லோகமாதேவியின் பதிவுகள்

Category: அனுபவம் (Page 6 of 6)

கால் கட்டும், கல்யாணமும்

பாலித்தீவில் மக்களிடையே ஒரு சமயம் சார்ந்த தொன்மையான பழக்கம் இருக்கின்றது. திருமண விழாக்களில் உயிருடன் ஒரு வாத்து மற்றும் ஒரு கோழியை அவற்றின் சின்னஞ்சிறியகால்களில் கல்லைக்கட்டி விட்டு ஏகப்பட்ட மந்திர உச்சாடனங்கள் மற்றும் பூசைகளின் பின்னர் கூட்டமாக ஒரு நீர் நிலைக்குச்சென்று அந்த ஒரு பாவமும் அறியா பறவைகளை  நீரில் விடுகிறார்கள். தப்பிக்க வழியின்றி மூழ்கி இறந்து அங்கேயே அவை மட்கி விடுவது புதிதாய் திருமணம் செய்துகொள்பவர்களின் குடும்ப வாழ்விற்கு  நல்லது என்னும் நம்பிக்கையின் பேரில் இது செய்யப்படுகின்றதாம்.கடவுளின் பெயரால்  செய்யபடும் வன்முறைகளில் இது உச்சமென்றே நான் நினைக்கிறேன்

எத்தனை குரூரம்?. மஞ்சள் நீரில் உடல் சிலிர்க்கும் பலி விலங்கினை கழுத்தின் குருதிக்குழாயை ஒரே வெட்டில் அறுக்கும் நம் சடங்கு  இதற்கு ஒப்பிடுகையில் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

உண்மையில் பல திருமணங்களில்  தப்பிக்க வழியின்றி   கல்லை கால்களில் கட்டிக்கொண்டு  மூழ்கி இறந்து  மட்கும் வரை இல்லறத்தில் இருக்கும் தம்பதியினருக்கும் இது பொருந்தும் அல்லவா இதைத்தான்நாம் கால்கட்டு என்று கல்யாணத்தை சொல்லிக்கொண்டிருக்கிறோமோ?

 

கடவுளுடன் சண்டை

கடந்த ஜூலையில் பாரதியார் பல்கலையில் என் பதவி உயர்வின் பொருட்டான  பயிற்சியின் ஒரு பகுதியாக  கல்லாறு தோட்டகக்லைத்துறை பழப்பண்ணைக்கும் திரும்பி வரும் வழியில் பிரசித்தி பெற்ற  மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கும் சென்றிருந்தோம். அங்கு செல்வது எனக்கு முதல் முறை.  கோவிலையொட்டிய சரிவில் அதிசயமாய், கறகள் ஒன்று போல நிறைந்திருக்குமாற்றில் தண்ணீர் கணிசமான அளவில் இருந்து ஒடிக்கொண்டுமிருந்தது.

சிறிய கோவில்தான் ஆனால் வெளியில் ஏகத்துக்கும் இடம், நல்ல கூட்டமும் கூட
சமீபத்தில் குண்டம் இறங்கி இருந்திருக்கிறார்கள் , அந்த சாம்பலை நிறைய அள்ளி நெற்றிக்கு இட்டுக்கொண்டும்,வீட்டிற்கு எடுத்துக்கொண்டும்  செல்பவர்களை பார்த்தேன்.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது பிரகாரத்தில் நடு வயதில் ஒரு பெண் நன்கு உடுத்திக்கொண்டு பின்னலில் கொஞ்சமாய் பூவெல்லாம் வைத்துக்கொண்டு கையில் ஒரு மஞ்சள் பையை பிடித்தபடி, அம்மன் இருக்கும்  திசை  நோக்கி  உட்கார்ந்து கொண்டு ‘’ கட்டையில் போறவளே என்று துவங்கி, நாசமாய் போயிருவே, நல்லா இருந்துருவியா ‘ என்று ஏகதுக்கும்  வசை பாடிக்கொண்டிருந்தார்கள், அனைவரும் திரும்பி பார்க்கும் படிக்கு உரக்க வேறு சண்டை.
சில சமயம் தொண்டை காய்ந்ததோ என்னவோ தலைகுனித்துகொண்டு கொஞ்ச நேரம் அமைதி, பின் மீண்டும் வரவழைத்துக்கொண்ட ஆங்காரத்துடன் அதே வசை

சந்தனக்காப்பில் அருளிக்கொண்டிருந்த அம்மனுக்கு உள்ளேயும் அர்ச்சனை நடந்தது.

இது போலவே முன்பொருமுறை பேருந்தில் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி ஒரு கோவிலின் வாசலில் மண்ணைவாறி தூற்றிக்கொண்டிருந்தார்கள்
அவர்களும் என்னவோ கண்ணிருடன் வசைபாடிக்கொண்டிருந்தது இன்னும்நினைவில் இருக்கிறது

குலதெய்வக்கோவிலில்  பல சமயம் ஆடு பலியிட்டு முடிந்தபின்னர்   அந்த குருதி சிந்தியிருக்கும் இடத்தில்  சில  பெண்களுக்கு சாமி வந்து கூந்தல் சுழற்றி புடவையை இழுத்துச்செருகியபடி ‘’டேய் ‘’ என்று கணவர் உள்பட அனைவரையும் கூவி அழைத்தபடி, முழு எழுமிச்சையை வாயிலிட்டு  கடித்து துப்பியும், நாக்கில் கற்பூரம் ஏற்றிக்கொண்டும் அருள் வாக்கு சொல்வதை பலமுறை கண்டிருக்கிறேன்

எல்லா ஆண்களும் பவ்யமாக துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு ’’சொல்லு ஆத்தா உனக்கென்ன குறை’’ என் று நிற்பார்கள்
அது வேறு வகையிலான out let   என் று எனக்கு தோன்றும்

 உனக்கு என்ன வேணும் என்ரு ஒரு முறை கூட கேட்டிருக்காத ஆண்களுக்கான ஒட்டுமொத்த அதிர்ச்சி வைத்தியத்தை ஏதோ ஒரு பெண் குடும்ப விழாக்களில்  வலிந்து செய்து, அடுத்த வருட  குலதெய்வ விழா வரையிலும்  பெண்களுக்கு நடக்கவிருக்கும் அநீதிகளுக்கெல்லாம் கொஞ்சமாய்  ஏற்பாடு செய்து கொள்ளும் பிழையீடு   அது என்றெண்ணுவேன், கூடவெ மிக்க மகிழ்ச்சியுடன் அவள் சீக்கிறம் மலையேறிவிடக்கூடதென்று விரும்பியபடி வேடிக்கை பார்ப்பேன்

ஆனால் இப்படிகடவுளைஇப்படி பகிரங்கமாய் வசைபாடுவது?

