லோகமாதேவியின் பதிவுகள்

Category: தினமலர் (Page 2 of 3)

வடிவம் மாறும் தாவரங்கள்

பூங்காக்களில் தாவரங்களை சிற்பங்கள் போலச் வெட்டி உருவங்களை அமைத்திருப்பதை நாம் கண்டிருப்போம். தாவரப் புதர்களை வெட்டிச் சீரமைத்து விரும்பிய உருவங்களை ஏற்படுத்தும் இந்த தாவரச் சிற்பக் கலை ‘டோபியரி’ (Topiary) எனப்படும். புதர் சிற்பக்கலை எனவும் கூறலாம். இப்படி வெட்டி வடிவமைக்கப்பட்டு வளரும் தாவரங்களும், ‘டோபியரி’ என்றே குறிப்பிடப்படுகின்றன. அடர்ந்து, நேராக வளரக்கூடிய பசுமைமாறாத தாவரங்களில் இந்த வடிவங்கள் செய்யப்படுகின்றன. குட்டையான, ஊசிபோன்ற மிகச்சிறிய இலைகளையுடைய பல்லாண்டுத் தாவரங்கள் இவை. இலைகளையும் கிளைகளையும் சீராக குறிப்பிட்ட இடைவெளிகளில் நறுக்குவதன் மூலம், இதுபோன்ற வடிவங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஏற்படுத்திய வடிவங்கள், பல ஆண்டுகளுக்கு அதே தோற்றத்தில் இருக்கவேண்டுமென்பதால், மிக மெதுவாக வளரும் தாவரங்களே இதற்குத் தேர்வு செய்யப்படுகின்றன
கம்பிகளும், கம்பி வலைகளும், கம்பிச் சட்டங்களும் குறிப்பிட்ட வடிவங்களைக்கொண்டு வருவதற்கு, சில சமயங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தாவரங்கள் வளரும் முன்பே சட்டங்களை அவற்றைச் சுற்றிலும் பொருத்தி, பின்னர் அவற்றை அந்த சட்டங்களுக்கு ஏற்றாற்போல வளர்த்தும் விரும்பிய வடிவங்கள் கொண்டு வரப்படுகின்றன. தாவர வேலி (Hedge – ஹெட்ஜ்) எனப்படும் புதர்கள், மரங்கள் முதலான தாவரங்களைக் கொண்டு அமைக்கப்படும் உயிர்வேலியானது மிக எளிய ‘டோபியரி’ வடிவமாகும். ரோமானியர்களின் காலத்திலிருந்தே புதர்ச்செடிகளை விலங்கு, பறவை, மனிதர்கள், பந்துகள், எழுத்து வடிவங்களைப்போல வெட்டி சீராக வளர்க்கும் இந்தக் கலை இருந்து வந்திருக்கிறது. எகிப்தியர்களும் இவ்வடிவங்களைப் பல தோட்டங்களில் அமைத்திருந்தனர். ‘வால்ட் டிஸ்னி’ (Walt Disney) 1962ல், டிஸ்னி கேளிக்கைப் பூங்காவில், பிரபல கார்ட்டூன் வடிவங்களில் டோபியரியை ஏற்படுத்தினார். அதன் பிறகு உலகின் பல தாவரவியல் தோட்டங்களிலும், வீடுகளிலும் இந்தக் கலை பரவலாக்கப்பட்டது
அத்தி (Ficus), துஜா (Thuja), மருதாணி (Lawsonia), டுராண்டா, (Duranta) லன்டானா, (Lantana) , ஐவி (Ivy), தெட்சி (Ixora) போன்ற புதர்ச்செடி வகைகளே அதிகம் டோபியரிக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஊசியிலைத் தாவரங்கள் (Conifers) டோபியரி மூலம் வடிவங்களைச் செய்து வளர்க்க மிக எளியதாகையால், உலகில் அதிகம் இதுவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதய வடிவம், குடை, பந்துகள், சதுரங்கள் போன்ற எளிய வடிவங்களிலிருந்து மிகச்சிக்கலான ஒட்டகச் சிவிங்கி, யானை, இயந்திரங்கள் போன்ற வடிவங்களும் டோபியரியில் உருவாக்கப்படுகின்றன. ஆர்வமிருந்தால் போதும், அதிக செலவின்றி மிக அழகிய இந்த தாவரச் சிற்பங்களை தோட்டங்களில் உருவாக்கி வளர்க்கலாம்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

