லோகமாதேவியின் பதிவுகள்

Author: logamadevi (Page 9 of 24)

பூமியின் நுரையீரல்

உலகின் பெரிய மழைக்காடு அமேசான் மழைக்காடுகள். தென் அமெரிக்காவின் அமேசான் படுகையில் பரவிப்படர்ந்திருக்கிறது. இதன் பரப்பளவு 70 லட்சம் ச.கி.மீ.
இது பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகிய ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. பிரேசிலில் மட்டுமே 60 சதவீதக் காடுகள் உள்ளன. உலகிற்கு 20 சதவீதம் ஆக்சிஜனைக் கொடுக்கும் இந்த வனப்பகுதி, பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது. 350க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்களைச் சேர்ந்த, 9 லட்சம் பூர்வகுடி மக்கள் இங்கே வசிக்கிறார்கள்.
தங்கச்சுரங்கங்கள், விதிகளுக்குப்புறம்பாக விலங்குகளையும் மீன்களையும் வேட்டையாடுதல், சோயா, யூகலிப்டஸ் விவசாயத்திற்காகக் காடுகளை அழித்தல், இயற்கை வளங்களைச் சுரண்டுதல் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் அமேசான் காடு தற்போது அழிந்து வருகிறது. கடந்த 29 ஆண்டுகளில் 40 சதவீதம் அழிந்துவிட்ட அமேசான் காடுகளைப் பாதுகாப்பது மிக அவசியம் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சர்வதேச நிறுவனமான ‘இயற்கைக்கான உலகளாவிய நிதியம்’ (World Wide Fund for Nature – -WWF) இந்தக் காடுகளைக் காப்பாற்ற பெருமுயற்சி எடுத்து வருகிறது.

அமேசான் நதி – உலகின் இரண்டாவது நீளமான நதி 4,100 கி.மீ.

உலகில் வாழும் தாவரங்கள், உயிரின வகைகளில் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்றன. இங்கு ஆண்டுதோறும் புதிய வகை உயிரினங்கள் கண்டறியப் படுகின்றன. 1999 முதல் 2015 வரையிலான காலத்தில் மட்டுமே இங்கு முன்பு அறியப்படாத 216 தாவரங்கள், 93 மீன்கள், 32 நில நீர் வாழிகள், 20 பாலூட்டிகள், 19 ஊர்வன மற்றும் ஒரு பறவை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

25 லட்சம் – பூச்சி இனங்கள்
10,000 – தாவர இனங்கள்
2,000 – பறவை இனங்கள்

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

பூண்டுகளுக்குத் திருவிழா!

