8 லிருந்து 35 கிராம் எடையும் கொண்ட சிறு உடல் கொண்டவை. இவற்றின் இறகுகள் மங்கலான கருமை, மண் நிறம் அல்லது சாம்பல் நிறம் கொண்டிருக்கும். குறுகிய இறகுகளும் குட்டைக்கால்களும் கொண்டிருப்பதால் இவற்றால் வேகமாக பறக்கவும் குகைகளின் ஆபத்தான சரிவுகளில் அமர்ந்து கூடு கட்டவும் முடிகிறது.
சின்ன உழவாரன் பறவைகள் காற்றில் பறக்கையிலேயே பூச்சிகளைப் பிடித்து உண்பதோடு இணைசேர்வதையும் உறங்குவதையும் காற்றில் பறக்கையிலேயே செய்கின்றன. இனப்பெருக்கக்காலத்தில் முட்டையிடத்தான் குகைகளில் இடம் தேடி வருகின்றன இப்பறவைகள்
சின்ன உழவாரன்கள் ஒலியை எதிரொலிக்கச்செய்வதின் மூலம் இருண்ட குகைகளின் உட்புறச் சுவர்களை உணர்கின்றன( echolocation)
வாழ்நாள் முழுக்க ஒரே இணையுடன் மட்டும் வாழும் இவற்றின் இனப்பெருக்கக்காலம் 92-120 நாட்கள். கூடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் பிற சின்ன உழவாரன்களின் கூடுகளிலும் இவை முட்டையிடும் வழக்கம் கொண்டிருக்கின்றன.
அடுக்கடுக்காக எச்சில் இழைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி ஆண் பறவைகளால் இந்தக்கூடு கட்டப்படுகிறது. சுமார் 30 நாட்களில் எச்சில் உலர்ந்து கெட்டியானபின் கூடுகளுக்குள் பழைய இறகுகளைக்கொண்டு வந்து வைத்து முட்டைகளுக்கு மென்மையான படுக்கையை ஆணும் பெண்ணுமாக உருவாக்குகின்றன. கூடு தயாரானவுடன் பெண் பறவை இரண்டே இரண்டு வெண்ணிற முட்டைகளை கூட்டினுள் இடுகிறது. ஆண் பெண் இருபறவைகளும் நாளொன்றுக்கு ஒருவர் என்னும் சுழற்சி முறையில் முட்டைகளை அடைகாக்கும்.
குஞ்சுகள் வளர்ந்து பறந்தபின்னர் இந்தக்கூடுகள் கைவிடப்படுகின்றன. ஒரே கூட்டில் சின்ன உழவாரன்கள் மறுமுறை கூடுகட்டுவதில்லை.
கைவிடப்பட்ட கூடுகளே சேகரிக்கப்படுகின்றன. கூடுகள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வண்ணங்களில் இருக்கும்.
உலகின் மிக விலைகொண்ட உணவுகளில் ஒன்றான இந்தப்பறவைக்கூடு சூப்புக்காக மிக அதிகமாக சேகரிக்கப்படுவதும் மதிப்பு மிக்கதும் (Aerodramus fuciphagus), என்னும் உழவாரன்களின் வெண்ணிறக் கூடுகள்தான். வெள்ளை மற்றும் மஞ்சள் நிறக்கூடுகள் கிலோவுக்கு 1500-லிருந்து 200 டாலர்கள் விலையென்றால், ரத்தக்கூடு என்றழைக்கப்படும் சிவப்புநிறக் கூடுகளின் விலை 10000 டாலர்களாக இருக்கிறது. பறவைக்கூடு சூப் ஒரு கிண்ணம் 100 டாலர்களிலிருந்து 500 டாலர்வரை இருக்கிறது.
