மனிதகுலம் ஏறத்தாழ 6000 வகையான பயிரிடப்பட்ட தாவர இனங்களை உணவுத்தேவைக்காக நம்பியுள்ளது, இவற்றில் வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுபவை 170 பயிர்கள் மட்டுமே. இவற்றிலும் 30 பயிர்கள் மட்டுமே அதிக அளவில் மீண்டும் மீண்டும் சாகுபடி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன ஒப்பீட்டளவில் சிறிய கவனம் கூட அளிக்கப்படாத பல முக்கிய காய் கனி வகைகளை அளிக்கும் ஏராளமான பயிர்கள் உலகின் கவனத்துக்கே வராமல் இருக்கின்றன..
சத்துக்கள் நிறைந்த இத்தகைய உலகளாவிய அளவில் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதப்படும் பயிர்கள் தேசிய அல்லது பிராந்திய அளவில் பிரதானமானவை. அவற்றில் ஒன்றுதான் செள செள காய்.
பூசணிக்காய் குடும்பமான குக்கர்பிட்டேசியின் சுரைக்காய், புடலை, பீர்க்கன், தர்பூசணி, பாகல் போன்றவை அதிகம் புழக்கத்தில் இருப்பவை. அதே குடும்பத்தில் இருக்கும் செள செள எனப்படும் காய் தென் தமிழகத்தில் அரிதாகவே உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
ஆங்கிலத்தில் cho cho , choko, mirliton, chayote என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் Sechium edule.
இதய வடிவ இலைகளும், பற்றுக்கம்பிச்சுருள்களும், வேர்க்கிழங்குகளும் கொண்ட செள செள ஒரு ஏறுகொடித்தாவரம். ஆண் மலர்கள் கொத்தாகவும் பெண் மலர் ஒற்றையாகவும் தனித்தனியே ஒரே கொடியில் அமைந்திருக்கும். தண்டுகளில் நார் நிரம்பியிருக்கும்.
உணவுக்காக சந்தைப்படுத்தப்படும் செள செள காய்கள் எனப்படுவது இதன் கனிகளே. இவை ஒழுங்கற்ற பேரிக்காய் வடிவில் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். பொதுவாக கனிகளில் முட்கள் காணப்படும். முட்களின்றியும், அடர்பச்சையிலும், வெளுத்த மஞ்சள் நிறத்திலும், அளவில் சிறிதாகவும் கூட காய்கள் இருக்கும். நீர் நிரம்பிய, சதைப்பற்றான காய்கள் இனிப்புச்சுவையுடைய பெரிய ஒற்றை விதை கொண்டிருக்கும்.
மெக்ஸிகோவை சேர்ந்த பல்லாண்டுத்தாவரமான இதன் ஒரு கொடி வருடத்திற்கு 80லிருந்து 100 காய்களையும் 25 கிலோ வேர்க்கிழங்குகளையும் கொடுக்கும்.
உலகெங்கும் இதன் பல வழங்கு பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. chayote, christophene, vegetable pear, mirliton, merleton choko ( ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில்), starprecianté, citrayota, citrayote (எக்குவடோர் மற்றும் கொலம்பியா), chuchu (பிரேசில்), machucha, caiota, pipinela (போர்ச்சுக்கல்), chow chow (இந்தியா), cho cho (ஜமைக்கா), Sayote (பிலிப்பைன்ஸ்), güisquil (குவாத்தமாலா), pear squash / iskus(நேபாள்).
இவை சௌசௌ / பெங்களூர் கத்தரிக்காய் / மேராக்காய் / சீமை கத்தரிக்காய்/சொச்சக்காய் என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன. Custard marrow என்னும் இதன் ஆங்கிலப்பெயர்களில் ஒன்றுதான் தமிழில் மேராக்காய் ஆகி இருக்கிறது
இதன் அறிவியல் பெயரின் பேரினப்பெயரான ’Sechium’ என்பது வெள்ளரிக்காயை குறிக்கும் பண்டைய கிரேக்கச் சொல்லான ’síkyos’ என்பதிலிருந்து பெறப்பட்டது. சிற்றினப்பெயரான ’edule’’ என்பது உண்ணத்தகுந்த என்று பொருள்படும்.
செள செள உற்பத்தியில் மெக்ஸிகோவும் பிரேசிலும் முதலிடத்தில் இருக்கின்றன. இந்த நாடுகளில் அவகேடோ, தக்காளி மற்றும் காபிக்கொட்டைகளுக்கு அடுத்த படியாக செளசெள அதிகம் விரும்பப்படும் நான்காவது உணவுப்பொருளாக இருக்கிறது.
இது அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும்கொண்ட சுவையான காய்களும்,“Quelites” எனப்படும் இதன் தளிரிலைகளும் “chayotextle” எனப்படும் வேர்க்கிழங்குகளும் இங்கு விரும்பி உண்ணப்படுகிறது
இதன் இலைகளிலும், வேர்க்கிழங்குகளிலும், காயிலும் ஏராளமான கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்களும் பல வைட்டமின்களும் உள்ளன.
இவை வேகவைத்தும், ஊறுகாய்களாகவும், அவித்தும், எண்ணையில் பொரித்தும் உண்ணப்படுகின்றன. காயின் அனைத்துப்பகுதிகளுமே உண்ணத்தகுந்தவை என்பதால் இதன் மெல்லிய தோலையும் விதையையும் நீக்க வேண்டியதில்லை. செள செளெவின் தோல் மற்றும் விதையையும் சேர்த்து சமைத்தும், சமைக்காமல் பச்சையாகவும் உண்ணலாம்
இக்கொடியின் காய் உள்ளிட்ட அனைத்துபாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை
இவை சிறுநீர் பெருக்கும், சிறுநீரக கற்களுக்கும் வீக்கங்களுக்கும் எதிராக செயல்புரியும், இருதயத்தை பாதுகாக்கும், குருதிக்கொதிப்பை கட்டுப்படுத்தும் மற்றும் உடலை வலுப்படுத்தும்.
செளசெள முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. காய்கள் கொடியில் இருக்கும் பொழுதே அதனுள் இருக்கும் விதை முளைத்துவிடுகிறது. தண்டின் வெட்டுத் துண்டுகளையும் சாகுபடிக்கு பயன்படுத்தலாம்
பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருங்காலத்திற்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் உணவு அடிப்படையிலான அணுகுமுறைகளில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத இனங்களின் (Neglected and underutilized species-NUS) பரவலான மீள் உபயோகங்கள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன.
செள செள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த, அனைத்துக் காலநிலைகளிலும் வளரும் இயல்பு கொண்ட, நோய் எதிர்ப்புதிறன் மிக்க, லாபம்அளிக்கும், உள்நாட்டில் கிடைக்கக்கூடிய எளிதில் வளர்க்க முடியும் பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதும், அவற்றின் நுண்சத்துக்கள் நிறைந்த காய்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதும் வருங்காலத்துக்கான உணவுசார்ந்த அணுகுமுறைகளில் மிக முக்கியமானவை.
உலகெங்கிலும் விதவிதமான உணவு வகைகளும் அவற்றை தயாரிக்க ஆயிரக்கணக்கான சேர்மானமற்றும், மசாலாப்பொருட்களும் உள்ளன. இந்த அடிப்படை பொருட்களில்லையெனில் பல உணவுகளை செய்ய இயலாது.உலகின் ஒருசில பகுதியில் மட்டும் பயன்படுத்தப்படும் பிரத்யேக மசாலா வகைகளும் பல இருக்கின்றன. இவற்றில் சில பொருட்கள் மிக அத்தியாவசியமானவை. அப்படியானஒன்றுதான் இந்தியாவின் பிரபலமான உணவுச்சேர்மானமான புளி.
.இனிப்பு மற்றும் புளிப்பு ஆகிய இருவகைகளில் புளி இருக்கிறதென்றாலும் அதிகம் சமையலில்உபயோகப்படுவது புளிப்பு வகைதான்.
16ம்நூற்றாண்டில் புளி ஆப்பிரிக்காவிலிருந்துமெக்ஸிகோ மற்றும் போர்ச்சுகலுக்கு வணிகர்களால்அறிமுகமானதுபின்னர்அங்கிருந்துஉலகின்பலபகுதிகளுக்கும்பயணித்தது,அரேபியர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் புளியமரத்தையும் அதன் கனிகளியும்முதன்முதலில்கண்டபோது அதை இந்தியாவின்பேரீச்சை என்னும் பொருளில் dates of India அதாவது tamar-al-hindi, என அழைத்தார்கள். எனவேஇம்லி என்றும் இந்திய பேரீச்சை என்றும் அழைக்கப்படும் புளியின் ஆங்கில பெயர் டாமரிண்ட்என்றானது.மார்க்கோபோலோபுளியைடேமரண்டி என்று குறிப்பிட்டிருக்கிறார்tamarandi.
தென்னிலங்கையில்இது வடுபுளி எனப்படுகிறது.. பேபேசிகுடும்பத்தைச் சேர்ந்தஇதன் கனி புளிப்புச்சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களைஅளிக்கும்புளிய மர வகைகள் உள்ளன
புளியின்தாவர அறிவியல் பெயர் டாமரிண்டஸ்இண்டிகா(.Tamarind –Tamarindus indica)இவ்வாறு அறிவியல் பெயரின் இரண்டாம் பாதியில் வரும் பிரதேச அல்லது நாட்டின் பெயர்கள் அந்த தாவரம் எந்த பகுதியைச்சேர்ந்தது என்பதை குறிக்கும் என்றாலும் புளியின் பெயரில் இருக்கும் இந்தியாவுக்கு அது சொந்தமான மரம் இல்லை. ஆப்பிரிக்காவை சேர்ந்த புளிய மரம் இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்குமுன்பிருந்தேஅறிமுகப்படுத்தப்பட்டிருந்ததால்இந்தியாவுக்கும்சொந்தமென்று கருதி அதன் அறிவியல் பெயரின்பிற்பாதியில் இந்தியா சேர்க்கப்பட்டிருக்கிறது.