இது என்ன மாதிரி மனநிலை ?

பைத்தியம்  என்று உறுதியாக சொல்ல முடியாதபடிக்கு சுயநினைவுடன் நல்ல தெளிவாகத்தான் பேசுகிறார்கள்

ஒரு வேளை கடவுள் இருப்பாரே ஆனால் வரிசையில் நின்று வேண்டிக்கொள்ளும் எங்களை விட, கடவுளை சொந்தமாய் நினைத்து, சண்டையிட்டு வசைபாடும் அளவிற்கு நம்பும் இவர்களுக்காவது எதாவ்து செய்யலாம்

நன்றிச்செண்டுகள்

கடந்த வருடம் எனக்கும் என் அம்மாவிற்குமாய் தீவிரசிகிச்சை அளித்த ஒரு  மருத்துவருக்கு நான் எழுதிய ஒரு கடிதம்இது.   தவிர்க்க முடியாதபடி மருத்துவத்திற்கு ஆளாகவேண்டியுள்ள  நோயாளிச் சமூகத்தின் பிரதிநிதியாக என் trigeminal neuralgia விற்கு பிறகு  மீண்டும் அவரிடம் குடும்பமாய் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டி இருந்ததால் இரண்டிற்கும் சேர்த்து இந்த நன்றிக்கடிதத்தை கோவை மருத்துவர்  திரு பாலகுமார் அவர்களுக்கு எழுதினேன்.

எனக்கு ஏற்பட்ட வலியை எங்களூரில் பல் வலியென்று கண்டுபிடித்து (?) root canal சிகிச்சைக்கெல்லாம் என்னை தயார் படுத்தினார்கள். பின்னரே நான் அவரிடம் மருத்துவ ஆலோசனைக்காக வந்தேன். 20 நிமிடங்களில் இது ஒரு நரம்பு,  அதன் பாதுகாப்பிற்கென இருக்கும் மேற்பூச்சை இழப்பதால் வரும் கடுமையான வலி  என்னும் மிகச்சரியானதோர் கண்டறிதலுக்கு  வந்து, சரியான ஆலோசனை வழங்கினார். Remarkable diagnosis!!

MRI ,  CT எல்லாம்  எடுக்க சொல்லவில்லை.மிகத்துல்லியமான கண்டறிதல், அதற்கான குறிப்பிட்ட வலிநிவாரணியைப் பரிந்துரைத்தார்.. ஒரு வேளை இதற்கு மேலதிக சில பரிசோதனைகள் செய்ய வேண்டுமெனச்சொல்லியிருந்தாலும் கட்டுப்பட்டிருப்பேன். எனினும் அப்படி சொல்லாமல் எளிமையான முறையில் மிக விலைகுறைந்த   (20 மாத்திரைகள் 11 ரூபாய்கள்) சரியான மருந்துகளை பரிந்துரைத்தார். கோவை தற்போது medical capitol என்று அழைக்கப்பட்டாலும் அங்கும் நோயாளிகளை கசக்கிப்பிழியும் அறமற்ற மருத்துவமனைகளே ஏராளம் என்பதை அனைவரும் அறிவோம். எங்கள் குடும்ப மருத்துவர் வசந்திற்கு அடுத்து அறத்தின் பேரிலான  நிலைப்பாட்டுடன் சிகிச்சை அளிப்பது இவர்தான்

எனக்குப்பின்னர் வெகு சில நாட்களிலேயே என் பெற்றோர்களுக்கும் சிகிச்சை அதிலும் என் அம்மாவிற்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்க்கரை நோயாளியான அம்மாவை 75 வயதிற்கு பின்னரான இந்த இருதய அடைப்பிலிருந்தும் அதன் உடனான சில கோளாறுகளிலிருந்தும் மீட்டெடுத்து உயிரளித்தது மருத்துவ இயலின் எல்லைகள் தாண்டிய ஒரு சிகிச்சை.

அவரிடம் மிகச் சிறப்பானதென்னவென்றால் நம்பிக்கை ஊட்டும்  உடல் மொழி.  அம்மா அப்பாவை மெல்ல தொட்டு அல்லது தட்டியபடி புன்னகையுடன் பேசும் அந்த உடல்மொழியிலேயே  உடல்நிலை பெரும்பாலும்  சீராகிவிடும்., அவ்வப்போது நல்ல தமிழிலும் பேசுகிறார்..

இந்தியாவில்  பெரிய சிக்கல். டாக்டர்களின் ஈகோ   என்பார் ஜெயமோகன். செகண்ட்ஒப்பீனியன் கேட்பதை பெரிய குற்றமாகவே எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர் மனமுவந்து அம்மாவை அம்மாவின் விருப்பத்திற்குரிய மருத்துவரிடம் காட்டவேண்டுமென்றால் காட்டசொல்லியதையும் நினைவு கூறுகிறேன்.. இரண்டாம் கருத்தை நாடினார் என்பதற்காகவே நோயாளிகளை தண்டிக்கும் டாக்டர்களைப்பற்றி நாம் ஏராளம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  அறத்துடன் திறமையும் பெருந்தன்மையும் சேர்ந்த ஒரு மருத்துவராக அவர் மேல் என் மதிப்பு பலமடங்கு கூடி இருக்கிறது இப்போது.

நோய்களுக்கு சிகிச்சைசெய்யும்போது நோயாளியின் மனதில் உள்ள அவநம்பிக்கையை போக்குவதையும் ஒரு சிகிச்சையாகவேசெய்யவேண்டுமென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன், ,.   உடல்நோய்களின் விளைவாக அவநம்பிக்கையிலும் வாழ்வு குறித்த எதிர்மறைசிந்தனையிலும் இருக்கும் நோயாளிகளை. வாழவேண்டுமென்ற விருப்புறுதி நோக்கி தள்ளிச்செல்வது மருத்துவரின் உடல்மொழியே.( ஜெயமோகன்) அதுவே நோய்களுக்கு முதல் மருந்து. அது அவரிடம் இருக்கிறது.

.  என் அம்மாவைப்போல முதுமையில் வலியின் முன் மண்டியிட்டு மன்றாடி   மருத்துவரிடம்   உடலை பலர் ஒப்படைக்கிறார்கள்.    நோய் எனும் அந்த ராட்சத வல்லமைக்கு சரியான  பதில் சொல்கிற ஒரு சில திறன் வாய்ந்த மருத்துவரகளில் அவரும் ஒருவர்.  அம்மா அடைந்த வேதனைகளிலிருந்து அவர்களை விடுவித்து. குணப்படுத்தினார். அவருக்கும் அவருடன் இணைந்திருந்த மருத்துவர்களுக்கும் என் நன்றிகள்.  ஒரு நேர்மையான திறமையான மருத்துவராக தனது பங்கை சரியாக செய்த ஒருவருக்கான நன்றிக்கடிதம் இது.