உலகின் மிகத்தரமான பூண்டு உற்பத்தி செய்யும் கலிஃபோர்னியாவின் கில்ராய் (Gilroy) நகரம் ‘உலகின் பூண்டுத் தலைநகரம்’ என்றழைக்கப்படுகிறது. ‘கில்ராய் பூண்டுகள்’ உலகப் பிரசித்தம் பெற்றவை. பூண்டு சாகுபடிக்குத் தேவையான வளமான நிலமும் பொருத்தமான காலநிலையும் இருப்பதால் இங்கு மட்டுமே ஆண்டுக்கு சுமார் 30 கோடி கிலோ அளவுக்குப் பல வகைப்பட்ட பூண்டுகள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கடைசி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இங்கு நடைபெறும் பூண்டுத் திருவிழா, அமெரிக்காவில் நடக்கும் உணவுத் திருவிழாக்களிலேயே மிகப்பிரம்மாண்டமானதாகும். இசை நிகழ்ச்சி, பூண்டு அழகிப் போட்டி, பேச்சுப்போட்டி, சமையல் போட்டி, கைவினைப்பொருட்கள் விற்பனை, பூண்டு வகைகளின் கண்காட்சி, விற்பனை என பூண்டுத் திருவிழா பல்வேறு அம்சங்களுடன் களைகட்டும்.
பூண்டுத் திருவிழா 1979ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம் பூண்டு கலந்த விதவிதமான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாகும். உலர்ந்த பூண்டுச்செடியின் இலைகளில் தயாரிக்கபட்ட இருக்கைகள், கைவினைப்பொருட்கள், பூண்டு வடிவக் கூடாரங்கள், பொம்மைகள், பூண்டு பலூன்கள் என எங்கெங்கிலும் பூண்டு மயம்தான்! அத்தனை பார்வையாளர்களுக்கும் இலவசமாக பூண்டு ஐஸ் கிரீம் வழங்கப்படும்.
திருவிழா நடக்கும்போது புகழ்பெற்ற சமையல் நிபுணர்கள், உணவு தயாரிக்கும் முறைகளை செய்து காட்டும் ‘தழல் சமையல்’ (Flame Cooking) இங்கு மிகப்பிரபலம். ஆண்டுதோறும் ஏறக்குறைய ஒரு கோடிப் பார்வையாளர்கள் உலகம் முழுவதிலிருந்து இதில் கலந்துகொள்கின்றனர், பார்வையாளர்களுக்கும் பூண்டுச் சமையல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் பட்டங்களும் வழங்கப்படும். இவ்விழாவில் தயாரிக்கப்படும் உணவுகளுக்குத் தேவையான பொருட்கள் அந்தப் பகுதியில் பயிரிடப்படும் உணவுப் பயிர்களிலிருந்தே தயாரிக்கப்படும்.
நம் நாட்டிலும் இதுபோல ஈரோடு மஞ்சள், சேலம் மாம்பழம், பண்ருட்டி பலாப்பழம், காஷ்மீர் குங்குமப்பூ என பல சிறப்புகள் இருக்கிறதல்லவா? அவற்றிற்கும் நாம் இப்படித் திருவிழாக்கள் ஏற்பாடு செய்து அவற்றை உலகம் முழுவதும் பிரபலமாக்க முயற்சி செய்யலாம்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

கொல்லும் அழகு

சூரியப் பனித்துளி
ஆங்கிலப் பெயர்: ‘கேப் சன்டியூ’ (Cape Sundew)
தாவரவியல் பெயர்: ‘டிரோசெரா கேபன்சிஸ்’ (Drosera capensis)

ஊனுண்ணித் தாவரங்களில் மிக அழகானது ‘கேப் சன்டியூ’. பசுமைமாறாத பல்லாண்டுத் தாவரமான இது 15 செ.மீ. உயரம் வரை வளரும். மெல்லிய தண்டுகளையும், நன்கு வளர்ந்த வேர் அமைப்பையும் உடையது. தண்டில் இருந்து 4 செ.மீ. நீளமும், 1 செ.மீ. அகலமும் உள்ள இலைகள் காணப்படும். இலைகளின் மேற்பரப்பிலும் ஓரங்களிலும் மெல்லிய இழைகளாக சிறு காம்புகள் உள்ள ‘டிரிக்ஹோம்ஸ்’ (Trichomes) எனப்படும் குமிழ்போன்ற சுரப்பிகள் காணப்படும். இந்த குமிழ்ச் சுரப்பிகள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் பனித்துளிகளைப்போல நெருக்கமாக இருக்கும். பூக்கும் தண்டுகளில் இருந்து இளஞ்சிவப்பு பூக்கள் பூக்கும். சிறிதுநேரத்திற்கே மலர்ந்திருக்கும் இந்தப் பூக்களில் பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். வெடிகனியில் மிகச்சிறிய கருப்பு விதைகள் இருக்கும்.
இலைகளில் இருக்கும் குமிழ்ச்சுரப்பிகளில் நொதிகள் (Encymes – என்சைம்ஸ்) நிறைந்த பசையைச் சுரக்கும். இனிப்புச் சுவையும், வாசனையும் உள்ள இந்தப் பசையால் ஈர்க்கப்பட்டு அருகே செல்லும் பூச்சிகள் அங்கேயே ஒட்டிக்கொள்ளும். ஒட்டிய பூச்சிகளின் உடலில் உள்ள சத்துக்களை இந்தச் செடி மெதுவாக கிரகித்து, செரிமானம் செய்துவிடும். மேலும் அதிக பசையைச் சுரந்து பூச்சியின் சத்துக்களை செடியின் பிற பாகங்களுக்குக் கடத்திவிடுகிறது. இதன் தாயகம் தென் ஆப்பிரிக்கா. இது அலங்காரச் செடியாகவும் உலகின் பல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

நான் உயரமான கள்ளி!