புளிய மரம் மிக பிரமாண்டமாக வளரும் இயல்புடையதுஇறகுக்கூட்டிலைகளும், மஞ்சள் பழுப்பு கலந்த மலர்களும்கொண்டிருக்கும்இம்மரம் சுமார் 90 அடி உயரம் வரை வளரக்கூடியது. வருடத்துக்கு சுமார் 225 லிருந்து300 கிலோ கனிகளைஅளிக்கின்றது.மிக மெதுவாக வளரும் இவை பல்லாண்டுகளுக்குபூத்துக்காய்த்து உயிர் வாழும்.
மிக பருத்த தடிமனான அடிமரத்தைகொண்டிருக்கும் புளியமரம் பெரும்பாலும் பசுமை மாறமல் இருக்கும். மண் நிறத்தில் உலர்ந்த ஓடுகளுடன் ஒழுங்கற்ற வளைவுகளுடன்கொத்துக் கொத்தாக தொங்கிக்கொண்டிருக்கும்வெடியாக்கனிகளானபுளியங்காய்கள்10 இன்ச் நீளம் இருக்கும்பட்டும் படாமல் புழகும்இயல்பைதமிழத்தில் ’’ஓடும் புளியம்பழமும் போல ’’என சொல்லுவார்கள்.. ஏனெனில் புளியின்ஓடானது அதன் சதையோடுஒட்டுவதில்லை. 10லிருந்து12 விதைகள்கனிகளினுள் காணப்படும்
இந்தியர்களின்விருப்ப உணவுகள் பலவற்றில் புளி சேர்க்கப்பட்டிருக்கும்அசைவசைவ உணவுகள் இரண்டிலும் புளி இங்கு சேர்க்கப்படுகிறது.. தென்னிந்தியாவின்பயணஉணவென்றே பெயர் பெற்றிருக்கும் புளியோதரை, தென்னிந்தியகலாச்சாரத்துடன்புளிக்கு இருக்கும் நெருக்கமான தொடர்புக்குசாட்சியளிக்கிறது
புளியில்பாலிஃபீனால், மெக்னீசியம்,செம்பு, செலினியம் போன்ற பல முக்கிய சத்துக்கள் இருக்கின்றன.இவற்றுடன் பல வகையான வைட்டமின்கள்பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தும்புளியில்நிறைந்துள்ளன.
இந்தியாவின் பஞ்ச காலங்களில் ஊற வைத்த புளியங்கொட்டைகள் உணவாகி இருக்கிறது. இன்றும் புளியங்கொட்டைகளை வறுத்து சாப்பிடும் பழக்கம் தென்னிந்தியகிராமங்களில் இருக்கிறது. கொட்டையைசுற்றியிருக்கும் நார் நிறைந்த சதைப்பற்றான பகுதியில் அதிக அளவு டார்டாரிக் அமிலம் இருக்கும் இதுவே புளியின்சுவைக்கு காரணம்
கெய்ரோவில்புளித்தண்ணீரில்தயாரிக்கப்பட்ட இனிப்பு பானகம் தெருவொரக்கடைகளில்விற்கப்படுவது பல்லாண்டு கால வழக்கமாக இருக்கிறது
புளிய மரங்கள் நிதானமாக எரியும் தன்மை கொண்டவையாதலால் சமையல் அடுப்புக்குஎரிவிறகாகபயனாகிறது.புளியமரக்கட்டைகள் மரச்சாமன்கள் செய்யவும் பயன்படுகின்றன புளியமரம் வண்டிச் சக்கரம், உலக்கை மற்றும் நீண்ட நாள் உழைக்கும்மரப்பொருட்கள் செய்யவும்பயன்படுகிறது..இம்மரம் வெட்டுவதற்கு மிகவும் கடினம். இதன் கடினத்தன்மை கரணமாக, இறைச்சிக் கடைகளில் அடிப்பலகையாகபயன்படுத்தப்படுகின்றது.
இந்தியாவெங்கிலும்கோவில்களிலும்வீடுகளிலும்செம்புச்சிலைகள் வெண்கல, பித்தளை பாத்திரங்களைதுலக்கபுளியேஉபயோகிக்கபடுகிறது. புளியங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் வார்னிஷ்களில்கலக்கபடுகிறது
தென்னிந்தியசாலைகளின் இருமருங்கிலும் நிழல் தரும் இம்மரங்களின்பெயரால்பலகிராமங்களின் பேருந்து நிறுத்தங்கள்உள்ளன.
4ம்நூற்றாண்டிலிருந்தே பண்டைய எகிப்திலும்கிரேக்கத்திலும் புளி பரவலாக உணவில்சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு உணவு வகைகளிலும்புளியின்சதைப்பகுதிசுவைக்காகவும், அதன் உணவை பாதுகாக்கும்தன்மைக்கெனவும்சேர்க்கப்படுகின்றது. இம்மரத்தின் தளிரிலைகளும், இளம் காய்களும்மலர்களும்துவையலாகஅரைத்துஉண்ணப்படுகின்றன.
பல.இந்தியகிராமங்களில் வெற்றிலை போடுகையில்சுண்ணாம்புக்கு பதில் புளியமரத்தின் இளம்தண்டுகளைசேர்ப்பதுண்டு. இதன்மரப்பட்டையிலிருந்து சாயம் எடுக்கப்படுகின்றது பல்வேறு பாரம்பரியமருத்துவமுறைகளில்இம்மரத்தின் பல பாகங்கள்சிகிச்சைக்கெனபயன்பாட்டில் இருக்கிறது
புளிய மரம் இந்தியக்கலச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. இம்மரத்திற்கடியில்உறங்கக்கூடாது என்னும் பொதுவான நம்பிக்கைக்கு காரணம் இதன் உதிரும் இலைகள் உடையில் கறையை ஏற்படுத்துவதால் இருக்கலாம்.
பர்மாவில்மழைக்கடவுள்புளிய மரங்களில் வசிப்பதாக நம்பிக்கை நிலவுவதால் அங்கு இம்மரங்கள்வழிபடப்படுகின்றன. பல கிராமங்களில்அரசமரத்துக்கும்வேம்புக்கும் திருமணம் செய்துவைப்பதைப்போல, சிலஇந்தியகிராமங்களில்மழை வேண்டி புளியமரத்துக்கும் மா மரத்துக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
ஆப்பிரிகாவில்புளியமரபட்டையை ஊற வைத்த நீரில் சோளத்தை கலந்து கால்நடைகளுக்குதீவனமாக கொடுத்தால் அவை காணாமல் போனாலும் திருட்டுப்போனாலும் திரும்ப உரிமையாளரிடம்வந்துவிடும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.
இந்தியாவில் பிறந்த குழந்தைக்குநாக்கில் தேன் தடவுவது போல மலேயாவில் புளித்தண்ணீரில்தேங்காய்பால் கலந்து தடவும் வழக்கம் இருக்கிறது. பல நாடுகளில் புளிய இலைகளை உண்ணக்கொடுத்தாலயானைகள்கட்டளைகளுக்கு எளிதில் கீழ்படியும் என்னும் நம்பிக்கை உண்டு.
பல்லாங்குழிகளில்சோழிகளுக்கு பதில் புளியங்கொட்டைகளைபன்னெடுங்காலமாக தமிழர்கள் உபயோகிக்கிறார்கள்.பலநாடுகளில்புளியமரம்தபால்தலைகளில்இடம்பெற்றுள்ளது.
உலகெங்கும் புளி பயணித்து வந்திருக்கும் பாதைகளைட்ரினிடாட்டாம்பரன் இனிப்பு- புளிப்பு உருண்டைகளும்(tambran balls) இந்தியாவின் சாம்பாரும், ரசாமும், புளியோதரையும், மெக்ஸிகோவின்புல்பரிண்டோ (pulparindo) மிட்டாய்களும்அகுவாஃப்ரெஸ்கா (agua fresca) பானமும், நைஜீரியாவின்காலையுணவுகஞ்சியானகுனான்சமியாவும்(kununtsamiya,) இந்தோனேஷியாவின்சம்பல்சாஸும் (sambal sauce) பிலிப்பைன்ஸின்சினிகேங்சூப்பும் (sinigang soup.) சுவையாக சொல்லிக் கொண்டிருக்கின்றன .தற்போது இந்தியா புளி உற்பத்தியில்முதலிடத்தில் இருக்கிறது
தாவரவியல் அகராதியை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் நினைத்ததைக்காட்டிலும் பெரும்பணியாக இருக்கிறது. பல தமிழ்சொற்களுக்கு வாரக்கணக்கில் தேடுகிறேன். அப்படி perianth/tepal என்னும் அல்லியும் புல்லியும் சேர்ந்த மலரின் இதழைபோன்ற பகுதிக்கு அதழ் என்னும் பெயர் கிடைத்தது. எத்தனை அழகான பெயர்! இந்த தளத்தின் பெயரையும் மென்மொழிகளிலிருந்து அதழ் என்றே மாற்றிவிட்டேன்.
நியூயார்க்கின் வடக்கு பகுதியில் வாழ்ந்த 6 இனக்குழுக்களின் ( Cayuga,Mohawk, Oneida,Onondaga,Seneca and Tuscarora.) கூட்டான பழங்குடியமைப்பு இரா குயிஸ் (Iroquois) வேட்டையாடிகளும், விவசாயிகளுமான மக்களை கொண்டது. இவர்களனைவருக்குமான பொதுவான சட்டங்களும் வரையறைகளும் உள்ளன.