மருத்துவத்துறையின்  இந்த அறமின்மைக்கு மாற்றாக அவர் வெகு சீக்கிரம் துவங்கப்போகும் சொந்த மருத்துவமனை,    இருக்குமென்பதால் அதற்கு  “அறம் ” என்றே கூட பெயரிட்டுவிடலாம்.

மருத்துவத்துறை பெரும்பாலும் வணிகமயமாகிவிட்டநிலையில் எந்த  தகிடு தத்தங்களும் இல்லாமல் எளிய மருந்துகளின் மூலமாகவும் நம்பிக்கையான உரையாடல்களாலும் மாத்திரமே  வியாதிகளைக் குணப்படுத்தும் மருத்துவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்பதற்கும்  என்னைப்போன்றவர்கள் முற்றிலும் நம்பிக்கையிழக்காமலிருப்பதற்கும்  திரு பாலகுமாரும்,திரு வசந்த் அவர்களுமே காரணம்.  எதிர்காலத்தில்இவரும்  திரு ஆல்வாவாகவே எளிய மக்களின் வாழ்வில் அறியப்படுவார் என்றே நம்புகிறேன், விரும்புகிறேன்,. அவரின் எதிர்கால புதிய சொந்த மருத்துவமனைக்கு என் வாழ்த்துக்களுடனும் ,மீண்டும் அனைத்திற்குமான நன்றிகளுடனும்

லோகமாதேவி

 

 

,

 

 

 

மலையாளமும் தமிழும்

மொழி சார்ந்த பல சிரமங்களுக்கு  திருமணமாகி கொங்கு நாட்டிலிருந்து அபுதாபிக்கு சென்றதும் நான் அனுபவித்திருக்கிறேன். அப்போதெல்லாம் இப்போது இருப்பதைப்போல தமிழ் ஆட்கள் இல்லை சுற்றிலும் மலையாளிகளே .எனக்கு பேசவும் யாரும் இன்றி  அவர்கள் பேசுவதும் புரியாமல்   நிலவரம்  ஒரே    கலவரமாக இருந்தது முதல் 6 மாதங்கள்

’’எந்தா சேச்சி கண்ணடை இட்டிருக்குனு?  காழ்ச்சி கொறவுண்டா? , பாங்கு விளிக்குன்ன சப்தம் கேட்டோ?’’ என்றெல்லாம் வேக வேகமாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பேய் முழி  முழித்துக்கொண்டிருந்தேன்  வெயிலடிக்கும் பொழுதுகளில் ’’நல்ல பனி குட்டிக்கு’’ என்பதைக்கேட்டு குழம்பி இருக்கிறேன். பனிபிடிப்பது என்றால் காய்ச்சலென்று தெரிய வெகு நாட்களாகியது

’’இன்னலே’’ என்றால் நான் இன்றைக்கு என்று பலநாட்கள் நினைத்துக்கொண்டிருக்கையில் அதற்கு ‘’நேற்று’’ என்று அர்த்தம என்பதே பல மாதங்கள்  கழித்துத்தான் தெரியவந்தது.

சரண் வயிற்றிலிருந்த போது எனக்கு இனிப்புகள் தர வந்த ஒரு மலையாளி பெண்மணி  ’’ தேவி நல்ல வண்ணம் வச்சுட்டுண்டு’’ என்றதும் நான் நல்ல நிறமாகிவிட்டேன் என்று நினத்து பூரித்துப்போய், பின்னர்  சரண் அப்பா   வண்ணம் வைப்பது என்றால் குண்டாவது  என்று விளக்கமளித்தபின்னர் ஏகத்துக்கும் கவலைப்பட்டேன்

புதியதாய் வாங்கிய இட்லிச்சட்டியில் ’’இன்னும் கொறைச்சு வெள்ளம் வைக்கணும்’’ என்று என்னிடம் சொல்லப்பட்டதை நான் இன்னும்  குறைவாக என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு மிகக்குறைவாக தண்ணீர்  வைத்து பாத்திரம் கரிப்பிடித்த கதையெல்லாம் நடந்த பின்னர் சுதாரித்துக்கொண்டேன்

காரியமாக தினம் ஏசியானெட்டும் கைரளியுமாகப் பார்த்து பேப்பரும் பேனாவுமாய் களம் இறங்கி  3 வருடங்களில் சரளமாக மலையாளம் பேசவும், மனசிலாக்கவும் முடிந்தது, ஆசான் சுரேஷ் கோபியின் கற்பித்தலில் பல மலையாளக்கெட்டவாரத்தைகளும்  கூட கற்றுக்கொண்டேன்!!!

இப்போது இங்கு கல்லூரியில் கேரளாவிலிருந்து மாணவர்கள் சேர்க்கை என்றால் கூப்பிடு லோகமாதேவியை என்னுமளவிற்கு மலையாளம் அத்துப்படி. கேரளவிலிருந்து வருபவரகளிடம் ‘’ஒண்ணு வேகம் போய் ஃபிஸ் அடைக்கணும்  கேட்டோ, நமக்கு  கோர்ஸினைக்குறிச்சு பின்ன  சம்சாரிக்காம் ‘’ என்பேன் அவர்களும் உடன் பணம் கட்டிவிடுவார்கள்.

ஆனால்  மலையாளம்  அத்தனை இனிமையான மொழி. அந்த பாஷையின் இனிமையிலிருந்து வெளியெற மனசின்றி இன்னும் இன்னுமென பேசிப்பேசி அதிகம் நான் இப்போழுது பேசுவதும் விரும்புவதும் தமிழை விடமலையாளத்திலேயே !

காருண்யமும் ஆனந்தமும்

சரண் பள்ளியில் ஆனந்த உற்சவத்திற்கு அவனுடன் நாங்களும் 3 நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அவன் பள்ளிக்கு அருகிலிருக்கிறது காருண்யா.

காருண்யா பல்கலைக்கழகத்திற்கு பலமுறை நான் சென்றிருக்கிறேன் எப்போது அந்த சாலைவழி சென்றாலும் மீண்டும் மீண்டும் செல்ல விரும்பும் ஒரு இடமாகவே இருக்கும் எனக்கு காருண்யாவும் பெதஸ்தாவும்

இந்த முறையும் கணவர் மகனுடன் சென்றேன். வழக்கம் போலவே அங்கு எங்குமே புற்களை மிதிக்காதீர்களென்றோ பூக்களைப்பறிக்காதீர்களென்றோ புகைப்படம் எடுக்ககூடாதென்றோ., எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமான தேவன் இருக்குமிடமாகவே அன்றும் இருந்தது.