கண்ணாடிக்குள் ஓர் அழகிய தோட்டம்

சூழலை இயற்கையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள வீடுகளில் செடிகள் வளர்க்கிறோம். வீட்டில் செடிகள் வளர்ப்பதில் பல முறைகள் உள்ளன. ஒளி ஊடுருவும் கண்ணாடிக் குடுவைகளுக்கு உள்ளே, சிறிய தாவரங்களை வளர்க்கும் தோட்டக்கலை ‘டெராரியம்’ (Terrarium) எனப்படுகிறது. பல வடிவங்களிலான முழுவதும் மூடியிருக்கும் அல்லது ஒருபுறம் திறந்திருக்கும் கண்ணாடிக் குடுவைகளில் செடிகளை வளர்க்கலாம். மூடிய குடுவையின் சுவர்களில் இருந்து செடிகளுக்குத் தேவையான வெப்பம், ஒளி கிடைக்கும். அதோடு அதிகப்படியான நீர் ஆவியாகி நீர்த்துளிகளாக குடுவையில் படிந்து, பின்னர் மீண்டும் செடிகளுக்கே கிடைக்கும்.
‘டெராரியம்’ முதன்முறையாக 1842இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘நாதனியல் பாக்ஷா வார்ட்’ (Nathaniel Bagshaw Ward) என்னும் பூச்சியியலிலும் தாவர அறிவியலிலும் மிகுந்த ஆர்வமுடைய ஒரு மருத்துவரால் உருவாக்கப்பட்டது. இவர் மூலிகைச் செடிகளை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு கண்ணாடிப் பெட்டிகளில் வளர்த்து அனுப்பினார். இந்த முறையில் செடிகளை வளர்ப்பது, பின்னர் ஓர் அழகிய தோட்டக்கலையாக மாறி, அனைவராலும் பரவலாக விரும்பப்படும் ஒன்றானது.
கற்றாழை போன்ற சதைப்பற்றுள்ள தாவரங்கள் (Succulents — சுக்குயூலென்ட்ஸ்), ஆர்க்கிட்கள் (Orchids), கள்ளிச்செடிகள் (Cacti — காக்டி), பெரணிகள் (Ferns — ஃபெர்ன்ஸ்) போன்றவை ‘டெராரியம்’ அமைக்க ஏற்ற தாவரங்களாகும். அளவில் மிகச்சிறிய செடிகளே டெராரியம் அமைக்கப் பொருத்தமானவை. குறைந்த சூரியஒளியும், தண்ணீரும் போதுமென்பதால், இவற்றை வீட்டுக்குள்ளும், மேஜைகளிலும், அலமாரிகளிலும் வைத்து எளிதாக வளர்க்கலாம். மணல், செம்மண், இயற்கை உரங்கள், பொம்மைகள், கூழாங்கற்கள் ஆகியவற்றை குடுவையின் அடிப்பகுதியில் பரப்பி, பின்னர் மிகச்சிறிய, மெதுவாக வளரக்கூடிய பொருத்தமான செடிகளை குடுவைக்குள் வைத்து விருப்பம்போல அழகுபடுத்தி நேராகவோ, சாய்வாகவோ, திறந்தோ, மூடியோ இத்தோட்டத்தை வடிவமைக்கலாம்.
நன்கு பராமரிக்கப்படும் குடுவைத் தாவரங்களைப் பல ஆண்டுகளுக்கு வைத்துக்கொள்ளலாம். பராமரிக்க மிகவும் எளிதான இவ்வகை உட்புறத் தோட்டத்தை (Indoor Garden), அகலமான குடுவைகள், கண்ணாடிப் பெட்டிகளில் எளிதில் உருவாக்கலாம். சூழலை அழகாக்கும் கண்ணாடிக் குடுவைச் செடிகளை நீங்களும் உங்கள் வீட்டில் வளர்க்கலாம்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

எழுத முடியாத பென்சில்!