இந்த பறவைக்கூடுகள் அமைந்திருக்கும் குகைச்சுவற்றில் இருக்கும் இரும்புச்சத்து கூடுகளின் புரதங்களுடன் வினை புரிந்து சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது
கருப்பு உழவாரன் எனப்படும் (Aerodramus maximus), மற்றும் இந்திய சின்ன உழவாரனான (Aerodramus unicolor). ஆகியவற்றின் கூடுகளும் பிரதானமாக சேகரிக்கப்படுகிறது.
இம்மூன்றைத்தவிர மற்ற சின்ன உழவாரங்களின் கூடுகளில் குச்சிகள் இலைகள் போன்ற தாவரபாகங்களும் இருப்பதால் அவை சேகரிக்கப்பட்டாலும் தரம் குறைவானதாக கருதப்படுகின்றன.

இந்தப் பறவைக்கூடுகளை சேகரிப்பவர்கள் “busyadors,” எனப்படுகின்றனர். கடற்பறவைகளின் எச்சங்களின் கடும்நெடி நிரம்பியிருக்கும், உழவாரன்கள் கூடுகட்டியிருக்கும் குகைப்பகுதியில் ஆயிரக்கணக்கான சிறகடிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். உழவாரப்பறவைகள் குகையின் கூரைச்சுவற்றில் பொன் சரிகைப்பட்டுப்போல மினுங்கும் பிறை நிலவின் வடிவத்தில் இருக்கும் கையகலக் கூடுகளை அமைக்கின்றன.
ஆசியாவின் மிக ஆபத்தான பணியாகக்கருதப்படும் இந்தப் பறவைக்கூடு சேகரிப்பில் பலநூறு பேர் உயிரைப்பணயமாக வைத்து தலைமுறைகளாக ஈடுபட்டுவருகின்றனர்.
ஒரு பறவைக்கூடு சுமார் 14 கிராம் எடைகொண்டிருக்கும் .எனவே ஒரு கிலோ அளவுக்குக்கூடுகளைச் சேகரிக்கப் பலமணிநேரம் அவர்கள் இந்த ஆபத்தான வேலையை செய்யவேண்டி இருக்கும்
பலநூறு அடி உயரமுள்ள கூரைகளில் இருக்கும் கூடுகளைச் சேகரிக்க மூங்கில் கழிகளிலும் ஏணிகளிலும் கட்டப்பட்டிருக்கும் கயிறுகளில் தொங்கியபடி அடிதப்பினால் மரணம் நிச்சயம் என்னும் நிலையில் வெள்ளைத்தங்கம் எனப்படும் இந்தகூடுகள் சேகரிக்கப்படுகின்றன.
சின்ன உழவாரன்களின் இனப்பெருக்கக்காலம் துவங்கியதும் கூடுகளைச்சேகரிப்போர் கடவுளுக்கு காணிக்கைச் செலுத்தி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி தங்கள் உயிருக்கு பாதுகாப்பளிக்கும் வேண்டுதல்களைச் செய்வார்கள்.
குகையின் சுவர்களையும் கூட்டையும் கைகளால் தொடுவது கடவுளுக்கு கோபம் உண்டாக்கும் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் திரிசூலம் போல மூன்று முனைகள் கொண்ட ராடா எனப்படும் ஒரு தடியையும் கையோடு எடுத்துச்சென்று அதைக்கொண்டுதான் கூட்டைச் சுவற்றிலிருந்து உரித்து எடுக்கிறார்கள். சூலம் போன்ற ராடா தடி கடவுளாக உடனிருந்து அவர்களை காப்பாற்றும் எனவும் நம்புகிறார்கள்.
இத்தனை ஆபத்து இருந்தும் தவறமல் திரும்பத் திரும்ப இவர்கள் பறவைக்கூடுகளை உயிரைப் பணயம் வைத்து சேகரிப்பது பறவைக்கூடுகளுக்கிருக்கும் சந்தை மதிப்பினால்தான்.

சேகரித்த கூடுகளைச் சுத்தம் செய்வது அடுத்த கட்ட கடினமான பணி. கூடுகளை நீரில் ஊறவைத்து மிருதுவாக்கியபின்னர் ஊசிகளால் அதில் ஒட்டியிருக்கும் இறகுப்பிசிறுகளும் அசுத்தங்களும் பிரித்தெடுக்கப்படுகிறது.