இப்பழங்குடியினரின் தொன்மங்களிலொன்று இரட்டை ஆண்குழந்தைகளின் மகப்பேறில் இறந்த ஆகாயதேவதையின் உடலிலிருந்து மகன்களுக்கு உணவளிக்கும் பொருட்டு முளைத்த மக்காச்சோளம், பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் செடிகள், பின்னர் அம்மக்களனைவருக்கும் உணவளித்ததென்கிறது.
இணைபிரியாத மூன்று சகோதரிகள் பற்றிய இம்மக்களின் மற்றொரு தொன்மம் டியோ-ஹா-கோ (Deo-ha-ko) என்றழைக்கப்படும் இச்சகோதரிகள் இம்மூன்று பயிர்களையும் காப்பதாக சொல்லுகின்றது.
மக்காச்சோளப் பயிர் பூமியில் விளைவிக்கப்பட்ட தானியப் பயிர்கள்களில் மிகப்பழமையானது. பலவிதமான பழங்களை அளிக்கும் ஸ்குவாஷ் கொடியின் காய்களும் கனிகளும் பலநாட்களுக்கு சேமித்து வைக்கும் படியான கடினமான வெளித்தோலை கொண்டவை. கிமு 20 ஆம் நூற்றாண்டிலேயே மெசோ அமெரிக்கர்களால் பயிரிடப்பட்ட ஆரம்பகால பழக்கப்பட்ட பயிர்களில் பீன்ஸ் செடியும் இருக்கிறது. புரதம் நிரம்பிய இதன் காய்களும் விதைகளும் இன்றுவரையிலும் உலகெங்கிலும் மிக முக்கியமான உணவு பொருளாக இருந்து வருகிறது,
இராகுயிஸ் மக்களே மூன்று சகோதரி பயிர்களென்னும் மக்காச்சோளம் பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் பழங்களை ஒன்றாக பயிரிடும் முறையை உருவாக்கியவர்கள். ஒன்றுக்கொன்று துணையாகவும், பயனுள்ளதாகவும் இவை மூன்றும் இருந்ததால் இவை சகோதரி பயிர்கள் என அவர்களால் அழைக்கப்பட்டன. இப்பயிரிடும் முறையை பிற பழங்குடி இனங்களும் கற்றுக்கொண்டு இம்முறையை பரவலாக்கினர்
பீன்ஸ் பயிர்கள் தென்அமெரிக்காவிலும்,மத்திய அமெரிக்காவில் ஸ்குவாஷ் பயிர்களும் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. இவற்றிற்கு ஆயிரமாண்டுகளுக்கு பின்பே மக்காச்சோள பயிர் உருவானது என்பதால் இம்மூன்றும் எப்போதிலிருந்து ஒன்றாக பயிரிடப்பட்டன என்று துல்லியமான கணக்குகள் கிடைக்கவில்லை. எனினும் தொல்லியல் ஆதாரங்கள் இம்மூன்று பயிர்களும் சுமார் 3500 வருடங்களுக்கு முன்பிருந்து துணை பயிர்களாக விளைவிக்கப்பட்டதற்கான சான்றுகளை அளிக்கிறது.
பீன்ஸ் கொடி பற்றி படர மக்காச்சோள செடி தனது உயர்ந்து வளரும் தண்டுகளை அளிக்கிறது, பீன்ஸ் கொடி தனது வேர் முடிச்சுக்களில் இருக்கும் பாக்டீரியாக்களால் நிலத்தின் நைட்ரஜன் சத்தை அதிகரிக்கிறது, பூசணிக்காய் குடும்பத்தை சேர்ந்த ஸ்குவாஷ் செடி நிலத்தில் பரவிப் படர்ந்து தனது அகலமான இலைகளால் நிலத்தை மூடி, ஈரத்தை வேர்களுக்கடியில் சேமித்து, களைகள் முளைக்கா வண்ணம் செய்கிறது.
30 செமீ உயரமும் 50 செமீ அகலமமும் கொண்ட தட்டையாக்கப்பட்ட மண் மேடுகளின் நடுவில் ஏராளமான மக்காச்சோள விதைகள் விதைக்கப்பட்டு அவற்றிற்கு உரமாக மீன்களும் புதைக்கப்படுகின்றன. 15 செமீ உயரத்துக்கு மக்காச்சோள பயிர்கள் வளர்ந்ததும் அவற்றின் அடியில் பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் பயிர்களின் விதைகள் அடுத்தடுத்து விதைக்கபட்டு கொத்துக்கொத்தாக இம்மூன்று பயிர்களும் வளர்க்கப்படுகின்றன. இப்பயிரிடும் முறை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக எந்த மாற்றமுமின்றி பின்பற்றப்படுவருகின்றது
வடஅமெரிக்காவின் வறட்சியான பகுதிகளில் மட்டும் நான்காவது சகோதரியாக ஸ்குவாஷ் மற்றும் பீன்ஸ் பயிர்களில் மகரந்த சேர்க்கை செய்யும் வண்டுகளை கவரும் மலர்கள் கொண்ட செடியான Cleome serrulata வையும் பயிரிடுகிறார்கள். சிலநாடுகளில் மூன்று சகோதரிப்பயிர்களுடன் , தோட்டத்தின் வடக்குப் பகுதியில் இச்செடிகளுக்கு நிழல் தராதவாறு சூரியகாந்தி செடிகளும் வளர்க்கப்படுகிறது.
Cleome serrulata
மக்காச்சோளம் வளருகையில் மண்ணின் நைட்ரஜன் சத்தை முழுவதுமாக உறிஞ்சி கொண்டுவிடும். மண்ணில் குறையும் நைட்ரஜனை பீன்ஸ் பயிர் மீண்டும் கொண்டு வரும், மண்ணில் இருக்கும் ஈரம் காய்ந்துவிடாமல் தனது அகலமான் இலைளால் காபந்து செய்து கூடவே வளரும் ஸ்குவாஷ் செடிகள் மக்காச்சோளம் உண்டாக்கும் மண் அரிப்பையும் தடுக்கின்றன. பயிர் சுழற்சியால் மட்டுமே சாத்தியமாகும் இழந்த சத்துக்களை, மண்ணில் மீண்டும் நிறைக்கும் முறையை, பயிர் சுழற்சி இல்லாமலேயே மூன்று சகோதரி பயிர்கள் கொடுக்கின்றன
கூட்டு பயிரிடும் முறையான இது இன்றளவும் உலக நாடுகள் பலவற்றில் சிறு விவசாயிகள் பின்பற்றும் வெற்றிகரமான ஒரு விவசாய முறையாக இருக்கிறது. அமெரிக்காவில் மிக பரவலாக இருக்கும் இம்முறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு மூன்று சகோதரி பயிர்களின் சித்திரம் செதுக்கப்பட்டிருக்கும் அமெரிக்க நாணயமொன்று 2009 ல் வெளியிடப்பட்டது.
அமெரிக்க பழங்குடியினரின் விவசாய முறையான இதிலிருந்து கிடைக்கும் மூன்று விளைபொருட்களில் மக்காச்சோளத்தில் இருந்து ஸ்டார்ச்சும், பீன்ஸில் இரருந்து புரதமும், ஸ்குவாஷ் பழங்களிலிருந்து வைட்டமின்களும் கிடைப்பதால் சரிவிகித உணவினால் உடலாரோக்கியமும் இக்கூட்டு விவசாயமுறையினால் மண்வளமும் மேம்படுகிறது. அமெரிக்க பழங்குடியினரின் இந்த முறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றும் அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் நாளில் தயாரிக்கப்படும் சிறப்பான உணவுகளில் இம்மூன்று விளைபொருட்களும் கலந்து இருக்கும்.
அய்யப்பன் கோவில் அருகில் இருந்த அந்த வாடகை வீட்டில் கழிந்த என் பால்யம் என்றென்றைக்கும் மறக்கவியலாததாகி விட்டிருக்கிறது. இன்றும்கூட மனது பாரமாகும் நாட்களில் அந்த தெருவுக்கு போய் இப்போது அடையாளம் தெரியமலாகிவிட்டிருந்தாலும அந்த முன்னறையின் பச்சைவண்ணமடித்த கம்பிகளுடனான ஜன்னல் மட்டும் அப்படியே இருக்கும் வீட்டை பார்த்துவிட்டு வருவதுண்டு. அந்த ஜன்னல் என் பால்யத்துக்குள் நான் நுழையும் வாசலாகி விட்டிருக்கிறது.
அந்த வீட்டில் நான் 2 ஆம் வகுப்பு படிக்கும் வரைதான் இருந்திருக்கிறேன், அம்மா தம்பி விஜியை வயிற்றில் கொண்டிருந்ததால்..3ம் வகுப்புக்கு வேட்டைக்காரன் புதூரிலும், பின்னர் ராஜா ராமண்ணா நகர் சொந்த வீடு கட்டப்பட்ட பின்பு அம்மாவுடன் தாராபுரம் போய் செயின்ட் அலொஷியஸில் 4 ம் வகுப்பும் படித்தேன்
ஆனால் அந்த வெங்கடேசா காலனி வீட்டின் அமைப்பு அப்படியே நினைவில் இருக்கிறது. இரண்டு அறையும் பின்னால் கரி படிந்த விறகடுப்பு டன் கூடிய சமையலறையும்,துவைக்கும் கல்லுடன் கூடிய , கீழே அமர்ந்து , பாத்திரம் கழுவும் இடத்துடன் பின் கதவுடன் முடியும் பெரிய பின் முற்றமும், பின் கதவை திறந்து கொஞ்சம் நடந்தால் தனியே வரிசையாக கட்டப்பட்டிருக்கும் எடுப்பு பொதுக்கழிவறைகளுமாக 3 குடித்தனங்கள் ஒரே காம்பவுண்டில்.