பென்சில் செடி
ஆங்கிலப் பெயர்கள்: ‘பென்சில் காக்டஸ்’ (Pencil Cactus),’ஸ்டிக்ஸ் ஆன் ஃபைர்’ (Sticks on Fire), ‘மில்க் புஷ்’ (Milk Bush)
தாவரவியல் பெயர்: ‘யுபோர்பியா டிருகால்லி’ (Euphorbia Tirucalli)
வேறு பெயர்கள்: தீக்குச்சிச் செடி, நெருப்புச் செடி, பென்சில் கள்ளி, பாச்சான் குச்சி, கட்டுக்கலவிக் கள்ளி
பென்சில் செடி, மிகச் சிறிய இலைகளுடன் பச்சை நிறத்தில் பளபளப்பாக பென்சில் போன்ற தடிமனில் உருண்டையான தண்டுகளுடன் இருக்கும். செடி என்று குறிப்பிட்டாலும், நான்கு மீட்டர் உயரம் வரை சிறு மரமாக வளரக்கூடியது. பாலைநிலங்களில் 6 முதல் 9 மீட்டர் உயரம் வரையில் வளரும். இதன் தாயகம் ஆப்பிரிக்கா. ‘யுபோர்பியேசியே’ (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகின் பல பாகங்களிலும் இது பரவலாக வளர்கிறது.
செடியின் அனைத்துப் பாகங்களும் பால் போன்ற திரவத்தைச் சுரக்கும் தன்மை உடையது. முட்களற்ற வழுவழுப்பான, மென்மையான தண்டுகள் நல்ல சதைப்பற்றுடன் இருக்கும். செடியின் மிகச் சிறிய பச்சை இலைகள் குறுகிய காலத்திலேயே உதிர்ந்துவிடுவதால் குச்சிகள் போன்ற பச்சைத் தண்டுகளே செடி முழுவதும் காணப்படும். இளம் தண்டுகள் மட்டும் சிறு இலைகளுடன் வளைந்து தொங்கியபடி இருக்கும். சிறு கொத்துகளாக மிகச்சிறிய மஞ்சள் பூக்களைப் பூக்கும். செதில் போன்ற தண்டுகளின் நுனியில் மஞ்சள் நிறப் பூக்கள் தோன்றுவது நெருப்புக் குச்சியைப் போலவே காட்சி தரும். சிறிய விதைகளை உடைய காய்களையும் காய்க்கும்.
பூக்களையும், சிறிய விதைகளையும் தேடி பறவைகள், வண்டுகள், அதிக அளவில் வரும். முட்கள் இல்லாததாலும், அடர்த்தியான கிளைகளுடன் இருப்பதாலும் பறவைகள் கூடுகட்ட இந்தச் செடியை அதிகம் தேர்ந்தெடுக்கின்றன. தமிழகத்தில் பல பிரிவினர், திருமணங்கள், விழாக்கள், சடங்குகளில் பால் பெருகும் இந்தச் செடியை மங்கலச் சின்னமாக உபயோகிக்கிறார்கள். இந்தச் செடியின் பால் கண்ணில் பட்டால் பார்வைக் குறைபாடு ஏற்படும். தரிசு நிலங்களிலும் எவ்விதப் பராமரிப்புமின்றி செழித்து வளரும் இச்செடி பல மருத்துவப்பயன்களையும் கொண்டது. மரு மற்றும் கொப்புளங்களை செடியின் பால் குணமாக்குகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் புற்றுநோய்க்கும் கல்லீரல் வீக்கத்திற்கும், கிருமித்தொற்றுகளுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