யானைக்கள்ளி
ஆங்கிலப் பெயர் : ‘எலிஃபன்ட் காக்டஸ்’ (Elephant Cactus)
தாவரவியல் பெயர்: ‘பகிசிரியஸ் பிரிங்லி’ (Pachycereus pringlei)
வேறு பெயர்கள்: ‘கார்டான்’ (Cardon), ‘மெக்சிகன் ஜயன்ட் காக்டஸ்’ (Mexican Giant Cactus)

* வறண்ட நிலப்பகுதிகளில் காணப்படும் தாவரம் கள்ளி. பெரும்பாலும் செடியாக இருக்கும் எனினும், மரமாகவும் வளரும். 127க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
* யானைக்கள்ளி, உலகிலேயே உயரமாக வளரக்கூடிய கள்ளி இனம். மெக்சிகோவின் பாஜா கலிஃபோர்னியா (Baja California), சொனோரா (Sonora) பாலைவனப் பகுதிகளில் வளர்கிறது.
* பசுமை மாறா வகையான இது, மிக மெதுவாகவே வளரும். சராசரி உயரம் 32 அடி.
* தண்டுகளில் வரி போன்ற அமைப்புகளும் (Ribs — ரிப்ஸ்), சாம்பல் நிறத்தில் வட்டமாக அமைந்துள்ள கூரிய முட்களும் (Areole — ஏரியோல்) காணப்படுகின்றன. அடித்தண்டில் இருந்து கிளைகள் வளரும்.
* வெள்ளை நிறத்தில், இரவில் பெரிதாகப் பூக்கும். வெளவால், பாலைப்பறவைகள் போன்றவற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடக்கும்.
* வேர்களில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை காரணமாக இது மண்ணில்லாத பாறையிலும் வளரும்.
* முட்கள் செறிந்திருக்கும் சிவந்த சதைப்பற்றுள்ள பழம், மெக்சிகோ பழங்குடியினரால் உண்ணப்படுகிறது. தண்டின் சதைப்பகுதி வலி நிவாரணியாகவும், தொற்று நீக்கியாகவும் பயன்படுகிறது.

சொனோரா பாலைவனப்பகுதியில், 63 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள யானைக்கள்ளி 2007ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