இதில் நாங்களும் கமலா அத்தை ராமு மாமா குடும்பம் பக்கம் பக்கமாக இரட்டை வீடுகளில். குருவாயூரப்பன் வீடு மட்டும் எங்கள் இருவரின் வீட்டுக்கு பின்னால் பக்கவாட்டில் திரும்பி கோபித்து கொண்டதுபோல் அமைந்திருந்க்கும். அவன் யாருடனும் அதிகம் ஒட்ட்டியதில்லை. வீட்டு பெரியவர்களும் அப்படியே. வீட்டு மதில் சுவரும் அடுத்திருந்த ஐயப்பன் கோவில் மதிலும் ஒன்றே. அந்த பால ஐயப்பனும் எங்கள் களித் தோழன்தான்.
எனக்கு எப்படி இது நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை எனினும் துல்லியமாக என்னால் நினைவு கூற முடிந்த ஒரு நினைவென்றால் முன்னறையின் வாசல் நிலையில் அம்மா என்னை மடியில் அமர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார் அறையின் கோடியில் பச்சை இரும்பு மடக்கு நாற்காலியில் அப்பா அமர்ந்து முன்னால் இருந்த மர ஸ்டூலில் சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி,ஒரு டம்ளரில் தண்ணீர், சோப்பு நுரையுடன் ஷேவிங் பிரஷ் சகிதம் முகச்சவரம் செய்து கொண்டிருக்கிறார். நான் அம்மாவின் ரவிக்கைக்குள் இருந்து முலையை எடுத்து அதன் காம்பை திருகி கொண்டிருப்பதை அம்மா புன்னகையுடன் அப்பாவிடம் சுட்டி காண்பிக்கிறார், திரும்பி பார்க்கும் அப்பா மறுமொழி ஏதும் சொல்லாமல் புன்னைகையைபோல எதோ செய்கிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறது ஏனெனில் ஒரு வேளை அம்மா எனக்கு 2 வயது வரை முலைகொடுத்திருப்பினும் அந்த நினைவுகள் இன்னும் அழியாமல் இருப்பது விநோதம்தான்.
அந்த வீட்டில் தான் அப்பா கலைக்களஞ்சியம் என்னும் ஒரு கெட்டி அட்டை போட்ட வண்ண புத்தகம் கொண்டு வந்து தந்தார்.கனத்த அதன் அட்டையை திறந்ததும் உள்ளே ஒருகாகித செந்தாமரை மலர் விரியும் அமைப்பு இருக்கும். மனம் அப்போது அப்படி பொங்கி ததும்பும்.என் சின்னஞ்சிறு கரங்களில் மீள மீள அச்செந்தாமரை மலர்ந்தபடியே இருந்தது. அட்லஸ் வழியே உலகை முதன் முதலில் பார்த்ததும் அதில்தான். அது அளித்த பரவசம் பின்னர் வேறெதிலும் கிடைத்ததில்லை..
நேரம் கிடைக்கையில் எல்லாம் அந்த முழு உலக வரைபடத்தையும் பின்னர் அடுத்தடுத்த பக்கங்களில் தனித்தனி கண்டங்களையும் அவற்றின் வழவழப்பையும் தொட்டுத்தொட்டு பார்த்தபடியே இருப்பேன். அங்கெல்லாம் சென்று வந்தது போலவே பெரும் பரவசமளித்த அனுபவம் அது. அப்பா அப்போது பார்த்து வந்த ஆசிரியப்பணியுடன் கூடுதலாக நூலக பாதுதுகாப்பும் அவர் பொறுப்பில் இருந்ததால் அதைக் கொண்டு வந்திருந்தார்..என் வாழ்வின் முதல் நூல் பரிச்சயமது.கமலா அத்தையின் மகன் ராமுவும் நாங்களும் ஏக வயது எனவே எல்லா விளையாட்டுகளிலும் அவனுமிருப்பான். அவனுடனும் கலைக்களஞ்சியத்தை வாசிப்போம் அல்லது பார்ப்போம்.
கமலா அத்தையின் வீட்டு கூடத்தில் டைனிங் டேபிளுடன் இணைக்கப்பட்டிருந்த காப்பிக்கொட்டை அரைக்கும் சிறு இயந்திரம் இருக்கும், அதில் அவ்வப்போது காபிக்கொட்டைகளை வறுத்தரைத்து அத்தை போடும் பில்டர் காபி கமகமக்கும்., அத்தையின் கீழுதட்டின் சின்ன சதைத் திரட்டு அளிக்கும் கவர்ச்சியாலேயே நான் அவர்பால் பெரிதும் ஈர்க்கப் பட்டிருந்தேன்.
பிரபாவுக்கென அத்தை தயிர்சாதத்தில் மாம்பழத்தை பிசைந்து ஊட்டுவார். வாசனை அபாரமாயிருக்கும். ஒருமுறை அத்தையின் உறவினரான கிளியுடன் விளையாடுகையில் , ஆம் அவள் பெயரே கிளிதான், மூன்று வரிசையில் இருந்த சிவப்பு சி்மெண்ட் பூசப்பட்டு கோடுகள் இடப்பட்டிருக்கும் வீட்டு வாசற் படிகளில் தடுக்கி விழுந்து மித்ரா நாக்கை துண்டித்துக்கொண்டாள், அப்பா அவளை தூக்கிக்கொண்டு அடுத்த தெரு தாமஸ் டாக்டர் வீட்டுக்கு ஓடி நாக்கை தைப்பதற்குள் அவரது வெள்ளை வேட்டி முழுக்க சிவப்பானது, பலமுறை அதே தாமஸ் டாகடரிடம் சின்ன சின்ன விஷக்கடிகளுக்கு சிகிச்சை பெற்றிருக்கிறோம். மித்ராவால் அவளது நுனி நாக்கை இப்போதும் முழுதாக மடிக்க முடியும்
வீட்டு வாசலில் எப்போதுமிருக்கும் கனகாம்பர பூச்செடிகள். அம்மா மாலையில் அவற்றை தொடுத்து தலையில் வைத்துக்கொள்வார்.பெரிய பெண்ணானதும் அப்படி நானும் வைத்துக்கொள்ளனுமென்று ரகசியமாக மனதில் நினைத்துக் கொள்வேன்.
கமலா அத்தை வீட்டு வாசலில் நின்ற சிவப்பு செம்பருத்தி மரங்களில், பூக்கள் பறிக்க வரும் ஐயப்பசாமி மாலை போட்ட என்னால் ஊமை மாமா என்றழைக்கப்பட்ட ஊமை பக்தர் ஒருவர் எல்லா வருடமும் தவறாமல் வந்து மலர்களை பறித்துசென்றுவிட்டு, கோவிலிலிருந்து திரும்புகையில் ஒருநாள் கூட தவறாமல் பொங்கலும் புளியோதரையுமாக பிரசாத தொன்னையை என் கையில் கொடுப்பார்.
அந்த தெருவில் தினமணிக்கதிர் பேப்பர் வாங்குவதால் கதிரக்கா என்றழைக்கப்டும் ஒரு பெண்ணின் வீடிருந்தது. அங்கே அநேகமாக தினமும் அந்த பேப்பரை நான் சென்று வாசிக்க வாங்கி வந்து பின்னர் திரும்ப கொடுப்பேன், அந்த கதிரக்காவின் குதிகால் வரை நீண்டிருக்கும் அடர்ந்த கூந்தலை அவரது அம்மா துணி துவைக்கும் கல்லில் பரத்தி வைத்து அரப்பிட்டு தேய்த்து கழுவுவார், கூடவே ’’ஆளைக்கொல்லும்டீ இத்தனை முடி’’ என்று கடிந்து கொள்வார்.
’’சீமெண்ணே ’’என்று கூவியபடி அவ்வபோது வாசலில் ஒற்றை மாட்டு வண்டி வரும். தகர டின்னில் மண்ணெண்ணெய் வாங்குவது வழக்கம் அப்போது., ஒருநாள் பிரபா உரக்க ’’எங்கம்மா இன்னிக்கு தீட்டு சீமெண்ண வேண்டாம்’’ என்று வீட்டு வாசலிலிருந்தே கத்த ராமு மாமா பின்னாலிருந்து காதை திருகி உள்ளே கூப்பிட்டு போனார். ‘’திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே சீமெண்ன நாராயணா ’’ என்று கோரஸாக அந்த வண்டி வருகையில் நாங்கள் மூவரும் பாடுவோம். கபாலத்தின் கடின ஓடே இல்லாமல் பிறந்த பிரபாவின் தங்கை ப்ரியாவை, வெகு பத்திரமாக கமலா அத்தை பார்த்துக் கொள்ளுவார்.5 வயதான பின்னரே அவளுக்கு சரியானது
அடுத்த தெருவில் பெரும் பணக்கார குடும்பமான சுஜியின் வீடிருந்தது. அதில் இருந்த நிலவறை பெரும் மர்மம் கலந்த வசீகரம் அளித்தது எனக்கு.