கடவுளின் உணவு

பெருங்காயம்
ஆங்கிலப் பெயர்: ‘அசஃபோட்டிடா’ (Asafoetida)
தாவரவியல் பெயர்: ‘ஃபெருலா அசஃபோட்டிடா’ (Ferula Asafoetida)
தாவரக் குடும்பம்: ‘ஏபியாசியே’ (Apiaceae)
வேறு ஆங்கிலப் பெயர்கள்: சாத்தானின் சாணம் (Devil’s Dung), நாற்றமடிக்கும் பசை, (Stinking Resin), அசந்த் (Assant), கடவுளின் உணவு (Food of the Gods)
வேறு பெயர்கள்: அத்தியாகிரகம், இரணம், கந்தி, பூத நாகம், வல்லிகம் (தமிழ்), காயம் (மலையாளம்), இங்கு (இந்தி), இன்குயா (தெலுங்கு), இன்கு (கன்னடம்)

சமையலுக்கு மணம் சேர்க்கிற முக்கியப் பொருட்களில் ஒன்று பெருங்காயம். பெருங்காயச் செடியின் தாயகம் ‘பெர்சியா’ (Persia) (ஈரான்). 2 – 3 மீட்டர் உயரம் வரை செடியாகவும் குட்டை மரமாகவும் வளரும். இது ஒரு பல்லாண்டுத் தாவரம். இதன் வேரில் இருக்கும் மஞ்சள் நிறப் பசையில் இருந்து கிடைப்பதே பெருங்காயம்.
இலை 40 செ.மீ. அளவில் இருக்கும். பூக்கள் அடர்மஞ்சள் நிறம். பழம் நீள்வட்ட வடிவில் தட்டையாக இருக்கும். பழத்தின் உள்ளே சிவப்பு, பழுப்பு நிறச் சாறு இருக்கும். வேர்கள் கேரட் வடிவத்தில் கடினமானதாகவும் பெரியதாகவும் சதைப்பிடிப்பாகவும் உள்ளன.
வளர்ந்த 4 ஆண்டுகளில் செடியில் பெருங்காயப் பசை உருவாகிறது. பூ பூப்பதற்கு முன்பாக, வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். மூன்று மாதங்களில் வேரிலிருந்து சுமார் 1 கிலோ வரை பசையை பெறலாம்.
பெருங்காயத்தில், பெருங்காயப் பசை, எளிதில் ஆவியாகும் எண்ணெய், சாம்பல் ஆகியவை உள்ளன. நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் கூட்டுப் பெருங்காயத்தில், கருவேலம் பிசின் (Gub Arabic), கோதுமை, மைதா போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பெருங்காயம் வாங்கும்போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் என்ன என்று அச்சிட்டிருப்பார்கள். பெருங்காயத்தில் நிறைய கலப்பட வகைகளும் வருகின்றன. இவை உடல் நலனுக்குக் கேடு விளைவிப்பவை.
ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் போன்ற பகுதிகளில் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய். காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவையுணர்வு நரம்புகளைத் தூண்டி, ருசி உண்டாக்கும் குணம் கொண்டது. செரிமான சக்தி, குடல் நுண்ணுயிரி அழிப்பு, வாயுத் தொல்லை நீக்குதல் போன்ற பல மருத்துவ குணம் உடையது. சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக்கொண்ட இது, சமைத்த உணவுகளில் மென்மையான சுவையையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

தலைகுனிந்து நிழல் தரும் மரம்

அழும் வில்லோ மரம்
ஆங்கிலப் பெயர்: ‘வீப்பிங் வில்லோ ட்ரீ’ (Weeping Willow Tree)
தாவரவியல் பெயர்: ‘சாலிக்ஸ் பாபிலோனிகா’ (Salix Babylonica)