தாவரங்களின் தோழன்

 எறும்புகள் ‘ஃபோர்மிசிடே’ (Formicidae) உயிரினக் குடும்பத்தைச் சேர்ந்தவை. எறும்புகளில் 10,000 வகைகளும், கிட்டத்தட்ட 22,000 சிற்றினங்களும் இருக்கின்றன. தாவரங்களுக்கும் எறும்புகளுக்கும் உள்ள உறவு மிகச்சிறப்பானது. பயறு வகைத் தாவரங்கள், ஆர்க்கிடுகள், ஆமணக்குச்செடியின் ‘யுஃபோர்பியேசியே’ (Euphorbiaceae) எனப்படும் ஆமணக்குச் செடி குடும்பத் தாவரங்கள் போன்றவை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தாவரங்கள் எறும்புகளுடன் நெருங்கிய உறவில் உள்ளவை.
* இந்தத் தாவரங்கள், எறும்புகளுக்குத் தங்குமிடம், உணவு போன்றவற்றை அளிக்கிறது பதிலுக்கு எறும்புகள் தாவரங்களை உண்ண வரும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்தல், விதைபரவல், மகரந்தச்சேர்க்கை தாவரக்கழிவுகளைச் சுத்தம் செய்தல், சத்துகளை அளித்தல், நோயிலிருந்து காத்தல் என, பல வகைகளிலும் உதவுகின்றன. சில எறும்புகள் இலைகளில் ஏற்படும் பூஞ்சைத்தொற்றினை (Fungal Infections — ஃபங்கல் இன்பெக்ஷன்ஸ்) பூஞ்சை இழைகளை உண்பதன் மூலம் முற்றிலுமாகக் கட்டுப்படுத்துகின்றன.
* எறும்புகளோடு இணைந்து வாழும் இவ்வகைத் தாவரங்கள் ‘மிர்மிகொஃபைட்ஸ்’ (Myrmecophytes) எனப்படும். இந்தத் தாவரங்களில் எறும்புகள் வாழ்வதற்கான ‘டொமேசியா’ (Domatia) எனப்படும் தங்குமிடங்களைக் கொண்டிருக்கும். உள்ளே வெற்றிடங்கள் உள்ள கூரிய முட்கள், வெற்றிடமாக இருக்கும் தண்டுகளின் உட்புறம், சுருண்ட இலைகளின் ஓரங்கள் ஆகியவற்றில் எறும்புகள் முட்டைகளை இட்டு பாதுகாப்பாகத் தங்கிக்கொள்ளும்.
* எறும்புகளுக்குத் தேவையான உணவுப்பொருட்களை இலைக்காம்புகளில், மகரந்தத்துகள்களில், இலை நுனிகளில், தண்டுகளில் சேகரித்து வைத்திருக்கும், நீர்ச்சுரப்பிகளை மலருக்கு வெளியே (Extrafloral Nectaries – எக்ஸ்ட்ராஃபுளோரல் நெக்டரிஸ்) எறும்புகளுக்கென உருவாக்கி வைத்திருக்கும் தாவரக் குடும்பங்களும் உள்ளன.
* பல வகையான பழ மரங்கள், எறும்புகளை பழங்கள் இருக்கும் காலத்தில் மட்டும்கூட வைத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ளும். பிசின் போன்ற திரவத்தை எறும்புகளுக்காகச் சுரக்கும். மாமரங்களிலும், கொய்யா மரங்களிலும் எப்போதும் எறும்புகள், இருப்பதைக் காணலாம்.

தெரிந்து கொள்வோம்
ஓடும் வேகம் (மணிக்கு)
யானை – 25 கி.மீ.
சிங்கம் – 80 கி.மீ.
சிறுத்தை – 114 கி.மீ.
புலி – 65 கி.மீ.
மான் – 60 கி.மீ.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

மாவுச் சத்துகளின் வங்கி

மரவள்ளி
ஆங்கிலப் பெயர்கள்: Tapioca – டாபியோகா, Cassava – கசாவா
தாவரவியல் பெயர்: Manihot esculenta – மணிஹாட் எஸ்குலேன்ட்டா
வேறு பெயர்கள் : குச்சிக் கிழங்கு, ஏழிலைக் கிழங்கு, ஆல்வள்ளி, குச்சி வள்ளிக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு

மனிதர்களின் உணவுத் தேவையில், கார்போஹைட்ரேட்டைத் (Carbohydrate) தருவதில் உலகின் மூன்றாவது இடத்தில் இருப்பது மரவள்ளிக் கிழங்கு. இது ‘யூபோர்பியேசியே’ (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த செடியின் வேரில் காணப்படும் கிழங்கு. இதன் தாயகம் தென் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
மரவள்ளிச் செடி 5 அடி உயரம் வரை வளரும். குட்டையாக வளரும் இனங்களும் உண்டு. நீண்ட நடுத்தண்டும், மெல்லிய குச்சிகளால் ஆன கிளைத் தண்டுகளும் காணப்படும். ஒரு காம்பில் ஈட்டி வடிவ இலைகள் ஏழு இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பூக்கள் சிறியதாக பச்சை, மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். பச்சை நிறக் காய்கள், காய்ந்ததும் வெடிக்கும் தன்மை கொண்டவை. விதை மூலமும் குச்சிகளைப் பதியனிடுவதன் மூலமும் இது இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கு, இரு முனைகளும் கூம்பிய வடிவத்தில் உள்ளே இறுக்கமான மாவுப்பொருளைக் கொண்டது. தடிமனான, மண்ணிறம் கொண்ட தோலினால் மூடப்பட்டிருக்கும். மையப் பகுதியில் நீளமான நார் காணப்படும். உட்பகுதி, வெண்மை நிறத்தில் இருக்கும். கிழங்கின் பட்டையில் ‘ஹைட்ரோசையனிக் அமிலம்’ (Hydrocyanic Acid) என்ற நச்சுப்பொருள் உள்ளது. இந்த அளவைப் பொறுத்து, இனிப்பு மரவள்ளி, கசப்பு மரவள்ளி என இரண்டு வகைகள் உள்ளன. முறையாகச் சமைக்கப்படாத கசப்பு மரவள்ளி, ‘கோன்சோ’ (Konzo) என்னும் நரம்பியல் குறைபாடு சார்ந்த நோயை உருவாக்கக்கூடும். கிழங்கில் புரதமோ, பிற சத்துகளோ அதிகம் இல்லை. மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகிய சத்துகள் உள்ளன.
வளரும் நாடுகளில், மரவள்ளி மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வணிகப் பயிராகவும் உள்ளது. இலைகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது. ஸ்டார்ச், ஜவ்வரிசி, குளூக்கோஸ், டெக்ஸ்ட்ரின், கோந்து, புரூக்டோஸ் சாறு, கெட்டி அட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மரவள்ளிக் கிழங்கு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