தொட்டுவிடலாமெனும் அண்மையில் மேற்கு தொடர்ச்சிமலைத்தொடர்களும்,. முகில் மூடிய மலைமுகடுகளும், நீர்த்துளி ததும்ப செழித்து வளர்ந்திருந்த புல்தரைகளும், பூக்களும் பறவைகளின் கீச்சிடலுமாக அங்கிருந்த சிலமணி நேரமும் நான் இறையின் அண்மையை உணர்ந்தவாரே இருந்தேன்

 

7 காட்சிகளையும் தேவனின் வரலாறையும் கண்டோம். சிலுவை சுமக்கும் காட்சியில் உருகி அங்கேயே கொஞ்சநேரம் நின்றேன். காட்டிக்கொடுக்கும் காட்சியிலும் அப்படியே.

Betrayal அதுதான் யுகம் யுகமாக மானுடத்தை தொடர்ந்துவந்துகொண்டே இருக்கிறது என்று நினத்துக்கொண்டேன். உண்மையில் பெரும் துரோகமென்பது பொதுவில் அனைவரும் நினைப்பது போல படுக்கையில் நிகழ்வதில்லை,நம்பிக்கை துரோகமே மாபெரும் பாவம். ஒருவரின் மேலான நமது உளமார்ந்த நம்பிக்கை முற்றாக அழிக்கப்படுகையில் நாமும் அழிந்தேதான் போகிறோம்  அந்த கணத்தில். ஏற்படும்அந்த விரிசல்கள் மீண்டும் ஒட்டுவதில்லை

தேவன் உயிர்தெழுவதையும் அங்கிருந்த அறிவிப்புபலகையில்  I am alive for ever and ever  எனும் வாசகங்களையும் பார்த்தபடி இருந்தேன் சிலநிமிடங்கள்

மழை இல்லை எனினும் இளவெயிலும் ஈரக்காற்றும் இருந்த்தது. தங்கநிறத்தில் கண்ணாடி இறகுகளுடன்  தும்பிகள் இணை இணையாக பறந்தன அந்த புல்வெளி எங்கும்

தெய்வீகக்ககுளத்தின் அருகில் சிறிதுநேரமிருந்தேன். சிறு சிறு கைவளையல்களாகவும், சில்லறைக்காசுகளாகவும் குளத்தின் அடியில் சேர்ந்திருந்தன நம்மில் பலரின் நம்பிக்கைகள்

ஒரு மூத்த சகோதரி புடவைத்தலைப்பால் முக்காடிட்டுக்கொண்டு விவிலியத்தை மடியில் பிரித்துப் படித்தபடி கண்களில் தாரை தாரையாய் நீர்பெருக அமர்ந்திருந்தார்

இன்னுமோர் இளைஞன் முழந்தாளிட்டு முகத்தை அங்கிருக்கும் ஒரு பீடத்தில் புதைத்தபடி இருந்தான் அவன் அழுதுகொண்டிருக்கிறான் என்பதை மெல்ல குலுங்கும் அவன் முதுகிலிருந்து அறிந்தேன்

கீச்சுக்குரலும் உற்சாகமுமாய் கத்தியபடி சில குழந்தைகளுடன் 2 குடும்பங்கள் வந்தன.. இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு இளைஞர்புறவுலகின் தொடர்பிலிருந்து முற்றிலும் விடுபட்டவராக கடமையே உருவாக தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக்கொண்ட்ருந்தார் .

அங்கிருந்த chapel ல் இன்னும் நிறைய மனிதர்கள், பெரும்பாலும் வேண்டுதல்களுடன் மன்றாட்டுகளுடன் துயரங்களுடன் நம்பிக்கைகளுடன் விருப்பங்களுடன்  அழுதும் தொழுதும் கொண்டிருந்தார்கள். என்னிடம் ஒரு சகோதரி வந்து மென்குரலில் எனக்கு ஏதாவது பிரார்த்தனைகளோ வேண்டுதல்களோ இருந்தால் சொல்லலாமென்றார்.

அவரின் கண்களை  புன்னகையுடன் நேராக சந்தித்து எனக்கு வேண்டுதல்களோ குற்றச்சாட்டுக்களோ, ஏன்புகார்களோகூட ஏதுமில்லை என்றேன். எனக்கு அன்று உண்மையில் இறைவனிடன் சொல்லிக்கொள்ள ”நான் அவரைக்கண்டுகொண்டேன்” என்னும் ஒரு சேதியே இருந்தது

அந்த பெண்ணின் கண்ணீரிலும்,, அந்த இளைஞனின் துயரத்திலும், குழந்தைகளின் உற்சாகத்திலும், அந்த நீர்பாய்ச்சிக்கொண்டிருந்த இளைஞனின் கடமைஉணர்விலும்,அங்கிருந்த மரங்களின் பூக்களிலும், பறவைகளிலும்,ஏதோதோ காரணத்தின் பொருட்டு அங்கு வந்திருந்த மனிதர்களின் நம்பிக்கையிலும் அந்த நம்பிக்கைகளின் மறு வடிவாக காலத்தைக்கடந்தபடி நீரின் அடியில் காத்திருக்கும் வளையல்களிலும் நான் இறைவனைக்கண்டேன்

கிருஸ்து எனும் ஒரு குறிப்பிட்ட சமயத்தின் கடவுளையல்ல நான் அங்கு உணர்ந்தது  எல்லாபடைப்புக்களுக்கும் மூலமான பிரம்மத்தை பெரும் இறையையே கண்டுகொண்டேன்.

அந்த சுவரெழுப்பிக்கட்டப்பட்ட சுண்ணம் பூசிய  சுவர்களுடனிருந்த அந்த பிரார்த்தனைக்கூடத்தில் மட்டுமல்ல , பச்சைபசேலென்ற அந்த தோட்டத்திலும், பலைமுகடுகளிலும் மனிதர்களிலும், பறவைகளிலும் புல் பூண்டுகளிலுமே தேவன் இருந்தார்

காருண்யாவின் வரலாறோ அதன் உரிமையாளர்களின் கதைகளோ அவர்களின் கல்விப்பணியோ எதுவும் எனக்கு ஒரு பொருட்டாகவில்லை அன்று. அந்த இயற்கை நிரம்பி ததும்பி வழிந்துகொண்டிருக்கும் இடத்தை நமக்களித்த அந்த குடும்பத்திற்கு  என் நன்றிகளைத்தெரிவித்துக்கொண்டேன் மானசீகமாய்

அடுத்த 3 நாட்களும் இதற்கு முற்றிலும் வேறானதோர் மனநிலையில் இருந்தேன் ஆனந்த உற்சவத்தில்

பூஜ்யஸ்ரீ ஸ்வரூபானந்தாக்களும் அனுகூலானந்தாக்களும் எங்களுக்கு அனுக்கிரஹமளித்து உய்வித்தார்கள். நல்ல உயர்தரமான துணியில் தயாரிக்கப்பட்ட உன்னதமான, எளிமைக்கும் துறவிற்கும் அடையாளமாகிய காவியை அணிந்திருந்தார்கள்.