மேரி நிம்மி,பாபு என்னும் ஒரு கிறிஸ்தவ குடும்பமும் நட்பிலிருந்தார்கள். அவர்கள் வீட்டிலிருக்கும் இப்போது’’ பெயிண்டர் பிரஷ் குரோட்டன்’’ என நான் தெரிந்து கொண்டிருக்கும் பலவண்ணச் சிதறல்கள் இருக்கும் இலைகளுடனான குரொட்டன் செடியும் நிலவறை அளித்த அதே ஈர்ப்பை அளிக்கும் எனக்கு.,
பெயிண்டர்ஸ் பிரஷ் குரோட்டன்
அம்மா பணிபுரிந்த பெண்களுக்கான அரசு விடுதி வீட்டின் நேரெதிர் கட்டிடத்தில் இருந்தது, அங்கு நான் அம்மாவுக்கு தெரியாமல் ஹாஸ்டல் பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிட்ட கஞ்சியும் கொள்ளுத்துவையலும்,அதன் பொருட்டு வாங்கிய அடிகளுமாக நிறைந்திருந்த காலமது. அங்கிருந்த ஒரு சிறு பப்பாளி மரத்தின் உச்சி வரை நான் ஏறி விளையாடுவேன். தங்கம்மாவும் நாகம்மாவும் இறங்கச் சொல்லி கூச்சலிடுவார்கள்.ஹாஸ்டலின் வேப்ப மரத்தின் பாதி நிம்மி வீட்டில் நிற்கும்.
ஹாஸ்டல் சமையல்கார நாகம்மா என்னை மடியில் படுக்க வைத்து சொல்லிய கதைகள் ஏராளம் பெரும்பாலுமவை அவரின் சொந்த வாழ்வின் கதைகள் என்பதை இப்போது உணர்கிறேன் அப்பா அம்மா எனக்கு கதைகள் சொல்லியதே இல்லை ஆனால் நாகம்மாவே என் உலகில் கதைகளை புகுத்தியவர் அவை அனைத்துமே துயரக்கதைகளானாலுமே.
மிக இளம் வயதிலேயே குறை பட்டுபோன நாகம்மாவின் கறை படிந்திருக்கும் வெள்ளைச்சேலையின் வாசம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது,, கால்களை நீட்டி என்னை படுக்க வைத்து நாகம்மா அடிக்கடி ’’கிங்கிங் கிங்கிங் காணலையே, எங்கயும் காணலியே, எங்கயும் காணலியே வாழமரத்தடியே மாமியார் வீடிருக்க’’ என்று துவங்கும் பூ வங்கி வரச்சென்ற தன் கணவனான ஆண் தவளை ஒரு பஸ் சக்கரத்தில் நசுங்கி செத்துப் போனது தெரியாமல் போனவர காணோமே என்று கண்ணீருடன் தேடும் பெண் தவளையின் பாடலை பாடுவார்., எப்போது அதை பாடினாலும் சொட்டு சொட்டாக நாகம்மா கண்களில் இருந்து வழியும் கண்ணீரின் வெம்மையை இப்போது சக ஹிருதயளாக உணர்கிறேன்,
நாகம்மா தன் ஒரே ஆசையாக கருப்பு செருப்புக்களை போட்டுக் கொள்ள விரும்பினார் என்னிடம் விளையாட்டாக எப்போது நான் வேலைக்கு போனாலும் சம்பளத்தில் செருப்பு வாங்கி தர வேண்டும் என்று சொல்லுவார். ஆய்வு மாணவிக்காக அளிக்கபட்ட சலுகைக்கட்டணம் வாங்கிய முதல் மாதமே நாகம்மாவிற்க்கு செருப்புக்கள் வாங்கினேன். ஆனால் போது அவர் அவற்றை அறிந்துகொள்ள முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒரு மூலை கட்டிலில் படுத்திருந்தார். பின்னர் சில நாட்களில் மறைந்துவிட்டார்.
கருப்பு செருப்புகளும், தவளைகளும், வெள்ளைச்சீலையும் எப்போதும் எனக்கு நாகம்மாவை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது
இன்னொரு உதவியாளர் தங்கம்மாவும் என்னை வளர்த்தவரில் ஒருவர். நாகம்மா என் செவிக்குணவளித்தார். தங்கம்மா வயிற்றுக்கு.
எப்போது என்னை பார்த்தாலும் எனக்கென்று அம்மாவுக்கு தெரியாமல் நான் சாப்பிடும் ஒரு ரகசிய தின்பண்டம் வைத்திருந்து கொடுப்பார்.அதில் தங்கமையின் வியர்வையின் வாசம் இருக்கும். அன்பின் வாசமது
திலேப்பி மீன்களீன் சதையை கீறி அவற்றில் மசாலாவை திணிக்கும் மெலிந்த எலும்பு புடைத்திருக்கும் கரிய தங்கம்மாவின் கைவிரல்கள் வளர்த்த உடலிது.
முதன் முதலாக வீட்டுக்கு வாங்கிய ஒரு சின்ன நாய் குட்டியின் கழுத்தில் கயிறு கட்டி ஜன்னலுக்கு உள்ளிருந்து கிணற்றில் தண்ணீர் சேந்துவதுபோல இழுத்து, அதை தூக்கிட்டு அறியாமல் நான் கொன்றேன். அது ஏன் அசையாமல் என்னிடம் விளையாடாமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறதென்பதை முதுகில் நாலு விழுந்த பின்னே தெரிந்துகொண்டேன். எனக்கு தெரியவந்த முதல் மரணம் அது.
எதன் பொருட்டோ எப்போதுமே வீட்டின் சந்தில் நின்றுகொண்டிருந்தது சிமெண்ட் தள்ளிக்கொண்டு போகும் சிறு வண்டியொன்றூ. அதனருகில் அமர்ந்து நிம்மியும் பிரபாவும் நாங்களும் பேசிய கதைகளில் பெரும்பாலும் ஒரு பெருங்காடிருக்கும் அதனுள் நுழைந்ததுமே கனிகள் செறிந்திருக்கும் பழமரங்களும் அண்டாக்களில் நிரம்பியிருக்கும் எலுமிச்சை சர்பத்துமாகவே இருக்கும். கேட்பாரற்ற அந்த உணவுகளை கற்பனைக்கதைகளில், அள்ளி அள்ளி புசிப்போம் அப்போ்து.
அங்கமர்ந்துதான் அப்போது எங்களுக்கு தெரிந்த இரண்டு சிற்றுண்டிகளான வாழைப்பழத்துக்கு அடுத்ததான நறுக்கிய தக்காளி துண்டுகளில் சர்க்கரை தடவி சாப்பிடுவோம், அம்மாவுக்கு தெரியாமல் ஒரு துளி நீர் ஊற்றி வைத்த சர்க்கரை டப்பாவில் மறுநாள் கிடைக்கும் சிறு சர்க்கரை வில்லையளித்த குதூகலத்தை இப்போது குளிர்சாதனப் பெட்டியில் எந்த அடுக்கில் கைவைத்தாலும் மகன்களுக்கு கிடைக்கும் பட்டை சாக்லேட்டுகள் அளிக்கவே முடியாது.
பள்ளியின் ,NCC ஆபீசரான அப்பா சுவரில் தொங்க விட்டிருக்கும் கார்க் குண்டுகள் சுடும் வெற்றுத் துப்பாக்கியை கொண்டு எங்களிருவரையும், அந்த அறியா வயதின் தவறுகளின் பொருட்டு சுட்டுவிடுவதாக சொல்லி மிரட்டுவார். வாயை பொத்திக்கொண்டு கண்ணீர் வழிய சுவரோடு சுவராக பல்லியை போல அழுந்தியபடி அஞ்சி நின்ற இரு சிறுமிகளை நானே இப்போது அந்த பச்சை கம்பி ஜன்னல் வழியே பார்க்க முடிகிறது.
’’கண்ணீரும் கனவும்’’ என்று அருணா அவர்களின் இன்றைய பதிவை வாசித்ததும் எனக்கும் பால்யத்தின் நினைவுகள் கொப்பளித்து கிளம்பியதால் அவற்றை எழுத தொடங்கியிருக்கிறேன். ஜன்னல் வழி பயணம் இன்னும் தொடரும்
மனிதன் அருந்தும் திரவ உணவுகளனைத்தும் பானங்கள் எனப்படுகின்றன. தாகம் தீர்க்கும் தண்ணீரிலிருந்து பால், பழச்சாறுகள், காப்பி, தேநீர் உள்ளிட்ட பலவகையான பானங்கள் அனைத்துக் கலாச்சாரங்களிலும் தொன்று தொட்டே புழக்கத்தில் இருந்து வருகின்றது. பானங்களில் மென்பானங்கள், சூடான பானங்கள் மற்றும் மது பானங்கள் என பலவகைகள் இருக்கின்றன.
உலகின் மிக அதிகமக்களால் அருந்தப்படும் விருப்பபானங்களில் முதன்மையாக குடிநீரும் தொடர்ந்து தேநீரும், பின்னர் மூன்றாவதாக பியரும் இருக்கின்றது.
தேநீரென்பது உலர்த்தி, பொடித்து, பதப்படுத்திய (Camellia sinensis) கமெலியா சினென்ஸிஸ் என்னும் தாவரத்தின் இலைகளை கொதிநீரில் இட்டு உண்டாக்கப்படுவது.