வடிவம் மாறும் தாவரங்கள்

பூங்காக்களில் தாவரங்களை சிற்பங்கள் போலச் வெட்டி உருவங்களை அமைத்திருப்பதை நாம் கண்டிருப்போம். தாவரப் புதர்களை வெட்டிச் சீரமைத்து விரும்பிய உருவங்களை ஏற்படுத்தும் இந்த தாவரச் சிற்பக் கலை ‘டோபியரி’ (Topiary) எனப்படும். புதர் சிற்பக்கலை எனவும் கூறலாம். இப்படி வெட்டி வடிவமைக்கப்பட்டு வளரும் தாவரங்களும், ‘டோபியரி’ என்றே குறிப்பிடப்படுகின்றன. அடர்ந்து, நேராக வளரக்கூடிய பசுமைமாறாத தாவரங்களில் இந்த வடிவங்கள் செய்யப்படுகின்றன. குட்டையான, ஊசிபோன்ற மிகச்சிறிய இலைகளையுடைய பல்லாண்டுத் தாவரங்கள் இவை. இலைகளையும் கிளைகளையும் சீராக குறிப்பிட்ட இடைவெளிகளில் நறுக்குவதன் மூலம், இதுபோன்ற வடிவங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஏற்படுத்திய வடிவங்கள், பல ஆண்டுகளுக்கு அதே தோற்றத்தில் இருக்கவேண்டுமென்பதால், மிக மெதுவாக வளரும் தாவரங்களே இதற்குத் தேர்வு செய்யப்படுகின்றன
கம்பிகளும், கம்பி வலைகளும், கம்பிச் சட்டங்களும் குறிப்பிட்ட வடிவங்களைக்கொண்டு வருவதற்கு, சில சமயங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தாவரங்கள் வளரும் முன்பே சட்டங்களை அவற்றைச் சுற்றிலும் பொருத்தி, பின்னர் அவற்றை அந்த சட்டங்களுக்கு ஏற்றாற்போல வளர்த்தும் விரும்பிய வடிவங்கள் கொண்டு வரப்படுகின்றன. தாவர வேலி (Hedge – ஹெட்ஜ்) எனப்படும் புதர்கள், மரங்கள் முதலான தாவரங்களைக் கொண்டு அமைக்கப்படும் உயிர்வேலியானது மிக எளிய ‘டோபியரி’ வடிவமாகும். ரோமானியர்களின் காலத்திலிருந்தே புதர்ச்செடிகளை விலங்கு, பறவை, மனிதர்கள், பந்துகள், எழுத்து வடிவங்களைப்போல வெட்டி சீராக வளர்க்கும் இந்தக் கலை இருந்து வந்திருக்கிறது. எகிப்தியர்களும் இவ்வடிவங்களைப் பல தோட்டங்களில் அமைத்திருந்தனர். ‘வால்ட் டிஸ்னி’ (Walt Disney) 1962ல், டிஸ்னி கேளிக்கைப் பூங்காவில், பிரபல கார்ட்டூன் வடிவங்களில் டோபியரியை ஏற்படுத்தினார். அதன் பிறகு உலகின் பல தாவரவியல் தோட்டங்களிலும், வீடுகளிலும் இந்தக் கலை பரவலாக்கப்பட்டது
அத்தி (Ficus), துஜா (Thuja), மருதாணி (Lawsonia), டுராண்டா, (Duranta) லன்டானா, (Lantana) , ஐவி (Ivy), தெட்சி (Ixora) போன்ற புதர்ச்செடி வகைகளே அதிகம் டோபியரிக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஊசியிலைத் தாவரங்கள் (Conifers) டோபியரி மூலம் வடிவங்களைச் செய்து வளர்க்க மிக எளியதாகையால், உலகில் அதிகம் இதுவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதய வடிவம், குடை, பந்துகள், சதுரங்கள் போன்ற எளிய வடிவங்களிலிருந்து மிகச்சிக்கலான ஒட்டகச் சிவிங்கி, யானை, இயந்திரங்கள் போன்ற வடிவங்களும் டோபியரியில் உருவாக்கப்படுகின்றன. ஆர்வமிருந்தால் போதும், அதிக செலவின்றி மிக அழகிய இந்த தாவரச் சிற்பங்களை தோட்டங்களில் உருவாக்கி வளர்க்கலாம்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