முதன்மை ஸ்வரூபானந்தா நிகழ்சியை துவங்க வருகை தரும் முன்பு ஏகத்திற்கும்  பெற்றோர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அலைபேசியை முற்றிலும் அணைத்துவிடவேண்டும், சிறுகுழந்தைகளுடன் வந்திருப்பவரகள் அவை தொல்லை தராமல் சப்தமிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் இப்படி பலபல கட்டளைகள்.

அந்த ஸ்வரூபானந்தா மேடையில் இயந்திரமாய் சில வார்த்தைகளைப்பேசிவிட்டு பின் கீழே  கூடைப்பந்து மைதானத்தை அரங்காக மாற்றியிருந்ததால் அங்கு வந்து அமர்ந்தார் அவரின் பாதம் தரையில் படுமுன்பெ அவரின் பாதத்திற்கும் மண்தரைக்குமிடையே ஒரு குட்டிப்பட்டுத்தலையணை வைக்கப்பட்டது

40 வயதைக்கடந்த பெற்றொர்களின் 2800 பேர் இருந்த அந்த பெரும் கூட்டத்திற்குஅவர் அம்புலிமாமா கதைகள் சொன்னார் ஆன்மீகசொற்பொழிவென்ற பெயரில்

மிகுந்த நாடகத்தன்மையுடன் கைகளை அசைத்தபடியும் ஒரு வசதியான ஆசனமொன்றில் அம்ர்ந்துகொண்டே எந்த உணர்ச்சியும் இல்லாதும் அவர் அதைசொல்லிக்கொண்டிருந்தார்.  பூரணகும்ப மரியாதையுடன் அவர் ஒரு அவதார புருஷராகவே நடத்தப்பட்டார். அவரின் அகமொழியாகிவிட்ட அழகான ஆங்கிலத்தில் பேசினார் ஆனால் ஜெயமோஹனின் எழுத்துக்கள் வழி நாமடையும் பரவசமும் உணர்வெழுச்சியும் ஒரு கணமும் அங்கிருந்த யாருக்கும் ஏற்படவேயில்லை.

சொற்பொழிவு (!!!!!) முடிந்தபின்னர் அவரின் காலடியில் மடமடவெனெ விழுந்த யாரயும் அவர் கவனிக்கவும் இல்லை. இயந்திரம் போல கைகள் அருளாசி வழங்கிக்கொண்டிருந்தது.

காருண்யாவில் இறையையும், சுதந்திரத்தயும் ஆனந்தாவில் அவதாரபுருஷர்களையும் ஆசாமிகளையும் விதிகளையும் ஒருசேரப்பார்த்தது நல்ல வித்தியாசமானதோர் அனுபவமாயிருந்தது

 

இதுவா ரகசியம்?

 

சில வாரங்களுக்கு முன்னர் பிரபல புலனாய்வுப்பத்திரிக்கை ஒன்றில்   சில கோடிகள் செலவில் பள்ளிப்பெண்களுக்கான சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் குறித்த ஒரு பதிவு வந்திருந்தது. அதற்கான புகைப்படத்தில் சில பெண்கள் சீருடையில் அந்த இயந்திரத்தினின்றும் நாப்கின்களை எடுக்கிறார்கள். அவர்கள் முகத்தை முழுவதுமாக மறைத்து வெளியிட்டு இருக்கிறார்கள். ஏன்?
பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்கள் கூட முன்வந்து சமுதாயத்தில் முகம் காட்டி நீதி பெறும் இந்த நாளில், பாலியல் தொழிலிருந்து மீண்டு வந்த ஒரு பெண் தன் கடந்து வந்த பாதையை புத்தகமாக வெளியிட்டிருக்கும் காலத்தில், நாப்கின் எடுத்து உபயோகிப்பது இன்னும் மறைக்கப்பட வேண்டிய விஷயமா? வெகு ஜன ஊடகங்களே இதிலிருந்து இன்னும் வெளி வரவில்லையெனில் எப்படி மற்றவர்களிடம் இதற்கான் புரிதலை எதிர்பர்க்க முடியும்?  மாதவிடாயென்பது, தவிர்க்க முடியாத, பெண்கள் எதிர்கொண்டே ஆக வேண்டிய ஒன்றென   ஆண்களின் உலகம் அறிந்து கொள்வதெப்போது?

சானிடரி நாப்கின் விற்கும் பன்னாட்டு கம்பெனியே பெயரை whisper என்று தானே சொல்லிகொள்கிறது/? இது ரகசியமாய் இருக்க வேண்டியது ஆனால் பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு தெருவடைத்து   பந்தலிட்டு அழைப்பிதழ் கொடுத்து, ஊரெங்குமாய் போஸ்டர் அடித்து, முரசறிவிக்காத குறையாக  அந்த இளம் பெண்  உடல் ரீதியாக கருத்தரிப்புக்கு தயாராகிவிட்டதை அனைவருக்கும் அறிவித்துக் கொண்டாடி மகிழலாம் இல்லையா? என்ன முரண் இது?

மருத்துவ இயலின் படி  ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium), ஒருவேளை அந்த முதிர்ந்த முட்டை கருவாகுமேயானால், அதற்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காக போதிய இரத்தம் கருப்பையின் உட்புற மடிப்புக்களில் தேங்கி இருக்கும்

விளம்பரங்களில் வருவது போல ஒரு சில சொட்டுக்களல்ல இந்த மாதவிடாய் குருதிப்போக்கென்பது. பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில் உள்ள  இழையங்களும்,  நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் சேர்ந்து  வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. உடன் சிலருக்கு கடும் வலியும் தசைப்பிடிப்பும் கால் குடைச்சலும்  கூட இருக்கும். இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது.

 

பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள். ஒரு பெண் தன்  வாழ்நாளில் சுமார் 3,500 நாட்கள் மாதவிடாயில்  இருக்கிறாள்
இந்த நாட்களில் தங்கள் உள்ளாடைகள் கறைபடாதிருக்கவே அணையாடை அல்லது அடைப்பான்  எனப்படும் நாப்கின்களை உபயோகிக்கின்றனர். உடலில் இருந்து வெளியாகும் அனைத்து கழிவுகளைப்போலவேதான் மாதவிலக்கு உதிரமும்  தூய்மையற்றது.  கசியும் தன்மை கொண்ட அதனை கட்டுப்படுத்தவும் முடியாது

 

சூடாயியம், இந்து  இசுலாமிய மற்றும் பல்வேறு மதங்கள் மாதாந்திர சுழற்சியில் இருக்கும்  பெண்களை பல நிகழ்வுகளிலும் தடை செய்து அவர்கள் அப்போது தனித்து இருக்க வேண்டுமெனவே வலியுறுத்துகிறது

மாதவிலக்கு நாட்களில் இவ்வாறு விலக்கபப்டுவதும், இதோடு வலி, எரிச்சல், சோர்வு, கசகசப்பு தனிமை எல்லாம் சேர, பெண்களும் இந்த நாட்களை பெரும்பாலும் வெறுக்கிறார்கள்.