அழுவதைப் போல தலைகுனிந்து, வளைந்து சோகமாக நிற்கும் மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படித் தோற்றமளிப்பவை அழும் வில்லோ மரங்கள். ‘சாலிக்கேசியே’ (Salicaceae) குடும்பத்தைச் சேர்ந்தவை. வட சீனாவைத் தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா முழுவதும் ஆற்றங்கரைகள், ஆழமற்ற நீரோடைகள் ஆகியவற்றின் ஓரங்களில் காணப்படும். இவை 30 மீட்டருக்கும் மேல் ஓங்கி உயரமாக வளரக்கூடியவை. சதுப்பு நிலங்களில் செழிப்பாக வளர்கின்றன. நீண்ட, ஒடிசலான கிளைகளில் நளினமாகத் தொங்குகிற அவற்றின் இலைகள் மெல்லியதாக இருக்கும். மலர்கள் பச்சைக் கொத்துக்களாகக் காணப்படும். நிழல் தரும் இந்த மரம், ஒரு மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 20 மீட்டருக்கு மேலும் உயரம் கொண்டதாகவும் வளரும். இந்த மரத்தின் சிறப்புத் தன்மையே, இது எடை குறைவானதாகவும், அதிக வலுவுள்ளதாகவும் இருப்பதுதான்.
வில்லோ மரங்களில் 400க்கும் அதிகமான வகைகள் இருக்கின்றன; அவற்றில் குறிப்பாக ‘வீப்பிங் வில்லோ’ எனப்படும் அழும் வில்லோ மிக வசீகரமான மரம். வளைந்த கிளைகளில் தாழ்ந்த பசுமையான அழகிய நீண்ட இலைகளுடன் இருக்கும் இம்மரம், மழை பெய்யும் பொழுது இலைகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளுடன் கண்ணீர்விட்டு அழுவது போல இருப்பதால், இதற்கு இந்தப் பெயர்.
இதன் மரப்பட்டைகளிலிருந்துதான் மிகவும் மிருதுவான, அதே சமயம் அதிக காலம் உழைக்கக்கூடிய கிரிக்கெட் மட்டை (Cricket Bat), விசில், புல்லாங்குழல், மீன் பிடி தூண்டில், வண்ணத் தூரிகைகள், பொம்மைகள், அம்புகள் போன்றவை செய்யப்படுகின்றன. இது மட்டுமல்ல; இந்த மரம் மருத்துவப் பண்புகளையும் உள்ளடக்கியது. உலகில் மிகப் பாதுகாப்பான வலிநீக்கி, காய்ச்சல், வீக்கம் நீக்கும் மருந்தாகப் பயன்படும் ‘ஆஸ்பிரின்’ மருந்து இம்மரத்தின் இலைகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் தன்மை கொண்டதால், ஆஸ்பிரின் மாரடைப்புக்கும் (Heart Attack), புற்றுநோய்க்கும் எதிராகக் குறைந்த அளவில், நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மண் சரிவுகள் ஏற்படாமல் இருக்க மலைப்பிரதேசங்களிலும், சீனா, ஸ்பெயின், அமெரிக்கா, லத்தீன், அமெரிக்கா போன்ற நாடுகளில் வணிக ரீதியாகவும் இவை வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவை கொண்டு வரப்பட்டன.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

வானவில் மரம்

ரெயின்போ யூகலிப்டஸ் (Rainbow Eucalyptus)
தாவரவியல் பெயர்: ‘யூகலிப்டஸ் டெக்லப்டா’ (Eucalyptus deglupta)