கண்ணாடிக்குள் ஓர் அழகிய தோட்டம்

சூழலை இயற்கையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள வீடுகளில் செடிகள் வளர்க்கிறோம். வீட்டில் செடிகள் வளர்ப்பதில் பல முறைகள் உள்ளன. ஒளி ஊடுருவும் கண்ணாடிக் குடுவைகளுக்கு உள்ளே, சிறிய தாவரங்களை வளர்க்கும் தோட்டக்கலை ‘டெராரியம்’ (Terrarium) எனப்படுகிறது. பல வடிவங்களிலான முழுவதும் மூடியிருக்கும் அல்லது ஒருபுறம் திறந்திருக்கும் கண்ணாடிக் குடுவைகளில் செடிகளை வளர்க்கலாம். மூடிய குடுவையின் சுவர்களில் இருந்து செடிகளுக்குத் தேவையான வெப்பம், ஒளி கிடைக்கும். அதோடு அதிகப்படியான நீர் ஆவியாகி நீர்த்துளிகளாக குடுவையில் படிந்து, பின்னர் மீண்டும் செடிகளுக்கே கிடைக்கும்.
‘டெராரியம்’ முதன்முறையாக 1842இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘நாதனியல் பாக்ஷா வார்ட்’ (Nathaniel Bagshaw Ward) என்னும் பூச்சியியலிலும் தாவர அறிவியலிலும் மிகுந்த ஆர்வமுடைய ஒரு மருத்துவரால் உருவாக்கப்பட்டது. இவர் மூலிகைச் செடிகளை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு கண்ணாடிப் பெட்டிகளில் வளர்த்து அனுப்பினார். இந்த முறையில் செடிகளை வளர்ப்பது, பின்னர் ஓர் அழகிய தோட்டக்கலையாக மாறி, அனைவராலும் பரவலாக விரும்பப்படும் ஒன்றானது.
கற்றாழை போன்ற சதைப்பற்றுள்ள தாவரங்கள் (Succulents — சுக்குயூலென்ட்ஸ்), ஆர்க்கிட்கள் (Orchids), கள்ளிச்செடிகள் (Cacti — காக்டி), பெரணிகள் (Ferns — ஃபெர்ன்ஸ்) போன்றவை ‘டெராரியம்’ அமைக்க ஏற்ற தாவரங்களாகும். அளவில் மிகச்சிறிய செடிகளே டெராரியம் அமைக்கப் பொருத்தமானவை. குறைந்த சூரியஒளியும், தண்ணீரும் போதுமென்பதால், இவற்றை வீட்டுக்குள்ளும், மேஜைகளிலும், அலமாரிகளிலும் வைத்து எளிதாக வளர்க்கலாம். மணல், செம்மண், இயற்கை உரங்கள், பொம்மைகள், கூழாங்கற்கள் ஆகியவற்றை குடுவையின் அடிப்பகுதியில் பரப்பி, பின்னர் மிகச்சிறிய, மெதுவாக வளரக்கூடிய பொருத்தமான செடிகளை குடுவைக்குள் வைத்து விருப்பம்போல அழகுபடுத்தி நேராகவோ, சாய்வாகவோ, திறந்தோ, மூடியோ இத்தோட்டத்தை வடிவமைக்கலாம்.
நன்கு பராமரிக்கப்படும் குடுவைத் தாவரங்களைப் பல ஆண்டுகளுக்கு வைத்துக்கொள்ளலாம். பராமரிக்க மிகவும் எளிதான இவ்வகை உட்புறத் தோட்டத்தை (Indoor Garden), அகலமான குடுவைகள், கண்ணாடிப் பெட்டிகளில் எளிதில் உருவாக்கலாம். சூழலை அழகாக்கும் கண்ணாடிக் குடுவைச் செடிகளை நீங்களும் உங்கள் வீட்டில் வளர்க்கலாம்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