இதன் தாவரப்பெயரிலிருந்து இவை சீனாவை தாயகமாக கொண்டவை என அறிந்துகொள்ள முடியமென்றாலும் தேயிலையின் தாயகம் இந்தியாதானென்கின்றன ஆய்வுகள். அஸ்ஸாமின் காடுகளில் இயற்கையாக செறிந்து வளர்ந்திருந்த Thea assamica என்னும் தாவரத்தின் விதைகள், இந்தியாவிற்கு வந்துசென்ற சீனப்பயணிகளால் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு விளைவிக்கப்பட்டு பின்னர் அதுவே கமெலியா சினென்ஸிஸ் ஆனது என்பதே தாவரவியல் அடிப்படையிலான வரலாற்று உண்மை
தேயிலைச்செடிகளில் இரண்டு முக்கியவகைகளே உலகெங்கும் பெருமளவில் பயிராகின்றது ;
Camellia sinensis என்னும் சிறிய இலைகளை கொண்ட சீன வகை
Leavea of Assamica and Sinensis
Camellia assamica என்னும் சற்றே பெரிய இலைகளை கொண்ட இந்திய வகை
தேயிலைச்செடிகள் நல்ல உயரமான மரமாக வளரும் இயல்புடையவை. ஆனால் இவற்றிலிருந்து தளிரிலைகளை தொடர்ந்து அறுவடை செய்வதன் பொருட்டு,இவற்றை குறிப்பிட்ட இடைவெளிகளில் குட்டையாக கத்தரித்துக்கொண்டே இருப்பதால் இவை புதர்களைப்போல தோன்றுகின்றன.
தேயிலைகளின் ஒரு இலையரும்பு மற்றும் அதனடியிலிருக்கும் இரண்டு தளிரிலைகள் மட்டுமே அறுவடை செய்யப்படுகின்றன. இந்த இலையரும்பும் இருஇலைகளுமான பகுதி Golden flush எனப்படும். இவை மூன்று வருடங்களான தேயிலைச்செடிகளிலிருந்து நூறு ஆண்டுகள் வரை 7 லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து ஆண்டு முழுவதும் அறுவடை செய்யப்படும். இந்த இடைவெளி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தேயிலை ரகத்துக்கும் மாறுபடும்
Golden Flush உடன் மேலும் இரண்டு கீழடுக்கு இலைகளும் சேர்ந்த 5 இலைகள் அடங்கிய பகுதி flush எனப்படும் இவையும் பல நாடுகளில் அறுவடை செய்யப்படுகின்றது.
அறுவடை செய்யப்பட்ட இலைகள் உலர்த்தப்பட்டு, அவற்றில் ஆக்ஸிஜனேற்றம் நடைபெரும் வகையில் காயப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட வெப்பத்தில் உலர்த்தப்பட்டு, நொதிக்கவைக்கப்பட்டு ,பின்னர் 1500க்கும் மேற்பட்ட பலவகைகளில் தேயிலைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
ஆக்ஸிஜனேற்றத்தை பொருத்தே தேயிலைக்ளின் தரம் வேறுபடுகின்றது. (உண்ணப்படாத வாழைப்பழங்கள் ஒருசிலநாட்களில் கருத்துப்போவது ஆக்ஸிஜனேற்றத்தால்தான்).
100 சதவீதம் முழுமையான ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டவை
Black Tea
நாம் அனைவரும் சாதரணமாக அருந்தும் ’Black tea’ எனப்படும் கருப்புத்தேயிலை. 50 சதவிதம் மட்டுமே ஆக்ஸிஜனெற்றம் நடந்தால் கிடைப்பது. ’Oolong tea; எனப்படும் ஊலாங் தேயிலை, பசுந்தேனீர் ’Green tea’ எனப்படுவது ஆக்ஸிஜனேற்றதுக்கே உட்படுத்தப்படாத உலர்ந்த தேயிலைகளிலிந்து தயாரிக்கப்படுவது.
இம்மூன்று வகைகள் அல்லாது இன்னும் நூற்றுக்கணக்கான ரகங்களில் தேயிலை உலகெங்கிலும். சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
பசுந்தேநீரை உலரவைக்கையில் சிறு சிறு வட்டங்களாக சுருண்டு கொள்ளும் ரகம் அதன் தோற்றத்தினால் ’Gunpowder tea’. எனப்படுகின்றது.
Gun powder Tea
White tea, என்பது குறிப்பிட்ட வெப்பநிலையில் மிகக்குறைந்த நேரம் மட்டுமே ஆக்ஸிஜனேற்றம் செய்கையில் கிடைபப்து. இது மிகவும் மென்மையான் மணத்தையே கொண்டிருக்கும். வெள்ளை தேயிலை சீனாவுக்கு வெளியே அரிதாகவே கிடைக்கும்
Twig tea, குச்சி தேநீர் அல்லது குக்கிச்சா தேநீரென்பது (Kukicha tea) தேயிலைச்செடியின் இலைகளுக்கு பதிலாக குச்சிகளையும் தண்டுகளையும் மட்டுமே பதப்படுத்தி பொடித்து தயரிக்கப்படும் தேநீராகும். இவ்வகைத்தேநீர் ஜப்பானில் மட்டுமே கிடைக்கும். குச்சிகளையும் கிளைகளையும் மூன்று வருடங்களுக்கு மேலான தேயிலைச்செடிகளிலிருந்து மட்டுமே எடுப்பதனால் இத்தேநீருக்கு மூன்றுவருட தேநீரென்றும் ஒரு பெயருண்டு. (Three year Tea ) .இதில் காஃபின் துளியும் இLலையென்பதால் உறக்கமிழப்பு, பக்கவிளைவுகள் என எந்தகவலையும் இல்லாமல் எப்போதுவேண்டுமானாலும் எத்தனைகோப்பைகள் வேண்டுமானாலும் அருந்தலாம்.
பதப்படுத்தப்பட்ட தேயிலைச்செடியின் குச்சிகள்
காப்பியிலும் கொக்கோ பீன்ஸ்களிலும் இருக்கும் காஃபின் ஆல்கலாய்டு தேநீரிலும் இருக்கின்றது. 250 மிலி அளவுள்ள ஒருகோப்பை தேநீரில் காஃபினின் அளவானது;
Black tea- 45-65 மில்லி கிராம்
Green, white and ooloog teas: 25- 45 மில்லி கிராம்
தேநீரின் காஃபின் அளவானது தேயிலைதூளின் அளவு, நீரின் கொதிநிலை, தேயிலைத்தூள் கொதிக்கும் நேரம் ஆகியவற்றைப்பொருத்து மாறுபடும். பொதுவாக அதிகநேரம் கொதிக்க வைக்கையில் காஃபினின் அளவும அதிகமாகும்.
ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்காத, தரமான தேயிலைகளிலிருந்து உண்டாக்ப்பட்ட தேநீரை அருந்துவது இதயத்தை பாதுகாத்து, புற்றுநோய்க்கு எதிரக செயலபட்டு, உடலெடையை குறைத்து ரத்தத்தின் கொழுப்பையும் கட்டுப்படுத்துகின்றது
தேயிலைச்செடி வளரும் மண்ணில் இருக்கும் அலுமினியம் இலைகளிலும் இருக்கிறதென்றாலும் தினசரி சில கோப்பைகள் தேநீர் அருந்துகையில் இவை உடலாரோக்கியத்துக்கு எந்தவித ஆபத்தையும் உண்டாக்குவதிலை. நாளொன்றூக்கு 30 கோப்பைகளுக்கு மேல் தேநீர் அருந்தும் போதுதான் இந்த அலுமினிய உலோகம் நஞ்சாகி ஆரோக்கியகேட்டை உண்டாக்கும் வாய்ப்பு இருக்கிறது.
பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்காத ஆர்கானிக் தேயிலைகளும் இப்போது சந்தைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
Bubble Tea
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான் தேநீர் பிரபலமாக இருக்கும் இந்தியாவில் பால் கலக்காத கருப்புத்தேநீரும் பால் கலந்த தேநீரும் பிரபலம். தைவானில் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து செய்யப்படும் சிறு சிறு உருண்டைகளை தேநீரில் போட்டு தரப்படும் குமிழித்தேநீர் (Bubble tea) மிகபிரபலம். கீரைக்குழம்பைபோல பசுங்குழம்பாக அருந்தபடும் மாச்சா தேநீர் ஜப்பானின் பாரம்பரியத்துடன் கலந்துள்ள மிக்கியமான ஒன்று.
மாச்சா
எல்லா வகையான தேயிலைகளிலும் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ளன என்றாலும் தேயிலையின் வகைகளைப்பொருத்து இவற்றின் அளவு மாறுபடும். பொதுவாக பசும் தேயிலை மற்றும் வெள்ளைத்தேயிலையில் Epigallocatechin or ECGC எனப்படும் மிக முக்கியமான, ஆன்டிஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது.. இவை இதயப்பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை உறுதிசெய்கின்றன
தென்னாப்பிரிக்காவில் வளரும் சிவப்புத்தேயிலைச் செடிகளிலிருந்து எடுக்கப்பட்டு ஆக்ஸிஜனேற்றமே செய்யப்டாத தேயிலைகளிலிருந்து கிடைப்பதே Rooibos tea எனப்படும் செந்தேநீர்
Pu’er Tea
சீனாவின் யுனான் மாகாணத்தின் பிரத்யேக வகையான pu’er tea எனப்படுவது தேயிலைகளை நுண்ணுயிர்களால் நொதித்தலுக்கு உள்ளாக்கி பின்னர் ஆக்ஸிஜனேற்றமும் செய்யப்பட்டு கட்டிகளாக விற்பனை செய்யப்படும் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த ஒரு தேயிலை வகையாகும். இது முதியவர்களின் நோய் பிரச்சனைகளுக்கு அருமருந்தாக கருதப்படுகின்றது
ஊதா தேயிலை எனப்படுவது உலகின் மிக சமீபத்திய புதிய தேயிலை வரவாகும்
கென்யாவின் ஊதா தேயிலைச்செடிகள்
கென்யாவில் கடல் மட்டதுக்குமேல் 7500அடி உயரங்களில் மட்டுமே வளர்க்கப்படும் கலப்பின தேயிலைச்செடிகளிலிருந்தே இவை கிடைக்கின்றது. நேரடியான சூரிய ஒளிபடும்படி வளர்க்கப்படும் இந்த செடிகளின் இலைகளில் நீல நிறமியான ஆந்தோசையானினின் அளவு பல ம்டங்கு அதிகரித்து இந்த ஊதா நிறம் வருகின்றது. இவை பல நுண்சத்துக்களும் மருத்துவப்பயன்களும் கொண்டவை. உடலெடையை குறைக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், புற்றுநோயை தடுக்கவும் இந்த ஊதா தேநீர் பெருமளவில் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
தேயிலைத்தூளின் விலை சில நூறு ரூபாய்களிலிருந்து சில ஆயிரம்வரை வேறுபடுகின்றது எனினும் தங்கத்தைக்காட்டிலும் 30 மடங்கு அதிகமான விலையுள்ள தேயிலையும் சந்தையில் உள்ளது
சீனாவின் தாது உப்புக்கள் நிறைந்திருக்கும், குறிப்பாக இரும்புச்சத்து நிறைந்த ’வூயி’ மலைப்பகுதியின் 1000 வருடங்களைக்கடந்த 3 தாய் தேயிலைச்செடிகளிலிருந்து கிடைக்கும் ’’டா ஹாங் பாவ்’’ (Da Hong Pao) தேயிலையே உலகின் மிக விலையுயர்ந்த தேயிலை. இது கிராம் 1400 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகின்றது. பொதுவாக இத்தேயிலையில் உண்டாக்கப்படும் தேநீர் சீனாவிற்கு வருகைதரும் பிறநாட்டு தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது. தாவரப்பொருட்களிலேயே விலையர்ந்ததும் இதுவே.