பச்சை, சாம்பல் நிறத் தோல்பட்டையை உடைய யூகலிப்டஸ் மரங்களை நாம் பார்த்திருப்போம். பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியாவைத் தாயகமாகக் கொண்ட யூகலிப்டஸ் மரத்தின் ஓரினம் பல நிறங்களை உடைய மரப்பட்டையைக் கொண்டுள்ளது. கண்ணைக் கவரும் இந்த மரத்திற்கு, வானவில் மரம் என்று பெயர். நீலம், ஊதா, ஆரஞ்சு, அடர் சிவப்பு என பல நிறங்களை உள்ளடக்கிய இந்த மரம் காண்பவர் கண்களைக் கவர்கிறது.
சுமார் 80 மீட்டர் உயரம் வரை வளரும் இந்த மரத்தின் அடிப்பகுதியின் சுற்றளவு 2 மீட்டர் வரை இருக்கும். மற்ற யூகலிப்டஸ் மரங்களைப் போலவே, இதன் பட்டைகள் ஆண்டுக்கு ஒருமுறை உரிந்துவிடும். புதிதாக இளம் பச்சை நிறத்தில் மரப்பட்டை தோன்றும். பச்சை நிறம் மெல்ல மாறத் தொடங்கி, பல வண்ணங்களில் மீண்டும் மாறும். அழகிய பல வண்ணத் தோற்றம் காரணமாக, ஹவாய், கலிஃபோர்னியா, டெக்சாஸ் போன்ற பகுதிகளில் அலங்காரத்துக்காக வளர்க்கப்படுகின்றன.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

தின்னக் கூலி வேண்டாம்!

கரும்பு
ஆங்கிலப் பெயர்: ‘சுகர்கேன்’ (Sugarcane)
தாவரவியல் பெயர்: ‘சக்காரம் அபிசினாரம்’ (Saccharum officinarum)
குடும்பம்: போயேசியே (Poaceae)
தாயகம்: இந்தியா, நியூ கினியா

புல் வகையைச் சார்ந்த வெப்ப மண்டல நன்செய் பயிர். நீர் வளம் மிகுந்த வண்டல், கரிசல் மண்ணில் நன்கு வளரும். இலைத்தோகை மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்க்கொத்து, ஆயிரக்கணக்கான சிறு பூக்களை உடையது. ஆண், பெண் பூக்கள் ஒன்றாக இருக்கும். கிளைகளற்று, தண்டுப்பகுதி உயரமாக வளரும். தண்டின் எடையில் 90 சதவீத சாறு இருக்கும்.

இனப்பெருக்கம்: தண்டுகளைப் பதியனிடுதல்
முதிர்ச்சிக் காலம்: 12 மாதங்கள்
அதிகம் பயிரிடப்படும் இரகங்கள்: சக்காரம் அபிசினாரம் (Saccharum officinarum)
சக்காரம் சைனன்ஸீஸ் (Saccharum sinensis)

அடங்கியுள்ள சத்துகள்: இரும்பு, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், காப்பர், வைட்டமின்கள்
உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
பயிரிடும் நாடுகள்: பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், பெரு, கொலம்பியா, ஆஸ்திரேலியா, கியூபா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 100 நாடுகள்.

சுற்றளவு: 5 செ.மீ.
உயரம் : 4 – 12 அடி இலைத் தோகை
தண்டு நிறம் : இள மஞ்சள், பச்சை, ஊதா, இளஞ்சிவப்பு.

தினமலர் தளத்தில் வெளியானது ]