எழுத முடியாத பென்சில்!

பென்சில் செடி
ஆங்கிலப் பெயர்கள்: ‘பென்சில் காக்டஸ்’ (Pencil Cactus),’ஸ்டிக்ஸ் ஆன் ஃபைர்’ (Sticks on Fire), ‘மில்க் புஷ்’ (Milk Bush)
தாவரவியல் பெயர்: ‘யுபோர்பியா டிருகால்லி’ (Euphorbia Tirucalli)
வேறு பெயர்கள்: தீக்குச்சிச் செடி, நெருப்புச் செடி, பென்சில் கள்ளி, பாச்சான் குச்சி, கட்டுக்கலவிக் கள்ளி
பென்சில் செடி, மிகச் சிறிய இலைகளுடன் பச்சை நிறத்தில் பளபளப்பாக பென்சில் போன்ற தடிமனில் உருண்டையான தண்டுகளுடன் இருக்கும். செடி என்று குறிப்பிட்டாலும், நான்கு மீட்டர் உயரம் வரை சிறு மரமாக வளரக்கூடியது. பாலைநிலங்களில் 6 முதல் 9 மீட்டர் உயரம் வரையில் வளரும். இதன் தாயகம் ஆப்பிரிக்கா. ‘யுபோர்பியேசியே’ (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகின் பல பாகங்களிலும் இது பரவலாக வளர்கிறது.
செடியின் அனைத்துப் பாகங்களும் பால் போன்ற திரவத்தைச் சுரக்கும் தன்மை உடையது. முட்களற்ற வழுவழுப்பான, மென்மையான தண்டுகள் நல்ல சதைப்பற்றுடன் இருக்கும். செடியின் மிகச் சிறிய பச்சை இலைகள் குறுகிய காலத்திலேயே உதிர்ந்துவிடுவதால் குச்சிகள் போன்ற பச்சைத் தண்டுகளே செடி முழுவதும் காணப்படும். இளம் தண்டுகள் மட்டும் சிறு இலைகளுடன் வளைந்து தொங்கியபடி இருக்கும். சிறு கொத்துகளாக மிகச்சிறிய மஞ்சள் பூக்களைப் பூக்கும். செதில் போன்ற தண்டுகளின் நுனியில் மஞ்சள் நிறப் பூக்கள் தோன்றுவது நெருப்புக் குச்சியைப் போலவே காட்சி தரும். சிறிய விதைகளை உடைய காய்களையும் காய்க்கும்.
பூக்களையும், சிறிய விதைகளையும் தேடி பறவைகள், வண்டுகள், அதிக அளவில் வரும். முட்கள் இல்லாததாலும், அடர்த்தியான கிளைகளுடன் இருப்பதாலும் பறவைகள் கூடுகட்ட இந்தச் செடியை அதிகம் தேர்ந்தெடுக்கின்றன. தமிழகத்தில் பல பிரிவினர், திருமணங்கள், விழாக்கள், சடங்குகளில் பால் பெருகும் இந்தச் செடியை மங்கலச் சின்னமாக உபயோகிக்கிறார்கள். இந்தச் செடியின் பால் கண்ணில் பட்டால் பார்வைக் குறைபாடு ஏற்படும். தரிசு நிலங்களிலும் எவ்விதப் பராமரிப்புமின்றி செழித்து வளரும் இச்செடி பல மருத்துவப்பயன்களையும் கொண்டது. மரு மற்றும் கொப்புளங்களை செடியின் பால் குணமாக்குகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் புற்றுநோய்க்கும் கல்லீரல் வீக்கத்திற்கும், கிருமித்தொற்றுகளுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