பறவைக்கூட்டில் சுமார் 62% புரதம் 27% மாவுச்சத்து, கால்சியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின்கள், சில கனிமங்கள் கொழுப்பு இரும்புச்சத்து ஆகியவை இருக்கிறது.
மிக அதிகவிலைக்கு விற்கப்படும் எல்லா உணவுப்பொருட்களையும் போலவே இதிலும் கலப்படங்களும் போலிகளும் இருக்கிறது. கடற்பாசிகள் சில பூஞ்சைக்காளான்கள் மற்றும் சில மரப்பிசின்களைச் சேர்த்து பறவைக்கூடு சூப் எனச்சொல்லி பிரபல உணவகங்களில் கூட ஏமாற்றுகிறார்கள்.
தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவின் கடற்கரையோரங்களில் கான்கிரீட் கட்டிடங்களின் மொட்டைமாடிகள் முழுக்க தகடுகளால் மூடி இருட்டாக்கி, பறவை நுழைய சிறு கீறல்கள் மட்டும் உண்டாக்கி பதிவு செய்யப்பட்ட பறவைக்குரலை எப்போதும் ஒலிக்கச்செய்து சின்ன உழவாரப்பறவைகளை அங்கு வந்து கூடுகள் கட்டச்செய்யப்படுகிறது. இந்த வீட்டுக்குகைகளில் கூடுகளை சேகரிப்பது, குகைகளில் சேகரிக்கும் ஆபத்தை இல்லாம்லாக்குகிறது.
வீட்டு உரிமையாளர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கிறது எனினும் அகற்றவே முடியாத பறவை எச்சங்களின் கடும் நெடியும் தொடர்ந்து கேட்கும் அவற்றின் குரலும் பெரும் தொந்தரவாகத்தான் அனைவருக்கும் இருக்கிறது.
பறவைகளால் வரும் நோய்கள் மக்களுக்கு இதனால் வெகுஎளிதில் பரவும் அபாயம் இருப்பதாக பறவையியலாளர்கள் தொடர்து எச்சரித்தவண்ன்ணம் இருக்கிறார்கள், ஆனால் குகைகளில் சேகரிக்கப்படும் கூடுகளுக்கு கிடைக்கும் அதே விலை, கட்டிடங்களில் எடுக்கப்படும் கூடுகளுக்கும் கிடைப்பதால் மேலும் பலர் இந்தக் கூடுகளை அவரவர் வீடுகளில் அமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்தப்பறவைக்கூடுகளின் தேவை மிக அதிகரித்திருப்பதால் முட்டைகள் இருக்கும், பறக்கமுடியாத இளம் குஞ்சுகள் பாதுகப்பாக இருக்கும் கூடுகளும் சேகரிக்கப்படுவதால் சின்ன உழவாரன்களின் எண்ணிக்கை அபாயகரமாக குறைந்து வருவதாகவும், கூடுகளைச் சேகரிப்போர் சந்திக்கும் ஆபத்துகள் மனித உரிமை மீறல்கள் எனவும் பறவைக்கூடு சூப்பின் பயன்களாகச் சொல்லப்படுபவைகளைக்காட்டிலும் தாவரசூப்களில் அதிக ப்பயன்கள் உள்ளது என்னும் கருத்துக்களும் தீவிரமாக முன்வைக்கப்படுகின்றன.