நிலத்துக்கு மேலே வளரும் வேர்கள்

தாவரங்களின் வேர்கள் என்றாலே நிலத்துக்குக் கீழே இருப்பவை என்றுதான் நாம் அறிந்திருப்போம். தாவரங்களின் வேர் (Root – ரூட்) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி ஆகும். ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவர வகைகளில் வேரின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு. வேர்களுக்கு தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சி அவற்றை தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு.
வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மழைக்காடுகளில் அதிக ஆழத்தில் வேர்கள் செல்லமுடியாத ஆழமற்ற வேர்களைக் கொண்ட பெருமரங்களின் அடித்தண்டிலிருந்து உருவாகும் மிகப்பெரிய தட்டையான வேர் உதைப்பு வேர் அல்லது பலகை வேர் (Buttress Roots – பட்ரெஸ் ரூட்ஸ்) எனப்படும். இவை கிளைகள் அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்து மரத்திற்கு சமநிலையை ஏற்படுத்துகின்றன.
இந்த வேர்கள், மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கியும் பக்கவாட்டிலும் சென்று தாவரங்களை நிலத்துடன் உறுதியாகப் பிணைத்து வைக்கின்றன. மழைக்காடுகளில் மண்ணின் ஆழத்தில் வளம் குறைவாகவும் மேற்பரப்பில் அதிகப்படியான உணவூட்டம் கிடைப்பதாலும் உதைப்பு வேர்கள் மண்ணில் மேற்புறமாகவே பரவி அதிக அளவில் சத்துகளை சேகரிக்கின்றன. பலகை வேர்கள் இல்லாத மரங்களின் ஆதார சக்தி (Anchorage Strength – அன்கோரேஜ் ஸ்ட்ரென்த்) 4.9 kNm (Kilo Newton Meter) என்றால் பலகை வேர்கள் உள்ள மரங்களின் ஆதார சக்தி, அதைக்காட்டிலும் இருமடங்காக 10.6 kNm என்ற அளவில் இருக்கும்.
அருகிலுள்ள மரங்களின் வேர்களுடன் உதைப்பு வேர்கள் பின்னிப் பிணைந்து வலை போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அருகிலுள்ள மரங்களையும் பாதுகாக்கின்றன. இவை மண்ணுக்கு மேல் 80 அடி தூரமும், 15 அடி உயரமும் மண்ணுக்குக் கீழ் 30 அடி தூரம் வரையிலும் வளரக்கூடியது. மிகவும் தடித்து உயரமான, நீளம் அதிகமான அலையலையாக படர்ந்தவைகள் என இவற்றில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. மழைக்காடுகளில் பட்டுப்பருத்தி, அத்தி மற்றும் மருத மரங்களில் அதிகமாக இவ்வகை பலகை வேர்கள் காணப்படும்

தினமலர் தளத்தில் வெளியானது ]

வேர்களில் இத்தனை விதங்களா!

தாவரங்களின் ஆதாரம் வேர்கள். பூமிக்கு அடியில் மட்டுமல்ல; பூமிக்கு மேலேயும், தாவரத்தின் பிற பாகங்களிலும் தோன்றும் வேர் வகைகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.

வேறிடத்துப் பிறப்பவை (Adventitious – அட்வென்டிடியஸ்)
தண்டு, இலை, கிளை, அடி மரம் ஆகிய பகுதிகளில் தோன்றுபவை.
கரும்பு

முண்டு வேர்கள் (Stilt – ஸ்டில்ட்)
பிரதான தண்டில் இருந்து தோன்றி, தாவரத்தை நிலைநிறுத்த உதவுபவை.
மக்காச்சோளம்

தாங்கு வேர்கள் (Prop – பிராப்)
கிளைகளில் உருவாகி, கீழ்நோக்கி வளரும். நிலத்தில் ஊன்றி கிளைகளைத் தாங்கும்.
ஆலமரம்

மூச்சு வேர்கள் (Respiratory – ரெஸ்பைரேட்டரி)
ஊன்று வேர்களில் இருந்து செங்குத்தாக நீர் மட்டத்திற்கு மேலும், நிலத்திலும் வளர்பவை.
அலையாத்தித் தாவரங்கள்

அண்டை வேர்கள் (Root Buttresses – ரூட் பட்ரெஸ்ஸஸ்)
பெரு மரங்களில், பட்டையாகத் தடித்து சுவர் எழுப்பியது போல உயர்ந்து, சுற்றிலும் வளர்பவை.
மருத மரம் (Buttress Tree)

மிதவை வேர்கள் (Floating – ஃப்ளோட்டிங்)
நீர்த் தாவரங்கள் மிதக்க உதவும். மென்மையாகவும், பருத்தும் காணப்படும். காற்று நிறைந்தவை.
ஆகாயத் தாமரை