இவற்றுடனேதான் பெண்கள் இந்த ஆண்களின் உலகில் எல்லா துறையிலுமே முன்னடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். உயிரியல் ரீதியாக பலவீனமானவர்கள் என்று சொல்லப்படும் பெண்கள்தான் ஆண்களுக்கான உணவு, உடை அவர்களுக்கான பாதுகப்பான சுத்தமாக பரமரிக்கப்பட்டிருக்கும் வீடு ஆகியவற்றை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். மாத விலக்கு நாட்களில் பெண்களுக்கு தேவையானது கருணையோ இரக்கமோ அல்ல அப்படி ஒன்று இருக்கிறது எனும் புரிதல் மட்டுமே

பெண்களை பெரும்பாலும்  வெறும் உடலாக மட்டுமே அறிந்துகொண்டிருக்கும் இந்த ஆண்களுக்கானது என்று சொல்லப்படும் உலகில் இந்த உடல்ரீதியான ஒரு நிகழ்வு குறித்த புரிதல் இல்லாமலிருப்பது அநீதி. மளிகைக்கடையிலும் மருந்துக்கடையிலும் இந்த நாப்கின்களை பெண்களே வெட்கப்பட்டுக்கொண்டு கேட்பதும் கடைக்காரர் ஒரு நாளிதழில்  அதை  மறைவாக சுற்றிஎடுத்துக்கொண்டு வருவதும்  தேவையே இல்லை.

1960 இல் இருந்து  பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றும் மருந்துகளைக் கொண்டு மாதவிடாய் நேருவதையும் கருத்தரிப்பதையும் கூட தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளத்துவங்கி இருக்கிறார்கள்.

உரக்க சொல்லப்படவேண்டியதுமில்லை, ரகசியமும் இல்லை, இந்த மாதவிடாய் எனும் உடலியல் நிகழ்வை.  ஒரு மருந்துக்கடையில் feminine hygienic  பொருளொன்றை நான் கேட்கையில் அங்கிருக்கும் பெண்கள் நமுட்டுச்சிரிப்புடன் அதை எடுத்துக்கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது, பெண்கள் முதலில் நமக்கு நிகழ்வதென்ன என்னும் புரிதலுடன் இருக்க   வேண்டும்

எல்லா நாளையும் போலவே குருதிக்கசிவு இருக்கும் இந்த நாட்களில் விளம்பரங்களில் காட்டுவது போல  விமானம் ஓட்டும் , குதிரை சவாரி செய்யும், நீளம்தாண்டும் பெண்கள் மட்டுமன்றி பேருந்தின் நெரிசலில் சிக்கி பயணிக்கும் பெண்களையும் ஓய்வின்றி குடும்பதிற்காக உழைக்கும் பெண்களையும், இது போல அவர்கள்  இயங்கும் பல தளங்களையும் ஆண்கள் கட்டாயம் எண்ணிப்பார்க்கவேண்டும். இந்த சில  நாட்கள் விலக்கி வைக்கப்படவேண்டியது அல்லவே அல்ல என்பதை இதுபோன்றதோர் சுழற்சியின் முட்டையிலிருந்து உருவான ஆண்களாலும் பெண்களாலும் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த உலகம் புரிந்துகொள்ளவேண்டும்

உலகம் தொடர்ந்து இயங்க காரணமாயிருக்கும் மாதாந்திர முட்டை உற்பத்தி பெண்கள் வெட்கப்பட வேண்டிய விஷயமும் ஆண்கள் அருவருப்பு படவேண்டிய விஷயமும் ரசியமாய் வைத்துக்கொள்ள்ப்பட வேண்டிய விஷயமும் அல்ல இது சரியான புரிதலுடன் எதிர்கொள்ள வேண்டிய ஒன்று. அதற்காக சுகாதாரமான நாப்கின்கள் பயன்படுத்துவோரின் முகங்கள் நிச்சயம் மறைக்க படவேண்டியதல்லவே அல்ல

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

இன்று நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் அதாவது நான் இளங்கலை படித்த தற்போது துணைப்பேராசிரியராகப் பணிபுரிகின்ற கல்லூரியில்,வைரவிழாகொண்டாட்டங்களில் ஒன்றாக முன்னாள் மாணவர்களின் சந்திப்பும்  அப்போது3 சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு விருது  வழங்குதலும் நிகழ்ந்தது  .

விழாவின்பொருட்டு நேற்றிலிருந்தே அத்தப்பூக்கோலம் போடத் துவங்கி இன்றும் காலையில் சென்று அதை மற்ற தோழிகளின் உதவியுடன் முடித்தேன்

அடுத்த முறை பூக்கோலம் போடுகையில் வழமைபோல வட்டமாக conventional design ல், போடாமல் புதிதாய் சிலவற்றை முயற்சிக்க இன்றே பல மாதிரிகள் பார்த்து வைத்துக்கொண்டேன்

என் வாழ்வில் இதுபோல எளிமையான விஷயங்களில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் மனமொன்றி அவற்றை செய்துமுடிக்கவும்  இன்னும் வாய்த்திருப்பதிலும் இயலுவதிலும் மகிழ்கிறேன்

விருது பெற்றவர்களில் ஒருவர் தமிழகவானிலை துறை இயக்குனர் திரு பாலசந்திரன். வெகுநாட்களுக்குப்பிறகு நல்ல மழை பொழிந்த இன்னாளில் அவர் இங்கு வந்திருந்து விருது பெற்றது பொருத்தமாக, மகிழ்வாக இருந்தது

என் வகுப்பு நண்பர்களில் சிலரே வந்திருந்தார்கள் அதுவும் பெருமுயற்சிக்குப்பின்னர். பலர் வரவில்லை  பல காரணங்களின் பொருட்டு

வந்திருந்த நாங்கள், செல்வமணி, செல்வகுமார், கண்ணன், சிவச்சந்திரன், ஜூனியர் சிவச்சந்திரன் (  ஜூனியர் புவனா என்று சொல்வதே பொருத்தம் அப்படியே அம்மாவின் ஜாடை அதே கண்கள் , அதே உடல்மொழி!), டேவிட்,மயில்சாமி, ரவி, மட்டுமே