கடவுளின் உணவு

பெருங்காயம்
ஆங்கிலப் பெயர்: ‘அசஃபோட்டிடா’ (Asafoetida)
தாவரவியல் பெயர்: ‘ஃபெருலா அசஃபோட்டிடா’ (Ferula Asafoetida)
தாவரக் குடும்பம்: ‘ஏபியாசியே’ (Apiaceae)
வேறு ஆங்கிலப் பெயர்கள்: சாத்தானின் சாணம் (Devil’s Dung), நாற்றமடிக்கும் பசை, (Stinking Resin), அசந்த் (Assant), கடவுளின் உணவு (Food of the Gods)
வேறு பெயர்கள்: அத்தியாகிரகம், இரணம், கந்தி, பூத நாகம், வல்லிகம் (தமிழ்), காயம் (மலையாளம்), இங்கு (இந்தி), இன்குயா (தெலுங்கு), இன்கு (கன்னடம்)

சமையலுக்கு மணம் சேர்க்கிற முக்கியப் பொருட்களில் ஒன்று பெருங்காயம். பெருங்காயச் செடியின் தாயகம் ‘பெர்சியா’ (Persia) (ஈரான்). 2 – 3 மீட்டர் உயரம் வரை செடியாகவும் குட்டை மரமாகவும் வளரும். இது ஒரு பல்லாண்டுத் தாவரம். இதன் வேரில் இருக்கும் மஞ்சள் நிறப் பசையில் இருந்து கிடைப்பதே பெருங்காயம்.
இலை 40 செ.மீ. அளவில் இருக்கும். பூக்கள் அடர்மஞ்சள் நிறம். பழம் நீள்வட்ட வடிவில் தட்டையாக இருக்கும். பழத்தின் உள்ளே சிவப்பு, பழுப்பு நிறச் சாறு இருக்கும். வேர்கள் கேரட் வடிவத்தில் கடினமானதாகவும் பெரியதாகவும் சதைப்பிடிப்பாகவும் உள்ளன.
வளர்ந்த 4 ஆண்டுகளில் செடியில் பெருங்காயப் பசை உருவாகிறது. பூ பூப்பதற்கு முன்பாக, வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். மூன்று மாதங்களில் வேரிலிருந்து சுமார் 1 கிலோ வரை பசையை பெறலாம்.
பெருங்காயத்தில், பெருங்காயப் பசை, எளிதில் ஆவியாகும் எண்ணெய், சாம்பல் ஆகியவை உள்ளன. நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் கூட்டுப் பெருங்காயத்தில், கருவேலம் பிசின் (Gub Arabic), கோதுமை, மைதா போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பெருங்காயம் வாங்கும்போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் என்ன என்று அச்சிட்டிருப்பார்கள். பெருங்காயத்தில் நிறைய கலப்பட வகைகளும் வருகின்றன. இவை உடல் நலனுக்குக் கேடு விளைவிப்பவை.
ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் போன்ற பகுதிகளில் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய். காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவையுணர்வு நரம்புகளைத் தூண்டி, ருசி உண்டாக்கும் குணம் கொண்டது. செரிமான சக்தி, குடல் நுண்ணுயிரி அழிப்பு, வாயுத் தொல்லை நீக்குதல் போன்ற பல மருத்துவ குணம் உடையது. சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக்கொண்ட இது, சமைத்த உணவுகளில் மென்மையான சுவையையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