எறும்புகள் ‘ஃபோர்மிசிடே’ (Formicidae) உயிரினக் குடும்பத்தைச் சேர்ந்தவை. எறும்புகளில் 10,000 வகைகளும், கிட்டத்தட்ட 22,000 சிற்றினங்களும் இருக்கின்றன. தாவரங்களுக்கும் எறும்புகளுக்கும் உள்ள உறவு மிகச்சிறப்பானது. பயறு வகைத் தாவரங்கள், ஆர்க்கிடுகள், ஆமணக்குச்செடியின் ‘யுஃபோர்பியேசியே’ (Euphorbiaceae) எனப்படும் ஆமணக்குச் செடி குடும்பத் தாவரங்கள் போன்றவை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தாவரங்கள் எறும்புகளுடன் நெருங்கிய உறவில் உள்ளவை.
* இந்தத் தாவரங்கள், எறும்புகளுக்குத் தங்குமிடம், உணவு போன்றவற்றை அளிக்கிறது பதிலுக்கு எறும்புகள் தாவரங்களை உண்ண வரும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்தல், விதைபரவல், மகரந்தச்சேர்க்கை தாவரக்கழிவுகளைச் சுத்தம் செய்தல், சத்துகளை அளித்தல், நோயிலிருந்து காத்தல் என, பல வகைகளிலும் உதவுகின்றன. சில எறும்புகள் இலைகளில் ஏற்படும் பூஞ்சைத்தொற்றினை (Fungal Infections — ஃபங்கல் இன்பெக்ஷன்ஸ்) பூஞ்சை இழைகளை உண்பதன் மூலம் முற்றிலுமாகக் கட்டுப்படுத்துகின்றன.
* எறும்புகளோடு இணைந்து வாழும் இவ்வகைத் தாவரங்கள் ‘மிர்மிகொஃபைட்ஸ்’ (Myrmecophytes) எனப்படும். இந்தத் தாவரங்களில் எறும்புகள் வாழ்வதற்கான ‘டொமேசியா’ (Domatia) எனப்படும் தங்குமிடங்களைக் கொண்டிருக்கும். உள்ளே வெற்றிடங்கள் உள்ள கூரிய முட்கள், வெற்றிடமாக இருக்கும் தண்டுகளின் உட்புறம், சுருண்ட இலைகளின் ஓரங்கள் ஆகியவற்றில் எறும்புகள் முட்டைகளை இட்டு பாதுகாப்பாகத் தங்கிக்கொள்ளும்.
* எறும்புகளுக்குத் தேவையான உணவுப்பொருட்களை இலைக்காம்புகளில், மகரந்தத்துகள்களில், இலை நுனிகளில், தண்டுகளில் சேகரித்து வைத்திருக்கும், நீர்ச்சுரப்பிகளை மலருக்கு வெளியே (Extrafloral Nectaries – எக்ஸ்ட்ராஃபுளோரல் நெக்டரிஸ்) எறும்புகளுக்கென உருவாக்கி வைத்திருக்கும் தாவரக் குடும்பங்களும் உள்ளன.
* பல வகையான பழ மரங்கள், எறும்புகளை பழங்கள் இருக்கும் காலத்தில் மட்டும்கூட வைத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ளும். பிசின் போன்ற திரவத்தை எறும்புகளுக்காகச் சுரக்கும். மாமரங்களிலும், கொய்யா மரங்களிலும் எப்போதும் எறும்புகள், இருப்பதைக் காணலாம்.

தெரிந்து கொள்வோம்
ஓடும் வேகம் (மணிக்கு)
யானை – 25 கி.மீ.
சிங்கம் – 80 கி.மீ.
சிறுத்தை – 114 கி.மீ.
புலி – 65 கி.மீ.
மான் – 60 கி.மீ.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]