கேராளாவின் Neestream என்னும் மலையாளத்திரைப்படங்களுக்கான புதிய இணையதளத்தின் இவ்வருடத்தின் முதல், புதிய வெளியீடாக ஜனவரி 15, 2021 அன்று வெளியிடப்பட்டது. ‘’ The Great Indian Kitchen. புதிய தளத்தின் பிரமாதமான வெளியீடு இந்த அழகிய குடும்பச்சித்திரம்.
இயக்குநர் ஜியோ பேபி, இசை சூரஜ் குரூப் மற்றும் மேத்யூஸ் புலிக்கன். நிமிஷா சுஜயன் மற்றும் சூரஜ் வெஞ்சிரமூடு பிரதான பாத்திரங்களில் (இரண்டாவது முறையாக ஜோடியாக.)ஒரு சில காட்சிகளைத்தவிர முழுப்படமுமே கோழிக்கோட்டில் ஒரே வீட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதே வீட்டில்தான் முன்பு 1993ல் மிதுனம் திரைப்படமாக்கபட்டது. பிற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவருமே கோழிக்கோடு நாடக நடிகர்கள்
ஒரு கண்ணாடியையோ அல்லது கேமிராவையோ இந்தியவீடுகளில்,குறிப்பாக தென்னிந்திய வீடுகளில் வைத்தால் தெரியவருவதைத்தான் முழுப்படமும் காட்டுகிறது..
நாயகி நம்மைப்போல, அடுத்த வீட்டுபெண்ணைப்போல, தோழியைப்போல நாம் அன்றாடம் சந்திக்கும் நூற்றுக்கணக்கான் பெண்களில் ஒருத்தியைப்போல இருப்பதும் படத்தின் பெரிய பலம். இது நம் கதை என அனைத்து இந்தியப்பெண்களும் விதிவிலக்கின்றி உணருவார்கள் திரையில் நிமிஷா சுஜயனை பார்க்கையில்.
நிமிஷா நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரி கலாரஞ்சனியை அதிகம் நினைவூட்டும் முகச்சாயலையும் உடல்மொழியையும் கொண்டிருக்கிறார். முழுப்படத்தின் ஆத்மாவே நிமிஷாதான். சூரஜின் நடிப்பு வழக்கம் போலவே பிரமாதம். உடலெடையை குறைத்து கச்சிதமாக இருக்கிறார். பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார்.இயல்பான சிறப்பான நடிப்பு.
மேசை நாகரீகம் குறித்து விளையாட்டாக சொல்லுவது போல சொன்ன மனைவியை கடிந்துகொண்டு அவளை மன்னிப்பு கேட்கச்சொல்லுவதும் ,அவள் மன்னிப்பை கேட்டவுடன் அகமலர்வதையும் அத்தனை அசலாக காட்டுகிறார். சிதல்புற்றுபோல ஆணவக்கரையான்களால் பெருகி வளர்ந்திருக்கும் இந்திய ஆணாதிக்க சமுகத்தின் பிரதிநிதியாக பிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார் சூரஜ்.
யானைப்பசியைப்போல ஆண்களின் இந்த வீங்கிய ஆணவத்திற்கு, கீரைக்கட்டுகளை தீனி போட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான் பெண்களுக்கான விதி.
சாலு கே தாமஸின் ஒளி இயக்கத்துக்கு, தனித்த பராட்டுக்களையும் அன்பையும் தெரிவித்தாக வேண்டும். அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார். துவக்க காட்சிகளில் நிமிஷாவின் நடன அசைவுகளின் போது அவர் முகத்தின் தெளிவை, மலர்வை, உறுதியை, கண்களின் ஒளியை அழகாக காட்டியவர், பின்னர் அவரே யோசனையில் ஆழ்ந்திருக்கும் களைஇழந்த முகத்துடன் இயந்திரமாக பாத்திரம் தேய்த்துக்கொண்டிருப்பதை, கலவியின் போது அவரின் மனஓட்டங்களை, சமையலறையில் மீள மீள வறுப்பதை, பொரிப்பதை, நறுக்குவதை, அரைப்பதை, பிறர் உண்ணுவதை என்று காட்சிகளை அருமையாக காட்டியிருக்கிறார்.
பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு பெயரில்லை என்பதுவும் இத்திரைப்படத்தின் சிறப்பு. இது நம் கதை என்னும் உணர்வு பார்க்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமே இதனால் இன்னும் மேலோங்குகின்றது.
பள்ளிஆசிரியரான சூரஜ் நிமிஷாவை பெண்பார்க்கும் காட்சியில் திரைப்படம் துவங்கி சட் சட்டென்று காட்சிகள் மாறி, சூரஜ் தன் பெற்றோருடன் வசிக்கும் வீட்டில் வாழ வருகிறார் நிமிஷா.
திடுக்கிடவைக்கும் திருப்பங்களோ, எதிர்பாரா சம்பவங்களோ, அவிழ்க்கப்படவேண்டிய மர்ம முடிச்சுகளோ இல்லாதது மட்டுமல்ல இதுபோல முன்பு வந்திருக்கும் பாலின சமத்துவம் குறித்தான திரைப்படங்களில் இருக்கும் வன்முறையும் இதிலில்லை. அன்பின் பெயரால், மரபின் பெயரால், சம்பிரதாயங்களின் பெயரால், சமூக கட்டுப்பாடுகளின் பெயரால், பெண்களுக்கு காலம் காலமாக அநீதி இழைக்கப்பட்டுக்கொண்டிருப்பதை சொல்லும் படமிது.
5 பாடல்களும், இடையிடையே சண்டைகளும் நடனங்களும் நிறைந்த வழக்கமான மரபான சினிமா இல்லை இது
துவக்கத்தில் முதல் அரைமணி நேரங்களுக்கு திரும்பத்திரும்ப காய்கறிகள் நறுக்கப்படுவது, நேந்திரம்பழங்கள் ஆவியிலடப்படுவது, இறைச்சி வெட்டப்படுவது, ஆப்பங்கள் ஊற்றப்படுவதென்று காண்பிக்கப்படுகையில் சிலருக்கு சலிப்புத்தட்டிவிடும். என்ன இது திரும்பத்திரும்ப இதையே காட்டுகிறார்களே என்று. அந்த சலிப்புத்தான் இப்படம் எதிர்பார்க்கும் வெற்றி.. அரைமணி நேரத்துக்கு திரும்பத்திரும்ப பார்க்கையில் சலிப்புத்தட்டும் விஷயத்தைத்தான், வாழ்நாள் முழுக்க எந்த உதவியும் இன்றி பல்லாயிரக்கணக்கான பெண்கள் மீள மீள செய்துகொண்டிருப்பதை சொல்லும் படமிது.
வெளியிலிருந்து பார்க்கையில் மகிழ்ச்சியான இல்லமென்று தோன்றும் ஆனால் உள்ளே ஆண்களின் நாக்கு, உடல், ஆணவம் இவற்றின் தேவைகளுக்கென வீட்டுப்பெண்களின் இளமையும் நேரமும் ஆரோக்கியமும் லட்சியங்களும், முழுவாழ்வுமே சுரண்டி உறிஞ்சி எடுத்துக்கொள்ளப்படுவதை, திருமணம் என்னும்பெயரில் பெண்கள் மிச்சமின்றி காலடியில் இட்டு நசுக்கப்படுவதை இப்போது நம் இந்தியச் சமூகத்தில் நடந்துகொண்டிருப்பதை அப்பட்டமாக காட்டும் படமிது
தெளிவான திரைக்கதை. இயக்குநர் அழகாக கதையைக்கொண்டு போகிறார். பொருத்தமான மென்மையான இசை, சிறப்பான படத்தொகுப்பு, அற்புதமான ஒளிப்பதிவு என மிக நல்ல ஒரு அனுவத்தை தருகின்றது இத்திரைட்பம்
ஆண்களின் இதயத்திற்கு அவர்களின் வயிற்றின் வழியேதான் பெண்கள் செல்லவேண்டுமென்னும் பழஞ்சொல் புழக்கத்திலிருக்கும் நம் சமூகத்தில் ஒருபோதும் பெண்களின் இதயத்திற்குள் ஆண்கள் நுழையும் வழிகுறித்து சொல்லப்பட்டதேயில்லை.