விழாவில் சிறிது நேரமும்  பின்னர் கல்லூரியை, துறையை சுற்றிப்பார்த்ததுமாய் பொழுது போனது. கல்லூரி அடியோடு மாறிப்போனதுபோல நாங்கள் வெகுவாய் மாறி இருக்கவில்லை. உருவம் மட்டுமே மாறியிருந்தது, உள்ளமும் சுபாவமும் அப்படியே இருந்ததால் இயல்பாய் 28 வருடங்கள் பின்னொக்கி செல்லவும் மகிழ்ந்திருக்கவும் முடிந்தது. வராத சிலரும் நினைவில் எங்களுடன் இருந்தார்கள், அனைவருமாய் அமுதசுரபியில் மதிய உணவு, பின்னர் கோபியை வலுக்கட்டாயமாக பணிபுரியும் இடத்திற்கே சென்று சந்திதோம்,  செல்வமணியின் காரில் மயில்சாமி மற்றும் ரவி என்னை கொண்டுவந்து வீட்டில் சேர்த்துவிட்டு சென்றார்கள், வீட்டில் இருக்கும் பென்சில் மரத்தின் தாவரவியல் பெயர் எனக்குதெரியுமா என ரவி சோதித்து கேள்விகேட்டதும் நான் ‘Acacia auriculiformis’   என சரியாக சொல்லிவிட்டேன். (என்கிட்டேயேவா?)

பல வருடங்களுக்குப்பிறகு நண்பர்களைச்சந்தித்ததில் மகிழ்ச்சி அனைவருக்கும்,

மாறிவரும்காலகட்டமும் அதற்கேற்றாற் போல மாறிவரும் வாழ்வின் இயங்கியலும், வெகுவாய் மாற்றத்துக்குள்ளாகிவிட்டிருக்கும்  உயர்கல்வித்துறைக்குறித்தும், குடும்பத்தைக்குறித்தும், பேராசிரியர்கள்பற்றியும் நிறையப்பேசினோம்

இனி வரும் காலங்களில். அனைவரும் குடும்பநண்பர்களாய் என்றென்றைக்குமாய் தொடரணும் என்றே அனைவரும் விரும்பினோம் அதுகுறித்து நிறைய பேசினோம், அப்படியே நடக்கட்டும்! அனைவரின் சார்பாகவும்  வந்திருந்த அனைவருக்கும் வரமுடியாமற் போனவர்களுக்குமாய் எனதன்புகள் என்றென்றைக்குமாய்!

பின்னர் கணிதத்துறை இந்துமதி மேடம் வீட்டுத்திருமணம், அஸ்ஸாம் மாப்பிள்ளையும் கொங்குப்பெண்ணும், கூடுதல் மகிழ்ச்சி மணமக்களைகண்டதில். அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும்  அன்புகளும்.

காணிநிலம் வேண்டும்

தினம் நாட்குறிப்பு எழுதிக்கொண்டிருந்தேன் பின்னர் சில காரணங்களால் வேறுசில விஷயங்களை prioritize செய்ததில் தினசரி நடந்தவற்றை எழுதுவது நின்றே போனது. பின்னர் இருந்த சோர்வான மனநிலையில் ஏதும் எழுதவோ வாசிக்கவோ இல்லை. 3 நாட்கள் விடுமுறையில் வந்திருந்த சரண் எப்போதும் போலான அம்மாவை காணும் ஆவலில் ,என்னை தேற்றியதோடு இந்த வலைப்பூவை துவங்கிக் கொடுத்து அவசியம் தினசரி எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் எப்போதும் போல மகிழ்ச்சியான அம்மாவாக இருக்கணும் எனும் அன்புக்கட்டளை இட்டுச்சென்றிருக்கிறான்