எச்சசரிக்கைகளும் கண்டனங்களும் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தாலும் பறவைக்கூடு சேகரிப்பும் அதன்தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
மலேஷியாவில் மட்டும் சுமார் 60000 பேர் இநந்தப்பறவைக்கூடு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மலேசிய அரசு இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டிருப்போருக்கு கடனுதவிகளும் வழங்குகிறது.,
இத்தொழிலில் தலைமுறைகளாக ஈடுபட்டிருக்கும் மலேசியப்பழங்குடியினர் பத்து வருடங்களுக்கொருமுறை சீட்டுக்குலுக்கிப்போட்டு அடுத்த பத்து வருட ஒப்பந்ததாரரை முடிவு செய்கிறார்கள். இப்போது சீன முதலாளிகள் குகைகளை பெருந்தொகைக்கு ஏலம் எடுப்பதால் இதை நூற்றுக்கக்கான வருடங்களாக வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பழங்குடியினர் பாதிப்படைந்திருக்கிறார்கள். பெருந்தொகைக்கு குகைகள் ஏலம் எடுக்கப்படுகின்றன. ஏலம் எடுத்த முதலாளிகள் ஆயுதமேந்திய காவலர்களைக்ளைக்கொண்டு குகைகளைப் பாதுகாக்கின்றன்ர்.
பல லட்சங்கள் புழங்கும் இந்த பறவைக்கூடு தொழில் போட்டியில் கொல்லப்பட்டவர்கள், குகைகளில் தொங்கிக்கொண்டு கூடு சேகரிப்பில் இருக்கையில் உயிரிழப்பவர்கள் ஆகியோரின் விவரங்கள் வெளிஉலகிற்கு தெரிய வராமல் மறைக்கப்படுகிறது..
இந்தப் பறவைகூடு உணவு வீடுகளில் சூடுபடுத்தி அருந்தும் திரவ வடிவில் பாட்டில்களிலும், உலர் பொடியாகவும் இருவிதங்களில் சந்தைப்படுத்தப்படுகிறது, சுத்தப்படுத்தப்பட்ட கூடுகள் அப்படியேவும் விற்பனையாகின்றன.
உணவாக மட்டுமல்லாமல் இவற்றின் சருமத்தைப்பாதுகாக்கும் இயல்புகளால் அழகுசாதனப் பொருள் தயாரிப்பிலும் இக்கூடுகள் பயன்படுத்தப்படுகின்றன. வருடத்திற்கு சுமார் 200 டன் பறவைக்கூடுகள் உலகின் பலபாகங்களிலும் உண்ணப்படுகிறது. இதில் ஹாங்காங்கின் அளவே மிக அதிகம்.

ஜின்செங் மற்றும் சர்க்கரை கலந்து எளிதாகத் தயாரிக்கப்படும் இந்த சூப் இளமையை தக்கவைத்து ஆற்றலை அதிகரித்து சருமப்பொலிவுக்கும் கண்பார்வை கூர்மைக்கும் உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்தோனேஷியா வருடத்திற்கு 2000 மெ டன் பறவைக்கூடுகளைச் சேகரித்து உலகின் முதல் இடத்திலும் தொடர்ந்து 600 டன் சேகரிக்கும் மலேசியாவும் மூன்றாம் இடத்தில் 400 டன் தாய்லாந்தும் இருக்கிண்றன.
இனி பறவைக்கூடு சூப்பை அருந்தும் வாய்ப்பு கிடைத்தால், மேசையில் நம் முன்பு கிண்ணத்தில் கண்ணாடி போல இருக்கும் அந்தத் திரவம் விலையுயர்ந்த ஒரு உணவு மட்டுமல்ல, பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜென் ஹெ பயணித்த பொக்கிஷ கப்பல்களின் மீது போதிய அலைகளின் ஓசை, உயிரைப்பணயம் வைத்து கயிற்றில் தொங்கிக்கொண்டு கூடுகளைச் சேகரிக்கும் தொழிலாளர்களின் நிழல், இதன் பட்டுப்போன்ற நூழிலைகள் ஆரோக்கியத்தையும் வாழ்நாளையும் நீட்டிக்கும் என் பேரரசர்கள் கொண்டிருந்த நம்பிக்கை இவை எல்லாம் கலந்த கலவைதான் அது என்பதை எண்ணிக்கொள்ளுங்கள்.

