தினம் தினம் இறைச்சியும் காய்கறிகளும் நறுக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டு சமைக்கப்படுகின்றன. திரும்பதிரும்ப பரிமாறுதலும், எச்சிலெடுப்பதும், பாத்திரம் தேய்ப்பதும், துணி துவைப்பதும், வீடு கூட்டுவதும், மாடிப்படிகளிலிருந்து சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வரையிலும் துடைத்து சுத்தமாக்குவதும், விறகடுப்பில் அரிசிச்சோற்றை சமைப்பதும், அனைத்தையும் முடித்து, இரவில் வீட்டுக்கதவை தாளிடுவது வரை முடித்த பின்னர் காத்திருக்கும் கணவனின் உடல் பசிக்கும் இரையாவதுமாக அப்படியே ஒரு இந்திய சமூகத்தை காட்டியிருக்கிறார்கள்.
பெண்கள் இப்படி அடுப்படியிலும், துவைக்கும் கல்லிலும், எச்சிலெடுத்தும் வீணாய்போகையில் ஆண்கள் சீட்டு விளையாடிக்கொண்டும், அலைபேசியில் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும், யோகா செய்துகொண்டும் தன்னை, தன் நலனை, தன் தேவையை, தன் ஆரோக்கியத்தை, தன் சுவையை, தன் வாழ்வை பார்த்துக்கொள்ளுகிறார்கள். எந்த மிகைப்படுத்தலும் இல்லாத அப்பட்டமான படம்
அடைத்துக்கொண்டு ஒழுகும் சமையலறை சின்க்கை சரிசெய்ய ப்ளம்பரை வரச்சொல்லி பலமுறை நினைவூட்டியும் கடைசிவரை அது அப்படியேதான் இருக்கிறது. ஒரு காட்சியில் சமையலறை எச்சில் அடைத்துக்கொண்ட சின்க்கின் நாற்றம் தன் மீது அடிக்கின்றதா என நாயகி கணவனுடன் அந்தரங்கமாக இருக்கும் நேரத்திலும் முகர்ந்து பார்த்துக்கொள்கிறாள். அது சின்க்கின் நாற்றம் மட்டுமல்ல, தேய்த்துக்கழுவினால் போய்விடுவதற்கு, அன்பின்மையின், புரிந்துகொள்ளாமையின், சுரண்டப்படுதலின், பகிர்தலற்ற வெற்று வாழ்வின் நாற்றம் அது, எத்தனை தேய்த்துக்கழுவினாலும் போகாதது.
ஒரே ஒரு காட்சியில் மட்டும் நிமிஷாவின் தோழி ஒருத்தி மாடிப்படிகளில் அமர்ந்திருக்கையில் கணவன் மனைவிக்கு தேநீர் எடுத்துக்கொண்டு வருவதையும், அன்றிரவு அவர் சமைக்கபோவதாகவும் சொல்லும் காட்சியையும் வைத்திருக்கிறார்கள். விதிவிலக்கான ஆண்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்று காட்ட.
நிமிஷா நடனஆசிரியையாக வேலைக்கு போக விரும்புவதைக்குறித்துச் சொல்லுகையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கணவனும் மாமனாரும் ’’அதெல்லாம் குடும்பத்துக்கு சரிவராது’’ என்று மறுத்துவிட்டு, உடனே ’’இன்று கடலைக்கறி பிரமாதம்’’ என்கிறார்கள். அந்த பாராட்டு நிமிஷாவுக்கும் நமக்கும் சொல்லுவதென்னவென்றால் எங்களுக்கு பிடித்ததுபோல சமைப்பதற்கு பிறந்து வளர்ந்திருப்பவர்கள் பெண்கள் என்பதைத்தான்.
நிமிஷாவின் மாதவிலக்கு நாட்களில் வீட்டுக்கு வேலைக்கு வரும் ஒரு பெண் வீடு கூட்டி துடைக்கையில் தனக்குள்ளே மெதுவாக பாடிக்கொண்டிருக்கிறாள். இப்படி வேலைக்கு வெளியெ வருவது பெண்களின் சின்ன சின்ன மகிழ்வுகளை சுதந்திரங்களை அனுபவிக்க வழிகாட்டுகிறது என்பதை அந்தகாட்சி நமக்கு உணர்த்துகிறது. உண்மையில் வேலைக்கு போகும் பெண்களுக்கு இரட்டைப்பணிச்சுமைதான் இருந்தும் வேலைக்கு போக விரும்புவது வீட்டிலேயே இருக்கையில் அவர்களின் கழுத்தை நெறிக்கும் மானசீக விரல்களிலிருந்து தற்காலிகமாகவாவது தப்பித்து மூச்சுவிட்டுக்கொண்டு மீண்டும் மாலை அதனிடம் அகப்பட்டுக்கொள்ளும் பொருட்டுத்தான்
இரவில் சமையலறை வேலைக்கு உதவ வரும் மருமகளை மாமியார் தடுத்து படுக்கையறைக்கு போகக்சொல்லுகிறார். அவருக்கு தெரியும் அங்கு அவரின் மகனென்னும் ஆணுக்கு இவள் தேவைப்படுவாளென.
அக்காட்சியில் படுக்கையறையில் இளம்பெண்ணின் உடல் ஆளப்படுவதும் சமையலறையில் இன்னுமொரு மூத்த பெண்ணின் உழைப்பு சுரண்டப்படுவதும் மாற்றி மாற்றி காண்பிக்கப்படும்.’’ 7 மணிக்கு மேல நீ இன்பலட்சுமி ’’பாடலை கூடங்களில் கேட்டு மகிழும் சமூகமல்லவா இது?
ஓயாத வீட்டுவேலைகளுக்குப்பிறகு உடலும் உள்ளமும் களைத்திருக்கும் பெண்களுக்கு, இன்பலட்சுமியாக இருக்கமுடியாமல், தாம்பத்ய உறவும், பாத்திரம் கழுவுவதைப்போல, எச்சில் எடுப்பதைப்போல, துணிதுவைப்பதைப்போல மற்றுமொரு வீட்டுவேலைகளிலொன்றாகி போய்விடுகின்றது என்பதையும் ஆண்கள் அன்றும் இன்றும் புரிந்துகொள்ளவேயில்லை
நெட்ஃப்லிக்ஸும் அமேஸான் பிரைமும் இப்படத்தை நிராகரித்ததற்கு காரணம் இதில் சொல்லப்பட்டிருக்கும் மத நம்பிக்கை தொடர்புடைய விஷயங்கள் என்கிறார்கள் இந்தப்படம் மதம் சார்ந்த நம்பிக்கைகளை கண்டிக்கவில்லை, மாறாக சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபு, குடும்ப வழக்கங்கள், காலம்காலமாக கடைப்பிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை விட, வாழ வந்திருக்கும் பெண்ணின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் முக்கியமென்பதைத்தான் சொல்லுகின்றது.
அக்குடும்பத்தின் சந்ததியினரை உருவாக்குபவளை, கணவனுடன் இணைந்து இறுதி மூச்சு வரை வாழ்பவளை, புரிந்துகொள்ள, அவளின் தேவைகளை அறிந்துகொள்ள, நிறைவேற்ற, ஆண்கள் முன்வரவேண்டுமெனவும் வீட்டுவேலைகளில் அவர்களின் பங்கும் இருக்கவேண்டும் என்பதையெல்லாம் சொல்லவேண்டியே அக்காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள்
இந்தப்படத்தை ஆண்கள் அவசியம் பார்க்கவேண்டுமென்றெல்லாம் பரிந்துரைக்க வேண்டியதில்லை. ஏனெனில் சிலமணிநேர திரைப்படத்தில் திருந்தும் சமூகமல்ல இந்தியச்சமூகம். முழுச்செவிடான சமூகத்தின் காதுகளில் இப்படியான சங்குகளை ஊதுவது வீண்.
காலம்காலமாக இப்படி அடுப்படியில் அடக்குமுறைகளையும், சுரண்டல்களையும் அனுபவித்துக்கொண்டெ இருப்பவர்களுக்கும், நமக்கு முன்னே இவ்வாறு தன் இளமை, வாழ்நாள், கனவு, ஆற்றலெல்லாவற்றையும் இப்படியே இழந்து மறைந்துபோனவர்களுக்கும் , இனிமேலும் தொடரவிருக்கும் இந்த அநீதிக்கு இரையாகப்போகும் இன்றைய சிறுமிகளும் எதிர்காலத்து பெண்களுக்குமான சமர்ப்பணமாக இத்திரைப்படத்தை எடுத்துக்கொண்டு,பெண்கள் அவசியம் இதை பார்க்கவேண்டும்.
ஒரு காட்சியில் பல தலைமுறைகளை சேர்ந்த தம்பதியினரின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக மெதுவாக காமிரா காட்டிக்கொண்டிருக்கையில் பின்னணியில் தேங்காய் துருவும், தாளிக்கும், சமைக்கும் ஓசைகள் மட்டும் அஞ்சலி செலுத்துவதைப்போல கேட்டுக்கொண்டிருக்கும்.
நிமிஷா என்னவானாள்? ஒழுகிக்கொண்டேயிருந்த அந்த சமையலறைக்குழாய் சரிசெயயப்ட்டதா? நிமிஷா வேலைக்குப் போகிறாளா? அதே வீட்டின் அதே தேநீர்கோப்பையை கழுவிக்கொண்டிருக்கும் தங்கவளையல்கள் நிறைந்திருக்கும் அந்தக்கைகள் யாருடையவை?
Neestream ல் திரைப்படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.