உறிஞ்சு வேர்கள் (Haustorial – ஹாஸ்டோரியல்)
தொற்றிப் படரும் தாவரங்களில் காணப்படும். கொடிகளுக்குத் தேவையான நீர், உணவு போன்றவற்றை உறிஞ்சும் வேர்கள்.
கஸ்குட்டா (Cuscutta)

ஒட்டு வேர்கள் (Clinging – கிளிங்கிங்)
மரங்களில் தொற்றிப் படரும் தாவரங்களில் காணப்படும். மரப்பட்டைகளின் இடுக்குகளில் பதிந்திருக்கும்.
மிளகுக் கொடி

உறிஞ்சு கவச வேர்கள் (Velamen – வெலாமென்)
செடியின் அடியிலிருந்து உண்டாகி தொங்கிக்கொண்டு, காற்றில் உள்ள ஈரத்தை எடுத்துக்கொள்ளும்.
ஆர்க்கிட் தாவரங்கள்

தினமலர் தளத்தில் வெளியானது ]

பறக்கும் புரதங்கள்

2050-ஆம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை, 900 கோடியாகப் பெருகும் என்பது ஒரு கணிப்பு. அந்தச் சூழலில், உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று. உலகில் வாழும் அனைத்து மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய, வேளாண்துறையால் மட்டும் முடியாது. எனவே, பிற வழிகளின் மூலம் மாற்று உணவைத் தேடவேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. அப்படிப்பட்ட மாற்று உணவாகப் பூச்சி உணவுகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன.
தாய்லாந்து, சீனா, ஜப்பான், பிரேசில், மெக்சிகோ, கானா, வியட்நாம் போன்ற நாடுகளிலும், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மத்தியிலும் பூச்சியை உண்ணும் பழக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழகக் கிராமப்புறங்களில்கூட ஈசல் பூச்சிகளை வறுத்து உண்ணும் வழக்கம் உள்ளது.
மனிதர்கள், பூச்சிகளை உணவாக உட்கொள்வது ‘என்டமோபாஜி’ (Entomophagy) எனப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட உண்ணப்படும் பூச்சிகளின் வரிசையில், வெட்டுக்கிளி, எறும்பு, வண்டு, பட்டுப்புழு, சிலந்தி, தேள், தேனீ, கரப்பான் பூச்சி போன்றவை உள்ளன.
பூச்சிகள், இயற்கையிலேயே அதிகப்படியான புரதம், கொழுப்புச் சத்துகளைக் கொண்டுள்ளன. இவை விரைவாக இனப்பெருக்கம் ஆகின்றன. பூச்சிகளை மனிதர்கள் உட்கொண்டாலும், சூழலியல் சமநிலை குலையாது. இன்னும் 30 ஆண்டுகளில், ‘பறக்கும் புரதங்கள்’ என அழைக்கப்படும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும் என்கின்றனர் பூச்சியியல் வல்லுநர்கள்.

தெரிந்து கொள்வோம்!

1. பூச்சியியல் ஆய்வாளரை, ஆங்கிலத்தில் இப்படி அழைப்போம் ………………………
2. உலகின் நீளமான மீன் எது? ……………………
3. மணிப்பூர், மிசோரம் மாநிலங்களின் மாநிலப் பறவை எது? ………………
4. பறக்க முடியாத பெரிய பறவை எது? ………………………

விடைகள்:
1. என்டமாலஜிஸ்ட் Entomologist-
2. ஜயன்ட் ஓர் மீன் (Giant Oar Fish). நீளம்: 110 அடி
3. மிஸஸ். ஹியூம்ஸ் பீஸன்ட் (Mrs. Hume’s pheasant)
4. நெருப்புக் கோழி (Ostrich)

தினமலர் தளத்தில் வெளியானது ]

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