அதிகாலை துவங்கி இரவு 8 மணி வரையிலான அலைச்சல் மிகுந்த மிக மீண்ட நாள் இன்று. சரணை மீண்டும் விடுதியில் விட்டுவிட்டு வந்தது, என்னை இன்னும் சிறு பெண்ணைப்போல எண்ணிஅரைமணிக்கொருதரம் நலம்விசாரித்துக்கொண்டும் கவலைப்பட்டுக்கொண்டும் இருக்கும் மித்ராவை அவளின் சீர்கெட்ட உடல்நிலையுடன் கண்டது. எனக்கு மிகப்பிரியமான பவானியை அவள் திருமணத்தின் பொருட்டு சென்று பார்த்து அவள் இனி இந்தியாவிலிருந்துபுறப்பட சிலநாட்களே இருக்கிறது என்னும் கசக்கும் உண்மையை அறிந்தது உள்பட பல காரணங்களால் நான் உளச்சோர்வுடன் இருந்தேன் எனினும் இரவு வீடு திரும்பி காரின் முகப்பு வெளிச்சத்தில் ஒளிரும் பச்சிலைகளும் சின்ன சின்ன உருண்டைக்காய்களுமாய் தெரிந்த புன்னைமரத்தைக்கண்டதும் என் சோர்வெல்லாம் மறைந்துவிட்டது
இந்த வீடு எனக்குத்தரும் நம்பிக்கையும் ஆசுவாசமும் வேறேதுவும் யாரும் எப்போழுதும் அளித்ததில்லை
பல வருடங்களுக்கு முன்னர் இந்தியா வந்து 2வருடங்களாகிய காலகட்டத்தில் இங்கே வீடு கட்ட நான் முடிவு செய்தபோது ஆதரிக்க யாருமில்லாததைவிட அத்தனைபேரும் எதிர்த்தார்கள், உலகமே தாழ்பணிந்து நகரமயமாக்கலுக்கு பின்னால் சென்று கொண்டிருக்கையில் பொள்ளாச்சியிலிருந்து இரு மகன்களுடன் ஒரு குக்கிராமத்திற்கு செல்வதான என்முடிவை பைத்தியக்காரத்தனமென்றே அனைவரும் அபிப்பிராயப்பட்டார்கள்
எனினும் என் முடிவில் உறுதியாய் இருந்தேன் அப்போதைய உடல்நிலையையோ அரசுப்பணி அமையாததால் கல்லூரியின் பணிச்சுமைஉள்ளிட்ட பல பிரச்சினைகளோ எதுவும் எனக்கு முக்கியமாக இல்லாமல் இந்த வீட்டைக்கட்ட எல்லா முயற்ச்சிகளையும் செய்தேன்
பள்ளிப்பிராயத்திலிருந்தே இதுபோல பசுமரங்கள் சூழ்ந்த ஒரு வீடு என் கனவு
பாரதியை எழுத்து எழுத்தாக மனனம் செய்திருந்த பள்ளிப்பருவத்தில் மிகக்கவரந்த பாடல்கள் என்றால் காணி நிலம் வேண்டுமென்னும் பராசக்திக்கு பாரதியின் விண்ணப்பக்கவிதையும், கண்ணம்மா எனும் காதலிக்கு எழுதிய காற்றுவெளியிடையும் தான்
நிலவூறித்ததும்பும் விழிகளும் அமுதூற்றினை ஒத்த விழிகளும் பத்தரைமாற்றுபொன்னொத்த மேனியுமாய் வர்ணித்து,வையத்தில் தானுள்ள மட்டிலும் அவளன்றி வேற்று நினைவில்லை எனச்சொல்லும், காதல் ததும்பி வழியும் இந்த கவிதையே, இந்த நிமிடம் வரையிலும் நான் வாசித்த ஆகச்சிறந்த காதல் கவிதை
காணிநிலம் வேண்டும் கவிதை வாசிக்க வாசிக்க அந்த காட்சிகள் மனதில் விரிந்துகொண்டெ செல்லும் பக்கதிலேயே இருக்கும் பத்துப்பனிரெண்டு தென்னைமரங்களும், கத்தும் குயிலோசையும், பாட்டுக்கலந்திட பத்தினிப்பெண்ணொருத்தியும், முத்தாய்ச்சுடரும் நிலவும்,தென்னங்கீற்றும், தூய வெண் மாடங்களும், அங்கே காவலிருக்கும் அன்னையுமாய் என் மனதிலும் அப்படி ஒரு இயற்கையுடன் இணைந்த மாளிகை வாசிக்கும் தோறும் மனதில் எழுந்து வந்து, ஆழ்மனதில் அச்சித்திரம் அப்படியே பதிந்துவிட்டிருக்கிறது
வீடு கட்டுகையிலேயே 12 தென்னை மரங்களை எண்ணி நட்டு வைத்தேன்.
சிறிதாக 4 அறைகளுடன் சிமிழ் போல ஒரு வீடும் சுற்றி மரம்செடிகொடியுமாய் திட்டமிட்டு வீட்டைக்கட்டினேன்
புன்னை தென்னை வேம்பு பலா, வெற்றிலை குமிழி,தேக்கு,வாழை செம்பருத்தி, நெல்லி மா,மூங்கில்,மந்தாரை அரப்பு விளா,சாம்பங்காய், கொய்யா,எலுமிச்சை, மல்லிமுல்லை கீரைகள், பனை,கமுகு,சப்போட்டா,சந்தனம்,சென்பகம்,பென்சில் மரம், நாரத்தை,நொச்சி,ஜூனிபர்,சைகஸ்,ஆடாதொடை, கனகாம்பரம்,முட்டைபழமரம்,பேஷன் பழக்கொடிமுருங்கை, பூஜைக்கான மலர்களுக்காக பல செடிகள், கிண்ணம் கிண்ணமாய் 2 வண்ணங்களில் பூத்துதள்ளும் அலமண்டா,ரோஜாக்கள்,பப்பாளி,மல்பெரி, மர, பாட்டில் பிரஷ், இலுப்பை, இலவம் மகிழம்,மலைவேம்பு,என்று எனக்கு பிரியமான எல்லாம் வைத்து வளர்த்திருக்கிறேன்
கத்தும் குயிலோசை மட்டுமன்றி எண்ணிலடங்கா பறவைகளின் குரலிலேயே விடிகிறது என் எல்லாக்காலைகளும். புன்னைமர நிழலின் குளிர்ச்சியில் இருக்கும் தொட்டித்தண்ணீரைஅருந்த வரும் மரங்கொத்தியும், காகமும்,கிளிகளும் புறாக்களும் எத்தனை எத்தனை அழகு
பலாவில் குடி இருக்கும் நாரைகள் இரண்டும்,மலைவேம்பின் பழங்களை கொத்தித்தின்ன வரும் கிளிக்கூட்டமும்,பட்டுப்பூச்சிகளும் ஓணான்களும் தட்டாரப்பூச்சிகளும், எறும்புக்கூட்டங்களும், பச்சோந்திகளூமாய் பல்லுயிருக்கும் புகலிடமானது இவ்வீடு
நட்டு வைத்துநீரூற்றீய எனக்கு எந்த வஞ்சமும் இன்றி காயும் பழமும் இலையும் காற்றுமாய் அள்ளி அள்ளிதந்துகொண்டிருகின்றன இம்மரங்களூம் செடிகளும்
என்னிடம் இருந்து ஏதும் எதிர்பார்க்காத, என்னை எப்போழுதும் வஞ்சிக்காத, நிராகரிக்காத, என்னை ஒருகணமும் தாழ்வாக எண்ணவைக்காத என் பிரிய மரங்கள்  , துரோகங்களாலும் வஞ்சங்களாலும் நிரைந்து வழியும் இவ்வுலகிலிருந்து மூச்சுத்திணறியபடி மாலை நான் வீடு திரும்புகையில் கிளையசைத்து , குதூகலமாய் வரவேற்கும் மரங்களும்,ஓய்வான வேளைகளில் கயிற்றுக்கட்டிலில் தென்னைமரத்தடியில் அமர்ந்து பாடல்கள் கேட்டுக்கொண்டும், புத்தகம்வாசித்துகொண்டும், இருக்கும் என்னை, அன்னையின் ஸ்நேகத்துடன் குனிந்துபார்த்தவாறிருக்கும் இவற்றை விட எனக்கு என்ன ஆ்றுதல் இருக்கும்?
பொழியும் நிலவினில் மகன்களுடன் கதைபடித்துக்கொண்டு கதை சொல்லிக்கொண்டு, பின்னிரவு வரையிலும் விழித்திருந்தபடி, விண்மீன்களையும் சிவப்பும் பச்சையுமாய் கண்சிமிட்டிக்கொண்டு இறங்கியபடியோ மேலேறிக்கொண்டோ இருக்கும் விமானங்களை வேடிக்கை பார்த்தவாரோ, அன்றி பிடித்த உணவினை சமைத்து உண்டபடியோ கழித்த எண்ணற்ற அற்புத கணங்களுகெல்லாம நான் என்ன கைமாறு செய்துவிட முடியும் இம்மரங்களுக்கும் செடிகளுக்கும்
எளியதும் நம் கண்முன்னே கையருகில் இருக்கும் ஒன்று அரியதாக இருக்க முடியாதென்றும் .அருகிலிருப்பது என்றுமே அரிதானதாயிறாது என்றுமே நாம் நம்பத்தலைப்பட்டிருக்கிறோம், அப்படி இல்லை எனபதை நான் , தாவரங்களுடனான இவ்வீட்டின் வாழ்வனுபவத்தில் சொல்கிறேன்

இயற்கையுடன் இணைந்த பசுமை சூழ்ந்த இருப்பிடம் தரும் உற்சாகமும்,அவை மீள மீள தரும்  வாழ்வின் மீதான பிடிப்பையும் அனுபவித்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்,

Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